மே தினம் – செயல்பட ஒரு பேரிகை முழக்கம்!
--சுகுமார் தாம்லே
(தேசியச்
செயலாளர், ஏஐடியுசி)
1886 மே தினம், காவிய சகாப்தம், பாட்டாளி
படை வரிசையில் இணையும் புதிய இளம் தலைமுறையினர் அறிவதற்காகத் திரும்பத் திரும்ப சொல்லப்பட
வேண்டும்!
அன்று பணிநிலைமை
19ம் நூற்றாண்டு காலத்தை ஒரு முறை திரும்பிப்
பார்ப்போம். அன்று மனித குலம் ஐரோப்பா மற்றும் அமெரிக்காவில் தனது வாழ்வாதாரத்திற்கான
தேவைகளை எப்படி உற்பத்தி செய்தது என்பதிலிருந்து இன்று பெரும் மாறுதல் ஏற்பட்டிருக்கிறது.
விவசாயத்திலிருந்து தொழிற்சாலைகள் வரை அனைத்திலும் மாற்றம், அடையாளம் காண முடியாத அளவு
சமுதாயம் முழுமையாக மாறியிருக்கிறது. உழைப்பாளி மக்கள் வயல்களில் அடிமைகளாய் கட்டப்பட்டு
உழன்ற காலம் போனது, அடிமைச் சங்கிலி வேரோடு கில்லி எறியப்பட்டு, தங்களைத் தாங்களே பாதுகாத்துக்
கொள்ளும் வகையில் விடுதலை பெற்றுள்ளனர்.
தொழிற்சாலைகள் என்ற புதிய அமைப்பு உருவாகி
ஒரு கூரையின் கீழ் “கரங்களை” வேலைக்கு அமர்த்தி அன்றாடப் பயன்பாட்டுக்குரிய பொருட்கள்,
உடைகள், பாத்திரங்கள், வீடுகள் என ‘காண்பது எல்லாம் தொழிலாளி செய்தான்’!
அந்த ஆலைகளில் வேலை செய்தவர்கள் பேருக்குத்தான்
சுதந்திரமானவர்கள், ஆனால் வேறு எங்கும் சென்று தங்கள் வயிறைக் கழுவ முடியாதவர்கள்.
ஆலை முதலாளியின் எந்த நிபந்தனையையும் ஏற்று வேலை செய்வதற்காக அவர்கள் கூட்டமாக ஓட்டிச்
செல்லப்படுவர். விளைவு நாம் எதிர்பார்க்கக் கூடியதுதான்: இரண்டு கால்களுடன் ஆலைக்கு
நடந்து வருபவர், ஆண், பெண் அல்லது குழந்தை, எவராயினும் அவர்கள் மறுநாள் காலை உயிருடன்
வந்து மீண்டும் வேலை செய்ய இயலும் அளவுமட்டுமே, சொற்ப ஊதியத்தை ஆலை உடைமையாளர் அளிப்பர்.
சூரியன் உதித்ததிலிருந்து மறையும் வரை வேலை நேரம்; அதுவே மின்சாரம் கண்டு பிடிக்கப்பட்ட
பிறகு 16, 18 அல்லது 20மணி நேரம் என வரைமுறையின்றி அதிகரிக்கப்பட்டது. ஆனால் 19ம் நூற்றாண்டிலிருந்தே
அமெரிக்காவில் பணி நேரத்தை 10 மணி என வரையறுக்கக் கோரி போராட்டங்கள் தொடங்கிவிட்டன.
வரலாற்று அறிஞர்கள், பொருளாதார நிபுணர்கள்
இதைக் கவனித்து விவாதங்களை நடந்தினர் என்பது உண்மையே. அவர்கள் அப்படி விவாதித்துக்
கொண்டிருக்கும்போதே மாமேதை காரல் மார்க்ஸ் தனது கூர்மையான பார்வையை முழுமையான அமைப்பின்
மீது – முதலாளித்துவ உற்பத்தி முறை மீதே
-- செலுத்தினார். ‘இது மனிதர்கள் செய்த முறைமை (சிஸ்டம்); மோசமான சுரண்டலை முடிவுக்குக்
கொண்டு வர இம்முறையையை ஒழிக்க வேண்டும், ஒழிக்க முடியும்’ என்று மார்க்ஸ் பிரகடனம்
செய்தார். அதனைச் செய்து முடிக்க அவர் தொழிலாளர்களின் சர்வதேச ஒத்துழைப்புக்கு அழைப்பு
விடுத்தார். 1864ல் அவர் ‘முதலாவது அகிலம்’ என்றழைக்கப்படும் ‘சர்வதேச உழைக்கும் மக்களின்
அசோஸியேஷன்’ அமைப்பை ஏற்படுத்தினார். முதலாவது
அகிலம் உழைப்பாளர்களின் பணி நேரத்தை எட்டு மணி என வரையறுத்துத் தீர்மானம் நிறைவேற்றியது.
சிக்காகோ இரத்த வெள்ளம்
‘ஹே மார்க்கெட் கிளர்ச்சி’ என்றழைக்கப்படும்
அமெரிக்காவின் சிக்காகோ நிகழ்வு 1886ல் (தொழிலாளர்களின் அமைதியாகக் கூடிய கூட்டத்தின்
நிகழ்வு) முதலாளிகளின் அடியாட்கள் மற்றும் போலீசாரால் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்டது.
(ஜோடிக்கப்பட்ட வழக்கில் நான்கு தொழிலாளர் தலைவர்கள் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டனர்,
சாட்சியம் இல்லை என்று மூவர் விடுவிக்கப்பட்டனர்.) ஆனால் அவர்கள் எழுப்பிய கோரிக்கை
முழக்கத்தை உலக அளவில் எடுத்துக் கொண்ட 1889ம் ஆண்டின் இரண்டாவது அகிலம் தொழிலாளர்களின்
பணி நேரத்தை எட்டு மணி நேரமாக வரையறுக்க மே 1ம் தேதியை உலகம் முழுவதும் “மே தின”மாக
அனுசரிக்க தீர்மானம் நிறைவேற்றியது; அதன்படி உலகமெங்கும், எல்லா கண்டங்களின் அனைத்து
நாடுகளிலும் 1890முதல் மேதினம் அனுசரிக்கப்படுகிறது.
பல போராட்டங்கள் நடைபெற்றன, அதன் விளைவாய்
உழைக்கும் மக்கள் பல்வேறு உரிமைகளை வென்று சாதித்தனர். மேம்பட்ட பணிச் சூழல் நிலைமைகள்,
ஊதியம் என்பன கோரியும் பணியிடத்தில் பெண்களுக்குப் பாலியல் தொல்லைகளைத் தடுக்கக் கோரியும்
நியூயார்க் நகரத்தில் பெண்கள் ஆயத்த ஆடை தொழிலாளர்கள் 1909ம் ஆண்டில் மீண்டும் மீண்டும்
வேலைநிறுத்தம் செய்தனர்; அந்தத் தொடர்ச்சியான போராட்டமே இன்று ஆண்டுதோறும் “மார்ச்
8 சர்வதேச உழைக்கும் மகளிர் தினம்” அனுசரிக்க பாதையமைத்து வழிகோலியது.
இந்தியாவில் சங்க அமைப்பு
இந்தியாவில்கூட தொழிலாளர்களுக்கு அரை மணி
நேர உணவு இடைவேளையுடன் ஞாயிறு வாராந்திர ஓய்வு பத்தாண்டு போராட்டத்திற்குப் பிறகு
1890ல் சாதிக்கப்பட்டது. அந்த இயக்கம் பாம்பே
மில் ஹேண்ட்ஸ் அசோஸியேஷன் நடத்திய நாராயன் மெஹாஜி லோகாண்டே தலைமையில் நடைபெற்றது; அவர்
மகாத்மா ஜோதிபா பூலேயின் தோழராவார்.
இந்தியத் தொழிலாளர்களின் முதலாவது மத்திய
தொழிற் சங்க அமைப்பான ஏஐடியுசி 1920 அக்டோபர் 31ல் அமைக்கப்பட்ட நிகழ்வே ஒரு வரலாற்றுச்
சிறப்பு மிக்கது; பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இந்தியா முழுவதும் ஆங்காங்கே நடைபெற்ற
எண்ணற்றப் போராட்டங்களின் இறுதி விளைவே ஏஐடியுசி பேரியக்கம்; அது தொழிலாளர்கள் மேலும்
போராடுவதற்கு ஊக்கம் அளித்தது மட்டுமல்ல, இந்திய விடுதலை போராட்டத்திற்கும் பல மடங்கு
வலிமை ஊட்டியது.
தொழிலாளர் நலச் சட்டங்கள்
தொழிலாளர் கோரிக்கை
போராட்டங்கள் அவர்களின் உரிமைகளாகி இந்தியாவில் சட்டங்களாக மலர்ந்தன, அவற்றில் உதாரணத்திற்குச்
சில: 1923 தொழிலாளர் ஈட்டுறுதிச் சட்டம்,
1926 தொழிற்சங்கங்கள் சட்டம், 1935 ஊதியப் பட்டுவாடா சட்டம், 1947 தொழிற் தகராறுகள்
சட்டம், 1948 இஎஸ்ஐ சட்டம், 1952 தொழிலாளர் பிராவிடண்ட் ஃபண்டு மற்றும் இதர பிற வசதிகள்
(மிஸிலேனியஸ்) வழங்கும் சட்டம், 1961 மகப்பேறு நலச் சட்டம், 1965 போனஸ் பட்டுவாடா சட்டம்,
1976 சமவேலைக்குச் சம ஊதியச் சட்டம் என்பன.
பொதுத்துறைகளும் சமூக நீதியும்
இந்தியாவில் உற்பத்தி மற்றும் சேவைப் பிரிவுகளில்
பொதுத் துறை நிறுவனங்களைக் கட்டியெழுப்ப ஏஐடியுசி பேரியக்கம் முக்கிய பங்காற்றியது.
இதனால் எஃகு, நிலக்கரி, சுரங்கம், பெட்ரோலியம், மின்சாரம், இரயில்வே, சாலை மற்றும்
கடல்வழி போக்குவரத்தும்; நிதிசார்ந்த பொதுப் பிரிவில் வங்கிகள், காப்பீட்டு நிறுவனங்களும்;
மற்றும் சுகாதாரம். கல்வி எனப் பல துறைகள் விடுதலைக்குப் பின் சாதிக்கப்பட்டதில் ஏஐடியுசி
இயக்கத்தின் பங்கு முக்கியமானது. இந்த வளர்ச்சி பிற்பட்ட வகுப்பினர் மற்றும் தாழ்த்தப்பட்ட
வகுப்பினருக்கு –நமது அரசியல் அமைப்புச் சட்டம் உறுதியளித்த – சமமான வாய்ப்பு வழங்குவதில்
முக்கிய பங்கு வகித்தது.
சுருங்கக் கூறின், பணி நிலைமைகளில் எவற்றை
எல்லாம் இன்றைய தலைமுறை உரிமையாகக் கருதுகிறதோ அவை சட்டமாக்கப்பட்டதன் பின்னணியில்
கடுமையான போராட்டங்களின் வரலாறு உள்ளது. உதாரணத்திற்கு மிகுதி நேரப் பணிக்கு இரண்டு
மடங்கு ஊதியம் (ஓவர் டைம் அலவன்ஸ்). சட்டபூர்வமாக வரையறுக்கப்பட்ட பணி நேரம் 8 மணி
நேரத்திற்கு மேல் பணி செய்ய, இரண்டு மடங்கு விகித ஊதியம் அளிக்கப்பட வேண்டும் என்பது
சட்டமாக்கப்பட்டுள்ளது.
இன்றைய சவால்கள்
பணிஅமர்த்துநர் மற்றும் ஊழியர் உறவுகளில்
20ம் நூற்றாண்டு வியக்கத்தக்க பெரும் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. உலகில் முக்கியமான
நிகழ்வுகளாக இரண்டு உலகப் போர்கள், ரஷ்யப் புரட்சி, ஐஎல்ஓ போன்ற முத்தரப்பு அமைப்புகள்,
நலவாழ்வு அரசு கோட்பாடு ஏற்பு, சங்கம் அமைக்கும் உரிமைக்கான உறுதியளிப்புக்கு மாநாடுகள்,
குறைந்தபட்ச கூலி, தொழிலாளர் ஆய்வு முதலியன குறித்துச் சர்வ தேச தொழிலாளர் அமைப்பில்
(ஐஎல்ஓ) விவாதிக்கப்பட்டதைக் குறிப்பிடலாம். ஐஎல்ஓ மாநாட்டுத் தீர்மானங்களுக்குத் தங்கள்
தங்கள் நாடுகளில் ஒப்புதல் தரவும், அவற்றை அமல்படுத்த தேவையான உள்நாட்டு சட்டங்களை
நிறைவேற்றவும் ஐஎல்ஓ-வின் உறுப்பு நாடுகள் எதிர்பார்க்கப்பட்டன.
இரண்டாம் உலகப் போருக்குப் பின், 20ம்
நூற்றாண்டின் மத்தியில், தேசிய விடுதலை இயக்கங்கள் வேகமெடுத்தன; ஐக்கிய நாடுகள் சபை
(ஐநா) நிறுவப்பட்டு, பனிப்போர் கால சர்வதேச ராஜிய உறவுகள் தொடங்கியது. மிக மிக வேகமாக
வளர்ச்சிபெற்ற தொழில்நுட்பம் முதலாளி தொழிலாளி உறவுகளை மேலும் மாற்றியது. நான்காவது
தொழில் புரட்சியாக அழைக்கப்படும் தகவல் தொழில்நுட்பம் தோன்றி வழிநடத்தத் தொடங்கியுள்ளது.
நாம் எங்கே இருக்கிறோம்?
அரசியல் அரங்கில், 1989 --90ல் சோவியத்
யூனியன் வீழ்ச்சி அடைய, அமெரிக்கா தலைமையிலான ஏகாதிபத்தியச் சக்திகள், திரிசூலங்களான
சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்ஃஎப்), உலக வர்த்தக அமைப்பு (WTO) மற்றும் உலக வங்கி இவற்றைக் கொண்டு மீண்டும் உலகைக் கட்டுப்படுத்த முயல்கிறது.
ஏறத்தாழ 21ம் நூற்றாண்டின் கால் பகுதியில்
இருக்கும்போது, இந்தியாவில் இந்த 2022 மே தினத்தில் நாம் எங்கே இருக்கிறோம்? வரலாறு
ஒரு முழு வட்டத்தைச் சுற்றி வந்து பாட்டாளி மக்கள் மீண்டும் அதே இடத்திற்கு வந்து விட்டதுபோலத்
தோன்றுகிறது, 150 ஆண்டுகளில் நமது முன்னோர்களால் வென்றெடுக்கப்பட்டு வாராதுபோல வந்து
கிடைத்த மாமணியாம் உரிமைகளை இழந்து அவை பூஜ்யமாக ஆக்கப்பட்டுவிட்டதாகத் தோன்றுகிறது.
எதையும் சந்திப்போம், நம்மால் முடியும்
நினைவிருக்கிறதா, எந்த முறையான சங்க அமைப்பும்
இல்லாமல் இந்தியத் தொழிலாளர்கள் போராட்டங்களில் இறங்கிய காலம் இருந்தது. எனவே சங்கம்
அமைக்கும் உரிமையைத் தொழிலாளர் குறுங்குறிகள் (லேபர் கோட்ஸ்) பறித்தால்தான் என்ன? ஃபிக்ஸட்
டேர்ம் (குறுகிய கால) வேலை முறையைக் கொண்டு முறைசார்ந்த நிரந்தரப் பணியை இல்லாது ஆக்கினால்
என்ன? இந்த மாற்றங்களை எல்லாம் “சுலபமாக பிசினஸ் செய்வதற்காக” கொண்டு வருவதாக ஒன்றிய
அரசு வெளிப்படையாக உரிமை கோரினால்தான் என்ன? விடுதலைக்குப் பின் கடந்த 70 ஆண்டுகளில்
மாபெரும் உழைப்பில் கட்டியெழுப்பிய பொதுத் துறை நிறுவனங்களை முழுமையாக ஒன்றிய அரசு
கூவிக் கூவி விற்று ஒன்றுமில்லாது ஆக்க முயன்றால்தான் என்ன?
இவை அனைத்தையும் பார்த்து கையைக் கட்டிக் கொண்டு ‘அழுது கொண்டிருப்பமோ, ஆண் பிள்ளைகள் அல்லவோ? உயிர் வெல்லமோ?’ அனைத்தையும் நம்மால் மீட்டெடுக்க முடியும்! தொழிலாளர் விரோத, மக்கள் விரோத, விவசாயிகள் விரோத மற்றும் தேசிய
விரோதமான ஒன்றிய அரசுக்கு எதிராகக் கிளர்ந்தெழுந்து செயலில் இறங்குவதற்கான பேரிகை அழைப்பே மே தினம்! இந்த அரசுதான் நமது உரிமைகள் அனைத்தையும் பறிக்கிறது. வேளாண் பெருங்குடி மக்கள் மீது ஒன்றிய அரசு திணித்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்த ஒற்றுமையும் விடாப்பிடியான உறுதிப்பாடும் அந்தக் கறுப்புச் சட்டங்களை ரத்து செய்ய அரசை நிர்பந்திக்க முடியும் என்பதை விவசாயிகள் தங்கள் போராட்டத்தின் மூலம் காட்டியுள்ளனர்.மேதினச் சபதமிது
நாம் விழிப்பாக இருக்க வேண்டும், எஃகு
போன்ற தொழிலாளர் – விவசாயி ஒற்றுமையைக் கட்ட வேண்டும்; அந்த ஒற்றுமையை வகுப்புவாத,
சாதிய சூழ்ச்சிகள் மூலம் சீர்குலைக்கும் முயற்சிகளுக்கு எதிராக மேலும் ஒற்றுமையைக்
கட்ட வேண்டும். சம்யுக்த கிசான் மோர்ச்சா (ஐக்கிய விவசாயிகள் முன்னணி) கூட்டமைப்பின்
“மிஷன் பாரத்” (நமது விடுதலை இயக்க முன்னோடிகள் கையளித்த அரசியலமைப்புச் சட்ட விழுமியங்களை
உடைய “இந்தியாவைக் காக்கும் கடமை”) முழக்கத்தை மேலெடுத்துச் செல்ல – 2024 தேர்தலில்
இந்த அரசை விரட்ட – இந்த மே தினத்தில் நாம் சபதம் ஏற்போம்!
--நன்றி : நியூஏஜ் (மே 1 – 7)
--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ,
கடலூர்
No comments:
Post a Comment