நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :
சில சித்திரத் சிதறல்கள் -33
வித்யா முன்ஷி : புரட்சிகர இதழியலின் முன்னோடி
--அனில் ரஜீம்வாலே
--நியூஏஜ் (பிப்.21 --27)
வித்யா கனுகா, பின்னர் வித்யா முன்ஷியானவர், குஜராத்தி குடும்பத்தைச் சேர்ந்தவர். ஒரு வழக்கறிஞர் தந்தைக்கும் சமூகச் செயற்பாட்டாளரான தாய்க்கும் பம்பாயில் 1919 டிசம்பர் 5ம் நாள் பிறந்தார். கல்வியில் சிறந்து பள்ளி இறுதித் தேர்வைப் பள்ளியின் முதல் மாணவியாகத் தேறி பம்பாய் எல்பின்ஸ்டோன் கல்லூரியில் ஐ.எஸ்சி (தற்போதைய +2போல அல்லது பியூசி போல) பாடப் பிரிவில் சேர்ந்தார். மருத்துவம் பயில்வதற்காகத் தனியே இங்கிலாந்து செல்வதென 1938ல் முடிவு செய்தார். அவரது லண்டன் பயணத்துக்குக் குடும்பத்தின் உள்ளிருந்தும் வெளியிலிருந்தும் எதிர்ப்பு வந்தது. குடும்பத்தினரின் எதிர்ப்பை எதிர்கொள்ள அவருடைய தாய்வழிப் பாட்டியே அவருக்குத் துணையாக உறுதியாக வாதாடினார்: “அவள் ஏன் செல்லக் கூடாது? அவளுடைய தந்தையிடம் பணம் இருக்கிறது, அவளிடம் தைரியம் இருக்கிறது”. அக்காலத்தில் லண்டன் செல்வதற்கு இருந்த சமூக மற்றும் குடும்ப தடைகளை எதிர்த்துப் போராட வித்யாவுக்கு ஏராளமான துணிவு தேவைப்பட்டது.
இங்கிலாந்தில் : கம்யூனிஸ்ட் ஆனார்
வித்யாவுக்கு அவருடைய மாமா மூலம் அறிமுகம் ஆன அரசியல், இங்கிலாந்தில்தான் மலர்ந்தது. புகழ்பெற்ற குற்றவியல் வழக்கறிஞரான தந்தை அவரிடம் புத்தகக் காதலை விதைக்க, பல நூல்களைத் தேடிப் படித்தார். 1938ல் இங்கிலாந்து சென்றடைந்தபோது வித்யா மருத்துவ முன் தேர்வுக்கான தயாரிப்புகளை முடித்திருந்தார்; அப்போது இரண்டாவது உலக யுத்தம் வெடித்தது. இந்தியா திரும்ப முடியாத நிலையில் துர்ஹாம், நியூகேசலில் இருந்த கிங்க்ஸ் (மன்னர்) கல்லூரியில் சேர்ந்தார். அங்கேதான் கம்யூனிஸ்ட் தத்துவம் மற்றும் இயக்கத்துடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு படிப்பைக் கைவிட்டு இங்கிலாந்திலேயே முழுநேரச் செயற்பாட்டாளர் ஆனார். ‘இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் இருந்த இந்திய மாணவச் சமூகங்களின் சம்மேளனம்’ என்ற FEDIND அமைப்பின் செயலாளரானார். கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி (CPGB) தொடர்பு ஏற்பட விரைவில் கட்சியின் உறுப்பினரானார். அங்கு இந்தியக் கம்யூனிஸ்ட்கள் மற்றும் தேசியவாதிகளுடனும் அவருக்கிருந்த தீவிரமான தொடர்பு அவரது வாழ்வின் எதிர்காலப் போக்கை வடிவமைத்தது. பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் பல்வேறு இயக்க நிகழ்வுகளில், குறிப்பாகப் பாசிசத்திற்கு எதிரான இயக்கங்களில், அவர் பங்கேற்றார்.
போஸ்டர்களின் சக்தி
இங்கிலாந்தில் இருந்தபோது 1943லேயே போஸ்டர்களின் உலகம் மற்றும் அதன் சக்தி வித்யாவுக்கு அறிமுகமானது. ஷெப்பீல்டு என்னும் இடத்தில் அவர் தனது நண்பர்களுடன் இணைந்து முதலாவது போஸ்டர் கண்காட்சியை அரங்கேற்றினார். வங்காள வறட்சியால் பாதிக்கப்பட்ட மக்களின் பேரதிர்ச்சித் துயர்களைக் கண்காட்சியில் விரிவாக எடுத்துக் காட்டியிருந்தனர். கண்காட்சி மூலம் திரட்டப்பட்ட தொகை வறட்சி பாதித்த வங்க மக்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பின்னர் இதனை மீண்டும் நினைவுபடுத்தி வித்யா கூறினார்: “அது முதலாகப் பெண்கள், இளைஞர் உரிமைகள், தொழிலாளர் பணிநிறுத்த நடவடிக்கைகளை எதிர்த்தல், சமூகத்தினரிடையே அமைதியை வலியுறுத்தல் போன்ற பல பிரச்சனைகள் பற்றி எண்ணற்ற போஸ்டர்களை வரைந்தேன். கண்களால் காணக் கூடிய காட்சி ஊடகத்தின் சக்தியை – போஸ்டர்களின் சக்தியை—குறைத்து மதிப்பிட முடியாது.” அத்தகைய பல அபூர்வமான மதிப்புமிக்க போஸ்டர்களைக் கால வெள்ளத்தில் இழந்தது நம் துரதிருஷ்டமே.
அத்தகைய பெண்மணியை 2014 மார்ச் 1தேதி நடைபெற்ற ‘போஸ்டர் பெண்மணி’ என்ற கண்காட்சியில் சிறப்பு விருந்தினராக அழைத்தது மிகப் பொருத்தமே; அதில் வித்யா முன்ஷி சக்கரநாற்காலியில் அமர்ந்தபடி கலந்து கொண்டார். அவர் பேசுவதைக் கேட்கப் பல இளம் பெண்கள் அவரைச் சூழ்ந்து கொண்டனர். ஒருக்கால் உலகின் எந்தப் பகுதிலேயும், அத்தகைய ஒரு கண்காட்சி நடத்தப்பட்டது அதுதான் முதன் முறை. சுயம், சுபன், சீகல் பவுண்டேஷன் போன்ற அமைப்புகள் நடத்திய அக்கண்காட்சி, 157 போஸ்டர்களுடன் கல்கத்தாவில் நடத்தப்பட்ட தனித்துவமான கண்காட்சி. குழு சார்பு இல்லாத அவருடைய அணுகுமுறை பலதரப்பட்ட கருத்துடையவர்களையும் அவர்பால் அன்புடையவராக்கியது.
உலக இளைஞர் அமைப்பு நிறுவுதல்
லண்டனில் 1945 அக்டோபர் நவம்பர் மாதங்களில் நடைபெற்ற ‘ஜனநாயக இளைஞர்களின் உலக சம்மேளனம்’ (WFDY) அமைப்பு மாநாட்டில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF) சார்பாக அவர் பங்கேற்றார். அதில் 67 நாடுகளிலிருந்து சார்பாளர்கள் பங்கேற்றனர். இந்தியாவின் சார்பில் வித்யா கனுகா, கேடயூன் பூம்லா மற்றும் ஏ கே சாதர் மூவரும் சார்பாளர்களாகவும் எம் ரஸ்சித் பார்வையாளராகவும், FEDIND அமைப்பின் சார்பில் கலந்து கொண்டனர். உலகில் நிலையாக நீள நீடிக்கும் அமைதியைக் கட்டுவதற்கு இளைஞர்களின் பங்களிப்பு என்ற இளைஞர் மாநாட்டின் துணைக்குழு ஒன்றின் செயலாளராக வித்யா கனுகா செயல்பட்டார்.
1946, ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 5வரை பாரீஸில் நடந்த WFDY சம்மேளனத்தின் முதல் கவுன்சில் கூட்டத்தில் ஒரு காலனிய குழு (பீரோ) அமைக்கப்பட்டது. வித்யாவிடம் அக்குழுவின் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டது. ஒரு இயக்கம் நடத்துவது என்றும் அதன் முன்னுரிமைப் பணியாக இந்தியாவுக்கு உணவு அனுப்புவது எனவும் குழு முடிவு செய்தது.
1945 பாரீஸில் பெண்களின் சர்வதேச ஜனநாயக சம்மேளனம் (WIDF) அமைப்பு நிறுவப்பட்டபோது அதன் அமைப்பு மாநாட்டில் மகிளா ஆத்ம ரக்க்ஷா சமிதி (MARS) என்ற பெண்கள் அமைப்பின் பொதுச் செயலாளரான இளா ரெய்டுடன் (Ela Reid) வித்யா கலந்து கொண்டார். 1945 நவம்பர் 26 முதல் டிசம்பர் 1தேதி வரை வெலோட்ரோம் டி‘ஹிவர் (குளிர்கால ஸ்டேடியம்) என்ற இடத்தில் நடைபெற்ற பிரம்மாண்டமான துவக்க மாநாட்டில் இருவரும் இந்தியாவின் சார்பில் கலந்து கொண்டனர்.
உலக இளைஞர் சம்மேளனத்தின் பிரதிநிதியாக 1948ல் இந்தியா திரும்பிய வித்யா, அந்த ஆண்டு பிப்ரவரியில் கல்கத்தாவில் நடைபெற்ற தென்கிழக்கு ஆசிய இளைஞர்கள் மாநாட்டிற்கான தயாரிப்புக் குழுவில் பணியாற்றினார்.
பெண்கள் இயக்கத்திலும் இதழியலிலும்
1954 கல்கத்தாவில் நடைபெற்ற ‘இந்திய மாதர் தேசிய சம்மேளன’த்தின் (NFIW) முதலாவது மாநாட்டில் வித்யா முன்ஷி கலந்து கொண்டார். பத்திரிக்கை செய்தித் தொடர்பு குழுவில் அவர் இருந்தார். அவ்வகையில் மாதர் சம்மேளனத்தை நிறுவிய தலைவர்களில் அவரும் ஒருவர்.
இங்கிலாந்திலிருந்து திரும்பியதும் அவர், பிற்காலத்தில் புகழ்பெற்ற அறிவாளியும், பத்திரிக்கையாளரும் கம்யூனிஸ்ட்டுமான, புவியியலாளர் சுனில் முன்ஷியைத் திருமணம் செய்து கொண்டார். சுனில் அதற்கு முன்பே பம்பாயிலிருந்து வெளியான மாணவர் பெருமன்றத்தின் புகழ்பெற்ற ‘தி ஸ்டூடெண்ட்’ பத்திரிக்கையின் ஆசிரியராக இருந்தவர். அந்த ‘மாணவன்’ பத்திரிக்கையில் பலமுறை வித்யாவும்கூட கட்டுரைகள் எழுதியுள்ளார். இந்தப் பத்திரிக்கைதான் வித்யாவை ஒரு இதழியலாளராக வளர்த்தது. பின்னர் கல்கத்தா சென்ற அவர் புகழ்பெற்ற ‘ப்ளிட்ஸ்’ (Blitz) பத்திரிக்கையில் செய்தியாளராகப் பணியாற்றினார்.
(‘செல்ல வேண்டிய பாதை’ எனப் பொருள்படக்கூடிய) ‘ச்சலர் பதே’ (‘Chalar Pathe’) என்ற வங்கமொழி பத்திரிக்கையின் ஆசிரியராகப் பொறுப்பேற்க கேட்டுக் கொள்ளப்பட்டபோது அம்மொழியை அவர் நன்றாக அறிந்திருக்கவில்லை. வங்க மொழியை விரைவாகவும் கடுமையாக உழைத்தும் அவர் கற்ற வேண்டி வந்தது.
பம்பாயின் புகழ்பெற்ற ‘ப்ளிட்ஸ்’ வார இதழின் கல்கத்தா செய்தியாளராக 1952 முதல் 1962 வரை அவர் பணியாற்றினார். அவர்தான் இந்தியாவின் முதலாவது பெண் இதழியலாளர் என்றுகூட அவரை அழைக்க முடியும்.
ப்ளிட்ஸ் இதழில் பணியாற்றியபோது பரபரப்பான பல (‘scoops’) செய்திகளைத் தோண்டித் துருவி வழங்கிய பெருமைக்குரியவர். ஒரு செய்தி, இரண்டு கனடா நாட்டு பைலட்கள் ஹாங்காங்கிலிருந்து தங்கத்தை எடுத்துக் கொண்டு விமானத்தில் சுந்தரவனத்தில் வீச இருந்தது; அதன் பிறகு அங்கிருந்து தங்கம் கல்கத்தாவிற்குக் கடத்தப்பட இருந்தது. மற்றொரு பரபரப்புச் செய்தி அசான்சோல் பகுதியின் சின்னகுரி சுரங்கப் பேரழிவு குறித்தது. நூற்றுக்கணக்கான சுரங்கத் தொழிலாளர்கள் அதில் கொல்லப்பட்டனர். அந்தத் துயரநிகழ்வை ‘ஆங்கர்’ (கோபம்) என்ற பெயரில் உத்பால் தத் நாடகமாக எழுதினார்.
பத்திரிக்கைத் தொழிலுக்கே உரிய இடையூறுகள் அந்த நாட்களில் இல்லாமல் இல்லை என அவர் தம் நினைவுகளைப் பகிர்ந்து கொள்கிறார். ஒருமுறை 1953 பேரணி ஒன்றில் பத்திரிக்கையாளர்கள் மீது போலீஸ் தடியடி நடத்தியபோது, அவரும் அதில் பங்கேற்றிருந்தார். மூத்தப் பத்திரிக்கையாளர்களைக் காயப்படுத்தி அவர்களுடைய புகைப்படக் கருவிகளைப் போலீஸ் உடைத்து நொறுக்கினர். ட்ராம் போக்குவரத்துக் கட்டண உயர்வைக் கண்டித்து நடந்த இயக்கம் குறித்துச் செய்தி சேகரிக்கச் சென்ற அவரைப் போலீசார் இரக்கமற்று அடித்துத் துவைத்தனர். போலீஸ் கடுமையாக விசாரித்தபோதும் ப்ளிட்ஸ் பத்திரிக்கையைக் குற்றச்சாட்டுகளில் சேர்க்கும் அவர்களின் முயற்சிகளுக்கு ஒத்துழைக்க மறுத்தார். போலீஸ் அராஜகம், தடியடி குறித்து விசாரிக்க நீதிபதி PB முகர்ஜி விசாரணைக் குழு அமைக்கப்பட்டது.
பெண்கள் பிரச்சனைகள் குறித்து ஆய்வு
1955 முதலாகவே பெண்கள் இயக்கத்தில் ஈடுபட்ட வித்யா முன்ஷி, வங்காள மொழியில் சரளமாகச் சிறப்புற்று பெண்கள் இயக்கம் பற்றி வங்க மொழியிலேயே பெரும்பகுதியும் எழுதினார். ‘மேற்கு வங்கத்தில் மாறிவரும் பெண்கள் அந்தஸ்து, 1970–2000’ என்ற அறிக்கைக்காக அரசியலில் பெண்களின் பங்கேற்பு என்ற ஓர் அத்தியாயத்தைத் தயாரித்தார். மேற்கு வங்கத்திற்கான அந்தஸ்து அறிக்கையைத் தொகுக்கும் யோசனையை மற்றவர்களோடு சேர்ந்து அவர் வெளியிட்டார். அவர் எழுதிய ‘அரசியல் பங்கேற்பு’ அத்தியாயம் பெண்கள் பங்களிப்பு குறித்த பல முக்கியமான தகவல்கள் நிறைந்தது.
நல்லதொரு பார்வை நூலாக இன்றளவும் விளங்கும் அவர் எழுதிய மிக விரிவான நூல் – “மீள் பார்வையில் : போர்க்கால நினைவுகளும் பெண்கள் இயக்கம் குறித்த எண்ணங்களும்”. அவர், ’பச்சிம் பங்கா மகிளா சமிதி’ --மேற்கு வங்க பெண்கள் அமைப்பின்—தலைவராகவும். NFIW, இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் தேசியச் செயலாளராக 1986 முதல் 1989 ஆண்டுகளிலும் அதன் செயற்குழு உறுப்பினராகப் பல ஆண்டுகளும் பொறுப்பு வகித்தார்.
இயக்கம் குறித்த பரந்த பார்வை கொண்டிருந்தார். சமிதா சென்னுக்கு அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறினார்: “இன்று பெண்களின் பல பிரச்சனைகள் மீது காந்தியவாதிகள், மார்க்சியவாதிகள் மற்றும் பெண்ணியலாளர்கள் சேர்ந்து பணியாற்ற முடிந்துள்ளது. ஆம், நம்மால் முடியும், நாம் அனைவரும் சேர்ந்துதான் செயலாற்ற வேண்டும்.” 1994ல் ‘குடும்பத்தை ஜனநாயகப்படுத்தல் : அதன் உரிமைகளைப் பாதுகாத்து விரிவுபடுத்தல்’ என்ற தலைப்பில் ஒரு சிறு கையேடு, துண்டுப் பிரசுரத்தை எழுதினார். பெண்கள் இயக்கச் செயற்பாட்டாளர்களுக்கு அது ஒரு முக்கியமான பாட நூல் எனலாம். NFIW மாதர் சம்மேளனம் குறித்து ஒரு சுருக்கமான வரலாற்றை ஆவணப்படுத்தி தொகுத்து எழுதியுள்ளார்.
10 அத்தியாயங்கள் ஒளிபரப்பான ஓர் இணையத் தொடர் வித்யா முன்ஷியை, ‘பெண்கள் கண்ணோட்டத்துடன் ஒரு பத்திரிக்கையாளர்’ எனச் சித்தரித்தது; 1959ல் நடைபெற்ற புகழ்பெற்ற நானாவதி வழக்கை அடிப்படையாகக் கொண்டு, “தீர்ப்பு: அரசு எதிர் நானாவதி” என்ற தலைப்பில் அத்தொடர் ஒளிபரப்பானது.
(அன்று மக்கள் மத்தியில் பரபரப்பாக இருந்த வழக்கு. ப்ளிட்ஸ் பத்திரிக்கை விசாரணை விபரங்களை விரிவாக வெளியிட்டது. கமாஸ் மானெக் ஷா நானாவதி என்ற இந்திய கப்பற்படை கமாண்டர் சில்வியாவை மணந்து சுகமாக வாழ்ந்து வந்தார். மாதக் கணக்கில் பணி நிமித்தம் கப்பலில் சென்றுவிட, அவருடைய பணக்கார நண்பன் அகூஜா சில்வியாவுடன் பழக ஒரு நாள் சில்வியா அகூஜாவிடம் தன்னை இழந்தார். தவறிழைத்ததைத் திரும்பவந்த கணவரிடம் கூறினார். ஒருநாள் மனைவி குழந்தையோடு தியேட்டர் சென்ற நானாவதி இடையே நண்பன் வீட்டுக்குச் சென்று அகூஜாவைப் பார்க்கிறான். கையில் இருந்த துப்பாக்கியால் அவனைச் சுட்டுக் கொன்றுவிட்டு சரண் அடைந்தார். வழக்கு திட்டமிட்ட கொலையா என விசாரித்தது.
9 ஜூரிகளில் (எண்பேராயம் போன்ற அமைப்பு) 8 பேர் திட்டமிட்ட கொலை அல்ல என்றது. ஆனாலும் உயர்நீதிமன்றம் அக்கருத்தை ஏற்கவில்லை. நானாவதிக்குத் தூக்கு தண்டனை விதித்தது, உச்சநீதிமன்றமும் உறுதி செய்தது. இறுதியில் அன்றைய கவர்னராக இருந்த நேருவின் தங்கை விஜயலெட்சுமி பண்டிட்டுக்குக் கருணை மனு அனுப்ப ப்ளிட்ஸ் பத்திரிக்கையும் மக்களைக் கேட்டுக் கொண்டது. எண்ணற்ற மக்கள் ஆதரவு தந்தனர். 25 பைசா மதிப்புள்ள ப்ளிட்ஸ் இதழ் இரண்டு ரூபாய்க்கு அப்போது விற்றது.
விசாரணையில் நானாவதி தான் தற்கொலை செய்துகொள்ளவே நினைத்ததாகவும், இறந்த பிறகு மனைவி குழந்தைகள் வாழ்வு குறித்து கவலை எழ, அகூஜாவைச் சந்தித்து அவர்களை ஏற்றுக் கொள்ளும்படி கேட்டதாகவும், மறுத்துவிட்ட அகூஜாவின் கெட்ட நோக்கத்தை அறிந்த தான் சுட்டுவிட்டதாகவும் கூறினார்.
இதில் முக்கியமான இன்னொரு செய்தி, இந்த வழக்குதான் ஜூரிகள் (நீதிபதிகள் சட்ட அறிஞர்கள் அல்லாத சான்றோர் அவை) அமைப்பு செயல்பட்ட கடைசி வழக்கு. அதன் பிறகு ஜூரிகள் அமைப்பு கலைக்கப்பட்டு விட்டது. –மொழிபெயர்ப்பாளர் இணையத்தில் தேடி இணைத்தது)
பெண்ணியம் முதல் சர்வதேசப் பிரச்சனைகள் தலைப்பு வரை உள்ளிட்ட பெண்கள் குறித்த விரிந்துபட்ட கேள்விகளுக்கு விடையளிக்கும் வகையில் பலபிரச்சனைகள் குறித்து நடைபெற்ற பல விவாதங்களில் அவர் பங்கேற்றார்.
மேற்கு வங்கக் கட்சிப் பத்திரிக்கையான ‘கலாந்தர்’ தினசரியைப் பதிப்பித்த போர்டின் (குழுவின்) தலைவராக வித்யா முன்ஷி பல ஆண்டுகள் செயல்பட்டார். மேலும் மாநில சமூக நல ஆலோசனை போர்டிற்குத் தலைமை வகித்தார்; பெண்களின் கமிஷன் அமைப்பின் முதல் ஒன்பது ஆண்டுகள், அதாவது 2000 ஆண்டுவரை தலைமை பொறுப்பேற்றார்.
பெண்கள் அமைப்பையும் இயக்கத்தையும் ஜனநாயகப்படுத்த, கட்சிக்கு உள்ளேயும் வெளியேயும், கடுமையாகப் போராடினார். இந்திய மக்கள் நாடக மன்றம் IPTA உள்ளிட்ட கலாச்சார இயக்கங்களுக்காகவும் அவர் எழுதினார்.
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேசியக் குழு உறுப்பினராக வித்யா முன்ஷி நீண்ட ஆண்டுகள் இருந்தார்.
வாழ்வின் இறுதி ஆண்டுகளில் 2002ல் ஏற்பட்ட பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். ஆனாலும் அதனால்கூட அவரைப் பணியாற்றுவதிலிருந்து முடக்கிவிட முடியவில்லை. அந்த நிலையிலும் பலமணி நேரம் தனது சக்கர நாற்காலியில் அமர்ந்து பத்திரிக்கைகள் மற்றும் ஆவணங்களைக் கவனமாகப் படித்தார். மொத்தமான கண்ணாடி அணிந்து உருப்பெருக்கி லென்ஸ் மூலம் பார்ப்பதும், எழுதுவதும், இடது கையால் குறிப்பெடுப்பதும் அவர் வழக்கம். இந்தியப் பெண்கள் இயக்க வரலாறு மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் குறித்த ஏராளமான குறிப்புகளை எழுதியுள்ளார். முக்கிய இயக்க நிகழ்வுகளை நினைவுகளிலிருந்து ஞாபகப்படுத்தி அவர் சொல்ல சொல்ல, அவருடைய கணவர் சுனில் முன்ஷி (சுருக்கெழுத்தில் அல்லாமல்) சாதாரண நீண்ட வரிகளில் சிரமப்பட்டு குறிப்பெடுப்பார்.
நீண்டகாலம் நோய்வாய்பட்டு, இறுதியில் 2014ம் ஆண்டு ஜூலை 8ம் நாள் அந்தப் புகழ்பெற்ற முதல் பெண் பத்திரிக்கையாளர் தமது 94ம் வயதில் இயற்கை எய்தினார்.
பத்திரிக்கைகளைக் கையில் எடுத்து ஒரு பெண் எழுத்தாளர் எழுத்துக்களைப் படிக்கும்போது தோழியர் வித்யா முன்ஷியை நினைவு கொள்வோம்!
--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்