Monday, 7 September 2026

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 129 --ஏஎஸ்ஆர் சாரி–கம்யூனிஸ்ட் அமைப்பாளர் மற்றும் சட்டவியல் வல்லுநர்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 129 


ஏஎஸ்ஆர் சாரி
–கம்யூனிஸ்ட் அமைப்பாளர் மற்றும் சட்டவியல் வல்லுநர்


–அனில் ரஜீம்வாலே 

ஏஎஸ்ஆர் சாரி 1908ல் (இன்றைய தெலுங்கானாவின்) செகந்திராபாத்தில் பிறந்தார். தனது நினைவோடையில் அவர் எழுதினார்: ”என் நினைவில் முதலில் முன்வந்து நிற்கும் விஷயம், நான் செகந்திராபாத் இரயில்வே குடும்பத்திலிருந்து வந்தவன்.” இரயில்வே, ஒரே தொழில் துறையாக இருந்ததால் பெரும்பாலான நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் இரயில்வே குடும்பங்கள். சாரியின் தந்தை ஸ்ரீநிவாஸ், மூத்த சகோதரர் இராமசாமி மற்றும் மாமா நரசிம்மன் இரயில்வேயில் பணியாற்றினார்கள்.

அவர் பிறந்த இடம் துர்நாற்றம் வீசும் சேரிகள், விளைவு ப்ளேக் நோய் : புபோனிக் பிளேக் அல்லது அரையாப்புப் பிளேக் (எர்சினியா பெஸ்டிஸ் பாக்டீரியாவினால் ஏற்படும் கடுமையான தொற்றுநோய்) ஒவ்வொரு ஆண்டின் நிகழ்வானது! எலிகள் இறந்து விழும் மற்றும் விரைவில் எண்ணற்ற மக்கள் செத்து விழத் தொடங்குவார்கள். ஓர் ஆண்டில் சுமார் ஆறு மாதங்களுக்கு அவர்கள் கூடாரங்களில் (டென்ட்களில்) வாழ வேண்டியிருந்தது.

சாரியின் குடும்பம் ஊரின் வெளிப்புறத்தில் டென்ட்களில் வாழ்ந்தது. அதன் எதிரே இரயில்வே விளையாட்டு மைதானம் இருந்தது. நிஜாம் கல்லூரி இன்ட்டர் கலை பிரிவு வகுப்பு மாணவரான சாரி நல்ல கிரிக்கெட் வீரர், மீடியம் வேகப்பந்து வீச்சாளர். தொடர்ந்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் (ஹாட்ரிக்) சாதனையால் அவரது நற்பெயர் உயர்ந்தது. அதனால் ஈர்க்கப்பட்ட இரயில்வே, அவருக்கு இரயில்வே கார்டு பணி வழங்க முன் வந்தது; ஆனால் அவரது சகோதரர் அனுமதிக்கவில்லை. சாரி தொடர்ந்து படித்து, வாழ்வில் மேம்பட வேண்டும் என அவர் விருப்பியதே காரணம்.

இந்தப் பாடம் அவரது வாழ்நாள் முழுவதும் ஏஎஸ்ஆர் மூளையில் ஆழப் பதிந்தது. அப்போது பணத்திற்கு உயர் மதிப்பு இருந்தது: அவரது தந்தை அற்ப ஊதியம் ரூ 25ல் பணியாற்றத் தொடங்கி மாதம் ரூ.50 ஊதியத்தில் ஓய்வு பெற்றார்!

அவரது சகோதரர் இராமு காந்திஜியின் பெரும் பக்தரானார். அவர் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்ற கைராட்டைகளை வாங்கித் தந்தார். ஏஎஸ்ஆர் வயதில் இளையவர், அவருக்குத் தந்த கைராட்டையும் சிறிதாக இருந்தது! இராமு குடும்பத்தினரால் முதல் குளியல் துண்டுகள் தயார்  செய்யப்பட்டன.  

ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் பகுதியில் காந்திஜியின் யங் இந்தியா இதழ் விநியோகத்திற்கான முழு முகவர் உரிமையை இராமு பெற்றார்; பிரிட்டிஷ் இந்தியாவில் அது துணிச்சலான செயல். ஏஎஸ்ஆர் மற்றும் தோழர்கள் யங் இந்தியா இதழ் பிரதிகளை ஞாயிற்றுக் கிழமைகளில் அதன் சந்தாதாரர்களுக்கு விநியோகித்தனர். அவரது குடும்பம் காந்தியக் குடும்பம், அவர்களின் உணவும்கூட ‘காந்திய’ முறையாக இருந்தது! கீரை போன்ற இலை காய்கறிகள் நிறைய உண்பது ஆரோக்கியமானது என எங்கோ காந்திஜி எழுதினார். அதைச் சரியாகப் பின்பற்றிய குடும்பம் உருளைக்கிழங்கு மற்றும் அரிசிக்குப் பதிலாக இலை உணவுப் பொருளுக்கு மாறியது!

சுதேசி பொருட்களை வாங்குவது முக்கியமான வழக்கம்; காலிகட் சோப்பு மற்றும் லுங்கிகளுக்கு ஆர்டர் செய்யப்பட்டன. இராமு ஏராளமான புத்தகங்கள் வாங்கினார் குடும்பத்தின் இளைய உறுப்பினர்கள் அனைத்தையும் படித்தனர், பள்ளிப் பாடப் புத்தகங்களைத் தவிர!

ஏஎஸ்ஆர் தனது 14 வயது வாக்கில் உண்மையான கொலை குற்றச்சாட்டு விசாரணை அடிப்படையில் அமைந்த லார்டு லிட்டன் எழுதிய ‘யூஜின் ஆரெம்’ என்ற நாவலைப் படித்தார். அப்போதுதான் ஒரு வழக்கறிஞராக ஆவது என்ற எண்ணம் சாரியைக் கவ்விப் பிடித்தது. 

அவரது குடும்பம் பழமைவாதக் குடும்பம் அல்ல, ஆனால் விரிவான அளவில் ஆரோக்கியமான சமய –தத்துவக் கருத்துகளின் தாக்கத்தைப் பெற்றிருந்தது. பக்திப் பாடல் மற்றும் செவ்வியல் கர்நாடக இசையில் ஆழமான ஈடுபாட்டை ஏஎஸ்ஆர் வளர்த்தார்; பக்தி யோகா மற்றும் இராமகிருஷ்ண மடத்தில் அவர் ஆர்வம் கொண்டார். விவேகானந்தரின் சீடரான மடத்தின் சுவாமி யோகேஷ்வரானந்த் செகந்திராபாத்துக்கு வந்தார். அவரது சொற்பொழிவுகள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. மகரிஷி கார்வேயும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினார். இஸ்லாமிய வாழ்க்கை முறை சுஃபி தத்துவம் மற்றும் உடைகளும் சாரியிடம் செல்வாக்கை ஏற்படுத்தியது.

அரசியல் நடவடிக்கைகள் 

கல்லூரியில் சாரி திறமையான விவாதம் செய்பவராக இருந்தார். ஒருமுறை அவர் அசைவ உணவுக்கு ஆதரவாகப் பேசினார். விவாதத்தில் அவர் கூறினார் : “உண்மைதான், தாவர உணவுகள் மனிதருக்குப் பயனுள்ளவை. ஆனால் கோழிக்கறி மற்றும் ஆட்டுக்கறி என்பது, ‘செரிக்கப்படுவதற்கு முந்தைய தாவரம்’ தவிர வேறு என்ன?” (அதாவது ஆடு உண்ட தாவரம் செரிக்கப்பட்டு பின் கறி ஆனது. செரிக்கப்படுவதற்கு முன் அது தாவரமாக இருந்தது என்று வாதிட்டார்.) உடனே அவரது கருத்து அவையோரைப் பிடித்துக் கொண்டது! அவர் பல பரிசுகள் பெற்றார்.

நிஜாம் கல்லூரியில் முதல் அரசியல் வேலைநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டதன் பெருமை சாரி குழுவினரையே சேரும். 1920களின் தொடக்கத்தில் காந்தியத்திலிருந்து அவர்கள் பிரிந்து சென்றனர். சௌரி சௌரா நிகழ்வுக்குப் பின் ஒத்துழையாமை இயக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டது. அது குறித்த அவர்களின் கருத்து இப்படி இருந்தது: “போலீஸ்காரர்கள் சிலர் கொல்லப்பட்டது என்ன ஒரு பெரிய விஷயம்?” அவர்கள் காந்திய அரசியல் தத்துவத்திலிருந்து பிரிந்து சென்றனரே தவிர, காந்தியிடமிருந்து அல்ல. எனவே காந்தி கைது செய்யப்பட்டபோது காந்தியின் கைதை எதிர்த்து அவர்கள் மாணவர்களின் வேலை நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

உடற்கட்டு வளர்ப்பு பயிற்சி மற்றும் இளைஞர் இயக்கம்

சாரியும் சில தோழர்களும் மிகவும் மெலிந்து இருக்க, ஆனால் மதுரையிலிருந்து வந்த நாராயணசாமி அவர்களிடம் உடற்கட்டு பராமரிப்புப் பயிற்சி குறித்த சிந்தனையை விதைத்தார்; பின்னர் அவ்வாறு தொடங்கியதுதான் ‘தண்டால் பஸ்கி’   உடற்பயிற்சி!அவரும் கூட்டாளிகளும் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் புகழ் பெற்ற உடற்கட்டு பயிற்சியாளர்களுக்கு எழுதினர்: குறிப்பாக, தசைகளைக் கட்டுப்படுத்தும் முறையை அவர்கள் மேசிக் (Maxick) லிருந்து கற்றனர்! அவர்களது ‘ஆராய்ச்சிக’ளின் விளைவு யூத் பிசிகல் கல்ச்சர் லீக் (YPCL) என்ற அமைப்பை நிறுவ இட்டுச் சென்றது.  அவர்கள் ‘மனதின் மர்மங்க’ளைக் கூட ஆராயத் தலைப்பட்டு ஃபிராய்டு, ஜங், அட்லர் மற்றும் எதைத்தான் என்றில்லாமல் படித்தனர். அவ்வளவு ஏன், அவர்கள் ஹிப்னாடிசம் படிக்கத் தொடங்கி அதன் மனோவசியத்திற்கு ஆட்பட்டனர். ஒருமுறை அந்த இளைஞர் லீக் அமைப்பு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டது. சாரியும் குழுவினரும் சர்க்கஸ் காட்சிகளை நடத்தினர். சாரி அவரே தன் வயிற்றின் மீது 300 பவுண்டு எடையுள்ள பெரிய பாறையைத் தாங்கினார்!

சாரி பி ஏ இளங்கலை பட்டத்தில் தேறிய பிறகு செயின்ட் பேட்டரிக்ஸ் ஐரோப்பிய உயர்நிலைப் பள்ளியில் ஒரு பணியைப் பெற்று அங்கு ஜூனியர் கேம்பிரிட்ஜ் வகுப்புக்குக் கணிதம் கற்பித்தார்.  வருடாந்திர ஆய்விற்கு அவரது மேனாள் முதல்வர் கென்னத் பர்னெட் (Kenneth Burnett) வருவதைக் கண்டு அவர் திகைத்தார். :”நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்?”என்று அவர் கேட்டார். “நான் இங்கே ஆசிரியராக கற்பிக்கிறேன் சார்”. மேனாள் முதல்வர், “என்ன? நீங்கள் என்ன கற்பிக்கிறீர்கள்” எனத் தொடர்ந்து கேட்டார். “கணிதம் சார்” பதில் கூறினார். “மேத்-த-மே-ட்டிக்ஸ்” என அழுத்தமாக உச்சரித்த முதல்வருக்கு அது நம்ப முடியாததாக இருந்தது. ஆய்வுக்கு வந்த பர்னெட் அறிக்கையில், “கணிதத்துறை போதுமான அளவுக்குப் பலப்படுத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்!

சட்டம் பயிலவும் பயிற்சி செய்யவும் சாரி பூனாவுக்கு இடம் மாறி சென்றார் ஆனால் இராணுவம் உட்பட பல்வேறு பணிகளில் அவர் சேர்ந்தார். ஆனால் தேசிய இயக்கம் மீதான ஒடுக்குமுறை அவருக்கு அளவுக்கு அதிகமாகப்பட்டது. எனவே இராணுவப் பிரிவு கணக்கு கண்ட்ரோலர் அதிகாரிக்கு அவர், “விடுதலை இயக்கத்தின் பால் அரசு பின்பற்றும் தேவையில்லாத ஒடுக்குமுறை கொள்கை அணுகுமுறை காரணமாக என்னால் இந்தச் சேவையில் தொடர முடியாத எனது இயலாமையைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று எழுதி தனது ராஜினாமாவை அனுப்பினார்:.

குர்தா பைஜாமா உடையில் அவர் பூனாவைவிட்டுப்  புறப்பட்டார்

அவரும் அவரது நண்பர் ரமணராவ் இருவரும் பேருந்து மூலம் பம்பாய் சென்றனர். அங்கு அவர் மாவட்டக் காங்கிரஸ் குழுவுக்கு அறிமுகம் செய்யப்பட்டார். சத்யாகிரகி உறுதி மொழியில் “நான் ஒருபோதும் வன்முறையாளன் இல்லை”. என்று கையெழுத்திடும்போது அவருக்குச் ‘சிறிதும் நடுக்கம் இல்லாமல் இல்லை’. டாக்டர் என் எஸ் ஹார்டிகர் நிறுவிய ஹிந்துஸ்தானி சேவா தளத்தில் தன்னை அவர் இணைத்துக் கொண்டார். அங்கு உடற்பயிற்சிகளும் கூட்டுக் குழு பயிற்சிகளும் (எக்சசைஸ் மற்றும் ட்ரில்) நடந்தன. மற்றவர்களுடன் சேர்ந்து அவர் காங்கிரஸ் ஹவுஸ் இடத்தைப் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டார். அவருடன் கூடஇருந்த சகா பஞ்சாபில் இருந்து வந்தவர். ‘இரண்டு P மற்றும் இரண்டு C’ காரணமாக அவர் கோபமாக இருந்தார். –அதுதான் அவருக்குக் காவல் பணி வழங்கப்பட காரணம் என்ற கோபம். ‘இரண்டு P மற்றும் இரண்டு C’ என்பது பஞ்சாப் பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி என்பதைக் குறித்தது!

அவர்கள் ‘பிரபாத் பெரி’ எனப்படும் ‘அதிகாலை ஊர்வல’மாகச் சென்று கள்ளுக் கடைகளில் மறியல் செய்தனர். லட்சக்கணக்கில் சட்டவிரோதமாகக் காங்கிரஸ் புல்லட்டின் சுற்றறிக்கை பிரசுரிக்கப்பட்டது. பம்பாய் பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி 1930 ஜூலை 12 ஊர்வலத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உடைக்க முடிவு செய்தது. அங்குதான் சாரி அவரது எதிர்கால வாழ்நாள் நண்பர்களான ஐயர் மற்றும் சுந்தரத்தைச் சந்தித்தார். 1930ல் கார்வாலி தின ஊர்வலத்தில் அவர் மிக மோசமாக அடிக்கப்பட்டார். 

கம்யூனிஸ்ட் ஆக ஆதல்

நாசிக் சிறையில் இருந்து விடுதலையான பிறகு ஏஎஸ்ஆர் கம்யூனிஸ்ட் தத்துவம்தான் ஒரே மாற்று என முடிவு செய்தார். கிடைத்த கம்யூனிச நூல்கள் அனைத்தையும் படித்தார். தி இரயில்வே மஸ்தூர் என்ற மும்மொழி பருவ இதழில் பிழை திருத்துபவராக உதவி செய்தார். ரியாஸநவ் (Ryazanov) முன்னுரையுடன் கூடிய கம்யூனிஸ்ட் அறிக்கையை ஒரே இரவில் படித்தவர், அதனால் ஆழமாக ஈர்க்கப்பட்டார்.

மஸ்கரேனஸ் (Mascaren-has) லிருந்து எம் என் ராய் வரை படித்தார், ஆனால் அவை ஈர்க்கவில்லை. [மஸ்கரேனஸ் என்பது மஸ்கரேன் தீவுக்கூட்டம் என்பதிலிருந்து பிறந்த அங்கு வாழ்வோரின் குடும்பப் பெயர் ஆனது. இங்கு ஒரு போர்த்துகீசிய சோசலிச நாவலாசிரியரை அது குறிக்கலாம்]. சுந்தரம் அவர்களால் ஹைதராபாத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் அங்கு அரசு சட்டக் கல்லூரியில் அவர் சேர்ந்தார். பின்னர் 1934ல் பாம்பே சென்றவர் கம்யூனிஸப் படிப்பு வட்டங்களில் இணைந்து தானே சிலவற்றை அமைக்கவும் செய்தார். அத்தகைய ஒரு கூட்டம் கபிலா கண்ட்வாலா (Kapila Khandwalla) இல்லத்தில் நடந்தது. கலந்து கொண்டவர்களில் மூவர் காங்கிரஸ்காரர்கள். அந்தப் பெண்மணி பெண்கள் பள்ளியின் முதல்வர். மற்றொரு அமைப்பு ஏஎஸ்கே வாழ்ந்த நீலம் மன்ஸிலில் நடந்தது. இவற்றில் கலந்து கொண்டவர்களில் சிலர் பின்னர் தீவிர கம்யூனிஸ்ட் செயல்பாட்டாளர்கள் ஆயினர்.

1939ல் கட்சி என் எல் உபாத்தியாயாவை அனைத்திந்தியக் காங்கிரஸ் கமிட்டி (AICC) தேர்தலில் நிறுத்தியது. ஏஎஸ்ஆர் மற்றும் சுமார் 100 இளம் கம்யூனிஸ்டுகள் எஸ்கே பாட்டிலை எதிர்த்து அவருக்காகப் பணியாற்றினர். நல்ல வாக்குகளைப் பெற்றாலும் அவர் பாட்டிலை அடுத்து இரண்டாவதாக மட்டுமே வந்தார்

‘மகாகை’ வேலை நிறுத்தம் 1940

‘மகாகை’ (விலைவாசி உயர்வு) வேலை நிறுத்தம் மார்ச் 1940ல் தொடங்கியது. ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் கலந்து கொண்ட அந்த வேலை நிறுத்தம், இரண்டாம் உலக யுத்தம் காரணமாகக் கிராக்கிப்படி கோரி, 40 நாட்கள் நீடித்தது. வேலை நிறுத்தம் குறித்துத் தினசரி நாட்குறிப்பை எழுத ஏஎஸ்ஆர் அவர்களிடம் பிசி ஜோஷி கேட்டுக் கொண்டார்.

ஏஎஸ்ஆர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் எஸ்ஏ டாங்கே, மிராஜ்கர், பருலேக்கர் (Parulekar), பட்கர் (Patkar) உள்ளிட்ட பல கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவாக வாதாடினார். ஏஎஸ்ஆர் ஜூன் 1940ல் கைது செய்யப்பட்டு பூனா எரவாடா சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் அவர்கள் நாசிக் சிறைக்கு மாற்றப்பட்டனர். அங்கு ஒரு டஜன் இளம்மாணவர்கள் உட்பட 55 கம்யூனிஸ்டுகள் இருந்தனர். அவர்கள் கூட்டாகப் படிப்பது, விவாதிப்பது மற்றும் வகுப்புகளை அமைத்து நடத்தினர். 1941 ஜனவரி 26ல் சுதந்திர தினத்தை அவர்கள் கொண்டாடினர். அவரும் மற்றவர்களுமாகச் சேர்ந்து மார்க்ஸின் டாஸ் கேப்பிட்டல் (மூலதனம்) நூலைப் படித்தனர். காங்கிரஸ்காரர்களுக்குத் தனியான வகுப்புகள்கூட  நடத்தப்பட்டன.

அவர்கள் வழக்கமாகக் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தி புரட்சிகரப் பாடல்களைப் பாடுவர். ‘நான் இறக்கும் நாள் வரை’ என்ற கிளிப்ஃபோர்ட் ஓடெட்ஸ் (Clifford Odets) எழுதிய நாஜிகள் எதிர்ப்பு நாடகத்தை 33 நடிகர்களுடன் மாபெரும் வகையில் அரங்கேற்றினர்! சிறை கண்காணிப்பாளர்கூட காக்கி யூனிபார்ம் உடைகள் முதலானவற்றைத் தந்து உதவினார். கவுண்டஸ் வான் ஹெட்விக் கதாபாத்திரத்தில் சந்திரகாந்த் ககோட்கர் மாபெரும் வெற்றி பெற்றார்! அந்த நாடகம் நினைவில் நிற்கக் கூடியதாக ஆனது.

சோவியத் யூனியன் மீது நாஜி தாக்குதல், 1941

1941 ஜூன் 22ல் சோவியத் யூனியனுக்கு எதிரான ஹிட்லரின் தீவிர ஆக்கிரமிப்பு, சிபிஐ கொள்கை வழியில் மாற்றத்திற்கு இட்டுச் சென்றது. அதன் முக்கிய அம்சங்கள் தியோலி முகாம் தோழர்களிடமிருந்து, அடிப்படையில் எஸ்ஏ டாங்கே மற்றும் பிடிஆர் இருவராலும் எழுதப்பட்டு இறுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியால் ஏற்கப்பட்டது. பி சி ஜோஷியை ‘இடது தேசியவாதி’ என அழைத்த சாரி, ‘ஒருபோதும் அவர் உண்மையான மாக்ஸியவாதியாக ஆகவில்லை’ என்றார். அவரது கூற்றுப்படி, பிசி ஜோஷி கட்சியின் இந்தப் புதிய பாதையை (நியூ லைன்) தயக்கத்துடன் மட்டுமே ஒப்புக்கொண்டார்.

டோஜோ தலைமையின் கீழ் ஜப்பான் 1941 டிசம்பர் 7 அன்று அமெரிக்க கப்பல்கள் மீது பேர்ல் துறைமுகத்தில் குண்டு வீசித் தாக்கியது. பின்னர் ஹாங்காங், மலாயா, பர்மா முதலிய நாடுகளைக் கைப்பற்றியது. 1942 ஏப்ரல் மாத வாக்கில் ஜப்பானியப் படைகள் கொஹிமாவுக்கு வந்தன; மே மாதத்தில் கல்கத்தா மீது குண்டுகள் வீசப்பட்டன. சிபிஐ புதிய பாதையை ஒப்புக்கொண்டது. 1942 ஜூலை 5 முதல் சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவது தொடங்கியது.

ஆகஸ்ட் இயக்கம், 1942

சாரி ப்யூபில்ஸ் வார் (மக்கள் யுத்தம்) பத்திரிக்கையின் செய்தியாளராக 1942 ஆகஸ்ட் 8ல் (தெற்கு மும்பை கிராண்ட் ரோட்டில் அமைந்துள்ள)  கோவாலியா டேங்க் மைதானத்திற்கு (தற்போது ஆகஸ்ட் புரட்சி மைதானம் என்று பெயர்) மிக நெருக்கத்தில் இருந்தார்; அன்று அங்கு சரித்திர நிகழ்வுகள் அரங்கேறின. காந்திஜி ‘செய் அல்லது செத்துமடி’ என்று பிரகடனம் செய்து ‘வெள்ளையனே வெளியேறு’ (குவிட் இந்தியா) இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு கடிதத்தில், அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி எதார்த்தமாக இருக்க விருப்பம் தெரிவித்து, ஜப்பானிய ஆபத்தைக் காண அறிவுறுத்தியது. காங்கிரஸிலிருந்து தலைவர் ஒருவர் கட்சி அலுவலகத்திற்கு வந்து தலைமறைவு இயக்கத்திற்குச் சிபிஐ தலைமை ஏற்க வேண்டும், ஏனெனில் கம்யூனிஸ்ட் கட்சி அதில் விரிவான அனுபவம் பெற்றது என வேண்டுகோள் விடுத்தார்! அருணா ஆசஃப் அலி பிரபலமான தலைவர் ஆனார். பின்னர் அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். சாரிக்கு அவர் நல்ல நண்பர் ஆனார்.

பம்பாய் கம்யூன் வாழ்க்கை 

1942ல் சட்டபூர்வமாக்கப்பட்ட பிறகு சிபிஐ, பம்பாய் சாண்ட்ஹர்ஸ்ட் சாலையில் அமைந்த ராஜபவனின் இரண்டு தளங்களை வாடகைக்கு விட்டது. கட்சியின் மத்திய தலைமையகத்தில் ஒரு கம்யூன் (கூடி வசிக்கும் குடியிருப்பு) அமைக்கப்பட்டது. சாரி மற்றும் பலர் கட்சியின் முழு நேர ஊழியர்களாயினர். அவர் தனது சட்டப் புத்தகங்களையும் அறையில் பயன்படுத்தும் மேசை, நாற்காலி முதலிய மரச்சாமன்களையும் நன்கொடையாக வழங்கினார். சுமார் 60 தோழர்களுடன் அயர்வின்றி தோழமை உணர்வில் பணியாற்றிய கம்யூன் வாழ்க்கை உற்சாகம் அளிப்பதாக இருந்தது. அந்தக் கம்யூன் குடியிருப்பைப் பலரும் வந்து பார்த்தனர்: அவர்களில் ராஜாஜி, உதய் சங்கர், எட்கர் ஸ்னோ, பெட்டி கிராம் மற்றும் அவருடன் சீனாவின் புதிய நான்காவது ராணுவம் மற்றும் ஹெச்.வி.ஆர் ஐயங்கார் முதலானோர் அடங்குவர்.

சாரி கட்சியின் பீப்பிள்ஸ் வார் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு போர்டில், ஷரப் ஆத்தர் அலி உடன் பணியாற்றினார். காலையில் வீதிகளில் பாடல்களைப் பாடி செல்லும் குழுவுக்குச் சாரி தலைமை தாங்கினார். அவர் பேராசிரியர் ஜே டி பெர்னால், எஃப்ஸ்டைன், கிங்ஸ்லே மார்ட்டின், பேராசிரியர் பிளாக் கெட், என்கே கிருஷ்ணன், பார்வதி கிருஷ்ணன், மோகன் குமாரமங்கலம், டாக்டர் பாபா முதலான பல பிரபல பிரமுகர்களைச் சந்தித்தார். ப்ரீத்தி சர்க்காருக்குச் சாரி ஜாலியன் வாலாபாக்கின் புகழ்பெற்ற பாடலைக் கற்றுத் தந்தார். 

“எனது வாழ்வில் ஆக மிக மகிழ்ச்சியாக இருந்த கம்யூன்  வாழ்க்கை காலம்” பிடிஆர் காலம் வரவும் நொறுங்கியது : அது தோழமை உணர்வை அழித்தது என்றார் அவர்.

“1946ல் இடைக்கால அரசு அமைக்கப்பட்டபோது சர்தார் பட்டேல் உள்துறை அமைச்சரானார். இரண்டு ஆண்டுகளில் கம்யூனிஸ்டுகளைத் துடைத்தெறிவதாக அவர் மார்தட்டினார். சாரியை ராஜாஜி பட்டேலிடம் அழைத்துச் சென்றபோது பட்டேல் அவரிடம், ‘நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ என வினவினர். சாரி இவ்வாறு பதில் கூறினார் ”நான் :துடைத்தெறியப்படுவதற்காகக் காத்திருக்கிறேன்!’ பட்டேல் அதிர்ந்து போனார்!!

1946 பிப்ரவரியில் நடைபெற்ற கடற்படை வீரர்களின் கிளர்ச்சிக்கும் சாரி சாட்சியாக இருந்தார்.

காந்திஜியின் படுகொலை 

ஒவ்வொரு நாளும் காந்திஜியின் பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்து கொள்வதும்; அவரது உரைகளின் முக்கிய உள்ளடக்கத்தின் சுருக்கத்தை வெளிநாட்டு பத்திரிக்கையாளர் -களுக்கு வழங்குவதும் சாரியின் வழக்கம். ஆனால் விதிவசமான அந்த நாளில் அவர் பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் செல்லவில்லை. (காந்திஜி படுகொலை செய்யப்பட்ட அந்நாளின்) செய்தியைக் கேட்டதும் அவர் பிர்லா மாளிகைக்குத் திரும்ப விரைந்து சென்றார். தேசமே அதிர்ச்சி அடைந்தது. அடுத்த நாள் பல லட்சக்கணக்கான மக்கள் டெல்லிக்கு விரைந்தனர்.


1948ல் கட்சி

1948 கட்சி காங்கிரஸ் மாநாட்டில் பி சி ஜோஷி (பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து) நீக்கப்பட்டார்; BT ரணதிவே கட்சி பொதுச் செயலாளராக அமர்த்தப்பட்டார். PCJ சீர்திருத்தவாதியாக இருந்தபோதிலும், அவர் தனது கருத்துக்களைக் கைவிடவில்லை என்பதில் தமக்கு (சாரிக்கு) திருப்தி இருந்ததாகச் சாரி கருத்துத் தெரிவித்தார். “பிடிஆர் அவசரப்பட்டு விட்டார்” மற்றும் அவரிடமிருந்து ஓர் அழைப்பு மக்களைப் புரட்சிக்குக் கிளர்ந்தெழச் செய்யும் என்று எண்ணினார்! ஆனால் பெருந்திரள் மக்கள் கூட்டம், ‘புதிதாக அமைக்கப்பட்ட சுதந்திர இந்தியாவின் அரசுக்கு எதிராகப் புரட்சிகர நடவடிக்கையை மேற்கொள்வது தேவையில்லாதது’ என்று எண்ணியது.

சாரி கூறுகிறார் : “நமது கட்சியில் குழுவாதப் போக்கு காலம் ஒரு பயங்கரக் கனவு”, அது, கட்சியை அழித்தது மட்டுமல்லாமல், “கம்யூனிஸ்டுகள் மத்தியில் பரஸ்பர நம்பிக்கையை நொறுக்கி விட்டது.” இந்த அனைத்தும் பி.சி ஜோஷி மீது அடிப்படையற்ற தாக்குதல்கள் மூலம் மூடி மறைக்க முயற்சிக்கப்பட்டது.

சாரி கைது செய்யப்பட்டு பம்பாய் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். தனது வழக்கை அவர் தானே வாதிட்டார்; அவரது சிறைவாசம் உறுதி செய்யப்பட்டாலும், அவரது நியாயமற்ற சிறைவாசம் குறித்து நீதிமன்றம் கடுமையான கருத்துகளைத் தெரிவித்தது. அவர்கள் நேருக்கு நேர் போலீசுடன் மோதலில் ஈடுபட்டனர். சுதந்திரத்திற்கு முன்பு பிடிஆர் அவர்களே தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை எதிர்த்த குழுவாதப் போக்கு நிலைப்பாடுகளை எடுத்தார் என்பதைச் சாரி சுட்டிக் காட்டினார். அவரது அந்தக் குறிப்பு, விளக்கம் ஏதுமின்றி நிராகரிக்கப்பட்டது. 

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

தேர்தல்கள்

1952ல் பம்பாய் சட்டமன்றத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது பலமான செவ்ரீ-காலா சௌக்கி பகுதியிலிருந்து சாரியை நிறுத்தியது. மிகக் கடுமையான தேர்தல் போட்டியில் 16 ஆயிரம் வாக்குகள் சாரி பெற்றாலும் தோல்வி அடைந்தார்.

உச்ச நீதிமன்றம் 

இந்திய உச்ச நீதிமன்றத்தில் சாரி முதன்முறையாகத் தோன்றியது பரவசமான உற்சாக நிகழ்வு.  தோழர் ஏகே கோபாலனின் ஆட்கொணர்வு மனுவுக்காக அவர் ஆஜரானார். அதன் பிறகு அவர் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் ஆஜரானார். மேலும், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 12 தெலுங்கானா தலைவர்களுக்கு ஆதரவாக வழக்காடிய புகழ்பெற்ற பிரிட்டிஷ்

இடதுசாரி வழக்கறிஞர் டிஎன் பிரிட் (DN Pritt) அவர்களுடன்கூட அவர் கூட்டாகப்  பணியாற்றினார். தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பிரிட், உலகம் முழுதும் சென்று இடதுசாரி மற்றும் புரட்சிகர நோக்கங்களுக்கு ஆதரவு திரட்டியவர். பகத்சிங், ஹோ சி-மின் மற்றும் ஜோமோ கென்யாட்டா (Jomo Kenyatta) போன்ற புரட்சியாளர்களுக்கு ஆதரவாக அவர் வாதாடியிருந்தார். அவர் புகழ்பெற்ற ‘கிங்ஸ் கவுன்சில்’ அமைப்பில் இருந்தார், ஆனால் கிங்ஸ் கவுன்சில் மத்தியில் அவர் தனியான ஒற்றை முற்போக்காளராக விளங்கியவர். பல்வேறு தருணங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட்களுக்காக அவர் வாதாடியுள்ளார்.

பெருந்திரள் அமைப்புகளில் 

ஏஎஸ்ஆர் சாரி, ஆப்பிரிக்க ஆசியன் சமாதான மற்றும் ஒருமைப்பாட்டு அமைப்பு (AAPSO), அனைத்திந்தியச் சமாதானக் குழு, ஜனநாயக வழக்கறிஞர்கள் சர்வதேச அசோசியேஷன், தொழிற்சங்கங்கள் முதலிய பல்வேறு பெருந்திரள் அமைப்புகளில் பணியாற்றினார்.

சாரி அவர்களுடைய குடும்பம் கட்சி சார்ந்த குடும்பம்; அவரது மனைவி தில்ஷாத் ஒரு

கட்சி உறுப்பினர் மற்றும் பெண்களின் சர்வதேச ஜனநாயக சம்மேளனத்தின் (WIDF) செயலாளர்; பம்பாயில் பணியாற்றும் அவரது மகன் லலித் கட்சி உறுப்பினர்; ஏஎஸ்ஆர்–இன் சகோதரர் ஏஎஸ்கே ஐயங்கார் தமிழ்நாடு சிபிஐ கட்சியின்  தலைவராகத் திகழ்ந்தவர்.

ஏஎஸ்ஆர் சாரி 1972 ஆகஸ்ட் 29 அன்று ஹைதராபாத்தில் தீவிர இதய பாதிப்பான வென்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷன் காரணமாக மரணமடைந்தார். அதற்கு முன் அவர் பல்வேறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டார்.

கற்றறிந்த வழக்கறிஞரான தோழர் ஏஎஸ்ஆர் நினைவைப் போற்றுவோம்!

–நன்றி : நியூ ஏஜ் (2025, மே 18 –24)

தமிழில்: நீலகண்டன், 

என்எப்டிஇ, கடலூர்

 

 

 

 

 

 

 

 

    .

 

 

 

  

 

Wednesday, 26 August 2026

நியூ ஏஜ் தலையங்கம் --சமூக ஊடகங்கள் மீது அரசின் கிடுக்கிப்பிடி

நியூ ஏஜ் தலையங்கம் (ஆக. 23 –29)

சமூக ஊடகங்கள் மீது 

அரசின் கிடுக்கிப்பிடி

சமூக ஊடகங்கள் மீது அரசின் கட்டுப்பாடு குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் சமீபத்திய அறிக்கை தீவிரமான கேள்வியை எழுப்புகிறது. அந்த அறிக்கையின்படி மார்ச் மற்றும் ஜூலை இடைப்பட்ட காலத்தில் ஒன்றிய அரசு சுமார் ஒவ்வொரு 68 வினாடிகளுக்கும் சமூக ஊடகத் தளங்களை முடக்கும் உத்தரவுகளை வெளியிட்டது– அதாவது சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார்

1275 தளங்களை முடக்கியது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அத்தகைய உத்தரவுகள்  சுமார் 1.95 லட்சம் எண்ணிக்கையைத் தொட்டது; அதில்  பெரும்பான்மை  இன்ஸ்ட்டாகிராம் ஊடகம் தொடர்பானவை எனக் கூறப்படுகிறது. இது வெறும் புள்ளி விபரங்கள் தொடர்பான விஷயம் அல்ல. அது பாசிச அதிகாரம் மற்றும் டிஜிட்டல் யுகத்தில் தகவல் இடையேயான முரண்பாட்டின் திசைவழியைச் சுட்டிக் காட்டுகிறது.

சட்ட விரோத, வன்முறை அல்லது தீவிரக் கெடுதல்கள் நிறைந்த (தகவல்) உள்ளடக்கத்திற்கு எதிரான நடவடிக்கை அவசியம் என்பது உண்மையே. ஆனால் ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கம் மற்றும் அரசின் மீதான விமர்சனம் இவற்றிற்கு இடையேயான எல்லைக் கோடுகள் தெளிவற்று மங்கலாகும் போது பிரச்சனை எழுகிறது. இந்த முழு நிகழ்வின் வளர்ச்சிப் போக்கையும்,  ஜனநாயகம் மற்றும் அதிகாரம் சார்ந்த பரந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.

வலதுசாரி மற்றும் பாசிசப் போக்குடன் கூடிய அரசுகள் வரலாற்று ரீதியாக, அதிகாரத்தின் மீதான கட்டுப்பாட்டை  மட்டுமல்லாமல், (சமூகத்தில் வந்து) குவியும் தகவல்கள் மற்றும் கருத்துக்கள் மீதும் கட்டுப்பாட்டை நிறுவ முயன்று வந்துள்ளன. நாஜி ஜெர்மனி மற்றும் பாசிச இத்தாலியில் சுதந்திரப் பத்திரிக்கை ஊடகம் ஒடுக்கப்பட்டு, ஒரு பிரச்சாரக் கட்டமைப்பு நிறுவப்பட்டது. அதே சூழல் இன்று இல்லை; ஆனால் அதிகாரம் மற்றும் தகவல் இடையிலான அடிப்படை முரண்பாடு தொடர்கிறது.

தகவல் ஊடகம் இன்று, செய்தித்தாள்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி இவற்றுடன் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதுதான் வித்தியாசம். தகவல் உருவாக்கம் மற்றும் தகவல் பரவல் கட்டமைப்பை இணைய வலைத்தளங்கள் (இன்டர்நெட்) மற்றும் சமூக ஊடகங்கள் முழுமையாக மாற்றி அமைத்துள்ளன.

புதிய தகவல் தொழில்நுட்பப் புரட்சி, இதழியல் மீது குறிப்பிட்ட அளவு பெரும் ஊடக நிறுவனங்களின் ஏகபோகத்தைப் பலவீனப்படுத்தியுள்ளது. கைபேசி வைத்திருக்கும் ஒரு சாதாரண குடிமகனும்கூட  ஒரு நிகழ்வு குறித்த சுதந்திரச் செய்தியாளராக ஆக முடியும். பல நேரங்களில் ஒரு புகைப்படம் அல்லது ஒரு வீடியோவே முழுமையான செய்தி ஆகிறது. பாரம்பரிய ஊடகங்களில் தகவல் வழக்கமாக மேலிருந்து கீழ் நோக்கிப் பாய்கிறது; சமூக ஊடகத்தில் மக்களே தகவல் உருவாக்குபவர்களாகவும் மற்றும் தகவல் நுகர்வோர்- களாகவும்  உள்ளனர். இதுவே அதன் ஜனநாயக ஆற்றலாகும்.

தற்போதுள்ள தகவல் சேவை தளங்கள் மீது அரசுகளின் கட்டுப்பாடு அதிகரிக்கும் எனில்,

வெப்3, மையப்படுத்தப்படாது பரவலாக்கப்பட்ட வலைப்பின்னல்கள்  மற்றும் ஒருவரோடு ஒருவர் (மைய சேவை வழங்குநர் இல்லாமல் தங்களுக்குள்) தகவல் பரிமாற்றம் ['பியர்-டு-பியர்' peer-to-peer (p2p)] போன்ற தொழில்நுட்ப மாடல்கள் விரைவாக முக்கியத்துவம் பெறுகின்றன.

வெப்3 என்பது, சுதந்திரத்திற்கான பாதுகாப்பு உத்திரவாதம் அல்ல; ஆனால் மையப்படுத்தப்படாது பரவலாக்கப்பட்ட (வலைப்பின்னல்) எந்த தனி ஒரு நிறுவனமோ அல்லது அரசோ தகவலின் முழு பாய்ச்சலைக் கட்டுப்படுத்துவதைக் கடினமாக்கும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சென்சார் தணிக்கை கட்டுப்பாடு எந்தளவுக்கு அதிகமாக இருக்கிறதோ, அந்தளவுக்கு, மாற்றுத் தொழில் நுட்ப வாய்ப்புகளுக்கான தேடலும் அதிகமாகும். இந்த வளர்ச்சிப் போக்கு முழுவதிலும் அதிகாரத்தின் இரட்டை மனப்பான்மை அணுகுமுறையும் வெளிப்படையாகத் தெரிகிறது. ஒரு புறம் அரசு சமூக ஊடகங்கள் மீது, குறிப்பாக இன்ஸ்டாகிராம் மீது, பரந்த பேரளவிலான கட்டுப்பாட்டைக் கொண்டுவர விரும்புகிறது; மறுபுறம், பிரதமர் நரேந்திர மோடியே அதே தளத்தின் மூலம் ஜென்’சி’ (Gen-Z) தலைமுறை இளைஞர்களை நெருங்க முயற்சிக்கிறார். சமூக ஊடகங்களின் ஆற்றலை ஆட்சியாளர்கள் நன்கு உணர்ந்துள்ளனர் என்பதையே இது காட்டுகிறது. 

இன்ஸ்டாகிராம் வெறும் பொழுதுபோக்குக்கான தளம் மட்டுமல்ல, மாறாக இளைஞர்களின் உரையாடல், அரசியல் கருத்து வெளிப்பாடு மற்றும் அணிதிரட்டு- வதற்கான ஓர் ஊடகமும் கூட என்பதை அவர்கள் அறிவார்கள்.

இதுதான் இன்றைய நாளின் வலதுசாரிகளின் அப்பட்டமான இரட்டை வேடம் –தனது சொந்த இமேஜை கட்ட அதே ஊடகத்தைப் பயன்படுத்தும்போது, (அதன்) விமர்சனக் குரல்களைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால் கவர்ந்து ஈர்க்கும் வீடியோ பதிவுகள் மூலம் மட்டும் நீண்ட காலம் இளைஞர்கள் மீது செல்வாக்கு செலுத்த முடியாது. நம்பிக்கை என்பது ஊடகத் தளங்களை மாற்றுவதன் மூலம் ஏற்படுத்துவது அல்ல; மாறாக கொள்கைகளையும் நோக்கங்களையும் மாற்றுவதன் மூலம் ஏற்படுத்தப்படுவது. வேலைவாய்ப்பு, கல்வி, சமூகப் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்பான நடைமுறை உண்மை அனுபவங்கள், அரசு உரிமை கோரும் கூற்றுகளுடன் பொருந்தவில்லை எனில், அந்த இடைவெளியை டிஜிட்டல் பிரச்சாரங்களால் நிரப்பி இணைக்க முடியாது.

சமூக ஊடகம், ஒரு வழி தகவல் ஒலிபரப்பு ஊடகம் அல்ல. (அந்த ஊடகத்தில்) பிரதமர் பேசினால், குடிமக்கள் எதிர்வினை ஆற்றி பதில் அளிப்பார்கள்; அரசு அதன் தரப்புக் செய்தியைக் கூறினால், மக்களும் தங்கள் (சொந்த அனுபவத்தின்) கதையை முன்வைப்பார்கள். இதுவே அதனது உண்மையான ஆற்றலாகும்.

எனவே எதிர்காலத்தின் போராட்டம் எந்தச் சமூக ஊடகத் தளம் நீடிக்கும் என்பது குறித்து வெறுமே முடிவு செய்வது அல்ல. மாறாக தகவல் யாருடைய உடமையாகவும் மற்றும் யார் கட்டுப்பாட்டிலும் இருக்கப் போகிறது –அரசின் வசமா, பெரு நிறுவன மூலதனங்கள் வசமா அல்லது மக்களின் வசமா?– என்பதே உண்மையான கேள்வியாக இருக்கும்.

ஜனநாயகத்தின் உண்மையான சோதனை என்பது, ஓர் அரசு அதனது 

ஆதரவாளர்கள் குரலுக்கு எவ்வளவு சுதந்திரம் அளிக்கிறது என்பதில் இல்லை. மாறாக, அதனை விமர்சிப்பவர்களுக்கு அரசு எவ்வளவு சுதந்திரம் அளிக்கிறது என்பதுதான் உண்மையான சோதனை.

சட்டவிரோத தகவல் உள்ளடக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் உரிமை அரசுக்கு உள்ளது; ஆனால் ஒரு ஜனநாயகத்தில் எந்த அரசுக்கும் விமர்சனத்தை ஒரு குற்ற நடவடிக்கையாக மாற்றும் உரிமை இல்லை. ஆன்லைன் உள்ளடக்கத்தை நீக்கும் அரசின் அதிகாரம் அதிகரிப்பதுடன், வெளிப்படைத் தன்மை, நீதிமன்றப் பரிசீலனை மற்றும் குடிமக்களின் அடிப்படை உரிமைகள்  பாதுகாப்பு இவையும் சமமாகத் தேவை. 

இறுதியில், தொழில்நுட்பத்தை முழுமையாக மூடிவிட முடியாது மற்றும் என்றென்றைக்குமாகத் தகவலையும் சிறைப்படுத்த முடியாது. ஓர் ஊடகத்தின் மீது கட்டுப்பாடு

ஏற்படுத்தப்படும் எனில், மற்றொரு ஊடகம் உருவாகும். கட்டுப்பாடும் அழுத்தமும் சில காலத்திற்குத் தகவல் பாய்ந்தோடுவதைக் குறைக்கலாம்; ஆனால் மக்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும் விருப்பத்தை அவை ரத்து செய்து விட முடியாது. இறுதியில் வெற்றி என்பது செய்தித் தணிக்கைக்கோ, அதிகாரத்திற்கோ உரியதாக இருக்காது; மாறாக, வெற்றி சுதந்திரத்திற்கும் மக்களுக்கும் உரியதாக அமையும்! 

தமிழில் : நீலகண்டன், 

என்எப்டிஇ, கடலூர்

Monday, 24 August 2026

வர்க்கப் போராட்டம் மூலம் சாதியை ஒழித்தல் --டாக்டர் அருண் மித்ரா

 

வர்க்கப் போராட்டம் மூலம் சாதியை ஒழித்தல் 

விடுதலைக்குச் சமூக கண்ணியமும் 

பொருளாதார நீதியும் தேவை

டாக்டர் அருண் மித்ரா


இந்தியச் சமூகம் வரலாற்றுக் காலம் தொட்டு தனிமனிதனின் திறமை, தகுதி அல்லது சாதனைகளின் அடிப்படையில் அடுக்குகளாகப் பிரிக்கப்படவில்லை; மாறாக ஒருவர் எந்தக் குடும்பம் மற்றும் சாதியில் பிறந்தவர் என்பதன்படி பெரிதும் பிரிக்கப்பட்டனர். ஒரு மனிதன் பிறந்த குடும்பம் அல்லது கோத்திரத்தின்படி அடையாளப்படுத்துவது ஒரு சமூக நோக்கத்திற்குப் பயன்படலாம் என்ற போதும், சாதியைப் பயன்படுத்தி (சமூகத்தைப்) படிநிலை அடுக்குகளாக நிறுவிடுவது ஆழமான, பிளவுபடுத்தும் அசமத்துவங்களை ஏற்படுத்துகிறது. மனுஸ்மிருதி, சாதி முறைமையைத்   தொகுத்து விதிகளாகியது; அது சமூகத்தை நான்கு வர்ணங்களாகப் பிரித்து தரப்படுத்தப்பட்ட சமத்துவமின்மைகளை நிறுவனப்படுத்தியது.

மேலும் செய்யும் தொழிலுடன் சாதி நெருக்கமாகத் தொடர்புபடுத்தப்பட்டது. உடல் உழைப்பு  மற்றும் “அசுத்தமான” பணிகள் என்றழைக்கப்படும் வேலையில் ஈடுபடுபவர்கள் தீண்டத்தகாதோர் என முத்திரை குத்தப்பட்டு –தவிர்க்க முடியாத அத்தியாவசியமான பங்களிப்பை அவர்கள் சமூகத்திற்கு அளித்த போதும் – அடிப்படை மனித உரிமைகள் அவர்களுக்கு மறுக்கப்பட்டது. கல்வி, பொது இடங்களைப் பயன்படுத்துவது ஊடாடும் சமூக உறவுகள் உட்பட மற்றவர்களுடன் உணவைப் பகிர்தல் மற்றும் குடும்ப உறவுகளை ஏற்படுத்திக் கொள்ளும் உரிமைகள் மறுக்கப்பட்டு கடுமையான சமூக விலக்கலை அவர்கள் சந்தித்தனர். நூற்றாண்டுகளாகத் தொடரும் அத்தகைய பழக்கங்கள், சமூக நிறுவன அமைப்புகள் மற்றும் சமூக உணர்வில்  ஆழமான சாதி பாகுபாடாகப் பொதிந்துள்ளன. 

இருப்பினும், சாதிய ஒடுக்குமுறை ஒருபோதும் எதிர்ப்பைச் சந்திக்காமல் போகவில்லை. பௌத்தம் மற்றும் பக்தி இயக்கம், பிறப்பு அடிப்படையிலான ஏற்றத்தாழ்வு படிநிலையை எதிர்த்து கேள்வி கேட்டன. பகவான் புத்தர் பிராமண மேட்டிமையை நிராகரித்தார்; மேலும் அவர், ஒரு மனிதனின் மதிப்பு அவனது நடத்தை மற்றும் செயல்களால் தீர்மானிக்கப்பட வேண்டுமே தவிர பிறப்பினால் அல்ல என்றார். பக்தி இயக்கத்தின் பல முனிவர்கள் சமயம் மற்றும் சமூக வாழ்வின் மீது சாதி அடிப்படையிலான மேலாதிக்க ஏகபோகத்தை எதிர்த்தனர்.

19ஆம் நூற்றாண்டில் ஜோதிராவ் புலே சக்தி மிக்க சாதி எதிர்ப்புச் சிந்தனையாளராக உருவானார். 1873 செப்டம்பர் 24ல் பூனாவில் அவர் நிறுவிய ‘சத்யசோதக் சமாஜ்’ ("உண்மை தேடுவோர் சங்கம்") அமைப்பின் மூலம் ஒடுக்கப்பட்ட சாதிகளின் உரிமைக்காக அவர்

போராடினார். அவரது மனைவி சாவித்திரிபாய் புலே அவருடன் இணைந்து பூனாவில் 1948ல் ‘பிடே வாடா’வில் இந்தியாவின் பெண்களுக்கான முதல் பள்ளியை நிறுவினார். (குறிப்பு: ‘வாடா’ எனில் மராத்தியில் பெரிய பாரம்பரியமான குடியிருப்பு அல்லது மாளிகை என்று பொருள். பள்ளி தொடங்கப்பட்ட கட்டடத்தின் உரிமையாளர் தத்யாசாஹேப் பிடே. எனவே அவரது பெயரால் இது 'பிடே வாடா' என்று அழைக்கப்பட்டது). சாவித்திரிபாய் புலே மற்றும் ஃபாத்திமா ஷேக் இருவரும் நெருங்கிய நண்பர்கள் மற்றும் 19ஆம் நூற்றாண்டின் முன்னணி இந்தியக் கல்வியாளர்களும், சமகாலச் சமூகச் சீர்திருத்தவாதிகளும் ஆவர். அவர்கள் பூனாவில் கடுமையான சமூக எதிர் விளைவுகளை ஒன்றாகச் சந்தித்துப் பெண்கள் மற்றும் விளிம்பு நிலை சமூகத்தினர்களுக்கு இந்தியாவின் முதல் பள்ளிகளை நிறுவி பெண் கல்விக்கு அடித்தளம் அமைத்தனர்.

அண்ணல் டாக்டர் பி ஆர் அம்பேத்கர் சாதிக்கு எதிரான போராட்டத்திற்கு வரலாற்றுப் புகழ்மிக்க, சமரசமற்ற திசை வழியை வழங்கினார். அவரது ஆகச்சிறந்த முதன்மை படைப்பான

‘சாதியை அழித்தொழித்தல்’ (Annihilation of Caste) சமூகச் சமத்துவமின்மைகள் மீதான கடுமையான விமர்சனங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. உழைக்கும் மக்களைச் சாதி பிளவுபடுத்துகிறது என்பதை அவர் உணர்ந்தார். அதே நேரத்தில் இந்தியாவின் விடுதலை, வரலாற்று ரீதியில் ஒடுக்கப்பட்ட சமூகங்களுக்கு அரசியல் அமைப்புப் பாதுகாப்பு மற்றும் முற்போக்கான சட்டங்களை நிறைவேற்றுவதற்கான அரசியல் வெளியை ஏற்படுத்தியது. அரசியலமைப்புச் சட்டம், சமூகப் பொருளாதாரச் சமத்துவத்திற்கான போராட்டத்தைத் தொடர்வதற்கான முக்கியமான அடித்தளத்தை வழங்கியது. இந்திய
அரசியல் காட்சிகளில், பிறப்பு அடிப்படையிலான பாகுபாட்டிற்கு எதிரான கருத்துக்களுக்கு முக்கிய இடமளித்த பெருமை
மகாத்மா காந்தியடிகளைச் சாரும். பண்டிட் ஜவஹர்லால் நேரு அறிவியல் மனப்பான்மையை ஊக்குவித்தார்; மற்றும் மதம், பிரதேசம், சாதி மற்றும் பாலினம் உள்ளிட்ட எந்த வகையான பாகுபாட்டிற்கும் எதிராகப் போதித்தார்.

சாதிப் பாகுபாட்டிற்கு எதிராகப் போராடியதில் கம்யூனிஸ்டுகள் மற்றும் பிற முற்போக்கு சக்திகள் முக்கியப் பங்காற்றின. வர்க்கமற்ற மற்றும் சுரண்டலற்றச் சமூகம் குறித்த பார்வையால் வழிகாட்டப்பட்ட கம்யூனிசச் செயல்பாட்டாளர்கள், “தீண்டத்தகாதோர்” என்று கருதப்பட்டவர்கள் வீடுகளுக்குள் நுழைந்து அவர்களுடன் உணவைப் பகிர்ந்து உண்டனர்; அவர்கள் மத்தியில் வாழ்ந்து ஒருமைப்பாட்டு பந்தங்களை ஏற்படுத்தினர். இதன் காரணமாக அவர்களில் பலர் தங்கள் சமூகத்தில் இருந்து தள்ளி வைக்கப்படுவதைச் சந்தித்தனர்.

அறிவியல் மற்றும் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் சாதிய ஒடுக்குமுறை, பொருளாதாரச் சுரண்டல் முறைகளுடன் நெருக்கமாகப் பின்னிப் பிணைந்த ஒன்று. வரலாற்று ரீதியாக, சாதியானது நிலப்பிரபுத்துவ மற்றும் முதலாளித்துவ ஆதிக்கத்தின் கட்டமைப்பாகச் செயல்பட்டு வந்துள்ளது. எனவே பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிரான போராட்டம், சாதிய ஒடுக்குமுறையையும் எதிர்கொள்கிறது.  வர்க்கப் போராட்டத்தின் மூலம் உழைக்கும் மக்களின் விடுதலை, சாதியின் பொருள் சார்ந்த (பௌதிக) அடித்தளங்களைப் பலவீனப்படுத்தி இறுதியில் அதனை அழித்து ஒழிப்பதற்கான சூழல்களை ஏற்படுத்துகிறது.

தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்ட மக்களும் சாதி மற்றும் மத எல்லைகளைக் கடந்து ஒன்றிணைய வேண்டும். தொழிலாளர் வர்க்கத்துக்குள் சாதி அல்லது மத அடிப்படையிலான பிளவுகள் அவர்களின் கூட்டுச் சக்தி வலிமையை வலுவிழக்கச் செய்து சுரண்டலின் உண்மையான கட்டமைப்புகளில் இருந்து அவர்களின் கவனத்தைத் திசை திருப்பவும் கூடும். துரதிஷ்டவசமாக, சில அரசியல் தலைவர்கள் அதிகாரத்தைக் கைப்பற்றும் நோக்கில் மக்களைப் பிரதானமாகச் சாதி ரீதியில் அணி திரட்டுகிறார்கள். அத்தகைய அரசியல், சமத்துவமின்மையைத் தொடர்ந்து நிலை நிறுத்தும் பொருளாதார மற்றும் சமூக கட்டமைப்புகள் பிரச்சனைக்குத் தீர்வு காணாமல், அடையாள அடிப்படையிலான பிரிவினைகளை வலிமைப்படுத்தக் கூடும். உண்மையான விடுதலைக்குச் சமூக கண்ணியமும் பொருளாதார நீதியும் ஆகிய இரண்டும் தேவை.

எனவே, வர்க்க ஒற்றுமை, அறிவியல் பூர்வ சிந்தனை மற்றும் சுரண்டலுக்கு எதிரான நிலைப்பாடு அடிப்படையில் அனைத்து ஒடுக்கப்பட்ட பிரிவினர்களையும் ஒன்றிணைக்க கம்யூனிச இயக்கம் முயன்று வருகிறது.

சுரண்டப்படும் மக்கள் அனைவரும் பகிர்ந்து கொள்ளும் அடிப்படை வர்க்க நலன்களை, சாதி முரண்பாடுகள் கவிழ்ந்து மறைத்திட அனுமதிக்கக் கூடாது. நம்முன் உள்ள பணி, சாதியைக் கட்டிக் காக்கும் சமூகப் பிளவுகளை வலுவிழக்கச் செய்வதுடன், சுரண்டலுக்கு எதிரான நமது  போராட்டத்தையும் கூர்மைப்படுத்த வேண்டும் என்பதாகும்.

எனவே பகுத்தறிவு மற்றும் முற்போக்கு சக்திகள் இரட்டைப் பொறுப்பைச் சந்திக்கின்றன: வர்க்கப் போராட்டத்தை மேலெடுத்துச் செல்வது மற்றும் சாதி பாகுபாட்டையும் சமூகப்பாகுபாட்டையும் எதிர்த்துப் போரிடுவது. மூடநம்பிக்கை மற்றும் வழிவழியாக வந்த பரம்பரை தப்பெண்ணங்களுக்குப் பதிலாக அறிவியல் மனப்பான்மையை இடம்பெறச் செய்ய வேண்டும். சாதி ரீதியில் ஒடுக்கப்பட்டவர்கள் மற்றும் பொருளாதார ரீதியில் சுரண்டப்பட்டவர்களைக் கல்வி அறிவு, கண்ணியம் மற்றும் கூட்டாக இணைந்த அமைப்பு இவற்றைக் கொண்டு அதிகாரப்படுத்தி வலிமை பெறச் செய்ய வேண்டும்.

சாதி மோதல்கள் மூலமாகச் சாதியை அழித்து ஒழிப்பது நடந்து விடாது. அதற்குச் சுரண்டப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் அனைவரின்  ஒற்றுமை, சமூக சீர்திருத்தம், அறிவியல் மனப்பான்மை உணர்வு மற்றும் பொருளாதாரச் சுரண்டலுக்கு எதிராக நிலைத்த தொடர்ச்சியான போராட்டமும் தேவைப்படுகின்றன. இந்தச் சக்திகளை ஒன்றிணைப்பதன் மூலமாக மட்டுமே நாம் உண்மையான சமத்துவமிக்க, சாதியற்ற மற்றும் சுரண்டலற்ற சமூகத்தை நோக்கி முன்னேற முடியும். தொழிற்சங்கங்கள் தலைமையிலான தொழிலாளர் இயக்கங்களுக்கு இந்த விஷயத்தில் பெரும் பொறுப்பும் முக்கியப் பங்கும் உள்ளன.

–நன்றி : நியூ ஏஜ் (ஆக. 23 –29) 

தமிழில் : நீலகண்டன், 

என் எஃப் டி இ, கடலூர்

 

 

Wednesday, 19 August 2026

ஏஐஎஸ்எப் 90வது ஆண்டு விழா --ஜந்தர் மந்தர் போராட்டம் பகுதி --2 (நிறைவுப் பகுதி

ஏஐஎஸ்எப் 90வது ஆண்டு விழா

ஜந்தர் மந்தர் போராட்டம்:

இளைஞர்கள் பயத்தை வெற்றி கொள்ள உதவிய AISF-AIYF

(கட்டுரைநிறைவுப் பகுதி)                                                                         

 -- அனில் ரஜீம்வாலே

தொழில்நுட்பம் சார்ந்த போராட்டங்கள்

இதனை ‘ஜென்சி’ தலைமுறை, அதனைத் தொடர்ந்து ‘ஆல்பா’ தலைமுறை போராட்டம் என வாதத்திற்காக அழைக்கலாம். ‘கரப்பான் பூச்சி’ என நீதித்துறை உறுப்பினர் ஒருவரின் அகந்தையான விமர்சனம், ஆட்சிநிர்வாகத்திற்கு எதிரான கூட்டம் கூட்டமாகக் ‘கரப்பான்களின்’ படையெடுப்பை நாடு முழுவதும் கொண்டு வந்தது (!). இவர்களில் தொழிலாளர்களும் விவசாயிகளும் அடங்குவர்; இவர்கள் 21-ஆம் நூற்றாண்டில் அலைபேசி, மடிக்கணினி மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகியவற்றால் முன்னெடுக்கப்பட்ட தகவல் புரட்சியின் சூழலில் வளர்ந்தவர்கள். இது ஒரு வலைப்பின்னல் சார்ந்த தலைமுறையாகும்; வர்க்கம், பிரிவு மற்றும் கலாச்சாரம் சார்ந்த கோரிக்கைகள் இவர்களின் ஒரு பகுதியாக மாறியுள்ளன. ஓர் இணையான சமூக வலைப்பின்னலின் எழுச்சியால் அச்சம் தணிந்துள்ளது.

அவர்களைத் தேச விரோதிகள் மற்றும் வெளிநாட்டு ஏஜெண்டுகள் என்று சித்தரிப்பதற்கான முயற்சிகள் தோல்வியடைந்து விட்டன.

நாடு முழுவதும் பரவலாக நடைபெறும் போராட்டங்கள், போலி மதவாத மற்றும் வகுப்புவாதப் பிரச்சாரத் தடை சுவர்களை உடைத்து வெளியே வரும் இளைஞர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதைக் காட்டுகின்றன.

. ஸ்ரீ ராமர் கோயில் அறக்கட்டளையில் நடந்துள்ள ‘காணிக்கை மோசடி’ மக்களின் உண்மையான மத நம்பிக்கையைச் சிதைத்துள்ளது; ஆளும் கட்சியால் வழிநடத்தப்படும் கோயில் பொருளாதாரத்தின் எதார்த்த நிலை, கண்மூடித்தனமான நம்பிக்கையின் பிடியை உடைத்து வருகிறது.

மேலும், இணையம் வழி இணைக்கப்பட்ட தலைமுறையினர், வகுப்புவாத-பாசிச அரசுக்கும் அதிகார அமைப்பிற்கும் எதிராக முதன்முறையாகத் தங்கள் நிலைப்பாட்டை உறுதியாக வெளிப்படுத்தியுள்ளனர்.

மக்கள் அச்சம் தவிர்த்து வருவது ஆட்சியாளர்களுக்கு அடுத்து வரவிருக்கும் நிகழ்வுகள் குறித்த ஒரு கடுமையான எச்சரிக்கை.

அதுமட்டுமின்றி, முற்போக்குக் கட்சிகள் தங்கள் வழிமுறைகளையும் உத்திகளையும் மறுசீரமைப்பதற்கான ஒரு வாய்ப்பாகவும் இது அமைகிறது. அவர்கள் சமூகத்தின் இணைய வலை பின்னலுடன் இணைக்கப்பட்ட பிரிவுகளுடன் இணக்கமாகச் செயல்பட வேண்டும்

AISF-AIYFன் சூழ்நிலைக்கு ஏற்ற செயல்பாடு 

அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் தனது 90வது அமைப்பு தினத்தை

கொண்டாடுகிறது. மாணவர் அமைப்பு சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் மாபெரும் ஜனரஞ்சகப் போராட்டங்களை முன்னெடுத்தும், பங்கேற்றும், சொல்ல முடியா எண்ணற்ற தியாகங்களைச் செய்தும் மாபெரும் புகழ்மிக்க வரலாற்றை உடையது. 1936 ஆகஸ்ட் 12 –13 தேதிகளில் லக்னோ, கங்கா பிரசாத் நினைவு ஹாலில் நடைபெற்ற அமைப்பு மாநாட்டில் நிறுவப்பட்டு இந்திய வரலாற்றில் ஆழமான அடையாளத்தை பதித்து உள்ளது

   ஸ்ரீ கங்கா பிரசாத் வர்மா அவர்களே ஒரு பெரும் விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் பிரபலமான காங்கிரஸ் தலைவர்; அவர் பெயரில்தான் ஹாலும் நூலகமும் நிறுவப்பட்டுள்ளது.

 ஏஐஎஸ்எப்  அமைப்பு, பல்வேறு தேசியப் போக்குகளின் விளைவு; அந்தக் கருத்து பிசி ஜோஷி, நேரு, போஸ் போன்ற தலைவர்களின் இணைந்த கருத்தால் உருவானது. இவ்வாறு மாணவர் பெருமன்றம், சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் ஆகச் சிறந்த பாரம்பரியத்தை முன்னெடுத்துச் சென்றது. இங்கு நாம் ஏஐஎஸ்எப் நடத்திய முக்கிய இயக்கங்கள் சிலவற்றைக் காண்போம்:

வரலாற்றுச் சிறப்புமிக்க முதலாவது அனைத்திந்திய மாணவர்கள் தினம்

1937 நவம்பர் 20ல் ஒரே நேரத்தில் நாடு முழுவதும் மாணவர்கள் தினம் அனுசரிக்கப்பட்டது. 

1937 அந்தமான் சிறைக் கைதிகள் விடுதலை இயக்கம்:

மாணவர் பெருமன்றம் அமைக்கப்பட்ட பிறகு விரைவில் அது அறிவித்த நாடு தழுவிய இயக்கம் 1937 ஆகஸ்டில் தொடங்கியது; அந்த இயக்கம், அந்தமான் தீவு செல்லுலார் சிறைகளில் அடைக்கப்பட்ட ஆயிரக்கணக்கான கைதிகளைத் தீவிலிருந்து பிரதான நிலப்பகுதிக்கு உடனடியாக மாற்றவும் அவர்களை விடுதலை செய்யவும் கோரியது.

கல்விச் சீர்திருத்தங்களுக்கான போராட்டம்: 

அறிவியல், தொழில்நுட்பம், சமூகவியல் சார்ந்த மானுடவியல் படிப்புகள், தேர்வுகள்,

கல்வி நிறுவனங்கள் மற்றும் சேர்க்கை முதலான விஷயங்களை ஒருங்கிணைந்த முறையில் விவாதிப்பதற்காக நாக்பூரில் 1946 ஜூன் 6ஆம் தேதியிலிருந்து 9ம் தேதி வரை ஏஐஎஸ்எப் அனைத்திந்தியக் கருத்தரங்கு ஒன்றை நடத்தியது. அந்தக் கருத்தரங்கு, அதுவரை எந்த அமைப்பாலும்  ஒருங்கிணைந்த தீர்மானங்களை முன்மொழிந்த வகையில் முதலாவது நடவடிக்கையாகும்.

1942 இயக்கத்தில் தீவிரப் பங்கேற்பு:

ஏஐஎஸ்எப் தலைவர்களும் செயல்பாட்டாளர்களும் 1942 ஆகஸ்ட் புரட்சி எனப்படும்

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பீகார், உ பி, மகாராஷ்டிரா, மேற்குவங்கம் மற்றும் பல்வேறு பிற மாகாணங்களில் நடைபெற்ற அதன் தொடக்கக் கட்டங்களில் பேரணிகள், கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்களை நடத்தி தீவிரமாகப் பங்கேற்றனர். சிந்துப் பிரதேச மாணவர் பெருமன்றத்தைச் சேர்ந்த ஹேமு கலானி பிரிட்டிஷ் போலீசாரிடம் பிடிபட்டு தூக்கிலிடப்பட்டார். அப்போது அவருக்கு வயது 17 மட்டுமே.

இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய எழுச்சி:

விடுதலைப் போரின் போருக்குப் பிந்தைய எழுச்சியில் (1945 –47) ஏஐஎஸ்எப் முன்னணி பங்கு வகித்தது. ஏதோ ஒரு நடவடிக்கை இல்லாமல் ஒரு நாளும் கடந்து போனதில்லை. ஏஐஎஸ்எப் அணியினர் பலர் களப்பலி தியாகிகள் ஆகினர்.

விடுதலையை வரவேற்றல்: 

1947 ஆகஸ்ட் 15-ல் இந்தியா அடைந்த சுதந்திரத்தை ஏஐஎஸ்எப் கூட்டங்கள் மற்றும் பேரணிகளை நடத்தி ஆர்வமுடன் வரவேற்றது. விடுதலைப் போராட்ட இயக்கத்தில் அதன் வெற்றிக்காக ஏஐஎஸ்எப் பெரும் தியாகங்களைச் செய்தது.

பாண்டிச்சேரி மற்றும் கோவாவில் விடுதலைப் போராட்டங்கள்: 

பிரெஞ்சு பாண்டிச்சேரி 1954லும் போர்த்துக்கீசிய கோவா 1961லும் விடுதலை பெற்றன. இந்தப் போராட்ட இயக்கங்களிலும் ஏஐஎஸ்எப் மீண்டும் முன்னணியில் இருந்தது. 1955ல் நிகழ்ந்த கோவா சத்தியாகிரகத்தில் பலர் களப்பலி தியாகிகள் ஆயினர்.

இளைஞர் இயக்கம் பின்னர் முக்கியமாக அனைத்திந்திய இளைஞர் பெருமன்றமாக

(AIYF, 1959) வடிவெடுத்தது. தேச மறு கட்டமைப்புக்காக ஏஐஎஸ்எப் உடன் இணைந்து ஏஐஓய்எப் நினைவில் நிற்கும் பல போராட்டங்களை நடத்தியது.

SFI, AISA போன்ற பிற இடதுசாரி அமைப்புகளுடன் இணைந்து ஏஐஎஸ்எப் மற்றும் ஏஐஒய்எப் அமைப்பு ரீதியான வலிமையையும் கருத்தியல் திட்பத்தையும் வழங்கியது –அவையின்றி எந்த இயக்கமும் நீடிக்க முடியாது. அவர்களைக் கலைக்க போலீஸ் எடுத்த முயற்சிகளையும் மீறி அவர்கள் நூலகங்களைத் திறந்து நீண்ட நேரத்திற்கு நடத்தினர்.

அவர்களின் சிறந்த வரலாற்றுப் பாரம்பரியத்தில் ஏஐஎஸ்எப் மற்றும் ஏஐஒய்எப் அமைப்புகளின் அர்ப்பணிப்புள்ள குழுக்கள் கூட்டங்கள், விவாதங்கள், உணவு, குடிநீர், மேடை முதலியவற்றை அமைத்துத் தந்து அரசியல் தந்திர உத்திகளையும் வகுத்தளித்தனர். மேலும் அவர்கள் தேவையற்ற விளம்பரங்களையும் நாடிச் செல்லவில்லை.

பங்கேற்ற இளைஞர்களின் மனங்களில் இருந்த ஆளும் தரப்புக் குறித்த எந்த அச்சத்தையும் விரட்டி அடிக்க ஏஐஎஸ்எப் மற்றும் ஏஐஒய்எப் கடுமையாகப் பாடுபட்டன.

பிற முக்கிய இயக்கங்களில் பங்கேற்றல்: 

ஏஐஎஸ்எப் பங்கேற்ற அல்லது தலைமையேற்று நடத்திய அனைத்து முக்கிய இயக்கங்கள் பற்றி விரிவான தகவல்களை இங்கு தருவது சாத்தியமல்ல. ஆனால் 1959 உணவு இயக்கம், வரலாற்றுச் சிறப்புமிக்க அனைத்திந்திய டெல்லிப் பேரணிகள், பாட்னா துப்பாக்கிச் சூட்டுக்கு எதிரான 1955 மாணவர்கள் இயக்கம், பல்வேறு பந்த் போராட்டங்கள், மாணவர்கள் உரிமைக்காகவும் கட்டண உயர்வுக்கு எதிராகவும் 1960களில் நடத்தப்பட்ட பல்வேறு போராட்டங்கள், ஏகபோகங்கள் மற்றும் வங்கிகளைத் தேசியமயம் ஆக்குவதற்கான  போராட்டம், கல்வியை ஜனநாயகப்படுத்தல், கல்வியைக் காவிமயமாக்குவதற்கு எதிரான போராட்டங்கள், ஜெயப்பிரகாஷ் நாராயணனின் ‘முழு புரட்சி’க்கு எதிரான இயக்கம், அவசர நிலைக்கு எதிரான போராட்டம், வகுப்புவாத பாசிச மற்றும் வலதுசாரிகளின் அதிகாரப் போட்டிக்கு எதிரான போராட்டங்கள் போன்றவற்றில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் பங்கேற்றது என்பதை இங்கு கூறினால் போதுமானது. வியட்நாம் விடுதலைப் போராட்டத்துடன் ஒருமைப்பாடு, பங்களாதேஷ் விடுதலை, அணிசேரா இயக்கம், அமெரிக்கா 7வது கப்பற்படைக்கு எதிரான போராட்டம் போன்ற அனைத்து முக்கிய ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களிலும் ஏஐஎஸ்எப் தீவிரமாகப் பங்கேற்றது.

மாணவர்கள் மற்றும் இளைஞர்களின் பிரச்சனைகள் ஒட்டுமொத்த பொருளாதாரக் கொள்கைகளுடன் நெருக்கமாகத் தொடர்புடையது என ஏஐஎஸ்எப் மற்றும் ஏஐஒய்எப்

எப்போதும் வலியுறுத்தின. கூடுதல் உற்பத்தி மற்றும் சமத்துவமான விநியோகம் இவற்றை நோக்கமாகக் கொண்ட மக்கள் நலன் சார்ந்த பொருளாதாரக் கொள்கைகள் மட்டுமே கல்வி, சுகாதாரம், வேலைவாய்ப்பு ஏற்படுத்தல், வீட்டு வசதி முதலிய அடிப்படைத் தேவைகளை நிறைவு செய்ய முடியும்.

முற்போக்கான மதசார்பற்ற பாடத் திட்டங்களுக்காகவும் மற்றும் எளிய,  ஆழமான உள்ளடக்கத்துடன் கூடிய சீரான இலவசக் கல்விக்காகவும் ஏஐஎஸ்எப் எப்போதும் உறுதியாக நின்றது.

நவீன தேசம் குறித்த கருதுகோள், அனைத்துச் சாதிகள், இனங்கள், மதங்கள், வகுப்புகள் முதலியவற்றின் இடையேயான ஒற்றுமையில் அமைந்துள்ளது என ஏஐஎஸ்எப் மற்றும்

ஏஐஒய்எப் தொடர்ச்சியாக வலியுறுத்தின. அவை இந்திய அரசியலமைப்புக்காகத் தொடர்ச்சியாக போராடின. ஏஐஎஸ்எப் மற்றும் இளைஞர் அமைப்புகள் போன்ற சக்திகள் விடுதலைக்காகப் போராடி தியாகம் செய்தன; அதே நேரத்தில் தீவிர வலதுசாரி பிற்போக்கு வகுப்புவாத சக்திகள் ஒருபோதும் விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெறவில்லை.

வகுப்புவாதப் பாசிசச் சக்திகளின் வருகையைத் தேச ஒற்றுமைக்கு அச்சுறுத்தல் என வெகு காலம் முன்பே ஏஐஎஸ்எப்– ஏஐஒய்எப் எச்சரித்தன.

அதே நேரத்தில், சாதிப் பிரச்சனை மற்றும் சாதியவாதத்திற்கான தீர்வை உறுதியாக ஆதரித்த ஏஐஎஸ்எப் தலைமையிலான மாணவர் இயக்கம், சமூக கலாச்சார நீதியின் முக்கியத்துவத்தை வலியுறுத்தியது. பொருளாதார உறவுகள் பிற அனைத்து உறவுகளின் அடிப்படையாக அமைந்தாலும், சமூக நீதிக்குத் தனித்த கூடுதல் அணுகுமுறையை அளிக்க வேண்டியது அவசியம். ஒடுக்கப்பட்டவர்கள் மேம்பாட்டுக்குப் பொருளாதாரத் தீர்வைத் தவிர, இட ஒதுக்கீடு  முக்கிய நடவடிக்கையாகும்.

மாணவர் பெருமன்றமும் பெருந்திரள் மாணவர் இயக்கமும் 

மாணவர் மற்றும் பொதுவான இயக்கங்களில் ஆழமான தாக்கத்தைப் பதித்துள்ள ஏஐஎஸ்எப், கருத்தியல் தெளிவை வழங்கியதுடன் இயக்கங்களை நிலை நிறுத்தும் பங்கை ஆற்றுகிறது.

டிசம்பர் 1965 –ஜனவரி 1966ல் இளைஞர் பெருமன்றத்துடன் முதல் முறையாக இணைந்து பாண்டிச்சேரியில் நடத்திய தனது கருத்தரங்கில் ஏஐஎஸ்எப், தேசிய ஜனநாயகம் மற்றும் விஞ்ஞான சோசலிசத் திசைவழி நோக்கு நிலை தீர்மானத்தை நிறைவேற்றியது. அதிலிருந்து ஜனநாயகம் குறித்த தனது கருதுகோளை மேம்படுத்தி விரிவுபடுத்தியுள்ளது.

இன்று அனைத்திந்திய மாணவர் பெருமன்றம், மாணவர்களைப் பாதுகாக்க வேண்டியும், கல்விச் சீர்திருத்தம் மற்றும் பிற பிரச்சனைகள் தொடர்பாகப் போராடுவதற்கும் வேண்டி ஜனநாயகம் மற்றும் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்கப் போராடுவதில் மும்முரமாக ஈடுபட்டுள்ளது.


           மாணவர் பெருமன்றம் வாழ்க! 

மாணவர்கள் போராட்டம் வெல்க!                                 

                                                    –நன்றி : நியூ ஏஜ் (ஆக.9 –15)

                             –தமிழில் : நீலகண்டன் 

என் எஃப் டி இ, கடலூர்

[நிறைவுப் பகுதி முற்றும்]