Friday 25 June 2021

கே என் ஜோக்லேக்கர் : தொழிலாளர் இயக்கத்தைக் கட்டியெழுப்பியவர்

 


நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து : 

சில சித்திரத் சிதறல்கள் -37

கே என் ஜோக்லேக்கர் : தொழிலாளர் இயக்கத்தைக் கட்டியெழுப்பியவர்

 --அனில் ரஜீம்வாலே

--நியூஏஜ் (மார்ச் 21 – மார்ச் 27)

கே என் ஜோக்லேக்கர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்க இயக்க வரலாற்றில் ஆர்வத்திற்குரிய மனிதராவார். இந்தியாவிலும் பம்பாயிலும் தொழிற்சங்க மற்றும் கம்யூனிச இயக்கத்தை டாங்கே, காட்டே, நிம்கர், ரூய்கர் முதலானவர்களுடன் இணைந்து கட்டியெழுப்பிய தலைவர். ரத்னகிரி மாவட்டம் ரத்னகிரி தாலுக்காவின் வைத்யலாவகோன் என்ற இடத்தில் 1896 ஆகஸ்ட் 7ல் பிறந்தார். அவருடைய முன்னோர்கள் அதே மாவட்டத்தின் குககர் தாலுக்காவின் ஹெட்வி என்ற கிராமத்தைச் சேர்ந்தவர்களாவர். தபால்காரரான அவர் தந்தையின் வாழ்க்கை சொற்ப ஊதியமான ரூ3 மாத ஊதியத்தில் துவங்கி 35 வருட கால சேவையில் உயர்ந்தது என்னவோ 27 ரூபாய் மற்றும் எட்டணா! ஜோக்லேக்கரின் மூத்த அண்ணன் அப்பல்லோ அண்டு மொரார்ஜி ஆலையில் ஃபிட்டராக வேலை செய்தார். ஜோக்லேக்கர் தனது 13வது வயதில் தன் தந்தையை இழந்தார். 

கல்வியும் வேலையும் 

ஹெட்வி கிராமப் பள்ளியில் மராத்தியில் 4வது வரை படித்தவர், தந்தை மறைவுக்குப் பிறகு 1909ல் பம்பாய்க்கு இடம் மாறுகிறார். மருத்துவரான தனது தாய்வழி மாமாவுடன் தங்கி எல்பின்ஸ்டோன் பள்ளியில் படித்த ஜோக்லேக்கர் 1914 –15ல் மெட்ரிகுலேஷன் தேறினார். 

மெட்ரிகுலேஷனுக்குப் பிறகு கஸ்டம்ஸ் அண்ட் அக்கவுண்டன்ட் ஜெனரல் அலுவலகத்தில் பணியாற்றினார். மேல்படிப்புக்காகப் பொருளைச் சேமித்து 1917ல் பாட்னா சென்று திலகர் நிறுவிய ஃபெர்குசன் கல்லூரியில் சேர்ந்தார். வரலாறு, பொருளாதாரம் மற்றும் அரசியல் விஞ்ஞானம் பாடத்தில் 1921ல் பிஏ பட்டம் பெற்றார். படிக்கும் காலத்தில் இரவு நேரத்தில் ஓர் அச்சகத்தில் பணியாற்றினார்.

முதல் உலகப் போரின்போது திலகரின் ஆலோசனையின்படி இந்திய இராணுவத்தின் யுனிவர்சிட்டி கம்பெனியில் வேலைக்குச் சேர்ந்தார்.

பம்பாயில் இருந்தபோது பெரும்பாலும் ஜோக்லேக்கர் டெக்ஸ்டைல் தொழிலாளர்களுடன் தொடர்பில் இருந்தார். முதல் உலகப் போரின்போது பல வேலைநிறுத்தங்கள் நடைபெற்றதை அவர் பார்த்தார். வேலைநிறுத்தத்தில் பல தொழிலாளர்கள் போலீசால் கொல்லப்பட்டது அவரிடம் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அவருடைய சகோதரரும்கூட வேலைநிறுத்தத்தில் பங்கேற்றார்.

திலகரின் அரசியல் செல்வாக்கு

அவருடைய தாய் மாமா ஷிவ்ராம் கோபால் வைத்யா ஒரு தீவிரமான திலகர் அணிக்காரர். திலகர் வெளியிட்ட ‘கேசரி’ (சிங்கம்) இதழை அவருக்காகப் படித்துக் காட்டச் சொல்வார்: இவ்வாறு அவர் ஜோக்லேக்கரை அரசியல்படுத்தினார். மாண்டலே சிறையிலிருந்து 1916ல் திலகர் விடுதலையடைந்ததும், அரசியல் நிகழ்வுகள் உயிர்ப்பெற்றன. வசந்த வியாக்யான மாலா என்னும் வசந்த காலத் தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சிகள் பூனாவில் நடந்தபோது ஜோக்லேக்கர் தவறாது அவற்றில் கலந்து கொண்டார். மேலும் 1917 நாசிக்கில் நடைபெற்ற காங்கிரஸின் இரண்டு அணி பிரதேச மாநாடுகளிலும், திலகரின் தனித் தொண்டராகவே அவருடன் இணைந்து, ஜோக்லேக்கர் கலந்து கொண்டார். 

மாணவர் இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்ற ஜோக்லேக்கர் விவாதங்களிலும் திலகர் துவக்கிய கணேஷ் உத்சவ், ஜிவாஜி உத்சவ் முதலான விழாக்களிலும் பங்கேற்றார். அவரது செயல்பாடுகளால் ஈர்க்கப்பட்ட திலகர் கேசரி அலுவலகத்திலிருந்து ஜோக்லேக்கருக்கு ரூ 5/- கல்வி உதவித்தொகை வழங்கினார். ‘இந்திய சமூகத்தின் வேலைக்காரர்கள்’ என்ற அமைப்பின் உறுப்பினராகி அவர் அதன் நூலகத்தைக் கவனித்துக் கொண்டார். மேலும் அங்கேயே ரூ15 மாத ஊதியத்திற்கு ‘வேலைக்காரப் பைய’னாகப் (பாய்) பணியாற்றினார். நூலகத்தில் இருந்ததால் சாத்தியமான அனைத்து இலக்கியங்களையும் வேண்டிய மட்டும் சுவைத்தார்; அதில் லண்டன் டைம்ஸ், மான்செஸ்டர் கார்டியன், இந்திய நாளிதழ்கள் மற்றும் புத்தகங்கள் அடக்கம். மேலும் ஆழமாக ரஷ்ய புரட்சியோடு அவருக்கு அறிமுகம் கிடைந்தது.

லாலா லஜபதி ராய் மற்றும் (லோக மான்ய பால கங்காதர) திலகர் இருவரையும் வரவேற்க சாந்தாராம் சாவலில் (Chawl) ஒரு மாபெரும் வரவேற்பு விழாவை டாங்கே மற்றும் பிற மாணவர்களுடன் சேர்ந்து ஜோக்லேக்கர் ஏற்பாடு செய்தார். டாங்கே, ஜோக்லேக்கர், மதோல்கர் மற்றும் பார்வதே ஓர் எடுத்துக்காட்டான குழுவாக (டீம்) அமைந்தனர். மராத்தி மாணவர்கள் இலக்கிய சொஸைட்டி ஒன்றை அமைத்து அதன் சார்பாக ‘யங் கலேஜியேட்’ (காலேஜ் இளைஞர்கள்) இதழையும் டாங்கே, நிம்கர், ஜோக்லேக்கரும் பிறரும் வெளியிடத் தொடங்கினர். 

தபால்காரர்கள் வேலைநிறுத்தம் பம்பாயில் 1919 – 20ல் நடைபெற்றபோது அவருடைய சகோதரர் அதில் கலந்து கொண்டார். அதே காலகட்டத்தில் ரயில்வே மற்றும் டெக்ஸ்டைல் வேலைநிறுத்தங்களும் நடைபெற்றன. 

ஒத்துழையாமைக்கு ஆதரவாக ஜோக்லேக்கர் கல்லூரி மாணவர்களிடமிருந்து 800 கையொப்பங்கள் திரட்டினார். அந்த இயக்கத்தில் அவர் டாங்கேவுடன் பங்கேற்றார். அப்போது ஒத்துழையாமைக்காக அமைக்கப்பட்ட தேசிய பள்ளியில் டாங்கே ஓர் ஆசிரியர் ஆனார். ஜோக்லேக்கருக்கு ஒரு ஃபேபியன் சோஷலிசவாதியும் தொழில் அதிபருமான லாட்வாலாவுடன் அறிமுகம் கிடைந்தது; லாட்வாலா அயல்நாடுகளிலிருந்து இலக்கியங்களை இறக்குமதி செய்து தருவித்தார்.  டாங்கேயின் ‘தி சோஷலிஸ்ட்’ வெளியீட்டுக்கு அதன் மேலாளராக இருந்து உதவினார். கான்பூர் சதி வழக்கில் (1924 --28) டாங்கே கைதானபோது அவர் ’தி சோஷலிஸ்ட்’ இதழின் ஆசிரியரானார். சிறைவாசிகளின் வழக்கில் அவர்களுக்கு ஆதரவாக மற்றவர்களுடன் இணைந்து உதவினார்.

திலகரின் ‘ராஷ்ட்டிர சேவக்’ (தேச ஊழியன்) நாளிதழில் அவரும் சேர்ந்து கொண்டார். லாட்வாலா ஆதரித்த சமூக ஜனநாயக புக் கிளப் அமைப்பைக் கட்டி அமைப்பதில் ஜோக்லேக்கர் தீவிரமாகச் செயலாற்றினார். அவருக்குக் கிடைத்த மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்சின் சில படைப்புகளை அவர் வெளியிட்டார். பிறரோடு இணைந்து 1923ல் ‘லேபர் பிரஸ்’ நிறுவினார்.

பிரதேச காங்கிரஸ் (BPCC) அமைப்பில் 

1921 வாக்கில் பம்பாய் மாகாண காங்கிரஸ் அமைப்பில் (BPCC) இருந்த 75 பேரில் டாங்கே, ஜோக்லேக்கர், எஸ்வி தேஷ்பாண்டே, சாத்தே, ஆர்வி நட்கர்னி முதலானோர் உட்பட 17 இளைஞர்கள் இருந்தனர். அவர்கள் BPCCன் சார்பில் ‘லேபர் கமிட்டி’ அமைத்து டெக்ஸ்டைல் மற்றும் பிற பகுதி தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றினர். புகழ் பெற்ற கிர்ணி காம்கர் யூனியன் (GKU) அமைப்புக்கு முன்னோடியான கிர்ணி காம்கர் மகாமண்டல் (GKM) அமைப்பு 1923ல் அமைக்கப்பட்டது. 

இந்தியாவின் டெக்ஸ்டைல் உற்பத்திப் பொருட்கள் மீது பிரிட்டிஷ் அரசு சுங்கத் தீர்வை விதிக்க, அதன் சுமை ஊதியவெட்டு முதலான வடிவில் தொழிலாளர்கள் மீது சுமத்தப்பட்டது. 1924 –25ல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் செய்து அரசை நிர்பந்தித்து வரியை ரத்து செய்ய வைத்தனர். மகாமண்டல் செயல்பாடுகளில் ஜோக்லேக்கர் தீவிரமாக ஈடுபட்டார். அவ்வமைப்பு ‘காம்காரி’ (தொழிலாளி) என்ற பெயரில் ஓர் இதழை ஆரம்பித்தது. அந்த இதழ்தான் பின்னாட்களில் தொழிலாளர் விவசாயிகள் கட்சி(WPP)யின் கட்சி இதழான ‘க்ரந்தி’ (kranthi) (வெளிச்சம், எழுச்சி, புரட்சி எனப் பொருள்படும்) மராத்தி இதழின் முன்னோடி. ஜோக்லேக்கர் மற்றும் மிராஜ்கர் இருவரையும் கூட்டு ஆசிரியர்களாகக் கொண்டு ‘க்ரந்தி’ 1927 மே 4ம் நாள் WPP கட்சியின் அதிகாரபூர்வ இதழாகத் தொடங்கப்பட்டது. 

கே என் ஜோக்லேக்கர் பம்பாய் மாகாண காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளராக 1925 -26ல் பொறுப்பு வகித்தபோது காங்கிரஸ் சில காலம் தொழிலாளர் வர்க்க அடிப்படையிலான கட்சியாக ஆனது.

ஏஐடியுசி அமைப்பில்

1920ல் பம்பாயில் நடைபெற்ற ஏஐடியுசியின் முதலாவது அமைப்பு மாநாட்டில் ஒரு மாணவனாக ஜோக்லேக்கர் கலந்து கொண்டார். 1923ல் மீண்டும் பம்பாயில் நடைபெற்ற அதன் 4வது மாநாட்டில் கிர்ணி காம்கர் மகாமண்டல் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். 1927 டெல்லியில் நடந்த ஏஐடியுசி மாநாட்டிலும் கலந்து கொண்டார்.

காலவோட்டத்தில் ஜோக்லேக்கர் ரயில்வே (GIPஎன்னும் கிரேட் இந்தியன் பெனிசுலா அதாவது இந்தியத் தீபகற்பம்) முதலிய அமைப்புகள், டெக்ஸ்டைல், ஆயில், சுரங்கம் மற்றும் பிறபகுதி தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றினார். 

சிபிஐ கட்சி அமைக்கப்படுதல்

(கான்பூர் சதிவழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட) பம்பாய் டிஃபென்ஸ் கமிட்டி வி ஹெச் ஜோஷியை வழக்குக்கு ஆதரவாக முன்னேற்பாடுகளைச் செய்ய கான்பூர் அனுப்பியது. ஹஸ்ரத் மொகானி மற்றும் சத்யபக்தாவுடன் தொடர்பு கொண்டபோது அவர்கள் மூலம் அனைத்திந்திய கம்யூனிஸ்ட் மாநாட்டிற்கான தயாரிப்புகள் குறித்து அறிந்தார். ஜோஷி திரும்பி வந்ததும் காங்கிரஸில் இருந்த கம்யூனிஸ்ட் குழு மகாணத்தில் சிபிஐ கட்சியை அமைத்திட தங்கள் கூட்டத்தை நடத்தினர். பம்பாய் குழு கான்பூர் கம்யூனிஸ்ட் மாநாட்டை நடத்துவதில் மொகானி, அர்ஜுன்லால் சேத்தி மற்றும் சத்யபக்தாவுடன் ஒத்துழைப்பது என முடிவு செய்ததில் ஜோக்லேக்கர் முக்கிய பங்காற்றினார்.  காட்டே, ஜோக்லேக்கர் மற்றும் நிம்கர் மாநாட்டில் கலந்து கொண்டனர். கம்யூனிஸ்ட்கள் ஏற்பாடு செய்த காங்கிரஸ் பந்தலை நோக்கிய பேரணியில் ஜோக்லேக்கர் கலந்து கொண்டார். பொதுவெளி அரங்கு கூட்டத்தில் சுமார் நான்கு முதல் ஐந்தாயிரம் மக்கள் கலந்து கொண்டனர். காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்ட பலரும் கம்யூனிஸ்ட் கூட்ட அமர்விலும் கலந்து கொண்டனர். 

ஜோக்லேக்கர் கூற்றுப்படி, (கான்பூர் மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்ட) கம்யூனிஸ்ட் கட்சி இரு பொதுச் செயலாளர்களில் ஒருவரான பர்கர்ஹட்டாவால் டெல்லியிலிருந்து ஒன்றும் பம்பாயிலிருந்து மற்றொன்று காட்டேவாலும் இரண்டு இணை கட்சி அலுவலகங்கள் செயல்பட்டன. 

1927ல் மெட்ராஸில் காங்கிரஸின் ஆண்டு கூட்டத் தொடர் நடந்தபோது அதில் ஜோக்லேக்கர் காங்கிரஸ் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார். மாநாட்டின் பொருளாய்வுக் குழுவில் பூரண சுயராஜ்யம் தீர்மானத்தை ஜோக்லேக்கர் முன் மொழிய அதனை ஜவகர்லால் நேரு ஆதரித்தார். தீர்மானம் பெருவாரியான பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட பொது அரங்கில் ஜவகர்லால் நேரு முன்மொழிய ஜோக்லேக்கர் ஆதரித்த அந்தத் தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. அவரும் மற்றவர்களும் சைமன் கமிஷனுக்கு எதிராக நடவடிக்கையில் இறங்க வற்புறுத்த பம்பாய் முழுவதும் ஆர்ப்பாட்டங்களுக்கு அது வழியமைத்தது. இரண்டு லட்சம் மக்களுக்கும் மேல் கலந்து கொண்ட பிரம்மாண்டமான பொதுக் கூட்டத்தில் மற்றவர்களோடு ஜோக்லேக்கரும் கலந்து கொண்டார். சைமன் குழுவிற்கு எதிரானப் பெரும் போராட்டங்களைத் தொழிலாளர் விவசாயிகள் கட்சி WPP, சிபிஐ  மற்றும் ஏஐடியுசி அமைப்புகள் ஏற்பாடு செய்தன. அந்தப் போராட்டங்களில் ஜோக்லேக்கர் முன்னணிப் பங்குவகித்தார். காங்கிரஸில் செயல்பட்ட சோஷலிசக் குழுவிலிருந்து பம்பாயில் WPP கட்சி அமைக்கப்பட்டது; அதன் தலைமைக்குழு தலைவர்களில் ஜோக்கலேக்கரும் ஒருவராக இடம் பெற்றார்.  

இதன் மத்தியில் ஜோக்லேக்கர் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினரானார். 

மே தினக் கொண்டாட்டம் 

1925ல் லாகூரில் மேதினம் கொண்டாடப்பட்டது. 1926ல் மே தினத்தை அனுசரிக்க கிர்ணி காம்கர் மகாமண்டல் முன்முயற்சிகளை எடுத்தது. சுமார் பத்தாயிரம் தொழிலாளர்கள் ஊர்வலத்தில் கலந்து கொள்ள பேரணி நடத்தப்பட்டது. பிரிட்டிஷ் தொழிலாளர்களுக்கு ஒருமைப்பாட்டு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. ஜோக்லேக்கரும் மற்ற தலைவர்களும் தலைமையேற்க 1927ல் காங்கிரஸ் இல்லத்திலிருந்து மாபெரும் ஊர்வலம் புறப்பட்டது. (இந்தியாவில் முதன் முறையாக மேதினம் 1923ல் சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் முயற்சியில் மெட்ராஸில் கொண்டாடப்பட்டது)

கிர்ணி காம்கர் வேலைநிறுத்தம், 1928

1928 ஏப்ரலில் வரலாற்றுப் புகழ்பெற்ற டெக்ஸ்டைல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் தொடங்கியது, அது ஆறு மாதங்களுக்கு மேல் நீடித்தது. காலக் கிரமத்தில் ‘கிர்ணி காம்கர் யூனியன்’ அமைக்கப்பட்டு பெரும் தலைவர்கள் மத்தியில் ஒருவராக ஜோக்லேக்கர்  உருவானார்; மேலும் GKU சங்கத்தில் டாங்கே, மிராஜ்கர், நிம்கர் முதலானவர்களுடன் ஜோக்லேக்கர் முக்கிய பிரமுகராகவும் சங்கத்தின் உதவிச் செயலாளர்களில் ஒருவராகவும் திகழ்ந்தார். 

1928ல் கல்கத்தாவில் நடந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்திற்கு ஜோக்லேக்கர் தலைமை வகித்தார். அது ஒரு முக்கியமான கூட்டம்; அக்கூட்டம் இந்திய தேசிய காங்கிரசுக்கு மேலும் தெளிவான வழிகாட்டுதலை வழங்க உதவியது.

WPP கட்சியும் தனது கூட்டத்தை நடத்தியது. அக்கட்சி மிக பிரம்மாண்டமான ஆர்ப்பாட்டப் பேரணியை, சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் (வேறு சிலர் கூற்றுப்படி கலந்து கொண்ட மக்கள் எண்ணிக்கை 80ஆயிரமாக இருக்கும்) கலந்து கொண்ட பேரணியைக் காங்கிரஸ் மாநாடு நடந்த பந்தலை நோக்கி நடத்தியது. காங்கிரஸ் கட்சியின் தலைவர் மோதிலால் நேரு காங்கிரஸ் பந்தலை இரண்டு மணி நேரம் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்து காங்கிரஸ் பிரதிநிதிகள் உட்பட திரண்டிருந்த மக்களிடையே உரை நிகழ்த்தினார். ஆர்ப்பாட்டப் பேரணி முழு விடுதலை தீர்மானத்தைக் காங்கிரஸ் நிறைவேற்ற வற்புறுத்தியது. அந்தக் கூட்டம் ஜோக்லேக்கரால் தலைமை தாங்கப்பட்டது. 

மீரட் சதி வழக்கு ( 1929 –33) தொடர்பாக பிரபலமான கம்யூனிஸ்ட் மற்றும் தொழிற்சங்கத் தலைவர்கள் 31 பேருடன் ஜோக்லேக்கரும் கைது செய்யப்பட்டார்.  

பார்வர்டு பிளாக் கட்சியில் இணைதல்

விடுதலையான பிறகும் தொழிற்சங்க அரங்கில் தொடர்ந்து பணியாற்றினார்; ஆனால் விரைவிலேயே நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் செல்வாக்கால் ஈர்க்கப்பட்டு சிபிஐ கட்சியிலிருந்து விலகிச் செல்லத் தொடங்கினார். 1946 பிப்ரவரியில் ஜபல்பூரில் நடத்தப்பட்ட பார்வர்டு பிளாக் தொழிலாளர்கள் அசம்பளி அமைப்பில் பாட்லிவாலா முதலானவர்களுடன் ஜோக்லேக்கர் சேர்ந்தார். 1948 முதல் 1952 வரை அனைத்திந்திய பார்வர்டு பிளாக் (AIFB) கட்சியின் பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார்.  ஆனால் பார்வர்டு பிளாக் கட்சி பிளவுபட்டு, பார்வர்டு பிளாக் (மார்க்ஸிஸ்ட்) பிரிவிலிருந்து 1952ல் ‘பார்வர்டு கம்யூனிஸ்ட் பார்ட்டி’ (FCP) தனியே அமைக்கப்பட்டது. அந்த FCP பிரிவும் விரைவில் பிளவைச் சந்தித்து FCP (ஜோக்லேக்கர்) மற்றும் FCP (ஆனந்தி முகர்ஜி) என இரு பிரிவுகளாயிற்று; காரணம், சரத் சந்திர போஸ் தலைமையிலான  இந்திய யுனைட்டெட் சோஷலிஸ்ட் ஆர்கனைசேஷன் (USOI) அமைப்புடன் அணி சேர்வதை ஜோக்லேக்கர் எதிர்த்தார். மேற்கு வங்கம் மகாராஷ்டிரா மற்றும் உபி கிளைகளை ஜோக்லேக்கர் தனது வசம் எடுத்துக் கொண்டார். அவருடைய அணி 1952ல் சிபிஐ கட்சியுடன் இணைந்தது; ஆனந்தி முகர்ஜியின் அணி போல்ஷ்விக் கட்சியுடன் இணைந்தது.

சிபிஐ கட்சியில் மீண்டும் இணைதல்

1952ல் ஜோக்லேக்கர் சிபிஐ கட்சியில் மீண்டும் சேர்ந்தார். அவர் தொடர்ந்து தொழிற்சங்கம் கட்சி மற்றும் பிற முன்னணி அரங்குகளில் பணியாற்றினார்.

கொள்கை பிடிப்புமிக்க ஜோக்லேக்கர் தமது 74வது வயதில் 1970 நவம்பர் 21ல் இயற்கை எய்தினார்.  

--தமிழில்: நீலகண்டன், 

என்எப்டிஇ, கடலூர்

Thursday 17 June 2021

வரலாற்றுத் தலைவர்கள் வரிசைகல்பனா தத் : சிட்டஹாங் ஆயுதக் கிளர்ச்சியின் கதாநாயகி

 நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து : 

சில சித்திரத் சிதறல்கள் -36

கல்பனா தத் : சிட்டஹாங் ஆயுதக் கிளர்ச்சியின் கதாநாயகி

 --அனில் ரஜீம்வாலே

--நியூஏஜ் (மார்ச் 14 – மார்ச் 20)

கல்பனா தத் (பின்னர் கல்பனா ஜோஷி) தற்போது பங்களா தேசத்தில் உள்ள பெங்கால் பிராவின்ஸ், சிட்டஹாங் மாவட்டம், போல்காளி உபஜில்லாவின் முன்னூறு வீடுகளே உள்ள ஸ்ரீபூர் என்னும் சிறிய கிராமத்தில் 1913 ஜூலை 27ல் பிறந்தார். ஆனால் அவருடையது பழமைவாதம், பாரம்பரியமான பழைய பழக்க வழக்கங்கள் உள்ள நிலச்சுவான்தார் வீடு. தந்தை விநோத் பெகாரி தத்தா, தாய் ஷோபனா தேவி. படித்த அவர்கள் குடும்பத்திலிருந்து பின்னர் சிலர் சுதந்திர இயக்கத்தோடு தொடர்பு கொண்டார்கள். 

கல்வியும் அரசியல் தீவிரச் செயல்பாடும்

வீட்டில் தொடக்கக் கல்வி பெற்ற கல்பனா, அவருடைய குடும்பத்தினர் ஒருவர் நிறுவிய டாக்டர் ஷத்கிர் பாலிகா உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். கல்வியில் சிறந்த கல்பனா எப்போதும் வகுப்பில் முதலிடம் பெற்றார். சரத்சந்திர சட்டோபாத்யாய் எழுதிய ‘பாதெர் தாபி’ (‘பாதைக்கான உரிமை’) என்ற நாவல் (பாதெர் தாபி என்ற இரகசிய சமூகக் குழுவின் நோக்கம் பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து இந்தியாவை விடுதலை செய்வது குறித்த நாவல்) மற்றும் கன்கைலால் கதைகள் போன்ற புரட்சியாளர்கள் கதைகளைப் படித்தார். அவருடைய இரண்டு மாமா ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கேற்றது அவரிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. அறிவியல் மீது ஆர்வம் கொண்ட கல்பனாவின் ஆதர்ச விஞ்ஞானி ஆச்சார்ய பிரஃபுல்ல சந்திரா ராய் ஆவர். அறிவியல் தவிர கணக்கு மற்றும் சமஸ்கிருத பாடத்திலும் அவர் சிறந்து விளங்கினார்.

இதன் மத்தியில் அவரது குடும்பம் அரசியல் ரீதியாகப் பிரிந்தது. சிட்டஹாங்கில் அவரது குடும்பம் நடத்தி வந்த துணி கடைக்குக் காந்திஜி விஜயம் செய்து பங்கா லெட்சுமி மில்ஸ் தயாரிப்பான சுதேசிப் பொருள்களைப் பார்வைக்குத் திறந்து வைத்தார். அக்குடும்பத்தின் பல பெண்களும் காந்தியைத் ‘தரிசனம்’ செய்வதற்காகச் சென்றது மட்டுமல்ல, தங்கள் அணிகலன் நகைகளையும் அவர் முன்னெடுத்த நல்ல செயல்களுக்கு அவரிடம் நன்கொடையாக அளித்தனர். 

சிட்டஹாங்கிலிருந்து 1929ல் மெட்ரிகுலேஷன் தேர்வில் தேறினார். அதே வருடம் மாணவர்கள் மாநாடு நடந்தபோது, தனது மாமாவின் உதவியோடு அம்மாநாட்டில் கல்பனா உரையாற்றினார். சிட்டஹாங் இளைஞர்கள் புரட்சிகர குழுவை அமைக்கத் தொடங்கியபோது அதன் உறுப்பினர் பூர்னேந்து தஸ்தீதார் அவருடைய குடும்பத்திற்கு வரலானார். கல்பனாவும் அவரிடம் பயிற்சி பெற்றார். 

விஞ்ஞானப் பட்டப்படிப்புக்காக கல்கத்தா பெத்யூன் கல்லூரியில் சேர்ந்து இயற்பியல், கணிதம் மற்றும் தாவரவியல் பாடங்களைப் படித்தார். உடற்பயிற்சி வகுப்புகள் மற்றும் படகோட்டல் முதலிய விளையாட்டுகளிலும் சேர்ந்தார். இந்தியும் பிரெஞ்சும் பயின்றார். சூர்யா சென், ஆனந்த் சிங், கணேஷ் கோஷ் முதலான புகழ்பெற்ற புரட்சியாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டது. லத்தி, வாள் முதலானவற்றில் ஆயுதப் பயிற்சியும் அவர் பெற்றார்.  ஜவகர்லால் நேரு கைது செய்யப்பட்டதைக் கண்டித்துக் கல்பனாவும் மற்றவர்களும் 1930 ஏப்ரலில் பெத்யூன் கல்லூரியில் வேலை நிறுத்தம் செய்தனர். கல்லூரியின் பெண் முதல்வர் அவர்களிடம் தவறாக நடக்க அவரை இறுதியில் மன்னிப்பு கேட்க வைத்தனர்.

பெண் மாணவர்கள் அசோஸியேஷனான சத்திரி சங் அமைப்பிலும் கல்பனா சேர்ந்தார். அந்த அமைப்பு, பினா தாஸ், பிரிதீலதா வட்டேடார் முதலான புரட்சியாளர்கள் இடம் பெற்ற, ஒரு பாதி புரட்சிகர (செமி ரெவலூஷனரி) அமைப்பாகும். 

சிட்டஹாங் ஆயுதக் கிடங்கு சூறையாடல்

புரட்சிகர இளைஞர்கள் சிட்டஹாங்கில் இருந்த பிரிட்டிஷ் ஆயுதக் கிடங்கை 1931 ஏப்ரல் 18ல் தாக்கினர். அந்தச் செய்தி பிரிட்டிஷ் அரசை உலுக்கியது, செய்தி விரைவாகப் பரவியது. சிட்டஹாங் செல்ல விரும்பிய கல்பனா மாற்றலுக்கு விண்ணப்பித்து ஏப்ரல் இறுதியில் அங்கே சென்றாலும், மாற்றல் கிடைக்காததால் காலம் விரையமாகி அவரது படிப்பைப் பாதித்தது. தனி மாணவராகத் தேர்வு எழுத அவருக்குச் சிட்டஹாங் மையம் கிடைத்தது. சிட்டஹாங் கல்லூரியில் இளங்கலை அறிவியல் (பிஎஸ்சி) பட்டப்படிப்பில் சேர அனுமதிக்கப்பட்டார். 

புரட்சிகரச் செயல்பாடுகளில் ஈடுபட அதிக ஆர்வம் கொண்டு துப்பாக்கிச் சுடுதல் மற்றும் பிற ஆயுதங்களில் பயிற்சி எடுத்தார். அவருடைய பள்ளி இறுதி நாட்களில் சுரபா தத்தா என்ற கம்யூனிஸ்ட் பெண்ணுடன் அவருக்கு ஏற்கனவே தொடர்பு இருந்தது. தன்னையும் செயல் நடவடிக்கைகளில் சேர்த்துக் கொள்ளும்படி ஆனந்த் சிங்கை ஏறத்தாழ கல்பனா நிர்பந்தித்து இறுதியில் குழுவில் சேர்ந்தார். அக்குழுவின் திட்டம் ரயில்வே பாதையைத் தகர்ப்பது. இந்திய குடியரசு ராணுவத்தைச் (இந்தியன் ரிபப்ளிகன் ஆர்மி) சேர்ந்த சூர்யா சென், கல்கத்தாவிலிருந்து ஆயுதங்களுக்குத் தேவையான ஆசிட், இரசாயனப் பொருட்கள் மற்றும் பிறவற்றை ஏற்பாடு செய்யும்படி கல்பனாவைக் கேட்டுக் கொண்டார். தேவையான அனைத்தையும் கல்பனாவே கொண்டு வந்தார். கன்-காட்டன் (துப்பாக்கிக்கான பருத்தி) துணி தயாரிப்பதில் நிபுணராகச் சிறப்புற்ற கல்பனா, நடவடிக்கை குழுவில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 

  டைனமைட் வெடியால் சிறை தகர்க்கும் அவர்களது முதல் முயற்சி வெற்றிபெறவில்லை. அச்சிறையில் தினேஷ் குப்தா மற்றும் இராமகிருஷ்ண பிஸ்வாஸ் தூக்கிலிடப்பட இருந்தனர். ஆண்வேடத்தில் இருந்த அவரைச் சிட்டஹாங்கின் பகர்தாலி ஐரோப்பிய கிளப் அருகே 1932 செப்டம்பர் 17ல் கைது செய்தனர். ஒரு வாரத்திற்குப் பிறகு அந்தக் கிளப் மீது பிரிதீலதா தலைமையில் திடீர் தாக்குதல் நடத்தப்பட்டது. முன்பு ஜலாலாபாத்தில் இரத்த வெள்ளத்தில் மூழ்கடிக்கப்பட்ட நிகழ்வில் பிரிட்டிஷ் படைகளின் துப்பாக்கிச் சூட்டில் பதின்வயது இளைஞர்கள் பலர் கொல்லப்பட்டதற்கு எதிர் நடவடிக்கையாக இத்தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த நடவடிக்கையின்போது பிரிதீலதா கடுமையாக காயம் அடைய அவர் சையனைடு விஷம் அருந்தி தன்னைத்தானே மாய்த்துக் கொண்டார். பிரிதீலதா கல்பனாவின் வகுப்புத் தோழி, உடன்வந்த புரட்சியாளர். 

இந்த வழக்கில் கல்பனாவையும் மாட்டிவிட போலீஸ் முயன்றாலும், போதிய சாட்சியம் இன்மையால் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். அவரை வீட்டிலேயே அடைத்து வைத்து வெளியே செல்ல முயற்சிக்க வேண்டாமென எச்சரிக்கப்பட்டார். வீட்டைச் சுற்றி போட்டிருந்த பலமான போலீஸ் கட்டுக்காவலை மீறி அவர் தப்பிச் சென்றார். அரசுப் பணியிலிருந்து அவரது தந்தை இடைநீக்கம் செய்யப்பட்டு அவருடைய வீட்டைச் சோதனையிட்டு எண்ணிறந்த பொருள்களைக் கைப்பற்றிச் சென்றனர். கல்பனாவும் சூர்யாதாவும் (சூர்யா தத்தா) போலீஸ் விரித்த வலையிலிருந்து எப்படியோ ஓர் இரவின் இருட்டில் தப்பிச் சென்றனர். ஒரு திடீர் தாக்குதலில் போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்தார். மனிந்திரா தத்தாவுடன் ஒரு குளத்தில் முழு இரண்டு மணிநேரம் அவர் பதுங்கி இருந்தார். பல மைல்கள் தொலைவு அவர் ஓடிக் கொண்டிருந்தார். சிட்டஹாங் அருகே ஒரு கடற்கரை நகரத்தில் அவர் கைது செய்யப்பட்டார்.

அவர்கள் எதிர்ப்பை மிஞ்சிய போலீஸ் பலத்தால் அவரும் அவரது வேறுசில தோழர்களும் கைது செய்யப்பட்டனர். ஒரு போலீஸ் அதிகாரி அவர் கன்னத்தில் அறைய, அருகே இருந்த ஒரு இராணுவக் கமாண்டர் அந்த அதிகாரியிடம், “அவருக்கு உரிய மரியாதையைக் காட்டி நடந்து கொள்க” எனக் கண்டித்துக் கூறினார். போலீஸ்காரர்கள் மத்தியிலும், ஏன் பிரிட்டிஷ் அதிகாரிகள் மத்தியிலும் கல்பனா மிகவும் புகழ் பெற்று இருந்தார். 

சூர்யா சென், தாரகேஷ்வர் தஸ்தீதர் இருவருக்கும் தூக்கு தண்டனையும் கல்பனாவுக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. இதற்குக் காரணம் சிறப்பு டிரிபியூனல் நீதிபதியைப் பொருத்து கல்பனாவிற்கு வயது 18 மட்டுமே. இரவீந்திரநாத் தாகூர் மட்டும் தலையிடாமல் இருந்தால், தண்டனையாக அவர்  அந்தமானுக்குக் கடத்தப்பட வேண்டியிருந்திருக்கும். முதலில்  அவர் ஹிஜ்லி மற்றும் ராஜ்ஷாகி சிறைகளுக்கும் பின்பு 1934 செப்டம்பர் முதல் 1935 அக்டோபர் வரை மெடினிபூர் சிறைக்கும் அனுப்பப்பட்டார். பிறகு தினாஜ்பூர் சிறைக்கும் பின்பு மெடினிபூர் சிறைக்குத் திரும்பவும் மாற்றப்பட்டார். 

கம்யூனிஸ்ட் கட்சியில்

கல்பனாவையும் மற்றவர்களையும் விடுதலை செய்வதற்கான அழுத்தம் நாளுக்கு நாள் அதிகரித்தது. தாகூர் மற்றும் காந்திஜியின் தலையீடு மட்டுமல்லாமல் கைதிகள் விடுதலைக்கான இயக்கம் கொடுத்த அழுத்தின் காரணமாகவும் கல்பனா 1939 மே 1ல் விடுதலை செய்யப்பட்டார். விடுதலைக்குப் பிறகு கல்பனாவிற்கு இரவீந்திரநாத் தாகூரிடமிருந்து எதிர்காலக் கடமைகளைச் சுட்டிக்காட்டி அவரது வெற்றிக்காக ஆசி வழங்கி ஒரு கடிதம் வந்தது. அவரது சக தோழர்கள் பலரும் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். ஆனால் இன்னும் அவருக்கு மட்டும் ஒரு தயக்கம் இருந்தது. அது தவிர, வேதாந்தம் மற்றும் கீதை தத்துவத்தின் செல்வாக்கிற்கு ஆட்பட்டிருந்தார்.

எந்தக் கல்லூரியும் அவரை அனுமதிக்கத் தயாராக இல்லை. இறுதியில் 1940ல் பிஏ தேர்வில் தேர்வாகி எம்ஏ (கணிதம்) பாடப் பிரிவில் சேர்ந்தார். 1940 –41ல் சிட்டஹாங்கில் வீட்டுச் சிறையில் இருந்தார். கல்கத்தா திரும்பி வந்ததும் ஒரு படிப்பு வட்டம் அமைப்பை நிறுவி ‘பதேயா’ (நற்கருணை, இறைப்பிரசாதம்) என்ற கையெழுத்துப் பிரதி இதழை வெளியிட்டார். சில நூறு உறுப்பினர்களோடு ‘நாரி சமிதி’ (பெண்கள் கூட்டமைப்பு) நிறுவினார். அவர் தொடங்கிய இரவு பள்ளி மற்றும் பகல் நேரப் பள்ளிகளில் பின்தங்கிய சமூக மாணவர்கள் படிக்க வந்தனர். ஜப்பானியர்கள் சிட்டஹாங் துறைமுகத்தில் குண்டுவீசித் தாக்கியபோது அவர் கடுமையாகப் பணியாற்றினார்; பாதுகாப்பு பயிற்சி அளிக்க மகிளா ஆத்ம ரக்க்ஷா சமிதியை அமைக்க உதவினார். மேலும் ட்ராம்வே தொழிலாளர்கள் அமைப்பை ஏற்படுத்தி சங்க அலுவலகத்தில் முழுநேரப் பணியாளராகப் பணியாற்றினார். மீண்டும் டைபாயிடு நோய் தாக்க அவர் கடுமையாக நோயுற்றார். 

மக்கள் கூட்டத்துள் பணியாற்ற அவர் விரும்பினார். சிட்டஹாங்கில் சந்தால் பழங்குடி இன தொழிலாளர்கள், தூய்மைப் பணியாளர்கள் மற்றும் துணி வெளுப்போர் காலனிகளில் பணியாற்றும் வாய்ப்பு அவருக்குக் கிடைத்தது. 1943 வங்கப் பஞ்சத்தின்போது அவர் தொண்டாற்றினார். கம்யூனிசத்திற்கு வெகு நெருக்கமாக வந்தார். 1942ல் அவர் நோயுற்றிருந்த காலத்தில்தான்  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக அனுமதிக்கப்பட்டார் என்ற செய்தி அவருக்குத் தெரிவிக்கப்பட்டது.

கட்சி கல்விக்காக 1942 டிசம்பரில் அவர் பம்பாய் கட்சி பள்ளிக்குச் சென்றார். அங்கே கட்சி பொதுச் செயலாளர் பிசி ஜோஷியைச் சந்தித்தார். பிரதேச மட்டத்தில் கட்சி அமைப்பாளராக அவர் நியமிக்கப்பட்டார். அவருடைய நான்கு சகோதரிகளும்கூட கட்சி உறுப்பினர்களாக இணைந்தனர். 1943 ஆகஸ்டில் பிசி ஜோஷியும் கல்பனா தத்தும் திருமணம் செய்து கொண்டனர். 

சிட்டஹாங்கிலும் வேறு இடங்களிலும் அவர் பல போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தியுள்ளார். மிகப் பெரிய வேலைநிறுத்தம் மற்றும் ஆர்பாட்டங்களில், 1946 ஜனவரியில் சிட்டஹாங் பாடியா என்ற இடத்தில் நடந்தது ஒன்றுதான் மிகப் பெரியது. அவரும் பிற தோழர்களும் அதைத் தலைமையேற்று நடத்தினர். பிரிட்டிஷ் வீரர்களின் அட்டூழியங்களுக்கு எதிராக நடந்த அப்போராட்டம், யுத்தத்திற்குப் பிறகு நாடு முழுவதும் எழுந்த எழுச்சியின் ஒரு பகுதியாகும். 

1946ல் வங்கச் சட்டமன்றத்திற்குச் சிபிஐ வேட்பாளராகப் போட்டியிட்ட அவர் வெற்றிபெறத் தவறினார்.                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                               ‘பிடிஆர் காலம்’

பிசி ஜோஷி மற்றும் கல்பனா ஜோஷி இருவரும்தான் ஒருக்கால் பிடிஆர் காலத்தில்  மிக மோசமாகத் துன்பப்பட்டவர்கள். 1947 டிசம்பரில் அவசரகோலத்தில் பிசி ஜோஷி கட்சி பொதுச் செயலாளர் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டு, பிடி ரணதிவே அந்தப் பொறுப்பில் அமர்த்தப்பட்டார். 1948 பிப்ரவரி - மார்ச்சில் இரண்டாவது கட்சி காங்கிரஸ் கல்கத்தாவில் நடைபெற்றபோது ஆதியோடு அந்தம் குழுப்போக்கு மற்றும் இடது சாகசப் பாதை கட்சியைப் பீடித்தது. முதலாளித்துவத்திற்குச் சரணடைதல் (அதாவது நேருவின் சுதந்திர அரசோடு சமரசம்) உள்பட அனைத்து வகையானவைகளுக்கும் பிசி ஜோஷி குற்றம் சாட்டப்பட்டார். அவரையும் கல்பனாவையும் கீழ்மைப்படுத்தும் பண்பு சிதைத்தல் அவர்களுக்கு எதிரான இயக்கமாகக் கட்டவிழ்த்துவிடப்பட்டது, அவர்களைத் தனிமைப்படுத்த வேண்டும் என்றனர். அவரை இடைநீக்கம் செய்து சாதாரண உறுப்பினராகக் கீழிறக்கப்பட்டார். அவரோடு கல்பனாவும் அரசியல் மற்றும் தனிவாழ்வில் துன்பப்பட்டார். அவையெல்லாம் அடிப்படை இல்லாத குற்றச்சாட்டுகள்; அவருக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட முறையோ அதிகபட்ச ஏதேச்சிகாரமும் தன்னிச்சயான ஜனநாயகமற்ற முறைகளுமாகும். 

1948ல் கல்பனா ஜோஷி தலைமறைவு வாழ்வில் சென்றார். கட்சியின் மீதான தடை 1951ல் நீக்கப்பட்டதும் நிதிச்சுமை மற்றும் அரசியல் நிர்பந்தங்களால் அவர் ஒரு பணியைத் தேடிக் கொள்ள நேர்ந்தது; பேராசிரியர் பிசி மகாலனோபிஸ் கீழே இந்தியப் புள்ளியியல் நிறுவனத்தில் பணியாற்றினார்.முக்கியமாக அவர் தேசிய சாம்பிள் சர்வே (NSS)யில் பணியாற்றினார். மேலும் கல்பனா ஜோஷி ரஷ்ய மொழி படிப்புகளுக்கான நிறுவனத்தை நிறுவிய இயக்குநருமாவார். 

தனது சுயசரிதையைச் ‘‘சிட்டஹாங் ஆயுதக் கிடங்கைச் சூறையாடியவர்கள் : ஞாபகங்கள்” என்ற சுயசரிதை நூலாக எழுதியுள்ளார். அதனைப் பிசி ஜோஷியின் முன்னுரையோடு ஆங்கிலத்தில் பிசி ஜோஷியும் நிகில் சக்ரவர்த்தியும் எழுதியுள்ளனர். கல்பனா எழுதுகிறார், “எங்கள் பள்ளி நாட்களில் எங்களது எதிர்காலம் குறித்து எந்தத் தெளிவான யோசனையும் எங்களுக்கு இல்லை. அப்போது ஜான்சி ராணி எங்கள் கற்பனையைப் பெருந்தீயாய்ப் பற்ற வைத்தார்”

புதுடெல்லியில் 1995 பிப்ரவரி 8ம் நாள் அந்தப் புரட்சி புயல் இம்மண்ணுலகை விட்டு நீங்கியது.

இளைஞர்களின் ஆதர்சமாய் பகத்சிங் போல, பெண்களில் முன்னே நிற்கும் கல்பனா என்றென்றும் இனிவரும் இளைஞர்களின் நெஞ்சங்களிலும் ஒளிவிட்டுப் பிரகாசிப்பார்!

--தமிழில் : நீலகண்டன், 

என்எப்டிஇ, கடலூர்


Monday 14 June 2021

இஎம்எஸ் : முதலாவது கம்யூனிஸ்ட் முதலமைச்சர்

 நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து : 

சில சித்திரச் சிதறல்கள் -38

இஎம்எஸ் : முதலாவது கம்யூனிஸ்ட் முதலமைச்சர் 

--அனில் ரஜீம்வாலே

--நியூஏஜ் (மார்ச் 28 –ஏப்ரல் 3)

1951—52ல் நடந்த நாட்டின் முதலாவது பொதுத் தேர்தல்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முக்கிய எதிர்கட்சியாக உருவானது; 1957ன் இரண்டாவது பொதுத் தேர்தல்களிலும் அதே நிலையைத் தக்க வைத்துக் கொண்டதுடன் கேரளா மாநிலத்தின் ஆளும் கட்சியாகவும் மாறியது. தேர்தல்கள் மூலம் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி ஆட்சி அதிகாரத்திற்கு வருவது அதுவே உலகில் இரண்டாவது முறை, இந்தியாவில் முதன் முறை. அரசியல் வட்டாரங்கள் மற்றும் மக்களிடையே அதிர்வலைகளை ஏற்படுத்தியது மட்டுமல்ல, ‘
முதலாளித்துவ
’ தேர்தல்கள் மூலம் கம்யூனிஸ்ட்கள் ஆட்சிக்கு வரமுடியாது எனக் கருதிய கம்யூனிஸ்ட்களையே தங்கள் வறட்டுப் புரிதல்களை மாற்றியமைக்க நிர்பந்தித்தது. கேரள மாநிலத்தில் கட்சி இஎம்எஸ் அவர்களை முதலமைச்சராக நியமித்தது, வரலாற்றில் அழியாத அடையாளமாயிற்று. 

விடுதலை இயக்கத்தில் ‘இஎம்எஸ்’

ஏளங்குளம் மனக்கால் சங்கரன் (EMS) நம்பூதிரிபாட், பரமேஸ்வரன் நம்பூதிரிபாட்டுக்கும் விஷ்ணுததா அந்தர்ஜனம் அம்மையாருக்கும் நான்காவது மகனாகப் பிரபுக்கள் குடும்பத்தில்  மலப்புரம் மாவட்டம் பெரிதாள்மன்னா தாலுக்காவின் குந்தி நதிகரைகளில் அமைந்த எர்ணாகுளத்தில்  1909 ஜூன் 13ம் நாள் பிறந்தார். சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் வளர்ச்சி பெற நம்பூதிரி குடும்பங்களில் காலங்காலமாக நீடித்த மிகக் கடுமையான பழமைவாதம் மெல்ல மெல்ல எதிர்ப்புக்களைச் சந்தித்தது. முற்போக்கு இளைஞர்களின் ‘யோகசேஷம சபா’ (LIC முத்திரையில்கூட யோகசேஷமம் இடம் பெற்றிருக்கும்; அது கீதை ஸ்லோகத்தின் உபநிடத வாக்கியம். யோகசேஷமம் என்பது பாதுகாப்பு மற்றும் நலவாழ்வு எனப் பொருள்தரும்) மற்றும் பிற அமைப்புகள் உருவாகத் தொடங்கின. சபா நடத்திய பத்திரிக்கையில் இஎம்எஸ் ‘பிரெஞ்ச் புரட்சியும் நம்பூதிரி சமூகமும்’ என்றொரு கட்டுரைகூட எழுதியுள்ளார். 

ஆரம்பக் கல்வியை ஒரு தனியார் பயிற்றுநரிடம் கற்ற பிறகு இஎம்எஸ் 1925ல் மூன்றாவது ஃபாரத்தில் பள்ளியில் சேர்ந்தார். 1929ல் எஸ்எஸ்சி தேர்வு பெற்றபோது சமஸ்கிரதத்திலும் ஆங்கிலத்திலும் சிறப்புற்றிருந்தார்.

அவர் 5வது ஃபாரம் படித்தபோது 1927ல் மெட்ராஸ் காங்கிரஸ் அமர்வு நடைபெற்ற காங்கிரஸ் நகரைச் சுற்றிப்பார்த்தபோதுதான் தேசியம் அவருக்கு முதலில் அறிமுகமானது. மாநாட்டு நிகழ்ச்சிகளை, சொற்பொழிவுகளை உன்னிப்பாக கவனித்தார். சுதந்திரப் போராட்ட வீரர் எம்பி நாராயண் மேனன், கொச்சியின் தீப்பொறி சொற்பொழிவாளர் வி ஜெ மதாய் போன்றவர்களின் உரைகளால் ஈர்க்கப்பட்டு ஆழமான செல்வாக்குக்கு ஆளானார்; அவர்கள் உரைகளை மீண்டும் கேட்க ஐந்து முதல் எட்டு கிலோமீட்டர் பயணித்தார். இஎம்எஸ் தங்கியிருந்த லாட்ஜுக்கு வட்டாரக் காங்கிரஸ் கமிட்டியின் இரண்டு உறுப்பினர் குழு விஜயம் செய்தது. அவரிடம் புறக்கணிப்பு குறித்த மாநாட்டுத் தீர்மானத்தை ஆங்கிலத்திலிருந்து மலையாளத்திற்கு மொழியாக்கம் செய்துதர ஒப்படைத்தது.

1928 –29 கல்வியாண்டில் பாலகாடு  பள்ளியில் சேர்ந்து பின்னர் ஜூன் 1929ல் திருச்சூர் செயின்ட் தாமஸ் கல்லூரியில் சேர்ந்தார். ராஜகோபாலாச்சாரியாரும் ஜம்னாலால் பஜாஜும் இந்திப் பிரச்சாரம் செய்ய பாலகாடு வந்தபோது கல்லூரி முதல்வர் அதனை எதிர்த்தார். இஎம்எஸ் மற்றும் நண்பர்கள் இந்தி இயக்கத்தில் சேர்ந்து அவர்கள் இருவரையும் சந்தித்து கிருஷ்ணசாமி அய்யரின் சபரி ஆஸ்ரமம் சென்றனர். (ஈவெ) ராமசாமி நாயக்கரோடு சேர்ந்து (பகுத்தறிவு இதழான) ‘யுக்திவாடி’ (ரேஷனலிஸ்ட், பகுத்தறிவாளர்) இதழில் அவர் பணியாற்றினார். 

சிஎஸ்பி மற்றும் கேபிசிசி கட்சிகளில்

காந்திஜியின் சட்டமறுப்பு இயக்கத்தில் சேர்வதற்காக இஎம்எஸ் கல்லூரியைவிட்டு வெளியேறினார். தேசிய மற்றும் சமூகச் சீர்திருத்த இயக்கங்களோடு சேர்ந்து பணியாற்றும்போது ஜிடிஹெச் கோல் (GDH Cole) போன்றோர் நூல்களின்வழி அவர் கம்யூனிசத்திற்கு நெருங்கிவரத் தொடங்கினார். கத்தோலிக்க இயக்கத்தோடும் அவருடைய ஆசிரியரும் (பின்னாட்களில் 1957 கம்யூனிச அமைச்சரவையில் அமைச்சரானவருமான) ஜோசப் முண்டச்சேரியோடும் நெருக்கம் அதிகமானது. சட்டமறுப்பு இயக்கத்தில் பங்கேற்றதால் இஎம்எஸ் கைதானார்; அவரைப் பாராட்டியதற்காக அவருடைய ஆசிரியர் எம்பி பால் கல்லூரியைவிட்டு வெளியேற நேர்ந்தது. 

ஏழை மக்களுக்கான போராட்ட இயக்கங்களை ‘நம்பூதிரி யுவஜன் சங்கம்’ (நம்பூதிரி இளைஞர்கள் சங்கம்) ஏற்பாடு செய்து நடத்தியதோடு, தண்டி யாத்திரையைப் போன்று மாநிலம் தழுவிய பேரணிகளையும் நடத்தியது.  அந்த நேரத்தில் இஎம்எஸ், ஜவகர்லால் நேரு பற்றிய ஒரு சிறிய வாழ்க்கை சரித்திர நூல் எழுதினார். மிகுந்த உற்சாகத்தோடு காதி விற்பனை, கதர்ஆடைகள் அணிவதில் ஈடுபட்டு, அன்னியத் துணிக்கடைகளுக்கு முன் மறியல் நடத்துவது மற்றும் வெளிநாட்டுத் துணிகள் பகிஷ்கரிப்பு இயக்கத்திலும் தீவிரமாகப் பங்கேற்றார்.

காந்தி – இர்வின் உடன்பாட்டிற்குப் பின் பையனூர் மற்றும் படகரா அரசியல் மாநாடுகளில் இஎம்எஸ் பங்கேற்றபோது அதில் ஜெஎம் சென்குப்தா, கேஎஃப் நரிமன் முதலானவர்கள் பங்கேற்றனர். அவர்களில் பலரும் பின்னாட்களில் அவருடைய சகாக்கள் ஆனார்கள்.

1931 நவம்பர் 1ல் தொடங்கிய குருவாயூர் கோயில் நுழைவு சத்தியாகிரகத்தில் இஎம்எஸ் தீவிரமாக ஈடுபட்டார். அவரது கல்லூரியில் பகிஷ்காரம் முழுமையாக நடைபெற்றது தீவிர இயக்கச் செயல்பாடுகளுக்குக் . கல்லூரிப் படிப்பு இடையூறாக இருப்பதாகக் கருதிய இஎம்எஸ், 1932 ஜனவரி 4ம் தேதி கல்லூரியைவிட்டு விலகினார். ‘உன்னி நம்பூதிரி’ வாரஇதழில் தனது வாசகர்களுக்கு எழுத்துபூர்வமான ஒரு தகவலை எழுதி வைத்துவிட்டு, காங்கிரஸ் சட்ட மறுப்பு இயக்கத்தில் பங்கேற்பதற்காகத் திருச்சூரிலிருந்து காலிகட் (கோழிகோடு) சென்றார். அவரைக் கைது செய்து காலிகட், கண்ணணூர்  மற்றும் வேலூர் உள்ளிட்ட பல்வேறு சிறைகளில் அடைத்தனர். அங்கே புகழ்பெற்ற கிருஷ்ணப்பிள்ளை மற்றும் பின்னர் ஏகே கோபாலனைச் சந்தித்தார். மேலும் கேஎன் திவாரி, கிரண் தாஸ், ஆர்எம் சென்குப்தா, ஆர்சி ஆச்சார்யா, என்ஜி ரங்கா மற்றும் பிறரைச் சந்தித்தார். 1933 –34ல் கண்ணணூர் சிறையில் காங்கிரஸ்காரர்கள் இடதுசாரிக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. 

விரைவில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி(சிஎஸ்பி)யில் சேர்ந்தவர் பின்னர் அதன் அனைத்திந்தியச் செயற்குழுவில் இடம் பெற்றார். கோழிக்கோடு இடதுசாரி காங்கிரஸ்காரர்கள் 1934ல் கட்சியின் கேரளா குழுவை ஏற்படுத்தினர். அந்தக் கூட்டத்திற்குக் கேளப்பன் தலைமை வகித்தார். 1934 மே பாட்னாவில் நடந்த சிஎஸ்பி-யின் முதலாவது அனைத்திந்திய மாநாட்டில் இஎம்எஸ் பங்கேற்றார். 

ஜெயபிரகாஷ் நாராயணன் (ஜெபி) எழுதிய ‘ஏன் சோஷலிசம்’ நூல் இஎம்எஸ்-சிடம்  பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. ஜெபியின் இந்த ஆக்கம் குறித்துக் கம்யூனிஸ்ட்கள் முன்வைத்த விமர்சனம், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்பால் இஎம்எஸ் நெருங்கிவர உதவியது. 1935ல் மெட்ராஸில் கிருஷ்ணப்பிள்ளை, எஸ்வி காட்டே மற்றும் சுந்தரையாவைச் சந்தித்த பிறகு 1936 ஜனவரியில் அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினராகத் தன்னை இணைத்துக் கொண்டார். குறிப்பிட்ட அந்தக் காலகட்டத்தில் இஎம்எஸ் தீவிரமான காங்கிரஸ்காரர், காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் தலைவர் மற்றும் ஒரு கம்யூனிஸ்டாகவும் இருந்தார்.

கேரளாவில் சிபிஐ 1937 ஜூலையில் அமைக்கப்பட்டபோது கிருஷ்ணப்பிள்ளை செயலாளராகவும் கே தாமோதரன், என்சி சேகர், இஎம்எஸ் மற்றும் சிலர் தலைமைக்குழு உறுப்பினர்களாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். 1937 – 38ல் கேரளபிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (KPCC) அமைப்புச் செயலாளராகவும், 1938 - 40களில் அதன் செயலாளராக இரண்டு முறையும் பொறுப்பு வகித்துள்ளார். 

பம்பாய், மெட்ராசில் காங்கிரஸ் அமைச்சரவைகள் அமைத்தது கட்சி வெளிப்படையாகச் செயல்பட ஓரளவு வசதியானது என இஎம்எஸ் (பின்னர்) எழுதியுள்ளார். ‘பிரபாவம்’ (புகழ், கீர்த்தி எனப் பொருள்படும்) என்ற வார இதழைச் சிஎஸ்பியின் மலபார் கிளை வெளியிட்டபோது இஎம்எஸ் அதன் ஆசிரியராக இருந்தார். அந்த நேரத்தில் கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி, கம்யூனிஸ்ட்கள் மற்றும் சிஎஸ்பி உறுப்பினர்களின் கட்டுப்பாட்டில் இருந்தது. இம்முயற்சியில் ‘தேசிய முன்னணி’ மற்றும் ‘காங்கிரஸ் சோஷலிஸ்ட்’ இதழ்கள் பெரிதும் உதவிகரமாக இருந்தன. 

மலபார் விவசாயிகள் இயக்கம் 

மலபார் அக்காலத்தில் மெட்ராஸ் ராஜதானியின் ஒருபகுதியாக இருந்தது. மெட்ராஸ் சட்டமன்றத்திற்கு இஎம்எஸ் வேட்புமனு 1937 மற்றும் 1938ல் இருமுறை நிராகரிக்கப்பட்டாலும், 1939 பிப்ரவரியில் இஎம்எஸ் போட்டியின்றி சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத்தின் குத்தகை விசாரணைக் குழு உறுப்பினரானார். குழுவின் மாற்றுக் கருத்துடைய உறுப்பினர்கள் மலபார் குத்தகைச் சட்டத்தில் தீவிரமான திருத்தங்களை ஆதரித்து மோசமான நிலப்பிரபுத்துவ ‘ஜென்மி’ முறையை ரத்து செய்தனர். (ஜென்மி என்பது முன்பு கேரளாவில் நிலவிய நிலப்பிரபுத்துவ மேட்டுக்குடி நம்பூதிரி மற்றும் நாயர் சமூகத்தினரைக் குறித்தது. அவர்களும் கோயில் நிலங்களை அரசர்களும் 20ஆயிரம் ஏக்கர் வரை வைத்திருக்க அனுமதிக்கப்பட்டனர்). அவருக்கு இந்த அனுபவம் மலபார் மற்றும் பிறபகுதிகளில் நிலப்பிரபுத்துவ கொச்சின் மற்றும் திருவிதாங்கூர் மாகாணங்களில் நிலவிய விவசாயம் சார்ந்த உறவுகளை ஆய்வுசெய்வதற்கு உதவியாக இருந்தது. தொடக்கத்தில் இந்த இயக்கங்களை இஎம்எஸ் ‘சோஷலிச பர்தோலி’ என்றழைத்தார். (குஜராத் மாநில சூரத் பகுதியின் ‘பர்தோலி’யில் ஆங்கில அரசின் அநியாய நிலவரியை எதிர்த்து சர்தார் பட்டேல் தலைமையில் நடந்த நிலவரி செலுத்த மறுத்த விவசாயிகளின் சத்தியாகிரகம், ஜூன் 1928).

இடதுசாரி காங்கிரஸ்காரர்கள் மலபாரிலிருந்து திருவிதாங்கூர் வரை நடத்திய மாபெரும் விவசாயிகள் பேரணியில் (கிசான் ஜதா) இஎம்எஸ் தீவிரமாகச் செயல்பட்டார். 

1940ல் சிஎஸ்பியின் செயற்பாட்டாளர்கள் நடத்திய மாநாட்டில் சிஎஸ்பி கிளைஅமைப்பை முழுமையாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைப்பது என்று முடிவெடுத்தனர். இக்கால கட்டத்தில்தான் இஎம்எஸ் ‘கேரள விவசாய இயக்கத்தின் சுருக்கமான வரலாறு’ என்பதை எழுதினார்.  1942 மத்தியில் கட்சி மீதான தடை விலக்கிக் கொள்ளப்பட்டது. 1943 மார்ச்சில்    கையூர் கிளர்ச்சி நிகழ்வில் (நிலப்பிரபுக்களை எதிர்த்து விவசாயிகள் நடத்திய போராட்டம், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும் மதகில் அப்பு, கோயித்தாரில் சிறுகண்டன், பொடுரா குஞ்ஜாம்பு நாயர் மற்றும் பள்ளிகல் அபுபக்கர் ஆகிய) நான்கு விவசாயப் போராளிகள் 1943 மார்ச் 29ல் தூக்கிலிடப்பட்டனர்.

1943 பம்பாயில் நடைபெற்ற முதலாவது கட்சி காங்கிரஸில் இஎம்எஸ் மத்திய குழுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அம்மை நோயால் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாக இருந்த இஎம்எஸ் 1947 ஜனவரியில் கைதுசெய்யப்பட்டு 7 9மாதங்கள் வேலூர் சிறையில்  அடைக்கப்பட்டார்.

 ‘பிடிஆர் கால’மும் இஎம்எஸ்சும்

1946 – 51 காலகட்டத்தில் கட்சியின் எதிர்காலம் ஊசலாடிக்கொண்டிருந்தபோது தனது நிலையைச் சுருக்கமாக விவரித்த இஎம்எஸ் இவ்வாறு கூறினார்: ‘‘1946க்கு முன் நான் ஜோஷி பாதையைத்தான் பின்பற்றினேன். 1946ல் ‘புன்னப்புரா வயலூர்’ மற்றும் தெலுங்கானா (ஆயுதப் புரட்சி) நிகழ்வுகளுக்கு வித்திட்ட ‘கூடுதல் தீவிரவாதத்தை நோக்கிய மாற்ற’த்தை முழு மனதோடு ஆதரித்தேன். கல்கத்தாவில் (1948) ஏனைய தோழர்களுடன் மாற்றத்தை ஆதரித்தேன்.”  பின்னர் மீண்டும் அவர் ‘ஆந்திரா பாதை’யை ஆதரிக்க மாறினார். இதனால்தான் ‘ரணதிவே அல்லது ராஜேஸ்வர ராவ் பொலிட் பீரோ’விலோ தான் சேர்த்துக் கொள்ளப்படவில்லை என உணர்ந்ததாக அவர் கூறினார். ‘பிடிஆர் பாதை’யை ஆதரிப்பதா இல்லையா என்பதைக் குறித்துக் கறாரான நிலைபாட்டை  அவர் எடுக்கவில்லை. 

நான்கு உறுப்பினர் சிபிஐ குழு 1950ல் மாஸ்கோ சென்றபோது கட்சி மையத்தின் பொறுப்பு இஎம்எஸ்-யிடம் அளிக்கப்பட்டது. விரைவில் அஜாய் கோஷ் கட்சியின் பொதுச் செயலாளரானார். 1951ல் இஎம்எஸ் கட்சி பொலிட்பீரோவில் இணைத்துக் கொள்ளப்பட்டார். 1953 -54 மதுரை மாநாடு மற்றும் 1956 பாலகாடு மாநாட்டில் அவர் பொலிட்பீரோவிலும் 1958 அமிர்தசரஸ் மற்றும் 1961 விஜயவாடா மாநாட்டில் மத்திய நிர்வாகக் குழுவிலும் இடம் பெற்றார். 

கட்சிப் பத்திரிக்கையான ‘நியூ ஏஜ்’ இதழின் ஆசிரியராகச் சிலகாலம் பொறுப்பேற்றார். 

முதலாவது கம்யூனிஸ்ட் முதலமைச்சர், 1957 

கேரளா மாநிலம் அமைக்கப்பட்டதும் 1957ல் நடைபெற்ற முதலாவது சட்டமன்ற தேர்தலில் கேரள மக்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு அறுதிப் பெரும்பான்மை அளித்தது நாட்டில் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வெற்றி, அதுவரை கம்யூனிஸ்ட்கள் ‘முதலாளித்துவ’ தேர்தல் முறை மூலம் ஆட்சி அதிகாரத்திற்கு வரமுடியாது என்று கருதிய அவர்களின் முந்தைய கொள்கை புரிதலின் வறட்டுத்தன்மையை மாற்றிக் கொள்ள நிர்பந்தித்தது. (ஆனால் மார்க்சும் ஏங்கெல்சும் ஜெர்மன் நாட்டின் தொழிலாளர் கட்சி (SDP) தேர்தல்களில் பெற்ற வெற்றிகளைக் குறித்தும், பாராளுமன்றத் தேர்தல்களைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டிய தேவையையும் வலியுறுத்தி உள்ளனர். ஆயுதப் புரட்சி ஒன்றே மாற்றத்திற்கான வழி என அவர்கள் வரையறுக்கவில்லை என்பதை அவர்களது எழுத்துகள் உணர்த்துகின்றன. – அனில் ரஜீம்வாலே எழுதிய ஏங்கல்ஸ் 200வது பிறந்தநாள் சிறப்புக் கட்டுரையை அடிப்படையாகக் கொண்டு மொழிபெயர்ப்பாளர் இணைத்தது). நன்கு பரிசீலித்து இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி இஎம்எஸ் அவர்களை முதலமைச்சராகத் தேர்ந்தெடுத்தது.

நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் கல்வி மசோதாகள் அறிமுகப்படுத்தப்பட்டன. 1959ல் இஎம்எஸ் அமைச்சரவை ஒன்றிய அரசால் கலைக்கப்பட்டது.

1967ல் மறுமுறை மீண்டும் இஎம்எஸ் முதலமைச்சராகி ஏழு கட்சிகள் அடங்கிய கூட்டணி ஆட்சிக்குத் தலைமை வகித்தார். 1969 வரை முதலமைச்சராக நீடித்தார். 1969ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சி அச்சுதமேனனன், கட்சி பிளவுக்குப் பின் சிபிஐயைச் சேர்ந்த முதலாமவராக,  முதலமைச்சரானார். (இஎம்எஸ்-சின் இருமுறை முதலமைச்சர் வரலாறு, அதன் சாதனைகள் தனிக் கட்டுரையாக எழுதப்பட வேண்டியது)

அமிர்தசரஸ் கட்சி காங்கிரஸ், 1958

சிபிஐ தனது அமைப்புவிதிகளில், திட்டங்கள் சார்ந்த கோட்பாடுகள் மற்றும் அமைப்பு நிலை கட்டமைப்புகளில் முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வந்தது. ‘பாட்டாளிகளின் சர்வாதிகாரம்’ என்ற கோட்பாட்டைக் கைவிட்டு, சோஷலிச இந்தியாவில் எதிர் கட்சிகள் என்ற கோட்பாட்டை முன்னிறுத்தியது; அமைப்புநிலையில் இரண்டடுக்கு நிர்வாக முறையை மூன்று அடுக்காக மாற்றியது. கட்சிக் காங்கிரஸ் முடிந்த உடன் நியூஏஜ் இதழில் இஎம்எஸ் எழுதிய முக்கியமான கட்டுரை ஒன்றில் மாநாட்டின் முடிவுகளைப் புகழ்ந்து வரவேற்றதுடன் நில்லாமல், இம்முடிவுகள் மூலம் சிபிஐ மகாத்மா காந்தியின் பாரம்பரியத்தை முன்னெடுத்துச் செல்கிறது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

பொதுச் செயலாளராக

1962 ஜனவரியில் அஜாய் கோஷ் மரணமடைந்ததும் இஎம்எஸ் நம்பூதிரிபாட் சிபிஐ கட்சி பொதுச்செயலாளராகவும் எஸ் ஏ டாங்கே கட்சியின் தலைவராகவும் ஆனார்கள்

சிபிஎம் கட்சியில் இணைதல்

1964ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு இஎம்எஸ் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்ஸிஸ்ட்) CPI-M கட்சியில் சேர்ந்தார்; 1964 ஏப்ரலில் நடைபெற்ற தேசியக் குழு கூட்டத்திலிருந்து வெளிநடப்பு செய்த 32 தோழர்களில் இஎம்எஸ்-சும் ஒருவர். தோழர் பி சுந்தரையா ராஜினாமா செய்த பிறகு 1977ல் இஎம்எஸ் சிபிஐ-எம் கட்சியின் பொதுச் செயலாளரானார். 1992 வரை அந்தப் பொறுப்பில் அவர் நீடித்தார். 

தோழர் இஎம்எஸ் நம்பூதிரிபாட் தமது 89வது வயதில் 1998 மார்ச் 19ம் நாள் மறைந்தார். 

எழுத்தாக்கங்கள்

விவசாயிகள் பிரச்சனைகள் உட்பட பல தலைப்புகளில் இஎம்எஸ் விரிவாக எழுதியுள்ளார். ‘ஒரு இந்தியக் கம்யூனிஸ்ட்டின் நினைவலைகள்’ என்ற தலைப்பில் தனது வாழ்க்கை சுயசரிதையை எழுதியுள்ளார். இந்திய விடுதலைப் போராட்டம், மகாத்மா காந்தியும் அவரது ‘இசமு’ம் போன்ற நூல்களையும் பொருளாதாரப் பிரச்சனைகள் மற்றும் பல பொருள்சார்ந்த படைப்புகள் மற்றும் கட்டுரைகளை ஆங்கிலம் மற்றும் மலையாள மொழிகளில் எழுதியுள்ளார். அவருடைய எழுத்துகளின் தொகுப்பு நூல் ஒன்று மலையாளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. கலாச்சார பண்பாட்டுத் துறையிலும் அவர் தீவிரமாகச் செயலாற்றினார். 

நேருவுக்குப் பிறகு யார் என்ற கேள்விக்கு விடையாக ஒரு சொல்லாடல் நமது நாட்டில் இருந்தது. அது, ‘நேருக்கே பாத், நம்பூதிரிபாட் ’ (நேருவுக்குப் பிறகு நம்பூதிரிபாட்) என்ற புகழ்பெற்ற முழக்கமாக விளங்கியதென்றால், அத்தகைய சிறப்புக்குரியவர் அவர். வாழ்க இஎம்எஸ்!

--தமிழில் : நீலகண்டன், 

என்எப்டிஇ, கடலூர்


Monday 7 June 2021

கீதா முகர்ஜி : பெண்கள் சக்தியின் சாரம், உருவகம்

 சில சித்திரத் சிதறல்கள் -35

கீதா முகர்ஜி : பெண்கள் சக்தியின் சாரம், உருவகம்

-                                                                     ---அனில் ரஜீம்வாலே

                                                                            --நியூஏஜ் (மார்ச் 7 --13)


கீதா முகர்ஜி, அனல் கக்கும் வார்த்தைகளோடு போர்க்குணமிக்கப் பாராளுமன்ற உறுப்பினர் என நன்கு அறியப்பட்ட கம்யூனிஸ்ட் தலைவர், ஏழு முறை நாடாளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். மேற்கு வங்கத்திலும் இந்தியாவிலும் அகில இந்திய மாணவர் பெருமன்றம் (ஏஐஎஸ்எஃப்) அமைப்பையும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியையும் கட்டி வளர்த்தவர்.  

தற்போது பங்களாதேசத்தில் உள்ள ஜெஸ்ஸோர் என்னுமிடத்தில் 1924 ஜனவரி 8ம் நாள் ஒரு நடுத்தர வர்க்கக் குடும்பத்தில் கீதா ராய் சொளத்திரியாகப் பிறந்தார். தந்தை ராய் பகதூர். ஜெஸ்ஸோரிலேயே பள்ளிக் கல்வியை முடித்து கல்கத்தா பல்கலைக்கழகத்தின் அஷுதோஷ் முகர்ஜி கல்லூரியில் வங்க இலக்கியத்தில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றார். மாணவர் தலைவரும் சிபிஐ உறுப்பினருமான அவருடைய மூத்த அண்ணன் சங்கர் ராய்சௌத்திரியின் ஆழமான செல்வாக்கிற்கு ஆட்பட்டார். 

மாணவர் இயக்கத்தில்

கீதா படிக்கும்போது 1939ல் ‘பெங்கால் பிரதேச மாணவர் சம்மேளன’மான BPSFல் இணைந்து மாணவர் இயக்கத்தில் முக்கியமான தலைவரானார். அப்போது BPSF சம்மேளனம் அந்தமான் கைதிகளை விடுவித்து அவர்களைத் தாயகம் திருப்ப அனுப்ப வேண்டும் எனக் கோரி போராட்டத்தை நடத்தியது. 1945 ஜூலை 29ல் நடைபெற்ற ஒரு பேரணியில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான அஞ்சல் மற்றும் பிற பகுதித் தொழிலாளர்களுக்கு முன்பு, ஒரே மாணவப் பெண் பிரதிநிதியாக உரையாற்றினார்.  

சத்ரி சங் (Chhatri Sangh) அமைப்பாளர்

ஏஐஎஸ்எஃப் ஆதரவின் கீழ் இயங்கிய கேர்ள் ஸ்டூடெண்ட் அஸோசியேஷனை (GSA) வங்காளம் மற்றும் இந்திய மட்டத்தில் அமைக்கக் காரணமாக இருந்தவர்களில் கீதாவும் ஒருவர். அந்த அமைப்பு வங்கத்தில் சத்ரி சங் (மாணவர் சங்கம்) என்று அழைக்கப்பட்டது.  

1938ல் அந்தமான் கைதிகள் விடுதலைக்காக மாணவர் பெருமன்றம் நடத்திய நாடு தழுவிய இயக்கத்தில் எண்ணற்ற பெண் மாணவர்கள் பங்கேற்றனர். அதன் தொடர்ச்சியாகப் பின் மாணவர் பெருமன்ற அமைப்புக்குள் பெண் மாணவர்கள் குழு (சத்ரி சங்) அமைக்கப்பட்டது. 

டெல்லியில் 1940 ஜனவரி 1 மற்றும் 2 தேதிகளில் நடைபெற்ற ஏஐஎஸ்எஃப்—ன் 5வது மாநாட்டில் நடந்த முக்கியமான நிகழ்ச்சி, அந்த அரங்கிலேயே பெண் மாணவர்களின் முதலாவது அகில இந்திய மாநாடும் நடைபெற்றதாகும். நாடு முழுவதிலுமிருந்து மாநாட்டில் எண்ணற்ற பெண் மாணவர்கள் பங்கேற்றனர். அதன் பின் நடந்த மாணவர் பெருமன்ற மாநாடுகளில் அதுவும் ஒரு நிரந்தர அம்சமாக இடம்பெறலாயிற்று. 

வங்கத்தில் BPSFன் கீழ் நடந்த பெண் மாணவர்கள் குழுவின் முக்கிய தலைவர் கீதா ராய்சௌத்திரி, அதன் முதல் பொதுச் செயலாளர் ஆனார். பலபல காரணங்களால் அந்தக் குழு சுதந்திரமான தனி அமைப்பாக வடிவெடுக்கவில்லை (என்று 1988 நவம்பர் 20ல் அளித்த பேட்டி ஒன்றில் அவர் கூறினார்.) 

  கேர்ள் ஸ்டூடெண்ட் அஸோசியேஷன் விரைவாக டெல்லி, பம்பாய், பாட்னா, பஞ்சாப் முதலான இடங்களுக்கும் பரவியது. 1940ல் கீதா இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார்.  

1940 லக்னோ நகர் ‘பரதாரி’யில் நடைபெற்ற அகில இந்தியப் பெண் மாணவர்களின் முதலாவது காங்கிரஸை (மாநாடு) கவிக்குயில் சரோஜினி நாயுடு துவக்கி வைத்தார். அம்மாநாட்டின் தலைவர் ரேணு சவுத்திரி. மாநாட்டின் பெருங் கூட்டத்தினரிடையே அவர் பேசும்போது தனது ஐரோப்பிய அனுபவங்களைத் தொடர்புபடுத்தியும், ஸ்பானிஷ் உள்நாட்டு யுத்தம் பற்றியும் பேசினார். அந்த மாநாட்டின் முக்கியமான அமைப்பாளர்கள் கீதா, அலோகா மஜூம்தார், நர்கிஸ் பாட்லிவாலா, பெரின், சாந்தா காந்தி, கனக் தாஸ்குப்தா, கல்யாணி முகர்ஜி ஆகியோர். அவர்களில் கீதாதான் மிகவும் இளையவர். கல்யாணி முகர்ஜி (பின்னர் கல்யாணி குமாரமங்களமானவர்) புகழ்பெற்ற மாணவர் தலைவரான விஸ்வநாத் முகர்ஜியோடு உடன்பிறந்தவரின் மகளாவார். விஸ்வநாத் முகர்ஜியும் கீதாவும் 1942ல் திருமணம் புரிந்தனர். அன்றைய பெண் மாணவர்கள் பிற்காலத்தில் பெண்கள் அமைப்பைக் கட்டி உருவாக்குவதில் காரண கர்த்தாக்களாக இருந்தனர். 

கைதான தேசியத் தலைவர்களை விடுவிக்கக் கோரி GSA அமைப்பில் இருந்த பெண் மாணவர்கள் டெல்லியில் ஏஐஎஸ்எஃப் பதாகையின்கீழ் மிகப் பெரிய ஆர்ப்பாட்டம் நடத்தியபோது அவர்கள் கண்ணீர் புகை குண்டுகளின் தாக்குதலைச் சந்திக்க நேர்ந்தது. சத்ரி சங் மாணவர்கள் கல்கத்தாவில் பெத்யூன் கல்லூரிக்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

சத்ரி சங் கல்கத்தாவிற்கு வெளியே பாரிசால், சிட்டகாங், பங்குரா போன்ற இடங்களிலும் கிளை பரப்பியது. அவர்களை ஒன்று திரட்டுவதில் மற்றவர்களோடு சேர்த்து கீதா முக்கியமான பங்காற்றினார். இரண்டாவது உலகப் போரில் ஜப்பான் படைகள் குண்டு பொழிந்த காலத்தில் சத்ரி சங் மிகத் தீவிரமாகத் தொண்டாற்றியது. மகிளா ஆத்ம ரக்க்ஷா சமிதி (MARS) அமைப்பதிலும் உதவியது. 

1941 –42ல் மாணவர் பெருமன்றத்தின் மாநாடு நடைபெற்றபோது, GSAவின் உறுப்பினர் எண்ணிக்கை 50 ஆயிரத்தைக் கடந்து வளர்ச்சி பெற்றிருந்தது; அங்கேயே GSAவின் இரண்டாவது மாநாடும் நடத்தப்பட்டது. 1946 ஜூலையில் நடைபெற்ற தபால் தந்தித் தொழிலாளர் வேலைநிறுத்தத்தில் கீதா முகர்ஜி முக்கியமான பங்காற்றினார். 1947 முதல் 1951 வரை அவர், ‘பெங்கால் பிரதேச மாணவர் சம்மேளன’மான BPSF ன் செயலாளராக இருந்தார். 

சுதந்திரத்திற்குப் பின்

கட்சியைப் பெரிதும் பாதித்த பிடிஆர் பாதையை அடுத்து 1948ல் சிபிஐ தடை செய்யப்பட்டது. எந்த விசாரணையும் இல்லாமல் கீதா முகர்ஜியைக் கைது செய்து பிரிசிடென்சி சிறையில் ஆறு மாதம் அடைத்தனர். பிறகு அவர் தொழிற்சங்கம், விவசாயிகள் மற்றும் கட்சி முன்அரங்குகளில் பணியாற்றினார். 1964 சிபிஐ பிளவுக்குப் பின் அவர் கட்சியிலே நீடித்து அதனைக் கட்டி உருவாக்கக் கடுமையாக உழைத்தார். 

1967 மற்றும் 1972ல் மிதுனாப்பூர் மாவட்டத்தில் தம்லுக் தொகுதியிலிருந்து மேற்கு வங்கச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  1978ல் பன்ஸ்குரா தொகுதியிலிருந்து அவர் பாராளுமன்ற மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழுவிற்கு 1978லும், தேசியச் செயற்குழுவிற்கு 1981லும் கீதா முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். 1998ல் சிபிஐ மத்திய செயலகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டதன் மூலம் மத்திய செயலகத்தின் முதலாவது பெண் உறுப்பினர் என்ற பெருமைக்கு உரியவரானார். 

பெண்கள் இயக்கத்தில்

இந்திய மாதர் தேசிய சம்மேளனம் NFIWன் பெரும் தலைவர்களில் கீதா முகர்ஜியும் ஒருவர். அதன் அமைப்பு மாநாட்டிலேயே 1954ல் அவர் செயற்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதற்கு முன்பே அவர் மகிளா ஆத்ம ரக்க்ஷா சமிதியின் தீவிரமாகச் செயலாற்றிய தலைவர்களில் ஒருவர். அதற்குப் பின் மாதர் சம்மேளனத்தின் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் அப்பொறுப்பில் 2000ல் தனது வாழ்நாள்வரை நீடித்தார்.

கீதா முகர்ஜி போராடிய பெண்கள் பிரச்சனைகள்

வரதட்சிணை ஒழிப்புச் சட்டம் 1961ன் அமலாக்கம் பற்றி ஆராய 1980ல் பாராளுமன்ற கூட்டுக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் கீதா முகர்ஜி அம்மசோதா குறித்து விரிவாக விவாதித்தார். 1980 டிசம்பர் 19 பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் வரதட்சிணை கொடுப்பதோ அல்லது வரதட்சிணை வாங்குவதோ சட்டப்படி நடவடிக்கைக்குரிய ஒரு குற்றமாக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தினார். 1981ம் வருடத்தை ‘வரதட்சிணை எதிர்ப்பு ஆண்டு’ எனப் பிரகடனப்படுத்த அவர் வற்புறுத்தினார். அதற்காகத் தேசிய அளவில் பிரச்சார இயக்கம் மேற்கொள்ள நிதி ஒதுக்கி, மத்தியிலிருந்து கிராம மட்டங்கள் வரை பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றார். 

1982 ஜூலை 15ல் பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் அப்பட்டமான வரதட்சிணை தொடர்பான குற்றங்களின் எதார்த்த நிலைமைகளை அம்பலப்படுத்தினார். வரதட்சிணை கொடுமையால் ஏற்பட்ட பரவலான சாவுகளை அவர் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தார்.    

குறைந்த பட்ச ஊதியச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்ள 1978ல் பார்வதி கிருஷ்ணன் பாராளுமன்றத்தில் ஒரு மசோதா தாக்கல் செய்தார். அதே போன்ற மசோதாவை 1980ல் கீதா முகர்ஜி அறிமுகம் செய்தார். 1980ல் மேலும் அவர் வேலையில்லா நிவாரண உதவி வழங்கவும், வயது வரம்பு தவிர்த்தல், பணிகளுக்கு மனு செய்வதற்கான கட்டணத்திலிருந்து விலக்களித்தல் போன்ற சலுகைகளுக்காகவும் மற்றொரு மசோதா கொண்டு வந்தார். வேலை வாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் தேவையை அவர் வலியுறுத்தினார். மத்திய அரசுப் பணிகளில் பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிப்பதற்கான மசோதாவையும் 1983ல் அவர் தாக்கல் செய்தார். அப்போது பெண்கள் பெருமளவில் வேலையைவிட்டு நிறுத்தப்படுவதைச் சுட்டிக் காட்டினார். 

பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதன் பொருட்டு பாராளுமன்றம் மற்றும் மாநிலச் சட்ட மன்றங்களில் பெண்களுக்கான இட ஒதுக்கீடு பெறுவதற்காக அவர் நடத்திய தொடர்ச்சியான தளர்வற்றப் போராட்டங்களுக்காகவே கீதா முகர்ஜியை வரலாறு என்றும் நினைவுறுத்தும். அதற்கு ஆதரவாக நாடு முழுவதும் தொடர்ச்சியாக அவர் பிரச்சார இணக்கங்களை நடத்தினார். பெண்களுக்கு இடஒதுக்கீடு அளிக்கும் மசோதாவைப் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்வதற்காக அம்மசோதாவை உரிய முறையில் தயாரித்து இறுதி செய்வதற்கான பாராளுமன்றத் தேர்வுக் குழு தலைவராக அவர் இருந்தார். 2010 மார்ச் 9ம் நாள் – சர்வதேச மகளிர் தினத்திற்கு அடுத்த நாள்—அம்மசோதாவிற்கு மாநிலங்களவை ஒப்புதல் அளித்து நிறைவேற்றியது, ஆனால் அந்த மசோதா சட்டமாவதை நாடுமன்ற மக்களவை தடுத்து நிறுத்தியது. 

“பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீட்டிற்கு ஆதரவாக ஒன்றுபடுக” (1997) என்ற தலைப்பில் கீதா முகர்ஜி ஒரு துண்டுப் பிரசுரத்தை இந்திய தேசிய மாதர் சம்மேளத்திற்காக அவர் வெளியிட்டார். 

‘தடுப்புக் காவலில் பாலியல் வன்புணர்வு’ என்பதற்கான வரைவிலக்கணத்தைச் சட்டத்தில் மேலும் விரிவாக்க வேண்டும் என அவர் 1983ல் கோரிக்கை விடுத்தார். 1960கள் 1970களில் சம்யுக்த மகிளா சமிதி (ஒன்றுபட்ட பெண்கள் கூட்டமைப்பு) உணவு தானிய வர்த்தகத்தை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும் கொள்ளை லாபம் அடிப்போர் மற்றும் பதுக்கல் பேர்வழிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரி தொடர்ச்சியான இயக்கத்தை நடத்தியது. 1967 ஜூலை ஆகஸ்ட் மாதங்களில் இப்பிரச்சனைகள் மீது சமிதி ஆர்ப்பாட்டங்களை நடத்தியது. 

ரேணு சக்கரவர்த்தி, கீதா முகர்ஜி மற்றும் பிற தலைவர்கள் வழிகாட்ட பல்லாயிரம் பெண்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

1981 மார்ச் 9ல் பாராளுமன்றம் நோக்கிப் பெண்கள் நடத்திய அகில இந்தியப் பேரணியில் கீதாமுகர்ஜி உரையாற்றினார். பஞ்சாபில் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட பல பகுதிகளுக்கும் வேன்களில் பிற பெண் தலைவர்களுடன் 1986 மே மாதத்தில் அவர் பயணம் மேற்கொண்டார். அவர்கள் 1989ல் மீண்டும் பஞ்சாப் மாநிலத்திற்கு விஜயம் செய்தனர். 

1970 மார்ச் 7, 8 தேதிகளில் கல்கத்தாவில் பச்சிம் பங்கா மகிளா சமிதியின்  (மேற்கு வங்க பெண்கள் கூட்டமைப்பு) 13வது மாநாட்டில் கூட்டமைப்பின் ஒற்றுமைக்காக ஒரு தீர்மானத்தை அவர் தாக்கல் செய்தார். பெண்கள் அமைப்பில் சீர்குலைவு இயக்கத்தை வலிமை இழக்கச் செய்துவிடும் என அவர் எச்சரித்தார். “எனவே இதற்கு முன்புபோல நாம் ஒற்றுமையாகப் பெண்கள் உரிமைகளுக்காகவும், நமது எதிரிகளை-- ஏகாதிபத்தியவாதிகள் மற்றும் ஜாட்தார் (பணக்கார மேல்தட்டு விவசாயிகள்) போன்றோரை-- எதிர்த்து ஒன்றிணைந்து போராடவும் வேண்டும்” என அவர் மேலும் வலியுறுத்தினார். ஆனால் பிரிந்து செல்வதாக முடிவெடுத்துவிட்ட குழு அவருடைய அறிவுரையைக் கேட்கத் தயாராக இல்லை; NFIW மாதர் சம்மேளனம் முறையாகப் பிரிந்தது, பச்சிம் பங்கா கணதந்திரிக் மகிளா சமிதி (PBGMS, மேற்கு வங்க குடியரசு பெண்கள் கூட்டமைப்பு) எனத் தனியாக அமைக்கப்பட்டது. மற்றொரு குழுவும் 1970 சேலத்தில் நடைபெற்ற NFIW மாதர் சம்மேளன 7வது மாநாட்டில் கலந்து கொள்ளவில்லை. 

மேற்கு வங்கப் பெண்கள் சமிதியின் பத்திரிக்கையான ‘கரே பாய்ரே’ (வீடும் உலகமும்) இதழின் துணை ஆசிரியராகக் கீதா முகர்ஜி பொறுப்பு வகித்தார். (முதன் முதல் இரவீந்திரநாத் தாகூர் ‘வீடும் உலகமும்’ என்ற பெயரில் ஒரு நாவலை எழுதினார்; பின் அந்த நாவலை அடிப்படையாகக் கொண்டு அதே பெயரில் சத்யஜித் ரே திரைப்படமாகவும் தயாரித்தார். பெண்களுக்கு அதிகாரமளித்தல் அதன் மையமான கருப் பொருள் –இணையத்திலிருந்து திரட்டியது). 1986ல் கிராமப்புறத் தொழிலாளர் குறித்து ஆராய அமைக்கப்பட்ட தேசிய ஆணையத்திலும், 1988ல் பெண்களுக்கான தேசிய ஆணையத்திலும் அவர் உறுப்பினராக இடம் பெற்றார். பத்திரிக்கை கவுன்சிலிலும் அவர் உறுப்பினராக இருந்தார்.

எழுத்தாளராக

அவர் எழுதிய பல புத்தகங்களில் குழந்தைகளுக்காக எழுதியவையும் அடங்கும். அவர் எழுதிய புத்தகங்களில் சில: பாரதர் உபகதா (இந்திய நாட்டுப்புறக் கதைகள்), சோட்டோதர் இரவீந்தரநாத் (குழந்தைகளுக்காக தாகூர்) மற்றும் ஹி அஜித் கதா கோ (வங்கச் சிறுகதைகள் தொகுப்பு). மேலும், கிழக்கு ஜெர்மானிய எழுத்தாளரான ப்ரூனோ அபிட்ஸ் (Bruno Apitz) எழுதிய ‘ஓநாய்களுக்கு மத்தியில் நிர்வாணமாய்’ (‘Naked among Wolves’) என்ற செவ்வியல் நாவலை வங்கமொழியில் மொழிபெயர்த்தார். அந்த நாவல் ஹிட்லரின் புச்சன்வால்டு வதை முகாமில் (Buchenwald Concentration Camp of Hitler) நிகழ்ந்த உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டது. ப்ரூனோவே அந்த வதைமுகாமிலிருந்து தப்பி உயிர் பிழைத்தவரே. காஜி நஸ்ருல் இஸ்லாம் மற்றும் இரவீந்திரநாத் எழுதியது உட்பட கவிதைகளைப் படித்து ரசிப்பதிலும், பாடுவதிலும் கீதா முகர்ஜிக்கு விருப்பம் அதிகம்.

மேனாள் பாரதக் குடியரசுத் தலைவர் மேதகு கே ஆர் நாராயணன் அவர்கள் கீதா முகர்ஜியைப் ‘பரிவும் அக்கறையும் நிரம்பிய அரசியல் செயற்பாட்டாளர்’ எனப் புகழ்ந்துரைப்பார். 

கீதா முகர்ஜி தமது 76வது வயதில் 2000ம் ஆண்டு மார்ச் 4ம் நாள் பலமான மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார். அன்றைய பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாய் தனது இரங்கல் செய்தியில், “திருமதி கீதா முகர்ஜி உறுதிப்பாடு மற்றும் அர்ப்பணிப்பின் உருவகமாகத் திகழ்ந்தவர். பெண்கள் சக்தியின் ஒளிவீசும் உதாரணம் அவர். அவருடைய வாழ்க்கை வரலாறு இனிவரும் தலைமுறையினருக்கு, குறிப்பாக இளம் பெண்களுக்கு, உற்சாகம் ஊட்டும் ஆதர்சமாக நீடிக்கும் என்பது திண்ணம்” எனப் புகழ்மாலை சூட்டினார்.

வாழ்க தோழர் கீதா முகர்ஜியின் புகழ்! அவர் வழியில் சாதிக்க வேண்டிய பணிகள் இன்னும் ஏராளம்!

-                                                                         --தமிழில் : நீலகண்டன்,

                                                                                  என்எப்டிஇ, கடலூர்

Thursday 3 June 2021

BV காக்கிலாயா : மக்கள் பெரிதும் அன்பு காட்டிய தலைவர்

 நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து : 

சில சித்திரத் சிதறல்கள் -34   

  BV காக்கிலாயா

                        மக்கள் பெரிதும் அன்பு காட்டிய தலைவர்

--அனில் ரஜீம்வாலே

--நியூஏஜ் (பிப்.28 –மார்ச் 6)

கர்நாடகா மற்றும் அதற்கு வெளியே மிகவும் புகழ் வாய்ந்த தலைவர்களில் ஒருவரான பிவின்ஜி விஷ்ணு காக்கிலாயா, வடக்குக் கேரளா, காசர்கோடு தாலுக்கா சேர்கலா அருகே பயஸ்வினி (சந்திரகிரி) ஆற்றங்கரையில் உள்ள பிவின்ஜி என்ற இடத்தில் 1919 ஏப்ரல் 11ல் பிறந்தார். அந்நதி மலையாளம் மற்றும் துளு பேசும் மக்கள் இடையே பாரம்பரியமாக எல்லை வகுப்பதாகச் சொல்லப்படுகிறது. ஆனால் அப்பகுதிகள் கன்னடா பேசும் ஆட்சியாளர்கள் கீழ் இருந்தன. பணக்கார நிலவுடைமையாளரான விஷ்ணு காக்கிலாயா மற்றும் கங்கம்மாவின் கடைசி மகனாகப் பிறந்த பிவி காக்கிலாயாவுக்கும் தந்தையின் பெயரே வழங்கப்பட்டது.  

‘காக்கிலாயா’ என்ற பெயர் காசர்கோடு தாலுக்கா மூளியார் கிராமத்தில் உள்ள காக்கோல் (Kakkol) என்ற இடத்திலிருந்து வந்ததாக எண்ணப்படுகிறது. காக்கிலாயாகள் ‘கும்பளே சீம்’ (‘Kumbale Seeme’) ராஜாக்களுக்கு ஆலோசகர்களாக இருந்தவர்கள்.

இளமை வாழ்வும் கல்வியும் 

விஷ்ணு காக்கிலாயா மூன்று வயதாக இருந்தபோது தந்தையை இழந்து, தாயின் அரவணைப்பிலும் மூத்த அண்ணன் சுப்பராயா காக்கிலாயா ஆதரவிலும் வளர்ந்தார். பள்ளிக் கல்வியைக்(SSLC) காசர்கோட்டிலும், இன்டர் (அரசியல்) கல்வியை 1937 மங்களூர் அலியோசியஸ் கல்லூரியிலும்; பின் அங்கேயே 1942 வரை தங்கி, இரசாயனப் பாடத்தில் இளங்கலை பட்டத்தையும் பெற்றார். கர்நாடகாவில் தங்கியிருந்தது முதலாக நாட்டின் எல்லா பகுதிகளிலும் சுதந்திரப் போராட்ட உணர்வு கொழுந்துவிட்டு எரிய, காக்கிலாயாவும் அதன்பால் ஈர்க்கப்பட்டார். மாணவர் போராட்டத்தில் ஈடுபட்டபோது கம்யூனிஸ்ட் இயக்கத்தோடு தொடர்பு ஏற்பட்டது. 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் ஒரு மாணவனாகக் கலந்து கொண்டு அவர் கைதானார். ஏஐஎஸ்எஃப் மாணவர் அமைப்பில் தீவிரமாகச் செயல்பட்ட காக்கிலாயா அதன் மாவட்டச் செயலாளராக இருந்தார். 1946ல் மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 

இதன் மத்தியில் யூசுப் மெஹ்ராலே, அசோக் மேதா, சோலி பாட்லிவாலா போன்றோரால் மங்களூரில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி (CSP) அமைக்கப்பட்டது. அந்தக் கட்சி கமலாதேவி சட்டோபாத்தியாயா செல்வாக்கின் கீழ் இருந்தது. காக்கிலாயாவும் அதில் சேர்ந்தார். மங்களூர் பகுதியைச் சேர்ந்த எஸ்வி காட்டே அங்கேயே தங்கி பணியாற்றியதால் காக்கிலாயா உள்ளிட்ட மாணவர்கள் மீது பெரும் செல்வாக்கு செலுத்தினார். மாணவச் செயற்பாட்டாளர்களும் பிறரும் தொழிலாளர் இயக்கங்களில் இணைய, சக்திமிக்கத் தொழிற்சங்க இயக்கம் எழுந்தது. டைல்ஸ், பீடி, காப்பி, முந்திரி, கைத்தறி முதலான தொழில்களில் 1935- 45 காலகட்டத்தில் பலம் பொருந்திய அமைப்புகள் உருவாயின.

காக்கிலாயா முறையாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் 1939ல் இணைந்து, தொழிற்சங்கம் மற்றும் விவசாய இயக்க அரங்குகளில் பணியாற்றினார்.

மக்கள் மத்தியில் பணியாற்றல்

வங்கப் பஞ்ச கால நாட்களில் காக்கிலாயா ஏராளமான நிவாரணப் பணிகளை ஆற்றியது மட்டுமின்றி, பதுக்கல் மற்றும் கள்ளச் சந்தைக்காரர்களுக்கு எதிராக மக்களை அணிதிரட்டினார்.

1946ல் ரேஷன் அளவை 2 அவுன்ஸ் வெட்டிக் குறைத்த நேரத்தில் மெட்ராஸ் கவர்னர் ஆர்சிபால்டு நே மங்களூரு விஜயம் செய்தார். அப்போது அதனை எதிர்த்து சிபிஐ தலைமையில் நடைபெற்ற இயக்கத்தில் காக்கிலாயா கலந்து கொண்டார். கவர்னர் நே விஜயத்தை எதிர்த்து மிகப்பெரிய கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் காவல் நிலையத்தை நோக்கிப் பேரணியாகச் சென்ற பிறகு கைதானவர்கள் விடுதலை செய்யப்பட்டனர். 

இந்தியா விடுதலை பெற்ற நாளில் காக்கிலாயா கண்ணூர் சிறையிலிருந்து விடுதலையானார். 

‘பிடிஆர் பாதை’ நிகழ்வுகளுக்குப் பின் சிபிஐ தடைசெய்யப்பட்டிருந்த காலத்தில் 1948ல் அவர் தலைமறைவு வாழ்க்கைக்குச் சென்றார். தேவங்கரேயில் 1950ல் அவர் கைதானார். பிரிக்கப்படாத தட்சிண கன்னடா மாவட்டத்தில் கட்சியை ஒற்றுமையாய் வைத்திருக்க அவர் தன்னாலான பெரும் முயற்சிகளை எடுத்தார். 

சட்ட மன்றத்தில்

1952–54ல் மெட்ராஸ் சட்டமன்றத்திலிருந்து கர்னாடகா (அப்போதைய மைசூர்) பகுதியைப் பிரதிநிதித்துவப்படுத்தி மாநிலங்களவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1972 –78ல் பந்த்வால் சட்டமன்ற உறுப்பினராகப் பெரும் வாக்குகள் வித்தியாசத்திலும் 1978 –83ல் வித்தல் தொகுதி எம்எல்ஏவாகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். கர்னாடகா மாநில மறுசீரமைப்பு மற்றும் மறுஇணைப்பு பற்றிப் பாராளுமன்றத்தில் கேள்விகள் எழுப்பினார். 

கர்னாடகா நிலச் சீர்திருத்தச் சட்டம், 1974 உருவாக காக்கிலாயா பெரும் காரண கர்த்தாவாக இருந்தார். இந்தத் துறையில் முதலமைச்சர் தேவராஜ் அர்ஜூடன் நெருக்கமாகப் பணியாற்றினார். முதலமைச்சர் அமைத்த நிலச் சீர்திருத்த ஆலோசனைக் குழுவுக்கு அவர் தலைமை வகித்தார். பந்த்வால் நில டிரிபியூனல் (தீர்ப்பாயம்) உறுப்பினராக இருந்தார். கர்னாடகா சட்டமன்றப் பொதுக் கணக்குக் குழு தலைவராகவும் பொறுப்பு வகித்தார். 

நிலச் சீர்திருத்தங்களுக்கான போராட்டம்

நிலச் சீர்திருத்த இயக்கத்தில் பிவி காக்கிலாயா ஆற்றிய மிகப் பெரிய பங்களிப்பின் காரணமாகப் புரட்சிகரமான மாற்றங்கள் ஏற்பட்டு அதனால் தட்சிண கர்னாடகா மாவட்டத்தில் மட்டும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்துள்ளனர். அந்தக் குடும்பங்களின் குழந்தைகளுக்கு கல்வி மற்றும் பிற வசதிகள் கிடைத்துள்ளன. இம்மாற்றத்தின் மூலம் பல படித்த நடுத்தர வர்க்கக் குடும்பங்கள் உருவாயின.

பெங்களூரு, கோலார், ஸ்ரீரங்கப்பட்டணம், ஹம்பி மற்றும் குல்பர்க்காவில் அகில இந்திய கிசான் சபா மாநாடுகளைக் காக்கிலாயா ஏற்பாடு செய்து நடத்தினார். மாநில அளவிலான அமைப்பு ‘கர்னாடகா ராஜ்ய ராயத் சங்கா (KRRS) என்றழைக்கப்படுகிறது. சிபிஐ கட்சியைச் சேர்ந்த ஸ்ரீனிவாஸ்குடி மற்றும் காக்கிலாயா இணைந்து தட்சிண கர்னாடகா உட்பட பல மாவட்டங்களில் அமைப்புக்களை ஏற்படுத்தினர். அவ்வமைப்பு நெல், கரும்பு, நிலக்கடலை, பருத்தி முதலான பயிர்களுக்குக் கட்டுப்படியான ஆதாய விலை நிர்ணயிக்கக் கோரி 1979 ஜனவரி பிப்ரவரி மாதங்களில் மாநிலம் தழுவிய போராட்ட இயக்கத்திற்கு அழைப்பு விடுத்தது.

ஏராளமாக எழுதிக் குவித்தவர்

மக்கள் மத்தியில் களப்பணிகளில் ஈடுபட்டாலும் காக்கிலாயா ஏராளமாக எழுதிக் குவித்துப் பல புத்தகங்களை எழுதியுள்ளார். அவருடைய இலக்கியப் படைப்புகளுக்காக, கன்னடா சாகித்திய அகாதெமி விருது உட்பட,  பல விருதுகளைப் பெற்றுள்ளார். எம் எஸ் கிருஷ்ணன் மற்றும் எஸ்எம் நாயக் உடன் சேர்ந்து அவர் செல்வாக்குமிக்க ‘நவகர்னாடகா பதிப்பகம் (பி) லிட்’, ஒன்றை நிறுவி இறுதிவரை அதன் தலைவராகச் செயலாற்றியுள்ளார். 

அவரது படைப்புகளில் சில: கம்யூனிசம், பாரதிய சிந்தனா, இந்து தர்மா, கம்யூனிசம், பூமி மது ஆகாஷா (‘Bhoomi mathu akasha’) முதலியன. சச்சார் குழு அறிக்கை மற்றும் பல பிற நூல்களைக் கனடா மொழியில் மொழியாக்கம் செய்துள்ளார். அவர் தனது சுயசரிதையை (‘Bareyada Dinachariya Mareyda Putagalu’) ‘எழுதப்படாத நாட்குறிப்பிலிருந்து மறக்க முடியாத பக்கங்கள்’ என்ற பெயரில் கன்னட மொழியில் எழுதியுள்ளார். 

1983 –86 காலகட்டத்தில் அவர் காரல் மார்க்ஸ் மற்றும் ஃபெடரிக் ஏங்கெல்ஸ் வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதினார். காரல் மார்க்ஸ் படைப்புகள் பற்றி காக்கிலாயா எழுதிய நூல் 1986ல் சோவியத் லாண்டு நேரு விருதைப் பெற்றது. ஏங்கெல்சின் வாழ்க்கை மற்றும் சிந்தனைகள் பற்றி காக்கிலாயாவின் ஆக்கம் கர்னாடகா சாகித்திய அகாதெமி விருதைப் பெற்றுள்ளது.

அவருடைய மனைவி அகல்யா 1998 ஜூன் 31ல் இயற்கை எய்தினார். அவர் சுதந்திரப் போராட்ட வீரரான ஸ்ரீநாராயண சோமயாஜியின் இளைய மகள் ஆவார். அவர்தான் அவர்களது நான்கு மகன்களையும் முக்கியமாகக் கவனித்து வளர்த்தார்.

தொழிற்சங்க இயக்கத்தில் 

தங்கள் நியாயமான உரிமைகளுக்காகப் போராடிய பீடித் தொழிலாளர்கள் போராட்டத்தில் காக்கிலாயா முன்னணியில் இருந்தார். அவர்களுக்குப் பல உதவிகள் செய்து பல உரிமைகளையும் சட்டங்களையும் பெற்றுத் தந்தார். மங்களூரு ஓடு செய்யும் தொழிலாளர்களின் நிலைமையை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்தவர். மேலும் ஏலக்காய், காப்பி எஸ்டேட்டுகள் மற்றும் தோட்டத் தொழில் போன்ற பிரிவுகளின் தொழிலாளர்களுக்காகவும் உழைத்தார். 1943 முதலாகவே நெசவாளர்கள், பீடி மற்றும் டைல் ஓடு தொழிலாளர்கள் அமைப்புகளைத் தட்சிண கன்னடா மாவட்டத்தில் அமைப்பதில் பாடுபட்டார்.

மாநிலங்கள் மறுசீரமைப்புப் போராட்டம்

அகண்ட கர்னாடகா ராஜ்ய நிர்மணா பரிக்க்ஷத் (ஒன்றிணைந்த கர்னாடக மாநில அமைப்புக் குழு) அமைப்பின் பொதுச் செயலாளராகக் காக்கிலாயா செயல்பட்டார். கன்னட மொழி பேசுவோர் வாழும் பகுதிகளைக் கர்னாடக மாநிலமாக ஒன்றிணைத்து அமைக்கப் போராடினார். பிரிட்டிஷ் ஆட்சியின்போது காசர்கோடு தாலுக்கா முந்தைய தென் கன்னடா மாவட்டத்தில் இருந்தது; அது புதிதாக அமைக்கப்பட்ட மாநிலத்தில் விடுபட்டு 1956ல் கேரளாவுடன் இணைந்தது. 

2006 நவம்பர் 1ம் தேதி ‘சுவர்ண கர்னாடக ஏகிகாரணா அவார்டு’ (தங்க கர்னாடகா ஒன்றிணைப்பு விருது) வழங்கி அவர் கௌரவிக்கப்பட்டார். விருது வழங்கும் விழாவில் பேசும்போது கர்னாடகாவை ஒன்றிணைப்பதற்காக ஆட்சியாளர்கள், அரசர்கள் மற்றும் அரசுகளை எதிர்த்து நடத்தப்பட்ட புகழ்பெற்ற போராட்டங்களை நினைவு கூர்ந்தார். சின்னச் சின்ன அற்ப விஷயங்களுக்காக மாநிலத்தின் ஒற்றுமையில் சமரசம் செய்யலாகாது என அவர் வேண்டினார்.

கோவா விடுதலைப் போராட்டம்

பெரும் பேரணியைப் பெங்களூரிலிருந்து கோவாவிற்கு 1955 ஆகஸ்ட் 15ல் காக்கிலாயா தலைமையேற்று மேற்கொண்டபோது போர்த்துகீசிய போலீசாரின் காட்டுமிராண்டித்தனத்தை எதிர்கொண்டார். ரகசியமாக இந்துஸ் என்னும் கோவா கிராமத்திற்கு அவர் நழுவிச் சென்று தேசியக் கொடியை ஏற்றினார். அதன் பிறகு அவர் மிருகத்தனமாக அடித்து நொறுக்கப்பட்டார். 

சிபிஐ மாநிலச் செயலாளராக நீண்ட வருடங்கள் பொறுப்பு வகித்ததுடன், கட்சியின் வாரப் பத்திரிக்கையான ‘கெம்பாவுதா’ (Kembavuta’) ஆசிரியராக 1986 முதல் 1991 வரை இருந்தார். 

1962ல் எம்எஸ் கிருஷ்ணன், எம்சி நரசிம்மன், சிஆர் கிருஷ்ணா ராவ், வாசன், கோவிந்தன் மற்றும் சிலரோடு காக்கிலாயா கைது செய்யப்பட்டார். 

சிபிஐ மாநிலச் செயலாளராக

1964 சிபிஐ கட்சி பிளவிற்குப் பிறகு பிவி காக்கிலாயா இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளரானார், 1972 வரை அப்பொறுப்பில் நீடித்தார். 1964 டிசம்பரில் பம்பாயில் நடைபெற்ற சிபிஐ 7வது கட்சிக் காங்கிரஸ் மாநாட்டின் சார்பாளர் தேர்வுக்குழுவின் (க்ருடென்ஷியல் கமிட்டி) உறுப்பினராக அவர் இடம்பெற்றார். அவர் தொடர்ச்சியாக 5வது அமிர்தசரஸ் (1958), 6வது விஜயவாடா (1931), 7வது பம்பாய் (1964) மற்றும் 8வது பாட்னா (1968) கட்சிக் காங்கிரஸ் மாநாடுகளில் தேசியக் குழுவிற்கு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 

1980களில் எண்ணிறைந்த மக்கள் திரள் போராட்டங்களைத் திரட்டி அமைத்து அவற்றில் பங்கேற்றார். உதாரணத்திற்கு 1982ல் நரகுண்டிலிருந்து பெங்களூருக்கு ஏராளமான விவசாயிகள் நடத்திய பேரணியில் தேவராஜ் அர்ஜ், டிபி சந்திராகவுடா மற்றும் மற்றவர்களோடு காக்கிலாயா முன்னணியில் பங்கேற்றார். 

கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு அவர் ஆற்றிய பெரும் பங்களிப்புக்காகத் தார்வாட்டில் உள்ள மார்க்சிய கோட்பாட்டிற்கான இந்திய நிறுவனம் அவருக்குக் காரல் மார்க்ஸ் விருது வழங்கியது.

2009 மார்ச் 22ல் பெங்களூரில் எம்எஸ் கிருஷ்ணன் நினைவு அறக்கட்டளை சார்பில் ஓர் எளிய விழாவில் அவருக்குப் பாராட்டு விழா நடைபெற்றது. ‘நிரந்தரா’ என்ற தலைப்பில் ஒரு பாராட்டு மலரை அவருக்கு என்சி நரசிம்மன் வழங்கினார். அந்தத் தொகுப்பு மலரில் காக்கிலாயா வாழ்வு மற்றும் பணிகள் குறித்த கட்டுரைகளும்; அவருடைய பிறந்த நாளில் நடத்தப்பட்ட “காக்கிலாயா 90: இளம் தலைமுறையினருடன் ஓர் உரையாடல்” என்ற நிகழ்வில் ஆற்றப்பட்ட சொற்பொழிகள் மற்றும் கட்டுரைகளும் இடம் பெற்றன. 

துளு மொழி, துளு இலக்கியம் மற்றும் கலாச்சாரத்திற்கு அவரது பங்களிப்பிற்காக காக்கிலாயாவுக்குத் துளு சாகித்திய அகாதெமி சார்பிலும் 2006 அக்டோபர் 25ல் பாராட்டு விழா நடத்தப்பட்டது. 

உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையிலும் சிபிஐ-யின் கண்டன எதிர்ப்பு இயக்கத்தில் அவர் கலந்து கொண்டார். அந்தக் கண்டனப் போராட்டம் இருவர் விடுதலை தொடர்பானது. நக்சலைட்டுகளுடன் தொடர்பு வைத்திருந்தனர் எனக் குற்றம்சாட்டிக் கைதுசெய்யப்பட்ட மங்களூரு பல்கலைக்கழக மாணவர் விட்டல மாலேகுடியே, அவருடைய தந்தை லிங்கண்ணா மாலேகுடியே இருவரையும் விடுதலை செய்யக் கோரிய போராட்டமே காக்கிலாயா பொது அரங்கில் கலந்து கொண்ட கடைசி நிகழ்ச்சியாகும். 

‘பிவி காக்கிலாயா நூற்றாண்டு விழா’ இரண்டு நாள் நிகழ்வாக 2019 ஆகஸ்ட் 10 மற்றும் 11 தேதிகளில் மங்களூரில் நடைபெற்றது. அந்தச் சிறப்புக் கருத்தரங்கில் அவருடைய பங்களிப்பு, வெகுஜன இயக்கங்களின் பல்வேறு அம்சங்கள், அவருடைய எழுத்துகள் புத்தகப் படைப்புகள் குறித்துச் சொற்பொழிவுகள் நிகழ்த்தப்பட்டன. முதல் பொழிவு, ‘பிவி காக்கிலாயா, மலபாரிலிருந்து கர்னாடகா சட்டமன்றத்திற்கு’ என்ற தலைப்பில் சிபிஐ மாநிலத் தலைவர் சித்தங்கவுடா பாட்டில் நிகழ்த்தினார். விழா எம்எஸ் கிருஷ்ணன் நினைவு அறக்கட்டளை, கொசத்து மாத இதழ், நவகர்னாடகா பதிப்பகம் மற்றும் சமதர்ஷினி வேதிகே அமைப்புகளின் சார்பில் இணைந்து நடத்தப்பட்டது. விழாவில் அமர்ஜித் கவுர், கன்னையா, பேராசிரியர் (ஆனந்த்) டெல்டும்டே, பேராசிரியர் சந்திரா பூஜாரி, தினேஷ் மட்டூ, பிபி லோகேஷ், டாக்டர் டிஎஸ் வேணுகோபால், டாக்டர் விஜய் தம்பந்தா, டிஎம் கிருஷ்ணா மற்றும் பலர் உரையாற்றினர்.

நீண்ட காலம் நோய்வாய்ப்பட்டு, மூளை இரத்தக் கசிவு காரணமாக பிவி காக்கிலாயா தமது 93வது வயதில் மங்களூரில்  2012 ஜூன் 4ம் நாள் இயற்கையெய்தினார்.

பிவி காக்கிலாயா அவருடைய படைப்புகள் நூல்கள் வழி என்றென்றும் வாழ்வார்!

--தமிழில் : நீலகண்டன், 

என்எப்டிஇ, கடலூர்