Wednesday 27 October 2021

பருவநிலை மாற்றம் : சில கசப்பான உண்மைகளை அறிவோம்


பருவநிலை மாற்றம் :

சில கசப்பான உண்மைகளை அறிவோம்

--கே ஜெயகுமார்

(கேரள மாநில மேனாள் தலைமைச் செயலர்)

            சென்ற வாரம் பருவம் தப்பிய சில நாட்கள் மழை மனித உயிர்களைப் பலிவாங்கி விட்டது. நிலச்சரிவுகள் மற்றும் சில விபத்துக்களில் சுமார் 100பேர் பலியாக, பல குடும்பங்கள் வீடிழந்து நிற்கின்றன. கேரளா மற்றும் உத்தர்காண்ட் கடும் மழையின் சீற்றத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. அவ்விரண்டு மாநிலங்களும் ஆயிரம் கிமீ தொலைவு பிரிந்து கிடந்தாலும், குறிப்பாக இயற்கை பேரழிவு சம்பந்தமாக அவற்றிடையே சிலப் பொதுத்தன்மைகள் உள்ளன. கேரளா மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடரிலிருந்து மேற்கு நோக்கி சரிந்து அமைந்திருக்கும்போது, உத்தர்காண்ட் மன்னும் இமயமலை நிலச்சாரல் மடியில் தவழ்கிறது. பெரும் மழையோடு மேகவெடிப்புகள் அதைத் தொடர்ந்த நிலச்சரிவுகள், ஆறுகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுவது இம்மாநிலங்களின் பொதுவான போக்காக உள்ளது. சமீபத்திய 2018ன் பெருவெள்ள அனுபவத்தை நினைவில் நிறுத்தி கேரளா இம்முறை வெள்ளம் மற்றும் அணையின் தடுப்புக் கதவுகள் திறப்பது குறித்துக் கூடுதல் எச்சரிக்கையோடு செயல்பட்டது. இருப்பினும் கேரளாவில் மட்டும் சுமார் 40பேர் பலியாயினர். இயற்கைச் சீற்றங்கள் புதிதல்ல என்றாலும் அவை அடிக்கடியும் அபாய அளவிலும் தீவிரத்திலும் பேருரு கொண்டு நிற்பது முற்றிலும் எதிர்பாராதது அல்லவே. சுற்றுச்சூழலியர்களும்  பருவநிலை விஞ்ஞானிகளும் இந்தப் போக்கின் நிச்சயத்தன்மை குறித்து தொடர்ந்து எச்சரித்தே வருகின்றனர். அதுபோலவே பருவநிலை மாற்றம் குறித்த அரசுகளுக்கு இடையே பேனல் (IPCC) அமைப்பின் சமீபத்திய அறிக்கையில் மற்ற விஷங்களோடு தீவிரமான மழை மீண்டும் மீண்டும் ஏற்படும் என்பதை முன்கணித்துக் கூறியுள்ளது.

            புவிக் கோளில் பருவநிலை மாற்றங்கள் அடைந்து வருகிறது என்பதில் விவாதமே இல்லை. ஆனால் துயரம் யாதெனில், பருவநிலை மாற்றத்தின் துன்பமயமான விளைவுகளைச் சமூகத்தின் எளிய பிரிவுகளே அனுபவிக்கின்றன; அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் வலிமையான நெருப்புக் கோழிகளோ இப்போதும் உலகில் எல்லாம் நன்றாகவே நடப்பதாக, தங்கள் தலைகளை மண்ணில் புதைத்து, நாடகமாடுகின்றன. பருவநிலை மாற்றம் அடைந்து வருதாகக் கூறுவதைப் பொய்யென நிரூபிப்பதற்கான ஆய்வுகளை நடத்தவும் பெருமளவில் நிதி அளிக்கப்படுவதாகச் சொல்லப்படுகிறது. அவையெல்லாம் நாளைய வாழ்வைக் காவு கொடுத்துப் பணக்கார நாடுகள் இன்று கொண்டாடுவதற்காக நம்மை நம்ப வைக்க நடத்தப்படும் தந்திரங்களாகும்.

            அதிகாரம் இருப்பதால் அரசுகள் பருவநிலை சீரழிவது குறித்து நீலிக் கண்ணீர் வடித்தபடி, பருவநிலையை மேலும் மோசமாக்கும் தங்கள் நேர்மையற்ற கொள்கைகளையும் திட்டங்களையும் மேலெடுத்துச் செல்வதில் குறியாக உள்ளனர்; அப்போதும் கவனமாகத் தங்கள் திட்டங்களுக்கு நலவாழ்வு, வளர்ச்சி என்றெல்லாம் சொல் அலங்கார ஆடைகளைப் பொருத்தமாக அணிவிக்கத் தவறுவதில்லை. இந்தக் கூற்று அமெரிக்கா, இந்தியா, ரஷ்யா மற்றும் சீனாவுக்கும் பொருந்தும்.

            சர்வதேச அமைப்புகளில் அரசுகள் காட்டும் சுற்றுச்சூழல் அக்கறைகள், பாரீஸ் உடன்பாடு குறித்த விவாதங்கள் எல்லாவற்றிலும் உள்ளீடற்ற வெற்று முழக்கமே நிரம்பி உள்ளது; வளர்ந்த நாடுகள் ஏற்படுத்திக் கொண்ட தங்கள் வாழ்க்கை முறையை மாற்றுவதில் காட்டும் தயக்கத்திலே அது வெளிப்படுகிறது. உலகின் இந்த முதன்மை நாடுகளை எப்படியும் எட்டிப் பிடித்து விடுவது என வளரும் நாடுகள் தங்கள் உரிமையை திரும்ப வலியுறுத்துகின்றன. இந்த (அறிவற்ற) சுயநலம், புவி வெப்பமயத்துக்குக் காரணமான பசுமை இல்ல வாயுக்களைக் குறைப்பதற்கான கொள்கைகளிலிருந்து, அவற்றைப் பின்வாங்கச் செய்கிறது.

            வளர்ச்சி என்பதன் உண்மையான பொருள் யாது என மறுவரையறை செய்யவும், சுற்றுச் சூழலில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் அனைத்திலிருந்தும் விலகி விட்டுவிடுவதிலும் நாடுகள் சம்மதிக்காதவரை எந்த உடன்பாடும் திறன்மிக்கதாகவோ அன்றி அர்த்தமுள்ளதாகவோ இருக்க இயலாது. ஆனால் வளர்ச்சி என்ற தன்னலக் குழுவால் இயக்கப்படும் அரசியல் நிர்வாகங்கள் அத்தகைய கடினமான முடிவுகளை மேற்கொள்வதில் எப்போதும் போக்குக் காட்டவே செய்யும்; அவர்கள் பொருத்தமற்று பயனற்றுப் போகும்வரை முடிவெடுக்க மாட்டார்கள். ஆனால் அப்போது திருத்த முடியாதபடியான பேரழிவு நிகழ்ந்து முடிந்திருக்கும்.

            பெருந்தொற்றால் மோசமான பொருளாதாரம் சுருங்கியதன் பின்னணியில் எல்லா அரசுகளும் பொருளாதாரத்தை உந்தித் தள்ள தலைபோகும் அவசரத்தில் செயல்படுகின்றன. புத்துயிர்ப்புத் தொகுப்புத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டு, வங்கிகளை மேலும் கடன்வழங்க வற்புறுத்தி, வணிகச் செயல்பாடுகளை எளிமையாக்குவது என்பதே மந்திரமானது; தேசிய மற்றும் விதேசி முதலீட்டாளர்களைத் தாஜா செய்வதும் பொதுச் செலவுகளை அதிகரிப்பதும் நடக்கிறது. இந்தக் கூச்சலின் மறுபுறத்தில் இருப்பது எது என்பதைக் காண நாம் தவறக்கூடாது.

            வேலைவாய்ப்பின்மை வெருட்டும் சமூகத்தில் அதிகரிக்கும் பசி பட்டினியும், ஊட்டச் சத்துக் குறைபாடும் (மத்திய அரசு இதை வன்மையாக மறுக்கிறது) உற்பத்தி சார்ந்த துறைகளில் முதலீட்டை ஓர் அரசு ஊக்குவிப்பது பெரிதும் நியாயமானதே. ஆனால் இதில் இடறி விழும் தவறின் எல்லைக்கோடு வேறிடத்தில் உள்ளது. முதலீட்டையும் வணிகச் செயல்பாடுகளையும் ஊக்குவிக்கும் உற்சாகத்தில், சுற்றுச் சூழல் சார்ந்த நியாயமான கவலைகளும் அக்கறைகளும் இதயமற்று வீதியில் வீசப்படுகின்றன.

            பொதுவாக எதிர்ப்பைச் சந்திக்கும் வளர்ச்சித் திட்டங்களுக்கு இச்சூழலில் சப்தமில்லாமல் அவசரமாகப் பச்சைக் கொடி காட்டப்படுகின்றன. சுற்றுச் சூழல் பாதிப்பு குறித்த ஆய்வுகளுக்கான விதிகள் அப்பட்டமாக நீர்க்கச் செய்யப்படுகின்றன. முதலீட்டை எளிமையாக்க வேண்டும் என்பதற்காகச் சுற்றுச்சூழல் முறைமை பற்றிக் கவலைப்படாமல் பல மாநில அரசுகளும் சுற்றுச்சூழல் முன் அனுமதி பெறுவதற்கான அளவீடுகளை மாற்றி அமைக்கின்றன. நிலக்கரியை எரித்து மின் உற்பத்தி செய்யும் முறையின் ஆபத்துகளை உலகம் முழுவதும் அங்கீகரித்தாலும் புதைபடிவ எரிபொருளை (ஃபாசில் ஃப்யூயல்) குறைப்பதற்கான மாற்று வழிமுறைகளை நாம் உருவாக்குவதாகத் தெரியவில்லை. இதற்கு மாற்று நிச்சயம் நீர் மின்திட்ட உற்பத்திக்கான அணைக்கட்டுகள் அல்ல.

            மின் உற்பத்தியை அதிகரிக்கும் ஆவலில், இமயமலை ஆறுகளில் மேலும் கூடுதல் அணைக்கட்டுகளைக் கட்ட திட்டமிடப்பட்டது; அப்படி ஏற்கனவே உத்தர்காண்ட் பகுதியில் கட்டிய கூடுதல் அணைகளால் அப்பகுதி மீண்டும் மீண்டும் நிலச்சரிவுகளும் பெரு வெள்ளமும் ஏற்படும் பாதிப்புக்கு எளிதில் உள்ளாகியுள்ளது. (எல்லாம் தெரிந்த ஏகாம்பரங்கள் நிரம்பிய நிதி-ஆயோக் உட்பட) எந்தத் தலைவரும் இமயமலை நதிகளிலோ அன்றித் துணை ஆறுகளிலோ மேலும் அணைகள் கட்ட வேண்டாம் என ஒப்புக்கொள்ளும் வகையில் எடுத்துரைக்க முன்வரவில்லை என்பது துரதிருஷ்டமே. சாலைகளை அகலப்படுத்தும் திட்டங்களும் அதுபோலத்தான்; வடக்கே பத்திரி நாத், மேற்கே துவாரகா, கிழக்கே ஜகந்நாத் பூரி மற்றும் தெற்கே இராமேஸ்வரம் எனும் ‘நான்கு புனிதத் தலங்க’ளை (சார் தாம்) இணைக்கும் இணைப்புச் சாலைகளை அகலமாக விரிவாக்கி விரைவுச் சாலைகளாக்கும் திட்டம், பிரம்மாண்டமான திட்டச் செலவு மற்றும் அளக்க முடியாத சுற்றுச்சூழல் பாதிப்புகளை ஏற்படுத்துவதை விலையாகக் கோரும் திட்டமாகும்; அது குறித்துக் கவலையும் எதிர்ப்பும் தெரிவித்த சில குரல் வளைகளையும் முழுமையாக நெறித்து முடக்கி விட்டனர்.

மேற்குத் தொடர்ச்சி மலைத்தொடர் மீது என்ன நடத்தப்படுகிறோ அதைப் பொருத்துத்தான் கேரளாவின் சுற்றுச்சூழல் அடர்த்தி அமையும் என்று சில ஆண்டுகளுக்கு முன்பு மாதவ் காட்கில் அறிக்கை மிகச் சரியாகவும் நியாயமாகவும் எச்சரித்தது. அந்த அறிக்கை மலைத் தொடரில் நுண்மையும் எளிதில் பாதிக்கப்படக்கூடிய இடங்கள் எனக் கண்டறியப்பட்ட பல பகுதிகளில் மனித நடவடிக்கைகளைத் தடுத்து நிறுத்தவும் குறைக்கவும் ஒழுங்குபடுத்தவும் விரும்பியது. மலைகளில் கல்வெட்டி எடுப்பதன் பின்விளைவுகள் நாம் காணக்கூடியதாக உள்ளது; எனவே  மேற்குத் தொடர்ச்சி மலையின் அந்த நிலங்களை மனிதக் குடியேற்றத்தை ஏற்படுத்தப் பயன்படுத்தும் திட்டங்களை மறு ஆய்வு செய்யவும் ஒழுங்குபடுத்த வேண்டிய தேவையும் எழுந்துள்ளது. மாநில அரசின் சார்பாக மேலும் ஒரு ஆய்வறிக்கை கஸ்தூரி ரங்கன் தலைமையில் தயாரிக்கப்பட்டது. அந்த அறிக்கையின் தொணியும் வார்த்தைகளும் மென்மையாக இருந்தாலும் கஸ்தூரி ரங்கன் அறிக்கையும்கூட காத்திருக்கும் ஆபத்துக்களை முன்னிலைப்படுத்திச் சுட்டிக் காட்டியது. பல தலைமுறைகளாக அங்கே குடியேறி வசிக்கும் மக்களிடம் (காத்திருக்கும் ஆபத்துகள் காரணமாக) அவர்கள் தங்களின் வசிப்பிடத்தைவிட்டு நீங்கியாக வேண்டும் எனச் சொல்வது இயல்பாகவே அன்பில்லாத ஒன்றே. (எவ்வாறாயினும் அது சொல்லப்பட்டே ஆக வேண்டும்.)

            அரசியல் கட்சிகள் மற்றும் பிரபலமான அரசுகள் மக்களிடம் ஜனரஞ்சகமற்ற உண்மைகளைச் சொல்லச் சிரமப்படுவார்கள். ஆனால் மகிழ்வற்றதாயினும் நம்முன் காத்திருக்கும் எதிர்கால ஆபத்தை மக்களுடன் பகிர்ந்து கொள்ளும் தருணம் வந்து விட்டது. நமது மக்கள் அவர்களின் அரசுகளை அவற்றின் சுற்றுச்சூழல் அக்கறையின் நேர்மையைக் கொண்டு தீர்மானிக்கும் உணர்வு பெற வேண்டும்; அதற்கு மாறாக, அரசுகளின் எப்படியும் எந்த வகையிலும் முதலீடுகளை ஈர்ப்பது என்ற கொள்கையை வைத்துத் தீர்மானிக்கலாகாது. ஏனெனில் அந்தக் கொள்கையின் இரட்டை விளைவு, முதலில் குறைந்த காலத்தில் லாபம், அடுத்து நீண்ட கால வேதனை என்பதாகும். உண்மையான பிரச்சனைகளை மூடி மறைக்கும் மேலெழுந்தவாரியான நாடகங்களும் மயக்கமூட்டும் கட்டுக் கதைகளின் சுயபாணி கொண்டாட்டங்களால் கவர நினைக்கும் (ஆள்வோரின்) முயற்சிகள் தோற்கும்போதுதான் ஒரு ஜனநாயகம் உண்மையிலே முதிர்ச்சி அடைந்தது எனக் கூற முடியும்.

            ‘மக்களாகிய நாம்’ நம்மை ஆள்வோர்களிடம் கண்கவரும் காட்சிகளுக்கு மாறாக நீடித்து நிலைத்திருக்கும் (வளர்ச்சிக்) கொள்கைகளையும், கொண்டாட்டங்களுக்கு மாறாக உயிர் வாழ்வதையும் கோர வேண்டிய தருணம் வந்து விட்டது. பருவநிலை மாற்றம் என்பது பேராசை பிடித்த முதலீட்டாளர்கள் மற்றும் எதிர்காலம் குறித்தக் கண்ணோட்டம் இல்லாத பார்வைக் குறை உடைய அரசுகளிடம் விட்டுவிட முடியாதபடி மிகவும் முக்கியமானதாகும்.    

--நன்றி: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் (27-10-21)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்      

 

 

 

  

Sunday 24 October 2021

பருவநிலை மாற்ற உச்சிமாநாடு பலன் தருமா?

 


பருவநிலை மாற்ற உச்சிமாநாடு பலன் தருமா?

--டாக்டர் சோமா மார்லா

     இன்று உலகின் தலையாய பிரச்சனை போரோ, அணு ஆயுதமோ அல்ல; புவி வெப்பமயமாதலும் பருவநிலைகள் தாறுமாறாக மாறுவதும்தான். இன்று உலகில் நாம் மிகக் கடுமையான உருக வைக்கும் கோடை வெப்பம், காடுகள் பற்றி எரிதல் மற்றும் பல பகுதிகளில் பொங்கிச் சீறி அழிவை ஏற்படுத்தும் வெள்ளம், பெரும்மழை இவற்றைச் சந்திக்கிறோம். அறிவியலாளர்களின் எச்சரிக்கைகளை அடுத்து ஐ நா மன்றம் 1995 பெர்லின் மாநாடு தொடங்கி ஆண்டுதோறும் பருவநிலை மாற்றம் குறித்த உலகத் தலைவர்கள் மற்றும் அமைப்புகளின் உச்சி மாநாட்டை நடத்தி வருகிறது. ஐநாவின் அடுத்த பருவநிலை மாற்ற மாநாடு 2021 பிரிட்டன் தேசத்தின் கிளாஸ்கோ நகரில் எதிர்வரும் அக்டோபர் 31 முதல் நவம்பர் 12 வரை நடக்க உள்ளது. 26வது சர்வதேச மாநாடாகிய இதனை COP26 என்று அழைப்பார்கள் (கான்ஃபெரன்ஸ் ஆஃப் பார்ட்டீஸ், சம்பந்தப்பட்ட தரப்பினர்களின் 26வது மாநாடு).

     2015 பாரீஸ் உடன்பாட்டை அடுத்து கூட்டங்கள் இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கிறது. அதில் அரசுத் தலைவர்கள், தூதுவர்கள், வணிகத் தலைவர்கள், தன்னார்வப் பிரச்சாரத் தொண்டர்கள், பத்திரிக்கையாளர்கள் என அனைத்து நாடுகளைச் சேர்ந்தவர்களும் கலந்து கொள்கின்றனர். பருவநிலை மாற்றப் பாதிப்புகளைத் தவிர்ப்பதற்காகச் சென்ற மாநாட்டிலிருந்து அதுவரை எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கின்றனர். அனைவரும் கூட்டாகச் சேர்ந்து உலக வெப்பநிலை உயர்வு 2டிகிரிக்கும் குறைவாக, முடிந்தால் 1.5 டிகிரியில் கட்டுப்படுத்திடும் வகையில் பசுமைக் குடில் வாயுக்கள் வெளியீட்டைக் குறைக்க முயற்சிப்பது என 2015 பாரீஸ் ஒப்பந்தத்தில் ஒப்புக்கொள்ளப்பட்டது. புவி வெப்ப உயர்வு 2டிகிரிக்கும் கீழே குறைக்க வேண்டுமெனில் ஆலைகள், கார்கள் போன்றவை வெளியிடும் 650 ஹிகா டன்கள் கரியமிலவாயு எனப்படும் கார்பன் வாயுவை (ஒரு ஹிகா டன் என்பது 100கோடி டன்களுக்குச் சமமானது) உலக நாடுகள் குறைக்க வேண்டும்; அப்போதுதான் நாம் மீண்டும் 2005 சுற்றுச் சூழல் மட்டத்திற்குத் திரும்பச் செல்ல முடியும்.

     ஒவ்வொரு நாடும் கார்பன் வெளியீட்டைக் குறைப்பதில் ‘தேச அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு’ என்ற (NDCs) இலக்கை நிர்ணயித்துச் செயல்பட்டால் மட்டுமே அந்த இலக்கை 2030க்குள் அடைய முடியும். சமுதாயத்தின் மீது பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்பு குறிப்பாக வளர்ந்து வரும் ‘உலகின் தென்பகுதி’ (க்ளோபல் சவுத்) நாடுகளில் அபாயகரமாக உள்ளது. இந்த நெருக்கடி வளர்ந்த ‘வசதி பெற்ற நாடு’கள் (‘haves’) வளர்ச்சிபெறாத ‘இல்லாத நாடுகள்’ (‘have nots’) மீது கடுமையாகச் சுமத்துவதாகும். அபரிமிதமான செல்வம் மிகுந்த மேற்குலக நாடுகள் வரலாற்றுபூர்வமாகவே நம்பூமியை மாசுபடுத்தி வருபவர்கள்; இப்பூவுலகின் மீது முக்கியமாகத் தங்கள் ‘கார்பன் காலடித் தட’த்தை (carbon foot prints) ஏற்படுத்தி விட்டுச் செல்கிறார்கள். (கார்பன் தடம் என்பது ஒரு நாடு தன் நடவடிக்கைகளால் வெளியிடும் கார்பன் டை ஆக்ஸைடு மற்றும் மீதேன் போன்ற புவி வெப்பமயத்திற்குக் காரணமான பசுமை இல்ல வாயுக்களின் மொத்த அளவாகும்.) உலகின் தென்பகுதி நாடுகளின் செல்வாதாரத்தில் 75 சதவீதத்தை மேற்குல நாடுகள் அடைந்து அனுபவிக்கின்றனர்.

     சீனா, ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட கார்பன் வெளியீட்டில் முதல் 10 இடங்களில் உள்ள நாடுகள் உலகின் மொத்த பசுமை இல்ல வாயுகளில் (கிரீன் ஹவுஸ் கேஸஸ், GHG) மூன்றில் இரண்டு பங்கை உமிழ்வதில் காரணமாக உள்ளன; அதே நேரம் ஏழ்மையான 100 தெற்கத்திய நாடுகள் அனைத்தும் சேர்ந்து மொத்தத்தில் 3.6 சதவீதமான கார்பனை வெளியிடுகின்றன. ஆனால் கடுமையான வறட்சி, காடுகள் அழிக்கப்படுவது, உயிர் பன்மைத்துவம் சுருங்குவது, திடீரென உயிரினங்கள் அழிந்து மறைவது, பருவம் தப்பிய பெரு மழை, கடல் மட்ட உயர்வால் நிலப்பகுதிகள் நீரில் மூழ்குவது போன்ற கடுமையான பேரழிவுகளை இந்த நூறு நாடுகளும் அனுபவிக்கின்றன.

     உலக மக்கள் தொகையில் வெறும் 5 சதவீதமே உடைய அமெரிக்கா சுமார் 30 சதவீதமான உலகின் மொத்த இயற்கை செல்வாதாரங்களை நுகர்ந்து, சுற்றுச்சூழலை மாசுபடுத்தி, பெரும்பான்மை கார்பன் அடிச்சுவட்டைப் பதிப்பதில் முக்கியமான குற்றவாளியாக நிற்கிறது. பசுமை இல்ல வாயுக்கள் வெளியிடுவதைக் குறைப்பதில் பொதுவான ஆனால் விகிதாச்சார அடிப்படையில் கூடுதல் பொறுப்புணர்வை (வளர்ந்த நாடுகள்) ஏற்க வேண்டும் என இந்தியாவும் ஏனைய வளரும் நாடுகளும் வற்புறுத்திக் கோரின. இதனால் இறுதியில் ‘பசுமை பருவநிலை நிதியம்’ (கிரீன் க்ளைமேட் ஃபண்டு’ அல்லது கிரீன் கார்பன் ஃபண்டு GCF) எனப்படும் நிதியத்திற்கு மேற்குலக நாடுகள் ஆண்டு தோறும் 100 பில்லியன் டாலர் மதிப்பிற்கு நிதி வழங்கிட ஒப்புக்கொள்ள வேண்டி வந்தது. எளிதில் பாதிக்கப்படும் ஏழை நாடுகள் பருவநிலை மாற்ற பாதிப்புகளை நீக்க சுற்றுச் சூழலில் கார்பன் அடிச்சுவட்டைக் குறைக்கவும் கார்பன் குறைப்புக்கான (மதிப்பெண் வரவு) வெகுமதிகளைப் (carbon credits) பெறவும் அந்த நிதியைக் கொண்டு நடவடிக்கைகளை எடுக்கும். (கார்பன் கிரிடிட் என்பது ஒரு டன் அளவு பசுமை குடில் வாயுவை வெளியிடும் உரிமை பெற்ற வர்த்தகப் பண்டம்). அதே போல குறைந்த அளவு கார்பன் வெளியிடும் எரிசக்தி முறைகள், மரபு சாரா எரிசக்தி உற்பத்தி, பூமிக்கு ஊறு  செய்யாத பாரம்பரிய இயற்கை சுற்றுச் சூழல் நட்பு மிகுந்த உள்நாட்டு உற்பத்தி ஆலைகளுக்கு ஊக்கமளித்தல், எரிசக்தி திறன் மிகுந்த போக்குவரத்து வாகனங்கள் மற்றும் வறட்சியைத் தாங்கும் வேளாண் முறை இவற்றை இந்த நிதி உதவியுடன் ஆதரித்திட உறுதி அளிக்கப்பட்டுள்ளது.

நிதியைக் கடத்தல் (ஹைஜாக்கிங்)

     ஆனால் பசுமை கார்பன் நிதி உண்மையில் எவ்வாறெல்லாம் உலகத் தெற்கு நாடுகளிலிருந்து பறந்து சென்றுவிடுகிறது எனப் பார்ப்போம். (36 நாடுகள் பங்கேற்க பாரீஸ் தலைமையகமாகக் கொண்டு செயல்படும்) ‘பொருளாதார ஒத்துழைப்பு மற்றும் வளர்ச்சிக்கான அமைப்பு’ (OECD) 2017ல் சில தரவுகளை வெளியிட்டது; அதன்படி வளரும் நாடுகள் அந்த நிதியில் சுமார் 7.1 பில்லியன் டாலர்களைக் கடனாக மட்டும் பெற முடிகிறது; அந்தத் தொகை உடனடியாகப் பயன்படுத்தும் வகையில் நேரடி நிதிஉதவியாக அளிக்கப்படுவதில்லை. ஆனால் திரும்பப் பயன்படுத்தும் எரிசக்தி உற்பத்தி, பசுமை போக்குவரத்து வாகனத் தொழிற்சாலைகள் போன்ற பசுமைத் தொழிலில் ஈடுபடும் உலகக் கார்ப்பரேட்டுகளின் பகாசுரக் கம்பெனிகள் அந்த நிதியில் ஆகப் பெரும் பகுதியைத் தங்கள் உரிமையாகக் கொள்ளையடிக்கின்றனர். எஞ்சிய குறை பின்னமான 100 பில்லியன் டாலர் நிதி மட்டுமே பருவநிலை மாற்றத்தால் பாதிக்கப்படும் நாடுகளுக்கு ஆண்டுதோறும் கிடைக்கிறது.

         உதாரணத்திற்குத் தனியார் சூரிய சக்தி உற்பத்தி நிறுவனமான இந்தியாவின் அதானி சோலார் நிறுவனம் சந்தையில் கூட்டாக 100 பில்லியன் டாலர் அளவு சந்தையை அதிகபட்சமாக வைத்துள்ளது; அதனைக் காரணம் காட்டி பசுமை கார்பன் நிதியத்திலிருந்து கணிசமான நிதி உதவித் தொகையை இலவசமாகப் பெறுகிறது – ஆனால் அதன் முழு விபரம் வெளியில் தெரியவில்லை. அதே நேரம் தெலுங்கானாவின் ‘விஸ்டராகு’ என்ற சிறிய பெண்கள் கூட்டுறவு அமைப்பு (பலாஷ் மர இலைகளிலிருந்து இயற்கை உயிரியல் நட்பு மிகுந்த உணவு உண்ணும் தட்டுக்கள் மற்றும் கோப்பைகளைத் தயாரிக்கும் நிறுவனம்) கார்பன் கிரிடிட் வெகுமதியாக ஒரு டாலர் நிதி உதவியைக் கூட பெற முடியவில்லை. இதற்காகப் பசுமை கார்பன் நிதியத்திலிருந்து உதவிபெற பருவநிலை மாற்ற ஒப்பந்த நாடுகளின் ஐநாவின் COP அமைப்புக்குப் பலமுறை வேண்டுகோள்கள் அனுப்பியும் பயன் இல்லை.

COP26 என்ன செய்ய முடியும்

    பசுமை கார்பன் நிதியை எவ்வாறு செலவிடுவது என்பதில் அரசுகளைப் பொறுப்பாக்கி ஒரு சட்டபூர்வ வழி முறையைக் காண்பதே எதிர்வரும் பருவநிலை உச்சி மாநாட்டு விவாதங்களில் மிகப் பெரிய பிரச்சனையாக இடம் பெற வேண்டும். பசுமை நிதியைப் பிரித்தளிப்பதை ஜனநாயகப்படுத்தவும், நிதியைச் செலவிடுவதில் முழுமையான வெளிப்படைத் தன்மையையும் பொறுப்புணர்வையும் ஏற்படுத்த வேண்டிய தேவை எழுந்துள்ளது.  

    வெளிப்படைத் தன்மையும் பொறுப்புணர்வும் எதிர்வரும் மாநாட்டில் விவாதத்திற்குரிய பொருளாக இடம்பெற வேண்டும். பசுமை கார்பன் நிதியை ஜனநாயகப்படுத்துவதன் மூலமே நடைமுறை சாத்தியமான பருவநிலை நீதி, நியதியை ஏற்படுத்த முடியும். 

     பாரீஸ் உடன்பாட்டில் ஒப்புக்கொண்ட அளவுக்குட்பட்ட வெப்ப உயர்வு இலக்குகளுக்குப் பிரதானமாகப் பொருந்துமாறு பசுமை இல்ல வாயுகள் குறைப்பின் நடைமுறை சாத்தியமான எதார்த்த இலக்குகளை நிர்ணயித்து அதற்கு ஆதரவு திரட்ட வேண்டியது பருவநிலை மாநாட்டுத் தலைமையின் மற்றொரு முக்கியமான பொறுப்பாகும்.  இதன் பொருள் புவி வெப்பமயமாதலை மட்டுப்படுத்த உலகளாவிய கார்பன்கள் வெளியிடுவதை 2010 மட்டத்திலிருந்து 45 சதவீதம் குறைக்க வேண்டும் என்பதாகும். COP26 மாநாட்டின் விவாதங்கள் மற்றும் முடிவுகள் அனைத்து நாடுகளையும் கட்டுப்படுத்துவதாகவும் ஒவ்வொரு அரசும் மற்ற அரசுகளைச் சட்டபூர்வமாக அதற்கு உட்படச் செய்யும் வழிமுறைகளையும் கண்டறிய வேண்டும்.

     பசுமை கார்பன் நிதியைப் பன்னாட்டுக் கார்ப்பரேஷன்கள் ஏகபோகமாக்குவதைப் பசுமை முதலாளித்துவத்தின் நடவடிக்கைகள் வெளிப்படுத்துகின்றன; அவை உலகின் ஏழை தென்பகுதி நாடுகளைப் புறக்கணிப்பதைத் தடுத்து முறைப்படுத்த வேண்டும்; குறிப்பாக, மறுசுழற்சி எரிசக்தி தொழில் நுட்பங்கள், வீணாகும் பொருள்களின் மறுசுழற்சிப் பயன்பாடு, பசுமை போக்குவரத்து வாகனங்கள் துறை, கார்பன் கிரிடிட் வர்த்தகம் அல்லது பசுமை சுற்றுச்சூழல் சுற்றுலா (அதாவது சுற்றுலா செல்வோர் செலுத்தும் கட்டணத்தில் ஒருபகுதியை உள்ளூர் சுற்றுச் சூழல் மற்றும் வனவிலங்குகள் பாதுகாப்பிற்காகச் செலவிட்டு, பலரும் செல்லாத இடங்களின் சுற்றுச் சூழலைப் பாதுகாத்து அந்த இடங்களுக்கும் சுற்றுலா சென்றுவர வசதி செய்து தருதல்) போன்றவற்றில் தலையிட்டு முறைப்படுத்தல் வேண்டும். பேரளவு உற்பத்தியைத் தடுப்பதற்கு மாறாக, அதீத உயர் லாபத்தைத் தேடி தீவிரமாக இயற்கையை அழித்து நடத்தப்படும் வெறியூட்டும் பைத்தியக்கார நுகர்வுக் கலாச்சாரம் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்பட வேண்டும்.

மார்க்ஸிய சுற்றுச்சூழல் மாற்று வழிமுறைகள்

       மெட்டபோலிக் ரிஃப்ட் (Metabolic rift, வளர்சிதை மாற்றத்தில் பிளவு) என்பது புகழ்பெற்ற சுற்றுசூழலியர் ஜான் பெல்லாமி ஃபோஸ்டர், முதலாளித்துவத்தின் கீழ் சுற்றுச் சூழல் அழிக்கப்படுவது

குறித்த காரல் மார்க்ஸின் புரிதலைச் சுட்டுவதற்காகக் கையாண்ட கலைச் சொல். முதலாளித்துவம் ஆகக் கூடுதலான கொள்ளை லாபம் என்பதைத் தேடி ஓடுவதில் இம்மண்ணின் அடுத்தடுத்துச் செழிக்கச் செய்யும் வளத்தைச் (natural fertility) சுரண்டி பிரம்மாண்ட பொருள் உற்பத்திக்காக இயற்கையின் சாரமான வளத்தின் சுழற்சியை (nutrient cycle) மீண்டும் சீர்செய்ய இயலாதபடி கடுமையாக பாதிக்கிறது – இயற்கையின் இந்தச் சுழற்சிதான் உணவை உற்பத்திச் செய்யவும் (அப்படி உற்பத்திச் செய்யப் பயன்படுத்திய மண்ணின் சாரத்தை) மீண்டும் மறுபுத்துயிர்ப்பு ஆக்கவும் இயற்கைக்குத் துணை நிற்கிறது. இந்த வளப்படுத்தும் சுழற்சியை முதலாளித்துவ உற்பத்தி முறை உடைத்து முறித்து விடுகிறது என சுட்டிக்காட்டிய காரல் மார்க்ஸ் அதுதான் மிகப்பெரிய சுற்றுச் சூழல் நெருக்கடி என்று குறிப்பிட்டார். எனவே சமூகத்திற்கும் இயற்கைக்கும் இடையே ஓர் ஆரோக்கியமான உறவு நீடிக்க வேண்டும்; இயற்கை தன்னைப் புத்துயிர்ப்பு செய்து சமூகத்தின் அடுத்த தலைமுறைக்கான மறுஉற்பத்தி நீடிப்பதற்குத் தேவையான சூழலையும் அனுமதிக்கிறது என்று விளக்கினார். [இயற்கை வளத்தின் சுழற்சி வட்டம் என்பது சக்தி (எனர்ஜி) மற்றும் பொருள்களுக்கு இடையே நடைபெறும் வளர்சிதை மாற்றத்திற்கான உயிரினங்களுக்கும் ஏனைய உயிரற்ற பொருள்களுக்கும் இடையே பரஸ்பரம் நிலவும் உறவைக் குறிக்கிறது. மண்ணிலிருந்து வளத்தை எடுத்துக் கொள்ளும் உயிரினம் (தாவரங்கள் மற்றும் விலங்குகள்), மீண்டும் மண்ணிற்கு அந்தச் சாரத்தை (தங்களது இறந்த உடல்கள் மக்குவதன் மூலம்) வழங்கும் ஓர் இயல்பான வட்ட நிகழ்முறை இது.]

        மார்க்ஸின் புகழ்பெற்ற பழமொழி, “இந்த பூமி தனிப்பட்ட மனிதனின், சமூகத்தின் அல்லது நாட்டிற்குச் சொந்தமானதல்ல; ஏன் மனிதனின் கூட்டுச் சொத்தும் அல்ல. நாம் இந்த பூமிக்கு விருந்தினர்கள் மட்டுமே. பூமியில் நமக்குக் கிடைத்ததைவிட மேம்பட்ட நிலையில் வரும் தலைமுறையினரிடம் இந்தப் பூமியைக் கைமாற்றிக் கொடுக்க வேண்டிய கடப்பாடு நமக்கு இருக்கிறது!”

       

இதையே மகாத்மா காந்தியடிகளின் பொன்மொழி, “இந்த உலகம் நம் அனைவருக்கும் தேவையானவற்றை வழங்க வல்லது. ஆனால் எந்த மனிதனின் பேராசையையும் பூர்த்தி செய்யக் கூடியது அல்ல!” வலியுறுத்துகிறது.

        சென்ற பருவநிலை மாநாட்டின் போது இளம் சுற்றுச்சூழல் போராளி கிரேட்டா துன்பர்க் வளர்ச்சியின் பின்னால் கொள்ளை லாபத்திற்காக ஓடும் தலைவர்களைப் பார்த்துப் பூவுலகைக் காக்க வேண்டிய அவர்களின் கடமையை உணர்ச்சி பொங்க எடுத்துரைத்து இந்தப் பூமி எதிர்காலக் குழந்தைகளுடையது, அதன் சுற்றுச் சூழலைப் பாழ்படுத்தாதீர்கள் என அவர்களை எச்சரித்தார்.

        எனவே எதிர்வரும் பருவநிலை மாநாட்டில் நடைமுறை சாத்தியமான பருவநிலை நீதியை நிலைநிறுத்திட பசுமை நிதியைச் செலவிடுவதை ஜனநாயகப்படுத்துவதில் கவனம் குவிக்கப்பட வேண்டும்!

        பூவுலகைப் பாதுகாப்பது நம் அனைவருடைய கடமையாகும்!

--நன்றி: நியூஏஜ் (அக்.24 – 30)

--தமிழாக்கம் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

Friday 22 October 2021

தோழர் ரஞ்சூர், அனைவருக்குமான விடுதலையை வேண்டிய ஒரு கிளர்சிக்காரக் கவிஞர்

 


தோழர் ரஞ்சூர்,

அனைவருக்குமான விடுதலையை வேண்டிய 

ஒரு கிளர்சிக்காரக் கவிஞர்

--குல்ஸார் பட்

ஸ்ரீநகர்: 1917ல் ரஷ்யாவில் போல்ஷ்விக் புரட்சி அலை புரண்டோடி நூற்றுக் கணக்கான ஆண்டுகள் பழைமையான ஏகாதிபத்திய ரொமனோவ் வம்ச ஆட்சியை (1613 --1917)  முடிவுக்குக் கொண்டு வந்தபோது தன் உடம்பில் மார்க்ஸிய இரத்தம் பாய்ந்தோடிய ஒரு குழந்தை பள்ளத்தாக்கின் விவரிக்க இயலாத ஒரு குக்கிராமத்தில் உதித்தது.  

            ஸ்ரீநகருக்கு 44 கிமீ தெற்கே நெருக்கமான ஆப்பிள் தோட்டத்தில் மறைந்ததுபோல உள்ளே அமைந்திருந்த அமைதியான கீகம் கிராமத்தில் அப்துல் சத்தார் ரஞ்சூர் பிறந்தார். இளம் பருவத்திலிருந்தே கவிதைகள் மீது ஆழமான காதலை வளர்த்துக் கொண்டு 17வது வயதிலேயே புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டார்.

            காஷ்மீரி மற்றும் உருது கவிதையில் சிறந்து விளங்கிய அவர் எதேச்சிகார டோக்ரா ஆட்சிக்கு எதிராகக் கிளர்ச்சிப் பதாகையை உயர்த்தியவர்களில் ஒருவராவார். இப்படித் தன் தந்தையை நினைவூட்டும் அவரது மகன் மன்சூர் அன்வர் தன் தந்தை எப்போதும் நிலப்பிரபுத்துவ ஆட்சிக்கு முடிவு கட்டுவதில் குறியாக இருந்தார் என்கிறார்.

            முப்பதுகளின் பாதியில் லாகூர் சென்ற ரஞ்சூர் சில ஆண்டுகள் அங்கே வசித்தார். அங்கு வசித்தபோது புகழ்பெற்ற மரியாதைக்குரிய உருதுக் கவிஞர் சர் முகமது இக்பால் அவர்களை எப்போதும் வழக்கமாகச் சந்தித்து வந்தார். இளம் ரஞ்சூரிடம் புரட்சிகரப் பொறி சுடர்விடுவதைக் கண்ட இக்பால் அவரிடம் ஜம்மு மற்றும் காஷ்மீர் மக்களின் ஜனநாயக உரிமைகளுக்காகப் போராடும்படி யோசனை கூறினார். ஏற்கனவே போல்ஷ்விக் புரட்சியால் கவரப்பட்டு சோஷலிச இலக்கியங்களை ஏராளம் தீவிரமாகப் படித்திருந்த ரஞ்சூர் பள்ளத்தாக்கிற்குத் திரும்பினார்; ஷேக் முகமது அப்துல்லாவுடன் இணைந்து ஜம்மு காஷ்மீரின் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகப் போராடினார்.

            1940களின் தொடக்க காலத்தில் காஷ்மீர் விவசாயிகள் இயக்கத்தைத் தலைமை தாங்கியதில் ரஞ்சூர் காரணகர்த்தாவாக இருந்தார். அக்காலத்தில் அன்றைய ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் விவசாயிகள் ஏதேச்சிகார டோக்ரா ஆட்சியாளர்கள் விதித்த கடும் வரிச்சுமையால் அல்லல்பட்டுக் கொண்டிருந்தனர். “காஷ்மீரில் ஆபத்து” என்ற தமது நூலில் ஜோசப் கோர்பெல்ஸ் டோக்ரா ஆட்சியாளர்களின் சர்வாதிகாரத்தன்மை குறித்துப் பின்வருவாறு எழுதினார்:

            “நிலம் பெரும்பாலும் மகாராஜாவுக்கு அல்லது ஹிந்து நிலஉடைமையாளர்களுக்குச் சொந்தமாக இருந்தது. அந்த நிலத்தில் பாடுபட்ட முஸ்லீம்கள் கட்ட வேண்டிய அதிகமான வரி அவர்களைப் பொருளாதார நெருக்கடி மற்றும் பசி பட்டியினில் தள்ளிவிடுவது வழக்கமான நடைமுறையாயிற்று…அவர்களின் குறைந்தபட்சக் களியாட்டமே அந்தத் திக்கற்றவர்களைத் தொல்லைப்படுத்துவதுதான்…அவர்களை வேட்டையாடத் தங்கள் வேலையாட்களுக்குத் தாராளமாக ஆசி வழங்கி மகிழ்ந்தனர்…” (ஏ ஜி நுரானி, ஃப்ரண்ட் லைன், 2016)

            1946 –47ம் ஆண்டுகளில் போலீஸ் அட்டூழியங்களையும் அவர் எதிர்கொண்டார். “எங்கள் வீட்டைப் போலீஸ்காரர்கள் பலமுறை சோதனையிட்டபோது, ஒரு தடவை அவரைப் பிடித்து விட்டனர்” என நினைவு கூர்கிறார், அன்வர். 

            “புகழ்பெற்ற வழக்கறிஞர் ஆஸஃப் அலி டெல்லியிருந்து ரஞ்சூர் சார்பாக நீதிமன்றத்தில் வழக்காட வந்தார்.”

            1949ல் விடுதலையானதும் அவர் தலைமறைவு வாழ்வில் சென்று கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவினார். மீண்டும் 1951ல் கைதானார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீர் கொந்தளிப்பான கட்டத்தைக் கடந்து சென்றது. ஜம்மு காஷ்மீரின் பிரதமராகப் பொறுப்பேற்ற 

ஷேக் முகமது அப்துல்லா 1953ல் பதவியிலிருந்து அகற்றப்பட்டு கைது செய்யப்பட்டார். ஜம்மு மற்றும் காஷ்மீர் இரண்டு பிராந்தியங்களிலும் ஷேக் புகழ்பெற்ற தலைவராகவும் உச்சத்தில் வைத்து மதிக்கப்படுபவராகவும் விளங்கினார். எதிர்பாராத நிகழ்வுகள் அப்பகுதிகளில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியதுடன் பல லட்சக்கணக்கான மக்களின் உணர்வுகளையும் காயப்படுத்தியது. ஷேக்கின் அரசியல் துணையாக விளங்கிய பக்க்ஷி     குலாம் முகமதுவும் கைது செய்யப்பட்டார். ஜம்மு காஷ்மீரின் சுயேச்சையான அந்தஸ்து மெல்ல அரிக்கப்படலாயிற்று. ஷேக்கின் நெருங்கிய சகா மிர்ஸா முகமது அஃப்ஸல் பெய்க், ஜம்மு மற்றும் காஷ்மீரின் அனைத்து மக்களும் பங்கேற்கும் பொது வாக்கெடுப்பு முன்னணியை (Plebiscite Front) அமைத்து, ஜம்மு காஷ்மீர் அந்தஸ்து குறித்து முடிவுசெய்ய பொது வாக்கெடுப்பு (கருத்துக் கணிப்பு) நடத்தப்பட வேண்டும் என வற்புறுத்தினார். அந்த முயற்சிக்குச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த ஷேக் அப்துல்லாவின் ஆதரவும் இருந்தது.

            ஷேக் – இந்திரா காந்தி இடையே உடன்பாடு ஏற்பட்டு, அம்மாநிலத்தின் முதலமைச்சராக ஷேக் பொறுப்பேற்ற பின் அந்த முன்னணி, 1975ல் கலைக்கப்பட்டது.

            பல பத்தாண்டுகள் நீடித்த ரஞ்சூரின் நீண்ட அரசியல் வாழ்வில் தேர்தல் அரசியலிலும் ஈடுபட்டு பல தேர்தல்களில் ராஜ்பொரா மற்றும் ஷோபியன் சட்டமன்றத் தொகுதிகளிலிருந்து போட்டியிட்டார், ஆனால் வெற்றிபெறவில்லை.

கவிஞர் மற்றும் எழுத்தாளராக ரஞ்சூர்

            காஷ்மீரி மற்றும் உருது மொழிகளில் எழுதிக் குவித்த ரஞ்சூர் ஒரு புரட்சிகர இலக்கியகர்த்தா, கவிஞர் மற்றும் எழுத்தாளராவார். “தொடக்கத்தில், மதத்தின் மீது நேசத்தோடு கவிதை புனைவதில் ஈடுபட்டவரின் கவிதை, சோஷலிசக் கவிஞர் சிராக் ஹாசன் ஹஸ்ரத் மற்றும் இக்பாலைச் சந்தித்தப் பிறகு முற்றிலுமாகப் பாதை மாறியது” என்கிறார் அன்வர்.

            அதன் பின் அவர் கவிதை கீழ்ப்படிய மறுப்பது, எதிர்ப்பை வெளிப்படுத்துவது என்றானது. ‘எளிய பதங்கள், எளிய நடை மற்றும் எளிய சந்தம்’ எனப் பாஞ்சாலி சபத முன்னுரையில் பாரதி எழுதியது போல, ரஞ்சூரின் கவிதை மொழி எளிய குழப்பமற்ற தீர்மானகரமான வார்த்தைகள், பிழையற்ற பாட்டு மற்றும் உரைநடை பாணியைப் பின்பற்றியதுடன் ஜம்மு காஷ்மீர் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கை உணர்வுகளை இயைந்து வெளிப்படுத்தியது. பெரும்பாலும் அவருடைய கவிதைகள் முழுமையான காஷ்மீரின் வலியையும் உதவியற்ற கையறுநிலையையும் பிரதிபலித்தது. காஷ்மீர் கடந்து வந்த வரலாற்று மற்றும் அரசியல் நிகழ்வுகளின் எதிரொலி எப்போதும் அவரது கவிதைகளில் நிறைந்திருந்தது.

            அடிமைப்பட்ட தேசத்தின் துயரங்கள் பின்வரும் கவிதையில் வெளிப்படுகிறது

“ஆங் குலாம் க்வாம்” (அடிமைப்பட்டதொரு தேசம்)

                “எங்கள் (காஷ்மீர்) நிலத்தை விற்றவர்களும் வாங்கியவர்களும்

               அதை வைத்துச் செய்யப் போவது ஒன்றும் இல்லை,

               அவர்கள் வியாபாரிகள், அன்னியர்கள்

               நான் கடவுளிடம் முறையிட்டுப் பிராத்திப்பேன்,

               இத் தேசத்திற்குச் சுதந்திர உணர்வைத் திரும்ப அளி

               சுதந்திரத்திற்கான ஏக்கப் பரிதவிப்பையும் உணர்வையும்

               எம் மக்களிடம் ஊட்டி நிறைப்பாய்

                இறைவனிடம் வேண்டுவேன்!”

            காஷ்மீரின் உயர் அரசியல் தலைவர்களுக்கான செய்திகளைச் சுருக்கமான நறுக்குத் தெறித்தாற் போன்று அவருடைய பல கவிதைகள் தெரிவித்தது மட்டுமல்ல, ஜம்மு காஷ்மீர் மக்களின் விருப்பதற்கும் விழைவிற்கும் மாறாக அவர்களது முடிவுகள் இருக்குமானால் அதன் கடுமையான பின்விளைவுகளையும் கூறி அக்கவிதைகள் எச்சரித்தன.

            ரஞ்சூரின் நாடி நரம்புகளில் மதவாத, வகுப்புவாதத்திற்கு இடமில்லை. அவற்றின் ஒவ்வொரு அங்குலத் துடிப்பிலும் மதசார்பற்ற ஆன்மா, பெரும் அமைதியைக் காதலித்த நேயம் நிறைந்திருந்தது. 

            தேசப் பிரிவினையின்போது கொழுந்துவிட்டு எரிந்த மதவாத தீ நாக்குகள் இந்தியா மற்றும் பாக்கிஸ்தான் இரண்டு நாடுகளின் ஆயிரக்கணக்கான மக்களைத் தின்று தீர்த்தபோது ரஞ்சூரின் எழுதுகோல் பின்வரும் கவிதையை அரற்றியது:

அம்னுக் பாய்காம் (சமாதானத்தின் செய்தி)

           “விழித்திடுங்கள், தயாராவீர், தேசத்தைக் காத்தல் செய்ய

          உங்கள் பாரம்பரியத்திற்கு இழுக்குத் தேடாதீர்

          இரத்தம் சிந்துவதை ஒருபோதும் உங்களால் நியாயப்படுத்த முடியாது

          கொப்பளிக்கும் அந்தக் குருதி ஒரு இந்துவைச் சேர்ந்ததாக

          அன்றி ஓர் இஸ்லாமியன் அல்லது

          சீக்கியரைச் சேர்ந்ததாயினும் கவலையில்லை,

          அனைவரையும் நீங்கள் அவசியம் பாதுகாக்க வேண்டும்!”

(மூலக் கவிதைகளை ஆங்கிலத்திற்கு மொழிபெயர்த்தது சன்யா மன்சூர், தமிழில் நீலகண்டன்)

            ரஞ்சூர் தனது வாழ்நாளில் கவிதைகள் உரைநடைகள் என 12க்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்தார். பல ஆண்டுகளுக்கு ‘ஹமாரா காஷ்மீர்’ என்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிப் பத்திரிக்கையின் ஆசிரியராகவும் இருந்து வெளியிட்டார்.

படுகொலை

90களின் தொடக்கத்தில் பள்ளத்தாக்குகில் தீவிரவாதம் வெடித்தது. ஆயிரக் கணக்கான இளைஞர்கள் பல்வேறு தீவிரவாதக் குழுக்களில் இணைந்தனர். தீவிரவாதிகளால் பல அரசியல் தலைவர்கள் சுடப்பட்டு இறந்தபோது நூற்றுக் கணக்கானவர்கள் உயிர் பிழைக்கப் பள்ளத்தாக்கிலிருந்து வெளியேறினர்.

பகைமை சூழ்ந்த நிலையிலும் அப்படித் தங்கள் தாய் மண்ணிலிருந்து வெளியேற முடியாது எனக் காஷ்மீர் மண்ணிலேயே தங்கி வாழ்ந்த பல தலைவர்களில் ரஞ்சூரும் ஒருவர்.

1990, மார்ச் 23 அன்று அழுத்தமான பனிப் போர்வை பள்ளத்தாக்கை மூடியிருந்த தருணத்தில், தமது நன்கு ஒழுங்குபடுத்தப்பட்ட சிறிய அறையில் தோழர் ரஞ்சூர் கம்பளிப் போர்வையில் தன்னைச் சுருட்டிச் சுருண்டு படுத்திருந்தார். அந்த அறைக்குள் ஓர் இளைஞன் நுழைந்தான்; தனது துப்பாக்கியை வெளியே எடுத்து அதனுள் நிறைத்திருந்த தோட்டாக்கள் அத்தனையும் அவருள் அனுப்பிட, கவிஞர் ரஞ்சூரின் உடனடி மரணம் சம்பவித்தது.

“தீவிரவாதிகளிடமிருந்து அவருக்குக் கொலை மிரட்டல்கள் வந்தன, என்றாலும் அழகிய காஷ்மீர் மண்ணைவிட்டு செல்ல அவர் சம்மதிக்கவில்லை; தம் உயிரினும் மேலாய் தாய் மண்ணை நேசித்தார்” என அன்வர் பழைய நினைவுகளை நினைவுகூர்ந்தார்.

ரஞ்சூரின் புகழ் உடல் அவரது இறுதி விருப்பத்திற்கேற்ப உயர்ந்தோங்கிய பைன் மரங்களின் நிழலுக்குக் கீழே அவரது தோட்டத்தில் புதைக்கப்பட்டது.

--நன்றி : நியூஏஜ் (அக்.3 –9)

--தமிழில் : வெ நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

Tuesday 19 October 2021

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 52 -- சுனில் முகர்ஜி

 

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வாழ்க்கை வரலாறு –52


சுனில் முகர்ஜி

பீகார் கம்யூனிஸ்ட் கட்சியின் ஸ்தாபகத் தலைவர்

--அனில் ரஜீம்வாலே

-- நியூஏஜ் (அக்.17 – 23)

                

             1939ல் பீகாரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை ஸ்தாபித்த முன்னணித் தலைவர்களில் ஒருவர் சுனில் முகர்ஜி. பீகார் பகல்பூர் நகரில் 1914 நவம்வர் 16ம் நாள் தனது தாய் மாமா வீட்டில் பிறந்தார். இளமைக் காலம் மூன்கரில் கழிந்தது. அவருடைய தந்தை நீரபதா முகர்ஜி ஒரு ப்ளீடர், பின்னர் மூன்கரில் வசிக்கத் தொடங்கி தொழிலாளர்கள் மற்றும் காங்கிரஸ் தலைவரானார். சுனில் 1921 –22ல் நான்காம் வகுப்பில் பள்ளியில் சேர்ந்தார்.  

            சுனிலின் மாமா தாரபாதா முகர்ஜி ஓர் அஞ்சலகத்தில் பணியாற்றினார். அவர் உறுதியான தேசியவாதியாகவும், பிரிட்டீஷ்க்கு எதிரானவராகவும் இருந்தார். அவருடைய ஆளுமை சுனில் மீது பெரும் செல்வாக்கு செலுத்தியது. தனது அஞ்சல் பணியைவிட்டு பதவி விலகிய தாரபாதா தொழிலாளர்கள் சங்கத்தில் பணியாற்றினார். தாரபாதாவின் மறைவுக்குப் பிறகு சுனிலின் தந்தை நீரபதா முழுமையாக மாறி, தனது பதவியை ராஜினாமா செய்து காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். தனது சொத்து முழுவதையும் சுதந்திரத்திற்காகக் காங்கிரஸ் கட்சியிடம் அளிக்க முடிவு செய்தார். 1930ல் அவர் கைது செய்யப்பட்டார். பின்னாட்களில் பாராளுமன்றச் செயலாளரானார், காங்கிரஸ் அரசுகளில் அமைச்சராக இருந்தார்; பல தேர்தல்களில் போட்டியிட்டு அனைத்திலும் வெற்றியும் பெற்றார்.

            சுனிலின் தாய் பங்கிம் சந்திர சாட்டர்ஜியின் குடும்பத்தைச் சேர்ந்தவர், அவர் அவருடைய மாமா ஆவார்.

யுகாந்தர் கட்சியில்

            வங்கத்தின் யுகாந்தர் கட்சிக்கு மூன்கரிலும் ஒரு குழு இருந்தது, அவர்கள் சுனிலை அடையாளம் கண்டனர். அக்கட்சியின் சியாமா பிரசாத் மஜூம்தார் சுனிலைச் சந்திப்பதை  வழக்கமாகக் கொண்டார். அந்தக் குழுவில் பினோத் பிகாரி முகர்ஜி, அனில் மொய்ரா, ஞான் விகாஸ் மொய்ரா, ஜூவாலா சிங் முதலான பலர் இருந்தனர். அவர்களில் பலர் பின்னர் பீகாரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவியதில் பங்கேற்றவர்கள்.

            அத்தருணத்தில் அவர்கள் ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் திரட்டி வந்தார்கள். மூன்கர் காவல் நிலையத்தின் மீது அவர்கள் வெடிகுண்டு எறிந்தபோது சுனிலும் அவர்களோடு இருந்தார். மஜூம்தார் புத்தகங்களையும் பிரசுரங்களையும் கொண்டுவந்து வழங்க அவர்கள் ருஷ்யா மற்றும் ஐரீஷ் புரட்சிகள் பற்றிப் படித்தனர். சுனில் உறுதியான புரட்சியாளராகி 1929ல் யுகாந்தர் கட்சி உறுப்பினரானார். அப்போது அவர் மூன்கர் ஜில்லா பள்ளியில் மெட்ரிக் படித்து வந்த மாணவராவார்.

            அதே நேரத்தில் கைதாவதிலிருந்து தப்புவதற்காக சுனில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். காங்கிரசுக்காக 1930 –32 ஆண்டுகளில் பல இரகசிய தலைமறைவு பணிகளை ஆற்றினார். சட்டவிரோதமான பிரசுரங்கள் மற்றும் கையேடுகளைக் கங்கைக்குக் குறுக்கே வடக்கு மூன்கரின் கோக்ரி கிராமத்தில் உள்ள தலைமறைவு அச்சகத்தில் அச்சடித்து எடுத்து வருவார். அவர்கள் ஓர் ஆசிரமமும் நடத்தி வந்தனர்.  

            சுனிலின் தந்தை நீரபதா முகர்ஜி கைது செய்யப்பட்ட பிறகு 1930ல் அவருடைய தாய் ஒரு சிறிய வீட்டிற்குக் குடிபெயர்ந்தார். யுகாந்தர் கட்சி ஆயுதங்களைத் திரட்டி வரும் பணியை சுனிலிடம் தந்தது. மூன்கரில் ஒரு துப்பாக்கித் தொழிற்சாலை இருந்தது. கல்கத்தாவுக்கு அனுப்புவதற்காக  அங்கிருந்து ரிவால்வர், கைத்துப்பாக்கிகள் போன்றவற்றைத் திரட்டிவர சுனில் பணிக்கப்பட்டார். 

காங்கிரஸ் அமர்வில்

            ஒரு பகுதியளவே சட்டப்படியான நிலையில் 1932ல் டெல்லியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டு அமர்வில் சுனில் முகர்ஜி கலந்து கொண்டார். மாநாட்டில் கலந்து கொள்ள அவருடன் வந்திறங்கிய பிரதிநிதிகள் மற்றும் காங்கிரஸ்காரர்கள் கைது செய்யப்பட்டனர். 

            11 பிரதிநிதிகளைச் சுனில் தன்னுடன் டெல்லிக்கு அழைத்து வந்தார். காலை 9 மணி அளவில் அவர்கள் அனைவரும் சாந்தினி சௌக்  இடத்திற்கு வந்து ஆவணங்களைப் படிக்கத் தொடங்குமாறு பணிக்கப்பட்டிருந்தனர். ஆயிரக் கணக்கானவர்கள் திரண்டு ஆவணத்தைப் படிக்கத் தொடங்கினர். அவர்கள் காவலர்களால் லத்தி மற்றும் துப்பாக்கி முனைகளால் தாக்கப்பட்டனர். பெரும் எண்ணிக்கையிலானவர்கள் காயமடைந்தனர். நகருக்கு வெளியே இருந்த முகாம் ஜெயிலுக்குக் கொண்டு சென்று இரண்டு மாதங்கள் அடைத்து வைத்தனர்.

            விடுதலையானதும் கல்கத்தா அடைந்த சுனில் ரிப்பன் பள்ளியில் மெட்ரிகுலேஷன் வகுப்பில் சேர்ந்தார். அவருடைய விடுதி அறை புரட்சிகர செயல்பாடுகளின் மையமாயிற்று. அவர் ‘கார்ன்வாலீஸ் தெரு துப்பாக்கிச் சூடு வழக்கு’ தொடர்பாக 1930ம் ஆண்டின் தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். அந்த வழக்கில் தினேஷ் மஜூம்தார் தூக்கிலிடப்பட்டார். ஆனால் சந்தேகத்தின் பலனை அளித்து சுனில் விடுதலை செய்யப்பட்டார்.

            அப்போது வங்கத்தின் கவர்னராக ஆன்டர்சன் மற்றும் போலீஸ் கமிஷனராக அஞ்சுதற்குரிய சார்லஸ் டெகர்ட்டும் இருந்தனர். சுனில் அவரது மாமா இல்லத்திலிருந்து கைது செய்யப்பட்டார். சிறையில் பல நாட்கள் அவர் மோசமாக அடித்துத் துன்புறுத்தப்பட்டார், ஐஸ் பாளங்களில் படுக்க வைத்தனர், நகக் கண்களில் ஊசிகளைச் செருகினர்… இப்படிப் பலவித கொடுமைகள் அவர் மீது நடத்தப்பட்டன. பின் பிரிசிடென்சி சிறைக்கு மாற்றி அவரைத் தனிமைச் சிறையில் அடைத்தனர்.

            அங்கே புகழ்பெற்ற கோபால் ஹால்தர் உட்பட பிரபலமான ஆளுமைகள் பலரைச் சந்தித்தார். அவர்கள் அரசியல் மற்றும் தத்துவார்த்த மறுசிந்தனை விவாதங்களில் ஈடுபட்டனர். அவர்கள் ரஷ்யப் புரட்சி, போல்ஷ்விக் கட்சி மற்றும் மாமேதை லெனின் வாழ்க்கை போன்றவற்றைப் புரிந்து கொள்ள முயன்றனர். அப்துல் ஹலீம் மற்றும் முஸாஃபர் அகமது அவர்களைத் தொடர்பு கொண்டார்.

பூபேஷ் குப்தாவுடன்

            எதிர்காலக் கம்யூனிஸ்ட் தலைவரான பூபேஷ் குப்தாவுடன் சுனில் ஒரே அறையில் அடைக்கப்பட்டார். முழு நான்கு ஆண்டுகள் அவர்கள் ஒன்றாகவே இருந்தது சுனிலின் வாழ்வுக்குத் தீர்மானகரமாக அமைந்தது. அவர்கள் மார்க்ஸின் ‘மூலதனம்’, லெனினின் ’அரசும் புரட்சியும்’ மற்றும் பல இடதுசாரி இலக்கியங்களைப் படித்தனர். இது 1934ம் ஆண்டின் மத்திய காலம் வரை நீடித்தது.

            சிறையில் அமைக்கப்பட்ட ‘கம்யூனிஸ்ட் ஒருங்கிணைப்பு’ அமைப்பில் சுனில் இணைந்தார். மார்க்ஸியப் படிப்புகளில் சுனில் தொடர்ந்து முறையாக ஈடுபட்டார். தற்போது பங்களாதேசத்தில் உள்ள மைமென்சிங் பகுதியின் புல்வாரியா போலீஸ் சரகத்துக்கு உட்பட்ட கிராமம் ஒன்றில் 1937ல் சுனில் ‘கிராமச் சிறை’யில் அடைத்து வைக்கப்பட்டார். சிறப்புத் தேர்வு மையம் ஒன்றில் அவர் மெட்ரிக் தேர்வு பெற்றார். இன்டர் தேர்வில் முதல் வகுப்பில் தேர்வு பெற்றார்.

                விடுதலையானதும் சுனில் பாட்னாவில் உள்ள பாட்னா பல்கலைக்கழகத்தில் அனுமதிக்கப்பட்டார். 1937 தேர்தல்களுக்குப் பிறகு காங்கிரஸ் அமைச்சரவை அமைக்க ஸ்ரீகிருஷ்ணா சின்ஹா பீகார் முதலமைச்சரானார். அவரது வீட்டில்தான் சுனில் தங்கினார். அவர் சுனிலின் தந்தையின் நண்பராவார். முதலில் பல்கலைக்கழகத்தில் அனுமதி கிடைக்கவில்லை; ஆனால் முதலமைச்சர் சினமுற்று வலியுறுத்தி அனுமதி பெற்றுத் தந்தார்.

            பல்கலைக்கழகத்தின் பொருளாதாரத் துறையில் சேர்ந்த சுனிலின் துறைத் தலைவர் டாக்டர் ஞான்சந்த் விரைவில் அவருடைய புரட்சிகர செயல்பாடுகளை அறிந்து அவரைத் தம் பிரிவில் அனுமதித்தார்.

            பாட்னாவில் ஏஐஎஸ்எஃப் தலைவரான அலி அஷ்ரஃப், ஜகந்நாத் சர்க்கார் மற்றும் பிறரைச் சுனில் தொடர்பு கொண்டார்.

            விவசாயி – தொழிலாளி – மாணவர் லீக் ஒன்று 1938 மூன்கரில் ரத்தன் ராய் தலைமையில் அமைக்கப்பட்டது. அவர் பீகார் கட்சியின் ஸ்தானபனத் தலைவர்களில் ஒருவராவார்.

            முதலில் சுனில் முகர்ஜி கல்கத்தா செல்ல விரும்பினார், ஆனால் அவ்வாறு செல்ல வேண்டாம் என அவருக்கு அறிவுறுத்தப்பட்டது. மத்திய கட்சியின் பத்திரிக்கையான ‘நேஷனல் ஃப்ரண்ட்’ (தேசிய முன்னணி) இதழுக்காக அவர் ஒரு ஏஜென்சி தொடங்கினார். பிசி ஜோஷி அவரை 1939 கயாவில் நடந்த கிசான் சபா மாநாட்டிற்கு வருமாறும் பீகாரில் கட்சியை அமைக்கவும் கேட்டுக் கொண்டார்.

பம்பாயில் பயிற்சி முகாம்

            கட்சி செயலாளர்களுக்கான மார்க்ஸியத்தில் மூன்று மாத பயிற்சிக்காக சுனில் பம்பாய்க்கு அழைக்கப்பட்டார். பல விரிவான பொருள்களில் பாடங்கள் கற்பிக்கப்பட்டன. பிசி ஜோஷி தவிர டாக்டர் அதிகாரி, அஜாய் கோஷ் மற்றும் ஆர் டி பரத்வாஜ் விரிவுரையாற்றினர். புகழ்பெற்ற வரலாற்று ஆய்வாளர் டாக்டர் ஆர் சி மஜூம்தார் அங்கிருந்தார். அவருடன் கேரளாவிலிருந்து பி கிருஷ்ணப்பிள்ளை மற்றும் ஆந்திராவிலிருந்து சந்திரசேகரனும் பங்குபெற்றார்.

பீகாரில் சிபிஐ ஸ்தாபித்தல்

            ஜூலையில் திரும்பி வந்ததும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை அமைக்கும் தயாரிப்புப் பணிகளைச் சுனில் தொடங்கினார். 1939 செப்டம்பரில் இரண்டாவது உலக யுத்தம் மூண்டது; அந்நிகழ்வின் வளர்ச்சிப் போக்குகளை விளக்குவதில் கடுமையான கருத்து மோதல்கள் ஏற்பட காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிடையே மோதல் பிளவுபடும் நிலையை அடைந்தது.

            பரஸ்பரம் கலந்து பேசிய பிறகு, அங்கிருந்த தோழர்களைக் கொண்டு 1939 அக்டோபர் 20ல் மூன்கரில் கூட்டம் ஒன்று நடைபெற்றது. அதில் இருபது (20) தோழர்கள் கலந்து கொண்டனர். கலந்து கொண்டவர் எண்ணிக்கை பற்றி வேறுபட்ட தகவல்கள் சொல்லப்பட்டாலும் 20 தோழர்கள் கலந்து கொண்ட கூட்டம் என்பதே மிகப் பெரிதும் ஏற்கப்பட்டது. சுனில் முகர்ஜியின் மூத்த சகோதரிக்குச் சொந்தமான கங்கை கரையருகே இருந்த சிறிய வீடு ஒன்றில் அக்கூட்டம் நடைபெற்றது. அந்த நாள் தசரா கொண்டாட்டங்கள் நடைபெற்ற நாளாகியதால் மற்றவர்கள் அறியாமல் கூட்டம் நடத்த அது நல்ல மறைவான வாய்ப்பாயிற்று. சிபிஐ கட்சியின் மத்தியக் குழு சார்பாக ஆர்டி பரத்வாஜ் கலந்து கொண்டார். கலந்து கொண்ட இருபது பேரில் நால்வர் கேன்டிடேட் உறுப்பினர்கள் மற்றவர்கள் முழு நேர உறுப்பினர்களாகவும் ஆனார்கள். ஐந்து உறுப்பினர் மாகாணக் குழு (ப்ரொவின்ஷியல் கமிட்டி PC) அமைக்கப்பட்டது: சுனில் முகர்ஜி செயலாளராகக் கொண்ட குழுவில் அலி அஷ்ரஃப், ராகுல் சாங்கிருத்தியாயன், ஞான் பிகாஸ் மொய்ரா மற்றும் பினோத் முகர்ஜி இடம் பெற்றனர்.

            எதிர்காலத்தில் புகழ்பெற்ற பெயராளர்களாகிய சுனில் முகர்ஜி, ரத்தன் ராய், ஷிவ் பச்சன் சிங், ராகுல் சாங்கீர்த்தியயானா, விஸ்வநாத் மாத்தூர் முதலானவர்களும் இருந்தனர்.

            பீகாரில் இருந்த கட்சி 1940 ஜனவரி 26ல் தானே சுதந்திர தினம் என அறிவித்தது. விடுதலையின் நோக்கங்கள், வர்க்கப் போராட்டம், ஏகாதிபத்தியம் மற்றும் பாசிசத்தை எதிர்த்தப் போராட்டம் குறித்து விளக்கி கையேடுகளை அவர்கள் விநியோகித்தனர்.  டால்மியா நகர், கிரிதிக், பாட்னா முதலான இடங்களில் பல்வேறு வேலைநிறுத்தங்கள் நடைபெற்றன. அப்போது வெளியான நாளிதழ்கள் “ஒரு புதிய, சிகப்பு நட்சத்திரம் பீகார் பிரதேசத்தில் எழுந்துள்ளது” எனக் குறிப்பிட்டன. இந்தப் புதிய ‘அபாயம்’ குறித்து ‘எச்சரித்த’ ஸ்டேட்ஸ்மன் பத்திரிக்கை அது விரைவில் நசுக்கப்பட வேண்டும் என எழுதியது.

            சுனில் முகர்ஜி, அலி அஷ்ரஃப் மற்றும் ராகுல் 1940 மார்ச்சில் கைது செய்யப்பட்டனர். ஜுன் மாதம் 50 தோழர்களுக்கும் மேல் கைது செய்யப்பட்டனர். அந்நேரம் கட்சி உறுப்பினர் எண்ணிக்கை ஐம்பதிற்கும் அதிகமாகக் கடந்திருந்தது. சுனில் முகர்ஜி பகல்பூர் மத்திய சிறைக்கு அனுப்பப்பட்டார்.

தியோலி தடுப்புக் காவல் முகாம் சிறையில்

            எதிர்மறையில் மோசமாகப் புகழ்பெற்ற தியோலி முகாம் சிறைக்கு 1940ல் சுனில் முகர்ஜி, அலி அஷ்ரஃப், ராகுல் உட்பட 15 தோழர்களுடன் பீகாரிலிருந்து அனுப்பப்பட்டார். அங்கே பிற்காலத்தில் கம்யூனிஸ்ட்டான சந்திரமா சிங் என்ற புரட்சியாளரும், யோகேந்திர சுக்லா, சூர்ய நாராயண சிங் (சோஷலிஸ்ட்) உட்பட பிறரும் இருந்தனர். சுனில் முகர்ஜி முகாம் எண் 2ல் அடைக்கப்பட்டார். எஸ் ஏ டாங்கே, அஜாய் கோஷ், ஆர் டி பரத்பாஜ், சோலி பாட்லிவாலா, எஸ்வி காட்டே, தன்வந்திரி முதலான புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் அங்கிருந்தனர்.

            தியோலி முகாமிற்கு அழைத்து வரும்போதே சுனில் முகர்ஜி உடல்நலம் குன்றி நோயுற்றிருந்தார். அப்பென்டிக்ஸ் (குடல்வால் அழற்சி) அறுவை சிகிச்சைக்காக ஆஜ்மீருக்கு, கார்வால் ரெஜிமெண்ட் பாதுகாவலோடு கொண்டு செல்லப்பட்டார். டாக்டர் யங்க் அவருக்குச் சிகிச்சை அளித்தார்.

            பாட்னா மெடிகல் காலேஜ் மற்றும் மருத்துவமனையில் (PMCH) சிகிச்சை முடித்த பிறகு 1942 ஜூலையில் சுனில் விடுவிக்கப்பட்டார். பாட்னா கழஞ்சி தெருவில் மாகாண கட்சி அலுவலகம் அமைக்கப்பட்டது. 1942 ஆகஸ்ட் இயக்கப் போராட்டப் பேரணிகள் அந்தத் தெரு வழியே சென்றது. 1943ல் கட்சி உறுப்பினர் எண்ணிக்கை 336ஆக உயர்ந்திருந்தது. மக்கள் தொடர்ந்து கட்சியில் இணைந்தனர். பின்னாட்களில் அகில இந்திய கிசான் சபாவின் பொதுச் செயலாளரான சகஜானந்த் சரஸ்வதியுடன் அவர் நெருக்கமாக இணைந்து பணியாற்றினார். 1942 – 44ம் ஆண்டுகளில் கிசான் சபா உறுப்பினர்களை அரசியல் ரீதியில் பயிற்சியளித்து உருவாக்குவதில் சுனில் முகர்ஜி அவருக்கு உதவினார்.

            1940ல் கார்யானந்த் சர்மா சிபிஐ கட்சியில் சேர்ந்தார். சுவாமி சகஜானந்த் கோபமுற்று சுனில் முகர்ஜியிடம் கூறினார்: ‘என்னுடைய கேடர்களை (அணி ஆட்களை) நீங்கள் எடுத்துக் கொண்டு விடுகிறீர்கள்!’. சுனில் தான் அவர்களுக்குக் கட்சி மற்றும் கிசான் சபா இரண்டிலும் பயிற்சி அளிப்பதாகப் பதில் கூறினார். அவருடைய பதிலில் திருப்தி அடைந்த சுவாமிஜி அதனை ஒப்புக் கொண்டார். இந்தக் காலகட்டத்தில் யோகேந்திர சர்மா, சதுரானன் மிஸ்ரா, போகேந்திர ஜா, கங்காதர் தாஸ், சந்திரசேகர் சிங் போன்ற ஏராளமான புகழ்பெற்ற ஆளுமைகள் பலர் கட்சியில் இணைந்தனர். 1944 வாகில் கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை 4000 ஆக வளர்ச்சி பெற்றிருந்தது.

            1943 – 44 வங்காளப் பஞ்சத்தின்போது கட்சி பல பணிகளை ஆற்றியது, அந்தப் பஞ்சம் பீகாரையும் கடுமையாக பாதித்திருந்தது.

            1943 மே மாதத்தில் பம்பாயில் நடைபெற்ற சிபிஐ முதலாவது கட்சி காங்கிரஸ் மாநாட்டில் சுனில் முகர்ஜி கலந்து கொண்டார். அவர் ஜாம்ஷெட்பூர், டால்மியாநகர், கிரிதித் முதலான இடங்களில் தொழிற்சங்க அரங்கில் பணியாற்றி கட்சியைக் கட்டுவதற்கு உதவினார்.

            1947ன் தொடக்கத்தில் கட்சி ‘ஜனசக்தி’ என்ற இந்தி நாளிதழை வெளியிட்டது. 1946முதல் கட்சி உறுப்பினரான ஷிவாணி சாட்டர்ஜியைச் சுனில் 1947 மே மாதம் திருமணம் செய்தார்.

            நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றுவதற்காகச் சுனில் முகர்ஜி தன்பாத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டார். எஸ்ஏ டாங்கே தலைவராகவும், சுனில் முகர்ஜி பொதுச் செயலாளராகவும் கொண்டு ‘அனைத்திந்திய நிலக்கரி தொழிலாளர்கள் சம்மேளனம்’ அமைக்கப்பட்டது.

பீகார் சட்டமன்றத்தில்

            1962 பீகார் சட்டமன்றத் தேர்தல்களில் கட்சி சுனில் முகர்ஜியை வேட்பாளராக நிறுத்தியது. ஏழாயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வென்றார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 12 இடங்கள் கிடைத்தன. மேலும் ஜாம்ஷெட்பூர் நாடாளுமன்றத் தொகுதியிலும் வென்றது. சிபிஐ சட்டமன்றக் குழுத் தலைவராகச் சுனில் முகர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். சட்டமன்றத்தில் திறமையாகப் பல உரைகளை ஆற்றினார்.

            1964ல் கட்சியில் ஏற்பட்ட பிளவு பீகாரை அதிகம் பாதிக்கவில்லை.  

1964 ஜாம்ஷெட்பூர் வகுப்புவாதக் கலவரங்களில் நிவாரணப் பணி

            1964ல் ஜாம்ஷெட்பூரில் மிகக் கடுமையான வகுப்புவாதக் கலவரங்கள் மூண்டன. அவற்றை வகுப்புவாதச் சக்திகள் துணையோடு டாட்டாக்கள் ஏற்பாடு செய்தனர். மிக மோசமான கலவரங்கள் அவை. அமைதியை ஏற்படுத்த சுனில் முகர்ஜி, கேதார் தாஸ் மற்றவர்கள் மிகக் கடுமையாகப் பாடுபட்டனர். கலவரங்களைத் திட்டமிட்டு நடத்திய வகுப்புவாத உதிரிகள் இருந்த மையங்களை அதிகாரிகளுக்கு அடையாளம் காட்டுவதில் சுனில் உதவினார்.

1965ல் கைது

            1960களில் ஏற்பட்ட காங்கிரஸ் எதிர்ப்பு அலையின்போது சுனில் முகர்ஜி மிகத் தீவிரமாகச் செயல்பட்டார். அவருடன் ராம் மனோகர் லோகியாவும் 1965ல் கைது செய்யப்பட்டார். பாட்னா காந்தி மைதானத்தில் பல தலைவர்களை அடித்துத் தாக்குதல் நடத்திக் கைது செய்தனர்.

            1967ல் காங்கிரசுக்கு எதிராகப் பல கட்சிகளின் கூட்டணி ‘சம்யுக்த விதயக் தள’ (SVD) ஆட்சி அமைந்தன. சுனில் முகர்ஜிக்குப் பீகாரின் முதலமைச்சராகும் வாய்ப்பை டாக்டர் லோகியா வழங்க முன்வந்தார்; ஆனால் சுனில் முகர்ஜி இது கருத்து முரண்பாடுகளை ஏற்படுத்தும் எனக் கூறி அதனை ஏற்க மறுத்துவிட்டார்: கூட்டணியில் சம்யுக்த சோஷலிஸ்ட் கட்சி (SSP)தான் பெரிய கட்சி. எஸ்விடி கூட்டணிக் கட்சிகளின் கூட்டம் சுனில் முகர்ஜி இல்லத்தில் நடைபெறுவது வழக்கம். சுனில் முகர்ஜிதான் மகாமாயா பண்டிட் சிங் அவர்களை முதலமைச்சர் ஆக்கலாம்  என்ற முடிவை அறிவித்தார்: அவருடைய மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை! சுனில் முகர்ஜியையும் அமைச்சராக்கலாம் என்ற யோசனையை அவர் ஏற்க மறுத்துவிட்டார்.

            1962 –67 மற்றும் 1969 –77 ஆண்டு காலத்தில் சிபிஐ சட்டமன்றக் குழுத் தலைவராக அவர் இருந்தார். 1973 –77ல் எதிர்கட்சித் தலைவராகவும் இருந்தார்.

மீண்டும் கட்சிச் செயலாளராக

          படிண்டா கட்சி காங்கிரஸ் (1978) முடிந்த பிறகு 1978 முதல் 1984வரை சுனில் முகர்ஜி சிபிஐ பீகார் மாநிலச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு செயல்பட்டார். 1978 முதல் 1984 வரை சிபிஐ மத்திய தேசியக் குழு (CEC) உறுப்பினராகப் பொறுப்பு வகித்தார். அதற்கு முன் ஒன்றுபட்ட கட்சியின் மத்தியக் கமிட்டி (CC) உறுப்பினராக இருந்தார்.

            பீகார் மாநிலத்தில் இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சியை வலிமை வாய்ந்ததாகக் கட்டியெழுப்பிய சுனில் முகர்ஜி, சில காலம் நோய்வாய்பட்டிருந்த பின், 1992 மார்ச் 30ம் தேதி மறைந்தார்.

--தமிழில்: நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்