Sunday 10 March 2024

மார்ச் 8, சர்வதேசப் பெண்கள் தினம் -- பெண்களைத் தவிர்த்தால், சமூக வளர்ச்சி மாற்றம் சாத்தியமில்லை

 மார்ச் 8, சர்வதேசப் பெண்கள் தினம்

                                              

  பெண்களைத் தவிர்த்தால், சமூக வளர்ச்சி மாற்றம் சாத்தியமில்லை

--டாக்டர் பி வி விஜயலெட்சுமி

உலகம் முழுவதும் சர்வதேச நாள்கள், வாரங்கள் மற்றும் ஆண்டுகள் எனப் பல கொண்டாடப்படுகின்றன. ஆனால் சர்வதேசப் பெண்கள் தினம், ஆகக் கூடுதலான முக்கியத்துவம் பெற்றிருந்த போதிலும் மிகவும் காலம் தாழ்த்தி, 1975ம் ஆண்டுதான் பரவலாகக் குறிப்பிடப்பட்டது. சமத்துவத்திற்குப் போராடுகின்ற கால ஓட்டத்தில் பெண்கள் தாங்களாகவே அதைப் பிரகடனம் செய்தனர். சமத்துவம், வரலாறு நெடுக மறுக்கப்பட்டு ஒரு பிரச்சனையாகவே இருந்து வருகிறது. விஞ்ஞானத் தொழில்நுட்பப் புரட்சியில் நாம் நுழையும் இந்நாள்களில்கூட, பெண்களின் சமத்துவமற்ற அந்தஸ்து என்ற நிலையில் பெரிய மாற்றம் எதுவும் நடந்துவிடவில்லை.

இச்சூழலில், இன்றைய இந்த நாள், தங்கள் தினசரி வாழ்விலும் பெண்கள் சந்திக்கும் அநீதிகள் மற்றும் வரையறையற்ற பாடுகள் குறித்து உலகத்திற்கு நினைவூட்டும் நாளாக அமைகிறது. கடுமையான பணிசூழல்களில் அவர்கள் உழல வேண்டியிருக்கிறது. மக்கள் தொகையில் பெண்கள் செம்பாதியாக இருப்பினும் அவர்களிள் பாடுகளில் இளைப்பாறுதல், இடைவெளி என்பதும் இல்லை, நியாயமாக அவர்களுக்கு உரிய வசதிகளும் இல்லை. இந்த நாளில், போதுமான வாழ்வாதாரம் மற்றும் பணிநிலைகளுக்குப் போராடும் பெண்கள், கடந்த காலங்களில் இதுவரை அடைந்த வெற்றிகளைக் கொண்டாடுகிறார்கள்; மேலும் இன்னும்  முடிக்கப்படாத வரலாற்றுக் கடமைகளுக்குத் தயார் செய்து கொள்கிறார்கள்.

மக்கள் தொகையில், ஏழ்மை, சுகாரமின்மை, வேலையின்மை, எழுத்தறிவின்மை மற்றும் பாதுகாப்பு இன்மை எனபனவற்றால் பாதிக்கப்படும் பகுதியினராக உண்மையில் பெண்களே உள்ளனர். மேலும் தங்களின் உரிமைகள் அங்கீகரிக்கப்படாத சூழ்நிலைகளில் அவர்கள் வாழ நிர்பந்திக்கப்படுகிறார்கள் என்பது மிக முக்கியம். எந்தெந்தப் பணிகளைச் செய்வதற்கு அவர்கள் கல்வித் தகுதியையும் கூடுதல் பயிற்சிகளையும் பெற்றார்களோ அந்த இடங்களுக்குக்கூட அவர்களுக்கு வேலை கிடைக்கவில்லை. பெண்கள் கூடுதலாகத் தகுதி உடைய பணிகளுக்குக்கூட, எல்லா இடத்தும், ஆண்களுக்கே முன்னுரிமை தரப்படுகிறது.

                            பொதுவாக உடல்ரீதியில் மட்டுமின்றி சமூக ரீதியிலும்கூட பெண்கள் எளிதில்

பாதிக்கப்படுபவர்களாக உள்ளனர். சமூகம் அவர்களை, அவர்களுக்கென்ற உரிமைகளை அனுபவிக்க முடியாத நிலைக்குப் பிடித்துத் தள்ளுகிறது. இதில் மிகவும் கவலைக்குரியது, உலகம் முழுவதும் இது உண்மையாக  இருப்பதாகும். வளர்ச்சி அடைந்த சமூகங்களிலும்கூட பெண்கள் சமத்துவமற்று நடத்தப்படுகிறார்கள். நிறுவனங்களில் போர்டு அமைப்பு என்பது உச்சநிலை அதிகாரம் உடையது. நிறுவனங்களின் அத்தகைய போர்டு கூட்டங் களில் கலந்து கொள்ளும் பெண் உறுப்பினர்கள் பங்கு மிகச் சொற்பமானது –என்னதான் அவர்களுக்கு மேம்பட்ட கூடுதல் கல்வித் தகுதி, திறமை மற்றும் அனுபவம் இருந்த போதிலும் உயர் மட்டத்தில் பெண்களின் பங்கு என்பது அரிதாக உள்ளது.

அரசியலமைப்புச் சட்டம் ஆண் பெண் சமத்துவத்தை அடிக்கோடிட்டு வலியுறுத்திய போதிலும், நடைமுறையில் எங்குமது பின்பற்றப்படுவதில்லை. பெண்களின் தவறு அல்லது திறமையின்மை காரணம் எதுவுமே இன்றி, அவர்கள் சந்திக்கும் துயரங்களுக்கு எதிராகப் போராடுவதில், இந்தச் சமூகம் முழுமையும்தான் அவர்களுக்கு உதவிட உணர்வுடன் முன்வர வேண்டும். தன் சொந்த மக்களுக்கு எதிராக எந்த அநீதியும் நிகழாத சமூகத்தைக் காண்பதற்கு அது ஆண் பெண் இருவருமே இணைந்து நடத்தும் போராட்டமாக வேண்டும். குறுகிய சொந்த நலன்களுக்காக நீதியைத் தங்கள் கைகளில் எடுத்துக் கொள்ளும் கும்பலிடம் பெண்கள் சந்திக்கும் கொடுமைகளை முறியடிக்க சமூகம் உதவிக் கரம் நீட்ட வேண்டும்.

பெண்களை வேண்டுமென்றே அடிமையாக வைத்திருப்பது முதலாளித்துவச் சமூகத்தில் மிகவும் சாதாரண வழக்கம். அவளால் எதிர்த்துப் பேச முடியாது, அவர்கள் குரல் அற்றவர்கள். அத்தகைய சமூகத்தில் ஆண்கள் குடும்பத்திற்கான வருவாய் ஈட்டும் ஒரே நபராய் எந்தக் கடினப் பணியிலும் உழல வேண்டியவர்களாக உள்ளனர். அநீதியை எதிர்க்க அவனுக்கும் உரிமை இல்லை, அவன் தலைக்கு மேல்தான் வேலையின்மை என்ற கத்தி தொங்கிக் கொண்டிருக்கிறதே. குடும்பத்தை உயிரோடு வைத்திருக்க அவனுக்குக் கிடைத்த வேலைதான் வருவாய்க்கான ஒரே வழி. நாளும் அதிகரிக்கும் வேலையில்லாத் திண்டாட்டம் என்ற இந்தப் பிரச்சனைக்கு முன்னுரிமை அடிப்படையில் தீர்வு கண்டாக வேண்டும்.

இது தனிநபர் பிரச்சனை அன்று, சமூகப் பிரச்சனை. மக்களின் வாழ்வில் சூழ்ந்துள்ள துன்ப துயரப் பாடுகள் குறித்துச் சமூகம் முழுவதும் விழிப்புணர்வு பெற வேண்டும். அதிக எண்ணிக்கையில் பெண்கள் உட்பட மக்கள் உணர்வுநிலையையும் விழிப்புணர்வையும் எழுப்பி, அரசியல் உறுதிப்பாடு ஊட்டப்பட வேண்டும். இவற்றிற்கெல்லாம் மேலாக ஒரு தீர்வு காணப் போராட மக்கள் தங்களை அர்ப்பணிக்க வேண்டும். சர்வதேச மகளிர் தினம் இவை எல்லாவற்றையும் உரத்து ஒலிக்கும் முக்கியத்துவம் உடையது. இந்த நாள் எதிர்காலத்திற்கும் அதன் பயன்பாடுகளை உடையது. ஆனால் இவற்றிற்கு மாறாக, இந்த நாளை வியாபார நோக்கங்களும் குறுகிய சொந்த நலன்களுக்கும் பயன்படுத்துபவர்களும் உள்ளனர் – மகளிர் தினத்தை முன்னிட்டு அவர்கள் தங்களின் பொருட்களை விளம்பரம் செய்கிறார்கள். எனவேதான இந்த நாளின் உண்மையான நோக்கங்கள் குறித்து நாம் விழிப்புடன் இருந்தாக வேண்டியுள்ளது.

மோசமான நிலைமைகள் இருந்தபோதிலும், பெண்கள் அவற்றை மீறி வாழ்கிறார்கள், தடை ஏற்படுத்துவற்றை எதிர்த்துப் போராடுகிறார்கள், வெற்றி பெறுகின்றனர். சமூகத்தின் பல தளங்களில் அவர்கள் வெற்றிகரமாக உலா வந்து, பெரும் உயரங்களை எட்டுகிறார்கள். இப்பயணத்தில் அவர்களின் வீரம் மற்றும் தியாகங்களின் வரலாறுகளை ஆய்வு செய்வதும் தற்போதைய தலைமுறைக்காக அவற்றைப் பதிவு செய்வதும் நமது பொறுப்பாகும். பெண்கள் வளர்ச்சி பெற்று முன்னேறும்போது, அந்த முன்னேற்றம் முழு மனிதகுலச் சமூகத்திற்கானது. (ஒரு ஆண் கல்வி கற்றால் தனியொருவன் பயனடைவான், ஆனால் ஒரு பெண் கல்வி கற்றால், அவள் குடும்பமும் அவள் வாழும் சமுதாயமும் மட்டுமன்றி, ஒரு நாட்டுக்கே நற்பயன் கிட்டும்’ என்றார் மகாத்மா காந்திஜி).

சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு, ஆயிரக் கணக்கான பெண்கள் வாக்குரிமைக்காக, வேலை வாய்ப்புக்காக, நிர்ணயிக்கப்பட்ட வேலை நேரம் முதலிய கோரிக்கைகளுக்காக வரலாற்றுச் சிறப்பு மிக்கப் போராட்டங்களைத் தொடுக்க முன் வந்தனர். தொழிற்புரட்சியின் தொடக்க காலத்தில் பல்வேறு குடும்பங்கள் ஐரோப்பாவிலிருந்து அமெரிக்காவுக்குப் புலம் பெயர்ந்தன. அவர்கள் பசி பட்டினியைச் சந்தித்துப் பரிதாபகரமான நிலைகளில் உழன்றனர். அங்கே சூரியன் உதிப்பதற்கு முன் அவர்கள் தங்கள் பணியிடங்களுக்குச் சென்று, சூரியன் மறைந்த பிறகு திரும்புவது வழக்கம். வாராந்திர ஓய்வுகூட இல்லாமல் சில நேரங்களில் 12 முதல் 16 மணி நேரம் வரை அவர்கள் உழைத்தார்கள். நல்ல காற்று, சூரிய வெளிச்சம் இல்லாத சிறிய குடியிருப்புகளில் வாழ்ந்தனர். 8 முதல் 10வயது வரையேயான குழந்தைகள்கூட அவர்களின் தாயார்களுடன் வேலைக்குச் செல்வது வழக்கம்.

மேற்கண்ட துன்பமயமான பரிதாப நிலைகளில் தொழிற்சங்கங்களும் பெண்கள் அமைப்புகளும் சேர்ந்து வலிமையான இயக்கங்களைக் கட்டினர். பெண்களை விழிப்புணர்வு பெறச் செய்ய பல முயற்சிகள் பெண்கள் அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்டன.

அமெரிக்காவின் நியூயார்க் நகர், மன்காட்டன் பகுதியின் ஆயத்த ஆடைகள் தயாரிப்பு ஆலைகளில் பணியாற்றிய 20 –30 பெண் உழைப்பாளர்கள் இணைந்து, 1909ல் வரலாற்றுப் புகழ்பெற்ற பிரபலமான வேலைநிறுத்தத்தை 11 வாரங்கள் தலைமையேற்று நடத்தினர். அந்த வேலைநிறுத்தம் நிர்ணயிக்கப்பட்ட வேலைநேரம், கூலி உயர்வு, வாராந்திர ஓய்வு முதலியவற்றைக் கோரி நடத்தப்பட்டது. மிக மோசமான கடுமையான பருவநிலை சூழல்நிலைகளிலும் அவர்கள் துணிவுடன் போராடினர். காவல் துறை, இராணுவம் மற்றும் கூலிப்படை கும்பல் பெண்களைக் கடுமையாகத் தாக்கிய போதிலும், எதற்கும் அஞ்சாமல் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை அவர்கள் உறுதியுடன் போராடினர். மொத்தம்  353 கம்பெனிகளில் 339 முதலாளிகள் கோரிக்கைகளை ஏற்பதற்கு நிர்பந்திக்கப்பட்டனர்.

இந்த வெற்றி பெண்கள் அமைப்புகளை ஊக்கப்படுத்த அவர்கள் சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாடத் தயாரிப்புகளை மேற்கொண்டனர். பெண்கள் தினத்தைக் கொண்டாடுவது என்ற

யோசனை 1910ல் இரண்டாவது அகிலத்தின் அமர்வின்போது கிளாரா ஜெட்கின் அவர்களால் முன் வைக்கப்பட்டது. 1911ல் ஓர் ஆலை தீ விபத்தில் 146 உழைக்கும் பெண்கள் உயிரோடு எரிக்கப்பட்டனர். சர்வதேசப் பெண்கள் தின விழாக்களில் இந்தத் தியாகிகளுக்கு உலகம் முழுவதும் பெண்கள் புகழ் அஞ்சலி செலுத்தினர். இத்தகைய வீரம் செறிந்த போராட்டங்கள் மற்றும் வெற்றிகளின் செழிப்பான கடந்த காலத்துடன் சர்வதேசப் பெண்கள் தினம் அனைத்து நாடுகளிலும் பெண்களை மிகப் பெரிதும் உற்சாகப்படுத்தியது. அது மட்டுமின்றி அந்த நாள், எந்த அநீதியுடனும் சமரசம் செய்யாது அவற்றை எதிர்த்துப் போரிட வேண்டுமென்ற படிப்பினையைக் கற்றுத் தரும் பாடமாகவும் நிரூபணமானது.

ஆணாதிக்கமுள்ள சமூகங்கள் பல நாடுகளில் மெல்ல கலகலத்து வருகின்றன என்பது உண்மையான போதிலும், இந்தியாவில் மனுஸ்மிருதி வழிகாட்ட வலது பிற்போக்கு சக்திகள் ஆட்சியில் உள்ளன. பெண்களுக்கு எதிரான பரவலான பாரபட்சம் நிலவுவதுடன், அது சமூகத்தைத் தனது பிடியில் வைத்துள்ளது. இத்தகைய விநோதத் தன்மை குறித்து ஆழமாக ஆராய வேண்டும். பாஜக ஆட்சியின் கீழ் இந்தியாவிலும், வலது பிற்போக்குவாதக் கட்சிகளால் ஆளப்படும் நாடுகளிலும்கூட, பெண்களின் பாதுகாப்பு என்பது எப்போதும் ஆபத்திலேயே உள்ளது. பத்தாண்டு காலத் தவறான ஆட்சியில், பெண்களின் பாதுகாப்பைப் பாஜக பெரிதும் ஆபத்துக்கு உள்ளாக்கி விட்டது. சோஷலிச ஆட்சி முறையில் பெண்கள் பாதுகாக்கப்படுவதுடன், அந்தச் சோஷலிச முறையே அவர்களுக்கு எதிரான குற்றச் செயல்கள் நிகழாது தடுத்துப் பாதுகாப்பதை உத்தரவாதப்படுத்துகிறது. இதனை  எப்போதும் அனைவரையும் உள்ளிணைத்த அவர்களின் கொள்கைகளில் காணலாம்.

75வது சுதந்திரதின விழாவின்போது பாஜக அரசு, பெண்களுக்கு எதிராக மிகக் கொடூரமான பாதகங்களை இழைத்த குற்றவாளிகளை விடுதலை செய்தது. பாஜகவின அந்த நடவடிக்கை

பெண்களின் நலன் குறித்த அதன் அறிக்கைகளுக்கு நேர் எதிரானது. அது பன்மைத்துவக் கலாச்சாரம் மற்றும் தனிநபர்களின் சுதந்திரத்தில் தலையிட்டு சிதைப்பதாகும். குஜராத்தில் நிறைமாத கர்பிணியான பில்கிஸ் பானுவைக் கும்பல் வல்லுறவு செய்தும், அவர் குடும்ப உறுப்பினர்களைப் படுகொலையும் செய்தனர். நீதிமன்றத்தால் தாமதமாகவேனும் தண்டிக்கப்பட்ட அக்கொடூரக் குற்றவாளிகளின் தண்டளை காலத்தை வெட்கமற்று குறைத்த பாஜக அரசு அவர்களை விடுதலை செய்தது மட்டுமின்றி மாலையிட்டு வரவேற்கவும் செய்தது. இந்த நிகழ்வில் ஓர் அம்சத்தை நாம் நினைவூட்ட வேண்டும். இராமாயணத்தில் ஸ்ரீஇராமர் தனது மனைவி சீதாவை விட்டு நீங்கினார், ஆனால் பில்கிஸ் பானுவின் கணவர், இவ்வளவு நிகழ்வுகளுக்குப் பிறகும் தனது மனைவியை ஒருபோதும் விட்டுப் பிரியவில்லை, அவரது முழுமையான சட்டப் போராட்டத்தில் அவர் உறுதியாக உடன் இருந்தார்.

நமது நெடிய போராட்டங்களின் பாரம்பரியத்தில், பாலினப் பிரச்சனைகளில் லெனின் மற்றும் கிளாரா ஜெட்கினின் வழிகாட்டல்கள் உள்ளன. அவ்வழிகாட்டல்கள் இன்றும்கூட பொருத்தமானவை ஆகும். பாலினச் சமத்துவத்தைச் சாதிப்பது சமூகத்தை மாற்றுவதன் மூலமே சாத்தியம் என அவர்கள் நம்பினர். எனவே இன்றைய சமூக முறையைக் கட்டாயம் மாற்ற வேண்டும். வரலாற்றைப் பின்னுக்குத் தள்ளும் இன்றைய வலதுசாரி பிற்போக்கு நடவடிக்கைகளை ஆராய்ந்து தெளிவாகப் புரிந்து கொள்ள அவர்களின் வழிகாட்டல்கள் மூலமே முடியும். வலதுசாரி பிற்போக்குக் கருத்தியல் பழமையான ஆணாதிக்க பங்கினைப் பலப்படுத்த அடிக்கடி முயற்சி செய்யும். அது பெண்களைக் கீழே தொலைவில் தள்ளி வைக்கும். ஆனால் இதற்கான மாற்றைச் சோஷலிச மற்றும் கம்யூனிச முறைகளில் காணலாம். அந்தச் சமூக முறைமையில் விடுதலையையும் பாலினச் சமத்துவத்தையும் நாம் காணலாம். பெண்களின் உரிமைகளுக்கானப் போராட்டம் சம்பந்தமாக லெனின் மற்றும் கிளாரா ஜெட்கின் திட்ட வடிவமைப்புகள், சமூகப் பொருளாதார சமத்துவமின்மைகளுக்கு எதிரான போராட்டங்களுடன் நெருக்கமாகத் தொடர்புடையனவாகும்.

இவற்றைத் தொகுத்தால், சர்வதேசப் பெண்கள் தினக் கொண்டாட்டங்கள், லெனின் மற்றும் கிளாரா ஜெட்கினின் திட்ட உத்திகளுடன் சேர்ந்து ஒரு வலிமையான செய்தியைத் தருகிறதென்று கூறலாம்: அது, எதிர்வரும் புரட்சிகர மாற்றங்கள் பெண்களின் நிலைமைகளை மேம்படுத்தி அவர்களின் உரிமைகளை மீட்டமைக்கும். பிற்போக்குப் பார்வை மற்றும் போக்குகளுக்கு எதிராக விஞ்ஞான உலகப் பார்வையை உணர லெனின் மற்றும் கிளாரா ஜெட்கின் மரபு உதவிடும். மேலும் அது அடிமைத் தளைகளிலிருந்து பெண்களை மட்டும் விடுதலை  செய்வது மட்டுமின்றி,  முழுமையான மனித குலத்தை விடுவிக்கும். பெண்களுக்குச் சம வேலைக்குச் சம ஊதியம், சமமான உரிமைகளை அடைவதற்கான போராட்டத்தில் பெண்களுக்கு உதவும். அதையும் தாண்டி, பொருளாதார, அரசியல் முறையில் பெண்களுக்குச் சமமான பங்கு மற்றும் சமத்துவ அங்கீகாரத்தைப் பெற உதவும்.

சர்வதேச உழைக்கும் மகளிர் தின விழாக்களில் இந்தச் செய்திகளைப் பெண்கள் மத்தியில் கொண்டு செல்வோம். நிச்சயமாக இது பெண்ணியம் அல்ல, ஆனால் மாறாகச் சமத்துவத்திற்கான நியாயமான போராட்டமாகும்.

அனைவருக்கும் மகளிர் தினத் தோழமை நல்வாழ்த்துகள்!

--நன்றி : நியூஏஜ் (மார்ச் 10 –16)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

Tuesday 6 February 2024

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு –82 ‘சகாவு’ கிருஷ்ணப்பிள்ளை

 

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு –82


‘சகாவு’  கிருஷ்ணப்பிள்ளை
--கேரளாவின் முதல் கம்யூனிஸ்ட்

-- அனில் ரஜீம்வாலே

--நன்றி : நியூஏஜ் (2023 பிப்.26 -.மார்ச் 4)

சகாவு P கிருஷ்ணப்பிள்ளை 42 ஆண்டுகளே இந்த மண்ணில் வாழ்ந்தாலும், அவரது பெயர் கேரளாவின் முதல் கம்யூனிஸ்ட் என்று வரலாற்றில் பொறிக்கப்பட்டது. சகாவு என்றால் தோழர் என்று பொருள். 1906 ஆகஸ்ட் 10ம் நாள் அவர் அமைதி தவழும் வைக்கம் முனிசிபல் நகரத்தில் பிறந்தார். அந்த ஊர் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் வேம்பநாட்டு காயல் (அல்லது வேம்பநாட்டு ஏரி) கரையில் அமைந்த அழகு மிளிரும் புகழ்பெற்ற உப்பங்கழி அருகே இருந்தது. அங்கிருந்து வைக்கம் ஆலயம் வெகு தொலைவில் இல்லை. அவரது தந்தை மயிலெழுத்து மன்னம்பள்ளி நாராயணப் பிள்ளை ஒரு கிராம அதிகாரி, தாயார் பார்வதி. அவர்களுக்குப் பத்து குழந்தைகள் பிறந்தாலும் நான்கு பேர் மட்டுமே உயிருடன் இருந்தனர்.

அவர் 13 வயது இருந்தபோது நெஞ்சத்தைப் பிளப்பதாக அவரது தாய் திடீரென்று மரணமடைந்தார், அடுத்த ஆண்டே தந்தையும் மாண்டு போனார். குழந்தைகள் அவர்களின் இரண்டு மூத்த சகோதரிகள் மற்றும் மாமா நாராயணப் பிள்ளை மற்றும் மூத்த சகோதரியின் கணவர் சங்கரப் பிள்ளை பாதுகாப்பில் வளர்ந்தனர்.

1919 வாக்கில், உள்ளூர் மலையாளப் பள்ளியில் படித்து வந்த கிருஷ்ணப்பிள்ளை 4வது வகுப்பு முடித்த பிறகு படிப்பை நிறுத்திவிட்டார். சிலகாலம் தனது சகோதரி கௌரி அம்மாள் அவர்களுடன் ஆலம்புழா (ஆலப்பி)வில் வசித்தபோது அங்கே ஒரு கயிறு தயாரிக்கும் ஆலையில் வேலை செய்தார். பின்னர் சிலகாலம் நாகர்கோயில் மற்றும் பிறகு தமிழ்நாடு முழுவதும் அலைந்தார். கிழக்குத் திருவிதாங்கூரின் மலயாரயாஸ் மலைவாழ் பழங்குடி மக்கள் மத்தியில் காடுகளில்கூட வசித்தார். 1922ல் கிருஷ்ணா வைக்கம் திரும்பினார். அது போருக்குப் பிந்தைய பொருளாதார மந்தநிலை சூழ்ந்த காலம். போரின் பாதிப்பை வேளாண் பொருளாதாரம் சந்தித்தது. அது நடுத்தரமாக நிலம் வைத்திருந்த பலரையும் பின்னடையச் செய்து அழிவை ஏற்படுத்தியது. கிருஷ்ணப்பிள்ளை குடும்பமும் கடுமையான நெருக்கடியைச் சந்தித்தது. திருவிதாங்கூரின் மகராஜா 1924 –25 நாயர் (சமூக) ஒழுங்குபடுத்துதல் சட்டம் மூலமாகக் கூட்டுக் குடும்பத்தின் சொத்துடைமைகளைப் (partition of joint family holdings) பிரிப்பதாக அறிவித்தார்.

கிருஷ்ணா தனது தாய்வழி மாமனிடமிருந்து தனது ‘தாரவாடு’ (தாய்வழி கூட்டுக் குடும்பத்தின் பூர்வீக இல்லமான வீட்டை) பராமரிக்கும் பொறுப்பை எடுத்துக் கொண்டார். இப்போது அவர் ‘கரனவார்’ (தாரவாடின் தலைவர், ஏறத்தாழ தமிழில் கர்ணம் என்று கொள்ளலாம்.). அன்றைய காலத்தில் நாயர் சமூக இளைஞர்கள் நீண்ட தலைமுடியை வளர்ப்பது வழக்கம்; ஆனால் அதற்கு மாறாகக் கிருஷ்ணப்பிள்ளை நீண்ட தலைமுடியை மேற்கத்திய பாணியில் முடிதிருத்தம் செய்வது போன்ற பல புரட்சிகரமான செயல்களில் ஈடுபடத் தொடங்கினார்.

ஒரு சிறு தேநீர் கடை திறந்தார், பின்னர் சைக்கிள் ரிப்பேர் கடையில் உதவியாளராகப் பணி புரிந்த பிறகு மீண்டும் தேநீர் கடைக்குத் திரும்பினார்.

இந்திமொழி கற்றல்

தனது ஓய்வு நேரங்களில் இந்தி கற்றுக் கொள்ளத் தொடங்கினார், ஒருவேளை மேலும் நல்ல வேலைக்காக இருக்கலாம், அம்மொழியால் அவர் கவரப்பட்டார் என்பதே உண்மை. அக்காலத்தில் காந்திஜி தனது இருப்பைக் கேரளாவில் உணர வைத்தார், இந்தி பிரச்சாரம் விடுதலைப் போராட்டத்தின் முக்கியமான கொள்கைகளின் ஒன்றாக இருந்தது. கிருஷ்ணப்பிள்ளை இந்தி மீது பெரும் ஆர்வமுடையவராக இருந்தார்.

வைக்கம் சத்தியாகிரகம் : அரசியலில் நுழைவு

      காந்திஜியின் போதனைகளின் தாக்கத்தைக் கேரளா உணர்ந்து வந்த சமயம் அது. வைக்கம் ஆலயத்திற்கு முன் ஒரு போராட்டம் நடந்தது. அதில் அவர் பங்கேற்காவிட்டாலும் கிருஷ்ணா தீவிரமாக அப்போராட்டத்தைக் கவனித்து வந்தார்.

   1924ல் நடந்த வைக்கம் சத்தியாகிரகம் நாடு முழுவதும் கவனத்தை ஈர்த்தது. அங்கு அக்காலத்தில் தாழ்த்தப்பட்ட சாதியினருக்குக் கோவில்கள் மூடப்பட்டிருந்தன, அவர்கள் கோவில் இருந்த வீதிகளில்கூட  அனுமதிக்கப்படுவதில்லை.

  வைக்கம் கோவில் நிலம் இந்தந்துருத்தி நம்பூதிரிக்குச் சொந்தமானது; இறைவன் சிவபெருமானே அவரது வாடகைதாரர்! வேடிக்கை. நம்பூதிரி ஆயுதம் தாங்கிய கையாட்கள் அடியாட்களைப் பயன்படுத்தி காந்தியச் சத்தியாகிரகிகளைத் தாக்குவது வழக்கம். காந்திஜி தனது யங் இந்தியா இதழில் “யார் இந்த இந்தந்துருத்தில்?” என்று கேள்வி எழுப்பினார்.

  மகாத்மா காந்திஜியின் துணிச்சலான தலைமையின் கீழ் அந்தச் சத்தியாகிரகம்

தொடங்கப்பட்டது. அவர் வைக்கம் விஜயம் செய்ததுடன், இந்தந்துருத்தில் சந்திக்க வேண்டும் என்ற தன் விருப்பத்தை வெளியிட்டார். அவ்விருப்பத்தைக் கேட்ட இந்தந்துருத்தில், அதற்குப் பதில் அளித்தார்: “பகவான் சிவனைச் சந்திக்கவே இந்தந்துருத்தில் செல்ல மாட்டார்; (வேண்டுமெனில்) காந்தி என்னிடம் வரட்டும்!” பின்னர் அந்த வீடும் இந்தந்துருத்தில் காம்பௌண்டும் சிபிஐ தலைமையிலான கள் இறக்குவோர் சங்கத்தின் அலுவலகமானது வரலாறு.

            சத்தியாகிரகிகள் அந்தக் குண்டர்களாலும், போலீசாலும் மோசமாகத் தாக்கப்பட்டனர். கூர்மையாக நிகழ்வுகளைக் கவனித்து வந்த கிருஷ்ணப்பிள்ளைக்கு இதுதான் முதலாவது அரசியல் பாடம்.

     மனம் வெறுத்துப்போன கிருஷ்ணப்பிள்ளை மூன்றாண்டுகளுக்குப் பிறகு 1927ல் வைக்கத்தைவிட்டுப் புறப்பட்டார். மூதாதையர் சொத்தை விற்க அவர் சம்மதிக்க, அதன் மூலம் கிடைத்த 2000 ரூபாயைச் சகோதரர்கள் மற்றும் சகோதரிகள் பிரித்துக் கொண்டனர். திடீரென்று தனது சொந்த கிராமத்தைவிட்டுச் சென்றவர், மறைந்து போனார்.

ஹரித்வாரிலும் பிற இடங்களிலும்  

     கிருஷ்ணப்பிள்ளை திடீரென்று ஹரித்வார் காட் கோவிலுக்குச் செல்லும் படிக்கட்டு பாதையில் (டெம்பிள் காட், நதிக்கரை படித் தொடர்) கண்டு பிடிக்கப்பட்டார். அவர் மாறுவேடத்தில் இருந்தபோதும் 1927 கடைசியில் பிகே நாயர் மற்றும் கேசவன் நாயர் அவரை அடையாளம் கண்டு கொண்டனர். கிருஷ்ணப்பிள்ளை உச்சிக் குடுமியைத் தவிர தலையை முழுவதுமாக மழித்துக் கொண்டவராக, ஒரு கோவண ஆடை உடுத்து, மார்பின் குறுக்கே ‘புனிதநூல்’ (யக்யோபவீதம், பூணூல்) அணிந்திருந்தார். இருந்தபோதும் அவர்கள் இருவரும் அவரை அடையாளம் கண்டு, இது என்ன வேடம், ஏன் என்று கேட்டனர். “(சத்திரங்களில்) இலவசமாகத் தங்கவும் உணவு உண்பதையும் உறுதி செய்வதற்காக!” என்றார். 

      அந்த இருவரும் டிஏவி கல்லூரியில் (பன்னாலால் கிரிதர்லால் தயானந்த் ஆங்கிலோ வேதிக் கல்லூரி) இந்தி பாடத்தில் முதுகலைப் பட்டம் நிறைவு செய்த பிறகு லாகூரிலிருந்து திரும்பி வந்து கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் இந்தி பிரச்சாரக்குகளாகப் பணி செய்தனர்.

கிருஷ்ணப்பிள்ளை அலகாபாத் சாகித்திய சம்மேளத்தில் பதிவு செய்து இரண்டு ஆண்டுகள் படித்தார். மாதம் 30ரூ ஊதியத்தில் அவர் இந்தி பிரச்சாரக் பணியில் கேரளாவில் பணியாற்றினார்.

அவருடைய மிக விருப்பமான புத்தகங்களில் ஒன்று பிரேம்சந்த் எழுதிய ‘மகாஜனி சப்யதா’ (அதீத வட்டி லேவாதேவிக்கார்களின் நாகரீகம்). 1930ல் காந்திஜி உப்புச் சத்தியாகிரகத்துக்கு அழைப்பு விடுக்க, கிருஷ்ணப்பிள்ளை, அப்போதுதான் சேர்ந்து ஒருமாதமே ஆகாத வேலையை ராஜினாமா செய்து அந்த இயக்கத்தில் கலந்து கொண்டார். காளிகட் (கோழிக்கோடு)க்குச் செல்ல இரயில் ஏறினார். 1930 ஜனவரி பையனூருக்கான உப்புச் சத்தியாகிரகிகள் குழுவில் தன்னைக் காங்கிரஸ் தொடண்டராகப் பதிவு செய்து கொண்டார்.

உப்புச் சத்தியாகிரகத்தில்

    28சத்தியாகிரகிகள் கோழிக்கோட்டிலிருந்து பையனூருக்கு அணி வகுத்துச் சென்றனர். புகழ்பெற்ற தண்டி யாத்திரை 1930 மார்ச் 12ல் தொடங்கியது. அதே நாளில் கேளப்பன் தலைமையில் பையனூருக்கு யாத்திரை புறப்பட்டது. சத்தியாகிரகிகள் குழுவில் சேர ஏராளமானோர் மனு அளித்திருந்தும், 28பேர் மட்டுமே தேர்ந்தெடுக்கபட, அதில் ஒருவராகக் கிருஷ்ணப்பிள்ளை இடம் பெற்றார். அப்போதுதான் அவர் பூனத்துறையில் வேலையை ராஜினாமா செய்திருந்தார்.

    சத்தியாகிரகிகள் தொழிலதிபர் சாமுவேல் ஆரோன் இல்லத்தில் முகாமிட்டுத் தங்கினர். (சாமுவேல் ஒரு சுதந்திரப் போராட்ட வீரரும் ஆவார். சத்தியாகிரகிகளுக்கு ஆதரவளித்ததால் கைது செய்யப்பட்டதுடன் அவரது சொத்தும் பறிமுதலானது.)  முகாமில் கிருஷ்ணா தூய்மைப் பணியை எடுத்துக் கொண்டார். கிருஷ்ணப்பிள்ளை தகிக்கும் மே மாத வெயிலில் தலையில் கடல்நீர் நிரப்பிய குடங்களைச் சுமந்தபடிவந்த சத்தியாகிரகிகளின் ஊர்வலத்திற்குத் தலைமை தாங்கிச் சென்றார். உப்புத் தயாரித்து அருகில் இருக்கும் சந்தையில் உப்புப் பொட்டலங்கள் விற்பனை செய்யப்பட்டன. அவர் கையில் மூவர்ணக் கொடியுடன் நிற்க, மற்றவர்கள் நெருப்பை மூட்டி உப்புத் தயாரித்தனர். போலீசார் தாக்குதலில் இறங்கினர், லத்திகள் சுழன்றன, மண்டைகள் உடைபட்டன, எலும்புகள் முறிக்கப்பட்டன. கிருஷ்ணா மீது அடிகள் மழையாய் விழுந்தன. இரத்தம் சிந்த அவர் அடிக்கப்பட்டார், உதைக்கப்பட்டார். ஆனாலும் கீழே விழுந்த பிறகும், விழுந்து கிடந்தவர் உடம்பெங்கும் போலீசின் பூட்ஸ் கால்கள் மிதித்தபோதும், கையிலிருந்த மூவர்ணக் கொடியைக் கீழே விடவில்லை. ஒரு முணகல் இல்லை. காவல் நிலையத்திற்கு அவரை இழுத்துச் சென்று கைது செய்தனர்.

     கண்ணணூர் சிறையில் அவருடன் ஆர்எம் சென்குப்தா, டிஎன் சக்ரவர்த்தி மற்றும் ஆர்சி ஆச்சார்யா போன்ற புரட்சியாளர்களும் அடைக்கப்பட்டிருந்தனர். மேலும் லாகூர் சதி வழக்குத் தொடர்பாக ஜெய்தேவ் கபூர் மற்றும் கமல்நாத் திவாரி முதலானோரும் அங்கு இருந்தனர். அவர்கள் அனைவரின் செல்வாக்கிற்கும் கிருஷ்ணா ஆட்பட்டார்.

     ஊரில் கிருஷ்ணப்பிள்ளை ‘சகாவு’ (தோழர்) எனப் புகழ்பெற்றார்! 1931ல் குருவாயூர் ஆலயமணியை அடித்த முதலாவது நம்பூதிரி பிராமணராக அல்லாத ஒருவரானார் அவர். (அவர் நாயர் சமூகத்தைச் சேர்ந்தவர்.) ஜமூரின் நாயரின் (கோழிக்கோடு ஆட்சியாளர் பட்டம்) பாதுகாவலர்கள் லத்தியால் மழையென அடித்தபோதும் கிருஷ்ணப்பிள்ளை கைவிடாது தொடர்ந்து மணியை அடித்தார்.

காங்கிரஸ், சிஎஸ்பி மற்றும் தொழிற்சங்கத்தில்

          காங்கிரஸில் செயல்பாடுகள் தீவிரமாக, கிருஷ்ணப்பிள்ளை 1934 பாம்பே அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பிகே பாலகிருஷ்ணன் மற்றும் மஞ்சுநாத ராவ் உடன் கலந்து  கொண்டார். அங்கே நடந்த காங்கிரஸ் சோஷலிஸ்ட்களின் கூட்டத்திலும் கலந்து கொண்டார்; அது ‘காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி  (சிஎஸ்பி) அமைப்பின் தொடக்கமாகும்.

    இளம் அரசியல் செயற்பாட்டாளர்களுக்கு ஒரு வகுப்பைக் கிருஷ்ணப்பிள்ளை கோழிக்கோடு கடற்கரை அருகில் நடத்தினார்.  முன்பு திருவனந்தபுரத்தில் அவர் 1934ன் தொடக்கத்தில் கம்யூனிஸ்ட் லீக் செயற்பாட்டாளர்களை இரகசியமாகச் சந்தித்தார். அதே நேரம் மலபார் பகுதியில் காங்கிரஸ் இயக்கம் கட்டுவதற்கானப் பொறுப்பினையும் ஏற்றார். கோழிக்கோடு, பாப்பினிச்சேரி, கண்ணணூர் எனப் பிற ஆலை பகுதிகளில் பல்வேறு வேலைநிறுத்தங்களை நடத்தவும் தொழிலாளர்களைத் திரட்டினார்; மேலும் காசர்கோடு, சிராக்கல் தாலுக்காகளில் பயணம் செய்தார். பக்கலம், காரக்காட்டு முதலிய இடங்களில் நடந்த ஊர்வலங்கள் உட்பட விவசாயிகளின் சக்திமிக்க  போராட்டங்களிலும் அவர் கலந்து கொண்டார். விரைவில் அவர் அப்பகுதியின் விவசாய மற்றும் தொழிற்சங்க இயக்கங்களின்  முக்கியத் தலைவரானார்.

        கேரளாவில் முதலாவது சிஎஸ்பி மாநாடு கோழிக்கோடு டவுன் ஹாலில் 1934ல் நடந்தது. அதில் கேளப்பன், கிருஷ்ணப்பிள்ளை, ஏகேஜி, சர்தார் சந்த்ரோத், மோயராத், இஎம்எஸ் முதலானவர்கள் பங்கேற்றனர். இஎம்எஸ் உடன் சேர்ந்து அவர் கேரளா முழுவதும் சிஎஸ்பி கிளைகளைத் திரட்டி அமைத்தார். கிருஷ்ணப்பிள்ளை சிஎஸ்பி-யின் செயலாளர் ஆனார்.

    ‘தொழிலாளர்  சகோதரத்துவம்’ (லேபர் பிரதர்குட்) இதழ் 1935ல் வெளியிடப்பட்டது. ‘காங்கிரஸ் சோஷலிஸ்ட்’ பேப்பர் பரவலாக விநியோகிக்கப்பட்டது. ‘இளம் லீக்’ அமைப்புகளை அமைத்திட கம்யூனிஸ்ட் லீக் உதவியது. அந்த அமைப்புகள் திருவிதாங்கூர், கொச்சி பகுதிகளில் நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு போராட்டங்களை நடத்துவதில் கேந்திரமான பங்கு வகித்தன.

       மேலும் கிருஷ்ணப்பிள்ளை வலுவான கைத்தறி நெசவாளர்கள் சங்கத்தின் நிறுவனரும் ஆவார்.

         முன்பு, தலைமறைவு அனுஷீலன் சமிதி அமைப்புடன் கிருஷ்ணா குறைந்த காலம் தொடர்பு கொண்டிருந்தார். (ரஷ்ய அராஜவாத கம்யூனிஸ்ட்டான பீட்டர்) க்ரோபோட்கின் எழுதிய ‘ரொட்டியின் வெற்றி’ (அல்லது ரொட்டி புத்தகம் எனப்படும் ‘கான்க்வஸ்ட் ஆப் பிரட்’) நூலின் ஒரு பகுதியையும், எமிலி பர்ன்ஸ் எழுதிய ‘சோஷலிசம் என்றால் என்ன?’ (‘வாட் இஸ் சோஷலிசம்’) என்ற நூலையும் மலையாள மொழியில் மொழிபெயர்த்தார்.

    சேர்த்தலை, (கேரளா ஆலப்புழா மாவட்டத்தின்) அம்பலப்புழா. திருவனந்தபுரம் முதலான இடங்களில் நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு எதிரான தீவிர பெருந்திரள் மக்கள் போராட்டங்கள் நடந்தன. கிருஷ்ணப்பிள்ளையிடமே நேரடியாக ஒரு சிஐடி அதிகாரி பேசும்போது, கிருஷ்ணப்பிள்ளைக்குத் தெரிய வந்தது, “மலபாரிலிருந்து ஓர் அபாயகரமான கிருஷ்ணப்பிள்ளை ஆலப்புழாவில் இருக்கிறார்…”

   1930ல் 800பேர் உறுப்பினர்களாக இருந்த காங்கிரஸ் அமைப்பின் உறுப்பினர்கள் எண்ணிக்கையை 1937 –38ல் 70ஆயிரமாக அதிகரிக்க கிருஷ்ணப்பிள்ளை பெருமளவில் உதவினார். 1937ல் திருச்சூர் அகில இந்திய தொழிலாளர் மாநாட்டில் செங்கொடியைக் கிருஷ்ணப்பிள்ளை ஏற்றினார்.

கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி அமைத்தல்

       காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி மற்றும் சிபிஐ, தொழிற்சங்கம் மற்றும் பிற இயக்கங்களைக் கட்ட எஸ்வி காட்டே, மிராஜ்கர், பாட்லிவாலா, சுந்தரையா போன்ற தலைவர்கள் கேரளாவுக்கு வந்தபோது, கிருஷ்ணப்பிள்ளை அந்தத் தலைவர்களின் செல்வாக்கால் ஈர்க்கப்பட்டு கம்யூனிசத்திற்கு மாறினார்.

     கேரளாவில் சிஎஸ்பி கிளையைக் கம்யூனிஸ்ட் கட்சியாக மாற்றிட கிருஷ்ணப்பிள்ளை தலைமையேற்றார். 1939 அக்டோபர் 13ல் தலிச்சேரி அருகே பினராய் என்ற இடத்தில் சிஎஸ்பி கட்சியின் சுமார் 90 முக்கிய செயல்பாட்டாளர்களின் இரகசியக் கூட்டம் நடந்தது. அவர்களில் கிருஷ்ணப்பிள்ளை, என்இ பலராம், ஏகேஜி, இபி கோபாலன், இஎம்எஸ் (ஏலம்குளம் மணக்கால் சங்கரன் நம்பூதிரிபாட்), வில்லியம் செனிலெக்ஸ், சந்த்ரோத் முதரலான பலரும் அடங்குவர்.

     காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் செயலாளரான கிருஷ்ணா அந்த அமைப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியாக மாற்றும் திட்ட முன்மொழிவை முன் வைத்தார். இதற்காகவும் மற்றும் சிபிஐ குழுக்களை அமைத்தது போன்ற பிற காரணங்களுக்காகவும் கிருஷ்ணப்பிள்ளை “கேரளாவின் முதல் கம்யூனிஸ்ட்” என்ற பெருமைக்கு உரியவரானார். 1940 ஜனவரி 26ல் கட்சி அறிவிக்கப்பட்டது.  அவரது சொந்த கிராமமான வைக்கத்திலிருந்து அவர் 1940 டிசம்பரில் கைது செய்யப்பட்டு, கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள இடலக்குடி கிளை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்.    

திருமணம்

      அவர் வித்தியாயமான சூழ்நிலைகளில் 1941ன் இறுதியில் தங்கம்மாவைச் சந்தித்தார். சிறையில் இருந்தபோது ஒவ்வொரு நாளும் சிறைவழியாகக் கடந்து செல்லும் ஒரு பெண்ணிடமிருந்து இந்தி புத்தகங்களைப் பெற்றுத்தர ஒரு காவலர் உதவியைக் கோரினார்.  செய்திகள் மற்றும் படிப்பதற்கான நூல்கள், இதழ்கள், நாளிதழ்களைக் கேட்டு இந்தியில் கடிதங்களைத் தான் திருப்பி அளிக்கும் புத்தகங்களில் வைத்து அனுப்பினார். இது பல மாதங்கள் நடந்தன. இந்தியில் கிருஷ்ணா அளிக்கும் செய்திகளைத் தங்கம்மா மலையாளத்தில் மொழிபெயர்த்துத் தலைமறைவாகச் செயல்பட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிடம் தந்தார். கிருஷ்ணப்பிள்ளை விடுதலையானதும் 1942 ஜூலையில் அவர்கள் எளிய முறையில் சாதாரணமாகத்  திருமணம் செய்து கொண்டனர்.

கையூர் (1943) மற்றும் புன்னபுரா வயலார் (1946)

            கேரளாவின் வடக்குக் கோடி, கையூர் என்ற இடத்தில் 1941 மார்ச் கடைசி வாரத்தில் சில விவசாயிகள், குத்தகைதாரர்கள் –நிலப்பிரபுகள் தகராறில் போலீசாருடன் மோதினர். நூற்றுக் கணக்கோனோர் கைது செய்யப்பட்டு, அடித்து நொறுக்கப்பட்டனர். கட்சிக்காரர்கள் தேடி வேட்டையாடப்பட்டனர். அடுத்த ஆண்டு போலீஸ் கிருஷ்ணப்பிள்ளையைத் தேடி வந்தது, ஆனால் அவர் தப்பி விட்டார். அடுத்த இரு ஆண்டுகள் நீதிமன்ற விசாரணைக்குப் பிறகு 5 ஏழை விவசாயப் பையன்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது. 


அப்பு, அபூபக்கர், குஞ்சம்பு (நாயர்) மற்றும் சிறுகண்டம் என நால்வர் தூக்கிலிடப்பட்டனர்
. (மற்றொரு பையனான கிருஷ்ணன் நாயர் மைனர் என்பதால், மரண தண்டனை பின்னர் ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்டது.) கேரளா எங்கும் எதிர்ப்புகள் வெடித்தன.

     கிருஷ்ணப்பிள்ளை தொடர்பில் இருந்த மற்றொரு வரலாற்று இயக்கம் புகழ்பெற்ற புன்னபுரா வயலார் ஆகும். அது திருவிதாங்கூர் சமஸ்தானத்தைச் சேர்ந்தது; அதன் திவான் சர் சிபி இராமசாமி அய்யர், ஒரு கூர்மையான மனிதரும் கொடூரமான ஆட்சியாளரும் ஆவார். 1943 பெரும் இந்தியப் பஞ்சத்தைத் தொடர்ந்த அப்பகுதியின் பரவலான கடும் உணவுப் பற்றாக்குறை காரணமாக அங்கு அமைதியின்மை ஏற்பட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பட்டினி அணிவகுப்பு மற்றும் ஊர்வலங்களைப் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நடத்தியது. அதில் தொழிலாளர்களும் கலந்து கொண்டனர்.

      ஆயுதப் பயிற்சிக்கான முகாம்களை அந்த இயக்கம் அமைத்தது. 1946 அக்டோபர் 22ல் பொது வேலை நிறுத்தம் நடைபெற்றது. முகாமில் இருந்த தோழர்கள் போலீசாரை நோக்கி நகர, முகாம்களை மூடிவிட கோரப்பட்டது. போலீஸ் சூழ்ந்து கொண்டதுடன் இராணுவ சட்டம் விதிக்கப்பட்டது. 26ம் தேதி நுழைய முயன்ற இராணுவத்தினர் வெற்றிபெற முடியவில்லை. ஆனால் போலீசும் இராணுவமும் மீண்டும் ஒன்று சேர்ந்து திருட்டுத்தனமாக மக்கள் முகாம்களைத் தாக்கியது. அந்த முழுநாளும் ஓயாத துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது அதனுடன் போலீசும் கண்மூடித்தனமாக மனம்போன போக்கில் சுட்டுத் தள்ள நூற்றுக் கணக்கானவர்கள் வீழ்ந்தனர், எங்கும் குருதி வெள்ளம். இதில் கிருஷ்ணப்பிள்ளை முதன்மை பங்காற்றினார்.

      அந்த இயக்கத்தின் காரணமாகத் திவான் சர் சிபி இராமசாமி அய்யர் வீழ்ச்சி தொடங்கியது

விடுதலை

        கிருஷ்ணப்பிள்ளை இந்திய விடுதலையைப் பெரும் உற்சாகத்துடன் வரவேற்றார். கட்சி அலுவலகத்தில் முண்டியடிக்கும் திரளான மக்கள் கூட்டத்தின் மத்தியில் அவர் இந்தியாவின் மூவர்ணக் கொடியைப் பறக்கவிட்டார்.

பிடிஆர் காலம்

      கேரளாவில் கிருஷ்ணப்பிள்ளை தலைமையில் இருந்த கட்சிக்குப் ‘பிடிஆர் (பிடி ரணதிவே) பாதை’ பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. 2வது கட்சி காங்கிரஸ் (1948) தேர்ந்தெடுத்த புதிய மத்திய கமிட்டி உறுப்பினர்களாகப் பி கிருஷ்ணப்பிள்ளை, இஎம்எஸ் மற்றும் கேசி ஜார்ஜ் மூவரும் கேரளாவிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டனர். ஆனால் புதிய பாதையுடன் கிருஷ்ணா ஒத்துப் போகவில்லை, கட்சி காங்கிரஸில் கலந்து கொள்ளவில்லை. கிருஷ்ணப்பிள்ளை, கேசி ஜார்ஜ் மற்றும்ம் என்சி சேகரை உறுப்பினர்களாகக் கொண்ட தலைமறைவு கட்சி மையம் அமைக்கப்பட்டது. திருவனந்தபுரம் மற்றும் பிற இடங்களின் சிறைச்சாலைகளில், பிடிஆர் பாதையின் அதிதீவிர சாகச நடவடிக்கைகளின் காரணமாகப் பல அரிய தோழர்களின் உயிர்களை இழந்தோம். கமின்ஃபார்ம் (Cominform) அமைப்பின் [கம்யூனிஸ்ட் அகிலத்திற்கு மாற்றாக அமைக்கப்பட்ட ‘கம்யூனிஸ்ட் இன்ஃபர்மேஷன் பீரோ’ என்பதன் சுருக்கம்]  இதழில் வெளியான LPPD (1950) தலையங்கம் [for a Lasting Peace and for a  Peoples’ Democracy, அதாவது “நிலைத்த அமைதிக்காக மற்றும் மக்கள் ஜனநாயகத்திற்காக”] போதுமான அளவு தலைமையின் தீவிரத் தன்மை போக்கைத் தணித்தது. [1947ல் அமைக்கப்பட்ட கமின்ஃபார்ம் அமைப்பு 1956ல் கலைக்கப்பட்டது.]

துயரகரமான முடிவு

    ஆலுவாவில் (பழைய பெயர் ஆல்வே) தலைமறைவு கட்சி கமிட்டி அவசரக் கூட்டத்தில்   என்சி சேகர் மற்றும் கேசி ஜார்ஜ் இருவருடன் கிருஷ்ணப்பிள்ளை கலந்து கொள்ள வேண்டியிருந்தது. கிருஷ்ணப்பிள்ளை கன்னார்கட் (முகம்மா)வில் செல்லிகண்டதுங்கல் நானப்பனின் குடிசையில் ஒரு வாரம் தங்கினார். தலைமறைவு வாழ்க்கையில் அவரது பெயர் இராமன். அடுத்த நாளே அவர் வேறு இடத்திற்கு இடம் பெயர வேண்டும், ஆனால் மிக துரதிருஷ்டவசமாக அது தள்ளிப்போனது.

     இரவு ஒன்பதரை மணி அளவில் ஒரு பாயில் ஓய்வெடுத்தவாறு கிருஷ்ணப்பிள்ளை அவரது அறிக்கையை எழுதிக் கொண்டிருந்தார். நானப்பனின் வயதான தாய் வீட்டில் இருந்தார். திடீரென்று அலறியபடி அந்த அம்மாவை அவர் சத்தமாக அழைத்தார். “என்னவாயிற்று?” என்று கேட்டார் மூதாட்டி. அவர் தனது இடது கையை அழுத்திவிட்டுக் கொண்டிருந்தார். “ஒன்றுமில்லை, ஒரு பாம்பு என் கையைக் கடித்து விட்டது.” வார்த்தைகளை மீறிய அதிர்ச்சியில் அந்தத் தாய் முதலில் தன்னால் ஆனதைச் செய்தபடி, அவரால் யாரை அழைக்க முடியுமோ அவர்களை அழைத்தார். அவர் கீழே இருந்து அறிக்கையை எடுத்தார். அதில் இவ்வாறு தொடங்கி இருந்தது: “அங்கே விமர்சனம் இருந்தது, ஆனால் சுய விமர்சனம் ஏதுமில்லை…” பாம்பு கடித்த பிறகு நடுங்கும் கைகளால் கடைசி வார்த்தைகளை எழுதினார்: “இருள் என் கண்களை மூடுகிறது. என் உடல் தளர்கிறது. என்ன நடக்கப் போகிறது எனக்குத் தெரியும். தோழர்களே! முன்னேறுங்கள்! செவ்வணக்கங்கள்!! எழுதுகோல் தரையில் விழுந்தது, கிருஷ்ணப்பிள்ளை சிகே மாதவன் மடியில் இருந்தார், மீண்டும் ஒருபோதும் எழுந்திருக்கவில்லை. அரை மணி நேரத்தில் அவர் மரணமடைந்தார்.

            அந்த நாள் 1948, ஆகஸ்ட் 19.

            செவ்வணக்கம் சகாவு! செவ்வணக்கம்!!

--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்

 

Friday 19 January 2024

ஆழ்ந்த மதவாதம் நிலவும் ராஜியத்தில் அறிவியல்பூர்வ மனதைத் தேடி …

 


ஆழ்ந்த மதவாதம் நிலவும் ராஜியத்தில்

அறிவியல்பூர்வ மனதைத் தேடி …

                                                          --கார்கி சக்ரவர்த்தி

    பல்வேறு துறைகளில் விஞ்ஞானம் தனது புதிய கண்டுபிடிப்புச் சாதனைகளுடன், வெளிப்படையாகத் தெரியும் சமூக மாற்றத்துடன் சமூகம் முன்னோக்கிச் செல்ல உதவுகிறது; எனினும், பொருளாதார ற்றத்தாழ்வுகள் பளிச்சென கண்ணை உறுத்தும் ஒரு நாட்டில் அதனை அப்படிப் பொதுவாகச் சொல்லிவிட முடியாது. கல்வியியல் பிரிவு என்ற வகையில் அறிவியல், நமது கல்விப் படிநிலை வரிசையில் உச்சத்தில் உள்ளது, குழந்தைகளுக்கு வாழ்வில் ஒரு சாதனையாளராக மாறும் அளவுகோலாகவும் இருக்கிறது. அதன்

நேர்மறை பங்களிப்பு ஒருபுறம் இருக்க, அறிவியல் கண்டுபிடிப்புகள் மாபெரும் இராணுவக் கருவிகள், ஆயுதங்கள், நவீனத் தொழில்நுட்பத்துடன் அமைந்த போர்த் தளவாடங்கள் உற்பத்தி செய்யும் மாபெரும் இராணுவ உற்பத்தி வர்த்தகத் தொழிலுடனும்கூட இணைக்கப்பட்டுள்ளது –அதன் மூலம் சாவு வியாபாரிகளின் கொள்ளை லாபம், உலகெங்கும் போர்ப் பதற்றம், வன்முறை மற்றும் அழிவும் அதிகரிக்கின்றன.

            எனினும், அறிவியல் பற்றிய மாபெரும் கதையாடல், அதன் மிக முக்கிய விளைவான எதையும் கேள்வி கேட்கும் பார்வை மற்றும் ஆராயும் உணர்வை மனிதகுலச் சிந்தைனையில் ஏற்படுத்தியதைக் காணத் தவறுகிறது. என்னைப் பொருத்தவரை, அறிவியல் ரீதியான மனம் உருவாவது, சமூகத்தில் ஆணும் பெண்ணுமாகப் பல பேராளுமையாளர்களை மீண்டும் கண்டுபிடிக்க ஊக்கமளிக்கும். எத்தனை எத்தனை ஆளுமைகள், ராஜா ராம்மோகன் ராய், ஈஸ்வர் சந்திர வித்தியாசாகர், இரவீந்திரநாத் தாகூர், ஜோதிபா மற்றும் சாவித்திரி பூலே, (பேகம் ரோக்கியா என்றறியப்படும் வங்கப் பெண் எழுத்தாளர், இஸ்லாமிய பெண்ணியவாதி, சமூக ஆர்வலர், பெண்ணுரிமை மற்றும் பெண்கல்விக்கான வழக்கறிஞர், சிந்தனையாளர், கல்வியியலாளர் என்ற பன்முகம் கொண்ட) ரோக்கியா ஷஹாவத் ஹூசைன் எனப் பலர். அவர்கள் அனைவரும் அறிவியல் பிரிவைச் சேர்ந்தவர்கள் இல்லை எனினும், மதம் என்ற பெயரில் திணிக்கப்பட்ட கண்மூடித்தனமான பழைய சடங்குகள், பழக்க வழக்கங்களைக் கேள்வி கேட்கும் மனம் கொண்டிருந்தனர். அவர்கள் தங்கள் நடவடிக்கைகள், எழுத்துகள் மற்றும் சொற்பொழிவுகள் மூலம் மதவாதப் பழமைவாதத்திற்குச் சவால்விட்டு கேள்விகேட்ட அவர்களின் பங்களிப்புகள் நமது மனங்களில் ஆழமான பதிவை விட்டுச் சென்றுள்ளன.

            பல்கிப் பெருகும் கட்செவி மூலமான (வாட்ஸ்அப்) வரலாறு மற்றும் சமூக ஊடகங்களின் இன்றைய நாள், எவரும் கேள்வி கேட்கும் தேடலுடன் எந்த விஷயத்திலும் ஆழமாகச் செல்ல முடியாத இழப்பின் அவலத்தைக் காண நேர்வது –ஒரு தொலைவிலிருந்து பார்க்க நேரினும்-- துயர் தருவது. ராஜா ராம்மோகன் ராய் அவர்களைச் சதி வழக்கத்திற்கு எதிராக அவர் நடத்திய போராட்டங்களுடன் தொடர்புபடுத்துவதுடன் நாம் நிறுத்திக் கொள்கிறோம். ஆனால், அனைத்து மதங்களின் போக்குகளையும் ஒன்றாய் இணைக்கும் தனித்துவமான முயற்சியான அவரது உலகெங்கும் வியாபிக்கும் மதம் என்ற கோட்பாட்டின் மீது அவர் ஆற்றியப் பேருரைகள் இன்னும் கேள்விபடாத ஒன்றாக இருப்பதுடன், நமது நினைவிலிருந்தே மறைந்தும் போனது. இன்றைய அல்லது கடந்தகால கல்வி முறை, விமர்சனபூர்வ கற்றல் செயல்பாட்டை ஊக்கப்படுத்துவதற்கு மாறாக, மேலிருந்து திணிக்கப்படும் எந்தவொரு விஷயம் குறித்தும் விவாதிப்பதற்கான இடம் இல்லாதது என்பது மட்டுமில்லை, அதனைக் கேள்வி கேட்கத் துணிவதையும் முனை முழுங்கச் செய்கிறது. இராமாயணம் குறித்து நம்மிடம் 300 அல்லது அதற்கு மேம்பட்டபலவிதமான கட்டுரைகள் உள்ளன. அப்படி வெவ்வேறாக இருப்பது ஒன்றே போதும் எவரையும் தேச விரோதி அல்லது இந்திய விரோதி என்று முத்திரை குத்திவிட, அதற்கு வாய்ப்புகள் ஏராளம்!.

     இருப்பினும், நெருக்கடியான சுகாதாரச் சூழ்நிலை நிலவும் நேரம், ஒரு நோயாளியை அருகில் இருக்கும், மருத்துவ அறிவியலின் ஆகச் சிறந்த உதாணமான, மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறோமே தவிர, எந்த வழிபாட்டு இடத்திற்கும் அல்ல. ஒருவர் தனது மத நம்பிக்கைக்கு ஏற்றபடி அப்போது பிராத்தனை செய்தாலும், அச்சூழலில் அறிவியலே மதஉணர்வை வெற்றி கொள்கிறது. கட்டுப்படியாகும் செலவில் பொதுச் சுகாதார முறைமையின் தேவையை ஒருவர் உணர்கிறார். அந்த இலக்கை அடைய குறைந்தபட்சம் 6 சதவீதம் பட்ஜெட் நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும். 

        எனினும், கடந்த சில ஆண்டுகளாக ஏற்படுத்தப்பட்டுள்ள அரசியல் மற்றும் மதவாதச் சூழலில், கீழ்ப்படிதல் உள்ள குடிமக்கள், நாட்டின் எல்லா வர்க்கத்தினர் இடையேயும் பரவலாக, அரசு கேட்டுக் கொண்ட வண்ணம் கோவிட் தொற்றை ஒழிக்க மணிகளை அடித்ததையும், தட்டுக்களைத் தட்டி ஓசை எழுப்பியதையும் கண்டோம். அதுபோலவே தொழில் ரீதியில் மருத்துவரான சுகாதரத்துறை அமைச்சர் போலியோ நோயை ஒழிக்க அனைத்து ஆலயங்களிலும் மாலைநேர பூஜை நடத்துமாறு சுற்றறிக்கை அனுப்பினார். மிகவும் படித்த ஒரு முதலமைச்சர் அனுமன் சாலிசா பாடலைத் தினமும் பாடுமாறு அனைத்து மாணவர்களையும் – ஏதோ இந்து மத நம்பிக்கையைத் தவிர, வேறு மத நம்பிக்கையைப் பின்பற்றும் மாணவர்கள் இல்லாததுபோல நினைத்துக்கொண்டு -- கேட்டுக் கொண்டார்.

      79.5 சதவீதமானவர்கள் இந்துகளாகப் பிறந்துள்ளர் என்பது உண்மையாகவே இருக்கலாம். ஆனால் அனைவருமே மதவாத உணர்வு என்ற பெயரில் முன்னிறுத்தப்படும் கருத்தியலை ஒப்புக் கொண்டு அதனை ஆதரிக்கின்றனர் என்று பொருளாகாது.  நாத்திகர்கள் அல்லது கடவுளை நம்பாதவர்கள், மதம் இந்தத் தேசத்தைக் கொன்றுவிடும் என்று கூறுவது சரிதான். மற்ற மத நம்பிக்கைகளுக்கு எதிரான வெறுப்புக் கலாச்சாரத்துடன் கூடிய மதவாதப் பிடிவாதக் கோட்பாடு நமது நாட்டின் பன்மைத்துவக் கட்டமைப்பைப் பிய்த்தெறிந்து விட்டது. தற்போது மூட நம்பிக்கைகள் அதிகரிப்புடன் கேள்வியின்றி சடங்குகளைப் பின்பற்றுவதுடன் சேர்ந்து அந்த வெறுப்புக் கலாச்சாரம் சமூகக் கலாச்சாரமாக அடி ஆழத்திற்கு ஊடுருவிச் சென்றுவிட்டது. 

    எனினும், பெரும் மக்கள் பிரிவு அத்தகைய மதவாதப் பிடிவாதக் கோட்பாட்டை அல்லது தீவிர மதவெறியை ஒப்புக் கொள்ளாது அல்லது எந்தவகையான நிறுவனப்படுத்தப்- பட்ட மதத்தையும் ஆதரிக்க மறுப்பது மட்டுமல்ல, மதவாத உணர்வு மற்றும் ஆன்மிகம் இடையே வேறுபாட்டை ஏற்படுத்தவும்  அவர்கள் முயற்சி செய்கிறார்கள், “கடவுள் இல்லாத ஆன்மிகம்” அல்லது இயற்கையுடன் இயைந்த வாழ்வு குறித்தும் பேசுகிறார்கள். இங்கு முன்னிறுத்தப்படுவதுபோல வேத மரபு ஒன்று மட்டுமே அல்ல என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்; ஏனெனில் வைணவம், சைவம், பக்தி இயக்கம் அல்லது லோகாயதம், சாருவாகம் போன்ற பல்வேறு மரபுகளும் உள்ளன.  இவையெல்லாம் கல்விப் புலன விவாதங்களின் தத்துவப் பாடத்தின் பாடத்திட்டத்துடன் மட்டும் சுருங்கி விட்டன. இந்துக்களாகப் பிறந்தவர்களில் பெரும் பிரிவு, பௌத்தத் தத்துவத்தில் பகுத்தறிவு ரீதியான எதார்த்த விளக்கத்தைக் கண்டார்கள் –அந்தப் பௌத்தத் தத்துவம் கடவுள் இல்லை என்பதைத் தெளிவாக மறுக்கிறது; கடவுள் நம்மில் இருக்கிறார் என்கிறது; எனவே முழுமையான ஆன்ம விடுதலை கோட்பாடு மலர்கிறது.

       அண்ணல் டாக்டர் அம்பேத்கர், “சாதியை ஒழிக்கும் வழி” என்ற தனது நூலில் இந்து மதவாத சமூக முறைமைகளைக் கடுமையாக விமர்சித்த பிறகு இறுதியில், பிராமணிய ஆதிக்கத்தில் பல்லாண்டுகளாகத் துன்பப்பட்ட பெரும் தலித் சமூகத்திற்குச் சமத்துவம் மற்றும் கண்ணியத்திற்கான பாதையைக் காட்டி பௌத்தத்திற்கு மாறியது, வெறும் தற்செயல் உடன்நிகழ்வு அல்ல.

    அயோத்தியில் ராம் மந்திர் மாபெரும் தொடக்க விழா விரைவில் நடக்க இருப்பதைக் காண உள்ளோம். மதவாதப் பெரும்பான்மையினரைத் தாஜா செய்ய அல்லது ஜனரஞ்சகத்திற்காகப் பெரும் தொகையைச் செலவிட்டு, இராமர் கோவில் வளாகம் முக்கியச் சுற்றுலா மையமாக மாற்றப்பட உள்ளது; அது ஏற்கனவே  வைஷ்ணவ் தேவி ஆலயம் முதல் திருப்பதி வரையிலும் மற்றும் சோமநாத்திலிருந்து பூரி ஜகந்நாத் வரையிலும் அவ்வாறு செழித்து வருகிறது.

கொல்கத்தாவில் கீதை பாதை என்ற சமீபத்திய நிகழ்வில் மாபெரும் கூட்டம் கூடுவது, பெரும்பான்மையினரைத் தாஜா செய்வதைப் போன்ற இந்து ஒருமைப்பாட்டின் பிரகடனமும் ஆகும். இராமர் கோவில் உணர்ச்சியைத் தூண்டும் அம்சமாக வேலை செய்வதுபோல, இந்நிகழ்ச்சி நிரலுக்கு எதிர்வரும் பொதுத் தேர்தலும் காரணம்.

  நிகழ்வுகளை ஊடகங்கள் விரிவாகப் பிரச்சாரம் செய்வதாலும் பெருந்தொகை செலவிடப்படுவதாலும் அயோத்தி ராமர் கோவில் தொடக்க விழா உலகளாவிய பிரம்மாண்ட மெகா நிகழ்வாகப் போகிறது. ஆனால், டாக்டர் மேக்நாத் சாஹா போன்ற புகழ்பெற்ற விஞ்ஞானிகளின் அறிவியல்

மற்றும் மதம் மீதான விமர்சனபூர்வ எழுத்துக்களின் சூழலில் வளர்க்கப்பட்ட காரணத்தால், அல்லது கோரா என்ற தலைப்பிலான இரவீந்திரநாத் தாகூரின் பிரதான இலக்கியப் படைப்பு என்பது போன்ற பல எழுத்துக்களில் குறைந்தபட்சம் ஈஸ்வர் சந்திர வித்யாசாகரின் குழந்தைகள் விரைவாகப் படிக்க் கூடிய சிறார் புத்தகமான சித்தார் பனாபஸ்” (சீதா காட்டிற்கு விரட்டப்பட்டார்) நூல்களின் சூழலில் வளர்க்கப்- பட்டதால், நாங்கள் விஞ்ஞானபூர்வ மனோபாவத்தை, வித்தியாசமாகச் சிந்திக்க, கேள்வி கேட்கும் மனங்களை வளர்த்துக் கொள்ள ஊக்குவிக்கப்பட்டோம்.

    [டாக்டர் மேக்நாத் சாஹா வங்காளத்தைச் சேர்ந்த இந்திய வானியல் விஞ்ஞானி. புகழ்பெற்ற கண்டுபிடிப்பான இவரது ‘சாஃஹா அயனியாக்கச் சமன்பாடு’, விண்மீன்களின் புறநிலை மற்றும் வேதியில் இயல்புகளை அறிய உதவுகிறது. வறுமை காரணமாக அவரது தந்தை அவரை வேலைக்கு அனுப்ப நினைத்தபோது, சாஃகாவின் பள்ளி ஆசிரியர்கள் தடுத்துச் சாஃகாவைப் பள்ளியில் தொடரச் செய்தனர். –கூடுதல் செய்தி இணைப்பு]

          அப்படி வளர்க்கப்பட்டதனால் எனது இதயம் சீதையைச் சென்றடைகிறது. சீதா எனக்கு ஒரு கதாநாயகியாக --தனது தூய்மையை நிரூபிக்க அக்னிப் பரிட்சையில் துன்பப்படவும், அதுவும் தாய்மைப் பேறில் கர்பிணியாக இருந்த நிலையிலும் கானகத்திற்கு விரட்டப்பட்ட கதாநாயகியாக-- நீடிக்கிறார். அற்புதமான அழகு மிளிரும் அயோத்தி நகருக்குத் திரும்ப வருமாறு சீதாப்
பிராட்டியை அழைத்தபோதும் வரமறுத்த அப்பெருமாட்டி முடிவெடுக்கும் தனது சொந்த மனதுடன் உறுதியாக இருந்தார். அயோத்திக்குத் திரும்புவதற்குப் பதிலாக அந்தக் கற்பின் கனலி, ‘நாணும் அச்சமும் நாய்கட்கு வேண்டுமாம்’ என்ற புதுமைப் பெண்ணான எனது கதாநாயகி, தனது தாய் பூமி மாதா மடியில் அமைதி கொள்ளச் சென்று விட்டாள். எப்போதும் சொல்பேச்சிற்குக் கட்டுப்பட்டு அடங்கியே நடப்பது என்பதை மறுக்கும் அத்தகைய ஓர் உணர்வுடைய ஜீவனை இன்று நான் தேடுகிறேன்.

            நமது நாட்டின் புராதன நினைவுச் சின்னங்கள் சட்டத்திற்கு விரோதமாக, தலைவர்கள் கண் எதிரில், பாபர் மசூதி தகர்க்கப்பட்டதின் இடிபாடுகள் மீது புதிதாகக் கட்டப்பட்ட இராமர் கோவில் தொடக்க நாள் அன்று –எனது நெறிசார்ந்த தனிமை உணர்ச்சிக்கு ஆறுதல் தேடுவதாக– பெரும் ஊக்கஉணர்ச்சி மிகுந்த சீதைஎம்பிராட்டி மனதின் நினைவாய் நான் ஒரு மெழுகுவர்த்தி அல்லது தீபத்தை ஏற்றுவேன்.

--நன்றி : நியூஏஜ் (ஜன.21 –27)

--தமிழில்  : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

       

           

 

 

   

Thursday 14 December 2023

விடுதலை இயக்கத்திலும் தேசிய மேம்பாட்டிலும் தொழிலாளி வர்க்கத்தின் பங்களிப்பு


 விடுதலை இயக்கத்திலும் தேசிய மேம்பாட்டிலும்

     தொழிலாளி வர்க்கத்தின் பங்களிப்பு

--டாக்டர் பி கே காங்கோ

            மனிதகுல மேம்பாட்டு நிகழ்முறையில் தொழிலாளி வர்க்கம் மிக முக்கிய பங்காற்றியது. மனித வளர்ச்சியில் இந்திய விடுதலை இயக்கம் முக்கியமான அம்சமாகும். தொழிலாளி வர்க்க இயக்கத்தின் ஆகப் பெரும் பங்களிப்பு, வளர்ச்சி மேம்பாட்டில் மக்களுக்கு அதிகாரமளித்தல் கோட்பாட்டை மையத்திற்குக் கொண்டு வந்ததாகும். 21ம் நூற்றாண்டின் இந்த நாளில் வளர்ச்சி குறித்து இரண்டு மாதிரிகள் உள்ளன. ஒன்று, உற்பத்தித் திறன் மற்றும் லாபத்தை அதிகரிப்பதன் அடிப்படையிலான ஜிடிபி (மொத்த உள்நாட்டு உற்பத்தி) எனும் சுத்தமான வளர்ச்சி மாடல் (இதில் பொருளாதார அம்சமே முதன்மை பெறும்).

            இரண்டாவது, மேம்பாடு அல்லது முன்னேற்ற அடிப்படையாக மனித மேம்பாட்டுக் குறியீடு அமைய வேண்டும் என்று கூறும் மாடல். 20ம் நூற்றாண்டிலிருந்து மனித வளம் மையமாக அமைந்த இந்த மாடலைத் தனது போராட்டங்களின் மூலம் நடுநாயகமாகக் கொண்டு வந்தது தொழிலாளி வர்க்கத்தின் ஆகப் பெரும் பங்களிப்பு. இப்பின்னணியில்தான் ஒருவர் விடுதலைக்கு முன் மற்றும் விடுதலைபெற்ற இந்தியாவில் தொழிலாளி வர்க்கத்தின் பங்களிப்பைப் பரிசீலிக்க வேண்டும். தொழிலாளி வர்க்கத்திற்கு விடுதலை இயக்கமானது எப்போதும் காலனியம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டமாகும். ஏனெனில், தொழிலாளி வர்க்கம் தேசத்துடன் தன்னை அடையாளப்படுத்திக் கொண்டது.

            தொழிலாளி வர்க்கத்திற்கு விடுதலையின் பொருள், வெள்ளைக்காரர்களிடமிருந்து இந்தியர்களுக்கு அதிகாரத்தை மாற்றுவது மட்டும் அல்ல; மாறாக, அனைத்து முனைகளிலும் இந்திய மக்களுக்கு அதிகாரமளித்தல் என்பதாகும். எனவே, தொழிலாளி வர்க்கம் விடுதலைக்கு முன் முக்கிய பங்கை வகித்தது, இந்தியா விடுதலை பெற்ற பிறகும் தொடர்ந்து முக்கிய பங்கை ஆற்றி வருகிறது.

            ஏகாதிபத்தியத்தை முறியடிக்கவும், மனித உரிமைகள் மற்றும் சமத்துவக் கொள்கைகள் அடிப்படையிலான ஜனநாயகத்தின் மூலம் மக்களுக்கு அதிகாரத்தைக் கொண்டு வருவதற்கும் இந்தியாவின் விடுதலை தேவை. இதற்கு மதசார்பற்ற தேசம் தேவை. புதிதாகச் சுதந்திரம் பெற்ற இந்திய அரசு ஜனநாயக, மதசார்பற்ற மற்றும் சோஷலிச சார்புடைய அரசானது. அரசியலமைப்புச் சட்டமே தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் மாபெரும் சானையாகும். தங்களின் பொருளாதாரக் கோரிக்கைகளில் மட்டுமே தொழிலாளர் வர்க்கம் சிக்கி மாட்டிக் கொண்டுள்ளது என்றும், பொருளாதார லாபங்களை மட்டுமே தொழிலாளி வர்க்கப் போராட்டம் ஏற்கிறது என்றும் குற்றம் சாட்டுபவர்கள், விரிந்து பரந்த (தொழிலாளி வர்க்கப் போராட்ட) சித்திரத்தைக் காணத் தவறுகிறார்கள்.

            அதிகாரம் என்பது அரசியல் அதிகாரம் மட்டுமல்ல, ஆனால் செல்வம், சாதி மற்றும் மதப் படிநிலைகள் மற்றும் பிற சலுகைகளின் மூலமும் அதிகாரம் வரும். பொருளாதார, அரசியல் என அனைத்துப் போராட்டங்கள் மூலம் தொழிலாளி வர்க்கம் சமத்துவத்திற்காகப் போராடுகிறது; மற்றும் ஆளும் வர்க்கத்தின் சலுகைகளைத் தாக்கி நீதிக்காகப் போராடுகிறது. இந்தியாவில் தொழிலாளி வர்க்கத்தின் பங்கைப் பரிசீலிப்பதற்கு இதுவே அடிப்படையாகக் கட்டாயம் இருக்க வேண்டும்.

            தொடக்கக் கட்டத்தில், வேலை நேரத்தைக் குறைக்க, வாராந்திர ஓய்வு கோரி, குழந்தை உழைப்பைக் கட்டுப்படுத்த வேண்டி தொழிற்சாலை சட்டத்தில் மாற்றங்களுக்காகத் தொழிலாளி வர்க்கம் போராடியது. இதற்காக, மதம், சாதி, மொழி மற்றும் வண்ணங்கள் வேறுபாடுகளுக்கு அப்பால், (‘வண்ணங்கள் வேற்றுமைபட்டால், அதில் மானுடர் வேற்றுமை இல்லை’ என) தொழிலாளர்களைத் திரட்டியது.

            மார்க்சியம் மற்றும் மகாராஷ்டிராவின் மகாத்மா ஜோதிராவ் புலே போன்ற சமூகச் சீர்திருத்தவாதிகளின் தாக்கத்தில், என்எம் லோகாண்டே மற்றும் ஷபூர்ஜி போன்றவர்கள்

1880களில் டெக்ஸ்டைல் தொழிலாளர்களைத் திரட்டி தொழிற்சாலை சட்டத்தில் மாற்றங்கள் கோரி அரசிடம் கோரிக்கை சாசனம் சமர்ப்பித்தனர். 1907ல் லோகமான்ய பாலகங்காதர திலகருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட சிறை தண்டனையை எதிர்த்து ஆறு நாள் வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடப்பட்டதில், மும்பையில் தொழிலாளர் வர்க்க உணர்வுநிலை அதிகரித்தது பிரதிபலித்தது. (அதில் தொழிலாளர்களின் பொருளாதாரக் கோரிக்கை இல்லை, மாறாக, தேசத் தலைவருக்கு ஆதரவான அரசியல் கோரிக்கைக்காகத் தொழிலாளர்கள் போராடினர் என்பதைக் காண்க). இந்த வளர்ச்சிப் போக்கை மாமேதை லெனின் கவனத்தில் எடுத்துக் கொண்டு, ‘இந்திய உழைக்கும் வர்க்க உணர்வுநிலை எழுச்சி, இந்தியாவை நீண்டகாலம் பிரிட்டிஷ் ஆள்வதை இயலாததாக்கி விடும்’ என எழுதினார்.

            லெனின் தலைமையில் மாபெரும் அக்டோபர் புரட்சி நடந்த 1917க்குப் பிறகு, உலகம் முழுவதுமிருந்த அனைத்துத் தொழிலாளர்களின் உணர்வுநிலை உயர்ந்தது. இந்தியத் தொழிலாளர் வர்க்கமும் இதற்கு விதிவிலக்கல்ல. அது ஒன்று திரண்டு ஒரு சங்கம் அமைக்க முடிவு செய்தது. இவ்வாறு, தொழிலாளர் வர்க்கத்தின் முதலாவது தேசிய சங்கமான நமது ‘அனைத்திந்திய தொழிற்சங்கக் வாங்கிரஸ்’ (ஏஐடியுசி) மும்பையில் 1920 அக்டோபர் 31ம் நாள் அமைக்கப்பட்டது. அமைப்பு நாள் தொடங்கி ஏஐடியுசி தொடர்ந்து சோஷலிசம் மற்றும் தேசிய விடுதலைக்காகப் போராடி வந்தது.

            1921ல் ஜாரியாவில் நடந்த மாநாட்டில், ஏஐடியுசி பிரிட்டிஷாரிடமிருந்து பூரண சுதந்திரம் கோரி தீர்மானம் நிறைவேற்றியது. அது வரை மக்கள் இயக்கமாக இருந்த காங்கிரஸ் கட்சி ஹோம் ரூல் என்னும் வரையறுக்கப்பட்ட சுதந்திரத்தைக் கோரியதே அல்லாமல் பூரண விடுதலை கோரவில்லை. எனவே, 1921 முதல் 1929வரை ஒவ்வொரு காங்கிரஸ் அமர்வின் முன்னும், காங்கிரஸ் கட்சி பூரண சுதந்திரம் தீர்மானத்தை நிறைவேற்ற வேண்டும் எனக் கோரி ஏஐடியுசி ஆர்பாட்டங்களை நடத்தியது. அந்தக் கோரிக்கை, 1929 லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் அமர்வின் போதுதான் கை கூடியது. பூரண சுதந்திரத் தீர்மானம் நிறைவேற்றிய லாகூர் அமர்வில் ஜவகர்லால் நேரு காங்கிரஸின் தலைவரானார்.

            அதனைத் தொடர்ந்து, உழைக்கும் வர்க்கம் கூடுதல் உற்சாகத்துடன் எல்லா முக்கியப் போராட்டங்களிலும், காங்கிரஸ் விடுத்த அறைகூவல்களிலும் பங்குபெற்றது.

            இந்திய விடுதலைக்காகத் தொழிலாளர்கள் மற்றும் தொழிற்சங்கங்களின் தியாகங்கள்

பல. சுதேசி இயக்கத்தில் பாபு ஜினு (Babu Genu) என்ற மில் தொழிலாளி மும்பையில் தனது உயிரைப் பலி கொடுத்தார். அதுபோலவே, 1946ல் ராயல் இந்திய கடற்படை பேரெழுச்சி வெடித்தபோது, எல்லாப் பகுதிகளிலும் தொழிலாளர் வர்க்கம் வேலைநிறுத்தங்களை ஏற்பாடு செய்து, வேலைநிறுத்தம் செய்து போராடிய கடற்படை வீரர்களை ஆதரித்தது.

     மும்பை நர்சிங் சம்மேளனத்தின் தலைவர்கள், கமல் தோன்டே மற்றும் விமல் ரணதிவே கடற்படை எழுச்சிக்கு ஆதரவாக நடைபெற்ற ஊர்வலத்தில் கலந்து கொண்டபோது, போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தனர். துப்பாக்கிச் சூட்டில் கமல் தோண்டே மாண்டார். கடற்படை வீரர்கள் மற்றும் தொழிலாளர்களின் இந்த வீரம் செறிந்த போராட்டம், விடுதலையை விரைவுபடுத்தி, இந்தியாவிலிருந்து பிரிட்டிஷ் ஆட்சியைப் புறப்படச் செய்தது. சுதந்திரத்திற்குப் பின் உலகம் இரண்டு முக்கிய முகாம்களாகப் பிளவுபட்டது.

            ஒரு முகாம் அமெரிக்க ஏகாதிபத்தியத் தலைமையில் அமைந்தபோது, மற்றொன்று சோவியத் யூனியனின் சோஷலிசத் தலைமையில் அமைந்தது. விடுதலைப் போராட்டத்தில் தொழிலாளர் வர்க்கம் பங்கெடுத்தது மற்றும் சோஷலிச சிந்தனை நிகழ்முறையின் கீழ் அதன் அரசியல் செல்வாக்கின் வளர்ச்சி காரணமாகவும் சோஷலிச நாடுகளின் உதவியுடன், புதிதாக விடுதலை பெற்ற இந்திய தேசம், வெளி உறவு விஷயங்களில் நடுநிலை கொள்கையையும் தேசிய மேம்பாட்டிற்காகக் கலப்புப் பொருளாதாரக் கொள்கையையும் தழுவியது.

            பொதுத்துறை நிறுவனப் பிரிவு பொருளாதாரத்தின் மிக மிக முக்கிய பிரிவானது. இவை அனைத்தும் இந்தியத் தொழிலாளி வர்க்கப் பங்களிப்பின் காரணமாக விளைந்தவை. ஒரு சமுதாயத்தின் எந்த மேம்பாட்டு நிகழ்முறையும் இரண்டு அம்சங்களைக் கொண்டிருக்கும். ஒன்று, உற்பத்தி உயர்தல்; மற்றொன்று, இந்த அதிகரித்த உற்பத்தியின் பலன்களைப் பகிர்ந்து கொள்வது. இவ்விரண்டு பகுதிகளிலும் தொழிலாளி வர்க்கம் முக்கிய பங்காற்றியது.

            எனவே, 1930லிருந்து 1980வரை உற்பத்தித் திறன் உயர்வுடன், அதன் பலனில் தொழிலாளி வர்க்கத்திற்கான பங்கும் உயர்ந்தது. ஆனால் 1990லிருந்து 2023வரை அதுபோல அவ்வாறு நடைபெறவில்லை.

            எனினும், முதலாளித்துவ (உற்பத்தி) முறை ‘டிரிக்கிள் டவுன் தியரி’ என்பதை நம்பியது.  (‘நெல்லுக்கு இறைத்த நீர் வாய்க்கால் வழிஓடி புல்லுக்கும் ஆங்கே பொசியுமாம்’ என

மூதுரையில் ஔவையார் கூறியபடியும்; 1890களில் "குதிரை மற்றும் குருவி கோட்பாடு" என்ற பெயரில் அறியப்பட்ட ‘டிரிக்கிள் டவுன் கோட்பாடு’, குதிரைக்கு அதிக அளவு ஓட்ஸ் உணவளிப்பதன் மூலம் சில தீவனங்கள் கடந்து செல்லும் அதிர்ஷ்ட சிட்டுக்குருவிகள் சாப்பிடலாம் என்று கூறியபடியும்), உற்பத்தியும் லாபமும் அதிகரித்தால் அது மெல்ல ஆனால் நிச்சயமாக ஊடுருவி கீழே கசிந்து பரவும், மற்றும் ஒவ்வொருவரும் பயனடைவார்கள் என முதலாளித்துவம் வலியுறுத்தியது. எனினும், இந்த வாதத்தை எதார்த்த உண்மைகள் மெய்ப்பிக்கவில்லை. தற்போது தனியார்மயத்துடன் பின்பற்றப்படும் உலகமயக் கொள்கையும், தொழிலாளி வர்க்க அமைப்புகளுக்கு எதிரான கொள்கைகள் மற்றும் தாராளமயம், தனியார்மயம், உலகமயம் (எல்பிஜி) அடிப்படையிலான கோட்பாடு என்பது முதலாளித்துவப் புத்தாக்கக் கொள்கை தவிர வேறில்லை.

            எனவே, தொழிலாளி வர்க்கம் அதனை எதிர்க்கிறது. அதனுடைய அந்த எதிர்ப்பு இயக்கங்களில் சமத்துவம், ஜனநாயகம், மனித உரிமைகள், மதச்சார்பின்மை மற்றும் சமூக நீதி கோட்பாடுகள் வலியுறுத்தப்படுகின்றன. எனவே, இவ்வாறு மனிதனை மையப்படுத்திய வளர்ச்சி மாதிரி விரும்பத்தக்க விளைவாயிற்று.

            நம்முடைய அனுபவத்தில், தொழிலாளி வர்க்கத்தின் ஒற்றுமை மட்டுமல்ல, மாறாக பாடுபட்டு உழைக்கும் அனைத்து மக்கள் கூட்ட ஒற்றுமையின் முக்கியத்துவம் உணரப்பட்டது. தற்போது தன்னைப் பாசிச ஆட்சியாக வெளிப்படுத்திக் கொள்ளும் முதலாளித்துவ மறு எழுச்சியின் தாக்குதலை முறியடிக்க, 20ம் நூற்றாண்டின் மத்தியிலும் 20களின் மத்தியிலும் அரசு அதிகாரத்தின் மீது தொழிலாளி வர்க்கத்திற்கு இருந்த செல்வாக்கைப் போன்ற ஒற்றுமையும் செல்வாக்கும் இத்தருணத்தின் தேவையாகும். பாசிசத்தை, முதலாளித்துவ மறுஎழுச்சி தாக்குதலை முறியடிக்க ஒன்றுபடுவோம்!

--நன்றி: நியூஏஜ் (டிச. 10 –16)

            --தமிழில் : நீலகண்டன்,

          என்எப்டிஇ, கடலூர்