Friday 30 December 2022

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 76 -- எம் என் ராய்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 76                          


                               
எம் என் ராய் – கம்யூனிஸ்ட்  அகிலத்திலிருந்து ‘தீவிர மனிதநேய’த்திற்கு

--நன்றி : நியூஏஜ் (டிசம்பர் 4 –10) 

--அனில் ரஜீம்வாலே

        இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியைத் தாஷ்கண்ட் மற்றும் இந்தியாவிலும் ‘நிறுவியவர்’ எம் என் ராய் என்ற தவறான கற்பிதக் கண்ணோட்டம் பரவலாக நிலவுகிறது. அப்பிரச்சனை மீது தொடர்ந்து நாம் தெளிவை ஏற்படுத்துவோம்.

         முன்பு உண்மையில் நரேந்திரநாத் பட்டசாரியா என்றிருந்த மனவேந்திர நாத் ராய் (எம் என் ராய்) ஒரு தலைச்சிறந்த புரட்சியாளர், வெளிநாட்டில் கம்யூனிஸ்ட் ஆனவர், கம்யூனிஸ்ட் அகிலத்தில் பணியாற்றியவர், இறுதியில் ‘தீவிர மனிதநேய’ கோட்பாடு சிந்தனை கருத்தியல் வழியை நிறுவியவர். அவர் தீனபந்து பட்டாசாரியா மற்றும் வசந்த குமாரி தேவி (பசந்த குமாரி தேவி) இணையருக்கு மேற்கு வங்க, 24வது பர்க்கானாவின் ஆர்பேலியா கிராமத்தில் 1887 மார்ச் 21ம் நாள் பிறந்தார். அவர்களுடையது ஒரு புரோகிதக் குடும்பம்.

தொடக்கக் கல்வி

        தொடக்கக் கல்வியை ஆர்பேலியா கிராமத்திலும், பின் 1898ல் கோடலியாவுக்கு மாறி அங்கு ஹரினாவி ஆங்கில – சமஸ்கிருதப் பள்ளியிலும் நரேன் படிப்பு தொடர்ந்தது. ஸ்ரீஅரபிந்தோ தேசியக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டவர் பின் பெங்கால் தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்திற்கு மாறி பொறியியல் மற்றும் இரசாயனப் பாடம் படித்தார். அந்தக் கல்வி நிறுவனம் பின்னாட்களில் ஜாதவ்பூர் பல்கலைக் கழகமாக மாறியது.

புரட்சிகர இயக்கத்தில்

    பக்கிம் சந்திரர், (படம்) விவேகானந்தர் மற்றும் பிற தீவிர ஆளுமையாளர்களின் ஆழமான

செல்வாக்குக்கு ஆட்பட்ட நரேன் 14 வயதில் தலைமறைவு அனுஷீலான் சமிதியில் சேர்ந்தார், பின் ஜதீன் முகர்ஜியின் ஜூகாந்தர் குழுவில் இணைந்தார். எதிர்காலப் புரட்சியாளர்களான சத்கௌரி பானர்ஜி, சைலேஷ்வர், ஷியாம் சுந்தர் போஸ், பானி, நரேந்திர சக்ரவர்த்தி முதலானவர்களையும் மற்றும் த்யோகரில் பரேன் கோஷ் என்ற புகழ்பெற்ற புரட்சியாளருடன் தொடர்பு கொண்டார்.

       1907–09ல் சிங்கிரிபோடா, நேத்ராவில் நடத்தப்பட்ட அரசியல் தாக்குதல் நடவடிக்கைகளில் அவர் பங்கேற்றார்.

        1910 ஜனவரியில் ஹௌரா குழுவினர் வழக்கு (ஹௌரா -ஷிப்பூர் விசாரணை)யில் கைது செய்யப்பட்ட  நரேன், 1911 பிப்ரவரியில் விடுதலை செய்யப்பட்டார். நரேனின் குழுவில் பாரிஸால் மற்றும் ஆத்மோன்நதி குழுக்கள் இணைய, அது ரோட்டா மற்றும் கம்பெனியில் ஆயுதக் கொள்ளைக்கு ஏதுவாயிற்று (கல்கத்தா, 1914, ஆகஸ்ட் 26). அதில் ஜூகாந்தர் மற்றும் அனுஷீலன் உறுப்பினர்கள் துப்பாக்கி வியாபாரியிடமிருந்து ஏற்றுமதிக்காக வைத்திருந்த மௌஸர் வகை கைத்துப்பாக்கி குவியல்களை இடைமறித்துக் கவர்ந்தனர்.

        1915 பிப்ரவரியில் நரேன் மீண்டும் கார்டன் ரீச் மோட்டார் கொள்ளை காரணமாக கைது செய்யப்பட்டார்.

        முதல் உலகப் போரின்போது, ஜெர்மன் ஆயுதங்களுக்காகத் தூது செல்ல நரேனை அவரது குழு தேர்ந்தெடுத்தது. பாதுகாவலிலிருந்து தப்பிய நரேன் 1915ல் (இந்தோனேஷியா) படாவியாவுக்குக் கப்பல் ஏறினார். திரும்பிய பின் ஜாவா செல்ல மீண்டும் 1915 ஆகஸ்ட்டில் பயணமானார்; இந்த முறை பல நிகழ்வுகளை உள்ளடக்கிய சரித்திரத்தை ஏற்படுத்திய பிறகு 1930ல்தான் திரும்பினார்.

சான் பிரான்சிஸ்கோவில்

        உதவி கிடைக்கும் என நம்பி இந்தோனேஷியாவைவிட்டு நரேன் ஜப்பான் சென்றார், புகழ்பெற்ற சீனத் தலைவர் சன் யாட் சென் (படம்)அவர்களைச் சந்தித்தார், விரைவில்

அங்கிருந்து கொரியா மற்றும் சீனாவுக்குச் சென்றார். ஒரு ஜெர்மன் கப்பலின் ரகசிய அறையில் நுழைந்து ஜப்பானுக்குத் திரும்பினார். பின் அமெரிக்கா விசா பெற்று சான் பிரான்சிஸ்கோ கப்பல் ஏறினார். பலோ ஆல்டோவில் தங்கியவர், (சாந்தி தேவி என்கிற) ஈவ்லின் லியோனரா ட்ரென்ட் அவர்களை மணம் புரிந்தார். மறைவாக இருக்க வேண்டி அவர் தனது பெயரை (மனவேந்திர/) ‘மனபெந்திர நாத் ராய்’ (எம் என் ராய்) என மாற்றிக் கொண்டார். நியூயார்க்கு மாறியவர், நியூயார்க் நகரப் பொது நூலகத்தில் மார்க்ஸியம் படித்தார்.அங்கே லாலா லஜபதி ராயைச் சந்தித்தார்.

        ராய் கூறியுள்ளபடி, அவருக்கு லாலா லஜபதி ராய்காரல் மார்க்ஸ் மற்றும் பிற சோஷலிச செவ்விலக்கிய நூல்களை வாங்கி”க் கொடுத்து அவரை மார்க்ஸின் ‘மூலதனம்’ படிக்கச் செய்தார். ராய் ஒரு சோஷலிசவாதியானார். இதன் மத்தியில் லஜபதி ராயின் கூட்டத்திலிருந்து அமெரிக்கப் போலீஸ் அவரைக் கைது செய்தது. காவலிலிருந்து தப்பிய ராய், புகைவண்டியைப் பிடித்து மெக்ஸிகோ எல்லையில் உள்ள சான் ஆன்டோனியோ சென்றார். அங்கிருந்து ரியோ கிரான்டே நதியைக் கடந்து மெக்ஸிகோ சென்றார்

பொதுச் செயலாளர், மெக்ஸிகோ கம்யூனிஸ்ட் கட்சி

        ராய் மெக்ஸிகோ சென்றபோது, அந்நாடு புரட்சித் துடிப்பு வலியின் விளிம்பில் இருந்தது, அங்கு நவம்பர் இறுதியிலிருந்து 1919 நவம்பர் தொடக்கம் வரை தங்கினார். அங்கே ‘சான் பிரான்சிஸ்கோ சதி வழக்கில்’ கைது செய்யப்பட்டாலும் விரைவில் விடுதலையானார். மெக்ஸிகோவின் தீவிரவாத கவர்னருக்கு அவர் அறிமுகக் கடிதம் கொண்டு சென்றதால், ராய் அந்நாட்டு அதிபர் கார்ரன்ஸா (Carranza) உடன் நட்பு கொண்டார். மெக்ஸிகோவிலிருந்து ஒரு முறை தப்ப முயன்றார். ஆனால் கப்பலைத் தவறவிட்டவர் பிறகு மீண்டும் முயற்சிக்கவில்லை.

   ராய், சோஷலிசக் கட்சிப் பத்திரிக்கை ‘லா லுசா’ (போராட்டம்) நடத்த உதவினார், அப்பத்திரிக்கை தொடர்ந்து 8 பக்கம் கொண்ட முறையான வார இதழானது. மேலும் அவர் கொலம்பியாவின் பார்ரன்கொய்லா நகரை மையமாகக் கொண்டு வட்டார மொழியில் ‘எல் ஹெரால்டோ’ என்ற பத்திரிக்கையை ஆசிரியராக இருந்து வெளியிட்டார். (அப்பத்திரிக்கை, (ஆங்கில தி ஹெரால்டு பத்திரிக்கையின் வட்டார மொழி பதிப்பாகும்)

    1918 மத்தியில் சோஷலிசக் கட்சி, எம்என் ராய் தயாரித்து லா லுசாவில் வெளியான அரசியலறிக்கையை (மெனிஃபெஸ்டோ) அடிப்படையாகக் கொண்டு, பெருந்திரள் தொழிலாளர்கள் கட்சியாக மாறியது. டிசம்பர் 1918ல் நடைபெற்ற மற்றொரு மாநாட்டில் அக்கட்சி கம்யூனிஸ்ட் கட்சியாக மாறியது. அக்கட்சியின் முதல் பொதுச் செயலாளராக எம்என் ராய் தேர்ந்தெடுக்கப்பட்டார். இன்றும்கூட, அக்கட்சி தலைமையகத்தில் அவருடைய பெயர் பொறிக்கப்பட்ட பலகை வைக்கப்பட்டுள்ளது.

    மெக்ஸிகோ கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக ராய் பலமுறை அதிபர் கார்ரன்ஸாவைச் சந்தித்தார்.

இரண்டாவது கம்யூனிஸ்ட் அகிலப் பேராயம், 1920

    1919ன் தொடக்கத்தில் கம்யூனிஸ்ட் அகிலத்தின் (‘Comintern’) புகழ்பெற்ற பிரதிநிதி மைக்கேல் பொரோடினை மெக்ஸிகோவில் ராய் சந்தித்தார். அமெரிக்காவிலே இருந்த பொரோடின் போலீசிலிருந்து தப்ப மெக்ஸிகோ சென்றார். கையில் பைசா காசில்லாமல் அவர் ராயின் நிழலில் தங்கினார். ராய் அவரை அதிபருடன் தொடர்பு கொள்ளச் செய்தார். எதிர்வரும் இரண்டாவது கம்யூனிஸ்ட் அகிலப் பேராயத்தில் கலந்து கொள்ள பிரதிநிதிகளை அனுப்புமாறு மெக்ஸிகோ கம்யூனிஸ்ட் கட்சிக்கு அழைப்பு வந்தது. கட்சி அனுப்பிய இரண்டு பிரிதிநிதிகளில் எம் என் ராய் ஒருவர். பெர்லின் அடைந்த அவர் பின் 1919 இறுதி மற்றும் 1920 தொடக்கத்தில் மாஸ்கோ சென்றடைந்தார்.

    பெர்லின் குழு புரட்சியாளர்கள்; ஜெர்மனி, ரஷ்யாவைச் சேர்ந்த மற்றவர்களையும்; வீரேந்திரநாத் சட்டோபாத்யாயா, அபானி முகர்ஜி, பூபேன் தத், செம்பக் பிள்ளை (செண்பக ராமன் பிள்ளை), சவுகத் உஸ்மானி முதலானவர்களையும் ராய் சந்தித்தார்.

        அகிலத்தின் பேராயம் தொடங்குவதற்கு ஒரு வாரம் முன்பே ராய் லெனினைச் சந்தித்தார். விவாதங்களுக்குப் பிறகு, ‘காலனியப் பிரச்சனைகள் மீது துணை ஆய்வறிக்கை (தீசிஸ்)’ தயாரிக்கும்படி லெனின் எம் என் ராயைக் கேட்டுக்கொண்டார்.

ராய் மீது லெனின் விமர்சனம்

        1920 ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 7 வரை இரண்டாவது கம்யூனிஸ்ட் அகிலத்தின் பேராயம் மாஸ்கோவில் நடைபெற்றது. இம்மாநாடு, லெனின் தயாரித்தளித்த தேசிய மற்றும் காலனியப் பிரச்சனைகள் குறித்த ஆய்வறிக்கையை விவாதித்தது. இப்பிரச்சனை மீதான துணை ஆய்வறிக்கை எம் என் ராய் அவர்களால் எழுதப்பட்டது. ஆய்வறிக்கைகள் மற்றும் விவாதத்தின் நோக்கம், காலனிய நாடுகளின் விடுதலை இயக்கங்களின் குணாம்சங்களைத் தொகுப்பதும் அதற்கேற்ப தந்திரோபாயம் மற்றும் செயல்திட்டங்களை உருவாக்குவதுமாகும்.

    ராயின் துணை ஆய்வறிக்கை அவதானிப்புகளை லெனின் கூர்மையாக விமர்சித்தார்; காரணம், அவை முற்றாக குழுவாதப் போக்குடையதாக இருந்தது; மேலும், இதனால் புரட்சியாளர்கள் மற்றும் கம்யூனிஸ்ட்கள், விடுதலை இயக்கத்திலிருந்து தனிமைபட வேண்டி வரும். டைப் செய்யப்பட்ட ராயின் ஆய்வறிக்கையிலிருந்து பெரிய பத்திகளை லெனின் தன் கைப்பட அடித்து நீக்கினார். (ஆதாரம் காண்க, சிபிஐ வரலாறு ஆவணங்கள், டாக்டர் அதிகாரி ஆசிரியராக இருந்து தொகுத்தது, தொகுதி 1, 1917 –22, பக்கங்கள் 173 –177, ராய் தீசிஸின் போட்டோ ஒளி நகல்)

      பூர்ஷ்வா ஜனநாயக இயக்கங்கள் ‘மக்கள் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்த-வில்லை’ என்று குறிப்பிட்ட எம் என் ராய், “இந்தியாவில் பெருந்திரள் மக்கள் பூர்ஷ்வா தலைவர்களுடன் இல்லை,” அவர்கள் புரட்சியின்பால் நகர்ந்து வருகிறார்கள் என்றார். “… பூர்ஷ்வா ஜனநாயக இயக்கங்கள் பொதுமக்கள் திரளின் உணர்வுகளையும் விழைவுகளையும் வெளிப்படுத்துகின்றன எனக் கருதுவது ஒரு தவறாகிவிடும்” எனக் கூறினார். ‘காந்திஜி மற்றும் காங்கிரசைத் ‘தூக்கி எறிந்து விட்டுவிடுதலை இயக்கத் தலைமையைக் கம்யூனிஸ்ட்கள் எடுத்துக் கொள்ள வேண்டும்’ என்றும், ‘பூர்ஷ்வா தேசியத்தை ஆதரிப்பது வர்க்கப் போராட்டத்தை நீக்கி அழித்துவிடும்’ என்றும் கூறினார் ராய்.

    இவற்றையும் மற்றும் ராய் ஆய்வறிக்கையின் பிற முக்கிய பத்திகளையும் லெனின் நிராகரித்தார். லெனினும் காமின்டர்ன் பேராயமும், (காலனிய நாடுகளின்) “கம்யூனிஸ்ட்கள் உள்நாட்டு சுதேசி பூர்ஷ்வா ஜனநாயக இயக்கத்திற்கு ஆதரவு அளித்தாக வேண்டும்” எனவும்

அவர்களுடைய புரட்சிகரப் பங்கு (இன்னும்) தீர்ந்துவிடவில்லை எனவும் தெளிவாகக் கூறினர். இவ்வாறாக, லெனின் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஐக்கிய முன்னணி என்ற புதுமை கருத்தை முன் வைத்தார். கீழ்த்திசை நாடுகளின் கம்யூனிஸ்ட்களிடம் லெனின் கூறினார்: “விழிப்புற்று வரும் பூர்ஷ்வா தேசியத்தில், அந்த மக்கள் மத்தியில், நீங்கள் உங்களை நிலைநிறுத்திக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது –அது, அதனது வரலாற்றுபூர்வ நியாயத்தைக் கொண்டிருக்கிறது” (லெனின் எழுத்து திரட்டு 30, பக்.162). அத்தகைய ஓர் இயக்கத்தில் ‘கம்யூனிஸ்ட் வண்ணத்தை’த் திணிப்பதற்கு எதிராக அவர் உறுதியாக இருந்தார் (நூல் திரட்டு 31, பக்.149)

    மேலும், காலனிய நாடுகளில் (சூழ்நிலை கனிவதற்கு முன்) ஒருவகையில் பிஞ்சிலே பழுப்பதாய்க் கம்யூனிஸ்ட் கட்சிகளை அமைப்பதையும் லெனின் உறுதியாக எதிர்த்தார், காரணம் (கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பதற்கு ஏற்ற) வர்க்கச் சமூக உருவாக்கம் இன்னும் மலர வேண்டிய மொட்டு அரும்பும் பருவத்திலே இருப்பதாகும். மகாத்மா காந்தி, சன் யாட்-சென், (கமால்) பாஷா மற்றும் அவர்களைப்போன்ற பிற ஏகாதிபத்திய எதிர்ப்புத் தலைவர்களையும் லெனின் பெரிதும் உயர்வாகப் பாராட்டினார்.

    அதற்கு மாறாக எம் என் ராய், “தேசிய பூர்ஷ்வாகள் ஏகாதிபத்தியத்தின்பால் ‘சென்று விட்டதாக’வும், காங்கிரஸ் ‘ஏகாதிபத்தியத்தின் ஏவலாளி’யாக மாறி விட்டதாகவும் கருதினார். இவ்வாறாக, எம் என் ராய் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் குழுவாத மற்றும் வரட்டுக் கோட்பாடு போக்கிற்கு அடித்தளம் அமைத்து, எதிர்காலத்தின் மீது பள்ளம் பறித்து வடு ஏற்படுத்தினார்.

ராய் தாஷ்கண்ட் ‘சிபிஐ’ கட்சியை எதிர்த்தார்

        எம் என் ராய் தாஷ்கண்ட் நகரில் (1920) சிபிஐ அமைப்பதற்குத் தொடக்கம் செய்தார் எனப் புரிந்து கொள்வது உண்மைத் தரவுகளின்படி தவறானது. உண்மையில், அவர் அதை எதிர்த்தார். அதுபோலவே இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் நிறுவனராக அவரை முன் நிறுத்துவதும் தவறானது.

        (1920ம் ஆண்டு அக்டோபர் 17நாள் தாஷ்கண்டில் நடத்தப்பட்ட ஒரு கூட்டத்தில் எம் என் ராய், MPBTஆச்சார்யா, அபானி முகர்ஜி, முகமது ஷஃபீக் உள்பட ஏழுபேர் மற்றும் பிறர் கலந்து கொண்டனர். ஷஃபீக்கைச் செயலாளராக்கி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டதாக அக்கூட்டம் அறிவித்தது. அதே தாஷ்கண்ட் நகரில் மற்றொரு கூட்டம் 1920 டிசம்பர் 15ம் நாள் நடைபெற்றது. –ஆசிரியரின் மற்றொரு கட்டுரையிலிருந்து)

    தாஷ்கண்டில் ’சிபிஐ’ அமைக்கும் யோசனையை எம்என் ராய் ஒப்புக்கொள்ளவில்லை என்பதை அவரது சொந்த வார்த்தையில் காணலாம். அக்கூட்டத்தில் கலந்து கொண்டாலும் ராய் தமது நினைவுக் குறிப்பு நூலில் இவ்வாறு எழுதினார்: இடம் பெயர்ந்து வந்த சில தனிநபர்கள் தங்களைக் கம்யூனிஸ்ட் கட்சி என அழைத்துக் கொள்வதில் பொருள் ஏதும் இல்லைஅது பெயருக்குத்தான் இருக்கும் ஒன்று என்பதை முழுமையாக அறிவார்கள்... ஏற்பட்டுவிட்ட சில அபிப்ராயங்களை மறுக்கும்  வகையில் ராய் மேலும் எழுதுகிறார் : புலம் பெயர்ந்து வெளிநாடு வந்தவர்கள் (‘முகாஜீர்கள்’) கம்யூனிஸ்ட் கட்சி அமைத்ததை நான் ஒப்புக்கொள்ளவில்லை; அந்தக் கட்சிக்கு இந்தியத் தொழிலாளர்கள் சார்பாகப் பேசுவதற்கே உரிமை இருப்பதாக நான் நம்பவில்லை எனும்போது ஒட்டுமொத்த இந்திய நாட்டு மக்கள் சார்பாகப் பேசவும் உரிமை இல்லை எனத் தனியாகக் குறிப்பிடத் தேவையில்லை. (நினைவுக் குறிப்புகள், பக்.465)

     டாக்டர் கங்காதர் அதிகாரி கூற்றின்படி அந்த நேரத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பதில் ராய் ஆர்வமாக இல்லை (சிபிஐ வரலாற்று ஆவணங்கள், தொகுதி 1, பக்.240); காரணம், இந்திய புரட்சியாளர்களுக்கான இராணுவப் பள்ளி ஒன்றை அமைத்திட அவர் விரும்பினார்.

       1920 தாஷ்கண்ட்டில் சிபிஐ அமைக்கும் யோசனை உண்மையில் வெளிநாடுகளுக்குப் புலம் பெயர்ந்து வந்த ‘முகாஜீர்கள்’ குழு மற்றும் பிற புரட்சியாளர்களிடமிருந்து வந்தது.

        இந்த ஆதாரங்கள், எம்என் ராய் தாஷ்கண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவினார் என்ற பரவலான தவறான கருத்தை ஒதுக்கி வைக்கும். டாக்டர் அதிகாரி, டாங்கே, காட்டே, முஸாஃபர் அகமது மற்றும் பிறர் உள்ளிட்ட இந்தியக் கம்யூனிஸ்ட்களுடன் ராய் மோதல் போக்கிலேயே இருந்தார், மேலும் 1925ல் கான்பூரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பு மாநாட்டையும் ராய் விரும்பவில்லை.

    தாஷ்கண்ட் குழு சில பிரச்சாரங்களை முன்னெடுப்பது என்ற வகையில் பயனுள்ள பங்களிப்பைச் செய்தது என்றாலும், உண்மையில் ஒரு கம்யூனிஸ்ட் கட்சியாகச் செயல்படவில்லை. விரைவில் இந்தியாவோடு தொடர்பு இல்லாமல், ஒருங்கிணைப்பு அல்லது எந்த நடவடிக்கையும் இல்லாமல் தாஷ்கண்ட் கட்சிவிரைவில் மறைந்தது.

(இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தாஷ்கண்ட் குழுவுக்கு முறையான மதிப்பு மரியாதை கொடுத்து, அக்குழுவை வெளிநாட்டு அலுவலகமாக (‘Foreign Buro’) நடத்துகிறது. -- ஆசிரியரின் மற்றொரு கட்டுரையிலிருந்து)

காமின்டர்ன் தலைமையில்

          கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற்குழுவிற்கும் (ECCI) அதன் தலைமைக் குழுவுக்கும் எம் என் ராய் தேர்ந்தெடுக்கப்பட்டார். அகிலத்தின் காலனிய பீரோவுக்கு அவர் செயலாளர். அவர் (ஒரு நாட்டின் சிறு நிர்வாகப் பகுதியான) கான்டன், சீனா மற்றும் காமின்டர்ன் பிரதிநிதியாக 1927 பிப்ரவரி கூட்டத்திற்கும் அனுப்பப்பட்டார். இந்திய பூர்ஷ்வா முதலாளிகளுக்குப் பிரிட்டிஷ் ‘சலுகைகள்’ காட்டும் சர்ச்சைக்குரிய ‘டி-காலனைசேஷன் தியரி’யின் ஆதரவாளராக இருந்தார். [இந்த ஆய்வறிக்கை(தியரி)யின் அவதானிப்பு காலனிய நாடுகளில் ஏகாதிபத்தியத்தால் முன்னெடுக்கப்படும் தொழில்மயமாக்கல், அந்நாட்டின் ஏகாதிபத்தியச் சார்பு நிலையைக் குறைத்து, காலனியத்தைக் கட்டவிழ்க்கிறது என்கிறது. பிற்காலத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் இந்தக் கோட்பாடு மார்க்சிய தொழில்மயமாக்கலுக்கு எதிரிடையானது என அதனை நிராகரித்தது – புரிதலுக்காக இணைத்தில் திரட்டியது].

கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற்குழுவிலிருந்து ட்ராஸ்கி வெளியேற்றப்படுவதற்கு ஆதரவாக அவர் வாக்களித்தார் – ஆனால் ஒரு வரலாற்று முரண்நகை, அவரே (1928ல்) 6வது கம்யூனிஸ்ட் அகிலப் பேராயத்திற்குப் பிறகு அதன் உறுப்பினராகத் தொடரவில்லை; இதற்குக் காமின்டர்னில் பரவலான ஸ்டாலினிய அந்தஸ்து குறைப்பு நடவடிக்கைகளும் பகுதியளவு ஒரு காரணம். 1929 தொடக்கத்தில் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்ப்பு அணி (Brandler-Thalheimer)குழுவினரின் முகாமுடன் ராய் தொடர்பில் இருக்கத் தொடங்கினார், காமின்டர்னின் ஆதரவிலிருந்து வெளியே வீழ்ந்தார்.

     டிசம்பர் 1929ல் காமின்டர்னிலிருந்து ராய் வெளியேற்றப்பட்டதைக் கம்யூனிஸ்ட் அகிலத்தின் பத்திரிக்கை Inprecorr’ (சர்வதேச பிரஸ் தகவல் தொடர்பு) அறிவித்தது. பெர்லின் செல்ல அவர் அனுமதியைப் பெற்றார்.

இந்தியாவுக்குத் திரும்புதல்

        15 ஆண்டுகளுக்குப் பிறகே 1930 டிசம்பரில் எம் என் ராய் இந்தியா திரும்பினார். நேரு, போஸ் மற்றும் பிற தலைவர்களை அவர் சந்தித்தார். 1924 வாரண்டின் கீழ் 1931 ஜூலையில் கைதான அவர் 12 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டார். பெரெய்லி மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டவர், இறுதியில் ஐந்தாண்டு நான்கு மாதங்கள் ஐந்து வெவ்வேறு சிறைகளில் அனுபவித்தார். அவரது உடல்நிலை நிரந்தரமாகச் சீர்குலைந்தது.

     1936 நவம்பரில் விடுதலையான பிறகு அவர் காங்கிரஸ் கட்சியில் இணைந்து 1936 டிசம்பரில் நடந்த காங்கிரஸின் ஃபைஸ்பூர் அமர்வில் கலந்து கொண்டார், அரசியலமைப்பு வரைவுக்கான சட்டமன்றத்தை அமைக்க ஆலோசனை முன்வைத்தார். வரலாற்று விநோதம், காங்கிரஸைத் ’தூக்கி எறிய’ வலியுறுத்திய ஒருவர், அதே காங்கிரஸ் கட்சியில் சேர்ந்ததுதான். மெட்ராசில் சிங்காரவேலர் இல்லத்திற்கு 1936ல் விஜயம் செய்த ராய், அவரது இல்லத்தில் தங்கினார்.

‘தீவிர மனிதநேயம்’

        விரைவில் காங்கிரசுடன் கருத்து வேறுபாடு வளர்ந்தது, (இன்டிபென்டென்ட் இந்தியா) ‘சுதந்திர இந்தியா’ என்ற வார இதழை வெளியிடத் தொடங்கினார். அவர் எலன் காட்ஸ்சாக் (Ellen Gottschalk) என்பவரை இரண்டாவது மணம் புரிந்த பிறகு டேராடூனில் குடியமர்ந்தார். ‘தீவிர காங்கிரஸ்காரர்கள் லீக்’ அமைப்பை நிறுவினார். அவர் தனது ‘பகுத்தறிவு, புனைவியல் மற்றும் புரட்சி’ (Reason, Romanticism and Revolution’) என்ற புத்தகத்தில் குழப்பமான கருத்தியல்களின் கலவையான ‘தீவிர மனிதநேயம்’ (‘radical humanism’) என்பதை வளர்த்தெடுத்து அமைத்தார். அவருடைய சிறிய குழு சொந்தமான தொழிற்சங்க அணியைக் கொண்டிருந்தது, மேலும் காங்கிரசிலும் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்திலும் (AISF) பணியாற்றினர்.

        ‘சுதந்திர இந்தியா’ இதழ், 1949ல் ‘தி ரேடிகல் ஹூமானிஸ்ட்’ என்று மாற்றப்பட்டு, பின்பு இந்திய மறுமலர்ச்சி நிறுவனத்தின் மாத இதழானது. 1945 முதல் சுதேந்திரநாத் தத்தாவுடன் இணைந்து ‘மார்க்ஸிய வழி’ என்ற காலாண்டு இதழையும் ஆசிரியராக இருந்து வெளியிட்டார் – அந்த மாதாந்திர இதழும் ‘தி ஹூமானிஸ்ட் வே’ என மாற்றப்பட்டது.

  1947ல் அவர் ‘புதிய மனிதநேயம்’ என்ற தனது சொந்த அரசியலறிக்கையை (மெனிஃபெஸ்டோ) எழுதினார். டேராடூனிலிருந்து அவர் ‘ரேடிகல் ஹூமானிஸ்ட்’ இதழைக் கொண்டு வந்தார். புகழ்பெற்ற ஆளுமைகளான TM தார்குண்டே, VB கார்னிக் முதலானோர் அவருடன் கூட்டு சேர்ந்திருந்தனர்.

        ராய் தனது குழுவினருடன் 1940ல் காங்கிரசைவிட்டு வெளியேறி, தீவிர ஜனநாயகக் கட்சி (RDP) நிறுவினார். 1946 டிசம்பரில் பம்பாயில் நடைபெற்ற அக்கட்சியின் மாநாட்டில் 22 அம்ச அடிப்படைக் கொள்கைகளை அல்லது ‘தீவிர ஜனநாயகத்தின்’ அரசியலறிக்கையை  அளித்தார். பின்னர், ‘கம்யூனிசத்திற்கு அப்பால்’ மற்றும் ‘புதிய மனிதநேயம் – ஓர் அறிக்கை’ என்பதை வெளியிட்டார்.

    இறுதியில், கட்சி அரசியல் தனது (புதிய மனிதநேய) ஜனநாயகக் கோட்பாட்டுடன் பொருத்தமற்றது என்ற முடிவிற்கு வந்தார். இதன் விளைவாய்த் தொடர்ந்து தீவிர ஜனநாயகக் கட்சி, அதனது கல்கத்தா மாநாட்டில் 1948 டிசம்பரில் கலைக்கப்பட்டது.

        ராய் டேராடூனில் இந்திய மறுமலர்ச்சி நிறுவனத்தை நிறுவினார். அம்ஸ்டர்டாமில் 1952ல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த சர்வதேச மனித நேய மற்றும் நன்நெறி சங்கம் (The International Humanist and Ethical Union (IHEU)அமைப்பின் தொடக்கப் பேராயத்தில் கலந்து கொள்ள இருந்த எம் என் ராய், எதிர்பாராத வகையில் 1952 ஜூனில், பேராயக் கூட்டத்திற்குச் சற்று முன்பு, 50 அடியிலிருந்து கீழே விழுந்து விபத்துக்கு ஆளானார். டேராடூன் மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்பட்டவர், பெருமூளை இரத்த உறைவு மற்றும் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். அவர் கலந்து கொள்ளாமலேயே மனிதநேயப் பேராயத்தில் அவர் IHEU சங்கத்தின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் எழுதிய கடைசி கட்டுரை 1954 ஜனவரி 24ல் வெளியானது.

        எம் என் ராய் தமது 67வது வயதில் டேராடூனில் மாரடைப்புக் காரணமாக 1954 ஜனவரி 25ல் இயற்கை எய்தினார்.

ராய் எழுதிய நூல்கள்

   மாஸ்கோ மற்றும் பெர்லினிலிருந்து ஏராளமாக எழுதிக் குவித்து, ‘வேன்கார்டு’ (முன்னோடி) மற்றும் ‘தி மாஸஸ்’ (மக்கள் திரள்) உள்ளிட்ட பல புத்தகங்கள் மற்றும் இதழ்களை வெளியிட்டார். மேலும் ‘நினைவோடைகள்’,மாறிவரும்நிலையில் இந்தியா’ (இந்தியா இன் ட்ரான்ஸிஷன்), ‘பொருள்முதல் வாதம்’, ‘தீவிர மனிதநேயம் பற்றி’, ‘இஸ்லாத்தின் வரலாற்றுப் பங்கு’, ‘இந்தியாவின் செய்தி’ முதலிய நூல்களையும், ‘நவீன விஞ்ஞானத்தின் தத்துவப் பின்விளைவுகள்’ என்ற புத்தகத்தையும் எழுதினார்.

இறுதிக் கட்ட வாழ்வு

        அவரது இறுதிக் காலகட்டம் ஆன்மிகத்தைச் சுற்றித் திரும்பியது, வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தில் நம்பிக்கை அகன்றது, பொருள்முதல் வாதத்திலிருந்து இயக்கவியலைப் பிரித்தது, பிரபஞ்சத்துக்கு ‘பின்னால் மற்றும் முன்னால்’ ஆழ்நிலை இருப்பைக் கண்டறிய விரும்பினார் (to discover transcendental being ‘behind and above’ the universe), வரலாற்றின் மனிதநேய விளக்கத்தை முயன்றார்; கம்யூனிசம் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகம் இரண்டையும் எதிர்த்தார், ‘மக்கள்’ எதிர்காலச் சமூகத்தை நடத்துவர் என்பனபோல எண்ணினார்.

       அவர் தனது வாழ்வைப் பலபல கோட்பாடுகள், ஆதார மூலங்களிலிருந்து தேர்ந்து எடுத்துத் தொகுத்த கருத்தோட்டங்களின் கலவையாக (eclectical) முடித்துக் கொண்டார்.

(அந்நூல்களின் வழி, கம்யூனிஸ்ட் அகிலத்திலிருந்து ‘தீவிர மனிதநேய’த்திற்கு வந்தவாராக, எம்என் ராய் வாழ்கிறார்)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

Saturday 24 December 2022

நியூஏஜ் தலையங்கம் -- தனியார் பிரிவின் குரலைப் பிரதிநிதித்துவம் செய்யும் ஜி 20 நாடுகள்

 நியூஏஜ் தலையங்கம் (டிச.25 –31)

                                                               தனியார் பிரிவின் குரலைப்
பிரதிநிதித்துவம் செய்யும் ஜி 20 நாடுகள்

         சமீபத்தில் இந்தியத் தலைமைப் பொறுப்பின் கீழ் ஜி –20 அமைப்பின் வளர்ச்சி செயல் குழு கூட்டம் மும்பை பந்த்ரா –குர்லா வளாகத்தில் உள்ள ஜியோ உலக மையத்தில் டிசம்பர் 13 –16ல் நடைபெற்றது.  மாநாட்டில் அமைப்பின் உறுப்பினர்கள், சிறப்பு அழைப்பு நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் கலந்து கொண்டனர்.

        ஜி-20 பிரமுகர்கள் விஜயம் செய்யவிருந்த 11 முனிசிபல் வார்டுகளை அழகுபடுத்த ரூ24.23 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இத்தகு விழா கொண்டாட்ட நிகழ்வுகளை மும்பையில் வசிப்பவர்கள் பலமுறை சந்தித்துள்ளனர். ஆனால் இவை நிலையாக இருக்கும் என்ற எந்தத் தோற்ற மயக்கமும் அவர்களுக்கு இல்லை என்பதுடன், வரி கட்டுபவர்கள் என்ற முறையில் அதற்கான இந்தச் செலவுகளையும் அவர்கள்தான் சுமக்கப் போகிறார்கள்.

      மும்பை சாந்தாகுரூஸ், போரிவளி இடையே பாதுகாப்பு நடவடிக்கை பெயரில் – புகழ்பெற்ற மும்பை சேரிப்பகுதிகளில் கோலோச்சும் துன்ப துயரங்களைப் போர்த்தி மூட -- வெள்ளை

துணிகளால் மறைக்கப்பட்ட பல்வேறு பகுதிகள் முளைத்தன. மூடிய திரைகளுக்குப் பின்னே மலையாய் சேறும் சகதியுமான குப்பைகளின் குவிப்பு எனச் செயல்பாட்டாளர்கள் கூறுகின்றனர். அதற்கு மேலும், பல இடங்களுக்குப் பிரதிநிதிகளை அழைத்துச் சென்ற கார்கள், தெருக்களில் குழந்தைகள் ஓடியாடியபோதும், ஆபத்தைப் பொருட்படுத்தாது அதி வேகத்தில் சென்றன. இதனை மேற்பார்வை செய்தவர்களின் ‘செய்ய வேண்டிய செயல்களின் பட்டியலில்’ இந்த ஆபத்துகள் பற்றிய கவலைக்கு இடமில்லை. முழுமையாக இப்பகுதியில் இருந்து தினசரி வியாபாரம் செய்வோர் விரட்டப்பட, ஆக்கிரமிப்பாளர்களின் இடங்கள் புல்டோசரால் இடிக்கப்பட்டு, எங்கேயும் செல்ல முடியாதாவாறு கேட்டுக்குள் தடுத்து நிறுத்தப்பட்டனர்.

      இந்தியாவின் பிரதமர் நரேந்திர மோடி ஜி-20 தலைவராகத் தேர்தெடுக்கப்பட்ட பின் நடக்கும் முதலாவது கூட்டத்தில், அரசுகள் மற்றும் உலகின் பெரும் பொருளாதாரங்களின் 19 வங்கி ஆளுநர்கள், ஐரோப்பிய யூனியன் கலந்து கொள்கின்றன. ஜி 20 அமைக்கபட்டது முதலாகப் பொருளாதார அதிகாரத்தின் விளிம்பிற்கு வெளியே உள்ள நாடுகளைத் தவிர, உலகிற்கான பொருளாதார வழிகாட்டுதல்களை வழங்குவதற்காகத் தானே நியமித்துக் கொண்ட குழுவாக உள்ளது. பன்னாட்டுக் கார்ப்பரேஷன்கள் ஜி-20குள், அதன் சிபார்சுகள் மற்றும் முடிவுகளில் மட்டுமின்றி, பெண்களுக்குப் பொருளாதார ரீதியில் அதிகாரம் அளித்தல் போன்ற பிரச்சனைகளிலும் செல்வாக்கு செலுத்துகின்றன. சிறப்பு அழைப்பாளர்களில் சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்எப்) மற்றும் உலக வங்கியின் பிரதிநிதிகள் வழக்கமாக அழைக்கப்படுகின்றனர்.

    கூட்டாக மேற்கண்ட அனைவரும் சுதந்திர வர்த்தகப் பிராந்தியங்களுக்காக மற்றும் பொருளாதார வளர்ச்சியை முக்கிய நிகழ்ச்சி நிரலாக வைத்து முன்னெடுத்துச் செல்ல முயற்சிக்கின்றனர். சமூக மற்றும் பொருளாதார நீதி மற்றும் மனித உரிமைகளுக்கு இங்கே இடமில்லை. சுதந்திர வர்த்தகம் மற்றும் முதலீடுகளுக்கான உடன்பாடுகள் பொதுவாக மக்களின் வாழ்வை மட்டுமின்றி, சுற்றுச் சூழலியலையும் பாழ்படுத்தி அழிப்பதாக நிரூபிக்கப்பட்டிருப்பது தெளிவு. மக்கள்கூட்டத்தின் அதி பணக்காரப் பிரிவுகளுக்கு மட்டும் உதவி, அதன் நலன்களுக்கு ஆதரவாக ஜி-20 இருப்பதும் நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனை அவ்வமைப்பு மற்ற பெரும்பான்மை மக்களின் நலன்களைப் பலியிட்டே செய்கிறது.

    1999ல் அமைக்கப்பட்டபோது, உலகப் பொருளாதார மற்றும் நிதி நெருக்கடியைத் தீர்பபதற்கு உதவும் வகையில், சரியான கொள்கைகளை வடிவமைத்து திருத்தங்களை மேற்கொள்ள அரசுகளின் நிதி அமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கிகளின் ஆளுநர்கள் சந்திக்கும் கூட்டமாக நடத்துவதே அதன் நோக்கம். ஜி-20ன் தலைமைப் பொறுப்பை இந்தியா இந்த ஆண்டு டிசம்பர் 1 முதல் 2023 நவம்பர் 30வரை வகிக்கும். இந்தத் தலைமைப் பொறுப்பு, அமைப்பில் இடம் பெற்ற நாடுகளுக்குச் சுழற்சி முறையில் ஓராண்டிற்கு வழங்கப்படுகிறது. உறுப்பு நாடுகள் ஜி-20 நாடுகளுக்குள், எந்நாட்டிலும் முதலீடு செய்ய எத்தடையும் இல்லை.

    ஜி-20ன் ஒவ்வொரு நாடும் அதற்கான சொந்த சமூக-பொருளாதார முறைமையைக் கொண்டுள்ளன; அது ஒரு சில நாடுகளைத் தவிர அவசியம் ஜனநாயக முறையில் இல்லை. அவற்றுள் பல நாடுகளில் சர்வாதிகாரம் அல்லது ஏதேச்சிகாரம்கூட ஆட்சியில் உள்ளன. மேலும் சவுதி அரேபியா போன்ற நாடுகள் முழுமையான அதிகாரம் உடைய மன்னர்களால் ஆளப்படுகின்றன.

    தலைமை வகிக்கும் நாட்டின் மீது அத்தலைமை, பெருமைமிகு மணிமகுடம் எதனையும் அணிவித்ததாக எங்கும் சுட்டிக்காட்ட முடியாது – கூட்டங்களில் / விவாதங்களில் கலந்து கொள்பவர்களை மகிழ்ச்சியாக வைத்திருக்க அந்நாடு செய்யும் மிகப் பெரிய செலவுத் தொகை ஒன்றைத் தவிர, வேறெதுவும் இல்லை. ஜி 20 அமைப்புக்கு அதிகாரம் இல்லை என்பது, தலைமை ஒவ்வொரு ஆண்டும் மாற்றி அளிக்கப்படுவதன் முக்கியமான அடையாளம். எனவே ஒவ்வொருவருக்கும் சுழற்சி முறையில் வரிசையில் தலைமை கிடைக்கும் என்பதே பொருள். தலைமை அளிக்கப்படுவதற்கான ஒரே குணாம்சம், அதன் சொந்த செலவில் மற்றவர்களை மகிழ்ச்சியாக வரவேற்று நடத்தும் தகுதி என்பதே.

    வர்த்தகம் குறித்து விவாதிக்க அமைக்கப்பட்ட ஜி 20ல், தற்போது வர்த்தகப் போரில் ஈடுபட்டுள்ள (அமெரிக்கா மற்றும் சீனா) நாடுகள் அல்லது மற்றவர்களுடன் சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் இல்லாத நாடுகளும் இடம் பெற்றுள்ளன. பருவநிலை மாற்றம் குறித்து விவாதிக்க

கடமைப்பட்ட ஜி20 அமைப்பில், பருவநிலை பாதிப்புக்குக் காரணமான கார்பன் உமிழ்வைத் தொடர்ந்து செய்யும் பருவநிலை வில்லன்களான நாடுகளும் இடம் பெற்றுள்ளன. இராணுவ உடன்பாடுகளை ஏற்படுத்திக் கொண்ட (ஐரோப்பா மற்றும் அமெரிக்கா) நாடுகளும் இடம் பெற்றுள்ளதன் பொருள், ஒருவர் மீதான போர் தாக்குதல் மற்ற அனைவர் மீதும் தாக்குதலைத் தொடங்குவதாகும் என்பதே. குறிப்பான நாடுகளுக்கு (ரஷ்யா) எதிராக உடன்பாடுகளைக் கையெழுத்திட்டுள்ள நாடுகளும் மற்றும் அந்நாடுகளுக்கு எதிராக ஆயுதங்களை அளிக்கும் விரோதிகளும் ஜி 20ல் உள்ளன. மேலும் இந்த அமைப்பில் தங்களுக்குள் எல்லைப் பிரிவுகள் இல்லாமல் மக்கள் சுதந்திரமாகச் செல்லவும், பணியாற்றவும், ஒருவருக்கொரு நாட்டில் சுதந்திரமாக முதலீடு செய்யக் கூடிய நாடுகளும் (ஐரோப்பிய யூனியன்) இடம் பெற்றுள்ளன.

ஜி 20ன் இப்பின்னணியில், நாம் நினைவில் கொள்ள வேண்டியது, இந்நாடுகளுக்கே கார்ப்பரேட்கள் வருவது வளர்ச்சிக்கான நல்ல செய்தி. வர்த்தகம்20, அல்லது B20 (Business20) தன்னை ஜி 20 சமூகத்திற்கு “தனியார் துறையின் குரலாக” முன்நிறுத்துகிறது. உலகின் மிகப் பெரிய கார்ப்பரேஷன்கள் ஜி20 நாடுகளிலே தளம் அமைத்து, குறிப்பிடத்தக்க பொருளாதார அதிகாரத்தையும் கொண்டுள்ளன என்பது சுட்டிக் காட்ட வேண்டிய முக்கிய விஷயமாகும்.

1990களின் பிற்பகுதியில், பொருளாதாரப் பிரச்சனைகள் மேற்கத்திய எல்லைகளோடு நின்றுவிடாது என்பது கொள்கை வகுப்பாளர்களுக்குத் தெளிவாகப் புரியத் தொடங்கியது. மேலும் ஏழு நாடுகள் குழுவின் (ஜி 7) மரபார்ந்த கூட்டங்கள் புதிய சவால்களுக்கு, ஈடுகொடுக்க முடியாத, தவறான பொருத்தப்பாடு உள்ளவை எனப் புரிந்தது. அதனைத்தான் வலிமிகுந்த மெக்சிகோ பெசோவின் (மெக்சிக்கோவின் நாணயம்) வீழ்ச்சியும் ஆசிய நிதி நெருக்கடியும் மற்றும் உருவாகி வளர்ந்து வரும் பொருளாதாரங்களும் அடிக்கோடிட்டு உணர்த்தின.

மேற்கத்திய நாடுகள் தாங்களே சொந்தமாகக் கையாள முடியாத மேற்கத்திய நெருக்கடிகளின் காரணமாகவே ஜி 20 என்ற அமைப்பு இருக்கிறது.

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்  

 

.

 

Tuesday 20 December 2022

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 75 -- காளிசரண் கோஷ்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 75                                                    

 
                            காளிசரண் கோஷ் –
ஃபிரெஞ்ச் எதிர்ப்புப் போராட்டத் தலைவர்

                                                                   --அனில் ரஜீம்வாலே

-- நன்றி : நியூஏஜ் (நவ.6 –12)

          தலைமறைவு புரட்சிகர இயக்கத்தில் ஈடுபட்ட காளிசரண் கோஷ், திங்கோரி முகர்ஜி, பவானிமுகர்ஜி, உமேஷ் நந்தி போன்ற புரட்சியாளர்களால் சந்தன்நாகூரின் கம்யூனிஸ்ட் கட்சி  தலைமை தாங்கப்பட்டது. (படம் நன்றி தி இந்து, ஒரு புத்தக மேல் அட்டை)

        1947 ஆகஸ்ட் 15ல் பிரிட்டிஷ் இந்தியா விடுதலை அடைந்தாலும், பிரான்ஸ் மற்றும் போர்த்துகீசிய காலனிய ஆட்சியின் கீழ் இருந்த பகுதிகளின் மக்கள் தங்கள் சுதந்திரப் போராட்டத்தை அதன் பிறகும் தொடரவே செய்தனர். அவர்கள் தங்கள் விடுதலையை முறையே 1954 மற்றும் 1961ல் பெற்றனர்.

        ஃபிரெஞ்ச் இந்தியா என அறியப்படும் பகுதியில் நடந்த விடுதலைப் போராட்டத்தின் பிரபலத் தலைவர்களில் காளிசரண் கோஷ் ஒருவர். ஃபிரெஞ்ச் இந்தியா என்பது, மேற்கு வங்கத்தில் உள்ள சந்தன்நாகூர் (சந்தர்நாகூர் எனவும் அறியப்படும்), பாண்டிசேரி, ஏனாம் (ஆந்திரப் பிரதேசம்), மாஹே (கேரளா) மற்றும் காரைக்கால் (தமிழ்நாடு) பகுதிகள் அடங்கியது. காளிசரண் கோஷ் சந்தன்நாகூர் மற்றும் பிற ஃபிரெஞ்ச் பகுதிகள் மட்டுமின்றி பிரிட்டிஷ் இந்தியா மற்றும் சுதந்திர இந்தியாவின் கம்யூனிஸ்ட் இயக்கத் தூண்களில் ஒருவராகவும் விளங்கினார்.

    அவரது வாழ்க்கை வரலாறு குறித்த மிகக் குறைந்த விபரங்களே கிடைக்கின்றன. எவையெல்லாம் கிடைக்கிறதோ அவற்றை நாம் குறிப்பிடுவோம். அவரது பங்களிப்புப் பற்றி விவாதிக்கும் முன், வரலாற்றுபூர்வமாக அவர் போராடிய சந்தன்நாகூரில் நடந்த விடுதலைப் போராட்டப் பின்னணியைச் சுருக்கமாகப் பார்க்கலாம்.

பின்னணி

        சந்தன்நாகூர், கல்கத்தாவிலிருந்து ஒரு மணி நேர பயணத்தில் செல்லும் சுமார் 40 கிமீ தொலைவில் உள்ள ஒரு சிறிய பேரூர். அன்றைய வங்கத்தின் நவாப் இப்ரஹிம் கான் ஒப்புதலோடு 1673ல் ஒரு ஃபிரெஞ்ச் காலனியாக அமைக்கப்பட்டது. ஹூக்ளி நதியின் வலது கரையில் அவர்கள் வணிக வளாக இடத்தை அமைத்தனர். 1688ல் அது பிரான்சின் நிரந்தரக் குடியிருப்பானது. அதனை 1756 ஆங்லோ – ஃபிரெஞ்ச் போரில் பிரிட்டிஷ் கப்பற்படை கைப்பற்றியது; 1763ல் பிரான்சுக்குத் திரும்ப கிடைத்தாலும் 1794ல் பிரிட்டிஷ் அதை மீண்டும் கைப்பற்றியது.

          1757ல் வங்க நவாப் மீர் ஜாஃபர் பிரிட்டிஸாரை எதிர்த்துப் போரிட (நெதர்லாண்டு)  டச்சு கிழக்கிந்திய கம்பெனியைப் படைகளைக் கொண்டு வருமாறு அழைப்பு விடுத்தார். டச்சுப் படைகள் சந்தன்நாகூருக்கு அருகே சின்சூர்ச் வந்தடைந்தது, ஆனால் போர்க்களத்தில் பின்வாங்கியது. 1816ல் சந்தன்நாகூர் மற்றும் அதைச் சுற்றி 7.8 சதுர கிமீ பரப்பு மீண்டும் பிரான்சிடம் அளிக்கப்பட்டது. 1954வரை அது பிரான்சின் கீழ் இருந்தது. அதுவரை அது ஃபிரெஞ்ச் இந்தியாவின் பகுதியாக அரசாளப்பட்டது.

விடுதலைக்கான போராட்டம்

        1915ல் சந்தன்நாகூரிலிருந்து சுமார் 20பேர் முதல் உலகப் போரில் ஈடுபட்டனர். இதுவும் காந்திஜி மற்றும் பிற தலைவர்களின் விஜயம் போன்ற நிகழ்வுகள் அப்பகுதியில் சில நவீன உணர்வைக் கொண்டு வந்தன. 1925 மற்றும் 1927ல் சந்தன்நாகூருக்குக் காந்திஜி விஜயம் செய்தார். காந்திஜியின் தண்டி யாத்திரை மற்றும் உப்பு சத்தியாகிரகத்தைச் சந்தன்நாகூரின் யுவ சமிதி தீவிரமாக ஆதரித்தது. ஃபிரெஞ்ச் அரசின் கீழ் கமிஷனர் ஜென்ரலான டாக்டர் ஹிரேன் சாட்டர்ஜி தலைமையின் கீழ் 1930களில் கம்யூனிஸ்ட் இயக்கம் பேரூர்களில் வலிமை பெறத் தொடங்கியது. சிபிஐ, சந்தன்நாகூரை அதன் மாவட்டத் தலைமையகமாக்கியது.

        20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அனுஷீலான், ஜூகாந்தர் மற்றும் பிற குழுக்கள் உடன் தொடர்புடைய புரட்சிகர இயக்கங்கள் வளரத் தொடங்கின. 1908 முஸாஃபர்பூர் வெடிகுண்டு வழக்கில் ஈடுபட்டவர் பிரபலமான புரட்சியாளர் கனைலால் தத்தா. (சந்தன்நாகூரில் பிறந்தவர், ஜூகாந்தர் இயக்கத்தைச் சேர்ந்தவர்). ராஷ்பிகாரி போஸ், சிரீஷ் சந்திர கோஷ், அரவிந்த கோஷ் (மாணிக்டலா வெடிகுண்டு வழக்கில் ஈடுபட்டவர்), மோதிலால் ராய் மற்றும் பிறருக்குப் ஃபிரெஞ்ச்சின் உறைவிடக் குடியிருப்பான (enclave) சந்தன்நாகூர் ஓர் உகந்த அடைக்கலப் பகுதியானது. பிரவார்தக் சிங் எண்ணற்ற சமூக மற்றும் புரட்சிகரப் பணிகளை ஆற்றினார்.

சந்தன்நாகூர் கம்யூனிஸ்ட் கட்சி

        புரட்சியாளர்களால் தலைமைதாங்கப்பட்ட சந்தன்நாகூரின் கம்யூனிஸ்ட் கட்சி வழக்கமாக வெளியிட்டுவந்த ‘சுதேசி பஜார்‘ இதழில் கோஷ் எழுதுவது வழக்கம். அவரது கட்டுரைகளில் ஒன்று தேச விரோதமாகக் கருதப்பட்டது. விளைவு, இதழின் ஆசிரியர் துர்க்கா தாஸ் மற்றும் பதிப்பாளர் ரமேஷ்வர் தே இருவரும் கைது செய்யப்பட்டு ஆறு மாத காலத் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டனர்.

     மற்றொரு எதிர்காலக் கம்யூனிஸ்ட் தலைவரான பவானி முகர்ஜியும் துர்க்காதாஸ் சேத் உடன் தொடர்பு கொண்டு தேசிய இயக்கத்தின் அங்கமானார். அவருக்கு மார்க்ஸியக் கருத்துகள் காளிசரண் கோஷ் அவர்களாலேயே அறிமுகப்படுத்தப்பட்டது.

        காளிசரண் கோஷ் சந்தன்நாகூரில் ஓர் இளைஞர் அமைப்பை நிறுவினார், அது பின்னர் மாநகராட்சித் தேர்தல்களில் பங்குபெற்று வென்றது. அவர் 1930ல் உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்றதற்காக மித்னாப்பூரிலிருந்து கைது செய்யப்பட்டார். பின்னர் சந்தன்நாகூருக்குத் திரும்ப வந்த அவர் ‘ஸ்பூலிங்கா’ அல்லது ’தீப்பொறி’ என்ற இதழை வெளியிட்டார். சில இதழ்கள் வெளியான பிறகு அது அரசால் நிறுத்தப்பட்டது.

        இரகசியமாக அவர் மித்னாப்பூருக்கு இடம் மாற்றிக் கொண்டார். சில நாட்களுக்குப் பின் கைது செய்யப்பட்டு விசாரணையின்றி சிறையில் அடைக்கப்பட்டார். பெரும் கொடுமைகளுக்குப் பெயர்போன தியோலி, ஹிஜிலி, புக்ஸா முதலிய தடுப்புக் காவல் முகாம்களில்  அடைத்து வைக்கப்பட்டார்.

கம்யூனிஸ்ட் கட்சியில் இணைதல்

        இந்தக் காலக் கட்டத்தில்தான் காளிசரண் கோஷ் கம்யூனிசம் பால் ஈர்க்கப்பட்டார். 1937ல் கம்யூனிஸ்ட் கட்சி ஹூக்ளி மாவட்டக் குழுவில் அவர் சேர்ந்தார். மாவட்டத்தின் கிராமங்களுக்குப் பயணம் செய்து விவசாயிகள், மற்றும் பிறருடன் தொடர்பு கொண்டார். சந்தன்நாகூர் மக்கள் அவரைப் பெரும் மரியாதையுடன் பார்த்தனர். ‘காளி-தா (ஜி போல ’தா என்பது வங்கமொழியின் மரியாதை விகுதி) என்று மிக்க அன்புடன் நன்கு அறியப்பட்டார். அவர் மக்களைத் திரட்டி அமைப்பதில் திறமையும், வங்க மொழி, ஆங்கிலத்தில் சக்திமிக்க சொற்பொழிவாற்றும் ஆற்றலும், இலக்கியம் மற்றும் பண்பாட்டில் தேர்ந்த பயிற்சியும் பெற்றிருந்தார். திருமணம் ஆகாத அவர் உயர்ந்த ஒழுங்கு கட்டுப்பாடுடன் வாழ்ந்தார். அவருடன் தொடர்கொண்ட எவருக்கும் மார்க்சியக் கல்வியைப் போதிப்பதில் எப்போதும் கருத்தாக இருந்தார். தனிப்பட்ட முறையில் எண்ணற்ற தோழர்களை அவர் தெரிந்திருந்தார்.

ஃபிரெஞ்ச் இந்தியாவில் போராட்டம்

      ஃபிரெஞ்ச் பகுதிகளான பாண்டிச்சேரி, சந்தன்நாகூர், ஏனாம், மாஹே மற்றும் காரைக்காலில் விடுதலைப் போராட்டம் 1940களில் கூர்மை அடைந்தது. 1942ம் ஆண்டு பல மாதங்கள் காளிசரண் பாண்டிச்சேரியில் தங்கி இருந்தார், மற்றவர்களுடன் இணைந்து இயக்கத்தை வழிநடத்தினார். பாண்டிச்சேரி வீதிகளில் அவர் ஆர்ப்பாட்டங்கள் நடத்தினார்.

        ஃபிரெஞ்ச் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி (Parti communiste de l’Inde francaise), இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் நெருங்கிய ஒத்துழைப்பில் பணியாற்றியது. (மக்கள் தலைவர்)

சுப்பையா அதன் செயலாளர், மற்றும் காளிசரண் கோஷ் அதன் முன்னணி செயற்பாட்டாளர். இரண்டாம் உலகப் போரின்போது கட்சி பிரபலமாக எழுந்தது. போர் வெடித்தபோது கட்சி சொத்துகள் கைப்பற்றப்பட்டு, கட்சி தடைசெய்யப்பட்டதால் அலுவலகங்கள் சூறையாடப்- பட்டன. பிரான்ஸ் தேசத்தில் ஃபிரெஞ்ச் கம்யூனிஸ்ட் கட்சி (FCP) போர் முயற்சிகளுக்கு ஆதரவளித்ததால் (ஃபிரெஞ்ச் இந்தியாவில்) 1940 செப்டம்பரில் தடை விலக்கிக் கொள்ளப்- பட்டது. காளிசரண் கோஷ், திங்கோரி முகர்ஜி, பவானி முகர்ஜி மற்றும் பிற  கம்யூனிஸ்ட்கள் மற்றும் புரட்சியாளர்களுடன் தனித்த நேரடித் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ள சுப்பையா சந்தன்நாகூர் சென்றார். அங்கே சுப்பையா கொண்டலபாரா சணல் ஆலை தொழிலளர்கள் சங்கம் மற்றும் பிறருடன் கூட்டங்களில் உரையாற்றினார். எல்லா நேரமும் காளிசரண் தீவிரமாகச் செயல்பட்டார்.    

        அனைத்து ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளையும் ஃபிரெஞ்ச் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி, ‘தேசிய ஜனநாயக முன்னணி’ (NDF) என்ற பதாகையின் கீழ் ஒன்று திரட்டியது. முதற்கண் 1946 ஜனவரியில் முறையாகப் பிரதிநிதிகள் மாநாட்டைக் கூட்டியது. தேசிய முன்னணியின் கீழ் சந்தன்நாகூரின் கம்யூனிஸ்ட் கட்சி, மகாஜன சபை மற்றும் அனைத்து சக்திகளையும் ஒன்றுபடுத்திக் கொண்டு வந்தது. சந்தன்நாகூர் அமைப்பு பாண்டிச்சேரி ஜனநாயக முன்னணியுடன் நெருக்கமாகப் பணியாற்றியது. என்டிஃஎப் அமைப்பில் கம்யூனிஸ்ட் கட்சியே முக்கியமான சக்தியாக இருந்தது.

       மாணவர்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் இளைஞர்களின் வெகுஜன பெருந்திரள் அமைப்புகளை ஃபிரெஞ்ச் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி அமைத்தது.

   பாண்டிச்சேரியில் 1946 ஏப்ரல் 7, 8ல் ஃபிரெஞ்ச் இந்தியா தொழிலாளர்கள் மாநாடு நடைபெற்றது. அம்மாநாட்டில் காளிசரண் கோஷ், எஸ்எஸ் மிராஜ்கர், ப ஜீவானந்தம் (ஜீவா), சந்தன்நாகூரின் முல்லீப் மற்றும் என்டிஎஃப் சார்பில் ஃபிரெஞ்ச் நாடாளுமன்றத்திற்கு வென்ற உறுப்பினர் லம்பெர்ட் சரவணனே முதலானவர்கள் உரையாற்றினர். அழைப்பின் பேரில் ஆளுநர் பாரோண் (Barron) அவர்களே அதில் உரையாற்றினார்.

   ஆர்வத்தைத் தூண்டும் ஆளுமையாளரான பாரோண், ஸ்ரீ அரபிந்தோ கோஷ் (ஸ்ரீஅரவிந்தர்) தத்துவத்தின் செல்வாக்கில் ஈர்க்கப்பட்டவர், 1937ல் பாண்டிச்சேரியில் ஸ்ரீஅரவிந்தர் ஆசிரமத்துக்குப்   வழக்கமாக விஜயம் செய்பவர். ஆனால் அவர் கம்யூனிட்களை எதிர்த்தவர். கம்யூனிஸ்ட்களைத் தவிர்க்கும்போதே என்டிஎஃப் அமைப்புடன் கூட்டாகச் செயல்பட முயன்றவர். அவ்வமைப்பின் சில தலைவர்கள் அவருடன் நெருக்கமாக இருந்தனர்.

    என்டிஎஃப் தலைமையின் கீழ் இருந்த மாநகராட்சிக் கட்டடத்தில் 1946 ஜூலை 14ல் காங்கிரஸ் கொடி ஏற்றப்பட்டது. அதைக் கண்டும் காணாததுபோல நிர்வாக ஆணையர், மாநகராட்சி மேயரிடம் அதை ஃபிரெஞ்ச் கொடியுடன் வைக்கச் சொன்னார்! தங்களது இறுதி நாட்கள் எண்ணப்பட்டு வருவதைப் பிரெஞ்சுகாரர்கள் நன்கு உணர்ந்தனர்.

    பிரிட்டிஷ் இந்தியாவின் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக 1947 ஜனவரி 21ல் இங்கே மாணவர்கள் “வியத்நாம் நாள்” அனுசரித்தனர்.

    ராயல் இந்தியக் கப்பற்படை எழுச்சியின் ஆண்டு விழாவிற்காக 1947 ஜனவரி 25ல் ஆர்பாட்டங்சகள் நடத்தி, சில மாணவர்கள் குழுவாக நிர்வாக ஆணையர் அலுவலகத்திற்குப் பேரணியாகச் சென்றனர். அவர்களை மத்திய காவல் போலீஸ்படை சுற்றி வளைத்தது. மாணவர்கள் ‘ஃபிரான்ஸ் ஏகாதிபத்தியம் வீழ்க, வீழ்க’ என முழக்கமிட்டனர். அவர்களுக்கு ஆதரவாக கொண்டலப்பாரா சணல் ஆலைத் தொழிலாளர்கள் சேர்ந்து கொண்டனர்.

 மெல்ல அதிகார மாற்றம்     

    போருக்குப் பின், ஃபிரெஞ்ச் பகுதிகளில் விடுதலைப் போராட்டம் வேகம் பெற்றது. காளிசரண் கோஷ் காரைக்கால் விடுதலை இயக்கத்திலும் தீவிரமாகப் பங்கேற்றார். 1947 டிசம்பர் 21ல் காரைக்காலில் அகமது நைனார் மரைக்காயர் தலைமையில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில், காளிசரண் ஃபிரெஞ்ச் இந்தியர்கள் தங்கள் விடுதலைப் போராட்டத்தைத் தொடங்கிட அறைகூவல் விடுத்து ஒரு தீர்மானம் கொண்டு வந்தார். காரைக்கால் இணைப்பு ஐக்கிய முன்னணியிலும் அவர் தீவிரமாகப் பங்கேற்றார்.

     1938ல் சந்தன்நாகூர் நிர்வாக அதிகாரியாக பாரோண் இருந்தார். பின்னர் அவர் அதன் ஆளுநராக நியமிக்கப்பட்டார். இந்திய விடுதலை நெருங்கி வருவதால், இந்த நகரின் மக்கள் ஃபிரெஞ்ச் ஆட்சியின் கீழ் இனியும் தொடரும் மனநிலையில் இல்லை. நகரில் இருந்த அரசியல் கட்சிகள், 1947 ஆகஸ்ட் 8க்கு முன் சந்தன்நாகூர் விடுதலை பிரகடனம் செய்யப்படாவிடில், மக்கள் பேரணியாகச் செல்ல நேரிடும் எனப் ஃபிரெஞ்ச் ஆட்சிக்கு இறுதி எச்சரிக்கை விடுத்தன. ஆனால் பிரான்ஸ் அரசு காது கொடுத்துக் கேட்கவில்லை.

        ஃபிரெஞ்ச் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, அனைத்து மாநகராட்சி அதிகாரிகளுக்கும் 1947 ஆகஸ்ட் 15ல் ஃபிரெஞ்ச் கொடியை இறக்கிவிட்டு, இந்திய மூவர்ணக் கொடியை ஏற்ற அறைகூவல் விடுத்தது. கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் மற்றும் பார்வர்டு பிளாக் மக்கள் போராட்டத்தில் இணைந்தன; சந்தன்நாகூர் மக்கள் ஃபிரெஞ்ச் நிர்வாக அதிகாரியை ஓட ஓட விரட்டினர், அதிகாரத்தை ஏற்றுக் கொண்டுவிட்டதன் அடையாளமாக இந்திய மூவர்ணக் கொடியை ஏற்றினர். மாநகராட்சியின் தலைவரை நிர்வாக அதிகாரியாக நியமித்தனர்.

         காந்திஜி அமைதி காக்கும்படிக் கேட்டுக் கொண்டார்.

        பெருந்திரள் போராட்டத்தின் வீரியத்தை அற்றுப் போகச் செய்ய பிரான்சு அரசு ஒரு தந்திர நடவடிக்கையை எடுத்தது. அது இரண்டு ஆணைகளை-- 1947 ஆகஸ்ட் 12ல் ஒன்று, ஆகஸ்ட் 20ல் மற்றொன்றும் -- வெளியிட்டது. இந்த ஆணைகள் அமைச்சர்கள் குழு அமைக்கப்பட வழி செய்தது. மாநகராட்சி சட்டமன்றமாக மாற்றப்பட்டது. இதற்கு முன்பு 1947 ஜூன் 30 மற்றும் ஜூலை 14ல் பிரான்சு அரசு, ஆளுநர் பாரோண் அவர்களுக்கு மாநகராட்சி சட்டமன்றம் மற்றும் நிர்வாக (அமைச்சரகக்) குழு ஏற்படுத்தக்கூடிய வகையில் செய்தி அனுப்பியது. இது அப்போது கவனத்தைத் திசை மாற்றிய ஒரு தந்திரம்.

    இதன் மத்தியில், ஃபிரெஞ்ச் குடியேற்றமான ஐந்து நகரங்கள் ‘சுதந்திர நகர்களாக’ப் பிரகடனப்படுத்தப்பட்டன; உண்மையில், தொடர்ந்து அவை ஃபிரெஞ்ச் குடியேற்றமாகவே நீடித்தன.

ஃபிரெஞ்ச் அரசு 1948 ஜூன் 8ல் இந்திய அரசுடன் உடன்பாடு செய்தது; அதன்படி, ஃபிரெஞ்ச் இந்திய மக்கள் தங்கள் சொந்த அரசைத் தேர்ந்தெடுக்கும் உரிமை உடையவர்களாக

அறிவிக்கப்பட்டனர். 1949 ஜூன் 19ல் சந்தன்நாகூரில் நடத்திய கருத்துக் கணிப்பு தேர்தலில் 97 சதவீத மக்கள் இந்தியாவுடன் இணைவதற்கு ஆதரவாக வாக்களித்தனர்.  7463 வாக்குகள் ஆதரவாகவும் 114 எதிராகவும் பதிவாயின. நகரின் நிர்வாகம் 1950 மே 2ல் இந்திய அரசால் எடுத்துக் கொள்ளப்பட்டது. ஃபிரான்ஸ், இந்தியா இடையே 1951 பிப்ரவரி 2ல் ஏற்பட்ட ஒப்பந்தத்தின் கீழ் அந்நகர் இந்தியாவுக்குப் பிரித்து அளிக்கப்பட்டது. அது சந்தன்நாகூர் பிரிப்பு உடன்பாடு என்றழைக்கப்படும். 1952 ஜூன் 9ல் சந்தன்நாகூர் இந்தியாவின் சட்டப்படி உரிமையாக (transferred to India de jure) மாற்றப்பட்டது. எல்லா அரசு ஊழியர்களும் 1952ஆகஸ்டில் இந்திய அரசு ஊழியர்களாக ஆனார்கள். சந்தன்நாகூர் மக்களின் விருப்பங்களை உறுதிப்படுத்திக்கொள்ள டாக்டர் அமர்நாத் ஜா தலைமையில் 1953 நவம்பர் 19ல் ஓர் ஆணையம் அமைக்கப்பட்டது. சந்தன்நாகூர் இணைப்புச் சட்டம் (1954) மூலம் 1954 அக்டோபர் 2ல் சந்தன்நாகூர் நகர் மேற்கு வங்கத்துடன் இணைந்தது.

1952 மத்தியில் ஃபிரெஞ்ச் இந்தியா கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்புக் குழு கூட்டம் (தமிழ்நாடு) கடலூரில் நடைபெற்றது. அதில் ஃபிரெஞ்ச் பகுதிகள் விடுதலைக்காக ஒரு நகல் செயல்திட்டம் (ப்ரோகிராம்) நிறைவேற்றப்பட்டது. அதன்படி, ஃபிரெஞ்ச் கைப்பற்றி ஆட்சி புரிந்த அனைத்துப் பகுதிகளின் விடுதலைக்காகவும், பின்னர் அப்பகுதிகளை இந்திய மாநிலங்களுடன் இணைக்கவும் போராடுவது என முடிவு செய்யப்பட்டது.

அதிகார மாற்றம் சம்பந்தமாக ஃபிரெஞ்ச் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1954 செப்டம்பர் 4ல் இந்தியப் பிரதமரிடம் ஒரு மகஜர் அளித்தது. அந்த மனுவில் (அதிகாரம் மாற்றித் தரப்படும்) இடைக்காலத்திற்கான முன்மொழிவுகள் அடங்கி இருந்தன.

1954 நவம்பர் 1ல் ஃபிரெஞ்ச் ஆட்சியாளர்கள் இந்தியாவைவிட்டுச் சென்றனர்.

தலைமறைவு நடவடிக்கைகளும் பின்னர் கட்சி செயல்பாடுகளும்

    இந்தியக் கம்யயூனிஸ்ட் கட்சி ‘பிடிஆர் கால’த்தின் போது தடை செய்யப்பட்டது. தலைமறைவான காளிசரண் அவரது ‘பதுங்கு இட’த்திலிருந்து கைது செய்யப்பட்டார். இக்காலத்தின்போது அவர் காச நோயால் பீடிக்கப்பட்டார், அவரது கால்களில் ஒன்று வெட்டி எடுக்கப்படவும் வேண்டியதாயிற்று.

        காளிசரண் கோஷ் சந்தன்நாகூர் முனிசிபல் கார்ப்பரேஷனுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1957 முதல் 1967வரை பணியாற்றினார். பின்னர் அவர் மேற்கு வங்கச் சட்டமன்றக் குழு உறுப்பினராகவும் இருந்தார்.

    அவருக்கு நுரையீரலின் ஒரு பகுதியை அகற்றும் அறுவை சிகிச்சை (lobectomy) மேற்கொள்ப்பட்டது. [மனிதனின் வலது நுரையீரலில் lobe எனப்படும் மூன்று பகுதிகளும், இடது நுரையீரலில் இரண்டு பகுதிகளும் இருக்கும். இதில் நோயுற்ற பகுதியை வெட்டி அகற்றும் அறுவை சிகிச்சை] சிகிச்சையைத் தொடர்ந்த பிரச்சனைகளால் அவர் நீண்ட காலம் துன்பப்பட்டார். வேலூர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

      அந்தப் புரட்சியாளர் காளிசரண் கோஷ், காளி’தா 1973 ஜனவரி 30ல் மறைந்தார். அவருக்குச் செவ்வணக்கம்!

--தமிழில் : நீலகண்டன், என்எப்டிஇ, கடலூர்

Saturday 17 December 2022

நியூஏஜ் தலையங்கம் (மற்றும் சூழலியல்) -- வளர்ச்சி மற்றும் இயற்கையின் இயங்கியல்

 நியூஏஜ் தலையங்கம் (டிச.18 --24)

வளர்ச்சி மற்றும் இயற்கையின் இயங்கியல்

            

    பெரும்பாலான அனைத்து வளர்ச்சி நடவடிக்கையிலும் அடிநீரோட்டமாக எங்கோ ஒரு நட்டம் நிகழ்ந்து கொண்டே இருக்கிறது. ஒவ்வொரு அடுத்த தொடக்கமும் அதற்கு முன்பு இருந்த நிலையை மறுப்பதன் அடிப்படையில் அமைகிறது. நம் கண் எதிரே உறுத்தும் ஓர் உதாரணம்,

புவி வெப்பமயமாதல். அடர்ந்து பரவும் (ஆலை மற்றும் வாகனங்களின்) புகை, நூற்றாண்டுகளாக மனித வாழ்வின் நாகரீகத் தொட்டில்களாய் ஓடிய நதிகள், ஆறுகள், ஓடைகள் வறண்டு கிடக்க, விளைவு சூழலியல் கடுமையாக மாறி, புவியைக் காக்கும் ஓசோன் படலம் அரித்து அழிக்கப்படுகிறது; மரங்களைப் பயன்படுத்தவும், விளை நிலங்களுக்காகவும் – அமேசான் உட்பட-- வெப்ப மண்டலக் காடுகள் வெட்டி அழிக்கப்படுகின்றன; மேலும் கடல்வாழ் மீன் உயிரினங்கள் மற்றும் பிற பொது பயன்பாடு செல்வாதாரங்கள் வீழ்ச்சி அடைந்து அழித்தொழிக்கும் விகிதம் அதிகரிக்கிறது,

        இந்த இடத்தில்தான் ஃபெடரிக் ஏங்கெல்ஸ், தமது இயற்கையின் இயங்கியலில் விவரித்த இயற்கைக்கு விரோதமான மனித இயல்பு பற்றிக் கூறியதன் பொருத்தப்பாடு வருகிறது: “…மனிதர்கள் அதை (இயற்கையை) அழித்து, அப்படிச் சரிசெய்யப்பட்ட மண்ணில் விதைக்கிறார்கள் அல்லது மரங்கள் அல்லது கொடிகளைப் பயிரிடுகிறார்கள்.” மனிதர்களின் எல்லா நடவடிக்கைகளும் ஏறத்தாழ திட்டமிட்டவாறு நடத்தப்படும்போது, விலங்குகள் திட்டமிடுவதில்லை. ஏங்கெல்ஸ் கூறுகிறார், “விலங்குகள் வெறுமே சுற்றுச்சூழலைப் பயன்படுத்துகின்றன, தங்கள் இருப்பால் அச்சூழலில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றன; தான் ஏற்படுத்திய மாற்றங்கள் மூலம் அதன் மீது மனிதன் ஆளுகை செலுத்தி, தன் தேவைக்குச் சேவையாற்றச் செய்கிறான். அதுதான் மனிதனுக்கும் விலங்கிற்கும் இடையே உள்ள இறுதி முக்கியமான வேறுபாடு: மீண்டும் ஒரு முறை மனித உழைப்பே இந்தக் குறிப்பான வேறுபாட்டைக் கொண்டு வந்தது.”

    இதனோடு நிறுத்தாத ஃபெடரிக் ஏங்கெல்ஸ் தொடர்ந்து சொல்கிறார், “எனினும், இயற்கையின் மீது மனிதன் சாதித்த அளப்பரிய வெற்றிகளுக்காக நம்மை நாமே அளவுக்கு அதிகமாகப் புகழ்ந்து தற்பெருமை பேசி தருக்கித் திரிய வேண்டாம். அத்தகைய ஒவ்வொரு வெற்றிக்காகவும் இயற்கை நம்மீது பழிவாங்க உள்ளது. ஒவ்வொரு வெற்றியும், முதலாவதாக நாம் விரும்பிய பலனைத் தருகிறது, உண்மைதான்; அடுத்த இரண்டாவது மூன்றாவது கட்டத்தில், அது மிக வித்தியாசமான மற்றும் எதிர்பாராத விளைவுகளை ஏற்படுத்துகிறது –பல நேரங்களில் அந்த விளைவு முதலாவதை (பலனை) ரத்து செய்வதாக உள்ளது.”

    ஏங்கெல்ஸ் மேலும் சுட்டிக் காட்டுகிறார், இயற்கையின் விதிகளை நன்கு புரிந்து கொண்டால், இயற்கையின் மீது நமது நடவடிக்கைகளின் உடனே மற்றும் நீண்ட கால

விளைவுகளைப் பற்றி சமூகம் மேம்பட்ட பார்வையைப் பெறும். இயற்கையான மற்றும் சமூக ரீதியான அம்சங்கள் இடையேயான தொடர்புகளில் உள்ள சிக்கல்களைப் பற்றியும் விவாதிக்கும் அவர், இரண்டாவதான சமூக அம்சங்களுக்குப் பெரும் முக்கியத்துவம் தருகிறார். செவ்வியல் அரசியல் பொருளாதார மட்டத்தில் எழும் கேள்விகளை அவர் எவ்வாறு கையாள்கிறார் என்பது, மிகுந்த முக்கியத்துவம் உடையது. ‘‘முதலாளித்துவத்திலும், முதலாளித்துவத்திற்கு முந்தைய பிற எல்லா சமூக -பொருளாதார அமைப்புகளிலும், ஒருவரின் முக்கியமான அல்லது உடனடி அக்கறை, உழைப்பு மற்றும் உற்பத்தியின் நேரடியான மற்றும் உடனடி விளைவுகளைப் பற்றியதாகவே இருந்தது, அவர்கள் நீண்ட காலச் சூழலியல் தாக்கங்கள் குறித்துக் கவலைப்படவில்லை’’ என்கிறார்.

        உற்பத்தித் தளங்கள், பண்டமாற்றை மட்டுமே நோக்கிய உடனடி உற்பத்தி மற்றும் இந்தப் பண்டங்களில் விற்பனைகள் மீதான மனிதச் செயல்பாடுகளின் சமூக விளைவுகளைப் பற்றி மட்டுமே செவ்வியல் அரசியல் பொருளாதாரம் ஆராய்கிறது’ என்கிறார் ஏங்கெல்ஸ். க்யூபாவில் ஸ்பானிய தோட்டத் தொழிலாளர்கள், மொட்டையாக பாறை தெரியுமளவு வயல்களை எரித்தது மட்டுமே அவர்களின் அக்கறையாக இருந்தது என்ற உதாரணத்தைச் சுட்டிக் காட்டும் அவர், “தற்கால உற்பத்தி முறையில் உடனடி மற்றும் மிக உறுதியான முடிவுகளைப் பற்றி மட்டுமே அக்கறை கொள்ளப்படுகிறது” என்கிறார்.

        காரல் மார்க்சும் பிரிட்டிஷ் முதலாளித்துவச் சமூகத்தின் சுற்றுச்சூழலியல் ஓட்டைகள் குறித்த விரிவான தகவல்களை வெளிப்படுத்தினார். சுற்றுச் சூழல் மாசடைதல் குறித்த ஆர்வத்தைத் தூண்டும் விபரங்களை ஏங்கெல்சுடன் சேர்ந்து வாதிடும் மார்க்ஸ், தொழில்துறை உற்பத்தி மற்றும் விவசாய உற்பத்தி இரண்டிற்கும் இடையே வலிமையான தொடர்பு இருப்பது

முக்கியமானது என்றார். உண்மையில், தத்துவவாதிகளும் விஞ்ஞானிகளுமான மார்க்சும் ஏங்கெல்சும் சமூகத்தை ஆராய்ந்து பரிசீலித்து, “கவலை அளிக்கும் நிலைக்கு முதலாளித்துவ சமூகமே பொறுப்பு” என நிறுவியுள்ளனர். சுரண்டும் சமூக -- பொருளாதார முறைமையில் மாற்றத்தைக் கோர, ஒடுக்கப்பட்ட மக்கள் திரளை விஞ்ஞான முறைப்படி திரட்டுவதற்கான செயல்திட்ட வரைபடத்தை, மார்க்ஸ் –ஏங்கெல்ஸ் ஆகிய இரட்டையர்களே தயாரித்து அளித்தார்கள். தொழில் துறை சமூகத்தின் சுற்றுச் சூழலியல் ஆபத்துகளை விஞ்ஞான முறைப்படி ஆராய்ந்து முன்கணித்து அவர்கள் கூறிய அனைத்தும் (அடுத்தடுத்து) உண்மையாயின.

        சுனாமி, நிலநடுக்கங்கள், வறட்சி மற்றும் பெரும் வெள்ளம் என எல்லாம் இப்போது சாதாரணம்; ஒவ்வொரு நிமிடமும் காடுகளின் நீண்ட பரப்புகள் பற்றி எரிகின்றன, நச்சு வாயுகள் தொற்றுகளைப் பரப்பி சூழலை விஷமாக்கி பெருந்தொற்றுகளை அதிகரிக்கின்றன. அராஜக (முறை) ‘வளர்ச்சி’யின் பின்விளைவுகள் கட்டவிழ்த்து விடப்படுவதையே இந்த அனைத்துப் பேரழிவுகளும் சுட்டிக் காட்டும் உண்மை. சுற்றுச் சூழலியல் பிரச்சனைகளை முதன்மை அக்கறையுடன் எடுத்துக் கொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. இயற்கையின் மீதான அச்சுறுத்தல், புவி வாழ்வின் மீதான அச்சுறுத்தலாகிவிட்டது. பிரபஞ்சத்தின் பல அடுக்குகளான வளி மண்டலம் (atmosphere), புவியின் உயிரினங்கள் வாழும் பரப்பு (biosphere) மற்றும் அதன் இரண்டின் மீது கட்டப்படும் தத்துவார்த்த மனித உணர்வுநிலை நுஸ்பியர் (noosphere) எனப் பல்வேறு பரிமாணங்களில், ஒருக்கால், முழுமையான மாற்றம் தேவைப்படலாம். நவீனத்துவத்தின் இறுதியில் நாம் நுழைந்து, பின்நவீனத்துவ நாட்களின் உதவியையும் ஈடுபாட்டையும் கோரி நிற்கும்போது, கூட்டுச் சிந்தனை மெல்ல கடந்த காலத்திற்குத் தள்ளப்பட்டுவிடுகிறது. (அதாவது, பின்நவீனத்துவம் ஒருவகையில் சுற்றுச் சூழலியல் பாதிப்பை அக்கறையின்றி புறக்கணிக்கிறது எனலாம். ‘புவிவெப்பமயம், அதனால் வெள்ளம், வறட்சி வருகிறது … அதனால் என்ன’ என்பது போன்ற மேம்போக்கு –மொழிபெயர்ப்பாளர் இணைப்பு)

            கடைசி வாய்ப்பை ஒரேயடியாக ஆட்சி அதிகாரம் எடுத்துக் கொள்கிறது. முழுமையான அணுகுமுறை சுயநலவிரும்பிகளின் நலன்களுக்குச் சேவை செய்யும் வழிமுறைகளை நோக்கி மடை மாற்றப்படுகிறது. இதனை அம்பலப்படுத்தி வெட்ட வெளிச்சமாக்குகிறது, சமீபத்திய வன நிலங்கள் விற்பனை. வனநிலங்களின் விற்பனை பேரம் முடிந்து, விலை வசூலிக்கப்படும், ஆனால் அந்தப் பிரச்சனை பொதுப் பட்டியலின் கீழ் இருப்பது உண்மையானாலும், உள்ளூர் அரசுகளுடன் அது பற்றிய விபரங்கள் எதுவும் பகிர்ந்து கொள்ளப்படாது – இத்தகைய நிகழ்வுகள் பல. இதில் பாத்தியதையுள்ள பாதிக்கப்பட்ட வனத்தில் வசிக்கும் வனவாசிகளின் ஒப்புதல் பெறுவதைப் பற்றி அக்கறை ஏதுமில்லை, அதன் சட்டரீதியான பக்கமும் காற்றில் பறக்கவிடப்படுகிறது.

        சூழலியலைப் பாதுகாக்க நாட்டின் பரப்பில் குறிப்பிட்ட சதவீத காடுகள் இருப்பது அவசியம். காடுகள் அழிக்கப்படாமல் பாதுகாக்க, வனநிலங்கள் பிரத்தேக ஒதுக்கீட்டிற்கான சட்டங்கள் உண்டு. ஆனால் இன்றைய தருணத்தின் சூழல் நெருக்கடியைச் சமநிலைக்குத் 

திரும்ப கொண்டு வருவதற்கு மிக முக்கிய தேவைக்கு மாறாக, ஒதுக்கீடு செய்யப்பட்ட வனநிலங்களை, காடுகளின் பயன்களுக்கு அல்லாத பிற பயன்பாட்டிற்கு அனுமதிக்கும் வகையில்  சட்டங்கள் திருத்தப்படுகின்றன. குரல்வளையை நெரிப்பதுபோல விரைவாக நிலைமை கடுமையாக்கப்படுகிறது. ஆட்சியாளர்கள் வனங்கள் (பாதுகாப்பு) விதிகள், 2022ல் கொண்டுவர உத்தேசித்துள்ள மாற்றங்களின் பொருள், வனவாசிகளை வாழ்வின் இறுதிக்குத் தள்ளுவதே; இதன் விளைவு, காடுகளில் வசிக்கும் மக்களுக்கு மட்டுமே அல்ல, மாறாக ஒட்டு மொத்த சூழலியலுக்கே இறுதியாகிவிடும்.

இயற்கை அதன் அத்தனை கொடைகளையும் ஏறத்தாழ இழந்து நிற்கிறது. அது, “இனிய பொழில்கள், நெடிய வயல்கள்  எண்ணரும் பெரு நாடு / கனியும் கிழங்கும் தானியங்களும் கணக்கின்றி தரும்” நாட்டின் காடுகள், நதிகள் மற்றும் மலைகள் மட்டுமே செல்வாதாரங்களை இழந்து நிற்கவில்லை; ஆனால் முழுமையான மனித வாழ்விடம் சவாலைச் சந்திக்கிறது – அசாதாரணமான மிகப் பெரிய அளவிலும் மற்றும் ஏறத்தாழ கண்ணுக்குப் புலப்படாமலும் சவால் நிற்கிறது! புவி காக்கப் புறப்படுவீர்!

--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்