Thursday, 9 July 2026

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு–152 SS பாட்லிவாலா – ஒரு சோசலிசவாதி, கம்யூனிஸ்ட் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரரின் அசாதாரணமான கதை

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு–152

SS
பாட்லிவாலா – ஒரு சோசலிசவாதி, 

கம்யூனிஸ்ட் மற்றும்
சுதந்திரப் போராட்ட வீரரின் 

அசாதாரணமான கதை

–அனில் ரஜிம்வாலே

எஸ் எஸ் பாட்லிவாலா ஓர் அசாதாரணமான மற்றும் திறமை வாய்ந்த மனிதர்; தொடர்ந்து அவர் ஒரு புகழ்பெற்ற விடுதலை வீரராக, ‘காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி’யின் நிறுவனராக, தீவிரக் கம்யூனிஸ்ட்டாக மற்றும் கலை பண்பாட்டு உலகில் செயலூக்கம் மிக்க வாழ்க்கைக்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு விலகியவராக சென்று கொண்டே இருந்தார்.

தொடக்க கால வாழ்க்கை : பாட்லிவாலாகள்

18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் இந்தியா கண்ணாடி பாட்டில்களை உற்பத்தி செய்யவில்லை, அவை பெரும்பாலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. 19ம் நூற்றாண்டில் பம்பாயில் ஒரு பார்சி குடும்பம் கண்ணாடி பாட்டில்கள் வர்த்தகத்தை மேற்கொள்ள முடிவு செய்தது; அதனால் ‘பாட்லிவாலா’ என்ற பெயரை வரித்துக் கொண்டு அத்தொழிலில் ஏறத்தாழ ஏகபோகத்தை நிறுவியது! இந்தப் பார்சி குடும்பம் இந்திய விடுதலை இயக்கம் மட்டுமின்றி, பண்பாடு மற்றும் கல்வித் துறைகளிலும் தொடர்ந்து பங்காற்றிய வண்ணம் செயல்பட்டது. 

பாட்லிவாலாகள் குடும்பத்திலிருந்து பின்னர் புகழ்பெற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் தொழிலில் ஈடுபட்டவர்கள் உருவானார்கள், சமூகத்தில் அதன் வழி மரியாதைக்குரிய அந்தஸ்தைப் பெற்றனர்.

அவர்களில் ஒருவர் டாக்டர் சபூக்ஷ் (ஷியாவாக்ஸ்) சொஹ்ராப் பாட்லிவாலா [Dr Shabukhsh (Shiavax) Sohrab Batliwala]. அவர் 1928 மற்றும் 1929ல் பம்பாய் மேயர் ஆனார். பம்பாயில் 1930ல் மரணமடைந்தார். அவருக்கும் திருமதி பாச்சுபாய் அவர்களுக்கும் 1905 மே 19ல் சொஹ்ராப் பிறந்தார். அவருக்கு வரலாற்றுப் புகழ்பெற்ற ஈரானியக் கவிஞர் சொஹ்ராப் என்று பெயரிட்டனர். அவர் சோலி என்ற பெயரில் பிரபலமானார்.

சோலியின் பெற்றோர் வெளிநாடு சென்றதால் சோலி பெரும்பாலும் தனது தாயின் சகோதரி (சித்தி, இந்தியில் ‘மௌசி’) உடன் தங்கினார்.

கல்வி 

சோலி 1911ல் தன்பாய் மற்றும் ரூபாபாய் நடத்திய குஜராத்தி பள்ளியில் சேர்ந்தார். 1921ல் நியூ ஹை ஸ்கூலில் சேர்ந்து மெட்ரிக் தேர்ச்சி பெற்றார். 1922 முதல் 1925 வரை அவர் புகழ் பெற்ற எல்பின்ஸ்டோன் கல்லூரியில் படித்து பி ஏ இளங்கலை பட்டம் பெற்று 1928ல் எல்எல்பி பட்டமும் பெற்றார். மேலும் அவர் வரலாறு மற்றும் பொருளாதாரம் (ஹானர்ஸ்) படித்தார். 

தொழில் ரீதியில் அவர் ஒரு வழக்கறிஞராகி இருக்க வேண்டும்.

மாணவர் இயக்கத்தில் 

அது எல்பின்ஸ்டோன் கல்லூரியில்தான் சோலிக்கு அரசியலில் தொடர்பு ஏற்பட்டது. அந்தக் கல்லூரி மாணவர் இயக்கத்தின் மையமாக இருந்தது. வங்கப் புரட்சி இயக்கம் குறித்து அறிந்த சோலி, அதில் ஆழமாக ஈர்க்கப்பட்டார். அந்நாட்களில் (BSB) என்ற பம்பாய் மாணவர்கள் சகோதரத்துவம் (பிரதர்ஹுட்) அமைப்பு பலம் பொருந்தியதாக இருந்தது. சோலி அந்த அமைப்பிலும், பம்பாய் யூத் லீக் என்ற இளைஞர் அமைப்பிலும் இணைந்தார். அந்நாட்களில் இளைஞர் லீக் அமைப்புகள் இந்தியா முழுவதும் பரவலான வலைப்பின்னலுடன் செயல்பட்டன.

கல்லூரியில் பல கீழ்ப்படியாமை நடவடிக்கைகளுக்குப் பெயரெடுத்தவர் சோலி; அவரது தந்தையின் அந்தஸ்து காரணமாகவே அவர் ஒழுங்கு நடவடிக்கைகளில் இருந்து அரிதாகத் தப்பினார். உதாரணத்திற்கு ‘உள்ளேன் ஐயா, ஆம் ஐயா’ என்று பதிலளிப்பதில் அவருக்கு விருப்பம் இல்லை. எனவே அவர் அதைக் கேலி செய்வார் அல்லது சப்தமாகப் பதில் அளிப்பார்! அவரை பெஞ்ச் மீது ஏறி நிற்கச் சொல்லி, ஆசிரியர்கள் அவரிடம் சப்தமிடுவர். அதனால்லாம் அடங்கி போகாத சோலி திரும்பக் கத்துவார், சில ஆசிரியர்கள் பொறுத்து போய் விடுவார்கள்!

அவர் பல்கலைக் கழகப் பயிற்சி படையில் (யுனிவர்சிட்டி ட்ரைனிங் கார்ப்ஸ், UTC) சேர்ந்தார், அது அவரின் எதிர்காலப் புரட்சிகரப் பணிகளுக்குக் கை கொடுத்தது!

இதன் மத்தியில் காதல் பிரச்சனையில் அவர் உணர்வு ரீதியான நெருக்கடிகளுக்கு ஆளானார் – அவர் காதலித்த அந்தப் பெண் பணம், கார் போன்ற லௌகீக விஷயங்களில் அதிக ஆர்வம் உடையவராக இருந்ததால், காதல் இறுதியில் முறிந்து போனது,

மனம் உடைந்து நம்பிக்கை இழந்த சோலி தற்கொலை செய்து கொள்ளவும் எண்ணினார். ஆனால், அபூர்வமான ஒரு வாழ்க்கையை வீணடித்துவிடக் கூடாது என்று பின்னர் ஒரு ‘முடிவு’க்கு வந்தார்!

அவர் உணவைத் ‘துறக்க’வும் கூட நினைத்தார். ஆனால் அந்த எண்ணத்தைத் தேசிய நிகழ்வுகள் தர்க்க ரீதியாகத் தவறு என நிரூபிக்க, விரைவில் அவர் உப்புச் சத்தியாகிரக இயக்கத்தில் இணைந்தார்.

உப்புச் சத்தியாகிரகம்

உப்புச் சத்தியாகிரகம் குறித்த சோலியின் கருத்து, அமைதியான சத்தியாகிரகம் என்ற அந்த இயக்கத்திற்கு எதிராக இருந்தது. சூரத்தில் தராசனா என்ற இடத்தில் பெரும் எண்ணிக்கையிலான உப்பு மூட்டைகள் அடுக்கப்பட்டு முள்வேலியிட்டுப் பாதுகாக்கப்- பட்டன. சோலி தலைமையிலான இளைஞர்கள் குழு ஒன்று ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தி முள்வேலியைத் துண்டித்து உப்பு மூட்டைகளைப் பல தவணைகளில் எடுத்துச் சென்றது.

இதைக் கண்டு திகைத்த உண்மையான சத்யாகிரகிகள், பகுத்தறிவுடன் நடந்து கொள்ள கூற அவர்களிடம் முயன்றனர். அவர்களின் தர்க்கவாதத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்த சோலியும் அவரது தோழர்களும் போலீஸ்காரர்கள் அடித்தபோது அதை ‘அமைதியாக’ சந்தித்தனர். அவருக்கு 9 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

1928ன் புகழ்பெற்ற பர்த்தோலி போராட்டத்திலும்கூட சோலி கலந்து கொண்டார். காங்கிரஸ் எவ்வாறு அகிம்சையைப் பின்பற்றியது என்றும், மேலும் ஏன் மற்றும் எவ்வாறு உப்புச் சத்தியாகிரகம் திட்டமிடப்பட்டது என்பதை விளக்கி அவர் தனது பேட்டிகளில் விவரித்துள்ளார்.

காங்கிரஸ் செயற்குழுவின் பிற உறுப்பினர்கள் தீவிரமாக ஆட்சேபித்த போதும் 1930ல் சிவில் ஒத்துழையாமை இயக்கம் எனப்படும் சட்ட மறுப்பு இயக்கத்தைக் காந்திஜி தொடங்கியது எவ்வாறு என்பதையும் கூட சோலி விளக்கினார்.

செயற்குழு உறுப்பினர்கள், முன்பு 1920களில் நடத்தப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் வன்முறை காரணமாக விலக்கிக் கொள்ளப்பட்டதைக் காந்திஜியிடம் நினைவூட்டினர். இப்போது 1930களின் தொடக்கத்தில் சூழ்நிலை முன்பை விட, வகுப்புவாத வன்முறை மற்றும் பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் உட்பட வன்முறை நிறைந்ததாக உள்ளது என்றனர். 

பிரிட்டிஷ்க்கு எதிராக மேலும் கூடுதல் சக்தியுடன் வெளியே வர விரும்பும் மக்களின் நாடியை ஒருவர் உணர வேண்டும் என்று அவர்களுக்கு மறுமொழி கூறிய காந்திஜி, மக்கள் செயல்பட விரும்புகிறார்கள், அவர்களுக்கு வழிகாட்ட தலைமை ஏற்பது முக்கியம் என்றார்.

போராட்டத்தைக் கைவிட அவரைச் சமாதானப்படுத்த சோலியின் தந்தை சிறைச்சாலைக்கு வந்தார். ஆனால் சோலி பேசுவதில்லை என்ற மௌன விரத சபதம் செய்திருந்தார். எனவே அவர் ஒரு காகிதத்தில் எழுதினார், மன்னிப்புக் கேட்கும்படி கூற மாட்டேன் என தந்தையும் உறுதிமொழி அளித்தார். உண்மையில் சோலியின் தந்தை ஆழமான சங்கடத்தில் இருந்தார், அதன் விளைவாய் இறுதியில் அவர் மாரடைப்பில் மரணம் அடைந்தார்.

சோலி முதலில் பம்பாய் சிறைக்கும் பின்னர் திருச்சிராப்பள்ளி சிறைக்கும் அனுப்பப்பட்டார்; அங்குப் புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர் பி சுந்தரய்யா அவர்களைச் சந்தித்தார். சோலி 30 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார். அவர் உடல் நலம் பாதிக்கப்பட அவரை விடுதலை செய்ய வேண்டியதாயிற்று.

விடுதலையான பின், சட்ட மறுப்பு இயக்கப் பின்னணியில், சோலி 100 முதல் 150 இளைஞர்களைத் திரட்டி ஒரு குழு அமைத்தார். லத்திகள் முதலியவற்றில் அவர்களுக்குப் பயிற்சி அளித்தது மட்டுமின்றி, கைராட்டை (சர்க்கா), சத்யாகிரகம் மற்றும் சுதேசி குறித்தும் போதிக்கப்பட்டது. இந்தச் ‘சுயம்சேவக்’குகள் (தன்னார்வத் தொண்டர்கள்) சுயராஜ்யம் அடையும் வரை வீட்டுக்குத் திரும்புவதில்லை எனச் சபதம் செய்தனர்! பின்னர் அவர் தலைமறைவானார், ஆனால் கைது செய்யப்பட்டு பிஜாபூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

அவரும் அவருடன் சேர்ந்த மற்றவர்களும் போலீஸ் உத்தரவுகளை ஏற்க மறுத்தனர். எனவே அவர் சிறையிலேயே விசாரிக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.

சீனியர் காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சேபித்தபோதும் சோலி, யூசுப் மெஹ்ரலி மற்றும் இளைஞர்களின் பிற தலைவர்கள் அரசியல் வகுப்புகளை ஏற்பாடு செய்து நடத்தினர்.

ராகுல் சாங்கிருத்தியாயனுடன் இணைந்து சோலி பீகார் சோசலிஸ்ட் கட்சி நிறுவும் முன்னெடுப்புகளை மேற்கொண்டார்.

“1938ல் லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் மாநாட்டில் ஒரு மாற்று வரைவு தீசிஸை முன் வைத்தோம். நம்பூதிரி பாத், திங்கர் மேத்தா மற்றும் ஆர் டி பரத்வாஜ் சிபிஐ பொலிட் பீரோ உறுப்பினராலும் அந்தத் தீசிஸ் ஆமோதிக்கப்பட்டது” என முற்போக்கு எழுத்தாளர் சங்க (PWA) நிறுவனரும், சிபிஐயின் பிரபல தலைவருமான சஜ்ஜாத் ஜாஹீர் ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்தார்

கம்யூனிஸ்டுகளும் கம்யூனிஸ்ட் அல்லாதவர்களும் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்புடன் செயல்படக்கூடிய ஒரு பரந்த இடதுசாரி மற்றும் ஒன்றுபட்ட சோசலிச அமைப்பாகக் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை வளர்க்க கம்யூனிஸ்டுகள் விரும்பினர். லாகூர் மாநாட்டுக்குப் பிறகு விரைவில் சிபிஐ பொதுச் செயலாளர் பி சி ஜோஷி அத்தகைய ஒரு வாய்ப்பை விவாதிக்க சிஎஸ்பி பொதுச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணனிடம் அதை முன் வைத்தார்

எம்என் ராய் உடன் மோதல்

எம் என் ராய் மற்றும் சில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சிஎஸ்பி அமைப்பதற்கு எதிராகத் தீவிரமாக இருந்தனர். இந்த நேரத்தில் இந்தியாவுக்கு வந்த ராய் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருந்தார். ராய் காங்கிரஸ் தலைவர்களிடம் சிஎஸ்பி-ஐ கலைக்க யோசனை கூறினார். இதற்காக அவர் தென்னிந்தியாவிற்கும்கூட விரிவாகப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தார்.

எனவே சிஎஸ்பி மத்திய செயற்குழு ராய் பிரச்சாரத்துக்கு எதிராகத் தென்னகத்தில் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்ய சோலி பாட்லிவாலாவை நியமித்தது. சோலி தீவிரமாகப் பயணம் செய்து ராய் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளித்தார். ராய் மற்றும் சோலி இருவரும் பேசும் வகையில் ஒரு பொதுக்கூட்டம்கூட இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் ராய் கூட்டத்திற்கு வர இயலவில்லை என செய்தி அனுப்பினார்.

கைது செய்ய உத்தரவு

சோலியின் உரையைக் கைதட்டி வரவேற்ற கூட்டத்தினர் அவரைத் தங்கள் தோள்களில்கூட தூக்கினர். அவர்கள் சோலியை ராய் தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். பேச மறுத்துவிட்ட ராய் சீற்றமடைந்து அவர்களை வெளியேறவும் உத்தரவிட்டார்!

இதன் மத்தியில் மெட்ராஸ் மாகாணத்தின் ராஜாஜி அரசு அவரைக் கைது செய்வதற்கு இரகசியமாக உத்தரவிட்டது. பிரிட்டிஷ் அரசின் தூண்டுதலில் சோலி ஆற்றிய உரை தேச விரோதமாக ஆகும் வகையில் இருந்தது என்பது இதற்காகக் கூறப்பட்ட சாக்கு! இவை அனைத்தும் சோலிக்குத் தெரியாது. சோலி மெட்ராஸ் மாகாணத்திற்கு மீண்டும் வந்தால் அவரைக் கைது செய்ய ராஜாஜி உத்தரவிட்டார்.

சோலி மாணவர்கள் மாநாட்டில் உரையாற்ற மெட்ராஸ் வழியாகக் கோழிக்கோடு (காலிகட்) செல்ல வேண்டி இருந்தது. அது, ராஜாஜியின் உத்தரவைச் செயல்படுத்த போலீஸைச் சுறுசுறுப்பு அடையச் செய்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கூடியிருந்த இடத்திற்கு அவர்களை வரச் செய்தது. போலீஸ் வருகையை ஏ கே கோபாலன் சோலியிடம் தெரிவித்தார். சோலி அவரிடம், “போலீசிடம் ஹாலில் நுழைய வேண்டாம், மீறி வந்தால் மாணவர்கள் வன்முறையில் இறங்கி சூழ்நிலை மோசமாகக் கூடும்” எனத் தெரிவிக்கக் கூறினார். ஆனால் மிகப் பிடிவாதமாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹாலில் நுழைந்தார். தவிர்க்க முடியாதது நிகழ்ந்தது: அவரது கார் அடித்து நொறுக்கப்பட்டது, அவரது உடை கந்தல் கந்தலாகக் கிழித்துத் தொங்கவிடப்பட்டு அவர் பிடித்துத் தள்ளப்பட்டார். எனவே அந்த அதிகாரியைக் காப்பாற்ற சோலி தலையிட வேண்டியதாயிற்று. இறுதியில் சோலி கைது செய்யப்பட்டார்.

இந்த நிகழ்வு காங்கிரஸ் கட்சிக்குள் அமளியை ஏற்படுத்தியது. இந்த அளவுகோல் பயன்படுத்தப்பட்டால், நேரு உட்பட எந்தத் தலைவரும் தேசத் துரோகம் என்ற பெயரில் கைது செய்யப்பட முடியும் என்ற கவலை ராஜாஜியிடம் தெரிவிக்கப்பட்டது! எனவே அவரது நடவடிக்கை மூர்க்கத்தனமானது என்றது.

காங்கிரஸ் தலைமை சோலியை விடுதலை செய்ய ராஜாஜியிடம் கூற அவரும் அதை ஏற்று விடுதலை செய்தார்.

சிபிஐயில் இணைதல்: மத்திய குழு உறுப்பினர்

சோலி 1935ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் பரிட்சார்த்த உறுப்பினராகச் சேர்ந்தார். உண்மையில், சிஎஸ்பி-யில் இருந்தபோது திரும்பத் திரும்ப கம்யூனிஸ்ட் என குற்றம் சாட்டப்பட்டவர்  அவர்.

சிஎஸ்பி-யில் இருந்த நாட்களில் சோலி கம்யூனிஸ்டுகளுடன் நெருக்கமாக ஒத்துழைப்பிலிருந்தார். ஏற்கனவே அவர் மெட்ராஸில் பி சுந்தரையா உடன் தொடர்பில் இருந்தார். 1940களின் தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட அவர் ஹிஜிலி சிறைக்கும் பின்னர் தியோலி வதை முகாம்களுக்கும் அனுப்பப்பட்டார்.

அங்கு அவர் எஸ்ஏ டாங்கே, பிடி ரணதிவே, ராகுல் சாங்கிருத்தியாயன், ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்ற தலைச்சிறந்த தலைவர்களைச் சந்தித்தார்.

1942 வாக்கில் டாங்கே மற்றும் சோலி தவிர பெரும்பாலான கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். எரவாடா சிறைக்கு மாற்றப்படும் வரை அவர்கள் மற்றொரு கைதியுடன் தனியே அடைத்து வைக்கப்பட்டனர். பின்னர் 1943ல் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலை ஆனதும் சோலி பம்பாய் கட்சி தலைமையகத்திலும் மற்றும் கட்சியின் கலாச்சாரப் பிரிவிலும் தீவிரமாகப் பணியாற்றினார். 1943 மே –ஜூன் மாதங்களில் நடைபெற்ற சிபிஐ முதலாவது கட்சி காங்கிரஸில் அவர் தீவிரமாகப் பங்கேற்றார். இந்தக் கட்சிப் பேராயத்தில் அவர் சிபிஐ மத்திய குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

பம்பாயில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் (ஏஐஎஸ்எப்) புகழ்பெற்ற தலைவர் நர்கீஸ் பாட்லிவாலாவை அவர் திருமணம் செய்து கொண்டார். தீவிரமான மாணவ மற்றும் கட்சித் தலைவரான நர்கீஸ் ஓர் அமைப்பாளரும் கூட. பின்னர் அவர்கள் பிரிந்தனர்.

சோலி மற்றும் நர்கீஸ் இருவரும் மாணவர்கள் மத்தியில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டனர்.

சுபாஷ் போஸ் தப்பிக்கும் திட்டம்

1939 –40ல் சுபாஷ் போஸ் இந்தியாவிலிருந்து தான் தப்பிக்கத் திட்டமிட உதவி கேட்டு சிபிஐ தலைமையை அணுகினார். பிசி ஜோஷி, டாக்டர் அதிகாரி, சோலி பாட்லிவாலா மற்றும் சிலர் உள்ளிட்ட சிபிஐ தலைவர்கள் போஸ் தப்பிப்பதற்குத் தீவிரமாகத் திட்டமிட்டு அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தினர். நன்கு திட்டமிட்ட இந்தத் தப்பிக்கும் திட்டத்தில் சோலி தகவல் தொடர்பாளராகச் செயல்பட்டார்.

கருத்து வேறுபாடுகள் மற்றும் கட்சியை விட்டு வெளியேறல்

1940களின் மத்தியில் பி சி ஜோஷி மற்றும் சிபிஐயுடன் சோலியின் கருத்து வேறுபாடுகள் தீவிரமாக வளர்ந்தன. இந்தக் கருத்து வேறுபாடுகள் முக்கியமாக இரண்டாவது உலக யுத்தம் குறித்த பரிசீலனையுடன் தொடர்புடையது. அவருடைய குற்றச்சாட்டுகள் திறம்பட பதிலளிக்கப்பட்டன. சோலி பாட்லிவாலா சிபிஐ-யில் இருந்து விலகிச் செல்லத் தொடங்கி தனக்கான தனியான சொந்த வெளியை ஏற்படுத்தினார். எனினும் அவர் தனது அடிப்படை கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளவில்லை.

பண்பாட்டு உலகில்

கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்தும் புலாபாய் தேசாய் நினைவு நிறுவனத்தில் சோலி இணைந்தார். அந்நிறுவனம் 1946-ல் தனது மாமனார் புலாபாய் தேசாய் நினைவாக மாதுரி தேசாய் அவர்களால் தொடங்கப்பட்டது. சோலி பாட்லிவாலா அதனை நிர்வகித்தார். ஏப்ரஹாம் அல்காசி உட்பட பல தலைச்சிறந்த கலாச்சார உலகப் பிரமுகர்களுக்கும்; மற்றும் இந்திய மக்கள் நாடக மன்றத்துடன் (IPTA) தொடர்புடைய ஏ கே ஹேங்கல், ஷியாம் பெனகல், கிரீஷ் கர்னாட், சவுகத் ஆஸ்மி போன்ற பலருக்கும் ஒரு பயிற்சிமுனை மையமாக அது மாறியது.

சோலி, புலாபாயின் மகன் திருபாய் அவர்களுக்குத் தனி உதவியாளர் ஆனார்; ஸ்விட்சர்லாந்துக்கான இந்தியத் தூதராகத் திருபாய் நியமிக்கப்பட்டபோது சோலி அவருடன் பெர்னே சென்றார்.

ஐஎன்ஏ கைதிகளுக்கு ஆதரவாக

(நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் உருவாக்கப்பட்ட ‘இந்தியத் தேசிய இராணுவ’த்தில் (INA) இணைந்த வீரர்களை இரண்டாம் உலகப் போரின்போது பிரித்தானிய அரசு கைது செய்தது.) கைது செய்யப்பட்ட அந்த வீரர்களுக்கு எதிராக 1945 –46ல் நடத்தப்பட்ட விசாரணைகளின்போது சோலி பாட்லிவாலா அவர்களுக்கு ஆதரவாகத் தீவிரமாக ஈடுபட்டு புலாபாய் தேசாய்க்கு உதவியாளராகச் செயல்பட்டார்.

கலாச்சாரப்  பண்பாட்டு நடவடிக்கைகள்

பாட்லிவாலாவுக்கு மருமகள் உறவு உடைய ஜாரின் கம்பட்டா மற்றும் ஃபிரென்ஸி ஆல்பிரிட்ஜ் (Zarine Khambatta and Freny Olbrich) இருவரும் தங்கள் ‘சோலி மாமா’வின் ஒப்பற்ற வாழ்க்கையை ஒன்றிணைத்தனர். பம்பாய் நகருக்குக் காந்திஜி, நேரு மற்றும் விஜயலட்சுமி பண்டிட் போன்ற தலைவர்கள் வருகை தந்தபோது பம்பாயில் 89, பி தேசாய் ரோடில் அமைந்த அவர்களது ‘ஹஸ்மன்’ (‘Hasman’) வீட்டில் சோலி அவர்களைச் சந்தித்தார். ஆல்பிரிட்ஜ் ஸ்காட்லாண்டிலிருந்து எழுதுகிறார்: “சமரசமற்ற நேர்மையான மனிதரான சோலி மாமா காங்கிரசை விட்டு வெளியேறினார்; காரணம், சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ், அவரால் கைவிட முடியாத கொள்கைகளுடன் முரண்பட்டதாகும்”

சிபிஐ-யுடன் கடுமையான வேறுபாடுகள் இருந்த போதிலும் சோலி காங்கிரஸ் தலைவர்களுக்கு, குறிப்பாக அதன் வலதுசாரிகளுக்கு ஒன்றைத் தெளிவுபடுத்தினார் – தனது நீண்ட கால கொள்கைகளைத் தன்னால் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள முடியாது.

சோலி பாட்லிவாலா பம்பாயில் ஜஹாங்கீர் ஆர்ட் கேலரியை விரிவுபடுத்தக் கடுமையாகப் பாடுபட்டார். மற்றும் அங்கு சிறிய தாழ்வாரச் சிற்றுண்டிச்சாலையான 'சமோவர்' (Samovar) ஒன்றைத் தொடங்கினார்.

வடிவமைப்புக் கலை கல்வியாளரான (design academician) மகேந்திர தக்கர் எழுதுகிறார்: “அவர் அருமையான ஒரு மார்க்சியவாதி”. “இந்தியர்கள் இந்த ‘இசம்’ என்பதை ஜனநாயகச் சோசலிசத்தின் பின்னொட்டாகப் பார்க்கிறார்கள்… சோலி’பாய் நடைமுறையில் கொண்டு வர உதவிய தேசிய ஒருமைப்பாடு இலட்சியத்தைச் சுற்றி ஒவ்வொருவரும் அணி திறள்கிறார்கள்”

ராஜ்பன்ஸ் கிருஷ்ணா லாகூர் மாணவர்கள் சங்கத்தின் புகழ்பெற்ற தலைவர். உஷா ராஜ்பன்ஸ் கிருஷ்ணாவின் மகளும், பால்ராஜ் மற்றும் பீஷம் சஹானியின் மருமகளுமான தேவிகா மோஜ்வானி தங்கள் வாழ்க்கையில் சோலி ஏற்படுத்திய தாக்கத்தை நினைவு கூர்கிறார்.

புத்தகங்கள்

சோலி பாட்லிவாலா சிபிஐ-யில் இருந்தபோதும், சிபிஐ விட்டு விலகி வெளியில் இருந்தபோதும் எண்ணற்ற பல கட்டுரைகள், அரசியல் அறிக்கைகள், கையேடுகள் மற்றும் நூல்களை எழுதினார். அவரது புகழ்பெற்ற படைப்புகளில் ஜெய் ஹிந்த்: இந்தியக் கிளர்ச்சிப் புதல்வி ஒருவரின் நாட்குறிப்பு – ராணி ஜான்சி படையுடன் (1945) என்ற நூல் வித்தல் பாய் கே ஜாவேரி உடன் இணைந்து எழுதியது (Jai Hind: The Diary of a Rebel Daughter of India -With the Rani of Jhansi Regiment (1945), co-authored with Vithal Bhai K Jhaveri;) ஜெய் ஹிந்த் என்ற தலைப்பில் மற்றொரு நூல் (1946). கட்சியை விட்டு விலகிய பிறகு அவர் சிபிஐ உடன் தனது கருத்து வேறுபாடுகள் குறித்தும் கூட எழுதியுள்ளார்.

சோலி பாட்லிவாலா பம்பாயில் 1986ஆம் ஆண்டு ஜூன் 14ம் தேதி இயற்கை எய்தினார்.

–நன்றி : நியூ ஏஜ் (2026, ஜூன் 21 –27)

– தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்.

 

Saturday, 27 June 2026

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வாழ்க்கை வரலாறு 150 --அபுல் ஓலா : சுதந்திர இயக்கம் கட்டிய பெருந்தலைவர்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வாழ்க்கை வரலாறு 150 


அபுல் ஓலா : சுதந்திர இயக்கம் கட்டிய பெருந்தலைவர்

–அனில் ரஜீம்வாலே

அபுல் ஓலா அல்லது ஜஃப்ருதீன் அஹமத் பீகாரைச் சேர்ந்த அபூர்வமான சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் கம்யூனிஸ்ட் அமைப்பாளர்; மிகக் கடினமான மற்றும் ஏழ்மையான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் வகுப்பு ஒற்றுமைக்காகப் போராடியவர். அவரது பெயர் ஏறத்தாழ மறக்கப்பட்ட ஒன்று எனினும், அவரது பங்களிப்புகள் இன்னும் வாழ்கின்றன.

தொடக்க கால வாழ்க்கை 

அபுல் ஓலா 1918 ஆகஸ்ட் 7ல் பீகார், கயா மாவட்டத்தில் சாட மசூதி (Chata Masjid) அருகில் பாட்டம் பிரிட்ஜ் மொஹல்லாவில், அறிவார்ந்த கருத்துக்கள் மற்றும் சுதந்திரப் போராட்டத் தியாகங்களுக்குப் புகழ்பெற்ற ஓர் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தார். (மொஹல்லா எனில் அண்மையிடம் என்று பொருள்). அவரது தந்தை மௌலானா கைருத்தீன் ஷாஹிப், கிலாபத் இயக்கம் மற்றும் ஜாமியாத் இஉலிமா-இ-ஹிந்த் அமைப்புகளின் தீவிர உறுப்பினர். கயாவில் காஸ்மியா மதராசா நிறுவப்பட அவரே பொறுப்பு. அவர் ஓர் ‘அலீம்’ (கற்றறிவாளர்), அபுலின் தாத்தாவும் கூட ஓர் ‘அலீம்’.

அபுல் ஓலா தனது தொடக்கக் கல்வியை உருது, அரபு மற்றும் பெர்சியன் மொழியில் அவரது அம்மா வழி தாத்தா மௌலானா அப்துல் கஃபார் வழிகாட்டலின்கீழ் பெற்றார். மனப்பாடமாகத் திருக்குர்ஆனை அவர் அறிவார்! அவரது தந்தை அவரை ‘ஹாபீஸ் குர்ஆன்’ என ஆக்க விரும்பினார். (முழுமையான திருக்குர்ஆனையும் மனனம் செய்து ஒப்பிக்க கூடிய ஒரு முஸ்லீம் ‘ஹாபீஸ் குர்ஆன்’ என்று அழைக்கப்படுகிறார்)

அரசியலில்

அபுலின் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி என அனைவரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடும்ப உறுப்பினர்கள் வழக்கமாக ராட்டையில் கதர் நூல் நூற்பவர்கள். கயா மாவட்ட அம்வானின் கெந்தூய் (Amwan, Kendui) கிராமத்தில் 1922ல் காங்கிரஸ் அமர்வு நடந்தது. அபுலின் தந்தை அவரது நான்கு வயது மகனை அந்த மாநாட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அபுல் ஓலா கயா ஜில்லா பள்ளியில் படித்தார். ஒரு மாணவராக இருந்தபோது முன்னணி புரட்சியாளரும் விடுதலைப் போராட்ட வீரருமான ஷியாம் பர்த்தாவர் உடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. பர்த்தாவர் எதிர்காலத்தில் கயா சதி வழக்கில் ஒரு தலைவராக ஆனவர்.

ஒரு மாணவர் தலைவராக அபுல் MORN என்ற பெயரில் ஓர் இரகசிய அமைப்பை ஏற்படுத்தினார். அப்பெயர் நான்கு புரட்சியாளர்கள் பெயரின் முதல் எழுத்தை இணைத்து வந்தது: அந்த நால்வர் –மோட்டோ, ஓலா, ராஜ்டியோ மற்றும் நாகேந்திரா. அது 1935 –36 காலகட்டம். பர்த்தாவர் அந்த அமைப்பைத் தலைமை ஏற்று நடத்தினார். தலைமறைவு இரகசிய  நடவடிக்கைகளில் ஈடுபட்ட அவர்கள் ஏராளமாகப் படிப்பது வழக்கம். 

ஷியாம் சரண் பர்த்தாவர் கயா மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் பிறந்தவர். அவரது குடும்பம் பிரிட்டிஷாருக்குச் சேவை புரிந்தபோதும் அவர் மெல்ல ஒரு புரட்சியாளராக உருவானார். அவரது தந்தை அடிக்கடி பிரிட்டிஷ் அட்டூழியங்களின் கதைகளை விவரிப்பது வழக்கம்

1920களில் கயாவில் செயல்பட்ட தீவிரமான இளைஞர் அமைப்பு, யுவக் சங். 1928ல் லாலா லஜபதி ராய் லத்தியால் கடுமையாகத் தாக்கப்பட்டு மரணம் அடைந்தபோது, இளைஞர்கள் சங்கத்தின் நடவடிக்கைகள் அதிகரித்தன. கயாவிலிருந்து 12 மைல் தள்ளி இருந்த ஓர் இடத்தில் இரகசிய  கூட்டம் நடத்தப்பட்டது; அக்கூட்டத்தில் பகத்சிங், சூர்யா சென், பர்த்தாவர் மற்றும் பிறர் கலந்து கொண்டனர்.

மற்றொரு கூட்டம் கயா சந்த் சௌரா மொஹல்லாவில் சாம்பத் கலியில் நடத்தப்பட்டது. புரட்சியாளர்கள் மீது பிரிட்டிஷ் அரசு அடக்குமுறைகளை அதிகரித்தது. மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல் ஆய்வாளருக்கு ஒரு கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. ஓலாவின் கூற்றுப்படி அக்கடிதம் பின்வருமாறு அமைந்தது: “உங்களுக்கு உபதேசங்கள் அல்லது அரசியல் உரையை வழங்குவது எனது நோக்கம் அல்ல. உங்கள் கடமைகளை ஆற்றும்போது மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்குச் சாதாரணமாக அறிவுரை கூறுகிறேன்; மற்றும் நட்பு ரீதியான அறிவுரையை நீங்கள் உண்மையுடன் எடுத்துக் கொள்ள தவறினால், முன்பு முடிந்துபோன சான்டர்ஸ், லோமென் (போன்ற அதிகாரிகள்) மற்றும் பிறர் தலைவிதியை நீங்கள் நினைவு கொள்ள வேண்டும். தங்களின் மேம்பட்ட நடத்தைக்குச் சான்றளிக்க நான் இரண்டு வாரம் அனுமதிக்கிறேன். இல்லையெனில், உங்களின் மரண தண்டனை ஆணைக்கு ஒப்புதல் அளிப்பதில் நான் மகிழ்ச்சியுடன் சம்மதிப்பேன், பிறகு இங்கிலாந்து முழுவதும் சேர்ந்தாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது. நான் தங்களுக்குத் தோட்டாக்களை அனுப்புகிறேன், அதன் நினைவு –ஒருக்கால் நீங்கள் நல்ல மனிதராக மாறும் பட்சத்தில்– உங்களைச் சரியான பாதையில் வழிநடத்தும் என நான் நம்புகிறேன்; இல்லாவிடில், தங்கள் ஆணவம் காரணமாக அதற்கான தருணம் எழும் எனில், அந்தத் தோட்டக்கள் தங்கள் சுய பாதுகாப்புக்கு உதவலாம்”

மாணவர்கள் அமைப்பு 

கயாவில் 1936ல் கயா மாவட்ட மாணவர்கள் அசோசியேஷன் அமைக்கப்பட்டது. கூட்டம், ராய் பக்கராவில் விசாலமான பங்களா(கோதி)வில் ஸ்ரீ நாராயன் ஜிண்டால் ‘வக்கீல்’ தலைமையில் நடந்தது.  பாட்னாவின் புகழ் பெற்ற பிளீடர் பாபு பல்தேவ் சகாய் கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். கூட்ட அமைப்பாளர்களின் முன் வரிசையில் ஓலா செயலாற்றினர். 1937ல் கயா ஜில்லா பள்ளியில் ஓலா பள்ளி மாணவர்கள் அமைப்பு ஒன்றைத் திரட்டி அமைத்தார். அந்த அமைப்பின் வரைவு விதிகளைக்கூட அவர் தயாரித்தார். சமூக அமைப்பு மாதிரியில் அது அமைந்தது.

அந்தமான் கைதிகள் விடுதலை இயக்கம்

நாடு முழுவதும் ‘அந்தமான் கைதிகள் விடுதலை இயக்கம்’ தந்த அழுத்தத்தின் காரணமாக ஷியாம் சரண் பர்த்தாவர் பிற கைதிகளுடன் அந்தமானில் இருந்து 1937ல் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானதும் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். நேஷனல் ஃப்ரண்ட் என்ற கட்சிப் பத்திரிக்கையின் பத்து பிரதிகள் கயாவுக்கு வருவது வழக்கம். அவற்றையும் மெட்ராஸில் இருந்து பதிப்பிக்கப்பட்ட நியூ ஏஜ் மாத இதழையும் ஓலா விநியோகித்தார். மாணவர்கள், கம்யூனிஸ்டுகள் மற்றும் அறிவாளர்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் இன்டர்நேஷனல் அமைப்பின் ஆவணங்கள் மற்றும் நூல்களையும்கூட அவர் விநியோகித்தார்.

கிராந்தி, சின்கரி மற்றும் காலிஷ் (Kranti, Chingari and Khalishபுரட்சி, தீப்பொறி, ஏக்கம்) போன்ற பருவ இதழ்களும் பதிப்பிக்கப்பட்டு வந்தன; அவற்றையும் தனது நண்பர்களிடம் ஓலா விநியோகித்தார். இந்தப் பருவ இதழின் பெயரில் கயாவில் “காலிஷ் பார்க்” என்ற பூங்கா பெயரிடப்பட்டது.

ஓலா, பர்த்தாவர் மற்றும் மற்றவர்கள் நகரத்தின் முன்னணி பிரமுகர்கள் உட்பட முற்போக்கு சிந்தனையாளர்கள் அமைப்பு ஒன்றையும் அமைத்தனர்.

மாணவர் இயக்கம் மற்றும் ஓலா கைது

கயா ஜில்லா மாணவர்கள் அமைப்பு என்ற பதாகையின் கீழ் 1938ல் அபுல் ஓலா மாணவர்களின் பெரும் இயக்கத்தைத் தலைமையேற்று நடத்தினார். கல்லூரி முதல்வருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றினர். இதையடுத்து ஓலாவுக்குப் பள்ளியில் அனைத்து வசதிகளும் பறிக்கப்பட்டன. தனது நடவடிக்கைகளை அவர் தொடர்ந்தார், ஜெகனாபாத்தில் நடைபெற்ற மாவட்ட மாணவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்.  புகழ் பெற்ற விடுதலைப் போராட்ட வீரர் பேராசிரியர் அப்துல் பாரி மாநாட்டைத் தொடங்கி வைத்தார். ஓலா அதன் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவர்.

1938ல் மாணவர்களின் பரவலான வேலை நிறுத்தத்தின்போது ஓலா கைது செய்யப்பட்டு கயா மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக நகரம் முழுவதிலும் மாணவர்கள் தெருவில் இறங்கி கண்டனப் போராட்டம் நடத்தினர். அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தையும் வழக்கறிஞர்கள் நூலகத்தையும் சூழ்ந்து கொண்டு, “சிறைக் கதவுகளை உடையுங்கள், ஓலா பாய் (சகோதரர் ஓலாவை) விடுதலை செய்” என முழக்கமிட்டனர். பீகார் மாகாண மாணவர்கள் சம்மேளனத்தின் இரண்டு தலைவர்கள், ஹரி கிஷோர் தாக்கூர் மற்றும் மூன்ட்ரிகா சிங், கயாவுக்கு விஜயம் செய்து ஓலாவின் விடுதலையைக் கோரினர்.

கதார் இயக்கத்தில் 

இந்திய நாடு முழுவதும் குறிப்பாக வட இந்தியாவில் இந்த நேரத்தில் கதார் இயக்கம் பரவியது, கதார் கட்சி, கீர்த்தி (கடின உழைப்பாளி) மற்றும் கீர்த்தி லேஹர் (உழைப்பாளர் இயக்கம் அல்லது அலை) என்ற இரு இதழ்களை முறையே உருது மற்றும் குர்முகி மொழியில் பிரசுரித்தது. [குர்முகி, பஞ்சாபி மொழியை எழுதப் பயன்படும் முதன்மையான எழுத்துமுறை. இது 16-ஆம் நூற்றாண்டில் சீக்கியர்களின் 2வது குருவான குரு அங்கத் உருவாக்கியது.]

ஷியாம் சரண் பர்த்தாவர், அபுல் ஓலா மற்றும் பிற தோழர்கள் கதார் கட்சியின் பணிகளிலும், கட்சிப் பருவ இதழ்கள் பிரசுரம் மற்றும் அதன் விநியோகத்திலும் ஈடுபட்டனர். இந்தக் காலகட்டத்தில் கயாவில் சின்கரி (Chingari, தீப்பொறி) மற்றும் கலீஷ் (Khalish ஏக்கம் /மனக்குமுறல்) இதழ்கள் பிரசுரிக்கப்பட்டன.

கிராந்தி மற்றும் சின்கரியில் ஓலா எழுதுவது வழக்கம். சமீபத்தில் தன்வந்தரி அந்தமானில் இருந்து திரும்பி இருந்தார். ஓலாவை மீரட்டுக்கு இடம் மாறி சென்று கீர்த்தி லேகார் உருது இதழுக்கு உதவும்படி அவர் வேண்டினார். ஓலா அங்குச் சென்று ஹர்மந்தர் சிங் சோதி, பரத் சிங் மற்றும் சாதிக் கம்போங் உடன் பணியாற்றினார்.

இரண்டாம் உலகப் போர் வெடித்ததும் பிரிட்டிஷ் அரசு கீர்த்தி லேகார் இதழ் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தது ஆசாத் அச்சகம் மற்றும் இதழும் அபராதத் தொகை கட்டும்படி கோரப்பட்டன. இறுதியில் செய்தித்தாளை மூடும்படி கட்டாயப்படுத்தப்பட்டது மற்றும் அதன் ஊழியர்களுக்கு எதிராக வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன.

பரத்வாஜுடன் தொடர்பு

மீரட்டில் இருந்தபோது அபுல் ஓலா புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவரும் சிபிஐ கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினருமான ஆர் டி பரத்வாஜ் உடன் தொடர்பு ஏற்பட்டது. பரத்வாஜ் வழிகாட்டலில் மீரட் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் கட்சி அமைக்கப்பட்டு வந்தது. மீரட் சிபிஐ கிளையின் (செல்) உறுப்பினரானார் ஓலா. அந்தக் கட்சிக் கிளை டேராடூன் சதி வழக்கில் தொடர்புடைய ஷர்ஜங், ராஜேந்திர பால் மற்றும் பரத் சிங் மற்றும் டெல்லி சதி வழக்கில் தொடர்புடைய ‘பீகாரி தோழர்’ (அவர்தான் ஓலா) மற்றும் ஓம் பிரகாஷ் முன்னி ஆகியோர்களை உள்ளடக்கியிருந்தது.

பீகாரில் கட்சி அமைத்தல்

போலீஸ் கம்யூனிஸ்டுகள் மீது நடவடிக்கைகளைக் கடுமையாக்க, ஓலா மீரட்டில் கைதாகாமல் தப்ப வேண்டி வந்தது; அவர் இரகசியமாகப் பீகார் சென்றார். பீகாரில் சுனில் முகர்ஜியைச் செயலாளராகக் கொண்டு 1939 அக்டோபரில் முன்கர் என்ற இடத்தில் சிபிஐ நிறுவப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட மாகாண அமைப்புக் குழுவின் உறுப்பினர் சரத் பட்நாயக் கயாவில் கட்சியை அமைக்கும் பொறுப்பை ஓலாவிடம் அளித்தார். அந்த நிலைமைகளில் அது கடினமான பணியாக இருந்தது. அவரது தலைமையின் கீழ் ஒரு கம்யூனிஸ்ட் தொடக்க உட்குழு அமைக்கப்பட்டது.

போர் எதிர்ப்பு நடவடிக்கைகள் 

1939 ஜனவரியில் கயா மாவட்டத்தில் தவ்ட்நகர் அருகில் சௌராம் கிராமத்தில் ஓர் அரசியல் மாநாடு நடத்தப்பட்டது. குமார் பத்ரி நாராயணன் சிங் ஏற்பாடு செய்த அந்த மாநாட்டில் சின்கரி குழு முன்னணி பங்கு வகித்தது. பஞ்சாப் கதார் மற்றும் கீர்த்தி கட்சிகளின் உறுப்பினர்கள் அதில் பங்கேற்றனர்; பர்த்தாவர் மற்றும் ஓலா தீவிரப் பங்காற்றினர்.

இரண்டாம் உலகப் போர் பின்னணியில் 1940ல் காங்கிரஸின் ராம்கர்க் (இன்று ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ளது) அமர்வின் மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டு அமர்வின் அருகில் அதே நேரத்தில் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஒரு சமரச எதிர்ப்பு மாநாடு (ஆன்ட்டி காம்பரமைஸ் கான்பரன்ஸ்) நடைபெற்றது. ஷீல்பத்ர யாஜி அதன் வரவேற்புக் குழுத் தலைவர், தன்ராஜ் ஷர்மா செயலாளர். கட்சி அறிவுறுத்தல்படி தன்ராஜ் சர்மா உடன் அபுல் ஓலா நெருக்கமாகப் பணியாற்றினார். கம்யூனிஸ்டுகள் மற்றும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி (CSP)யில் இருந்தவர்கள் உட்பட விரிவான இடதுசாரி அணியினர் அதில் பங்கேற்றனர்.

ஓலா மீண்டும் தலைமறைவாகச் செல்ல நேர்ந்தது. அவர் மாணவர்கள் மத்தியில் தனது பணிகளைத் தொடர்ந்தார். (பீகார்) தர்பங்கா, லகரியாசராய் என்ற இடத்தில் பீகார் மாகாண மாணவர்கள் கன்வென்ஷன் நடத்தப்பட்டது. ஏஐஎஸ்எப் பொதுச் செயலாளர் எம் ஃபரூக்கி அதில் பங்கேற்றார். பெருமளவில் (ஏஐஎஸ்எப்) மாணவர் பெருமன்றத்தின் தலைமறைவு நடவடிக்கைகளுக்கு ஓலா உதவினார்.

கதார் கட்சி பணி தொடர்பாகப் பஞ்சாபில் இருந்து திடீரென்று சுரேந்திர மோகன் நாயக் கயாவுக்கு வந்தார். அவர் ஓலாவை அவரது தலைமறைவு மையத்தில் சந்தித்தார். கல்கத்தாவில் நடைபெற இருந்த கதார் கட்சி கூட்டத்தில் பங்கேற்க இருவரும் சேர்ந்து புறப்பட்டனர்; ஆனால் சிலர் கைது செய்யப்பட்டாலும் சுரேந்திர மோகன் மற்றும் ஓலா கைதாகாமல் தப்பினர்.

ஓலா ஓர் இரகசிய கடிதம் மூலம் லாகூர் செல்ல கேட்டுக் கொள்ளப்பட்டார். அவரும் அதை ஏற்று லாகூரை அடைந்து பாய் ஹர்பன்சிங்கைச் சந்தித்தார். அவர்கள் மாண்ட்கோமரி ஃபடேஹ்வால் (Montgomery Fatehwal) என்ற இடத்தில் ஒரு தலைமறைவு கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் தங்கள் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த முடிவு செய்தனர். 

கைது 

திரும்பி வந்ததும் ஓலா தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினார் தொடர்ந்து போலீசிடம் கைதாகாமல் நழுவி வந்தார். 1941 தொடக்கத்தில் நோயுற்றிருந்த தனது தாயைச் சந்திக்க கயா சென்றார், அவரது வீட்டைப் போலீஸ் சூழ்ந்திருந்தது. அருகிலுள்ள இடங்கள் மற்றும் மொஹல்லாகள் (நகரை ஒட்டிய புறநகர் பகுதிகள்) அடைக்கப்பட்டு இருந்தன. மதிலேறிக் குதித்து ஓட முயன்ற ஓலாவைப் பெரும் போலீஸ் படை மடக்கிப் பிடித்தது. முதலில் மத்திய சிறைக்கும் பின்னர் ஹசாரிபாக் சிறைக்கும் மாற்றப்பட்டார். ‘சிறைக்குள் ஒரு சிறை’ என்ற புகழ்பெற்ற வார்டு எண் 14ல் அவர் அடைக்கப்பட்டார். இந்த வார்டில் நான்கு பகுதிகளாகச் சுமார் 60 கைதிகள்; அவர்களில் ராகுல் சாங்கிருத்தியாயன், சுனில் முகர்ஜி, கிஷோரி பிரசன்னா சிங், அலி அஷ்ரப், தன்ராஜ் சிங், காரியானந்த் சர்மா உள்ளிட்ட பெரும்பாலோர் கம்யூனிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்ட் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள்.

1941ன் மத்தியில், அதாவது ஜூன் 22ல் சோவியத் யூனியன் மீது ஹிட்லரின் தாக்குதலுக்குப் பிறகு, ஓலா உள்ளிட்ட கைதிகள் விடுதலை செய்யப்படலாயினர்

கிசான் சபாவில்

விடுதலையான பிறகு ஓலா பீகார் பிட்டாவில் நடைபெற்ற அகில இந்திய கிசான் சபா (AIKS)வின் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்றார். பிசி ஜோஷி மற்றும் சுனில் முகர்ஜி கதார் கட்சி மற்றும் பஞ்சாபின் கீர்த்தி கட்சியின் விவரங்கள் குறித்து ஓலாவிடம் கேட்டனர். இச்சமயத்தில் கீர்த்தி கட்சி சிபிஐயுடன் இணையத் தயாராக இருந்தது.

விரைவில் அபுல் ஓலா 1942ல் கயா மாவட்டக் கட்சி செயலாளரானார். இந்தப் பொறுப்பில் அவர் 1947 வரை நீடித்தார்.

1944 –45 காலகட்டத்தின்போது அபுல் ஓலா பிற தோழர்களுடன் சேர்ந்து பரவலாகக் கிசான் சபா அமைப்பதில் ஈடுபட்டார். ஓலாவால் சகுராபாத்தில் ஒரு பேரணி நடத்தப்பட்டது. சுவாமி சகஜானந்தா கலந்து கொண்ட அப்பேரணி மக்கள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அபுல் ஓலாவின் தீவிரப் பங்கேற்புடன் வேறு பல கூட்டங்களும் பேரணிகளும் நடத்தப்பட்டன.

மன்ஸார் ரிஸ்வி உடன் சந்திப்பு 

மன்ஸார் ரிஸ்வி அல்லது மன்ஸாரூல் ஹாக் 1943ல் நடைபெற்ற முதலாவது கட்சி காங்கிரஸில் பீகாரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது சிபிஐ மத்திய குழு உறுப்பினர். அவர் பீகார் சாப்ரா பகுதியைச் சேர்ந்தவர், அலிகாரில் படித்தவர். 1924ல் உபி கான்பூரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு மாநாட்டுத் தயாரிப்புக்கு அமைக்கப்பட்ட 78 பேர் குழுவில் அவர் ஒருவர். தனது சகோதரி அக்யூலா காட்டூன் (Aquila Khatoon) நகைகள் அனைத்தையும் பீகாரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் யத்தீன் அச்சகத்திற்கு (Yatin Press) நன்கொடையாக அளித்தார்.

சாப்ராவில் ஓலா சிபிஐ சார்பாக மன்சார் ரிஸ்வியைச் சந்தித்தார். அவர்கள் இருவரும் இணைந்து கட்சியைக் கட்டப் பணியாற்றினர். சாப்ராவுக்கு அருகில் சரண் என்ற கிராமத்தில் ஓலாவுக்கு ஆசிரியர் பணி கிடைத்தது. அபுல் ஓலா 1944 ஏப்ரல் 4ம் தேதி அக்யூலா காட்டூனை மணந்தார்.

தேர்தல் பணிகளில் 

1946ல் நாடு முழுவதும் நடைபெற்ற பொது தேர்தல்களில் ஓலா விரிவாகப் பணியாற்றினார். கட்சி அவரை முஸ்லிம் தொகுதிகளான சாப்ரா, சிவான் மற்றும் கோபால்கஞ்ச் இடங்களில் பணியாற்றக் கூறியது. அதே நேரத்தில் பருத்தி மற்றும் சணல் ஆலைகள், கடைகள், தொடக்கப்பள்ளி ஆசிரியர் அமைப்பு, முனிசிபல் தொழிலாளர்கள், இரயில்வே பிளாட்பார்ம் கூலிகள் மற்றும் பிற தொழிலாளர்களை ஓலா திரட்டினார். மேலும் உணவு, மண்ணெண்ணெய், சர்க்கரை, எண்ணெய் முதலான பொருட்களின் பற்றாக்குறைக்கு எதிராக அவர் கண்டன இயக்கங்களை நடத்தினார்.

வகுப்புவாதக் கலவரங்களின்போது மக்களைப் பாதுகாக்கவும், அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி அளிப்பதிலும் ஓலா கடுமையாகப் பணியாற்றினார். பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு அவர் உணவும் தங்குமிடமும் ஏற்பாடு செய்தார்.

சுதந்திரத்திற்குப் பிறகு 

1947க்கு பிறகு அபுல் ஓலா ஒரு வேலையில் சேர வேண்டி வந்தது; காரணம் பி டி ஆரின் குழுவாதப் போக்கு பாதை காரணமாகக் கட்சி அதன் அணிகளைப் பராமரிக்கும் நிலையில் இல்லை. அந்தப் பாதையின் விளைவுகள் கட்சிக்கு மட்டுமல்லாமல் தனிநபர் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பேரழிவு ஏற்படுத்துவதாக இருந்தது.

சியாம் சரண் பர்த்தாவர் கயா மாவட்டத்தின் ஜில்லா பரிஷத் (மாவட்டச் சபை) செயலாளரானார். ஓலா ஜில்லா பரிஷத்தில் ஒரு வேலையில் சேர்ந்தார். அவர் பிஏ மற்றும் பிஎல் பட்டத் தேர்வுகளிலும் கலந்து கொண்டார். மேலும் பீகார் மாநில உள்ளாட்சி அமைப்புகள் அக்கவுண்டன்ட் தேர்வில் அவர் தேர்ச்சி பெற்றார். அதைத் தொடர்ந்து ஜில்லா பரிஷத்தில் அக்கவுண்டன்ட் பதவிக்கு அவர் பணி நியமனம் பெற்றார்.

இந்தியச் சுதந்திரத்தின் வெள்ளி விழா ஆண்டில் 1972ல் ஓலா சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான தாமிரப் பட்டயம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். அவர் வாழ்நாள் முழுவதும் அவருக்குக் குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்பட்டது.

அவர் 1979ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார், பின்னர் பார் அசோசியேஷனில் வழக்கறிஞராகச் சேர்ந்தார். ஆனால் ஊழல் கோலோச்சிய நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் அங்கு நிலவிய பரவலான தனிநபர் சுயநல முன்னெடுப்புகளுடன் அவரால் ஒத்துப்போக முடியவில்லை. எனவே அதைவிட்டு அவர் வெளியேறினார். ஏற்கனவே அவர் டிஸ்ட்ரிக் போர்டு குடியிருப்பைக் காலி செய்து விட்டதால் சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்தார். 

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்த அவரது மனைவி 1994 ஜனவரி 8ல் மரணம் அடைந்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் அமைப்பில் ஓலா முன்னணி பிரமுகரானார். அதன் மாவட்டத் தலைவராகவும் மாநிலத் துணைத் தலைவராகவும் ஆனார். பின்னர் அவரது மகன்களில் ஒருவரான ஜமீலுடன் வசிக்க அவர் பாட்னாவுக்குக் குடி பெயர்ந்தார். கம்யூனிஸ்ட் கட்சியிலும் பெருந்திறள் இயக்கங்களிலும் அவர் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டார்.

மரணம்

பாட்னாவில் 2006 ஜனவரி 1ல் அவருக்குக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. அவர் பாட்னா டாக்டர் ஹாய் வளாகத்தில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அதே நாள் அவர் மரணம் அடைந்தார். ஜனவரி 2ல் கயாவுக்குக் கொண்டுவரப்பட்ட அவரது உடல் கயாவில் உள்ள நியூ கரீம்கஞ்ச் கபர்ஸ்தானில் (கல்லறைத் தோட்டம்) நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் ஏராளமான சமூக மற்றும் அரசியல் ஆளுமைகள் கலந்து கொண்டனர். மாநில நிர்வாகதின் சார்பாக உதவிக் கோட்ட அதிகாரி (எஸ்டிஓ) நல்லடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 5 மகன்கள், 4 மகள்கள், மாமனார் மாமியார் மற்றும் பிறர் உள்ளிட்ட பெரிய குடும்பத்தை அபுல் ஓலா விட்டுச் சென்றார்.

தற்போதைய இந்தக் கட்டுரையாளர் அவரையும் மற்றும் அவரது சில குடும்ப உறுப்பினர்களையும் குழந்தைப் பருவத்தில் அறியும் பேறு பெற்றிருந்தார். 

இந்திய விடுதலையின் பொன்விழாவின்போது விடுதலைப் போராட்டம் குறித்த சுருக்கமான பதிவுகளை அபுல் ஓலா எழுதினார். பீகாரில் இருந்து முதன் முதலாகச் சிபிஐ மத்திய குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட (1943 பம்பாய் கட்சி காங்கிரஸ்) மன்ஸார் ரிஸ்வியின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் எழுதினார். சுதந்திரப் போராட்டத்திற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் பெரும் எண்ணிக்கையிலான கற்றறிந்த முஸ்லிம் இளைஞர்களைக் கொண்டு வந்த பெருமை அவரையே சாரும். அந்த இளைஞர்களில் பலரும் கருத்தியல் மற்றும் மார்க்சிய அரசியலில் பயிற்றுவிக்கப்பட்டனர்.

பீகார் வரலாற்றுக் காங்கிரஸ் மாநாடுகளில் அபுல் ஓலா அடிக்கடி நினைவு கூரப்படுகிறார்.

–நன்றி : நியூ ஏஜ் 19 (2026, மே 10– 16)

–தமிழில் :நீலகண்டன், 
என் எஃப் டி இ, கடலூர்.

Saturday, 6 June 2026

கம்யூனிஸ்ட் தலைவர்களின் வரலாறு 151 --- பெரின் பரூச்சா, மாணவர் மற்றும் சமாதான இயக்கங்களின் முன்னோடி அமைப்பாளர்

 கம்யூனிஸ்ட் தலைவர்களின் வரலாறு 151 


பெரின் பரூச்சா : மாணவர் மற்றும் சமாதான
இயக்கங்களின் முன்னோடி அமைப்பாளர்

–அனில் ரஜீம்வாலே 


பெரின் பரூச்சா (திருமணத்திற்குப் பிறகு பெரின் ரொமேஷ் சந்திரா) பணக்கார பார்சி குடும்பத்தில் பிறந்தவர்; சுதந்திர மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து, தொடர்ந்து மாணவ, சமாதான மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்களின் தலைச் சிறந்த அமைப்பாளர் ஆனவர்.

தொடக்க கால வாழ்க்கையும் கல்வியும் 

பெரின் இப்போது பாகிஸ்தானில் உள்ள பலுசிஸ்தான், ச்சாமன் (Chaman) என்ற இடத்தில் ஒரு பார்சி குடும்பத்தில் 1918 அக்டோபர் 2ல் பிறந்தார். அவரது தந்தை லெப்டினன்ட் கர்னல் பைரோஸ் பைராம்ஜி பரூச்சா, ஒரு பிரிட்டிஷ் இந்திய ராணுவ டாக்டர், பின்னர் லாகூரின் சர்ஜன் ஜெனரல் ஆனவர். அவரது தாயார் பெயர் பிலூ. பெண்களுக்கான கின்னார்ட் கல்லூரியிலும் பின்னர் லாகூர் பல்கலைக்கழகத்திலும் பெரின் படித்தார்.

அரசியலில் 

அவரது தந்தை முற்போக்கான தாராளப் பார்வை கொண்டவர்; எனவே முழு குடும்பச் சூழலும் அவ்வாறே இருந்தது. கின்னார்ட் கல்லூரியில் அவருக்குச் சுதந்திரப் போராட்ட வீரர்களுடனும் சுதந்திரப் போராட்டத்துடனும் தொடர்பு ஏற்பட்டது. விரைவில் அவர் திறன்மிக்க அமைப்பாளராக மலர்ந்தார். தன்னைச் சுற்றி அவர் பெரும் குழு உறுப்பினர்களை ஒன்று சேர்த்து லாகூரில் ஓர்-அறை வீட்டை வாடகைக்கு எடுத்து அங்கிருந்து செயல்பட்டார். அவர் நிதி திரட்ட உதவியும், நிவாரணங்கள் வழங்கியும் மற்றும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தினார். ஷீலா பாட்டியாவுடன் சேர்ந்து பஞ்சாபின் விவசாயப் பின் நிலப்பகுதிகளுக்குப் பலமுறை விஜயம் செய்ய அவர் ஏற்பாடு செய்தார்.

ஓர் அமைப்பாளராகப் பிறரிடம் மிகக் கடுமையாகப் பணி வாங்குபவராகவும் திறன்மிக்க அணிகளைக் கொண்ட குழுவைக் கட்டி எழுப்பவராகவும் பெரின் இருந்தார்.

அவரது தந்தையின் இராணுவக் கடமைகள்  அவரைப் பல்வேறு இடங்களுக்கும் மாறச் செய்தது. அதன் விளைவாய் அவர் பல்வேறு இராணுவக் கண்டோன்மெண்ட் நகரங்களில் லட்சிய குழந்தமைப் பருவத்தையும், சிம்லாவில் சிறிது காலம் உறைவிட பள்ளி வாழ்வையும்கூட பெற்றார். லாகூர் கல்லூரிக்குச் சென்ற காலகட்டத்தில் அவர் கையால் நூற்று கையால் நெய்யப்பட்ட கதர் ஆடைகளை அணியத் தொடங்கினார்.

லாகூர் மாணவர் சங்கம் (LSU)

லாகூரில் படிக்கும்போதுதான் பெரின் லாகூர் மாணவர் சங்கத்துடன் தொடர்பு கொண்டார். அந்நாட்களில் லாகூர், அரசியல் மற்றும் கருத்தியல் நடவடிக்கைகள் மற்றும் மேலும் மாணவர் நடவடிக்கைகளின் முக்கிய மையமாக இருந்தது. சக்திமிக்க  மாணவர் அமைப்பாக உருவான LSU உடன் ஜவஹர்லால் நேரு, பகத்சிங் மற்றும் பிற பிரபலமான ஆளுமையாளர்கள் தொடர்பில் இணைந்திருந்தனர். 1936ல் அது அனைத்திந்திய மாணவப்  பெருமன்றத்துடன் (ஏஐஎஸ்எப்) இணைப்புப் பெற்றது.

1928 அக்டோபர் 7ல் நடைபெற்ற லாகூர் மாணவர் சங்கத்தின் முதலாம் ஆண்டு விழாவிற்கு நேரு அனுப்பிய செய்தியில், “லாகூர் மாணவர் சங்கத்தின் முதலாவது ஆண்டு விழாவில் நேரில் கலந்து கொள்ள இயலாததற்கு நான் வருந்துகிறேன். போராட்டங்களும் துன்பங்களும் நிறைந்த உலகில் நம்பிக்கை அளிப்பது இளைஞர்களின் விழிப்புணர்வும் கிளர்ச்சியையும்விட வேறு எதுவும் இல்லை. லாகூரின் மாணவர்கள் தங்களை ஒன்று திரட்டி ஒரு சங்கமாக அமைத்து இருப்பதில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்…” என்று கூறினார்.

பகத்சிங்கின் பாரத் நவ் ஜவான் சபா லாகூர் மாணவர் சங்கத்துடன் நெருக்கமான ஒத்துழைப்பில் இருந்தது. அத்தகைய அமைப்பில்தான் பெரின் பரூச்சா பணியாற்றத் தொடங்கியிருந்தார்.

அந்தச் சங்கம் பிரபோத் சந்திரா, ராஜ்பன்ஸ் கிருஷ்ணா, வீடி சோப்ரா, ஐ.கே குஜ்ரால், பேராசிரியர் ரன்தீர் சிங் போன்ற பிற தலைசிறந்த மாணவர் தலைவர்களை ஈர்த்தது. கால ஓட்டத்தில் பெரின் எல்எஸ்யு அமைப்பின் வலிமையான தூண்களில் ஒருவரானார்,

லாகூரில் கங்காராம் பள்ளி முதல் தரமான கல்வி நிறுவனம். அதன் முதல்வர் (கவிக்குயில் சரோஜினி நாயுடு மற்றும் சுகாசினி ஜம்பேகார் இருவரின் சகோதரியான) மிராளினி சட்டோபாத்தியாயா. அந்தப் பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விவாதங்கள் மற்றும் உரையாடல்களின் மையமாக ஆனது. அவர்களில் பெரின் பரூச்சா, ஷீலா பாட்டியா, விமலா டாங்க், பூரண் ஆச்சார்யா, ஸ்னேகலதா சன்யால் மற்றும் பிறர் அடங்குவர்.

பெரின் நினைவு கூறினார்: “இந்தக் காலத்தைச் சுற்றி நாங்கள் மறுமலர்ச்சி கிளப் ஒன்று வைத்திருந்தோம்” அதில் மாணவர் இயக்கத்தில் பின்னர் இணைந்த பலர் சேர்ந்தனர் (இந்தக் கட்டுரையாளருக்கு 1992 ஜனவரி 28ல் அவர் அளித்த பேட்டி). அந்த கிளப் அரசியல் பிரச்சனைகளை விவாதிக்க வாராவாரம் கூடும். அதில் மஸார் அலி, மக்மூத் அலி, ரொமேஷ் சந்திரா, பீஷம் சஹ்னி, ராஜ்பன்ஸ் கிருஷ்ணா மற்றும் பிறருடன் பெரினும் கூட கலந்து கொள்வர்.

பிரபோத் சந்திராவால் எல்எஸ்யு நடத்தப்பட்டு வந்தது. 1938லிருந்து மறுமலர்ச்சி மன்றத்தின் (ரெனெய்சான்ஸ் கிளப்) பலர் பிரபல செயல்பாட்டாளர்கள் ஆனார்கள். மாணவியர்களின் பரவலான பங்கேற்பு அதன் சிறப்பு அம்சம். சுமார் 700 மாணவியர்கள் பங்கேற்புடன் 1940 ஜனவரியில் மிகப் பெரிதும் விளம்பரம் செய்யப்பட்ட மாணவியர்கள் மாநாடு நடைபெற்றது. பெரின், லிட்டோ ராய் (அஜாய் கோஷ் உடன் திருமணமான பிறகு லிட்டோ கோஷ்) மற்றும் மற்றவர்கள் இந்தக் கல்லூரிகளையும் பள்ளிகளையும் தங்கள் செயல்பாட்டிற்கான  அடித்தளம் ஆக்கினர்.

விடி சோப்ரா எல்எஸ்யூ முதலாவது மாநாட்டில் அதன் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 ஜனவரி 26 ஐ சுதந்திர தினமாக அனுசரித்தபோது அவர் 18 மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.

மாணவர் பெரும் மன்றத்தின் முதல் பொதுச் செயலாளராக 1941 –42

1941 டிசம்பர் 31 மற்றும் 1942 ஜனவரி 1ல் பாட்னாவில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் (AISF) வரலாற்றுச் சிறப்புமிக்க 7வது மாநாடு நடைபெற்றது.  1941 ஜூன் 22ல்

நாஜிக்கள் சோவியத் யூனியனை ஆக்கிரமித்த பிறகு இரண்டாம் உலக யுத்தத்தின் மாறிய தன்மை மாநாட்டின் முக்கிய உரையாடல் தலைப்பாக அமைந்தது.

AISFன் இந்த மாநாட்டில்தான் ‘மக்கள் யுத்தம்’ என்ற கருத்து பெரினால் முதலில் முன் வைக்கப்பட்டது.  இந்த மாநாட்டில் பஞ்சாப் பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மியான் இஃப்திகாருதீன் தலைமை வகித்தார். மாநாட்டில் 600 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

எப்போதும் இல்லாத அளவு அத்தியாவசியப் பொருட்களின் விலை அதிகரித்தது; பொதுவாக மக்களுக்கு வாழ்க்கை மிக மிக கடினமானது. கல்வி சின்னா பின்னமாகி குழப்பத்தில் இருந்தது என  AISFன் தி ஸ்டூடன்ட் இதழில் பெரின் எழுதிய கட்டுரைகளில் சுட்டிக் காட்டினார்.

1943 வங்கப் பெரும் பஞ்சத்தின்போது பெரின் மாணவர் அமைப்பை மாபெரும் நிவாரண பணியில் ஈடுபடுத்தினார். AISFன் நூற்றுக்கணக்கான அணிகளும் உறுப்பினர்களும் பெரும் எண்ணிக்கையிலான நிவாரண சமையல் கூடங்களின் பணிகளைச்  செய்யும் ஆட்களாகச் செயல்பட்டனர்; அந்த நிவாரண சமையல் கூடங்கள் பல்லாயிரம் மக்களுக்கு உணவளித்தது. அந்தப் பஞ்சத்தில் பசியால் 30 லட்சம் மக்கள் மடிந்தனர்.

AISFன் மற்றொரு சிறந்த தலைவரான ஏ பி பரதன் AISF மாநாட்டு நாள்களையும் பெரினின்

தலைமை பண்பையும் பின்வருமாறு நினைவு கூர்கிறார்:

“காலம் ஓடுகிறது. வாழ்க்கை தொடர்ந்து நடக்கிறது. பழைய நினைவுகள் மங்குகின்றன. ஆனால் திடீரென்று ஏதோ நடக்கிறது, சில நிகழ்வுகள் உங்களுக்கு அதிர்ச்சி அளிக்கிறது, நீண்ட காலம் முன்பு முடிந்துபோன பழைய நாட்களுக்கு நீங்கள் தூக்கி அடிக்கப்படுகிறீர்கள்.”

“ஜனவரி 7 அன்று பெரின் சந்திரா தமது முதிர்ந்த 96 வயதில் மறைந்தார் என்ற செய்தி, 1941ஆம் ஆண்டு முடியும் தருவாயின்போது ஒரு நாள் நிகழ்வின் நினைவை மீண்டும் கிளறி விட்டது. மாணவர் பெருமன்றம் (AISF) பாட்னாவில் மாநாடு நடத்திக் கொண்டிருந்தது. சென்ற ஆண்டுதான் இணைந்திருந்த நான், பழைய மத்திய பிரதேசத்தின் சார்பாக ஒரு பிரதிநிதியாக மாநாட்டில் கலந்து கொள்ள வந்திருந்தேன். (பல பெண் பிரதிநிதிகள் வந்திருந்தனர் எனினும்) லாகூரில் இருந்து வந்திருந்த இரண்டு பெண் பிரதிநிதிகள் எங்கள் அனைவரையும் மிகவும் ஈர்த்தனர். ஒருவர் பெரின் பரூச்சா, மற்றவர் லிட்டோ (பின்னர் அஜாய் கோஷ் அவர்களை மணந்தார்)”

பார்சி இனப் பெண்ணான பெரின் வசதியான குடும்பத்தைச் சேர்ந்தவர். தேர்ந்தெடுக்கப்பட்ட பொதுச் செயலாளர் கலந்து கொள்ள இயலாததால் அவர் மாணவர் அமைப்பின் உயர் பொறுப்பில் செயல்பட்டார். திறன் மிக்க அவரது செயல்பாடு மற்றும் பிரபலமான தன்மை AISFன் பொதுச் செயலாளராக அவரைப் பாட்னா மாநாட்டில் தேர்ந்தெடுக்கப் பாதை அமைத்தது. இரண்டாம் உலக யுத்தம் நடந்து கொண்டிருந்தது 1941-ல் ஹிட்லரின் பாசிஸ்டுகள் சோவியத் யூனியனைத் தாக்கினர். இந்தத் தாக்குதலின் விளைவாகப் போரின் மாறியுள்ள தன்மை மீது பெரின் விவாதங்களை கொண்டு செலுத்தினார்.”

பெரின் AISFன் பொதுச் செயலாளர் பொறுப்பில் 1943 வரை இருந்தார்.

மாணவர்கள் ஒற்றுமை குறித்து பெரின் 

இந்தக் கட்டுரை ஆசிரியருக்குப் பல தருணங்களில் அவர் அளித்த பேட்டிகளில் AISFன் நாக்பூர் மற்றும் பின்னர் பாட்னா அமர்வுகள் மாணவர்கள்  அமைப்பில் பிளவுகளை ஏற்படுத்தியதாகவும்; அவை  தடுக்கப்பட்டிருக்கக் கூடும் மற்றும் அவை தடுக்கப்பட்டிருக்க வேண்டும் என பெரின் பரூச்சா கருத்தியதாகக் கூறினார். ஆனால்  “இது (நிகழ்ந்து முடிந்த பின்) பின்னர் ஏற்பட்ட எண்ணம்” என்று கூறினார். (பேட்டி 1992 ஜனவரி 28)

மேலும் அவர் மக்கள் யுத்தம் (பியூப்பிள்ஸ் வார்) என்ற கருத்து பாட்னா மாநாட்டில் மிக அழுத்தமாக வலியுறுத்தப்பட்டது என்றும் கூறினார். “இது தவிர்க்கப்பட்டிருக்க வேண்டும் மற்றும் மாணவர்கள் ஒற்றுமை குறித்துப் பெரும் முயற்சிகள் செய்யப்பட்டிருக்க வேண்டும்”  என்று கருத்துத் தெரிவித்தார். (இந்தக் கட்டுரையாசிரியருக்கு 1995 அக்டோபர் 26ல் பெரின் பரூச்சா அளித்த பேட்டி)

பெண்கள் இயக்கத்தில் 

லக்னோவில் நடைபெற்ற ஓர் அனைத்திந்திய மாநாட்டில் அமைக்கப்பட்ட பெண் மாணவர்கள் அசோசியேஷனின் தீவிரமான தேசியத் தலைவர்களில் பெரினும் ஒருவர். அவர்

நர்கீஸ் பாட்லிவாலா, சாந்தா காந்தி, கல்யாணி முகர்ஜி, கீதா முகர்ஜி (படம்) மற்றும் பிறருடன் சேர்ந்து ஒரு வலிமையான குழுவாக அமைந்தது. பெரின் லாகூரில் மாணவர் இயக்கத்தில் இருந்தபோது, லிிட்டோ ராய் (கோஷ்), ஷீலா பாட்டியா மற்றும் பிறருடன் சேர்ந்து லாகூர் மாணவர்கள் சங்கத்தில் பெண்கள் அணி ஒன்றை அமைக்க இளம் பெண்கள் இயக்கங்களிலும் ஈடுபட்டார். அவர்கள் கல்லூரி கல்லூரியாகச் சென்று உறுப்பினர்களைச் சேர்த்தனர். மாணவிகளின் மாபெரும் மாநாடுகள் நடத்தப்பட்டன.

பெரின் மற்றும் அவரது தோழியர்களிடம் ராமேஸ்வரி நேரு அனைத்திந்தியப் பெண்கள் மாநாடு அமைப்பில் (AIWC) பணியாற்றும்படி யோசனை தெரிவித்தார். அவரது யோசனைபடி அனைத்திந்தியப் பெண்கள் மாநாடு மற்றும் பெண்களின் சிறிய பாதுகாப்பு கமிட்டி (WSDC) இரண்டு அமைப்புகளும் பஞ்சாபில் ஓர் இணைப்பு மாநாட்டில் ஒன்றாக இணைந்தன.

பஞ்சாபில் WSDC

இரண்டாம் உலக யுத்தத்தின்போது பஞ்சாப் உள்பட இந்தியா முழுவதும் பெண்கள் சுய பாதுகாப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஒரு நேரத்தில் மாகாணத்தில் 13 ஆயிரம் உறுப்பினர்களுடன் அது வலிமை வாய்ந்த அமைப்பாக உருவானது. பெரின் மற்றும் மற்றவர்களின் கீழ் அது பெண்கள் மற்றும் மாணவர் இயக்கங்களில் முக்கியமான பங்காற்றியது. பஞ்சாப் முழுவதும் பிரம்மாண்ட மாநாடுகளும் பேரணிகளும் நடத்தப்பட்டன

பெரின் மற்றும் ரொமேஷ்

பெரின் பரூச்சா மற்றும் ரொமேஷ் சந்திரா இருவரும் லாகூர் மாணவர் சங்கம் மற்றும் AISFல் தீவிரமாகச் செயல்பட்டனர் அவர்களின் மாணவப் பருவ நாட்களின்போதே லாகூரிலே

இருவரும்  சந்தித்துள்ளனர். விரைவில் ரொமேஷ் லாகூர் சிபிஐ செயலாளர் ஆனார். 1942 ல் இருவரும் திருமணம் செய்து கொண்டனர். அவர்களுக்கு ஒரு மகனும் ஒரு மகளும், ஃபெரோஸ் மற்றும் ஷோபா. அவர்களின் மருமகள் சந்திதா சினிமா மற்றும் கலை உலகில் பிரபலமானவர். பெரின் மற்றும் ரொமேஷ் இருவரின் வாழ்க்கை தேசப் பிரிவினையின்போது நிலை குலைந்தது. மிகக் கடினமான சூழ்நிலையில் அவர்கள் முதலில் பம்பாய்க்கும் பின்னர் டெல்லிக்கும் இடம் பெயர வேண்டி இருந்தது. மெல்ல மெல்ல அவர்கள் அங்கு குடியேறினர். 

1940களின் தொடக்கத்தில் பெரின் கட்சி உறுப்பினரானார்.

சுதந்திரத்திற்குப் பின் 

1947 ஆகஸ்ட் 15-ல் இந்தியா சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டின் சூழ்நிலை முற்றாக

மாறியதுபிசி ஜோஷி தலைமையிலான சிபிஐ இந்திய விடுதலையைப் பரவலாக வரவேற்றது. ஆனால் விரைவில் பிடிஆரின் குழுவாதப் போக்குக் சிபிஐ-யில் செல்வாக்குப் பெற, கட்சி நாட்டின் மைய நீரோட்டத்தில் இருந்து துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு விரைவில் பிடிஆர் நீக்கப்பட்டு அஜாய் கோஷ் (படம்) பொதுச் செயலாளர் ஆனார்.

அவர் தலைமை பொறுப்புக்கு வந்ததும் கட்சியிலும் தேசத்திலும் அமைதி குறித்த பிரச்சனை முக்கியத்துவம் பெற்றது. சமாதான இயக்கத்தில் சேரும்படி பெரினைக் கட்சி கேட்டுக் கொண்டது.

1958ல் தொடங்கப்பட்டு புகழ்பெற்ற விடுதலைப் போராட்ட வீரர் அருணா ஆசஃப் அலி தலைமையிலான இடதுசாரி தினசரியான ‘பேட்ரியாட்’ இதழில் பெரின் குறுகிய காலம் பணியாற்றினார். அங்கே அவர் தொழிலாளர்களைத் தொழிற்சங்க அமைப்பில் திரட்டினார், விரைவில் அவர் சமாதான இயக்கத்தில் இணைந்தார்.

அனைத்திந்திய சமாதான இயக்கம் 

இந்தியா மற்றும் உலகம் முழுவதும் சமாதான இயக்கம் மக்களின் விரிந்து பரந்த இயக்கமாகும். அது கட்சிக்குள் விழிப்புணர்வைக் கொண்டு வந்தது, கட்சி பெருந்திரள் மக்கள் மத்தியில் நுழைவதை அது சாத்தியமாக்கியது.

ரொமேஷ் சந்திராவைப் பொதுச் செயலாளராகக் கொண்டு 1951ல் அனைத்திந்தியச் சமாதானக் குழு (ஆல் இந்தியா பீஸ் கவுன்சில்) அமைக்கப்பட்டது. அந்தக் குழுவில் சைஃபுதீன் கிச்சுலு, பண்டிட் சுந்தர்லால், பால்ராஜ் சஹானி, பிரிதிவிராஜ் கபூர், முல்க்ராஜ் ஆனந்த், டிடி கோசாம்பி மற்றும் பலர் இணைந்திருந்தனர். அந்த அமைப்பில் பெரின் ஆர்வமாக அர்ப்பணிப்புடன் பணியாற்றத் தொடங்கினார். பின்னர் சமாதானக் குழுவின் முன்னணித் தலைவரானார்.

1957 கெய்ரோவில் ஆப்பிரிக்க ஆசிய சமாதான ஒருமைப்பாடு அமைப்பு (AAPSO)

உருவானது. பெரினைப் பொதுச் செயலாளராகக் கொண்டு 1972ல் அனைத்திந்தியச் சமாதான ஒருமைப்பாட்டு கழகம் (AIPSO) செயல்பாட்டுக்கு வந்தது. அந்தப் பொறுப்பில் அவர் 1991 வரை இருந்தார்.

அனைத்திந்தியச் சமாதானக் குழு (AIPC) மற்றும் AIPSO மனதில் நிற்கும் பல்வேறு பெருந்திரள் இயக்கங்களை நடத்தியது: ஸ்டாக்ஹோம் வேண்டுதலுக்கான பிரச்சாரம், பாண்டாங் மாநாட்டுக்கான (1955) பிரச்சார இயக்கம், கூட்டு சேரா இயக்கம், வியட்நாம், பங்களாதேஷ், பாலஸ்தீனம் மற்றும் பிறவற்றுடன் ஒருமைப்பாட்டுப் பிரச்சாரம், 1975 பாட்னாவில் 6000 பிரதிநிதிகள் கலந்து கொண்ட பாசிச எதிர்ப்பு மாநாடு போன்ற பல நிகழ்வுகள் நடத்தியதைக் குறிப்பிடலாம்

பெரின் குறித்து பிரமிளா லூம்பா 

பிரமிளா லூம்பா பெண்கள் இயக்கம் மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனம்

(NFIW)ன் பிரபலமான தலைவரும் பெரினின் நெருங்கிய தோழியும் ஆவார். அவர் எழுதினார்: “பெரினுடன் எனக்கு நீண்ட காலத்தொடர்பு உண்டு. அது லாகூர் கினார்டு கல்லூரியில் நான் அப்போது இன்னும் இளங்கலை மனைவியாக இருந்த கடந்த கால நாட்களுக்குக் செல்லும். பெரின் அப்போது ஏற்கனவே நன்கு அறியப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவராகத் .திகழ்ந்தார்.”

“பெரினுடன் எனது முதலாவது சந்திப்பு மங்கலாக நினைவு உள்ளது. அது மயக்கும் வசீகரமான ஒரே நடனக்காரரான உதய் சங்கர் மற்றும் அவரது குழுவினரின் நடன நிகழ்ச்சிக்குப் பிறகு ரீகல் சினிமா தியேட்டருக்கு வெளியே நிகழ்ந்தது.”

“கம்யூனிஸ்டுகள் கலை மற்றும் கலாச்சாரத்தைப் போராட்டத்திற்கான ஆயுதமாக மட்டும் பார்க்காமல், மாறாக வாழ்க்கை மற்றும் பணி குறித்த பார்வையை மேம்படுத்தவும் ஊக்கமும் வலிமையையும் பெறுவதற்கானது என பெரிதும் மதித்த காலம் அது” 

பெரின் ரொமேஷ், லிட்டோ மற்றும் அஜாய் கோஷ் சில வாடகை அறைகளில் படிப்பு வட்டங்கள் அமைத்ததைப் பிரமிளா நினைவு கூர்கிறார். பெரின் இளம் பெண்களின் சிறிய குழுவைத் திரட்டி, அவர்கள் பெண்கள் மத்தியில் பணியாற்ற ஊக்குவித்தும், விடுதலைப் போராட்டத்தில் பணியாற்ற அவர்களுக்கு  அரசியல் உணர்வை எழுச்சி பெறவும் செய்தார்.

வங்கப் பஞ்சத்தில் நிவாரண பணிகளின்போது, “(நிதி முதலியவற்றைத் திரட்ட பஞ்சாப் பகுதியில்) சுற்றுலாவுக்கு ஏற்பாடு செய்தவர் பெரின்: அந்தக் குழுவுக்கு அறிமுகம் செய்து அவர்கள் ஏற்கத்தக்க அளவில் பொறுமையாக ஏகாதிபத்திய எதிர்ப்பு உரைகளை ஆற்றினார்: எனினும் அந்த உரைகள் அந்த மக்களுக்கு நிகழ்வுகளுடன் தொடர்புபடுத்த போதுமான அளவு எளிமையாக இருந்தது. நிதி திரட்டல் சுற்றுலாவின் பலன் அற்புதமாக அமைந்தது, ஏராளமான தானியக் குவியல்கள் திரட்டப்பட்டன.”

“பெரின் பணியாற்றும் விரைவு மற்றும் அவரது ஆவணங்கள் மற்றும் கோப்புகளை அவர் நுணுக்கமான நேர்த்தியுடன் பராமரித்தது என்னை மிகவும் ஈர்த்தது.”

“நாட்டில் சமாதான இயக்கத்தை ஆகச் சிறந்த முறையில் அவர் கட்டி எழுப்பியது, அவருக்கே உள்ள தனிச்சிறப்பு”

எழுத்தாக்கப் பணிகள்

பெரின் பல புத்தகங்களும் கட்டுரைகளும் எழுதி உள்ளார். அவரது மாணவப் பருவ நாட்களிலும்கூட அவர் AISFன் ‘தி ஸ்டூடண்ட்’ பத்திரிக்கையில் கட்டுரைகளும் அறிக்கைகளும் எழுதினார். அவரது குறிப்பிடத்தக்க படைப்புகளில் ‘தி ஃபயர் ஓர்ஷிப்பர்ஸ்’ (தீயை வணங்குபவர்கள்) நூலை பம்பாய் ஸ்ராண்ட் புத்தக கிளப் பதிப்பித்தது. அந்த நாவல் பார்சி சமூகத்தில் சாதி கலப்புத் திருமணத்தின் பிரச்சினைகளை மையமாகக் கொண்டிருந்தது. பெரின்தான் சர்ச்சைக்குரிய கலப்புத் திருமணத்தை முன்னிறுத்திய முதல் பார்சி நாவலாசிரியர். 

புத்தகத்தில் (விமர்சகர்) நோவி கபாடியா கூறியபடி:

“பெரின் இயல்பாகத் தொலைநோக்கு பார்வை கொண்ட தீர்க்கதரிசி. 1960களில் பார்சிகள் மத்தியில் கலப்புத் திருமணங்கள் போக்குச் சொட்டும் நீர் போல அளவில் மிகச் சிறிது; ஆனால் நாவலாசிரியர் மிக நுட்பமாக அது பெரு வெள்ளமாகப் பெருக்கெடுக்கும் என்று சுட்டிக் காட்டுகிறார். வெறும் 30 ஆண்டுகள் இடைவெளியில் பார்சி வகுப்பினர் மத்தியில் கலப்புத் திருமணங்கள் வெகுவாக அதிகரித்தது. எனவே இந்த நாவலில் ‘பெஸ்டோன்ஜி தனது மகனின் கலப்புத் திருமணம் (தனது வகுப்பினர் மத்தியில்) புதிய போக்கை ஏற்படுத்தி விடும் என ஆட்சேபிப்பதைக்’ காண்கிறோம்.

கட்சியில் பொறுப்புகள்

பெரின் நீண்ட காலம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேசியக் கவுன்சில் உறுப்பினராக இருந்தார். பின்னர் மத்திய செயற்குழு (CEC) உறுப்பினராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மற்றும் பல்வேறு  வெகுஜன அமைப்புகளில் பல பொறுப்புகளை வகித்துள்ளார்.

மரணம் 

பெரின் பரூச்சா (சந்திரா) தனது முதிர்ந்த 96வது வயதில் நீண்ட கால நோய்க்குப் பிறகு 2015 ஜனவரி 7ல் மரணம் அடைந்தார்.

இந்தியா முழுவதும் மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் அவரது மரணத்திற்கு அஞ்சலி செலுத்தியது. அவரது இறுதி விருப்பப்படி அவரது புகழுடம்பு பம்பாய் கிராண்ட் மருத்துவக் கல்லூரிக்குத் தானமாக வழங்கப்பட்டது. இந்தக் கல்லூரியில்தான் அவரது தந்தை மருத்துவம் படித்தார். 

பெரின் பரூச்சா (சந்திரா) நினைவைப் போற்றுவோம்!

–நன்றி நியூ ஏஜ் (2026 மே 24 –30)
–தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்

பின்னிணைப்பு

தோழியர் பெரின் பற்றி நியூ ஏஜில் ஒரு கட்டுரை வந்துள்ளது.                      

பெரின் ( பரூச்சா) சந்த்ரா லாகூரில் தனது மாணவப் பருவத்தில் AISFல் சேர்ந்தவர். வசதியான குடும்பத்தில் பிறந்த பெண்மணி. 1928ல் லாகூர் மாணவர் சங்கத்தைத் தோற்றுவித்தவர்களில் ஒருவர். தேச சுதந்திரம் வேண்டிப் போராடிய இளைஞர்களுள் ஒருவர். 1943 வங்காள பஞ்சத்தின்போது மாணவர்களைத் திரட்டி வங்காளத்தில் பணியாற்றியவர். தேசப் பிரிவினையின்போது லாகூரிலிருந்து மும்பைக்கு அகதிகளாக வந்தவர்.  பின்னர் உலக சமாதான இயக்கத்தில் இணைந்து பணியாற்றினார்.

1986ல் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் குமரியில் இருந்து சென்னைக்கு ஒரு நடைபயணம்

நடைபெற்றது. தோழர் ஜெகன் அறிவுறுத்தலின் பேரில் நானும் கலந்து கொண்டேன். பெரின் பல இடங்களில் வந்து கலந்து கொண்டார். பெரின் ஒரு பார்சி. கூட்டங்களில் பெண்கள் இவரை வேடிக்கை பார்த்தனர். “இந்திராகாந்திவந்திருக்கிறார் என்று தங்களுக்குள் பேசிக் கொண்டார்கள்.

(வாட்ஸ்அப் குழுவில் தோழர் செல்வரங்கன் பதிவு)

அந்தச் சமாதான நடைபயணத்தில் கடலூரில் நாங்களும் கலந்து கொண்டோம். என் நினைவில் இன்னும் பசுமையாக உள்ளது, திருநெல்வேலித் தோழர் சங்கர் எழுப்பிய முழக்கங்கள். அந்த முழக்கங்கள் NFTE சங்க வழக்கமான ஆக்ரோஷமான கோஷங்களாக இல்லாமல் ஒரு நதி நடப்பது போல அமைதியாக, மக்கள் மனங்களில் பதிவதாக அமைந்திருந்தன. “கங்கை பாயும் நாட்டினிலே இரத்த ஆறு ஓடுவதா?“ ”காந்தி பிறந்த நாட்டினிலே சாந்தி தவழ வேண்டாமா” என்பது போன்ற முழக்கங்கள் எவ்வளவு வலிமையானவை!

--மொழிபெயர்ப்பாளர் பதிவு