ரஷ்யப் புரட்சியின் 104வது ஆண்டு
மாபெரும் அக்டோபர் :
21ம் நூற்றாண்டில் ஜனநாயகம்
மற்றும் புரட்சிகர நிகழ்முறை
--அனில் ரஜீம் வாலே
நியூஏஜ் ( நவ.14 – 20)
‘ஆகாவென்று
எழுந்தது பார் யுகப் புரட்சி’ என பாரதி ஆனந்தக் கூத்தாடிய ரஷ்யப் புரட்சி பொதுவானதும்
மற்றும் குறிப்பானதுமான அம்சங்களை உள்ளடக்கியது: ஒன்று, அனைத்துப் புரட்சிகள் மற்றும் ஜனநாயக மாற்றங்கள் என்பனவற்றிற்குப்
பொருந்தக் கூடியவை; மற்றொன்று முழுவதும்
ரஷ்யப் பண்புகளைக் கொண்ட அந்த மண்ணிற்கே உரிய அம்சம். சில குறிப்பிட்ட அகவய மற்றும்
புறவயமான நிலைமைகள் நிலவிய சூழ்நிலையில், அங்கே ஏகாதிபத்தியத்தின் அனைத்து முக்கிய
முரண்பாடுகளும் ரஷ்யாவில் திரட்சியாகக் குவிக்கப்பட அது, புரட்சிக்கான எதார்த்த சூழல் உருவாவதை நோக்கிச் செலுத்தியது.
ஜாரின் ரஷ்யா ஜனநாயக நாடு அல்ல, ஏதேச்சிகார முடியாட்சி; அங்கே தேர்தல்கள் நடத்தப்படுவது அபூர்வம்; முற்போக்கான கட்சிகள், குறிப்பாக (RSDLP) ‘ரஷ்ய சமூக ஜனநாயக தொழிலாளர் கட்சி’, பொதுவாக சட்டவிரோதமாகவே செயல்பட்டது. வாக்களிக்கும் உரிமை கடுமையாக கட்டுப்படுத்தப்பட்டது. இருந்த போதிலும் வி ஐ லெனின் சட்டபூர்வமான மற்றும் ஜனநாயக வாய்ப்புகள் எவை கிடைத்தாலும் அவற்றை முழுமையாகப் பயன்படுத்தினார். ரஷ்ய RSDLP கட்சி ஜனநாயக உரிமைகள் மற்றும் வாய்ப்புகளைத் தொடர்ச்சியாக வற்புறுத்தி வந்தது. அந்தக் கட்சி 1906ல் ரஷ்யப் பாராளுமன்றமான டூமாவுக்கு நடந்த தேர்தல்களைப் புறக்கணித்தது மாபெரும் தவறு என்று கருதினார் லெனின். இரண்டாவது டூமாவுக்கு 1907லும், மூன்றாவது 1907 –12 மற்றும் நான்காவது தேர்தல் 1912 –17ல் நடைபெற்றன.
ரஷ்யத் தொழிலாளர்
கட்சி 1907 டூமாவுக்கு 6 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படும் வகையில் வெற்றி அடைந்தபோது,
அவர்கள் அந்த அவையை முழுமையாகப் பயன்படுத்தினர். ரஷ்யாவில் தேர்தல் பிரச்சாரம் என்பது
அபூர்வம்; இருப்பினும் கிடைக்கும் வாய்ப்புகளைக் கட்சி முறையாகப் பயன்படுத்த வேண்டும்
என வலியுறுத்தினார் லெனின்.
ரஷ்யப் புரட்சிக்கு
முன்பும் அதற்குப் பின்பும் மேற்கத்திய நாடுகளில் புரட்சியாளர்கள் ஜனநாயக அமைப்புகளில்
பங்கெடுத்து அவற்றைப் புரட்சிகரப் பயன்பாட்டிற்குப் பயன்படுத்தினர் என்பதைச் சுட்டிக்
காட்டி லெனின் வலியுறுத்துகிறார். ‘எந்தச் சூழ்நிலையிலும்
ரஷ்யப் புரட்சி வழிமுறைகளைப் பிரதி எடுத்து (காப்பி அடிக்கும்) போலச் செய்தலில் ஈடுபடக்
கூடாது’ என லெனின் வற்புறுத்தி எச்சரிக்கிறார். இதை அவரது புகழ்பெற்ற “இடதுசாரி கம்யூனிசம்: ஓர் இளம்பருவக் கோளாறு”
என்ற நூலில் மிகத் தெளிவாக்குகிறார். பாராளுமன்ற மற்றும் ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்களின்
மீது அவர் ஆகக் கூடுதலான அழுத்தம் தருகிறார்.
சோவியத்கள் வகித்த பங்கு
ரஷ்யாவில் சோவியத்கள்
அதிகாரபூர்வமற்ற மக்கள் திரள் ஜனநாயக அமைப்புகளாகத் திகழ்ந்தாலும், பரவலாக அங்கீகரிக்கப்பட்டன.
அந்த அமைப்பு 1905 புரட்சியின்போது பிறந்தது. ஏறத்தாழ ஆண்டுதோறும் நடக்கும் அதற்கான
தேர்தல்களில் அனைத்து முக்கிய அரசியல் கட்சிகளும் போட்டியிட்டன. சோவியத்கள் 1917ல்
நடந்த புரட்சியில் முக்கிய பங்காற்றின. உண்மையில் ரஷ்யப் புரட்சியே ‘சோவியத் புரட்சி’தான்
– அதிலிருந்துதான் முதலில் சோவியத் ரஷ்யா மலர்ந்து பின்னர் சோவியத் யூனியனாக அமைக்கப்பட்டது.
ரஷ்ய தொழிலாளர்கள்,
விவசாயிகள் மற்றும் படைவீரர்களின் அதிகார அமைப்புகளே சோவியத்கள். அந்தச் சோவியத்கள்
மூலமாகவும் அதன் வடிவத்திலும் உழைக்கும் மக்கள் கூட்டம் தங்களின் ஆட்சியைச் செலுத்தினர்
என்பதால் அது பெருந்திரள் உறுப்புகளாகும். எனவே வரையறுக்கப்பட்ட அரசியலமைப்பு மன்றத்தைவிட
(கான்ஸ்டிடியுவன்ட் அசம்பிளி) சோவியத்கள் கூடுதல் ஜனநாயகத் தன்மை உடையன. மார்ச் மாதத்திற்கும்
நவம்பருக்கும் இடையே (பழைய காலண்டர்படி பிப்ரவரி முதல் அக்டோபர் வரை) 1917ல் அடுத்தடுத்து
சோவித்களுக்கு நடந்த தேர்தல்களில் மெல்ல மெல்ல உறுதியாக போல்ஷ்விக்குகள் (சற்றே புரட்சிக்கு
முன்னதாக) மென்ஷ்விக்குகள் மற்றும் சோஷலிஸ்ட் புரட்சியாளர்களைவிட பலம் அடைந்து பெரும்பான்மை
பெற்றதன் மூலம் சோவியத்களை வழிநடத்த அடித்தளம் இட்டனர்.
இவ்வாறாக, ரஷ்யப் புரட்சியின் வரலாறு ஆயுதம் தாங்கிய
தொழிலாளர்களின் வெறும் வரலாறு மட்டுமல்ல; ஆனால் அதற்கும் மேல் மக்களிடையே சோவியத்களாகத்
திரண்டு அமைந்த பெருந்திரள் ஜனநாயகச் செயல்பாட்டின்
வரலாறாகும். இதுவே ரஷ்யப் புரட்சியின் ஜனநாயக இயல்பும் தன்மையுமாகும்.
சோவியத்களும் கட்சியும்
சோவியத்கள் அதிகாரத்தைக்
கட்சியின் கைகளில் குவிப்பதை லெனின் எதிர்த்தார். உழைக்கும் வர்க்கம் மற்றும் சோவியத்கள்
‘சார்பாகச் செயல்படும்’ போக்கைக் கட்சி வளர்த்துக் கொள்ள, இது அந்த வர்க்கத்தின் நியாயபூர்வமான
செயல்பாடுகளை மெல்ல மெல்ல இழக்கச் செய்தது. கட்சியானது
யோசனைகளைத் தெரிவித்து வழிகாட்டலாமே தவிர, அது சோவியத்கள் மற்றும் உழைக்கும் வர்க்கத்திற்கு
இப்படிச் செய் என உத்தரவிடக் கூடாது. வர்க்கத்தின் ஆட்சியே
தவிர கட்சியின் ஆட்சி அல்ல. இது குறித்த விவாதங்கள் கட்சிக்குள்
நீண்ட காலம் நடைபெற்று வந்தன; மேற்கண்ட கருத்தின் அம்சத்தைப் பார்க்கத் தவறிய ஸ்டாலின்
மற்றும் மற்ற சில தோழர்கள் குறித்து லெனின் மிகவும் அதிருப்தி அடைந்தார். லெனின் மறைவுக்குப்
பிறகு, சோவியத்கள் மெல்ல தங்கள் அதிகாரத்தையும் முக்கியத்துவத்தையும் இழந்து, புறக்கணித்துப்
பின்னுக்குத் தள்ளப்பட, முழு அதிகாரமும் போல்ஷ்விக் கட்சியின் கைகளுக்கு இடம் மாறியது.
இது தனிப்பட்ட
அதிகாரத்திற்கு வழியமைத்து, இறுதியில் ஸ்டாலின் கைகளில் அதிகாரம் அனைத்தும் குவிக்கப்பட்டதன்
விளைவு, பேரழிவு ஏற்பட்டது. இந்த அபாயகரமான, ஜனநாயக விரோத அணுகுமுறையை முன்னுணர்ந்தவராக
லெனின், தனது இறுதி கடிதங்களில் இது குறித்துக் கட்சியின் மத்திய குழுவை எச்சரித்தார்.
கட்சியின் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து ஸ்டாலினை உடனடியாக நீக்குவதற்கு
லெனின் விடுத்த அழைப்பு உதாசீனப்படுத்தப்பட்டது. சோவியத்களிடமிருந்து
அதிகாரங்களைக் கட்சியின் மத்திய குழுவும் பொலிட் பீரோவும் பறிக்கும் இக்கேடு தரும்
போக்கு குறித்து ரோசா லக்சம்பர்க்கும் எச்சரித்தார். இந்த நெடுநோக்குப் பார்வையுடன்தான்
லெனின், அந்தஸ்தில் மத்திய குழுவிற்குச் சமமான பரவலான அதிகாரங்களுடன், ‘தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள்
ஆய்வு’ (இன்ஸ்பெக்க்ஷன்) என்பதை ஏற்படுத்தி அமைக்குமாறு யோசனை தெரிவித்தார்.
இரண்டாம் உலகப்
போருக்குப் பிந்தைய உலகில் –
ஜனநாயகமும் புரட்சியும் :
1917ல் ரஷ்யப்
புரட்சி நடந்து ஒரு நூற்றாண்டுக்கு மேல் கடந்து விட்டது. சர்வதேசச் சூழலில் தீவிரமான
மாறுதல்கள் உலகில் நிகழ்ந்துள்ளன. அந்த மாற்றங்கள் உத்தி மற்றும் தந்திரோபாயங்களில்
பெரும் மாறுதல்களைத் தேவைப்படுத்தியுள்ளன. உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம் இரண்டாவது உலகப்
போருக்குப் பிந்தைய நிலைமைகளின் குணாம்ச ரீதியிலான மாற்றங்களை மதிப்பீடு செய்ததில்,
புதிய உத்திகளையும் தந்திரோபாயங்களையும் ஏற்படுத்திடக் கோரியுள்ளன.
உலகக்
கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஆவணங்கள் புரட்சி குறித்த மார்க்சிய
– லெனினியக் கோட்பாட்டுக்களில் புதிய அம்சங்களை இணைத்து அவற்றை (தற்காலத்திற்குப் பொருந்துமாறு)
புதுப்பித்துள்ளன. எனவே அந்த ஆவணங்கள் மிகவும் முக்கியமானவை. முன்பு
எப்போதும் இல்லாத அளவு ஜனநாயக அமைப்புக்களும் உரிமைகளும் பரவி உள்ளதால்,
எதிர்காலப் புரட்சிகள் ஆயுதங்களை நாடிப் போக
வேண்டாம் என உறுதியாகச் சான்றளிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற வடிவத்திலான போராட்டம்,
முக்கியமான ஒன்றாக மாறி, பெருந்திரள் மக்கள் சக்தி இயக்கங்களால் ஆதரிக்கப்படுகிறது.
சட்டமன்றங்கள் மற்றும் நாடாளுமன்றங்களில் அதிகமான பிரதிநிதித்துவத்தைப் பெறுவது (தற்போது)
கம்யூனிஸ்ட்கள், தொழிலாளர்கள் மற்றும் புரட்சிகர கட்சிகளுக்குக் கேந்திரமான முக்கியத்துவம்
உடையதாக மாறியுள்ளது.
இது உண்மையில், பாசிசம் தோற்கடிக்கப்பட்ட பிறகு, மக்கள் திரளுக்கான வெற்றி. மிகத் துல்லியமாக, அனைவருக்குமான வாக்குரிமை உட்பட, இவ்வுரிமைகளுக்காகத்தான் தொழிலாளர் வர்க்க இயக்கம், மார்க்சின் காலத்திலிருந்தே, போராடி வந்தது. 1830கள் மற்றும் 40களின் காலத்தின்போது அனைவருக்குமான வாக்குரிமை என்ற கேள்வி முதலில் கூடுதல் அழுத்தத்துடன் எழுப்பப்பட்டது; இங்கிலாந்தில் நடைபெற்ற சாசன இயக்கம் (சார்ட்டிஸ்ட் மூவ்மெண்ட்) தனது முக்கிய கோரிக்கையாக இதை வலியுறுத்தியது. இதன் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டு மார்க்சும் ஏங்கெல்சும் இந்த இயக்கத்திற்குத் தீவிரமாக ஆதரவு வழங்கினர்.
தொழிலாளர்கள் மற்றும் பரவலான புரட்சிகர போராட்டத்தில் 20ம் நூற்றாண்டின் இரண்டாவது பாதியில் இந்த அம்சத்தில் முக்கியமானதாக ஆனது. உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம் கம்யூனிஸ்ட் கட்சிகள் மீது இவ்வாறு புதிய பாத்திரத்தையும் பொறுப்புகளையும் வைத்தது. மேலும் உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம் முதன் முறையாக என்ன விலை தந்தாகிலும் புதிய உலகப் போரைத் தவிர்க்குமாறு உலக மக்களை அறைகூவி அழைத்தது. ‘அணு ஆயுதம் மற்றும் நியூக்கிளியர் ஆயுதங்களைக் குறைப்பது மட்டுமின்றி, பொதுவாகவே படைக்குறைப்பு, பதட்டத் தணிவு’ என்ற அதன் முழக்கம், உலகின் ஜனநாயக இயக்கத்திற்கு உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம் வழங்கிய புதிய பங்களிப்பாகும். (இரண்டாவது உலகப் போரில் பயன்படுத்திய அணுவைப் பிளப்பதன், fission மூலம் செயல்படுவது அணு ஆயுதம்; அணுவின் மையக் கருவில் பிணைத்தல், fusion மூலம் செயல்படும் ஹைட்ரஜன் அணு குண்டு போன்றவை நியூக்கிளியர் ஆயுதம்). இந்தப் பின்னணியில்தான் அமைதியான சமாதான சகவாழ்வு என்ற கருத்தாக்கம் மேலும் வளர்ச்சி பெற்றது. மாமேதை லெனின் அவர்களால்தான், 1917 ரஷ்யப் புரட்சி வெற்றி அடைந்த உடனடியாக, அந்தக் கோட்பாடு முதன்முறையாக அமைத்து உருவாக்கப்பட்டது,
சமூக மாற்றத்திற்கான
மக்கள் போராட்டங்களுக்கு இவ்வாறு, உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம் புதிய பின்னணியை அல்லது
ஏற்றதொரு சூழலை விரிவாக்கித் தந்தது.
வளரும் நாடுகளில்
கம்யூனிஸ்ட் கட்சிகள்
கம்யூனிஸ்ட் மற்றும்
தொழிலாளர்கள் கட்சிகளுக்குத் தேசிய விடுதலைப் போராட்ட இயக்கங்களின் வெற்றி, புதிய கடமைகள்
மற்றும் பொறுப்புகளை அளித்தது. கம்யூனிஸ்ட் கட்சியின் மரபார்ந்த கோட்பாட்டின்படி அதன்
கடமை, பாட்டாளி மற்றும் சோஷலிசப் புரட்சியை நடத்தி முடிப்பது அல்லது வழிகாட்டுவது என்பதே.
அப்படித்தான் மார்க்ஸ், ஏங்கெல்ஸ் மற்றும் லெனின் படைப்புகளில், எப்போதும் இல்லை என்றாலும்,
பொதுவாகச் சொல்லப்பட்டுள்ளன. இந்தக் கடமைகளில்
லெனின் சில மாறுதல்களைச் செய்தார். லெனின்
அவரது எழுத்துக்களிலும், காலனிய நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்களுடன் பேசும்போதும்
பின்வருமாறு அவர் வலியுறுத்தினார்: ‘‘அந்நாடுகளின்
கம்யூனிஸ்ட்களும் கம்யூனிஸ்ட் கட்சிகளும் ‘எல்லா காலங்களிலும்’ தேசிய விடுதலை மற்றும்
ஜனநாயக இயக்கங்களில் பங்கேற்றே ஆக வேண்டும்; தங்களது அமைப்பின் தனித்த அடையாளங்கள்
மற்றும் திட்டங்களை மேற்கொள்ளும் அதே நேரத்தில் அவை பூர்ஷ்வா சக்திகளுடன் ஒத்துழைக்க
வேண்டும். விடுதலை அடைந்த பிறகும்கூட கம்யூனிஸ்ட் கட்சிகளும் புரட்சிகரக் கட்சிகளும்
ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டத்தையும் தேசிய மறுகட்டமைப்புக்காகவும் தங்களது
போராட்டங்களைத் தொடர வேண்டும்.”
இக்கருத்துகள்
தொடக்க வடிவத்திலும் மேலோட்டமாகவும் லெனின் படைப்புகளில் காணப்படுகின்றன. இந்தக் கோட்பாடுகளை
உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம் 1960கள் -- 70களில் மேலும் செழுமைப்படுத்தி மேம்படுத்தின.
முன்பு ஏகாதிபத்திய காலனி நாடுகளாக இருந்த, புதிதாக விடுதலை அடைந்த, பின்தங்கிய நாடுகளில்
உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகளின் பிரதானமான முக்கிய பங்கு பாத்திரம் என்ன என்ற கேள்வி புதிய
மட்டங்களில் விவாதிக்கப்பட்டது. அத்தகைய நாடுகளில் ‘கம்யூனிஸ்ட் கட்சி’யின்
பங்கு மற்றும் முக்கிய பொறுப்பு என்ன? தற்போது அது, எதார்த்தமாக
பாட்டாளி அல்லது சோஷலிசப் புரட்சியை உடனடியாக நடத்துவது அல்ல; அது, அவசரமாக தீவிர ஜனநாயகப்
புரட்சியில் இறங்குவதும் அல்ல. இந்த நாடுகளில் நிலவும் சமூகப் பொருளாதார நிலையோ மற்றும்
வர்க்க அம்சத்தைப் பொருத்தோ அத்தகைய புரட்சியை நடத்துவதற்கேற்ற (அகப் புற) சூழலைப்
பெற்றிருக்கவில்லை. வேறுபட்ட காலத்திலும் வேறுபட்டச் சூழல் நிலைகளிலும் நடைபெற்ற ரஷ்யப்
புரட்சியின் அனுபவங்களைப் பார்த்துக் காப்பி அடிப்பது எதார்த்ததில் சாத்தியமானதல்ல.
கம்யூனிஸ்ட் இன்டர் நேஷனலில் லெனின் ரஷ்யப் புரட்சியைப் பிரதி எடுத்துச் செய்யாதீர்கள்
எனத் திரும்பத் திரும்ப எச்சரித்தார். பல கம்யூனிஸ்ட்களும் அவர்களது கூடுதல் உற்சாகத்தால்
பூர்ஷ்வா அரசை ‘உடனடியாக’த் தூக்கி எறிந்து ‘சோவியத்’ புரட்சியை அவர்களின் நாடுகளில்
‘கொண்டு வந்துவிட’ விரும்பினார்கள். இந்த அணுகுமுறை
போக்குகளை லெனின் மேலே குறிப்பிட்ட ‘இடதுசாரி‘ கம்யூனிசம் என்ற நூலிலும் பிற இடங்களிலும்
விமர்சித்துள்ளார்.
விடுதலையடைந்த
நாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் கடமைகள்
வளரும் நாடுகளில்
உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் தங்கள் நாட்டின் ‘வாராது போல வந்த மாமணியாம்’ சுதந்திரத்தை
ஏகாதிபத்திய நாடுகளின் புதிய சூழ்ச்சிகளிலிருந்து பாதுகாக்கும் ஸ்தூலமான பிரச்சனைகளைச்
சந்தித்தனர். தேசக் கட்டுமானம் மற்றும் மறுகட்டுமானத்திற்கான ஸ்தூலமான செயற்திட்டங்களில்
அவர்கள் கலந்து கொள்ள வேண்டியிருந்தது. அவற்றில் சமூகப் பொருளாதார மாற்றம் மற்றும்
தொழிற்சாலைகள், விவசாய மேம்பாட்டிற்கான திட்ட நடவடிக்கைகளை அமைத்திடுவதையும் உள்ளடக்கியிருந்தது.
உதாரணத்திற்கு அடிப்படை மற்றும் கனரக மெஷின் ஆலைகளை மேம்படுத்தவும், நிலப்பிரபுத்துவத்திற்கு
எதிரான நிலச் சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் வேண்டும். அதேபோல அவர்கள் சிறு மற்றும்
குறு விவசாயிகளை முன்னேற்றுவதற்கும்; சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்களான (MSMEs) பிரிவுகளை மேம்படுத்தி
பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளையும் திட்டமிட வேண்டியிருந்தது. இந்தியா போன்ற நாடுகளில்
உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் முக்கியத் தொழில் பிரிவுகளைத் தேசியமயப்படுத்தவும், பொதுத்
துறைகளை ஏற்படுத்தவும் – குறிப்பாக அரசு மற்றும் பொதுத் துறை பிரிவுகளில் அவைகளை ஏற்படுத்தவும்
– போராட வேண்டி இருந்தது.
இந்தியாவில் கம்யூனிஸ்ட்
கட்சி
இந்தியாவில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மிகச் சரியாக அந்தப் பங்கினையே ஆற்றியது. 90களின் பிற்பகுதி இரண்டு ஆண்டுகளைத் தவிர சிபிஐ ஒரு போதும் ஆட்சியில் இருந்ததில்லை.
ஆனால் ஏகபோகத்திற்கு எதிரான பொதுத் துறைகள், நிலப்பிரபுத்துவ எதிர்ப்பு நிலச் சீர்திருத்தங்கள், கனரக மெஷின் தொழிற்சாலைகளைக் கட்டுதல், பெரும் வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு வணிகத்தைத் தேசியமயமாக்கல், 14 பெரும் ஏகபோக வங்கிகளைத் தேசியமயமாக்கல், அடிப்படைக் கட்டமைப்புகளைப் பொதுத் துறையில் ஏற்படுத்துதல், வலிமைவாய்ந்த இரும்பு எஃகு தொழிற்சாலைகளை நிறுவுதல், நிலக்கரி சுரங்கம், கச்சா எண்ணை சுத்திகரிப்பு ஆலைகள், மின்சாரம், இரயில்வே கட்டமைப்பு மற்றும் பிற தொழிற்சாலைகளைப் பொதுத் துறையில் ஏற்படுத்துதல் முதலியவற்றிற்கான போராட்டங்களை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தலைமையேற்று நடத்தியது. நிலச் சீர்திருத்தங்கள் மற்றும் உபரி நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்குப் பிரித்தளித்தலுக்கான போராட்டங்களைச் சிபிஐ நடத்தியதன் மூலம் நிலப்பிரபுத்துவ உறவுகளை அழித்திட வழிகோலியது. புதிய தேசம், புதிய கல்வி, வேலைவாய்ப்புகள், சுகாதாரம் முதலியவற்றிற்குச் சிபிஐ போராடியதன் வாயிலாக ஏகாதிபத்தியம் மற்றும் நிதி மூலதனத்தின் முகத்திற்கு எதிராகச் சோஷலிச (நாடுகளின்) உதவியுடன் தேசத்தை வலிமையாகக் கட்டியெழுப்ப துணை நின்றது.இன்றைய காலத்தின் ஜனநாயகப் புரட்சி
இவ்வாறு தற்போதைய காலத்தின் வளரும் உலகில்
கம்யூனிஸ்ட் கட்சி, வளர்ச்சி மற்றும் தேசத்தைக் கட்டும் பிரச்சனைகளில் ஸ்தூலமான வரையரையில்
எழும் கேள்விகளைத் தவிர்க்க முடியாது. இல்லாவிடில், நாடுகள் மீண்டும் ஏகாதிபத்தியம்,
பெரும் வணிக முதலைகள் மற்றும் நிதி மூலதனத்திற்கு இரையாக வீழ்ந்துபடும். தற்சார்பு
பொருளாதாரம் மற்றும் ஜனநாயக அரசியல் அமைப்பு, தேசத்தை ஏகாதிபத்திய எதிர்ப்பு உள்ளடக்கத்துடன்,
ஏகபோகத்திற்கு எதிரான வலிமை என்ற சுயபாதுகாப்பு ஆயுதங்களை கொண்டிருக்கும்; அவற்றோடு
மக்கள் பிரச்சனைகளைத் தீர்க்கும் ஆற்றல் வளம் உடையதாகவும் விளங்கும். இந்த நிகழ்வுகள்
ஜனநாயகப் புரட்சி உள்ளடக்கத்தைக் கொண்டிருக்கும் – அதுதான், நவீன காலத்தில் லெனின்
கோட்பாடான பூர்ஷ்வா ஜனநாயகப் புரட்சியை மேலும் பரிணாம வளர்ச்சியுறச் செய்வது. இவ்வாறு கம்யூனிஸ்ட் கட்சிகள் பிற ஜனநாயக மற்றும்
ஏகாதிபத்திய எதிர்ப்புச் சக்திகளுடன் இணைந்து அத்தகைய மாற்றத்திற்கான வாகனங்களாகச்
செயல்படும். அதன் பிறகுதான் எதிர்கால புரட்சிக்கான வலிமையான அடித்தளத்தை ஏற்படுத்த
முடியும். உண்மையில் இன்றைய புரட்சி, இருக்கும் சூழ்நிலையைத் திடீரென அதிரடியாக மாற்றுவது
அல்ல, மாறாக அது ஒரு தொடர் நிகழ்வு, ஏற்றதொரு சூழலுக்கான அடித்தளத்தை எதிர்காலத்தில்
ஆழமாக்கி ஏற்படுத்துவது.
இன்றைய
உலகில் ரஷ்யா, சீனா, கியூபா அல்லது வியட்நாம் போன்ற புரட்சிகள் ஏற்படாது என்பது மிகத்
தெளிவானது. அந்த நாட்கள் முடிந்து விட்டன. 21ம் நூற்றாண்டின் புரட்சிகள் குணாம்ச
ரீதியில் வேறு வகையானவை. திடீர் கிளர்ச்சிகள் அல்லது கொரில்லா வடிவிலான போராட்டங்கள்
பொதுவாக இன்று வழக்கொழிந்தவை என்பது ஒரு பக்கம் இருக்க, அவை தேவையுமில்லை, சாத்தியமும்
இல்லை. நவீன இராணுவப்படைகள் மிகவும் வலிமையானவை, அவற்றை அத்தகைய கிளர்ச்சி, கொரில்லா
தாக்குதல் சக்திகளால் சந்திக்க முடியாது. பொதுவாக இன்று இராணுவங்கள், லத்தீன் அமெரிக்கா
போன்று, ஜனநாயகத் தீர்ப்புக்கு மதிப்பளிப்பவை. தற்காலத்தில் பெருந்திரள் போராட்டங்களுக்கும்
சமூக மாற்றங்களுக்கும், ஜனநாயகம் மற்றும் முற்போக்கான அரசியலமைப்புச் சட்டங்கள் ஆயுதங்களாகி
உள்ளன.
21ம் நூற்றாண்டில்
ஜனநாயகம் மற்றும் புரட்சி
21ம் நூற்றாண்டில் பெரிய
மாறுதல்கள் நடந்துள்ளன; அவை நம்முடைய கோட்பாடுகள் மற்றும் அமைப்புச் சூத்திர உருவாக்கங்களில்
அடிப்படை மாற்றங்களின் தேவையைக் கோரியுள்ளன. மேலும் அவை மார்க்ஸித்தைப் புதுப்பிக்கவும்
கோருகின்றன. இன்று நாம் பாட்டாளி வர்க்கம் (/சர்வாதிகாரம்) என்று பேச முடியாது; அதைவிட
சமூக மற்றும் பொருளாதார மதிப்புகளை உருவாக்குபவர்கள் என்ற வகையில் ‘உழைக்கும் வர்க்கம்’
எனப் பேசுவதே விரும்பத் தக்கது. சரித்திரப் போராட்டங்களால் அந்த வார்த்தை கூடுதலாகப்
பொருள் தருவதாகி விட்டது. தொழில் நுட்பப் புரட்சி அதன் வாழ்வியல் நிலைமைகளை உயர்த்துவதில்
உதவி உள்ளது.
உழைக்கும் வர்க்கத்தின்
கட்டமைப்பு பெரும் மாறுதல்களுக்கு உள்ளாகியுள்ளது. அதனைப் ‘பாட்டாளி’ (ப்ராலிடேரியட்) எனப் பண்புடையதாக வகைப்படுத்துவது
சிரமம். அதன் கூறுகளின் ஒழுங்கமைவு முறை ஆகக் கூடுதலாக சேவைப் பிரிவுகளால் (சர்வீஸ்
செக்டார்) செல்வாக்குப் பெற்று, உற்பத்திப் பிரிவுகளால் குறைவாகவே இருப்பதைக் காண்கிறோம்.
இன்றைய சமூகத்தையும் பொருளாதாரத்தையும் சேவைகளே கூடுதலாகச் செல்வாக்கு செலுத்துகிறது.
(உழைக்கும் வர்க்கம் என்பதைவிட) ‘உழைக்கும்
மக்கள் திரள்’ என்றழைப்பதே மிகவும் பொருத்தமானது. மேலும் மேலும் அதிகமான மனிதர்கள்
‘தகவல்’ என்பதை அடிப்படைப் பொருளாகக் கொண்டு பணியாற்றுகிறார்கள். அவர்களுடைய கோரிக்கைகள்,
முழக்கங்கள் மற்றும் வழிமுறைகள் (மெத்தட்) இப்போது வித்தியாசமாக உள்ளன.
சமூக அமைப்பு பெரும்
மாறுதல்களுக்கு உள்ளாகியுள்ளது : பழைய வர்க்கங்கள் மற்றும் பிரிவுகள் உருமாற்றமடைந்து,
ஒருவகையில் பழையன வரலாற்றில் முடிந்து போனவைகளாக, எலெக்ட்ரானிக்ஸ் (மின்னணுவியல்) போன்ற
புதிய பிரிவுகள் உருவாகின்றன. நடுத்தரப் பிரிவுகள் எண்ணிக்கையில் அதிகரிக்கின்றன; உற்பத்தியின்
ஒப்பீட்டு அந்தஸ்து குறைக்கப்படுகிறது. நகரமயமாதல் வேகமாக நடைபெறுகின்றன; விரைவில்
பெரும்பான்மை மக்கள் மின்னணு சாதனங்களால் ‘இணைக்கப்பட்ட’ (வயர்டு), பல லட்சம் மக்கள்
தொகை உள்ள, நகரங்களில் வசிக்கப் போகிறார்கள். விவசாயம் சுருங்குகிறது. இத்தகைய பின்னணியில்
ஜனநாயக அமைப்புகள் மற்றும் மாற்றங்களின் பங்கும்
முக்கியத்தவமும் அதிகரிக்கின்றன.
‘வருங் காலம்’ இனியும்
புரட்சிகளின் முழக்கங்களால் ஆன காலமாக இருக்கப் போவதில்லை. கம்யூனிஸ்ட் மற்றும் புரட்சிகரக்
கட்சிகள் ‘செயல்பட்டே’ (பர்ஃபார்ம்)
ஆக வேண்டும். வேறு வார்த்தைகளில் சொல்வதானால், அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்,
பிரச்சனைகளில் முடிவெடுக்கும் உச்சத்திற்கு வர வேண்டும்; அது மட்டுமின்றி, எவ்வாறு
காரியமாற்ற வேண்டும் மற்றும் பிரச்சனைகளைத் தீர்க்க வேண்டும் என்பதை (செயல்படுத்திக்)
காட்ட வேண்டும். நாடாளுமன்ற ஜனநாயக சிஸ்டம் அதனை ஜனநாயக, கம்யூனிஸ்ட் மற்றும் இடதுசாரி
சக்திகளால் ஜனநாயக வழிமுறையில் அரசு அதிகாரத்திற்கு வருவதையும், வளர்ச்சிக் களத்தில்
செயல்படுத்துவதையும் சாத்தியமாக்கி உள்ளது. இந்தியாவில் இடதுசாரி கூட்டாக நான்கு மாநிலங்களில்
ஆட்சி செலுத்தியும் சிலவற்றில் நன்றாகச் செயலாற்றியும் வருகின்றது.
லத்தீன் அமெரிக்கா நாம்
பேசி விவாதிக்க வேண்டியதும், ஆழமாகப் பரிசீலிக்க வேண்டிய தேவையையும் ஏற்படுத்தி உள்ளது.
ஏறத்தாழ இருபது ஆண்டுகளாக 12 நாடுகளில் தொடர்ச்சியாகக் கம்யூனிஸ்ட்கள் உட்பட இடதுசாரி
சக்திகள் இடைவெளி இன்றி மக்கள் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்டு அரசு அதிகாரத்திற்கு
வந்து ஆட்சி நடத்தி வருகிறார்கள். இந்த நாடுகளில் இருபது ஆண்டுகளாக இடதுசாரி ஆதரவாக
உள்ள அதிபர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். இராணுவப் படைப் பிரிவுகளும் மக்களின்
தேர்தல் தீர்ப்புகளை எதிர்க்காது, நடுநிலை வகிக்கின்றன.
நேபாளத்திலும்
பிற இடங்களிலும் நடக்கும் நிகழ்வுகளும் பாடம் போதிக்கின்றன. இந்த எல்லா நிகழ்வுகளும்
சமூகத்தின் புரட்சிகர ஜனநாயக மாற்றத்தில் ஜனநாயக அமைப்புகளின் வளர்ந்துவரும் முக்கியத்துவத்தைக்
காட்டுகின்றன. ஜனநாயக மாற்றம் அல்லது புரட்சியின் இயல்பு மற்றும் வழிமுறை 21ம் நூற்றாண்டில்
கடுமையான மாற்றங்களைக் கடந்து வந்துள்ளது.
ரஷ்யப் புரட்சியின்
சாரமான அடிப்படை சமூக மாற்றம் அப்படியே நீடிக்கும்போது, புரட்சியின் வடிவங்கள், வழிமுறைகள்
மற்றும் மாற்றங்களின் தன்மை வேறாக வித்தியாசப்படுகின்றன என்பது தெளிவு. 21ம் நூற்றாண்டில்
புரட்சிகள், குணாம்ச ரீதியில் வித்தியாசமானவை; அவை பரவலான பன்முகச் சக்திகளுடன் மேலும்
ஜனநாயகத் தன்மை உடையனவாகச் செயல்படுபவை!
காலத்திற்கேற்ப
புரட்சி தொடரட்டும்! ‘புதியதோர் உலகம் செய்வோம்!’
--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்