Wednesday 29 March 2023

வைக்கம் பாரம்பரியம்

 

வைக்கம் பாரம்பரியம் : இந்துத்துவா சக்திகளை முறியடிப்பீர்

சாதியத்துடன் போராட

உழைக்கும் மக்களே எழுக!

                                            கானம்ராஜேந்திரன்   கேரள மாநிலச் செயலாளர், சிபிஐ 

             வைக்கம் சத்தியாகிரகம், சாகசம் நிரம்பிய எதிர்ப்புப் போராட்டக் கதை; கேரளாவின் அரசியல் மற்றும் சமூக வளர்ச்சியில் அதற்கு இணையான நிகழ்வு வேறெதுவும் இல்லை. 1924ல் தொடங்கிய அப்போராட்டத்தின் நூற்றாண்டை நாம் கொண்டாடுவோம். அகிம்சை அடிப்படையிலான வைக்கம் போராட்டம் முதன் முறையாகத் தீண்டாமை மற்றும் முறையற்ற பழக்க வழக்கங்களுக்கு எதிராகக் குரல் எழுப்பிய இயக்கம்; இந்தியாவில் முக்கியமான போராட்டத்தில் அத்தகு விஷயங்கள் போராட்டத்தின் மையப் பிரச்சனையாக ஒருபோதும் இருந்ததில்லை. மேலும் கேரளாவில், ஏன் இந்தியா முழுமையிலுமே முதலாவது வெற்றிகரமான போராட்டம் அது, உழைக்கும் மக்கள் சமூகச் சீர்திருத்தத்திற்காக ஆர்வமுடன் தீவிரமாக முன்வந்து கலந்து கொண்ட இயக்கம் அது.

       கேரளா கோட்டயம் மாவட்டத்தின் வைக்கம் தாலுக்காவில் நிலவிய சமூக அநீதிக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட ஒரு போராட்ட வடிவமே, அதன் அத்தனை பரிமாணங்களுடன் கூடிய வைக்கம் சத்தியாகிரகம். சுதந்திரப் போராட்டம் தொடங்கப்படுவதற்கு முன்பு ஏற்கனவே

சமூக விடுதலைக்கான நன்கு கட்டமைக்கப்பட்ட போராட்டங்கள் கேரளாவில் நிகழ்ந்தன. அந்த விவாதங்களின் வரிசையில் முன்னே வரும் போராட்டம், பெண்கள் மார்பை மூடி தங்கள் மானத்தைக் காத்துக் கொள்ள உரிமை கோரி சாணார் சமூகத்தினர் நடத்திய ‘தோள் சீலைப் போராட்டம்.’ அந்த இயக்கத்தின் லட்சியம் தாழ்ந்த சாதியாகக் கருதப்பட்ட சாணார் பெண்களுக்கு மானத்தைப் பாதுகாத்துக் கொள்ள அவர்கள் விரும்பும் வகையில் ஆடை உடுத்தச் சுதந்திரம் வேண்டும் என்பது மட்டுமே. ஆனால் அது முழுமையான சாதி முறைமையை எதிர்த்த ஒன்றல்ல.

மாறாக சாதி முறைமையின் நம்பிக்கை அடித்தளத்தை 1888ல் ஸ்ரீநாராயண குரு நிறுவிய அருவிபுரம் பிரதிஷ்ட்டா (சிவன் கோயில்) ஏற்கனவே அசைத்து விட்டது. [கேரள மாநிலத்தில்

தீண்டத் தகாதவர்களுக்குக் கடவுள் வழிபாடு மறுக்கப்பட்ட காலத்தில், அருவிப்புரம் என்கிற மலைகளும் காடுகளும் சூழ்ந்த நெய்யாறு ஓடும் இடத்திற்கு அருகில் ஸ்ரீநாராயண குரு அமைத்த அருவிப்புரம் சிவன் கோவில் ஒரு புரட்சிகர செயல். இது போன்று அவர் கட்டிய பலகோயில்களிலும் அனைத்துச் சமூகத்தினரும் வழிபடும் வகையில் ஆலய நுழைவிற்குப் புதிய வழி முறை கண்டார். மகாகவி சுப்பிரமணிய பாரதியார் அவரது படைப்பில் இதை ஈழுவ சிவன் கோவில் என்று குறிப்பிட்டுள்ளார். --இணையத்திலிருந்து]

     ஸ்ரீநாராயண குருவின் செயல்பாடு கேரளாவின் சமூக இயக்கங்களுக்குக் குறிப்பிடத்தக்க அளவு ஊக்கத்தையும் வேகத்தையும் சேர்த்தது. சடங்குகளை அனுசரிப்பதில் புதிய மேம்பாடுகளை அமல்படுத்தியும், எழுத்தறிவு மற்றும் கல்வியைப் பரப்புவதிலும் ஈடுபட்ட மறுமலர்ச்சி இயக்கத் தலைவர்கள் ஸ்ரீநாராயண குருவின் பாதையைத் தொடர்ந்தனர்.

      ஸ்ரீநாராயண குரு, அய்யன்காளி (படம்), சட்டாம்பிசுவாமி, அய்யா வைகுண்ட சுவாமி, (மதிய உணவு வழங்கி ஏழை தலித்களுக்குக் கல்வியை வழங்கிய) ஃபாதர் சவரா குரியாகோஸ்

எலியாஸ், (தலித் கிருஸ்துவ மத போதகர், சமூக சீர்திருத்தவாதி, கல்வியாளர், பொய்க்கைல் அப்பச்சன் எனப்படும்) பொய்க்கைல் யோகண்ணன், (ஆயுர்வேத மற்றும் அலோபதி) டாக்டர் வேலுக்குட்டி ஆரயன் போன்ற பெருமக்கள் கேரள சமூகத்தைச் சமூக நீதி மற்றும் அதைத் தொடர்ந்து வழக்கொழிந்த பழமைவாத பழக்க வழக்கங்களிலிருந்து விடுதலை பெறவும் வழி நடத்தியவர்கள்.

        சாதியால் பிரிக்கப்பட்டிருந்த சமூகத்தை, சமூக நீதி மற்றும் மானுடச் சமத்தன்மையை முற்றிலும் புறக்கணித்து, அன்று அநீதியே நிலவி ஆட்சி செய்தது.

          சாதிய முறைமையின் தடைகளைப் பிரித்தெறிய, தாழ்த்தப்பட்ட சமூகத்தின் வேலுக்குட்டி ஆரயன் போன்ற அறிஞர்களால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் நடந்தன.

    கேரளாவில் சாதி அடிப்படையிலான சமத்துவமின்மை வைக்கம் சத்தியாகிரகத்தின் விளைவாய் கழன்று வீழத் தொடங்கியது, அதன் பாரம்பரியம் உயிர்ப்போடு வைக்கப்பட்டது. மற்ற இடங்களுக்கும் அது ஓர் உதாரணமாகி, சமூக மாற்றத்திற்கு பாதை சமைக்கப்பட்டது.

கேரள முதலாவது கம்யூனிஸ்ட் அரசின் சாதனை

         கேரள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் தேசிய இயக்க முற்போக்கு இடதுசாரி குழுவினரும் தொழிலாளர்கள் விவசாயிகள் உரிமைகளுக்காகப் போராட்டங்களை முன்னெடுத்தனர்; அதில் சமரா சத்தியாகிரக இயக்க முன்மாதிரிகளைப் பின்பற்றி சமூகப் புரட்சிக்கும் ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினரின் விடுதலைக்காகவும் பாடுபட்டனர்.

        கேரள மாநிலத்தில் ஜனநாயகத் தேர்தல் முறையின் கீழ் 1957ல் தேர்ந்தெடுக்கப்பட்ட சிபிஐ அரசு தேச வரலாற்றில் முதன் முறையானது, உலக வரலாற்றில் அது இரண்டாம் முறை. அந்த சரித்திர நிகழ்வு எந்த அளவு ஆழமாகக் கட்சியின் செல்வாக்கு இருந்தது என்பதன் வெளிப்பாடு. இவ்வாறு மறுமலர்ச்சியிலிருந்து மரபுரிமையாக ஸ்வீகரித்துக் கொள்ளப்பட்ட கேரளச் சமூகத்தின் அனைத்து அரசியல் விழுமியங்களும், மாநிலத்தின் முதலாவது கம்யூனிஸ்ட் அரசால் அதன் ஆதாரக் கொள்கைகளாக  உள்ளார்ந்து இணைக்கப்பட்டன.

     கேரளாவில் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை கட்சிக்குள்ளேயும்கூட அதன் அமைப்பு மற்றும் மதிப்புறு விழுமியங்களில் தீவிர மாற்றங்களைக் கொண்டு வந்தது. வேளாண்மை, கல்வி, சுகாதாரம், சமூக நீதி, சமூகப் பாதுகாப்பு இவற்றில் சீர்திருத்தங்களைக் கொண்டு வந்தது. அத்தகைய நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட பகுதிகளில் கட்சி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டது. நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் தொடர்ச்சியாக விடாப்பிடியாகப் பின்பற்றப்பட்டன.

வைக்கம் சத்தியாகிரகப் பின்னணி

     மலபாரின் தீயர்கள் இன மக்களைவிட திருவாங்கூரின் ஈழவ இனத்தவர் இன்னும் மோசமான நிலையில் இருந்தனர். குடிமை உரிமைகள் குறித்த உரையாடல்கள் பிரபலமடைந்ததற்கு ஸ்ரீநாராயண குரு, மகாகவி குமாரன் ஆசான் மற்றும் சிவி குஞ்சிராமன், ட்டிகே மாதவன் போன்ற தீவிரமான அரசியல் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்களுக்கே நன்றி கூற வேண்டும். வைக்கம் சத்தியாகிரகத்தில் மற்றொரு கேள்விப்படாத பாரம்பரியம் அதில்

நேரடியாக ஸ்ரீநாராயண குரு, மகாத்மா காந்தி மற்றும் (தந்தை பெரியார் எனும்) ஈவெ ராமசாமி நாயக்கர் ஈடுபட்டதாகும். அத்தகைய மாபெரும் சமூகச் சீர்திருத்தவாதிகள் அந்தச் சத்தியாகிரகத்தில் ஈடுபடுபட வேண்டிய தவிர்க்க முடியாத நிலைக்குக் காரணம், வைக்கம் மகாதேவச் சேஷத்ர (சிவாலயம்) சுற்றுப்பகுதியின் பொதுச் சாலைகள் தீண்டத்தகாத மக்களுக்குப் பயன்படுத்த முடியாத நிலையே நீடித்தது. அதுவும், திருவாங்கூர் சமஸ்தானத்தின் பொது வழித்தடங்கள், சாலைகள் 1865ல் சாதி, இன வேறுபாடு இன்றி மக்கள் அனைவருக்கும் திறந்துவிடப்பட்ட பிறகும் கோயில் வளாகத்தில் தீண்டத்தகாதோருக்குத் தடை. கோயிலைச் சுற்றிய நான்கு வீதிகளில் அவர்ணாக்கள் (நான்கு வர்ண முறைக்கு வெளி வைக்கப்பட்ட வனவாசிகள் போன்ற தீண்டத்தகாதோர்) சுதந்திரமாக நடந்து செல்லும் உரிமை மறுக்கப்படவே, ஸ்ரீநாராயண குரு அவர்களே தடை பிரச்சனையைக் கையாள நேர்ந்தது.

      1923ல் காக்கிநாடாவில் நடைபெற்ற காங்கிரஸ் கட்சி ஆண்டு அமர்வில் சத்தியாகிரகப் போராட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. அம்மாநாடு மௌலானா முகமது அலி

தலைமையில் 1923 டிசம்பர் 28 முதல் 1924 ஜனவரி 1 வரை நடைபெற்றது. TK மாதவன் வழிகாட்டலில் தொடர்ச்சியான முயற்சிகளின் விளைவு, அந்த முரண்பாடு தேசிய கவனத்தை ஈர்த்தது. 1924 செப்டம்பர் 27ல் ஸ்ரீநாராயண குருவின் வருகை போராட்டக்காரர்களிடையே பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தி ஒரு திருப்புமுனை ஆனது. 1925 மார்ச் மாதம் காந்தி முதன் முறையாக வைக்கம் வந்தார். மரியாதைக்குரிய ‘இந்தம்துருத்தி மனா’வில் (உயர்சாதி நம்பூதிரி பிரிவினரின் இல்லம்) சாதி அடிப்படையிலான கொடுமைகளுக்கு எதிராகக் காந்திஜி பேசினார்.

நம்பூதிரிகள் வாதம்

        இந்தம்துருத்தியில் மனையில் வசித்த, வைக்கத்தின் பிற 48 இல்லங்களின் மீது உரிமையை வைத்திருந்த, பழைய மரபின் வந்த (நம்பூதிரி) பிராமணர்கள், ஜனநாயகத்தில் நம்பிக்கை

இன்மை காரணமாகத் தாங்களே கடவுளின் தெய்வீகச் சட்டங்களைப் பாதுகாப்பவர்கள் என்று எண்ணி விட்டனர். இந்தம்துருத்தி மனைக்கு (படம்) விஜயம் செய்த காந்தி இதனைத் தானே நேரில் காணும் வாய்ப்புப் பெற்றார். ‘தீண்டத்தகாதோர் தங்கள்  முந்தைய பிறவிகளில் செய்த பாவங்களின் காரணமாகத் தீண்டத்தகாத சாதிகளில் பிறந்து விட்டனர்என்றும்;எனவே இந்தப் பிறவியில் அதற்காகக் கடவுளால் விதிக்கப்பட்ட தண்டனையை (கர்மவினையை) அவர்கள் அனுபவிப்பதே விதிஎன்றும்’;பிராமணர்களும் அரசரும் அந்தத் தண்டனையை நிறைவேற்றத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள்என்றும் இந்தம்துருத்தி நம்பூதிரி காந்திஜியுடன் விவாதம் செய்தார். பிராம்மணியத்தின் கர்மா வினைக் கொள்கை கோட்பாட்டில் நம்பிக்கை உள்ளவர்களுடன் விவாதிப்பது சாத்தியம் இல்லை.

உண்மையும் புரட்டும்

     காந்திஜி அவரே முன்வந்து ஆட்சேபம் தெரிவித்தார், ‘தீண்டாமை இந்து கொள்கை அல்ல.’ ஆனால் பலன் ஏதும் இல்லை. அவர்கள் காந்திஜியையே தங்கள் வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. (வைசியரான காந்தி பிராமணர்கள் வீட்டுக்குள் நுழையக் கூடாதாம். எனவே) மனைக்கு வெளியே தனியே இதற்காகப் பந்தல் அமைத்து காந்தியுடன் விவாதங்கள் நடந்தன. ஆனால் இந்த வரலாற்று நிகழ்வைப் பாஜக,மகாத்மாஜி தான் ஒரு பிராமணர் அல்லாதபடியால் அவரே வீட்டிற்குள் வருவதை மறுத்து விட்டார்’ என்று வரலாற்றுப் புரட்டை நிறுவ முயற்சிக்கிறது. (சங்பரிவார் கும்பல் தோன்றிய நாள் முதலாக இப்படி இந்தியாவின் உண்மை வரலாற்றையும் போராட்டத்தையும் மாற்றி எழுதுவது அவர்களின் நிகழ்ச்சி நிரலில் ஒன்று.) அவர்கள் எப்போதும் இதைச் செய்ய முயற்சிப்பர்.

      இந்தம்துருத்தி மனை சொத்து தற்போது கம்யூனிஸ்ட் கட்சியிடம் உள்ளது. வரலாற்றுச் சக்கரச் சூழற்சியில் அங்கே நமது கட்சி அலுவலகம் செயல்பட்டுக் கொண்டிருக்கும் நிலையில் அந்த முரண்நகை தொடர்கிறது. 


 அதனை ஏஐடியுசி சங்கத்திடமிருந்தும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிடமிருந்தும் திரும்ப எடுத்துக் கொள்ள வேண்டும் என்று சங்பரிவார் கும்பல் வாதிடுகிறது. தற்போது அந்தச் சொத்து ஏஐடியுசி மற்றும் கட்சியின் வசம் உள்ள நிலைமை வரலாற்றின் பழிவாங்கல் மற்றும் சாதிய சக்திகளுக்கு அவற்றின் தோல்வியின்  நினைவூட்டல்.

மதத் தீவிரவாதிகளின் நோக்கம்

      சாதாரண மக்கள் பொதுப் போக்குவரத்துகளைப் பயன்படுத்துவதைத் தடுத்த, நான்கு வர்ணத்திற்கு வெளியே வைக்கப்பட்ட மலைசாதி மக்கள் போன்ற தாழ்த்தப்பட்டவர்களை (அவர்ணா) கல்வி பெறுவதிலிருந்து தடுத்த --பிராமணியச் சடங்குகளைக் கட்டாயமாக்கிய-- அதே சாதிய ஆதிக்கவாதிகளை மகிழ்விப்பதே பாஜக-வின் இலக்கு. கேரள மறுமலர்ச்சி இயக்கத்தின் மரபுகள் மற்றும் விழுமியங்கள் மீது எதிர்மறையான சாயம் பூசும் அணுகுமுறைகளைப் பாஜக மற்றும் சங் பரிவார் சக்திகள் கடைபிடிக்கின்றன. மதத் தீவிரவாதம் மற்றும் வகுப்புவாத நஞ்சைப் புகுத்தி, இடது ஜனநாயக முன்னணியைத் தூக்கி எறிய பாஜக அனைத்து முயற்சிகளையும் எடுக்கிறது. இதனுடன், நரேந்திர மோடி தலைமையிலான என்டிஏ நிர்வாகத்தால் கட்டற்ற சுதந்திரம் வழங்கப்பட்ட தீவிர வலதுசாரி வகுப்புவாதக் குழுக்களால் நமது ஜனநாயகம் ஒட்டுமொத்த ஆபத்திற்கு உள்ளாகியுள்ளது.

        மதத் தீவிரவாதக் குழுக்களால் இடது ஜனநாயக முன்னணிக்கு மட்டுல்ல, பொருளாதாரச் சுதந்திரம், மதச்சார்பின்மை, அனைவருக்கும் சமமான சட்டத்தின் ஆட்சி, மற்றும் நாடாளுமன்ற ஜனநாயக முறைமை உள்ளிட்ட  மக்களால் இதுவரை ஆக்கப்பட்ட அனைத்து வெற்றிகளுக்கும் ஆபத்து. சங் பரிவார் அமைப்புகளால் ஆதரித்து ஊக்கப்படுத்தப்படும் இந்து வகுப்புவாதம், மக்களின் பரவலான கடும் எதிர்ப்பைச் சந்தித்தே ஆக வேண்டும். ஜனநாயக விரோத பாசிசக் கருத்துக்களுடன் அவர்கள் நமது அற்புதமான தேசத்தின் பன்மைக் கலாச்சாரம் மற்றும் (வேற்றுமையில் ஒற்றுமை என்ற) பன்மைத்துவத்தையும் ஒழித்துக் கட்ட கடைசி முயற்சிகளைச் செய்கிறார்கள்; அதுமட்டுமா அதன் மூலம் அவர்கள் இந்திய தேசிய ஒற்றுமையையும், மக்களின் சகோதரத்துவ உணர்வையும் உழைக்கும் மக்களின் மதசார்பின்மை ஒற்றுமையும் நமது பன்மைத்துவப் பண்பாட்டின் சீர்மிகு அடையாளங்களை அழிக்கவும் முயற்சி செய்கிறார்கள். அவர்களால் நாட்டின் தலித்கள் மற்றும் மதச் சிறுபான்மையினர்களைப் பாதிக்கும் நெருக்கடிகள் ஏராளம். வெறுப்பை விதைத்து, சிறுபான்மையினர்களை அடக்கி ஒடுக்கி அவமதித்து, சாதி மற்றும் பசு பாதுகாப்புப் பெயரால் பெருந்திரள் படுகொலைகளை நிகழ்த்தி இந்தியாவைப் பிரதிநிதித்துவப்- படுத்துவதை அவர்கள் நோக்கமாகக் கொண்டுள்ளனர். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடித்தளமாகிய மதச்சார்பின்மை அவர்களது நிர்வாகத்தால் மதிக்கப்படுவதே இல்லை.

   ஆர்எஸ்எஸ் அமைப்பின் இந்துத்துவா அரசியல் கருத்தோட்டம் மனுஸ்மிருதியை அடிப்படையாகக் கொண்ட மதத் தேசியவாதத்தின் வடிவம். இந்துத்துவா மற்றும் அதன் ஒற்றுமையை ஆதரித்துப் பராமரிப்பதுடன் இந்து ராஷ்ட்டிராவை வளர்த்தும், தலித்கள் மற்றும் ஆதிவாசிகளை இரண்டாம் தரக் குடிமக்களாகவும் பாஜக நிர்வாகம் நடத்துகிறது. இந்துத்துவா கற்பனை செய்யும் சமூகத்தின் அம்சங்களுக்குச் சாதி அடித்தளமாகச் செயலாற்றினால், மனுஸ்மிருதி அதனை உறுதிப்படுத்தும் சக்தியாகச் செயலாற்றும். தலித்கள், தலித் பெண்கள் மற்றும் தலித் சிறுமிகளுக்கு எதிரான கொடுமையான வன்முறை நிகழ்வுகள் இனரீதியான ஆழமான கவலைகளை எழுப்புகிறது. ஒரு பசுவைக் கொன்றதற்காக அவர்கள் தூக்கில் தொங்கவிடப்படுவதே இந்து மேல்சாதி அதிகாரத்தின் கீழ் தலித்கள் நடத்தப்படும் விதத்திற்கு அடையாளம்.

        படுபாதகமான அநீதியில் ஈடுபட்டவர்களை ஆதரிக்கவே முடியாத நிலைகளில் அரசு, அந்த இந்து உயர் சாதி தனிநபர்களை வெளிப்படையாக ஆதரிக்கிறது; மேலும், ஹாத்ராஸில் ஆதரவற்ற சிறுமி மற்றும் பலருக்கு அவர்கள் இழைத்த கொடுமைக்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகளைப் பலவீனப்படுத்துவதிலும் அரசு இறங்குகிறது. தலித்கள் மற்றும் மலைசாதியினர்களைக் கொலை செய்ததாகவும் பாலியல் அத்துமீறில்களில் ஈடுபட்டதாகவும் ஆர்எஸ்எஸ் –பாஜக தலைவர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எதிராகக் குற்றம் சாட்டப்பட்ட எண்ணிறந்த நிகழ்வுகள் உள்ளன. அந்தத் துன்பியல் நிகழ்வுகள் நம் வாசலில் கொண்டுவரப்படுகின்றன. நாம் என்ன செய்ய வேண்டும்?

      அந்தப் படுபாதகங்களை நிகழ்த்தும் வகுப்புவாதப் பாசிசத்தை முறியடிக்க ஒன்றுபடுவோம். அனைத்து இயக்கங்கள், மதசார்பற்ற கட்சிகள் ஒன்றாக இணைந்து, வகுப்புவாதப் பாசிசத்திற்கு எதிரான உறுதியான நிலைபாட்டை எடுக்கும் ஐக்கிய முன்னணி மூலம் மட்டுமே அதனைத் தோற்கடிக்க முடியும். மதசார்பற்ற இந்தியா தொடர்ந்து நீடிப்பதை உறுதிப்படுத்த இந்தத் தருணத்தின் கட்டாயத் தேவை பாசிசத்திற்கு எதிரான அத்தகைய ஐக்கிய முன்னணி. ஆனால் பாஜக பிரதிநிதித்துவப்படுத்தும் வகுப்புவாதத்துடன் அனைத்திந்திய அளவில் வெற்றிகரமாக மோதிச் சண்டையிட தனித்த ஒரு கட்சியால் இயலாது. எனவே அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே முன்னணியாக ஒன்றுபட வேண்டும், அதுவே தற்போதைய அரசியல் சகாப்தத்தின் கடமையும் பொறுப்பும் ஆகும். அதைத்தான் வைக்கம் சத்தியாகிரகத்தின் பாரம்பரியம் நம்மிடம் கோருகிறது. அந்த இலட்சியத்தைச் சாதிப்பதை நோக்கி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அயராது பாடுபடுகிறது. ஏனைய கட்சிகளையும் அறைகூவி அழைக்கிறது, வைக்கம் பாரம்பரியம்!

-- நன்றி : நியூஏஜ் (மார்ச்.26 –ஏப்ரல் 1)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

பின்குறிப்பு

          இக்கட்டுரை வைக்கம் பாரம்பரிய நூற்றாண்டு தொடக்கப் பின்னணியில் நமது இன்றைய கடமையை வலியுறுத்துவதே. வைக்கம் போராட்டக் குறிப்புகள், ஆய்வுகள் குறிப்பாகத் தந்தைப் பெரியாரின் பங்களிப்பு என எழுதுவதற்கும், அந்தப் புகழார்ந்த வரலாற்றை மீள் வாசிப்பு செய்வதற்கும் ஏராளம் உண்டு. அவற்றைத் தேடிப் படிப்போம்.


(https://www.hindutamil.in/news/opinion/columns/531749-periyar-in-vaikkam.html இந்து தமிழ் 24-12-2019 இதழில் வெளியான பழ அதியமான் எழுதிய வைக்கத்துக்கும் பெரியாருக்கும் என்ன சம்பந்தம்? தலைப்பிலான கட்டுரையின் இணைய முகவரி. 


அதில் ஒரு செய்தி: “1924-25-ல் வைக்கம் போராட்டம் நிகழ்ந்த தருணத்தில் ஈ.வெ.ராமசாமி நாயக்கரை ‘வைக்கம் வீரர்’ என்று எழுதினேன். அவருக்கு அது ஒரு பட்டப் பெயராகவே பிற்காலத்தில் ஆகிவிட்டது’ என்று திரு.வி.க. குறிப்பிட்டுள்ளார்.)


வைக்கம் சத்தியாகிரக நூற்றாண்டைக் கொண்டாடுவோம். கேரள அரசு சத்தியாகிரகம் நடந்த 603 நாட்களைக் குறிக்கும் வகையில் 603 நாட்கள் விழா எடுத்துக் கொண்டாட உள்ளது.

          (மொழிபெயர்ப்பாளர் இணைப்பு)

                                 

Sunday 19 March 2023

காவிகளின் அச்சுறுத்தலை நாம் எதிர்த்து முறியடிப்போம் --பினாய் விஸ்வம், எம்பி

 

                காவிகளின் அச்சுறுத்தலை நாம் எதிர்த்து முறியடிப்போம்

--பினாய் விஸ்வம், எம்பி

சிபிஐ தேசியக் குழுச் செயலாளர்

      திரிபுரா மாநில ராம் நகர் தொகுதியின் பகுதியான காளிகாபூரில் பாதி எரிக்கப்பட்ட வீட்டின் முன் நாங்கள் நின்றோம். அந்தப் பயங்கர நாளில், திரிபுரா தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட்ட தினத்தில் நிகழ்ந்தவற்றை நடுத்தர வயதுள்ள பெண்மணி எங்களிடம் கண்ணீருடன் விவரித்தார். அந்நாளில் தனது 12வயது மகனை ஒருபோதும் விட்டுவிடாதபடி அணைத்துக் கொண்டிருந்தார். அவர்களுடைய முகத்தில் அந்த அனுபவங்களின் துயரங்கள் வெளிப்படையாக அப்போதும் நிறைந்திருந்தது.

    ராம் நகர் தொகுதி சட்டமன்ற இடத்தைப் பாஜக கட்சியிடமிருந்து இடது முன்னணி – காங்கிரஸ் கூட்டு வென்றது. எல்லா தொகுதிகளையும் எந்தக் குறுக்குவழியில் எப்படியாவது கைப்பற்ற முயன்ற பாஜக கட்சி அதைச் சற்றும் எதிர்பார்க்கவில்லை. அவர்களால் அந்தத் தோல்வியை ஒப்புக்கொள்ள முடியவில்லை. விளைவு, அந்த இரவே அதுவரை காணாத மூர்க்கத்துடன் வன்முறையை அரங்கேற்றினர். இருள் கவியத் தொடங்கியதும், ஆர்எஸ்எஸ் – பாஜக குண்டர்கள் விஸ்வஜித் குமார் (பெயர் மாற்றப்பட்டுள்ளது, பாதிக்கப்பட்டவர் தங்கள் அடையாளங்களைக் கூற இன்னும் அச்சப்படுகிறார்கள்) வீட்டை நிர்மூலமாக்கினர்.

    மேலும் கடுமையான பின்விளைவுகள் வரும் என மிரட்டிய பிறகு, எப்போதும்போல அவர்களுக்குப் பிடித்த ஜெய் ஸ்ரீராம் என வெறித்தனமாகக் கூச்சலிட்டபடி வீட்டுக்குத் தீயிட்டனர். புறப்படும்போது வீட்டினரின் ஒரே வாழ்வாதாரமான ஆட்டோ ரிக்க்ஷாவை அடித்து நொறுக்கவும் அவர்கள் மறக்கவில்லை. அந்த வீட்டினர் செய்த ஒரே குற்றம் ராம்நகரில் போட்டியிட்ட இடது முன்னணி வேட்பாளருக்காகப் பணியாற்றியதுதான். தாயிடமிருந்து பெருகிய கண்ணீர் மகனின் முகத்தை நனைத்தது, அவன் சப்தமிட்டு அழத் தொடங்கினான்.

அங்கே பார்வையிடச் சென்ற எங்களுடன் திரிபுராவின் மேனாள் முதல்வர் மாணிக் சர்க்காரும் இருந்தார். அந்தத் தாயிடமும் மகனிடமும் ஆறுதல் கூறி தேற்றிய அவர், உயிரச்சம் காரணமாகத் தொலை தூர இடத்திற்குச் சென்ற தந்தையைக் குறித்துக் கேட்டார். கண்ணீரைத் துடைத்தெறிந்து உறுதியாக நிற்கும்படி கூறிய மாணிக் சர்க்கார் அவர்களுக்குத் தைரியம் அளித்தார். அது உண்மையில் பலனளித்தது. அந்தப் பையன் எங்களிடம் பேசத் தொடங்கினான், சற்று நேரத்தில் தாயும்கூட தேற்றிக் கொண்டு இயல்பாகச் பேசினார்.

வீட்டிலிருந்து நாங்கள் வெளியே வரும்போது, மாணிக்‘தா அந்தப் பையனின் தோளில் தட்டியபடி, “நீ வளர்ந்ததும் என்னவாக ஆவாய்?” என்று கேட்டார். பதில் மிகத் தெளிவாக வந்தது, “நான் ஒரு தோழன் ஆவேன்.” ஆம், அந்தச் சிறுவன், இன்று வலியும் எதிர்காலம் குறித்த கவலையும் நிறைந்த காலத்தைக் கடந்து கொண்டிருக்கும், திரிபுரா மக்களின் என்றும் இறவாத துணிச்சல், வீரத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறான்.

    திரிபுராவில் ஆர்எஸ்எஸ் –பாஜக கட்டவிழ்த்துவிட்ட வன்முறை பின்னணியில், இடது முன்னணி –காங்கிரஸ் கட்சிகளைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் அடங்கிய குழு உண்மை கண்டறியும் நோக்கத்துடன் செல்வதென முடிவானது. அந்நோக்கத்தை மனதில் கொண்டு சிபிஐ (எம்) கட்சியின் தலைவர்கள் இளமாறம் கரீம், பிஆர் நடராஜன், ஏஏ ரஹீம், காங்கிரஸ் தலைவர்கள் ரஞ்சித் ரெஞ்சன், அப்துல் காலிக் மற்றும் சிபிஐ பிரதிநிதியாக நானும் வன்முறை பாதித்த இடங்களுக்கு விஜயம் செய்தோம்.

    மேனாள் முதல்வர் மாணிக் சர்க்கார் உள்ளிட்ட மாநிலப் பிரிவு கட்சித் தலைவர்கள் எங்களுடன் இணைந்து கொண்டனர். முழுமையாக அடித்து நொறுக்கப்பட்ட வீடுகள், இரப்பர்

தோட்டங்கள், எரிக்கப்பட்ட ஆட்டோ ரிக்க்ஷாகளையும் குளங்களில் செத்து மிதக்கும் மீன்களையும் கண்டோம். வன்முறை போக்கிரிகளின் நோக்கம் மிகத் தெளிவானது. இடது காங்கிரஸ் கூட்டணியைத் தீவிரமாக ஆதரித்து அதன் வேட்பாளர்களின் வெற்றிக்குப் பாடுபட்ட மக்கள் அனைவரையும் முழுமையாக வேதனையில் ஆழ்த்தி அச்சுறுத்துவதே நோக்கம். பெட்ரோல் குண்டுகள் பரவலாகப் பயன்படுத்தப்பட்டன. அடித்து உடைக்கப்பட்ட வீடுகளின் உருக்குலைந்த காட்சிகள் நெஞ்சைப் பிளப்பதாக இருந்தன.

    திரிபுராவுக்கு விஜயம் செய்யக் கூடிய எவரும் இந்துத்துவா பயங்கரவாதத்தின் எல்லை இல்லா சாட்சியங்களைக் காண முடியும். வெறிபிடித்த போக்கிரித்தனமான அரசியல் கொள்கையின் வெற்றியைக் காண வேண்டுமானால் நீங்கள் திரிபுராவுக்கு வாருங்கள். ஜனநாயகம் என்பதற்கான அர்த்தத்தை ஒருபோதும் அறியாத அடியாட்கள், ஒன்றிய அரசின் முழுமனதான ஆதரவுடன், மாநிலம் முழுவதும் பயங்கரவாதத்தைக் கட்டவிழ்த்து விட்டனர். மூன்று பேர் உயிரிழந்தனர், ஆயிரக் கணக்கில் காயமடைந்தனர். நாடாளுமன்ற தூதுக் குழுவினர்கூட தாக்குதலிலிருந்து விட்டு வைக்கப்படவில்லை. இளமாறம் கரீம் மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளர் டாக்டர் அஜய் குமார் பயணம் செய்த வாகனங்களைப் பாஜக – ஆர்எஸ்எஸ் கிரிமினல்கள் தாக்கினர்.

    எங்களது வருகை குறித்து முன்கூட்டியே தகவல் தந்த போதிலும் பாதுகாப்புக்காக வந்த மாநிலப் போலீஸ் தங்கள் மௌனமான ஆதரவைக் குண்டர்களுக்குத் தந்தனர். ஆனால் பாஜக மற்றும் அதனது தகவல் தொழிட்நுட்பக் குழுக்கள் இதற்கு எதிரான பொய்யான கட்டுக் கதைகளைப் பரப்பினர். அதுதான் பொய்களின் கருத்தியல். வன்முறை கோலோச்சுவதன் காரணமாக ஆயிரக் கணக்கான மக்கள் தங்கள் வீடுகளிலிருந்து வெளியேறி தொலைவில் வசிக்க நிர்பந்திக்கப்படுகிறார்கள். தங்கள் தங்கள் வீடுகளில் உண்டு உறங்கி வாழ்வது என்ற மக்களின் அடிப்படை உரிமை திரிபுராவில் தற்போது ஒரு பழங்கதை. மாநிலத்தில் 2018ல் பாஜக ஆட்சி அதிகாரத்திற்கு வந்தது முதல் பொதுமக்கள் திரளின் வாழ்க்கைக்குப் பாதுகாப்பு என்பதற்கு உத்தரவாதமில்லை.

    சட்டத்தின் வீழ்ச்சியும் அராஜகத்தின் எழுச்சியும் குறித்து மாநில ஆளுநருக்குத் தூதுக் குழு விரிவாக எடுத்துரைத்தது. ஆனால் இந்தக் கடுமையான பிரச்சனைக்கு ஆளுநரின் பதில் அப்பட்டமான புறக்கணிப்பே. பாஜக தலைமையிலான அரசு, சட்டமன்றத்தில் தங்கள் எண்ணிக்கையையும் வாக்கு சதவீதத்தையும் குறைத்த மக்களைப் பழிவாங்குகிறது. நடந்து முடிந்த தேர்தலில் பாஜக வென்ற இடங்கள் 11 குறைந்து விட்டது. பதற்றமான ஆபத்தான சூழ்நிலையின் காரணமாக எங்களால், இளம் சிபிஐ வேட்பாளர் சத்தியஜித் ரியாங் போட்டியிட்ட சாந்தி பஜார் தொகுதிக்கு விஜயம் செய்ய முடியவில்லை. கைபேசி மூலமாக அவருடன் உரையாடியபோது பாஜக குண்டர்களின் வன்முறையை எதிர்பார்ப்பதாகக் கூறினார். அவரது குடும்பத்தினரின் ஒரே வாழ்வாதாரமான அவருடைய இரப்பர் தோட்டம் ஏற்கனவே அழிக்கப்பட்டது.

    சிபிஐ, சிபிஐ(எம்) மற்றும் காங்கிரஸ் கட்சிகளின் தொண்டர்கள் ஜனநாயகத்திற்கான தங்களின் போராட்டத்தைக் கைவிட மாட்டோம் எனத் தெளிவாக உறுதிபட உரைத்தனர். திரிபுரா மக்களின் போராட்டம், விஷக் கொடுக்குகளின் வன்முறையையும் வெறுப்பையும் கொண்டிருக்கும், பாசிச அரசுக்கு எதிரானது. இந்தப் போரில் திரிபுரா மக்களை நாம் கைவிட்டுவிடக் கூடாது. இந்த நாட்டின் ஜனநாயக உணர்வு நிலைக்கு திரிபுரா மக்களுடன் நமது அனைத்து வலிமைகளுடன் ஒன்றிணைந்து நின்றிட இதுவே சரியான உகந்த தருணம்.

    பாசிசம் வீழ்த்துவோம், ஜனநாயகம் பாதுகாப்போம், திரிபுரா மக்களுக்கு ஆதரவாய் நின்றிடுவோம்!

--நன்றி : நியூஏஜ் (மார்ச் 19 –25)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

 

Thursday 16 March 2023

மகளிர் தினத்தில் ரோசா லுக்ஸம்பர்க் நினைவுகள்

 

ஒரு கருத்தியலாளர், நமது காலத்திற்கு ஊக்கம் அளிப்பவர்    மகளிர் தினத்தில் ரோசா லுக்ஸம்பர்க் நினைவுகள்

                                      --டாக்டர் BV விஜயலெட்சுமி

புரட்சிகர சோஷலிசவாதி, மார்க்சிய தத்துவ இயலாளர் மற்றும் போர் எதிர்ப்புச் செயல்பாட்டாளரான ரோசா லுக்ஸம்பர்க் 152வது பிறந்த நாளைக் கொண்டாடி மார்ச் 8 மகளிர் தினத்தில் அவரை நினைவு கூர்வோம்! ‘சீர்திருத்தமா அல்லது புரட்சியா என்ற நூலில், ‘முதலாளித்துவ முறைமையை முழுமையாகத் தூக்கி எறிவதன் மூலம் மட்டுமே உண்மையான மாற்றம் சாதிக்கப்பட முடியும்’ என அவர் எழுதிய கருத்துகளை நினைவு கொள்வது ஆதர்சம் தரும், நம்மைச் செயல்பட உற்சாகமளிக்கும். மேம்பட்ட உலகு குறித்த லுக்ஸம்பர்க்கின் கண்ணோட்டம் இன்னும் அடைந்துவிடக்கூடியதாகவே உள்ளது, அது நனவாக்கப்படுவதை நோக்கி அனைவரும் செயல்பட அவரது உதாரணம் நம்மை ஊக்கம் பெறச் செய்யும்.

            ரோசா 1871 மார்ச் 5ல் போலந்து நாட்டின் சாமொஸ்க்கில் பிறந்தார். ஒரு யூத நடுத்தரக் குடும்பத்தில் வளர்க்கப்பட்டவரின் அறிவாற்றல் ‘வளரும் பயிர் முளையிலேயே தெரிவது’ போல இளம்பருவத்திலேயே சுடர்விட்டது. தமது காலத்தின் மிகச் செல்வாக்குப் பெற்ற சிந்தனையாளர்கள், செயல்பாட்டாளர்களில் ஒருவராகத் திகழ்ந்து, உலகம் முழுவதும் உள்ள மக்களுக்கு இன்று வரை, தொடர்ந்து உற்சாகமளித்து வருகிறார்.

          1887 வார்சா நகரில் படிப்பைத் தொடங்கிய லுக்ஸம்பர்க், பின்னர் சுவிஸர்லாந்து சென்று தனது கல்வியைத் தொடர்ந்தார். அங்கேதான் அவருக்குக் காரல் மார்க்ஸின் எழுத்துகள் அறிமுகமாயின, ஒரு சமூகச் செயற்பாட்டாளர் ஆனார். 1898ல் குஸ்தாவ் லூபெக்-கைத் திருமணம் செய்து ஜெர்மனிக்குக் குடிபெயர்ந்தார். அங்கு ஜெர்மனி சமூக ஜனநாயகக் கட்சியில் (SPD) இணைந்தார். கட்சியில் வெகு விரைவில் புகழ்பெற்று முன்னணித் தலைவராக உயர்ந்தார். சமூக இயக்கத்தில் அவரது குரல் உயரிய மதிப்பு பெறலாயிற்று.

    லுக்ஸம்பர்க், தொழிலாளர்கள் உரிமைகள் மற்றும் சமூக நீதிக்குத் தீவிரமாக ஆதரவு அளித்தார். முதலாளித்துவ முறைமை என்பது இயல்பிலேயே சுரண்டும் தன்மை கொண்டது என்பதிலும் உழைப்புக் கருவிகளின் கூட்டு சொத்துரிமை மூலம் மட்டுமே உண்மையான ஜனநாயகம் சாதிக்கப்பட முடியும் என்பதிலும் லுக்ஸம்பர்க் நம்பிக்கை உடையவர்.

       மேலும், போர் மற்றும் இராணுவமயமாக்கலுக்கு லுக்ஸம்பர்க் தீவிர எதிர்ப்பாளர். முதலாம் உலகப் போரை மிகக் கடுமையாக வெளிப்படையாக அவர் விமர்சித்தார். இந்த அவரது போர் எதிர்ப்புச் செயல்பாடுகளுக்காக 1915ல் அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சிறைப்பட்ட போதும், அங்கிருந்து தொடர்ந்து செயல்பட்டும் எழுதியும் வந்தார், அவரது எழுத்துக்கள் முன்னிலும் அதிகமாகச் செல்வாக்கு செலுத்தத் தொடங்கியது.

            20ம் நூற்றாண்டின் தொடக்க காலத்தின் அரசியல் மற்றும் அறிவார்ந்த பெரும் பரப்பில் ரோசா லுக்ஸம்பர்க் அழிக்க முடியாத அடையாளச் சுவட்டைப் பதித்துச் சென்றுள்ளார். அவரது காலத்தின் பெரும் செல்வாக்கு பெற்ற சிந்தனையாளர்கள், செயற்பாட்டாளர்களில் ஒருவராக அவர் உயர்ந்தபடி விளங்கினார் – உலகம் முழுமையிலும் சமூக மாற்றத்திற்கான இயக்கங்களை உற்சாகப்படுத்தினார்.

            லுக்ஸம்பர்க்கின் வாழ்வும் பணியும் அவர் வாழ்ந்த காலத்தில் நிலவிய அரசியல் மற்றும் சமூக நிலைமைகளால் ஆழமாகச் செல்வாக்கிற்கு ஆட்பட்டது. முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியம் எழுச்சி பெற்று வளர்ந்து வந்ததையும், முதலாவது உலகப் போரின் தொடக்கம் மற்றும் ருஷ்யப் புரட்சிக்குப் பிறகு விளந்த கட்டுக்கடங்காத பின்விளைவுகளையும் கண்கொண்டு பார்த்த சாட்சியாக அவர் இருந்தார்.  இந்த அனுபவங்கள் அவருடைய கருத்தியல் நிலைபாடுகளையும், அவர் தலைமை ஏற்ற போராட்டங்கள் மற்றும் இயக்கங்களையும் வடிவமைத்தன.

    மார்க்ஸிய மற்றும் சோஷலிசக் கோட்பாடுகளில் லுக்ஸம்பர்க் ஆழமான பற்றுறுதி கொண்டார், உண்மையான ஜனநாயகம் மற்றும் சமூக நீதிக்கான திறவுகோள் உழைக்கும் வர்க்கத்திடம் இருப்பதாக நம்பினார். தொழிலாளர் உரிமைகளுக்குத் தீவிர ஆதரவாளரான அவர், முதலாளித்துவ முறைமை இயல்பிலேயே சுரண்டும் குணத்தை உள்ளார்ந்து கொண்டிருப்பதாகவும் நம்பினார்.

    போர் மற்றும் இராணுவமயத்திற்குக் கடுமையான எதிர்ப்பாளரான லுக்ஸம்பர்க், போர் என்பதே முதலாளித்துவ முறைமையின் விளைபொருள் என உறுதியாக நம்பினார்; சர்வதேசப் புரட்சி மட்டுமே நிலையான சமாதானத்தைக் கொண்டு வர முடியும் என உரைத்தார். ‘தி ஜுனியஸ் பாம்லெட்’ (‘The Junius Pamphlet,) என்ற புகழ் பெற்ற அவரது கட்டுரையில், “செய்ய வேண்டிய உச்சபட்ச புரட்சிகரமான விஷயம், என்ன நிகழ்கிறது என்பதை எப்போதும் உரத்துப் பிரகடனம் செய்வதே” என்று எழுதினார். (அச்சம் தவிர்த்து, குன்றென நிமிர்ந்து நின்று, நேர்பட, வெடிப்புறப் பேசு.) இந்த உணர்வு அவரது நம்பிக்கையைப் பிரதிபலித்தது. போரின் அநீதிக்கு எதிராக உரத்துக் குரல் எழுப்புவதும், மேலும் நியாயமான, அமைதியான உலகை நோக்கிப் பணியாற்றுவதும் முக்கியம் என அவர் உறுதியாக நம்பினார். [ஜுனியஸ் பாம்லெட் என்ற துண்டறிக்கை லுக்ஸம்பர்க் சிறையில் இருந்தபோது போரை எதிர்த்து எழுதியது. தன்னை மறைத்துக் கொள்ள அவர் ‘ஜுனியஸ்’ என்ற புனைப்பெயர் சூட்டிக் கொண்டார்; ரோமன் குடியரசின் கதாநாயகன் லுஸியஸ் ஜுனியஸ் புரூடஸ் என்ற பெயரை அது குறிப்பதாக இருக்கலாம் –இணையத்திலிருந்து திரட்டியது.]

    தமது வாழ்நாள் முழுமையும் லுக்ஸம்பர்க் சமூக மாற்றத்திந்கான எண்ணிறைந்த போராட்டங்கள் மற்றும் இயக்கங்களில் ஈடுபட்டார். ஜெர்மனி சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) தலைவரான அவர், புரட்சிகர சோஷலிசம் மற்றும் தொழிலாளர்கள் உரிமைகளுக்கு ஆதரவாக நின்றார். மேலும் 1918 –1919ஆண்டுகளில் நடந்த ஜெர்மன் புரட்சியில் முக்கிய பங்காற்றிய சமூக அமைப்பான ‘ஸ்பார்டகஸ் லீக்’ அமைப்பின் நிறுவன உறுப்பினராகவும் அவர் இருந்தார். [1914ல் தொடங்கிய ‌முதல் உலகப் போரில் பிரான்ஸ், பிரிட்டன் நாட்டைச் சேர்ந்த சோஷலிச அமைப்புகள் தத்தமது அரசுகளுக்கு ஆதரவளித்தன. அதுபோன்றே ஜெர்மனியின் SPD கட்சியும் போருக்கு ஆதரவு அளித்தது. SDPகட்சி எடுத்த இம்முடிவு ரோசாவிற்கு பெரும் அதிர்ச்சியையும் சொல்லொணா வேதனையையும் அளித்தது. எனினும் உலகப்போருக்கு எதிரான எண்ணம் கொண்ட கிளாரா ஸெட்கின் (Clara Zetkin), பிரான்ஸ் மெஹ்ரிங் (Franz Mehring), லியோ ஜோகிசஸ் (Leo Jogiches) மற்றும் தீவிர சோஷலிஸ்டான நாடாளுமன்ற உறுப்பினர் கார்ல் லெய்ப்னெக்ட் (Karl Leibnect) ஆகியோருடன் இணைந்து போருக்கு எதிரான குழுவை (Gruppe internationale) உருவாக்கினார். அதுவே பின்னாளில் "ஸ்பார்டகஸ் லீக்" என்றழைக்கப்பட்டது. இந்தக் குழு உறுப்பினர்களே பின்னர் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவினர்  -–விடுதலை, 2020 ஜூலை 25 இதழிலிருந்து நன்றியுடன்]

    லுக்ஸம்பர்க்கின் இலக்கியப் பங்களிப்புகளும் மிகவும் முக்கியமானவை. அவர் சளைக்காது பெருமளவு எழுதிக் குவித்தவர்.  மார்க்ஸிய தியரி,  பொருளாதாரம்  மற்றும் அரசியல் குறித்த அவரது

 படைப்புகள் இன்றைய நாள் வரை செல்வாக்கு மிக்கதாக விளங்குகின்றன. அவரது ‘மூலதனத்தின் திரட்சி’ நூலில் முதலாளித்துவத்தின் முரண்பாடுகள், தொழிலாளர்களைச் சுரண்டுவது குறித்து அவர் ஆய்வு செய்வார். ருஷ்யப் புரட்சி’ நூலில் சோஷலிசம்பால் போல்ஷ்விக்குகளின் அணுகுமுறையை விமர்சனம் செய்து, கூடுதல் ஜனநாயகம் மற்றும் புரட்சியில் பங்கேற்பு அணுகுமுறைக்காக வாதிடுவார். [படத்தில் ரோசா லுக்ஸம்பர்க் குறித்துத் தோழர் பட்டாபி எழுதிய சிறு நூல், NCBH வெளியீடு]

      அவருடைய பல சாதனைகளையும் மீறி, லுக்ஸம்பர்க்கின் வாழ்க்கை துயரம் மேலிடும் வகையில் அகாலமான முடிவை எதிர்கொண்டது. 1919 ஜெர்மன் புரட்சியின்போது வலதுசாரி துணை இராணுவத்தைச் சேர்ந்த ஒருவனால் சுடப்பட்டு லுக்ஸம்பர்க் படுகொலை செய்யப்பட்டார். மரணமடைந்தபோது அவருக்கு 47வயதே ஆகியிருந்தது. [கொல்லப்படுவதற்கு முந்தைய நாளில் கூட “The revolution will ‘raise itself again clashing’, and to your horror it will proclaim to the sound of trumpets: I was, I am, I shall be.” என "புரட்சி மீண்டும் எழுச்சியுறும். அவை எழுப்பும் எக்காள ஒலி நான் வாழ்ந்தேன், வாழ்கிறேன், வாழ்வேன் என முழங்கி உங்களைத் திகிலுறச் செய்யும்" என எழுதியதில் வெளிப்படுகிறது ரோசா லக்சம்பர்க்கின் வைர நெஞ்சம். –மேலே குறிப்பிட்ட விடுதலை கட்டுரை]

      உலகம் முழுவதும் நடைபெறும் சமூக நீதி இயக்கங்களுக்கு லுக்ஸம்பர்க்கின் மரபு தொடர்ந்து இன்று ஊக்கமளிக்கிறது. தொழிலாளர்களின் உரிமைகள், போருக்கு எதிரான செயலூக்கம் மற்றும் புரட்சிகர சோஷலிசத்தின் பால் அவருடைய பற்றுறுதி, நூறு ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படி, இன்றும் பொருத்தமுடையதாக உள்ளன. ‘சீர்திருத்தமா அல்லது புரட்சியா’ என்ற நூலில், “எதிர்காலம் நம்முள் இருக்கிறது, மேலும் அது நமது இன்றைய செயல்களின் மேல் சார்ந்து இருக்கிறது” என்று எழுதினார்.

    அவர் மறைவைத் தொடர்ந்து மலர்ந்த சமூக மாற்றத்திற்கான பல இயக்கங்களில் லுக்ஸம்பர்க்கின் செல்வாக்கு இருப்பதை நாம் காணமுடியும். உலகம் முழுவதும் செயல்படும் சோஷலிசவாதிகள், பெண்ணியலாளர்கள், இனவெறிக்கு எதிரான செயற்பாட்டாளர்களால் அவருடைய கருத்துகள், சிந்தனைகள் ஏற்றுக் கொண்டாடப்படுகின்றன. மேலும் நியாயமும், சமத்துவமும் மிக்க சமுதாயத்தை நிறுவிடும் புரட்சிக்கான அவரது அறைகூவல், ‘கெட்ட போரிடும் உலகத்தை வேரொடு சாய்த்துப் புதியதோர் உலகம் செய்ய’ உழைக்கும் மக்கள் அனைவரின் காதுகளில் தொடர்ந்து ரீங்காரமிட்டு ஒலிக்கிறது.

       ரோசா லுக்ஸம்பர்க்கின் 152வது பிறந்த நாளில் நாம் அவரது வாழ்க்கை மற்றும் அவர் விட்டுச் சென்ற பாரம்பரியத்தை நினைவு கொள்வோம். அவர் தம் வாழ்வை அர்ப்பணித்த சமூக நீதிக்காகவும், தொழிலாளர் உரிமைகளுக்காகவும் போராட்டங்களைத் தொடர்வதன் மூலம் அவரது நினைவுக்கு நாம் மரியாதை செய்வோம்!

-- நன்றி : நியூஏஜ் (மார்ச் 12 --18)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

           

 

 

 

                                                                                                                                                                 

 

Thursday 2 March 2023

சிபிஐ (எம்எல்) விடுதலை கட்சியின் 11வது பேராயத்தில் தோழர் பல்லப் சென்குப்தா

 


சிபிஐ (எம்எல்) விடுதலை கட்சிப் பேராயத்தில் சிபிஐ வாழ்த்துரை

                       பிற்போக்குச் சக்திகளை முறியடிக்க, தேவை பரந்துபட்ட கூட்டணி

--பல்லப் சென்குப்தா

2023 பிப்ரவரி 16ல் பாட்னாவில் நடைபெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட் –லெனினிஸ்ட்) விடுதலை கட்சியின் 11வது கட்சிப் பேராயத்தில் சிபிஐ தேசியக் குழு செயலாளர் பல்லப் சென்குப்தா வழங்கிய வாழ்த்துரை:

            முதற்கண், எனது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பாக உங்கள் கட்சிப் பேராயத்திற்கு ஒத்துழைப்பையும் மிகுந்த தோழமை வாழ்த்துகளையும் கூறுவதில் மகிழ்ச்சி. பேராயத்தின் தொடக்க அமர்வுக்குச் சிபிஐ சார்பாக என்னை அழைத்ததற்கு நன்றி, இங்கே குழுமியுள்ள பிற இடதுசாரி கட்சி தலைவர்கள், சகோதரப் பிரதிநிதிகள், அறிஞர்கள், செயற்பாட்டாளர்கள் மற்றும் நண்பர்களுக்கு எனது வாழ்த்துகள்.

            நண்பர்களே, வரலாற்றுச் சிறப்பு மிக்க பீகார் மண்ணில் சிபிஐ (எம்எல்) விடுதலை கட்சிப் பேராயத்திற்காக நாம் இங்கே கூடியுள்ளோம். இந்த மண் உயர்கல்விக்கான மிக மூத்த புராதன கல்வி நிறுவனங்கள் செயல்பட்ட இடம், குறிப்பாக அவை இந்திய சிந்தனை மரபின் மிக முற்போக்கான பிரிவுகளுக்குக் குறிப்பிடத்தக்க பங்களித்தவை. நவீன காலங்களிலும், பீகாரும் அதன் மக்களும் அரசியல் ரீதியிலும் அறிவார்ந்த வகையிலும் தனித்துவமான இடத்தைப் பெற்றவை. இந்த மண், சகஜானந்த சரஸ்வதி, கார்யானந்த் சர்மா, சுனில் முகர்ஜி, சதுரானன் மிஸ்ரா, போகேந்திர ஜா, கணேஷ் சங்கர் வித்யார்த்தி மற்றும் வினோத் மிஸ்ரா முதலான கம்யூனிஸ்ட் பேராளுமைத் தலைவர்களின் கடும் உழைப்பையும் தியாகங்களையும் சந்தித்தது. அன்றும் இன்றும் செங்கொடிக்குச் சொந்தமான இம்மண், சாதியம் ஆணாதிக்கம், மற்றும் நில உடைமையாளர்களுக்கு எதிரான போராட்டங்களில் உறுதியான தலைமை, ஊக்கம் மற்றும் நம்பிக்கைகளை வழங்கியது. கம்யூனிசக் கொள்கை வளர்ச்சிக்காக இம்மண்ணை நம் தோழர்களின் குருதியாலும் வியர்வையாலும் செழுமைப்படுத்திய தியாகிகளுக்கு என் செவ்வணக்கம்!

            உலக வரலாற்றில் ஒரு முக்கிய காலகட்டத்தில் நடைபெறும் உங்கள் பேராயம் தீவிர முக்கியத்துவம் பெறுகிறது. மனிதகுலம் இன்று மோதும் தலையாய பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டிய எப்போதுமில்லாத அவசரத்தில் நாம் சூழப்பட்டுள்ளோம். முதலாளித்துவ லாபத் தேடல் மற்றும் அதிகாரம், செல்வாக்கிற்கு ஆலாய்ப் பறக்கும் ஏகாதிபத்தியப் பேராசையால், சர்வதேசிய சமூக, அரசியல் மற்றும் பொருளாதாரச் சூழல் தீவிரமாக பாதிக்கப்பட்டுள்ளது. ஏகாதிபத்தியத்தின் கருவியான பாசிசம் மீண்டும் தலையெடுத்து, அதன் ஆழமான வேர்களைத் தேட முயற்சிக்கிறது. உலக அமைதியும் சமூக நீதியும் ஆபத்தில் உள்ளன. நாடுகளின் தேசிய இறையாண்மை அரிக்கப்பட்டு, முதலாளித்துவ இணைப்பு நிகழ்முறையில் அச்சுறுத்தப்படுகின்றன. சுற்றுச்சூழலியல் சீர்கேடு அபாயகரமான அளவில் பேரழிவாக உருவெடுத்துள்ளது. உலகம் ஆபத்தான பாதைகளின் சந்திப்பில் நிற்கிறது.

     இந்த உலகச் சூழலில் சிபிஐ (எம்எல்) விடுதலைக் கட்சியின் 11வது கட்சிப் பேராயம் நடைபெறுவது இந்திய அரசியல் வாழ்வில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவத்தைப் பெறுகிறது.

    இந்திய வரலாற்றின் இக்கட்டான முக்கிய காலகட்டத்தில் உங்கள் கட்சிப் பேராயம் நடைபெறுகிறது. நமது விடுதலை இயக்கமும், அரசியலமைப்புச் சட்டமும் அடைய விரும்பிய ஒவ்வொன்றிற்கு எதிராகவும் நின்ற சக்திகளால், ஏறத்தாழ கடந்த ஒன்பது ஆண்டுகளாக, நமது மதசார்பற்ற சோஷலிச ஜனநாயகக் குடியரசு முற்றுகையிடப்பட்டுள்ளது. நாடாளுமன்றம் போன்ற சட்டமியற்றும் அமைப்புகள் வழக்கொழிந்து வருகின்றன, நீதித்துறை சுதந்திரம் அச்சுறுத்தலில் உள்ளது. குடியரசின் மதசார்பற்ற நற்சான்று அடையாளங்கள் காவிப் பெரும்பான்மைவாதத்தால் களங்கப்படுத்தப்பட்டு நிற்பதுடன், முழுச் சூழ்நிலையும் வெறுப்பு மற்றும் சகிப்புத் தன்மையின்மை என்ற துர்நாற்றம் வீசுகிறது. எனினும், குறுகிய மனப்பான்மையுள்ள பிளவுபடுத்தும் இச்சக்திகளின் எழுச்சி, எதிர்த்துத் தட்டிக் கேட்கப்படாமல் போகாது; எனவேதான் ஆர்எஸ்எஸ் –பாஜக தீய திட்டங்களை எதிர்க்க இன்று அனைத்துச் சமூகப் பிரிவுகளும் வீதிகளில் இறங்கிப் போராடி வருகிறார்கள்.

       உலகளாவிய பொருளாதாரத்தில் 2008 –09 கீழ்நோக்கி உருகி நிலை குலைந்து போன

பிறகு வலதுசாரி அதிகாரமயத்தின் எழுச்சியை உலகு தழுவிய நிகழ்வாகப் பார்க்கலாம். வலது அல்லது அதிதீவிர வலது ஆகிய இந்தச் சக்திகள் மோதல்களை உருவாக்கி, தேசிய இனங்கள், மதம், ஜாதி, இனம் என்ற அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்துகின்றனர்.

        அன்பான தோழர்களே, நமது நாட்டில் மோடி அரசு நாட்டின் 75வது சுதந்திரநாளை ‘அமிர்த காலம்’ என்ற கதையாடலுக்காகத் தீவிரமாகத் திட்டங்களைத் திணிக்கிறது. எனினும் இவ்வளவு காலத்திற்குப் பிறகும் ஏழ்மையும் மிக அதிகமாகச் சமத்துவமின்மையும் நாட்டில் தொடர்கிறது. நரேந்திர மோடி வழிகாட்டலில் நாடு கடந்த ஒன்பது ஆண்டுகளில் அனைத்து வளர்ச்சிக் குறியீடுகளிலும் பின்னடைந்துள்ளது. கோவிட் 19 நெருக்கடி புதிய தாராளமய வளர்ச்சி மாடலில் உள்ள குறைபாடுகளை முழுமையாக அம்பலப்படுத்தியுள்ளது. லட்சோப லட்சம் மக்கள் அழிந்தனர். ஆனால் இத்தோல்விக்குப் பொறுப்வானவர்கள் யார் என எதிர்த்துக் கேள்வி கேட்வர்கள் தொடர்ந்து குறிவைக்கப்படுகிறார்கள், கொடூரமான சட்டங்கள் மூலம் மிரட்டப்படுகிறார்கள். அதற்கு வருமான வரி இலாக்கா, மத்திய புலனாய்வு அமைப்பு சிபிஐ, மற்றும் அமலாக்கத் துறை போன்றவற்றின் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்துகிறார்கள்.

       மக்களுக்கு எதிராக ஒன்றிய அரசு எடுக்கும் நடவடிக்கைகள் பல. பண வீக்கத்தின் கீழ் மக்கள் உழல்கிறார்கள், ஆனால் அரசு அவர்களின் நண்பர்கள் செல்வத்தைக் குவிப்பதற்காக மும்முரமாக ஈடுபட்டுள்ளது. நாட்டின் பொதுக் கல்வி முறையை புதிய கல்விக் கொள்கை அச்சுறுத்துகிறது, ஆனால் அரசு பணக்காரர்களுக்காக அயல்நாட்டு கல்வி நிறுவனங்களை வரவேற்கிறது. பொதுத்துறை நிறுவனங்கள் க்ரோனி முதலாளித்துவத்துவத்திற்குக் காவு கொடுக்கப்பட்டு, தன்னிறைவு மற்றும் சமூக நீதி கருத்துகள் தோற்கடிக்கப்படுகின்றன. அதானி என்ற பெயரே க்ரோனி கேப்பிடலிசத்திற்கு மாற்றுப் பெயராக மாறி இருக்கிறது. சமத்துவ உணர்வுடைய இந்தியா என்ற கருத்தாக்க மாளிகையிலிருந்து ஒவ்வொரு செங்கல்லாக உருவப்பட்டு அழிக்கப்பட்டு வருகிறது.

    ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் நடக்கும் அரசு, சிறுபான்மையினரை வெளிப்படையாகப் பாகுபடுத்தி நடத்துவதுடன், அவர்கள் மீது வெறுப்பையும் திட்டமிட்டு ஏற்படுத்துகிறது. மனுவாதி ஆர்எஸ்எஸ் அரசு ஆட்சியில் தலித்கள் மீதான தாக்குதல்கள் பல மடங்காக அதிகரித்துள்ளது. நமது அரசியல் அமைப்புச் சட்டம் ஷெல்யூல்டு 5ம் பாகத்தில் பழங்குடி இன

மக்களுக்களித்த உரிமைகளை மறுக்கிறது. (அவர்களுக்கான இடம் என வகைப்படுத்தப்பட்டு அந்த நிலத்தை மற்றவர்கள் வாங்குவதைத் தடை செய்வதே ஷெல்யூல்டு 5ன் 1996 PESA சட்டம்) ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஆணாதிக்க மனப்பான்மையைப் பின்பற்றும் அவர்கள்,  பெண்களிடம் வீட்டிலேயே அடைந்து கிடக்கக் கூறுகிறார்கள். சமூகத்தின் பல பிரிவினர்கள் சம்பந்தமான பிரச்சனைகளைக் கடுமையாக்கும் ஆர்எஸ்எஸ் மற்றும் அவர்களின் சமூக ரீதியான திட்டம் நாட்டைப் பல நூறு ஆண்டுகளுக்குப் பின்னே இழுத்துச் செல்வதேயாகும். அனைவரையும் உள்இணைக்கும் விடுதலைப் போராட்டத்தின் பண்பை இல்லாது ஆக்கவும் இந்திய தேசியம் என்பதை மறுவரையறை செய்யவும் அவர்கள் கடந்த காலத்தின் மீது உக்ரமாகப் போர் நடத்துகிறார்கள்.

      அன்புள்ள தோழர்களே, உங்க அரசியல் தீர்மான வரைவறிக்கைப் படித்தேன், தற்போதைய ஆளும் ஆட்சியைக் குறித்து உங்களுடைய பரிசீலனை மதிப்பீடுகளுடன் நான் முழுமையாக உடன்படுகிறேன். ஆனால் தற்போது நம்முன் உள்ள கேள்வி, எப்படி இந்த வகுப்புவாதப் பாசிச சக்திகளை ஆட்சியிலிருந்து அகற்றி நமது மதசார்பற்ற ஜனநாயக (நாடாளுமன்ற ஆட்சி) அரசியலைக் காப்பாற்றப் போகிறோம் என்பதுதான்.

      நல்லது, கடந்த சில ஆண்டுகளாக இடதுசாரி கட்சிகளுக்குள் புரிதல் வலிமைப்பட்டு வருகிறது, ஒன்றுபட்ட பல செயற்பாடுகள் மேலெடுக்கப்படுகின்றன, ஆனால் அவை போதாது. அதிகாரத்திலிருந்து ஆர்எஸ்எஸ் –பாஜக கூட்டை விரட்ட, அதைத் தாண்டி நாம் மேலே செல்ல செல்ல வேண்டும்.

       மீபத்தில் விஜயவாடாவில் நிறைவடைந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது கட்சிப் பேராயத்தில் இந்த முக்கியமான பிரச்சனை விவாதிக்கப்பட்டு, பின்வரும் முடிவுக்கு வந்தது: “…

இந்தச் சூழலில் அவசரமான தேவை – மத்தியிலும மாநிலங்களிலும் உள்ள பாஜக ஆட்சிக்கு மாற்றாக மதசார்பற்ற ஜனநாயக மாற்றை வளர்த்தெடுப்பதற்காக -- அனைத்து மதசார்பற்ற, ஜனநாயக, இடதுசாரி சக்திகளின் ஆகப் பரந்துபட்ட கூட்டணியை ஒன்று திரட்டி அமைப்பதாகும்.

  இந்த இலக்கை நனவாக்க இடதுசாரி சக்திகளை அணிதிரட்டி ஒன்றிணைப்பதும், வீரம் செறிந்த மக்கள் இயக்க நடவடிக்கைகளை நடத்துவதே தீர்மானகரமான முக்கியத்துவம் உடையது. (அப்போது) ஜனநாயக, மதசார்பற்ற, தேசபக்த சக்திகளை அத்தகைய மாற்று அணியின்பால் ஈர்க்க முடியும். அத்தகைய பரந்துபட்ட மாற்று அணி, வகுப்புவாத பாசிச சக்திகள் ஆட்சியில் தொடர வேண்டி தங்களின் விஷம் தோய்ந்த திட்டங்களுடன் சமூகத்தை ஊடுறுவச் செய்யும் முயற்சிகளை, முறியடிக்க வல்லது.”

     இந்தப் பின்னணியில் கம்யூனிஸ்ட் ஒற்றுமை மற்றும் இறுதியில் கோட்பாட்டு அடிப்படையில் இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் மீண்டும் ஐக்கியமாதல் குறித்த கேள்வி - --இந்திய அரசியலில் வலிமையான, சுதந்திர இடதுசாரி தூணைக் கட்டியெழுப்புவதற்கான-- காலத்தின் கோரிக்கை என நாங்கள் நிச்சயம் நம்புகிறோம்.

            தோழர்களே, நண்பர்களே! இந்தியக் கம்யூனிஸ்ட் (மார்க்ஸிய –லெனினிய) விடுதலைக்


கட்சியின் 11வது கட்சிப் பேராயம் நிச்சயமாக அமைப்பை வலிமையாக்கும், இடதுசாரி, மதசார்பற்ற, ஜனநாயக சக்திகளின் ஒற்றுமைக்குப் பங்களிப்புச் செய்யும் என்று நான் உறுதியாக நம்புகிறேன். இந்தச் செய்திகளுடன் சிபிஐ (எம்எல்) விடுதலை கட்சியின் 11வது கட்சிப் பேராயம் அனைத்து வெற்றிகளையும் பெற நான் வாழ்த்துகிறேன். 
செவ்வணக்கம்!

             மார்க்ஸியம் லெனினியம்  என்றும் வாழ்க! இடதுசாரி ஒற்றுமை நீடு வாழ்க!

--நன்றி : நியூஏஜ் (பிப்.26 –மார்ச் 4)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்