Wednesday 30 December 2020

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 23 இராவி நாராயண் ரெட்டி

 

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் -23

                               

                                            

        இராவி நாராயண் ரெட்டி:

           தெலுங்கானா 

ஆயுதப் போராட்டத்தின் கதாநாயகன்

--அனில் ரஜீம்வாலே

(நியூ ஏஜ்–நவ.21 --27, 2020)

            தெலுங்கானா ஆயதப் போராட்டத்தின் (1946—50) புகழ்வாய்ந்த தலைவர் இராவி நாராயண் ரெட்டி (ஆர்என்ஆர்) 1908ம் ஆண்டு ஜூன் 5ம் நாள், ஆந்திரப் பிரதேசத்தின் ராமகிரி மண்டல போலிபள்ளி கிராமப் பஞ்சாயத்தின் புவனகிரி என்ற இடத்தில் (தற்போது தெலுங்கானா மாநிலத்தில் உள்ளது) பிறந்தார். அவரது கிராமம் சர்ஃப்-இ-காஸ் (நிஜாமின் தனிப்பட்ட சொந்த சொத்தான) நிலம் அமைந்த அட்ராஃப் பால்டா (Atraf Balda) மாவட்டத்தில் அமைந்திருந்தது. அது ஹைதராபாத் நிஜாமின் சமஸ்தானத்தின் ஒரு பகுதியாகும்.

            அவர் விடுதலை பெற்ற இந்தியாவின் 1952 முதலாவது பொதுத் தேர்தலின் கதாநாயகரும் ஆவார்.

            அவருடைய பெயரைத் தற்போதும் பலர் ‘இரவி’ என்று தவறாகவே எழுதுகிறார்கள், அது ராவி ஆற்றின் பெயராக அவருக்கு வைக்கப்பட்டதால் அவர், ‘இராவி’ நாராயண் ரெட்டி. சதார்காட் உயர்நிலைப் பள்ளியில் படித்த பின் ஹைதராபாத் நிஜாம் கல்லூரியில் சேர்ந்து 1927ல் மெட்ரிக் படிப்பை நிறைவு செய்தார். அப்போது மாநிலம் முழுமையிலுமாக மொத்தம் வெறும் 15 உயர்நிலைப் பள்ளிகளே இருந்தன. இராவி பணக்கார நிலப்பிரபுத்துவக் குடும்பத்திலிருந்து வந்தாலும் சந்தர்ப்பம் வரும் ஒவ்வொரு தருணத்திலும் அவர் எதிர்த்துக் கிளர்ச்சி செய்யத் தவறியதில்லை. அவர் நல்ல விளையாட்டு வீரரும் கூட, அகில இந்திய ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்றுள்ளார். அப்போது முதுகில் அடிபட்ட காயத்தின் பாதிப்பு, வாழ்நாள் எல்லாம் அவருக்குத் தொடர்ந்தது.

காந்திய இயக்கத்தில் இணைதல்

            காந்திஜியின் அறைகூவலை ஏற்று இன்டர் மீடியட் படிப்பைப் புறக்கணித்து பாதியிலேயே கைவிட்டு காந்தியின் இயக்கத்தில் சேர்ந்தார். காந்திய நூல்களைப் படிக்கத் தொடங்கி ஒத்துழையாமை இயக்கத்திலும் பங்கேற்றார். சுமார் 100 இளைஞர்கள் டாக்டர் செல்லிகனி இராமாராவ் தலைமையில் மாநிலத்தை விட்டு வெளியேறி காக்கி நாடாவில் சத்தியாகிரக முகாம் அமைத்தபோது இராவியும் பத்தம் யெல்லா ரெட்டியும் அதில் சேர்ந்தனர். அங்கிருந்து திரும்பியதும் தனது கிராமத்தில் இராவி ஒரு நூற்பு மையத்தை அமைத்தார். 

            அவர் நேரு எழுதிய புத்தகங்களையும் ‘மாஸ்கோ உரையாடல்கள்’ போன்ற சோஷலிச இலக்கியங்களையும் படித்தார். காங்கிரஸ் கட்சியின் ‘காங்கிரஸ் சோஷலிஸ்ட்’  இதழை அவர் தவறாது படித்தார்.

அரிஜன சேவா சங்கத்தில்

            ஏரவாடா சிறையில் இருந்த காந்திஜி டாக்டர் அம்பேத்காருடன் பூனா உடன்பாடு கண்டு, சிறையிலிருந்து விடுதலையான பிறகு ஹரிஜன் சேவா சங்கத்தைத் தொடங்கினார். வார்தா ஆசிரமத்தில் காந்தியிடம் தனது அனைத்து நகைகளையும் வழங்கிய இராவி அரிசன சேவா சங்கத்தின் ஹைதராபாத் கிளைக்குச் செயலாளர் ஆனார். அரிசன முன்னேற்றத்திற்காக அந்தச் சங்கம் எண்ணற்றப் பெரும் சேவைகளை மேற்கொண்டது; அனைத்துச் சாதியினரோடு சமமாக அமர்ந்து உண்ணும் சமபந்தி போஜனம் நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்தல், கற்பித்தல், விடுதிகளைக் கட்டுதல், பள்ளிகளை நடத்துதல் எனப் பல தொண்டுகள். சங்கக் கூட்டங்களில் கலந்து கொள்ள டெல்லி செல்ல வேண்டியிருந்த இராவி நாராயண் காந்திஜியின் சொற்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்புப் பெற்றார். ஹைதராபாத்தில் மஜ்லீஸ்கள் மற்றும் அன்ஜும்-இ-தப்லீக்கள் பரப்பிய மேலாதிக்க முஸ்லீம் மதவாதத்தை அரிசன சேவா சங்கம் தீவிரமாக எதிர்த்தது மட்டுமல்ல, இந்து மதவாதப் பிரச்சாரத்தையும் எதிர்த்தது. மதவெறியர்கள் நடத்திய கட்டாய மதமாற்றத்தை எதிர்த்தும் போராடியது.

ஆந்திர மகாசபா

            தெலுங்கு மொழியை அங்கீகரிப்பதற்கான ஓர் இயக்கம் 1920களில் மாநிலத்தில் வேகம் கொண்டது.  பல்வேறு தெலுங்கு அமைப்புகள் ஒன்று கூடி 1924ல் ஆந்திரா ஜன்சங்கம் (ஆந்திரா மக்கள் அசோசியேஷன்) அமைப்பை ஏற்படுத்தினர். அதில் வணிகர்களும் கடைக்காரர்களும் மிக முக்கியமான பங்காற்றினர். அப்போது மாணவராக இருந்த இராவி நாராயண் வணிகர்களின் கூட்டமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

            ஆந்திர மகாசபாவின் முதல் மாநாடு 1930ல் ‘ஜோஷிபேட்’டில் நடைபெற்றது. இராவி, இராமச்சந்திர ரெட்டி மற்றும் 13 பேருடன் மாநாட்டிற்கு அவ்வளவு தொலைவும் சைக்கிளிலேயே சென்றனர். தன்னார்வப் படை குழுவுக்கு இராவி தலைவராகச் செயல்பட்டார்.

            இராவி தன் மாணவ நண்பர்களுடன் இம்முறை 74 மைல்கள் (!) சைக்கிள் மிதித்துச் சென்று மகாசபாவின் இரண்டாவது மாநாடு நடந்த தேவர்கொண்டா என்ற இடத்திற்குச் சென்றனர். தெலுங்கு மொழிக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டது.

            மூன்றாவது மாநாடு கம்மத்தில் நடந்தபோது இராவி நாராயண், நண்பர்கள் முயற்சியால் மராத்தி, கன்னடம், உருது முதலிய மற்ற மொழிகளும் பயன்படுத்தப்பட்டன. 1937ல் நிஜாமாபாத்தில் நடைபெற்ற மாநாட்டில் இராவி செயலாளர்களில் ஒருவராகத் தேர்வானார். 1940 மாநாட்டில் அமைப்பு நிலை சீர்திருத்தத்திற்கான முன்மொழிவுகளை அவர் அளித்தார்.

            1941 ஹூசூர்நகர் சில்லுகூட் என்ற இடத்தில் நடந்த மகாசபாவின் 8வது மாநாட்டில் ஆர்என்ஆர் தலைமை தாங்கினார். அப்போது வலதுசாரி இடதுசாரி என்ற பிளவு கூர்மையடைந்தது. கம்யூனிஸ்ட்கள் மிகவும் பலம் பொருந்திய சக்தியானார்கள். விவசாயிகள் இயக்கமும் வேகம் பிடித்துத் தீவிரமடைந்தது. சூர்யாபேட், ஜன்ஹூன் மற்றும் பிற இடங்களிலும் விவசாயிகளின் பெரும் எழுச்சி மூண்டது. 11வது மாநாட்டில் 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொள்ள, 12வது மாநாட்டில் 40 ஆயிரத்திற்கும் அதிகமான மக்கள் பங்கேற்றனர். அந்த மாநாடும் இராவி நாராயண் தலைமையேற்க நடந்தது. பத்தம் யெல்லா ரெட்டி அமைப்பின் தலைவராகவும் ஆர்என்ஆர் மகாசபாவின் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

            இதன் மத்தியில் மகாசபாவிலிருந்து வலதுசாரி பிரிவினர் வெளியேறினர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைதல்

            நில உடைமைக்கு 20 ஏக்கர் உச்சவரம்பு என அறிவித்தது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி. இந்த அறிவிப்பைத் தொடர்ந்து இராவி நாராயண் தனக்கு 20 ஏக்கர் மட்டும் வைத்துக் கொண்டு 500 ஏக்கர் நிலங்களைக் கொடுத்து விட்டார். காந்திஜி செகந்திராபாத் (இரட்டை நகரங்கள் என அறியப்படுவது, 3வது நிஜாம் சிகந்தர் ஜா பெயரில் அமைந்த நகர்) வழியாகச் சென்றபோது அவரிடம் இராவி 50 ‘தோலா’ எடையுள்ள தங்கத்தை வழங்கினார்.  

            1939 இறுதியில் இராவி சிபிஐ கட்சியில் சேர்ந்தார். ஆந்திர மகாசபாவிலும், காங்கிரசிலும் இருந்த கம்யூனிஸ்ட் குழுக்களை ஒன்றிணைப்பதில் அவர் முக்கிய பங்காற்றினார். ஹைதராபாத் காமரேடுகளின் அசோசியேஷனிலும் அவர் மிகத் தீவிரமாகச் செயல்பட்டார். மாகாணத்திலும் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் கம்யூனிஸ்ட் குழுக்கள் செயல்பட்டு வந்தன. அவை 1939ல் ஒன்றிணைந்து நிஜாம் மாநிலக் கம்யூனிஸ்ட் கமிட்டி அமைக்கப்பட்டது. சி இராஜேஸ்வர ராவ் சில அரசியல் வகுப்புகள் அங்கே எடுத்துள்ளார்.

           

போன்கீர், சூர்யாபேட், ராமண்ணாபேட், நலகொண்டா, ஹூஸுர்நகர் முதலிய இடங்களில் விவசாயிகளின் எழுச்சி சக்திமிக்கதாகத் திரண்டது. 1946 அக்டோபரில் (சூர்யாபேட் மாவட்ட) பாலிமுல்லா கிராமத்தில் ஆயுதப் போராட்டம் நடந்தது.  பதா சூர்யாபேட்டிலும் அது தொடர்ந்தது. மக்கள் கவண் வில்கள், கற்கள், தடிகள் மற்றும் இதர பிற முரட்டுத்தனமான வழிகளில்தான் தொடக்கத்தில் அந்தப் போராட்டத்தைத் துவங்கினர்.

            இராவி நாராயண் கிராமங்களுக்குச் சென்று விவசாயிகளைத் திரட்டினார். பிறகு அவர் பம்பாய் சென்று விவர அறிக்கையைச் சிபிஐ கட்சி தலைமையிடம் தெரிவித்தார். ஆட்சியில் இருந்த நிஜாம் வரலாற்றில் இழுக்குடைய அவரது ஆயுதமேந்திய ரசாக்கர் குண்டர்களின் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டார்; அவர்கள் (வாராங்கல் மாவட்டத்திலுள்ள) அகுனூர்  கிராமம் (இங்கே 800 ஆண்டுகள் பழமையான சிவன் கோவிலும் பல ஜைன கோவில்களும் உள்ளன), மச்சிரெட்டிபல்லி முதலான இடங்களில் வன்முறை அட்டூழியங்களை நிகழ்த்தினர். மோகன் குமாரமங்கலம் பத்திரிக்கையாளர் சந்திப்பில் உரையாற்றும்போது இவற்றை விவரித்ததால் மக்கள் அனைவரும் உண்மைகளை அறிந்து கொண்டனர். கள நிலவரத்தை நேரில் சென்று திரட்டிவர காந்திஜி பத்மஜா நாயுடுவை அனுப்பினார். அவர் நிஜாமுடன் விவாதித்து அவருக்குக் காரண காரிய பகுத்தறிவு ஊட்டி உண்மைநிலையை உணரச் செய்ய முயன்றும் அதில் பலன் ஏற்படவில்லை.

            இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பிசி ஜோஷி ஆயுதப் போராட்டம் துவங்க அனுமதி அளித்தார். இராவி நாராயண் மற்றும் ஆந்திர மகாசபா அறைகூவல் விடுக்க, ஆயுதம் தாங்கிய ‘தலாம்கள்’ (தன்னார்வத் தொண்டர் அணிகள்) அமைக்கப்பட்டன. நிஜாம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியையும் ஆந்திர மகாசபாவையும் தடை செய்தார்; மக்கள் மத்தியில் மத வெறுப்புணர்வு, வேறுபாடுகளைத் தூண்டினார். நாடு விடுதலை அடையும் தருணம், அவர் ஹைதராபாத்தைச் சுதந்திர நாடாக அறிவிக்கச் சதி செய்தார்.

            1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் மகாசபாவும் ஹைதராபாத் நகரில் மூவர்ணக் கொடியை ஏற்றி பல்வேறு கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தன. ஆர்என்ஆர், பத்தம் யெல்லா ரெட்டி, சி இராஜேஸ்வரராவ், கேஎல் மகேந்திரா மற்றும் பிற தலைவர்கள் தலைமையேற்க, கம்யூனிஸ்ட் கட்சி தெலுங்கானா பிராந்தியத்தில் சுமார் 2500 கிராமங்களை விடுதலை செய்தது மட்டுமின்றி 10 லட்சம் ஏக்கர் நிலங்களை, ‘தலாம்கள்’ (தன்னார்வத் தொண்டர் அணிகள்) மூலம் நிலமற்றவர்களுக்குப் பிரித்தளித்தது.

‘போலீஸ் ஆக்க்ஷன்’ மற்றும் இந்திய இராணுவம் நுழைவு

            அந்தக் குறிப்பிட்ட சூழ்நிலை தருணங்களில் 1946ல் ஆயுதம் தாங்கிய போராட்டத்தைத் தொடுப்பது என்ற முடிவு மிகவும் சரியானது. அது நிஜாமிற்கு எதிரான, நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரான புகழ்மிக்கப் போராட்டம், மக்கள் ஏகோபித்து ஆதரவளித்தது.

            ஆனால் இரண்டு நிகழ்வுகளின் வளர்ச்சிப் போக்குகள் சூழ்நிலையை மாற்றி விட்டது. 1948ம் ஆண்டு செப்டம்பர் 13ம் நாள் இந்திய இராணுவம் ஹைதராபாத் நகருக்குள் நுழைந்து நிஜாமின் அமைச்சர்களைக் கைது செய்தது. நிஜாம் சரணடைந்தார், புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டது. இந்திய இராணுவத்தின் செயல்பாடுகள் எப்போதுமே போற்றத்தக்கதாகச் சரியாக இருந்து விடுவதில்லை. இந்த நிகழ்வும் கூட ‘போலீஸ் ஆக்க்ஷன்’ (காவலர்கள் நடவடிக்கை) என்றே குறிப்பிடப்படுகிறது. மக்கள் இந்திய அரசின் நடவடிக்கையை ஆதரித்தனர். நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் பிற நடவடிக்கைகளுக்கான வழி திறந்து விடப்பட்டது.

            இரண்டாவது மாற்றம், கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து பிசி ஜோஷி 1947 டிசம்பரில் BTரணதிவேயால் நீக்கப்பட்டது. இது, சிபிஐ கட்சியை ஏறத்தாழ அழிப்பதான, ‘பிடிஆர் லைன்’ வழி இடதுசாரி சாகசப் பாதைக்குத் திறப்பு விழா நடத்துவதாயிற்று. தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தை நேரு அரசுக்கு எதிராக இந்திய மக்கள் நடத்திய ஆயுதக் கிளர்ச்சியின் ஒரு பகுதி என ரணதிவே மதிப்பிட்டார். இதன் தர்க்க நீட்சியாக இந்தப் போராட்டம் இந்திய இராணுவத்திற்கு எதிரான ஒன்றாகவும் தொடர்ந்தது. விளைவு, அழிவு ஏற்படுத்தும் தற்கொலை முயற்சி என நிரூபணமாயிற்று. தெலுங்கானா போராட்டம் பிளவுபட்டு ஒரு பெரும் பகுதி விவசாயிகள் அதை விட்டு நீங்கினர். (அரசின்) சில சீர்திருத்தங்கள் ஆரம்பமானது. இதனைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட்கள் மக்களிடமிருந்து தனிமைப்படுத்தப்பட்டனர். மக்கள் ஆதரவை இழந்த காரணத்தால் (போராட்டத்தில் ஈடுபட்ட) கம்யூனிஸ்ட்கள் கிராமங்களை விட்டு காடுகளுக்கு மாறும் நிர்பந்தம் உண்டானது. இறுதியில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டனர், ஆயுதப் போராட்டத்தையும் விலக்கிக் கொள்ள நேர்ந்தது.

            இராவி நாராயண் ரெட்டி, கேஎல் மகேந்திரா, பத்தம் யெல்லா ரெட்டி, மக்தூம் மற்றும் பிறர் ஆயுதப் போராட்டத்தை விலக்கிக் கொள்ள வற்புறுத்தினர். அதனைச் செய்ய கட்சித் தலைமை மிகவும் தாமதப்படுத்தி விட்டது. எனினும் ஆர்என்ஆர் அனைத்து முயற்சிகளையும் தொடர்ந்தார். இதன் விளைவாய் அவர் பிடிஆர் தலைமையின் சீற்றத்திற்கு ஆளானார். அவர் சீர்திருத்தவாதத்தை, பிற்போக்குத் திருத்தல் வாதத்தை மேற்கொள்வதாகக் குற்றம் சாட்டி துரோகியாவும்கூட சித்தரிக்கப்பட்டு, அட, பட்டியலில் வேறு என்னதான் சொல்லாது விட்டு வைத்தார்கள்! அவர் இடைநீக்கம் செய்யப்பட்டார். அவர் அங்கிருந்து வெளியேறி பம்பாய்க்குச் செல்ல நேர்ந்தது. அங்கே அவர் டாங்கே முதலான தலைவர்களைச் சந்தித்தார். இரண்டு மாதங்கள் அங்கே தங்கியதன் மூலம் போலீசிலிருந்து தப்பினார்.  

            இதன் மத்தியில் பிடிஆர் தலைமை மாற்றப்பட்டு முதலில் சி இராஜேஸ்வர ராவ், பின்னர் அஜாய் கோஷ் பொதுச் செயலாளரானார். கட்சி விசாரணை கமிஷன் இராவி மீதான குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை விடுவித்தது. 1950 டிசம்பரில் கட்சியின் மத்தியக் குழு கடிதம் ஒன்று பின்வருமாறு தெரிவித்தது: “ஆந்திரப் பிரதேசக் கமிட்டியிலிருந்து நீக்கப்பட்ட இராவி நாராயண் ரெட்டி மீதான குற்றச்சாட்டுகளை விசாரிக்கக் கமிஷன் ஒன்று அமைக்கப்பட்டது.”

            தலைமறைவு வாழ்விலிருந்து 1951ல் வெளிவந்த இராவி நாராயண் ஹைதராபாத்தில் வசித்தார். சிறிது காலம் கைதாகி சிறையில் இருந்த பிறகு டிசம்பர் 1951ல் விடுதலையானார். மாறியுள்ள புதிய சூழ்நிலை குறித்தான தனது கருத்துகளை ஓர் அறிக்கையாக அவர் சமர்ப்பித்து அதில் கட்சிப்  பாதையில் ஏற்படுத்த வேண்டிய மாறுதல்களுக்கு ஆதரவு தெரிவித்திருந்தார்.

முதல் பொதுத் தேர்தல்களின் கதாநாயகன்

            1951 –52 முதல் பொதுத் தேர்தல்களில் போட்டியிடுவது என கட்சி முடிவெடுத்தது. அப்போதும் சிபிஐ கட்சி தடை செய்யப்பட்டு இருந்ததால் ஹைதராபாதில் கட்சி பிடிஎஃப் அல்லது மக்கள் ஜனநாயக முன்னணி என்ற பெயரில், ‘கை‘ சின்னத்தில் போட்டியிட்டது. டாக்டர் ஜெய்சூர்யா தலைவராக இருந்தார். நலகொண்டா பாராளுமன்றத் தொகுதியிலிருந்து போட்டியிட இராவி நாராயண் –சிறையில் இருந்து கொண்டே—மனு தாக்கல் செய்தார். விடுதலையானதும், ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு தனது தாயைப் போய்ச் சந்தித்தார். கட்சி முடிவு செய்தது, அவர் தான் போட்டியிடும் தொகுதியில் தனக்காகப் பிரச்சாரம் செய்யத் தேவையில்லை! அவரை வாராங்கல் மாவட்டப் பொறுப்பாளராக நியமித்தது. அவர் தனக்காகப் பிரச்சாரமே செய்யவில்லை என்றுதான் கூற வேண்டும். ஆனால் அவருக்குப் பிரச்சாரம் செய்வதற்காக மக்கள் காடுகளிலிருந்தும்கூட வெளியே வந்தார்கள். நாடு முழுவதிலும் நடைபெற்ற தேர்தலில் அவரே அதிகபட்ச வாக்குகளைப் பெற்று அமோக வெற்றி பெற்றார். வாக்கு எண்ணிக்கையில் பண்டித ஜவகர்லால் நேருவே அவருக்கு அடுத்து இரண்டாவதாக வந்தார். மற்றவர்களைப் போலவே கம்யூனிஸ்ட்களுக்கும் இது சற்றும் எதிர்பாராத ஒன்று; அது பாராளுமன்ற ஜனநாயகம் குறித்து அவர்களை மறுசிந்தனை செய்ய வற்புறுத்தியது. ஆர்என்ஆர் பாராளுமன்ற மக்களவையில் முதல் உறுப்பினராக நுழைந்தார்.

            இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வாராங்கல்லில் 12 இடங்களையும் நலகொண்டாவில் 14 இடங்களையும் மற்றும் தெலுங்கானா பகுதியில் 40 இடங்களையும் வென்று மிகப் பெரிய சாதனையைச் செய்தது.

ஆர்என்ஆரும் சர்வோதயாவும்

            ஆர்என்ஆரின் பெரிய மைத்துனர் (மனைவியின் மூத்த சகோதரர்) வி இராமச்சந்திர ரெட்டி தானமாக வழங்கிய 100 ஏக்கர்களைக் கொண்டு போன்கீர் தாலுக்காவின் பொச்சாம்பல்லி கிராமத்தில் வினோபா பாவேயின் பூதான இயக்கம் தொடங்கியது. ஆர்என்ஆர் பூதான இயக்கத்திற்கு எதிரி அல்ல; அவரைப் பொறுத்தவரை, யாதொரு இயக்கத்தின் மூலமும் ஏழைகளுக்கு உதவிகள் செய்யப்படும் என்றால் அது வரவேற்கத் தக்கதே என்று கூறினார். ஆனால் அதன் தத்துவத்தைதான் அவர் எதிர்த்தார். (பறித்தவர்களிடமிருந்து பறித்தால் அது பறித்தலாகாது என்பது மார்க்ஸியம். சமூகத்திலிருந்து பறித்த செல்வங்களிலிருந்து கொஞ்சம் தானம் செய்பவர்களைத் தானப் பிரபு என எப்படிக் கொண்டாட முடியும்?--மொழிபெயர்ப்பாளர்). பூதான இயக்கமே தெலுங்கானா போராட்டத்தின் ஒரு விளைவு என்று அவர் கருதினார்.

            1984ல் தண்ணீருக்காக ஓர் இயக்கம் ’ஜல சாதனா சமிதி’ என்பதன் கீழ் நடத்தினார். பின்னர் நலகொண்டா பாராளுமன்றத் தேர்தல்களில் இதுவரை அச்சடிக்காத மிக நீண்ட வாக்குச் சீட்டு, 485 வேட்பாளர்களின் பெயர்களை அச்சிட்டு, வழங்க வேண்டி வந்தது.

பத்ம விபூஷண் விருது

            இந்திய அரசால் வழங்கப்படும் (முதல் உயரிய விருதான பாரத் ரத்னாவுக்கு அடுத்து)  இரண்டாவது புகழார்ந்த உயரிய குடியியல் விருதான பத்ம விபூஷண் விருது இராவி நாராயண் ரெட்டிக்கு வழங்கப்பட்டது.

தெலுங்கானா போராட்டத்தின் கதாநாயகன் இராவி நாராயண் ரெட்டி 1991 செப்டம்பர் 7ம் நாள் மறைந்தார்.

இன்றைய விவசாயிகளின் வீரம் செறிந்த போராட்டத்திலும் அவர் தியாகத்தின் வீச்சு வீசிக் கொண்டிருக்கிறது என்பதை வானுயர உயர்த்தப்படும் செங்கொடிகளில் காண முடிகிறது.

 --தமிழில்: நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

Saturday 26 December 2020

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு தினம் -- டிசம்பர் 26

 

டிச. 26 -- சிபிஐ 95வது அமைப்பு தின விழா கொண்டாட்டம்

           தேசிய மற்றும் வர்க்க

       இயக்கங்களின் விளைவே

1925ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி

--அனில் ரஜீம்வாலே

நியூஏஜ் டிச.20—26

            இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் திட்ட ஆவணம் (புதுச்சேரி, 2015) கூறுகிறது, “இந்திய மண்ணின் கான்பூர் நகரில் நடைபெற்ற மாநாட்டில் 1925, டிசம்பர் 26ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது.” (பத்தி1.2) இந்த ஆண்டு டிசம்பர் 26ம் நாள் சிபிஐ கட்சியின் 95வது அமைப்புதின விழா காணும் நாம், அதன் நூற்றாண்டு நிறைவை 2025ல் கொண்டாடுவோம்.

சிபிஐ கட்சி அமைப்பு -- 1920 தாஷ்கண்ட் முயற்சிகள்

            1925க்கு முன்பு சிபிஐ என்ற கட்சி அமைப்பைக் கட்ட நடந்த பல முயற்சிகளில் 1920 தாஷ்கண்ட் நகர் முயற்சியும் ஒன்று. சோவியத் ரஷ்யாவிலும் பிற ஐரோப்பிய நாடுகளிலும் வசித்த சில புரட்சியாளர்களும் கம்யூனிஸ்ட்களும் ‘கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆப் இந்தியா’ அமைப்பை நிறுவிட முடிவு செய்து 1920ம் ஆண்டு அக்டோபர் 17நாள் தாஷ்கண்டில் ஒரு கூட்டம் நடத்தினர். அக்கூட்டத்தில் எம் என் ராய், MPBTஆச்சார்யா, அபானி முகர்ஜி, முகமது ஷஃபீக் உள்பட ஏழுபேர் மற்றும் பிறர் கலந்து கொண்டனர். ஷஃபீக்கைச் செயலாளராக்கி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டதாக அக்கூட்டம் அறிவித்தது. அதே தாஷ்கண்ட் நகரில் மற்றொரு கூட்டம் 1920 டிசம்பர் 15ம் நாள் நடைபெற்றது.

            அதன் பின்னர் மேலும் கூட்டங்கள் எதுவுமோ அல்லது பயனுள்ள நடவடிக்கைகளோ நடத்தப்படவில்லை. சிபிஐ அமைப்பதற்கான ‘இறந்து பிறந்த’ (குழந்தை போன்ற) முயற்சி அது. இந்தியப் புரட்சியாளர்கள் குறிப்பாக ‘இந்திய புரட்சிகர அசோசியேஷன்’ அமைப்பிற்குள் நிலவிய முரண்பாடுகளும் கொள்கை பற்றாக்குறையும் ‘தாஷ்கண்ட் கட்சி’யைச் செயல்படாது முடக்கி விட்டது –போதுமான முன்தயாரிப்புகளும் எதிர்கால நோக்கமும் இல்லாது அமைத்ததே காரணம். அக்‘கட்சி’ உயிர்ப்பான எந்தத் தொடர்பையும் இந்தியாவுடன் கொண்டிருக்கவில்லை.

எம் என் ராயின் பங்கு

            எம்என் ராய் ஒரு புரட்சியாளர், இந்தியாவிலிருந்து 1915ல் இந்தோனேஷியாவிற்கு ஆயுதங்கள் சேகரிப்பதற்காகப் புலம்பெயர்ந்து சென்றவர். இறுதியில் அமெரிக்கா சென்று அங்கே கம்யூனிஸ்ட்டாகப் பரிணமித்தார். 1918ல் அவர் நிறுவிய மெக்ஸிகோ சோஷலிட் கட்சி ஓராண்டில் மெக்ஸிகோ கம்யூனிஸ்ட் கட்சி ஆனது. காமின்டர்ன் எனப்படும் கம்யூனிஸ்ட் அகிலத்தின் 1920 இரண்டாவது மாநாட்டில் மெக்ஸிகோ கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாளராகக் கலந்து கொண்ட ராய், மீண்டும் அங்கே திரும்பிச் செல்லவில்லை.  

            காலனிய (நாடுகளின்) பிரச்சனைகள் குறித்து, அவரது அனுபவங்கள் அடிப்படையில்,  ‘துணை ஆய்வறிக்கை’ தயாரிக்கும்படி எம்என் ராய் அவர்களை இரண்டாவது அகிலத்தில் லெனின் கேட்டுக்கொண்டார். முதன்மை ஆய்வறிக்கையை(தீசிஸ்) லெனினே தாக்கல் செய்தார். இந்தியா மற்றும் பிற காலனிய நாடுகளின் விடுதலை இயக்கங்கள் மற்றும் அவற்றின் பூர்ஷ்வா தலைமைகள் குறித்த அணுகுமுறை மீது மிகக் கூர்மையான விவாதங்கள் நடத்தப்பட்டன. முற்றிலும் செக்டேரியன் (குழுப் போக்கு) ஆவணமாக ராய் தயாரித்த ஆய்வறிக்கை, லெனின் மற்றும் கம்யூனிஸ்ட் அகிலத்தால் அப்படியே முழுவதுமாக நிராகரிக்கப்பட்டது. டைப் செய்யப்பட்ட ராயின் ஒரிஜினல் தீசிஸ் அறிக்கையில் லெனின் தன் கைப்பட நிராகரிக்கப்பட்ட பத்திகளை வெட்டி நீக்கினார்.

            பின்தங்கிய நாடுகளின் “பூர்ஷ்வா (நடுத்தர-வர்க்கம்) ஜனநாயக விடுதலை இயக்கங்கள் மீது கம்யூனிஸ்ட் தத்துவச் சாயங்கள் ஏற்றிட எடுக்கும் முயற்சிகளுக்கு எதிரான உறுதியான போராட்டங்க”ளை லெனின் வரவேற்று ஆதரித்தார். (அவ்வியக்கங்களில் வலிந்து நாம் கம்யூனிச நடைமுறைகளைத் திணிக்க முயலக் கூடாது என்பது கருத்து).  ஒவ்வொரு தேசிய, காலனிய எதிர்ப்பு மற்றும் பூர்ஷ்வா ஜனநாயக இயக்கங்களையும் கம்யூனிஸ்ட்கள் கட்டாயம் ஆதரிக்க வேண்டும் என லெனின் வற்புறுத்தினார்.

            ஒடுக்கப்பட்ட நாடுகளில் இருக்கும் கம்யூனிஸ்ட்கள் ஆற்ற வேண்டிய கடமை, ‘புரட்சிகரக் கட்சிக’ளை ஏற்படுத்துவது எனினும், கம்யூனிஸ்ட் கட்சிகள் அந்தப் பெயரில் இருந்தால் மட்டும் போதாது. பக்குவமான எதார்த்த சூழ்நிலை கனியாமல், எந்தப் பரபரப்பான அவசரத்திலும் கம்யூனிஸ்ட் கட்சிகளை அமைப்பதை லெனின் உறுதியாக எதிர்த்தார்; (அப்படிக் கம்யூனிஸ்ட் கட்சிகளை அமைப்பதற்குத் தேவையான) அடிப்படையான, போதுமான வர்க்கங்கள் வளர்ச்சி பெறுவது மிக முக்கியமானது என்றார். கீழ்த்திசை நாடுகளின் கம்யூனிஸ்ட்களிடம் லெனின் கூறினார், “(தற்போது) விழிப்புற்று வரும் பூர்ஷ்வா தேசியத்தில் நீங்கள் உங்கள் அடித்தளத்தை அமைத்திடல் வேண்டும்…”

            பூர்ஷ்வா ஜனநாயக இயக்கங்களோடு இணைந்து இயங்குவது பாட்டாளி வர்க்க இயக்கத்திற்கு ஊறு விளைவித்திடும் என எம்என் ராய் மற்றும் பிற செக்டேரியன் தலைவர்கள் கருதினர். காந்திஜி உட்பட பூர்ஷ்வா தலைமையைப் முதலில் ‘தூக்கி எறிந்து விட்டு’ விடுதலை இயக்கத் தலைமையைப் பாட்டாளி வர்க்கம் ‘கைப்பற்ற’ வேண்டும் என ராய் விரும்பினார். இந்த அணுகுமுறை பார்வை ஒட்டுமொத்தமாக (அகிலத்தால்) நிராகரிக்கப்பட்டது.

            சில நேரங்களில் சொல்லப்படுவது போல, 1920 தாஷ்கண்ட்டில் சிபிஐ கட்சி அமைப்பது என்ற முன் முயற்சி கம்யூனிஸ்ட் அகிலத்திலிருந்து அல்லது எம்என் ராயிடமிருந்து வரவில்லை. அது நாடுவிட்டு இடம் பெயர்ந்து வந்த ‘முகாஜிர்கள்’ குழு மற்றும் சோவியத் யூனியனிலும் ஜெர்மனி போன்ற நாடுகளில் வசித்த மற்ற சில புரட்சியாளர்களிடமிருந்து வந்தது.

            ராய் தாஷ்கண்ட் கூட்டத்தில் கலந்து கொண்ட போதிலும் அவர் ‘சிபிஐ’ அமைக்கும் யோசனையை ஏற்கவில்லை. அவர் தனது நினைவுக் குறிப்பில் எழுதுகிறார், “இடம் பெயர்ந்து வந்த சில தனிநபர்கள் தங்களைக் கம்யூனிஸ்ட் கட்சி என அழைத்துக் கொள்வதில் பொருள் ஏதும் இல்லை…(அவர்கள்) முழுமையாக அறிவார்கள் அது பெயருக்குத்தான் இருக்கும் ஒன்று..” ஏற்பட்டுவிட்ட சில அபிப்ராயங்களை மறுக்கும் வகையில் ராய் மேலும் எழுதுகிறார் : “புலம் பெயர்ந்து வந்தவர்கள் கம்யூனிஸ்ட் கட்சி அமைத்ததை நான் ஒப்புக்கொள்ளவில்லை; அந்தக் கட்சிக்கு இந்தியத் தொழிலாளர்கள் சார்பாகப் பேசுவதற்கே உரிமை இருப்பதாக நான் நம்பவில்லை எனும்போது –ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்கள் சார்பாகப் பேசவும் உரிமை இல்லை எனத் தனியாகக் குறிப்பிடத் தேவையில்லை.”

            இந்த ஒரு நினைவுக் குறிப்பு, ‘இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி’யை எம்என் ராய் நிறுவினார் என்ற பரவலான தவறான கருத்தை நீக்கிவிட்டது. ராய் இந்தியக் கம்யூனிஸ்ட்களோடு தொடர்பு கொண்டு ‘கம்யூனிஸ்ட் கட்சி’ குறித்த தனது சொந்தக் கருத்தை அவர்கள் மீது திணிக்க விரும்பினார். ஆனால் டாக்டர் அதிகாரி, டாங்கே, காட்டே, முஸாஃபர் அகமது முதலான மற்றவர்கள் எம்என் ராயின் அணுகுமுறையைக் கூர்மையாக விமர்சித்தனர்.

            சில பிரச்சாரங்களை முன்னெடுப்பது என்ற வகையில் தாஷ்கண்ட் குழு பயனுள்ள பங்களிப்பைச் செய்தது என்றாலும், உண்மையில் ‘கம்யூனிஸ்ட் கட்சி’யாகச் செயல்படவில்லை. விரைவில் இந்தியாவோடு தொடர்பு இல்லாமல், ஒருங்கிணைப்பு அல்லது எந்த நடவடிக்கையும் இல்லாமல் ‘தாஷ்கண்ட் கட்சி’ மறைந்தது. பல்வேறு தொழில் நகர்களிலும் நகர்ப்புற மையங்களிலும் 1920ம் ஆண்டு முதலே செயல்பட்டு வந்த இந்தியக் கம்யூனிஸ்ட்கள் 1925ல் கட்சி அமைப்பதை நோக்கி நகர்ந்தனர். இந்தியாவில் இருந்த கம்யூனிஸ்ட்கள் ஒருபோதும் 1920 தாஷ்கண்டில் அமைக்கப்பட்ட ‘கட்சி’யை அங்கீகரித்ததில்லை.

இந்தியாவில் சோஷலிச, கம்யூனிஸ்ட் கொள்கைகள் பரவல்

            சிபிஐ அமைப்பதற்கு வெகுமுன்னரே சோஷலிச மற்றும் மார்க்சிய கருத்துகள் நாட்டில் மலரத் தொடங்கின.

            அவற்றில் குறிப்பிடத்தக்க நிகழ்வு, முதன் முதலில் சுவாமி விவேகானந்தர், ‘நான் ஒரு சோஷலிஸ்ட்’ எனப் பிரகடப்படுத்தியது; அவர் இரண்டாவது அகிலம் தலைமையேற்ற பாட்டாளி வர்க்க இயக்கங்களால் ஈர்க்கப்பட்டு அதன் ஆழமான தாக்கத்திற்குள்ளானார்.

            லோக மான்ய பாலகங்காதர திலகர் பிரிட்டிஷ் பாணியில் 1916ல் ‘இந்தியத் தொழிலாளர் கட்சி’யை அமைத்தார். 1923ல் இந்தியாவில் நடைபெற்ற முதலாவது மேதினத்தின் போழ்து, ‘தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்’டான சிந்தனைச் சிற்பி ம சிங்காரவேலர், மெட்ராசில் ‘லேபர் கிசான் பார்ட்டி’யை நிறுவியதை அறிவித்தார். மெட்ராசிலிருந்து செயல்பட்ட ’தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் கட்சி’ யின் (The Workers and Peasants Party (WPP) மத்தியக் குழு, தனது பஞ்சாப், பம்பாய் மற்றும் வங்காளக் கிளைகளுக்கு ‘கொடி நாள்’ (‘Flag Day’) தினத்தை ஜூலை 18ம் நாள் அனுசரிக்கும்படி 1923 ஜூலையில் தந்தி அனுப்பி, மேலும்  அந்நிகழ்வில் தேசிய மூவர்ணக் கொடியையும் செங்கொடியையும் ஏற்றி வைக்கக் கோரியது.

            இந்த நிகழ்ச்சிகள் அனைத்தும் 1925ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பதற்குத் தேவையான வலிமையான அடித்தளத்தை உருவாக்கின. 

AITUC (1920) அமைக்கப்பட்டதும்  கம்யூனிஸ்ட் குழுக்கள் மலர்தலும்

          வரையறுக்கப்பட்ட வகையில் காலனிய ஆட்சியின் தொழில்மயமாக்கல், தொழிலாளர் வர்க்கத்தை உருவாக்க, அந்தப் பௌதீகப் புறச்சூழல் நிலைமை இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் எழுவதற்கு வழியமைத்தது. அதேபோல (பரவலாக இல்லை என்றாலும்) வரையறுக்கப்பட்ட நவீன கல்வி, அறிவாளிகள் பிரிவு மலர்வதற்கு உதவியது; கல்வியறிவு பெற்ற அவர்களில் பலரும் சோஷலிச மற்றும் கம்யூனிச இயக்கத்தில் இணைந்தனர். உருவான தொழிலாளி வர்க்கம் ஏஐடியுசி தொழிற்சங்கப் பேரியக்கத்தை 1920ல் நிறுவியதானது, அதனது வழியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பதை நோக்கிப் பங்களிப்புச் செய்தது. அது, தொழிலாளி வர்க்கத்தினுடைய வர்க்க உணர்வைக் குணாம்ச ரீதியில் வளர்த்தது.  ஏஐடியுசியின் முதலாவது அமைப்பு மாநாட்டில் அதன் தலைவர் லாலா லஜபதி ராய் அவர்களின் துவக்க உரை அதற்கு நிரூபணமான கட்டியம் கூறியது. அதன் பிறகு கம்யூனிஸ்ட்கள் செல்வாக்குப் பெறத் தொடங்கி, இயக்கத்திற்குத் தேசிய உணர்வு மற்றும் வர்க்க உணர்வைக் கொணர்ந்தனர். டாங்கே, காட்டே, மிராஜ்கர், முஸாஃபர் அகமது, சிங்காரவேலர், ஜோக்லேக்கர், அஜாய் கோஷ், சக்லத்வாலா மற்றும் படையணியாய்த் தலைவர்கள் பலரும் தொழிலாளர் வர்க்கத்தை அரசியல்மயப்படுத்தவும், கோட்பாட்டுத் தத்துவமயப்படுத்தவும் உதவினர்.

            இதன் மத்தியில், பெரும் தொழிலக மையங்களில் செயல்பட்ட கம்யூனிஸ்ட் குழுக்கள் சிபிஐ அமைப்பது நோக்கிச் செல்ல உதவின. இந்த நிகழ்வுகள் எதனிலும் தாஷ்கண்ட் குழு ஆற்றிய எந்தவொரு பங்களிப்பும் இல்லை. 

            பல்வேறு கம்யூனிஸ்ட் குழுக்கள் மார்க்சிய செய்திப் பத்திரிக்கைகளை வெளியிட்டன; எஸ் ஏ டாங்கேவின் ‘தி சோஷலிஸ்ட்’, முஸாஃபர் அகமது நடத்திய லங்கல், சோகன் சிங் ஜோஷ் வெளியிட்ட கிர்தி (தொழிலாளி), ம சிங்காரவேலர் நடத்திய லேபர் கிசான் கெஜட் (தொழிலாளி விவசாயி அறிக்கை) முதலிய பல மாத, வார இதழ்கள் இக்காலக் கட்டத்தில் வெளியாயின.

            இந்தியாவின் முதல் மார்க்சியச் சிற்றேடாகக் ‘காந்தியும் லெனினும் ஓர் ஒப்பீடு’ (1921) என்ற எஸ் ஏ டாங்கே எழுதி வெளியிட்ட கையேட்டில் காந்தி, லெனின் இருவரின் அரசியல் பார்வை மற்றும் கொள்கைகளை ஒப்பிட்டு, மாறுபாடுகள் வேறுபடுத்திக் காட்டப்பட்டன. அவரது தி சோஷலிஸ்ட் இதழ் முந்தைய மார்க்சியத் தலைமுறையினரைப் பயிற்றுவித்தது.

            கம்யூனிஸ்ட்கள் இந்திய விடுதலை இயக்கத்தின் பிரிக்க முடியாத பகுதியாக இருந்தனர். கம்யூனிஸ்ட்டான மௌலானா ஹஸ்ரத் மொகானி, 1921ம் ஆண்டிலேயே, முழுச் சுதந்திரம் என்பதைக் கோரிக்கை தீர்மானமாக அலகாபாத் காங்கிரஸ் மாநாட்டில் முன் மொழிந்தார். 1925ம் ஆண்டு வாக்கில், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிலும், பம்பாய், மெட்ராஸ், பஞ்சாப் முதலிய மாகாணக் காங்கிரஸ் கமிட்டிகளிலும் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் கம்யூனிஸ்ட்கள் உறுப்பினர்களாக இருந்தனர். சிங்காரவேலர் (மெட்ராஸ் இராஜதானி காங்கிரஸ் கமிட்டி என்றும் அழைக்கப்படும்) மெட்ராஸ் மாகாணக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியிலும் தீவிரமாகப் பணியாற்றினார்.

            இந்திய விடுதலை இயக்கத்தில் தொழிலாளர் வர்க்கம் கேந்திரமான பங்காற்றியது, கம்யூனிஸ்ட்கள் அளப்பரிய பெரும் பங்களிப்புச் செய்தனர்.

1925 கான்பூரில் சிபிஐ கட்சி அமைக்கப்பட்டது

            1925ம் ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்ட நிகழ்வு, தேசிய மற்றும் வர்க்கப் போராட்ட இயக்கங்களின் இயக்கவியலின் இணைந்த வரலாற்று விளைவு; ரஷ்யப் புரட்சியும் சர்வதேச நிகழ்வுப் போக்குகளும் அந்த விளைவை முழுமையாக்கிச் செயல்படுத்திய வினை ஊக்கிகள். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஸ்தாபிக்கப்பட்டதைத் தேசிய இயக்கத்தின் அனைத்து முற்போக்குப் பிரிவுகளும் வரவேற்றன.

            இந்நிகழ்வுப் போக்குகளின் இயல்பான உச்சமாகக் கான்பூரில் சிபிஐ அமைக்கப்பட்டது. காங்கிரஸ் மாநாட்டுப் பந்தல் அருகே கம்யூனிஸ்ட் கட்சியின் மாநாடு நடத்தப்பட்டதானது, விடுதலை இயக்கத்தோடு இருந்த மிக நெருங்கிய கூட்டுறவை அடையாளப்படுத்துகிறது. கான்பூர் மாநாடு முறையான கட்சி அமைப்பை ஏற்படுத்தி, மத்தியச் செயற்குழு மற்றும் கட்சிப் பொறுப்புகளுக்குத் தேர்வு செய்து, கட்சி அமைப்புச் சட்ட விதிகளையும் உறுப்பினர் படிவம் மற்றும் செங்கொடியையும் அங்கீகரித்து நிறைவேற்றியது. அதன் பிறகு காலப்பரிணாமத்தில் தொடர்ந்த வடிவை அது ஏற்றுத் தழுவியது. தேசிய மற்றும் வர்க்கக் கடமைப் பொறுப்புகள் இரண்டையும் இயக்கவியல் ரீதியாக இணைத்து, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எதிர் கொண்டது.

            கான்பூர் மாநாடு ம சிங்காரவேலரைத் தலைவராகவும் எஸ் வி காட்டே மற்றும் ஜெபி பகர்கட்டா (JP Bagerhatta) ஆகியோரைப் பொதுச் செயலாளர்களாகத் தேர்ந்தெடுத்தது. 1927 முதல் காட்டே மட்டுமே ஒரே பொதுச் செயலாளராகச் செயல்பட்டார்.

அமைப்புத் தேதி பிரச்சனை : ஒன்றுபட்ட கட்சியே தீர்த்தது

            கட்சி அமைப்பு தினம் பற்றிய பிரச்சனையைப் பிளவுபடாத ஒன்றுபட்ட கம்யூனிஸ்ட் கட்சியே இறுதியாக முடித்து வைத்தது. 1959ல் இந்தோனேஷிய கம்யூனிஸ்ட் கட்சி எழுப்பிய ஒரு கேள்விக்கு பதில் அளிக்கக் கட்சியின் மத்திய செயற்குழு 1959 ஆகஸ்ட் 18ல் கூடி விவாதித்து ‘இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1925ல் அமைக்கப்பட்டது என முடிவு செய்தது. அந்தச் செயற்குழு கூட்டத்தில் அஜாய் கோஷ், பிடி ரணதிவே, பிசி ஜோஷி, எம் பசவபுன்னையா, இசட் ஏ அகமது, எஸ் ஏ டாங்கே, பூபேஷ் குப்தா, ஏ கே கோபாலன் மற்றும் பிறர் பங்கேற்றனர். கூட்டக் குறிப்புக்களைத் தம் கைப்பட எழுதிய பசவபுன்னையா அதில் பின்வருமாறு பதிவு செய்தார்: “சிபிஐ கட்சி அமைப்பு நாள் – 1925”. கூட்டக் குறிப்புகளின்படி கலந்து கொண்ட வேறு எவரும்,  வேறு எந்தத் தேதியும் முன் வைக்கவில்லை.

இதன் அடிப்படையில் இந்தோனேஷிய (கம்யூனிஸ்ட் கட்சியின்) ரெவியு இதழ் ஆசியருக்கு 1959 ஆகஸ்ட் 20 அன்று சிபிஐ செயற்குழு சார்பாகத் தோழர் பி.டி.ரணதிவே கையெழுத்திட்டு எழுதிய கடிதத்தில் கூறப்பட்டதாவது:  “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி டிசம்பர் மாதம், 1925ம் ஆண்டு அமைக்கப்பட்டது. அதற்கு முன்பும்கூட தனிப்பட்ட கம்யூனிஸ்ட்களும், கம்யூனிஸ்ட் குழுக்களும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து செயல்பட்டு வந்தனர். ஆனால் 1925ல் கான்பூரில், நாட்டின் பல்வேறு கம்யூனிஸ்ட் குழுக்களின் சார்பாக வந்த பிரதிநிதிகள் கூடி, நடத்திய கூட்டத்தில்தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது”.

கட்சியின் வங்க மாநிலக்குழு 1960ம் ஆண்டில் கட்சியின் 40வது அமைப்பு தினத்தை, 1920ம் ஆண்டை அடிப்படையாக வைத்து, 1961ல் கொண்டாட முடிவு செய்தது. அன்றைய ஒன்றுபட்ட சிபிஐ கட்சியின் பொதுச் செயலாளராகச் செயல்பட்டுவந்த தோழர் இஎம்எஸ் நம்பூதிரிபாட் வங்கத் தலைமைக்கு 1960 ஜூன் 10ம் தேதி எழுதிய கடிதத்தில் தெரிவித்ததாவது: “உங்களுடைய மாநிலக்குழு 1961ல் கட்சியின் 40வது அமைப்பு தினத்தை அனுசரிக்கும் வகையில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளதாகத் தெரிய வந்தது. (மத்திய) செயற்குழு இது பற்றி விவாதித்து, இதனைத் தேசியக் குழுவைத் தவிர கட்சியின் எந்த அமைப்பும் முடிவு செய்ய முடியாது எனத் தீர்மானித்தது. எனவே இந்தப் பிரச்சனையை கட்சியின் அடுத்த தேசியக் குழுக் கூட்டத்தில் எழுப்புவதே முறையானதாக இருக்கும்” 

இதே பொருள் பற்றி 1963 ஜூன் 5ம் நாள் செயற்குழு சார்பில் தோழர் எம் என் கோவிந்தன் நாயர் வெளியிட்ட அறிக்கையில் கூறியதாவது:

“சம்பந்தப்பட்ட அனைவருக்கும் நாம் தெரிவிக்க விரும்புவது யாதெனில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கான்பூரில் கம்யூனிஸ்ட்கள் நடத்திய மாநாட்டில் 1925ம் ஆண்டு டிசம்பரில் அமைக்கப்பட்டது. இதற்கு முன்பும் கம்யூனிஸ்ட் அகிலத்திடமிருந்து வழிகாட்டுதல்களைப் பெற்று நாட்டின் பல பகுதிகளில் சுமார் ஏழு கம்யூனிஸ்ட் குழுக்கள் செயல்பட்டு வந்தனர். ஆனால் கம்யூனிஸ்ட் பார்ட்டி ஆஃப் இந்தியா என்ற கட்சி மேற்குறிப்பிட்ட கான்பூர் மாநாட்டில், 500க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் பங்கேற்க, 1925 டிசம்பரில் அமைக்கப்பட்டு செயல்பாட்டிற்கு வந்தது. அம்மாநாட்டில் பங்கேற்ற குறிப்பிடத்தக்க முக்கியமான தோழர்கள் முஸாபர் அகமத் (கல்கத்தா), எஸ் வி காட்டே, ஆர் எஸ் நிம்க்கர் மற்றும் ஜெ பி பகர்கட்டா (பாம்பே), அப்துல் மஜீத் (லாகூர்), சி கே அய்யங்கார் மற்றும் சிங்காரவேலு செட்டியார் (மெட்ராஸ்). 1925 டிசம்பரில் கூடிய மாநாட்டின்போது எஸ் ஏ டாங்கே மற்றும் சௌகத் உஸ்மானி சிறையில் இருந்தனர். ”கட்சியின் செயற்குழு டிசம்பர் 28ல் கூடி தோழர் எஸ் வி காட்டே அவர்களைப் பொதுச் செயலாளர்களில் ஒருவராகத் தேர்ந்தெடுத்தது.” (நியூ ஏஜ், ஜூன் 9, 1963)

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தாஷ்கண்ட் குழுவுக்கு முறையான மதிப்பு மரியாதை கொடுத்து, அக்குழுவை ‘வெளிநாட்டு அலுவலக’மாக (‘Foreign Buro’) நடத்துகிறது.

இவ்வாறாக, பிளவுபடாத ஒன்றுபட்ட சிபிஐ கட்சியின் தலைமை எந்தவிதக் குழப்பம் மற்றும் ஐயத்திற்கிடமின்றித் தெளிவாக, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது 1925ம் ஆண்டே தவிர, அது 1920ம் ஆண்டு அல்ல என்று உறுதியாக இறுதி செய்தது. இந்த முடிவை எடுத்த கட்சியின் மத்திய செயற்குழு அமைப்பானது, கம்யூனிச இயக்கத்தின் கோபுரம் போல் உயர்ந்த புகழ்மிக்கத் தலைவர்கள் பலரையும் உள்ளடக்கியது.

இவ்வாண்டு கட்சியின் 95வது அமைப்பு தினத்தைக் கொண்டாடுவோம், 100வது அமைப்பு தினக் கொண்டாட்டங்களை நோக்கி செம்பதாகை உயர்த்தி அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்!

செங்கொடி வாழ்க! செங்கொடி தந்த தியாகத் தலைவர்கள் வாழ்க!

கம்யூனிஸ்ட் கட்சி ஜிந்தாபாத்! இன்குலாப் ஜிந்தாபாத்!

--தமிழில்: நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

Friday 25 December 2020

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 22 மக்கள் தலைவர் வ சுப்பையா

 

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் -22


மக்கள் தலைவர் வ சுப்பையா :

பிரெஞ்ச் இந்தியாவின் விடுதலைக்கு வித்திட்டவர்

--அனில் ரஜீம்வாலே

(நியூ ஏஜ்–நவ.15 --21, 2020)

            1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா விடுதலை அடைந்த பிறகும் பாண்டிச்சேரி, காரைக்கால் (தமிழ்நாட்டிற்கு அருகே இரண்டு பகுதிகளாக), ஏனாம் (ஆந்திரா, காக்கிநாடா அருகே), மாகே (கேரளா, கோழிக்கோடு அருகே), மற்றும் சந்திரநாகூர் அல்லது சந்தர்நகர் (மேற்கு வங்கம்) போன்ற பகுதிகள் பிரான்ஸ் தேசத்தின் பிடியில் இருந்தன. அவை கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் அதன் தலைவர் வ சுப்பையா தலைமையிலான போராட்டத்தால் 1954ல் விடுதலை அடைந்தன.

சில முந்தைய சரித்திரம்

          போர்த்துகீசியர்கள் முதலில் நம் மண்ணில் பாண்டிச்சேரியில் வந்து இறங்கினார்கள்; அவர்களது ஆலைகள் மற்றும் குடியிருப்புகளை உள்ளூர் மக்கள் புது--சேரி (புதியதான குடியிருப்பு என்ற பொருளில்) அழைத்தனர். அதையே போர்த்துகீசியர்கள் 1954ல் தங்கள் வரைபடத்தில் ‘புதுசேரியா’ (Puducheria)  என்று குறித்தனர்.

          மசூலிப்பட்டினத்தில் பிரெஞ்ச் ஆலை ஒன்றைப் பிரான்சின் கிழக்கிந்திய கம்பெனி 1664 செப்டம்பர் 1ம் நாள் நிறுவியது. பீஜ்பூர் சுல்தான் கீழ் வலிகொண்டபுரத்தின் க்விலன்டர் (Qiladar) ஷேர் கான் லோடி, மசூலிப்பட்டினத்தின் இயக்குநர் ஃபிரான்கோய்ஸ் மார்ட்டினிடம் ஓர் இடத்தை வழங்க அவர் அதில் 1674ல் பாண்டிச்சேரியை நிர்மாணித்தார். மேலும் மாஹேயை 1720களிலும், ஏனாம் பகுதியை 1731லிலும் மற்றும் காரைக்கால் பகுதியை 1738லும் பிரான்ஸ் கைப்பற்றியது. 1793ல் பாண்டிச்சேரி பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின் கீழ் வந்தாலும், 1814ல்  பிரான்சிடமே மீண்டும் வழங்கி விட்டது.

          1871 பாரீஸ் கம்யூன் தாக்கத்தில் பிரெஞ்ச் இந்தியா பத்து கம்யூன்களாகப் பிரிக்கப்பட்டு, ஒவொன்றும் ஒரு மேயரின் கீழ் கொண்டு வரப்பட்டது.

சுப்பையா இளமைப் பருவம்

          வரதராஜூலு கைலாஷ் சுப்பையா 1911ம் ஆண்டு பிப்ரவரி 7 நாள் பிறந்தார். அவருடைய தாத்தா கோட்டைக்குப்பத்தில் ஒரு காவல்துறை அதிகாரி, தந்தை வணிகராக இருந்தார். செகன்டரி பள்ளிக் கல்வியைப் பெட்டிட் செமினார் பள்ளியிலும் (1917 –23), அதன் பிறகு பாண்டிச்சேரி கால்வே கல்லூரியில் (1923—28) உயர்கல்வியையும் முடிந்தார்.

          1927 செப்டம்பரில் சுப்பையா பாண்டிச்சேரியிலிருந்து கடலூருக்கு மகாத்மா காந்தியைப் பார்ப்பதற்காக  இரண்டு நண்பர்களோடு சைக்கிள் மிதித்துச் சென்றார். ‘பிராத்தனை’ கூட்டத்தில் உரையாற்றிக்கொண்டிருந்த மகாத்மாவைக் கண்டார்.  அதே ஆண்டு மெட்ராசில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டைப் ‘பார்ப்பதற்கும்’ சென்று பல புகழ்பெற்ற மனிதர்களைச் சந்தித்தார். ரஷ்யா குறித்து ஜவகர்லால் நேரு எழுதிய புத்தகத்தை 1928ல் படித்தவர், மேலும் ‘லெனினும் ரஷ்யப் புரட்சியும்’ என்ற சிங்காரவேலர் எழுதிய புத்தகத்தையும் படித்தார்.

          கல்லூரியில் ஆறாவது பாரத்தில் படித்துக் கொண்டிருந்த போது மூன்று வாரங்களுக்கு நீடித்த மாணவர்களின் வேலைநிறுத்தத்தை நடத்தியதால் 6 மாதங்களுக்குக் கல்லூரியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். 1929ல் கல்லூரியில் விவாதக்குழுவை அமைத்து அதற்கு ‘தி ம்யூச்சுவல் பிரதர்குட்’ (பரஸ்பர சகோதரத்துவம்) எனப் பெயரிட்டார்; 1930ல் இளைஞர் அமைப்பையும் (யூத் லீக்), 1931ல் கால்வே கல்லூயில் முன்னாள் மாணவர்களின் பேரவை மன்றத்தையும் ஏற்படுத்தினார்.  ‘சுயமரியாதை’ இயக்கத்துடனும் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.

பிரெஞ்ச் இந்தியாவில் யூத் லீக்

          யூத் லீக் எனும் இளைஞர் மன்ற அமைப்புகளை 1931--32களில் சுப்பையா அமைத்தார்; ‘இராமகிருஷ்ணா படிப்பகம்’ என்பதன் தலைவராகச் செயல்பட்டு தேசிய உணர்வை விரிவாகப் பரப்பினார். 1931ல் ஒரு காப்பீட்டு நிறுவனத்தில் கிளை மேலாளராகப் பணியில் சேர்ந்தார்.

          விரைவில் பாண்டிச்சேரி அரிசன சேவா சங்கம் நிறுவப்பட்டு சுப்பையா அதன் செயலாளர் ஆனார்; சேரி (ஜுஹீ ஏரியா) பகுதிகளைச் சுத்தம் செய்தார்; அரிசன குழந்தைகள் மற்றும் பெரியவர்களுக்கும் கல்வி கற்பித்தார்.

          மெட்ராஸ் பிரிசிடன்சி சுற்றுப் பயணத்தின்போது 1934 பிப்ரவரி 17ம் நாள் காந்திஜி பாண்டிச்சேரி வந்தார். பாண்டிச்சேரி வரும்போது ஸ்ரீ அரவிந்தர் இருக்க மாட்டார் என்பதால், காந்திஜி முதலில் பயணத்தையே ரத்து செய்திருந்தார். இதை அறிந்த சுப்பையா அவரது முடிவை மாற்ற முயல்வதற்காகக் குன்னூர் சென்று, காந்திஜியின் பக்கத்து அறையிலேயே தங்கினார். குளிரால் சுப்பையா நடுங்கிக் கொண்டிருந்தபோது, திறந்த வராண்டாவில் ஒரு கயிற்றுக் கட்டிலின் மேல் ஒரு சாதாரண துண்டோடு காந்திஜி நன்றாக உறங்கிக் கொண்டிருந்ததைக் கண்டார்!

காந்திஜியோடு உடன் நடந்து சென்றபோது, அவரது நடை வேகத்திற்கு இளைஞரான சுப்பையாவால் ஈடு கொடுக்க முடியவில்லை. பாண்டிச்சேரி விஜயத்தை ரத்து செய்ய வேண்டாம், அது பெரும் முக்கியத்துவம் உடையதென சுப்பையா சமாதானப்படுத்த உடனடியாகக் காந்திஜியும் சம்மதித்தார். பாண்டிச்சேரி ஒடியன்சாலையில் ஒரு மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.

கம்யூனிச இயக்கத்திலும், தொழிற்சங்க இயக்கத்திலும்

          1934 ஜூலையில் சுப்பையா மெட்ராசில் அமீர் ஹைதர் கான் மற்றும் சுந்தரையாவைச் சந்தித்து மெட்ராசில் கம்யூனிஸ்ட் கட்சி நிர்மாணம் குறித்து விவாதித்தார். இரகசியமாக இரவில் முதலியார் பேட்டை, அரியாங்குப்பம் முதலிய பகுதிகளில் தொழிலாளர்களைச் சந்தித்துச் சுப்பையா தொழிற்சங்கங்களைக் கட்டியமைத்தார். ‘சுதந்திரம்’ என்ற தமிழ் மாத இதழை நடத்தி அதில் பிரதானமாகத் தொழிலாளர்களின் பிரச்சனைகளை இடம்பெறச் செய்து வெளியிட்டார். அந்த இதழ் 8000 பிரதிகள் அச்சாகி, மெட்ராஸ், சிலோன், தென்னாப்பிரிக்கா, மலாயா, பர்மா முதலான இடங்கள் வரை பரவியது.

வலிமையான பிரெஞ்ச் தொழிற்சங்கப் பொது மகாசம்மேளனம் (French TU CGT -- Confederation general du travail) அமைப்புடன் சுப்பையாவுக்குத் தொடர்பு ஏற்பட்டது. வரையறுக்கப்பட்ட வேலைநேரம் கோரி பாண்டிச்சேரி சவனா மில்லில் (பின்னர் சுதேசி ஆலை என அழைக்கப்பட்டது) காலவரையறையற்ற வேலைநிறுத்தம் தொடங்கப்பட்டது. 84 நாட்கள் அந்த வேலை நிறுத்தம் நடந்த பிறகு, ஆலையின் முதலாளி கோரிக்கைக்குப் பணிந்தார்; 1935ல் ஏப்ரல் 29ம் நாள் 10 மணி வேலைநேர ஒப்பந்தம் எட்டப்பட்டது. இந்த ஒப்பந்தத்தின்படி ரோடியர் மில் மற்றும் கேஃபில் மில்களும்கூட (Gaeble mills பின்னர் பாரதி மில் ஆனது) ஒழுங்குக்கு வந்தன.

1935 ஜுன் 3ம் நாள் பாண்டிச்சேரியில் முதன் முறையாகத் தொழிலாளர்களின் பொதுக் கூட்டம் நடைபெற்றது. 1936ம் ஆண்டு அக்டோபர் 17ம் நாள் பாண்டிச்சேரிக்கு ஜவகர்லால் நேரு, தீரர் சத்திய மூர்த்தி, கர்மவீரர் காமராஜர் ஆகிய தலைவர்களைச் சுப்பையா விழுப்புரத்திலிருந்து காரில் அழைத்து வந்தார்.

பிரான்சில் மக்கள் முன்னணி வென்றது

          (பாசிசத்திற்கு எதிரான இடதுசாரிகள் மற்றும் மையவாத அரசியல் கட்சிகள் சேர்ந்த) மக்கள் முன்னணி (பாப்புலர் ஃப்ரண்ட்) 1936ல் பிரான்ஸ் தேர்தலில் வெற்றி பெற்று அரசமைத்தது; அது பாண்டிச்சேரியில் ஒரு சாதகமானச் சூழ்நிலையை உண்டாக்கியது. 1936 ஜூலையில் வரலாற்றுச் சிறப்பு மிக்கத் தொழிலாளர்களின் போராட்டம் பாண்டிச்சேரியில் நடந்தபோது இயந்திரத் துப்பாக்கிகள் தாங்கிய போலீஸ் படை கொண்டுவந்து குவிக்கப்பட்டது. துப்பாக்கிச் சூட்டில் 12 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். தொழிலாளர்கள் சவனா மில்லுக்குத் தீ வைத்தனர். சுப்பையாவும் ராமண்ணாவும் எப்படியோ தப்பிவிட்டனர். பிரெஞ்ச் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கேப்ரியல் பெரி இந்தப் பிரச்சனையைப் பிரான்ஸ் பாராளுமன்றத்தில் எழுப்பினார். லியான் ப்ளம்மின் மக்கள் முன்னணி அரசு பிரெஞ்ச் கவர்னர் சோலோமியாக்கைக் கண்டித்தது. இதனைத் தொடர்ந்து தோழர்கள் கிரி, குருசாமி, துரைசாமி மற்றும் சுப்பையா கவர்னருடன் பேச்சுவார்த்தை நடத்தினர். தொழிலாளர்களின் 1936 ஜூலை 30 வரலாற்றுச் சிறப்பு மிக்கப் போராட்டம் பாண்டிச்சேரியில் 8 மணி நேர முறை அறிமுகமாக வழிவகுத்தது. 

பிரான்ஸ் தேசத்திற்கு விஜயம்

          நேரு கூறிய யோசனைப்படி, சுப்பையா 1937 மார்ச் மாதம் பிரான்சுக்குச் சென்றார். அவர் இல்லாத நேரத்தில் பாண்டிச்சேரி விவகாரங்களை எஸ்வி காட்டே மற்றும் எஸ்ஆர் சுப்பிரமணியம் கவனித்துக் கொண்டனர். சுப்பையா பிரான்சில் க்ளமெண்ஸ் டட், மேடம் அன்ட்ரே வையோலிஸ், கேப்ரியல் பெரி, பியாரே செமார்டு மற்றும் பல தலைவர்களைச் சந்தித்தார். 1941ல் நாஜிகளால் பெரி கொல்லப்பட்டார். அதுமட்டுமல்லாமல், ‘சோர்போன் பல்கலைக்கழக’த்தில் (1257 ஆம் ஆண்டுவாக்கில் இராபர்ட் தே சோர்போன் என்பவரால் நிறுவப்பட்ட கல்லூரி; தற்போது பாரிஸ் பல்கலைக்கழகம் என்றழைக்கப்படுகிறது) சுப்பையாவின் நண்பரும் பிரெஞ்ச் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினரான மாஹேவைச் சேர்ந்த மாதவன் மைக்கேல் மற்றும் பலரும் நாஜிகளால் படுகொலை செய்யப்பட்டனர்.

          பிரான்சில் சுப்பையா இந்திய மாணவர்கள் அசோசியேஷனில் உரையாற்றினார். பிரெஞ்ச் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளரானப் புகழ்பெற்ற மௌரிஸ் தொரேஸ் (Maurice Thorez) அவர்களைச் சந்தித்தார்.  

          பிரான்ஸ் தொழிலாளர் அமைச்சர் மௌரி மௌடேட் உடன் நடத்திய விவாதத்திற்குப் பிறகு லேபர் கோடு புரிதல் உடன்பாடு ஏற்பட்டது; இதனால் பாண்டிச்சேரியில் 1938 ஜனவரி 1ம் தேதி முதல் எட்டு மணி வேலைநேர முறை அமலாக்கச் சட்டம் நிறைவேற வழிவகுத்தது. ஆயிரக் கணக்கானோர் அன்புடன் வரவேற்க 1937ல் சுப்பையா தாயகம் திரும்பினார்.

          நேரு கூறிய யோசனைப்படி சுப்பையா பாண்டிச்சேரியில் 1937ல் ‘மகாஜன் சபா’வைத் தொடங்கினார் – மகாஜன சபா என்பது காங்கிரசுக்கு இன்னொரு பெயர். சுப்பையா வீட்டுக்கு வீடு சென்று காதி விற்பனை செய்தார். 1938ல் சூரத் நகருக்கு அருகே இருக்கும் ஹரிபுராவில் நடந்த காங்கிரஸ் மாநாட்டிலும் கலந்து கொண்டார்.

          நாஜி ஜெர்மனி 1940ல் பிரான்சை ஆக்கிரமித்தபோது பாண்டிச்சேரி பிரான்ஸ் தேசத்தோடு இருந்த தொடர்பை இழந்தது. அப்போது போவின் என்பவரால் நிர்வகிக்கப்பட்ட பாண்டிச்சேரி அநேகமாகப் பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் வந்தது.

          1941ல் சுப்பையா கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார். அச்சிறையில் அடைக்கப்பட்டிருந்த சுமார் 400 கம்யூனிஸ்ட்களில் எஸ்வி காட்டே, ஜீவா, ஏகே கோபாலன், பாலதண்டாயுதம் முதலானவர்களும், பல காங்கிரஸ்காரர்களும் இருந்தனர்.

அனைவரும் 1942 செப்டம்பரில் விடுதலை செய்யப்பட்டனர்.

கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தேசிய ஜனநாயக முன்னணி அமைத்தல்

          விடுதலைக்குப் பிறகு சுப்பையா பாண்டிச்சேரியில் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பைக் கட்டினார். அவர் காரைக்கால், மாஹே மற்றும் சந்தன் நாகூர் விஜயம் செய்து அங்கே காளிச்சரண் கோஷ் மற்றும் பிற தலைவர்களைச் சந்தித்தார். 


(மேற்கு வங்கத்தின் 24 பர்கானா கோடலியாவில் பிறந்த காளிச்சரண் கோஷ், புகழ்பெற்ற விடுதலைப் போராட்ட வீரர், பத்திரிக்கையாளர், எழுத்தாளர், வழக்கறிஞர், பல தலைவர்களின் சரிதைகளை எழுதியவர். அவர் எழுதிய ‘சட்டமில்லாத சட்டங்கள்’ (The Lawless Laws") புத்தகத்தின் மூலம் பிரிட்டிஷ் பாராளுமன்றத்தில் சலசலப்பை ஏற்படுத்தியவர். ‘தி ரோல் ஆப் ஹானர்’ மற்றும் ‘வங்காளத்தில் பஞ்சம்’ போன்ற நூல்கள் பெரும் புகழ்பெற்றவை –மொழிபெயர்ப்பாளர் இணைத்தது)

          ‘சுதந்திர பிரெஞ்ச் கலகக் கிளர்ச்சியாளர்கள்’ (Free French Insurgents --FFI) குழுவினர் மற்றும் வெளிநாட்டில் நிறுவப்பட்ட ஜெனரல் டி கௌளி (General de Gaulle) பிரான்ஸ் அரசோடு தொடர்பு கொண்டார் சுப்பையா. FFI கிளர்ச்சியாளர்கள், சுப்பையாவின் நண்பரும் அல்ஜீயர்ஸ் பிரெஞ்ச் கல்லூரி பேராசிரியரான அடீஸ்எம் (Adiceam) அவர்களைப் பாண்டிச்சேரிக்கு அனுப்பி பரந்த அடிப்படையிலான நாஜி எதிர்ப்பு ‘காம்பேட்’ தாக்குதல் அமைப்பை நிறுவினார். சுப்பையா அக்குழுவின் தலைவராகவும் பேராசிரியர் லாம்பெர்ட்-சரவணே பொதுச் செயலாளராகவும் செயல்பட்டனர்.

          போர் முடிந்த பிறகு பாண்டிச்சேரியில் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்து முற்போக்குச் சக்திகளையும் ஒன்றுதிரட்டி, தேசிய ஜனநாயக முன்னணி அமைத்தது. 1946 ஜூன் 26ல் கவுன்சல் ஜெனரல் சபைக்கு நடந்த தேர்தலில் 44 இடங்களில் 34 இடங்களைத் தேசிய ஜனநாயக முன்னணி வென்றது.

பிரான்ஸ் பாராளுமன்றத்திற்கு

          பேராசிரியர் லாம்பர்ட்-சரவணே தேசிய ஜனநாயக முன்னணியின் சார்பாகப் பிரெஞ்ச் பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். வ.சுப்பையாவும் பக்கிரிசாமியும் காரைக்காலில் இருந்து பிரெஞ்ச் பாராளுமன்றத்தின் மேல் சபையான ‘தி கவுன்சல் ல ரிபப்ளிக்’ அமைப்புக்கு 1947 ஜனவரி 26ல் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இந்தியாவின் சுதந்திரம்

          1947 ஆகஸ்ட் 9ல் (வெள்ளையனே வெளியேறு இயக்கம் போல) ‘பாண்டிச்சேரியை விட்டு வெளியேறு தினம்’ கொண்டாடப்பட்டது. 1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா விடுதலை அடைந்ததைப் பாண்டிச்சேரி பிராந்தியம் முழுவதும் சுப்பையாவின் முன்முயற்சியில் பெரும் அளவில் விழாவாகக் கொண்டாடப்பட்டது. சந்திரநாகூர் பகுதி மக்கள் இந்தியாவின் மூவர்ணக் கொடியை ஏற்றி அதன் மூலம் நிர்வாகத்தைக் கைப்பற்றியதை அடையாள பூர்வமாக உணர்த்தினர். ஆனால் அந்தப் பகுதியின் நிர்வாக அதிகாரம், ஒரு பொது வாக்கெடுப்பின் மூலம், முறைப்படி உடன்பாடு கண்டு 1952 மே 2ம் நாள்தான் (இந்திய அரசுக்கு) மாற்றித் தரப்பட்டது. (அப்பகுதி மேற்கு வங்கத்துடன் இணைக்கப்பட்டது)

சுதந்திரப் போராட்ட வீரர்கள் மீது தாக்குதல்

          பாண்டிச்சேரியில் சுப்பையாவின் இல்லம் தாக்கப்பட்டு 1950 ஜனவரி 14ல் தீ வைத்து எரிக்கப்பட்டபோது, சுப்பையா தலைமறைவு வாழ்வில் இருந்தார்; அந்த இல்லம்தான் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகமாகவும் ‘பிரெஞ்ச் இந்திய லேபர் ஸ்டோரா’கவும் செயல்பட்டது. பாண்டிச்சேரி இணைப்புக்குழு அமைக்கப்பட்டது. இந்தோ சீனாவிலிருந்து பிரான்ஸ் தனது சில துருப்புக்களைப் பாண்டிச்சேரிக்கு மாற்றத் துவங்கியிருந்தது. 1954ல் வியட்நாமுடன் டைன் பைன் ஃபூ சண்டையில் கடுமையாக அடிவாங்கிய பிறகு பிரான்ஸ் பாண்டிச்சேரிக்குப் பலரையும் மாற்றியது; ஆனால் துருப்புக்களின் உள்ளவுணர்வு உறுதி பாதிக்கப்பட்டு மிகவும் தாழ்ந்த நிலையில் இருந்தது.

          அஜாய் கோஷ் தலைமையிலான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களைச் சுப்பையா சந்தித்தார்; 1954 ஏப்ரல் 7ம் நாள் ‘நேரடி நடவடிக்கை’ தொடங்கியது. கிராமங்கள் விடுதலையாயின. பாண்டிச்சேரி எல்லைகளில் சிபிஐ கட்சியின் மேஜர் ஜெய்பால் சிங் போராளிகளுக்குப் பயிற்சி அளித்தார். மண்ணடிப்பேட்டை கம்யூன் முதன் முதலாகச் சுதந்திர அரசை அறிவித்து, மூவர்ணக் கொடியை ஏற்றியது. அடுத்தடுத்து ஒவ்வொரு கம்யூனாக விடுதலை பெறத் தொடங்கின.

பாண்டிச்சேரியில் மூவர்ணக் கொடி

        1954ம் ஆண்டு ஜூலை 1 தேதி ஏனாமும், ஜூலை16ல் மாஹேயும் தங்களை விடுதலை பெற்றதாகப் பிரகடனப்படுத்தின. முதன் முறையாகப் பாண்டிச்சேரி முழுவதும் மூவர்ணக் கொடி ஏப்ரல் 1954ல் பறக்கத் தொடங்கி, பாண்டிச்சேரி மண்ணை இந்தியத் தாய்நாட்டோடு இணைக்கும் கோரிக்கை வேகம் பெறத் தொடங்கியது. 1954 ஆகஸ்ட் 9ம் நாள் முழு வேலைநிறுத்தம் அனுசரிக்கப்பட்டு, பிரெஞ்ச் அதிகாரிகள் மற்றும் நிறுவனங்கள் சுற்றி வளைக்கப்பட்டன. நேருவும் பிரான்சின் பிரதமர் மென்டெஸ் பிரான்சும் அமைதியான முறையில் அதிகார மாற்றம் குறித்து விவாதித்தனர்.

          1954 அக்டோபர் 18ல் முனிசிபல் கவுன்சிலர்கள் 178 பேரில் 170 கவுன்சிலர்களும் சட்டமன்ற உறுப்பினர்களும் பாண்டிச்சேரி இந்தியா இணைப்பை அறிவித்தனர். 1954 அக்டோபர் 21ல் உடன்பாடு காணப்பட்டு, அதிகார மாற்றம் 1954 நவம்பர் 1தேதி உத்யோகபூர்வமாகச் செய்யப்பட்டது.

          இந்தியாவுக்கான கான்சல் ஜெனரல் கேவல் சிங் தனியே சிறப்பாக மக்கள் தலைவர் வ சுப்பையா அவர்களை விடுதலைப் போராட்ட முகாமில் சந்தித்து, நிகழ்வுகளின் வளர்ச்சிப் போக்குகளை அவருக்கு விளக்கினார்.

          கோட்டக்குப்பத்திலிருந்து சுப்பையா அவர்கள், தனது தாய் மற்றும் மனைவி தோழியர் சரஸ்வதியுடன் அலங்கரிக்கப்பட்டச் சிறப்பு இரதத்தில் பாண்டிச்சேரிக்கு ஊர்வலமாக அழைத்து வரப்பட்டார். பிரான்ஸ் தேசத்துக் கொடி கீழிறக்கப்பட்டு, ராஜ் நிவாசில் (ஆளுநர் மாளிகை) சுப்பையாவுக்குத் தனித்த சிறப்பு மரியாதை செய்து, மூவர்ணக்கொடி ஏற்றி வைக்கப்பட்டது.

சுதந்திரத்திற்குப் பிறகு

1964 முதல் 1969 வரை பாண்டிச்சேரி சட்டமன்றத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சட்டமன்றக் குழுவின் தலைவராக வ சுப்பையா செயல்பட்டார். 1969 –73 காலகட்டத்தில் அஇஅதிமுக கூட்டணி அரசில் அவர் விவசாயத்துறை அமைச்சராகப் பொறுப்பு வகித்தார். அவருடைய மனைவி தோழியர் சரஸ்வதி சுப்பையாவும் கூட சிபிஐ கட்சி சட்டமன்ற உறுப்பினர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினராகவும் சுப்பையா பணியாற்றியுள்ளார்.

மக்கள் தலைவர் எனப் பேரன்போடு அழைக்கப்படும், பாண்டிச்சேரியின் விடுதலைக்கு வித்திட்ட, தோழர் வ சுப்பையா தமது 82வது வயதில் 1993 செப்டம்பர் 10ம் நாள் இயற்கையெய்தினார்

. அவருக்கு மரியாதை செய்யும் வகையில் அவரது நினைவுத் தபால் தலை வெளியிட்டு இந்திய அரசு சிறப்புச் செய்தது. சுதந்திரப் போராட்ட வீரருக்கான தாமிரப்பட்டய விருது பெற்ற பெருமைக்கும் போற்றுதலுக்கும் உரியவர்.

வாழ்க மக்கள் தலைவர் வ சுப்பையா புகழ்!

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்