Tuesday 28 February 2023

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 78 -- கேதார் தாஸ், பீகார் தொழிற்சங்கத் தலைவர்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 78


                            கேதார் தாஸ் – வலிமையான தொழிலாளர் இயக்கத்தைக் கட்டியவர்

                                                                        --அனில் ரஜீம்வாலே


        கேதார் தாஸ் என்ற பெயர் இந்திய மற்றும் பீகார் உழைக்கும் வர்க்கம் மற்றும் தொழிற் சங்க இயக்கத்துடன் பிரிக்க முடியாதபடி ஒன்றிணைந்தது. புகழ்பெற்ற 1958 ஜாம்ஷெட்பூர் போராட்ட வரலாற்றுப் பக்கங்களில் அவர் நிறைந்திருக்கிறார்.

பீகார் மாநிலத்தின் தர்பங்கா (இன்றைய மதுபானி) மாவட்டத்தின் குர்மகா (பச்சரி) கிராமத்தில் கேதார் லால் தாஸ் கீழ்மட்ட நடுத்தர வர்க்க கிராமப்புறக் குடும்பத்தில் 1913 ஜனவரி 4ம் நாள் பிறந்தார். தந்தை ஸ்ரீஹரிநந்தன் தாஸ், தாய் திருமதி சுகவதி. அவர்களது மோசமான பொருளாதார நிலைமையால், கேதார் 1934லேயே ஜாம்ஷெட்பூரில் தனது ஒன்று விட்ட சகோதரர் ஷியாம் பெகாரி லால் தாஸ் உடன் வேலைக்குச் செல்ல நேரிட்டது. முலாம் பூசிய தகரம் தயாரிக்கும் கம்பெனியில் எழுத்தராகப் பணியாற்றினார். கேதார் மெட்ரிக் வரை மட்டுமே படித்தார்.

தொழிற் சங்க இயக்கத்தில்

        ஈயம் பூசி தகரம் தயாரிக்கும் (டின்பிளேட்டு) கம்பெனி நிர்வாகம் கடும் தொழிலாளர் விரோத அணுகுமுறை கொண்டது. புகழ்பெற்ற தொழிற்சங்கத் தலைவர் பேராசிரியர் அப்துல் பாரி என்ற காங்கிரஸ்காரருடன் கேதார் தாஸ் தொடர்பு கொண்டார். கேதார் தாஸும் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். அவர்களுக்கிடையேயான நெருக்கத்தில் பிளவு ஏற்படுத்த நிர்வாகம் மற்ற தொழிலாளர்களைவிட கேதாரின் ஊதியத்தை உயர்த்தியது. ஆனார் கேதார் தாஸ் அதை ஏற்க மறுத்ததால், சீற்றமடைந்த பிரிட்டிஷ் கம்பெனி நிர்வாகம் கேதார் தாஸை வேலையிலிருந்து நீக்கியது. அதன் பிறகு கேதார் தாஸ் முழு நேர தொழிற்சங்க இயக்கச் செயல்பாட்டாளர் ஆனார்.  

       பெரும் புரட்சியாளர் ஹஜரா சிங், பஞ்சாபின் ஹோஷியார்பூர் ஏழை குடும்பத்தைச் சேர்ந்தவர். அவர் (உத்ரகாண்டில் கலாபாணி ஆற்றின் கரைகளின்) ‘கலாபாணி’யில் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். விடுவிக்கப்பட்டு ஜாம்ஷெட்பூர் வந்தவர், தொழிலாளர்களைத் திரட்டினார். 9மாதங்கள் நீடித்த ஜாம்ஷெட்பூர் வேலைநிறுத்தம் 1939, ஜூலை-1 நிகழ்வுகளில் உச்சம் தொட்டது. வேலை நிறுத்தத்தை உடைக்கும் முயற்சிகளைத் தடுக்க ஹஜரா சிங் மற்றும் பியாரா சிங் ஆலை வாயிலின் கதவுகள் முன் படுத்தனர். கம்பெனியின் டிரக் வாகனம் அவர்கள் மீது ஏறி அவர்கள் இருவரையும் கொன்றது. அவர்கள் 1939 ஜூலை 2ல் டாடா மெயின் மருத்துவமனையில் மரணமடைந்தனர். வயர் பொருட்களைத் தயாரிக்கும் கம்பெனியில் அமைதியான மறியல் நடைபெற்றது. துயரகரமான அந்தச் சம்பவத்திற்குப் பின் கேதார் தாஸ் தனது வாழ்வைத் தொழிலாளர்களின் மேம்பாட்டிற்காக அர்ப்பணிக்கத் தீர்மானித்தார், அதன்படியே இறுதிவரை திருமணம் செய்து கொள்ளாமல் இருந்தார்.

1942 இயக்கத்தில்

      1942ல் மகாத்மா காந்திஜி உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்கினார். அதனை ஆதரித்து நாடுமுழுவதும் நடத்தப்பட்ட தார்மிக இயக்கத்தில் கேதார் தாஸும் இணைந்தார். அதைத் தொடர்ந்து கைதாகி ஆறு மாதங்கள் சிறை தண்டனை பெற்றார். விடுதலையான பின் டின்பிளேட் தொழிலாளர்கள் சங்கத்தில் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், டாக்டர் அப்துல் பாரி சங்கத்தின் தலைவர்.

சிபிஐ கட்சியில் இணைதல்

       1943ல் கேதார் தாஸ் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். ஜாம்ஷெட்பூர் மட்டுமின்றி பீகார் முழுவதும் அவர் தீவிரமான கட்சிப் பணி ஆற்றினார்.

தொழிற்சங்க இயக்கத்தில்

      1952ல் கேதார் தாஸ் ஜாம்ஷெட்பூர் மஸ்தூர் யூனியனை நிறுவினார். அந்த அமைப்பு 1957ல் ஏஐடியுசி பேரியக்கத்தில் இணைப்புச் சங்கமானது. சுனில் முகர்ஜி மஸ்தூர் சங்கத்தின் தலைவராகவும், கேதார் தாஸ் பொதுச் செயலாளராகவும் தேர்வு செய்யப்பட்டனர். டாடா நகர் ஃபௌண்ட்ரி கம்பெனி (உலோக உருக்கு மற்றும் வார்ப்பட ஆலை)யின் ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் கேதார் தாஸ் தலைமையில் நடைபோட்டனர். சுரேஷ் பிரஸாத் என்ற தொழிற்சங்கச் செயல்பாட்டாளரை நிர்வாகம் வேலைநீக்கம் செய்தது. பேச்சு வார்த்தை தோல்வி அடைந்த பிறகு, கேதார் தாஸ் ஜாம்ஷெட்பூர் கோல்முரி மைதானத்தில் காலவரையறையற்ற உண்ணாவிரதத்தில் அமர்ந்தார். நிர்வாகம் சுரேஷை மீண்டும் பணியில் அமர்த்தும் கட்டாயம் ஏற்பட்டது.

வரலாற்றுச் சிறப்புமிக்க 1958 வேலைநிறுத்தம்

        ஜாம்ஷெட்பூர் மஸ்தூர் யூனியன் (JMU) 1957 --58ல் தொழிலாளர் உரிமைகள் மற்றும் அங்கீகாரத்தை மீண்டும் ஸ்தாபிக்கும் அற்புதமான போரைத் தலைமையேற்று நடத்தியது. மஸ்தூர் யூனியன் மிக வலிமையானது, டாடா அயர்ன் அண்ட் ஸ்டீல் கம்பெனி (TISCO)யில் மட்டும் 33ஆயிரம் தொழிலாளர்களில் 19ஆயிரத்திற்கும் அதிகமான உறுப்பினர்களை உடையது. அடிப்படை ஊதிய மாற்றம், கிராக்கிப் படி உயர்வு மற்றும் அங்கீகாரம் கோரியது. 1957அக்டோபர் அந்தக் காலத்திலேயே முறையான பணிக் குழு (ஒர்க்ஸ் கமிட்டி), மற்றும் ஒர்க்ஸ் கமிட்டிகளில் யூனியன் பிரதிநிதிகளை அனுமதிக்கவும் தொழிலாளர் ஆணையருக்கு (லேபர் கமிஷனர்) கடிதம் எழுதியது. 15வது இந்தியத் தொழிலாளர் மாநாடு இரும்பு எஃகு ஆலைகளில் ஊதியங்களை மாற்றி அமைக்க சிபார்சு செய்தது. இது தொழிலாளர்களின் கோரிக்கை மிகவும் நியாயமானது எனக் காட்டியது.

        ஜாம்ஷெட்பூர் மஸ்தூர் யூனியன் 1958 பிப்ரவரி 26ல் பிரதமரிடம் கோரிக்கை மனு ஒன்றைச் சமர்ப்பித்தது. எஸ்ஏ டாங்கே தலைமையில் சென்ற ஏஐடியுசி தூதுக் குழு பிரதமர் மற்றும் தொழிலாளர் அமைச்சரைச் சந்தித்தது.

          வேலை நிறுத்தம் தவிர்க்க இயலாததாயிற்று, டிஸ்கோ நிறுவனத் தொழிலாளர்கள் கேதார் தாஸ் தலைமையில் 1958 மே 12ல் வேலைநிறுத்தப் போராட்டத்தில் இறங்கினர். 1200 தன்னார்வத் தொண்டர்கள் ஜெஎம்யு பேட்ஜ் அடையாளப் பட்டையுடன் முக்கியமான சேவைகளை நடத்தினர். கேதார் தாஸுடன் இந்த வேலைநிறுத்தத்த்தில் பரின் தே, அலி அம்ஜத், சத்யநாராயணா சிங், ஓ கோபாலன், ராம்அவதார் சிங் போன்ற புகழ்பெற்ற பல தலைவர்கள் கலந்து கொண்டனர். டிஸ்கோ நிர்வாகம் மே 15 தொடங்கி 400 தொழிலாளர்கள் சிலரை வேலை நீக்கம் செய்து தண்டித்தது. ஜாம்ஜெட்பூர் தொழிலாளர்கள் மே 16ல் முழுமையான வேலைநிறுத்தம் செய்து ஆதரவு தெரிவித்தனர். ஜெஎம்யு 1958 மே 2ல் தார்மிக வேலைநிறுத்தம் செய்ய அனைத்துத் தொழிலாளர்களும் காலவரையற்று வேலையை நிறுத்தினர். ஜெஎம்யு சங்க அலுவலகமான புகழ்பெற்ற சாக்ஷி* கட்டடத்திற்குள் நுழைந்த போலீஸ் அலி அம்ஜத், சத்யநாராயணா சிங் உள்ளிட்ட பிறரைக் கைது செய்தது. கேதார் தாஸ் அப்போது அங்கில்லை. கைது நடவடிக்கையைத் தொழிலாளர்கள் எதிர்க்க போலீஸ் தடியடி நடத்தியதுடன், துப்பாக்கிச் சூட்டிலும் இறங்க இரண்டு தொழிலாளர்கள் மாண்டனர்.

     [*சாக்ஷி, வடகிழக்கு இந்திய சிங்பூம் பகுதியில் இருந்த ஒரு கிராமம். அந்த இடத்தை                   ஜாம்ஷேட்ஜி டாடா தனது ஸ்டீல் சிட்டி அமைக்கும் திட்டத்திற்கான இடமாகத் தேர்வு               செய்தார். அது 1919ல் ஜாம்ஷெட்பூர் ஆனது. சாக்ஷி தற்போது ஸ்டீல் சிட்டிக்கும், முன்பு              காளிமதி என்று அழைக்கப்பட்ட சுபர்நரேகா ஆற்றிற்கும் இடையே உள்ளது.]

மே 18 தொடங்கி நிர்வாகம் பெருமளவிலான ஆத்திரமூட்டலில் ஈடுபட்டது. நகரம் முழுமையும் 1958 மே 21ல் ஹர்த்தால் போராட்டம் செய்தது. கேதார் தாஸ், அம்ஜத் அலி, பாலி தே, ஹபிபுர்

ரஹ்மான, கோபாலன், குர் பக்ஸ் சிங், கர்த்தார் சிங், சத்திய நாராயண் சிங் போன்ற பலர் மீதும் புதிதாகச் சிறப்பு வழக்குகள் புனையப்பட்டன. ஆலைகளில் வெடி வைத்து சிதறடித்தது, வெடிப்பு ஊது உலைகளை (ப்ளாஸ்ட் ஃபர்னஸ் படம்) அழித்தல், சொத்துகளைச் சூறையாடுவது முதலான சதிகளில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டனர். சாக்ஷி சிறப்பு நீதி மன்றத்தில் 135க்கும் அதிகமான வழக்குகள் தொடுக்கப்பட்டன. கேதார் தாஸ், பரீன் தே, அம்ஜத் அலி மற்றும் ஓ கோபாலனுக்கு 9 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

     நிர்வாகம் சில தொழிலாளர்களுக்குச் ‘சிகப்பு அட்டை’ (பிங்க் கார்டு) வழங்கத் தொடங்கியது. அந்தத் தொழிலாளர்கள் ஆலை வளாகத்திற்குள் நுழைய முடியாது என்பது அதன் பொருள். ஆனால் பிங்க் கார்டை நிர்வாகம் திரும்பப் பெற வைத்தனர் தொழிலாளர்கள். இப்போராட்டத்தில் இராணுவமும்கூட ஜாம்ஷெட்பூர் வீதிகளில் வரவழைக்கப்பட்டனர்.

     கேதார் தாஸ் தலைமறைவானார். அவரைத் தேடிக் கண்டு பிடிக்க அரசு பெருமளவில் போலீஸ் குழுக்களை அமைத்தது. அவரைக் கைது செய்ய மேஜிஸ்ட்ரேட்டுகள், ஐஜி, டிஐஜி, எஸ்பி புடைசூழ ஆயிரக் கணக்கில் போலீசார் குவிக்கப்பட்டனர். தொழிலாளர் அமைச்சர் வினோத் ஆனந்த் ஜா ஜாம்ஷெட்பூர் வந்தார். பல இரவுப் பொழுதுகளில் கேதார் தாஸின் உறவினர் கமலபதிதாஸ் வீடு போலீசால் சோதனையிடப்பட்டது.

இரகசியமாகச் சட்டமன்றத்தை அடைதல்

        கேதார் பாபு இரகசியமாகப் பாட்னாவின் சட்டமன்றக் கட்டடத்தை அடைந்து, தன் மீதான குற்றச்சாட்டு விவாதங்கள் மற்றும் நம்பிக்கை இல்லா வாக்கெடுப்பிலும் கலந்து கொள்ளத் தஞ்சம் புகுந்தார். அவர் அங்கே இருந்த இரண்டு நாட்களும் அவரது ‘தரிசன’த்தைக் காண்பதற்காக நூற்றுக் கணக்கான போலீசார் வந்தனர். மே 27 நள்ளிரவு சட்டமன்ற வளாகத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

    இதற்கு முன் இல்லாத வகையில் உழைக்கும் வர்க்கம் ஒன்று திரண்டு ஒற்றுமையை வெளிப்படுத்த, நிர்வாகமும் அரசும் அவரச அவசரமாக நடவடிக்கையில் பின்வாங்கினர். சொல்லொண்ணா அடக்குமுறைகளைச் சந்திந்த பிறகு அவர்களுடைய பெரும்பாலான கோரிக்கைகள் ஏற்கப்பட்டன. சுமார் 800 தொழிலாளர்கள் வேலைநீக்கம் செய்யப்பட்டனர். பொதுத் தேர்தல்களில் அதற்குப் பழி தீர்க்க சபதம் செய்த தொழிலாளர்கள் அதைச் செய்தும் காட்டினர்.

    ஜெஎம்யு சங்கம் 1958 மே 29ல் பணிக்குத் திரும்ப அழைப்பு விடுத்தது. தொழிலாளர் குடும்பங்களுக்கான நிவாரணம் திரட்ட ஏஐடியுசி நாடுதழுவிய அறைகூவல் தந்தது.

   ஆனால் முன்னணித் தலைவர்களுக்கு எதிரான ‘ஜாம்ஷெட்பூர் சதி வழக்கு’ இழுத்தடிக்கப்பட்டு நீண்டு கொண்டே இருந்தது. 1958 ஆகஸ்ட் 5 தேதியிட்ட போலீஸ் குற்றப்பத்திரிக்கை, ‘சிபிஐ மற்றும் ஜெஎம்யு’ தலைவர்கள் கேதார் தாஸ் மற்றும் பிறர் ‘சட்டத்தைத் தங்கள் கையில் எடுத்துக் கொண்டு அமைதியைக் குலைத்தனர்’ என்றும் வன்முறைக்குத் தூண்டி பிரச்சாரம் செய்தனர் எனவும் குற்றம் சாட்டியது. விசாரணை நடைபெற்ற சிறிய அறையில் போலீஸ் துப்பாகிகளுடன் கும்பலாகக் கூடினர். 1960 –61ம் ஆண்டில் தலைவர்களுக்குச் சிறை தண்டைனை விதிக்கப்பட்டது. கேதார் பாபு 1962 பொதுத் தேர்தலில் போட்டியிட முடியவில்லை. எனவே சிபிஐ சுனில் முகர்ஜியைச் சட்ட மன்றத்திற்கு வேட்பாளராக நிறுத்த முடிவு செய்தது. அவர் 7ஆயிரம் வாக்குகளுக்கு மேல் வாங்கி பிரம்மாண்டமான வெற்றி பெற்றார். சட்டமன்றத்தில் சிபிஐ 12 இடங்களை வென்றது. சிபிஐ கட்சியைச் சேர்ந்த டாக்டர் உதய்கர் மிஸ்ரா இந்தத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    டாடா தொழிலாளர்களுக்கும், நாடு முழுவதும் எஃகு ஆலை தொழிலாளர்களுக்கும் சம்பளம் உயர்த்தப்பட்டது.

தேர்தல்களில் போட்டி

    1957 தேர்தல்களில் கேதார் தாஸ் சிபிஐ வேட்பாளராகப் பீகார் சட்டமன்றத்திற்கு ஜாம்ஷெட்பூர் தொகுதியிலிருந்து போட்டியிட்டார். பேராதரவு தந்த உழைக்கும் வர்க்கம் சாதனை வாக்குகள் அளித்து அவரைச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்தனர். அவர் மீண்டும் 1969 மற்றும் 1972 தேர்தல்களிலும் வென்றார்.

      தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகும் போராட்டங்களைத் தொடர்ந்தார், ஜாம்ஷெட்பூர் மற்றும் பீகார் ஆலைத் தொழிலாளர்களுக்காகப் பாடுபட்டார். டெல்கோ (டாடா என்ஜினியரிங் & லோக்கமோடிவ் கம்பெனி) மற்றும் டின்பிளேட் தொழிலாளர்களுக்காக 7 நாட்கள் நீண்ட வேலைநிறுத்தத்தை 1957ல் தலைமையேற்று நடத்தினார்.

        1964ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுபட்டது. தொடர்ந்து இறுதி வரை கேதார் தாஸ் சிபிஐ கட்சியிலேயே நீடித்தார்.

மற்றுமொரு சரித்திர வேலைநிறுத்தம், 1969

      1960களில் டாடா தொழிலாளர்கள் தொடர்ந்து போராட வேண்டியிருந்தது. கேபிள் கம்பெனி பொது அலுவலகத்தை 1967ல் முற்றுகையிடும் போராட்டத்தைக் கேதார் தாஸ் தலைமை ஏற்று நடத்தினார். பாதுகாப்பு அலுவலர்கள் அவர்கள் மீது பிரம்படி நடத்தினர். கேதார்‘தா அவர்களைப் பாதுகாக்க ஜூவாலா சிங்கும் சலீமும் தங்கள் மீது அடிகளை வாங்கினர், இருப்பினும் கேதார்‘தா –வும் காயமடைந்தார்.

    1969ல் பொறியியல் ஊதிய போர்டு சிபார்சுகளை அமலாக்கக் கோரி ஒரு கூட்டுப் போராட்டக் குழு அமைக்கப்பட்டது. கேதார் தாஸ், டாக்டர் அகோரி மற்றும் பேராசிரியர்
பிராஜ்நந்தன் கிஷோர்
அதன் முக்கிய தலைவர்கள். 1969 நவம்பர் 17ல் டின்பிளேட் மைதானத்தில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் உரையாற்றிய கேதார் தாஸ் பேச்சு வார்த்தைகள் தோல்வி அடைந்ததாக அறிவித்தார். அடுத்த நாள் நவம்பர் 18லிருந்து கால வரையறையற்ற வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டது. 40ஆயிரம் தொழிலாளர்கள் 48 நாட்கள் தொடர்ச்சியாக வேலையை நிறுத்தினர்.

எஸ் ஏ டாங்கே, இந்திரஜித் குப்தா, ஜகன்நாத் சர்கார், சதுரானந்த் மிஸ்ரா, சந்திரசேகர் சிங், இராம்நாத் திவாரி, ஜார்ஜ் ஃபெர்னான்டஸ் (படம்) முதலிய பெரும் தலைவர்கள் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களைச் சந்தித்தனர்.

     பிரதமர் இந்திராகாந்தி தலையிட்ட பிறகே வேலைநிறுத்தம் விலக்கி கொள்ளப்பட்டது. அந்தச் செய்தி, பகவத் ஜா ஆஸாத், தொழிலாளர் துறை அமைச்சரால் அகில இந்திய ரேடியோவில் (ஏஐஆர்) அறிவிக்கப்பட்டது.

       ஜாம்ஷெட்பூர் ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கம் கேதார் தாஸ் தலைவராகவும், திலீப் கோஷ் பொதுச் செயலாளராகவும் கொண்டு 1971 டிசம்பர் 29ல் அமைக்கப்பட்டது. எல்லா ஒப்பந்தத் தொழிலாளர்களும் நிரந்தரத் தொழிலாளர்களாக ஆவர் என்ற உடன்பாடு 1979 ஆகஸ்ட் 17ல் ஒப்புக்கொள்ளப்பட்டது. கடுமையாக நோய்வாய்ப்பட்ட கேதார் தாஸ் மருத்துவச் சிகிச்சைக்காக மாஸ்கோ சென்றார். அவர் திரும்பி வந்த பிறகே உடன்பாடு எட்டப்பட்டது. அதன் விளைவாக, 1980 ஜனவரி 14 முதல் 2600 ஒப்பந்தத் தொழிலாளர்கள் நிரந்தரமானார்கள்.

ஏஐடியுசி மாநாடு, 1981

    ஏஐடியுசி பேரியக்கத்தின் 30வது அமர்வு ஜாம்ஷெட்பூரில் 1970 அக்டோபர் 13 முதல் நடைபெற்றது. இந்தியா முழுவதிலிருந்தும் வெளிநாடுகளிலிருந்தும் 7ஆயிரம் பிரதிநிதிகளும் மற்றவர்களும் கலந்து கொண்டனர். கேதார்‘தா அதன் முன்னணி அமைப்பாளராக இருந்தார்.

ஒப்பந்தத் தொழிலாளர்கள் போராட்டம், 1981

        டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவன (TISCO) நிர்வாகம் 10ஆயிரம் ஒப்பந்தத் தொழிலாளர்களுக்கு நிரந்தரப் பணி வழங்க மறுத்தது. அதன் விளைவாய்

தொழிலாளர்கள் கேதார் தாஸ் தலைமையில் மின்னல் வேக அதிரடி வேலைநிறுத்தத்தில் 1981 பிப்ரவரி 11 முதல் இறங்கினர். தொழிலாளர் ஆணையர் முன்முயற்சியில் கூட்டப்பட்ட முத்தரப்பு பேச்சு வார்த்தைகளில் கலந்து கொள்ள நிர்வாகம் மறுத்து விட்டது. எனவே கேதார் தாஸ் தலைமையில் 1981 பிப்ரவரி 15ல் தொழிலாளர்கள் பாரி மைதானத்திலிருந்து மாபெரும் ஊர்வலமாகச் சென்றனர். பிரம்படியும் கல்வீச்சும் தொடர, அதில் கேதார் தாஸ் காயமடைந்தார். பிப்ரவரி 18ல் நடைபெற்ற கூட்டத்தில் அவர் உண்ணாவிரதப் போராட்டத்தை அறிவித்தார். அந்த அறிவிப்புத் தொழிலாளர்கள் மற்றும் நிர்வாகத்தினர் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. உண்ணாவிரதப் போராட்டத்தில் இறங்க வேண்டாம் என ஒவ்வொருவரும் அவரைக் கேட்டுக் கொண்டாலும், அவர் தன் முடிவில் உறுதியாக இருந்தார்.

            1981 பிப்ரவரி 19ல் முகம் மழித்துக் கொண்டிருந்தபோது அவர் திடீரென்று கீழே விழுந்தார், மூளைக்குள் இரத்தக் கசிவால் பாதிக்கப்பட்டார். அதே நாள் 1981 பிப்ரவரி 19ல் அவர் தமது 71வது வயதில் மரணமடைந்தார். அவரது புகழுடம்பு சிபிஐ அலுவலகத்திற்கு எடுத்து வரப்பட்டது. பிப்ரவரி 20ல் ஒரு லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்க அவரது இறுதி ஊர்வலம் நடந்தது.

      டிஸ்கோ ஆலையின் ஊது உலை (ப்ளாஸ்ட் ஃபர்னஸ்) அதன் இயங்கு காலத்தில் மூன்று முறைதான் நிறுத்தப்பட்டது; 1948ல் பாபுஜி மகாத்மா காந்தி படுகொலை செய்யப்பட்ட போழ்தும், 1958 மற்றும் 1981 போராட்டங்களின் போழ்து மட்டுமே –அந்த இரண்டு போராட்டங்களும் கேதார் பாபு தலைமை ஏற்று நடத்தியவை.

     கேதார் தாஸ் தமது அன்றாட வாழ்வில் மிக எளிமையாக, அளந்து சிக்கனமாகச் செலவு செய்பவராக, மென்மையான குறைவான பேச்சு -- எனினும் பெரும் விளைவுகளை ஏற்படுத்தவல்ல பேச்சுக்குச் சொந்தக்காரராகவும் இருந்தார். மிகப் பெரும் பலன் அளிக்கும் அந்தத் திறனை -- கேதார் தாஸ், பாரின் தே, அலி அம்ஜத், டாக்டர் உதய்கர் மிஸ்ரா, ஓ கோபாலன் மற்றும் பிற தலைவர்கள் நிறைந்த வான்பரப்பின் -- ஆற்றல்மிகு தொழிலாளர் வர்க்கத் தலைமை வழங்கியது. எளிமையும் சிக்கனமும் மிகுந்த முன்னுதாரணக் கம்யூனிஸ்ட் வார்ப்பில், கேதார் தாஸ் அல்லது கேதார் பாபு எளிமையாக உடுத்துவார், சிறிதளவே உண்பார். பேசுவதும் குறைவுதான், ஆனால் அவர் பேசினால் மக்கள் காது கொடுத்துக் கேட்டனர்.

      கேதார் தாஸைத் தீவிரமாகப் பின்பற்றுபவரான பாரிதோஷ் பட்டாசாரியா “மோடிஃப்” என்ற கலை வடிவத்தில் ஒரு முன்னணி வார இதழில் (‘அவந்த் கார்டே’ முன்னணி என்பதற்கான பிரெஞ்ச் வார்த்தை)  எழுதினார்: “சுழன்றடிக்கும் பேய்க்காற்றின்போது மக்களுடன் இருப்பது

வாழையடி வாழையாய் மரபுவழி வந்த ஒரு தொடர்ச்சி, பூமிப் பந்தின் எல்லா இடத்தும், ஒவ்வொருவருக்கும், மகிழ்ச்சியான மேன்மையான வாழ்வை உறுதி செய்ய கேதார் தாஸ் போன்ற சுயநலமற்ற மனிதர்களால் புதுப்பிக்கப்பட்டு வருகிறது”. அந்தக் கட்டுரையில் பட்டாசாரியா, இரண்டாம் உலகப் போரின்போது நாஜி துப்பாக்கிப் படைக்குழுவால்  சுட்டுக் கொல்லப்பட்ட இளம் பல்கேரிய கவிஞர் நிக்கோலாய் வாப்ட்ஸரௌவ் (Nikolai Vuptsarov படம்) எழுதிய குறுங் கவிதையைத் தான் மிகவும் நேசித்த, இப்போது அந்த நேசத்திற்குரிய கேதார் தாஸை இழந்து தவிக்கும் பெருந்தவிப்போடு அக்கவிதையை மீண்டும் உயிர்ப்பித்து அவருக்கு அர்ப்பணித்துப் பாடினார்:

“துப்பாக்கிப் படைக்குப் பின்பு, புழு பூச்சிகள்,

அப்படித்தான் செல்கிறது வாழ்க்கை,

ஆனால் அந்தப் புயலுக்கு மத்தியில் உங்களுடன் நான் இருப்பேன்,

எனது மக்களே, நான் உங்களை அப்படி நேசிக்கிறேன்!”

கேதார்‘தா என்றும் வாழ்வார்!!

--நன்றி: நியூஏஜ் (ஜன.8 –14)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

பின் இணைப்பு

    வாப்ட்ஸரௌவ் 1942ல் கைது செய்யப்பட்டார். மனிதத்தன்மையற்ற கொடூரங்களுக்கு ஆட்படுத்தப்பட்டு இறுதியில் 1942 ஜூலை 23ல் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. கடைசி அந்த நேரம் வரை அவர் தொடர்ந்து எழுதினார். உண்மைதான், தனது மனைவியை விளித்து அவர் எழுதிய கடைசி கவிதை, உணர்ச்சிகளால் நெகிழச் செய்வது, ஊக்கமளிப்பது:

            போர் கடுமையாக, இரக்கமற்று இருந்தது

            காவியப் போர் என அவர்கள் கூறுவர்

            நான் வீழ்ந்தேன். எனது இடத்தில் மற்றொருவர் வந்தார்

            ஏன் ஒரு பெயரைத் தனித்துக் கூற வேண்டும்?

 

துப்பாக்கிப் படைக்குப் பின்னே -- புழு பூச்சிகள்.

அப்படித்தான் செல்கிறது வாழ்க்கை.

ஆனால் அந்தப் புயலுக்கு மத்தியில்

 நாங்கள் உங்களுடன் இருப்போம்,

எனது மக்களே, நாங்கள்

உங்களை அவ்வளவு நேசிக்கிறோம்!”

மதியம் 2 00மணி, 1942 ஜூலை 23

 

 

 

 

 

 

Tuesday 21 February 2023

இந்தியாவின் ஜிடிபி மற்றும் மனித வளர்ச்சிக் குறியீட்டின் போக்கு

 

                                  இந்தியாவின் ஜிடிபி மற்றும் மனித வளர்ச்சிக் குறியீட்டின் போக்கு

                                                                        --வஹிதா நிஜாம்

ஏஐடியுசி தேசியச் செயலாளர்

அரசியல் ரீதியில் 2023ம் ஆண்டு முக்கியமானது, அது 2024 பொதுத் தேர்தலுக்கான களத்தை அமைக்கும். வாக்குகளைத் துருவங்களாகப் பிளவுபடுத்த பாஜக நெறியற்ற எதனையும் செய்யத் துணிந்தது என்பது அறிந்ததே. பொருளாதாரத்தைப் பொருத்த அளவில் அதனைக் கையாள்வதில் அக்கட்சியின் செயல்பாடு மோசமான மதிப்பெண் பெற்றது. தனது தோல்விகளைத் தரை விரிப்பில் மூடிமறைக்கும் கதையாடல்களைக் கட்டியமைப்பதில் அது பலே கில்லாடி. கோவிட் பெருந்தொற்றின் பாதிப்பிலிருந்து இந்தியப் பொருளாதாரம் முழுமையாக மீண்டு விட்டதாகக் கூறும் 2023 –24ம் ஆண்டிற்கான பொருளாதார சர்வே, அதன் வளர்ச்சி 2023 –24ம் ஆண்டில் 6லிருந்து 6.8 சதவீதமாக எதிர்பார்க்கிறது.

        நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் மீண்டும் ஒருமுறை உற்சாகமற்ற உதவாக்கரை வெற்று பட்ஜெட்டைச் சமர்பித்துள்ளார். கடந்த எட்டாண்டுகள் ஆட்சியின்போது பாஜக எடுத்த நடவடிக்கைகளின் நிகர பாதிப்பை இல்லாமல் ஆக்குவதோ அல்லது மீட்பதிலோ அதன் எந்தக் கொள்கைகளின் மூலமாகவும் நடத்த முடியாது; காரணம், அதன் ஒவ்வொரு கொள்கையும் அவர்களது கார்ப்பரேட் நண்பர்களின் நலன்களுக்குச் சேவை செய்வதேயாகும். ஹிண்டன்பர்க் ஆய்வறிக்கை இவ்வுண்மையைச் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபித்துள்ளது. தவிரவும், ஜிடிபி அறிக்கையும், பேரழிவாகிய பசியின் எதார்த்த உண்மை மற்றும் சரியும் சுகாதாரக் குறியீடுகள் குறித்து ஐநா வளர்ச்சி திட்ட (UNDP) அறிக்கை வெளிப்படுத்துகிறது. உலகின் ஐந்தாவது பெரிய பொருளாதாரத் தரத்தில் இருக்கும் இந்தியா, அதே நேரம் மனித வளர்ச்சிக் குறியீட்டில் (HDI, ஹூமன் டெவலப்மெண்ட் இன்டெக்ஸ்) 132வது தரவரிசையில் உள்ளது. இவற்றிலிருந்து தேசம் எத்திசையில் செல்கிறது என்ற போக்கு தெளிவாகிறது.

    இதுவரை ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி)யைப் பொருத்தவரை அது, நாடு முழுவதும் ஓர் ஆண்டில் நிதி சார்ந்த, அனைத்து இறுதி பண்டங்கள் மற்றும் சேவைகளின் சந்தை மதிப்பு உற்பத்தியாக இருந்தது. ஜிடிபி-யை மொத்த மக்கள் தொகையால் வகுக்கக் கிடைப்பது ஒரு ‘தனிநபர் சராசரி ஜிடிபி.’ இவ்வாறு ஜிடிபி மற்றும் தனிநபர் சராசரி ஜிடிபி இவ்விரண்டும் ஒரு நாடு தனது மக்கள் தொகைக்கான தேசத்தின் பொருளாதார உற்பத்தியின் அளவீடுகள் ஆகும். எனவே இந்த எண்கள் மக்களின் பொருளாதார நலவாழ்வின் முழுமையான அளவீடு ஆகாது. அது ஒரு சராசரி எண், அது வெளிப்படுத்தும் உண்மைகளைவிட மூடி மறைப்பதே அதிகமானதாகும். எனவே நலமாக இருப்பது அல்லது ஜிடிபி அதிகரிப்பு என்பது மனிதனின் நலம் மற்றும் வளர்ச்சியைச் சுட்டிக் காட்டாது.

    அமெரிக்காவின் பெரும் பொருளாதாரப் பின்னடைவின்போது (கிரேட் டிப்ரெஷன்) அமெரிக்கத் தேசிய வருவாய் 1932ல் எந்த அளவு சென்றது என்பதைப் புரிந்து கொள்ள

அமெரிக்கப் பொருளாதார நிபுணர் சிமோன் குஸ்நெட்ஸ் ஜிடிபி முறையைக்
கண்டுபிடித்தார். இரண்டாவது உலகப் போரின்போது
ஜான் மெனார்டு கெயின்ஸ் நவீன ஜிடிபி வரையறை விளக்கத்தை மேம்படுத்தினார். அவரது ஜிடிபி கணக்கிடும் முறையில் தேசத்தின் வருவாயில் அரசு செலவிடுவதும் சேர்க்கப்பட்டது. இந்த முன்னெடுப்பு போர்க்காலத் தேவைகளால் இயக்கப்பட்டது. விரைவில் அந்த முறை ஏற்கப்பட இன்று வரை அதுவே தொடர்கிறது.

            எனவே, தொழிற் புரட்சி காலத்தில் பிறந்து, நவீன முதலாளித்துவத்தை ஆதரிக்கும்

தியரியாக மேம்படுத்தப்பட்ட ஜிடிபி தற்போது, புதிய தாராளமய காலத்தின் எந்த அளவுக்கு ஏழ்மையையும் இல்லாமையையும் மறைக்க முடியுமோ அதற்குப் பயன்பட்டு வருகிறது. மொத்த உற்பத்தி எவ்வளவு என்பதில் மட்டுமே அக்கறைபடும் ஜிடிபி, உற்பத்தியின் பலன்களை யார் அறுவடை செய்கிறார்கள் என அக்கறை படுவதில்லை. மேலும் அதுவே பொருளாதார அந்தஸ்து எந்த மட்டத்தில், ‘சூப்பர் பவரா’, ‘நடுத்தர’ அல்லது உருவாகிவரும் பவரா என்பதைத் தீர்மானிக்கிறது. 21ம் நூற்றாண்டிலும்கூட வளர்ந்த மற்றும் வளர்ந்துவரும் நாடுகளுக்கு இடையில் வேறுபாடு ஜிடிபி-யைக் கொண்டு முடிவு செய்யப்படுகிறது. ஜிடிபி அடிப்படையில் பிரிக்ஸ் நாடுகள் அமைப்பு உருவாக்கப்பட்டது. தனிநபர் சராசரி ஜிடிபி ஒத்து இருக்கும் இரண்டு நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தி குறியீட்டு தர மதிப்பெண் நிலையில் மட்டும் எப்படி வேறு வேறாக முடிகிறது? உதாரணத்திற்கு மனித வளர்ச்சிக் குறியீடு (HDI)   தரவரிசையில் அமெரிக்கா 21வது இடம், ரஷ்யா 52, சீனா 79, பிரேஸில் 87, இந்தியா 132. இந்த முரண்பாடுகள் அரசுகள் வகுக்கும் கொள்கைகளின் முன்னுரிமை குறித்து விவாதத்தை எழுப்ப முடியும்.

    பொருளாதார வளர்ச்சி மட்டுமே ஒரு நாட்டின் வளர்ச்சி ஆகாது; நாட்டு மக்கள் மற்றும் அவர்களின் ஆற்றல்கள் நாட்டின் வளர்ச்சியை அளவிடுவதற்கு முக்கிய காரணியாக இருக்க வேண்டும். அந்த இலட்சியத்தை நோக்கமாகக் கொண்டு 1990ல் ஐக்கிய நாடுகள், மனித வளர்ச்சிக் குறியீடு  (HDI, ஹூமன் டெவலப்மெண்ட் இன்டெக்ஸ்) என்ற அளவீட்டு முறையை உருவாக்கியது. ஹெச்டிஐ தலைப்பின்கீழ் நான்கு பிரதானமான வளர்ச்சி பகுதிகள் உண்டு. அவை, குழந்தைகளின் சராசரி பள்ளி ஆண்டுகள், எதிர்பார்க்கப்படும் பள்ளி ஆண்டுகள், பிறந்த குழந்தைகளின் உயிர் வாழ்க்கை எதிர்பார்ப்பு மற்றும் ஒட்டு மொத்த தனிநபர் தேசிய வருவாய். இந்த அனைத்துச் சுட்டெண்களில் (இன்டிகேட்டர்ஸ்) 2022ம் ஆண்டில் 191 நாடுகளில் இந்தியாவின் தரவரிசை 132. அதற்கு முந்தைய ஆண்டின் 130வது இடத்திலிருந்து மேலும் இரண்டு இடங்கள் சரிந்து 132வது இடம். எதார்த்தம் இவ்வாறு இருக்க அதே நேரத்தில் நாட்டின் பிரதமர் 5 லட்சம் கோடி டாலர்கள் பொருளாதாரமாக இந்தியாவைக் கட்டி அமைத்து வருவதாக டமாரமடிப்பது பெரும் வியப்பு. இது வளர்ச்சியை நோக்கமாகக் கொண்டது இல்லை என்பது வெளிப்படை. 

விடுதலையே வளர்ச்சியாக

       பொருளாதார அறிஞர் அமர்தியா சென் ‘வளர்ச்சி என்பது விடுதலையாக’ (டெவலப்மெண்ட் அஸ் ஃப்ரீடம்) என்ற தமது நூலில் கூறுவார்: விடுதலை என நான் குறிப்பிடுவது வளர்ச்சி

குறித்த பரந்த கண்ணோட்டத்தைப் படம் பிடிக்கும் முயற்சியாகும்; அது வழக்கமான, குறுகிய முறையில் வரையறுக்கப்படும் பொருளாதார இலக்குகளுக்கு மாறானது. இந்தச் சுதந்திரம் ஒரு வகையில் ‘பெரிதினும் பெரிது கேட்கும்’ பேராசை இலக்கு; காரணம், இதில் மனித ஆற்றல்களின் சாத்தியப்பாடுகளை –நோயிலிருந்து விடுதலை மற்றும் கல்வியிலா அறியாமையிலிருந்து விடுதலை போன்ற சாத்தியப்பாடுகளை– உள்ளடக்கியது: இதில் அடையும் வளர்ச்சி மேம்பாடு தனிநபர்களுக்கு நன்மை, அதே நேரதில் சமூகங்களுக்கும் நன்மையானதாகும்

பரிதாபகரமாக இந்தியா 132வது இடத்தில்

       2021ல் இந்தியாவின் மனித வளர்ச்சிக் குறியீட்டின் நான்கில் மூன்று காரணி அளவீடுகளில் வீழ்ச்சி அடைந்துள்ளது, ஒன்றில் மட்டும் சிறிதளவு முன்னேற்றம். கல்வியைப் பொருத்தவரை இரண்டு காரணிகள். ஒன்று எதிர்பார்க்கப்படும் கல்வி ஆண்டுகளில் வீழ்ச்சி, இருப்பினும் சராசரி பள்ளி ஆண்டுகளில் உயர்வு காணப்படுகிறது. பின்னர் வாழ்க்கைத் தரம் உள்ளது –அதில்தான் ஒட்டுமொத்த தேசிய வருமானம் (GNI), தனிநபர் வருமானம் வருகிறது. இந்தியா இதில் 6681லிருந்து 6590 டாலராகச் சரிந்துள்ளது, அதாவது வருமானம் குறைந்துள்ளது.

       எதிர்பார்க்கப்படும் பள்ளி ஆண்டுகள் 11.9 ஆண்டுகளை ஒப்பிட, சராசரி பள்ளி ஆண்டுகள் மனித வளர்ச்சி குறியீட்டின்படி வீழ்ச்சி அடைந்து 6.7 வருடங்களாக உள்ளது. இந்தியக் குழந்தைகள் சராசரியாகப் பள்ளிகளில் சென்று படிப்பது வெறும் ஆறு ஆண்டுகளுக்குச் சற்று கூடுதலாக இருப்பதைச் சமாதானம் கூறி மன்னிக்க முடியாதது. ஸ்ரீலங்காவில் 10ஆண்டுகளுக்கும் அதிகமாகவும், உலகின் பெரும்பாலான வளர்ந்த நாடுகளில் இந்தச் சராசரி 12 ஆண்டுகளுக்கு அதிகமாகவும் உள்ளது. பெருந்தொற்று குழந்தைகளின் கல்வியைக் கடுமையாகப் பாதித்த பிறகும் கல்விக்கு அரசு செலவிடுவது வெட்டப்படுகிறது. கல்வி என்பது உற்பத்தி ஆற்றல், அது மனித மூலதனத்தை உற்பத்தி செய்கிறது. இந்தியா கல்விக்குச் செலவிடுவது மிகக் கூடுதலாக அதிகரிக்கப்பட வேண்டிய தேவை உள்ளது. பாஜக 2014 தேர்தல் அறிக்கை ஜிடிபியில் 6 சதவீதம் கல்விக்குச் செலவிடப்படும் என வாக்குறுதி அளித்தது. ஆனால் அதன் ஆட்சியின் சாதனை கல்விக்கு மூன்று சதவீதத்திற்குக் குறைவாகவே செலவிடுவதாக உள்ளது. கோவிட் 19 பெருந்தொற்று கல்வியில் ஏற்படுத்திய சீர்குலைவு மாணவர்களின் கல்வியில் இழப்பு மற்றும் பள்ளி இடைநிற்றல் விகிதம் அதிகரிப்பு எனக் கடுமையாக பாதித்துள்ள நிலையில் 2022 பட்ஜெட்டில் கல்விக்கான ஒதுக்கீடு ரூ.6ஆயிரம் கோடி வெட்டபடுவது எவ்வளவு குரூரமானது?

       கேந்திரமான பகுதிகளான சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயம் இவற்றிற்குப் பட்ஜெட் நிதி ஒதுக்கீடு கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தொடர்ந்து குறைக்கப்பட்டு வருகிறது. இப்பிரிவுகளில் கரோனா கடும் எதிர்மறை விளைவுகளை ஏற்படுத்திய பிறகும் அரசு இப்பிரிவுகளில் செலவிடுவது மட்டும் வெட்டிக் குறைக்கப்படுகிறது.

வேலை வாய்ப்பு இல்லாத வளர்ச்சி

    ஒரு சதவீத பொருளாதார வளர்ச்சியுடன் வேலைவாய்ப்பு விகிதம் எவ்வளவு சதவீதம் மாற்றமடைகிறது என்ற அளவீட்டை வேலைவாய்ப்பு நெகிழ்ச்சி (எம்ப்ளாய்மெண்ட் எலாஸ்டிசிட்டி) என்று கூறுவர். இந்திய ரிசர்வ் வங்கி 2022ம் ஆண்டில் நாட்டின் வளர்ச்சி 8சதவீதமாக மதிப்பீடு செய்துள்ளபோது வேலை கிடைக்கும் விகிதம் வெறும் 0.01 சதவீதமாக உள்ளது. அதன் பொருள், பொருளாதாரம் வளர்ந்தாலும் எம்ப்ளாய்மெண்ட் எலாஸ்டிசிட்டி வீழ்ச்சி அடைகிறது என்பதே. ஒரு பொருளாதாரம், அதன் வளர்ச்சி நிகழ்முறையில் தனது மக்களுக்கு எந்த அளவு வேலைவாய்ப்புகளை உண்டாக்கித் தரும் திறன் உடையதாக இருக்கிறது என்பதை அது சுட்டிக் காட்டுகிறது. இந்த வகையில், குறிப்பாக உலகளாவிய போட்டி நடைபெறும் முக்கியமான ஆண்டுகளில் இந்தியா மிக மோசமாகச் செயல்படுகிறது.

முன்னுதாரண மாற்றமே இத்தருணத்தின் தேவை

    சுழன்றடிக்கும் வேலையில்லா திண்டாட்டத்துடன் போராட இப்போதைய தேவை வேலைவாய்ப்பு உருவாக்கமே. அதற்குத் தேவை ஒரு கொள்கை மாற்றம், அதனை பாஜக ஒருபோதும் புரிந்து கொள்ளத் தயாராக இல்லை. ஏழ்மையைக் குறைக்க வேலைவாய்ப்பை உருவாக்கும் “கூலி பொருள் முதலீடு மாடல்” என்ற கோட்பாட்டு பொருளாதாரத் தியரிகள் 

உள்ளன. (அதற்கு மாறானது மூலதன முதலீடு, தொழிலைப் பெருக்கப் பயன்படுமே தவிர, உழைப்பாளிகளின் நுகர்வுக்கானது அல்ல.) கூலி பொருள் முதலீடு மாடல் இந்தியாவில் இரண்டாவது, மூன்றாவது ஐந்தாண்டு திட்ட முக்கிய காலகட்டத்தின்போது அமலாக்கப்பட்டது. ஆனால் தற்போது மூலதனப் பொருட்களில் (கேபிடல் குட்ஸ்) திரட்சியாகக் குவிக்கப்படும் முதலீடு வளர்ச்சியைப் பலூனாக ஊதிப்பெருக்கிக் காட்டுவதைத் தவிர, வேலைவாய்ப்பை உருவாக்குவதில்லை. இந்தியச் சமூக பொருளாதாரக் கட்டமைப்பில் மேம்படுத்தப்பட்ட நேருவின் வளர்ச்சி மாடலை நோக்கி ஓர் முன்னுதாரணமான மாற்றமே இன்றைய பிரச்சனைகளைத் திறன்வாய்ந்த முறையில் தீர்க்க முடியும்.

    சமூகக் குறியீடு சுட்டிகள் இந்தியா துன்பத்தில் உழல்வதைக் காட்டுகின்றன. மகிழ்ச்சிக் குறியீடு (ஹெப்பினஸ் இன்டெக்ஸ்) தரவரிசையில் இந்தியா பரிதாபகரமான மதிப்பெண்களுடன் மீண்டும் ஒருமுறை வீழ்ச்சி அடைந்துள்ளது. தற்கொலை விகிதம் அதிகரிக்கிறது. தேசிய குற்ற ஆவண பீரோ (NCRB) தகவல்கள்படி விவசாயிகள் மத்தியில் தற்கொலை என்பதில் தற்போது அமைப்பு சாரா பிரிவு தொழிலாளர்களின் தற்கொலைகளும் சேர்ந்துள்ளதாகக் கூறுகிறது.

வறுமை குறித்த ஆய்வின் வறுமை         

    இந்திய வறுமை விகிதம் குறித்த உண்மையான நிலையைப் படம் பிடித்துக் காட்ட முறையான கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை. பன்முகப் பரிமாண ஏழ்மை 27.9 சதவீதம் நிலவுவதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன, தீவிர பன்முகப் பரிமாண ஏழ்மை 8.8 சதவீதம். இந்த விகிதமே உலகத் தரத்தின்படி மிக அதிகம். உலகில் இந்தியா மிகக் கடுமையான இல்லாமையில் இருப்பவர்களின் வாழ்விடமாக உள்ளது. கொள்கையில் சாரமற்ற வறட்சியே ஏழ்மை உண்டாக்குகிறது. தேடிக் கண்டு பிடித்தால் இதற்கான மிக முக்கிய காரணம், சமூகப் பிரிவு மற்றும் உற்பத்தி பிரிவில் செலவிடுவதில் போதாமையே ஆகும். மருத்துவச் சுகாதாரச் செலவுகளால் ஏழ்மை நிலை மோசமடைகிறது என்கிறது ஓர் ஆய்வு. சாதாரணமான பொது மக்கள் 70லிருந்து 75 சதவீதம் உடல்நலனுக்காக நேரிடையாக தன் 'கையிலிருந்தே மருத்துவச் செலவுகள் செய்ய' நேர்வது (மருத்துவக் காப்பீடு போன்ற வசதி இல்லாமல்) அவர்களின் வறுமையை மேலும் தீவிரமாக்குகிறது. இதற்கு முக்கிய காரணம் பொது சுகாதாரத்தில் அரசு பற்றாக்குறையாகச் செலவிடுவதேயாகும்.

            ஜிடிபி மற்றும் மனித வளர்ச்சிக் குறியீடு இடையேயான போக்கு குறித்த ஒட்டுமொத்த பருந்துப் பார்வை, வளர்ச்சி குறித்த கதையாடலில் சாதாரண மனிதன் ஓர் அங்கமாக இல்லை

என்ற உண்மையை அம்பலப்படுத்துகிறது. “சராசரியாக நான்கடி ஆழமுள்ள ஆற்றைத் தாண்டாதே” (ஆழம் தெரியாமல் காலை விடாதே) என்ற பழமொழி, ஜிடிபி போன்ற தரவுகளின் சராசரிகளின் தன்மையை நிரூபிக்கப் போதுமானது. ஏனெனில் சராசரி என்றால் எல்லா இடத்திலும் ஆழம் நான்கடி என்பதில்லை. அதுபோல ஜிடிபி வளர்ச்சி கடைக்கோடி மனிதனின் வாழ்வில் பிரதிபலிப்பதில்லை. எனவே ஜிடிபி, இந்தியா போன்ற ஒரு நாட்டின் மனித வளர்ச்சியின் (நல்ல உணவு, குடிநீர், வாழ்விடம், சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்புப் போன்ற) அத்தியாவசிய முக்கிய அம்சங்களைக் குறைப்பதாக முடிகிறது. ஆட்சியின் அவலங்கள், தோல்விகளைத் தரைவிரிப்பின் அடியில் கூட்டித் தள்ளுவதில் ஜிடிபி போன்ற புள்ளி விபரங்கள் பாஜகவுக்கு ஒரு வரப் பிரசாதமாக உள்ளது.

வளர்ச்சியில் மனித வாழ்க்கை முக்கியம்

ஏழ்மை மற்றும் பஞ்சங்கள்’ என்ற தமது நூலில் அமர்தியா சென், ‘நகர்ப்புற மேட்டுக்குடிகளுக்காகப் பணியாற்றி கிராமப்புற உழைப்பாளிகளைப் புறக்கணிக்கும்’ ஒரு பொருளாதாரத்தின் அபாயங்களைப் பரிசீலிப்பார். ஜிடிபி வளர்ச்சி அடைவதால் அது, ஜி-20 போன்ற உலக ஆளுகைகளின் மேல் மட்டத்தில் இந்தியாவை வைக்க உதவிடலாம், ஆனால் அது மக்கள் சேவை ஆற்ற வேண்டிய பொருளாதாரம் அவர்களைப் பலி கொடுப்பதாகும். அத்தகைய கொள்கை வகுப்பு இன்னும் பல மக்களைத் தொடர்ந்து கீழே தள்ளி, கை விட்டுவிடும் –இந்தப் புறக்கணிப்பு, பொருளாதாரம் அனைவரது நன்மைக்காக என்று மாறி மனித வாழ்வுகளில் நீண்ட காலத் தாக்கங்களை ஏற்படுத்தக்கூடிய மாறக்கூடிய அம்சங்களில் கவனம் செலுத்தி, சிக்கலான பிரச்சனைகளைத் தீர்க்க முன்வரும்வரை தொடரவே செய்யும்.   

மாற்றத்தை யார் ஏற்படுத்துவது?

      (5 டிர்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரம், உலகில் ஐந்தாவது பெரிய பொருளாதாரம் போன்று) ஜிடிபியின் வியப்பூட்டும் வளர்ச்சி எண்களைக் கண்டு ஏமாறாமல், மக்கள் உண்மையான வளர்ச்சி என்ன என்பதைப் பற்றிய புரிதல் உணர்வைத் திரட்டுவது முக்கியமானது. தாறுமாறான எண்களை இதயத்தில் வைக்காமல், அங்கே மக்களை வைத்து, மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சி மாடலைக் கண்டறிய வேண்டிய நேரம் வந்து விட்டது.

      ஜிடிபி அதிகரிப்பிற்கும், மனித வளர்ச்சி குறியீட்டிற்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைத்து இணைக்க, சுகாதாரம், கல்வி போன்ற சமூகப் பிரிவுகளில் அரசுகள் எவ்வளவு தூரம் முதலீடு செய்கின்றன, அந்த முதலீடுகள் எவ்வாறு திறமையான முறையில் ஆக்கபூர்வமான பொருளாதார நடவடிக்கைகளாக மாற்றப்படுகின்றன என்பதில் அதற்கான தீர்வு உள்ளது –அப்படிச் செய்தால்தான் மனித வளர்ச்சிக் குறியீடு மேம்பாடு அடைவது, மேலான ஜிடிபி வளர்ச்சிக்கும் இட்டுச் செல்லும்.

    எனவே, நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் செழுமைக்கும் உண்மையான வழி தேசிய வருமானத்தை அதிகரிப்பது, வருமான இடைவெளியைக் குறைப்பது, பாலின அசமத்துவத்தைக் குறைப்பது, மருத்துவ சுகாதாரம் மற்றும் கல்வி தரங்களை மேம்படுத்துவது, தனிநபர் சுதந்திரத்தைப் பாதுகாப்பது என்பவற்றை அடிப்படையாகக் கொண்டு அரசுகள் செயல்படுவதேயாகும்.

    மேற்கண்டவற்றைச் சாதிக்க அரசியல் உறுதிப்பாடு தேவைப்படுகிறது, அது அரசியல் சிந்தனை கோட்பாட்டுகளுடன் பிரிக்க முடியாதபடி தொடர்பு உடையது. இந்த (மக்கள் மைய) வளர்ச்சி மாடலுக்கு நேர் எதிரிடையானது பாஜக அரசியல் கருத்தோட்டம். அந்தக் கட்சியின் கார்ப்பரேட் ஆதரவு மற்றும் முற்றதிகாரச் சிந்தனை கோட்பாடு அடிப்படையில் ஜனநாயக விரோதமானது. இன்று ஜனநாயக ஆதார அடித்தளங்கள் சீர்குலைக்கப்படுவது அதிகரித்து வருவதை இந்தியா பார்த்து வருகிறது. செயல்படும், செழித்து வளரும் ஜனநாயகம் மட்டுமே மக்களை மையமாகக் கொண்ட வளர்ச்சியைக் கொண்டு வர முடியும்!  

--நன்றி : நியூஏஜ் (பிப்.19 --25)

--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்

 

             

Tuesday 7 February 2023

அரசியலமைப்புச் சட்ட முன்னுரைகள் (Preambles)

 

                           அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாப்போம், தேசத்தைப் பாதுகாப்போம்

--கே சாம்பசிவ ராவ்

சிபிஐ தெலுங்கானா மாநிலச் செயலாளர்

            முன்னுரைகள் (Preambles) அரசமைப்புச் சட்டத்தின் சாரம், அதன் அடிப்படை கட்டமைப்பு. அதில் சுட்டிக் காட்டப்படும் நோக்கங்கள் அரசமைப்புச் சட்டம் மற்றும் தேசத்தின் இதயம். மக்களே இறுதி அதிகாரம் உடையவர்கள் என்று கூறும் அரசமைப்புச் சட்டமே அவர்களிடமிருந்து உருவானதுதான். உண்மையில் அதன் முன்னுரை, ‘அனைத்துக் குடிமக்களுக்கும் சமூக, பொருளாதார மற்றும் அரசியல் நீதியைப் பெற்றுப் பாதுகாக்க, கருத்தை வெளிப்படுத்தும் சுதந்திரம், கருத்தைப் பின்பற்றும் நம்பிக்கை, சமய நம்பிக்கை மற்றும் வழிபாட்டு சுதந்திரம், அந்தஸ்து மற்றும் வாய்ப்புகளில் சமத்தன்மை முதலியன கட்டாயமான தேவை’ எனப் பிரகடனம் செய்கிறது.

முன்னுரைத் தீர்மானம்

            அரசமைப்புச் சட்டத்தின் முன்னுரை அறிவிக்கிறது, “இந்திய மக்களாகிய நாங்கள்,

இந்தியாவை (இறையாண்மை, சோசலிச, மதச்சார்பற்ற, ஜனநாய) குடியரசாக அமைக்க இறையாண்மையுடன் தீர்மானித்து, அதன் அனைத்துக் குடிமக்களுக்கும்,

சமூக, பொருளாதார, அரசியல் நீதி;

எண்ணம், பேச்சு, கொள்கை நம்பிக்கை, சமய நம்பிக்கை மற்றும் வழிபாட்டுச் சுதந்திரம்;

அந்தஸ்து மற்றும் வாய்ப்பில் சமஉரிமை … இவற்றைப் பாதுகாக்கவும்,

அவர்கள் அனைவர் மத்தியில் சகோதரத்துவத்தை மேம்படுத்தி தனிநபர் கண்ணியத்தையும், தேசத்தின் ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டை உறுதிப்படுத்தவும்;

எங்களது அரசியலமைப்பு அசம்பளியில் இந்த 1949 நவம்பர் இருபத்தி ஆறாம் நாள் உறுதியுடன் இதன்படி இந்த அரசமைப்புச் சட்டத்தை ஏற்று, சட்டமியற்றி எங்களுக்கு நாங்களே வழங்கிக் கொள்கிறோம்”

    இவ்வாறுதான் இந்த நாட்டின் மக்கள் அரசமைப்புச் சட்டத்தை ஏற்று, சட்டமியற்றி தங்களுக்குத் தாங்களே வழங்கிக் கொண்டனர். நரேந்திர மோடி தலைமையில் பாஜக கட்சி ஒன்றியத்தில் அதிகாரத்திற்கு வந்த பிறகு இந்தத் தேசம் எவ்வாறு செல்கிறது என்பதை நாம் பரிசீலித்துக் காண்போம்.

    அரசமைப்பு சாசனம் அதன் 74வது ஆண்டில் நுழையும்போது நுழைவாயிலான முன்னுரையின் நோக்க இலக்குகளைப் பரிசீலிப்போம்; அது எவ்வாறு அமலாக்கப்படுகிறது, இன்று ஆட்சியில் உள்ள பிரதமர் நரேந்திர மோடி அரசமைப்புச் சட்டத்திற்கு எந்த அளவுக்கு மரியாதை தருகிறார் என்பதையும் பரிசீலிப்போம். மேலும் எவ்வாறு அரசமைப்புச் சட்டம் பிய்த்தெறியப்படுகிறது, அதன் அடிப்படைகளில் ஒன்றான அடிப்படை உரிமைகள் எவ்வாறு அழிக்கப்படுகின்றது, அதன் வழிகாட்டுக் கோட்பாடுகள் அமலாக்கப்படுகிறதா என்பதுடன் சேர்த்து ஆராயலாம். அரசமைப்புச் சட்ட முகப்பு நோக்கங்களின் இன்று சீர்குலைக்கப்படும் நிலையைக் காண்போம்.

1.         இறையாண்மை:

அடிமைத்தனத்தின் நுகத்தடியிலிருந்து இந்தியாவை விடுவிக்கவும், சுதந்திரமான தன்னாட்சி, தன்னிறைவு மற்றும் இறையாண்மையைச் சாதிக்கத் தங்கள் நல்லுயிர்களை ஈந்த தியாகிகள் எண்ணிறைந்தோர் நம் வரலாற்றில் உண்டு.  

1947 விடுதலைக்கு முன்பு நம் நாட்டில் வெறும் ஐந்து பொதுத்துறை நிறுவனங்கள் மட்டுமே இருந்தன. சில ஆண்டுகளுக்கு முன்பு அந்த எண்ணிக்கை சுமார் 400

பொதுத் துறை நிறுவனங்களாக அதிகரித்தன. மோடி பிரதமராக வருவதற்கு முன்பே இந்தியா உலகின் ஐந்து பெரும் பொருளாதாரங்களில் ஒன்றாக இருந்தது, சுய சார்புப் பாதையைப் பின்பற்றியது. இன்றைய ஒன்றிய அரசு அதானி, அம்பானி, கார்ப்பரேட் குழுமங்கள் போன்ற மனிதர்களின் நலன்களுக்குச் சேவை செய்ய சட்டங்களைக் கொண்டு வருகிறது; ஒட்டு மொத்த தேசத்தை விற்பனை செய்வதன் ஒரு பகுதியாக நமது இறையாண்மை மற்றும் சுயசார்பைக் காவு கொடுத்து, முன்னோர் கடுமையாக உழைத்து ஈட்டிய பொதுத்துறை நிறுவன அலகுகளை விற்று வருகிறது.

அரசு கேந்திரமான நான்கு பகுதிகளை அடையாளம் கண்டுள்ளது. அவற்றில், அணுசக்தி, விண்வெளி மற்றும் பாதுகாப்பு; போக்குவரத்து மற்றும் தொலைத் தொடர்புகள், எரிசக்தி, பெட்ரோலியம்; நிலக்கரி மற்றும் பிற தாதுகள்; வங்கிகள், காப்பீடு மற்றும் நிதி சார்ந்த சேவைகள். இந்த நான்கு கேந்திரமான பிரிவுகளில் மட்டுமே அரசு தன் வசம் குறைந்தபட்ச அளவே பங்கேற்றுச் செயல்படும். இவை நான்கிலும்கூட பெரும்பான்மை பங்குகளும், பிற பொதுத்துறை அலகுகள் முழுமையும் நாடாளுமன்றம் நிறைவேற்றிய சட்டத்தின்படி விற்பனைக்கு வைக்கப்படும். 2007 –08ம் ஆண்டில் அமெரிக்காவில் ஏற்பட்ட பொருளாதாரச் சரிவைத் தொடர்ந்து உலகம் முழுமையும் ‘பொருளாதார உருகுநிலை’ (மெல்ட் டவ்ண்) என்ற பொருளாதாரப் பின்னடைவால் பாதிக்கப்பட்டு வரும்போது அதன் தாக்குதலை நமது பொருளாதாரம் மட்டுமே சமாளித்து நின்றதற்கு ஒரே காரணம் நமது பொதுத் துறை நிறுவனங்களே. தற்போது அனைத்து பொதுத் துறை நிறுவனங்களிலும் பங்கு விற்பனை செய்வது, தனியார்மயமாக்குவது என்ற பாஜகவின் பொருளாதாரக் கொள்கைகள் நாட்டிற்கு அழிவை ஏற்படுத்துவதுடன் இந்திய இறையாண்மைக்கும் பெரும் ஆபத்தாகி உள்ளது.

2.         சோஷலிசம், மதச்சார்பின்மை:

நேரு சகாப்தத்தில் அறிமுகம் செய்யப்பட்ட கலப்புப் பொருளாதாரம் நாட்டை முன்னோக்கிச் செலுத்த உதவியது. இந்திரா காந்தி ஆட்சியில் 1976ல் அரசமைப்புச் சட்ட 42வது திருத்தத்தின் மூலம் அரசமைப்புச் சட்ட

முன்னுரையில் மதச்சார்பின்மை மற்றும் சோஷலிசம் என்ற பதங்கள் இணைக்கப்பட்டன. வகுப்பு நல்லிணக்கம் மற்றும் மதச்சார்பின்மை கொள்கையுடன் இந்தியா துடிப்புடன் செயல்பட இந்தச் சட்டத் திருத்தம் அறிமுகம் செய்யப்பட்டது. முன்னுரையின் இந்த நோக்கங்களைப் பின்னடையச் செய்து தலைகீழாக மாற்றவும், நாட்டைப் பன்னாட்டுக் கம்பெனிகளைச் சார்ந்து இருப்பதாக மாற்றவும் இப்போது பாஜக அரசு முயற்சி செய்கிறது. என்டிஏ அரசு ‘சோஷலிச’ மற்றும் ‘மதச்சார்பற்ற’ என்ற வார்த்தைகளை முன்னுரையிலிருந்து நீக்கிக் கைவிட்டுவிட மிக நைச்சியமாக முயற்சி செய்கிறது.

அரசமைப்புச் சட்டத்தின் இடத்தில் மனுஸ்மிருதியைக் கொண்டு வந்து வைத்து மாற்றுவதற்கு மோடி ஆர்வமுடன் காத்திருக்கிறார். அவர் அம்பேத்கரையும் அரசமைப்புச் சட்டத்தையும் புகழ்கிறார், ஆனால் அதே நேரத்தில் மனு ஆதரித்த ‘வர்ண வ்யவஸ்தா’ (நான்கு வருண சமூக அமைப்பு முறையை) அமலாக்கவும் முயற்சி செய்கிறார் –அதைத்தான் ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஹெக்டேவார், கோல்வால்கர் போன்றவர்கள் தீவிரமாகப் பிரச்சாரம் செய்தனர். ஒன்றியத்தின் ஆட்சியாளர்கள், தேசப் பிதா காந்திஜியைப் படுகொலை செய்த கொலையாளி நாதுராம் கோட்சேவுக்கு ஆலயங்கள் கட்ட மக்களை உற்சாகப்படுத்துகின்றனர். பாஜக தலைவர்கள் மறுபுறமோ மிக விரிவாகக் காந்திஜியின் செய்திகளை மேற்கோள் காட்டி மகாத்மாவைக் கடத்த முயற்சி செய்கிறார்கள்.

    தங்கள் வாக்கு அரசியலுக்காக அவர்கள் மாபெரும் மனிதநேயர் விவேகானந்தரையே கடந்தவும் துணிந்தவர்கள். மனித மதிப்புகள் மற்றும் சமூக நல்லிணக்கக் கருத்துகளுக்காக

அறியப்பட்ட விவேகானந்தர், சாதி இனம், நம்பிக்கை மற்றும் மதம் போன்றவற்றைக் கடந்து அன்பிற்குரிய பாரதப் புதல்வராவார். புகழ்பெற்ற சிக்காகோ உரையில் விவேகானந்தர் பெருமிதத்துடன் பிரகடனம் செய்தார், ‘நான் பாரதம் என்று அழைக்கப்படும் தேசத்தைச் சார்ந்தவன்; எனது தேசம் உலகெங்கிலும் இருந்து அவரவர் சொந்தத் தாய் நாடுகளில் கொலைகாரத் தாக்குதல்களைச் சந்தித்த மக்கள் இருக்க இடம் கோரி அகதியாக வந்தபோது அந்த மக்களை அரவணைத்துக் கொண்ட தேசம் எங்கள் தேசம்’ என்று முழங்கினார்.

மதச்சார்பின்மைக்காக நின்ற சத்திரபதி சிவாஜியைக்கூட அபகரிக்க முயற்சிகள் நடந்தன. சிவாஜி தனது இராணுப்படையின் தலைமை தளபதியாக ஓர் இஸ்லாமியரை வைத்திருந்தார்,

படை வீரர்களில் மூன்றில் ஒரு பங்கு முஸ்லீஸ்களைத் தேர்ந்தெடுத்தார். அதுவே அவரது சமூகக் கட்டமைப்பின் பண்பு. சமீபத்தில் இந்து மதவாதிகள் என அழைத்துக் கொள்பவர்கள் ‘இந்து தர்ம சம்சத்’ (நாடாளுமன்றம்) மாநாட்டை அகமதாபாத்தில் கூட்டினர்; அதில் தற்போதைய அரசமைப்புச் சட்டம் மனுஸ்மிருதியைக் கொண்டு மாற்றப்பட வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றினர். மேலும் தற்போதைய தலைநகர் டெல்லி என்பதற்கு மாறாக, உத்தரப்பிரதேசத்தின் காசி (வாரணாசி)யைத் தலைநகராக்க வேண்டும் எனவும் தீர்மானம் நிறைவேற்றினர். அரசு இவர்களுக்கு எதிராகக் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என நீதிமன்றம் பணித்தாலும் ஒன்றிய அரசு அந்த உத்தரவைச் சாதாரணமாகப் புறக்கணித்தது.

            மற்றொரு நிகழ்வில் கர்ப்பிணியான ஒரு முஸ்லீம் பெண்ணைப் பாலியல் பலாத்காரம் செய்து, மூன்று வயது குழந்தை உட்பட 7பேரைக் கொன்றதற்காக ஆயுள் தண்டனை பெற்ற 11 கேடு கெட்ட குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட்டனர். அவர்களது கருணை மனுவைப் பரிசீலித்த குஜராத் மாநில அரசு, அந்தக் குற்றவாளிகள், ‘நல்ல நடத்தை உள்ளவர்கள்’ என்று கூறி அனைவரையும் விடுதலை செய்து விட்டது. விடுதலையானவர்களுக்குப் பிரம்மாண்ட ஊர்வல வரவேற்பும் மரியாதையும் அளிக்கப்பட்டது. அரசமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க வேண்டிய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அரசமைப்புச் சட்ட முகவுரையிலிருந்து மதச்சார்பின்மை மற்றும் சோஷலிசம் வார்த்தைகளை நீக்க வேண்டும் என்று வெளிப்படையாக அறிவிக்கிறார்.

3.    ஜனநாயகம்

அமெரிக்கக் குடியரசுத் தலைவர் ஆப்ரகாம் லிங்கன் புகழ்பெற்ற அவரது உரையில், ‘‘மக்களின் அரசு, மக்களால் அரசு, மக்களுக்கான அரசு இம்மண்ணில் இருந்து அழியலாகாது” என்று வற்புறுத்தினார். ஜனநாயகத்தில் அதிகாரம் மற்றும் மாற்று எதிர்க்கருத்து இரண்டும் ஒன்றுடன் ஒன்று பின்னிப் பிணைந்தது என்பதே இதன் பொருள். அதுவே ஜனநாயகத்தின் அழகு. ஆட்சி முறைகளில் ஜனநாயகமே ஆகச் சிறந்தது என வரலாறு நிரூபித்திருக்கிறது.

மோடி ஆட்சிக்கு வந்ததற்குப் பிறகு, ஜனநாயகத்தின் பொருளையே மாற்றிவிட்டார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளை, ஜனநாயகம் என்ற போர்வையில், கவிழ்ப்பதையே வழக்கமாக்கி விட்டார் மோடி. எட்டு மாநிலங்களில் பாஜக அல்லாத கட்சிகளால் ஆளப்பட்ட ஆட்சிகள் ஏற்கனவே கொடுமையாகத் தூக்கி எறியப்பட்டு விட்டன. கவிழ்ப்பு வேலையைச் செய்து முடிக்கும் நிகழ்முறையில், எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களை மிரட்டிப் பணிய வைக்கவும் ஒன்றியத்தில் ஆளும் கட்சியிடமே மாநில அதிகாரத்தையும் மாற்ற வசதியாக, ஒன்றிய அரசின் அமலாக்கத் துறை, வருமான வரி, புலனாய்வுத் துறை போன்றவற்றின் முகமைகளை அவர் பயன்படுத்துகிறார். இதைத் தவிர எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் ஆளுநர்கள் அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் முறையைக் கையாள்கின்றார். குறிப்பாக கேரளா, தெலுங்கானா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு, டெல்லி, பஞ்சாப் போன்ற மாநிலங்களில் நிகழ்வனவற்றை நாம் பார்த்து வருகிறோம்.

4.  குடியரசு

உச்சபட்ச அதிகாரம் மக்கள் கையில் வைத்திருக்கும் அரசு முறையே குடியரசாகும். அங்கே அதிகாரம் மன்னர் போன்ற ஒரு தனிநபரிடம் குவிக்கப்படாமல், மக்கள் தங்கள் பிரதிநிதிகளைத் தேர்தல்கள் மூலம் தேர்ந்தெடுத்து ஆட்சி நிர்வாகம் நடைபெறும். அந்த ஜனநாயக உணர்வை மனதில் கொண்டு நமது அரசிலமைப்புச் சட்டத்தை உருவாக்கியோர் அதிகாரங்களை ஒன்றியப் பட்டியல், மாநிலப் பட்டியல், பொதுப் பட்டியல் என்று பிரித்தமைத்தனர். இவ்வாறு சட்டமியற்றும் மன்றம், நீதி மன்றம், நிர்வாகம் எனப் பிரித்து அதனதன் எல்லைக்குள் அவற்றிற்கான குறிப்பிட்ட அதிகாரங்களும் –ஒன்று மற்றதன் அதிகாரத்திற்குள் அத்துமீறாமல் அமைத்து -- வழங்கப்பட்டுள்ளன. அரசமைப்புச் சட்டத்தின் கோட்பாட்டிற்கு எதிராக மோடி அரசு கூட்டாட்சி முறையைப் பிய்த்தெறிகிறது. ஒன்றிய அரசு பொதுப் பட்டியலின் கீழ் உள்ள விவசாயம், மின்சாரம், கல்வி, வரி போன்ற விஷயங்களில் தன்னிச்சையாக அதிகாரங்களைப் பறித்து எடுத்துக் கொள்கிறது. மாநிலங்களின் கருத்தைப் பற்றி கவலைப்படாமல் இவை அனைத்தையும் ஒரே மதம், ஒரே மொழி, ஒரே வரிவிதிப்பு, ஒரே தேர்தல், ஒரே தேசம், ஒரே கட்சி, ஒரே நாடு என்ற பெயரில் நடத்துகின்றனர். ஒன்றியத்தின் ஆட்சியாளர்கள் இந்துத்துவ மதவாதச் சக்திகளின் ஆதரவுடன் சமூகத்தைப் பிளவுபடுத்தவும், எதிர்க்கட்சி இல்லாத (எதிர்க்கட்சி ஒழிக்கப்பட்ட) பாரதம் என்ற முழக்கத்துடன் தனிநபர் பிரபுத்துவ அரசை ஏற்படுத்த முயற்சி செய்கின்றனர். இந்தியாவை அதிபர் ஆட்சி முறைக்கு மாற்ற அனைத்து முயற்சிகளையும் மோடி மேற்கொள்கிறார்.

5.  நீதி

அரசமைப்புச் சட்ட முகவுரையில் குறிப்பிடப்படும் சமூக, பொருளாதார, அரசியல் நீதி எதுவும் நரேந்திர மோடி ஆட்சியில் பார்க்க முடியவில்லை. நாட்டின் அனைத்து அரசு நிறுவனங்களையும் தனியார்மயப்படுத்துவதன் மூலம், திட்டமிட்டு இட ஒதுக்கீடும் சமூக நீதியும் ஒழிக்கப்பட்டு வருகின்றன. நீண்ட போராட்டத்திற்குப் பிறகே 44 தொழிலாளர் நலச்சட்டங்கள் கொண்டு வரப்பட்டன, ஆனால் மோடி அரசு அவற்றை நான்கு தொழிலாளர் குறுங்குறிகளாக மாற்றி விட்டது. மொத்த மக்கள் தொகையில் 15 சதவீரமாக உள்ள முஸ்லீம் சமுதாயத்திலிருந்து ஒருவரைக்கூட மோடி தனது அமைச்சரவையில் சேர்க்கவில்லை.

6.  சுதந்திரம்

எண்ணங்களில் சுதந்திரம், கருத்துகளை வெளிப்படுத்த, பேச எனப் பல சுதந்திரங்களை அடிப்படை உரிமைகளாக அரசமைப்புச் சட்டம் குடிமக்கள் அனைவருக்கும் வழங்கியுள்ளது. ஒன்றிய பாஜக அரசு கருத்துகளை வெளியிடவும் பேச்சு சுதந்திரத்தையும் மூர்க்கமாக நசுக்கி வருகிறது, எதிர்க்கட்சிகளை அடக்கி அவர்கள் குரல்வளை நெறிக்கப்படுகிறது. தபோல்கர், தோழர் கோவிந்த் பன்சாரே, பேராசிரியர் கல்புர்க்கி, கௌரி லங்கேஷ் போன்ற பகுத்தறிவாளர்கள், பகுத்தறிவை ஆதரித்து மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தப் பாடுபட்டதற்காகக் காட்டுமிராண்டித்தனமாகக் கொலை செய்யப்பட்டனர். மோடி ஆட்சியில் நாம் எதை உண்ண வேண்டும், எதை உடுத்த வேண்டும், எந்த நம்பிக்கையை நாம் பின்பற்ற வேண்டும், எந்த மொழியை நாம் பேச வேண்டும் என்பதற்கெல்லாம் இன்று மக்களுக்கு உத்தரவிடுவதே வழக்கமாகி உள்ளது. பிறகு அரசமைப்புச் சட்டம் போற்றி வழங்கிய சுதந்திரம் நாட்டில் எங்கே இருக்கிறது?

7.   சமத்துவம்

விடுதலை அடைந்து 75 ஆண்டுகள் கடந்த பிறகு நாட்டில் அசமத்துவம் முன்பு எப்போதும் இல்லாத அளவு அதிகரித்து விட்டது. சமீபத்தில் ஆக்ஸ்ஃபாம் வெளியிட்ட ஆய்வறிக்கை நாட்டின் பரம ஏழைகளான 50 சதவீதத்தினர் மொத்தமாக வைத்திருப்பதைவிட 40 சதவீதம் கூடுதலான சொத்துகளை அதிபணக்கார ஒரு சதவீத இந்தியர்கள் உடமையாகக் கொண்டிருப்பதை வெளிப்படுத்தியது. அதேபோல கீழ்மட்டத்தில் அடியில் கிடக்கும் பாதி மக்கள் தொகையின் 3 சதவீதச் சொத்தைவிட சுமார் 20 மடங்கு அதிகமாக மேல்நிலையில் உச்சத்தில் உள்ள 5சதவீத பணக்காரர்களிடம், 61.7சதவீதச் சொத்து உள்ளது. நெருக்கடியில் இருந்து கைதூக்கிவிடும் மீட்பு நடவடிக்கை என்ற பெயரில் அதானி, அம்பானி போன்ற கார்ப்பரேட் குழுமங்களுக்குப் பொருளாதாரத் தொகுப்புகள் லட்ச லட்சம் கோடிகளாக வழங்கும் ஒன்றிய அரசு அதே நேரத்தில், ஒப்பீட்டளவில் அதிபணக்காரர்கள் அடிக்கும் கொள்ளையில் அற்பமான சிறுதொகையான மானியங்களை மக்களுக்கு ரத்து செய்துவிட கொடூரமாக முயற்சி செய்கிறது.

இந்த நாட்டின் பிரதமரே மானியங்களை ரேவடி கலாச்சாரம் (இலவச அறிவிப்புகள் இனிப்பு மிட்டாய் தருவதுபோல தேர்தலில் வாக்குகளைக் கவரும் கலாச்சாரம்) எனக் கேலி பேசுகிறார். குறைந்தபட்ச சமத்தன்மையை ஓரளவாவது ஏற்படுத்தும் மானியங்கள் அனைத்தையும் ரத்து செய்ய முயற்சி செய்யப்படுகிறது. இதன் பின்னணியில், உலகளாவிய பட்டினிக் குறியீடு பட்டியலில் 2022ம் ஆண்டில் இந்தியா 121 நாடுகளில் பாக்கிஸ்தான், பங்களாதேஷ், நேபாளம் போன்ற நாடுகளைவிட பின்தங்கி 107வது இடத்தில் இருந்ததைப் பார்க்க வேண்டும். இந்தச் சூழ்நிலையில் தேவையான நிவாரண உதவிகளை ஏழை மக்களுக்கு வழங்குவதற்கு மாறாக அவர்களை வேலையைவிட்டு நீக்கியும், முறையான நிரந்தரப் பணிகளில் மிக அற்ப ஊதியத்தில் ஒப்பந்த முறையிலும், அவுட் சோர்ஸிங் மூலமும் கார்ப்பரேட்களின் கொத்தடிமைகளாக பணிநியமனம் செய்கின்றனர்.

8.  சகோதரத்துவம்

இந்துகள், முஸ்லீம்கள், சீக்கியர்கள் போன்ற வேறுபட்ட வகுப்பினரிடையே மத வெறுப்பு உணர்வைப் பரப்பித் தூண்டுபவர்கள் மத நல்லிணக்க அடையாளங்கள் மீதும்

தாக்குதல் நடத்துகின்றனர், நாட்டின் வேற்றுமைக்கிடையில் ஒற்றுமை பேணும் பன்முகக் கலாச்சாரத்தை அழிக்கின்றனர். இந்த நாசகாரச் செயலுக்காக அவர்கள் சமூக ஊடகங்களை, குறிப்பாகத் தேர்தல் நேரத்தில், தீவிரமாகப் பயன்படுத்துகின்றனர். பாஜக கட்சிக்கு அரசமைப்புச் சட்டத்தின் நோக்கங்களைப் பிய்த்தெறிந்து சீர்குலைப்பதே பொதுவான வழக்கமாக உள்ளது.

இந்தத் தருணத்தின் அவசரத் தேவை நாம் தூண்போல் நின்று ஒருமைப்பாடு, இறையாண்மையைப் பாதுகாப்பதும் நமது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு அறைகூவல் விடுத்தபடி தேசத்தை, தேசத்தின் ஒற்றுமையை மற்றும் அதன் அரசியலமைப்புச் சட்டத்தைப் பாகாப்பதுமே ஆகும்.        

 --நன்றி : நியூஏஜ் (பிப்.5 –11)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்