கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு -145
ராகுல சாங்கிருத்தியாயன்
– ஏராளமாக எழுதியவர், அறிஞர், தலைவர்
–அனில் ரஜீம்வாலே
ராகுல் பல்துறை மேதை, மாபெரும் மொழியியலாளர், நாவலாசிரியர், வரலாற்றாளர்,
தத்துவ மேதை, விரிவாகப் பயணம் செய்த பயணி, கலைக் களஞ்சிய அறிஞர். இவை அனைத்தையும்விட
மேலாக, அவர் பரவலாக அங்கீகரிக்கப்பட்டப் பெருந்திரள் விவசாயிகள் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட்
கட்சி தலைவர். குறைந்தபட்சம் 30 (முப்பது) மொழிகளை அவர் அறிந்திருந்தார்!
ராகுல சாங்கிருத்தியாயன், கேதார்நாத் பாண்டே என்ற இயற்பெயருடன் 1893 ஏப்ரல்
9ம் நாள் உத்தரப்பிரதேச அசாம்கர் மாவட்ட முகமதாபாத் தாலுக்கா பண்டகா கிராமத்தில் செல்வச்
செழிப்பு மிக்க பிராமணக் குடும்பம் ஒன்றில் மூத்த குழந்தையாகச் சாங்க்ரித்தியா கோத்திரத்தில்
பிறந்தார். தந்தை பண்டிட் கோவர்தன் பாண்டே மற்றும் தாயார் திருமதி குல்வந்தி தேவி.
அவரது பூர்வீகக் கிராமம் அசாம்கர் மாவட்டத்தின் கனைலா சக்கர பான்பூர். அவரது தாய்மொழி
போஜ்புரி. அவர் குடும்பத்தின் பூர்வீக வேர்கள் இன்றைய கோரக்பூர் மாவட்ட ரப்தி ஆற்றங்கரையில்
அமைந்த மலான் கிராமம். அவரது தாய் வழி தாத்தா ராம்சரண் பதக் மூலம் தொடக்கக் கல்வியை
உருது வழியில் பெற்றார். பின்னர் 1899ல் ராகுல், தேவநாகரி எழுத்தைப் பதம் பள்ளியில்
கற்றார். அவரது மாமா சமஸ்கிருத அறிஞரான மகாதேவ் பண்டிட்டிடம் 1902-ல் சமஸ்கிருதம் படித்தார்.
சிறுவன் கேதார் தொடக்கக் கல்வியை அசாம்கர் நிசாமாபாத்தில் உள்ள நடுநிலைப்
பள்ளியில் பெற்றார். அப்போது 12 வயதே ஆன அவருக்கு அந்தக் கால வழக்கப்படி திருமணமும்
நடந்தது. ராகுல் அந்தத் திருமணத்தை “ஒரு தமாஷ்”என்று குறிப்பிடுகிறார். 14 வயதில் வேலை
தேடி கல்கத்தாவுக்குத் தப்பி சென்றார். கல்கத்தா சுவர்களில் ஒட்டிய போஸ்டர்கள் மூலம்
அவர் வங்க மொழியைக் கற்றுக் கொண்டார்!
பயணங்கள்
கேட்போரை மலைக்கச்
செய்யும் ராகுலின் சிலிர்ப்பூட்டும் ஆச்சரியமான சாகசப் பயணங்கள், அவரது பல எழுத்தாக்கங்களின்
ஆதாரமாக அமைந்து, பெரும்பான்மையான அவரது ஆளுமையை வடிவமைத்தது. 1910ல் வேதாந்தத்தைப்
படித்துக் கொண்டு இருந்த போதும் ஹரித்வார், ரிஷிகேஷ், கங்கோத்திரி, பத்திநாத் மற்றும்
கேதார்நாத் வழியாக அவர் மேற்கு இமயமலைத் தொடரை நோக்கிப் பயணப்பட்டார். 1911ல் காசியில்
துர்க்கா சப்தசதி இறைவியிடம் தன்முன் காட்சி அளிக்குமாறும், அப்படித் தோன்றத் தவறினால்
தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாவும் ‘சவால்’ விடுத்தார்! இதைத் தொடர்ந்து ‘காவியம்’
(சமஸ்கிருத கவிதையியல்) மற்றும் ‘வியாகரணம்’ (சமஸ்கிருத இலக்கணம்) படித்தார். அப்போதிலிருந்து
ஒருபோதும் அவர் நீண்ட காலம் ஓரிடத்தில் தங்கவில்லை, முறையான கல்வியைப் பெறவில்லை, ஆனால்
அவரது கல்வியறிவு பெரிதும் சுயமாகக் கற்றது.
இதன் மத்தியில்
(பீகார் சப்ரா மாவட்ட) பார்ஸா மடத் தலைவருக்கு ஒரு சீடர் தேவைப்பட்ட நிலையில், அவர்
தன்னைத் தானே மடத்துடன் இணைத்துக் கொண்டார். 1912ல் சாப்ராவுக்குப் பயணம் செய்தார்,
ஒரு சாதுவாகத் தொடங்கி ‘பாபா ராமோதர் தாஸ்’ ஆனார். மடத்தின் தலைவருக்கு வாரிசாக அவர்
ஆகியிருக்க முடியும், ஆனால் மத நடவடிக்கைகளில் முற்றாகச் சலித்துப்போய்த் தென்னிந்தியாவுக்கு
ஓடினார், உத்தரார்த்தி மடாலயத்தில் தங்கினார். சில மாதங்களுக்குப் பிறகு அவர் அயோத்தியா
வந்தடைந்தார்.
ஆர்ய சமாஜ் அமைப்பில்
1914 அக்டோபரில்
அசாம்கர்க்கில் அவரது வீட்டுக்குத் திரும்பினார், ஆர்ய சமாஜ் இயக்கத்தில் அறிமுகமாகி
1915ல் ஆர்ய சமாஜ் இயக்கம் குறித்துச் சொற்பொழிவுகள் ஆற்றிக் கொண்டே அவர் வீட்டைவிட்டு
ஆக்ராவுக்குச் சென்றார். அதே நேரத்தில் அவர் அரபு, பெர்ஷியன் மொழிகளையும் உலகத்தின்
மதங்கள் குறித்தும் கற்றார். அதன் பிறகு அவர் தயானந்த் ஆங்கிலோ வேத (DAV) பள்ளியில் படிக்க லாகூர் சென்றார்.
அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பௌத்தத்தில் ஈர்ப்பு
விரைவில் புத்த
மதத் தத்துவத்துடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. பௌத்தம் தொடர்பாக அவர் சென்ற இடங்களில்
குஷிநகர், சாரநாத், லும்பினி மற்றும் புத்த கயா அடங்கும். வேண்டுமென்றே அவர் ராஜபுத்திர
மற்றும் முஸ்லீம் வீடுகளில் மீன் உணவைச் சமைத்து உண்டார். 1918ல் ராகுல் உருது, இந்தி
மற்றும் ஆங்கிலச் செய்தித் தாள்களில் ரஷ்யப் புரட்சி பற்றி படித்தார். புரட்சி அவரை
(சர் ஃபிரான்சிஸ் பேகன் எழுதி முடிக்காத உடோப்பியன் நாவலில் வரும்) ‘புதிய அட்லான்டிஸ்’
அல்லது கற்பனாவாதக் கம்யூனிசச் சமூகமான ‘உடோப்பியா’வாகத் தன்னை எண்ண வைத்தது. 1919
ஜாலின்வாலாபாக் நிகழ்வுகள் அவரிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது, அவரைத் தொந்தரவுபடுத்தி
துரத்திய பிரச்சனைகள் அவருககுத் தெளிவானது. 1921ல் ஆர்ய சமாஜத்துடன் அவரது செயல்பாட்டுத்
தொடர்புகள் முடிவுக்கு வந்தன.
ஒத்துழையாமை இயக்கத்தின்போது
தங்கள் தாய்மண்ணிற்குச் சேவையாற்ற காந்திஜி இளைஞர்களுக்கு விடுத்த அழைப்பால் ராகுல்
உற்சாகம் பெற்றார். ஒரு கூட்டத்தில் சொற்பொழிவாற்றியதற்காக அவர் கைது செய்யப்பட்டு
4 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1922ல் அவர் தனது சமஸ்கிருத மற்றும் இந்தியத்
தத்துவங்கள் பற்றிய அறிவை ஆழப்படுத்தினார். [வேதத்தை ஏற்றுக் கொண்ட பண்டைய இந்து தத்துவத்தை
வேதாந்தம், மீமாம்சம் அல்லது உத்தர மீமாம்சம், நியாயம், வைசேடிகம், சாங்கியம் மற்றும்
யோகம் ஆகிய ஆறு தரிசனங்கள் என்றழைப்பர்]
துறவியாகிய ராகுல்,
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட (பீகார் சரண் மாவட்டத்தின்) சாப்ரா ஏழை மககளுக்குச் சேவை
செய்தார். அருகில் இருந்த ஏக்மா பகுதியில் அவர் நூற்புச் சக்ர ராட்டைக் கருவிகளை வழங்கினார்,
அதனுடன் காந்தியச் சிந்தனைகளை மையமாக வைத்துப் போஜ்புரியில் பொதுச் சொற்பொழிவுகளை ஆற்றினார்.
1922 ஜனவரி 31ல் அவர் கைது செய்யப்பட்டார். சிறைக்குள் அவர்கள் டிராஸ்கி எழுதிய ‘போல்ஷ்விசம்
மற்றும் உலகப் புரட்சி’ புத்தகத்தின் பிரதியைக் கடத்தி எடுத்து வந்தனர். ராகுல் அங்கு
சமஸ்கிருத மொழியில் ஓர் அரசியல் பஜனை ஸ்லோகப் பாடலையே புனைந்தார்!
சப்ரா மாவட்டக்
காங்கிரஸ் கமிட்டியில் அவர் சேர்ந்தார், கயா காங்கிரஸ் அமர்வில் கலந்து கொண்டார். அங்கு
அவர் தேசியத் தலைவர்களிடம், பழைய பாரம்பரிய நடைமுறைகளைக் கறாராகப் பின்பற்றும் பழமைவாத
இந்துகளிடமிருந்து புத்தகயாவைப் பௌத்த மதத்தவர்களிடம் மாற்றித் தரும்படி மன்றாடினார்.
சில காலமாகவே அத்தகைய மாற்றத்திற்காக அவர் பிரச்சாரம் செய்து வந்தார். 1923 மார்ச்
--ஏப்ரல் மாதங்களில் ராகுல் ஒன்னரை மாதங்கள் நேபாளத்தில் கழித்தார். கார்கில் முதல்
லடாக் வரையான பாதை வழியாக லாமாகள் மற்றும் புத்த பிக்குகளைச் சந்தித்தபடி காஷ்மீருக்குப்
பயணமானார். இந்தப் பயணங்களின்போது உயிர்வாழ அவர் பிச்சைகூட எடுத்தார்! அறுபது வயதான
ரிஜாங் லாமாவைச் சந்திக்க அவர் 18,000 அடி உயரத்தில் ஹார்டோங்-லா வரைகூட சென்றார்.
நடுங்க வைக்கும் குளிரிலும், வழுக்கிச் சறுக்கும் பாறைகளிலும், நடந்தும் மற்றும் என்ன
போக்குவரத்துவசதி கிடைக்கிறோ அதிலெல்லாம் பயணம் செய்து, நாடோடிகள் மட்டுமே செல்லும்
சாலை வழியாக, சுற்றிலும் ஐஸ் போர்த்திய மலைகளின் ஊடேயும், ஏன் அதன் மேலேறியும்கூட அவர்
பயணம் மேற்கொண்டார். வழியில் கண்டெடுத்த செங்டுக் (Sengtuk) என்ற திபேத்திய நாய் குறித்த மனதைத் தொடும் விவரிப்பை அளித்துள்ளார்.
தனது தாய் தந்தை மறைந்தபோதுகூட கண்ணீர் சிந்தாத ராகுல் இந்த வளர்ப்புப் பிராணி இறந்தபோது
அடக்க முடியாத பெருகும் கண்ணீருடன் இருந்தார். “நான் அந்த வளர்ப்பு நாய் மரணத்திற்குச்
சமஸ்கிருதத்தில் எட்டு சுலோகங்கள் இரங்கற்பாவாக எழுதினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
1922 ஜனவரி
31ல் சப்ரா மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் அவர் தலைமை தாங்கும்போது கைது செய்யப்பட்டு
6மாத சிறை தண்டனையில் (பீகார்) பக்ஸர் சிறைக்கு அனுப்பப்பட்டார். மீண்டும் அவர்
1925 --26ல் கிசான் போராட்டத்தில் ஹஸாரிபாக் சிறைக்குச் சென்றார். சிறையில் நேரத்தைப்
பவுத்தம் பற்றி படிக்கப் பயன்படுத்தினார். 1927 –28ல் சிலோனில் (இன்றைய ஸ்ரீலங்கா)
அவர் வித்யாலா ஏகாரா பரிவேகாவில் சமஸ்கிருத ஆசிரியராகப் பணியில் சேர்ந்து சமஸ்கிருதம்
கற்பித்தபடி, அவர் தானே பாலி மொழி படித்துக் கொண்டு அங்கு மொத்தம் 19 மாதங்கள் தங்கினார்.
இறுதியில் அவர் பாலி மொழியில் எழுதப்பட்ட பண்டைய பௌத்த புனித நூலான திரிபிடகத்தில்
பாண்டித்தியம் பெற்றவர் என்பதைக் குறிக்கும் திரிபிமகா-கார்ய பட்டம் வழங்கப்பட்டார்.
[கௌதம புத்தரின் போதனைகளைத்
தொகுத்த புனிதநூல் ‘திரிபிடகம்’
(Tripitaka). 'பிடகம்' என்றால் கூடை
அல்லது திரட்டு என்று பொருள்; 'திரி' என்றால் மூன்று. இவை சுத்தபிடகம், விநயபிடகம்,
அபிதம்மபிடகம் என மூன்று முக்கிய பிரிவுகளைக் கொண்டிருப்பதால் திரிபிடகம் என அழைக்கப்படுகிறது.] மகா பண்டிட் தர்மானந்த் கோசம்பி-யிடமிருந்து அவர் புத்த பிக்குவாக (துறவி)
தீட்சை பெற்றார். 1928 இறுதியில் ஸ்ரீலங்காவைவிட்டுத் திபேத்துக்குப் புறப்பட்டார்.
இது எளிய பயணமாக இருக்கவில்லை; இப்பயணம், அவர் இறுதியாக (சீனாவின் தன்னாட்சி பெற்ற
திபேத் பகுதியின் நிர்வாகத் தலைநகரான) லாசா நகரை அடைவதற்கு முன் மொத்தமாக ஒரு வருடம்,
6மாதங்கள் மற்றும் இருபது நாள்கள் எடுத்துக் கொண்டது –வழி நெடுக அனைத்து வகையான கடினமான
பகுதிகளையும், அவ்வளவு ஏன் யூகிக்க முடியாத இடுக்கண் நிலப்பரப்புகளையும் கொண்டிருந்தது.
திபேத்தில் அவர் உள்ளூர் மொழியைக்
கற்றுக் கொண்டே கையெழுத்துப் பிரதி ஆவணங்களையும் திரட்டினார். மேலும் அவர் Bho Sanskrit œabdkoœ என்ற தலைப்பிலான --16ஆயிரம் வார்த்தைகளைக்
கொண்ட-- பதிப்பிக்கப்படாத அகராதியையும் தொகுத்தார்,
1940களில் அவர் மூன்றாவது முறையாகத் திபேத்துக்குச் சென்றார்; ஒன்னரை லட்சம் சுலோகங்களை உள்ளடக்கிய சுமார் 70 புதிய பௌத்த
நூல்களின் பிரதிகளை அவரது சொந்தக் கையெழுத்தில் உருவாக்கினார். அவரால் தயாரிக்கப்பட்ட
திபேத்திய சமஸ்கிருத அகராதியை அலகாபாத் இந்துஸ்தானி அகாதமி பதிப்பித்தது. எல்லா வகையிலும்
அவரது எழுத்தாக்க ஆவணங்களைப் பாதுகாத்து வைத்திருக்க புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் டாக்டர்
கேபி ஜெயஸ்வால் மற்றும் பாட்னாவில் அமைந்துள்ள ஜெயஸ்வால் ஆய்வு நிறுவனம் பெரிதும் உதவியது.
1930ல் அவர் ஸ்ரீலங்கா
திரும்பினார், அங்கு இறுதியாக அவர் ஒரு துறவியாக நியமிக்கப்பட்டு, சன்னியாச ஆஸ்ரமப்
பெயராக ராகுல சாங்கிருத்தியாயன் என்ற பெயர் வழங்கப்பட்டார். அங்கு 1930 அக்டோபர் டிசம்பரில்
‘புத்தகார்ய’ (புத்தரின் செயல்கள் அல்லது புத்தரின் வாழ்வியல் நடத்தை) என்ற தலைப்பிலான
புதிய புத்தகத்தை எழுதினார். சப்ராவுக்குப் புறப்பட்டுச் சென்றவர், 1931 நவம்பர்
28ல் மடாலயத்திற்குத் திரும்பினார். அதற்கு முன் காரல் மார்க்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட்
அறிக்கையை அவர் மொழிபெயர்த்தார்.
ஐரோப்பாவிற்கு
ஜூலை 1932ல் அவர் (அண்ணல் அம்பேத்கரின் ‘புத்தரும்
அவரது தம்மமும்’ நூலை இந்தியில் மொழிபெயர்த்தவரும், இந்தியப் பௌத்தத் துறவியுமான) பதந்த்
ஆனந்த் கௌசல்யாயன் உடன் மகாபோதி சொஸைட்டி பிரதிநிதிகளாக லண்டன் விஜயம் செய்தார். சொஸைட்டி
அமைப்பினர் பிற ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் புத்த மதத்திற்கு ஆதரவாகப்
பிரச்சாரம் செய்ய வேண்டினாலும், சாங்கிருத்தியாயன் சில மாதங்களுக்குப் பிறகு திரும்பிவிட்டார்.
இதற்காகச் சொல்லப்பட்ட காரணம் வருமாறு: “முதலாளித்துவ வாழ்க்கை முறையை மிகச் சலிப்பாக
உணர்ந்தேன். நான் (லண்டனில்) என்ன விரும்பினேன் என்பதை நான் அவதானித்துப் புரிந்து
கொண்டேன்; அமெரிக்காவிலும் அது போன்றவைகளே; எனவே, நான் எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.”
1933ல் சாங்கிருத்தியாயன் பாட்னா, லடாக் மற்றும் லாகூரில் புதிய இடங்களுக்கு விஜயம்
செய்தார். 1934 –1938 இடைப்பட்ட ஆண்டுகளில் அவர் மூன்று முறை திபேத்துக்கும், பர்மா,
கொரியா, ஜப்பான் மற்றும் பிற நாடுகளுக்கும் சென்றார். திரும்ப வரும்போது தன்னுடன் கொண்டுவந்த
80கும் மேற்பட்ட சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட பௌத்தப் படைப்புகளில் பலவற்றை அவர் மொழிபெயர்த்து
வெளியிடவும் செய்தார்.
ரஷ்யா விஜயம்
1935ல் ரஷ்யாவுக்கு முதலில் விஜயம் செய்த சாங்கிருத்தியாயன்
அங்கு இரண்டு வாரம் இருந்தார். லெனின்கிராடுக்குப் பயணமாக அவர் அனுமதிக்கப்படாததால்
அவரால் புகழ்பெற்ற ரஷ்ய பௌத்தத் தத்துவயியலாளரும் இந்தியவியலாளருமான எப்.
ஐ. ஷெர்பாட்ஸ்கோய் (Scherbatsky)
அவர்களைச் சந்திக்க இயலவில்லை. 1937ல் ரஷ்யாவுக்கு அவரது இரண்டாவது விஜயம் லெனின்கிராடு
பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதம் கற்பிக்கும்படி சோவியத் விஞ்ஞான அக்காதமி அவரை அழைத்தபோது
நடந்தது. (மங்கோலிய அறிஞரான லோலா என்றழைக்கப்பட்ட) எலினா நார்வெர்டோவ்னா
கோஸெரோவ்ஸ்காயா (Ellena
Narvertovna Kozerovskaya) என்ற பெண்மணியைச் சந்திந்தார், அவருக்குச் சமஸ்கிருதம்
கற்பித்தார். அவர்கள் 1937 டிசம்பர் 22ல் திருமணம் செய்து கொண்டனர். 1938ல் ரஷ்யாவில்
அவர்கள் மகன், இகோர் (Igor)
பிறந்தான்.
மார்க்சியத் தத்துவத்தை ஏற்றல், AIKS அமைப்பு மாநாடு
ஏற்கனவே மார்க்சிய ஈர்ப்பின் கீழ் இருந்த ராகுல் பல்வேறு
மார்க்சிய நூல்களைப் படித்தார், மார்க்சியச் சிற்றேடுகளை எழுதத் தொடங்கினார். அவர்
இந்தியில் எழுதிய ‘கம்யூனிசம் ஏன்?’ நூல் சாப்ரா ஜில்லா பள்ளி வாயிலில் விற்கப்படுவதைப்
புகழ்பெற்ற கம்யூனிசத் தலைவர் இந்திரதீப் சின்ஹா 1933லேயே கண்டார். அந்தப் புத்தகம்
சின்ஹாவைக் கம்யூனிசத்திற்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றியது.
இந்திரதீப் சின்ஹாவும் சந்திரசேகர் சிங்கும்
பாட்னாவில் ஜெய்பிரகாஷ் நாராயன் மற்றும் ராகுலைக் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி (CSP) அலுவலகத்தில் சந்தித்தனர். ராகுல் இருவரையும் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய உற்சாகப்படுத்தினார்.
அனைத்திந்தியக் கிசான் சபா (AIKS) அமைப்பைக் கட்டி உருவாக்கியவர்களில்
ராகுலும் ஒருவர். ராகுல் விவசாய இயக்கங்களுடன், சரண் மாவட்டத்தில் சக்கரை ஆலைத் தொழிலாளர்கள்
வேலை நிறுத்தங்களையும் தலைமையேற்று நடத்தினார்.
பீகாரில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவியவர்
1938ல் ரஷ்யாவிலிருந்து திரும்பிய சாங்கிருத்தியாயன் விவசாயிகள்
இயக்கத்தில் மீண்டும் இணைந்தார், CSP கட்சி உறுப்பினரானானர். பீகாரில் கம்யூனிஸ்ட் கட்சி 1939 அக்டோபரில்
முங்கரில் நிறுவப்பட்டது. அமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட
சிலரில் ராகுல சாங்கிருத்தியாயனும் ஒருவர். இவ்வாறு பீகாரில் கம்யூனிஸ்ட் கட்சியை அமைத்த
நிறுவன உறுப்பினர்களில் அவரும் ஒருவராக இருந்தார். புகழ்பெற்ற அமவாரி கிசான் இயக்கத்தின்
சத்தியாகிரகம் ஒன்றை ஏற்பாடு செய்ததற்காக அவர் சில மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார்.
1940 மோட்டிகார் என்ற இடத்தில் விவசாயிகள் கூட்டத்திற்கு அவர் தலைமையேற்றார். அப்போது
ஆத்திரமூட்டும் வகையில் பேசியதாகக் கூறி மீண்டும் கைதானார். இரண்டாண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு
ஹசாரிபாக் சிறையில் இரண்டு ஆண்டுகளைக் கழித்தார். குத்தகைதாரர்கள் உரிமைகளைக் கோரி
பீகாரில் புகழ்பெற்ற பகஷ்ட் இயக்கம் (Bakasht
movement) 1938 –39ல் நடைபெற்றது.
சரண் மாவட்டத்தில் ராகுல் கிசான் சபாவைத் தலைமையேற்று நடத்தினார். அதில் 200 பெண்கள்
சிகப்பு வண்ணப் புடவை அணிந்து கையில் செங்கொடிகளை ஏந்தியபடி “ரொட்டி அல்லது சிறை” வழங்குக
என்ற முழக்கத்துடன் பேரணியாகச் சென்றனர்.
1939 ஜனவரி இறுதியில் ராகுல் (பீகார் முசாஃபர்பூர் மாவட்ட மார்வான் பகுதியின்) ரேபுரா கிராமத்தில் கிசான் கூட்டமொன்றில் உரையாற்றினார். 1939 பிப்ரவரியில் அமவாரியில் 11
சத்தியாகிரகிகளுக்குத் தலைமை தாங்கி சட்டப் பிரிவு 144ஐ மீறி கரும்பு வெட்டத் தொடங்கினார். அந்தக் கரும்புத் தோட்டத்தின் ஜமீன்தார் ராகுல் மீது தனது யானையை அவிழ்த்துவிட யானைப் பாகன் லத்தியால் தாக்கி அவரைக் கீழே தள்ளினான். அந்த மாகாணம் முழுவதும் பரவலான கண்டனங்கள் எழுந்தன. கை விலங்கிட்டு அவர் கைது செய்யப்பட்டார். இது செய்திப் பத்திரிக்கைகளில் பிரசுரிக்ப்பட்டது; கைகளில் விலங்கிடப்பட்ட ராகுல சாங்கிருத்தியாயன் புகைப்படம் வரலாற்றுப் புகழ்பெற்றதானது.சிறையில் அவர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார், பின்னர் மற்றவர்களால் அந்த
உதாரணம் பின்பற்றப்பட்டது. ராகுல் 1940 பிப்ரவரி 24 மற்றும் மார்ச் 26க்கு இடையே கைது
செய்யப்பட்டார். 1940 பிப்ரவரி 24ல் சாம்பரானில் நடத்தப்பட்ட பீகார் பிரதேசக் கிசான்
சபா மாநாட்டில் இருந்தார். ஆந்திரப் பிரதேசம் பலாசாவில் 1940 மார்ச் 26ல் நடைபெற்ற
அகில இந்தியக் கிசான் சபாவின் (AIKS) 5வது மாநாட்டில் அவரால்
தலைமையேற்க முடியவில்லை, காரணம் மாநாட்டையொட்டி முன் கூட்டியே அவர் கைது செய்யப்பட்டார்.
தியோலி வதை முகாம்
கைது செய்யப்பட்ட ராகுல், ஏற்கனவே எஸ் ஏ டாங்கே, அஜாய் கோஷ்,
ஆர் டி பரத்வாஜ், எஸ் வி காட்டே மற்றும் பெரும் எண்ணிக்கையிலான பிற கம்யூனிஸ்ட்கள்
அடைக்கப்பட்டிருந்த (ராஜஸ்தானின் தியோலியில் உள்ள) தியோலி வதை முகாம் சிறைக்கு மாற்றப்பட்டார்.
அந்த முகாமில் ராகுல் ஏறத்தாழ ஓர் ஆண்டு இருந்தார், அங்கு தனது நேரத்தைக் காலை முதல்
மாலைவரை எழுதுவதில் செலவிட்டார். உதாரணத்திற்கு, தர்ஷன் திக்தர்ஷன் (இந்தியத் தத்துவ
தரிசனம்), வைக்யாமிக் சமாஜ்வாத் (விஞ்ஞான சோஷலிசம்) மற்றும் சில நூல்களின் பெரும் பகுதியை
எழுதினார். தியோலி முகாமில் நடத்த புகழ்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் தீவிரமாகப்
பங்கேற்றார்
ராஜ் பவனில்
1940களின்போது ராகுல், பிசி ஜோஷி மற்றும் பிற தலைவர்களின்
அறிமுகம் பெறுவதற்காகப் பம்பாயில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் (Raj Bhuvan) தங்கிப் பணியாற்றினார். அங்கு எல்லா தலைவர்களும் மாதம்
21ரூ கட்சி ஊதியம் பெற்று பணியாற்றும் முழுநேர கட்சி ஊழியர்கள். ராகுல் அடிக்கடி தரையில்
பாய் மீது உறங்குவார் மற்றும் தொடர்ந்து எழுதுவார். கறாரான ஒழுங்குமுறையைப் பின்பற்றி
அவர் பணிகளில் தனக்குரிய பங்கைச் சரியாக நிறைவேற்றுவார். திரைப்படங்கள் பார்ப்பதில்
மிகவும் விருப்பமுள்ள அவர், தியேட்டர்களில் மிகக் குறைந்த கட்டண வகுப்புகளில் தோழர்களுடன்
படம் பார்ப்பார்.
1944ல்
இந்தியவியலாளர் பேராசிரியர்
ஷெர்பாட்ஸ்கி (Prof Scherbatsky) அழைப்பின் பெயரில் மீண்டும் சோவியத் ரஷ்யா விஜயம்
செய்தார். லெனின்கிராடு பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணியை ஏற்க அழைக்கப்பட்ட சாங்கிருத்தியாயன்
1945லிருந்து 1947வரை ரஷ்யாவில் மூன்றாவது முறை தங்கினார். பௌத்தவியலில் அவரது அறிவார்ந்த
நிபுணத்துவம் மிக உயர்வாக மதிக்கப்பட்டது; புகழ்பெற்ற பேரா. ஷெர்பாட்ஸ்கி அவரைப் பௌத்தத் தத்துவத்தில்
கற்றுத் துறைபோகிய வல்லுநர் எனக் கருதினார்.
இந்தியாவுக்குத் திரும்புதல்
இந்தியா
சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து சாங்கிருத்தியாயன் 1947 ஆகஸ்ட் 17ல் இந்தியா திரும்பினார்.
ராகுல் 1938ல் பீகார் சாகித்திய சம்மேளனத் தலைவராகவும், 1948ல் அனைத்திந்திய இந்தி
சாகித்திய சம்மேளனத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொழி குறித்த பிரச்சனையில்
அவருக்கும் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட வேறுபாடுகளின் விளைவு, அவர் கட்சியில் இருந்து
விடுவிக்கப்பட்டார். அப்போது அவர் எழுதினார்: “இவ்வளவு நேரம் நான் கட்சியிலிருந்து
விலகிய செய்தி பத்திரிகைகளில் வெளியாகி இருக்கும். பலரும் வருந்தி இருப்பர், நானும்
கூட அப்படித்தான் –ஏனெனில் கட்சியிலிருந்து தள்ளி இருந்த போதிலும் நான் கட்சியைத் தவிர,
வேறு எதனோடும் சொந்தமாக இருக்க முடியாது. கம்யூனிசம் எப்போதும் எனது லட்சியமாக நீடிக்கிறது…”
1955
பிப்ரவரியில் அவர் ஆசப் அலி ரோட்டில் இருந்த கட்சி அலுவலகத்திற்குச் சென்றார் அப்போதைய
சிபிஐ பொதுச் செயலாளர் அஜாய் கோஷ் அவர்களைச் சந்தித்தார். மீண்டும் கட்சியில் இணைய
ராகுல் விருப்பம் தெரிவித்தார். அஜாய் கோஷ் கூறினார்: “மிகவும் நல்லது, வரவேற்கிறேன்”.
உடனடியாக ராகுல் தனது உறுப்பினர் படிவத்தைச் சமர்ப்பித்தார். தான் ஒரு கட்சி உறுப்பினரல்லாத
நபராக இனி இறக்கப் போவதில்லை என ராகுல் மிகவும் மகிழ்ந்தார்!
ஞாபக சக்தி இழத்தலும் மரணமும்
1961
டிசம்பர் 8ல் ராகுல சாங்கிருத்தியாயன் இறுதியில் தனது நாட்குறிப்பு புத்தகத்தில் பின்வரும்
குறிப்பை எழுதினார்: “இன்றிலிருந்து நான் நாட்குறிப்பு எழுதுவதை நிறுத்துகிறேன்”.
1961 டிசம்பர் 11வாக்கில் சாங்கிருத்தியாயன் முழுமையாகத் தனது ஞாபக சக்தியை இழந்தார்.
கட்சி, அவரது மனைவி கமலாவுடன் அவரைச் சோவியத் யூனியனுக்கு அனுப்பியது ஆனால் அவரது உடல்நிலை
தேறவில்லை. சோவியத் யூனியனிலிருந்து ஏப்ரல் 9ல் திரும்பிய பிறகு 1963 ஏப்ரல் 14 ல்
சாங்கிருத்தியாயன் இயற்கை எய்தினார்.
பிரதமர்
ஜவஹர்லால் நேரு, “நமது நாட்டின் ஆகப் பெரும் அறிஞர்களில் அவர் ஒருவர்” என்று கூறினார்.
மகாபோதி சொசைட்டியின் பொதுச் செயலாளர், “நாகார்ஜூன் மற்றும் அஸ்வகோஷ் போன்ற அறிஞர்கள்
வரிசையில் ஒன்றாய் வைத்துப் போற்றத்தக்க தரத்திலானவர் அவர்” என்றார். அவரது மறைவு உழைக்கும்
மக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு பெரும் இழப்புக்களில் ஒன்று.
முதலில் அவருக்குச் சாகித்திய அகாதமி விருதும் (படம்) பின்னர் பத்மபூஷண் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். மேலும், காசி பண்டிட் சபா அமைப்பினரால் அவரது ஈடு இணையில்லாத சிறந்த சமஸ்கிருதப் புலமைக்காக அபூர்வமான ‘மகா பண்டிதர்’ என்ற பட்டம்
அளிக்கப்பட்டது. அவரது கடும் முயற்சிகளால்தான், தொலைந்து போனதாகக் கருதப்பட்ட ஆயிரக் கணக்கான பௌத்தத் தத்துவப் பனை ஓலைச்சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த ஓலைச்சுவடிகளை அவர் 22 கோவேறு கழுதைகளின் மீது ஏற்றி கொண்டு வந்து கேபி ஜெயஸ்வால் கல்வி நிறுவனத்திடம் ஒப்படைத்தார். அவர் சேகரித்த அபூர்வமான பல பொருட்கள் இன்னும் பாட்னா அருங்காட்சியகத்தில் கிடக்கின்றன. இந்திய அரசு 1993ல் அவரது நூற்றாண்டில் அவருக்குச் சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டுக் கௌரவித்தது.ராகுல சாங்கிருத்தியாயன் படைப்புகள்
வாழ்வின் விரிந்த பரப்பில் பல்வேறு தலைப்புக்களின் கீழ் அவர் எழுதிய நூல்களைப்
பட்டியலிடுவது மிகவும் கடினம். அவரது ‘வால்கா முதல் கங்கை வரை’, ‘உலகை மாற்று, தப்பி ஓடாதே’ (Bhagonahin, Badlo), 22வது நூற்றாண்டு (Baiswin Sadi), ‘கம்யூனிசம் ஏன்’ போன்ற பிற நூல்கள் நன்கு பிரபலமானவை. மத்திய ஆசியா வரலாறு, பௌத்தம், இஸ்லாம், தத்துவம், இந்தியத் தத்துவம், கிசான் இயக்கம், மதங்கள், மார்க்ஸ் லெனின் மற்றவர்கள் குறித்த வாழ்க்கை வரலாறு குறித்து அவர் விரிவாக எழுதியுள்ளார்.‘புதிய
இந்தியாவின் புதிய தலைவர்கள்’ (நயே பாரத் கே நயே நேதா) என்ற வாழ்க்கை வரலாறு தொகுப்பு;
பல்வேறு கதைகள் மற்றும் நாவல்கள்; வரலாறுகள்; கம்யூனிச கோட்பாடும் தத்துவமும்; பாலி மற்றும் சமஸ்கிருத நூல்கள்
குறித்து; மொழிகள்; இலக்கணம்; உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு; தனது சாதனைகள், எண்ணிறந்த பயணங்கள்,
சந்தித்த இடையூறுகள், அனுபவங்கள் என மிக சுவாரசியமாக ஐந்து தொகுதிகளில் தொகுக்கப்பட்ட
ஆர்வத்தைத் தூண்டும் சுய வரலாறு மற்றும் எதைப்பற்றி தான் அவர் எழுதவில்லை? நம்மை மூச்சு
மூட்டச் செய்யும் பல பல அம்சங்கள் குறித்த நூல்கள் என அந்தப் பட்டியல் நீளும். அவர் இந்தியில்
200க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்; அவற்றுள் பெரும்பாலானவை பல்வேறு இந்திய மற்றும்
அயல்நாட்டு மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு வெளியிடப் பட்டுள்ளன. ராகுல சாங்கிருத்தியாயனின்
நூல்கள் தொடர்ந்து உற்சாகப்படுத்தி மக்களைச் சோசலிசம்
மற்றும் கம்யூனிசத்திற்குக் கொண்டு வருகின்றன.
அவரது
நூல்களைப் படித்துப் பயனுறுவது தவிர வேறு என்ன அஞ்சலி அவருக்கு நாம் செலுத்த முடியும்? தொடர்ந்து
ராகுல சாங்கிருத்தியாயன் நூல்களைப் பயில்வோம்!
--நன்றி : நியூ ஏஜ் (2026 பிப். 15 -- 21)
–தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ,
கடலூர்.


















