Saturday, 31 January 2026

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு– 96 கே சத்தியநாராயணா –1930களின் தொடக்கத்தில் சிபிஐ கட்சியைக் கட்டியவர்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு– 96


கே சத்தியநாராயணா –1930களின் தொடக்கத்தில்
சிபிஐ கட்சியைக் கட்டியவர்

–அனில் ரஜீம்வாலே

அமீர் ஹைதர் கானுடன் சேர்ந்து தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டி வளர்த்த நிறுவனத் தலைவர்களில் ஒருவர் கம்பம்பட்டி சத்யநாராயணா  (சீனியர்). அதற்கு முன் 1934ல் ஆந்திராவில் கம்யூனிஸ்ட் கட்சியை பி சுந்தரய்யாவுடன் நிறுவியவர்களில்  ஒருவராக எம். சிங்காரவேலர்  திகழ்ந்தார். 

கே சத்யநாராயணா 1909 ஜூலை 17ல் ஆந்திரா கிழக்குக் கோதாவரி மாவட்டம் ராஜோல் தாலுகாவில், தோத்தவாரம் என்ற கிராமத்தில் பிறந்தார். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அவரது தந்தை தனது மகனின் பெயரையே கொண்டிருந்தார். தந்தை துனி ஜமீன்தாரின் சேவகத்தில் திவான் ஆக இருந்தார்.

1919ல் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்றபோது சத்தியநாராயணா காக்கிநாடாவில் படித்துக் கொண்டிருந்தார்; அந்நிகழ்வு  அவர் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி தன்னை விடுதலைப் போராட்ட இயக்கத்தில் அர்ப்பணிக்க முடிவெடுக்க வைத்தது. 1921 –22ல் உயர்நிலைப் பள்ளியில் இருந்தபோது புலுசு சாம்பமூர்த்தி, எம் ரங்கையா நாயுடு, டி சுப்பம்மா மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்களின் சொற்பொழிவுகளைக்  கேட்டார். அப்போது எல்லா இடங்களிலும் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தது, அவர்கள் குவியல் குவியலாக வெளிநாட்டு துணிகளைச் சேகரித்துத் தீயிட்டுக் கொளுத்தினர்; சுதேசி மற்றும் காதி பொருட்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தனர். பல காங்கிரஸ் தலைவர்கள் நல்ல ஊதியம் தரும் அரசு வேலைகளை உதறிவிட்டு வெளியேறினர்,  காதி ஆடைகளில் மிகச் சாதாரணமாக வாழத் தொடங்கினர்.

காதி துணிகளை விற்றுக் கொண்டிருந்த முக்கிய தலைவர்களுடன் சத்யநாராயணா திரிந்தார். அவரே கைராட்டையில் நூல் நூற்கத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளில் நான்கு வேட்டிகளுக்கான கதர் ஆடை நூற்பு நூல் பிரிக்கட்டுகள் நூற்றார்; அதில் இரண்டு கட்டுகளைத் தந்தையிடம் வழங்கினார். அவர், பழங்குடி இனத் தலைவர் அல்லூரி சீதாராம் ராஜூ தலைமையில் நடத்தப்பட்ட கிளர்ச்சியால் உற்சாகமடைந்தார்.

காந்தியின் விஜயம் 

1929ல் ஆந்திரப் பிரதேசத்திற்கு விஜயம் செய்த காந்தி (காக்கிநாடா மாவட்டத்தின் ஒரு நகரமான, மாங்கனி மற்றும் வெற்றிலைக்குப் புகழ்பெற்ற) துனி நகரத்திற்கு வந்தார். ஒரு நிலச்சுவான்தார் அவருக்கு விருந்தளித்தார். ஒரு பெரிய ஹாலில் காந்தியுடன் பெண்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பெண்கள் மிக தாராளமாகத் தங்கள் நகைகளைக் காந்தியிடம் நன்கொடையாக அளித்தனர். (இந்த நகரத்தில்தான் அல்லூரி சீதாராம் ராஜு படித்தார்).

மாலை கூட்டத்தில் பலரும் பணத்தை நன்கொடையாக அளித்தனர். உரையாற்றும் போது காந்தி, “எனக்கு, எளிய மக்கள் நன்கொடையாகத் தரும் ‘கானீஸ்’ (தம்படி காசு) அல்லது சிறு தொகை, பணக்காரர்கள் அளிக்கும் பெரும் தொகைகளைவிட விலை மதிப்பு மிக்கது” எனப் பிரகடனம் செய்தார். இந்நிகழ்வின்போது சத்யநாராயணா காக்கிநாடா கல்லூரியில் பி ஏ இளங்கலை  படித்துக் கொண்டிருந்தார். ஏறத்தாழ அந்த நேரத்தில் இந்தியாவுக்குச் சைமன் கமிஷன் விஜயம் செய்தது.’சைமன் குழுவே திரும்பிப் போ!’ என்ற முழக்கத்துடன் காக்கிநாடா கல்லூரியில் ஒரு வேலை நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவர்கள் பெரும் பேரணியை நடத்தினர், மாலையில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் புகழ்பெற்ற புரட்சிகரத் தலைவரும், கம்யூனிஸ்ட்டுமான சுவாமி குமாரானந்த் உரையாற்றினார்.

அதைத் தொடர்ந்த அடுத்த நாளில் சத்தியநாராயணா, பூரண சுதந்திரம் குழுவின் செயலாளர் சாம்பமூர்த்தி இல்லத்தில் குமாரானந்தை மீண்டும் சந்தித்தார். அவர்கள் நீண்ட நேரம் உரையாடினர். சுவாமி அவருக்கு ரெவி மில்லர் எழுதிய ‘போல்ஸ்விக்-இசத்தின் வலிமையும் புனைவும்’ (/கட்டுக்கதையும்’) என்ற தலைப்பிலான புத்தகத்தைக் (‘The Might and Myth of Bolshevism’ by Rewi Miller) கொடுத்தார். சத்யநாராயணா இரவு முழுதும் அந்தப் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்து காலையில் படித்து முடித்தார். சத்தியநாராயணாவின் ஓவியக் கலைஞரான ஒரு நண்பர் அதிலிருந்து லெனின் சித்திரத்தை வரைந்த பின் அப்புத்தகம் திருப்பித் தரப்பட்டது. 

தீவிர அரசியலில்

சத்தியநாராயணா 1929ல் பிஏ பட்டத் தேர்வில் வெற்றி பெற்றார். 21 வயதில் தனது நண்பர்களுடன் வாழ்க்கையை முழுமையாக நாட்டுக்கு அர்பணிப்பது என்று சபதம் செய்தார். ஒவ்வொரு ஞாயிறும் கதர் விற்பனை செய்ய ஒரு குழுவை அமைத்தனர். 

1929 டிசம்பர் 31 நள்ளிரவில்  காங்கிரஸ் கட்சி பூரண விடுதலை என்ற தீர்மானத்தை லாகூர் அமர்வில் நிறைவேற்றியது. ஜனவரி 26ம் நாளைச் சுதந்திர தினமாக அனுசரிக்க மக்களும் மாணவர்களும் முடிவு செய்தனர். மெட்ராஸில் 1930 ஜனவரி 26 அன்று சத்யநாராயணாவும் வேறு சிலரும் சேர்ந்து ஒரு முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். அவர்கள் மாணவர்களைத் திரட்டி திருவல்லிக்கேணி கடற்கரை வரை பேரணியாகச் சென்றனர்.

எம்.ஏ முதுகலை முதல் ஆண்டுக்குப் பிறகு அவர் தனது படிப்பைக் கைவிட்டு உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். சத்தியாகிரக முகாமில் மற்றவர்களுடன் சுந்தரையாவும் கூட இருந்தார்.

இதன் மத்தியில் சத்யநாராயணா முதலில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார், பின்னர் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலும் (CSP) மற்றும் இறுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இணைந்தார். திரிபுரியில் நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ஆந்திராவில் இருந்து அவரும் வேறு பலரும் (நேதாஜி சுபாஷ் சந்திர) போஸுக்கு வாக்களித்தனர், பட்டாபி சீதாராமையாவைத் தோற்கடித்தனர்.

காங்கிரஸில் செயல்பாடு

அவர் காக்கிநாடா மாவட்டக் காங்கிரஸ் கமிட்டியில் இருந்தார், வேமூர் சத்தியாகிரக முகாமுக்குத் தன்னார்வத் தொண்டர்களைத் திரட்டினார். மேலும் அவர் தலைமறைவாக (இரகசியமாக) ‘ரண துந்துபி’ (போர் முரசு) என்ற சைக்ளோ-ஸ்டைல் செய்யப்பட்ட இதழைப் பல மாதங்களுக்கு நடத்தினார்.

இதன் மத்தியில் ஒத்துழையாமை இயக்கம் வேகம் பெற்றது. ஆயிரக்கணக்கானோர் சிறை புகுந்தனர். 1931 ஜனவரி 26ல் அவர் தானாக முன்வந்து கைதனார் ஆறு மாதம் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். ராஜமுந்திரி சிறைக்கு அனுப்பப்பட்ட அவர் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே விடுதலையானார். இளம் உறுப்பினர்கள் காந்தி– இர்வின் உடன்பாட்டால் ஏமாற்றம் அடைந்தனர்.

காங்கிரஸ் அமர்வில் கலந்து கொள்ளல் 

சிறையிலிருந்து விடுதலையான பின் சத்யநாராயணா காங்கிரஸ் கராச்சி மாநாடு அமர்வில் ஆந்திர பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். பம்பாயில் இருந்து கராச்சிக்கு அவர்கள் கப்பலில் பயணம் செய்தனர். கப்பலில் ஏறுவதற்குச் சற்று முன் அவர்கள் பகத்சிங் மட்டும் கூட்டாளிகள் தூக்கிலிடப்பட்ட செய்தியை அறிந்தனர். காங்கிரஸ் அமர்வு தீர்மானத்தில் வன்முறையைக் கண்டித்த பகுதியை நீக்க வேண்டும் என்ற முன்மொழிவை ஆதரித்தார்.

கராச்சியிலிருந்து திரும்பிய பிறகு காக்கிநாடாவில் ஒரு காங்கிரஸ் தலைவருடன் இரகசிய அமைப்புக் குழுவில் அவர் சேர்ந்தார். தடை செய்யப்பட்ட டெல்லி அமர்விலும் கலந்து கொண்டார். டெல்லிச் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட புரட்சியாளர் ஒருவருடன் அவர் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். 1932ல் அவர் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது ஒருக்கால் வைசம்பாயனன் ஆக இருக்கலாம். வைசம்பாயனன் வட இந்தியாவில் ஹிந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு (HSRA)ன் பொறுப்பாளராக இருந்தார். சத்யநாராயணா HSRA அமைப்பின் கிளை ஒன்றை ஆந்திராவில் தொடங்க அவரது ஒப்புதலைப் பெற்றார். அவர் ஒரு ரிவால்வர் மற்றும் சில தோட்டாகளையும் கூட பெற்றுக் கொண்டார்.  

அமீர் ஹைதர் கானுடன் சேர்ந்து சிபிஐ அமைத்தல்

அவர் தன் செயல்பாட்டை மேலும் தொடர்வதற்கு முன் மெட்ராசுக்குத் திரும்ப கேட்டுக் கொள்ளப்பட்டார். 1931 -32 ல் அங்குச் சென்ற அவர் தென்னிந்தியாவில் வேறு சிலருடன்

சேர்ந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பதில் ஈடுபட்டு இருந்த அமீர் ஹைதர் கானைச் சந்தித்தார். அப்போது கட்சி தடை செய்யப்பட்டிருந்ததால், அவர் தலைமறைவாகப் பணியாற்றி வந்தார். அமீர் ஹைதர் மெட்ராஸில்  ‘யங் ஒர்க்கர்ஸ் லீக்’ என்ற இளைஞர் அமைப்பை நிறுவினார். அதிலிருந்த இளைஞர்கள் அச்சகத் தொழில் மற்றும் பிற தொழிற்சாலைகளைச் சேர்ந்தவர்கள். சத்தியநாராயணா அந்த அமைப்பில் ஒருவரானார். அவர்கள் தொழிலாளர்கள் மத்தியில் வர்க்க உணர்வை ஊட்ட முயன்றனர்.

அவர் மாதம் 25 ரூபாய் என்ற குறைந்த ஊதியத்தில் முழு நேர கட்சி ஊழியர் ஆனார். அவரும் அவரது மனைவி மாணிக்யம்பா இருவரும் அந்தச் சொற்ப ஊதியத்தில் எப்படியோ வாழ்க்கை நடத்தினர். [மாணிக்யம்பா என்ற பெயர் கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் திராக்ஷாராமத்தில் அமைந்த, 18 சக்தி பீடங்களில் ஒரு சக்தி பீடத் தெய்வத்தின் பெயர் –கூடுதல் இணைப்பு]. அவர்கள் மெட்ராஸ் சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு டிராம்வே தொழிலாளியின் வீட்டில் வசித்தனர்.

கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிக்கையாக மெட்ராஸில் இருந்து “முன்னேற்றம்” இதழ் வெளியிடப்பட்டது. ராஜா வடிவேலு அதன் ஆசிரியராகவும் அச்சிடுபவர் மற்றும் பதிப்பாளராகவும் இருந்தார். அந்த இதழ் மீரட் சதி வழக்கு விசாரணை விபரங்களை விரிவாக வழங்கியது. விரைவில் சத்தியநாராயணா மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்து கைது செய்யப்பட்டார். தடை செய்யப்பட்ட வீரபாரதி இதழின் பிரதிகளை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் விசாரிக்கப்பட்டு ராஜமுந்திரி மற்றும் பெல்லாரி சிறைகளுக்கு அனுப்பப்பட்டார். 

அதன் பிறகு அவர் மெட்ராஸில் இருந்து பிரகாசம் பந்துலு நடத்திய ஸ்வராஜ் பத்திரிக்கைக்காகப் பணியாற்றினார்; பின்னர் அவர் சித்தி ராஜாவால் பிரசரிக்கப்பட்டு வந்த நியூ ஏஜ் இதழில் துணை ஆசிரியராக இணைந்தார். பின்னர் வந்த காலத்தில் காட்டே அதன் ஆசிரியரானார். நியூ ஏஜ் இதழ் விஞ்ஞான சோஷலிசத்தைப் பிரச்சாரம் செய்தது. 

தொழிலாளர் பாதுகாப்பு லீக் 

1935ஆம் வருடத்தின்போது அவர் தொழிலாளர் பாதுகாப்பு லீக் அமைப்பில் பணியாற்றினார். இதன் மத்தியில் தனித் தேர்வராகத் தனது முதுகலை எம்ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றார். லீக் அமைப்பு நெல்லூர் மற்றும் பிற இடங்களுக்கு பரவியது. தோழர் பி. சுந்தரய்யாவும்கூட அதில் பணியாற்றினார். அது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெளிப்படையான பொதுமேடை அமைப்பாகப் பயன்பட்டது.

இதன் மத்தியில் பல்வேறு பேரூர்கள் மற்றும் நகரங்களில் இருந்து ஏராளமான இதழ்கள் கொண்டு வரப்பட்டன. ஏ எஸ் கே அய்யங்கார், வடிவேலு, பாஷ்யம், மாணிக்கம் மற்றும் பலர் லீக் அமைப்பில் பணியாற்றினர். முனிசிபல் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றிய சத்யநாராயணா மேலும் அச்சகத் தொழில், ட்ரம்வே தொழிலாளர்கள் மத்தியிலும்கூட பணியாற்றினார். மெட்ராஸில் அனைத்து இந்திய அச்சகத் தொழிலாளர்கள் மாநாடு முதன்முறையாக நடத்தப்பட்டது –அந்த மாநாட்டிற்குத் தொழிலாளர்கள் பாதுகாப்பு லீக் ஏற்பாடு செய்தது

 முனிசிபல் தொழிலாளர்கள் மத்தியில் “மன பிரபா” (நமது வெளிச்சம்) பத்திரிக்கையை விநியோகம் செய்ததற்காக அவரும் வீ நரசிங்க ராவ் இருவரும் கைது செய்யப்பட்டனர். இரு காங்கிரஸ்காரர்கள் அவர்கள் தரப்புக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடினர். ஒருவர் உயர் நீதிமன்ற நீதிபதி, மற்றொருவர் தூய்மையான காந்தியர். அவர்கள்தான் என் எஸ் வரதாச்சாரி மற்றும் பி ஜெகன்நாத ராஜு; பின்னர் அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் ஆனார். நரசிங்கராவும் சத்தியநாராயணாவும் கடலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர். 1936ல் தான் அவர் விடுதலையானார். இதன் மத்தியில் கட்சி பின்பற்றிய பாதை குறிப்பிடத்தக்க அளவு மாறியது. ரஜினி பாமி தத் மற்றும் பிராட்லே தீசிஸ் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நேர்மறையான முறையில் உதவியது.

[கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களான ஆர்பி தத் (ரஜினி பால்மே தத்) மற்றும் பென் பிராட்லே இருவரும் தத்–பிராட்லே கோட்பாட்டை முன்வைத்தனர். அக்கோட்பாடு இந்தியாவில் “ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் முன்னணி” அமைக்கும் யோசனையை முன்மொழிந்தது. அது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கம்யூனிஸ்டுகளை, இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்து பணியாற்றக் கோரியது– அதுவரை பின்பற்றப்பட்ட முந்தைய குறுங்குழுவாத கம்யூனிஸ்ட் கொள்கையிலிருந்து (செக்டேரியன்) அது குறிப்பிடத்தக்க பெரும் மாறுதலாகும். இந்தக் கொள்கை மாற்றம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நேர்மறையாகப் பெரிதும் உதவியது –கூடுதல் இணைப்பு]

சத்தியநாராயணா கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் (CSP) பொறுப்புகளை ஏற்று மெட்ராசைவிட்டு காக்கிநாடாவுக்குச் சென்றார். கோட்டி பள்ளியில் மாவட்ட விவசாயிகள் மாநாடு நடத்தப்பட்டது, விவசாயத் தொழிலாளர் அமைப்புகள் ஏற்பட்டன. பல்வேறு பேரூர்களில் தொழிற்சங்கங்கள் அமைக்கப்பட்டன. காக்கிநாடா கயிறு உற்பத்தித் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். 

1937 மாகாணத் தேர்தல்கள்

1937 பிப்ரவரியில் மெட்ராஸ் மாகாணச் சட்டமன்ற குழுவுக்குத் தேர்தல்கள் நடத்தப்பட்டன முக்கியமான போட்டி நீதிக்கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில். காங்கிரஸ் ஆதரித்த இரண்டு கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்றனர். மற்ற எல்லா தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியைக் கம்யூனிஸ்டுகள் ஆதரித்தனர் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களில் மூவர்ண கொடியும் செங்கொடியும் ஒன்றாக ஏற்றப்பட்டன. தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சத்யநாராயணாவும் மற்றவர்களும் கிராமம் கிராமமாக, வீடு வீடாகச் சென்றனர். அது உண்மையில் ஒரு பெரும் அனுபவம். சில தருணங்களில் அவர்கள் அடித்துத் தாக்கப்பட்டனர். ஆளுநரால் தடைகள் ஏற்படுத்தப்பட்ட போதும் மெட்ராஸ் மாகாணத்தில் காங்கிரஸ் அரசாங்கம் அமைந்தது.

விரைவில் மாகாணக் காங்கிரஸ் குழுக்களுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. வலதுசாரியான எம்சி ராஜுவை எதிர்த்துப் போட்டியிட்டு மாகாணக் காங்கிரஸ் கமிட்டிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரசியல் பள்ளியை நீதிக்கட்சி தடை செய்தது! 

முதலில் நீதி கட்சியின் ரெட்டி நாயுடு பிரதமராக (இன்றைய முதலமைச்சர் பதவி) நியமனம் செய்யப்பட்டார். இக்காலத்தின்போது குண்டூர் கொத்தப்பட்டினம் என்ற இடத்தில் ஆந்திர மாகாண இளைஞர் அமைப்பும் சோசலிஸ்ட் கட்சியும் இணைந்து ஓர் அரசியல் பள்ளியை ஏற்பாடு செய்து நடத்தியது. சத்யநாராயணாவும்கூட அங்கே பாடம் நடத்தினார். மாவட்டக் காங்கிரஸ் தலைவர்கள் அதற்கு நிதி அளித்து உதவினர். அவர்கள் அதற்காக அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று நிதி திரட்டினர்.

இரண்டு வாரங்களுக்கு பிறகு நீதிக்கட்சி அரசு அந்தப் பள்ளியைத் தடை செய்தது! வகுப்பில் கலந்து கொண்டவர்கள் தடையை மீற அவர்கள் மீது தடியடி நடத்தினர். பலர் கைது செய்யப்பட்டனர், கூட்டங்கள் பரவலாக நடத்தப்பட்டன; விரைவில் காங்கிரஸ் கட்சி அதிகாரத்துக்கு வந்தது. தடை நீக்கப்பட்டு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

1937 இறுதியில் ஆந்திரா காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி ‘நவசக்தி’ என்ற பத்திரிகையை வெளியிட்டது. சத்யநாராயணா ஆசிரியர் குழுவில் ஒருவர். எனவே அவர் பெஸ்வாடா (விஜயவாடா) குடிபெயர்ந்தார். காங்கிரஸ் அமைச்சரவையின் முற்போக்கான நடவடிக்கைகளை அப்பத்திரிக்கை ஆதரித்தது, பிற்போக்கானவற்றை விமர்சித்தது. 

முக்கியமான கம்யூனிஸ்டுகள் ஆந்திரா காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராகவும், ஏன், அனைத்திந்தியக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும்கூட ஆனார்கள். சத்தியநாராயணா காங்கிரஸ் கட்சியின் 1938 ஹரிபுரா மற்றும் 1939 திரிபுரி மாநாட்டிலும் ஆந்திராவில் இருந்து கலந்து கொண்டார்.

(குண்டூர் மாவட்ட) மச்சாவரம் பாலம் என்ற இடத்தில் 1938ல் மற்றொரு அரசியல் பள்ளி நடத்தப்பட்டது. 300 பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.  வகுப்பில் ஏறத்தாழ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களில் பாதிக்கு மேல் அதில் கலந்து கொண்டனர். குண்டூர் காங்கிரஸ் தலைவர்கள் அனைத்து உதவிகளையும் செய்தனர். இந்த அரசியல் பயிற்சி பள்ளியிலும் கூட சத்தியநாராயணா பாடம் நடத்தினார்.

இரண்டாம் உலகப் போரின்போது

‘நவசக்தி’ நிறுத்தப்பட்டு பலரும் தலைமறைவாகச் சென்றனர். சத்யநாராயணா இரகசியக் கூட்டங்களையும்,  வெளிப்படையான கூட்டங்களையும் நடத்தினார். (இரண்டாவது உலகப் போர் குறித்து) அவர் விரிவான வரைபடத்தைத் தயாரித்து எந்தெந்த நாடுகளின் படைகள் எங்கே நிலை கொண்டுள்ளன என்ற போர் நிலைப்பாடுகளை விளக்கினார். அவர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் வேறு 200 பேருடன் அடைக்கப்பட்டார். 1941ல் சோவியத் யூனியன் (USSR) தாக்கப்பட்ட பிறகு சிறைக்குள் தீவிர விவாதங்கள் வெடித்தன.

அந்தச் சிறைவாசிகளுக்குள் ஒருவராக இருந்த மாபெரும் மார்க்சிய அறிஞர் கே பி கிருஷ்ணா அமெரிக்காவில் இருந்து திரும்பி இருந்தார்; மேலும் அவர் இந்தியத் தத்துவம் மற்றும் பிற பொருள்களில் உள்ள பொருள்முதல்வாத மற்றும் இயக்கவியல் குறித்து விரிவாக

எழுதியவர். சிறையில் நடந்த வகுப்புகளில் காரல் மார்க்சின் மூலதனம் குறித்து அவர் விளக்கினார். சோவியத் யூனியன் மீது நாஜிகள் தாக்குதலுக்குப் பிறகு அவர் சிபிஐ பின்பற்றிய அரசியல் பாதையில் (பொலிட்டிக்கல் லைன்) மாற்றத்தை ஆதரித்து ஓர் ஆவணம் தயாரித்து அதைச் சிறைக்கு வெளியே அனுப்பினார். பிந்தைய காலங்களில் கே பி கிருஷ்ணா வாழ்க்கை மற்றும் பணிகள் குறித்துச் சத்யநாராயணா எழுதினார். மெல்ல மெல்ல சிபிஐ மத்திய குழு பல பிரச்சனைகளில் கிருஷ்ணா ஆவணத்தில் கூறப்பட்ட நிலைப்பாட்டிற்கு வந்தது

விடுதலைக்குப் பின் சத்யநாராயணா மாவட்ட சிபிஐ பத்திரிக்கையான “பிரஜா சக்தி” ஆசிரியர் குழுவில் இணைந்தார். பிந்தைய நாள்களில் அவர் கட்சியின் 1942 பாதை அமலாக்க வழிமுறை குறித்துக் குறை கூறி விமர்சித்தார்.

அந்நாட்களில் ராயலசீமா பகுதியில் வங்கத்தைப் போல கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. கட்சி ஏராளமான நிவாரணப் பணிகளைச் செய்தது.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு

1946 தேர்தல்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றது, மாகாணச் சட்டமன்றத்திற்கு ஒருவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலுக்குப் பிறகு பிரகாசம் தலைமையில் மெட்ராஸில் புதிய அரசு அமைக்கப்பட்டது. அந்த நேரத்தில் கம்யூனிஸ்டுகள் செல்லப்பள்ளி ராஜாவை எதிர்த்து மாபெரும் விவசாயிகள் இயக்கத்தைத் தொடுத்தது. அரசு ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்தியது, அந்தச் சட்டம் பின்பு ‘பிரகாசம் அவசரச் சட்டம்’ என்று அறியப்பட்டது. சத்தியநாராயணாவும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். விடுதலை செய்யப்பட்ட பின் கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸ்காரர்களும் இணைந்து இந்தியாவின் சுதந்திரத்தைக் கொண்டாடினார்கள்.

தெலுங்கானாவில் ஆயுதப் போராட்டத்தைத் திரும்பப் பெற சத்தியநாராயணா ஆதரவாக இருந்தார்.

சர்வதேசக் கம்யூனிஸ்ட் இயக்கம் மீது நிலைப்பாடுகள் 

ரஷ்யாவில் ஜோசப் ஸ்டாலினின் ‘தன்னிச்சையான, அதிகாரத்துவ, மார்க்சிய விரோத மற்றும் அத்துமீறல்கள்’ குறித்த குருச்சேவின் பொதுவான விமர்சனத்தைச் சத்யநாராயணா ஆதரித்தார். சீனாவின் நிலைப்பாடுகளைச் சத்யநாராயணா கூர்மையாக விமர்சித்தார். அவர் நம் நாட்டின் நக்சலைட் இயக்கத்தை, ‘சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை நகலெடுத்துச் செயல்படும் அவர்களின் போக்கிற்காகவும் மற்றும் பரவலாக அக்கட்சியைப் புகழ்வதற்காகவும்’ கண்டித்தார். அவர்கள் பின்பற்றிய பாதை 1948 –50களின் ‘ஆந்திரா திசீஸ்’ கோட்பாட்டின் திருந்திய பதிப்புத் தவிர வேறில்லை என்றார் சத்யநாராயணா.

மறைவு 

கம்பம்பட்டி சத்யநாராயணா (சீனியர்) 1983 ஜனவரி 16ஆம் தேதி இயற்கை எய்தினார். அந்த நேரத்தில் அவர் ஆந்திரப் பகுதியின் கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு குறித்து எழுதுவதில் மும்மரமாக ஈடுபட்டிருந்தார்.

சத்தியநாராயணாவின் மனைவி கம்பம்பட்டி மாணிக்யாம்பா, வாழ்க்கை முழுதும் அவருடன் சேர்ந்து பணியாற்றினார். அவரும் பலமுறை கைது செய்யப்பட்டு இருக்கிறார்; அரசியல் பள்ளிகளில் கலந்து கொண்டிருக்கிறார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைத்த ஆந்திரா மாகாணப் பெண்கள் கூட்டமைப்பில் பணியாற்றிய அவர், சமூக மற்றும் அரசியல் வாழ்வில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளார். 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா நிறைவின்போது சத்தியநாராயணா – மாணிக்யம்பா இணையர் புகழ் வாழ்க என வாழ்த்துவோம்! 


--நன்றி :
நியூ ஏஜ் (2023 அக். 15 –21) 

--தமிழில் : நீலகண்டன்,

 என்எப்டிஇ, கடலூர்.

 

Monday, 12 January 2026

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு -- 95 ராதா மோகன் கோகுல்ஜி : 1925ல் சிபிஐ அமைப்பு மாநாடு ஏற்பாட்டாளர்களில் ஒருவர்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு -- 95


ராதா மோகன் கோகுல்ஜி :
1925ல் சிபிஐ அமைப்பு மாநாடு ஏற்பாட்டாளர்களில் ஒருவர்

–அனில் ரஜீம்வாலே

1925ல் கான்பூரில் நடந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு மாநாட்டின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக ராதா மோகன் கோகுல்ஜி பெயரை ஒரு சிலரே அறிந்திருப்பர். தற்போது அவரது பெயர் மறக்கப்பட்ட ஒன்று. இந்த மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் சத்திய பக்தா, மௌலானா ஹஜ்ரத் மொஹானி, அர்ஜுன் லால் சேத்தி மற்றும் பல முன்னணி செயல்பாட்டாளர்களுடன் அவர், எல்லா வகையிலும் மாநாட்டின் அமைப்பு மற்றும் வரவேற்புக் குழுவாகச் செயல்பட்டார்.

தொடக்க வாழ்க்கை 

ராதா மோகன் கோகுல்ஜி 1865 டிசம்பர் 15ல், பிரிட்டிஷ் இந்தியாவின் அவுத் அல்லது அயோத்தி (தற்போது உபியில் உள்ளது) அரசின் கீழ் அலகாபாத், கோபால் கஞ்ச் என்ற இடத்தில் பிறந்தார். அவரது மூதாதையர்கள் ராஜஸ்தான் ஜெய்ப்பூர் எஸ்டேட்டின் கேத்திரியிலிருந்து வந்தவர்கள். அவர்கள் ஒருக்கால் 250 ஆண்டுகளுக்கும் முன்னால் சொத்துக்களை இழந்த அல்லது வறுமை காரணத்தால் இடம்பெயர்ந்த அகர்வால் சிங்கானியாஸ் ஆவர். அவர்களில் ஒருவர் பத்ரி மகாராஜாவுக்கு பொடார் (Poddar, அதாவது ட்ரஷரர், பொக்கிஷதாரர்) ஆக இருந்தார். (பொடார் என்பது இந்தியாவில் இருந்து வந்த மார்வாரி அகர்வால் மத்தியில் காணப்படும் குடும்பப் பெயரும் மற்றும் சில வட இந்திய மாநிலங்களில் பனியா வணிகச் சமூகத்தினரின் இனச் சிறப்புப் பெயரும் ஆகும்.) அந்த இடம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக 1857ல் கிளர்ந்து எழுந்து, அந்த இடத்தைப் பல நாட்கள் பிடித்து வைத்திருந்த ராஜா ராணா பேணி மாதவ் சிங் உடன் தொடர்புடையது. அவருடைய தந்தை லாலா கோகுல் சந்த். 

ராதா மோகன் ஆறு வயதில் அருகில் இருந்த புத்த விகாரில் தொடக்கக் கல்வி பெற்று அங்கு இந்தி மொழி கற்றார். இதைத் தொடர்ந்து மௌல்வி ஃபிதா ஹுசைன் அவருக்குக் கல்வி கற்பித்தார். பின்னர் அவரது தந்தை அலகாபாத் மாவட்ட  ஷஹ்ஜாத்பூருக்கு வந்தார்.  பிறகு படிப்புக்காகக் கான்பூருக்கு மாறி அவரது மாமாவுடன் தங்கினார். 13 வயதில் ராதா மோகனுக்குத் திருமணம் நடந்தது. 1878ல் ஆக்ராவில் உள்ள செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் உயர்கல்வி கற்றார். அங்கு அவர் ஆங்கிலம் படித்தார். 

ஒருக்கால் ராதா மோகன் அவரது தந்தையின் பெயரை இணைத்து ராதா மோகன் கோகுல்ஜி ஆகியிருக்கக்கூடும். 1984ல் அவரது தந்தையின் சொந்த வணிகம் நொடித்துப் போனதால் அவர் அகராவைவிட்டு நீங்க வேண்டியதாயிற்று. ஏதாவது வேலையைத் தேடி அலகாபாத் திரும்பினார். மாதம் இருபது ரூபாய் சம்பளத்தில் கணக்குத் துறையில் பழகுநர் பணி கிடைத்தது. ஆனால் ஒரு பிரிட்டிஷ் ஊழியருடன் மோதல் ஏற்பட்டு அவரை அடித்தார், பணிக்குச் சேர்ந்த 9 மாதத்திலேயே வேலையை விட்டு விலகினார். இனி பிரிட்டீஸ்க்குக் கீழ் வேலை செய்யக்கூடாது என்று சபதம் செய்து வீட்டுக்குச் சென்றார். தனது எல்லாச் சான்றிதழ்கள்ளையும் தீயில்  எரித்தார். இது நடந்தது 1886 ஜூலை மாதம். ஆக்ராவில் சமூக சீர்திருத்தப் பணியை மேற்கொண்டார். ஆக்ராவில் ஆரிய சமாஜ் அமைப்பில் நடந்த ஒரு முஸ்லீம் ‘சுத்திகரிப்புச்: சடங்’கில் (மீண்டும் தாய் மதத்திற்கு மாறி திரும்ப வருபவர்களுக்கு நடத்தப்படும் சடங்கு, ஆரிய சமாஜ் தொடங்கிய இயக்கம்) - அந்தச் சடங்கில் இனிப்புகள் வழங்கப்படுவது வழக்கம். இதனால் பழமைவாத மக்கள் வெறுப்புற்றனர். ஆனால் ராதா மோகன் அந்த இனிப்புச் சாப்பிடுவதை வற்புறுத்தினார்.

ஆரிய சமாஜ் சார்பாக விதவை மறுமணத்திற்கு ஆதரவாகவும் அவர் பிரச்சாரம் செய்தார். 

1885ல் அலகாபாத்தில் உள்ள ‘சுதேசி வியாபாரக் கம்பெனி:யின் ரூ 25 மதிப்புள்ள பங்கினை அவர் பெற்றார். அது முதலாக அவர் எப்போதும் சுதேசி ஆடைகளையே அணிந்தார். 

காங்கிரஸ் செல்வாக்கின் கீழ்

பம்பாயில் இந்தியத் தேசியக் காங்கிரஸ் நிறுவப்பட்டது, 1885ல். அது குறித்த விளக்கக் கூட்டம் அலகாபாத் ஜான்சன்கஞ்ச் ஷிவ்ராகான் பாடசாலையில் பண்டிட் சுந்தர்லால் தலைமையில் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பண்டிட் மதன் மோகன் மாளவியா உரையாற்றினார். அதில் ராதா மோகன் உட்பட சுமார் 15 பேர் கலந்து கொண்டனர். அவர் மனதில் அந்தக் கூட்டம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் வேலை தேடி ரிவா என்ற இடத்திற்கு அவர் மாற வேண்டியதாயிற்று. ஆனால் மலேரியா பாதிப்புக்கு ஆளாகி கான்பூர் திரும்பினார். அங்குப் பண்டிட் பிரதாப் நரைன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு நடத்தப்பட்ட ‘பிராமின்’ என்ற இதழில் பணியாற்றத் தொடங்கினார். 

கல்கத்தாவில் 

பணி நிமித்தமாகக் கல்கத்தா சென்ற அவர் சில மார்வாரி பையன்களுக்கு டியூஷன் எடுத்தார். மேலும் அவர் வணிகச் சமூகத்தில் இணைந்தார்; ஜுகல் கிஷோர் பிர்லா உடன் அறிமுகம் ஏற்பட்டது --அவர் ஆரிய சமாஜத்தின் கீழ் ஏராளமான சமூகச் சீர்திருத்தப் பணிகளைச் செய்து கொண்டிருந்தார். ராதா மோகன் 1908ல் ‘சத்திய சனாதன் தர்மம்’ என்ற பெயரிலான ஒரு இதழை வெளியிடத் தொடங்கினார். அதன் மூலம் ஏராளமான சீர்திருத்தப் பணிகளைச் செய்தார். அது ‘ஸ்ரீ சனாதன தர்மம்’ என்ற பழமைவாதத்திற்கு எதிரான ஒரு சீர்திருத்தவாதியின் பதிலாக அமைந்தது. 

 லஜபதி ராயைப் பின்பற்றுபவர்

அவர் ஏராளமான தேசியவாத நூல்களைப் படித்தார், லஜபதி ராய் கருத்துக்களின் செல்வாக்கின் கீழ் வந்தார். பின்னர் அவர் லாலா லஜபதி ராய் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். 

இதன் மத்தியில் முதலில் அவர் தனது மனைவியை இழந்தார், பின்பு அவரது மகளையும் பிறகு 1901ல் 16வயதேயான அவரது ஒரே மகனையும் இழந்தார். மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அவர் வாழ்க்கை  மோசமாக இருந்தது. மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்தப்பட்டார்; ஆனால் அவரோ ஒரு கைம்பெண்ணை மட்டும்தான் மணப்பேன் என்றார். யாரும் அதற்குச் சம்மதிக்கவில்லை. பின்பு அவர் ஒருபோதும் மீண்டும் மணம் செய்து கொள்ளவில்லை. இந்தக் காலகட்டத்தின்போது முதலில் அவர் குர்கானுக்கும் பின்னர் மதுராவுக்கும் சென்றார். 

ஏராளமாக எழுதினார்

ராதா மோகன் 1908ல் தேஷ் கா தன்’ (தேசத்தின் செல்வம்) என்ற நூலை எழுதினார். அந்நூல் காலனியச் சுரண்டலைக் கூர்மையாக விமர்சனம் செய்து எழுதப்பட்ட  காலனியப் பொருளாதாரத்தின் மீதான ஆழமான விமர்சன நூல். அவர் தொழிலாளர்களின் பங்கை வலியுறுத்தினர். சமூகத்தை மேம்படுத்த சமூக நல நடவடிக்கைகளை விவரித்து ‘நீதி தர்ஷன்’என்ற நூலை 1912ல் எழுதினார். பின்னர் அவர் ‘கம்யூனிசம் க்யா ஹை’ (கம்யூனிசம் என்றால் என்ன?) என்ற புகழ்பெற்ற நூலை எழுதினார். ககோரி (ரயில் கொள்ளை) நிகழ்வை அடுத்து அது தொடர்பாக ராம் பிரசாத் பிஸ்மில், அஸ்வகுல்லாகான் மற்றும் பிறர் கைது செய்யப்பட்டனர் (ரயிலில் கொண்டு செல்லப்பட்ட பிரிட்டிஷ் அரசின் கஜானா பணத்தை இந்தியப் புரட்சியாளர்கள் உபி அருகில் உள்ள ககோரி ரயில்வே நிலையத்தில், தங்கள் புரட்சிகர நடவடிக்கைகளுக்காக 1925 ஆகஸ்ட் 9ல், துணிச்சலாகக்  கொள்ளை அடித்தனர். இந்நிகழ்வே ககோரி சதி வழக்கு.) நடைமுறை தகவல்கள் மற்றும் ஞானத்தின் அடிப்படையில் அந்த ஹிந்துஸ்தான் குடியரசு அசோசியேசன் (HRA) அமைப்பை முழுமையாக அங்கீகரித்தது ராதா மோகன்தான். அவர் ஜான்சியில் இருந்த சந்திரசேகர் ஆசாத்திடம் விஜய்குமார் சின்ஹாவை அனுப்பி அவரைத் தன் வீட்டுக்கு அழைத்தார். அவர் சசீந்திரநாத் சன்யால் மற்றும் பிற அத்தகைய புரட்சியாளர்களுடன் தீவிரத் தொடர்பில் இருந்தார். 

ராதா மோகன் பெண்கள் இயக்கத்திலும் கூட ஆழமான தடம் பதித்தார். பெண்கள் உரிமைக்கான பெரும் ஆதரவாளரான அவர், கைம்பெண்கள் மறுமணத்திற்காகவும் குழப்பத்தை ஏற்படுத்தும் பழமைவாதத்திற்கு எதிராகவும் ஓய்வின்றி உழைத்தார். அவருடைய கருத்துக்களும் மற்றும் பிறரது கருத்துக்களும் இணைந்து 1917ல் ‘பாரதிய மகிளா சமிதி’ அமைப்பை ஏற்படுத்துவதில் பங்களிப்புச் செய்தன. 

பகத்சிங்கும் கூட அவரைச் சந்தித்து, பின்னர் கம்யூனிசம் குறித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்து வந்தார். 1924ல் ராதா மோகன் இந்தியில் எழுதிய ‘கம்யூனிசம் என்றால் என்ன?’ என்ற நூல் மிகப் பிரபலம் அடைந்தது. கான்பூரில் உள்ள பிரம்மன் அச்சகத்தில் சத்திய பக்தா அந்நூலைப் பதிப்பித்து வெளியிட்டார். அந்நூல் கம்யூனிசக் கோட்பாடுகள், ரஷ்யப் புரட்சி, அதன் தியரி மற்றும் செயலாக்கத்தின் தகவல்களை மிக விரிவாகப் பேசியது. அக்காலத்தில் இந்தப் புத்தகம் புரட்சியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் பெரும் பங்காற்றியது. பின்பு இந்நூலின் சில 150 பிரதிகளை ஆக்ராவில் போலீஸ் கண்டறிந்து அவற்றைக் கைப்பற்றியது. அவற்றைப் பல ஆண்டுகளுக்குப் பிறகே  மீட்டெடுக்க முடிந்தது.

புரட்சியாளர்களுக்கு ஆயுதங்கள், வெடி மருந்துகள் மற்றும் பணத்தையும்யும்கூட அவர் ஏற்பாடு செய்து தந்தார்.

காந்திய இயக்கத்தில் 

ராதா மோகன் 1921 ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார். அவர் பண்டிட் சுந்தர்லால் செல்வாக்கின் கீழ் நாக்பூர் சத்தியாகிரகம் அல்லது அ-சகயோக் (Asahayog சமஸ்கிருதம், ஒத்துழைக்காமை) ஆசிரமத்தில் வாழத் தொடங்கினார்.

இதன் மத்தியில் அவர் (இத்தாலியின் ஐக்கியம் மற்றும் சுதந்திரத்திற்குப் பாடுபட ‘இளம் இத்தாலி’ என்ற புரட்சிகர அமைப்பை உருவாக்கிய) மாஜினி, கரிபால்ட்டி, நெப்போலியன் போனபார்ட் மற்றும் பிறர் குறித்த ஏராளமான வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதினார். நெப்போலியன் வாழ்க்கை குறித்த நூல் நகரி பிரச்சாரனி சபாவுக்காக எழுதப்பட்டது. அவர் சிறிது காலம் இந்து மகாசபா உடன் இணைந்திருந்தார். 

1925 கான்பூரில் சிபிஐ கட்சி அமைக்கப்பட்டதும் கோகுல்ஜியும்

1923ல் நாக்பூரில் இருந்து ‘பிராண்வீர்’ (துணிச்சலான போர்வீரன்) இதழைக் கொண்டு வருவதில் ராதா மோகன் கோகுல்ஜியுடன் சத்திய பக்தா இணைந்தார். பிராண்வீர் இதழ், கான்பூரில் சத்திய பக்தாவால் அமைக்கப்பட்ட ‘இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி’யின் முதலாவது காலாண்டு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் சத்திய பக்தா செயலாளர் என்று கையெழுத்திட்டிருந்தார். கட்சியில், பெரும்பாலும் கான்பூர் மற்றும் உபியில் இருந்து, 78 உறுப்பினர்கள் இருந்ததாக அந்த அறிக்கை கூறியது.  அதன் புகழ்பெற்ற உறுப்பினர்களில் மௌலானா ஹஸ்ரத் மொகானி, ராதா மோகன் கோகுல்ஜி, ராமசங்கர் அவஸ்தி (வர்த்தமான் இதழ ஆசிரியர்), ராம் கோபால் வித்யாலங்கர் (பிரான்வீர் இதழ் ஆசிரியர்) மற்றும் பலர் அடங்குவர்.

ராதா மோகன், கம்யூனிஸ்ட் முதல் மாநாட்டின் முன்னணி அமைப்பாளர்களில் ஒருவராகசத்திய பக்தா, மௌலானா ஹஸ்ரத் மொகானி [இந்த வரலாற்றுக் கட்டுரைத் தொடரில் சத்யாபக்தா வரலாறு வரிசை எண் 57லிலும் மற்றும் மௌலானா ஹஸ்ரத் மொஹானி வரலாறு வரிசை எண் 47லிலும் இடம் பெற்றுள்ளது –மொழிபெயர்ப்பாளர் இணைப்புமற்றும் பிறருடன் –விளங்கினார் என்பது பரவலாகப் பெரிதும் அறியப்படவில்லை. 1924ல் அவர் ‘இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி’யில் பணியாற்ற சத்திய பக்தாவால் கான்பூருக்கு அழைக்கப்பட்டார். கான்பூரில் அவர் தங்கியிருந்தபோது மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், (‘சொத்துரிமை என்பது திருட்டு’ என்ற பிரெஞ்ச் சோசலிசவாதியும் தத்துவவாதியும் அராஜகத் தத்துவத்தின் முன்னோடிகளில் ஒருவருமான) புரூதோன், (ரஷ்யப் புரட்சியாளர், அராஜகத் தத்துவ ஆதரவாளரான) பக்குனின் முதலானவர்களை ராதா மோகன் படித்தார். அவர் உறுதியான பகுத்தறிவாளரானார். இக்காலகட்டத்தில், ராதா மோகன் கம்யூனிசத்தின் பல அடிப்படை கோட்பாடுகளை ஒருங்கிணைத்து உட்கிரகித்தார். அவர் ஏற்கனவே ‘கம்யூனிசம் என்றால் என்ன?’ என்ற நூலை, மார்க்சியக் கோட்பாடுகளுக்கான விளக்கங்களுடன், எழுதியவர்.

ராதாமோகன் குறித்துப் பல அறிஞர்கள்

ராதா மோகன் குறிப்பாக இலக்கியம் மற்றும் மார்க்சியத்தின் மீதும் ஏராளமான நூல்களை எழுதினார். புத்தகங்கள் மட்டுமல்லாது பல இதழ்களுக்கும் ஆசிரியராக இருந்தார்.

முன்னணி இலக்கியப் பிரமுகராக அவர் பரவலாக அறியப்பட்டார். கவிஞர் நிராலா அவரைத் தனது முதல் அரசியல் குருவாகக் கருதினார். [இந்தி இலக்கியத்தின் 1910களின் நடுப்பகுதியிலிருந்து 1940களின் முற்பகுதி வரை பரவியிருந்த மாய-காதல் வாதத்தின் சகாப்தமே சாயவத் இயக்கம் எனப்படுகிறது. இது அதற்கு முந்தைய போதனை வாதம் மற்றும் அரசவை மரபுகளுக்கு எதிர்வினையாகத் தோன்றியது. அந்த இயக்கத்தின் முக்கிய நான்கு தூண்களாக ஜெய்சங்கர் பிரசாத், ‘நிராலா’ என்ற புனைப்பெயர் கொண்ட சூரியகாந்த் திரிபாதி, சுமித்ரானந்தன் மற்றும் மகாதேவி வர்மா குறிப்பிடப்படுகிறார்கள். இவர்களின் கவிதைகளில் காதலும் மனிதநேயமும் சிறப்பிடம் பெறுகின்றன. --கூடுதல் இணைப்பு]

அவரைப் பற்றி எழுதும்போது பிரேம்சந்த், அவரை ‘நவீன சார்வாகத் தத்துவ இயலாளர்’ (நவீன லோகாயுத/ பொருள் முதல் வாத, பகுத்தறிவாளர்) என்று கூறுகிறார். பிரேம்சந்த்

கருத்தின்படி மதம், சமூகம், ஒழுக்க நெறி மற்றும் அரசியல் பிரச்சனைகள் மீது அச்சமற்று எழுதிய சிலரில் அவரும் ஒருவர். அவர் அனைத்து வகையான சமூக மற்றும் மத பழமைவாதத்திற்கு/ இருண்மைவாதக் கருத்துக்கு எதிரானவர். அவர் ‘மாதுரி’ என்ற இந்தி இதழில் தொடர்ச்சியாக 8 ஆண்டுகள் “கடவுளை வெளியே துரத்துதல்” (‘Expulsion of God’) என்று தொடங்கிய தொடரை எழுதினார். 

டாக்டர் ராம் விலாஸ் சர்மா கூற்றுப்படி, ராதா மோகன் விவசாயத் தொழிலாளர்களுக்காக, அவர்கள் உழுது பயிரிடும் நிலம் அவரவர்க்கே சொந்தமாக வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார். மேலும் அவர் ஏகாதிபத்தியம் மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராகத் தீவிரமாக இருந்தார். ராதா மோகனின் வாழ்க்கை கம்யூனிச இயக்கத்தின் இந்தக் கட்டத்துடன் மிக நெருக்கமாக பிணைந்து இருந்தது என்று விஜயகுமார் சின்ஹா எழுதினார். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அந்தக் கட்டம் குறித்துத் தனியாக, குறிப்பாக ஆங்கிலத்தில், வெளியிட வேண்டும் என்ற யோசனையை அவர் தெரிவித்தார்.

ஆக்ரா பல்கலைக்கழகத்தின் தேவி தத் ஜோஷி கூற்றுப்படி இந்தியாவில் கம்யூனிசக் கருத்துக்களை இந்தி மொழியில் பெருந்திரள் மக்கள் மத்தியில் பரப்பியவர்களில் ராதா மோகன் முதலாமவர். புகழ்பெற்ற புரட்சியாளர் பகத்சிங்கின் தோழரும் நன்கறியப்பட்ட

கம்யூனிஸ்ட்டுமான ஷிவ் வர்மா, சத்திய பக்தா கூறியதை மேற்கோள்காட்டி கூறினார்: ராதா மோகனும், மௌலானா  ஹஸ்ரத் மொகானியும் நடைமுறையில் எல்லா வகையிலும் கான்பூர் கம்யூனிஸ்ட் அமைப்பு மாநாடு வெற்றி பெறுவதற்கு ஆக கூடுதலாகப் பங்களிப்புச் செய்தனர். ராதா மோகன் நூலகத்திலிருந்துதான் ஷிவ் வர்மா, காரல் மார்க்சின் கம்யூனிஸ்ட் அறிக்கையை எடுத்துச் சென்றார்; சந்திரசேகர் ஆசாத்துக்குப் படித்துக் காட்டினார்.

சிபிஐ-ன் கான்பூர் அமைப்பு மாநாடு தேர்ந்தெடுத்த மத்திய செயற்குழுவில் ராதா மோகன் கோகுல்ஜி ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர். புதிய மத்தியச் செயற்குழுவின் முதல் கூட்டம் டிசம்பர் 28ல் நடைபெற்றது. அது பல்வேறு மாகாணங்களுக்குப் பொறுப்பாளர்களை முடிவு செய்தது. ராதா மோகன் கோகுல்ஜி மற்றும் முசாபர் அஹமத் வங்கத்தின் பொறுப்பாளர் ஆக்கப்பட்டார்கள். அவரவர் மாகாணங்களுக்கான  மாகாணக் குழுக்களை அமைத்திட, அவர்கள் முறையே அம்மாகாணச் செயலாளர்கள் ஆக்கப்பட்டார்கள். 

அமைப்பு ரீதியான கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் சிபிஐ உடன் அவரது தொடர்பு சிறிது காலமே நீடித்தது. அவருக்குக் கலவையான கருத்துக்கள் இருந்தன. 1926க்கு பின் அவர், சத்திய பக்தாவின் கான்பூர் குழுவின் சில உறுப்பினர்களுடன் சேர்ந்து ‘இந்தி சாம்யவாதி கட்சி’யை (இந்தி கம்யூனிஸ்ட் கட்சி) அமைக்க முயன்றார். எதார்த்தத்தில் இயல்பாகவே இது நீடிக்கவில்லை. பின்னர் அவர் சமூகப் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். 

ஷிவ் வர்மாவுடன் தொடர்பு 

1926 டிசம்பரில் கோகுல்ஜி முதன் முறையாகப் புகழ்பெற்ற பகத்சிங் புரட்சியாளர்கள் குழுவைச்  சேர்ந்த ஷிவ் வர்மாவை விஜயகுமார் சின்ஹா மூலமாகச் சந்தித்தார். கோகுல்ஜி அந்நாட்களில் இரு சிறிய அறைகள் மட்டுமே கொண்ட தொழிலாளர்களின் அடுக்கக் குடியிருப்புப் (chawl type) பகுதியில் தங்கி வந்தார். தொழிலாளர்கள் வழக்கமாகக் கீழ்த்தளத்தின் அறைகளில் தங்குவர், கோகுல்ஜி மட்டும் மேல் தளத்தில் தங்கினார். காலையில் ஷிவ் வர்மாவும் விஜய்யும் வந்தபோது அவர் காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்தார். ஷிவ் ஏற்கனவே அவரை 1925ல் கான்பூர் காங்கிரஸ் அமர்வில் சந்தித்துள்ளார். காலை இந்த முதல் சந்திப்பு ஷிவ் வர்மாவுக்கு ஏமாற்றம் தருவதாக இருந்தது. அடுத்த நாள் காலை சந்திப்பு மிக உற்சாகமளிப்பதாக அமைந்தது; கோகுல்ஜி ஏராளமான கேள்விகளை, தனிப்பட்ட வாழ்வு குறித்தும் அரசியல் ரீதியான கேள்விகளையும், எழுப்பினார். ‘கம்யூனிசம் கியா ஹை?’ புத்தகத்தை அவரிடம் தந்தார்.

ஷிவ் வர்மா முன்பு, ராம் சந்திர வர்மா 1918ல் எழுதிய ‘சாம்வாத்’ (கம்யூனிசம்) உள்ளிட்ட, மார்க்ஸியம் குறித்த ஒன்று அல்லது இரண்டு புத்தகங்களைப் படித்துள்ளார்.கோகுல்ஜியின் புத்தகம் மிக எளிமையாகவும் கற்றுத் தருவதாகவும் இருந்தது.  அவரது புத்தகங்களை ஷிவ் வர்மா திருப்பித் தரும்போது, கோகுல்ஜி அவரிடம் ‘கம்யூனிசம் என்றால் என்ன’ என்பது உள்ளிட்ட ஏராளமான கேள்விகளைக் கேட்டார்.

அவர்களின் பரஸ்பர உறவும் தொடர்பும் அதிகரித்தது, ஷிவ் வர்மா உறுதியான மார்க்சியவாதியாகவும் கம்யூனிஸ்ட் ஆகவும் ஆனார். கோகுல்ஜி மார்க்சியத்தின் மீது அவரது ஆசிரியரானார். கோகுல்ஜி  வீட்டில்தான் சந்திரசேகர ஆசாத்தை ஷிவ் முதன் முறை சந்தித்தார். மேலும் ஷிவ் வர்மா மற்றும் சிலருக்கு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கை துப்பாக்கிகளை ராஜஸ்தானில் இருந்து வாங்குவதற்குக் கோகுல்ஜி உதவினார். அவரது நண்பர் ஃபதேக் பகதூர் தலையணையில் மறைத்து வைத்துக் கைத்துப்பாக்கிகளைக் கொண்டு வந்தார். ஒரு துப்பாக்கி மணி பானர்ஜியால் அகமதாபாத் சிஐடி காவல் கண்காணிப்பாளர் பானர்ஜியைச் சுடுவதற்குப் பயன்படுத்தப்பட்டது; மற்றொன்று (லாகூரில் ‌1928 டிசம்பர் 17ல் பிரிட்டிஷ் காலனிய காவல் அதிகாரி) சாண்டர்ஸ்-ஐ  கொல்வதற்குப்  பகத்சிங்கால் பயன்படுத்தப்பட்டது. அதே கைத்துப்பாக்கி மத்திய சட்டமன்றத்தில் வெடிகுண்டு வீசிய வழக்கில் பகத்சிங்கிடமிருந்து கைப்பற்றப்பட்டது.

மேலும் கோகுல்ஜி ராஜா மகேந்திர பிரதாப்பைச் சந்திக்க நேபாள் பகுதிக்கு விஜயம் செய்தார், ஆனால் அவரைச் சந்திக்க முடியாமல் போனது.

 மீரட் சதி வழக்கின் போது போலீஸ் ஆக்ராவில் கோகுல்ஜி யின் இளைய சகோதரர் வீட்டைச் சோதனையிட்டது. அவர்களுக்குக் கம்யூனிசம் க்யா ஹை? என்பதன் பிரதிகளைத் தவிர்த்து வேறு எதுவும் கிடைக்கவில்லை. ராதா மோகன் நகருக்கு வெளியே இருந்தார். 1930ல் கைது செய்யப்பட்டு கான்பூர் சிறைக்கு அனுப்பப்பட்ட அவர், ஹமிர்ப்பூரில் அவரது செயல்பாடுகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வரையறை கட்டுப்பாடுடன் 1932ல் விடுதலை செய்யப்பட்டார். வயிற்றுப் போக்கு முதலான வயிறு உபாதைகள் காரணமாகச் சிறையில் அவர் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். இந்தப் பாதிப்புகள் 1935ல் அவர் இறக்கும் வரை நீடித்தது. அவர் பிராண்வீர், மத்வாலா, மனோரமா, மகா ரதி, நவ யுகம் முதலான இதழ்களில் தீவிரமாக எழுதிக் குவித்தார். 

இறுதி நாட்கள் 

ராதா மோகன் கான்பூருக்கு அருகில் உள்ள ஹமீர்பூர் மாவட்டத்தின் போகி என்ற கிராமத்தில் தனது இறுதி நாள்களைக் கழித்தார். 1933ல் சுவாமி பிரம்மானந்த் மற்றும் பிருந்தாவன் சிங் இருவரும் பசுமை சூழ்ந்த சிறு குன்றுகளுக்கு மத்தியில் சிறு பள்ளியைத் தொடங்கினர். உண்மையில் அந்தப் பள்ளி பல்வேறு சமூக மற்றும் புரட்சிகர நடவடிக்கைகளை மறைப்பதற்கான திரை. இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலை மறைவு புரட்சிகரப் பிரச்சாரம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆயுதங்கள் திரட்டப்பட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டன. பின்னரே போலீஸ் அந்த இடத்தைக் கண்டுபிடித்தது.

அவரது 70வது வயதுகளில் ராதா மோகன் அவரைச் சுற்றி ஓர் இளைஞர் படையை அமைத்தார். அருகிலுள்ள கிராமங்களுக்கு விஜயம் செய்து கல்வி கற்பிக்க மாணவர்களை ஒன்று திரட்டினார். இலக்கியங்களுக்கு மத்தியில் அவர்களுக்குப் பண்டித நேரு எழுதிய “ஒரு தந்தையிடமிருந்து  மகளுக்குக் கடிதங்கள்” நூலையும் கற்பித்தார். பண விடை அஞ்சல் மூலம் மக்கள் அவருக்குப் பணம் அனுப்பி உதவினர். பல மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளியிலேயே தங்கினார், உணவு சமைத்துக் கூட்டாக உண்டனர்.

ராதா மோகன் நடவடிக்கைகளில் காவல்துறை சந்தேகம் அடைந்தது. ஒரு பாபா சாமியார் வேடத்தில் இளைஞர்களைத் திரட்டி குண்டு தயாரிப்பில் பயிற்சி அளிப்பதாக அறிக்கை அனுப்பப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் அவரை அழைத்தார். உடல்நலம் இல்லாதபோதும் மோசமான சாலை வழியே ஒரு சிறு குதிரை அல்லது மட்டக்குதிரையில் (pony) சென்றார். திரும்பி வரும்போது வயிற்றுப்போக்கு மற்றும் சீதபேதியால் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டார்.

பத்து நாட்களுக்குப் பிறகு 1935 செப்டம்பர் 3ம் தேதி அவர் மரணமடைந்தார். அவர் உறுதியான கடவுள் மறுப்பாளர், ஆனால் மரணமடையும் நேரத்தில் ‘ஹே ராம்’ என்று அவர் உதடுகள் உச்சரித்தன. அவர் கோகி (Khohi) அருகில் உள்ள வயல் வெளியில் அடக்கம் செய்யப்பட்டார். தற்போது இந்த இடம் இடிந்து சிதைந்த நிலையில் உள்ளது. அவருடைய பெரிய புகைப்படத்துடன் அவரது மறைவு செய்தி ‘தைனிக் விஸ்வமித்ரா, (தினசரி உலக நண்பன்) என்ற ஹிந்தி நாளிதழ் வெளியிட்டது.

அத்தகைய ஆளுமை மிக்க மனிதர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதுடன் இணைந்திருந்தார் என்ற பெருமிதத்துடன். கட்சி நூற்றாண்டின் இத்தருணத்தின்போது ராதா மோகன் கோகுல்ஜி-யின் நினைவைப் போற்றுவோம்! 


–நன்றி : நியூ ஏஜ் (2023 அக். 1 –7)

–தமிழில் : நீலகண்டன்,

என்எஃப்டிஇ, கடலூர்

 

Monday, 8 December 2025

இந்திய அரசியலமைப்புச் சட்டமும் சாதியும்

 


19ம் நூற்றாண்டு வருகையிலிருந்தும், கல்வியும் விழிப்புணர்வும் பரவியதிலிருந்தும்

சாதியின் பெயரால் இழைக்கப்பட்ட அநீதி கவனக் குவிப்புப் பெற்றது. பெரியார், மகாத்மா
பூலே மற்றும் டாக்டர் அம்பேத்கர் போன்ற மற்றும் பிற சீர்திருத்தவாதிகள் இந்தச் சாதி அநீதி பிரச்சனை மீது கவனக் குவிப்பை ஏற்படுத்தி, சாதியற்ற சமூகத்தைக் கோரி அதற்காகப் பாடுபட்டனர்.

இந்திய மார்க்சியவாதிகளும் கம்யூனிஸ்டுகளும்கூட சமத்துவ அடிப்படையிலான சமூகக் காட்சிப் படிவத்தைச் சித்தரித்து அதில் சாதிக்கு இடமில்லை என்று முன்வைத்தனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது 2015 புதுச்சேரி கட்சி காங்கிரஸ் மாநாட்டில் ஒரு தீர்மானத்தை வடிவமைத்து நிறைவேற்றியது: அந்தத் தீர்மானம், சமத்துவம் மற்றும் சம வாய்ப்பு அடிப்படையிலான சமூகத்தை நிறுவ, சாதிப் போராட்டம் மற்றும் வர்க்கப் போராட்டம் இரண்டும் ஒன்றாக இணைந்து செல்ல வேண்டியது குறித்துப் பேசியதுடன், அத்தகைய சமுதாயம் ஒரு சோசலிச அமைப்பில் மட்டுமே சாத்தியம் எனப் பிரகடனம் செய்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டமும் கூட அத்தகைய சமூகத்தை எண்ணத்தில் கொண்டிருந்தது. 

எனினும் 1949ல் அமைக்கப்பட்ட நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் அதனைச் சந்தித்தது. எதார்த்தத்தில் அத்தகைய சமூகம் ஒன்று இல்லை. அத்தகைய சமூகத்தை அமைப்பதற்குச் சமூக நீதிக் கருதுகோள் கட்டாயம் என்பதை உணர்ந்தது. இந்திய அரசியலமைப்பை வரைவதும் முக்கியமான நடவடிக்கை என்பதால், எஸ்சி/ எஸ்டி சமூகத்தினருக்கு அதில் இட ஒதுக்கீடு அளிப்பது போன்ற உறுதியான நேர்மறை நடவடிக்கைகளை முன்மொழிந்தது. அதன் பின்னர் இது பிற பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) சமூகத்தினருக்கும் நீட்டிக்கப்பட்டது.

சாதி என்பது ஆயிரம் வருடங்களுக்கு மேலாக நிலவி வருவது மட்டுமின்றி, மதத்தாலும் நியாயப்படுத்தப்பட்டதால் சாதி, கருத்தியல் மட்டம் என்பதைத் தாண்டி (ஆதிக்கம் முதலிய) கள எதார்த்த சக்தி ஆனதுடன், மனித மனத்தையும் கெட்டியாகப் பற்றிப் பிடித்துள்ளது. இன்று, மேல் சாதியினர் மட்டுமின்றி எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி போன்ற பிற சாதிகளைச் சார்ந்தவர்களும்கூட இந்தச் சாதி ரீதியான சிந்தனைக்குப் பலியாகி வருவதை நாம் காண்கிறோம். எனவே இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தப் பிரச்சனையைச் சமாளித்துக் கையாள வேண்டி வந்தது.

சாதாரணமாக சாதி வாதத்தால் நியாயப்படுத்தப்பட்டது. பிற்படுத்தப்பட்ட சாதி என்றழைக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்ததன் மூலம் இந்த மெரிட் தகுதி மாயை நொறுக்கப்பட்டது; மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் கடந்த 75 ஆண்டுகள் அனுபவம் இந்த அம்சத்தை நிரூபிக்கிறது. ஆனால் அது சமூகம் முழுமையாலும்  ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். ஒரு கருத்து மக்கள் கூட்டத்தைக் கவ்வி பிடிக்கும்போது அது எதார்த்தச் சக்தியாகிறது என்றார்

காரல் மார்க்ஸ்; மக்கள் மனதைப் பிடித்துள்ள இந்தச் சாதிப் பிடிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டால்தான், அது ஆதிக்க எதார்த்த சக்தி என்ற நிலையிலிருந்து அகற்றப்படும்; அதன் மூலமே சாதியக் கருத்தியலை எதிர்க்கும் யதார்த்தக் களநிலைகளை ஏற்படுத்த முடியும்.

இட ஒதுக்கீட்டின் மூலம் அதற்குத் தீர்வு காண  முயற்சிக்கப்பட்டது. ஒரு சமூகத்தில் ஒரு தனிநபருக்குக் கண்ணியம் மற்றும் சம வாய்ப்பு இருந்தால் மட்டுமே, மற்றும் அவன் அல்லது அவள் சாதி, மதம், பாலினம், மொழி முதலான அடிப்படைகளில் பாரபட்சம் இல்லாமல் பணியாற்றுவதற்கும் வாழ்வதற்கும் முடிந்தால் மட்டுமே சாதி இல்லாத சமூகம் அமைக்கப்பட முடியும் என்ற உண்மையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் உணர்ந்திருந்தது. 

சாதிக் சமூகத்தின் தற்போதைய சவாலும், சாதியற்ற சமூகத்தை எதிர்காலத்தில் நிர்மாணிப்பதும் இந்திய அரசியலமைப்பால் முன்மொழிக்கப்பட்டது. இது நமது அரசியலமைப்பின் சிறப்பு; இதனை நாம், நவம்பர் 26ல் வர இருக்கின்ற அரசியலமைப்புச் சட்ட தினத்தில் வலியுறுத்த வேண்டும்.

இந்த லட்சியத்தை நோக்கி முன்னோக்கிச் செல்ல அறிவியல் பார்வை மிக முக்கியமானது; எனவே இந்திய அரசியலமைப்புச் சட்டம், (காரண காரிய தர்க்க ரீதியாகச் சிந்திக்கும் அறிவான) அறிவியல் பார்வையைப் பரப்பும் பொறுப்பை இந்திய அரசிடம் அளித்தது. ஆனால் துரதிஷ்டவசமாக இன்று, கலாச்சாரத் தேசியம் என்ற பெயரில் இந்தப் பொறுப்பு அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்த உலகில், தேச மக்கள் மத்தியில் அறிவியல் கண்ணோட்டப் பார்வையைப் பரப்பும் பொறுப்பை அரசிடம் வழங்கிய ஒரே அரசியலமைப்புச் சட்டம் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் மட்டுமே.

அதுபோலவே இந்திய அரசியலமைப்புச் சட்டம் நிறுவிய அரசு, மதசார்பற்றத் தன்மையுடையதாகவும், எந்தவொரு மதம், பிரிவு அல்லது சாதிக்குச் சொந்தம் உடையது இல்லை என்றவாறும் அமைத்தது. நவம்பர் 26ல் அரசியலமைப்பு தினத்தை நாம் கொண்டாடும்போது இவை நினைவுறுத்தப்பட்டு, பலப்படுத்தப்பட வேண்டும்.

இந்தியா 140 கோடி மக்கள் தொகையுடன் கூடிய ஒரு தனித்துவமான தேசம். இங்கே சாதி ஒரு வித்தியாசமான வினோதப் பிரச்சனை மற்றும் உலகம் முழுதும் பணியாற்றுவதற்காகச் செல்லும் இந்தியர்களுடன் சாதியும் கூட உலகெங்கும் பரவுகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள சில மாநிலங்கள் –சாதி அநீதி குறித்தப் புகார்கள் வந்த காரணத்தால்– சாதி பாரபட்சத்திற்கு எதிரான சட்டங்களை இயற்றி உள்ளதாகச் செய்திகள் வருகின்றன. இதன் விளைவாய் இந்தியச் சமூகம் சாதி முறையை ஒழிக்க தீவிரமாக முயற்சிக்க வேண்டும் என்ற புரிதல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் விரும்பியது இதைத்தான் மற்றும் இந்தியர்கள் நாம் அனைவரும் அந்தத் திசை வழியில் பணியாற்ற வேண்டும்.

துரதிஷ்டவசமாக, பெரும்பான்மையான சாதிகள், வேலையில்லாத் திண்டாட்டம் குறித்த கேள்விக்கான பதில் இட ஒதுக்கீடு என்று நினைப்பதால், விரிவாகப் பரவியுள்ள வேலையில்லாத் திண்டாட்டம் இதற்கு எதிராகத் தடையாக உள்ளது. ஆனால் அது அவ்வாறு அல்ல.  இந்த யதார்த்த உண்மையை அம்பலப்படுத்த இட ஒதுக்கீடுகள் மட்டுமல்ல, வாய்ப்புகளும் கிடைக்கச் செய்ய வேண்டும்: அதுவும், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயப்படுத்தப்பட்டு வரும்போது மற்றும் தனியார் துறை பிரிவில் இட ஒதுக்கீடுகள் இல்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். தனியார் மயமாக்கப்படுவதால் பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டு இடங்கள் இழக்கப்பட்டது எவ்வளவு என்பது குறித்தப் புள்ளி விபர தரவுகளை ஒருவர் தேடினால், அத்தகைய புள்ளி விபரங்களே இல்லை என்பது மட்டுமல்ல; மாறாக அத்தகைய பிரச்சனைகள் மீது எந்தப் போராட்டங்களும்  நடத்தப்படுவதும் இல்லை –சமூக நீதியைப் பேணுவதில் நாம் உண்மையிலேயே இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க நினைத்தால் அத்தகைய போராட்டங்கள் இத்தருணத்தின் தேவையாகும். ‘தனியார்மயத்தைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்காதே’ என்பது நமது முழக்கமாக வேண்டும்!

தற்போது செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்துவதன் காரணமாகப் பணியிடங்கள் குறைக்கப்படுகின்றனவா என்பதன் மீது விவாதங்கள் நடைபெறுகின்றன. புதிய தொழில்நுட்பம் காரணமாக ஏற்படுத்தப்படும் புதிய பணிகள், சிறப்புத் திறன்கள் மற்றும் கல்வித் தகுதியைக் கோருகின்றன. புதிய பணிகளுக்குத் தகுதி உடையவராக்க அனைத்து இந்தியர்களுக்கும் பொருத்தமான அத்தகையத் திறன்கள் மற்றும் கல்வியை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கல்வி தனியார்மயமாக்கல், பணம் உடையவர்களுக்கு மட்டுமே தேவைகளைப் பூர்த்தி செய்வதால் இதில் உதவிடாது –சமீபத்தில் வருமானம் மற்றும் சொத்தில் சமத்துவமற்ற தன்மை மீது நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, அந்த ஏற்றத்தாழ்வு அபாயகரமான அளவை எட்டி உள்ளதாகச் சுட்டிக் காட்டுகிறது.

மேற்கண்ட பின்னணியில், இந்தியாவில் சாதிகள் குறித்தப் பிரச்சனையை இந்திய அரசியலமைப்புச் சட்டம், நடைமுறை சாத்தியமான வகையில் கையாண்டுள்ளது குறித்து நாம் பெருமைப்பட வேண்டும். 

அத்தகைய பெருமிதம் மிக்க நமது அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க நாம் உறுதி ஏற்போம்! மற்றும் சாதியற்றச் சமூகத்தை அமைக்கும் அதன்  விழைவை நனவாக்க நாம் பாடுபடுவோம்!

--நன்றி : நியூ ஏஜ் (நவ.30 –டிச.6)

–தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்.