Saturday 20 May 2023

தாகூரின் 162வது பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை --கார்க்கி சக்ரவர்த்தி

 தாகூரின் 162வது பிறந்த நாள் சிறப்புக் கட்டுரை


        ‘குறுகிய பார்வை தேசிய’த்திற்கு எதிராகக்

குரல் எழுப்பும் இரவீந்திரநாத் தாகூர்

                                                    --கார்க்கி சக்ரவர்த்தி

            குறுகிய தேசியவாத உணர்வுகள் தூண்டிவிடப்படும்போது, தாகூரின் நினைவுகளை ஞாபகப்படுத்திக் கொண்டாடுவது என்பது வெறும் சடங்காகி விட்டதாகத் தோன்றுகிறது.

            வங்காளிகளின் நாட்காட்டியின்படி போயி ஷாக் மாதம் 25ம் நாள் (மே 8 அல்லது 9ல்) இரவீந்திரநாத்தின் பிறந்தநாள் விழா, வங்கத்தில் பொது விடுமுறை நாளாகவும், நாட்டில் வங்கச் சமூக மக்கள் வாழும் இடங்களிலும் கொண்டாடப்படுகிறது. அவரது கவிதைகளைப் படிப்பது, பாடல்களை பாடுவது, நாடகங்களை அரங்கேற்றுவது என்றெல்லாம் நடத்தி அவரை ஞாபகப்படுத்துவது ஆண்டுதோறும் நிகழ்த்தப்படும் சடங்காக மாறிவருகிறது. இருப்பினும், உலகளாவிய பொது சமயம், சர்வதேசியம், கலாச்சாரம் மற்றும் நாகரீகம் என்பன குறித்த தாகூரின் செய்தியை மக்களிடம் பரவலாக எடுத்துச் செல்ல நாம் தவறினோம். அவரது சமயம், குறுகி, தனித்துப் பிரிந்துபோய், சடங்கு வழிபாட்டுச் சடங்குகளில் அடைந்து கிடப்பதல்ல. மாறாக, அமைதி மற்றும் புனிதம் இரண்டுடனும் கலந்து எல்லாம்வல்ல பரம்பொருள் இறையுடன் நேராகத் தொடர்பு கொண்டது; அவரது ஆழ்ந்த பக்தி, பிரேமை (பேரன்பு) மற்றும் பிரகிருதி (இயற்கை) இவை பரந்த ஆன்மிகப் பெருவெளியில் ஒன்று கலந்து பொங்கிப் பிரவாகிக்கும் உணர்ச்சிப் பாடல்களால் ஆனது.

            இன்று தீவிர மதப் பிடிவாதப் பற்று மூலம் பெரும்பான்யினரைத் தாஜா செய்யும் சூழல் நிலவுகிறது. மத அடையாளங்களைப் பற்றிநின்று தீவிர முழக்கங்களை எழுப்பி அனைத்தையும் அரசியல்படுத்துவதன் மூலம், குறுகிய மதவாத தேசியப் பிடிவாத உணர்வுவிசிறிவிடப்படுகிறது.

இந்நிலையில், குருதேவர் தாகூரைக், குறிப்பாக ஒரு சடங்கு நிகழ்வாக, அவரது பிறந்த நாளில் மட்டும் நினைவூட்டுவது மதிப்புடையதாகுமா? அறிவைப் பரிமாறிக் கொள்ளும் அவரது கருத்தோட்டத்தை, முதலாவது சர்வதேசப் பல்கலைக்கழகமான விஸ்வ பாரதியை நிறுவிய அவரது பார்வையை, ஒரு கல்வியாளராக அவரது பங்களிப்புகளை மற்றும் கிராமப்புற மறுகட்டுமானம் (ஸ்ரீநிகேதன்) குறித்த அவரது கண்ணோட்டத்தையும் புரிந்து கொள்ள முயற்சிக்காமலேயே, அவ்வாறு விழா கொண்டாடுவது, அவருக்கு நாம் துரோகம் இழைப்பதாகாதா? 

            இங்கே ஒரு மனிதன், விவாதித்திற்குரிய முக்கிய பிரச்சனைகளில் காந்தியுடன் உடன்பட மறுப்பதை ஒப்புக்கொள்ளும்போதே, அவரை “மகாத்மா” என்று அழைத்ததைப் பார்க்கிறோம்.


அவர் மானுட சமூகத்தின் ஒற்றுமையில் -- அவர்களின் இனம், தோலின் நிறம் மற்றும் நம்பிக்கை வேறுபாடுகளைப் பொருட்படுத்தாமல் – நம்பிக்கை கொண்டிருந்தார். தேசியம் குறித்து அவருக்கென்று சொந்தப் பார்வையும் கருத்தும் இருந்தது. ஒருமுறை அவர், ”பெரும் சமூகத்திலிருந்து விலகி தங்கள் நம்பிக்கையே மேம்பட்டது எனச் சாதிக்கும் சுயநலக் குழுவாத வழிபாடு மற்றும் குறுகிய தேசியவாதம் என்பதிலிருந்து உலகம் முழுவதும் துன்பப்பட்டு வருகிறது” என்று காந்தியிடம் சொன்னார்.

            இங்கே ஒரு மனிதன், 1905ன் சுதேசி இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்று எண்ணற்ற தேசபக்தி பாடல்களை எழுதினாலும், அந்த இயக்கம் வகுப்புவாத வன்முறையில் மோதிக் கொள்வதைக் கண்டு அதிர்ச்சி அடைந்து, அந்த இயக்கத்திலிருந்து விலகி விட்டார். ஒரே நாளில் அத்தனைக் கமிட்டிகளிலிருந்தும் ராஜினாமா செய்தார். இங்கே ஒரு மனிதன், அவர் எழுதிய எண்ணற்ற கட்டுரைகள் மற்றும் கடிதங்கள் எதுவும் மக்கள் மத்தியில் பெரிதாய்ப் பரப்பப்படாமல் பிறந்த நாளில் மட்டும் நினைக்கப்படுகிறான்.

            இன்று பெரிய அளவில் தேசம் மதவாதத்தில் பிளவுபட்டு இருக்கும்போது தாகூரின் எழுத்துகள் நிச்சயம் ஒரு புதிய நம்பிக்கை பார்வையை நமக்கு அளிக்கின்றன. 1911ல் அவர் எழுதினார்: “முஸ்லீம்கள் சமமானவர்களாக மாற அவர்கள் போராட வேண்டும். இந்தச் சமத்துவமின்மை நிலையிலிருந்து மீண்டு வர முஸ்லீம்கள் இந்துகளைவிட அதிகமாகக் கோர வேண்டும். அவர்களின் கோரிக்கையுடன் நாம் உண்மையாகவே உடன்பட வேண்டும். அந்தஸ்தில், கௌரவத்தில், கல்வியில் முஸ்லீம்கள் இந்துகளுக்குச் சமமாக வந்தால், அது இந்துகளுக்குப் பலன் அளிப்பதாகும்.”

[ “எல்லாரும் ஓர் குலம், எல்லாரும் ஓரினம்

   எல்லாரும் இந்திய மக்கள்

   எல்லாரும் ஓர்நிறை, எல்லோரும் ஓர் விலை

   எல்லாரும் இந்நாட்டு மன்னர்”

என்றானால், பின்னர் நம் நாடு…

   ஒப்பில்லாத சமுதாயம்

    உலகத்துக்கு ஒரு புதுமை”

என்று மகாகவி பாரதியும் இதைத்தான் பாடினாரோ!]   

            இரவீந்திரநாத் தனது காலத்தைத் தாண்டி வெகுவாக முந்தி இருந்தவர். ஐரோப்பா மீது பாசிசத் தாக்குதலுக்கு எதிரான அவருடைய எச்சரிக்கை, “நாகரீகத்தில் நெருக்கடி” என்று

தலைப்பிட்ட அவரது புகழ்பெற்ற சிற்றேட்டு, (பிரான்ஸ் நாவலாசிரியர்களான) ரோமைன் ரோலந்து மற்றும் ஹென்றி பார்புஸ்ஸே 1936 செப்டம்பரில் புருசெல்ஸ் நாட்டில் நடத்திய உலக அமைதி பேராயத்திற்கு அவர் அனுப்பிய செய்தி மற்றும் 1937ல் நாஜிகளுக்கு எதிரான ஸ்பெயினின் மக்கள் முன்னணிக்கு உதவிட அவர் விடுத்த வேண்டுகோள் என இவை அனைத்தும் குருதேவர் இரவீந்திரநாத் தாகூரின் நவீன இந்தியா குறித்த மாபெரும் எதிர்காலக் கண்ணோட்டத்தைத் தெளிவாக வெளிப்படுத்துகின்றன. நமது நாட்டிலும் உலகம் முழுவதும் உள்ள பிற்பட்ட சக்திகள் மற்றும் பிற்பட்ட கருத்துகளுக்கு எதிராக எழுந்து நின்று, கண்டனம் செய்து தனது குரலை எழுப்பக் கூடியவராக அவர் இருந்தார்.

            இன்று நிலவும் பகைமை, வெறுப்பு, பழிவாங்கும் உணர்வு மேலிட்ட சூழ்நிலையில் நம் மனங்கள், பெரும்பான்மை மேட்டிமை அரசியல் மற்றும் மதவாத ஆளுகை எண்ணத்திற்கு

மாறான வேறு கருத்துகளைக் கூறி எதையும் வெளிப்படுத்த அச்சப்படும் உணர்வுகளால் நிறைந்துள்ளன. இச்சூழலில் (‘அச்சமில்லை, அச்சமில்லை, அச்சமென்பது இல்லையே’ என்று முழங்கிய பாரதி போல) மகாகவி தாகூரின்எங்கே மனம் அச்சமற்று இருக்கிறதோ, எங்கே தலை நிமிர்ந்து நிற்கிறதோ, எங்கே அறிவு சுதந்திரமாய் இருக்கிறதோ, எங்கே உலகம் குறுகிய தேசிய எல்லைகளால் துண்டாடப்படாமல் இருக்கிறதோ….   … அங்கே அந்தச் சொர்க்க பூமியில் எந்தையே என்நாடு விழித்தெழட்டும்!” கவிதை வரிகளை மட்டும் திரும்பத் திரும்ப எதிரொலிக்கப் பாடுவது பொருத்தமானதா? சிந்திப்போம்.

--நன்றி : நியூஏஜ் (மே 21 –27)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

   

 

 

 

Friday 19 May 2023

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 79 -- சரளா சர்மா

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 79

                                            


 சரளா சர்மா : தலைச் சிறந்த கம்யூனிஸ்ட் மற்றும் பெண்கள் இயக்கத் தலைவர்

                                                     --அனில் ரஜீம்வாலே

            சரளா குப்தா (திருமணத்திற்குப் பின் சரளா சர்மா) செழிப்பு மிக்க குடும்பத்தில் 1921 ஏப்ரல் 17ல் பழைய டெல்லி, சாந்தினி சௌக்கில் வரலாற்றுப் புகழ்பெற்ற ஹவேலி ஹைதர் (கான்) குலியில் பிறந்து 100 வயது வரை வாழ்ந்த பெருமாட்டி. அவரது தந்தை ஜகதீஷ் பண்டிட் குப்தா ஒரு சார்ட்டர் அக்கௌண்டன்ட், தாயார் சகுந்தலா. அவரைச் சுற்றியிருந்த சுற்றுச் சூழல் அவரது ஆளுமையை மேம்படுத்துவதற்கு மிக மிக ஏற்றதாக இருந்தது. பழைய டெல்லி பகுதி முகலாய மற்றும் பிற அரண்மனைகளின் செல்வாக்கில் மத்திய காலச் சூழ்நிலையுடன் (பரந்து விரிந்த பண்ணை வீடுகள் போன்ற) கோதீஸ் (உருது), பங்களாகள், கோட்டைகள், மசூதிகள், ஆயலயங்கள், குருத்வாராக்களும் அனைத்து வகையான கடைகளும் கற்பனைக்கெட்டாதபடி வளைந்து நெளிந்து செல்லும் குறுகிய தெருக்கள் மற்றும் சந்துகளிலும் நிறைந்திருக்கும் சூழல் அமைந்தது. [ஹவேலி என்பது ஹவாலி என்ற அரபுச் சொல்லில் இருந்து வந்தது, தனியார் இடம் எனப் பொருள்படும். பின்னர் முகலாயக் கட்டடக்கலை சார்ந்த தொகுப்பு வீடுகளின் மாளிகையைக் குறிப்பதாயிற்று.] அது மட்டுமல்ல, அப்பகுதியில் மிகவும் பிற்படுத்தப்பட்ட தொழிலாளர்கள், கூலிகள் இரவும் பகலும் வேலை செய்து கொண்டிருப்பார்கள். மத்திய காலத்திலிருந்தே அப்பகுதி கல்வி கேள்வி கற்பதற்கான இடமாகத் திகழ்ந்தது.

    சரளா, வரலாற்றுப் புகழ்பெற்ற ஜும்மா மசூதி (ஜமா மஸ்ஜித்) அருகே அமைந்த, இந்திரப்பிரஸ்தா பள்ளியில் தொடக்கக் கல்வி பெற்றார். அப்பள்ளி டெல்லியில் பெண்களுக்கான முதலாவது பள்ளி என்ற பெருமை பெற்றது. சரளாவின் தாத்தா ஜுகல் கிஷோர் அந்தப் பள்ளி நிறுவுவதற்கான தொடக்க முயற்சிகளை எடுத்தார். அன்னி பெசன்ட் அம்மையாரின்  (படம்) செல்வாக்கிற்கு ஆட்பட்ட லாலா ஜுகல் கிஷோர் பெண்கள்

கல்விக்காக முன்கைஎடுக்க இந்திரப்பிரஸ்தா பள்ளி 1904 மே 19ல் தொடங்கப்பட்டது. அம்முயற்சியில் எண்ணற்ற பிற சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் தொழில் முனைவோர்களின் உதவியை அவர் பெற்றார். அப்பள்ளி ஜும்மா மசூதி அருகே இருந்த லாலா பால் கிஷண் தாஸின் கட்டடத்தில் அமைந்தது. அந்நாட்களில் பெண்களின் கல்வி என்பது நினைத்துப் பார்க்க முடியாத விலக்கப்பட்ட செயலாக  இருந்தது, பெண்கள் வெளியே வரக்கூடாது, பர்தாவுக்குள் வாழ வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது.

        அந்தப் பள்ளி மெல்ல மெல்ல பல தலைவர்களுக்குப் பயிற்சி அளிக்கும் தேசிய இயக்க மையமாயிற்று. ஜவகர்லால் நேருவின் மனைவி கமலா நேரு இப்பள்ளியில்தான் படித்தார். பள்ளி முதல்வரும் ஆஸ்திரேலிய நிறுவனருமான மிஸ் எல் ஜி‘மெய்நர் (ஹோம் ரூல் இயக்கத்தின்) அன்னி பெசன்ட் அவர்களைத் தீவிரமாகப் பின்பற்றுபவர். ஹோம் ரூல் லீக் அலுவலகம் இங்கிருந்து செயல்பட்டது, விரைவில் அது காங்கிரஸ் செயல்பாடுகளின் மையமாயிற்று. இதன் எதிரொலியாகப் பிரிட்டிஷ் அரசு பள்ளிக்கான நிதி உதவிகளைத் திரும்பப் பெற்றது. ஆனால் பாபு ஜுகல் கிஷோர் மனம் தளராது அச்சவாலை எதிர்கொண்டு, மக்களிடமிருந்து நிதி திரட்டினார்.

    பெண் கைடு ஆக இருந்தாலும் சரளா பிரிட்டிஷ் யூனியன் ஜாக் கொடி ஏற்றுவதையும் ‘மன்னர் நீண்ட காலம் வாழிய வாழிய’ (லாங் லிவ் தி கிங்) பாடப்படுவதையும் எதிர்த்தார். அவர் குறிப்பாக அந்தப் பாடலின் ‘அமெரிக்க நாட்டை ஆள்வதற்கு நீண்ட காலம் வாழ்கவே’ (லிவ் லாங் டு ரூல் ஓவர் யுஎஸ்) என்ற வரியை எதிர்த்தார்.

        இவ்வாறாக, சரளா பெருகி வரும் தேசியச் சூழலின் செல்வாக்கிற்கு ஆட்பட்டார். ‘டெல்லி நவ ஜவான் சபா’ இயக்கம் இங்கே தீவிரமாகச் செயல்பட்டது. டெல்லியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவிய பஹல் சிங், நவ ஜவான் சபாவுடன் சந்த் சிங் மற்றும் பிறருடன் இணைந்து நெருக்கமாகச் செயல்பட்டார்.

        1930 ஏப்ரல் உப்புச் சத்யாகிரக வளாகமாகவும் டெல்லி திகழ்ந்தது. அந்த இயக்கம் ஏப்ரல் 6ல் யமுனா ஆற்றின் சேறும் உப்பும் படிந்த தாழ்நிலங்களில் தொடங்கியது. சத்யாகிரக முகாம்கள் தார்யாகனி மற்றும் பிற இடங்களில் திறக்கப்பட்டன. பெண்கள் பெருமளவில் பங்கேற்றனர். இந்திரப்பிரஸ்தா பெண்கள் பள்ளி மற்றும் இந்திரப்பிரஸ்தா பெண்கள் கல்லூரியின் மாணவர்கள் அவற்றில் உற்சாகமாகவும் தீவிரமாகவும் பங்குபெற்றனர்.

        பள்ளிப் படிப்பை முடித்த சரளா இந்திரப்பிரஸ்தா பெண்கள் கல்லூரியில் சேர்ந்து 1935 முதல் 1940 வரை படித்தார். 1942ல் இந்து கல்லூரியில் சேர்ந்து பொருளாதாரத்தில் முதுகலை எம் ஏ பட்டத்தை நிறைவு செய்தார். 

அரசியலுடன் தொடர்பு

     அரசியலுடன் சரளாவின் முதல் தொடர்பு காங்கிரஸ் கட்சி மூலம் ஏற்பட்டது. அவர் மாணவராக இருந்தபோது டெல்லியில் 5000 பெண்கள் பங்கேற்ற பேரணியில் கலந்து கொண்டார். மற்றவர்களுடன் சேர்ந்து சரளா “இந்தக் கொடுங்கோல் அரசை நாங்கள் சகியோம்” என்ற பாடலைப் பாடினார்.

        அப்போது தடைசெய்யப்பட்டிருந்த பண்டிட் சுந்தர்லாலின் ‘இந்தியாவில் பிரிட்டிஷ் ராஜ்’ என்ற புத்தகத்தைச் சரளா படித்தார். சிட்டகாங் ஆயுதக் கிடங்கு சூறையாடல்  நிகழ்வுகள் மூலம் கம்யூனிஸ்ட் சிந்தாந்தம் குறித்து அவருக்குத் தெரிய வந்தது. பிரீதிலதா வதேதார் மற்றும் கல்பனா ஜோஷி வீர தீரச் செயல்கள் மற்றும் 1937 –38 பாம்பே தொழிலாளர்களின் டெக்ஸ்டைல் வேலைநிறுத்தமும் அவரை ஆழமாக ஈர்த்துச் செல்வாக்கு செலுத்தின. அவர் ராகுல சாங்கிர்த்தியாயன், பிரேம் சந்த் மற்றும் பிற எழுத்தாளர்களுடன் சர்வதேச மார்க்ஸிய இலக்கியங்களையும் ஏராளமாகப் படித்து அவற்றால் ஈர்க்கப்பட்டார்.

மாணவர்கள் அமைப்பில்

    பெண் மாணவர்கள் அடங்கிய தன்னார்வக் குழுவைச் சரளா குப்தா ஒருங்கிணைத்து அமைத்தார். விரைவில் அனைத்திந்திய மாணவர்கள் சம்மேளனத்தில் 1938ல் இணைந்தவர், அதன் இணைச் செயலாளராகவும் டெல்லி மாகாண மாணவர்கள் சம்மேளனப் பொருளாளராகவும் ஆனார். ஒரு சிறிய டைப் ரைட்டருடன் அவர் டிராம் வண்டியில் பயணம் செய்து சாந்தினி சௌக் பாகீரத் அரண்மனையில் இருந்த மாணவர்கள் சம்மேளன அலுவலகத்திற்குச் செல்வது வழக்கம். அதன் புதிய அலுவலகம் கத்ரா ஷாஹின்ஷாகியில் இருந்தது. சரளா குதிரையால் இழுக்கப்படும் வண்டியான ‘புக்கி’யிலும் பயணிப்பது உண்டு.  

மாணவர்கள் சம்மேளத்திலிருந்து சிபிஐ கட்சிக்கு

     1938 நவம்பர் 13 –14ல் நடைபெற்ற டெல்லி மாணவர்கள் சம்மேளன மூன்றாவது மாநாட்டில் கவிக்குயில் சரோஜினி நாயுடு தொடக்க உரையாற்ற, நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் சிறப்புரை ஆற்றினார். சரளா குப்தா அதன் இணைச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

        பஹல் சிங் ஒரு பெரும் தலைவர், டெல்லி பிரதேஷ் காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர். ஏற்கனவே கம்யூனிஸ்ட்டான அவர் மாணவர் தலைவர்களுடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார். குறிப்பாக அவர் வொய்டி சர்மா, சரளா குப்தா, ஃபரூக்கி, ஷங்கி மற்றும் ஷகில் மீது கவனம் குவித்தார். அதன் விளைவாய்ப் பின்னர் 1939ல் அவர்கள் முதல் கம்யூனிஸ்ட் மாணவர்கள் ஆனார்கள். 1938ல் காங்கிரசின் ஹரிபுரா அமர்வு மாநாட்டிற்கு வொய்டி சர்மாவை (யக்ஞ தத் சர்மா) பஹல் சிங் அழைத்துச் சென்றார்.  

     டெல்லியில் அந்நாட்களில் பெரும்பான்மையான கம்யூனிஸ்ட்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்தனர். சிபிஐ பொலிட் பீரோ உறுப்பினர் ஆர் டி பரத்வாஜ் முன்முயற்சியில் டெல்லியில் ஓர் அமைப்புக் குழு நிறுவப்பட்டது. பஹல் சிங் டெல்லி கட்சி செயலாளர் ஆக்கப்பட்டார். அவர் கைதான பிறகு வொய் டி சர்மா செயலாளர் ஆனார். சிபிஐ மீதான தடை நீக்கப்பட்டு சட்டப்படி செயல்பட அனுமதிக்கப்பட்டதும் மாகாணக் கட்சி அலுவலகம் ஜும்மா மசூதி பகுதியில் 1943 ஜனவரி 3ல் திறக்கப்பட்டது. முதலாவது மாகாண மாநாடு 1944 ஜனவரி 23 முதல் 25வரை நடைபெற்றது. 

  அது வண்ணமயமான மாநாடு, அதையொட்டி அலங்கரிப்புகளும் கண்காட்சிகளும் நடத்தப்பட்டன.

        அப்போது சமீபத்தில்தான் சரளா கட்சியில் சேர்ந்திருந்தார், மிக சுறுசுறுப்பாகத் தீவிரமாகச் செயல்பட்டார். நிரஞ்ஜன் சென்னுடன் இணைந்து கட்சிக்காக அவர் ஒரு கலாச்சாரக் குழுவை ஏற்படுத்தினார். மாநாட்டின் தலைமைக்குழு தோழர்களுடன் அவரும் இருந்தார். பெண்கள் அணியின் உணவுக் குழுவினர் ஆற்றிய பணிகள் குறித்த அறிக்கையை அவர் அளித்தார்.

      கலாச்சார நிகழ்ச்சிகளின்போது அவர் ஒரு பாடலை இயற்றி பாடவும் செய்தார். “செங்கொடி அறைகூவி அழைக்கிறது, உழைக்கும் சகோதரர்களே!” (லால் ஜண்டா ஹஹ்தா ஹை: துஜ்ஸே புகார், பையா மஸ்துரோன்!). கலாச்சார மற்றும் பெண்கள் முன்னணிகளின் புகழ்பெற்ற அமைப்பாளர் ஆனார்.

     சிபிஐ டெல்லி மாகாணக் குழுவுக்குப் பஹல் சிங், வொய் டி சர்மா, எம் ஃபரூக்கி மற்றும் முகமத் யாமின் போன்ற தலைச் சிறந்த தலைவர்களுடன் அவரும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் டெல்லி கட்சியின் பொருளாளர் ஆனார் சரளா.

      தொடர்ச்சியான பின்வந்த ஆண்டுகளிலும் சரளா சர்மா மீண்டும் மீண்டும் டெல்லி தலைமை பொறுப்புக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பெண்கள் இயக்கத்தில்

    1940ல் அனைத்திந்தியப் பெண்கள் மாநாட்டின் ஒரு பிரிவான டெல்லி பெண்கள் லீக் அமைப்பில் சரளா இணைந்தார்.  அது பல்வேறு பெண்கள் குழுகள் சேர்ந்த ஒரு குடையின் கீழான கூட்டமைப்பு. அந்த லீக்கின் இணைச் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1942 இயக்கத்தில் தீவிரமாகப் பங்கேற்று பிரம்மாண்டமான சாந்தினி சௌக் பேரணியில் கலந்து கொண்டார். ‘வெள்ளையனே வெளியேறு’ போன்ற முழக்கங்களைக் கண்ணீர் புகை குண்டுகளை எதிர்கொண்டு அவர் எழுப்பினார். டெல்லி செவிலியர்களுக்கு மத்தியில் சரளா தீவிரமாகப் பணியாற்றினார்; ஒரு செவிலியர் வயிற்றுப் போக்கால் (டயேரியா) மரணமடைய அதைக் கண்டித்து விக்டோரியா பெண்கள் மருத்துவமனையில் வேலைநிறுத்தத்தை அவர் அமைத்து நடத்தினார். மருத்துவமனையில் செவிலியர்களின் மோசமான நிலைக்கு எதிராகக் கண்டனப் போராட்டத்தைத் தலைமையேற்று நடத்தினார், அவர்களின் கூலி/ ஊதியங்களை உயர்த்தக் குரல் கொடுத்தார்.

    1943 பம்பாயில் நடைபெற்ற இந்திய மக்கள் நாடக மேடை (இப்டா) மாநாட்டில் சரளா பங்கேற்று அதன் செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இப்டாவின் கிளையை டெல்லியில் அமைக்கும் பொறுப்பு அவரிடம் ஒப்படைக்கப்பட்டது.

    மில்கள், ஆலைத் தொழிலாளர்களுக்கு மத்தியில் பணியாற்றிய சரளா, இரயில்வே, டெக்ஸ்டைல், ரிக்க்ஷா இழுப்பவர்கள், டிராம் தொழிலாளர்கள் முதலான பிற தொழில்களின் தொழிலாளர்களுடனும் பணியாற்றினார். பம்பாயின் கபிலா கந்த்வாலாவுடன் இணைந்து சரளா டெல்லி உழைக்கும் பெண்கள் குறித்த அறிக்கையைத் தயாரித்தார். அந்த அறிக்கை 1946 மகராஷ்டிராவின் அகோலாவில் நடைபெற்ற அனைத்திந்திய பெண்கள் மாநாடு (AIWC) மாநாட்டின் முன் சமர்ப்பிக்கப்பட்டது.

    1943ல் நேரிட்ட மாபெரும் வங்காளப் பஞ்சத்தின் (தி கிரேட் பெங்கால் ஃபெமைன்) நிவாரணப் பணிகளின்போது டெல்லி மகிளா சங் (பெண்கள் சங்கம்) அமைக்கப்பட்டது. 1942ல் AIWC உடன் ஏற்பட்ட சில வேறுபாடுகளை அடுத்து அந்தப் பெண்கள் சங்கம் பேகம் ஹஷ்மியைத் தலைவராகவும் சரளா சர்மாவை அதன் பொதுச் செயலாளராகவும் கொண்டு அமைக்கப்பட்டது. அந்தச் சங்கத்தில் 5000 உறுப்பினர்கள் இருந்தனர். வங்கப் பஞ்சத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிட சங்கம் தொடர்ச்சியான பிரச்சாரங்களை நடத்தியது.

அது இப்டாவுடன் இணைந்து யமுனா காட் பகுதியில் தொடர்ந்து 11 நாட்கள் காலை 5 முதல் 10 வரை பாடல்களைப் பாடிக் கொண்டு நிதி திரட்டும் இயக்கத்தை நடத்தியது. யமுனா காட் படித்துறையில் எவ்வாறு சுமார் ஒரு டஜன் பெண்களும் பையன்களும் நின்று கொண்டு அங்கே குளிக்கவும் பிராத்தனை செய்யவும் வரும் பெண்களிடம் பிரச்சாரம் செய்தனர் என்பதைச் சரளா ஞாபகப்படுத்துகிறார். சரளாவும் மற்ற தோழர்களும் “கேளுங்கள் எங்கள் இந்து(ஸ்தான்) நண்பர்களே, வங்கம் பசியில் துடிக்கிறது” போன்ற பாடல்களைப் பாடினர். அந்தப் பெண்களிடம் துணிப் பைகளில் (ஜோலி) ஒரு காசைப் போடுங்கள் என வேண்டினர். வீடு வீடாகச் சென்று சரளாவின் குழு உறுப்பினர்கள் வங்காளப் பஞ்ச நிவாரணத்திற்காக நிதி திரட்டினர். காந்தி மைதானத்தில் சரளா நாடகங்கள் மற்றும் பாடல் இசை நிகழ்ச்சிகளை அமைத்து நடத்தினர்.

டெல்லி மகிளா சங்கம் நாடகங்கள், நாட்டியங்கள் முதலான கலை நிகழ்ச்சிகளைப் பெண்கள் சுலபமாகக் கலந்து கொள்ளும் வகையில் பொது இடங்களிலும் வீடுகளின் முற்றங்களிலும் நடத்தியது. அவர்கள் கறுப்புச் சந்தை, ரேஷன் பொருட்களைப் பதுக்குவதற்கு எதிராகக் கோரிக்கைகளை எழுப்பினர். சில நேரங்களில் பெண்களைத் திரட்டிக் கொண்டு உணவு தானியங்கள் பதுக்கப்பட்ட இடங்களுக்கே சென்று பதுக்கி வைத்திருந்தவர்களிடம் இருந்து பறிமுதல் செய்தும் வந்தனர்.

கல்கத்தா ஜப்பானியர்களால் குண்டு வீசித் தாக்கப்பட்டபோது ஒரே நாள் இரவில் சரளா ஒரு நாடகத்தை எழுதினார். அதனை ஒரு நிழல் நாடகமாக ‘தானியா’ (தேவதைகளின் அரசி) என்ற பெயரில் 1943 பிப்ரவரி 10ல் காந்தி மைதானத்தில் அரங்கேற்றினார். அதைச் சுமார் 25ஆயிரத்துக்கும் மேல் பார்வையாளர்கள் கண்டு ரசித்தனர்.

தார்யாகஞ்சின் சரஸ்வதி பவனில் டெல்லி மகிளா சங்கம் சர்வதேசப் பெண்கள் தினத்தைக் கொண்டாடியது. காந்தி மைதானத்தில் சரளா வங்கப் பஞ்சம் குறித்து ஓர் ஓவியக் கண்காட்சியை ஏற்பாடு செய்து காட்சிப்படுத்தினார். அதில், தான் வரைந்த ஓவியங்கள் மட்டுமின்றி தனது சகோதரன் வரைந்தது மற்றும் சிட்டப் பிரசாத் பட்டாச்சார்யா வரைந்த ஓவியங்களையும் இடம்பெறச்செய்தார்; சுனில் ஜானா புகைப்படங்களும்கூட அதில் பார்வைக்கு வைக்கப்பட்டன.

[சிட்டப் பிரசாத் பட்டாச்சார்யா (Chittaprosad Battacharyaமுன்னோடியான இந்திய அரசியல் ஓவியக் கலைஞர். ஏராளமாக மக்களின் வாழ்வைத்

 தத்ரூபமாக வரைந்தவர், குறிப்பாக வங்கப் பஞ்சத்தின்போது சுற்றுப்பயணம் செய்து அன்றைய மக்களின் அல்லல்களைக் கறுப்பு வெள்ளை ஓவியங்களாகத் தீட்டி அச்சிலும் லினோகட் உத்தியில் அச்சிட்டவர். நூல்களும் எழுதியுள்ளார். 1915 ஜூன் 21ல் மேற்கு வங்க 24 பர்க்கானாவின் நைகாட்டியில் பிறந்தார், 1978 நவம்பர் 13ல் கல்கத்தாவில் மறைந்தார்.    

 புகைப்படப் பத்திரிக்கையாளரும் இந்தியா குறித்த பல டாக்குமெண்டரிகளை எடுத்த சுனில் ஜானா (Sunil Janah) அசாமில் 1918 ஏப்ரல் 17ல் பிறந்தார், 2012 ஜூன் 21ல் கலிபோர்னியா பெர்க்லேவில் மறைந்தார். இந்திய விடுதலை இயக்கம், விவசாய தொழிலாளர் இயக்கங்கள், பஞ்சங்கள், கலவரங்கள், கிராமப்புற மற்றும் மலைவாழ் மக்கள் வாழ்க்கை, தொழில்மயம் மற்றும் நகரமயமாதல் காலம் என அத்தனையும் அவரது கேமிரா பதிவு செய்து ஆவணப்படுத்தியது  –கூடுதல் இணைப்பு] 

தேசப்பிரிவினையின்போது ஏற்பட்ட மதவாதக் கலவரங்களில் சாந்தினி சௌக் மற்றும் பிற இடங்களில் பாதிக்கப்பட்டவர்கள் மத்தியில் சரளா நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். பால் மற்றும் தேவையான பிற பொருட்களைக் குழந்தைகளுக்கு விநியோகித்தார், குறுகிய தெருக்கள் மற்றும் சந்துகளில் வசிக்கும் மக்களை தேடிச் சென்று உதவினார். அவர்கள் நீண்ட காலம் அவரை நன்றியுடன் நினைவு கூர்ந்தனர். 

டெல்லியின் சாதாரண பொதுமக்களிடையே அவர்களது குடிமை மற்றும் குடியுரிமை பிரச்சனைகள், கல்வி, சுகாதாரம், சமூக கலாச்சாரச் சுரண்டல் போன்றவைகளுக்காகச் சரளா தீவிரமாகப் பணியாற்றினார். பேகம் ஹஷ்மி, சத்யாவதி, சந்தோ பீபி, மீமோ பாய் மற்றும் அருணா ஆஸஃப் அலி முதலானோர் அவருடன் பழைய டெல்லியில் பணியாற்றிய புகழ்பெற்றவர்களில் சிலராவர்

சுதந்திரத்திற்குப் பிந்தைய காலம்

        இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிடிஆர் காலத்தின்போது (1948 –50) முற்றிலும் முழுமையான குழுப்போக்குப் பாதையைக் கடைபிடிக்க டெல்லி மற்றும் இந்தியாவின் பிற பகுதிகளில் அது கட்சியைச் சீர்குலைத்தது, தலைவர்கள் தலைமறைவாயினர்; அவ்வாறே சரளாவும் தலைமறைவானார், அப்படியே இரண்டு முழு ஆண்டுகளும் காணாது போனார். அதற்கு முன் கைது செய்யப்பட்டவர் 1948 அக்டோபர் 8முதல் நவம்பர் 17வரை சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவர் உண்ணாவிரதப் போராட்டத்திலும் ஈடுபட்டார்.

    1950களின் தொடக்கத்தில் டெல்லியில் கட்சியை மீட்டுருவாக்கம் செய்வதில் சரளா தீவிரமாக உதவினார். பெண்கள் அமைப்பையும் மீண்டும் கட்டி

எழுப்புவதில் உதவிட தற்போது அது ஜன்வாதி மகிளா சமாஜ் என்று பெயரிடப்பட்டு 22 கிளைகளுடன் உள்ளது. 1953ல் சரளா அதன் செயலாளர் ஆனார். 1954ல் இந்திய மாதர் தேசிய சம்மேளனம் அதன் டெல்லி மாநாட்டில் அமைக்கப்பட்டபோது, சரளா அதன் நிறுவனத் தலைவர்களில் ஒருவராகி 1962 முதல் 1970 வரை அதன் செயலாளர்களில் ஒருவராகச் செயல்பட்டார். லெனின் நூற்றாண்டு விழாவின்போது 1970ல் அவருக்கு லெனின் விருது அளிக்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

தேர்தல்கள்

     1954ல் ஒரு கம்யூனிஸ்ட் வேட்பாளராகச் சரளா சர்மா முனிசிபல் கமிட்டிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் பள்ளிகள், குடிநீர் வசதி, முஸ்லீம் பெண்கள் பிரச்சனைகள் போன்றவற்றில் ஏராளமான மேம்பாட்டு வளர்ச்சிப் பணிகளில் ஈடுபட்டார். முனிசிபல் கார்ப்பரேஷனாக டெல்லி தரம் உயர்த்தப்பட்டபோது அந்த அமைப்பிற்கு மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். டெல்லி மாநகராட்சியின் கல்விக் குழுவின் துணைத் தலைவராக அவர் நியமிக்கப்பட்டார்.

இயக்கங்கள்

    1973 செப்டம்பர் 11ல் பெண்கள் குழுவிற்குத் தலைமையேற்று, சரளா சர்மா பழைய செயலகத்திற்குள்  வலுக்கட்டாயமாக நுழைந்து, குடிமைப் பொருள் வழங்கல் எக்ஸிக்யூடிவ் கவுன்சிலரைக் கேரோ செய்தார்; அவரிடம் வேண்டுகோள் மனுவுடன் 21 பாக்கெட்டுகளில் காய்ந்த சேறு மற்றும் சிறு குழாங்கற்களுடன் ரேஷனில் வழங்கப்பட்ட தரமற்ற உணவு தானியங்களின் மாதிரிகளை வழங்கினர். மற்றுமொரு குழு1974 மார்ச் 19ல் சந்தித்தனர். 1984 சீக்கியர்களுக்கு எதிரான கலவரங்களின்போது சரளா மற்றவர்களுடன் இணைந்து அமைதி ஊர்வலங்களை நடத்தினார்.

மாநாடுகள்

     அவர் பல்வேறு சர்வதேச மாநாடுகளிலும் எண்ணிறைந்த தேசிய மாநாடுகளிலும் கலந்து கொண்டார். உதாரணத்திற்கு, 1975ல் பெர்லினில் அக்டோபரில் நடைபெற்ற பெண்களின் சர்வதேச ஜனநாயகச் சம்மேளனத்தின் (WIDF) 7வது உலகப் பேராயத்தில் அவர் பங்குபெற்றார், இதில் சிறப்பு, அந்த ஆண்டுதான் சர்வதேசப் பெண்கள் ஆண்டாகவும் கொண்டாடப்பட்டது.

            சரளா சர்மா முதலில் டெல்லி மகிளா சங்கப் பொதுச் செயலாளராகவும் பின்னர் 1986ல் அதன் தலைவராகவும் ஆனார். சரளா குப்தாவாக இருந்தவர் 1953ல் வொய் டி சர்மா அவர்களைத் திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவரும் மாணவர் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கச் செயல்பாடுகளின்போது சந்தித்தனர். [யக்ஞ தத் சர்மா, டெல்லி கட்சிக் கிளையை நிறுவியவர்களில் ஒருவர், தொழிற்சங்கத் தலைவர். 1918 மார்ச் 1ல் பிறந்தார், 2004 ஜனவரி 11ல் காலமானார்]

           சரளா சர்மா பல்வேறு கட்டுரைகள் மற்றும் டெல்லி சிபிஐ நிறுவனர் பஹல் சிங் குறித்து இந்தியில் (1975) எழுதிய சிற்றேடு உள்ளிட்ட பல சிறு நூல்களையும் எழுதியுள்ளார்.

          நீண்ட காலம் உடல் நலம் குன்றி இருந்த பின் அவர் மரணமடைந்தார். தனது 102வது பிறந்த நாளுக்கு நான்கு நாட்கள் முன்பு 2022 ஏப்ரல் 11ல் அவர் காலமானார். ஒப்பற்ற கம்யூனிஸ்ட் பெண் செயற்பாட்டாளரான அவரது நினைவுகள் நீங்காது நிலைக்கும். வாழ்க அவர் புகழ்!     

--நன்றி:நியூஏஜ் (2023, ஜன.29 –பிப்.4)                                                                                         

                                                                             --தமிழில் : நீலகண்டன், என்எப்டிஇ, கடலூர்

Sunday 7 May 2023

மார்க்ஸ் எழுதிய “பிரான்ஸில் வர்க்கப் போராட்டங்கள் –1848 முதல் 1850 வரை”

 

மே 5, காரல் மார்க்ஸ் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை

மார்க்ஸ் எழுதிய “பிரான்ஸில் வர்க்கப் போராட்டங்கள் –1848 முதல் 1850 வரை”:

அதன் வரலாற்று முக்கியத்துவம்

                              -அனில் ரஜீம்வாலே

          ஏங்கெல்ஸ் விளக்கியதுபோல, இந்தப் படைப்பு பிரான்ஸ் மற்றும் ஐரோப்பாவின் சமகால வரலாற்றைப் பொருள்முதல்வாதக் கருத்தாக்கத்தின் மூலம் (வரலாற்றுப் பொருள் முதல்வாதம்) தூலமாகப் பயன்படுத்தி விளக்கும் முதல் முயற்சி. கம்யூனிஸ்ட் அறிக்கையில் (1848) தொடங்கிய இந்நிகழ்முறை, பொதுவான வடிவத்தில் முழுமையான நவீன வரலாற்றுக்குப் பயன்படுத்தப்பட்டது; தற்போது இது மேலும் குறிப்பாகத் தீர்மானகரமானது.

            இப்படைப்பு மார்க்ஸ் தொடங்கிய ‘நியூ ரேனிஷ் நியூஸ்பேப்பர் : ஜனநாயகத்திற்கான இதழ்’ பத்திரிக்கையில் மார்க்ஸால் எழுதப்பட்டத் தொடர் கட்டுரைகளைக் கொண்டது. அதன் மறுபதிப்புப் பணி தயாரிப்புகளை 1895ல் ஏங்கெல்ஸ் மேற்கொண்டபோது, அவரும்கூட பங்களிப்புச் செய்து நான்காவது அத்தியாயத்தை இணைத்தார்.

     அது முதன் முறையாகப் பிரான்சின் முழுமையான காலகட்டத்தின் வரலாற்றைப் பொருள்முதல்வாதக் கண்ணோட்டத்தில் விளக்கியது. அதுவரை இல்லாது முதன் முறையாகப் அது பாட்டாளிகளின் தூலமான தந்திரோபாயங்கள் வகுக்கப்பட்ட நிகழ்வு. பாட்டாளி வர்க்கம், அப்போதும் உலக வரலாற்றில் உருவாகி வந்தபோதும், அது இனியும் வடிவமற்று தெளிவில்லாது இருக்கவில்லை; தனக்கான உத்திகள், தந்திரோபாயங்களை வளர்த்து, இவ்வாறு வரலாற்று உணர்வுள்ள வர்க்கமாக மாறியது.

பொருளாதாரக் காரணங்கள்

          இந்நூலுக்கான 1895ம் ஆண்டு அறிமுகத்தில் ஏங்கெல்ஸ் இப்படைப்பு, நிகழ்வுகள் மற்றும் ஆழமான விரிந்த பொருளாதார நிகழ்முறைகளுடன் உறவுள்ள மேலெழுந்தவாரியான நிகழ்வுகளுக்கு இடையேயான, உள்ளார்ந்த அடிப்படை தொடர்பு காரணங்களைத் தேடிக் கண்டறிந்ததைச் சுட்டிக் காட்டுகிறார்.

      பொருள்முதல்வாத இயங்கியல் (விஞ்ஞான) முறை அரசியல் முரண்பாடுகளைப் பின்னோக்கி தேடிச் சென்று, பொருளாதார நலன்களால் ஏற்படுத்தப்பட்ட அன்று நிலவிய சமூக வகுப்புகளுக்கு இடையே நலன்களின் மோதல்களைக் காணக் கோருகிறது. அவ்வாறு இயங்கியல், அரசியல் விஞ்ஞான வரலாறு அல்லது ‘அரசியலில்’ முதன் முறையாக பயன்படுத்தப்பட்டது.

பொருளாதாரமும் அரசியலும்

     1847ன் வர்த்தக நெருக்கடியே 1848 பிப்ரவரி, மார்ச் புரட்சிகளின் உண்மையான தாய் என்று மார்க்ஸ் கண்டறிந்தார்.

           1848 பிரெஞ்ச் மற்றும் ஐரோப்பிய புரட்சிகளின் அனுபவம் மார்க்சை முதலாளித்துவ முறை உற்பத்தி குறித்த ஆய்வை மேற்கொள்ள உற்சாகப்படுத்த, அது இறுதியாக அவரது மாபெரும் படைப்பான ‘டாஸ் கேப்பிடல்’ (மூலதனம்) ஆக்கத்தைப் பல தொகுதிகளாக எழுதுவதில் செலுத்தியது. மார்க்சும் ஏங்கெல்சும் சில கற்பிதங்களின் கீழ் -- அதை அவர்களே சுட்டியும் காட்டியுள்ளனர்-- ஐரோப்பாவில் பாட்டாளிகளின் புரட்சி நிகழ இருப்பதாகக் கூறினர். (தவறான அந்த) எதிர்பார்ப்பிற்கு முதலாளித்துவ முறை உற்பத்தி குறித்தப் பொருளாதார ஆய்வின் போதாமையே காரணம்.

1789 பிரெஞ்ச் புரட்சி மந்திர வீச்சின் கீழ்

     1789 பிரெஞ்ச் புரட்சியின் வரலாற்று அனுபவம் அந்தக் கால ஐரோப்பாவின் அரசியல் சிந்தனைப் போக்கில் செல்வாக்குச் செலுத்தியது. “எனவே அது, 1848 பிப்ரவரியில் பாரீசில் பிரகடனம் செய்யப்பட்ட ‘சமூக’ப் புரட்சியின் போக்கு மற்றும் தன்மை குறித்த எங்கள்  கருத்துருகளில், ‘பாட்டாளிகளின் புரட்சி, 1789 மற்றும் 1830 (எழுச்சிகளின்) மாதிரி வார்ப்பின் நினைவுகளால் மிக வலிமையான சாயலுடன்’ இருக்க வேண்டும் என எதிர்பார்த்தது இயல்பானதாகவும் தவிர்க்க முடியாததாகவும் ஆனது” என்று கூறுகிறார் ஏங்கெல்ஸ்.

            புரட்சிகர எழுச்சியால் ஐரோப்பா முழுமையும், ரஷ்யாவின் எல்லை வரை, ஒளியூட்டப் பட்டது. அது, பாட்டாளிகள் மற்றும் பூர்ஷ்வாகளுக்கு இடையிலான அதிகாரத்திற்கான முதல் பெரும் போர் என்பது நிரூபணமானது. அதனாலும் கூட இந்தப் படைப்பு முக்கியமாகிறது.  

            ‘சர்வாதிகாரிகள்’ மீது ‘மக்கள்’ வெற்றி பெறும் வரை நீண்ட போராட்டம் நடத்தப்பட வேண்டும் என சில எதார்த்தமற்ற உதிரிகள் பிரகடனம் செய்கிறார்கள். ஆனால் ’புரட்சியின் முதல் அத்தியாயம் ஏற்கனவே முடிந்து விட்டது’ என்று கூறி, மார்க்சும் ஏங்கெல்சும் அக்கருத்தினுடன் 1850 இலையுதிர் காலத்திலேயே உடன்படவில்லை. இதைக் கூறியதற்காக மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்ஸ் இருவரும் ‘புரட்சிக்குத் துரோகிகள்’ என முத்திரை குத்தப்பட்டு சமூக விலக்கம் செய்யப்பட்டனர்!!

     19ம் நூற்றாண்டின் முடிவில், புரட்சியை ஏற்படுத்தும் முறைகளும் நிலைமைகளும் முழுமையாக மாறி விட்டன. 1848 போராட்ட முறை தற்போது வழக்கொழிந்ததாகி விட்டது. புதிய வழிமுறைகளும் வடிவங்களும் எழுந்து விட்டன.  ஜெர்மனியைப்போல வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை, தேர்தல்கள் மற்றும் நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வெற்றி பெறுவது என்பனவற்றை ஏங்கெல்ஸ் வளர்ந்து வரும் முக்கியத்துவம் உடையதாக விவரித்து, மேலும் இப்போது அது கூடுதலாகவே சாத்தியம் என்கிறார்.

சில தீர்மானகரமான முக்கிய முடிவுகள்

   பிப்ரவரி பேரிகேட்ஸ் எனப்படும் தடுப்பு (நிகழ்வு)களிலிருந்து உருவான தற்காலிக (புரவிஷனல்) அரசின் சேர்க்கையமைப்பு, எதிர்பார்த்தபடியே அதன் வெற்றியைப் பங்கு போட்ட வேறுபட்ட கட்சிகளைப் பிரதிபலித்தது. அக்கட்சிகளே இணைந்து ஜூலை அரசாட்சியைத் தூக்கி எறிந்தது என்றாலும், அது வேறுபட்ட வர்க்கங்களுக்கு இடையே செய்து கொண்ட சமரசமன்றி வேறெதுவாகவும் இருக்க முடியாது; அதன் வர்க்க நலன்களும் எதிர் எதிராக முரண்பட்ட நலன்களைக் கொண்டதே.” அந்த அரசில் தொழிலாளர் வர்க்கம் லூயிஸ் ப்ளான்க் மற்றும் ஆல்பெர்ட் என்ற இரண்டு தொழிலாளர் பிரதிநிதிகளைப் பெற்றது (காண்க: ‘பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள், 1848 –50’ நூல், மார்க்ஸ் ஏங்கெல்ஸ் தேர்ந்தெடுத்த படைப்புகள், தொகுதி 1, பக் 210)

         150 ஆண்டுகளுக்கு முன்பே எழுதப்பட்ட, புரட்சியின் முழு இயங்கியலைக் கொண்ட இந்த அசாதாரணமான அறிக்கை, எதிரெதிர் மற்றும் பிற வர்க்கங்களின் ஒன்றுபடுதல் மற்றும் போராடுதலின் இயங்கியலை வெளிப்படுத்துகிறது. இது விஞ்ஞான முறையைத் தூலமாகப் பயன்படுத்திய இயங்கியல்.

        இரண்டு இணையான குடியரசுகள் உருவானதை மார்க்ஸ் சுட்டிக் காட்டுவார் (பக். 211). தொழிலாளர் பிரதிநிதிகள் ஒரு குடியரசைப் பிரகடனப்படுத்த அரசைக் கட்டாயப்படுத்தினர். இல்லை எனில், அவர்கள் சுமார் 2 லட்சம் தொழிலாளர்கள் அணி வகுத்துச் சென்று நேஷனல் கார்டைக் கட்டாயப்படுத்தியிருப்பார்கள்.

       அதன் விளைவாய், ஒரு வகையில் வழக்கிழந்த 1789 பிரெஞ்ச் புரட்சியின் முழக்கங்கள் மீண்டும் தெருக்களில் எதிரொலித்தன.

     “தற்காலிக அரசுக்குக் குடியரசை (பிரகடனப்படுத்த) உத்தரவிட்டதன் மூலம் … பாட்டாளிகள் அதிலிருந்து முன்களத்திற்கு ஒரு சுதந்திரமான கட்சியாக நடைபோட்டது.” அது விடுதலைக்கான போராட்டத்திற்குக் களத்தை வென்றது (தன்னையே விடுவித்துக் கொள்ள அல்ல!)

            பாட்டாளிகள் குடியரசை ‘உத்தரவிட்டது’ (டிக்டேட்டிங்), அதுவும் 1848 –50ல் என்பது, மிகவும் குறிப்பிடத்தக்கது: அது ஒரு சுதந்திரமான வர்க்கமாகச் செயல்பட்டதைக் காட்டுகிறது. அவர்கள் பூர்ஷ்வாகளுடன் அருகருகில் தங்கள் சொந்த அமைச்சகங்களை அமைத்தனர்.

       “பூர்ஷ்வா (நடுத்தர வர்க்க முதலாளி)களுடன் பொதுவாக இருந்து தொழிலாளர்கள் பிப்ரவரி புரட்சியைச் செய்தனர், மற்றும் பூர்ஷ்வாகளுக்கு பக்கத்திலேயே அவர்கள் தங்கள் நலன்களில் முன்னேற்றம் கண்டனர்; அது மட்டுமின்றி, அவர்கள் ஒரு தொழிலாளியைத் தற்காலிக அரசில், பூர்ஷ்வா பெரும்பான்மையினருடன் அவர்களோடேயே அமைச்சராகவும் இடம்பெறச் செய்தனர்” (பக்.213)

      இது மற்றுமொரு அற்புதமான பத்தி : 1848லேயே ஒரு பூர்ஷ்வா அரசில் தொழிலாளர் வர்க்கப் பிரதிநிதியின் நுழைவை மார்க்ஸ் சுட்டிக் காட்டினார்! இது ஓர் வரலாற்றுச் சாதனை.

       அதே நேரத்தில், 1848 புரட்சி, நவீன சமூகத்தின் இரண்டு பெரும் வர்க்கங்களுக்கு இடையே நடைபெற்ற முதலாவது பெரும் போராகும். 

      ‘பிரான்ஸில் வர்க்கப் போராட்டங்கள்’ நூல் மிகவும் ஆர்வத்தைத் தூண்டக் கூடிய மார்க்ஸின் மிகப்பெரும் படைப்புகளில் ஒன்று. புரட்சிகரப் பெருந்திரள் போராட்டங்களின்

நேரடி அனுபவங்களை அவர், புரட்சி குறித்த தனது சொந்த தியரியை மேம்படுத்தப் பயன்படுத்தினார். இந்தப் படைப்பில்தான் அவர் பாட்டாளிகளின் சர்வாதிகாரம் என்ற தனது புகழ்பெற்ற தியரியை வளர்த்தெடுத்து அரசின் வர்க்கத் தன்மையை விளக்கினார். அதற்கு முன் ஒருபோதும் தொழிலாளர் வர்க்கம் ஆளும் வர்க்கமாகப் பார்க்கப்பட்டதில்லை. இன்று அந்தக் கட்டமைப்பு உருவாக்கம், புதிய சூழ்நிலைகளில் பொருத்தமற்றது என கைவிடப்பட்டு ‘தொழிலாளர் வர்க்கத்தின் ஆட்சி’ (சர்வாதிகாரம் அன்று) என்ற கருத்துரு மாற்றப்பட்டுள்ளது.

மேலும் காரல் மார்க்ஸ் இந்த ஆக்கத்தில் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் இடையே கூட்டு என்ற (வர்க்கக் கூட்டணி) கருத்துருவை உருவாக்கினார்.

மார்க்சும் ஏங்கெல்சும் வயது வந்தோர் வாக்குரிமை மற்றும் தேர்தல் முறையைப் பிரச்சாரத்திற்காக மட்டுமல்லாது, ஜனநாயக மற்றும் சோஷலிசப் புரட்சிகளுக்காகவும் பயன்படுத்துவதை வலிமையாக ஆதரித்தனர்.

இப்படைப்பிற்கு ஏங்கெல்சின் அறிமுகம் (1895)

    1895ல் ஃபெடரிக் ஏங்கெல்ஸ் இப்படைப்பிற்கு மிக முக்கியமான அறிமுகத்தை எழுதினார்.

அதில் ஜனநாயகம் மற்றும் வயது வந்தோர் வாக்குரிமை குறித்த மார்க்சிய அணுகுமுறை மற்றும் பிற கேள்விகளுக்கும் கோடிட்டுக் காட்டினார். மாறிவரும் சூழ்நிலையில் மார்க்ஸியத்தை எவ்வாறு வளர்ப்பது என்பதை ஏங்கெல்ஸ் காட்டினார். ‘வர்க்கப் போராட்டங்கள்’ நூல் எழுதப்பட்டு 50 ஆண்டுகள் கடந்த இடைக்காலத்தின்போது நிகழ்ந்த மாற்றங்களை ஏங்கெல்ஸ் விளக்கினார். மற்றவற்றுடன் பின்வருவதை அவர் குறிப்பிட்டுக் காட்டினார்:

 1.  1830கள் –40களிலிருந்து பிரான்ஸ் மற்றும் பிற நாடுகளில் சாலைகள் அகலமாயின. எனவே ஆயுதம் தாங்கிய போராட்டம் ஒன்று சாத்தியமில்லை, அல்லது போராட்டங்களின் இறுதியில் மட்டுமே வர முடியும். குறுகிய சாலைகளிலும் சந்துகளிலும் தடுப்புகளை (பேரிகேட்ஸ்) அமைத்துப் போரிட்ட முறை தற்போது சாத்தியமில்லை. ‘முட்டாள்தனமான முயற்சி அது’ என்றார் அவர். ஏங்கெல்சின் இந்த வார்த்தைகளுக்கு நவீன கால ‘அதிதீவிர புரட்சியாளர்கள்’ செவி சாய்க்க வேண்டும்.

            2. 1848–50 காலகட்டத்திலிருந்து இராணுவங்கள் நவீனமயப்படுத்தப்பட்டு வருகின்றன, அவை அகலமான சாலைகளில் சுலபமாக பவனி வருகின்றன. இச்சூழ்நிலையில் ‘எங்கே அத்தகைய இராணுவங்கள் நடவடிக்கை எடுக்க முடியுமோ அந்த இடத்தில்போய் அகப்பட்டுக் கொள்ளும் அளவு நாம் பைத்தியக்காரர்கள் அல்லர்’ என கூறினார் ஏங்கெல்ஸ்.

 3. இதற்கு மத்தியில் நாடாளுமன்ற ஜனநாயக முறைமைகள் மேம்படுத்தப்பட்டன. (நமது கொள்கைகளைப்) பிரபலப்படுத்துவதற்கு அவை பயன்படுத்தப்படுவது மட்டுமல்லாது, ஆனால் பெரும்பான்மை வெற்றி பெறுவதற்கும், அரசுகளை அமைப்பதற்குக்கும்கூட அவை பயன்படுத்தப்பட வேண்டும். அவை சோஷலிசப் புரட்சி மாற்றத்திற்கு இட்டுச் செல்லும் வடிவங்களுக்குக்கூட மாறிடலாம், உதாரணத்திற்கு ஜெர்மனியைச் சொல்லலாம். ‘நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை வெற்றி பெறுங்கள், ஒவ்வொரு அடியாகச் சோஷலிசம் நோக்கி நகருங்கள்’ என்று அவர் ஜெர்மனி  சோஷலிச ஜனநாயக கட்சிக்குக் கூறினார். இன்று இது மேலும் கூடுதலாகப் பொருத்தமுடையதாகும்.

‘பிரான்ஸில் வர்க்கப் போராட்டங்கள்’ நூலில் இயக்கவியல்

     இப்படைப்பு முழுவதும், இயக்கவியல் பொருள்முதல்வாத முறையைத் தெளிவாகப் பார்க்கலாம். மார்க்சும் ஏங்கெல்சும் உச்சிமேல் வைத்துக் கொண்டாடக் கூடிய மிக உயர்ந்த இயக்கவியலாளர்கள். இயக்கவியலைப் பயன்படுத்தி ஐரோப்பிய, பிரெஞ்ச் புரட்சிகளை ஆய்வு செய்வது என்பது சுலபமான பணி அல்ல.

1. இந்தப் படைப்பில் பிரான்ஸில் வர்க்க குணாம்சங்களை அடையாளப்படுத்த போதுமான பொருளாதாரத் தரவுகளும் ஆய்வுகளும் பயன்படுத்தப்பட்டன. விவசாய உற்பத்தி, வரிகள் முதலின மற்றும் நிதி குறித்த புள்ளிவிவரங்களை வழங்கி, “விவசாயிகள் மீதான சுரண்டல், ஆலைத் தொழிலாளர்கள் சுரண்டலில் இருந்து வடிவத்தில் மட்டுமே வேறுபடுகிறது” என மார்க்ஸ் கூறுகிறார். “சுரண்டுபவர் ஒருவரே: மூலதனம். தனிநபர் முதலாளிகள் தனிநபர் விவசாயிகளை அடமானம் மற்றும் லேவாதேவி மூலம் சுரண்டுகிறார்; முதலாளித்துவ வர்க்கம் வேளாண்குடி விவசாய வர்க்கத்தை அரசு வரிகள் மூலம் சுரண்டுகிறது”. இன்றும்கூட, விவசாயம் மற்றும் முதலாளித்துவம் (ஆலை) இடையேயான சிக்கலான உறவைப் புரிந்து கொள்ள இந்தப் பகுப்பாய்வு போதுமான அளவு பொருத்தமானதாக உள்ளது.

2. பிரெஞ்ச் விவசாயி (நிலத்தின் மீதான) தன் உரிமையை முதலாளிகளிடம் --நில அடமானத்தின் மீதான வட்டி வடிவத்திலும், லேவாதேவிக்காரர் அடமானம் இன்றி அளிக்கும் முன்பணத்தின் மீதான வட்டி வடிவத்திலும் – விட்டுக் கொடுத்தார்; நிலத்தின் வாடகை மட்டுமல்ல, உழைப்பின் லாபத்தை மட்டுமல்ல, ஒரு வார்த்தையில் கூறுவதானால், முழுமையான நிகர லாபம் மட்டுமல்ல, கூலியின் ஒரு பகுதியையும்கூட இழந்தார்; எனவே அவர் *ஐரிஷ் (அயர்லாந்து) குத்தகை விவசாயி மட்டத்திற்கு மூழ்கினார். இவை அனைத்தும் தனியார் சொத்துரிமை என்ற போர்வையின் கீழ் நடத்தப்பட்டன. (பக்.276)

     (*ஐரிஷ் விவசாயிகளின் வாழ்க்கை, துன்ப துயரங்கள் மற்றும் நில மீட்சிப் போராட்டங்கள் அனைத்துமே தனியான ஒரு போராட்ட வரலாறு. ஐரிஷ் குத்தகை விவசாயி, நிலப் பிரபுக்களுக்கு குத்தகை வாடகை செலுத்த வேண்டும், ஐரிஷ் சர்ச் தேவாலயத்திற்கும் அரசுக்கும் வரி செலுத்த வேண்டிய கட்டாயத்தில் இருந்தனர் --இணையத்திலிருந்து )

3. மெல்ல மெல்ல, விவசாயிகள், குட்டி முதலாளிகள், பொதுவாக நடுத்தர வர்க்கம் முதலானோர் குடியரசுக் கோரிக்கைகளுக்காகப் பாட்டாளிகளுடன் வந்து சேர்ந்தனர்.

4. அடுத்து, மார்க்ஸ் பல்வேறு வகை சோஷலிசத்தை அடையாளப்படுத்துகிறார்: பெட்டி பூர்ஷ்வா (குட்டி முதலாளிகள்), அராஜகவாதம், பூர்ஷ்வா சோஷலிசம், உடோப்பிய கோட்பாட்டு சோஷலிசம் (கற்பனாவாத சோஷலிசம்) மற்றும் புரட்சிகர சோஷலிசம். மேலே கூறியவைகளை மார்க்ஸ் கூர்மையாக விமர்சனம் செய்தார், விஞ்ஞான சோஷலிசத்தை மேம்படுத்தினார்.

5. கரன்சி நோட்டுகளின் தொடர்ச்சியான புழக்கம் மற்றும் செயல்பாட்டில் வங்கிகளின் பங்கு அதிகரித்ததால் நிதிசார்ந்த எதேச்சிகாரம் வலிமையாக்கப்பட்டது.

6. செழிப்பும்  நெருக்கடியும் என வேறுபட்ட கால வட்டத்தில் ஐரோப்பா சென்றது. ஒரிஜினல் நிகழ்முறை இங்கிலாந்தில் ஏற்பட்டது. அந்தக் கண்டமே முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது நிலை என வேறுபட்ட கட்டங்களைக் கடந்து சென்றது.

7. எனவே நெருக்கடிகள் முதலில் இக்கண்டத்தில் புரட்சிகளை ஏற்படுத்தியபோது, அதற்கான அடித்தளங்கள் இங்கிலாந்தில் இடப்பட்டன. “வன்முறை வெடிப்புகள் இயல்பாக பூர்ஷ்வா அமைப்பின் மையத்தைவிட,

அதிலிருந்து விலகி இருக்கும் அதன் ஒரங்களிலேயே நிகழும், ஏனெனில் மையத்தில் சமரசம் செய்து கொள்ளும் வாய்ப்புகள் அங்கேவிட இங்கே அதிகம்.” இது மார்க்ஸின் ஓர் அரிதான மேற்கோள். இது, ஏகாதிபத்திய சகாப்தத்தில், ரஷ்யப் புரட்சி நிலைமைகளுடன் லெனினால் ஒப்பிடப்பட்டது. இது ஒரு மேதையின் அசாதாரணமான புத்திகூர்மையின் வீச்சு, அவர் காரல் மார்க்ஸ் –அவரே புரட்சியின் தன்மை மற்றும் நிபந்தனை நிலைமைகளை எதிர்பார்த்தார்.

8. ஐரோப்பா பொதுவான செழிப்புமிக்க காலத்தில் நுழைந்தது, உற்பத்தி சக்திகள் அபரிமிதமாக உற்பத்தி செய்து வளம் பெருக்கியபோது, குழப்பங்கள் மற்றும் நெருக்கடிக்காகப் புரட்சி காத்திருக்க வேண்டியிருந்தது

நாம் மார்க்சின் ‘பிரான்சின் வர்க்கப் போராட்டங்கள்’ படைப்பாக்கத்தைப் படிக்கவும் விவாதிக்கவும் வேண்டும். அதுவும் 21ம் நூற்றாண்டின் விஞ்ஞான தொழில்நுட்ப வளர்ச்சி தருணத்தில் இது மிகவும் முக்கியம். 

மார்க்ஸின் படைப்புகள் மீதான விவாதங்கள் தொடர்பாக

       இரண்டாம் உலகப் போரின் பின்பு உலக கம்யூனிஸ்ட் இயக்கம் (WCM) ஏராளமான விவாதங்கள் மற்றும் அரசியல் உரையாடல்களைக் கண்டது – அதில் மாறிய புதிய சூழ்நிலைகளில் மார்க்ஸின் படைப்புகளை வியாக்ஞானம் செய்த விளக்கங்களும் அடக்கம். 1960களில் நடைபெற்ற பரவலான ஆய்வுகளில் மார்க்ஸ் மற்றும் லெனின் அடிப்படை படைப்புகள் ஆய்வு நடந்தது. அவை நேர்மறையான முயற்சிகளின் பக்கம். அதற்கு வெளியேயும்கூட ஆய்வாளர்கள், அறிஞர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் என ஏராளமானோர் மார்க்ஸின் படைப்புகளைப் படித்து ஆய்வு செய்தனர்.

இந்தப் படைப்புகளில், பிரான்ஸில் வர்க்கப் போராட்டங்கள், பிரான்ஸில் சிவில் வார் (உள்நாட்டுப் போர்), 18வது புருமையர் (குறுகிய காலம் அமலில் இருந்த பிரெஞ்ச் புரட்சிகர நாட்காட்டி, நெப்போலியன் போனபார்ட் அதிகாரத்திற்கு வந்த ஆண்டைக் குறிப்பது), டூரிங்குக்கு மறுப்பு, தத்துவத்தின் வறுமை, சோஷலிசம்: உட்டோபிய கற்பனாவாதமும் விஞ்ஞானமும், இயற்கையின் இயக்கவியல், ஏகாதிபத்தியம்: முதலாளித்துவத்தின் உச்சபட்டச மட்டம் முதலான நூல்கள் அடங்கும்.

அவை மார்க்ஸிய கோட்பாடு, சித்தாந்தம், தத்துவம் மற்றும் அதன் ஆய்வுமுறையின் வளமான ஆதாரமாகவும் அமையும். மார்க்ஸியத்தைப் புரிந்து கொள்ளவும் அதைக் கற்றுத் துறைபோகவும் மார்க்ஸின் அந்தப் படைப்புகளையும் மீண்டும் படிப்பதும் ஆய்வு செய்வதும் கட்டாயமான தேவை ஆகும்.

மார்க்ஸியம், லெனினியம் வெல்க! நீடு வாழ்க!

--நன்றி : நியூஏஜ் (ஏப்.30 –மே 6)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

              

.