மராட்டிய தலித் இலக்கியவாதி
பாபுராவ் பாகுல்,
சமூக எழுச்சியின் கதைசொல்லி
--மகேஷ் ரதி
சமூக ஒடுக்குமுறைக்கு எதிரான தொடர்ச்சியான
கலகங்களின் நிகழ்முறையைப் பதிவு செய்த ஆவணம் என்பதும் பாபுராவ் பாகுலின் இலக்கியம்
என்பதும் வேறுவேறு அல்ல. அவரது இலக்கியம், மனிதத்தன்மையற்று இழிவாகப் புறக்கணிக்கப்படும்,
பிற்படுத்தப்பட்ட தலித் சமூகம் படும் துயரங்களுக்கு எதிரான கலகங்களைப் படம் பிடித்துக்
காட்டுவது மட்டுமல்ல, நிறுவனமயப்படுத்தப்பட்ட பிராமணிய ஒடுக்குமுறை சுரண்டல் அமைப்பையும்
திரும்பத் திரும்ப அம்பலப்படுத்துவது. பிராமணிய சுரண்டலுக்கு எதிரான கலகத்தின் தீவிர
எதிரொலி அவரது இலக்கியப் படைப்புகளில் தெளிவாகக் கேட்கலாம். அவரது படைப்பிலக்கியம்
மராட்டிய இலக்கியத்தில், குறிப்பாக தலித் இலக்கியத்தில், புதிய மற்றும் கலக எழுச்சி
உணர்வை விரிவாக்கியது.
அவர் எந்தச் சமூகத்தைச் சார்ந்தவரோ அதே
சமுதாயத்திலிருந்து வந்தவர்களே அவர் படைப்புக்களின் கதை மாந்தர்கள்; அவர்களது வலிதான்
அவரது கலகத்தின் அடிப்படை. ஒடுக்கப்பட்ட சமூகத்திலிருந்தே கதை மாந்தர்களைத் தேர்ந்தெடுத்து
அவர்கள் படும் மனிதத்தன்மையற்ற துன்ப துயரங்களை இலக்கியத்தில் வடித்தார்.
சமூக மாற்றத்திற்காகவும் ஒடுக்கப்பட்டவர்களின்
விடுதலைக்காகவும் குரல் எழுப்ப ஓர் உயர்சாதி அல்லது மேல் வர்க்கத்தைச் சார்ந்த தாராளச்
சிந்தனையர் எவரையும் அவரது படைப்புக்களில் தலைமாந்தராகப் படைப்பதில்லை. இந்தவொரு இலக்கியத்
திறனில் அவர் அண்ணா பாவ் சாத்தேவின் மரபை மேலெடுத்துச் செல்கிறார்; அதே நேரம் சமூக
உளச்சான்று உணர்வை, குறிப்பாக தலித் உள்ளுணர்வை உயர்ந்த மட்டத்திற்கு மேலெடுத்துச்
செல்கிறார்.
எப்போதும் அவரது கதைமாந்தர்கள் சாதி அடிப்படையிலான
மனிதத்தன்மையற்ற சமூகக் கட்டமைப்பை எதிர்த்துத் தளர்வின்றி கலகம் செய்வர், கேள்வி கேட்பர்,
உடன்பட மறுப்பர், இழிவுபடுத்தலை வெறுத்துச் சீற்றம் கொள்வர்… பிராமணிய சமூக அமைப்பு,
உயர்வு தாழ்வான படிநிலை சமூக அமைப்பைக் கண்டு அவரது கதை மாந்தர்கள் அஞ்சுவதில்லை; அதனோடு
உடன்பட மறுத்து முரண்பட்டு தளர்வின்றி எதிர்த்துக் கலகம் செய்வர்…அந்த அநீதியான அமைப்பை
மாற்ற அவர்கள் தொடர்ந்து போராடுவார்கள்.
அண்ணா பாவ் சாத்தே (முழு பெயர் துக்காராம் பாவ் சாத்தே; மகாராஷ்டிரா, சங்கிலி
மாவட்டம் தீண்டத்தகாத மாங் சமூகத்தில் பிறந்த இலக்கிய கர்த்தா, முதலில் கம்யூனிசத்தால் ஈர்க்கப்பட்டு, பின் அம்பேத்காரியராக விளங்கியவர்) தொடர்பு ஏற்பட்ட பின் பாபுராவ் மார்க்சியத்தை ஆழமாகப் பயின்றார். அவர் கதைகள், கவிதைகளில் மார்க்சிய கருத்துக்களின் செல்வாக்கைத் தெளிவாகக் காணமுடியும். 1963ல் இந்தி மொழியாக்கத்தில் வெளியான அவரது ‘ஜப் மைநே அப்னி சாதி ச்சுபாய்’ (நான் எனது சாதி குறித்து மௌனித்தபோது) சிறுகதைகள் தொகுப்பில் மார்க்சியப் பதிவுகளின் சுவடுகளைக் காண முடியும். அதனை அவர் முதலில் மராத்தியில் ‘Jewa mi jat chorli hoti’ (எனது சாதியை நான் மறைத்தபோது) என்ற முதல் சிறுகதை தொகுப்பில் எழுதியிருந்தார். இந்தக் கதை தொகுப்பில் பல கதைகள் தலித்
உளச்சான்று உணர்வு நிலையிலிருந்து தலித் கலகம் என்பதை நோக்கிய மாற்றத்திற்கு நிரூபணமாக
உள்ளன.
இந்தக் கதையில் முக்கியமான பாத்திரம் தனது
தந்தையோடு முரண்பட்டு பேசும்போது சமூக ஒடுக்குமுறை மற்றும் சாதிய பாகுபாட்டுக்கு எதிராக
ஏதோ ஒரு வரலாற்று சாசனப் பிரகடனம் அல்லது அறிக்கையை வெளியிடுவதைப் போல இருக்கும். ‘விரோதி’
என்ற அவரது கதையின் கதாநாயகனான ஜெய் அவனது தந்தையை நோக்கிக் கேட்பார்: “பங்கியின் பையன்
பங்கி ஆகத்தான் வேண்டும் என எங்கே எழுதி வைத்திருக்கிறது?” (பங்கி என்றால் தீண்டத்
தகாத கீழ் சாதி, தெருக் கூட்டுபவர்கள்); மதம் மற்றும் நாட்டின் பாரம்பரிய வழக்கங்கள்
குறித்த தந்தையின் உபயோகமற்ற வாதங்களை அடித்து நொறுக்கி அவரை நோக்கி ஜெய் கேட்பான்,
“எந்த மதம்?”
“ஒரு மனிதனை நொறுங்கச் செய்து அவனை ஒரு
விலங்காக மாற்றுவது எது, அதுவா மதம்? அதுவும் கற்சிலைகளுக்கு மனிதர்களைவிட கூடுதல்
முக்கியத்துவம் அளிக்கும் இந்த நாட்டில்? அத்தகைய மதத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை.
நமக்கு இந்த வறுமையை, இந்தப் பற்றாக்குறையைக் கொடுத்த மதம் நிராகரிக்கப்பட வேண்டும்”
அவரது கதாபாத்திரம் முயற்சியைக் கைவிடுவது இல்லை, சூழ்நிலையை மாற்றத் தொடர்ந்து
போராடுகிறது. அது போல, ‘ஜப் மைநே…’ கதையின் காசிநாத் என்ற பாத்திரம் தேவையின் காரணமாக பிறப்பு அடிப்படையிலான வாழ்வாதாரத்தைத் தழுவ நேரும்போது உரத்துக் கத்துவான், “ஏய், நான் மகர் தான், ஆனா அதுக்காக அதோட அர்த்தம், நாத்தம் பிடித்த மனிதக் கழிவுகளையும் சுவரின் மீது பெய்த மூத்திரத்தையும் நான் சுத்தம் செய்வேன் என்பதல்ல!” கதை பாத்திரங்கள் ஒடுக்கு முறைக்கு எதிராகக் கலகம் செய்வது மட்டுமல்ல, மனித மேன்மையும் சமத்துவத்துவத்தையும் அடிப்படையாகக் கொண்ட புதிய உலகம் பற்றியும் கனவு காண்கின்றன. பாகுலின் கதைகள் தாழ்த்தப்பட்ட விளிம்புநிலை சாதிகள், ஏழைகள், வக்ரமான மனநோய் பிடித்தவர்கள், குற்றவாளிகள் போன்றோரின் உண்மையான வாழ்க்கை விவரிப்புகளின் தொகுப்பாகும்.
பாகுலின் இலக்கியம், கட்டமைத்து நிலைநிறுத்தப்படும்
அரசியல் மற்றும் தத்துவச் சொற்பொழிவு கதையாடல்களை மீண்டும் மீண்டும் மறுத்து முரண்படுகிறது.
தவறான மற்றும் போலியான உணர்வுகளின் மேல்
கட்டி முன்வைக்கப்படும் அன்றைய சமகால அரசியல் மற்றும் தத்துவ யோசனைகளுக்கு மாற்றாய்
-- ஊடுபாவாகப் பின்னப்பட்ட மதம் சார்ந்த உணர்வுகள் மற்றும் ‘எல்லோரும் நல்லவரே,’ சமமான
உரிமை உடைய குடிமக்களே என்ற அடிப்படையில் புதிய சமத்துவ உலகுக்கான (நியூ ஈகாலிடேரியன்
வோர்ல்டு) கனவுகள் – இவற்றிற்கு எதிராகப் பாகுல் தொடர்ந்து சவால் விடுகிறார். நிறுவனமயப்படுத்தப்பட்ட
சுரண்டலுக்குச் சவால் விடும்போது, புரட்சிகர எழுத்தாளர் என்ற பதத்திற்கு உண்மையாக,
அவர் மாறிவிடுகிறார்; இந்தப் புரட்சிக்கான அரசியல் மற்றும் தத்துவ அடிப்படை மார்க்சியம்
தவிர வேறில்லை.
’‘ஆச்சார்ய ஆத்ரே’ (படம், பிரகலாத் கேசவ் ஆத்ரே பன்முக ஆற்றலுடைய மராத்திய இலக்கிய ஆளுமை) என்ற அவரது கதை 1957ல் “நவயுகம்’ கம்யூனிஸ்ட் இதழில் வெளியானது தற்செயல் நிகழ்வு அல்ல. அதன் பிறகு அவர் தொடர்ந்து தனது படைப்புக்களை “நவயுகம்” மற்றும் ”யுகாந்தர்” முற்போக்கு, கம்யூனிஸ்ட் இதழ்களில் வெளியிட்டார்.
உண்மையில், அவரது கதை தொகுப்புகளில் வெளியான
அனைத்துக் கதைகளையும் தொகுத்துப் பரிசீலித்தால் அவை ‘மார்க்சியம்’ மற்றும் ‘அம்பேத்கரியம்’
சார்ந்த பதிவுகளை வெளிப்படுத்துவதை அறியலாம்.
பாபுராவ் பாகுல், மராத்தி மற்றும் தலித்
இலக்கியத்தில் புகழ்பெற்ற மரியாதைக்குரிய பெயராக விளங்குகிறது; அப்போது மராத்தியில்
உருவாகிவந்த தலித் இலக்கியப் போக்கிற்கு அவர் புதிய திசைவழியையும் எழுச்சியையும் வழங்கினார்.
இன்றைய காலத்தில்,
“மநு” இன்னும் மரணமடைந்துவிடாது மேலும் தீவிரத்துடன் தாக்குதல் நடத்தும்போது, பாகுலின்
கதைகள் இத்தருணத்தில் மேலும் மிகுந்த பொருத்தப்பாடு உடையதாக விளங்குகிறது. [“வள்ளுவர்செய்
திருக்குறளை மறுவற நன்கு உணர்ந்தோர்கள் உள்ளுவரோ மநுவாதி ஒரு குலத்துக்கு ஒரு நீதி”
என்றுரைக்கும் மனோன்மணியம்]
அரசியலமைப்புச் சட்டத்தின்படியான அதிகாரத்திற்கும்
சமூதாய அதிகாரத்திற்கும் இடையே பிளவுபட்டு நிற்கும், ‘மநு’ இன்னும் கூடுதல் பலத்தோடு
தாக்குதல் நடத்தி வருகின்ற இந்தியச் சமூகத்தைப் புரிந்து கொள்ள, பாகுலின் படைப்புக்கள்
மேலும் பரவலாகப் படிக்கப்பட வேண்டும்.
‘மநு’வின் சமூக அதிகாரத்தை ஒழிப்பதற்கும்
அதனை எதிர்த்துச் சவால்விடவும், ‘ஏழை என்றும் அடிமை என்றும் எவனும் இல்லை, சாதியில்
இழிவு கொண்ட மனிதர் என்ப இந்தியாவில் இல்லையே’ என்னும் சமத்துவத்தின் அடிப்படையிலான
‘சரிநிகர் சமானமான’ மேன்மைச் சமூகத்தை அமைப்பதற்கும் பாபுராவ் பாகுலின் படைப்புக்களை
மக்களிடம் கொண்டு செல்வோம்! மக்கள் திரள் மத்தியில் அவற்றை உரத்து வாசிப்போம்!
--நன்றி : நியூஏஜ் (ஏப்ரல்10 -- 16)
--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ,
கடலூர்
No comments:
Post a Comment