Friday 27 August 2021

அனில் ரஜீம்வாலே எழுதிய பொருளாதாரக் கட்டுரை -- தமிழாக்கம்

 


தங்கு தடையற்ற நிதிமயமாக்கல் பொருளாதாரத் தேசியத்தின் மீது மதவாத பாசிசம் நடத்தும் தாக்குதல்

--அனில் ரஜீம்வாலே

          விடுதலை பெற்ற இந்திய மாளிகை பொருளாதாரத்தின் அழகிய முகப்பான பொதுத்துறை நிறுவனங்களைப் பிய்த்தெறிவதில் ஆர்எஸ்எஸ் – பாஜக ஆட்சி மும்முரமாக ஈடுபட்டிருக்கிறது; அந்த இடத்தில் கார்ப்பரேட் நிதிமூலதனத்தின் மேலாதிக்கத்தை வைக்க நினைக்கிறது. இதற்கு, 1991ம் ஆண்டின் விவாதத்திற்குரிய தாராளமயக் கொள்கை அமலான ‘30 வது ஆண்டு’ தினத்தைப் பயன்படுத்தி ‘நேருவினது பொருளாதாரத் திட்ட வழிமுறை’யைத் தாக்கவும், தங்களது சொந்த ‘புதிய’ பொருளாதாரக் கொள்கைகளை நியாயப்படுத்தவும் பாஜக முயல்கிறது. பாஜகவின் வலதுசாரி பிற்போக்கு பொருளாதாரக் கொள்கைகள் இந்தியப் பொருளாதாரத்திற்கு முழுமையான ஆபத்தாக வந்து நிற்கிறது.

            நெருக்கடி மிகுந்த பொருளாதாரத்தைத் ‘தாராளமயப்படுத்தும்’ சகாப்தத்தைத் தொடங்கி வைத்த 1991-சீர்திருத்தங்கள், தனியார்மயத்திற்கும் உலகமயத்திற்கும் வழிகோலியது. அந்த நெருக்கடியிலிருந்து வெளிவர இரண்டு வழிமுறைகள் இருந்தன: ஒன்று, தேவையான மாற்றங்களை அதற்குள்ளேயே செய்து, மாறிவரும் சூழலுக்கு ஏற்ப ‘நேருவினது பொருளாதார வழிமுறை’யைச் செழுமைப்படுத்திப் பொதுத்துறையை வலிமைபெறச் செய்வது. மற்றொரு வழி, பெரும் தேசிய மற்றும் பன்னாட்டு வணிகக் குழுமங்களுக்கு உதவும் வகையில் இந்தியப் பொருளாதாரத்தைத் திறந்துவிட்டு அன்னிய நேரடி மூலதனத்தை ஆதரிப்பது. துரதிருஷ்டவசமாக, இரண்டாவது பாதையே தேர்ந்தெடுக்கப்பட்டது.

            பொருளாதாரத்தைத் தாராளமயப்படுத்துவது எப்போதுமே எதிர்மறையானது இல்லை; சில நேரம் புதிய தொழில்நுட்பம் மற்றும் சில நுகர்பொருட்கள் (உற்பத்தி) போன்ற பிரிவுகளில் தாராளமயம் தேவைப்படலாம். வளர்ந்துவரும் உலகச் சந்தைகள், தொழில்நுட்பம் மற்றும் மூலதனத்தைத் திரட்டுவது இவற்றைக் கருத்தில் கொண்டு சில தளர்வுகள் அவசியம். பரஸ்பரம் பலனளிக்கும் அடிப்படையில், சர்வதேசக் கட்டண விகிதங்களைக் குறைப்பதும் விரும்பத்தக்கதே. ஆனால் மிகப் பெருமளவில் சலுகைகளைப் பன்னாட்டு மற்றும் பெரும் இந்திய முதலீட்டாளர்களுக்கு அளிப்பது தவறானது. இன்றைய பாஜக ஆட்சி தேசத்தின அடிப்படை பொருளாதாரக் கட்டமைப்பின் மீது  கட்டுப்பாடற்ற பிற்போக்குத் தாக்குதலை ஏவிவிட்டுள்ளது; அது அனைத்து வகைகளிலும் நெருக்கடியை உண்டாக்குகிறது.

உலகமயமாக்கலும் சர்வதேசியமயமும்

            இரண்டு கோட்பாடுகளைப் பற்றிய புரிதல் நமக்கு அவசியம். இன்றைய உலகில் இரண்டு பெரும் வளர்ச்சிப் போக்குகள் நம் கவனத்தை ஈர்க்கின்றன. ஒன்று, கடந்த 30 முதல் 40 ஆண்டுகளில், பணத்தையும் பொருட்களையும் பரிமாற்றிக் கொண்டு எப்போதுமில்லாத அளவில் மிகப் பிரம்மாண்டமாக உலகச் சந்தை வளர்ந்து வந்தது: 21ம் நூற்றாண்டின் ஒரு பத்தாண்டின் உற்பத்தி, முழுமையான 20ம் நூற்றாண்டின் உற்பத்திக்குச் சமமாக இருந்தது. உலகச் சந்தையின் இந்தச் சர்வதேசியமயத்தை அமெரிக்காவின் கொள்கை வகுப்பாளர்களும் பொருளாதார வல்லுநர்களும் பலன்களை வாரிச் சுருட்டி ஏகபோகமாக்கும் நோக்கத்தில் ‘உலகமயமாக்கல்’ என்று உருச் சிதைத்தார்கள். பொருட்கள் (பண்டங்கள்), முதலீடு, பணம் மற்றும் உழைப்பு இவற்றைச் சர்வதேசியமயமாக்குவது இந்த நிகழ்முறையின் நோக்கம்; இந்நிகழ்முறை தொழில்நுட்பப் புரட்சியுடன் இணையும்போது அது சமகாலத்தின் பலமான சக்தியாகிறது. நிதி ஏகபோகங்கள் ஒருபுறம், அதற்கு எதிரான மற்றும் ஏகபோகமற்ற சக்திகள் மறுபுறமாக இரண்டுக்கும் இடையே உலகச் சந்தை போர்க்களமாகிறது.  

            அடுத்து இரண்டாவது அம்சம், தொழிட்நுட்பப் புரட்சி மற்றும் தகவல் புரட்சி இரண்டும் எலெக்ட்ரானிக், கம்யூட்டர் புரட்சி மற்றும் இணையத்தோடு (இன்டர்நெட்) இணைந்து உலகச் சந்தையை அதிவேகமாகவும் அமைப்பு ரீதியிலும் உருமாற்றி மறுவடிவம் கொள்ளச் செய்கிறது. 21ம் நூற்றாண்டின் இருபது ஆண்டுகளிலேயே இன்டர்நெட் மொபைல், தகவல் தொடர்புக்கான முக்கிய கருவியானது மட்டுமல்ல, உற்பத்தியிலும்கூட முக்கியமானது. உள்நாட்டு மற்றும் உலகச் சந்தையில் பெரிதும் நுழைய வீடுகளிலேயே உற்பத்திச் செய்யப்படும் பொருட்களும் சிறு குறு (MSMEs) பிரிவு வர்த்தகமும் போராடுகின்றன; இப்போராட்டம் கார்ப்பரேட் உலகத்துடன் முரண்பாட்டை அதிகரிக்கின்றது. எனவே (சந்தையை ஆக்கிரமிக்க முயலும் சக்திகளுக்கு எதிராக) சந்தையை ஜனநாயகப்படுத்துவதும் முக்கியமான போராட்டமாகிறது.

GATT மற்றும் WTO

            அமெரிக்காவும் பிற மேற்கத்திய அரசுகளும் கட்டணம் மற்றும் வர்த்தகப் பொது உடன்பாடு (GATT) மற்றும் உலக வர்த்தக அமைப்பு (WTO) இரண்டையும் பயன்படுத்தி உலக ஒழுங்குமுறையை (வோர்ல்ட் ஆர்டர்) ‘உலகமயப்படுத்த’ முயன்றன. வலிமைமிக்க சில நாடுகளின் நலனுக்காக வர்த்தகக் கட்டணங்கள் மற்றும் அறிவுசார் சொத்துரிமை (IPR) சிதைக்கப்பட்டன. தொடக்கத்தில் தயங்கினாலும் வளர்ந்து வரும் நாடுகள் காட் மற்றும் உலக வர்த்தக அமைப்பில் சேர்ந்து அமெரிக்காவின் நோக்கத்தைத் தடுத்தன. காட் மற்றும் உலக வர்த்தக அமைப்பை அந்த அமைப்பிற்குள் இருந்துதான் எதிர்க்க  முடியும் என்பதை வளர்ந்துவரும் நாடுகள் உணர்ந்தன. சுமார் 200 நாடுகள் இணைந்தன.

உலக வர்த்தக அமைப்பில் அமெரிக்காவுக்கு எதிரான பல வழக்குகளில் இந்தியா வென்றுள்ளது. ஆனால் அதெல்லாம் அந்தக் காலம். பாஜக ஆட்சி அமெரிக்காவிடம் மண்டியிடும் கொள்கைகள் காரணமாக உலக வர்த்தக அமைப்பில் இந்திய நிலையைப் பலவீனப்படுத்தியது மட்டுமல்ல சில தருணங்களில் சரணடையவும் செய்தது.

பொதுத்துறையும் அரசும்

அரசு மற்றும் பொதுத் துறை நிறுவனங்களின் பங்கு பாத்திரமும் காலத்தோடு மாறத்தான் வேண்டும், உதாரணத்திற்குப் புதிய தொழில் நுட்பத்தை உள்வாங்கிக் கொள்வதைச் சொல்லலாம். அவற்றின் உச்சபட்சச் செல்வாக்கைக் கைவிடாமல் அது பரவலாக்கப்பட வேண்டும். எல்லாப் பொருட்களையும் பொதுத்துறையில்தான் உற்பத்திச் செய்ய வேண்டும் என்பது எவருடைய வழக்கும் அல்ல, அப்படி யாரும் கோரவும் இல்லை. உதாரணத்திற்குப் பொதுவான நுகர் பொருட்கள், சில எலெக்ரானிக் கருவிகள் முதலானவற்றின் உற்பத்தியில் நேரடியான அரசுக் கட்டுப்பாடோ மேற்பார்வையோ தேவையில்லை. ஆனால் அடிப்படையான தொழிற்சாலைகள், உள்கட்டமைப்புகள் பொதுத்துறையில்தான் நீடிக்க வேண்டும். அவை பிரிக்கப்படக் கூடாது.

நடுத்தர, சிறு குறு வர்த்தக நிறுவனங்கள் போன்ற பொதுத்துறை அல்லாத தொழிற்சாலைகள் மற்றும் வர்த்தகத்தின் வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் வசதி செய்து தருவதே அரசுப் பிரிவின் பணியாகும். அவற்றிற்குக் கச்சாப் பொருட்கள், மெஷினரி, உள்கட்டமைப்பு, வங்கிக் கடன் முதலானவைகள் பெறுவதில் உதவிட வேண்டும். பொதுத் துறை குறித்த முக்கியமான கேள்வி மற்றும் விவாதங்களில் கடுமையாக நடந்த அரசியல் தத்துவார்த்தக் கொள்கை போராட்டங்களே சுதந்திர இந்தியாவை அடையாளப்படுத்தின.

பொருளாதாரத் தேசியமயத்தின் மீது

பாஜக நடத்தும் தத்துவார்த்தப் பொருளாதாரத் தாக்குதல்

          பாஜக-ஆர்எஸ்எஸ் தோன்றியதுடன் முதன் முறையாக முழுமையான வலதுசாரி பிற்போக்கு அரசு மத்தியில் அமைந்தது. இந்த அரசு தேசக்கட்டுமானத்தில் ஊடுருவி, விடுதலைக்குப் பிறகு நாடு சாதித்த அனைத்து நேர்மறையான சாதனைகளையும் உடைத்து ஒவ்வொன்றாகப் பிய்த்து எறிந்து வருகிறது; ‘நேருவினது மாடல் அல்லது (வளர்ச்சிச்) சட்டகம்’ மீது முழுவீச்சில் நிதி மூலதனத்தின் தாக்குதலைக் கட்டவிழ்த்துள்ளது. ஜனசங் – ஆர்எஸ்எஸ் (தற்போது பாஜக – ஆர்எஸ்எஸ்) வழிநெடுக பொதுத்துறை நிறுவனங்கள் அடிப்படையிலான பொருளாதாரக் கொள்கைகளுக்கு எதிரான பிற்போக்கு எதிர் துருவமாக அமைந்து, எதிர்த்தே வந்துள்ளது. விடுதலைக்குப் பிறகான இந்தியாவின் எதிர்கால வரலாறு என்பது வளர்ச்சி மற்றும் பிற்போக்கு சக்திகளுக்கு இடையேயான போராட்டக் களங்களை நடத்துவதைப் பொருத்தே அமையும்.

இந்திய வளர்ச்சியில் பொதுத்துறைகள்

            இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, பிரதமர் நேரு மற்றும் ஏனைய முற்போக்குச் சக்திகள் கடுமையான போராட்டங்களை நடத்தியே பின்வரும் துறைகளில் வலிமையான பொருளாதார அடித்தளத்தை அமைத்தன: இரும்பு மற்றும் எஃகு, நிலக்கரி, எண்ணெய் மற்றும் பெட்ரோலியம், மின்சாரம், கனரகத் தொழில்கள் –- கருவிகள், இரயில்வே மற்றும் பெரும் போக்குவரத்து அமைப்புகள், முக்கியமான கச்சாப் பொருட்கள், எண்ணெய் சுத்திகரிப்பு

ஆலைகள், உலோகவியல் தொழில்கள், அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் ரசாயனங்கள் (அமோனியா, கந்தக அமிலம் போன்ற ஹெவி கெமிகல்), சுரங்கம், நீர் பாசனத் திட்டங்கள் முதலானவை பொதுத்துறைப் பிரிவில் நிறுவப்பட்டன. வேளாண்மை உட்பட இந்தியாவின் திசைவழியை நிர்ணயித்த வங்கிகள் தேசியமயத்திற்காகக் கடுமையான போராட்டங்கள் 1969ல் நடத்தப்பட்டன. இந்தியப் பொருளாதாரத்தின் ‘அதிகார உச்சத்தில்’ (கமாண்டிங் ஹைட்ஸ்) வலிமையான பொதுத்துறைகள் அமைக்கப்பட்டதன் மூலம் இந்தியா அதற்கு முன் அனுபவித்த பிற்போக்கு நிலையை வென்றது.

i)   அடிப்படைக் கட்டுமைப்புகள் ii) கனரக இயந்திர உற்பத்தித் தொழிற்சாலைகள் iii) போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு முதலானவைகள் பொதுத் துறை மற்றும் அரசுத் துறையில் ஏற்படுத்தப்பட்டன. உற்பத்திச் சாதனங்களை உற்பத்தி செய்வது வளரும் பொருளாதாரத்திற்கு மிகவும் முக்கியமானது. கனரக இயந்திரங்கள், இரும்பு மற்றும் எஃகு இவற்றோடு அடிப்படைக் கட்டமைப்புகள் ஒரு வலிமையான தேசத்தைக் கட்டியெழுப்ப அத்தியாவசியமானவை. தேசமும் தேசிய உணர்வும் வலுவான பொருளாதாரத்தை ஆதாரமாகக் கொண்டவை. வளர்ந்து வந்த முதலாளித்துவ ஏகபோகம் மேற்கண்ட முக்கியமான துறைகளைக் கபளீகரம் செய்வதைத் தவிர்க்கப் போராடுவதற்குப் பொதுத்துறைகள் வலிமையான சக்திமிக்க ஆயுதம் என்பதை நிரூபித்தன. பொதுத்துறைகள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இந்நேரம், எழுச்சிபெற்றுவரும் 75 ஏகபோகங்களின் கட்டுப்பாட்டில் இந்தியப் பொருளாதாரம் முழுமையாகச் சென்றிருக்கும். இந்திய வரைபடத்தின் முக்கிய நட்சத்திரப் புள்ளிகளாகப் பிளாய், பொக்காரோ, (பீகார் பகுசராயில் உள்ள) பரவுனி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, விசாகப்பட்டினம் எஃகு ஆலை, (கர்னாடகா சிக்கமங்களூர் மலைத்தொடரான) குத்ரேமுக் தேசியப்பூங்கா, BHEL, HCL, HAL, மதுரா எண்ணெய் சுத்திகரிப்பு, HMT முதலானவைகளும் ஆசியாவிலேயே மிகப் பெரியதும், உலகில் 4வது பெரிய அமைப்பான இந்திய இரயில்வேயும் அமைந்துள்ளன.

பொருளாதார நிதிமயமாக்கல் : பாஜக கொள்கையின் விளைவு

                 தொழில்துறை மூலதனம்  அதாவது உற்பத்திக்கான மூலதனம் மற்றும் வங்கி மூலதனம் இணைக்கப்படும் நிலையை நிதிமூலதனம் (பைனான்ஸ் கேப்பிடல்) என்று லெனின் வரையறை செய்கிறார். இன்றைய நிலையில் நிதிமூலதனம்  புதிய அம்சங்களைப் பெற்றிருப்பதால் லெனின் வரையறை மேலும் செழுமைப்படுத்தப்பட்டதாகக் கொள்ளலாம். (உற்பத்தியுடன் ஒப்பிடும்போது) தொழில்துறை மூலதனத்தில் கூடுதலாக உபரி மூலதனம் இருக்கிறது; அது உற்பத்தியிலிருந்து பறந்துபோய் யூக வணிகத்தில் ஈடுபடுத்தப்படுகிறது. இவ்வாறாக நிதிமூலதனம் மேலும் ஸ்டாக் மற்றும் பங்குகளிலும், செக்குரிட்டிகள், பாண்டுகள், (நிதி ஒப்பந்தம் மற்றும் அதன் மீது எதிர்காலத்திலும் நடக்கும் பரிவர்த்தைகளான) டெரிவிடிவ்கள், அன்னிய நேரடி முதலீடுகள் FII எனப்படும் அன்னிய நிதி நிறுவனங்கள் செய்யும் முதலீடுகள், (நீண்டகால லாபத்தை எதிர்நோக்கிச் செய்யப்படும் ஸ்டாக், பாண்ட் போன்ற நிதிசார் சொத்துகளின்) போர்ட்ஃபோலியோ முதலீடுகள், பிற நிதி சார்ந்த ஒப்பந்த ஆவணங்கள் (இன்ஸ்ட்ருமெண்ட்) முதலியன ஸ்டாக் மார்க்கெட்டிலும் வெளியிலும் முதலீடு செய்யப்படுகின்றன. உற்பத்தியிலிருந்து அல்லாமல் மாறாக ஸ்டாக் பங்குப் பரிவர்த்தனை மற்றும் யூக வணிகத்திலிருந்து நிதிமூலதனம் சூப்பர் லாபத்தை எதிர்பார்க்கிறது. இது ‘பணம் மேலும் பணம்’ வர்த்தகப் பரிவர்த்தனை மூலம் நடத்தப்படுகிறதே தவிர ‘பணம் – பண்டம்’ பரிவர்த்தனைகள் மூலம் அல்ல. (அதாவது ஒரு பங்குப் பத்திரம் கை மாறும்போது அதன் மதிப்பு சந்தை நிலவரத்துக்கு ஏற்ப உயர்கிறது. இது காகிதத்தில் இருப்பதே தவிர, உண்மையில் மூலதனம் உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட்டு உற்பத்தி அதிகரித்து அதன் மூலம் செல்வம் உயர்வதல்ல. இதில் உற்பத்தியே நடைபெறாததால் அது தொடர்பான தொழிலாளர்கள், மக்கள் என எவருக்கும் எந்தப் பயனும் இல்லை. வேலை வாய்ப்பும் உயராது).

                 நிதிமூலதனம் செல்வாக்குப் பெற்று உற்பத்தி முதலீட்டிற்கு எதிராகவும் உற்பத்தி முதலீட்டின் மீது ஒட்டுண்ணியாகவும் உரிஞ்சுகிறது. அது மிகப் பிரம்மாண்டமாக வளர்ந்து அதானிகளாகவும், அம்பானிகளாகவும் பிற புதிய மற்றும் நிதி, ஏகபோகங்களின் உருவமாக வளர்ந்து நிற்கிறது. மூலதனம், பணம் மற்றும் நிதிகள் அரசு மற்றும் உற்பத்திப் பிரிவுகளிலிருந்து பெருமளவு அசுர நிதி கார்ப்ரேட்டுகளுக்கு மாற்றப்பட்டு தற்போது வேகம் எடுத்துள்ளது. உற்பத்தியில் ஈடுபடுத்தப்பட வேண்டிய முதலீடு மடைமாற்றப்பட்டு இவ்வாறு மாறி நிற்பதே பொருளாதாரத்தை நிதிமூலதனமாக்கல் என்பதாகும்.

                 இந்த நிதி மாற்றத்திற்கு (ஃபைனான்சியல் கன்வர்ஷன்) பாஜ தலைமையிலான அரசே முக்கிய கருவி. வேளாண் பொருளாதாரத்திலிருந்து கிடைக்கும் மிகப் பெரிய லாபங்களை ஏகபோக நிதிப் பிரிவுகளுக்கு மடைமாற்றம் செய்வதால், உற்பத்தியின் அடக்கச் செலவில் நெருக்கடியை உண்டாக்குகிறது. இந்த நிகழ்முறையைத்தான் மூன்று வேளாண் சட்டங்கள் பிரதிபலிக்கின்றன. நகரமயமாக்கலும் அதன் காரணமாக விவசாய நிலப் பரப்பை இழத்தலும் லாபதை மடைமாற்றும் பாதையாகிறது.         

கரோனா பெருந்தொற்று : நிதிமயமாக்கலின் கருவி

                 எல்லா முறைகளிலும் லாபங்களைப் பணமாக்கப்பட்டச் செல்வமாக மாற்றும் நிதிமயமாக்கல், கரோனா / கோவிட் நெருக்கடியைப் புதிய கருவியாகப் பயன்படுத்துகிறது. மக்கள் மேலும் ஏழைகளாகவும் நடுத்தர சிறு குறு தொழிலகங்கள் அழிக்கப்படும்போது, நூறுகோடி சொத்துடைய பில்லியனர்கள் எப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளனர். லட்சக்கணக்கில் மக்கள் வேலை இழந்து உற்பத்தி, வங்கித் தொழில் மற்றும் நிதிநிலைமை முதலியன இந்தியாவில் நெருக்கடிகளில் சிக்கித் தவிக்கும் நேரத்தில் இது நடக்கிறது. தொழிற்சாலைகளின் லாபத்தை உற்பத்தியில் ஈடுபடுத்துவதற்கு மாறாக லாபங்கள் நிதிமூலதனம் ஆக்கப்படுவதால் உற்பத்திக்கான முதலீட்டில் பற்றாக்குறையை ஏற்படுத்தி, நடுத்தர சிறு குறு தொழிலகங்களைக் கடுமையான அபாயத்தில் தள்ளியுள்ளது.

(பொருளாதார) அதிகார மாற்றம்

                 சுதந்திர இந்தியாவில் முதன் முறையாக, பொதுத்துறைப் பிரிவிலிருந்து முழு அளவில் அதிகார மாற்றம் நிதி சார்ந்த தனியார் பிரிவுக்கு நடந்துள்ளது. பொதுத்துறை நிறுவனங்களைக்     கட்டாயமாகப் பிரிப்பதன் ஒரு பகுதியாக 2022ம் ஆண்டிற்கு 1.75 லட்சம் கோடி விற்பனை இலக்கு நிர்ணயிக்கப்பட்டடுள்ளது. நாடக பாணியில் கடந்த காலத்திலிருந்து துண்டித்துக் கொண்டு அரசுக்குச் சொந்தமான வங்கிகளில் குறைந்தபட்சம் இரண்டையும் பொதுக் காப்பீட்டுக் கழகத்தையும் அரசாங்கம் தனியார்மயமாக்கப் போகிறது. பொருளாதார நிதிநிலைக்கு ‘மாபெரும் நிதி ஊக்குவிப்பு’ என்று 2021 – 22 ஆண்டு பட்ஜெட் மார்தட்டுகிறது – அந்தச் சொற்றொடர் நம் பொருளாதாரத்தை அல்ல, நிதிமூலதனத்திற்கான ஊக்குவிப்பு என்பதன் வேறொரு பெயர்தான். அதன் கீழ் லட்சக் கணக்கான கோடிகள் ரூபாய் கொட்டப்படுகிறது.

                 அரசின் பொதுத்துறைகளை ‘யுக்திசார் விற்பனை’ (ஸ்டாடர்ஜிக் சேல்) செய்யும் திட்டத்தில் பாரத் பெட்ரோலியம் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிட் (BPCL), சிமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா (CCI), ஷிப்பிங் கார்ப்ரேஷன், (இரயில் கோச்சுகள், உதிரி பாகங்கள், சுரங்கக் கருவிகள் உற்பத்திச் செய்யும்) பாரத் எர்த் மூவர்ஸ் லிட்.,(BEML), தொழிற்சாலைகள் வளர்ச்சி இந்திய வங்கியான IDBI, (இரும்பு மற்றும் எஃகு உற்பத்தி செய்யும் ஒரிசாவின்) நீலசல் ஸ்பேட் நிகம் லிட்., முதலானவை அடங்கும். தேசத்தின் மிகப்பெரிய முதலீட்டாளரும், காப்பீட்டாளாரும், அதிக லாபம் ஈட்டும், 34 ட்ரில்லியன் ரூபாய் சொத்து மதிப்புள்ள (ஒரு ட்ரில்லியன் = நூறாயிரம் கோடி) அரசுத் துறை நிறுவனமான எல்ஐசியின் பங்குகளை விற்பதற்கு ஐபிஓ எனப்படும் ‘தொடக்கநிலை பொது முகமதிப்பை’  (பங்கிற்கான தொடக்க விலையை) அரசு வெளியிட உள்ளது. எல்ஐசி இப்போது விற்பனைக்காக உள்ளது எனில் நன்றாகச் செயல்பட்டதால் ‘தண்டிக்க’ப்பட்டிருக்கிறது!

                 இந்துஸ்தான் பெட்ரோலியம் கார்ப்ரேஷன் லிட்.,(HPCL) நிறுவனத்தின் 49சதவீதத்தை கழட்டிவிட்டதன் மூலம் அரசுக்கு மிகப் பிரம்மாண்ட தொகை கிடைத்துள்ளது : 2016-17லிருந்து வருடவாரியாக 2020-21வரை முறையே ரூ 46 378கோடி, ரூ100 642கோடி, ரூ85,063கோடி, ரூ49,828 கோடி மற்றும் ரூ18 223 கோடி கிடைத்துள்ளது –இந்தத் தொகை அனைத்தும் அப்படியே தனியார் நிதிப்பிரிவுக்கு அனுப்பப்பட்டு விட்டது. தேசியப் பணமாக்கல் பாதை (நேஷனல் மானிடைசேஷன் பைப்லைன்) என்பது அரசு மற்றும் பொதுமக்கள் முதலீட்டை நிதிமயமாக்கல் பணமாக மாற்றும் வாகனமாகும்.

’பேடு பேங்க்ஸ் Bad banks’’ : நிதி மூலதனவாதிகளின் தந்திரம்

                 பெரிய வணிகக் கம்பெனிகள் வாங்கிய கடனைத் திரும்பச் செலுத்து என அவர்களைக் கட்டாயப்படுத்துவதன் மூலமாக அல்லாமல், குயுக்தியான வழிமுறையில் வங்கிப் பிரிவின் மோசமான கடன் பிரச்சனையைத் (bad loans) தீர்க்க முனைந்துள்ளது அரசு: அதற்காக ஊர் உலகில் கேள்விப்படாத பெயரில் ’பேடு பேங்க்ஸ்’ (மோசமான வங்கிகள்) என்ற ஒன்றை நிறுவுவார்களாம்! (நல்ல வங்கிகள் கொடுத்த கடனை மோசமான வங்கிகள் தீர்த்து வைக்குமாம்). கடைந்தெடுத்த பொய்யனுக்கு அரிச்சந்திரன் எனப் பெயர் சூட்டுவதைப்போல ‘சொத்து மேலாண்மை’ (அஸட் மேனேஜ்மெண்ட்) அல்லது ’புனர் நிர்மாண நிறுவனம்’ (ரீகன்ஸ்ட்ரக்க்ஷன் கம்பெனி) நொடித்துப்போன நிறுவனங்களின் ஆஸ்தியைக் (ஸ்ட்டிரஸ்டு அஸட்ஸ்) கைப்பற்றி ஆர்வமுள்ள முதலீட்டாளர்களுக்கு அதனை விற்பனை செய்து பைசல் செய்யுமாம். அதுமட்டுமல்ல, அதற்காக வங்கிகள் ஈக்குவிட்டி பங்குகளை உள்ளீடு செய்வதற்காக ரூ20ஆயிரம் கோடி ரூபாய்களை இந்த ஆண்டு அடிப்படை மூலதனமாக ஒதுக்கித் தருமாம். மாற்று முதலீட்டு நிதியம் (AIFs) மோசமான கடன்களை ‘வாங்கி’க் கொள்ளுமாம்! ஏதேதோ பெயர்களில் மக்கள் சொத்தைக் கொள்ளை அடிக்கிறார்கள்.

பில்லியனர்களும் நிதிமூலதனமும்

                 பிரதமர் பெருமிதத்துடன் சொல்கிறார், தற்சார்பு கண்ணோட்டம்! இதோ இங்கே அவருடைய தற்சார்பு: 1991ல் இந்தியா பெற்ற அன்னிய நேரடி முதலீடு (எஃப்டிஐ) 129 மில்லியன் டாலர்கள், அது 2020-21ம் ஆண்டில் 576 மடங்குகள் வளர்ந்து அதிர்ச்சியளிக்கும் 74,390 மில்லியன் டாலர்களாகியுள்ளது! (ஒரு மில்லியன் என்றால் 10 லட்சம்; ஒரு டாலருக்குச் சுமார் 74ரூபாய் என்றால் அது இந்திய ரூபாயில் நினைத்துப் பார்க்க மலைப்பாக உள்ளது). வெளியுறவு முதலீடு 1991ல் வெறும் 4 மில்லியன் டாலர்கள்; ஆனால் 2021 ஜனவரி 31ல் தொற்று சூழ்நிலையிலேயே அது 30,542 மில்லியன் டாலராக வளர்ந்து நிற்கிறது! இந்தியர்கள் காப்பீட்டுப் பிரிவில் அனைத்துக் கட்டுப்பாடுகளையும் முற்றாக இழப்பார்கள்.

                 அதிக பில்லியனர்கள் எண்ணிக்கையில் அமெரிக்கா, சீனாவை அடுத்து இந்தியாதான் மூன்றாவதாக இருப்பதாக (Hurun) ‘ஹுரூண் உலகப் பணக்காரர்கள் அறிக்கை’ தெரிவிக்கிறது. அந்த ஆய்வறிக்கை டாலர்களில் உலகப் பில்லியனர்கள் பட்டியலில் (100 கோடி ரூபாய் அல்ல, டாலர்களில் 100 கோடி பட்டியலில்) 2020ம் ஆண்டின்போது மேலும் 40 புதிய இந்தியர்கள் சேர்க்கப்பட்டதான தகவலை வெளிப்படுத்தியது. அந்தப் பட்டியலில் இப்போது மொத்தம் 209 இந்திய வம்சாவளி பில்லியர்கள் உள்ளனர்; அவர்களில் முகேஷ் அம்பானியும் கௌதம் அதானியும் முதலாவதாக இருக்க  177 பேர் இந்தியாவில் வசிக்கும் அதிபணக்காரர்கள். கொரோனா தொற்று காலத்தில் முதல் 100 பில்லியனர்களின் சொத்து 35 சதவீதம் தாவிப் பாய்ச்சலில் வளர்ந்துள்ளதாக ஆக்ஸ்ஃபாம் ஆய்வறிக்கை கூறுகிறது. இந்தத் தொகையைக் கொண்டு 13.8 கோடி இந்தியப் பரம ஏழைகளுக்குத் தலைக்கு ரூபாய் 94,045 காசோலையாகத் தரலாம்!

                 அம்பானியின் சொத்து 24%உயர்ந்து 83 பில்லியன் டாலராக ஆகி உலகப் பில்லியனர்கள் பட்டியலில் 8வது இடத்தைப் பிடித்துள்ளார். அதானி சொத்து ஏறத்தாழ இரண்டு மடங்காக 32 பில்லியன் டாலராகியுள்ளது. தொற்றின்போது இந்தியாவில் ஏழு பேருக்கு ஒருவர் வேலை இழந்துள்ளபோது, ஒரு மணி நேரத்தில் முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் 90 கோடி ரூபாய் சம்பாதித்துள்ளது!  2020 ஏப்ரலில் மட்டும் இந்தியாவில் 1லட்சத்து 70 ஆயிரம் மக்கள் வேலை இழந்துள்ளபோது சந்தை முதலீட்டுக் குவிப்பும் பங்கு சந்தையும் சூடுபிடித்துள்ளது. அம்பானியின் சொத்து மட்டுமே 40 கோடி முறைசாரா தொழிலாளர்களை வறுமைக் கோட்டுக்கு மேலே ஐந்து மாதங்களுக்கு வைத்திருக்க முடியும்.

                 கடந்த பத்தாண்டுகளில் 2020ல் மட்டும் மிகக் கூடுதலான செல்வ அதிகரிப்பைக் கண்டதாகவும் இந்த ஆண்டில் ஒவ்வொரு வாரமும் எட்டு புதிய டாலர் பில்லியர்கள் உருவாகியதாகவும் ‘ஹுரூண்’ அறிக்கை கூறுகிறது. ஒரு வருடத்தில் இத்தனைச் செல்வம் உருவாக்கப்பட்டதை உலகம் எப்போதும் பார்த்ததில்லை. அரசே முன்னின்று பணத்தைக் கொட்டியும் முதலீட்டை யூக வணிகத்தில் ஈடுபடுத்தும்போது பொதுமக்கள், நடுத்தர சிறு குறு தொழிலகங்கள் மற்றும் கடை வைத்திருப்போர் தங்கள் சேமிப்பைக் கார்ப்பரேட்டுகளிடம் மிகக் கூடுதலாக இழந்துள்ளனர்.

                 ஸ்டாக் மார்க்கெட் மதிப்பு உயர்வு (நிதிசார்ந்த சொத்துகள் மதிப்பு உயர்வு) தீவிரமான யூத்திற்கு வழிகோலியது. இந்த ஆண்டு மார்ச் 2ல் மும்பை ஸ்டாக் மார்கெட் (BSE Sensex) 447 புள்ளிகள் உயர்ந்து, ஐம்பதாயிரம் மட்டத்தைக் கடந்து, பங்குகளுக்கு பெரும் லாபம் தந்தது. நிப்டி (NIFTY) எனப்படும் ‘தேசிய பங்குச் சந்தை 50’ன் புள்ளிகளும் உயர்ந்து கூடுதல் லாபம் கண்டது. (தேசிய பங்குச் சந்தை, என்எஸ்இ, பரவலாக அதிக எண்ணிக்கையிலான நிறுவனங்களின் பங்குகளை அடிப்படையாகக் கொண்டு மதிப்பிடப்படுகிறது. நிப்டியோ அந்நிறுவனங்களில் உச்சத்தில் இருக்கும் 50 நிறுவனங்களை அடிப்படையாகக் கொண்டது.) லாபம் ஈட்டும் ஓஎன்ஜிசி நிறுவனத்தைப் பிரித்தெறியச் செய்யும் வகையில் அதானி எண்ணெய் தொழில் பிரிவில் வெடிப்புற வளர்ச்சியை நிகழ்த்தியுள்ளார்.

பொருளாதாரம் பல வேறுபட்ட நிலைகளில்

                 குணாம்ச ரீதியில் பொருளாதாரம் வித்தியாசமான நிலையில் நுழைந்துள்ளது; பொதுத்துறைகள், ஏகபோகமற்ற வணிகம் மற்றும் உற்பத்தி(துறை)க்கு எதிராக நிதி(மூலதனக்) கார்ப்பரேஷன்களுக்கு நிபந்தனையற்ற கட்டற்றச் சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்கள், விவசாயத் தொழிலாளர்கள், விவசாயிகள், நடுத்தர வர்க்கம், அறிவாளிகள், சிறு உற்பத்தியாளர்களை மட்டுமல்ல, சிறு மற்றும் நடுத்தர முதலாளிகள் மற்றும் தொழில் முனைவோர்களையும் நிதிமூலதனம் விழுங்கிச் சாப்பிட்டுக் கபளீகரம் செய்கிறது. பொருளாதாரத்தில் ஒட்டுண்ணியான யூக வணிகம் செல்வாக்குச் செலுத்துவதால் உற்பத்தி (பிரிவு) அபாயத்தில் உள்ளது.

                 பொருளாதாரத்தைத் தங்குதடையற்ற நிதிமயமாக்கல், மதவாத பாசிசத்தின் முக்கியமான ஊற்றுக்கண்ணாக மாறியுள்ளது.

                 முற்போக்கு, ஜனநாயக மற்றும் இடதுசாரி சக்திகளின் பரந்துபட்ட விரிவான முன்னணியே மேற்கண்ட அபாயங்களைத் தடுத்து நிறுத்தி விரட்டவல்லது. பொருளாதாரத்தை ஜனநாயகப்படுத்தலே இந்த நேரத்தின் தலையாய தேவை.

-- நன்றி : நியூஏஜ் (ஆக. 15 -- 21)

--தமிழில்: நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

           

Monday 23 August 2021

75வது சுதந்திர தினச் சிறப்புக் கட்டுரை --அமர்ஜித் கவுர்

 


75வது சுதந்திர தினச் சிறப்புக் கட்டுரை

ஆகஸ்ட் 15, கடந்து வந்த காலத்தை அசைபோடும் நாள்




--அமர்ஜித் கவுர்

பொதுச் செயலாளர் ஏஐடியுசி

            1947ஆகஸ்ட்15ல் இந்தியா விடுதலையைச் சாதித்தது –போராட்டங்களும் தியாகங்களும் அதன் இறுதி லட்சியத்தை அடைந்தது. அன்றிலிருந்து அடிப்படைக் கட்டமைப்பு, விஞ்ஞானத் தொழில்நுட்பம், இயற்கை செல்வாதாரங்களை அகழ்ந்தெடுத்தல், பொதுத்துறை நிறுவனங்கள் உட்பட தேசியச் சொத்துக்கள் உருவாக்கம் என பல துறைகளிலும் வளர்ச்சியின் பல எல்லைகளைச் சாதித்து இந்தியா செம்மாந்து நடைபோட்டு வருகிறது.

விடுதலைக்குப் பின் சாதனைகள்

            இந்தச் சாதனையில் விவசாயிகள், தொழிலாளர்கள், கல்வியாளர்கள், ஆய்வாளர்கள், அறிவியல் துறை வல்லுநர்கள் என மக்களின் பங்களிப்பு அளப்பரியது. 1942 -- 43 வங்கத்தில் பெரும் பஞ்சம், விடுதலைக்குப் பிறகு அமெரிக்காவின் பிஎல்480 திட்டத்தைச் சார்ந்திருத்தல் என்ற நிலையிலிருந்து இந்தியா மீண்டெழுந்தது; வேளாண் பிரிவில் நம் தேவைக்கு ஓரளவு சுய சார்பு நிலையை அடைந்தோம்; இடதுசாரி முற்போக்கு சக்திகள் முக்கிய பங்காற்ற அவர்களின் ஆதரவோடு தொழிலாளர்கள் போராட்டம் வங்கி மற்றும் காப்பீடு துறை தேசியமயத்தைச் சாதித்து வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்குச் செலுத்தியது. தேசியமயத்தால் நடுத்தர, சிறு மற்றும் குறு தொழில்கள் நிறுவப்பட்டு புது உற்சாகம் பெற்றது; இதனால் பல பத்து லட்சம் மக்களின் வாழ்வாதாரத்திற்கு புதிய வாய்ப்புகள் திறந்தன. வளர்ச்சியின் ஆதார மையமாகப் பொதுத் துறைகள் விளங்கின.

எதிர்ப்பும் ஆதரவும்

            1950களிலிருந்தே சுய சார்பு பொருளாதார மாடல் கொள்கைகளுக்கும் அவை குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்கும் போதும் எப்போதும் கடுமையான எதிர்ப்பு இருந்தே வந்துள்ளது. இதை எதிர்த்தவர்கள் அன்றைய பாரதிய ஜன சங் (பாஜகவின் அந்தநாள் அவதாரம்), காங்கிரசின் சில பகுதியினர் மற்றும் பழமைவாத சக்திகள்; அதே நேரத்தில் நமது நாட்டின் இயற்கை மற்றும் தேசிய செல்வாதாரங்கள் அவற்றின் வளர்ச்சி மீதான தேசத்தின் இறையாண்மையைக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிற்சங்க இயக்கம் உறுதியாக ஆதரித்தன. உழைக்கும் மக்கள் கூட்டம் மற்றும் விவசாயிகளின் உழைப்பு மற்றும் பங்களிப்பால் உருவான பெரும் செல்வம் ஒரு சிலரின் கைகளில் குவிய, பாடுபட்டு உழைத்த மக்களின் வாழ்வில் உழைப்புக்கேற்ற பெரியதொரு பயன் வந்து சேரவில்லை என்பதும் உண்மையே – காரணம் செல்வாதாரம் பாரபட்சமாகச் சமமின்றி பகிரப்பட்டதுதான்.

சாதனைகளுக்குத் தடை

            மற்றொரு புறத்தில் இந்தியா பல்வேறு துறைகளில் புதிய உச்சங்ககளை எட்டிச் சாதித்து வந்தது: பொறியியல், உற்பத்தி, அகழ்வாராய்ச்சி, அணு மற்றும் நியூக்ளியர் விஞ்ஞானம், விண்வெளி முதலான துறைகளிலும்; மற்றும் அதே நேரத்தில் கல்வி, பயிற்சி, வேலைவாய்ப்பு, பணியிடப் பாதுகாப்பு, ஏற்கத்தக்க கவுரவமான ஊதியம் முதலியவற்றில் சம வாய்ப்புக்கான இயக்கம்; மற்றும் சமூகப் பாதுகாப்பு பலம் பொருந்தியதாக வளர்ச்சி பெற்று பல தொழிலாளர் உரிமைகள், சட்டப்படியான தகுதிப்பாடுகள் மற்றும் சலுகைகள் சாதிக்கப்பட்டன. ஆனால் சுதந்திரமான சந்தை பொருளாதாரச் சக்திகளுக்கு ஆதரவான 1991ன் புதிய தாராளமயப் பொருளாதார மாடல் வாழ்வின் சகல பகுதிகளிலும் சமத்துவமான வாய்ப்புகள் மற்றும் அனைவருக்கும் நீதியை உறுதிப்படுத்தும் நிகழ்நிரல்கள் பின் தள்ளப்பட்டன.

            சர்வதேச நிதி நிறுவனம் (IMF), உலக வங்கி மற்றும் உலக வர்த்தக அமைப்பு (WTO) கூட்டாகக் கட்டளையிடக் கொண்டுவரப்பட்ட புதிய தாராளமய நிகழ்ச்சித் திட்டங்களுக்கு எதிரான எதிர்ப்பு இயக்கம் மெல்ல வலிமை பெற, தொழிற்சங்கங்கள் முக்கிய பங்காற்றின.

இன்றைய நிலை

            கடந்த 30 ஆண்டுகளின் நிகழ்வுகளையும் மாற்றங்களையும் விரிவாக விவரிக்கத் தேவையில்லை, இப்போது நாடு எங்கே வந்து சேர்ந்துள்ளது என்பதைப் பார்த்தாலே போதும். இந்நிலைக்குக் கொண்டு வந்த அதே சக்திகளின் முழு கட்டுப்பாட்டில் ஆட்சியதிகாரம் உள்ளது; அவர்கள் அப்படியே நிதிமூலதனம், இந்திய மற்றும் வெளிநாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களின் நிகழ்ச்சிநிரல் திட்டங்களோடு உடன்பட்டு நிற்கிறார்கள். அவர்களோ இந்தியச் சந்தைகள், வர்த்தகம், இயற்கை செல்வாதாரம் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கயையும் சொத்துகளையும் கைப்பற்றுவதிலேயே குறியாக இருக்கிறார்கள். அதற்கு வசதியாக ஆட்சியில் இருப்பவர்கள் தொழிலாளர் வர்க்கம் மற்றும் அவற்றின் சங்கங்கள் சாதித்த உரிமைகளைப் பறிப்பது; அதற்காகத் தொழிலாளர் சீர்திருத்தங்களைத் திணிப்பதன் மூலம் தொழிலாளர் சட்டங்களை 4 குறுங்குறிகளாகச் சுருக்குவது, விவசாய நிலங்களை ஏகபோக கார்ப்பரேட்களுக்கு ஆதரவாக கார்ப்பரேட்மயப்படுத்துவது என இறங்கியுள்ளனர். இதனால் விவசாயிகளையும் விவசாயத் தொழிலாளர்களையும் ஏதுமற்றவர்களாக திவாலாக்கவும் துணிந்து விட்டனர்.

அனைத்தும் விற்பனைக்கு

            இந்த மோடி ஆட்சி விற்பனைப் பட்டியலில் இல்லாத துறையில்லை, அது பொதுத்துறை அல்லது அரசுத் துறைகளாக இருந்தாலும் சரி, எதுவும் விட்டு வைக்கப்படவில்லை. லாபம் ஈட்டும் துறையோ ஈட்டாததோ, கேந்திரமானதோ அல்லாததோ அனைத்தும் உள்ளடக்கியது என்பதை நிதியமைச்சரின் அறிக்கை தெளிவுபடுத்துகிறது. இரயில்வேயிலிருந்து, ரயில் நிலைய பிளாட்வாரம் வரை, விமான நிலையங்கள், துறைமுகங்கள் கிடங்குகள், எரிசக்தித் துறையில் எண்ணெய், எரிவாயு, மின்சாரம், ஸ்டீல், நிலக்கரி, செம்பு, டெலிகாம், அஞ்சல் துறைகள், பாதுகாப்பு, நிதிப் பிரிவில் வங்கிகள் மற்றும் காப்பீடு, அணுசக்தி, விண்வெளி விஞ்ஞானம் முதலிய அனைத்தும் இந்த ஆட்சியின் கீழ் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன.

            இத்தேசத்தின் விடுதலைப் போராட்ட இயக்கத்திலோ அல்லது சுதந்திரத்திற்குப் பிறகு நாட்டைக் கட்டியமைக்கும் சுயச்சார்பு பொருளாதாரக் கொள்கைகளிலோ இன்றைய ஆளும் கட்சிக்கும் அதன் சங்க் பரிவார் கும்பலுக்கும் எந்தப் பங்கும் கிடையாது; அவர்கள் எப்போதுமே சுதந்திரச் சந்தை சக்திகளின் ஆதரவாளர்களும் பிரச்சாரகர்களும் ஆவார்கள்; அவர்களின் எவருக்கும் அடிப்படை மனித உரிமைகள் குறித்துத் தாங்கள் அறநெறி தவறுவதாக எந்தப் பதற்றமும் கிடையாது. அவர்கள் பின்பற்றும் இலட்சிய முழக்கம், ‘நட்டத்தைச் சமூகமயப்படுத்தி பொதுவாக்குவது, தனியார் கார்ப்பரேட்டுகள் மற்றும் அவர்களின் கூட்டாளிகளின் லாபத்தை உட்சபட்சமாக அதிகமாக்குவது’

பொதுமக்களுக்கு எதிர்காலம் எதை வைத்திருக்கிறது?

விலைஉயர்வு

          அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வைப் பொருத்தவரை அது பொதுமக்களின் கைகளை மீறிச் சென்றுவிட்டது; பெட்ரோல் ரூ 62 லிருந்து 112, டீசல் 55 லிருந்து 200, சமையல் எரிவாயு உருளை 414 லிருந்து 834, பருப்பு 60 –70லிருந்து 190 – 220, பால் 30 லிருந்து 60, ரயில்வே பிளாட்பாரம் டிக்கெட் ரூ 5லிருந்து 50, ரயில் பயணக் கட்டணம் அரை மடங்கிலிருந்து இரண்டு மடங்காக உயர்ந்துள்ளன. எரிபொருட்களின் விலை உயர்வால் போக்குவரத்துக் கட்டணங்கள் உயர அதன் தொடர்விளைவாய் எல்லாப் பொருட்களின் விலை உயர்கின்றன.

            வேலைவாய்ப்பு

            நிரந்தர ஊழியராகவோ கூலி வேலையோ வேலைவாய்ப்புப் பிரிவிலும் மக்களின் வாழ்வாதார சூழலிலும் நிலைமை கவலை அளிப்பதாக உள்ளது. 45 ஆண்டுகளில் இல்லாத உயர்ந்த அளவாக வேலையின்மை விகிதம் ஏற்கனவே 2019ல் 7.4 சதவீதமாக இருந்தது கோவிட் தொற்றுக்கு முன்பு 2020 மார்ச்சில் 8.1 சதவீதமாக உயர்ந்தது. தொற்றுக்குப் பிறகு இந்நிலை இன்னும் மோசமாகும். பண மதிப்பிழப்பு மற்றும் தவறாக அவசரமாக அமல்படுத்தித் திணிக்கப்பட்ட (ஜிஎஸ்டி)  சரக்குப் போக்குவரத்து வரி காரணமாக பொருளாதார வீழ்ச்சிநிலை இன்னும் ஆழமானது; மேலும் 2020 மார்ச்சில் திடீரென அமல்படுத்திய ஊரடங்கால் அநேகமாக வேலையில் இருந்த 45 கோடி பேர் தூக்கியெறியப்பட்டு வாழ்வாதாரம் இழந்தனர்.

            புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்

            மாநிலத்திற்குள்ளும், பிற மாநிலங்களுக்கும் 20 கோடிக்கும் அதிகமான புலம் பெயர்ந்த தொழிலாளர்கள்--ஊரடங்கின் காரணமாகப் போக்குவரத்து நிறுத்தப்பட்டதால்-- உச்சபட்ச இன்னல்களுக்கு ஆளாயினர். உணவுப் பாதுகாப்பின் கீழ் கொண்டுவரப்பட்ட 84 கோடி பேரில், 10கோடிக்கும் அதிகமானவர்களின் ரேஷன் அட்டைகள் ஆதார் அட்டையுடன் இணைக்கப் படாததால் அவர்களால் ரேஷன் உணவுப் பொருட்கள் பெற இயலவில்லை.

            கோவிட் தொற்று முதல் அலையின் ஊரடங்கின்போது புலம் பெயர்ந்த தொழிலாளர்கள் பல்வேறு மாநிலங்களில் பரிதவித்தபோது நடத்தப்பட்ட கள ஆய்வு அவர்களில் 94 சதவீதமானவர்கள் ரேஷன் பொருட்களைப் பெறவில்லை என்றும், 78 சதவீதமானவர்கள் தங்களுக்குச் சமைத்த உணவு கிடைக்கவில்லை என்றும் 74 சதவீதமானவர்கள் கையில் வெறும் 300 ரூபாய்க்கும் குறைவான இருப்பு இருந்ததாகக் கூறியதாகவும் தெரிவிக்கிறது. அவர்கள் பலநூறு மைல்கள் வெயிலிலும் மழையிலும் நடந்தே சென்ற கொடுமையை உலகமே பார்த்தது.

            ஊரடங்கு முடிவுக்கு வந்தபிறகு வேலையின்மை விகிதம் ஏறத்தாழ 27 சதவீதம் உயர்ந்தது. 2020 ஏப்ரலில் ஒரு மணி நேரத்திற்கு ஒரு லட்சத்து எழுபதாயிரம் மக்கள் வேலையிழந்தனர்.

            சிறு குறு தொழில் பிரிவுகள்

            உற்பத்தியாளர் கூட்டுறவின் ஆய்வின்படி நடுத்தர, சிறு மற்றும் குறு தொழில் நிறுவனங்கள் (MSMEs) மீண்டும் தொழில்களைச் செயல்படுத்தத் தொடங்கும்போது நிலைமை மோசமாகவே இருந்தது. 6.3கோடி நிறுவனங்களில் 34.4 சதவீதம் மட்டுமே மீண்டும் செயல்படக் கூடியதாக இருந்தன; 33 சதவீதம் நிரந்தரமாக மூடப்பட்டுவிட்டன; 33 சதவீதம் 2020 ஆண்டின் இறுதியிலோ 2021ம் ஆண்டின் முதல் காலாண்டிலோ தொடங்கப்பட இயலலாம் என்ற நிலையில் இருந்தன. இரண்டாவது அலைத் தொற்று நிலைமையை மேலும் மோசமாக்கியது.

            இந்த ஜூன் ஜூலையில் (மாத ஊதியம் அல்லாத) ஊதியம் அல்லது கூலி தொடர்பான வேலைகளில்  இழப்பு 80 லட்சம். இது அத்தகைய வேலைகளில் இந்தியப் பொருளாதாரக் கண்காணிப்பு மையம்(CMIE) வெளியிட்ட புள்ளிவிபரமான 3 கோடி வேலை இழப்புக்களைத் தவிர வேறு. அதில் இளைஞர்களின் வேலையிழப்பு விகிதாசாரத்தில் அதிகமானது. 15லிருந்து 25 வயதுடைய பிரிவில் வேலையின்மை 54 சதவீதம் என்பது அவர்கள் வாழ்க்கைக்கு மட்டுமின்றி தேசத்திற்கும் நட்டமாகும்.

அரசு மற்றும் கார்ப்பரேட் கூட்டு

            முதல் மற்றும் இரண்டாவது அலை தொற்றின்போது அரசு வெளியிட்ட மீட்புத் தொகுப்புத் திட்டம் கார்ப்பரேட்டுகளுக்கு ஆதரவானது; அதில் அவர்கள் கோரிய வரிச் சலுகை வழங்கப்பட்டது. கடந்த இருபது ஆண்டுகளாகப் படிப்படியாகக் குறைக்கப்படும் வரியானது 35 சதவீதத்திலிருந்து தற்போது 20 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளது. இதில் கவனிக்க வேண்டியது, இந்த ஆட்சியின் போது மட்டும் 30 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக்கப்பட்டது. இங்கே சில பெரும் கொள்ளைக்காரர்கள் பொதுத்துறை வங்கிகளிலிருந்து மக்கள் பணத்தைக் கடானகப் பெற்றுவிட்டுத் தப்பிச் செல்ல விடப்பட்டுள்ளனர்; அந்தக் கொள்ளைக்காரர்களிடம் அவர்கள் கொள்ளை அடித்த பணத்தைச் சட்டபூர்வமான இன்சால்வன்சி குறுங்குறி மூலம் சரிசெய்து கொள்ளச் சமாதானக் கொடியை நீட்டுகிறது அரசு.

            மோடி ஆட்சி காலத்தில் மட்டும் இதுவரை வங்கிகளின் செயல்படாத சொத்து எனப்படும் (NPA)மோசமான வாராக் கடன் கணக்கிலிருந்து அநேகமாக 8.3 லட்சம் கோடி வங்கி ஆவணங்களில்  தள்ளுபடி என்ற பெயரில் கொள்ளையடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் அதே நேரத்தில் மத்திய தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட மேடையிலிருந்து, வருமான வரி கணக்கு வரம்பிற்குள் வராத ஏழைகள், குறைந்த மற்றும் நடுத்தர வருமானப் பிரிவு மக்களுக்கு ரூ7500 ரொக்கமாக வழக்க விடுக்கப்பட்ட கோரிக்கையை; அல்லது மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி அளிப்புத் திட்டத்தின் (MGNREGA) கீழ் உள்ள தொழிலாளர்களின் வேலை நாட்களையும் ஊதியத்தையும் அதிகரிக்கக் கோரிய கோரிக்கையை ஏற்க மறுத்துள்ளது. அதற்கு மாறாக பல வழிகளில் பொதுமக்களின் மீதான வரிகளை அறிமுகப்படுத்தியது; மேலும் பிரதமரின் செல்லத் திட்டமான (புது பாராளுமன்ற வளாகம் கட்டும்) சென்ட்ரல் விஸ்டா திட்டச் செலவுக்குக்--கடுமையான ஊரடங்கு உத்தரவைப் பிறப்பித்த சூடோடு-- 20ஆயிரம் கோடி பட்ஜெட் அனுமதியை அறிவித்துள்ளது.

            குழந்தைகள் மீது பாதிப்பு

            ஐஎல்ஓ மற்றும் யுனெஸ்கோ அமைப்புகள் குழந்தைகள் மீதான மோசமான பாதிப்பைப் பட்டியலிட்டுள்ளன. தொற்று மற்றும் ஊரடங்கால் மேலும் அதிகமாகச் சுமார் 4.9 கோடி குழந்தைகள் கல்வியை இழந்து உழைக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டுள்னர். இ-வழி கல்வி அனைவருக்கும் சாத்தியமாகாத நிலையில் கல்வியில் சமூகம் ஏற்கனவே பிளவுபட்டு பாதிக்கப்பட்டிருக்கிறது. பத்து சதவீத குடும்பங்களுக்கே இணைதள வசதி பெற்றிருக்கும்போது, நடுத்தர மற்றும் ஏழை மக்கள் பெரும்பாலோரால் தங்கள் குழந்தைகளுக்கு ஸ்மார்ட் செல் போன் வாங்கித்தரவும் ஆன்-லைன் கல்வியை வழங்கவும் வாய்ப்பில்லாமல் இருக்கிறார்கள். குழந்தைத் தொழிலாளர்களில் 70 சதவீதமானவர்கள் கிராமப் பகுதிகளிலிருந்து வருகிறார்கள் என்றும் 20சதவீதம் சேவைப் பிரிவிலும் பத்து சதவீதம் தொழிற்சாலைகளிலும் உழைப்பதாக இதுவரை கிடைத்துள்ள தரவுகள் குறிப்பிடுகின்றன. அவர்களில் 28% ஐந்து முதல் 11 வயதுப் பிரிவிலும் 35 சதவீதமானவர்கள் 12 முதல் 14 வயதுடையவர்களாகவும் உள்ளனர்.

            பெண்கள் மீதான பாதிப்பு

            அதிக சதவீதத்தினர் வேலைகளையும் வாழ்வாதாரத்தையும் இழந்தது மட்டுமின்றி அதிகரித்த வீட்டு வன்முறைகளால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் பெண்களே. கோவிட் பாதிப்பு காலத்தில் குழந்தைத் திருமண நிகழ்வுகள் அதிகரித்துள்ளன. பொருளாதாரம் மீண்டும் செயல்படத் தொடங்கிய பிறகு மீண்டும் வேலையில் சேர்வதில் பெண்களின் சதவீதமே மிகக் குறைவு. பெண்கள் செய்துவரும் பணிகள் போன்றவற்றிற்கு அவசரமில்லை; எனவே தொழிலை மீண்டும் தொடங்கும் துவக்க நிலையிலேயே அவர்களைப் பணிக்கு எடுக்கத் தேவையில்லை என வேலைவழங்கும் உரிமையாளர்கள் நினைக்கிறார்கள்.

            அதிகரிக்கும் சமத்துவமின்மை

            சமத்துவமின்மை நிலை நாட்டில் மோசமாகி வருகிறது. சர்வதேசத் தொழிலாளர் அமைப்பான ஐஎல்ஓ புள்ளிவிபரத்தின்படி தொற்றுக்கு முந்தைய காலத்தைவிடத் தற்போது 40 கோடி இந்தியர்கள் ஏழைகளாகியுள்ளனர். ஆண்களில் ஏறத்தாழ 35 சதவீதத்தினரும் பெண்களில் 50 சதவீதத்தினரும் வேலையில் மீண்டும் சேரவில்லை. ஏழைக் குடும்பங்களின் வருமானம் மேலும் குறைந்து ஊதிய இடைவெளி அதிகரிக்கிறது; ஊதிய வெட்டு மற்றும் முன்பு பெற்ற பலன்களைவிட குறைவான பலன்களையுமே உரிமையாளர்கள் தரப்பு தருகிறது. ஊரடங்கில் மூடப்பட்ட காலத்திற்கான ஊதியம் மறுக்கப்பட்டு ஆட்குறைப்பு தொடர்கிறது.

            மறுபுறத்தில், மார்ச் 2020 முதல் மார்ச் 2021வரை முகேஷ் அம்பானி 128 சதவீதமும், அதானி 480 சதவீதமும் தங்கள் சொத்தை அதிகரித்துள்ளனர். நூறு கோடிக்கும் மேல் சொத்து மதிப்பு உடைய பில்லியனர்கள் எண்ணிக்கை இதே காலகட்டத்தில் 100லிருந்து 140 ஆக உயர்ந்துள்ளது. இந்தப் பில்லியனர்கள் தங்கள் சொத்தை 12.97 லட்சம் கோடி அதிகரித்த நேரத்தில் மக்கள் ஆக்ஸிஜன் பற்றாக்குறையாலும், வென்டிலேட்டர், மருத்துவப் படுக்கைகள் அல்லது மருந்துகள் கிடைக்காத காரணத்தால் செத்துக் கொண்டிருந்தார்கள். மருத்துவச் சுகாதாரப் பிரிவில் 24 கார்ப்பரேட் குழுமங்கள் தினமும் 500 கோடி சம்பாதித்தன. அதன் உச்சமாக, தடுப்பூசி வணிகத்தில் லாபத்தைக் குவிக்க மோடி அரசு மும்முரமாக உள்ளது.  ஆனால் இதற்கு முந்தைய அரசுகள் இந்தியாவில் தடுப்பூசிகளை எப்போதும் இலவசமாகவே வழங்கியதைப் பரவலாக அனைவரும் அறிவோம். இந்தத் தொகையை மகாத்மா காந்தி வேலை உறுதியளிப்புத் திட்டதில் செலவிடுவோம் என்றால் அது அத்திட்டத்தைப் பத்தாண்டுகள் செயல்படுத்துவதற்கான பட்ஜெட்டுக்குப் போதுமானது. மக்கள் தொகையில் மேலே இருக்கும் ஒரு சதவீதத்தினர் நாட்டின் 70 சதவீதச் செல்வத்திற்கு உரிமையாளர்களாக உள்ளனர் என ஆய்வுகள் காட்டுகின்றன. வேளாண் சட்டங்களும் தொழிலாளர் குறுங்குறிச் சட்டங்களும் அமல்படுத்தப்படுமானால் இடைவெளியும் சமத்துவமின்மையும் மேலும் அதிகரிக்கும்.

            நாட்டின் மீது சட்டங்களின் தாக்குதல்

            ஆனால் சாதாரண மக்களுக்கும் தேசத்திற்கும் எதிரான தங்கள் நிகழ்ச்சிநிரலைத் தொடர்ந்து திணிப்பதில் மோடி அரசு பிடிவாதமாக உள்ளது. இந்தக் கொள்கைகளுக்கு எதிரான எந்தக் கண்டன எதிர்ப்பையும் தேசத் துரோகம் என முத்திரரை குத்தி அவர்களது குரல்களை நெறிக்கப் பல்வேறு நிர்வாக முகமைகளைத் தவறாகப் பயன்படுத்தி, பல்வேறு சட்டங்களின்கீழ் குற்றச்சாட்டு சுமத்தப்படுகிறது. இந்தியக் குற்றப்புலனாய்வு அமைப்பு (CBI), தீவிரவாதத்திற்கு எதிரான தேசியப் புலனாய்வு முகமை (NIA), சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம் (UAPA), தேசத் துரோகச் சட்டம், தேசியப் பாதுகாப்பு முகமை (NSA) மற்றும் செயலாக்கத் துறை (ED) முதலானவற்றைப் பயன்படுத்தி மக்களைச் சிறையில் அடைப்பது மட்டுமின்றி அத்தியாவசியப் பாதுகாப்புச் சேவை மசோதாவைப் பாராளுமன்றத்தில் நிறைவேற்றி அந்தக் கொடுமையான சட்டத்தைப் பயன்படுத்தி மேலும் தொழிற்சங்கங்களின் வேலை நிறுத்தம்  உட்பட கூட்டுபேர உரிமைகளையும் பறிக்கிறார்கள்.

            உளவுச் செயலி கருவி

            உளவுச் செயலியான பெகாசஸ் இத்தாலிய மென்பொருளைப் பயன்படுத்தி இந்திய அரசியல்வாதிகள், பத்திரிக்கையாளர்கள், சிந்தனையாளர்கள், நீதித் துறையைச் சார்ந்தோர், பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்த செயற்பாட்டாளர்கள் முதலியவர்களின் தொலைபேசி உரையாடல் தகவல்கள் களவாடப்படும் நபர்கள் பட்டியலில் இருந்தது தவிர எதிர்காலத்தில் கண்காணிக்கப்பட வேண்டியவர்களின் பெயர்களும் அடங்கி இருந்தது.  இது தொடர்பான உண்மைகளைத் தேசம் அறிய விரும்புகிறபோது ஒன்றிய அரசு வெட்கமில்லாமல் மௌனமாக இருக்கிறது. சங்க் பரிவார் கும்பலால் போஷிக்கப்படும் உதிரி அமைப்புகள் -- அரசின் அதிகார மிக்கவர்களின் ஆசி மற்றும் ஆதரவோடு -- வெறுப்பைப் பரப்புவதுடன் மதம், சாதி, மொழி முதலானவற்றின் அடிப்படையில் சமூகத்தைத் துருவங்களாகப் பிளவுபடுத்தும் தங்கள் நிகழ்ச்சி நிரல் திட்டங்களைத் தொடர்வதில் மும்முரமாக இருக்கிறார்கள்.

            இது பிரித்தாளும் சூழ்ச்சி அரசியல் மட்டுமல்ல; ஆனால், பல நூற்றாண்டுகளாக இணக்கமாக வாழும் நமது சமூகத்தையும், விடுதலை இயக்கத்தின் சாதனைகளையும், நமது தேசியச் சொத்துக்கள் மற்றும் இயற்கை செல்வாதார சொத்துரிமையையும், இந்திய அரசியல் சட்டத்தின் மையமான விழுமியங்களையும் நன்நெறி உணர்வுகளையும்  பிரித்தெறியும் நோக்கம் கொண்டவை. நாம் விழிப்புடன் இருத்தல் முக்கியம்.

தேசம் காத்தல் நம் கடமை

            மேற்கண்ட பின்னணியிலும் நமது தேசத்தைச் சூழ்ந்துள்ள கடுமையான ஆபத்தை உணர்ந்ததாலும் மத்தியத் தொழிற்சங்கங்களின் இணைந்த மேடை பிரிவுவாரி சம்மேளனங்களுடன் இணைந்து வெள்ளையனே வெளியேறு இயக்க தினமான ஆகஸ்ட் 9ம் நாளை “இந்தியாவைப் பாதுகாப்போம் தினம்” என அனுசரிக்குமாறு அறைகூவல் விடுத்தது. சம்யுக்த கிசான் மோர்ச்சா எனப்படும் விவசாயப் பெருங்குடியினர் கூட்டமைப்பு இந்த நாளை “விவசாயிகளைப் பாதுகாப்போம், இந்தியாவைப் பாதுகாப்போம் தினம்” என அனுசரித்தது.

            இந்திய விடுதலைத் திருநாளின் 75வது ஆண்டு பவள விழா தருணத்தில் நாம் சபதம் ஏற்போம்! தேசத்தைப் பின்னோக்கி இழுக்கும் பிற்போக்கு சக்திகளைத் திரும்ப எதிர்த்துப் போரிடுவோம்! பிரித்துப் பிளவுபடுத்தும் சக்திகளை, வெறுப்பை விதைக்கும் மனிதநேயத்திற்கு எதிரான சக்திகளை, பழமைவாத மூடநம்பிக்கை பரப்பும் சக்திகளை, பன்மைத்துவ நம்பிக்கைக்கு எதிரானவர்களை, பால், இனம், சாதி எனப் பாகுபடுத்துபவர்களை எதிர்த்துப் போரிடுவோம்! மாற்றுக் கருத்துரைக்கும் உரிமை மற்றும் பேச்சுரிமைக்கு எதிரான சக்திகளை எதிர்த்து ஒன்றுபட்டுச் சமர் புரிவோம் எனச் சபதம் ஏற்போம்!

            அச்சம் தவிர்! ஒற்றுமை வலிமையாம்!

 கீழோர்க்கு அஞ்சேல்! தீயோர்க்கு அஞ்சேல்!

 தேசம் காத்தல் செய்!”        மகாகவி பாரதியார்

            தேசம் காப்போம்!

--நன்றி : நியூஏஜ் (ஆகஸ்ட் 15 –21)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

     

 

 

             

 

Thursday 19 August 2021

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 46 -- மீனாதாய் சானே

 

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :                      

சில சித்திரத் சிதறல்கள் - 46

 


மீனாதாய் சானே :
தொடக்கக் கால பெண் கம்யூனிஸ்ட் தலைவர்

--அனில் ரஜீம்வாலே

--நியூ ஏஜ் ஜூலை 18 – 24

            மீனாட்சிதாய் சானே (சர்தேசாய்) மகாராஷ்ட்டிரா மாநில சோலாப்பூரில் 1909 மே 18ல் பிறந்தார். அவர் புகழ்பெற்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எஸ் ஜி சர்தேசாய் அவர்களின் இளைய சகோதரி; இதனால் இயல்பாகவே அவருடைய கருத்தோட்டங்களால் மீனாதாய் செல்வாக்கு பெற்று தனது கருத்துக்களையும் வடிவமைத்துக் கொண்டார். மிகவும் ஆரம்ப காலப் பெண் கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர்கள் மற்றும் தலைவர்கள் ஒரு சிலரில் அவரும் ஒருவர்.

            மீனாட்சி இளம் வயதிலேயே தனது தாயைக் காசநோய் காரணமாக இழந்தார். அவர் மறைவதற்கு முன்புவரை மருத்துவச் சிகிச்சைக்காக ஹைத்திராபாத் முதலிய பல்வேறு இடங்களுக்கு அவர் அழைத்துச் செல்லப்பட்டார். அவர் குஜராத் மாநில பில்லிமோராவில் 1911ல் இறந்தார். எனவே மீனாட்சி ஒரு சிறு குழந்தையாகத் தனது தாயின் அன்பும் அரவணைப்பு எதையும் பெற்றதில்லை. மீனாட்சியின் தாய் இந்திராபாய், பிரபலமான கிர்லோஸ்கர் குடும்பத்தைச் சேர்ந்தவர். மீனா (மற்றும் எஸ் ஜி சர்தேசாய் இவர்களின்) தந்தை ஜி எஸ் சர்தேசாய் (கன்பத்ராவ் சர்தேசாய்) ஆவார்.

            தாயின் மறைவுக்குப் பிறகு மீனா பம்பாய்க்குச் சென்றார். குழந்தைப் பருவத்திலிருந்தே அவர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டிருந்தார். அப்போது டாக்டர் கிர்லோஸ்கர் அவரைச் சோலாப்பூர் அழைத்து வந்தார். உடல்நலமின்மை காரணமாகப் பெரும்பகுதி மீனா வீட்டிலேயே படித்தார். ஏழாவது வகுப்பு தேர்ச்சி பெற்றதும் ஹிஜ்சன் பகுதியில் இருந்த மகிளா வித்தியாலயாவில் 8ம் வகுப்பில் சேர்த்துக் கொள்ளப்பட்டார். ஒருசமயம் ஆளும் கெய்க்குவார்டு மன்னரிடம் உறவினர்கள் பணியாற்றியதால் அவர் பரோடாவிலும் படித்தார்.

அரசியலில்

           அண்ணன் எஸ்ஜி சர்தேசாய் 1925ல் பம்பாய் ஸைடன்ஹாம் கல்லூரியில் சேர்ந்தார். 1920களில் தேசிய இயக்கம் வீறுகொண்டு எழ இளைஞர்கள் புதிய பாதையை நாடத் தொடங்கினர். சர்தேசாய் தனது தங்கை மீனாவிடம் கூறினார்: ‘நாம் இருவரும் வியாபாரத்தில் அல்லது நிரந்தர பணிகளில் சேர்ந்து ஆகப் போவது ஒன்றுமில்லை; எனவே நம்முடைய வாழ்வின் முழு நேரத்தையும் சமூகத்திற்காகவும் தேசத்திற்காகவும் அர்ப்பணிப்பதை நம் வாழ்வின் நோக்கமாகக் கொள்வோம்!

            அநீதி மற்றும் சுரண்டலுக்கு எதிராகப் போராடுவது என்று மீனா முடிவு செய்தார். இந்த விஷயங்களைத் தனது தந்தை கன்பத்ராவ் சர்தேசாய் (‘அபா’) உடன் கடிதத் தொடர்பு மூலம் விவாதித்தார்; அவர் பெர்லின் மாறிச் சென்ற பிறகும் கடிதத் தொடர்பு தொடர்ந்தது.

            கல்லூரியில் சேர்ந்த பிறகு மீனா ‘எனது வாழ்வின் குறிக்கோள்’ என்ற தலைப்பில் 1928 நவம்பர் 29 தேதியிட்ட ஒரு ஆவணத்தைத் தயாரித்தார்.  முக்கியமாக இரண்டு இயக்கங்களில் தான் பங்கேற்கப் போவதாக அதில் எழுதினார்: ஒன்று விவசாயிகள் இயக்கம் மற்றும், ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது. குறைந்தபட்சம் 4ம் வகுப்பு வரை உள்ள பள்ளிக் கூடம் ஒன்றை ஏழை மற்றும் ஒடுக்கப்பட்டவர்கள் கற்பதற்காக தான் நிச்சயம் ஆரம்பிக்க வேண்டும். அவர் எழுதினார்: “எனது லட்சியத்தின் மீது கவனத்தைக் குவிப்பேன், எனது விருப்பதை நிறைவேற்றாமல் நான் சாக மாட்டேன். எனது பிரதிக்ஞையை மறக்கக் கூடாது என்பதற்காக இந்த ஆவணத்தை எப்போதும் எனது கண்களில் படுமாறு வைப்பேன்” – இப்படிக்கு மீனாட்சி சர்தேசாய்!

            அத்தகையது அவருடைய தீர்மானகரமான முடிவு. அவருடைய கல்லூரித் தோழியான பிந்து சப்ரே (பின்னர் பிரமிளா பான்வால்கர் ஆனவர்) அவரைப் பற்றி தனது நினைவுக் குறிப்பில் எழுதும்போது, ‘மீனா புகழ்பெற்ற பெண்ணாக இருந்தார், எப்போதும் மற்றவர்களுக்கு உதவிடத் தயாராக இருப்பார்.’ மீனா தொடர்ந்து ஆஸ்த்துமா நோயால் துன்பப்பட்டார்.  

            சர்தேசாய் மற்றும் கிர்லோஸ்கர் குடும்பங்கள் இரண்டும் சமூகச் சீர்திருத்தக் குடும்பங்கள் ஆனபடியால் அவற்றின் செல்வாக்கு மீனாவிடம் ஆழமாகப் பதிந்தது. தேசிய இயக்கத் தலைவர்கள் பூனாவுக்கு (இப்போது பூனே) விஜயம் செய்து சொற்பொழிவாற்றுவது வழக்கம். மீனா அந்தக் கூட்டங்களுக்குத் தனது நண்பர்களை அழைத்து வருவார்.

            காந்திஜி தனது உப்பு சத்தியாகிரகத்தை 1929 மார்ச் 20ல் தொடங்கினார். காந்திஜியைச் சந்தித்த ஸ்ரீனிவாஸ் சர்தேசாய் (SG சர்தேசாய்) தான் ‘வன சத்தியாகிரக’த்தைத் தொடங்க அனுமதி பெற்றார். காங்கிரஸ் தலைவர் சங்கர் ராவ் தேவ் சத்தியாகிரகத்துக்கான பொறுப்பை அவரிடம் அளித்தார். சத்தியாகிரகம் 1930ல் டிஸ்ரிக்ட் நகரின் சங்கம்நர் என்ற இடத்தில் தொடங்கியது.

            மீனாட்சி தனது இரண்டு தோழிகளுடன் சங்கம்நரை உடனடியாக அடைந்தார்; ஆனால் வந்தவுடன் அவர்கள் கைது செய்யப்பட்டனர். இந்தச் செய்தி நாளிதழ்களில் விரைவாகப் பரவியது. சத்தியாகிரகிகள் போலீசாரிடம், ‘இந்தப் பெண்கள் சத்தியாகிரகத்தைக் காண வந்தவர்களே தவிர, அதில் கலந்து கொள்ள வந்தவர்கள் இல்லை என்றும், விரும்பினால் அவர்கள் சத்தியாகிரகிகளைக் கைது செய்து கொள்ளட்டும்’ என விளக்கினர்.

            இந்த விளக்கம் பலன் அளித்தது, பெண்கள் விடுதலை செய்யப்பட்டார்கள். கல்லூரி திரும்பியதும், கல்லூரியின் முதல்வர் அவர்களை மன்னிப்பு கேட்கச் சொன்னார். மீனா மறுத்து விட்டார். மற்ற பெண்களும் தாங்களாகவே அங்கே சென்றதாகவும் யாருடைய வற்புறுத்தலும் இல்லை என்று கூறினர். இந்நிகழ்வுக்குப் பிறகு மீனாட்சி கொண்டாடப்படும் புகழ் பெற்றார்!

            1931ல் எஸ்ஜி சர்தேசாய் விடுதலையானதும் மீனாவைப் பம்பாய்க்கு அழைத்தார். அங்கே மார்க்சியம் குறித்த பல்வேறு அம்சங்களை அவருக்கு விளக்கினார். மார்க்சியம் குறித்த சில நூல்களையும் தந்தார். பம்பாயில் இருந்தபோது மீனா ‘பிரகதி’ (வளர்ச்சி, முன்னேற்றம்) என்ற நாளிதழில் சேர்ந்தார். நல்ல மதிப்பெண் பெற்று அவர் GA தேர்வில் தேர்ச்சி பெற்றார். இதன் மத்தியில் அவருக்கு சத்தாராவில் SNDT பள்ளி மற்றும் கல்லூரியில் வேலை கிடைத்து 1931ல் தற்காலிக ‘லேடி சூப்பிரெண்டென்ட்’ ஆனார்.  

            பொதுக் கூட்டங்களில் அவர் சொற்பொழிவாற்றத் தொடங்கினார். கணேஷ் சதுர்த்தி விழாவில் இரண்டு உரைகளை ஆற்றினார். தனியார் சொத்துரிமை குறித்துப் பேசும்போது புக்காரின், லாஃபார்க், பெட்ரென்ட் ரஸ்ஸல் மற்றும் பிற ஆளுமைகளின் கருத்துக்களை அவர் திறமையாக எடுத்துக் காட்டி விளக்கினார். இதனை அறிய வந்த சர்தேசாய் அவரைக் கடிதங்கள் மூலம் பாராட்டினார்.

முழுநேர சிபிஐ கட்சி ஊழியராக

            மேற்படிப்புக்காக மீனாவை அமெரிக்கா அல்லது வேறு ஐரோப்பிய நாட்டிற்கு அனுப்பும் தயாரிப்புகளில் அவரது குடும்பம் ஈடுபட்டது. ஆனால் இங்கேயே முழு நேரம் அரசியலில் ஈடுபட்டு கட்சி வேலைகளில் தனது நேரத்தை அர்ப்பணிப்பது என்பதே அவரது நோக்கமாக இருந்தது. தனது இலட்சிய நோக்கத்தைத் தந்தையிடம் தெரிவித்தார். தந்தை அவரை வற்புறுத்தாமல் அத்தகைய நடவடிக்கையில் இருக்கும் சாதக பாதகங்களை எடுத்துரைத்தார். முதலில் அவர் பள்ளிப் பணியிலேயே தொடரலாம் என முடிவு செய்தாலும், பம்பாயில் கட்சித் தோழர்களுடன் ஆலோசித்த பிறகு, முழு நேரக் கட்சிப் பணி முடிவைத் தாமதிக்க வேண்டாம் என முடிவு செய்தார். பள்ளி நிர்வாகத்திற்கு மீனா ஒரு மாதம் முன்பே அறிவிப்புக் கொடுத்தார்.

            இந்நடவடிக்கை துணிச்சலானதும் சிரமமானதும் ஆகும். செல்வச் செழிப்புமிக்கக் குடும்பத்தைச் சேர்ந்த அவர் சுலபமான வாழ்க்கைப் பாதையைத் தேர்ந்தெடுத்திருக்கலாம்; ஆனால் அவர் தனக்கு மிகவும் விருப்பமான தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றுவதைத் தேர்ந்தெடுத்தார். பெரும்பான்மையான முக்கியத் தலைவர்கள் மீரட் சதி வழக்கு (1929 -- 33) காரணமாகச் சிறையில் அடைக்கப்பட்டதால் கட்சி அமைப்பும் அதன் நிதி நிலைமையும் மிக மோசமாக இருந்தது. எனவே முழு நேர கட்சி ஊழியரான அவருக்கு பணரீதியில் உதவி செய்யும் நிலையில் கட்சி இல்லை. இவ்வளவு மோசமான நிலையில் அவருடைய இந்த முடிவு பலரையும் வியப்பில் ஆழ்த்தியது.

            புகழ்பெற்ற பிளீடர் (வழக்கறிஞர்) அண்ணா சாகேப் பராவ்லே மற்றும் அவருடைய மனைவி மாய்சாகேப் அவருடைய செலவுகளை ஏற்க முன்வந்தது மட்டுமின்றி அதை அவர்கள் கடைசி வரை செய்தனர். அண்ணா சாகேப் மீனாவை “என் மகளே” என்றழைத்தே கடிதங்களில் எழுதுவார். அது 1932ம் ஆண்டு.

            பம்பாய் வந்திறங்கியதும் தன் வீட்டிற்குச் செல்லாமல் நேரே மாதுங்காவில் இருந்த கட்சி கம்யூன் (குடியிருப்பு) சென்றார். ஒருக்கால் இதுவே பம்பாயில் அமைக்கப்பட்ட முதலாவது கம்யூனாக இருக்கக் கூடும். ஜம்பேகார், கர்காட்கர், சர்தேசாய், அதிகாரி, கோல்ஹட்கர் முதலான தலைவர்கள் அங்கே தங்குவது வழக்கம். இப்போது மீனாவும் கூட அவர்களோடு சேர்ந்து கொண்டார்.

            தொழிலாளர்கள் காலனிகளுக்குச் செல்லத் தொடங்கியவர், அங்கே தொழிலாளர்களை – குறிப்பாக– பெண் தொழிலாளர்களைச் சந்தித்தார். மதன்புரா போன்ற இழிவுக்குப் பெயர்போன பஸ்தீஸ் எனப்படும் நெருக்கம் அதிகமான குடியிருப்புகளுக்குக் கூட சென்றார். கிர்ணி காம்கர் யூனியன் (ஜிகேயு) பல கூட்டங்களுக்கு ஏற்பாடு செய்தது.

            முழுநேர ஊழியர்கள் ஏறத்தாழ கையில் தம்படி காசில்லாமல் இருந்தார்கள். இருப்பினும் எப்படியோ 2 ரூபாய்க்குக் கிடைக்கும் மலிவான ‘ரைஸ் –பிளேட்’ மற்றும் சில ‘சாய் போ’ (சமோசா போன்ற உணவு) இவற்றைக் கொண்டு வாழ்வை ஓட்டினார்கள். கூட்டங்களின்போது சில தோழர்கள் அவரை டீ தயாரிக்கும்படி கூறுவதை அவர் விரும்புவதில்லை. ‘உங்களில் ஒவ்வொருவருக்கும் டீ போடத் தெரியும். பிறகு ஏன் என்னிடம் சொல்கிறீர்கள்? நான் பெண் என்பதால்தானே!’ என அவர்களிடம் திருப்பிக் கேட்பார். அவர்கள் வாயடைத்து நிற்பார்கள்.

            அவருக்குக் கம்யூனில் தங்கியிருந்த ரகுநாத் கர்காட்கர் என்பவருடன் நெருக்கமான நட்பு வளர்ந்தது. ஏழ்மையான குடும்பத்திலிருந்து வந்த அவர் ஜிகேயு சங்கத்தில் தீவிரமாகப் பணியாற்றினார். அவர் கம்யூனிஸ்ட் கொள்கைகளில் ஆழமான புலமை பெற்றிருந்தார். 1932 டிசம்பரில் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை வழிநடத்த ஒரு வாரத்திற்குள் அவர்கள் சோலாப்பூர் விரைந்தனர். அங்கே மோசமான நிலையில் வாழ்ந்த தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 12 மணி நேரத்திற்கும் அதிகமாக நீண்ட நேரம் உழைக்க நிர்பந்திக்கப்பட்டனர். சிறையில் வழங்கப்படும் உணவைவிட வீணாகிப் போன மோசமான உணவே அவர்களுக்கு வழங்கப்பட்டது. முதலாவது வேலைநிறுத்தம் 1920 ஜனவரி 16ல் நடந்தது. அதனைத் திலகர் ஆதரித்தார். தொழிலாளர்களுக்கு வேலைநிறுத்தத்துடன் அனுபவம் இல்லாத காரணத்தால், தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தை ‘giving adda’என்று அழைத்தனர். லால் பாவ்டா ஜிகேயு சோலாப்பூரில் 1928ல் அமைக்கப்பட்டது.

            ஸ்டேஷனுக்கு வந்ததும் கர்காட்கர் உடனடியாகக் கைது செய்யப்பட்டார். மீனாவுக்கு நாளிதழ்களில் அதிக விளம்பரம் கிடைத்தது. ‘சோலாப்பூர் சமாச்சார்’ என்ற பத்திரிக்கையின் 1933 டிசம்பர் 9ம் தேதி இதழில் வெளிவந்த செய்தியில், மீனாதாய் தொழிலாளர்கள் கூட்டத்தில் முழக்கங்களை எழுப்பியதாகவும் நாட்டின் தொழிலாளர் இயக்கம் பற்றி சிறிய உரை நிகழ்த்தி அறிக்கை தந்ததாகவும் குறிப்பிட்டுள்ளது.

தொழிற்சங்க இயக்கத்தில்

            மீனாதாய் முக்கிய தலைவராக உருவானதும், மக்கள் அவர் யார் என அறிய முற்பட்டபோது அவரைப் பற்றிய பிற விஷயங்களோடு அவர் டாக்டர் BK கிர்லோஸ்கரின் பேத்தி என்பதையும் சொல்வார்கள். கிர்லோஸ்கர் புகழ்பெற்ற சமூகச் சீர்திருத்தவாதி. தனது பேரன் ஸ்ரீனிவாஸ் (ஸ்ரீனிவாஸ் கணேஷ் சர்தேசாய்) மற்றும் பேத்தி மீனாட்சி மேற்கொண்ட (மார்க்சிய) பாதையைப் புரிந்து கொள்ள கிர்லோஸ்கர் தனது 70வது வயதில் மார்க்சியத்தைப் படித்தவர். பின்னர் அவரே இறுதியில் மார்க்சியவாதியாக மாறி கம்யூனிஸ்ட்களுக்கு உதவியவர். 

     மீனாட்சி அடிக்கடி தொழிலாளர்களின் பஸ்தீஸ்களில் தங்கி இரகசிய கூட்டங்களை நடத்துவார். 1934ல் மூன்று மாதங்கள் நீடித்த வேலைநிறுத்தம் காரணமாக அவர், கர்காட்கர், பாட்லிவாலா, விபூதே முதலானவர்களோடு கைது செய்யப்பட்டார். பீஜாபூர் சிறையில் ஆறு மாதங்கள் அடைக்கப்பட்டனர். இதுவே அவர் சிறைக்குச் சென்ற முதல் அனுபவம். அப்போது தாய்மை நிலையில் இருந்த அவருக்கு மாஜிஸ்ட்ரேட் ‘பி’ கிளாஸ் வகுப்பு அளித்த பிறகும் கடுங்காவல் சிறைதண்டனை வழங்கப்பட்டது. இதனைப் பரவலாகப் பலரும் கண்டித்தனர்.

          1934 அக்டோபரில் மீனாட்சியும் கர்காட்கரும் விடுவிக்கப்பட்டனர். 1935ல் அவர்களுக்கு

ஒரு மகன் பிறந்தான், அவனுக்குப் புகழ்பெற்ற புரட்சியாளர் ஜதின் பெயராக ஜதீந்திரா எனப் பெயர் சூட்டினர். (வங்கப் புரட்சிகர அமைப்பான அனுசீலன் சமிதியைச் சேர்ந்த ஜதின் தாஸ் எனப்படும் ஜதீந்திரநாத் தாஸ் பானர்ஜி. லாகூர் சிறையில் 63 நாட்கள் உண்ணாவிரதம் இருந்து 1929 செப்டம்பர் 13ல் தமது 25வது வயதில் உயிர் நீத்தப் புரட்சியாளர்). கூட்டங்களில் உரையாற்றும்போது ஒரு கூட்டத்தில் ‘கம்யூனிசம் குறித்த ஆனா ஆவன்னா’ என்ற தலைப்பில் மீனாட்சி ஆற்றிய உரை ஒருக்கால் சோலப்பூரில் நடந்த அத்தகைய கூட்டங்களில் முதல் வகையானதாக இருக்கலாம். தனது மகனை முதுகில் சுமந்து சென்றபடியே அவர் தொழிலாளர்களோடு பணியாற்றுவார்.

            இதன் மத்தியில் மிக மோசமான நிலையில் இருந்த பீடித் தொழிலாளர்களை, குறிப்பாகப் பெண் தொழிலாளர்களை அணி திரட்டத் தொடங்கினார். முதுகைக் குனிந்தபடியே, இடுப்பும் முதுகும் ஒடியுமாறு, 10 மணி நேரம் அவர்கள் பீடி சுற்ற வேண்டியிருந்தது. அது பொறுக்க முடியாத வலியை ஏற்படுத்தும். 1000 பீடிகளுக்குக் கூலியாக வெறும் 5 அணாக்கள் – அதையும் பலநேரம் முழுமையாகத் தராமல் பல விதங்களில் பிடித்தங்களைச் செய்து குறைவாகக் கூலியைத் தருவார்கள்.

            சிஷ்கரண் மங்கிலால் பீடி ஆலையில் ஐந்து ஆணாவுக்குப் பதில் எட்டணா கூலி கேட்டு 125 பெண் தொழிலாளர்கள் 1934 அக்டோபர் 29ல் வேலைநிறுத்தம் செய்தனர். இந்த வேலைநிறுத்தம்தான் அமைப்பு சாரா தொழில் பிரிவில் இந்தியாவில் நடத்தப்பட்ட முதலாவது வேலைநிறுத்தமாக இருக்கக் கூடும். அதன் தலைவர் மீனாட்சி. ஆண் தொழிலாளர்களுடன் தோளோடு தோள் சேர்ந்து ஒன்றிணைந்து பெண் தொழிலாளர்கள் போராடினர்.  

            அந்நாட்களில் தொழிலாளர்கள், அவர்களின் தலைவர்கள் மற்றும் சங்கங்களுக்கும்  வாடகைக்குக் குடியிருக்கவோ அலுவலகம் நடத்தவோ சுலபமாக இடம் கிடைக்காது. புகழ்பெற்ற மராத்தி எழுத்தாளர் என்சி பாட்கே சோலாப்பூருக்கு விஜயம் செய்து தானே நேரில் பார்த்து கிர்லோஸ்கர் மாத இதழில் (மராத்தி) தொழிலாளர்களின் வாழ்க்கை நிலை மற்றும் போராட்டங்கள் குறித்து எழுதினார். அந்த இதழை ஷங்கர் லால் கிர்லோஸ்கர் வெளியிட்டு வந்தார். அவர்கள் வீட்டை அடைந்த உடன் வெளியே பெருமுழக்கங்கள் எதிரொலிப்பதைக் கேட்டனர். வீட்டின் உச்சியிலிருந்து பார்த்தபோது சிகப்புக் கொடிகளைத் தாஙகி வரும் தொழிலாளர்கள் ஊர்வலத்திற்கு தலைமையேற்றபடி மீனாட்சி பெருங்குரலில் முழக்கங்கள் எழுப்புவதைப் பார்த்தனர். சர்தேசாயும் மீனாட்சியும் ஊர்வலம் முடிந்த பிறகு வீடு திரும்பியவர்கள் அது குறித்து நெடுநேரம் பேசினர்.

1937 பொதுத் தேர்தல்கள்

            1935 அரசியலமைப்புச் சட்டத்தின்படி 1937 பிப்ரவரியில் நாட்டில் பொதுத் தேர்தல்கள் நடத்தப்பட்டன. டெக்ஸ்டைல் சங்கங்களும் காங்கிரசும் இணைந்து போட்டியிடுவது என முடிவெடுத்தன. கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் சங்கங்கள் ஆதரவுடன் தொழிலாளர்கள் தொகுதியில் ஹெட்கிகர் (சுதந்திரப் போராட்ட வீரர், பின்னர் சன்னியாசம் பெற்று சுவாமி இராமானந்த தீர்த்தர் ஆனவர்) நிறுத்தப்பட்டார். மிகப் பெரிய வாக்கு வித்தியாசத்தில் அவர் வென்றார். ‘என்ஜின்’ சின்னத்தில் நின்ற அவர் 7719 வாக்குகள் பெற, எதிர்த்து நின்ற Shபகாலே 973 வாக்குகள் மட்டுமே பெற்றார். இந்த வெற்றி தொழிலாளர்கள் மத்தியில் ஈடு இணையில்லா உற்சாகத்தை எழுப்பியது.

            ‘ஏக்ஜூட்’ (ஒருமைப்பாடு) என்ற தொழிலாளர்களின் வாராந்திர இதழில் மீனாதாய் தீவிரமாகப் பங்கேற்றார். 1930 பிப்ரவரி 14 ‘கைதிகள் தின’த்தின்போது அவர் மீண்டும் கைது செய்யப்பட்டு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். கர்காட்கர், விபுதே முதலானவர்களுடன் அவர் ஏரவாடா சிறையில் அடைக்கப்பட்டார்.

புதிய கட்டத்தில் நுழைவு

            சிறையில் தன் வாழ்வு குறித்து அவர் மறு சிந்தனை செய்ய முற்பட்டார். தனது குழந்தைக்கும் குடும்பத்திற்கும் கூடுதல் அக்கறையும் கவனிப்பும் வழங்க வேண்டிய தேவையை உணர்ந்தார். அதோடு மட்டுமில்லாமல் தன் கணவர் கர்காட்கருடன் அவருக்குக் கருத்து வேறுபாடு அதிகரித்து விலக ஆரம்பித்தார். விடுதலை ஆனவுடன் அவர்களுக்குள் மணமுறிவு நடந்தது. சானே என்பவருடன் நட்பு வளர அவர்கள் 1950ல் திருமணம் செய்து கொண்டனர்.

            1938ல் விடுதலையானவுடன் மீனாதாய் இரயில்வே நிலையத்தில் அன்புடன் வரவேற்கப் பட்டார். ‘மத்திய பிராந்த்’ (மத்திய மாகாணம் அல்லது CP) பீடி காம்கர் பரீட்சத் தலைவராக அவர் 1938 நவம்பர் 21ல் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1939 அக்டோபர் 3ல் சோலாப்பூரில் ‘போர் எதிர்ப்பு நாள்’ அனுசரிக்க நடந்த கூட்டத்தில் சானே, சர்தேசாய் முதலானவர்களுடன் அவரும் சொற்பொழிவாற்றினார். 1939 டிசம்பர் 5 – 7 தேதிகளில் நடத்தப்பட்ட ‘மகாராஷ்ட்டிரா மகிளா பரீட்ஷத்’ (பெண்கள் சபை)  மாநாட்டின் அமைப்பாளர்களில் ஒருவராகப் பணியாற்றினார்.

            1940 மே மாதம் இந்தியப் பாதுகாப்பு விதிகளின் கீழ் மீண்டும் கைது செய்யப்பட்ட மீனாதாய் 1942வரை சிறையில் அடைக்கப்பட்டார்.

BTR காலமும் மீனாதாய் ராஜினாமாவும்

            மீனாட்சிதாய் பிடிஆர் காலத்தில் மீண்டும் கைதாகி எரவாடா சிறையில் அடைக்கப்பட்டார். கட்சிக்குள் நடைபெற்ற மயிர் பிளக்கும் வாதங்களால் அவர் மிகவும் சோர்வடைந்தார். இந்தப் பூசல்களுக்கு ஒரு முடிவு கட்டுமாறு ஏழு பக்க வேண்டுகோள் கடிதம் ஒன்றை அவர் எழுதினார். அதனால் பலன் ஏதும் விளையாத நிலையில் வெறுத்துப் போய் கட்சியிலிருந்து ராஜினாமா செய்தார்.  

            1950ல் விடுதலையான அவர் தொடர்ந்து கட்சியுடன் இருந்தார். தீவிரமாகப் பல முன்னரங்குகளில் பணியாற்றிய அவர் தீவிரமான கல்விப் பணியை மேற்கொண்டார்; முனிசிபல் பள்ளிக் கல்வி போர்டில் பொறுப்பு வகித்தார், 1952 -53 களில் பஞ்ச நிவாரணப் பணிகளை மேற்கொண்டு, பெண்கள் சம்மேளனத்தில் பணியாற்றினார். 1980 நவம்பர் 14 -15ல் அவுரங்காபாத்தில் நடைபெற்ற மகாராஷ்ட்டிரா மாநில மகிளா சம்மேளன மாநாட்டில் தலைமை வகித்தார்.

            பின்னர் பூனேக்கு அவருகே டெலிகௌன் பிராந்தியத்திற்கு மாறினார். ‘மகிளா ஆந்தோலன் பத்ரிகா’ (பெண்கள் முன்னேற்ற இதழ்) அமைய உதவினார்.

            கொண்ட கொள்கையில் தளராத முன்னத்தி பெண் கம்யூனிஸ்ட் தலைவர் மற்றும் செயற்பாட்டாளரான மீனாதாய் சானே தனது 80வது வயதில் 1989 ஆகஸ்ட் 17ல் மறைந்தார்.

            அவர் நினைவைப் போற்றுவோம்!

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்