கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு
--149 தெலுங்கானா போராட்டத்தின் கதாநாயகி–அனில்
ரஜீம்வாலே
சுகுணா
நிலப்பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை, முந்தைய ஆந்திரப்
பிரதேசத்தின் மேடக் மாவட்ட பாமுலபர்த்தி அருகே கிஷ்டபுர கிராமத்தின்
கொம்மிடி ராமச்சந்திர ரெட்டி. தாயார் லெக்ஷம்மா. திருமணத்திற்குப் பிறகு அவரது தந்தை
பிபிநகரிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்த அவரது மாமனாரின் பிரம்மன்பள்ளி
ஊருக்குக் குடி பெயர்ந்தார். அங்குதான் அவரது அனைத்துக் குழந்தைகளும் பிறந்தன. சுகுணாவின் மூத்த
சகோதரர் கோதண்டராமி ரெட்டி பிற்காலத்தில் தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தின் புகழ்பெற்ற
தியாகி ஆனார். அவர்கள் அனைவருக்கும் அவர் ஒரு தத்துவ போதகராகவும் வழிகாட்டியாகவும்
இருந்தார். அவரது தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டபோதும் முழு குடும்பமும்
ஒரு குடும்பம் போலவே வசித்தது.
அவர்களின்
முன்னோர்கள் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இக்கிராமங்களுக்குக் கால்நடை விற்பனைக்காக
வருவது வழக்கம். அவரது தாய் வழி தாத்தா கொம்மிடி புல்லா ரெட்டி பிரம்மன்பள்ளியில் நிலங்களை
வாங்கி அங்கேயே குடியேறினார். அது இந்தியாவின் மிகப் பெரிய மன்னர் ஆட்சி அரசான ஹைதராபாத்
சமஸ்தானத்தின் ஒரு பகுதி. தெலுங்கானாவின் 8 மாவட்டங்கள், மரத்வாடாவின் 5 மாவட்டங்கள்
மற்றும் கர்நாடகத்தின் 3 மாவட்டங்கள் சேர்ந்த ஹைதராபாத் சமஸ்தானத்தை நிஜாம் ஆட்சி
செய்தார்.
சுகுணாவின்
பாட்டி விவசாயம் உட்பட முழு குடும்பத்தையும் பராமரித்தார். ஆயுதப் போராட்டம் தொடங்கிய
காரணத்தால் குடும்பம் பெரும்பாலும் செகந்திராபாத்துக்குக் குடி பெயர்ந்தது. ஆனால் பாட்டி
மட்டும் கிராமத்தில் எரிந்துபோன அந்த வீட்டில் தனியாக வாழ்ந்தார்.
அவர்களின்
குடும்பம் பெரியது மற்றும் தாயார் தரப்பிலும் தந்தை தரப்பிலும் ஒவ்வொருவரும் 70 ஏக்கர்
நிலங்களை உடைய பணக்கார நில உடைமை குடும்பம்; மேலும் சுமார்
200 பசுக்கள் மற்றும் பல குதிரைகளும் உண்டு. ஆனால் அவர்கள் பெரிதும் உயர்வாக மதிக்கப்பட்ட
குடும்பம். சுகுணாவின் மூத்த சகோதரர் கோதண்ட பல முற்போக்கான மாற்றங்களைத் தொடங்கி வைத்து
பல்வேறு பழங்கால மூட நம்பிக்கை மரபுகளை உடைத்தார்.
சுகுணா
ஒருங்கிணைந்த நல்கோடா மாவட்ட புவனகிரி அருகே பிரம்மன்பள்ளியில் 1934 நவம்பர் 7ல் பிறந்தார்.
அவரது மூத்த சகோதரர் அளித்த ஊக்கத்தில் அவர் 11வது வயதில் தெலுங்கானா கம்யூனிஸ்ட் இயக்கத்தில்
இணைந்து, 1946 –51 காலகட்டத்தில் நடந்த தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றினார்.
அமைதியானவரான
அவரது மூத்த சகோதரி சசிரேகா கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் ஆயுதப் போராட்டத்தில் தீவிரமாகப்
பணியாற்றினார். சசிரேகா கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். சிறையில்
அவர் ஒவ்வொருவருக்கும் செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்களை வழக்கமாக கொண்டு வருவார்
மற்றும் தையல் வேலைகளிலும் ஈடுபடுவார். அவர் 2012 டிசம்பரில் மரணமடைந்தார்.
சுகுணா
ஐந்தாவது கிரேட் வரை அவரது கிராமத்தில் படித்தார். பின்னர் ஐந்தாவது ஆறாவது கிரேடை
ராமன்னபேட்டையில் அவரது அத்தை வீட்டில் படித்தார். இந்தப் பள்ளிக்கூடம் ஆர்ய சமாஜ்
முறைபடி நடத்தப்பட்டது.
அவரது
சகோதரர் கோதண்டா ஆரிய சமாஜத்தின் ஆழமான செல்வாக்கு ஆட்பட்டவர் மற்றும் அனைத்துப் பாரம்பரியமான
மத வழக்கங்களையும் எதிர்த்தார். பெண் குழந்தைகள் உட்பட அனைத்துக் குழந்தைகளையும் அவர்களது
சாதி முதலிய வேறுபாடுகளைக் கருதாது காலை நேரத்தில் அவர்களை ஊர்வலமாக அழைத்துச்
செல்வது வழக்கம். மேலும் அவர் ‘தர்மஸ்தலா’ என்றழைக்கப்பட்ட தனியார் தெருபள்ளியை நிறுவினார்;
ஒவ்வொருவரின் உழைப்பால் கட்டப்பட்டதால் ‘தர்மஸ்தலா’ என்று அது அழைக்கப்பட்டது. அங்கு
அவர்கள் உருதும் தெலுங்கும் படித்தனர்.
கிராமத்தில்
அனைத்துக் குழந்தைகளுக்கும் உடற்பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டது. மரபுகளை உடைத்துச்
சகோதரிகள் குதிரை ஏற்றம், சைக்கிள், நீச்சல் கற்றது மட்டுமின்றி நவீன ஆடைகள் அணிந்தது
அவர்களைத் தனித்துக் காட்டியது. ‘சரஸ்வதி வந்தனா’ மற்றும் பிற பக்தி பஜன்கள்,
பாடல்களைப் பாடுவதுடன், அவர்கள் “ஸாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா” பாடலையும்கூட
பாடுவர். மேலும் அவர்கள் ஹரிஜன முன்னேற்றப் பணிகளையும் செய்தனர்.
ஆந்திர மகாசபாவில்
நிலப்பிரபுத்துவ
எதிர்ப்பு மற்றும் நிஜாமுக்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கிய நட்சத்திரப் பங்கு
வகித்த ஆந்திர மகாசபா அமைக்கப்பட்ட நிகழ்வு, நீண்ட மற்றும் பல்வேறு சம்பவங்கள் நிறைந்த
பின்னணி கொண்டது. 1920களில் தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளை விலக்கியும் நசுக்கியும்,
உருது மொழி அலுவல் மொழியாக நிஜாமால் திணிக்கப்பட்டது. 1922ல் சமூக சீர்திருத்தக் கூட்டத்தில்
ஒரு பேச்சாளர் தெலுங்கில் பேச அனுமதிக்கப்படவில்லை. அத்தகைய நிகழ்வுகள் தெலுங்கு மொழியை
முறையாக அங்கீகரிப்பதற்காக ஆந்திர ஜன சங்கம் அமைப்பு அமைக்கப்பட்டது. விரைவில் அது
மொழி பிரச்சனையைத் தாண்டிச் சென்று சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளை எழுப்பியது.
விரைவில் ஆந்திர மகாசபா அமைக்கப்பட்டது;
1928ல் மேலும் பள்ளிகள், நிலவரியில் சலுகைகள், குடிமைச் சுதந்திரங்கள் முதலியனவற்றைக்
கோரியது. 1930ல் ஜோகிப்பேட்டில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பல சமூகச் சீர்திருத்த நடிவடிக்கைகள்
கோரப்பட்டது.
ராவி
நாராயணன் ரெட்டி, (சுகுணாவின் மூத்த சகோதரரான) கோதண்ட ராமிரெட்டி மற்றும் பிறர் போன்ற
பல இளம் தலைவர்கள் மகாசபாவில் இணைந்தனர். இந்தக் கட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மகாசபாவில்
இணைந்தது அதற்குத் தெளிவான திசை வழியைத் தந்தது. 1943 வாக்கில் கம்யூனிஸ்டுகள் சபா
அமைப்பில் சக்தி மிக்கவர்கள் ஆனார்கள்.
ஆந்திர
மகாசபாவின் 11வது அமர்வு ராவி நாராயணன் ரெட்டி தலைமையில் புவனகிரியில் நடந்தது. அந்த
மாநாட்டிற்காகச் சுகுணாவின் சகோதரர் கோதண்டா கடுமையாக உழைத்தார், குடும்பம் முழுவதும்
அதில் இணைந்தது. இந்த மாநாட்டில் சபா இன்னும் கூட தீவிர அமைப்பானது.
சுகுணாவின் அண்ணன் கோதண்டராமி, ராவி நாராயணன் ரெட்டி செல்வாக்கில் ஆட்பட்டிருந்தார் மற்றும் ஆரிய சமாஜத்தின் செயல்பாட்டாளராகவும் இருந்தார். பின்னர் ஆந்திர மகாசபாவில் இணைந்தார்; அதற்கும் பிறகு சிபிஐயில் இணைந்தார். சுகுணா மற்றும் அவரது மூத்த சகோதரி சசிரேகாவை அவர் போன்கீர் நகரில் நடந்த மகாசபாவுக்கு அழைத்துச்
சென்றார். 1943ல் நடைபெற்ற விஜயவாடா அரசியல் பயிற்சி வகுப்புகளில் இளம் வயது காரணமாகச் சுகுணா கலந்து கொள்ள முடியவில்லை. போன்கீர் மாநாட்டில் (சுதந்திரப் போராட்ட வீரரும், தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தில் கலந்து கொண்டவருமான சிபிஐ சட்டமன்ற உறுப்பினர்) மல்லு சுயராஜ்யம் உள்ளிட்ட பலருடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.அவரது தந்தை (கிராம
நிர்வாக அதிகாரம் உடைய) போலீஸ் படேல் மற்றும் மாலி என்ற பொறுப்பை வகித்தார். பிரம்மன்பள்ளி படேலான
அவர் பல நேரங்களில் அவர்களின் தலைமறைவு பணியின்போது உதவினார். அந்நாட்களில் 10ல் இருந்து
20 கிராமங்கள் ஒரு ஜாகிர் ஆட்சி நிர்வாகத்தின் கீழ் இருக்கும். ஒவ்வொரு ஜாகிரின் கீழும்
ஒரு போலீஸ் படேல் இருப்பார். தந்தை அந்தப் பதவியைத் தனது தந்தையிடமிருந்து மரபுரிமையாகப்
பெற்றார். சுகுணாவின் தந்தை மிக நல்லியல்பு உள்ளவர் மற்றும் சாதாரண மக்களிடம் பரிவு
உடையவர்.
இந்தியாவின் விடுதலை
சுகுணா, அவரது அண்ணன்
கோதண்டராமி மற்றும் குடும்பத்தின் மற்றவர்கள் 1947 ஆகஸ்ட் 15ல் அவர்களின் கிராமத்தில்
இருந்தனர். தேசியக் கொடியை ஏற்றி பெரிய அளவில் விடுதலையை அவர்கள் கொண்டாடினர்.
1948ல் கிராம மையத்தில் மூவர்ணக் கொடியும் செங்கொடியும் ஏற்றப்பட்டன; ஒரு பொதுக்கூட்டத்தில்
உரையாற்றிய கோதண்ட, ‘சுதந்திரம் வந்துவிட்டது, நிஜாம் தோற்கடிக்கப்பட்டார், மற்றும்
இப்போது போராட்டத்தைத் தொடர வேண்டிய தேவையில்லை’ என்றார்.
கட்சியில் இணைதல்
16 வயதிற்குக் குறைவாக
இருந்தபோதும் சுகுணாவிற்குத் தெலுங்கானா பகுதி குழுவின் சார்பாக ராவி நாராயணன் ரெட்டி
கட்சி உறுப்பினர் அட்டையை வழங்கினார். அவர்களால் பராமரிக்கப்பட்ட இரகசிய பதுங்குமிடத்தில்
(டென்) இது வழங்கப்பட்டது; சுகுணாவின் கட்சி மற்றும் தலைமறைவு பணி பெரிதும் பாராட்டப்பட்டது.
தலைமறைவு பணிக்கான
பதுங்குமிடங்கள் பராமரிப்பதைச் சுகுணா வழக்கமாகக் கொண்டிருந்தார். அங்கு வெங்கடாச்சாரி
மற்றும் ஆனி ரெட்டி ஆனந்தாவுடன் சேர்ந்து அவர் அறிக்கைகள் எழுதுவது மற்றும் அவற்றைச்
சைக்ளோ ஸ்டைல் பிரதி எடுப்பது வழக்கம். தோழர்களுக்கும், உடல் நலமற்றவர்களுக்கும் உதவுவது
–அவ்வளவு ஏன் பாத்திரங்களைக் கழுவுவது --உள்ளிட்ட பல பயனுள்ள பணிகளை அவர்கள்
செய்தனர்.
ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வது
குறித்து முரண்பாடு
1948 செப்டம்பருக்குப்
பிறகு ‘போலீஸ் நடவடிக்கை’ மற்றும் இந்திய இராணுவம் ஹைதராபாத்துக்குள் நுழைந்தது;
இச்சூழ்நிலையில் ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வது குறித்துக் கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் மூண்டன.
கட்சி மக்கள் மத்தியில் ஆதரவு இழக்கத் தொடங்கியது, அவர்கள் பிளவுபட்டு, பல பிரிவுகளும்
ஆயுதப் போராட்டத்தை விட்டு நீங்குவது அதிகரித்தது. நிஜாம் தோற்கடிக்கப்பட்டு, விவசாயிகளின்
கோரிக்கைகள் ஒரு பகுதி நிறைவேற்றப்பட்டதால் ராவி நாராயணன் ரெட்டி, ராஜ் பகதூர் கவுர்,
மக்தூம் மொகிதீன் மற்றும் பிற தலைவர்கள் தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தைத் திரும்ப பெற
வலியுறுத்தினர். பசவபுன்னையா மற்றும் பி சுந்தரையா முதலிய சில தலைவர்கள்
இன்னும் ஆயுதப் போராட்டத்தைத் தொடர விரும்பினர்; ஆனால் அவர்களின் குறுகிய குழுவாதப்
போக்குக் கண்ணோட்டத்தின் காரணமாக அவர்கள் தனிமைப்பட்டு போயினர், அது கட்சிக்குப்
பெரும் கேடுகளை விளைவித்தது.
கட்சி பொதுச் செயலாளர்
BT
ரணதிவே ஆயுதப் போராட்ட உத்திகளைத் தொடர வற்புறுத்தினார்; அதன் விளைவாய்க் கட்சிக்கும்,
பெருந்திரள் மக்கள் இயக்கத்திற்கும் மாபெரும் சேதாரம் ஏற்பட்டது
பதுங்குமிடத்தில்
பணி மற்றும் திருமணம்
சுகுணா ஆயுதப் போராட்டத்தில்
நேரடியாகப் பங்கேற்கவில்லை, அவர் மிகவும் விரும்பியும் அவர் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை.
கட்சி அவருக்கு ஹைதராபாத்தில் சோபா கவர்களைச் செய்பவராகச் செயல்பட்டு பதுங்குமிட அறைகளில் தங்கி,
எழுதவும் கட்சி கடிதங்கள் மற்றும் ஆவணங்களைச் சைக்லோ ஸ்டைல் செய்யவும், அவற்றை எடுத்துச்
சென்று உரியவரிடம் சேர்க்கும் கூரியராகப் பணியாற்றும் பொறுப்பைத் தந்தது.
1949 நவம்பர் 25ல்
சுகுணா –எஸ் வி கே பிரசாத் திருமணம் நடந்தது. எஸ்விகே ஆயுதப் போராட்டத்தில் தீவிரமாகப்
பங்கேற்று, காயமடைந்து கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு ஆளான தலைவர்களில் ஒருவராவார்.
1952ல் தான் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
ஆயுதப் போராட்டம் திரும்ப
பெற்ற பின் வாழ்க்கை
எஸ்விகே பிரசாத்
கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, பி சுந்தரய்யா பதுங்கும் இடத்திற்கு வந்து
ஆயுதப் போராட்டத்தைக் கட்சி திரும்பப் பெற்றதாக அறிவித்தார். பதுங்குமிடங்கள் மூடப்படலாயின.
பதுங்குமிடங்களைப் பராமரித்தவர்களும் பணியாற்றிய உதவியாளர்களும் அவரவர் வீடுகளுக்குத்
திரும்ப வேண்டியதாயிற்று. பலரும் தங்கள் வீடுகளுக்கும் கிராமங்களுக்கும் திரும்பச்
செல்ல தயாராக இல்லாததால் இந்த முடிவு மிகவும் கடினமானதாக இருந்தது
போராட்டம் திரும்ப
பெற்ற பிறகு சுகுணா அவரது கிராமத்திற்குச் செல்ல ஆலோசனை தரப்பட்டது ஆனால் அங்கே அவரைக்
கைது செய்ய ஒரு வாரண்ட் காத்திருந்தது. முதலில் அவர் பூனா சென்றார். அங்கே இருந்த
ரகசிய பதுங்கும் இடத்தில் பிராத்தியாகாத்மா அவரது மனைவியுடன் தங்கியிருந்தார். பிராத்தியாகாத்மா
பின்னர் புகழ் பெற்ற சினிமா இயக்குனரானார். பின்னர் அவர் எஸ் வி கே இளைய சகோதரரான
அவரது மைத்துனர் நரசையா வசித்த மெட்ராசுக்கு இடம் பெயர்ந்தார். நரசையா பிற்காலத்தில்
ஒரு தொழிலதிபர் ஆனார்.
1952 தேர்தல்கள்
மக்கள் ஜனநாயக முன்னணி
(PDF,
People’s Democratic Front) என்ற பேனரின் கீழ் கட்சி வேட்பாளராக
நிறுத்திய (மராத்வாடா விடுதலை மற்றும் நிஜாமுக்கு எதிரான போராட்ட வீரரான) அவுரங்காபாத்தின்
கோவிந்த தாஸ் ஷெராஃப் அவர்களுக்காகச் சுகுணா பணியாற்றினார். சில வாக்குகள் வித்தியாசத்தில்
அவர் தோல்வியடைந்தார். சுகுணா வெளிப்படையாகப் பணியாற்றினார் ஆனால் கைது செய்யப்படவில்லை.
பிடிஎப் மாபெரும் கூட்டத்தை நடத்தியது.
ஏதாவது வேலைக்குத்
தகுதி பெற வேண்டும் என்பதற்காகச் சுகுணா இந்தி கற்றார். மேலும் அவர் ஆந்திரா சரஸ்வதா
பரிக்ஷத் நடத்திய தெலுங்கு தேர்வுகளிலும் கலந்து கொண்டார். ஏதாவது ஒரு வேலையில் சேர
அவர் எப்போதும் விரும்பினார்.
கட்சியைத் திரட்டி அமைத்தல்
சிதறிக் கிடந்த கட்சியைச்
சுகுணா, எஸ்விகே மற்றும் பிற தோழர்கள் மீண்டும் திரும்ப கட்டியமைக்கத் தொடங்கினர்.
கட்சியைப் புனர்நிர்மாணம் செய்ய வாராங்கல் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்ட எஸ்விகே அங்கு
மாவட்டச் செயலாளர் ஆனார். சுகுணா இடம்பெயர நேர்ந்தது அவர் தனது படிப்பைப் பாதியில்
கைவிட்டார்.
அவர், கட்சி மற்றும்
பெருந்திரள் அமைப்பு, குறிப்பாகப் பெண்கள் முன்னணியில் ஏராளமான பணிகள் ஆற்றினார்.
அதே நேரத்தில் மிகவும் கஷ்டமான நிலையில் இருந்த தனது குடும்பத்தையும் கவனித்துக் கொண்டார்.
பின்னர் ஆந்திரப்
பிரதேச உழைக்கும் பெண்கள் அசோசியேஷனின் செயலாளர் ஆனார். அவர் தனது தோழர்களுடன் சேர்ந்து,
கழிவறைகள் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களின் பணி நேரம்
மற்றும் பணி நிலைமைகள் குறித்து ஒரு மனுவைத் தயாரித்தார்; உழைக்கும் பெண்களிடம் இருந்து
ஆயிரக்கணக்கான கையெழுத்துக்களைத் திரட்டி மாபெரும் கூட்டம் நடத்தினார். ஊர்வலமாகச்
சென்று கையெழுத்துப் பெறப்பட்ட மனுவை ஆளுநரிடம் வழங்கினர். அந்நேரத்தில் சுகுணா ஹைதராபாத்தில்
பல கம்பெனிகளின் தொழிற்சங்கத் தலைவராக இருந்தார். அந்த நிறுவனங்களின் தொழிலாளர்கள்
பெரும்பாலும் பெண்கள். மருத்துவமனை மற்றும் அறுவை சிகிச்சையில் பயன்படுத்தும் பஞ்சு
துணி (காஸ்) தயாரித்தல், சலைன் பாட்டில் உற்பத்தி, மாங்கனிச் சாறு தயாரித்தல்
உள்ளிட்ட 300 அல்லது 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் ஆலைகளில் தொழிற்சங்கங்கள்
அமைக்கும்படி அவரைக் கட்சி பணித்தது.
ரமிஸாபி மற்றும் பிற வழக்குகள்
சுகுணா புகழ்பெற்ற
ரமிஸாபி, ஹமீதி மற்றும் பிற பிரச்சனைகளை எடுத்தார். சில பொழுது கணவர் இல்லாத நேரத்தில்
ரமிஸாபி சில காவலர்களால் ரிக்ஷாவில் இருந்து கீழே பிடித்து இழுத்து காவல் நிலையம் கொண்டு
செல்லப்பட்டு நான்கு காவலர்களால் பாலியல் வல்லுறவுக்கு ஆளானார் அவரது கணவர் மிருகத்தனமாகத்
தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதை எதிர்த்துக் கண்டனப் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும்
நடைபெற்றன அவற்றில் சுகுணா தீவிரமாகப் பங்கேற்றார்
எம் சிபிஐ கட்சியில்
சேர்தலும் சிபிஐக்குத் திரும்ப வருதலும்
1964ல் கட்சி பிளவுபட
எஸ்விகே சிபிஐ-எம் கட்சியை ஆதரித்தார், ஆனால் தீவிரமாக அதில் பணியாற்றவில்லை. பின்னர்
அவர், சிபிஐஎம் கட்சியிலிருந்து ஓம்கார் வெளியேற்றப்பட்டதற்கு
எதிர்ப்பு தெரிவித்து 1983 –84ல் ஓம்கார் தலைமையிலான எம்சிபிஐ கட்சியில் இணைந்தார்.
சட்டமன்றத்திற்கு எம்சிபிஐ வேட்பாளராககூட அவர் போட்டியிட்டார். பின்னர் ஓம்காருடன்
கருத்து வேறுபாடு ஏற்பட அதிலிருந்து வெளியேறி சிபிஐயில் மீண்டும் இணைந்தவர் தனது மரணம்
வரை சிபிஐயில் தொடர்ந்து நீடித்தார்.
சுகுணா சிறிது காலம்
சிபிஐயில் நீடித்தார் ஆனால் விரைவில் அவரும் எஸ் வி கே-வைப் பின் தொடர்ந்து சிபிஐ
-எம்மில் இணைந்தார். சிபிஐ-எம் பெண்கள் பிரிவில் அவர் தீவிரமான தலைவர் ஆனார். திடீரென்று
எஸ்விகே ஓம்கார் கட்சியில் இணைந்தது அவருக்குச் சில சங்கடங்களை ஏற்படுத்தியது. எஸ்விகே-வைத்
தொடர்ந்து சுகுணாவும் எம்சிபிஐ கட்சியில் இணைந்தார். ஆனால் சில காலத்திற்குப் பிறகு
சிபிஐ திரும்பிய அவர் இறக்கும் வரையில் சிபிஐயில் நீடித்தார்.
சுமார் 200 எம்சிபிஐ
உறுப்பினர்கள் அவர்களுடைய மியாபூர் இல்லத்தில் கூடி இரண்டு நாள் விவாதத்திற்குப் பிறகு
சிபிஐயில் இணைய முடிவு செய்தனர். அப்போதைய மாநிலச் செயலாளர் என் கிரிபிரசாத் கட்சி
கொள்கைகளை விளக்கினார்; வாராங்கல் மாவட்டத்தின் அனைத்துத் தொழிலாளர்களும் சிபிஐயில்
இணைந்தனர்
அவர் தனது இறுதி
நாட்களில், “கம்யூனிஸ்ட் இயக்கம் முழுமையும் மீண்டும் ஒன்றாக ஒன்றிணைந்தால் அது மிகவும்
நல்லது என நான் கருதுகிறேன்” என்று கூறினார். குறைந்தபட்சம் சிபிஐ, சிபிஐ-எம், எம்சிபிஐ
மற்றும் தேர்தல் களில் பங்குபெறும் அத்தகைய மார்க்சிய- லெனினிய குழுக்கள் ஒன்றாதல்
வேண்டும் என்று அவர் கருதினார்
எஸ்விகே சுகவீனம் மற்றும்
சுகுணா
1990களின்போது நோய்
வாய்ப்பட்ட எஸ்விகே உடல்நிலை தொடர்ந்து மோசமாகி கோமா நிலைக்குச் சென்றார். 1994 ஜூலை
17ல் அவர் மரணமடைந்தார். அவர் தனது வாழ்க்கைத் துணைவர் மட்டுமல்ல, தன்னை அரசியலில்
உருவாக்கியவர் மற்றும் வழிகாட்டி என சுகுணா நினைவு கூர்கிறார். 40 ஆண்டுகள் ஒன்றாக
வாழ்ந்த அவர்களின் வாழ்வு முடிவுக்கு வந்தது. எவ்வளவு காலம் தனது மிகுதி வாழ்வு நீடிக்கும்,
அது எவ்வாறு செல்லும் என்ற நினைவுகளில் அவர் உணர்ச்சியற்றவர் ஆனார். அவரது குழந்தைகள்
அவரை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றனர். எப்போதும் அவர் எஸ்விகே பற்றிய நினைவுக்
குறிப்புகளை எழுத விரும்பினார். அவர் எழுதிய குறிப்புகளையும் பிற தகவல்களையும் தேடி
திரட்டுவதில் மூன்றாண்டுகள் போயின. இறுதியில் ஒருவகையாக சில நினைவுக் குறிப்புகளை எழுத
சுகுணாவால் முடிந்தது
அவரது முதல் குழந்தை
ஷோபா 1951 ஜூன் 10ஆம் தேதி பிறந்தார். ஒரு கட்சி செயல்பாட்டாளராக, கஷ்டமான காலங்களைக்
கடந்து குழந்தைகளை வளர்ப்பதில் அவரது வலியையும் சிரமங்களையும் அவர் விவரித்தார். போதுமான
ஆடைகள், தண்ணீர்கூட இல்லை, மின்சாரம் முதலியனவும் இல்லை. இருந்த போதிலும் தனது
குழந்தைகளை வளர்க்க அவர் கடுமையாகப் போராடினார். 1959 மற்றும் 1964ல் இரண்டாவது மூன்றாவது
குழந்தை முறையே பிறந்தன. வீட்டு உரிமையாளர்கள் தந்த அழுத்தத்தில் அவர் அடிக்கடி வாடகை
அறை மாற வேண்டி வந்தது. குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க எஸ்விகேயால் இயலவில்லை.
அவர் மிகக் கடுமையான
நெருக்கடியில் இருந்தபோது தனது விரக்தியை கட்சி தோழர்களிடமும் எஸ்விகே-யிடமும் கூட
விவரித்தார். எஸ்விகே உட்பட கட்சித் தோழர்கள் அவரவர் குடும்பத்தைவிட கட்சிக்குக் கூடுதல்
பொறுப்புடையவர்களாக இருந்தனர் என அவர் எழுதினார். இதனால் எஸ்விகே தனது குழந்தைகளிடம்
அன்பு இல்லாதவர் என்பதல்ல. தனது மகளின் வற்புறுத்தலில் 1987இல் அமெரிக்கா சென்ற சுகுணா
பின்னர் (குடியுரிமை இன்றி நிரந்தரமாக அமெரிக்காவில் வசிக்கும் சட்டபூர்வ உரிமையை வழங்கும்)
கிரீன் கார்டு பெற்றார்.
சுகுணா ஏதாவது ஒரு
வேலையில் சேர விரும்பினார். பிளாக் டெவலப்மெண்ட் அதிகாரி (பிடிஓ) பதவி அவர் கதவை
தட்டியது. ஆனால் குடும்பச் சூழ்நிலை அதை அனுமதிக்கவில்லை, எஸ்விகே-வும் கூட வற்புறுத்த
அவர் அப்பதவியை ஏற்கவில்லை.
சூசெக்ஸ் பல்கலைக்கழகத்தில்
படித்துக் கொண்டிருந்த பிரிட்டிஷ் சோசலிசத் தொழிலாளர்கள் கட்சியின் உறுப்பினர் பார்ரே
பவியர் (Barry
Pavier) சுகுணா மற்றும் எஸ்விகே-யின் வீட்டில் தங்கி தெலுங்கானா ஆயுதப் போராட்டம்
குறித்து ஒரு புத்தகம் எழுதினார்
சிஆர் ஃபவுண்டேஷனில்
இறுதி ஆண்டுகள்
தனது வாழ்வின் இறுதி
12 ஆண்டுகளின்போது சுகுணா சிபிஐ ஹைதராபாத்தில் நடத்தி வந்த சி ஆர் பவுண்டேஷன் அமைப்பின்
முதியோர் இல்லத்தில் தங்கினார். அவரது மூத்த மகன் வந்து பெரியதோர் அறையை அவருக்குத்
தேர்ந்தெடுத்து அதற்கான கட்டணத்தைச் செலுத்தினார். நீண்ட காலம் உடல் நலமின்றி இருந்த
சகமுரி சுகுணா ஹைதராபாத் கொண்டாபூரில் சந்திரா ராஜேஸ்வரராவ் (சிஆர்) ஃபவுண்டேஷன் முதியோர்
இல்லத்தில் 2025 ஜூன் மாதம் 21ஆம் நாள் இரவு 11 மணிக்கு இயற்கை எய்தினார்
தோழர் சுகுணா நினைவுகளைப்
போற்றுவோம்!
–நன்றி : நியூ ஏஜ் (ஏப்ரல் 19 –25)
--தமிழில் :
நீலகண்டன்,
என்எப்டிஇ,
கடலூர்
.







