Monday 29 March 2021

தோழர் ரகுவுக்கு ஆத்மார்த்த அஞ்சலி -- எழுத்தாளர் எஸ்ஸார்சி

       


    தோன்றிற் புகழொடு தோன்றுக!

                                          


 எஸ்ஸார்சி

நன்றி: திண்ணை இணைய இதழ் (மார்ச் 28, 2021 இதழில் வெளியானது)

            கடலூர் தொலைபேசி தொழிற்சங்கத் தலைவர் T.ரகுநாதன் 21/03/2021 அன்று சென்னை கே கே நகரில் காலமானார்.   அவரின் வயது எண்பதைத்தொட்டுக் கொண்டிருந்தது. இன்னும் சில ஆண்டுகள் அவர்  ஆரோக்கியத்தோடு வாழ்வார் எனத் தோழர்கள்  நம்பிக்கையோடு இருந்தனர். ஆனால் அன்புத் தோழர்களிடமிருந்து அவர்  இறுதிவிடை பெற்றுக்கொண்டார்.

            கடலூர்  மற்றும் விழுப்புரம் மாவட்டத் தொலைபேசி ஊழியர்களில்  குறைந்தது  ஓராயிரம் குடும்பங்களின்  மகிழ்ச்சியிலும் இன்ப துன்பத்திலும் பங்குபெற்ற பண்பாளர்.  தோழர்  ரகு  நேர்மைச் செல்வத்திற்கு ஓர்  ஒளி வீசும் இலக்கணம்.  முந்திரிக் காட்டில் முப்பது பேர் என்று குறைவாக மதிப்பிடப்பட்ட தொழிற்சங்கத்தை ஆயிரம் உறுப்பினர்களுக்குச் சொந்தமாக்கிய அமைப்புக் கலை தெரிந்த வித்தகத் தோழர்.

மகளிருக்குப் பாதுகாப்புத் தர மறுத்திட்ட தொலைபேசி நிர்வாகத்தை எதிர்த்து 1980 பிப்ரவரியில் நடைபெற்ற கடலூர் தொலைபேசி மாவட்டம் தழுவிய போராட்டம் ஐந்து நாட்கள் நடைபெற்றது. நிர்வாகத்தால் 300 தோழர்கள் தண்டனை பெற்றாலும் தண்டனையிலிருந்து எல்லோரையும் மீட்டெடுத்தச் சாதனையாளர் ரகு.

            தொழிற்சங்கத்தைச் சமூக நோக்கத்தோடு அணுகியவர். உறுப்பினர்களின்  நாட்டுப் பற்றுக்கு உரம் ஊட்டி வளர்த்தவர். மார்க்சியத்தை மனிதநேய மாற்றுக் குறையாமல் காத்த போராளிகளில் ரகு முதன்மையானவர். ஒழுக்க சீலர். மானுடப் பண்பின் உரைகல்.

            நாற்பது  ஆண்டுகள் தொலைபேசித் துறையில் பணிக் கலாசாரத்தோடு  பணியாற்றி ஓய்வுபெற்றவர். தொலைபேசி ஊழியர்  பொதுவுடமைத் தொழிற்சங்கத்தில் (NFTE)  பல்வேறு பொறுப்புக்களில்  ஈடுபாட்டோடு பங்காற்றியவர். ஒவ்வொரு தோழனுக்கும் அவரின் உதவியும் ஆலோசனையும்  எவ்வகையிலேனும் நிச்சயமாகக் கிடைத்தேயிருக்கும். அவ்வுதவியை அந்தத் தோழர் தன் வாழ்நாள் முழுவதும் நினைவில் வைத்துக் கொள்ள வாய்த்த பெரும் பேறு. இது கடலூர்ப் பகுதியின் எதார்த்தம்.

திருவரங்கத்துப் புனித பூமியில் மிக உயர்ந்த ஆசாரச் சீலர்களின் குடும்பத்தில் பிறந்த ரகுநாதன் சாதி மத மாச்சர்யங்களைக் கடந்து தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். தன் இறுதி மூச்சு வரை தன் குல ஆசாரப்படி அணியவேண்டிய முப்பிரி நூல் அணியாது புரட்சிகரமாய்த் தன் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்.

            கடலூர்ப் பகுதியில்  பணியாற்றிய  தோழர் சிரில் என்னும் அன்புத் தோழரின் வழிகாட்டுதலால் மார்க்சிய நெறிக்கு கொண்டுவரப்பட்டவர் தோழர் ரகு. தமிழகத் தொலைபேசி ஊழியர்களின்  நெஞ்சங்களை கொள்ளைகொண்ட உத்தமர் தோழர் ஜகன் அவர்களுக்கு மிக அணுக்கமானவர்.

தோழர் ரகுவின் பணி ஓய்வுப் பெருவிழா கடலூர் நகர் மன்ற அரங்கில் 01 06 2002 ல் வெகு சிறப்பாகத் தொலைபேசித் தோழர்களால் கொண்டாடப்பட்டது. பொதுவுடமைச் செல்வர் மூத்த தோழர் ஐயா நல்லக்கண்ணு அவர்கள் விழாவில் கலந்துகொண்டு  ரகுவை வாழ்த்திப் பெருமை சேர்த்தார்.  நிகழ்ச்சியைக் கடலூர் மாவட்டத் தொலைபேசி ஊழியர் சங்க   நெறியாளர் தோழர் இரா ஸ்ரீதர்  சிறப்பாக வடிவமைத்துச் சரித்திரம் படைத்தார்.

            விருட்சம்’ என்னும் தலைப்பில் ஒரு கட்டுரை சிறப்பு மலர் வெளியிடப்பட்டது. தோழர் ரகுவின் அருமை பெருமைகளை எல்லோரும் அறிய அது வாய்ப்பானது. கவிஞர் கோவி. ஜெயராமன் தொலைபேசி ஊழியர் சங்கத் தலைவர்  பணி ஓய்வு விழா மலர் சிறக்கவும்  அவ்விழா நிகழ்வு ஓர் வரலாறுத் தடமாக அமைந்திடவும் ஓய்வின்றி பங்களிப்பு நல்கினார்.

தோழர் சிரில் நினைவு அறக்கட்டளை என்னும் அமைப்பினைக் கடலூர் தொலைபேசி ஊழியர்கள் அமைத்து கடந்த இருபது ஆண்டுகளுக்கு  மேலாகத் தமிழ்ப் பணி ஆற்றிவருவது இவண் குறிப்பிடத்தக்கது. தமிழ்ப் பாடத்தில் முதல் மதிப்பெண் பெற்ற தொலைபேசி ஊழியர்களின்  மாணவச் செல்வங்களுக்குச்  சங்க வேறுபாடின்றி  ஆண்டுதோறும் பரிசுகள் வழங்கி சிறப்பு செய்யப்படுகிறது.

            அத்தமிழ் விழாவில் தமிழ்ச் சான்றோர் பெருமக்கள்  தொடர்ந்து கவுரவிக்கப்படுகின்றனர்.  முனைவர் நா. பாசுகரன், அகரமுதல்வன், பிரபஞ்சன், ராஜம் கிருஷ்ணன், காசி ஆனந்தன், கவிஞர் அறிவுமதி, பத்மாவதி விவேகானந்தன், சிருங்கை சேதுபதி, வைணவ அறிஞர் மதுராந்தகம் ரகுவீர் பட்டாச்சாரியார்,  தோழர் தா பாண்டியன், ராஜ்ஜா, ஸ்டாலின் குணசேகரன், திருப்பூர் சுப்புராயன்,  இந்து தமிழ் நாளிதழ் சமஸ் என அந்த வரிசைத் தொடர்கிறது. இத்தகைய அரிய நிகழ்வுகளுக்கு எல்லாம் தனது மனக் குகையில் அடித்தளம் அமைத்திட்டவர் தோழர் ரகுவே.


கடலூரில் பல்வேறு இலக்கிய அமைப்புக்கள் இயங்குகின்றன. தமிழ்ச் சான்றோர்கள் வாழ்ந்து வருகிறார்கள்.  நாமார்க்கும் குடியல்லோம் எனப் பாடிய அப்பர்  உலாவிய மண்.  வாடிய பயிரைக்கண்ட போதெல்லாம் வாடிய பெருமகனார்  இராமலிங்க வள்ளலார் திருவடிபட்டத்  திருமண் அல்லவா. ஈடில்லா தேசப்பற்றுக்குச் சொந்தமான  வீரத்தாய்  கடலூர் அஞ்சலை அம்மாள்  இந்திய நாட்டு விடுதலைக்குப் போராடிய புனித பூமிதானே கடலூர்.

தோழர் ரகு, கடலூர் அருகே சாத்தான்குப்பத்திலுள்ள கிறித்துவ மிஷினரியின்  ஆளுகையின் கீழுள்ள ஆதரவற்றோர் இல்லத்தில் பயிலும் மாணவச் செல்வங்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதில் முன் கை எடுத்தவர். தொழிலாளர்களையும் சங்கத்தையும் சமூகப் பணிகளில் ஆற்றுப்படுத்தி  ஈடுபடுத்தியவர்.

2004 டிசம்பரில்  கடலூர் சந்தித்த சுனாமிப் பேரழிவு நிகழ்வின்போது பாதிக்கப்பட்ட மீனவக் குடும்பங்களுக்கு உதவுவதில் முன் நின்றனர். கடலூர் மாவட்டத் தொலைபேசித் தோழர்கள். தோழர் ரகுவின் தலைமைப் பங்கு அதனில் மகத்தானது.

கடலூர் மாவட்டக் கலை இலக்கியப் பெருமன்றக் கிளையின் செயல்பாட்டில் தன்னை முழுமையாக இணைத்துக் கொண்டவர் தோழர் ரகு. இலக்கியப் பெருமன்ற நிகழ்வுகளான கவிஞர் ஞானக்கூத்தன் கவி அரங்கிலும், நூற்கடல் கோபாலைய்யர் ‘கம்பனில் தோழமை’ எனும் உரை நிகழ்விலும், தனுஷ்கோடி ராமசாமியின் ஜெயகாந்தன்  ஞான பீடவிருது பெற்றமை குறித்தப் பாராட்டு நிகழ்விலும் ஈடுபாட்டுடன் கலந்துகொண்டவர்.

கடலூரில் எண்ணற்ற  தொழிற்சங்க .மாநாடுகள் தோழர் ரகுவின் தலைமையின் கீழ் வெற்றிகரமாக நடைபெற்றதனை இங்கே பெருமையோடு குறிப்பிடலாம்.

தோழர் ரகுவின் எல்லையற்ற தோழமைப் பண்பு காணக் கிடைக்காத செல்வம். துப்புரவுப் பணியாற்றும் தொழிலாளியிலிருந்து எத்தனை உயர்மட்ட அதிகாரிகள் இருந்தாலும் எல்லோருடனும் சம நிலையோடு பழகும் பண்பாளர். தொலைபேசி ஊழியர்களின் ஆயிரம் ஆயிரம் பிரச்சனைகளைத்  தனது கூர்மதியால் தீர்த்து வைத்தவர்.

தொலைபேசித் தொழிற்சங்கம் இந்தியத் தொழிற்சங்க வரலாற்றில் சாதித்தவைகள் ஏராளம். தினக்கூலித் தொழிலாளர்கள்  எண்ணிக்கையில் லட்சம் பேருக்கும் கூடுதலாக  நிரந்தர  ஊழியர் ஆக்கிய சாதுர்யத்திற்கும்  சாகசத்திற்கும் பாத்தியதையுடைய உயிரோட்டமுள்ள அமைப்பு அது. அந்தப் பெருமை மிகு அமைப்பின் செயல்பாட்டிற்கும் சிறப்புக்கும் தோழர் ரகு போன்ற தலைவர்களே ஆணிவேராக இருந்து பணியாற்றியவர்கள்.

.கடலூரில் மகளிர் தினவிழா ஆண்டுதோறும் மார்ச் மாதம் எட்டாம் நாள் நடைபெறும் அவ்விழாவில்  சாதனைப் பெண்மணிகள் கலந்து கொள்வர். பெண்கள் மட்டுமே  விழா மேடையை அலங்கரிப்பார்கள். விழா நிகழ்வு  முழுமையும் பெண் ஊழியர்களால் நடத்தப்படும். தோழியர் கே. விஜயலட்சுமி எனும் தோழியர் மகளிர் தினவிழா நிகழ்வுகளுக்குப் பொறுப்பாகச் செயல்பட்டார். அந்தத் தோழியரும் சிலகாலம் முன் காலமானார். இப்படியாக மகளிர் நிகழ்வுகளுக்குப்  பிரபலங்கள் பலர் கலந்துகொண்டு சிறப்பு சேர்த்துள்ளார்கள். ராஜம் கிருஷ்ணன், தமிழ்ச்செல்வி, அ. வெண்ணிலா, பர்வீன்சுல்தானா என அந்த வரிசையைப் பட்டியலிடலாம்.

கருத்து மாறுபாடு கொண்ட தோழர்களை அரவணைத்துச் செல்வதில் தோழர் ரகுவிற்கு நிகர் ரகுவே. எதிரணித் தோழர்களோடு விவாதிப்பதில், பிரச்சனைகளை எடுத்துவைப்பதில் ரகுவிற்கு நிகர்  அவர் மட்டுமே. அத்தனை கூர்மையான அறிவுத் திறனுடன்  ததும்பும் நகைச்சுவை உணர்வுடன் விவாதம் செய்பவர்களைத் தொழிற்சங்க அரங்கில் காண்பது மிக அரிது.

எப்பொழுதும் படித்துக் கொண்டே இருக்கும் தோழர் ரகு ஆங்கிலப் புலமை மிக்கவர்.

மேடைகளில் பேசும்போது அவரின் பேச்சு நம்மைத் தட்டி எழுப்பும், சொக்கவைக்கும். இந்தி மொழியிலும் ஆகத் தேர்ச்சிபெற்றவர் ரகு. வட இந்தியத் தலைவர்களின் இந்தி உரையை நம்தமிழில் ஆக்கி விருந்து படைப்பார்.

            ஆங்கில மொழிச்செறிவால் நல்ல மொழி பெயர்ப்பாளர். அதிகாரிகள் எத்தனை உயர் அதிகாரிகளாக இருந்தாலும் தோழரின் பேச்சாற்றலுக்கு முன்னால் தோற்றுத்தான் போவார்கள். தோழர் எடுக்கும் பிரச்சனைகளில் நேர்மை நிச்சயம் கொலுவிருக்கும். சட்டப்படியே செய்யவேண்டும் என்பதில் மாற்றுக் குறையாத  உறுதியிருக்கும். எடுக்கப்படும் எல்லா முடிவுகளுக்கும்  அடிநாதமாக மனிதாபிமானம் மிளிர்வதை நாம் கண்டுணர முடியும்.

தன் குடும்ப முன்னேற்றத்தைவிடத் தன் தோழர்களின் நல் வாழ்க்கையைப்பற்றி மட்டுமே சிந்தித்த ஒரு தோழர் உண்டென்றால் அந்த அதிசயமே எங்கள் ரகு.

நல்ல நண்பனாய் உடன் பிறவா சகோதரனாய்,  பெற்றதாயினும் சாலப்பரிந்து உதவும் அன்பருக்கு அன்பனை, தோழர் ரகுவை நாம் தோற்றுவிட்டுத்தான் நிற்கிறோம்.

அவரை மீண்டும் படிப்போம்.  தோழர் ரகுவின் சிந்தனைகள் நமக்கு வழிகாட்டக் காத்திருக்கின்றன!

 ‘உன்னோடு விவாதித்து

 வென்றவர் இல்லை

ஆனால்

தோற்பதிலும்  வெற்றியுண்டு

எப்படி நீ அறியாது போனாய் ?’

                                                      கவிஞர் கடலூர், நீலகண்டன்.

Sunday 28 March 2021

சர்வதேச பெண்கள் தினம் கட்டுரை 3 நம்முடைய பெண்களை உண்மையில் நாம் கொண்டாடுகிறோமா?

 

நம்முடைய பெண்களை உண்மையில் நாம் கொண்டாடுகிறோமா?


--நந்திதா கிருஷ்ணா

வரலாற்றாளர், சூழலியல் ஆர்வலர் மற்றும் எழுத்தாளர்

            சோவியத் யூனியனில் பெண்கள் வாக்குரிமை கோரி போராடி அதனை 1917லேயே அடைந்த நிலையில் மார்ச் 8 சர்வதேச பெண்கள் தினத்தைக் கொண்டாடுகிறார்கள். சிலநாடுகள் மார்ச் மாதத்தைப் பெண்கள் மாதம் என்றும் வேறுசில நாடுகள் பெண்களுக்கான வரலாற்று மாதம் என்றும் கொண்டாடுகின்றன. பெண்கள் தினம் என்பது பெண்மையை, பெண்ணின மதிப்புகளை உயர்த்திப் பிடிப்பதும் அவர்களின் சாதனைகளையும் பங்களிப்புகளையும் அங்கீகரிப்பது என்றும் பொருள். இந்தியாவிலும் அந்நாளில் பெண் சாதனையாளர்களுக்கு விருது வழங்கும் நிகழ்வுகள் நடத்தப்படுகின்றன. ஆனால் அவையெல்லாம் படித்த நடுத்தர வர்க்கப் பெண்கள் சம்பந்தப்பட்டது. பெண்ணினத்தின் எஞ்சிய பகுதியினர் கவனிக்கப்படாது விடப்படுகின்றனர். இந்தியாவில் பாலினச் சமத்துவத்தை அடைவதிலிருந்து வெகு தொலைவு தள்ளி இருக்கிறோம்; ஆயிரம் ஆண்களுக்கு 940 பெண்கள் மட்டுமேயெனும் ஏற்றத் தாழ்வான பாலின விகிதம் அதிர்ச்சியளிப்பதாகும்.

            இந்தியாவில் பெண்கள் ஆற்றும் பாதிக்கும் மேற்பட்ட பணிகள் ஊதியமளிக்கப்படாதவை மற்றும் அமைப்பு சாராத பணிகளே. இந்திய விவசாயிகளில் 40% பெண்கள் என்றபோதிலும், அவர்கள் வசம் 9% நிலங்கள் மட்டுமே உடைமையாக உள்ளது. பாதி இந்தியப் பெண்களுக்கு வங்கிக் கணக்கு இல்லை உச்சநீதிமன்றம் இந்து குடும்பச் சொத்தில் மகள்களுக்கும் சமமான உரிமை உண்டென்று கூறியபோதிலும் 60% பெண்களுக்குச் சொத்து இல்லை. மொத்த உற்பத்திக் குறியீட்டில்  (ஜிடிபி) பெண்களின் பங்களிப்பு உலக சராசரி 37 சதவீதமாக இருக்க, இந்தியாவில் வெறும் 17%. உழைப்புச் சக்தியில் பெண்களுக்குச் சமமான வாய்ப்பு அளிக்கப்படுமானால் இந்தியாவின் ஜிடிபி 27 சதவீதமாக உயருமெனச் சர்வதேச நாணய நிதியம் (ஐஎம்ஃஎப்) மதிப்பிட்டுள்ளது.

            பாதிக்கும் மேற்பட்டப் பெண்களிடம் செல்பேசி இல்லை, 80% பெண்கள் இணையத் தொடர்பு இல்லை. அரசின் பிரதம மந்திரி முத்ரா திட்டத்தின் கீழ் விவசாயமல்லாத, கார்ப்பரேட் அல்லாத கடன்கள் சிறு குறு தொழில் முனைவோருக்கு வழங்கப்படுகிறது: அதில் பெண் தொழில் முனைவோர்கள் 78%மாகவும், வங்கிமூலம் நேரடி நலஉதவி பெறும் பொருளாதாரத்தில் பின்தங்கியோருக்கான ஜன்தன் யோஜனா திட்டத்தின் மூலமும் அரசு பெண்களுக்கு அதிகாரமளிக்க முயல்கிறது. இருப்பினும் இந்தியப் பெண்கள் இன்னும் பொருளாதார ரீதியாக அதிகாரமளிக்கப்பட்டவர்களாக இல்லை – சமவேலைக்கு (பெண்களுக்குச்) சம சம்பளமில்லை.

            இந்தியாவில் பெண்களின் மிகப்பெரிய பிரச்சனை உடல்ரீதியாகப் பாதுகாப்பில்லாதது. பெண்களுக்கு எதிரான குற்ற விகிதம் இந்தியாவில் 53.9%. டெல்லியில் பெண்கள் பொது இடங்களில் பாலியல் அல்லது உடல்சார்ந்த வன்முறைத் தாக்குதல்களை அனுபவிப்பது 92%. அது நமது தேசியத் தலைநகரம். பெண்களுக்கு எதிரான வன்முறை வெளியே தெரிவதைவிட எங்கும், எப்போதும், நீக்கமற இன்னும் அதிகமாகவே நடைபெறுகின்றன; இதில் பலவகை வடிவிலான வன்முறைகள் குற்றங்களாகக் கருதப்படுவதில்லை, அன்றி வெளிஉலகிற்குத் தெரிவிக்கப்படுவதில்லை. பெண்களுக்கு எதிரான பாலியல் வன்முறைக்காக இந்தியாவை உலகின் மிகமிக அபாயகரமான நாடாகக் கருதுகின்றனர். வன்புணர்வு இந்தியாவில் மிகச் சாதாரணமான நிகழ்வாகிப் போனது; இந்தியாவில் ஒவ்வொரு 20 நிமிடத்திற்கும் ஒரு பெண் வன்புணர்வுக்கு ஆளாகிறாறென தேசிய குற்ற ஆவணப் பதிவுகள் அமைப்பு (NCRB) கூறுகிறது.

            2019ம் ஆண்டில் ஒவ்வொரு நாளும் 88 வன்புணர்வு வழக்கு பதியப்பட்டதாக அவ்வமைப்பு சமீபத்தில் புள்ளிவிபரம் வெளியிட்டுள்ளது. பாலியல் வன்கொடுமைக்கு ஆளான பெண்ணுக்குப் பல நேரம் நியாயம் கிடைப்பதில்லை; காரணம், அவர்களது தரப்பைக் காவல்துறை நியாயமாகக் காதுகொடுத்துக் கேட்பதில்லை, முதல் தகவல் அறிக்கை பதிவதில்லை, பலதருணங்களில் மருத்துவ சாட்சியம் பதியப்படுவதில்லை. இவையெல்லாம் குற்றம் புரிந்தவர்கள் சுலபமாகத் தப்பிவிடச் சாதகமாகின்றன.

            என்னால் ஆணின் மன அமைப்பைப் புரிந்து கொள்ள முடியவில்லை, எப்படி பலாத்காரமாக ஒரு பெண்ணை அல்லது குழந்தையைத் தவறாக நடத்துவது அல்லது வன்புணர்வுக்கு ஆட்படுத்துவது என்ன மனநிலையோ? இந்தியப் பெற்றோர்கள் தங்கள் மகன்களுக்கு வாழ்வின் நல்ல மதிப்பீடுகளைச் சொல்லித் தருவதில்லையோ? பெரும்பான்மை வன்புணர்வுக் குற்றங்களும் கழிவறை வசதி இல்லாத காரணத்தால் வயல்வெளிக்குச் செல்லும்போது நடக்கின்றன. ஆனால் நகரில் பேருந்துக்காகக் காத்திருக்கும் பெண்ணுக்கும் பாதுகாப்பில்லை என்பதைத்தான் நிர்பயா வழக்கு அம்பலப்படுத்தியது. இந்நிலையில் இரவில் காலங்கடந்து பெண்கள் வெளியே தங்கியிருப்பதும், அல்லது ஈர்க்குமாறு மேற்கத்திய உடைகளை அணிவதையும் காரணம் காட்டிப் பெண்களை அரசியல்வாதிகள் குறை கூறுவது எந்தவகையிலும் பயன்தராது. அது அவர்களுடைய வேலை இல்லை. மாறாக, அவர்களுடைய பணி பெண்களுக்குப் பாதுகாப்பு வழங்குவதுதான்.

            கல்விக்கான வாய்ப்பு குறைவு, ஏழ்மை காரணமாகப் பெண்களைத் தகுந்த வயதிற்கு முன்பே திருமணம் செய்து கொடுப்பது கரோனா தீநுண்மி பெருந்தொற்றால் அதிகரித்துள்ளது. உலகம் முழுவதும் கோவிட் தொடர்பாகப் பள்ளிகள் மூடப்பட்டதால் 160 கோடி குழந்தைகளின் கல்வி தடைபட்டுள்ளது. இப்படித்தான் 2013ல் எபோலா தொற்று பரவியதும் பெண் குழந்தைகள் படிப்பைக் கைவிட்டு பள்ளியைவிட்டு நீங்க, தொடர்ந்து அவர்கள் குழந்தைத் திருமணம் செய்து கொடுக்கப்பட்டதும் நடந்தது – இதனை ஒருவகையில் அப்பெண்ணின் குடும்பம் பொருளாதார நெருக்கடியிலிருந்து விடுவிக்கப்பட்டதாகக் கருதினர்.

            தொற்றின் காரணமாக வேலையிழப்பு, குடும்ப வருமான இழப்பினால் பெண்களைப் பொருளாதாரச் சுமையாகக் கருதி இளம் வயதில் திருமணம் முடிப்பது இந்தியக் குடும்பங்களில் நிர்பந்திக்கப்படுகிறது. கரோனா தீநுண்மித் தொற்றின் காரணமாக வயதுக்கு வராத இலட்சக் கணக்கான பெண்கள் திருமண வாழ்வில் திணிக்கப்படும் ஆபத்து உலகம் முழுவதும் நடைபெறுவதாக யுனிசெப் அறிக்கை கூறுகிறது. ஐ.நா.வின் புள்ளி விபரப்படி இந்தியாவில் மட்டும் ஒவ்வொரு ஆண்டும் 15 இலட்சம் குழந்தை மணப்பெண்கள் திருமணம் நடைபெறுவதாக மதிப்பிட்டுள்ளது. தொற்று ஆரம்பித்த நாள் முதலாக நான் பல இளம் பெண்களின் சோகக் கதைகளைப் படித்து வருகிறேன். வேலையிழந்த பெற்றோர் அவர்களை வயதானவர்களுக்கு மணம் முடிக்கிறார்கள், அதன் பிறகு ஒரு வாய் வயிறுக்குச் சோறிடும் சுமை குறையுமே என்று.

            இந்திய அரசு அனைவருக்கும் கல்வி என்பதில் உறுதி பூண்டு, அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி வழங்க  கல்வி உரிமை சட்டத்தை நிறைவேற்றியுள்ளது. 15 முதல் 16 வயதுள்ள பெண் குழந்தைகள் பள்ளியை விட்டு இடை நிற்பது 2008ல் 20 சதவீதமாக இருந்தது, 2018ல் 13.5%ஆகக் குறைந்துள்ளதென ஆண்டு கல்விநிலை அறிக்கை கூறுகிறது. பல நேரங்களில் தங்கள் தம்பி தங்கைகளைப் பார்த்துக் கொள்ளவும், வீட்டு வேலைகளில் உதவி செய்யவும் வேண்டி பெண்கள் பள்ளியைவிட்டு இடைநிற்பது துரதிருஷ்டமே. மேலும் கழிவறை வசதி மற்றும் பாதுகாப்பின்மை வேறு சில பிரச்சனைகளாகும்.

            தற்போதைய வில்லன் கோவிட்-19. பெண்களுக்கான பயன்படு நிலையில் பள்ளிகளில் தனிக் கழிவறைகள் எண்ணிக்கை 2010லிருந்து உயர்ந்து 2018ல் 66.4%மாக அதிகரித்துள்ளது; அதேபோலப் பள்ளிகளில் சுற்றுச் சுவர் 13.4%லிருந்து 64.4 சதவீதமாக உயர்ந்துள்ளது. இந்தியாவின் சராசரி கல்வியறிவு விகிதம் 64.8%, அதில் ஆண்கள் 75.3%மாக இருக்க, பெண்கள் 53.7% மட்டுமே; இதில் ஆண் பெண் இடைவெளி21.6%. இந்த இடைவெளி கிராமப்புறத்தில் இன்னும் கூடுதலாக இருக்கும். பெண்கள் அந்தஸ்து நிலைமையில் நிலவும் இத்தொற்று பாதிப்புக்கு முடிவு எதுவும் கண்ணில் தெரியவில்லை.

            பெண்கள் அதிகாரம் பெறுவதற்கான தீர்வு கல்வி மற்றும் பொருளாதாரச் சுதந்திரம் அடைவதில் மட்டுமே உள்ளது. தீநுண்மி கல்விச் சாலைகளை மூட நிர்பந்தித்துள்ளது. மேலும் ஓராண்டு இந்தியப் பெண்கள் பாடு துன்பமயமே. எதிர்வரும் ஜூன் மாதம் பள்ளிகள், கல்லூரிகள், பயிற்சி நிலையங்கள் -- தொற்று கால முன்னேற்பாடுகளான முகக் காப்பு, கையுறை, விலகி நிற்றல் முதலியவற்றை கடைபிடித்து, குறைந்த எண்ணிகையில் வகுப்புகள் ஷிப்ட் முறையில் -- திறக்கப்பட வேண்டும். இந்தியர்கள் புதியன கண்டுபிடிப்பவர்கள், புதிய வழிகளைக் காணுவார்கள். அவர்களுக்கு அனுமதியளிக்கப்பட்டால் பள்ளிகள் மாற்று வழிமுறைகளைக் கண்டு பிடிப்பார்கள். அவ்வாறின்றி, கல்விச் சாலைகள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றால், குழந்தைத் தொழிலாளர், குழந்தைத் திருமணங்கள் மற்றும் பொதுவாகப் பெண்கள் அவமரியாதைக்குள்ளாவது அதிகரிப்பதையே நாம் எதிர்பார்க்க முடியும்.

--நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 27-03-2021

Are We Truly Celebrating Our Women?

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

 

Friday 26 March 2021

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 28 சுதா ராய் – கம்யூனிஸ்ட் மற்றும் தொழிற்சங்க முன்னணியின் பெண் தலைவர்

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் -28


சுதா ராய் – கம்யூனிஸ்ட் மற்றும் தொழிற்சங்க முன்னணியின் பெண் தலைவர்

--அனில் ரஜீம்வாலே

--நியூஏஜ் (ஜன.3-.9 இதழ்)

            சுதா ராய் 1914ல் தற்போதைய பங்களாதேசத்தில் உள்ள ஃபரிதாபூர் என்ற இடத்தில் ஒரு நிலக்கிழார் குடும்பத்தில் பிறந்தவர். அவரது தந்தை அகால மரணமடைந்ததால் தனது தாயையும் மற்ற குழந்தைகளையும் கவனிக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. டாக்காவில் உள்ள ஈடன் கல்லூரியிலும் கல்கத்தா பல்கலைக்கழகத்திலும் வங்கமொழியில் ஹானர்ஸ் சிறப்பு பட்டப் படிப்பை முடித்தார்.

            சுதா ராயை அரசியலுக்குக் கொண்டு வந்தவர் மனோரஞ்சன் குஹா தாக்கூர்டா. அவரது ஒன்றுவிட்ட சகோதரர் (கசின்) சிசிர் ராய் அவரைத் தொழிற்சங்க இயக்கத்தோடு தொடர்பு கொள்ளச் செய்தார். அவர் பின்னாட்களில் போல்ஷ்விக் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார். பெங்கால் லேபர் பார்ட்டி (பிஎல்பி) என்றழைக்கப்பட்ட ஓர் அமைப்பு 1933ல் நிறுவப்பட்டது; மீரட் சதி வழக்குப் பின்னணியில் அக்கட்சி ஓர் இரகசிய அமைப்பாக, போல்ஷ்விக் கட்சி என்ற பெயரில் செயல்பட்டது. அந்தக் கட்சியை நிஹரேந்து தத் குப்தா மற்றும் டாக்டர் நரேஷ் சென்குப்தா அமைத்தனர். அவர்கள் பிரிட்டனில் மாணவர்களாக இருந்தபோது கம்யூனிஸ்ட்களாக ஆனவர்கள்.

            பெங்கால் லேபர் கட்சியின் பிரபலமான தலைவர்களில் சிசிர் ராய், சுதா ராய், ஜோதிர்மாய் நந்தி, கமல் சர்க்கார், பிஸ்வநாத் தூபே முதலானவர்கள் அடங்குவர். அந்தக் கட்சி முக்கியமாகக் கல்கத்தாவின் கிட்டர்பூர் மெடியாபர்ஸ் பகுதியின் துறைமுகத் தொழிலாளர்கள் மத்தியில் செயல்பட்டது. அந்தத் தொழிலாளர்களில் பெரும்பாலோனோர் உருது மற்றும் இந்தி பேசுபவர்கள்.

தொழிற்சங்க இயக்கத்தில்

            பெங்கால் லேபர் பார்ட்டி (பிஎல்பி) மிக நெருக்கமாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒத்துழைத்தது. துறைமுக மற்றும் கப்பல், சணல், இரும்பு மற்றும் எஃகு, உலோகம் மற்றும் என்ஜினியரிங், பேர்டு அண்டு கோ கம்பெனி, சுகாதாரத் தூய்மைப் பணியாளர்கள், ரயில்வே துறையில் பணியாற்றும் தொழிலாளர்கள் மத்தியில் எனத்  தொழிற்சங்க அமைப்புகள் பலவற்றைப் பிஎல்பி நிறுவியது. இந்த அமைப்புகளின் அனைத்து நடவடிக்கைகளிலும் மெல்ல மெல்ல சுதா ராய் ஈடுபட்டார். சமூக விரோத சக்திகளின் அடாவடியால் அந்நாட்களில், துறைமுகப் பகுதிகளில் பெண்கள் நடமாடுவது பாதுகாப்பானதாக இல்லை; ஆனால் சுதா ராய் அச்சவாலை எதிர்கொண்டு அமைப்பு சார்ந்த பணிகளில் உற்சாகமாகவும் உறுதியோடும் செயல்பட்டார். தொழிலாளர்கள் மத்தியில் அவர் ‘பெகன்ஜி’ (இந்தியில் ‘மரியாதைக்குரிய சகோதரி’ என்று பொருள்) என்று அனைவராலும் அன்புடன் அழைக்கப்படும் பெரும் புகழோடு விளங்கினார். 

            அஸாம் ரயில்வேமென் சம்மேளத்திலும் பணியாற்றினார், அதற்காக 1939 –40களில் அவர் அஸாம் சென்றார்.

1932ல் சுதா ஆசிரியர் பணியைக் கமலா பெண்கள் பள்ளியில் மேற்கொண்டார்; 1958வரை அதே பணியில், இடையே சிலகாலம் துண்டிக்கப்பட்டாலும், நீடித்தார். அப்போது தெற்குக் கல்கத்தாவின் ஹஜ்ரா சந்தில் (ஹஜ்ரா லேன்) வசித்தார். பள்ளியில் வகுப்புகள் முடிந்ததும், அவர் பிற்பகலில் வழக்கமாகத் துறைமுகப் பகுதிக்குச் சென்று தொழிலாளர்களிடையே பணியாற்றினார். அவர்களோடு நேரத்தைச் செலவிட்டு, அவர்கள் பிரச்சனைகள் குறித்துப் பேசி, வர்க்க உணர்வு மற்றும் சோஷலிசம் பற்றி அவர்களுக்கு அறிமுகம் செய்தார். லெனின் மற்றும் ரஷ்யப் புரட்சி பற்றி மிக விரிவாக எடுத்துரைத்தார். உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம் பற்றித் தெரிந்துகொள்ளச் செய்தார். மிக நுட்பமாக அரசியல் மற்றும் தத்துவத்தைத் தொழிலாளர்களுக்கு முறையாக அறிமுகம் செய்த ஒருசில தொழிலாளர் வர்க்கத் தலைவர்களில் சுதாவும் ஒருவர்.

கல்கத்தா போர்ட் அண்டு டாக் ஒர்க்கர்ஸ் யூனியன் மார்ச் 1934 ல் அமைக்கப்பட்டது. சுதா ராய் அச்சங்கத்தில் தீவிரமாகச் செயல்பட்டார். 1934ல் மிக வெளிப்படையாக மே தினத்தை அனுசரித்தபோது அந்தக் கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் திரண்டனர். (இந்தியாவில் முதல் மே தினம் சென்னையில் 1923ல்  சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர் நடத்தினார்)

விரைவில் தொழிலாளர்கள் தங்கள் கோரிக்கைகளை எழுப்பினர்; வேலை நேரத்தை 11 மணியிலிருந்து 8மணி நேரமாகக் குறைப்பது, தினக் கூலியை உயர்த்துவது, பணிச் சுமையைக் குறைப்பது, பணிப் பாதுகாப்பு முதலியன சில. இக்கோரிக்கைகளை வலியுறுத்தி மொத்தமுள்ள 20 ஆயிரம் துறைமுகத் தொழிலாளர்களில் 15ஆயிரம் பேரும், ஐயாயிரம் கப்பல் கட்டும் தொழிலாளர்களில் 2000 தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். கல்கத்தா துறைமுகத்தில் மட்டும் 50 கப்பல்கள் செயல்படாமல் முடங்கிக் கிடந்தன.

இந்த வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாகத் திரட்டி அமைப்பதில் சுதா ராய் தீவிரமாகப் பங்கேற்றார். பலநாட்களில் சிசிர், ஜோதிர்மாய் நந்தி மற்றும் சுதா ராய் வீட்டிற்குச் செல்லாமல் கப்பல் நிற்கும் துறையின் பகுதியில் உள்ள சிறிய அறையிலேயே தங்கி இருந்தனர். செயல்படுவதே சிரமமான மிக மோசமான சூழ்நிலைகளில் அவருடைய செயல்பாடு தீரத்தின் வெளிப்பாடு.

வேலைநிறுத்தம் செய்தவர்கள் பழிவாங்கப்பட மாட்டார்கள் என்ற உறுதிமொழியில் 1934 டிசம்பர் 16ம் நாள் வேலைநிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது. அலுவல்சாராத விசாரணைக் குழு ஒன்று அமைக்கப்பட்டது. அக்குழுவில் சர் பிசி ராய், டாக்டர் நரேஷ் சென்குப்தா மற்றும் மௌல்வி ஏகே ஃபஸ்லுல் ஹஹ் போன்ற பிரபலமானவர்கள் இடம் பெற்றனர். மேலும் அந்த வேலைநிறுத்தம், ரஹீம், யூசுப், ஷேர் கான், நாராயண் ராவ், அப்தர் ரஹ்மான் கான் முதலான முக்கியமான கம்யூனிஸ்ட் தலைவர்களை உருவாக்கித் தந்தது.

போல்ஷ்விக் கட்சி சிபிஐ கட்சியுடன் இணைந்தது

             1936ம் ஆண்டின் தொடக்கத்தில் போல்ஷ்விக் கட்சி சிபிஐ கட்சியுடன் இணைந்ததும் சுதா ராயும் சிபிஐயில் சேர்ந்தார். சுதா ராய் வங்காளத்தின் சட்டவிரோதமான சிபிஐ கட்சியில் சேர்ந்த இரண்டாவது பெண்ணாக இருக்கக் கூடும். முதலாவது பெண் லத்திகா சென். 1949 ஏப்ரல் 27ல் நடந்த போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் பலியான தியாகி, லத்திகா சென்.

            போல்ஷ்விக் கட்சி மீண்டும் ஒருமுறை திருத்தி அமைக்கப்பட்டு திரும்பவும் ஒரு கட்சியாக உருவானது. 1939ல் நடைபெற்ற திரிபூரி காங்கிரஸில் சுபாஷ் போஸ் தொடர்பான பிரச்சனை எழுந்தபோது, அது நிகழ்ந்தது. நிகரேந்து தத், பிஸ்வநாத் தூபே, சிசிர் ராய் போன்ற போல்ஷ்விக் தலைவர்கள், சிபிஐ கட்சி சுபாஷ் போஸையும் அவர் பார்வர்டு பிளாக் கட்சி அமைத்ததையும் ஆதரித்து இருக்க வேண்டும் என்று கருதினர். தேசிய ஐக்கிய முன்னணி என்ற பெயரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வர்க்கக் குலாவுதல் (ஒத்துழைப்பு) கொள்கையைக் கடைபிடித்துவிட்டதாக அத்தலைவர்கள் எண்ணினர். சுதா ராயும் திரிபூரி காங்கிரஸ் மாநாட்டில் சிபிஐ பிரதிநிதியாக முக்கிய சிபிஐ கூட்டங்களில் பங்கேற்றார். அவரும் சிபிஐ கட்சியிலிருந்து விலகி மற்ற தலைவர்களோடு போல்ஷ்விக் கட்சியில் இணைந்தார். 1941ல் அவர் வேலையை விட்டுவிட்டு சில காலம்  போல்ஷ்விக் கட்சிப் பணியாற்றினார்.

இரண்டாவது உலகப் போரின்போது

            இரண்டாவது உலகப் போரின்போது ஏஐடியுசி தலைமையில் பாரக்பூர் –திட்டஹார்க் பகுதியின் (சணல் மில் தொழிலாளர்களின்) ஸாட்கல் மஸ்தூர் சங்கத்தில் சுதா ராய் தளர்வின்றி ஒரு தொழிற்சங்கத் தலைவராகத் தீவிரமாகச் செயல்பட்டார். ஓர் அர்ப்பணிப்புள்ள செயற்பாட்டாளர் மற்றும் தலைவரது செயல்பாடு என அவரை நந்த்லால் போஸ் வர்ணித்துள்ளார். “இந்த இளம் பெண்,” கல்கத்தா பல்கலைக்கழகப் பட்டதாரி, பெங்கால் லேபர் கட்சியின் மற்றும் சிபிஐ கட்சியின் முக்கியமான தலைவர் எனப் (போலீஸ்) புலனாய்வுத் தகவல் அறிக்கைகளில் குறிப்பிட்டுள்ளனர். தொழிலாளர்களின் அரசியல் பிரக்ஞை உணர்வுகளை எழுப்ப அவர் கடுமையாகப் பாடுபட்டார்.

குழுப் போக்குக்கு எதிராக

            குழுவாதப் போக்குடைய அரசியல் கட்சியிலும் சூழலிலும் இருந்தாலும், சுதா ராயின் அணுகுமுறை குறிப்பிடத்தக்க பரந்த சிந்தனைப் போக்குடையதாக இருந்தது.  1938ல் ஜெஸ்ஸோர் கௌல்னா அரசியல் தொழிலாளர்கள் மாநாட்டில் நரேஷ் சென் என்ற செயல்பாட்டாளர் எதிர் முகாம் ஆட்களால் 1938 மே 28ல் கொல்லப்பட்டார், காரணம் அவர் கம்யூனிஸத்தின் பால் சென்றார் என்பதே. பாலிகுங்கேயில் 1938 ஜூன் 10ல் கண்டனக் கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பெரும் எண்ணிக்கையிலான மாணவர்கள், தொழிலாளர்கள் –குறிப்பாக ஹுகும்சந்த் இரும்பு ஆலையின் தொழிலாளர்கள் – கலந்து கொண்டனர். அந்தக் கூட்டத்தில் சுதா ராய், முஸாஃபர் அகமது உட்பட போல்ஷ்விக் பார்ட்டி மற்றும் சிபிஐ தலைவர்கள் உரையாற்றினர்.  

            சுதா ராய் பேசும்போது, குழுப் போக்கு அணுகுமுறை மற்றும் விரோத மனப்பான்மையால் அரசியல் களங்கப்படுத்தப்பட்டு வருவதாக இடித்துரைத்தார். “சுதந்திரத்திற்கான போராட்ட வீரர்கள் முக்கியமான ஒரு கொள்கையைக் கண்ணின் மணியாய் கொண்டனர்: ஏகாதிபத்தியத்திற்கு எதிராகப் போரிடுவது. பகுத்தறிவையும் வாதிடுவதையும் பயன்படுத்த வேண்டுமே தவிர, வன்முறையை அல்ல. “பயங்கரவாதிகள் லெனினைக் கொல்ல முயன்றனர், ஆனால் இன்றளவும் லெனினியம் செம்மாந்து முன்னோக்கி நடைபோடுகிறது.”

            பாட்னாவிலிருந்து சுதா ராய் முஸாஃபூரில் இருந்த உமா கோஷ் அவர்களுக்கு 1942 அக்டோபர் 7ல் எழுதிய கடிதத்தில், பாசிசத்திற்கு எதிரானவர்களின் ஒற்றுமை, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உட்பட மிகவும் முக்கியமானது. “பிசி ஜோஷியும்கூட ஒன்றிணைந்த பெருந்திரள் செயல்பாட்டிற்கு ஒப்புக்கொண்டுள்ளார்…” ரேணு சக்ரவர்த்தியும்கூட குழுவாதப் போக்கற்ற சுதா ராயின் அணுகுமுறையைச் சுட்டிக் குறித்துள்ளார்.   

            கப்பல்துறை தொழிலாளர் போர்டில் முதல் பெண் உறுப்பினராக சுதா ராய் இருந்துள்ளார். 1945ல் ‘லோக் சிக்க்ஷா பரிக்க்ஷத்’ என்ற வயது வந்தோர் கல்வியறிவு அமைப்பை அமைத்தார்.

பெண்கள் இயக்கத்தில்

            1943ல் சுதா பெண்கள் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். அனைத்திந்திய பெண்கள் மாநாடு (AIWC) மற்றும் அதன் ‘குழந்தைகள் முகாமை (செல்) பாதுகாப்போம்’ (Save Children Cell’) பிரிவில் பணியாற்றினார். பாரிசாலில் நடைபெற்ற ‘மகிளா ஆத்ம ரக்க்ஷா சமிதி’ அமைப்பின் இரண்டாவது வட்டார மாநாட்டில் கலந்து கொண்டார். 1940களில் மத்தியில் மதக் கலவரங்களில் பாதிக்கப்பட்டு துன்பப்பட்டவர்கள் மற்றும் ஆதரவற்றோர் முகாம்களில் தீவிரமாகச் செய்ல்பட்டு பல்வேறு பணிகளை ஆற்றினார்.

            1954ல் ‘இந்தியப் பெண்கள் தேசிய சம்மேளனம்’ (NFIW) அமைப்பு மாநாட்டில் சுதா ராய் பங்கேற்றார். அம்மாநாட்டு வரவேற்புக் குழுவின் ஒரு உறுப்பினரான அவர் மாநாட்டில் துணைத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்தப் பொறுப்பை 1981 வரை வகித்தார்.

பொதுத் தேர்தல்களில்

            முதலாவது நாடாளுமன்றப் பொதுத் தேர்தலில் போல்ஷ்விக் கட்சி சார்பாகப் போட்டியிட்ட ஒரே வேட்பாளர் சுதா ராய் மட்டுமே. பாரக்பூர் தொகுதியில் போட்டியிட்டு அவர் 25,792 வாக்குகள் பெற்றார். 1957 சட்டமன்றத் தேர்தல்களில் கோட்டை (போர்ட்) தொகுதியிலிருந்து போட்டியிட்டு நான்காவதாக வந்தார்.

யுடியுசி அமைப்பில்

            சுதா ராய் பணியாற்றிய துறைமுக கப்பல் தொழிலாளர்கள் சங்கம் 1958ல் பிளவுபட்டது. சுதா, சிசிர் மற்றும் பூத்நாத் தே முதலானோர் பிஸ்வநாத் தூபேயை எதிர்த்து நின்றனர். 1960ல் சிசிர் ராய் மரணமடைய, சுதா ராய் யுடியுசி சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆனார்.

மீண்டும் சிபிஐ கட்சியில் இணைதல்

            1965ல் நடைபெற்ற போல்ஷ்விக் கட்சி மாநாட்டில் சுதா ராய், கட்சியை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைக்க வேண்டும் என வற்புறுத்தினார். அவருடைய யோசனையை மாநாடு நிராகரித்தது. அதன் பிறகு அவர் தமது ஆதரவாளர்களுடன் போல்ஷ்விக் கட்சியை விட்டு விலகி, சிபிஐ கட்சியில் இணைந்தார். ஏஐடியுசியின் ஸாட்கல் மஸ்தூர் யூனியன் (சணல் தொழிலாளர்கள் சங்கம்) மற்றும் சில தொழிற்சங்கங்களில் சுதா ராய் பணியாற்றத் தொடங்கினார்.

            1970களில் நடைபெற்ற பங்களாதேஷ் விடுதலைப் போருக்கு உறுதியான தீவிர ஆதரவை வழங்கினார்.

            ஓர் ஆற்றல் மிக்க தொழிற்சங்கத் தலைவரான சுதா ராய், சிலகாலம் நோய்வாய்ப்பட்டு இன்னலுற்ற பிறகு 1987 ஜூன் 7ம் நாள் மறைந்தார்.

            தொழிலாளர்களிடையே அவர் ஆற்றிய பணி என்றும் நீங்காது நினைவிலிருக்கும்.

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

  

Thursday 18 March 2021

‘சர்வதேசப் பெண்கள் தினம்’ கட்டுரை 2

 

   சர்வதேச உழைக்கும் பெண்கள் ஆண்டு: 

இன்று பெண்கள் சந்திக்கும் 

புதிய சவால்கள் 


--அமர்ஜித் கவுர்

பொதுச் செயலாளர், ஏஐடியுசி

            “பணிநிலைமை, கூலி, வேலைநேரம் மற்றும் பணியிடத்தில் பாதுகாப்பு போன்றவை மேம்பட, போராட்ட இயக்கங்களில் பெண் தொழிலாளர்கள் பங்கேற்பு மற்றும் தியாகத்தை நினைவூட்ட ஒரு நாளை அனுசரிக்க வேண்டும்!” – இக்கருத்தைக் கோபன்ஹேகனில் 1910ம் ஆண்டு நடைபெற்ற இரண்டாவது அகிலத்தின் சோஷலிசப் பெண்கள் கூட்டமொன்றில் -- தன் உழைப்பின் தகுதியில் ஒரு தொழிற்சங்கவாதியான -- கிளாரா ஜெட்கின்சன் வெளியிட்டார். மேலும் அவர் பேசும்போது, “மனிதர்களாக நடத்தப்படல், வரையறுக்கப்பட்ட பணிநேரம், முறையான ஊதியம், உழைப்பிற்கு மரியாதை முதலிய உரிமைகளைப் பெற, போராட்டங்களை முன்னின்று நடத்திய தொழிலாளர்களின் தியாகங்களை நினைவூட்டும் வகையில் ‘மே தினம்’ என்பது முழுமையான உழைக்கும் வர்க்கத்தைச் சேர்ந்தது; அதுபோலவே, பெண் தொழிலாளர்கள் நடத்திய போராட்டங்களுக்கும் உரிய முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டும்!”

பின்னணியில் ஒரு போராட்டம்

            மிகுந்த முக்கியத்துவம் உடைய அவரது உரையின் பின்னணி பின்வருமாறு இருந்தது: 19ம் நூற்றாண்டின் தொழில்மயம் காரணமாக ஆலைகளில் பெண் தொழிலாளர்களும் அதிக அளவில் உழைத்தது மட்டுமல்ல, மோசமான பணிநிலைமைகளில் பணியாற்றவும் நிர்பந்தம். கடுமையான வறுமையின் காரணமாக 4, 5 வயதுடைய குழந்தைகளும்கூட தினமும் 12லிருந்து 14 மணி நேரம் வேலைவாங்கப்பட்டனர். இவ்வளவு கடுமையான உழைப்புக்கும் அற்ப ஊதியம், பணித்தன்மைசார் பாதுகாப்பு, சுகாதார வசதி ஏதுமற்ற, அபாயகரமான பணிச்சூழல் கொடுமை. இனியும் பொறுக்க முடியாது என 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் தொழிலாளர்கள் எதிர்க்கத் தொடங்கினர்.

            கோட்டுக்கு வெளியே அணியும் கையில்லாத குட்டையான சட்டை தயாரிக்கும் நியூயார்க் மன்காட்டனில் இருந்த நிறுவனத்தின் 30ஆயிரம் பெண் தொழிலாளர்கள் --10மணி வேலை நாள், சங்கம் அமைக்க அனுமதி கோரி -- டிசம்பர் மாதக் குளிரையும் பொருட்படுத்தாது வீதிகளில் இறங்கிப் போராடினர். போராடியவர்கள் மீது கடுமையான அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. தடியடி தாக்குதல், துப்பாக்கிச் சூடு இவற்றில் எண்ணற்றோர் காயமடைய, பலர் கொல்லப்பட்டனர். சில நாட்களுக்குப் பிறகு அப்பகுதியில் இருந்த இரண்டு ஆலைகளில் தீவிபத்து ஏற்பட, தப்பிக்க அல்லது வெளியேற வழியில்லாத நிலையில் 125பேர் தீயில் எரிந்து மாண்டனர். அதே போழ்து, உலகம் முழுவதும் பெண்களுக்கு வாக்குரிமை கோரி பல இயக்கங்கள் நடைபெற்றன.

            ‘சர்வதேசப் பெண்கள் தினம்’ என்ற யோசனையைக் கிளாரா முன் வைத்து பேசியபோது இந்த டெக்ஸ்டைல் ஆலைப் பெண் தொழிலாளர்களின் வீரம் செறிந்த போராட்டங்களைத்தான் குறிப்பிட்டார். மார்ச் 8ம் தேதியைச் சர்வதேச உழைக்கும் பெண்கள் தினமாக அனுசரிப்பது என முடிவாயிற்று. உலகின் பல பகுதிகளில் தொழிலாளர்களும் தொழிற்சங்கங்களுமே இந்நாளைத் தொடக்கத்தில் கொண்டாடின. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ‘பெண்கள் சர்வதேசிய ஜனநாயக சம்மேளனம்’ (WIDF) அமைக்கப்பட்டு, அவ்வமைப்பிற்குப் ‘பொருளாதார – சமூகக் கவுன்சில்’ என்ற உயரிய கலந்தாலோசனை அங்கீகாரத்தை ஐக்கிய நாடுகள் சபை வழங்கி ‘பெண்கள் தினம்’ கொண்டாடும் இயக்கத்தை முன்னெடுத்தது; அதன் பிறகுதான் ஐநா-வின் அங்கீகாரத்துடன் பரவலாக உலகெங்கும் சிறப்பாகக் கொண்டாடப்படுகிறது. பெண்களும் தொழிற்சங்க இயக்கங்களும் கொண்டாட, ஐநாவின் 1975 அமர்வில் 1975ம் ஆண்டைச் ‘சர்வதேசியப் பெண்கள் ஆண்டு’ எனப் பிரகடனத் தீர்மானம் ஏற்கப்பட்ட பிறகே அரசாங்க மட்டத்திலும் பெண்கள் தினக் கொண்டாட்டங்கள் துவங்கின. [அரசு சாரா தன்னார்வ அமைப்புகளுக்கு அதன் சமூகப் பணிகளை அங்கீகரிக்கும் விதமாக ஐ நா மாமன்றம் வழங்குகின்ற மிக உயர்ந்த மதிப்புமிக்க அந்தஸ்தே ஒரு என்ஜிஓ அமைப்பிற்கு வழங்கப்படும் (ECOSOC) எனப்படும் ஆலோசனைக்குழு அந்தஸ்தாகும்.] 

இந்தியாவில் பெண் உரிமை தோற்றம்

            இந்தியாவிலும் பெண்களின் நிலை, வாழ்க்கை, பெண்கள் வாழ்வாதாரம் குறித்து ஆய்வு நடத்த முதன்முறையாக அரசு பூர்வமான கமிட்டி அமைக்கப்பட்டது. பின்வந்த ஆண்டுகளில் பெண்கள் இயக்கங்கள், ‘குழுவின் சிபார்சுகளை அரசே அமல்படுத்து’ என்ற கோரிக்கை முழக்கமாக அக்குழுவின் சிபார்சுகளே அடிப்படையாக அமைந்தன.  பெண்கள் அமைப்புகளும் தாங்களாக முன்வந்து சமூகத்தில் பெண்கள் அந்தஸ்து உயர்வதற்குப் பல ஸ்தாபனங்கள், ஆய்வு மையங்களை ஏற்படுத்தின. பெண்களின் மேம்பாட்டிற்கு அவர்களுக்கான கல்வி, உடல்நலம், சுகாதாரம், தண்ணீர், அடிப்படை குடிமை வசதிகள், பணியாற்றப் பயிற்சி மற்றும் வேலைபெறும் வாய்ப்பு போன்ற உரிமைகளை நமது இந்திய அரசியல் சட்டத்தில் இடம்பெறச் செய்து பொறிக்கப்பட்டுள்ளன; ஆனால் அவற்றை வென்று சாதிக்க, அமல்படுத்த மிகக் கடுமையான போராட்டங்களை நடத்த வேண்டியிருந்தது.

            மேலும், சமூக பொருளாதார கலாச்சார வெளியில் ஆண் பெண் சமத்துவ நீதியை நிலைநாட்டத் தொடர்ந்து தீவிரமான போராட்டங்களும் நடத்திட வேண்டியிருந்தது. தானாக எதுவும் மாறிவிடவில்லை. எப்போதெல்லாம் பெண்கள் பாலின நீதியுடன் கூடிய கௌரவமான வாழ்வுரிமை கோரிக்கை எழுப்பிப் போராடுகிறார்களோ அப்போதெல்லாம் அறிவுப் பரவலைத் விரும்பாத குழப்பவாதிகள், பிற்போக்கு, மதவாத சாதிய சக்திகள் அந்தப் போராட்டங்களுக்கு எதிராகத் தடைகளை ஏற்படுத்த முயன்றார்கள்.

பாஜக ஆட்சியில் புதிய தாக்குதல்கள்

            சமீப காலங்களில், மத்தியில் தற்போதைய ஆட்சியாளர்கள் பதவிக்கு வந்ததிலிருந்து இச்சக்திகள், அதிகார அமைப்புகளின் ஆதரவோடு பெண்களுக்கு எதிரான தங்கள் பிற்போக்குத் திட்டங்களைத் திணிக்க தைரியம் பெற்றுவிட்டார்கள். இதனால் அனைத்து வகை பாகுபாடுகளுக்கும் எதிராகப் பாலின நீதியை நிலைநாட்ட நடத்தப்படும் போராட்டங்கள் மேலும் கடினமாக்கப்படுவதுடன் பெரும் விடா முயற்சியும் தேவைப்படுகிறது; இதனினும் பெருங்கொடுமை, பாஜக ஆளும் சில மாநிலங்களில் சட்டத்தின் மூலம் பிற்போக்கு நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. அதன் சமீபத்திய வடிவம்தான் “லவ் ஜிகாத்” என்ற பெயரில் பெண்களின் திருமணத் தேர்வை மறுக்கும் போக்கு. அதைவிட மோசமாக, தேர்தல் வெற்றி நோக்கத்திற்காக வெறுப்பு மற்றும் நச்சுக் கருத்துகளைப் பிரச்சாரம் செய்வதன் மூலம் சமூகத்தைப் பிளவு படுத்துவதானது, நமது நாட்டின் சமூகக் கட்டமைப்பைச் சீர்குலைக்கும் அபாயகரமான பின்விளைவுகளுக்கு வழி கோலும். இவை அனைத்திலும் பாதிக்கப்படுவது, அதன் விளைவுகளைச் சுமப்பது பெண்களே.

பெண்கள் இன்று சந்திக்கும் பிரச்சனைகள்

            இவ்வாண்டு மார்ச் 8ல் சர்வதேச உழைக்கும் பெண்கள் தினத்தைக் கொண்டாடும்போது பெண்கள் முன் எழுந்துள்ள சவால்கள் பல மடங்காக அதிகரித்துள்ளது. பல அருவருப்பான உண்மைகள் கோவிட் 19 நெருக்கடி காலத்தில் தலைதூக்கியுள்ளன. பெண்கள் தங்கள் குழந்தைகளோடும் ஆண் தொழிலாளிகளோடும் நெடுஞ்சாலைகளில் பல மைல்கள் தொலைவு கடுமையான இன்னல்களுக்கு இடையே நடந்து சென்ற துயரம் மிகுந்த படங்களை ஊடகங்களில் பார்த்த உலகம் அதிர்ச்சியில் உறைந்து போனது. ஆனால் நேரடியாகப் பார்த்த அரசு இவற்றைப் புறக்கணித்து வாளாயிருந்தது; துயர் துடைக்க, ஆறுதல் அளிக்க எந்தச் சிறு நடவடிக்கையும் எடுக்கவில்லை. பெண்கள் மீதான தாக்குதல் அபாயம் –அவர்கள் வீட்டில் இருந்தாலும், பணியிடங்களில், ஏன் பல மைல் தொலைவு சோர்வாக நடந்துபோகும்போதும் – அதிகரித்தன. பெண்களுக்கு எதிரான இல்ல-வன்முறை (டொமஸ்டிக் வயலன்ஸ்) 40%க்கும் கூடுதலாக அதிகரித்த கசப்பான உண்மையைப் பல ஆய்வு அறிக்கைகள் வெளிப்படுத்தின.

            பெண் தொழிலாளர்களில் 97 சதவீதத்திற்கும் அதிகமாக அமைப்புசாரா பொருளாதாரப் பிரிவில் உழைப்பவர்களே; அமைப்புரீதியான பிரிவுகளில் பணியாற்றும் பெரும்பாலானோர் ஒப்பந்த முறையிலோ, தற்காலிக தினக்கூலியாக அல்லது வெளியிலிருந்து பணிஒப்பந்தம் செய்யப்பட்டவர்களாக (அவுட் சோர்ஸ்டு) இருப்பவர்களே. 97% பெண் உழைப்பாளிகளுக்குப்  பேறுகால விடுமுறை பலன்கள் ஒரு நிறைவேறாத கனவு. 1975 சர்வதேசப் பெண்கள் ஆண்டில் ‘சமவேலைக்கு சம ஊதியம் சட்டம்’ பிரகடனப்படுத்தப்பட்டு, 1976ல் அறிப்பாணை வெளியிடப்பட்டும், அமலாக்கத்தில் தொடர்ந்து தோல்வியே நிலவுகிறது.

பாலினப் பாகுபாடும் சமூக அணுகுமுறையும்

                பணியிடத்தில் பாலினச் சீண்டல்கள், தொல்லைகள் –விசாகா வழிகாட்டுதல்களுக்குப் பிறகும் – தணியாமல் தொடரவே செய்கிறது. பின்னர் நிர்பயா வழக்குக்குப் பிறகு பாலியல் துன்புறுத்தல் தடுப்புச் சட்டம் நிறைவேற்றப்பட்டும் பயனின்றி அப்படியே உள்ளது. பாகுபாடு கூடாது என்ற அடிப்படையில் பெண்களுக்கான நீதி கிடைத்திட சமூகத்தின் உளப்பாங்கு போக்கு மாற வேண்டிய தேவை உள்ளது. விவசாயிகள் போராட்டத்தில் பெண்கள் ஏன் பங்குபெற வேண்டும், அவர்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்பச் செல்ல வேண்டும் என்பன போன்ற அறிக்கைகள்; அல்லது, பெண்ணை மானபங்கம் செய்த படுபாவியையே அவனால் பாதிக்கப்பட்ட பெண்ணை மணக்க இயலுமாவென நீதித்துறையின் உயர்பீடத்திலிருந்து வினவுவது போன்றவை சமூகத்தில் ஆழமாக வேரோடிப்போன பாலின நீதி உணர்வற்ற அணுகுமுறையை அம்பலப்படுத்துவன. இதற்கு மாறாகச் சமீபத்தில்,  (முன்னாள் அமைச்சரும் பத்திரிக்கையாளருமான) எம்ஜெ அக்பர் எதிர் பிரியா ரமணி வழக்கில் டெல்லி உயர்நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு ஓர் ஆறுதலாகும்; எதிர்பார்க்கும் மாறுதல்களுக்கான நம்பிக்கையை அளிப்பது. (அதுபோன்ற வழக்குகளில் பொதுவாக இதுவரை நீதிமன்றங்களில் பாதிக்கப்பட்ட பெண்ணை நோக்கி கேட்கப்படும் கேள்விகள்: ஏன் உடனே சொல்லவில்லை? வழக்குப் பதியாமல் சமூக ஊடகத்தில் எழுதுவது ஏன்? என்ன ஆதாரம்? ஆடவரின் மதிப்பு மரியாதை என்னாவது? இதுபோன்ற அபத்தமான, பரவலான வினாக்களுக்கு இத்தீர்ப்பு தகுந்த விடையளித்து ஆறுதல் அளிக்கிறது)

பொருளாதாரப் பின்னடைவும் பெண்கள் துயரும்  

            வீழ்ச்சி மற்றும் மூழ்கும் பொருளாதாரத்தின் பாதிப்புகளை நம் நாடு சந்திக்கப்போகிறது. நல்ல ஊதியம் மற்றும் பணிபாதுகாப்புள்ள பணிகள் குறைக்கப்படுகின்றன; பொதுத்துறை நிறுவனங்களைத் தனியார்மயப்படுத்தும், அரசுத் துறைகளைச் சீரழித்து பலவீனப்படுத்தும் அரசின் முறைதவறிய நோக்கத்துடனான கொள்கைகளே அதற்குக் காரணம். மேலும் புதிய ஆளெடுப்பும் நடைபெறுவதில்லை.  

            சமூகப் பிரிவில் அரசு செலவழிப்பது தொடர்ச்சியாகக் குறைக்கப்படுவதால், அமைப்பு சாரா பொருளாதாரத்தில் கிடைத்துவந்த வேலைவாய்ப்புகள் சுருங்குகின்றன. உதாரணத்திற்கு ‘மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புச் சட்ட’த்தின் கீழ் கிராம ஊரகப் பகுதிகளில் பணி வழங்கும் (MGNREGA) திட்டத்திற்கான மத்திய பட்ஜெட் நிதி ஒதுக்கீடு தொடர்ச்சியாகக் குறைக்கபடுகிறது; பணியிடங்களை ஏற்படுத்துவதற்கான சட்டம் மதிக்கப்படுவதில்லை. கரோனா தொற்று ஊரடங்குக்கு பிந்தைய காலத்தில் ஆண்களைக் காட்டிலும் விகிதாசாரத்தில் பெண்களின் வேலையிழப்பு மிக அதிகம். பணித் திறன் உடைய பெண் தொழிலாளர்கள் வாழ்க்கையைச் சமாளிக்க வேண்டி –ஊதியம் குறைவான—பணித்திறன் தேவையில்லாத (அன்ஸ்கில்டு) பணியிடங்களில் பணியாற்ற முன்வருகின்றனர். அங்கேயும் அவர்களுக்கான வாய்ப்பு சுருங்கியே வருகிறது.

தொழிலாளர் சட்டங்கள் திருத்தமும் பெண்களுக்குப் பாதிப்பும்  

            தொழிலாளர் நலச் சட்டங்களைத் திருத்தி நான்கு குறுங்குறிகளாக (code) மாற்றியுள்ளது. இந்நடவடிக்கை தொழிற்சங்கங்களை ஒதுக்கித் தள்ளி, கூட்டு பேரச்சக்தியைப் பலவீனமாக்கும்; மேலும் சமூகப் பாதுகாப்பு, பணியின்போது பாதுகாப்பு மற்றும் ஊதியப் பிரச்சனைகளில் பெரும் எண்ணிக்கையிலான தொழிலாளர் பட்டாளத்தை விலக்கி வைக்கும்.

            போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள், பணியிடத்திற்குச் செல்ல போக்குவரத்து வசதி, மற்றும் பணியிடத்தில் குறைந்தபட்ச வசதிகளைச் செய்து தராமல், சுரங்கப் பணிகள் மற்றும் ஆலைகளில்  இரவு ஷிப்ட் திரும்ப கொண்டு வந்துள்ளது பெண்களை மீண்டும் இரண்டு மடங்கு துன்பத்திற்கு உள்ளாக்கும்.

            தடைசெய்யப்பட்ட பகுதிகளை உடல்நலத்திற்கு தீங்கு பயக்கும் பகுதி என வரையறை செய்து அப்பகுதிகளில் பெண்கள் பணியாற்றுவது தொழிற்சாலை சட்டத்தில் ஏற்கனவே தடை செய்யப்பட்டிருந்தது; ஆனால் அச்சட்டத்தில் தற்போது திருத்தம் செய்து ‘பெண்கள்’ என்ற வார்த்தையைக் ‘கருவுற்ற தாய்மார்கள்’ என மாற்றியுள்ளது மிகவும் பிற்போக்கான நடவடிக்கை. அது மற்ற பெண்களை அப்பகுதியில் பணியாற்ற நிர்பந்திக்கும். இவ்வாறு தொழிலாளர் நலச் சட்டங்களை குறுங்குறியாக்கியதில் பல பகுதிகளில் செய்யப்பட்ட --கடுமையான விளைவுகளை ஏற்படுத்தும்-- மாறுதல்கள் குறித்து ஆழமான விவாதங்கள் தேவைப்படுகின்றன.

            எனவே, தற்போதைய ஆட்சியாளர்களால் “வாழ்க்கையில் நிலையற்றவை என்பன நிலையானதாக மாற்றப்படுகின்றன” என்ற விமர்சனம் மிகவும் பொருத்தமானது.

காரிருளில் மின்னல் கீற்றென நம்பிக்கை

            இவ்வளவு கடுமையான காலச் சூழ்நிலையில், பெரும் எண்ணிக்கையிலான மகளிரும், அனைத்து வயதுடைய பெண்களும் போராட்டங்களில் பங்கேற்பது, காரிருளில் மின்னல் கீற்று போல ஆறுதல் அளிக்கும் ஒரு விஷயம். அவர்கள் தங்கள் சொந்த பாதுகாப்புப் பிரச்சனைகளுக்காக மட்டுமின்றி, தங்கள் அடையாளத்தை நிலைநாட்ட, சமூகத்தின் பலபிரிவு மக்களின் அக்கறையுள்ள விஷயங்கள் குறித்தும் போராட முன்வருகிறார்கள். கல்வி உரிமைக்கான போராட்டங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளை வணிகமயமாக்கும் போக்குகளைக் கண்டித்து, தனியார்மயத்தை எதிர்த்து, மாணவர் சங்கங்களுக்கு ஜனநாயக உரிமைகள் கோரி நடைபெறும் போராட்டங்களில் இப்பெண்கள் களத்தில் முன்னே நிற்கிறார்கள்.  இது நம்பிக்கை அளிக்கும் போக்கு.

           


குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிரான இயக்கத்தைப் பெண்களில் இளையோர் மற்றும் மூத்தோர் இணைந்து தலைமையேற்று நடத்தினர். அதேபோல அனைத்து வயதுடைய பெண்களும் பெரும் எண்ணிக்கையில் திரண்டு தற்போது வேளாண் பெருமக்கள் நடத்தும் நெடிய போராட்டத்தில் பங்கேற்கின்றனர்.

            கல்வித் தகுதியுடைய இளம் பெண்கள், இளைஞர்களுக்குச் சற்றும் பின்தங்காது, போராடும் விவசாயிகளுக்குத் தேவையான தொழில்நுட்ப ஆதரவு உதவியை வழங்குகின்றனர். தற்போதைய ஆளும் தரப்பு 2014ல் ஆட்சிபீடம் ஏறிய நாள் முதலாக பல இளம் பெண்களுக்கு எதிராகச் ‘சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்’ ஊபா (UAPA), தேசத் துரோகச் சட்டம், தேசியப் பாதுகாப்புச் சட்டம், மற்றும் இந்திய குற்றவியல் சட்டப் பிரிவுகளின் கீழெல்லாம் வழக்குப் பதிந்து கைது செய்கிறார்கள். ஆனால் இதற்கெல்லாம் அவர்கள் சற்றும் அஞ்சுவதில்லை, சுற்றி நில்லாதே போ பகையே எனக் களமாடுகின்றனர். ஆட்சியாளர்களுக்கு அஞ்சாத அந்தப் பெண்களுக்கு ஆதரவாக அவர்கள் குடும்பத்தினரும் உறுதியாக நிற்கின்றனர்.

            இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் ஜீவனான மதிப்புறு விழுமியங்களை அழித்தொழிக்கத் தலைப்படும் சக்திகளுக்கு எதிராக வெளிப்படையாகச் சவால்விடும் வீரம் செறிந்த இளம் பெண்களின் நெஞ்சுரத்திற்கு இந்தியச் சமூகத்தின் அனைத்து ஜனநாயக, மதசார்பற்ற மற்றும் முற்போக்கு சக்திகள் மிகுந்த நன்றிக் கடப்பாடு உடையவர்கள்.

சமூக வளர்ச்சியில் பெண்களின் பங்களிப்பு

            பிரிட்டிஷ் காலனிய ஆட்சியிலிருந்து நாடு விடுதலை வெற்றியை அடைந்ததில் பெண்கள் ஆற்றிய பங்கு அளப்பரியது; விடுதலை பெற்ற பாரத தேசத்தைக் கட்டியெழுப்புவதிலும், பெற்ற விடுதலையைப் பேணிக் காப்பதிலும் அதே உற்சாகமாக பங்கேற்பு; ‘தண்ணீர் விட்டோ வளர்த்தோம், கண்ணீரால் காத்து’ வாராது வந்த விடுதலையை, நாட்டின் இறையாண்மையை, மாற்றுக் கருத்துரைக்கும் உரிமையை, பேச்சுரிமையை, அதற்கும்மேல் அரசியலமைப்புச் சட்டத்தையும்  தற்போது பாதுகாப்பதில் முன்நிற்பதும் பெண்களே. 

            இந்த ஆண்டின் சர்வதேச உழைக்கும் பெண்கள் நாளில் இப்போராட்டங்களைத் தொடர்ந்து வெற்றியை நோக்கி முன்னெடுத்துச் செல்ல சூளுரைப்போம்!  

                        “விலகி வீட்டில்ஓர் பொந்தில் வளர்வதை

                         வீரப்பெண்கள் விரைவில் ஒழிப்பராம்

                         ஆணும் பெண்ணும் நிகர்எனக் கொள்வதால்

                         அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்!”

                                         -- நன்றி : நியூஏஜ் (மார்ச் 14 –20)

-- தமிழில் : வெ நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்