Wednesday, 18 February 2026

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 131 -- அபானி முகர்ஜி– இந்தியப் புரட்சியாளர்களை வெளிநாட்டில் திரட்டியவர்

 

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 131

அபானி முகர்ஜி– 
இந்தியப் புரட்சியாளர்களை வெளிநாட்டில் திரட்டியவர்

–அனில் ரஜீம்வாலே 

 பீரங்கி இருந்த சிறை வாசலில் எச்சரிக்கை ஒலி ‘ஒரு கைதி தப்பி விட்டான்’ என்று அலறியபோது சிறை அமைந்த தீவில் இருள் கவியத் தொடங்கியிருந்தது. வெளியே தப்பிச் சென்ற அவன், எச்சரிக்கை தரப்பட்டு காவலர்கள் சுட்டபோது, கடலுக்குள் மூழ்கி போதுமான தொலைவுக்கு அப்பால் சென்று விட்டான். இருளும் நல்ல காலமும் அவனைக் காப்பாற்றின. ஒரு மீன்பிடி படகைப் பார்த்த அவன் உதவிக்கு அழைக்க, கை தூக்கி விடப்பட்டு போலீசிடமிருந்து மறைத்து அக்கரையில் விடப்பட்டான்; அங்கு தன் உருவத்தையும் பெயரையும் மாற்றிக் கொண்டு எதிரிக்கு எதிராகப் போரைத் தொடர முடிவு செய்தான்… –இது, ‘தி கவுண்ட் ஆஃப் மான்டே கிறிஸ்டோ’ நாவலின் ஒரு அத்தியாயம் அல்ல. இது 1917 இலையுதிர் காலத்தில் உண்மையில் நிகழ்ந்த ஒரு நிகழ்வு. 

["தி கவுண்ட் ஆஃப் மான்டே கிறிஸ்டோ" (The Count of Monte Cristo) என்பது அலெக்ஸாண்ட்ரே டுமாஸ் எழுதிய புகழ்பெற்ற பிரெஞ்சு சாகச மற்றும் பழிவாங்கல் நாவல் ஆகும். தவறுதலாகச் சிறையில் அடைக்கப்படும் எட்மண்ட் டான்டெஸ் என்ற இளைஞன், தப்பித்துப் பெரும் செல்வந்தராகி, தன்னைச் சூழ்ச்சி செய்தவர்களைப் பழிவாங்கும் கதை.]

1917 நிகழ்வின் காட்சியில் இடம்பெற்றது சிங்கப்பூரில் இருந்த பிரிட்டிஷ் சிறை. தப்பிய கைதி அபானி முகர்ஜி, ஓர் இந்தியப் புரட்சியாளர். “ஷாகீர் என்ற பெயரில் ஜாவாவுக்குப் பயணம் செய்த அவர், அங்கிருந்து ஹாலந்து பின்னர் ஜெர்மனி இறுதியில் 1920ல் மாஸ்கோவுக்குப் பற்றுறுதி கொண்ட ஒரு கம்யூனிஸ்ட்டாகச் சென்றார்”. (நியூ டைம்ஸ், இதழ் 14, 1967 மேற்கோளாகக் கௌதம்  சட்டோபாத்தியா  எழுதிய ‘அபானி முகர்ஜி, அசாத்திய துணிச்சல் மிக்க ஒரு புரட்சியாளரும் முன்னோடி கம்யூனிஸ்ட்டும்’ என்ற பிபிஹெச் பதிப்பக 1976 வெளியீடு, முன்னுரை முதல் பத்தியிலிருந்து)

அபானிநாத் முகர்ஜி இந்தியாவில் ஒரு முன்னோடியான கம்யூனிஸ்ட், பெரும்பான்மையான தனது வாழ்வை ஐரோப்பாவில், குறிப்பாகச் சோவியத் யூனியனில் வாழ்ந்தவர்–  அங்கேயே வரலாற்றின் முரண் நகையாக ஜோசப் ஸ்டாலினின் அடக்குமுறை  ஆட்சியால் அநீதியாகச் சுட்டுக் கொல்லப்பட்டவர். (1920ல்) தாஷ்கண்ட் நகரில் ‘இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி’யை அமைக்கும் முயற்சியில் ஈடுபட்டவர்களில் அபானியும் ஒருவர்.

அபானி (தற்போது மத்திய பிரதேசத்தில் உள்ள) மத்திய பிராந்தியத்தின் ஜபல்பூரில் 1891 ஜூன் 3ம் தேதி பிறந்தார். அவரது தந்தை ஸ்ரீதிருலோகநாத் முகர்ஜி, ஒரிஜினலாகச் சத்கிரா துணைக் கோட்டத்தின் பாபுலியா கிராமத்தைச் சேர்ந்தவர். அந்தக் கிராமம் (தற்போது பங்களாதேஷில் உள்ள) வங்கத்தின் கவுல்னா மாவட்டத்தில் உள்ளது. அவர்களுக்குக் கல்கத்தா நகரில்  56 பி, சுக்கியா தெருவில் ஒரு வீடும் உள்ளது.

பிரிவினைக்கு எதிரான இயக்கம் 

புரட்சிகர இயக்கங்கள் எழுச்சி பெற்ற காலகட்டத்தின்போது, 1905ல் வங்கம் முழுதும் பிரிவினைக்கு எதிரான அலை வீசிய இயக்கத்தில் அபானி ஈர்க்கப்பட்டார். அவரது தாயார் திருமதி ஹரிமதி தேவி முழுமையாக இதில் அவரை ஆதரித்தார், அடக்குமுறை மற்றும் அடிமைத்தனத்தை எதிர்ப்பதில் அவரை எப்போதும் ஊக்குவித்தார். அவரது தாயார் புகழ் பெற்ற கவிஞர் ரவீந்திரநாத் தாகூருக்கு உறவினர் ஆவார்.

1905 கல்கத்தா மெட்ரோபாலிட்டன் நிறுவனம் அருகில் பந்தீர் மடத்தில் நடத்தப்பட்ட பிரம்மாண்டமான கூட்டத்தில் திலகரும் முக்கியப் பேச்சாளர்களில் ஒருவர். 

அரசின் இழிவான ‘கார்லைல் சுற்றறிக்கை’ (R.W. Carlyle வங்கத்தின் காவல்துறை அதிகாரி) அத்தகைய கூட்டங்களில் மாணவர்கள் கலந்து கொள்வதைத் தடை செய்தது. இருப்பினும் அபானி உள்பட மெட்ரோபாலிட்டன் நிறுவனத்தின் பல மாணவர்கள் கூட்டங்களில் கலந்து கொண்டது மட்டுமின்றி தன்னார்வத் தொண்டர்களாகவும் அதில் செயல்பட்டனர்.

இதை அறிந்த தலைமையாசிரியர் அபானியை பெஞ்சின் மீது நிற்க வைத்தார்! கோபமடைந்த அபானி பழைய பாணியிலான பங்காவின் (காற்றாடி) கயிற்றை அறுத்தார். பிறகு நடந்தது தெரிந்ததுதான் அவர் வெளியேற்றப்பட்டார். ஜபல்பூரைவிட்டு ஓடியவரை ஓர் உறவினர் மீண்டும் திரும்பக் கொண்டு வந்து விட்டார்!

முகர்ஜிக்களின் வீடு புரட்சியாளர்களின் மையமானது. தரைத்தளத்தில் புகழ்பெற்ற புரட்சியாளர் சாகரம் கணேஷ் தியோஸ்கர் மற்றும் சாலையின் மறுபுறத்தில் மற்றொரு புகழ்பெற்ற புரட்சியாளர் பிரமத நாத் தத்தா வசித்தனர். அபானியும் பிரமதாவும் நெருக்கமான நண்பர்களாகினர். அவர்களுக்குத் தியோஸ்கர் பயிற்சி அளித்தார். அங்கு பிபின் சந்திர பால் மற்றும் பிற பல புரட்சியாளர்கள் விஜயம் செய்தனர்.

அகமதாபாத் பின்னர் ஜப்பானில்

அவரைக் ‘காப்பாற்ற’ அபானியின் பெற்றோர் அவரைத் தொலைவில் உள்ள அகமதாபாத் டெக்ஸ்டைல் பயிற்சி நிறுவனத்தில் படிக்க அனுப்பினர். அவர் நன்றாகப் படித்தது மட்டுமின்றி அரசியல் தொடர்புகளையும் நன்கு ஏற்படுத்திக் கொண்டார்.

1908ல் பக்ஸா சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்ட பிபின் பால் ஹௌரா புகைவண்டி நிலையத்தில் அன்புடன் வரவேற்கப்பட்டார். [ஹிமாலய மலைத் தொடரில் பக்ஸா டைகர் ரிசர்வ் பகுதியில் உள்ள மேற்கு வங்காளத்தின் அலிபுர்துவார் மாவட்டத்தில் அமைந்துள்ள பக்ஸா கோட்டை சிறை (Buxa Fort Jail), அந்தமானின் செல்லுலார் சிறைக்கு அடுத்தபடியாகக் கொடுமை நிறைந்தது] பிபின் பாலுக்கு மரியாதை வரவேற்பளித்த சுதேசி தன்னார்வத் தொண்டர்கள் அணிவகுப்பில் அபானியும் இடம் பெற்றார் என்பதைச் சொல்லவும் வேண்டுமா? விரைவில் அவரைத் தொடர்பு கொண்ட சில தலைவர்கள் அவரைத் தீவிர அரசியலுக்குள் ஈர்த்தனர்.

அஹமதாபாத் திரும்பிய அபானி ‘ஒன்றுபட்ட வங்க இல்லம்’ என்ற சுதேசி அமைப்பை அமைத்தார். அவருக்குப் பங்கலக்ஷ்மி காட்டன் மில்லில் உதவி நெசவு மாஸ்டர் பணி கிடைத்தது.

சில காலத்திற்குப் பிறகு 1909ல் வெளிப்பார்வைக்குத் தனது தொழிற்சார்ந்த பணி நிமித்தம் என்று ஜப்பான் புறப்பட்டுச் சென்றார்; ஆனால் உண்மையில் அவர் புரட்சியாளர் ஜிதேந்திரநாத் முகர்ஜியால் அனுப்பப்பட்டார். ஜப்பானில் அபானி புரட்சியாளர்கள் பலரைச் சந்தித்தார், ஒரு சிறு குழுவை அமைத்தார். மௌலானா பர்கத்துல்லாவைச் சந்தித்த அவர், அவரது யோசனைபடி கடற்பயணமாக ஐரோப்பா சென்றார். ஜெர்மனி சென்ற அவருக்குச் சோசலிச இயக்கத்துடன் தொடர்பு ஏற்பட்டது. 

1912-ல் இந்தியா திரும்பிய அவருக்கு ஆண்ட்ரூ யூல் அண்ட் கோ நிறுவனத்தில் ஒரு வேலை கிடைத்தது. [இப்போது ஆண்ட்ரூ யூல் & கோ. லிமிடெட் என்பது இந்திய அரசின் கனரகத் தொழில்துறை அமைச்சகத்தின் உரிமையின் கீழ் உள்ள ஓர் இந்திய மத்திய பொதுத்துறை நிறுவனம்] அந்நிறுவனத்தில் ஒரு வேலை நிறுத்தம் நடந்தது. அபானி தொழிலாளர்களிடம் அனுதாபம் கொண்டார், வேலையை விட்டுவிட வேண்டியது ஆயிற்று. பின்னர் அவர் மதுராவிலிருந்த பிரேம் மகா வித்யாலயா நிறுவனத்தில் டெக்ஸ்டைல் துறையில் ஒரு டைரக்டராகப் பணியில் சேர்ந்தார். அந்த நிறுவனம் எதிர்காலத்தில் ஒரு புரட்சியாளராக ஆகிய ராஜா மகேந்திர பிரதாப்-ஆல் நடத்தப்பட்டது. அபானி மகேந்திர பிரதாபின் தனிச் செயலாளராகவும் ஆனார்.

முதலாவது உலகப் போர் வெடித்தபோது அபானி கல்கத்தா சென்றார்; இந்த முறை, மீண்டும் ஆயுதங்கள் வாங்கி வர, ஜெத்தின் முகர்ஜியால் அவர் ஜப்பான் அனுப்பப்பட்டார்.

டோக்கியோவில் அபானி, லாலா லஜ்பத் ராய், டாக்டர் சன் யாட் சென், ராஷ் பிஹாரி போஸ் முதலான புரட்சியாளர்களை சந்தித்தார்.

1916ல் இந்தியாவில் அப்போது எழுச்சி பெற்ற கிளர்ச்சிக்கு உதவிட அபானி இந்தியா திரும்ப எத்தனித்தார்.  ஆனால் பினாங்கில் கைது செய்யப்பட்டு சிங்கப்பூரில் இருந்த கேனிங் கோட்டைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கிருந்து தப்புவது சாத்தியமற்ற ஒன்றாகக் கருதப்பட்டது; ஆனால் அபானி சாத்தியமற்றதைச் சாத்தியமாக்கினார்!

கேனிங் கோட்டையில் இருந்து (Fort Canning) இருந்து தப்புதல்

சில மாதங்களைக் கழித்த பிறகு அபானி (சிங்கப்பூரின் தென்கிழக்கு பகுதியில் 48 மீட்டர் (157 அடி) உயரமுள்ள ஒரு முக்கிய மலையான) கேனிங் கோட்டையில் இருந்து தப்பும் சாகசத்தைத் திட்டமிட்டார். ஒவ்வொரு நாளும் சிறைவாசிகள், பிரிட்டிஷ் காவலர்கள் சுற்றி நிற்க, கடலில் குளிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். ஒரு கடல் பாதை இந்தியப் பெருங்கடலை இணைத்தது. அதில் பெரிய கப்பல்கள் வர முடியாது ஆனால் படகுகள் வர முடியும்.

ஒரு நாள் மாலை அபானி நீருக்கடியில் நீந்தி தப்பினார்; அவர் ஒரு ஜப்பானிய மீனவரின் படகைப் பிடித்துக் கொள்ள சத்தம் இல்லாமல் கடல் வெளிக்கு இழுத்துச் செல்லப்பட்டார். அவரது ஜெர்மன் நண்பர்கள் சப்தமாகப் பாடி காவலர்களின் கவனத்தைத் திசை திருப்பினர். கடல் திமிங்கலங்களால் அவர் உண்ணப்பட்டிருக்கலாம் அல்லது அப்படியே கடலில் மூழ்கி இருக்கலாம் என்று பிரிட்டிஷார்,முடிவு கட்டினர்! அவர் கைதி என்பதால் அவரை நீண்ட நேரம் வைத்திருக்க அஞ்சிய படகுக்காரர் அவரை மனிதர்களற்ற ஒரு தீவில் இறக்கி விட்டார். அபானி அங்கேயே ஒரு வார காலம் நிலக்கடலையை (குரங்குகள் உண்ணும் கொட்டை) உண்டும்  ஊற்று நீரைப் பருகியும் உயிர் தப்பினார்.

பிறகு வந்த ஓர் இந்தோனேசியப் படகுக்காரர் தந்த உணவுதான் ஒரு வாரத்திற்குப் பிறகு அவருக்குக் கிடைத்த ஒரு நாள் முழுமையான உணவு; சில உடைகளையும் தந்தவர், அவரைச் சுமத்ராவுக்கு அழைத்துச் சென்றார். அங்கே ஒரு வயதான டச்சு தோட்டக்காரரின் பங்களாவில் ‘ஷாகீர்’ என்ற பெயரோடு கூலி வேலையில் சேர்ந்தார். தோட்டத் தொழிலாளிகள் மத்தியில் பணியாற்றிய சில இந்தோனேசிய இடதுசாரிகளுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.

அப்போது ஷாங்காயில் இருந்த புகழ்பெற்ற தேசபக்தரும் சமூக இயலாளருமான பேராசிரியர் பினாய் சர்க்கார் கூறுகிறார்: “ஷாங்காயில் நாங்கள் அபானியின் நாடக பாணியிலான பெரும் தப்பித்தல் நிகழ்வை அறிந்தோம். இந்தத் தப்பித்தல் நிகழ்வைத் தினசரிகளும்கூட தலைப்புச் செய்தியாகப் பிரசுரித்தன.” அந்தத் தப்பித்தல் நிகழ்வின் முழுமையான விவரங்கள் இன்னும் தெரியவில்லை.

 முதல் உலகப் போருக்குப் பிறகு ‘ஷாகீர்’ போலி பாஸ்போர்ட் மூலம் (நெதர்லாந்தின் பெரிய துறைமுக நகரான) ராட்டர்டாம் சென்று டச்சு கம்யூனிஸ்டுகளைத் தொடர்பு கொண்டார். பிறகு பெர்லினுக்குச் சென்ற அவர் எம் என் ராய், வீரேந்திரநாத்  சட்டோபாத்தியாயா மற்றும் BN தத்தாவைச் சந்தித்தார். டச்சு கம்யூனிஸ்ட் தலைவர் ரட்கர்ஸ் (Rutgers) அபானிக்கு மாஸ்கோ செல்ல நற்சான்றுகள் கடிதம் தந்தார்.

பெர்லின் நகரில் வாழ்க்கை பல நேரங்களில் கொடுமையாக இருந்தது, உயிர் வாழ அபானி அங்கு ‘மசாஜ்’ (‘masseur’) செய்யும் பணியைக்கூட  மேற்கொண்டார். 

மாஸ்கோ செல்லும் வழியில் அபானி பெர்லினுக்கு வந்தபோது இந்தியப் புரட்சியாளர்களுக்கு அது இன்ப அதிர்ச்சியாக இருந்தது. ராய் அவரது மனைவி ஏவ்லின் மற்றும் அபானி, 1920 ஜூன் 24ல் “தி இந்தியன் கம்யூனிஸ்ட் அறிக்கை” கொள்கை அறிக்கை வரைவை தி கிளாஸ்கோ சோசலிஸ்ட் (the Glasgow Socialist) பிரசுரித்தது. [கிளாஸ்கோ சோசலிசம் என்பது ஸ்காட்லாந்தின் கிளாஸ்கோ நகரின் வலுவான தொழிலாள வர்க்க வரலாறு, தீவிரத் தொழிற்சங்கப் போராட்டங்கள் மற்றும் ஜான் மக்லீன் போன்ற புரட்சியாளர்களைக் கொண்ட சோசலிச இயக்கத்தைக் குறிக்கிறது.] அந்த அறிக்கை, இந்தியாவில் பிரிட்டிஷ் ஆட்சியைத் தூக்கி எறிய இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட்கள், எல்லாத் தேசியப் போராட்டங்களையும் ஆதரிக்க வேண்டும் என  அறைகூவி அழைத்தது. 

இந்த அறிக்கை எம் என் ராயின் குழுவாதப் போக்கு (செக்டரியன்) பாதைக்கு ஒப்புதல் அளிக்கவில்லை.

2வது காமிண்டர்ன் மாநாட்டில் கலந்து கொள்ளல், 1920 

இரண்டாவது கம்யூனிஸ்ட் அகிலம் எனப்படும் இந்த மாநாட்டில் அபானி முகர்ஜி ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து மாற்றுப் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். தேசிய மற்றும் காலனியப் பிரச்சனையை விவாதிப்பதற்காக இந்த மாநாடு மாஸ்கோபில் 1920 ஜூலை 19 முதல் ஆகஸ்ட் 7 வரை நடைபெற்றது. லெனின் முக்கிய அறிக்கையை முன் வைத்தார். லெனின், துணைக் கோட்பாட்டு அறிக்கையை அளிக்க எம்என் ராயைக் கேட்டுக் கொண்டார்; ஆனால் எம் என் ராய் முன்வைத்த அறிக்கை அவரது அப்பட்டமான குழுவாதப் போக்கு (செக்டேரியன்) நிலைப்பாடுகளுடன் இருந்ததால் அவ்வறிக்கை குறித்து லெனின் பெரிதும் ஏமாற்றம் அடைந்தார். அந்த நிலைப்பாடுகளை லெனினும் காமின்டர்ன் மாநாடும் முழுமையாக நிராகரித்தது. 

அபானியின் நிலைப்பாடு அப்போது என்னவாக இருந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை; ஆனால் பின்னர் நிகழ்வுகள் அவர் லெனினை ஆதரித்தார் எனக் காட்டின. ராயும் அபானியும் தனிப்பட்ட நல்லதோர் நட்பில் இல்லை. அபானியால் எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறு நூல் மூலம் ராயின் வாழ்க்கை தவறாகச் சித்தரிக்கப்பட்டது என்பது பற்றிய குற்றச்சாட்டுகளை விசாரிக்க காமின்டர்ன் அமைப்பு, ஒரு குழுவை கூட நியமித்தது. அந்த வாழ்க்கை வரலாறு நூல் அச்சு அசலாக அப்படியே அபானியின் கையெழுத்தில் ராய் அவரே எழுதியது என்பது கண்டறியப்பட்டது.!!! மாபெரும் முக்கிய அறிவாளிகளில் ஒருவரை அபானி சந்திக்கும் வாய்ப்பைப் பெற்றார், அது இரண்டாவது அகிலம் மாநாட்டில் மாமேதை லெனின். அபானி தனிப்பட்ட முறையிலும் கருத்தியல் ரீதியிலும் அவரால் ஆழமாக ஈர்க்கப்பட்டார்.

 இந்தியாவில் புரட்சிகர இயக்கம், தேசிய விடுதலை இயக்கத்துடன் எந்த ஒன்றையும் பொதுவாகக் கொள்ளவில்லை என்றார் ராய். இந்தக் கருத்தை லெனின் மிகக் கடுமையாகத் தாக்கினார்: லெனின் கூறினார், “ரஷ்யாவில் ஜார் இசத்திற்கு எதிராகத் தாராளவாதிகள் செயல்பட்டபோது, நாங்கள் தாராளவாதிகளின் விடுதலை இயக்கத்தை ஆதரித்தோம். இந்தியக் கம்யூனிஸ்டுகள் பூர்ஷ்வா ஜனநாயக இயக்கத்தை –அதனுடன் இணைந்து விடாமல்– கண்டிப்பாக ஆதரிக்க வேண்டும்”

அபானி 1921ல் மலபார் எழுச்சி குறித்த தனது கட்டுரையை லெனினுக்கு அனுப்பினார். அந்தக் கட்டுரையைப் புக்காரினுக்கு அனுப்பி அதை படித்துப் பார்க்கக் கூறிய லெனின், “இந்தியத் தோழர்களிடமிருந்து நாம் மேலும் பிரசுரங்களை வெளியிட வேண்டும்” என்று குறிப்பிட்டார் (ஆதாரம் லெனின் தேர்வு நூல்கள் 45, பக்கம் 376). அபானியின் மனைவி ரோசா ஃபிட்டிங்ஆப், (Rosa Fitingof) சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPSU) உறுப்பினராக 1918-லிருந்து இருந்தார் [அப்போது CPSUக்கு ரஷ்ய கம்யூனிஸ்ட் கட்சி (போல்ஷ்விக்) என்று பெயர்]; மற்றும் லெனினின் செயலாளர் லிடியா ஃபோட்டிவா-வின் (Lydia Fotieva) உதவியாளராக இருந்தார் மற்றும் அடிக்கடி லெனினைச் சந்திக்கும் வாய்ப்பையும் பெற்றார்

1920 தாஷ்கண்ட் கூட்டம் 

அபானி உட்பட 7 புரட்சியாளர்களின் கூட்டம் ’இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி’யை அமைக்க 1920 அக்டோபர் 17ல்  தாஷ்கண்ட் நகரில் நடைபெற்றது. ராய், முகமது ஷஃபிக், ரோசா ஃபிட்டிங்ஆப் முதலானவர்களும் அதில்  இடம்பெற்றனர். ஒரு வசதியான தேதியில் மாஸ்கோவில் அனைத்துக் கம்யூனிஸ்டுகளின் மாநாட்டை (காங்கிரஸ்) நடத்துவது என அவர்கள் முடிவு செய்தனர். இக்கட்சியின் செயலாளராக அபானி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது ஃபிட்டிங்ஆப் உரிமை கோரல்; ஆனால் அந்தக் கூற்று சர்ச்சைக்குரியது. 

மேலும் அந்தக் ‘கம்யூனிஸ்ட் கட்சி’ ஒருபோதும் செயல்பாட்டிற்கு வரவில்லை மற்றும் விரைவிலேயே மறைந்தும் போனது. அபானியும் மாஸ்கோவில் இருந்த இந்தியன் இராணுவப் பள்ளியில் சேர்ந்தார்.

இந்தியாவுக்குத் திரும்பல் 

1922 டிசம்பரில் அபானி கடல் பயணமாக (ஜெர்மனியின் இரண்டாவது பெரிய துறைமுக நகரமான) ஹம்பர்கில் இருந்து வார்டன்ஃபெல்ஸ் என்ற ஜெர்மன் நீராவி கப்பல் மூலம் இந்தியா புறப்பட்டார். 25ம் தேதி மெட்ராஸ் வந்து சேர்ந்த அவர், முன்பே தகவல் தெரிவித்தபடி வேலாயுதத்தை இருள் மறைவில் சந்தித்தார்; பின்பு 27ம் தேதி அதே படகில் ரங்கூன் வழியாகக் கல்கத்தாவுக்குப் புறப்பட்டார். வேலாயுதம் மற்றும் சிங்காரவேலரைச் சந்திக்க அவர் மீண்டும் திரும்ப மெட்ராஸ் வந்தார்; தொழிலாளர் விவசாயிகள் கட்சிக்கும் (லேபர் கிசான் பார்ட்டி) அக்கட்சியின் அறிக்கை தயாரிப்பிலும் உதவினார்.

‘இந்தியன் விடுதலைக் கட்சி’யை அமைத்த வீரேந்திரநாத், பர்கத்துல்லா மற்றும் பி என் தத்தா முதலிய இரண்டாவது புரட்சியாளர்கள் குழுவின் பிரதிநிதியாகவே நடைமுறையில் அபானி செயல்பட்டார். மூன்றாவது கம்யூனிஸ்ட் அகிலம் மாநாட்டில் கலந்து கொள்ளவும் அவர் பணிக்கப்பட்டார். 

டாக்காவில்  பாதுகாப்பாகத் தங்குதல் 

அபானி தங்குவதற்காகவும் மேற்கொண்டு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கவும், அனுசீலன் மற்றும் ஜுகாந்தர் (அல்லது யுகாந்தர்) குழுக்களின் தலைவர்களைச் சந்தித்தார். சுபாஷ் சந்திர போஸும்கூட அவரைப் பற்றி தெரிந்து கொண்டு அவருக்குப் பாதுகாப்பான தங்கும் இடத்தை வேண்டினார். அனுசீலன் அவருக்கு டாக்காவில் தங்க ஓர் இடத்தை ஏற்பாடு செய்தனர். (திரிபுராவில் வழக்கறிஞரான) திரிபூர் சந்திரா சென் கூறுகிறார், “1923ல் நான் அவரது காவல்காரராகவும், சமையல்காரராகவும் உதவியாளராகவும் இருந்தேன்.” ஆனால் அபானியின் கடிதங்கள் –அபானிக்குத் தெரியாமலேயே– அனுசீலன் தலைவர் பிரதுல் கங்குலி மூலம் செல்ல வேண்டியிருந்தது. அவ்வாறு செயல்பட திரிபூர் அறிவுறுத்தப்பட்டிருந்தார்.

அபானியின் தலைக்கு விலை வைக்கப்பட்டு இருந்ததால் அவர் எங்கேயும் தங்குவது ஆபத்தாக இருந்தது எனப் பிரபல அறிஞர் டாக்டர் சுனிதி குமார் சாட்டர்ஜி கூறியுள்ளார். அபானி, சுபாஷ் போஸின் நெருங்கிய நண்பரான திலீப் ராய், பேராசிரியர் சத்யன் போஸ் மற்றும் வேறு சிலரையும் கூட சந்தித்தார்.

ஏற்கனவே தீர்மானகரமான கம்யூனிஸ்ட்டான அபானி, அனுசீலன் ஜுகாந்தர் மற்றும் பிற இயக்கங்களில் இருந்து கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குச் செயல்பாட்டாளர்களைக் கொண்டுவர கருதினார். ஆனால் இந்த அமைப்புகள் அபானி மற்றும் நளினி குப்தாவைத் தங்களின் சொந்த நோக்கங்களுக்குப் பயன்படுத்த விரும்பின. அனுசீலனால் அவர்கள் இருவருக்கும் டாக்காவில் அதே கட்டிடத்தில் தங்க இடமளிக்கப்பட்டது. அந்த இடத்திலேயே சதீஷ் பிரகாசியும் கூட தங்கினார்.

ஆபத்தை உணர்ந்த அபானி டாக்காவில் தங்கி இருந்த இடத்தில் இருந்து அவசரமாகப் புறப்பட்டு கல்கத்தா சென்றார், யுகாந்தர் தலைவர்களைத் தேடினார். ஆனால் யுகாந்தர் அமைப்பு அபானியை நடைமுறையில் வீட்டுக் கைதியாக வைத்திருந்து அவரை ஆயுதங்கள்  சேகரிக்கப் பயன்படுத்தியது. அங்கிருந்து தப்ப யுகாந்தர் அமைப்பின் ஓர் இளம் கலகக்காரர் சந்தோஷ் மித்ரா தான் அவருக்கு உதவினார்.

  1923 மே தினத்தில் ஓர் அறிக்கை (மேனிபெஸ்டோ) வெளியிடப்பட்டது; அது, மணிலால், எம் டாக்டர், அபானி முகர்ஜி மற்றும் சிங்காரவேலர் சேர்ந்து கூட்டாக எழுதியது. காமின்டர்ன் தலைவர் ஜினோ வீவ் (Zinoviev) அவர்களுக்கு அபானி இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பதன் கஷ்டங்கள் குறித்து எழுதினார்.

என்றென்றைக்குமாக இந்தியாவை விட்டு புறப்படுதல்

1924 ஏப்ரலில் அபானி, ஜெர்மனியர்களால் கைப்பற்றப்பட்ட அம்போய்ஸ் என்ற பெயரிலான பிரெஞ்சு கப்பலில் (பிரான்ஸ் தேசத்தின் துறைமுக நகரான) மர்சேய் வழியாகப் பெர்லின் சென்றவர், அதன் பிறகு ஒருபோதும் இந்தியா திரும்பவில்லை. புகழ்பெற்ற கலைஞரான அதுல் போஸ், மர்சேய் பயணம் குறித்து விரிவான தகவல்களைத் தந்துள்ளார்.

இங்கிலாந்தில் 1924 தேர்தலில் தொழிலாளர் கட்சி வெற்றி பெற்றது, பொதுவான மன்னிப்பு அளிக்கப்படும் என்ற நம்பிக்கை  எழுந்தது. அபானி லேபர் கட்சி பிரதமருக்கு ஒரு நீண்ட கடிதம் எழுதினார்; அதில் அவரது சமீபத்திய நடவடிக்கைகள் குறித்த சிறு குறிப்பை எழுதி, அகிம்சை மற்றும் பாராளுமன்ற நடவடிக்கை கோட்பாடுடன்  தான் அமைக்கும் ஹிந்துஸ்தான் தொழிலாளர் மற்றும் விவசாயிகள் கட்சியைப் பற்றி விளக்கினார்.

ஆனால் பிரிட்டிஷ் அரசு அபானி முகர்ஜி அல்லது நாடு கடத்தப்பட்ட வேறு பிற புரட்சியாளர்களுக்குப் பொது மன்னிப்பு வழங்க மறுத்துவிட்டது.  

மீண்டும் சோவியத் யூனியன் திரும்பல் 

1925ல் அபானி முகர்ஜி சோவியத் யூனியனுக்குத் திரும்பச் சென்று சோவியத் பிரஜை ஆகி, வரலாறு மற்றும் பொருளாதாரம் படிக்க நேரத்தைச் செலவிட்டார். சௌமிந்திரநாத் தாகூர் மற்றும் சௌகத் உஸ்மானி அவரது அறிவாற்றல் கண்டு  மிகப் பெரியதும் ஈர்க்கப்பட்டனர். 

அபானி (தென்கிழக்கு உஸ்பெஸ்கிஸ்தான் பெரிய நகரான) சமர்க்கண்டின் சிறப்புத் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார்; மற்றும் (கிர்கிஸ்தான் எனப்படும் சோவியத் யூனியனுடன் இணைந்து இருந்தபோது) கிர்கிசியாவின் பழங்குடியினர் புனர்வாழ்வுக்கான கமிஷனில் இடம்பெற்றார். 1928ல் சிவப்புப் பேராசிரியர்கள் கல்வி நிறுவனத்திலிருந்து (ரெட் ப்ரொபசர்ஸ் இன்ஸ்டிட்யூட்) அவர் பட்டம் பெற்றார். இந்திய வரலாறு மற்றும் விவசாயப் பிரச்சனைகள் குறித்து அபானி சிறப்பு நிபுணத்துவம் பெற்றார். 1930ல் இருந்து 1932 வரை அவர் லெனின்கிராட் ஓரியண்டல் நிறுவனத்தில் சீனியர் சிறப்பாசிரியராகப் பணியாற்றினார். மேலும் “கீழை நாடுகளின் பண்பாட்டு ஆய்வாளர்களின் அனைத்து யூனியன் கூட்டமைப்பின் தலைவர்” (president of All Union Association of Orientologists) என்றும் அவர் வர்ணிக்கப்பட்டார்.

1931ல் இராமானந்த் சட்டர்ஜியால் தொகுத்துப் பதிப்பிக்கப்பட்ட ‘பிரபாஸி’ (நாடு கடத்தப்பட்டவர்கள்/ புலம்பெயர்ந்தவர்கள்) என்ற இதழில் அபானி குறித்த ஓர் அறிக்கை, “ரஷ்யாவில் ஒரு பெங்காலியின் சாதனை” என்ற தலைப்பில் வெளியானது. அதில் அவர், லெனின்கிராடின் ‘கீழை நாடுகள் இயல் நிறுவன’த்தின் பேராசிரியர் என்றும், 1930ல் அறிவியல் அகாடமியின் கல்விச் செயலாளர் மற்றும் சர்வதேச வேளாண் அறிவியல் நிறுவனத்தின் உறுப்பினர் என்றும் வர்ணிக்கப்பட்டார்.

(கம்யூனிஸ்ட் தலைவரும் 1919 முதல் 1946 வரை) சோவியத் அதிபருமான மைக்கேல் இவனோவிச் கலினின் அவரை நன்கு அறிவார்.

1932 டிசம்பரில் லெனின் கிராண்ட் கீழை நாடுகள் நிறுவனத்தின் இயக்குநர் ஓல்டன்பர்க் (Oldenburg) இந்தியா பற்றிய அபானியின் அறிவு அபாரமானது என வர்ணித்தார். ரஷ்ய ஆவணக். காப்பகங்களில் அபானியின் பெயர், ‘அபானி திருலோகவிச் முகர்ஜி’என்று விவரிக்கப்பட்டது.

அபானியின் எழுத்துப் பணிகள்

அபானி முகர்ஜி, வேளாண் இந்தியா, இங்கிலாந்தும் இந்தியாவும், மலபார் எழுச்சி, விவசாய நிலை மற்றும் இந்தியாவில் விவசாயிகள் இயக்கம் உள்ளிட்ட எண்ணற்ற நூல்கள் மற்றும் கட்டுரைகளை எழுதியுள்ளார். 

ஸ்டாலினிய ஒடுக்கு முறையில் களபலி 

1933 நவம்பர் 4 தேதியிட்ட ஒரு சுற்றறிக்கை, அபானி கல்வி நிறுவனத்தின் சேவையில் இனிமேல் இல்லை மற்றும் அவர் “மிக நீண்ட சுற்றுப்பயணத்தில் தொலைவில் உள்ளார்” என்று தெரிவித்தது. அது உண்மையில் முடிவற்ற பயணமானது!

தொடக்கத்தில் அவரது விதி மர்மப் புதிரால் சூழப்பட்டது, ஆனால் வெகு காலம் பின்புதான், 1930களின் ஸ்டாலினிய இழிவான களையெடுப்பு/ தூய்மைப்படுத்தல் நடவடிக்கைகளில் அவர் கைது செய்யப்பட்டு சுட்டுக் கொல்லப்பட்டார் எனக் கண்டறியப்பட்டது. [ஜோசப் ஸ்டாலின் தனக்கு எதிரான கருத்து உடையவர்கள் மீது கட்டவிழ்த்துவிட்ட அடக்கு முறைகளில் மாபெரும் தூய்மைப்படுத்தல், நாடு கடத்தல், தேசத் துரோகிகள் என முத்திரை குத்தி பல லட்சம் மக்களைக் கொன்றொழித்தது, சைபீரிய ‘குலாக்’ தொழிலாளர் முகாம்களுக்கு அனுப்பப்பட்டது முதலியன அடங்கும்] 

1937ல் அவர் வீரேந்திரநாத் சட்டோபாத்தியா உடன் சுட்டுக் கொல்லப்பட்டார் –நம்பிக்கை அளிக்கும் ஒரு கம்யூனிஸ்ட் அறிவாளர் மற்றும் புரட்சிகரப் பிரச்சனைகளுக்கு ஆபத்தும் சாகசங்களும் நிறைந்த வாழ்வில் ஓய்வின்றி தீர்வு தேடியதுடன், ஒரு கல்வியாளருமான ஒருவருக்கு நேர்ந்த துயரகரமான முடிவு அது!

1957ல் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அளித்த தகவல்படி அபானி முகர்ஜி 1937 அக்டோபர் 28ல் மரணம் அடைந்தார்.

அடுத்து வந்த சோவியத் தலைமையால் சில காலத்திற்குப் பிறகு அபானி முகர்ஜி, அவரது மரணத்திற்குப் பிந்தைய வகையில், வரலாற்றில் உரிய மறுவாழ்வு இடம் அளிக்கப்பட்டார்.

புரட்சியாளர் அபானி புகழ் ஓங்குக!

– நன்றி : நியூ ஏஜ் (2024 ஜூன் 15– 21)

தமிழில் : நீலகண்டன்

 என் எஃப் டி இ, கடலூர்

 

  

 

 

 

 

 

 

   

 

 

 

         

 

Wednesday, 4 February 2026

நியூஏஜ் தலையங்கம் -- கம்யூனிஸ்ட் அறிக்கை

1848 பிப்ரவரி 21 லண்டனில் காரல் மார்க்ஸ் மற்றும் ஃபெடரிக் ஏங்கெல்ஸ் எழுதிய ‘த கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ’ எனப்படும் ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’ வெளியிடப்பட்டது. கம்யூனிஸ்ட் லீக் அமைப்பு வேண்டி கேட்டுக் கொண்டபடி எழுதப்பட்ட அந்த அறிக்கை கம்யூனிசத் தத்துவத்தின் அடிப்படை நூலானது. “உலகத் தொழிலாளர்களே ஒன்றுபடுங்கள்” என்ற அதன் புகழ் பெற்ற அறைகூவலுடன், முதலாளித்துவத்தைத் தூக்கி எறிந்து தங்களின் ஆட்சியை நிறுவுங்கள் என பாடுபடும் மக்கள்திரளை அது கேட்டுக் கொண்டது. புரட்சியின் விஞ்ஞானபூர்வ முறையைக் கோடிட்டு காட்டியதுடன், கம்யூனிஸ்டு அறிக்கை அதனைச் சாதித்து அடையும் பாதையையும் காட்டியது.

எல்லாக் காலத்திலும் உள்ள எல்லாப் புரட்சிகரப் புத்தகங்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் அறிக்கை உயர்ந்தோங்கி எங்கெங்கும் பரவி நிற்கிறது. அந்த அறிக்கை முதலில் வெளியான 178 ஆண்டுகளுக்குப் பிறகும் உலகின் பெரும்பான்மையான பல்வேறுபட்ட மொழிகளில் நூற்றுக்கும் அதிகமான முறை மறு பதிப்புக் கண்டு வருகிறது; புகழப்பட்டது, பழிக்கப்பட்டது, தடை செய்யப்பட்டது மற்றும் சிதைக்கப்பட்டது. எனினும் மறு பதிப்புகள் வந்த வண்ணம் உள்ளன. கம்யூனிஸ்ட் அறிக்கை அதன் விஞ்ஞானபூர்வ பார்வையுடன், இயக்கவியல் அணுகுமுறையுடன் இன்றைக்கும்கூட கூடுதல் பொருத்தப்பாடு உடையதாக விளங்குகிறது. காரல் மார்க்ஸின் புகழ் பெற்ற கூற்று, “இதுநாள் வரையான தத்துவவாதிகள் உலகைக் குறித்து விளக்கம் அளித்து வந்துள்ளனர்; எனினும், (நம்முன் உள்ள) பிரச்சனை அதனை எவ்வாறு மாற்றுவது என்பதுதான்”

காரல் மார்க்ஸ் மற்றும் ஃபெடரிக் ஏங்கெல்ஸ் இருவராலும் கம்யூனிஸ்ட் அறிக்கை எழுதப்பட்ட 1848ஆம் ஆண்டு, ஐரோப்பா முழுவதும் குழப்பமும் கொந்தளிப்பும் நிறைந்த காலம். பிரான்சில் அரசர் லூயி பிலிப்புக்கு எதிராக அதிருப்தி அதிகரித்து வந்த நேரம்.  ஆஸ்ட்ரோ ஹங்கேரியன் பேரரசுக்கு எதிராக நீறு பூத்த நெருப்பாக கனன்று கொண்டிருந்த நேரம். ஜெர்மன் மற்றும் இத்தாலிய அரசுகளில் தேசிய ஐக்கியமாதல் கோரிக்கை வளர்ந்து வந்த நேரம்.

அறிக்கை உருவான சமூகச் சூழல்

1789ல் நிலப்பிரபுத்துவ ஆட்சியை வளர்ந்து வந்த குட்டி முதலாளிகள் (பூர்ஷ்வாசி) தலைமையிலான புரட்சிகர சக்திகள் தூக்கி எறிந்தது. நிலப் பிரபுத்துவத்துக்கு எதிரான இந்தப் பூர்ஷ்வா புரட்சியில் விவசாயிகளும் ஆலைத் தொழிலாளிகளான பாட்டாளிகளும் இணைந்தனர். பூர்ஷ்வா உற்பத்தி உறவுகள் உருவாகி மேம்பட சாதகமான வாய்ப்பு அமைந்தது; அப்படி முகிழ்ந்த அதே நேரத்தில் முதலாளித்து முறையிலான உற்பத்தியில் முரண்பாடுகளும் தோன்றின. பிரெஞ்சு புரட்சி அதனைத் தொடர்ந்த வளர்ச்சி நிலையான பாட்டாளி வர்க்க உணர்வு மற்றும் ஆலைத் தொழிலாளர் வர்க்கப் போராட்டங்களுக்கான சூழ்நிலைகளை ஏற்படுத்தியது; சோசலிசம் மற்றும் கம்யூனிசம் குறித்த பிரச்சனைகளைத் தெளிவுபடுத்தியது. ஓர் அரசியல் சக்தியாக நவீனத் தொழிலாளர் வர்க்கம் உருவானது, அது, 1840களின் பிற்பகுதியில் –அதற்கு முந்தைய ஆண்டுகளின் சமூக அரசியல் சூழலில் நொதித்து எழுந்த புரட்சிகரக் கூறுகளிலிருந்து தனித்துப் பிரிக்கும்– முக்கிய அம்சமாகும். [அதாவது வர்க்க உணர்வு பெற்ற நவீனத் தொழிலாளி வர்க்கம் வேறு; முந்தைய புரட்சிகளில் ஈடுபட்ட குழுக்களின் தன்மை வேறு].

ஐரோப்பா முழுவதும் புதிய தொழிலாளர் வர்க்கம் இரகசிய புரட்சிகர அமைப்புகளுடன் வெளிவந்தது. அவற்றில் சில (19ஆம் நூற்றாண்டின்) முற்கால சோசலிசச் சிந்தனையாளர்களான செயின்ட் ஹென்றி டி சைமன் அல்லது சார்லஸ் ஃபூரிலே (Saint-Simon or Fourier) முதலானவர்களால் ஊக்கம் பெற்றன. மற்றவர்கள், பிரெஞ்சுப் புரட்சியின் சமத்துவக் கொள்கைகளுக்காகப் போராடிய தீவிர இடதுசாரி தலைவர்களான பிலிப் புனாரோட்டி மற்றும் கிராக்ஸ் பாபுஃப் (Philippe Buonarroti and Gracchus Babeuf) போன்ற சர்வதேசத் தலைவர்களிடமிருந்து ஊக்கம் பெற்றனர். பிரான்சில் லூயிஸ் ஆகுஸ்டே பிளாக்கி போன்ற தீவிரவாதிகள் கிளர்ச்சி ஆயுதப்படை தாக்குதல் குழுக்களை அமைக்க முயன்றனர். [பிளாங்கியின் சிந்தனை கருத்துகளே ‘பிளாங்கிசம்’ எனப்படுகிறது]

அறிக்கை உருவாதல் 

அத்தகைய குழுக்களில் ஒன்றான ‘நீதிக்கான கழகம்’ (த லீக் ஆப் ஜஸ்ட்) 1839ல் பிளாங்கி ஆதரவாளர்களுடன் பாரிஸில் நடந்த எழுச்சி கிளர்ச்சியில் கலந்து கொண்டது. இந்தக் குழுதான் 1847ல் மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்சின் வற்புறுத்தலால் கம்யூனிஸ்ட் லீக் என்று அமைப்பின் பெயரை மாற்றிக் கொண்டது. 1847 டிசம்பரில் இந்தக் கம்யூனிஸ்ட் லீக் தனது கட்சிக்கான செயல் திட்ட வரைவை எழுத அவர்களிடம் வேண்டியது. அதன்படி 1848 பிப்ரவரியில் கம்யூனிஸ்ட் லீக் அமைப்பின் செயல் திட்டமாகக் கம்யூனிஸ்ட் மேனிபெஸ்டோ  கொண்டு வரப்பட்டது.

மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் அன்றைய காலத்தின் மிகமேம்பட்ட அரசியல், பொருளாதார மற்றும் தத்துவச் சிந்தனைகளை விஞ்ஞான சோசலிசமாக மேம்படுத்தினர்: சமூகம் மாற்றமடைந்ததற்கான விதிகளை அவர்கள் கண்டுபிடித்தனர்; பின்னர் அந்த விதிகளைப் பயன்படுத்தி சோசலிசத்தைக் கொண்டு வருவதற்கும் மற்றும் கால ஓட்டத்தில் ஒரு கம்யூனிஸ சமுதாயத்தைப் படைப்பதற்கும் கட்டியம் கூறினர். முந்தைய புரட்சிகளின் கற்பனாவாதக் கம்யூனிசம் மற்றும் சோசலிசத்திற்கு மாறாக அவர்கள் விஞ்ஞான கம்யூனிசத்தை மேம்படுத்தினர். முதன்முறையாகக் கம்யூனிஸ்ட் அறிக்கை சமூக மாற்றத்திற்கு ஒரு வர்க்கத்தைக் கண்டுபிடித்தது, அது ஆலைத் தொழில் சார்ந்த பாட்டாளிகள், இன்னும் சிறப்பாகத் தொழிலாளி வர்க்கம் என்றழைக்கலாம். மேலும் ஏன் மற்றும் எவ்வாறு மிகச் சரியாக அவர்கள் புரட்சிகரமானவர்கள் என்பதை மார்க்சும் ஏங்கெல்சும் விளக்கினர்.

அவர்கள் ஜெர்மன் தத்துவவாதி ஹெகல் அவர்களின் இயக்கவியல் (டயலெக்டிகல்) முறையைப் பயன்படுத்தினர் –ஆனால் அப்படிப் பயன்படுத்தியபோது, ஹெகலின் கருத்தியலை (ஐடியலிசம்) கைவிட்டு, இயக்கவியல் மற்றும் வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தை மேம்படுத்தினர். வரலாற்றின் இயக்க சக்தியாக வர்க்கப் போராட்டத்தை அவர்கள் அடையாளப்படுத்தினர். முதலாளித்துவச் சமூகப் பொருளாதாரத்தையும், சமூக உற்பத்தி சக்திகளின் வரலாற்று ரீதியான மேம்பாட்டையும் பகுப்பாய்வு பரிசீலனை செய்த அடிப்படையில், தொழிலாளர் வர்க்கமே உண்மையில் புரட்சிகரமான வர்க்கம் என்று அவர்கள் அடையாளப்படுத்தினர் –அந்த வர்க்கம் தன்னைத்தானே விடுதலை செய்து கொள்வது மட்டுமின்றி,  முழுமையான மனித குலத்தை விடுவிக்கும் திறன் உடையது என அடையாளப்படுத்தினர்.

அவர்களது அடிக்கடி மேற்கோள் காட்டப்படும் வாசகமான, “இதுவரை நிலவக் கூடிய அனைத்துச் சமூகங்களின் வரலாறும் வர்க்கப் போராட்டத்தின் வரலாறே” என்ற கூற்றுடன் தொடங்கி அந்த இளம் புரட்சியாளர்கள் இருவரும், வர்க்கப் போராட்டத்தின் வரலாற்றை அதன் தொடக்கத்திலிருந்து 1848 வரையில் புகழ் பெற்ற வகையில் நிறுவினர். கம்யூனிஸ்ட் அறிக்கையின் வரலாற்று முக்கியத்துவம், மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் விரிவுபடுத்திய அறிவார்ந்த கருத்துக்களின் காரணமாக மட்டுமல்ல. முதன்முறையாகப் புரட்சியின் செயல் உத்தி (ஸ்டேட்டர்ஜி), புரட்சியின் திட்டம் (ப்ரோக்ராம்) மேம்படுத்தப்பட்டது. மார்க்சும் ஏங்கெல்சும் அப்போதிருந்த சமூகத்தின் பல்வேறு வர்க்கங்களை அறிவியல் முறையில் பரிசீலித்தனர்; மேலும் தொழிலாளர் வர்க்கம்– அதன் தன்மையின் காரணமாகவே– உச்சபட்சமாகப் புரட்சிகர வர்க்கம் என எடுத்துக் காட்டினர்.

கம்யூனிஸ்ட் அறிக்கை (முதலாவது அகிலம் என்று அறியப்படும்) சர்வதேசத் தொழிலாளர்கள் கூட்டமைப்பை ஊக்குவித்தது: மேலும் ஜெர்மனி மற்றும் பிரான்சில் பெருந்திரள் சோஷலிஸ்ட் கட்சிகள் அமைக்கப்பட்டது, அதன் வீச்சை இருபதாம் நூற்றாண்டில் விரிவுபடுத்தியது. சில வழிகளில் ரஷ்ய புரட்சியை, விளாடிமீர் இலீச் லெனின் தலைமையிலான போல்ஷ்விக் கட்சியின் கைகளில் கம்யூனிஸ்ட் அறிக்கை என்பதன் கூட்டு விளைவு எனக் கருதலாம்.

 அதன் பிறகு லெனின் தொடர்ந்து மேனிபெஸ்டோ அடிப்படையில் குறைந்தபட்சம் இரண்டு விஷயங்களைச் செய்தார்.  முதலில், முதலாளித்துவத்தின் உச்ச கட்டத்தை

ஏகாதிபத்தியமாகப் பகுப்பாய்வு செய்தார். இரண்டாவதாக அவர், நவீனப் புரட்சிகளை –அவற்றின் முன்னணியை ஜனநாயக கூட்டணிகளாக விரிவுபடுத்தி– ஏகாதிபத்தியத்துடன் தொடர்புபடுத்தினார். அவர் காலனிய எதிர்ப்புத் தேசிய விடுதலைப் போராட்டங்களை அல்லது தேசிய விடுதலை புரட்சிகளை நேரடியாக ஏகாதிபத்தியத்துடன் தேடிக் கண்டடைந்தார்; மற்றும் காலனிய நாடுகளின் கம்யூனிஸ்டுகளைத் பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சிகளில் தீவிரமாகக் கலந்து கொள்ள அறைகூவல் விடுத்தார். இவ்வாறு, கம்யூனிஸ்ட் அறிக்கையும் கூட காலனியத்திற்கு எதிராகப் போராடிய ஒடுக்கப்பட்ட மக்களுக்கு, மற்றும் விடுதலைக்கும், இறுதியாகச் சோசலிச வடிவங்களுக்கு இட்டுச் செல்வதற்கும் ஒரு செயல் திட்டமானது.

விஞ்ஞானத் தகவல் தொழில்நுட்பப் புரட்சியின் தாக்கம் மேலோங்கிய நூற்றாண்டில் புதிய தொழிலாளர் வர்க்கம் உருவாகி வரும் இந்த 21 ஆம் நூற்றாண்டிலும் கூட கம்யூனிஸ்ட் அறிக்கை நம்மை ஊக்கப்படுத்துகிறது.

சந்தர்ப்பச் சூழ்நிலைகள் மாறி உள்ளன, மாற்றத்திற்கான முறைகளும் கூட மாறி உள்ளன என்றாலும், அடிப்படையான முறையும் ஊக்கமும் அப்படியே நீடிக்கிறது. 

 கம்யூனிஸ்ட் அறிக்கை, ஜனநாயகத் திசை வழியில், பிற  ஜனநாயகச் சக்திகளுடன் கூட்டணியாக இணைந்து படிப்படியாகச் சமூகத்தை எவ்வாறு மாற்றுவது என்பதைக் கற்றுத் தருகிறது.

சமூகத்தை மாற்றி அமைக்க கம்யூனிஸ்ட் அறிக்கையை நாளும் கற்போம்!

–தமிழில் :நீலகண்டன்,

 என் எஃப் டி இ, கடலூர்

 

  

 

  .           

Saturday, 31 January 2026

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு– 96 கே சத்தியநாராயணா –1930களின் தொடக்கத்தில் சிபிஐ கட்சியைக் கட்டியவர்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு– 96


கே சத்தியநாராயணா –1930களின் தொடக்கத்தில்
சிபிஐ கட்சியைக் கட்டியவர்

–அனில் ரஜீம்வாலே

அமீர் ஹைதர் கானுடன் சேர்ந்து தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டி வளர்த்த நிறுவனத் தலைவர்களில் ஒருவர் கம்பம்பட்டி சத்யநாராயணா  (சீனியர்). அதற்கு முன் 1934ல் ஆந்திராவில் கம்யூனிஸ்ட் கட்சியை பி சுந்தரய்யாவுடன் நிறுவியவர்களில்  ஒருவராக எம். சிங்காரவேலர்  திகழ்ந்தார். 

கே சத்யநாராயணா 1909 ஜூலை 17ல் ஆந்திரா கிழக்குக் கோதாவரி மாவட்டம் ராஜோல் தாலுகாவில், தோத்தவாரம் என்ற கிராமத்தில் பிறந்தார். நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த அவரது தந்தை தனது மகனின் பெயரையே கொண்டிருந்தார். தந்தை துனி ஜமீன்தாரின் சேவகத்தில் திவான் ஆக இருந்தார்.

1919ல் ஜாலியன் வாலாபாக் படுகொலை நடைபெற்றபோது சத்தியநாராயணா காக்கிநாடாவில் படித்துக் கொண்டிருந்தார்; அந்நிகழ்வு  அவர் மனதில் ஆழமான காயத்தை ஏற்படுத்தி தன்னை விடுதலைப் போராட்ட இயக்கத்தில் அர்ப்பணிக்க முடிவெடுக்க வைத்தது. 1921 –22ல் உயர்நிலைப் பள்ளியில் இருந்தபோது புலுசு சாம்பமூர்த்தி, எம் ரங்கையா நாயுடு, டி சுப்பம்மா மற்றும் பிற காங்கிரஸ் தலைவர்களின் சொற்பொழிவுகளைக்  கேட்டார். அப்போது எல்லா இடங்களிலும் ஒத்துழையாமை இயக்கம் நடைபெற்றுக் கொண்டிருந்தது, அவர்கள் குவியல் குவியலாக வெளிநாட்டு துணிகளைச் சேகரித்துத் தீயிட்டுக் கொளுத்தினர்; சுதேசி மற்றும் காதி பொருட்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்தனர். பல காங்கிரஸ் தலைவர்கள் நல்ல ஊதியம் தரும் அரசு வேலைகளை உதறிவிட்டு வெளியேறினர்,  காதி ஆடைகளில் மிகச் சாதாரணமாக வாழத் தொடங்கினர்.

காதி துணிகளை விற்றுக் கொண்டிருந்த முக்கிய தலைவர்களுடன் சத்யநாராயணா திரிந்தார். அவரே கைராட்டையில் நூல் நூற்கத் தொடங்கினார். இரண்டு ஆண்டுகளில் நான்கு வேட்டிகளுக்கான கதர் ஆடை நூற்பு நூல் பிரிக்கட்டுகள் நூற்றார்; அதில் இரண்டு கட்டுகளைத் தந்தையிடம் வழங்கினார். அவர், பழங்குடி இனத் தலைவர் அல்லூரி சீதாராம் ராஜூ தலைமையில் நடத்தப்பட்ட கிளர்ச்சியால் உற்சாகமடைந்தார்.

காந்தியின் விஜயம் 

1929ல் ஆந்திரப் பிரதேசத்திற்கு விஜயம் செய்த காந்தி (காக்கிநாடா மாவட்டத்தின் ஒரு நகரமான, மாங்கனி மற்றும் வெற்றிலைக்குப் புகழ்பெற்ற) துனி நகரத்திற்கு வந்தார். ஒரு நிலச்சுவான்தார் அவருக்கு விருந்தளித்தார். ஒரு பெரிய ஹாலில் காந்தியுடன் பெண்கள் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. பெண்கள் மிக தாராளமாகத் தங்கள் நகைகளைக் காந்தியிடம் நன்கொடையாக அளித்தனர். (இந்த நகரத்தில்தான் அல்லூரி சீதாராம் ராஜு படித்தார்).

மாலை கூட்டத்தில் பலரும் பணத்தை நன்கொடையாக அளித்தனர். உரையாற்றும் போது காந்தி, “எனக்கு, எளிய மக்கள் நன்கொடையாகத் தரும் ‘கானீஸ்’ (தம்படி காசு) அல்லது சிறு தொகை, பணக்காரர்கள் அளிக்கும் பெரும் தொகைகளைவிட விலை மதிப்பு மிக்கது” எனப் பிரகடனம் செய்தார். இந்நிகழ்வின்போது சத்யநாராயணா காக்கிநாடா கல்லூரியில் பி ஏ இளங்கலை  படித்துக் கொண்டிருந்தார். ஏறத்தாழ அந்த நேரத்தில் இந்தியாவுக்குச் சைமன் கமிஷன் விஜயம் செய்தது.’சைமன் குழுவே திரும்பிப் போ!’ என்ற முழக்கத்துடன் காக்கிநாடா கல்லூரியில் ஒரு வேலை நிறுத்தம் ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவர்கள் பெரும் பேரணியை நடத்தினர், மாலையில் ஒரு பொதுக்கூட்டம் நடந்தது. அந்தக் கூட்டத்தில் புகழ்பெற்ற புரட்சிகரத் தலைவரும், கம்யூனிஸ்ட்டுமான சுவாமி குமாரானந்த் உரையாற்றினார்.

அதைத் தொடர்ந்த அடுத்த நாளில் சத்தியநாராயணா, பூரண சுதந்திரம் குழுவின் செயலாளர் சாம்பமூர்த்தி இல்லத்தில் குமாரானந்தை மீண்டும் சந்தித்தார். அவர்கள் நீண்ட நேரம் உரையாடினர். சுவாமி அவருக்கு ரெவி மில்லர் எழுதிய ‘போல்ஸ்விக்-இசத்தின் வலிமையும் புனைவும்’ (/கட்டுக்கதையும்’) என்ற தலைப்பிலான புத்தகத்தைக் (‘The Might and Myth of Bolshevism’ by Rewi Miller) கொடுத்தார். சத்யநாராயணா இரவு முழுதும் அந்தப் புத்தகத்தை படித்துக் கொண்டிருந்து காலையில் படித்து முடித்தார். சத்தியநாராயணாவின் ஓவியக் கலைஞரான ஒரு நண்பர் அதிலிருந்து லெனின் சித்திரத்தை வரைந்த பின் அப்புத்தகம் திருப்பித் தரப்பட்டது. 

தீவிர அரசியலில்

சத்தியநாராயணா 1929ல் பிஏ பட்டத் தேர்வில் வெற்றி பெற்றார். 21 வயதில் தனது நண்பர்களுடன் வாழ்க்கையை முழுமையாக நாட்டுக்கு அர்பணிப்பது என்று சபதம் செய்தார். ஒவ்வொரு ஞாயிறும் கதர் விற்பனை செய்ய ஒரு குழுவை அமைத்தனர். 

1929 டிசம்பர் 31 நள்ளிரவில்  காங்கிரஸ் கட்சி பூரண விடுதலை என்ற தீர்மானத்தை லாகூர் அமர்வில் நிறைவேற்றியது. ஜனவரி 26ம் நாளைச் சுதந்திர தினமாக அனுசரிக்க மக்களும் மாணவர்களும் முடிவு செய்தனர். மெட்ராஸில் 1930 ஜனவரி 26 அன்று சத்யநாராயணாவும் வேறு சிலரும் சேர்ந்து ஒரு முழு அடைப்புப் போராட்டத்திற்கு ஏற்பாடு செய்தனர். அவர்கள் மாணவர்களைத் திரட்டி திருவல்லிக்கேணி கடற்கரை வரை பேரணியாகச் சென்றனர்.

எம்.ஏ முதுகலை முதல் ஆண்டுக்குப் பிறகு அவர் தனது படிப்பைக் கைவிட்டு உப்புச் சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். சத்தியாகிரக முகாமில் மற்றவர்களுடன் சுந்தரையாவும் கூட இருந்தார்.

இதன் மத்தியில் சத்யநாராயணா முதலில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார், பின்னர் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியிலும் (CSP) மற்றும் இறுதியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலும் இணைந்தார். திரிபுரியில் நடந்த காங்கிரஸ் தலைவர் தேர்தலில் ஆந்திராவில் இருந்து அவரும் வேறு பலரும் (நேதாஜி சுபாஷ் சந்திர) போஸுக்கு வாக்களித்தனர், பட்டாபி சீதாராமையாவைத் தோற்கடித்தனர்.

காங்கிரஸில் செயல்பாடு

அவர் காக்கிநாடா மாவட்டக் காங்கிரஸ் கமிட்டியில் இருந்தார், வேமூர் சத்தியாகிரக முகாமுக்குத் தன்னார்வத் தொண்டர்களைத் திரட்டினார். மேலும் அவர் தலைமறைவாக (இரகசியமாக) ‘ரண துந்துபி’ (போர் முரசு) என்ற சைக்ளோ-ஸ்டைல் செய்யப்பட்ட இதழைப் பல மாதங்களுக்கு நடத்தினார்.

இதன் மத்தியில் ஒத்துழையாமை இயக்கம் வேகம் பெற்றது. ஆயிரக்கணக்கானோர் சிறை புகுந்தனர். 1931 ஜனவரி 26ல் அவர் தானாக முன்வந்து கைதனார் ஆறு மாதம் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். ராஜமுந்திரி சிறைக்கு அனுப்பப்பட்ட அவர் தண்டனைக் காலம் முடிவதற்கு முன்பே விடுதலையானார். இளம் உறுப்பினர்கள் காந்தி– இர்வின் உடன்பாட்டால் ஏமாற்றம் அடைந்தனர்.

காங்கிரஸ் அமர்வில் கலந்து கொள்ளல் 

சிறையிலிருந்து விடுதலையான பின் சத்யநாராயணா காங்கிரஸ் கராச்சி மாநாடு அமர்வில் ஆந்திர பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். பம்பாயில் இருந்து கராச்சிக்கு அவர்கள் கப்பலில் பயணம் செய்தனர். கப்பலில் ஏறுவதற்குச் சற்று முன் அவர்கள் பகத்சிங் மட்டும் கூட்டாளிகள் தூக்கிலிடப்பட்ட செய்தியை அறிந்தனர். காங்கிரஸ் அமர்வு தீர்மானத்தில் வன்முறையைக் கண்டித்த பகுதியை நீக்க வேண்டும் என்ற முன்மொழிவை ஆதரித்தார்.

கராச்சியிலிருந்து திரும்பிய பிறகு காக்கிநாடாவில் ஒரு காங்கிரஸ் தலைவருடன் இரகசிய அமைப்புக் குழுவில் அவர் சேர்ந்தார். தடை செய்யப்பட்ட டெல்லி அமர்விலும் கலந்து கொண்டார். டெல்லிச் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட புரட்சியாளர் ஒருவருடன் அவர் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டார். 1932ல் அவர் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டது ஒருக்கால் வைசம்பாயனன் ஆக இருக்கலாம். வைசம்பாயனன் வட இந்தியாவில் ஹிந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு (HSRA)ன் பொறுப்பாளராக இருந்தார். சத்யநாராயணா HSRA அமைப்பின் கிளை ஒன்றை ஆந்திராவில் தொடங்க அவரது ஒப்புதலைப் பெற்றார். அவர் ஒரு ரிவால்வர் மற்றும் சில தோட்டாகளையும் கூட பெற்றுக் கொண்டார்.  

அமீர் ஹைதர் கானுடன் சேர்ந்து சிபிஐ அமைத்தல்

அவர் தன் செயல்பாட்டை மேலும் தொடர்வதற்கு முன் மெட்ராசுக்குத் திரும்ப கேட்டுக் கொள்ளப்பட்டார். 1931 -32 ல் அங்குச் சென்ற அவர் தென்னிந்தியாவில் வேறு சிலருடன்

சேர்ந்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பதில் ஈடுபட்டு இருந்த அமீர் ஹைதர் கானைச் சந்தித்தார். அப்போது கட்சி தடை செய்யப்பட்டிருந்ததால், அவர் தலைமறைவாகப் பணியாற்றி வந்தார். அமீர் ஹைதர் மெட்ராஸில்  ‘யங் ஒர்க்கர்ஸ் லீக்’ என்ற இளைஞர் அமைப்பை நிறுவினார். அதிலிருந்த இளைஞர்கள் அச்சகத் தொழில் மற்றும் பிற தொழிற்சாலைகளைச் சேர்ந்தவர்கள். சத்தியநாராயணா அந்த அமைப்பில் ஒருவரானார். அவர்கள் தொழிலாளர்கள் மத்தியில் வர்க்க உணர்வை ஊட்ட முயன்றனர்.

அவர் மாதம் 25 ரூபாய் என்ற குறைந்த ஊதியத்தில் முழு நேர கட்சி ஊழியர் ஆனார். அவரும் அவரது மனைவி மாணிக்யம்பா இருவரும் அந்தச் சொற்ப ஊதியத்தில் எப்படியோ வாழ்க்கை நடத்தினர். [மாணிக்யம்பா என்ற பெயர் கிழக்குக் கோதாவரி மாவட்டத்தில் திராக்ஷாராமத்தில் அமைந்த, 18 சக்தி பீடங்களில் ஒரு சக்தி பீடத் தெய்வத்தின் பெயர் –கூடுதல் இணைப்பு]. அவர்கள் மெட்ராஸ் சிந்தாதிரிப்பேட்டையில் ஒரு டிராம்வே தொழிலாளியின் வீட்டில் வசித்தனர்.

கட்சியின் அதிகாரபூர்வ பத்திரிக்கையாக மெட்ராஸில் இருந்து “முன்னேற்றம்” இதழ் வெளியிடப்பட்டது. ராஜா வடிவேலு அதன் ஆசிரியராகவும் அச்சிடுபவர் மற்றும் பதிப்பாளராகவும் இருந்தார். அந்த இதழ் மீரட் சதி வழக்கு விசாரணை விபரங்களை விரிவாக வழங்கியது. விரைவில் சத்தியநாராயணா மேற்கு கோதாவரி மாவட்டத்தில் இருந்து கைது செய்யப்பட்டார். தடை செய்யப்பட்ட வீரபாரதி இதழின் பிரதிகளை விநியோகித்தார் என்ற குற்றச்சாட்டின் பேரில் விசாரிக்கப்பட்டு ராஜமுந்திரி மற்றும் பெல்லாரி சிறைகளுக்கு அனுப்பப்பட்டார். 

அதன் பிறகு அவர் மெட்ராஸில் இருந்து பிரகாசம் பந்துலு நடத்திய ஸ்வராஜ் பத்திரிக்கைக்காகப் பணியாற்றினார்; பின்னர் அவர் சித்தி ராஜாவால் பிரசரிக்கப்பட்டு வந்த நியூ ஏஜ் இதழில் துணை ஆசிரியராக இணைந்தார். பின்னர் வந்த காலத்தில் காட்டே அதன் ஆசிரியரானார். நியூ ஏஜ் இதழ் விஞ்ஞான சோஷலிசத்தைப் பிரச்சாரம் செய்தது. 

தொழிலாளர் பாதுகாப்பு லீக் 

1935ஆம் வருடத்தின்போது அவர் தொழிலாளர் பாதுகாப்பு லீக் அமைப்பில் பணியாற்றினார். இதன் மத்தியில் தனித் தேர்வராகத் தனது முதுகலை எம்ஏ தேர்வில் தேர்ச்சி பெற்றார். லீக் அமைப்பு நெல்லூர் மற்றும் பிற இடங்களுக்கு பரவியது. தோழர் பி. சுந்தரய்யாவும்கூட அதில் பணியாற்றினார். அது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு வெளிப்படையான பொதுமேடை அமைப்பாகப் பயன்பட்டது.

இதன் மத்தியில் பல்வேறு பேரூர்கள் மற்றும் நகரங்களில் இருந்து ஏராளமான இதழ்கள் கொண்டு வரப்பட்டன. ஏ எஸ் கே அய்யங்கார், வடிவேலு, பாஷ்யம், மாணிக்கம் மற்றும் பலர் லீக் அமைப்பில் பணியாற்றினர். முனிசிபல் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றிய சத்யநாராயணா மேலும் அச்சகத் தொழில், ட்ரம்வே தொழிலாளர்கள் மத்தியிலும்கூட பணியாற்றினார். மெட்ராஸில் அனைத்து இந்திய அச்சகத் தொழிலாளர்கள் மாநாடு முதன்முறையாக நடத்தப்பட்டது –அந்த மாநாட்டிற்குத் தொழிலாளர்கள் பாதுகாப்பு லீக் ஏற்பாடு செய்தது

 முனிசிபல் தொழிலாளர்கள் மத்தியில் “மன பிரபா” (நமது வெளிச்சம்) பத்திரிக்கையை விநியோகம் செய்ததற்காக அவரும் வீ நரசிங்க ராவ் இருவரும் கைது செய்யப்பட்டனர். இரு காங்கிரஸ்காரர்கள் அவர்கள் தரப்புக்கு ஆதரவாக நீதிமன்றத்தில் வாதாடினர். ஒருவர் உயர் நீதிமன்ற நீதிபதி, மற்றொருவர் தூய்மையான காந்தியர். அவர்கள்தான் என் எஸ் வரதாச்சாரி மற்றும் பி ஜெகன்நாத ராஜு; பின்னர் அவர் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் பிறகு உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் ஆனார். நரசிங்கராவும் சத்தியநாராயணாவும் கடலூர் மற்றும் திருச்சிராப்பள்ளி சிறைகளுக்கு அனுப்பப்பட்டனர். 1936ல் தான் அவர் விடுதலையானார். இதன் மத்தியில் கட்சி பின்பற்றிய பாதை குறிப்பிடத்தக்க அளவு மாறியது. ரஜினி பாமி தத் மற்றும் பிராட்லே தீசிஸ் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நேர்மறையான முறையில் உதவியது.

[கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்களான ஆர்பி தத் (ரஜினி பால்மே தத்) மற்றும் பென் பிராட்லே இருவரும் தத்–பிராட்லே கோட்பாட்டை முன்வைத்தனர். அக்கோட்பாடு இந்தியாவில் “ஏகாதிபத்திய எதிர்ப்பு மக்கள் முன்னணி” அமைக்கும் யோசனையை முன்மொழிந்தது. அது, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கம்யூனிஸ்டுகளை, இந்திய தேசிய காங்கிரசுடன் இணைந்து பணியாற்றக் கோரியது– அதுவரை பின்பற்றப்பட்ட முந்தைய குறுங்குழுவாத கம்யூனிஸ்ட் கொள்கையிலிருந்து (செக்டேரியன்) அது குறிப்பிடத்தக்க பெரும் மாறுதலாகும். இந்தக் கொள்கை மாற்றம் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு நேர்மறையாகப் பெரிதும் உதவியது –கூடுதல் இணைப்பு]

சத்தியநாராயணா கிழக்கு கோதாவரி மாவட்டத்தின் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் (CSP) பொறுப்புகளை ஏற்று மெட்ராசைவிட்டு காக்கிநாடாவுக்குச் சென்றார். கோட்டி பள்ளியில் மாவட்ட விவசாயிகள் மாநாடு நடத்தப்பட்டது, விவசாயத் தொழிலாளர் அமைப்புகள் ஏற்பட்டன. பல்வேறு பேரூர்களில் தொழிற்சங்கங்கள் அமைக்கப்பட்டன. காக்கிநாடா கயிறு உற்பத்தித் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். 

1937 மாகாணத் தேர்தல்கள்

1937 பிப்ரவரியில் மெட்ராஸ் மாகாணச் சட்டமன்ற குழுவுக்குத் தேர்தல்கள் நடத்தப்பட்டன முக்கியமான போட்டி நீதிக்கட்சிக்கும் காங்கிரஸ் கட்சிக்கும் இடையில். காங்கிரஸ் ஆதரித்த இரண்டு கம்யூனிஸ்டுகள் வெற்றி பெற்றனர். மற்ற எல்லா தொகுதிகளிலும் காங்கிரஸ் கட்சியைக் கம்யூனிஸ்டுகள் ஆதரித்தனர் பிரச்சாரப் பொதுக் கூட்டங்களில் மூவர்ண கொடியும் செங்கொடியும் ஒன்றாக ஏற்றப்பட்டன. தேர்தல் பிரச்சாரத்திற்காகச் சத்யநாராயணாவும் மற்றவர்களும் கிராமம் கிராமமாக, வீடு வீடாகச் சென்றனர். அது உண்மையில் ஒரு பெரும் அனுபவம். சில தருணங்களில் அவர்கள் அடித்துத் தாக்கப்பட்டனர். ஆளுநரால் தடைகள் ஏற்படுத்தப்பட்ட போதும் மெட்ராஸ் மாகாணத்தில் காங்கிரஸ் அரசாங்கம் அமைந்தது.

விரைவில் மாகாணக் காங்கிரஸ் குழுக்களுக்குத் தேர்தல் நடத்தப்பட்டது. வலதுசாரியான எம்சி ராஜுவை எதிர்த்துப் போட்டியிட்டு மாகாணக் காங்கிரஸ் கமிட்டிக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரசியல் பள்ளியை நீதிக்கட்சி தடை செய்தது! 

முதலில் நீதி கட்சியின் ரெட்டி நாயுடு பிரதமராக (இன்றைய முதலமைச்சர் பதவி) நியமனம் செய்யப்பட்டார். இக்காலத்தின்போது குண்டூர் கொத்தப்பட்டினம் என்ற இடத்தில் ஆந்திர மாகாண இளைஞர் அமைப்பும் சோசலிஸ்ட் கட்சியும் இணைந்து ஓர் அரசியல் பள்ளியை ஏற்பாடு செய்து நடத்தியது. சத்யநாராயணாவும்கூட அங்கே பாடம் நடத்தினார். மாவட்டக் காங்கிரஸ் தலைவர்கள் அதற்கு நிதி அளித்து உதவினர். அவர்கள் அதற்காக அருகில் உள்ள கிராமங்களுக்குச் சென்று நிதி திரட்டினர்.

இரண்டு வாரங்களுக்கு பிறகு நீதிக்கட்சி அரசு அந்தப் பள்ளியைத் தடை செய்தது! வகுப்பில் கலந்து கொண்டவர்கள் தடையை மீற அவர்கள் மீது தடியடி நடத்தினர். பலர் கைது செய்யப்பட்டனர், கூட்டங்கள் பரவலாக நடத்தப்பட்டன; விரைவில் காங்கிரஸ் கட்சி அதிகாரத்துக்கு வந்தது. தடை நீக்கப்பட்டு அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.

1937 இறுதியில் ஆந்திரா காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி ‘நவசக்தி’ என்ற பத்திரிகையை வெளியிட்டது. சத்யநாராயணா ஆசிரியர் குழுவில் ஒருவர். எனவே அவர் பெஸ்வாடா (விஜயவாடா) குடிபெயர்ந்தார். காங்கிரஸ் அமைச்சரவையின் முற்போக்கான நடவடிக்கைகளை அப்பத்திரிக்கை ஆதரித்தது, பிற்போக்கானவற்றை விமர்சித்தது. 

முக்கியமான கம்யூனிஸ்டுகள் ஆந்திரா காங்கிரஸ் கமிட்டியின் உறுப்பினராகவும், ஏன், அனைத்திந்தியக் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும்கூட ஆனார்கள். சத்தியநாராயணா காங்கிரஸ் கட்சியின் 1938 ஹரிபுரா மற்றும் 1939 திரிபுரி மாநாட்டிலும் ஆந்திராவில் இருந்து கலந்து கொண்டார்.

(குண்டூர் மாவட்ட) மச்சாவரம் பாலம் என்ற இடத்தில் 1938ல் மற்றொரு அரசியல் பள்ளி நடத்தப்பட்டது. 300 பேருக்கு மேல் கலந்து கொண்டனர்.  வகுப்பில் ஏறத்தாழ இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களில் பாதிக்கு மேல் அதில் கலந்து கொண்டனர். குண்டூர் காங்கிரஸ் தலைவர்கள் அனைத்து உதவிகளையும் செய்தனர். இந்த அரசியல் பயிற்சி பள்ளியிலும் கூட சத்தியநாராயணா பாடம் நடத்தினார்.

இரண்டாம் உலகப் போரின்போது

‘நவசக்தி’ நிறுத்தப்பட்டு பலரும் தலைமறைவாகச் சென்றனர். சத்யநாராயணா இரகசியக் கூட்டங்களையும்,  வெளிப்படையான கூட்டங்களையும் நடத்தினார். (இரண்டாவது உலகப் போர் குறித்து) அவர் விரிவான வரைபடத்தைத் தயாரித்து எந்தெந்த நாடுகளின் படைகள் எங்கே நிலை கொண்டுள்ளன என்ற போர் நிலைப்பாடுகளை விளக்கினார். அவர் கைது செய்யப்பட்டு வேலூர் மத்திய சிறையில் வேறு 200 பேருடன் அடைக்கப்பட்டார். 1941ல் சோவியத் யூனியன் (USSR) தாக்கப்பட்ட பிறகு சிறைக்குள் தீவிர விவாதங்கள் வெடித்தன.

அந்தச் சிறைவாசிகளுக்குள் ஒருவராக இருந்த மாபெரும் மார்க்சிய அறிஞர் கே பி கிருஷ்ணா அமெரிக்காவில் இருந்து திரும்பி இருந்தார்; மேலும் அவர் இந்தியத் தத்துவம் மற்றும் பிற பொருள்களில் உள்ள பொருள்முதல்வாத மற்றும் இயக்கவியல் குறித்து விரிவாக

எழுதியவர். சிறையில் நடந்த வகுப்புகளில் காரல் மார்க்சின் மூலதனம் குறித்து அவர் விளக்கினார். சோவியத் யூனியன் மீது நாஜிகள் தாக்குதலுக்குப் பிறகு அவர் சிபிஐ பின்பற்றிய அரசியல் பாதையில் (பொலிட்டிக்கல் லைன்) மாற்றத்தை ஆதரித்து ஓர் ஆவணம் தயாரித்து அதைச் சிறைக்கு வெளியே அனுப்பினார். பிந்தைய காலங்களில் கே பி கிருஷ்ணா வாழ்க்கை மற்றும் பணிகள் குறித்துச் சத்யநாராயணா எழுதினார். மெல்ல மெல்ல சிபிஐ மத்திய குழு பல பிரச்சனைகளில் கிருஷ்ணா ஆவணத்தில் கூறப்பட்ட நிலைப்பாட்டிற்கு வந்தது

விடுதலைக்குப் பின் சத்யநாராயணா மாவட்ட சிபிஐ பத்திரிக்கையான “பிரஜா சக்தி” ஆசிரியர் குழுவில் இணைந்தார். பிந்தைய நாள்களில் அவர் கட்சியின் 1942 பாதை அமலாக்க வழிமுறை குறித்துக் குறை கூறி விமர்சித்தார்.

அந்நாட்களில் ராயலசீமா பகுதியில் வங்கத்தைப் போல கடுமையான பஞ்சம் ஏற்பட்டது. கட்சி ஏராளமான நிவாரணப் பணிகளைச் செய்தது.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு

1946 தேர்தல்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாபெரும் எண்ணிக்கையிலான வாக்குகளைப் பெற்றது, மாகாணச் சட்டமன்றத்திற்கு ஒருவர் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தேர்தலுக்குப் பிறகு பிரகாசம் தலைமையில் மெட்ராஸில் புதிய அரசு அமைக்கப்பட்டது. அந்த நேரத்தில் கம்யூனிஸ்டுகள் செல்லப்பள்ளி ராஜாவை எதிர்த்து மாபெரும் விவசாயிகள் இயக்கத்தைத் தொடுத்தது. அரசு ஒரு சட்டத்தை அறிமுகப்படுத்தியது, அந்தச் சட்டம் பின்பு ‘பிரகாசம் அவசரச் சட்டம்’ என்று அறியப்பட்டது. சத்தியநாராயணாவும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார். விடுதலை செய்யப்பட்ட பின் கம்யூனிஸ்டுகளும் காங்கிரஸ்காரர்களும் இணைந்து இந்தியாவின் சுதந்திரத்தைக் கொண்டாடினார்கள்.

தெலுங்கானாவில் ஆயுதப் போராட்டத்தைத் திரும்பப் பெற சத்தியநாராயணா ஆதரவாக இருந்தார்.

சர்வதேசக் கம்யூனிஸ்ட் இயக்கம் மீது நிலைப்பாடுகள் 

ரஷ்யாவில் ஜோசப் ஸ்டாலினின் ‘தன்னிச்சையான, அதிகாரத்துவ, மார்க்சிய விரோத மற்றும் அத்துமீறல்கள்’ குறித்த குருச்சேவின் பொதுவான விமர்சனத்தைச் சத்யநாராயணா ஆதரித்தார். சீனாவின் நிலைப்பாடுகளைச் சத்யநாராயணா கூர்மையாக விமர்சித்தார். அவர் நம் நாட்டின் நக்சலைட் இயக்கத்தை, ‘சீனக் கம்யூனிஸ்ட் கட்சியை நகலெடுத்துச் செயல்படும் அவர்களின் போக்கிற்காகவும் மற்றும் பரவலாக அக்கட்சியைப் புகழ்வதற்காகவும்’ கண்டித்தார். அவர்கள் பின்பற்றிய பாதை 1948 –50களின் ‘ஆந்திரா திசீஸ்’ கோட்பாட்டின் திருந்திய பதிப்புத் தவிர வேறில்லை என்றார் சத்யநாராயணா.

மறைவு 

கம்பம்பட்டி சத்யநாராயணா (சீனியர்) 1983 ஜனவரி 16ஆம் தேதி இயற்கை எய்தினார். அந்த நேரத்தில் அவர் ஆந்திரப் பகுதியின் கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு குறித்து எழுதுவதில் மும்மரமாக ஈடுபட்டிருந்தார்.

சத்தியநாராயணாவின் மனைவி கம்பம்பட்டி மாணிக்யாம்பா, வாழ்க்கை முழுதும் அவருடன் சேர்ந்து பணியாற்றினார். அவரும் பலமுறை கைது செய்யப்பட்டு இருக்கிறார்; அரசியல் பள்ளிகளில் கலந்து கொண்டிருக்கிறார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைத்த ஆந்திரா மாகாணப் பெண்கள் கூட்டமைப்பில் பணியாற்றிய அவர், சமூக மற்றும் அரசியல் வாழ்வில் தனக்கென ஒரு இடத்தைப் பெற்றுள்ளார். 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டு விழா நிறைவின்போது சத்தியநாராயணா – மாணிக்யம்பா இணையர் புகழ் வாழ்க என வாழ்த்துவோம்! 


--நன்றி :
நியூ ஏஜ் (2023 அக். 15 –21) 

--தமிழில் : நீலகண்டன்,

 என்எப்டிஇ, கடலூர்.