Thursday, 13 August 2026

ஏஐஎஸ்எப் 90வது ஆண்டு விழா-- ஜந்தர் மந்தர் போராட்டம்: வெற்றி கொள்ள உதவிய AISF-AIYF

 ஏஐஎஸ்எப் 90வது ஆண்டு விழா

ஜந்தர் மந்தர் போராட்டம்:

இளைஞர்கள் பயத்தை வெற்றி கொள்ள 
உதவிய AISF-AIYF

–அனில் ரஜீம்வாலே

1936 ஆகஸ்ட் 12 –13ல் நிறுவப்பட்டvஐஎஸ்எப் (அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்), தனது 90வது ஆண்டு அமைப்பு தின விழாவைக் கொண்டாடுகிறது. அன்றிலிருந்து அது பல்வேறு மாற்றங்கள், போராட்டங்கள் மற்றும் மறுகட்டமைப்புகளின் சகாப்தங்களைக் கடந்து, எப்போதும் வெற்றிகரமாக நடை போடுகிறது. சுதந்திரத்திற்கு முன்னும் பின்னும் மாணவர் பெருமன்றம், சமீபத்தில் தலைநகரை உலுக்கிய ‘கரப்பான்பூச்சிகள்: போராட்டம்(!) உட்பட முக்கியமான பெருந்திரள் போராட்டங்களை ஊக்கப்படுத்தியது.

காக்ரோச் ஜனதா கட்சி (CJP) தலைமையில் சமீபத்தில் டெல்லி ஜந்தர் மந்தர் மாணவர்களின் எழுச்சியில் ஏஐஎஸ்எப் தீவிரமாகப் பங்கேற்று போராட்டத்தை வடிவமைத்தது. அதில் பங்கேற்ற மாணவர்கள் ஏஐஎஸ்எப் அமைப்பு, அதன் லட்சியங்கள் மற்றும் நோக்கங்கள் பற்றி ஏராளமாகத் தெரிந்து கொண்டனர்.

‘கரப்பான் பூச்சி’ எழுச்சி

முதலில் நாம், தங்கள் போராட்டத்தின் புகழ்மிக்க திடீர் வெற்றியால் நாட்டைத் திரும்பிப் பார்க்கச் செய்து,  மரபார்ந்த பல்வேறு தடைகளை உடைத்த ஜந்தர் மந்தர் எழுச்சியை நெருக்கமாகப் பார்ப்போம். பின்னர் நாம் ஒரு கழுகு பார்வையில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் பங்களிப்புகளை அதன் வரலாற்றுப் பின்னணியில் பார்ப்போம்.

நீதிபதிகளில் ஒருவரால் இளம் தலைமுறைக்கு இழைக்கப்பட்ட அவமானம், ஒரு வகையில் உண்மையில் ஆளும் கட்சி அணுகு முறையின் பிரதிபலிப்பே: அதற்குப் பின் நவீனத்துவம் அதற்கே உரிய முறையில் காட்டிய பொருத்தமான மறுவினைதான் ‘கரப்பான் பூச்சி’ எழுச்சி. [பார்வை: மே 15 நீதிமன்றத்தில் ஒரு வழக்கு விசாரணையின் போது தலைமை நீதிபதி “கரப்பான் பூச்சிகள் போல சில இளைஞர்கள் உள்ளனர்” என்றும்; சில வழக்கறிஞர்கள் ’சமூகத்தின் ஒட்டுண்ணிகள்’ என்றும் கருத்துத் தெரிவித்ததாகவும்;. மறுநாள் அதை மறுத்த நீதிபதி அதற்கு விளக்கமும் அளித்தார் என்றும் கூறப்படுகிறது]. 

அவர்கள் (அரசு) முரட்டுப் பலப்பிரயோகம் மற்றும் அச்சுறுத்தல் மூலம் மாணவர்களுக்குப் ‘பாடம்’ புகட்ட  விரும்பினார்கள். ஆனால் நடந்தது என்னவோ, நாடு முழுவதும் ‘கரப்பான் பூச்சிகள் மயம்’ எனப் பரவிய ஓர் எழுச்சிதான்; அது நிர்வாக முறைமைக்குள்  விரிசல்கள் ஏற்பட வழி வகுத்தது.

இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில்,  அரசு அதிகாரத்திற்குச் சவால் விடுக்கும் வகையில் ஒரு கதைக்கள விவரிப்பு உடனடியாக உருவாக்கப்படுகிறது. அதுதான் இணையதள வலைப்பின்னல் மற்றும் அதைப் பயன்படுத்தும் தலைமுறையின் ஆற்றல்.

மாணவர் பெருமன்றமும் கூட சில அறுபது ஆண்டுகளுக்கு முன்– பாட்னாவில் கட்டணம் 50 பைசா உயர்த்தப்பட்டபோது அதை எதிர்க்க மாணவர்களுக்கு அறைகூவல் விடுத்து– 1965 ஆகஸ்ட் 9ல் பெருந்திரள் போராட்டத்தை நடத்தியது. மாணவர்கள் தடியடியடிகளுக்கும் துப்பாக்கித் தோட்டாக்களுக்கும் அஞ்சாமல் எதிர்த்து நின்றனர். போராட்டம் பீகார் முழுவதும் பரவியது. அது பெருமன்றத்திற்குப் புது பிறப்பானது. மாணவர் இயக்கத்தின் விளைவுதான் 1967 தேர்தலில் 17 மாநிலங்களில் 9ல் காங்கிரஸ் அரசுகள் தோல்வியடைந்தது.

அச்சம் ஓடியது 

இன்று, அரசியலமைப்புச் சட்டத்தைச் சீர்குலைக்கவும், ஜனநாயகத்தை அழிக்கவும் துணிந்துள்ள வலதுசாரி வகுப்புவாத பாசிசச் சக்திகளின் ஆட்சியின் கீழ், நாட்டில் நிலவும் காட்சி மிகவும் மோசமாக உள்ளது. 2014ல் இருந்து பாஜக –ஆர்எஸ்எஸ் ஆட்சி அச்ச உணர்வு, போலி தேசியவாதம் மற்றும் பிரிட்டிஷ் ஆட்சி பாரம்பரியமான வகுப்புவாத ‘பிரித்தாளும்’ கொள்கை முறைமையைப் புகுத்தி கட்டி எழுப்புகிறது. தடியடி பலப்பிரயோகம், செய்திஊடகம் மற்றும் சட்டத் துறை வழிகளைத் தவறாகப் பயன்படுத்துவது பிரிட்டிஷ் காலனிய முறைகளில் ஒன்றை நினைவூட்டுகிறது.

சமீபத்திய காக்ரோச் ஜனதா கட்சி தலைமையில் மாணவர்கள் போராட்டத்தின் ஆகப்பெரிய லாபம், மக்கள் மத்தியில் ஆளும் தன்னலக் குழு கும்பலுக்கு எதிரான அச்ச உணர்வு முழுமையாக ஒழிந்ததுதான். ஆளும் பாஜக கூட்டணி அதனுள் விரிசல்கள் ஏற்பட்டு, பலவீனமான நிலையில் அது காணப்படுகிறது. அந்த நிகழ்முறை ஓராண்டு காலத்திற்கு நீடித்த விவசாயிகளின் போராட்டத்தின்போது தொடங்கியது: அப்போது தேசியத் தலைநகரை அவ்வளவு நீண்ட காலம் சூழ்ந்து கொண்ட விவசாயிகள் இறுதியில் அனைத்துத் தடைகளையும் உடைத்து ஜந்தர் மந்தர் போராட்டத்தில் முடிந்தது.

பெருந்திரள் போராட்ட முறைகள் மற்றும் மக்களை அதில் ஈடுபடுத்துவது குறித்து ஒருவித உணர்வு பற்றிப் படர்ந்தது. புதிய ஜென்சி தலைமுறை குறித்துப் பல்வேறு கருதுகோள்கள் முன்வைக்கப்படுகின்றன; மற்றும் தற்போது ஆல்பா தலைமுறை முதலானவைகள் குறித்தும் பேசப்படுகிறது.

தற்போதைய எதிர்ப்புப் போராட்டம், தகவல் புரட்சி ஏற்படுத்திய சில பின் நவீனத்துவக் கூறுகளுடன் அமைந்த வேறுபட்ட பின்னணியில் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனை

ஏஐஎஸ்எப் பெருமன்றமும் மற்றவர்களும் பயன்படுத்த கற்று வருகிறார்கள். சமூகத்தின் அனைத்துப் பகுதிகளிலும் எழுந்த எழுச்சியின் வேகமான சமூக ஊடகப் பரவலுக்கு முன்னால், லத்திகள் மற்றும் வன்முறை ஆகியவை வெறும் அடையாளங்களாகவே சுருங்கிப் போயின. போலீஸ்காரர்களைப் ‘போலீஸ் மாமா’ என்றழைக்கப்படும் அளவு மாற்றம் நிகழ்ந்தது, சில போலீஸ்காரர்களே கூட போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

  படைப்பாற்றல் மிக்க பங்கேற்புடன், அந்த நிகழ்வின் விவரிப்பு அந்த இடத்தில் அப்போதே உருவாக்கப்படுகிறது. அரசின் நடவடிக்கைகள் காட்சி பிம்பங்களாக மாற்றப்பட்டு, பின்னர் வெகுஜன எதிர்ப்பாகவும் தன்னிச்சையான முழக்கங்களாகவும் உருவெடுக்கின்றன. சமூக-பொருளாதார நெருக்கடியின் தனித்துவமான வெளிப்பாடான இந்தப் பேராற்றல்தான், அரசு இயந்திரத்தையும் அதிகாரப்பூர்வ ஊடகங்களையும் எதிர்கொண்டது.

வினாத்தாள் கசிவுகள் அதிருப்தியின் பல்வேறு போக்குகள் 2024 நாடாளுமன்றத் தேர்தலின் போதும், ஸ்ரீ ராமர் கோயில் நன்கொடைகள் ஊழலிலும், இ-20 எனப்படும் பெட்ரோலில் 20% எத்தனால்  கலப்புப் பிரச்சனை தவறாகக் கையாளப்படுவதிலும் என இப்படி உருவாகி வந்தன –ஒரு கட்டத்தில் அது மாபெரும் போக்கானது.

ஆனால் பல பிரிவுகள் மத்தியில் அதிருப்தி பரவியது என்ற உண்மையை ஆளும் கட்சியும் ஆட்சி நிர்வாகமும் அசட்டையாக ஒப்புதல் என எடுத்துக் கொண்டன : (அதாவது ஆளும் கட்சி தங்கள் ஆதரவு தளமாக கருதிய) படித்த நடுத்தர வர்க்கங்களின் அந்த இளைஞர் பிரிவுகள் – மடிக்கணினி, நவீன திறன் கைபேசி மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் சமூக ஊடகத் தளங்களில் பணியாற்றும்– பிரிவினர்கள் மத்தியில் அதிருப்தி பரவியது.

ஏஐஎஸ்எப் –ஏஐஒய்ஃப் மற்றும் இடதுசாரிகள் பொதுவாக வகித்த பாத்திரம்

தினசரி பத்திரிகைகளும் கூட மாணவர் பெருமன்றம் மற்றும் பொதுவாக இடது அமைப்புகளின் கட்டுப்பாடு மற்றும் நோக்கத் தெளிவுக்காக, அவை வகித்த  பெரும் பங்கை அங்கீகரித்துள்ளன. தொடக்கத்தில் திணறித் தடங்கல் மற்றும் தயக்கத்துடன் தொடங்கிய

இயக்கம் குறித்து முதலில் சந்தேகங்கள் இருந்தன. எனினும் வாஞ்ச்சுக்வின் உண்ணாவிரதப் போராட்டம் சில நம்பிக்கைகளை ஊட்டியது. இடது அமைப்புகள் குறிப்பாக அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் மற்றும் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றத்தின் விராஜ் தேவங், தினேஷ், ஹரிஷ் பாலா போன்ற பல தலைவர்கள் இயக்கத்தை நிலை நிறுத்த ஏராளமான களப்பணிகளைச் செய்தார்கள். சிஜெபி தலைவர்கள் பெரும் பணியாற்றினர். மெல்ல மெல்ல இயக்கம் நம்பிக்கை
அடைந்து அகில இந்தியப் பெருந்திரள் போராட்டமானது.

சிபிஐ பொதுச் செயலாளர் தெளிவாக அதை எடுத்துக் கூறினார்: “அது அரிதான ஓர் இயக்கம். .. மாணவர்களின் இயக்கம் பாஜகவின் ஆணவத்தைத் தோற்கடித்து உள்ளது”. நீண்ட காலம் பதவியை ராஜினாமா செய்ய மறுத்த ஒன்றியக் கல்வி அமைச்சர் இறுதியில் பதவி விலக வேண்டியதாயிற்று.

இந்த அதிருப்தி அமைப்பு ரீதியானதும் மற்றும் பாஜக தலைமையிலான என்டிஏ அரசின் நியாயமற்ற கொள்கைகளுக்கு எதிரானதும் ஆகும்.  முழுமையான கல்வி முறைமை ஆழமான நெருக்கடியில் உள்ளது; மாணவர்களின் எதிர்காலம் குறித்து முழுமையாக அக்கறையற்று, பாடத்திட்டம், தேர்வுகள் மற்றும் எதிர்காலத்துடன் அது பொறுப்பற்ற முறையில் விளையாடுகிறது. மாநிலம் அடுத்து மாநிலமாக, குறிப்பாக ஒன்றியத்தை ஆளும் கட்சியின் மாநிலங்களில் கல்விமுறை ஒட்டுமொத்தமாகச் சீர்குலைந்துள்ளது.

இதுவரை நெகிழ்வு போக்கு மற்றும் அமைதியுமாக இருந்ததாகக் கருதப்பட்ட நடுத்தர வர்க்கங்களின் அதிருப்தி அது; நேரடி மற்றும் மறைமுக வரிகளைக் கட்டி தேசிய வருவாய் விகிதாசாரத்தில் பெரும் பங்களிப்பைச் செலுத்திய அந்த வர்க்கங்கள், பதிலுக்குக் குறைவாகவே திரும்பப் பெற்றது. நீண்ட காலமாகப் பொறுமையுடன் காத்திருந்த நடுத்தர வர்க்கம் ஏதோ ஒரு தருணத்தில் வெடித்தது. தகவல் தொழில்நுட்பம் மற்றும் சமூக ஊடக உணர்வு இந்த விழிப்புணர்வு மாற்றத்தில் ஆகப்பெரிய பங்கை வகித்தது –இன்று அது ‘தகவல்’ மற்றும் எலக்ட்ரானிக் நேரலை விழிப்புணர்வால் பெரிதும் வடிவமைக்கப்- பட்டுள்ளது.

இதன் விளைவாய், இந்த விழிப்புணர்வுடன் கட்டமைக்கப்பட்ட இளைஞர்கள்

தடியடிகள், கண்ணீர் புகை மற்றும் அட்டூழியங்களைச் சந்தித்த போதும் பின்வாங்காத வகையில் போதுமான துணிச்சல் பெற்று விட்டனர்.

இவ்வாறாக, உளவியல் மற்றும் அரசியல் ரீதியான ஒரு தடை கடக்கப்பட்டு, விழிப்புணர்வில் ஒரு மாற்றம் ஏற்பட்டது; இதன் விளைவாக, பெருகிவரும் மக்கள் கூட்டம் இனி எவ்வித பாதிப்புக்கும் எளிதில் உள்ளாகக்கூடிய நிலையில் இல்லை என்பதோடு, தவறான பிரச்சாரங்களாலும் வழிநடத்தப்படுவதில்லை.

மேலும் மாணவர்கள் என்ன விரும்புகிறார்கள்? முதலில் நியாயமான தேர்வுகள். நீறு பூத்த நெருப்பாக நீண்ட காலம் அதிருப்தி கனிந்து வந்தது. வழிபாட்டுத் தலங்களின் ஊழல்கள் அம்பலப்படுத்தப்பட்ட பிறகு அது வெடித்து வெளியே வந்தது! அரசு தனது முக்கிய தந்திரோபாய சீட்டை (ஆட்டத்தில்) இழந்தது.

அரசுத் தரப்பு, மாபெரும் இயக்கத்தைத் தவறான மற்றும் கெடுமதி வண்ணங்களில் சித்தரித்துக் காட்ட முயன்றது. போராட்டத்தில் கலந்து கொண்ட பெண்களுக்கு எதிரான அட்டூழியங்கள் ஆளும் வட்டங்களின் உண்மையான வர்க்க குணத்தை அம்பலப்படுத்தியது.

ஒரு கட்டத்தில் அரசு முழுமையாகப் பதற்றத்தில்  ஆழ்ந்து நடுங்கியது.. விரிசல்கள் தோன்றின மற்றும் ஆளும் வட்டங்களிலேயே அதிருப்தி வெளிப்படையாகப் பரவியதுடன் அரசின் இந்து வகுப்புவாதப் பேரினவாதப் போக்கு பலவீனமான நிலைக்குத் தள்ளப்பட்டது.

பொது சொத்துக்கள் மற்றும் சட்டங்களை அழிக்கும் வன்முறை இயக்கங்களை அவர்கள் ஏற்பாடு செய்தும்;  வன்முறை மொழியைப் பயன்படுத்தி, டாக்டர் மன்மோகன் சிங், இந்திரா காந்தி மற்றும் பிறருக்கு எதிராக வன்முறையைக் கூட பயன்படுத்தியும் கல்வி வளாகங்களில் அமைதியின்மையை ஏற்படுத்திய நாட்களை பாஜக –ஆர்எஸ்எஸ் முற்றாகவே மறந்து விட்டது. இப்போது அது திரும்பத் தாக்குகிறது. சில காலத்திற்கு முன்பு வினாத்தாள் கசிவு இயக்கம் உற்பத்தி செய்த ‘விளைப் பொருள்’ஆன கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானே மாணவர்கள் போராட்டத்திற்கு எதிராக உறுதியாக நின்றார். தங்கள் காலத்தில் ஒழுங்கு கட்டுப்பாட்டை மீறிய மனிதர்களே இன்று தற்போது மாணவர்களுக்கு ‘ஒழுக்கக் கட்டுப்பாடு மீது ‘உபதேசம்’ போதிக்கிறார்கள்!

(வரலாற்றில். AISF நடத்திய முக்கியப் போராட்டங்கள் குறித்து இந்தக் கட்டுரையின் அடுத்த பகுதியில்)                                                                                      [முதல் பகுதி முற்றும்]

–நன்றி : நியூ ஏஜ் (ஆக.9 –15)

–தமிழில்: நீலகண்டன், 

என் எஃப் டி இ, கடலூர்

Saturday, 8 August 2026

நியூ ஏஜ் தலையங்கம்-- மாணவர் பெருமன்றமும் வெள்ளையனே வெளியேறு இயக்கமும்

 நியூ ஏஜ் தலையங்கம் (ஆகஸ்ட் 9 -15)

மாணவர் பெருமன்றமும்
வெள்ளையனே வெளியேறு இயக்கமும்

இந்த ஆண்டு ஆகஸ்ட் 12 அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் (ஏஐஎஸ்எப்) 90ம் ஆண்டு அமைப்பு தினத்தை அடையாளப்படுத்துகிறது. 1936ல் தொடங்கப்பட்டதில் இருந்தே ஏஐஎஸ்எப், தேச

விடுதலைக்கான போராட்டத்தில் ஈடுபட்டது. 84 ஆண்டுகளுக்கு முன்பு ‘வெள்ளையனே வெளியேறு (குவிட் இந்தியா) இயக்கம்’ தொடங்கப்பட்ட போது 1942 ஆகஸ்ட் 9ல் மாணவர் பெருமன்றம் அதில் முன்னணி பாத்திரம் வகித்தது. சிந்த் மாகாணத்தில் கைது செய்யப்பட்டு தூக்குமரத்தில் ஏற்றப்பட்ட ஆகஸ்ட் கிளர்ச்சியாளர்களில் முதல் தியாகி பெரு மன்றத்திலிருந்து வந்தவர். அவரது பெயர் ஹேமு கலானி, சிந்த் மாகாணத்தின் சுக்கூரில் உள்ள பள்ளியில் இருந்து வந்தவர்.

அப்பகுதியில் ஏஐஎஸ்எப் ‘சுக்கூர் மாணவர் சங்க’த்தின் கீழ்ப் பணியாற்றி வந்தது; அதன் தீவிர செயல்பாட்டாளர்களில் ஒருவரான ஹேமு, பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் இலக்குக்கு

ஆளாகி 1942 ஆகஸ்ட் 24 இரவு கைது செய்யப்பட்டார். பின்னர் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட அவர், 1943 ஜனவரி 21 அன்று –அவரது உதடுகள் ‘இன்குலாப் ஜிந்தாபாத்’ போன்ற முழக்கங்களை ஒலித்த வண்ணம் இருக்க– தூக்கிலிடப்பட்டார். அவர் பெயர் சிந்து பிராந்தியத்தில் புகழ்பெற்ற பெயரானது. ஜோத்பூரில் ஒரு பொதுச் சதுக்கம் ‘ஹேமு கலானி சௌக்’ என்று அவரது பெயரைத் தாங்கி நிற்கிறது.

விரைவில் முடிவிலாத பெருவெள்ளமென அலை அலையாய்ப் பையன்களும் பெண்களுமாகத் தியாகிகள் பட்டியலில் இணைந்தனர். நாடு முழுவதுவதுமாக வீசிய வரலாற்று நிகழ்வாக அது மாறியது. (அன்று ஒன்றுபட்ட ஐக்கிய மாகாணம் என்று அழைக்கப்பட்ட) உ.பி., இயக்கத்தின் முக்கிய மையமாக இருந்தது. அந்த இயக்கத்தின் முன்னணி வகித்தவர்களில் சர்ஜூ பாண்டே ஒருவர். அவர் ராமா சிங் போன்ற தனது சகாக்கள் சிலருடன் 1942 ஆகஸ்ட் 15ல் (உபி, காசிப்பூர் மாவட்டத்திலுள்ள) காசிமாபாத் காவல் நிலையத்தை அடைந்தார். அவர்கள் அங்கிருந்த போலீஸ் அதிகாரியைக் கட்டாயப்படுத்தி பிரிட்டிஷாரின் யூனியன் ஜாக் கொடியை இறக்கி மூவர்ணக் கொடியை ஏற்றச் செய்தனர். காசிமாபாத் காவல் நிலையத்தில் முழுமையாக ஒரு வார காலம் மூவர்ணக் கொடி பறந்தது.

சர்ஜூ பாண்டேவைக் கண்டதும் சுட உத்தரவுகள் பறந்தன. அந்த நிகழ்வு எல்லா இடங்களிலும் பிரபலமானது. சர்ஜூவும் அவரது தோழர்களும்‌ கிராமம் விட்டு கிராமம் மாறிச் சென்று நீண்ட காலம் தலைமறைவாக இருந்தனர். கிராமத்தவர்கள் அவர்களை ஒருபோதும் காட்டிக் கொடுக்கவில்லை. அவர்களின் குடும்பங்களைப் போலீஸ் துன்புறுத்தத் தொடங்கியது.

சில மாதங்களுக்குப் பிறகு சர்ஜூ அவரது தோழர் ராமா சிங்குடன் சுசுன்டி கிராமத்தில் கைது செய்யப்பட்டார். முதலில் காசிப்பூர் சிறைக்கு அனுப்பப்பட்ட சர்ஜூ பின்னர் காசி மற்றும் பிற சிறைகளுக்கு மாற்றப்பட்டார். சிறையில் மனிதத் தன்மையற்ற முறையில் நடத்தப்பட்டார், கை கால்களில் விலங்கு பூட்டி தனிமைச் சிறையில் அடைக்கப்பட்டு மிருகத்தனமாகத் தாக்கப்பட்டார், மாவு அரைக்கும் மில்களில் பணியாற்றவும் கட்டாயப்படுத்தப்பட்டார். 

சுயநினைவற்று விழும் வரை பிரம்பால் தாக்கப்பட்ட ஒவ்வொரு முறையும் அவர் “பாரத மாதா கி ஜெய்” மற்றும் “வந்தே மாதரம்” என்று முழங்கினார். நீதிமன்றத்தில் தனது வழக்கை அவரே வாதாடி நடத்தினார், சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஒப்புக் கொண்டார். அவருக்கு 42 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனையும் பெரும் தொகை அபராதமும் விதிக்கப்பட்டது.

ஏஐஎஸ்எப் செயல்பாட்டாளர்கள் அதே முறையில் மாநிலத்தின் பல பகுதிகளிலும் கிளர்ச்சி செய்தனர். பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் நிலைமை கட்டுக்கடங்காமல் போக, இராணுவம் உள்ளே வரவழைக்கப்பட்டு எட்டு நாட்களுக்கு பல்கலைக்கழக வளாகத்தை அது தனது பிடிக்குள் வைத்திருந்தது. காங்கிரஸின் ஷா குழு மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் (முகீம்) ஃபரூக்கி குழு ஆகிய இரண்டு மாணவர் சங்க அமைப்புகளும் இணைந்து செயல்பட்டன: சேர்ந்து செயல்பட்ட அவர்கள் தடியடிகள் மற்றும் துப்பாக்கி குண்டுகளைச் சேர்ந்தே சந்தித்தனர் மற்றும் இரு குழுவினர்களும் சேர்ந்தே சிறைக்குச் சென்றனர்.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தின் (BHU) மாணவர் அமைப்புகள் தங்கள் நடவடிக்கைகளைத் காசியிலிருந்து காசிப்பூருக்கு விரிவுபடுத்தின. ஏஐஎஸ்எப் செயல்பாட்டாளரான விஸ்வநாத் சிங் தலைமையில் மாவட்டத் தலைநகரில் கோட்வாலிக்கு மாணவர்களின் மாபெரும் பேரணி நடைபெற்றது.

ஃபெரோஷாபாத்தைச் சேர்ந்த ஓம் பிரகாஷ் பாலிவால், இந்தியத் தாயின் கௌரவத்தைப் பாதுகாக்க தங்கள் உயிரையும் தியாகம் செய்யுமாறும்; அப்போதுதான் அடுத்துவரும் தலைமுறையினர் அவர்களை நினைவு கொள்வார்கள் என்று மாணவர்களிடம் வேண்டி அவர்களை ஊக்குவித்தார். பாலிவால் பின்னர் (ஃபரூக்கி பிரிவு) மாணவர் பெருமன்றத்தின் பிரபல தலைவர் ஆனார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கியபோது பீகாரில் சந்திரசேகர் சிங், ராகுல் சாங்கிருத்தியாயன் மற்றும் இந்திரதீப் சின்ஹா உள்ளிட்ட பெரும்பாலான ஏஐஎஸ்எப் தலைவர்கள் நவ்கட்ச்சியா என்ற இடத்தில் நடைபெற்ற மாணவர் பெருமன்றத்தின் பாகல்பூர்

மாவட்ட மாநாட்டில் கலந்து கொண்டிருந்தனர். மாநாடு இரண்டு நாட்கள் தொடர்ந்தது; மாநாட்டின் எல்லா விவாதங்களிலும் குவிட் இந்தியா இயக்கம் பிரதான ஆதிக்கம் செலுத்தியது. நவ்கட்சியாவில்தான் அவர்களுக்குக் காந்தி கைதான செய்தி கிடைத்தது. அடுத்த நாளே சந்திரசேகர் சிங் தனது நண்பர்களுடன் பாட்னா சென்றடைந்தார். காந்திஜி மற்றும் பிற தேசியத் தலைவர்கள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து ஒரு நாள் முழுவதும் வேலை நிறுத்தம் செய்ய ஏஐஎஸ்எப் அறைககூவல் விடுத்தது.   

ஆகஸ்ட் 12ல் செகரட்டரியேட் முன்பு பீகார் ஏஐஎஸ்எப் பொதுச் செயலாளர் சந்திரசேகர் சிங் தலைமையில் மாணவர்கள் பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். பிரிட்டிஷ் அரசு தடியடியிலும் துப்பாக்கிச் சூட்டிலும் இறங்கியது; அதில் ஏழு மாணவர்கள் பலியாகி இரத்த சாட்சி ஆயினர், மற்றும் பலர் காயமடைந்தனர். பெருமன்றச் செயற்பாட்டாளர்கள் அவர்களை மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனர். கார்யானந்த் சர்மா, சந்த் லால் சிங், போகேந்திர ஜா, தேஜ்நாராயணன் மற்றும் பிறர் உள்ளிட்ட ஏஐஎஸ்எப் தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

பீகாரின் மாணவர்கள் போராட்டத்தை  நடத்திய சந்திரசேகர் சிங் மற்றும் பிற செயற்பாட்டாளர்கள் தவிர அவர்களில் கிருஷ்ண சந்திர சவுத்ரி, சதுரானன் மிஸ்ரா, கங்காதர் தாஸ், ஜெய்மங்கல் சிங், டாக்டர் ராம்விலாஸ் சர்மா, சியாவர் சரண் முதலானவர்களும் அடங்குவர். மாநிலத்தில் மொத்தம் 122 இடங்களில் போலீஸ் துப்பாக்கிச் சூடு நடத்தியது. பீகார் பெகுசாராய் மாவட்டத்தில் போலீசுக்கு எதிராக மக்கள் தீவிரமான கடும்  போரிட்டனர். பிகேட் மற்றும் டேக்கரா இடையில் உள்ள சாலையில் மக்கள் மீது போலீஸ் துப்பாக்கியால் சுட அதில் உசித் சிங் என்ற இளைஞர் களபலி தியாகியானார்.

மாணவர் பெருமன்றப் பங்கேற்பின் சுடர்மிகு அம்சங்களில் ஒன்று சத்தாராவில் நிகழ்ந்தது: அங்கு –வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் ஒரு பகுதியாக– ‘பிரதி சர்க்கார்’ (புகழ்பெற்ற இணையான தலைமறைவு அரசு) ஒன்றை நானா பாட்டில்  நிறுவினார். ஏஐஎஸ்எப்–இன் மாணவச் செயற்பாட்டாளர்கள் மற்றும் ஆறாவது அல்லது ஏழாவது வகுப்பு வரை மட்டுமே படித்த விவசாயிகள் இந்த இயக்கத்தின் பெரும்பான்மை தலைமறைவுப் பணியாளர்களாக அமைந்தனர். பிரதி சர்க்கார் 1946 ஜனவரி வரை தொடர்ந்து நீடித்தது; அது தனது சமூக, அமைப்பு நிலை, நிர்வாகம் மற்றும் நீதித்துறை பணிகள் மூலம் அந்தப் பகுதியிலும் மற்றும் தேசிய இயக்கத்திலும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திச் சென்றது. இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இயக்கத்திற்கு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்புகளைச் செய்தனர்.

அகிம்சை முறையில் தொடங்கிய சில அமைப்புகள் 1942 இயக்கத்தில் வன்முறை வழிமுறைகளைக் கையில் எடுத்தன; அதற்கு அந்த அமைப்புகள் ‘சூழ்நிலைக்கு ஏற்ப வழிமுறைகளைப் பயன்படுத்தலாம்’ என்ற காந்திஜியின் அறிக்கையைப் பயன்படுத்தின. இவ்வாறு, ஏஐஎஸ்எப்  செயற்பாட்டாளர், புலின் பெஹாரி சென், (மேற்கு வங்கம் கிழக்கு மித்னாபூரின்) கெஜுரி கிராமத்தில் குடிப்படை ஒன்றை (மிலீஷியா –துணை இராணுவப் படை) நடத்தினார்; அதன் இரகசியப் பணியாளர்கள் இளைஞர்களுக்குப் பிரம்பு மற்றும் குறுவாள் பயிற்சி அளித்தனர், மற்றும் புரட்சிகர இதழ்களை விநியோகித்தனர்.

அகமதாபாத்தில் பெருமன்றச் செயற்பாட்டாளரும் காங்கிரஸ் சோசலிஸ்ட் தலைவருமான ஜெயந்தி தாக்குர் அவரது “ஆசாத் அர”சில் இருந்து  அப்பகுதியில் வீட்டு உரிமையாளர்கள் ஒவ்வொருவரும் தலைக்கு ஓர் அணா வீதம்  பங்களிக்க வேண்டும் என்ற உத்தரவை வெளியிட்டார். அதன் மூலம் ரூபாய் 50 திரட்டினார். அடுத்து விரைவில் அவர் அகமதாபாத் நகரின் தலைவராகப் பிரபலமானார். அவருக்குக் கீழ் "போல் நாயக்–கள்" (Pol Nayaks) இருந்தனர்; இவர்கள் "போல்ஸ்" (Pols) என்று அழைக்கப்பட்ட, சாதி அடிப்படையில் அமைந்த தனித்த குடியிருப்புப் பகுதிகளின் தலைவர்களாகத் திகழ்ந்தனர். அவரது மேற்பார்வையில் நகரத்தின் 14 வார்டுகளை 19 தலைவர்கள் கவனித்துக் கொண்டனர். 

சுதந்திரப் போராட்டத்தில் பங்களிப்புச் செய்த பெருமித உணர்வுடன் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் (ஏஐஎஸ்எப்) 90வது அமைப்பு தினத்தைக் கொண்டாடுவோம்!

 (--கிருஷ்ண ஜா)

–தமிழில் : நீலகண்டன், 

என் எஃப் டி இ, கடலூர்

 

 

Thursday, 9 July 2026

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு–152 SS பாட்லிவாலா – ஒரு சோசலிசவாதி, கம்யூனிஸ்ட் மற்றும் சுதந்திரப் போராட்ட வீரரின் அசாதாரணமான கதை

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு–152

SS
பாட்லிவாலா – ஒரு சோசலிசவாதி, 

கம்யூனிஸ்ட் மற்றும்
சுதந்திரப் போராட்ட வீரரின் 

அசாதாரணமான கதை

–அனில் ரஜிம்வாலே

எஸ் எஸ் பாட்லிவாலா ஓர் அசாதாரணமான மற்றும் திறமை வாய்ந்த மனிதர்; தொடர்ந்து அவர் ஒரு புகழ்பெற்ற விடுதலை வீரராக, ‘காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி’யின் நிறுவனராக, தீவிரக் கம்யூனிஸ்ட்டாக மற்றும் கலை பண்பாட்டு உலகில் செயலூக்கம் மிக்க வாழ்க்கைக்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை விட்டு விலகியவராக சென்று கொண்டே இருந்தார்.

தொடக்க கால வாழ்க்கை : பாட்லிவாலாகள்

18 மற்றும் 19ஆம் நூற்றாண்டுகளில் இந்தியா கண்ணாடி பாட்டில்களை உற்பத்தி செய்யவில்லை, அவை பெரும்பாலும் சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்டன. 19ம் நூற்றாண்டில் பம்பாயில் ஒரு பார்சி குடும்பம் கண்ணாடி பாட்டில்கள் வர்த்தகத்தை மேற்கொள்ள முடிவு செய்தது; அதனால் ‘பாட்லிவாலா’ என்ற பெயரை வரித்துக் கொண்டு அத்தொழிலில் ஏறத்தாழ ஏகபோகத்தை நிறுவியது! இந்தப் பார்சி குடும்பம் இந்திய விடுதலை இயக்கம் மட்டுமின்றி, பண்பாடு மற்றும் கல்வித் துறைகளிலும் தொடர்ந்து பங்காற்றிய வண்ணம் செயல்பட்டது. 

பாட்லிவாலாகள் குடும்பத்திலிருந்து பின்னர் புகழ்பெற்ற மருத்துவர்கள் மற்றும் மருத்துவத் தொழிலில் ஈடுபட்டவர்கள் உருவானார்கள், சமூகத்தில் அதன் வழி மரியாதைக்குரிய அந்தஸ்தைப் பெற்றனர்.

அவர்களில் ஒருவர் டாக்டர் சபூக்ஷ் (ஷியாவாக்ஸ்) சொஹ்ராப் பாட்லிவாலா [Dr Shabukhsh (Shiavax) Sohrab Batliwala]. அவர் 1928 மற்றும் 1929ல் பம்பாய் மேயர் ஆனார். பம்பாயில் 1930ல் மரணமடைந்தார். அவருக்கும் திருமதி பாச்சுபாய் அவர்களுக்கும் 1905 மே 19ல் சொஹ்ராப் பிறந்தார். அவருக்கு வரலாற்றுப் புகழ்பெற்ற ஈரானியக் கவிஞர் சொஹ்ராப் என்று பெயரிட்டனர். அவர் சோலி என்ற பெயரில் பிரபலமானார்.

சோலியின் பெற்றோர் வெளிநாடு சென்றதால் சோலி பெரும்பாலும் தனது தாயின் சகோதரி (சித்தி, இந்தியில் ‘மௌசி’) உடன் தங்கினார்.

கல்வி 

சோலி 1911ல் தன்பாய் மற்றும் ரூபாபாய் நடத்திய குஜராத்தி பள்ளியில் சேர்ந்தார். 1921ல் நியூ ஹை ஸ்கூலில் சேர்ந்து மெட்ரிக் தேர்ச்சி பெற்றார். 1922 முதல் 1925 வரை அவர் புகழ் பெற்ற எல்பின்ஸ்டோன் கல்லூரியில் படித்து பி ஏ இளங்கலை பட்டம் பெற்று 1928ல் எல்எல்பி பட்டமும் பெற்றார். மேலும் அவர் வரலாறு மற்றும் பொருளாதாரம் (ஹானர்ஸ்) படித்தார். 

தொழில் ரீதியில் அவர் ஒரு வழக்கறிஞராகி இருக்க வேண்டும்.

மாணவர் இயக்கத்தில் 

அது எல்பின்ஸ்டோன் கல்லூரியில்தான் சோலிக்கு அரசியலில் தொடர்பு ஏற்பட்டது. அந்தக் கல்லூரி மாணவர் இயக்கத்தின் மையமாக இருந்தது. வங்கப் புரட்சி இயக்கம் குறித்து அறிந்த சோலி, அதில் ஆழமாக ஈர்க்கப்பட்டார். அந்நாட்களில் (BSB) என்ற பம்பாய் மாணவர்கள் சகோதரத்துவம் (பிரதர்ஹுட்) அமைப்பு பலம் பொருந்தியதாக இருந்தது. சோலி அந்த அமைப்பிலும், பம்பாய் யூத் லீக் என்ற இளைஞர் அமைப்பிலும் இணைந்தார். அந்நாட்களில் இளைஞர் லீக் அமைப்புகள் இந்தியா முழுவதும் பரவலான வலைப்பின்னலுடன் செயல்பட்டன.

கல்லூரியில் பல கீழ்ப்படியாமை நடவடிக்கைகளுக்குப் பெயரெடுத்தவர் சோலி; அவரது தந்தையின் அந்தஸ்து காரணமாகவே அவர் ஒழுங்கு நடவடிக்கைகளில் இருந்து அரிதாகத் தப்பினார். உதாரணத்திற்கு ‘உள்ளேன் ஐயா, ஆம் ஐயா’ என்று பதிலளிப்பதில் அவருக்கு விருப்பம் இல்லை. எனவே அவர் அதைக் கேலி செய்வார் அல்லது சப்தமாகப் பதில் அளிப்பார்! அவரை பெஞ்ச் மீது ஏறி நிற்கச் சொல்லி, ஆசிரியர்கள் அவரிடம் சப்தமிடுவர். அதனால்லாம் அடங்கி போகாத சோலி திரும்பக் கத்துவார், சில ஆசிரியர்கள் பொறுத்து போய் விடுவார்கள்!

அவர் பல்கலைக் கழகப் பயிற்சி படையில் (யுனிவர்சிட்டி ட்ரைனிங் கார்ப்ஸ், UTC) சேர்ந்தார், அது அவரின் எதிர்காலப் புரட்சிகரப் பணிகளுக்குக் கை கொடுத்தது!

இதன் மத்தியில் காதல் பிரச்சனையில் அவர் உணர்வு ரீதியான நெருக்கடிகளுக்கு ஆளானார் – அவர் காதலித்த அந்தப் பெண் பணம், கார் போன்ற லௌகீக விஷயங்களில் அதிக ஆர்வம் உடையவராக இருந்ததால், காதல் இறுதியில் முறிந்து போனது,

மனம் உடைந்து நம்பிக்கை இழந்த சோலி தற்கொலை செய்து கொள்ளவும் எண்ணினார். ஆனால், அபூர்வமான ஒரு வாழ்க்கையை வீணடித்துவிடக் கூடாது என்று பின்னர் ஒரு ‘முடிவு’க்கு வந்தார்!

அவர் உணவைத் ‘துறக்க’வும் கூட நினைத்தார். ஆனால் அந்த எண்ணத்தைத் தேசிய நிகழ்வுகள் தர்க்க ரீதியாகத் தவறு என நிரூபிக்க, விரைவில் அவர் உப்புச் சத்தியாகிரக இயக்கத்தில் இணைந்தார்.

உப்புச் சத்தியாகிரகம்

உப்புச் சத்தியாகிரகம் குறித்த சோலியின் கருத்து, அமைதியான சத்தியாகிரகம் என்ற அந்த இயக்கத்திற்கு எதிராக இருந்தது. சூரத்தில் தராசனா என்ற இடத்தில் பெரும் எண்ணிக்கையிலான உப்பு மூட்டைகள் அடுக்கப்பட்டு முள்வேலியிட்டுப் பாதுகாக்கப்- பட்டன. சோலி தலைமையிலான இளைஞர்கள் குழு ஒன்று ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தி முள்வேலியைத் துண்டித்து உப்பு மூட்டைகளைப் பல தவணைகளில் எடுத்துச் சென்றது.

இதைக் கண்டு திகைத்த உண்மையான சத்யாகிரகிகள், பகுத்தறிவுடன் நடந்து கொள்ள கூற அவர்களிடம் முயன்றனர். அவர்களின் தர்க்கவாதத்தில் நியாயம் இருப்பதை உணர்ந்த சோலியும் அவரது தோழர்களும் போலீஸ்காரர்கள் அடித்தபோது அதை ‘அமைதியாக’ சந்தித்தனர். அவருக்கு 9 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது.

1928ன் புகழ்பெற்ற பர்த்தோலி போராட்டத்திலும்கூட சோலி கலந்து கொண்டார். காங்கிரஸ் எவ்வாறு அகிம்சையைப் பின்பற்றியது என்றும், மேலும் ஏன் மற்றும் எவ்வாறு உப்புச் சத்தியாகிரகம் திட்டமிடப்பட்டது என்பதை விளக்கி அவர் தனது பேட்டிகளில் விவரித்துள்ளார்.

காங்கிரஸ் செயற்குழுவின் பிற உறுப்பினர்கள் தீவிரமாக ஆட்சேபித்த போதும் 1930ல் சிவில் ஒத்துழையாமை இயக்கம் எனப்படும் சட்ட மறுப்பு இயக்கத்தைக் காந்திஜி தொடங்கியது எவ்வாறு என்பதையும் கூட சோலி விளக்கினார்.

செயற்குழு உறுப்பினர்கள், முன்பு 1920களில் நடத்தப்பட்ட ஒத்துழையாமை இயக்கம் வன்முறை காரணமாக விலக்கிக் கொள்ளப்பட்டதைக் காந்திஜியிடம் நினைவூட்டினர். இப்போது 1930களின் தொடக்கத்தில் சூழ்நிலை முன்பை விட, வகுப்புவாத வன்முறை மற்றும் பிரிட்டிஷ் அரசின் ஒடுக்குமுறை நடவடிக்கைகள் உட்பட வன்முறை நிறைந்ததாக உள்ளது என்றனர். 

பிரிட்டிஷ்க்கு எதிராக மேலும் கூடுதல் சக்தியுடன் வெளியே வர விரும்பும் மக்களின் நாடியை ஒருவர் உணர வேண்டும் என்று அவர்களுக்கு மறுமொழி கூறிய காந்திஜி, மக்கள் செயல்பட விரும்புகிறார்கள், அவர்களுக்கு வழிகாட்ட தலைமை ஏற்பது முக்கியம் என்றார்.

போராட்டத்தைக் கைவிட அவரைச் சமாதானப்படுத்த சோலியின் தந்தை சிறைச்சாலைக்கு வந்தார். ஆனால் சோலி பேசுவதில்லை என்ற மௌன விரத சபதம் செய்திருந்தார். எனவே அவர் ஒரு காகிதத்தில் எழுதினார், மன்னிப்புக் கேட்கும்படி கூற மாட்டேன் என தந்தையும் உறுதிமொழி அளித்தார். உண்மையில் சோலியின் தந்தை ஆழமான சங்கடத்தில் இருந்தார், அதன் விளைவாய் இறுதியில் அவர் மாரடைப்பில் மரணம் அடைந்தார்.

சோலி முதலில் பம்பாய் சிறைக்கும் பின்னர் திருச்சிராப்பள்ளி சிறைக்கும் அனுப்பப்பட்டார்; அங்குப் புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர் பி சுந்தரய்யா அவர்களைச் சந்தித்தார். சோலி 30 நாள் உண்ணாவிரதப் போராட்டத்தை மேற்கொண்டார். அவர் உடல் நலம் பாதிக்கப்பட அவரை விடுதலை செய்ய வேண்டியதாயிற்று.

விடுதலையான பின், சட்ட மறுப்பு இயக்கப் பின்னணியில், சோலி 100 முதல் 150 இளைஞர்களைத் திரட்டி ஒரு குழு அமைத்தார். லத்திகள் முதலியவற்றில் அவர்களுக்குப் பயிற்சி அளித்தது மட்டுமின்றி, கைராட்டை (சர்க்கா), சத்யாகிரகம் மற்றும் சுதேசி குறித்தும் போதிக்கப்பட்டது. இந்தச் ‘சுயம்சேவக்’குகள் (தன்னார்வத் தொண்டர்கள்) சுயராஜ்யம் அடையும் வரை வீட்டுக்குத் திரும்புவதில்லை எனச் சபதம் செய்தனர்! பின்னர் அவர் தலைமறைவானார், ஆனால் கைது செய்யப்பட்டு பிஜாபூர் சிறைக்கு அனுப்பப்பட்டார்.

அவரும் அவருடன் சேர்ந்த மற்றவர்களும் போலீஸ் உத்தரவுகளை ஏற்க மறுத்தனர். எனவே அவர் சிறையிலேயே விசாரிக்கப்பட்டு இரண்டரை ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டார்.

சீனியர் காங்கிரஸ் தலைவர்கள் ஆட்சேபித்தபோதும் சோலி, யூசுப் மெஹ்ரலி மற்றும் இளைஞர்களின் பிற தலைவர்கள் அரசியல் வகுப்புகளை ஏற்பாடு செய்து நடத்தினர்.

ராகுல் சாங்கிருத்தியாயனுடன் இணைந்து சோலி பீகார் சோசலிஸ்ட் கட்சி நிறுவும் முன்னெடுப்புகளை மேற்கொண்டார்.

“1938ல் லாகூரில் நடைபெற்ற காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியின் மாநாட்டில் ஒரு மாற்று வரைவு தீசிஸை முன் வைத்தோம். நம்பூதிரி பாத், திங்கர் மேத்தா மற்றும் ஆர் டி பரத்வாஜ் சிபிஐ பொலிட் பீரோ உறுப்பினராலும் அந்தத் தீசிஸ் ஆமோதிக்கப்பட்டது” என முற்போக்கு எழுத்தாளர் சங்க (PWA) நிறுவனரும், சிபிஐயின் பிரபல தலைவருமான சஜ்ஜாத் ஜாஹீர் ஒரு பேட்டியில் நினைவு கூர்ந்தார்

கம்யூனிஸ்டுகளும் கம்யூனிஸ்ட் அல்லாதவர்களும் ஒருவருக்கு ஒருவர் ஒத்துழைப்புடன் செயல்படக்கூடிய ஒரு பரந்த இடதுசாரி மற்றும் ஒன்றுபட்ட சோசலிச அமைப்பாகக் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சியை வளர்க்க கம்யூனிஸ்டுகள் விரும்பினர். லாகூர் மாநாட்டுக்குப் பிறகு விரைவில் சிபிஐ பொதுச் செயலாளர் பி சி ஜோஷி அத்தகைய ஒரு வாய்ப்பை விவாதிக்க சிஎஸ்பி பொதுச் செயலாளர் ஜெயப்பிரகாஷ் நாராயணனிடம் அதை முன் வைத்தார்

எம்என் ராய் உடன் மோதல்

எம் என் ராய் மற்றும் சில மூத்த காங்கிரஸ் தலைவர்கள் சிஎஸ்பி அமைப்பதற்கு எதிராகத் தீவிரமாக இருந்தனர். இந்த நேரத்தில் இந்தியாவுக்கு வந்த ராய் காங்கிரஸ் கட்சியில் இணைந்திருந்தார். ராய் காங்கிரஸ் தலைவர்களிடம் சிஎஸ்பி-ஐ கலைக்க யோசனை கூறினார். இதற்காக அவர் தென்னிந்தியாவிற்கும்கூட விரிவாகப் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்தார்.

எனவே சிஎஸ்பி மத்திய செயற்குழு ராய் பிரச்சாரத்துக்கு எதிராகத் தென்னகத்தில் பயணம் மேற்கொண்டு பிரச்சாரம் செய்ய சோலி பாட்லிவாலாவை நியமித்தது. சோலி தீவிரமாகப் பயணம் செய்து ராய் குற்றச்சாட்டுகளுக்குப் பதில் அளித்தார். ராய் மற்றும் சோலி இருவரும் பேசும் வகையில் ஒரு பொதுக்கூட்டம்கூட இதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. ஆனால் ராய் கூட்டத்திற்கு வர இயலவில்லை என செய்தி அனுப்பினார்.

கைது செய்ய உத்தரவு

சோலியின் உரையைக் கைதட்டி வரவேற்ற கூட்டத்தினர் அவரைத் தங்கள் தோள்களில்கூட தூக்கினர். அவர்கள் சோலியை ராய் தங்கியிருந்த வீட்டிற்கு அழைத்துச் சென்றனர். பேச மறுத்துவிட்ட ராய் சீற்றமடைந்து அவர்களை வெளியேறவும் உத்தரவிட்டார்!

இதன் மத்தியில் மெட்ராஸ் மாகாணத்தின் ராஜாஜி அரசு அவரைக் கைது செய்வதற்கு இரகசியமாக உத்தரவிட்டது. பிரிட்டிஷ் அரசின் தூண்டுதலில் சோலி ஆற்றிய உரை தேச விரோதமாக ஆகும் வகையில் இருந்தது என்பது இதற்காகக் கூறப்பட்ட சாக்கு! இவை அனைத்தும் சோலிக்குத் தெரியாது. சோலி மெட்ராஸ் மாகாணத்திற்கு மீண்டும் வந்தால் அவரைக் கைது செய்ய ராஜாஜி உத்தரவிட்டார்.

சோலி மாணவர்கள் மாநாட்டில் உரையாற்ற மெட்ராஸ் வழியாகக் கோழிக்கோடு (காலிகட்) செல்ல வேண்டி இருந்தது. அது, ராஜாஜியின் உத்தரவைச் செயல்படுத்த போலீஸைச் சுறுசுறுப்பு அடையச் செய்து ஆயிரக்கணக்கான மாணவர்கள் கூடியிருந்த இடத்திற்கு அவர்களை வரச் செய்தது. போலீஸ் வருகையை ஏ கே கோபாலன் சோலியிடம் தெரிவித்தார். சோலி அவரிடம், “போலீசிடம் ஹாலில் நுழைய வேண்டாம், மீறி வந்தால் மாணவர்கள் வன்முறையில் இறங்கி சூழ்நிலை மோசமாகக் கூடும்” எனத் தெரிவிக்கக் கூறினார். ஆனால் மிகப் பிடிவாதமாக இருந்த போலீஸ் இன்ஸ்பெக்டர் ஹாலில் நுழைந்தார். தவிர்க்க முடியாதது நிகழ்ந்தது: அவரது கார் அடித்து நொறுக்கப்பட்டது, அவரது உடை கந்தல் கந்தலாகக் கிழித்துத் தொங்கவிடப்பட்டு அவர் பிடித்துத் தள்ளப்பட்டார். எனவே அந்த அதிகாரியைக் காப்பாற்ற சோலி தலையிட வேண்டியதாயிற்று. இறுதியில் சோலி கைது செய்யப்பட்டார்.

இந்த நிகழ்வு காங்கிரஸ் கட்சிக்குள் அமளியை ஏற்படுத்தியது. இந்த அளவுகோல் பயன்படுத்தப்பட்டால், நேரு உட்பட எந்தத் தலைவரும் தேசத் துரோகம் என்ற பெயரில் கைது செய்யப்பட முடியும் என்ற கவலை ராஜாஜியிடம் தெரிவிக்கப்பட்டது! எனவே அவரது நடவடிக்கை மூர்க்கத்தனமானது என்றது.

காங்கிரஸ் தலைமை சோலியை விடுதலை செய்ய ராஜாஜியிடம் கூற அவரும் அதை ஏற்று விடுதலை செய்தார்.

சிபிஐயில் இணைதல்: மத்திய குழு உறுப்பினர்

சோலி 1935ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் பரிட்சார்த்த உறுப்பினராகச் சேர்ந்தார். உண்மையில், சிஎஸ்பி-யில் இருந்தபோது திரும்பத் திரும்ப கம்யூனிஸ்ட் என குற்றம் சாட்டப்பட்டவர்  அவர்.

சிஎஸ்பி-யில் இருந்த நாட்களில் சோலி கம்யூனிஸ்டுகளுடன் நெருக்கமாக ஒத்துழைப்பிலிருந்தார். ஏற்கனவே அவர் மெட்ராஸில் பி சுந்தரையா உடன் தொடர்பில் இருந்தார். 1940களின் தொடக்கத்தில் கைது செய்யப்பட்ட அவர் ஹிஜிலி சிறைக்கும் பின்னர் தியோலி வதை முகாம்களுக்கும் அனுப்பப்பட்டார்.

அங்கு அவர் எஸ்ஏ டாங்கே, பிடி ரணதிவே, ராகுல் சாங்கிருத்தியாயன், ஜெயப்பிரகாஷ் நாராயணன் போன்ற தலைச்சிறந்த தலைவர்களைச் சந்தித்தார்.

1942 வாக்கில் டாங்கே மற்றும் சோலி தவிர பெரும்பாலான கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர். எரவாடா சிறைக்கு மாற்றப்படும் வரை அவர்கள் மற்றொரு கைதியுடன் தனியே அடைத்து வைக்கப்பட்டனர். பின்னர் 1943ல் விடுதலை செய்யப்பட்டனர்.

விடுதலை ஆனதும் சோலி பம்பாய் கட்சி தலைமையகத்திலும் மற்றும் கட்சியின் கலாச்சாரப் பிரிவிலும் தீவிரமாகப் பணியாற்றினார். 1943 மே –ஜூன் மாதங்களில் நடைபெற்ற சிபிஐ முதலாவது கட்சி காங்கிரஸில் அவர் தீவிரமாகப் பங்கேற்றார். இந்தக் கட்சிப் பேராயத்தில் அவர் சிபிஐ மத்திய குழு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார்.

பம்பாயில் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின் (ஏஐஎஸ்எப்) புகழ்பெற்ற தலைவர் நர்கீஸ் பாட்லிவாலாவை அவர் திருமணம் செய்து கொண்டார். தீவிரமான மாணவ மற்றும் கட்சித் தலைவரான நர்கீஸ் ஓர் அமைப்பாளரும் கூட. பின்னர் அவர்கள் பிரிந்தனர்.

சோலி மற்றும் நர்கீஸ் இருவரும் மாணவர்கள் மத்தியில் மிகத் தீவிரமாகச் செயல்பட்டனர்.

சுபாஷ் போஸ் தப்பிக்கும் திட்டம்

1939 –40ல் சுபாஷ் போஸ் இந்தியாவிலிருந்து தான் தப்பிக்கத் திட்டமிட உதவி கேட்டு சிபிஐ தலைமையை அணுகினார். பிசி ஜோஷி, டாக்டர் அதிகாரி, சோலி பாட்லிவாலா மற்றும் சிலர் உள்ளிட்ட சிபிஐ தலைவர்கள் போஸ் தப்பிப்பதற்குத் தீவிரமாகத் திட்டமிட்டு அதை வெற்றிகரமாகச் செயல்படுத்தினர். நன்கு திட்டமிட்ட இந்தத் தப்பிக்கும் திட்டத்தில் சோலி தகவல் தொடர்பாளராகச் செயல்பட்டார்.

கருத்து வேறுபாடுகள் மற்றும் கட்சியை விட்டு வெளியேறல்

1940களின் மத்தியில் பி சி ஜோஷி மற்றும் சிபிஐயுடன் சோலியின் கருத்து வேறுபாடுகள் தீவிரமாக வளர்ந்தன. இந்தக் கருத்து வேறுபாடுகள் முக்கியமாக இரண்டாவது உலக யுத்தம் குறித்த பரிசீலனையுடன் தொடர்புடையது. அவருடைய குற்றச்சாட்டுகள் திறம்பட பதிலளிக்கப்பட்டன. சோலி பாட்லிவாலா சிபிஐ-யில் இருந்து விலகிச் செல்லத் தொடங்கி தனக்கான தனியான சொந்த வெளியை ஏற்படுத்தினார். எனினும் அவர் தனது அடிப்படை கொள்கைகளில் சமரசம் செய்து கொள்ளவில்லை.

பண்பாட்டு உலகில்

கலை மற்றும் கலாச்சாரத்தை மேம்படுத்தும் புலாபாய் தேசாய் நினைவு நிறுவனத்தில் சோலி இணைந்தார். அந்நிறுவனம் 1946-ல் தனது மாமனார் புலாபாய் தேசாய் நினைவாக மாதுரி தேசாய் அவர்களால் தொடங்கப்பட்டது. சோலி பாட்லிவாலா அதனை நிர்வகித்தார். ஏப்ரஹாம் அல்காசி உட்பட பல தலைச்சிறந்த கலாச்சார உலகப் பிரமுகர்களுக்கும்; மற்றும் இந்திய மக்கள் நாடக மன்றத்துடன் (IPTA) தொடர்புடைய ஏ கே ஹேங்கல், ஷியாம் பெனகல், கிரீஷ் கர்னாட், சவுகத் ஆஸ்மி போன்ற பலருக்கும் ஒரு பயிற்சிமுனை மையமாக அது மாறியது.

சோலி, புலாபாயின் மகன் திருபாய் அவர்களுக்குத் தனி உதவியாளர் ஆனார்; ஸ்விட்சர்லாந்துக்கான இந்தியத் தூதராகத் திருபாய் நியமிக்கப்பட்டபோது சோலி அவருடன் பெர்னே சென்றார்.

ஐஎன்ஏ கைதிகளுக்கு ஆதரவாக

(நேதாஜி சுபாஷ் சந்திர போஸால் உருவாக்கப்பட்ட ‘இந்தியத் தேசிய இராணுவ’த்தில் (INA) இணைந்த வீரர்களை இரண்டாம் உலகப் போரின்போது பிரித்தானிய அரசு கைது செய்தது.) கைது செய்யப்பட்ட அந்த வீரர்களுக்கு எதிராக 1945 –46ல் நடத்தப்பட்ட விசாரணைகளின்போது சோலி பாட்லிவாலா அவர்களுக்கு ஆதரவாகத் தீவிரமாக ஈடுபட்டு புலாபாய் தேசாய்க்கு உதவியாளராகச் செயல்பட்டார்.

கலாச்சாரப்  பண்பாட்டு நடவடிக்கைகள்

பாட்லிவாலாவுக்கு மருமகள் உறவு உடைய ஜாரின் கம்பட்டா மற்றும் ஃபிரென்ஸி ஆல்பிரிட்ஜ் (Zarine Khambatta and Freny Olbrich) இருவரும் தங்கள் ‘சோலி மாமா’வின் ஒப்பற்ற வாழ்க்கையை ஒன்றிணைத்தனர். பம்பாய் நகருக்குக் காந்திஜி, நேரு மற்றும் விஜயலட்சுமி பண்டிட் போன்ற தலைவர்கள் வருகை தந்தபோது பம்பாயில் 89, பி தேசாய் ரோடில் அமைந்த அவர்களது ‘ஹஸ்மன்’ (‘Hasman’) வீட்டில் சோலி அவர்களைச் சந்தித்தார். ஆல்பிரிட்ஜ் ஸ்காட்லாண்டிலிருந்து எழுதுகிறார்: “சமரசமற்ற நேர்மையான மனிதரான சோலி மாமா காங்கிரசை விட்டு வெளியேறினார்; காரணம், சுதந்திரத்திற்குப் பிறகு காங்கிரஸ், அவரால் கைவிட முடியாத கொள்கைகளுடன் முரண்பட்டதாகும்”

சிபிஐ-யுடன் கடுமையான வேறுபாடுகள் இருந்த போதிலும் சோலி காங்கிரஸ் தலைவர்களுக்கு, குறிப்பாக அதன் வலதுசாரிகளுக்கு ஒன்றைத் தெளிவுபடுத்தினார் – தனது நீண்ட கால கொள்கைகளைத் தன்னால் ஒருபோதும் சமரசம் செய்து கொள்ள முடியாது.

சோலி பாட்லிவாலா பம்பாயில் ஜஹாங்கீர் ஆர்ட் கேலரியை விரிவுபடுத்தக் கடுமையாகப் பாடுபட்டார். மற்றும் அங்கு சிறிய தாழ்வாரச் சிற்றுண்டிச்சாலையான 'சமோவர்' (Samovar) ஒன்றைத் தொடங்கினார்.

வடிவமைப்புக் கலை கல்வியாளரான (design academician) மகேந்திர தக்கர் எழுதுகிறார்: “அவர் அருமையான ஒரு மார்க்சியவாதி”. “இந்தியர்கள் இந்த ‘இசம்’ என்பதை ஜனநாயகச் சோசலிசத்தின் பின்னொட்டாகப் பார்க்கிறார்கள்… சோலி’பாய் நடைமுறையில் கொண்டு வர உதவிய தேசிய ஒருமைப்பாடு இலட்சியத்தைச் சுற்றி ஒவ்வொருவரும் அணி திறள்கிறார்கள்”

ராஜ்பன்ஸ் கிருஷ்ணா லாகூர் மாணவர்கள் சங்கத்தின் புகழ்பெற்ற தலைவர். உஷா ராஜ்பன்ஸ் கிருஷ்ணாவின் மகளும், பால்ராஜ் மற்றும் பீஷம் சஹானியின் மருமகளுமான தேவிகா மோஜ்வானி தங்கள் வாழ்க்கையில் சோலி ஏற்படுத்திய தாக்கத்தை நினைவு கூர்கிறார்.

புத்தகங்கள்

சோலி பாட்லிவாலா சிபிஐ-யில் இருந்தபோதும், சிபிஐ விட்டு விலகி வெளியில் இருந்தபோதும் எண்ணற்ற பல கட்டுரைகள், அரசியல் அறிக்கைகள், கையேடுகள் மற்றும் நூல்களை எழுதினார். அவரது புகழ்பெற்ற படைப்புகளில் ஜெய் ஹிந்த்: இந்தியக் கிளர்ச்சிப் புதல்வி ஒருவரின் நாட்குறிப்பு – ராணி ஜான்சி படையுடன் (1945) என்ற நூல் வித்தல் பாய் கே ஜாவேரி உடன் இணைந்து எழுதியது (Jai Hind: The Diary of a Rebel Daughter of India -With the Rani of Jhansi Regiment (1945), co-authored with Vithal Bhai K Jhaveri;) ஜெய் ஹிந்த் என்ற தலைப்பில் மற்றொரு நூல் (1946). கட்சியை விட்டு விலகிய பிறகு அவர் சிபிஐ உடன் தனது கருத்து வேறுபாடுகள் குறித்தும் கூட எழுதியுள்ளார்.

சோலி பாட்லிவாலா பம்பாயில் 1986ஆம் ஆண்டு ஜூன் 14ம் தேதி இயற்கை எய்தினார்.

–நன்றி : நியூ ஏஜ் (2026, ஜூன் 21 –27)

– தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்.

 

Saturday, 27 June 2026

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வாழ்க்கை வரலாறு 150 --அபுல் ஓலா : சுதந்திர இயக்கம் கட்டிய பெருந்தலைவர்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வாழ்க்கை வரலாறு 150 


அபுல் ஓலா : சுதந்திர இயக்கம் கட்டிய பெருந்தலைவர்

–அனில் ரஜீம்வாலே

அபுல் ஓலா அல்லது ஜஃப்ருதீன் அஹமத் பீகாரைச் சேர்ந்த அபூர்வமான சுதந்திரப் போராட்ட வீரர் மற்றும் கம்யூனிஸ்ட் அமைப்பாளர்; மிகக் கடினமான மற்றும் ஏழ்மையான சூழ்நிலையில் வாழ்ந்து கொண்டு தன் வாழ்நாள் முழுவதும் வகுப்பு ஒற்றுமைக்காகப் போராடியவர். அவரது பெயர் ஏறத்தாழ மறக்கப்பட்ட ஒன்று எனினும், அவரது பங்களிப்புகள் இன்னும் வாழ்கின்றன.

தொடக்க கால வாழ்க்கை 

அபுல் ஓலா 1918 ஆகஸ்ட் 7ல் பீகார், கயா மாவட்டத்தில் சாட மசூதி (Chata Masjid) அருகில் பாட்டம் பிரிட்ஜ் மொஹல்லாவில், அறிவார்ந்த கருத்துக்கள் மற்றும் சுதந்திரப் போராட்டத் தியாகங்களுக்குப் புகழ்பெற்ற ஓர் இஸ்லாமிய குடும்பத்தில் பிறந்தார். (மொஹல்லா எனில் அண்மையிடம் என்று பொருள்). அவரது தந்தை மௌலானா கைருத்தீன் ஷாஹிப், கிலாபத் இயக்கம் மற்றும் ஜாமியாத் இஉலிமா-இ-ஹிந்த் அமைப்புகளின் தீவிர உறுப்பினர். கயாவில் காஸ்மியா மதராசா நிறுவப்பட அவரே பொறுப்பு. அவர் ஓர் ‘அலீம்’ (கற்றறிவாளர்), அபுலின் தாத்தாவும் கூட ஓர் ‘அலீம்’.

அபுல் ஓலா தனது தொடக்கக் கல்வியை உருது, அரபு மற்றும் பெர்சியன் மொழியில் அவரது அம்மா வழி தாத்தா மௌலானா அப்துல் கஃபார் வழிகாட்டலின்கீழ் பெற்றார். மனப்பாடமாகத் திருக்குர்ஆனை அவர் அறிவார்! அவரது தந்தை அவரை ‘ஹாபீஸ் குர்ஆன்’ என ஆக்க விரும்பினார். (முழுமையான திருக்குர்ஆனையும் மனனம் செய்து ஒப்பிக்க கூடிய ஒரு முஸ்லீம் ‘ஹாபீஸ் குர்ஆன்’ என்று அழைக்கப்படுகிறார்)

அரசியலில்

அபுலின் இரண்டு சகோதரர்கள் மற்றும் ஒரு சகோதரி என அனைவரும் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். குடும்ப உறுப்பினர்கள் வழக்கமாக ராட்டையில் கதர் நூல் நூற்பவர்கள். கயா மாவட்ட அம்வானின் கெந்தூய் (Amwan, Kendui) கிராமத்தில் 1922ல் காங்கிரஸ் அமர்வு நடந்தது. அபுலின் தந்தை அவரது நான்கு வயது மகனை அந்த மாநாட்டிற்கு அழைத்துச் சென்றார்.

அபுல் ஓலா கயா ஜில்லா பள்ளியில் படித்தார். ஒரு மாணவராக இருந்தபோது முன்னணி புரட்சியாளரும் விடுதலைப் போராட்ட வீரருமான ஷியாம் பர்த்தாவர் உடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. பர்த்தாவர் எதிர்காலத்தில் கயா சதி வழக்கில் ஒரு தலைவராக ஆனவர்.

ஒரு மாணவர் தலைவராக அபுல் MORN என்ற பெயரில் ஓர் இரகசிய அமைப்பை ஏற்படுத்தினார். அப்பெயர் நான்கு புரட்சியாளர்கள் பெயரின் முதல் எழுத்தை இணைத்து வந்தது: அந்த நால்வர் –மோட்டோ, ஓலா, ராஜ்டியோ மற்றும் நாகேந்திரா. அது 1935 –36 காலகட்டம். பர்த்தாவர் அந்த அமைப்பைத் தலைமை ஏற்று நடத்தினார். தலைமறைவு இரகசிய  நடவடிக்கைகளில் ஈடுபட்ட அவர்கள் ஏராளமாகப் படிப்பது வழக்கம். 

ஷியாம் சரண் பர்த்தாவர் கயா மாவட்டத்தின் ஒரு கிராமத்தில் பிறந்தவர். அவரது குடும்பம் பிரிட்டிஷாருக்குச் சேவை புரிந்தபோதும் அவர் மெல்ல ஒரு புரட்சியாளராக உருவானார். அவரது தந்தை அடிக்கடி பிரிட்டிஷ் அட்டூழியங்களின் கதைகளை விவரிப்பது வழக்கம்

1920களில் கயாவில் செயல்பட்ட தீவிரமான இளைஞர் அமைப்பு, யுவக் சங். 1928ல் லாலா லஜபதி ராய் லத்தியால் கடுமையாகத் தாக்கப்பட்டு மரணம் அடைந்தபோது, இளைஞர்கள் சங்கத்தின் நடவடிக்கைகள் அதிகரித்தன. கயாவிலிருந்து 12 மைல் தள்ளி இருந்த ஓர் இடத்தில் இரகசிய  கூட்டம் நடத்தப்பட்டது; அக்கூட்டத்தில் பகத்சிங், சூர்யா சென், பர்த்தாவர் மற்றும் பிறர் கலந்து கொண்டனர்.

மற்றொரு கூட்டம் கயா சந்த் சௌரா மொஹல்லாவில் சாம்பத் கலியில் நடத்தப்பட்டது. புரட்சியாளர்கள் மீது பிரிட்டிஷ் அரசு அடக்குமுறைகளை அதிகரித்தது. மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் காவல் ஆய்வாளருக்கு ஒரு கடிதம் அனுப்ப முடிவு செய்யப்பட்டது. ஓலாவின் கூற்றுப்படி அக்கடிதம் பின்வருமாறு அமைந்தது: “உங்களுக்கு உபதேசங்கள் அல்லது அரசியல் உரையை வழங்குவது எனது நோக்கம் அல்ல. உங்கள் கடமைகளை ஆற்றும்போது மனிதாபிமானத்துடன் நடந்து கொள்ளுங்கள் என உங்களுக்குச் சாதாரணமாக அறிவுரை கூறுகிறேன்; மற்றும் நட்பு ரீதியான அறிவுரையை நீங்கள் உண்மையுடன் எடுத்துக் கொள்ள தவறினால், முன்பு முடிந்துபோன சான்டர்ஸ், லோமென் (போன்ற அதிகாரிகள்) மற்றும் பிறர் தலைவிதியை நீங்கள் நினைவு கொள்ள வேண்டும். தங்களின் மேம்பட்ட நடத்தைக்குச் சான்றளிக்க நான் இரண்டு வாரம் அனுமதிக்கிறேன். இல்லையெனில், உங்களின் மரண தண்டனை ஆணைக்கு ஒப்புதல் அளிப்பதில் நான் மகிழ்ச்சியுடன் சம்மதிப்பேன், பிறகு இங்கிலாந்து முழுவதும் சேர்ந்தாலும் உங்களைக் காப்பாற்ற முடியாது. நான் தங்களுக்குத் தோட்டாக்களை அனுப்புகிறேன், அதன் நினைவு –ஒருக்கால் நீங்கள் நல்ல மனிதராக மாறும் பட்சத்தில்– உங்களைச் சரியான பாதையில் வழிநடத்தும் என நான் நம்புகிறேன்; இல்லாவிடில், தங்கள் ஆணவம் காரணமாக அதற்கான தருணம் எழும் எனில், அந்தத் தோட்டக்கள் தங்கள் சுய பாதுகாப்புக்கு உதவலாம்”

மாணவர்கள் அமைப்பு 

கயாவில் 1936ல் கயா மாவட்ட மாணவர்கள் அசோசியேஷன் அமைக்கப்பட்டது. கூட்டம், ராய் பக்கராவில் விசாலமான பங்களா(கோதி)வில் ஸ்ரீ நாராயன் ஜிண்டால் ‘வக்கீல்’ தலைமையில் நடந்தது.  பாட்னாவின் புகழ் பெற்ற பிளீடர் பாபு பல்தேவ் சகாய் கூட்டத்தைத் தொடங்கி வைத்தார். கூட்ட அமைப்பாளர்களின் முன் வரிசையில் ஓலா செயலாற்றினர். 1937ல் கயா ஜில்லா பள்ளியில் ஓலா பள்ளி மாணவர்கள் அமைப்பு ஒன்றைத் திரட்டி அமைத்தார். அந்த அமைப்பின் வரைவு விதிகளைக்கூட அவர் தயாரித்தார். சமூக அமைப்பு மாதிரியில் அது அமைந்தது.

அந்தமான் கைதிகள் விடுதலை இயக்கம்

நாடு முழுவதும் ‘அந்தமான் கைதிகள் விடுதலை இயக்கம்’ தந்த அழுத்தத்தின் காரணமாக ஷியாம் சரண் பர்த்தாவர் பிற கைதிகளுடன் அந்தமானில் இருந்து 1937ல் விடுதலை செய்யப்பட்டார். விடுதலையானதும் அவர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். நேஷனல் ஃப்ரண்ட் என்ற கட்சிப் பத்திரிக்கையின் பத்து பிரதிகள் கயாவுக்கு வருவது வழக்கம். அவற்றையும் மெட்ராஸில் இருந்து பதிப்பிக்கப்பட்ட நியூ ஏஜ் மாத இதழையும் ஓலா விநியோகித்தார். மாணவர்கள், கம்யூனிஸ்டுகள் மற்றும் அறிவாளர்கள் மத்தியில் கம்யூனிஸ்ட் இன்டர்நேஷனல் அமைப்பின் ஆவணங்கள் மற்றும் நூல்களையும்கூட அவர் விநியோகித்தார்.

கிராந்தி, சின்கரி மற்றும் காலிஷ் (Kranti, Chingari and Khalishபுரட்சி, தீப்பொறி, ஏக்கம்) போன்ற பருவ இதழ்களும் பதிப்பிக்கப்பட்டு வந்தன; அவற்றையும் தனது நண்பர்களிடம் ஓலா விநியோகித்தார். இந்தப் பருவ இதழின் பெயரில் கயாவில் “காலிஷ் பார்க்” என்ற பூங்கா பெயரிடப்பட்டது.

ஓலா, பர்த்தாவர் மற்றும் மற்றவர்கள் நகரத்தின் முன்னணி பிரமுகர்கள் உட்பட முற்போக்கு சிந்தனையாளர்கள் அமைப்பு ஒன்றையும் அமைத்தனர்.

மாணவர் இயக்கம் மற்றும் ஓலா கைது

கயா ஜில்லா மாணவர்கள் அமைப்பு என்ற பதாகையின் கீழ் 1938ல் அபுல் ஓலா மாணவர்களின் பெரும் இயக்கத்தைத் தலைமையேற்று நடத்தினார். கல்லூரி முதல்வருக்கு எதிராக முழக்கங்களை எழுப்பிய அவர்கள் மூவர்ணக் கொடியை ஏற்றினர். இதையடுத்து ஓலாவுக்குப் பள்ளியில் அனைத்து வசதிகளும் பறிக்கப்பட்டன. தனது நடவடிக்கைகளை அவர் தொடர்ந்தார், ஜெகனாபாத்தில் நடைபெற்ற மாவட்ட மாணவர்கள் மாநாட்டில் கலந்து கொண்டார்.  புகழ் பெற்ற விடுதலைப் போராட்ட வீரர் பேராசிரியர் அப்துல் பாரி மாநாட்டைத் தொடங்கி வைத்தார். ஓலா அதன் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவர்.

1938ல் மாணவர்களின் பரவலான வேலை நிறுத்தத்தின்போது ஓலா கைது செய்யப்பட்டு கயா மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார். அவர் கைது செய்யப்பட்டதற்கு எதிராக நகரம் முழுவதிலும் மாணவர்கள் தெருவில் இறங்கி கண்டனப் போராட்டம் நடத்தினர். அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தையும் வழக்கறிஞர்கள் நூலகத்தையும் சூழ்ந்து கொண்டு, “சிறைக் கதவுகளை உடையுங்கள், ஓலா பாய் (சகோதரர் ஓலாவை) விடுதலை செய்” என முழக்கமிட்டனர். பீகார் மாகாண மாணவர்கள் சம்மேளனத்தின் இரண்டு தலைவர்கள், ஹரி கிஷோர் தாக்கூர் மற்றும் மூன்ட்ரிகா சிங், கயாவுக்கு விஜயம் செய்து ஓலாவின் விடுதலையைக் கோரினர்.

கதார் இயக்கத்தில் 

இந்திய நாடு முழுவதும் குறிப்பாக வட இந்தியாவில் இந்த நேரத்தில் கதார் இயக்கம் பரவியது, கதார் கட்சி, கீர்த்தி (கடின உழைப்பாளி) மற்றும் கீர்த்தி லேஹர் (உழைப்பாளர் இயக்கம் அல்லது அலை) என்ற இரு இதழ்களை முறையே உருது மற்றும் குர்முகி மொழியில் பிரசுரித்தது. [குர்முகி, பஞ்சாபி மொழியை எழுதப் பயன்படும் முதன்மையான எழுத்துமுறை. இது 16-ஆம் நூற்றாண்டில் சீக்கியர்களின் 2வது குருவான குரு அங்கத் உருவாக்கியது.]

ஷியாம் சரண் பர்த்தாவர், அபுல் ஓலா மற்றும் பிற தோழர்கள் கதார் கட்சியின் பணிகளிலும், கட்சிப் பருவ இதழ்கள் பிரசுரம் மற்றும் அதன் விநியோகத்திலும் ஈடுபட்டனர். இந்தக் காலகட்டத்தில் கயாவில் சின்கரி (Chingari, தீப்பொறி) மற்றும் கலீஷ் (Khalish ஏக்கம் /மனக்குமுறல்) இதழ்கள் பிரசுரிக்கப்பட்டன.

கிராந்தி மற்றும் சின்கரியில் ஓலா எழுதுவது வழக்கம். சமீபத்தில் தன்வந்தரி அந்தமானில் இருந்து திரும்பி இருந்தார். ஓலாவை மீரட்டுக்கு இடம் மாறி சென்று கீர்த்தி லேகார் உருது இதழுக்கு உதவும்படி அவர் வேண்டினார். ஓலா அங்குச் சென்று ஹர்மந்தர் சிங் சோதி, பரத் சிங் மற்றும் சாதிக் கம்போங் உடன் பணியாற்றினார்.

இரண்டாம் உலகப் போர் வெடித்ததும் பிரிட்டிஷ் அரசு கீர்த்தி லேகார் இதழ் மீது கடுமையான நடவடிக்கை எடுத்தது ஆசாத் அச்சகம் மற்றும் இதழும் அபராதத் தொகை கட்டும்படி கோரப்பட்டன. இறுதியில் செய்தித்தாளை மூடும்படி கட்டாயப்படுத்தப்பட்டது மற்றும் அதன் ஊழியர்களுக்கு எதிராக வாரண்டுகள் பிறப்பிக்கப்பட்டன.

பரத்வாஜுடன் தொடர்பு

மீரட்டில் இருந்தபோது அபுல் ஓலா புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவரும் சிபிஐ கட்சியின் பொலிட் பீரோ உறுப்பினருமான ஆர் டி பரத்வாஜ் உடன் தொடர்பு ஏற்பட்டது. பரத்வாஜ் வழிகாட்டலில் மீரட் மற்றும் உத்தரப்பிரதேசத்தில் கட்சி அமைக்கப்பட்டு வந்தது. மீரட் சிபிஐ கிளையின் (செல்) உறுப்பினரானார் ஓலா. அந்தக் கட்சிக் கிளை டேராடூன் சதி வழக்கில் தொடர்புடைய ஷர்ஜங், ராஜேந்திர பால் மற்றும் பரத் சிங் மற்றும் டெல்லி சதி வழக்கில் தொடர்புடைய ‘பீகாரி தோழர்’ (அவர்தான் ஓலா) மற்றும் ஓம் பிரகாஷ் முன்னி ஆகியோர்களை உள்ளடக்கியிருந்தது.

பீகாரில் கட்சி அமைத்தல்

போலீஸ் கம்யூனிஸ்டுகள் மீது நடவடிக்கைகளைக் கடுமையாக்க, ஓலா மீரட்டில் கைதாகாமல் தப்ப வேண்டி வந்தது; அவர் இரகசியமாகப் பீகார் சென்றார். பீகாரில் சுனில் முகர்ஜியைச் செயலாளராகக் கொண்டு 1939 அக்டோபரில் முன்கர் என்ற இடத்தில் சிபிஐ நிறுவப்பட்டது. புதிதாக அமைக்கப்பட்ட மாகாண அமைப்புக் குழுவின் உறுப்பினர் சரத் பட்நாயக் கயாவில் கட்சியை அமைக்கும் பொறுப்பை ஓலாவிடம் அளித்தார். அந்த நிலைமைகளில் அது கடினமான பணியாக இருந்தது. அவரது தலைமையின் கீழ் ஒரு கம்யூனிஸ்ட் தொடக்க உட்குழு அமைக்கப்பட்டது.

போர் எதிர்ப்பு நடவடிக்கைகள் 

1939 ஜனவரியில் கயா மாவட்டத்தில் தவ்ட்நகர் அருகில் சௌராம் கிராமத்தில் ஓர் அரசியல் மாநாடு நடத்தப்பட்டது. குமார் பத்ரி நாராயணன் சிங் ஏற்பாடு செய்த அந்த மாநாட்டில் சின்கரி குழு முன்னணி பங்கு வகித்தது. பஞ்சாப் கதார் மற்றும் கீர்த்தி கட்சிகளின் உறுப்பினர்கள் அதில் பங்கேற்றனர்; பர்த்தாவர் மற்றும் ஓலா தீவிரப் பங்காற்றினர்.

இரண்டாம் உலகப் போர் பின்னணியில் 1940ல் காங்கிரஸின் ராம்கர்க் (இன்று ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ளது) அமர்வின் மாநாடு நடத்தப்பட்டது. மாநாட்டு அமர்வின் அருகில் அதே நேரத்தில் சுபாஷ் சந்திரபோஸ் தலைமையில் ஒரு சமரச எதிர்ப்பு மாநாடு (ஆன்ட்டி காம்பரமைஸ் கான்பரன்ஸ்) நடைபெற்றது. ஷீல்பத்ர யாஜி அதன் வரவேற்புக் குழுத் தலைவர், தன்ராஜ் ஷர்மா செயலாளர். கட்சி அறிவுறுத்தல்படி தன்ராஜ் சர்மா உடன் அபுல் ஓலா நெருக்கமாகப் பணியாற்றினார். கம்யூனிஸ்டுகள் மற்றும் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி (CSP)யில் இருந்தவர்கள் உட்பட விரிவான இடதுசாரி அணியினர் அதில் பங்கேற்றனர்.

ஓலா மீண்டும் தலைமறைவாகச் செல்ல நேர்ந்தது. அவர் மாணவர்கள் மத்தியில் தனது பணிகளைத் தொடர்ந்தார். (பீகார்) தர்பங்கா, லகரியாசராய் என்ற இடத்தில் பீகார் மாகாண மாணவர்கள் கன்வென்ஷன் நடத்தப்பட்டது. ஏஐஎஸ்எப் பொதுச் செயலாளர் எம் ஃபரூக்கி அதில் பங்கேற்றார். பெருமளவில் (ஏஐஎஸ்எப்) மாணவர் பெருமன்றத்தின் தலைமறைவு நடவடிக்கைகளுக்கு ஓலா உதவினார்.

கதார் கட்சி பணி தொடர்பாகப் பஞ்சாபில் இருந்து திடீரென்று சுரேந்திர மோகன் நாயக் கயாவுக்கு வந்தார். அவர் ஓலாவை அவரது தலைமறைவு மையத்தில் சந்தித்தார். கல்கத்தாவில் நடைபெற இருந்த கதார் கட்சி கூட்டத்தில் பங்கேற்க இருவரும் சேர்ந்து புறப்பட்டனர்; ஆனால் சிலர் கைது செய்யப்பட்டாலும் சுரேந்திர மோகன் மற்றும் ஓலா கைதாகாமல் தப்பினர்.

ஓலா ஓர் இரகசிய கடிதம் மூலம் லாகூர் செல்ல கேட்டுக் கொள்ளப்பட்டார். அவரும் அதை ஏற்று லாகூரை அடைந்து பாய் ஹர்பன்சிங்கைச் சந்தித்தார். அவர்கள் மாண்ட்கோமரி ஃபடேஹ்வால் (Montgomery Fatehwal) என்ற இடத்தில் ஒரு தலைமறைவு கூட்டத்தில் பங்கேற்றனர். அவர்கள் தங்கள் நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்த முடிவு செய்தனர். 

கைது 

திரும்பி வந்ததும் ஓலா தனது நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தினார் தொடர்ந்து போலீசிடம் கைதாகாமல் நழுவி வந்தார். 1941 தொடக்கத்தில் நோயுற்றிருந்த தனது தாயைச் சந்திக்க கயா சென்றார், அவரது வீட்டைப் போலீஸ் சூழ்ந்திருந்தது. அருகிலுள்ள இடங்கள் மற்றும் மொஹல்லாகள் (நகரை ஒட்டிய புறநகர் பகுதிகள்) அடைக்கப்பட்டு இருந்தன. மதிலேறிக் குதித்து ஓட முயன்ற ஓலாவைப் பெரும் போலீஸ் படை மடக்கிப் பிடித்தது. முதலில் மத்திய சிறைக்கும் பின்னர் ஹசாரிபாக் சிறைக்கும் மாற்றப்பட்டார். ‘சிறைக்குள் ஒரு சிறை’ என்ற புகழ்பெற்ற வார்டு எண் 14ல் அவர் அடைக்கப்பட்டார். இந்த வார்டில் நான்கு பகுதிகளாகச் சுமார் 60 கைதிகள்; அவர்களில் ராகுல் சாங்கிருத்தியாயன், சுனில் முகர்ஜி, கிஷோரி பிரசன்னா சிங், அலி அஷ்ரப், தன்ராஜ் சிங், காரியானந்த் சர்மா உள்ளிட்ட பெரும்பாலோர் கம்யூனிஸ்டுகள் மற்றும் கம்யூனிஸ்ட் ஒருங்கிணைப்புக் குழுவைச் சேர்ந்தவர்கள்.

1941ன் மத்தியில், அதாவது ஜூன் 22ல் சோவியத் யூனியன் மீது ஹிட்லரின் தாக்குதலுக்குப் பிறகு, ஓலா உள்ளிட்ட கைதிகள் விடுதலை செய்யப்படலாயினர்

கிசான் சபாவில்

விடுதலையான பிறகு ஓலா பீகார் பிட்டாவில் நடைபெற்ற அகில இந்திய கிசான் சபா (AIKS)வின் அகில இந்திய மாநாட்டில் பங்கேற்றார். பிசி ஜோஷி மற்றும் சுனில் முகர்ஜி கதார் கட்சி மற்றும் பஞ்சாபின் கீர்த்தி கட்சியின் விவரங்கள் குறித்து ஓலாவிடம் கேட்டனர். இச்சமயத்தில் கீர்த்தி கட்சி சிபிஐயுடன் இணையத் தயாராக இருந்தது.

விரைவில் அபுல் ஓலா 1942ல் கயா மாவட்டக் கட்சி செயலாளரானார். இந்தப் பொறுப்பில் அவர் 1947 வரை நீடித்தார்.

1944 –45 காலகட்டத்தின்போது அபுல் ஓலா பிற தோழர்களுடன் சேர்ந்து பரவலாகக் கிசான் சபா அமைப்பதில் ஈடுபட்டார். ஓலாவால் சகுராபாத்தில் ஒரு பேரணி நடத்தப்பட்டது. சுவாமி சகஜானந்தா கலந்து கொண்ட அப்பேரணி மக்கள் மீது ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அபுல் ஓலாவின் தீவிரப் பங்கேற்புடன் வேறு பல கூட்டங்களும் பேரணிகளும் நடத்தப்பட்டன.

மன்ஸார் ரிஸ்வி உடன் சந்திப்பு 

மன்ஸார் ரிஸ்வி அல்லது மன்ஸாரூல் ஹாக் 1943ல் நடைபெற்ற முதலாவது கட்சி காங்கிரஸில் பீகாரில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதலாவது சிபிஐ மத்திய குழு உறுப்பினர். அவர் பீகார் சாப்ரா பகுதியைச் சேர்ந்தவர், அலிகாரில் படித்தவர். 1924ல் உபி கான்பூரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு மாநாட்டுத் தயாரிப்புக்கு அமைக்கப்பட்ட 78 பேர் குழுவில் அவர் ஒருவர். தனது சகோதரி அக்யூலா காட்டூன் (Aquila Khatoon) நகைகள் அனைத்தையும் பீகாரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் யத்தீன் அச்சகத்திற்கு (Yatin Press) நன்கொடையாக அளித்தார்.

சாப்ராவில் ஓலா சிபிஐ சார்பாக மன்சார் ரிஸ்வியைச் சந்தித்தார். அவர்கள் இருவரும் இணைந்து கட்சியைக் கட்டப் பணியாற்றினர். சாப்ராவுக்கு அருகில் சரண் என்ற கிராமத்தில் ஓலாவுக்கு ஆசிரியர் பணி கிடைத்தது. அபுல் ஓலா 1944 ஏப்ரல் 4ம் தேதி அக்யூலா காட்டூனை மணந்தார்.

தேர்தல் பணிகளில் 

1946ல் நாடு முழுவதும் நடைபெற்ற பொது தேர்தல்களில் ஓலா விரிவாகப் பணியாற்றினார். கட்சி அவரை முஸ்லிம் தொகுதிகளான சாப்ரா, சிவான் மற்றும் கோபால்கஞ்ச் இடங்களில் பணியாற்றக் கூறியது. அதே நேரத்தில் பருத்தி மற்றும் சணல் ஆலைகள், கடைகள், தொடக்கப்பள்ளி ஆசிரியர் அமைப்பு, முனிசிபல் தொழிலாளர்கள், இரயில்வே பிளாட்பார்ம் கூலிகள் மற்றும் பிற தொழிலாளர்களை ஓலா திரட்டினார். மேலும் உணவு, மண்ணெண்ணெய், சர்க்கரை, எண்ணெய் முதலான பொருட்களின் பற்றாக்குறைக்கு எதிராக அவர் கண்டன இயக்கங்களை நடத்தினார்.

வகுப்புவாதக் கலவரங்களின்போது மக்களைப் பாதுகாக்கவும், அதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரண உதவி அளிப்பதிலும் ஓலா கடுமையாகப் பணியாற்றினார். பாதிக்கப்பட்ட ஏழை குடும்பங்களுக்கு அவர் உணவும் தங்குமிடமும் ஏற்பாடு செய்தார்.

சுதந்திரத்திற்குப் பிறகு 

1947க்கு பிறகு அபுல் ஓலா ஒரு வேலையில் சேர வேண்டி வந்தது; காரணம் பி டி ஆரின் குழுவாதப் போக்கு பாதை காரணமாகக் கட்சி அதன் அணிகளைப் பராமரிக்கும் நிலையில் இல்லை. அந்தப் பாதையின் விளைவுகள் கட்சிக்கு மட்டுமல்லாமல் தனிநபர் உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைக்கும் பேரழிவு ஏற்படுத்துவதாக இருந்தது.

சியாம் சரண் பர்த்தாவர் கயா மாவட்டத்தின் ஜில்லா பரிஷத் (மாவட்டச் சபை) செயலாளரானார். ஓலா ஜில்லா பரிஷத்தில் ஒரு வேலையில் சேர்ந்தார். அவர் பிஏ மற்றும் பிஎல் பட்டத் தேர்வுகளிலும் கலந்து கொண்டார். மேலும் பீகார் மாநில உள்ளாட்சி அமைப்புகள் அக்கவுண்டன்ட் தேர்வில் அவர் தேர்ச்சி பெற்றார். அதைத் தொடர்ந்து ஜில்லா பரிஷத்தில் அக்கவுண்டன்ட் பதவிக்கு அவர் பணி நியமனம் பெற்றார்.

இந்தியச் சுதந்திரத்தின் வெள்ளி விழா ஆண்டில் 1972ல் ஓலா சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான தாமிரப் பட்டயம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். அவர் வாழ்நாள் முழுவதும் அவருக்குக் குடும்ப ஓய்வூதியமும் வழங்கப்பட்டது.

அவர் 1979ல் பணியிலிருந்து ஓய்வு பெற்றார், பின்னர் பார் அசோசியேஷனில் வழக்கறிஞராகச் சேர்ந்தார். ஆனால் ஊழல் கோலோச்சிய நீதிமன்ற நடவடிக்கைகள் மற்றும் அங்கு நிலவிய பரவலான தனிநபர் சுயநல முன்னெடுப்புகளுடன் அவரால் ஒத்துப்போக முடியவில்லை. எனவே அதைவிட்டு அவர் வெளியேறினார். ஏற்கனவே அவர் டிஸ்ட்ரிக் போர்டு குடியிருப்பைக் காலி செய்து விட்டதால் சிறிய வீட்டை வாடகைக்கு எடுத்தார். 

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு இருந்த அவரது மனைவி 1994 ஜனவரி 8ல் மரணம் அடைந்தார்.

சுதந்திரப் போராட்ட வீரர்கள் அமைப்பில் ஓலா முன்னணி பிரமுகரானார். அதன் மாவட்டத் தலைவராகவும் மாநிலத் துணைத் தலைவராகவும் ஆனார். பின்னர் அவரது மகன்களில் ஒருவரான ஜமீலுடன் வசிக்க அவர் பாட்னாவுக்குக் குடி பெயர்ந்தார். கம்யூனிஸ்ட் கட்சியிலும் பெருந்திறள் இயக்கங்களிலும் அவர் தொடர்ந்து தீவிரமாக ஈடுபட்டார்.

மரணம்

பாட்னாவில் 2006 ஜனவரி 1ல் அவருக்குக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. அவர் பாட்னா டாக்டர் ஹாய் வளாகத்தில் அனுமதிக்கப்பட்டார். எனினும் அதே நாள் அவர் மரணம் அடைந்தார். ஜனவரி 2ல் கயாவுக்குக் கொண்டுவரப்பட்ட அவரது உடல் கயாவில் உள்ள நியூ கரீம்கஞ்ச் கபர்ஸ்தானில் (கல்லறைத் தோட்டம்) நல்லடக்கம் செய்யப்பட்டது. இறுதிச் சடங்கில் ஏராளமான சமூக மற்றும் அரசியல் ஆளுமைகள் கலந்து கொண்டனர். மாநில நிர்வாகதின் சார்பாக உதவிக் கோட்ட அதிகாரி (எஸ்டிஓ) நல்லடக்க நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். 5 மகன்கள், 4 மகள்கள், மாமனார் மாமியார் மற்றும் பிறர் உள்ளிட்ட பெரிய குடும்பத்தை அபுல் ஓலா விட்டுச் சென்றார்.

தற்போதைய இந்தக் கட்டுரையாளர் அவரையும் மற்றும் அவரது சில குடும்ப உறுப்பினர்களையும் குழந்தைப் பருவத்தில் அறியும் பேறு பெற்றிருந்தார். 

இந்திய விடுதலையின் பொன்விழாவின்போது விடுதலைப் போராட்டம் குறித்த சுருக்கமான பதிவுகளை அபுல் ஓலா எழுதினார். பீகாரில் இருந்து முதன் முதலாகச் சிபிஐ மத்திய குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட (1943 பம்பாய் கட்சி காங்கிரஸ்) மன்ஸார் ரிஸ்வியின் வாழ்க்கை வரலாற்றையும் அவர் எழுதினார். சுதந்திரப் போராட்டத்திற்கும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும் பெரும் எண்ணிக்கையிலான கற்றறிந்த முஸ்லிம் இளைஞர்களைக் கொண்டு வந்த பெருமை அவரையே சாரும். அந்த இளைஞர்களில் பலரும் கருத்தியல் மற்றும் மார்க்சிய அரசியலில் பயிற்றுவிக்கப்பட்டனர்.

பீகார் வரலாற்றுக் காங்கிரஸ் மாநாடுகளில் அபுல் ஓலா அடிக்கடி நினைவு கூரப்படுகிறார்.

–நன்றி : நியூ ஏஜ் 19 (2026, மே 10– 16)

–தமிழில் :நீலகண்டன், 
என் எஃப் டி இ, கடலூர்.