Saturday 30 January 2021

25 பகவதி சரண் பாணிகிரகி

 

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் – 25



பகவதி சரண் பாணிகிரகி :

கம்யூனிச, ஒரிய இலக்கிய இயக்கங்களின் ஸ்தாபகர்

--அனில் ரஜீம்வாலே

நியூஏஜ் (2020 டிசம்பர் 13 –19 இதழ்)

            இவ்வுலகில் 34 ஆண்டுகளே வாழ்ந்தாலும் ஒரிசா மற்றும் நாட்டின் பிற பகுதிகளிலும் தேசிய, கம்யூனிச மற்றும் இலக்கிய இயக்கங்களின் வரலாற்றில் அழிக்க முடியாத அடையாளத்தை பதித்துச் சென்றவர் பகவதி சரண் பாணிகிரகி. பூரி மாவட்டத்தில் 1908ம் ஆண்டு பிப்ரவரி 1ம் நாள் பிறந்தார். பூரி பாலிபட்னாவின் விஸ்வநாத்பூரைச் சேர்ந்த அவருடைய தந்தை ஸ்வப்னேஷ்வர் பாணிகிரகி, ஒரு சுதந்திரப் போராட்ட வீரரும் வழக்கறிஞரும் ஆவார். தாயார் சரஸ்வதி பாணிகிரகி. தொடக்கக் கல்வியை வீட்டிலேயே பெற்று, தேசியக் கருத்தோட்டத்தின் மையமான சத்தியவாடி தேசியப் பள்ளியில் பின் சேர்க்கப்பட்டார். உத்கல்மணி’ கோப்பந்து தாஸ் மற்றும் அவரது கூட்டாளிகள் தேசிய உணர்வைப் பரப்பியதுடன் அப்பள்ளியின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றினர். நீல்கண்ட், க்ருபாசின்ஹா, ஹரிஹர் மற்றவர்களுடன் சேர்ந்து கோப்பந்து தாஸ் அப்பள்ளியை நிறுவினார். ஒரிசா வரலாற்றில் ‘சத்தியவாடி யுக’த்தின் (‘Satyabadi Juga’) வருகையை முன்னறிவித்தவர் என கோப்பந்து கருதப்படுகிறார்.

            பகவதி மீது ஆழமான பெரும் தாக்கத்தைச் செலுத்தியவர் அவரது சகோதரர்களில் ஒருவரான, முற்போக்கு இலக்கிய ஆளுமை, காளிந்தி சரண் பாணிகிரகி. மேலும் வங்கப் புரட்சியாளர் சத்யேந்திரநாத் குகாவுடனும் பகவதிக்குத் தொடர்பு ஏற்பட்டது. கட்டாக்கில் இளங்கலை பட்டம் படித்தவர், முதுகலை பட்டத்தைப் பாட்னாவில் பெற்றார்.

             ‘சௌஜ யுகா’ என்ற போக்கை ஒடியா மொழியில் துவக்கிய பகவதியும் காளிந்தியும் மகாகவி இரவீந்தநாத் தாகூரின் புனைவிலக்கியக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு 1920ல் சௌஜ சமிதி (Sabuja Samiti) இயக்கத்தைத் தொடங்கினர். சௌஜ என்ற வார்த்தை ‘சௌஜ பத்ர’ என்ற வங்காளி இதழிலிருந்து வந்தது. சௌஜ இயக்கம் ஒடியாவில் முற்போக்கு மற்றும் மார்க்சிய இலக்கியப் போக்கான ’பிரகதி காலம்’  (‘முன்னேற்றம்’) நோக்கி வளர்ச்சியடைந்தது.


         காளிந்தி சரணின் மூத்த மகள் நந்தினி சத்பதி. இடதுசாரி சிந்தனையாளரான இவர் ஒரிசாவின் முதல் பெண் முதலமைச்சர் ஆவார் (ஜூன் 1972 முதல் டிசம்பர் 1976வரை; மேலும் ஒடியா மொழியில் இவர் மொழிபெயர்த்த தஸ்லிமா நஸ்ரின் வங்கமொழி நாவல் ‘லஜ்ஜா’ பெரும் புகழ்பெற்ற ஒன்று).


அரசியலில்

            காந்திஜியின் போதனைகளால் ஆழமான தாக்கம் பெற்ற பகவதி, பின்னர் மெல்ல பல விஷயங்களில் கருத்து வேறுபட்டார். குருசரண் பட்நாயக் மற்றும் நவ கிருஷ்ண சௌத்திரியுடன் இணைந்து 1936ல் ஒரிசாவில் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியை ஆரம்பித்தவர், விரைவில் அதன் பிரதேசப் பொதுச்செயலாளர் ஆனார். காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் இருக்கும்போது கம்யூனிஸ்ட் அறிக்கையை ஒடியாவில் மொழிபெயர்த்தார். சிஎஸ்பி கட்சியின் ‘க்ருஷக்’ (விவசாயி) என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகச் செயல்பட்டார். பின்னர் அந்த மாகாணத்தின் சிபிஐ கட்சியை நிறுவினார். பகவதி சிலகாலம் காங்கிரஸ் கட்சியின் அலுவலகத்தில் அலுவலகச் செயலாளராகப் பணியாற்றினார். அக்காலகட்டத்தில் இந்திய தேசியக் காங்கிரஸ் வரலாற்றின் முதல் தொகுதியை மொழிபெயர்த்தார். கக்கோரி சதி வழக்கின் ராஜ்குமார் சின்காவுடன் தொடர்பு கொண்டார். (1925 ஆகஸ்ட் 9ல் கக்கோரி என்ற சிறுகிராமத்தில் புகைவண்டியை நிறுத்தி --புரட்சிகர இயக்கத்திற்கு ஆயுதம் வாங்கக்-- கொள்ளையடித்த நிகழ்வு. இதில் நான்கு புரட்சியாளர்களுக்குத் தூக்கு தண்டனையும், மற்றவர்களுக்கு நீண்டகால சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. – மொழிபெயர்ப்பாளர் இணைத்தது.) 1930களில் இச்செயல்பாடுகளுடன்  இளைஞர் லீக் இயக்கத்திலும் பகவதி ஈடுபட்டார்.

முற்போக்கு இலக்கியம் மற்றும் எழுத்தாளர்கள் இயக்கத்தில்

            முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கம் வெகு காலத்திற்கு முன்பே 1934ல் ஒரிசாவில் செயல்பட்டது என்பது பலருக்கும் வியப்பளிக்கும் செய்தியாகலாம்.கட்டக்கில் உள்ள நவீன்ஷா கல்லூரி வளாகத்தில் பகவதி சரண் பாணிகிரகி தலைமையிலான 8 உறுப்பினர் குழு (‘புதிய சகாப்தத்தின் இலக்கியச் சமூகம்’ என்ற) ‘நவயுக சாகித்ய சம்சத்’ அமைப்பைத் தொடங்கியது. ஆனந்த் பட்நாயக், குருசரண் பட்நாயக், விஜயா சந்திர தாஸ் (Bijaya Chandra Das) மற்றும் சிலர் உடனிருந்தனர். அந்த அமைப்பு கம்யூனிச இயக்கம் மற்றும் கம்யூனிச உணர்வு ஒரிசாவில் கருக்கொண்டு முளைவிடத் தொடங்கியதன் அடையாளமாகும். அந்த அமைப்பு காங்கிரஸ் சோஷலிசக் கட்சியின் கலாச்சார பண்பாட்டு அணியாகச் செயல்பட்டது.

            நவயுக சாகித்ய சம்சத் முறையாகக் கட்டக் நகரில் 1935 நவம்பர் 29 முதல் டிசம்பர் 6ம் நாள் வரை நடந்த எட்டு நாள் மாநாட்டில் தொடங்கி வைக்கப்பட்டது. இவ்வாறாக முற்போக்கு எழுத்தாளர் கூட்டமைப்பு (Progressive Writers Association) லக்னோவில் தொடங்கப்படுவதற்கு நான்கு மாதங்களுக்கு முன்பே சம்சத் தொடங்கப்பட்டு விட்டது. பகவதியும்கூட (1936 ஏப்ரல் 10ம் நாள் பிரேம் சந்த் தலைமை தாங்க ஸாஜாத் ஸாஹீர் தலைமையிலான) லக்னோ மாநாட்டில் சம்சத் சார்பில் கலந்து கொண்டார்.

            1936 ல் பகவதி (நவீன என்று பொருள்படும்படியான) ‘ஆதுநிகா’ என்ற இலக்கிய இதழை ஆசிரியராக இருந்து வெளியிட்டார். அந்த இதழ் குறைந்த காலமே வெளிவந்தாலும் இலக்கியப் போக்குகளைப் பாதித்துச் செதுக்குவதில் முக்கிய பங்காற்றியது. ‘மொழியியல், இலக்கிய மற்றும் கலாச்சாரம் குறித்த சர்வதேச சஞ்சிகை’ (IJLLC) 2016 செப்டம்பர் இதழில் ஆதுநிகா இலக்கிய இயக்கத்திற்கு ஆற்றிய பங்களிப்பு அளப்பரியது எனக் குறிப்பாகப் பதிவிட்டுள்ளது. பகவதி அவரது முதலாவது தலையங்கத்தில் (மே, 1936) சமுதாயம் முன்னேற அதில் நிலவும் முரண்பாடு மோதல்கள் தீர்க்கப்படுவதை நம்பிக்கையோடு எதிர்நோக்குவதாகக் குறிப்பிட்டுள்ளார் என்று அந்த சஞ்சிகை எழுதியுள்ளது. ஒடியா இலக்கியத்தில் தனித்துவமான அடையாளத்தைப் பதித்துள்ள ஆதுநிகா இதழ் மூலம் ஒரிசாவின் படைப்பூக்கமும் அறிவார்ந்த வாழ்க்கையிலும் பகவதி சரண் ஒரு புரட்சியை ஏற்படுத்தியுள்ளார் என இலக்கிய சர்வதேச சஞ்சிகை புகழ்கிறது. அந்த இதழ் ஒடியா இலக்கியத்தைச் ‘சத்தியவதி யுகா’ காலத்தை நோக்கி அழைத்துச் சென்றது.

            தனது குறைந்த வாழ்நாளில் பகவதி பன்னிரெண்டுக்கும் மேற்பட்ட கதைகளை எழுதியுள்ளார். ‘ஷிகார்’ (வேட்டையாடப்படும் இரை) என்பது அதில் ஒன்று. அக்கதையில்

ஒரிசாவின் ஆதிவாசிகள் காலனிய மற்றும் நிலப்பிரபுத்துவ ஆட்சியாளர்களால் எப்படிச் சுரண்டப்படுகிறார்கள் என்பதை வர்ணித்திருப்பார். இந்தக் கதையைத்தான் புகழ்பெற்ற சினிமா இயக்குநர் மிருணாள் சென் அவர்கள் ‘மிருகயா’ (பிரபுத்துவ வேட்டை) என்ற பெயரில், 1976ல் பெரும் வரவேற்பைப் பெற்ற, சினிமாவாக எடுத்திருந்தார்.

            பகவதி சரண் உலகச் சரித்திரத்தையும் ஒடியா மொழியில் எழுதியுள்ளார்.

சுதேச மாநிலங்களை எதிர்த்துப் போராட்டம்

            பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் ஒரிசா மிகவும் பின்தங்கிய பிராந்தியமாக இருந்தது. அப்போது தேங்கனல், நீல்கிரி, ரான்பூர், நயாஹார்க், தாஸ்பல்லா முதலிய எண்ணிறைந்த சுதேச ஆட்சிப் பகுதிகளும் அதில் இருந்தன. சுதேச மாகாணங்களில்  ‘கிழக்கு மாநிலங்களின் ஏஜென்சி’யின் கீழ் இருந்த 21 மாநிலங்கள் காலனிய மற்றும் நிலப்பிரபுத்துவ ஒடுக்குமுறைக்கு ஊற்றுக் கண்ணாக இருந்தன. சில அரிசி ஆலைகளைத் தவிர பெரிதாக வேறு தொழிற்சாலைகள் எதுவும் ஒரிசாவில் இல்லை. அப்போதைய ‘ஒரிசா மற்றும் பீகார்‘ மாகாணத்தில் சேர்ந்திருந்த ஒரிசாவின் பெரும் பகுதி மெட்ராஸ் மாகாணத்தின் கீழ் இருந்தது.

            ஜமீன்தார்கள், மாஸ்டதார்கள், கவுன்டியாகள், லக்ராஜ்தார்கள் முதலிய பல்வேறு நிலப்பிரபுத்துவ எஜமானர்களால் ஒரிசா ஆதிக்கம் செலுத்தப்பட்டு வந்தது.

            பகவதி சரண் நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் போராட்டங்களில் தீவிரமாகப் பங்கேற்றார். 1938 –39ல் தேங்கானல் நிலப்பிரபுத்துவ அரசை எதிர்த்தப் போராட்டத்தில் சத்தியாகிரகியாகப் பங்கேற்றத்துடன்,  சத்தியாகிரகத் தன்னார்வத் தொண்டர்கள் குழு ஒன்றைத் தனது தலைமையில் போராட்டத்திற்கு நடத்திச் சென்றார். தேங்கானலில் உங்கல் புதபங்கா முகாமிலிருந்து போராட்டச் செயல்பாடுகளை அவர் வழிநடத்தினார்.  ‘ரண பேரி’ (போர் முழக்கம்) என்ற தலைப்பில் சிறு பிரசுரத்தை அவர் மக்களிடம் விநியோகித்தார். போலீஸ் ஐஜி அவருடைய இரசிய அறிக்கைகளில் பகவதி சரணைப் புரட்சிக்காரர், கம்யூனிஸ்ட் என்று வர்ணித்திருந்தார்.

ஒரிசாவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிர்மாணித்தல்

            1932ல் பெனாரஸ் எனப்படும் வாரணாசியில் உள்ள காசி வித்யாபீடத்தில் குருசரண் பட்நாயக் மற்றும் பிராண்நாத் பட்நாயக் படித்து வந்தனர். அவர்கள் இருவரும் பகவதி சரணுடன் இணைந்து பகவதியைச் செயலாளராகக் கொண்டு கல்கத்தாவில் முதலாவது கம்யூனிஸ்ட் குழுவை (செல்) அமைத்தனர். அந்தக் குழுவில் ஆனந்த் பட்நாயக், விஸ்வநாத் பாசயத், அசோக் தாஸ், வைத்யநாத் தாஸ், விஜயா சந்திர தாஸ் முதலான பலரும் ஒன்று திரண்டனர். அவர்களில் பலரும் யுகாந்தர் புரட்சியாளர்கள் குழுவிலிருந்து வந்தவர்கள். (அனுசீலன் சமிதி என்ற புரட்சி அமைப்பிலிருந்து பிரிந்து 1906ஆம் ஆண்டு வங்கத்தில் உருவான புரட்சிகர அமைப்பு.  அரவிந்தர், அவரது சகோதரர் பாரின் கோஷ்,  பூபேந்திரநாத் தத்தா, ராஜா சுபோத் மாலிக் ஆகியோர் இதனைத் தொடங்கினர். ‘யுகாந்தர்’ (என்றும் அழிவில்லாதது) என்ற வங்காள இதழை விவேகானந்தரின் சகோதரர் பூபேந்திரநாத் தத்தா நடத்தினார். –நன்றி விக்கி பீடியா)

            ஒரிசாவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1936 ஏப்ரல் 1தேதி அமைக்கப்பட்டது. காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சிக்குள் ஒரு பெரிய சிபிஐ குழு உருவாக்கப்பட்டது. அதில் பகவதி இணைந்தார். மினு மசானி என அறியப்படும் (மூன்று முறை எம்பியாக இருந்த சுதந்திரா கட்சி அரசியலாளர்) மினோசர் ரஸ்டம் மசானி எழுதிய ‘காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சிக்கு எதிரான கம்யூனிஸ்ட் சதி’ நூலில், போலீஸ் அறிக்கைகளின் ஆதாரத்தின்படி, காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் 34 முதல் 40 உயர் மட்டத் தலைவர்கள் ‘பகவதியின் சிபிஐ கட்சியுடன்’ இருந்தனர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

            ஒரிசா கம்யூனிஸ்ட் குழுவின் முதலாவது செயலாளர் பகவதி. அவர் 1938ல் பாம்பே சிபிஐ தலைமையகம் சென்றார். காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி ஏற்பாடு செய்த கோடைக்கால பயிற்சிப் பள்ளியில் கலந்து கொண்டார். அங்கிருந்து திரும்பி வந்ததும் அவர் சிபிஐ  கட்சியின் ‘நேஷனல் ஃப்ரண்ட்’ இதழைப் பிரச்சாரம் செய்து இளைஞர்களைப் பயிற்றுவித்தார்.

            1940 ஏப்ரலில் பகவதி காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியிலிருந்து ராஜினாமா செய்த நேரத்தில் ஜெயபிரகாஷ் நாராயண் ஒரிசாவின் சிஎஸ்பி கட்சிக் கிளையைக் கலைத்தார். பகவதி முழு நேரத்தையும் சிபிஐ கட்சி அமைப்பிற்காகச் செலவிட்டார். ’ஆகேசல்’ (மேலும் ‘முன்னேறிச் செல்’) என்ற கட்சி இதழை (அச்சடிக்காமல்) சைக்ளோஸ்டில் செய்து பிரதி எடுத்து பகவதி வெளியிட்டார்.

            இவ்வாறு பகவதி சரண் மற்றும் பிற தோழர்களின் அதிகரித்த செயல்பாடுகள் காரணமாக பிரிட்டிஷ் அரசு 1940 ஜூலை 11ல் ஒரிசா கம்யூனிஸ்ட் சதி வழக்கை ஏவியது. பகவதி சரண் உட்பட ஏறத்தாழ கட்சித் தலைவர்கள் முழுமையுமே கைது செய்யப்பட்டு சிறையிலேயே விசாரிக்கப்பட்டனர். இவ்வழக்கு விரிவாகப் பத்திரிக்கைகளில் பரபரப்பாக விளம்பரம் பெற்றது.

            விடுதலைக்குப் பிறகு பகவதியும் மற்ற தோழர்களும் கட்சியை மறுசீரமைக்கத் தொடங்கினர். 1942 –43களில் அவர் மாகாணத்தில் விரிவாகச் சுற்றுப்பயணம் செய்து விவசாயிகள் மற்றும் ஏழை மக்களிடையே உரையாற்றினார்.

இரண்டாவது உலக யுத்தமும் பஞ்சமும்

            1939ல் இரண்டாவது உலகப் போர் வெடித்தது, 1941 ஜூன் 22ல் சோவியத் யூனியன் தாக்கப்பட்டது. தென்கிழக்கு ஆசியாவில் ஜப்பானிய படைகள் விரைவாக முன்னேறி இந்திய எல்லைகளை நெருங்கியது. 1942 பிப்ரவரி 15ல் சிங்கப்பூரும், அதே ஆண்டு மார்ச் 8ல் ரங்கூனும் ஜப்பானியப் படைகளிடம் வீழ்ந்தன. பர்மாவில் பணியாற்றி வந்த பெரும் எண்ணிக்கையிலான ஒரியர்கள் நாட்டைவிட்டு வெளியேறத் தொடங்கினர். அத்தோடு ஒரிசாவின் கடற்கரை மாவட்டங்களை ஜப்பான் தாக்குமோ என்ற அச்சுறுத்தல் மட்டுமல்ல, உள்ளே நுழைந்துவிடும் சாத்தியமும் இருந்தது. மக்களைப் பாதுகாப்பாக வெளியேற்றத் தொடங்கியும், ஜப்பானின் வான்வழித் தாக்குதலை முறியடிக்க இரவு நேரத்தில் முழுமையாக விளக்குகளை அணைப்பதும் நடைமுறைப்படுத்தப்பட்டன. தோணிகள், படகுகள் முதலான நீர்வழிப் போக்குவரத்து சாதனங்கள் திரட்டப்பட்டன. எந்த மோசமான அசம்பாவித நிகழ்வுகளையும் எதிர்கொள்ள வேண்டி தயாரிப்புப் பணிகளில் முற்போக்கு சக்திகள் தேசிய யுத்த முன்னணியில் பணியாற்றினர். ஜப்பானிய படைகள் உள்ளே நுழையுமென்றால் அதனை எதிர்த்துப் போரிட குடிமக்கள் எதிர்ப்பரண் அமைக்க சிபிஐ அறைகூவல் தந்தது. ஒரிசா பிரிவின் செயலாளர் என்ற முறையில் இப்போராட்டத்தில் பகவதி முனையிலே முகத்து நின்றார். ‘முக்தி யுத்தா’ (விடுதலைப் போர்) கட்சிப் பத்திரிக்கை வெளிவரவும் வழிகாட்டினார்.

            இந்த நேரத்தில்தான் 1943ல் பகவதி பஞ்ச நிவாரணப் பணிகளில் தன்னைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டார். இக்காலகட்டத்தில் வங்கப் பஞ்சம் வெடித்தது. அதன் பாதகமாக விளைவு ஒரிசா, பீகார் மற்றும் பிற இடங்களிலும் பரவியது. ஒரிசாவில் மட்டும் பஞ்சம் காரணமாக 40 ஆயிரம் மக்கள் இறந்தனர். இப்பெரும் துயருக்கு உலக யுத்தச் சூழலைத் தங்கள் நலன்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பிரிட்டிஷ் அரசின் கொள்கைகளே காரணம்.

            உணவு தானியங்களைப் பிற இடங்களுக்குக் கொண்டு செல்வது மற்றும் விலைகளைக் கட்டுப்படுத்துவது மீது மாகாண அரசுகளிடமிருந்த உரிமைகளைப் பிரிட்டிஷ் அரசு பறித்தது. விளைவு,  பெருமளவிலான உணவு தானியங்கள் மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்டது; மேலும் பெருமளவு கடத்தலும் நடந்தது.

            பஞ்ச நிவாரண நடவடிக்கை பணிகளில் ஈடுபட்ட போழ்துதான் 1943 அக்டோபர் 23ம் நாள் பகவதி சரண் இயற்கை எய்தினார். அவரது இறப்பு குறித்து முரண்பாடான தகவல்கள் உலவுகின்றன. 1943 அக்டோபர் 31 தேதியிட்ட சிபிஐ கட்சிப் பத்திரிக்கையான ‘பியூபிள்ஸ் வார்’ இதழில் பிரசுரித்தபடி (சிங்களா பாக்டீரியா தொற்றின் காரணமாக ஏற்படும் ‘பாசிலரி டயேரியா‘ எனப்படும்) வயிற்றுப்போக்கால், பஞ்ச நிவாரண நடவடிக்கை தொடர்பான கடும் உழைப்பால், உடல்நலம் பாதித்து அவர் இறந்தார். அவர் பட்டினியால் பெரிதும் சத்து குறைபாடு உடையவராக இருந்தார். பிரிட்டிஷ் அதிகாரிகளின் கடுமையான சித்திரவதைகளுக்குப் பின், சந்தேகத்திற்குரிய முறையில் அவரது மரணம் நிகழ்ந்தது என்பது வேறு சில அறிக்கைகளின் கூற்று.

            ஒரிசா மாநிலத்தின் புவனேஸ்வரில் உள்ள இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்
தலைமையகக் கட்டடம்
“பகவதி பவன்” என்று ஆகச் சிறந்த கம்யூனிஸ்ட்டும் முன்னோடியுமான பகவதி சரண் பாணிகிரகி அவரின் பெயரைப் பெருமையோடு தாங்கி நிற்கிறது.


--தமிழில் : நீலகண்டன்,

தொடர்புக்கு 94879 22786

 

Monday 25 January 2021

வேளாண் சட்டங்கள் – நீதிமன்றமும் அரசியலமைப்புச் சட்டமும்

                                                                                                                        வேளாண் சட்டங்கள் –

           நீதிமன்றமும் அரசியலமைப்புச் சட்டமும்

--காளீஸ்வரன் ராஜ்     (உச்சநீதிமன்ற வழக்கறிஞர்)

புகைப்படம் நன்றி : இந்தியன் எக்ஸ்பிரஸ்

            புதிய வேளாண் சட்டங்கள் தொடர்பான பிரச்சனையில் நீதிமன்றத் தலையீடு “தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது” என சிலநாட்களுக்கு முன்பு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கருத்து தெரிவித்தது. வேளாண் சட்டங்களை இடைநிறுத்தி, ஆய்வுக் குழு அமைத்த நீதிமன்ற உத்தரவை விமர்சித்து சட்ட அடிப்படையிலும், அரசியலமைப்பு ரீதியிலும் விமர்சனங்கள் எழுந்தன. அரசியலமைப்பு அடிப்படையில் அமைந்த நீதிமன்றம், நிர்வாக (மத்தியஸ்த) நீதிமன்றம் போல நடக்க முயன்றுள்ளது என்பது விமர்சகர்கள் கூற்று; அதாவது, அரசை இக்கட்டிலிருந்து மீட்பதற்காகவே நீதிமன்றம் பிரச்சனைக்குத் தீர்வு காண முயன்றது. ஆனால் நீதிமன்றத்தின் தலையீடு நியாயமான தீர்வினைக் கண்டு பிடித்து சுமூகமான உடன்பாட்டிற்கு வருவதற்கு உதவுவதற்காகவே என்பது மாற்றுப் பார்வை எதிர்விமர்சனம்.

            வேளாண் சட்டங்களை எதிர்த்த உச்சநீதிமன்ற வழக்குகளின் முக்கியமான அடிப்படை சட்டமியற்றல் சம்பந்தமானது. அதன்படி, குறிப்பிட்ட சட்டம் இயற்ற யாருக்கு அதிகாரம் என்பதைச் “சாராம்சமான உட்கருவும், பொருளடக்கமும்” கோட்பாட்டின்படி பரிசீலிப்பதே நீதிமன்றத்தின் முன்னுரிமையாகும்; அதன் பிறகே அச்சட்டத்தின் பிற அம்சங்கள் ஆய்வுக்கு வரும். அவ்வாறு அரசியலமைப்பின் ஏழாவது அட்டவணையின் கீழ் மாநில (அதிகாரத்தின் கீழ் வரும்) பட்டியலில் இடம் பெற்றதே இந்தச் சட்டத்தின் உட்கரு என்பது அடிப்படையான வாதம்.

ஏழாவது அட்டவணை பல பிரிவுகளின் தொகுப்பு போன்றது. சட்டமியற்றும் தேவைக்காகப் பலமுறை மத்திய அரசு மாநில அதிகார எல்லையில் ஊடுருவது வழக்கம். அதை நியாயப்படுத்த மத்திய பட்டியல் அல்லது பொதுப் பட்டியல் இவற்றில் சில பதிவுகளை (என்ட்ரீஸ்) இடம்பெறச் செய்து அதிகார எல்லைகளை (மாற்றி) வரையறுத்து, பின்னர் அதனைப் பின்பற்றுவார்கள். இவ்வாறு முழு சட்டப் புத்தகமும் மத்திய அரசின் அரசியல் மற்றும் பொருளாதாரக் கொள்கைகளுக்கு ஏற்றவாறு எழுதப்பட்டதை ஒத்திருக்கும். இதே தந்திரத்தை மாநிலங்களும் சில நேரம் செய்வதுண்டு. எவ்வாறாயினும், இவ்விரண்டிலும் அரசியல் சாசன அமைப்பின் கட்டுக்கோப்பு மேலும் அபாயத்திற்கு உள்ளாவது தெளிவு.

புதிய வேளாண் சட்டங்களின் சாராம்சமான உட்கருவும், பொருளடக்கமும் “விவசாயம்”. விவசாயம், விவசாய நிலம் மற்றும் சந்தை ஆகியன மாநிலப் பட்டியலில் முறையே 14, 18 மற்றும் 28வது பதிவுகளாக இடம்பெற்றுள்ளன. அதில் ”விவசாயக் கடன் நிவாரணம்” என்பதை உள்ளடக்கியது 30வது பதிவு. அந்தப் பட்டியலின் 45 முதல் 48வரையான பதிவுகள் நிலம் அல்லது விவசாய நிலம் சம்பந்தமான வருமானம் மற்றும் அதன் மீதான வரிவிதிப்பு தொடர்பானது. பாராளுமன்றம் நிறைவேற்றிய சட்டம் பெருமளவு ஏழாவது வரையறையின் எல்லைக்குள் அத்துமீறி இருந்தால் உச்சநீதிமன்றம் அதனை அப்படியே ரத்து செய்திருக்கலாம்.

காமேஷ்வர் சிங் வழக்கின் (1952) தீர்ப்பு சந்தேகப்படும்படியான சட்டமியற்றலுக்கு எதிராக வழங்கப்பட்ட மிக அரிதான கண்டனமாகும். இராஜஸ்தான் மாநில அரசு எதிர் ஜி சௌலா (1958) வழக்கில் நீதிமன்றம், குறிப்பிட்ட சட்டம் செல்லுபடியாகுமா என்பதைத் தீர்மானிக்க, அச்சட்டத்தின் உள்ளடகத்தின் மீது கவனத்தைக் குவித்தது.

மேற்கண்ட தீர்ப்புகள் தற்போதைய வேளாண் சட்டங்களை ஊடுருவிப் பரிசீலிக்க முன்னுதாரணமான மதிப்புடையவை. பொதுப்பட்டியலின் பதிவு 33ன் மீது சார்ந்திருக்க மத்திய அரசு முயற்சிக்கும். வர்த்தகம் மற்றும் வணிகயியல் பற்றிய அப்பதிவு பாராளுமன்றத்திற்குத் தடைசெய்யப்பட்ட பகுதி அல்ல. அதில் உணவுப் பொருட்களும் அடக்கம். எனவே வேளாண் சட்டங்களைக் கொண்டுவர, இவ்வாறாகத் தனக்குச் சட்டபூர்வமான தகுதி இருப்பதாக நியாயப்படுத்த மத்திய அரசு வாதிடக்கூடும்.

இப்பிரச்சனையில் அரசியலமைப்பு ரீதியில் சவாலான இப்புதிரைத் தீர்த்து வைக்கவே உச்சநீதிமன்றத்தில் பல வழக்குகள் தொடுக்கப்பட்டன. ஆனால் உரிய நேரத்தில் சட்டரீதியாகத் தீர்த்து வைக்க நீதிமன்றம் தவறி விட்டது; அவ்வகையில் இன்று டெல்லி விதிகளில் நடைபெறும் பல சம்பவங்களுக்கும் நீதிமன்றமும் ஒருவகையில், முதன்மையாக இல்லாவிட்டாலும், இரண்டாவதாகப் பொறுப்புடையதே. இதன் பாடம், அரசியலமைப்புப் பிரச்சனைகளில் காலம் என்பது பொன்போன்றது.

இருந்தபோதிலும், சட்டரீதியான காரணங்களைக் கூறாமல், உச்சநீதிமன்றம் ஜனவரி 12ம் தேதி வேளாண் சட்டங்களை இடைநிறுத்தி உத்தரவிட்டது; சட்டரீதியான புதிரை விடுவிப்பதைவிட, அரசியல் ரீதியான புதிரைத் தீர்ப்பதே அதன் நோக்கம் என்பது தெளிவானது. நீதிமன்றத்தின் தலையீடு தாமதித்த ஒன்று, தடம் புரண்ட ஒன்று. நீதிமன்றம் அமைத்த சமரசக் குழு ஏராளமான விமர்சனங்களை எதிர்கொண்டது. நீதிமன்றமும் அதனது செயல்படும் பொறுப்பில் தவறியது என விமர்சிக்கப்பட்டது.

ஆனால் தெரிந்து வேண்டுமென்று நோக்கத்தோடு உணர்வற்று நடந்து கொண்ட நிர்வாகம் மற்றும் சட்டமியற்றும் (பாராளு) மன்றங்களின் செயல்பாடுகள் சமமான அளவு கடுமையானது. நெருக்கடிக்குத் தீர்வுகாண சட்டங்களின் அமலாக்கத்தை நிறுத்தி வைக்கலாம் என்பதொத்த யோசனையை முன்வைக்க மத்திய அரசுக்கு ஏறத்தாழ வடஇந்தியாவின் கடும் குளிர்பருவம் முழுவதும் தேவைப்பட்டது. கலந்தாய்வு முறை ஜனநாயகத்தில் சட்டமியற்றும் மன்றங்களின் ஆக்கபூர்வமான விவாதங்கள் முக்கியமான மைய இடத்தை வகிக்கும். பெரும்பான்மை வாதம் (மெஜாரிட்டியிசம்) என்பது விவாதத்தை மறுப்பதற்கான மாற்று அன்று. சந்தையின் மேலாண்மையை நம்பும் ஓர் ஆட்சியின் பார்வையை, நாட்டு மக்கள் படும் துன்ப துயரங்களைக் காணவொட்டாது மறைத்துவிடும். விவசாயிகள் சந்திக்கும் பிரச்சனையில் எதிர்கட்சிகளும்கூட சிறப்பாக நடந்து கொண்டதாகப் பெருமை பேசமுடியாது.  

வேளாண் மசோதாக்கள் பாராளுமன்றத்தில் ஏதோ குறைவாக அல்லது முழுமையாக விவாதமின்றி, எதிர்ப்புகளையும் மீறி அவசரகதியில், நிறைவேற்றப்பட்டு விட்டன. சட்ட மசோதா கொண்டு வருவதற்கு முன், அது சபையில் தாக்கலாகும்போது ஏன் அதற்குப் பிறகும்கூட சட்டமியற்றும் முழுமையான நிகழ்முறையில் விவாதங்களிலும் கலந்தாய்வுகளிலும் ஈடுபட வேண்டிய தேவையைக் கலந்தாய்வு ஜனநாயகம் வலியுறுத்துகிறது. இச்சட்டங்கள் கொண்டுவருமுன் தங்களுடன் விவாதிக்கப்படவில்லை என்ற விவசாயிகளின் புகார் முன்கலந்தாய்வின் தேவையைச் சுட்டிக்காட்டுகிறது. ஒரு விஷயத்தில் பாத்தியதை உரிமை உடையவர்களுக்குத் தங்கள் தரப்பை எடுத்துரைக்கும் வாய்ப்பு, அவர்கள் நலன்களைப் பாதிக்கும் முக்கிய முடிவு எடுக்கப்படுவதற்கு முன்,  வழங்கப்பட வேண்டும். தேசிய நீதி வழங்கல் என்பது, சட்டமியற்றல் துறையிலும்கூட, ஆழமான கோட்பாடு.

ஜனநாயகத்தில் ஒரு சட்டத்தின் செல்லுபடியாகும் ஏற்புத்தன்மை, தெருக்களில் நிகழும் அமைதியான போராட்டங்கள் வழியாகவும் சோதிக்கப்படும். ஜனநாயகபூர்வ பொறுப்பேற்பு என்பதை உறுதிப்படுத்த அரசியல் இயக்கம் ஒரு முக்கியமான கருவியாகும். பெருந்தொற்று காலத்தில், இவ்வளவு நெருக்கடி கட்டுப்பாடு சவால்களுக்கு மத்தியில் ஒரு பெருந்திரள் குடிமக்கள் போராட்டம், ஏராளமான மக்கள் பங்கேற்புடன், நடத்தப்படுவது உண்மையில் குறிப்பிடத்தக்கது. பொதுவாக இத்தகைய இயக்கங்கள் அரசு நடவடிக்கைகளைத் தடுத்துக் கட்டுப்படுத்தும் வல்லமை மிக்கவை. இந்தியாவின் குடிமக்கள் சட்டமறுப்பு இயக்கம் வரலாற்றுப் புகழ் மிக்கது என்பதற்கு அதன் பிரம்மாண்டமான பெருந்திரள் பங்கேற்புப் பண்பு மட்டும் காரணமில்லை; மாறாக வன்முறையற்ற அகிம்சை முறையிலான தத்துவத்தைப் பற்றி நிற்கும் அதன் ஆதார வேர்களும் காரணம். பிரம்மாண்டமான விவசாயிகள் இயக்கம் ஆகப்பெரும் அந்த நெறிமுறை பண்பாட்டு உள்ளடக்கப் பொருண்மையைக் கொண்டிருக்கிறது – அது அரசியலமைப்பு சார்ந்த ஆட்சி நெறிமுறைக்குப் புறம்பான ஒன்று அல்ல. அந்த நீதிசார்ந்த உள்ளடக்கமே அந்த இயக்கத்திற்கு வலிமையை வழங்குகிறது.

தேசத்தின் அடிப்படையான அரசியலமைப்புச் சட்டத்தின் முன்னுரை வழங்கியுள்ள “சமூக நீதி, பொருளாதார நீதி மற்றும் அரசியல் நீதி”யைக் கோருவதற்கு விவசாயிகளுக்கு எல்லா உரிமைகளும் உண்டு. சட்டத்தின் ஆதரவோடு வழங்கப்படும் குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது விவசாயத்திற்கான நீதியின் விலக்க முடியாத மாறுபட்ட வடிவமே. மண்டி முறை ஒழிக்கப்படுவதால் பஞ்சாப், ஹரியானா போன்ற மாநிலங்களுக்கு ஏற்படும் வருவாய் இழப்பு என்பதும் கூட்டாட்சி முறைமையின் கவலைக்குரிய அக்கறையேயாகும்.

நமது நாட்டின் விவசாயம் பல வகைகளில் பன்மைத்துவ வேறுபாடுகள் கொண்டது; அந்தப் பன்மைத்துவத்தை அங்கீகரித்து நன்கு விரிவாகப் பிரதிபலிப்பதே அரசியல் சாசனத்தின் ஏழாவது அட்டவணை.  எந்த ஒரு நடவடிக்கை கூட்டாட்சியின் மேன்மையான கொள்கைகளைப் பலவீனப்படுத்திவிடுமோ அது, அரசியல் ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும், எதேச்சியதிகாரத்துவமாக மாறிவிடும். கூட்டாட்சி என்பதும் அதிகாரத்தைப் பகிர்தல் என்பதும் ஒரே பொருள் சார்ந்தது.

--நன்றி: இந்தியன் எக்ஸ்பிரஸ் (24-01-2021)

Farm Laws, The Court and the Constitution

--தமிழில் : நீலகண்டன்,

  என்எப்டிஇ, கடலூர்  

 

           

 

 

Thursday 21 January 2021

தோழர் லெனின் நினைவு நாள்

    

தோழர் லெனின் 150வது பிறந்த நாள் 22—04--2020

அவர்  கண்டுபிடித்தக் கோட்பாடுகளின்  

முக்கித்துவமும், பொருத்தப்பாடும்

 --அனில் ரஜிம்வாலே

(நன்றி : மெயின் ஸ்ட்ரீம், 

தொகுதி LVII எண்19 நியூடெல்லி, 27—04—2019)

                

அடுத்த ஆண்டு உலகம் லெனின் 150வது பிறந்த நாளைக் கொண்டாட உள்ளது. அறிவின் பேருருவும் புரட்சியை வாழ்நாளெல்லாம் அனுசரித்த நடைமுறையாளருமான அவருடைய கோட்பாட்டுகளின் வரலாற்றுச் சகாப்தப் பங்களிப்பைக் கற்றுணரும் தருணம் இது. ஆனால் துரதிருஷ்டம், பலரும் அதனைப் புறக்கணித்து மறக்கத் தலைப்படுகின்றனர். எனவே இன்றை காலகட்டத்தில் லெனினியத்தின் பொருத்தப்பாட்டை வளர்த்தெடுத்து நிலைநிறுத்துவது மிகவும் முக்கியமானதாகிறது.

நிகழ்வுகள் நிறைந்த வாழ்வு

                விளாதீமிர் இலியிச் உலியானவ் என்பது இயற்பெயர், சைபிரியாவுக்கு நாடு கடத்தப்பட்ட பிறகு லெனின். ரஷ்யாவின் சிம்பிர்ஸ்க் என்ற இடத்தில், படித்த முற்போக்கான கருத்தோட்டமுடைய மத்தியதர வர்க்கக் குடும்பத்தில் 1870 ஏப்ரல் 22ம் தேதி பிறந்தார். சிம்பிர்ஸ்க் பின்னர் உலியானாவ்ஸ்க் என்று மாறியது. படிப்பில் மிகவும் கூர்மையான அறிவுடைய புத்திசாலியான மாணவர். பள்ளியில் லத்தீன் மற்றும் கிரேக்க மொழியில் சிறப்புற்று முதல்தர மாணவராக விளங்கினார். பின்னர் கழான்(Kazan) பல்கலைக்கழகத்தில் ஜார் ஆட்சிக்கு எதிரான நடவடிக்கையில் ஈடுபட்டதால் அவரது படிப்பு தடைப்பட்டது; அவர் கைதாகி வெளியேற்றப்பட்டார். குடும்பம் சமராவுக்கு இடம் பெயர்ந்தபோது அவருக்கு மார்க்சிய நூல்களுடன் அறிமுகம் ஏற்பட்டது. சட்டப்படிப்பில் முதல் வகுப்பில் பட்டம் பெற்றார். 1892 –93ம் ஆண்டுகளில் சமராவில் அவர் வழக்குறிஞராகப் பணியாற்றினார். 1893ல் செயிட் பீட்டர்ஸ்பர்க்குக்கு இடம் பெயர்ந்தபோது அங்கும் பொது வழக்கறிஞராக இருந்தார்.  

  மார்க்சிய அறிவில் லெனினின் ஆழ்ந்த புலமை

            1870 தொடங்கி மார்க்சியத்தை அறிமுகப்படுத்தியதால் ஜார்ஜ் பிளிக்கானவ், ’ரஷ்யாவின் மார்க்சியத் தந்தை’ எனப் புகழப்படுகிறார். லெனின் அவரையே தனது வழிகாட்டியாகவும் ஆசிரியராகவும் நினைந்தார். 1889ல் மார்க்சின் ’மூலதனம்’ நூலைக் கற்று மார்க்சியரானபோது லெனினின் வயது 19 மட்டுமே. 1887லேயே தனது பாதையின் திசைவழி எது என்பதை அவர் தேர்ந்தெடுத்தார். அவருடைய மூத்த சகோதரர் அலெக்சான்டர் ஜாரைக் கொல்ல முயன்ற குற்றச்சாட்டில் தூக்கிலிடப்பட்டார். அதற்காகப் பெரிதும் வருந்தினாலும், லெனின் தனது சகோதரரின் வழிமுறையிலிருந்து தன்னை வேறுபடுத்திக் கொண்டபோது அவருக்கு வயது 17 மட்டுமே, அவ்வளவு சிந்தனைத் தெளிவோடு இருந்தார் லெனின்.

ரஷ்யாவில் அன்றைய காலத்தில் விவசாயிகளைக் குறித்து நிலவிய ’நரோத்னியம்’ என்ற (மார்க்சியத்திற்கு முன்னோடியாக அமைந்த கருத்தியல்) –தன்னை ’மக்களுக்கு மத்தியில்’ என்று அழைத்துக் கொண்டது --  ஒரு வகையான உடோப்பிய கற்பனாவாத விவசாய சோஷலிசம் குறித்த விமர்சனமாக லெனின் 24 வயதில் ’மக்களின் நண்பர்கள் என்றால் என்ன’ என்ற புத்தகத்தை 1894ல் எழுதினார். புரட்சிக்கான உத்திகளைத் திட்டமிடுவதற்கு முன்பு முதலாளித்துவம் குறித்து ஓர் ஆழமான ஆய்வு நடத்தப்பட வேண்டுமென லெனின் வலியுறுத்தினார்.

1895ல் அவர் புரட்சியாளர்களோடு தொடர்பு கொள்ள ஐரோப்பா அனுப்பி வைக்கப்பட்டார். அது ’தொழிலாள வர்க்க விடுதலைக்கான லீக்’ என்ற அமைப்பு அந்த ஆண்டே உருவாகக் காரணமாயிற்று. அவர் கைது செய்யப்பட்டு சைபீரியாவுக்கு நாடு கடத்தப்பட ஷுசென்ஸ்கோயி சென்றடைய 11 வாரங்கள் பயணம் செய்தார். அங்கே லெனின் நாடஸ்கா குருப்ஸ்கயாவைத் திருமணம் செய்து கொண்டார். அங்கிருந்தபடியே RSDLP எனப்படும் ’ரஷ்யன் சோசியல் டெமாகிரட்டிக் லேபர் பார்ட்டி’யை 1898ல் மின்ஸ்க்-கில் அமைக்கப் பங்களிப்பு செய்தார், அவர் நேரடியாகக் கலந்து கொள்ளவில்லை. 1900ல் நாடு கடத்தப்பட்டதிலிருந்து விடுதலையானதும் ஐரோப்பா சென்றவர், முன்பே கைதாவதைத் தவிர்க்கும் பொருட்டு 1917 பிப்ரவரி புரட்சிக்குப் பிறகே ரஷ்யாவுக்குத் திரும்ப முடிந்தது.

ரஷ்யப் புரட்சிக்கான உத்திகளையும் தந்திரோபாயங்களையும் திட்டமிடும் பிரச்சனையில் 1903ல் RSDLP கட்சி போல்ஷ்விக்குகள், மென்ஷ்விக்குகள் என இரண்டாகப் பிளவுற்றது. லெனின் வழிகாட்டுதலில் போல்ஷ்விக்குகளே 1917 ரஷ்யப் புரட்சியை நடத்தினர். இந்த இரண்டு பிரிவு கட்சிகளும் பின்னர் ஒன்றுபடவே இல்லை. இஸ்க்ரா, பிராவ்தா, இஸ்வெஸ்தியா எனப்பல இதழ்கள் மற்றும் பத்திரிக்கைளை நிறுவிட லெனின் உதவி செய்தார். அந்த இதழ்களின் வழியே நடைபெற்ற விவாதங்களில் மார்க்சியக் கோட்பாடு மற்றும் நடைமுறை அமலாக்கம் குறித்த மேம்பட்ட வளர்ச்சிக்கு உதவினார்.

மார்க்சியத்தைக் குணாம்ச ரீதியில் உயர் தளங்களுக்கு மேம்படுத்துவதில் லெனின் பங்கு:

            விஞ்ஞானபூர்வக் கோட்பாட்டு கருத்தியலாளராக நிகரற்று விளங்கிய லெனின் மார்க்சியக் கோட்பாட்டைப் புதிய மட்டங்களுக்கு உயர்த்தி, புதிய கோட்பாட்டு கண்டுபிடிப்புகளை நிகழ்த்தி, ரஷ்யப் புரட்சியைச் சாத்தியமாக்கியவர். உலகிலேயே ஹெகலியத் தத்துவத்தில் கரைகண்ட சிலரில் லெனினும் ஒருவர்; மேலும் அந்தச் சிலரிலும் ஹெகலிய இயங்கியலில் நிபுணத்துவம் பெற்ற வெகுசிலரில் லெனின் தனித்துவமானவர். முதலாளித்துவத்தின் அடுத்த உயர் கட்டத்தைக் கண்டுபிடித்துச் சொன்னவர் அவரே, அதுவே ’ஏகாதிபத்தியம்’ என அறியப்படுகிறது. ஏகாதிபத்தியச் சகாப்தத்தில் சோஷலிசத்தை அடைவதற்கான புரட்சியின் வழியில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடைப்பட்ட நிலைகளைக் கடந்தாக வேண்டும் என அவர் சுட்டிக் காட்டினார்; அதனை அவர் ஒட்டுமொத்தமாக ’பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சி’ என்ற வார்த்தையால் அழைத்தார். ஆனால் அதற்கு மாறாக மென்ஷ்விக்குகள், ’சோஷலிசத்திற்கு நேரடி மாற்றம்’ என்றதால் லெனினுடன் முரண்பட்டார்கள், பூர்ஷ்வா புரட்சியால் ஆகப்போவது ஒன்றுமில்லை என மறுத்தார்கள். இப்படி உருவானதுதான் அவருடைய புகழ்பெற்ற ஆய்வான ’ரஷ்யப் புரட்சிக்கான இரண்டு உத்திகள்’ (ஜுன் -- ஜூலை 1905ல் எழுதியது) என்பது ’சமூக ஜனநாயகத்திற்கான இரண்டு உத்திகள்’ என்று (1907 மீண்டும் பிரசுரமான கட்டுரைத் தொகுப்பிலும் கூடுதல் விபரங்களோடு) விளக்கப்படுகிறது. அதன் முக்கியமான கோட்பாட்டுக் கூறுகள் தற்காலத்திலும் பொருத்தமுடையது.

            நிலப்பிரபுத்துவத்துவத்திற்கு எதிரான மற்றும் ஏகாதிபத்தியத்திற்கு எதிரான முடிக்கப்படாத கடமைகளைப் புரட்சி முடித்தாக வேண்டும். ஏகாதிபத்திய நிதிமூலதனம் உழைக்கும் மக்கள் கூட்டத்தை மட்டும் சுரண்டுவதில்லை, அது சொத்துடைமையாளர்களையும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான முதலாளிகளையும் சுரண்டுகிறது. (எனவேதான் லெனின் வலியுறுத்தினார்) தொழிலாளி வர்க்கம் நிலஉடைமைக்கு எதிரான, ஜாரின் எதேச்சிகாரத்திற்கு எதிரான மற்றும் காலனியத்திற்கு எதிரான  தனது போராட்டத்தில் சொத்துடைமையாளர்களையும் சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் பூர்ஷ்வா முதலாளி வர்க்கங்களையும் இணைத்துக் கொள்ள வேண்டும்.

            ’சோஷலிசத்திற்கு’ மட்டுமே உழைப்போம் என்ற அடிப்படையில் மென்ஷ்விக்குகள் இந்த இயக்கங்களில் பங்கு பெறாது விலகியே இருந்தனர்.

 வெற்றிபெற்ற முதல் புரட்சியின் தலைவர்

            அவர்தான் தயாரிப்புப் பணிகளில் ஈடுபட்டார், ரஷ்யப் புரட்சியை நடத்தினார் என்ற போதும் லெனின் கோட்பாட்டளவிலும் நடைமுறையிலும் ஒருபோதும் கட்சி அமைப்பின் முறையான தலைவராக அல்லது செயலாளர் அல்லது பொதுச் செயலாளர் என்ற எந்தப் பதவியையும் வகித்ததில்லை. கட்சியில் எந்தப் பதவிகளும் ஏற்படுத்தப்படவில்லை என்பது பெரிதும் வெளியே தெரியாத உண்மையாகும். ஆரம்பம் முதலே கட்சியில் கூட்டுப் பொறுப்பு தலைமையே இருந்தது; மேலும் புரட்சியின் போதும்கூட முறையான எந்தப் பதவிகளும் உருவாக்கப்படவில்லை.

            1922ல் மத்திய அலுவலகப் பணிகளை ஒருங்கிணைக்க வேண்டி ’பொதுச்’ செயலாளர் என்ற பதவி ஏற்படுத்தப்பட்டது. அந்தப் பொறுப்பை வகிக்கும் ஒரு மனிதரிடமிருந்து நாள் தோறும் எதிர்பார்க்கப்படுவதைக் குறிப்பதற்காகவே ’பொது’ என்ற அடைமொழி சேர்க்கப்பட்டது. பின்னர் ஸ்டாலினுக்குக் கீழே வந்தபின், அந்த வார்த்தை பலம் பொருந்திய அதிகாரம் என்ற பொருளை அடைந்தது. ஸ்டாலினே முதல் பொதுச் செயலாளர். அந்தத் தகுதியைப் பயன்படுத்தி அவர் அதிகாரத்தைக் குவிக்கத் தொடங்கியபோது அவர் உடனடியாக நீக்கப்பட வேண்டும் என லெனின் கேட்டுக் கொண்டார். அதன் பிறகு வரலாறு எப்படி எல்லாம் தகவமைத்துக் கொண்டது தனி கதை.

            லெனின் எந்தப் பதவியையும் விரும்பியதும் இல்லை, அதன் பின்னே அலைந்ததும் இல்லை. அவருடைய அறிவார்ந்த வழிகாட்டலில் செயல்பட்டக் கூட்டுத் தலைமையே புரட்சியை வெற்றிகரமாக நடத்தி புரட்சிகரமான அரசையும் அமைத்தது. மிகுந்த தயக்கத்தோடே லெனின் சோவியத் அரசாங்கத்தின் (அமைச்சர்கள் குழுவின் தலைவர்) பிரதமரானார்.

            1918ல் வாயிற் கூட்டத்தில் பேசும்போது இடது சோஷலிசப் புரட்சிகர கட்சியின் (Left SRP) ஓர் உறுப்பினரால் லெனின் சுடப்பட்டுக் காயமடைந்தார். போல்ஷ்விக் கட்சியுடன் கூட்டணி அரசில் இடம் பெற்றிருந்த அந்தக் கட்சி, முதலாளிகளிடமும் ஏகாதிபத்தியத்திடமும் லெனின் சரணடைந்ததாகக் குற்றம் சுமத்தியது. அரசிலிருந்து அந்தக் கட்சி வெளியேற்றப்பட்டதும் சோவியத் அரசுக்கு எதிராகக் கலகத்தில் ஈடுபட்டது. அந்தக் கொலையாளியின் தோட்டாக்கள் உடலில் தங்கிய காயத்தின் காரணமாக லெனின் என்ற புரட்சியாளர் 1924ம் ஆண்டு ஜனவரி 21ம் நாள் இம்மண்ணுலகை விட்டு நீங்கினார்.

தேசிய விடுதலை இயக்கங்கள் மற்றும் சுதந்திரம் குறித்த லெனின் அணுகுமுறை

            ரஷ்யப் புரட்சிக்குப் பிறகு உலகப் புரட்சிகர இயக்க நடைமுறைகளின் பிரிக்க முடியாத ஒருங்கிணைந்த பகுதியாகச் சுதந்திரத்திற்கானப் போராட்டங்கள் மற்றும் தேசிய விடுதலையை முதன் முதலாக வரலாற்றில் இடம்பெறச்செய்தது லெனின். சுதந்திரத்திற்காகப் போராடும் மக்களுக்கு ஒல்லும் வகையெல்லாம் ஓவாது உதவியைச் செல்லும் வாயெல்லாம் செய்தவர் லெனின்.

            ஏகாதிபத்தியம் குறித்த லெனினின் கோட்பாடு மற்றும் தேசிய விடுதலைப் போராட்டங்கள் தவிர்க்க முடியாத ஒரு புது வகையான ஐக்கிய முன்னணியை நோக்கி இட்டுச் சென்றது. இந்தியா, சீனா, வியத்நாம் போன்ற பிற நாடுகளில் காலனியத்திலிருந்தும் ஏகாதிபத்தியத்திலிருந்தும் விடுதலை பெறுவதற்காக நடைபெறும் மக்களின் போராட்டங்களுக்கு உத்வேகத்துடன் ஓர் அரசே  உதவி செய்தது வரலாற்றில் அதுவே முதன் முறை. சோவியத் ரஷ்யா சாத்தியமான அனைத்து வகை உதவிகளையும் அவர்களுக்கு வழங்கியது. வலதுசாரி பிற்போக்கு அணியினர் வேண்டுமானால் நமது சுதந்திரப் போராட்டத்தில் ரஷ்யப் புரட்சி ஏற்படுத்திய தாக்கத்தை மக்களிடமிருந்து மறக்கச் செய்ய விரும்பலாம். திலகர், லாலா லஜபதிராய், காந்தி, நேரு, தாகூர் (தாகூர் 1927ல் ரஷ்யாவிலிருந்து தனது கடிதங்களை எழுதியுள்ளார்), நேதாஜி சுபாஷ் சந்திர போஸ், என்.ஜி.ரங்கா, சுவாமி சகஜானந்தர், இராகுல சாங்கிருத்தியாயன் போன்ற நம்முடைய பல தேசியத் தலைவர்கள் ரஷ்யப் புரட்சியால் ஆதர்சமும் ஊக்கமும் பெற்றவர்கள்.

            காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சித் தலைமையில் நடத்தப்பட்ட விடுதலை போராட்ட இயக்கங்களுடன் புரட்சியாளர்கள் ஒத்துழைக்க வேண்டுமென லெனின் வற்புறுத்தினார். காலனிய நாடுகளில் உள்ள முதலாளித்துவ அமைப்புகள் முற்போக்கான ஏகாதிபத்திய எதிர்ப்பு சக்திகள் என்பது லெனினது கருத்தாகும். எனவேதான் இரண்டாவது அகிலத்தின் (1920) கூட்டத்தில்  காந்தி மற்றும் காங்கிரஸ் பற்றிய எம்.என்.ராயின் குறுகிய குழுப்போக்கு அணுகுமுறையை லெனின் கடுமையாக விமர்சித்தார். எம் என் ராய் முதலில் சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் தலைமைப் பொறுப்பிலிருந்து காந்தி தூக்கி எறியப்பட வேண்டும் என விரும்பினாலும், பின்னரே அந்த விடுதலை இயக்கத்தில் பங்கேற்றார். இந்தக் குறுகிய குழுப் போக்குக் கோட்பாட்டை லெனின் மிகக் கடுமையாகத் தாக்கி அதனைச் ’சுய அழிப்பு (பாதை) என்றார். கம்யூனிஸ்ட்கள் எப்போதும் தங்களது தனித்துவத்தைப் பேணி ஒழுகும் அதே போழ்து எல்லா நேரங்களிலும் எல்லா இடங்களிலும் ஜனநாயக ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கங்களில் கம்யூனிஸ்ட்கள் பங்கேற்க வேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளார்.

            ஏகாதிபத்திய எதிர்ப்பு, காலனிய எதிர்ப்புக்கான ஐக்கிய முன்னணி அமைத்த வடிவமைப்பாளர் லெனின். காலனிய நாடுகளிலிருந்து புரட்சியாளர்கள் லெனினைச் சந்திகக்கவும் அவரது வழிகாட்டலைப் பெறுவதற்காகவும் ரஷ்யா வந்து திரண்டனர். அவர்களில் பிருத்வி சிங் ஆசாதி, வீரேந்திரநாத் சட்டோபாத்யாயா, சவுகத் உஸ்மானி, ராஜா மகேந்திர பிரதாப் போன்ற எண்ணிறந்தவர் அடங்குவர். இரண்டாவது சர்வதேச (கம்யூனிஸ்ட்)

அகிலத்தின் (7வது) சுட்கார்ட் காங்கிரஸ் மாநாட்டில் 1908 மேடம் காமா இந்திய மூவர்ணக் கொடியை விரித்துப் பறக்க விட்டதை லெனின் பெரிதும் உவந்து புகழ்ந்துரைத்து முழுமையான ஆதரவை வெளிப்படுத்தினார்.

பாராளுமன்ற போராட்டங்கள் குறித்து லெனின்

            மேற்கு ஐரோப்பிய நாடுகளின் நடைமுறை பாராளுமன்ற ஜனநாயகமும் தேர்தல் வழிப்பட்ட முறைமையும் ஆகும். அங்கே நடைபெறும் போராட்டங்கள் குறித்து லெனின் வித்தியாசமான அணுகுமுறை கொண்டிருந்தார். உண்மையில் அந்த முறைமையை அவர் போற்றிப் புகழ்தார் என்றே சொல்ல வேண்டும். மேற்கத்திய நாடுகளில் உள்ள கம்யூனிஸ்ட்கள் ரஷ்யப் புரட்சியைப் பார்த்து காப்பி அடித்து கண்மூடித்தனமாகப் பின்பற்றுவதையும், அந்நாடுகளில் நடைபெறும் பெருந்திரள் மக்கள் பங்கேற்கும் பாராளுமன்ற தேர்தல் போராட்டங்களைப் புறக்கணிப்பதையும் லெனின் விமர்சிக்கிறார். சுதந்திரமான (அச்சு) ஊடகங்களின் முக்கித்துவத்தையும் அவர் அடிக்கோடிட்டுக் காட்டுகிறார்.  அதே போன்று ஆசியாவின் புரட்சியாளர்களை ரஷ்யாவைக் காப்பியடிக்க வேண்டாம் என்றும், அவர்கள் நாடுகளின் எதார்த்த கள நிலைமை முற்றிலும் வேறாக இருப்பதால் ’புரட்சி’க்கு அவசரப்பட்டு முயல வேண்டாம் என்றும் எச்சரிக்கிறார். ரஷ்யப் புரட்சியைப் புகழ்வதை விடுத்து, அவர்கள் தங்கள் நாடுகள் குறித்த தூலமான ஆழ்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டுமெனவும் அறிவுரை வழங்கியுள்ளார்.

            லெனினுடைய படைப்புக்களில் ”இடதுசாரி கம்யூனிசம்: ஓர் இளம்பருவக் கோளாறு” போன்ற ஆக்கங்களில் வேறுபட்ட நிலைமைகளுக்கு ஏற்றவாறு அவருடைய நெகிழ்வுப் போக்குள்ள அணுகுமுறையைக் காணலாம். அங்கெல்லாம் அவர் ஜனநாயக உரிமைகளுக்கும் ஜனநாயகப் புரட்சிக்கும் முக்கியத்துவத்தை வலியுறுத்துவார். மேற்கத்திய நாடுகளில் உள்ள பாராளுமன்றங்கள் பொய் புரட்டோ அன்றி பயனற்ற ஒன்றோ அல்ல என்பதை லெனின் தெளிவாக எடுத்துக் கூறியுள்ளார். இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ் போன்ற தேசங்களில் தேர்தல் முறைமை மிகவும் முக்கியத்துவம் உடையதாகையால் கம்யூனிஸ்ட்கள் அவற்றை முழுமையாகப்  பயன்படுத்தவும், எவ்வளவு சாத்தியமோ அவ்வளவு கூடுதலாக இடங்களை வெல்லவும் முயல வேண்டும். இங்கிலாந்து முதலாளித்துவத் தேர்தல் முறையில் உள்ள ஊழலை எதிர்த்துப் போராட வேண்டுமென லெனின், இங்கிலாந்து கம்யூனிஸ்ட் கட்சியின் (CPGB) வில்லியம் கலாச்சரிடம் கூறியுள்ளார். வலதுசாரி பிற்போக்குவாதக் கட்சிகளுக்கு எதிராகக் கம்யூனிஸ்ட்கள் முற்போக்கு முதலாளித்துவக் கட்சிகளுடன் இணைந்து கூட்டாகத் தேர்தலில் போட்டியிட வேண்டும்.

            முதலாளித்துவக் கட்சிகள் உட்பட பிறக் கட்சிகளுடன் இணைந்து தேர்தலில் போட்டியிடும் ஜெர்மானிய கம்யூனிஸ்ட்கள், குறைந்தபட்சத் திட்டத்தின் அடிப்படையில் அவர்களோடு கூட்டாகச் செயல்படுவதை லெனின் வரவேற்றுள்ளார்.  செய்தி ஊடக விரிவான வலைப் பின்னலை ஐரோப்பிய கம்யூனிஸ்ட்களும் பயன்படுத்த வேண்டும். இத்தகைய அமைப்பு வழிமுறை போராட்ட வாய்ப்புகளுக்கான நிலைமை ரஷ்யாவில் குறைவாகவே உள்ள போதிலும் ரஷ்ய கம்யூனிஸ்ட்கள் எங்கெல்லாம் தேர்தல் வாய்ப்பு நிலவுகிறதோ அங்கெல்லாம் அதனைப் பயன்படுத்த வேண்டும்.

            தனித்து ஒதுங்குவது, தூய்மை வாதம் பேசுவது மற்றும் புரட்சிக்காகத் தேவையற்று அவசரப்படுவதை லெனின் எதிர்க்கிறார். தூலமான எதார்த்தக் களஆய்வுகளைக் காவு கொடுத்து, விலையாகத் தந்து,  பொய்யான அதீத நம்பிக்கை உணர்வு நிலையை ரஷ்ய புரட்சி ஏற்படுத்திவிட்டதோ என லெனின் கவலைப்படுகிறார்.

லெனின் போதனைகளின் பொருத்தப்பாடு

            சமூக விஞ்ஞானம், விஞ்ஞானம் மற்றும் புரட்சியின் கோட்பாடு குறித்து லெனின் அற்புதமான கண்டுபிடிப்புகளை நிகழ்த்தியுள்ளார். அவைகளை ஆழமாகக் கற்றறிய வேண்டும். அவர் ஒருபோதும் வறட்டுக் கோட்பாட்டு பிடிவாதக்காரர் அல்ல; மாறாக, மாறிவரும் சூழ்நிலைக்குத் தக்கவாறு புரட்சிகர விஞ்ஞானக் கோட்பாட்டை மேம்படுத்தி வளர்த்தெடுத்தவர். அவரது சில சொந்தக் கோட்பாடுகளில் மாற்றங்களும், காலத்திற்கேற்பத் திருத்தப்படுவதற்கான தேவையும், வேறு சில மேலும் மேம்படுத்தப்படவும் வேண்டும். எவ்வாறாயினும், குறிப்பாக அவர் பின்பற்றிய முறையும்  அவரது பல கோட்பாடுகளும் இப்போதும் மிகவும் பொருத்தப்பாடு உடையதாக உள்ளன.

            இன்று உலகம் முழுவதும் பாராளுமன்ற தேர்தல் முறையும் அனைத்து வகையான ஊடகங்களும் பொதுவான நிகழ்முறையாக இருப்பதால், ஜனநாயகம் மற்றும் ஜனநாயகப் புரட்சி பற்றிய லெனினுடைய விஞ்ஞானப் பார்வை மிகவும் பொருத்தமுடையதாகிறது. இந்தியாவில் ஜனநாயக உரிமைகளை விரிவுபடுத்தவும், அரசமைப்புச் சட்டம் மற்றும் பாராளுமன்ற ஜனநாயகத்தை வலதுசாரியினரின் தாக்குதல்களிலிருந்து பாதுகாக்கவும் இந்தியாவில் கம்யூனிஸ்ட்களும் முற்போக்குச் சக்திகளும் கடுமையான போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். அரசமைப்புச் சட்டத்தின் வாயிலாக நேபாளத்தில் கம்யூனிஸ்ட்கள் ஆட்சி அதிகாரத்திற்கு வந்துள்ளனர். ஒரு டஜனுக்கும் மேற்பட்ட லத்தின் அமெரிக்க நாடுகளில் இடது மற்றும் ஜனநாயகச் சார்புடைய அரசாங்கங்கள் எழுச்சி பெற்று கடந்த இருபது ஆண்டுகளாக அந்நாடுகளில் நேரடியாகத் தேர்தல்கள் மூலம் ஆட்சிக்கு வருகின்றனர்.

            [தற்போது கோவிட்-19 பாதிப்பின்போது கேரள மாநிலத்தின் இடது ஜனநாயக முன்னணியின் சுகாதாரச் செயல்பாடு உலகம் முழுவதும் புகழப்படும் வகையில் ஆர்வத்தோடு நோக்கப்படுகிறது – மொழிபெயர்ப்பாளர் சேர்த்தது]

            வளரும் ஜனநாயகத்தின் முக்கியத்துவம், பாராளுமன்ற முறைமை மற்றும் ஜனநாயக புரட்சி குறித்த லெனினியக் கோட்பாடு சமகாலப் பொருத்தப்பாட்டைப் பெற்று விளங்குகிறது.

லெனினியம் நீடு வாழ்க!   

            --தமிழில் :  நீலகண்டன்,

  என்எப்டிஇ, கடலூர்

Sunday 17 January 2021

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 24 கே ஏ கேரளீயன் : கம்யூனிச இயக்கத்தின் முன்னோடி

 


நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் -- 24

கே ஏ கேரளீயன் : கம்யூனிச இயக்கத்தின் முன்னோடி

--அனில் ரஜீம்வாலே

நியூஏஜ் (2020டிசம்பர் 6 –12 இதழ்)

            அவருடைய உண்மையான பெயர் கடையப்பிரத் குங்கப்ப நம்பியார். கேரளாவின் கண்ணூர் மாவட்டம் சிரக்கல் தாலுக்காவின் செருந்தாழம் கிராமத்தில் 1910 ஏப்ரல் 15ம் நாள் பிறந்தார். (இந்தச் சிரக்கல் தாலுக்காவின் பெருவமூரில் பிறந்தவர் நடிகர் எம் என் நம்பியார்). செல்வம் மிக்கப் பெரும் நிலக்கிழார் குடும்பம். குங்கப்பா ஐந்தாவது பாரத்திற்குப் பிறகு மயிலவிக்கு அழைத்துவரப்பட்டு பேரளச்சேரி ஆங்கில நடுநிலைப் பள்ளியில் படித்தார். அந்தப் பள்ளி புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர் ஏ கே கோபாலன் தந்தையார் நிர்மாணித்து நடத்தியது. குங்கப்பாவின் வாழ்வில் அந்தப் பள்ளி பெரும் திருப்புமுனையானது.

            அங்கே பள்ளி ஆசிரியர்களில் ஒருவரான ஏ.கே.கோபாலனைச் சந்தித்தார். பிறகு அவர்கள் நல்ல நண்பர்களாகவும் தோழர்களாகவும் ஆனார்கள். தன்னுடைய மாணவனே தனக்கு அரசியல் குருவானதாக ஏகேஜி கூறுவது வழக்கம்! அதிகாரத்துவம் மிகுந்த தனது மாமன்களோடு பிணங்கி குங்கப்பா தனது தாயை அழைத்துக் கொண்டு 1923ல் மீண்டும் செருந்தாழம் வந்தார். பூட்டியிருந்த வீட்டின் பூட்டை உடைத்து அங்கே தங்கினார். அவருடைய குடும்பம் மாமன்களின் ஆதிக்கத்திற்கு உட்பட்டதால் அவருடை தந்தையால் மனைவியையோ குழந்தைகளையோ தனது பொறுப்பில் எடுத்துக் கொள்ள முடியவில்லை. குங்கப்பா பையனூர் உயர்நிலைப் பள்ளியில் சேர்ந்தார். 

அரசியலில்

            குங்கப்பாவின் தந்தை V P குஞ்சிராமன் குஞ்சிமங்கலம் கிராம ‘அதிகாரி’ யாக இருந்தார். (தாய் கடையபிரத் பார்வதி அம்மா). பணிநிமித்தம் அநேக இடங்களுக்குச் சென்று வரவேண்டி இருந்த அவர் வீடு திரும்பும் வழியில் தி கேரள சஞ்சாரி, தி கேரள பத்திரிகா, மாத்ருபூமி முதலான பத்திரிக்கைகளை வாங்கி வருவார். அவற்றிலிருந்து குங்கப்பா தேசிய இயக்கம் பற்றிய தகவல்களைப் பெற்றார். தந்தையும்கூட தேசிய இயக்கச் சார்புடையவராக இருந்ததால் தனது மகனின் ஆர்வத்தோடு ஒத்துழைத்தார்.

            1928 மிகவும் முக்கியமான ஆண்டு, சைமன் கமிஷனைப் புறக்கணித்துப் போராட்டங்கள் நாடு தழுவிய இயக்கமாக வெடித்தன. பேரணியில் லாலா லஜபதி ராய் கடுமையாகத் தாக்கப்பட்டு பின்னர் அதன் காரணமாகவே மரணமடைய, நாட்டில் பெரும் போராட்டத் தீ பற்றி எரியத் தொடங்கியது. மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்தனர். அந்தப் போராட்டத்தில் குங்கப்பா தீவிரமாகப் பங்கேற்றார்.

            அவருடைய தந்தை அவரைத் தமிழ்நாட்டில் தஞ்சை மாவட்டத் திருவையாறு சமஸ்கிருதப் கல்லூரியில் சேர்க்க, அங்கே குங்கப்பா ஆழமாகச் சமஸ்கிருதம் கற்றார்.  அதே நேரத்தில் தேசிய இயக்கத்திலும் தீவிரமாகப் பங்கேற்க எண்ணி இயக்க நடவடிக்கைகளில் இறங்கினார். அதனால் கல்லூரியை விட்டு விலகிவிடுமாறு கல்லூரி அதிகாரிகள் அவரை நிர்பந்திக்க, அதை அவரே சொந்தத் தீர்மானமாக மகிழ்ச்சியாக நடைமுறைப்படுத்தி விட்டார்.

தேசியத்தின் இருப்பிடமாக விளங்கிய கங்கன்கார்க் பகுதியின் விக்ஞான் தயினி பள்ளியில் சேர்ந்தார். ‘காந்திஜிக்கு ஜே!’, ‘பாரத் மாதா கீ ஜே!’ என்ற முழக்கங்களோடு அப்பள்ளி 1926 ஏப்ரலில் துவக்கப்பட்டது. தேசியவாதிகளான சி கண்ணன் நாயர், பி கேளு நாயர், K T K R நம்பியார் முதலானவர்களால் நிறுவப்பட்டது. காசர்கோடு–மலபார் பகுதியில் தேசிய இயக்கத்தின் ஒரு மையமாகத் திகழ்ந்தது.

பையனூரில் 1928 ஏப்ரல் 25 –27 தேதிகளில் ஜவகர்லால் நேரு தலைமையில் நடைபெற்ற கேரள பிரதேசக் காங்கிரஸ் மாநாட்டில் ஒரு தன்னார்வத் தொண்டனாகப் பணி செய்யும் வாய்ப்பு குங்கப்பாவுக்குக் கிடைத்தது.

ஆங்கிலேயரின் உப்புச் சட்டத்தைத் தனது புகழ்பெற்ற தண்டி யாத்திரை மூலம் 1930 ஏப்ரல் 6ல் மீறினார் காந்திஜி. கேரளா முழுவதும் பாத யாத்திரைகள் நடத்தப்பட்டன. சத்தியாகிரகிகள் காளிகட்’டிலிருந்து (தலைச்சேரி, கண்ணூர் வழியாக) பையனூர் வரை 130 கி.மீ. மேற்குக் கடற்கரை ஓரமாக நடந்தனர். (கோழிக்கோடைத்தான் ஆங்கிலேயர்கள் காளிகட் என்றனர்; அங்கிருந்து புத்தக பைண்டிங்கிற்கான காலிகோ துணி ஏற்றுமதியானதால் இப்பெயர் வந்ததாகக் கூறுவர். கள்ளிக்கோட்டை என்றும் கூறுவதுண்டு.) பத்திரிக்கைகளின்வழி செய்தி அறிந்து குங்கப்பா தன்னையும் ஒரு தொண்டராகக் காசர்கோடு மாவட்டத்தின் ஹாஸ்டர்க்- தாலுக்காவில் இருந்து பதிவு செய்தார். கே மாதவன், கே பிஆர் கோபாலன், கிருஷ்ணப் பிள்ளை மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

காளிகட், வெர்கோட் இல்லத்தில் சத்தியாகிரக முகாம் அமைக்கப்பட்டது. குங்கப்பா உட்பட 33 பாத-யாத்திரிகள் தேர்வு செய்யப்ட்டனர். சென்ற இடமெல்லாம் அவர்களுக்கு மாபெரும் வரவேற்பு அளிக்கப்பட்டது. சட்டத்தை உடைத்துப் பையனூரில் உப்பு எடுத்து மக்களுக்கு விற்றபோது அவர்கள் அதை ஒரு ‘பிரசாதமாக’ பக்திபூர்வமாகப் பெற்றனர்.

குங்கப்பா ‘கேரளீயன்’ ஆனார்

            ஒரு விவசாயத் தலைவரான விஷ்ணு பாரதீயன் (விஷ்ணு நம்பீசன்) குங்கப்பா வீட்டிற்கு வழக்கமாகச் செல்ல, விரைவில் அவர் குங்கப்பாவின் நண்பரானார். கிருஷ்ணப் பிள்ளை மற்றும் கோபாலனும் அவரது நண்பர்கள் குழுவில் இருந்தனர். 

1931ல் காந்தி –இர்வின் உடன்பாட்டில் கையெழுத்திட்டு திரும்பிய பிறகு உடனடியாக அவர் கைது செய்யப்பட்டார். தேசம் முழுவதும் அதனைக் எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் கூட்டங்கள் நடத்தப்பட்டன. கண்ணூரிலும் எதிர்ப்புக் கூட்டங்கள் நடைபெற்றது மட்டுமின்றி மாணவர்கள் வகுப்புகளைப் புறக்கணித்து ‘ஹர்த்தால்’ செய்தனர். குங்கப்பா மிகத் தீவிரமாகச் செயல்பட்டு விளக்கும்தாரா மைதானத்தில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கெடுத்தார். அங்கிருந்து அவரும் மற்றவர்களும் கைது செய்யப்பட்டனர். மன்னிப்பு கேட்டால் விடுவித்து விடுவதாகப் போலீஸ் கூறியும் அதற்கு அவர்கள் மறுத்து விட்டனர். 

விசாரணையின்போது விஷ்ணு நம்பீசன் கூறினார்: “நான் பாரதீயன்” (அதாவது நான் பாரதத்திற்காக இருப்பவன்). அதனைக் கேட்டுச் சீற்றமடைந்த மாஜிஸ்டிரேட் கூறினார்: “நான் கூட பாரதீயன்தான்”. விஷ்ணு பதிலடி கொடுத்தான்: “நாங்கள் இந்திய விடுதலைக்காகப் போராடுகிறோம். நீங்கள் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்குச் சேவகம் செய்கிறீர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்களைப் பிடித்துத் தள்ளுகிறீர்கள். நீங்கள் பாரதீயனாக முடியாது.” குங்கப்பா பிரகடனம் செய்தார், தான் இனி ‘கேரளீயன்’ என்று. கேரளீயனுக்கு 9 மாதங்கள் கடுங்காவல் தண்டனையும் விஷ்ணுவுக்கு இரண்டு ஆண்டுகள் தண்டனையும் வழங்கப்பட்டது.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு குங்கப்பா பெருமைமிக்க ‘கேரளீயன்’ ஆகிப் புகழ் பெற்றார்.

கோவில் நுழைவு இயக்கமும் விடுதலைப் போராட்டமும்

            1931ல் தீண்டத்தகாதோர் மற்றும் தலித்களின் கோவில் நுழைவு இயக்கம் வலுப்பெற அதே ஆண்டு கேளப்பன் மற்றும் ஏ கே கோபாலன் தலைமையில் ‘குருவாயூர் சத்தியாகிரகம்’தொடங்கியது. வடக்கு மலபாரில் தலித்களை முன்னேற்றுவதற்கான இயக்கத்தைக்  கேரளீயன் மற்றும் பிறர் தொடங்கினர்; கேரளீயன், கிருஷ்ணப் பிள்ளை மற்றும் சிலர் தலைமையேற்கப் பெரும்பேரணி பையனூர் கண்டோத் ஆலயத்தை அடைந்தது. அங்கே அவர்கள் கண்டபடி அடித்துத் துவைக்கப்பட்டதில் கேரளீயன் மயிரிழையில் உயிர் தப்பினார். இந்தச் சம்பவத்திற்குப் பிறகு தீண்டாண்மைக்கு எதிரான பிரச்சார இயக்கம் எல்லா இடங்களிலும் பரவியது.

            1932ல் கடகம் காப்புக் காடு வனப்பகுதியில் விறகுக்காகக் காய்ந்த சுள்ளிகள் மற்றும் உலர்ந்த சருகு, செத்தைகளைப் பொறுக்கும் ஆதிவாசிகளின் உரிமைகளைத் தடை செய்தனர். கேரளீயன், கண்ணன் நாயர் மற்றும் கிருஷ்ணப் பிள்ளை மூவரும் அடைய முடியாத அடர்ந்த வனப் பகுதியை இரகசிய பாதைகள் மூலம் சென்றடைந்து ஆதிவாசிகளை ஒன்று திரட்டி, தடை உத்தரவுக்குக் கண்டனம் தெரிவிக்கும் வகையில், மரங்களை வெட்டச் செய்தனர். இந்தப் போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியும்கூட ஒரு கூட்டாளியாகப் பங்கேற்றது.

            1932–34ல் காந்திஜி அறைகூவல் விடுத்த ஒத்துழையாமை இயக்கத்தில் கேரளீயன் பங்கேற்று கள்ளிக்கோட்டை எனப்படும் கோழிக்கோடில் கைதானார். சிறையில் வங்கத்தின் புரட்சியாளர்கள் ஆர்எம் சென்குப்தா, டிஎன் சக்ரவர்த்தி, ஜெய்தேவ் கபூர் மற்றும் பிறரோடு அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது.

            1933 ஜனவரி 26ம் நாள் கோழிக்கோடு கடற்கரையில் மூவர்ணக்கொடி பறக்கவிட்டபோது கேரளீயனும் சேகரன் நாயரும் ஒரு பேனரைப் பெருமிதத்துடன் பிடித்திருந்தனர். அவர்கள் கலைந்து செல்ல மறுக்கவே காவலர்களால் கடுமையாகத் தாக்கப்பட்டார்கள். மறுமுறையும் கேரளீயன் மரணத்திலிருந்து தப்பினார்.

சிஎஸ்பி மற்றும் கம்யூனிஸ்ட் குழுவில்

கேரள சிஎஸ்பி அல்லது காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி 1934ல் சி கே கோவிந்தன் நாயர், கேளப்பன், இஎம்எஸ், கே தாமோதரன், என்சி சேகர் முதலானவர்களால் அமைக்கப்பட்டபோது கேரளீயன் சிறையில் இருந்தார். விடுதலைக்குப் பிறகு 1935ல் சிஎஸ்பி அவரை விவசாயிகளை ஒன்றுதிரட்ட நியமித்தது. கேரளீயன் கள்ளியச்சேரியைத் தனது செயல்பாடுகளுக்கான மையமாகக் கொண்டு செயல்பட்டு, கட்சிக்கு இது குறித்த அறிக்கை ஒன்றையும் தயாரித்து அளித்தார்.

1934ல் ஆரோன் கம்பெனியில் ஒரு தொழிலாளி தாக்கப்பட்டதால் தொழிலாளர்கள் திடீர் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். மற்றவர்களுடன் சேர்ந்து கேரளீயன் அந்த இயக்கத்தைத் தலைமையேற்று நடத்தினார். 1930களில் வில்லியம் ஸ்னீலக்ஸ் (William Snelex), கேபிஆர், கேவிஎன் மாஸ்டர், ஏ வி குங்கம்பு முதலான முன்னணி தலைவர்கள் போல பின்னர் கேரளீயனும் ஆரோன் மில்ஸ், காமன்வெல்த் காட்டன் மில்ஸ், காளிகட், செருவன்னூர் டெயில்ஸ் பாக்டரி முதலான பல தொழிற்சங்கங்களில் முன்னணிப் பங்கு வகித்தார்.

 1936 ஜூலையில் மலபார் தொடங்கி மெட்ராஸ் வரை சுமார் 1500 மைல் தொலைவு பாத யாத்திரையாக நடந்த விவசாயிகள் பேரணியில் கேரளீயனும் கலந்து கொண்டார். யாத்திரை செல்லும் வழியில் அவர் வழிநடைப் பாடல்களைப் புனைந்தார்.

கம்யூனிஸ்ட் கட்சி அமைத்தல்

            1935ல்   எஸ் வி காட்டே கேரளா வந்தபோது அவரைச் சந்தித்தச் சிலரில் கேரளீயனும் கிருஷ்ணப் பிள்ளையும் அடங்குவர். கேரள காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் தலைவர்கள் ஏறத்தாழ அனைவரும் கம்யூனிஸ்ட்களே. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மலபார் கிளை 1937ல் இரகசியமாக அமைக்கப்பட்டது. 1939 டிசம்பரில் தலிச்சேரிக்கு அருகே பினரேயில் நடந்த மற்றொரு இரகசியக் கூட்டத்தில் கேரளீயனும் கலந்து கொண்டார். மலபாரின் முழுமையான சிஎஸ்பி பிரிவும் சிபிஐயில் இணைந்தது.

            பிரெஞ்ச் ஆளுகையில் இருந்த மாகே பகுதியினரோடும் அவர் தொடர்பில் இருந்தார். அது மலபாரில் நிகழ்ந்த ’மோரழா சம்பவ’த்திற்குப் பிறகு (Morazha Incident*) அவர் ஆலம்புழா உட்பட பலபகுதிகளில் தலைமறைவாக இருந்து செயல்பட்ட காலம். அவர் காங்கிரஸ் கட்சிக்காகவும் பணியாற்றினார். அந்த மாவட்டத்திலும் பிற இடங்களிலும் மெல்ல கம்யூனிஸ்ட் கட்சி செல்வாக்கு பெற்றுவருவதாக மெட்ராஸ் அரசு அறிக்கையில் தெரிவித்தது.

[*Morazha Incident: கேரள பிரதேச காங்கிரஸ் கமிட்டி மலபார் மக்களுக்கு 1940 செப்டம்பர் 15ம் தினத்தை ‘ஏகாதிபத்திய எதிர்ப்பு நாளாக’ அனுசரிக்க அறைகூவல் விட்டது; ஆனால் காங்கிரஸ் தலைமை அதனை நிராகரித்து விட்டது. இருப்பினும் அந்த நாளில் வடக்கு மலபார் பகுதியில் கூட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் நடத்தப்பட்டன. கண்ணூர் மாவட்ட அந்தூர் முனிசிபாலிட்டியைச் சேர்ந்த மொரழா கிராமம் (அதற்கு முன்பு தலிப்பரம்பா முனிசிபாலிடியின் பகுதியாக இருந்தது) போராட்டத்தின் மையமாக இருந்தது. அங்கு கலவரத்தில் இரு போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட அந்த மொரழா சம்பவத்தில் பிரபல கம்யூனிஸ்ட் தலைவர் கேபிஆர் கோபாலனுக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. காந்திஜி உட்பட பல அரசியல் தலைவர்கள் வற்புறுத்தலால் தண்டனை நிறைவேற்றப்படவில்லை. 1942 ஆகஸ்ட் வெள்ளையனே வெளியேறு இயக்கமும் மொரழாவில் சிஎஸ்பி தலைவர் டாக்டர் கேபி மேனன் தலைமையில் எழுச்சியோடு நடந்தது. – தகவல் உதவி : விக்கி பீடியா மொழிபெயர்ப்பாளர் இணைத்தது]

1942ல் மெட்ராஸிலிருந்து மோகன் குமாரமங்கலம், பி இராமமூர்த்தி மற்றும் பிறரோடு கேரளீயன் ‘மெட்ராஸ் சதி வழக்கின் கீழ்’ கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகள் அலிப்பூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

விவசாயிகள் சங்கத்தில்

            கேரளீயன் தலைமையில் கர்ஷகா சங்கம் (விவசாயிகள் சங்கம்), விவசாயிகளுக்கு (வேஸ்ட் லாண்டு எனப் பொருள்படும்) புனம்’ நிலத்தில் இருந்த உரிமைகளைப் பறித்ததை எதிர்த்துப் போராட்டத்தைத் துவக்கியது. (புனம் என்றால் தமிழில் மலையைச் சார்ந்த வயல் என்று பொருள்). அதில் முக்கியமானது 1944 முதல் 1947 வரை மலபார் கூத்தளி எஸ்டேட்டில் நடந்த போராட்டம். அப்போது அவர் பல கவிதைகள் பாடல்களை எழுதினார்; கைகளில் கதிர் அரிவாளை ஏந்திய பெண்கள் வயல்களில் நின்று கொண்டு அதனை அவரது புகழாகப் பாடுவது வழக்கம்.

            கோழிக்கோடில் 1946 நவம்பரில் நடந்த விவசாயிகள் மாநாட்டின் பிரச்சனைகளில் ‘புனம்’ நிலங்களில் விவசாயிகளின் உரிமையும் ஒன்று. 1944 வங்கத்தின் நெட்ரகோனா பகுதியில் நடந்த அகில இந்திய கிசான் சபா மாநாட்டில் கேரளீயன் பங்கு கொண்டார். அம்மாநாட்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் பி சி ஜோஷி கலந்து கொண்டு உரையாற்றினார்.

தேச விடுதலைக்குப் பிறகு

            1948ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மலபாரில் தடைசெய்யப்பட்டபோது கேரளீயன்  கட்சிச் செயலாளராக இருந்தார். சிரக்கல் மற்றும் பிற பகுதிகளில் விவசாயிகளின் இயக்கம் மற்றும் பிற இயக்கங்களைக் கட்டியதில் கேரளீயனும் முக்கியமான ஒருவர் என கிருஷ்ணப் பிள்ளை கூறுவார். மலபாரில் கர்ஷகா சங்கம் (விவசாயிகள் சங்கம்) வலிமை பொருந்திய ஒரு சக்தியானது.

            மலபார் கர்ஷகா சங்கத்தின் இதழாகக் ‘கிருஷிகாரன்’ என்ற வாரந்திர பத்திரிக்கையை 1952ல் கள்ளிக்கோட்டையிலிருந்து அதன் ஆசிரியராக இருந்து வெளியிட்டார். கேரளீயன்


‘ஜனயுகம்’ மற்றும் பல பத்திரிக்கைகளில் பணியாற்றினார். 1935 –40 ஆண்டுகளில் மாத்ருபூமியில் மிக அதிகமாக அவர் எழுதிக் குவித்தார். கண்ணூரிலிருந்து வெளியான ஒரு சமஸ்கிருத இதழின் ஆசிரியராகவும் அவர் இருந்துள்ளார்.

            1956 நவம்பர் 1ம் தேதி முதல் கேரளா ஒரு மாநிலமானது. 1956 டிசம்பரில் சோரனூர் மாநாட்டில் கேரள கர்ஷகா சங்கம் உருவானது. கேரளீயன் அதன் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கேரளா கம்யூனிஸ்ட் அரசுகள் நிலச்சீர்திருத்தங்களை அமல்படுத்துவதில் விவசாயிகள் சங்கம் பெரும் செல்வாக்கு செலுத்தி முக்கிய பங்காற்றியது. 

            1970ல் தீவிர அரசியலிருந்து கே ஏ கேரளீயன் ஓய்வு பெற்று, தமது எஞ்சிய வாழ்வை முக்கியமாக இலக்கியப் பணிகளுக்கு அர்ப்பணித்தார். ஒரு கம்யூனிசக் குடும்பத்திலிருந்து வந்த அவரது துணைவியார் மறைந்த திருமதி கே கே அம்மிணி ஓர் ஆசிரியர் ஆவார். கோழிக்கோடின் கோவிந்தபுரத்தில் இருந்த அவர்களது இல்லம் தனித்துவச் சிறப்பு மிக்கது, உலகம் முழுவதிலிருந்து ஆய்வாளர்களை அந்த இல்லம் ஈர்த்தது.

            பெரும் கல்வியாளராக இருந்து ஒரு கம்யூனிஸ்டாக விவசாயிகளுக்காக அரும்பாடுபட்ட பெரும் புகழாளர் கே ஏ கேரளீயன் கோழிக்கோடில் 1994 ஜூலை 9ம் நாள் மறைந்தார். 

 பெருந்தகைக்கு நம் செவ்வணக்கம்!

--தமிழில் : நீலகண்டன்,

தொடர்புக்கு 94879 22786