Monday 29 August 2022

75வது சுதந்திர விழா சிறப்புக் கட்டுரை -- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் தேச நிர்மாணத்தில் அதன் பங்கும்

                                                                         


           இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் தேச நிர்மாணத்தில் அதன் பங்கும்

--அனில் ரஜீம்வாலே

          இந்திய விடுதலையின் 75வது பவளவிழாவைக் கொண்டாடும் தருணத்தில், விடுதலை இயக்கத்தில் எந்தச் சிறு பங்கும் பெறாத சக்திகள், கபட வேடதாரிகளாக இன்று, வீடுகளில் நம்மை இந்திய மூவர்ணக் கொடியை ‘விண்ணுயர’ ஏற்றுமாறு கூறுவது எவ்வளவு பெரிய வரலாற்று முரண்நகை! விடுதலை இயக்கத்தில் பங்கு பெறாதது மட்டுமல்ல, மாறாக சங் பரிவார் கும்பல் விடுதலைப் போராட்டத்தைக் ‘கால விரயம்’ என்றும் ‘முட்டாள்தனமானது’ என்றும் எள்ளி நகையாடி எதிர்த்தது! அதற்கு ஆர்எஸ்எஸ் விநோதமான ‘விளக்க’த்தைத் தந்தது: அவர்கள் அமைப்பு கலாச்சார அமைப்பாம், ‘அரசியலுடன் செயல்பட எதுவும் இல்லை’!! மருந்துக்கு ஒரே ஒரு தியாகியின் பெயர்கூட அவர்களிடம் இல்லை. விடுதலை பெற்றதற்குப் பிறகும்கூட தேசிய மூவர்ணக் கொடி நம் நாட்டிற்குப் பொருத்தமானது இல்லை என அவர்கள் பிரச்சாரம் செய்தனர்!

     அவர்கள் வரலாறு இவ்வாறாக, தற்போது மூவர்ணக் கொடி மீது அவர்களுக்குத் தீடீர் ‘காதல்’ வந்த காரணம் என்னவோ? அவர்கள் பதில் அளிக்க வேண்டும்.

விடுதலையும் இந்திய தேசத்தைக் கட்டியெழுப்பலும்

          விடுதலை பெற்றபோது, நாடு பலவீனமானதாக, பின்தங்கிய காலனிய தேசமாக இருந்தது. அந்தச் சூழல், நாட்டின் அரசியல் மற்றும் பொருளாதார விடுதலையை உறுதிப்படுத்தும் நோக்கில் அமைந்த, வளர்ச்சிக்கான தெளிவான செயல் திட்டத்தைக் கோரியது. வலதுசாரி பிற்போக்கு மற்றும் வகுப்புவாதச் சக்திகளின் நோக்கம் வேறாக இருந்தது; உலக ஏகாதிபத்திய ஆதரவுடன் அவர்கள், நிலப்பிரபுத்துவ, வணிக மற்றும் ஏகபோக நலன்களின் மேலாதிக்கத்தைப் பாதுகாத்துத் தொடர விரும்பினர்; அதற்காக, இந்தியப் பொருளாதாரத்தை வெளிநாட்டைச் சார்ந்து இருக்கும் நிலையிலும் அரசியல் ரீதியாகப் பிற்போக்குத் தன்மையிலும் தள்ள இந்தியாவைப் பின்னுக்கு இழுத்தனர். விடுதலைக்குப் பிறகு இந்தியாவின் நிகழ்ச்சிப் போக்கில்  வளர்ச்சிக்கான சக்திகள் மற்றும் பிற்போக்குச் சக்திகளுக்கு இடையிலான போராட்டமே மையமான முரண்பாடாக இருந்தது; அப்போராட்டமே தேசத்தின் திசை வழியை முடிவு செய்து நிர்ணயித்தது.

தேசம் என்ற கோட்பாடு

          காலனிய மற்றும் ஏகாதிபத்திய காலத்தில்-- சக்திமிக்க, சுயசார்பு அடிப்படை கட்டுமானங்களையும், கனரக மற்றும் பிற இயந்திரங்கள் போன்ற உற்பத்திச் சாதனங்களையும் மேம்படுத்தி வளர்க்காமல் --இந்தியா போன்றதொரு நாடு நிலைத்திருக்க முடியாது. இம்முன்னேற்றத்தைச் சாதிக்காதிருந்தால், நாடு காலனிய --ஏகாதிபத்தியத்திற்குப் பலியாகி இருக்கும். நவீன காலத்தில் ஒரு வளரும் தேசம் கனரகக் கருவிகள், உலோகவியல், எனர்ஜி, இரும்பு, எஃகு, நிலக்கரி, போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு முதலியவற்றை உற்பத்தி செய்யும் திறன்களைப் பெற்றிருத்தல் அவசியம். வேறு வார்த்தைகளில் கூறினால், இந்தியா அதனது சொந்த அடிப்படை உள்கட்டமைப்புகளை வளர்த்தாக வேண்டும், அதன் அடிப்படையில் பொதுத் துறையின் வழிகாட்டலின் கீழ் பொருளாதாரத்தின் பிறவெல்லாம் கட்டி எழுப்பப்படும். மரபு, வரலாறு மற்றும் பண்பாடு இந்தக் கண்ணோட்டத்தில் முன் வைக்கப்பட வேண்டும்.

          தேசம், தேசத்தை உருவாக்கி நிர்மாணித்தல் என்ற கோட்பாடு உணர்ச்சிப் பெருக்கில் உதிர்க்கப்படும் வெற்று முழக்கம், வார்த்தை ஜாலம் ஆக முடியாது; மாறாக அது, நவீன, வலிமையான நாட்டிற்கான உறுதியான கொள்கைகளை உருவாக்கும் கேள்வி பற்றியது.

வளர்ச்சி செயல்திட்ட உருவாக்கத்தில் சிபிஐ உதவி

        இந்திய அரசியல், பொருளாதார மற்றும் கலாச்சார மேம்பாட்டிற்கான இருமுனை செயல்திட்டத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி (சிபிஐ) வகுத்தது: ஒன்று, பொதுத்துறை தலைமையில் இந்தியப் பொருளாதாரத்தைக் கட்டியமைத்தல், மற்றும் அடுத்தது அரசியல் ஜனநாயகம்.

   சிபிஐ அதற்கான கொள்கைகளை வகுத்தளித்ததுடன், முக்கிய தொழிற்சாலைகளை  --குறிப்பாக அயல்நாட்டு, உள்நாட்டு ஏகபோகங்களுக்குச் சொந்தமான தொழிற்சாலைகளை – ‘தேசியமய’மாக்குவதற்கான பெருந்திரள் போராட்டங்களை நடத்தியது. ‘தேசியமயமாக்கல்’ என்ற சொல், ‘தேசம்’ என்ற வேர்ச்சொல்லில் இருந்து வந்தது: எனவே, அவை தேசத்திற்குச் சொந்தமானதாக இருக்க வேண்டும். பெரிய மற்றும் பகாசுர உற்பத்திச் சாதனங்கள், கருவிகள், அடிப்படை கட்டமைப்புகள், தகவல் தொலைத்தொடர்பு மற்றும் போக்குவரத்து போன்றவை கட்டாயமாகத் தேசத்திற்குச் சொந்தமானதாகவும் அவற்றை அரசு மக்கள் நலனுக்காகப் பயன்படுத்துவதாகவும் இருக்க வேண்டும்.

          ஐந்து பிரிட்டிஷ் ரயில்வே கம்பெனிகள் தேசியமயமாக்கப்பட்டு அவற்றை இணைத்து ‘இந்திய இரயில்வே’ அமைக்கப்பட்டது. இன்று அதுதான் உலகிலேயே ஆகப் பெரியதும் மிகத் திறமையான இரயில்வே கட்டமைப்பாக உள்ளது; அது இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாக மட்டுமில்லை, தேசிய ஒருமைப்பாட்டின் வலிமையான வாகனமாகவும் திகழ்கிறது.

     தேசியப் பொருளாதாரத்தை வளர்ப்பதன் மூலம் மட்டுமே மக்களின் தேவைகளையும் அவர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற முடியும். இந்த இரண்டும் ஒன்றொடு ஒன்று பரஸ்பரம் தொடர்புடையன. சிபிஐ செயல்திட்டம் பொதுத்துறையைப் பொருளாதாரத்தின் ‘உத்தரவிடும் உச்சத்தில்’ (கமாண்டிங் ஹைட்ஸ்) வைத்தது: அப்படி உருவானவைதாம், பிலாய், துர்க்காபூர், பொக்காரோ, பரூனி உருக்காலைகளும், மதுரா எண்ணை சுத்தகரிப்பு, (கர்னாடகா மாநில சிக்கமங்களூரு மாவட்டத்தின் --குதிரைபோன்ற முகம் அமைந்த மலை உச்சியான) ‘குதிரேமுக்’ மலைத்தொடரில் தேசியப் பூங்கா, விசாகப்பட்டினம் ஸ்டீல் தொழிற்சாலை (VSP), இரயில்வே, மின்சாரம் மற்றும் எண்ணிறைந்த மற்ற பிரிவுகளும்  --75 ஏகபோகக் குழுமங்கள் மற்றும் அவர்களின் அரசியல் ஆதரவாளர்களின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்து – வெற்றிகரமாக நிறுவப்பட்டன. இந்தியாவை வலிமையிழக்கச் செய்ய விரும்பும் உலக ஏகாதிபத்தியச் சக்திகள், குறிப்பாக அமெரிக்கா, நம் நாட்டிற்கு உதவிட மறுத்தது. சோஷலிச நாடுகள், குறிப்பாகச் சோவியத் சோஷலிச ஒன்றியம் (USSR), இந்தியாவைப் பொருளாதாரச் சக்தியாக மாற்றப் பெருமளவு உதவி செய்தது. இதனால் ஏகாதிபத்திய முறைகளின் தாக்குதல்களிலிருந்து இந்தியா தன்னைப் பாதுகாத்துக் கொள்ள இயன்றது.

முன்னணி பொதுத்துறை நிறுவனங்களாக பெல், ஹெச்எம்டி, கெயில், செயில், இந்திய மருந்து மற்றும் பார்மசூட்டிகள் லிட் (IDPL) முதலிய நிறுவனங்களையும் அறிவியல் மற்றும் தொழிலக ஆய்வுக்கான இந்தியக் கவுன்சில் (CSIR), வரலாற்று ஆய்வுக்கான இந்தியக் குழு (ICHR), சமூக அறிவியல் ஆய்வுக்கான இந்தியக் குழு (ICSSR), இந்திய வேளாண் ஆய்வு நிறுவனம் (IARI) போன்ற எண்ணற்ற கல்வி மற்றும் ஆய்வுக்கான முக்கிய  நிறுவனங்களையும் இந்தியா ஏற்படுத்தியது.

வங்கிகள் தேசியமயம், 1969

    வளர்ச்சி மற்றும் பிற்போக்குச் சக்திகள் இடையிலான போட்டியில், விடுதலைக்குப் பின் இந்திய வரலாற்றின் ஒரு திருப்பு முனை, மிகச் சிறப்பான உயர்ந்த அடையாளம், உச்சத்தில் இருந்த 14 ஏகபோக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதேயாகும். அந்தத் திருப்பு முனை பொருளாதார மற்றும் அரசியல் ரீதியில் மட்டுமில்லாமல் தத்துவார்த்த ரீதியிலும் வலதுசாரி அணி மீது கடுமையான தோல்வியைச் சுமத்தியது. அது, வலது பிற்போக்கு மற்றும் இடது தீவிரவாதம் இரண்டிற்கு எதிராகவும் மிகக் கூர்மையாக நடத்தப்பட்ட தத்துவார்த்தப் போர். வங்கிகள் தேசியமயத்தை நிலப்பிரபுத்துவ, ஏகபோகத் தன்னலக் குழுக்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய ஜனசங்கம், ஸ்தாபன காங்கிரஸ், சுதந்திரா கட்சி உள்ளிட்ட பிற வலதுசாரிகள் மிகக் கடுமையாக எதிர்த்தனர்.

          அதே நேரத்தில் முந்தைய சமஸ்தான ஆட்சியாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த மன்னர் மானியமும் ஒழிக்கப்பட்டது. இந்தக் கொள்கைகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்து நிதியமைச்சர் மொரார்ஜி தேசாய் பதவி விலகினார். இந்தியக் குடியரசுத் தலைவர் பதவிக்குச் சிபிஐ மற்றும் இந்திரா காங்கிரஸ் ஆதரவுடன் டாக்டர் வி வி கிரியும், வலதுசாரி ஆதரித்த என் சஞ்சீவ ரெட்டிக்கும் இடையே நடந்த போட்டி அரசியல் வெளிப்பாட்டை பிரதிபலிக்கிறது. மிகக் கடுமையாக நடந்த போட்டியில் வி வி கிரி வெற்றிபெற்று குடியரசுத் தலைவரானார்.

       நிலப்பிரபுத்துவ கந்து வட்டி முறைக்கும், ஏகபோகமயமாக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் 14 வங்கிகள் தேசியமயம் மரணஅடியானது. சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவன (MSME) பிரிவின் பெருமளவிலான விரிவாக்கலுக்கும், பசுமைப் புரட்சிக்கு வழி நடத்திய வேளாண் பிரிவின் நவீனமயமாக்கலும் தேசியமயமான வங்கிகள் புதிய வழியைத் திறந்தன. ஸ்டீல் உருக்கு உற்பத்திக்கு முழுத் திறன் வாய்ந்த கட்டமைப்பை ஏற்படுத்தியதுடன் இணைந்த இந்த நடவடிக்கை உலக அரங்கில் இந்தியாவை முன்னே கொண்டு வந்தது.

          நேருவின் வளர்ச்சி மாடல், அல்லது வளர்ச்சிக்கான ‘நேருவின் சட்டகம்’ (ஃப்ரேம் ஒர்க்) இந்தச் செயல்திட்ட யுக்திக்குப் பெரிதும் உதவியது. 1938ன் தொழில் கொள்கை தீர்மானம் முக்கியமாக நேருவால் வடிவமைக்கப்பட்டது; மேலும் திட்டமிட்ட, சுயசார்பு மற்றும் சுதந்திரமான பொருளாதாரத்திற்கு 1948 மற்றும் 1956 தொழில் கொள்கை தீர்மானங்கள் வலிமையான அடித்தளத்தை அமைத்தன. பொதுத்துறைகள் தலைமையில் வளர்ச்சிக்கானச் செயல்திட்ட யுத்தியின்பால் பிரதமராக நேரு ஒரு நேர்மறை அணுகுமுறையைக் கொண்டிருந்தார். இன்று வலதுசாரி பிற்போக்குவாதிகள் நேருவின் வளர்ச்சிக் கட்டமைப்பை அழிக்க முயற்சி செய்கிறார்கள், நேருவின் பேரையும் புகழையும் சேற்றை வாரி இறைத்து இழிவுபடுத்த முயற்சி செய்கிறார்கள்.

பாராளுமன்ற ஜனநாயகத்திற்காகப் போராட்டம்

          நமது அரசியலமைப்புச் சட்டமும் நாடாளுமன்ற முறைமையும் பிரிட்டிஷ் காலனிய ஆட்சிக்கு எதிரான நமது விடுதலை போராட்டத்தின் நேரடி விளைவாகும். விடுதலைக்காகப் போராடும் அதே நேரத்தில் நாம் அரசியல் மற்றும் அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்காகவும் கூடுதல் இந்தியர்களின் பங்கேற்பிற்காகவும் போராடினோம். ஜனநாயக உரிமைகளை நீட்டிப்பதற்காக நீண்ட போராட்டங்களை இந்திய தேசிய காங்கிரஸ், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி மற்றும் பிறவும் நடத்தினர். பிரிட்டிஷ் காலனிய ஆட்சியின் பொருளாதார மற்றும் அரசியல் விளைவுகள் மீது காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கற்றறிவாளர்களும் தலைவர்களும் மிகக் கடுமையான விமர்சனங்களைச் செய்தனர்.

          1937 பொதுத் தேர்தல்கள் நடக்கும்போது சிபிஐ தடை செய்யப்பட்டிருந்தது. இருந்த போதிலும் மெட்ராஸ், பஞ்சாப் மற்றும் வங்காளம் உட்பட பல்வேறு சட்டமன்றங்களுக்குப் கம்யூனிஸ்ட்கள் சுயேட்சைகளாக அல்லது காங்கிரஸ் பதாகையில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

          அந்நாட்களில் கல்வி மற்றும் சொத்துரிமையின் அடிப்படையில் தகுதிப்பாடு இருந்ததால், வாக்களிக்க உரிமை பெற்றவர் எண்ணிக்கை வரையறுக்கப்பட்டதாக இருந்தது, வாக்களிப்போர் 14 சதவீதத்திற்கும் மேல் ஒருபோதும் இல்லை. பிரிட்டிஷ் ஆட்சியின்போது ‘தொழிலாளர்களுடைய தொகுதிகள்’ இருந்ததால் பல கம்யூனிஸ்ட்கள் சட்டமன்றப் பிரதிநிதிகளாகத் தேர்ந்தெடுத்து அனுப்பப்பட்டனர். அவ்வாறே அரசியலமைப்பு நிர்ணய சபைக்கும் தொழிலாளர் பிரதிநிதியாகச் சோமநாத் லாகிரி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

     சுதந்திரத்திற்குப் பின் ஜனநாயகத்திற்கான அடித்தளத்தை ஏற்படுத்த, அனைவருக்கும் வாக்கு மற்றும் வாக்களிக்கும் உரிமைகளை நீட்டிப்பதற்கான போராட்டம் முக்கிய பிரச்சனையாக இருந்தது. ஜனநாயக உரிமைகளுக்காகத்தான்  கம்யூனிட்கள் உட்பட தேசியத் தலைவர்கள் போரானர், அதற்காகத் தங்கள் இன்னுயிரையும் தந்தனர்.

அரசியலமைப்பு நிர்ணய சபை

  1946ல் அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு நடந்த தேர்தல்களில் 11மாகாணங்களில் 9ல் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்றது. சிபிஐ கட்சியும் போட்டியிட்டு தொழிலாளர்களின் தொகுதியிலிருந்து ஓர் இடத்தை வென்று அரசியல் நிர்ணய சபைக்குச் சோமநாத் லாகிரியை அனுப்பியது. 14 சதவீதம் மட்டுமே வரையறுக்கப்பட்ட வாக்காளர்கள் அதில் வாக்களித்தனர். ஆனால்  உண்மையில் சிபிஐ, 1927லேயே வெகு முன்னதாக அனைவருக்கும் வாக்குரிமை அடிப்படையில் அரசியலமைப்பு நிர்ணய சபையை அமைக்க வேண்டுமெனக் கோரியது.

    பாம்பே மாகாணச் சட்டமன்றத்திற்கு எஸ் ஏ டாங்கே போல சிபிஐ வேட்பாளர்கள் சில மாகாணச் சட்டமன்றங்களுக்கான தேர்தல்களில் வெற்றி பெற்றார்கள்.

      அரசியலமைப்பு நிர்ணய சபையில் முன் வைக்கப்பட்ட எண்ணற்ற திருத்தங்கள் மற்றும் முன்மொழிவுகளை டாக்டர் பிஆர் அம்பேத்கர், அரசிலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக இருந்து பரிசீலித்தார். இந்த (விவாதம், பரிசீலனை போன்ற) நடவடிக்கை முழுமையாக நான்கு ஆண்டுகள் நீண்டது: அதில் நேரு, டாக்டர் அம்பேத்கர், டாக்டர் இராஜேந்திர பிரசாத், (என் கோபாலசுவாமி) அய்யங்கார் மற்றும் இறுதியாகச் சோமநாத் லாகிரி தங்களது சொந்த மதிப்புமிக்க பங்களிப்புகளைச் செலுத்தினர்.

அரசியலமைப்புச் சட்டம் : இந்திய ஜனநாயகத்தின் அடிப்படை

இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஒரு தனித்துவமான, இணையற்ற ஆவணமாகும்; உலகில் வேறெந்த அரசிலமைப்புச் சட்டமும் ஒரே அடியில் தனது வயது வந்த மக்கள் அனைவருக்கும், அதே நாளில், வாக்குரிமை வழங்கவில்லை: அவர்கள் ஆணோ பெண்ணோ, தொழிலாளி அல்லது முதலாளி, விவசாயி அல்லது நிலப்பிரபு, பணக்காரன் அல்லது ஏழை, படித்தவரோ படிக்காதவரோ என எந்தப் பாகுபடும் இன்றி அனைவருக்கும் வாக்குரிமை அளித்தது. உண்மையில், வாக்குரிமை மக்கள் கைகளில் கிடைத்த சக்திமிக்க ஆயுதம். அது இந்திய தேசத்தை வடிவமைத்தது.                         


         தீவிர வலதுசாரிகளும் பாசிச வகுப்புவாதச் சக்திகளும் அதைச் சீர்குலைக்கவும் பாசிசத்தைத் தோன்றச் செய்யவும் தங்களால் ஆன அனைத்து முயற்சிகளையும் செய்வது புரிந்து கொள்ளக் கூடியதே. இந்த அரசியலமைப்புச் சட்டத்தைதான் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உறுதியாகப் பாதுகாத்துப் போராடி வருகிறது.

          இந்த அரசியலமைப்புச் சட்ட ஜனநாயகத்தின் கீழ் 1957ல் இஎம்எஸ் தலைமையில் கேரளாவில் முதலாவது கம்யூனிச அமைச்சரவை அமைக்கப்பட்டது, மேலும் பின்னர் அந்த அரசு 1969ல் அச்சுத மேனன் தலைமையில் செயல்பட்டது. இது தவிரவும் பல்வேறு மாநிலங்களில் இடதுசாரி, ஜனநாயக, காங்கிரஸ் அல்லாத, மாநிலக் கட்சிகளின் ஆட்சிகள் பொறுப்புக்கு வந்தன.

          பன்முகக் கலாச்சாரம், பன்முக மத நம்பிக்கைகள், பல்வேறு மொழிகள் பேசும் பரந்துபட்ட வகையிலான மக்களைக் கொண்ட இந்திய தேசத்தை நமது அரசியலமைப்புச் சட்டம் ஒன்றாக இணைத்துள்ளது. இடதுசாரிகள், வலதுசாரிகள், மையக் கருத்துடையோர், மாநிலக் கட்சிகள் எனப் பல வேறுபட்ட கட்சிகள் பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் உள்ளன. இதுவே இந்திய ஜனநாயகத்தின் வலிமை.

          இந்தியா ஒரு வலிமையான நவீன தேசமாக மலர்ந்துள்ளது, அதன் முக்கிய குணாம்சமும் வலிமையும் அதன் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படையில் உள்ளது.

        இந்த வலிமையும் ஒற்றுமையும்தான் இன்றைய சங் பரிவார் கும்பலின் பாசிச, வகுப்புவாதப் பிளவுபடுத்தும் சக்திகளின் தாக்குதலுக்கு இலக்காகி உள்ளது.

          இன்றைய 75வது இந்திய விடுதலையின் பவள விழாவைக் கொண்டாடும் தருணத்தில் இந்தியாவை, இந்தியாவின் ஒற்றுமையை அதன் ஆதார வலிமையான அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க உறுதி பூணுவோம்!  

--நன்றி : நியூஏஜ் (ஆக.28 –செப்.3)

--தமிழில்: நீலகண்டன்,

தொடர்புக்கு 94879 22786

Friday 26 August 2022

இந்திய விடுதலையின் 75 ஆண்டுகளும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும் --டாக்டர் பி கே காங்கோ

 

இந்திய விடுதலையின் 75 ஆண்டுகளும்,

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியும்

--டாக்டர் பி கே காங்கோ

            நாடு 75வது சுதந்திர தினத்தைக் கொண்டாடிவரும் வேளையில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது கிளை அமைப்புகள் அனைத்தும் அதனைச் சிறப்பாகக் கொண்டாட அறைகூவல் விடுத்தது. போஸ்டர், புகைப்படக் கண்காட்சிகள், கலை நிகழ்ச்சிகள், கவியரங்கங்கள் ஏற்பாடு செய்து, அவ்விழாக்களில் விடுதலைப் போராட்ட வீரர்கள் மற்றும் அவர்தம் குடும்பத்திரை அழைத்துக் கட்சியின் பல்வேறு மாவட்டக் கிளைகள் அவர்களுக்கு மரியாதை செய்து கௌரவித்துள்ளன. அதே நேரம் விடுதலைப் போராட்ட இயக்கத்தில் கட்சி மற்றும் அதனது செயல் மறவர்கள் ஆற்றிய அளப்பரிய பங்கினை வலியுறுத்தி கையேடுகள் மற்றும் கடடுரைகளும் எழுதப்பட்டன. (புகைப்படத்தில்பாலன் இல்ல’த்தில் பெரியவர் தோழர் நல்லகண்ணு 75வது சுதந்திர தின மூவர்ணக் கொடியை ஏற்ற, மாநிலச் செயலாளர் தோழர் ஆர் முத்தரசன் உரையாற்றுகிறார்)

            எடுத்த எடுப்பில் பெருமிதத்துடன் நாம் குறிப்பிடலாம், இந்தியாவின் உழைக்கும் வர்க்கமும் அதன் தேசிய அமைப்பான அனைத்திந்திய தொழிற்சங்கக் காங்கிரஸ் (ஏஐடியுசி) பேரியக்கமும்தான் 1923லேயே “பூரண சுதந்திரம்” என்பதற்கான முதல் முழக்கத்தைத் தந்தது; உழைக்கும் வர்க்கத்தின் முதல் அரசியல் கட்சி தொடக்கத்தில் குழுக்களாகவும், மற்றும் பிறகு 1925 டிசம்பர் 26ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியாக ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து இந்தப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தியது.

    எனினும், பிறந்ததிலிருந்தே கம்யூனிஸ்ட் கட்சியையும், மார்க்ஸிய நூல்களையும் பிரிட்டிஷ் அரசு தடை செய்தது. மேலும் பல்வேறு வழக்குகளைத் தொடுத்து அணிகளை ஒடுக்கியது. கட்சித் தலைவர்களைக் கைது செய்து அவர்களுக்கு எதிராகப் பல்வேறு சதி வழக்குகளைப் புனைந்தனர். கான்பூர் சதி வழக்கு, மீரட் சதி, பெஷாவர் வழக்கு என்பன போன்ற நன்கு அறியப்பட்ட வழக்குகள் மற்றும் பிறவும் தலைவர்கள் மற்றும் கட்சியினர் மீதான அடக்குமுறை சித்திரவதைக் கொடுமைகளையும் அவற்றை எதிர்கொண்ட கம்யூனிஸ்ட் தலைவர்-களின் நெஞ்சுரத்தையும் கதை கதையாய்ச் சொல்லும்!

    தொழிலாளர்கள், விவசாயிகள், பழங்குடி இன மற்றும் பாடுபடும் மக்கள் கூட்டத்தை விடுதலை இயக்கத்தில் ஈடுபடச் செய்து அதனை முழுமையான மக்கள் இயக்கமாக்கிய பெருமை கம்யூனிஸ்ட்களையே சாரும். இந்த ஈடுபாடு, காங்கிரஸ் இயக்கத்தின் உள்ளேயும் வெளியேயும் இருந்தவர்கள் மீது செல்வாக்கு செலுத்திய மகாத்மா காந்திஜியின் பெரும் பங்களிப்புடன் ஒன்றிணைய, இயக்கத்தின் மையமாக பொது மக்கள் திரள் பங்கேற்க விடுதலை இயக்கம் வீறுநடை போட்டது.

         கம்யூனிஸ்ட்கள் பல வெகுஜன மக்கள் அமைப்புக்களை ஏற்படுத்த முன் முயற்சி எடுத்தனர்; மாணவர்கள், எழுத்தாளர்கள், விவசாயிகள் மற்றும் கலைஞர்களை விடுதலை இயக்கத்தில் திரட்ட கம்யூனிஸ்ட்கள் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (ஏஐஎஸ்எப்), அனைத்திந்திய கிசான் சபா (ஏஐகேஎஸ்), முற்போக்கு எழுத்தாளர்கள் அமைப்பு மற்றும் இந்திய மக்கள் இயக்கம் போன்ற அமைப்புக்களை நிறுவினர். 1936ம் ஆண்டில் இந்த அனைத்து அமைப்புக்களும் நிறுவப்பட்டபோது, பாஸிச மேகங்கள் உலக வானத்தை இருளடையச் செய்யத் தொடங்கி இருந்தன.

     1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் (க்விட் இந்தியா) கம்யூனிஸ்ட்கள் பங்கேற்கவில்லை எனப் பொத்தாம் பொதுவாக இடம், பொருள், சூழலைக் குறிப்பிடாமல் இடதுசாரிகளின் எதிரிகள் அடிக்கடி தேய்ந்துபோன ரெக்கார்டாகக் குற்றம் சாட்டுவார்கள். அன்றைய சூழல் மனித குலம் முழுமையும் அச்சுறுத்திய பாஸிசச் சக்திகளை எதிர்த்துப் போரிடும் முடிவைக் கம்யூனிட்கள் மேற்கொள்வதில் ஈடுபடச் செய்தது. கம்யூனிஸ்ட்களைப் பொருத்தவரை, மனிதகுல விடுதலைக்காக, அன்றைய பாஸிசச் சவால் அச்சுறுத்தலை எதிர்த்து முறியடிப்பதே தங்களின் உலகு தழுவிய பரந்த போராட்டக் கடமை எனக் கருதினர். இரண்டாம் உலகப் போரின் நாட்கள் உலகம் முழுவதும் உள்ள மக்கள் கூட்டங்களுக்குச் சொல்லொண்ணா கடும் துன்ப துயரங்களை ஏற்படுத்தியது.

            காங்கிரசும் அதன் ஆதரவாளர்களும் பாஸிச ஆபத்துக் குறித்து அறியாமல் இல்லை என்ற உண்மையைச் சுட்டிக்காட்ட வேண்டும். அப்படியும் காங்கிரஸ், சுதந்திரமான இந்தியா பாஸிசத்திற்கு எதிராக முக்கியப் பெரும் பங்காற்ற முடியும் என்று கருதியது: அதனால்தான், சுதந்திரத்திற்காகப் பிரிட்டிஷ்காரர்களை எதிர்த்து நடத்தும் போரில் பாஸிஸ்டுகளை நண்பர்களாகக் கருதி நடத்த வேண்டும் என்ற நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் கொள்கையைக் காங்கிரஸ் ஆதரிக்கவில்லை.

            மேலும் குறிப்பிட வேண்டிய ஒரு செய்தி, 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் அருணா ஆஸஃப் அலி, காம்ரேட் கிராந்திசிங் நானா பாட்டீல் மற்றும் அவர்களின் ‘டூஃபென் சேனா’ தோழர்கள், மற்றும் ஷாஹீத்-இ-ஆஸாத் பகத்சிங் கூட்டாளிகளான அஜாய் கோஷ் போன்றவர்கள், மற்றும் கதார் கட்சியின் சோகன் சிங் ஜோஷ் போன்ற தலைவர்களும் மற்றவர்களும் பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். (க்விட் இந்தியா இயக்கத்தின் ஆளுமைகள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைபாட்டைப் புரிந்திருந்தனர் என்பதுதானே அதன் பொருள்)

       1946 கப்பற்படை வீரர்கள் எழுச்சியின்போது கம்யூனிஸ்ட்களின் பங்களிப்பைப் பெருமிதத்துடன் குறிப்பிடலாம். ஜனநாயகம் மற்றும் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்கான போராட்டமே இந்திய விடுதலைக்கான போராட்டம் என்பதை நாம் நிளைவில் கொள்ள வேண்டியது அவசியம்; எனவேதான், பிரிட்டிஷாருடன் தனி ஆட்சி நடத்திய 571 சமஸ்தானங்களின் இந்திய நிலப்பிரப்புக்களின் ஆட்சியை எதிர்த்தப் போராட்டங்களில் கம்யூனிஸ்ட்கள் முன்னணிப் பாத்திரம் வகித்து முக்கிய பங்காற்றினர். கம்யூனிஸ்ட்கள் ஜனநாயகத்திற்காக மக்கள் போராட்டத்தைக் கட்டியமைத்து நடத்தினர். குறிப்பாக ஹைதராபாத் நிஜாமை எதிர்த்துக் கம்யூனிஸ்ட்கள் நடத்திய வீரம் செறிந்த போராட்டத்தைக் குறிப்பிட வேண்டும். அப்போராட்டத்தில் தெலுங்கானா பகுதியின் 3000 கிராமங்களில் விவயாயிகளுக்கும், நிலமற்ற ஏழைகளுக்கும் கம்யூனிஸ்ட்கள் நிலத்தைப் பகிர்ந்தளித்தனர். மக்களைச் சுரண்டி ஒடுக்கிய நிலஉடைமை ஜாகிர்தார்கள் ஓட வேண்டியதாயிற்று.

    இப்போராட்டத்தின் விளைவாய் மாநில அரசுகள் நில உச்சவரம்புச் சட்டத்தையும், குத்தகைதாரர்கள் சட்டத்தையும் நிறைவேற்ற வேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாயின. இந்தியாவில் நிலப்பிரபுத்துவத்திற்கு விழுந்த மரண அடி இது.

      இன்று, நாம் 75வது சுதந்திர தின விழாவைக் கொண்டாடிவரும் தருணம், விடுதலைப் போராட்டக் காலத்தில் வளர்ந்து உருப்பெற்ற “இந்தியா என்ற கருத்தாக்கம்” அபாயத்தில் அச்சுறுத்தலில் உள்ளது. சமூகத்தின் செல்வாதாரச் சலுகைகளை அனுபவித்து வந்த பிரிவுகள், உலகம் முழுவதும் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் இயக்கத்தால் உற்சாகம் பெற்ற மக்களின் ஜனநாயக எழுச்சியைக் கண்டு, குறிப்பாக 1917 ரஷ்யப் புரட்சியைக் கண்டு, பீதி அடைந்து தங்களின் வசதிகள் ஆபத்தில் இருப்பதாகக் கருதினர்; எனவே தாங்களும் அமைப்பாக ஒன்று திரள வேண்டிய தேவை தீவிரமாக இருப்பதாக உணர்ந்தனர். இவ்வாறு, அவர்களின் குறுகிய தன்னல நலன்களைப் பாதுகாக்க இராஷ்ட்ரிய சுயம்-சேவக் சங் (ஆர்எஸ்எஸ்) என்ற அமைப்பு பிறந்தது.

            ஆர்எஸ்எஸ் “பலசாலி பாரத்” (வலிமையான இந்தியா) என்ற கோட்பாட்டை வளர்த்து முன்னிறுத்தியுள்ளது; ஆனால் இந்த வலிமை உயர் சாதி மற்றும் மேல் வர்க்கத்தினரின் சலுகைகளை /செல்வ நுகர்வைப் பாதுகாப்பதிலிருந்து வருகிறது: குறிப்பாக, உழைக்கும் பெருந்திரள் மக்கள் நலன்களைப் பலியிட்டு பெரும் ஏகபோகங்கள் மற்றும் அன்னிய மூலதனத்தைப் பாதுகாப்பதிலிருந்து வருகிறது. கலாச்சாரத் தேசியவாதம் (ஹைப்பர் நேஷனலிசம்) என்ற இந்துத்துவப் போர்வையில் வலிமையான இராணுவத்தை வலியுறுத்துவதுடன் இந்தக் கோட்பாட்டின் ஆதார முதுகெலும்பு அமைகிறது.

     எனவே இன்று இந்திய விடுதலையின் 75வது ஆண்டு பவளவிழாவைப் பெருமிதத்துடன் கொண்டாடும்போது இந்தியா என்ற கருத்தாக்கத்திற்கு மீண்டும் செல்ல வேண்டிய அவசியத் தேவை உள்ளது; அந்தக் கருத்தாக்கத்தின் பொருள், மக்களுக்கு அதிகாரம் அளிப்பது மற்றும் உண்மையான ஜனநாயகம் எதுவோ அதுவே சுதந்திரம்: அதுதான் உலக மக்களின் விடுதலைக்கு உதவும், ஆதிக்கத்திற்கு அல்ல. விடுதலை என்பது மக்களுக்கானதே தவிர பாஸிச மற்றும் வலதுசாரி பிற்போக்குச் சக்திகள் பிரச்சாரம் செய்வது போல, மக்கள் தேசத்திற்கானவர்கள் இல்லை. அது பாஸிசவாதிகளின் பொய் முகமூடி. 75வது சுதந்திர நாளில் நாம் இன்னும் விழிப்புடன் இருக்கச் சமதமேற்போம்! சுதந்திரத்தை மட்டுமன்று, விடுதலைப் போராட்ட இயக்கம் உருவாக்கித் தந்த இந்தியா என்ற கருத்தாக்கத்தையும் கண்ணின் மணியாய்ப் பாதுகாப்போம்!

--நன்றி : நியூஏஜ் (ஆக.21 – 27)

--தமிழில்: நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

Saturday 20 August 2022

கம்யூனிஸ்ட்தலைவர்கள் வரலாறு 69 -- டாக்டர் ராஜ் பகதூர் கௌர்

                                                                                                                             கம்யூனிஸ்ட்தலைவர்கள் வரலாறு 69


       
ராஜ் பகதூர் கௌர் --

பன்முக ஆளுமை கொண்ட தலைவர்
மற்றும் மனிதரில் இரத்தினம்

                                                               --அனில் ரஜீம்வாலே

ராஜ் பகதூர் கௌர் பன்முக ஆளுமை மற்றும் அத்தனை குணங்களும் நிரம்பிய தலைச் சிறந்தோர்களின் மத்தியில் விளங்குகிறார்.

ஹைதராபாத் கௌளிபுராவில் 1918 ஜூலை 21ல் ஸ்ரீ ராய் மகபூப் ராய் கௌரின் மூத்த மகனாகப் பிறந்தார். தாய் திருமதி அமராவதி கௌர் காசியைச் சேர்ந்தவர். அவரது தாத்தா 1850களில் தனது இரண்டு சகோதரர்கள் மற்றும் சகோதரியுடன் 1850வாக்கில் உ.பி., ஃபைசாபாத் மாவட்டத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர். அவர், புகழ் பெற்ற உருது மற்றும் பாரசீக மொழி கவிதைகளை இயற்றிய  கலிப் (வெற்றியாளர்) அல்லது மிர்சா கலிப் என்ற ஆசியாவின் தலை சிறந்த உருது, பாரசீகக் கவிஞர், கலிபுல் மாலிக் கலிப் சாங் அவர்களிடம் சேவை புரிந்தார். ராஜ் பகதூர் மூன்று வயதாக இருக்கும்போது தாயை இழந்தார். தாய் இறந்து எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு அவரது தந்தை மறுமணம் செய்தார், இம்முறை அது கலப்புத் திருமணமாக இருந்தது.

கல்வி

          ராஜ் பகதூர் மூன்றாம் வகுப்பிலிருந்து ஷாலிபந்தா நடுநிலைப் பள்ளியில் உருது வழியில் தொடக்கக் கல்வியையும் பின்னர் ஏழாம் வகுப்பிலிருந்து சந்தர்காட் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆங்கில வழியில் கற்று, விடுதியில் தங்கி மெட்ரிக் தேர்வை 1936ல் முதல் வகுப்பில் தேர்வானார். அவரது இறுதி காலம் வரை தனது ஆசிரியர்களை மிகுந்த அன்புடன் நினைவு கொண்டார். புத்தகங்களின் மீது தீராத காதலை வளர்த்துக் கொண்ட அவர் ஹைதராபாத் அபிட்ஸ் அரசு நூலகத்திற்குச் சென்று ஏராளமான நூல்களைக் கொண்டு வந்தார், தனது வீட்டிலேயே ஒரு நூலகமும் வைத்திருந்தார்.

            அவர், கலிப் மற்றும் இக்பால் முதல் பிரேம் சந்த் மற்றும் ஹஸ்ரத் மொஹானி வரை படைத்த இலக்கியங்களைப் படித்தார்; அரசியல் படைப்புக்களை எம்என் ராய், ஜெய்பிரகாஷ் நாராயணன் எழுதிய “சோஷலிசம் ஏன்?” மற்றும் அலகாபாத் சோஷலிஸ்ட் புக் கிளப்பிலிருந்து மற்றவர் எழுத்துக்கள் முதல் கம்யூனிஸ்ட்கள் வரையிலும் படித்தார், ஏராளமான இதழ்களையும் படித்தார். மாணவப் பருவ நாட்களில் அவர் ஆரிய சமாஜ் கூட்டங்களில் கலந்து கொண்டார். ஒன்பதாம் வகுப்பில் படிக்கும்போது கணேஷ் உற்சவக் கூட்டம் ஒன்றில், ‘மனிதன் கடவுள் உருவாக்கிய மிருகம்’ என்று கலிஃபா அப்துல் ஹக்கீம் கூறும்போது சௌகே உடனே, ‘மனிதன் கடவுளைக் கொல்லும் மிருகமும் கூட!’ எனக் குறிப்பிட்டதாகச் சொல்லக் கேட்டார். அவர் உடனே புக்காரினிடம் திரும்பி அவரது ‘வரலாற்றுப் பொருள்முதல் வாதம்’ நூலையும் எம்என் ராயின் ‘லோகாயதம்’ (மெட்டீரியலிசம்) நூலையும் படித்து மெல்ல சோஷலிசத்தின்பால் நகரலானார்.

           பள்ளிக் கல்விக்குப் பின் ராஜ் பகதூர் விடுதிகளில் தங்கி 1943 செப்டம்பரில் உஸ்மானிய பல்கலைக்கழகத்திலிருந்து எம்பிபிஎஸ் மருத்துவப் பட்டம் நிறைவு செய்தார். படிக்கும் காலத்தில் அவருக்கு இலவச உதவிகள் மட்டுமின்றி சிறந்த மாணவர்களுக்கு அளிக்கப்படும் ‘பர்சரி’ (இலத்தீன் வேர்ச் சொல்), கல்வி உதவித் தொகை ரூ 17ம் பெற்றார்.

            பின்னர் சிட்டி கல்லூரியில் அவர் ஆசிரியரானார்.

அரசியலில்

     ஹைதராபாத் காங்கிரஸ் 1938ல் நிறுவப்பட்டு, அதன் நிழல் குழுவின் கூட்டம் ராஜ் பகதூரின் வீட்டிலேயே நடக்கும்! அதன் தாக்கத்திலிருந்து அவரால் தப்ப இயலவில்லை. சிவில் உரிமைகள் மற்றும் பொறுப்பான அரசுக்காகச் சத்தியாகிரக இயக்கத்தைக் காங்கிரஸ் தொடங்கியது. அதில் சேர விரும்பிய ராஜ் பகதூரும் சுவாமி இராமானந்த் தீர்த்தரைச் சந்தித்தார். நிஜாம் அதைத் தடை செய்ததால் 1939ல் ‘வந்தே மாதரம்’ இயக்கம் தொடங்கப்பட்டது. அதில் ராஜ் பகதூர் தீவிரமாகப் பங்கேற்றார்.

            ராஜ் பகதூர் 1938ல் விடுதலைக்கான போராட்டம் குறித்த தனது முதலாவது அரசியல் கட்டுரையைப் பயம் (‘செய்தி‘ என்று பொருள்படும் பாரசீரகச் சொல்) உருது நாளிதழில் எழுதினார். 1939ல் மாணவர்கள் சங்கத்தில் சேர்ந்து 1940ல் ஏஐஎஸ்எப் நாக்பூர் மாநாட்டில் மக்தூமுடன் கலந்து கொண்டார். மாநாட்டில் முஷ்டாக், முகர்ஜி மற்றும் பரதனுடன் தொடர்பு கொண்டார். 1941 ஏஐஎஸ்எப் பாட்னா மாநாட்டிலும் கலந்து கொண்டார்.

       1941ல் உஸ்மானியா மருத்துவக் கல்லூரி மாணவர்கள் சங்கத்தின் துணைத் தலைவரானார். கல்லூரி இதழின் ஆசிரியர் பொறுப்பையும் வகித்தார்.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில்

            1939ல் காம்ரேடுகள் அசோஸியேஷனில் சேர்ந்து, விரைவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். சையத் ஆலம் கூன்டுகிரி, மக்தூம், சையத் இம்ராகிம், மாணிக்லால் குப்தா, ஆசன் மிர்ஸா மற்றும் நாகோ ராவ் உட்பட பல சிபிஐ கட்சி ஆதரவாளர்களால் 1938 –39ல் காம்ரேடுகள் அசோஸியேஷன் அமைக்கப்பட்டது. விரைவில் நிஜாம் சமஸ்தானத்தின் கம்யூனிஸ்ட் குழுவை நிறுவியது. 1942 --43ல் காம்ரேடுகள் அசோஸியேஷன் செயலாளர் மற்றும் 1943 –44ல் ராஜ் அதன் தலைவராகவும் ஆனார்.  காம்ரேடுகள் அசோஸியேஷன் பற்றி பாம்பே மாகாண உள்துறை அமைச்சர் கேஎம் முன்ஷி சந்தேக அச்சம் கொண்டார். ராஜ் பகதூர், சரோஜினி நாயுடு மற்றும் ஜவகர்லால் நேருவின் ஆழமான செல்வாக்கிற்கு ஆட்பட்டார். 1940 முதலாக விரைவில் கேஎல் மகேந்திராவுடன் சேர்ந்து ஆந்திர மகாசபா அமைப்பில் தீவிரமாகச் செயல்பட்டார்.

                       மக்தூம் மொகிதீன் சிபிஐ கட்சியின் ‘நேஷனல் ஃப்ரண்ட்’ இதழை வினியோகிக்க

ஏற்பாடு செய்வதை வழக்கமாகக் கொண்டிருந்தார், அந்த இதழ் மக்களிடையே பிரபலமாக இருந்தது. மக்தூம் நகரத்தின் முதலாவது கட்சிக் கிளை செயலாளராகவும் ராஜ் பகதூர்  துணைச் செயலாளராகவும் இருந்தனர்.    


தொழிற்சங்க இயக்கத்தில்

          ஏற்கனவே அவரது கல்லூரி இதழில் மருத்துவப் பட்டதாரிகளுக்குக் குறைந்த ஊதியம் வழங்கப்படுவதை ராஜ் பகதூர் விமர்சனம் செய்து எழுதியதை மருத்துவச் சேவைகளின் இயக்குநர் ஆட்சேபித்தார். இவ்வாறு அவர் தொடக்கம் முதலே தொழிலாளர் பிரச்சனைகளில் பொங்கியெழும் உணர்வுடையவராக இருந்தார். எம்பிபிஎஸ் மருத்துவம் படிக்கும்போதே, மருத்துவத் தொழிலை மேற்கொள்வதில்லை, கட்சி / தொழிற்சங்க முழு நேர ஊழியராகப் பணியாற்றுவதென்று அவர் முடிவு செய்து விட்டார்.

       நிஜாம் (சமஸ்தான) அரசு இரயில்வே தொழிலாளர்கள் சங்கம், ஹைதராபாத் டெக்ஸ்டைல் மற்றும் பிற தொழிலாளர்கள் அமைப்புகள், குல்பர்கா, நான்டெட், வாராங்கல் முதலான இடங்களிலும் தொழிலாளர்களை ஒன்று திரட்டும் அமைப்பாளர்கள் மத்தியில் அவர் பணியாற்றினார். மேலும் அவர் ஆலம்புழா மெட்டல் தொழிலாளர்கள், ஷாகாபாத் சிமெண்ட் தொழிலாளர்கள் மற்றும் மற்றவர்களை அமைப்பாகத் திரட்டினார்.

       அனைத்து ஹைதராபாத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (AHTUC) 1945ல் மக்தூம், ராஜ் பகதூர், மகேந்திரா, ஜாவேத் ரிஸ்வி, குலாம் ஹைதர் மற்றும் பிறர் தலைமையில் அமைக்கப்பட்டது. தொடக்கம் முதல் அமைப்பின் செயலாளராக ராஜ் பகதூர் இருந்தார்.

          அந்நேரத்தில் ஹைதராபாத் அரசில் தொழிற்சங்கச் சட்டங்கள் எதுவும் இல்லை. உலக யுத்தத்திற்குப் பிறகு விலைவாசி ஏற்றம் வேலைநிறுத்த அலைகளைக் கூர்மையாக எழச் செய்தது. அப்போராட்டங்களில் ராஜ் பகதூர் மிகத் தீவிரமாக ஈடுபட்டார். அவர் மாணவராக இருக்கும்போதே டெக்ஸ்டைல் தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் போன்ற இயக்கங்களில் பங்கேற்க நான்டெட் மற்றும் வாராங்கல் சென்றிருக்கிறார்.

            1946 குல்பர்காவில் எம்எஸ்கே மில் தொழிலாளர்கள் சங்கம், டிபிஆர் மில் சங்கம், ஹைதராபாத் நூற்பு மற்றும் நெசவு ஆலைகள் சங்கம் முதலானவற்றுடன் அவர் தொடர்பு கொண்டிருந்தார்.

ஒடுக்குமுறை எதிர்ப்பு தினம், 1946

            1946 அக்டோபர் 16ம் நாளை ஒடுக்கு முறை எதிர்ப்பு தினம் (ஆன்டி-ரெப்ரஷன் டே) என அனுசரிக்கப்பட்டது, தொழிலாளர்கள் ஒரு நாள் பொது வேலைநிறுத்தம் செய்தனர். ராஜ் பகதூர், மக்தூம், ஜாவேத் ரிஸ்வி முதலானவர்க்கு எதிராக கைது உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ராஜ் பகதூர் மற்றும் ரிஸ்வி தலைமறைவாகச் சென்றாலும் விரைவில் கைதாயினர். 1946 நவம்பர் 15ல் கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டது. ஹைதராபாத் மத்திய சிறையிலிருந்து மருத்துவப் பரிசோதனைக்காக உஸ்மானிய மருத்துவ மனைக்கு அழைத்துச் சென்றபோது ராஜ் பகதூர் மற்றும் ஜாவேத் ரிஸ்வி மருத்துவமனையிலிருந்து தப்பிச் சென்றனர். தப்பிச் செல்லும் முழுமையான திட்டத்தை பிஎஸ் பரஞ்பே, ரஃபி அகமது மற்றும் மாணவர் சங்கத்தின் பசித் உடன் இணைந்து கே எல் மகேந்திரா தீட்டினார். 1951 ஏப்ரல் 24வரை தலைமறைவாக இருந்த ராஜ் பகதூர், ராஜ்கொண்டா (ராச்சாகொண்டா) மலைகளிலிருந்து கைது செய்யப்பட்டார்.

            இதன் மத்தியில் கட்சி, மக்கள் அமைச்சரவை மற்றும் மாகாணத்தில் அரசியலமைப்பு அஸம்பளிஅமைக்க வேண்டும் என்ற முழக்கங்களை முன்னெடுத்துச் சென்றது. பின்னர் கிரேட்டர் (ஒன்றுபட்ட) ஆந்திராவில் மக்கள் ஆட்சி என்ற முழக்கத்தைத் தந்தது.

பம்பாய் விஜயம் : ஆயுதப் போராட்டம்

          நிஜாமின் நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு எதிராக 1947 செப்டம்பரில் ஆயுதங்களை எடுப்பது என்று மாநிலத்தில் இருந்த கட்சி முடிவு செய்தது. இம்முடிவை மத்திய கட்சி ஒப்புக் கொள்ளச் செய்ய ராஜ் பகதூர் பம்பாய் சென்று பொதுச் செயலாளர் பிசி ஜோஷியுடன் விவாதித்து அவரது ஒப்புதலைப் பெற்றார். பல கட்சிகளின் பல்வேறு தலைவர்களைச் சந்தித்த அவர், நரசிம்ம ரெட்டி என்ற மாற்றுப் புனைப் பெயரில் அகமது நகரில் ஒரு பொதுக் கூட்டத்திலும் உரையாற்றினார். அவர் சோஷலிச ஆதரவுத் தலைவர்களான சந்திரகுப்த சௌத்திரி, வி டி தேஷ்பாண்டேவையும் சந்தித்தார். சோலாப்பூரில் கட்சித் தலைவர்களைச் சந்த்தித்த பிறகு அவர் விஜயவாடா திரும்பினார்.

        தலைமறைவு வாழ்வின்போது 1948 ஏப்ரல்/ மே மாதங்களில் ஹைதராபாத் நகரத்தின் கட்சி செயலாளர் பொறுப்பை ஏற்றார். 1950ல் பொறுப்பை மக்தூமிடம் ஒப்படைத்துவிட்டு ஆயுதக் குழுக்களுடன் சேர்ந்து கொள்ள ராஜ்கொண்டா மலைகளுக்குச் சென்றார்.

      ஏப்ரல் /மே 1948ல் கைது வாரண்ட் உத்தரவுகளைத் திரும்பப் பெறுவதாக ஏமாற்றும் அறிவிப்பை நிஜாம் வெளியிட்டார். இந்தச் சூழ்ச்சி விளையாட்டைக் கட்சியின் நகரக் குழு சுல்தான் பஜாரில் பொதுக்கூட்டம் நடத்தி அம்பலப்படுத்தியது. பி நரசிங்க ராவ் கூட்டத்தின் அமைப்பாளர். தலைமறைவாக இருந்த ராஜ் பகதூர் திடீரென்ற தோன்றி ஓர் உரையை நிகழ்ந்தினார்; உரை முடிந்ததும் விளக்கு அணைக்கப்பட்டது, ராஜ் பகதூர் போலீசார் கண்ணில் மண்ணைத் தூவி ஒரு வீட்டின் வழியே தப்பி மறைந்தார்.

பிடிஆர் பாதை, பயனற்ற ஆயுதப் போராட்டம்

            ராஜ் பகதூர் கலந்து கொண்ட கட்சியின் (இரண்டாவது) காங்கிரஸ் மாநாடு 1948 பிப்ரவரியில் பிடிஆர் பாதையை ஏற்று சாகசப் பாதையில் வழி நடத்தப்பட்டது. ராஜ் பகதூர் பிடிஆர் பாதையை ஆதரித்தார். அப்பாதை ஹைதராபாத் மற்றும் தெலுங்கான பகுதிகளின் கட்சியை ஆயுதப் போராட்டத்தைத் தொடர நிர்பந்தித்தது; அதுவும் இந்திய இராணுவம் 1948 செப்டம்பரில் (’போலீஸ் நடவடிக்கை’) நுழைந்த பிறகும் –‘சோஷலிசப் புரட்சி’யைச் சாதிப்பதன் பகுதியாக – ஆயுதப் போராட்டத்தைத் தொடர்ந்தது. விவசாய மற்றும் நடுத்தர வகுப்பைச் சேர்ந்த பெரும் பகுதியினரிடமிருந்து போராட்டம் தனிமைப்படுத்தப்பட்டு, கிராமங்களிலிருந்து காடுகளுக்கு இடம் மாற்றிச் செல்ல வேண்டிய கட்டாய நிலைக்குத் தள்ளப்பட்டது. ‘போலீஸ் நடவடிக்கை’க்குப் பிறகும், மற்றும் நிஜாம் தப்பி ஓடிய பின்னரும் ஆயுதப் போராட்டத்தைத் தொடர்ந்தது உண்மையான பேரழிவு.

   ஹைதராபாத்துக்குள் இந்திய இராணுவம் நுழைந்த பிறகும் ஆயுதப் போராட்டத்தைத் தொடர்வது குறித்துக் கட்சிக்குள் வேறுபாடுகள் வளரத் தொடங்கியது. குறிப்பாக 1950ல் பிடிஆர் நீக்கப்பட்ட பிறகு, கட்சி ஆழமாக விவாதித்து இறுதியில் ஆயுதப் போராட்டத்தைத் திரும்பப் பெற்றது, முதல் பொதுத் தேர்தல்களில் பங்கேற்றது.

      ராஜ் பகதூர் கௌரும்கூட ஆயுதப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும் என்றே கருத்தினாலும், அதே நேரம் நிஜாமுக்கு எதிரான போராட்டத்தின் பலன்களைப் பாதுகாக்க வேண்டும் என்றார். மத்திய கட்சி அவரைத் தோழர்களிடம் பேச ராஜ் கொண்டா மலைகள், தேவரகொண்டா காடுகளுக்கும் (1951 மார்ச்–ஏப்ரல்) அனுப்பியது. அப்போது ஆயுதம் தாங்கிய குழுக்கள் ஜன்கௌண், போன்கிர் மலைப் பகுதிகளுக்கும் ராச்சகொண்டா காட்டுப் பகுதிகளுக்கும் பின்வாங்கிச் சென்றிருந்தது. அங்கே பல மாதங்கள் தங்கியிருந்த அவர் ஏராளமான அனுபவங்களைப் பெற்றார். அவர் கே கிருஷ்ணமூர்த்தி மற்றும் மற்றவர்களின் ஸ்க்வாடில் இருந்தார்.

            ரால்ல ஜன்கௌண் அருகே நான்கு நாட்கள் அரசியல் மற்றும் இராணுவப் பயிற்சி முகாமை நடத்தி முடித்த பிறகு பங்கேற்றவர்கள் கலைந்து சென்றாலும் சற்று தாமதப்படுத்தி விட்டார்கள். கிருஷ்ணமூர்த்தி மற்றும் வேறு சிலருடன் இணைந்து ராஜ் பகதூர் பக்கத்து மலைக்குப் புறப்பட்டுச் சென்றார். தங்கள் காலடித் தடத்தைத் தேடி மற்ற உறுப்பினர்கள் நேரத்தில் உண்மையில் புறப்பட்டு விட்டார்களா, இல்லையா என்பதை அறிய பின்னோக்கி வந்தனர். வரும் வழியில் ஓடையிலிருந்து தண்ணீர் அருந்தும்போது இராணுவப் பிரிவுகள் குறுக்கிட்டதால் திரும்ப வேண்டியதாயிற்று; அப்போது ராஜ் பகதூர் தனது மார்க் 4 ரைஃபிள் துப்பாக்கியைத் தொலைத்துவிட்டார். அவருடன் மற்ற இருவரையும் இராணுவம் துரத்திப் பிடித்து விட்டது; அவர்கள் இராணுவத்திடம் பிடிபட்டதை மலைகளுக்குப் பின்னால் இருந்து கிருஷ்ண மூர்த்தியால் பார்க்க முடிந்தது.

ராஜ் பகதூரின் இரண்டு தோழர்களான பைலா இராமச்சந்திர ரெட்டி மற்றும் குட்டா சீதாராமி ரெட்டி இராணுவ முகாமில் பிடித்து வைக்கப்பட்ட பிறகு சுட்டுக் கொல்லப்பட்னர். ஹைதராபாத் அரசு விடுதலைப் போராட்டத்தின் உயர்ந்த தலைவரான ராஜ் பகதூர் சுட்டுக் கொல்லப்படுவதிலிருந்து தப்பினார். காங்கிரஸ் தலைவர்கள், எஸ் இராதாகிருஷ்ணன் மற்றும் பிறரும் தலையிட்டு அவரது உயிரைப் பாதுகாக்க உதவினர்.

       ரைஃபிளின் அடிப்பக்கக் கட்டையால் இராணுவ ஆட்கள் அவரைத் தாக்கினர். விலங்கிட்டு கால்களைச் சங்கிலியால் பிணைத்து அவரை வாராங்கல் முகாமிற்கு மாற்றினர். தொடர்ந்து மூன்று நாட்கள் அவர் கொடுமைகளுக்கு ஆளானார். பின்னர் அவர் ஹைதராபாத் சிறைக்கு மாற்றப்பட்டபோது அங்கு மக்தூம் மற்றும் பலரைச் சந்தித்தார். இதன் மத்தியில் கட்சி ஆயுதப் போராட்டத்தை விலக்கிக் கொண்டு தேர்தல்களில் பங்கேற்க முடிவெடுத்தது.

திருமணம்

            1943லிருந்து பிரிஜ் ராணி, ராஜ் பகதூர் இருவரும் ஒருவரொடு ஒருவர் அறிமுகம் ஆனவர்கள். அந்நேரத்தில் ராணி கட்சி உறுப்பினராகி பெண் ஊழியர்கள் மத்தியில் தீவிரமாக இருந்தார். காங்கிரஸ் சத்தியாகிரகத்தில் பங்கேற்றது மட்டுமின்றி சிறையில் அடைக்கப்பட்ட அவர், தலைமறைவு வாழ்விலும் சென்றார். தலைமறைமாக இருந்தபோது இருவரும் 1948ல் திருமணம் செய்து கொண்டனர்.

அதற்கு முன் ராஜ் பகதூருக்கு 1939ல் அஸாம்கர்க்கைச் சேர்ந்த சன்ஜோகிதாவுடன் திருமணம் நடந்தது. ஆனால் அவரது அரசியல் நடவடிக்கைகள் காரணமாக அவர்களது திருமண வாழ்வு சுமுகமாகச் செல்லவில்லை, இருவரும் மணமுறிவு பெற்றனர்.

தேர்தல்களும் அதற்குப் பிறகும்

          1951ல் கட்சி ஆயுதப் போராட்டத்தை விலக்கிக் கொண்டது, மேலும் தேர்தல்களில் போட்டியிடுதெனத் தீர்மானித்தது. ராஜ் பகதூர் கௌர் சிறையில் இருந்தபடி முஷிராபாத் தொகுதியிலிருந்து போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார், ஆனால் உரிய நேரத்திற்குள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்க்க இயலவில்லை. பின்னர் மே 1952ல் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; நாடாளுமன்ற தொடங்க நாளில் கலந்து கொள்ள வசதியாக 1952 மே 13ல் சிறையிலிருந்து விடுதலையானார்.

இந்தியாவின் துணை குடியரசுத் தலைவரும் மக்களவைத் தலைவருமான டாக்டர் (சர்வபள்ளி) எஸ் இராதாகிருஷ்ணன் அவையின் எந்த உறுப்பினரும் சிறையில் இருக்கலாகாது
என வற்புறுத்தினார். அதனை ஆட்சேபித்த கோபால சுவாமி அய்யங்காரிடம் இராதாகிருஷ்ணன் கூறினார்,
“ஒவ்வொரு முனிவருக்கும் ஒரு கடந்த காலம் உண்டு, ஒவ்வொரு பாவிக்கும் ஓர் எதிர்காலம் உண்டு!” இரண்டாவது முறை 1956ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்ட ராஜ் பகதூர் கௌர், மூன்றாவது முறை வாய்ப்பு வழங்கப்பட்டபோது மறுத்து விட்டார், ஏனெனில் அப்போது ஹைதராபாத் நகரத்தின் கட்சி செயலாளராக ஆகி இருந்தார்.

கட்சியில் வகித்த பொறுப்புகள்

        அவர் 1940களிலும் பின்னர் 1962ல் ஹைதராபாத் நகரத்தின் கட்சி செயலாளர், கட்சி பிராந்தியக் குழு உறுப்பினர், கட்சி மாநிலக் குழுவின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தார்; 1969 முதலாக சிபிஐ தேசியக்குழு உறுப்பினராகவும், 1988ல் ஓய்வு பெறும் வரை 1975லிருந்து சிபிஐ சிஇசி உறுப்பினராகவும் பொறுப்பு வகித்தார். மத்திய கட்சி உருது மொழியில் நடத்திய ‘கம்யூனிஸ்ட் ஜெய்ஸா’ (கம்யூனிஸ்ட் ரிவியூ) மாதாந்திர இதழின் ஆசிரியராகவும் 1978லிருந்து கட்சி தொழிற்சங்க இலாக்காவின் பொறுப்பாளராகவும் செயல்பட்டார்.

    70 வயதை எட்டியதிலிருந்து ஒவ்வொரு பதவியையும் கைவிடத் தொடங்கினார். மாநிலத்திலும் மற்றும் நாடு முழுவதிலும் எண்ணிறந்த முக்கியத் தொழிற்சங்க அமைப்புகளின் பதவிகளை வகித்த அவர் பிரபலமான தலைவராக விளங்கினார். 1954ல் ஏஐடியுசி பேரியக்கத்தின் பொருளாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார், 1986லிருந்து அதன் துணைத் தலைவராக இருந்தார்.

     அவரே புகழ்பெற்ற எழுத்தாளராகவும் இலக்கியவாதிகள், கலைஞர்கள் பலருடன் தொடர்பில் இருந்ததுடன் முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார்.  

            எண்ணிறந்த புத்தகங்கள், கையேடுகள் மற்றும் கட்டுரைகளை அவர் எழுதினார்.

       ராஜ் பகதூர் கௌர் 93வது வயதில் 2011 அக்டோபர் 7ம் நாள் இயற்கை எய்தினார். அவருடைய புகழ் உடம்பு மருத்துவ மாணவர்களின் ஆய்வுக்காக உஸ்மானிய மருத்துவக் கல்லூரிக்கு வழங்கப்பட்டது.

       விடுதலைப் போராட்டம் மற்றும் சமூகப் பணிக்களுக்கு டாக்டர் ராஜ் பகதூர் கௌர் ஆற்றிய தலைச்சிறந்த பங்களிப்புக்களுக்காக அவருக்கு ‘யுத்தவீரர் நினைவு விருது’ (யுத்வீர் மெமோரியல் அவார்டு) அளிக்கப்பட்டது.

நினைவில் வாழும் அவரது வாழ்வும் பணியும் இத்தேசத்தின் இளம் கம்யூனிஸ்களுக்கு என்றென்றும் ஆதர்சமாக விளங்கும்!

-- நன்றி  : நியூஏஜ் (ஜூலை 17 –23)

                      --தமிழில் : நீலகண்டன், என்எப்டிஇ, கடலூர்

 

Sunday 14 August 2022

75வது சுதந்திரத் திருநாள் சிறப்புக் கட்டுரை -- கிராந்தி ஸிம்ஹா நானா பாட்டீல்

 

75வது சுதந்திரத் திருநாள் சிறப்புக் கட்டுரை

--விடுதலைப் போராட்ட வரலாற்றுப் பக்கங்களிலிருந்து…

கிராந்தி ஸிம்ஹா நானா பாட்டீல்
:
புரட்சியை முன்னறிவித்து முழங்கிய சிங்கம்

--நியூஏஜ் (ஆக.14 –20)

            1942 ஆகஸ்ட் 9ம் நாள் இந்திய மக்கள் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தின் மூலம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களை நோக்கி நாட்டை விட்டு அவர்கள் வெளியேற வேண்டிய தருணம் இது என எச்சரித்தனர். பிரிட்டிஷ் காலனியவாதிகளுக்கு மகாத்மா காந்தி விடுத்த அந்த அறைகூவலுக்கு மக்கள் பெருந்திரள் பெருமளவில் ஆதரவாகத் திரண்டனர். அந்த அறைகூவல் முழக்கத்தை அப்படியே ஏற்றுக் கொண்ட மகாராஷ்ட்டிரா சத்தாரா மாவட்ட மக்கள், தங்கள் மண்ணிலிருந்து பிரிட்டீஷ் ஆட்சியின் அடிமை நுகத்தடியைத் தூக்கி எறிய, அடுத்த நாளே உடனடியாகப் போராட்ட இயக்கத்தைத் தொடங்கினர்.

            காந்திஜி கூறிய வண்ணம் வெள்ளையனே வெளியேறு (க்விட் இந்தியா) இயக்கம் வன்முறையற்ற (அமைதியான) முறையில் தொடங்கியது. ஆனால் பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் சத்தாரா மாவட்டத்தில் ஐந்து வெவ்வேறு இடங்களில் பதினொரு தேசபக்தர்களைக் கொல்லும் காட்டுமிராண்டிதனத்தைத் தேர்ந்தெடுத்தனர். அடக்குமுறை போலீஸ் படை, நிலப்பிரபுக்கள் மற்றும் குற்றவாளிகள், போக்கிரிகள் அடங்கிய அவர்களின் உள்ளூர் படைகள் பின்பலமாக இருக்க, பிரிட்டீஷ் காலனியவாதிகளுக்குக் கிளர்ச்சியாளர்களை அடக்கிச் சமாளிக்க முடிந்தது; ஆனால் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே. ஏனெனில் ஒட்டு மொத்தமாகப் வெள்ளையர்களை எதிர்க்க வேண்டும் என்ற அந்த முழுமையான முன்னெடுப்பும், கொடுமையான அரசியல், அடக்குமுறை சமூகக் கட்டமைப்புக்களிலிருந்து விட்டு விடுதலையாக வேண்டும் என்ற மக்களின் பெரும் விழைவின் தகிப்பின் வெளிப்பாடு அது. ஒடுக்குமுறை நடவடிக்கைகளை நீண்டகாலம் தொடர்வது இயலாததாயிற்று. மக்கள் கூட்டம் வீரம்மிக்க நானா பாட்டீல் தலைமையில் வழி நடத்தப்பட்டது, அவர் மக்கள் நெஞ்சங்களில் தொடர்ந்து புரட்சி நெருப்பை மூட்டி, புதிய உற்சாகத்துடன் எதிர்ப்புக் கிளர்ச்சியை முன்னின்று நடத்தினார். நானா பாட்டீல் 1900ம் ஆண்டு ஆகஸ்ட் 3ம் நாள் பிறந்தார். 1976 டிசம்பர் 6ல் இயற்கை எய்தினார்.

        நானா பாட்டீல் வாழ்நாள் முழுவதும் மண்ணில் புரட்சிகரப் போராட்டங்களில் பல வடிவங்களை வளர்த்தெடுத்தார்.

            இந்த ஆயுதக் கிளர்ச்சி இந்தியாவில் அந்நேரத்தில் நடந்த பிற போராட்டங்களிலிருந்து பெரிதும் அடிப்படையான கூடுதல் மாற்றங்களை ஏற்படுத்தும் தன்மையிலானது. ஒருபுறம் தனிநபர் சத்தியாகிரகப் போராட்டங்கள் நடத்தப்பட்டன. மறுபுறம் பிரிட்டீஷ் ஆட்சியைத் தூக்கி எறிய பலரும் ஒன்றிணைந்த முயற்சிகளை மேற்கொண்டனர். பல வேறுபட்ட வடிவங்களில் போராட்டங்கள் உருவாகின. பகல்பூர், பலியா, மித்னாபூர், (தற்போது பங்களா தேசத்தில் இருக்கும்) குமில்லா மற்றும் சம்பரான் போன்ற இடங்களிலும் போராட்டங்கள் நடைபெற்றன.

            1930ல் மகாராஷ்ட்டிரா சோலாப்பூர் மாவட்ட டெக்ஸ்டைல் ஊழியர்கள் சோலாப்பூர் நகரைப் பிரிட்டீசாரின் பிடியிலிருந்து சில நாட்கள் விடுதலை செய்தனர். சோலாப்பூர் கம்யூன் ஏற்படுத்தும் சோதனை முயற்சி மல்லப்ப தன்ஷெட்டி, ஸ்ரீகிருஷ்ணா சாரதா, குர்பான் ஹூசைன் மற்றும் ஜகந்நாத் ஷிண்டே ஆகியோரின் தலைமையில் மேற்கொள்ளப்பட்டது. பின்னர் அவர்கள் அனைவரும் தூக்கிலிடப்பட்டனர். ருஷ்ய போல்ஷ்விக் புரட்சியின் தாக்கத்தால் மேற்கொள்ளப்பட்ட சோலாப்பூர் கம்யூன் உருவாக்கப்பட்ட நிகழ்வு உலகிற்குப் பாரீஸ் கம்யூன் நிகழ்வை நினைவுபடுத்தியது.

            காற்று மாறி அடித்ததைச் சோலாப்பூர் கிளர்ச்சியில் பார்த்தாலும் அவை தனியொரு நகருக்குள் வரையறுக்கப்பட்டதாக இருந்தது. பின்னர் வந்த நாட்களில் அவை மாபெரும் புயற்காற்றாய் அருகமைந்த சத்தாரா மாவட்டத்தில் சுழன்றடித்தது. ஷாக் அடிக்கும் திறந்த மின் கம்பியான தனிநபர் நானா பாட்டீல், மக்களின் உறங்கிக் கிடந்த விடுதலைக்கான விருப்பத்தை வெற்றிகரமாகத் தூண்டிவிட்டு மிகப் பெரும் சக்தி ஆக்கினார். நானா பாட்டீல் மக்களின் பங்கேற்புடன் பிரம்மாண்டமான கிராமப்புற கம்யூன் அமைப்பை -- ஓரிரு நாட்கள், மாதங்கள் அல்ல –ஆகஸ்ட் 1943 முதல் 1946 மே மாதம் வரை, மூன்றாண்டு காலத்திற்குக் குறையாமல் வெற்றிகரமாக உருவாக்கி நடத்தினார். நானா பாட்டீலின் இயக்கம், ஏனைய அனைத்து ஆயுதக் கிளர்ச்சிகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட தனித்துவமானது: அதன் முலம் பிரிட்டீஷ் அடிமைத் தளையிலிருந்து நூற்றுக் கணக்கான கிராமங்களை –அங்கே அவர்கள் பிரிட்டிஷ் படைகளால் சூழப்பட்டிருந்தாலும் --விடுதலை செய்தார். அது வியத்தகு அற்புத நிகழ்வுக்குச் சற்றும் குறைந்தது அல்ல. இந்த இயக்கம், ‘மாற்று அரசு இயக்கம்’ எனப் பொருள்படும், ‘பிரதி சர்க்கார் இயக்கம்’ என்று அழைக்கப்படுகிறது.

   இந்த இயக்கத்தின் தனித்துவத்தைப் புரிந்து கொள்ள ஒருவர் இப்பகுதியின் பூகோள அமைப்பு மற்றும் வரலாற்றைப் புரிந்து கொள்ள வேண்டும். இப்பகுதி எதிர்காலக் கண்ணேட்டமுடைய சிவாஜி மகராஜ் மன்னரின் நேர்மையான ஆட்சியைச் சந்தித்திருக்கிறது. இப்பகுதியில்தான் மகாத்மா பூலே மற்றும் சாவித்திரிபாய் பூலே பிறந்த முறையே கட்குன் மற்றும் நய்கௌண் போன்ற கிராமங்களைக் கொண்டுள்ளது. மேலும் இங்கே 19ம் நூற்றாண்டின் பெரும் சீர்திருத்தவாதி கோபால் கணேஷ் அகர்கர் (படம்) இப்பகுதியின் கராட் தாலுக்கா டேம்பூ என்ற கிராமத்தில் பிறந்தார்.                                                     (இந்து தமிழ் இதழில் அகர்கர் குறித்த 10 தகவல்கள் காண https://www.hindutamil.in/news/blogs/180773-10.html)

            இப்பகுதி ஒருபுறம் முகலாயர்களுக்கு எதிரான சத்திரபதி சிவாஜியின் விடுதலைப்

போராட்டங்களையும், மறுபுறம் சாதி அமைப்புக்கு எதிரான “சத்தியஷோதக்” (உண்மையைத் தேடுபவர்கள் அமைப்பு) இயக்கப் போராட்டங்களின் வரலாற்று மரபைப் பிரதிநிதித்துவப் படுத்துகிறது. சுதந்திரப் போராட்டக் காலத்தில் சமூகத்தில் பிரிட்டீஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் மேலும் சமூகத்தில் நிலவிய நிலப்பிரபுத்துவ அமைப்பு முறைக்கும், சாதிய ஒடுக்குமுறைக்கு எதிராகவும் புதிய விழிப்புணர்வு எழுச்சி பரவியது.

            (சத்திய ஷோதக் சமாஜ் ஒரு சமூக சீர்திருத்த அமைப்பாகும். புனாவில் 1873 செப்டம்பர் 24ல் ஜோதிபா பூலே நிறுவிய இவ்வமைப்பு மகாராஷ்ட்டிரா சமூகத்தில் தாழ்த்தப்பட்ட சலுகை மறுக்கப்பட்ட குழுவினர்கள் கல்வி பெறுவதை ஆதரித்ததுடன் அவர்கள் சமூக மற்றும் அரசியல் உரிமைகளை அடையவும் பாடுபட்ட இயக்கம். மேலும் விவசாயிகளின் கிளர்ச்சிகள் மற்றும் பிராமணர் அல்லாதோர் இயக்கத்திலும் செல்வாக்கு செலுத்தியது. இதன் தலைவர்கள் இந்தியக் காங்கிரஸ் இயக்கத்திற்குச் சென்றுவிட சமாஜ் 1930களில் கலைக்கப்பட்டது)

         இப்பகுதி, கர்மவீர் பாவ்ராவ் பாட்டீல் உருவாக்கிய சமூக மாற்றத்தையும் கீழ்ச் சாதியினர் உட்பட மக்கள் திரளுக்குப் பள்ளிக்கூட வலைப்பின்னல் கட்டமைப்புக்கள் மூலம் கல்வியறிவு வழங்கிட அவர் மேற்கொண்ட அற்புதமான முயற்சிகளையும் கண்டது. அண்ணல் டாக்டர் அம்பேத்கரும்கூட அவரது கல்விக்காகச் சத்தாராவில் வாழ்ந்திருக்கிறார். இதே பகுதியில்தான் கர்மவீர் வித்தல் ராம்ஜி ஷிண்டே சாதிய முறையை ஒழிக்க மக்களைத் திரட்டினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செங்கொடியின் கீழ் தோழர் விவி சித்தாலே கிராமப்புற மக்களைத் திரட்டினார். இவை எல்லாம் விடுதலை இயக்கங்களுக்கான மிகவும் நிலைத்த சாதகமான சூழலை உருவாக்கின. எல்லா விடுதலை சக்திகளின் ஒட்டுமொத்த கலவையை நானா பாட்டீல் பிரதிநிதித்துவப்படுத்தி, புரட்சிகரமான காலத்தைத் தொடங்கி வழிநடத்தினார்.

            நீண்ட காலமாக மக்களை ஒடுக்கிய நிறுவப்பட்ட அதிகார அமைப்புகளுக்கு எதிராக பிரதி சர்க்கார் (மாற்று முறை ஆட்சி) இயக்கம் மோதலையும் மேற்கொண்டது. கிராமப்புறச் சமூகத்தில் பேரெழுச்சியை ஏற்படுத்தி ஆதிக்க அதிகார அமைப்புக்கள் மற்றும் அவற்றின் அடுக்கு முறை வழக்கங்களுக்குச் சவால் விடுத்த இந்த இயக்கத்துடன் ஒப்பிடக்கூடிய ஓர் இயக்கத்தை அரிதாகத்தான் காண முடியும். விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் தலைமையின் கீழ் ஒரு புதிய சமுதாயத்தை ஏற்படுத்துவதே, பிரதி சர்க்கார் இயக்கத்தின் நோக்கம். அங்கே வகுப்பு, சாதி, பாலினம் மற்றும் சமயம் என்ற அடிப்படையில் “பிரிவிலை, எங்கும் பேதமில்லை,” சுரண்டல் இல்லை.

அதிகார மையங்களைத் தாக்கி அழித்தல்

            இந்தப் புரட்சிகர இயக்கம் சாதித்த மாபெரும் மாற்றங்களை ஒருவர், ஐரோப்பாவுக்கு (17வது 18வது நூற்றாண்டு) அறிவொளி எழுச்சி பெற்ற (என்லைட்மெண்ட் ஏஜ்) காலம்

ஏற்படுத்திய மாற்றங்களுடன் ஒப்பிடலாம். “தேசிய விடுதலை கட்டமைப்புகள் மற்றும் ஹிட்லர் பாசிச சக்திகளுக்கு எதிரான ஐரோப்பிய போராட்டங்கள்” என்ற தலைப்பில் பகத்சிங் எழுதிய கட்டுரையால் நானா பாட்டீல் ஊக்கம் பெற்றார். பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிரான போரில் வெற்றி பெற அவர்களின் அதிகாரம் எந்தெந்த மையங்களில் அழுத்தமாகக் குவிக்கப்பட்டிருக்கிறது என்பதை அடையாளம் கண்டு, அவ்ற்றைத் தாக்கி அழிக்க வேண்டும் என அவர் உணர்ந்தார். காவல் நிலையங்கள், அப்பகுதி நிலப்பிரபுக்கள் மற்றும் அவர்களின் கேடுகெட்ட குற்றவாளிப் படைகள் என அம்மூன்று அதிகார மையங்கள் மூலமாகவே பிரிட்டீஷ் அதிகாரம் செயல்படுவதை அவர் அடையாளம் கண்டார். ஒரு பயிற்சி பெற்ற மல்யுத்த வீரரான அவர், இந்த அதிகார மையங்களைத் தாக்கி அழித்தால், பிரிட்டீஷ் ஆட்சி சரிந்து வீழும் என்பதை அறிந்திருந்தார். இவ்வாறு நூற்றுக் கணக்கான கிராமங்களில் பிரிட்டீஷ் ஆட்சியின் அந்த அதிகார மையங்களை ஒழித்து விரட்டுவதை அவர் சாதித்தார்.

            முதலாவதாக, இளைஞர்களை ஒழுங்குபடுத்தப்பட்ட இராணுவமாக அமைத்தார். டூஃபேன் சேனா (சுழற்காற்று அல்லது புயற்காற்றுப் படை) என அழைக்கப்பட்ட அந்தப் படையினர் போலீஸ் நிலையங்களைத் தாக்குவர், காவலர்களைச் சிறைப் பிடித்து அவர்களின் ஆயுதங்களைப் பறித்துச் செல்வர். மற்றொரு முறையிலான போராட்டத்தில் அரசு கருவூலங்களைக் கொள்ளையடிப்பர். அந்தக் காலங்களில் வரியாகப் பெருந்தொகை வசூலிக்கப்பட்டு அரசு ஊழியர்களுக்கான ஊதியத்திற்கான பெரும்நிதி புகைவண்டிகள் மூலம் அனுப்பி வைக்கப்பட்டது. புரட்சியாளர்கள் ரெயில்களைத் தாக்குவர், கஜானாப் பெட்டிகளில் உள்ள நிதியை எடுத்துச் சென்று தங்களின் புரட்சிகர நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்துவர். அத்தகைய தாக்குதல்கள் தூலே மாவட்டம் முதல் சத்தாரா மாவட்டத்தின் குந்தால் போன்ற சிறு கிராமங்கள் வரை பரவி இருந்தது. மேலும் புரட்சியாளர்கள் இரயில்வே நிலையத்தையும் தீக்கிரை ஆக்குவர். இந்த நடவடிக்கைகள் எல்லாம் பிரிட்டீஷ் ஆட்சியாளர்கள் மத்தியில் அதிர்ச்சி அலைகளை அனுப்பி, அவர்களது நம்பிக்கையைக் குலைத்தது.

            அப்பகுதியின் பல்வேறு நிலப்பிரபுக்கள் பிரிட்டீஷ் ஏஜென்டுகளாக வேலைசெய்து அவர்களுடன் கூட்டு சேர்ந்து ஏழை விவசாயிகளை ஒடுக்கினர். பாடுபடும் இந்த விவசாயத் தோழர்களே நானா பாட்டீலின் புரட்சிகர விடுதலைப் படையின் வீரர்களாக மாறினர். அவர்கள் தாக்குதல் நடத்துவதற்கு முன் அரசு அதிகாரிகள் மற்றும் பிற மாநிலங்களின் பாட்டீல், தேஷ்முக் போன்ற ‘வாடன்டார்’கள் பலவீனமாக்கப்பட்டனர். (வாடன் என்றால் சிறு நிலம்; வாடன்டார் என்பது ‘நில உரிமையாளர்’ எனப் பொருள்படும் மராட்டிய கோலி சாதியினருக்கு வழங்கப்படும் பட்டம்). சத்தியஷோதக் இயக்கம் ஏற்கனவே பட் பிக்க்ஷூஷாஹி (BhatBhikshukshahi பிராமண குருமார்கள் மற்றும் புரோகிதர்களின் ஆட்சி) அதிகாரத்தைப் பலவீனமாக்கியிருந்தது.

லேவாதேவிக்காரர்கள் மீது தாக்குதல்

            கிராந்தி சிங் நானா பாட்டீலின் விடுதலைப் படை, அநியாய வட்டிக்குக் கடன் வழங்கி

ஏழை விவசாயிகளைக் கொடூரமான கடன் வலையில் சிக்க வைத்த லேவாதேவிக் காரர்களின் அதிகாரக் கொட்டத்தைத் தாக்கியது. பிரதி சர்க்கார் இயக்கம் வட்டிக் கடைக்காரர்களின் வீடுகளைத் தாக்கிக் கோப்புகளை அழித்துக் கடன் பத்திர ஆவணங்களை விவசாயிகளிடம் வழங்கினர். இக்கடன்களிலிருந்து விவசாயிகள் விடுதலை பெற்றதாக அறிவித்தனர். 1936ம் ஆண்டில் அமைக்கப்பட்ட அகில இந்திய கிசான் சபா, கடன்களை ரத்து செய்யவும், நிலமற்ற விவசாயிகளுக்கு நிலங்களைச் சமமாகப் பகிர்ந்தளிக்கவும் கோரி அறைகூவல் விடுத்தது. இக்கோரிக்கைகளை ஏற்ற பிரதி சர்க்கார் உடனே அதனை அமலாக்கி செயல்படுத்தியது. இது விவசாயிகளுக்கு ஒரு புதிய நம்பிக்கையை அளித்தது. மேலும் புகை வண்டிகளிலிருந்து கொள்ளை அடித்த நிதிகளையும் ஏழைகளிடம் பகிர்ந்தளித்தனர்.

சமூகப் பணிகள்

            இவற்றைத் தவிர பிரதி சர்க்கார் இயக்கம் ஆற்றிய மற்றுமொரு முக்கியமான பணி சமூகச் சீர்திருத்தம் தொடர்பானது. சாதிய முறையை ஒழிப்பது, கலப்புத் திருமணங்களை ஆதரித்து நடத்துவது, கைம்பெண்கள் மறுமணம், மது விலக்கு மற்றும் கைதிகள் விடுதலை என பல பிரச்சனைகளுக்குத் தீர்வு காணப் பாடுபட்டது. திட்டங்களைத் தீவிரமாக அமைத்து அவர்கள் தங்கள் கருத்துக்களை நடைமுறைப்படுத்தினர். தங்கள் கருத்துக்களைப் பிரச்சாரம் செய்ய பல்வேறு கலைவடிவ நிகழ்ச்சிகளை உருவாக்கினர். இளம் கலைஞர்கள், பாடகர்கள் மற்றும் நடிகர்களைக் கொண்ட குழுக்களை அமைத்துப் பல்வேறு ஜல்சாக்களை (இசையும் பாடல்களும் கொண்டு நடத்தப்படும் கலைநிகழ்ச்சி) நடத்தி, தங்கள் கலை நிகழ்ச்சிகள் மூலம் மக்கள் மத்தியில் புதிய உளச் சான்று எழுச்சி உணர்வை ஏற்படுத்தினர் . (மக்கள் ஒன்றுகூடும் இடம் என்று பொருள்படும் ஜல்சா என்ற அரபிச் சொல், இன்னும் அதே பொருளில் உருதுமொழியில் பயன்பாட்டில் உள்ளது. பிற மொழிகளில் அந்தச் சொல்லின் உண்மையான பொருள் சற்றுத் திரிந்து விட்டது.) இந்தக் கலைமுயற்சி பாரம்பரிய வடிவங்களுக்கு எதிராக நன்கு திட்டமிட்டு ஒரு மாற்றுக் கலாச்சார முன்னணியை உருவாக்க முன் வைக்கப்பட்டது.

            இவ்வாறு, பிரதி சர்க்கார் என்பது மக்கள் வாழ்க்கையின் அரசியல், பொருளாதாரம், சமூக மற்றும் கலாச்சார அம்சங்கள் அனைத்தையும் தழுவிய முழுமையான புரட்சியானது. அது

மக்களிடம் மக்கள் மொழியில் நேரடியாகப் பேசியது. மார்க்ஸ், லெனின், பூலே மற்றும் அம்பேத்கரின் சிந்தனை கருத்துகளைக் கவி முனிவர்களின் ஜனரஞ்சகமான மொழியில் மக்களிடம் கொண்டு செல்ல அவர்கள் கடுமையான முயற்சிகளை மேற்கொண்டனர். இதன் விளைவாய் இந்திய விடுதலையின் மூவர்ணக் கொடி ஒவ்வொரு சாவடியிலும் (பிரிட்டீஷ் நிர்வாகத்தின் கிராமப்புற மட்டத்தில் அமைந்த அலுவலகங்கள்) மாதக் கணக்கில் பறந்தது.

மாற்று ஆட்சி முறை

            பிரதி சர்க்கார் கவிஞரின் வெறும் கனவோ அன்றி ஒரு பிறழ்வோ அல்ல. அது மக்களின் ஆட்சியை, அந்த வார்த்தையின் முழுப் பொருளில், பிரதிநிதித்துவப்படுத்தியது. அந்த இயக்கம் விஞ்ஞான அறிவியல் சிந்தனையின் பலமான அடித்தளத்தில் கட்டப்பட்டது. புதிய அரசுக்கு பல நிர்வாக அமைப்புகள் உருவாக்கப்பட்டன. கொரில்லா யுத்த தந்திரத்தில் நிபுணத்துவம் வாய்ந்த அர்ப்பணிப்பு மிக்க வீரர்கள் அடங்கிய இராணுவப் படைஇருந்தது. மக்களின் வாழ்வை மேம்படுத்த நிதி நிர்வாக இலாக்கா உருவாக்கப்பட்டது. மக்கள் மத்தியில் நடைபெற்ற பணிகளை மேற்பார்வையிட அமைப்புக் குழு இருந்தது. நீதிபதிகள் மூலம் நேர்மையான முறையில் வழக்குகளைக் கையாண்டு நீதி வழங்கும் நீதிபரிபாலன முறை செயல்படுத்தப்பட்டது. மேலும் மக்கள் மத்தியில் செய்திகளைப் பரப்பும் பஹீர்ஜி நாயக் கமிட்டி, தகவல் போக்குவரத்துக்கு ஒரு குழுவும், மக்கள் அவர்களின் அணியினருக்கு பயிற்சி அளிக்கப் பள்ளிகளும் புதிய ஆட்சியில் இருந்தன. (பஹீர்ஜி நாயக், மராட்டிய சாம்ராஜ்யமும் முகலாய சாம்ராஜ்யமும் போரிட்டபோது சத்ரபதி சிவாஜி இராணுவத்தில் இருந்த 17வது நூற்றாண்டு இந்திய உளவு மற்றும் இராணுவக் கமாண்டர் ஆவார். உளவறியும் அவரது மாபெரும் செயல்பாடுகளைப் பாராட்டி சிவாஜி அவருக்கு நாயக் பட்டம் அளித்தார்.)

            இந்த அமைப்புக்களில் மிகமிகப் புகழ்பெற்றதும் பிரபலமானதும் டூஃபேன் சேனா. அவர்கள் அமைத்த செயல்வீரர்கள் குழுக்கள் சிலவற்றில் எண்ணிக்கை குறைவானதாகவும், சில நேரம் 150பேர்களைக் கொண்ட குழுவாகவும் இருக்கும். குழுக்கள் அதற்கானத் தனித் தலைவர்களுடன் தொகுப்புக்களாகப் பிரித்து அமைக்கப்பட்டன. குழுக்களில் மூத்த மட்டத்தில் தலைவர்களும் அதற்கும் மேல் ‘டிக்டேட்டர்’ (சர்வாதிகாரி) என்றழைக்கப்பட்ட அவர்களைக் கட்டுப்படுத்துபவர்களும் இருந்தனர். இதுதான் அவர்களது அரசும் நிர்வாகக் கட்டமைப்பும் ஆகும். அது சிறப்பாகவும் துல்லியமாகவும் செயல்பட்டது. அமைப்புக்களின் பல்வேறு மட்டங்களில் செயல்பட்ட இந்த அனைத்து அமைப்பு முறைமைகளுடன் பிரதி சர்க்கார் இயக்கம் மக்களுக்கான ஒரு முன் மாதிரி அரசு ஆட்சி முறையை வழங்கினர். இந்தச் செயல்பாடு சாதிய சுரண்டல் ஒழிப்பை நாடும் ஒரு முறைமையை ஏற்படுத்துவதற்கானது.

ந்திய விடுதலைக்குப் பிறகும் தொடர்ந்த புரட்சி

            இந்தியா விடுதலை அடைந்த பிறகும் நானா பாட்டீல் இந்த மரபைத் தொடர்ந்தார். தெலுங்கானா போராட்டத்தின்போது அவர் ஆயுதங்களை அனுப்பி விவசாயிகளுக்கு உதவியது, கம்யூனிசப் புரட்சி மீது அவர் கொண்ட ஆழமான பற்றுறுதியின் மெய்சிலிர்க்கும் உதாரணம். மேலும் அவர் கோவா மற்றும் ஹைத்தராபாத் விடுதலை இயக்கங்களுக்கும் உதவினார். அவர் மகாராஷ்ட்டிராவின் ‘சம்யுக்த மகாராஷ்ட்டிரா இயக்கத்தின்’ உறுதியான தலைவராக விளங்கினார். (‘சம்யுக்த மகாராஷ்ட்டிரா சமிதி’, மேற்கு மற்றும் மத்திய இந்தியா பகுதியில் மராத்தி பேசும் பகுதியைத் தனி மாநிலமாக அமைக்க வேண்டும் எனக் கோரிய இயக்கம். இதன் தலைவர் எஸ் ஏ டாங்கே. 1956முதல் 60வரை போராட்டம் நடைபெற்றது.) நானா பாட்டீல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தலைவராக ஆனார், 1955ல் அகில இந்திய கிசான் சபா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மிகப் பிரபலமாக இருந்த அவர் 1957ல் சத்தாரா தொகுதியிலிருந்து பாராளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். மீண்டும் பாராளுமன்ற உறுப்பினராக 1967ல் மராத்வாடா பகுதியிலிருந்து வெகு தொலைவில் இருந்த பீடு மாவட்டத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார்.

            பிரதி சர்க்கார் இயக்கம் கிராந்தி அக்ரானி ஜி டி பாபு லேடு, கிராந்திவீர் நாக்நாத் அண்ணா நைக்வாடி, பார்டே மாஸ்டர், ஷேக் காகா, உயிர்த் தியாகம் செய்த பாபுஜி பட்நாகர், டி ஜி தேஷ் பாண்டே, சாந்தாராம் கரூட் போன்ற பல ஆகப் பெரும் ஆளுமைத் தலைவர்களை வழங்கியது.

மண்ணில் தொடரும் நானா பாட்டீல் பாரம்பரியம்

            சுரண்டலுக்கு எதிரான போராட்டம் இன்றும்கூட இந்த மண்ணில் தொடர்கிறது. இப்போராட்ட முயற்சிகளின் ஊடாகப் பிரதி சர்க்கார் இயக்கத்தின் தத்துவம் மற்றும் செயல்பாட்டுப் பாரம்பரியம் தொடர்ந்து செயல்படுகிறது. இந்தக் கடினமான தருணங்களில் விவசாயிகளின்பால் அவர்களின் பற்றுறுதி குறிப்பிடத்தக்கது. இன்றைய நாளில் நம் நாடு மிகக் கொடுமையான அடக்குமுறை மற்றும் அதிகரிக்கும் பாசிச ஆட்சிப் பின்னணிக்கு எதிராக நானா பாட்டீலின் மரபு தனித்துவமாக நிமிர்ந்து நிற்கிறது.

            ஏகாதிபத்தியம் மற்றும் சுரண்டலுக்கு எதிராகப் போராடிய காலங்களில் நானா பாட்டீல் மற்றும் அவரது தோழர்களின் பிரதி சர்க்கார் ஓர் அழகிய சோஷலிசக் கனவைப் பிரதிநிதித்துவப்படுத்தியதை மகாராஷ்ட்டிரா கண்டது. நமது சோஷலிச இயக்கம் இந்த மாபெரும் தலைவர்களின் காலடித் தடத்தை பின்பற்றும். 

தாயின் மணிக்கொடியுடன் வீரர்களின் தியாகத்தையும் வணங்குவோம்

          இந்தியத் திருநாட்டின் இந்த 75வது சுதந்திர நாளில் நானா பாட்டீல் மற்றும் அவரது தோழர்களுக்குச் செவ்வணக்கம்!

            ஜனநாயக நாட்டின் நாடாளுமன்றத்தின் மக்கள் அவையில் மராத்தியில் பேசிய முதல் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்.

            விடுதலைப் போரில் வீழ்ந்த மலர்கள் ஒவ்வொருவருக்கும் இந்தச் சுதந்திரத் திருநாளில் அஞ்சலி செய்வோம்!

நன்றி --‘அனைத்திந்திய கிசான் சபா’ தொகுத்த களஞ்சித்திலிருந்து

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்