Tuesday 27 July 2021

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 42 சந்திரா சிங் கார்வாலி

 

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :                      

சில சித்திரத் சிதறல்கள் - 42


சந்திரா சிங் கார்வாலி : 

அமைதியான 1930 பெஷாவர் கிளர்ச்சியின் கதாநாயகன்

--அனில் ரஜீம்வாலே

--நியூ ஏஜ் மே 23—29

            

           1930 பெஷாவரில் சந்திரா சிங் கார்வாலியால் தலைமை தாங்கி நடந்தப்பட்ட பிரிட்டிஷ் படையைச் சேர்ந்த ராயல் கார்வால் ரைபிள்ஸ் பிரிவின் அமைதியான கிளர்ச்சி பெரிதும் அறியப்படாத ஒன்று;  ஒருக்கால் பிரிட்டிஷ் இராணுவத்தில் அவர்தான் முதல் கிளர்ச்சிக்காரராக இருக்கக் கூடும். சந்திரா சிங் பிற்காலத்தில் புகழ்பெற்ற கம்யூனிஸ்ட்டாக மாறினார்.

            சந்திரா சிங் கார்வாலி தற்போதைய உத்தரகாண்ட் மாநிலத்தின் கார்வால் மாவட்ட தாளிசய்ன் தாலுக்கா, பட்டி சௌதான், சாய்னி மேரா மாசா கிராமத்தில் 1891 செப்டம்பர் 25ல் பிறந்தார். (டிசம்பர் 25 என்று இணைய கட்டுரைகள் சிலவற்றில் காணப்படுகிறது). தந்தை ஜதாலி சிங் பண்டாரி. அப்பகுதியில் கற்க வசதி இல்லாததால் சந்திரா சிங் முறைசாரா கல்வி பயின்றார். தனது தாயைப் பற்றி எழுதும்போது, ‘அவர் படிப்பறிவு இல்லாதவராயினும் தாய்தான் ஆழமாக தன்னிடம் தாக்கத்தைச் செலுத்தி தனது நேர்மறையான நற்குணங்களுக்குக் காரணமானார்’ என்று குறிப்பிடுகிறார். அழகு கொஞ்சும் சுற்றுச்சூழல் அற்புதமாகச் சூழ்ந்திருக்க அவர் வாழ்ந்தார். அங்கே மரங்களால் மூடப்பட்ட மலைகள், எங்கும் வண்ண மலர்கள், பாடித் திரியும் பறவைகள் நிறைந்திருந்தன. அந்த இயற்கை அவரிடம் ஆழமான செல்வாக்கைச் செலுத்தி அவருடைய ஆளுமையை வடிவமைத்தது.

            இளமையிலேயே திருமணம் முடித்து, நிலப்பிரபுத்துவத்தோடு பிரிட்டிஷ் காலனிய பழக்க வழக்கங்களின் சுரண்டல் கொடுமைகளை ஏராளம் அனுபவித்தார். அந்த வழக்கங்களைப் பொதுவாக ‘வர்தாஸ்ட்’ (‘vardast’) (நால்வர்ண முறையா என்பது மொழிபெயர்ப்பாளருக்கு நிச்சயமில்லை) என்பார்கள்; அதற்குப் பிரிட்டிஷாரின் ஆதரவும் இருந்தது. அதன்படி அரசு அலுவலர்கள், அது சாதாரண பியூன் (சர்பாசி)யாக இருந்தாலும் சரி, யாராக இருந்தாலும் அவர்கள் தங்குவதற்கு இடம், உணவு, துணி துவைத்துக் கொடுத்தல் முதலான அனைத்து வசதிகளையும் செய்து தர வேண்டும். அதில் சிறிது தவறு ஏற்பட்டாலும் அனைத்து கிராமவாசிகளும் அவமானங்கள், தண்டனைகளை அனுபவித்தாக வேண்டும். இந்த அனைத்துக் கொடுமைகளையும் சந்திரா சிங் நேரடியாக அனுபவித்தார்.

முதல் உலகப்போர் இராணுவத்தில்

            அப்போது 1914ல் முதல் உலகப் போர் தொடங்கிய நேரம். பெரும் எண்ணிக்கையிலான கார்வாலி இன மக்கள் இராணுவத்தில் சேர்க்கப்பட்டு ஐரோப்பா உட்பட பல முன்னணி போர்க் களங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அவ்வூரின் மலைகளைச் சுற்றி இளம் போர்வீரர்கள் இராணுவச் சீருடை அணிந்து விரைப்பாக நடந்து சென்றபோது அவர்களின் தொப்பி மேல்நோக்கி ஒரு குறிப்பிட்ட கோணத்தில் வளைந்து இருந்ததும் இளம் சந்திரா சிங்கை வெகுவாக ஈர்த்தது! அவனை அவர்கள் இராணுவத்தில் சேருமாறு அழைத்தனர், இலவசமாக உணவு, இலவசமாக தங்கும் இடம் மற்றும் உலகத்தைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பும் கிடைக்குமென்றனர்! சந்திரா சிங்கும் அவர்களின் அந்தக் கவர்ச்சி வார்த்தைகளுக்கு மயங்கி வாய்ப்புக்காகக் காத்திருக்கத் தொடங்கினான்.

1914 செப்டம்பர் 1தேதி ஆளெடுக்கும் ஹவில்தார் ஒருவர் கிராமத்திற்கு வந்தார். சந்திரா சிங்கின் வீடுதான் வரிசைகளில் முதலில் இருந்தபடியால் அதிருஷ்டம் விழுந்தது போலாயிற்று. தந்தையின் உத்தரவுக்கு இணங்க சந்திரா சிங் ஹவில்தார் உணவைத் தயாரித்துக் கொள்ள வசதியாகப் பாத்திரங்கள் மற்றும் சமையல் பொருட்களைத் தயாரித்து அளித்தார். ஹவில்தாரிடம் தான் இராணுவத்தில் சேர முடியுமா என அவன் வினவ, ஹவில்தார் ஆமோதித்தபோது அவன் மகிழ்ச்சியில் துள்ளிக் குதித்தான். சந்திரா சிங் அந்த ஹவில்தாருடன் செப்டம்பர் 3ம் தேதி விடியற் காலையில் இரகசியமாகக் கலோதன்டா (லேன்ஸ்ட்வுண்) என்ற இடத்திற்கு வீட்டைவிட்டுப் புறப்பட்டார். 2/39 கார்வாலி ரைபிள்ஸ் (துப்பாக்கிப்) பிரிவின் 6வது கம்பெனி 12வது பிரிவில் சந்திரா சிங் சேர்ந்தார். இராணுவத்தில் சேர பெற்றோர்களின் ஆசியையும் பெற்றார்.

பிரான்ஸ் போர்க்களம் (1915)

            75 கார்வால் ரைபிள்ஸ் ஜவான்களுடன் சந்திரா சிங் 1915 ஜூலை 6ல் பம்பாய் புறப்பட்டார். வழியில் படைகள் கடுமையான காலராவால் பாதிக்கப்பட்டு 15 நாட்கள் தனிமையில் வைக்கப்பட்டனர். 300 கார்வாலிய வீரர்கள் உட்பட 700 ஜவான்களுடன் ‘கோகநாடா’ கப்பலில் 1915 ஆகஸ்ட் 1ல் அவர்கள் விக்டோரியா பண்டருக்குப் புறப்பட்டனர். ஆகஸ்ட் 14ம் நாள் ஆடென் மற்றும் போர்ட் சயித் வழியாக (பிரான்சின்) மார்ஷிலெஸ் (Marseilles) அடைந்தனர்.

அது முற்றிலும் வேறு உலகம், சந்திரா சிங் அங்கே பிரான்ஸ் மற்றும் ஐரோப்பிய வாழ்க்கை முறையை அனுபவித்தார். ஜெர்மானியர்களுக்கு எதிரான சில கோரமான மிகக் கடினமான பதுங்குகுழி போர்முறை யுத்தங்களில் அவர் பங்கேற்றார்; எந்திரத் துப்பாக்கிகளால் தோட்டாக்களைப் பொழிந்து வெடி குண்டுகளை வீசி, துப்பாக்கி மற்றும் துப்பாக்கி பயோநெட் கூர்முனைக் கத்திகளால் குத்திக் கிழித்துப் போரிட்டு அழிவுகளை ஏற்படுத்தியபடி போரிட்டார். அவற்றில் சாவிலிருந்து நூலிழைகளில் தப்பினார் என்றுதான் கூற வேண்டும். அந்தப் போர்களை ராகுல சாங்கிருத்தியாயன் மிக விரிவாக விவரித்துள்ளார். பிரான்சில் இரண்டு மாதங்கள் மற்றும் எட்டு நாட்கள் தங்கியிருந்தது அவரை முழுமையாக மாற்றியது.

சந்திரா சிங்கும் ஏனைய வீரர்களும் 1915 அக்டோபரில் இந்தியாவுக்குப் புறப்பட்டு 1916 பிப்ரவரியில் இந்தியா வந்தடைந்தனர். வரும் வழிகளில் பதுங்கு குழிகளை வெட்டுவது போன்ற பல கடமைகளைச் செய்ய வேண்டியிருந்தது.  

சந்திரா சிங் லான்ஸ் நாயக் பதவி உயர்வு பெற்று 12வது ப்ளாட்டூனின் 4வது பிரிவின் கமாண்டர் ஆனார். அவர்கள் 1917ல் மெசபடோமியா சென்று அங்கே துருக்கியர்களுக்கு எதிரான  பஸ்ரா மற்றும் ராமதீ (ஈராக்) போர்களில் தகிக்கும் வெப்பத்தில் போரிட்டனர்.

மனைவி இறந்து போனதும் இரண்டாவது முறை அவர் மணம் செய்து கொண்டார்.

தேசிய இயக்கத்தில்

            ஒருமுறை இரண்டு அரசியல் கைதிகளைப் பாதுகாக்கும் பணியில் ஈடுபட்டிருந்தபோது உத்தரவுகளுக்கு மாறாக அவர்களிடம் பேச்சுக் கொடுத்தார் சந்திரா சிங். அப்போதுதான் முதன் முறையாக அரசியல் அறிமுகம் ஏற்பட்டு தேசிய இயக்கம் பற்றிய பல உண்மைகளை அறிந்து கொண்டார். அதில் வயதுமுதிர்ந்த கைதி, ‘தனது மகனும்கூட இராணுவதில்தான் இருப்பதாகத்’ தெரிவித்தார்; ஒரு மகன் தனது தந்தையைக் கைது செய்தால் சந்திரா சிங் எப்படிப்பட்ட உணர்வில் இருப்பார் என அவர் கேட்டார். இவ்விவாதம் அவருள் மின்னல் கீற்றைப் பாய்ச்சியது.

            கோவிந்த் வல்ல பந்த், ஹர்கோவிந்த் பந்த் பிறருடன் சேர்ந்து குமாவுன் பரிஷத் (Kumaon Parishad குமாவுன் பகுதியின் சபை) அமைத்து நிலவுடைமை முறையை எதிர்த்தனர்.  (உத்தர்காண்டின் குமாவுன் இடத்தின் பெயருக்குக் கூர்மாவதாரம் பிறந்த மண் என்று அர்த்தம்) அல்மோராவில் மிகப் பெரிய பேரணி நடத்தப்பட்டது. அந்த இடம் முழுவதும் ‘காந்திஜிக்கு ஜெய்’ என்ற முழக்கம் விண்ணதிர எதிரொலித்தது. (அந்த இயக்கம் சுதந்திர இயக்கத்தில் முக்கிய பங்கு வகித்தது. ஹர்கோவிந்த் பந்த் சபையின் முதல் தலைவர்)

            போருக்குப் பின் படைப் பிரிவுகளைக் கலைத்தது நெருக்கடிகளை ஏற்படுத்தியது. உணவுக்கு கடும் பற்றாக்குறை ஏற்பட பட்டினியால் சிலநேரம் மக்கள் இறந்தார்கள். போர் வீரர்கள் வேலை இழந்தார்கள். பிரான்சில் 13ஆயிரம் கார்வாலியர்கள் இறந்து போக, அவர்தம் குடும்பம் நிர்கதியானது. அப்பிராந்தியத்தைப் பிளேக், காலரா, மலேரியா சூழ்ந்தது.

            சந்திரா சிங்கும் மற்றவர்களும் தாங்கள் சாதாரண வீரர்களாகப் பதவி இறக்கப்பட்டதை எதிர்த்தனர். காந்திஜியைச் சந்திக்க விரும்பி அவர் டேராடூன் மற்றும் ஜகத்ரீ சென்றபோது அவரால் சந்திக்க இயலவில்லை. அவர் அங்கே சந்தித்தது மோதிலால் நேருவைத்தான் என்பதைப் பின்னரே அறிந்து கொண்டார். மோதிலாலிடம் தான் ‘காந்திஜியின் படை’யின் ஒரு வீரன் என்று அறிமுகப்படுத்திக் கொண்டபோது சந்திரா சிங் முதலில் பிரிட்டிஷ் இராணுவத்திலிருந்து விலக வேண்டும், இல்லாவிட்டால் அவர்கள் அவரைக் கொடுமைப்படுத்துவர் என்று அறிவுறுத்தினார்.

            இதன் மத்தியில் வாஸிரிஸ்தான் மற்றும் கைபர் கணவாய்க்கு அனுப்பப்பட்டபோது சந்திரா சிங் கம்பெனி குவார்டர் மாஸ்டர் பதவியில் இருந்தார். அங்கிருந்து திரும்பும்போது அவர் ஒரு ஆர்ய சமாஜ் உறுப்பினராக மாறியிருந்தார். இப்போது அவர் சரளமாகப் பத்திரிக்கைகளைத் தினமும் படித்துக் கான்பூர் போல்ஷ்விக் சதி வழங்குகளைப் பற்றியும் எஸ் ஏ டாங்கே மற்றும் பிற தலைவர்கள் பற்றியும் தெரிந்து கொண்டார். இராணுவத்தில் செயல்பட்ட இரகசிய கூட்டங்களில் பங்கேற்றவர் காங்கிரஸில் சேரும் இலட்சியம் கொண்டவராக இருந்தார்.  

            கார்வால் திரும்பிய சந்திரா சிங்குக்கு ஒரு கூட்டத்தில் காந்திஜி தனது கைகளாலேயே காங்கிரஸ் ‘குல்லா’ வழங்கினார்.

சரித்திரப் புகழ் வாய்ந்த பெஷாவர் கிளர்ச்சி (1930)

          

  காந்திஜி புகழார்ந்த தண்டி யாத்திரையை 1930 மார்ச் 12ல் தொடங்கினார். பெஷாவர் மற்றும் சுற்றுவட்டாரங்களில் காங்கிரஸின் விரிவான இயக்கமும் ‘எல்லை காந்தி’ எனப் புகழப்படும் கான் அப்துல் கப்பார் கான் அவர்களின் குதை கித்மத்கர் (இறைவனின் தொண்டர்கள்) என்ற போராட்ட இயக்கமும் வீறுகொண்டு எழுந்தன. 1930 ஏப்ரலில் சந்திரா சிங்கின் 2/18 கார்வால் ரைபிள் பிரிவு பெஷாவருக்கு வெளியே தயாராக நிறுத்தப்பட்டனர்.

            ஏப்ரல் 23ல் ஒரு பொதுக்கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. சந்திரா சிங்கின் படைப் பிரிவு காலையிலேயே அங்கு கொண்டுவரப்பட்டு, தேவையெனில் கூட்டத்தினரை நோக்கி துப்பாக்கியால் சுட உத்தரவிடும்படி பணிக்கப்பட்டிருந்தனர். 22ம் தேதி மாலை சந்திரா சிங் நடத்திய இரகசிய கூட்டத்தில் கம்பெனிகளிலிருந்து பிரதிநிதிகள் வந்து கலந்து கொண்டனர். கூட்டத்தில் சுடும்படி உத்தரவிட்டால், அவ்வாறு சுடுவதற்கு மறுப்பது என முடிவு செய்தனர்.

            கிஸ்ஸா காவானி பஜாரில் (கதை சொல்லிகள் சந்தை) காங்கிரசும் குதை கித்மத்கர் இயக்கத்தினரும் ஏப்ரல் 23ல் நடத்திய கூட்டத்தில் படைகள் வரிசையாய் நிறுத்தப்பட்டன. கார்வாலி ரைபிள்ஸ் அங்கே செல்லுமாறு உத்தரவிட்டபோது, சந்திரா சிங் உட்பட 36 பேர் பின்னே நிறுத்தப்பட்டு விட்டனர். படைப் பிரிவுகளுக்குத் தண்ணீர் கொடுக்கும் சாக்கில் அந்த இடத்திற்குச் செல்ல மேஜர் பி போவெல் அவர்களிடம் அனுமதி பெற்றுவிட்டார். சில கழுதைகளை ஏற்பாடு செய்த சந்திரா சிங் வழியெல்லாம் தண்ணீர் சுமந்து சென்றார்.

            கூட்டம் மிக விறுவிறுப்பாக நடந்து கொண்டிருந்தது. கலைந்து சென்றுவிடுமாறும், இல்லையெனில் துப்பாக்கிச் சூடு நடத்த உத்தரவிடுவேன் எனக் கேப்டன் ரிக்கெட் கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தவர்களை நோக்கி உத்தரவிட்டான். அவருக்கு அடுத்து சந்திரா சிங் நின்று கொண்டிருந்தார். ரிக்கெட் ‘ஃபையர்’ என ‘சுடு’வதற்கு உத்தரவிட, பக்கத்தில் இருந்த சந்திரா சிங்  ‘சீஸ் ஃபையர்’ (சுட வேண்டாம், துப்பாக்கிச் சூட்டை நிறுத்துங்கள்) என மாற்று உத்தரவைப் பிறப்பித்தார். உத்தரவு மற்ற கம்பெனிகளுக்கும் அனுப்பப்பட்டது. பிரிட்டிஷ்காரர்கள் அதிர்ச்சியில் உறைந்து போயினர். என்ன செய்கிறாய் எனக் கேட்டபோது சந்திரா சிங் இவ்வாறு பதில் அளித்தார்: “நாங்கள் ஆயுதமற்ற நிராயுதபாணிகளைச் சுட மாட்டோம்”. கார்வாலி வீரர்கள் தங்கள் ரைபிள்களைக் கீழே வைத்து விட்டனர்.

            எனவே பிரிட்டிஷ் படைவீரர்கள் திரட்டப்பட்டனர். அடுத்து அங்கே நடந்தது மற்றுமொரு ‘ஜாலியன்வாலா பாக்’. கண்டபடிச் சுடத் தொடங்கியவர்கள் கவச வண்டிகளால் மக்களை நசுக்கினர். இயந்திரத் துப்பாக்கிகள் தாராளமாகப் பயன்படுத்தப்பட்டன. மைதானம் முழுவதும், வீதிகள், சந்துகள் எல்லாம் இறந்த உடல்கள் இறைந்து கிடந்தன. 300க்கும் மேற்பட்டவர்கள் ரத்த வெள்ளத்தில் கொல்லப்பட்டனர். கைகளில் எது கிடைத்ததோ அதைக் கொண்டு மக்கள் எதிர்க்கத் தொடங்கினர்.  

பிரித்தானிய படைவீரர்களுக்கும் அறவழி சுதந்திரப் போராட்டக்காரர்களுக்கும் இடையில் நடைபெற்ற மோதலில் 1930 ஏப்ரல் 23ல் பெஷாவர் நகரில் படைவீரர்கள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் நூற்றுக் கணக்கான போராட்டக்காரர்கள் கொல்லப்பட்ட இத்துயர நிகழ்வே கதை சொல்லிகள் சந்தைப் படுகொலை அல்லது கிஸ்ஸா காவானி பஜார் படுகொலை என்றழைக்கப்படுகிறது.

இராணுவக் கோர்ட்டு விசாரணை

            மக்களும் வீரர்களும் சந்திரா சிங்கைச் சூழ்ந்து கொண்டு வாழ்த்துக் கூறினர். கார்வாலி வீரர்களை முகாம்களுக்கு அழைத்துச் சென்று ஆயுதங்களை அகற்றி அவர்கள் மீது இராணுவக் கோர்ட் நடவடிக்கை எடுக்கப்பட்டது.

            அடுத்த நாள் மீண்டும் கார்வாலி ரைபிள்ஸ் வீரர்களை அங்கே செல்லுமாறும் அதற்கு மாறாக உத்தரவுகளை மீறினால் சுடப்படுவார்கள் என்றும்  எச்சரிக்கப்பட்டனர். அவர்கள் மிகச் சாதாரணமாக இராணுவ டிரக் வண்டியில் ஏற மறுத்து விட்டனர். 67 ஜவான்கள் சந்திரா சிங் தலைமையில் கடிதத்தில் கையெழுத்திட்டு பதவி விலகினர். அவர்கள் அனைவரும் அபோட்டாபாத் அழைத்துச் செல்லப்பட்டு பல்வேறு வகையான ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டனர். சந்திரா சிங்குக்கு ஆயுள் தண்டனை. இறுதியில் அவர் 1930 ஜூன் 12ம் நாள் அப்போட்டாபாத் அனுப்பப்பட்டு மிக மோசமான, வெளிச்சம் இல்லாத, சிறியதொரு சிறைக் கொட்டகையில் மூன்றடிக்கு ஆறரை அடி அளவில் இருந்த பிளாட்பார்ம் போன்ற இடத்தில் அடைக்கப்பட்டார்; தரையில் மாவு அறைக்கும் எந்திரம் (சக்கி), நாற்றமெடுக்கும் கழிவறைப் பொந்து மற்றும் எல்லா இடத்திலும் சாகடிக்கும் பூச்சிகள் நிறைந்த இடம்!

            மறுநாள் சந்திரா சிங் இரும்புச் சங்கிலியால் (பெடீ தண்டா) பிணைக்கப்பட்டார். அந்தச் சங்கிலியைச் சுமந்தபடிதான் தொடர்ந்து 6 ஆண்டுகள் இருந்தார்! அந்தச் சங்கிலிகள் 1936 ஜூன் 21ம் நாள் பெய்ரேலி சிறையில் துண்டிக்கப்பட்டது! இப்படி 11 ஆண்டுகள், மூன்று மாதம் மற்றும் 16 நாட்கள் இடைவெளியின்றி அவர் சிறையில் இருந்தார்.

கம்யூனிஸ்ட்களுடன் தொடர்பு

            இந்த 11 ஆண்டுகளில் நைனி, லக்னோ, அல்மோரா, டெராடூன், பெய்ரேலி முதலான பல்வேறு சிறைகளுக்குப் பயணம் செய்து சொல்லொண்ணா கொடுமைகளையும் அவமானங்களையும் அனுபவித்தார்; (அதனை எதிர்த்து) உண்ணாவிரதப் போராட்டங்களிலும் ஈடுபட்டார். யஷ்பால், இரமேஷ் சந்திரா குப்தா, நேரு, சுபாஷ் போஸ், ஜ்வாலா பிரசாத் குப்தா, ஜெய் பகதூர் சிங், ஆச்சார்ய நரேந்திர தேவ், பண்டிட் சுந்தர்லால் மற்றும் எண்ணிறந்த பலரையும் சந்தித்தார். அவர்கள் அவரைக் கம்யூனிச இயக்கத்தின்பால் வடிவமைத்தனர். தற்போது அவர் ‘படே பாய்இ’ (மூத்த சகோதரர்) ஆனார். 

            1941 செப்டம்பர் 26ல் அவர் விடுதலை செய்யப்பட்டாலும் கார்வாலில் நுழையத் தடை விதிக்கப்பட்டார். நேருவின் வேண்டுகோளை ஏற்று அலகாபாத் காங்கிரஸ் தலைமையகமாய் இருந்த ஆனந்த பவனத்தில் அவரும் அவரது குடும்பத்தினரும் தங்கினர்; அதன் பிறகு காந்திஜி அவரை வார்தா ஆசிரமத்துக்கு அழைக்க, அங்கே காந்திஜியுடன் நெருங்கிய நட்பு வளர்ந்தது.

1942 இயக்கத்தில்

            பின்னர் அவர் அலகாபாத்துக்கும் வாரணாசிக்கும் திரும்பியபோது நாடு வெள்ளையனே வெளியேறு 1942 இயக்கத்தில் சென்று கொண்டிருந்தது. மிகப் பிரம்மாண்டமான மாணவர்கள் கூட்டமொன்றில் இயக்கத்தின் ‘கமாண்டர் இன் சீப்’ என அவரும் ‘சர்வாதிகாரி’யாக டாக்டர் கௌரலாவும் நியமிக்கப்பட்டனர். இளைஞர்களை அவர் தொலைபேசிக் கம்பிகளை வெட்டுவது எப்படி மற்றும் ரயில்வே தண்டவாளங்களை அடியோடு அகற்றுவது முதலானவற்றில் பயிற்சி அளிக்கத் தொடங்கினார். 1942 அக்டோபர் 6ல் கைதான அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டு மிர்ஸாபூருக்கு அனுப்பப்பட்டார். சிறையில் அங்கே சிவ் வர்மா உள்பட பல கம்யூனிஸ்ட்களைச் சந்தித்தார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராக

            1945ல் விடுதலையான பிறகு சிபிஐ பொதுச் செயலாளர் பிசி ஜோஷியோடு தொடர்பு கொண்டார்; பிசி ஜோஷி அவருக்கு 100ரூபாய் அனுப்பி அவரைப் பம்பாய்க்கு வருமாறு அழைத்தார். குவியல் குவியலாக மார்க்சிய நூல்களைப் படிப்பதற்காக அளித்த ஜோஷி அவருக்கு மார்க்சியத்தில் பயிற்சி அளித்தார். பயிற்சி முடிந்த 6 மாதங்களில் தொழிலாளர் வர்க்கத்தினர் நிறைந்த பகுதிகளில் பணியாற்ற அவர் அனுப்பி வைக்கப்பட்டார். கட்சி தலைமையகத்தில் 72 தோழர்களுடன் அமைந்த கம்யூன் வாழ்க்கை சந்திரா சிங்கை ஆழமாக ஈர்த்தது. ஜோஷி அவரை அகில இந்திய கிசான் சபாவின் நேத்ரகோனா (வங்காளம்) மாநாட்டிற்கு அழைத்துச் சென்றார்.

            அப்போது சந்திரா சிங் ‘பெஷாவர் எழுச்சியின் கதாநாயகன்’ என்ற புகழோடு அறியப்பட்டு ‘சந்திரா சிங் பாபா கி ஜெய்’ என்ற முழக்கத்துடன் வாழ்த்திசைக்கப்பட்டார்.

            கட்சி தலைமையகத்தில் நடந்த சிறு கூட்டத்தில் பிசி ஜோஷி உரையாற்றி சந்திரா சிங்குக்குக் கட்சி உறுப்பினர் சிகப்பு அட்டை வழங்கினார். கட்சிப் பணிக்காகச் சந்திரா சிங் லக்னோவுக்கு திரும்ப அனுப்பப்பட்டார். ராணிகெட் பகுதியில் பணியாற்ற அவருக்குப்  பொறுப்பளிக்கப்பட்டது.

            இதன் மத்தியில் 1946 தேர்தல்கள் நடத்தப்பட்டதில் இடைக்கால அரசு உருவானது. சந்திரா சிங்கைத் தேர்தலில் நிறுத்த சிபிஐ முடிவு செய்தாலும் அவர் கார்வாலில் இருந்து போட்டியிடத் தடைசெய்யப்பட்டிருந்தார். கோர்ட் மார்ஷல் உத்தரவு நகலைப் பெற்று தேர்தலில் போட்டியிட கவர்னரின் அனுமதியைப் பெற அவர் அங்கும் இங்குமாக அலைக்கழிக்கப்பட்டார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு 1946 டிசம்பர் 22ல் அவர் கோட்வார் (Kotdwar) அடைந்தபோது அவருக்கு எழுச்சி மிக்க வரவேற்பு அளிக்கப்பட்டது. அவருக்கான அனுமதிக் கடித ஆவணங்களை வேண்டுமென்றே கவர்னர் தாமதப்படுத்தினர்; தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்வதற்கான கால கெடு முடிந்த அரை மணி நேரம் அழித்தே அனுமதிக் கடித்தை வழங்கினார். எனவே கட்சி, காங்கிரஸ் கட்சியின் முற்போக்கு வேட்பாளர் டாக்டர் கௌரலாவை ஆதரித்தது; அவருடைய வெற்றிக்காகச் சந்திரா சிங்கே தேர்தல் பணியாற்றினார். 

டெஹ்ரி சமஸ்தான அரசை எதிர்த்துப் போராட்டம்

          பௌரி கட்சி மையமாக்கப்பட்டது. சந்திரா சிங், சக்லானியும் மற்றவர்களும் கட்சிக்காகவும் டெஹ்ரி சமஸ்தான அரசை (Tehri princely state) எதிர்த்தப் போராட்டங்களுக்காகவும் கடுமையாக உழைத்தார்கள். 1948 ஜனவரி 11ல் சக்லானி சுடப்பட்டு மாண்டார், மோலு சிங்கும் களபலி ஆனார். கொல்லப்பட்ட அவர்களின் உடல்களைச் சுமந்து கொண்டு மிகப் பிரம்மாண்டமான பேரணி மலைகளின் ஊடாகப் பல நாட்களுக்குச் சந்திரா சிங் மற்றும் பிறர் தலைமையில் நடந்து சென்றது. இறுதிச் சடங்குகள் முடிந்த பிறகு சந்திரா சிங் பிரகடனப்படுத்தினார் : “டெஹ்ரி விடுதலை ஆனது!”

            இதன் பிறகு சில காரணங்களால் சந்திரா சிங் கட்சி உறுப்பினரிலிருந்து விலகினார். 1952ல் கோட்வார் வந்த பிசி ஜோஷி அவரைச் சமாதானப்படுத்தி உறுப்பினர் அட்டையைப் புதுப்பிக்கச் செய்தார். அதன்படியே அவரும் மீண்டும் கட்சி உறுப்பினர் ஆனார். 1979 ஆகஸ்டில் கோட்வாரில் சந்திரா சிங் மிகக் கடுமையாக நோய்வாய்ப்பட்டார். ஒரு மருத்துவமனையில் 1979 அக்டோபர் 1ம் தேதி அந்த வீரத் திருமகன் உயிர் நீத்தார்.

            அவருடைய நினைவாக இந்திய அரசு அஞ்சல் தலை வெளியிட்டது.

            மகாத்மா காந்தி ஒருமுறை கூறினார் : “என்னிடம் மட்டும் நான்கு சந்திரா சிங் கார்வாலிகள் இருப்பார்கள் என்றால், தேசம் பல ஆண்டுகளுக்கு முன்பே விடுதலை பெற்றிருக்கும்!

-- தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

Thursday 22 July 2021

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 41 ஜெகந்நாத் சர்க்கார்

 

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் - 41


ஜெகந்நாத் சர்க்கார் :  

பீகாரில் கம்யூனிச இயக்கத்தைக் கட்டியவர் 

--அனில் ரஜீம்வாலே

--நியூ ஏஜ் மே 9-- 15

ஜெகந்நாத் சர்க்கார் 1919 செப்டம்பர் 25ம் நாள் ஒரிசா மாநில பூரியில் பிறந்தார். அவரது தந்தை டாக்டர் அகில் நாத் சர்க்கார் (AN சர்க்கார்) பீகாரில் புகழ்வாய்ந்த மருத்துவர், பீகார் மற்றும் ஒரிசா பிராந்தியத்தின் அசிஸ்டண்ட் சர்ஜன். தாய், பீனாபாணி, மகனை வயிற்றில் கருவாகச் சுமந்தபோது பூரி ஜெகந்நாதர் ஆலையத் தேரை வடம் பிடித்து இழுத்தார் என்பார்கள்; அது புனிதக் கடமை எனக் கருதப்படுகிறது. எனவே மகனுக்கு ‘ஜெகந்நாத்’ எனப் பெயரிட்டார். புகழ் வாய்ந்த வரலாற்றாசிரியர் சர் ஜுடுநாத் சர்க்கார் அவருடைய மாமா ஆவார்.

பாட்னா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவ மனை (PMCH) ஆலைய மருத்துவப் பள்ளி என்று நிறுவப்பட்டது. 1925ல் அது வேல்ஸ் இளவரசர் மருத்துவக் கல்லூரி ஆனது. 1924ல் பாட்னாவுக்கு மாற்றப்பட்ட டாக்டர் ஏ என் சர்க்கார் ஜுடுநாத் சர்க்கார் வீட்டில் தங்கினார்.

பாட்னாவில் பெருமை வாய்ந்த ராம் மோகன் ராய் செமினரிப் பள்ளியில் படித்த ஜெகந்நாத் 1935ல் தனித்த சிறப்புத் தகுதியுடன் மெட்ரிக் தேர்வானார். தொடர்ந்து முதல்நிலையே பெற்றார். பிறகு பாட்னா அறிவியல் கல்லூரியில் ISc (இந்தியன் ஸ்கூல் சர்ட்டிபிகேட், 12வது வகுப்பு) படிப்பில் சேர்க்கப்பட்டார். அங்கே அவர் ‘ரோல் நம்பர் 13’ என்று புகழ்பெற்றார். அவருடைய மாமா ஆசிரியராக இருந்த பாட்னா கல்லூரியில் பிறகு சேர்ந்து 1937ல் பி ஏ பட்டம் பெற்றார்.

அங்கேதான் எதிர்காலத் தலைவர்களான சுனில் முகர்ஜி, அலி அஷ்ரஃப் போன்ற பிறரும் படித்தார்கள். பாட்னாவில் அவருக்குச் சந்திர ஷேகர் சிங்குடன் தொடர்பு ஏற்பட்டது. விரைவிலேயே ஜெகந்நாத்’தா, அவர் அப்படித்தான் அன்புடன் அழைக்கப்பட்டார், மாணவர் அமைப்பான ஏஐஎஸ்எஃப் மற்றும் கட்சியைப் பற்றி அறிந்து கொண்டார். பாட்னாவிலும் பீகாரிலும் அப்போது ஏஐஎஸ்எஃப் வளர்ந்து எழுச்சிபெற்று வந்தது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைதல்

சிபிஐ சார்பாகப் பிசி ஜோஷியும், காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி சார்பாக ஜெயப்பிரகாஷ் நாராயணனும் பீகாரில் சிபிஐ கிளை அமைப்பதில்லை என்ற உடன்பாடு செய்திருந்தனர்; காரணம், கம்யூனிஸ்ட்களும் சோஷலிஸ்ட்களும் நல்ல புரிதலோடு இணைந்து பணியாற்றிக் கொண்டிருந்தனர். ஆனால் விரைவிலேயே, குறிப்பாக இரண்டாவது உலக யுத்தம் மற்றும் நடைமுறைத் தந்திரங்கள் வகுப்பது தொடர்பாக, முரண்பாடுகள் ஏற்பட்டன. இதைத் தொடர்ந்து கம்யூனிஸ்ட்கள் 1939 மூன்கரில் ஒரு கூட்டம் நடத்தி பீகாரில் சிபிஐ கிளை அமைப்பை நிறுவினர். கமிட்டி அமைக்கப்பட்டது. ஜெகந்நாத்’தா அப்போது கட்சி உறுப்பினராகவில்லை. அவரைச் சேரும்படி வேண்டியபோது எம்ஏ தேர்வு எழுதிய பிறகு இணைகிறேன் எனப் பதிலளித்தார். ஆனால் விரைவிலேயே 1940ல் எம்ஏ தேர்வு எழுதாமலேயே கட்சியில் இணைந்தார்.  பாட்னா, கடம்குவான் என்ற இடத்தில் அழுக்கு மண்டிய இருட்டு அறையில் மாணவரான ஜெகந்நாத் சர்க்கார், ஏற்கனவே கட்சி உறுப்பினரான சுரேந்திர ஷர்மா மற்றும் மித்னாபூரிலிருந்து வந்த ‘தேசியப் புரட்சியாளர்’ அஜீத் மித்ரா மூவரும் கூடி முதல் கட்சிக் கிளையைப் பீகாரில் அமைத்தனர். மூன்கரில் அமைக்கப்பட்ட பிரதேச கமிட்டி (PC) சார்பில் அலி அஷ்ரஃப் கலந்து கொண்டார். இப்படியாகப் பாட்னாவில் முதலாவது கட்சி அமைப்பு அமைக்கப்பட்டது.

கட்சி அப்போது தலைமறைவாகச் செயல்பட்டது. தலைமறைவு தொழில்நுட்ப (‘tech’) பிரிவின் பொறுப்பு ஜெகந்நாத்’தாவுக்கு வழங்கப்பட்டு கட்சியின் தலைமறைவு முகவரியாகச் செயல்பட்டார். பம்பாய் தலைமையகத்திற்கு அனுப்ப வேண்டிய தகவல்கள், கடிதங்களும், அங்கிருந்து வருவனவும் அவர் மூலமாக நடந்தது. அப்படிக் கடிதம் சுமக்கும் ‘கூரியர்’களாக பெகுசராயின் தேவ்கி நந்தன் சிங், ஹில்சா பகுதியைச் சேர்ந்த பவுல்வந்த் பிரசாத் மற்றும் மூன்கரின் ஹரி சின்ஹா மூவரும் இருந்தனர்.

சாப்ரா, மூன்கர், தர்பங்கா, பகல்பூர், பாட்னா முதலிய இடங்களில் 1940 ஜனவரி 26ல் மாணவர்களின் பெரும் வேலைநிறுத்தப் போராட்டங்கள் நடைபெற்றன.  டால்மியா நகரின் தொழிலாளர்களும் வேலை நிறுத்தத்தில் இறங்கினர்.  

            அனுபவக் குறைவு காரணமாகச் சுனில் முகர்ஜி, ராகுல் சாங்கிருத்யாய்னா, விஸ்வநாத் மாதூர், பிபி முகர்ஜி, ரத்தன் ராய் முதலான பல தோழர்கள் கைதாயினர்.

            எனவே தொடர்ந்து புதிய பிரதேசக் கமிட்டிகள் அமைக்க வேண்டியதாயிற்று. 1940ல் பிசி ஜோஷி ஒரு ‘கூரியர்’ தோழர் மூலம் ஜெகந்நாத்’தாவைக் கட்சி உறுப்பினர்கள் பட்டியலை அனுப்புமாறு தகவல் அனுப்பினார். மற்றுமொரு தகவல் மூலம் பயிற்சி பெறுவதற்காக ஜெகந்நாத்’தாவை உடனடியாகக் கல்கத்தா விரையும்படிக் கூறப்பட்டது. ஜெகந்நாத்’தா எம்ஏ தேர்வை எழுதாது, பிறகு ஒருபோதும் அவர் அத்தேர்வை எழுதவில்லை, அமைதியாக வீட்டைவிட்டுக் கல்கத்தாவுக்குப் புறப்பட்டார்.

            கல்கத்தாவில் பவானி சென் (இவரைப் பற்றி இந்த வரலாற்றுத் தலைவர்கள் கட்டுரைத் தொடரில் 15வது கட்டுரை வெளிவந்தது) தினமும் அவருக்குச் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் (போல்ஷ்விக்குகள்) CPSUB அமைப்பின் வரலாறு பற்றிய பாடத்தில் சொற்பொழிவுகள் நடத்தினார். பாடம் நடத்தி முடித்த பிறகு அவருக்குக் கேள்விகள் கொடுக்கப்பட்டு அதற்கான விடைகளை எழுதும்படி கூறப்பட்டார். பின்னர் நிருபன் சக்ரவர்த்தி (Nripen Chakravarty) மற்றும் பஞ்சு கோபால் பண்டாரி இணைந்து கொண்டனர்.

            பவானி சென்னுக்கு அடுத்து சோமநாத் லாகிரி (இவரைப் பற்றி இந்த வரலாற்றுத் தலைவர்கள் கட்டுரைத் தொடரில் 12வது கட்டுரை வெளிவந்தது) கட்சி மற்றும் தொழில்நுட்ப அமைப்பு குறித்து பாடம் எடுத்தார். இதன் மத்தியில் கட்சி ‘மக்கள் யுத்தம்’ பற்றிய அணுகுமுறையை நிறைவேற்றியது. எனவே சோமநாத் லாகிரி மேற்கொண்டு விளக்க நேரம் இல்லை என்று கூறி ஒரு தடிமனான தொகுப்பு ஆவணங்களை அவரிடம் கையளித்து அவற்றைப் படித்த பிறகு திரும்ப ஒப்படைக்கும்படி கூறினார்.

பிரதேசக் கட்சிச் செயலாளர் (1941)

            பொலிட் பிரோ உறுப்பினர் என்ற முறையில் லாகிரி பீகாரில் மன்ஸார் ரிஸ்வி, ஷ்யாமல் கிஷோர் ஜா, யோகேந்திர ஷர்மா மற்றும் ஜெகந்நாத்’தா உள்ளடக்கிய புதிய புரொவின்சியல் கமிட்டியை அமைத்தார். அண்மையில் கட்சியில் சேர்ந்த, முதுகலை பட்டப்படிப்பைப் பாதியில் விட்ட  22 வயதேயான இளைஞரான ஜெகந்நாத் சர்க்கார், மிகச் சிரமமான காலகட்டத்தில் (1941) கட்சிப் பிரதேசக் கமிட்டியின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இதன் மத்தியில் ஜெகந்நாத்’தா கிரிதிஹ் மற்றும் பிற பகுதிகளுக்கு கட்சி மற்றும் தொழிற்சங்கப் பணிகளுக்காகச் சென்றார்.

            எஸ் ஜி சர்தேசாய் (இவரைப் பற்றி இந்த வரலாற்றுத் தலைவர்கள் கட்டுரைத் தொடரில் 2வது கட்டுரையாக வெளிவந்தது) மத்திய கமிட்டி பிரதிநிதியாகப் பீகார் வருவது வழக்கம். ஏற்கனவே ஜெகந்நாத்‘தாவுடன் அவருக்கு அறிமுகம் இருந்தது. கல்கத்தாவில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி கூட்டத்தில் பார்வையாளராகச் சென்றிருந்த ஜெகந்நாத்’தா அங்கு அவரை முதன் முறையாகச் சந்தித்தார். எஸ் ஜி சர்தேசாயின் மாமா புகழ்பெற்ற வரலாற்று அறிஞரான ஜி எஸ் சர்தேசாய்; அவர் சர் ஜுடுநாத் சர்க்காரின் நெருங்கிய நண்பராவார். ‘மார் பாகவ்’ (பிரிட்டிஸாரை வெளியே அனுப்பு) என்னும் 1946 தீர்மானத்தோடு சேர்த்து பிரதேசக் கமிட்டி உறுப்பினர்களை எஸ் ஜி சர்தேசாய் நன்கு அறிந்து வைத்திருந்தது ஜெகந்நாத்’தாவை ஆழமாகக் கவர்ந்தது. பிறகு ஜெகந்நாத்’தா கிரிதிஹ் மற்றும் ஜாரியா போன்ற இடங்களின் சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் சங்கம் உட்பட மற்றவர்களோடு பணியாற்றச் சென்றார். அங்கே அவர் சதுரானன் மிஸ்ரா (பின்னர் ஒன்றிய விவசாய அமைச்சராக இருந்தவர்), சரத் பட்நாயக், கிருபா சிந்து கவுன்டியா மற்றும் பிறரைச் சந்தித்தார். மிகவும் மோசமான பணிநிலைமைகளில் தொழிலாளர்கள் பாடுபட்டனர், அதே போல அவர்களோடு பணியாற்றுவதும் கடினமாக இருந்தது. அங்கே சபலேந்து பட்டாசாரியா முதலான தலைவர்களைச் சந்தித்தவர் பல வேலைநிறுத்தங்களிலும் கலந்து கொண்டார்.

‘பிடிஆர் கால’த்தில் ஜெகந்நாத்’தா

            இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1947 ஆகஸ்ட் 15ல் இந்தியாவின் விடுதலையை வரவேற்றது. பிசி ஜோஷி பிரம்மாண்டமான பேரணிகள், ஊர்வலங்கள், கூட்டங்கள் போன்றவற்றை விடுதலையை ஆதரித்து நடத்தச் செய்தார். ஆனால் 1947 இறுதியில், 1948 தொடக்கத்தில் இடது குழுப் போக்கு சாகசப் பாதை, பி டி ரணதிவே தலைமையில் சிபிஐயில் அதிகாரத்திற்கு வந்தது. அவர் பிசி ஜோஷிக்குப் பதிலாகப் பொதுச் செயலாளர் ஆனார். ‘இந்த விடுதலை ஓர் ஏமாற்று, பொய்’ என்ற முழக்கத்தோடு, சோஷலிச ஆயுதப் புரட்சிக்கு அறைகூவல் விடுத்ததன் கீழ் கட்சியின் அழிவு தொடங்கியது. கட்சி முற்றாகத் தனிமைப்படுத்தப்பட்டு சிதறடிக்கப்பட்டது. மூன்றே ஆண்டுகளில் 90ஆயிரம் உறுப்பினர்களைக் கொண்ட கட்சி வெறும் 9ஆயிரமாகச் சுருங்கியது!

            ஜெகந்நாத்‘தாவும் வேறு சிலரும் அவசர கலந்தாலோசனைகளுக்காகப் பீகாரிலிருந்து கல்கத்தாவிற்கு அழைக்கப்பட்டனர். தலைமையகம் பம்பாயிலிருந்து கல்கத்தாவுக்கு மாற்றப்பட்டது.

            கண்டுபிடிக்கப்பட்டு, கைதாவதிலிருந்து தப்பி பல வழிமுறைகளையும் பயன்படுத்தி திட்டமில்லாத இடங்களில் நின்றும், தங்கியும் ஜெகந்நாத் சர்க்கார், இந்திரதீப் சின்ஹா (இவரைப் பற்றி இத்தொடரில் 3வது கட்டுரை வந்தது) மற்றும் யோகேந்தர ஷர்மா இரகசியமாகக் கல்கத்தா சென்றனர். கல்கத்தா பாக் பஜாரில் உள்ள ஜெகந்நாத்‘தா மாமா இல்லத்தில் அவர்கள் தங்கினர்.

            சில நாட்களுக்குப் பிறகு புதர்களுக்கு மத்தியில் இருந்த பாழடைந்த மசூதிக்கு அவர்கள் அழைத்துச் செல்லப்பட்டனர்; திடீரென அங்கே பிடிஆர் தோன்றினார். கட்சியின் பாதையை விளக்கியவர், பின்னர் 1949 மார்ச் 9ம் தேதி கட்சி துவக்க உள்ள காலவரையறையற்ற இரயில்வே வேலைநிறுத்தத்தைப் பற்றி விளக்கினார். இறுதியில் பிடிஆர் கூறினார்: “இரயில்வே வேலை நிறுத்தம் தொடங்குவது இந்தியாவில் சோஷலிசப் புரட்சியின் தொடக்கம்.” அந்த மூவரையும் உடனே திரும்பும்படி அவர் கூறினார்.

            அனைத்து ரயில் புகைவண்டிகளும் மகிழ்ச்சியாக எப்போதும்போல் ஓட, இரயில்வே வேலை நிறுத்தம் முழுவதுமாகத் தோல்வியடைந்தது! ஜெகந்நாத்’தாவும் மற்றவர்களும் இரயில்வே பாதைகளைப் பார்த்தபடி இருக்க, ‘சோஷலிசப் புரட்சி’யின் எதிர்காலம் சிதறி நொறுங்கியது! அவர்களுடைய அறைகூவல் அழைப்பைத் தொழிலாளி வர்க்கம் செவிமடுத்துக் கேட்கவில்லை.

            பிடிஆர் கோபம் கொண்டு யாரெல்லாம் இதற்குக் காரணம் எனக் கண்டுபிடிக்க அவர்களுக்கு உத்தரவிட்டார். எந்தத் தகவல்களையெல்லாம் திரட்டமுடியுமோ அவற்றை ஜெகந்நாத்‘தாவும் மற்றவர்களும் அறிக்கையாக அனுப்பினர். இதன் மத்தியில் முஸாஃபர்ஃபூர் சென்ற அவர்கள் அங்கே கிருஷ்ணகுமார் கன்னா என்ற மாணவனின் மறைவிடத்தைப் போலீஸ் சுற்றிவளைத்ததைப் பார்த்தனர். சந்திரஷேகர் சிங் ஏற்கனவே கைது செய்யப்பட்டிருந்தார். இயற்கைக் கடன் கழிப்பதைப்போல ஜெகந்நாத்’தா தன்னைச் சோளக்காட்டில் மறைத்துக் கொண்டாலும், கண்டுபிடிக்கப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.  அவர் கல்கத்தா, ராஞ்ஜி முதலான சிறைகளில் அடைக்கப்பட்டார். சிறையில் அரசியல் வகுப்புகளை எடுத்தார். அவர் நிதானமான மென்மையான பேச்சாளர், அவருடைய விளக்கவுரை சொற்பொழிகள் பெரிதும் விரும்பப்பட்டது.

            அந்த நேரத்தில் பினோத் முகர்ஜி (வினோத் முகர்ஜி) பீகார் கட்சிச் செயலாளராக இருந்தார். ஜெகந்நாத் சர்க்காரும் மற்றவர்களும் சிறையிலிருந்து தப்ப உத்தரவிட்ட அவர் தோழர்களை அதற்கேற்பத் திட்டமிடச் சொன்னார். ஜெகந்நாத்‘தாவுக்கு உடன்பாடு இல்லை எனினும் கட்சிக் கட்டளையை ஏற்க வேண்டியிருந்தது. ஏணி, கயிறு, போலீஸ்காரர்களை மயக்கமடையச் செய்ய மருந்துகள், சன்னல் கம்பிகளை அறுக்க அரம் முதலிய அனைத்தும் தயார் செய்து திட்டம் முழுமையானது. ஆனால் திட்டத்தைக் கைவிட வேண்டி வந்தது.

            இதனிடையே LPPDயின் (நீடித்த அமைதிக்காகவும், மக்களுடைய ஜனநாயகத்திற்காகவும், ‘For a Lasting Peace, For People’s Democracy’ ) தலையங்கம் வெளிவந்து எழுச்சியை ஏற்படுத்தியது. LPPD காமின்ஃபார்மின் (கம்யூனிஸ்ட் தகவல் பிரோ அமைப்பின்) அதிகாரபூர்வ இதழாகும். அத்தலையங்கத்தின் பகுப்பாய்வு பிடிஆர் கூறும் கருத்தோட்டத்துடன் பொருந்தவில்லை. ஏற்கனவே கட்சியில் அதிருப்தி நிலவியது, தற்போது தலைமையை மாற்ற வேண்டும் என்ற கோரிகை விரைந்து வலுப்பெற்றது. பிடிஆர் நீக்கப்பட்டு முதலில் சிஆர் (சி ராஜேஸ்வர ராவும்) பிறகு அஜாய் கோஷ் (1951) பொதுச் செயலாளர் ஆனார்கள்.

            சிறையிலிருந்து விடுதலையான பிறகு ஜெகந்நாத்‘தா புதிய சூழ்நிலையில் கட்சியை மறுகட்டமைக்கும் பணிகளில் ஈடுபட்டார். கட்சியின் பீகார் கிளை பொதுத் தேர்தல்களில் பங்கேற்பது என முடிவு செய்தது.

1952 – 56 காலகட்டம்

            1952ல் மீண்டும் ஜெகந்நாத் சர்க்கார் கட்சிச் செயலாளராகி, 1956 வரை அப்பொறுப்பில் இருந்தார். அவருடைய தலைமையில் கட்சி விரைவாக வளர்ந்து நிலைநிறுத்திக் கொண்டு பல பெருந்திரள் போராட்ட இயக்கங்களை அமைத்து நடத்தியது. பாட்னா பிஎன் கல்லூரியில் 1955ல் நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் டினா நாத் பாண்டே கொல்லப்பட்டார். அதைக் கண்டித்து கட்சி மாநிலம் தழுவிய பெரும் இயக்கம் நடத்தியது. இதற்காக அனைத்துக் கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு அமைப்பதில் கட்சி முன்முயற்சி எடுத்தது.

            அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (ஏஐஎஸ்எஃப்) மற்றும் இளைஞர் பெருமன்றம் (ஏஐவொய்எஃப்) ஏற்பாடு செய்த அரசியல் பள்ளிக் கூடங்களில் ஜெகந்நாத்‘தா பல விரிவுரை சொற்பொழிவுகளை ஆற்றினார்.

1967 –78 காலகட்டம்

            1967 பொதுத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்த பிறகு மாநிலங்களில் காங்கிரஸ் அல்லாத ‘சம்யுக்த விதாயக் தள்’ கூட்டணி அரசுகளை அமைப்பது சிக்கல் நிறைந்ததாக இருந்தது. ஜெகந்நாத்‘தா மிகத் திறமையாகக் கட்சியை வழிநடத்தினர். பீகாரில் காங்கிரஸ் அல்லாத (சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி, பிரஜா சோஷலிஸ்ட் கட்சி முதலானவை இணைந்த) கூட்டணி அரசில் இந்திரதீப் சின்ஹா, சந்திரஷேகர் சிங், தேஜ்நாராணன் ஜா என்ற மூன்று கம்யூனிஸ்ட்கள் அமைச்சர்களாக இடம் பெற்றனர். ஜெகந்நாத்‘தா வழிகாட்ட அவர்கள் பாராட்டத்தக்க பணிகளைச் செய்தனர்.

            ஜெகந்நாத்‘தா ஒரு கவர்ச்சிகரமான மேடைப் பேச்சாளர் இல்லை எனினும், கருத்துகளை மிகவும் திறம்பட விளக்குபவர், கட்சிக் கூட்டங்களில் பெரிதும் மதிக்கப்பட்டார். பீகார் முழுவதும் அரசியல் வட்டாரங்களில் மதிப்புக்குரியவராகத் திகழ்ந்தார். அவர் மென்மையானவராக, பதற்றமில்லா அமைதி நிதானத்துடன் கட்சிக்குக் கடினமான காலங்களில் உதவினார்.

            1974 –75களில் ஜெபியின் ‘முழுப் புரட்சி’ இயக்கம் பெரிய சவாலாக இருந்தது. ஜெகந்நாத்‘தா தலைமையில் பீகாரில்தான் ஜெபியின் இயக்கம் திரும்பப் பெற வைக்கப்பட்டது. ஜெபியின் இந்தக் ‘கட்சியற்ற ஜனநாயக இயக்கம்’ ஆர்எஸ்எஸ் தலைவர் நானாஜி தேஷ்முக் தலைமையிலான ஒருங்கிணைப்புக் குழுவால் நடத்தப்பட்டது. இந்த வலதுசாரி பிற்போக்கு இயக்கம் பீகாரில் ஜெகந்நாத்‘தா முயற்சியால் தடுத்து நிறுத்தப்பட்டது.

            ஜெகந்நாத்‘தாவின் கீழ் பீகார் கட்சி இந்தியில் ‘ஜனசக்தி’ என்ற நாளிதழை வெளியிடத் தொடங்கியது. அவர் DA ரஜீம்வாலே (இந்தக் கட்டுரையாசிரியர் அனில் ரஜீம்வாலேயின் மறைந்த தந்தையார்) அவர்களிடம் கூறினார்: “எங்களுக்குத் தேவை ஒரு நேர்மையான, உண்மையான, கடினமாக உழைக்கும் ஒரு தோழர் –ஜனசக்தி இதழை மேற்பார்வை செய்யவும் நடத்தவும் தேவை. நீங்கள் உங்கள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஜனசக்தியின் பொறுப்பை ஏற்க வேண்டும்”. ரஜீம்வாலேயும் உடனே வேலையைத் துறந்து ஜனசக்தி இதழின் பொறுப்பை ஏற்றுக் கொண்டார். பீகாரின் பிரபலமான முன்னணி நாளிதழ் ஆனது ஜனசக்தி.

            ஜெகந்நாத்‘தா பொறுப்பு வகித்த காலத்தில் பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள், ஆசிரியர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், அறிஞர்கள் கட்சியில் சேர்ந்தனர். நடைமுறையில் தலைமையேற்கும் அறிஞராகப் பீகாரில் உருவான டாக்டர் ஏ கே சென், ஏழைகளையும் தொழிலாளர்களையும் ஒன்று திரட்டினார். பாட்னாவில் புகழ்பெற்ற குடிமக்கள் ஃபோரம் அமைப்பை உருவாக்கி, அதன் மூலம் அரங்கம் நிறைந்த, நினைவில் நிற்கும் கூட்டங்களை நடத்தினார்.

            ஜெகந்நாத்‘தா பதவிக் காலத்தில்தான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் 8வது கட்சி காங்கிரஸ் 1968ல் பாட்னாவில் சிறப்பாக நடைபெற்றது. அது ஒரு பிரம்மாண்டமான நிகழ்வு.

கட்சியின் மத்திய செயலகத்தில்

            பின்னர் ஜெகந்நாத்‘தா மத்திய செயலகத்தில் இணைந்துக் கொள்ளப்பட்டதால், கட்சியின் தலைமையகமான அஜாய் பவன் மையத்திலிருந்து செயல்பட டெல்லிக்கு மாறினார். வருவதற்கு அவருக்கு விருப்பம் இல்லை, புதிய பொறுப்பில் அவரால் இயல்பாக இருக்க முடியவில்லை; பீகார் போன்ற பிரம்மாண்டமான பெருந்திரள் கட்சிக் கிளைகளில் செயல்படுவதே அவருக்குப் பெரிதும் பழக்கம். ஒரு முறை சிபிஐ கட்சிப் பொதுச் செயலாளர் பொறுப்புக்குக்கூட அவர் பெயர் அடிபட்டது.

சோஷலிஸ்ட் ஆட்சிகளின் வீழ்ச்சி

            1991-92 வாக்கில் சோவித் யூனியனும் பல கிழக்கு ஐரோப்பிய சோஷலிச ஆட்சிகளும் வீழ்ச்சி அடைய பரவலான குழப்பமும் அதிருப்தி, ஏமாற்றமும் உண்டாகியது. அதுவரை நிறுவப்பட்ட பல கருதுகோள்கள், கோட்பாடுகளை மறுபரிசீலனை செய்ய தயாராக இருந்த பல தலைவர்களில் ஜெகந்நாத்‘தாவும் ஒருவர். திறந்த மனதோடு இருந்த அவர் பல கேள்விக் குறிகளை எழுப்பினார். மிகக் கூர்மையாக ஸ்டாலினிசத்தை விமர்சித்தார். வெளிப்படையான விவாதங்களை அவர் ஆதரித்தார்.

            ஜெகந்நாத்‘தா எண்ணிறைந்த பல கட்டுரைகளையும் நூல்களையும் எழுதிக் குவித்தார். அவர் ஒரு தீவிரமான வாசகர், புத்தகப் புழு. அவருடைய மனைவி நீலிமாதேவி அவர்களும் கட்சிப் பணிகளில் ஈடுபட்டவர், மிகவும் நட்பானவர், முழுமையாக ஒத்துழைப்பராக இருந்தார்.

            ஜெகந்நாத்‘தா மூளை உறைதல் (brain clots) பிரச்சனைகளோடு இக்காலத்தில் துன்பப்பட்டவர், மிக நீண்டகாலம் பல்வேறு உடல் உபாதைகளோடு சிரமப்பட்டாலும் தொடர்ந்து படித்துக் கொண்டும், எழுதிக் கொண்டும் முடிந்தவரை விவாதித்துக் கொண்டும் இருந்தார்.

            பீகாரில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டியெழுப்பிய அறிவார்ந்த கம்யூனிஸ்ட் தலைவர் ஜெகந்நாத் சர்க்கார் பாட்னாவில் 2011 ஏப்ரல் 8ம் நாள் மறைந்தார்.

            அவர் நினைவுகளுக்குச் செவ்வணக்கம்!

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

       

 

        

Tuesday 20 July 2021

இளா மித்ரா : அணையா புரட்சி ஜோதி -- தலைவர்கள் வரிசை 39

 

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் -39

இளா மித்ரா :  அணையா புரட்சி ஜோதி

--அனில் ரஜீம்வாலே


--நியூ ஏஜ் ஏப்ரல் 11 – 17

            இளா மித்ரா 1925 அக்டோபர் 18ல் கல்கத்தாவில் பிறந்தார். அவருடைய முன்னோர்கள் இன்றைய பங்களாதேசத்தின் ராஜ்ஷாகி மாவட்டத்தின் ஷனாய்தா சப்டிவிஷனின் பஹுஷியா கிராமத்திலிருந்து வந்தவர்கள். அவர் நடுத்தர வர்க்க அரசு ஊழியரின் மகளாவார். தந்தை நாகேந்திர நாத் சென் கல்கத்தா ஏஜிபி அலுவலகத்தின் கணக்காளர். பெத்யூன் பள்ளி மற்றும் கல்கத்தா பல்கலைக்கழகத்தின் கல்லூரியில் படித்து வங்காள இலக்கியத்தில் பிஏ ஹார்னர்ஸ் பட்டத்தை 1944ல் பெற்றார். கல்லூரி இளங்கலை முடித்து, கொடுமையான துன்ப துயரங்களை அனுபவித்து, 13 ஆண்டுகளுக்குப் பிறகு 1958ல் கல்கத்தா பல்கலைக்கழகத்தில் பிரைவேட் மாணவராகத் தேர்வெழுதி இறுதியாக வங்க இலக்கியம் மற்றும் கலாச்சாரத்தில் எம்ஏ முதுகலைப் பட்டம் பெற்றார். சிட்டி கல்லூரியில் விரிவுரையாளராகத் சேர்ந்தார். கல்கத்தா பல்கலைக் கழகத்தின் செனட் உறுப்பினராகத் தொடர்ச்சியாக ஐந்து முறை அவர் பொறுப்பு வகித்தார்.

விளையாட்டு வீரர்

            அவரது பள்ளி மற்றும் கல்லூரி நாட்களில் 1935 முதல் 38 வரை வங்க மாகாணத்தின் விளையாட்டு சாம்பியனாகத் திகழ்ந்தார். அவர் நல்ல கூடைப் பந்தாட்ட வீராங்கனையும்கூட. 1930களின் விளையாட்டு உலகின் நட்சத்திரமாக இருந்தார். ஜப்பான் ஒலிம்பிக் பந்தயங்களில் பங்கேற்க இந்தியப் பிரதிநிதியாக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார்; ஆனால் உலகப்போர் காரணமாக ஜப்பான் விளையாட்டுப் போட்டிகள் நடைபெறவில்லை.

அரசியல் செயல்பாடுகள்

            அவரது மாணவப் பருவ நாட்களில் இளா அகில இந்திய மாணவப் பெருமன்றத்துடன் (ஏஐஎஸ்எஃப்) தொடர்பில் இருந்தார். (MARS அல்லது பெண்கள் சுயபாதுகாப்பு அஸோசியேஷன் எனப்படும்) மகிளா ஆத்ம ரக்க்ஷா சமிதி அமைப்பிலும் போர் நடைபெற்ற ஆண்டுகளில் செயல்பட்டார். விரைவில் கம்யூனிட் இயக்கச் செயல்பாடுகளில் ஈடுபட்டு 1943ல்


தமது 18 வயதிலேயே கட்சி உறுப்பினானார். 1944ல் ராமேந்திர நாத் மித்ரா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். ராமேத்திரா மால்டா மாவட்டத்தின் இராமச்சந்திரபூரின் பணக்கார ஜமீந்தார் குடும்பத்தின் மகனாவார்; ஆனால் அவரோ அம்மாவட்டத்தின் கம்யூனிச இயக்கம் மற்றும் கிசான் சபாவின் அமைப்பாளராக உருவானார். அவர் கட்சி முழு நேர ஊழியரானார். எனவே இளா இராமச்சந்திரபூருக்கு இடம் பெயர்ந்து 1948ல் ஒரு மகனைப் பெற்றெடுத்தார்.

            அக்காலகட்டத்தில் கல்கத்தாவில் கலவரங்கள் வெடித்தன. நவகாளி (மதக்) கலவரத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளை மேற்கொள்ள கட்சி அவரை அங்குச் செல்லப் பணித்தது. பாதிக்கப்பட்ட பகுதிகளில் மகாத்மா காந்தி மற்றும் மற்ற தலைவர்களோடு இளா மித்ரா விரிவாகப் பயணம் செய்தார். நிவாரண மற்றும் மறுவாழ்வுப் பணிகளில் அவர் பேரளவிலான வகையில் தீவிரமாகப் பங்கேற்றார். முதன்முறையாகப் பெரும் மக்கள் திரளோடு அவர் நேரடியாகத் தொடர்பு கொண்டார்.

            தேசப் பிரிவினைக்குப் பிறகு மித்ராவின் ஜமீன்தார் குடும்பம் கிழக்குப் பாக்கிஸ்தானின் பகுதியானது; எனவே இளா பாக்கிஸ்தான் பகுதியான கிழக்கு வங்காளத்தில் இருந்து விட்டார். உள்ளூர் விவசாயத் தலைவரான அல்டாஃப் ஹுசைன் முயற்சியில் கிருஷ்ணா-கோவிந்தபூரில் அவர்களுடைய இல்லத்திற்கு அருகே ஒரு பள்ளி திறக்கப்பட்டது. அங்குள்ள மக்கள் ‘பதுமாதா’ (புதியதாக மணமான பெண்மணி) அதாவது இளாதான் தங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும் எனக் கோரினர். மாணவர்கள் எண்ணிக்கை அதிகரித்து அது ஓர் இயக்கமாயிற்று.

            பாக்கிஸ்தானில் கம்யூனிஸ்ட் கட்சி அடக்குமுறைகளைச் சந்தித்ததால் விரைவில் இளா தலைமறைவு வாழ்வில் செல்லுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டார். அப்போது கர்பிணியாக இருந்த அவர் கல்கத்தாவிற்குத் தப்பிச் சென்று தனது மகன் மோகனைப் பெற்றெடுத்தார். ராமச்சந்ரபூரில் அவருடைய மாமியார் பொறுப்பில் மோகன் வளர்க்கப்பட்டார்.

            இளா கணவரோடு நவாப்கஜ் போலீஸ் சரகத்தின் (பங்களா தேசத்தில் உள்ள) நச்சோல் திரும்பினார். ராஜ்ஷாகியிலிருந்து 35 கிமீ இருந்த நச்சோல் எளிதில் சென்றடைய முடியாத பகுதி. உள்ளூர் தலைவர்கள் அங்குள்ள விவசாயிகளைக் ‘தேபகா போராட்ட’ இயக்கத்திற்காகத் தீவிரமாகத் திரட்டினர். விவசாய இயக்கங்களை நசுக்குவதற்குத் தன்னால் ஆன அனைத்து முயற்சிகளையும் முஸ்லீம் லீக் அரசு எடுத்தது.

            நச்சோல் பகுதிகளில் ஜாட்டேதார் (ஜாட் சமூகத்தைச் சேர்ந்த நிலவுடைமை ஜமீன்தார்கள்) விவசாய விளைபொருள்களின் உற்பத்தியில் மூன்றில் இரண்டு பங்கை எடுத்துக் கொண்டதால் பயிர் செய்து பாடுபட்ட விவசாயிகளுக்கு வெறும் ஒருபங்கு மட்டுமே கிடைத்தது. வடக்கு வங்காளத்தின் மற்ற மாவட்டங்களில் அவர்கள் பாதி உற்பத்தியையே பெறுவது வழக்கம். நெல்லைக் குத்திப் புடைத்து உமி நீக்கி அரிசியாக்கத் தொழிலாளர்களுக்கு 20ல் மூன்று ‘அராஸ்’ மட்டுமே கிடைத்தது. அவர்கள் குறைந்த பட்சம் 7 அராஸ் (‘aras’) தரக் கோரினார்கள்.  

            சாந்திப்பூரை இயக்கத்தின் தனது தலைமையிடமாகக் கொண்டு மூத்த கம்யூனிஸ்ட் சந்தல் (இனத்) தலைவர் மாட்லா மாஜ்கி அவர்களின் வீட்டில்  இருந்து இளா செயல்பட்டார். இளா மித்ரா அப்பகுதிகளில் விரிவாகச் சுற்றுப்பயணம் செய்து பெரும் எண்ணிக்கையிலான விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளைச் சந்தித்தார்.

விரைவில் அவர் ‘ராணி மா’ எனப் புகழ்பெற்றார். அவருடைய செயல்பாடுகளைப் புகழ்ந்துரைத்துப் பாடல்கள்கூட புனையப்பட்டன. போராட்டம் ஆயுதம் தாங்கிய போராட்டமாக மாறி வேகமாகப் பரவியது. விவசாயிகளின் தலைமை மிகவும் எளிமையான திறன்மிக்க அணுகுமுறையைப் பின்பற்றினர். ஒரு குறிப்பிட்ட வயலில் அறுவடை முடிந்ததும் நிலத்தின் சொந்தக்காரரை ஒரு குறிப்பிட்ட நாளில் வரச்சொல்லி இயக்கத்தின் தலைவர்கள், சாதாரண கிராமத்துப் பொது மக்கள் மற்றும் அவ்வயலில் பாடுபட்ட விவசாயிகளும் கூடுவர். உற்பத்தியான விளைபொருள் மூன்று பங்குகளாகப் பிரிக்கப்பட்டு இரண்டு பங்கு விவசாயிகள் பெறுவர். இந்த ஏற்பாட்டை நிலவுடைமையாளர்களும் ஏற்க வேண்டியிருந்தது. 1950ம் ஆண்டின் வாக்கில்  சுற்று வட்டத்தில் இருந்த நிலவுடைமையாளர்கள் அனைவரும்  ‘தேபகா’ (மூன்று பங்காகப் பிரிப்பது) மற்றும் ‘சத் அரி’ (‘Tebhaga’ and ‘sat ari’)முறையை ஏற்க வேண்டி வந்தது.

            ஆனால் நிர்வாகமும் நிலவுடைமையாளர்களும் அமைதியாக இருக்கத் தயாரில்லை. போலீஸ் படையையும் ஆயுதம் தாங்கிய (கூலிப்) படையும் திரட்டி தொல்லைப்படுத்தவும் மக்களைக் கொள்ளையிடவும் தொடங்கினர். பயிர்கள் கொள்ளையிடப்பட்டு பெரும் எண்ணிக்கையிலான விவசாயிகள், தொழிலாளர்களைக் கைது செய்து சித்தரவதை செய்தனர்.

            1950 ஜனவரி 7ல் இரண்டாயிரம் படைகள் நச்சோல் வந்திறங்கி பல டஜன் கிராமங்களைத் தீயிட்டுக் கொளுத்தின. இராணுவத்தினருக்குப் போலீசும் அன்சார்களும் ‘ஆதரவளி’த்தனர். (அன்சார் என்போர் இஸ்லாமிய உள்ளூர்வாசிகள், மதினாவிலிருந்து மெக்கா வந்த நபிகள் மற்றும் தோழர்களுக்கு ஆதரவளித்தோர் வழிவந்தவர்கள். அன்சார் என்ற இஸ்லாமிய வார்த்தைக்கு ‘ஆதரவளிப்போர்’ ’பாதுகாப்புத் தருவோர்’என்று பொருள்). வீடு வீடாகச் சென்று அடுத்த கிராமத்திற்குச் சென்றனர். நூற்றுக்கணக்கான சந்தால் இனத்தவர்கள் கொல்லப்பட்டனர். இளாவின் தோழர்கள் அவரை அரிசி ஏற்றிச் செல்லும் மாட்டு வண்டிகளில் இரகசியமாக எல்லையைத் தாண்டித் தப்பிச் செல்ல வேண்டினர்; ஆனால் மற்றவர்கள் பாதுகாப்பாக விடுவிக்கப்படும்வரை செல்ல மாட்டேன் என அவர் மறுத்துவிட்டார். ரமீன் மித்ரா வழிநடத்திய குழு, பாதுகாப்பாக இந்திய எல்லைக்குச் சென்றனர்; ஆனால் மற்றவர்களால் இயலவில்லை. இளாவும் நூற்றுக் கணக்கான தோழர்களும் கைது செய்யப்பட்டனர். அவர் சந்தல் இன மக்களின் உடையில் இருந்து அவர்களுடைய மொழியைப் பேசினாலும் உளவுத் துறையினர் அவரைக் கண்டுபிடித்து விட்டனர்.     

            நச்சோல் காவல் நிலையத்தில் தொடர்ச்சியான மனிதத் தன்மையற்ற சித்தரவதைகள் தொடங்கின. நூற்றுக் கணக்கானவர்களை அடித்துத் துவைத்தனர்: இளா மித்ராதான் அவர்களது தலைவர் எனவும் அவர் தூண்டுதலில்தான் போலீஸ்காரர்கள் கொல்லப்பட்டனர் என அவர்கள் ஒப்புக்கொண்டு சொல்வதற்காகத்தான் அத்தனை அராஜகங்களும்  நடத்தப்பட்டன. ஆனாலும் அவர்கள் எதையும் சொல்ல மறுத்தனர். சித்ரவதையில் மட்டுமே சுமார் 100 பேர் இறந்தனர்.

பாக்கிஸ்தானில் கற்பனைசெய்ய முடியாத சித்தரவதைகள்

            இளா மித்ரா மீது அதற்குப் பிறகுதான் கற்பனை செய்ய முடியாத விவரிக்க முடியாத சித்தரவதைகள் நடத்தப்பட்டன: அவர் ஒரு கம்யூனிஸ்ட், பெண் மற்றும் முஸ்லீம்கள் ஆதிக்கத்தில் உள்ள பாக்கிஸ்தானில் ஒரு இந்துவாகவும் இருந்தார். அவரை முறித்துப் போட நடத்தப்பட்ட இந்த எல்லா அம்சங்களும் வெற்றியடையவில்லை. அவரிடமிருந்து ஒப்புதல் வாக்குமூலம் பெற பாக்கிஸ்தான் அரசு தனது அரசதிகாரங்களை முழுமையாகப் பயன்படுத்தியது. அவருடைய தோழிமார் மனோரமா மசீமா மற்றும் பானு தேவி பின்னர் வற்புறுத்தியதால் இளா மித்ரா இந்த முழு விபரங்களைக் கூற மற்றவர்கள் இதை அறிய வந்தது. அவருக்கு உண்ண உணவும் நீரும் கொடுக்கவில்லை, துப்பாக்கிகளின் பின்பக்க மரக்கட்டையால் தொடர்ந்து அடித்தனர், பூட்ஸ் காலால் வயிற்றில் உதைத்தனர், வலதுகால் நகங்களை பிய்த்து எடுத்தனர், எல்லா வகையிலும் அவர் மீது அத்து மீறி விவரிக்க முடியாத கொடுமைகளை நடத்தினர். இந்தச் சித்தரவதை மூன்று நான்கு நாட்கள் தொடர்ந்து நடந்தி அவரை இரத்தத்தில் நனைத்தனர். பின்னர் அவர் நவாப்கஜ்ச் சிறைக்கு அழைத்துச் சென்றபோது நுழைவாயிலிலேயே கொடூரமாக அடித்தனர். பின்னர் சில அதிகாரிகள், குறிப்பாக அங்கே போலீஸ் அதிகாரியாக இருந்த அவரது கல்லூரித் தோழர்களில் ஒருவர் அவருக்கு இரகசியமாக உதவிட, மேலும் சித்தரவதைகளைத் தடுத்து நிறுத்தினார்.

            சிறைக்குள் நடத்தப்பட்ட சித்தரவதைகளை அவரது விவரமான அறிக்கையாக ‘லியாகத்- நுரூல் அமீன் ஆட்சி’க்கு எதிரான சிறு பிரசுரமாக நாடு முழுவதும் விநியோகிக்கப்பட்டன. அந்தச் சுற்றறிக்கை பரவலான அதிர்ச்சியையும் கிளர்ச்சியையும் உண்டாக்கியது.

            இயக்கத்தைத் தலைமையேற்றது, போலீஸ் மற்றும் பிற அதிகாரிகள் கொலை, கட்டாயமாகப் பயிர்களைக் கொள்ளையடித்தது மற்றும் சட்டவிரோதமாக விவசாயிகளைக் கூட்டமாகக் கூட்டியது என அவர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் அவரது உடல்நிலை மிகவும் மோசமானது. ராஜ்ஷாகி மத்தியச் சிறையில் அவரது உடல்நிலை மற்றும் மனநிலை உடைந்து போகும் நிலைக்கு வந்தது.

            அவர் எழுதினார், “சில நேரம் மகனைப் பெற்றெடுத்த மகிழ்ச்சியான தருணம் மின்னல் வெட்டாய் வந்து போகும்…ஆனால் விரைவில் மறையும். இனிமையான நினைவுகள் எதையும் என்னால் ஞாபகப்படுத்த முடியவில்லை….எல்லாம் அந்தகார இருளில் முடிந்து போனதாகத் தோன்றும் … நீதிபதியின் குரல் ….ஆனால் அனைத்தும் ஒன்றுமில்லா சூன்யத்திற்குத் திரும்பிவிடும்.”

            டாக்கா மத்திய சிறைக்கும் அங்கிருந்து பிறகு டாக்கா மருத்துவக் கல்லூரிக்கு ஏறத்தாழ சாவின் விளிம்பில் 1953ல் அவர் மாற்றப்பட்டார். நூற்றுக்கணக்கானோர் அவரை வந்து பார்த்தனர். மௌலானா பாஷானி மற்றும் பிற தலைவர்கள் கிழக்கு வங்காளச் சட்டமன்றத்தில் இப்பிரச்சனையை எழுப்பி அவரை விடுவிக்க வற்புறுத்தினர். 

            1954 ஜூன் மாத மத்தியில் பரோலில் விடுவிக்கப்பட்டு மருத்துவச் சிகிச்சைக்காக அவர் கல்கத்தா கொண்டுவரப்பட்டார். மெல்ல குணம் அடைந்தார். அவர் மீண்டும் உடல்நலம் திரும்பினார் என்றறிந்த பாக்கிஸ்தான் அரசு வழக்குகளைத் தொடர்ந்து மேலும் நடத்த அவரைத் திரும்ப அனுப்புமாறு இந்திய அரசை நிர்பந்திக்கத் தொடங்கியது. சர்வாதிகார ஆட்சியிடம் அவரை மீண்டும் திரும்ப ஒப்படைக்க அவரது நண்பர்களும் தோழர்களும் மறுத்தனர். டாக்டர் ஷிஷிர் முகர்ஜி மற்றும் பிற மருத்துவர்கள் கவனிப்பில் அவர் இருந்தார். அவருடைய நிலைமையை நாவலாசிரியர் திபேந்திர பண்டோபாத்யாயா மிக விரிவாக விவரித்துள்ளார். மனரீதியான வேதனைகளிலிருந்து அவர் மீண்டுவர சுசித்ரா மித்ரா (தாகூர் பாடல்களை அவர் படுக்கைக்கு அருகில் அமர்ந்து பாடுவார்), சுபாஷ் முகோபாத்யாயா மற்றும் பிறர் உதவினர். அவர் மீது ‘கேனோ பான் பாருல் தாக்கோ ரே’ (‘ஏன் அழைத்தாய் எங்கள் சின்னத் தங்கை, பாரூல்!’), என்ற கவிதையை அவர் இயற்றினார்.

(இப்பாடல் வங்கமொழி சிறுவர் இலக்கியத்தில் ஒரு நாடோடிக் கதையை அடிப்படையாகக் கொண்டது. ஒரு காலத்தில் ஒரு அரசன், அவனுக்கு 7 அரசிகள், கடைசி அரசி அழகி பண்பானவர். ஒருவருக்கும் குழந்தை இல்லை. கடைசியில் இளைய அரசி கர்ப்பம். அரசன் தர்பாரில் இருக்கும்போது குழந்தை பிறந்த செய்தியை உடனே தெரிவிக்க ஒரு தங்கச் சங்கிலியை ஏற்பாடு செய்து கட்டியிருந்தான். பொறாமை கொண்ட 6 அரசிகள் அவன் கோபத்தைக் கிளற சூழ்ச்சி செய்தனர். பிறந்த  அழகான 7 ஆண் மற்றும் ஒரு பெண் குழந்தைகளை எரித்து சாம்பலை சாம்பல் குப்பை மேட்டில் கொட்டிவிட்ட அவர்கள், அரசிக்கு எலிகளும், தவளைகளும் நண்டுகளும் பிறந்தன என அரசனிடம் பொய் உரைத்தனர். கோபம் கொண்ட அரசன் 7வது அரசியைத் துரத்தி விட்டான். அவளும் சாணி பொறுக்கி, வறட்டியாக்கி அரண்மனைக்கு அனுப்பும் துயரம் நிறைந்த வாழ்வை வாழ்கிறாள்.

            அரசன் பூசைக்கு ஒரு நேரம் நாட்டில் பூ எதுவும் இல்லை. வேலையாள் சென்று அரண்மனை சாம்பல் குழிக்கு அருகே இருக்கும் 7 சாம்பல் மரங்கள் மற்றும் ஒரு பாரூல் மரத்தில் ஒவ்வொரு பூ இருப்பதாகக் கூறுகிறான். தோட்டக்காரன் பறிக்க வருகிறான் என்பதைப் பாரூல் 7 சாம்பல் மரங்களை அவசரமாக அழைத்துக் கூறுகிறது. அப்போதுதான் அவைகள் கேட்பதாக இந்தக் கவிதை வரி வருகிறது: ‘ஏன் அழைத்தாய், எங்கள் சின்னத் தங்கை பாரூல்?’ தோட்டக்காரர் வருகிறார், உங்கள் மலர்களை நீங்கள் கொடுப்பீர்களா? என பாரூல் கேட்க, சாம்பல் மரங்கள், ‘மாட்டோம் மாட்டோம், நாங்கள் மேலே பறந்து விடுவோம்’ என்றன. அதிசயப்பட்ட தோட்டக்காரர் கூற அரசன் நேரே வருகிறான். அப்போதும் அதே கேள்வி பதில், ‘அரசன் வருகிறார், தருவீர்களா? –மாட்டோம் மாட்டோம்’. இப்படியாக 6அரசிகள் வந்து ஒவ்வொருவராக பறிக்க வந்தபோதும் மலர்கள் மேலே மேலே பறந்தன. கடைசியில் அடிமையை அழைக்கும்படி அசரீரி சொல்ல தேடிப்பிடித்து சாணி பொறுக்கிக் கொண்டிருந்த அவளை மரியாதைக் குறைவாகத் தூக்கி வந்து, மலர் பறிக்க உத்தரவிட்டனர். அவள் சென்றபோது அந்த மலர்கள் 7 ஆண் இளவரசர்களாகவும் ஒரு அழகிய இளவரசியாகவும் தாயைக் கட்டிக் கொண்டு இறங்கின. பொறாமை கொண்ட 6 அரசிகளைத் தண்டித்த அரசன் இவர்களோடு மகிழ்ச்சியாக வாழ்ந்து அரசாட்சி செய்தான் என கதை முடிகிறது. இது போன்ற பாடல் சினிமாக்களிலும் இடம் பெற்றுள்ளன.)

            அவர் பாக்கிஸ்தான் திரும்பிச் செல்லவில்லை, மேற்கு வங்கத்தில் கட்சிப் பணியாற்றினார். 1957ல் ஒரு தனித்தேர்வராக வங்கமொழியில் எம்ஏ பட்டத்தை நிறைவு செய்தார்; வங்கமொழிப் பேராசிரியராக சிட்டி கல்லூரி (தெற்கு)ல் பணிசெய்தார். 1962--71 மற்றும் 1972--77 ஆண்டுகளில் மாணிக்தாலா தொகுதியிலிருந்து சட்டமன்றத்திற்கு நான்கு முறை தேர்ந்தெடுக்கப்பட்டார்.

            அவர் திரும்பிச் செல்லாவிட்டாலும் இளா மித்ரா ஒருபோதும் (பின்னர் பங்களாதேசமாக மாறிய) கிழக்கு வங்காளத்தை மறக்கவில்லை. பங்களாதேச விடுதலைப் போரின்போது அவரது வீடு மற்றும் கட்சி அலுவலகம் விடுதலைப் போராளிகளின் மையமாக இருந்தது. ‘என்னுடைய கடமை இது, அந்நாட்டிற்கு நான் கடன் பட்டிருக்கிறேன்’ என்று அவர் கூறினார். 1972 மற்றும் 74ல் அவர் பங்களாதேசத்திற்கு விஜயம் செய்தார். வங்கபந்து ஷேக் முஜிபுர் ரஹ்மான் அவர்களை இளா மித்ரா சந்தித்தபோது, ’மித்ரா இணையர்கள் எனது மகனும் மகளும் ஆவர்’ என்று கூறினார். அவர்களை மீண்டும் பங்களாதேசக் குடிமகன்களாக அழைத்துக் கொள்வேன் என அவர் உறுதிமொழி அளித்தார், ஆனால் இதன் மத்தியில் வங்கபந்துவே படுகொலை செய்யப்பட்டார்.

            1965ல் முஸ்லீம்களுக்கு எதிரான கலவரங்களைத் தடுப்பதில் அவர் பங்கெடுத்தார்.

            பங்களாதேசத்தில் இளாமித்ராவின் முன்னோர்களின் வீடு பராமரிப்பின்றி கிடந்தது. பங்களாதேசம் தினாஜ்பூரின் தேபகா சத்ராவில் இளா மித்ரா முரல் (சுவரோவியம்) ஒன்று உள்ளது.

            இந்திய அரசு இளா மித்ராவுக்குத் தாமிரப் பத்திர விருது அளித்து கௌரவித்தது; மேலும் இலக்கிய மொழிபெயர்ப்பு பணிகளுக்காகச் சோவியத் லாண்டு நேரு விருது வழங்கப்பட்டது.

            மேற்கு வங்கப் பிராந்திய கிசான் சபாவின் தலைவராகவும் இந்தோ சோவியத் கலாச்சாரக் கழகமான இஸ்கஃப் (ISCUF) அமைப்பின் மாநிலத் தலைவராகவும் அவர் இருந்தார்.

            அணையா புரட்சி ஜோதியான இளா மித்ரா கல்கத்தாவில் 2002 அக்டோபர் 13ம் நாள் மறைந்தார்.

            அவர் புகழ் என்றும் சுடர்விட்டுப் பிரகாசிக்கும்!

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்