மகாத்மா
காந்தி
தேசிய
ஒருமைப்பாட்டிற்காக இன்னுயிர் தந்த தியாகி
--கார்க்கி சக்ரவர்த்தி
சுதந்திரம் அடைந்த ஆறே மாதங்களுக்குள், நமது இந்தியாவின் தேசத் தந்தை, மகாத்மா காந்தியடிகள் 1948 ஜனவரி 30 அன்று இந்து மகா சபா ஆதரவாளர் நாதுராம் கோட்ஸே-வால்
படுகொலை செய்யப்பட்டார். தேசம் முழுமையும் அதிர்ச்சி அடைந்தது, ஆனால் இந்து தீவிரவாத அணியினர் மத்தியில் மகிழ்ச்சி கொப்பளித்தது. அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் பட்டேல் 1948 செப்டம்பர் 11ல் ஆர்எஸ்எஸ் தலைவர் எம்எஸ் கோல்வால்கருக்கு எழுதிய கடிதத்தில், “இந்துகளின் மனங்களில் நீங்கள் விஷத்தைப் புகட்டியதன் காரணமாகத் தேசம் இன்று வாராது வந்த மாமணி போன்ற மதிப்பிட முடியாத காந்திஜியை இழந்து துன்புறுகிறது” என்று குறிப்பிட்டார். அவர் ஏன் படுகொலை செய்யப்பட்டார்? என்ற
கேள்வி இன்னும் நீடிக்கிறது. அது ஒரு தனிநபரின் கொலை அல்ல, மாறாக, காந்திஜி ஆதரித்துப்
பிரச்சாரம் செய்து வாழ்ந்து காட்டிய ஒரு தத்துவக் கோட்பாட்டின் படுகொலை. அந்தத் தத்துவம்,
மதசார்பற்ற ஒன்றுபட்ட இந்தியா; சிறுபான்மையினருக்குப் பெரும்பான்மைச் சமூகத்தைப் போலவே
அங்கே சமமான சமூக வெளியைப் பெறக்கூடிய ஒரு புது தத்துவத்தின் தேசம் அது. விடுதலைப்
போராட்டம் முழுமையுமே, மதசார்பற்ற தேசியம் மற்றும் மதவாதத் தேசியம் என்ற இரு தத்துவங்களுக்கு
இடையே நடைபெற்ற போட்டியின் போராட்டக் களமாகவே அமைந்தது.
காந்தியத் தத்துவத்தின்
மீது இன்றைய தாக்குதல்
முன்பு எப்போதையும்விட இன்று மகாத்மா காந்தியை
ஞாபகம் கொள்ள வேண்டிய தேவை எழுந்துள்ளது; காரணம், இந்தியா குறித்த அவரது கண்ணோட்டம்
கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கிறது. நடைபெற்று வரும் தொலைக்காட்சி விவாதங்கள்,
சமூக ஊடகப் பிரச்சாரங்களில் உண்மைகள் பெருமளவு சிதைக்கப் படுகின்றன; தம் வாழ்நாள் முழுவதும்
எந்தத் தத்துவத்திற்காக நின்று காந்திஜி போராடினாரோ அவைகளை மறுப்பதும், கடினமாகி வருகிறது.
நமது விடுதலைப் போராட்ட வீரர்கள் இரத்தம் சிந்தி, உயிர்த் தியாகம் செய்து போராடிய இந்தியா
குறித்த கருத்தாக்கத்தைப் பிய்த்து எறிவதற்காக அதிகாரம், பணபலம், கட்டமைப்பு பலத்துடன்
முழுமையான நிர்வாக இயந்திரம் நாடு முழுவதும் பெரும் பிரச்சாரத்தைக் கட்டவிழ்த்துள்ளது.
சமயக் கட்டமைப்புகள், பன்மொழி மற்றும் கலாச்சார வேறுபாடுகளுடன் அமைந்த நமது இந்திய
நாட்டின் பன்மைத்துவத்தைப் பிரித்தெறிந்து சிதைக்கும் அவர்களின் நடவடிக்கைகளை எதிர்ப்பது
நம் முன் உள்ள மாபெரும் சவால்.
தெளிவான இடதுசாரி சிந்தனையுள்ள
தேசபக்தர் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், நமது அரசியலமைப்புச் சட்டத்தின் சிற்பி அண்ணல்
டாக்டர் பி ஆர் அம்பேத்கர் மற்றும் பிற ஆளுமைகள், இன்று அதிகாரத்தில் உள்ள பாஜக –ஆர்எஸ்எஸ்
ஆளும் தரப்பின் இந்தியா குறித்த அரசியல் தத்துவத்திற்கு முற்றிலும் மாறுபட்ட கருத்தோட்டம்
கொண்டவர்கள். அவர்களை அபகரித்துச் சொந்தம் கொண்டாட முயற்சி செய்கிறது இன்றைய ஆளும்
தரப்பு.
காந்திஜி மரணத்துடன் இந்தியா, சிறுபான்மையின
முஸ்லீம்- களின் பாதுகாவலரை இழந்தது. துல்லியமாகக் கூறினால், அவரது அரசியல் நிலைபாடு
மற்றும் அதற்கு எதிரான மதவாத வகுப்பினர்கள் காரணமாகவே காந்திஜி தனது உயிரைத் தியாகம்
செய்ய வேண்டி வந்தது. தேசப் பிரிவினையின்போது அவர் முஸ்லீம்களுக்கு ஆதரவாளராகவும்,
வேகமாக வளர்ந்து வந்த பெரும்பான்மைவாதக் கருத்தோட்ட வெற்றிக்கு இடையூறானவராகவும் கருதப்பட்டார்.
இன்றும்கூட, தேசப் பிரிவினைக்கும் முஸ்லீம்கள் பாக்கிஸ்தானுக்குச் செல்லாமல் இந்தியாவிலேயே
அனுமதிக்கப்படவும் காந்திஜிதான் பொறுப்பு என்று பல தருணங்களில் குற்றம் சாட்டப்படுகிறார்.
தேசப் பிரிவினைக்குப்
பின்னுள்ள வரலாறு
இந்தியா, பாக்கிஸ்தான் என தேசம் இரண்டாகப்
பிளவுபட்டதற்குப் பின்னால் உள்ள வரலாற்று உண்மைகளை இன்றைய தலைமுறை அறியாதவர்களாக இருக்கலாம்.
இரு தேசம் என்ற கோட்பாட்டை 1923ல் ‘இந்துத்துவா’ என்ற நூலில் முதலில் முன்மொழிந்து
ஆதரித்தவர் சவார்க்கர்; பின்னர் 1937ல் நடைபெற்ற இந்து மகாசபா அகமதாபாத் அமர்வில் மேலும்
அதை விரிவாக விளக்க, பெரும் எண்ணிக்கையிலான இந்துகளிடம் அந்தக் கருத்து செல்வாக்குப்
பெற்றது. மகாத்மாவைக் கடுமையாக இந்து மகாசபா விமர்சிக்க, அதன் தலைவர் வினாயக் தாமோதர்
சவார்க்கர் எப்போதும் காந்திஜியை “முஸ்லீம்களுக்குக் கூடுதல் சாதகமாக ஆதரவைக் கொட்டியவர்”
என்றார். சவார்க்கரின் இந்த அம்சத்தைப் பற்றி நேதாஜி தனது ‘இந்தியப் போராட்டம்’ என்ற
நூலிலும் குறிப்பிட்டுள்ளார். சவார்க்கரை இந்து தீவிரவாதிகள் தங்கள் வழிகாட்டும் குருவாகக்
கருதினர். அவருடன் தொடர்பில் இருந்த கோட்ஸே பெரும் மதிப்புடன் அவரோடு பணியாற்றினார்.
கோட்ஸே துப்பாக்கி சுடும் மன்றங்களை நிறுவி, சிறுபான்மையினருக்கு எதிராக இந்துகளுக்கு
இராணுவப் பயிற்சி அளிப்பதை ஊக்குவித்தார். இந்து தீவிரவாதிகளுக்கு முஸ்லீம்களே முதல்
எதிரிகள், பிரிட்டிஷ்காரர்கள் இல்லை.
இந்து மகாசபாவின் கருத்தோட்டம் இன்னும்
தொடர்ந்து நீடிக்கவே செய்கிறது. அன்று சாந்தியின் தேவ தூதர் மகாத்மா, “பாக்கிஸ்தானில்
உள்ள இந்துகளுக்கு என்னவெல்லாம் (கெடுதிகள்) செய்யப்பட்டாலும், இந்தியாவில் வாழும்
சிறுபான்மையின முஸ்லீம்கள் ஏனைய சிறுபான்மையினர்களுக்குச் சமமாக நடத்தப்பட வேண்டும்”
என்று வற்புறுத்தினார். பன்முக -- பன்மைத்துவ மதச்சார்பற்ற தேசியம் (a
multi-plural secular nationalism) என்ற மகாத்மாவின் இந்த அணுகுமுறையை எப்போதும் அவர்கள்
“போலி மதச்சார்பின்மை” (“pseudo-secular”) என்று கேலி பேசினர் –ஏதோ மதச்சார்பின்மை
என்ற வார்த்தையே எதிர்மறை பண்புடைய சொல் என்பது போல!
இந்துகளை இராணுவமயப்படுத்துவதன் தத்துவார்த்த
வழிகாட்டியாகச் சீடர்களால் போற்றப்பட்ட சவார்க்கர், இந்து மகாசபா மட்டுமே அரசியல் களத்தில்
காங்கிரஸை எதிர்த்துச் சவால்விட முடியும் என்று கருதினர். 1941 மற்றும் 1944க்கு இடையே
இந்து தத்துவக் கோட்பாட்டை வளர்த்துப் பாடுபடுவதற்காகச் சவார்க்கரைப் புகழ்ந்து கோட்ஸே
அவருக்குப் பல கடிதங்கள் எழுதினான். இந்நிகழ்வுகளின் விளைவாய், இந்துகளை ஆதரித்து,
இந்து நலன்களுக்காகப் பாடுபடக்கூடிய ஒரு கதாநாயகனாகச் சவார்க்கர் மிக இயல்பாக மற்றவர்களால்
தேர்ந்தெடுக்கப்பட்டு எதிர்நோக்கப்பட்டார்.
சொல் வேறு, செயல் வேறு
2014 முதல் காந்திஜியின் உருவம் ’ஸ்வச் பாரத்’ (தூய்மை இந்தியா-‘தூய்மையை நோக்கி ஓர் அடி‘ என்ற வாசகத்துடன்) பிரச்சாரத்தின் அடையாளச் சின்னமாக மோடி அரசால்
பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், அரசியல் ரீதியாகவும் தத்துவார்த்த ரீதியாகவும் காந்திஜியை (ஒரு சிமிழில் அடைப்பது போல) ஒரு மூலையில் முடக்குவதற்கான செயல்கள் ஆளும் வட்டாரங்களால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்பதே உண்மை. காந்தி உருவத்தை வைத்து மோடி விளையாடுகிறார் எனில், ஆளும் தரப்பின் சீடர்கள் சுதந்திரப் போரின் பிற அரசியல் பிரபலத் தலைவர்களை வைத்து விளையாடுகின்றனர், காந்தியை மக்கள் நினைவுகளிலிருந்து தொலைவில் நிறுத்துவதே அவர்களது நோக்கம். (ஒரு பக்கம், அனைவரும் அறிந்த நேரு போன்ற விடுதலைப் போராட்டத் தலைவர்களை அவமானப்படுத்திக் கொண்டே, மறுபக்கம் முகம் தெரியாத விடுதலை போராட்டத் தியாகிகள் குறித்து ஆவணப்படுத்த ஆய்வுகளைச் செய்ய வேண்டும் என்று தமிழக ஆளுநர் பல்கலைக் கழகங்களில் பேசுகிறார் என்பது அதற்கு ஓர் உதாரணம் –மொழிபெயர்ப்பாளர் இணைப்பு)காந்திஜியின் கருத்தோட்டங்களை ஒருபோதும் ஏற்காத, ஆர்எஸ்எஸ் – பாஜக – இந்து மகாசபா அணியினர் மற்றும் அவர்களின் பல்வேறு வெகுஜன அமைப்புகள் இப்போதும் அக்கொள்கைகளை நிராகரிக்கின்றன. கடந்த ஆண்டு கல்கத்தாவில் உள்ளூர் இந்து மகா சபா அமைப்பினர் ஏற்பாடு செய்த துர்க்கா பூஜா பந்தல்களில் ஒன்றில் காந்திஜியை ஓர் அசுர அரக்கனாகச் சித்தரித்துப் படம் வைத்தார்கள் என்பதொன்றும் ஏதேச்சையான விபத்து அல்ல. உள்ளூர் மக்களின் கடும் எதிர்ப்புக்குப் பிறகு அது மாற்றப்பட்டது. என்றாலும், ‘தங்களுக்கு
காந்தி உண்மையில் ஓர் அரக்கனே’ என்று கூறி இந்து மகாசபா வெளிப்படையாகவும் துணிச்சலாகவும் தங்கள் நிலைபாட்டை வற்புறுத்துகிறது. (2019 அலிகாரில் காந்தி நினைவு நாளில் அவரது உருவ பொம்மையை விளையாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக் கொண்டாடிய வலதுசாரி இந்து அமைப்பு நிகழ்வில் ஒரு பெண் சன்யாசினி காந்தியின் படத்தைக் குறி வைத்துத் துப்பாக்கியை நீட்டிய படத்தை எப்படி மறக்க முடியும்? –மொழிபெயர்ப்பாளர் இணைப்பு)
எனவே, இந்து-முஸ்லீம் ஒற்றுமையை வலியுறுத்திய காந்தியின் கோட்பாட்டிற்காக காந்தியத்திற்கு விரோதமான நிலைபாடு இன்றும்கூட அடிநீரோட்டமாக, நீறுபூத்த நெருப்பாக நீடிக்கவே செய்கிறது; குழுப்போக்கு இந்துத்துவ தீவிர தேசியத்தின் எழுச்சி காரணமாக அந்நிலைபாடு தலை எடுக்கிறது, எச்சரிக்கை.
நமது கடமை
எனவே, காந்திஜியின் கோட்பாடுகளையும், பின்னாட்களில்
நமது அரசியலமைப்புச் சட்டத்தில் பிரதிபலித்த ஒன்றுபட்ட இந்தியா குறித்த அவரது கண்ணோட்டத்தையும்
பாதுகாக்க, ஜனவரி 30அன்று நாம் சபதம் செய்வோம்! தேசப் பிதா மகாத்மாவைப் படுகொலை செய்த
நாதுராம் கோட்ஸேவைப் புகழ்பவர்கள், அவனது சிலைகளை அமைப்பவர்கள் நாடு முழுவதும் பரவி
இருப்பதை மறக்கலாகாது. தாங்கள் இட்டுக் கட்டி உற்பத்தி செய்யும் கதைகள் மூலம் வரலாற்று
உண்மைகளைச் சிதைக்க முயலும் அவர்களின் மறைமுகத் திட்டங்களை அம்பலப்படுத்துவது தற்போது
நமது கட்டாயக் கடமையாகும்!
“கொடுமைசெய்
தீயோர் மனமது திருந்த
நற்குணம் அதைப் புகட்டிடுவோம்
மடமை
அச்சம் அறுப்போம் -- மக்களின்
மாசிலா நல்லொழுக்கம் வளர்ப்போம்
கருணை,
ஒற்றுமை, கதிரொளி பரவி
உலகிலே சாந்தி நிலவ வேண்டும்!
திடம்
தரும் அஹிம்ஸா யோகி நம் தந்தை
ஆத்மானந்தம் பெறவே....
களங்கமில்
அறம் வளர்ப்போம் -- எங்கும்
சாந்தி நிலவ வேண்டும்
காந்தி
மஹாத்மா கட்டளை அதுவே
கடமை
மறவோம் அவர்கடன் தீர்ப்போம்!”
(--கவிதை : சேது
மாதவ ராவ்)
“வாழ்க
நீ எம்மான், இந்த வையத்து நாட்டில் எல்லாம்”
--நன்றி:நியூஏஜ் (ஜன.29 –பிப்.4)
--தமிழில்
: நீலகண்டன்,