Tuesday 25 August 2020

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 10 : ஹிஜாம் ராவத் சிங் : மணிப்பூர் மக்களின் கதாநாயன், மாநிலத்தின் தந்தை

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் - 10                               



ஹிஜாம் ராவத் சிங் :

மக்களின் கதாநாயன்,

மாநிலத்தின் தந்தை 



--அனில் ரஜீம்வாலே

(நியூஏஜ் ஆகஸ்ட் 16 –22, 2020)

          

ஹிஜாம் ராவத் சிங், மணிப்பூர் மாநிலத்தில் கம்யூனிஸ்ட் கட்சியைக் கட்டியெழுப்பியவர், மாநிலத்தின் ஒவ்வொரு வீட்டிலும் உச்சரிக்கும் பெயர். மணிப்பூர் மாநிலத்தைப் படைத்த சிற்பி என்றும், மணிப்புரி தேசிய இனத்தை நிலப்பிரபுத்துவத்திலிருந்தும், பிரிட்டீஷ் ஆட்சியில் இருந்தும் விடுவித்தவர் என்று கொண்டாடப்படுகிறார். (மணிப்பூர், இம்பால் மேற்கு மாவட்டம், வான்கோய் தாலுக்காவில் உள்ள) ஆய்னம் லேய்கே (Oinam Leikei) என்ற கிராமத்தில் ஓர் ஏழை குடும்பத்தில் 1896ம் ஆண்டு, செப்டம்பர் 30ம் நாள் பிறந்தார் ராவத் சிங். தந்தையை இளம் வயதிலும், பின்னர் அடுத்து தாயையும் இழந்தார். காங்லா அரண்மனைக்கு அருகே இம்பாலில் இருந்த ஜான்ஸ்டன் மேல்நிலைப் பள்ளியில் 7வது வரை படித்தார். அப்போது ராவத் பாலர் சங்கத்தையும், சத்ர சன்மிலான் எனப்படும் மாணவர் அமைப்பையும் ஏற்படுத்தினார். 1913ல் டாக்காவில் படிக்கச் சேர்ந்தாலும், பணம் இல்லாததால் மீண்டும் திரும்ப வர நேரிட்டது.

          பெற்றோரை இழந்த காரணத்தால் தனது செலவுக்காக மாணவர் உணவுச்சாலை ஒன்றில் சமையல்காரனாக வேலை பார்த்துள்ளார், பள்ளி மாதக் கட்டணம் நான்கு அணா கட்ட முடியாமல்!

          இம்பாலில் தனது நண்பர் மைபாம் ஷாம்தென் என்பவருடன் வாங்கெய்யில் (ஸ்ரீகோவிந்தா ஜீ வைணவ ஆலயம் உள்ள இடம்) தங்கி இருந்தார்; அந்த நண்பரோ மகாராஜா சூரசந்த் சிங் அரண்மனையில் பணியாற்றியதால் ராவத்துக்கும் அரச குடும்பத்தினருடன் தொடர்பு ஏற்பட்டது. மகாராஜாவுக்கும் ராவத்தை மிகவும் பிடித்துப் போனது; அவரது மூத்த சகோதரரின் மகளான இளவரசி கொம்தோன்சனா தேவியைத் திருமணம் செய்து வைக்க, ராவத் மகாராஜாவின் மருமகனானார். அரசவையில் அவர் ஒரு நீதிபதியாகப் பின் நியமிக்கப்பட்டார்.

தேசிய உணர்வின் தாக்கம்

          மேலே படிப்பதற்காகக் கல்கத்தா சென்றபோது 1922ல் மகாத்மா காந்தியின் உரையைக் கேட்டார், தேசிய உணர்வில் மூழ்கினார். மணிப்பூரில் முதன் முதலில் காதி கதர் உடை அணிந்தவர் அவர்தான். அவருடைய தேசியவாத கண்ணோட்டம் மற்றும் நடவடிக்கை காரணமாக மகாராஜா கோபம் கொண்டு அவரைச் சமூக விலக்கம் செய்து ஒதுக்கி வைத்தார்.

          கல்வி என்ற பிரச்சனையை மணிப்பூரில் ராவத் முதலில் கையில் எடுத்து மணிப்பூர் கல்வி நிறுவனம் ஒன்றைத் துவக்கினார்; பின்பு அது இம்பால் மகாராஜா உயர்நிலைப் பள்ளியானது. 1927ல் மாஜிஸ்ரேட் ஆனார், ஆனால் வித்தியாசமான மாஜிஸ்ரேட்டாகத் தனது அதிகாரத்தை மக்களுக்கு உதவுவதற்காகப் பயன்படுத்தினார். மகாராஜாவின் ஆதரவோடு நடத்தப்பட்ட பிராமண சபாவுக்கு எதிராக ராவத் கிளர்ந்தெழுந்து, அந்தச் சபாவின் பிற்போக்கு சித்து விளையாடல்களுக்கு எதிராக மூவாயிரம் மக்களை ஒன்றுதிரட்டினார்.

          மணிப்பூர் மகாராஜாவின் அதிகாரம் சவாலைச் சந்தித்தது இதுதான் முதன் முறை.

மகாராஜாவுடன் மோதல்

          1934ல் மகாராஜா ‘நிகில் மணிப்பூர் இந்து மகாசபா’ என்ற அமைப்பை, (நிகில் என்றால் அனைத்து, முழுமையாக என்று பொருள்) இந்து மகாசபாவைப் போன்ற வழிமுறையில் அமைத்தார். (முதலில் அதன் நோக்கம் தேசியமாகவும், கிருஸ்துவ மதத்தின் ஆக்கிரமிப்பைத் தடுத்து நிறுத்துவதாகவும் இருந்தது.) அதன் பெரும்பாலான பணிகளை ராவத் மேற்கொண்டார். ஆனால் விரைவில் முரண்பாடு, மோதல் ஏற்பட்டது. சின்காவில் நடந்த அதன் நான்காவது மாநாட்டு கூட்டத்தில், மகாராஜா கலந்து கொள்ளாதபோது, அமைப்பின் பெயரில் இருந்த இந்து என்ற சொல் கைவிடப்பட்டது. மகாராஜா சினமுற்றாலும், ராவத் தனது பணியை விட்டு விலகி, மகாசபாவின் செயல்பாடுகளில் முழுநேரமும் ஈடுபட்டார்; ஜனநாயக பூர்வமான கோரிக்கைகளை முன்னெடுத்தார்; ராஜ தர்பாரைத் (தேர்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட) சட்டமன்றமாக மாற்ற வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தார். 

          1937ல் மாண்டலேவில் நடைபெற்ற மாநாட்டில் சபா உதவித் தலைவராக ராவத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே வருடம் அசாம் பிரதேச ராஷ்ட்ரிய மாநாட்டிலும் பங்கேற்றார். வயது வந்தோர் வாக்குரிமை அடிப்படையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றம் கோரிய மகஜரைச் சமர்ப்பிக்க நான்காயிரம் பேரிடம் கையெழுத்து திரட்டினார். அதன்பிறகு மகாராஜாவின் வேட்பாளரை 700 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, ராவத் மகாசபா தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். டிக்போய் எண்ணெய் வயல் தொழிலாளர்கள் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டை மகாசபா வன்மையாக கண்டித்தது. மணிப்பூரில் எங்கெங்கும் கதர், காந்தி குல்லா, மூவர்ணக் கொடி என தேசிய இயக்கம் வீறுகொண்டது.

பெருந்திரள் பெண்கள் எழுச்சி

          1939 டிசம்பரில் மாபெரும் பெண்கள் இயக்கம் வெடித்தது. போரின் பெயரால் ஏற்றுமதி மற்றும் கள்ளச்சந்தை காரணமாகச் சந்தையில், அரிசி இல்லாது மறைந்தது போனதே போராட்டத்திற்கு முக்கிய காரணம். மணிப்பூர் பொருளாதாரத்தில் பெண்கள் கேந்திரமான முக்கிய பங்கு வகிப்பவர்கள். (அதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு, இமா கைதேல் - அம்மா சந்தை

மணிப்பூரைத் தாண்டியும் புகழ் பெற்ற பெரிய சந்தையாகும். இது முழுவதும் பெண்களால் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு மணிப்பூரின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வரும் ஐயாயிரத்துக்கும் மேற்பட்ட பெண்கள் அன்றாடம் தங்கள் பொருட்களைக் கொண்டுவந்து விற்கின்றனர். இச்சந்தையில் பூக்கள், காய்

கனிகளில் இருந்து கருவாடு, வாசனைத் திரவியங்கள், கைவினைப்பொருட்கள் வரை அனைத்தும் கிடைக்கும்.) எனவே இயல்பாக அவர்கள் திரும்பத் திரும்ப ’நுபி லான்’ அல்லது ‘நுபி லால்’ ((மணிப்புரியில் ‘பெண்களின் போர்’ எனப் பொருள்படும்) இயக்கத்தைத் துவக்கினர்.

          1981ல் ஆங்கிலேயர்களுக்கும் மணிபுரிக்கும் நடந்த யுத்தத்திற்குப் பிறகு பிரித்தானிய காலனியவாதிகள் மணிப்பூரை ஆக்கிரமித்து மிடின்குனகு சூரசந்த் சிங் (1891-1941), என்ற சிறுவனை மெந்டுராபாக் அரசராகத் தெரிவு செய்தனர். மகாராஜா அரிசி ஏற்றுமதி மற்றும் வர்த்தகச் சூதாட்டத்தில் ஈடுபட்டு சந்தையில் அரிசியைக் கட்டுப்படுத்தினார். முன்பு அரிசி மாநிலத்திற்குள் மக்கள் பயன்பாட்டிற்கு மட்டுமே இருந்தது. செய்தித் தொடர்பு, மோட்டார் வாகன அறிமுகம் மற்றும் மார்வாரி வியாபாரிகள் வந்தபின் அரிசி ஏற்றுமதி வர்த்தப் பொருளாகி மாநிலத்தை விட்டு வெளியே அனுப்பப்படலாயிற்று. இதனால் அவ்வவ்போது நெருக்கடிகள் ஏற்பட்டது. 1939ல் பஞ்சம் போன்ற நிலை ஏற்பட, மக்கள் கொதித்தெழுந்தனர். அதில் பெண்கள் தங்களது ‘இரண்டாவது நுபி லான்’ போரைத் தொடுத்தனர்.

          1939ல் மகாராஜாவையும் கிம்சன் என்ற பிரித்தானிய அரசியல் ஏஜென்டையும் எதிர்த்து அந்தப் போராட்டம் நடைபெற்றது. டிசம்பர் 11 அன்று க்வாய்ராம்பண்ட் பஜாரில் அரிசியைக் காணாத பெண்கள் தர்பார் உறுப்பினர்களை முற்றுகையிட்டனர். அவர்களில் பலர் தப்பி விட, பிடிபட்ட ஷார்ப், தர்பாரின் தலைவரை டெலிகிராப் ஹவுசில் அடைத்து வைத்தனர். அசாம் 4வது ரைபிள் படை தாக்கியதில் பல பெண்கள் காயமடைந்தனர். கிளர்ச்சியாளர்கள் அரசியல் ஏஜென்ட் மாக்ஸ்வெல்லை எதிர்த்தும் முழக்கமிட்டனர்.

          மாநிலத்திற்கு வெளியே இருந்த ராவத் சிங் டிசம்பர் 16ம் நாள் திருபுராவிலிருந்து திரும்பினார். ராவத் ‘மணிப்பூர் பிரஜா சம்மெலினி’ என்ற புதிய அரசியல் கட்சியை நிறுவி, மாபெரும் கூட்டங்களில் உரையாற்றினார்.

கைதும் கம்யூனிஸ்ட்டாக மலர்தலும்

          1940 ஜனவரி 7ம் நாள் கைதான ராவத் மூன்றாண்டு தண்டனையில் முதலில் மணிப்பூர் சிறைக்கும் பின்னர் சில்ஹெட் (பங்களாதேஷில் உள்ள 5வது பெரிய நகரம், ஜலாலாபாத் என்றும் அழைக்கப்படுகிறது) சிறைக்கும் அனுப்பி வைக்கப்பட்டார். சிறையில் ஹேமங் பிஸ்வாஸ், ஜோதிர்மாய் நந்தி மற்றும் பிற கம்யூனிஸ்ட்களைச் சந்தித்தார். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கத்தால் தேசியப் பெரும் எழுச்சி மூள, ஏராளமானோர் சிறைகளில் அடைக்கப் பட்டனர். பல கம்யூனிஸ்ட்கள் மற்றும் புரட்சியாளர்களுடன் தொடர்பு ஏற்பட, கம்யூனிசத் தத்துவம் அறிமுகமானது. ராவத் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக மனு செய்தார்.

          1943 மார்ச் 20ல் விடுதலையான ராவத் மணிப்பூரில் நுழைய அனுமதிக்கப்படாததால் பங்களாதேஷ் கச்சர் மாவட்டத்தில் தங்க நேரிட்டது. அங்கே விவசாயிகள் மற்றும் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்கள் மத்தியில் வேலை செய்தார். (தற்போது பங்களாதேஷில் இருக்கும்) மைமென்சிங் பகுதியின் நேத்ரகொனாவில் 1944 மார்ச்சில் நடைபெற்ற அனைத்திந்திய கிசான் சபா (AIKS) மாநாட்டில் கலந்து கொண்டார்.

          ராவத்தின் முயற்சியால் கச்சர் மாவட்டத்தில் சுமார் 50 சிறந்த மனிதர்கள் கட்சி உறுப்பினராகவும் அதில் பத்து பேர் முழுநேர கட்சி ஊழியர்களாகவும் ஆனார்கள். விவசாய சங்கத்தின் உறுப்பினர் எண்ணிக்கை ஆறாயிரத்தைக் கடந்தது. 1944ல் சுர்மா பள்ளத்தாக்கில் நடைபெற்ற விவசாய மாநாட்டிலும் கலந்து கொண்டார்.  

          இந்திய நாடக மன்றம் (IPTA)ன் குழுஒன்றை ’ஸ்வதேஷ் கானர் தள்’ என்ற பெயரில் கச்சரில் அமைத்தார். (ராவத் அவர்களே பெரும் எழுத்தாளர், கவிஞர், நாடக ஆசிரியர், நடிகர் மற்றும் பத்திரிக்கையாளர். அந்த வகையில் அவருடைய வாழ்க்கை ருஷ்யாவின் லியோ டால்ஸ்டாயுடனும் கவிஞர் டாக்டர் கமல் சிங்குடனும் ஒப்பிடத் தக்கது என்றொரு இணைய (E-PAO) கட்டுரையில் ஒரு போலீஸ் உயர் அதிகாரி எழுதியுள்ளார். ஏனெனில் அவர்களுடைய இலக்கிய ஆளுமை தவிர, செல்வ வாழ்வைத் துறந்து ஏழை எளிய மக்களுக்காக வாதாடவும் போராடவும் செய்தவர்கள் அவர்கள் – இணைப்பு மொழிபெயர்ப்பாளர்).

          1943ல் பாம்பேயில் நடைபெற்ற முதல் சிபிஐ கட்சி காங்கிரஸ் மாநாட்டில் ராவத் சிங் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார். மணிப்பூர் மக்களின் சார்பில் அவர் வாழ்த்துச் செய்தியைத் தெரிவித்தார். இந்தச் செய்தி ’பியூபிள்ஸ் வார்’ சிபிஐ கட்சிப் பத்திரிக்கையில் வெளியானது. அந்தச் செய்தியில், கட்சி உறுப்பினராகத் தான் மனு செய்து வேண்டியது ஏற்கப்படுமானால், அதனைப் புரட்சிகரப் பெரும் பேறாகக் கருதுவேன் என்று பதிவு செய்திருந்தார். மேலும் ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களுக்கு எதிராகப் போராட வேண்டியது மணிப்பூர் மக்களின் முக்கியமான கடமை என்றும், கொரிலா யுத்தத்திற்கான பெரும் படையைத் தான் திரட்டப்போவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

          இதனால் ராவத் மணிப்பூரில் மீண்டும் நுழைவதற்கு ஆங்கிலேய அரசு நிச்சயமாக ஒப்புக் கொண்டிருக்க வேண்டும். ஆனால் அதற்கு மாறாக, பிரிட்டீஷ் அவரைப் பாதுகாப்புக் கைதியாக 1944 செப்டம்பர் 15ம் நாள் கைது செய்தது. விடுதலையானதும் கச்சர் மாவட்ட கிசான் சபாவின் பொதுச் செயலாளர் ஆனார். 1946ல் அசாம் சட்டமன்றத்திற்கானத் தேர்தலில் போட்டியிட்டு சில வாக்குகளில் தோல்வி அடைந்தாலும், பின்னர் அவரே இரண்டு முறை சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946 ஏப்ரலில் மணிப்பூர் பிரஜா மண்டலை நிறுவினார். கம்யூனிஸ்ட் என்று குற்றம் சாட்டி மணிப்பூர் மகாசபாவிலிருந்து அவர் வெளியேற்றப்பட்டார்.

          1946ல் இம்பாலில் இருந்து ஒன்பது மைல் தள்ளி இருக்கும் நம்போல் என்ற இடத்தில் மணிப்பூர் க்ருஷக் சங்கத்தின் இரண்டாவது மாநாடு ராவத் சிங் தலைமையில் நடைபெற்றது.

          இரண்டாவது உலக யுத்தத்தின்போது முன்னேறிய ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களை எதிர்க்க ராவத் கொரிலா படைகளை அமைத்தார். அந்தப் படையில் குறைந்தது 20ஆயிரம் பேர் சேர்வதற்காக அவர் அழைப்பு விடுத்தார். முன்னேறி வந்த ஜப்பான் படைகள் மணிப்பூர் மீது பலமுறை வெடிகுண்டுத் தாக்குதல் நடத்தினர்.

இந்தியா விடுதலை அடைந்தது

          இந்திய விடுதலைக்குப் பிறகு மணிப்பூர் மன்னர் (போதசந்திர) தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்றத்தினை ஏற்படுத்த உறுதியளித்தார். ஜனநாயக செயல்பாட்டு நிகழ்முறைகளைத் துவக்க 9 கட்சிகளின் மாநாட்டை 1947 நவம்பர் 30ல் அமைத்தார் ராவத். அதில் பழங்குடி இனங்களின் பல அமைப்புகளும் சேர்க்கப்பட்டன. ராவத் 1948 பிப்ரவரி – மார்ச் மாதங்களில் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது சிபிஐ கட்சி மாநாட்டில் கலந்து கொண்டார். 1948 ஆகஸ்ட் 23ம் நாள் மணிப்பூரில் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது. மணிப்பூரில் முதல் பொதுத் தேர்தல் 1947ல் நடத்தப்பட்டது. அதில் மணிப்பூர் க்ருஷக் சபா (விவசாய சபை) 23 இடங்களுக்குப் போட்டியிட்டு 5 இடங்களில் வென்றது. வெற்றவர்களில் ராவத்தும் ஒருவர்.

          அப்போதைய மத்திய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் மணிப்பூர், கச்சர், லுஷாய் மலைப் பகுதிகள், திருபுரா முதலியவற்றை உள்ளக்கிய வடமேற்கு எல்லைப்புற மாகாணம் (பூர்பச்சல் பிரதேசம்) ஒன்றை அமைக்கத் திட்டமிட்டார். அந்தத் திட்டத்தை எதிர்த்து 1948, செப்டம்பர் 21ம் நாள் மிகப் பிரம்மாண்டமான கூட்டம் நடத்தப்பட்டது. மணிப்பூரின் பல பகுதிகளிலிருந்தும் மக்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர். போலீஸ் கடும் தாக்குதலில் ஈடுபட்டது.  (புங்டோங்பம் பகுதியில் மக்களைத் தடுத்த போலீசாருடன் ஏற்பட்ட கைகலப்பில் ஒரு போலீஸ் அதிகாரி அந்த இடத்திலேயே கொல்லப்பட்டார். இனி போலீஸ் துறையின் அடக்குமுறை கண்மூடித்தனமான இருக்குமென உணர்ந்த) ராவத் சிங் தலைமறைவானார். மணிப்பூர் பிரஜா சங்கமும், மணிப்பூர் க்ருஷக் சபாவும் தடை செய்யப்பட்டன. ராவத் சிங் தலைக்கு ரூபாய் பத்தாயிரம் சன்மானம் அறிவிக்கப்பட்டது.

          அந்த நேரத்தில் தீவிர இடதுசாரி குழுப்போக்கு, (ஆயுதப் புரட்சி) சாகசங்களின் பாதை கட்சியில் செல்வாக்கு செலுத்தியது. தெலுங்கானா, காகத்துவீப், திருபுரா, மைமென்சிங் முதலிய இடங்களில் ஆயுதப் போராட்டங்கள் நடந்து கொண்டிருந்தன. மணிப்பூரிலும் ஆயுதப் போர் கட்டவிழ்த்து விடப்பட்டது. மாநிலம் முழுவதும் போலீஸ் முகாம்கள் பல அமைக்கப்பட்டன.

          1951ல் ஆயுதங்கள் வாங்கி வர ராவத்தைப் பர்மாவுக்குச் செல்லக் கட்டளையிட்டது கட்சி. பர்மாவில் அப்போது ஆயுதப் போராட்டம் கடுமையாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. அனைத்துக் கம்யூனிஸ்ட் குழுக்களோடும் தொடர்பு கொண்டு அவற்றை ஒருங்கிணைக்க ராவத் முயற்சி செய்தார். அவர்களும் மணிப்பூரின் போராட்டத்திற்கு உதவுவதாக உறுதி அளித்தனர். ஆனால் திரும்பும் வழியில் ஹிஜாம் ராவத் சிங்கை டைபாய்டு சுரம் தாக்கியது. எல்லையோர கிராமமான வாங்போவில் 1951 செப்டம்பர் 26ம் நாள் மணிப்பூரின் வீரத் திருமகன் விழி மூடினார்.

      “பொருளாதார ரீதியாக மணிப்பூர் பின்தங்கிய நாடு…இந்தப் பெரும் இடைவெளி பற்றாக்குறையை இட்டு நிரப்புவதும், நாட்டில் முன்னேற்றம் மற்றும் வளர்ச்சியைக் கொண்டுவருவதுமே நம் எல்லோருடைய சரியான அணுகுமுறையாக இருக்கும்.”

--ஹிஜாம் ராவத், நிகில் இந்து மணிப்பூர் மகாசபாவின் முதல் மாநாட்டில்

          “தற்போது ஒரு நல்ல தருணம் வாய்த்திருக்கிறது; இந்த நேரத்தில் முக்கியமான கேள்வியாக நம்முன் நிற்பது பரஸ்பரம் கூடுவதும் ஆக்கபூர்வமாகக் கட்டி எழுப்புவதும்தான். நம்முடைய சொந்த தனிநபர் கோப தாபங்கள், பகைமை, இனக்குழு மோதல் மற்றும் தேசிய பகை உணர்ச்சியை மறந்து, நாம் அனைவரும் தேசத்தை முழுமையாக நேசிக்கத் தயாராவோம்.”

--ஹிஜாம் ராவத், நிகில் இந்து மணிப்பூர் மகாசபாவின் 2வது மாநாட்டில்

(மணிப்பூர் சட்டமன்றத்தை நோக்கி ஹிஜாம் ராவத் சிலை, சமீபத்தில் மாநில முதலமைச்சரால் திறந்து வைக்கப்பட்டது)

பிறசேர்க்கை - 1

        1891-இல் ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் வரும் சமயத்தில் மணிப்பூர் ஒரு தனியரசரின் ஆளுகைக்கு உட்பட்ட ஒரு சமஸ்தானம் (Princely State) ஆகும். 1946 அக்டோபர் 15 அன்றே மணிப்பூர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. 1947-இல் மணிப்பூர் அரசியல் சட்டம் ஒரு ஜனநாயக அரசை உருவாக்கியது. அது  செயற்பாட்டு அதிகாரமுள்ள அரசரைத் தலைவராகவும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் அடங்கிய சட்டசபையையும் கொண்டது. 1956 முதல் யூனியன் பிரதேசமாகவே இருந்து வந்த மணிப்பூர், 1972-இல் தனி மாநிலமானது . மணிப்பூர் மாநிலத்தில் சுமார் 25 மில்லியன் பழங்குடி மக்கள் வசித்து வருகிறார்கள். மித்திஸ், பன்கல்ஸ், நாகா, குக்கீஸ் போன்ற பழங்குடி இனமக்கள் முக்கியமானவர்கள்.

பிறசேர்க்கை - 2

           14.4.1944 அன்றுதான் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் தலைமையிலான ஆசாத் ஹிந்த் அரசு,  மணிப்பூர் மாநிலத்திலுள்ள மொய்ரங் மற்றும் நாகலாந்து மாநிலத்தின் பல பகுதிகளை ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசின் பிடியிலிருந்து கைப்பற்றியது. இந்திய தேசிய ராணுவப் படையின் வெற்றியை மொய்ரங் தினமாக மணிப்பூர் மாநிலத்தில் கொண்டாடுகிறார்கள்.   ஆங்கிலேயர்கள் சந்தித்த மிகக் கடுமையான போர்களில் இதுதான் மிகக் கடினமான போர்  என பிரிட்டிஷ் அரசாங்கமே ஒப்புக் கொண்டுள்ளது.  மேலும், இதுதான் ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திற்கு எதிராக இந்தியா சந்தித்த முதல் வெற்றி.

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்


Wednesday 19 August 2020

வரலாற்று தலைவர்கள் வரிசை 9 தோழர் இசட் ஏ அகமத் : அறிவார்ந்த மக்கள் தலைவர்

                  



 

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் -9

தோழர் இசட் ஏ அகமத் :

அறிவார்ந்த மக்கள் தலைவர்


--அனில் ரஜீம்வாலே

 (நியூஏஜ் ஆக.9—15, 2020)

          ZA அகமது அவர்களுடைய தாத்தா ஜலந்தரைச் சேர்ந்த ராம் சிங் சௌகான், 1930ல் முஸ்லீம் பக்கீர் (முஸ்லீம் புனிதர்) ஒருவரைச் சந்தித்த பிறகு முஸ்லீமாக மதம் மாறியவர். அவருடைய படம் இப்போதும் லாகூர் சீப்ஸ் கல்லூரியில் இடம் பெற்றுள்ளது. அகமதின் தாயார், இக்பால் பேகம், ஜாட் குடும்பத்திலிருந்து வந்தவர்; தந்தை, ஜீயாவுதீன் அகமத் (தற்போது பாக்கிஸ்தானில் உள்ள) மிர்பூர் காஸ் பகுதியின் டிஎஸ்பி காவல்துறை அதிகாரி. ஜெய்னுல் ஆபிதின் (ZA) அகமத், மிர்பூர் காஸ் பகுதி உமர்காட் என்ற ஊரில் 1907 செப்டம்பர் 29ல் பிறந்தார். (ஜெய்னுல் ஆபிதின் என்பதற்கு நம்பிக்கையாளர்களின் அணிகலன் என்பது பொருள்.) அவரிடம் தேசிய மற்றும் கம்யூனிஸ்ட் பார்வையிலான கருத்துகள் வளர்ந்து உருவாவதற்கு அவரது தந்தையின் ஆழமான செல்வாக்கே காரணம்.

          இஸ்லாமிய மதரசா பள்ளியின் பழமைவாதம் மற்றும் இருண்மைவாதக் கருத்துகள் காரணமாக ஜெய்னுலை மதரசா பள்ளிக்கு அனுப்புவதை தந்தை எதிர்த்தார்; வீட்டிலேயே தனிப் பயிற்சிக்கு ஏற்பாடு செய்து ஆங்கிலம் கற்பித்தார். 1914ல் குஜராத் கோத்ராவில் உள்ள பள்ளிக்கும் பின்னர் மெட்ரிகுலேஷன் படிக்க ஹைத்திராபாத் (சிந்து மாநிலம்) சென்றார். அலிகார் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அகமத் தனது ஹானர்ஸ் படிப்பில் பிரஞ்ச் புரட்சியைத் தேர்வு செய்தார்.

          ஜெய்னுல் அங்குதான் ஷபூர்ஜி சக்லத்வாலா பற்றி கேள்விப்பட்டார். ஜெய்னுல் ‘தீவிர கட்சி’ ஒன்றை அமைத்து தனது கருத்துக்கு KM அஷ்ரப்-ஐயும் இணங்கச் செய்தார். தந்தையிடம் லெனின் வாழ்க்கை சரித்திர புத்தகம் ஒன்றைப் பார்த்தபோது தந்தைதான் கூறினார், ‘புதிய சமூதாயம் ஒன்றைப் படைத்துவரும் மாபெரும் மனிதர், லெனின்’ என்று.

மார்க்சியத்தோடு தொடர்பு

          ஹானர்ஸ் படிப்பு முடிந்ததும் 1928ல் மேற்படிப்புக்காக இங்கிலாந்து சென்றார். அதற்காக மாதம் ரூ250/- கடன் உதவித் தொகையைத் தாமஸ் குக் அண்ட் கம்பெனி மூலமாக முஸ்லீம் அறக்கட்டளை ஒன்றிடமிருந்து பெற்று வந்தார். தேசப் பிரிவினைக்குப் பிறகு அந்த அறக்கட்டளை பாக்கிஸ்தான் நாடோடு சென்று விட்டதால், அகமத் அந்தத் தொகையைத் திரும்பச் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என்பது விந்தையே! லண்டனில் சக்லத்வாலாவை மீண்டும் சந்தித்தார். (அவர் இந்தியப் பார்சி வம்சத்தைச் சேர்ந்த பிரிட்டீஷ் அரசியல்வாதி.) அவர்மட்டும் கம்யூனிஸ்ட் ஆகாமல் இருந்திருந்தால் பெரும் டாட்டா குடும்பத்தின் வளர்ப்பாகி இருப்பார். சக்லத்வாலா, 1927ல் பிரிட்டன்  பாட்டர்சீ தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் கம்யூனிஸ்ட் எம்பி ஆவார்.

          அகமத் லண்டன் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ் கல்லூரியில் படித்தார். சாஜ்ஜாட் ஜாகீர், அஷ்ரப், சௌகத் உமர், நிகரேந்து தத் மஜூம்தார் முதலானவர்களைக் கம்யூனிஸ்ட் குழுவில் சந்தித்தார். கட்சி பள்ளியில்  பிரபலமான பிரிட்டீஷ் கம்யூனிஸ்ட்கள் ரால்ப் ஃபாக்ஸ் மற்றும் பென் பிராட்லே ஆகியோரது சொற்பொழிவுகளில் கலந்து கொண்டார். அந்தக் குழு ‘பாரத்’ என்ற இதழை நடத்தியது. அவர்கள் மார்க்சிய தத்துவ நூல்களை வட்டமேசை மாநாடுகளில் கலந்து கொள்ள வந்தவர்கள் மூலம் இந்தியா அனுப்பி வைத்தனர் –மாநாட்டில் கலந்து கொண்ட பிரதிநிதிகள் பொதுவான சோதனைகளிலிருந்து விலக்கு பெற்றவர்கள் என்பதால் இது சாத்தியமானது. அதில் ஒரு கட்டு புத்தகம் அலகாபாத், ஆனந்த பவனம் வழிதேடி வந்து சேர்ந்து, அந்த மாளிகையில் நேருவின் புத்தகச் சேகரிப்பை மேலும் வளப்படுத்தியது! அந்தப் புத்தகச் சேகரிப்பு பொக்கிஷத்திற்கு அகமதை அழைத்துச் சென்றவர் இந்திரா காந்தி.

          லண்டனில் தங்கியிருந்தபோது இசட் ஏ அகமதும் நண்பர்களுமாக ஹாலந்து முதல் இத்தாலிவரை ஐரோப்பாவிற்கு ஒரு சைக்கிள் பயணத்தை இரண்டரை மாதங்களில் மேற்கொண்டனர். அவர் இந்தியன் சிவில் சர்வீசஸ் எனப்படும் ஐசிஎஸ்-சில் சேர மறுத்து விட்டார்; மாறாக, பிஹெச்டி ஆய்வைப் ‘பெண்கள் மற்றும் குழந்தைத் தொழிலாளர் உழைப்பு’ என்ற தலைப்பில் எடுத்துக் கொண்டு, இந்தியாவில் ஆறுமாத கால களப் பணியை மேற்கொண்டார்.  1935ல் அவருக்கு PhD டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

          பாசிசம் அதிகரித்து வந்த தருணத்தில், கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் ஹாரி போல்லீட் அவருடன் பாசிச எதிர்ப்பு ஐக்கிய முன்னணி குறித்து விவாதித்தார். 1934ல் ப்ரூசெல்சில் நடைபெற்ற பாசிச எதிர்ப்பு மாநாட்டில் தோழியர் ஹஜ்ரா பேகம் மற்றும் மற்றவர்களோடு அகமதும் கலந்து கொண்டார்.

இந்தியா திரும்பல்

1936ல் பாம்பே திரும்பிய அகமத், சர்தேசாய் முதலானோரைச் சந்தித்தார். மிகவும் இறுக்கமான BTரணதிவேயுடன் அவருக்கு ஏற்பட்ட சந்திப்பு ஏமாற்றமளித்தது; பிடிஆர், காமின்டர்ன் அமைப்பின் ஐக்கிய முன்னணி கோட்பாட்டை (1935) ஏற்கவில்லை.

கராச்சி அடைந்ததும், அவருடைய தந்தையார் தனக்கு அனைத்துத் தகவல்களும் உளவு அறிக்கைகள் மூலம் தெரியுமெனக் கூறினார், அவர் டிஐஜி காவல் அதிகாரி ஆயிற்றே. சிலகாலம் அகமத் ஆசிரியராகப் பணியாற்றினார்; சாஜ்ஜாட் ஜாகீரிடமிருந்து லக்னோ வருமாறு அழைப்புக் கடிதம் வந்தது. அப்போதுதான் நாடு திரும்பியிருந்த அவருடைய லண்டன் நண்பர்கள் குழுவினர், மனதை ஈர்த்த லக்னோ காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டனர். அந்நகரில் அப்போது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய கமிட்டி கூடியிருந்தது; பிசி ஜோஷி, கட்சி உறுப்பினராக அகமதுக்கு ஒப்புதல் வழங்கினார். பின்னர் அவர் கட்சியின் மத்திய குழுவுக்கு அழைப்பாளர் ஆக்கப்பட்டார்.

அலகாபாத்தில் நேருவைச் சந்தித்த பிறகு ஆனந்த பவனத்தில் மாதம் 50ரூ ஊதியத்தில் அகமது முழுநேர ஊழியரானார். இதன் மத்தியில் ஹஜ்ரா பேகத்துடன் அவருக்குத் திருமணம் நடைபெற்றது; திருமணத்திற்குப் பிறகு மாத ஊதியம் ரூ75/-ஆக அதிகரிக்கப்பட்டது. தேசிய முன்னணி கோட்பாட்டின் ஒரு பகுதியாக, கம்யூனிஸ்ட்கள் அப்போது காங்கிரசில் பணியாற்றுவது வழக்கம்.

காங்கிரசில் பணியாற்றல்

அப்போது அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியில் நேரு மேற்பார்வையில் பல்வேறு இலாக்காகளை அமைத்தபோது, ZAஅகமத் விவசாய இலாக்கா செயலாளர் ஆனார். காங்கிரஸ் கட்சியின் விவசாய இலாக்கா பல புத்தகங்களையும், சிறு கையேடுகளையும் வெளியிட்டது. “இந்தியாவில் வேளாண் பிரச்சனைகள்” என்ற அகமதின் புத்தகம் மிகவும் புகழ்வாய்ந்தது. இவரது பணியால் மிகவும் ஈர்க்கப்பட்ட நேரு, அகமதைக் காந்திஜிக்கு அறிமுகம் செய்து வைத்தார். அந்தப் புத்தகம் பற்றி அறிந்து கொண்ட காந்திஜி அகமதை ஆரத் தழுவினார்.

இதன் மத்தியில் அகமத், ‘பத்திரிக்கைத் தொழிலாளர்கள் சங்கம்’ உட்பட பல தொழிற்சங்க அமைப்புகளைத் திரட்டி அமைத்தார். ஆர் டி பரத்வாஜைச் சந்தித்தார். (இந்தக் கட்டுரை தொடரின் 5வது கட்டுரை அவரைப் பற்றியது) அகமத் காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டார். 1937–39ல் உ.பி. பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர் ஆனார். உத்திரப் பிரதேசத்தின் விவசாய பகுதிகளில் ஷிப்பன் லால் சக்சேனா மற்றும் முன்ஷி கலிகா பிரசாத் உடன் சுற்றுப்பயணம் செய்தார். பல கட்சி கிளைகளை அமைத்தார். 1936–40களில் கான்பூரில் பல தொழிலாளர் இயக்கங்களில் பங்கேற்றார்.

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் செயலாளர்களில் ஒருவரானார் அகமது. பீகார் மோதிகாரி பகுதியில் நடந்த விவசாயிகள் மாநாட்டில் ராகுல சாங்கிருத்தியாயன் அவர்களைச் சந்தித்தார். பின்னர் பிரத்தேகமாகக் கட்டப்பட்ட குடிசையில் அகமதோடு சாங்கிருத்தியாயன் மூன்று வாரங்கள் ஒன்றாகத் தங்கியிருந்தார். அப்போது அநேகமாக அங்கிருந்துதான் ”வால்கா முதல் கங்கை வரை” நூலின் சில பகுதிகளை அவர் எழுதியிருக்கக் கூடும். விரைவில் ராகுல சாங்கிருத்தியாயனும் பின்னர் அகமதுவும் கைது செய்யப்பட்டு ஒன்னரை மாதங்களுக்குப் பிறகு தியோலி அனுப்பி வைக்கப்பட்டார்கள். 

தியோலி முகாமில்

          ராஜஸ்தான் பாலைவனத்தின் நடுவே கோடாவிலிருந்து 60 கி.மீ. தூரத்தில் இந்தத் தடுப்புக் காவல் சிறப்பு முகாம் 1857ல் --மிகவும் ‘அபாயகர’மான சுதந்திரப் போராட்ட வீரர்களை அடைப்பதற்கென்றே—கட்டப்பட்டது. இராணுவத்தினர் கட்டுப்பாட்டின்கீழ் வைக்கப்பட்டிருந்தது. சிறைக் கைதிகளில் பெரும்பாலானோர் கம்யூனிஸ்ட்கள். முகாமில் முறையான தொடர் வகுப்புகளை அவர்கள் நடத்தினார்கள். எஸ் ஏ டாங்கே பொருளாதாரம் குறித்து அகமதை வகுப்பெடுக்கக் கூறினார்; அவரது உரை அனைவராலும் பெரிதும் விரும்பப்பட்டது.

          தங்களைத் தங்கள் சொந்தப் பகுதி சிறைகளுக்கு இடமாற்ற வேண்டும், குடும்பத்தினருக்கு நிதி உதவி செய்ய வேண்டும் என்று கோரி சிறைவாசிகள் உண்ணாவிரதப் போராட்டம் துவக்கினர். அகமதின் உடல்நிலை பாதித்தது. வெளியே நாடுமுழுதும் எதிர்ப்பு இயக்கங்கள் வலுத்தன, குடும்பத்தின் பெண் உறுப்பினர்கள் உள்துறை செயலாளர் மாக்ஸ்வெல் அவர்களை ஒரு குழுவாகச் சந்தித்தனர். கைதிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் தாங்களும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம் என உறுதிபட தெரிவித்தனர். கோரிக்கைகள் ஏற்கப்பட்டு அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அகமதோ அங்கிருந்து பரெய்லி மத்தியச் சிறைக்கு அனுப்பப்பட்டு பின்னர் 1942 ஏப்ரலில் தான் விடுவிக்கப்பட்டார். அங்கிருந்து லாகூர் சென்றவர் அங்குப் புதிதாகக் கட்சி அலுவலம் நிர்மாணிக்க உதவினார்.

உ.பி.யில் பணி

          லக்னோ திரும்பியதும் அகமது ‘இந்தியா பப்ளிஷிங் ஹவுஸ்’ மற்றும் ‘சோஷலிச புத்தக மன்றம்’ ஒன்றையும் அமைத்தார். அந்தப் பணியில் சுபாஷ் போஸ், ஜெயபிரகாஷ் நாராயணன் போன்ற புகழ்பெற்ற தலைவர்கள் உடன் இருந்தனர். இப்படி அறிவார்ந்த பலர் அந்தப் பணியில் ஈடுபட்டது மட்டுமல்ல, அகமதும் மற்றவர்களும் பல புத்தகங்களையும் எழுதினர். 

          கான்பூரில் பீடி, பத்திரிக்கை, தகரம், குதிரை வண்டி (டோங்கா), ரிக்க்ஷா, கடைகள் மற்றும் பிற தொழிலில் ஈடுபட்டத் தொழிலாளர்கள் மத்தியில் பணியாற்றினார். உ.பி., அலகாபாத்தில் உள்ள சிவ்யோகி பகுதியில் அமைந்த ஆர்டனஸ் தொழிற்சாலையில் தொழிற்சங்கம் அமைத்தார். மேலும் இராணுவ இன்ஜினியரிங் ஊழியர்களுக்கான சங்கத்தையும் அமைத்தார். பின்னாட்களில் AITUC மத்திய தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளர் ஆன ஸ்ரீவத்சவாவை இங்கேதான் அகமது சந்தித்தார். அகமது அவரைக் கட்சிக்குள் கொண்டு வந்தார்.

          1944ல் பெனாரசில் (காசி) நடந்த கைத்தறித் தொழிலாளர்கள் மாநாட்டில் அகமது கலந்து கொண்டார். அங்கே மாவ் என்ற இடத்தை அவரது மையமாகக் கொண்டு அவர் செயல்பட்டபோது, நெசவுத் தொழிலாளர்களால் ஈர்க்கப்பட்டவர் தம் முழுவாழ்நாளையும் அவர்கள் மத்தியில் பணியாற்ற அர்ப்பணிக்க முடிவு செய்து அவர்களுடனே நிரந்தரமாகத் தங்கவும் விரும்பினார். ஆனால் கட்சி இதற்குச் சம்மதிக்கவில்லை.

அகில இந்திய கிசான் சபாவில்

          அகில இந்திய விவசாயிகள் சங்கம் (ஆல் இந்தியா கிசான் சபா –சகஜானந்த சரஸ்வதி துவக்கியது) முதல் அமைப்பு நிலை மாநாட்டிற்கு 1936 ஏப்ரல் 11ல் இந்தியா முழுவதும் இருந்து பிரதிநிதிகள் லக்னோ வந்தனர். ZAஅகமது ஒரு பார்வையாளராகக் கலந்து கொண்டார். அங்கே அவர் இந்துலால் யாக்னிக் மற்றும் என்ஜி ரங்காவைச் சந்தித்தார்; அகமதிடம் அவர் உங்கள் வாழ்க்கையை இந்தி பேசும் பிராந்தியத்தில் விவசாயிகள் இயக்கத்தில் அர்ப்பணிக்கக் கேட்டுக் கொண்டார். விவசாயச் சங்கத்தின் மத்திய நிர்வாகக் குழுவில் அகமது இணைத்துக் கொள்ளப்பட்டார். ஜெய் பகதூர் சிங், சர்ஜூ பாண்டே இருவரோடும் ZAஅகமதும் சேர்ந்து உபி விவசாயிகள் சங்கத் ‘திரிமூர்த்தி’களாக விளங்கினர். முன்ஷி கலிகா பிரசாத்தைக் கட்சிக்குக் கொண்டு வந்தார் ZAஅகமது.  

1943 பாம்பேயில் முதலாவதாக நடந்த கட்சி காங்கிரஸ் மாநாட்டில் அகமது பங்கேற்றார். கிசான் சபாவும் கட்சியும் உ.பி.யில் விரைவாகப் பரவியது. கட்சிக்கு நிதி திரட்ட குறுக்கும் நெடுக்குமாக நீண்ட தொலைவு பயணங்களை மேற்கொண்டபோது தோழியர் ஹஜ்ரா பிரபலமான தலைவரானார் என்பதை அங்கே எழுப்பப்பட்ட ஒரு முழக்கமே உணர்த்தும்: “ஆ ஹை ஹஜ்ரா, தி தோ பஜ்ரா” (‘ஹஜ்ரா வந்து விட்டார், கம்பு முதலிய தானியங்களைக் கொடுத்து விடுங்கள்’). பிக்டா (பீகார்), மலபார் (கேரளா) முதலிய இடங்களுக்கு விரிவாகப் பயணம் மேற்கொண்டார். இஎம்எஸ் நம்பூதிரிபாட்டைச் சந்தித்தார்; பாம்பே வந்தபோது பிசி ஜோஷி அவரை, அப்போது பஞ்சமும் வறட்சியும் கொடுமையாகப் பரவிய வங்கத்திற்குப் போகக் கூறினார். அகமது தேபாகா இயக்கத்திலும் பங்கு பெற்றார்.  (நிலஉடமையாளருக்குக் குத்தகை விவசாயிகள் தரவேண்டிய பங்கு, விளைச்சலில் பாதி என்பதை மூன்றில் ஒருபங்காகக் குறைக்க வேண்டுமென்ற வங்காள விவசாயிகளின் கோரிக்கையில் உருவானது தேபாகா இயக்கம். கிசான் சபா இந்த இயக்கத்திற்குப் புது உத்வேகம் அளித்தது.)

தேச விடுதலைக்குப் பிறகு

          ZAஅகமது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கல்கத்தா கட்சி காங்கிரஸில் (1948)  கலந்து கொண்டார். பிடிஆர் பாதை அப்போது கட்சியில் ஆதிக்கம் செலுத்தியது. அகமது தலைமறைவு வாழ்க்கையில் சென்றார். எச்சரிக்கை கிடைத்ததை அடுத்து, லக்னோ கட்சி அலுவலகத்தில் இருந்த சுமார்70 தோழர்கள் தலைமறைவாயினர், கட்சி அலுவலகமும் காலி செய்யப்பட்டது.  ஃபெரோஸ் கோதியில் சில நாட்கள் தங்கிய அகமது டெல்லிக்கு ரயில் மூலமாக ஓர் இராணுவ அதிகாரி சீருடையில் சென்றார்! பின்னர் டகோடாவில் அவர் லாகூர் புறப்பட்டுச் சென்றார். பாக்கிஸ்தானிலும் அவருக்கு எதிராகக் கைது வாரண்டு இருந்தது. தனது சகோதரர் ஜப்ரூதின் அகமது, டிஐஜியாக இருக்கும் கராச்சி புறப்பட்டார். சொல்லவே தேவையில்லை, இயல்பாகவே அகமது போலீஸ் ஜீப்பிலே சுற்றினார்! அவருடைய சகோதரர் ஏனைய காவலர்களுக்கு அவரைவிட்டு விலகி இருக்கக் கூறியதோடு, அகமது தன்னுடன் தான் தங்குவார் என்று மிகத் தெளிவாகக் கூறி விட்டார்.

          வணிகம் செய்பவர் உடையில் அகமது ஜோத்பூர் புறப்பட்டு, பாம்பே சென்று மீண்டும் அலகாபாத் திரும்பி கட்சியின் ’இருட்குகை’ (den) அறையில் தங்கினார். மிகக் கூர்மையாக பிடிஆர் பாதையை விமர்சனம் செய்தார். விளைவு, உடல் உழைப்பு வேலைகளை ‘மட்டும்’ பார்த்தால் போதும் என உத்தரவிடப்பட்டார் – அதன் பொருள், இனி அறிவார்ந்த கொள்கை கோட்பாடு பணிகளைச் செய்ய வேண்டாம் என்பதுதான்! அவர் சமையல் பாண்டங்கள் பாத்திரங்கள் கழுவினார்!

          அது மட்டுமல்ல, அகமது (புரட்சியாளராக அல்லாமல்) ஒரு ’சீர்திருத்தவாதி’யாக, ஒரு (பிற்போக்கு) ‘திருத்தல் வாதி’யாக மாறிவிட்டதால், அவரை மணமுறிவு (டைவர்ஸ்) செய்துவிடும்படி ஹஜ்ராவுக்கு பிடிஆர் ‘உத்தரவிட்டார்’!  அவர்கள் தீரத்துடன் அதை மறுத்துவிட்டனர்.

          அதன் மத்தியில் காம்-இன்பார்ம் (கம்யூனிஸ்ட் தகவல்) பத்திரிக்கையில் வந்த தலையங்கம் அனைவரையும் அதிர்ச்சி கொள்ள வைத்தது. அது கூறியது : இந்தியா விடுதலை அடைந்து விட்டது; இனி அதன் பொருளாதார, சமூகநலப் பணிகளை வலுப்படுத்துவதற்கான முயற்சிகள் போன்றவைகளை ஒவ்வொருவரும் மேற்கொள்ள வேண்டும். இது எல்லாமே பிடிஆர் பாதைக்கு முரணானவை! இப்போது என்ன செய்ய வேண்டும்? என சிவ் குமார் மிஸ்ரா கேட்டார். பிரதேச கமிட்டியின் அவசரக்கூட்டம் கூட்டப்பட்டது. முதலில் சிவ் குமார் யாதவும் பின்னர் ZAஅகமதுவும் உபி கட்சி செயலாளர் ஆனார்கள். 1951ல் தலைமறைவாக நடத்தப்பட்ட கல்கத்தா கட்சி காங்கிரஸ் மாநாட்டில் அகமது இரகசியமாகக் கலந்து கொண்டார். அம்மாநாட்டில் அஜாய் கோஷ் பொதுச் செயலாளராகத் தேர்வானார்.

கட்சி மற்றும் பாராளுமன்றப் பொறுப்புகளில்

          21 உறுப்பினர்கள் கொண்ட கட்சி மத்திய குழுவில் ZAஅகமது இடம் பெற்றார். 1953 –54ல் மதுரையில் நடைபெற்ற கட்சி காங்கிரஸில் மத்திய குழுவிற்கு அவர் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1956 பாலகாடு கட்சி காங்கிரஸில் பொலிட் பீரோ உறுப்பினராகத் தேர்வானார். 1958 அமிர்தசரஸ் மாநாட்டில் மத்திய செயலகத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு செயலகத்தில் 1968 வரை நீடித்தார். 1968 பாட்னா கட்சி காங்கிரஸில் மத்திய நிர்வாகக் குழுவில் இடம் பெற்ற அகமது அதிலிருந்து 1992வரை அந்தப் பொறுப்பில் செயலாற்றினார்.

          நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக 1958 –62, 1966, 1972 – 78 மற்றும் 1990 –94 ஆண்டுகளில் பணியாற்றினார். இதன் மத்தியில் அவர் மாநில மேலவைக் கவுன்சிலுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

          மக்களின் அறிவார்ந்த தலைவராக விளங்கிய டாக்டர் ஜெய்னுல் ஆபிதின் அகமத் 1999ம் வருடம் ஜனவரி 17ம் நாள் மறைந்தார்.

                                                                                          --தமிழில் : நீலகண்டன்,

 என்எப்டிஇ, கடலூர்

 


Monday 17 August 2020

புதிய கல்விக் கொள்கை : கற்பனைகளும் கட்டுடைத்தலும்

 

   

புதிய கல்விக் கொள்கை :

கற்பனை கதையாடல்களும், உண்மை நிலைகளும்

--டாக்டர் யுகல் ராயலு

(சிபிஐ கட்சிக் கல்வி இலாக்கா பொறுப்பாளர்)

(நியூஏஜ் ஆக.9 – 15 இதழ்)

        நவீன மனித சமுதாயத்திற்கு உணவு, உடை, உறையுள் போல கல்வியும் மிக முக்கியம் என்பது சொல்லித் தெரிய வேண்டியதில்லை. எல்லா வளர்ந்த சமூகங்களிலும் பொதுவாக நன்கு வளர்ச்சி பெற்ற கல்வி முறை உள்ளது. பெரும்பான்மையான ஐரோப்பிய நாடுகளில் சோஷலிச முறைபோல அனைவருக்குமான சமவாய்ப்பு அரசு கல்வியை, உயர்ந்த தரத்தில், சீரான முறையில் வழங்கும் கொள்கையை ஏற்றுக் கொண்டுள்ளன. நமது நாட்டிலும்கூட எந்தப் பகுதிகளிலெல்லாம் கல்வி சென்று அடைந்ததோ, அங்கெல்லாம் அனைத்து வகைகளிலும் வளர்ச்சி பெற்றிருப்பதை நாம் பார்க்க முடியும்.

        எல்லா வாக்குறுதிகளையும்போலவே, புதிய கல்விக் கொள்கை (என்இபி)யிலும் மோடி அரசு பெரும் ஆரவாரமான கூச்சலை எழுப்பியுள்ளது. புதிய கல்விக் கொள்கை வரைவு அறிக்கையைத் தயாரித்த குழுவின் தலைவர் டாக்டர் கஸ்தூரி ரங்கன் (விண்வெளி ஆராய்ச்சி கழகம் இஸ்ரோவின் முன்னாள் தலைவர், விஞ்ஞானி, கல்வியாளர்), பெரும் புகழ்பெற்ற ஒரு பேராளர். ஆனால் வியப்பிற்குரியது, டாக்டர் கஸ்தூரி ரங்கன் வழங்கிய ஆலோசனைகளுக்கும், உண்மையில் அமைச்சரவை முடிவெடுத்த கல்விக் கொள்கைக்குமிடையே உள்ள பாரதூரமான வேறுபாடு இடைவெளிகளாகும்.

       புதிய கல்விக் கொள்கை, பிரம்மாண்டமான உறுதிமொழிகளையும், அடைய வேண்டிய முழுமையான இலக்குகள் குறித்த வர்ணனைகளையும் டாம்பீகமாகக் கொண்டிருக்கிறது. வார்த்தையாடல் ஜாலங்கள், மிகத் திறமையாக இரண்டு விஷயங்களை மூடி மறைக்கிறது; ஒன்று, அனைத்துத் துறைசார்ந்த உயர் கல்விகளையும் தனியார்மயப்படுத்தும் கடுமையான முயற்சி; இரண்டு, பள்ளிக் கல்வியை மிகத் தந்திரமாகக் காவிமயப்படுத்துவது. சொல்லப்படும் கற்பனை எதிர்பார்ப்புயையும், அதனைத் தோலுரிக்கும் உண்மை நிலைகளையும் ஒவ்வொன்றாகப் பட்டியலிடலாம்:

கற்பனை எதிர்பார்ப்பு-1: வேறுபட்ட துறைகளில் பலவிதமான பாடப் பிரிவுகளிலிருந்து மாணவர்கள் பல்துறைகளைத் தேர்ந்தெடுக்க வாய்ப்பளிப்பது (Multidisciplinary system)!

உண்மைநிலை : பல்துறை முறை என்றால் அனைத்து மட்டங்களிலும் ஒவ்வொரு பாடத்திற்கும் கற்பிக்கும் ஆசிரியர்கள் தேவை. பள்ளிகள், கல்லூரிகளில் போதுமான ஆசிரியர்கள் இல்லை என்பதே எதார்த்தம். செலவைக் குறைக்க அரசு, நிரந்தர ஆசிரியர்களுக்கு பதில் ‘மணிநேர ஒப்பந்த அடிப்படை’யில் (கிளாக்-ஹவர் பேசிஸ்) நியமிக்கிறது. அவர்களுக்குக் குறிப்பிட்ட மணிநேரங்கள் பாடவேளையாக ஒதுக்கப்படும். அத்தகைய ஆசிரியர்களுக்கு அந்த மணிக்கு மேல் பொறுப்பு எதுவுமில்லை. குறைந்த ஊதியத்திற்கு, கற்றறிந்த ஒருவர் ஏன் தேவைக்கு அதிகமான மணி நேரம் கல்விக்கூடத்தில் பொழுதைச் செலவிட வேண்டும்? அல்லது மாணவர்களின் முழுமையான ஒருங்கிணைந்த வளர்ச்சி குறித்து ஏன் கவலைப்பட வேண்டும்?

கற்பனை எதிர்பார்ப்பு-2: அரசு பொது நிதியிலிருந்து தற்போதைய மூன்று சதத்திலிருந்து ஆறு சதமாகக் கல்விக்கான முதலீட்டை அதிகரிப்பதே இலக்கு!

உண்மைநிலை : தற்போதைய அரசு மெல்ல மெல்ல உயர் கல்விக்காகச் செலவிடுவதைக் குறைத்து வருகிறது. ஏற்கனவே முதுகலை மட்டத்தில் ஆய்வுக்கான மானியத்தைப் பாதியாக வெட்டிவிட்டார்கள். மேலும் மேலும் கல்வி நிறுவனங்களுக்குச் சுயசார்பு, கல்வி மற்றும் நிதி சார்ந்த தன்னாட்சி, அங்கீகாரத்தை வழங்குகிறார்கள் – அதன் பொருள் கல்வி நிறுவனங்களை மேலும் தனியார்மயப்படுத்துகிறார்கள் என்பதே. இந்த நிலையில், தற்போதைய மூன்று சதவீதமாவது அரசு தொடர்ந்து முதலீடு செய்யுமா என்பதே வியப்பிற்குரியது. (மேலும் கோதாரி கமிஷன் எப்போதோ கூறிய 6சதவீதம் என்பதையே இன்னமும் அரசுகள் செலவிடவில்லை. மாறாக இன்றைய நிலையில் தேவை 10சதவீதத்திற்கும் மேல் என்பதே உண்மை)

கற்பனை எதிர்பார்ப்பு-3: வரலாறு, சமூகவியல், தத்துவம், உளவியல், இலக்கியம், எழுத்தாற்றல், மானுடவியல், புடைப்பூக்கக்கலை முதலிய துறைகள் அடங்கிய லிபரல் ஆர்ட்ஸ் கல்வித்துறை; குடிமையியல், இந்தியப் பாரம்பரியம் மற்றும் மொழிகள் மேம்பாடு வலியுறுத்தப் பெறும்.

உண்மைநிலை: லிபரல் ஆர்ட்ஸ் பட்டம் பெற்றவர்கள் நன்கு விவாதிக்கும் திறனும், பிரச்சனைகளுக்குத் தீர்வுகாணும் திறனும் கைவரப் பெறுவார்கள் என்பது இத்துறைக்கான விளக்கம். ஆனால் அரசாங்கம் சுதந்திரமாகச் சிந்திக்கும் உணர்வெழுச்சியை எப்படியாவது கொன்றொழிப்பது எனத் தீர்மானித்துச் செயல்படுகிறது. ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், ஜாமியா மிலியா மற்றும் ஹைத்திராபாத் மத்தியப் பல்கலைக் கழகங்களில் என்ன நடந்தது என்பதை நாடறியும்! இந்தியாவின் மனிதஆற்றல் கல்வித் துறை படிப்புகளின் ஆகச் சிறந்த கோட்டையாகப் பெயர் பெற்று விளங்கி வருவது ஜெஎன்யு. மாணவர்களை, கல்வியாளர்களை எதிரிகள் போல வேட்டையாடும் அரசு, புதியக் கல்விக் கொள்கை அறிக்கையில் கதை சொல்கிறது. அரசு மற்றவர்களுக்கு உபதேசிப்பதைத் தான் முதலில் செயல்படுத்த வேண்டும்.

கற்பனை எதிர்பார்ப்பு-4: முழுமையான வளர்ச்சிக்காக “பரக்” -- Performance Assessment Review and Knowledge-- அமைக்கப்படும்.  (ஒரு தொடரின் ஆங்கில முதல் எழுத்துகள் சேர்ந்த சுருக்கச்சொல் “பரக்”-- இந்தியில் தேர்வு எனப் பொருள்படும்.) ‘செயலாக்க மதிப்பீடு பரிசீலனை மற்றும் அறிவாற்றல்’ என்பது அமைப்பின் பெயர்.

உண்மைநிலை: வெளியிலிருந்து பார்க்க மிகவும் நல்லது போலத் தோற்றமளிக்கிறது. ஆனால் செயல்பாட்டை, அறிவாற்றலை யார் மதிப்பிடப் போகிறார்கள்? அரசு அதிகாரிகளா அல்லது தனியாரா? வெளிப்படைத் தன்மையும் திறந்த மனதுடனான அணுகுமுறையும் இல்லாமல் இந்த முயற்சி வீணில் முடியும்.

கற்பனை எதிர்பார்ப்பு-5: ஆசிரியர்களுக்குத் தேசிய அளவில் தொழில்சார்ந்த தரப்படுத்தல் நிறுவுதல் (நேஷனல் புரஃபஷனல் ஸ்டாண்டர்டு ஃபார் டீச்சர்ஸ் -- (NPST)!      

உண்மைநிலை: இன்றைய நிலையில் நாடுமுழுதும் ஏராளமான ஆசிரியர் காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. எதிர்கால இந்திய இளைஞர்களின் அறிவைச் செதுக்கி உருவாக்கும் முக்கிய பணியில் தற்காலிக மற்றும் (கிளாக்-ஹவர்) கடிகார மணிநேர அடிப்படையிலான ஆசிரியர்களே பணியாற்றி வருகிறார்கள். அனைத்துக் கல்விப் புலனங்களில், அனைத்துக் கல்வி நிலையங்களிலும் தேவையான தொழில்சார்ஆற்றல்மிக்க ஆசிரியர்களை முதலில் நியமியுங்கள்.

கற்பனை எதிர்பார்ப்பு-6: உயர்கல்வியில் ‘கிராஸ் என்ரோல்மென்ட் ரேஷியோ’ (GER) [அதாவது பள்ளிக் கல்வி முடிப்பவர்களில் எவ்வளவு பேர் உயர்கல்வியைத் தொடர்கிறார்கள் என்பதற்கான விகிதம்]. தற்போது நூற்றுக்கு 26.3 பேர் மட்டுமே மேலே தொடர்ந்து படிக்கிறார்கள் என்ற குறைவான மோசமான நிலையை மாற்றி 50 சதமாக உயர்த்த இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது!

உண்மைநிலை: தற்போதைய நிலவரப்படி, பள்ளி முதல் வகுப்பில் நுழையும் மாணவர்கள் எண்ணிக்கையில் 2சதவீதத்தினர் மட்டுமே இளநிலை பட்டப் படிப்பு மட்டத்தை அடைகிறார்கள். கிராமப்புறங்களில் கல்வி பெறுவதற்கான வாய்ப்பு வசதி முற்றாக இல்லாத நிலை காரணமாக, கிராமப்புறச் சாதாரண ஏழை மாணவர்கள் பள்ளிக் கல்வியைத் தாண்டிச் செல்ல முடிவதில்லை. இந்தச் சூழ்நிலையில் உயர்நிலைக் கல்வியில் அரசின் இலக்கான (GER) விகிதத்தை அதிகரிக்க அடிப்படை மட்டத்தில் அரசு, உண்மையாகக் கூடுதலாகச் செலவிட்டால் மட்டுமே முடியும்.

கற்பனை எதிர்பார்ப்பு-7: பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களை அவ்வவ்போது குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்படும் ஆய்வுகளிலிருந்து விடுவிப்பது; அதற்குப் பதில், சுய ஆய்வு மதிப்பீடு செய்து கொள்ளும் பாதையில் அவற்றை வைப்பது

உண்மைநிலை: இவ்வளவு ஆய்வுகள் சோதனைகள் நடத்தும்போதே, தனியார் கல்வி நிறுவனங்கள் தங்கள் ஆசிரியர்கள் மற்றும் அலுவலர்களுக்குக் குறைந்த ஊதியம் மட்டுமே வழங்கி, பெரும் லாபம் கொழிப்பதிலேயே கண்ணாக நிறுவனங்களை நடத்தி வருகின்றன. இந்த ஆய்வுகளும் கட்டுப்பாடுகளும்கூட இல்லை என்றால் அவர்கள் காட்டில் மழைதான், விருப்பம் போல விளையாடலாம். இதனால் மேல்தட்டு கல்வி முறையில், சாதாரண மக்களைப் பற்றி கவலைப்படாத உச்சாணி கோபுரக் கல்வி நிலையங்களில், பணக்காரர்கள் மட்டுமே சேர்ந்து படிக்கவும், மற்றவர்களுக்குத் தரம் குறைந்த கல்வியும் என்ற நிலை ஏற்படும்.

கற்பனை எதிர்பார்ப்பு-7: நிதி விவகாரங்களில் வெளிப்படைத் தன்மை!

உண்மைநிலை: இந்தியாவில், கண்மூடித்தனமாகத் தனியார்மயக் கல்வி பரவியதற்கு முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மற்றும் தற்போதைய தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசுகளே காரணம். அரசு நிதியால் நடத்தப்பட்ட கல்வி நிறுவனங்களை மறைமுகமாகச் சிறுமைபடுத்தி பழிகூறி, தனியாருக்கான இடத்தை உண்டாக்கித் தந்தார்கள். தனியார் நடத்துபவைக் கல்வி நிலையங்களாக இருந்தாலும், அங்கேயும் மற்ற எல்லா முதலாளிகளையும் போலவே அவர்களின் நோக்கம் கொள்ளை லாபமே தவிர, கல்வி அல்ல. தனியாருக்கு ஆதரவான ஒரு சூழ்நிலையில் யார் பூனைக்கு மணி கட்டுவது என்பது பிரதானமான கேள்வி. தனியார் மயமான கல்வியில் வெளிப்படைத் தன்மை என்பது இன்னொரு அலங்கார வார்த்தை.

சில முக்கியமான பிரச்சனைகள்

1. பள்ளிக் கல்வி :

பள்ளிக் கல்வியைப் பற்றி பேசும்போது, ஒவ்வொரு குழந்தைக்கும் கல்வி வழங்குவதில் உள்ள அடிப்படை பிரச்சனைகள் அனைத்தையும் ஏதோ நிறைவேற்றிவிட்ட எண்ணத்தில் புதிய கல்விக் கொள்கை ஆவணம் பேசுகிறது. சமூக, பொருளாதார ரீதியாகச் சாதகமற்ற நிலையில் வைக்கப்பட்டுள்ள சமூகக் குழுவினரின் பிரச்சனைகள் குறித்து, அறிக்கை முழுமையாக மௌனம் சாதிக்கிறது; அந்தப் பிரிவு மக்களின் குழந்தைகள் கல்வி பெறுவதில் இன்னும் இடர்பாடுகளைச் சந்திக்கின்றனர். இதுகுறித்து ஏராளமான செய்திகள் வருகின்றன; சமீபத்தில் ஓர் இளம்பெண் தினமும் 24கி.மீ. சைக்கிளில் பயணித்துப் பள்ளிக்குச் செல்கிறார் என ஒரு செய்தி. மறுபுறத்தில் கேரள மாநிலத்தில், ஒரு கிராமத்துப் பெண் போர்டு தேர்வுகள் எழுத, அவருக்காகவே தனியே படகு சேவையை அரசு இயக்கியது என்பதும் செய்திதாளில் பார்க்க முடிகிறது. அதேபோலவே ஜப்பானில் தனியொரு மாணவி பள்ளி செல்ல வேண்டும் என்பதற்காக, அவரது கிராமத்திற்கு ரயிலை ஓட்டுகிறது என்ற வரவேற்கக்கூடிய செய்தியும் வருகிறது.

2. பள்ளி அடிப்படை கட்டமைப்பு :

கிராமங்கள் அல்லது காலனிகளை ஒரு தொகுப்பாக்கி, அங்குள்ள சிறிய பள்ளிகளை ஒன்றாக இணைத்து, விரிந்த பெரிய பள்ளி வளாகமாக மாற்றும் யோசனை சொல்லப்படுகிறது. சிறிய அளவு பள்ளிகள், (சாதாரணமாக ஒதுக்குப்புறமான தொலைவு இடங்களில் அமைந்தவை) ‘இயக்கப்படுவதில் சிக்கல்’ அதிகமாக உள்ளன எனப் புதிய கல்விக் கொள்கை ஆவணம் கூறுகிறது. நிர்வாக வசதிக்காகச் சிறிய பள்ளிகளை மூடிவிடுவது என்ற யோசனை, பெருமளவு கிராமப்புற மாணவர்களை, குறிப்பாக பெண் மாணவிகளை, கல்வி கற்கும் சிஸ்டத்திலிருந்தே வெளியேறச் செய்யும். (இப்படி அருகமை பள்ளிகளை மூடிவிட்டால் எப்படி 100 சதவீதக் கல்வி அறிவு என்ற இலக்கை எட்டுவது?) என்ன ஒரு புத்திசாலித்தனமான யோசனை!

3. பாடத் திட்டச் சட்டகம்:

உண்மைகள் மற்றும் செயல்முறைகளை அப்படியே மனப்பாடம் செய்வதில் தற்போதைய கல்விமுறை முழுமையாகக் கவனம் குவிக்கிறது. எனவே ஒவ்வொரு பாடத்திலும் பாடத்திட்டச் சுமையை, அதன் முக்கியமான மைய பொருண்மை அளவுக்குக் குறைக்கப் பரிந்துரை அளிக்கப் படுகிறது. இதனால் (மைய கருத்தைப் புரிந்து கொண்ட மாணவன் அது குறித்து) மேலும் விவாதிக்கவும் பகுப்பாய்வு அடிப்படையில் முழுமையாகக் கற்பதற்கான போதுமான (காலம் முதலிய) இடம் வழங்க முடியும்” எனப் புதிய கல்வி ஆவணம் குறிப்பிடுகிறது. இது மிகவும் நல்ல, நேர்மறையான கருத்துப் பதிவு. ஆனால் இந்த மாற்றத்தை எப்படி நடைமுறையில் சாதிப்பது? அதற்குக் கூடுதல் ஆசிரியர்களை நியமிக்க வேண்டும், ஆசிரியர் மாணவர் விகிதத்தை 1: 25எனப் பராமரிக்க வேண்டும். மாணவர்கள் மீது அக்கறையோடு சரியான வகையில் கவனம் செலுத்த, நிரந்தர அடிப்படையில் போதுமான ஆசிரியர்களை அனைத்துப் பள்ளிகளிலும் நியமித்தால் மட்டுமே, விவாதம் மற்றும் பகுப்பாய்வு முறையில் முழுமையான கற்றல் என்பதை நோக்கி நடைபோட முடியும்.

4. பள்ளித் தேர்வுகள் சீர்திருத்தம்:

ஆவணம் குறிப்பிடுகிறது, “தற்போதைய பள்ளி போர்டு தேர்வுகள், i) மாணவர்களைச் சில பாடங்களில் மட்டுமே கூடுதல் கவனத்தைச் செலுத்த நிர்பந்திக்கிறது  ii) கற்றலை உருவாக்க முறையில் (பார்மடிவ் மேனர்) சோதிக்கவில்லை iii) மாணவர்கள் மத்தியில் கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்துகிறது. மாணவர்களின் முழுமையான பள்ளி அனுபவத்தில் அவர்களின் வளர்ச்சியை தொடர்ந்து கண்காணிக்க, மூன்று, ஐந்து, மற்றும் எட்டாம் வகுப்பு மாணவர்களுக்கு ‘ஸ்டேட் சென்சஸ் தேர்வு’ எனப் பொதுத் தேர்வுகள் நடத்த, வரைவுக் கொள்கை முன்மொழிகிறது...”

இது உண்மையில் மிகவும் விந்தையான ஆச்சரியத்திற்குரியது. பத்தாம் வகுப்பு ஒரு பொது போர்டு தேர்வின் ஒற்றை அழுத்தத்தைப் போக்க வரைவறிக்கை தரும் பரிந்துரை, புதிதாக மூன்று போர்டு பொதுத் தேர்வுகள் திணிப்பு! மூன்று, ஐந்து வகுப்புகளில் பொதுத் தேர்வு எனின் அந்த மாணவர்களின் முழு குடும்பமும் மனஅழுத்தத்தில் தள்ளப்படும். கறுப்புப் பணத்தை அழித்து ஒழிக்க, 500 ரூபாய் வங்கி கரன்சிகளை 2000ரூபாய் வங்கி கரன்சிகளால் மாற்றியதைப் போல இதுவும் இருக்கிறது! ஆன்-லைன் வகுப்பு புரியாதபோது, அந்தப் பாடத்திற்குத் தனியே ஆன்-லைன் டியூஷன் ஏற்பாடு செய்வதைப் போல!

இந்த முழு ஆவணமும் பரபரப்பான பிரச்சார மொழியில், பொதுமக்களை ஈர்க்கும் சர்க்கரை தடவிய சொற்களில் தயாரிக்கப்பட்டுள்ளது. போர்டு தேர்வுகள் வேண்டாம் என்ற கட்டத்தை இன்னும் இந்தியா வந்தடையவில்லை. ஒருவகையில் போர்டு பொதுத் தேர்வுகள் என்பது மாணவர்கள் வாழ்வில், ஒரு முக்கியமான திருப்புமுனையாக உள்ளது. தற்போதைய தேவை போர்டு தேர்வுகள் முறையில் சீர்திருத்தம் மட்டுமே.

 5. உயர்கல்வி :

உயர்கல்வியைப் பொருத்த அளவில் தற்போதைய அரசின் நோக்கங்கள் என்ன என்பதை மிகச் சாமர்த்தியமாகக் கல்விக் கொள்கை ஆவணம் மறைத்துவிடுகிறது. மற்ற துறைகளைப் போலவே அரசு உயர்கல்வித் துறையையும் காவிமயப்படுத்த விரும்புகிறது. அதற்காகவே பல்கலைக்கழக மானியக்குழு (UGC), நாக் (NAAC) எனப்படும் ‘தேசிய மதிப்பீடு மற்றும் தரச்சான்று குழு’  மற்றும் பிற அமைப்புகளின் அதிகாரப் பங்கு பாத்திரங்களைக் குறைக்கிறது.

6. ஒழுங்காற்று அமைப்பும் தரச்சான்று வழங்கலும்:

ஆவணம் பின்வருமாறு கூறுகிறது, ”யுஜிசி-யின் பணி உயர்கல்வி நிறுவனங்களுக்கு மானியங்களை வழங்குவது மட்டும் என வரையறுக்கப்படுகிறது. தற்போது யுஜிசியின் கீழுள்ள நாக் அமைப்பு இனி, உயர்மட்ட தரச்சான்று வழங்குநராக, பலவகை கல்வி நிறுவனங்களுக்கு அதிகாரபூர்வ சான்றளித்தல் என்ற புதிய செயல்பாட்டை மட்டும் மேற்கொள்ளும்; மேலும் அது 5 முதல் 7 வருடங்களுக்கு ஒரு முறை உயர் கல்வி நிறுவனங்களை மதிப்பீடு செய்யும்…”  

இது உயர்கல்வியைக் கொல்லைப்புற வழியாகத் தனியார் மயப்படுத்துவதைத் தவிர வேறில்லை. முதலில் நாக் வேறுபட்ட நிறுவனங்களுக்கு லைசென் வழங்குமாம், பின்னர் அவை கல்வி நிறுவனங்களை மதிப்பிடுமாம். இதில் முதல் அம்சம், வரலாற்று ரீதியாகச் சோதனைகளை வென்று நிரூபிக்கப்பட்ட யுஜிசி அமைப்பு கலைக்கப்படுகிறது. முக்கியமான காரணம் யுஜிசியின் பல உறுப்பினர்கள் காவிப்படை அதிகாரத்திற்குப் பணிபவர்களாக இல்லை; எனவே, யுஜிசி- அமைப்பையே கலைத்து விடுகிறார்கள். காவிப்படைக்கு நெருக்கமான நிறுவனங்களை முதலில் நாக் தேர்ந்தெடுத்து லைசென்ஸ் வழங்க, பின்னர் அவர்கள் பிற நிறுவனங்களை மதிப்பீடு செய்வார்கள். இதன் மூலம் ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகம், மற்றும் ஜாமியா மிலியா போன்ற கல்வி நிறுவனங்களை மெல்ல இழுத்து மூடிவிடுவது அரசுக்குச் சுலபமாகிவிடும்.

7. புதிய உயர் கல்வி நிறுவனங்களை நிறுவுதல்

என்இபி ஆவணம் கூறுகிறது,”தற்போது உயர் கல்வி நிறுவனங்களைப் பாராளுமன்றம் அல்லது சட்ட மன்றங்கள் ஏற்படுத்துகின்றன. அதற்குப் பதிலாக இந்தக் கொள்கை, உயர்கல்வி நிறுவனங்களை அதற்கென்ற அமைப்பின் மூலம் ஏற்படுத்தலாம் என முன்மொழிகிறது. (அதாவது ‘தொழில் கல்விக்கான அகில இந்திய கவுன்சில்(AICTE) மற்றும் யுஜிசி இரண்டையும் ஒன்றிணைத்து ‘தேசிய உயர்கல்வி ஒழுங்காற்று ஆணையம்’ (NHERA) ஒன்றை ஏற்படுத்துவது. அந்த) NHERA அமைப்பின் கீழ் உயர்கல்வி நிறுவன சாசனம் (Charter) மூலம் இத்தகைய கல்வி நிறுவனங்களை அமைப்பது. (உதாரணமாக சரித்திரத்தில் மாக்ன காட்டா சாசனம், உடன்படிக்கை எனப் படித்திருப்போம்; சார்ட்ட என்பது இலத்தீன் மொழியில் காகிதம் எனப் பொருள்படும். எனவே சட்டரீதியான ஆவணம்.) அதன்படி சில குறிப்பிட்ட வரையறைகளின் பேரில் வெளிப்படையான மதிப்பீடுகள் அடிப்படையில் இந்த சாசனம் வழங்கப்படும். புதிதாக அமைக்கப்படும் எல்லா உயர்கல்வி நிறுவனங்களும், NHERAஒழுங்காற்று அதிகார அமைப்பு வழங்கும் தகுதிஅங்கீகாரச் சான்றிதழைக் உயர்கல்வி நிறுவனம் தொடங்கப்பட்ட ஐந்து ஆண்டுகளுக்குள் நிச்சயம் பெற வேண்டியது கட்டாயம்.

முக்கியமான கேள்வி:மிக முக்கியமான கல்வி விஷயத்தில் பாராளுமன்றம் மற்றும் சட்டமன்றங்களின் இறையாண்மைமிக்க உச்சபட்ச மேலாண்மை அதிகாரத்தை ஏன் கீழிறக்கி அழிக்க வேண்டும்?”. ஒழுங்காற்று NHERA அமைப்பு பாராளுமன்றம் அல்லது சட்டமன்றங்களின் அதிகாரத்திற்கு உட்பட்டதாக இருத்தல் வேண்டும். தற்போதைய முறையில் கல்வி சம்பந்தமான அனைத்தும் மக்கள் பிரதிநிதிகளால் கட்டாயம் விவாதிக்கப்படும் பிரச்சனைகளாக உள்ளது. இதுவே மிகவும் ஜனநாயகபூர்வமானது. தற்போதைய அரசு இந்த ஜனநாயகக் கோட்பாட்டை இல்லாது ஆக்க, ஒழித்துக் கட்டிவிட முற்படுகிறது.

8. உயர்கல்வி நிறுவனங்களின் மறுசீரமைப்பு :

வேறுபடுத்தி வெளிப்படையாக அறியமுடியாதபடி மிக நுட்பமாக, தன்னாட்சி பற்றி இந்த ஆவணம், “…இத்தகைய எல்லா நிறுவனங்களும் மெல்ல மெல்ல கல்விப் புலம், நிர்வாகம் மற்றும் நிதி என அனைத்திலும், முழுமையான தன்னாட்சியை நோக்கி நகரும்” எனக் கூறுகிறது.

மீண்டும் தனியார்மயம் நோக்கி ஓரடி முன்னே! கல்வி நிறுவனங்கள் தங்கள் செலவு மற்றும் ஊதியங்களைக் கொடுக்கும் அளவு சம்பாதித்துவிட முடியாது என்பது அனைவருக்கும் நன்றாகத் தெரியும். அரசு அல்லது மாணவர்களின் பெற்றோர் செலவின் சுமைகளைத் தாங்க வேண்டும். நிதி தன்னாட்சி என்றால், உனது சொந்த வாழ்க்கை தேவைக்கு நீயே சம்பாதித்துக் கொள்… என்பதே பொருள். அவ்வாறெனில், இந்தக் கல்வி நிறுவனங்கள் ஏதோ ஒரு பெயரில் தங்கள் கட்டணங்களை உயர்த்தக் கட்டாயப்படுத்தப்படும். இது தனியார்மயமின்றி வேறில்லை. இதன் மற்றொரு விளைவு, தொலைதூரங்களில், மலைவாழ் பிரதேசங்கள் மற்றும் கிராமப்புறங்களில் அமைந்துள்ள சாதாரண கல்வி நிறுவனங்களுக்கு அடிக்கப்படும் சாவு மணி இது– ஏனெனில் இந்தப் பகுதிகளைச் சார்ந்த பெற்றோருக்குக் கட்டணம் செலுத்தும் சக்தி மிகச் சொற்பமானது.

9. தொழில்பயிற்சி கல்வி :

புதிய கல்விக் கொள்கை இந்தியாவின் தொழில்பயிற்சி (உடனான) கல்வியை அமெரிக்கா மற்றும் ஜெர்மன் போன்ற நாடுகளுடன் ஒப்பிட்டுப் பேசுகிறது.  அது குறிப்பிடுகிறது, “…19 முதல் 24 வயதுடைய உழைப்புச்சக்தி நபர்களில் 5 சதவீதத்திற்கும் குறைவானவர்களே இந்தியாவில் தொழில்பயிற்சி கல்வியைப் பெறுகிறார்கள்; மாறாக, இதுவே அமெரிக்காவில் 52%, ஜெர்மனியில் 75% மற்றும் தென்கொரியாவில் 96% என்ற அளவில் உள்ளது…” ஆனால் இந்தியாவைவிட இந்த நாடுகளில் கல்விக்காக மிக அதிகமாகச் செலவழிக்கிறார்கள் என்பதை ஆவணத்தின் பிதாமகர்கள் வசதியாக மறந்து விட்டார்கள்.

அது மேலும் கூறுகிறது, “…அனைத்துப் பள்ளி மாணவர்களும் ஏதாவது ஒரு தொழிலில் பயிற்சிக் கல்வியை கிரேடு 9 முதல் 12க்குள் கட்டாயம் பெற வேண்டும். தற்போதைய ’தேசிய திறன் தகுதி சட்டக’த்தின் கீழ் திறன்சார் மட்டங்களோடு ஒத்திசைவாகப் பள்ளிக் கல்வித் திட்டச் செயல்பாடுகளை அளித்திடப் பொருத்தமான வகையில், முன்மொழியப்பட்ட பள்ளி வளாகங்கள் தங்கள், சிறப்பு நிபுணத்துவத் திறனை வளர்த்துக் கட்டிஎழுப்ப வேண்டும். ..”

மீண்டும் வானளாவிய கோட்டை கட்டும் பேச்சுகள்! (ஒருவகையில் பழைய குலகல்வி திட்டத்தின் புது வடிவம் இது என்பது ஒருபக்கம் இருக்க) தொழில் பயிற்சிக் கல்விக்கு “அந்தத் தொழிலில் கைத்திறன்” உடைய பயிற்சியாளர்கள் தேவை. மேலும் அதற்கு ஆதரவாக நல்ல செய்முறை ஆய்வங்கள், சோதனைக்கூடங்கள் அல்லது தொழில் பட்டறைகள் துணைநிற்க வேண்டும். திறனைப் போதிக்க தொழில் சார்ந்த நிபுணர்கள் பணியமர்த்தப்பட வேண்டும். தற்போதைய அனுபவம் யாதெனில், கம்யூட்டர் லேப் இல்லாமலேயே கம்யூட்டர் கல்வி கற்றுத் தருவதைப் போல, தொழில்பயிற்சி கல்வி, எந்த செயல்முறை பயிற்சியும் இன்றிக் காகிதத்தில் வழங்கப்படுகின்றன. நிதி ஆதரவை, அரசு உதவியை அதிகரிக்காமல் தொழில் கல்வி குறித்த எந்தப் பேச்சும் வெறும் வெற்று ஆரவாரம் மட்டுமே.

10.         கல்வியும் இந்திய மொழிகளும் :

மொழிகளைப் பொருத்து இந்த ஆவணம், தீயைத் தொடுவது போலப் பல மக்களின் உணர்வோடு விளையாடி தவறான இடத்தில் உரசி விட்டது. அதன் முன் வைப்புகள் வெளிப்படுத்தியதைவிட மறைத்ததே அதிகம்.

ஆவணம் கூறுகிறது, “…பயிற்று மொழி வீட்டு மொழியாகவோ / தாய்மொழியாகவோ / உள்ளூர் மொழியாகவோ இருப்பது -- 5வது கிரேடு வரை, அதுவே 8வது கிரேடு வரை என்றால்-- விரும்பத்தக்கது” என்று சொல்லிவிட்டு, இறுதி வால் பகுதியில் ”எங்கெல்லாம் சாத்தியமாகுமோ அங்கெல்லாம்” என ஒரு ’இக்கு’ (அபாய முடிச்சை) வைத்திருக்கிறது.

நோக்கம் மிக நல்லதாகத்தான் தோன்றுகிறது –துவக்கக் கல்வி தாய்மொழியில் (வாழ்விட மொழியில்) என்பது. ஆனால் கேள்வி, இது இந்தியா முழுவதும் ஒரே மாதிரியாகவா? என்பதுதான். ஆங்கிலவழி (தனியார்) பள்ளிகள் ஒரேயடியாக உடனே பயிற்றுமொழியைத் தாய் மொழியாகத் துவக்க வகுப்புகளுக்கு மாற்றி விடுமா?

வல்லுநர்களின் கவலை, முடிவு எடுக்கப்பட்ட உடன் அனைத்து அரசு பள்ளிகளும் துவக்க வகுப்புகளில் தாய்மொழிவழி கற்பித்தலுக்கு மாறி விடும்; ஆனால், ஆங்கிலவழிப் பள்ளிகளுக்கு விருப்பத்தேர்வு (option) வாய்ப்பளிக்கப்பட்டால், எந்தத் தனியார் பள்ளியும் தாய்மொழிவழி பயிற்சிக்கு மாறாமல், தொடர்ந்து ஆங்கிலவழிக் கல்வி போதனையையே மேற்கொள்ளும். இதனாலும் அரசுப் பள்ளிகளில் சேர்க்கை குறையும், ஏற்கனவே அதுதான் நடந்து வருகிறது. இப்படியே குறைந்து கொண்டு போனால், ஒரு கட்டத்தில் அரசு அனைத்துப் பள்ளிகளையும் மூடிவிடும் – கல்வி என்பது தனியார் ஏகபோக வேட்டைகாடாகும். சிலவருடங்களிலேயே பள்ளிக் கல்வியில் முழுமையான தனியார் மயம் கோலோச்சும்!

கல்வி ஆவணத்தின் இன்னொரு விளையாட்டு, சமஸ்கிருத மொழிக்கு அளிக்கப்பட்டுள்ள (சிறப்பு) இடம். பள்ளிக் கல்வியில் இரண்டு இந்திய மொழிகள் என்ற மும்மொழிக் கொள்கையில் மட்டுமல்லாமல், உயர் கல்வியின் எல்லா மட்டங்களிலும் இந்திய செவ்வியல் மொழிகளோடு, சமஸ்கிருதம் படிப்பதற்கு வழங்கப்பட்டுள்ள வாய்ப்பு. (தாய்மொழிவழி கல்வி விரும்பத்தக்கது எனச் சொல்லிய இரண்டு பத்திகளை அடுத்து, எப்படி எல்லாம் சமஸ்கிருத மொழி வளர்ச்சிக்கு வாய்ப்புகள் ஏற்படுத்தப்படும் என விரிவாகப் பட்டியலிடுவதிலிருந்தே அரசின் நோக்கம் வெளிப்பட்டு விடுகிறது)

(தெலுங்கில் ஒரு பழமொழி உண்டு, ‘பேரு பெத்த பேரு தாகடானிகி நீலு லேது’ (பேர் என்னவோ பெரிய பேர் தான், குடிக்கத்தான் தண்ணீர் இல்லை); அப்படி நரேந்திரமோடி அரசின் மற்ற அனைத்து பிரச்சனைகளில் போலவும், கல்வியைப் பொருத்த அளவிலும், பக்கம் பக்கமாக வானளாவப் பேச்சு இருக்கிறதே தவிர, உள்ளடக்கம் – செயல்பாடு என்று வரும்போது தேய்ந்து சிறுத்துப் போகிறது. சொல்லப்பட்ட பெரும்பான்மையான மாறுதல்கள் ஒப்பனை செய்து அழகுபடுத்தப்பட்டதாக, மேலோட்டமானதாக உள்ளன. ஆனால் அழுத்தம் என்னவோ மேலும் மேலும் தனியார்மயம் என்பதே.  உயர்ந்த தரம் மற்றும் சுதந்திரமான கல்வி வழங்குவது என ஆவணத்தின் மேற்பூச்சு ஒப்பனை மொழி இனிக்கப் பேசுகிறது. ஆனால் எதார்த்தத்தில், மற்ற எல்லா அமைப்புகளையும் போலவே, கல்வி குறித்த சகல பரிமாணங்களையும் ஒற்றை மையத்திலிருந்து, ஒரு சிலரின் கட்டுப்பாட்டில் வைக்கவே அரசு விரும்புகிறது. வேறுபட்ட பண்பாடுகளோடு விரிந்து பரந்த இந்தியா போன்ற தேசத்தில் ஜனநாயகத்தின் உள்ளூர் அமைப்புகள் மற்றும் மாநில அரசுகளின் பங்கேற்பு, அவற்றையும் ஈடுபடுத்தல் என்பது பற்றி எந்தக் குறிப்பும் ஆவணத்தில் இடம்பெறவில்லை.

மேலே குறிப்பிட்டதுபோல, துவக்கக் கல்வியில் தாய்மொழி வழி கற்பித்தல் நல்ல நோக்கமுடையது. இந்த யோசனை சாத்தியப்பட வேண்டுமானால் அருகமைப் பள்ளிகள் என்ற கோட்பாடு மேலும் பலப்படுத்தப்பட வேண்டும். ஒரு பகுதியில் உள்ள எல்லா குழந்தைகளும் தங்களுக்கு அருகே அமைந்த பள்ளிகளுக்குச் செல்வார்கள். அமைச்சரின் குழந்தையும், அமைச்சர் கார் டிரைவரின் குழந்தையும் ஒரே பள்ளிக்குச் செல்லுமானால், கல்வியின் தரம் உயர்வது மட்டுமல்ல, சமத்துவம் என்ற கருத்தும் ஜனநாயக நாட்டில் அமலாகவும் செய்யும்.

எந்த நாட்டில் கல்வி கடைச் சரக்காக, வர்த்தக விலைபொருளாகிறதோ, அந்த நாடு தொடர்ந்து பின்தங்கிய நாடாகவே இருக்கும்; அதன் பெரும்பான்மை இளைஞர்கள், வளர்ச்சி, முன்னேற்றத்திற்கான முக்கியமான கருவியான கல்வி மறுக்கப்பட்டவர்களாகவே இருப்பர்.

என்றைக்குக் கல்வி, அனைவருக்கும் சமமானதாக, எல்லோரும் பெறுவதற்குக் கட்டுப்படியாகும் வகையில் சாத்தியப்படுவதாக அமைகிறதோ, அப்போதுதான் இந்த தேசம் உண்மையில் வலிமையானதாக இருக்கும்!  

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ கடலூர்

 

'அன்ன சத்திரம் ஆயிரம் வைத்தல்,

ஆலயம் பதினாயிரம் நாட்டல்

அன்னயாவினும் புண்ணியம் கோடி 

ஆங்கோர் ஏழைக்கு எழுத்தறிவித்தல்!

வீடுதோறும் கலையின் விளக்கம்

வீதிதோறும் இரண்டொரு பள்ளி;

தேடு கல்வியிலாத ஒருஊரைத் 

தீயினுக்கு இரையாக மடுத்தல்!

பட்டங்கள் ஆள்வதுஞ் சட்டங்கள் செய்வதும்

பாரினிற் பெண்கள் நடத்த வந்தோம்;

பயிற்றிப் பல கல்வி தந்து- இந்தப் பாரை உயர்த்திட ...

தேர்ந்த கல்வி ஞானம் எய்தி வாழ்வம் இந்த நாட்டிலே!

                                              --மகாகவி பாரதியார்