கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 155
P மாணிக்கம் –மெட்ராஸ் மாகாணத்தில்கம்யூனிஸ்ட் இயக்கம் கட்டிய அமைப்பாளர்
–அனில் ரஜிம்வாலே
ப மாணிக்கம் 1921 அக்டோபர் 26ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம்,
வலங்கைமான் அருகே பாடகச்சேரி என்ற கிராமத்தில் பிறந்தார். அவரது தந்தை பக்கிரிசாமி,
தாயார் மகமாயி அம்மாள். பக்கிரிசாமி விவசாய விளைபொருட்கள் மொத்த விற்பனை அங்காடியில்
காசாளராகப் பணியாற்றினார். அவர்களது குடும்பம் நடுத்தர வர்க்கக் குடும்பம். தஞ்சை மாவட்ட
வலங்கைமானைப் பூர்வீகமாகக் கொண்ட பக்கிரிசாமி, இறுதியில் கடலூரில் குடியேறினார். கடலூர்
புதுச்சேரிக்கு அருகில் உள்ள ஊர். மாணிக்கத்தின் தந்தை முதலில் ஒரு பாடகர்; அதே நேரத்தில்,
இ வி இராமசாமி (தந்தை பெரியார்) மற்றும் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர் ம
சிங்காரவேலர் தலைமையிலான பரவலான சுயமரியாதை இயக்கத்தில் அப்பகுதியில் தீவிரமாகச்
செயல்பட்டார்.
விடுதலை மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்களில் தொடக்கம்
மாணிக்கம் கடலூரில் எஸ்பிஜி நடுநிலைப் பள்ளியிலும் பின்னர் கடலூர் முனிசிபல்
உயர்நிலைப் பள்ளியிலும் பள்ளிக் கல்வியை நிறைவு செய்தார். அங்கே படிக்கும்போது பெரும் விடுதலைப் போராட்ட வீரர் அஞ்சலை அம்மாள் வாழ்வால் ஈர்க்கப்பட்டு பொது வாழ்வில் இணைந்தார். ஒத்துழையாமை இயக்கத்தின்போது மகாத்மா காந்திதான் அஞ்சலை அம்மாள் அவர்களைத் ‘தென்னிந்தியாவின் ஜான்சி ராணி’ என்று அழைத்தார்.எஸ்எஸ்எல்சி முடித்த பிறகு மாணிக்கம் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்
கழகத்தில் சேர்ந்தார். அங்கு அவரது சக மாணவரும் மார்க்சிய அறிஞருருமான சுப்பிரமணிய
சர்மாவையும், இளைஞர் தலைவரான பாலதண்டாயுதத்தையும் சந்தித்தார். அவர்கள்
இருவரும் அவரது வகுப்புத் தோழர்கள் மட்டுமல்ல, மாணிக்கத்தின் எதிர்காலப் பாத்திரத்தை
வரையறுத்ததில் பெரும் பங்காற்றியவர்கள்.
ஸ்பெயின் தேசத்தில் ஜெனரல் பிராங்கோ பாசிசப் படைகளை எதிர்த்துப்
போராடிய ரிபப்ளிக்கன் ஸ்பெயின் குழுவினருக்கு ஆதரவாக நிதி திரட்ட ஜவஹர்லால் நேரு
விடுத்த அறைகூவலின்படி, அவர்கள் நிதி திரட்டினர்.
மாணிக்கம் 8 வயது மாணவராக இருந்தபோது அவரது அண்டை வீட்டுக்காரரான
25 வயது இளைஞர் இராமச்சந்திரன் அடித்தே கொல்லப்பட்டார். இந்நிகழ்வு இளம் மாணிக்கத்தின்
மனதை ஆழமாகப் பாதித்தது. 1930ல் காந்திஜியின் தலைமையில் நடைபெற்ற சத்தியாகிரகப் போராட்டத்தில்
கலந்து கொண்டவர் இராமச்சந்திரன்.
அரசியல் நடவடிக்கைகளில்
அண்ணாமலைப் பல்கலைக் கழகம் அரசியல் நடவடிக்கைகளின் மையத் தொட்டிலாக
இருந்தது; அவர்கள் மத்தியில் கம்யூனிஸ்டுகள் இருந்தனர். கம்யூனிஸ்ட் மாணவர்கள், ‘தோழர்கள்
மன்றம்’ (காம்ரேடுகள் கிளப்) அமைத்தனர்; அந்த அமைப்பு எதிர்கால நிகழ்வுகளில் முக்கியப்
பங்கு ஆற்றியது. அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கம்யூனிஸ்ட் கட்சி கட்டியமைத்த தலைவர்கள்
மத்தியில் சுப்பிரமணிய சர்மா இருந்தார்.
மாணிக்கம் இந்த நிகழ்வுகளின் பிரிக்க முடியாத அங்கமானார், பின்னர் பல்கலைக்
கழகத்தின் அனைத்து இந்திய மாணவர் பெருமன்றத்தின் (ஏஐஎஸ்எப்) செயலாளராகி, மாணவத் தலைவராக உருவானார். ஏற்கனவே மார்க்சியச் செல்வாக்கின் கீழ் வந்தவர், முக்கியமாக எஸ் சர்மா மற்றும் பாலதண்டாயுதத்தின் முயற்சிகளால் ஏராளமாகப் படித்தார்.1942ல் தங்கள் கோரிக்கைக்காக மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர்.
அவர்களின் தலைவரான ப மாணிக்கம் உட்பட 32 மாணவர்களை அதிகாரிகள் பல்கலைக் கழகத்திலிருந்து
வெளியேற்றினர்.
கம்யூனிஸ்ட் இயக்கத்தில் சேர்தல்
இந்நடவடிக்கைகளின் காலகட்டத்தில் மாணிக்கம், ப ஜீவானந்தம், ஏ எஸ் கே ஐயங்கார்,
பி ராமமூர்த்தி, பி ஸ்ரீனிவாச ராவ் போன்ற தலைச் சிறந்த கம்யூனிஸ்ட் இயக்கத் தலைவர்களைச் சந்தித்தார். காலக்கிரமத்தில் மாணிக்கம் கட்சியின் முழு நேர ஊழியர் ஆனார். மேலும் அவர் எஸ்.சர்மா, ஆர் உமாநாத், எம் பி ஸ்ரீனிவாசன் மற்றும் பிறருடன் கூட்டாக மாணவர் முன்னணி அரங்கிலும் பணியாற்றினார்.1944ல் கட்சி மாணவர் அமைப்பைக் கட்ட திருநெல்வேலி மாவட்டத்திற்கும்;
பின்னர் 1945ல் பிற மாவட்டங்களுக்கும் அவரை அனுப்பியது. பிடிஆர் காலத்தின்போது அவர்
திருநெல்வேலி மாவட்டக் கட்சி செயலாளரானார், அப்பொறுப்பில் 1948ல் இருந்து 1962 வரை
நீடித்தார். மாணவர் இயக்கத்திற்கு உதவுவதுடன்கூட அவர், துறைமுக, டெக்ஸ்டைல், விவசாய
மற்றும் பிற தொழிலாளர்கள் மத்தியில் தொழிற்சங்க மற்றும் கட்சி இயக்கங்களுக்கான வலிமையான
அடித்தளங்களை நிறுவினார்.
திருநெல்வேலி அற்புதமான வெளிகளில் பணி
திருநெல்வேலி மாவட்டக் கட்சியில் மாணிக்கத்தின் பணிகள் அப்பகுதியில்
கம்யூனிஸ்ட் கட்சி அடித்தளம் அமைப்பதை நோக்கி பெரும் பங்களிப்புகளை நல்கியது. கட்சியின்
முதலாவது மாவட்ட மாநாடு 1948 ஜனவரியில் நடைபெற்றது. அந்த மாநாட்டில் மாணிக்கம் அமைப்புச்
செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அம்மாநாடு விவசாயத் தொழிலாளர்கள் சங்கம் மற்றும்
ஆலைத் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களை அமைக்க முடிவு செய்தது. ஆர் நல்லகண்ணு நாங்குநேரி மற்றும்
களக்காடு பகுதிகளில் தீவிரமாகப் பணியாற்றி வந்தார்.
திருநெல்வேலி மெட்ராஸ் மாகாணத்தின் தென்கோடி மாவட்டம். ‘திருநெல்வேலி’
என்ற பெயருக்கு அழகான நெல் வயல்கள் சூழ்ந்த நிலம் என்று பொருள். மேலும் அது ‘புனித
நெல் வயல்களால் வேலியிடப்பட்டது’, அல்லது நகரின் தலைவரான சிவபெருமான் நெல் வயல்களால்
வேலியிடப்பட்டு வணங்கப்படுகிறார் என்று அறியப்படுகிறது; (திரு + நெல் + வேலி).
[சிவபக்தர் ஒருவர் வீடுகளில் யாசகம் பெற்ற நெல்லைச் சிவபெருமான் நெய்வேத்தியத்திற்காக
வெயிலில் உலர்த்திவிட்டு குளிக்கச் சென்றார். அப்போது மழை பெய்ய பதறிப்போன சிவபக்தர்
நெல் நனையாமல் பாதுகாக்கத் திரும்ப ஓடி வந்தவர் அந்த அற்புதக் காட்சியைக் கண்டார்:
காய வைத்த நெல்லைச் சுற்றி மட்டும் மழை பெய்ய, நெல் பாதுகாப்பாக இருந்தது. சிவன் நெல்லை
வேலியிட்டு பாதுகாத்தார் என்ற இந்தப் புராணக் கதையும் நகருக்கான பெயர் காரணமாகச் சொல்லப்படுகிறது
–கூடுதல் இணைப்பு]
இந்த மாவட்டம் பருத்தி உற்பத்தியின் மையமாகவும் உலகம் முழுவதும் புகழ்
பெற்றிருந்தது. இங்கு விளையும் பருத்தி உலகச் சந்தையில் ‘tinnies’ என்று –குறிப்பாக
லிவர்பூலில் தின்னவேலி காட்டன் (திருநெல்வேலி பருத்தி) என அறியப்பட்டது. பருத்தி ஏற்றுமதிக்கு
முக்கிய வணிக மையம் தூத்துக்குடி. இதன் தொடர்ச்சியாக, வலிமையான விவசாய மற்றும் தொழிற்சங்க
இயக்கங்கள் இப்பகுதியில் கட்டப்பட்டன.
1865க்கு பிறகு அரசு ரயத்துவாரி அடிப்படையில் நில வருவாய் முறையை அறிமுகப்படுத்தியது.
ஜமீன்தாரி முறையும் கூட அமல்படுத்தப்பட்டது.
திருநெல்வேலி, கட்சியின் ஒரு முக்கிய மையம்; இங்கு –பலமான நிலப் பிரபுத்துவ
உறவுகள் விவசாயிகளுக்கு ஆதரவாக இல்லாதபோதும்– விவசாயிகள் இயக்கங்களில் தீவிரமாகப்
பங்கெடுத்தனர். பிரிட்டிஷ் காலனிய நில வருவாய் கொள்கைகள் நேரடியாகச் சுரண்டலுக்கும்
பொருளாதார நெருக்கடிக்கும் இட்டுச் சென்றது. அதற்கு முன்பு பாளிகர் கிளர்ச்சிகள்
(அதாவது பாளையக்காரர்கள் என்பதன் ஆங்கிலச் சிதைந்த வடிவம், Poligar rebellions) பாளையக்காரர்களின்
கிளர்ச்சிகள் நிகழ்ந்தன. 1908 திருநெல்வேலி கிளர்ச்சி மற்றும் வ உ சிதம்பரம் பிள்ளை
மற்றும்
சுப்ரமணிய
சிவா போன்ற
புகழ்பெற்ற தலைவர்கள் கைது செய்யப்பட்ட பிறகு நிகழ்ந்த கிளர்ச்சிகள் போன்ற முக்கிய
நிகழ்வுகள் நடந்தன.
நிலத்தைச் சொந்தமாக வைத்திருக்கத் தடுக்கப்பட்ட தலித்கள், அடிமைகளாகக்
கொடூரமாக நடத்தப்பட்டனர். ஆக்கிரமிக்கப்பட்டு இருந்த போதும் ‘பஞ்சமி’ நிலத்திற்கான போராட்டம்
மீதும்
கவனம் குவிக்கப்பட்டது. [பஞ்சமி நிலம் என்பது, நிலமற்ற பட்டியல் இன (SC) ஏழை மக்களின் பொருளாதார மற்றும் சமூக
முன்னேற்றத்திற்காக 1892ஆம் ஆண்டில் பிரித்தானிய அரசால் (செங்கல்பட்டு ஆட்சியர் ஜே.எச்.ஏ.
ட்ரெமென்கியூரி அறிக்கையின் அடிப்படையில்) ஒதுக்கப்பட்ட வேளாண் விளைநிலங்கள் ஆகும்.
சுயசார்புடன் வாழவும், வறுமையைப் போக்கவும் ஆங்கிலேயர் காலத்தில் லட்சக் கணக்கான ஏக்கர்
நிலங்கள் பட்டியல் இன மக்களுக்கு இலவசமாக வழங்கப்பட்டன. ஐந்தாம் வர்ணத்தினர் அல்லது
‘பஞ்சமர்’ என அழைக்கப்பட்ட தலித் மக்களுக்கு வழங்கப்பட்டதால் இந்நிலம் 'பஞ்சமி நிலம்'
என்று அழைக்கப்பட்டது.--கூடுதல் இணைப்பு] பஞ்சமி நிலத்திற்கான போராட்டம் நில பட்டாக்களைப் பெறுவதற்காகவும்
நடைபெற்றது.
விலை ஏற்றத்தாழ்வுகள் அல்லது அறுவடை எப்படி இருந்தபோதும் கவலைப்படாது,
அதிகமான மற்றும் நிர்ணயிக்கப்பட்ட வரிகளை ரொக்கமாகச் செலுத்த வேண்டிய முறைகளைப் பிரிட்டிஷ்
அரசு அறிமுகப்படுத்தியது. இதன் விளைவு, கடுமையான கடன்கள் மற்றும் நிலம் பறிமுதல்கள்.
காலனிய நிர்வாகத்தின் ஆதரவுடன் ஜமீன்தார்கள் அடிக்கடி பண்ணையாட்கள் அல்லது கொத்தடிமை
தொழிலாளர்களை உடல்ரீதியில் கடுமையாகத் தாக்கினர். 1940களில் இருந்து தமிழ்நாடு விவசாயிகள்
சங்கம் அல்லது விவசாய அமைப்புகளும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் அமைப்பு ரீதியில்
ஒன்று திரண்டு தங்கள் போராட்டங்களை நடத்தின.
கிளாம்பூர், சிவகிரி, வள்ளியூர், கடையநல்லூர் மற்றும் பல இடங்களில்
ஏராளமான எண்ணிக்கையில் விவசாயப் போராட்டங்கள் நடைபெற்றன.
சுப்பிரமணிய பாரதி நினைவு நூலகம் ஒன்று எட்டயபுரத்தில்
நிறுவப்பட்டது.
தூத்துக்குடி, அம்பாசமுத்திரம் கோவில்பட்டி முக்கிய தொழிற்சங்க மையங்களாக
விளங்கின.
பாலதண்டாயுதம் மற்றும் பிறருடன் இணைந்து ப மாணிக்கம் இந்தியக் கம்யூனிஸ்ட்
கட்சியின் முக்கிய அமைப்பாளர்களில் ஒருவராக இருந்தார்.
அதே நேரத்தில் கட்சி பெரிய அளவில் பதிப்பகங்களை அமைத்து நூல்களை வெளியிட்டது.
1940ல் சிறையில் அடைக்கப்பட்ட எஸ் எஸ் பிள்ளை என்ற காங்கிரஸ்காரர் கம்யூனிஸ்ட்
கட்சியில் இணைந்தார், நூல்கள் வெளியிடுவதில் தீவிரமாக ஈடுபட்டார். மாவட்டக் கட்சி,
மாணிக்கம் வழிகாட்டுதல் கீழ் தனது சொந்தப் பதிப்பகத்தை அமைத்தது.
மதுரை ஹார்வி மில் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் அரசு, மாணிக்கம்,
பி. ராமமூர்த்தி, கேடிகே தங்கமணி, எம் ஆர் வெங்கட்ராமன் மற்றும் பிறர் மீது
சதி வழக்குகளைப் புனைந்தது. அவர்கள் ஓர் ஆண்டு விசாரணை கைதிகளாக இருந்தனர்.
மாணிக்கம் தென் மாவட்டங்களில் டெக்ஸ்டைல் தொழிலாளர்கள் மற்றும் அமைப்பு
ரீதியாகத் திரண்ட பல்வேறு டெக்ஸ்டைல் தொழிலாளர் சங்கங்கள் மத்தியில் தீவிரமாகப் பணியாற்றினார்.
மேலும் பீடி, சுருட்டு, துறைமுகம் மற்றும் பிற ஆலைகளில் பல்வேறு தொழிற்சங்கங்களை நிறுவியவர்
அவர்.
மதுரைச் சதி வழக்கு
மதுரைச் சதி வழக்கில்
கேடிகே தங்கமணி மற்றும் பி இராமமூர்த்தியுடன் மாணிக்கம் ஓராண்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
அவர் பாளையங்கோட்டையில்
கொக்கரக்குளம் மற்றும் மதுரைச் சிறைகளில் அடைக்கப்பட்டார். மதுரைச் சதி வழக்கு மற்றும்
திருநெல்வேலிச் சதி வழக்கிலும் மாணிக்கம் சேர்க்கப்பட்டார்.
1949 மற்றும்
1950க்கு இடையில் விக்கிரமசிங்கபுரம், திருநெல்வேலி, களக்காடு, மணியாச்சி, ஸ்ரீவைகுண்டம்,
தூத்துக்குடி, கோவில்பட்டி, ஒட்டப்பிடாரம் மற்றும் பல இடங்களில் பல்வேறு வழக்குகள்
தொடுக்கப்பட்டன.
மத்திய மற்றும் மாநில
அரசுகளைக் கவிழ்க்கச் சதி செய்தது, இரயில் பாதைகள் மற்றும் தந்திப் போக்குவரத்தைச்
சீர்குலைக்க முயற்சி செய்தது, வெடி மருந்துகள் சட்டத்தை மீறியது மற்றும் ஆயுதங்களை
வைத்திருந்தது உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் அவர்கள் மீது சுமத்தப்பட்டன.
மெட்ராஸ் மற்றும் நெல்லைச்
சதி வழக்குகள்
கேடிகே தங்கமணி உடன்
ஓராண்டு மற்றும் பி இராமமூர்த்தி உடன் ஓராண்டிற்கும் 1946– 47ல் புகழ்பெற்ற மெட்ராஸ்
சதி வழக்கில் அவர் கைது செய்யப்பட்டார். நாடு சுதந்திரம் அடைந்த பிறகே அவர் விடுதலை
செய்யப்பட்டார். பின்னர் 1948ல் நெல்லைச் சதி வழக்கில் கைது செய்யப்பட்ட அவருக்கு ஆயுள்
தண்டனை விதிக்கப்பட்டது. ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 1954ல் தான் அவர் விடுதலை செய்யப்பட்டார்.
அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் அவர் விடுவிக்கப்பட்டார்.
1950களில் அவர் திருநெல்வேலியில்
இருந்து மாநில மையத்திற்கு மாறினார். முதலில் தமிழ்நாடு மாநிலக் கட்சிக்கு உதவிச் செயலாளராக
இருந்தவர், பின்னர் மாநிலச் செயலாளராகி 1992 வரை அந்தப் பொறுப்பில் இருந்தார். மேலும்
அவர் மத்தியச் செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார்.
அவர் மாநிலச் சட்டமன்ற
உறுப்பினராக 10ஆண்டுகளுக்கு மேல் இருந்தார் மற்றும் 1981 –86ஆம் ஆண்டுகளில் அவர் தமிழ்நாடு
மேல் சபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கட்சியின் மாநிலப் பத்திரிக்கை, ‘ஜனசக்தி’-யின்
ஆசிரியராக அவரது வாழ்நாள் இறுதிவரை செயல்பட்டார். புகழ்பெற்ற நியூ செஞ்சுரி புக்
ஹவுஸ் (NCBH)
நிறுவன வலைப்பின்னல் அமைப்பைக் கட்டி எழுப்ப அவர் உதவினார்.
பி டி ஆர் காலம்
பிடி ரணதிவே கட்சிப்
பொதுச் செயலாளராக இருந்த காலத்தில் கட்சியும் தனிநபர் தோழர்களும் பெரிதும் துன்பத்திற்கு
ஆளாகினர். பி மாணிக்கமும் கூட மிகக் கடினமான காலத்தைக் கடந்தார், தலைமறைவாகச் சென்றார்.
தலைமறைவு வாழ்வில் இருந்தபோது அவரது தந்தை மறைந்த போதும் தந்தையின் இறுதிச் சடங்கில்
அவரால் கலந்து கொள்ளச் செல்ல முடியவில்லை.
மாணிக்கமும் வேலுசாமித்
தேவரும் திருநெல்வேலி பகுதியில் மலப்புரத்தில் ஒரு மாடி வீட்டு வாடகை அறையில் மாறுவேடத்தில்
வசிக்கத் தொடங்கினர். தேங்காய் வியாபாரம் செய்யும் வணிகர்களாக அவர்கள் நடித்தனர். அவர்களின்
முக்கிய பணி கட்சியைத் திரட்டி அமைப்பதும், பல்வேறு இடங்களில் இருந்து கட்சித் தலைமைக்குத்
தகவல்களை அனுப்புவதுமாகும்.
ஆனால் ஒரு சாலையில்
நடந்து செல்லும்போது விசாரணைத் தேடுதல் குழு காவலர்களால் விரைவில் அவர் அடையாளம்
காணப்பட்டார். விரைவாக ஓடி அவர் தப்ப முயன்றாலும் அவரைப் பிடித்தக் காவலர்கள் அவரைக்
கடுமையான சித்திரவதைகளுக்கு ஆளாக்கினர்.
1949ல் பி. மாணிக்கம்
சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்; ஆனால் தான் வரதன் என்று கூறி அவர் தன்னைத்தானே
காப்பாற்றிக் கொண்டார்.
எனினும் அவர் போலீஸ்காரர்களின்
சந்தேக வலையில் விழுந்தார். கட்சிப் பணிக்காக அவர் குற்றாலம் சென்றபோது, குற்றாலத்தில்
ஐந்தருவிக்குச் செல்லும் சாலையில் ஓர் உளவுத்துறை அதிகாரி மாணிக்கத்தை அடையாளம்
கண்டார்.
இதனைத் தொடர்ந்து
மாணிக்கம் கடும் சித்திரவதைகளுக்கு ஆளாக்கப்பட்டார். குற்றாலம், தென்காசி, அம்பாசமுத்திரம்,
திருநெல்வேலி, ஸ்ரீவைகுண்டம் மற்றும் தூத்துக்குடி என பல்வேறு காவல் நிலையங்களில் அவர்
அடித்துத் துன்புறுத்தப்பட்டார்.
அந்நாளில்
தான் எழுத்தாளர் ஆர் எஸ் ஜேக்கப் கைது
செய்யப்பட்டார். அவர்கள் மாணிக்கத்தை ஒரு சாக்குப் பையில் கட்டி காவல் நிலையத்தில்
போட்டனர். மாணிக்கம் இறந்து விட்டதாகப் போலீஸ்காரர்கள் கூறினார்கள். அவர்கள் இரத்த
வெள்ளத்தில் கிடந்த அம்மனிதனைப் புறக்கணித்து, ஜேக்கப் அவர்களைச் சித்திரவதை செய்யத் தொடங்கினர்.
மாணிக்கம் இரண்டாவது முறையாக உயிர் பெற்றார் என்று அந்த நிகழ்வை ஆசிரியர்
ஜேக்கப் கூறினார்.
பின்னர் அவர் பிரம்மமூர்த்தி,
எம் ஆர் வெங்கட்ராமன், கேடிகே தங்கமணி மற்றும் பிறருடன் மதுரைச் சதி வழக்குகளில்
கைது செய்யப்பட்டார்.
பல்வேறு இடங்களில்
பணியாற்றிய தோழர்களைச் சம்பந்தப்படுத்தி 1949– 50ல் நெல் சதி வழக்குகள் புனையப்பட்டன.
1951ம் ஆண்டு வழக்கில் 67 தோழர்கள் குற்றவாளிகள் எனத் தீர்ப்பளிக்கப்பட்டது, மாணிக்கம்
32வது நபராகக் குற்றம் சாட்டப்பட்டார். அரசைத் தூக்கி எறிய சதி செய்ததாக அவர்கள் மீது
குற்றம் சாட்டப்பட்டது. இவ்வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஆர் நல்லகண்ணு
55வது நபர்.
மாணிக்கம் 1954ல்
விடுதலையானார். நெல்லை மாவட்டக் கட்சியின் மூன்றாவது மாநாட்டில் மாணிக்கம் மாவட்டச்
செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மேலும் அவர் ஒருங்கிணைந்த திருநெல்வேலி மாவட்ட
மாவட்டச் செயலாளராகப் பணியாற்றினார்.
புகழ்பெற்ற எழுத்தாளர்களுடன்
அவர் நல்ல உறவை வளர்த்தார். தொ மு சி ரகுநாதன், அண்ணாச்சி சண்முகம் பிள்ளை, பேராசிரியர்
நா வானமாமலை, ‘திகசி’ என்ற தி க சிவசங்கரன் மற்றும் பிறர் அதில் அடங்குவர்.
1950கள் மற்றும்
1960களில் செங்கல்பட்டு மற்றும் பிற மாவட்டங்களில் விவசாயிகளின் சக்திமிக்க போராட்டங்கள்
நடைபெற்றன. தோழர் மாணிக்கம் அவர்களின் கூற்றுப்படி அந்தப் போராட்டங்கள் எந்த அளவு ஈர்க்கக்
கூடியதாக இருந்ததெனில், அப்போராட்டங்களை எவ்வாறு ஒருங்கிணைத்தீர்கள் என்று பீகார் தோழர்கள்
கூட கேட்டறிந்ததாக அவர் குறிப்பிடுகிறார்.
திருமணம்
மாணிக்கம், சரஸ்வதியை
மணந்தார். அவர், மாணிக்கத்துடன் சிறையில் இருந்த தோழர் இ தளவாய் அவர்களின் சகோதரி.
தளவாய் பின்னர் விக்ரமசிங்கபுரத்தில் ஏஐடியுசி தலைவரானார். தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில்
பணியாற்றிய அவர், ஒரு விடுதலைப் போராட்ட வீரரும் ஆவார்.
மாணிக்கம் சரஸ்வதி
தம்பதியருக்கு ஐந்து மகன்கள் மற்றும் ஒரு மகள். அவர்கள் குரோம்பேட்டையில் கட்டிய ஒரு
வீட்டில் தொடக்கத்தில் வாழ்ந்தனர். பின்னர் மனைவி சரஸ்வதி தனது நான்காவது மகன் பாஸ்கர்
வீட்டிற்கு மாறினார்.
திருநெல்வேலி மற்றும் பிற
மாவட்டங்களில் கட்சியின் வளர்ச்சி
தென்கோடி பகுதியான
திருநெல்வேலி மற்றும் பிற மாவட்டங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வளர்ச்சி அபரிமிதமாக
இருந்தது –விவசாயிகள் மத்தியில் மட்டுமின்றி, எழுத்தாளர்கள், கலைஞர்கள் மற்றும் அறிஞர்கள்
மத்தியிலும் கட்சி சிறப்பாக வளர்ந்தது. எண்ணற்ற விவசாயப் போராட்டங்கள் நடைபெற்றன; சிவகிரி,
கீழாம்பூர், வள்ளியூர், கடையநல்லூர் மற்றும் பிற மையங்களில் அமைப்புகள் கட்டியெழுப்பப்பட்டன.
அது தவிரவும் தூத்துக்குடி, கோவில்பட்டி மற்றும் பிற பகுதிகளில் தொழிற்சங்க இயக்கம்
ஒன்று திரட்டப்பட்டது.
பாலதண்டாயுதம், வி
பி சிந்தன், என் ராமச்சந்திரன், எம் ஆர் வெங்கட்ராமன்
மற்றும் பிறருடன் மாணிக்கம் மாவட்டத்தில் கட்சியை
ஒன்று திரட்டி அமைத்தார்
மாநிலச் செயலாளராக மாணிக்கம்
தமிழ்நாடு மாநிலத்தில் எம் கல்யாணசுந்தரம் கட்சி மாநிலச் செயலாளராக இருந்தபோது
மாணிக்கம் கட்சி உதவிச் செயலாளர். சில ஆண்டுகளுக்கு அவர் மாநிலப் பொறுப்புச் செயலாளராகப் பணியாற்றினார். கோயம்புத்தூரில் நடைபெற்ற மாநில மாநாட்டில் மாநிலச் செயலாளராக மாணிக்கம் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1978 அதிலிருந்து 15 ஆண்டுகள் அவர் மாநிலச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.1960கள் மற்றும்
1980கள் காலகட்டம் இரண்டிலும் கட்சியில் உருக்கு போல ஒற்றுமையைப் பேண கடுமையாக அவர்
பாடுபட்டார்.
மாணிக்கம் குரோம்பேட்டையில்
வாழ்ந்தபோது தினமும் ரயில் மூலம் மாம்பலம் ரயில் நிலையத்திற்குப் பயணம் செய்தார்.
(சென்னை) மாம்பலம் ரயில் நிலையத்திலிருந்து கட்சி அலுவலகத்திற்கு அவர் சைக்கிள் மற்றும்
ரிக்க்ஷா மூலம் பயணம் செய்வது வழக்கம். சில சமயங்களில் அவர் மாம்பலம் ரயில் நிலையத்திற்கு
நடந்து கூட செல்வார். (அத்தகைய எளிமையான தோழர் மற்றும் தலைவர் எங்கள் பி எம்
–மொழிபெயர்ப்பாளர் இணைப்பு)
பத்திரிக்கை ஆசிரியராகவும்
எழுத்தாளராகவும்
பி மாணிக்கம் விடுதலைக்கு
முன்பிருந்தே கூட கட்சி இதழியல் உடன் நெருக்கமாக உறவு கொண்டிருந்தார். எண்ணற்ற பல இதழ்களைக்
கொண்டு வருவதில் உதவியும் மற்றும் அதில் அவர் பணியாற்றவும் செய்தார். கட்சிப் பத்திரிக்கையான
ஜனசக்தியின் ஆசிரியராகவும் அவரது இறுதி நாள் வரை அவர் இருந்தார். சில காலங்கள்
இடைவெளி இருந்தபோதும் ஜனசக்தி இதழ் தினசரியாக வெளிவந்தது.
கட்சியின் பதிப்பகமாக
என்சிபிஹெச் அல்லது நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் அமைப்பின் இயக்குனர்கள் குழுவின் தலைவராகச்
செயல்பட்டார். சிந்தனையைக் கிளரும் பல கட்டுரைகளைக் கட்சியின் ஜனசக்தி, நியூ ஏஜ், தாமரை,
மார்க்சிய ஒளி முதலான பல்வேறு இதழ்களில் அவர் எழுதினார். மேலும் எண்ணற்ற பல சிற்றேடுகள்
மற்றும் கையேட்டுப் பிரசுரங்களையும் அவர் எழுதினார்
கட்சிப் பொறுப்புகள்
மாணிக்கம் கட்சியின்
மாநிலச் செயலாளராக இருந்தத்துடன் பல ஆண்டுகளுக்குக் கட்சியின் மத்திய செயற்குழு உறுப்பினராகவும்
(CEC)
பொறுப்பு வகித்தார்
சட்டமன்றப் பதவிகள்
முன்பே குறிப்பிட்டது
போல அவர் தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராக இருந்தார். ஒரு சட்டமன்ற உறுப்பினராக
அவர் அரசியல் பிரச்சனை முதல் கலாச்சாரப் பிரச்சனைகள் வரை வரலாற்றுச் சிறப்புமிக்க பல
உரைகளை ஆற்றினார்.
மறைவு
தோழர் ப மாணிக்கம்
தமது 76வது வயதில் 1999 ஜூன் 22 ஆம் நாள் ஒரு தனியார் மருத்துவமனையில் இயற்கை
எய்தினார்.
வாழ்க தோழர் பி எம்
புகழ்!
–நன்றி : நியூ ஏஜ் (2026, ஆக.2 –8)
–தமிழில் : நீலகண்டன்,
என் எஃப் டி இ, கடலூர்














