Saturday, 6 June 2026

கம்யூனிஸ்ட் தலைவர்களின் வரலாறு 151 --- பெரின் பரூச்சா, மாணவர் மற்றும் சமாதான இயக்கங்களின் முன்னோடி அமைப்பாளர்

 கம்யூனிஸ்ட் தலைவர்களின் வரலாறு 151 


பெரின் பரூச்சா : மாணவர் மற்றும் சமாதான
இயக்கங்களின் முன்னோடி அமைப்பாளர்

–அனில் ரஜீம்வாலே 


பெரின் பரூச்சா (திருமணத்திற்குப் பிறகு பெரின் ரொமேஷ் சந்திரா) பணக்கார பார்சி குடும்பத்தில் பிறந்தவர்; சுதந்திர மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து, தொடர்ந்து மாணவ, சமாதான மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் தலைச் சிறந்த அமைப்பாளர் ஆனவர்.

தொடக்க கால வாழ்க்கையும் கல்வியும் 

பெரின் இப்போது பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான், ச்சாமன் (Chaman) என்ற இடத்தில் ஒரு பார்சி குடும்பத்தில் 1918 அக்டோபர் 2ல் பிறந்தார். அவரது தந்தை லெப்டினன்ட் கர்னல் பைரோஸ் பைராம்ஜி பரூச்சா, ஒரு பிரிட்டிஷ் இந்திய ராணுவ டாக்டர், பின்னர் லாகூரின் சர்ஜன் ஜெனரல் ஆனவர். அவரது தாயார் பெயர் பிலூ. பெண்களுக்கான கின்னார்ட் கல்லூரியிலும் பின்னர் லாகூர் பல்கலைக்கழகத்திலும் பெரின் படித்தார்.

அரசியலில் 

அவரது தந்தை முற்போக்கான தாராளப் பார்வை கொண்டவர்; எனவே முழு குடும்பச் சூழலும் அவ்வாறே இருந்தது. கின்னார்ட் கல்லூரியில் அவருக்குச் சுதந்திரப் போராட்ட வீரர்களுடனும் சுதந்திரப் போராட்டத்துடனும் தொடர்பு ஏற்பட்டது. விரைவில் அவர் திறன்மிக்க அமைப்பாளராக மலர்ந்தார். தன்னைச் சுற்றி அவர் பெரும் குழு உறுப்பினர்களை ஒன்று சேர்த்து லாகூரில் ஓர்-அறை வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கிருந்து செயல்பட்டார். அவர் நிதி திரட்ட உதவியும், நிவாரணங்கள் வழங்கியும் மற்றும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். ஷீலா பாட்டியாவுடன் சேர்ந்து பஞ்சாபின் விவசாயப் பின் நிலப்பகுதிகளுக்குப் பலமுறை விஜயம் செய்ய அவர் ஏற்பாடு செய்தார்.

ஓர் அமைப்பாளராகப் பிறரிடம் மிகக் கடுமையாகப் பணி வாங்குபவராகவும் திறன்மிக்க அணிகளைக் கொண்ட குழுவைக் கட்டி எழுப்பவராகவும் பெரின் இருந்தார்.

அவரது தந்தையின் இராணுவக் கடமைகள்  அவரைப் பல்வேறு இடங்களுக்கும் மாறச் செய்தது. அதன் விளைவாய் அவர் பல்வேறு இராணுவக் கண்டோன்மெண்ட் நகரங்களில் லட்சிய குழந்தமைப் பருவத்தையும், சிம்லாவில் சிறிது காலம் உறைவிட பள்ளி வாழ்வையும்கூட பெற்றார். லாகூர் கல்லூரிக்குச் சென்ற காலகட்டத்தில் அவர் கையால் நூற்று கையால் நெய்யப்பட்ட கதர் ஆடைகளை அணியத் தொடங்கினார்.

லாகூர் மாணவர் சங்கம் (LSU)

லாகூரில் படிக்கும்போதுதான் பெரின் லாகூர் மாணவர் சங்கத்துடன் தொடர்பு கொண்டார். அந்நாட்களில் லாகூர், அரசியல் மற்றும் கருத்தியல் நடவடிக்கைகள் மற்றும் மேலும் மாணவர் நடவடிக்கைகளின் முக்கிய மையமாக இருந்தது. சக்திமிக்க  மாணவர் அமைப்பாக உருவான LSU உடன் ஜவஹர்லால் நேரு, பகத்சிங் மற்றும் பிற பிரபலமான ஆளுமையாளர்கள் தொடர்பில் இணைந்திருந்தனர். 1936ல் அது அனைத்திந்திய மாணவப்  பெருமன்றத்துடன் (ஏஐஎஸ்எப்) இணைப்புப் பெற்றது.

1928 அக்டோபர் 7ல் நடைபெற்ற லாகூர் மாணவர் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழாவிற்கு நேரு அனுப்பிய செய்தியில், “லாகூர் மாணவர் சங்கத்தின் முதலாவது ஆண்டு விழாவில் நேரில் கலந்து கொள்ள இயலாததற்கு நான் வருந்துகிறேன். போராட்டங்களும் துன்பங்களும் நிறைந்த உலகில் நம்பிக்கை அளிப்பது இளைஞர்களின் விழிப்புணர்வும் கிளர்ச்சியையும்விட வேறு எதுவும் இல்லை. லாகூரின் மாணவர்கள் தங்களை ஒன்று திரட்டி ஒரு சங்கமாக அமைத்து இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்…” என்று கூறினார்.

பகத்சிங்கின் பாரத் நவ் ஜவான் சபா லாகூர் மாணவர் சங்கத்துடன் நெருக்கமான ஒத்துழைப்பில் இருந்தது. அத்தகைய அமைப்பில்தான் பெரின் பரூச்சா பணியாற்றத் தொடங்கியிருந்தார்.

அந்தச் சங்கம் பிரபோத் சந்திரா, ராஜ்பன்ஸ் கிருஷ்ணா, வீடி சோப்ரா, ஐ.கே குஜ்ரால், பேராசிரியர் ரன்தீர் சிங் போன்ற பிற தலைசிறந்த மாணவர் தலைவர்களை ஈர்த்தது. கால ஓட்டத்தில் பெரின் எல்எஸ்யு அமைப்பின் வலிமையான தூண்களில் ஒருவரானார்,

லாகூரில் கங்காராம் பள்ளி முதல் தரமான கல்வி நிறுவனம். அதன் முதல்வர் (கவிக்குயில் சரோஜினி நாயுடு மற்றும் சுகாசினி ஜம்பேகார் இருவரின் சகோதரியான) மிராளினி சட்டோபாத்தியாயா. அந்தப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விவாதங்கள் மற்றும் உரையாடல்களின் மையமாக ஆனது. அவர்களில் பெரின் பரூச்சா, ஷீலா பாட்டியா, விமலா டாங்க், பூரண் ஆச்சார்யா, ஸ்னேகலதா சன்யால் மற்றும் பிறர் அடங்குவர்.

பெரின் நினைவு கூறினார்: “இந்தக் காலத்தைச் சுற்றி நாங்கள் மறுமலர்ச்சி கிளப் ஒன்று வைத்திருந்தோம்” அதில் மாணவர் இயக்கத்தில் பின்னர் இணைந்த பலர் சேர்ந்தனர் (இந்தக் கட்டுரையாளருக்கு 1992 ஜனவரி 28ல் அவர் அளித்த பேட்டி). அந்த கிளப் அரசியல் பிரச்சனைகளை விவாதிக்க வாராவாரம் கூடும். அதில் மஸார் அலி, மக்மூத் அலி, ரொமேஷ் சந்திரா, பீஷம் சஹ்னி, ராஜ்பன்ஸ் கிருஷ்ணா மற்றும் பிறருடன் பெரினும் கூட கலந்து கொள்வர்.

பிரபோத் சந்திராவால் எல்எஸ்யு நடத்தப்பட்டு வந்தது. 1938லிருந்து மறுமலர்ச்சி மன்றத்தின் (ரெனெய்சான்ஸ் கிளப்) பலர் பிரபல செயல்பாட்டாளர்கள் ஆனார்கள். மாணவியர்களின் பரவலான பங்கேற்பு அதன் சிறப்பு அம்சம். சுமார் 700 மாணவியர்கள் பங்கேற்புடன் 1940 ஜனவரியில் மிகப் பெரிதும் விளம்பரம் செய்யப்பட்ட மாணவியர்கள் மாநாடு நடைபெற்றது. பெரின், லிட்டோ ராய் (அஜாய் கோஷ் உடன் திருமணமான பிறகு லிட்டோ கோஷ்) மற்றும் மற்றவர்கள் இந்தக் கல்லூரிகளையும் பள்ளிகளையும் தங்கள் செயல்பாட்டிற்கான  அடித்தளம் ஆக்கினர்.

விடி சோப்ரா எல்எஸ்யூ முதலாவது மாநாட்டில் அதன் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஜனவரி 26 ஐ சுதந்திர தினமாக அனுசரித்தபோது அவர் 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.

மாணவர் பெரும் மன்றத்தின் முதல் பொதுச் செயலாளராக 1941 –42

1941 டிசம்பர் 31 மற்றும் 1942 ஜனவரி 1ல் பாட்னாவில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் (AISF) வரலாற்றுச் சிறப்புமிக்க 7வது மாநாடு நடைபெற்றது.  1941 ஜூன் 22ல்

நாஜிக்கள் சோவியத் யூனியனை ஆக்கிரமித்த பிறகு இரண்டாம் உலக யுத்தத்தின் மாறிய தன்மை மாநாட்டின் முக்கிய உரையாடல் தலைப்பாக அமைந்தது.

AISFன் இந்த மாநாட்டில்தான் ‘மக்கள் யுத்தம்’ என்ற கருத்து பெரினால் முதலில் முன் வைக்கப்பட்டது.  இந்த மாநாட்டில் பஞ்சாப் பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மியான் இஃப்திகாருதீன் தலைமை வகித்தார். மாநாட்டில் 600 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

எப்போதும் இல்லாத அளவு அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்தது; பொதுவாக மக்களுக்கு வாழ்க்கை மிக மிக கடினமானது. கல்வி சின்னா பின்னமாகி குழப்பத்தில் இருந்தது என  AISFன் தி ஸ்டூடன்ட் இதழில் பெரின் எழுதிய கட்டுரைகளில் சுட்டிக் காட்டினார்.

1943 வங்கப் பெரும் பஞ்சத்தின்போது பெரின் மாணவர் அமைப்பை மாபெரும் நிவாரண பணியில் ஈடுபடுத்தினார். AISFன் நூற்றுக்கணக்கான அணிகளும் உறுப்பினர்களும் பெரும் எண்ணிக்கையிலான நிவாரண சமையல் கூடங்களின் பணிகளைச்  செய்யும் ஆட்களாகச் செயல்பட்டனர்; அந்த நிவாரண சமையல் கூடங்கள் பல்லாயிரம் மக்களுக்கு உணவளித்தது. அந்தப் பஞ்சத்தில் பசியால் 30 லட்சம் மக்கள் மடிந்தனர்.

AISFன் மற்றொரு சிறந்த தலைவரான ஏ பி பரதன் AISF மாநாட்டு நாள்களையும் பெரினின்

தலைமை பண்பையும் பின்வருமாறு நினைவு கூர்கிறார்:

“காலம் ஓடுகிறது. வாழ்க்கை தொடர்ந்து நடக்கிறது. பழைய நினைவுகள் மங்குகின்றன. ஆனால் திடீரென்று ஏதோ நடக்கிறது, சில நிகழ்வுகள் உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது, நீண்ட காலம் முன்பு முடிந்துபோன பழைய நாட்களுக்கு நீங்கள் தூக்கி அடிக்கப்படுகிறீர்கள்.”

“ஜனவரி 7 அன்று பெரின் சந்திரா தமது முதிர்ந்த 96 வயதில் மறைந்தார் என்ற செய்தி, 1941ஆம் ஆண்டு முடியும் தருவாயின்போது ஒரு நாள் நிகழ்வின் நினைவை மீண்டும் கிளறி விட்டது. மாணவர் பெருமன்றம் (AISF) பாட்னாவில் மாநாடு நடத்திக் கொண்டிருந்தது. சென்ற ஆண்டுதான் இணைந்திருந்த நான், பழைய மத்திய பிரதேசத்தின் சார்பாக ஒரு பிரதிநிதியாக மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்தேன். (பல பெண் பிரதிநிதிகள் வந்திருந்தனர் எனினும்) லாகூரில் இருந்து வந்திருந்த இரண்டு பெண் பிரதிநிதிகள் எங்கள் அனைவரையும் மிகவும் ஈர்த்தனர். ஒருவர் பெரின் பரூச்சா, மற்றவர் லிட்டோ (பின்னர் அஜாய் கோஷ் அவர்களை மணந்தார்)”

பார்சி இனப் பெண்ணான பெரின் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் செயலாளர் கலந்து கொள்ள இயலாததால் அவர் மாணவர் அமைப்பின் உயர் பொறுப்பில் செயல்பட்டார். திறன் மிக்க அவரது செயல்பாடு மற்றும் பிரபலமான தன்மை AISFன் பொதுச் செயலாளராக அவரைப் பாட்னா மாநாட்டில் தேர்ந்தெடுக்கப் பாதை அமைத்தது. இரண்டாம் உலக யுத்தம் நடந்து கொண்டிருந்தது 1941-ல் ஹிட்லரின் பாசிஸ்டுகள் சோவியத் யூனியனைத் தாக்கினர். இந்தத் தாக்குதலின் விளைவாகப் போரின் மாறியுள்ள தன்மை மீது பெரின் விவாதங்களை கொண்டு செலுத்தினார்.”

பெரின் AISFன் பொதுச் செயலாளர் பொறுப்பில் 1943 வரை இருந்தார்.

மாணவர்கள் ஒற்றுமை குறித்து பெரின் 

இந்தக் கட்டுரை ஆசிரியருக்குப் பல தருணங்களில் அவர் அளித்த பேட்டிகளில் AISFன் நாக்பூர் மற்றும் பின்னர் பாட்னா அமர்வுகள் மாணவர்கள்  அமைப்பில் பிளவுகளை ஏற்படுத்தியதாகவும்; அவை  தடுக்கப்பட்டிருக்கக் கூடும் மற்றும் அவை தடுக்கப்பட்டிருக்க வேண்டும் என பெரின் பரூச்சா கருத்தியதாகக் கூறினார். ஆனால்  “இது (நிகழ்ந்து முடிந்த பின்) பின்னர் ஏற்பட்ட எண்ணம்” என்று கூறினார். (பேட்டி 1992 ஜனவரி 28)

மேலும் அவர் மக்கள் யுத்தம் (பியூப்பிள்ஸ் வார்) என்ற கருத்து பாட்னா மாநாட்டில் மிக அழுத்தமாக வலியுறுத்தப்பட்டது என்றும் கூறினார். “இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் மாணவர்கள் ஒற்றுமை குறித்துப் பெரும் முயற்சிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்”  என்று கருத்துத் தெரிவித்தார். (இந்தக் கட்டுரையாசிரியருக்கு 1995 அக்டோபர் 26ல் பெரின் பரூச்சா அளித்த பேட்டி)

பெண்கள் இயக்கத்தில் 

லக்னோவில் நடைபெற்ற ஓர் அனைத்திந்திய மாநாட்டில் அமைக்கப்பட்ட பெண் மாணவர்கள் அசோசியேஷனின் தீவிரமான தேசியத் தலைவர்களில் பெரினும் ஒருவர். அவர்

நர்கீஸ் பாட்லிவாலா, சாந்தா காந்தி, கல்யாணி முகர்ஜி, கீதா முகர்ஜி (படம்) மற்றும் பிறருடன் சேர்ந்து ஒரு வலிமையான குழுவாக அமைந்தது. பெரின் லாகூரில் மாணவர் இயக்கத்தில் இருந்தபோது, லிிட்டோ ராய் (கோஷ்), ஷீலா பாட்டியா மற்றும் பிறருடன் சேர்ந்து லாகூர் மாணவர்கள் சங்கத்தில் பெண்கள் அணி ஒன்றை அமைக்க இளம் பெண்கள் இயக்கங்களிலும் ஈடுபட்டார். அவர்கள் கல்லூரி கல்லூரியாகச் சென்று உறுப்பினர்களைச் சேர்த்தனர். மாணவிகளின் மாபெரும் மாநாடுகள் நடத்தப்பட்டன.

பெரின் மற்றும் அவரது தோழியர்களிடம் ராமேஸ்வரி நேரு அனைத்திந்தியப் பெண்கள் மாநாடு அமைப்பில் (AIWC) பணியாற்றும்படி யோசனை தெரிவித்தார். அவரது யோசனைபடி அனைத்திந்தியப் பெண்கள் மாநாடு மற்றும் பெண்களின் சிறிய பாதுகாப்பு கமிட்டி (WSDC) இரண்டு அமைப்புகளும் பஞ்சாபில் ஓர் இணைப்பு மாநாட்டில் ஒன்றாக இணைந்தன.

பஞ்சாபில் WSDC

இரண்டாம் உலக யுத்தத்தின்போது பஞ்சாப் உள்பட இந்தியா முழுவதும் பெண்கள் சுய பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒரு நேரத்தில் மாகாணத்தில் 13 ஆயிரம் உறுப்பினர்களுடன் அது வலிமை வாய்ந்த அமைப்பாக உருவானது. பெரின் மற்றும் மற்றவர்களின் கீழ் அது பெண்கள் மற்றும் மாணவர் இயக்கங்களில் முக்கியமான பங்காற்றியது. பஞ்சாப் முழுவதும் பிரம்மாண்ட மாநாடுகளும் பேரணிகளும் நடத்தப்பட்டன

பெரின் மற்றும் ரொமேஷ்

பெரின் பரூச்சா மற்றும் ரொமேஷ் சந்திரா இருவரும் லாகூர் மாணவர் சங்கம் மற்றும் AISFல் தீவிரமாகச் செயல்பட்டனர் அவர்களின் மாணவப் பருவ நாட்களின்போதே லாகூரிலே

இருவரும்  சந்தித்துள்ளனர். விரைவில் ரொமேஷ் லாகூர் சிபிஐ செயலாளர் ஆனார். 1942 ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும், ஃபெரோஸ் மற்றும் ஷோபா. அவர்களின் மருமகள் சந்திதா சினிமா மற்றும் கலை உலகில் பிரபலமானவர். பெரின் மற்றும் ரொமேஷ் இருவரின் வாழ்க்கை தேசப் பிரிவினையின்போது நிலை குலைந்தது. மிகக் கடினமான சூழ்நிலையில் அவர்கள் முதலில் பம்பாய்க்கும் பின்னர் டெல்லிக்கும் இடம் பெயர வேண்டி இருந்தது. மெல்ல மெல்ல அவர்கள் அங்கு குடியேறினர். 

1940களின் தொடக்கத்தில் பெரின் கட்சி உறுப்பினரானார்.

சுதந்திரத்திற்குப் பின் 

1947 ஆகஸ்ட் 15-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டின் சூழ்நிலை முற்றாக

மாறியதுபிசி ஜோஷி தலைமையிலான சிபிஐ இந்திய விடுதலையைப் பரவலாக வரவேற்றது. ஆனால் விரைவில் பிடிஆரின் குழுவாதப் போக்குக் சிபிஐ-யில் செல்வாக்குப் பெற, கட்சி நாட்டின் மைய நீரோட்டத்தில் இருந்து துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு விரைவில் பிடிஆர் நீக்கப்பட்டு அஜாய் கோஷ் (படம்) பொதுச் செயலாளர் ஆனார்.

அவர் தலைமை பொறுப்புக்கு வந்ததும் கட்சியிலும் தேசத்திலும் அமைதி குறித்த பிரச்சனை முக்கியத்துவம் பெற்றது. சமாதான இயக்கத்தில் சேரும்படி பெரினைக் கட்சி கேட்டுக் கொண்டது.

1958ல் தொடங்கப்பட்டு புகழ்பெற்ற விடுதலைப் போராட்ட வீரர் அருணா ஆசஃப் அலி தலைமையிலான இடதுசாரி தினசரியான ‘பேட்ரியாட்’ இதழில் பெரின் குறுகிய காலம் பணியாற்றினார். அங்கே அவர் தொழிலாளர்களைத் தொழிற்சங்க அமைப்பில் திரட்டினார், விரைவில் அவர் சமாதான இயக்கத்தில் இணைந்தார்.

அனைத்திந்திய சமாதான இயக்கம் 

இந்தியா மற்றும் உலகம் முழுவதும் சமாதான இயக்கம் மக்களின் விரிந்து பரந்த இயக்கமாகும். அது கட்சிக்குள் விழிப்புணர்வைக் கொண்டு வந்தது, கட்சி பெருந்திரள் மக்கள் மத்தியில் நுழைவதை அது சாத்தியமாக்கியது.

ரொமேஷ் சந்திராவைப் பொதுச் செயலாளராகக் கொண்டு 1951ல் அனைத்திந்தியச் சமாதானக் குழு (ஆல் இந்தியா பீஸ் கவுன்சில்) அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் சைஃபுதீன் கிச்சுலு, பண்டிட் சுந்தர்லால், பால்ராஜ் சஹானி, பிரிதிவிராஜ் கபூர், முல்க்ராஜ் ஆனந்த், டிடி கோசாம்பி மற்றும் பலர் இணைந்திருந்தனர். அந்த அமைப்பில் பெரின் ஆர்வமாக அர்ப்பணிப்புடன் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் சமாதானக் குழுவின் முன்னணித் தலைவரானார்.

1957 கெய்ரோவில் ஆப்பிரிக்க ஆசிய சமாதான ஒருமைப்பாடு அமைப்பு (AAPSO)

உருவானது. பெரினைப் பொதுச் செயலாளராகக் கொண்டு 1972ல் அனைத்திந்தியச் சமாதான ஒருமைப்பாட்டு கழகம் (AIPSO) செயல்பாட்டுக்கு வந்தது. அந்தப் பொறுப்பில் அவர் 1991 வரை இருந்தார்.

அனைத்திந்தியச் சமாதானக் குழு (AIPC) மற்றும் AIPSO மனதில் நிற்கும் பல்வேறு பெருந்திரள் இயக்கங்களை நடத்தியது: ஸ்டாக்ஹோம் வேண்டுதலுக்கான பிரச்சாரம், பாண்டாங் மாநாட்டுக்கான (1955) பிரச்சார இயக்கம், கூட்டு சேரா இயக்கம், வியட்நாம், பங்களாதேஷ், பாலஸ்தீனம் மற்றும் பிறவற்றுடன் ஒருமைப்பாட்டுப் பிரச்சாரம், 1975 பாட்னாவில் 6000 பிரதிநிதிகள் கலந்து கொண்ட பாசிச எதிர்ப்பு மாநாடு போன்ற பல நிகழ்வுகள் நடத்தியதைக் குறிப்பிடலாம்

பெரின் குறித்து பிரமிளா லூம்பா 

பிரமிளா லூம்பா பெண்கள் இயக்கம் மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம்

(NFIW)ன் பிரபலமான தலைவரும் பெரினின் நெருங்கிய தோழியும் ஆவார். அவர் எழுதினார்: “பெரினுடன் எனக்கு நீண்ட காலத்தொடர்பு உண்டு. அது லாகூர் கினார்டு கல்லூரியில் நான் அப்போது இன்னும் இளங்கலை மனைவியாக இருந்த கடந்த கால நாட்களுக்குக் செல்லும். பெரின் அப்போது ஏற்கனவே நன்கு அறியப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவராகத் .திகழ்ந்தார்.”

“பெரினுடன் எனது முதலாவது சந்திப்பு மங்கலாக நினைவு உள்ளது. அது மயக்கும் வசீகரமான ஒரே நடனக்காரரான உதய் சங்கர் மற்றும் அவரது குழுவினரின் நடன நிகழ்ச்சிக்குப் பிறகு ரீகல் சினிமா தியேட்டருக்கு வெளியே நிகழ்ந்தது.”

“கம்யூனிஸ்டுகள் கலை மற்றும் கலாச்சாரத்தைப் போராட்டத்திற்கான ஆயுதமாக மட்டும் பார்க்காமல், மாறாக வாழ்க்கை மற்றும் பணி குறித்த பார்வையை மேம்படுத்தவும் ஊக்கமும் வலிமையையும் பெறுவதற்கானது என பெரிதும் மதித்த காலம் அது” 

பெரின் ரொமேஷ், லிட்டோ மற்றும் அஜாய் கோஷ் சில வாடகை அறைகளில் படிப்பு வட்டங்கள் அமைத்ததைப் பிரமிளா நினைவு கூர்கிறார். பெரின் இளம் பெண்களின் சிறிய குழுவைத் திரட்டி, அவர்கள் பெண்கள் மத்தியில் பணியாற்ற ஊக்குவித்தும், விடுதலைப் போராட்டத்தில் பணியாற்ற அவர்களுக்கு  அரசியல் உணர்வை எழுச்சி பெறவும் செய்தார்.

வங்கப் பஞ்சத்தில் நிவாரண பணிகளின்போது, “(நிதி முதலியவற்றைத் திரட்ட பஞ்சாப் பகுதியில்) சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தவர் பெரின்: அந்தக் குழுவுக்கு அறிமுகம் செய்து அவர்கள் ஏற்கத்தக்க அளவில் பொறுமையாக ஏகாதிபத்திய எதிர்ப்பு உரைகளை ஆற்றினார்: எனினும் அந்த உரைகள் அந்த மக்களுக்கு நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்த போதுமான அளவு எளிமையாக இருந்தது. நிதி திரட்டல் சுற்றுலாவின் பலன் அற்புதமாக அமைந்தது, ஏராளமான தானியக் குவியல்கள் திரட்டப்பட்டன.”

“பெரின் பணியாற்றும் விரைவு மற்றும் அவரது ஆவணங்கள் மற்றும் கோப்புகளை அவர் நுணுக்கமான நேர்த்தியுடன் பராமரித்தது என்னை மிகவும் ஈர்த்தது.”

“நாட்டில் சமாதான இயக்கத்தை ஆகச் சிறந்த முறையில் அவர் கட்டி எழுப்பியது, அவருக்கே உள்ள தனிச்சிறப்பு”

எழுத்தாக்கப் பணிகள்

பெரின் பல புத்தகங்களும் கட்டுரைகளும் எழுதி உள்ளார். அவரது மாணவப் பருவ நாட்களிலும்கூட அவர் AISFன் ‘தி ஸ்டூடண்ட்’ பத்திரிக்கையில் கட்டுரைகளும் அறிக்கைகளும் எழுதினார். அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் ‘தி ஃபயர் ஓர்ஷிப்பர்ஸ்’ (தீயை வணங்குபவர்கள்) நூலை பம்பாய் ஸ்ராண்ட் புத்தக கிளப் பதிப்பித்தது. அந்த நாவல் பார்சி சமூகத்தில் சாதி கலப்புத் திருமணத்தின் பிரச்சினைகளை மையமாகக் கொண்டிருந்தது. பெரின்தான் சர்ச்சைக்குரிய கலப்புத் திருமணத்தை முன்னிறுத்திய முதல் பார்சி நாவலாசிரியர். 

புத்தகத்தில் (விமர்சகர்) நோவி கபாடியா கூறியபடி:

“பெரின் இயல்பாகத் தொலைநோக்கு பார்வை கொண்ட தீர்க்கதரிசி. 1960களில் பார்சிகள் மத்தியில் கலப்புத் திருமணங்கள் போக்குச் சொட்டும் நீர் போல அளவில் மிகச் சிறிது; ஆனால் நாவலாசிரியர் மிக நுட்பமாக அது பெரு வெள்ளமாகப் பெருக்கெடுக்கும் என்று சுட்டிக் காட்டுகிறார். வெறும் 30 ஆண்டுகள் இடைவெளியில் பார்சி வகுப்பினர் மத்தியில் கலப்புத் திருமணங்கள் வெகுவாக அதிகரித்தது. எனவே இந்த நாவலில் ‘பெஸ்டோன்ஜி தனது மகனின் கலப்புத் திருமணம் (தனது வகுப்பினர் மத்தியில்) புதிய போக்கை ஏற்படுத்தி விடும் என ஆட்சேபிப்பதைக்’ காண்கிறோம்.

கட்சியில் பொறுப்புகள்

பெரின் நீண்ட காலம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேசியக் கவுன்சில் உறுப்பினராக இருந்தார். பின்னர் மத்திய செயற்குழு (CEC) உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றும் பல்வேறு  வெகுஜன அமைப்புகளில் பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

மரணம் 

பெரின் பரூச்சா (சந்திரா) தனது முதிர்ந்த 96வது வயதில் நீண்ட கால நோய்க்குப் பிறகு 2015 ஜனவரி 7ல் மரணம் அடைந்தார்.

இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அவரது மரணத்திற்கு அஞ்சலி செலுத்தியது. அவரது இறுதி விருப்பப்படி அவரது புகழுடம்பு பம்பாய் கிராண்ட் மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக வழங்கப்பட்டது. இந்தக் கல்லூரியில்தான் அவரது தந்தை மருத்துவம் படித்தார். 

பெரின் பரூச்சா (சந்திரா) நினைவைப் போற்றுவோம்!

–நன்றி நியூ ஏஜ் (2026 மே 24 –30)
–தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்

பின்னிணைப்பு

தோழியர் பெரின் பற்றி நியூ ஏஜில் ஒரு கட்டுரை வந்துள்ளது.                      

பெரின் ( பரூச்சா) சந்த்ரா லாகூரில் தனது மாணவப் பருவத்தில் AISFல் சேர்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்த பெண்மணி. 1928ல் லாகூர் மாணவர் சங்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். தேச சுதந்திரம் வேண்டிப் போராடிய இளைஞர்களுள் ஒருவர். 1943 வங்காள பஞ்சத்தின்போது மாணவர்களைத் திரட்டி வங்காளத்தில் பணியாற்றியவர். தேசப் பிரிவினையின்போது லாகூரிலிருந்து மும்பைக்கு அகதிகளாக வந்தவர்.  பின்னர் உலக சமாதான இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார்.

1986ல் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குமரியில் இருந்து சென்னைக்கு ஒரு நடைபயணம்

நடைபெற்றது. தோழர் ஜெகன் அறிவுறுத்தலின் பேரில் நானும் கலந்து கொண்டேன். பெரின் பல இடங்களில் வந்து கலந்து கொண்டார். பெரின் ஒரு பார்சி. கூட்டங்களில் பெண்கள் இவரை வேடிக்கை பார்த்தனர். “இந்திராகாந்திவந்திருக்கிறார் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

(வாட்ஸ்அப் குழுவில் தோழர் செல்வரங்கன் பதிவு)

அந்தச் சமாதான நடைபயணத்தில் கடலூரில் நாங்களும் கலந்து கொண்டோம். என் நினைவில் இன்னும் பசுமையாக உள்ளது, திருநெல்வேலித் தோழர் சங்கர் எழுப்பிய முழக்கங்கள். அந்த முழக்கங்கள் NFTE சங்க வழக்கமான ஆக்ரோஷமான கோஷங்களாக இல்லாமல் ஒரு நதி நடப்பது போல அமைதியாக, மக்கள் மனங்களில் பதிவதாக அமைந்திருந்தன. “கங்கை பாயும் நாட்டினிலே இரத்த ஆறு ஓடுவதா?“ ”காந்தி பிறந்த நாட்டினிலே சாந்தி தவழ வேண்டாமா” என்பது போன்ற முழக்கங்கள் எவ்வளவு வலிமையானவை!

--மொழிபெயர்ப்பாளர் பதிவு

  

 

 

 

 

Saturday, 23 May 2026

AIPSO வின் பெருமைமிகு 75 ஆண்டுகள்

 

   --பல்லப் சென்குப்தா

தலைவர், உலகச் சமாதானக் குழு,

பொதுச் செயலாளர் AIPSO

மற்றும் தேசியச் செயலாளர் CPI

உலக சமாதானம், ஏகாதிபத்திய எதிர்ப்பு ஒருமைப்பாடு, ஜனநாயகம் மற்றும் மனிதகுலக் கண்ணியத்திற்காக அர்ப்பணித்த ‘அனைத்திந்திய சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம்’ (AIPSO) தனது 75 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்தச் சாதனை மைல்கல் வெறும் கொண்டாட்டத் தருணம் அல்ல; இது 1951 மே 14ல் சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் நிறுவப்பட ஊக்குவித்த கொள்கைகளின் சிந்தனை பிரதிபலிப்பு, அவற்றை மீண்டும் உறுதிப்படுத்தல் மற்றும் மறு அர்ப்பணிப்புக்கான தருணமும் ஆகும். 

AIPSO அமைப்பு மிகுந்த பெருமையுடன் இந்திய விடுதலைப் போராட்டத்தின் காலனிய எதிர்ப்புப் பாரம்பரியங்களை மரபுரிமையாகப் பெற்றுள்ளது. நமது தேசிய விடுதலை இயக்கம், விடுதலைக்கான போராட்டம் தனித்து நடத்த முடியாது என்பதைத் தலைமுறை தலைமுறையாக இந்தியர்களுக்குக் கற்றுத் தந்துள்ளது. உலகின் எந்த இடத்திலும் காலனியம் மற்றும் ஒடுக்குமுறைக்கு எதிரான போராட்டம், எல்லா இடங்களிலும் நீதி, சமத்துவம் மற்றும் சுதந்திரத்திற்கான  போராட்டங்களுடன்  பிரிக்க முடியாதபடி தொடர்புடையது. எனவே சர்வதேச ஒருமைப்பாடு, சுதந்திர இந்தியாவின் ஜனநாயக மற்றும் முற்போக்கு உணர்வின் உள்ளார்ந்த ஒருங்கிணைந்த பகுதியானது.

சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் சர்வதேச வரலாற்றுக் கட்டத்தில் பிறந்தது. இரண்டாவது உலகப் போரில் பாசிசம் தோற்கடிக்கப்பட்டது, சோவியத் யூனியனின் உச்சபட்ச தியாகங்கள், சோசலிச நாடுகள் உதயம் மற்றும் அணு ஆயுதங்களுக்கு எதிரான உலகளாவிய இயக்கத்தின் வளர்ச்சி ஆகியன உலகம் முழுவதும் சமாதானத்திற்கான சக்தி மிக்க விழைவை ஏற்படுத்தின. ஹிரோஷிமா மற்றும் நாகசாகி மீது அணு ஆயுதக் குண்டுவீச்சு ஏற்படுத்திய கொடூரமான  பதற வைக்கும் பேரழிவு அணு ஆயுதப் போரின் காட்டுமிராண்டித்தனத்தை அம்பலப்படுத்தியது; மற்றொரு உலகப் பேரழிவைத் தடுக்க சமாதானத்தை விரும்பும் மக்களின் உறுதிப்பாட்டை வலிமைப்படுத்தியது. அதே நேரத்தில் ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் காலனிய மக்கள், ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு எதிராகக் கிளர்ச்சியில் இறங்கினர்.

இந்தச் சூழ்நிலையின் பின்னணியில் புகழ்பெற்ற தேச பக்தர்கள், கற்றறிந்தோர், கலைஞர்கள் மற்றும் அரசியல் தலைவர்கள் ஒன்றாகக் கூடி 1951இல் ‘அனைத்திந்தியச் சமாதானக் கவுன்சி’லை அமைத்தனர்; அந்தக் குழு பின்னர் 1972ல் ‘அனைத்திந்தியச் சமாதான ஒருமைப்பாட்டுக் கழக’மாகப் பரிமளித்தது.

டாக்டர் சைபுதீன் கிச்சுலு, அருணா ஆசப் அலி, அஜாய் கோஷ், ஏ கே கோபாலன், டிடி கோசாம்பி, பால்ராஜ் சஹானி, பிரிதிவிராஜ் கபூர், வி கே கிருஷ்ணமேனன் மற்றும் முல்க்ராஜ் ஆனந்த் போன்ற புகழ்பெற்ற ஆளுமைகள் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்திற்கு அடித்தளமிட உதவியவர்கள் மத்தியில் இருந்தனர்.

பல பத்தாண்டுகளில் AIPSO, இந்தியாவில் சமாதான ஒருமைப்பாட்டு இயக்கங்களில் வலிமை மிக்கதாக உருவானது. அது, உலகம் முழுவதும் நடைபெற்ற தேச விடுதலை போராட்டங்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் பக்கத்தில் தொடர்ச்சியாக உறுதியாக நின்றது. அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு எதிராக வியட்னாமிய மக்களின் வீரம் செறிந்த போராட்டத்திற்குப் பெருந்திரள் மக்களின் ஒருமைப்பாட்டு ஆதரவை AIPSO திரட்டியது. அது வங்கதேச விடுதலைப் போராட்டத்தை ஆதரித்தது, கியூபா மீது ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராகத் தனது குரலை உயர்த்தியது; தென்னாப்பிரிக்காவில் நிறவெறி இன ஒதுக்கலுக்கு (அபார்தீட்) எதிரான இயக்கத்துடன் உறுதியாக நின்றது; (வடமேற்கு ஆப்பிரிக்கா சகாரா பாலைவனப் பகுதியைச் பூர்வீகமாகக் கொண்ட ஒரு நாடோடி மற்றும் கலாச்சார இனக்குழுவான) சகராவி இன மக்களின் போராட்டத்தை ஆதரித்தது; தங்களுக்கான சுதந்திரத் தாய் மண்ணிற்குப் பாலஸ்தீனர்கள் நடத்திய நியாயமான போராட்டத்தில் தனது ஊசலாட்டமற்ற ஒருமைப்பாட்டு ஆதரவைப் பாலஸ்தீன மக்களுக்கு அளித்தது. இன்றும் கூட AIPSO பாலஸ்தீனிய மக்களின் தவிர்க்க முடியாத உரிமைகளுக்காகத் தொடர்ந்து பிரச்சாரம் செய்கிறது; மற்றும் நாடுகளுக்கு இடையில் சமாதானம் மற்றும் நட்புணர்வுக்காக குறிப்பாக  தெற்காசிய நாடுகளுக்கு மத்தியில் நட்புணர்வுக்காகக் கியூபாவுக்கு எதிரான அமெரிக்காவின் முற்றுகையை எதிர்க்கிறது.

புகழ்மிக்க ஆளுமையாளர்கள் மத்தியில் AIPSOவின் நிறுவன உறுப்பினர் ரொமேஷ் சந்திராவின் பங்களிப்புகள் சிறப்பு இடத்தைப் பெறுகிறது. பனிப்போர் காலத்தின் கடினமான

பல 10 ஆண்டுகளின்போது சர்வதேச சமாதான இயக்கத்தை விரிவுபடுத்துவதிலும் வலிமைப்படுத்துவதிலும் உலகச் சமாதான கவுன்சிலின் தலைவராக ரொமேஷ் சந்திரா அசாதாரணமான பங்காற்றினார். ஏகாதிபத்திய போர்கள், காலனிய ஆக்கிரமிப்பு, இனவெறி மற்றும் அணு ஆயுதங்களுக்கு எதிராகக் கண்டங்களுக்கு இடையே பல நூறு லட்சம் மக்களை  ஒன்றுபடுத்த அவரது தலைமையின் கீழ் உலகச் சமாதானக் கவுன்சில் சக்திமிக்க மேடையானது. அவரது அயராத முயற்சிகள், தேசிய விடுதலை, சமூக நீதி மற்றும் பொருளாதார இறையாண்மைக்கான போராட்டங்களுடன் சமாதானத்திற்காகப் பாடுபடுதலைத் தொடர்புபடுத்தியது. அவர் இந்தியாவிலும் வெளிநாட்டிலும் தலைமுறை தலைமுறையான செயல்பாட்டாளர்களை ஊக்குவித்தார். சர்வதேச அளவில் இந்தியச் சமாதான இயக்கத்தின் பெருமையையும் செல்வாக்கையும் அதிகரிப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தார்.

இன்று அது நிறுவப்பட்ட 75 ஆண்டுகளுக்குப் பிறகு AIPSO அதன் வலிமையிலும் பொருத்தப்பாட்டிலும் தொடர்ந்து வளர்கிறது. இந்த அமைப்புத் தொடர்ந்து சமாதானம், ஜனநாயகம், மதச்சார்பின்மை, சூழலியல் பாதுகாப்பு, சமூக நீதி மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகள் குறித்த பிரச்சனைகளை எழுப்பி வருகிறது. அதன் மாநாடுகள், கருத்தரங்குகள், ஒருமைப்பாட்டு பிரச்சாரங்கள் மற்றும் பெருந்திரள் மக்களைத் திரட்டுவது இந்த இயக்கத்தின் துடிப்புமிக்க வலிமையைப் பிரதிபலிக்கிறது.

அதே நேரத்தில் சமகால உலகம் கடுமையான மற்றும் இதுவரை சந்தித்திராத சவால்களை முன்னிறுத்துகிறது. அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றங்கள் இருந்தபோதும் மனிதகுலம், போர், பசி, சமத்துவமின்மை மற்றும் சுரண்டலில் இருந்து தொடர்ந்து துன்பப்படுகிறது. ஏகாதிபத்தியத் தலையீடுகள், இராணுவக் கூட்டணிகள் மற்றும் மூர்க்கமான போர்கள் உலக சமாதானத்தை அச்சுறுத்துகின்றன. அணு ஆயுதங்கள் தொடர்ந்து மனித நாகரீகத்தை ஆபத்துக்கு உள்ளாக்குகின்றன. பொருளாதார ஆதிக்கமும், செல்வாதாரங்கள் மீது கட்டுப்பாட்டைச் செலுத்துவதற்கான போட்டியும் பிரதேசங்கள் தோறும் மோதல்களைத் தீவிரப்படுத்துகிறது. வகுப்புவாதம், மத அடிப்படைவாதம், மற்றும் பெரும்பான்மைவாத அரசியல் என இவை சமூகங்களில் நஞ்சை விதைக்கிறது மற்றும் ஜனநாயக அமைப்புகளைச் சீர்குலைக்கிறது

தற்காலத்தில் இந்தியாவும்கூட தீவிரமான சவால்களைச் சந்திக்கிறது. பிளவுபடுத்தும் மற்றும் வகுப்புவாதச் சக்திகளின் கீழ் நமது மதச்சார்பற்ற சமூகக் கட்டமைப்பு இழைபின்னல் அழுத்தத்திற்கு உள்ளாகியது. அரசியலமைப்புச் சட்டத்தின் விழுமியங்களான ஜனநாயகம், சமத்துவம், கூட்டாட்சி மற்றும் சமூக நீதி  மேலும் தாக்குதலுக்கு ஆளாகிறது. மதம், சாதி அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்த வெறுப்பு அரசியல் முயற்சிக்கிறது. பொருளாதாரரீதியில் சமத்துவமின்மை இடைவெளிகள் அதிகரிக்கும்போது தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் விளிம்பு நிலை வகுப்புகளின் உரிமைகள் அரிக்கப்படுகின்றன. அத்தகைய சூழ்நிலையில் சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தை வலிமைப்படுத்தும் பொறுப்பு இன்னும் கூடுதல் அவசரத்தைப் பெறுகிறது.

சமாதானத்தைப் பாதுகாப்பது என்பது இன்று ஜனநாயகம், மதச்சார்பின்மை மற்றும் அரசியலமைப்புச் சட்ட விழுமியங்களைப் பாதுகாப்பதில் இருந்து பிரிக்க முடியாது. எனவே AIPSO அதன் செயல்பாடுகளைச் சமூகத்தின் அனைத்துப் பிரிவினர்கள் மத்தியில் குறிப்பாக, இளைஞர்கள் மத்தியில் விரிவுபடுத்தவும் ஆழப்படுத்தவும் வேண்டும். வகுப்புவாத வெறுப்பு, சர்வாதிகார அதிகாரத்துவம், ராணுவமயவாதம், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிராக அமைதியை விரும்பும் ஜனநாயக மற்றும் தேசபக்த சக்திகளின் ஒற்றுமையை AIPSO விரிவாகக் கட்டி எழுப்ப வேண்டும். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் பொறிக்கப்பட்ட லட்சியங்களான நீதி, சுதந்திரம், சமத்துவம் மற்றும் சகோதரத்துவம் புதுப்பிக்கப்பட்ட உறுதிப்பாட்டுடன் பாதுகாக்கப்பட வேண்டும்.

சமாதானம் மற்றும் ஒருமைப்பாட்டு நோக்கத்திற்காக ஒன்றுபடும் மக்கள், நிகழ்வு போக்குகளின் மீது செல்வாக்குச் செலுத்த முடியும் என்பதை AIPSOவின் வரலாறு எடுத்துக் காட்டுகிறது. அமைப்பின் 75 ஆண்டு காலப் பயணம், சர்வதேசியம் மற்றும் கூட்டு நடவடிக்கையின் நீடித்து நிலைத்திருக்கும் வலிமைக்குச் சான்று பகரும். வன்முறை, சகிப்பின்மை மற்றும் அதிகரிக்கும் உலகளாவிய நிலையற்றத்தன்மையால் அடையாளப்- படுத்தப்படும் சகாப்தத்தில் சாந்தி சமாதானம், ஒருமைப்பாடு மற்றும் ஒத்துழைப்பின் செய்தி எப்போதையும்விட இப்போது கூடுதல் பொருத்தம் உடையதாகிறது.

வரலாற்றுச் சிறப்புமிக்க AIPSOவின் இந்த ஆண்டு தினத்தில், பல பத்தாண்டுகளாகத் தியாகம் மற்றும் போராட்டத்தின் மூலம் இந்த இயக்கத்தைக் கட்டி வளர்த்த அனைவருக்கும் நாம் அஞ்சலி செலுத்துவோம்! அவர்களின் பாரம்பரியம் சமாதானம், ஜனநாயகம் மற்றும் மனித குல விடுதலை பதாகையை மேலும் முன்னெடுத்துச் செல்ல ஊக்குவிக்கிறது.

அனைத்திந்தியச் சமாதான ஒருமைப்பாட்டுக் கழகத்தின் 75வது ஆண்டு நிறைவு செயல்படுவதற்கான புதுப்பிக்கப்பட்ட அறைகூவல் ஆகட்டும். இந்தியா முழுவதும் உள்ள அமைதியை விரும்பும் மக்கள் இந்த வரலாற்று இயக்கத்தை வலிமைப்படுத்த ஒன்றுபடட்டும்; அப்போதுதான்  நாம் ஒன்றாக இணைந்து நமது அரசியல் அமைப்புச் சட்டத்தையும், நமது சமூகத்தின் ஜனநாயக இழைப்பின்னல் கட்டமைப்பையும் பாதுகாக்க முடியும்; ஏகாதிபத்தியம் மற்றும் போரை எதிர்க்கவும்;  சமாதானம், நீதி, ஒருமைப்பாடு மனித மகிழ்ச்சி அடிப்படையிலான உலகத்தைக் கட்டுவதற்குப் பணியாற்ற முடியும். 

அகில இந்தியச் சமாதான ஒருமைப்பாட்டுக் கழகம் ஜிந்தாபாத்! 

“புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட

                   போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்!”

–நன்றி : நியூ ஏஜ் (மே 24 –30)

–தமிழில் : நீலகண்டன், 

என் எஃப் டி இ, கடலூர்

Thursday, 21 May 2026

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு --149 எஸ் சுகுணா –கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் தெலுங்கானா போராட்டத்தின் கதாநாயகி

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு --149 

எஸ் சுகுணா –கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும்
தெலுங்கானா போராட்டத்தின் கதாநாயகி
–அனில் ரஜீம்வாலே

சுகுணா நிலப்பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை, முந்தைய ஆந்திரப் பிரதேசத்தின் மேடக் மாவட்ட பாமுலபர்த்தி அருகே கிஷ்டபுர கிராமத்தின் கொம்மிடி ராமச்சந்திர ரெட்டி. தாயார் லெக்ஷம்மா. திருமணத்திற்குப் பிறகு அவரது தந்தை பிபிநகரிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்த அவரது மாமனாரின் பிரம்மன்பள்ளி ஊருக்குக் குடி பெயர்ந்தார். அங்குதான் அவரது அனைத்துக் குழந்தைகளும் பிறந்தன. சுகுணாவின் மூத்த சகோதரர் கோதண்டராமி ரெட்டி பிற்காலத்தில் தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தின் புகழ்பெற்ற தியாகி ஆனார். அவர்கள் அனைவருக்கும் அவர் ஒரு தத்துவ போதகராகவும் வழிகாட்டியாகவும் இருந்தார். அவரது தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டபோதும் முழு குடும்பமும்  ஒரு குடும்பம் போலவே வசித்தது.

அவர்களின் முன்னோர்கள் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இக்கிராமங்களுக்குக் கால்நடை விற்பனைக்காக வருவது வழக்கம். அவரது தாய் வழி தாத்தா கொம்மிடி புல்லா ரெட்டி பிரம்மன்பள்ளியில் நிலங்களை வாங்கி அங்கேயே குடியேறினார். அது இந்தியாவின் மிகப் பெரிய மன்னர் ஆட்சி அரசான ஹைதராபாத் சமஸ்தானத்தின் ஒரு பகுதி. தெலுங்கானாவின் 8 மாவட்டங்கள், மரத்வாடாவின் 5 மாவட்டங்கள் மற்றும் கர்நாடகத்தின் 3 மாவட்டங்கள் சேர்ந்த ஹைதராபாத் சமஸ்தானத்தை நிஜாம் ஆட்சி செய்தார். 

சுகுணாவின் பாட்டி விவசாயம் உட்பட முழு குடும்பத்தையும் பராமரித்தார். ஆயுதப் போராட்டம் தொடங்கிய காரணத்தால் குடும்பம் பெரும்பாலும் செகந்திராபாத்துக்குக் குடி பெயர்ந்தது. ஆனால் பாட்டி மட்டும் கிராமத்தில் எரிந்துபோன அந்த வீட்டில் தனியாக வாழ்ந்தார்.

அவர்களின் குடும்பம் பெரியது மற்றும் தாயார் தரப்பிலும் தந்தை தரப்பிலும் ஒவ்வொருவரும் 70 ஏக்கர் நிலங்களை உடைய பணக்கார நில உடைமை குடும்பம்; மேலும் சுமார் 200 பசுக்கள் மற்றும் பல குதிரைகளும் உண்டு. ஆனால் அவர்கள் பெரிதும் உயர்வாக மதிக்கப்பட்ட குடும்பம். சுகுணாவின் மூத்த சகோதரர் கோதண்ட பல முற்போக்கான மாற்றங்களைத் தொடங்கி வைத்து பல்வேறு பழங்கால மூட நம்பிக்கை மரபுகளை உடைத்தார்.

சுகுணா ஒருங்கிணைந்த நல்கோடா மாவட்ட புவனகிரி அருகே பிரம்மன்பள்ளியில் 1934 நவம்பர் 7ல் பிறந்தார். அவரது மூத்த சகோதரர் அளித்த ஊக்கத்தில் அவர் 11வது வயதில் தெலுங்கானா கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து, 1946 –51 காலகட்டத்தில் நடந்த தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றினார். 

அமைதியானவரான அவரது மூத்த சகோதரி சசிரேகா கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் ஆயுதப் போராட்டத்தில் தீவிரமாகப் பணியாற்றினார். சசிரேகா கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். சிறையில் அவர் ஒவ்வொருவருக்கும் செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்களை வழக்கமாக கொண்டு வருவார் மற்றும் தையல் வேலைகளிலும் ஈடுபடுவார். அவர் 2012 டிசம்பரில்  மரணமடைந்தார். 

சுகுணா ஐந்தாவது கிரேட் வரை அவரது கிராமத்தில் படித்தார். பின்னர் ஐந்தாவது ஆறாவது கிரேடை ராமன்னபேட்டையில் அவரது அத்தை வீட்டில் படித்தார். இந்தப் பள்ளிக்கூடம் ஆர்ய சமாஜ் முறைபடி நடத்தப்பட்டது.

அவரது சகோதரர் கோதண்டா ஆரிய சமாஜத்தின் ஆழமான செல்வாக்கு ஆட்பட்டவர் மற்றும் அனைத்துப் பாரம்பரியமான மத வழக்கங்களையும் எதிர்த்தார். பெண் குழந்தைகள் உட்பட அனைத்துக் குழந்தைகளையும் அவர்களது சாதி முதலிய வேறுபாடுகளைக் கருதாது காலை நேரத்தில் அவர்களை  ஊர்வலமாக அழைத்துச் செல்வது வழக்கம். மேலும் அவர் ‘தர்மஸ்தலா’ என்றழைக்கப்பட்ட தனியார் தெருபள்ளியை நிறுவினார்; ஒவ்வொருவரின் உழைப்பால் கட்டப்பட்டதால் ‘தர்மஸ்தலா’ என்று அது அழைக்கப்பட்டது. அங்கு அவர்கள் உருதும் தெலுங்கும் படித்தனர்.

கிராமத்தில் அனைத்துக் குழந்தைகளுக்கும் உடற்பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டது. மரபுகளை உடைத்துச் சகோதரிகள் குதிரை ஏற்றம், சைக்கிள், நீச்சல் கற்றது மட்டுமின்றி நவீன ஆடைகள் அணிந்தது அவர்களைத் தனித்துக் காட்டியது. ‘சரஸ்வதி வந்தனா’ மற்றும் பிற பக்தி பஜன்கள்,  பாடல்களைப் பாடுவதுடன், அவர்கள் “ஸாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா” பாடலையும்கூட பாடுவர். மேலும் அவர்கள் ஹரிஜன முன்னேற்றப் பணிகளையும் செய்தனர். 

ஆந்திர மகாசபாவில்

நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு மற்றும் நிஜாமுக்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கிய நட்சத்திரப் பங்கு  வகித்த ஆந்திர மகாசபா அமைக்கப்பட்ட நிகழ்வு, நீண்ட மற்றும் பல்வேறு சம்பவங்கள் நிறைந்த பின்னணி  கொண்டது. 1920களில் தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளை விலக்கியும் நசுக்கியும், உருது மொழி அலுவல் மொழியாக நிஜாமால் திணிக்கப்பட்டது. 1922ல் சமூக சீர்திருத்தக் கூட்டத்தில் ஒரு பேச்சாளர் தெலுங்கில் பேச அனுமதிக்கப்படவில்லை. அத்தகைய நிகழ்வுகள் தெலுங்கு மொழியை முறையாக அங்கீகரிப்பதற்காக ஆந்திர ஜன சங்கம் அமைப்பு அமைக்கப்பட்டது. விரைவில் அது மொழி பிரச்சனையைத் தாண்டிச் சென்று சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளை எழுப்பியது. 

விரைவில் ஆந்திர மகாசபா அமைக்கப்பட்டது; 1928ல் மேலும் பள்ளிகள், நிலவரியில் சலுகைகள், குடிமைச் சுதந்திரங்கள் முதலியனவற்றைக் கோரியது. 1930ல் ஜோகிப்பேட்டில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பல சமூகச் சீர்திருத்த நடிவடிக்கைகள் கோரப்பட்டது.

ராவி நாராயணன் ரெட்டி, (சுகுணாவின் மூத்த சகோதரரான) கோதண்ட ராமிரெட்டி மற்றும் பிறர் போன்ற பல இளம் தலைவர்கள் மகாசபாவில் இணைந்தனர். இந்தக் கட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மகாசபாவில் இணைந்தது அதற்குத் தெளிவான திசை வழியைத் தந்தது. 1943 வாக்கில் கம்யூனிஸ்டுகள் சபா அமைப்பில் சக்தி மிக்கவர்கள் ஆனார்கள்.

ஆந்திர மகாசபாவின் 11வது அமர்வு ராவி நாராயணன் ரெட்டி தலைமையில் புவனகிரியில் நடந்தது. அந்த மாநாட்டிற்காகச் சுகுணாவின் சகோதரர் கோதண்டா கடுமையாக உழைத்தார், குடும்பம் முழுவதும் அதில் இணைந்தது. இந்த மாநாட்டில் சபா இன்னும் கூட தீவிர அமைப்பானது.

சுகுணாவின் அண்ணன் கோதண்டராமி, ராவி நாராயணன் ரெட்டி செல்வாக்கில் ஆட்பட்டிருந்தார் மற்றும் ஆரிய சமாஜத்தின் செயல்பாட்டாளராகவும் இருந்தார். பின்னர் ஆந்திர மகாசபாவில் இணைந்தார்; அதற்கும் பிறகு சிபிஐயில் இணைந்தார். சுகுணா மற்றும் அவரது மூத்த சகோதரி சசிரேகாவை அவர் போன்கீர் நகரில் நடந்த மகாசபாவுக்கு அழைத்துச்

சென்றார். 1943ல் நடைபெற்ற விஜயவாடா அரசியல் பயிற்சி வகுப்புகளில் இளம் வயது காரணமாகச் சுகுணா கலந்து கொள்ள முடியவில்லை. போன்கீர் மாநாட்டில் (சுதந்திரப் போராட்ட வீரரும், தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தில் கலந்து கொண்டவருமான சிபிஐ சட்டமன்ற உறுப்பினர்) மல்லு சுயராஜ்யம் உள்ளிட்ட பலருடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.

அவரது தந்தை (கிராம நிர்வாக அதிகாரம் உடைய) போலீஸ் படேல் மற்றும் மாலி என்ற பொறுப்பை வகித்தார். பிரம்மன்பள்ளி படேலான அவர் பல நேரங்களில் அவர்களின் தலைமறைவு பணியின்போது உதவினார். அந்நாட்களில் 10ல் இருந்து 20 கிராமங்கள் ஒரு ஜாகிர் ஆட்சி நிர்வாகத்தின் கீழ் இருக்கும். ஒவ்வொரு ஜாகிரின் கீழும் ஒரு போலீஸ் படேல் இருப்பார். தந்தை அந்தப் பதவியைத் தனது தந்தையிடமிருந்து மரபுரிமையாகப் பெற்றார். சுகுணாவின் தந்தை மிக நல்லியல்பு உள்ளவர் மற்றும் சாதாரண மக்களிடம் பரிவு உடையவர்.

இந்தியாவின் விடுதலை 

சுகுணா, அவரது அண்ணன் கோதண்டராமி மற்றும் குடும்பத்தின் மற்றவர்கள் 1947 ஆகஸ்ட் 15ல் அவர்களின் கிராமத்தில் இருந்தனர். தேசியக் கொடியை ஏற்றி பெரிய அளவில் விடுதலையை அவர்கள் கொண்டாடினர். 1948ல் கிராம மையத்தில் மூவர்ணக் கொடியும் செங்கொடியும் ஏற்றப்பட்டன; ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய கோதண்ட, ‘சுதந்திரம் வந்துவிட்டது, நிஜாம் தோற்கடிக்கப்பட்டார், மற்றும் இப்போது போராட்டத்தைத் தொடர வேண்டிய தேவையில்லை’ என்றார்.

கட்சியில் இணைதல் 

16 வயதிற்குக் குறைவாக இருந்தபோதும் சுகுணாவிற்குத் தெலுங்கானா பகுதி குழுவின் சார்பாக ராவி நாராயணன் ரெட்டி கட்சி உறுப்பினர் அட்டையை வழங்கினார். அவர்களால் பராமரிக்கப்பட்ட இரகசிய பதுங்குமிடத்தில் (டென்) இது வழங்கப்பட்டது; சுகுணாவின் கட்சி மற்றும் தலைமறைவு பணி பெரிதும் பாராட்டப்பட்டது.

தலைமறைவு பணிக்கான பதுங்குமிடங்கள் பராமரிப்பதைச் சுகுணா வழக்கமாகக் கொண்டிருந்தார். அங்கு வெங்கடாச்சாரி மற்றும் ஆனி ரெட்டி ஆனந்தாவுடன் சேர்ந்து அவர் அறிக்கைகள் எழுதுவது மற்றும் அவற்றைச் சைக்ளோ ஸ்டைல் பிரதி எடுப்பது வழக்கம். தோழர்களுக்கும், உடல் நலமற்றவர்களுக்கும் உதவுவது –அவ்வளவு ஏன் பாத்திரங்களைக் கழுவுவது  --உள்ளிட்ட பல பயனுள்ள பணிகளை அவர்கள் செய்தனர்.

ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வது குறித்து முரண்பாடு

1948 செப்டம்பருக்குப் பிறகு ‘போலீஸ் நடவடிக்கை’ மற்றும் இந்திய இராணுவம் ஹைதராபாத்துக்குள் நுழைந்தது; இச்சூழ்நிலையில் ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வது குறித்துக் கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் மூண்டன. கட்சி மக்கள் மத்தியில் ஆதரவு இழக்கத் தொடங்கியது, அவர்கள் பிளவுபட்டு, பல பிரிவுகளும் ஆயுதப் போராட்டத்தை விட்டு நீங்குவது அதிகரித்தது. நிஜாம் தோற்கடிக்கப்பட்டு, விவசாயிகளின் கோரிக்கைகள் ஒரு பகுதி நிறைவேற்றப்பட்டதால் ராவி நாராயணன் ரெட்டி, ராஜ் பகதூர் கவுர், மக்தூம் மொகிதீன் மற்றும் பிற தலைவர்கள் தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தைத் திரும்ப பெற வலியுறுத்தினர். பசவபுன்னையா மற்றும் பி சுந்தரையா முதலிய சில தலைவர்கள் இன்னும் ஆயுதப் போராட்டத்தைத் தொடர விரும்பினர்; ஆனால் அவர்களின் குறுகிய குழுவாதப் போக்குக் கண்ணோட்டத்தின் காரணமாக அவர்கள் தனிமைப்பட்டு போயினர், அது  கட்சிக்குப் பெரும்  கேடுகளை விளைவித்தது.

கட்சி பொதுச் செயலாளர் BT ரணதிவே ஆயுதப் போராட்ட உத்திகளைத் தொடர வற்புறுத்தினார்; அதன் விளைவாய்க் கட்சிக்கும், பெருந்திரள் மக்கள் இயக்கத்திற்கும் மாபெரும் சேதாரம் ஏற்பட்டது

பதுங்குமிடத்தில் பணி மற்றும்  திருமணம்

சுகுணா ஆயுதப் போராட்டத்தில் நேரடியாகப் பங்கேற்கவில்லை, அவர் மிகவும் விரும்பியும் அவர் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. கட்சி அவருக்கு ஹைதராபாத்தில் சோபா கவர்களைச் செய்பவராகச் செயல்பட்டு பதுங்குமிட அறைகளில் தங்கி, எழுதவும் கட்சி கடிதங்கள் மற்றும் ஆவணங்களைச் சைக்லோ ஸ்டைல் செய்யவும், அவற்றை எடுத்துச் சென்று உரியவரிடம் சேர்க்கும் கூரியராகப் பணியாற்றும்  பொறுப்பைத்  தந்தது.

1949 நவம்பர் 25ல் சுகுணா –எஸ் வி கே பிரசாத் திருமணம் நடந்தது. எஸ்விகே ஆயுதப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்று, காயமடைந்து கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு ஆளான தலைவர்களில் ஒருவராவார். 1952ல் தான் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

ஆயுதப் போராட்டம் திரும்ப பெற்ற பின் வாழ்க்கை 

எஸ்விகே பிரசாத் கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, பி சுந்தரய்யா பதுங்கும் இடத்திற்கு வந்து ஆயுதப் போராட்டத்தைக் கட்சி திரும்பப் பெற்றதாக அறிவித்தார். பதுங்குமிடங்கள் மூடப்படலாயின. பதுங்குமிடங்களைப் பராமரித்தவர்களும் பணியாற்றிய உதவியாளர்களும் அவரவர் வீடுகளுக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. பலரும் தங்கள் வீடுகளுக்கும் கிராமங்களுக்கும் திரும்பச் செல்ல தயாராக இல்லாததால் இந்த முடிவு மிகவும் கடினமானதாக இருந்தது

போராட்டம் திரும்ப பெற்ற பிறகு சுகுணா அவரது கிராமத்திற்குச் செல்ல ஆலோசனை தரப்பட்டது ஆனால் அங்கே அவரைக் கைது செய்ய ஒரு வாரண்ட் காத்திருந்தது. முதலில்  அவர் பூனா சென்றார். அங்கே இருந்த ரகசிய பதுங்கும் இடத்தில் பிராத்தியாகாத்மா அவரது மனைவியுடன் தங்கியிருந்தார். பிராத்தியாகாத்மா பின்னர் புகழ் பெற்ற சினிமா இயக்குனரானார். பின்னர் அவர் எஸ் வி கே  இளைய சகோதரரான அவரது மைத்துனர் நரசையா வசித்த மெட்ராசுக்கு இடம் பெயர்ந்தார். நரசையா பிற்காலத்தில் ஒரு தொழிலதிபர் ஆனார்.

1952 தேர்தல்கள்

மக்கள் ஜனநாயக முன்னணி (PDF, People’s Democratic Front) என்ற பேனரின் கீழ் கட்சி வேட்பாளராக நிறுத்திய (மராத்வாடா விடுதலை மற்றும் நிஜாமுக்கு எதிரான போராட்ட வீரரான) அவுரங்காபாத்தின் கோவிந்த தாஸ் ஷெராஃப் அவர்களுக்காகச் சுகுணா பணியாற்றினார். சில வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார். சுகுணா வெளிப்படையாகப் பணியாற்றினார் ஆனால் கைது செய்யப்படவில்லை. பிடிஎப் மாபெரும் கூட்டத்தை நடத்தியது.

ஏதாவது வேலைக்குத் தகுதி பெற வேண்டும் என்பதற்காகச் சுகுணா இந்தி கற்றார். மேலும் அவர் ஆந்திரா சரஸ்வதா பரிக்ஷத் நடத்திய தெலுங்கு தேர்வுகளிலும் கலந்து கொண்டார். ஏதாவது ஒரு வேலையில் சேர அவர் எப்போதும் விரும்பினார்.

கட்சியைத் திரட்டி அமைத்தல்

சிதறிக் கிடந்த கட்சியைச் சுகுணா, எஸ்விகே மற்றும் பிற தோழர்கள் மீண்டும் திரும்ப கட்டியமைக்கத் தொடங்கினர். கட்சியைப் புனர்நிர்மாணம் செய்ய வாராங்கல் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்ட எஸ்விகே அங்கு மாவட்டச் செயலாளர் ஆனார். சுகுணா இடம்பெயர நேர்ந்தது அவர் தனது படிப்பைப் பாதியில் கைவிட்டார்.

அவர், கட்சி மற்றும் பெருந்திரள் அமைப்பு, குறிப்பாகப் பெண்கள் முன்னணியில் ஏராளமான பணிகள் ஆற்றினார். அதே நேரத்தில் மிகவும் கஷ்டமான நிலையில் இருந்த தனது குடும்பத்தையும் கவனித்துக் கொண்டார்.

பின்னர் ஆந்திரப் பிரதேச உழைக்கும் பெண்கள் அசோசியேஷனின் செயலாளர் ஆனார். அவர் தனது தோழர்களுடன் சேர்ந்து, கழிவறைகள் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களின் பணி நேரம் மற்றும் பணி நிலைமைகள் குறித்து ஒரு மனுவைத் தயாரித்தார்; உழைக்கும் பெண்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான கையெழுத்துக்களைத் திரட்டி மாபெரும் கூட்டம் நடத்தினார். ஊர்வலமாகச் சென்று கையெழுத்துப் பெறப்பட்ட மனுவை ஆளுநரிடம் வழங்கினர். அந்நேரத்தில் சுகுணா ஹைதராபாத்தில் பல கம்பெனிகளின் தொழிற்சங்கத் தலைவராக இருந்தார். அந்த நிறுவனங்களின் தொழிலாளர்கள் பெரும்பாலும் பெண்கள். மருத்துவமனை மற்றும் அறுவை சிகிச்சையில் பயன்படுத்தும் பஞ்சு துணி (காஸ்) தயாரித்தல், சலைன் பாட்டில் உற்பத்தி, மாங்கனிச் சாறு தயாரித்தல் உள்ளிட்ட 300 அல்லது 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் ஆலைகளில் தொழிற்சங்கங்கள் அமைக்கும்படி அவரைக் கட்சி பணித்தது. 

ரமிஸாபி மற்றும் பிற வழக்குகள்

சுகுணா புகழ்பெற்ற ரமிஸாபி, ஹமீதி மற்றும் பிற பிரச்சனைகளை எடுத்தார். சில பொழுது கணவர் இல்லாத நேரத்தில் ரமிஸாபி சில காவலர்களால் ரிக்ஷாவில் இருந்து கீழே பிடித்து இழுத்து காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டு நான்கு காவலர்களால் பாலியல்  வல்லுறவுக்கு ஆளானார் அவரது கணவர் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதை எதிர்த்துக் கண்டனப் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன அவற்றில் சுகுணா தீவிரமாகப் பங்கேற்றார்

எம் சிபிஐ கட்சியில்  சேர்தலும் சிபிஐக்குத் திரும்ப வருதலும்

1964ல் கட்சி பிளவுபட எஸ்விகே சிபிஐ-எம் கட்சியை ஆதரித்தார், ஆனால் தீவிரமாக அதில் பணியாற்றவில்லை. பின்னர் அவர், சிபிஐஎம் கட்சியிலிருந்து ஓம்கார் வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1983 –84ல் ஓம்கார் தலைமையிலான எம்சிபிஐ கட்சியில் இணைந்தார். சட்டமன்றத்திற்கு எம்சிபிஐ வேட்பாளராககூட அவர் போட்டியிட்டார். பின்னர் ஓம்காருடன் கருத்து வேறுபாடு ஏற்பட அதிலிருந்து வெளியேறி சிபிஐயில் மீண்டும் இணைந்தவர் தனது மரணம் வரை சிபிஐயில் தொடர்ந்து நீடித்தார்.

சுகுணா சிறிது காலம் சிபிஐயில் நீடித்தார் ஆனால் விரைவில் அவரும் எஸ் வி கே-வைப் பின் தொடர்ந்து சிபிஐ -எம்மில் இணைந்தார். சிபிஐ-எம் பெண்கள் பிரிவில் அவர் தீவிரமான தலைவர் ஆனார். திடீரென்று எஸ்விகே ஓம்கார் கட்சியில் இணைந்தது அவருக்குச் சில சங்கடங்களை ஏற்படுத்தியது. எஸ்விகே-வைத் தொடர்ந்து சுகுணாவும் எம்சிபிஐ கட்சியில் இணைந்தார். ஆனால் சில காலத்திற்குப் பிறகு சிபிஐ திரும்பிய அவர் இறக்கும் வரையில் சிபிஐயில் நீடித்தார்.

சுமார் 200 எம்சிபிஐ உறுப்பினர்கள் அவர்களுடைய மியாபூர் இல்லத்தில் கூடி இரண்டு நாள் விவாதத்திற்குப் பிறகு சிபிஐயில் இணைய முடிவு செய்தனர். அப்போதைய மாநிலச் செயலாளர் என் கிரிபிரசாத் கட்சி கொள்கைகளை விளக்கினார்; வாராங்கல் மாவட்டத்தின் அனைத்துத்  தொழிலாளர்களும் சிபிஐயில் இணைந்தனர்

அவர் தனது இறுதி நாட்களில், “கம்யூனிஸ்ட் இயக்கம் முழுமையும் மீண்டும் ஒன்றாக ஒன்றிணைந்தால் அது மிகவும் நல்லது என நான் கருதுகிறேன்” என்று கூறினார். குறைந்தபட்சம் சிபிஐ, சிபிஐ-எம், எம்சிபிஐ மற்றும் தேர்தல் களில் பங்குபெறும் அத்தகைய மார்க்சிய-  லெனினிய குழுக்கள் ஒன்றாதல் வேண்டும் என்று அவர் கருதினார்

எஸ்விகே சுகவீனம் மற்றும் சுகுணா 

1990களின்போது நோய் வாய்ப்பட்ட எஸ்விகே உடல்நிலை தொடர்ந்து மோசமாகி கோமா நிலைக்குச் சென்றார். 1994 ஜூலை 17ல் அவர் மரணமடைந்தார். அவர் தனது வாழ்க்கைத் துணைவர் மட்டுமல்ல, தன்னை அரசியலில் உருவாக்கியவர் மற்றும் வழிகாட்டி என சுகுணா நினைவு கூர்கிறார். 40 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த அவர்களின் வாழ்வு முடிவுக்கு வந்தது. எவ்வளவு காலம் தனது மிகுதி வாழ்வு நீடிக்கும், அது எவ்வாறு செல்லும் என்ற நினைவுகளில் அவர் உணர்ச்சியற்றவர் ஆனார். அவரது குழந்தைகள் அவரை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றனர். எப்போதும் அவர் எஸ்விகே பற்றிய நினைவுக் குறிப்புகளை எழுத விரும்பினார். அவர் எழுதிய குறிப்புகளையும் பிற தகவல்களையும் தேடி திரட்டுவதில் மூன்றாண்டுகள் போயின. இறுதியில் ஒருவகையாக சில நினைவுக் குறிப்புகளை எழுத சுகுணாவால் முடிந்தது

அவரது முதல் குழந்தை ஷோபா 1951 ஜூன் 10ஆம் தேதி பிறந்தார். ஒரு கட்சி செயல்பாட்டாளராக, கஷ்டமான காலங்களைக் கடந்து குழந்தைகளை வளர்ப்பதில் அவரது வலியையும் சிரமங்களையும் அவர் விவரித்தார். போதுமான ஆடைகள், தண்ணீர்கூட இல்லை, மின்சாரம் முதலியனவும் இல்லை.  இருந்த போதிலும் தனது குழந்தைகளை வளர்க்க அவர் கடுமையாகப் போராடினார். 1959 மற்றும் 1964ல் இரண்டாவது மூன்றாவது குழந்தை முறையே பிறந்தன. வீட்டு உரிமையாளர்கள் தந்த அழுத்தத்தில் அவர் அடிக்கடி வாடகை அறை மாற வேண்டி வந்தது. குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க எஸ்விகேயால் இயலவில்லை.

அவர் மிகக் கடுமையான நெருக்கடியில் இருந்தபோது தனது விரக்தியை கட்சி தோழர்களிடமும் எஸ்விகே-யிடமும் கூட விவரித்தார். எஸ்விகே உட்பட கட்சித் தோழர்கள் அவரவர் குடும்பத்தைவிட கட்சிக்குக் கூடுதல்  பொறுப்புடையவர்களாக இருந்தனர் என அவர் எழுதினார். இதனால் எஸ்விகே தனது குழந்தைகளிடம் அன்பு இல்லாதவர் என்பதல்ல. தனது மகளின் வற்புறுத்தலில் 1987இல் அமெரிக்கா சென்ற சுகுணா பின்னர் (குடியுரிமை இன்றி நிரந்தரமாக அமெரிக்காவில் வசிக்கும் சட்டபூர்வ உரிமையை வழங்கும்) கிரீன் கார்டு  பெற்றார்.

சுகுணா ஏதாவது ஒரு வேலையில் சேர விரும்பினார். பிளாக் டெவலப்மெண்ட் அதிகாரி (பிடிஓ) பதவி அவர் கதவை தட்டியது. ஆனால் குடும்பச் சூழ்நிலை அதை அனுமதிக்கவில்லை, எஸ்விகே-வும் கூட வற்புறுத்த அவர் அப்பதவியை ஏற்கவில்லை. 

சூசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த பிரிட்டிஷ் சோசலிசத் தொழிலாளர்கள் கட்சியின் உறுப்பினர் பார்ரே பவியர் (Barry Pavier) சுகுணா மற்றும் எஸ்விகே-யின் வீட்டில் தங்கி தெலுங்கானா ஆயுதப் போராட்டம் குறித்து ஒரு புத்தகம் எழுதினார்

சிஆர்  ஃபவுண்டேஷனில் இறுதி ஆண்டுகள்

தனது வாழ்வின் இறுதி 12 ஆண்டுகளின்போது சுகுணா சிபிஐ ஹைதராபாத்தில் நடத்தி வந்த சி ஆர் பவுண்டேஷன் அமைப்பின் முதியோர் இல்லத்தில் தங்கினார். அவரது மூத்த மகன் வந்து பெரியதோர் அறையை அவருக்குத் தேர்ந்தெடுத்து அதற்கான கட்டணத்தைச் செலுத்தினார். நீண்ட காலம் உடல் நலமின்றி இருந்த சகமுரி சுகுணா ஹைதராபாத் கொண்டாபூரில் சந்திரா ராஜேஸ்வரராவ் (சிஆர்) ஃபவுண்டேஷன் முதியோர் இல்லத்தில் 2025 ஜூன் மாதம் 21ஆம் நாள் இரவு 11 மணிக்கு இயற்கை எய்தினார்

தோழர் சுகுணா நினைவுகளைப் போற்றுவோம்!

நன்றி : நியூ  ஏஜ் (ஏப்ரல் 19 –25)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

 

 .