Tuesday 30 June 2020

கோவிட் பாதிப்புக்குப்பின் பொருளாதாரத் திட்டம்


கொள்ளை நோய்க்குப் பிறகு,
நாளைய பொருளாதார மறுமலர்ச்சி, வளர்ச்சி  
உழைப்பாளர்களின் கண்ணியம் முக்கியமாகட்டும்!

--சுனில் முகோபாத்யாய்

   
(நியூஏஜ் வார இதழ் 
             ஜூன் 28–ஜூலை 04)

தலைமுறைக்கு நன்றி சொல்வோம், நல்லவேளை சார்லஸ் டிக்கன்ஸ் அல்லது மார்க்சிம் கார்க்கி நமது நாட்டில் பிறக்கவும் இல்லை, இன்று உயிரோடும் இல்லை. அப்படி இருந்திருந்தால் இன்றைய நமது ஆட்சியாளர்கள், அவர்களுடைய மாபெரும் இலக்கியப் படைப்புக்கள் -- ‘கடுமையான காலங்கள்’(1854), ‘அடி ஆழங்கள்’(1902) --  இரண்டையும் முன்வைத்து, அவர்களை ‘அழிவின் முன்னறிவிப்பாளர்கள்’ என்று அழைத்திருக்கக் கூடும். டிக்கன்ஸ் எழுதிய ‘கடுமையான காலங்கள்’ நாவலில் விக்டோரியா கால இங்கிலாந்தின் தொழில்நகரங்களில் தொழிலாளர்களின் துயரம் மிகுந்த வாழ்வியல் நிகழ்வுகள் உருக்கமாக விவரிக்கப்பட்டிருக்கும். உலகம் புகழும் கார்க்கியின் நாடகமான ‘அடி ஆழங்கள்’ அதாவது படுபாதாளத்தில் ஒதுக்கப்பட்டு, மோசமான இழிநிலையில் வைக்கப்பட்ட –ஜார் உருஷ்யாவின் வோல்கா நதிக்கரை அருகே—கூடாரங்களில் வாழ்ந்த ஒரு மக்கள் குழு படும் துயரங்கள் காட்சிப்படுத்தப் பட்டிருக்கும்.
        இவ்விரண்டு பெரும் படைப்புக்களிலும், கசப்பான உண்மைகளுக்கும் அந்தச் சமூகங்களில் நிலவிய ஆறுதல் அளிக்கும் மாயைகளுக்கும் இடையேயான முரண்பாடுகள் விளக்கப்பட்டிருக்கும். வாழ்க்கையின் உண்மை, மனிதர்களைப் பயன்படுத்திய பின் மிகச் சுலபமாக வீசி எறிந்து விடுவதால், அவர்கள் நம்பிக்கை இழந்து திருட்டுகளிலும் விபசாரத்தின் பக்கமும் திரும்பி விடுகிறார்கள்.
நவீன இந்தியச் சினிமா தயாரிப்பாளர்களின் ஆதர்ச குருவாகிய சத்தியஜித் ரே கூட அவருடைய ‘பதேர் பாஞ்சாலி’ மாபெரும் படைப்புக்காக விட்டு வைக்கப்படவில்லை. விபூதிபூஷண் பந்தோபாத்யா எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்ட அந்தப் படம் உலகளாவிய அளவில் புகழ்களை அள்ளிக் குவித்தது; ஆனால் இந்தியாவில் அப்போது சிலர் ரே இந்திய வறுமையை வெளிநாட்டில் விற்றுக் கொண்டிருக்கிறார்’ என்று குறை கூறினர். அவர்களெல்லாம் வரலாற்றின் குப்பைத் தொட்டியில் எறியப்பட்டுவிட்டார்கள்.  (''சத்யஜித் ரேயின் திரைப்படங்களை ஒருவர் பார்த்திருக்கவில்லை என்றால், அவர் சூரியனையும், நிலவையும் கண்டிராமல் உலகத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார் என்று அர்த்தம்" என அகிரா குரோசாவா புகழாரம் சூட்டியுள்ளார். அத்தகைய) சத்தியஜித் ரேவின் பதேர் பாஞ்சாலி படத்திற்கு அன்றைய அரசுகள் கேலிக்கை வரிச் சலுகைகள் வழங்கின; தேசிய விருதும் தரப்பட்டது.
ஆனால் இன்று அதே காமிராக்காரர்கள், ஊடகவியலாளர்கள், நிருபர்கள், வழக்கறிஞர்கள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் புலம்பெயர் தொழிலாளர்கள் கோவிட் பாதிப்பு, ஊரடங்கின் காரணமாகப் படும் இன்னல்களை, அவர்களது துயரம்மிகு நீண்ட பயணங்களை, அதன் இடையூறுகளை, அவலக் காட்சிகளை வெளிஉலகத்தின் பார்வைக்குக் கொண்டு வந்தார்களென, அவர்கள் ‘அழிவின் முன்னறிவிப்பாளர்கள்’ என ஆளும் வட்டாரங்களால் முத்திரை குத்தப்படுகிறார்கள்.
அந்தத் ‘தீர்க்கதரிசிகள்’ தங்கள் கடமையைத் தொடர்ந்து செய்யட்டும். ஊரடங்கு மற்றும் கோவிட் பாதிப்பிலிருந்து தேசம் மீண்டெழுந்து வளர்ச்சி பெற, வீராவேசமாகக் கொட்டி முழங்குவது எந்தவகையிலும் உதவப் போவதில்லை. ஆனால் ஆக்கபூர்வமான விமர்சனங்கள், நலம்தரும் ஆலோசனைகள் நிச்சயம் உதவும் -- ஆள்வோர்கள் அவற்றை ஆழமாகக் கருத்தில் கொண்டு பரிசீலித்து அமல்படுத்துவார்கள் எனில், --  அவைஉதவும்.
சில அப்பட்டமான உண்மைகள்: நமது ஒட்டுமொத்த பெரும் பொருளாதாரத்தின் அளவுகோல் குறியீடுகள், தொற்று பாதிப்பிற்கு முன்னரே குறையத் தொடங்கியதைச் சுட்டிக் காட்டுகின்றன. (1) ஜிடிபி இரண்டாண்டுகளுக்கு முன்பிருந்த 7 சதவீதத்திலிருந்து 2019 –20 நிதியாண்டில் 4.2% எனக் குறைந்தது. (2) தொழிற்சாலை உற்பத்திக் குறியீடு 4.4% லிருந்து மைனஸ் 0.7 சதவீதமாக வீழ்ச்சி (3) முதலீடு 34.2% லிருந்து 29.7%ஆனது. (4) ஏற்றுமதி 10% லிருந்து எதிர்மறையாக 4.8% வீழ்ச்சி (5) வங்கி வழங்கும் கடன் 10 சதவீதத்திலிருந்து 6.1%ஆகக் குறைவு (6) வங்கிக் கடன் வளர்ச்சியைத் தரமிடும் ஆய்வு அமைப்பான CRISIL (Credit Rating Information Services of India Limited), வங்கி வழங்கும் கடன் தலைகுப்புற வீழ்ச்சி அடைந்து பூஜ்யம் முதல் எதிர்மறை 1 சதவீதமாகலாம் எனக் கணித்துள்ளது. (7) இந்தியத் தொழில்கள் கூட்டமைப்பு, ‘கோவிட் பாதிப்பால் துண்டிவிடப்பட்ட ஊரடங்குகள் பொருளாதார நடவடிக்கைகளை உறையச் செய்துவிட்டன; இது நிச்சயம் பொருளாதார வளர்ச்சியை மேலும் மந்தகதி அடையச் செய்யும்’ எனக் கூறியுள்ளது. – இவர்கள் எல்லாம் ‘அழிவின் முன்னறிப்பாளர்களா?’ 
கரோனா வைரஸ் தாக்கத்திலிருந்து மக்கள் உயிர்களைக் காப்பாற்றுவது மற்றும் வாழ்வாதாரம் இழந்துவிடாதவாறு மக்களைக் காப்பது என்ற இருபிரச்சனைகளுக்கு இடையே சமன்பாடு காண்பது என்பது மிக முக்கியமான சவால் என்பதை நாம் ஒப்புக் கொள்வோம். 80% மேல் இந்திய வேலைவாய்ப்பு அமைப்புசாரா பகுதிகளில் உள்ளது. இந்தப் பகுதிகளில் பணியாற்றும் தொழிலாளர்கள், தினக்கூலிகள் (அவர்களில் பெரும்பான்மையோர் புலம்பெயர் உழைப்பாளிகள்) வேலைகளையும் வருவாயையும் இழந்துள்ளனர். அவர்களுடைய முதலாளிகளுடன் அநேகமாக எவருக்கும் எந்தவித ஒப்பந்தமும் இல்லை, எனவே எந்தவிதச் சமூகப் பாதுகாப்பு ஆதரவும் இல்லை. அவர்கள் மிகக் கொடுமையான ஏழ்மையில் தள்ளப்பட்டுள்ளனர்; பொருளாதார மீட்பு ஏற்படும் வரை அவர்களுக்கு வாழ்வு இல்லை.
தொற்று பாதிப்பு குறைந்த பிறகு வேலை வாய்ப்பு வடிவம் நிச்சயம் வெகுவாக மாற வேண்டியிருக்லாம்; காரணம், மனிதர்களுக்கிடையே இடைவெளியைத் தொடர்ந்து பராமரிக்க வேண்டிய தேவை உள்ளது. பொருளாதாரத்தில் பல பணிகள் முக்கியத்துவம் இழந்து மறையலாம். இதனாலும் வேலை இழப்புகள் கூடும். அப்போதைய சூழ்நிலையில் தேவைப்படும் புதிய தொழில் திறன் இல்லாத காரணத்தால், வேலைஇழந்தவர்கள் புதிய சூழ்நிலைக்குப் பொருந்தாது மேலும் துன்பத்தில் ஆழ்வர். நாம் நன்கு திட்டமிட்டு சமூகப் பாதுகாப்பு முறையை உருவாக்கினால் மட்டுமே, மேற்கண்ட சூழல் உண்டாக்கக்கூடிய அடுக்கடுக்கான பெரும் சமூக விளைவுகளைத் தவிர்க்க முடியும். இதனைச் சாதிக்க மத்திய மாநில அரசுகள், தங்கள் முயற்சிகளை ஒருங்கிணைத்து, மிகமிக முக்கியமான பங்கினை ஆற்ற வேண்டும்.
ஆனால் சில மாநில அரசுகள், பொருளாதாரத்தை மறுஎழுச்சி பெறச் செய்ய தொழிலாளர்கள் 12 மணிநேரம் உழைக்க வேண்டும் என நம்புவது ஒரு பிரச்சனையாகி உள்ளது. இதுவும் மிகவும் குழந்தைத்தனமானதும் மிகச் சிக்கலான பிரச்சனைக்குப் பழமைவாத அணுகுமுறைத் தீர்வும் ஆகும். இது ஒரு பக்கம், மேலும் வேலையின்மையை அதிகரிக்கும், அது நிச்சயம் விரும்பக்கூடியது அல்ல; மறுபக்கம், இது தொழிலாளர்களை டிக்கன்ஸ் மற்றும் கார்க்கி காலத்தின் நீண்ட நேர கட்டாய அடிமை உழைப்பு முறைக்கு மீண்டும் கொண்டு செல்லும் --  அதன் விளைவாய் உழைப்பாளிகள் களைப்பு, காயம் மற்றும் இறுதியில் இறப்பதற்கும் வழி வகுக்கும்.
மாறாக, நமக்குத் தேவை வேலை வாய்ப்பை அதிகரிக்கும் பிரிவுகளான உற்பத்திப் பிரிவு, வேளாண்மை மற்றும் அடிப்படை கட்டமைப்புகளை உருவாக்கும் திட்டங்கள். இந்தியாவை உலக உற்பத்தியின் மையமாக்க வேண்டும். அது ஒரு நாள் இரவில் நடத்தி முடிக்கப்படுவதும் அல்ல, விரைவில் நனவாகும் சாத்தியமும் அல்ல. கோவிட் மற்றும் ஊரடங்கால் உலகின் தேவை–வழங்கல் சங்கிலித் தொடர்பு அறுபட்டு, உலகப் பொருளாதாரமே உழல்கிறது.  வளர்ந்த பொருளாதார நாடுகளின் வீழ்ச்சியடைந்த நுகர்வு மீண்டும் உற்சாகம் பெற காலம் பிடிக்கும். நுகர்வு குறையும் போது, (உற்பத்தியும் சுருங்குவதால்) முதலீடு சற்று ஓய்வெடுக்கச் சென்றுவிடும். உலக முதலீட்டாளர்கள் இந்தியாவில் முதலீடு செய்ய உடனே ஓடிவந்து விடுவார்கள் என எதிர்பார்க்க முடியாது, உலகப் பொருளாதாரம் மறுமலர்ச்சி அடையும் வரை காத்திருக்கத்தான் வேண்டும்.
பொருளாதாரம் மந்தகதி அடைந்தபோதும் கடந்த நான்கு ஆண்டுகளாக விவசாயத் துறையில் செயல்பாடு நன்றாகவே உள்ளது. எனவே நாம் விவசாயத்துடன் கூடவே தோட்டப்பயிர், பூக்கள் உற்பத்தி, மீன்வளம், கோழிப்பண்ணை மற்றும் கால்நடை, விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகளிலும் மேலும் வேலைவாய்ப்பை உருவாக்கக் கவனம் செலுத்த வேண்டும் – இந்திய கிராமங்கள்  வளர்ச்சி பெற வேண்டும்.
புலம்பெயர் தொழிலாளர்கள் மீண்டும் தங்கள் சொந்த இடங்களுக்குத் திரும்பியது நமக்கு ஒரு வாய்ப்பை வழங்கி உள்ளது: ஓர் இடத்தில் குவிதல் இன்றி, நாடு தழுவிய அளவில் நிலப்பரப்பில் பரவலாக்கப்பட்ட பொருளாதார வளர்ச்சி மாதிரியை உருவாக்க வேண்டும். அது உழைப்பாளிகளின் உழைப்பை மதிக்கும், அவர்களைக் கண்ணியமாக நடத்துதை ஆதார அடிப்படையாகக் கொண்டு இயங்கும் வளர்ச்சி முறையாக இருக்கும். உற்பத்தி மற்றும் சந்தைப் படுத்துவது இரண்டிலும் விவசாயக் கூட்டுறவுகள் முக்கியமான பங்காற்ற முடியும். பால் பொருட்களுக்கான ‘அமுல்’ பிராண்டு நிறுவன அடையாளமாகி வெற்றி பெற்றதை எவ்வாறு மறக்க முடியும்? அது எங்கெல்லாம் செயல்பட்டதோ அங்கெல்லாம் வெண்மைப் புரட்சி விளைத்தது பெரும் மாற்றம். நமது நாட்டின் நிலப்பரப்பில் விவசாயம் சார்ந்த தொழிற்சாலைகள் மேலும் மேலும் புதிய நிறுவன அடையாளங்களை ஏற்படுத்த முடியும். புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் தொழில் முனைவோர்களை ஊக்குவிக்க மாநில அரசுகள் பிற்பட்ட மாவட்ட வளர்ச்சித் திட்டங்களை மேலும் விரிவாக்க வேண்டும்.
ஒவ்வொரு மாநில அரசும் நிலங்கள் பயன்பாட்டிற்கு மாதிரி வடிவங்களுக்கான வரைபடத்தைத் தயாரிக்க வேண்டும். வளம் குன்றிய தரிசு நிலங்கள் தொழிற்சாலைகள் அமைக்கவும், செழிப்பான நிலங்கள் விவசாயத்திற்கும் ஒதுக்கப்பட வேண்டும். இதில், நமது உணவு முறைகள் மாறிவருவதால் பழத்தோட்டங்கள் அமைப்பது பற்றிக் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்; ஓரளவு வசதியானவர்களும் தங்கள் உணவில் தானியங்களைக் குறைத்துக் கொண்டு, கூடுதலாகப் பழங்கள், மீன், முட்டை மற்றும் பால் பொருள்களைச் சாப்பிடத் துவங்கியுள்ளனர். நமது பொருளாதாரம் வளர்ச்சி அடைந்து மக்களின் வருவாயும் அதிகரிக்கும்போது இத்தகைய உணவுகளுக்கான தேவையும் நிச்சயம் வளரும். மேலும் கிராமமக்களின் வருவாய் ஈட்டலுக்குக் கைத்தொழில்களை மேம்படுத்துவதும் புறக்கணிக்க முடியாத முக்கியத்துவம் உடையது.
கரோனவின் கடும் பாதிப்பு பெருநகர்களிலே இருப்பதையும் நமது கிராமப்புறப் பகுதிகள் பெருமளவில் பாதிப்பிலிருந்து காப்பிடப்பட்ட தன்மையையும் பார்க்கிறோம். எனவே பெருநகரங்களின் நெருக்கடி மிகுந்த வளர்ச்சியின் அபாயத்தைக் குறைக்கவும் கூடுதல் ஜிடிபி கிராமப் பகுதிகளிலிருந்து அதிகரிக்கவும் முடியும் என நம்பலாம்.
கிராமப்புற ஏழைகளையும், நம்பிக்கை உடைந்து திரும்பியுள்ள புலம்பெயர் தொழிலாளர்களையும் பட்டினி, சத்துக்குறைபாடு மற்றும் சாவிலிருந்தும் காக்க வேண்டிய தேவை உள்ளது. இதனை எதிர்கொள்ள ஏற்கனவே நல்லதோர் திட்டம், ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம்’ உள்ளது. அதனைப் பயன்படுத்தி மனிதநேய நெருக்கடியிலிருந்து அவர்களை மீட்டெடுத்து, அவர்களிடம் மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்தலாம். புலம்பெயர் தொழிலாளர்கள் தங்கள் ஊர் திரும்பியதும் அவர்களுக்கு வேலை அட்டைகளை வழங்க வேண்டும். பரவலாக வரவேற்பைப் பெற்ற, மையப்படுத்தப்படாத இத்திட்டத்தின் செயல்பாட்டில், நமது பஞ்சாயத்து அமைப்புகள் முக்கியமான இடம் வகிக்க முக்கியத்துவம் தரப்பட வேண்டும். கிராமப்புறப் பொதுப் பணித் திட்டங்களை அவர்கள் பகுதியில் செயல்படுத்தும் பஞ்சாயத்துகளின் திறன் பலப்படுத்தப்பட வேண்டும்; முன்னுரிமை தந்து அவர்களிடம் நிதி அளிக்கப்பட வேண்டும். அவர்கள் கள எதார்த்தத்தை நன்கு உணர்ந்தவர்கள் ஆதலின், திட்டங்களின் பணித் தன்மையை முடிவு செய்யும் அதிகாரம் அவர்களிடமே விடப்பட வேண்டும். (கரோனா எதிர்ப்புத் தடுப்பு நடவடிக்கைகளில் கேரள மாநிலத்தின் பஞ்சாயத்து அமைப்புக்களின் ஒருங்கிணைந்த செயல்பாடுகள் பலராலும் பாராட்டப்பட்டது இங்கு நினைவூட்டல் பொருத்தமானது –மொழிபெயர்ப்பாளர்)
இந்த நடவடிக்கைகள் எல்லாம் நகர்ப்புற பொருளாதார மையங்களின் அழுத்தத்தைக் குறைக்கும்; எவ்வாறெனின், கிராமப்புற மக்கள் தங்களுக்கு அருகிலேயே வேலைவாய்ப்பைப் பெறுவதால், நாட்டின் கிராமப்புற உற்பத்தி அதிகரிப்பது மட்டுமின்றி, அந்த மக்களும் கண்ணியமான மேம்பட்ட வாழ்க்கைத் தரத்தை –நிச்சயம், நகரங்களின் ஒதுக்குப்புறச் சேரிகளில் வசித்ததைவிட--மேலான வாழ்வைப் பெறுவார்கள்.
‘இந்தியா கிராமங்களில் வாழ்கிறது’ என்ற மகாத்மாவின் மணிமொழி அலங்காரமானச் சொல்லாடலாக மட்டும் இல்லாமல் எதார்த்தத்தில் உண்மையாக வேண்டும்.
--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்
     

Monday 29 June 2020

தலைவர்கள் வாழ்விலிருந்து : சித்திரத் சிதறல்கள் -2 S.G. சர்தேசாய் :


நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :
சில சித்திரத் சிதறல்கள் -2


S.G. சர்தேசாய் : தலைவர், நல்ஆசிரியனுமாய்

--அனில் ரஜீம்வாலே
(நியூஏஜ் 2020 ஜூன் 21 – 27 இதழ்)

இளமைப் பருவம் பள்ளியில்
        ஸ்ரீனிவாஸ் கணேஷ் சர்தேசாய் மராட்டிய மாநில ஷோலாப்பூரில்1907 மே 3ம் நாள் பிறந்தார். ஜிஎஸ் சர்தேசாய் எனும் புகழ்பெற்ற வரலாற்றாசிரியரின் உடன்பிறந்தார் மகன் உறவு (nephew). சர்தேசாய் புகழ்பெற்ற கல்வியாளரும் தொழிலதிபருமான கிர்லோஸ்கர் குடும்ப உறவினரும் கூட. அவரது நான்கு வயதில் தமது தாயை இழந்தார். 13வயதிலேயே 1920-ல் பரோடா உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்ட அவர் மெட்ரிகுலேஷன் தேர்வெழுத அனுமதிக்கப்படவில்லை, காரணம் குறை வயதாம்! எனவே அடுத்த ஆண்டு 1923லே எழுதினார். அவருடைய மாமா ஜிஎஸ் சர்தேசாய் இளவரசர் பிரதாப் மற்றும் கெய்க்குவாட் அரசகுடும்ப உறுப்பினர்களுக்கு ஆசிரியராக இருந்தார். அதனால் அரச குடும்பத்தினர் பழக்க வழக்கங்களை மிக நெருக்கமாக இருந்து பார்க்கக் கூடிய வாய்ப்பைச் சர்தேசாய் பெற்றார்.
கல்லூரியில்
         (மராட்டிய சங்கிலி மாவட்டத் தலைநகரான சங்கிலி –மஞ்சள் நகர் என மஞ்சளுக்குப் புகழ்பெற்ற -- கிருஷ்ணா நதிகரையில் அமைந்த) சங்கிலி கல்லூரியில் 1923ல் ஸ்ரீனிவாஸ் சேர்ந்தார். அங்கே ஆங்கிலம், சமஸ்கிருதம், பௌதீகம் மற்றும் கணக்குப் பாடங்களைப் பயின்றார். அந்தப் பாடங்களில் அவருக்கு ஆர்வம் இல்லாததால் வணிகம், பொருளாதாரம், ஆங்கிலம் முதலியவற்றைப் படிக்கப் பாம்பே வணிகக் கல்லூரிக்கு மாறினார். அதே நேரம் இந்தியத் தத்துவங்கள், சுவாமி விவேகானந்தர், ராமதீர்த்தர் போன்றவர்களைப் படிக்க மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். கல்லூரி விவாதங்களில் பங்கேற்றதுடன் கல்லூரி இதழ் நடத்துவதிலும் பொறுப்பேற்றார். பேராசிரியர் பீ.ஏ.வாடியா மற்றும் பி.ட்டி.ஷா போன்ற பெரும் கல்வியாளர்கள் சொற்பொழிவுகளைக் கேட்கும் வாய்ப்பினைப் பெற்றார். அவருக்குக் கிடைத்த மற்றொரு பெரும் வாய்ப்பு புகழ்பெற்ற பிரித்தானியக் கம்யூனிஸ்ட் தலைவர் (மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்) ஷபூர்ஜி சக்லத்வாலா உரையைக் கேட்டது.  1927ல் அலகாபாத் பல்கலைக் கழகத்தில் (M.Com) முதுகலை வணிகவியல் கற்கச் சென்றார். பாம்பேயில் சைடென்ஹாம் கல்லூரி முதல்வர், இந்திய அரசு சேவையில் பணியாற்றச் சர்தேசாய் பெயரைச் சிபார்சு செய்தபோதும், அவர் அதை நாகரீகமாக மறுத்து விட்டார்.
அரசியலில்
       அலகாபாத் நிகழ்வொன்று அவர் வாழ்வில் பெரும் மாற்றத்தைக் கொண்டு வந்தது. இந்தியா வந்திருந்த பிர்கென்ஹெட் பிரபு, இந்தியர்கள் சொந்தமாக அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கத் தெரியாதவர்கள் என விமர்சனம் செய்தார். அதன் பின்னரே மோதிலால் நேரு தலைமையில் அரசமைப்புச் சட்ட வரைவுக் குழு அமைக்கப்பட்டது. வரைவு அறிக்கையைத் தயாரிக்கும் பணி சர் தேஷ் பகதூர் சாப்ரு வசம் தரப்பட்டது. அவருக்கு ஓர் உதவியாளர் தேவைப்பட்டார். அப்போது சர்தேசாய் தமது முதுகலைப் பட்ட ஆய்வுக்காகப் பாடுபட்டு வந்தார். அவரைப் பண்டிட் இருதயநாத் குன்ஸ்ரு (சமூக சேவகர் மற்றும் 1954ல் நீதிபதி ஃபாஸில் தலைமையில் அமைக்கப்பட்ட மாநிலப் புனரமைப்புக்குழுவின் உறுப்பினராகச் செயல்பட்டவர்) அந்த உதவியாளர் பொறுப்பை ஏற்றுக் கொள்ளும்படி கூறினார். அதன்படி 1928லிருந்து நேரு குடும்ப இல்லமான ஆனந்த பவனத்திலிருந்து சர்தேசாய், சாப்ருவின் உதவியாளராகப் பணியாற்றத் துவங்கினார்.  இந்நிகழ்வு சர்தேசாயின் வாழ்வின் திசைவழியை மாற்றியது.
        சர்தேசாய் தமது பணிகளில் அப்படியே மூழ்கி விடுவார் என பண்டிட் மோதிலால் நேரு அடிக்கடி குறிப்பிடுவார். கூட்டங்களுக்குக் குறிப்புகள் தயாரிப்பார். பிரிட்டீஷ் அரசியலமைப்பை விரிவாகப் படித்ததுடன், பிரிட்டீஷ் பேரரசின் பிற அரசியலமைப்புச் சட்டங்களையும் படித்தார். இந்திய அரசியலமைப்பு அறிக்கையை எழுதிய ஆசிரியர்கள் முக்கியமாக மோதிலால் நேருவும் சாப்ருவும் ஆவர். மௌலானா ஆசாத் மற்றும் பிற தலைவர்களின் கருத்துகளைக் கேட்கும் வாய்ப்பினைப் பெற்றார் சர்தேசாய்.
        இதன் மத்தியில், ஜவகர்லால் நேரு மற்றும் பிசி ஜோஷியுடன் சர்தேசாய் அறிமுகம் ஆகிறார். அப்போதுதான் சோவியத் யூனியனிலிருந்து திரும்பிய நேரு அந்நாட்டின் சோஷலிச முறையால் பெரிதும் ஈர்க்கப்பட்டவராக இருந்தார். அங்கே அவர் 1929ல் புரூசெல்ஸில் நடைபெற்ற ஏகாதிபத்தியத்திற்கு எதிரான லீக் மாநாட்டிலும் கலந்து கொண்டார். சர்தேசாயிடம் –கம்யூனிஸ்ட் அறிக்கை, அரசும் புரட்சியும், புக்காரினின் வரலாற்றுப் பொருள்முதல் வாதம் முதலானவை உட்பட-- பல மார்க்ஸிய நூல்களை நேரு கொடுத்தார் எனச் சர்தேசாய் குறிப்பிட்டுள்ளார்.
        அலகாபாத்தில் உள்ள ஹாலண்டு ஹால் ஓட்டலில் சர்தேசாய் பி.சி.ஜோஷியைச் சந்தித்தார். அங்கே ஜோஷி மார்க்ஸியப் படிப்பு வட்டம் ஒன்றை அமைத்தார். மீரட் சதி வழக்கில் (1929 – 33) ஜோஷி கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நடந்த கண்டன ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்றார். அதன் பின்னர், சர்தேசாய் கம்யூனிஸ்ட் கட்சியில் முழு நேர ஊழியராக இணைய விரும்பி, சாப்ரு போன்றோரிடம் தெரிவித்தார். அவர்கள் நன்கு சிந்தித்த பிறகு முடிவெடுக்கும்படி கூறினர். கிர்லோஸ்கர் பிரதர்ஸ் கம்பெனிகள் மற்றும் பத்திரிக்கைகளில் பணியாற்றவும் அவருக்கு அழைப்புகள் வந்தன. ஆனால் அவற்றை விட்டு, தனது வணிகவியல் முதுகலைப்பட்ட ஆய்வையும் முடிக்காமல் முழுநேர ஊழியராகப் பணியாற்றத் தம்மை முழுமையாக ஒப்படைத்துக் கட்சியில் சேர்ந்தார்.
பாம்பேயில்
        M Com படிப்பை விட்டு நீங்கிய சர்தேசாய், பி சி ஜோஷி கைதுக்குப் பின் பாம்பே சென்றார். அங்கு 1929 முதல் தி கிரேட் இந்தியன் பெனிசுலா (GIP) இரயில்வே கம்பெனி தொழிலாளர்கள் சங்கத்தில் பணியாற்றத் துவங்கினார். எஸ் வி தேஷ்பாண்டே,     BT ரணதிவேயுடன் தொடர்பு கிடைத்தது. 1930ல் GIP இரயில்வே தொழிலாளர்கள் சங்கம் வேலைநிறுத்தத்தில் இறங்கியது. தொழிலாளர்களை அணி திரட்ட (நாசிக் மாவட்டத்தின் மூன்றாவது பெரிய நகரான) மன்மட் பகுதிக்கு அனுப்பப்பட்டார் சர்தேசாய். காவல்துறை, மற்றும் நிர்வாகத்தின் கடும் அடக்குமுறைகளைச் சந்தித்து பாம்பே திரும்பினார். அப்போது உப்பு சத்தியாகிரகம் நடந்து கொண்டிருந்தது. அதில் கலந்து கொள்ள அவர் விரும்பினாலும் மற்றவர்கள் ஏன் அனுமதிக்கவில்லை என்பது அவருக்குப் புரியவில்லை. இருப்பினும் மீறி தண்டி உப்பு சத்தியாகிரகத்திலும் காந்திஜியின் மற்ற இயக்கங்களிலும் பங்கேற்றார். அகமது நகர் வன சத்தியாகிரக இயக்கத்தில் (காடுகள் பாதுகாப்பிற்கான சத்யாகிரகம்) பங்கேற்று கைதாகி எரவாடா மற்றும் நாசிக் சிறைச் சாலைகளுக்கு அனுப்பப்பட்டார். காந்தி – இர்வின் உடன்பாடு ஏற்பட்ட பிறகு விடுதலையானார். ‘இரயில்வே ஒர்க்கர்’ ஆங்கில இதழ் மற்றும் ‘இரயில்வே மஸ்தூர்’ என்ற இந்தி இதழ்களின் ஆசிரியராகச் சர்தேசாய் பணியாற்றியுள்ளார்.
        பின்னர் கான்பூர் சென்றபோது அங்கு 1932ல் கைதானார். சிறையில் அஜாய் கோஷ் அவர்களைச் சந்தித்தார். அவருடன் பேசியபோது கம்யூனிச இயக்கம் குறித்துப் பல செய்திகளைக் கூறினார்.  விடுதலையான பிறகு பாம்பே வந்து, பெருமளவில் அப்போது எழுச்சி பெற்று நடந்த மக்கள் இயக்கங்கள் மற்றும் கம்யூனிச இயக்கங்கள் பலவற்றில் உற்சாகமாகப் பங்கேற்றார். 1934ல் நடைபெற்ற வேலைநிறுத்தத்தின்போது மீண்டும் கைதுசெய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை பெற்றார். பல மார்க்ஸிய நூல்களைக் கற்றதுடன், அவற்றில் பலவற்றை மராத்தில் மொழிபெயர்த்தார்.
காங்கிரஸ் சோஷலிசக் கட்சியில்
        விடுதலைக்குப் பிறகு CSP (காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி)யோடு தொடர்பு கொள்ளப் பணிக்கப்பட்டார். இதன் மத்தியில் கவுன்சில் தேர்தலில் பணியாற்ற அவர் சோலாப்பூர் அனுப்பி வைக்கப்பட்டார். போலீஸ் அடக்குமுறைகளை மீறி கட்சி வேட்பாளர் அமோக வெற்றி பெற்றார். சிலகாலம் சோலாப்பூரில் பணியாற்றியபோது, செம்பாதி எண்ணிக்கை பெண்களாக இருந்த ஏராளமான பீடித் தொழிலாளர்கள் மத்தியில் வேலை செய்தார். சர்தேசாயின் இளைய சகோதரி மீனாட்சிகூட அங்கே அவர்களோடு பணியாற்றினார்.
        சோலாப்பூரில் ‘ஏக்ஜுட்’ (ஒற்றுபட்டிருத்தல்) என்ற மராத்தி இதழை நடத்தினார். மீண்டும் கைதாகி பீஜபூர் மற்றும் எரவாடா சிறைகளில் அடைப்பு. 1938 நவம்பரில் விடுதலையான பிறகு  பாம்பே பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டி மற்றும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 திரிபுராவிலும் கல்கத்தாவிலும் நடைபெற்ற இந்திய தேசிய மாநாடுகளில் கலந்து கொண்டார். அங்கே அவர் ஆற்றிய ஈர்க்கக் கூடியதான உரைகள் அனைவராலும் பாராட்டப்பட்டன.
        இரண்டாவது உலகப் போர் வெடித்த பிறகு அக்டோபர் 1939ல் தலைமறைவு இயக்க வாழ்வில் ஈடுபட்டார். 1940ல் பஞ்சப்படிக்காக நடைபெற்ற போராட்டங்களில் உயிர்ப்போடு பங்கேற்றார். 1940 நவம்பரில் மீண்டும் கைது செய்யப்பட்டு நாசிக் சிறையில் அடைக்கப்பட்டவர் சுமார் இரண்டாண்டுகளுக்குப் பிறகு ஜூலை 1942ல்தான் விடுதலையானார். காங்கிரசில் இருந்து செயல்பட்ட கம்யூனிஸ்ட் குழுவின் தலைவராக 1942 ஆகஸ்ட் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் பங்கேற்றார்.
முதல் இந்தியக் கம்யூனிட் கட்சி காங்கிரஸ் மாநாடு 1943
        1942 செப்டம்பரில் கட்சி மையத்திலிருந்து செயல்பட அவர் பணிக்கப்பட்டார். உ.பி., பீகார் மற்றும் பல மாநிலங்களுக்கும் சென்று கட்சிப்பணி ஆற்றினார்; அவற்றுள் கட்சி கல்விப் பணியும் ஒன்று. லகிசராய் பகுதியின் பல கிராமங்களுக்கும் பீகாரின் பல பகுதிகளுக்கும் சென்று பணியாற்றினார். கட்சிப் பத்திரிக்கையான ‘லோக்ஆயுதா’ இதழில் தொடர்ந்து எழுதினார்.
         இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை 1942 ஜூலையில் நீக்கப்பட்டது. (தலைமறைவாக இல்லாமல்) முதன்முறை வெளிப்படையாகக் கட்சிக் காங்கிரஸ் பாம்பேயில் 1943, மே 23 முதல் ஜூன் 1தேதி வரை நடைபெற்றது. அதில் பதினாராயிரம் உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய 139 மாநாட்டுப் பிரதிநிதிகள் பங்கேற்றனர். கட்சியின் பெரும் தலைவர்கள் எஸ் ஏ டாங்கே, பி சி ஜோஷி, எஸ் ஜி சர்தேசாய், டாக்டர் ஜி அதிகாரி, எஸ் வி காட்டே, இஎம்எஸ், சோகன்சிங் ஜோஷ் மற்றும் பலர் மாநாட்டு நிகழ்முறைகளில் பங்கேற்றனர். சிபிஐயின் மத்தியக் குழு உறுப்பினராகச் சர்தேசாய் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவரும் டாக்டர் அதிகாரி உட்பட்டோர் அந்தப் பொறுப்புகளில் தாங்களாகவே தங்களை விடுவித்துக் கொள்ளும் வரை நீடித்தார்கள். 1982 வரை தேசியக்குழு உறுப்பினராகச் சர்தேசாய் இருந்தார். மத்திய நிர்வாகக் குழு மற்றும் சிபிஐ மத்தியச் செயலகத்தில் நீண்ட காலம் உறுப்பினராகப் பணியாற்றினார்.
பிற செயல்பாடுகள்
        1969 மாஸ்கோவில் நடைபெற்ற உலகக் கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாடு உட்பட பல சர்வதேச மாநாடுகளில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் எஸ் ஜி சர்தேசாய் பங்கேற்றுள்ளார். மத்திய கட்சிக் கல்வி பள்ளியின் பணிகளில் தீவிரமாகப் பணியாற்றிய ஆசிரியர் அவர். 1970 முதல் 1976 வரை மாநிலங்களவை உறுப்பினராக இருந்தார். ‘வோர்ல்டு மார்க்ஸிஸ்ட் ரிவியூ’ இதழின் ஆசிரியர் குழுவில் சர்தேசாயும் ஒருவர். அவர் தமது வாழ்வின் இறுதிக் காலத்தை மகாராஷ்டிரா புனே மாவட்ட தாலேகாவ் (தாபடே) பகுதியில் கழித்தார். 1957ல் டாக்டர் கார்கி பட்கர் அவர்களை  மணந்தார்.
பல நிகழ்வுகள் குறித்த அவரது பார்வையும் எழுத்துகளும்
        ‘ஸ்டாலினிய கொள்கை வரட்டுப் பிடிவாதம்’  (‘Stalinist dogmatism’) மற்றும் (அமைப்புகளை) அதிகாரமயப்படுத்தலை வெளிப்படையாக எதிர்த்தார். மார்க்ஸியம், உருவாகும் புதிய சூழ்நிலைகளைக் கருத்தில் கொண்டு, தொடர்ந்து வளர்ச்சி அடைந்து மாறிக்கொண்டே இருக்க வேண்டும்; இல்லையெனில், அது (குட்டையாகத்) தேங்கிவிடும் என்று சர்தேசாய் வலியுறுத்தினார்.
        டாக்டர் அம்பேத்கார் குறித்து பல கட்டுரைகளை எழுதி அவரது சிந்தனைகளை மார்க்ஸ் மற்றும் பிற சிந்தையாளர்களின் கருத்துகளோடு ஒப்பிட்டார். “அம்பேத்காரும் ஷெட்யூல்டு சாதிகளும்” போன்ற தலைப்புகளில் அவர் எழுதிய கட்டுரைகள் (இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆங்கிலப் பத்திரிக்கையான) நியூஏஜ் இதழில் டிசம்பர் 1969ல் பிரசுரமானது.
        அவருடைய புகழ்பெற்ற நூல்களில் “பண்டைய இந்தியாவில் வளர்ச்சியும் பழமைவாதமும்” (‘Progress and Conservatism in Ancient India’) என்பது குறிப்பிடத்தக்கது.
        சிறந்த நல்லாசிரியரும் நல்வழிகாட்டியத் தலைவருமான எஸ் ஜி சர்தேசாய் 1996 நவம்பர் 18ம் நாள் மறைந்தார்.
        அவருடைய செயல்பாடுகளும் அறிவார்ந்த எழுத்துகளும் என்றும் நினைவில் வாழும். சர்தேசாய் நினைவுக்குச் செவ்வணக்கம்!
--தமிழில் : நீலகண்டன்,
 என்எப்டிஇ, கடலூர்


Friday 26 June 2020

டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் வெளியான தோழியர் அமர்ஜித் கவுர் பேட்டி


AITUC பொதுச் செயலாளர்
தோழியர் அமர்ஜித் கவுர்
 நன்றி : டைம்ஸ் ஆஃப் இந்தியா           
 ஜூன் 26 இதழில் பேட்டி


ஊதியம், பணிபாதுப்பு மட்டும் கேட்பதற்கல்ல தொழிற்சங்கங்கள்!
பொது நலனுக்காகச் சங்கடமான கேள்விகளையும்
அவர்கள் கேட்க வேண்டும்!
(இந்தியா முழுமைக்குமான முதல் தொழிற்சங்கம் AITUC தனது நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வரும் ஆண்டு இது. அதன் பொதுச்செயலாளர் அமர்ஜித் கவுர், தற்காலச் சூழலில் தொழிற்சங்க இயக்கத்தின் பங்கு என்ன என்பதைத் தரூஃபால் (Taru Bahl) அவர்களுடான பேட்டியின்போது துல்லியமாக வரையறுத்துச் சுட்டிக்காட்டுகிறார்)
? ஊரடங்கின்-பின், உங்கள் பார்வையில் அக்கறைகள், கவலைகள் என்ன?
       தொழிலாளர்கள் சந்தையில் முன்பே இருந்த பிரச்சனைகள் மேலும் வேலை இழப்புகள், ஊதிய இழப்பு, ஒப்பந்தப்பணிக்கு மாறுவது, ஆட்குறைப்பு, அனைத்து வகைத் தொழிலாளர்களுக்கும் —நிரந்தரமானவர்கள், காஷுவல், தற்காலிகமோ அல்லது  கால வரன்முறைப் பணியாளர்களோ எவராயினும்-- கட்டாயச் சம்பளமில்லா விடுப்பு என இவை, (ஆள்வோர்களால்) தம்பட்டமடிக்கப்படும் பணிப் பாதுகாப்பு உறுதிமொழிகளைக் கேலிக்கூத்தாக்குகின்றன.
        தொழிலாளர் சட்டங்களை மாற்றுவது, அவர்களின் அடிப்படையான ஊதிய உரிமை, மருத்துவப் பாதுகாப்பு, போனஸ் மற்றும் மிகுதிநேரப்படியை மறுப்பதற்குக் கோவிட்-19 ஒரு வசதியான சால்ஜாப்பாகப் பயன்படுத்தப்படுகிறதா என்ற கேள்வி எழுகிறது. ’ஒரு சட்டம், ஒரு நாடு’ என்ற தத்துவத்தை அனுசரிக்கிறோமா இல்லையா? மத்திய அரசு சொல்லியபடி உ.பி., மத்திய பிரதேசம், குஜராத் மாநில அரசுகள் தொழிலாளர் சட்டங்களைத் திருத்துவதிலும் அவற்றை இடைநிறுத்தி வைப்பதிலும் ஈடுபடுகின்றன. சட்டப்படியான 8மணிநேர வேலைநேரம் அதிர்ச்சிதரும் வகையில் 12 மணியாக, அதைவிட மோசமாக அதிகரிக்கப்பட்டது. பணிநேர உத்தரவை இராஜஸ்தான் அரசு திரும்பப் பெற்றுவிட்டது.
        பொருளாதார நடவடிக்கைகளை மீண்டும் துவக்குவதற்கு இந்த மாற்றங்கள் எதுவும் தேவையே இல்லை. மாறாக இந்த மாற்றங்கள் உண்மையில் ‘வாடகைக்கு எடு, பயன்படுத்து, தூக்கி எறி’ என்ற முறையைக் கொண்டுவரவும், லாபத்தை உச்சபட்சமாக அதிகரிக்கவும், தொழிலாளர் செலவுகளை வெட்டுவதற்கும், கூட்டுபேர உரிமை மற்றும் சங்கம் அமைக்கும் உரிமைகளை முடக்குவதற்குமே வழியமைத்துத் தருகின்றன.
? உங்களுடைய உடனடியான முன்னுரிமையுள்ள அடுத்த நடவடிக்கைகள் என்ன?
        தொழிலாளர் சட்டங்களில் மாற்றங்கள் மற்றும் குறுங்குறி (Codification) ஆக்கல் நிறுத்தப்பட வேண்டும். சமீபத்தில் பிரகடனம் செய்யப்பட்ட அவசரச் சட்டங்கள் உத்தரவுகள் அனைத்து திரும்பப்பெற்று, அரசும், பணியமர்த்துநர்களும் தொழிலாளர் நலன்களை மனதில் கொள்ள வேண்டும்.
        இரண்டாவது, முக்கியமாகப் பட்டினிச் சூழ்நிலை பற்றி கவனம் செலுத்தப்பட வேண்டும். இன்னார் இனியார் எனப் பார்க்காது அனைவருக்கும் ரேஷன் அட்டைகள் வழங்கப்படுவதுடன், அதற்கேற்ப உணவுப் பொருட்களும் மாநில அரசுகளுக்கு உறுதி செய்யப்பட வேண்டும். இந்த நடவடிக்கை கிராமப்புற மற்றும் நகர் புறத்து மக்கள், திரட்டப்பட்ட மற்றும் திரட்டப்படாத தொழிலாளர்கள் அனைவரையும் உள்ளடக்கியதாக அமைய வேண்டும்.  அனைத்துத் தொழிலாளர் நலன்களையும் பாதுகாப்பதான விரிவான சமூக உத்தரவாதம் / பாதுகாப்பு வலைப்பின்னல் அமல்படுத்தப்படவேண்டும்.
        மூன்றாவது, 6மாத காலத்திற்கு மக்கள் கையில் ரொக்கத் தொகை வழங்க வேண்டும். (இந்தப்பணம் அத்தியாவசியப் பொருட்கள் வாங்கப் பயன்படுத்தப்பட்டு சந்தையில் சுழற்சிக்கு வந்து மீண்டும் பொருளாதார நடவடிக்கைகளை உண்மையில் ஊக்கப்படுத்தும் என்பது பலராலும் விளக்கப்பட்டுள்ளது). வேலையைப் பொருத்தவரை ஊதியம் பராமரிக்கப்பட வேண்டும்; இன்றைய சூழ்நிலையில் வாழ்வாதாரம் பறிக்கப்பட்ட திரட்டப்படாத மற்றும் அமைப்புசாரப் பிரிவுகளில் பணியாற்றுவோர்க்கு மாதம் ரூ7,500/= வழங்க வேண்டும். இது பொருளாதாரத்தை மீண்டும் செயல்பட உதவும். எவர் ஒருவரும் வேலை இழக்கக் கூடாது. சிறு,குறு தொழிலங்களில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு நான்கு ஐந்து மாதங்களுக்கு ஊதியம் வழங்க மத்திய அரசு முன்வருமானால், அந்தத் தொழில் முனைவோரும் எவர் ஒருவரையும் வேலையிலிருந்து விரட்ட மாட்டார்கள். இந்திய கிராமப்புறத்தைப் பொருத்து, சிறு, குறு, நடுத்தர மட்ட விவசாயிகள் பாதுகாக்கப்படவும், அவர்களுக்கு இடுபொருள்கள் மானிய விலையில் வழங்கப்படவும், விளைபொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலை வழங்குவதாலும் அவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும். மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதியளிப்பு திட்டத்தின் கீழ் கூடுதல் நிதி ஒதுக்கப்பட வேண்டும்; அதன் பணிகள் பரவலாக்கவும், வேலைநாட்களை 200 ஆக உயர்த்தவும் மற்றும் கிராமப்புறத்தில் இன்றைய பணிவாய்ப்பு கூடுதலாக இருப்பதைச் சமாளிக்கும் வகையில் மாநிலத்தின் குறைந்தபட்ச கூலி பொருந்துவதாகவும் செய்ய வேண்டும்.
        தொழிலாளர்கள் மற்றும் ஏழைப்பிரிவு மக்கள் வெளிப்புறச் சிகிச்சை பெறுவதற்கு வசதியாக ஆயுஷ்மான் பாரத் அட்டை விதிகளை ஏன் திருத்தக் கூடாது? ஏனெனில் தற்போதைய திட்டத்தின்படி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்ட சிகிச்சைகளுக்கான செலவுகள் மட்டுமே, அதுவும் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டு பெற முடியும். இந்திய கிராமப்புற மற்றும் நகர்புறத் தொழிலாளர்களின் நலன்களைப் பாதுகாக்கும் வகையில் பிஎம் கேர்ஸ் நிதி உண்மையில் மேலும் பங்காற்றுவதாக வேண்டும்.
?தொழிலாளர் வர்கத்தின் நலன்களைப் பாதுகாக்கத் தொழிற்சங்க இயக்கத்தை மறுபடைப்பூக்கமுடையதாக மாற்றியமைப்பதற்கான தருணம் வந்து விட்டதா?   
        தேசிய, மாநில மற்றும் (தொழில்) பிரிவு மட்டங்களில் தொழிற்சங்கங்கள் ஒன்றிணைவதற்கான செய்தியை உயர்த்தித் தாங்கிப் பிடித்துச் செல்ல வேண்டும். வேறுபட்ட பிரிவுகளைப் பிரதிநிதித்துவம் செய்வோர் எதிர்காலத்தில் ‘ஒரு தொழிற்சாலை, ஒரு சங்கம்’ என்பதைச் சாதிக்கும் திசைவழியை நோக்கி முயல வேண்டும்.
         “எப்படிப் பேசாமல் மௌனமாக இருந்துவிடக் கூடாது” என்பதைச் சமூகத்தின் மற்ற பிரிவு மக்களுக்கு எடுத்துக் காட்டுவதோடு மட்டுமே தொழிற்சங்கங்களின் கடமைப் பொறுப்பு முடிந்து விடாது; மாறாக, எப்படித் தைரியமாகப் “போராட்டங்களைத் திரட்டி அமைப்பது’‘ என்பதை நிகழ்த்திக் காட்ட வேண்டியதும் தொழிற்சங்கங்களின் கடமைப் பொறுப்பாகும். தொழிலாளர்களை, நாட்டின் செல்வாதாரக் குவிப்பு மற்றும் மறுபங்கீடு குறித்த அனைத்துப் பிரச்சனைகளையும் பாதிக்கும் அரசின் அரசியல் முடிவுகளை அவர்கள் கேள்வி கேட்க வேண்டும். நாம் நம்முடைய ஊதியம், ஊதிய உயர்வு, பணிகாப்பு முதலியவற்றை மட்டும் வெறுமே பேசுபவர்கள் அல்ல. ‘ஒருவன் அல்ல தொழிலாளி, ஒன்றுபட்டவன் தொழிலாளி’ என்ற வகையில் தொழிலாளர்களைப் பிரதிநிதித்துவப் படுத்தும் நாம் ஓர் அமைப்பாக, ஆள்வோர்களிடம் சங்கடமான கேள்விகளைக் கேட்க வேண்டும்; பேரளவிலானப் பொது நன்மையை முன்வைத்து எழுப்பப்படும் எதிர்கருத்து மதிக்கப்பட வேண்டும் என்ற ஒரு பண்பாட்டு முறையை நாம் உண்டாக்க வேண்டும்.
? பணி மற்றும் வாழ்வாதாரத்திற்கான பாதுகாப்பின்மை வளர்ந்துள்ள தற்போதைய சூழலை நாம் தவிர்த்திருக்க முடியுமா?
        ஆம், முழுமையாக முடியும் என்பதே பதில். அதிகாரத்தில் உள்ளவர்கள் அரசியல், மதம், அடையாளச் செயல்பாடுகள் மற்றும் பிரச்சாரத்தை முன்னுக்கு எடுத்து வந்தார்கள்; அதற்கு மாறாக, ஆதரவு, கருணை, உற்சாகமூட்டல், நம்பிக்கை வளர்க்கும் முன்னெடுப்புகளுடன் சமூக ஒருங்கிணைப்பைப் பலப்படுத்தி ஏற்படுத்தி இருப்பார்களானால், நாடு சமீபத்தில் கேட்டப் புலம் பெயர் தொழிலாளர்கள் குறித்த இந்திய கதைகளின் நிலைமை முற்றிலும் வேறாக இருந்திருக்கும்.
        இன்னும் காலம் கடந்து தாமதமாகி விடவில்லை. தேசிய ஊரடங்கின்போது அரசு ஆலோசகர்கள் கூறியதற்கு மாறாக, கூட்டம் கூட்டமாகத் தொழிலாளர்கள் லே-ஆஃப் செய்யப் பட்டார்கள். 150 ஆண்டுகால நெடிய போராட்டங்களால் இந்திய உழைக்கும் வர்க்கம் சாதித்துப் பெற்ற உரிமைகளான தொழிற்சங்கச் சட்டம் 1926, தொழிற் தகராறு சட்டம், குறைந்தபட்ச ஊதியச் சட்டம், தொழில் பழகுநர் சட்டம், இந்திய ஒப்பந்தத் (தொழிலாளர்) சட்டம், இஎஸ்ஐசி, இபிஎஃப்ஓ மற்றும் பிற உரிமைகளும் சலுகைகளும் அடித்துச் செல்லப்பட்டு, நமது தேசத்தை 19ம் நூற்றாண்டின் கொத்தடிமை மற்றும் சுரண்டல் இருள் வெளிக்குத் தள்ளப்படுகிறார்கள்.
        இவை அனைத்தும் தடுத்து நிறுத்தப்பட வேண்டும், 
        நிறுத்தப்பட முடியும்!
--நன்றி : டைம்ஸ் ஆஃப் இந்தியா
--தமிழில் : நீலகண்டன்,
 என்எப்டிஇ, கடலூர்  


Tuesday 23 June 2020

சி அச்சுத மேனன் -- அர்ப்பணிப்பின் உறைவிடம்


நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :
சில சித்திரத் சிதறல்கள் -1
       
        சி. அச்சுத மேனன் : அர்ப்பணிப்பின் உறைவிடம்

--அனில் ரஜீம்வாலே
       இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற நாட்டின் முதல் முதலமைச்சர் சி. அச்சுத மேனன். அவருடைய பெயர் தூய்மையும் நேர்மையும் உடைய ஊழல் அற்ற ஆட்சி, மிக முற்போக்கான நிலச்சீர்திருத்தங்கள், ஏழைகளின் வாழ்வில் பெரும் மாற்றம், அடிப்படை ஆய்வு நிறுவனங்கள் போன்றவற்றோடு பிரிக்க முடியாதபடி பிணைக்கப்பட்டுள்ளது. நேர்மைக்கும் அர்ப்பணிப்பிற்கும் அவர் ஓர் எடுத்துக்காட்டு உருவகம், அரசியலில் மிக உயர்ந்த, புதிய தரத்தை ஏற்படுத்தி நிறுவியவர். ஒரு முதலாளித்துவ ஆட்சிமுறைக்கு உட்பட்டும் எவ்வளவோ சாதிக்கலாம் என்பதை எடுத்துக்காட்டிய அச்சுத மேனன், மக்களுக்கு ஆதரவான பல முற்போக்கான நடவடிக்கைகளைச் செயல்படுத்தியவர்.  
இளமைக்காலமும் அரசியலும்
        செலாத் அச்சுதமேனன் நடுத்தர வர்க்கக் குடும்பத்தில், முந்தைய கொச்சி மாநில திருச்சூரில் 1913 ஜனவரி 10ம் நாள் பிறந்தார். மெட்ரிக் தேர்வில் மாநிலத்திலேயே முதல் இடம் பெற்று, மெட்ராஸ் பல்கலைக் கழக இளங்கலை (கணிதவியல்) பட்டப்படிப்பில் முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். மிக அதிகமான மதிப்பெண்கள் பெற்று சட்டப் படிப்பில் நுழைந்து (பிரிட்டீஷ் இந்தியாவின்) மெட்ராஸ் மாகாணத்திலேயே பாஷ்யம் அய்யங்கார் தங்கப் பதக்கத்தை வென்றார்.
        சட்டத் துறையில் சேர்ந்தாலும் அது, அவரது விருப்பத்திற்கு உகந்ததாக இல்லை. இதன் மத்தியில் சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் தொடர்பு ஏற்பட்டு 1935ல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்; அதே வருடத்தில் முதலில் திருச்சூர் மாவட்டக் காங்கிரஸ் செயலாளராகி, பின்னர் அதன் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடுத்த ஆண்டே கொச்சி மாநில காங்கிரஸ் கமிட்டிச் செயலாளர் ஆனார்.

        காங்கிரஸ் தலைவர் வி.ஆர் கிருஷ்ணன் எழுத்தச்சன் அவர்களுடன் இணைந்து கொச்சியில் விவசாயிகளைத் திரட்டினார். குத்தகை கால நிர்ணயம் மற்றும் நியாயமான குத்தகை கோரி முதலாவது கிஸான் பேரணியைக் கொச்சி மாநிலத்தில் –திருவில்வாமல முதல் எர்ணாகுளம் வரை—நடத்தினார். மற்றவர்களுடன் இணைந்து அவர் மற்றுமொரு பேரணியைச் செருந்துருத்தி முதல் எர்ணாகுளம் வரை, ஆலய நுழைவு கோரிக்கையை முன்வைத்து நடத்தினார். 
        சிங்கப்பூரிலிருந்து, சோஷலிச அறிவாயுதத்தைத் தாங்கி, அப்போதுதான் நாடு திரும்பி இருந்த புகழ்பெற்ற கே.கே வாரியாருடன் சேர்ந்து திருச்சூர் தொழிலாளர் சகோதரர்களுடனும் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.
1937ல் நடைபெற்ற கொச்சி மாநில அனைத்து அரசியல் கட்சிகளின் மாநாட்டின் வரவேற்புக்குழு செயலாளராக அவர் செயலாற்றினார்.  காங்கிரஸ் கட்சிக்குள் இருந்து செயல்பட்ட காங்கிரஸ் இடதுசாரி அணியில் சேர்ந்த அவர் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியோடு தொடர்பு கொண்டார். போருக்கு எதிராகப் பிரச்சாரம் செய்ததற்காக அச்சுத மேனன் முதன்முறையாகக் கைது செய்யப்பட்டு ஓராண்டு சிறை தண்டனை பெற்றார். 1942 (சுதந்திரப் போராட்ட) இயக்கத்தில் பங்கு பெற்று மீண்டும் கைது, ஓராண்டு சிறை. சிறையில் அவர் புகழ்பெற்ற எழுத்தாளர் ஹெச் ஜி வேல்ஸ் எழுதிய “சுருக்கமான உலக சரித்திரம்” புத்தகத்தை மலையாள மொழியில் ‘லோக் சரித்திர சங்கிரகம்” என்று மொழி பெயர்த்தார். அவருடைய இரண்டாவது புத்தகம் “சோவியத் லேண்ட்” 1943ல் வெளியானது.
சிபிஐ கட்சியில் இணைதல்
        1941ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்து விரைவில் கட்சியின் கொச்சி மாநிலக்குழுவின் செயலாளர் ஆனார். பின்னர் திருவான்கூர் – கொச்சி சிபிஐ கட்சியின் செயலாளர் ஆகி, 1949 வரை கட்சிச் செயலாளராக நீடித்தார்.
        அச்சுத மேனன் 1948 கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது கட்சி காங்கிரஸ் மாநாட்டில் கொச்சியின் 8 பிரதிநிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்டு, வாக்கெடுப்பில் ‘பிடிஆர் பாதை’க்கு எதிராக அவர் வாக்களித்தார். மதராஸ் ரயில் நிலையத்திலிருந்து ஏராளமான பிரதிநிதிகள் வண்டியில் ஏறினர். அது ஏறத்தாழ பாதி தலைமறைவு வாழ்க்கைக் காலம். எனவே அச்சுத மேனன் மாறுவேடத்தில் வங்காள வேட்டி மற்றும் நீண்ட குர்தாவை அணிந்திருந்தார்!
        1948 முதல் 1951 வரை அவர் தலைமறைவு வாழ்க்கையில் இருந்தபோது கேரள மாநில அமைப்புக் குழுவில் அச்சுத மேனன், இஎம்எஸ், என்.சி சேகர், கே.சி ஜார்ஜ், கே.வி பட்ரோஸ், எம்.எஸ் தேவ்தாஸ் முதலானோரும் 1950ல் இணைந்த பி.கே வாசுதேவன் நாயரும் இடம் பெற்றிருந்தனர். கட்சி பின்பற்றும் பாதையைக் கேள்விகேட்டு அச்சுத மேனன் ஓர் ஆவணத்தைத் தயாரித்து மேலும் சில கேள்விகளை எழுப்பினார். ரஷ்ய பாதை அல்லது சீனப் பாதை என்பதற்குப் பதிலாக, புரட்சிக்கான இந்தியப் பாதை இருக்க வேண்டும் என அவர் வற்புறுத்தினார். கே.சி. ஜார்ஜ் மற்றும் என்.இ பலராம் அவரை ஆதரித்து அவருக்கு உதவினர்.
அந்த அறிக்கையோடு அச்சுதமேனன் மத்திய குழுவிற்கு ஒரு கடிதத்தையும் அனுப்பினார். அதில், அப்போது வெளியிடப்படும் இந்திய அரசமைப்புச் சட்டம் குறித்தும் பரிசீலிக்க வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டினார். (அப்படிச் செய்தால்) அது இந்தியக் கம்யூனிஸ்ட்களுக்கு வெளிப்படையாகச் செயல்படுவதற்கான ஒரு வாய்ப்பை வழங்கக் கூடும். அவருடைய தரப்பு கருத்துகளைக் கட்சித் தலைமை நிராகரித்து, ஏற்க மறுத்தது. இந்தியா ‘உண்மையான’ சுதந்திரத்தை அடையாத காரணத்தால் இந்த ‘அரசியலமைப்புச் சாசனத்தால்’ என்ன பயன்? என்று வினவிய கட்சியின் (மத்தியக் குழு)  தலைமை, அச்சுத மேனனின் கருத்தை ஆட்சேபித்தது.
தேர்தல்களில் கட்சி பங்கேற்பு
        இதன் மத்தியில் B T ரணதிவே கட்சித் தலைமைப் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டு, அடுத்து இடையே சி.இராஜேஸ்வரராவ், பின் அஜாய் கோஷ் சிபிஐ பொதுச்செயலாளர் ஆனார்கள். மெதுமெதுவே கட்சியின் பாதை நன்மை நோக்கி மாறத் துவங்கி, தேசிய அரசியல் மையநீரோட்டத்தில் சேர்ந்தது. 1952ன் முதல் பொதுத் தேர்தலில் போட்டியிடுவதெனக் கட்சி முடிவு செய்தது. அச்சுத மேனன் அப்போது சிறையில் இருந்தபோதும், மாநிலச் சட்டமன்றத்திற்குத் தேர்வானார். 1957, 60, 69 மற்றும் 1970 ஆண்டுகளின் அடுத்தடுத்தச் சட்டமன்றத் தேர்தல்களிலும் அவர் வெற்றி பெற்றார். 1968ல் மாநிலங்கள் அவையின் பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்த்தெடுக்கப்பட்டார். ஆனால் அடுத்த ஆண்டே 1969ல் மக்களவையிலிருந்து பதவி விலகக் கேட்டுக்கொள்ளப்பட்டார்; காரணம், கேரள மாநில முதலமைச்சர் பொறுப்பை அவர் ஏற்க வேண்டியிருந்தது.
கேரளாவின் முதலமைச்சராக
        இந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட் அமைச்சரவை 1957ல் முதலமைச்சர் இஎம்எஸ் தலைமையின் கீழ் அமைக்கப்பட்டது அனைவரும் அறிந்ததே. அந்த அமைச்சரவையில் அச்சுதமேனன் நிதி மற்றும் வேளாண்துறை அமைச்சராக்கப்பட்டார். இரண்டே ஆண்டு குறைந்த காலத்தில் சில நல்ல நடவடிக்கைகளை எடுத்தார். அந்த அரசு 1959ல் ஜனநாயக விரோதமாகக் கலைக்கப்பட்டது. 1969ல் சி அச்சுத மேனன் சட்டமன்றக் கட்டட அறை ஒன்றில் அமர்ந்திருந்தபோது இஎம்எஸ் தலைமையிலான மற்றொரு அமைச்சரவையின் பதவி விலகல் அறிவிக்கப்பட்டது. இங்கே அந்த நெருக்கடியின் விவரங்களுக்குள் நாம் செல்லப் போவதில்லை. ஒரு வாரத்திற்குள் புதிய அரசு ஒன்றிற்குத் தான் தலைமை ஏற்கக் கேட்டுக் கொள்ளப்படுவோம் என்று அச்சுத மேனன் எதிர்பார்க்கவே இல்லை! அவர் முதலமைச்சர் ஆக்கப்பட்டார். பின்னர் அவரது அமைச்சரவையில் காங்கிரஸ் கட்சியும் சேர்ந்து கொண்டது. உண்மையில் அந்த அரசில் காங்கிரஸே பெரிய கட்சி என்றபோதும், முதலமைச்சர் பதவி அச்சுத மேனனிடம் சென்றது. அந்த அளவு அவரது கீர்த்திமை மேன்மையும் நேர்மையும் இருந்தது. கேரளச் சட்டமன்ற வரலாற்றில் முதன் முறையாக முழுமையான ஐந்தாண்டுகள் நிறைவு செய்த முதல் முதலமைச்சர் அவர். அந்தப் பொறுப்பில் ஏழு ஆண்டுகள் இருந்தார்.
மாதிரி முதலமைச்சர்
        நாடு முழுமைக்கும், நம்பிக்கை நேர்மைக்கு ஒரு முன்மாதிரி எடுத்துக்காட்டு, அச்சுத மேனன் தலைமையிலான அரசு. அந்த அரசு, இந்தியாவில் பெரிதும் முழுமையான நிலச் சீர்திருத்தங்களை மேற்கொண்டது. அதன் காரணமாக விவசாயக் கூலித் தொழிலாளர்கள் என்ற வர்க்கமே இல்லாது ஆக்கப்பட்டது. இந்தச் சாதனை எவராலும் சாதிக்கப்படாத ஒன்று. இது எப்பேர்ப்பட்டச் சாதனை என்பதை ‘வண்மை இல்லை, ஓர் வறுமை இன்மையால் ….உண்மை இல்லை, பொய் உரை இலாமையால்’ என்ற கம்பன் பாடல் கூறும். அதுபோலக் கூலிக்கு நிலத்தை உழுதுவந்த சுமார் 25 லட்சம் உழவர்கள் நில உரிமை  பெற்று உழுதவனுக்கு நிலம் சொந்தமாக்கப்பட்டது. காடு சார்ந்த மற்றும் பிற நிலங்கள் –பிர்லாக்களின் 30ஆயிரம் ஏக்கர் நிலங்களும் உட்பட-- லட்சக் கணக்கான ஏக்கர் நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டு, வீடமைந்த நிலங்களுக்கு விவசாயக் கூலிகள் உரிமையாளர் ஆக்கப்பட்டார்கள்.
        நாட்டின் முதன் வகைப்பட்டதாய் முதன் முதலில் வீடற்றவர்களுக்கு ஒரு லட்சம் வீடுகள் அரசால் கட்டித் தரப்பட்டன. பின்னர் மேலும் கூடுதலாக வீடுகள் கட்டப்பட்டன. தொழிலாளர்களுக்குப் பணிக் கொடை (க்ராஜூட்டி) உரிமை உள்பட வேறுபல முக்கிய நடவடிக்கைகளையும் அந்த அரசு மேற்கொண்டது.
        இவற்றைத் தவிர, விவசாயப் பல்கலைக் கழகம், வளர்ச்சிக்கான மையம், நீர் ஆதார மேம்பாட்டு மையம், காடுகள் ஆராய்ச்சி நிறுவனம், பூமி குறித்த ஆய்வுக்கான ‘புவி அறிவியல் மையம்’ போன்ற பல எண்ணிறந்த நிறுவனங்களை  அவர் நிறுவினார்.
        ஒவ்வொருவராலும் மிக உயர்வாக மதிக்கப்பட்ட அச்சுத மேனன், இன்றும் பரவலாக மரியாதைக்குரியவராகத் திகழ்கிறார். வாழ்நாள் முழுதும் நேர்மை, உண்மை, பணியில் அர்ப்பணிப்பு, நேரம் தவறாமை மற்றும் குறைந்த காலத்தில் நிறைவாகச் சாதித்தவராக இருந்தார். குறைவாகப் பேசும் பழக்கமுடையவர் எனினும், அவரது பேச்சில் குறைவான சொற்கள் நிதானமாய், பொருள் பொதிந்ததாய், மாற்றாரை ஏற்கச் செய்வதாய் இருக்கும். திருவள்ளுவரும் ‘திண்ணமாகச் சில சொற்களால் விளக்கத் தெரியாதவர்களே பல சொல்ல விரும்புவார்’ என்பார் (குறள் 649). இந்தியா இதுவரை பெற்ற ஆகச் சிறந்த முதலமைச்சர் அவர். ஆனால் துரதிருஷ்டம், அவரது சாதனைகளை நாம் போதுமான அளவு பிரச்சாரம் செய்யவில்லை.
(திவான் சி.பி.ராமசாமி ஐயருக்கு எதிராக 1946-ல் நடைபெற்ற) புன்னப்புரா -- வயலார் போராட்டங்கள் குறித்து கே.சி.ஜார்ஜ் எழுதிய புத்தகத்திற்கு அறிமுக உரை எழுதிய அச்சுதமேனன் அதில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்: “கே.சி.ஜார்ஜ் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மகாத்மா காந்தி. ஏசு கிருஸ்துவுக்கு முன்னோடியான ஜான் (John the Baptist), இயேசுபிரான் குறித்துச் சொல்லும்போது, நான் அவரது காலணிகளின் நாடாவை அவிழ்க்கும் அருகதை உடையவன் அல்லேன்’ என்பது போலத்தான் நானும் சொல்ல வேண்டும். இருந்தாலும் புதிய தலைமுறைக்குக் கே.சி.ஜார்ஜ் அவர்களை நான் அறிமுகம் செய்கிறேன்.”
சோவியத் யூனியன் குறித்து
1956ல் ஹங்கேரியில் சோவியத் யூனியனின் ஆயுதத் தலையீட்டை அச்சுத மேனன் கூர்மையாக விமர்சனம் செய்தார். மேலும் அது பற்றி கட்சி தலைமைக்கும் எழுதினார். ஆனால் அதன் மீது எதுவும் நடைபெறவில்லை. ஆனால் அதன் பின்னர் 1968ல் செக்கோஸ்லாவாக்கியாவில் சோவியத்தின் ஆயுதத் தலையீடு பரவலான விவாதப் பொருளானது. கட்சி ஏறத்தாழ செங்குத்தாக இரண்டு செம்பாதியாகப் பிளவு பட்டது. அச்சுத மேனன் மீண்டும் சோவியத் நடவடிக்கையைக் கடுமையாக எதிர்த்தார்.
        சோவியத் சோஷலிசக் குடியரசின் பொதுவான திசைவழிப் பாதையை மேம்படுத்த மிகைல் கோர்பசேவ் எடுத்த முயற்சிகளை அவர் ஆதரித்தார். அவர்கள் தங்கள் தவறுகளை தேடி அடையாளப்படுத்தவும் திருத்தவும் முயல்கிறார்கள் என்றார். புரட்சியாளர்கள் கட்டாயம் தங்கள் தவறுகளை ஆய்ந்தறிந்து அவற்றைத் திருத்திச் சரிசெய்தல் வேண்டும்.
 இந்தியப் பண்புக்கூறுகளை ஆழ்ந்து படித்தறிந்து இந்திய நிலைமைகளுக்கு ஏற்ப  மார்க்ஸியத்தை வளர்த்தெடுக்க வேண்டும் என அச்சுத மேனன் வலியுறுத்தினார். சோஷலிசத்திற்கான இந்தியப் பாதையைக் கண்டறிதல் வேண்டும். மாறுபடும் அனைத்து கருத்துகளையும் ‘முதலாளியக் கடைச் சரக்கு’ என நிராகரித்தல் தவறான போக்கு. காரல் மார்க்ஸைத் தவிரவும் கம்யூனிஸ்ட்கள் சுவாமி விவேகானந்தர், மகாத்மா காந்தி, அம்பேத்கர், ஆச்சார்ய நரேந்திர தேவ், ஸ்ரீ நாராயண குரு, அரவிந்த கோஷ், (தந்தை பெரியார்) போன்ற பிற பெருமக்களின் சிந்தனைகளையும் அவசியம் கற்க வேண்டும். காந்தியின் வன்முறையற்ற அகிம்சை வழியிலான பாதை குறித்து ஆழ்ந்து நம் கவனத்தில் கொள்ளுவதற்கான தேவை உள்ளது.
படைப்பூக்கச் செயற்பாடுகள்
இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயலகம், மத்திய நிர்வாகக் குழு மற்றும் தேசியக் குழுவில் நீண்டகாலம் பணியாற்றியவர் அச்சுத மேனன். அவரைப் பற்றி குறிப்பிடும் சி இராஜேஸ்வரராவ், ‘அவர் மிகமிக நேர்மையானவராக இருந்ததால் அவரால் வெற்றிகரமான முதலமைச்சராக விளங்க முடிந்தது’ என்றார்.
1977க்குப் பிறகு கட்சியின் முன்னணி பதவிகளிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, தனது நேரத்தை சமூகப் பணி, இதழியல் மற்றும் படிப்பதில் செலவிட்டார். கடைசி பத்து வருடங்களில் COSTFORD (கிராமப்புற முன்னேற்றத்திற்கான அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையம்) என்ற லாபநோக்கமற்ற அமைப்பை 1985ல் நிறுவினார். அவரது ஆர்வத்தின் பரப்பும் செயல்பாடும், சூழலியல், விஞ்ஞான தொழில்நுட்பம், (மையத்தில் அதிகாரம் குவிக்கப்படாத) பரவலாக்கப்பட்ட ஜனநாயகம், பெண்கள் முன்னேற்றம், எழுத்தறிவு மேம்பாடு மற்றும் பலவாக, மிக விரிவானது. அவருடைய பெயரால் சி அச்சுத மேனன் பவுண்டேஷன் என்ற அமைப்பு நிறுவப்பட்டுள்ளது.
கேரள சாகித்ய அகாதமி விருது, சோவியத் லேண்ட் நேரு விருது முதலிய விருதுகளை அவர் பெற்றார். சி அச்சுதமேனன் திருவனந்தபுரத்தில் 1991 ஆகஸ்ட் 16ம் நாள் மறைந்தார்.
  வாழ்க அச்சுத மேனன் புகழ்!
                                                                           --நன்றி நியூஏஜ்
--தமிழில் : நீலகண்டன்,
  என்எப்டிஇ, கடலூர்