Wednesday 28 September 2022

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 72 -- ராமானந்த் அகர்வால்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 72

       


ராமானந்த் அகர்வால்  --

அரச சமஸ்தானங்களில் சிபிஐ கட்சியைக் கட்டியவர்

                                                               --அனில் ரஜீம்வாலே

அரியானா குர்கான் மாவட்டம், ரேவாரி தாலுக்கா, பல்வாரி கிராமத்தில் ராமானந்த் அகர்வால் 1919 மே 3ம் நாள் பிறந்தார். தந்தை சூரஜ்பான், தாய் கௌசல்யா தேவி. ராமானந்த் பிறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பே தந்தை இறந்ததால், தாய் அவர் பிறந்த பாவல் கிராமத்தில் அவரை வளர்க்க, குழந்தைப் பருவத்தை அவர் அங்கேயே செலவிட்டார்.

பாவலில் தொடக்கக் கல்வி பெற்ற அவர் மேல் கல்விக்காக ரேவாரி அனுப்பப்பட்டார். 1936ல் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்து, டெல்லி இந்து கல்லூரியில் சேர்ந்தார். 1940ல் இளங்கலைப் பட்டத்தை முதல் தரப்பிரிவில் சிறப்பாகத் தேறி ஒட்டுமொத்தமாக இரண்டாம் இடம் பெற்றார். 1936ல் டெல்லி மாணவர்கள் பெடரேஷன் மாநாட்டில் கலந்து கொண்டார்.

அரசியலில்

    அந்நாட்களில் டெல்லி விடுதலை இயக்கத்தின் மையமாகத் திகழ்ந்தது. காங்கிரஸ் 1937 தேர்தல்களில் 11ல் ஒன்பது மாகாணங்களில் வென்றது. ராமானந்த் காங்கிரஸ் செயற்பாட்டாளர்களுடன் தொடர்பு கொண்டு மாணவர் இயக்கத்தில் கலந்து கொள்ளத் தொடங்கினார். சபி நதி வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பணிகளில் தீவிரமாக அவர் ஈடுபட்டபோது அவருக்கு வயது 15 மட்டுமே.

          பிஏ பட்டம் நிறைவு செய்து அவர் லாகூரின் பஞ்சாப் பல்கலைக் கழகம் சென்றார். அங்கே 1943ல் எல்எல்பி சட்டப் படிப்பை முதல் தரத்தில் தேறி தங்கப் பதக்கமும் பெற்றார்.  அதிகபட்ச மதிப்பெண் பெற்று ஒரு சாதனையை ஏற்படுத்தினார். லாகூரில் இருந்தபோது அவர் சமூக அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட்டார். தனது நண்பர்களுடன் இணைந்து லாகூரில் மனிதநேயச் சொசைட்டியை நிறுவினார். அந்த அமைப்பு அரிசனங்கள் மற்றும் பிற பிற்படுத்தப்பட்டவர்களின் கல்வி மற்றும் சமூக அந்தஸ்தை மேம்படுத்தப் பணியாற்றியது.

    1943ல் வங்கத்தில் பெரும் பஞ்சம், பாதிக்கப்பட்டோருக்கான நிவாரணப் பணிகளில் தீவிரமாகப் பணியாற்றினார். இந்தக் காலகட்டத்தில் கம்யூனிஸ்ட்களின் தொடர்பு ஏற்பட்டு அவர்களின் ஆழமான செல்வாக்கிற்கு ஆளானார். 1942 விடுதலை இயக்கத்தில் கைதிகளை விடுவிக்கக் கோரிய இயக்கங்களிலும் அவர் பங்கு பெற்றார்.

          படிப்பை முடித்த பிறகு இல்லம் திரும்பிய அவர் சட்டத் தொழிலை மேற்கொள்ள வேண்டுமெனக் குடும்ப உறுப்பினர்கள் விரும்பினர். ஆனால் குவாலியர் பிர்லா டெக்ஸ்டைல் ஆலையில் வருடத்திற்கு ரூ13ஆயிரம் ஊதியத்தில் மேலாளர் பதவி வழங்கப்பட சிறிது காலம் அங்கே பணியாற்றினார். பின் அதனை உதறி குர்கானில் சட்டத் தொழில் தொடங்கினாலும், சில காலத்தில் அதில் ஆர்வம் இழந்தார். அரசியல் போராட்டங்களில் ஈர்க்கப்பட்டார்.

மன்னர் சமஸ்தானங்களில் போராட்டங்கள்

சமஸ்தானங்களில் நிலப்பிரபுத்துவ ஆட்சி. பிரிட்டிஷ் இந்தியாவில் வெள்ளையர்களின் நேரடி ஆட்சி நடைபெற்றது. மன்னர் சமஸ்தானங்களில் பொறுப்பான அரசுகள் அமைக்கக் கோரி காங்கிரஸ் போராட்டங்களை நடத்த முடிவு செய்தது. ராமானந்த் அந்த இயக்கங்களில் பங்கெடுத்தார். (மக்களின் அமைப்பு எனப்படும்) பிரஜா மண்டல் இயக்கம் சமஸ்தானங்களின் நிலப்பிரபுத்துவ ஆட்சியை எதிர்க்கும் முக்கிய உறுப்பாக இருந்தது; அதிலும் ராமானந்த் பங்கேற்கத் தொடங்கினார். பொறுப்பான அரசுகளுக்காகவும் பன்கர் மற்றும் ரத் சமஸ்தானங்களை இந்தியாவுடன் இணைப்பதற்காகவும் போராட குர்கானில் ஒரு குழு அமைக்க அவர் உதவினார். மேலும் பாட்டியாலா, நபா, பட்டௌடி, ஃபரீத்கோட் மற்றும் பிற சமஸ்தானங்களையும் இந்தியாவுடன் இணைக்கவும் அவர் செயல்படத் தொடங்கினார்.

1945ல் பட்டௌடி சமஸ்தான நவாப்புக்கு எதிராக டாக்டர் சாந்தி சொரூப் தத்தாவுடன் சேர்ந்து அவர் ஒரு பேரணிக்குத் தலைமை வகித்தார். ஒரு கோரிக்கை சாசன மனுவை வழங்க அவர்கள் அரண்மனைக்குச் சென்றனர். ஆர்ப்பாட்டக்காரர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிடுவதாகப் போலீஸ் அச்சுறுத்தியது. ‘எங்கே, சுடுங்கள், பார்க்கலாம்’ என ராமானந்த் அவர்களுக்குச் சவால்விட போலீஸ் அவசரஅவசரமாகப் பின் வாங்கியது. 1946 ஃபரீத்கோட் சத்தியாகிரகத்திலும் அவர் பங்கேற்றார்.

1946ல் ரேவாரியைச் சேர்ந்த காந்தி அகர்வால் என்பவரை மணம் செய்து கொண்டார்.

ராமானந்தின் மூத்த சகோதரர் வணிகத்திற்காக 1941ல் ஆல்வார் மாற்றிச் சென்றார். ஆல்வார் முக்கியமான வணிக மையம் மட்டுமல்ல, அரசியல் மையமும்கூட. சகோதரருக்கு உதவ ஆல்வார் சென்ற ராமானந்த் அவரது எண்ணை ஆலையில் கூட்டாளியாகச் சேர்ந்தார்.

1946ல் நிறுவப்பட்ட இந்திய இடைக்கால அரசில் (ப்ரொவிஷனல் கவர்ன்மெண்ட்) ஜவகர்லால் நேரு பிரதமரானார். இந்தியாவின் விடுதலை நெருங்கிக் கொண்டிருந்தது. இருப்பினும், (இராஜஸ்தானின்)ஆல்வார் அரசசமஸ்தானத்தை ஆட்சி செய்தவர் இந்தியச் சுதந்திரத்தை ஒப்புக் கொள்ளத் தயாரில்லை, தனது நிலப்பிரபுத்துவ ஆட்சியைத் தொடர விரும்பினார். ஹீராலால் சாஸ்திரி தலைமையிலான பிரஜா மண்டலுக்கு அவர் சில சலுகைகளை வழங்க முன்வந்தும், சாஸ்திரி அவர் வலையில் விழ மறுத்து விட்டார். ராமானந்த், பொறுப்பான அரசு அமைக்கக் கோரிய பிரஜா மண்டல் பணிகளில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். அவர் நெசவாளர்கள், ஒடுக்கப்பட்டோர், அரிசனங்கள், தோல் பதனிடும் தொழிலாளர்கள் முதலானவர்களின் குடியிருப்பு கிராமங்களுக்கு (மொஹல்லா) சென்று தொடர்பு கொண்டார். அவர்களுக்காக அவர் இரவுப் பள்ளிகளை நிறுவினார், கிசான் பஞ்சாயத்துகளை அமைத்தார். நாராயன் தத் உடன் இணைந்து சர்வோதயா அச்சகத்தை நிறுவினார். நெசவாளிகளுக்குக் குறைந்த விலையில் நூல் (பண்டல்கள்) கிடைக்க கூட்டுறவு பண்டகசாலை அமைத்தார்.

இந்தியாவின் விடுதலையும் ஆல்வாரும்

       1947 ஆகஸ்ட் 15ல் இந்தியா விடுதலை அடைந்தது. ஆல்வார் சமஸ்தான பிரஜா மண்டல் அமைப்பு குடிமக்களை வீடுகளில் விளக்கேற்றி தீபாவளிபோல விடுதலையைக் கொண்டாடுமாறு வற்புறுத்தியது. அந்தச் செயல்பாடு, இந்திய விடுதலையை அங்கீகரிக்காது, அதனைக் கொண்டாடவும் மறுத்த சமஸ்தான ஆட்சியாளர்களின் போக்கிற்கு எதிரான கண்டனமும்கூட. ராமானந்தும் அவரது கூட்டாளிகளும் வீடுவீடாக, கடை கடையாகச் சென்று மண்ணால் செய்த (அகல்) விளக்குகளை விநியோகித்தனர். ஆல்வார் மகாராஜா இன்னும் இரண்டாடுகளில் பொறுப்பான அரசு அமைக்கப்படும் என்று பலகீனமாக அறிவித்தாலும் அதை அவர்கள் நம்பவில்லை.

          1947 அக்டோபரில், இளைஞர்களைக் கொண்ட பிரஜா மண்டல் சேவா தள் என்ற அமைப்பை ராமானந்த் நிறுவினார். இளைஞர்களுக்கு ஆயுதப் பயிற்சி உட்பட அவர் பயிற்சி முகாம்களை அமைத்தார், ஆனால் அனுமதிக்கப்படவில்லை.

காந்திஜி படுகொலை

         1948 ஜனவரி 30ல் மகாத்மா காந்திஜி படுகொலை செய்யப்பட்டார். காந்திஜி படுகொலை வரை நடந்த நிகழ்வுகளில் இந்து மகாசபா மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் ஈடுபட்டு வந்தது நன்கு அறிந்த செய்தி, ஆனால் ஆல்வார் ஆட்சியாளர்களும் அந்தச் சதியில் ஈடுபட்டிருக்கலாம் என்ற சந்தேகமும் நிலவியது. மக்கள் கடும் சீற்றம் கொண்டார்கள், ஆட்சியாளர்களுக்கு எதிராகப் பேரணிகள் நடைபெற்றன. ராமானந்த் செயலூக்கத்துடன் அவற்றில் பங்கேற்றார். நிலமை கடுமையாக, ஆல்வார் ஆட்சியாளர் டெல்லிக்கு அழைக்கப் பட்டார். இந்திய அரசு அவரிடம் சரணடையவும், சமஸ்தானத்தை இந்திய ஒன்றியத்துடன் இணைக்கும் ஆவணங்களிலும் கையெழுத்திடும்படி கூறியது. அவர் மறுக்கவே, அவர் கைது செய்யப்பட்டு சிறை வைக்கப்பட்டார். ஆல்வாருக்கு மத்திய படைகள் அனுப்பப்பட்டன. கேபி லால் இந்திய ஒன்றிய அரசின் சார்பாக ஆல்வார் பகுதியின் நிர்வாகியாக நியமிக்கப்பட்டார்.

மட்சய சங்கம்

          1948 மார்ச் 18ல் ஆல்வார், பரத்பூர், தோல்பூர் மற்றும் கரௌலி என்ற நான்கு நிலப்பிரபுத்துவ சமஸ்தானங்களை ஒன்றிணைத்து, ஆல்வாரைத் தலைநகராகக் கொண்டு ‘மட்சய சங்கம்’ என்பது அமைக்கப்பட்டது. பிரஜா மண்டலைச் சேர்ந்த பாபு ஷோபாராம் பிரதமராக நியமிக்கப்பட்டார். அவர் ‘ஸ்வதந்தர பாரத்’ என்ற இதழின் ஆசிரியராக இருந்தவர்.

        இந்த இராஜியங்களின் பிரஜா மண்டல் மற்றும் காங்கிரசின் மாநாடு ஆல்வாரில் 1948 நவம்பரில் நடைபெற்றது. மட்சய காங்கிரஸ் நிறுவப்பட்டு ராமானந்த் அகர்வால் அதன் பொதுச் செயலாளர்களில் ஒருவரானார். விடுதலைக்குப் பிறகு இந்தக் காங்கிரசின் முதல் அமர்வு ஜெய்பூரில் நடைபெற்றது. மாநாட்டு ஏற்பாடுகளின் பொறுப்பு, காங்கிரஸ் சேவா தள் அமைப்பிடம் அளிக்கப்பட, அதற்காக அமைக்கப்பட்ட மூன்று உறுப்பினர்கள் குழுவில் ராமானந்தும் ஒருவராக நியமிக்கப்பட்டார்.

          ராமானந்த் எந்த அதிகாரபூர்வ பதவியிலும் சேரவில்லை. மக்கள் கோரிக்கைகளுக்காக அவர் தனது சொந்த அரசுக்கு எதிராகவே பெருந்திரள் போராட்டங்களை நடத்தினார். அப்போராட்டங்கள் வெற்றிகரமாக அமைந்தன.

      தேசப் பிரிவினைக்குப் பிறகு பெரும் எண்ணிக்கையிலான அகதிகள் பஞ்சாப், சிந்து, பகவல்பூர், (லாகூர், ஆப்கானிஸ்தானுடன் எல்லைகளைக் கொண்ட) எல்லைப்புற மாகாணம் (ஃப்ராண்டியர் ப்ராவின்ஸ்) முதலியவற்றிலிருந்து ஆல்வார் மற்றும் பரத்பூருக்கு வந்தனர். அவர்களுக்கான நிவாரண, மறுவாழ்விற்காக லாலா காஷிராம் குப்தாவுடன் சேர்ந்து ராமானந்த் பணியாற்றினார்.

     1949 மே மாதம் மட்சய சங்கம் இராஜஸ்தானுடன் இணைந்தது. நிலங்களிலிருந்து வெளியேற்றப்பட்ட விவசாயிகளுக்கு அந்த நிலங்களை வழங்கவும் அதற்கான பட்டா உரிமை பெறுவதற்கான போராட்டங்களை ராமானந்த் தொடங்கினார். இதன் விளைவாய் விவசாயிகள் அவருடன் உறுதியாக நின்றனர், பின்னர் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர்.

   1950ல் கட்டண உயர்வை எதிர்த்து மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் ராமானந்த் அகர்வால் பங்கு பெற்றார். அதே வருடம் காங்கிரஸ் நாசிக் அமர்வில் கலந்து கொண்டார். அதில் நேருவின் விருப்பத்திற்கு மாறாகப் புருஷோதம் தாஸ் தாண்டன் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ராமானந்த் நேருவை ஆதரித்தார். *உட்கட்சி வேறுபாடுகள் அதிகரித்தன.

*(தொடக்கத்தில் தாண்டனுடன் நேரு இணக்கமாகவே இருந்தார். உபி-யின் ராஜரிஷி என அறியப்படும் தாண்டன் தேசப் பிரிவினையை

எதிர்த்தார். பிரிவினைக்குப் பின் பாக்கிஸ்தானில் இந்துகள் மீது தாக்குதல் அதிகரித்த சூழ்நிலையில் இந்தியச் சிறுபான்மை முஸ்லீம்களை எப்படி நடத்துவது என்பதில் கருத்து வேறுபாடு ஏற்பட்டது. தாண்டன், கேஎம் முன்ஷியுடன் இணைந்து மதமாற்றத்தை எதிர்த்தவர், இந்தி மொழிக்கு அலுவல் மொழி அந்தஸ்தைப் பெற வாதாடியவர், மென்மையான இந்துமதவாதி. ஆனால் நேரு ‘பாக்கிஸ்தானில் சிறுபான்மையினர் எப்படி நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு இணங்க, இந்தியாவில் சிறுபான்மை முஸ்லீம்களை நடத்த முடியாது; அரசியல் சட்டம் அனைவருக்கும் பாதுகாப்பு அளிக்கிறது’ என்றார். எனவே கருத்து வேறுபாடுகள். ஆச்சார்ய கிருபளாளியை நேரு காங்கிரஸ் தலைவர் பதவிக்கு ஆதரித்தார், ஆனால் தாண்டன் காங்கிரஸ் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். – இணையத்திலிருந்து மொழிபெயர்ப்பாளர் இணைத்த கூடுதல் தகவல்)

கம்யூனிஸ்ட் கட்சியில்

          1951ல் ஆல்வாரில் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டது. முதலாவது பொதுத் தேர்தல்கள் நடைபெறுவதற்குச் சற்று முன்பு 1952ல் காங்கிரசின் கிருபா தயாள் மாதூர் மற்றும் பூல் சந்த் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தனர். நிலப்பிரபுத்துவச் சக்திகளின் ஆழமான வேர் பிடித்த நிகழ்வுகள் நடக்கும்போது, தேர்தலுக்கு முன் காங்கிரசைவிட்டு விலகுவது சரியானது இல்லை என்பது ராமானந்தின் கருத்து.

          தேர்தல் முடிந்த பிறகு 1952 மார்ச் மாதம் ராமானந்த் அகர்வால் காங்கிரசில் இருந்து ராஜினாமா செய்து சிபிஐ கட்சியில் இணைந்தார். காங்கிரஸ் இயக்கத்திற்கு அவர் ஆற்றிய சேவைகள் உச்சத்தில் வைத்துப் பாராட்டப்பட்டன. ஊழலை எதிர்த்தும், மக்களுக்கு மோட்டா ரக தானியங்கள் வழங்கப்படுவது குறித்தும், பாக்கிஸ்தானிலிருந்து வந்த அகதிகள் முதலான பிரச்சனைகளின் பேரில் மாபெரும் மக்கள் இயக்கப் போராட்டங்களை அவர் நடத்தினார். அவர் ஊழலுக்கு எதிரான முன்னணி ஒன்றையும் அமைத்தார்.

            அகதிகளாக வந்த விவசாயிகளுக்கு நிலங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என்று கோரி ராமானந்த் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினார். ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக லத்தியால் அடித்துத் தாக்கியதில் ராமானந்த் மிகக் கடுமையாகக் காயமடைந்தார். ஹருமால் தோலனி, நாராயண் தத், பக்ஷி வாஸிர்சந்த் முதலானவர்களுடன் அவரும் கைது செய்யப்பட்டார். சிறையில் அவர்கள் மோசமாக நடத்தப்பட்டனர்.

            1954 செப்டம்பரில் இராஜஸ்தான் கம்யூனிஸ்ட் கட்சியின் இரண்டாவது மாநாடு ஆல்வாரில் நடைபெற்றது. வரவேற்புக் குழுவின் பொறுப்பாளராக ராமானந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார். மாநிலக் கட்சி தலைமைக் குழுவில் அவர் இணைக்கப்பட்டார். அதே ஆண்டு ஆல்வார் சிபிஐ செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

            1953ல் ஆல்வார் நகர கார்ப்பரேஷன் தேர்தல் நடத்தப்பட்டது. ராமானந்த் அகர்வால் ’ஆஸாத் மோர்ச்சா’ (விடுதலை முன்னணி) அமைப்பைத் தொடங்கினார், அந்த முன்னணி 24ல் 15 இடங்களில் வென்றது. காங்கிரஸ் மிக மோசமான தோல்வியைத் தழுவியது, அக்கட்சியின் மேனாள் கார்ப்பரேஷன் சேர்மன் உட்பட பலர் தோல்வி அடைந்தனர்.

      குடிநீர் வழங்கும் திட்டச் செயல்பாட்டிற்காக விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு முறையான நட்டஈட்டுத் தொகை வழங்க வற்புறுத்தி ராமானந்த் தர்ணா மற்றும் சத்தியாகிரகப் போராட்டம் நடத்தினார். முதலமைச்சர் சுகாடியா அளித்த உறுதி மொழிக்குப் பிறகே அவர் 13 நாட்கள் நீடித்த தனது உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக் கொண்டார்.

தேர்தல்களில் போட்டி

            முதல் முறையாக ஆல்வார் சட்டமன்றத் தொகுதிக்கான 1957தேர்தலில் ராமானந்த் அகர்வால் போட்டியிட்டார். அந்த மாவட்டத்தில் சிபிஐ 4 சட்டமன்ற இடங்களில் போட்டியிட்டு 16.6 சதவீத வாக்குகள் பெற்றது. ராமானந்த் 40.9 சதவீத வாக்குகளைப் பெற்று, வெறும் 1500 வாக்குகளில் காங்கிரசிடம் தோல்வி அடைந்தார். ராம்ஹார்க் தொகுதியில் ஹருமால் தோலனி வெறும் 1440 வாக்குகளில் தோல்வி அடைந்தார். ஆல்வார் மாவட்டத்தில் சிபிஐ முக்கிய எதிர்க்கட்சியானது.

           குடிமக்கள் முன்னணிக்குத் தலைமை வகித்து ராமானந்த் கார்ப்பரேஷன் தேர்தல்களில் 19 இடங்களைப் பெற்று வென்றார்.

     1962 தேர்தல்களில் அவர் 4000 வாக்குகள் வித்தியாசத்தில் வென்றார். விடுதலைக்குப் பிறகு நடந்த மிகப் பிரம்மாண்டமான பேரணியாக ஒரு பெரும் பேரணி நடத்தப்பட்டது. சட்டமன்றத்திற்கு 5 சிபிஐ உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சிபிஐ சட்டமன்றக் குழுத் தலைவராக ராமானந்த் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

     லக்ஷ்மன்ஹார்க் நாடாளுமன்றத் தொகுதியில் சிபிஐ ஆதரவுடன் ஒரு சுயேச்சை வேட்பாளர் தேர்ந்தெடுக்கப்பட்டார். பிரபல தலைவராக உருவெடுத்த ராமானந்த் சட்டமன்றத்தின் சொல்லாற்றல் மிக்கப் பேச்சாளராகத் திகழ்ந்தார். மற்ற பிற சாதனைகளுடன், ஆதரவற்ற மூத்த குடிமக்களுக்கும், உடல் ஊனமுற்ற மாற்றுத்திறனாளிகளுக்கும் ஓய்வூதியம் வழங்குவதற்கான அவரது முன்மொழிந்த திட்டம் சட்டமன்றத்தால் நிறைவேற்றப்பட்டதைக் குறிப்பிட வேண்டும். பல்வேறு பிற பிரச்சனைகளை எழுப்பி சிலவற்றிற்கு அதிகாரபூர்வமாகத் தீர்வும் கண்டார்.

            1972ல் ராமானந்த் மீண்டும் சட்டமன்றத் தேர்தல்களில் வென்றார்.

பெருந்திரள் போராட்டங்கள்

            ராமானந்த் தலைமையேற்று நடத்திய முக்கியப் போராட்டங்களில் ‘ரூத் போராட்டம்’ என்பது ஒன்று. சமஸ்தான இராஜியங்களின் காலத்தில் ‘விரிந்த நிலப்பரப்பு’கள் (‘ரூத்’) அரச குடும்பத்தினர் வேட்டையாடுவதற்காக ஒதுக்கி வைப்பது பொதுவாக வழக்கம். விவசாய நிலங்களையும்கூட அப்படி ஒதுக்கினார்கள். அதைத்தான் ‘ரூத்’ என அழைப்பர். ராமானந்த் மற்றும் சிபிஐ கட்சி அப்படி நிலங்களை ஒதுக்குவதை ஒழிக்கக் கோரியதுடன், அந்நிலங்களை நிலமற்ற விவசாயிகளுக்குப் பிரித்தளிக்க வேண்டும் என வற்புறுத்தினர். போராட்டக்காரர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். அப்போராட்டம் வெற்றிகரமாக ’ரூத்’ ஒழிப்பில் நிறைவடைந்தது.

       வேறுபல நிலப் போராட்டங்களிலும் ராமானந்த் தீவிரமாகப் பங்கேற்றார்.


உள்ளூர் கல்லூரிகளில் முதுநிலைப் பட்ட வகுப்புகளுக்காக அவர் போராடினார். நிலங்களைப் பிரித்தளிக்கும் சட்டமன்றக் குழுவில் அவர் இடம் பெற்றார். 1964ல் மாவட்டத்தின் பிரச்சனைகளை விவாதிக்க ஓர் அரசியல் மாநாடு நடத்தப்பட்டது. அம்மாநாட்டில்
எஸ்ஏ டாங்கே மற்றும் டாக்டர் ராம் மனோகர் லோகியாவும் (படம்) உரையாற்றினர். 25 உறுப்பினர் போராட்டக் குழு அமைக்கப்பட்டது.

       கிஷண்ஹர்க் பகுதி விவசாயிகளை இடம் பெயரச் செய்வதைக் கண்டித்துப் பெரும் எதிர்ப்பியக்கங்களை ராமானந்த் தலைமையேற்று நடத்தினார். 1961ல் ‘புருஷார்த்தி கிசான் சபா’ (கடின உழைப்பாளி விவசாய சங்கம்) என்ற பேனரின் கீழ் அவர் சட்டமன்றம் முன்பு பெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தினார். (ஜெயபிரகாஷ் நாராயண்) ஜெபி இயக்கத்தை எதிர்த்து ராமானந்த் பாசிச எதிர்ப்பு மாநாடுகளை நடத்தினார். மேலும் அவர் எமர்ஜென்சி காலத்தில் சஞ்சய் காந்தியின் கொள்கைகளுக்கு எதிராகவும் பெரும் இயக்கங்களை நடத்தினார். (சுதந்திரப் போராட்ட வீரரான

ஜெயபிரகாஷ் நாராணன் ஒரு சோஷலிஸ்ட். ஆனால் காங்கிரஸ் எதிர்ப்பின் காரணமாக, அவர் தொடங்கிய இயக்கத்தில் அவரது சகாக்களின் கருத்துகளை மீறி பாசிச ஜனசங்கத்தை, அவர்களின் பேச்சை நம்பி, தனது இயக்கத்தில் கூட்டு சேர அனுமதித்தார். ஜனசங்கத்தின் வகுப்புவாதக் கொள்கைகளையும் கைவிடச் செய்ய முடியும் என்று அவர் அளவுக்கதிகமாக நம்பிவிட்டார். அந்த அவரது இமாலயத் தவறு சுட்டிக்காட்டப்பட்டபோது அவர் ஓர் உரையில், ‘ஜனசங்கத்தினர் பாசிசவாதிகள் என்றால் ஜெபியும் பாசிஸ்ட்டாக இருக்கட்டும்’ என்று கூறி விட்டார். உண்மை யாதெனில், ஜனசங்கமும் ஆர்எஸ்எஸ் அமைப்பும் ஜெபியைப் பயன்படுத்திக் கொண்டன. -- இணைத்திலிருந்து மொழிபெயர்ப்பாளர் இணைத்த கூடுதல் தகவல்)

கம்யூனிஸ்ட் கட்சியில் பொறுப்புகள்

            1964ல் கட்சியில் ஏற்பட்ட பிளவுக்குப் பின் ராமானந்த் அகர்வால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் நீடிப்பதைத் தேர்ந்தெடுத்தார். 1964ல் சிபிஐ தேசிய குழு உறுப்பினராகவும், 1968ல் கட்சியின் மாநிலச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971ல் மீண்டும் மாநிலச் செயலாளர் ஆனார். பல்வேறு மாநாடுகளில் கலந்து கொண்ட அவர், தனது உடல் நலப் பாதிப்பையும் பொருட்படுத்தாமல் 1978 படிண்டா சிபிஐ கட்சிக் காங்கிரசில் கலந்து கொண்டார்.

            ராமானந்த், கிதாப் கர் (நூல் நிலையம்) அமைக்க ஏற்பாடு செய்ததுடன், பின்னர் இராஜஸ்தான் பதிப்பகம் தொடங்கி, அதன் நிர்வாக இயக்குநரானார். மேலும் அவர் ஜெய்பூரில் சுவாமி குமாரானந்த் பவன் கட்டவும் உதவினார்.

  1970களின் பிற்பகுதியில் கடுமையான இதயப் பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டார். 1977ல் உடல்நிலை மேலும் மோசமாகி, பிறகு 1979ல் மீண்டும் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டார். அவர் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டாலும், 1979 மே 16ல் அவர் மறைவு நேரிட்டது.

            ராமானந்த் அகர்வால் புகழ் ஓங்குக!

--நன்றி : நியூஏஜ் (செப்.4 – 10)

--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்  

         

                         

Sunday 25 September 2022

நியூஏஜ் தலையங்கம் -- ஹைதராபாத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றினர், கம்யூனிஸ்ட்கள்

 நியூஏஜ் தலையங்கம் (செப்.25 –அக்.21)

                                     ஹைதராபாத்தில் மூவர்ணக் கொடியை ஏற்றினர், கம்யூனிஸ்ட்கள்

     தெலுங்கானா பகுதியின் ஹைதராபாத் சமஸ்தான அரசுக்கு எதிராக விவசாயிகளின் கிளர்ச்சியைத் தலைமையேற்று நடத்தியதே தெலுங்கானா ஆயுதப் போராட்டம். அடிப்படையில் அப்போராட்டம் விவசாயப் பெருங்குடி மக்களை நியாயமற்ற சுரண்டலில் இருந்து விடுதலை 

 மற்றும் இந்தியா விடுதலை அடையும்போது ஹைதராபாத்தை இந்திய ஒன்றியத்துடன் இணைப்பதை நோக்கமாகக் கொண்டது. இந்தியா சுதந்திரமடைந்த உடனே 1947 செப்டம்பரில் தோழர் டாக்டர் ராஜ்பகதூர் கவுர் எழுதிய புத்தகத்தை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வெளியிட்டது; அந்நூலிற்கு ராஜ்பகதூர், ‘ஹைதராபாத்தின் மீது மூவர்ணக் கொடி நிச்சயம் பறக்கும்’ என்று சரியாகவே தலைப்பிட்டார். 1944 –46களில் தொடங்கிய விவசாய எழுச்சி 1946 –51ல் அரசுக்கு எதிரான ஒழுங்கமைக்கப்பட்ட பெருங்கிளர்ச்சியாகப் பரிணமித்தது; அந்த மக்கள் போராட்டத்தை வழிநடத்திய புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவரே டாக்டர் ராஜ்பகதூர் கவுர்.

   ஹைதராபாத் நிலப்பிரபுத்துவ ராஜாங்கத்தில் பெரும்பான்மையான நிலங்கள் தோராஸ் எனப்படும் (doras) நிலப்பிரபுக்களின் கைகளில் குவிந்து கிடக்க, சுரண்டல் மிகக் கடுமையாகக் கோலோச்சியது. அவ்வேளாண் அடிமைமுறையில் கிராமங்களின் விவசாயிகள் மீது (ஜமீன்தார்களைவிட) தோராஸ் முழுமையான அதிகாரம் செலுத்தினர். 1930களில் நிலமை மோசமாகி, வணிகப் பயிர்களை நோக்கி மாற்றம் நிகழ்ந்தது. நாற்பதுகளில் விவசாயிகள் கம்யூனிசத்தின்பால் திரும்பி, ஆந்திர மகாசபா மூலம் அமைப்பாக ஒன்று திரண்டு, உரிமைகள் இயக்கத்தைத் தொடங்கினர். அப்பகுதியைப் பாதித்த உணவுப் பஞ்சம் தூண்டுகோலாக, இரண்டாவது உலகப் போரின் இறுதியில் அந்த இயக்கத்தை நிர்வாகமும் தோராஸ்களும் நசுக்க முயன்றதைத் தொடர்ந்து, அந்த இயக்கம் கிளர்ச்சியாகக் கைமீறியது.

          வாராங்கல் மாவட்டக் கடவாடி கிராமத்தில் தோரா ஏஜெண்ட்டுகளால் உள்ளூர் விவசாயத் தலைவர் கொல்லப்பட்டபோது, 1946 ஜூலை 4ல் கிளர்ச்சி தொடங்கியது. முதலில் நிஜாம் மிர் காசிம் அலி கான் என்பானாலும் பின்னர் காசிம் ரஸ்வியாலும் தொடர்ந்த அடக்குமுறைக்குப் பதிலடியாக நால்கொண்டா மற்றும் வாராங்கல் மாவட்டங்களில் கருக்கொண்டு தொடங்கிய கிளர்ச்சி, தெலுங்கானா முழுவதும் புரட்சியாகப் பரவி வளர்ந்தது. ஹைதராபாத் அரசுப் படைகளும் போலீசும், அடியாட்கள் கும்பல் ரஸாக்கர்களுடன் இணைந்தாலும் கிளர்ச்சியாளர்களை அடக்க இயலாதது மட்டுமல்ல, அவர்கள் பின்வாங்கி ஓட நேர்ந்தது; கிளர்ச்சியாளர்களின் படைகள் வெற்றிகரமாகக் கொரில்லா தாக்குதல்களை நடத்தியது. கிளர்ச்சியாளர்கள் கிராம ராஜ்யங்களையும், கிராமக் கம்யூன்களையும் கொண்டதாக இணையான அரசு நிர்வாக முறையை ஸ்தாபித்தனர். அம்முறை சமூகப் புரட்சிக்கு வித்திட்டது; அங்கே சாதி, பாலின வேறுபாடுகள் குறைந்தன.

பெண்களின் பங்கேற்பு, அவர்களின் ஆயுதம் தாங்கிய குழுக்கள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் அதிகரித்தது. நிலங்கள் பகிர்ந்தளிக்கப்படுவது அதிகரிக்க, விவசாயிகளின் நிலைமையும் மேம்பட்டது. 1948ன் உச்சத்தில் கிளர்ச்சி ஏறத்தாழ தெலுங்கானா பகுதி அனைத்தையும் கைப்பற்ற, குறைந்தது 4,000 கிராமங்கள் அவர்களின் நேரடி நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் வந்தன.

     தெலுங்கு மொழி பேசும் கிருஷ்ணா – கோதாவரி டெல்டா பிராந்தியத்தின் அருகமை பகுதிகளில், ஆந்திர மகாசபா (மெட்ராஸ்) மற்றும் அனைத்திந்திய கிசான் சபா போன்ற வேளாண்மை அமைப்புகள் மூலம் பெருமளவு ஸ்தாபன ரீதியாக 1934 முதலாகக் கம்யூனிஸ்ட்கள் தீவிரமாகச் செயல்பட்டு வந்தனர். தெலுங்கானா கம்யூனிஸ்ட் இயக்கத்தின் பயிற்சிபெற்ற முதலாவது கிளர்ச்சியாளர்களின் தாக்குதல் செயல்பாடு வாராங்கல் மாவட்ட மாதிரா –கம்மம் பகுதியில் நிகழ்ந்தது; அதனை வைரா மற்றும்

பலேர் (Wyra and Paleru) நீர்ப்பாசனத் திட்டங்களில் குடியமர்ந்த விவசாயிகள் மூலம் நிகழ்த்தினர். அவர்களுக்குக் கடலோர ஆந்திராவில் உறவினர்கள் இருந்தனர். முங்கலாவில் பணியாற்றிய புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவரான சந்திரா இராஜேஸ்வர ராவ் (சி ராஜேஸ்வர ராவ்) முயற்சிகளால் முதலாவது கம்யூனிஸ்ட் அமைப்புகள் வாராங்கல் மற்றும் நால்கொண்டா மாவட்டங்களில் நிறுவப்பட்டன. தெலுங்கானாவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசக் கமிட்டி  பர்வாஎல்லி வெங்கடரமணநாயக்  தலைமையின் கீழ் 1941ல் அமைக்கப்பட்டது.

          கம்யூனிஸ்ட் இயக்க வளர்ச்சிக்கு மாணவர்கள் இயக்கம் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பு செய்தது. (வங்கப் பிரிவினையைக் கண்டித்துத் தொடங்கப்பட்ட) வந்தே மாதரம் எதிர்ப்பு இயக்கங்களில் அனுபவங்கள் பெற்று, எண்ணற்ற முற்போக்கு மாணவர்களின் இயக்கங்கள் அமைக்கப்பட்டன; அவை இறுதியில் 1942 ஜனவரியில் அனைத்து ஹைதராபாத் மாணவர்கள் சங்கமாக ஒன்றிணைந்தன. தேவுலபள்ளி வெங்கடேஸ்வர ராவ் என்ற வந்தே மாதரம் எதிர்ப்பியக்கங்களின் மேனாள் மாணவப் போராட்டக் கிளர்சியாளர், வாராங்கல் மற்றும் நால்கொண்டா மாவட்டங்களில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியமைப்பதில் காரணகர்த்தாவாக இருந்தார். ஹைதராபாத் நகரின் தேசிய, முற்போக்கு மற்றும் மதச்சார்பு கொள்கை உடைய கற்றறிவாளர்கள்

அரசியல் தீவிரச் செயல்பாடு நோக்கியும் மாறினார்கள்; முற்போக்கு ‘நயா ஆதாப்’ பதிப்பகம் வெளியிட்ட கம்யூனிஸ்ட் நூல்கள் மற்றும் வகுப்புவாத குழுப்போக்கு அமைப்புகளின் வளர்ச்சிக்கு எதிர்வினையாகத் தொடக்கத்தில் அமைக்கப்பட்ட காம்ரேட்ஸ் அசோசியேஷன் செல்வாக்கிற்கும் அவர்கள் ஆட்பட்டார்கள். இந்த அசோஸியேஷன் ராஜ்பகதூர் கவுர் மற்றும் (உருது கவிதைகளுக்காகச் சாகித்ய அகாடமி விருது பெற்ற) மக்தூம் மொஹியுதீன் தலைமையின் கீழ் கம்யூனிஸ்ட் இயக்கமானது.

 1947 பிப்ரவரியில் பிரிட்டிஷ் நிர்வாகம் இந்தியத் தலைமைக்கு அதிகாரத்தை மாற்றித் தருவதாக அறிவித்தபோது, சமஸ்தான அரசுகளுக்கு, அவை இந்தியா அல்லது பாக்கிஸ்தான் நாட்டுடன் இணையலாம் அல்லது சுதந்திர நாடாகத் தொடரலாம் என்று அவற்றிற்கு விருப்பத் தேர்வை வழங்கியது. ஹைதராபாத் நிஜாம், முஸ்லீம் பிரபுகள் மற்றும் மஜ்லிஸ்-இ-இதிகாதுல் முஸல்மீன் அமைப்பு ஹைதராபாத் சுதந்திர அரசாக வேண்டும் என விரும்பினர்; ஆனால் பெரும்பான்மையான குடிமக்கள் அரசியல் உரிமை மற்றும் சுயஅரசாட்சியில் பங்குபெறலாம் என்ற நம்பிக்கையில் இந்தியாவுடன் இணைய விரும்பினார்கள். கம்யூனிஸ்ட் கட்சி தனது கோரிக்கைப் பட்டியலில் இந்தியாவுடன் ஹைதராபாத் சமஸ்தான இணைப்பைச் சேர்த்ததுடன், இந்திய தேசியக் காங்கிரசின் முற்போக்கு இடதுசாரிப் பிரிவுடன் கூட்டு சேர்ந்து நிஜாமை அக்கோரிக்கையை ஒப்புக்கொள்ள வற்புறுத்தியது.

    1947 மார்ச் மாதத்தில் காங்கிரசில் பிளவு மிகக் கூர்மையடைய, மாநிலக் காங்கிரசின் செயற்குழு மீட்டமைக்கப்பட்டு சுவாமி இராமனந்த தீர்த்தர் 751க்கு 498 என்ற பெரும் வாக்கு வித்தியாசத்தில் பிஜி ராவ்வை வென்று மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்; இதனால் அவரால் காங்கிரசுக்குள் மிதவாதிகளைத் தவிர்க்க முடிந்தது. அவர் கம்யூனிஸ்ட்களை அவர்களுடைய கிளர்ச்சிக்காகப் புகழ்ந்தார், மாநில காங்கிரசுக்குள் மேலும் புரட்சிகரமான கொள்கைகளைக் கொண்டுவர ஆலோசனை தந்தார்.

          ஹைதராபாத்தை இந்தியாவுடன் இணைக்கக் கோரி காங்கிரஸ் சத்தியாகிரகத்தில் இறங்க, சுவாமி இராமனந்த தீர்த்தர் தலைமையிலான மாநிலக் காங்கிரஸ் சட்டமறுப்புப் பிரச்சாரம் தொடங்கியது. காங்கிரஸ் போராட்ட முறையின் திறன் செயல்திறன் மீது தயக்கம் இருந்தாலும் அவர்களது போராட்டத்தில் கம்யூனிஸ்ட்கள் கலந்து கொண்டனர். விரைவில் தெலுங்கானாவில் பெரும்பாலான போராட்டங்கள், குறிப்பாகக் கிராமப் பகுதிகளில், கம்யூனிஸ்ட்களால் நடத்தப்பட்டன; இதனால் இவர்களுக்கு இடையில் போலீசாரால் வேறுபடுத்தி அறிய முடியாததால் இரண்டு கட்சிகளும் கூட்டணி அமைத்து விட்டன என்று கருதினர். இந்தச் சூழ்நிலையில் கம்யூனிஸ்ட்கள் மத்தியில் பொதுவான புரிதல், “வலதுசாரி காங்கிரஸ்காரர்களின்” பின்னணியில் தோராகளின் ஆதரவு இருந்ததாக எண்ணினர்; இதனால் அவர்களோடு எந்த வடிவத்திலும் கூட்டு சேர்வதை எதிர்த்தனர். அதே நேரம் “இடதுசாரி காங்கிரஸ்காரர்கள்” கம்யூனிஸ்ட் கட்சியுடன் இணைய விரும்பினார்கள், ஆனால் அந்த விருப்பத்தை முன்னே எடுத்துச் செல்ல இயலாதவர்களாக இருந்தனர்.

          முன்பு தோரா அமைப்பாகக் காணப்பட்ட ஆந்திரா கான்பரன்ஸ் என்ற அமைப்பு, விவசாயிகள் மத்தியில் பிரபலமாகி, தெலுங்கானாவில் அதனை ஆந்திரா மகாசபா (AMS) என்று குறிக்கப்படலானது. அதே காலகட்டத்தில் வெங்கடேஸ்வர ராவ், உற்சாகமிழந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் மற்றும் ஆதரவாளர்களை நேரடியாகக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைத்தார். தொடக்கத்தில் பயிரிடுவோர் அசோஸியேஷன் போன்ற நிலக்கிழார்களின் அமைப்புகள் மிதவாத தலைமையின் எதிர்ப்பைச் சந்தித்தன; மேலும் அரசிடமிருந்து வந்த கடுமையான அடக்குமுறைகள் மூலமாக ஆந்திர மகாசபா மெல்ல நிஜாமிய நிர்வாகத்தை எதிர்க்கும் தீவிரப் பெருந்திரள் மக்கள் இயக்கமாக மாறியது; அது, விவசாயிகள், தொழிலாளி வர்க்கம், நடுத்தர வர்க்கம் மற்றும் இளைஞர்களை உறுப்பினர்களாகக் கொண்ட தீரம்மிக்க கூட்டணியாக மாறியது. இந்த நிகழ்முறை 1944ல் ஆந்திர மகாசபாவின் (போன்கிர் என்ற பழங்காலக் கோட்டை இருக்கும்) போன்கிர் அமர்வில் நிறைவடைந்தபோது, இரண்டு இளம் கம்யூனிஸ்ட்கள் ராவி நாராயண் ரெட்டி மற்றும் பத்தம் எல்லா ரெட்டி முறையே அதன் தலைவராகவும் செயலாளராகவும் தேர்வு பெற்றனர்.

    பின்னர் நிகழ்ந்தவைத் தியாகிகளால் எழுதப்பட்ட தெலுங்கானா ஆயுதப் போராட்டம், ஹைதராபாத் சமஸ்தானத்தில் கம்யூனிஸ்ட்கள் மூவர்ணக் கொடியைப் பறக்கவிட்டனர், ஹைதராபாத் இந்திய ஒன்றியத்துடன் இணைக்கப்பட்டது. 

               தெலுங்கானா தியாகிகளுக்குச் செவ்வணக்கம்!

--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்

                         

 

Wednesday 21 September 2022

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 71 -- ‘நாகை’ கே முருகேசன்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 71


      
கே முருகேசன் --

தென்னகத்தில் சிபிஐ கட்சியைக் கட்டியவர்

                              -- அனில் ரஜீம்வாலே

          ‘நாகை’ முருகேசன் என்று புகழுடன் அறியப்படும் கே முருகேசன் 1909 ஜனவரி 10ல் முன்பு மெட்ராஸ் மாகாணமாக இருந்த தமிழ்நாட்டின் தஞ்சை மாவட்டம் நாகப்பட்டினத்தில் (நாகை) பிறந்தார். அவரது தந்தை குப்புசாமி நடுத்தர விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்தவர்.

    நாகையிலேயே தொடக்கக் கல்வி மற்றும் உயர்நிலைக் கல்வியைப் பெற்ற முருகேசன், 1927 ஏப்ரலில் தனது எஸ்எஸ்எல்சி பள்ளிக் கல்வி இறுதித் தேர்வை நிறைவு செய்தார். தேசிய உணர்வுடைய தந்தை அவருக்கு விடுதலை இயக்கம் பற்றிய கதைகளைக் கூறுவார். பிரிட்டிஷ் ஆட்சியினர் மீது முருகேசனுக்கு வெறுப்பு வளர்ந்தது. ஒரு முறை நாகப்பட்டினம் வந்த காந்திஜி பஞ்சாபில் நடந்த அட்டூழியங்களை விவரித்தார். இந்தச் செய்தி தந்தையால் மகனுக்குத் தெரிவிக்கப்பட்டது.

     1927 மே தினத்தன்று ரயில்வே தொழிலாளர்கள் சங்கம் நடத்திய பிரம்மாண்டமான கூட்டத்தை முருகேசன் கண்டார். சிலர் தங்கள் உரைகளில் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் மற்றும் தொழிலாளி வர்க்க உணர்வு குறித்துப் பேசினர். முருகேசன் தொழிலாளி வர்க்கத்தில் ஆர்வம் கொண்டார்.

1927 சாக்கோ வான்ஜெட்டி வழக்கின் தாக்கம்

          அமெரிக்காவில் நிக்கோலா சாக்கோ மற்றும் பார்த்தோலோமியோ வான்ஜெட்டி என்ற இரு இத்தாலியப் புலன்பெயர்ந்த தொழிலாளர்களின் தலைவர்கள் மீது மாசச்சூசெட்ஸ்-டின் ஷூ தொழிற்சாலை ஒன்றின் காவலாளியையும் சம்பளம் வழங்கும் முதலாளியையும் (பே மாஸ்டர்) கொலை செய்ததாகப் பொய்யாகக் குற்றம் சாட்டப்பட்டது. வேண்டுமென்றே அந்த வழக்கு 7 ஆண்டுகளுக்கு இழுத்தடிக்கப்பட்டது. இறுதியில் அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டு 1927ல் சார்லஸ்டவுண் அரசுச் சிறையில் மின்சார நாற்காலியில் அமர வைத்து மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது. அவர்களது மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட ஐம்பதாவது ஆண்டில் மாசச்சூசெட்ஸ் (தலைநகர் பாஸ்டன்) மாகாண கவர்னர் மைக்கேல் துகாகிஸ் வெளியிட்ட ஒரு பிரகடனம், ’அவர்கள் நியாயமற்று விசாரிக்கப்பட்டார்கள்’ என்றும் “அவர்கள் மீதான எந்த அபகீர்த்தியும் என்றென்றைக்குமாக அவர்கள் பெயர்களிலிருந்து நீக்கப்படுகிறது” என்று அறிவித்தது.

          அந்த வழக்கும் தீர்ப்பும் ஆழமான உளவியல் ரீதியான தாக்கத்தை முருகேசனிடம் ஏற்படுத்தியது. இந்திய நாடெங்கிலும் உலகளவிலும் கற்றறிவாளர்கள், தொழிலாளர்கள் மத்தியில் பரவலான சீற்றம் எழுந்தது.

அரசியலில் தீவிரப் பங்கேற்பு

        அந்நாட்களின்போது நாகையில் அமைந்திருந்த தென்னிந்திய இரயில்வே (SIR, ஒர்க்-ஷாப்) பணிமனை, இரயில்வே தொழிலாளர் இயக்கத்தின் மையமாகத் திகழ்ந்தது.

முருகேசன் அதில் தீவிரமாக ஈடுபட்டார். பின்னர் அந்த SIR கம்பெனி திருச்சி, பொன்மலையில் ஒரு பணிமனையைக் கட்டியது. ஆயிரக் கணக்கான இரயில்வே தொழிலாளர்கள் பணிக்குறைப்பு செய்யப்படுவர் என மிரட்டப்பட்டதால் தொழிலாளர்கள் மத்தியில் கோப அலை எழுந்தது. எனவே, SIR தொழிலாளர்கள் சங்கம் வேலைநிறுத்த நோட்டீஸ் அளித்தது; அது, மெட்ராஸ் மாகாணம் முழுவதும் பிரம்மாண்டமான வரலாற்றுச் சிறப்புமிக்கத் தார்மிக ஆதரவு  வேலைநிறுத்தத்திற்கு இட்டுச் சென்றது.

  நிகழ்வுகளை முருகேசன் உன்னிப்பாகக் கவனித்தார்.

    EVR’ (ஈவெரா) பெரியார் கூட்டங்கள் உட்பட, அந்நாட்களில் நடைபெற்ற ஏறத்தாழ அனைத்துப் பொதுக் கூட்டங்களிலும் முருகேசன் வழக்கமாகக் கலந்து கொண்டார். விரைவில் முருகேசன் தந்தை பெரியாரின் ‘சுய மரியாதை இயக்க’த்தில் (SRM, ‘செல்ஃப் ரெஸ்பெக்ட் மூவ்மெண்ட்’) சேர்ந்தார்.

   எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதி தேர்வான பிறகு முருகேசன் கல்வியைத் தொடரவில்லை. அவர் மக்கள் நலனுக்காகப் போராடும் முழுநேர ஊழியராக ஆனார்.

                  முருகேசன் தனது முடிவைத் தெரிவித்ததும் அவரது தந்தை, ‘முதலில் 18வயது

தாண்டட்டும், பின்னர் முடிவெடுக்கலாம்’ என யோசனை கூறினார். முருகேசன் தன் தாயையும் சமாதானப்படுத்தினார். ‘மிருகங்கள் எந்தத் தெருவிலும் சுதந்திரமாக நடமாடலாம் ஆனால் ஒடுக்கப்பட்ட மக்கள் நடக்கக்கூடாதா’ என்ற பெரியாரின் வாதத்தைத் தாயிடமும் திரும்பக் கூறினார்! ஏன்? அவரது தந்தையே ஒரு காங்கிரஸ்காரர், முழு குடும்பமும் காதி உடையை மட்டுமே உடுத்தினர். இதனால் அவரது குடும்பத்தினரின் அணுகுமுறையும் முருகேசனுக்குப் பெரிதும் உதவியது.

 பிராமணர் அல்லாத இயக்கத்தை முன்னெடுத்த மெட்ராஸ் மாகாணத்தின் நீதிக் கட்சி 1916ல் அமைக்கப்பட்டது. 1925ல் காங்கிரஸ் பிரதேச மாநாடு காஞ்சிபுரத்தில் நடைபெற்றது. சிந்தனைச் சிற்பி ம சிங்காரவேலர் தேசியக் கொடியை ஏற்றினார். சாதிவாரி பிரதிநிதித்துவம் மற்றும் இடஒதுக்கீடு கோரி பெரியார் ஒரு தீர்மானத்தை முன்மொழிந்தார். கருத்து வேறுபாடுகள் குவிந்து கூர்மையடைந்தது. பெரியார் ஆதரவாளர்களுடன் வெளியேறினார்.

   தொடக்கத்தில் கே முருகேசன் பெரியாரை ஆதரித்தார், ஆனால் பின்னர் பல பிரச்சனைகள் மீது வேறுபட்டார்.

ரஷ்யப் புரட்சியின் தாக்கம்

          1927 நவம்பர் 7ல் ரஷ்யப் புரட்சியின் ஆண்டு விழா அனுசரிக்கப்பட்டு, நாகையில் மிகப் பெரிய கூட்டம் நடைபெற்றது. மே தினம், பெரியார் கூட்டங்கள் தவிர முருகேசனைப் புரட்சிகர அரசியல்பால் ஆற்றுப்படுத்தியதில் ரஷ்யப் புரட்சி பெரும் பங்கு வகித்தது. மேலும் ஆயுதப் போராட்ட அடிப்படையில் இயங்கிய தலைமறைவு இளைஞர் இயக்கமும் அவர் மீது செல்வாக்கு செலுத்தியது.

          மாணவர்கள் வேலைநிறுத்தங்களிலும் தீவிரமாகப் பங்கேற்ற முருகேசன் கைதாகி நன்கு அடிவாங்கினாலும் பின்னர் விரைவிலேயே விடுதலை செய்யப்பட்டார்.

சுயமரியாதை இயக்கம் (SRM)

     1927ல் இந்தியா வந்தடைந்த சைமன் கமிஷன் 1928வாக்கில் நாடு முழுவதும் சுற்றுப் பயணம் செய்தது. குழுவிற்கு எதிராக மெட்ராசில் பெரும் இயக்கங்கள் நடத்தப்பட்டன. துரதிருஷ்டவசமாக, தந்தை பெரியாரும் அவரது சுயமரியாதை இயக்கமும் சைமன் குழுவை ஆதரித்ததால் அவர்களுடன் முருகேசன் ஒத்துழைப்பது என்ற கேள்வியே எழவில்லை. மேலும் 1930களின் தொடக்கத்தில் காந்திஜி தலைமையிலான ஒத்துழையாமை இயக்கத்தையும் பெரியார் எதிர்த்தார். இதன் விளைவாய், பெரியார் மற்றும் சுயமரியாதை இயக்கத்திலிருந்து முருகேசன் விலகினார்.

     டி என் ராமச்சந்திரன், சாமிநாதன் மற்றும் மற்றவர்களுடன் முருகேசன் விரைவில் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார். நாகை காங்கிரஸ் கமிட்டிச் செயலாளர் கோவிந்தசாமி தலைமையில் பெரும் இயக்கம் நடைபெற்றது. அவர் கைதாகி திருச்சி சிறைக்கு அனுப்பப்பட அங்கே, இந்துஸ்தான் சோஷலிஸ்ட் குடியரசு அஸோசியேஷனைச் (HSRA) சேர்ந்த பட்டுகேஷ்வர் தத் மற்றும் பாய் மகாவீர் சிங் முதலானவர்களைச் சந்தித்தார். சிறையில் அவர்கள் காங்கிரஸ் கைதிகளுக்கு வழக்கமாக மார்க்சிசம் மற்றும் சோஷலிசம் குறித்து அரசியல் வகுப்பு எடுத்தனர். வகுப்பு விரிவுரைகளின் குறிப்புகளை எழுதி கோவிந்தசாமி யாருமறியாமல் வெளியே கடத்திடுவார். அக்குறிப்புகளை முருகேசனும் அவரது நண்பர்களும் படியெடுத்து “குடியரசு” இதழில் வெளியிடுவார்கள். பின்னர் அவற்றைத் தொகுத்துக் ‘கம்யூனிசத்தின் கோட்பாடுகள்’ என்ற தலைப்பில் அவர்கள் பிரசுரித்தனர்.

     1931ன் காந்தி – இர்வின் உடன்பாடு குறித்துக் கருத்துத் தெரிவித்த முருகேசன் எது சரி என்பதைக் காந்திஜி அறிவார் என்றார். பகத்சிங்கைக் காப்பாற்ற ஆகச் சிறந்த அளவு காந்திஜி முயன்றார், மேலும் அவர் பகத்சிங்கைக் காட்டிக் கொடுத்தார் என்பதுபோலச் சொல்வது தவறானதாகும். இது மடத்தனமான அறிக்கை என்றார் முருகேசன்.

      சாமிநாதன், ஜி என் ராமச்சந்திரன் மற்றும் முருகேசன் போன்ற சுயமரியாதை இயக்க

முன்னணித் தலைவர்கள் காங்கிரஸ் தலைமையிலான தேசிய இயக்கத்திற்கு ஆதரவாக வெளிப்படையாக வெளியே வந்தனர், மேலும் அவர்கள் கம்யூனிசத்தாலும் ஈர்க்கப்பட்டனர். பாட்டாளி வர்க்கச் சர்வதேச கீதத்தைத் தமிழில் மொழிபெயர்த்தது சாமிநாதன். (யூஜின் பார்ட்டியார் எழுதிய சர்வதேச கீதம், சாமிநாதனின் மொழிபெயர்ப்பில் ‘பட்டினிக் கொடுஞ் சிறைக்குள் பதறுகின்ற மனிதர்காள்’ எனத் தொடங்கும் பாடலாக இன்றும் ஒலிக்கிறது)

 சுயமரியாதை இயக்கத்தின் இளம் தலைவர்கள் இன்னும் கூடுதலான நேர்கொண்ட பார்வையில் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நிலைபாட்டை எடுத்து, ப ஜீவானந்தத்தைச் செயலாளராகக் கொண்டு ‘சுயமரியாதை சமதர்மக் கட்சி’யை நிறுவினர். காங்கிரஸ்பால் ஈவெரா பெரியாரின் வெறுப்பு அவரைக் ‘‘காங்கிரஸ் ஆட்சியைவிட பிரிட்டிஷ் ஆட்சி மேல்’’ என்ற நிலையை எடுக்க வைத்தது. புதிய அமைப்புச் சோஷலிசத்தை நோக்கித் திரும்பியது. ஆர்.கீசன், முருகேசன் போன்ற சுயமரியாதை இயக்க முன்னணித் தலைவர்கள் மற்றவர்களுடன் இணைந்து தனியான ‘சுயமரியாதை மாநாட்டை’த் தஞ்சை மாவட்டத் திருத்துறைப்பூண்டியில் 1936 பிப்ரவரியில் கூட்டினர். அவர்கள் சுயமரியாதைக்காரர்களின் சுதந்திரமான சோஷலிசக் கட்சியை அமைக்க முடிவெடுத்தனர்.

                         இதன் மத்தியில் காட்டே, ஏஎஸ்கே (ஐயங்கார்), சுந்தரையா மற்றும் பிற 

தலைவர்களை அமைப்பாளர்கள் சந்தித்தனர். 1936 நவம்பர் 1ல் முதலாவது சுயமரியாதை சோஷலிச மாநாடு திருச்சிராப்பள்ளியில் நடைபெற்றது. டாக்டர் எம் கிருஷ்ணசுவாமி தலைமை தாங்கிய மாநாட்டை எஸ் ஏ டாங்கே தொடங்கி வைத்தார். மாநாட்டில் சுயமரியாதை சோஷலிஸ்டுகள் ‘காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி’யில் (CSP) இணைய முடிவு செய்தனர்.

        1934ல் ஒரு நாளிதழைத் தொடங்க முருகேசன் வேறு சிலருடன் மெட்ராஸ் வந்தார். அவர் சிங்காரவேலரின் உதவியை நாடினார், அவருடன் தங்கியிருந்து, அவருடைய பெரிய நூலகத்தைப் பயன்படுத்திக் கொண்டார். கம்யூனிசம் குறித்து அவர் சிங்காரவேலரிடமிருந்து ஏராளமாகக் கற்றுக் கொண்டார்.

    மெட்ராஸ் வரும்போது அவரிடம் இராமச்சந்திரன் கொடுத்த 2000 ரூபாயைப் பயன்படுத்தி முருகேசன் ‘புது உலகம்’ (நியூ வோர்ல்டு) என்ற மார்க்சிய மாத இதழைத் தொடங்கினார். முருகேசன் இதழின் ஆசிரியர், இராமச்சந்திரன் அதன் துணை ஆசிரியர். 1935 மே முதல் நாள் அதன் முதல் இதழ் வெளியானது.

‘தென்னிந்தியாவைக் குலுக்கிய பத்து நாட்கள்’

      1918லேயே நாகப்பட்டினத்தில் ரயில்வே தொழிலாளர்கள் சங்கம் அமைக்கப்பட்டது.

அவர்களிடையே விபி பிள்ளை, டாக்டர் பி வரதராஜூலு நாயுடு, மற்றும் திரு வி க உள்ளிட்ட பலர் உரையாற்றினர். 1919 மார்ச்சில் மகாத்மா காந்திஜிகூட உரையாற்றினார். பின் வந்த ஆண்டுகளில் நாகப்பட்டினம், இரயில்வே தொழிலாளர் போராட்டங்களின் மையமானது. 1927 –28 காலகட்டத்தில் நாகப்பட்டினம் மற்றும் பிற மையங்களில் இரயில்வே தொழிலாளர்கள் அடிக்கடி வேலை நிறுத்தத்தில் இறங்கினர்.

 1928 ஏப்ரல் வாக்கில் இரயில்வே நிர்வாகம் 5000 தொழிலாளர்களை ஆட்குறைப்புச் செய்வதாக அறிவித்தது. தொழிலாளர்களின் எண்ணிக்கையைக் குறைத்து வீட்டுக்கனுப்ப பணியில் தேர்வு (டிரேடு டெஸ்ட்), சிலருக்குக் கூடுதல் பணிக்கொடை அளிப்பது உள்ளிட்ட பல்வேறு வழிமுறைகளை நிர்வாகம் கையாண்டது. வீசி எறிந்த ரொட்டித் துண்டு போன்ற சலுகைகளைத் தொழிலாளர்கள் ஏற்க மறுத்தனர். டி கிருஷ்ணசாமிப்பிள்ளை தலைமையில் வேலைநிறுத்தக் குழு மையம் அமைக்கப்பட்டது. குழுவில் சிங்காரவேலு, முகுந்த் லால் சிர்கார் இடம் பெற்றனர்.

     நிர்வாகம் நாகப்பட்டினம், போத்தனுர் மற்றும் பொன்மலை பணிமனைகளைப் பூட்டியது. அந்தச் செய்தி தென்னிந்திய இரயில்வே முழுவதும் பரவியது. சிக்னல்மென் மற்றும் ரன்னிங் ஸ்டாஃப் ஊழியர்கள் அந்தச் செய்தியை எல்லா இடங்களுக்கும் எடுத்துச் சென்றனர். 1928 ஜூன் 30ல் பிரம்மாண்டமான பேரணி திருச்சிராப்பள்ளியில் நடத்தப்பட்டது. வேலைநிறுத்த அறிவிப்பு வழங்கினர்; 1930 ஜூலை 19ல் வேலைநிறுத்தம் தொடங்கியது.

    இந்த வரலாற்றுப் புகழ்பெற்ற வேலைநிறுத்தம் பத்து நாட்கள் நீடித்தது. வரலாற்றில் இந்த வேலைநிறுத்தம் “தென்னிந்தியாவைக் குலுக்கிய பத்து நாட்கள்” என்று இடம் பெற்றது. இந்தச் சரித்திர வேலை நிறுத்தத்தில் முருகேசன் தீவிரமாகப் பங்கேற்றார். அரசு தனது ஆவணங்களில் இதனை அந்த ஆண்டின் மிக முக்கியமான நிகழ்வு என்று பதிவு செய்தது. பல்வறு கேடர்களைச் சேர்ந்த இரயில்வே தொழிலாளர்கள் அனைவரும் பங்கேற்று பாசஞ்சர் மற்றும் மெயில் ரயில் வண்டிகளைத் தடுத்து நிறுத்தினர், தண்டவாளக் கப்ளிங் எனப்படும் இணைப்புக்களைத் துண்டித்தனர், லெவல் கிராஸிங்களை மறித்துத் தடுத்தனர், இரயில்வே தண்டவாளங்களில் படுத்து நிர்வாகம் ஓட்டிய ரயில் வண்டிகளையும் நிறுத்தினர். இப்படிப் போராட்டம் பல வடிவங்களை எடுத்தது. போலீஸ் பிரம்படி தாக்குதல், துப்பாக்கி முனையால் குத்தித் தாக்குதல் என்பதுடன் அமைதியாக ஆர்ப்பாட்டம் நடத்தியவர்கள் மீது துப்பாக்கிச் சூடும் நடத்தினர்.

          ஜூலை 21ல் நிர்வாகம் எல்லா ரயில் வண்டிகளையும் ரத்து செய்தது. ஜூலை 27 வாக்கில் ரயில்வே தொழிலாளர் சங்கச் செயற்குழு, வேலைநிறுத்தக் குழு உறுப்பினர்கள் அனைவருடன் நூற்றுக் கணக்கான தொழிலாளர்களும் கைது செய்யப்பட்டனர். சங்கத்தின் ‘தொழிலாளி’ இதழ் அலுவலகம் உட்பட தொழிற்சங்க அலுவலகங்கள் சோதனையிடப்பட்டு சூறையாடப்பட்டன. மெட்ராசில் ஆயிரமாயிரமாகத் தொழிலாளர்கள் கண்டனப் பேரணி நடத்தினர். பிரிட்டிஷ் அரசால் வேலைநிறுத்தத்தை உடைக்க முடிந்ததே தவிர அவர்களால் தொழிலாளர்களின் எழுச்சி உணர்வை அடக்க முடியவில்லை.

    வேலைநிறுத்தத்தின் முன்னணித் தலைவர்களுக்கு எதிராகத் தென்னிந்திய இரயில்வே சதி வழக்குத் தொடுக்கப்பட்டது. 1937 –39ல் மெட்ராசில் காங்கிரஸ் அமைச்சரவை அமைக்கப்பட்டதும் சிறையில் அடைக்கப்பட்டவர்களின் விடுதலை சாத்தியமானது.

     1935ம் ஆண்டிலிருந்து தொழிலாளர்களின் புதிய தலைமை உருவானது, அதில் கே முருகேசன், ப ஜீவானந்தம், ஏஎஸ்கே முதலானோர் இடம்பெற்றனர்.

புகழ்ந்திசைக்கப்படாத (பாடாண் திணை) நாயகன்

     கே முருகேசன் முழுமையாக அரசியல் பணியில் ஈடுபட முடிவு செய்தார். மெட்ராசுக்கு

மாறிய அவர் சிங்காரவேலரைச் சந்தித்தார், அவரது பரந்த பங்களாவில் தங்கினார். அவரைச் சிங்காரவேலர் அச்சகத் தொழிலாளர்கள், டிராம், கள் இறக்குவோர், தெருக்களில் வியாபாரம் செய்பவர்கள் முதலான தொழிற்சங்கங்களில் அறிமுகப்படுத்தினார். முருகேசன் பல தொழிற்சங்கங்களில் முக்கிய பொறுப்புக்களிலும், அவற்றில் பலவற்றின் செயலாளராகவும் ஏஎஸ்கே ஐயங்கார், ப ஜீவானந்தம், பி இராமமூர்த்தி முதலானவர்களுடன் செயல்பட்டார்.

20 தருணங்களில் மொத்தம் 16 ஆண்டுகள் முருகேசன் சிறை தண்டனை பெற்றார். 1936 முதல் 1940 வரை தமிழ்நாட்டில் தங்கி இருந்த எஸ் வி காட்டே தொழிற்சங்கப் பணியில் கே முருகேசனையும் மற்றவர்களையும் வளர்த்து உருவாக்கினார். ஏஎஸ்கே ஐயங்கார் போல கே முருகேசனும் திருமணம் செய்துகொள்ளவில்லை.

   கம்யூனிஸ்ட் மற்றும் தொழிற்சங்க இயக்கத்திற்காகத் தனது வாழ்வை அர்ப்பணித்த முருகேசன் கொண்டாடிப் புகழப்பட வேண்டிய தலைவர் எனினும், குடத்திலிட்ட விளக்காகப் புகழ்ந்திசைக்கப்படாத நாயகனாக இருந்துவிட்டார். 1936ல் மெட்ராசில் தொடங்கப்பட்ட முதலாவது சிபிஐ கிளையின் உறுப்பினர் அவர். பி இராமமூர்த்தி, ஏஎஸ்கே ஐயங்கார், ப ஜீவானந்தம், பி சீனுவாச ராவ் முதலானோர் உறுப்பினர்களாக இருந்த அக்கிளையின் முதலாவது செயலாளர் சி எஸ் சுப்பிரமணியம். சிங்காரவேலர் எழுதிய 250 புத்தகங்களை மாஸ்கோவுக்கு அனுப்பி வைப்பதில் காரணகர்த்தாவாக இருந்தவர் முருகேசன். அந்நூல்கள் மாஸ்கோ லெனின் நூலகத்தில் பத்திரப்படுத்தி வைக்கப்பட்டுள்ளன.

          ஆயுதப் போராட்டம் என்ற கருத்தை முருகேசன் ஆதரிக்கவில்லை.

         சிபிஐ அந்த நேரத்தில் மிகவும் முறை சார்ந்த அமைப்பாகத் திகழ்ந்தது, வேறு எந்தக் கட்சிக்கும் அத்தகைய அமைப்பு பலம் கிடையாது. இராணுவத்தில்கூட கட்சியின் 500 யூனிட்டுகள் (கிளை போன்ற சிறிய அமைப்பு) இருந்தன.

          இரண்டாவது உலகப் போரின்போது முருகேசன் சிறையில் அடைக்கப்பட்டார், 1942ல் விடுதலையாக வேண்டும். மகாத்மா காந்தி கைது செய்யப்பட்டதைக் கண்டித்துப் போராட முருகேசனும் மற்றவர்களும் கைதாயினர். 1942ல் மீண்டும் கைது செய்யப்பட்ட முருகேசன் முதலில் அல்லிபுரம் முகாம் சிறையிலும் பின்னர் வேலூர் மத்திய சிறை மற்றும் தஞ்சாவூர் ஜெயிலுக்கும் அனுப்பப்பட்டார். தொழிலாளர்களின் பெரும் போராட்டத்திற்குப் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

  சிறையில் முருகேசன் பல காங்கிரஸ்காரர்களையும் மற்றவர்களையும் கம்யூனிஸ்ட் கட்சியில் இணையச் செய்தார்.

    முருகேசன் மற்றவர்களுடன் 1947 ஆகஸ்ட் 15 விடுதலை விழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார்.

    1948 ஜனவரி 30ல் மகாத்மா காந்திஜி படுகொலை செய்யப்பட்டார். இது பரவலான கோபம் மற்றும் ஆர்எஸ்எஸ் உறுப்பினர்கள் மீது தாக்குதல்களையும் ஏற்படுத்தியது. பின்னர் ஆர்எஸ்எஸ் தடை செய்யப்பட்டது. மைலாப்பூர், திருவல்லிக்கேணி மற்றும் பிற இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிகள் இனிப்பு வழங்கி மகாத்மா காந்தி படுகொலையைக் ‘கொண்டாடி’னர். இது மக்களைக் கடும் சீற்றம் கொள்ளச் செய்ய அவர்கள் ஆர்எஸ்எஸ் சுயம்சேவக்குகளைத் தாக்கினர். முஸ்லீம்களைத் தாக்குவதன் மூலம் மேலும் கோபம் வன்முறை ஏற்படுத்தச் செய்யப்பட்ட முயற்சியைக் கம்யூனிஸ்ட்கள் தடுத்தனர். காந்திஜிக்குப் போதுமான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்பதால் அவர் மீது தாக்குதல் நடத்தவும் இறுதியில் அவர் படுகொலை செய்யப்படுவதற்கும் காரணமாயிற்று என முருகேசன் கருதினார்.

    தமிழ்நாட்டில் கட்சி செயல்பாடுகளில் தீவிரப் பங்காற்றிய முருகேசன், புதுடெல்லில் டாக்டர் அதிகாரி உட்பட பலருடன் பல்வேறு பொறுப்புக்களிலும் பணியாற்றினார். 1964 கட்சி பிளவிற்குப் பிறகு அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் நீடித்தார். கட்சியும் தொழிற்சங்கமுமே வாழ்வாக வாழ்ந்த தோழர் கே முருகேசன் 1991 ஆகஸ்ட் 17ல் இயற்கை எய்தினார்.

--நியூஏஜ் (ஆக.21 –27)

--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்

     

 

 

 

Tuesday 20 September 2022

செப்டம்பர் 17 -- தெலுங்கானா ஆயுதப் போராட்டம் --சிறப்புக் கட்டுரை

 

தெலுங்கானா ஆயுதப் போராட்டம்

இந்தியாவுடன் ஹைதராபாத் சமஸ்தானத்தை
இணைக்கப் போராடியது, சிபிஐ

--எஸ். சுதாகர் ரெட்டி
சிபிஐ மேனாள் பொதுச் செயலாளர்

1947 செப்டம்பர் 11ல் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் உடந்தையாய் இருக்க, ஹைதராபாத் சமஸ்தானத்தை நிஜாம் சுதந்திர நாடாக அறிவித்ததால், நிஜாமுக்கு எதிராக மூண்டெழுந்த தெலுங்கானா ஆயுதப் போராட்டம் முக்கியமான வரலாற்று நிகழ்வாகும். ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்திய ஒன்றியத்துடன் இணைக்க நிஜாம் ஆட்சிக்கு எதிராக ஆயுதம் ஏந்துமாறு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மக்களுக்கு அறைகூவல் விடுத்தது. அப்போராட்டப் பிரகடனத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, ஆந்திர மகாசபா மற்றும் அனைத்து ஹைதராபாத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (AHTUCசார்பில் முறையே தோழர்கள் ராவி நாராயண் ரெட்டி, பத்தம் எல்லா ரெட்டி மற்றும் மக்தூம் மொஹிதீன்

கையெழுத்திட்டனர். இந்தியாவின் விடுதலைப் போராட்டம் பல கருத்தோட்ட ஓடைகள் சங்கமித்தப் பேராறு.          

   முக்கியப் போராட்டம், பிரிட்டிஷ் நேரடியாக ஆட்சிசெய்த பிரிட்டிஷ் இந்தியாவில் நடைபெற்றது. அது தவிர சிறிதும் பெரிதுமான 545 சமஸ்தானங்கள், குறுநில ஆட்சிகள் பிரிட்டிஷ் குடையின் கீழ் இருந்தன. தங்கள் குறுநிலத்தில் வாழ்ந்த மக்களைச் சுரண்டவும் கொடுமைகளைச் செய்யவும் மட்டுமே அவை சுதந்திரமாக இருந்தன; ஆனால் அப்படி மேலாண்மை செய்ய அனுமதித்தற்காகப் பிரிட்டிஷ் பேரரசுக்கு அவை பெரும் தொகைகளை (கப்பமாக) செலுத்த வேண்டியிருந்தது. உண்மையில் அது சாதாரணமான சிறிய சலுகை அல்ல; பிரிட்டிசாருக்கு அஞ்சியே மக்கள் அவர்களைத் தூக்கி எறியாமல் இருந்தனர்.

ஹைதராபாத் மாகாண அமைப்பு

          சமஸ்தானங்களில் ஹைதராபாத் மிகவும் பெரியது. அந்தச் சமஸ்தானத்தின் பாதி மாவட்டங்கள் தெலுங்கு பேசுபவை, ஐந்தில் மராத்தி மொழியும், கனடா மொழி பேசப்பட்ட மூன்று கனடா மாவட்ங்களிலும் இருந்தன. எனவே இப்பிரதேசத்தை மொழிகளின் முப்பட்டை கண்ணாடி (பிரிசம்) எனலாம். ஆனால் அலுவல் மொழியும், பயிற்சி மொழியும் உருது மட்டுமே. இம்மண் பெரும் தேஷ்முக்குகள் மற்றும் நிலப்பிரபுகள் கைகளில் குவிந்து இருந்தது. அவர்களில் சிலரிடம் ஒரு லட்சத்திலிருந்து ஒன்னரை லட்சம் ஏக்கர் பரப்பளவுள்ள நிலங்கள் குவிந்திருந்தது.

          அங்கு “வெட்டி” என்ற சிஸ்டம் நடைமுறையில் இருந்தது, (ஜீவா பாடும் ‘பாழுக்கு உழைத்தோமடா’ போல) அதன்படி அனைத்து மக்களும் ஊதியமின்றி நிலப்பிரபுக்களுக்காக வேலை செய்ய வேண்டும். எந்தக் குடிமை உரிமைகளோ, மனித உரிமைகளோ இல்லாத ஏறத்தாழ பாதி அடிமை என்ற அந்த முறையை மக்கள் வெறுத்தனர், எனினும் அவர்களால் எதுவும் செய்ய முடியாத கையறுநிலை.

தேசியக் காங்கிரசும் பிரதேச மாகாணங்களும்

தேசியக் காங்கிரஸ் தலைமையிலான தேசிய இயக்கம் தனது போராட்டத்தைப் பிரதேச மாகாணங்களில் விரிவுபடுத்த முயற்சி செய்யவில்லை; ஒருக்கால், அவர்களின் ஆதரவைப் பின்னர் ஒருகாலத்தில் பெற வேண்டியிருக்கலாம் என்பது அவர்கள் நம்பிக்கை. “வெளிநாட்டுக் காலனியத்திற்கு எதிரான போராட்டம்” என்பதைக் காங்கிரஸ் இயக்கம் வெள்ளைத் தோல் உடையவர்களுக்கு எதிரான போராட்டம் என வரையறுத்து அத்துடன் நிறுத்திக் கொண்டது. உண்மையில், நம் மண்ணைச் சேர்ந்த பிரதேச மாகாணங்களின் ஆட்சியாளர்கள் (நேட்டிவ் ரூலர்ஸ்) தங்களின் வலிமை அனைத்தையும் திரட்டிப் பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரித்தனர். பிரிட்டிஷ் ஆதரவில் அவர்கள் பிரிட்டிஷ் வேலைக்காரர்கள் மற்றும் வீரர்களைவிடவும் (அரசரைத் தாண்டிய அரச விஸ்வாசி போல) கூடுதல் விஸ்வாசத்துடன் இருந்தனர்.

          ஆனால் விடுதலைப் போராட்டத்தின் ஒளிக்கீற்று சமஸ்தானங்களின் இருண்ட பகுதிகளையும் சென்றடையவே செய்தது, மக்கள் மத்தியில் நம்பிக்கை எழுந்தது. திருவாங்கூர் –கொச்சி, ஜம்மு காஷ்மீர், மணிப்பூர் மற்றும் பிற பகுதிகளின் ஏதேச்சிகார பிரதேச ஆட்சிகளுக்கு எதிராக வீரம் செறிந்த ஆயுதப் போராட்டங்கள் நடந்தன. 1942ன் வெள்ளையனே வெளியேறு இயக்கம், இரண்டாவது உலகப்போர் மற்றும் அதன் பின்விளைவுகள், இந்திய தேசிய இராணுவத்தின் போர், பாம்பேயில் நடைபெற்ற ராயல் இந்தியா நேவி (ஆர்ஐஎன்) கப்பல்படை வீரர்களின் கிளர்ச்சி புதிய நம்பிக்கைகளைக் கொண்டு வந்தன. ஆனால் இந்திய தேசியக் காங்கிரசும் மகாத்மா காந்தியும் ஒரு கட்டத்திற்கு மேல் சமஸ்தானப் பகுதிகளில் போராட்டங்களை விரிவுபடுத்த விரும்பவில்லை. ஆனாலும் பிரிட்டிஷ் நம் இந்திய தேசத்தைவிட்டு வெளியேறக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

சுதந்திரப் பிரகடனம்

          பிரிட்டிஷ் நாடாளுமன்றம் 1947 ஜூன் மாதம் இந்தியா, பாக்கிஸ்தான் மற்றும் 545 சமஸ்தானங்களுக்கும் விடுதலையைப் பிரகடனப்படுத்தி ஒரு சட்டத்தை நிறைவேற்றியது. இந்தியத் துணைக் கண்டத்தில் குழப்பதை ஏற்படுத்தும் ஒரு கேடு கெட்ட சூழ்ச்சி அது. இப்படிச் செய்வதன் மூலம் உட்நாட்டு சச்சரவுகள், போர்கள் ஏற்படும் என எதிர்பார்த்த அவர்கள், அதன் விளைவாய் சட்டம் ஒழுங்கைப் பராமரிக்க தங்களின் பிரிட்டிஷ் இராணுவம் நீண்ட காலத்திற்கு இங்கே இருக்கலாம் என்பதும் அவர்கள் கனவு. ஆனால் அதற்கு மாறாக, ஜனநாயக முறைக்கு மாறவும், ஒன்றுபட்ட இந்தியாவுக்கான மக்களின் ஆழமான விழைவால் பெரும்பாலான சமஸ்தானங்கள் இந்திய ஒன்றியத்துடன் இணையச் சம்மதித்தன; எனினும், ஹைதராபாத், ஜம்மு காஷ்மீர், திரிபுரா மற்றும் (சோமநாதர் ஆலயம் இருக்கும் பகுதியான) ஜுனகத் சமஸ்தானங்கள் மட்டும் தனித்து விடுதலையை அறிவித்தன.

ஹைதராபாத்தில் சமூகங்களின் போக்கு

          ஹைதராபாத் நிஜாம் பிரிட்டனிலிருந்து ஆயுதங்கள் வாங்க உத்தரவிட்டு, பெரும் தொகையை (பிரிட்டனின்) வெஸ்ட்மினிஸ்டர் வங்கிக்கு மாற்றினார். அந்தப் பணம் இன்னும் பிரிட்டிஷ் வசமே உள்ளது, இந்தியா–பாக்கிஸ்தான் தகராறு இன்னும் தீர்க்கப்படவில்லை. ஆந்திர மகாசபா தெலுங்கு பேசும் மக்களின் சமூகப் பண்பாட்டு இயக்கமாகும், பின்வந்த ஆண்டுகளில் அந்த அமைப்பில் இடதுசாரிகள் ஆதிக்கம் செலுத்தினர். முக்கியமான 1947 காலகட்டத்தில் ராவி நாராயண் அதன் தலைவராக இருந்தார். முஸ்லீம் அரசு என அதனைப் பாதுகாக்க, நிஜாமின் தனி இராணுவமான, ராஜ்கர்கள் (Razakers) மக்கள் மீது அடக்குமுறை அச்சுறுத்தல்களைக் கட்டவிழ்த்து விட்டது.

          உண்மையாதெனில், பெரும் எண்ணிக்கையிலான முஸ்லீம்கள் கடும் ஏழ்மையில் வாழ்ந்தனர். நிஜாமை ஆதரித்த நிலப்பிரபுகளில் கூடுதலான எண்ணிக்கையினர் இந்துகளே. துரதிருஷ்டவசமாக முஸ்லீம் ஜனத் தொகையில் ஒரு பிரிவினர் “அனல் மாலிக்” (நான் அரசன்) என்ற முழக்கத்தைப் பெரிதும் நம்பினர், நிஜாமை ஆதரித்தனர். [அதாவது, நாட்டை ஆள்வது தன்னைப் போன்ற ஒரு முஸ்லீம், எனவே அது தான் ஆட்சி செய்வதைப்போல –நான் நாட்டின் அரசன், என்பது ‘அனல் மாலிக்’ கோட்பாடு. புறநானூற்றுப் பாடல் ‘மன்னன் உயிர்த்தே மலர்தலை உலகம்’ என்று பேசும்]. ஆனால் நாட்டுப் பற்று, ஜனநாயக மற்றும் முற்போக்குச் சிந்தனை கொண்ட முஸ்லீம்கள் நிஜாமுக்கு எதிரான போராட்டத்திற்கு ஆதரவு நல்கினர். உதாரணத்திற்கு, தனது நிலத்திற்காகப் போராடிய பண்டகி என்ற முஸ்லீம் விவசாயி இந்து நிலப்பிரபுக்களால் கொல்லப்பட்டார். நிஜாமை எதிர்த்த ‘அம்ரோஸ்’ (இன்று) இதழின் துணிச்சல் மிக்க ஆசிரியர், ஷோய்லபுல்லா கான் ராஜ்கர்களால் கொலையானார்.

தெலுங்கானா போராட்டத்தில் கம்யூனிஸ்ட் கட்சி

          தெலுங்கானா பகுதி போராட்டத்தைக் கம்யூனிஸ்ட்கள் தலைமையேற்று நடத்தியதால் அதற்கு ஒருபோதும் வகுப்புச் சாயம் பூசப்படவில்லை. அந்தப் போராட்டம்

வழக்கொழிந்த, வாழ்ந்து முடிந்த நிலப்பிரபுத்துவத்திற்கு எதிரானது. நிலைமை நன்கு கனிந்து இருந்தது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுதியான தெளிவான அழைப்புக்குச் செவிசாய்த்த லட்சக் கணக்கான மக்கள் அதில் பங்கேற்றனர். உண்மையைச் சொன்னால், தெலுங்கானா பகுதியில் கட்சியின் ஸ்தாபனக் கட்டமைப்பு பலவீனமாகவே இருந்தது; ஆனால் கட்சித் தலைமையின் செல்வாக்குப் புகழ், சரியான திட்ட உத்தி, தந்திரோபாயங்கள் கட்சிக்குப் பெரிதும் உதவின.

          ஒருங்கிணைந்த மெட்ராஸ் மாகாணத்தின் பகுதியாக இருந்த ஆந்திரா கட்சி ஸ்தாபனக் கட்டமைப்பு ரீதியில் சிறப்பான தயார்நிலையில் இருந்தது. கட்சித் தலைமை தத்துவார்த்த மற்றும் அரசியல் முதிர்ச்சியைப் பெற்றிருந்தது. ஆந்திரா கட்சி அனைத்து உதவிகளையும் தெலுங்கானா போராட்டத்திற்கு அளித்தது. ஆயுதப் பயிற்சி முகாம்கள் நடத்தப்பட்டன, நிதி மற்றும் ஆயுதம் திரட்டப்பட்டது, தன்னார்வத் தொண்டர்கள் தெலுங்கானா போராட்டத்தில் இணைந்தனர், பல ஆந்திரத் தோழர்கள் தெலுங்கானாவில் கொல்லப்பட்டு பலியாயினர். 1946லிருந்து ஹைதராபாத்தில் தங்கி இருந்த தோழர் சி இராஜேஸ்வர ராவ் மற்றும் தோழர்கள் பி சுந்தரையா, தம்மா ரெட்டி சத்யநாராயணா, எஸ்விகே பிரஸாத் போன்ற பிற புகழ்பெற்ற தலைவர்களும் மற்றும் பலரும் நேரடியாக இணைந்து போராட்டத்தில் பங்கேற்று வழிகாட்டினர்.

ஹைதராபாத்தில் தோழர் சி ஆர் கட்சியின் முதல் (உட்கரு) மையத்தை ஏற்படுத்தினார். மூவாயிரம் கிராமங்கள் கட்சிச் செல்வாக்கின் கீழ் வந்தன. நிலமற்றவர்களுக்குச் சுமார் பத்து லட்சம் ஏக்கர் நிலம் பிரித்தளிக்கப்பட்டது. நிலவுடைமை ஜமீன்தார்கள் கிராமங்களிலிருந்து தப்பியோடி எங்கோ மறைந்தனர். போராட்டத்தில் இரண்டு கட்டங்கள் இருந்தன.

போராட்டத்தில் இரண்டு கட்டங்கள்

முதல் கட்டம், ஆயுதப் போராட்டம் தொடங்கிய 1947 செப்டம்பர் 11ம் நாளிலிருந்து, ஹைதராபாத்துக்குள் இந்திய இராணுவம் நுழைந்த 1948 செப்டம்பர் 17ம் நாள் வரையானது. போராட்டத்தின் இரண்டாம் கட்டம், அந்த நாளிலிருந்து ஆயுதப் போராட்டம் திரும்பப் பெற்ற 1951 வரையானது. முதல் கட்டத்தில் மக்கள் அற்புதமான

பேராதரவையும் பரிவையும் வாரி வழங்கினர். நிலப்பிரபுகள் ஓடி ஒளிந்தனர். ராஜ்கர்கள் மற்றும் நிஜாமின் போலீஸ்படைகள் தங்கும் இடமாகவும் மையமாகவும் இருந்த ஜமீன்தார்களின் தேவிடீஸ் என்று அறியப்படும் மாபெரும் பங்களாக்கள் தீயிட்டுக் கொளுத்தப்பட்டன. லட்சக் கணக்கான மக்கள் போராட்டத்தில் பங்கேற்றனர். சர்தார் பட்டேலின் நம்பிக்கைகுரியவரான கே எம் முன்ஷி ஹைதராபாத் மாகாணத்தில் இந்திய அரசின் ஏஜெண்ட் ஜெனரலாக இருந்தார். மோதல் நிறுத்த ஒப்பந்தம் நிஜாமுக்கும் இந்திய அரசுக்கும் இடையில் ஏற்பட்டது.

இந்திய அரசின் அணுகுமுறை

நிஜாம் இந்திய ஒன்றியத்துடன் இணைய வேண்டும் என அரசு விரும்பினாலும், படைகளின் பலப் பிரயோகத்தைப் பயன்படுத்த விரும்பவில்லை. ஆனால் கம்யூனிஸ்ட்கள் வலிமை பெற்று வந்ததால், எங்கே கம்யூனிஸ்ட்கள் ஹைதராபாத்தைக் கைப்பற்றி விடுவார்களோ என்ற அச்ச உணர்வு இருந்தது. எனவே ஏதாவது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் காங்கிரஸ் தலைவர்கள் ஒன்றியத்தின் தலைமைக்கு அழுத்தம் தந்தனர். இந்திய இராணுவம் நான்கு புறங்களிலிருந்தும் ஹைதராபாத் மாகாணத்திற்குள் 1948 செப்டம்பர் 13 நாள் அணிவகுத்து நுழைந்தனர், செப்டம்பர் 17 அன்று நிஜாம் சரணடைந்தார்.

நிஜாமின் படையால் வலிமையான இராணுவத்தை எதிர்த்து நிற்க முடியவில்லை. எனவே எதிர்ப்பு பெயரளவில் மட்டுமே இருந்தது. நிஜாம் சரணடைவதாகப் பிரகடனம் செய்தார், இந்தியாவுடன் ஹைதராபாத் மாகாணத்தின் இணைப்பு அறிவிக்கப்பட்டது. இந்த இணைப்புக்காக முக்கிய போரை நடத்தி எண்ணற்ற தனது தோழர்களின் இன்னுயிர்களைத் தியாகம் செய்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் ஒன்றிய அரசு கலந்தாலோசிக்கவில்லை. இது மிகப் பெரிய துரோகம். (நோக்கம் பொதுவானதாக இருந்ததால், அரசு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை இயல்பான நேச சக்தியாகக் கருதி இருக்க வேண்டும்.) கட்சியுடன் விவாதங்கள் நடத்தப்படவில்லை. தூக்கி எறியப்பட வேண்டிய நிஜாமுக்கு ராஜ மரியாதை அளிக்கப்பட்டது, பின் அவரை ‘ராஜ் பிரமுக்’காக (ஆளுநருக்கு இணையான முக்கிய பிரமுகர் அந்தஸ்து), வருடத்திற்கு ரூபாய் 2 கோடி நிவாரண மானியத் தொகையுடன், அறிவித்தனர்.

சிபிஐ மீது இராணுவத்தின் அட்டூழியம்

கிராமங்களுக்குள் அணிவகுத்து நுழைந்த இந்திய இராணுவம் கம்யூனிஸ்ட்களைத் தேடி வேட்டையாடியது. மக்கள் மீது பெரும் கொடூர அட்டூழியங்களைப் புரிந்த ராஜ்கர்களின் தலைவனான காசிம் ரஸ்வி சிறு தண்டனைக்குப் பிறகு பாக்கிஸ்தான் செல்ல அனுமதிக்கப் பட்டான். இந்திய இராணுவம் ராஜ்கர்களை விடுதலை செய்தது; ஆனால் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட கம்யூனிஸ்ட்களைக் கொன்றது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டத்தைத் தொடர்வது என முடிவு செய்தது.

போராட்டத்தைத் தொடர்ந்தது ஏன்?

நிலப்பிரபுக்கள் கிராமங்களுக்குத் திரும்ப வந்தனர், பிரித்தளிக்கப்பட்ட நிலங்களை மீண்டும் கைப்பற்ற முனைந்தனர். ஜெனரல் சௌத்திரி கம்யூனிஸ்ட்களை 2 வாரங்களில் அழித்தொழிப்பதாக ஜம்பமடித்தார். குழப்பம் ஏற்பட்டது. நடுத்தர வர்க்கம், வணிகம் செய்யும் மக்கள், கற்றறிவாளர்கள் நிஜாமின் ஆட்சி முடிவுக்கு வந்ததாக மகிழ்ச்சி அடைந்தனர். இந்திய ஒன்றியத்துடன் இணைப்புச் சாதிக்கப்பட்டது. அவர்கள் ஆயுதப் போராட்டம் திரும்பப் பெறப்பட வேண்டும் என விரும்பினர். ஏழை மக்கள் குழம்பினர். கட்டாயமாக ஆயுதப் போராட்டத்தைத் தொடர கட்சி நிர்பந்தப்படுத்தப்பட்டது.

புதிய முடிவு

நிஜாம் மற்றும் நிலப்பிரபுக்களுடன் சமரசம் செய்து கொண்டதன் மூலம் காங்கிரஸ் மற்றும் ஒன்றிய அரசு துரோகம் இழைத்தன என்பது உண்மையே! ஆயினும் ஒருக்கால், மாறிய சூழ்நிலைக்குப் பொருத்தமான வித்தியாசமான உத்தி தேவைப்பட்டிருக்கலாம். சிலர் நடுநிலை வகித்தர். காங்கிரஸ் ஆதரவாளர்கள் வெளிப்படையாகத் தீவிர பகை உணர்வு கொண்டனர். தங்கள் அடியாள் படைகளுடன் திரும்ப வந்த நிலவுடைமையாளர்கள் அத்தகைய எல்லா பிரிவுகளையும் ஒன்று திரட்டினர். ஆயுதப் போராட்டத்தைத் திரும்பப் பெறுதல், திரும்பப் பெறும் நேரம் காலம் மற்றும் பின்பற்ற வேண்டிய தந்திரோபாயம் கட்சிக்குள் சூடான விவாதப் பொருள்களாயின. கட்சி மதிப்புமிக்க பல தோழர்களின் உயிர்களைப் பலி கொடுத்து இழந்தது. இறுதியாக கட்சி ஆயுதப் போராட்டத்தை விலக்கிக் கொள்வதாகவும் பொதுத் தேர்தல்களில் பங்கேற்கவும் முடிவெடுத்தது. கட்சி மீது தடை விதிக்கப்பட்டிந்ததால் கம்யூனிஸ்ட்கள் ‘மக்கள் ஜனநாயக முன்னணி’ என்ற பெயரில் வரையறுக்கப்பட்ட இடங்களுக்குப் போட்டியிட்டனர், மாபெரும் பெருமபான்மையுடன் வெற்றிவாகை சூடினர்.

முடிவின் மீது மாறுபட்ட பார்வைகள்

இன்றும்கூட தெலுங்கானா ஆயுதப் போராட்டம் மற்றும் அதன் பாடங்கள் மிகவும் பொருத்தமானவை. ஆயுதப் போராட்டம் திரும்பப் பெற்றது இன்னும் விவாதத்திற்குரிய பொருளாக உள்ளது. திரும்பப் பெற்றது தவறான முடிவு என்று கூறும் நக்ஸைலைட்கள் மற்றும் மாவோயிஸ்ட்களின் சில பிரிவுகள், அவர்களின் தற்போதைய ஆயுதம் தாங்கிய போராட்டம் தெலுங்கானாவின் தொடர்ச்சி என்கின்றன. சில தோழர்கள் திரும்பப் பெற்ற முடிவு தாமதமாக எடுக்கப்பட்டது, இன்னும் முன்னதாகவே திரும்பப் பெற்றிருக்க வேண்டும் என்று நம்புகின்றனர். இந்தப் பொருள் மீது ஆழமான நேர்மையான விவாதங்கள் நடத்தப்படுவதன் மூலம் இந்தியப் புரட்சிக்கான முறையான பாடங்களை உய்த்துணரலாம்.

வரலாற்றைத் திரித்தல்

   தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தின்போது, பாஜக மற்றும் அதன் முன்னோடியான ஜன சங்கம் பிறக்கவில்லை ஆயினும், ஆர்எஸ்எஸ் அமைப்பு அப்போது இருக்கவே செய்தது. ஒருமுறை ஆர்எஸ்எஸ் சர்சங்சாலக் (உச்சபட்ச தலைவர்) ஹைதராபாத்தை விட்டு வெளியேறக் கூறியபோது அவரும் அதற்குக் கீழ்ப்படிந்ததாகக் கூறப்படுகிறது. இஸ்லாமுக்கு மதம் மாறுவதற்கு எதிராக ஆர்ய சமாஜ் எதிர்ப் போராட்டம் நடத்தி இந்துயிசத்திற்கு மீண்டும் மாறும் பிரச்சாரத்தை முன்னெடுத்தது. அத்தருணத்தில் குழம்பினாலும் பின்னர் அவர்களில் பலரும் தங்கள் தவறை உணர்ந்தனர். அத்தகைய ஆர்ய சமாஜிகள் பின்னர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்தனர்.

          ஆயுதப் போராட்டத்தின் 74 ஆண்டுகளுக்குப் பிறகு, பாஜக மற்றும் சங் பரிவார் அமைப்புகள் தற்போது திடீர் பாசம் வந்தவர்களாக விடுதலை தினத்தை (லிபரேஷன் டே) அனுசரிக்கின்றனர்; தெலுங்கானாவை விடுதலைப் பெறச் செய்ததில் சர்தார் பட்டேல் தீர்மானகரமான பங்கினை ஆற்றியதாக உரிமை கோருகின்றனர். சுதந்திர இந்தியாவுக்கு எதிராகக் கம்யூனிஸ்ட்கள் போர் தொடுத்ததாக மேலும் குற்றம் சாட்டுகின்றனர். பொய் புனைந்துரைத்தலில் எந்த அளவுக்குக் கீழிறங்க முடியுமோ அப்படி பாஜகவினர் மோசமாகக் கம்யூனிஸ்ட்களைக் களங்கப்படுத்த ‘கம்யூனிஸ்ட்கள் ராஜ்கர்களுடன் கை கோர்த்தனர்’ என அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை சுமத்தவும் துணிகின்றனர். அவர்களது இந்த முழுமையான நோக்கம், தெலுங்கானா ஆயுதப் புரட்சியை முஸ்லீம் அடக்குமுறைக்கு எதிரான இந்துகளின் விடுதலைப் போராட்டம் என்ற உணர்வை ஏற்படுத்துவதற்கே ஆகும். இம்முயற்சி கேடுகெட்ட கட்டுக்கதை என்பதைத் தவிர வேறில்லை. இது அப்பட்டமாக வரலாற்றைச் சிதைத்துத் திரிப்பது.

ஆயுதப் போராட்டத்தின் உண்மை

       உண்மை யாதெனில், நிஜாம் தலைமை தாங்கியதும், இந்து நில உடைமையாளர்கள் மற்றும் சில முஸ்லீம் ஜாகிர்தார்கள் ஆதரித்ததுமான நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான வீரம் செறிந்த போராட்டமே வரலாற்றுப் புகழ் பெற்ற தெலுங்கானா போராட்டம்!

    நிஜாம் மதசார்பற்றவர் அல்ல என்பது உண்மைதான், ஆனால் தனது சொந்த காரணங்களுக்காக அவர் எப்போதும் வகுப்புவாத நிகழ்ச்சிநிரலைப் பின்பற்றவில்லை. அவர் இந்து ஜாகிர்தார்கள் மற்றும் தேஷ்முக்களைப் புரவலராக ஆதரித்தார். அவரிடம் சில இந்து அதிகாரிகளும் இருந்தனர்; இராஜியத்தின் பெரும்பான்மை இந்து குடிமக்களுடன் தொடர்பு கொள்ள நிஜாமிற்கு அவர்கள் தேவைப்பட்டனர். ஆனால் பாரபட்சம், குறைந்தபட்சம் மொழி மற்றும் சமயம் தொடர்பான பாரபட்சம், நிச்சயமாக அங்கே இருந்தது.

     ஆனால் ஆயுதம் எடுத்துப் போராடியவர்கள், ஒடுக்குமுறை நிலப்பிரபுத்துவத்தை எதிர்த்துத்தான் தாங்கள் போராடுகிறோமே தவிர ஒரு மதத்தை எதிர்த்து அல்ல என்பதில் தெளிவாக இருந்தார்கள். தேசிய ஜனநாயகக் கூட்டணி(என்டிஏ) ஆட்சியில் இருந்தபோது பாஜக அந்த அருவருப்பான பிரச்சாரத்தைத் தொடங்கியது. அப்போது ஹைதராபாத் மாநில சுதந்திரப் போராட்டத் தியாகிகள் பரிசீலனைக் குழு (ஸ்கிரீனிங் கமிட்டி, விபி சிங் ஆட்சியின்போது நியமிக்கப்பட்ட அதிகாரபூர்வ குழு, பின்னர் ஐக்கிய முன்னணி ஆட்சியில் உள்துறை அமைச்சர் இந்திரஜித் குப்தா நியமித்த குழு) ஆயிரக் கணக்கான தெலுங்கான விடுதலைப் போராட்ட வீரர்கள் பெயர் பட்டியலை ஓய்வூதியம் வழங்கக் கோரி சிபார்சு செய்தது. ஆனால் அப்போது 1998 முதல் 2004 வரை உள்துறை அமைச்சராக இருந்த எல் கே அத்வானி சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கான அந்த ஓய்வூதியத்திற்கு அனுமதி வழங்க மறுத்து ஸ்கிரீனிங் கமிட்டி சிபார்சை நிராகரித்தார்.

          நிஜாமிற்கு எதிரான மக்கள் போராட்டத்தில் எந்தப் பங்கும் வகிக்காத சங் பரிவார் கும்பல், வெட்கமற்று இப்போது வரலாற்றைத் திரிக்கத் தனது அருவருப்பான தந்திரங்களைச் செயல்படுத்த முயற்சிக்கிறது. பொய்களில் பிறந்த பாஜக, பொய்களிலேயே வளர்ந்தது. அன்னிய ஆட்சியிலிருந்து ஒரு நாடு சுதந்திரம் அடைந்தால் அதனை விடுதலை என்று அழைப்பார்கள். விடுதலை என்பது, அன்னிய ஆட்சியிலிருந்தும், ஒடுக்குமுறையாளர்களின் சுரண்டலிருந்தும் மக்களை விடுவிப்பது என்றும் சமூக ரீதியிலும், அரசியல் ரீதியிலும் உண்மையான ஜனநாயகத்தைச் சாதிப்பது என்றும் விரிவான பொருள் உடையது.

புதிய ஆய்வு தேவை

          தெலுங்கானா ஆயுதப் போராட்டம் பல்வேறு கோணங்களிலிருந்து பரிசீலனை செய்யப்பட வேண்டும். கட்சியால் தலைமை தாங்கப்பட்ட ஏழைகள், விவசாயத் தொழிலாளர்கள், சிறு விவசாயிகள் தவிர, நடுத்தர வர்க்க வேளாண் குடியினர், சிறு குறு வணிகர்கள், அறிவுச் சமூகம் என்ற பிரிவுகளிலிருந்தும் பரந்த அளவிலான மக்கள் ஆயுதப் போராட்டத்தை ஆதரித்தனர், மிக மிக சிரமமான காலங்களில் நமது தலைமறைவு வாழ்வு தலைவர்களைக் காப்பாற்றியுள்ளனர். கவிஞர்கள், எழுத்தாளர்கள், பத்திரிக்கையாளர்கள், அரசு ஊழியர்கள், இந்துகள், முஸ்லீம்கள் எனப் பலதரப்பினர் ஆயுதப் போராட்டத்துடன் உறுதியாக நின்றனர்.

          பெண்கள் முக்கிய பங்கு வகித்தனர்.

  சமூகத்தின் பல்வேறு பிரிவுகள் தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தை ஆதரித்ததற்கான காரணங்கள் யாவை என்பது குறித்து ஆழமான ஆய்வு நடத்த வேண்டிய தேவை உள்ளது. அத்தகைய ஆய்வு மட்டுமே தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தை ஒருங்கிணைந்த முறையில் புரிந்து கொள்ளவதற்கு ஒருவருக்கு உதவிடும்.

     தெலுங்கானா குறித்த இதுவரையான பெரும்பாலான நூல்களும் எழுத்துகளும் போராட்டத்தின் வரையறுக்கப்பட்ட கோணத்தில் இருந்து மட்டுமே செய்யப்பட்டுள்ளது. சிலர் இந்த வீரம் செறிந்த போரின் பகுதி விவரிப்புகளை மட்டுமே தந்துள்ளனர்.  கம்யூனிஸ்ட் இயக்கத்தில் பிளவு ஏற்படுத்திய சூழல், சில முக்கியமான தலைவர்களின் பங்களிப்புகளைக் குறைவுபடுத்தவும் மற்றும் அவர்களையே புறக்கணிக்கும் அளவும் சில எழுத்தாளர்களை முயற்சிக்கச் செய்துவிட்டது. அதற்கு மாறாக, பாரபட்சம் அற்ற, விருப்பு வெறுப்பற்ற முறையில், தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தின் ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த விரிவான பதிவுகளும், ஆய்வு எழுத்தாக்கங்களும் இனி எதிர்கால வரலாற்றாளர்களால் திரிபின்றி எழுதப்படும் என நான் நம்புகிறேன்.

          1948 செப்டம்பர் 17ம் நாள் இந்திய இராணுவம் ஹைதராபாத் மாகாணத்திற்குள்

நுழைந்து, அதனை நிஜாமிடமிருந்து மீட்டு இறுதியில் ஹைதராபாத் மாகாணத்தை இந்தியத் துணைக்கண்டத்தின் ஒன்றியத்துடன் ஒன்றிணைத்த நாள்!

தெலுங்கானா ஆயுதப் போராட்டத் தியாகிகளுக்குச் செவ்வணக்கம்!

(கட்டுரையாசிரியர், சுரவரம் சுதாகர் ரெட்டி,

மேனாள் நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் சிபிஐ மேனாள் பொதுச் செயலாளர்)

--நன்றி : நியூஏஜ் (செப்.18 – 24)

--தமிழில் : நீலகண்டன்,

தொடர்புக்கு 94879 22786