Monday, 14 September 2026

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 155 -- P மாணிக்கம் –மெட்ராஸ் மாகாணத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் கட்டிய அமைப்பாளர்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 155 


P மாணிக்கம் –மெட்ராஸ் மாகாணத்தில் 
        கம்யூனிஸ்ட் இயக்கம் கட்டிய அமைப்பாளர்

 

–அனில் ரஜிம்வாலே

ப மாணிக்கம் 1921 அக்டோபர் 26ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம்,  வலங்கைமான் அருகே பாடகச்சேரி என்ற கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை பக்கிரிசாமி, தாயார் மகமாயி அம்மாள். பக்கிரிசாமி விவசாய விளைபொருட்கள் மொத்த விற்பனை அங்காடியில் காசாளராகப் பணியாற்றினார். அவர்களது குடும்பம் நடுத்தர வர்க்கக் குடும்பம். தஞ்சை மாவட்ட வலங்கைமானைப் பூர்வீகமாகக் கொண்ட பக்கிரிசாமி, இறுதியில் கடலூரில் குடியேறினார். கடலூர் புதுச்சேரிக்கு அருகில் உள்ள ஊர். மாணிக்கத்தின் தந்தை முதலில் ஒரு பாடகர்; அதே நேரத்தில், இ வி இராமசாமி (தந்தை பெரியார்) மற்றும் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர் ம சிங்காரவேலர் தலைமையிலான பரவலான சுயமரியாதை இயக்கத்தில் அப்பகுதியில் தீவிரமாகச் செயல்பட்டார்.

விடுதலை மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்களில் தொடக்கம்

மாணிக்கம் கடலூரில் எஸ்பிஜி நடுநிலைப் பள்ளியிலும் பின்னர் கடலூர் முனிசிபல்

உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார். அங்கே படிக்கும்போது பெரும் விடுதலைப் போராட்ட வீரர் அஞ்சலை அம்மாள் வாழ்வால் ஈர்க்கப்பட்டு பொது வாழ்வில் இணைந்தார். ஒத்துழையாமை இயக்கத்தின்போது மகாத்மா காந்திதான் அஞ்சலை அம்மாள் அவர்களைத் ‘தென்னிந்தியாவின் ஜான்சி ராணி’ என்று அழைத்தார்.

எஸ்எஸ்எல்சி முடித்த பிறகு மாணிக்கம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். அங்கு அவரது சக மாணவரும் மார்க்சிய அறிஞருருமான சுப்பிரமணிய சர்மாவையும், இளைஞர் தலைவரான பாலதண்டாயுதத்தையும் சந்தித்தார். அவர்கள் இருவரும் அவரது வகுப்புத் தோழர்கள் மட்டுமல்ல, மாணிக்கத்தின் எதிர்காலப் பாத்திரத்தை வரையறுத்ததில் பெரும் பங்காற்றியவர்கள்.

ஸ்பெயின் தேசத்தில் ஜெனரல் பிராங்கோ பாசிசப் படைகளை எதிர்த்துப் போராடிய ரிபப்ளிக்கன் ஸ்பெயின் குழுவினருக்கு ஆதரவாக நிதி திரட்ட ஜவஹர்லால் நேரு விடுத்த அறைகூவலின்படி, அவர்கள் நிதி திரட்டினர்.

மாணிக்கம் 8 வயது மாணவராக இருந்தபோது அவரது அண்டை வீட்டுக்காரரான 25 வயது இளைஞர் இராமச்சந்திரன் அடித்தே கொல்லப்பட்டார். இந்நிகழ்வு இளம் மாணிக்கத்தின் மனதை ஆழமாகப் பாதித்தது. 1930ல் காந்திஜியின் தலைமையில் நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தில் கலந்து கொண்டவர் இராமச்சந்திரன்.

அரசியல் நடவடிக்கைகளில் 

அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அரசியல் நடவடிக்கைகளின் மையத் தொட்டிலாக இருந்தது; அவர்கள் மத்தியில் கம்யூனிஸ்டுகள் இருந்தனர். கம்யூனிஸ்ட் மாணவர்கள், ‘தோழர்கள் மன்றம்’ (காம்ரேடுகள் கிளப்) அமைத்தனர்; அந்த அமைப்பு எதிர்கால நிகழ்வுகளில் முக்கியப் பங்கு ஆற்றியது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டியமைத்த தலைவர்கள் மத்தியில் சுப்பிரமணிய சர்மா இருந்தார்.

மாணிக்கம் இந்த நிகழ்வுகளின் பிரிக்க முடியாத அங்கமானார், பின்னர் பல்கலைக்

கழகத்தின் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் (ஏஐஎஸ்எப்) செயலாளராகி, மாணவத் தலைவராக உருவானார். ஏற்கனவே மார்க்சியச் செல்வாக்கின் கீழ் வந்தவர், முக்கியமாக எஸ் சர்மா மற்றும் பாலதண்டாயுதத்தின் முயற்சிகளால் ஏராளமாகப் படித்தார்.

1942ல் தங்கள் கோரிக்கைக்காக மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர். அவர்களின் தலைவரான ப மாணிக்கம் உட்பட 32 மாணவர்களை அதிகாரிகள் பல்கலைக் கழகத்திலிருந்து வெளியேற்றினர்.

கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்தல் 

இந்நடவடிக்கைகளின் காலகட்டத்தில் மாணிக்கம், ப ஜீவானந்தம், ஏ எஸ் கே ஐயங்கார்,

பி ராமமூர்த்தி, பி ஸ்ரீனிவாச ராவ் போன்ற தலைச் சிறந்த கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களைச் சந்தித்தார். காலக்கிரமத்தில் மாணிக்கம் கட்சியின் முழு நேர ஊழியர் ஆனார். மேலும் அவர் எஸ்.சர்மா, ஆர் உமாநாத், எம் பி ஸ்ரீனிவாசன் மற்றும் பிறருடன் கூட்டாக மாணவர் முன்னணி அரங்கிலும் பணியாற்றினார்.

1944ல் கட்சி மாணவர் அமைப்பைக் கட்ட திருநெல்வேலி மாவட்டத்திற்கும்; பின்னர் 1945ல் பிற மாவட்டங்களுக்கும் அவரை அனுப்பியது. பிடிஆர் காலத்தின்போது அவர் திருநெல்வேலி மாவட்டக் கட்சி செயலாளரானார், அப்பொறுப்பில் 1948ல் இருந்து 1962 வரை நீடித்தார். மாணவர் இயக்கத்திற்கு உதவுவதுடன்கூட அவர், துறைமுக, டெக்ஸ்டைல், விவசாய மற்றும் பிற தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்க மற்றும் கட்சி இயக்கங்களுக்கான வலிமையான அடித்தளங்களை நிறுவினார்.  

திருநெல்வேலி அற்புதமான வெளிகளில் பணி

திருநெல்வேலி மாவட்டக் கட்சியில் மாணிக்கத்தின் பணிகள் அப்பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சி அடித்தளம் அமைப்பதை நோக்கி பெரும் பங்களிப்புகளை நல்கியது. கட்சியின் முதலாவது மாவட்ட மாநாடு 1948 ஜனவரியில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் மாணிக்கம் அமைப்புச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அம்மாநாடு விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் மற்றும் ஆலைத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை அமைக்க முடிவு செய்தது. ஆர் நல்லகண்ணு நாங்குநேரி மற்றும் களக்காடு பகுதிகளில் தீவிரமாகப் பணியாற்றி வந்தார்.

திருநெல்வேலி மெட்ராஸ் மாகாணத்தின் தென்கோடி மாவட்டம். ‘திருநெல்வேலி’ என்ற பெயருக்கு அழகான நெல் வயல்கள் சூழ்ந்த நிலம் என்று பொருள். மேலும் அது ‘புனித நெல் வயல்களால் வேலியிடப்பட்டது’, அல்லது நகரின் தலைவரான சிவபெருமான் நெல் வயல்களால் வேலியிடப்பட்டு வணங்கப்படுகிறார் என்று அறியப்படுகிறது; (திரு + நெல் + வேலி). [சிவபக்தர் ஒருவர் வீடுகளில் யாசகம் பெற்ற நெல்லைச் சிவபெருமான் நெய்வேத்தியத்திற்காக வெயிலில் உலர்த்திவிட்டு குளிக்கச் சென்றார். அப்போது மழை பெய்ய பதறிப்போன சிவபக்தர் நெல் நனையாமல் பாதுகாக்கத் திரும்ப ஓடி வந்தவர் அந்த அற்புதக் காட்சியைக் கண்டார்: காய வைத்த நெல்லைச் சுற்றி மட்டும் மழை பெய்ய, நெல் பாதுகாப்பாக இருந்தது. சிவன் நெல்லை வேலியிட்டு பாதுகாத்தார் என்ற இந்தப் புராணக் கதையும் நகருக்கான பெயர் காரணமாகச் சொல்லப்படுகிறது –கூடுதல் இணைப்பு]

இந்த மாவட்டம் பருத்தி உற்பத்தியின் மையமாகவும் உலகம் முழுவதும் புகழ் பெற்றிருந்தது. இங்கு விளையும் பருத்தி உலகச் சந்தையில் ‘tinnies’ என்று –குறிப்பாக லிவர்பூலில் தின்னவேலி காட்டன் (திருநெல்வேலி பருத்தி) என அறியப்பட்டது. பருத்தி ஏற்றுமதிக்கு முக்கிய வணிக மையம் தூத்துக்குடி. இதன் தொடர்ச்சியாக, வலிமையான விவசாய மற்றும் தொழிற்சங்க இயக்கங்கள் இப்பகுதியில் கட்டப்பட்டன.

1865க்கு பிறகு அரசு ரயத்துவாரி அடிப்படையில் நில வருவாய் முறையை அறிமுகப்படுத்தியது. ஜமீன்தாரி முறையும் கூட அமல்படுத்தப்பட்டது.

திருநெல்வேலி, கட்சியின் ஒரு முக்கிய மையம்; இங்கு –பலமான நிலப் பிரபுத்துவ உறவுகள் விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லாதபோதும்– விவசாயிகள் இயக்கங்களில் தீவிரமாகப் பங்கெடுத்தனர். பிரிட்டிஷ் காலனிய நில வருவாய் கொள்கைகள் நேரடியாகச் சுரண்டலுக்கும் பொருளாதார நெருக்கடிக்கும் இட்டுச் சென்றது. அதற்கு முன்பு பாளிகர் கிளர்ச்சிகள் (அதாவது பாளையக்காரர்கள் என்பதன் ஆங்கிலச் சிதைந்த வடிவம், Poligar rebellions) பாளையக்காரர்களின் கிளர்ச்சிகள் நிகழ்ந்தன. 1908 திருநெல்வேலி கிளர்ச்சி மற்றும் வ உ சிதம்பரம் பிள்ளை மற்றும் சுப்ரமணிய சிவா போன்ற புகழ்பெற்ற தலைவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்த கிளர்ச்சிகள் போன்ற முக்கிய நிகழ்வுகள் நடந்தன.

நிலத்தைச் சொந்தமாக வைத்திருக்கத் தடுக்கப்பட்ட தலித்கள், அடிமைகளாகக் கொடூரமாக நடத்தப்பட்டனர். ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த போதும் ‘பஞ்சமி’ நிலத்திற்கான போராட்டம் மீதும் கவனம் குவிக்கப்பட்டது. [பஞ்சமி நிலம் என்பது, நிலமற்ற பட்டியல் இன (SC) ஏழை மக்களின் பொருளாதார மற்றும் சமூக முன்னேற்றத்திற்காக 1892ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசால் (செங்கல்பட்டு ஆட்சியர் ஜே.எச்.ஏ. ட்ரெமென்கியூரி அறிக்கையின் அடிப்படையில்) ஒதுக்கப்பட்ட வேளாண் விளைநிலங்கள் ஆகும். சுயசார்புடன் வாழவும், வறுமையைப் போக்கவும் ஆங்கிலேயர் காலத்தில் லட்சக் கணக்கான ஏக்கர் நிலங்கள் பட்டியல் இன மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. ஐந்தாம் வர்ணத்தினர் அல்லது ‘பஞ்சமர்’ என அழைக்கப்பட்ட தலித் மக்களுக்கு வழங்கப்பட்டதால் இந்நிலம் 'பஞ்சமி நிலம்' என்று அழைக்கப்பட்டது.--கூடுதல் இணைப்பு] பஞ்சமி நிலத்திற்கான போராட்டம் நில பட்டாக்களைப் பெறுவதற்காகவும் நடைபெற்றது.

விலை ஏற்றத்தாழ்வுகள் அல்லது அறுவடை எப்படி இருந்தபோதும் கவலைப்படாது, அதிகமான மற்றும் நிர்ணயிக்கப்பட்ட வரிகளை ரொக்கமாகச் செலுத்த வேண்டிய முறைகளைப் பிரிட்டிஷ் அரசு அறிமுகப்படுத்தியது. இதன் விளைவு, கடுமையான கடன்கள் மற்றும் நிலம் பறிமுதல்கள்.  காலனிய நிர்வாகத்தின் ஆதரவுடன் ஜமீன்தார்கள் அடிக்கடி பண்ணையாட்கள் அல்லது கொத்தடிமை தொழிலாளர்களை உடல்ரீதியில் கடுமையாகத் தாக்கினர். 1940களில் இருந்து தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் அல்லது விவசாய அமைப்புகளும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் அமைப்பு ரீதியில் ஒன்று திரண்டு தங்கள் போராட்டங்களை நடத்தின.

கிளாம்பூர், சிவகிரி, வள்ளியூர், கடையநல்லூர் மற்றும் பல இடங்களில் ஏராளமான எண்ணிக்கையில் விவசாயப் போராட்டங்கள் நடைபெற்றன.

சுப்பிரமணிய பாரதி நினைவு நூலகம் ஒன்று எட்டயபுரத்தில் நிறுவப்பட்டது.

தூத்துக்குடி, அம்பாசமுத்திரம் கோவில்பட்டி முக்கிய தொழிற்சங்க மையங்களாக விளங்கின.

பாலதண்டாயுதம் மற்றும் பிறருடன் இணைந்து ப மாணிக்கம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்தார்.

அதே நேரத்தில் கட்சி பெரிய அளவில் பதிப்பகங்களை அமைத்து நூல்களை வெளியிட்டது. 1940ல் சிறையில் அடைக்கப்பட்ட எஸ் எஸ் பிள்ளை என்ற காங்கிரஸ்காரர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார், நூல்கள் வெளியிடுவதில் தீவிரமாக ஈடுபட்டார். மாவட்டக் கட்சி, மாணிக்கம் வழிகாட்டுதல் கீழ் தனது சொந்தப் பதிப்பகத்தை அமைத்தது.

மதுரை ஹார்வி மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் அரசு, மாணிக்கம், பி. ராமமூர்த்தி, கேடிகே தங்கமணி, எம் ஆர் வெங்கட்ராமன் மற்றும் பிறர் மீது சதி வழக்குகளைப் புனைந்தது. அவர்கள் ஓர் ஆண்டு விசாரணை கைதிகளாக இருந்தனர்.

மாணிக்கம் தென் மாவட்டங்களில் டெக்ஸ்டைல் தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு ரீதியாகத் திரண்ட பல்வேறு டெக்ஸ்டைல் தொழிலாளர் சங்கங்கள் மத்தியில் தீவிரமாகப் பணியாற்றினார். மேலும் பீடி, சுருட்டு, துறைமுகம் மற்றும் பிற ஆலைகளில் பல்வேறு தொழிற்சங்கங்களை நிறுவியவர் அவர்.

மதுரைச் சதி வழக்கு 

மதுரைச் சதி வழக்கில் கேடிகே தங்கமணி மற்றும் பி இராமமூர்த்தியுடன் மாணிக்கம் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

அவர் பாளையங்கோட்டையில் கொக்கரக்குளம் மற்றும் மதுரைச் சிறைகளில் அடைக்கப்பட்டார். மதுரைச் சதி வழக்கு மற்றும் திருநெல்வேலிச் சதி வழக்கிலும் மாணிக்கம் சேர்க்கப்பட்டார்.

1949 மற்றும் 1950க்கு இடையில் விக்கிரமசிங்கபுரம், திருநெல்வேலி, களக்காடு, மணியாச்சி, ஸ்ரீவைகுண்டம், தூத்துக்குடி, கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் மற்றும் பல இடங்களில் பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டன.

மத்திய மற்றும் மாநில அரசுகளைக் கவிழ்க்கச் சதி செய்தது, இரயில் பாதைகள் மற்றும் தந்திப் போக்குவரத்தைச் சீர்குலைக்க முயற்சி செய்தது, வெடி மருந்துகள் சட்டத்தை மீறியது மற்றும் ஆயுதங்களை வைத்திருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டன.

மெட்ராஸ் மற்றும் நெல்லைச் சதி வழக்குகள் 

கேடிகே தங்கமணி உடன் ஓராண்டு மற்றும் பி இராமமூர்த்தி உடன் ஓராண்டிற்கும் 1946– 47ல் புகழ்பெற்ற மெட்ராஸ் சதி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகே அவர் விடுதலை செய்யப்பட்டார். பின்னர் 1948ல் நெல்லைச் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 1954ல் தான் அவர் விடுதலை செய்யப்பட்டார்.  அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.

1950களில் அவர் திருநெல்வேலியில் இருந்து மாநில மையத்திற்கு மாறினார். முதலில் தமிழ்நாடு மாநிலக் கட்சிக்கு உதவிச் செயலாளராக இருந்தவர், பின்னர் மாநிலச் செயலாளராகி 1992 வரை அந்தப் பொறுப்பில் இருந்தார். மேலும் அவர் மத்தியச் செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார்.

அவர் மாநிலச் சட்டமன்ற உறுப்பினராக 10ஆண்டுகளுக்கு மேல் இருந்தார் மற்றும் 1981 –86ஆம் ஆண்டுகளில் அவர் தமிழ்நாடு மேல் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் மாநிலப் பத்திரிக்கை, ‘ஜனசக்தி’-யின் ஆசிரியராக அவரது வாழ்நாள் இறுதிவரை செயல்பட்டார். புகழ்பெற்ற நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (NCBH) நிறுவன வலைப்பின்னல் அமைப்பைக் கட்டி எழுப்ப அவர் உதவினார்.

பி டி ஆர் காலம்

பிடி ரணதிவே கட்சிப் பொதுச் செயலாளராக இருந்த காலத்தில் கட்சியும் தனிநபர் தோழர்களும் பெரிதும் துன்பத்திற்கு ஆளாகினர். பி மாணிக்கமும் கூட மிகக் கடினமான காலத்தைக் கடந்தார், தலைமறைவாகச் சென்றார். தலைமறைவு வாழ்வில் இருந்தபோது அவரது தந்தை மறைந்த போதும் தந்தையின் இறுதிச் சடங்கில் அவரால் கலந்து கொள்ளச் செல்ல முடியவில்லை.

மாணிக்கமும் வேலுசாமித் தேவரும் திருநெல்வேலி பகுதியில் மலப்புரத்தில் ஒரு மாடி வீட்டு வாடகை அறையில் மாறுவேடத்தில் வசிக்கத் தொடங்கினர். தேங்காய் வியாபாரம் செய்யும் வணிகர்களாக அவர்கள் நடித்தனர். அவர்களின் முக்கிய பணி கட்சியைத் திரட்டி அமைப்பதும், பல்வேறு இடங்களில் இருந்து கட்சித் தலைமைக்குத் தகவல்களை அனுப்புவதுமாகும்.

ஆனால் ஒரு சாலையில் நடந்து செல்லும்போது விசாரணைத் தேடுதல் குழு காவலர்களால் விரைவில் அவர்  அடையாளம் காணப்பட்டார். விரைவாக ஓடி அவர் தப்ப முயன்றாலும் அவரைப் பிடித்தக் காவலர்கள் அவரைக் கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கினர்.

1949ல் பி. மாணிக்கம் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்; ஆனால் தான் வரதன் என்று கூறி அவர் தன்னைத்தானே காப்பாற்றிக் கொண்டார்.

எனினும் அவர் போலீஸ்காரர்களின் சந்தேக வலையில் விழுந்தார். கட்சிப் பணிக்காக அவர் குற்றாலம் சென்றபோது, குற்றாலத்தில் ஐந்தருவிக்குச் செல்லும் சாலையில் ஓர் உளவுத்துறை அதிகாரி மாணிக்கத்தை அடையாளம் கண்டார். 

இதனைத் தொடர்ந்து மாணிக்கம் கடும் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டார். குற்றாலம், தென்காசி, அம்பாசமுத்திரம், திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் தூத்துக்குடி என பல்வேறு காவல் நிலையங்களில் அவர் அடித்துத் துன்புறுத்தப்பட்டார்.

 அந்நாளில் தான் எழுத்தாளர் ஆர் எஸ் ஜேக்கப் கைது செய்யப்பட்டார். அவர்கள் மாணிக்கத்தை ஒரு சாக்குப் பையில் கட்டி காவல் நிலையத்தில் போட்டனர். மாணிக்கம் இறந்து விட்டதாகப் போலீஸ்காரர்கள் கூறினார்கள். அவர்கள் இரத்த வெள்ளத்தில் கிடந்த அம்மனிதனைப் புறக்கணித்து, ஜேக்கப் அவர்களைச் சித்திரவதை செய்யத் தொடங்கினர். மாணிக்கம் இரண்டாவது முறையாக உயிர் பெற்றார் என்று அந்த நிகழ்வை ஆசிரியர் ஜேக்கப் கூறினார்.

பின்னர் அவர் பிரம்மமூர்த்தி, எம் ஆர் வெங்கட்ராமன், கேடிகே தங்கமணி மற்றும் பிறருடன் மதுரைச் சதி வழக்குகளில் கைது செய்யப்பட்டார்.

பல்வேறு இடங்களில் பணியாற்றிய தோழர்களைச் சம்பந்தப்படுத்தி 1949– 50ல் நெல் சதி வழக்குகள் புனையப்பட்டன. 1951ம் ஆண்டு வழக்கில் 67 தோழர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது, மாணிக்கம் 32வது நபராகக் குற்றம் சாட்டப்பட்டார். அரசைத் தூக்கி எறிய சதி செய்ததாக அவர்கள் மீது குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆர் நல்லகண்ணு 55வது நபர்.

மாணிக்கம் 1954ல் விடுதலையானார். நெல்லை மாவட்டக் கட்சியின் மூன்றாவது மாநாட்டில் மாணிக்கம் மாவட்டச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட மாவட்டச் செயலாளராகப் பணியாற்றினார்.

புகழ்பெற்ற எழுத்தாளர்களுடன் அவர் நல்ல உறவை வளர்த்தார். தொ மு சி ரகுநாதன், அண்ணாச்சி சண்முகம் பிள்ளை, பேராசிரியர் நா வானமாமலை, ‘திகசி’ என்ற தி க சிவசங்கரன் மற்றும் பிறர் அதில் அடங்குவர்.

1950கள் மற்றும் 1960களில் செங்கல்பட்டு மற்றும் பிற மாவட்டங்களில் விவசாயிகளின் சக்திமிக்க போராட்டங்கள் நடைபெற்றன. தோழர் மாணிக்கம் அவர்களின் கூற்றுப்படி அந்தப் போராட்டங்கள் எந்த அளவு ஈர்க்கக் கூடியதாக இருந்ததெனில், அப்போராட்டங்களை எவ்வாறு ஒருங்கிணைத்தீர்கள் என்று பீகார் தோழர்கள் கூட கேட்டறிந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.

திருமணம் 

மாணிக்கம், சரஸ்வதியை மணந்தார். அவர், மாணிக்கத்துடன் சிறையில் இருந்த தோழர் இ தளவாய் அவர்களின் சகோதரி. தளவாய் பின்னர் விக்ரமசிங்கபுரத்தில் ஏஐடியுசி தலைவரானார். தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றிய அவர், ஒரு விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.

மாணிக்கம் சரஸ்வதி தம்பதியருக்கு ஐந்து மகன்கள் மற்றும் ஒரு மகள். அவர்கள் குரோம்பேட்டையில் கட்டிய ஒரு வீட்டில் தொடக்கத்தில் வாழ்ந்தனர். பின்னர் மனைவி சரஸ்வதி தனது நான்காவது மகன் பாஸ்கர் வீட்டிற்கு மாறினார்.

திருநெல்வேலி மற்றும் பிற மாவட்டங்களில் கட்சியின் வளர்ச்சி

தென்கோடி பகுதியான திருநெல்வேலி மற்றும் பிற மாவட்டங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது –விவசாயிகள் மத்தியில் மட்டுமின்றி, எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் அறிஞர்கள் மத்தியிலும் கட்சி சிறப்பாக வளர்ந்தது. எண்ணற்ற விவசாயப் போராட்டங்கள் நடைபெற்றன; சிவகிரி, கீழாம்பூர், வள்ளியூர், கடையநல்லூர் மற்றும் பிற மையங்களில் அமைப்புகள் கட்டியெழுப்பப்பட்டன. அது தவிரவும் தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் பிற பகுதிகளில் தொழிற்சங்க இயக்கம் ஒன்று திரட்டப்பட்டது.    

பாலதண்டாயுதம், வி பி சிந்தன், என் ராமச்சந்திரன், எம் ஆர் வெங்கட்ராமன்  மற்றும் பிறருடன் மாணிக்கம் மாவட்டத்தில் கட்சியை ஒன்று திரட்டி அமைத்தார்

மாநிலச் செயலாளராக மாணிக்கம் 

தமிழ்நாடு மாநிலத்தில் எம் கல்யாணசுந்தரம் கட்சி மாநிலச் செயலாளராக இருந்தபோது

மாணிக்கம் கட்சி உதவிச் செயலாளர். சில ஆண்டுகளுக்கு அவர் மாநிலப் பொறுப்புச் செயலாளராகப் பணியாற்றினார். கோயம்புத்தூரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் மாநிலச் செயலாளராக மாணிக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978 அதிலிருந்து 15 ஆண்டுகள் அவர் மாநிலச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.

1960கள் மற்றும் 1980கள் காலகட்டம் இரண்டிலும் கட்சியில் உருக்கு போல ஒற்றுமையைப் பேண கடுமையாக அவர் பாடுபட்டார்.

மாணிக்கம் குரோம்பேட்டையில் வாழ்ந்தபோது தினமும் ரயில் மூலம் மாம்பலம் ரயில் நிலையத்திற்குப் பயணம் செய்தார். (சென்னை) மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து கட்சி அலுவலகத்திற்கு அவர் சைக்கிள் மற்றும் ரிக்க்ஷா மூலம் பயணம் செய்வது வழக்கம். சில சமயங்களில் அவர் மாம்பலம் ரயில் நிலையத்திற்கு நடந்து கூட செல்வார். (அத்தகைய எளிமையான தோழர் மற்றும் தலைவர் எங்கள் பி எம் –மொழிபெயர்ப்பாளர் இணைப்பு)

பத்திரிக்கை ஆசிரியராகவும் எழுத்தாளராகவும் 

பி மாணிக்கம் விடுதலைக்கு முன்பிருந்தே கூட கட்சி இதழியல் உடன் நெருக்கமாக உறவு கொண்டிருந்தார். எண்ணற்ற பல இதழ்களைக் கொண்டு வருவதில் உதவியும் மற்றும் அதில் அவர் பணியாற்றவும் செய்தார். கட்சிப் பத்திரிக்கையான ஜனசக்தியின் ஆசிரியராகவும் அவரது இறுதி நாள் வரை அவர் இருந்தார். சில காலங்கள் இடைவெளி இருந்தபோதும் ஜனசக்தி இதழ் தினசரியாக வெளிவந்தது.

கட்சியின் பதிப்பகமாக என்சிபிஹெச் அல்லது நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் அமைப்பின் இயக்குனர்கள் குழுவின் தலைவராகச் செயல்பட்டார். சிந்தனையைக் கிளரும் பல கட்டுரைகளைக் கட்சியின் ஜனசக்தி, நியூ ஏஜ், தாமரை, மார்க்சிய ஒளி முதலான பல்வேறு இதழ்களில் அவர் எழுதினார். மேலும் எண்ணற்ற பல சிற்றேடுகள் மற்றும் கையேட்டுப் பிரசுரங்களையும் அவர் எழுதினார்

கட்சிப் பொறுப்புகள் 

மாணிக்கம் கட்சியின் மாநிலச் செயலாளராக இருந்தத்துடன் பல ஆண்டுகளுக்குக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும் (CEC) பொறுப்பு வகித்தார்

சட்டமன்றப் பதவிகள் 

முன்பே குறிப்பிட்டது போல அவர் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். ஒரு சட்டமன்ற உறுப்பினராக அவர் அரசியல் பிரச்சனை முதல் கலாச்சாரப் பிரச்சனைகள் வரை வரலாற்றுச் சிறப்புமிக்க பல உரைகளை ஆற்றினார்.

மறைவு 

தோழர் ப மாணிக்கம் தமது 76வது வயதில் 1999 ஜூன் 22 ஆம் நாள் ஒரு தனியார் மருத்துவமனையில் இயற்கை எய்தினார்.

வாழ்க தோழர் பி எம் புகழ்! 

–நன்றி : நியூ ஏஜ் (2026, ஆக.2 –8)

தமிழில் : நீலகண்டன், 

என் எஃப் டி இ, கடலூர்

Monday, 7 September 2026

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 129 --ஏஎஸ்ஆர் சாரி–கம்யூனிஸ்ட் அமைப்பாளர் மற்றும் சட்டவியல் வல்லுநர்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 129 


ஏஎஸ்ஆர் சாரி
–கம்யூனிஸ்ட் அமைப்பாளர் மற்றும் சட்டவியல் வல்லுநர்


–அனில் ரஜீம்வாலே 

ஏஎஸ்ஆர் சாரி 1908ல் (இன்றைய தெலுங்கானாவின்) செகந்திராபாத்தில் பிறந்தார். தனது நினைவோடையில் அவர் எழுதினார்: ”என் நினைவில் முதலில் முன்வந்து நிற்கும் விஷயம், நான் செகந்திராபாத் இரயில்வே குடும்பத்திலிருந்து வந்தவன்.” இரயில்வே, ஒரே தொழில் துறையாக இருந்ததால் பெரும்பாலான நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் இரயில்வே குடும்பங்கள். சாரியின் தந்தை ஸ்ரீநிவாஸ், மூத்த சகோதரர் இராமசாமி மற்றும் மாமா நரசிம்மன் இரயில்வேயில் பணியாற்றினார்கள்.

அவர் பிறந்த இடம் துர்நாற்றம் வீசும் சேரிகள், விளைவு ப்ளேக் நோய் : புபோனிக் பிளேக் அல்லது அரையாப்புப் பிளேக் (எர்சினியா பெஸ்டிஸ் பாக்டீரியாவினால் ஏற்படும் கடுமையான தொற்றுநோய்) ஒவ்வொரு ஆண்டின் நிகழ்வானது! எலிகள் இறந்து விழும் மற்றும் விரைவில் எண்ணற்ற மக்கள் செத்து விழத் தொடங்குவார்கள். ஓர் ஆண்டில் சுமார் ஆறு மாதங்களுக்கு அவர்கள் கூடாரங்களில் (டென்ட்களில்) வாழ வேண்டியிருந்தது.

சாரியின் குடும்பம் ஊரின் வெளிப்புறத்தில் டென்ட்களில் வாழ்ந்தது. அதன் எதிரே இரயில்வே விளையாட்டு மைதானம் இருந்தது. நிஜாம் கல்லூரி இன்ட்டர் கலை பிரிவு வகுப்பு மாணவரான சாரி நல்ல கிரிக்கெட் வீரர், மீடியம் வேகப்பந்து வீச்சாளர். தொடர்ந்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய அவர் (ஹாட்ரிக்) சாதனையால் அவரது நற்பெயர் உயர்ந்தது. அதனால் ஈர்க்கப்பட்ட இரயில்வே, அவருக்கு இரயில்வே கார்டு பணி வழங்க முன் வந்தது; ஆனால் அவரது சகோதரர் அனுமதிக்கவில்லை. சாரி தொடர்ந்து படித்து, வாழ்வில் மேம்பட வேண்டும் என அவர் விருப்பியதே காரணம்.

இந்தப் பாடம் அவரது வாழ்நாள் முழுவதும் ஏஎஸ்ஆர் மூளையில் ஆழப் பதிந்தது. அப்போது பணத்திற்கு உயர் மதிப்பு இருந்தது: அவரது தந்தை அற்ப ஊதியம் ரூ 25ல் பணியாற்றத் தொடங்கி மாதம் ரூ.50 ஊதியத்தில் ஓய்வு பெற்றார்!

அவரது சகோதரர் இராமு காந்திஜியின் பெரும் பக்தரானார். அவர் குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருக்கும் ஏற்ற கைராட்டைகளை வாங்கித் தந்தார். ஏஎஸ்ஆர் வயதில் இளையவர், அவருக்குத் தந்த கைராட்டையும் சிறிதாக இருந்தது! இராமு குடும்பத்தினரால் முதல் குளியல் துண்டுகள் தயார்  செய்யப்பட்டன.  

ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் பகுதியில் காந்திஜியின் யங் இந்தியா இதழ் விநியோகத்திற்கான முழு முகவர் உரிமையை இராமு பெற்றார்; பிரிட்டிஷ் இந்தியாவில் அது துணிச்சலான செயல். ஏஎஸ்ஆர் மற்றும் தோழர்கள் யங் இந்தியா இதழ் பிரதிகளை ஞாயிற்றுக் கிழமைகளில் அதன் சந்தாதாரர்களுக்கு விநியோகித்தனர். அவரது குடும்பம் காந்தியக் குடும்பம், அவர்களின் உணவும்கூட ‘காந்திய’ முறையாக இருந்தது! கீரை போன்ற இலை காய்கறிகள் நிறைய உண்பது ஆரோக்கியமானது என எங்கோ காந்திஜி எழுதினார். அதைச் சரியாகப் பின்பற்றிய குடும்பம் உருளைக்கிழங்கு மற்றும் அரிசிக்குப் பதிலாக இலை உணவுப் பொருளுக்கு மாறியது!

சுதேசி பொருட்களை வாங்குவது முக்கியமான வழக்கம்; காலிகட் சோப்பு மற்றும் லுங்கிகளுக்கு ஆர்டர் செய்யப்பட்டன. இராமு ஏராளமான புத்தகங்கள் வாங்கினார் குடும்பத்தின் இளைய உறுப்பினர்கள் அனைத்தையும் படித்தனர், பள்ளிப் பாடப் புத்தகங்களைத் தவிர!

ஏஎஸ்ஆர் தனது 14 வயது வாக்கில் உண்மையான கொலை குற்றச்சாட்டு விசாரணை அடிப்படையில் அமைந்த லார்டு லிட்டன் எழுதிய ‘யூஜின் ஆரெம்’ என்ற நாவலைப் படித்தார். அப்போதுதான் ஒரு வழக்கறிஞராக ஆவது என்ற எண்ணம் சாரியைக் கவ்விப் பிடித்தது. 

அவரது குடும்பம் பழமைவாதக் குடும்பம் அல்ல, ஆனால் விரிவான அளவில் ஆரோக்கியமான சமய –தத்துவக் கருத்துகளின் தாக்கத்தைப் பெற்றிருந்தது. பக்திப் பாடல் மற்றும் செவ்வியல் கர்நாடக இசையில் ஆழமான ஈடுபாட்டை ஏஎஸ்ஆர் வளர்த்தார்; பக்தி யோகா மற்றும் இராமகிருஷ்ண மடத்தில் அவர் ஆர்வம் கொண்டார். விவேகானந்தரின் சீடரான மடத்தின் சுவாமி யோகேஷ்வரானந்த் செகந்திராபாத்துக்கு வந்தார். அவரது சொற்பொழிவுகள் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. மகரிஷி கார்வேயும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினார். இஸ்லாமிய வாழ்க்கை முறை சுஃபி தத்துவம் மற்றும் உடைகளும் சாரியிடம் செல்வாக்கை ஏற்படுத்தியது.

அரசியல் நடவடிக்கைகள் 

கல்லூரியில் சாரி திறமையான விவாதம் செய்பவராக இருந்தார். ஒருமுறை அவர் அசைவ உணவுக்கு ஆதரவாகப் பேசினார். விவாதத்தில் அவர் கூறினார் : “உண்மைதான், தாவர உணவுகள் மனிதருக்குப் பயனுள்ளவை. ஆனால் கோழிக்கறி மற்றும் ஆட்டுக்கறி என்பது, ‘செரிக்கப்படுவதற்கு முந்தைய தாவரம்’ தவிர வேறு என்ன?” (அதாவது ஆடு உண்ட தாவரம் செரிக்கப்பட்டு பின் கறி ஆனது. செரிக்கப்படுவதற்கு முன் அது தாவரமாக இருந்தது என்று வாதிட்டார்.) உடனே அவரது கருத்து அவையோரைப் பிடித்துக் கொண்டது! அவர் பல பரிசுகள் பெற்றார்.

நிஜாம் கல்லூரியில் முதல் அரசியல் வேலைநிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டதன் பெருமை சாரி குழுவினரையே சேரும். 1920களின் தொடக்கத்தில் காந்தியத்திலிருந்து அவர்கள் பிரிந்து சென்றனர். சௌரி சௌரா நிகழ்வுக்குப் பின் ஒத்துழையாமை இயக்கம் விலக்கிக் கொள்ளப்பட்டது. அது குறித்த அவர்களின் கருத்து இப்படி இருந்தது: “போலீஸ்காரர்கள் சிலர் கொல்லப்பட்டது என்ன ஒரு பெரிய விஷயம்?” அவர்கள் காந்திய அரசியல் தத்துவத்திலிருந்து பிரிந்து சென்றனரே தவிர, காந்தியிடமிருந்து அல்ல. எனவே காந்தி கைது செய்யப்பட்டபோது காந்தியின் கைதை எதிர்த்து அவர்கள் மாணவர்களின் வேலை நிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்தனர்.

உடற்கட்டு வளர்ப்பு பயிற்சி மற்றும் இளைஞர் இயக்கம்

சாரியும் சில தோழர்களும் மிகவும் மெலிந்து இருக்க, ஆனால் மதுரையிலிருந்து வந்த நாராயணசாமி அவர்களிடம் உடற்கட்டு பராமரிப்புப் பயிற்சி குறித்த சிந்தனையை விதைத்தார்; பின்னர் அவ்வாறு தொடங்கியதுதான் ‘தண்டால் பஸ்கி’   உடற்பயிற்சி!அவரும் கூட்டாளிகளும் இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவின் புகழ் பெற்ற உடற்கட்டு பயிற்சியாளர்களுக்கு எழுதினர்: குறிப்பாக, தசைகளைக் கட்டுப்படுத்தும் முறையை அவர்கள் மேசிக் (Maxick) லிருந்து கற்றனர்! அவர்களது ‘ஆராய்ச்சிக’ளின் விளைவு யூத் பிசிகல் கல்ச்சர் லீக் (YPCL) என்ற அமைப்பை நிறுவ இட்டுச் சென்றது.  அவர்கள் ‘மனதின் மர்மங்க’ளைக் கூட ஆராயத் தலைப்பட்டு ஃபிராய்டு, ஜங், அட்லர் மற்றும் எதைத்தான் என்றில்லாமல் படித்தனர். அவ்வளவு ஏன், அவர்கள் ஹிப்னாடிசம் படிக்கத் தொடங்கி அதன் மனோவசியத்திற்கு ஆட்பட்டனர். ஒருமுறை அந்த இளைஞர் லீக் அமைப்பு கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கிக் கொண்டது. சாரியும் குழுவினரும் சர்க்கஸ் காட்சிகளை நடத்தினர். சாரி அவரே தன் வயிற்றின் மீது 300 பவுண்டு எடையுள்ள பெரிய பாறையைத் தாங்கினார்!

சாரி பி ஏ இளங்கலை பட்டத்தில் தேறிய பிறகு செயின்ட் பேட்டரிக்ஸ் ஐரோப்பிய உயர்நிலைப் பள்ளியில் ஒரு பணியைப் பெற்று அங்கு ஜூனியர் கேம்பிரிட்ஜ் வகுப்புக்குக் கணிதம் கற்பித்தார்.  வருடாந்திர ஆய்விற்கு அவரது மேனாள் முதல்வர் கென்னத் பர்னெட் (Kenneth Burnett) வருவதைக் கண்டு அவர் திகைத்தார். :”நீங்கள் இங்கே என்ன செய்கிறீர்கள்?”என்று அவர் கேட்டார். “நான் இங்கே ஆசிரியராக கற்பிக்கிறேன் சார்”. மேனாள் முதல்வர், “என்ன? நீங்கள் என்ன கற்பிக்கிறீர்கள்” எனத் தொடர்ந்து கேட்டார். “கணிதம் சார்” பதில் கூறினார். “மேத்-த-மே-ட்டிக்ஸ்” என அழுத்தமாக உச்சரித்த முதல்வருக்கு அது நம்ப முடியாததாக இருந்தது. ஆய்வுக்கு வந்த பர்னெட் அறிக்கையில், “கணிதத்துறை போதுமான அளவுக்குப் பலப்படுத்தப்பட்டுள்ளது” என்று குறிப்பிட்டார்!

சட்டம் பயிலவும் பயிற்சி செய்யவும் சாரி பூனாவுக்கு இடம் மாறி சென்றார் ஆனால் இராணுவம் உட்பட பல்வேறு பணிகளில் அவர் சேர்ந்தார். ஆனால் தேசிய இயக்கம் மீதான ஒடுக்குமுறை அவருக்கு அளவுக்கு அதிகமாகப்பட்டது. எனவே இராணுவப் பிரிவு கணக்கு கண்ட்ரோலர் அதிகாரிக்கு அவர், “விடுதலை இயக்கத்தின் பால் அரசு பின்பற்றும் தேவையில்லாத ஒடுக்குமுறை கொள்கை அணுகுமுறை காரணமாக என்னால் இந்தச் சேவையில் தொடர முடியாத எனது இயலாமையைத் தெரிவித்துக் கொள்கிறேன்” என்று எழுதி தனது ராஜினாமாவை அனுப்பினார்:.

குர்தா பைஜாமா உடையில் அவர் பூனாவைவிட்டுப்  புறப்பட்டார்

அவரும் அவரது நண்பர் ரமணராவ் இருவரும் பேருந்து மூலம் பம்பாய் சென்றனர். அங்கு அவர் மாவட்டக் காங்கிரஸ் குழுவுக்கு அறிமுகம் செய்யப்பட்டார். சத்யாகிரகி உறுதி மொழியில் “நான் ஒருபோதும் வன்முறையாளன் இல்லை”. என்று கையெழுத்திடும்போது அவருக்குச் ‘சிறிதும் நடுக்கம் இல்லாமல் இல்லை’. டாக்டர் என் எஸ் ஹார்டிகர் நிறுவிய ஹிந்துஸ்தானி சேவா தளத்தில் தன்னை அவர் இணைத்துக் கொண்டார். அங்கு உடற்பயிற்சிகளும் கூட்டுக் குழு பயிற்சிகளும் (எக்சசைஸ் மற்றும் ட்ரில்) நடந்தன. மற்றவர்களுடன் சேர்ந்து அவர் காங்கிரஸ் ஹவுஸ் இடத்தைப் பாதுகாக்கும் பணியை மேற்கொண்டார். அவருடன் கூடஇருந்த சகா பஞ்சாபில் இருந்து வந்தவர். ‘இரண்டு P மற்றும் இரண்டு C’ காரணமாக அவர் கோபமாக இருந்தார். –அதுதான் அவருக்குக் காவல் பணி வழங்கப்பட காரணம் என்ற கோபம். ‘இரண்டு P மற்றும் இரண்டு C’ என்பது பஞ்சாப் பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி என்பதைக் குறித்தது!

அவர்கள் ‘பிரபாத் பெரி’ எனப்படும் ‘அதிகாலை ஊர்வல’மாகச் சென்று கள்ளுக் கடைகளில் மறியல் செய்தனர். லட்சக்கணக்கில் சட்டவிரோதமாகக் காங்கிரஸ் புல்லட்டின் சுற்றறிக்கை பிரசுரிக்கப்பட்டது. பம்பாய் பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி 1930 ஜூலை 12 ஊர்வலத்திற்கு விதிக்கப்பட்ட தடையை உடைக்க முடிவு செய்தது. அங்குதான் சாரி அவரது எதிர்கால வாழ்நாள் நண்பர்களான ஐயர் மற்றும் சுந்தரத்தைச் சந்தித்தார். 1930ல் கார்வாலி தின ஊர்வலத்தில் அவர் மிக மோசமாக அடிக்கப்பட்டார். 

கம்யூனிஸ்ட் ஆக ஆதல்

நாசிக் சிறையில் இருந்து விடுதலையான பிறகு ஏஎஸ்ஆர் கம்யூனிஸ்ட் தத்துவம்தான் ஒரே மாற்று என முடிவு செய்தார். கிடைத்த கம்யூனிச நூல்கள் அனைத்தையும் படித்தார். தி இரயில்வே மஸ்தூர் என்ற மும்மொழி பருவ இதழில் பிழை திருத்துபவராக உதவி செய்தார். ரியாஸநவ் (Ryazanov) முன்னுரையுடன் கூடிய கம்யூனிஸ்ட் அறிக்கையை ஒரே இரவில் படித்தவர், அதனால் ஆழமாக ஈர்க்கப்பட்டார்.

மஸ்கரேனஸ் (Mascaren-has) லிருந்து எம் என் ராய் வரை படித்தார், ஆனால் அவை ஈர்க்கவில்லை. [மஸ்கரேனஸ் என்பது மஸ்கரேன் தீவுக்கூட்டம் என்பதிலிருந்து பிறந்த அங்கு வாழ்வோரின் குடும்பப் பெயர் ஆனது. இங்கு ஒரு போர்த்துகீசிய சோசலிச நாவலாசிரியரை அது குறிக்கலாம்]. சுந்தரம் அவர்களால் ஹைதராபாத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார் அங்கு அரசு சட்டக் கல்லூரியில் அவர் சேர்ந்தார். பின்னர் 1934ல் பாம்பே சென்றவர் கம்யூனிஸப் படிப்பு வட்டங்களில் இணைந்து தானே சிலவற்றை அமைக்கவும் செய்தார். அத்தகைய ஒரு கூட்டம் கபிலா கண்ட்வாலா (Kapila Khandwalla) இல்லத்தில் நடந்தது. கலந்து கொண்டவர்களில் மூவர் காங்கிரஸ்காரர்கள். அந்தப் பெண்மணி பெண்கள் பள்ளியின் முதல்வர். மற்றொரு அமைப்பு ஏஎஸ்கே வாழ்ந்த நீலம் மன்ஸிலில் நடந்தது. இவற்றில் கலந்து கொண்டவர்களில் சிலர் பின்னர் தீவிர கம்யூனிஸ்ட் செயல்பாட்டாளர்கள் ஆயினர்.

1939ல் கட்சி என் எல் உபாத்தியாயாவை அனைத்திந்தியக் காங்கிரஸ் கமிட்டி (AICC) தேர்தலில் நிறுத்தியது. ஏஎஸ்ஆர் மற்றும் சுமார் 100 இளம் கம்யூனிஸ்டுகள் எஸ்கே பாட்டிலை எதிர்த்து அவருக்காகப் பணியாற்றினர். நல்ல வாக்குகளைப் பெற்றாலும் அவர் பாட்டிலை அடுத்து இரண்டாவதாக மட்டுமே வந்தார்

‘மகாகை’ வேலை நிறுத்தம் 1940

‘மகாகை’ (விலைவாசி உயர்வு) வேலை நிறுத்தம் மார்ச் 1940ல் தொடங்கியது. ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் கலந்து கொண்ட அந்த வேலை நிறுத்தம், இரண்டாம் உலக யுத்தம் காரணமாகக் கிராக்கிப்படி கோரி, 40 நாட்கள் நீடித்தது. வேலை நிறுத்தம் குறித்துத் தினசரி நாட்குறிப்பை எழுத ஏஎஸ்ஆர் அவர்களிடம் பிசி ஜோஷி கேட்டுக் கொண்டார்.

ஏஎஸ்ஆர் நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் எஸ்ஏ டாங்கே, மிராஜ்கர், பருலேக்கர் (Parulekar), பட்கர் (Patkar) உள்ளிட்ட பல கம்யூனிஸ்டுகளுக்கு ஆதரவாக வாதாடினார். ஏஎஸ்ஆர் ஜூன் 1940ல் கைது செய்யப்பட்டு பூனா எரவாடா சிறையில் அடைக்கப்பட்டு பின்னர் அவர்கள் நாசிக் சிறைக்கு மாற்றப்பட்டனர். அங்கு ஒரு டஜன் இளம்மாணவர்கள் உட்பட 55 கம்யூனிஸ்டுகள் இருந்தனர். அவர்கள் கூட்டாகப் படிப்பது, விவாதிப்பது மற்றும் வகுப்புகளை அமைத்து நடத்தினர். 1941 ஜனவரி 26ல் சுதந்திர தினத்தை அவர்கள் கொண்டாடினர். அவரும் மற்றவர்களுமாகச் சேர்ந்து மார்க்ஸின் டாஸ் கேப்பிட்டல் (மூலதனம்) நூலைப் படித்தனர். காங்கிரஸ்காரர்களுக்குத் தனியான வகுப்புகள்கூட  நடத்தப்பட்டன.

அவர்கள் வழக்கமாகக் கலாச்சார நிகழ்ச்சிகளை நடத்தி புரட்சிகரப் பாடல்களைப் பாடுவர். ‘நான் இறக்கும் நாள் வரை’ என்ற கிளிப்ஃபோர்ட் ஓடெட்ஸ் (Clifford Odets) எழுதிய நாஜிகள் எதிர்ப்பு நாடகத்தை 33 நடிகர்களுடன் மாபெரும் வகையில் அரங்கேற்றினர்! சிறை கண்காணிப்பாளர்கூட காக்கி யூனிபார்ம் உடைகள் முதலானவற்றைத் தந்து உதவினார். கவுண்டஸ் வான் ஹெட்விக் கதாபாத்திரத்தில் சந்திரகாந்த் ககோட்கர் மாபெரும் வெற்றி பெற்றார்! அந்த நாடகம் நினைவில் நிற்கக் கூடியதாக ஆனது.

சோவியத் யூனியன் மீது நாஜி தாக்குதல், 1941

1941 ஜூன் 22ல் சோவியத் யூனியனுக்கு எதிரான ஹிட்லரின் தீவிர ஆக்கிரமிப்பு, சிபிஐ கொள்கை வழியில் மாற்றத்திற்கு இட்டுச் சென்றது. அதன் முக்கிய அம்சங்கள் தியோலி முகாம் தோழர்களிடமிருந்து, அடிப்படையில் எஸ்ஏ டாங்கே மற்றும் பிடிஆர் இருவராலும் எழுதப்பட்டு இறுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியால் ஏற்கப்பட்டது. பி சி ஜோஷியை ‘இடது தேசியவாதி’ என அழைத்த சாரி, ‘ஒருபோதும் அவர் உண்மையான மாக்ஸியவாதியாக ஆகவில்லை’ என்றார். அவரது கூற்றுப்படி, பிசி ஜோஷி கட்சியின் இந்தப் புதிய பாதையை (நியூ லைன்) தயக்கத்துடன் மட்டுமே ஒப்புக்கொண்டார்.

டோஜோ தலைமையின் கீழ் ஜப்பான் 1941 டிசம்பர் 7 அன்று அமெரிக்க கப்பல்கள் மீது பேர்ல் துறைமுகத்தில் குண்டு வீசித் தாக்கியது. பின்னர் ஹாங்காங், மலாயா, பர்மா முதலிய நாடுகளைக் கைப்பற்றியது. 1942 ஏப்ரல் மாத வாக்கில் ஜப்பானியப் படைகள் கொஹிமாவுக்கு வந்தன; மே மாதத்தில் கல்கத்தா மீது குண்டுகள் வீசப்பட்டன. சிபிஐ புதிய பாதையை ஒப்புக்கொண்டது. 1942 ஜூலை 5 முதல் சிறைக் கைதிகள் விடுதலை செய்யப்படுவது தொடங்கியது.

ஆகஸ்ட் இயக்கம், 1942

சாரி ப்யூபில்ஸ் வார் (மக்கள் யுத்தம்) பத்திரிக்கையின் செய்தியாளராக 1942 ஆகஸ்ட் 8ல் (தெற்கு மும்பை கிராண்ட் ரோட்டில் அமைந்துள்ள)  கோவாலியா டேங்க் மைதானத்திற்கு (தற்போது ஆகஸ்ட் புரட்சி மைதானம் என்று பெயர்) மிக நெருக்கத்தில் இருந்தார்; அன்று அங்கு சரித்திர நிகழ்வுகள் அரங்கேறின. காந்திஜி ‘செய் அல்லது செத்துமடி’ என்று பிரகடனம் செய்து ‘வெள்ளையனே வெளியேறு’ (குவிட் இந்தியா) இயக்கத்திற்கு அறைகூவல் விடுத்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஒரு கடிதத்தில், அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டி எதார்த்தமாக இருக்க விருப்பம் தெரிவித்து, ஜப்பானிய ஆபத்தைக் காண அறிவுறுத்தியது. காங்கிரஸிலிருந்து தலைவர் ஒருவர் கட்சி அலுவலகத்திற்கு வந்து தலைமறைவு இயக்கத்திற்குச் சிபிஐ தலைமை ஏற்க வேண்டும், ஏனெனில் கம்யூனிஸ்ட் கட்சி அதில் விரிவான அனுபவம் பெற்றது என வேண்டுகோள் விடுத்தார்! அருணா ஆசஃப் அலி பிரபலமான தலைவர் ஆனார். பின்னர் அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். சாரிக்கு அவர் நல்ல நண்பர் ஆனார்.

பம்பாய் கம்யூன் வாழ்க்கை 

1942ல் சட்டபூர்வமாக்கப்பட்ட பிறகு சிபிஐ, பம்பாய் சாண்ட்ஹர்ஸ்ட் சாலையில் அமைந்த ராஜபவனின் இரண்டு தளங்களை வாடகைக்கு விட்டது. கட்சியின் மத்திய தலைமையகத்தில் ஒரு கம்யூன் (கூடி வசிக்கும் குடியிருப்பு) அமைக்கப்பட்டது. சாரி மற்றும் பலர் கட்சியின் முழு நேர ஊழியர்களாயினர். அவர் தனது சட்டப் புத்தகங்களையும் அறையில் பயன்படுத்தும் மேசை, நாற்காலி முதலிய மரச்சாமன்களையும் நன்கொடையாக வழங்கினார். சுமார் 60 தோழர்களுடன் அயர்வின்றி தோழமை உணர்வில் பணியாற்றிய கம்யூன் வாழ்க்கை உற்சாகம் அளிப்பதாக இருந்தது. அந்தக் கம்யூன் குடியிருப்பைப் பலரும் வந்து பார்த்தனர்: அவர்களில் ராஜாஜி, உதய் சங்கர், எட்கர் ஸ்னோ, பெட்டி கிராம் மற்றும் அவருடன் சீனாவின் புதிய நான்காவது ராணுவம் மற்றும் ஹெச்.வி.ஆர் ஐயங்கார் முதலானோர் அடங்குவர்.

சாரி கட்சியின் பீப்பிள்ஸ் வார் பத்திரிக்கையின் ஆசிரியர் குழு போர்டில், ஷரப் ஆத்தர் அலி உடன் பணியாற்றினார். காலையில் வீதிகளில் பாடல்களைப் பாடி செல்லும் குழுவுக்குச் சாரி தலைமை தாங்கினார். அவர் பேராசிரியர் ஜே டி பெர்னால், எஃப்ஸ்டைன், கிங்ஸ்லே மார்ட்டின், பேராசிரியர் பிளாக் கெட், என்கே கிருஷ்ணன், பார்வதி கிருஷ்ணன், மோகன் குமாரமங்கலம், டாக்டர் பாபா முதலான பல பிரபல பிரமுகர்களைச் சந்தித்தார். ப்ரீத்தி சர்க்காருக்குச் சாரி ஜாலியன் வாலாபாக்கின் புகழ்பெற்ற பாடலைக் கற்றுத் தந்தார். 

“எனது வாழ்வில் ஆக மிக மகிழ்ச்சியாக இருந்த கம்யூன்  வாழ்க்கை காலம்” பிடிஆர் காலம் வரவும் நொறுங்கியது : அது தோழமை உணர்வை அழித்தது என்றார் அவர்.

“1946ல் இடைக்கால அரசு அமைக்கப்பட்டபோது சர்தார் பட்டேல் உள்துறை அமைச்சரானார். இரண்டு ஆண்டுகளில் கம்யூனிஸ்டுகளைத் துடைத்தெறிவதாக அவர் மார்தட்டினார். சாரியை ராஜாஜி பட்டேலிடம் அழைத்துச் சென்றபோது பட்டேல் அவரிடம், ‘நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ என வினவினர். சாரி இவ்வாறு பதில் கூறினார் ”நான் :துடைத்தெறியப்படுவதற்காகக் காத்திருக்கிறேன்!’ பட்டேல் அதிர்ந்து போனார்!!

1946 பிப்ரவரியில் நடைபெற்ற கடற்படை வீரர்களின் கிளர்ச்சிக்கும் சாரி சாட்சியாக இருந்தார்.

காந்திஜியின் படுகொலை 

ஒவ்வொரு நாளும் காந்திஜியின் பிரார்த்தனைக் கூட்டங்களில் கலந்து கொள்வதும்; அவரது உரைகளின் முக்கிய உள்ளடக்கத்தின் சுருக்கத்தை வெளிநாட்டு பத்திரிக்கையாளர் -களுக்கு வழங்குவதும் சாரியின் வழக்கம். ஆனால் விதிவசமான அந்த நாளில் அவர் பிரார்த்தனைக் கூட்டத்திற்குச் செல்லவில்லை. (காந்திஜி படுகொலை செய்யப்பட்ட அந்நாளின்) செய்தியைக் கேட்டதும் அவர் பிர்லா மாளிகைக்குத் திரும்ப விரைந்து சென்றார். தேசமே அதிர்ச்சி அடைந்தது. அடுத்த நாள் பல லட்சக்கணக்கான மக்கள் டெல்லிக்கு விரைந்தனர்.


1948ல் கட்சி

1948 கட்சி காங்கிரஸ் மாநாட்டில் பி சி ஜோஷி (பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து) நீக்கப்பட்டார்; BT ரணதிவே கட்சி பொதுச் செயலாளராக அமர்த்தப்பட்டார். PCJ சீர்திருத்தவாதியாக இருந்தபோதிலும், அவர் தனது கருத்துக்களைக் கைவிடவில்லை என்பதில் தமக்கு (சாரிக்கு) திருப்தி இருந்ததாகச் சாரி கருத்துத் தெரிவித்தார். “பிடிஆர் அவசரப்பட்டு விட்டார்” மற்றும் அவரிடமிருந்து ஓர் அழைப்பு மக்களைப் புரட்சிக்குக் கிளர்ந்தெழச் செய்யும் என்று எண்ணினார்! ஆனால் பெருந்திரள் மக்கள் கூட்டம், ‘புதிதாக அமைக்கப்பட்ட சுதந்திர இந்தியாவின் அரசுக்கு எதிராகப் புரட்சிகர நடவடிக்கையை மேற்கொள்வது தேவையில்லாதது’ என்று எண்ணியது.

சாரி கூறுகிறார் : “நமது கட்சியில் குழுவாதப் போக்கு காலம் ஒரு பயங்கரக் கனவு”, அது, கட்சியை அழித்தது மட்டுமல்லாமல், “கம்யூனிஸ்டுகள் மத்தியில் பரஸ்பர நம்பிக்கையை நொறுக்கி விட்டது.” இந்த அனைத்தும் பி.சி ஜோஷி மீது அடிப்படையற்ற தாக்குதல்கள் மூலம் மூடி மறைக்க முயற்சிக்கப்பட்டது.

சாரி கைது செய்யப்பட்டு பம்பாய் ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டார். தனது வழக்கை அவர் தானே வாதிட்டார்; அவரது சிறைவாசம் உறுதி செய்யப்பட்டாலும், அவரது நியாயமற்ற சிறைவாசம் குறித்து நீதிமன்றம் கடுமையான கருத்துகளைத் தெரிவித்தது. அவர்கள் நேருக்கு நேர் போலீசுடன் மோதலில் ஈடுபட்டனர். சுதந்திரத்திற்கு முன்பு பிடிஆர் அவர்களே தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை எதிர்த்த குழுவாதப் போக்கு நிலைப்பாடுகளை எடுத்தார் என்பதைச் சாரி சுட்டிக் காட்டினார். அவரது அந்தக் குறிப்பு, விளக்கம் ஏதுமின்றி நிராகரிக்கப்பட்டது. 

இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

தேர்தல்கள்

1952ல் பம்பாய் சட்டமன்றத்திற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது பலமான செவ்ரீ-காலா சௌக்கி பகுதியிலிருந்து சாரியை நிறுத்தியது. மிகக் கடுமையான தேர்தல் போட்டியில் 16 ஆயிரம் வாக்குகள் சாரி பெற்றாலும் தோல்வி அடைந்தார்.

உச்ச நீதிமன்றம் 

இந்திய உச்ச நீதிமன்றத்தில் சாரி முதன்முறையாகத் தோன்றியது பரவசமான உற்சாக நிகழ்வு.  தோழர் ஏகே கோபாலனின் ஆட்கொணர்வு மனுவுக்காக அவர் ஆஜரானார். அதன் பிறகு அவர் உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு வழக்குகளில் ஆஜரானார். மேலும், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 12 தெலுங்கானா தலைவர்களுக்கு ஆதரவாக வழக்காடிய புகழ்பெற்ற பிரிட்டிஷ்

இடதுசாரி வழக்கறிஞர் டிஎன் பிரிட் (DN Pritt) அவர்களுடன்கூட அவர் கூட்டாகப்  பணியாற்றினார். தொழிலாளர் கட்சி நாடாளுமன்ற உறுப்பினரான பிரிட், உலகம் முழுதும் சென்று இடதுசாரி மற்றும் புரட்சிகர நோக்கங்களுக்கு ஆதரவு திரட்டியவர். பகத்சிங், ஹோ சி-மின் மற்றும் ஜோமோ கென்யாட்டா (Jomo Kenyatta) போன்ற புரட்சியாளர்களுக்கு ஆதரவாக அவர் வாதாடியிருந்தார். அவர் புகழ்பெற்ற ‘கிங்ஸ் கவுன்சில்’ அமைப்பில் இருந்தார், ஆனால் கிங்ஸ் கவுன்சில் மத்தியில் அவர் தனியான ஒற்றை முற்போக்காளராக விளங்கியவர். பல்வேறு தருணங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட்களுக்காக அவர் வாதாடியுள்ளார்.

பெருந்திரள் அமைப்புகளில் 

ஏஎஸ்ஆர் சாரி, ஆப்பிரிக்க ஆசியன் சமாதான மற்றும் ஒருமைப்பாட்டு அமைப்பு (AAPSO), அனைத்திந்தியச் சமாதானக் குழு, ஜனநாயக வழக்கறிஞர்கள் சர்வதேச அசோசியேஷன், தொழிற்சங்கங்கள் முதலிய பல்வேறு பெருந்திரள் அமைப்புகளில் பணியாற்றினார்.

சாரி அவர்களுடைய குடும்பம் கட்சி சார்ந்த குடும்பம்; அவரது மனைவி தில்ஷாத் ஒரு

கட்சி உறுப்பினர் மற்றும் பெண்களின் சர்வதேச ஜனநாயக சம்மேளனத்தின் (WIDF) செயலாளர்; பம்பாயில் பணியாற்றும் அவரது மகன் லலித் கட்சி உறுப்பினர்; ஏஎஸ்ஆர்–இன் சகோதரர் ஏஎஸ்கே ஐயங்கார் தமிழ்நாடு சிபிஐ கட்சியின்  தலைவராகத் திகழ்ந்தவர்.

ஏஎஸ்ஆர் சாரி 1972 ஆகஸ்ட் 29 அன்று ஹைதராபாத்தில் தீவிர இதய பாதிப்பான வென்ட்ரிகுலர் ஃபைப்ரிலேஷன் காரணமாக மரணமடைந்தார். அதற்கு முன் அவர் பல்வேறு தாக்குதல்களால் பாதிக்கப்பட்டார்.

கற்றறிந்த வழக்கறிஞரான தோழர் ஏஎஸ்ஆர் நினைவைப் போற்றுவோம்!

–நன்றி : நியூ ஏஜ் (2025, மே 18 –24)

தமிழில்: நீலகண்டன், 

என்எப்டிஇ, கடலூர்

 

 

 

 

 

 

 

 

    .

 

 

 

  

 

Wednesday, 26 August 2026

நியூ ஏஜ் தலையங்கம் --சமூக ஊடகங்கள் மீது அரசின் கிடுக்கிப்பிடி

நியூ ஏஜ் தலையங்கம் (ஆக. 23 –29)

சமூக ஊடகங்கள் மீது 

அரசின் கிடுக்கிப்பிடி

சமூக ஊடகங்கள் மீது அரசின் கட்டுப்பாடு குறித்து இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிக்கையின் சமீபத்திய அறிக்கை தீவிரமான கேள்வியை எழுப்புகிறது. அந்த அறிக்கையின்படி மார்ச் மற்றும் ஜூலை இடைப்பட்ட காலத்தில் ஒன்றிய அரசு சுமார் ஒவ்வொரு 68 வினாடிகளுக்கும் சமூக ஊடகத் தளங்களை முடக்கும் உத்தரவுகளை வெளியிட்டது– அதாவது சராசரியாக நாள் ஒன்றுக்கு சுமார்

1275 தளங்களை முடக்கியது. கடந்த ஐந்து ஆண்டுகளில் அத்தகைய உத்தரவுகள்  சுமார் 1.95 லட்சம் எண்ணிக்கையைத் தொட்டது; அதில்  பெரும்பான்மை  இன்ஸ்ட்டாகிராம் ஊடகம் தொடர்பானவை எனக் கூறப்படுகிறது. இது வெறும் புள்ளி விபரங்கள் தொடர்பான விஷயம் அல்ல. அது பாசிச அதிகாரம் மற்றும் டிஜிட்டல் யுகத்தில் தகவல் இடையேயான முரண்பாட்டின் திசைவழியைச் சுட்டிக் காட்டுகிறது.

சட்ட விரோத, வன்முறை அல்லது தீவிரக் கெடுதல்கள் நிறைந்த (தகவல்) உள்ளடக்கத்திற்கு எதிரான நடவடிக்கை அவசியம் என்பது உண்மையே. ஆனால் ஆட்சேபனைக்குரிய உள்ளடக்கம் மற்றும் அரசின் மீதான விமர்சனம் இவற்றிற்கு இடையேயான எல்லைக் கோடுகள் தெளிவற்று மங்கலாகும் போது பிரச்சனை எழுகிறது. இந்த முழு நிகழ்வின் வளர்ச்சிப் போக்கையும்,  ஜனநாயகம் மற்றும் அதிகாரம் சார்ந்த பரந்த கண்ணோட்டத்தில் பார்க்க வேண்டும்.

வலதுசாரி மற்றும் பாசிசப் போக்குடன் கூடிய அரசுகள் வரலாற்று ரீதியாக, அதிகாரத்தின் மீதான கட்டுப்பாட்டை  மட்டுமல்லாமல், (சமூகத்தில் வந்து) குவியும் தகவல்கள் மற்றும் கருத்துக்கள் மீதும் கட்டுப்பாட்டை நிறுவ முயன்று வந்துள்ளன. நாஜி ஜெர்மனி மற்றும் பாசிச இத்தாலியில் சுதந்திரப் பத்திரிக்கை ஊடகம் ஒடுக்கப்பட்டு, ஒரு பிரச்சாரக் கட்டமைப்பு நிறுவப்பட்டது. அதே சூழல் இன்று இல்லை; ஆனால் அதிகாரம் மற்றும் தகவல் இடையிலான அடிப்படை முரண்பாடு தொடர்கிறது.

தகவல் ஊடகம் இன்று, செய்தித்தாள்கள், வானொலி மற்றும் தொலைக்காட்சி இவற்றுடன் மட்டுப்படுத்தப்படவில்லை என்பதுதான் வித்தியாசம். தகவல் உருவாக்கம் மற்றும் தகவல் பரவல் கட்டமைப்பை இணைய வலைத்தளங்கள் (இன்டர்நெட்) மற்றும் சமூக ஊடகங்கள் முழுமையாக மாற்றி அமைத்துள்ளன.

புதிய தகவல் தொழில்நுட்பப் புரட்சி, இதழியல் மீது குறிப்பிட்ட அளவு பெரும் ஊடக நிறுவனங்களின் ஏகபோகத்தைப் பலவீனப்படுத்தியுள்ளது. கைபேசி வைத்திருக்கும் ஒரு சாதாரண குடிமகனும்கூட  ஒரு நிகழ்வு குறித்த சுதந்திரச் செய்தியாளராக ஆக முடியும். பல நேரங்களில் ஒரு புகைப்படம் அல்லது ஒரு வீடியோவே முழுமையான செய்தி ஆகிறது. பாரம்பரிய ஊடகங்களில் தகவல் வழக்கமாக மேலிருந்து கீழ் நோக்கிப் பாய்கிறது; சமூக ஊடகத்தில் மக்களே தகவல் உருவாக்குபவர்களாகவும் மற்றும் தகவல் நுகர்வோர்- களாகவும்  உள்ளனர். இதுவே அதன் ஜனநாயக ஆற்றலாகும்.

தற்போதுள்ள தகவல் சேவை தளங்கள் மீது அரசுகளின் கட்டுப்பாடு அதிகரிக்கும் எனில்,

வெப்3, மையப்படுத்தப்படாது பரவலாக்கப்பட்ட வலைப்பின்னல்கள்  மற்றும் ஒருவரோடு ஒருவர் (மைய சேவை வழங்குநர் இல்லாமல் தங்களுக்குள்) தகவல் பரிமாற்றம் ['பியர்-டு-பியர்' peer-to-peer (p2p)] போன்ற தொழில்நுட்ப மாடல்கள் விரைவாக முக்கியத்துவம் பெறுகின்றன.

வெப்3 என்பது, சுதந்திரத்திற்கான பாதுகாப்பு உத்திரவாதம் அல்ல; ஆனால் மையப்படுத்தப்படாது பரவலாக்கப்பட்ட (வலைப்பின்னல்) எந்த தனி ஒரு நிறுவனமோ அல்லது அரசோ தகவலின் முழு பாய்ச்சலைக் கட்டுப்படுத்துவதைக் கடினமாக்கும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், சென்சார் தணிக்கை கட்டுப்பாடு எந்தளவுக்கு அதிகமாக இருக்கிறதோ, அந்தளவுக்கு, மாற்றுத் தொழில் நுட்ப வாய்ப்புகளுக்கான தேடலும் அதிகமாகும். இந்த வளர்ச்சிப் போக்கு முழுவதிலும் அதிகாரத்தின் இரட்டை மனப்பான்மை அணுகுமுறையும் வெளிப்படையாகத் தெரிகிறது. ஒரு புறம் அரசு சமூக ஊடகங்கள் மீது, குறிப்பாக இன்ஸ்டாகிராம் மீது, பரந்த பேரளவிலான கட்டுப்பாட்டைக் கொண்டுவர விரும்புகிறது; மறுபுறம், பிரதமர் நரேந்திர மோடியே அதே தளத்தின் மூலம் ஜென்’சி’ (Gen-Z) தலைமுறை இளைஞர்களை நெருங்க முயற்சிக்கிறார். சமூக ஊடகங்களின் ஆற்றலை ஆட்சியாளர்கள் நன்கு உணர்ந்துள்ளனர் என்பதையே இது காட்டுகிறது. 

இன்ஸ்டாகிராம் வெறும் பொழுதுபோக்குக்கான தளம் மட்டுமல்ல, மாறாக இளைஞர்களின் உரையாடல், அரசியல் கருத்து வெளிப்பாடு மற்றும் அணிதிரட்டு- வதற்கான ஓர் ஊடகமும் கூட என்பதை அவர்கள் அறிவார்கள்.

இதுதான் இன்றைய நாளின் வலதுசாரிகளின் அப்பட்டமான இரட்டை வேடம் –தனது சொந்த இமேஜை கட்ட அதே ஊடகத்தைப் பயன்படுத்தும்போது, (அதன்) விமர்சனக் குரல்களைக் கட்டுப்படுத்துகிறது. ஆனால் கவர்ந்து ஈர்க்கும் வீடியோ பதிவுகள் மூலம் மட்டும் நீண்ட காலம் இளைஞர்கள் மீது செல்வாக்கு செலுத்த முடியாது. நம்பிக்கை என்பது ஊடகத் தளங்களை மாற்றுவதன் மூலம் ஏற்படுத்துவது அல்ல; மாறாக கொள்கைகளையும் நோக்கங்களையும் மாற்றுவதன் மூலம் ஏற்படுத்தப்படுவது. வேலைவாய்ப்பு, கல்வி, சமூகப் பாதுகாப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் தொடர்பான நடைமுறை உண்மை அனுபவங்கள், அரசு உரிமை கோரும் கூற்றுகளுடன் பொருந்தவில்லை எனில், அந்த இடைவெளியை டிஜிட்டல் பிரச்சாரங்களால் நிரப்பி இணைக்க முடியாது.

சமூக ஊடகம், ஒரு வழி தகவல் ஒலிபரப்பு ஊடகம் அல்ல. (அந்த ஊடகத்தில்) பிரதமர் பேசினால், குடிமக்கள் எதிர்வினை ஆற்றி பதில் அளிப்பார்கள்; அரசு அதன் தரப்புக் செய்தியைக் கூறினால், மக்களும் தங்கள் (சொந்த அனுபவத்தின்) கதையை முன்வைப்பார்கள். இதுவே அதனது உண்மையான ஆற்றலாகும்.

எனவே எதிர்காலத்தின் போராட்டம் எந்தச் சமூக ஊடகத் தளம் நீடிக்கும் என்பது குறித்து வெறுமே முடிவு செய்வது அல்ல. மாறாக தகவல் யாருடைய உடமையாகவும் மற்றும் யார் கட்டுப்பாட்டிலும் இருக்கப் போகிறது –அரசின் வசமா, பெரு நிறுவன மூலதனங்கள் வசமா அல்லது மக்களின் வசமா?– என்பதே உண்மையான கேள்வியாக இருக்கும்.

ஜனநாயகத்தின் உண்மையான சோதனை என்பது, ஓர் அரசு அதனது 

ஆதரவாளர்கள் குரலுக்கு எவ்வளவு சுதந்திரம் அளிக்கிறது என்பதில் இல்லை. மாறாக, அதனை விமர்சிப்பவர்களுக்கு அரசு எவ்வளவு சுதந்திரம் அளிக்கிறது என்பதுதான் உண்மையான சோதனை.

சட்டவிரோத தகவல் உள்ளடக்கத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் உரிமை அரசுக்கு உள்ளது; ஆனால் ஒரு ஜனநாயகத்தில் எந்த அரசுக்கும் விமர்சனத்தை ஒரு குற்ற நடவடிக்கையாக மாற்றும் உரிமை இல்லை. ஆன்லைன் உள்ளடக்கத்தை நீக்கும் அரசின் அதிகாரம் அதிகரிப்பதுடன், வெளிப்படைத் தன்மை, நீதிமன்றப் பரிசீலனை மற்றும் குடிமக்களின் அடிப்படை உரிமைகள்  பாதுகாப்பு இவையும் சமமாகத் தேவை. 

இறுதியில், தொழில்நுட்பத்தை முழுமையாக மூடிவிட முடியாது மற்றும் என்றென்றைக்குமாகத் தகவலையும் சிறைப்படுத்த முடியாது. ஓர் ஊடகத்தின் மீது கட்டுப்பாடு

ஏற்படுத்தப்படும் எனில், மற்றொரு ஊடகம் உருவாகும். கட்டுப்பாடும் அழுத்தமும் சில காலத்திற்குத் தகவல் பாய்ந்தோடுவதைக் குறைக்கலாம்; ஆனால் மக்கள் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்தும் விருப்பத்தை அவை ரத்து செய்து விட முடியாது. இறுதியில் வெற்றி என்பது செய்தித் தணிக்கைக்கோ, அதிகாரத்திற்கோ உரியதாக இருக்காது; மாறாக, வெற்றி சுதந்திரத்திற்கும் மக்களுக்கும் உரியதாக அமையும்! 

தமிழில் : நீலகண்டன், 

என்எப்டிஇ, கடலூர்