Thursday, 21 May 2026

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு --149 எஸ் சுகுணா –கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் தெலுங்கானா போராட்டத்தின் கதாநாயகி

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு --149 

எஸ் சுகுணா –கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும்
தெலுங்கானா போராட்டத்தின் கதாநாயகி
–அனில் ரஜீம்வாலே

சுகுணா நிலப்பிரபுத்துவக் குடும்பத்தைச் சேர்ந்தவர். அவரது தந்தை, முந்தைய ஆந்திரப் பிரதேசத்தின் மேடக் மாவட்ட பாமுலபர்த்தி அருகே கிஷ்டபுர கிராமத்தின் கொம்மிடி ராமச்சந்திர ரெட்டி. தாயார் லெக்ஷம்மா. திருமணத்திற்குப் பிறகு அவரது தந்தை பிபிநகரிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருந்த அவரது மாமனாரின் பிரம்மன்பள்ளி ஊருக்குக் குடி பெயர்ந்தார். அங்குதான் அவரது அனைத்துக் குழந்தைகளும் பிறந்தன. சுகுணாவின் மூத்த சகோதரர் கோதண்டராமி ரெட்டி பிற்காலத்தில் தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தின் புகழ்பெற்ற தியாகி ஆனார். அவர்கள் அனைவருக்கும் அவர் ஒரு தத்துவ போதகராகவும் வழிகாட்டியாகவும் இருந்தார். அவரது தந்தை இரண்டாவது திருமணம் செய்து கொண்டபோதும் முழு குடும்பமும்  ஒரு குடும்பம் போலவே வசித்தது.

அவர்களின் முன்னோர்கள் சுமார் 200 ஆண்டுகளுக்கு முன்பு இக்கிராமங்களுக்குக் கால்நடை விற்பனைக்காக வருவது வழக்கம். அவரது தாய் வழி தாத்தா கொம்மிடி புல்லா ரெட்டி பிரம்மன்பள்ளியில் நிலங்களை வாங்கி அங்கேயே குடியேறினார். அது இந்தியாவின் மிகப் பெரிய மன்னர் ஆட்சி அரசான ஹைதராபாத் சமஸ்தானத்தின் ஒரு பகுதி. தெலுங்கானாவின் 8 மாவட்டங்கள், மரத்வாடாவின் 5 மாவட்டங்கள் மற்றும் கர்நாடகத்தின் 3 மாவட்டங்கள் சேர்ந்த ஹைதராபாத் சமஸ்தானத்தை நிஜாம் ஆட்சி செய்தார். 

சுகுணாவின் பாட்டி விவசாயம் உட்பட முழு குடும்பத்தையும் பராமரித்தார். ஆயுதப் போராட்டம் தொடங்கிய காரணத்தால் குடும்பம் பெரும்பாலும் செகந்திராபாத்துக்குக் குடி பெயர்ந்தது. ஆனால் பாட்டி மட்டும் கிராமத்தில் எரிந்துபோன அந்த வீட்டில் தனியாக வாழ்ந்தார்.

அவர்களின் குடும்பம் பெரியது மற்றும் தாயார் தரப்பிலும் தந்தை தரப்பிலும் ஒவ்வொருவரும் 70 ஏக்கர் நிலங்களை உடைய பணக்கார நில உடைமை குடும்பம்; மேலும் சுமார் 200 பசுக்கள் மற்றும் பல குதிரைகளும் உண்டு. ஆனால் அவர்கள் பெரிதும் உயர்வாக மதிக்கப்பட்ட குடும்பம். சுகுணாவின் மூத்த சகோதரர் கோதண்ட பல முற்போக்கான மாற்றங்களைத் தொடங்கி வைத்து பல்வேறு பழங்கால மூட நம்பிக்கை மரபுகளை உடைத்தார்.

சுகுணா ஒருங்கிணைந்த நல்கோடா மாவட்ட புவனகிரி அருகே பிரம்மன்பள்ளியில் 1934 நவம்பர் 7ல் பிறந்தார். அவரது மூத்த சகோதரர் அளித்த ஊக்கத்தில் அவர் 11வது வயதில் தெலுங்கானா கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இணைந்து, 1946 –51 காலகட்டத்தில் நடந்த தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றினார். 

அமைதியானவரான அவரது மூத்த சகோதரி சசிரேகா கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் ஆயுதப் போராட்டத்தில் தீவிரமாகப் பணியாற்றினார். சசிரேகா கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறையில் இருந்தார். சிறையில் அவர் ஒவ்வொருவருக்கும் செய்தித்தாள்கள் மற்றும் புத்தகங்களை வழக்கமாக கொண்டு வருவார் மற்றும் தையல் வேலைகளிலும் ஈடுபடுவார். அவர் 2012 டிசம்பரில்  மரணமடைந்தார். 

சுகுணா ஐந்தாவது கிரேட் வரை அவரது கிராமத்தில் படித்தார். பின்னர் ஐந்தாவது ஆறாவது கிரேடை ராமன்னபேட்டையில் அவரது அத்தை வீட்டில் படித்தார். இந்தப் பள்ளிக்கூடம் ஆர்ய சமாஜ் முறைபடி நடத்தப்பட்டது.

அவரது சகோதரர் கோதண்டா ஆரிய சமாஜத்தின் ஆழமான செல்வாக்கு ஆட்பட்டவர் மற்றும் அனைத்துப் பாரம்பரியமான மத வழக்கங்களையும் எதிர்த்தார். பெண் குழந்தைகள் உட்பட அனைத்துக் குழந்தைகளையும் அவர்களது சாதி முதலிய வேறுபாடுகளைக் கருதாது காலை நேரத்தில் அவர்களை  ஊர்வலமாக அழைத்துச் செல்வது வழக்கம். மேலும் அவர் ‘தர்மஸ்தலா’ என்றழைக்கப்பட்ட தனியார் தெருபள்ளியை நிறுவினார்; ஒவ்வொருவரின் உழைப்பால் கட்டப்பட்டதால் ‘தர்மஸ்தலா’ என்று அது அழைக்கப்பட்டது. அங்கு அவர்கள் உருதும் தெலுங்கும் படித்தனர்.

கிராமத்தில் அனைத்துக் குழந்தைகளுக்கும் உடற்பயிற்சிகள் கற்றுத் தரப்பட்டது. மரபுகளை உடைத்துச் சகோதரிகள் குதிரை ஏற்றம், சைக்கிள், நீச்சல் கற்றது மட்டுமின்றி நவீன ஆடைகள் அணிந்தது அவர்களைத் தனித்துக் காட்டியது. ‘சரஸ்வதி வந்தனா’ மற்றும் பிற பக்தி பஜன்கள்,  பாடல்களைப் பாடுவதுடன், அவர்கள் “ஸாரே ஜஹான் சே அச்சா ஹிந்துஸ்தான் ஹமாரா” பாடலையும்கூட பாடுவர். மேலும் அவர்கள் ஹரிஜன முன்னேற்றப் பணிகளையும் செய்தனர். 

ஆந்திர மகாசபாவில்

நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு மற்றும் நிஜாமுக்கு எதிரான போராட்டத்தில் மிக முக்கிய நட்சத்திரப் பங்கு  வகித்த ஆந்திர மகாசபா அமைக்கப்பட்ட நிகழ்வு, நீண்ட மற்றும் பல்வேறு சம்பவங்கள் நிறைந்த பின்னணி  கொண்டது. 1920களில் தெலுங்கு உள்ளிட்ட பிற மொழிகளை விலக்கியும் நசுக்கியும், உருது மொழி அலுவல் மொழியாக நிஜாமால் திணிக்கப்பட்டது. 1922ல் சமூக சீர்திருத்தக் கூட்டத்தில் ஒரு பேச்சாளர் தெலுங்கில் பேச அனுமதிக்கப்படவில்லை. அத்தகைய நிகழ்வுகள் தெலுங்கு மொழியை முறையாக அங்கீகரிப்பதற்காக ஆந்திர ஜன சங்கம் அமைப்பு அமைக்கப்பட்டது. விரைவில் அது மொழி பிரச்சனையைத் தாண்டிச் சென்று சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சனைகளை எழுப்பியது. 

விரைவில் ஆந்திர மகாசபா அமைக்கப்பட்டது; 1928ல் மேலும் பள்ளிகள், நிலவரியில் சலுகைகள், குடிமைச் சுதந்திரங்கள் முதலியனவற்றைக் கோரியது. 1930ல் ஜோகிப்பேட்டில் நடத்தப்பட்ட கூட்டத்தில் பல சமூகச் சீர்திருத்த நடிவடிக்கைகள் கோரப்பட்டது.

ராவி நாராயணன் ரெட்டி, (சுகுணாவின் மூத்த சகோதரரான) கோதண்ட ராமிரெட்டி மற்றும் பிறர் போன்ற பல இளம் தலைவர்கள் மகாசபாவில் இணைந்தனர். இந்தக் கட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி மகாசபாவில் இணைந்தது அதற்குத் தெளிவான திசை வழியைத் தந்தது. 1943 வாக்கில் கம்யூனிஸ்டுகள் சபா அமைப்பில் சக்தி மிக்கவர்கள் ஆனார்கள்.

ஆந்திர மகாசபாவின் 11வது அமர்வு ராவி நாராயணன் ரெட்டி தலைமையில் புவனகிரியில் நடந்தது. அந்த மாநாட்டிற்காகச் சுகுணாவின் சகோதரர் கோதண்டா கடுமையாக உழைத்தார், குடும்பம் முழுவதும் அதில் இணைந்தது. இந்த மாநாட்டில் சபா இன்னும் கூட தீவிர அமைப்பானது.

சுகுணாவின் அண்ணன் கோதண்டராமி, ராவி நாராயணன் ரெட்டி செல்வாக்கில் ஆட்பட்டிருந்தார் மற்றும் ஆரிய சமாஜத்தின் செயல்பாட்டாளராகவும் இருந்தார். பின்னர் ஆந்திர மகாசபாவில் இணைந்தார்; அதற்கும் பிறகு சிபிஐயில் இணைந்தார். சுகுணா மற்றும் அவரது மூத்த சகோதரி சசிரேகாவை அவர் போன்கீர் நகரில் நடந்த மகாசபாவுக்கு அழைத்துச்

சென்றார். 1943ல் நடைபெற்ற விஜயவாடா அரசியல் பயிற்சி வகுப்புகளில் இளம் வயது காரணமாகச் சுகுணா கலந்து கொள்ள முடியவில்லை. போன்கீர் மாநாட்டில் (சுதந்திரப் போராட்ட வீரரும், தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தில் கலந்து கொண்டவருமான சிபிஐ சட்டமன்ற உறுப்பினர்) மல்லு சுயராஜ்யம் உள்ளிட்ட பலருடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.

அவரது தந்தை (கிராம நிர்வாக அதிகாரம் உடைய) போலீஸ் படேல் மற்றும் மாலி என்ற பொறுப்பை வகித்தார். பிரம்மன்பள்ளி படேலான அவர் பல நேரங்களில் அவர்களின் தலைமறைவு பணியின்போது உதவினார். அந்நாட்களில் 10ல் இருந்து 20 கிராமங்கள் ஒரு ஜாகிர் ஆட்சி நிர்வாகத்தின் கீழ் இருக்கும். ஒவ்வொரு ஜாகிரின் கீழும் ஒரு போலீஸ் படேல் இருப்பார். தந்தை அந்தப் பதவியைத் தனது தந்தையிடமிருந்து மரபுரிமையாகப் பெற்றார். சுகுணாவின் தந்தை மிக நல்லியல்பு உள்ளவர் மற்றும் சாதாரண மக்களிடம் பரிவு உடையவர்.

இந்தியாவின் விடுதலை 

சுகுணா, அவரது அண்ணன் கோதண்டராமி மற்றும் குடும்பத்தின் மற்றவர்கள் 1947 ஆகஸ்ட் 15ல் அவர்களின் கிராமத்தில் இருந்தனர். தேசியக் கொடியை ஏற்றி பெரிய அளவில் விடுதலையை அவர்கள் கொண்டாடினர். 1948ல் கிராம மையத்தில் மூவர்ணக் கொடியும் செங்கொடியும் ஏற்றப்பட்டன; ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய கோதண்ட, ‘சுதந்திரம் வந்துவிட்டது, நிஜாம் தோற்கடிக்கப்பட்டார், மற்றும் இப்போது போராட்டத்தைத் தொடர வேண்டிய தேவையில்லை’ என்றார்.

கட்சியில் இணைதல் 

16 வயதிற்குக் குறைவாக இருந்தபோதும் சுகுணாவிற்குத் தெலுங்கானா பகுதி குழுவின் சார்பாக ராவி நாராயணன் ரெட்டி கட்சி உறுப்பினர் அட்டையை வழங்கினார். அவர்களால் பராமரிக்கப்பட்ட இரகசிய பதுங்குமிடத்தில் (டென்) இது வழங்கப்பட்டது; சுகுணாவின் கட்சி மற்றும் தலைமறைவு பணி பெரிதும் பாராட்டப்பட்டது.

தலைமறைவு பணிக்கான பதுங்குமிடங்கள் பராமரிப்பதைச் சுகுணா வழக்கமாகக் கொண்டிருந்தார். அங்கு வெங்கடாச்சாரி மற்றும் ஆனி ரெட்டி ஆனந்தாவுடன் சேர்ந்து அவர் அறிக்கைகள் எழுதுவது மற்றும் அவற்றைச் சைக்ளோ ஸ்டைல் பிரதி எடுப்பது வழக்கம். தோழர்களுக்கும், உடல் நலமற்றவர்களுக்கும் உதவுவது –அவ்வளவு ஏன் பாத்திரங்களைக் கழுவுவது  --உள்ளிட்ட பல பயனுள்ள பணிகளை அவர்கள் செய்தனர்.

ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வது குறித்து முரண்பாடு

1948 செப்டம்பருக்குப் பிறகு ‘போலீஸ் நடவடிக்கை’ மற்றும் இந்திய இராணுவம் ஹைதராபாத்துக்குள் நுழைந்தது; இச்சூழ்நிலையில் ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வது குறித்துக் கட்சிக்குள் கருத்து முரண்பாடுகள் மூண்டன. கட்சி மக்கள் மத்தியில் ஆதரவு இழக்கத் தொடங்கியது, அவர்கள் பிளவுபட்டு, பல பிரிவுகளும் ஆயுதப் போராட்டத்தை விட்டு நீங்குவது அதிகரித்தது. நிஜாம் தோற்கடிக்கப்பட்டு, விவசாயிகளின் கோரிக்கைகள் ஒரு பகுதி நிறைவேற்றப்பட்டதால் ராவி நாராயணன் ரெட்டி, ராஜ் பகதூர் கவுர், மக்தூம் மொகிதீன் மற்றும் பிற தலைவர்கள் தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தைத் திரும்ப பெற வலியுறுத்தினர். பசவபுன்னையா மற்றும் பி சுந்தரையா முதலிய சில தலைவர்கள் இன்னும் ஆயுதப் போராட்டத்தைத் தொடர விரும்பினர்; ஆனால் அவர்களின் குறுகிய குழுவாதப் போக்குக் கண்ணோட்டத்தின் காரணமாக அவர்கள் தனிமைப்பட்டு போயினர், அது  கட்சிக்குப் பெரும்  கேடுகளை விளைவித்தது.

கட்சி பொதுச் செயலாளர் BT ரணதிவே ஆயுதப் போராட்ட உத்திகளைத் தொடர வற்புறுத்தினார்; அதன் விளைவாய்க் கட்சிக்கும், பெருந்திரள் மக்கள் இயக்கத்திற்கும் மாபெரும் சேதாரம் ஏற்பட்டது

பதுங்குமிடத்தில் பணி மற்றும்  திருமணம்

சுகுணா ஆயுதப் போராட்டத்தில் நேரடியாகப் பங்கேற்கவில்லை, அவர் மிகவும் விரும்பியும் அவர் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. கட்சி அவருக்கு ஹைதராபாத்தில் சோபா கவர்களைச் செய்பவராகச் செயல்பட்டு பதுங்குமிட அறைகளில் தங்கி, எழுதவும் கட்சி கடிதங்கள் மற்றும் ஆவணங்களைச் சைக்லோ ஸ்டைல் செய்யவும், அவற்றை எடுத்துச் சென்று உரியவரிடம் சேர்க்கும் கூரியராகப் பணியாற்றும்  பொறுப்பைத்  தந்தது.

1949 நவம்பர் 25ல் சுகுணா –எஸ் வி கே பிரசாத் திருமணம் நடந்தது. எஸ்விகே ஆயுதப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்று, காயமடைந்து கைது செய்யப்பட்டு சித்திரவதைகளுக்கு ஆளான தலைவர்களில் ஒருவராவார். 1952ல் தான் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

ஆயுதப் போராட்டம் திரும்ப பெற்ற பின் வாழ்க்கை 

எஸ்விகே பிரசாத் கைது செய்யப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு, பி சுந்தரய்யா பதுங்கும் இடத்திற்கு வந்து ஆயுதப் போராட்டத்தைக் கட்சி திரும்பப் பெற்றதாக அறிவித்தார். பதுங்குமிடங்கள் மூடப்படலாயின. பதுங்குமிடங்களைப் பராமரித்தவர்களும் பணியாற்றிய உதவியாளர்களும் அவரவர் வீடுகளுக்குத் திரும்ப வேண்டியதாயிற்று. பலரும் தங்கள் வீடுகளுக்கும் கிராமங்களுக்கும் திரும்பச் செல்ல தயாராக இல்லாததால் இந்த முடிவு மிகவும் கடினமானதாக இருந்தது

போராட்டம் திரும்ப பெற்ற பிறகு சுகுணா அவரது கிராமத்திற்குச் செல்ல ஆலோசனை தரப்பட்டது ஆனால் அங்கே அவரைக் கைது செய்ய ஒரு வாரண்ட் காத்திருந்தது. முதலில்  அவர் பூனா சென்றார். அங்கே இருந்த ரகசிய பதுங்கும் இடத்தில் பிராத்தியாகாத்மா அவரது மனைவியுடன் தங்கியிருந்தார். பிராத்தியாகாத்மா பின்னர் புகழ் பெற்ற சினிமா இயக்குனரானார். பின்னர் அவர் எஸ் வி கே  இளைய சகோதரரான அவரது மைத்துனர் நரசையா வசித்த மெட்ராசுக்கு இடம் பெயர்ந்தார். நரசையா பிற்காலத்தில் ஒரு தொழிலதிபர் ஆனார்.

1952 தேர்தல்கள்

மக்கள் ஜனநாயக முன்னணி (PDF, People’s Democratic Front) என்ற பேனரின் கீழ் கட்சி வேட்பாளராக நிறுத்திய (மராத்வாடா விடுதலை மற்றும் நிஜாமுக்கு எதிரான போராட்ட வீரரான) அவுரங்காபாத்தின் கோவிந்த தாஸ் ஷெராஃப் அவர்களுக்காகச் சுகுணா பணியாற்றினார். சில வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார். சுகுணா வெளிப்படையாகப் பணியாற்றினார் ஆனால் கைது செய்யப்படவில்லை. பிடிஎப் மாபெரும் கூட்டத்தை நடத்தியது.

ஏதாவது வேலைக்குத் தகுதி பெற வேண்டும் என்பதற்காகச் சுகுணா இந்தி கற்றார். மேலும் அவர் ஆந்திரா சரஸ்வதா பரிக்ஷத் நடத்திய தெலுங்கு தேர்வுகளிலும் கலந்து கொண்டார். ஏதாவது ஒரு வேலையில் சேர அவர் எப்போதும் விரும்பினார்.

கட்சியைத் திரட்டி அமைத்தல்

சிதறிக் கிடந்த கட்சியைச் சுகுணா, எஸ்விகே மற்றும் பிற தோழர்கள் மீண்டும் திரும்ப கட்டியமைக்கத் தொடங்கினர். கட்சியைப் புனர்நிர்மாணம் செய்ய வாராங்கல் மாவட்டத்திற்கு அனுப்பப்பட்ட எஸ்விகே அங்கு மாவட்டச் செயலாளர் ஆனார். சுகுணா இடம்பெயர நேர்ந்தது அவர் தனது படிப்பைப் பாதியில் கைவிட்டார்.

அவர், கட்சி மற்றும் பெருந்திரள் அமைப்பு, குறிப்பாகப் பெண்கள் முன்னணியில் ஏராளமான பணிகள் ஆற்றினார். அதே நேரத்தில் மிகவும் கஷ்டமான நிலையில் இருந்த தனது குடும்பத்தையும் கவனித்துக் கொண்டார்.

பின்னர் ஆந்திரப் பிரதேச உழைக்கும் பெண்கள் அசோசியேஷனின் செயலாளர் ஆனார். அவர் தனது தோழர்களுடன் சேர்ந்து, கழிவறைகள் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட வீட்டு வேலை செய்யும் தொழிலாளர்களின் பணி நேரம் மற்றும் பணி நிலைமைகள் குறித்து ஒரு மனுவைத் தயாரித்தார்; உழைக்கும் பெண்களிடம் இருந்து ஆயிரக்கணக்கான கையெழுத்துக்களைத் திரட்டி மாபெரும் கூட்டம் நடத்தினார். ஊர்வலமாகச் சென்று கையெழுத்துப் பெறப்பட்ட மனுவை ஆளுநரிடம் வழங்கினர். அந்நேரத்தில் சுகுணா ஹைதராபாத்தில் பல கம்பெனிகளின் தொழிற்சங்கத் தலைவராக இருந்தார். அந்த நிறுவனங்களின் தொழிலாளர்கள் பெரும்பாலும் பெண்கள். மருத்துவமனை மற்றும் அறுவை சிகிச்சையில் பயன்படுத்தும் பஞ்சு துணி (காஸ்) தயாரித்தல், சலைன் பாட்டில் உற்பத்தி, மாங்கனிச் சாறு தயாரித்தல் உள்ளிட்ட 300 அல்லது 300க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணியாற்றும் ஆலைகளில் தொழிற்சங்கங்கள் அமைக்கும்படி அவரைக் கட்சி பணித்தது. 

ரமிஸாபி மற்றும் பிற வழக்குகள்

சுகுணா புகழ்பெற்ற ரமிஸாபி, ஹமீதி மற்றும் பிற பிரச்சனைகளை எடுத்தார். சில பொழுது கணவர் இல்லாத நேரத்தில் ரமிஸாபி சில காவலர்களால் ரிக்ஷாவில் இருந்து கீழே பிடித்து இழுத்து காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்டு நான்கு காவலர்களால் பாலியல்  வல்லுறவுக்கு ஆளானார் அவரது கணவர் மிருகத்தனமாகத் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இதை எதிர்த்துக் கண்டனப் போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடைபெற்றன அவற்றில் சுகுணா தீவிரமாகப் பங்கேற்றார்

எம் சிபிஐ கட்சியில்  சேர்தலும் சிபிஐக்குத் திரும்ப வருதலும்

1964ல் கட்சி பிளவுபட எஸ்விகே சிபிஐ-எம் கட்சியை ஆதரித்தார், ஆனால் தீவிரமாக அதில் பணியாற்றவில்லை. பின்னர் அவர், சிபிஐஎம் கட்சியிலிருந்து ஓம்கார் வெளியேற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து 1983 –84ல் ஓம்கார் தலைமையிலான எம்சிபிஐ கட்சியில் இணைந்தார். சட்டமன்றத்திற்கு எம்சிபிஐ வேட்பாளராககூட அவர் போட்டியிட்டார். பின்னர் ஓம்காருடன் கருத்து வேறுபாடு ஏற்பட அதிலிருந்து வெளியேறி சிபிஐயில் மீண்டும் இணைந்தவர் தனது மரணம் வரை சிபிஐயில் தொடர்ந்து நீடித்தார்.

சுகுணா சிறிது காலம் சிபிஐயில் நீடித்தார் ஆனால் விரைவில் அவரும் எஸ் வி கே-வைப் பின் தொடர்ந்து சிபிஐ -எம்மில் இணைந்தார். சிபிஐ-எம் பெண்கள் பிரிவில் அவர் தீவிரமான தலைவர் ஆனார். திடீரென்று எஸ்விகே ஓம்கார் கட்சியில் இணைந்தது அவருக்குச் சில சங்கடங்களை ஏற்படுத்தியது. எஸ்விகே-வைத் தொடர்ந்து சுகுணாவும் எம்சிபிஐ கட்சியில் இணைந்தார். ஆனால் சில காலத்திற்குப் பிறகு சிபிஐ திரும்பிய அவர் இறக்கும் வரையில் சிபிஐயில் நீடித்தார்.

சுமார் 200 எம்சிபிஐ உறுப்பினர்கள் அவர்களுடைய மியாபூர் இல்லத்தில் கூடி இரண்டு நாள் விவாதத்திற்குப் பிறகு சிபிஐயில் இணைய முடிவு செய்தனர். அப்போதைய மாநிலச் செயலாளர் என் கிரிபிரசாத் கட்சி கொள்கைகளை விளக்கினார்; வாராங்கல் மாவட்டத்தின் அனைத்துத்  தொழிலாளர்களும் சிபிஐயில் இணைந்தனர்

அவர் தனது இறுதி நாட்களில், “கம்யூனிஸ்ட் இயக்கம் முழுமையும் மீண்டும் ஒன்றாக ஒன்றிணைந்தால் அது மிகவும் நல்லது என நான் கருதுகிறேன்” என்று கூறினார். குறைந்தபட்சம் சிபிஐ, சிபிஐ-எம், எம்சிபிஐ மற்றும் தேர்தல் களில் பங்குபெறும் அத்தகைய மார்க்சிய-  லெனினிய குழுக்கள் ஒன்றாதல் வேண்டும் என்று அவர் கருதினார்

எஸ்விகே சுகவீனம் மற்றும் சுகுணா 

1990களின்போது நோய் வாய்ப்பட்ட எஸ்விகே உடல்நிலை தொடர்ந்து மோசமாகி கோமா நிலைக்குச் சென்றார். 1994 ஜூலை 17ல் அவர் மரணமடைந்தார். அவர் தனது வாழ்க்கைத் துணைவர் மட்டுமல்ல, தன்னை அரசியலில் உருவாக்கியவர் மற்றும் வழிகாட்டி என சுகுணா நினைவு கூர்கிறார். 40 ஆண்டுகள் ஒன்றாக வாழ்ந்த அவர்களின் வாழ்வு முடிவுக்கு வந்தது. எவ்வளவு காலம் தனது மிகுதி வாழ்வு நீடிக்கும், அது எவ்வாறு செல்லும் என்ற நினைவுகளில் அவர் உணர்ச்சியற்றவர் ஆனார். அவரது குழந்தைகள் அவரை அமெரிக்காவுக்கு அழைத்துச் சென்றனர். எப்போதும் அவர் எஸ்விகே பற்றிய நினைவுக் குறிப்புகளை எழுத விரும்பினார். அவர் எழுதிய குறிப்புகளையும் பிற தகவல்களையும் தேடி திரட்டுவதில் மூன்றாண்டுகள் போயின. இறுதியில் ஒருவகையாக சில நினைவுக் குறிப்புகளை எழுத சுகுணாவால் முடிந்தது

அவரது முதல் குழந்தை ஷோபா 1951 ஜூன் 10ஆம் தேதி பிறந்தார். ஒரு கட்சி செயல்பாட்டாளராக, கஷ்டமான காலங்களைக் கடந்து குழந்தைகளை வளர்ப்பதில் அவரது வலியையும் சிரமங்களையும் அவர் விவரித்தார். போதுமான ஆடைகள், தண்ணீர்கூட இல்லை, மின்சாரம் முதலியனவும் இல்லை.  இருந்த போதிலும் தனது குழந்தைகளை வளர்க்க அவர் கடுமையாகப் போராடினார். 1959 மற்றும் 1964ல் இரண்டாவது மூன்றாவது குழந்தை முறையே பிறந்தன. வீட்டு உரிமையாளர்கள் தந்த அழுத்தத்தில் அவர் அடிக்கடி வாடகை அறை மாற வேண்டி வந்தது. குடும்பத்திற்கு நேரம் ஒதுக்க எஸ்விகேயால் இயலவில்லை.

அவர் மிகக் கடுமையான நெருக்கடியில் இருந்தபோது தனது விரக்தியை கட்சி தோழர்களிடமும் எஸ்விகே-யிடமும் கூட விவரித்தார். எஸ்விகே உட்பட கட்சித் தோழர்கள் அவரவர் குடும்பத்தைவிட கட்சிக்குக் கூடுதல்  பொறுப்புடையவர்களாக இருந்தனர் என அவர் எழுதினார். இதனால் எஸ்விகே தனது குழந்தைகளிடம் அன்பு இல்லாதவர் என்பதல்ல. தனது மகளின் வற்புறுத்தலில் 1987இல் அமெரிக்கா சென்ற சுகுணா பின்னர் (குடியுரிமை இன்றி நிரந்தரமாக அமெரிக்காவில் வசிக்கும் சட்டபூர்வ உரிமையை வழங்கும்) கிரீன் கார்டு  பெற்றார்.

சுகுணா ஏதாவது ஒரு வேலையில் சேர விரும்பினார். பிளாக் டெவலப்மெண்ட் அதிகாரி (பிடிஓ) பதவி அவர் கதவை தட்டியது. ஆனால் குடும்பச் சூழ்நிலை அதை அனுமதிக்கவில்லை, எஸ்விகே-வும் கூட வற்புறுத்த அவர் அப்பதவியை ஏற்கவில்லை. 

சூசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருந்த பிரிட்டிஷ் சோசலிசத் தொழிலாளர்கள் கட்சியின் உறுப்பினர் பார்ரே பவியர் (Barry Pavier) சுகுணா மற்றும் எஸ்விகே-யின் வீட்டில் தங்கி தெலுங்கானா ஆயுதப் போராட்டம் குறித்து ஒரு புத்தகம் எழுதினார்

சிஆர்  ஃபவுண்டேஷனில் இறுதி ஆண்டுகள்

தனது வாழ்வின் இறுதி 12 ஆண்டுகளின்போது சுகுணா சிபிஐ ஹைதராபாத்தில் நடத்தி வந்த சி ஆர் பவுண்டேஷன் அமைப்பின் முதியோர் இல்லத்தில் தங்கினார். அவரது மூத்த மகன் வந்து பெரியதோர் அறையை அவருக்குத் தேர்ந்தெடுத்து அதற்கான கட்டணத்தைச் செலுத்தினார். நீண்ட காலம் உடல் நலமின்றி இருந்த சகமுரி சுகுணா ஹைதராபாத் கொண்டாபூரில் சந்திரா ராஜேஸ்வரராவ் (சிஆர்) ஃபவுண்டேஷன் முதியோர் இல்லத்தில் 2025 ஜூன் மாதம் 21ஆம் நாள் இரவு 11 மணிக்கு இயற்கை எய்தினார்

தோழர் சுகுணா நினைவுகளைப் போற்றுவோம்!

நன்றி : நியூ  ஏஜ் (ஏப்ரல் 19 –25)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

 

 . 

 

Tuesday, 12 May 2026

மார்க்சியமும் 21ம் நூற்றாண்டின் எதார்த்தங்களும் -- --அனில் ரஜீம்வாலே

 

மார்க்சியமும் 21ம் நூற்றாண்டின் எதார்த்தங்களும்

இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகும் கூட காரல் மார்க்சின் பெயரும் போதனைகளும் உலகெங்கும் மக்களையும், இந்தியாவில் அரசியல் மற்றும் கட்சி கருத்தியல் எல்லைகளைத் தாண்டியும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. உலகம் தலைசிறந்த பல சிந்தனையாளர்களைத் தந்துள்ளது அவர்களிடமிருந்து நாம் கற்க வேண்டும். ஆனால் யாரும் மார்க்ஸைப் போல சமூகப் பொருளாதார, அரசியல் மற்றும் கருத்தியல்-தத்துவார்த்தப் பிரச்சனைகளில் ஆழமாகச் செல்லவில்லை. ஆனால் அவர் பிரச்சனைகளின் மூலங்களுக்கும் மனித சமூக வளர்ச்சிக்கும் ஆழமாகச் சென்று அதன் இயக்கத்தையும் மற்றும் அதன் பிரச்சனைகளின் வளர்ச்சி மற்றும் நெருக்கடிகள் இரண்டையும் விளக்கினார்.

மார்க்சின் பங்களிப்பு 

பிற சிந்தனையாளர்களும் தலைவர்களும் உழைக்கும் மக்களுடன் அனுதாபப்பட்டு அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்த தலைமை ஏற்றும்; வாழ்க்கை மற்றும் சமூக நீதி மேம்பாட்டுக்கான அவர்களின் போராட்டத்தை ஆதரிக்கவும் செய்தனர். ஆனால் மார்க்ஸ், சமத்துவமின்மை, சமூக மற்றும் பொருளாதார, ஏன் கலாச்சாரத்திலும் சுரண்டல், ஏழ்மை  முதலான பிரச்சனைகள் ஏன் எழுந்தன என்ற சரியான கேள்வியை எழுப்பினார்; மற்றும் அப்பிரச்சனைகள் என்றென்றைக்குமாகத் தீர்க்கப்பட முடியாததா என்ற கேள்வியையும் எழுப்பினார்.

காரல் மார்க்ஸ் அவரது கண்டுபிடிப்புகள் மூலம் சமூக இருப்பு மற்றும் அதன் இயக்கத்தை ஒரே நிகழ்முறையாக ஒன்றுபடுத்தினார். அவரும் ஃபெடரிக் ஏங்கல்சும் அவர்களின் கோட்பாட்டு ஆய்வுகள் மூலம் இயற்கை, சமூகம் மற்றும் உணர்வுநிலையைக் குறுக்கீடு இடையறுதல் இல்லாத ஒரே நிகழ்முறையாக ஒன்றுபடுத்தினர்: புரட்சியாளர்- களும் ஜனநாயகவாதிகளும் சமூகத்தை மாற்றி புதிய ஒன்றை ஏற்படுத்துவதற்காக அதனைப் புரிந்து கொள்ள வேண்டும்

மற்றவர்கள் மனிதகுல பிரச்சனையின் இந்த அம்சம் அல்லது அந்த அம்சத்தின் மீது பாராட்டுக்குரிய வகையில் ஆய்வை மேற்கொண்டு, மக்களுக்கும் நாட்டிற்கும் ஏதோ சில நன்மையைச் செய்ய மனிதாபிமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தனர். அவர்களில் பெரும்பாலும் பொதுவாக அவரவர் நாடுகளின் பிரச்சனைகளில் ஆழ்ந்து பரிசீலித்தனர். மார்க்ஸ் இந்த அணுகுமுறையுடன் திருப்தி அடையவில்லை. அவர் உலகச் சமூகத்தின் பிரச்சனையை முழுமையான ஒன்றாகவும் மற்றும் இந்தியா உட்பட தனித்தனி நாடுகளின் பிரச்சனைகளிலும் ஆழமாகச் சென்றார். அவர் ‘ஐரோப்பா மைய’ சிந்தனை கொண்டவர், ஐரோப்பிய சமூகத்தின் பிரச்சனைகளில் மட்டுமே ஆழ்ந்தவர் எனக் கருதுகின்றனர். இது தவறானது. இந்தியா உட்பட ஆசிய சமூகத்தை அவர் நன்றாக அறிவார். இந்தியக் கிராமச் சமூக வகுப்பை அவர் ஆழமாக ஆய்வு செய்தார்; அவர் அதை உற்பத்திமுறை என்றழைத்தார். அவர் சாதி பிரச்சனை மற்றும் அதன் தன்மையையும், வர்க்கங்களுடன் அதன் சிக்கலான பரஸ்பர உள் உறவுகளையும் ஆராய்ந்தார்.

மார்க்சும் இந்தியாவும்

இந்தியா மற்றும் பிற ஆசிய நாடுகளின் தனித்துவமான அம்சங்களை விளக்க காரல் மார்க்ஸ்தான் ”ஆசிய உற்பத்தி முறை” (‘Asiatic Mode of Production’ –the AMP) என்ற கோட்பாட்டை உருவாக்கினார். காரல் மார்க்சின் கூற்றுப்படி இந்தச் சில அம்சங்கள் –உதாரணத்திற்கு நிலத்தில் பொது உரிமை மற்றும் அரசுடன் நேரடி உறவு போன்ற அம்சங்கள் –ஜெர்மன் மற்றும் பிரெஞ்ச் மண்ணில் வசிக்கும் சமூகங்களுக்கும் பொருந்துவதாகும்.

கிராமச் சமூகம், வருண முறை, சாதியின் குணாம்சங்களையும்; உற்பத்திக் கருவியில், பிரதானமாக நிலத்தில், பொது உரிமை மற்றும் தனி உரிமையை மாற்றும் சிக்கலையும் விளக்க ஆசிய உற்பத்தி முறை பெரிதும் உதவும். இயற்கை உற்பத்தி முறை கோட்பாட்டை மேம்படுத்துவது ஆசிய சமூகங்களுக்குப் பெரிதும் பொருந்தும். (வட இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தின் பகுதிகளை உள்ளடக்கிய, சிந்து மற்றும் கங்கை நதிகளால் உருவாக்கப்பட்ட மிகப் பரந்த, வளமான வண்டல் சமவெளிப் பகுதியான) இந்தோ-கங்கைச் சமவெளி பகுதியில் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி ஒப்பிட்ட அளவில் மெதுவாக இருப்பதை அவர் விளக்குகிறார் –இங்குப் பெரும் முயற்சியின்றி கிராமச் சமூகங்களை  மீண்டும் உருவாக்குவது  எளிதானது. மற்றவற்றுடன் மத நம்பிக்கை மற்றும் கருத்தியல் உள்ளிட்ட இந்த அம்சங்கள் படிநிலையில் சாதியைப் பொருத்த உதவின மற்றும் பரம்பரை உற்பத்தி முறையில் தொடரவும் செய்தது. இந்தியாவைப் போல் வேறு எந்தச் சமூகத்திலும் கருவிகளும் உற்பத்திச் சாதனங்களும் வழி வழி சந்ததி பாரம்பரியமாக இருந்து சாதி முறைமையை  வலிமை பெறச் செய்தது இல்லை.

ஏழ்மையும் சுரண்டலும் ஒழிக்கப்பட முடியாதன, அவை பொறுத்துக் கொள்ளப்படத்தான் வேண்டும் மற்றும் அவற்றைச் சீர்திருத்தலாம் மற்றும் மேம்படுத்த மட்டும் செய்யலாம் என ஒப்புக் கொள்ள மார்க்ஸ் தயாராக இல்லை. அவர் கற்பனாவாதச் சோசலிசத்தை (உட்டோபியன் சோசலிசத்தை) எதிர்த்தார்; முதலாளித்துவமே இந்த இதே மண்ணில் –வானகத்தில் அல்ல– சொர்க்கத்தை ஏற்படுத்த தேவையான பௌதீகச் சூழலை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்ட அவர் விஞ்ஞான சோசலிசக் கோட்பாட்டை நிறுவினார்.

காரல் மார்க்ஸ் இரண்டு பெரும் கண்டுபிடிப்புகளைச் செய்தார்: வரலாற்றின் பொருள்

முதல்வாதக் கோட்பாடு மற்றும் உபரி மதிப்பு (சர்ப்ளஸ் வேல்யூ). அவர் வேறு
பலவும் கண்டறிந்தார் –ஒவ்வொன்றும் ஒரு நோபல் பரிசு பெறத் தகுதியானது!– என்பது உண்மையே. உபரி மதிப்பை உறிஞ்சுவதன் மூலம் ஒரு தொழிலாளி எவ்வாறு சுரண்டப்படுகிறார் என அவர் தெளிவாக எடுத்துக் காட்டினார். இந்தக் கண்டுபிடிப்பின் மீதும் வேறு சிலவற்றின் மீதும் அமைந்தது அவரது பெரும் படைப்பான “மூலதனம்” (கேப்பிட்டல்).

உலக ஏகாதிபத்தியம் ஆழமான நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளபோது இந்த நூற்றாண்டின் 20 ஆண்டுகளில் அவர் கற்பித்தவை எவ்வளவு பொருத்தமானவை எனக் காட்டியுள்ளது. பூர்ஷ்வா மற்றும் மார்க்சியர் அல்லாத பொருளியலாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் முதலாளித்துவம் கால இடைவெளியில் பொருளாதார நெருக்கடி (பாதிப்பு) என்ற மார்க்ஸின் கோட்பாட்டை ஆராயத் தலைப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் ஐந்து பகாசுர நிதி நிறுவனங்கள் ஓர் இரவில் சரிந்து விழுந்தது உலகெங்கிலும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியது மற்றும்  பொருளியலாளர்கள் மற்றும் தலைவர்களை மார்க்ஸ் எவ்வாறு இவ்வளவு சரியாகச் சொன்னார் என வியக்க வைத்துள்ளது!

மார்க்ஸும் ஏகாதிபத்திய நெருக்கடி  சுழற்சி வட்டங்களும்

மார்க்ஸ் முன்கணித்துக் கூறியது போலவே உலக ஏகாதிபத்தியம் கால இடைவெளியில் அவ்வப்போது நெருக்கடி சுழற்சிகளைக் கடந்து செல்கிறது. அவர் துல்லியமான ஆண்டுகளைக் கூட கணக்கிட்டுள்ளார். இன்று இருபத்தோராம் நூற்றாண்டில் இந்தக் கால இடைவெளி நெருக்கடிகளின் சுழற்சிகள் ஒன்றன் மீது ஒன்றாக ஏற்பட ‘நெருக்கடிக்குள் நெருக்கடி’ என, ஒரு நெருக்கடி முடிவதற்குள் மற்றொன்று தொடங்கும் விளைவை ஏற்படுத்தியுள்ளது.

மார்க்ஸ் எழுதிய, மிகக் கடினமான படைப்பான டாஸ் கேப்பிட்டல் உட்பட, அவரது நூல்களின் விற்பனை உச்சம் தொட்டுள்ளது. டாஸ் கேப்பிட்டலின் மூன்றாவது தொகுதியில் அவரது கோட்பாடான ‘கற்பனையான மூலதனம்’ (‘fictitious capital’ பங்குச் சந்தை பத்திரங்கள், கடன்பத்திரங்கள், போலிச் சொத்துக்கள் போன்ற வெறும் காகித வடிவில் அல்லது உரிமையின் அடிப்படையில் லாபம் ஈட்டும் மூலதனம்) தற்போதைய சமகாலத்தின் நிதி மூலதனத்துடன் (பைனான்ஸ் கேப்பிட்டல்) பணத்தையும் மூலதனத்தை-யம் இணைக்கிறது. நாம் மித மிஞ்சிய பண மூலதனத்தை (அதாவது கூடுதலாகவே பணம் இருக்கிறது, முதலீடு செய்ய வாய்ப்பு இல்லாத நிலையை) அத்தகைய ஏராளமான பணத்துடன் ஏகாதிபத்திய முறைமை மிதப்பதைப் பார்க்கிறோம். திறன் சார்ந்த பலனுள்ள உற்பத்தியில் முதலீடு செய்ய இயலாமல் ஏகாதிபத்திய நிதியம் மிகவும் பயன் இல்லாத இரண்டு பகுதிகளில் முதலீடு செய்கிறது: பங்குச் சந்தை மற்றும் கோத்தாக மனிதர்களைப் பேரளவில் அழிக்கும் நவீன ஆயுதங்கள் உற்பத்தி.

மிக வலிமையானது என கருதப்படும் உலகின் ஆகப் பெரும் பணக்கார நாடான அமெரிக்கா மிகப் பெரிய செல்வத்தை வைத்துள்ளது, இருப்பினும் அதனால் பலன் அளிக்கும் முதலீட்டிற்கு  மூலதனத்தைக் கண்டுபிடிக்க இயலாமல் உள்ளது. எனவே அது கொடிய பிரச்சாரங்களில் ஒன்றான நாடுகளை ஆக்கிரமித்து அந்நாடுகளின் அரசுகளைத் தூக்கி எறியத் தொடங்கியுள்ளது, இதற்கு முன் சந்தித்திராத போர்களில் அந்நாடுகளை ஈடுபடுத்துகிறது. அமெரிக்கா உலக நாடுகளை எல்லாம், கனடா உள்பட, அதன்  மாகாணப் பகுதிகளாக்க (பிராவின்ஸ்கள்) விரும்புகிறது! அது லாப விகிதங்களளை அதிகமாகவே நீடிப்பதற்கு உலகைப் பதற்றத்தில் காத்திருக்க வைத்துள்ளது. ஆனால் ஈரான் போன்ற நாடுகள் மிகவும் எதிர்பாராத முறையில் எதிர்த்துத்  திரும்பத் தாக்கி அமெரிக்காவின் அனைத்துக்  கணக்குகளையும் குலைத்துப் போடுகின்றன

தகவல் புரட்சி, சைபர் பிரிவு  தொழிலாளர்கள் மற்றும் மார்க்சியம் 

21 ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் தற்போதைய வளர்ச்சி மட்டங்கள், மார்க்சிய கோட்பாடு மற்றும் நடைமுறை செயல்பாட்டில் –குறிப்பாக தகவல் மற்றும் தொழில்நுட்ப புரட்சி சூழலில்– புதிய அம்சங்களைச் சேர்த்துள்ளது. அதன் ஆழமான தாக்கத்தில் தற்போதுள்ள எதார்த்தங்கள் வேகமாக மாறி வருகின்றன மற்றும் புதிய பிரிவுகளும் கட்டமைப்புகளும் உள்ளே வருகின்றன. தொழிலாளர் வர்க்கமும் கூட கடுமையான மாறுதல்களைக் கடந்து வருகிறது. கைப்பேசி போன்ற புதிய மின்னணு கருவிகள் ஒவ்வொரு தனிநபர்களையும் அடைந்துள்ளன.  உற்பத்தியில் தகவல், வெறும் ஆதரவு செல்வாதாரம் என்ற அதன் மரபார்ந்த பங்கைத் தாண்டி முதன்மை புதிய அம்சமாகி உற்பத்தி நிகழ்முறையில் அவுட்சோர்சிங், சேவை மற்றும் தகவல் தொடர்பாகி உள்ளன.

இந்த வளர்ச்சிப் போக்குகள் உற்பத்தி பண்டம், மதிப்பு மற்றும் சந்தையின் புதிய பிரச்சனைகளை எழுப்பியுள்ளன. புதிய கருவிகள் சிறிய உற்பத்தியாளர்களுக்குச் சாதகமாக உள்ளன; இருந்த போதிலும், நிதி கார்ப்பரேஷன்கள் –லாப விகிதங்கள் வீழ்ச்சி அடைந்து, ஏகாதிபத்திய சந்தையில் மேலும் நெருக்கடியை ஏற்படுத்திய  நிலையில் –இந்த மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோக்கள் உள்ளிட்ட பிற கருவிகளை லாப மட்டங்களை அதிகரிக்கப் பயன்படுத்த முயற்சிக்கின்றன.

சேவை பிரிவில் சைபர் ப்ராலிடேரியட் (டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் தயாரிப்பு, பராமரிப்பு மற்றும் இயக்குதலில் பணியாற்றும் தொழிலாளர்கள்), மனதால் புதிய நடுத்தர மற்றும் தொழிலாளர் வர்க்கங்கள், இளைஞர்கள், பெண்கள், நகரமயமான வலைப்பின்னலில் பணியாற்றுவோர் முதலான புதிய பிரிவு தொழிலாளர்கள் வரத் தொடங்கியுள்ளனர்: அவையெல்லாம் புதிய கேள்விகளையும் மற்றும் கோட்பாட்டு மற்றும் செயல்முறை சவால்களையும் கொண்டு வந்துள்ளன. மார்க்சியம் தேங்கிய கோட்பாடு அல்ல மாறாக அது செயல்படுவதற்கான வழிகாட்டி. எனவே நாம் இருபத்தோராம் நூற்றாண்டின் எதார்த்தங்களுடன் அவற்றைக் கையாள புதிய அறிவு கருவிகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.

--நன்றி : நியூ ஏஜ் (மே 10 –16)

 –தமிழில் : நீலகண்டன், 

 என்எப்டிஇ, கடலூர்

 

   

 

Sunday, 10 May 2026

மார்க்ஸை நினைவு கூர்தல் இன்று அரசியல் தேவை --–டாக்டர் அருண் மித்ரா

 

மார்க்ஸை நினைவு கூர்தல்

இன்று அரசியல் தேவை

–டாக்டர் அருண் மித்ரா 

காரல் மார்க்ஸ் 1818 மே 5ல் பிறந்தார். இன்றைய உலகின் கொந்தளிப்பான நிலை மார்க்சின் கருத்துக்களை மீண்டும் பார்க்க நம்மைக் கட்டாயப்படுத்துகிறது, முதலாளித்துவம் குறித்த அவரது விமர்சனம் இன்றும் மிகப் பொருத்தமாக உள்ளது. சமீபத்தில் ஈரானுக்கு எதிராக அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்தும் ஆக்கிரமிப்பு, சமகால ஏகாதிபத்தியத்தைச் செலுத்தும் அதன் தீவிரப் பேராசையை மீண்டும் ஒருமுறை அம்பலப்படுத்துகிறது. மறைவான அதன் நோக்கம் பின்வருமாறு பரவலாகப் புரிந்து கொள்ளப்பட்டது: உலகின் பாதிக்கும் அதிகமான மரபார்ந்த கச்சா எண்ணை இருப்பைச் செறிவாகக் கொண்டுள்ள சவுதி அரேபியா, ஈரான், ஈராக், ஐக்கிய அரபு அமீரகம் (UAE) மற்றும் குவைத் அடங்கிய இந்தத் தெற்காசியா பிராந்தியத்தின் விரிந்து பரந்த இயற்கை வளங்களின் மீது கட்டுப்பாட்டைச் செலுத்துவது அதன் நோக்கம்.

பருவமாற்றப் பிரச்சனையைத் தீர்க்க புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பால் உலகமே கூடுதலாகத் திரும்பி உள்ளபோது, சக்தி மிக்க பெரும் கார்ப்பரேஷன்கள் சுற்றுச்சூழல் பாதிப்புகள் குறித்துச் சற்றும் கவலைப்படாமல் படிம எண்ணெய் (ஃபாசில் ஃப்யூயல்) பயன்பாட்டில் தொடர்ந்து செல்கிறது. இந்த முரண்பாடு, நீடித்த சூழலியல் தன்மை மற்றும் மனிதகுல நலனுக்கு மேலதிகமாக லாபத்தை (கொள்ளை லாபமாக) அதிகபட்சமாக்குவது என்ற முதலாளித்துவத்தின் உள்ளார்ந்த தர்க்கத்தைத் துல்லியமாக எடுத்துக்காட்டுகிறது.

காசாவில் மனிதநேய நெருக்கடி இந்த யதார்த்தத்தை மேலும் விளக்குகிறது. அளவுக்கு அதிகமான இராணுவ நடவடிக்கை, இஸ்ரேலால் 20000 குழந்தைகள் உட்பட பெருமளவு சாதாரண மக்களைப் பலி வாங்குவதில் முடிந்துள்ளது. அத்தகைய வன்முறை மனிதத்தன்மையற்ற விரிவான போக்கையும்; சர்வதேசச் சட்டங்கள் மற்றும் அமைப்புகள் பல நேரங்களில் சக்தி மிக்க அரசுகளைக் கட்டுப்படுத்துவதில் தோல்வி அடைந்த உலக அரசியலில் தண்டனை இன்மையையும் பிரதிபலிக்கிறது.

அனைத்துச் சர்வதேச சட்டங்களையும் மதிக்காமல்  புறந்தள்ளி காசாவுக்கு அப்பாலும் தாக்குதல்கள் நீட்டிக்கப்படுவது உள்ளிட்ட இப்பகுதியில் நீடிக்கும் மோதல்கள், பேராசைகளால் ஏற்படுத்தப்- பட்ட நிலையற்ற தன்மையை வலியுறுத்தி எடுத்துக் காட்டுகிறது. தி ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேச நீதிமன்றம் மற்றும் சர்வதேசக் குற்றவியல் நீதிமன்றம் காசாவில் நடக்கும் இன அழிப்புக்காக நெதன்யாகுவைப் பொறுப்பாளியாக்கி உள்ளன.

இந்த நிகழ்வுப் போக்குகள் –மனித வாழ்க்கைக்கு மேலாக லாபத்தை வைக்கும், சூழலியல் சமத்தன்மையைச் சீர்குலைக்கும் மற்றும் முடிவற்று பற்றி எரியும் மோதல்களுக்கு மேலும் எண்ணை ஊற்றும்– முதலாளித்துவத்தின் மிகக் கோரமான முகத்தை வெளிப்படுத்துகின்றன. லாபத்தைக் குவிப்பது மற்றும் போட்டியால் செலுத்தப்படும் முதலாளித்துவம், சமூகம் மற்றும் இயற்கை இரண்டையும் அச்சுறுத்தும் நெருக்கடிகளை உற்பத்தி செய்யும் என்று மார்க்ஸ் எச்சரித்தார். 

பூகோள-அரசியல் மற்றும் பொருளாதார நலன்களின் உப உற்பத்தி பொருளான உலகளாவிய ஆயுதப் போட்டி, சுற்றுச் சூழலியல் மோசமாவதில் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறது. மனித மேம்பாட்டிற்குப் பயன்படுத்தப்பட வேண்டிய இயற்கைச் செல்வாதாரங்கள், அதற்கு மாறாக இராணுவமயமாக்குதல் நோக்கி திருப்பப்படுகிறது. இதன் விளைவு சமத்துவமின்மை, பாதுகாப்பு இன்மை மற்றும் சூழலியல் நெருக்கடி துன்பங்களால் அடையாளப்படுத்தப்படுகிறது.

இந்தக் கட்டத்தில் மனித குலத்திற்கு முன் உள்ள சவால், குடிமக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், பெண்கள் மற்றும் பிற எளிய பிரிவினரின் உரிமைகள் பாதுகாப்பதை உறுதிப்படுத்துவது குறித்தானது. கட்டுப்படுத்தப்படாத லாபத்தை விட, மாறாக நீதி, சமத்துவம் மற்றும் நிலையான வளர்ச்சி அடிப்படையிலான முறையை நோக்கிய மாற்றல் இதற்குத் தேவைப்படுகிறது 

இந்த முரண்பாடுகளைப் புரிந்து கொள்வதற்கான சட்டகத்தை மார்க்சியம் வழங்குகிறது. அது, வர்க்க உறவுகளில் உள்ளார்ந்து பொதிந்த சுரண்டலிலிருந்து எழும் சமூகச் சமத்துவமின்மை- களை வலியுறுத்துகிறது; அது மட்டுமல்லாமல் அத்தகைய சமத்துவமின்மைகளை உணர்வுள்ள கூட்டு நடவடிக்கை மூலம் வெற்றி காண முடியும் என அறுதியிட்டு உரைக்கிறது. சமூக முறைமைகள் வரலாற்று சூழல் சார்ந்தவை எனப் பார்க்கும், மற்றும் ஆற்றலுடன் கூடிய வளரும்  கோட்பாடான மார்க்சியம் –உதாரணமாக அடிமைத்தனமும் நிலப்பிரபுத்துவமும் முதலாளித்துவத்திற்கு வழிவிட்டது போல, –முதலாளித்துவமும் கூட சோசலிசம் மற்றும் கம்யூனிசத்தால் மாற்றி அமைக்கப்படும் (என்று வரலாற்றுப் போக்கைக் காண்கிறது)

இன்று செல்வம் தொடர்ந்து உலகின் மேல்மட்ட சிலரது கைகளில் குவிந்து கிடக்கிறது; அதே நேரம் மக்கள் திரளின் பெரும் பிரிவினர்கள், அடிப்படை உரிமைகளுக்காகவும் கண்ணிய வாழ்விற்காகவும் போராடிக் கொண்டிருக்கின்றனர். முன்னேறிய முதலாளித்துவச் சமூகங்களும் கூட சமத்துவமின்மை மற்றும் சமூக நீதி குறித்த அடிப்படை பிரச்சனைகளைத் தீர்ப்பதில் தோல்வி அடைந்துள்ளன.

வளர்ந்து வரும் நாடுகள், சக்தி மிக்க நாடுகளின் பொருளாதார மற்றும் அரசியல் அழுத்தங்களுக்குப் பாதிக்கப்படக் கூடியனவாக இருக்கும்போது, பல நேரங்களில் செல்வாதாரங்கள் மீதான மோதல்கள் வழியே அவை வெளிப்படுகின்றன. கோவிட் பெருந்தொற்று போன்ற மிகத் தீவிரமான சுகாதார நெருக்கடி சூழ்நிலைகளின் போதும் கூட, பெரிய மருந்து கார்ப்பரேஷன்கள் சிறிய நாடுகளுக்குத் தடுப்பு மருந்துகளை வழங்கும்போது அச்சுறுத்தி மிரட்டின (பிளாக் மெயில் செய்தன).

இந்தியாவில் சந்தையாலும், ஏகாதிபத்தியச் சக்திகளின் குறிப்பாக அமெரிக்காவின் அழுத்தங்களாலும் செலுத்தப்படும் கொள்கைகளால் சமீபத்திய பொருளாதாரப் போக்குகள் வடிவமைக்கப்பட்டன:  அவை  வேலையின்மை, உண்மை ஊதியம் வீழ்ச்சி மற்றும் கல்வி, சுகாதாரப் பராமரிப்புப் போன்ற அத்தியாவசிய சேவைகள் கிடைப்பதைக் குறைத்ததில் பங்களித்தன சமீபத்தில் அமெரிக்கா உடன் ஏற்படுத்தப்பட்ட வர்த்தக ஒப்பந்தம் இந்திய அரசின் பலவீனங்களை அம்பலப்படுத்தி விட்டது.

அத்தகைய நிலைகள் பரவலான அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது. அதற்கு மறு வினையாக அதிகாரத்தில் உள்ளவர்கள் தங்கள் ஆட்சி அதிகாரத்தைத் தொடர, ஒடுக்கு முறையை நாடுகின்றனர்; போலி தேசியவாதம், வரலாற்றைச் சிதைப்பது மற்றும் அடையாளம், சமய நம்பிக்கை, இன அடிப்படையிலான சமூகப் பிளவுகளை ஊக்குவித்து வளர்க்கின்றனர். 

இந்தக் கட்டத்தில், அடையாள அடிப்படையிலான போராட்டங்களுடன் விமர்சன ரீதியாக ஆராய்ந்து ஈடுபடும்போது, வர்க்க அரசியலின் முதன்மையை மீண்டும் வலியுறுத்துவது முக்கியமானது. தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் இடையில் ஒற்றுமையைக் கட்டுவது மற்றும் மாற்றுக் கருத்தியல் விவரிப்பை மேம்படுத்துவது, புதிய தாராளமய முதலாளித்துவத்தின் ஆதிக்கத்தை எதிர்ப்பதை நோக்கிய முக்கிய நடவடிக்கைகளாகும்.

இன்று காரல் மார்க்ஸை  நினைவு கூர்தல் வெறும் அறிவார்த்த நடவடிக்கை அல்ல –அது அரசியல் தேவையாகி உள்ளது. அவரது நுண்ணோக்கு ஆய்வு பார்வை, மேலும் நியாயமான, சமத்துவமான மற்றும் நிலையான உலகம் நோக்கிய பாதையைத் தொடர்ந்து ஒளிபெறச் செய்கிறது.                      

 நன்றி : நியூ ஏஜ் (மே 10 –16)

தமிழில் : நீலகண்டன், 

என்எப்டிஇ கடலூர்


Thursday, 7 May 2026

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 148 -- மாலினி துல்புலே

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 148 


மாலினி துல்புலே –உழைக்கும் பெண்கள் இயக்கத்தில்

கம்யூனிசத்தை அறிமுகம் செய்தவர்

–அனில் ரஜீம்வாலே 


மாலினி துல்புலே தனித்துவமான ஆளுமையாளர், பொதுவாகத் தொழிலாளர் இயக்கத்திலும், குறிப்பாக உழைக்கும் பெண்கள் மற்றும் அறிவாளர்கள் மத்தியிலும் அரசியலைக் கொண்டு வந்தவர். பூனா மற்றும் மகாராஷ்டிராவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டிய முன்னணியாளர்களின் அவர் ஒருவர். பூனாவில் ஆகச் சிறந்த குடிமகள் விருது வழங்கப்பட்டவர்.

தொடக்க வாழ்க்கை

பரோடா அரச மாகாணத்தின் மெஹ்சானா கிராமத்தில் 1922 அக்டோபர் 1ம் தேதி பிறந்தார். துவாரகா எனப் பெயர் சூட்டப்பட்டார். அவருடைய தந்தை சங்கர்ராவ் பட்வர்தன் முனிசிபாலிட்டி செயலாளர். குடும்பம் பொருளாதாரத்தில் அவ்வளவு நன்றாக இல்லாதபோதும் அவர் தேசியம் மற்றும் விடுதலைப் போராட்டச் சூழலில் வளர்க்கப்பட்டார். பெரும்பாலும் பையன்கள் மத்தியில் விளையாடி வாழ்ந்ததால் அவர் கூச்ச சுபாவம் இல்லாமல் இருந்தார்.

மராத்தி பேசும் சமூகம் குறைவான எண்ணிக்கையுடன் சிறியது, அதைச் சூழ்ந்து குஜராத்தி பேசும் மக்கள் இருந்தனர். எனவே அவர்களுக்கு ஏராளமான செயல்பாடுகள் இருந்தன, அதில் போதுமான அளவு மாலினி ஆழ்ந்திருந்தார். அவர் மராத்தி, குஜராத்தி, ஆங்கிலம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளைக் கற்றார்.

செவ்வியல் இசை மற்றும்  நுண்கலையில் அதிக விருப்பம் உடைய அவர், நீண்ட தொலைவு பயணம் செய்து பம்பாய்க்குச் சென்று பால்-கந்தர்வாவின் நாடகங்கள் பார்ப்பார். அவரது குடும்பத்தால் இசை, இலக்கியம் மற்றும் அது தொடர்பான துறைகளில் அவருக்குத் தொடர்ந்த முறையான பயிற்சி அளிக்க இயலவில்லை. அவர் ஆஜ்மீர் மத்திய கல்வி போர்டு, நாக்பூர் வித்யா பீடம் மற்றும் பனாரஸ் பல்கலைக் கழகத்திலிருந்து பிஏ மற்றும் எம்.ஏ  பட்டமும் கலைகளில் பட்டமும் பெற்றார். 

திருமணம் 

ஓர் உறவினர் மூலம் வசந்த் துல்புலே உடன் மாலினிக்குத் தொடர்பு ஏற்பட்டது. அவர் முதலில் காங்கிரஸிலும் பின்னர் காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி ஊழியராகவும் பின்னர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முழுநேர  ஊழியர் ஆனவர். அவரது குடும்பமும் அறிவார்ந்தது. அவர்கள் 1944ல் திருமணம் செய்து கொண்டனர் 1946ல் கோபர்கோன் (அகமது நகர் மாவட்டத்தின் ஒரு நகராட்சி) என்ற இடத்தில் வசிக்கத் தொடங்கினர். 

மாலினியின் மாமியார் சரஸ்வதி பாய் தீவிரமான செயல்பாட்டாளரும், திறன் மிக்க ஆளுமையாளரும் ஆவார். மாலினி பின்னர் அவர் குறித்து விரிவான கட்டுரை எழுதியுள்ளார். .மாலினியின் மாமனார் ஒரு புகழ்பெற்ற காங்கிரஸ் தலைவர். எனவே அந்த முழுமையான சூழ்நிலையும் அரசியல் மற்றும் சமூகம்  சார்ந்து இருந்தது.

சரஸ்வதிபாய் சுதேசியைத் தீவிரமாக ஆதரித்தார். அவர் ஒரு கூட்டத்தில் சரோஜினி நாயுடுக்கு முன்பு சில தலைவர்களின் இரட்டை வேடத்தை அம்பலப்படுத்தினார். இதன் விளைவாய் அவரது குடும்பத்தினர் உட்பட ஒவ்வொருவரும் கதர் உடுத்தத் தொடங்கினர். அவர் கூட்டுக் குடும்பத்தின் குழந்தைகளுக்காகக் கதர் துணிக்கு வண்ணம் தோய்த்து அதில் எம்பிராய்டரி பூவேலைப்பாடுகள் செய்து தந்தார். 1943ல் கஸ்தூரிபாய் இறந்த பிறகு மக்களிடமிருந்து  ஏராளமான நிதி திரட்டினார். 

அரசியல் மற்றும் தொழிற்சங்கச் செயல்பாடுகள் 

காந்தியின் ஆழமான செல்வாக்குக்கு ஆட்பட்ட மாலினி, அகில இந்திய பெண்கள் காங்கிரஸில் பணியாற்ற தொடங்கி தமது பதினாறாவது வயதில் அதன் செயலாளர் ஆனார். பின்னர் அவர் அகமத்நகர் மற்றும் பூனாவில் பீடி மற்றும் சர்க்கரை ஆலை தொழிலாளர்களைத் திரட்டி அமைத்தார். அகமத் நகரில் சட்டவிரோத வரிகளுக்கு எதிராக விவசாயிகளயும் கூட அவர் திரட்டினார்.

இந்திய விடுதலை 

கோபர்கோன் தாலுகா கச்சேரியில் துல்புலே-கள் 1947 ஆகஸ்ட் 15ல் இந்திய விடுதலையைக் கொண்டாடும் வகையில் மூவர்ண கொடியேற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.

பிடிஆர் காலகட்டம்

பல தோழர்களைப் போல வசந்தராவ் மற்றும் மாலினி துல்புலே உட்கட்சிப் போராட்டத்தில் கடினமான நேரங்களையும், வெளியே ஒடுக்குமுறைகளையும் அனுபவித்தனர்.  வசந்தராவ் கைது செய்யப்பட்டார். அந்த நேரத்தில் பனாரஸ் இந்து பல்கலைக்கழகத்தில் தனது எம் ஏ பட்டப்படிப்பைப் படித்துக் கொண்டிருந்த மாலினி, தேர்வுக்கு இரண்டு மாதங்கள் முன்பிருந்தே அங்கு தங்கியிருந்தார். எனவே அவரைக் கைது செய்ய முடியவில்லை. அவர் திரும்பி வந்ததும் அஹமத்நகரில் தங்க முடிவு செய்தார்.

அவருக்குச் சாந்தாபாய் குல்கர்னி, பாபா கோசாயி, பி எம் மகாஜன், பாய் சத்யா மற்றும் அவர்கள் போன்ற பல தோழர்களுடன் அறிமுகம் ஏற்பட்டது. ஏராளமான கம்யூனிஸ்ட் தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

பாய்சத்யா மராத்தி மொழியில் இன்குலாப் என்ற இதழை வெளியிடத் தொடங்கினார், அதில் மாலினி  விளக்கமாகக் கட்டுரைகள் எழுதினார்.

தலைமறைவு கம்யூனிஸ்ட்டுகளைத் தேடிய போலீஸ், ஏழை மக்களின் சில குடியிருப்புகளைத் தாக்கியது. குறிப்பாகப் பெண்களை மிரட்டி அவர்களைப் பீதியடையச் செய்தது. ஆறு மைல் தொலைவு நடந்து சென்று மாலினி அந்தப் பெண்களை –பயத்தில் மூன்று நாட்களாக சமையல் கூட செய்யாத அப்பெண்களை –சந்தித்தார். மாலினியின் இருப்பே பெண்களுக்குப் பெரும் ஊக்கமாக அமைந்தது.

விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சியில் இணைதல்

மார்ச் 1947ல் மகாராஷ்டிரா காங்கிரஸ் கட்சியின் கூட்டம் ஒன்று நடைபெற்றது; அதில் ஒரு பிரிவினர் காங்கிரஸ், ‘பகுஜன் சமாஜ்’க்கு உதவிகரமாக இல்லை என முடிவு செய்தனர். எனவே வெளியேறி தனி கட்சி அமைக்க அவர்கள் முடிவு செய்தனர். கட்சியை விட்டு வெளியேறியவர்களில் கேசவ்ராவ் ஜெயதே, சங்கர்ராவ் மோர், ஆர்கே கட்டில்கர், நானா பட்டேல் மற்றும் பிறர் அடங்குவர். மகாராஷ்டிராவில் அவர்கள் விவசாயிகள் மற்றும் தொழிலாளர்கள் கட்சியை 1947 ஆகஸ்ட் 3ல் அமைத்தனர்.

அக்கட்சியின் தலைவர்கள் நகருக்கு வந்து பாய்சத்யா இல்லத்தில் ஒரு கூட்டத்தை நடத்த, டவுனில் அக்கட்சி அமைப்பை ஏற்படுத்த ஏதுவாயிற்று. மாலினி அதுவரையில் சிபிஐ கட்சியில் இணையவில்லை. விவசாயிகள் தொழிலாளர்கள் கட்சி (PWP)யின்பால் மக்கள் ஈர்க்கப்பட்டனர் மற்றும் சிபிஐ நல்ல நிலையில் இல்லை. மாலினி PWPல் இணைந்தார், சிறையில் இருந்து விடுதலையானதும் வசந்தராவும்கூட PWPல் இணைந்தார்.

1950 வாக்கில் வசந்தராவ் மற்றும் மாலினி நகரில் இருந்து பூனாவுக்குக் குடிபெயர்ந்தனர். 1952 தேர்தல்களில் PWP கட்சி மோசமான தோல்வியை அடைய கட்சிக்குள் அது நெருக்கடியை ஏற்படுத்தியது. வசந்த்ராவ் உட்பட கட்சியின் பெரும் பிரிவினர், வேறு பலர் எதிர்த்தபோதும், கட்சியை சிபிஐ உடன் இணைக்க வற்புறுத்தினர்.

விவசாயிகள் தொழிலாளர் கட்சியைக் கலைத்துவிட்டு சிபிஐயுடன் இணைப்பதை மாலினி தீவிரமாக ஆதரித்தார். சிபிஐயில் இணைய அவர் தன்னிச்சையாக முடிவு செய்து PWP பொதுச் செயலாளருக்குத் தனது  ராஜினாமா கடிதத்தைச் சமர்ப்பித்தார். அது 1954 ஏப்ரல். அவர் PWP மத்திய கட்சி அலுவலகச் செயலாளராகப் பணியாற்றி வந்தார். அவர் தனது ராஜினாமா கடிதத்தில், ‘மார்க்சியத்தில் நம்பிக்கை உள்ள அனைவரும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில்  இருக்க வேண்டும்’ என்று தெரிவித்தார். இந்த வழியில் மட்டும்தான் ஜனநாயகப் புரட்சிகர முன்னணியை வலிமைப்படுத்த முடியும். பின்னர் அவர் சிபிஐயில் இணைந்தார்.

1955 பிப்ரவரி 8 சங்கிலியில் நடந்த PWP மாநாட்டில் சிபிஐயுடன் இணைக்கும்  முன்மொழிவு தோற்கடிக்கப்பட்டது.

உழைக்கும் பெண்கள் குழு மற்றும் பெண்கள் விடுதலை இயக்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு (ஷ்ராமிக் மகிளா சமிதி மற்றும் ஸ்திரீ முக்தி அந்தோலன் சம்பர்க் சமிதி)

உழைக்கும் பெண்கள் குழுக்கள்

அகில இந்திய பெண்கள் மாநாட்டில் (AIWC) சங்கர்ராவ் மோரின் மனைவி சாந்தாபாய் மோருடன் மாலினி’தாய் வழக்கமாகப் பணியாற்றினார். (‘தாய்’ என்ற பின்னொட்டு மராத்தியில் பெண்களை மரியாதையுடன் அழைக்கும் முறை. மூத்த சகோதரி /அக்கா அல்லது மரியாதைக்குரிய பெண்மணி என்று பொருள்)

சுதந்திரத்திற்கு முன்பு காங்கிரஸ்காரர்கள், கம்யூனிஸ்டுகள் மற்றும் சோசலிஸ்ட்கள் உட்பட அனைத்து முற்போக்கு பிரிவினர்களும் –பெண்களின் பரந்துபட்ட அமைப்பாக விளங்கிய– அனைத்திந்தியப் பெண்கள் மாநாட்டில் பணியாற்றினர். சுதந்திரமே முக்கிய நோக்கமாக இருந்ததால் அமைப்பும் அதனது ஒற்றுமையைப் பராமரிக்க முடிந்தது.

ஆனால் சுதந்திரத்திற்குப் பிறகு கருத்தோட்டங்கள் பலவாக, வேறுபாடுகள் ஏற்படத் தொடங்கின. வெளியேறிய கம்யூனிஸ்டுகள் ஷ்ராமிக் மகிளா சமிதி (உழைக்கும் பெண்கள் குழு)வை அமைத்தது ஒரு முக்கியமான நிகழ்வு.

முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று ‘பெண்கள் விடுதலைக்கான இயக்கங்களின் ஒருங்கிணைப்பு குழு’ (ஸ்திரீ முக்தி அந்தோலன் சம்பர்க் சமிதி) அமைக்கப்பட்டது. 1970களில் மாலினி துல்புலே, சாயா தாதர், லீலா போஸ்லே, குமுத் போர், சுலபா பிரம்மி, சவுதாமணி ராவ், நிர்மலா சாத்தே முதலானவர்கள் முன்னெடுப்பில் இந்த அமைப்பு அமைக்கப்பட்டது. இந்த ஒருங்கிணைப்புக் குழு, பங்கேற்பாளர்கள் ஆர்வமுடன் கலந்து கொண்ட இரண்டு நாள் பயிற்சி பட்டறையைப் பூனாவில் நடத்தியது. இந்தப் பயிற்சி பட்டறையின்போது பெண் கல்வியாளர்கள் முதல் வயலில் பணியாற்றும் பெண் தொழிலாளர்கள் வரை மற்றும் பெண் உழைப்பாளர்கள் அடங்கிய குழுக்கள் பெண்கள் பிரச்சனைகளை விவாதித்தன. மும்பை, பூனா போன்ற பெரிய நகரங்கள் மட்டுமின்றி கிராமப்புறப் பகுதிகளிலும்கூட பெண்களின் அமைப்புகள் அமைக்கப்பட்டன.

இந்தச் சமிதி பால் விநியோகம் செய்ய, சிறு குழந்தைகளுக்கான பள்ளிகள், எழுத்தறிவு வகுப்புகள், ரேஷன் பொருட்களை ஏற்பாடு செய்தல் முதலியவற்றுக்கான மையங்களை அமைத்ததுடன் அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டது. இந்தப் பெண்களின் குழு ‘இந்திய மாதர் தேசியச் சம்மேளன’த்துடன் (NFIW) இணைப்புப் பெற்றது. மாலினி’தாய் துல்புலே மற்றும் ரோசா தேஷ்பாண்டே இருவரும் பொதுச்செயலாளர்கள் ஆக்கப்பட்டனர்.

1964 மார்ச் 9ல்  பம்பாய் சட்டமன்றம் முன்பு 15ஆயிரத்திற்கும் அதிகமான பெண்கள் கலந்து கொண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தின் முக்கிய பிரச்சனை, தொழிற்சாலையில் பணியாற்றும் வரை பெண்கள் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்ற முன்நிபந்தனையை எதிர்ப்பது. திருமணத்திற்கு எதிரான இந்த நிபந்தனை பரவலாக எதிர்க்கப்பட்டது. இந்த அமைப்பு பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கையெழுத்துக்களைத் திரட்டி சட்டமன்றத்திற்குச் சமர்ப்பித்தது.

பெண் தொழிலாளர்கள் நிர்பந்தத்ததில் அரசு, பெண் தொழிலாளர்கள் திருமணம் குறித்த முன்மொழிவைத் திரும்பப் பெற்றது.

1965 மற்றும் 1973ல் சமிதியின் பிரம்மாண்டமான மாநாடுகள் நடத்தப்பட்டன.

சம்பர்க் சமிதி (ஒருங்கிணைப்புக் குழு) அமைக்கப்பட்டது மற்றும் மகாராஷ்டிராவில் பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டதன் மூலம் பெண்களின் இயக்கத்தை ஊக்கம் பெறச் செய்தது. அது முறையான கூட்டங்கள், கருத்துப் பரிமாற்றம், மார்ச் 8ல் பெண்கள் தின விழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகளைக் கூட்டாக அமைத்து நடத்தியது, பல்வேறு அமைப்புகளின் கோரிக்கைகளைக் கூட்டாக மேலே எடுத்துச் சென்றது. 1987-ல் அரசு ‘பெண்களுக்கான தேசிய நெடுநோக்கு திட்ட’த்தைத் தயாரித்தது. பெண்களின் ஒருங்கிணைப்புக் குழு பெண்களுக்கான தினக்கூலி, பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பக் கல்வி தொடர்பான சில முக்கிய  சிபாரிசுகளைச்  செய்தது. 1990ல் இந்த அமைப்புப் பெண்கள் இயக்கத்தின் அறிக்கை (மெனிபெஸ்டோ) ஒன்றையும் பிரசுரித்தது

‘டப்பா-பாட்லிவாலி’ பெண்கள் இயக்கம்

1960 –70களில் சமிதி ‘டப்பா பாட்லிவாலி’ என்ற தனித்துவமான இயக்கத்தை முன்னின்று நடத்தியது (‘டப்பா பாட்லிவாலி’ என்பதன் பொருள் பழைய பாட்டில்கள், பெட்டிகள் மற்றும் பாத்திரங்களை விற்கும் பெண்கள்). அந்த இயக்கத்தில் மாலினி’தாய் தீவிரமாக ஈடுபட்டார். ஏழைப் பெண்கள் வழக்கமாகக் குடியிருப்புப் பகுதிகளில் சுற்றி வந்து பழைய பாத்திரங்கள் மற்றும் பிற பொருட்களை வாங்குவர். பம்பாயில் தலையில் கூடையுடன் செல்லும் இத்தகைய பெண்கள் ஒரு சாதாரண காட்சி. இப்படி அவர்கள் வாங்கிச் சேகரித்த பொருட்களைக் கொண்டுவரும் அதற்கான இடம்தான் டப்பா-பாட்லிவாலா பஜார். அந்த இடத்தை ஒவ்வொரு ஆண்டும் கார்ப்பரேஷன் காண்ட்ராக்ட்க்கு ஏலம் விடும்.

அவர்கள் அந்த இடத்திற்குப் பல முறை (‘பெரீஸ், ‘pheris’) பழைய பொருட்களைச் சேகரிக்கவோ அல்லது வாங்கவோ திரும்பத் திரும்ப  வரவேண்டி இருக்கும். ஒவ்வொரு முறையும் அவர்கள் நுழைவு கட்டணம் செலுத்த வேண்டும். இந்த வேலை அவர்களுக்கு ஒரு சிறிய லாபத்தை மட்டுமே தந்தது. 

அது டப்பா-பாட்லிவாலிகள் உட்காருவதற்கான ஒரு இடம் அல்லது அத்தகைய மைதானம். அதற்கு அவர்கள் கட்ட வேண்டிய வாடகை அவர்களுக்கு அதிகமாகவே இருந்தது. எனவே வாடகையைக் குறைக்க அவர்கள் கோரிக்கை எழுப்பினர்.

அதற்காக அவர்கள் எட்டணாவில் இருந்து இரண்டு ரூபாய் வரை செலுத்த வேண்டி இருந்தது. அது தவிர அமரும் இடம் பொருத்தமற்றதாகவும் அழுக்கும் மற்றும் வெயில் மழையிலிருந்து பாதுகாக்க மேற்கூரை இல்லாமலும் இருந்தது. இதற்காகச் சமிதி பிரம்மாண்டமான இயக்கத்தைத் தொடங்க அதன் விளைவாய் ஆறு பைசா வாடகையில் நான்குக்கு நான்கு என்ற அமரும் இடம் கிடைத்தது மட்டுமின்றி, 6 பைசா வாடகைக்கு ரசீதும் தரப்பட்டது. இது ஷ்ராமிக் மகிளா சமிதிக்கு (உழைக்கும் பெண்கள் அசோசியேனுக்கு) மாபெரும் வெற்றி.

மாலினிபாய், சாந்தாபாய், மால்டிபாய் மற்றும் அவர்களின் கூட்டாளிகள் வடக்கையைக் குறைக்கவும் மற்றும் சாதகமான பணிச் சூழலை ஏற்படுத்தவும் டப்பா பாட்லிவாலிகளை ஒன்று திரட்ட முன்கையெடுத்தனர். இதன் விளைவாய் உழைக்கும் பெண்கள் ஒரு நாளைக்குச் சுமார் இரண்டு ரூபாய் சேமிக்க முடிந்தது, பெரும் ஆறுதலாகவும் நிம்மதியாகவும் இருந்தது. ஒரு நாளைக்கு ஒவ்வொரு முறை நுழையும் போதும் வாடகை செலுத்தும் முறை நிறுத்தப்பட்டு ஒரு நாளைக்கு ஒருமுறை மட்டுமே வாடகை செலுத்தினால் போதும் என்று மாற்றப்பட்டது.

தொழிற்சங்கப் போராட்டங்கள் 

ஏஐடியுசி அமைப்பின் கீழ் இணைக்கப்பட்டிருந்த பல்வேறு தொழிற்சங்கங்களிலும் மாலினி’தாய் தீவிரமாகப் பணியாற்றினார். அவர் மருத்துவமனை தொழிலாளர்கள் சங்கத்தை அமைக்க உதவினார். பூனாவில் செவிலியர்கள் மற்றும் பல்வேறு ஊழியர்கள் மத்தியிலும், மும்பை கே இ எம் ஹாஸ்பிடல், இன்ஜினியரிங் தொழிலாளர்கள், கெமிக்கல் தொழிலாளர்கள் சங்கங்களிலும் மற்றவற்றிலும் அவர் தீவிரமாகப் பணியாற்றினார்.

கோவா சத்தியாகிரகம்

1955ல் நடைபெற்ற கோவா சத்தியாகிரகத்தில் மாலினி’தாய் முன்னணிப் பங்கு வகித்தார். நானாசாஹேப்  கோர், சேனாபதி பாபெட் மற்றும் பிறர் தலைமையில் பங்கேற்ற சத்யாகிரகிகளைப் போர்த்துக்கீசிய காவலர்கள் பிடித்துப்போய் காடுகளில் விட்டனர். வேறு பலரும் (கோவா) அகுடா கோட்டை சிறைக்கு அனுப்பப்பட்டனர்.

ராஜாராம் பாட்டில் தலைமையிலான அடுத்த குழுவில் மாலினி’தாய் இருந்தார். பலரும் அவரைத் தடுக்க முயன்று போர்த்துக்கீசிய காவலர்கள் மற்றும் இராணுவத்தின் முரட்டுத்தனத்தைக் கூறி எச்சரித்தனர். ஆனால் மாலினி’தாய் பின்வாங்கவில்லை. “அடி உதைகளையும் சித்திரவதைகளையும் ஆண்கள் சந்திக்கிறார்கள். நானும் அதையே சந்திப்பேன். அதில் என்ன பிரச்சனை?” என பதிலடி கொடுத்தார்

வீரப் பெண்மணியான அவரது மாமியார் அவரைப் பெரிதும் உற்சாகப்படுத்தினார். “நீ போவது என்று முடிவு செய்து விட்டாய்; உன் முடிவில் நீ உறுதியாக இரு. ஒருமுறை முடிவு செய்த பின் உன் முடிவை மாற்றாதே” என்றார். அவரது வார்த்தைகள் அபாரமான தார்மீக ஆதரவாக இருந்தது. கலந்து கொள்வது என மாலினி உறுதியாக முடிவு  செய்தார்.

அவரது குழு அரோண்டா வழியாகக் கடற்படை மாலுமிகள் உதவியுடன் போர்த்துக்கீசிய எல்லையை அடைந்தது. அரசு கட்டிடத்தின் மீது மூவர்ணக் கொடியை ஏற்ற ரகுநாத் சாவன், சதாசிவ கார்க்கனீஸ் மற்றும் சிலர் மெல்ல நழுவினர். போர்த்துக்கீசியர் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி பெட்னே என்பவர் மூவர்ண கொடியை வெற்றிகரமாக ஏற்றினார்.

கைது செய்யப்பட்ட சத்தியாக்கிரகிகள் சிறிய இடத்தில் அடைத்து வைக்கப்பட்டு மோசமாக அடிக்கப்பட்டனர். மாலினி’தாய் அடிகளிலிருந்து தப்பினாலும் அவரது கால் ஓர் இராணுவ வீரரின் பூட்ஸ்களால் நசுக்கப்பட்டது. பின்னர் வேறு சில தனி நிகழ்வுகளில் போர்த்துக்கீசிய வீரர்களைச் சந்தித்தபோது அடிபட்டார். போர்த்துக்கீசிய வீரர்களின் கமாண்டர் மான்டேரோ மாலினியின் கீழ்ப்படிதலற்ற பதில்களால் சீற்றமடைந்தார். “ஆம் நான் மீண்டும் வருவேன்!” என்றார் மாலினி’தாய். பின்னர் அவர்கள் ஒரு லாரியில் ஏற்றப்பட்டு அடை மழையில் காடுகளில் விடப்பட்டனர்.

பின்னர் மாலினி’தாய் கோவா சத்தியாகிரகம் குறித்துப் பல்வேறு நிகழ்வுகளை விவரித்து எண்ணற்ற கட்டுரைகள் எழுதினார்

இந்திரா சமூகச் சமையற்கூடம்

இந்திரா சமூகச் சமையற்கூடம் என்ற பெயரில் ஒரு நல்ல மலிவு உணவு திட்டம், 10 உணவு வழங்கும் இடங்களுடன் ஓர் அறக்கட்டளையால் தொடங்கப்பட்டது. உழைக்கும் பெண் உறுப்பினர்கள் மலிவு விலையில் உணவு, மருந்துகள், விலை இல்லா புத்தகங்கள் உள்ளிட்ட ஏராளமான வசதிகளை வழக்கமாகப் பெற்றனர். பெண்கள் அமைப்பாகத் திரண்டனர் மற்றும் சில கோரிக்கைகளை அடையவும் செய்தனர். ஏறத்தாழ எல்லா தொழிலாளர்களும், தங்கள் குடும்பங்களால் ஒதுக்கப்பட்டவர்கள் உட்பட, ஏழைப் பெண்கள் ஆவர்.

ஆனால் பின்னர் அந்த உரிமையாளர் நிதியை ஏராளமாக வாரிச் சுருட்டத் தொடங்கினார் மற்றும் தொழிலாளர்களை ஆட்குறைப்புச் செய்தார் அல்லது தொழிலாளர்களுக்குத் தொந்தரவுகளை ஏற்படுத்தினார். அதை அடுத்து மாலினிபாய் மற்றும் மற்றவர்கள் அவர்களின் பிரச்சனையை எடுத்து நீண்ட போராட்டங்களை நடத்தினர்.

வீர் அணைக்கட்டுக்கான போராட்டம்

அந்த அணைக்கட்டு பூனா –சத்தாரா சாலையில் நீர் நதியின் மீது வீர் கிராமத்திற்கு அருகில் அமைந்திருந்தது. அரசு 1956-ல் அணையின் மட்டத்தை உயர்த்த முடிவு செய்தது; இதன் விளைவாய்ப் பல்வேறு கிராமங்கள் மூழ்கும் நிலை வரும்.1956 ஆகஸ்டில் பாதிக்கப்பட்ட மக்களின் மாநாடு ஒன்று முதலில் மக்களுக்கு மறுவாழ்வு பின்னர் அணையின் மட்டத்தை உயர்த்துவது என்று கோரியது. எல்லா கட்சிகளாலும் இந்தக் கோரிக்கை ஆதரிக்கப்பட்டது. அவர்கள் (அணைக்கட்டிற்கு) நிலத்திற்குப் பதிலாக நிலம் கோரினர். இப்போராட்டத்தில் மாலினி’தாய் மற்றும் வசந்தராவ் முன்னணிப் பங்கு வகித்தனர். கிராமத்தவர்கள் ஒவ்வொருவருக்கும் ஆறு ஏக்கர்கள் நிலம் கிடைத்தது.

வீட்டு வேலை செய்யும் பெண்களின் அமைப்பு 

குமுத் போர் மற்றும் பிறருடன் இணைந்து மாலினி’தாய், வீட்டு வேலை செய்யும் பெண்களின் சேவை நிலைமைகளை மேம்படுத்த இந்த அமைப்பை நிறுவினார். இந்த அமைப்பு 1987 ஜனவரி 9ல் ஊதிய கட்டமைப்பு, போனஸ், கிராஜுட்டியை முறைப்படுத்தல் உள்ளிட்ட நான்கு அம்ச கோரிக்கை பட்டியலை வழங்கியது

ஏஐசிபி கட்சியில் இணைதல் 

பின்னர் மாலினி’தாய் துல்புலே அவரது நம்பிக்கையின் காரணமாக அகில இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் (AICP) சேர்ந்தார் –அதே நேரத்தில் அவரது கணவர் வசந்தராவ் துல்புலே சிபிஐ கட்சியில் நீடித்தார். இறுதி நாட்களில் உடல் பலகீனம் மற்றும் சிபிஐயில் இருந்து விலகி இருந்தது காரணமாக மாலினி’தாய் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தார் –இருந்த போதும் அவர் ஏஐடியூசி தொழிற்சங்கத்திலும் வேறு சில நடவடிக்கைகளிலும் தொடர்ந்து நீடித்தார்.

மாலினி’தாய் துன்புலே 2009 டிசம்பர் 14ல் இயற்கை எய்தினார்

அவரது எழுத்துப் பணிகள் 

மார்க்சியத்தின் அடிப்படை நூல்கள் உட்பட மாலினி’தாய் ஏராளமாகப் படிப்பவர். அதே நேரத்தில் அவர் பல்வேறு மார்க்சிய நூல்களை எழுதவும் மொழிபெயர்க்கவும் கூட செய்தார். அவர் கட்சிக்கும் மாதர் சம்மேளனத்திற்கும் மற்றும் பிற பெண்கள் அமைப்பிற்கும் பல்வேறு அறிக்கைகள், பிரசுரங்களை எழுதுவது வழக்கம். மற்ற படைப்புகள் தவிர குஜராத்தி மற்றும் ஆங்கிலத்தில் இருந்து பல்வேறு நூல்களையும் மொழிபெயர்ப்புச் செய்துள்ளார். ஸ்திரீ, கிர்லோஸ்கர் உள்ளிட்ட பல மராத்திய இதழ்களுக்கும் அவர் ஏராளமாக எழுதினார். பூனாவில் தொழிலாளர்கள் இயக்க வரலாறு குறித்து அவர் எழுதினார். மேலும் அவர் தனது கணவர் வசந்தராவ் துல்புலே வாழ்க்கை மற்றும் பணிகள் குறித்தும் எழுதினார். பூனா அட்வான்ஸ் ஆய்வுகள் நிறுவனத்தில் அவர் கற்பித்தார். மார்க்ஸ் எழுதிய “லூயிஸ் (நெப்போலியன்) போனபார்ட்டின் பதினெட்டாவது ப்ரூமைர்” நூலை அவர் மராத்தியில் மொழிபெயர்த்தார்.

மாலினி’தாய் நினைவைப் போற்றுவோம்!

--நன்றி : –நியூஏஜ் (மார்ச் 29 –ஏப்ரல் 4) 
–தமிழில் நீலகண்டன், 
என் எஃப் டி இ, கடலூர்
 
பின் இணைப்பு :

     (லூயிஸ் நெப்போலியனின் பதினெட்டாவது ப்ரூமெய்ர் --  என்பது, லூயிஸ் நெப்போலியன் போனபார்ட் (நெப்போலியன் III) 1851-ல் நிகழ்த்திய ஆட்சிக் கவிழ்ப்பை விவரிக்கும் காரல் மார்க்ஸின் புகழ்பெற்ற அரசியல் பகுப்பாய்வு நூல். 1799-ல் முதலாம் நெப்போலியனின் அதிகாரக் கைப்பற்றலை (18 Brumaire, பிரெஞ்சு ரிபப்ளிகன் நாட்காட்டின்படி ப்ரூமெய்ர் மாதத்தின் 18வது நாள்) நினைவுபடுத்தும் வகையில், இந்த நிகழ்வை மார்க்ஸ் "வரலாறு முதலில் சோகமாக நிகழ்ந்த பின், கேலிக்குரிய நகைச்சுவையாக மீண்டும் நிகழ்கிறது" என்று விவரித்தார் –இணையத்திலிருந்து கூடுதல் இணைப்பு

 

 .