Thursday, 7 May 2026

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 148 -- மாலினி துல்புலே

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 148 


மாலினி துல்புலே –உழைக்கும் பெண்கள் இயக்கத்தில்

கம்யூனிசத்தை அறிமுகம் செய்தவர்

–அனில் ரஜீம்வாலே 


மாலினி துல்புலே தனித்துவமான ஆளுமையாளர், பொதுவாகத் தொழிலாளர் இயக்கத்திலும், குறிப்பாக உழைக்கும் பெண்கள் மற்றும் அறிவாளர்கள் மத்தியிலும் அரசியலைக் கொண்டு வந்தவர். பூனா மற்றும் மகாராஷ்டிராவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டிய முன்னணியாளர்களின் அவர் ஒருவர். பூனாவில் ஆகச் சிறந்த குடிமகள் விருது வழங்கப்பட்டவர்.

தொடக்க வாழ்க்கை

பரோடா அரச மாகாணத்தின் மெஹ்சானா கிராமத்தில் 1922 அக்டோபர் 1ம் தேதி பிறந்தார். துவாரகா எனப் பெயர் சூட்டப்பட்டார். அவருடைய தந்தை சங்கர்ராவ் பட்வர்தன் முனிசிபாலிட்டி செயலாளர். குடும்பம் பொருளாதாரத்தில் அவ்வளவு நன்றாக இல்லாதபோதும் அவர் தேசியம் மற்றும் விடுதலைப் போராட்டச் சூழலில் வளர்க்கப்பட்டார். பெரும்பாலும் பையன்கள் மத்தியில் விளையாடி வாழ்ந்ததால் அவர் கூச்ச சுபாவம் இல்லாமல் இருந்தார்.

மராத்தி பேசும் சமூகம் குறைவான எண்ணிக்கையுடன் சிறியது, அதைச் சூழ்ந்து குஜராத்தி பேசும் மக்கள் இருந்தனர். எனவே அவர்களுக்கு ஏராளமான செயல்பாடுகள் இருந்தன, அதில் போதுமான அளவு மாலினி ஆழ்ந்திருந்தார். அவர் மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளைக் கற்றார்.

செவ்வியல் இசை மற்றும்  நுண்கலையில் அதிக விருப்பம் உடைய அவர், நீண்ட தொலைவு பயணம் செய்து பம்பாய்க்குச் சென்று பால்-கந்தர்வாவின் நாடகங்கள் பார்ப்பார். அவரது குடும்பத்தால் இசை, இலக்கியம் மற்றும் அது தொடர்பான துறைகளில் அவருக்குத் தொடர்ந்த முறையான பயிற்சி அளிக்க இயலவில்லை. அவர் ஆஜ்மீர் மத்திய கல்வி போர்டு, நாக்பூர் வித்யா பீடம் மற்றும் பனாரஸ் பல்கலைக் கழகத்திலிருந்து பிஏ மற்றும் எம்.ஏ  பட்டமும் கலைகளில் பட்டமும் பெற்றார். 

திருமணம் 

ஓர் உறவினர் மூலம் வசந்த் துல்புலே உடன் மாலினிக்குத் தொடர்பு ஏற்பட்டது. அவர் முதலில் காங்கிரஸிலும் பின்னர் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி ஊழியராகவும் பின்னர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர  ஊழியர் ஆனவர். அவரது குடும்பமும் அறிவார்ந்தது. அவர்கள் 1944ல் திருமணம் செய்து கொண்டனர் 1946ல் கோபர்கோன் (அகமது நகர் மாவட்டத்தின் ஒரு நகராட்சி) என்ற இடத்தில் வசிக்கத் தொடங்கினர். 

மாலினியின் மாமியார் சரஸ்வதி பாய் தீவிரமான செயல்பாட்டாளரும், திறன் மிக்க ஆளுமையாளரும் ஆவார். மாலினி பின்னர் அவர் குறித்து விரிவான கட்டுரை எழுதியுள்ளார். .மாலினியின் மாமனார் ஒரு புகழ்பெற்ற காங்கிரஸ் தலைவர். எனவே அந்த முழுமையான சூழ்நிலையும் அரசியல் மற்றும் சமூகம்  சார்ந்து இருந்தது.

சரஸ்வதிபாய் சுதேசியைத் தீவிரமாக ஆதரித்தார். அவர் ஒரு கூட்டத்தில் சரோஜினி நாயுடுக்கு முன்பு சில தலைவர்களின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தினார். இதன் விளைவாய் அவரது குடும்பத்தினர் உட்பட ஒவ்வொருவரும் கதர் உடுத்தத் தொடங்கினர். அவர் கூட்டுக் குடும்பத்தின் குழந்தைகளுக்காகக் கதர் துணிக்கு வண்ணம் தோய்த்து அதில் எம்பிராய்டரி பூவேலைப்பாடுகள் செய்து தந்தார். 1943ல் கஸ்தூரிபாய் இறந்த பிறகு மக்களிடமிருந்து  ஏராளமான நிதி திரட்டினார். 

அரசியல் மற்றும் தொழிற்சங்கச் செயல்பாடுகள் 

காந்தியின் ஆழமான செல்வாக்குக்கு ஆட்பட்ட மாலினி, அகில இந்திய பெண்கள் காங்கிரஸில் பணியாற்ற தொடங்கி தமது பதினாறாவது வயதில் அதன் செயலாளர் ஆனார். பின்னர் அவர் அகமத்நகர் மற்றும் பூனாவில் பீடி மற்றும் சர்க்கரை ஆலை தொழிலாளர்களைத் திரட்டி அமைத்தார். அகமத் நகரில் சட்டவிரோத வரிகளுக்கு எதிராக விவசாயிகளயும் கூட அவர் திரட்டினார்.

இந்திய விடுதலை 

கோபர்கோன் தாலுகா கச்சேரியில் துல்புலே-கள் 1947 ஆகஸ்ட் 15ல் இந்திய விடுதலையைக் கொண்டாடும் வகையில் மூவர்ண கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பிடிஆர் காலகட்டம்

பல தோழர்களைப் போல வசந்தராவ் மற்றும் மாலினி துல்புலே உட்கட்சிப் போராட்டத்தில் கடினமான நேரங்களையும், வெளியே ஒடுக்குமுறைகளையும் அனுபவித்தனர்.  வசந்தராவ் கைது செய்யப்பட்டார். அந்த நேரத்தில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தனது எம் ஏ பட்டப்படிப்பைப் படித்துக் கொண்டிருந்த மாலினி, தேர்வுக்கு இரண்டு மாதங்கள் முன்பிருந்தே அங்கு தங்கியிருந்தார். எனவே அவரைக் கைது செய்ய முடியவில்லை. அவர் திரும்பி வந்ததும் அஹமத்நகரில் தங்க முடிவு செய்தார்.

அவருக்குச் சாந்தாபாய் குல்கர்னி, பாபா கோசாயி, பி எம் மகாஜன், பாய் சத்யா மற்றும் அவர்கள் போன்ற பல தோழர்களுடன் அறிமுகம் ஏற்பட்டது. ஏராளமான கம்யூனிஸ்ட் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

பாய்சத்யா மராத்தி மொழியில் இன்குலாப் என்ற இதழை வெளியிடத் தொடங்கினார், அதில் மாலினி  விளக்கமாகக் கட்டுரைகள் எழுதினார்.

தலைமறைவு கம்யூனிஸ்ட்டுகளைத் தேடிய போலீஸ், ஏழை மக்களின் சில குடியிருப்புகளைத் தாக்கியது. குறிப்பாகப் பெண்களை மிரட்டி அவர்களைப் பீதியடையச் செய்தது. ஆறு மைல் தொலைவு நடந்து சென்று மாலினி அந்தப் பெண்களை –பயத்தில் மூன்று நாட்களாக சமையல் கூட செய்யாத அப்பெண்களை –சந்தித்தார். மாலினியின் இருப்பே பெண்களுக்குப் பெரும் ஊக்கமாக அமைந்தது.

விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியில் இணைதல்

மார்ச் 1947ல் மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியின் கூட்டம் ஒன்று நடைபெற்றது; அதில் ஒரு பிரிவினர் காங்கிரஸ், ‘பகுஜன் சமாஜ்’க்கு உதவிகரமாக இல்லை என முடிவு செய்தனர். எனவே வெளியேறி தனி கட்சி அமைக்க அவர்கள் முடிவு செய்தனர். கட்சியை விட்டு வெளியேறியவர்களில் கேசவ்ராவ் ஜெயதே, சங்கர்ராவ் மோர், ஆர்கே கட்டில்கர், நானா பட்டேல் மற்றும் பிறர் அடங்குவர். மகாராஷ்டிராவில் அவர்கள் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சியை 1947 ஆகஸ்ட் 3ல் அமைத்தனர்.

அக்கட்சியின் தலைவர்கள் நகருக்கு வந்து பாய்சத்யா இல்லத்தில் ஒரு கூட்டத்தை நடத்த, டவுனில் அக்கட்சி அமைப்பை ஏற்படுத்த ஏதுவாயிற்று. மாலினி அதுவரையில் சிபிஐ கட்சியில் இணையவில்லை. விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி (PWP)யின்பால் மக்கள் ஈர்க்கப்பட்டனர் மற்றும் சிபிஐ நல்ல நிலையில் இல்லை. மாலினி PWPல் இணைந்தார், சிறையில் இருந்து விடுதலையானதும் வசந்தராவும்கூட PWPல் இணைந்தார்.

1950 வாக்கில் வசந்தராவ் மற்றும் மாலினி நகரில் இருந்து பூனாவுக்குக் குடிபெயர்ந்தனர். 1952 தேர்தல்களில் PWP கட்சி மோசமான தோல்வியை அடைய கட்சிக்குள் அது நெருக்கடியை ஏற்படுத்தியது. வசந்த்ராவ் உட்பட கட்சியின் பெரும் பிரிவினர், வேறு பலர் எதிர்த்தபோதும், கட்சியை சிபிஐ உடன் இணைக்க வற்புறுத்தினர்.

விவசாயிகள் தொழிலாளர் கட்சியைக் கலைத்துவிட்டு சிபிஐயுடன் இணைப்பதை மாலினி தீவிரமாக ஆதரித்தார். சிபிஐயில் இணைய அவர் தன்னிச்சையாக முடிவு செய்து PWP பொதுச் செயலாளருக்குத் தனது  ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்தார். அது 1954 ஏப்ரல். அவர் PWP மத்திய கட்சி அலுவலகச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தில், ‘மார்க்சியத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில்  இருக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். இந்த வழியில் மட்டும்தான் ஜனநாயகப் புரட்சிகர முன்னணியை வலிமைப்படுத்த முடியும். பின்னர் அவர் சிபிஐயில் இணைந்தார்.

1955 பிப்ரவரி 8 சங்கிலியில் நடந்த PWP மாநாட்டில் சிபிஐயுடன் இணைக்கும்  முன்மொழிவு தோற்கடிக்கப்பட்டது.

உழைக்கும் பெண்கள் குழு மற்றும் பெண்கள் விடுதலை இயக்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு (ஷ்ராமிக் மகிளா சமிதி மற்றும் ஸ்திரீ முக்தி அந்தோலன் சம்பர்க் சமிதி)

உழைக்கும் பெண்கள் குழுக்கள்

அகில இந்திய பெண்கள் மாநாட்டில் (AIWC) சங்கர்ராவ் மோரின் மனைவி சாந்தாபாய் மோருடன் மாலினி’தாய் வழக்கமாகப் பணியாற்றினார். (‘தாய்’ என்ற பின்னொட்டு மராத்தியில் பெண்களை மரியாதையுடன் அழைக்கும் முறை. மூத்த சகோதரி /அக்கா அல்லது மரியாதைக்குரிய பெண்மணி என்று பொருள்)

சுதந்திரத்திற்கு முன்பு காங்கிரஸ்காரர்கள், கம்யூனிஸ்டுகள் மற்றும் சோசலிஸ்ட்கள் உட்பட அனைத்து முற்போக்கு பிரிவினர்களும் –பெண்களின் பரந்துபட்ட அமைப்பாக விளங்கிய– அனைத்திந்தியப் பெண்கள் மாநாட்டில் பணியாற்றினர். சுதந்திரமே முக்கிய நோக்கமாக இருந்ததால் அமைப்பும் அதனது ஒற்றுமையைப் பராமரிக்க முடிந்தது.

ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு கருத்தோட்டங்கள் பலவாக, வேறுபாடுகள் ஏற்படத் தொடங்கின. வெளியேறிய கம்யூனிஸ்டுகள் ஷ்ராமிக் மகிளா சமிதி (உழைக்கும் பெண்கள் குழு)வை அமைத்தது ஒரு முக்கியமான நிகழ்வு.

முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று ‘பெண்கள் விடுதலைக்கான இயக்கங்களின் ஒருங்கிணைப்பு குழு’ (ஸ்திரீ முக்தி அந்தோலன் சம்பர்க் சமிதி) அமைக்கப்பட்டது. 1970களில் மாலினி துல்புலே, சாயா தாதர், லீலா போஸ்லே, குமுத் போர், சுலபா பிரம்மி, சவுதாமணி ராவ், நிர்மலா சாத்தே முதலானவர்கள் முன்னெடுப்பில் இந்த அமைப்பு அமைக்கப்பட்டது. இந்த ஒருங்கிணைப்புக் குழு, பங்கேற்பாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்ட இரண்டு நாள் பயிற்சி பட்டறையைப் பூனாவில் நடத்தியது. இந்தப் பயிற்சி பட்டறையின்போது பெண் கல்வியாளர்கள் முதல் வயலில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் வரை மற்றும் பெண் உழைப்பாளர்கள் அடங்கிய குழுக்கள் பெண்கள் பிரச்சனைகளை விவாதித்தன. மும்பை, பூனா போன்ற பெரிய நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறப் பகுதிகளிலும்கூட பெண்களின் அமைப்புகள் அமைக்கப்பட்டன.

இந்தச் சமிதி பால் விநியோகம் செய்ய, சிறு குழந்தைகளுக்கான பள்ளிகள், எழுத்தறிவு வகுப்புகள், ரேஷன் பொருட்களை ஏற்பாடு செய்தல் முதலியவற்றுக்கான மையங்களை அமைத்ததுடன் அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. இந்தப் பெண்களின் குழு ‘இந்திய மாதர் தேசியச் சம்மேளன’த்துடன் (NFIW) இணைப்புப் பெற்றது. மாலினி’தாய் துல்புலே மற்றும் ரோசா தேஷ்பாண்டே இருவரும் பொதுச்செயலாளர்கள் ஆக்கப்பட்டனர்.

1964 மார்ச் 9ல்  பம்பாய் சட்டமன்றம் முன்பு 15ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் முக்கிய பிரச்சனை, தொழிற்சாலையில் பணியாற்றும் வரை பெண்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற முன்நிபந்தனையை எதிர்ப்பது. திருமணத்திற்கு எதிரான இந்த நிபந்தனை பரவலாக எதிர்க்கப்பட்டது. இந்த அமைப்பு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கையெழுத்துக்களைத் திரட்டி சட்டமன்றத்திற்குச் சமர்ப்பித்தது.

பெண் தொழிலாளர்கள் நிர்பந்தத்ததில் அரசு, பெண் தொழிலாளர்கள் திருமணம் குறித்த முன்மொழிவைத் திரும்பப் பெற்றது.

1965 மற்றும் 1973ல் சமிதியின் பிரம்மாண்டமான மாநாடுகள் நடத்தப்பட்டன.

சம்பர்க் சமிதி (ஒருங்கிணைப்புக் குழு) அமைக்கப்பட்டது மற்றும் மகாராஷ்டிராவில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டதன் மூலம் பெண்களின் இயக்கத்தை ஊக்கம் பெறச் செய்தது. அது முறையான கூட்டங்கள், கருத்துப் பரிமாற்றம், மார்ச் 8ல் பெண்கள் தின விழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளைக் கூட்டாக அமைத்து நடத்தியது, பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளைக் கூட்டாக மேலே எடுத்துச் சென்றது. 1987-ல் அரசு ‘பெண்களுக்கான தேசிய நெடுநோக்கு திட்ட’த்தைத் தயாரித்தது. பெண்களின் ஒருங்கிணைப்புக் குழு பெண்களுக்கான தினக்கூலி, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பக் கல்வி தொடர்பான சில முக்கிய  சிபாரிசுகளைச்  செய்தது. 1990ல் இந்த அமைப்புப் பெண்கள் இயக்கத்தின் அறிக்கை (மெனிபெஸ்டோ) ஒன்றையும் பிரசுரித்தது

‘டப்பா-பாட்லிவாலி’ பெண்கள் இயக்கம்

1960 –70களில் சமிதி ‘டப்பா பாட்லிவாலி’ என்ற தனித்துவமான இயக்கத்தை முன்னின்று நடத்தியது (‘டப்பா பாட்லிவாலி’ என்பதன் பொருள் பழைய பாட்டில்கள், பெட்டிகள் மற்றும் பாத்திரங்களை விற்கும் பெண்கள்). அந்த இயக்கத்தில் மாலினி’தாய் தீவிரமாக ஈடுபட்டார். ஏழைப் பெண்கள் வழக்கமாகக் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றி வந்து பழைய பாத்திரங்கள் மற்றும் பிற பொருட்களை வாங்குவர். பம்பாயில் தலையில் கூடையுடன் செல்லும் இத்தகைய பெண்கள் ஒரு சாதாரண காட்சி. இப்படி அவர்கள் வாங்கிச் சேகரித்த பொருட்களைக் கொண்டுவரும் அதற்கான இடம்தான் டப்பா-பாட்லிவாலா பஜார். அந்த இடத்தை ஒவ்வொரு ஆண்டும் கார்ப்பரேஷன் காண்ட்ராக்ட்க்கு ஏலம் விடும்.

அவர்கள் அந்த இடத்திற்குப் பல முறை (‘பெரீஸ், ‘pheris’) பழைய பொருட்களைச் சேகரிக்கவோ அல்லது வாங்கவோ திரும்பத் திரும்ப  வரவேண்டி இருக்கும். ஒவ்வொரு முறையும் அவர்கள் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த வேலை அவர்களுக்கு ஒரு சிறிய லாபத்தை மட்டுமே தந்தது. 

அது டப்பா-பாட்லிவாலிகள் உட்காருவதற்கான ஒரு இடம் அல்லது அத்தகைய மைதானம். அதற்கு அவர்கள் கட்ட வேண்டிய வாடகை அவர்களுக்கு அதிகமாகவே இருந்தது. எனவே வாடகையைக் குறைக்க அவர்கள் கோரிக்கை எழுப்பினர்.

அதற்காக அவர்கள் எட்டணாவில் இருந்து இரண்டு ரூபாய் வரை செலுத்த வேண்டி இருந்தது. அது தவிர அமரும் இடம் பொருத்தமற்றதாகவும் அழுக்கும் மற்றும் வெயில் மழையிலிருந்து பாதுகாக்க மேற்கூரை இல்லாமலும் இருந்தது. இதற்காகச் சமிதி பிரம்மாண்டமான இயக்கத்தைத் தொடங்க அதன் விளைவாய் ஆறு பைசா வாடகையில் நான்குக்கு நான்கு என்ற அமரும் இடம் கிடைத்தது மட்டுமின்றி, 6 பைசா வாடகைக்கு ரசீதும் தரப்பட்டது. இது ஷ்ராமிக் மகிளா சமிதிக்கு (உழைக்கும் பெண்கள் அசோசியேனுக்கு) மாபெரும் வெற்றி.

மாலினிபாய், சாந்தாபாய், மால்டிபாய் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் வடக்கையைக் குறைக்கவும் மற்றும் சாதகமான பணிச் சூழலை ஏற்படுத்தவும் டப்பா பாட்லிவாலிகளை ஒன்று திரட்ட முன்கையெடுத்தனர். இதன் விளைவாய் உழைக்கும் பெண்கள் ஒரு நாளைக்குச் சுமார் இரண்டு ரூபாய் சேமிக்க முடிந்தது, பெரும் ஆறுதலாகவும் நிம்மதியாகவும் இருந்தது. ஒரு நாளைக்கு ஒவ்வொரு முறை நுழையும் போதும் வாடகை செலுத்தும் முறை நிறுத்தப்பட்டு ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே வாடகை செலுத்தினால் போதும் என்று மாற்றப்பட்டது.

தொழிற்சங்கப் போராட்டங்கள் 

ஏஐடியுசி அமைப்பின் கீழ் இணைக்கப்பட்டிருந்த பல்வேறு தொழிற்சங்கங்களிலும் மாலினி’தாய் தீவிரமாகப் பணியாற்றினார். அவர் மருத்துவமனை தொழிலாளர்கள் சங்கத்தை அமைக்க உதவினார். பூனாவில் செவிலியர்கள் மற்றும் பல்வேறு ஊழியர்கள் மத்தியிலும், மும்பை கே இ எம் ஹாஸ்பிடல், இன்ஜினியரிங் தொழிலாளர்கள், கெமிக்கல் தொழிலாளர்கள் சங்கங்களிலும் மற்றவற்றிலும் அவர் தீவிரமாகப் பணியாற்றினார்.

கோவா சத்தியாகிரகம்

1955ல் நடைபெற்ற கோவா சத்தியாகிரகத்தில் மாலினி’தாய் முன்னணிப் பங்கு வகித்தார். நானாசாஹேப்  கோர், சேனாபதி பாபெட் மற்றும் பிறர் தலைமையில் பங்கேற்ற சத்யாகிரகிகளைப் போர்த்துக்கீசிய காவலர்கள் பிடித்துப்போய் காடுகளில் விட்டனர். வேறு பலரும் (கோவா) அகுடா கோட்டை சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

ராஜாராம் பாட்டில் தலைமையிலான அடுத்த குழுவில் மாலினி’தாய் இருந்தார். பலரும் அவரைத் தடுக்க முயன்று போர்த்துக்கீசிய காவலர்கள் மற்றும் இராணுவத்தின் முரட்டுத்தனத்தைக் கூறி எச்சரித்தனர். ஆனால் மாலினி’தாய் பின்வாங்கவில்லை. “அடி உதைகளையும் சித்திரவதைகளையும் ஆண்கள் சந்திக்கிறார்கள். நானும் அதையே சந்திப்பேன். அதில் என்ன பிரச்சனை?” என பதிலடி கொடுத்தார்

வீரப் பெண்மணியான அவரது மாமியார் அவரைப் பெரிதும் உற்சாகப்படுத்தினார். “நீ போவது என்று முடிவு செய்து விட்டாய்; உன் முடிவில் நீ உறுதியாக இரு. ஒருமுறை முடிவு செய்த பின் உன் முடிவை மாற்றாதே” என்றார். அவரது வார்த்தைகள் அபாரமான தார்மீக ஆதரவாக இருந்தது. கலந்து கொள்வது என மாலினி உறுதியாக முடிவு  செய்தார்.

அவரது குழு அரோண்டா வழியாகக் கடற்படை மாலுமிகள் உதவியுடன் போர்த்துக்கீசிய எல்லையை அடைந்தது. அரசு கட்டிடத்தின் மீது மூவர்ணக் கொடியை ஏற்ற ரகுநாத் சாவன், சதாசிவ கார்க்கனீஸ் மற்றும் சிலர் மெல்ல நழுவினர். போர்த்துக்கீசியர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி பெட்னே என்பவர் மூவர்ண கொடியை வெற்றிகரமாக ஏற்றினார்.

கைது செய்யப்பட்ட சத்தியாக்கிரகிகள் சிறிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டு மோசமாக அடிக்கப்பட்டனர். மாலினி’தாய் அடிகளிலிருந்து தப்பினாலும் அவரது கால் ஓர் இராணுவ வீரரின் பூட்ஸ்களால் நசுக்கப்பட்டது. பின்னர் வேறு சில தனி நிகழ்வுகளில் போர்த்துக்கீசிய வீரர்களைச் சந்தித்தபோது அடிபட்டார். போர்த்துக்கீசிய வீரர்களின் கமாண்டர் மான்டேரோ மாலினியின் கீழ்ப்படிதலற்ற பதில்களால் சீற்றமடைந்தார். “ஆம் நான் மீண்டும் வருவேன்!” என்றார் மாலினி’தாய். பின்னர் அவர்கள் ஒரு லாரியில் ஏற்றப்பட்டு அடை மழையில் காடுகளில் விடப்பட்டனர்.

பின்னர் மாலினி’தாய் கோவா சத்தியாகிரகம் குறித்துப் பல்வேறு நிகழ்வுகளை விவரித்து எண்ணற்ற கட்டுரைகள் எழுதினார்

இந்திரா சமூகச் சமையற்கூடம்

இந்திரா சமூகச் சமையற்கூடம் என்ற பெயரில் ஒரு நல்ல மலிவு உணவு திட்டம், 10 உணவு வழங்கும் இடங்களுடன் ஓர் அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது. உழைக்கும் பெண் உறுப்பினர்கள் மலிவு விலையில் உணவு, மருந்துகள், விலை இல்லா புத்தகங்கள் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை வழக்கமாகப் பெற்றனர். பெண்கள் அமைப்பாகத் திரண்டனர் மற்றும் சில கோரிக்கைகளை அடையவும் செய்தனர். ஏறத்தாழ எல்லா தொழிலாளர்களும், தங்கள் குடும்பங்களால் ஒதுக்கப்பட்டவர்கள் உட்பட, ஏழைப் பெண்கள் ஆவர்.

ஆனால் பின்னர் அந்த உரிமையாளர் நிதியை ஏராளமாக வாரிச் சுருட்டத் தொடங்கினார் மற்றும் தொழிலாளர்களை ஆட்குறைப்புச் செய்தார் அல்லது தொழிலாளர்களுக்குத் தொந்தரவுகளை ஏற்படுத்தினார். அதை அடுத்து மாலினிபாய் மற்றும் மற்றவர்கள் அவர்களின் பிரச்சனையை எடுத்து நீண்ட போராட்டங்களை நடத்தினர்.

வீர் அணைக்கட்டுக்கான போராட்டம்

அந்த அணைக்கட்டு பூனா –சத்தாரா சாலையில் நீர் நதியின் மீது வீர் கிராமத்திற்கு அருகில் அமைந்திருந்தது. அரசு 1956-ல் அணையின் மட்டத்தை உயர்த்த முடிவு செய்தது; இதன் விளைவாய்ப் பல்வேறு கிராமங்கள் மூழ்கும் நிலை வரும்.1956 ஆகஸ்டில் பாதிக்கப்பட்ட மக்களின் மாநாடு ஒன்று முதலில் மக்களுக்கு மறுவாழ்வு பின்னர் அணையின் மட்டத்தை உயர்த்துவது என்று கோரியது. எல்லா கட்சிகளாலும் இந்தக் கோரிக்கை ஆதரிக்கப்பட்டது. அவர்கள் (அணைக்கட்டிற்கு) நிலத்திற்குப் பதிலாக நிலம் கோரினர். இப்போராட்டத்தில் மாலினி’தாய் மற்றும் வசந்தராவ் முன்னணிப் பங்கு வகித்தனர். கிராமத்தவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறு ஏக்கர்கள் நிலம் கிடைத்தது.

வீட்டு வேலை செய்யும் பெண்களின் அமைப்பு 

குமுத் போர் மற்றும் பிறருடன் இணைந்து மாலினி’தாய், வீட்டு வேலை செய்யும் பெண்களின் சேவை நிலைமைகளை மேம்படுத்த இந்த அமைப்பை நிறுவினார். இந்த அமைப்பு 1987 ஜனவரி 9ல் ஊதிய கட்டமைப்பு, போனஸ், கிராஜுட்டியை முறைப்படுத்தல் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கை பட்டியலை வழங்கியது

ஏஐசிபி கட்சியில் இணைதல் 

பின்னர் மாலினி’தாய் துல்புலே அவரது நம்பிக்கையின் காரணமாக அகில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் (AICP) சேர்ந்தார் –அதே நேரத்தில் அவரது கணவர் வசந்தராவ் துல்புலே சிபிஐ கட்சியில் நீடித்தார். இறுதி நாட்களில் உடல் பலகீனம் மற்றும் சிபிஐயில் இருந்து விலகி இருந்தது காரணமாக மாலினி’தாய் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார் –இருந்த போதும் அவர் ஏஐடியூசி தொழிற்சங்கத்திலும் வேறு சில நடவடிக்கைகளிலும் தொடர்ந்து நீடித்தார்.

மாலினி’தாய் துன்புலே 2009 டிசம்பர் 14ல் இயற்கை எய்தினார்

அவரது எழுத்துப் பணிகள் 

மார்க்சியத்தின் அடிப்படை நூல்கள் உட்பட மாலினி’தாய் ஏராளமாகப் படிப்பவர். அதே நேரத்தில் அவர் பல்வேறு மார்க்சிய நூல்களை எழுதவும் மொழிபெயர்க்கவும் கூட செய்தார். அவர் கட்சிக்கும் மாதர் சம்மேளனத்திற்கும் மற்றும் பிற பெண்கள் அமைப்பிற்கும் பல்வேறு அறிக்கைகள், பிரசுரங்களை எழுதுவது வழக்கம். மற்ற படைப்புகள் தவிர குஜராத்தி மற்றும் ஆங்கிலத்தில் இருந்து பல்வேறு நூல்களையும் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். ஸ்திரீ, கிர்லோஸ்கர் உள்ளிட்ட பல மராத்திய இதழ்களுக்கும் அவர் ஏராளமாக எழுதினார். பூனாவில் தொழிலாளர்கள் இயக்க வரலாறு குறித்து அவர் எழுதினார். மேலும் அவர் தனது கணவர் வசந்தராவ் துல்புலே வாழ்க்கை மற்றும் பணிகள் குறித்தும் எழுதினார். பூனா அட்வான்ஸ் ஆய்வுகள் நிறுவனத்தில் அவர் கற்பித்தார். மார்க்ஸ் எழுதிய “லூயிஸ் (நெப்போலியன்) போனபார்ட்டின் பதினெட்டாவது ப்ரூமைர்” நூலை அவர் மராத்தியில் மொழிபெயர்த்தார்.

மாலினி’தாய் நினைவைப் போற்றுவோம்!

--நன்றி : –நியூஏஜ் (மார்ச் 29 –ஏப்ரல் 4) 
–தமிழில் நீலகண்டன், 
என் எஃப் டி இ, கடலூர்
 
பின் இணைப்பு :

     (லூயிஸ் நெப்போலியனின் பதினெட்டாவது ப்ரூமெய்ர் --  என்பது, லூயிஸ் நெப்போலியன் போனபார்ட் (நெப்போலியன் III) 1851-ல் நிகழ்த்திய ஆட்சிக் கவிழ்ப்பை விவரிக்கும் காரல் மார்க்ஸின் புகழ்பெற்ற அரசியல் பகுப்பாய்வு நூல். 1799-ல் முதலாம் நெப்போலியனின் அதிகாரக் கைப்பற்றலை (18 Brumaire, பிரெஞ்சு ரிபப்ளிகன் நாட்காட்டின்படி ப்ரூமெய்ர் மாதத்தின் 18வது நாள்) நினைவுபடுத்தும் வகையில், இந்த நிகழ்வை மார்க்ஸ் "வரலாறு முதலில் சோகமாக நிகழ்ந்த பின், கேலிக்குரிய நகைச்சுவையாக மீண்டும் நிகழ்கிறது" என்று விவரித்தார் –இணையத்திலிருந்து கூடுதல் இணைப்பு

 

 .

 

 

 

 

Friday, 1 May 2026

போர் மற்றும் சமாதானத்திற்கான போராட்டத்தில் லெனின் கருத்துக்களின் பொருத்தப்பாடு

 


போர் மற்றும் சமாதானத்திற்கான போராட்டத்தில் 

லெனின் கருத்துக்களின் பொருத்தப்பாடு





    –பல்லப் சென்குப்தா

தேசியச் செயலாளர், சிபிஐ

ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 22-ல் உலகம் முழுவதும் புரட்சியாளர்களும் கம்யூனிஸ்டுகளும் ஏகாதிபத்தியம் குறித்த மாபெரும் கோட்பாட்டாளரும், போல்ஷ்விக் புரட்சியின் தலைவரும், உலகின் முதலாவது தொழிலாளர்களின் அரசை நிறுவியவருமான விளாடிமீர் இலீச் லெனின் பிறந்தநாளைக் கொண்டாடுவர். கம்யூனிஸ்டுகளுக்கு லெனின் வாழ்வும் பணியும் வெறும் வரலாற்றுக் கலைப் பொருட்கள் அல்ல; அவை தற்கால உலகளாவிய இயங்கியலைப் புரிந்து கொள்வதற்கான; மற்றும் சமாதானம், ஜனநாயகம் மற்றும் சோசலிசத்திற்கான போராட்டத்தை வடிவமைப்பதற்கான வாழும் வழிகாட்டியாக அமைந்தவை. 

பேரழிவை ஏற்படுத்தும் போர்கள், அதிகரிக்கும் இராணுவமயம் மற்றும் ஏகாதிபத்தியத்திற்குள் தீவிரமாக்கும் மோதல்கள் இவற்றால் அடையாளப்படுத்தப்படும் இன்றைய சர்வதேசச் சூழலில் லெனின் கருத்துக்களின் பொருத்தப்பாடு மேலும் கூர்மையாகவும் எப்போதையும்விட இப்போது அவசரத் தேவை மிகுந்ததாகவும் விளங்குகிறது 

மோதல் மற்றும் ஏகாதிபத்திய போட்டி விரோதம் நிறைந்த உலகு

இன்றைய உலகம் பல்வேறு ஆயுத மோதல்கள் மற்றும் பூகோள-அரசியல் பதற்றங்களில் மூழ்கி உள்ளது. உக்ரைனில் நீண்ட காலமாக நடக்கும் போர், காசா மீது இஸ்ரேலின் இன அழிப்பு தாக்குதல், ஈரானுக்கு எதிராக நேரடியாக அமெரிக்கா இஸ்ரேல் கூட்டு இராணுவ மோதல், மேற்காசியாவில் பரவும் நிலையற்ற தன்மை, தென் சீனக் கடல் மற்றும் கொரியன் தீபகற்பத்தில் இராணுவப் பதற்றங்கள் அதிகரிப்பு என இவையெல்லாம் உலக சமாதானத்தை எளிதில் பாதிக்கக்கூடிய தன்மைக்குச் சான்று பகர்கின்றன.

இந்த மோதல்கள் தனித்ததொரு விபத்துக்கள் அல்ல; அல்லது இனவெறுப்பு, மத வெறுப்பு வெளிப்பாடுகளும் அல்ல. மாறாக சந்தைகளை, எரிசக்தி பாதைகளை, உற்பத்திக்கான மூலப் பொருட்களை, கேத்திரிய முக்கியத்துவம் உள்ள செல்வாக்கை மற்றும் பூகோள-அரசியல் மேலாதிக்கத்தைக் கைப்பற்ற ஏகபோக மூலதனங்களுக்குள் நடக்கும் உலகளாவிய போட்டிகள் அவை.

ஒரு நூற்றாண்டுக்கும் கூடுதலாக முன்பு தனது மாபெரும் படைப்பாக்கமான “ஏகாதிபத்தியம்– முதலாளித்துவத்தின் ஆக உச்சகட்டம்” என்ற நூலில் லெனின் இத்தகைய காட்சிநிலைகளுக்கு அறிவியல் பூர்வ விளக்கத்தைத் தந்துள்ளார்.

ஏகாதிபத்திய முதலாளித்துவத்தின் இயல்பான உற்பத்தி பொருளே நவீன போர்கள் என்பதை அவர் எடுத்துக் காட்டினார். குறிப்பாக உற்பத்தி சக்திகள் மற்றும் தேசிய எல்லைகளுக்கு இடையில் முரண்பாடுகள், மூலதன ஏற்றுமதி, காலனியச் சக்திகளுக்கு மத்தியில் உலகம் பிரிக்கப்படுதல் மற்றும் சமச்சீரற்ற முதலாளித்துவ வளர்ச்சி பிரச்சனைகள் தீவிரமாதல் என்பன அதன் விளைபொருளே என்பதை அவர் விளக்கினார். 

லெனின் கருத்துப்படி –தொழிலாளி வர்க்கமும் ஒடுக்கப்பட்ட மக்களும் தலையிட்டு போர்களைப் பெற்றெடுத்து உற்பத்தி செய்யும் முறையைத் தூக்கி எறியாவிடில்– ஏகாதிபத்தியம் தவிர்க்க முடியாதபடி, மனித குலத்தைப் பேரழிவுடன் மிரட்டும் தங்களுக்கு இடையிலான மோதல்களை உற்பத்தி செய்யும்.

தற்போதைய சர்வதேசச் சூழல் மிக வலிமையாக லெனினின் பகுப்பாய்வை எதிரொலிக்கிறது. நேட்டோ போன்ற இராணுவக் கூட்டணிகள் கிழக்கு நோக்கி ஆசியாவுக்குள் விரிவாகின்றன. உலகளாவிய இராணுவச் செலவுகள் சாதனை உச்சத்தைத் தொட்டு ஆண்டுக்கு 2.4 ட்ரில்லியன் அமெரிக்க டாலர் தொகையைத் தாண்டுகிறது. அணு ஆயுதங்கள் நவீனமாக்கல் திட்டங்கள் வேகம் எடுக்கின்றன. பல லட்சக் கணக்கில் மக்கள் ஏழ்மை, கட்டாயப்படுத்தப்பட்ட இடப்பெயர்வு, பசி மற்றும் சூழலியல் சீரழிவால் துன்பப்படும்போது ஆயுதங்களை உற்பத்தி செய்யும் தொழிற்துறை அதீத லாபங்களை அறுவடை செய்கிறது. ‘இராணுவமயமாக்கல் சரியான பாதையில் இருந்து விலகிச் செல்லும் பிழற்வு அல்ல, மாறாக ஏகாதிபத்தியக் கழுத்தறுக்கும் போட்டியின் ஒரு தேவை’ என்ற மாமேதை லெனினின் உள்ளொளிப் பார்வை, இன்றும் அதிர்ச்சியூட்டும் வகையில் மிகச் சரியானதாக விளங்குகிறது

சமாதானத்திற்கான லெனின் பார்வை: (ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டத்தில் சமாதானத்திற்கான ஆணை என்பதிலிருந்து)

சமாதானத்திற்கான லெனின் பற்றுறுதி வெறும் கருத்தியல் கோட்பாடு சார்ந்ததும் அல்ல; முழுவதும் அமைதி வழிபட்டதும் அல்ல (neither abstract nor pacifist). அது வர்க்கப் பகுப்பாய்வு மற்றும் புரட்சிகர நடைமுறையில் வேர்கொண்டது. 1917 நவம்பர் 8ல், நவம்பர் புரட்சி அதிகாரத்தைக் கைப்பற்றிய மறுநாளே சோவியத் அரசாங்கம், லெனின் தானே வரைந்த வரலாற்றுச் சிறப்புமிக்க சமாதானத்திற்கான ஆணையை (historic Decree on Peace) வெளியிட்டது

இந்த ஆவணம் நாடுகளை ஆக்கிரமித்து இணைத்துக் கொள்வதையும் (தோல்வி அடைந்த நாடுகள் மீது) ஈட்டுத்தொகை கோருவதையும் கண்டித்தது; முதலாவது உலகப் போரில் உடனடி போர் நிறுத்தத்தத்திற்கு அறைகூவல் விடுத்தது. சண்டையில் ஈடுபட்ட அனைத்து நாடுகளின் தொழிலாளர்கள் மற்றும் மக்களுக்கு அவர்களின் சொந்த ஏகாதிபத்திய அரசுகளுக்கு எதிராக எழுவதற்கு வேண்டுகோள் விடுத்தது.

லாபத்தை அதிகபட்சமாக்குவது, பிராந்தியப் போட்டி மற்றும் தொடர்ச்சியான நெருக்கடி அச்சுறுத்தலால் செலுத்தப்படும் முறையான முதலாளித்துவத்தின் கீழ் அமைதியை நிரந்தரமாக அடைய முடியாது என லெனின் உணர்ந்தார். “மூலதனத்தின் அதிகாரத்தைத் தூக்கி எறியாமல் அமைதி சாத்தியமில்லை” என்று அவர் வாதிட்டார். எனவே அமைதிக்கான போராட்டம், கட்டாயம் பிரிக்க முடியாதபடி ஏகாதிபத்தியம், சுரண்டல் மற்றும் சமூக அநீதிக்கு எதிரான போராட்டத்துடன் தொடர்புபடுத்தப்- பட்டுள்ளது. லெனினுக்கு உண்மையான அமைதி என்பது சாதாரணமாகப் போர் இல்லாமல் இருப்பது அல்ல; மாறாக சோசலிசத்தால் மட்டுமே அத்தகைய நிலைமை சாத்தியம் என்பதே.

அதே நேரத்தில் லெனின் சர்வதேசத் தொழிலாளர் வர்க்க ஒற்றுமையை முழுமையான தேவை என வலியுறுத்தினார். ஏகாதிபத்தியம் திட்டமிட்ட முறையில் தேசியவாதம், பேரினவாதம், இனம், இராணுவப் பிரச்சாரம் மூலம் தொழிலாளர்களைப் பிரிக்க முயற்சி செய்யும் என அவர் புரிந்து கொண்டார். இதற்கு எதிராக அவர், “தொழிலாளர்களுக்குத் தேசம் இல்லை”என்ற கோட்பாட்டை முன் வைத்தார். தேசிய எல்லைகளைத் தாண்டி ஒடுக்கப்பட்டோர் மத்தியில் ஒருமைப்பாடு ஒன்றே ஏகாதிபத்தியப் போருக்கு எதிராக நிற்கவல்ல திறன்மிக்க ஆற்றல்.

லெனினியத்தின் சமகாலப் பொருத்தப்பாடு 

இன்றைய உலகமயமான முதலாளித்துவத்தில் லெனின் அடையாளப்படுத்திய முரண்பாடுகள் நீடிப்பது மட்டுமல்ல, அவை தீவிரமடைந்தும் உள்ளன. பொருளாதாரச் சமத்துவமின்மை கோரமான எல்லைகளை அடைந்துள்ளது: 100 கோடிகள் கணக்கில் சொத்துடைய உலகின் முதல் 10 அதி பணக்காரர்கள் மனித குலத்தின் கீழ்  மட்டத்தில் உள்ள 40 சதவீத மக்கள் வைத்துள்ள மொத்த செல்வத்தை விட கூடுதலாக வைத்துள்ளனர். பன்னாட்டு கார்ப்பரேஷன்களும் நிதி ஏகபோகங்களும் அரசுகள் மீதும், ஐஎம்எப் மற்றும் உலக வங்கி போன்ற சர்வதேச நிறுவனங்கள் மற்றும் உலக ஊடகங்கள் மீதும் அளவுக்கு மீறிய கட்டுப்பாட்டைச் செலுத்துகின்றன. சாதாரண ஜனநாயகங்களிலும் கூட ஜனநாயக உரிமைகள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்படும்போது, தொழிலாளி வர்க்க அமைப்பைப் பலவீனப்படுத்த தீவிர வலதுசாரி மற்றும் பாசிச சக்திகளோ அவர்களின் பொருளாதாரப் பாதுகாப்பற்ற தன்மையைப் பயன்படுத்திச் சுரண்டுகின்றன. சர்வதேச உறவுகள் இராணுவமயப்படுத்தப்படுவது அதிகரிப்பது குறிப்பாகக் கவலைக்குரிய வகையில் அச்சமூட்டுவதாக உள்ளது. –பருவநிலை தாறுமாறாதல், பெருந்தொற்றை எதிர்கொள்ளும் தயார் நிலை, பெருந்திரள் ஏழ்மை, அகதிகள் நெருக்கடிகள் –போன்ற உடனடி உலக சவால்களுக்குத் தீர்வு காண்பதற்குப்  பதில், அரசுகள் மாபெரும் நிதியாதாரங்களை ஆயுத உற்பத்திக்கும் இராணுவ விரிவாக்கத்திற்கும்  மடைமாற்றி விடுகின்றன. சீனா மற்றும் ரஷ்யாவைச் சுற்றி வளைக்க அமெரிக்க தலைமையிலான முயற்சி, உக்ரைனில் ரஷ்யாவுக்கு எதிரான நேட்டோ அமைப்பின் போலியான போர், ஜெர்மனியையும் ஜப்பானையும் மீண்டும் இராணுவமயமாக்கல் என இவையெல்லாம் ‘ஏகாதிபத்தியம் போருக்கு இட்டுச் செல்லும்’ என்ற லெனின் கோட்பாட்டை உறுதிப்படுத்துகின்றன.

இந்த வளர்ச்சி போக்குகள் எதிர்பாரா விபத்துகளோ அல்லது பகுத்தறிவு தர்க்கத்திற்குப் புறம்பானதோ அல்ல என்பதை புரிந்து கொள்ள லெனினின் –இயங்கியல் பொருள் முதல் வாதம்– முறை நமக்கு உதவுகிறது. அவை முதலாளித்துவக் கட்டமைப்பு நெருக்கடியின் வெளிப்பாடுகள்: அளவுக்கு அதிகமான மூலதனக் குவிப்பு, லாப விகிதங்கள் வீழ்ச்சி, ஏகாதிபத்தியத்திற்குள் தீவிரமாகும் போட்டிகள், சுரண்டுவதற்குப் புதிய வேட்டைக் காடுகள் தேடல். எனவே போர்களுக்குச் “சர்வாதிகாரிகள்”, “தீவிரவாதிகள்” அல்லது “நாகரிகங்களின் மோதல்” மீது பழி போடும் அதிகாரப்பூர்வ  விவரிப்புகளைக் கம்யூனிஸ்டுகள் நிராகரிக்க வேண்டும். அதற்குப் பதிலாகக் கம்யூனிஸ்டுகள் மோதல்களின் ஆணிவேர் காரணங்களான பூகோள-அரசியல்  மற்றும் பொருளாதரத்தை அம்பலப்படுத்த வேண்டும்

அமைதிக்கான போராட்டத்தில் கம்யூனிஸ்டுகளின் பங்கு 

இவ்வாறு லெனின் பிறந்த நாள் விழாவைக் கொண்டாடுவது சமாதானம் மற்றும் சர்வதேச ஒருமைப்பாட்டிற்குக் கம்யூனிஸ்டுகளின் பற்றுறுதியைப் புதுப்பிக்கும் தருணம் ஆகும். இதற்குப் பல்வேறு முனைகளில் உறுதியான அரசியல் நடவடிக்கைகள் தேவைப்படுகிறது.

முதலில் கம்யூனிஸ்டுகளும் தொழிலாளர் கட்சிகளும் போர், இராணுவமயமாக்கல் மற்றும் அணு ஆயுதங்களுக்கு எதிராகப் பொதுமக்களின் கருத்தைத் தீவிரமாகத் திரட்ட வேண்டும். ராஜ்ஜிய உறவு தீர்வுகள், அதிகரிக்கும் இராணுவப் பதற்றங்களுக்கு எதிர்ப்பு மற்றும் அபாயகரமான உலக ஆயுதப் போட்டியை நிராகரிப்பது ஆகியவற்றை கோருவதற்கு அவர்கள் தொழிற்சங்கங்கள், சமாதான இயக்கங்கள், இளைஞர் அமைப்புகள், போருக்கு எதிரான  அறிஞர்கள் மற்றும் ஜனநாயகச் சக்திகளை ஒன்றாகக் கட்டி பரந்துபட்ட இணைந்த முன்னணி மேடை அமைப்புகளைக் கட்ட வேண்டும். நேட்டோ (NATO), ஆஸ்திரேலியா, பிரிட்டன் அமெரிக்கா கூட்டணி (AUKUS) மற்றும் அமெரிக்கா, இந்தியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியா கூட்டணியான  குவாட் (QUAD) போன்ற இராணுவக் கூட்டணிகள் (பாதுகாப்புக்காக அல்லாமல்) எவ்வாறு ஏகாதிபத்திய மேலாண்மைக்கான கருவிகளாக உள்ளன என்பதைக் கம்யூனிஸ்டுகள் கட்டாயம் அம்பலப்படுத்த வேண்டும்.

இரண்டாவது, இந்தியச் சூழ்நிலையில் நரேந்திர மோடி அரசின் அதிகரிக்கும் ஏகாதிபத்திய ஆதரவு  நிலைபாடுகளைக் கம்யூனிஸ்டுகள் அம்பலப்படுத்த வேண்டும்.

அமெரிக்க–இஸ்ரேலிய அச்சுடன் இந்தியாவின் கேந்திரியமானக் கூட்டணி, (இந்தோ பசிபிக் பிராந்தியத்தில் சீனாவின் செல்வாக்கைக் கட்டுப்படுத்த ஏற்படுத்தப்பட்ட QUAD) ‘நாற்கரப் பாதுகாப்புப் பேச்சுவார்த்தை’ அமைப்பில் இந்தியாவின் பங்கேற்பு, காசாவில் நடக்கும் இனப்படுகொலையைக் கண்டிக்க அதன் தயக்கம் மற்றும் மேற்கத்திய இராணுவக் கூட்டுகளின்பால் அதன் நெருக்கம் காட்டும் முயற்சி என இவை எல்லாம், கூட்டு சேரா கொள்கை மற்றும் காலனிய எதிர்ப்பு ஒருமைப்பாடு என்ற இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க  கொள்கையில் இருந்து விலகிச் செல்லும் அபாயகரமான போக்கை வெளிப்படுத்துகின்றன. 

சிபிஐ, சிபிஐ(எம்), சிபிஐ(எம்எல்) விடுதலை உள்ளிட்ட இந்தியாவின் கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் பிற இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள் இந்தக் கொள்கை விலகலுக்கு எதிராகத் தொடர்ச்சியான, கொள்கை சார்ந்த குரலை எழுப்ப வேண்டும். ஓர் ஏகாதிபத்திய முகாமுக்கு எதிராக மற்றொன்றுடன் கூட்டணி சேர்வதன் மூலமாக அல்லாமல், இடதுசாரிகள் ஏகாதிபத்திய சிக்கலான தொடர்புகளை எதிர்ப்பதன் மூலம் இந்தியாவின் இறையாண்மையைப் பாதுகாக்க வேண்டும்.

மூன்றாவது, முற்போக்கு சக்திகளிடையே சர்வதேசிய ஒருமைப்பாடு அவசரமாக வலிமைப்படுத்தப்பட வேண்டும். தீவிரப்படுத்தப்பட்ட பூகோள-அரசியல் அணி சேர்க்கை அமைப்பு-களின் சகாப்தத்தில் கம்யூனிஸ்ட் இயக்கம் உண்மையான ஏகாதிபத்திய எதிர்ப்பு அகிலத்தைக் கட்ட வேண்டும்– அந்தச் சர்வதேச அமைப்பு ஏகாதிபத்தியப் போட்டிகளில் ஒன்றுடன் சார்புநிலை எடுக்காமல் மாறாக அனைத்து ஏகாதிபத்திய போர்களையும் எதிர்க்கும் ஒன்றாக விளங்க வேண்டும்.. இதற்காகக் காமின்டன் அமைப்பின் போர் எதிர்ப்பு மாநாடுகளின்  உணர்வு புதுப்பிக்கப்பட வேண்டிய தேவையும்;  மற்றும் ஆசியா, ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மற்றும் ஐரோப்பாவில் உள்ள கம்யூனிஸ்ட்கள் மத்தியில் ஒத்துழைப்புக்கான புதிய மேடைகள் கட்டப்பட வேண்டிய தேவையும் உள்ளது.

நான்காவது, தேசிய இறையாண்மை, சமாதான சகவாழ்வு மற்றும் சர்வதேசச் சட்டங்களை மதிப்பது ஆகிய கொள்கைகளை –வெறும் கருத்தியல் நெறிகளாக அல்லாமல், ஏகாதிபத்திய ஆக்கிரமிப்புக்கு எதிரான ஆயுதங்களாக– கம்யூனிஸ்டுகள் பாதுகாக்க வேண்டும். இந்தக் கொள்கைகள் ஐநா சாசனத்தில் பொறிக்கப்பட்டுள்ளன; ஆனால் திட்டமிட்ட முறையில் சக்தி மிக்க அரசுகளால் மீறப்படுகின்றன: எனினும் இந்தக் கொள்கைகள் போர்களைத் தடுக்கவும் நாடுகளுக்கு மத்தியில் ஒத்துழைப்பைச் சாத்தியமாக்கவும் முக்கியமானவைகளாக நீடிக்கின்றன. அதே நேரத்தில் கம்யூனிஸ்டுகள் (பாலஸ்தீனம் போன்ற) உண்மையான தேசிய விடுதலைப் போராட்டங்கள் மற்றும் பூர்ஷ்வா அரசுகளின் இராணுவ பேராசைகள் இடையில் வேறுபாடுகளைப் பிரித்தறிய வேண்டும்

லெனின் மரபுகளைப் புதுப்பித்தல் 

அமைதி என்பது வெறும் போர்கள் இல்லாமல் இருப்பது அல்ல’ என லெனின் மரபு நமக்கு கற்றுத் தருகிறது. அது சமூக நீதி, சமத்துவம் மற்றும்  உழைக்கும் மக்களின் விடுதலையுடன் பிரிக்க முடியாதது. சாதாரண மக்கள் வர்க்க உணர்வுடன் ஒன்று திறளும்போது மற்றும் எல்லைகளைத் தாண்டி ஒன்றுபடும்போது, சமூகத்தை மாற்றும் சக்தி பெறுகிறார்கள் மற்றும் போர்களை உற்பத்தி செய்யும் முறையை ஒழிக்கிறார்கள் எனத் திரும்பத் திரும்பச் சொல்வதில் லெனின் ஒருபோதும் சோர்வடைந்ததில்லை.

இன்று மனித குலம் இருத்தல் சவால்களைச் சந்திக்கிறது: ஏகாதிபத்தியப் போர்கள் மட்டுமல்ல ஆனால் சூழலியல் சரிவு, ஆழமாகும் பொருளாதார நெருக்கடிகள் மற்றும் பாசிசம் மீண்டும் தலையெடுத்தல் ஆகிய  சவால்களைச் சந்திக்கிறது. இந்த இருள் சூழ்ந்த நிலையில் லெனின் பார்வை ஒளிவிளக்காகத் திகழ்கிறது. அவரது கருத்துக்கள், போர்களுக்கு எதிரான கொள்கை வழிபட்ட எதிர்ப்பு மற்றும் ஜனநாயக புத்தறிவு விழிப்புணர்வு மற்றும் சோசலிச எதிர்காலத்திற்கான  நேர்மறை போராட்டத்துடன் இணைக்க நம்மை வற்புறுத்துகிறது: அந்த எதிர்காலம் சுரண்டல், ஒடுக்குமுறை அல்லது ஏகாதிபத்திய வன்முறை இல்லாதது.

நாம் லெனின் பிறந்தநாளைக் கொண்டாடும்போது கம்யூனிஸ்டுகள் மற்றும் முற்போக்கு சக்திகள் தங்கள் புரட்சிகரப் பற்றுறுதியை மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும். சர்வதேச ஒருமைப்பாட்டை வலிமைப்படுத்துவது மற்றும் அமைதிக்காக மக்களைத் திரட்டுவதன் மூலம், மற்றும் ஏகாதிபத்தியம், முதலாளித்துவத்திற்கு எதிராகத் தளர்வின்றி போராடுவதன் மூலம் நாம் லெனினின் புரட்சிகர செய்தியை 21ம் நூற்றாண்டிற்கு முன்னோக்கி எடுத்துச் செல்ல முடியும்.

லெனினுக்குச் சிறந்த அஞ்சலி அவரை நினைவு கூர்வது மட்டுமல்ல, மாறாக செயல்பாடு அவருக்கான சிறந்த அஞ்சலி: போர் ஒடுக்குமுறை மற்றும் அநீதியிலிருந்து விடுதலை பெற்ற உலகைக் கட்டுவதற்கு ஊசலாட்டம் இல்லாத அர்ப்பணிப்புடன் கூடிய செயல்பாடு. 


செயல்படுவோம்! 

லெனின் புகழ் வாழ்க!

            மே தினம் வாழ்க! 


–நன்றி : நியூ ஏஜ் (ஏப். 26 –மே 2)

–தமிழில் :நீலகண்டன், 

 என் எஃப் டி இ,  கடலூர் 

  .   

 

 
 

Wednesday, 25 March 2026

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு -147 ஆர் நல்லகண்ணு –ஜனங்களின் மீட்பர், முனிவர் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு -147

ஆர் நல்லகண்ணு 

–ஜனங்களின்  மீட்பர், முனிவர் மற்றும் 
கம்யூனிஸ்ட் தலைவர்

அனில் ரஜீம்வாலே 

ஆர் நல்லகண்ணு அரிய தலைவர்களின் வகையைச் சேர்ந்தவர், மக்களால் தங்கள் மீட்பர் என்று கருதப்படுபவர், சுதந்திரப் போராட்ட வீரர், தமிழ்நாடு மாநில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் ஆக உயர்ந்த  தலைவர்களில் ஒருவர். அவரது வாழ்க்கை, கொந்தளிப்பான விடுதலைப் போராட்டத்திலிருந்து இந்திய விடுதலைக்குப் பிறகு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த முழுமையான 101 ஆண்டுகளை வாழ்ந்தவர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்ட 1925 டிசம்பர் 26ல், தூத்துக்குடிக்கு அருகில் தாமிரபரணி நதி வளைவின் வளமையான திருவைகுண்டத்தில் பிறந்தார். தந்தை ராமசாமி தேவர், தாயார் கருப்பாயி அம்மாள். அவர்களது குடும்பம் செழிப்பான விவசாயக் குடும்பம். நீதிமன்ற ஜூரியாகப் பணியாற்றிய அவரது தந்தை, அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் நீதிமன்றத்திற்குச் செல்லும்போது வண்டிக்கு முன்னே சைக்கிளில் ஒரு காவலர் செல்வது வழக்கம் எனக் கூறப்படுகிறது. 

அந்தப் பெற்றோர்களின் 10 குழந்தைகளில் நல்லகண்ணு மூன்றாவது குழந்தை.

அன்போடு தோழர் ஆர்என்கே என்றும் அல்லது ஐயா நல்லகண்ணு என்றும் அவரை அழைப்பர்.

கல்வி மற்றும் அரசியல் செயல்பாடுகள் 

அந்தப் பகுதிகளில் இருந்தது ஒரே ஒரு பள்ளி மட்டும்தான், அதைச் சாதாரணமாக ‘ஸ்கூல்’ என்று மட்டும் அழைப்பர். அவர் இன்டர்மீடியட் மட்டம் வரை தமிழில் படித்தார், மதுரை இந்து கல்லூரியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மேலே படிக்கவில்லை.

பள்ளியில் இருந்தபோது மகாத்மா காந்தியால் ஊக்கம் பெற்று மாணவர் இயக்கத்தில் இணைந்தார். பின்னர் சுதந்திரப் போராட்ட வீரர் ‘அண்ணாச்சி’ சண்முகம் மற்றும் அவரது ஆசிரியர் பலவேசம் செட்டியார் மூலம் அவருக்கு மார்க்சிய நூல்கள் அறிமுகம் கிடைத்தது.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது சிறையில் கூட அடைக்கப்பட்டார். வ உ சிதம்பரம் பிள்ளை (வ உ சி) யின் சுதேசி இயக்கத்தாலும் அவர் உத்வேகம் பெற்றார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைதல் 

18 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர் முழு நேர கட்சி ஊழியர் ஆவதற்காக உடுத்திய ‘ஒரு வேட்டி துண்டுடன்’ வீட்டை விட்டுப் புறப்பட்டார். வேளாண் இயக்கத்தில் பி சீனிவாசராவ் உடன் நெருக்கமாகப் பணியாற்றினார்; மற்றும் தூத்துக்குடி ஹார்வி மில் தொழிற்சங்கப் போராட்டங்கள் மற்றும் தமிழறிஞர் திரு வி கல்யாண சுந்தரனார் (திருவிக) எழுத்துக்களாலும் உருவாக்கப்பட்டார். 

விடுதலைப் போராட்டத்தில்

தொழிலாளர் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் இணைந்தபோதே, நீதி மற்றும் விடுதலைக்கான போராட்டங்களுக்குள் நல்லகண்ணுவின் தொடக்கமும் முன்பே அமைந்தது

அதனை அவர் நினைவுகூரும் போது, “நான் குழந்தையாக இருந்தபோது, எனது நகருடன் ஒட்டி இருந்த தூத்துக்குடியில் மில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அது ஹார்வி குழும ஆலைகளில் ஒன்று. அது பஞ்சாலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் என்று அழைக்கப்பட்டது. அவர்களை ஆதரிக்க எங்களது நகரில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அரிசி சேகரித்துத் தூத்துக்குடியில் வேலை நிறுத்தத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்குப் பெட்டிகளில் அனுப்புவோம். எங்களைப் போன்ற இளம் பையன்கள் வீதி வீதியாகச் சென்று அரிசியைச் சேகரிப்போம்” என்ற  நல்லகண்ணு, “எனக்கு அப்போது வெறும் 5 அல்லது 6 வயது இருக்கும்“ என்று மேலும் கூறினார்.

1937 தேர்தல்

1935 ஜூலையில் நீதி கட்சியின் ‘தி ஜஸ்டிஸ்’ பத்திரிக்கை, எல்லா இடங்களிலும் காங்கிரஸின் கதர்ச் சீருடைகள், காந்தி குல்லாகள் மற்றும் மூவர்ணப் பதாகைகளை ஒவ்வொரு குக்கிராமங்களிலும் ஒருவர் காண முடியும் என்று குறிப்பிட்டது. அந்த மக்கள் பெரும்பாலும் ஏழைகள்  மற்றும் வாக்குரிமை இல்லாதவர்கள். 

1937ல் மெட்ராஸ் ராஜதானியில் மாகாணத் தேர்தல்கள் நடைபெற்றன.

“அப்போது மெட்ராஸில் இரண்டு முக்கிய கட்சிகளே இருந்தன. காங்கிரஸ் மற்றும் நீதிக்கட்சி. சின்னங்களுக்குப் பதிலாக வாக்குப் பெட்டியின் வண்ணத்தால் கட்சிகள் அடையாளப்படுத்தப்பட்டன. அப்போது நாங்கள் பிரச்சாரம் செய்த காங்கிரசுக்கு மஞ்சள் பெட்டி, நீதிக் கட்சிக்குப் பச்சை பெட்டி ஒதுக்கப்பட்டன” என்று ஒரு பேட்டியில் நல்லகண்ணு நினைவு கூர்ந்து விவரித்தார்.

“மஞ்சள் பெட்டிக்கு ஓட்டு போடுங்க”, “மஞ்சள் பெட்டியைத் தேர்ந்தெடுங்கள்” என்று இளம்பிள்ளைகள் டமாரங்களை அடித்து ஒலி எழுப்பியபடி கத்துவார்கள், அவர்களில் நல்லகண்ணுவும் ஒருவர், அப்போது வெறும் 12 வயது. நிலம் வைத்திருப்பவர்கள் மற்றும் பத்து ரூபாய் அல்லது அதற்கு அதிகமாக நிலவரி செலுத்துபவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். எனவே எந்த ஒரு தொகுதியிலும் 1000 அல்லது 2000 மேல் வாக்களிக்க மாட்டார்கள்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு “பறையடித்து முழக்கங்களை உரத்து எழுப்பும்” தேர்தல் நடைமுறையைத் தாண்டி அதே நல்லகண்ணு அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபட உள்ளார்!

“நான் 15 வயதிலிருந்து சிபிஐயில் இருக்கிறேன்” என்று கூறுகிறார் நல்லகண்ணு. அவரது நண்பர்களுக்கு அவர் ‘தோழர் ஆர்.என்.கே’. முறையான கட்சி உறுப்பினர் முறை பின்னர்தான் வந்தது, ஆனால் அவர் தொடர்ந்து ஆதரவு கோரியது செங்கொடிக்கு –பிற இரண்டு வண்ணங்களுக்கு அல்ல!

பிந்தைய ஆண்டுகளில் நல்லகண்ணு சிறிய மார்பளவு சிலைகள் மற்றும் உருவ பொம்மைகளை அவரது அறையில் வைத்திருப்பார்: மார்க்ஸ், லெனின், பெரியார். அம்பேத்கர், சுப்ரமணிய பாரதி மற்றும் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு  புகைப்படங்கள். இவை அனைத்திற்கும் அடுத்து, “குறைந்த தண்ணீரைப் பயன்படுத்துங்கள்!” என்று வேண்டியபடி ஒரு நாட்காட்டி சுவரில் தொங்கும்.

12ம் வயதிலிருந்தே அவரது போராட்ட ஆண்டுகளின் ஊடாகப் பாரதி பாடல்கள் அவரை உற்சாகப்படுத்தின. “அந்தப் பாடல்களில் சிலவற்றை நான் இந்தி பண்டிதர் பலவேசம் செட்டியாரிடம் இருந்து பள்ளியில் கற்றுக் கொண்டேன்” என்றார் அவர்.  

பாரதியார் புத்தகம் ஒன்றைப், பள்ளிக்கு வந்திருந்த சுதந்திரப் போராட்ட வீரர் எஸ் சத்தியமூர்த்தியிடம் இருந்து அவர் பெற்றார். அது பாரதியின் தேசிய கீதம் என்ற கவிதைகளின் தொகுப்பு. ரஷ்யாவில் 1917 அக்டோபர் புரட்சியை முதலில் வரவேற்றுப் பாராட்டியவர் அவர். மேலும் அதைப் புகழ்ந்து ஒரு பாடலும் கூடஅவர் எழுதினார் (மகாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாள்…)

நல்லகண்ணு மெட்ராஸ் மாகாணத்தில் பி சீனிவாச ராவ் மற்றும் பிறருடன் சேர்ந்து விவசாயிகளின் (கிசான்) அமைப்பை அவரது 25வது வயதில் அமைத்தார். 1946ல் கட்சியின் ஜனசக்தி பத்திரிக்கைக்காகப் பணியாற்ற அவருக்குப் பணி ஒதுக்கப்பட்டபோது, அவர் தன்னை விவசாயிகள் மத்தியில் பணியாற்ற மாற்றும்படி கேட்டுக்கொண்டார்.

உப்பள உரிமையாளர்களுடன்  போராடுதல்  

அவரது நகருக்கு அருகில் இருந்த உப்பளங்களில் பணியாற்றிய தொழிலாளர்கள் பரிதாபகரமான நிலையில் இருந்தனர். “நாங்கள் இரவு நேரத்தில் கற்களை வீசி உப்பள உரிமையாளர்களுடன் கடும் சண்டைகளில் ஈடுபடுவோம்” என நினைவு கூர்ந்தார் நல்லகண்ணு. அது 1940களின் காலகட்டம்.

உப்பள உரிமையாளர்களின் ஏஜெண்டுகளாகப் போலீஸ்காரர்கள் நடந்தனர்.  ஒரு சப்-இன்ஸ்பெக்டர் இறந்துபட, போலீஸ்காரர்கள் நடமாடும் கண்காணிப்புக் குழுவை அமைத்து இரவும் பகலும் தொழிலாளர்களைத் தொல்லைப்படுத்தினர். சில ஆண்டுகள் தொடர்ந்த போராட்டம், 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்துடன் இணைந்தது.

இதற்காக நல்லகண்ணு அவரது  வீட்டில் அடிக்கடி  தண்டிக்கப்பட்டார். மற்றும் சில நேரங்களில் அவரது தந்தை அவரது பள்ளி கட்டணத்தை நிறுத்தி வைக்கவும் செய்தார்! 

நல்லகண்ணு நினைவு கூர்கிறார்: “பள்ளி கட்டணத்திற்காக அவரை நான் கேட்டால், என்னிடம் கத்துவார்: ‘உன் படிப்பை விட்டு விட்டு, வயல்களில் உன் மாமன்களுக்கு உதவி செய்!’.”

தொடக்கத்தில் தகரத்தால் செய்யப்பட்ட ஒலிபெருக்கி கருவிகளைப் பயன்படுத்தி, பேச்சாளர்கள் ஏறி நின்று கூட்டத்தினர் இடையே உரையாற்ற மேசை நாற்காலிகளைத் திரட்டுவது அவர்கள் வழக்கம். “காலம் செல்லச் செல்ல நல்லதொரு மைக் மற்றும் ஒலிபெருக்கிகளைப் பெறத் தொடங்கினோம். நாங்கள் முன்னுரிமை தந்து விரும்பிய அந்த மைக், ‘சிக்காகோ மைக்’ அல்லது சிகாகோ ரேடியோ சிஸ்டம் ஆகும்” என்றார் ஆர் என் கே.

ராயல் இந்தியன் நேவி (ரின்) என்ற கப்பற்படை வீரர்கள் கிளர்சிக்குப் பிறகு, 1946ல் பிரிட்டிஷ், கம்யூனிஸ்டுகள் மீது தாக்குதல் நடத்தி, கிராமங்களில் இருந்த கட்சி அலுவலகங்களில்கூட சோதனை நடத்தியது. நல்லகண்ணுவும் தோழர்களும் பல்வேறு தகவல் பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தினர், அவற்றில் சில நூற்றாண்டு காலப் பழமையானது. (பதினெட்டாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் எதிர்ப்புப் போராளியான) மாவீரன் கட்டபொம்மனைப் பின்பற்றி மக்கள், வீட்டின் முன் வேம்பின் சிறு கிளைகளைச் சொருகி வைத்தல், குழந்தையை அழச் செய்தல், பசுவின் சாணம் அல்லது காய்ந்த சாணம் (வறட்டி) முதலியவற்றை வீட்டு நுழைவாயிலில் வைத்து, ஒரு வீட்டில் கட்சித் தோழர் இருப்பதை அல்லது இல்லாததைப் புலப்படுத்தவும், வீட்டில் கூட்டம் நடப்பதை அல்லது ஆபத்து சூழ்ந்திருப்பதைச் சுட்டுவதற்கு இரகசிய அடையாள, சமிக்ஞையாகப் பயன்படுத்தினர். 

மெட்ராஸ் மாகாணத்தில் ஜமீன்தாரி முறையை ஒழிப்பதற்கான போராட்டம் முக்கியமான இயக்கம்; அந்த முறையின் கீழ் (பரம்பரை உரிமையாக நிலம் வைத்திருக்கும்) மிராசுதாரி மற்றும் (ஆட்சியாளர்களால் இலவசமாக அளிக்கப்படும் நிலங்களை உரிமையாக உடைய) இனாம்தாரி முறைகள் அங்கு சாதாரணம். ஆயிரக்கணக்கான ஏக்கர் வளமான (நஞ்சை) நிலங்கள் இந்த முறையில் பெரும் நில உடமையாளர்கள் வசம் இருந்தது. ஜமீன்தாரி முறையை ஒழிக்கும் இந்தப் போராட்டங்களில் கம்யூனிஸ்டுகள் முன்னணியில் இருந்தனர்.

நல்லகண்ணு கூறினார்: “நாங்கள் தீண்டாமையை ஒழிப்பதற்காகப் போராடினோம். ஆலய நுழைவு இயக்கங்களில் நாங்கள் தீவிரமான பங்காற்றினோம். இந்த நில உரிமை முறைகளில் நூற்றாண்டு பழமையான வழக்கமான பிரம்மதேயம் மற்றும் தேவதானம் போன்றவைகளும் கூட இருந்தன. [பிரம்மதேயம் என்பது பிராமணர்களுக்கு இனாமாக / வரிவிலக்கு அளித்து மன்னர்களால் வழங்கப்பட்ட நிலம் அல்லது கிராமம். தேவதானம் என்பது கோயில்களின் பராமரிப்பு மற்றும் பணிகளுக்காக மன்னர்கள், அதிகாரிகள் அல்லது வணிகர்களால் கோயில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலமாகும்.] பிரம்மதேயத்தின் கீழ் பிராமணர்கள் பெரும் லாபங்களைக் குவித்தனர். தேவதானத்தின் கீழ் குத்தகைதாரர்களும் தொழிலாளர்களும் அவர்களின் இரக்கத்தைச் சார்ந்து இருக்க வேண்டி இருந்தது, நிலங்களில் இருந்து வெளியேற்றப்படுவதையும் அவர்கள் சந்தித்தனர்.

மடங்களின் வசம் ஆறு லட்சம் ஏக்கர் நிலம் இருந்தது மக்களின் போராட்டங்கள் அவர்களின் அதிகாரத்தைக்  குறைத்தது.

1948ல் தமிழ்நாடு ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. 1947 –49 இடைப்பட்ட ஆண்டுகளில் கோயில் நிலங்களில் இருந்து ஏராளமானோர் வெளியேற்றப்- பட்டனர். 1948 --1960 இடைப்பட்ட ஆண்டுகளில் நடைபெற்ற போராட்டங்கள் இந்தக் கோயில்கள் மற்றும் மடங்களின் அதிகாரங்களை உடைந்து நொறுங்கியததைக் கண்டது.

ஒரு கோயிலில் ஓர் இரவு நடந்த எதிர்ப்புப் போராட்டங்களை நல்லகண்ணு விவரிக்கிறார்: போராடிய விவசாயிகள், கோயில் தேர்த்திருவிழா நடைபெறும்போது பெரும் வடகயிறு மூலம் கோயில் தேர் /அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தை இழுத்துச் செல்பவர்களும் ஆவர். நிலங்களிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்படுவது தொடரும் என்றால் மற்றும் விதைப்பதற்கு நெல்மணிகள் கொடுக்கப்படாவிட்டால் நாங்கள் தேரை இழுக்க முடியாது என்று மறுத்துவிட்டனர்.

தலித் மக்கள் மீது அட்டூழியங்கள்

1943ல் தலித் தொழிலாளர்கள் இன்னும் சாட்டையால் அடிக்கப்பட்டு, பிறகு அந்தக் காயங்களின் மீது பசுவின் சாணி கரைசல் ஊற்றப்பட்டது. எப்போது சேவல் கூவுகிறதோ அப்போதே அந்த விடியலின் 4 அல்லது 5மணிக்கு அவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டும். மிராஸ்தார் நிலங்களில் கால்நடைகளைக் குளிப்பாட்டி, சாணியை அகற்றி, நிலத்திற்கு நீர் பாய்ச்ச வேண்டும். (இந்தக் கொடுமைகள் தாங்காமல்) தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அவர்களின் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது.

சீனிவாச ராவ் மற்றும் நல்லகண்ணு தலைமை ஏற்க, அங்குக் கிசான் சபாவின் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‘செங்கொடிகளை ஏந்திச் சென்றதற்காக மிராசுதார்களின் அடியாட்கள் தாக்குவார்கள் எனில், அவர்களைத் திருப்பித் தாக்குங்கள்’ என்று விவசாயிகளிடம் கூறப்பட்டது. இறுதியில் திருத்துறைப்பூண்டியில் மிராசுதார்கள் மற்றும் முதலியார்கள், சாட்டையால் அடித்துச் சாணிப்பால் ஊற்றும்  பழக்கத்தை ஒழித்த ஓர் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

பி சீனிவாச ராவ் அவர்களைத் தொடர்ந்து தமிழ்நாடு அனைத்திந்தியக் கிசான் சபாவின் தலைவராக ஆர் என் கே ஆனார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் (சிபிஐ– எம்) இணைந்த தோழர் சங்கரய்யா உடன் நல்லகண்ணு மிகவும் நெருக்கமானவர்.

நெல்லை சதி வழக்கு

1948 –50களின் பிடிஆர் குழுவாதப் போக்கு காலகட்டத்தில் சிபிஐ மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது; அதன் ஆயுதப் போராட்டத்திற்காகக் கம்யூனிஸ்ட் கட்சியைப் அடித்து நொறுக்க போலீசுக்கு வாய்ப்பு  அளித்தது. 1949ல் நாங்குநேரி புலியூர்குறிச்சி கிராமத்தில் 23 வயதான நல்லகண்ணு கைது செய்யப்பட்டு சிறைக் காவல் சித்திரவதைகளுக்கு ஆட்பட்டார். ஒரு போலீஸ் அதிகாரி பற்ற வைத்த சிகரெட் அடிக்கட்டையால் நல்லகண்ணுவின் மீசையைத் தீய்த்துப் பொசுக்க, உதட்டின் மேல் நிரந்தர வடுவின் அடையாளம் ஏற்பட்டது: அதன் பிறகு அவரால் மீசையை வளர்க்க முடியவில்லை. நல்லகண்ணு கூறினார்: “போலீஸ் சிகரெட்டால் பொசுக்கி எனது மீசையை நீக்கியது. அது, கிருஷ்ணமூர்த்தி என்ற மெட்ராஸ் நகரப் போலீஸ் இன்ஸ்பெக்டரால் என் மீது நடத்தப்பட்ட சித்திரவதைகளின் ஒரு பகுதி. நடு இரவு 2 மணிக்கு என் கைகளைக் கட்டியவர் அடுத்த நாள் காலை 10 மணிக்குத்தான் அவிழ்த்து விட்டார் பிறகு தனது  குறுந்தடியால் என்னை நீண்ட நேரம் அடித்தார்”

இந்த நிகழ்வை நினைவு கூறிய அவரிடம் தனிப்பட்ட முறையில் எந்த வெறுப்பும் இல்லை,  தன்னை சித்திரவதை செய்தவர்கள் பால் எந்தப் பகையும் அவரிடம் இல்லை.

மதுரை மத்தியச் சிறையில் கைதி எண் 9658 என்ற எண்ணுடன் இருந்த நல்லகண்ணு,

சிறைக் காவலில் சித்திரவதைகள் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்தைக் கண்டித்துப் போராட்டங்களை நடத்திய அதே நேரத்தில் சிறைவாசிகளுக்காக இலக்கிய நிகழ்ச்சி- களையும் நடத்தினார்.

1956ல் விடுதலை செய்யப்பட்டார். நீண்ட பல நாட்கள் ஒரே சிறையறையில் அடைபட்டுக் கிடந்ததையும், அந்த அறையின் கதவுகள் ஒவ்வொரு காலையும் சிறிது நேரம் மட்டுமே திறந்திருந்தது என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

திருமணம்

நல்லகண்ணு 1958ல் ஓர் அரசு பள்ளி ஆசிரியை ரஞ்சிதம் என்பவரைத் திருமணம் செய்து

கொண்டார். அந்தப் பெண்மணி அப்போதைய திருநெல்வேலி சிபிஐ மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் அண்ணாசாமியின் மகள் ஆவார். அவரது திருமணம் ஒரு மதக்கலப்பு திருமணம் ஆகும். ரஞ்சிதம் ஒரு கிறிஸ்தவர். நல்லகண்ணு 30 ரூபாய் மாத ஊதியத்தில் கட்சி முழு நேர ஊழியர், குடும்பத்தை மனைவி கவனித்துக் கொண்டார்.

அவர் 1982ல் காலமானார் அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் (ஒருவர் ஆண்டாள் மருத்துவராக உள்ளார்; மற்றொருவர் காசி பாரதி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்)

தேர்தல்கள் மற்றும் கட்சி பொறுப்புகள் 

மென்மையாகப் பேசும் எளிய மனிதரான நல்லகண்ணு சமரசமற்ற மதச்சார்பு அரசியல் மற்றும் தனிப்பட்ட நேர்மையை அடையாளப்படுத்துகிறார். 1967 மற்றும் 1977-இல் அம்பாசமுத்திரம் தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கும் 1999ல் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியிலும் போட்டியிட்டார். அவற்றில் வெற்றி பெற இயலாத போதும் ஒருபோதும் அவர் வருந்தியது இல்லை. 1992 முதல் 2005 வரை தமிழ்நாடு சிபிஐ மாநிலச் செயலாளராக அவர் பணியாற்றினார்.

அவர் 2005ல் சென்னையில் ஒரு வாடகை   குடியிருப்பில் எளிமையாக வாழ்ந்தார். 

அவர் [கட்சி வழங்கிய ரூ ஒரு கோடி நிதியைக் கட்சி இடமே திரும்ப அளித்தார்; மற்றும் மாநில அரசு 2007ல் ‘அம்பேத்கர் விருது’டன் வழங்கிய ஒரு லட்சத்தை கட்சிக்கும் விவசாய சங்கத்திற்கும் அளித்தார்;] தமிழக அரசு 1922ல் ‘தகைசால் தமிழர் விருது’டன் அளித்த ரூபாய் 10 லட்சம் முழுவதையும் –ஏன் அந்தத் தொகையுடன் தனது கைப்பணம் ரூபாய் 5 ஆயிரத்தை சேர்த்து– முழுவதையும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

சூழலியல் பாதுகாப்பதற்காக 

நல்லகண்ணு கூறுவார் : “ஆறுகள் மறையும்போது, முதலில் இழப்புக்கு ஆளாவது மிகவும் பரம ஏழைகள்”. அடியோடு ஆற்று மணலைச் சுரண்டி எடுப்பதையும், நிலப் பரப்புகளைப் பலவீனமாக்கும் அச்சுறுத்தும் திட்டங்களையும்  உறுதியுடன் எதிர்த்தார். 

அவருக்குச் சூழலியல் ஒரு நீதி நெறி சார்ந்த பிரச்சனை; சூழலியல் என்பதன் பொருள் நிலம் மற்றும் நீரைச் சார்ந்து இருக்கும் சாதாரண மக்கள். வயது முதிர்ந்த நிலையிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர்  பயணம் செய்து கிராமவாசிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் அக்கறையோடு விசாரித்துக் கேட்டறிவார். அது ஒரு பொழுதுபோக்கு கவர்ச்சிகர ஆர்வம் அல்ல, ஆனால் அவருக்கு அது ஒரு சமூக நீதிப் பிரச்சனை.

அரசியலுக்கும் சுற்றுச்சூழல் இயக்கங்களுக்கும் இடையில் ஓர் அபூர்வ இணைப்புப் பாலம் அவர்.

சாதி பாகுபாட்டுக்கு எதிராக 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் “ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்” அமைப்புக்கும் கூட தலைமையேற்ற அவர், வாழ்நாள் முழுக்க தீண்டாமைக்கு எதிரான போராளியாக இருந்தார், சாதிகளைக் கடந்த மற்றும் மதங்களைக் கடந்த கலப்புத் திருமணங்களை ஆதரித்தார்.

அவரது மாமனார் அண்ணாசாமி 1995ல் (தலித்களுக்குத் தனி கிளாஸ் பயன்படுத்தும்) ‘இரட்டை குவளை முறை’யை எதிர்த்து ஓர் இயக்கம் தொடங்கினார்; அந்தப் பாகுபடுத்தும் முறையைக் கண்டித்து தானே சொந்தமாக ஒரு டீக்கடை திறந்தார். சாதிக் கலவரம் வெடித்தது, அதில் அவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கு முன்பு நல்ல கண்ணு பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதிப் பேரணி நடத்தினார். மாமனாரின் இறப்புக்கு அரசு அளித்த நிவாரணத் தொகையைப் பாதிக்கப்பட்ட இரண்டு சமூகத்தினரின் குழந்தைகளை ஆதரிக்கப் பயன்படுத்தினார். அவரது ஆலோசனை பேரில் திமுக அரசு, (சாதி மோதல்களைத் தவிர்க்க தலைவர்களின் பெயரில் இருந்த) மாவட்டங்கள், போக்குவரத்துக் கழகங்களுக்கு மறுபெயர் சூட்டியது. 

மேனாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஒருமுறை, தனக்கு “தந்தை பெரியார் ஒரு கண் மற்றும் நல்லகண்ணு மற்றொரு கண்” என்று குறிப்பிட்டார்.

(சூழலியல் போராளியான) அவர் 2018ல் தனது 95வது வயதில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு முன் நேரடியாக வாதிட்டு வழக்கை வென்றார் –தாமிரபரணி ஆற்றில் மணல்  அள்ளுவது தடை செய்யப்பட்டது.

2019-ல் நல்லகண்ணு மற்றும் அவரது குடும்பம், பொது வாழ்வில் அவரது பங்களிப்பை அங்கீகரித்து ஒரு நன்றி அறியதலாக  ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டை காலி செய்யும்படி கோரப்பட்டது. பரவலாக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அந்த நடவடிக்கைக்கு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். திமுக தலைவர் எம் கே ஸ்டாலின் நல்லகண்ணுக்கு மாற்று  இல்லம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

விருதுகள்

நல்லகண்ணு பெற்ற விருதுகள்  வருமாறு: 

2007 ஆகஸ்ட் 14ல் தமிழ்நாடு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடமிருந்து சக யோகி புரஸ்கார் விருது; 2008 அக்டோபர் 3ல் அனைத்திந்திய மகாத்மா காந்தி சமூக நல ஃபோரம் அமைப்பிடமிருந்து அவரது சமூகச் சேவைக்காக காந்திய விருது; அம்பேத்கர் விருது மற்றும் 2009 ஜனவரி 21ல் மாவட்ட எழுத்தாளர்கள் அமைப்பு வழங்கிய ஜீவா விருது.

2022 சுதந்திர தினத்தில் தமிழ்நாடு அரசு ஆர் என் கே அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கியது. 2021ல் நிறுவப்பட்ட தமிழ்நாட்டின் அந்த ஆக உயர்ந்த விருதுடன் 10 லட்ச ரூபாய் பண முடிப்பும் தோழர் ஆர்.என்.கே  அவர்களிடம் முதலமைச்சர் எம்கே ஸ்டாலின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் இருந்து வழங்கினார்.

திரைப்படம்

2019-ல் சினிமா தயாரிப்பாளரும் நடிகருமான சமுத்திரக்கனி “அதனால்தான் அவர் நல்லகண்ணு” என்ற தலைப்பில் ஒரு வாழ்க்கை வரலாறு திரைப்படம் தயாரித்தார்.

எழுத்தாக்கங்கள் 

நல்லகண்ணு தீவிரமான வாசகர் மற்றும் ஒரு எழுத்தாளரும் கூட. உதாரணத்திற்குச் சீனிவாசராவ் வாழ்க்கை வரலாற்று நூலையும் வேறு பல நூல்கள் மற்றும் கட்டுரைகளையும் எழுதி உள்ளார். 

மறைவு 

தோழர் ஆர் நல்லகண்ணு 2026 பிப்ரவரி 25ல் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காலமானார். வயது முதிர்வு மற்றும் பல உள் உறுப்புகள் செயலின்மையால்

பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் உயிர்காக்கும் கருவிகள் ஆதரவில் இருந்தார். கட்சிகளைக் கடந்து அவரது மறைவுக்கு அனைத்து கட்சியினரும் இரங்கல் தெரிவித்தனர். முதலமைச்சர் எம் கே ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் அவர் புகழுடம்புக்கு மலர் வளையம் வைத்து (செவ்வணக்கம் முழங்கி) அஞ்சலி செலுத்தினார். நல்லகண்ணுவுக்கு அரசு இறுதி மரியாதை அளிக்கப்பட்டது. மருத்துவ ஆய்வுக்காக அவரது உடல் மருத்துவக் கல்லூரிக்குத் தானம் அளிக்கப்பட்டது.

ராகுல் காந்தி நல்லகண்ணுவின் நினைவுக்கு பெரும் புகழஞ்செலி செலுத்தினர்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ”நல்லகண்ணு சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களாலும் மிக உயர்வாக மதிக்கப்பட்டார். அதுபோலவே குறிப்பிடத்தக்கது அவரது எளிமை. எனது பரிவும் இரங்கலும் அவரது குடும்பத்தினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு உரித்தாக்குக” என்று கூறினார்.

நல்லகண்ணு இவ்வாறு தனது வாழ்க்கையில் லட்சியத்தை வெளிப்படுத்தினார்:


“கம்யூனிசம் சமூகத்தின் தேவை. ஒரு நாள் சமூகம் அதை ஏற்றுத் தழுவிக் கொள்ளும். ஒடுக்கப்பட்ட மக்களின் நல வாழ்வுக்காக நாம் போராடுகிறோம். நாம் எதற்காகப் போராடினோமோ அதை அவர்கள் நுகர்ந்து மகிழ்வதை காண்பதே எனது ஆகப் பெரிய சொத்து”

[சிராவயலில் தோழர் ஜீவாவைச் சந்தித்த காந்தி, “நீங்கள் தான் தேசத்தின் சொத்து” என்று கூறியதைப் போல நமது தோழர் நல்லகண்ணு தேசத்தின் சொத்து. வாழ்க அவர் புகழ்!]

–நன்றி : நியூ ஏஜ்  (2026 மார்ச் 15– 21)
–தமிழில் : நீலகண்டன்,
  என்எப்டிஇ, கடலூர்