Tuesday 26 July 2022

வரலாற்றுப் புகழ்பெற்ற கான்பூர் போல்ஷ்விக் சதி வழக்கு -- புத்தக மதிப்புரை

 புத்தக மதிப்புரை

                                                      
                              வரலாற்றுப் புகழ்பெற்ற கான்பூர் போல்ஷ்விக் சதி வழக்கு

--திக்காராம் சர்மா

            உலக வரலாற்றில் மிகப் பெரிய நிகழ்வுகளில் ஒன்றான ரஷ்யப் புரட்சி, இயக்கங்களைப் பொதுவாகவும், விடுதலை இயக்கங்களைக் குறிப்பாகவும் ஆழமாகச் செல்வாக்கு செலுத்தியது. இந்தியா உள்ளிட்ட காலனிய நாட்டு மக்களைக் காலனிய ஆட்சிக்கும் சுரண்டல்வாதிகளுக்கும் எதிரான தங்களின் போராட்டங்களைத் தொடர உற்சாகப்படுத்தியது. அதன் விளைவாய் இந்தியாவில் தொழிலாளர் வர்க்கம் மற்றும் விவசாயிகளின் பங்கேற்புடன் ஒரு புதிய அரசியல் இயக்கம் உருக்கொண்டது. இதனால் மிரண்டுபோன பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள், இந்தியா மீது அக்டோபர் புரட்சியின் தாக்கத்தைக் கட்டுப்படுத்த, உளவுத் துறையில் “போல்ஷ்விக் இலாக்கா” என்றொரு புதிய பிரிவை ஏற்படுத்தினர்.

            மற்றொரு தாக்கம், கல்கத்தா, பாம்பே, மெட்ராஸ், லாகூர், ஒன்றுபட்ட மாகாணம் முதலான பல்வேறு நகரங்களில் அமைந்த கம்யூனிஸ்ட் குழுக்களாகும்; அந்தக் குழுக்களில் பாம்பேயின் எஸ்ஏ டாங்கே குழு, வங்கத்தில் முஸாஃபர் அகமது குழு, லாகூரில் இக்பால் குழு, உபியில் மற்றொரு குழு, மெட்ராஸில் சிங்கார வேலர் குழு போன்றவை சில உதாரணம். இது தவிர இந்தியாவில் கம்யூனிஸ்ட் கோட்பாடுகளைப் பரப்ப வெளிநாட்டிலிருந்து தீவிரமாகச் செயல்பட்ட எம் என் ராய், அவருடன் நேரடியாகத் தொடர்பு கொண்ட சௌகத் உஸ்மானி போன்ற சில இளைஞர்களுக்குக் கம்யூனிஸ்ட் பிரச்சாரம் செய்யப் பயிற்சி அளித்தார்.

எம் என் ராய் மற்றும் இந்தியாவில் கம்யூனிஸ்ட் பிரச்சாரம்  

            நரேந்திர நாத் பட்டாசார்ஜி என்கிற மணவேந்திர நாத் ராய் (எம் என் ராய்) 1915 பிப்ரவரியில் இந்தியாவைவிட்டுப் புறப்பட்டு ஐரோப்பாவைச் சென்றடைந்தார். மெக்ஸிகன்

நாட்டின் பெண் ஈவ்லின் (Evelyn) என்பவரை மணம் முடித்தார். 1921ம் ஆண்டிற்கு முன்பே கம்யூனிஸ்ட் ஆன அவர் விரைவில் கம்யூனிஸ்ட் மூன்றாவது அகிலத்தின் உறுப்பினராகி அதனது கீழை நாடுகளின் துறையின் தலைவரானார். 1921 மே 15ல் பெர்லினில் “இந்தியச் சுதந்திரத்திற்கான முன்னோடி” (தி வேன்கார்டு ஆப் இந்தியன் இன்டிபென்டன்ஸ்) என்ற கம்யூனிஸ்ட் பத்திரிகையைத் தொடங்கினார். பின்னர் பத்திரிக்கை தலைப்பு வேன்கார்டு என்பதிலிருந்து அட்வான்ஸ் கார்டு (முன்னணிப் படை) என மாற்றப்பட்டது. பத்திரிக்கையின் நகல்கள் இந்தியாவிற்கு அனுப்பப்பட்டன. அதன் விளைவு உடனே வெளிப்பட்டது; கல்கத்தா அமிர்த் பஜார் பத்திரிக்கா தொடர்ச்சியாகக் கட்டுரைகளை வெளியிட்டது, அது வேன்கார்டு பத்திரிக்கை தந்த உற்சாகத்தின் விளைவே என்பது வெளிப்படை. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிப் பிரச்சாரம், பிற செயல்பாடுகளுக்கு நாடு முழுதும் முகவர்கள் / தொடர்பு கொண்டிருந்தார் ராய். அவர்கள் இந்தியாவில் கம்யூனிச செய்தித்தாள்கள், இலக்கியங்களை விநியோகிப்பதை வழக்கமாகக் கொண்டனர்.

கான்பூர் சதிவழக்கு பின்னணி

            நான்காவது கம்யூனிஸ்ட் அகிலத்தின் மாநாட்டிற்கு இந்தியாவிலிருந்து பிரதிநிதிகளைப் பங்கேற்கச் செய்ய ராய் மேற்கொண்ட ஆகச் சிறந்த முயற்சிகள் வெற்றிபெறவில்லை. பிறகு அவர் பெர்லினில் ஒரு மாநாடு நடத்தும் யோசனையை முன் வைத்து டாங்கே, சிங்கார வேலர், மற்றும் குலாம் ஹாசனைப் பங்கேற்க வேண்டினார், ஆனால் அதுவும் சாத்தியமாகவில்லை. இருவார பத்திரிக்கையான வேன்கார்டு ஆசிரியர் பொறுப்பிலிருந்து அதை வெளியிட்டதுடன் ராய் பின்வரும் தலைப்புக்களில் மூன்று சிற்றேடுகளை வெளியிட்டார்: “மாற்றத்தின் வாயிலில் இந்தியா”, “இந்தியாவின் பிரச்சனைகளும் தீர்வும்” மற்றும் “நமக்கு என்னதான் வேண்டும்?” என்ற பிரசுரங்களைப் பிரச்சாரத்திற்காகவும் தேச விடுதலை மற்றும் உரிமைகளுக்காக இந்தியர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தவும் வெளியிட்டார். அவரது குழு, விவசாயிகள் மற்றும் தொழிலாளர் வர்க்கத்தைத் திரட்டி அவர்களிடையே தத்துவார்த்த பற்றுறுதியை மலரச் செய்வதை ஆதரித்தது. பிரிட்டிஷ் அரசு முக்கிய மையங்களில் அவர்களது செயல்பாடுகளை முடக்கவும், ராய் மற்றும் இந்தியாவில் அவரது முகவர்களை இழிபடுத்தவும் முடிவு செய்தது. இந்த அனைத்து வளர்ச்சிப் போக்குகளையும் நசுக்க பிரிட்டிஷ் அரசு கான்பூர் போல்ஷ்விக் சதி வழக்கை ஜோடிக்கத் தொடங்கியது.

            ஒரு நீதிபதி நியாயமற்று நடந்து கொள்வதிலிருந்து தடுக்க அங்கே சான்றோர் அவை போன்ற ஜூரி முறை இல்லாத காரணத்தால் வழக்கைக் கான்பூரில் நடத்துவது என முடிவாயிற்று. செஷன்ஸ் நீதிபதி ஹெச் இ ஹோம்ஸ்-உம் அதேபோல கொடுமையான மனிதன், ஒரு வருடம் முன்புதான் உபி மாநில கோரக்பூர் சௌரி சௌரா வழக்கில் அவர் 172 விவசாயிகளுக்கு மரண தண்டனை விதித்தார். தற்போது 1924 மே 20ல் மத்திய உளவு அமைப்பின் இயக்குநர் 13 பேர்கள் அடங்கிய பட்டியலை அரசு வழக்கறிஞரின் கருத்தை அறிவதற்காகத் தாக்கல் செய்து, அவர்களுக்கு எதிராகச் சதி வழக்கைத் தொடுத்தார்.

குற்றச்சாட்டும் குற்றம் சாட்டப்பட்டவர்களும்

            மாட்சிமை தங்கிய பேரரசரின் பிரிட்டிஷ் இந்தியா இறையாண்மையை மறுத்தார்கள் என்பது அவர்களுக்கு எதிரான குற்றச்சாட்டுகள், எனவே இந்தியக் குற்றவியல் சட்டம் 121 ஏ பிரிவின் கீழ் அவர்கள் சட்டப்படி விசாரிக்கப்பட வேண்டியவர்கள். ஆவணங்களைப் பரிசீலித்த பிறகு பட்டியலிருந்து 5 பேர்கள் விடப்பட்டு மீதமுள்ள எம் என் ராய், முஸாஃபர் அகமது, சௌகத் உஸ்மானி, குலாம் ஹாசன், ஸ்ரீபத் அம்ரித் டாங்கே, சிங்காரவேலுச் செட்டியார், ராம் லால் சர்மா மற்றும் நளினி குப்தா ஆகிய எண்மர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார்கள்.

எஸ் ஏ டாங்கே

            இந்தியாவில் ராய் கட்சியின் தலைமைப் பொறுப்பில் பாம்பேவிலிருந்து எஸ் ஏ டாங்கே

நியமிக்கப்பட்டார். “சோஷலிஸ்ட்” என்ற இதழின் ஆசிரியராக அவர் இருந்தார். ‘காந்தி எதிர் (ஒப்புமை) லெனின்’ என்ற அவர் எழுதிய சிறுபிரசுரம் எம்என் ராயின் கவனத்தை ஈர்க்க அவர் தமது குறிக்கோள் திட்டத்தை டாங்கேவிடம் மாற்றினார். டாங்கேவின் சீடர்களில் ஒருவரான சத்யபக்த்(தா), ‘பிராண்வீரா’ என்ற சமூக வெளியீட்டை நாக்பூரிலிருந்து தயாரித்து வந்தார். பாம்பேயில் 1924 மார்ச் 6ல் டாங்கே கைதானார். “இந்தியாவில் கம்யூனிசத்தைச் செலுத்தும் ஊக்க உணர்வாக டாங்கே காட்சியளிக்கிறார்” என்பது டாங்கே குறித்த உளவு அமைப்பு (இன்டலிஜென்ஸ் பீரோ) இயக்குநர் சிசில் காயே கருத்து. பம்பாய் அரசின் செயலாளர் இந்திய அரசின் உள்துறைக்கு, “டாங்கே ஓர் இழிவான பெயரெடுத்த (நொட்டோரியஸ்) கம்யூனிஸ்ட் மற்றும் கிருத்துவத்துக்குப் புனிதத் திருமுழுக்கு யோவான் அல்லது புதிய அருளப்பர் போல இந்தியாவில் கம்யூனிசத் தத்துவத்தைப் பரப்பும் புனித ஜான் ஆவார்” என்று எழுதினார்.

            முகமது சௌகத் உஸ்மானி இராஜஸ்தான் பிக்கானீரைப் பூர்வீகமாகக் கொண்டவர். தாஷ்கண்ட்டில் ராயைச் சந்தித்து அவருடன் மாஸ்கோ சென்று “புரட்சிகரப் பள்ளி”யில் ஒரு
பாடத்திட்டத்தைக் கற்றார். 1922 மத்தியில் பம்பாய் அடைந்தவர் காசி மற்றும் கான்பூரில் கட்சிக் கிளைகளை அமைப்பதில் வெற்றிபெற்றார். காசியில் அவரது பெரும்பாலான ஆதரவாளர்கள் பல்கலைக் கழக மாணவர்களும்
சம்பூரானந்த் என்றப் பேராசிரியருமாவர். ஓர் அரசியல் கிளச்சியாளர் எனப் பரவலாக அறியப்பட்ட பேராசிரியர் சுற்றுக்குவிட்ட “ஸ்வராஜ்” என்ற செயல் திட்டம் போல்ஷ்விக் மனப்போக்குகளை வெளிப்படுத்தியது. 1923 மே 8ம் நாள் கான்பூரிலிருந்து கைது செய்யப்பட்ட உஸ்மானிக்கு எதிராகப் பெஷாவர் சதி வழக்கில் பிடியாணை இருந்ததால் அவர் பெஷாவர் சிறைக்கு மாற்றப்பட்டார். ஆளால் நீண்ட கடும் தாமதம் காரணமாகப் பெஷாவர் சதி வழக்கு பின்னர் கைவிடப்பட்டது.

            நளினி குப்தாவின் முழு பெயர் நளினி பூஷண் தாஸ் குப்தா; வங்கத்திலிருந்து வந்த அவர்

ராயின் அறிவுறுத்தலின் கீழ் போல்ஷ்விக்குகளுடன் தூதராகத் தொடர்பில் இருந்தவர். 1921 டிசம்பரில் கொழும்பு வழியாக அவர் இந்தியா வந்தடைந்தார். கம்யூனிஸ்ட் கட்சியை அமைக்க கம்யூனிஸ்ட் கருத்துக்களைப் பரப்பவும், தேசியவாதிகள் அல்லது புரட்சியாளர்களின் ஆதரவை வென்றிடுவதற்குமான பொறுப்பு அவருக்கு அளிக்கப்பட்டது, ஆனால் அந்தக் கடமைமையை நிறைவேற்றுவதில் அவர் தோல்வியடைந்தார். அவருடைய பங்கிற்கு ஒரே வெற்றி முஸாஃபர் அகமதைச் சந்தித்து அவரை ராயின் செயல் திட்டத்தில் இணைத்ததுதான். அவர் கைதானார் ஆனால் பின்னர் பிரிட்டிஷ் தகவல் உளவாளியாக வேலை செய்தார். என்றாலும் (காட்டிக் கொடுத்த) இந்தச் செயல் அவருக்கு உதவவில்லை: அவருக்கும் நான்கு ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்பட்டது. சிறையில் சில காலம் சென்று நோய்வாய்ப்பட, 1925லேயே விடுதலை ஆனாலும் அதன் பின்னர் அரசியல் இயக்கத்தில் அவர் எங்கும் தென்படவில்லை.

சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர்

            மெட்ராஸ் உயர்நீதிமன்ற முன்னணி வழக்கறிஞரான எம் சிங்காரவேலு செட்டியார்

மெட்ராஸில் ஒரு கம்யூனிஸ்ட் குழுவை நடத்தி வந்தார். இந்துஸ்தான் தொழிலாளர் விவசாயக் கட்சியை அங்கே அமைத்துக் கட்சியின் அறிக்கை (மெனிஃபெஸ்டோ) வரைவு அமைப்பு விதிகளை உருவாக்கினார். கம்யூனிசம் குறித்தப் பல கட்டுரைகளை “ஹிந்து” பத்திரிக்கையில் அவர் எழுதினார். இதன் விளைவாக எம் என் ராய், அவரைப் பின்பற்றும் எஸ்ஏ டாங்கே மற்றும் பிறரைப்போல சிங்காரவேலு செட்டியாரையும் அணியில் சேர்த்துக் கொண்டார். 1924 மார்ச் 6ம் நாள் எம் சிங்காரவேலு செட்டியாருக்கு எதிராகப் பிடியாணை கைது உத்தரவிடப்பட்டது. எனினும் மார்ச் 7ம் நாளே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டு அவரது வீட்டிலேயே இருக்க அனுமதிக்கப்பட்டார். மருத்துவரீதியாகத் தகுதியில்லாத காரணத்தால் அவர் மீதான குற்ற விசாரணை நடத்தப்படவில்லை, மேலும் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் ரத்தாயின.

            கல்கத்தாவின் கம்யூனிஸ்ட் குழு ஒரு பத்திரிக்கையாளரான முஸாஃபர் அகமதால்
தொடங்கப்பட்டது. 1922ன் தொடக்கத்தில் நளினி குப்தா அவரைச் சந்தித்தார். அதுநாள் முதலாக அவர் ராயுடன் நேரடிக் கடிதத் தொடர்பில் இருந்ததுடன் அவரிடமிருந்து வழக்கமாகச் சிறு தொகையும் பெற்றார்.
“பூம்கேது” என்ற செய்திப் பத்திரிக்கையின் தயாரிப்புக்குப் பொறுப்பான சில தனிநபர்கள் குழுவுடன் அவர் தொடர்பு கொண்டார். இரண்டு முறை அந்தப் பத்திரிக்கை மற்றும் தொழிலாளர் தலைவர்கள் முகண்ட லால் சிர்கார் மற்றும் ஜெ என் விஸ்வாஸ் இருவருக்கு எதிராகவும் அரசு நடவடிக்கை எடுத்தது. சிங்கார வேலுவும் உடன் குற்றம் சாட்டப்பட்டிருந்தாலும் அவருடைய முதிய வயது மற்றும் அவரது உடல் நலன் கருதி குற்றச்சாட்டுகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.

தண்டனை மேல்முறையீடு

             சதி வழக்கால் பாதிக்கப்பட்ட நளினி குப்தா, முஸாஃபர் அகமது, ஸ்ரீபாத அமிர்த் டாங்கே மற்றும் சௌகத் உஸ்மானி ஆகிய நான்கு பேருக்கும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. பாதிக்கப்பட்ட நால்வரும் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அது நிராகரிக்கப்பட்டது. எம் என் ராய் மற்றும் ராம் சரண் லால் சர்மா நாட்டிற்கு வெளியே இருந்ததால் அந்த நேரத்திற்கு விசாரணை கைவிடப்பட்டது. எனினும் 1931 ஜூலை 1ம் நாள் பம்பாயில் ராய் கைது செய்யப்பட்டார். கூடுதல் செஷன்ஸ் நீதிபதி முன் அவரை விசாரணைக்குக் கொண்டு வந்தபோது, நீதிமன்றத்திற்கு வருவதைத் தவிர விசாரணை நிகழ்வு எதிலும் பங்கேற்பதில்லை என்ற நிலைபாட்டை எடுத்தார். இபிகோ 121-ஏ பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றம் இழைத்ததாக அவரைக் குற்றவாளி என அறிவித்த நீதிபதி (நாடு கடத்துவதுபோல நாட்டிற்குள்ளேயே நீண்ட தொலைவில் குறிப்பிட்ட இடத்தில் இருக்கும்) சிறைக்குக் கடத்தி (ட்ரான்ஸ்போர்ட்டேஷன்) 12 ஆண்டுகள் அடைத்து வைக்கும் தண்டனை விதித்தார், பின்னர் மேல்முறையீட்டில் அது ஆறு ஆண்டுகளாகக் குறைக்கப்பட்டது. ராம் சரண் லால் சர்மாவைக் கைது செய்ய முடியவில்லை. குலாம் ஹாசன் தானாகப் போலீஸில் சரணடைந்து எம் ஷஃபீக் வழக்கில் அரசுத் தரப்பு சாட்சியாகச் செயல்பட்டார்.

நூலாசிரியர் குறித்து

            இந்நூலின் ஆசிரியர் ஆர் எஸ் யாதவ் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசியக் குழு உறுப்பினர், கட்சியின் இந்திப் பத்திரிக்கையான ‘முக்தி சங்கார்ஷ்’ (விடுதலைப் போராட்டம்) இதழின் பத்திரிக்கையாளர். இந்தியாவில் தொழிலாளர் பிரச்சனைகள், இந்தியப் பொருளாதாரம் இந்திய அரசியல் முறைமை, வரலாறு முதலான பல்வேறு தலைப்புக்களில் கட்டுரைகள் மற்றும் புத்தகங்கள் எழுதியவர். ஆசிரியரின் இந்த நூல் அளப்பரிய மதிப்பும் முக்கியத்துவமும் உடையது.

            இந்நூல், விடுதலைப் போராட்டம் மற்றும் ரஷ்யப் புரட்சிக்குப் பின் பொதுவாக நாட்டிலும் குறிப்பாகக் கான்பூரிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உருக்கொள்ளத் தொடங்கிய துவக்க ஆண்டுகளின் நிகழ்வுகள் தொடர்பான காட்சிகளின் மிகச் சிறந்த விவரிப்பாக உள்ளது. இவை தவிர நான்கு முக்கியமான ஆவணங்கள் ‘ஜாயிண்ட் மேஜிஸ்டிரேட்டின் தி கமிட்டல் ஆர்டர்’, ‘செஷன்ஸ் நீதிபதி தீர்ப்பு’, ‘மேல் முறையீட்டில் உயர்நீதிமன்றத் தீர்ப்பு’, ‘எம் என் ராய் வழக்கில் கூடுதல் செஷன்ஸ் நீதிபதி தீர்ப்பு’ இவை நூலின் பின்னிணைப்பாக இணைக்கப்பட்டுள்ளன. நூலின் மொழி நடை எளிமையாகவும் படிப்போர் சுலபமாகப் புரிந்து கொள்ளும் வகையிலும் உள்ளது. பெரும் மதிப்புடைய தகவல்களைத் திரட்டுவதில் நூலாசிரியர் எடுத்துக் கொண்ட சிரமங்கள், புத்தகத்தை மேலும் ஆர்வமுடையதாகப் படிக்கத் தூண்டுகிறது. நிச்சயமாக இந்நூல் சாதாரண வாசகர்களால் விரும்பப்படும் என்பதுடன் வரலாற்று மாணவர்கள் மற்றும் ஆய்வறிஞர்களுக்கு பெரிதும் உதவியாக இருக்கும் என்பதில் ஐயமில்லை.

(நூலாசிரியர் ஆர் எஸ் யாதவ், 

பியூபிள்ஸ் பப்ளிஷிங் ஹவுஸ் வெளியீடு, அக்டோபர் 2021, விலை ரூ400/=)

--நன்றி : நியூஏஜ் (ஜூலை17 –23)

--தமிழில் நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர் 

                                               

 

                

 

Monday 25 July 2022

லேபர் கோடு அமலாக்கம் சிக்கலாகிறது

 
       தொழிலாளர் குறுங்குறிகள்         அமலாக்கம் சிக்கலாகிறது

--ஞான் பதக்

            புதிதாகக் கொண்டுவரப்பட்ட தொழிலாளர் குறுங்குறிகள் (லேபர் கோடு) அமலாவதில் சிக்கல் நீடிக்கிறது, அந்தச் சிக்கல்களை மோடி அரசு தீர்க்கும் என்பதற்கான அறிகுறி எதுவும் இல்லை. அமலாக்கத்தின் வழியில் தடைகள் பல. லேபர் பொதுப் பட்டியலில் வருவதால் மாநில அரசுகளும் குறுங்குறிகளுக்கான விதிகளை இயற்றி ஒப்புதல் தர வேண்டும். இன்னும் எல்லா மாநிலங்களும் தேவையான சட்டவிதிகளை வரைவதில் தயாராகவில்லை. மேலும் குறைந்த பட்ச ஊதியம் குறித்து நியமிக்கப்பட்ட எஸ்பி முகர்ஜி கமிட்டி செப்டம்பருக்கு முன்பு தனது அறிக்கையைக் கொண்டுவரும் நிலையில் இல்லை. இரண்டு குறுங்குறிகள் குறித்து முதலாளிகள் மற்றும் தொழில்துறை அமைப்புக்கள் தங்கள் தரப்புக் கவலைகளை எழுப்பி உள்ளன. மத்தியத் தொழிற்சங்கங்கள் குறுங்குறிகளை முற்றாக ரத்து செய்யக் கோரி தங்கள் நிலைபாட்டை மேலும் இறுக்கமாக்கி உள்ளன. குறுங்குறிகள் அமலாக்கத்தால் ஏற்படக்கூடிய அரசியல் விளைவுகள் குறித்தும், அமல்படுத்தும் நேரம் மற்றும் சட்ட விதிகளை வெளியிடும் முறைகள் சம்பந்தமாகவும் ஆளும் அமைப்புக்குள்ளேயே வேறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன.

    ஒன்றிய தொழிலாளர் மற்றும் பணியமர்த்தல் அமைச்சரகம் சொல்வதிலும் அதன் தொணியிலும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்பட்டிருப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை; இந்தக் குறுங்குறிகளின் கீழ் ஏற்கனவே இயற்றப்பட்ட விதிகளின் சில அம்சங்களை-- குறிப்பாக, ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்புக் குறுங்குறிகள் சம்பந்தமானவற்றை--  மறுபரிசீலனை செய்ய இப்போது அவர்கள் வெளிப்படையாக இருப்பதாக அறியப்படுகிறது. ஒன்றியத் தொழிலாளர் அமைச்சர் பூபேந்திர யாதவ், “புதிய விதிகள் பொருத்தமான நேரத்தில் அமலாக்கப் படும்” என்று கூறினார். எனினும், அதன் மூலம் உண்மையில் அவர் எதை உணர்த்துகிறார் என்பதை விளக்கவில்லை.

            அப்பொருத்தமான நேரம் ஏற்கனவே இழக்கப்பட்டுவிட்டது என்றே ஆளும் நிர்வாகம் பொதுவாக எண்ணுகிறது. 2017ல் குறுங்குறிகளை உருவாக்கும் நிகழ்முறை தொடங்கி  ஐந்தாண்டுகள் கடந்தாகிவிட்டது. ஊதியம் மீதான குறுங்குறி 2019ல் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது, ஏனைய மூன்றும் -- தொழில் உறவுகள் குறுங்குறி, சமூகப் பாதுகாப்புக் குறுங்குறி மற்றும் பணியிடப் பாதுகாப்பு, சுகாதார நலன் மற்றும் பணிநிலைமைகள் குறித்த குறுங்குறி –2020லேயே நிறைவேற்றப்பட்டன. லேபர் பொதுப்பட்டியல் விஷயம் எனபதால், ஒன்றிய அரசு அமலாக்கத்திற்கான இறுதி அறிவிக்கையை வெளியிடும் முன்பு,  மாநிலங்களும் தங்களுக்கான சட்டவிதிகளை உருவாக்கி தங்கள் அரசிதழ்களில் வெளியிட வேண்டிய கட்டாயத் தேவை உள்ளது. ஆனால் மாநிலங்கள் கோவிட் 19 நெருக்கடியில் இருந்ததால் அவற்றால் அதைச் செய்து முடிக்க இயலவில்லை.

            பல விஷயங்களுக்கான அமலாக்கத்திற்கான இறுதித் தேதி குறிக்கப்பட்டும், அவை தவறவிடப்பட்டன. மிக சமீபத்தில் அவ்வாறு ஜூலை 1 முதல் என்று அறிவிக்கப்பட்டது தற்போது அதன் அமலாக்கம் ‘பொருத்தமான நேரம்’ என்றாகியுள்ளது; என்றாலும், உள்ளார்ந்த தடைகள் மற்றும் அதிகரிக்கும் சிக்கல்களால் அந்த நாள் விரைவில் வர வாய்ப்பில்லை. 2022 ஆண்டின் இறுதி அல்லது 2023 ஆண்டின் தொடக்கம் என்பதாக அது தாமதிக்கப்படலாம்; மேலும் எதிர்மறையான அரசியல் விளைவுகள் குறித்த அச்சம் வலிமையாகும் பட்சத்தில் மோடி அரசு அதன் அமலாக்கத்தை 2024 பொதுத் தேர்தல்களுக்குப் பிறகு என ஒட்டுமொத்தமாகத் தள்ளி வைக்கவும் கூடும்.

மாநிலங்களில் வரைவுவிதிகள் தாமதம் 

          இந்நான்கு குறுங்குறிகளுக்கும் 24 மாநிலங்கள் மட்டுமே சட்டவிதிகளை வரைந்துள்ளன. மேற்குவங்கத்தில் நான்கிற்குமான வரைவு விதிகள் இன்னும் நிலுவையில் உள்ளன. இராஜஸ்தானில் மூன்று நிலுவையில். ஆந்திரா, மேகாலயா மற்றும் நாகாலாந்து மாநிலங்களிலும் வரைவு விதிகள் தயாராகவில்லை. பெரும்பாலான மாநிலங்களில் சமூகப் பாதுகாப்பு மற்றும் பணிசார்ந்த பாதுகாப்புக் குறுங்குறி சம்பந்தமாகவே விதிகள் வரைவு நிலுவையில்உள்ளது. ஊதியக் குறுங்குறியின் கீழ் 30 மாநிலங்களும், தொழிலகத் தொடர்பு குறுங்குறியின் கீழ் 26 மாநிலங்களும், பணிசார்ந்த பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமை மற்றும் சமூகப் பாதுகாப்புக் குறுங்குறியின் கீழ் 24 மாநிலங்கள் மட்டுமே தேவையான வரைவுச் சட்ட விதிகளை உருவாக்கியுள்ளன. இந்திய நாடு முழுவதும் தொழிலாளர் குறுங்குறிகள் முறையாக அமல்படுத்தப்பட வேண்டுமானால் அனைத்து மாநிலங்களும் தங்கள் மாநிலத்திற்கான விதிகளை வரையறுக்க வேண்டியது மிக அவசியம்.

          நான்கு குறுங்குறிகள் கீழும் ஏற்படுத்தப்பட்ட விதிகள் மோசமாக வரையப்பட்டிருப்பதாக மாநிலங்கள் புகார் தெரிவிக்கின்றன. கேரள மாநிலத் தொழிலாளர் துறை அமைச்சர் கேரள சட்டமன்றத்தில் பேசும்போது, “குறுங்குறிகளின் கீழுள்ள பெரும்பான்மையான ஷரத்துக்கள் ‘தொழிலாளர் விரோத’மாக இருப்பதால் அதற்கான வரைவுச் சட்ட விதிகளை மாநில அரசு மிகுந்த தயக்கத்துடன்தான் தயாரித்தது” என்று அதிகாரபூர்வமாகவே குறிப்பிட்டார்.

       ஒன்றிய அரசு அமைப்புக்குள்ளும் வேறுபாடுகள் உள்ளன. பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் கடந்த ஆண்டு அறிக்கை ஒன்றில் நான்கு குறுங்குறிகளும் (முன்பு இருந்த) 29 சட்டங்களின் எளிய கூட்டுத்தொகுப்பே என்றும், அதில் சில முரண்பாடுகள் கருத்தில் கொள்ளப்படவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த நான்கிற்குப் பதிலாக, அந்த இடத்தில் நன்கு ஒருங்கிணைக்கப்பட்ட தொழிலாளர் குறுங்குறி ஒன்று மட்டுமே இந்தியாவுக்குத் தேவை.

            மேலும் அதன் அமலாக்க முறை குறித்தும் கருத்து வேறுபாடுகள் உள்ளன. அரசில் சிலர் அவற்றை ஒட்டுமொத்தமாக ஒரே கட்டமாக அமல்படுத்த வேண்டும் என்று கருதுகின்றனர்; மற்றவர்களோ இன்றுள்ள நிலையில் அவை கட்டம் கட்டமாக மெல்ல அமல்படுத்தப்பட வேண்டும் என்கின்றனர். 

குறைந்தபட்ச ஊதிய நிர்ணய முறை

            ஊதியம் குறித்த குறுங்குறியின் கீழ் தேசியக் குறைந்தபட்ச ஊதியத்தை நிர்ணயிப்பது முக்கியமான ஒன்று. பல தடைகளுக்கு மத்தியில் இதற்கான எஸ்பி முகர்ஜி குழு பணியாற்றி வருகிறது. எதிர்வரும் செப்டம்பருக்கு முன் குழுவின் அறிக்கை தாக்கலாக வாய்ப்பில்லை. குழுவின் உறுப்பினர்களிடையே கருத்து வேறுபாடு, பெரும் உடன்பாடின்மைக்கு மத்தியில் குறைந்த பட்ச ஊதியத்தை கணக்கிடும் முறை மட்டுமே இறுதி செய்யப்பட்டுள்ளது; அதன்படி, அது சத்தான உணவின் தேவை மற்றும் நுகர்ச்சிக்கான செலவின் அடிப்படையில் நிர்ணயிக்கப் படும், அதற்குத்தான் தொழிற்சங்கங்களும் வலியுறுத்தின.

     முகர்ஜி மற்றொரு முறையை (மெத்தடாலஜி) ஆதரித்தார். அது பன்மைக் காரணிகள் அடிப்படையில் முடிவை மேற்கொள்ளும் முறை. (பிரச்சனையை வரையறுப்பது, தேவைகளை அடையாளம் காண்பது, இலக்குகளை நிர்ணயிப்பது, பல்வேறு மாற்றுவழிகளை அடையாளம் காண்பது, காரணிகளை வளர்த்தெடுப்பது மற்றும் முடிவெடுக்கும் நுட்பத்தைப் பயன்படுத்தல் போன்ற ஆறு நிலைகளை உள்ளடக்கியது.) இதன் பிறகும் இடர்பாடுகள் உண்டு, ஏனெனில் தொழிலகங்கள் மற்றும் வணிகக் குழுமங்களின் கருத்துக்களையும், யோசனைகளையும் கருத்தில் கொண்டாக வேண்டும். இது தவிர, பத்தாண்டுகளுக்கு முற்பட்ட 2011 –22 பழைய தரவுகளைச் சார்ந்திருக்காமல், 2022ம் ஆண்டின் உணவு விலைவாசி செலவுக் குறியீட்டைக் கொண்டு வந்து அந்தப் புதிய தரவைப் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்.

           முதலாளிகளின் அமைப்புக்களான CII (இந்தியத் தொழில்துறை மகாசம்மேளனம்) மற்றும் FICCI (இந்திய வணிக மற்றும் தொழில்துறை அமைப்புச் சம்மேளனம்) குறைந்த பட்ச ஊதியம் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்கான முன்மொழியப்பட்ட சட்ட விதிகள் குறித்துத் தங்கள் சந்தேகத் தயக்கங்களை வெளியிட்டுள்ளன. இந்தப் பின்னணி தொடர்பில்தான் ஒன்றிய தொழிலாளர் மற்றும் பணியமர்த்தல் அமைச்சரகம் மேலும் விவாதங்களை நடத்திய பிறகு விதிகளை மறுபரிசீலனை செய்வதாக அறிவித்துள்ளது. முதலாளிகள், தாங்கள் பெரும் நிதி நெருக்கடியில் துன்பப்படும் நேரத்தில் குறுங்குறிகள் சட்டங்களை அமலாக்குவது தங்களின் நிதிச் சுமையை அதிகரிக்கும் என கவலை தெரிவித்துள்ளனர்.

            மத்தியத் தொழிற்சங்கங்களின் ஒன்றுபட்ட முன்னணி ஏற்கனவே தங்கள் நிலைபாட்டை இறுக்கமாக்கி உள்ளது. குறுங்குறிகள் அமலாக்கப்பட்டது முதல் அது பெரும்பாலான

தொழிலாளர்களைத் தொழிலாளர் நலச் சட்டங்களின் பயன்களைப் பெறும் பாதுகாப்பு வளையத்திலிருந்து வெளியேற்றிவிடும் எனக் கூறுவதுடன், குறுங்குறிகளை ரத்து செய்ய வேண்டும் எனவும் வலியுறுத்திக் கோருகிறது. குறுங்குறிகளுக்கு எதிராக அவர்கள் ஏற்கனவே மூன்று பொது வேலை நிறுத்தங்களை நடத்தியதுடன், மேலும் கடுமையான போராட்டத்திற்குத் தங்களைத் தயார்படுத்தி வருகின்றனர். துண்டு துண்டாக அணுகுவதை நிறுத்தி நான்கு குறுங்குறிகளுக்குமான அனைத்துச் சட்டவிதிகளையும் முழுமையாக வெளியிடும்படி மத்தியத் தொழிற்சங்கங்கள் ஒன்றிய அரசைக் கேட்டுள்ளன.

அரசு ஆதரவு பிஎம்எஸ் எதிர்ப்பு

      பாஜக ஆதரவுத் தொழிற்சங்கமான பாரதிய மஸ்தூர் சங் (பிஎம்எஸ்) அமைப்பும்கூட

தொழில்உறவு குறுங்குறி மற்றும் பணிசார்ந்த பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணிநிலைமைகள் மீதான குறுங்குறியின் சில ஷரத்துக்களை எதிர்க்கிறது. ஒட்டுமொத்தமாகக் குறுங்குறிகள் அனைத்தையும் ஒரே மூச்சில் அமலாக்குவதையும் பிஎம்எஸ் எதிர்க்கிறது. சம்பந்தப்பட்ட உரிமை உடைய அனைவருடனும் பேச்சு வார்த்தை நடத்தி வேறுபாடுகளுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும்; தொழிலாளர்கள், முதலாளிகள் மற்றும் அரசு இவற்றின் மத்தியில் ஒருமித்தக் கருத்து உள்ள விதிகள் மட்டுமே முதலில் அமலாக்கப்பட வேண்டும் என்றும் அத்தொழிற்சங்கம் கூறுகிறது. மேலும் தொழில் உறவுகள் குறுங்குறி, குறிப்பாகப் பதிவு செய்வது மற்றும் மத்தியத் தொழிற்சங்கங்கள் செயல்பாடு குறித்த ஷரத்துக்களின் மீது அரசு ஆதரவு பிஎம்எஸ் அமைப்பும்கூட கவலையை வெளிப்படுத்தியுள்ளது.

   குறுங்குறிகளை அமலாக்குவது தொடர்பான முன்மொழிகளால் எதிர்பார்க்கப்படும இடர்பாடுகளுக்குத் தீர்வு காணத் தொழிற்சங்கங்கள், ஆலைத் தரப்புப் பிரதிநிதிகள் குழுவினருடன் விவாதங்களை நடத்துவதில் ஒன்றிய தொழிலாளர் மற்றும் பணியமர்த்தும் அமைச்சரகம் ஈடுபட்டுள்ளது. கருத்து வேறுபாடுகளுக்குப் பேசி தீர்வுகாண ஒன்றிய அரசு தொழிலாளர்கள் மற்றும் முதலாளிகள் அமைப்புகளிடம் புதிய வாய்ப்புக்களை வழங்கி உள்ளது.

சீரமைப்புக்கள் தொழிலாளர் நலன்களைச் சீரழிக்க அனுமதிக்க முடியாது.

--நன்றி : நியூஏஜ் ( ஜூலை 24 –30)

--தமிழில் : நீலகண்டன்,
         என்எப்டிஇ, கடலூர்

 

Wednesday 20 July 2022

கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் வரலாறு 67 -- தர்ஷன் சிங் ‘கனடியன்’

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 67


       
தர்ஷன் சிங் ‘கனடியன்’ --

                         கனடா கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் மற்றும் சிபிஐ தலைவர்

                                                 --அனில் ரஜீம்வாலே

        கனடா கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் ஜார்ஜ் கிடோரா கூற்றின்படி, தர்ஷன் சிங் சங்கா பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணம் (கனடாவின் மேற்குப் பகுதி) மற்றும் கனடாவின் தொழிற்சங்கம் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் தனது முத்திரையைப் பதித்துக் கனடிய தொழிலாளர்களின் புகழ்பெற்ற தலைவரானவர். மற்றொரு கனடிய கம்யூனிஸ்ட் ஹர்ஜித் தௌதாரியா, ‘தர்ஷனின் வாழ்க்கையின் ஆய்வு மற்றும் பங்களிப்பு அவரது பெயரில் ஓர் (அறக்கட்டளை) அமைப்பை உருவாக்கியது’ என்று கூறினார். புலம்பெயர்ந்தவர்களுக்காகவும் கனடா கம்யூனிஸ்ட் கட்சி கொள்கைகளுக்காகவும் தர்ஷன் சிங் பெருமையுடன் போராடினார். இதன் விளைவாய் அவர் தர்ஷன் சிங் ‘கனடியன்’ என்றே புகழப்பட்டார்.

குடும்பப் பின்னணி

            தர்ஷன் சிங் சங்கா 1917 மார்ச் 13ல் பஞ்சாப் மாநிலம், ஹோஷியார்பூர் மாவட்டம், கார்சங்கர் தாலுக்காவின்  லங்கேரி என்ற கிராமத்தில் பிறந்தார். தந்தை ஸ்ரீ தேவா சிங், தாயார் திருமதி ராவ். தர்ஷன், பாய் பியரா சிங் லங்கேரி போன்ற கதர் இயக்கத் தலைவர்களின் ஆழமான செல்வாக்கிற்கு ஆளானார். (கதர் இயக்கம், இந்தியச் விடுதலைக்குப் போராடிய, அமெரிக்கா, கனடா போன்ற வெளிநாடுகளில் வாழ்ந்த பஞ்சாபியர்கள் தொடங்கிய இயக்கம்.). தர்ஷன் பள்ளிக் கல்வியை முடித்தார்.

            தர்ஷனது குடும்பம் வெறும் மூன்று அல்லது நான்கு ஏக்கர் நிலமுடைய ஏழை விவசாயக் குடும்பம். 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இப்பகுதியிலிருந்து மக்கள் கனடா மற்றும் அமெரிக்காவுக்குப் புலம்பெயரத் தொடங்கினர். அவர்கள் காவல் மற்றும் இராணுவத்திலும் சேர்ந்தனர், பலர் ஷாங்காய் மற்றும் ஹாங்காங் சென்றனர். கனடாவில் இருந்த தர்ஷனின் மாமாக்களில் ஒருவரான ஹர்ஷ்லி, தர்ஷனைக் கனடா அனுப்பும்படி அவரது தந்தையை வற்புறுத்தினார். எப்படியோ 800 ரூபாயைத் திரட்டிய குடும்பம் தர்ஷனை அனுப்பி வைத்தது. நான்கு நாட்கள் பயணம் செய்து கல்கத்தா சென்றவர் பின்னர் சரக்கு வண்டியில் ஹாங்காங் சென்றார். அப்போது அவர் வயது 18. அது ஒரு கொடுமையான பயணம். அங்கிருந்து படகு எதுவும் கிடைக்காததால், மீன்பிடி மிதவை போன்ற சீன மரக்கலத்தில் சீற்றமான கடலில் ஐந்தாறு நாட்கள் பயணித்து ஷாங்காய் சென்றார். 1937 மார்ச் 13ல் வான்கூவர் வந்தடைந்தார்.

            மாமா ஹர்ஷ்லி தான் பணி செய்து வந்த கபூர் லும்பர் கம்பெனியான மரவாடிக்கு அவரை அழைத்துச் சென்றார். ஷர்ஷனுக்கு வேலை வாங்கிக் கொடுத்த மாமா அவர் வேலையை இழந்தார்! இது பற்றி தர்ஷன் சிங் கூறுவார் “கபூர் சிங் எனக்கு ஒரு வேலை கொடுத்தபோது அவர் எனது மாமாவை வீட்டுக்கு அனுப்பி விட்டார். கபூர் சிங்கைப் பொருத்தவரை எனது மாமா பயன்படாத கிழக் குதிரை.” ஏனெனில் அவருக்கு 60 வயது, தர்ஷனுக்கு 20 மட்டுமே. எவ்வளவு கொடுமையாக இருக்க முடியுமோ அவ்வளவு மோசமான நிலையில் அவரது வேலை நிலைமை இருந்தது. பிறகு தர்ஷன், மரம் மற்றும் மரம் அறுக்கும் பல்வேறு ஆலைகளில் பணியாற்றினார். மரவாடித் தொழில் பல்லாயிரக்கணக்கானவர்களை மிக மோசமான நிலைகளில் பணியாற்ற வேலைக்கு அமர்த்தியது. வெள்ளைத் தொழிலாளர்களைவிட மற்ற தொழிலாளர்களுக்குச் சம்பளம் குறைவாகவே வழங்கப்பட்டது. பஞ்சாபி ஆலை முதலாளிகளும்கூட இந்தப் பாரபட்சத்தையே கடைபிடித்தனர்.

தொழிலாளர் இயக்கத்தில்

            விரைவில் தர்ஷன் வான்கூவர் பிரிட்டிஷ் கொலம்பியா பல்கலைக் கழகத்தில் சேர்ந்தார். இளம் கம்யூனிஸ்ட் லீக் (YCL) அமைப்பின் உறுப்பினரானார். அவருக்குக் கனடா கம்யூனிஸ்ட் கட்சி செயற்பாட்டாளர்கள் போர்ஜன் சகோதரர்கள், எமில் மற்றும் பில் தொடர்பு ஏற்பட்டது.

            வரலாற்றுப் புகழ் பெற்ற வான்கூர் உள்ளுர் குருத்துவாராவின் சமூகச் செயல்பாடுகளில் தர்ஷன் பங்கேற்று அங்கு இந்திய விடுதலை தொடர்பான பிரச்சனைகள் குறித்துப் பேசினார். விரைவில் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்திலிருந்து மற்றொரு பகுதியான அல்பெர்டாவுக்கு இராம் சந்தர் என்ற பெயரில், தனது உண்மையான அடையாளத்தை மறைத்துச்  சென்றார். எட்மோன்டன் என்ற பகுதிக்கு வடக்கே 300 கிமீ தொலைவில் வின்ஃபீல்டு அருகில் ஒரு புதர் போன்ற இடத்தின் மேக்டௌகல் ஆலையில் பணியாற்றினார். அங்கே நிலைமை பொறுக்க முடியாத அளவு கடுமையாக, வடக்கில் 24 மணி நேரமும் குளிரான இடமாக இருந்தது. தர்ஷன் சிங், “அந்த இடத்தைக் கனடாவின் நரகம் என்றழைக்கலாம்” என்று சரியாகவே குறிப்பிட்டார்.

            300க்கும் அதிகமான சட்டவிரோத புலம்பெயர்ந்தவர்களின் வழக்குகளை நடத்த டாக்டர் பாண்டியா என்ற இந்திய வழக்கறிஞருக்கு அவர் உதவினார். அவர்கள் ஒரு குழுவை அமைத்து புலம்பெயர்ந்தோர் சமூகத்தினரிடமிருந்து சுமார் 400 டாலர்கள் திரட்டினர். 1939ல் கனடாவில் 300க்கும் அதிகமான இந்தியர்கள் சட்டபூர்வ அந்தஸ்து பெற்றனர்.

கனடா இராணுவத்தில் இணைதல்     

            1939ல் இரண்டாம் உலக யுத்தம் தொடங்கியது, தர்ஷன் சிங் மற்றும் மற்றொரு இந்தியர் கிரிபூ முதல் இந்தியர்களாக இராணுவத்திலிருந்து நியமன உத்தரவு பெற்றனர். பொதுவாக இந்தியர்கள், வாக்குரிமை உட்பட பொது ஜனநாயக உரிமைகள் மறுக்கப்பட்டதால், இராணுவத்தில் சேர்வதற்கு எதிராக இருந்தார்கள். ஆனால் தர்ஷன் ‘புரட்சிக்கு அது உதவக்கூடுவதாகும்’ என்று எண்ணினார். அவர் உள்ளத்தில் எதிர்காலம் குறித்த ஏதோ ஒரு திட்டம் இருந்தது.

            அவர் பிரிட்டிஷ் கொலம்பியாவின் ஒகனாகன் என்ற இடத்தில் நான்கு மாத இராணுவப் பயிற்சிக்குச் சேர்ந்தார். பயிற்சியில் “நான் ஒருவன் மட்டுமே இந்தியன், மற்ற அனைவரும் வெள்ளையர்கள்” என அதை நினைவுக் குறிப்புகளில் குறிப்பிட்டார். அந்த இராணுவப் பயிற்சித் திட்டம் மிக மிகக் கடுமையானதாக இருந்தது.

         தனது இடத்திற்குத் திரும்பியதும் வேறு யாரோ ஒருவரின் போரில் இறப்பதைவிட ஒருவன் தனது சொந்த நாட்டிற்காக உயிரை விடுவதே மேல் என அவர் உணர்ந்தார். இதன் விளைவாய் இந்தியாவுக்கு 1940 ஜூனில் கப்பல் ஏறி, அபி சாந்தனி என்ற சிந்திக்காரருடன் டோக்கியோவில் இடையே தங்கினார். ஹாங்காங் மற்றும் ஷாங்காயில் சில இந்தியர்கள் கைது செய்யப்படுவதாக அறிந்தார். எனவே டோக்கியோவிலிருந்து வான்கூவர் திரும்பியவர் மீண்டும் மரத் தொழிற்சாலைகளில் சுமார் ஆறு ஆண்டுகள் பணியாற்றினார்.

கனடா கம்யூனிஸ்ட் கட்சியில் இணைதல்

            கனடாவின் தொழிற்சங்க இயக்கத்திலும் தர்ஷன் தீவிரமாகப் பங்கேற்றார். மரத்தொழில் மற்றும் கனடா தொழிற்சங்க இயக்கத்தின் சக்திமிக்க பிரிவான மர ஆலைத் தொழிலாளர்களின் சங்கங்களில் அவர் பணியாற்றினார். “பட்டினியின் 30கள்” (‘Hungry Thirties’) என்ற ஏழ்மை தலைவிரித்தாடிய (முதல் உலகப் போருக்குப் பின் நிகழ்ந்த பொருளாதார வீழ்ச்சி) காலத்தில் நடந்த 90 சதவீதமான வேலைநிறுத்தங்களைக் கனடா கம்யூனிஸ்ட் கட்சியும் தொழிலாளர்கள் ஒற்றுமை லீக் அமைப்பும் தலைமையேற்று நடத்தின. பிரிட்டிஷ் கொலம்பியாவில் கம்யூனிஸ்ட்கள் “அமெரிக்க சர்வதேசிய மரத் தொழிற்சாலைத் தொழிலாளர்கள்” (IWA) அமைப்பை நிறுவ முயற்சி மேற்கொண்டனர்.

            ஏற்கனவே இளம் கம்யூனிஸ்ட் லீகுடன் தொடர்பில் இருந்த தர்ஷன், குல்தீப் சிங் பெயின்ஸ் மற்றும் ரத்தன் சிங் இருவருடன் 1939ல் கனடா கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தார். “முதற்கண் கம்யூனிஸ்ட் கட்சியில் சேரக் காரணம், நானே இந்தியாவிலிருந்து சோஷலிச இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டவன் …பின்னர் அடுத்த விஷயம் …இந்திய விடுதலைக்குக் கம்யூனிஸ்ட் கட்சி மட்டுமே ஆதரவளித்தது” என்பதே என்று கூறினார்.

            தர்ஷன் சிங் ‘கனடியன்’ என்று பிரபலமானார். யாருமே அவரைத் தர்ஷன் அல்லது சிங் அல்லது சங்கா என்று அழைக்கவில்லை. பின்னர் பஞ்சாப் சட்டமன்றத்தில்கூட ‘கனடியன்’ என்றே அவர் புகழ்பெற்றார்! அவர் கூறுவார்: எனக்கு இரண்டு தாய் நாடுகள், கனடா மற்றும் இந்தியா! “நான் எந்த அளவு இந்தியாவின் ஒரு பகுதியாக இருக்கிறேனோ அதேபோல கனடா நாட்டின் பகுதியாகவும் நான் இருப்பதாக உணர்கிறேன்“

            கனடா கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் க்ரைக் பிரிட்செட் கூறியபடி, “தொழிற்சங்கத்திலும் கட்சியிலும் தர்ஷன் சிங் மிக முக்கியமான பங்கு வகித்தார், அதன் முக்கியமான காரணம் அவர் மிகச் சிறந்த சொற்போழிவாளர் என்பது. அவருக்கு ஆங்கில மொழியில் தேர்ந்த பயிற்சியும் ஆளுமையும் இருந்தது.” கனடா கம்யூனிஸ்ட் கட்சி தர்ஷன் சிங்கை நாடு முழுவதும் சொற்பொழிவாற்றும் பிரச்சாரப் பயணம் அனுப்பியது. நிகெல் மோர்கன், ஹர்ஓல்டு பிரிட்செட் மற்றும் பிறருடன் அவரும் கனடா தேசம் முழுவதும் பெரும் பணியாற்றினார். மோர்கன் அவரிடம் குறிப்பாக இந்திய, சீன மற்றும் ஜப்பானிய தொழிலாளர்களுடன் தொடர்பு கொள்ள உதவும்படி வேண்டிக் கொண்டார்.

            1945ல் யூபௌ என்ற இடத்தின் தொழிற்சாலையில் நடந்த நிகழ்வு ஒன்று தர்ஷனின் புகழை எடுத்துக் காட்டும். தொழிலாளர்களின் சிறிய வீடுகள் (பங் ஹவுஸ்) அமைந்த அவர்களின் இருப்பிடத்தில் தொழிலாளர்களின் கூட்டத்தை நடத்துவது எளிய பணியாக இல்லை. தர்ஷனை உள்ளே நுழைய அனுமதி மறுத்து வெளியேறும்படி கூறியபோது, கொட்டும் மழையில் 80க்கும் அதிகமான தொழிலாளர்கள் அவருக்குப் பாதுகாப்பு அரணாகச் சூழ்ந்து கொண்டு சூப்பரின்டெண்டிடம் அவர்கள் தர்ஷனைத் தொட்டால் நாங்கள் வேலைகளிலிருந்து விலகி விடுவோம் என்று மிரட்டிய பிறகு, தர்ஷன் தன் கூட்டத்தைத் தொடர்ந்தார். இந்த நிகழ்வு பரவலாகி பெரும் பலனளித்தது.

            குருத்துவாராக்களில் தர்ஷன் பல கூட்டங்களை நடத்தி இந்தியர்கள் மத்தியில் விடுதலை இயக்கம் மற்றும் உள்ளூர் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினார். ஹர்ஓல்டு பிரிட்செட் மற்றும் நாகிந்தர் சிங் கில் இருவருடன் அவர் 1943ல் விக்டோரியாவில் மாகாண அரசுடன், சம உரிமைகளை வலியுறுத்த, ஒரு குழுவைத் தலைமை தாங்கி அழைத்துச் சென்றார். இறுதியில் அந்த உரிமை 1946ல் வென்றெடுக்கப்பட்டது. ஒரு பேட்டியில் தர்ஷன் கூறினார்: “மீண்டும் அதே ஆண்டுதான் நாங்கள் தொழிற்சாலைகளின் முழுமையான மாபெரும் வேலை நிறத்தத்தை சில அடிப்படை கோரிக்கைக்காகச் சுமார்40 நாட்கள் நடத்தினோம்.” மாகாணத்தின் அனைத்துப் பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து குவிந்தனர்.

          பஞ்சாபியர்கள் கனடா வந்தடைந்தபோது அவர்களுக்கு ஓட்டு உரிமை இருந்தது, ஆனால் 1907ல் அது பறிக்கப்பட்டு விட்டது.

          விடுதலை இயக்கங்கள் குறித்து 1945 –46ல் தர்ஷன் சிங் “ஆசியாவின் எழுச்சி என்றொரு விடுதலை இயக்கங்கள் குறித்து 1945 –46ல் தர்ஷன் சிங் “ஆசியாவின் எழுச்சி” என்றொரு புத்தகம் எழுதினார். டொராண்டோ முன்னேற்றப் பதிப்பகம் வெளியிட்ட அந்நூல் கனடாவின் டாக்டர் நார்மன் பெத்துன் மற்றும் இந்தியாவின் டாக்டர் துவாரகா தாஸ் கோட்னீஸ் (படம்) இருவருக்கும் அர்ப்பணிக்கப்பட்டது. அவர்கள் ஜப்பானிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துச் சீன மக்களுக்காகப் போராடித் தங்கள் இன்னுயிர்களைத் தியாகம் செய்தவர்கள் ஆவர்.

இந்தியா திரும்பல்

            தர்ஷன் சிங் 1947 டிசம்பர் 16ல் இந்தியா திரும்பினார். இதை விளகக்கும்போது அவர், “கனடாவைவிட இந்தியாவுக்கு நான் அதிகமாகத் தேவைப்பட்டேன்” என்று கூறினார். அங்கே அவருக்குத் தேவையான அனைத்து வசதிகளும் இருந்தன, தீவிரமான அரசியல் பணியும் செய்து கொண்டு இருந்தார். என்றாலும், எதையோ இழந்தது போன்ற அழுத்தமான உணர்வு, அது அவர் இந்தியா திரும்பியே ஆக வேண்டும் என்றது. இந்தியாவில் மக்களுக்கு உண்ணப் போதுமான உணவில்லை என்பதை அறிவார். “நான் அந்த நேரங்களை அறிவேன், அப்போது நாங்கள் புல் விதைகளை உண்டு வாழ வேண்டிய நிர்பந்தம், கோதுமை அல்லது அரிசி அல்லது வேறு எதுவும் இல்லை. மாதக்கணக்கில் ஒரு துளி சக்கரைகூட கிடைக்காத தருணங்களை நானறிவேன்.“ இந்திய மக்கள் கூட்டத்திடையே வாழ்ந்து அவர்களுக்குப் பணியாற்ற வேண்டும் என்ற பலமான உந்துதல் அவருக்கு ஏற்பட்டது. இது அவரைத் தனது கனடா தோழர்களுக்கு ஒரு கடிதத்தை எழுதி வைத்துவிட்டு இந்தியாவுக்குப் புறப்படச் செய்தது.

            இந்தியா திரும்பிய உடன் அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிடம் ஆஜர் ஆனார். இரண்டு மாதங்களுக்கு அவர் சுற்றித் திரிந்து நண்பர்கள், உறவினர்கள் மற்றும் பொது மக்களைச் சந்தித்தார். 1948 மார்ச் மாதம் கல்கத்தாவில் நடைபெற்ற சிபிஐ இரண்டாவது கட்சிக் காங்கிரஸில் கலந்து கொண்டார், அந்த மாநாட்டில்தான் பிடிஆர் பாதை ஏற்கப்பட்டது. கட்சிக் காங்கிரசுக்குப் பிறகு அவர் தலைமறைவாகி, அப்படித் தலைமறைவாகவே ஐந்தாண்டுகள் இருந்தார். லூதியானாவில் சிபிஐ அலுவலகத்தைப் போலீஸ் தீடீர் சோதனையிட்டதில் அவர் மட்டுமே தப்பினார். தலைமறைவு வாழ்வில் அவரது பெயர் ‘கரம் சந்த்’.

            தர்ஷன் சிங் ஜலந்தர் மாவட்டக் கட்சிச் செயலாளராகி, அப்பொறுப்பில் 13 ஆண்டுகள் செயல்பட்டார். பிந்தைய ஆண்டுகளில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சரான காங்கிரஸ் கட்சியின் ஸ்வரண் சிங்கை எதிர்த்து 1957 தேர்தலில் கட்சி அவரை வேட்பாளராக நிறுத்தியது. தர்ஷன் சிங் தோற்கடிக்கப்பட்டாலும், அவர் 1 லட்சத்து 50 ஆயிரம் வாக்குகள் பெற்றார்.

            1963ல் அவர் தனது குடியிருப்பை அவரது சொந்த கிராமம் இருந்த ஹோஷியாபூர் மாவட்டத்திற்கு மாற்றிக் கொண்டார். 1967 சட்டமன்றத் தேர்தல்களில் போட்டியிட்டு 14ஆயிரம் வாக்குகள் பெற்றபோது, எதிர்த்துப் போட்டியிட்டவர் 20ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு அதே தொகுதி இடைத் தேர்தலில் போட்டியிட்டு 800 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றார். அந்தத் தோல்வி நடைமுறை தவறின் காரணமாக அவருக்கு 3900 வாக்குகளை இழக்கச் செய்தது. ஆனால் அவர் 1972 சட்டமன்றத் தேர்தலில் 24ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். மிகக் கடினமான நிலைகளில் அவர் 1977 தேர்தல்களில் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

திருமணம் மற்றும் குடும்பம்

            தர்ஷன் சிங் கனடியன் 1950ல் புரட்சிகரக் குடும்பத்தைச் சேர்ந்த பெண்ணான ஹர்பன்ஸ் கௌர் என்பரைத் திருமணம் செய்து கொண்டார். அவரது தந்தை மற்றும் தாத்தா சிபிஐ உறுப்பினர்கள், கதர் இயக்கத்துடன் தொடர்பு கொண்டவர்கள். ஹர்பன்ஸ் தர்ஷன் சிங்குக்குப் பெரிதும் உதவியாக இருந்தார். 1948லிருந்து 1963வரை கட்சி வழங்கிய மாத ஊதியம் ரூபாய் 30லிருந்து 80வரை மட்டுமே பெற்று தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். ஐந்து உறுப்பினர்கள் கொண்ட அவரது குடும்பத்திற்கு நண்பர்களும் தோழர்களும் உதவினர். 1963லிருந்து தர்ஷன் தனது தந்தையின் நிலத்தை மேம்படுத்திக் கூடுதல் வருமானத்திற்கு வழி செய்தார், ஹர்பன்ஸும் 14 மணி நேரம்வரை வயலில் பாடுபட்டார். பயிர்களைப் பார்த்துக் கொண்டதுடன் கால்நடையைப் பராமரித்து அவர் பால் விற்பனை செய்தார்.

கட்சி மற்றும் பிற அமைப்புப் பொறுப்புகள்

சிபிஐ மாவட்டச் செயலாளராகப் பொறுப்பு வகித்ததுடன் தர்ஷன் சிங் பஞ்சாப் கிசான் சபா செயலாளர், தேசியக் குழு உறுப்பினர் (1963–77), பஞ்சாப் மாநிலக் கட்சி உதவிச் செயலாளர் (1966 –68), பஞ்சாப் மாநிலச் செயலாளர் (1968 –71) ஆகிய பல பொறுப்புக்களில் செயல்பட்டார்.

அவரது கிராமத்திற்கு அருகே கண்டி என்ற இடத்தில் நன்கு செயல்படும் மருந்தகம் ஒன்றைக் கட்டினார்.

1964ல் சோவியத் யூனியனிலிருந்து திரும்பும் வழியில் தர்ஷன் மீண்டும் கனடா விஜயம் செய்து அங்கே இரண்டு மாதங்கள் தங்கினார். இந்தியாவில் கிராமம் கிராமமாக அவர் நடந்தே செல்வதை அறிந்த அவரது கனடிய தோழர் எர்லிங் ஜர்னாசன் (Erling Bjarnason) அவருக்காக ஒரு சைக்கிளை இந்தியாவுக்கு அனுப்பினார். அவரது புத்தகம் ஒன்றின் பின் அட்டையில் இருந்த அவருடைய போட்டோவின் அசல் நெகடிவ் பிலிம் வான்கூவருக்கு மாறிய ஒரு புகைப்படக் கலைஞரிடம் தேடிக் கண்டடையப்பட்டது. அவருடைய குழந்தைகள் தனது தந்தையின் இளமைக்காலப் போட்டோக்களைப் பார்த்தது இல்லை. போட்டோவின் அந்த நெகடிவ் பிரதியை அவருக்கு இலசமாகக் கொடுத்தார்.

இறுதி ஆண்டுகளும் படுகொலையும்

            தர்ஷன் சிங் கனடியன் தனது இறுதி ஆண்டுகளில் எழுதுவதற்கு விரல்களை அசைக்கக்கூட முடியாத அளவு, மிகவும் உடல்நலம் குன்றி இருந்தார். சிறிது தேறியதுமே தீவிரமாகச் செயல்பட ஆரம்பித்து விடுவார். அமிர்தசரஸ் மற்றும் மோகா போன்ற இடங்களில் (பஞ்சாப்) தீவிரவாதிகளின் பலம்பொருந்திய இடங்களிலேயே கூட்டங்களில் சொற்பொழிவு ஆற்றினார், தோழர்களையும் கட்சியையும் பாதுகாக்க நடவடிக்கைகள் எடுத்தார். ஆனால் அவர் தன்னைப் பற்றி கவலைப்பட மாட்டார். அவர் படுகொலை செய்யப்படுவதற்கு மூன்று நாட்கள் முன்புதான் அவர் டெல்லியில் இருந்தார்.

            1986 செப்டம்பர் 24ல் அமிர்தசரஸ் மாவட்டம் ரய்யா என்ற இடத்தில் அனைத்துக் கட்சி கூட்டம் ஒன்றில் உரையாற்றினார். கூட்டம் முடிய தாமதமானதால் தோழர்கள் அவரை அங்கேயே தங்கி மறுநாள் புறப்படலாம் என்றனர். ஆனால் அபாயத்தைப் புறக்கணித்து மகில்பூருக்கு (ஜலந்தர்) பேருந்தில் புறப்பட்டார். மறுநாள் செப்டம்பர் 25 சில உறவினர்களைப் பார்த்துவிட்டு, ஆபத்துக்களைக் குறைத்து மதிப்பிட்டு, சைக்கிளில்  லங்கேரி புறப்பட்டார். மற்ற தோழர்களும் அது தீவிரவாதம் குறைவான இடம் என்று குறைத்து மதிப்பிட்டுவிட்டனர். ஆனால் மறைவிடத்திலிருந்து திடீரென்று தாக்கிய தீவிரவாதக் கொலையாளிகள் மிக நெருக்கத்தில் அவரைச் சுட்டுக் கொன்றனர். காவலர்கள் அறிக்கைகளைப் புறக்கணித்து மணிக் கணக்கில் தாமதமாக வந்தனர். செய்தி அறிந்து ஆயிரக் கணக்கில் ஆர்ப்பாட்டக்காரர்கள் மகில்பூர் போலீஸ் நிலையத்தில் குவிந்து ஹோஷியார்பூர் செல்லும் வழியை மறித்தனர். செப்டம்பர் 26ல் தர்ஷனின் மகில்பூர் கிராமத்தில் பிரம்மாண்டமான அணிவகுப்பு ஏற்பாடு செய்யப்பட்டது.

            அவரது புகழுடம்பு முழு அரசு மரியாதையுடன் எரியூட்டப்பட்டது.

          கனடா முழுமையும் அவரது மறைவுக்கு அஞ்சலி செலுத்தியது. கனடா கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர் எமில் ஜார்னாசன் தலைமையில் நடந்த பெரும் அஞ்சலிக் கூட்டத்தில், பிந்தைய ஆண்டுகளில் பிரிட்டிஷ் கொலம்பியாவின் பிரதமரான உஜல் தோசான்ஞ் (Ujjal Dosanj)  உள்ளிட்டோர் உரையாற்றினர். மௌரிஸ் ரஷ், ஹேரி ரன்கின், க்ளே பெரி, எமில் ஜார்னாசன் முதலான பலர் இரங்கற் கூட்டங்களில் பங்கேற்றனர்.

            ஒவ்வொரு வகையிலும் தனித்துவமான தர்ஷன் சிங் ‘கனடியன்’ நினைவுகள் நீடு வாழி!

-- நன்றி : நியூஏஜ் (ஜூன் 19 –25)

              -- தமிழில் :நீலகண்டன்,  என்எப்டிஇ, கடலூர்   

 

 

 

 

             

 

 

Thursday 7 July 2022

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 66 -- குருசரண் பட்நாயக்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 66

குருசரண் பட்நாயக்--

தலைச் சிறந்த சிபிஐ தலைவர்

மற்றும் இலக்கிய ஆளுமை


--அனில் ரஜீம்வாலே

ஒடிஷா மாநிலத் தொடக்கக் கால கம்யூனிஸ்ட் இயக்க முன்னோடித் தலைவராகவும் நாடறிந்த புகழ்பெற்ற சிபிஐ தலைவராகவும் மற்றும் தேசம் புகழும் இலக்கியவாதியாகவும் ஒரே நேரத்தில் திகழ்ந்த தனித்துவமான ஆளுமையாளர்தான் குருசரண் பட்நாயக். ஒரு சிறு நிலக்கிழார் குடும்பத்தில் 1917 அக்டோபர் 31ம் நாள் பிறந்தார். நான்கு மாதக் குழந்தையாக இருந்தபோதே பெற்றோரை இழந்தார். தந்தை இறந்ததும், அவரில்லாமல் உயிர்வாழ விரும்பாத தாயும் தற்கொலை செய்து கொண்டார். குருசரணும் அவரது சகோதரர் ஆனந்தாவும் பாட்டியின் பாதுகாப்பில் விடப்பட்டனர்.

        விரைவில் பூரி அனுப்பப்பட்ட அவர் தனது தாய்வழி மாமாவுடன் வசித்தார். அங்கிருந்த காங்கிரஸ் ஆசிரமம் போலீசாரால் தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. எனவே அதன் பின்னர் குருசரண் ஜகந்நாதர் ஆலயத்தின் உள்ளே அர்ச்சகர்களுடன் தங்கினார் அவர்களும் இவர் மீது பெரும் அன்பு கொண்டனர்.

          குருசரண் மிக இளம் வயதிலேயே சுதந்திர இயக்கத்தில் ‘வானர சேனா’ (குரங்குப் படையில்) செயல்பாட்டாளராகச் சேர்ந்து கொண்டார். 1930ல் தனது இளம் 13 வயதிலேயே பள்ளி வாயிற் மற்றும் கடைகளின் முன் மறியலில் ஈடுபட்டார். இந்நிகழ்வில் அவரும் அவரது மாணவ நண்பர்களும் கடுமையாகப் பிரம்படி தண்டனை பெற்றனர்.

            1932 காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொள்ள அவர் டெல்லிகூட சென்றார், அங்கே கைது செய்யப்பட்டு பல சரித்திரச் சம்பவங்கள் நிகழ்ந்த புகழ்பெற்ற கூனி தர்வாஜா நுழைவாயில் அருகே உள்ள சிறையில் அடைக்கப்பட்டார். கட்டாக் திரும்பிய பிறகு மீண்டும் கைதாகி பாட்னா அனுப்பப்பட்டார்; அங்கே கூரை மற்றும் சுவர்கள் தகரத்தால் அடைக்கப்பட்ட நெருக்கடியான சிறு அறைகளில் தகிக்கும் வெப்பத்தில் மூவாயிரம், நான்காயிரம் பேர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். இவ்வளவு மிகக் கடுமையான சூழ்நிலையில் ஒரிசாவிலிருந்து வந்த கைதிகள் அழிந்தனர். குருசரணும் பெரியம்மை வைசூரியால் பீடிக்கப்பட்டார். சிறையிலிருந்து அவர் வந்ததும் அவரது பாட்டியார் அவரைக் காசி வித்யா பீடத்திற்கு அனுப்பிவிட்டார்.

      காசி வித்யா பீடத்தில் பிராண்நாத் பாட்நாயக், சரத் பட்நாயக் போன்ற புரட்சிகர மாணவர்கள் படித்து வந்தனர். குருசரணை ஆச்சார்ய நரேந்திர தேவ் ஈர்க்க, குருசரண் அவரது ஆழமான செல்வாக்கிற்கு ஆட்பட்டார். அவருக்கு நரேந்திர தேவ் சோஷலிசம் குறித்துக் கற்பித்தார். குருசரண் வித்யாபீடத்திலிருந்து பட்டம் பெற்றார். நரேந்திர தேவ் தாக்கத்தால் குருசரண் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியில் (சிஎஸ்பி) சேர்ந்தார். பெனாரஸிலிருந்து திரும்பியதும் நவ க்ருஷ்ணா சௌத்திரி மற்றும் பகவதி சரண் பாணிகிரகியுடன் சேர்ந்து சிஎஸ்பி கட்சியை அமைக்கும் செயலில் இறங்கினார்.

    குருசரணுடன் சேர்ந்து அவரது மூத்த சகோதரர் ஆனந்த் பட்நாயக்கும் உப்பு சத்தியாகிரகத்தில் பங்கேற்றார். அவர் கம்யூனிச இயக்கத்தில் முன்னணிப் பிரமுகரானார்.

முற்போக்கு இலக்கிய இயக்கம்

            ஒரிசாவில் முற்போக்கு எழுத்தாளர்கள் இயக்கம் மிகவும் முன்னதாக 1934லேயே உருவாகியது என்பது பலருக்கும் வியப்பாக இருக்கும். உண்மையில் அதன் தொடக்கத்தை 1932 –33களிலேயே காணலாம். ‘நவயுக சாகித்திய சம்சத்’ (புதிய சகாப்தத்தின் இலக்கியச் சமூகம்) என்ற அமைப்பு கட்டாக், ரவீன்ஷா கல்லூரி வளாகத்தில் பகவதி சரண் பாணிகிரகி தலைமையிலான எட்டு உறுப்பினர்களால் அமைக்கப்பட்டது. இந்த அமைப்பில் ஆனந்த் பட்நாயக், குருசரண் பட்நாயக், வி(பி)ஜய சந்திர தாஸ் மற்றும் சிலர் தீவிரமாகப் பங்கேற்றனர். இவ்வமைப்பு ஒரிசாவில் கம்யூனிச இயக்கம் அரும்பி முளைவிட உதவியது. அதே நேரத்தில் அது சிஎஸ்பி கட்சியின் கலாச்சார அணியாகவும் செயல்பட்டது.

            லக்னோவில் முற்போக்கு எழுத்தாளர் கூட்டமைப்பு (PWA) மாநாடு நடைபெறுவதற்கு ஆறு  மாதங்களுக்கு முன்னதாக 1935 நவம்பர் 29 முதல் டிசம்பர் 6வரை இம்மாநாடு நடைபெற்றது.

உத்கல சாம்யாபதி கர்மி சங்கம் மற்றும் ‘சாரதி’ இதழ்

            (உத்கல இன்றைய ஒடிஷா மாநிலத்தின் வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியைக் குறிப்பது.

அது முந்தைய கலிங்க தேசம் என்பதால் கலிங்க தேசத்தின் வடக்குப் பகுதி எனச் சுட்டும் வகையில் உத்தர கலிங்கா என்றாகி உத்கல ஆனது எனவும் சொல்வார்கள்) ஒடிஷாவின் முற்போக்கு இலக்கிய மற்றும் சோஷலிச நடவடிக்கைகளுக்கான அடித்தளத்தை நவ க்ருஷ்ணா சௌத்திரி மற்றும் பிறருடன் கூட்டு சேர்ந்து பிராண்நாத் பாட்நாயக் அமைத்ததாக 1970களில் வெளியான சிபிஐ மாநிலக் கட்சிப் பத்திரிக்கை ‘நவ துனியா’ (புதிய உலகம்) இதழ்களில் ஒன்று தெரிவிக்கிறது. 1933ன் தொடக்கத்திலேயே அமைக்கப்பட்ட ஒடிஷா காங்கிரஸ் சாம்யாபதி கர்மி சங்கம் என்ற அமைப்பு பின்னர் சாம்யாபதி கர்மி சங்கம் (‘கம்யூனிஸ்ட் தொழிலாளர்கள் சங்கம்’) என்று மாற்றமடைந்தது. பிறகு இரண்டு மாதங்களில், 1933 மே மாதம், ‘சாரதி’ என்ற இதழை வெளியிட்டது.

            இந்த அமைப்பின் பொதுச் செயலாளரான நவ க்ருஷ்ணா சௌத்திரி 1934 ஜூன் 11 ஆஷா (இதழில்) வெளியிட்ட அறிக்கையில் மகாத்மா காந்தி தலைமையிலான காங்கிரஸ், பெருந்திரள் மக்களின் அரசியல் அமைப்பாக இருப்பதை விளக்கினார். காங்கிரஸ் செயற்பாட்டாளர்கள் பலர் சோஷலிச இயக்கத்தில் சேர்ந்தனர்; காங்கிரஸில் இருந்த சோஷலிசவாதிகள் இயக்கத்தைச் சோஷலிசத்தின்பால் மறுதகவமைக்க முயன்றனர். இதன் விளைவாய் காங்கிரசுக்குள் ஒரு சோஷலிசக் கட்சி உருவானது. சோஷலிச கம்யூனிஸ்ட் சங்கம் (கர்மி சங்கா) விரிவடைய  அனைத்திந்திய காங்கிரஸ் சோஷலிச மாநாடு உதவியது. சில புதிய, முக்கியமான உறுப்பினர்கள் இணைந்தனர். அவர்களில் குருசரண் பட்நாயக், கங்காதர் மிஸ்ரா, கோகுல்மோகன் ரைச்சுதாமணி, கௌரசந்திர தாஸ், மாலதி செளத்திரி, கோவிந் சந்திர மிஸ்ரா, திவாகர் பட்நாயக், பிராண்நாத் பாட்நாயக் போன்றோர் அடங்குவர்.

                           சாம்யாபதி கர்மி சங்கம் ‘சாரதி’ என்ற வாராந்திர இதழை 1934 மார்ச்சிலிருந்து

வெளியிட்டது. அதன் ஆசிரியராக நவ க்ருஷ்ணா இருந்தார் என 1934 மார்ச் 13 இதழில் தெரிவித்த தேசகதா, அந்த இதழ் விவசாயிகள் மற்றும் கூலி வருவாய் உழைப்பாளிகள் குறித்துக் கவனத்தைக் குவித்தது என மேலும் தெரிவிக்கிறது. சாரதியில் பகவதி சரண் பாணிகிரகி, (படம்) பிராண்நாத் பாட்நாயக், மன்மோகன் சௌத்திரி போன்றோர் தொடர்ச்சியாக எழுதினர். பகவதி பாணிகிரகியின் கட்டுரைகள் ‘உலக நெருக்கடியும் அதிலிருந்து தப்பும் வழிகளும்’ என்ற தலைப்பில் 1934 ஏப்ரல் 16 தொடங்கி ஐந்து இதழ்களில் நிறைவடைந்தது. பாணிகிரகி சோஷலிசத் தத்துவத்தை எளிய மொழியில் விளக்கியிருந்தார். சாரதியின் ஆசிரியர் நவ க்ருஷ்ணா சௌத்திரி பல கட்டுரைகள் மற்றும் ஆசிரியர் குறிப்புகளையும் எழுதினார். 1934 ஆகஸ்ட் 27 சாரதி இதழில் மன்மோகன் சௌத்திரி ‘வரலாற்றைக் களங்கப்படுத்தும் முயற்சி’ (இதிகாசகு விக்ரூத கரிபாரா ச்சேஸ்தா) எழுதினார். சாரதி முதல் தொகுப்பிற்குக் குருசரண் பட்நாயக் மற்றும் கோகுலாநந்த மொஹண்டியும்கூட அர்த்தமுள்ள பங்களிப்புச் செய்தனர். இவ்வாறாகச் சாரதி இதழ் ஒரிய மொழியில் மார்க்சியத்தை ஒருங்கிணைந்து படிப்பதற்கு 1930களில் புதிய தலைமுறையைத் தயார்ப்படுத்தியது.

            சமூக மற்றும் இயற்கை அறிவியல், இலக்கியம் மற்றும் பிற துறைகளின் பல்வேறு நிகழ்வுகளை நவயுக சாகித்திய சம்மேளனம் விவாதித்தது. இந்த அமைப்பு 1936 ஏப்ரலில் லக்னௌவில் நிறுவப்பட்ட முற்போக்கு எழுத்தாளர்கள் கூட்டமைப்பில் தன்னையும் இணைப்பு அமைப்பாக இணைத்துக் கொண்டது. ஒரிய மொழியில் முற்போக்கு இலக்கியப் போக்கு (புதுமை, நவீன எனப் பொருள்படும்) ‘ஆதுனிகா’ என்ற சஞ்சிகை 1936 மே மாதம் நிறுவப்பட்டதுடன் இணைந்து உறுதியான தூல வடிவம் பெற்றது. பகவதி சரண் பாணிகிரகி மற்றும் குருசரணின் மூத்த சகோதரர் ஆனந்த பட்நாயக்கும் அதன் ஆசிரியர்களாக இருக்க, குருசரணும் அதனுடன் நெருக்கமாக இருந்தார்.

கம்யூனிஸ்ட் கட்சியில்

            1932ல் குருசரண் பட்நாயக்கும் பிராண்நாத் பாட்நாயக்கும் பெனாரஸ் காசி வித்யா பீடத்தில் படித்துக் கொண்டிருந்தனர். பின்னர் கல்கத்தாவுக்கு மாற்றிக் கொண்ட இருவரும் பகவதி சரணுடன் இணைந்து, அவரைச் செயலாளராகக் கொண்ட, முதலாவது கம்யூனிஸ்ட் கிளைக் குழு (செல்) அமைப்பை நிறுவினர். அந்தக் குழுவில் ஆனந்த் பட்நாயக், விஸ்வநாத் பசயாட், அசோக் தாஸ், வைத்தியநாத் தாஸ், விஜய சந்திர தாஸ் முதலான பலர் உறுப்பினராக இணைய பெரும் குழுவாக ஒன்று திரண்டது. அவர்களில் பலரும் புரட்சியாளர்களின் யுகாந்தர் குழுவிலிருந்து வந்தவர்கள்.

            ஒரிசாவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1936 ஏப்ரல் 1ல் அமைக்கப்பட்டது. சிஎஸ்பி கட்சிக்குள் பகவதி இணைந்த ஒரு பெரிய சிபிஐ குழு அமைக்கப்பட்டது. இந்நிகழ்வைக் குறித்து எம்ஆர் மசானி “சிஎஸ்பிக்கு எதிராக கம்யூனிஸ்ட் சதித் திட்டம்” என்றொரு புத்தகம் எழுதினார்; போலீஸ் அறிக்கைகளின் அடிப்படையில் அதில், சிஎஸ்பியின் உயர்நிலைத் தலைவர்கள் 40 பேர்களில் 34பேர் ‘பகவதியின் சிபிஐ உடன்’ உள்ளதாக எழுதினார்.

            1935 --36ன் ஒரு தருணத்தில் ‘லேபர் மந்த்லி’ இதழிலிருந்து கம்யூனிஸ்ட் கட்சியின் முகவரியைக் கண்டறிந்த பிறகு குருசரண் கல்கத்தா சென்றார். அம்முகவரி ஜக்காரியா தெருவில் இருந்த ஒரு வீடு, அங்கே அவர் முஸாஃபர் அகமது மற்றும் நிருபன் சக்ரவர்த்தி இருவரையும் சந்தித்தார். பிறகு அவர் புகழ்பெற்ற பிசி ஜோஷியுடன் தொடர்பு கொண்டார். குருசரண் கல்கத்தாவில் கம்யூனிஸ்ட் கட்சியில் முதலாவது ஒரிய உறுப்பினராகச் சேர்ந்தார். பிசி ஜோஷியுடன் விவாதித்த பிறகு ஒரிய கம்யூனிஸ்ட்கள் 1937 பொதுத் தேர்தல்களில் கம்யூனிஸ்ட் வேட்பாளரைக் காங்கிரஸ் டிக்கெட்டில் நிறுத்தினர். அந்த வேட்பாளர் பிராண்நாத் பாட்நாயக், அவர் குர்தா தொகுயிலிருந்து போட்டியிட்டு வென்றார். குருசரண் தேர்தல்களில் தீவிரமாகப் பங்கேற்றார். அதனுடன், எழுச்சி பெற்று வந்த விவசாயிகள் இயக்கம், கம்யூனிஸ்ட்களுக்கு நிலப்பிரபுத்துவ எதிர்ப்புப் பெருந்திரள் போராட்டங்களுக்கு  வாய்ப்பை ஏற்படுத்திக் கொடுத்தது.

            1936ல் பிராண்நாத் பாட்நாயக், குருசரண் பட்நாயக் மற்றும் பகவதி சரண் பாணிகிரகி ஒரிசாவில் இரகசிய கம்யூனிஸ்ட் கட்சியை அமைத்தனர். 1936 நவம்பர் 29ல் கல்கத்தா, ஆல்பெர்ட் ஹாலில் மிகப் பெரிய கிஸான் மாநாடு நடந்தபோது விநியோகிக்கப்பட்ட ஒரியா மொழி சிறு பிரசுரத்தில் சரத் சந்திர பட்நாயக், குருசரண் பட்நாயக் மற்றும் ஆபர்த்தி சரண் நாயக் ஆகிய மூன்று பெரும் கம்யூனிஸ்ட்கள் கையெழுத்திட்டனர்.

            புகழ்பெற்ற 1938 திரிபுரி காங்கிரஸ் மாநாட்டில் ஜிசி சௌதாமணி, டிசி மொஹண்டி, ராம் கிருஷ்ண ரத் முதலான 10 – 12 பிரதிநிதிகளுடன் குருசரண் பட்நாயக்கும் பங்கேற்றார். அத்தருணத்தில் பிசி ஜோஷி ஒரிசா வந்து பல முன்னணித் தலைவர்கள் மற்றும் செயற்பாட்டாளர்களைச் சந்தித்து சிபிஐ அமைப்பு உருவாக உதவினார். இந்தக் கட்டத்தில் குருசரண் மற்றவர்களுடன் இணைந்து அச்சக ஊழியர்களைத் திரட்டி கட்டாக்கில் குருசரணைத் தலைவராகக் கொண்டு சங்கம் அமைத்தனர். இந்த அச்சக ஊழியர்கள் சங்கம்தான் இந்தியாவில் முதன் முதலாகப் பதிவு பெற்ற சங்கமாகும்.

            1942ல் நிறுவப்பட்ட ‘நவதுனியா’ இதழ் தொடக்கத்தில் உத்கல் சிபிஐ மாகாணக் குழுவின் பத்திரிக்கையாகக் கட்டாக்கிலிருந்து வெளிவந்தது. அதன் ஆசிரியர்களாக மோகன் தாஸ், பிராண்நாத் பாட்நாயக், ராம் க்ருஷ்ண பட்டி, சரத் பட்நாயக் முதலானோர் இருந்துள்ளனர். 1970களிலிருந்து குருசரண் பட்நாயக் நவதுனியா ஆசிரியராக இருந்தார். ‘கோடிகுந்தா’ என்னும் மார்க்ஸிய தத்துவ இதழின் ஆசிரியராகவும் அவர் இருந்தார்.

ஒரிசா கம்யூனிஸ்ட் சதி வழக்கு

            கம்யூனிஸ்ட்களைத் தவிர்த்த காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி உறுப்பினர்களின் தனியான கூட்டத்தை ஜெயபிரகாஷ் நாராயணன் நடத்தினார். அதில் சிஎஸ்பியின் மாகாண முன்னணி அமைப்புகளைக் கலைக்கும் தன்னிச்சையான தீர்மானத்தை அறிவித்தார். நவகிருஷ்ண சௌத்திரி ஏக ‘சர்வாதிகாரி’யாக அறிவிக்கப்பட்டார். இந்நடவடிக்கை சிஎஸ்பி கட்சியை உடைத்தது. இத்தகு நிகழ்வுப் போக்கு வளர்ச்சியின் பிறகே பிரிட்டிஷ் அதிகாரிகள் ஒரிசா கம்யூனிஸ்ட்கள் மீது கம்யூனிஸ்ட் சதி வழக்குகளைப் புனைந்தனர். சிபிஐ மாகாணச் செயலாளர் பகவதி சரண் பாணிகிரகி, குருசரண் பட்நாயக், சரத் பட்நாயக், டிசி மொஹண்டி, ஆனந்த பட்நாயக், வைத்யநாத் ரத் உள்ளிட்ட ஒரு டஜன் கம்யூனிஸ்ட்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். சிறையின் உள்ளே நடைபெற்ற விசாரணை குறித்து விரிவாகப் பத்திரிக்கைகளில் செய்திகள் வெளியாயின.

            1942வரை குருசரண் சிறையில் இருந்தார். ஒரிசா கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் போர் (People’s War line) கருத்தை முழுமையாக ஆதரித்தது. 1945ல் குருசரணும் மற்றவர்களும் ஐஎன்ஏ கைதிகளை விடுதலை செய்யக் கோரிய இயக்கத்தை 1945ல் நடத்தினர். 1946ல் நடைபெற்ற தேர்தல்களில் மாகாண சட்டமன்றத்திற்குக் கம்யூனிஸ்ட் வேட்பாளராக வைத்தியநாத் ரத் தொழிலாளர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

            முழுமையாகத் தனது அரசியல் வாழ்க்கையில் குருசரண் பட்நாயக் 13 முறைகளுக்கும் மேலாகச் சிறை தண்டனை பெற்றார். மேலும் அவர் தெங்கானல், நீல்கிரி முதலான சமஸ்தான அரசுகளுக்கு எதிரான போராட்டங்களிலும், பிரஜா மண்டல் இயக்கங்களிலும் தீவிரப் பங்காற்றினார்.

விடுதலை மற்றும் அதற்குப் பிறகு

            ஆற்றல் வாய்ந்த பொதுச் செயலாளராகப் பிசி ஜோஷி இருந்தபோது சிபிஐ மத்திய கட்சி அலுவலக ஊழியர்களில் ஒருவராகப் பணிவும் பண்பும் கொண்ட அர்ப்பணிப்புமிக்க புரட்சியாளர் குருசரண் இணைந்தார். கட்சி மத்திய தலைமையகத்தில் 1948 –50களிலும் பின்னர் 1952ல் நாடாளுமன்றக் கட்சி அலுவலகச் செயலாளராகப் பொறுப்பேற்கும் முன்பும் அவர் பணியாற்றினார்.

            1947 ஆகஸ்ட் 15 தேச விடுதலையைக் கம்யூனிஸ்ட்கள் வரவேற்றார்கள். குருசரண் பட்நாயக் விடுதலையை வரவேற்பதில் தீவிரமாக இருந்தார். அதேபோல 1948 ஜனவரி 30 அன்று மகாத்மா காந்திஜி படுகொலைச் செய்யப்பட்டதில் மிகவும் மனவருத்தமுற்றார்.

            1948 பிப்ரவரி கல்கத்தாவில் நடைபெற்ற சிபிஐ இரண்டாவது கட்சி காங்கிரஸில் குருசரண் பட்நாயக் ஒரு பிரதிநிதியாகப் பங்கேற்றார். மாநாட்டில் பிடிஆர் பாதையை முழுமையாக ஆதரித்தார். கட்சியின் மத்தியக் குழுவில் பிசி ஜோஷியைச் சேர்ப்பதற்கு எதிராக வாக்களித்தார். இருந்த போதிலும் பிசி ஜோஷி அவமரியாதையாகத் தவறாக நடத்தப்பட்டார் என்பதில் அவருக்குச் சந்தேகமில்லை. (கட்சி தலைமறைவு வாழ்வின்போது புனைப்பெயர் பூண்ட தலைவர்களால் முன்வைக்கப்பட்ட ஆவணமான) மூன்று Pகளின் கடிதத்திற்குப் பிறகு அவரும் மற்றவர்களும் பிடிஆர் பாதை குறித்து மறுசிந்தனை செய்யத் தொடங்கி, அப்பாதையை ஆதரித்த தவறை அவர்கள் உணர்ந்தனர்.

            கட்சி மத்திய குழுவின் விரிவடைந்த ப்ளீனம் கல்கத்தாவில் 1952 டிசம்பர் 30 முதல் 1953 ஜனவரி 10தேதி வரை நடைபெற்றது. அக்கூட்டத்தில் கலந்து கொண்டவர்களில் அஜாய் கோஷ், எஸ்ஏ டாங்கே, இஎம்எஸ், சுந்தரைய்யா, குருசரண் பட்நாயக் மற்றும் பிறரும் அடங்குவர். அனைத்து மாநிலங்களிலிருந்தும் 58 பிரதிநிதிகளும் அழைப்பாளர்களும் பங்கேற்றனர். தலைமைக் குழு தோழர்களாக டாங்கே, காட்டே மற்றும் ஜோஷி தேர்ந்தெடுக்கப்பட்டனர். கூட்டத்தின் நோக்கத்தை அஜாய் கோஷ் விளக்கினார். அவருக்குப் பின் டாங்கே மற்றும் இஎம்எஸ் பேசினார்கள். ப்ளீனம் அடுத்த கட்சி காங்கிரஸ் தேதியை நிர்ணயித்தது.

            மூன்றாவது கட்சி காங்கிரஸ் 1953 டிசம்பர் 27முதல் 1954 ஜனவரி 3வரை தமிழ்நாடு மதுரையில் நடைபெற்றது.

            அஜாய் கோஷ் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட மத்திய குழுவில் புகழ்பெற்ற அஜாய் கோஷ், எஸ்ஏ டாங்கே, இஎம்எஸ், சுந்தரைய்யா, ஜோதி பாசு, அச்சுத மேனன், சி இராஜேஸ்வர ராவ் முதலானவர்களுடன் குருசரண் பட்நாயக்கும் இடம் பெற்றார்.

            அஜாய் கோஷ் கட்சித் தலைமையை ஏற்றுக் கொண்டபின் கட்சி முறைமை சார்ந்த, காரிய சாத்தியமான, நெகிழ்வுத் தன்மையுள்ள அரசியல் பாதையை நன்கு சிந்தித்து, கட்சியைப் புத்துயிர் பெறச் செய்ய மறுதகவமைக்கும் நடவடிக்கைகளைத் தொடங்கியது. இந்த நிகழ்முறை நடவடிக்கைகள் அனைத்திலும் ஓர் அங்கமாகக் குருசரண் முழுமையாகப் பங்கேற்றார்.

            1958 அமிர்தசரஸ் கட்சி காங்கிரஸ் முதலாக புதியதாக அமைக்கப்பட்ட மத்திய செயற்குழு (சிஇசி)க்குக் குருசரண் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

விருதுகளும் இலக்கியச் செயல்பாடுகளும்

            குருசரண் பட்நாயக் அவர்களுக்கு 1971ல் சோவியத் லாண்டு நேரு விருதும், 1985ல்

சாகித்திய அகாடமி வாழ்நாள் சாதனையாளர் விருதும், அவருடைய மாபெரும் தத்துவப் படைப்பான ‘ஜகத் தர்ஷனரே ஜெகந்நாத்’ என்ற நூலிற்காகக் கேந்திரிய சாகித்திய அகாடமி விருதும் வழங்கப்பட்டது. மேலும் அவருக்கு ‘உத்கல் ரத்னா’ விருது உத்கல் சாகித்திய சமாஜ் அமைப்பால் வழங்கப்பட்டது. அவர் சுமார் 55 செவ்வியல் நூல்களையும் நூற்றுக்கும் மேற்பட்ட மார்க்சிய லெனிய படைப்புகளின் மொழிபெயர்ப்புகளையும் செய்துள்ளார். அவர் ஏராளமாக எழுதிக் குவித்த எழுத்தாளர். பகவான் ஜகந்நாதருடன் தொடர்புடைய கதைகளின் மீதான தத்துவ விளக்கங்களை அளித்த அவரது நூலுக்காக அவருக்குச் சாகித்திய அகாடமி விருது வழங்கப்பட்டது.

            கேந்திரிய சாகித்திய அகாடமியுடன் அவர் நெருக்கமாக இணைந்திருந்தார். அவர் ஒருபோதும் தேர்தல்களில் போட்டியிட்டதில்லை.

            புகழ்பெற்ற இடதுசாரி பத்திரிக்கையான ‘மெயின் ஸ்டிரீம்’ இதழுடனும் சிபிஐ தலைவர்கள் மற்றும் கற்றறிந்த அறிஞர்களான நிகில் சக்ரவர்த்தி மற்றும் ரேணு சக்ரவர்த்தியுடனும்  குருசரண் பட்நாயக் நெருங்கிய தொடர்பில் இருந்தார். 

            குருசரண் பட்நாயக் கட்டாக்கின் ஷான்கர்பூரில் உள்ள அவரது ‘ஆனந்த அலோக்’ இல்லத்தில் 2008 நவம்பர் 23ம் நாள் மறைந்தார். அவரது ஒரிய மொழி இலக்கியப் படைப்புக்களிலும் கம்யூனிஸ்ட்கள் மனங்களிலும் குருசரண் பட்நாயக் நீடு வாழ்வார்.

--நன்றி: நியூஏஜ் (ஜூன்5 –11)

                                                                                                               --தமிழில் : நீலகண்டன், 

என்எப்டிஇ, கடலூர்