Thursday 30 December 2021

பெண்களின் திருமண வயதை உயர்த்தும் மசோதா -- ஆனி ராஜா விமர்சனம்

                                                       


     பெண்களின் திருமண வயதை உயர்த்தும் மசோதா

 திரைமறைவு அரசியல் நோக்கம் கொண்டது

--ஆனி ராஜா

(பொதுச் செயலாளர், இந்திய மாதர் தேசிய சம்மேளனம்)

            பெண்களின் சட்டபூர்வத் திருமண வயதை 18லிருந்து 21 வயதாக உயர்த்த இந்திய அரசு 2021, டிசம்பர் 21அன்று மக்களவையில் ‘குழந்தைத் திருமணத் தடைச் சட்டம், 2006’  திருத்த மசோதா (மசோதா எண் 163 ஆண்டு 2021) தாக்கல் செய்துள்ளது.

            இந்து, கிருஸ்துவ, முஸ்லீம், பார்சி மதங்கள் சார்ந்த அந்தந்த மதத்தினர் சம்பந்தமான திருமணம், மணமுறிவு, தத்து எடுத்தல், ஜீவனாம்சம் தொடர்பான (இந்து திருமணச் சட்டம் 1955, இந்திய கிருஸ்துவர்கள் திருமணச் சட்டம் 1872, முஸ்லீம் தனிநபர் சட்ட அமலாக்கச் சட்டம் 1937, பார்சி திருமண மற்றும் மணமுறிவு சட்டம் 1936 மற்றும் சிறப்புத் திருமணச் சட்டம் 1954, வெளிநாட்டவர் திருமணச் சட்டம் 1969) சட்டங்களில் திருத்தம் செய்வது மசோதாவின் நோக்கம். தற்போது நடைமுறையில் உள்ள பாரம்பரியம், பழக்க வழக்கம், திருமண நடைமுறைகள் குறித்து மசோதா குறிப்பிடுகிறது.

            பெண்களுக்கான சட்டபூர்வ திருமண வயதை உயர்த்தும் இந்தத் திருத்தத்தின் மூலம் வேலைவாய்ப்பு மற்றும் கல்வியைத் தொடரவும், ஆரோக்கியமான குழந்தைப் பேறுக்காக உடல் நலனைக் காக்கவும் பெண்களுக்கு வாய்ப்பு ‘வழங்குவதாக’ பாஜக அரசு பெருமை பேசுகிறது. சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக அரசு கூறுகிறது.

மசோதாவில் சொல்லப்பட்ட நோக்கம்

            மேலெழுந்தவாரியாகப் பார்க்க, உத்தேசிக்கப்பட்டுள்ள இம்மசோதா பெண்களுக்குச் சார்பானதாக, முற்போக்கானதாகத் தோன்றினாலும், நெருக்கமாக ஆராய்ந்தால் உண்மை அதற்கு நேர்மாறானது என்பது விளங்கும். பெண்களுக்கு அதிகாரம் அளிப்பது, குறிப்பாக அவர்களின் ஊட்டச்சத்து, கல்வி, தாய்- சேய் மரண விகிதம் முதலானவற்றை மேம்படுத்த வேண்டும் என்பது சொல்லப்பட்ட நோக்க இலக்குகள்; அவர்களது குடும்பத்தினர், சமூகம், (கலாச்சார) கண்காணிப்பு தனி அமைப்புகள் அல்லது அரசு இவற்றின் வற்புறுத்தல் இன்றி பெண்கள் தன்னாட்சியுடன் குறிப்பாக வயது வந்த பெண்கள் தங்கள் திருமணம், குழந்தை பெறுதல் முதலானவற்றை முடிவெடுக்கும் உரிமை உட்பட அனைத்து வகையிலும் பெண்கள் அதிகாரமளிக்கப்பட வேண்டும் என்பது நோக்கம்.

அதற்காகவே திருமண வயதை உயர்த்துவது என்ற அரசு நடவடிக்கை மேற்குறிப்பிட்ட பிரிவுகளில் அரசின் பிற செயல்பாடுகளோடு ஒத்துச் செல்லவில்லை என்பது நமது ஆய்வின் கருத்து. மேற்சொன்ன இலட்சிய இலக்குகள் மீதான உறுதிப்பாட்டை இந்திய மாதர் தேசிய சம்மேளனம் (NFIW) மீண்டும் உறுதியாக வற்புறுத்துகிறது. மேலும் இந்த நோக்கங்களைப் பெண்களின் திருமண வயதை உயர்த்துவதன் மூலம் சாதித்துவிட முடியாது என மாதர் சம்மேளனம் உறுதிபடக் கூறுகிறது. எதார்த்தத்தில் நிலவும் பெண்களின் அந்தஸ்து நிலையை ஒப்பிட, பெண்களுக்கு ‘அனைத்து வகையிலும் முழுமையாக’ அதிகாரமளிப்பதை, அவர்களின் திருமண வயதை அதிகரிப்பதன் மூலம், சரி செய்துவிட முடியாது.

            தேசத்தின் செல்வாதார வாய்ப்புக்கள் மற்றும் நீதியைப் பெறுவதில் பெண்களுக்குச் சமத்துவமற்ற பெரும் பிரச்சனைகள் உள்ளன. பெண்கள் திருமண வயதை உயர்த்துவதை மக்கள் தொகையைக் கட்டுப்படுத்தும் கருவியாகப் பயன்படுத்துவது ஒரு சமூகத்தினரையும் சமுதாயத்தின் மிகவும் ஏழ்மை நிலையில் உள்ளவர்களையும் (பாதிக்கும்) நோக்கமுடையதாகச் செலுத்திவிடும். வெளியே சொல்லப்படும் நோக்க இலக்குகளுக்கும், அதை எட்டுவதற்கான அமைப்புநிலை வசதிகளுக்கும் இடையே ஆழமான முரண்பாடுகள் நிலவுகின்றன; அத்தகைய வாய்ப்பு வசதி குறைபாடு தரமான கல்வியைப் பெறுவதில், குறிப்பாகப் பெண் குழந்தைகள் மற்றும் சமூகத்தின் விளிம்புநிலையிலிருந்து வருபவர்களைத்  தரமான கல்வியைப் பெற இயலாதவராக்குகிறது.

கல்வி நிலை :

விளிம்புநிலையில் உள்ளவர்களுக்கு உயர் கல்வியைப் பெறுவது ஏறத்தாழ முடியாத ஒன்று. பத்தாம் வகுப்புவரை உள்ள கிராமப்புற அரசுப் பள்ளிகள், கற்பிக்கும் ஆசிரியர்கள் பற்றாக்குறை மற்றும் முறையான கட்டமைப்பு வசதிகள் அற்ற நிலையில் உள்ளன. இக்குறைபாடு இலட்சக் கணக்கான பெண் குழந்தைகள் 10ம் வகுப்பைக்கூட அடைய முடியாதவராகத் தவிர்த்துவிடுகிறது.

2013 -14ம் ஆண்டிற்கான ‘கல்விக்கான ஒருங்கிணைந்த மாவட்டத் தகவல் முறைமை’ அறிக்கையின்படி, தொடக்கநிலை பள்ளிக் கல்வியில் 6கோடிக்கும் அதிகமான பெண் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 2019 –20ம் ஆண்டு நடுநிலைக் கல்வி மட்டத்தில் பள்ளிகளில் அதே எண்ணிக்கையில் பெண்குழந்தைகள் இருக்க வேண்டாமா? ஆனால் அவ்வாண்டிற்கான அறிக்கையில் வெறும் 35 லட்சம் பெண் குழந்தைகள் மட்டுமே நடுநிலை மட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர் எனக் கூறப்பட்டுள்ளது. அதன் பொருள், 5கோடியே 65லட்சம் பெண் குழந்தைகள் தொடக்கக் கல்வியோடு இடை நிறுத்தப்பட்டுவிட்டார்கள் என்பதே. அப்படி ஐந்தாம் வகுப்போடு இடை நிறுத்தப்பட்டவர்கள் எப்படித் தங்கள் 18வது வயதில் பட்டக் கல்வியில் சேர முடியும்? எப்படி அவர்கள் அதிகாரமளிக்கப்படுவர்?

இந்தியப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் ஆரோக்கியம்

            உடல்நலன், ஆரோக்கியம் என்பது மிக மிக முக்கியமான பிரச்சனை; அப்பிரச்சனைக்கு விரைவாகத் தீர்வு காண, உறுதியான செயல்பாடுகள், விஞ்ஞான மற்றும் அறிவார்ந்த அணுகுமுறை வேண்டும். குறிப்பாக இரத்த சோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாட்டால் அதிகரிக்கும் தாய் – சேய் மரண விகிதங்களை முதலில் தடுத்து நிறுத்த விரைவான நடவடிக்கை தேவை. (தாய் – சேய் மரண விகிதம் (maternal and infant mortality) என்பது ஊட்டச்சத்து குறைபாடு, இரத்த சோகையால் பாதிப்புக்குள்ளாகும் கர்ப்பிணி தாய்மார்கள் பிரசவத்தின்போது மரணமடையும் எண்ணிக்கை, பிறந்த குழந்தை 5 வயதிற்குள் மரணமடையும் எண்ணிக்கையையும் குறிப்பிடுவது.)

வேறுசில ஆய்வு அறிக்கைகள்

            சமீபத்தில் வெளியான ‘உலகப் பட்டினி குறியீடு பட்டியல்’ (க்ளோபல் ஹங்கர் இன்டக்ஸ்) அறிக்கையில் 116 நாடுகளில் இந்தியா 101 இடத்தில் உள்ளது. நாடுகளின் சூழ்நிலை, மக்களின் ஊட்டச் சத்து குறைபாடு, ஐந்து வயதுடைய குழந்தைகளில் i) வயதுக்கு ஏற்ற எடையின்றி மெலிந்து இருப்பது (சைல்டு வேஸ்ட்டிங்) ii) வயதுக்கு ஏற்ற உயரம் இன்றி குள்ளமாக இருப்பது (சைல்டு ஸ்டண்டிங்) மற்றும் iii) ஊட்டச்சத்தின்றி இறந்து போவது (சைல்டு மார்ட்டாலிட்டி) போன்ற காரணிகளின் தரவுகள் அடிப்படையில் அப்பட்டியல் தயாரிக்கப்படுகிறது.

ஒன்றிய அரசின் ‘தேசிய குடும்பநல ஆய்வு -5’ (NFHS-5)அறிக்கையின்படி ஆறு வயதிற்குக் கீழ் உள்ள இந்திய தேசத்தின் குழந்தைகளில் 67% இரத்த சோகையில் பாதிக்கப்பட்டுள்ளனர். இது அதற்கு முந்தைய 4வது அறிக்கையில் 58.6 சதவீதமாக மட்டுமே இருந்தது. அதே போல ஐந்து வயதிற்குக் கீழுள்ள குழந்தைகளில் குள்ளமாவது 36%, வயதுக்கேற்ற எடை இல்லாது இருப்பது 19% மற்றும் எடை குறைவான குழந்தைகள் 32.1 சதவீதமாக உள்ளது என அறிக்கை கூறுகிறது. தாய் சேய் மரண விகிதத்திற்கு முக்கிய காரணம் பெண்கள் மற்றும் குழந்தைகள் மத்தியில் இரத்தசோகை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு அதிகமாக இருப்பதேயாகும். குடும்ப நல சர்வே அறிக்கை 5ன்படி, கர்ப்பிணி அல்லாத 15 வயதிலிருந்து 49 வரையான பெண்களில் இரத்த சோகை 53.2 சதவீதத்திலிருந்து 57.2 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதே நிலைதான் கர்ப்பிணித் தாய்மார்களிடமும் காணப்படுகிறது.

மோசமான பொருளாதார நிலை

            இன்றைய பொருளாதார நிலை என்பது வேலை வாய்ப்பு இல்லாத மற்றும் பணி இழப்பு ஏற்படுத்தும் வளர்ச்சியாக உள்ளது; இந்த நிலைமை இளம் பெண்களுக்குப் பொருளாதார அதிகாரமளிப்பதை வெகுவாகப் பாதிக்கிறது. தொழிலாளர் உழைப்புச் சக்தியில் பெண் தொழிலாளர்களின் பங்கேற்பு  தற்போது 20 சதவீதமாக மிகவும் குறைந்துள்ளது என ‘தேசிய சாம்பிள் சர்வே அமைப்பின் (NSSO)’ சமீபத்திய ஆய்வறிக்கை சுட்டிக் காட்டுகிறது. அங்கன் வாடிகளிலும், ஆஷா மற்றும் மதிய உணவுப் பணியாளர்களாகவும் ஆண்டுக் கணக்காகப் பணியாற்றும் இலட்ச இலட்சமான பெண்கள், தொழிலாளர்களாகவே அங்கீகரிக்கப்பட்டதில்லை. பள்ளிகளில் மதிய உணவு சமைக்கும் சமையல்காரர்களுக்குப் பணி நியமனத்தில் கூறப்பட்ட கடமைகளைத் தவிரவும் பெருக்குதல், கழிவறைகளைத் தூய்மை செய்தல், பள்ளி முதல்வர் வீட்டில் அன்றாட வீட்டுப் பணிகள் கட்டாயப்படுத்தப்பட்டு சுரண்டலுக்கு ஆளாக்கப்படுகின்றனர்.

            அதே போன்ற நிலையில் இருப்பவர்களே ஆஷா பணியாளர்களும் (ASHA, ‘அக்கிரிட்டெட் சோஷியல் ஹெல்த் அக்டிவிஸ்ட்’, அதாவது பயிற்சி பெற்ற ‘பொது ஒப்புதல் அளிக்கப்பட்ட சமூகச் சுகாதாரச் செயல்பாட்டாளர்’). கிராமங்களில் யாருக்கு எந்த நேரத்தில் என்ன உடல்நல பாதிப்பு என்றாலும் அவர்களை முதலில் கவனிக்கும் சுகாதாரப் பணியாளர் ஆஷாதான். நள்ளிரவில் ஒரு கர்ப்பிணித் தாய் அழைத்தாலும் சென்று கவனித்து அவர்களை மருத்துவமனையில் சேர்க்கத் தயாராக இருக்க வேண்டியவரும் அவர்தான். அவர்கள் எல்லாம் தன்னார்வத் தொண்டர்கள் என அழைக்கப்படுகின்றனர். இப்படிப்பட்ட பணியாளரின் உழைப்பைப் புறக்கணித்து அவர்களைத் தொழிலாளர்கள் என அடையாளப்படுத்தவும் முற்றாக மறுக்கப்படுகிறது.

ஊதிய இடைவெளி

            உலகப் பொருளாதார ஃபோரம் என்ற அமைப்பின் உலகப் பாலின இடைவெளி 2021 அறிக்கையில் 156 நாடுகள் தரவரிசை பட்டியலில் இந்தியாவுக்கு 140வது இடம்; இந்தியாதான் தெற்காசியாவில் மோசமாகச் செயல்படும் மூன்றாவது நாடு. பொருளாதாரச் செயல்பாடுகளில் ஈடுபடுவது மற்றும் வாய்ப்புகள் குறித்த துணை குறியீடு பட்டியலில் பெண்களின் நிலை சரிந்துள்ளதாகச் சுட்டிக் காட்டுகிறது: “சரிவை ஏற்படுத்தும் காரணிகளில் பெண்களின் உழைப்புச் சக்தி பங்கேற்பு விகித வீழ்ச்சி, நிபுணத்துவம் மற்றும் தொழில்நுட்பப் பணிகளில் பெண்கள் பங்களிப்பு குறைவது,  மூத்த மேலாண்மைப் பொறுப்புக்கள் மற்றும் மேல்நிலையில் பெண் மேனேஜர்கள் எண்ணிக்கை சரிவு என – அனைத்துப் பிரிவுகளிலும் பெண்களின் நிலையில் சரிவே ஏற்பட்டுள்ளது. மேலும் இந்தியாவில் பெண்கள் ஈட்டிய வருமானம், மதிப்பீட்டின்படி ஆண்களின் வருமானத்தில் ஐந்தில் ஒரு பங்கு மட்டுமே என்பது இந்தியாவை உலகளாவிய இந்தக் குறியீட்டுப் பட்டியலின் கடைசி பத்து இடங்களில் தள்ளி உள்ளது” என அறிக்கை கூறுகிறது.

முன்னோக்கிச் செல்வதற்கான வழி

            இந்த நாட்டின் பெண்கள் உண்மையாகவே நன்றாக இருப்பதை உறுதிப்படுத்த வேண்டுமெனில்; அரசியலமைப்புச் சட்டம் உறுதியளித்த சமத்துவம் மற்றும் கௌரவமான குடியுரிமையை வழங்கிடவும்; தரமான இலவச மற்றும் வேலைவாய்ப்புப் பெற தகுதியுடையதாக்கும் கல்வியை உறுதி செய்வதில் நமது கவனம் ஊசலாட்டமற்றுக் குவிக்கப்பட வேண்டும்; மேலும் ஊட்டச்சத்து மற்றும் தரமான சுகாதாரம் பேணல் வசதி (அது மருத்துவக் காப்பீடு வழங்குவது அல்ல) கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்; இளம் பெண்களுக்கு மனநிறைவான உறுதியளிக்கப்பட்ட கௌரவமான வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பான பணியிடம்; வன்முறையற்ற பாதுகாப்பான சமூகச் சூழ்நிலை; திருமணம் குறித்துப் பெண்களுக்குச் சுயேச்சையான மற்றும் முடிவெடுக்கும் அதிகாரம் அளித்தல். இவற்றையெல்லாம் உறுதி செய்து கிடைக்கச் செய்தால், பின்னர் அதுவே தன்னியல்பாக பெண்களின் திருமண வயதைப் பொருத்தமாக உயர்த்தச் செய்யும். (மாறாக, இந்த வசதி வாய்ப்புகளை அளிக்காமல் எந்திரத்தனமாக திருமண வயதை உயர்த்த சட்டம் கொண்டு வருவதால் பயனில்லை.)

            எனினும் மேற்குறிப்பிட்ட வாய்ப்புகளை அளிக்கும் அனைத்துப் பிரிவுகளும் தீவிரமாக தனியார்மயப்படுத்தப்படுவது மிகவும் துரதிருஷ்டமானது. இது மேலும் அவர்கள் வாய்ப்புக்களை –குறிப்பாக மிகவும் விளிம்புநிலை மற்றும் சமூகத்தின் நலிந்த பிரிவுகளைச் சேர்ந்த பெண்களுக்கு – எட்டாமல் செய்துவிடும்.

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் முதலியன

          தேசிய உணவு பாதுகாப்புச் சட்ட அமலாக்கம் குறித்துப் பிரதமரும் அரசும் விவாதிக்க வேண்டிய நேரத்தில், அச்சட்டத்தைக் குறிவைத்துத் தாக்கி ஆதார் உடன் இணைக்கப்படுகிறது. இதனால், பெருமளவில் மக்கள் உணவுப் பாதுகாப்பின்றி விலக்கப்பட்டு, சட்டத்தின் பயன் மறுக்கப்படுகிறது. 1975 அக்டோபர் 2ம் நாள் கொண்டுவரப்பட்ட “ஒருங்கிணைந்த குழந்தைகள் மேம்பாட்டு திட்ட சேவைகள்” (இன்டெகிரேட்டட் சைல்டு டெவலெப்மெண்ட் ஸ்கீம், ICD Scheme) குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும். உலகின் மிகப்பெரிய இந்தச் சமூகநலப் பாதுகாப்புத் திட்டம், ஆறு வயதிற்கு உட்பட குழந்தைகளின் ஊட்டச்சத்து, உடல்நலன் மற்றும் மன நலம் உள்ளிட்ட ஆரோக்கியத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது. (மேலும் 16லிருந்து 44 வயது வரையான கர்ப்பிணிப் பெண்கள் மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் உடல்நலத்தைப் பேணுவதுமாகும்.) இதன் மூலம் தாய் சேய் இறப்பு, நோய்வாய்ப்படுதல் மற்றும் குழந்தைகள் கல்வி இடைநிற்றல் முதலியவற்றைக் குறைப்பதும் திட்டத்தின் நோக்கம். மேலும் திட்டத்தின் பயனை எஸ்சி எஸ்டி பிரிவினர் அடையுமாறு நீட்டித்து இளம் குழந்தைகள் மற்றும் பெண்கள் இடையேயான உறவுப் பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும், பாலின சமத்துவ உணர்வு உடைய வாழ்க்கை அணுகுமுறையை ஏற்படுத்துவதையும் மேம்படுத்தப்பட வேண்டும். ஆனால் இந்தச் சமூகநலத் திட்டங்களுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு தொடர்ச்சியாகக் குறைக்கப்படுவதால் தற்போது இத்திட்டம் சீர்குலைக்கப்படுகிறது. எனவே நாடாளுமன்ற அவைகளில் விவாதிக்க வேண்டும். உணவு பாதுகாப்புச் சட்டத்தை மேலும் வலிமையாக்கி, அனைத்து அத்தியாவசியப் பொருட்களும் குறைந்த விலையில் கிடைக்கச் செய்வதாய் பரவலாக அனைவருக்கும் விஸ்தரிக்க வேண்டும். பேறுகால விடுமுறை, மருத்துவ வசதி  முதலிய பேறு கால வசதிகளும் பெண்கள் அனைவருக்கும் என பரவலாக்கி உறுதிப்படுத்த வேண்டும்.

சமூகநலத் திட்டங்களின் பயன்

            புள்ளிவிபரங்கள், எண்ணிறைந்த ஆய்வுகள் மற்றும் ஆய்வு முடிவுகள், பெண்களுக்கு அதிகாரமளிப்பதோடு சமூக நலத் திட்டங்கள் மற்றும் சேவைகள் கிடைக்கச் செய்வதை இணைத்துத் தொடர்புபடுத்துகிறது. இந்த மெய்மைக்கு முக்கியத்துவம் கொடுத்தே, பெண்களின் அனுமதிக்கப்பட்ட சட்டபூர்வத் திருமண வயதை உயர்த்துவது நிச்சயமாக பெண்கள் நலனுக்கான தீர்வாக ஒருபோதும் இருக்க முடியாது என்பதை உறுதிபடக் கூறுகிறோம். மாறாக, முக்கியமான உடல்நலம், கல்வி, வேலைவாய்ப்பு முதலிய பிரிவுகள் மீது கவனம் குவிக்கப்பட வேண்டும்.

            2006 குழந்தை திருமணத் தடை சட்டம் அமலான பிறகும், நமது நாட்டில் குழந்தைத் திருமணங்கள் நடைபெறுவது வழக்கமாக உள்ளதென அரசே கூறுகிறது. நடைபெறும் திருமணங்களில், இந்தியாவில் பெண்களின் சட்டபூர்வ திருமணத்திற்கான 18 வயது வரும்முன்னர் (அதாவது அவர்கள் சட்டப்படி குழந்தையாக இருக்கும்போதே) ஏன் 23 சதவீதமான திருமணங்கள் நடைபெறுகின்றன என்பது குறித்து நாடாளுமன்றம் அவசரமாக விவாதிக்க வேண்டும் என்பது மாதர் சம்மேளனத்தின் கருத்து. வரதட்சிணை சட்டமும் பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை. சட்டங்கள் இருந்தும் அவை ஏன் முடமாக்கப்பட்டு நீதி தேவைப்படும் நிலையில் உள்ள பெண்களாலும் பயன்படுத்தப்படுவதில்லை என்பதற்கான காரணங்களையும் நாடாளுமன்றம் மறுபரிசீலனை செய்து விவாதிக்க வேண்டும்.

அரசியல் பாலினச் சமத்துவம்

            மிக முக்கியமாக அரசியல் பாலினச் சமத்துவத்தை உறுதி செய்ய ‘பெண்கள் இட ஒதுக்கீடு மசோதா’வை நிறைவேற்றுவது மிகப் பெரிய நடவடிக்கையாக இருக்கும். நாடாளுமன்றத்தில் அம்மசோதா தாக்கல் செய்யப்பட்டு 25 ஆண்டுகள் கடந்து விட்டன. முடிவெடுக்கும் உச்சபட்ச அதிகார அமைப்புக்களான நாடாளுமன்றம், சட்டமன்றங்கள் போன்றவைகளின் நிகழ்முறையில் பெண்களுக்கான வெளி இருக்குமானால், அவர்களால் விவாதங்களில் பயனுள்ள வகையில் பங்களிப்புச் செய்ய இயலும்; ‘பட்டங்கள் ஆள்வதிலும் சட்டங்கள் செய்வதிலும்’ பொதுவாக பெரிதும் சமூகத்திலும் குறிப்பாக பெண்களுக்கு உண்மையில் பயனுறுமாறும் பங்கேற்க இயலும். இந்தியாவில் பாராளுமன்ற ஜனநாயகம் நடைமுறைக்கு வந்து 75 ஆண்டுகள் கடந்த பின்னும் பாராளுமன்றத்தில் பெண் உறுப்பினர்களின் எண்ணிக்கை வெறும் 14 சதவீதமாக இருக்கிறது என்பது அவமானமில்லையா?

            ஓர் அதிர்ச்சி அளிக்கும் உண்மை, தற்போது ‘குழந்தைத் திருமணத் தடை (திருத்த) மசோதா 2021’ குறித்து பரிசீலிக்க உள்ள நாடாளுமன்ற நிலைக் குழுவில் ஒரே ஒரு பெண் உறுப்பினர் மட்டுமே இடம் பெற்றுள்ளார். அதன் பொருள், பெண்களுக்கு அதிகாரமளித்தல் என்பது என்ன என்பதையும், ஒரு பெண் எந்த வயதில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதையும் ஆண்கள் முடிவு செய்யப் போகிறார்கள் என்பதுதான்.

            பெண்களின் விருப்பத் தேர்வுகள், பெண்களின் வாழ்வு மீது அதிகாரம் செலுத்துவது மற்றும் கட்டுப்படுத்துவது என்பதில் அரசு கவனம் செலுத்த முயல்கிறது; அதற்கு மாறாக, இந்த நாட்டின் பெண்கள், சமூக அரசியல் நீதியை உறுதிப்படுத்துவதற்காக நீண்ட காலமாகக் கோரிவரும்  நாடாளுமன்றங்களில் தங்களுக்கான நிலைத்த பிரதிநிதித்துவத்தை வழங்கிடும் வழிமுறைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

            உரிமைகளும் நீதிகளும் மறுக்கப்படுவது பெண்களின் மீதான வன்முறையே. அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய சமத்துவம் மற்றும் நீதிக்கான பெண்களின் உரிமைகளை உறுதிப்படுத்த ஒன்றிய அரசு பின்வருவனவற்றை வழங்க பொறுப்பேற்க வேண்டூம் : அவை, முதுகலை பட்டப்படிப்பு வரை பெண்களுக்கு இலவசக் கல்வி வழங்குதல், திறன் மேம்பாடு, வேலை வாய்ப்புகள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு வன்முறையற்ற சூழலை உருவாக்கத் தற்போது நடைமுறையில் உள்ள சட்டங்களின் உறுதியான அமலாக்கம். இந்தத் திசைவழியில் அரசு நிர்வாக அமைப்பு மற்றும் சமூகத்தின் கட்டமைப்பு மாற்றங்களோடு உறுதியான நடவடிக்கைகளை எடுப்பதே பெண்களுக்கு அதிகாரமளிப்பதற்கான பாதை.

            

புத்தாண்டில் அத்தகைய பாதைக்கான 

விடியல் பிறக்கட்டும்! வாழ்த்துகள்! 

--நன்றி : நியூஏஜ்(டிச.26 – ஜன.1)

           --தமிழில்: நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

Tuesday 28 December 2021

நாகாலாந்து படுகொலைகளும் ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டமும்

 

நாகாலாந்து படுகொலைகளும் 

ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டமும்

--எஸ். சுதாகர் ரெட்டி

(மேனாள் பொதுச் செயலாளர்,  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி)

            நாகாலாந்தில் ஆயுதப்படைகள் டிசம்பர் 4ம் தேதி நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 14 பேர் கொல்லப்பட்டனர். மோன் மாவட்டத்தில் பணியாற்றும் சுரங்கத் தொழிலாளர்கள் சிலர், மற்றவர்கள் அவர்களுடைய கிராமத்திலிருந்து வந்த அவர்களது உறவினர்களும் நண்பர்களும். அது ஓர் இரக்கமற்றப் படுகொலை. ‘ஆயுதப் படையினர் தற்காப்புக்காகத் துப்பாக்கிச் சூடு நடத்தினர்’ என உள்துறை அமைச்சர் அமித்ஷா நாடாளுமன்றத்தில் அறிக்கை அளித்தார். அது கேலிக்குரிய பொய்.

            படையினருக்கு எதிர்ப்புறத்தில் இருந்து சுடும்போது, படையினர் திருப்பித் துப்பாக்கிச் சூடு நடத்தினால் அது தற்காப்பு. அவர்களது வாகனத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால் சாலைத் தடுப்புகளைப் பயன்படுத்தியிருக்கலாம். அவ்வழியில் தீவிரவாதிகளை எதிர்பார்த்து துப்பாக்கிச் சூடு நடத்தியதாகப் படையினர் கூறிக் கொள்கின்றனர். தங்கள் வண்டியை நிறுத்துமாறு சைகை செய்யப்படவில்லை என உயிர்பிழைத்த தொழிலாளி கூறினார். ஒருக்கால் அத்தகவல் உளவுப் பிரிவினரால் தரப்பட்டிருக்கலாம். சில காலமாக நாகாலாந்து கொந்தளிப்பில் குழப்பமாக இருந்தது. சில ஆண்டுகளுக்கு முன் நாகாலாந்து தீவிரவாதிகளுடன் சில உடன்பாடு ஏற்பட்டதாக மோடி அரசு கூறினாலும் அந்த உடன்பாடு என்ன என்பது குறித்து மக்களிடம் நம்பிக்கை வைத்து எதுவும் சொல்லவே இல்லை. தீவிரவாதிகளுடன் விவாதம் நடத்திய மூத்த காவல்துறை அதிகாரி ரவிக்குச் சுளையாகச் சமீபத்தில் (தமிழ் நாட்டின்) ஆளுநர் பதவி அளிக்கப்பட்டது. கொடூரமான துப்பாக்கிச் சூடு சம்பவம் கிளர்ச்சியாளர்களை இப்பகுதியில் மீண்டும் தீவிரவாதச் செயல்களில் ஈடுபடத் தூண்டலாம்.

            இராணுவக் கோர்ட் விசாரணை நடத்துவது இச்சம்பவத்தில் குற்றவாளிகளைத் தண்டிக்க உதவாது; காரணம், அவர்களை ‘ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டம்’ (AFSPA, அஃப்ஸ்பா) பாதுகாக்கிறது. ‘பதற்றமான பகுதிகள்’ என அழைக்கப்படும் இடங்களில் மக்கள் இயக்கங்களை நசுக்குவதற்காகப் பிரிட்டிஷ் அரசு கொண்டு வந்ததே இந்தச் சிறப்பு அதிகாரச் சட்டம். விடுதலை பெற்ற இந்தியாவில் அஸாமின் சில பகுதிகளுக்காக 1958ல் இச்சட்டம் அறிமுகமானது. பின்னர் ஒன்றிணைந்த அஸாம் மேலும் ஆறு வடகிழக்கு மாநிலங்களாகப் பிரித்து அமைக்கப்பட்டபோது (அந்த ஏழு மாநிலங்களும் சேர்ந்து ‘ஏழு சகோதரிகள்’ என அழைக்கப்பட்டது) அஃப்ஸ்பா கொண்டுவரப்பட்டது. அச்சட்டத்தை அமல்படுத்த அஸாம் ரைஃபிள்ஸ் படைப் பிரிவு நியமிக்கப்பட்டது. அவர்கள் நடத்திய அட்டூழியங்கள் காரணமாகச் சிறப்பு அதிகாரச் சட்டத்தை மக்கள் வெறுத்தனர். பின்னர் அது மாற்றியமைக்கப்பட்டது. கடந்த பல வருடங்களில் பல சம்பவங்கள் நிகழ்ந்தேறின, கிளர்ச்சியாளர்களோடு மற்றவர்களும் கொல்லப்பட்டனர்.

இருபது ஆண்டுகளுக்கு முன் மணிப்பூரில் 20 அப்பாவி மக்கள் கொல்லப்பட்டனர். பேருந்து நிலையத்தில் காத்திருக்கும்போது சிலர் மிருகத்தனமான தாக்குதலைச் சந்தித்தனர். மனோரமா தேவி என்ற பெண்மணி பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு கொல்லப்பட்ட நிகழ்வால் மணிப்பூர் பெண்கள் பெரும் சீற்றம் அடைந்தனர். அவர்கள் நடத்திய ஆர்ப்பாட்டப் பேரணி உலக மக்களின் மனசாட்சியை உலுக்கியது; அப்பேரணியில் நிர்வாணமாகச் சென்ற பெண்கள், ”எங்களைப் பலாத்காரம் செய்”

என முழக்கமிட்டனர். மக்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். அஃப்ஸ்பா சட்டத்திற்கு எதிராக இரோம் ஷர்மிளா பல ஆண்டுகள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார். அவருக்கு வலுக்கட்டாயமாக அரசு உணவு ஊட்டினாலும், அவற்றை மீறி அவர் 16 ஆண்டுகள் தனது உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தினார்.   

காலிஸ்தான் இயக்கத்தின்போது பஞ்சாபிற்கு நீட்டிக்கப்பட்ட அஃப்ஸ்பா 14 ஆண்டுகள் அமலுக்குப் பிறகு விலக்கிக் கொள்ளப்பட்டது.  1990ல் ஜம்மு காஷ்மீரில் திணிக்கப்பட்ட சட்டம் இன்றும் அமலில் உள்ளது. 12வது மக்களவையில் நான் (எஸ் சுதாகர் ரெட்டி) உறுப்பினராக இருந்தபோது மணிப்பூரிலிருந்து அனைத்துக் கட்சி குழுவினரை அழைத்துச் சென்று சிவராஜ்சிங் பாட்டில், உள்துறை அமைச்சரைச் சந்தித்தோம்; பின்னர் 14வது மக்களவையின்போது பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங்கையும் சந்தித்து விவாதித்தோம். சிறப்புச் சட்டத்தை விலக்கினால் ஆயுதப் படையினர் மனஉறுதி குலைந்து தளர்ச்சியடையக்கூடுமென இருவருமே வித்தியாசமான காரணம் கூறினர்.  சில அத்துமீறல்கள் நடைபெறுவதை அவர்கள் ஏற்றாலும் சில பகுதிக

ளில் தொடர வேண்டிய தேவை உள்ளது என்றனர். சூழ்நிலை மேம்பட்ட பிறகு மறுபரிசீலனை செய்ய உறுதியளித்தனர். சட்டத்தை ரத்து செய்யக்கோரி வடகிழக்கில் பல தூதுக்குழுக்களும் பல்வேறு போராட்டங்களும் நடந்தன. திரிபுரா மாநிலத்தில் இடதுசாரி அரசு அமைதியை ஏற்படுத்திய பிறகு சட்டம் விலக்கப்பட்டது. பின்னர் மிஸோராம் மேகாலயாவிலும்
ரத்தானது. ஆனால் அஸாமின் சில பகுதிகள், நாகாலாந்து, இம்பால் தவிர்த்து மணிப்பூர் முழுவதும் மற்றும் ஜம்மு காஷ்மீரிலும் அஃப்ஸ்பா சட்டம் இன்னும் தொடர்கிறது.

ஐநா சபையின் மனித உரிமைகள் கமிஷன் (UNHRC) இச்சட்டத்தை விலக்கிக் கொள்ள திரும்பத் திரும்ப இந்திய அரசிடம் கூறியது. இது பற்றி ஆய்வு செய்ய பல கமிஷன்கள் அமைக்கப்பட்டன.


நீதிபதி ஜீவன் ரெட்டி கமிஷன்

            உச்சநீதிமன்ற நீதியரசர் ஜீவன் ரெட்டி தலைமையிலான குழு 2005 ஜூன் 6 அறிக்கையில் இச்சட்டத்தை ரத்து செய்யக் கறாராகச் சிபார்சு செய்தது. ஏனெனில், “இச்சட்டம் வெறுப்பு மற்றும் அடக்குமுறையின் அடையாளம், அடாத நடவடிக்கைகளுக்கான ஒடுக்குமுறை கருவி” என்றது. 10 ஆண்டுகள் கிடப்பில் போடப்பட்ட அறிக்கையை 2015ல் மோடி அரசு நிராகரித்தது.

சந்தோஷ் ஹெக்டே குழு

            2013ல் ஆறு பேர் இராணுவத்தால் கொல்லப்பட்ட நிகழ்வை அடுத்து தொடர்ச்சியாக நடத்தப்பட்ட போராட்டங்களால் நீதியரசர் சந்தோஷ் ஹெக்டே குழு அமைக்கப்பட்டது. மேனாள் முதன்மை தேர்தல் ஆணையர் ஜெஎம் லிங்டோ மற்றும் காவல்துறை மூத்த அதிகாரி ஒருவரும் குழுவில் இடம்பெற்றனர். விசாரணைக்குப் பிறகு பலியானவர்கள் எவர் மீதும் எந்தக் குற்றப் பின்னணி பதிவுகளும் இல்லை என்று அறிவித்தவர்கள், அஃப்ஸ்பா சட்டம் மேலும் மனிதத்தன்மையுடன் இருக்க வேண்டும், இராணுவப் படையினர் தங்கள் செயல்களுக்கு மேலும் பொறுப்பாக்கப்பட வேண்டும் என்றும் கூறினர். நீதிக்குப் புறம்பான கொலைகளைச் சட்டபூர்வமாக விசாரிப்பது குறித்து ஒன்றிய அரசு மூன்று மாத காலத்திற்குள் முடிவெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் ஆலோசனை கூறினர். மேலும் ஜம்மு காஷ்மீர் மற்றும் வடகிழக்கு மாநிலங்கள் போன்ற பகுதிகளில் அமைதியை ஏற்படுத்தி சாதிப்பதில் அஃப்ஸ்பா சட்டம் தடையாக உள்ளது எனக் குறிப்பிட்டது.

            ஹெக்டே குழு ஆயுதப் படையினருக்கு எதிராகக் குற்ற நடவடிக்கை எடுப்பதிலிருந்து அவர்களுக்குப் பாதுகாப்பு அளிக்கும் அச்சட்டத்தின் ஆறாவது பிரிவைக் குறிப்பிட்டு முக்கியமான விமர்சனத்தைச் செய்தது: ‘அப்பிரிவின்படி ஒன்றிய அரசின் அனுமதி இன்றி எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட முடியாது; அவ்வாறெனில், உரிய விசாரணைக்குப் பின் ஒன்றிய அரசால் சட்டபூர்வ குற்ற நடவடிக்கைக்கு அனுமதி வழங்க முடியும் என்பதே அதன் பொருள்’ என்றும் விளக்கியது.

            இரண்டாவது நிர்வாகச் சீர்திருத்தக் குழு தனது அறிக்கையில் அஃப்ஸ்பா சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என சிபார்சு செய்தது; மேலும் அவ்வாறு ரத்து செய்தால் அது வடகிழக்கு மாநில மக்களிடையே எழுந்துள்ள பாகுபாடு மற்றும் அன்னியப்படுத்தப்படுவதான உணர்வையும் நீக்கும் என்று கருத்துரைத்தது. அக்குழு, சட்டவிரோத நடவடிக்கைகள் (தடுப்பு) சட்டத்தைத் திருத்தவும் வடகிழக்குப் பகுதியில் ஆயுதப்படைகளைப் பயன்படுத்துவது பற்றிய புதிய அத்தியாயத்தைச் சேர்க்க வேண்டும் எனவும் சிபார்சு செய்தது. 

            உச்சநீதிமன்றம் பின்வருமாறு கூறியது: ஆயுதப்படை நடத்தும் எந்த என்கௌண்டரில் பலியானாலும், பலியானவர் அப்பாவி பொது மனிதரோ அல்லது தீவிரவாதியோ அல்லது பயங்கரவாதியோ எவராயினும் அது முழுமையான விசாரணைக்கு உட்படுத்த வேண்டும்; சட்டம் அனைவருக்கும் பொது, இருவருக்கும் சமமாகவே பயன்படுத்த வேண்டும். ஜனநாயகத்தின் தேவை அது, மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பதன் தேவையும், தனிநபர் சுதந்திரங்களைப் பாதுகாப்பதன் தேவையுமாகும். இப்படிப் பல முக்கியமான சிபார்சுகளுக்குப் பிறகும் ஆயுதப் படையினர் சிறப்பு அதிகாரச் சட்டம், மக்கள் விருப்பத்திற்கு மாறாகத் தொடர்கிறது; அப்பாவிகள் பலியாவதும்கூட.

            சிலகாலம் முன்பு ஒரு மூத்த இராணுவ அதிகாரி, ‘எந்த நாட்டின் மக்கள் அந்நாட்டின் இராணுவத்தைப் பார்த்து பயப்படவில்லையோ, அந்த நாடு சபிக்கப்பட்டதாக அழியும்’ என்று திருவாய் மலர்ந்தார். அது சரியான கருத்து அல்ல. எல்லைகளையும் தேசத்தையும் பாதுகாப்பதற்காக உருவாக்கப்பட்டதே இராணுவம், மக்களை அடக்கி ஒடுக்குவதற்காக அல்ல. நாட்டின் எதிரிகள், ஆக்கிரமிப்பாளர்கள் இராணுவப் படையைப் பார்த்து பயப்பட வேண்டும். நமது நாட்டு மக்கள் இராணுவத்தை மதிக்கிறார்கள், வீரர்களின் தியாகத்தை நோக்கி அவர்களிடம் அன்புடையவர்களாக இருக்கிறார்கள். பின் அவர்கள் ஏன் அச்சப்பட வேண்டும்?

            அரசு நிர்வாகத்தின் எந்த அமைப்பிடமும் அச்சப்படுவது வெறுப்பை வளர்க்கும். தேசத்தின் ஒட்டுமொத்த மக்களும் தீவிரவாதிகள் இல்லை. மக்கள் கூட்டம் பின்வரும் பிரிவினர்களைக் கொண்டிருக்கிறது: தேசத்தின் செல்வத்தை உற்பத்தி செய்யும் உழைக்கும் வர்க்கம்; தேசத்திற்கு அன்னமிட உணவு தானியங்களை உற்பத்தி செய்யும் விவசாயிகள்; ஞாலம் நடுங்கவரும் கப்பல்கள் போல பெரும் கருவிகளை உற்பத்தி செய்து வானை அளக்க ஊர்திகள் அனுப்பும் நமது விஞ்ஞானிகள், தொழில்நுட்பவியலாளர்கள்; மக்களின் நலன் காக்கும் மருத்துவர்கள், மருத்துவப் பணியாளர்கள், கைவினைஞர்கள், ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், அறிஞர்கள், கலைஞர்கள், மக்கள் உரிமைக்காகப் போராடும் மக்கள் பிரதிநிதிகள், சிறிய பெரிய வணிகர்கள், போற்றுதலுக்குரிய தூய்மைப் பணியாளர்கள், கணினி வல்லுநர்கள் என எண்ணிறைந்த பகுதியினரைக் கொண்டது நமது மக்கள் தொகை. இந்த மக்கள் இராணுவத்தைப் பார்த்து ஏன் பயப்பட வேண்டும்? எங்கெல்லாம் குற்றவாளிகளும் சமூக விரோதிகளும் இருக்கிறார்களோ அவர்களை நமது காவல்துறையினர் கவனித்துக் கொள்வார்கள்.

            நாடாளுமன்றத்தில் எதிர் கட்சிகள், காங்கிரஸ் உட்பட (பொதுவாக ஆட்சிஅதிகாரத்தில் இருக்கும் கட்சிகள், அதிகாரம் இழந்ததும் ஞானம் வந்தவராவார்கள்) நாகாலாந்து படுகொலைகள் குறித்து முழுமையான விசாரணை கோரி எதிர் தரப்புப் பங்கினை ஆற்றின; இடதுசாரிகள் உட்பட சில கட்சிகள் மக்கள் விரோத அஃப்ஸ்பா சட்டத்தை ரத்து செய்யக் கோரின.

           தற்போது இதற்கான போராட்டம் வடகிழக்கு மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளோடு வரையறுத்து நிற்பதல்ல. இது ஒட்டு மொத்த தேசத்தின் ஜனநாயகத்திற்கான போராட்டம். அரசியல் கட்சிகள், ஜனநாயக சக்திகள் மற்றும் மக்கள் அனைவரும் அஃப்ஸ்பா சட்டத்தை ரத்து செய்வதற்காக இணைந்து போராட முன்வர வேண்டும்.

(கடைசி செய்தி : வெறுப்புக்குரிய ஆயுதப் படைகள் சிறப்பு அதிகாரச் சட்டத்தை நாகாலாந்தில் நீக்குவதற்காக ஒன்றிய அரசு உள்துறை அமைச்சக கூடுதல் செயலாளர் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது. ரத்து செய்வதற்கான வழிமுறைகளை அக்குழு 45 நாட்களில் தரும். –பத்திரிக்கை செய்தி)

--நன்றி: நியூஏஜ் (டிச.19 --25)

--தமிழில் : நீலகண்டன்

Sunday 26 December 2021

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 96வது அமைப்பு தினம் -- ஒரு வரலாற்றுப் பார்வை -- நியூஏஜ் தலையங்கம்

 

நியூஏஜ் தலையங்கம் (2020 டிச.26 – ஜன.1, 2021)

மீண்டும் மக்களிடம் செல்வோம்!

மேலும் முன்னோக்கிச் செல்வோம்!

            1925 டிசம்பர் 26ம் நாள் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்க வரலாற்றில் மறக்கமுடியாத நாள்! அந்நாளில்தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிறந்தது! சிபிஐ வாழிய வாழியவே!

            கான்பூரில் அந்த டிசம்பர் மாதத்து தினம் குளிராக இருந்தாலும், அங்கே குழுமியிருந்த இளம் புரட்சியாளர்கள் அணையா நம்பிக்கை மற்றும் புதிய உலகு பற்றிய விழைவுகளின் தகிக்கும் நெருப்பின் நெஞ்சக் கிளர்ச்சியோடு இருந்தனர். அவர்கள் மெட்ராஸ், கல்கத்தா, பம்பாய், பஞ்சாப், கான்பூர் முதலான தேசத்தின் பல்வேறு பகுதிகளில் புதிதாகப் பிறந்த கம்யூனிஸ்ட் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி குழுமியிருந்தனர். இந்திய மண்ணில் கட்சியின் முதலாவது அமைப்புநிலை மாநாடு நிகழ்வதற்கு முன்பே, இந்திய எல்லைகளுக்கு அப்பால் தாஷ்கண்ட் கம்யூனிஸ்ட் குழுக்கள் போன்றவை நிறுவப்பட்டன. அவர்களது கனவு சுதந்திர  இந்தியா வளர்ச்சி பெற்று சோஷலிசப் பாதையில் முன்னோக்கிச் செல்ல வேண்டும் என்பதே. இருப்பினும் காக்காய் உட்கார பனம்பழம் விழுந்த கதையாய் அது, விபத்தாய் நிகழ்ந்தவைகளின் தன்னிச்சை விளைவு அல்ல. மாறாக, சாதகமற்ற சமூக அரசியல் பின்புலத்தில் ஆழமான விவாதங்களுக்குப் பிறகு நன்கு சிந்தித்து எடுத்து வைத்த அடிகள், அது திட்டமிட்ட நடவடிக்கைகளின் விளைவு. ஏகாதிபத்திய எதிர்ப்பு விழிப்புணர்வு குருத்தாய் முளைவிட்டாலும் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் மற்றும் அதன் இந்தியக் கையாட்கள் அதனைப் பிடிங்கி எறிய கடுமையாக முயன்றார்கள். அனைத்தையும் மீறி, எதிர்க்க முடியாதபடி இந்திய மண்ணில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிறந்தது! சிபிஐ வாழிய வாழியவே!

            1917ல் மாபெரும் அக்டோபர் சோஷலிசப் புரட்சியின் வெற்றி வரலாற்றின் பாதையை முற்றிலுமாக மாற்றியது. யுகப் புரட்சியின் அதிர்வுகள் ஒடுக்கப்பட்ட மக்கள் திரள் மற்றும் அனைத்து கண்டங்களின் நாடுகள் மத்தியிலும் அதன் நம்பிக்கை செய்தியைப் பரப்பியது. மனிதகுல விடுதலைக்கான மார்க்சிய தத்துவத்தின் ஆதர்சத்தால் ஊக்குவிக்கப்பட்ட மாபெரும் அக்டோபர் புரட்சி விடியல் கீதத்தால், புரட்சிகர குழுக்கள் சமூக மாற்றம் குறித்துப் புதிய உள்நோக்குப் பார்வையைப் பெறத் தொடங்கினர். இந்தியாவில் ‘நவஜவான் பாரத் சபா’, தோழர்களோடு பகத்சிங் வழிநடத்திய ‘இந்துஸ்தான் சோஷலிச குடியரசு அசோசியேஷன்’ மற்றும் சூர்யா சென் போன்றவர்கள் நடத்திய இளைஞர் படை குழுக்கள், வங்கத்தின் ஜுகாந்தர் மற்றும் அனுசிலான் குழுக்கள் அனைத்தும் இந்த விழிப்புணர்வின் பகுதிகளாக விளங்கின.

            1908ம் ஆண்டிலேயே பால கங்காதர திலகர் கைது செய்யப்பட்டபோது பம்பாய்த் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் பிரகடனம் செய்தனர் – அந்த வேலைநிறுத்தம் இந்திய உழைக்கும் வர்க்கம் முதன் முதலாக நடத்திய அரசியல் வேலைநிறுத்த நடவடிக்கையாகும்! திலகருக்கு ஆறு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதற்கு ஆறு நாட்கள் வேலை நிறுத்தம் செய்தனர். பம்பாய் வீதிகளில் “திலகரை விடுதலை செய்” என்ற ஒரே முழக்கம்
எதிரொலித்தது. தொழிலாளர் வர்க்கத்தின் இந்த நடவடிக்கையை அறிந்த
லெனின் எழுதினார்,

‘இந்திய உழைக்கும் வர்க்கம் முதிர்ச்சி அடைந்துவிட்டது’. அந்த முதிர்ச்சிதான் 1920ல் ஏஐடியுசி பேரியக்கத்தை அமைத்திடச் செய்தது. தொழிலாளர்களோடு விவசாயிகள், இளைஞர்கள், பிற ஒடுக்கப்பட்ட பிரிவினர்களும் காலனிய ஆட்சிக்கு எதிராகக் கிளர்ந்து எழுந்தனர். புதிய போராட்டப் பாதை காண்பதற்கான அவர்களுடைய தவிப்புமிக்கத் தேடல் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பதற்குப் பாதை சமைத்தது. காங்கிரஸ் தலைமையின் அரைகுறை மனதோடு எடுக்கப்படும் நடவடிக்கைகளால் ஏமாற்றம் அடைந்த காங்கிரஸ் அணிகளும்கூட இந்தியப் புரட்சியாளர்களைச் சுதந்திரம் மற்றும் வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புக்களைத் தேட வற்புறுத்தியது.

            அப்படி அமைப்பதற்கு முன்பே கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் தத்துவம், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியவாதிகள் தலைமையிலான வஞ்சக இருட்சக்திகளால் தாக்கப்பட்டது. சோஷலிசக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு போராட்டக் களத்தில் குதித்த இளம் புரட்சியாளர்களுக்கு எதிராக ஒன்றன்பின் ஒன்றாக சதி வழக்குகள் புனையப்பட்டன; 1922 முதல் 1928 வரையான ஐந்து  பெஷாவர் சட்ட வழக்குகள், கான்பூர் சதி வழக்கு, லாகூர் சதி வழக்கு, மீரட் சதி வழக்கு என எதிர்ப்போர் குரல்வளைகளை நெறிக்க பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இடைவெளியின்றி தொடுத்த வழக்குகளின் பட்டியல் மிக நீண்டது. பொய்யும் புனைச் சுருட்டுக்களும் மற்றும் சதிகளால் கம்யூனிஸ்ட் கட்சியைக் கொல்ல முடிந்திருக்குமானால், அது இந்த மண்ணில் நிலைத்திருக்க முடியாது. இப்படி ஒடுக்குமுறையாளர்கள் மற்றும் வர்க்க எதிரிகளால் தூண்டப்பட்ட அனைத்துத் தொல்லைகளையும் துணிந்து எதிர்த்துதான், தேசத்தை விடுவித்து புதிய உலகு காணும் பாதையில் முன்னேற, கம்யூனிஸ்ட்கள் தங்கள் தளராத போராட்டங்களில் தொடர்ச்சியாக ஈடுபட்டார்கள்.  இந்திய அரசியல் வான்வெளியில் ‘பூரண சுதந்திரம்’ என்ற முழக்கத்தை ஒலிக்கச் செய்தது, கம்யூனிஸ்ட்கள்தான்.

           


1921 இந்திய தேசிய காங்கிரஸ் அகமதாபாத் அமர்வில் பூரண சுதந்திரத்திற்கான தீர்மானத்தை முன்மொழிந்தவர் தோழர் ஹஸ்ரத் மொஹானி (படம்). அத்தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. அடுத்த ஓராண்டிலே 1922 காங்கிரஸ் கயா அமர்வில் அதே கோரிக்கையை மேலும் அதிக ஆதரவோடு திரும்ப எழுப்பியவர் தோழர் சிங்காரவேலு செட்டியார்.

            ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1925ம் ஆண்டின் இறுதியில், கான்பூரில் நடந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு மாநாட்டின் வரவேற்புக்குழு தலைவரானார், ஹஸ்ரத் மொஹானி. சிபிஐ அமைப்பு மாநாட்டிற்குத் தலைமை வகித்தார், சிங்காரவேலு செட்டியார். நினைவில் நீங்கா அந்நாட்களிலிருந்து இந்திய சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் கம்யூனிஸ்ட்கள் மறுக்க முடியாத பெரும் பங்களிப்புகளைச் செய்தனர். அகில இந்திய கிசான் சபா, அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், முற்போக்கு எழுத்தாளர்கள் கூட்டமைப்பு முதலிய வெகுஜன அமைப்புகளும் 1936ம் ஆண்டில் லக்னோவில் கட்டியமைக்கப்பட்டன. இளைஞர்கள், பெண்கள் அமைப்புக்களும் பிற ஒடுக்கப்பட்ட மக்கள் திரளும் கம்யூனிஸ்ட்களுடன் அணி திரண்டு முனையிலே முகத்து நிற்றனர்.

            சிபிஐ வரலாற்றின் மாபெரும் சகாப்தம் தீரமான போராட்டங்கள் மற்றும் தியாகங்களால் நிரம்பியது. பொருளாதார, அரசியல் மற்றும் சமூக ஒடுக்குமுறையிலிருந்து விடுவித்து மக்கள் திரளை அவர்களின் முன்னோக்கிய பயணத்தில் கட்சி தலைமைதாங்கி வழிநடத்தியது. நிலப்பிரபுத்துவ காலனிய சக்திகளுக்கு எதிரான, சாகச நிகழ்வுகள் நிரம்பிய, தெலுங்கானா மற்றும் புன்னபுரா வயலார் ஆயுதம் தாங்கிய போராட்டங்கள் மற்றும் அமைதிவழிப்பட்ட விவசாயிகளின் தேபகா இயக்கம் கம்யூனிச வரலாற்று நிகழ்வுகளில் பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்பட்டன.

            செங்கொடி தலைமையில் நாட்டின் பல பகுதிகளில், சுரண்டலுக்கும் ஒடுக்குமுறைகளுக்கும் எதிரான சுயநலமற்றப் போராட்டங்களில், இன்னுயிரை ஈந்த தியாக மறவர்களை வருங்காலத் தலைமுறையினரும் என்றென்றும் நினைவு கொள்வர். சுதந்திர இந்திய வரலாற்றின் ஒவ்வொரு திருப்பு முனையிலும், தொழிலாளர்கள் மற்றும் பாடுபாடும் மக்கள் திரளின் நலன்களின் சார்பாக, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி களத்திலே முன்நின்றது. வலதுசாரி பிற்போக்குச் சக்திகளின் பேரழிவை ஏற்படுத்தும் சதிகளை எதிர்த்து எப்போதும் களமாடியது சிபிஐதான்; அதன் மூலம் ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் சோஷலிச இலக்குகளின் மேன்மையைக் கட்சி உயர்த்திப் பிடித்தது. வகுப்புவாத, பாசிச சக்திகள் நிகழ்த்த இருக்கும் அதன் (பேரழிவு) இயல்பைக் குறித்துக் கட்சி விழிப்புணர்வுடன் எப்போதும் தேசத்தை எச்சரிக்கிறது. பாசிச அபாய அச்சுறுத்தல்களை எதிர்த்துப் போராட மதசார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி சக்திகளின் பரந்த அடிப்படையிலான மேடை அவசியம் என சிபிஐ வலியுறுத்தக் காரணம், உலக வரலாறு மற்றும் இந்திய வளர்ச்சி குறித்த கட்சியின் புரிதல் மிகத் தெளிவானது என்பதே. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது வலிமை மற்றும் சக்திகளைத் தொழிலாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், மாணவர்கள், பெண்கள், தலித் மற்றும் ஆதிவாசி மக்களின் உரிமைககளுக்காகப் போராட எப்போதும் அர்பணிக்கிறது. இந்தியத் துணைக் கண்டத்தின் குறுக்கும் நெடுக்குமாக சிபிஐ-யின் செங்கொடி – எங்கெல்லாம் மக்கள் ஆளும் வர்க்கங்களின்  கொடூரமான கொள்கைகளை எதிர்த்துக் கிளர்ந்து போராடுகிறார்களோ, அங்கெல்லாம் – செம்மாந்து ஒளிவீசி பறப்பது தெரிகிறது.

            கட்சி தொடங்கப்பட்டதிலிருந்து 1947வரை காலனிய ஆட்சிக்கு எதிராகவும், பின்னர் பல பத்தாண்டுகள் காங்கிரஸின் மக்கள் விரோத கொள்கைகளை எதிர்த்தும், தற்போது பாஜகவின் மிகப் பிற்போக்குத்தனமான ஆட்சிக்கும் அதனைக் கட்டுப்படுத்தி வழிநடத்தும் பாசிச ஆர்எஸ்எஸ் அமைப்புக்கு எதிராகவும் முக்கியமான போர்களுக்குத் தளர்வின்றி மக்களைத் திரட்டுகிறது. தற்காலத்தில் இந்திய மக்கள் திரளுக்கு எதிரான முக்கிய எதிரி வகுப்புவாத பாசிச சக்திகளே என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிதான் மிகக் கூடுதலான தெனிவோடு பிரகடனப்படுத்தியது. மேலும் முக்கிய எதிரிக்கு எதிரான போர்களத்தில் வெற்றி பெற அனைத்து மதசார்பற்ற, ஜனநாயக இடதுசாரி சக்திகளின் பரந்துபட்ட மேடையை நனவாக்குவது என்ற அரசியல் கண்ணோட்டத்தை முன்னிறுத்தி ஆதரித்த முதல் அரசியல் கட்சியும் சிபிஐதான். மார்க்சிய விஞ்ஞானக் கோட்பாடுகளின் நம்பிக்கைக்குரியதாய் நின்று விளங்கும் சிபிஐ, அதன் அடிப்படையில் நமது நாட்டின் சமூக அரசியல் முரண்பாடுகளையும் உலகைச் சுற்றியுள்ள நிகழ்வுகளையும் பகுத்துணர எப்போதும் முயல்கிறது. இந்த அதன் அணுகுமுறை முயற்சிகளில் சொந்த அனுபவங்களிலிருந்தும் உலக அனுபவங்களிலிருந்தும் மதிப்புறு பாடங்களைக் கட்சி கற்றுள்ளது. இந்த வகையில் உலக கம்யூனிஸ்ட் போர்ப்படை அணிவரிசைகளில் தானும் பெருமைமிக்க ஒரு படைப் பிரிவு எனப் பிரகடனப்படுத்துவதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மிகுந்த பெருமிதம் கொள்கிறது. 

            சோவியத் யூனியன் வீழ்ச்சியடைந்து, உலக சோஷலிச முகாம் பலவீனமானபோது அது மார்க்சியத் தத்துவத்தின் தோல்வி அல்ல எனத் தயக்கமின்றி அறிவித்த சிபிஐ கட்சி, அதனைப் பயன்படுத்திய ஓர் அணுகுமுறையின் வீழ்ச்சி என்றது. சோஷலிச நெருக்கடிக்குப் பிறகு நடந்த 15வது கட்சி காங்கிரஸில், புதிய சூழ்நிலைகள் ஏற்படுத்திய பிரச்சனைகளைத் தீர்க்கும் சவாலை, புரட்சிகர மார்க்சிய விஞ்ஞானத்தைப் படைப்பூக்கமாக மேம்படுத்துவதன் மூலமாக, கட்சி எதிர்கொண்டு ஏற்றது.

            இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 96வது அமைப்புதினத்தைக் கொண்டாடும் இன்றைய தருணத்தில் கட்சி தனது உறுப்பினர்கள், ஆதரவாளர்கள், இடதுசாரிகளின் நலம் நாடுபவர்களை மார்க்சியப் புரட்சிகரத் தத்துவம் மற்றும் நடைமுறைகளைப் பயின்று தங்களைத் தயார்ப்படுத்திக் கொள்ளுமாறு அறைகூவி அழைக்கிறது. கடந்து வந்த பாதையைத் திரும்பிப் பார்க்கும்போது, இந்த மாபெரும் தேசத்தின் சேவையிலும் நமது மக்கள் திரளின் நன்மைக்காகவும் ஆற்றிய எண்ணிறந்த தனது சாதனைகளுக்காகச் சிபிஐ கட்சி இயல்பாகவே பெருமிதம் கொள்கிறது. அதனோடு, முயற்சிகளில் தானடைந்த தோல்விகளையும்கூட கட்சி அறிந்தே இருக்கிறது. நீண்ட பயணத்தில் நிகழ்ந்த தனது தவறுகளைத் துணிவுடன் ஒப்புக்கொள்ளும் அரசியல் நேர்மையும் கொண்ட ஒரே கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே! அச்செயல் மக்கள்பால் உள்ள அதன் நேர்மையையும் கொள்கைபால் உள்ள பற்றுறுதியையும் பிரதிபலிப்பது.

            அதே உணர்வோடு, கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கொள்கை கோட்பாட்டின் அடிப்படையில் மீண்டும் ஒன்றிணைப்பது குறித்த முக்கிய பிரச்சனையில் சிபிஐ தனது நிலைபாட்டை உறுதிபட மீண்டும் வற்புறுத்துகிறது.  கொள்கைசார்ந்து எதிர்கால கண்ணோட்டத்துடன் மீளாய்வு செய்தால் கம்யூனிஸ்ட்கள் ஓர் உண்மையை உணர முடியும்;  அது, நமது இயக்கத்தில் ஏற்பட்ட பிளவு, புரட்சிகர இயக்கத்தைப் பலவீனப்படுத்தி, வர்க்க எதிரிகளை வலிமையாக்கி உள்ளது என்ற பெரும் உண்மையைப் புரிய வைக்கும். கம்யூனிச இயக்கத்தின் எதிர்வரும் நூற்றாண்டு மற்றும் அதன் விவாத நிகழ்வுகளில், தங்கள் சிந்தனை மற்றும் செயல்களில் ஒன்றுபடுவதற்கு உதவிடும் வகையில் பொருள் பொதிந்த விவாதங்களை நடத்துவதற்கான வாய்ப்புகளை இந்தியக் கம்யூனிஸ்ட்களுக்கு வழங்க வேண்டும்.

            இலட்சக் கணக்கான சிபிஐ உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பல்லாயிரக் கணக்கான அதன் கிளை அமைப்புகளுக்கு 96வது அமைப்பு தினம் என்பது கொண்டாடுவதற்கும் அனுசரிப்பதற்குமான வெறும் நாள் அன்று. எந்த மாபெரும் இலட்சியங்களுக்காக 1925ல் கட்சி நிறுவப்பட்டதோ அதற்குத் தங்களை மறு அர்ப்பணிப்பு செய்யும் தருணமாகும் இது.  அதே ஆண்டில் தொடங்கப்பட்ட ஆர்எஸ்எஸ், தேசத்தின் ஜீவாதாரங்களை உறிஞ்சிட தனது விஷக் கொடுக்குகளை நீட்டியுள்ளது என்பதை நாம் மறக்கலாகாது. இத்தகைய ஆபத்தான வளர்ச்சி அதன் கொள்கை சரியானது என்பதால் ஏற்பட்டதல்ல. உண்மையில் நியதி, நீதி, சரித்தன்மை என்பதெல்லாம் அவர்கள் கொள்கைகளுக்குப் புறம்பான எதிரிடையானவை. அவர்கள் முசோலினி பள்ளியில் படித்து பயிற்சி பெற்ற ஹிட்லர் பாசிசத்தின் இந்திய (பதிப்பின்) முகமாகும். 

            புதிய தாராளமயம் ஏவப்பட்டதால் இந்தியாவில் வலதுபுறம் சாய்ந்து வீசும் காற்றின் உதவியால் அவர்கள் வலிமையைத் திரட்டி தங்கள் இரகசியமான நோக்கங்களை நிறைவேற்றத் துணிந்துள்ளனர். இனப் பெருமிதம் மற்றும் சூப்பர் கொள்ளை லாபம் என்ற சிறகுகளில் ஏறி நமது நாட்டின் மதசார்பற்ற கட்டமைப்பினுள் ஊடுருவி, சமூகத்தில் வகுப்புவாதப் பிரிவினை விதைகளை விதைக்க முயல்கின்றனர். மக்களைத் திரட்டி அவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும்.

            ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் செயல்படும் ஒன்றிய அரசு தனது பல சட்ட நடவடிக்கைகள் மூலமாக வகுப்புவாத பாசிசச் சக்திகளையும் உலகின் கார்ப்பரேட்டுகளையும் கட்டவிழ்த்து விட்டுள்ளது. அவர்கள் திட்டமிட்டு நாட்டு மக்கள் மத்தியில் ஒரு பிரமையைக் கட்டமைத்தனர் – அது, அவர்கள் தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்றச் சித்தரிப்பு. அந்த மாயா பிம்பத்தை, இன ஆதிக்க மேட்டிமையை இந்திய விவசாயிகள் தங்கள் வரலாற்றுப் புகழ்மிக்க ஓராண்டிற்கும் மேல் நீடித்தப் போராட்டங்களால் சுக்கு நூறாக நொறுக்கி விட்டனர். விவசாயிகளின் புகழ்மிக்க அமைதியான அப்போராட்டத்திலிருந்து தேசம் கற்க வேண்டிய பாடங்கள் ஏராளம். இது தொடர்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி கட்சிக் காங்கிரஸ் மாநாட்டு அறைகூவல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு மேலும் பொருத்தமுடையது. அந்த அறைகூவல்,

            “மக்களிடம் செல்வோம், அவர்களோடு மீண்டும் ஒன்றிணைவோம்!”

            அந்த முழக்கம் கம்யூனிஸ்ட்களுக்குத் தங்கள் லட்சியங்களையும் நம்பிக்கைகளையும் நினைவுறுத்தும் கண்காணிப்பு வார்த்தைகளாகட்டும்!

மார்க்சியம் - லெனினியம் ஜிந்தாபாத்! செங்கொடி ஜிந்தாபாத்!                                           இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஜிந்தாபாத்!

--தமிழில் : நீலகண்டன், என்எப்டிஇ, கடலூர்    

Wednesday 22 December 2021

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாற்று வரிசை 55 -- பத்தம் எல்லா ரெட்டி

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 55         


பத்தம் எல்லா ரெட்டி
--

ஆயுதப் போராட்டத்தை விலக்கிக் கொள்வது எப்படி என அறிந்த தலைவர்

– அனில் ரஜீம்வாலே

நியூஏஜ் (நவம்.21 – 27)

            ஆந்திரா மாநிலம், கரீம்நகர் மாவட்டத்தில் கலிப்பள்ளி கிராமத்தில், பட்டேல்கள் என அறியப்படும் நடுத்தர விவசாயிகள் குடும்பத்தில் 1906ல் பத்தம் எல்லா ரெட்டி பிறந்தார். தந்தை பெயர் ஹன்மையா அசல்தார் முகட்டம் (Hanmaiah Asaldar Mukaddam). கலிப்பள்ளியில் இருந்த தொடக்கப் பள்ளியில் ஆரம்பக் கல்வியையும் பின்னர் ஹைத்தராபாத், கௌளிகுடா நகரின் விவேக் வர்த்தனி பள்ளியில் சேர்ந்த பத்தம் எல்லா ரெட்டி 1927 –28ல் மெட்ரிக் கல்வியை முடித்தார். அந்தக் கல்வி நிறுவனத்தின் தேசியத் தனித்துவமும் தாராளச் சிந்தனை பண்பும் அவரிடம் ஆழமான செல்வாக்கு செலுத்தியது. அவருக்கு வாமன் நாயக் என்ற புரட்சியாளருடன் தொடர்பு ஏற்பட்டது.

சட்டமறுப்பு இயக்கத்தில்

            அப்பள்ளி செல்வாக்குபோலவே அதே நேரம் காங்கிரஸ் தலைமையிலான இயக்கத்தாலும் ஈர்க்கப்பட்டு கதர் பிரச்சாரங்களில் சேர்ந்தார். அவர் ஹைத்தராபாத் நகரின் கோல்கொண்டா பத்திரிக்கா, மெட்ராசிலிருந்து வெளியான ஆந்திர பத்திரிக்கா இதழ்களின் முகவரானார்.

            ஆந்திர மகாசபா அமைப்பு 1920களிலேயே தொடங்கப்பட்டதாகும். 1921ல் வெறும் 12 உறுப்பினர்களுடன் ஆந்திரா ஜன் சங்கம் (ஆந்திர மக்களின் சொஸைட்டி) நிறுவப்பட்டது. 1922 பிப்ரவரியில் அதன் முதல் மாநாடு நடைபெற்றது. 1928ல் அவ்வமைப்பு ஆந்திரா மகாசபா என மாற்றப்பட்டு அதன் முதல் மாநாடு 1930ல் நடைபெற்றது.

            எல்லா ரெட்டி பின்னாட்களில் மகாசபாவின் முக்கியமான தலைவர்களில் ஒருவரானார். அவர் ஆந்திர மகாசபாவின் முக்கிய புள்ளியும் காங்கிரஸ் தலைவருமான சுவாமி இராமானந்த் தீர்த்(தர்) அவர்களுடன் மிக நெருக்கமாகப் பணியாற்றினார். இராமானந்த் தீர்த்(தர்) நிஜாமின் ஆட்சிக்கு எதிராகப் பல போராட்டங்களை நடத்தி ஹைத்தராபாத்தை இந்தியாவுடன் இணைப்பதற்காகப் பாடுபட்டார். ஆந்திர மகாசபாவில் கம்யூனிஸ்ட்களும் காங்கிரஸ்காரர்களும் ஒன்றாகப் பணியாற்றினார். எல்லா ரெட்டி 1930 ஜூலையில் சட்டமறுப்பு இயக்கத்தில் சேர மெட்ராஸ் மாகாணத்திற்குப் புறப்பட்டார். திருச்சிராப்பள்ளியிலும் வேலூரிலும் சத்யாகிரகப் பிரச்சாரம் செய்தார். கள்ளுக் கடை மற்றும் அயல்நாட்டுப் பொருள்கள் விற்கும் கடைகளில் மறியல் செய்ததற்காக அவர் பீமாவரத்தில் கைதானார். 1930 ஜூலை 26ல் குற்றவாளியெனத் தீர்ப்பாகி ஏழு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.

            விவசாய விளைச்சல் திருப்திகரமாக இல்லாததால் 1931ல் அவர் விவசாயிகள் மத்தியில் (சமஸ்தான) அரசுக்கு வரி வருமானம் செலுத்த வேண்டாம் எனப் பிரச்சாரம் செய்தார். 1931 அக்டோபரில் கலிப்பள்ளி, ஜவகர்பேட், முஸகான் பேட் மற்றும் ஆனந்த்குண்டி முதலான ஊர்களின் மக்களைத் திரட்டி ‘முழுமையான வரி வருவாய் தள்ளுபடி அல்லது பணம் செலுத்துவதற்கு மேலும் காலஅவகாசம்’ கோரி மனுஅளிக்கச் செய்தார்.

            1931 செப்டம்பரில், ‘பால்நந்தா ஆந்திரா சபா நிலையம்’ என்ற பெயரில் தெலுங்கு நூலகம் ஒன்றைத் திறந்தார். ஆர்மூர், நிஜாமாபாத் மாவட்டத்திற்கு விஜயம் செய்து மகாத்மா காந்தியின் இயக்கத்திற்காக நிதி திரட்டினார்.

            1928 –29ல் காக்கிநாடாவில் ராவி நாராயண ரெட்டியுடன் உப்பு சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டதே எல்லா ரெட்டியின் முதலாவது பெரிய அரசியல் நடவடிக்கை. அவ்வியக்கத்தில் அவர் அடி உதைபட்டு, கைதாகி ஏழு மாதங்கள் தொடர்ச்சியாக மெட்ராஸ் பிராந்தியத்தின் பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டார். அப்போது எல்லா நேரமும் கை கால்களில் விலங்கைப் பூட்டி மிகக் கொடூரதாகத் துன்புறுத்தப்பட்டார். விடுதலையானதும் ஆந்திர மகாசபாவில் சேர்ந்தார். அத்தருணத்தில் எல்லா ரெட்டியும் ராவி நாராயண ரெட்டியும் இளைஞர் இயக்கத்திலும் தலைவர்களாக இருந்தார்கள்.

            மாநிலக் காங்கிரஸ் அமைப்பு நிறுவப்பட்ட 1938 முக்கியமான வருடமாகும். ஆனால் அவ்வமைப்பு உடனடியாகத் தடை செய்யப்பட்டது. அது நடத்திய சத்தியாகிரகப் போராட்ட இயக்கத்தில் அதன் 7வது சத்தியாகிரகிகள் அணியின் ‘சர்வாதிகாரி’ யாக (அணித் தலைவர்) பத்தம் எல்லா ரெட்டி அறிவிக்கப்பட்டார். மாநில காங்கிரஸ் அமைப்பின் செயல்பாட்டுக் கமிட்டியின் உறுப்பினராகவும் அவர் இருந்தார். 1937 முதல் 1941ம் ஆண்டு வரையான காலத்தின் மகாசபாவின் அரசியல் தீவிரமயமானது. 1941ல் ராவி நாராயண ரெட்டி அதன் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர்கள் இருவரும் மகாசபாவை மிகத் திறமையாக வழிநடத்தினர். 

            ஹைத்தராபாத் நகரில் காங்கிரஸ் சார்பில் அவர் சத்தியாகிரகத்தில் தன்னை ஒப்புக் கொடுத்தார், 1938 ஆகஸ்ட் 11ல் கைதானார். எல்லா ரெட்டி ஓர் உறுதியான கம்யூனிஸ்ட்டாகவும் தீவிரமான காங்கிரகாரருமாகப் பணியாற்றினார். அப்படி அவர் முரண்பாடான இரண்டுமாக இருப்பதைப் பல தோழர்களுக்கு ஜீரணிக்க முடியவில்லை.

            மெட்ராஸ் மாகாணம், கிருஷ்ணா மாவட்ட துணிலிப்பாடு என்ற இடத்தில் நடைபெற்ற விவசாயிகளுக்கான அரசியல் பள்ளிக்குச் சென்று கலந்து கொண்டார். காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் தலைவரும் அகில இந்திய கிஸான் சபாவின் (ஏஐகேஎஸ்) தலைவருமான பேராசிரியர் என் ஜி ரங்கா அந்தப் பள்ளியை நடத்தி வந்தார். 1939ல் மாணவர்கள் நடத்திய ‘வந்தே மாதரம்’ போராட்டத்திற்கு உதவினார். 1939 கரீம் நகரில் அவர் கதர் கடை ஒன்றையும் தொடங்கினார்.

காங்கிரஸ் மற்றும் ஆந்திர மகாசபாவில்

            எல்லா ரெட்டி தனது இல்லத்தில் 1939 நவம்பர் 30ல் ஒரு பொதுக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தார். அக்கூட்டத்தில் குண்டூரைச் சேர்ந்த தேஷ்பக்த கொண்டா வெங்கடப்பையா கதர் (காதி), அரிசன முன்னேற்றம், மற்றும் பிற தலைப்புக்களில் சொற்பொழிவாற்றினார். அவர் 1939 டிசம்பரில் நடந்த அலிர் கிஸான் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆந்திர மகாசபாவின் 7வது வருடாந்திர அமர்வின்போது 1940 ஏப்ரல் 21 மால்காப்பூரில் ‘விவசாயிகள் பேரணி’ என அறியப்படும் ஆர்ப்பாட்டம் ஒன்றை எல்லா ரெட்டி நடத்தினார். ஆந்திர மகாசபா உண்மையான பெருந்திரள் மக்கள் இயக்கமாக, முக்கியமாக நால்கொண்டா மற்றும் வாராங்கல் பகுதிகளில் வளர்ந்தது. கரீம் நகரிலும் அது வளர்ந்து வந்தது. 1941லிருந்து மகாசபாவின் செயல்பாடுகளில் எல்லா ரெட்டியும் அவரது கூட்டாளிகளும் செல்வாக்கு செலுத்தினர். விரைவில் எல்லா ரெட்டி அதன் பொதுச் செயலாளரானார், இயக்கமும் நிஜாமுக்கு எதிரான ஒன்றுபட்ட தீவிர முன்னணியானது.

            1942 மே மாதம் ரூ200 அபராதமும் ஓராண்டு கடுங்காவல் தண்டனையும் விதிக்கப்பட்ட எல்லா ரெட்டி சிர்சில்லா சிறையில் அடைக்கப்பட்டார். (இன்றைய தெலுங்கானா மாநிலத்தில் சிர்சில்லா 40ஆயிரத்திற்கும் மேற்பட்ட விசைத் தறிகளுடன் முக்கியமான டெக்ஸ்டைல் மையமாகத் திகழ்கிறது). அவருக்கு விலங்கு பூட்டத் தேவையில்லை என நீதிமன்றத்திலேயே நீதிபதி கூறிய பிறகும், கான்ஸ்டபிள்கள் அவரது கை கால்களில் விலங்குகளைப் பூட்டி சிர்சில்லாவிலிருந்து கரீம்நகருக்கு அவரை மாற்றினர். தினஇதழ்களில் அது பரபரப்பான செய்தியானது. அவரை வழியனுப்ப பெரும் எண்ணிக்கையில் இளைஞர்கள் குவிந்தனர். காவல் நிலையத்திற்கு அவரை முக்கிய வீதிகள் வழியாக நடத்தி அழைத்துச் சென்று அங்கே மனநலம் பாதித்த ஒருவனுடன் அவரை அடைத்து வைத்தனர். பல முறை வேண்டியும் உணவோ குடிக்க நீரோ வழங்க மறுத்து பின் அவரை வாராங்கலுக்கு மாற்றினர். அங்கேயும் அந்தச் சிறையிலிருந்து செஷன்ஸ் நீதிமன்றத்திற்கு, 6 கிமீ தொலைவு அவரது ஒரு காலில் பெரும் இரும்பு வளையத்தை மாட்டி நடத்தியே அழைத்துச் சென்றனர். அவர் மிகவும் பசியோடு இருந்ததால் கழிபேட் பேருந்து சேவையில் இருந்த பயணிகள் அவருக்கு மாங்கனிகளும் தண்ணீரும் வழங்கினர்.

            நிஜாம் அரசின் ஹைத்தராபாத் காவல் மற்றும் சிறைத் துறை ஐஜி-க்கு கே டெய்லர் என்ற துணை காவல் கண்காணிப்பாளர் பின்வருமாறு கடிதம் எழுதினார் : ”எல்லா ரெட்டி தொல்லை விளைவிக்கும் மிகத் தீவிரமான கலகக்காரர்; எனவே அவரை நிபந்தனைகள் இல்லாமல் விடுதலை செய்தால், விரைவில் மகாத்மா காந்தி தொடங்க உள்ள கிளர்ச்சிப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்கக்கூடும்.” இத்தகவல்களைக் கோல்கொண்டா பத்திரிக்கா மற்றும் ஆந்திரா பத்திரிக்கா போன்றவை விரிவாக வெளியிட்டன. சிறையில் அரசியல் கைதிகளுக்கு உரிமையான மேம்பட்ட வசதிகள் மற்றும் நாளிதழ்கள் வழங்கக் கோரி அவர் சிறையில் உண்ணாவிரதப் போராட்டமும் மேற்கொண்டார். அவரைக் கட்டாயப்படுத்தி உணவூட்ட முயன்றனர். இறுதியில் அவரது போராட்டமே வென்றது, அரசியல் கைதிகளுக்கான சில முக்கிய வசதிகள் தரப்பட்டன.

            பின் விடுதலை செய்யப்பட்டவரை ஒரு கிராமத்தில் கட்டாயமாக அடைத்து வைத்தனர்.

பின்னர் சிபிஐ கட்சியில்

            மகாசபாவையும் சிபிஐ கட்சியையும் அரசு தடை செய்தது. எல்லா ரெட்டியும் மற்றவர்களும் தலைமறைவாயினர். அங்கிருந்தபடி ராவி நாராயணன், எல்லா ரெட்டி மற்றும் மக்தூம் மொகியுதீன் கட்சி சார்பாக அறிக்கைகள் வெளியிடுவது வழக்கம். இயக்கத்தின் ஒருவகையான  ‘மூவர் அணியாக’ அவர்கள் ஒத்திசைந்து செயல்பட்டனர். அந்தப் பகுதியில் வாழும் மக்களுக்கு 1947 செப்டம்பர் 11ல் அவர்கள் விடுத்த திறந்த வேண்டுகோளில் ஆந்திர மகாசபாவின் சார்பில் எல்லா ரெட்டி கையொப்பம் இட்டார். சிபிஐ, அனைத்து ஹைத்தராபாத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (AHTUC) மற்றும் மகாசபா மூன்றும் இணைந்து வெளியிட்ட அந்த அறிக்கையில் நிஜாம் அரசு, நிலச்சுவான்தார்கள் மற்றும் (வரி வசூலிக்க அதிகாரமாக) தேஷ்முக் பட்டம் அளிக்கப்பட்ட நிலப் பிரபுக்களுக்கு எதிராகப் போராட ஆயுதங்களை ஏந்துமாறு மக்களை அறைகூவி வேண்டினர். நிஜாமும் (நிலவுடைமையாளர்களின் தனிப்பட்ட கூலிப்படையான) ராஜ்கார்களும் ஹைத்தராபாத் இந்தியாவுடன் இணைவதை விரும்பவில்லை; சுதந்திரமான அரசாக நீடிக்க வேண்டுமென அவர்கள் விரும்பினர்; ஆனால் மூவர் அணி நிஜாம் அரசுக்கு முடிவுகட்டவும்  இந்திய ஒன்றியத்துடன் இணைவதற்காகவும் அறைகூவல் தந்தது.

ஹைத்தராபாத் இணைப்பும் கட்சியின் தவறும்

            சில காங்கிரஸ்காரர்கள் சிறையில் இருக்க மற்றவர்கள் அந்தச் சமஸ்தானத்தின் எல்லைகளில் முகாம் அமைத்துத் தங்கி இருந்தனர். இந்திய அரசின் போலீஸ் நடவடிக்கைக்குப் பின் நிஜாம் சரணடைந்தார்; ஹைத்தராபாத் இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது. பொதுமக்கள் இந்திய இராணுவத்தைத் தங்களை விடுவித்த இரட்சகர்களாக வரவேற்றனர்.

            இந்தத் தருணத்தில்தான் கட்சி மிகப்பெரிய தவறை, சொல்லப்போனால் உண்மையில் ஓர் அபத்தத்தை, இழைத்தது. இரண்டாவது கட்சிக் காங்கிரஸை ஒட்டி ஆந்திரா கமிட்டி குழுவாத சாகசப் பாதையைப் பின்பற்றுவதற்கான தீர்மானத்தை நிறைவேற்றியது. அத்தீர்மானத்தின்படி (ஒன்றியத்தில் அதிகாரத்தில் இருந்த) காங்கிரஸ் ஏகாதிபத்தியத்துடன் கூடிக் குலாவி அதனோடு அதிகாரத்தைப் பங்கு போட்டுக் கொண்டது என்றும், சுதந்திரமே ஒரு ஏமாற்றுப் பொய் என்றும் கூறியது: மேலும், நாடு முழுவதும் கொரில்லா போராட்டத்தைத் தொடுக்க வேண்டும் எனக் கூறியது. அதாவது, ‘சீனப் பாதை’ என்று அழைக்கப்பட்ட பாதையைப் பின்பற்றியது. அவர்கள் அளித்த முழக்கம், “தெலுங்கானா வழி (ஆயுதப் போராட்டக் கிளர்ச்சி) ஒன்றுதான் நாடு முழுவதும் பின்பற்றப்பட வேண்டும்” என வலியுறுத்தியது.

            எல்லா ரெட்டி, மக்தூம் மற்றும் ராவி நாராயணன் ரெட்டி இந்த வாதத்தில் சமாதானம் அடையாமல், குறிப்பாக இந்திய இராணுவம் நுழைந்த பிறகு ஆயுதப் போராட்டம் தொடர்வதை எதிர்த்தனர்: விளைவு, புதிய தலைமைப் பட்டியலில் இடம் பெறாது விடப்பட்டனர். கட்சியின் தெலுங்கானா குழுவின் செயலாளராக அதன் முதல் மற்றும் இரண்டாவது மாநாடுகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்தான் எல்லா ரெட்டி. அவரும் மற்றவர்களும் கட்சியின் தெலுங்கானா கமிட்டி ஆந்திரா மாகாணக் கமிட்டியிலிருந்து தனியாகச் செயல்பட விரும்பினர். மற்றவர்கள் தெலுங்கானா கமிட்டி மாகாணக் குழுவின் கீழ்தான் இருக்க வேண்டும் என விரும்பினர்.

            எல்லா ரெட்டி தெலுங்கானா சிபிஐ மாகாணக் குழுவின் செயலாளராக இருந்தார். அவர் சிபிஐ கட்சியின் அகன்ற ஆந்திரா (விசால் ஆந்திரா) குழுவிலும் உறுப்பினராக இருந்தார்.

              எல்லா ரெட்டியைக் குழந்தைப் பருவத்திலிருந்தே கவனிக்கும் வாய்ப்பு பெற்றவர், புகழ்பெற்ற மாணவர் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவரான நரசிங்(க) ராவ். அவர்கள் மாணவப் பருவ நாட்களிலும், தலைமறைவு வாழ்வின்போதும் சந்தித்திருக்கிறார்கள். 1952 தேர்தலில் சிட்டிபேட் தொகுதியிலிருந்து போட்டியிட்ட குருவா ரெட்டிக்காக அவர்கள் பணியாற்றியுள்ளனர். 

கிஷன் சந்தர் (2014, நவம்பர் 23 – 1977 மார்ச் 8) (படம்) என்ற உருது மற்றும் இந்தி சிறுகதை மற்றும் நாவலாசிரியர் எழுதிய “ஜப் கெத் ஜாகெ” என்ற கதையின் வழி  நரசிங்(க) ராவ், “மா பூமி” என்ற தெலுங்குமொழி திரைப்படத்தை 1980ல் எடுத்து வரலாற்று ஆளுமையான எல்லா ரெட்டியை நினைவு கூறுகிறார். 

  
(அந்த நாவலும் திரைப்படமும் விவசாயிகளின் போராட்ட உணர்வையும், எந்தத் தியாகத்திற்கும் அவர்கள் தயாராக இருப்பதையும் கலை நேர்த்தியோடு விவரிக்கிறது.) அந்தப் படத்தின் (போஸ்டர் படத்தில்) பல சித்தரிப்பு நிகழ்வுகளில், மலைசார்ந்த அப்பகுதி கிராமத்தில் ஒரு பெண் கொரில்லா படையைக் காவல் காத்து நின்ற நிகழ்வும் ஒன்று. அக்காட்சியில் கட்சி ஒரு செய்தித் தூதுவர் மூலம் தகவல் அனுப்பும்போது அவரிடம் அந்தப் பெண் கேட்பார் : “எல்லா ரெட்டி எப்படி இருக்கிறார்?” 

பாராளுமன்றவாதியாக

          1950 – 51வாக்கில் பிடிஆர் (ஜூன் 1950திலும்) பின்னர் சி இராஜேஸ்வரராவ் (ஏப்ரல் 1951 னிலும்) தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு கட்சியின் பாதையும் மாற்றப்பட்டது, (‘மக்கள் ஜனநாயகப் புரட்சி’ பாதை ‘தேசிய ஜனநாயகப் பாதை எனக் கட்சித் திட்டம் மாற்றப்பட்டது). அன்றைய நிலையில் ஆயுதப் புரட்சியை எதார்த்தமற்றது மற்றும் தேவை இல்லாதது எனக் கைவிடவும் எதிர்வரும் முதல் பொதுத் தேர்தலில் போட்டியிடவும் கட்சி முடிவு செய்தது. பத்தம் எல்லா ரெட்டி, ராவி நாராயணன், மக்தூன் மொகியுதீன் மற்றும் கேஎல் மகேந்திராவும் மற்றவர்களும் ஹைத்தராபாத்தில் இந்திய இராணுவம் நுழைந்த பிறகு ஆயுதப் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வேண்டுமென்று ஏற்கனவே அறைகூவல் விடுத்தனர்.

            பத்தம் எல்லா ரெட்டி 1952 தேர்தல்களில் கரீம்நகர் மக்களவைத் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தலைமறைவாய் செயல்பட்டுவந்த சிபிஐ கட்சி அங்கம் வகித்த மக்கள் ஜனநாயக முன்னணியின் வேட்பாளராக அவர் நிறுத்தப்பட்டார். காங்கிரஸ் கட்சி வேட்பாளரும், பின்னாட்களில் இந்தியப் பிரதமரான பிவி நரசிம்ம ராவ் அவர்களை எல்லா ரெட்டி தோற்கடித்தார். தெலுங்கானா பகுதியில் கம்யூனிஸ்ட்கள் ஏறத்தாழ பாதி இடங்களை வென்றனர். ஹைத்தராபாதின் சிக்கட்பள்ளியில் ராவி நாராயணன், மக்தூம், சந்திரகுப்தா சௌத்திரியுடன் எல்லா ரெட்டிக்கு எழுச்சிகரமான வரவேற்பு அளிக்கப்பட்டது. பிரம்மாண்டமான பேரணியும் ஏற்பாடு செய்யப்பட அதில் டாக்டர் ஜெயசூரியா மற்றும் அருணா ஆசஃப் அலி கலந்து கொண்டனர். 

            பின்னர் எல்லா ரெட்டி மாநிலங்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1958 ஆந்திரா சட்டமன்ற இடைத் தேர்தலில் புக்கரம் தொகுதியில் வென்றார். 1972ல் இந்தூர்தி சட்டமன்ற இடத்தை வென்றார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் பிளவு

            1964ல் சிபிஐ பிளவுபட்டது. பத்தம் எல்லா ரெட்டி சிபிஐ –எம் கட்சியில் இணைந்தார், ஆனால் குறைந்த காலமே அக்கட்சியில் இருந்தார். கரீம்நகர் மாவட்டத்திலிருந்து சிபிஎம் கட்சியில் இணைந்த ஒரே பிரபலமான சிபிஐ தலைவர் அவர். மூன்று மாதமே சிபிஎம் கட்சியில் நீடித்த எல்லா ரெட்டி மீண்டும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வந்தார்.

அறிவியல் தொழில்நுட்பத்திற்கு ஆதரவு

            பத்தம் எல்லா ரெட்டி விஞ்ஞான அணுகுமுறையை மிகுதியாக வற்புறுத்தி அறிவியல் மற்றும் தொழில்நுட்பப் படிப்புக்கு அடித்தளமிட்டார். இந்தியாவை நவீனமாக்குவதற்கு அதுதான் சிறந்த வழி என அவர் நம்பினார். கல்வி நிறுவனங்களை நடத்தி வந்தவர்கள் அவருடைய முயற்சிகளுக்குப் பெரும் மரியாதை செலுத்தினர்.

            பத்தாம் எல்லா ரெட்டி 1979ல் இறந்தார். (அவரது பிறந்த நாள் ஜனவரி 1, 1906 எனவும் மறைவு தேதி ஜனவரி 1, 1979 எனவும் ஓர் இணையத் தகவல் சொல்கிறது)

            2006ல் எல்லா ரெட்டியின் பிறந்தநாள் நூற்றாண்டு கொண்டாட்டங்களின்போது ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் ஒய் எஸ் ராஜசேகர் ரெட்டி கரீம்நகரில் அவரது வெண்கலச் சிலையைத் திறந்து வைத்தார். அந்த விழாவில் பேசிய முதலமைச்சர் கரீம்நகர் மாவட்டத்தில் நீர்ப்பாசன வேளாண்மைத் திட்டங்களை நிறைவேற்றுவதன் மூலம் கூடுதல் ஆயக்கட்டு கட்டுமானங்களை வழங்குவதை நனவாக்க சபதம் செய்தார். அந்தத் திட்டம் பத்தம் எல்லா ரெட்டியின் நீண்டகாலக் கனவாகும். அவரது கனவை நனவாக்குதல் அவருக்குச் செலுத்தும் பொருத்தமான அஞ்சலி!

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்.

 

 

 

 

 

.