Monday 24 July 2023

நியூஏஜ் தலையங்கம் -- பாஸ்டில் சிறை தகர்ப்பு எழுச்சியின் முக்கியத்துவம்

 


நியூஏஜ் தலையங்கம் (ஜூலை 23 – 29)

பாஸ்டில் சிறை தகர்ப்பு எழுச்சியின் முக்கியத்துவம்

    பிரான்ஸ் தேசத்தில் முடியாட்சி முடிவுக்கு வந்ததைக் கொண்டாடும் தேசிய தின விழாவில் கலந்து கொள்ள இந்தியப் பிரதமர் பாரீஸ் சென்றிருந்தார்.

    நீராவி சக்தி கண்டுபிடிக்கப்பட்ட 34 ஆண்டுகளுக்குப் பின் அந்நாள் 1789 ஜூலை 14. அது நிலப்பிரபுத்துவம் நொறுங்கி முதலாளித்துவம் மெல்ல தொடங்கிய காலகட்டம். மேலாண்மைச் செல்வாக்கு அப்போதும் ராஜ பிரபுத்துவ வம்சத்தினரின் கைகளிலே இருந்ததால், முதலாளிகள் அதிகாரத்தில் பங்கு கிடைக்காத அதிருப்தியில் இருந்தனர். தொழிலாளர்கள் தங்கள் ஊதியத்தில் 90சதவீதத்தை விழுங்கிய ரொட்டியின் (உணவு) அதீத விலை உயர்வு அதிருப்தியில் வாடினர். அதனால் உடை, இருப்பிடம், சுகாதாரம், கல்வி போன்ற அத்தியாவசியங்களுக்கு அவர்களால் செலவிட முடியவில்லை. விவசாயிகளோ நிலப்பிரபுக்கள் விருப்பப்படி ஆட வேண்டிய அடிமை நுகத்தடியில் கட்டுண்டு கிடந்தனர்.

நீராவிச் சக்தி, கட்டமைப்பு முதல் மேலாதிக்கம் வரை அனைத்தையும் மாற்றியது. அது வயல்வெளி முதல் தொழிற்சாலைகள் வரை மாற்றத்தின் காலம். மாற்றம் என்பது அதற்கான

விலையையும் கோரியது. அதுதான், பாரீஸில் நடைபெற்ற சிறை தகர்ப்பு எழுச்சி, ஒரு புதிய தொடக்கத்தின், புரட்சிக்கான சமிக்ஞையைத் தந்தது; அதன் பிறகே, “சுதந்திரம், சமத்துவம் சகோதரத்துவம்” என்ற உயரிய லட்சியங்கள் அடிப்படையில் குடியரசு அமைக்கப்பட்டது. ஆனால் அந்த நாட்கள் வித்தியாசமானவை. முழுமையான மேல் கட்டுமானம், வேளாண் முறை, கண்மூடித்தனமான நிலப்பிரபுத்துவ ஆட்சியும் கலகலத்து நொறுங்கத் தொடங்கியது. அரசரும் அரசியும் இனியும் வணங்கத்தக்க தெய்வாம்சங்கள் அல்ல. மக்களுக்கு அரசர் 16வது லூயி (Louis XVI), அரசி மேரி அன்டோனெட் மீது ஒரு சிறிதும் நம்பிக்கை இல்லை.

கண்ணை உறுத்தும் ஓர் உண்மை, கண்ணுக்கெட்டிய தூரம் முடிவில்லாத மிகக் கொடுமையான துன்பம், எங்கும் பரவி இருந்த பசி பட்டினியில் தெரிந்தது. பசியில் இருந்த மக்கள் அதனால் கடும் சீற்றத்தில் இருந்தனர். மற்றொரு அடிப்படையான உண்மை, அதனளவில் எழுச்சிப் புயலைக் கொண்டுவரப் போதுமானதாக இருந்த, பிரான்ஸ் நாட்டைச் சூழ்ந்திருந்த பொருளாதார திவால் நிலைமை. 1789 அந்த மே மாதத்தில் அரசியல் நிச்சயமற்றத் தன்மை, பொருளாதார இன்னல்கள் இரண்டும் தீவிரம் அடைந்தன. நிலைமை கொதி நிலைக்கு வந்தது. புதிய சிந்தனையுடன் ஒரு புதிய சமுதாயம் அரும்பும் அறிகுறிகள் மெல்ல உருவாயின. அங்கே தனிமனித உரிமைகள் மற்றும் சமத்துவ அடிப்படையிலான பிரதிநிதித்துவமுள்ள அரசிற்கான தேவை வளர்ந்தது. ஜனநாயகம் குறித்த கருத்தியல்கள் வடிவம் பெறுவதில் பிரான்ஸ் மட்டும் தனித்து இல்லை, வளர்ச்சி அடைந்த உலகம் முழுமையும் புதிய விடியலுக்காகக் காத்திருந்தது. அந்த மூலதனத்தின் ஆட்சி, பிரான்ஸ் தேசத்தால் மட்டும் அடையாளம் காணப்படவில்லை, ஆனால் (1765 --1783 ஆண்டுகளுக்கு இடையில் நடைபெற்ற அரசியல் எழுச்சியான) அமெரிக்கப் புரட்சியாலும் ஊக்கப்படுத்தப்பட்டது.

அப்போது, ஜூலை 14 காலை பாரீஸைச் சுற்றி வளைக்க படைகளுக்கு அரசர் உத்தரவிட்டதாக ஒரு வதந்தி பரவத் தொடங்கியது. அதற்கான எதிர்வினை பயமாகவோ அன்றி துரோகம் இழைப்பதாகவோ இல்லை; மாறாக, அது வலிமை பொருந்தியதாகவும் உரத்தும் இருந்தது. அது ஒரு வரலாற்றுத் தருணம், அதைத் தொடர்ந்து அது உலகத்தை மாற்றிப் போட்டது. சர்வாதிகார முடியாட்சிக்கு எதிராக அச்சமற்ற மாபெரும் மக்கள் கூட்டம், நிலப்பிரபுத்துவத்தின் வாழும் அடையாளமாக விளங்கிய பாஸ்டில் மீது தாக்குதல் தொடுத்தது. அரண்மனை கோட்டை அரணின் ஆளுநர் பேச்சு வார்த்தை நடத்த முயன்றார், ஆனால் தோல்வி அடைய முதல் பலி ஆனார். துண்டிக்கப்பட்ட அவரது தலையை ஓர் ஈட்டியில் சொருகி மக்கள் வீதிகளில் வலம் வந்தனர். தங்களை நசுக்கிவந்த அவர்கள் மீது அதிகாரம் செலுத்தும்  போதைக்கு மக்கள் ஆட்படவில்லை; ஆனால் அவர்களுடன் நீறு பூத்த நெருப்பாகக் கனன்று வந்த புனிதச் சீற்றம் அது. புரட்சி தொடங்கியது. செப்டம்பர் 1792ல் பிரான்சு குடியரசு பிரகடனப்படுத்தப்பட்டது. 1793 ஜனவரி 21ல் 16வது லூயி புரட்சியாளர்களால் விசாரிக்கப்பட்டார். முடியாட்சி முடிவுக்கு வந்தது. அது பிரான்சு குடியரசின் முதல் ஆண்டாகக் கருதப்பட்டு அவ்வாறே பிரகடனப்படுத்தப்பட்டது. 16வது லூயி கடைசி லூயி (Louis the Last)என்று மக்களால் அழைக்கப்பட்டார்.

அரசர் 16வது லூயி, (தலை வெட்டும் கருவி) கிளெட்டின் கீழ் கிடத்தப்பட்டார். அவரது மரணத்துடன் நிலப்பிரபுத்துவ முறை முடிவுக்கு வரத் தொடங்கியது. அதன் பின் வெர்சாய்ஸ் அரண்மனையில் (பாரீசுக்கு மேற்கே 12 மைல் தொலைவில் 14வது லூயியால் வெர்சாய்ஸில் கட்டப்பட்ட  அரச இல்லத்தில்) எந்த அரசரும் வாழவில்லை.

புரட்சியின் இறுதி விளைவுகள் அற்புதம், ஆனால் எதிர்பார்க்கப்படாதது அல்ல. மாற்றம் நிரந்தரமானது, கருவிகளின் பரிணாமத்தால் வழிநடத்தப்படுவது. பிரெஞ்ச் புரட்சியைப் பொருத்தவரை அது நீராவின் சக்தியால் நடத்தப்பட்டது. மெல்ல தொழிற்புரட்சியின் காலம், புதிய கருவிகளுடனும், ஆட்சி நடத்த ஒரு ஜனநாயக அமைப்பு முறையுடன், அரும்பி வளர்ந்தது; இந்த மட்டத்தில் புரட்சி அதனுடன், “மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைகள் பிரகடனம்” என்ற ஒரு புதிய பாகமான அம்சத்தைக் கொண்டு வந்தது. வரலாற்றில் முதன் முறையாக மனித உரிமைகள் அங்கீகரிக்கப்பட்டன. அது உண்மை விடுதலைக்கான போராட்டத்தை ஒரு புதிய மட்டத்திற்குக் கொண்டு வந்தது. அது சமூக நீதிக்கான போராட்டம்.

           போராட்டங்கள் தொடர்ந்து நடைபெறுகின்றன, புதிய முழக்கங்களுடனும்,

வியாக்யானங்களுடனும். நடைமுறையில் உள்ள முறைமை (சிஸ்டம்) பிரச்சனைகளை உயிர்ப்புடன் வைத்துள்ளது. பிரச்சனைகள் அடிப்படை மாற்றங்களுக்குக் கட்டியம் கூறுகின்றன. ஓர் உதாரணம், தற்போது நடைபெறும் பென்ஷன் போராட்டங்கள். மற்றும் இளைஞர் ஒருவரைப் போலீஸ் கொன்றதன் காரணமாக எழுந்த கலவரங்கள்.

இது, ஒரு முறை புதிய விடியலுக்குக் கட்டியம் கூறி பெரும்புயலுக்குச் சமீக்ஞை தந்த அதே பாஸ்டில் தகர்ப்பு நிகழ்வின் அதே தருணம். இந்தியா அவர்களின் கொண்டாட்டங்களில் கலந்து கொண்டது. புதிய காலத்தின் தொடக்கமான தலைவாயிலில் நின்றுகொண்டு ஆட்சி செய்வது முடியாட்சி அல்ல, மாறாக வலதுசாரி சக்திகளுக்கு ஆதரவு தந்து வளர்க்கும் நிதி மூலதனம். அதேபோழ்து ஆர்எஸ்எஸ் - பாஜக ஆட்சியின் ஆண்டுவிழாவும் நடைபெறுகிறது, அத்தருணத்தில் பாஜக, “சேவா, ஜுஷான், கரீப் கல்யாண்” (சேவை, நல்லாட்சி மற்றும் ஏழைகள் நலம்) என்ற முழக்கத்தைப் பயன்படுத்துகிறது.

2014 மற்றும் 2019ல் நடைபெற்ற இரண்டு பொதுத் தேர்தல்களிலும் மோடி அரசு சாதாரணமாக தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி நாட்டின் மீது ஆர்எஸ்எஸ் சிந்தனை மற்றும் கருத்துகளைத் திணித்தது. ஆட்சியில் இருந்த சக்திகளுக்கு அரசியலமைப்புச் சட்டக் கோட்பாடுகள், லட்சிய விழுமியங்கள் அன்னியமானவை, அதற்கு நெருக்கமானது நிதி மூலதனத்திற்கு ஆதரவாக இருப்பதே. பாஸ்டில் தகர்ப்பு தொழிற்புரட்சி காலத்துடன் முதலாளித்துவ நிகழ்முறையின் தொடக்கமாக இருந்தது, அதுவே கார்ப்பரேட் மயமாக்குவதற்கு ஆதரவாகவும் இருந்தது.

அம்முறைமை (சிஸ்டம்) ஏனைய மக்களின் விழைவுகளைப் பொருட்படுத்தாமல் அவர்கள் குரல்களை நெறித்துத் தானடித்த மூப்பாக, ஓய்வின்றி அரசியலமைப்பு கோட்பாடுகளைப் பிய்த்தெறிவதில் ஈடுபட்டது. உழைக்கும் மக்களையும், மத, மொழி சிறுபான்மையினரையும் நசுக்கும் பெரும்பான்மை ஆட்சிமுறைமையைக் கொண்டு வருவதே  அவர்களின் பெருவிருப்பம்; மேலும் அதன் மூலம் இறுதியாக ஜனநாய அமைப்பு முறைமைகளைச் சீரழித்துச் சட்டத்தின் ஆட்சியையும் மீறி தங்களின் இலக்கை அடைவது அவர்களின் நோக்கம்.

கார்ப்பரேட் பிரிவுக்காக, எல்லா அதிகாரங்களையும் ஒன்றியத்தின் கைகளில் குவிக்கச் செய்து, எல்லாவித மத்தியகால பிற்போக்கு கருத்துகளை நடைமுறைக்குக்

கொண்டு வருவதன் மூலம், ‘கீழ்மட்ட’ சாதிகள் என அழைக்கப்படுபவர், பெண்கள் மற்றும் பொதுவாகச் செல்வத்தை உற்பத்தி செய்வதில் உழன்று ஆனால் அச்செல்வத்தை உரிமையாக வைத்திராத மக்கட்பிரிவுகளுக்கு எல்லாம் இரண்டாம் தர அந்தஸ்தை வழங்குவது அவர்களின் திட்டம். இதனைச் சாதிக்க, அரசியலமைப்புச் சட்டத்தின் அனைத்து விதிகளையும் சாகடித்து ஓர்மை வார்ப்பு ஆட்சியாளர்களால் விதிகளை மாற்றி அமைப்பது அதற்குத் தேவையாக உள்ளது.

இத்தகைய ஆட்சியின் கீழ், பாஸ்டில் தகர்ப்பு நிகழ்வுக்குப் பிறகு கொண்டுவரப்பட்ட சரித்திரப் புகழ் வாய்ந்த, “மனிதன் மற்றும் குடிமகனின் உரிமைகள் பிரகடனம்” அதனது மேன்மையான அர்த்தத்தை இழக்கிறது. கடந்த 9 ஆண்டுகளில் மனித உரிமைகள் சீர்குலைக்கப்பட்டு தூக்கி எறியப்படுகின்றன. [அதன் கொடூர உச்சம் மணிப்பூரில் பெண்களை நிர்வாணப்படுத்தி வீதிகளில் இழுத்துச் சென்ற காட்சிகளில் உலகத்திற்கு வெளிப்படுகிறது.

இந்தியா விடியலுக்குக் காத்திருக்கிறது, “இந்தியா” விடைகாண களம் காண்கிறது! மாற்றம் ஒன்றே மாறாதது, மாற்றம் மானுடத் தத்துவம்!]

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர் 

 

 

Tuesday 18 July 2023

ஜூலை 19 -- வங்கிகள் தேசியமய தினம் -- தோழர் சிஹெச்வி சிறப்புக் கட்டுரை

 

தேசியமயமாக்கப்பட்ட வங்கிள் 

தேசத்தைக் கட்டிமைக்கும் அமைப்புகள்

--வங்கிகளைத் தனியார்மயப்படுத்துவது

   மக்கள் விரோதம்

--சி ஹெச் வெங்கடாசலம்,

பொதுச் செயலாளர், AIBEA

எதிர்வரும் ஜூலை 19, நமது நாட்டில் தனியாருக்குச் சொந்தமான பெரிய வங்கிகள், வெற்றிகரமாகத் தேசியமயமாக்கப்பட்டதன் 55வது ஆண்டு. அந்த நாள் நமக்கு முக்கியமாகக் கொண்டாட வேண்டிய ஒரு நாள்; ஏனெனில் வங்கிகள் தேசியமயத்தைச் சாதிப்பதற்கான போராட்டங்களில் நாம் தியாகம் மிக்க பங்காற்றியிருக்கிறோம்.

    ஏஐபிஇஏ பேரியக்கத்தை நிறுவிய நமது முன்னோர்களின் கண்ணேட்டத்திற்கு நாம் நன்றி தெரிவிப்போம் –தேசியமயக் கோரிக்கை 1946ல் நமது அமைப்பு நிறுவப்பட்ட நாள் முதலாக அதன் கருவிலேயே இருந்தது. அதன் பின்னர் 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஏஐபிஇஏ அதற்காகப் பிரச்சாரம் செய்து, இயக்கங்கள் நடத்தி அதற்குப் பிறகு கடுமையாகப் போராடி மிகுந்த அரசியல் முக்கியத்துவம் உடைய இக்கோரிக்கையைச் சாதித்தது. அதனால்தான் அந்தச் சாதனையை நாம் கொண்டாடுகிறோம்!

    இப்போராட்டத்தில் ஏஐபிஇஏ அமைப்பை ஊக்கப்படுத்தி வழிகாட்டியதில் சிபிஐ மற்றும் ஏஐடியுசி ஆற்றிய பங்கை நினைவுகூர வேண்டியது மிக முக்கியமானது. எஸ்ஏ டாங்கே, பூபேஷ் குப்தா, எஸ்எம் பானர்ஜி, ஏகே கோபாலன், என்கே கிருஷ்ணன், இந்திரஜித் குப்தா போன்ற பல தலைவர்கள் நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் இந்தக் கோரிக்கைக்கு பிரச்சாரம் செய்து ஆதரித்தனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட, ஏஐபிஇஏ பொதுச் செயலாளருமான, பிரபாத் கர் திரும்பத் திரும்பக் இக்கோரிக்கையை எழுப்புவதிலும், வங்கி ஊழியர்களின் மாபெரும் போராட்டத்தைக் கட்டியமைத்து நடத்தியதிலும் முன்னணிப் பங்கு வகித்தார் என்பது உண்மையே.

     இப்போதும் வளர்ந்துவரும் பொருளாதாரமான நமது நாட்டில், மேம்பாடு மற்றும் வளர்ச்சியை உந்தித் தள்ளுவதில் வங்கித் துறை கேந்திரமான பங்கு வகிக்கிறது. வங்கிகள் தேசியமயமாக்கப்படுவதற்கு முன்பு அனைத்து வங்கிகளும் தனியார் பிரிவில் இருந்ததாலும், முக்கிய தனியார் வங்கிகளைச் சொந்தமாகக் கொண்டிருந்த பெருமுதலாளிகள் தங்கள் லாபத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருந்ததாலும் நாட்டின் தேவைகளைப் பற்றி அவர்கள் கவலைப்படவில்லை.

            தேவையுள்ள தொகுதிகள் மற்றும் தேவையுள்ள பிரிவுகளுக்கு வங்கிச் சேவை, குறிப்பாக வங்கிக் கடன், சுலபமாகப் பெறக்கூடியதாக இல்லை. இவ்வாறு தனியார் வங்கிகள் முதலாளிகளுக்கும் தொழில் குழாம்களுக்கும் வெறும் லாபம் ஈட்டும் கருவிகளாக மட்டும் இருந்தன. எனவேதான் வங்கிகளைத் தேசியமயமாக்க வேண்டும், அவற்றைப் பரந்துபட்ட அடிப்படையில் பொருளாதார வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்திற்குத் துணையாக நிற்கச் செய்ய வேண்டும் என்ற தேசபக்த கோரிக்கை எழுந்தது.

     இந்தக் கோரிக்கை சாதிக்கப்பட முடியாதது என்று பலராலும் கேலி பேசப்பட்டது, வேறு பலர் நம்பிக்கையற்று இருந்தனர். தொழில் குழாம்கள், முதலாளிகள் மற்றும் வங்கி உரிமையாளர்கள் சீற்றம் அடைந்தனர். அரசோ அக்கோரிக்கைபால் மகிழ்ச்சியாக இல்லை, எரிச்சல் கொண்டது. ஆனால் அக்கோரிக்கைக்காகப் போராடுவதில் ஏஐபிஇஏ பேரியக்கம் உறுதியாக இருந்தது.

    1964ல் நடைபெற்ற திருவனந்தபுரம் மாநாட்டிலிருந்து மாபெரும் போராட்டத்திற்கு ஏஐபிஇஏ அறைகூவல் விடுத்தது. பிரபாத் கர் மற்றும் HL பர்வானா தொடர்ச்சியான போராட்டத்திற்கு

 

வலிமையான அழைப்பு விடுத்தனர். வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் வங்கிகள் தேசியமயக் கோரிக்கையை எழுப்பி போராட்ட அலையின் உச்சத்தில் இருந்தனர்.

   கிராமப்புறங்களில் துன்பங்கள் அதிகரிக்க மக்கள் காங்கிரஸ் கட்சி மீது நம்பிக்கை இழ்ந்ததால், 1966ல் காங்கிரஸ் கட்சி பல மாநிலங்களில் ஆட்சி அதிகாரத்தை இழந்தது. எனவே இந்திரா காந்தி இப்பிரச்சனைகளைத் தீர்க்கும் வகையில் முடிவுகளை எடுத்தார். ஆனால் இந்த நடவடிக்கைகளைக் காங்கிரஸ் கட்சிக்குள்ளேயே பல தலைவர்கள் எதிர்த்தனர்.

    1969 வாக்கில், காங்கிரஸ் கட்சிக்குள் பிரச்சனைகளும் இந்திரா காந்திக்கும் மொராஜி தேசாய்க்கும் இடையில் பிளவும் அதிகரிக்க, இந்திரா காந்தி பல்வேறு முற்போக்கு முடிவுகளை அறிவித்தார். இது நமது கோரிக்கையை வற்புறுத்த உகந்த அரசியல் சூழலை ஏற்படுத்தியது. கம்யூனிஸ்ட் கட்சி, ஏஐடியுசி மற்றும் பிற முற்போக்கு சக்திகளும் நமது கோரிக்கையை எதிரொலித்தன. 1957முதல் 1967 வரை பிரபாத் கர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் அவர் இக்கோரிக்கையை நாடாளுமன்றத்தில் எழுப்பி, பல்வேறு அரசியல் கட்சிகள், எம்பி-கள் ஆதரவைத் திரட்டினார்.

    காலம் கனிந்தது, மேடம் இந்திரா காந்தி விரைந்து முடிவெடுத்தார், அவரது அரசு 1969 ஜூலை 19ல் வங்கிகளைத் தேசியமயமாக்கும் அவசரச்

 சட்டத்தைப் பிரகடனப்படுத்தியது.

    வங்கித் தொழில் கம்பெனிகள் (கையகப்படுத்தல் மற்றும் அண்டர் டேக்கிங்ஸ் மாற்றம்) மசோதா 1969, வங்கிகள் தேசியமயத்திற்கான நோக்கங்கள் மற்றும் காரணங்களைப் பின்வருமாறு தெரிவித்தது:

  பல லட்சக் கணக்கானவர்களின் வாழ்க்கையை வங்கி முறைமை தொட்டுத் தொடர்பு கொள்கிறது மேலும் அது பெருமளவில் சமூகப் பயன்பாடுகளுக்கு ஊக்கப்படுத்தப்படவும்; விவசாயம், சிறுதொழில்கள் மற்றும் ஏற்றுமதியில் தீவிர வளர்ச்சி போன்ற தேசிய முன்னுரிமைகளுக்கும்; வேலைவாய்ப்பு மட்டத்தை உயர்த்தல், புதிய தொழில் முனைவோர்களை உற்சாகப்படுத்தல் மற்றும் பின்தங்கிய பகுதிகளின் வளர்ச்சி போன்ற நோக்கங்களுக்கும் சேவையாற்றவும் வேண்டும். இந்த நோக்கப் பயனை அடைய, வங்கிச் சேவைகளையும், வங்கி முறைமையின் முக்கியப் பகுதிகளின் செயல்பாடுகளையும் விரிவுபடுத்தவும், பல்வேறாகப் பரவலாக்குவதற்காகவும் நேரடிப் பொறுப்பை அரசு எடுத்துக் கொள்ள வேண்டிய தேவை உள்ளது.”

    இது, ஏஐபிஇஏ பேரியக்கத்தைப் பொருத்தவரை அதன் நெடுநாள் கண்டோட்டம் நனவானது ஆகும். சுதந்திரா கட்சி (இப்போது அது இல்லை) மற்றும் ஜன சங்கம் (பாஜக வின் முந்தைய பெயர்) தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் நாடு முழுமையும் இந்த முற்போக்கு நடவடிக்கையைக் கொண்டாடி வரவேற்றது. இவ்வாறு நமது ஏஐபிஇஏ பேரியக்கம் நமது நாட்டின் அரசியல் நிகழ்வுகளில் பொன்னால் ஆன ஓர் அத்தியாயத்தைச் செதுக்கியது!

    வங்கி தேசியமயம் வங்கித் தொழில் பிரிவைப் பெரிய அளவில் மாற்றம் செய்தது. கடைகோடி கிராமப்புறங்களிலும் வங்கிக் கிளைகள் திறக்கப்பட்டன. இதுவரை புறக்கணிக்கப்பட்ட பிரிவுகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் கடன்கள் வழங்கப்பட்டன. சாதாரண மக்கள் வங்கிச் சேவையை எளிதில் பெற முடிந்தது. (லேவாதேவி அதிக வட்டிக் கொடுமை கட்டுப்படுத்தப்பட்டது.) வங்கிகளில் செலுத்தப்பட்ட பொதுமக்களின் பணத்திற்கு பத்திரமாக பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. 55 ஆண்டுகளில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் தேசத்தின் பொருளாதாரத்தை முன்னோக்கி இயக்கும் முக்கிய என்ஜின் ஆயின.

    வளர்ச்சி, தாவிப் பாய்ச்சல் மற்றும் அவற்றில் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளின் பங்களிப்பு அபாரமானவை. ஆனால் கார்ப்பரேட்டுகள் அழுத்தத்தின் காரணமாக வங்கிகளை அரசு தனியார் மயமாக்கி முதலாளிகளிடம் கையளிக்க விரும்புகிறது, அப்போதுதானே அவர்களால் வங்கிகளின் இருக்கும் பெருமதிப்பு வாய்ந்த சேமிப்புத் தொகைகளைக் கொள்ளை அடித்து வாரிச் சுருட்ட முடியும்? இதுதான் நாமும் நமது தேசமும் எதிர் நோக்கும் ஆபத்து.

வங்கிகளைத் தேசியமயமாக்கப் போராடியது போலவே, இன்று பொதுத்துறை நிறுவன வங்கிகளைப் பாதுகாப்பதும், அவற்றைத் தனியார்மயப்படுத்த மேற்கொள்ளப்படும் முயற்சிகளை முடியடிப்பதுமே நமது தேசபக்த கடமை. இதுதான் நமது பிரதான பணி, நமது முக்கிய கோரிக்கைகள் பின்வருமாறு:

Ø  பொதுத்துறை நிறுவன வங்கிகளை வலிமையாக்கு, விரிவுபடுத்து!

Ø  வங்கிகள் தனியார்மயத்தை நிறுத்து!

Ø  அனைத்துத் தனியார் வங்கிகளையும் தேசியமயமாக்கு!

Ø  கார்ப்பரேட் பெரு முதலாளிகளின் வாராக் கடனை வசூல் செய்!

Ø  வேண்டுமென்று கடனைத் திருப்பக் கட்டாது அடம் பிடிப்பவர்களுக்கு எதிராகக் குற்ற நடவடிக்கை எடு!

Ø  ஹேர் கட் முதலான வசீகரப் பெயர்களில் கடன் தள்ளுபடி மற்றும் சலுகைகளை நிறுத்து!



Ø  Ø Øசேமிப்புகள் மீது வட்டியை உயர்த்து!

Ø  வங்கி சேவைக் கட்டணங்களைக் குறை!

Ø  கூட்டுறவு வங்கிகளில் இரண்டடுக்கு முறையை ஏற்படுத்து!

Ø   (அடிப்படை வங்கி மற்றும் நிதிச் சேவைகளை அளிக்கும் கிராமிய வங்கிகள் போன்ற) ‘ரீஜினல் கிராமப்புற வங்கி’களை (RRB) சம்பந்தப்பட்ட ஸ்பான்சர் வங்கிகளுடன் இணை!

Ø  அனைத்து வங்கிகளிலும் போமான ஆளெடுப்பை உடனே நடத்து!

வங்கிகள் தனியார்மயத்தை எதிர்த்து நமது பிரச்சாரம் மற்றும் போராட்டங்களை நாம் தொடர்ந்து நடந்த வேண்டும். வங்கிகள் தேசத்தைக் கட்டியமைக்கும் அமைப்புகள், அவை அவ்வாறே நீடிக்க வேண்டும்.

வங்களைத் தனியார்மயப்படுத்தி அவற்றைப் பேராசை பிடித்த கார்ப்பரேட்டுகளிடம் கையளிப்தை நாம் அனுமதிக்கக் கூடாது. மக்கள் பணம் மக்கள் நலனுக்காகப் பயன்படுத்தப்பட வேண்டும், நாளும் அந்தச் செல்வங்கள் தனியார் கார்ப்பரேட் கொள்ளை கொண்டு போவதற்காக அல்ல. தேசிய சேமிப்பு பரவலான அடிப்படையில் தேசிய வளர்ச்சி மேம்பாட்டிற்குப் பயன்படுத்தப்பட வேண்டும், அவை கடன் வாங்கி, திரும்பக் கட்ட மறுத்து ஏமாற்றி ஓடும்  ஓடுகாலி குற்றவாளிகள் கொள்ளை அடித்துத் திருடிச் செல்வதற்காகத் திரட்டப்பட்டவை அல்ல.

“பொதுத்துறை வங்கிகளைப் பாதுகாப்போம்!

பொருளாதாரத்தைப் பாதுகாப்போம்!

மக்களைப் பாதுகாப்போம்! தேசத்தைப் பாதுகாப்போம்!”

--இந்த உயரிய நோக்கங்களுடன் இன்று நாம்

வங்கிகள் தேசியமய தினத்தைக் கொண்டாடுவோம்!

--நன்றி : நியூஏஜ் (ஜூலை 16 –22, 2023)

--தமிழில் : நீலகண்டன், NFTE,

தொலைத் தொடர்பு துறை, கடலூர்

 

 

 

 

 

 

 

 

Monday 10 July 2023

அழகான கவிதை வரிகள் -- ஆங்கிலத்திலிருந்து தமிழாக்கம்

 

                                   
  

விரும்பும் மிக மிக அழகான வரிகள், எப்போதும் படிக்க…,


சில நேரங்களில் இருள் கவிந்த இரவில்

எனது மனசாட்சியைச் சென்று பார்ப்பேன்,

இன்னும் அதற்கு மூச்சு இருக்கிறதா எனக் காண,

ஏனெனில் அது மெல்ல செத்துக் கொண்டிருந்தது, 

ஒவ்வொரு நாளும்!!!

அழகானதொரு இடத்தில் ஒரு வேளை உணவுக்கு

நான் பணம் செலுத்தும்போது

அந்தத் தொகை ஒருக்கால், அதோ எனக்காகக் கதவைத்

திறந்து பிடித்திருக்கும் காவலாளியின் மாத ஊதியமாகலாம்…

விருட்டென்று அந்த எண்ணத்திலிருந்து விடுபட்டேன்

அது கொஞ்சம் இறந்தது!

தள்ளுவண்டிக்காரரிடமிருந்து காய்கறி வாங்கும்போது

அவரது மகன் “சோட்டு” புன்னகைத்தபடி

உருளைக்கிழங்கு எடை போடுகிறான்

சோட்டு சிறு பையன்

பள்ளியில் படித்துக் கொண்டல்லவா இருக்க வேண்டும்

நான் விலகி மறுபுறம் பார்க்கத் தொடங்கினேன்

அது கொஞ்சம் இறந்தது!

பெரும் டிசைனர் உடையை அணிந்து

என்னை அலங்கரித்துக் கொள்ளும்போது

அதன் விலை வெடிகுண்டு விலையாகலாம்…

கந்தல் உடையில் ஒரு பெண் தன்னை மூடி

கண்ணியத்தைக் காக்கும் வெற்றிபெறாத முயற்சியில்

கடந்து சென்றதைப் பார்த்தேன்…

காட்சி தெரிந்த சாளரத்தை உடனடியாக நான் மூடினேன்

அது கொஞ்சம் இறந்தது!

தீபாவளியின்போது மகனுக்கு விலைஉயர்ந்த பரிசுகள் வாங்கினேன்

திரும்பும் வழியில், பசித்த வயிறு பஞ்சடைந்த கண்களுடன்

அரைகுறை ஆடையில் சிறுவர்கள் சிகப்பு விளக்கில்

வெடிகளை விற்றுக் கொண்டிருந்தனர்

அவர்களிடமிருந்தும் சிலதை வாங்கி மனசாட்சியைக் காப்பாற்றலாமா…

இருந்தும், அது கொஞ்சம் இறந்தது!

என்வீட்டில் வேலைசெய்யும் உடல்நலம் பாதித்த பெண்மணி

அன்று வேலைக்குத் தன் மகளை அனுப்பி இருந்தார்,

பள்ளிக்குக் கட் அடிக்கச் சொல்லியிருப்பார்

அவளைத் திரும்பப் போகச் சொல்லி இருக்க வேண்டும்

ஆனால் சமையலறை சிங்’கில் வழியும் பாத்திரங்கள்

மற்றும் மலைபோல் குவித்த அழுக்குத் துணிகள்

எனக்குள் சொல்லிக் கொண்டேன்,

ஓரிரண்டு நாட்களுக்குத்தானே…

அது கொஞ்சம் இறந்தது!

ஒரு குழந்தை மீது பாலியல் வன்கொடுமை அல்லது

கொலை குறித்து நான் கேட்டபோது வருத்தம் உணர்ந்தேன்

இருந்தும், சிறிது நன்றி, நல்லவேளை அது என் குழந்தை இல்லை

என்னை நான் கண்ணாடியில் பார்க்க முடியவில்லை…

அது கொஞ்சம் இறந்தது!

சாதி, மதம், இனம் என மக்கள் சண்டையிடும்போது

என் மனம் காயம்பட்டது, கையறுநிலை உணர்ந்தேன்

எனக்குள் சொல்லிக் கொண்டேன், என் தேசம் நாசமாகப் போகட்டும்

ஊழல் அரசியல்வாதிகளைப் பழித்தேன்,

எனக்கு இதில் எந்தப் பொறுப்பும் இல்லை,

என்னை விடுவித்துக் கொண்டேன்

அது கொஞ்சம் இறந்தது!

எனது நகரம் விழி பிதுங்கித் திணறியது,

புகை சூழ்ந்த நகரங்களில் சுவாசித்தல் ஆபத்தானபோது

தினமும் வேலைக்குக் காரில் சென்றேன்,

மெட்ரோவில் பயணிக்கவில்லை, தனித்தனி வாகனத்திற்கு பதில்

நண்பர்களாகச் சேர்ந்து மகிழுந்தைப் பகிரும் முயற்சி இல்லை

ஒரு கார் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்தாது, நான் நினைத்தேன்

அது கொஞ்சம் இறந்தது!

எனவே,

இருள் கவிந்த இரவில் மனசாட்சியைச் சென்று பார்த்தபோது

நாசி அருகே கைவைத்துக் கண்டு கொண்டேன்

மூச்சு இன்னும் ஓடிக்கொண்டிருந்தது, 😭😭😭

அதிசயம், தினமும் துளி துளியாக நான் அதைப் புதைத்தேன்….

                                          --டாக்டர் மல்லிகா பத்மநாபன்

ஆங்கிலக் கவிதை தமிழாக்கம் – நீலகண்டன், கடலூர்