Wednesday, 25 March 2026

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு -147 ஆர் நல்லகண்ணு –ஜனங்களின் மீட்பர், முனிவர் மற்றும் கம்யூனிஸ்ட் தலைவர்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு -147

ஆர் நல்லகண்ணு 

–ஜனங்களின்  மீட்பர், முனிவர் மற்றும் 
கம்யூனிஸ்ட் தலைவர்

அனில் ரஜீம்வாலே 

ஆர் நல்லகண்ணு அரிய தலைவர்களின் வகையைச் சேர்ந்தவர், மக்களால் தங்கள் மீட்பர் என்று கருதப்படுபவர், சுதந்திரப் போராட்ட வீரர், தமிழ்நாடு மாநில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் நாட்டின் ஆக உயர்ந்த  தலைவர்களில் ஒருவர். அவரது வாழ்க்கை, கொந்தளிப்பான விடுதலைப் போராட்டத்திலிருந்து இந்திய விடுதலைக்குப் பிறகு ஏற்ற இறக்கங்களைச் சந்தித்த முழுமையான 101 ஆண்டுகளை வாழ்ந்தவர்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்ட 1925 டிசம்பர் 26ல், தூத்துக்குடிக்கு அருகில் தாமிரபரணி நதி வளைவின் வளமையான திருவைகுண்டத்தில் பிறந்தார். தந்தை ராமசாமி தேவர், தாயார் கருப்பாயி அம்மாள். அவர்களது குடும்பம் செழிப்பான விவசாயக் குடும்பம். நீதிமன்ற ஜூரியாகப் பணியாற்றிய அவரது தந்தை, அலங்கரிக்கப்பட்ட மாட்டு வண்டியில் நீதிமன்றத்திற்குச் செல்லும்போது வண்டிக்கு முன்னே சைக்கிளில் ஒரு காவலர் செல்வது வழக்கம் எனக் கூறப்படுகிறது. 

அந்தப் பெற்றோர்களின் 10 குழந்தைகளில் நல்லகண்ணு மூன்றாவது குழந்தை.

அன்போடு தோழர் ஆர்என்கே என்றும் அல்லது ஐயா நல்லகண்ணு என்றும் அவரை அழைப்பர்.

கல்வி மற்றும் அரசியல் செயல்பாடுகள் 

அந்தப் பகுதிகளில் இருந்தது ஒரே ஒரு பள்ளி மட்டும்தான், அதைச் சாதாரணமாக ‘ஸ்கூல்’ என்று மட்டும் அழைப்பர். அவர் இன்டர்மீடியட் மட்டம் வரை தமிழில் படித்தார், மதுரை இந்து கல்லூரியில் இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு மேலே படிக்கவில்லை.

பள்ளியில் இருந்தபோது மகாத்மா காந்தியால் ஊக்கம் பெற்று மாணவர் இயக்கத்தில் இணைந்தார். பின்னர் சுதந்திரப் போராட்ட வீரர் ‘அண்ணாச்சி’ சண்முகம் மற்றும் அவரது ஆசிரியர் பலவேசம் செட்டியார் மூலம் அவருக்கு மார்க்சிய நூல்கள் அறிமுகம் கிடைத்தது.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின்போது சிறையில் கூட அடைக்கப்பட்டார். வ உ சிதம்பரம் பிள்ளை (வ உ சி) யின் சுதேசி இயக்கத்தாலும் அவர் உத்வேகம் பெற்றார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைதல் 

18 வயதில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த அவர் முழு நேர கட்சி ஊழியர் ஆவதற்காக உடுத்திய ‘ஒரு வேட்டி துண்டுடன்’ வீட்டை விட்டுப் புறப்பட்டார். வேளாண் இயக்கத்தில் பி சீனிவாசராவ் உடன் நெருக்கமாகப் பணியாற்றினார்; மற்றும் தூத்துக்குடி ஹார்வி மில் தொழிற்சங்கப் போராட்டங்கள் மற்றும் தமிழறிஞர் திரு வி கல்யாண சுந்தரனார் (திருவிக) எழுத்துக்களாலும் உருவாக்கப்பட்டார். 

விடுதலைப் போராட்டத்தில்

தொழிலாளர் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவாக நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் இணைந்தபோதே, நீதி மற்றும் விடுதலைக்கான போராட்டங்களுக்குள் நல்லகண்ணுவின் தொடக்கமும் முன்பே அமைந்தது

அதனை அவர் நினைவுகூரும் போது, “நான் குழந்தையாக இருந்தபோது, எனது நகருடன் ஒட்டி இருந்த தூத்துக்குடியில் மில் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்தனர். அது ஹார்வி குழும ஆலைகளில் ஒன்று. அது பஞ்சாலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் என்று அழைக்கப்பட்டது. அவர்களை ஆதரிக்க எங்களது நகரில் ஒவ்வொரு வீட்டிலிருந்தும் அரிசி சேகரித்துத் தூத்துக்குடியில் வேலை நிறுத்தத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்குப் பெட்டிகளில் அனுப்புவோம். எங்களைப் போன்ற இளம் பையன்கள் வீதி வீதியாகச் சென்று அரிசியைச் சேகரிப்போம்” என்ற  நல்லகண்ணு, “எனக்கு அப்போது வெறும் 5 அல்லது 6 வயது இருக்கும்“ என்று மேலும் கூறினார்.

1937 தேர்தல்

1935 ஜூலையில் நீதி கட்சியின் ‘தி ஜஸ்டிஸ்’ பத்திரிக்கை, எல்லா இடங்களிலும் காங்கிரஸின் கதர்ச் சீருடைகள், காந்தி குல்லாகள் மற்றும் மூவர்ணப் பதாகைகளை ஒவ்வொரு குக்கிராமங்களிலும் ஒருவர் காண முடியும் என்று குறிப்பிட்டது. அந்த மக்கள் பெரும்பாலும் ஏழைகள்  மற்றும் வாக்குரிமை இல்லாதவர்கள். 

1937ல் மெட்ராஸ் ராஜதானியில் மாகாணத் தேர்தல்கள் நடைபெற்றன.

“அப்போது மெட்ராஸில் இரண்டு முக்கிய கட்சிகளே இருந்தன. காங்கிரஸ் மற்றும் நீதிக்கட்சி. சின்னங்களுக்குப் பதிலாக வாக்குப் பெட்டியின் வண்ணத்தால் கட்சிகள் அடையாளப்படுத்தப்பட்டன. அப்போது நாங்கள் பிரச்சாரம் செய்த காங்கிரசுக்கு மஞ்சள் பெட்டி, நீதிக் கட்சிக்குப் பச்சை பெட்டி ஒதுக்கப்பட்டன” என்று ஒரு பேட்டியில் நல்லகண்ணு நினைவு கூர்ந்து விவரித்தார்.

“மஞ்சள் பெட்டிக்கு ஓட்டு போடுங்க”, “மஞ்சள் பெட்டியைத் தேர்ந்தெடுங்கள்” என்று இளம்பிள்ளைகள் டமாரங்களை அடித்து ஒலி எழுப்பியபடி கத்துவார்கள், அவர்களில் நல்லகண்ணுவும் ஒருவர், அப்போது வெறும் 12 வயது. நிலம் வைத்திருப்பவர்கள் மற்றும் பத்து ரூபாய் அல்லது அதற்கு அதிகமாக நிலவரி செலுத்துபவர்கள் மட்டுமே வாக்களிக்க முடியும். எனவே எந்த ஒரு தொகுதியிலும் 1000 அல்லது 2000 மேல் வாக்களிக்க மாட்டார்கள்.

மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு “பறையடித்து முழக்கங்களை உரத்து எழுப்பும்” தேர்தல் நடைமுறையைத் தாண்டி அதே நல்லகண்ணு அரசியல் பிரச்சாரங்களில் ஈடுபட உள்ளார்!

“நான் 15 வயதிலிருந்து சிபிஐயில் இருக்கிறேன்” என்று கூறுகிறார் நல்லகண்ணு. அவரது நண்பர்களுக்கு அவர் ‘தோழர் ஆர்.என்.கே’. முறையான கட்சி உறுப்பினர் முறை பின்னர்தான் வந்தது, ஆனால் அவர் தொடர்ந்து ஆதரவு கோரியது செங்கொடிக்கு –பிற இரண்டு வண்ணங்களுக்கு அல்ல!

பிந்தைய ஆண்டுகளில் நல்லகண்ணு சிறிய மார்பளவு சிலைகள் மற்றும் உருவ பொம்மைகளை அவரது அறையில் வைத்திருப்பார்: மார்க்ஸ், லெனின், பெரியார். அம்பேத்கர், சுப்ரமணிய பாரதி மற்றும் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு  புகைப்படங்கள். இவை அனைத்திற்கும் அடுத்து, “குறைந்த தண்ணீரைப் பயன்படுத்துங்கள்!” என்று வேண்டியபடி ஒரு நாட்காட்டி சுவரில் தொங்கும்.

12ம் வயதிலிருந்தே அவரது போராட்ட ஆண்டுகளின் ஊடாகப் பாரதி பாடல்கள் அவரை உற்சாகப்படுத்தின. “அந்தப் பாடல்களில் சிலவற்றை நான் இந்தி பண்டிதர் பலவேசம் செட்டியாரிடம் இருந்து பள்ளியில் கற்றுக் கொண்டேன்” என்றார் அவர்.  

பாரதியார் புத்தகம் ஒன்றைப், பள்ளிக்கு வந்திருந்த சுதந்திரப் போராட்ட வீரர் எஸ் சத்தியமூர்த்தியிடம் இருந்து அவர் பெற்றார். அது பாரதியின் தேசிய கீதம் என்ற கவிதைகளின் தொகுப்பு. ரஷ்யாவில் 1917 அக்டோபர் புரட்சியை முதலில் வரவேற்றுப் பாராட்டியவர் அவர். மேலும் அதைப் புகழ்ந்து ஒரு பாடலும் கூடஅவர் எழுதினார் (மகாகாளி பராசக்தி கடைக்கண் வைத்தாள்…)

நல்லகண்ணு மெட்ராஸ் மாகாணத்தில் பி சீனிவாச ராவ் மற்றும் பிறருடன் சேர்ந்து விவசாயிகளின் (கிசான்) அமைப்பை அவரது 25வது வயதில் அமைத்தார். 1946ல் கட்சியின் ஜனசக்தி பத்திரிக்கைக்காகப் பணியாற்ற அவருக்குப் பணி ஒதுக்கப்பட்டபோது, அவர் தன்னை விவசாயிகள் மத்தியில் பணியாற்ற மாற்றும்படி கேட்டுக்கொண்டார்.

உப்பள உரிமையாளர்களுடன்  போராடுதல்  

அவரது நகருக்கு அருகில் இருந்த உப்பளங்களில் பணியாற்றிய தொழிலாளர்கள் பரிதாபகரமான நிலையில் இருந்தனர். “நாங்கள் இரவு நேரத்தில் கற்களை வீசி உப்பள உரிமையாளர்களுடன் கடும் சண்டைகளில் ஈடுபடுவோம்” என நினைவு கூர்ந்தார் நல்லகண்ணு. அது 1940களின் காலகட்டம்.

உப்பள உரிமையாளர்களின் ஏஜெண்டுகளாகப் போலீஸ்காரர்கள் நடந்தனர்.  ஒரு சப்-இன்ஸ்பெக்டர் இறந்துபட, போலீஸ்காரர்கள் நடமாடும் கண்காணிப்புக் குழுவை அமைத்து இரவும் பகலும் தொழிலாளர்களைத் தொல்லைப்படுத்தினர். சில ஆண்டுகள் தொடர்ந்த போராட்டம், 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்துடன் இணைந்தது.

இதற்காக நல்லகண்ணு அவரது  வீட்டில் அடிக்கடி  தண்டிக்கப்பட்டார். மற்றும் சில நேரங்களில் அவரது தந்தை அவரது பள்ளி கட்டணத்தை நிறுத்தி வைக்கவும் செய்தார்! 

நல்லகண்ணு நினைவு கூர்கிறார்: “பள்ளி கட்டணத்திற்காக அவரை நான் கேட்டால், என்னிடம் கத்துவார்: ‘உன் படிப்பை விட்டு விட்டு, வயல்களில் உன் மாமன்களுக்கு உதவி செய்!’.”

தொடக்கத்தில் தகரத்தால் செய்யப்பட்ட ஒலிபெருக்கி கருவிகளைப் பயன்படுத்தி, பேச்சாளர்கள் ஏறி நின்று கூட்டத்தினர் இடையே உரையாற்ற மேசை நாற்காலிகளைத் திரட்டுவது அவர்கள் வழக்கம். “காலம் செல்லச் செல்ல நல்லதொரு மைக் மற்றும் ஒலிபெருக்கிகளைப் பெறத் தொடங்கினோம். நாங்கள் முன்னுரிமை தந்து விரும்பிய அந்த மைக், ‘சிக்காகோ மைக்’ அல்லது சிகாகோ ரேடியோ சிஸ்டம் ஆகும்” என்றார் ஆர் என் கே.

ராயல் இந்தியன் நேவி (ரின்) என்ற கப்பற்படை வீரர்கள் கிளர்சிக்குப் பிறகு, 1946ல் பிரிட்டிஷ், கம்யூனிஸ்டுகள் மீது தாக்குதல் நடத்தி, கிராமங்களில் இருந்த கட்சி அலுவலகங்களில்கூட சோதனை நடத்தியது. நல்லகண்ணுவும் தோழர்களும் பல்வேறு தகவல் பரிமாற்ற முறைகளைப் பயன்படுத்தினர், அவற்றில் சில நூற்றாண்டு காலப் பழமையானது. (பதினெட்டாம் நூற்றாண்டு பிரிட்டிஷ் எதிர்ப்புப் போராளியான) மாவீரன் கட்டபொம்மனைப் பின்பற்றி மக்கள், வீட்டின் முன் வேம்பின் சிறு கிளைகளைச் சொருகி வைத்தல், குழந்தையை அழச் செய்தல், பசுவின் சாணம் அல்லது காய்ந்த சாணம் (வறட்டி) முதலியவற்றை வீட்டு நுழைவாயிலில் வைத்து, ஒரு வீட்டில் கட்சித் தோழர் இருப்பதை அல்லது இல்லாததைப் புலப்படுத்தவும், வீட்டில் கூட்டம் நடப்பதை அல்லது ஆபத்து சூழ்ந்திருப்பதைச் சுட்டுவதற்கு இரகசிய அடையாள, சமிக்ஞையாகப் பயன்படுத்தினர். 

மெட்ராஸ் மாகாணத்தில் ஜமீன்தாரி முறையை ஒழிப்பதற்கான போராட்டம் முக்கியமான இயக்கம்; அந்த முறையின் கீழ் (பரம்பரை உரிமையாக நிலம் வைத்திருக்கும்) மிராசுதாரி மற்றும் (ஆட்சியாளர்களால் இலவசமாக அளிக்கப்படும் நிலங்களை உரிமையாக உடைய) இனாம்தாரி முறைகள் அங்கு சாதாரணம். ஆயிரக்கணக்கான ஏக்கர் வளமான (நஞ்சை) நிலங்கள் இந்த முறையில் பெரும் நில உடமையாளர்கள் வசம் இருந்தது. ஜமீன்தாரி முறையை ஒழிக்கும் இந்தப் போராட்டங்களில் கம்யூனிஸ்டுகள் முன்னணியில் இருந்தனர்.

நல்லகண்ணு கூறினார்: “நாங்கள் தீண்டாமையை ஒழிப்பதற்காகப் போராடினோம். ஆலய நுழைவு இயக்கங்களில் நாங்கள் தீவிரமான பங்காற்றினோம். இந்த நில உரிமை முறைகளில் நூற்றாண்டு பழமையான வழக்கமான பிரம்மதேயம் மற்றும் தேவதானம் போன்றவைகளும் கூட இருந்தன. [பிரம்மதேயம் என்பது பிராமணர்களுக்கு இனாமாக / வரிவிலக்கு அளித்து மன்னர்களால் வழங்கப்பட்ட நிலம் அல்லது கிராமம். தேவதானம் என்பது கோயில்களின் பராமரிப்பு மற்றும் பணிகளுக்காக மன்னர்கள், அதிகாரிகள் அல்லது வணிகர்களால் கோயில்களுக்குக் கொடையாக வழங்கப்பட்ட நிலமாகும்.] பிரம்மதேயத்தின் கீழ் பிராமணர்கள் பெரும் லாபங்களைக் குவித்தனர். தேவதானத்தின் கீழ் குத்தகைதாரர்களும் தொழிலாளர்களும் அவர்களின் இரக்கத்தைச் சார்ந்து இருக்க வேண்டி இருந்தது, நிலங்களில் இருந்து வெளியேற்றப்படுவதையும் அவர்கள் சந்தித்தனர்.

மடங்களின் வசம் ஆறு லட்சம் ஏக்கர் நிலம் இருந்தது மக்களின் போராட்டங்கள் அவர்களின் அதிகாரத்தைக்  குறைத்தது.

1948ல் தமிழ்நாடு ஜமீன்தாரி ஒழிப்புச் சட்டம் அமலுக்கு வந்தது. 1947 –49 இடைப்பட்ட ஆண்டுகளில் கோயில் நிலங்களில் இருந்து ஏராளமானோர் வெளியேற்றப்- பட்டனர். 1948 --1960 இடைப்பட்ட ஆண்டுகளில் நடைபெற்ற போராட்டங்கள் இந்தக் கோயில்கள் மற்றும் மடங்களின் அதிகாரங்களை உடைந்து நொறுங்கியததைக் கண்டது.

ஒரு கோயிலில் ஓர் இரவு நடந்த எதிர்ப்புப் போராட்டங்களை நல்லகண்ணு விவரிக்கிறார்: போராடிய விவசாயிகள், கோயில் தேர்த்திருவிழா நடைபெறும்போது பெரும் வடகயிறு மூலம் கோயில் தேர் /அலங்கரிக்கப்பட்ட சப்பரத்தை இழுத்துச் செல்பவர்களும் ஆவர். நிலங்களிலிருந்து கட்டாயமாக வெளியேற்றப்படுவது தொடரும் என்றால் மற்றும் விதைப்பதற்கு நெல்மணிகள் கொடுக்கப்படாவிட்டால் நாங்கள் தேரை இழுக்க முடியாது என்று மறுத்துவிட்டனர்.

தலித் மக்கள் மீது அட்டூழியங்கள்

1943ல் தலித் தொழிலாளர்கள் இன்னும் சாட்டையால் அடிக்கப்பட்டு, பிறகு அந்தக் காயங்களின் மீது பசுவின் சாணி கரைசல் ஊற்றப்பட்டது. எப்போது சேவல் கூவுகிறதோ அப்போதே அந்த விடியலின் 4 அல்லது 5மணிக்கு அவர்கள் வேலைக்குச் செல்ல வேண்டும். மிராஸ்தார் நிலங்களில் கால்நடைகளைக் குளிப்பாட்டி, சாணியை அகற்றி, நிலத்திற்கு நீர் பாய்ச்ச வேண்டும். (இந்தக் கொடுமைகள் தாங்காமல்) தஞ்சாவூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகில் உள்ள ஒரு கிராமத்தில் அவர்களின் கண்டனப் போராட்டம் நடத்தப்பட்டது.

சீனிவாச ராவ் மற்றும் நல்லகண்ணு தலைமை ஏற்க, அங்குக் கிசான் சபாவின் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ‘செங்கொடிகளை ஏந்திச் சென்றதற்காக மிராசுதார்களின் அடியாட்கள் தாக்குவார்கள் எனில், அவர்களைத் திருப்பித் தாக்குங்கள்’ என்று விவசாயிகளிடம் கூறப்பட்டது. இறுதியில் திருத்துறைப்பூண்டியில் மிராசுதார்கள் மற்றும் முதலியார்கள், சாட்டையால் அடித்துச் சாணிப்பால் ஊற்றும்  பழக்கத்தை ஒழித்த ஓர் உடன்பாட்டில் கையெழுத்திட்டனர்.

பி சீனிவாச ராவ் அவர்களைத் தொடர்ந்து தமிழ்நாடு அனைத்திந்தியக் கிசான் சபாவின் தலைவராக ஆர் என் கே ஆனார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் (சிபிஐ– எம்) இணைந்த தோழர் சங்கரய்யா உடன் நல்லகண்ணு மிகவும் நெருக்கமானவர்.

நெல்லை சதி வழக்கு

1948 –50களின் பிடிஆர் குழுவாதப் போக்கு காலகட்டத்தில் சிபிஐ மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டது; அதன் ஆயுதப் போராட்டத்திற்காகக் கம்யூனிஸ்ட் கட்சியைப் அடித்து நொறுக்க போலீசுக்கு வாய்ப்பு  அளித்தது. 1949ல் நாங்குநேரி புலியூர்குறிச்சி கிராமத்தில் 23 வயதான நல்லகண்ணு கைது செய்யப்பட்டு சிறைக் காவல் சித்திரவதைகளுக்கு ஆட்பட்டார். ஒரு போலீஸ் அதிகாரி பற்ற வைத்த சிகரெட் அடிக்கட்டையால் நல்லகண்ணுவின் மீசையைத் தீய்த்துப் பொசுக்க, உதட்டின் மேல் நிரந்தர வடுவின் அடையாளம் ஏற்பட்டது: அதன் பிறகு அவரால் மீசையை வளர்க்க முடியவில்லை. நல்லகண்ணு கூறினார்: “போலீஸ் சிகரெட்டால் பொசுக்கி எனது மீசையை நீக்கியது. அது, கிருஷ்ணமூர்த்தி என்ற மெட்ராஸ் நகரப் போலீஸ் இன்ஸ்பெக்டரால் என் மீது நடத்தப்பட்ட சித்திரவதைகளின் ஒரு பகுதி. நடு இரவு 2 மணிக்கு என் கைகளைக் கட்டியவர் அடுத்த நாள் காலை 10 மணிக்குத்தான் அவிழ்த்து விட்டார் பிறகு தனது  குறுந்தடியால் என்னை நீண்ட நேரம் அடித்தார்”

இந்த நிகழ்வை நினைவு கூறிய அவரிடம் தனிப்பட்ட முறையில் எந்த வெறுப்பும் இல்லை,  தன்னை சித்திரவதை செய்தவர்கள் பால் எந்தப் பகையும் அவரிடம் இல்லை.

மதுரை மத்தியச் சிறையில் கைதி எண் 9658 என்ற எண்ணுடன் இருந்த நல்லகண்ணு,

சிறைக் காவலில் சித்திரவதைகள் மற்றும் அதிகாரத் துஷ்பிரயோகத்தைக் கண்டித்துப் போராட்டங்களை நடத்திய அதே நேரத்தில் சிறைவாசிகளுக்காக இலக்கிய நிகழ்ச்சி- களையும் நடத்தினார்.

1956ல் விடுதலை செய்யப்பட்டார். நீண்ட பல நாட்கள் ஒரே சிறையறையில் அடைபட்டுக் கிடந்ததையும், அந்த அறையின் கதவுகள் ஒவ்வொரு காலையும் சிறிது நேரம் மட்டுமே திறந்திருந்தது என்பதையும் அவர் நினைவு கூர்ந்தார்.

திருமணம்

நல்லகண்ணு 1958ல் ஓர் அரசு பள்ளி ஆசிரியை ரஞ்சிதம் என்பவரைத் திருமணம் செய்து

கொண்டார். அந்தப் பெண்மணி அப்போதைய திருநெல்வேலி சிபிஐ மாவட்டக்குழு உறுப்பினர் தோழர் அண்ணாசாமியின் மகள் ஆவார். அவரது திருமணம் ஒரு மதக்கலப்பு திருமணம் ஆகும். ரஞ்சிதம் ஒரு கிறிஸ்தவர். நல்லகண்ணு 30 ரூபாய் மாத ஊதியத்தில் கட்சி முழு நேர ஊழியர், குடும்பத்தை மனைவி கவனித்துக் கொண்டார்.

அவர் 1982ல் காலமானார் அவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் (ஒருவர் ஆண்டாள் மருத்துவராக உள்ளார்; மற்றொருவர் காசி பாரதி ஆசிரியராகப் பணியாற்றுகிறார்)

தேர்தல்கள் மற்றும் கட்சி பொறுப்புகள் 

மென்மையாகப் பேசும் எளிய மனிதரான நல்லகண்ணு சமரசமற்ற மதச்சார்பு அரசியல் மற்றும் தனிப்பட்ட நேர்மையை அடையாளப்படுத்துகிறார். 1967 மற்றும் 1977-இல் அம்பாசமுத்திரம் தொகுதியில் இருந்து சட்டமன்றத்திற்கும் 1999ல் கோயம்புத்தூர் நாடாளுமன்ற தொகுதியிலும் போட்டியிட்டார். அவற்றில் வெற்றி பெற இயலாத போதும் ஒருபோதும் அவர் வருந்தியது இல்லை. 1992 முதல் 2005 வரை தமிழ்நாடு சிபிஐ மாநிலச் செயலாளராக அவர் பணியாற்றினார்.

அவர் 2005ல் சென்னையில் ஒரு வாடகை   குடியிருப்பில் எளிமையாக வாழ்ந்தார். 

அவர் [கட்சி வழங்கிய ரூ ஒரு கோடி நிதியைக் கட்சி இடமே திரும்ப அளித்தார்; மற்றும் மாநில அரசு 2007ல் ‘அம்பேத்கர் விருது’டன் வழங்கிய ஒரு லட்சத்தை கட்சிக்கும் விவசாய சங்கத்திற்கும் அளித்தார்;] தமிழக அரசு 1922ல் ‘தகைசால் தமிழர் விருது’டன் அளித்த ரூபாய் 10 லட்சம் முழுவதையும் –ஏன் அந்தத் தொகையுடன் தனது கைப்பணம் ரூபாய் 5 ஆயிரத்தை சேர்த்து– முழுவதையும் முதலமைச்சர் பொது நிவாரண நிதிக்கு வழங்கினார்.

சூழலியல் பாதுகாப்பதற்காக 

நல்லகண்ணு கூறுவார் : “ஆறுகள் மறையும்போது, முதலில் இழப்புக்கு ஆளாவது மிகவும் பரம ஏழைகள்”. அடியோடு ஆற்று மணலைச் சுரண்டி எடுப்பதையும், நிலப் பரப்புகளைப் பலவீனமாக்கும் அச்சுறுத்தும் திட்டங்களையும்  உறுதியுடன் எதிர்த்தார். 

அவருக்குச் சூழலியல் ஒரு நீதி நெறி சார்ந்த பிரச்சனை; சூழலியல் என்பதன் பொருள் நிலம் மற்றும் நீரைச் சார்ந்து இருக்கும் சாதாரண மக்கள். வயது முதிர்ந்த நிலையிலும் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு அவர்  பயணம் செய்து கிராமவாசிகள் மற்றும் சுற்றுச்சூழல் ஆர்வலர்களிடம் அக்கறையோடு விசாரித்துக் கேட்டறிவார். அது ஒரு பொழுதுபோக்கு கவர்ச்சிகர ஆர்வம் அல்ல, ஆனால் அவருக்கு அது ஒரு சமூக நீதிப் பிரச்சனை.

அரசியலுக்கும் சுற்றுச்சூழல் இயக்கங்களுக்கும் இடையில் ஓர் அபூர்வ இணைப்புப் பாலம் அவர்.

சாதி பாகுபாட்டுக்கு எதிராக 

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் “ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம்” அமைப்புக்கும் கூட தலைமையேற்ற அவர், வாழ்நாள் முழுக்க தீண்டாமைக்கு எதிரான போராளியாக இருந்தார், சாதிகளைக் கடந்த மற்றும் மதங்களைக் கடந்த கலப்புத் திருமணங்களை ஆதரித்தார்.

அவரது மாமனார் அண்ணாசாமி 1995ல் (தலித்களுக்குத் தனி கிளாஸ் பயன்படுத்தும்) ‘இரட்டை குவளை முறை’யை எதிர்த்து ஓர் இயக்கம் தொடங்கினார்; அந்தப் பாகுபடுத்தும் முறையைக் கண்டித்து தானே சொந்தமாக ஒரு டீக்கடை திறந்தார். சாதிக் கலவரம் வெடித்தது, அதில் அவர் கொடூரமாகக் கொல்லப்பட்டார். அவரது இறுதிச் சடங்கில் கலந்து கொள்வதற்கு முன்பு நல்ல கண்ணு பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைதிப் பேரணி நடத்தினார். மாமனாரின் இறப்புக்கு அரசு அளித்த நிவாரணத் தொகையைப் பாதிக்கப்பட்ட இரண்டு சமூகத்தினரின் குழந்தைகளை ஆதரிக்கப் பயன்படுத்தினார். அவரது ஆலோசனை பேரில் திமுக அரசு, (சாதி மோதல்களைத் தவிர்க்க தலைவர்களின் பெயரில் இருந்த) மாவட்டங்கள், போக்குவரத்துக் கழகங்களுக்கு மறுபெயர் சூட்டியது. 

மேனாள் தமிழக முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் ஒருமுறை, தனக்கு “தந்தை பெரியார் ஒரு கண் மற்றும் நல்லகண்ணு மற்றொரு கண்” என்று குறிப்பிட்டார்.

(சூழலியல் போராளியான) அவர் 2018ல் தனது 95வது வயதில் மதுரை உயர்நீதிமன்ற அமர்வு முன் நேரடியாக வாதிட்டு வழக்கை வென்றார் –தாமிரபரணி ஆற்றில் மணல்  அள்ளுவது தடை செய்யப்பட்டது.

2019-ல் நல்லகண்ணு மற்றும் அவரது குடும்பம், பொது வாழ்வில் அவரது பங்களிப்பை அங்கீகரித்து ஒரு நன்றி அறியதலாக  ஒதுக்கீடு செய்யப்பட்ட வீட்டை காலி செய்யும்படி கோரப்பட்டது. பரவலாக அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களும் அந்த நடவடிக்கைக்கு தங்கள் கோபத்தை வெளிப்படுத்தினர். திமுக தலைவர் எம் கே ஸ்டாலின் நல்லகண்ணுக்கு மாற்று  இல்லம் வழங்கப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

விருதுகள்

நல்லகண்ணு பெற்ற விருதுகள்  வருமாறு: 

2007 ஆகஸ்ட் 14ல் தமிழ்நாடு ஆளுநர் சுர்ஜித் சிங் பர்னாலாவிடமிருந்து சக யோகி புரஸ்கார் விருது; 2008 அக்டோபர் 3ல் அனைத்திந்திய மகாத்மா காந்தி சமூக நல ஃபோரம் அமைப்பிடமிருந்து அவரது சமூகச் சேவைக்காக காந்திய விருது; அம்பேத்கர் விருது மற்றும் 2009 ஜனவரி 21ல் மாவட்ட எழுத்தாளர்கள் அமைப்பு வழங்கிய ஜீவா விருது.

2022 சுதந்திர தினத்தில் தமிழ்நாடு அரசு ஆர் என் கே அவர்களுக்கு தகைசால் தமிழர் விருது வழங்கியது. 2021ல் நிறுவப்பட்ட தமிழ்நாட்டின் அந்த ஆக உயர்ந்த விருதுடன் 10 லட்ச ரூபாய் பண முடிப்பும் தோழர் ஆர்.என்.கே  அவர்களிடம் முதலமைச்சர் எம்கே ஸ்டாலின் செயின்ட் ஜார்ஜ் கோட்டை கொத்தளத்தில் இருந்து வழங்கினார்.

திரைப்படம்

2019-ல் சினிமா தயாரிப்பாளரும் நடிகருமான சமுத்திரக்கனி “அதனால்தான் அவர் நல்லகண்ணு” என்ற தலைப்பில் ஒரு வாழ்க்கை வரலாறு திரைப்படம் தயாரித்தார்.

எழுத்தாக்கங்கள் 

நல்லகண்ணு தீவிரமான வாசகர் மற்றும் ஒரு எழுத்தாளரும் கூட. உதாரணத்திற்குச் சீனிவாசராவ் வாழ்க்கை வரலாற்று நூலையும் வேறு பல நூல்கள் மற்றும் கட்டுரைகளையும் எழுதி உள்ளார். 

மறைவு 

தோழர் ஆர் நல்லகண்ணு 2026 பிப்ரவரி 25ல் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனையில் காலமானார். வயது முதிர்வு மற்றும் பல உள் உறுப்புகள் செயலின்மையால்

பாதிக்கப்பட்ட அவர் மருத்துவமனையில் உயிர்காக்கும் கருவிகள் ஆதரவில் இருந்தார். கட்சிகளைக் கடந்து அவரது மறைவுக்கு அனைத்து கட்சியினரும் இரங்கல் தெரிவித்தனர். முதலமைச்சர் எம் கே ஸ்டாலின் தனிப்பட்ட முறையில் அவர் புகழுடம்புக்கு மலர் வளையம் வைத்து (செவ்வணக்கம் முழங்கி) அஞ்சலி செலுத்தினார். நல்லகண்ணுவுக்கு அரசு இறுதி மரியாதை அளிக்கப்பட்டது. மருத்துவ ஆய்வுக்காக அவரது உடல் மருத்துவக் கல்லூரிக்குத் தானம் அளிக்கப்பட்டது.

ராகுல் காந்தி நல்லகண்ணுவின் நினைவுக்கு பெரும் புகழஞ்செலி செலுத்தினர்.

அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் நரேந்திர மோடி, ”நல்லகண்ணு சமூகத்தின் அனைத்து பிரிவு மக்களாலும் மிக உயர்வாக மதிக்கப்பட்டார். அதுபோலவே குறிப்பிடத்தக்கது அவரது எளிமை. எனது பரிவும் இரங்கலும் அவரது குடும்பத்தினர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு உரித்தாக்குக” என்று கூறினார்.

நல்லகண்ணு இவ்வாறு தனது வாழ்க்கையில் லட்சியத்தை வெளிப்படுத்தினார்:


“கம்யூனிசம் சமூகத்தின் தேவை. ஒரு நாள் சமூகம் அதை ஏற்றுத் தழுவிக் கொள்ளும். ஒடுக்கப்பட்ட மக்களின் நல வாழ்வுக்காக நாம் போராடுகிறோம். நாம் எதற்காகப் போராடினோமோ அதை அவர்கள் நுகர்ந்து மகிழ்வதை காண்பதே எனது ஆகப் பெரிய சொத்து”

[சிராவயலில் தோழர் ஜீவாவைச் சந்தித்த காந்தி, “நீங்கள் தான் தேசத்தின் சொத்து” என்று கூறியதைப் போல நமது தோழர் நல்லகண்ணு தேசத்தின் சொத்து. வாழ்க அவர் புகழ்!]

–நன்றி : நியூ ஏஜ்  (2026 மார்ச் 15– 21)
–தமிழில் : நீலகண்டன்,
  என்எப்டிஇ, கடலூர்

Monday, 23 March 2026

நியூ ஏஜ் தலையங்கம் (2026, மார்ச் 22 –28) -- ‘மாபெரும் தியாகி’ பகத்சிங்

 நியூ ஏஜ் தலையங்கம் (2026, மார்ச் 22 –28) 

‘ஷாஹித் -இ- ஆசம்’ பகத்சிங்
(‘மாபெரும் தியாகி’ பகத்சிங்)

நூற்றாண்டுக்கு ஐந்தாண்டு குறைவாக 1931 மார்ச் 23 அன்று பகத்சிங் அவரது தொடக்க இளமை காலத்தில் தியாகியாக்கப்பட்டார். காலனிய அடிமைத் தளையில் இருந்து தேசத்தை விடுதலை செய்யும் பாதையை, வெளிப்படையான புதிய கருத்துக்களுடன் பின்பற்றிய நகர்ப்புறத்து இளைஞர்களில், தனது தோழர்களுடன் ‘இந்துஸ்தான் சோசலிசக் குடியரசு இராணுவம்’ (HSRA) என்ற அமைப்பை உருவாக்கிய பகத்சிங் ஒருவர். பின்னர் மார்க்சியத் தத்துவச் செல்வாக்கின் கீழ் வந்தபின், அவர்கள் அமைப்பின் கடைசி சொல், இராணுவம் (ஆர்மி) என்பது ‘அசோசியேஷன்’ என மாற்றப்பட்டது.

 (உச்சபட்ச தண்டனை அளிக்கப்பட்ட வழக்கின்) விசாரணை நீதிமன்றத்தில் நடந்த போது பகத்சிங் கூறினார், “புரட்சி மனித குலத்தின் பிரிக்க முடியாத உரிமை. சுதந்திரம் அனைவருக்கும் பிறப்புரிமை. சமூகத்தைத் தாங்கி உண்மையில் இயங்கச் செய்பவர்கள் உழைப்பாளர்கள். …எந்தத் தியாகமும் ஆக அற்புதமான நோக்கத்திற்காகச் செய்வது மிகப்பெரிது அல்ல.” மேலும் புரட்சி என்பது அவருக்கு வெடிகுண்டு துப்பாக்கி கலாச்சாரம் அல்ல என்று விளக்கிய பகத்சிங் தொடர்ந்து கூறினார், “அது, இறுதியில் வெளிநாட்டு மற்றும் இந்திய முதலாளித்துவத்தைத் தூக்கி எறிந்து, உழைக்கும் பாட்டாளிகளின் சர்வாதிகாரத்தை நிறுவுகின்ற முழுமையான சமூக மாற்றம்.”

நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட மரண தண்டனைக்குக் காத்துக் கொண்டிருந்த பகத்சிங், அப்போது 23 வயது தான்; நேரத்தை வீணடிக்காமல் மார்க்சியத்தை படிப்பதில் பொழுதை ஈடுபடுத்திக் கொண்டான் அந்த இளைஞன்.

பகத்சிங்கும் அவரது தோழர்களும் அதே பாதையைப் பகிர்ந்தனர், அதே கோட்பாடுகளைப் பின்பற்றினர்; உடன் அடைக்கப்பட்டு இருந்த பிற அரசியல் கைதிகள் சந்தித்த மோசமான இருள் சூழ்ந்த நிலைமைகளை மேம்படுத்த அவர்கள் இடை விடாது தொடுத்த போராட்டங்கள், குறிப்பாக வழக்கு விசாரணை நீதிமன்றத்தில் நடந்து கொண்டிருந்தபோது ஏறத்தாழ அவர்களை மாவீரர்கள் ஆக்கியது.

நாட்டிற்கு உள்ளேயும் நேர்மறையான நம்பிக்கை மிகவும் துடிப்புடன் இருந்தது. பாம்பே டெக்ஸ்டைல் தொழிலாளர்கள் மிக பிரம்மாண்டமான வேலை நிறுத்தத்தைத் தொடங்கினர், அது ஆறு மாதங்களுக்கு நீடித்தது. கல்கத்தாவிலும் கான்பூரிலும் கூட தொழிலாளர்கள் பாம்பே

தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தில் இறங்கினர். 1926ல் பகத்சிங் மற்றும் அவரது நண்பர்கள் ‘பாரத் நவஜவான் சபா’ என்ற அமைப்பைத் தொடங்கினர். வெகு விரைவிலேயே அந்தச் சபா  வலிமை பொருந்திய அமைப்புகளில் ஒன்றானது –பஞ்சாபில் இருந்த இளைஞர்களைத் தீவிரப் படுத்துவதில் அது முக்கிய பங்காற்றியது. பகத்சிங் சில காலம் ‘கீர்த்தி’ (Kirti) பத்திரிக்கை ஆசிரியர் குழுவினரோடு ஈடுபட்டார். சோஹன் சிங் ஜோஷ் அவர்களால் நடத்தப்பட்ட அந்தப் புரட்சிகரப் பஞ்சாபியப் பத்திரிக்கை ஒரு சோசலிச இதழாகும்.

விரைவில் HSRA  அமைப்பு மறு சீரமைக்கப்பட்டது, அவரது முக்கிய நோக்கம் நாட்டை 

விடுவித்து ஒரு சோசலிச அரசை அமைப்பதாகும். இதில் முக்கியமான பிரச்சனை விடுதலை மற்றும் சோசலிசத்திற்கு எப்படிப் போராட்டத்தைத் தொடுப்பது். சோசலிசம் அவர்களது லட்சியம். பின்னர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்த பலரும் அவர்களின் அந்த நோக்கத்தில் வந்து இணைந்தார்கள். அஜாய் கோஷ் அவர்களில் ஒருவர், அவர் பின்னர் சிபிஐ பொதுச் செயலாளர் ஆனார். 


 சூழ்ந்திருந்த இருளின் அடர்த்தி மெல்ல விலகி அதன்  விளிம்புகளில் வாய்ப்பின் வெளிச்சம் மின்னியது. மக்கள் போராட்டங்களைக் கட்டவிழ்த்து விட்டனர். அங்கங்கே இளைஞர் லீக் அமைப்புகள் தொடங்கப்பட்டன, தொழிலாளர் வர்க்கம் பெரும் கிளர்ச்சியைத் தொடங்குவதில் மும்முரமாக இருந்தது. அடுத்து விரைவில் கம்யூனிஸ்டுகள் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்களைக் கைது செய்ய வாரண்டுகள் வந்தன. 

அலகாபாத் பல்கலைக்கழக மாணவரும் இளைஞர் வீக் அமைப்பின் தலைவருமான பிசி ஜோஷி கைது செய்யப்பட்டார். அதன் விளைவாய் மாணவர்கள்   ஓர் அணியாய்த் திரண்டுத் தீவிரக் கண்டனப் போராட்டத்தில் இறங்கினர், நாடு முழுவதும் ஆர்ப்பாட்டங்கள் பல்கிப் பெருகின.

விரைவில் அந்தத் தருணமும் வந்தது, பகத்சிங்கும் தோழர்களும் தாங்கள் கம்யூனிஸ்களுடன் இணைந்து அவர்களுடன் செயல்பாட்டு ரீதியில் கூட்டுச் சேர்ந்து பணியாற்ற முடியும் என உணர்ந்தனர். வேறுபாடுகள் இருந்த போதிலும், ஒன்றுபட்ட தன்மைகள் குறித்து அவர்களிடம் விழிப்புணர்வு இருந்தது. இருவரும் ஏகதிபத்தியத்திற்கு எதிராக இருந்தனர், சோசலிசத்தை நோக்கி நகரும் இலட்சியத்தைத் தங்களின் இறுதி நோக்கமாகப்  பின்பற்றினர்.

 இதில் HSRA அமைப்பும் கம்யூனிஸ்டுகளும் ஒன்று. கம்யூனிஸ்டுகளைக் கைது செய்வது தங்களுக்கும் கூட ஓர் அச்சுறுத்தல் என்று இப்புரட்சிகரப் பிரிவுகளால் கருதப்பட்டது. எதிர்ப்பைத் தொடங்குவது என அவர்கள் தீர்மானித்தனர், அது மக்களுக்கு எதிரான ஒடுக்குமுறை நடவடிக்கைகளின் முழுமையான ஏகாதிபத்திய கொள்கைக்கு  எதிரானது.

தொழில் தகராறு மசோதாவை நிறைவேற்றியது அத்தகைய நடவடிக்கைகளில் ஒன்று. அதை எதிர்ப்பதற்காக அதனை விளக்கி ஒரு சுற்றறிக்கையை விநியோகிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. நாடு முழுவதன் கவனத்தை ஈர்க்க சட்டமன்ற மத்திய  ஹாலில் ஒரு வெடிகுண்டை வெடிப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. வெடிகுண்டை வீசுவது யாரையும் கொல்வதற்காக அல்ல; மாறாகச் செய்தியைப் பிரகடனம் செய்து –பகத்சிங்கின் தோழர் பட்டுகேஷ்வர் தத் உடன் இந்த முழு நடவடிக்கைக்கும் பொறுப்பேற்று– பின்னர், பகத்சிங் எழுதிய விளக்க அறிக்கையைச் சட்டமன்றத்தில் விநியோகிப்பது என்பது திட்டம். 

குண்டு வெடிப்புக்குப் பின் அங்கு ஒரே குழப்பம்  ஒவ்வொருவரும் அவையைவிட்டு வெளியேறினர். துண்டுப் பிரசுரங்கள் சுற்றிலும் சிதற விடப்பட வேண்டியதாயிற்று. அது பகத்சிங்கால் அவரே எழுதிய அறிக்கை, அதில் அவர்கள் அதற்கான பொறுப்பை ஏற்றனர். பகத்சிங்கும் பட்டுகேஸ்வர் தத்தும் அந்த இடத்திலிருந்தே கைது செய்யப்பட்டனர்.

1929ல் லாகூர் சதி வழக்கு தொடங்கியபோது, பகத்சிங் மற்றும் தோழர்களுக்கு விசாரணையைப் புரட்சிகரப்  பயன்பாட்டாக்க வேண்டும் என்பது தெளிவானது. எப்போதெல்லாம் அத்தகைய வாய்ப்பு எழுகிறதோ, அப்போதெல்லாம் பிரிட்டிஷ் அரசு அம்பலப்படுத்தப்பட வேண்டும். மற்றும் அதனைப் புரட்சியாளர்களின் வெல்ல முடியாத உறுதிப்பாட்டை வெளிப்படுத்துவதாகவும் பயன்படுத்தப்பட வேண்டும்.

‘நாங்கள்’ சிறைக்கு உள்ளேயும் வெளியேயும் தொடர்ந்து பாடுபடுவோம், மக்களை எழுச்சி பெறச் செய்து கொண்டே இருப்போம் என்று அவர் கூறினார். புதிய தலைமை எழுவதற்கான அடிப்படையை ஏற்படுத்தும் உதாரணத்தை அவர்களின் தலைமுறை படைப்பதாக இந்தப் புரட்சியாளர்கள் நம்பினார். சோசலிசம் அவர்களுக்கு ஒரு லட்சியம், அவர்களை வழிநடத்தும் கோட்பாடு, இந்தியா விடுதலை பெற்ற பிறகு சமூகத்தை மறு கட்டமைப்பு செய்வது.

பகத்சிங் தீவிரமான வாசகர் குறிப்பாகச் சோசலிச நூல்கள்; மற்றும் ஒருக்கால் அந்தக் குழுவினர் மத்தியில் சோசலிசத்தின் பால் ஈர்க்கப்பட்ட முதலாமவர் அவர். சிறைக்கு வெளியே

நடக்கும், சோலாப்பூர் எழுச்சி, பெஷாவர் கிளர்ச்சி, சந்திராசிங் கார்வாலி தலைமையில் கார்வாலி வீரர்களின் துணிச்சலான நிலைபாடு போன்ற எல்லா முக்கிய நிகழ்வுகளையும் அவர் அறிந்திருந்தார். அவரது விசாரணையின்போது நீதிமன்றத்தில் அவர் கூறினார்: “எங்களது போராட்டம், துப்பாக்கி மற்றும் வெடிகுண்டுகள் அடிப்படையிலானது அல்ல; மாறாக, எங்கு ஒவ்வொருவரும் அவரவர் அடிப்படை தேவையைப்  பூர்த்தி செய்யப் போதுமானவைகளைப் பெற்ற ஒரு சமூக மாற்றத்தின் மீது –சுருக்கமாகச் சோசலிசத்தின் பால் – அடிப்படையாகக் கொண்டது எங்கள் போராட்டம்”

ஏராளமான நூல்களை, குறிப்பாகச் சிறையில், படித்த படிப்பு,  அவர்களின் பார்வையை விரிவாக்க உதவியது. எப்போதும் அவர்கள் சோவியத் யூனியனை வியந்து போற்றிப்

புகழ்ந்தனர்; 1930 நவம்பர் புரட்சி நாளின்போது (அவர்கள் அதை அக்டோபர் புரட்சி என்று அழைத்தனர்) சோவியத் யூனியனுக்கு, அதன் வெற்றிகளைப் புகழ்ந்து வாழ்த்துச் செய்தி அனுப்பினர்; மற்றும் அதன் எல்லா பகைவர்களுக்கும் எதிராக அவர்களுக்கு ஆதரவாக  இருப்போம் எனவும் உறுதியும் கூறினர்.

1931 மார்ச் 23 அன்று, காங்கிரஸின் கராச்சி அமர்வு நடப்பதற்கு சற்று முன், பகத்சிங் மற்றும் அவரது தோழர்களுக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனை (தூக்கு தண்டனை) நிறைவேற்றப்பட்டது. மாபெரும் தியாகி பகத்சிங்குக்கு அப்போது வயது வெறும் 24.

            வாழ்க சாஹித் -இ- ஆசம் பகத்சிங்

இன்குலாப் ஜிந்தாபாத்!

–தமிழில் : நீலகண்டன், 
என்எப்டிஇ, கடலூர்.

   

   

Monday, 16 March 2026

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாற்று வரிசை 145 -- ராகுல சாங்கிருத்தியாயன்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு -145

ராகுல சாங்கிருத்தியாயன்

 – ஏராளமாக எழுதியவர், அறிஞர், தலைவர்

–அனில் ரஜீம்வாலே 

ராகுல் பல்துறை மேதை, மாபெரும் மொழியியலாளர், நாவலாசிரியர், வரலாற்றாளர், தத்துவ மேதை, விரிவாகப் பயணம் செய்த பயணி, கலைக் களஞ்சிய அறிஞர். இவை அனைத்தையும்விட மேலாக, அவர் பரவலாக அங்கீகரிக்கப்பட்டப் பெருந்திரள் விவசாயிகள் மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர். குறைந்தபட்சம் 30 (முப்பது) மொழிகளை அவர் அறிந்திருந்தார்! 

ராகுல சாங்கிருத்தியாயன், கேதார்நாத் பாண்டே என்ற இயற்பெயருடன் 1893 ஏப்ரல் 9ம் நாள் உத்தரப்பிரதேச அசாம்கர் மாவட்ட முகமதாபாத் தாலுக்கா  பண்டகா கிராமத்தில்  செல்வச் செழிப்பு மிக்க பிராமணக் குடும்பம் ஒன்றில் மூத்த குழந்தையாகச் சாங்க்ரித்தியா கோத்திரத்தில் பிறந்தார். தந்தை பண்டிட் கோவர்தன் பாண்டே மற்றும் தாயார் திருமதி குல்வந்தி தேவி. அவரது பூர்வீகக் கிராமம் அசாம்கர் மாவட்டத்தின் கனைலா சக்கர பான்பூர். அவரது தாய்மொழி போஜ்புரி. அவர் குடும்பத்தின் பூர்வீக வேர்கள் இன்றைய கோரக்பூர் மாவட்ட ரப்தி ஆற்றங்கரையில் அமைந்த மலான் கிராமம். அவரது தாய் வழி தாத்தா ராம்சரண் பதக் மூலம் தொடக்கக் கல்வியை உருது வழியில் பெற்றார். பின்னர் 1899ல் ராகுல், தேவநாகரி எழுத்தைப் பதம் பள்ளியில் கற்றார். அவரது மாமா சமஸ்கிருத அறிஞரான மகாதேவ் பண்டிட்டிடம் 1902-ல் சமஸ்கிருதம் படித்தார்.

சிறுவன் கேதார் தொடக்கக் கல்வியை அசாம்கர் நிசாமாபாத்தில் உள்ள நடுநிலைப் பள்ளியில் பெற்றார். அப்போது 12 வயதே ஆன அவருக்கு அந்தக் கால வழக்கப்படி திருமணமும் நடந்தது. ராகுல் அந்தத் திருமணத்தை “ஒரு தமாஷ்”என்று குறிப்பிடுகிறார். 14 வயதில் வேலை தேடி கல்கத்தாவுக்குத் தப்பி சென்றார். கல்கத்தா சுவர்களில் ஒட்டிய போஸ்டர்கள் மூலம் அவர் வங்க மொழியைக்  கற்றுக் கொண்டார்!

பயணங்கள்


கேட்போரை மலைக்கச் செய்யும் ராகுலின் சிலிர்ப்பூட்டும் ஆச்சரியமான சாகசப் பயணங்கள், அவரது பல எழுத்தாக்கங்களின் ஆதாரமாக அமைந்து, பெரும்பான்மையான அவரது ஆளுமையை வடிவமைத்தது. 1910ல் வேதாந்தத்தைப் படித்துக் கொண்டு இருந்த போதும் ஹரித்வார், ரிஷிகேஷ், கங்கோத்திரி, பத்திநாத் மற்றும் கேதார்நாத் வழியாக அவர் மேற்கு இமயமலைத் தொடரை நோக்கிப் பயணப்பட்டார். 1911ல் காசியில் துர்க்கா சப்தசதி இறைவியிடம் தன்முன் காட்சி அளிக்குமாறும், அப்படித் தோன்றத் தவறினால் தான் தற்கொலை செய்து கொள்ளப் போவதாவும் ‘சவால்’ விடுத்தார்! இதைத் தொடர்ந்து ‘காவியம்’ (சமஸ்கிருத கவிதையியல்) மற்றும் ‘வியாகரணம்’ (சமஸ்கிருத இலக்கணம்) படித்தார். அப்போதிலிருந்து ஒருபோதும் அவர் நீண்ட காலம் ஓரிடத்தில் தங்கவில்லை, முறையான கல்வியைப் பெறவில்லை, ஆனால் அவரது கல்வியறிவு பெரிதும் சுயமாகக் கற்றது.

இதன் மத்தியில் (பீகார் சப்ரா மாவட்ட) பார்ஸா மடத் தலைவருக்கு ஒரு சீடர் தேவைப்பட்ட நிலையில், அவர் தன்னைத் தானே மடத்துடன் இணைத்துக் கொண்டார். 1912ல் சாப்ராவுக்குப் பயணம் செய்தார், ஒரு சாதுவாகத் தொடங்கி ‘பாபா ராமோதர் தாஸ்’ ஆனார். மடத்தின் தலைவருக்கு வாரிசாக அவர் ஆகியிருக்க முடியும், ஆனால் மத நடவடிக்கைகளில் முற்றாகச் சலித்துப்போய்த் தென்னிந்தியாவுக்கு ஓடினார், உத்தரார்த்தி மடாலயத்தில் தங்கினார். சில மாதங்களுக்குப் பிறகு அவர் அயோத்தியா வந்தடைந்தார்.

ஆர்ய சமாஜ் அமைப்பில்

1914 அக்டோபரில் அசாம்கர்க்கில் அவரது வீட்டுக்குத் திரும்பினார், ஆர்ய சமாஜ் இயக்கத்தில் அறிமுகமாகி 1915ல் ஆர்ய சமாஜ் இயக்கம் குறித்துச் சொற்பொழிவுகள் ஆற்றிக் கொண்டே அவர் வீட்டைவிட்டு ஆக்ராவுக்குச் சென்றார். அதே நேரத்தில் அவர் அரபு, பெர்ஷியன் மொழிகளையும் உலகத்தின் மதங்கள் குறித்தும் கற்றார். அதன் பிறகு அவர் தயானந்த் ஆங்கிலோ வேத (DAV) பள்ளியில் படிக்க லாகூர் சென்றார்.

அரசியல் நடவடிக்கைகள் மற்றும் பௌத்தத்தில் ஈர்ப்பு

விரைவில் புத்த மதத் தத்துவத்துடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. பௌத்தம் தொடர்பாக அவர் சென்ற இடங்களில் குஷிநகர், சாரநாத், லும்பினி மற்றும் புத்த கயா அடங்கும். வேண்டுமென்றே அவர் ராஜபுத்திர மற்றும் முஸ்லீம் வீடுகளில் மீன் உணவைச் சமைத்து உண்டார். 1918ல் ராகுல் உருது, இந்தி மற்றும் ஆங்கிலச் செய்தித் தாள்களில் ரஷ்யப் புரட்சி பற்றி படித்தார். புரட்சி அவரை (சர் ஃபிரான்சிஸ் பேகன் எழுதி முடிக்காத உடோப்பியன் நாவலில் வரும்) ‘புதிய அட்லான்டிஸ்’ அல்லது கற்பனாவாதக் கம்யூனிசச் சமூகமான ‘உடோப்பியா’வாகத் தன்னை எண்ண வைத்தது. 1919 ஜாலின்வாலாபாக் நிகழ்வுகள் அவரிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது, அவரைத் தொந்தரவுபடுத்தி துரத்திய பிரச்சனைகள் அவருககுத் தெளிவானது. 1921ல் ஆர்ய சமாஜத்துடன் அவரது செயல்பாட்டுத் தொடர்புகள் முடிவுக்கு வந்தன.

ஒத்துழையாமை இயக்கத்தின்போது தங்கள் தாய்மண்ணிற்குச் சேவையாற்ற காந்திஜி இளைஞர்களுக்கு விடுத்த அழைப்பால் ராகுல் உற்சாகம் பெற்றார். ஒரு கூட்டத்தில் சொற்பொழிவாற்றியதற்காக அவர் கைது செய்யப்பட்டு 4 மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1922ல் அவர் தனது சமஸ்கிருத மற்றும் இந்தியத் தத்துவங்கள் பற்றிய அறிவை ஆழப்படுத்தினார். [வேதத்தை ஏற்றுக் கொண்ட பண்டைய இந்து தத்துவத்தை வேதாந்தம், மீமாம்சம் அல்லது உத்தர மீமாம்சம், நியாயம், வைசேடிகம், சாங்கியம் மற்றும் யோகம் ஆகிய ஆறு தரிசனங்கள் என்றழைப்பர்]

துறவியாகிய ராகுல், வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட (பீகார் சரண் மாவட்டத்தின்) சாப்ரா ஏழை மககளுக்குச் சேவை செய்தார். அருகில் இருந்த ஏக்மா பகுதியில் அவர் நூற்புச் சக்ர ராட்டைக் கருவிகளை வழங்கினார், அதனுடன் காந்தியச் சிந்தனைகளை மையமாக வைத்துப் போஜ்புரியில் பொதுச் சொற்பொழிவுகளை ஆற்றினார். 1922 ஜனவரி 31ல் அவர் கைது செய்யப்பட்டார். சிறைக்குள் அவர்கள் டிராஸ்கி எழுதிய ‘போல்ஷ்விசம் மற்றும் உலகப் புரட்சி’ புத்தகத்தின் பிரதியைக் கடத்தி எடுத்து வந்தனர். ராகுல் அங்கு சமஸ்கிருத மொழியில் ஓர் அரசியல் பஜனை ஸ்லோகப் பாடலையே புனைந்தார்!

சப்ரா மாவட்டக் காங்கிரஸ் கமிட்டியில் அவர் சேர்ந்தார், கயா காங்கிரஸ் அமர்வில் கலந்து கொண்டார். அங்கு அவர் தேசியத் தலைவர்களிடம், பழைய பாரம்பரிய நடைமுறைகளைக் கறாராகப் பின்பற்றும் பழமைவாத இந்துகளிடமிருந்து புத்தகயாவைப் பௌத்த மதத்தவர்களிடம் மாற்றித் தரும்படி மன்றாடினார். சில காலமாகவே அத்தகைய மாற்றத்திற்காக அவர் பிரச்சாரம் செய்து வந்தார். 1923 மார்ச் --ஏப்ரல் மாதங்களில் ராகுல் ஒன்னரை மாதங்கள் நேபாளத்தில் கழித்தார். கார்கில் முதல் லடாக் வரையான பாதை வழியாக லாமாகள் மற்றும் புத்த பிக்குகளைச் சந்தித்தபடி காஷ்மீருக்குப் பயணமானார். இந்தப் பயணங்களின்போது உயிர்வாழ அவர் பிச்சைகூட எடுத்தார்! அறுபது வயதான ரிஜாங் லாமாவைச் சந்திக்க அவர் 18,000 அடி உயரத்தில் ஹார்டோங்-லா வரைகூட சென்றார். நடுங்க வைக்கும் குளிரிலும், வழுக்கிச் சறுக்கும் பாறைகளிலும், நடந்தும் மற்றும் என்ன போக்குவரத்துவசதி கிடைக்கிறோ அதிலெல்லாம் பயணம் செய்து, நாடோடிகள் மட்டுமே செல்லும் சாலை வழியாக, சுற்றிலும் ஐஸ் போர்த்திய மலைகளின் ஊடேயும், ஏன் அதன் மேலேறியும்கூட அவர் பயணம் மேற்கொண்டார். வழியில் கண்டெடுத்த செங்டுக் (Sengtuk) என்ற திபேத்திய நாய் குறித்த மனதைத் தொடும் விவரிப்பை அளித்துள்ளார். தனது தாய் தந்தை மறைந்தபோதுகூட கண்ணீர் சிந்தாத ராகுல் இந்த வளர்ப்புப் பிராணி இறந்தபோது அடக்க முடியாத பெருகும் கண்ணீருடன் இருந்தார். “நான் அந்த வளர்ப்பு நாய் மரணத்திற்குச் சமஸ்கிருதத்தில் எட்டு சுலோகங்கள் இரங்கற்பாவாக எழுதினேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

1922 ஜனவரி 31ல் சப்ரா மாவட்டக் காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் அவர் தலைமை தாங்கும்போது கைது செய்யப்பட்டு 6மாத சிறை தண்டனையில் (பீகார்) பக்ஸர் சிறைக்கு அனுப்பப்பட்டார். மீண்டும் அவர் 1925 --26ல் கிசான் போராட்டத்தில் ஹஸாரிபாக் சிறைக்குச் சென்றார். சிறையில் நேரத்தைப் பவுத்தம் பற்றி படிக்கப் பயன்படுத்தினார். 1927 –28ல் சிலோனில் (இன்றைய ஸ்ரீலங்கா) அவர் வித்யாலா ஏகாரா பரிவேகாவில் சமஸ்கிருத ஆசிரியராகப் பணியில் சேர்ந்து சமஸ்கிருதம் கற்பித்தபடி, அவர் தானே பாலி மொழி படித்துக் கொண்டு அங்கு மொத்தம் 19 மாதங்கள் தங்கினார். இறுதியில் அவர் பாலி மொழியில் எழுதப்பட்ட பண்டைய பௌத்த புனித நூலான திரிபிடகத்தில் பாண்டித்தியம் பெற்றவர் என்பதைக் குறிக்கும் திரிபிமகா-கார்ய பட்டம் வழங்கப்பட்டார். [கௌதம புத்தரின் போதனைகளைத் தொகுத்த புனிதநூல் திரிபிடகம்’ (Tripitaka).  'பிடகம்' என்றால் கூடை அல்லது திரட்டு என்று பொருள்; 'திரி' என்றால் மூன்று. இவை சுத்தபிடகம், விநயபிடகம், அபிதம்மபிடகம் என மூன்று முக்கிய பிரிவுகளைக் கொண்டிருப்பதால் திரிபிடகம் என அழைக்கப்படுகிறது.] மகா பண்டிட் தர்மானந்த் கோசம்பி-யிடமிருந்து அவர் புத்த பிக்குவாக (துறவி) தீட்சை பெற்றார். 1928 இறுதியில் ஸ்ரீலங்காவைவிட்டுத் திபேத்துக்குப் புறப்பட்டார். இது எளிய பயணமாக இருக்கவில்லை; இப்பயணம், அவர் இறுதியாக (சீனாவின் தன்னாட்சி பெற்ற திபேத் பகுதியின் நிர்வாகத் தலைநகரான) லாசா நகரை அடைவதற்கு முன் மொத்தமாக ஒரு வருடம், 6மாதங்கள் மற்றும் இருபது நாள்கள் எடுத்துக் கொண்டது –வழி நெடுக அனைத்து வகையான கடினமான பகுதிகளையும், அவ்வளவு ஏன் யூகிக்க முடியாத இடுக்கண் நிலப்பரப்புகளையும் கொண்டிருந்தது.

திபேத்தில் அவர் உள்ளூர் மொழியைக் கற்றுக் கொண்டே கையெழுத்துப் பிரதி ஆவணங்களையும் திரட்டினார். மேலும் அவர் Bho Sanskrit œabdkoœ என்ற தலைப்பிலான --16ஆயிரம் வார்த்தைகளைக் கொண்ட--  பதிப்பிக்கப்படாத அகராதியையும் தொகுத்தார், 1940களில் அவர் மூன்றாவது முறையாகத் திபேத்துக்குச் சென்றார்; ஒன்னரை லட்சம் சுலோகங்களை உள்ளடக்கிய சுமார் 70 புதிய பௌத்த நூல்களின் பிரதிகளை அவரது சொந்தக் கையெழுத்தில் உருவாக்கினார். அவரால் தயாரிக்கப்பட்ட திபேத்திய சமஸ்கிருத அகராதியை அலகாபாத் இந்துஸ்தானி அகாதமி பதிப்பித்தது. எல்லா வகையிலும் அவரது எழுத்தாக்க ஆவணங்களைப் பாதுகாத்து வைத்திருக்க புகழ்பெற்ற வரலாற்றாசிரியர் டாக்டர் கேபி ஜெயஸ்வால் மற்றும் பாட்னாவில் அமைந்துள்ள ஜெயஸ்வால் ஆய்வு நிறுவனம் பெரிதும் உதவியது.

1930ல் அவர் ஸ்ரீலங்கா திரும்பினார், அங்கு இறுதியாக அவர் ஒரு துறவியாக நியமிக்கப்பட்டு, சன்னியாச ஆஸ்ரமப் பெயராக ராகுல சாங்கிருத்தியாயன் என்ற பெயர் வழங்கப்பட்டார். அங்கு 1930 அக்டோபர் டிசம்பரில் ‘புத்தகார்ய’ (புத்தரின் செயல்கள் அல்லது புத்தரின் வாழ்வியல் நடத்தை) என்ற தலைப்பிலான புதிய புத்தகத்தை எழுதினார். சப்ராவுக்குப் புறப்பட்டுச் சென்றவர், 1931 நவம்பர் 28ல் மடாலயத்திற்குத் திரும்பினார். அதற்கு முன் காரல் மார்க்ஸ் எழுதிய கம்யூனிஸ்ட் அறிக்கையை அவர் மொழிபெயர்த்தார்.

ஐரோப்பாவிற்கு

      ஜூலை 1932ல் அவர் (அண்ணல் அம்பேத்கரின் ‘புத்தரும் அவரது தம்மமும்’ நூலை இந்தியில் மொழிபெயர்த்தவரும், இந்தியப் பௌத்தத் துறவியுமான) பதந்த் ஆனந்த் கௌசல்யாயன் உடன் மகாபோதி சொஸைட்டி பிரதிநிதிகளாக லண்டன் விஜயம் செய்தார். சொஸைட்டி அமைப்பினர் பிற ஐரோப்பிய நாடுகள் மற்றும் அமெரிக்காவில் புத்த மதத்திற்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய வேண்டினாலும், சாங்கிருத்தியாயன் சில மாதங்களுக்குப் பிறகு திரும்பிவிட்டார். இதற்காகச் சொல்லப்பட்ட காரணம் வருமாறு: “முதலாளித்துவ வாழ்க்கை முறையை மிகச் சலிப்பாக உணர்ந்தேன். நான் (லண்டனில்) என்ன விரும்பினேன் என்பதை நான் அவதானித்துப் புரிந்து கொண்டேன்; அமெரிக்காவிலும் அது போன்றவைகளே; எனவே, நான் எனது நேரத்தை வீணடிக்க விரும்பவில்லை.” 1933ல் சாங்கிருத்தியாயன் பாட்னா, லடாக் மற்றும் லாகூரில் புதிய இடங்களுக்கு விஜயம் செய்தார். 1934 –1938 இடைப்பட்ட ஆண்டுகளில் அவர் மூன்று முறை திபேத்துக்கும், பர்மா, கொரியா, ஜப்பான் மற்றும் பிற நாடுகளுக்கும் சென்றார். திரும்ப வரும்போது தன்னுடன் கொண்டுவந்த 80கும் மேற்பட்ட சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட பௌத்தப் படைப்புகளில் பலவற்றை அவர் மொழிபெயர்த்து வெளியிடவும் செய்தார்.

ரஷ்யா விஜயம்

       1935ல் ரஷ்யாவுக்கு முதலில் விஜயம் செய்த சாங்கிருத்தியாயன் அங்கு இரண்டு வாரம் இருந்தார். லெனின்கிராடுக்குப் பயணமாக அவர் அனுமதிக்கப்படாததால் அவரால் புகழ்பெற்ற ரஷ்ய பௌத்தத் தத்துவயியலாளரும் இந்தியவியலாளருமான எப். ஐ. ஷெர்பாட்ஸ்கோய் (Scherbatsky) அவர்களைச் சந்திக்க இயலவில்லை. 1937ல் ரஷ்யாவுக்கு அவரது இரண்டாவது விஜயம் லெனின்கிராடு பல்கலைக் கழகத்தில் சமஸ்கிருதம் கற்பிக்கும்படி சோவியத் விஞ்ஞான அக்காதமி அவரை அழைத்தபோது நடந்தது. (மங்கோலிய அறிஞரான லோலா என்றழைக்கப்பட்ட) எலினா நார்வெர்டோவ்னா கோஸெரோவ்ஸ்காயா (Ellena Narvertovna Kozerovskaya) என்ற பெண்மணியைச் சந்திந்தார், அவருக்குச் சமஸ்கிருதம் கற்பித்தார். அவர்கள் 1937 டிசம்பர் 22ல் திருமணம் செய்து கொண்டனர். 1938ல் ரஷ்யாவில் அவர்கள் மகன், இகோர் (Igor) பிறந்தான்.

மார்க்சியத் தத்துவத்தை ஏற்றல், AIKS அமைப்பு மாநாடு

   ஏற்கனவே மார்க்சிய ஈர்ப்பின் கீழ் இருந்த ராகுல் பல்வேறு மார்க்சிய நூல்களைப் படித்தார், மார்க்சியச் சிற்றேடுகளை எழுதத் தொடங்கினார். அவர் இந்தியில் எழுதிய ‘கம்யூனிசம் ஏன்?’ நூல் சாப்ரா ஜில்லா பள்ளி வாயிலில் விற்கப்படுவதைப் புகழ்பெற்ற கம்யூனிசத் தலைவர் இந்திரதீப் சின்ஹா 1933லேயே கண்டார். அந்தப் புத்தகம் சின்ஹாவைக் கம்யூனிசத்திற்குக் கொண்டு வருவதில் முக்கிய பங்காற்றியது.

    இந்திரதீப் சின்ஹாவும் சந்திரசேகர் சிங்கும் பாட்னாவில் ஜெய்பிரகாஷ் நாராயன் மற்றும் ராகுலைக் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி (CSP) அலுவலகத்தில் சந்தித்தனர்.  ராகுல் இருவரையும் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைய உற்சாகப்படுத்தினார். அனைத்திந்தியக் கிசான் சபா (AIKS) அமைப்பைக் கட்டி உருவாக்கியவர்களில் ராகுலும் ஒருவர். ராகுல் விவசாய இயக்கங்களுடன், சரண் மாவட்டத்தில் சக்கரை ஆலைத் தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்களையும் தலைமையேற்று நடத்தினார்.

பீகாரில் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவியவர்

   1938ல் ரஷ்யாவிலிருந்து திரும்பிய சாங்கிருத்தியாயன் விவசாயிகள் இயக்கத்தில் மீண்டும் இணைந்தார், CSP கட்சி உறுப்பினரானானர். பீகாரில் கம்யூனிஸ்ட் கட்சி 1939 அக்டோபரில் முங்கரில் நிறுவப்பட்டது. அமைப்பு கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட சிலரில் ராகுல சாங்கிருத்தியாயனும் ஒருவர். இவ்வாறு பீகாரில் கம்யூனிஸ்ட் கட்சியை அமைத்த நிறுவன உறுப்பினர்களில் அவரும் ஒருவராக இருந்தார். புகழ்பெற்ற அமவாரி கிசான் இயக்கத்தின் சத்தியாகிரகம் ஒன்றை ஏற்பாடு செய்ததற்காக அவர் சில மாதங்கள் சிறையில் அடைக்கப்பட்டார். 1940 மோட்டிகார் என்ற இடத்தில் விவசாயிகள் கூட்டத்திற்கு அவர் தலைமையேற்றார். அப்போது ஆத்திரமூட்டும் வகையில் பேசியதாகக் கூறி மீண்டும் கைதானார். இரண்டாண்டுகள் தண்டனை விதிக்கப்பட்டு ஹசாரிபாக் சிறையில் இரண்டு ஆண்டுகளைக் கழித்தார். குத்தகைதாரர்கள் உரிமைகளைக் கோரி பீகாரில் புகழ்பெற்ற பகஷ்ட் இயக்கம் (Bakasht movement) 1938 –39ல் நடைபெற்றது. சரண் மாவட்டத்தில் ராகுல் கிசான் சபாவைத் தலைமையேற்று நடத்தினார். அதில் 200 பெண்கள் சிகப்பு வண்ணப் புடவை அணிந்து கையில் செங்கொடிகளை ஏந்தியபடி “ரொட்டி அல்லது சிறை” வழங்குக என்ற முழக்கத்துடன் பேரணியாகச் சென்றனர்.

     1939 ஜனவரி இறுதியில் ராகுல் (பீகார் முசாஃபர்பூர் மாவட்ட மார்வான் பகுதியின்) ரேபுரா கிராமத்தில் கிசான் கூட்டமொன்றில் உரையாற்றினார். 1939 பிப்ரவரியில் அமவாரியில் 11

சத்தியாகிரகிகளுக்குத் தலைமை தாங்கி சட்டப் பிரிவு 144ஐ மீறி கரும்பு வெட்டத் தொடங்கினார். அந்தக் கரும்புத் தோட்டத்தின் ஜமீன்தார் ராகுல் மீது தனது யானையை அவிழ்த்துவிட யானைப் பாகன் லத்தியால் தாக்கி அவரைக் கீழே தள்ளினான். அந்த மாகாணம் முழுவதும் பரவலான கண்டனங்கள் எழுந்தன. கை விலங்கிட்டு அவர் கைது செய்யப்பட்டார். இது செய்திப் பத்திரிக்கைகளில் பிரசுரிக்ப்பட்டது; கைகளில் விலங்கிடப்பட்ட ராகுல சாங்கிருத்தியாயன் புகைப்படம்  வரலாற்றுப் புகழ்பெற்றதானது.

சிறையில் அவர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினார், பின்னர் மற்றவர்களால் அந்த உதாரணம் பின்பற்றப்பட்டது. ராகுல் 1940 பிப்ரவரி 24 மற்றும் மார்ச் 26க்கு இடையே கைது செய்யப்பட்டார். 1940 பிப்ரவரி 24ல் சாம்பரானில் நடத்தப்பட்ட பீகார் பிரதேசக் கிசான் சபா மாநாட்டில் இருந்தார். ஆந்திரப் பிரதேசம் பலாசாவில் 1940 மார்ச் 26ல் நடைபெற்ற அகில இந்தியக் கிசான் சபாவின் (AIKS) 5வது மாநாட்டில் அவரால் தலைமையேற்க முடியவில்லை, காரணம் மாநாட்டையொட்டி முன் கூட்டியே அவர் கைது செய்யப்பட்டார். 

தியோலி வதை முகாம்

      கைது செய்யப்பட்ட ராகுல், ஏற்கனவே எஸ் ஏ டாங்கே, அஜாய் கோஷ், ஆர் டி பரத்வாஜ், எஸ் வி காட்டே மற்றும் பெரும் எண்ணிக்கையிலான பிற கம்யூனிஸ்ட்கள் அடைக்கப்பட்டிருந்த (ராஜஸ்தானின் தியோலியில் உள்ள) தியோலி வதை முகாம் சிறைக்கு மாற்றப்பட்டார். அந்த முகாமில் ராகுல் ஏறத்தாழ ஓர் ஆண்டு இருந்தார், அங்கு தனது நேரத்தைக் காலை முதல் மாலைவரை எழுதுவதில் செலவிட்டார். உதாரணத்திற்கு, தர்ஷன் திக்தர்ஷன் (இந்தியத் தத்துவ தரிசனம்), வைக்யாமிக் சமாஜ்வாத் (விஞ்ஞான சோஷலிசம்) மற்றும் சில நூல்களின் பெரும் பகுதியை எழுதினார். தியோலி முகாமில் நடத்த புகழ்பெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் அவர் தீவிரமாகப் பங்கேற்றார்

ராஜ் பவனில்

   1940களின்போது ராகுல், பிசி ஜோஷி மற்றும் பிற தலைவர்களின் அறிமுகம் பெறுவதற்காகப் பம்பாயில் உள்ள சிபிஐ தலைமையகத்தில் (Raj Bhuvan) தங்கிப் பணியாற்றினார். அங்கு எல்லா தலைவர்களும் மாதம் 21ரூ கட்சி ஊதியம் பெற்று பணியாற்றும் முழுநேர கட்சி ஊழியர்கள். ராகுல் அடிக்கடி தரையில் பாய் மீது உறங்குவார் மற்றும் தொடர்ந்து எழுதுவார். கறாரான ஒழுங்குமுறையைப் பின்பற்றி அவர் பணிகளில் தனக்குரிய பங்கைச் சரியாக நிறைவேற்றுவார். திரைப்படங்கள் பார்ப்பதில் மிகவும் விருப்பமுள்ள அவர், தியேட்டர்களில் மிகக் குறைந்த கட்டண வகுப்புகளில் தோழர்களுடன் படம் பார்ப்பார்.

  1944ல் இந்தியவியலாளர் பேராசிரியர் ஷெர்பாட்ஸ்கி (Prof Scherbatsky) அழைப்பின் பெயரில் மீண்டும் சோவியத் ரஷ்யா விஜயம் செய்தார். லெனின்கிராடு பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணியை ஏற்க அழைக்கப்பட்ட சாங்கிருத்தியாயன் 1945லிருந்து 1947வரை ரஷ்யாவில் மூன்றாவது முறை தங்கினார். பௌத்தவியலில் அவரது அறிவார்ந்த நிபுணத்துவம் மிக உயர்வாக மதிக்கப்பட்டது; புகழ்பெற்ற பேரா. ஷெர்பாட்ஸ்கி அவரைப் பௌத்தத் தத்துவத்தில் கற்றுத் துறைபோகிய வல்லுநர் எனக் கருதினார்.

இந்தியாவுக்குத் திரும்புதல்

இந்தியா சுதந்திரம் பெற்றதைத் தொடர்ந்து சாங்கிருத்தியாயன் 1947 ஆகஸ்ட் 17ல் இந்தியா திரும்பினார். ராகுல் 1938ல் பீகார் சாகித்திய சம்மேளனத் தலைவராகவும், 1948ல் அனைத்திந்திய இந்தி சாகித்திய சம்மேளனத் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். மொழி குறித்த பிரச்சனையில் அவருக்கும் கட்சிக்கும் இடையே ஏற்பட்ட வேறுபாடுகளின் விளைவு, அவர் கட்சியில் இருந்து விடுவிக்கப்பட்டார். அப்போது அவர் எழுதினார்: “இவ்வளவு நேரம் நான் கட்சியிலிருந்து விலகிய செய்தி பத்திரிகைகளில் வெளியாகி இருக்கும். பலரும் வருந்தி இருப்பர், நானும் கூட அப்படித்தான் –ஏனெனில் கட்சியிலிருந்து தள்ளி இருந்த போதிலும் நான் கட்சியைத் தவிர, வேறு எதனோடும் சொந்தமாக இருக்க முடியாது. கம்யூனிசம் எப்போதும் எனது லட்சியமாக நீடிக்கிறது…”

1955 பிப்ரவரியில் அவர் ஆசப் அலி ரோட்டில் இருந்த கட்சி அலுவலகத்திற்குச் சென்றார் அப்போதைய சிபிஐ பொதுச் செயலாளர் அஜாய் கோஷ் அவர்களைச் சந்தித்தார். மீண்டும் கட்சியில் இணைய ராகுல் விருப்பம் தெரிவித்தார். அஜாய் கோஷ் கூறினார்: “மிகவும் நல்லது, வரவேற்கிறேன்”. உடனடியாக ராகுல் தனது உறுப்பினர் படிவத்தைச் சமர்ப்பித்தார். தான் ஒரு கட்சி உறுப்பினரல்லாத நபராக இனி இறக்கப் போவதில்லை என ராகுல் மிகவும் மகிழ்ந்தார்!

ஞாபக சக்தி இழத்தலும் மரணமும் 

1961 டிசம்பர் 8ல் ராகுல சாங்கிருத்தியாயன் இறுதியில் தனது நாட்குறிப்பு புத்தகத்தில் பின்வரும் குறிப்பை எழுதினார்: “இன்றிலிருந்து நான் நாட்குறிப்பு எழுதுவதை நிறுத்துகிறேன்”. 1961 டிசம்பர் 11வாக்கில் சாங்கிருத்தியாயன் முழுமையாகத் தனது ஞாபக சக்தியை இழந்தார். கட்சி, அவரது மனைவி கமலாவுடன் அவரைச் சோவியத் யூனியனுக்கு அனுப்பியது ஆனால் அவரது உடல்நிலை தேறவில்லை. சோவியத் யூனியனிலிருந்து ஏப்ரல் 9ல் திரும்பிய பிறகு 1963 ஏப்ரல் 14 ல் சாங்கிருத்தியாயன் இயற்கை எய்தினார்.

பிரதமர் ஜவஹர்லால் நேரு,நமது நாட்டின் ஆகப் பெரும் அறிஞர்களில் அவர் ஒருவர்” என்று கூறினார். மகாபோதி சொசைட்டியின் பொதுச் செயலாளர், “நாகார்ஜூன் மற்றும் அஸ்வகோஷ் போன்ற அறிஞர்கள் வரிசையில் ஒன்றாய் வைத்துப் போற்றத்தக்க தரத்திலானவர் அவர்” என்றார். அவரது மறைவு உழைக்கும் மக்கள் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கு பெரும் இழப்புக்களில் ஒன்று.

முதலில் அவருக்குச் சாகித்திய அகாதமி விருதும் (படம்) பின்னர் பத்மபூஷண் விருதும் வழங்கி கௌரவிக்கப்பட்டார். மேலும், காசி பண்டிட் சபா அமைப்பினரால் அவரது ஈடு இணையில்லாத சிறந்த சமஸ்கிருதப் புலமைக்காக அபூர்வமான ‘மகா பண்டிதர்’ என்ற பட்டம் 

அளிக்கப்பட்டது. அவரது கடும் முயற்சிகளால்தான், தொலைந்து போனதாகக் கருதப்பட்ட ஆயிரக் கணக்கான பௌத்தத் தத்துவப்  பனை ஓலைச்சுவடிகள் கண்டுபிடிக்கப்பட்டன. அந்த ஓலைச்சுவடிகளை அவர் 22 கோவேறு கழுதைகளின் மீது ஏற்றி  கொண்டு வந்து கேபி ஜெயஸ்வால் கல்வி நிறுவனத்திடம் ஒப்படைத்தார். அவர் சேகரித்த அபூர்வமான பல பொருட்கள் இன்னும் பாட்னா அருங்காட்சியகத்தில் கிடக்கின்றன. இந்திய அரசு 1993ல்
அவரது நூற்றாண்டில்
 அவருக்குச் சிறப்பு அஞ்சல் தலை வெளியிட்டுக் கௌரவித்தது. [இந்திய அரசு மகாபண்டிதர் ராகுல் சாங்கிருத்யாயன் தேசிய விருது, மகா பண்டிதர் ராகுல் சாங்கிருத்யாயன் சுற்றுலா விருது ஆகிய விருதுகளை ராகுல் சாங்கிருத்தியாயன் பெயரால் வழங்குகிறது.]

ராகுல சாங்கிருத்தியாயன் படைப்புகள் 

வாழ்வின் விரிந்த பரப்பில் பல்வேறு தலைப்புக்களின் கீழ் அவர் எழுதிய நூல்களைப்

பட்டியலிடுவது மிகவும் கடினம். அவரது ‘வால்கா முதல் கங்கை வரை’, ‘உலகை மாற்று, தப்பி ஓடாதே’ (Bhagonahin, Badlo), 22வது நூற்றாண்டு (Baiswin Sadi), ‘கம்யூனிசம் ஏன்’  போன்ற பிற நூல்கள் நன்கு பிரபலமானவை. மத்திய ஆசியா வரலாறு, பௌத்தம், இஸ்லாம், தத்துவம், இந்தியத் தத்துவம், கிசான் இயக்கம், மதங்கள், மார்க்ஸ் லெனின் மற்றவர்கள் குறித்த வாழ்க்கை வரலாறு குறித்து அவர் விரிவாக எழுதியுள்ளார்.

‘புதிய இந்தியாவின் புதிய தலைவர்கள்’ (நயே பாரத் கே நயே நேதா) என்ற வாழ்க்கை வரலாறு தொகுப்பு; பல்வேறு கதைகள் மற்றும் நாவல்கள்; வரலாறுகள்; கம்யூனிச கோட்பாடும் தத்துவமும்; பாலி மற்றும் சமஸ்கிருத நூல்கள் குறித்து; மொழிகள்; இலக்கணம்; உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் வரலாறு; தனது சாதனைகள், எண்ணிறந்த பயணங்கள், சந்தித்த இடையூறுகள், அனுபவங்கள் என மிக சுவாரசியமாக ஐந்து தொகுதிகளில் தொகுக்கப்பட்ட ஆர்வத்தைத் தூண்டும் சுய வரலாறு மற்றும் எதைப்பற்றி தான் அவர் எழுதவில்லை? நம்மை மூச்சு மூட்டச் செய்யும் பல பல அம்சங்கள் குறித்த நூல்கள் என அந்தப் பட்டியல் நீளும். அவர் இந்தியில் 200க்கும் மேற்பட்ட நூல்களை எழுதினார்; அவற்றுள் பெரும்பாலானவை பல்வேறு இந்திய மற்றும் அயல்நாட்டு மொழிகளில் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு வெளியிடப் பட்டுள்ளன. ராகுல சாங்கிருத்தியாயனின் நூல்கள் தொடர்ந்து உற்சாகப்படுத்தி மக்களைச் சோசலிசம் மற்றும் கம்யூனிசத்திற்குக் கொண்டு வருகின்றன. 

அவரது நூல்களைப் படித்துப் பயனுறுவது தவிர வேறு என்ன அஞ்சலி அவருக்கு நாம் செலுத்த முடியும்? தொடர்ந்து ராகுல  சாங்கிருத்தியாயன் நூல்களைப் பயில்வோம்!

--நன்றி : நியூ ஏஜ் (2026 பிப். 15 -- 21)

–தமிழில் : நீலகண்டன், 

என்எப்டிஇ, கடலூர்.