Thursday 30 September 2021

ஆப்கானிஸ்தானும் உலக அரசியல் சக்திகள் உறவுச் சமநிலையில் மாற்றங்களும்

 


ஆப்கானிஸ்தானும்

உலக அரசியல் சக்திகள் உறவுச் சமநிலையில் மாற்றங்களும்

--அனில் ரஜீம்வாலே

மார்க்ஸிய அறிஞர்

            ஆப்கானிஸ்தானத்திலிருந்து அமெரிக்கப் படைகள் முழுமையாக வெளியேறியதும் அந்நாட்டிற்கு உள்ளேயும், வெளியேயும் காட்சிகள் முழுமையாக மாறி விட்டன. சுமார் 20 ஆண்டுகள் தங்கியிருந்த பிறகு திடீரென்று அவர்கள் வெளியேறி விட்டனர். இருப்பினும் அது திடீர் முடிவாக இருக்க முடியாது; நிச்சயம் அமெரிக்க ஆளும் தரப்பு வட்டாரங்களில் தீவிரமாகப் பரிசீலிக்கப்பட்டிருக்கும். 

            ஆங்காங்கே சில நவீனமயங்கள் ஏற்பட்டதைத் தவிர்த்து ஆப்கானிஸ்தான் பெரிதும் மலைவாழ் மக்களின் செல்வாக்குள்ள சமூகம். அனைத்தையும்விட ஆப்கானிஸ்தான் அமைந்துள்ள புவிப்பகுதியின் முக்கியத்துவம்; அப்பகுதி பல அரசியல் மற்றும் பொருளாதாரப் போக்குகள் குறுக்கும் நெடுக்குமாக வெட்டிச் சந்திக்கின்ற இடமாக அமைந்துள்ளது. 19ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் இராணுவப் படைகளின் காலம் தொட்டு இந்த நாட்டை எந்த வெளிநாட்டுச் சக்திகளாலும் அடக்கி ஆள முடிந்ததில்லை. அந்த நாட்டின் ‘மக்கள் ஜனநாயகக் கட்சி’ (PDP)யின் உதவிக்காகச் சென்ற சோவியத்கள் உள்நாட்டு மலைவாழ் இனக்குழுக்களைச் சந்திக்க முடியாமல் திரும்ப நேர்ந்தது. இப்போது அமெரிக்கப் படைகள் 20 ஆண்டுகள் தங்கிய பிறகு அவசர அவசரமாகத் திடீரென்று மூட்டை கட்டிச் சென்றனர். 

தலிபான் : அமெரிக்கா உருவாக்கியது

            தலிபான் அமைப்பே அமெரிக்க ஏகாதிபத்தியம் உருவாக்கியதுதான். கடந்த நூற்றாண்டின் 1990களின் தொடக்கத்தில் ஆப்கானிஸ்தானைவிட்டு சோவியத் வெளியேற அதன் அரசியல்சக்தி வெற்றிடத்தை நிரப்பவும், ஆப்கன் சமூகம் முற்போக்குத் திசையில் மாறுவதைத் தடுப்பதற்காகவும் அமெரிக்கா உருவாக்கிய அமைப்பு.

            ஆப்கானிஸ்தான் எல்லையை ஒட்டிய பாக்கிஸ்தானின் வடக்குப் பகுதிகளில் ‘தலிபான்’ (பஷ்தூன் மொழியில் ‘மாணவர்கள்’ என்று பொருள்) அமைக்கப்பட்டது. தீவிரமான சன்னி பிரிவு இஸ்லாம் கொள்கையை மேம்படுத்துவதற்காகத் தொடக்கத்தில் அவ்வமைப்பிற்குச் சவுதி அரேபியா எல்லா உதவிகளையும் வழங்கியது; பின்பு அமெரிக்கா பெருமளவில் நிதியளிக்கிறது. தலிபான்கள் அதிகாரத்தைக் கைப்பற்றியதும் தங்களின் சொந்தப் புரிதலின்படியான ‘ஷரியா’ (இஸ்லாமியச் சட்டம்) பதிப்பு முறையை மீண்டும் ஏற்படுத்த உறுதியளித்தனர். அண்மையிலுள்ள இரான் நாடு ஷியா பிரிவு முஸ்லீம்கள் செல்வாக்குப் பெற்றது.

            முன்பு தனது முகாஜீதீன்களைக் கொண்டு சோவியத்களை எதிர்த்த பர்க்கனுதின் ரப்பானியின்  ஆட்சியைக் கவிழ்த்து 1996ல் தலிபான் காபூலைக் கைப்பற்றியது. நீண்ட போர்களால் சோர்ந்துபோன மக்கள், அமைதி வரும் என்று நம்பி, முதலில் தலிபான்களின் ஆட்சியை வரவேற்றனர். ஆனால் விரைவில் தலிபான்கள் ஆட்சி மக்களின் ஜனநாயக, கலாச்சார மற்றும் மனித உரிமைகள் மீது அனைத்து வகைகளிலும் தாக்குதல்களைக் கட்டவிழ்த்து விட்டனர்; சொல்லொண்ணா அட்டூழியங்களை நிகழ்த்தினர்: பொதுவெளியில் அனைவரும் காண தூக்கு, உடல் உறுப்புகளை வெட்டும் தண்டனைகளை நிறைவேற்றுவது, ஆண்களைத் தாடி வளர்க்கவும் பெண்கள் முழுமையாக மறைக்கும் பர்க்கா ஆடைகள் அணியவும் நிர்பந்தித்தல் முதலானவற்றைத் திணித்தனர். தொலைக்காட்சி, வானொலி மற்றும் சினிமா முதலியவற்றிற்குத் தடை விதித்தும் 10 வயதுக்கு மேற்பட்ட பெண் குழந்தைகள் கல்வி கற்க வெளியே அனுப்படுவவதையும் நிறுத்தினர்; ஒட்டுமொத்தமாகப் பெண்கள் வெளியே வரக்கூடாது என்று அவர்களின் சமூகச் செயல்பாடுகளுக்குத் தடைவிதித்தனர்.

            தலிபான்கள் ஆட்சியை உலகில் அங்கீகரித்த ஒரே நாடு அமெரிக்கா. பின்னர் தலிபான்கள் அமெரிக்கக் கட்டுப்பாட்டிலிருந்து தனித்துச் சென்றனர். அப்போது அமெரிக்கா அவர்கள் மீது,  உலக வர்த்தக மையக் கட்டட 9/11 தாக்குதலில் தொடர்புடைய அல்-காய்தா தீவிரவாதக் குழுக்களை ஆதரித்துப் பாதுகாப்பதாகக் குற்றம் சாட்டியது.

            தலிபான்களுடன் அமெரிக்க உறவு மோசமடைய, நேட்டோ கூட்டு நாடுகளுடன் சேர்ந்து அமெரிக்கப் படைகள் ஆப்கானிஸ்தானில் இறங்கியது. (அவர்கள் துணையோடு) ‘நார்தெர்ன் அலையன்ஸ்’ அமைப்பு (ஆப்கன் விடுதலைக்கான ஒன்றிணைந்த இஸ்லாமிய தேசிய முன்னணி) செயல்பாட்டிற்கு வந்தது;  அது தலிபான் சக்திகளை எதிர்த்துப் போராடி அவர்களைக் காபூல் ஆட்சிக் கட்டிலிலிருந்து டிசம்பர் 2001ல் விரட்டியது. தலிபான் ஆட்சி வீழ்ந்து சிதறியது. அது முதல் அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகள் ஆப்கானிஸ்தானத்திலேயே முகாமிட்டுத் தங்கியது.

புவிசார்அரசியல் மற்றும் எண்ணை/ எரிவாயு தன்னலநோக்கங்களில் மாற்றம்

            பல வழித்தடங்கள் சந்திக்கும் குறுக்குப் பாதையில் ஆப்கானிஸ்தான் அமைந்துள்ளது. பாக்கிஸ்தான், மத்திய கிழக்கு, இரான், உஸ்பெஸ்கிஸ்தான், தஜிஹிஸ்தான், ரஷ்யா, சீனா, இந்தியா முதலான நாடுகளில் நடைபெறும் நிகழ்வுகள்  ஆப்கான் சமூகம் மற்றும் அரசியலில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்துகிறது. மேலும் ஏகாதிபத்திய தன்னல நோக்கங்கள் காரணமாக அமெரிக்காவும் ஆழமான செல்வாக்கைச் செலுத்துகிறது.

            9/11 இரட்டை கோபுரத் தாக்குதல் மற்றும் ஒசாமா பின் லாடனைத் தேடுவதைச் சாக்கிட்டு அமெரிக்கா ஆப்கானிஸ்தானத்தில் தலையிட்டது, இறுதியில் பின்லாடனையும் பாக்கிஸ்தானில் கொன்றது. இருப்பினும் தலிபான் எதிர்ப்பு அரசுக்கு உதவிட 20 ஆண்டுகள் தங்கிவிட்டது; ஆனால் தலிபான்களுடன் உள்ள தொடர்பையும் முழுமையாக முறித்துக் கொள்ளவில்லை. பயங்கரவாதிகள் எனத் தானே கைது செய்தவர்கள் உட்பட பல தலிபானியக் குழுக்களை அமெரிக்காவின் அதிகாரிகள் தொடர்ந்து சந்தித்தனர். ஆப்கானிஸ்தானில் அமெரிக்கா நீண்ட காலம் தங்கியதற்குப் பல புவிசார்ந்த பொருளாதார, புவிசார்அரசியல் காரணங்கள் இருந்தன.

            அந்தப் பெரும் காரணங்களில் அப்பிராந்தியத்தில் நிறைந்து காணப்படும் எண்ணை மற்றும் எரிவாயு படுகைகள் மற்றும் அதை எடுத்துக் கொண்டு செல்லும் குழாய் பாதைகளும் முக்கியமான ஒன்று. துர்க்மெனிஸ்தானின் எண்ணை மற்றும் அபரிமிதமான எரிவாயு படுக்கை சேமிப்பை மிகக் குறைவான தூரம் மற்றும் செலவு குறைவான பாதையில் கொண்டு செல்வதற்கு ஆப்கானிஸ்தான் வழியே செல்வதுதான் லாபகரமானது.

            உலக இயற்கை எரிவாயு படுக்கையின் நான்காவது பெரிய சேமிப்பு துர்க்மெனிஸ்தானில் உள்ளது: அங்கு இருப்பதாக மதிப்பிடப்பட்ட 19.5 டிரில்லியன் கனசதுர மீட்டர் கொள்ளளவு இயற்கை எரிவாயு சேமிப்பு என்பது உலகின் மொத்த இருப்பில் சுமார் 10 சதவீதமாகும்.

            காஸ்பியன் கடல் பகுதியின் எண்ணை எரிவாயு சேமிப்பில் அமெரிக்க அரசு மற்றும் கம்பெனிகள் பெரும் ஈடுபாட்டையும் பங்குகளையும் கொண்டுள்ளன. முதலில் பாக்கிஸ்தானுக்கு, பின்னர் சாத்தியமெனில் இந்தியாவுக்கும், எரிவாயுவை ஆப்கானிஸ்தான் வழியாகக் கொண்டு செல்ல மத்திய ஆசிய எரிவாயு குழாய்பாதையைப் பெரியஅளவில் கட்டியமைக்கத் துர்க்மெனிஸ்தான், உஸ்பெஸ்கிஸ்தான், பாக்கிஸ்தான் மூன்று நாடுகளும் ஒப்புக்கொண்டன. ‘மத்திய ஆசிய எரிவாயு குழாய்பாதை நிறுவனங்களின் கூட்டுப் பேரமைப்பு’ (கன்சார்டியம்) ஏற்படுத்தப்பட்டது; பேரமைப்பில் (முதலில் 47%, பின்னர் 54% பங்குகளுடனும்) ‘உனோகால்’ என்ற அமெரிக்கக் கம்பெனி, டெல்டா ஆயில் (15% பங்குடன் சவுதி அரேபிய நிறுவனம்), துர்க்மெனிஸ்தான் (7% பங்கு) மற்றும் பிற நாடுகள், நிறுவனங்களும் அதில் இடம் பெற்றன. அமெரிக்க அரசு ஆதரவளிக்க அதிக பங்குகள் உடைய உனோகால் கம்பெனி அதை வளர்ப்பதில் தலைமையேற்றது. 1997 டிசம்பரில் அமெரிக்க எரிசக்தித் துறையின் மூத்த அதிகாரிகள் தலிபான் அமைச்சர்களை வாஷிங்டனில் சந்தித்து அந்நிறுவனத்தின் பல ஆயிரம் கிமீ குழாய் பாதை செயற்பாட்டில் கூட்டாகப் பணியாற்றினர்.

            ‘உனோகால் – சென்ட்காஸ் கன்சார்டியம்’ (உனோகால் நிறுவனம் --மத்திய ஆசிய கேஸ் பைப்-லைன் கூட்டுப் பேரமைப்பு) தலிபான்களுக்கு பெரும் தொகையை வழங்க ஒப்புக் கொண்டது. உனோகாலின் போட்டியாளரான ‘பிரிதாஸ்’ என்னும் அர்ஜென்டினா நிறுவனம் கேஸ் எடுத்துச் செல்லும் கட்டணமாகத் தனிபானுக்கு ஒரு பில்லியன் டாலர் வழங்க முன்வந்தது; அந்தத் தொகை பெருமளவிலான ரயில் பாதை, சாலை நிர்மாணம் மற்றும் எரிவாயு பாதையில் வலுவான தலிபான் படைகளால் 20 கிமீக்கு ஒரு போலீஸ் காவல் வழங்கவும் தரப்பட முன்வந்தது.

பிரிதாஸ் நிறுவனத்தைவிட உனோகால் தலைமையேற்ற சென்ட்காஸ் கன்சார்டியத்திற்கு முன்னுரிமை தர துர்க்மெனிஸ்தானை அமெரிக்க அரசு கட்டாயப்படுத்தியது. கன்சார்டியம் பேரமைப்பிற்கு எரிவாயு குழாய் பாதை ஒப்பந்தம் 1997ல் கிடைத்தது. அந்த ஆண்டு மூத்த தலிபான் குழு ஒன்றிற்குப் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்காவின் டெக்சாஸ் நகருக்குப் பயண ஏற்பாட்டையும் அமெரிக்கக் கம்பெனி செய்து தந்தது. ஆனால் திடீரென்று ஆப்கானிஸ்தானத்தில் அரசியல் சூழ்நிலை மோசமடைந்தது. 1998ல் தான்சானியா மற்றும் கென்யாவின் அமெரிக்கத் தூதரகங்கள் மீது அல்-காய்தா தாக்குதல் நடத்தியது. அதே ஆண்டு ஆகஸ்டில் அமெரிக்கா ஆப்கானிஸ்தானத்தில் இருந்த பின்-லாடன் முகாம்களைத் தாக்கியது; நான்கு மாதங்களுக்குப் பிறகு உனோகால் சென்ட்காஸ் அமைப்பிலிருந்து வெளியேறியது.  

            இன்று எரிவாயு குழாய் நிர்மாண வளர்ச்சியில் உனோகால் முன்னணி பாத்திரம் வகித்து வடக்கு துர்க்மெனிஸ்தானிலிருந்து ஆப்கான் வழியாகப் பாக்கிஸ்தானின் அரேபிய கடல் துறைமுகத்திற்கு சுமார் 1700 கிமீ எரிவாயு குழாய் பாதை அமைத்துள்ளது.

            எண்ணை எரிவாயு வர்த்தகச் செயல்பாட்டிற்குத் தேவையான நிலைத்தன்மையை அடைய வேண்டி அமெரிக்கா தலிபான்களுடன் சமரசமாகக் குழைகிறது.

தலிபான், அமெரிக்கா மற்றும் எண்ணை வளம்   

               


ஆப்கானிஸ்தான் வழியாக இயற்கை எரிவாயு குழாய்பாதைக்காகச் சமீபத்தில் தலிபான் குழு திடீரென்று துர்க்மெனிஸ்தானிற்கு விஜயம் செய்தது. இதற்கு ஏற்பாடு வசதிகளைச் செய்து தந்தது அமெரிக்க அரசு. அமெரிக்கா நீண்டகாலமாகச் சாதிக்கப் பாடுபட்டதை நான்கு நாடுகளின் ஆங்கில முதல் எழுத்தைக் கொண்டு “TAPI“ என்பர் : அது ‘துர்க்மெனிஸ்தான், ப்கானிஸ்தான், பாக்கிஸ்தான் மற்றும் ந்தியா’ வழியாகச் செல்லும் இயற்கை எரிவாயு குழாய் பாதை என்பதைக் குறிக்கும்.

                எண்ணை மற்றும் எரிவாயு தேடியெடுக்கும் ஆய்வுகள் மற்றும் குழாய் அமைப்பதில் அமெரிக்காவும் தலிபானும் தங்களுக்கிடையே ஒத்துழைப்பை மீண்டும் புதுப்பித்தனர்.

சீனாவின் பார்வையும் நோக்கங்களும்

            2009ல் மத்திய ஆசியா – சீனா இடையே பைப்-லைன் திட்டம் துவங்கப்பட்டது. அது முதலாக, துர்க்மெனிஸ்தான் 290 பில்லியன் கனசதுர மீட்டர் எரிவாயுவைச் சீனாவிற்கு அனுப்பி வருகிறது. சீனா நிதியளித்து நிர்மாணித்த அந்தப் பைப்-லைன் திட்டம் ஆண்டு தோறும் 55 பில்லியன் கனசதுர மீட்டர் துர்க்மெனிய எரிவாயுவை எடுத்துச் செல்கிறது.

            இதனால் அந்தப் பகுதி எண்ணை புவிசார் அரசியலில் சீனாவிற்கு மிகப் பெரிய ஆர்வம் இருக்கிறது; ஆப்கானிஸ்தானத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியதைத் தனக்குச் சாதகமாக்க அந்நாடு பார்க்கிறது. துர்க்மெனிஸ்தான் எண்ணை, எரிவாயு குழாய்கள் மற்றும் தனது உறுதியான பாதுகாப்பிற்குத் தலிபானை எதிர்பார்த்து நிற்கிறது.

            அமெரிக்க ஆதரவுடன் தலிபான் துர்க்மெனிஸ்தான் மீது முக்கியத்துவமுடையதாகக் கண் வைக்கிறது. மேலும் அமெரிக்கா, சீனா, ரஷ்யா மற்றும் பாக்கிஸ்தான் நாடுகள் அந்நாட்டின் புதிய தலைமைக்கு அரசியல் ஆதரவையும் வழங்குகின்றன.

            இவ்வாண்டின் தொடக்கத்தில் தலிபானியக் குழு, துர்க்மெனியத் தலைநகர் அசுகாபாத் சென்று, துர்க்மெனிஸ்தான் மின்சாரத்தை ஆப்கானிஸ்தான் வழியாகப் பாக்கிஸ்தானுக்கு ஏற்றுமதி செய்து கொண்டு செல்வது குறித்தும் விவாதித்தது.

            ஆப்கானிஸ்தானை மத்திய ஆசியாவுக்கும் தெற்காசியாவுக்கும் இடையே பாலமாகத் தலிபான் கருதுகிறது. அதன் முன்னெடுப்புத் திட்டங்களில் ஒன்று சுமார் 1840கிமீ நீண்ட குழாய்பாதையைப் பாக்கிஸ்தான் எல்லையை ஒட்டியுள்ள இந்தியாவின் பஞ்சாப் மாநில ஃபாசில்கா மாவட்டம் வரை நீட்டிப்பதாகும்.

            துர்க்மெனிஸ்தான் உற்பத்தி செய்யும் பெரும்பகுதி எரிவாயுவை, உஸ்பெஸ்கிஸ்தான் மற்றும் கஸகஸ்தான் வழியே அமைக்கப்பட்ட மூன்று குழாய் பாதை ஏற்றுமதி கட்டமைப்புகள் மூலம்  சீனாவிற்குத் தற்போது துர்க்மெனிஸ்தான் வழங்கி வருகிறது.

            துர்க்மெனிய மற்றும் பிற எரிவாயு மீது ரஷ்யாவும்கூட தீவிரமான ஆர்வம் கொண்டுள்ளது.

தலிபானும் போதைப் பொருள் வர்த்தகமும்

            தலிபானும் அதன் கூட்டாளி துணை அமைப்புகளும் அபின் (ஓப்பியம்) செடிகள் பயிரிடுவது, அபின் வர்த்தகம் மற்றும் கடத்தலை ஆதரிக்கும் முக்கிய புரவலர்கள் ஆவர். (மலைப்பகுதியில் விளையும் அபின் செடியின் முற்றிய காய்களின் விதைகளே கசகசா மருந்துப் பொருளாகும். காய் முற்றும் முன் அதைக் கீறி பாலெடுத்து உறைய வைத்துத் தயாரிப்பதே போதைப் பொருளான அபின் -- தமிழ் ஆயுர் வேதம் முகநூலில் இருந்து இணைத்தது.)

            ஆப்கானிஸ்தான் உலகின் மிகப்பெரிய அபின் உற்பத்தி மற்றும் உலகின் 80சதவீத ஹெராயின் போதைப் பொருள் வழங்கும் நாடாகும். அந்நாட்டின் ஜிடிபி-யில் அபின் வர்த்தகம் 11 சதவீதமாகும். ஆப்கானின் 34 மாகாணங்களின் 22ல் அபின் (பாப்பி) செடி வளர்க்கப்படுகிறது. நீண்ட காலமாக தலிபானின் கட்டுப்பாட்டில் இருக்கும் தெற்கு ஆப்கானிஸ்தான் பகுதியில்தான் பெரும்பகுதி போதைச் செடிகள் பயிரிடப்படுகின்றன. அபின் பயிரிடுவதை எதிர்த்துப் ‘போரிட’அமெரிக்கா 9 பில்லியன் டாலர் செலவிட்டது. ஆனால் எதிர்ப்பில் திறமையான சட்ட நடவடிக்கைகளையோ அல்லது இராணுவ நடவடிக்கையோ அமெரிக்கா எடுக்கவில்லை என்பதே உண்மை; தலிபான்களைவிட போதைப் பொருள் வர்த்தகம் சிறியதொரு தீமை எனக் கருதிவிட்டது போலும்! அமெரிக்காவின் போதைப் பொருள் எதிர்ப்பு நடவடிக்கை அதிகாரியான ரிச்சர்டு ஹால்ப்ரூக் கடந்த 40ஆண்டுகளில் அமெரிக்காவின் ‘முயற்சி’களைப் பயன்தராது மிகவும் வீணடிக்கப்பட்ட மற்றும் திறனற்ற நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்கா தலிபான்களிடம் கையளித்து விட்டது

            ஆப்கானிஸ்தான் சூழலையும் வரலாற்றையும் அமெரிக்கா நன்றாக அறிந்துள்ளது. தலிபான்களின் கீழ் பெண்களே மிக மோசமாக சுரண்டப்படும், ஒடுக்கப்படும் பிரிவு என்பதையும் அறியும். ஆப்கான் கலாச்சாரம், பண்பாடு, நாகரீகத்தைத் தலிபான்கள் சீரழிக்கிறார்கள் என்பதையும் அமெரிக்கா நன்றாகவே அறியும். அனைத்திற்கும் மேலாகத் தலிபான்களிடம் அதிகாரத்தைக் கையளித்து ஒப்படைப்பது அந்நாட்டை மீண்டும் பிற்போக்கு மத்திய காலத்திற்குத் தூக்கி எறிவதாகும் என்பதையும் நன்கு அறியும். மனித, ஜனநாயக உரிமைகள்; அமைதி, நிலைத்தன்மை, பாதுகாப்பு இப்படி எதைத்தான் என்றில்லை, பலவும் அமெரிக்கா உரத்துப் பேசும். இப்போது இவை அனைத்தும் தலிபான்களால் அச்சுறுத்தப்படுகின்றன. தலிபான்களைப் பற்றி உள்ளும் புறமும்  அதன் கடந்தகால, நிகழ்கால மற்றும் எதிர்காலம் குறித்தும் அமெரிக்கா நன்கு அறியும்.

            இவ்வளவு அறிந்தும் பிறகு ஏன் ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேறவும் அதிகாரத்தைத் தலிபான்களிடம் ஒப்படைக்கும் முடிவையும் அமெரிக்கா தேர்ந்தெடுத்தது? இதற்கான பதில் அதனுடைய ஏகாதிபத்திய தன்னல நோக்கங்களில் உள்ளது. மேலே குறிப்பிட்ட மதிப்புகள், ‘விழுமியங்கள்’ குறித்து அமெரிக்கா சிறிதும் அக்கறைபடுவதில்லை. தன்னுடைய இராணுவ வீரர்கள் பற்றியே அதன் அக்கறையும் கவலையும். நீண்டகாலம் தலிபான்களுடன் விவாதங்களில் ஈடுபட்டாலும் உண்மையில் அதனால் தலிபான்களை எதிர்கொண்டு சந்திக்க இயலவில்லை. ஆப்கானை விட்டு நீங்குவது என்பது முன்பே திட்டமிட்ட ஒன்றே.

            பயங்கரவாதத்தை எதிர்த்துப் போரிடுவதாக அமெரிக்கா உரத்துப் பெருமை பேசும் அதே நேரத்தில் பயங்கரவாதி ஹக்கானி வலைப்பின்னல் அமைப்பினருடன் நெருங்கிய  தொடர்புடைய தலிபான் அரசை ஆதரிக்கிறது. ஆப்கான் இடைக்கால அரசின் அமைச்சர் சிராஜூதீன் ஹக்கானி உலகப் பயங்கரவாதிகள் பட்டியலில் தீவிரமாகத் தேடப்படும் ஒருவராவார்.

            அமெரிக்கா மிக விநோதமான ஏகாதிபத்தியக் கொள்கையைப் பின்பற்றுகிறது.

            எண்ணை, எரிவாயு மற்றும் தனது பிற நன்மைகளைப் பாதுகாக்க வேண்டிய தேவை அமெரிக்காவுக்கு உள்ளது. அரபுக் கடல் மற்றும் அதைத் தாண்டி தொலைவான பிராந்தியங்களை அடைந்து தனது செல்வாக்கு வளாகத்தை விஸ்தரிக்க அமெரிக்கா தலிபான்களுடனும் ஒத்துழைக்கும்.  

            சீனா, ரஷ்யா, துர்க்மெனிஸ்தான் முதலான மற்ற சக்திகளுக்கும் சொந்த நலன்களின் ஆர்வம் உண்டு என்பதால் அவையும் ஆப்கானிஸ்தான் மற்றும் ஆப்கான் மக்களைத் தங்களது புவிசார் அரசியல் பரிசோதனைச் சாலை எலிகளாக, சோதனைப் பொருட்களாக மாற்றுகின்றன. அமெரிகாவின் விலகல் அவர்களது ‘வாய்ப்பு’களை அதிகரித்துள்ளது.  

இந்தியாவின் நிலைபாடு

            சமீப காலங்களில் அமெரிக்க ஆதரவு கொள்கைகளைப் பின்பற்றியதற்கான விலைகளை இந்தியா தர வேண்டியுள்ளது. இப்போது திடீரென்று புதிய அபாயங்களைச் சந்திக்கிறது. இந்திய அரசின் ‘நண்ப’னான அமெரிக்கா திடீரென்று ஆப்கானிஸ்தானைவிட்டுச் சென்று விட்டதால், தலிபான்கள் மற்றும் பாக்கிஸ்தானிடமிருந்து தீவிரவாத மற்றும் பிற ஆபத்துகள் அதிகரித்துள்ளன. ஆப்கானிஸ்தானத்தின் புதிய ஆட்சியை எதிர்ப்பதா அல்லது ஆதரிப்பதா என்ற மிகப் பெரிய தடுமாற்றத்தில் இந்திய அரசு உள்ளது. எரிவாயு குழாய் பாதைகள் (ஒரு முடிவிற்கு) உதவலாம், அல்லது உதவாது போகலாம். எண்ணை மற்றும் எரிவாயு தேவையின் சூழல் இந்திய அரசைத் தலிபான்களுடன் நட்பு கொள்ள நிர்பந்தித்தாலும், அவர்களுடன் இந்தியா மிகவும் நெருக்கமாக நட்புகொள்ள முடியாது.

            இந்தியாவின் நிலை தனிமைப்படுத்தப்பட்டதாகவும் உதவியற்ற நிலையிலும் உள்ளதாகத் தோன்றுகிறது. ஆப்கன் மக்களை ஆதரித்து நிற்கும் உறுதியான முடிவை இந்தியா மேற்கொள்ள வேண்டும்; தலிபான் – அமெரிக்கச் சூழ்ச்சிகளிலிருந்து தன்னைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.

--நன்றி : நியூஏஜ் (செப்.26 –அக்.2)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ. கடலூர்

 

 

 

Tuesday 28 September 2021

அமைதியான உலகம் சாத்தியம், போரில்லாத உலகைப் படைப்போம்!

 


அமைதியான உலகம் சாத்தியம்,

போரில்லாத உலகைப் படைப்போம்!

--பேரா. டாக்டர் யுகல் ராயலு

            சர்வதேச அமைதி நாளில் அமைதி மற்றும் அகிம்சையின் தூதுவர் மகாத்மா காந்திஜி உரைத்ததை நினைவு கொள்வோம் : “இப்பூமியில் அனைவரின் தேவைகளையும் பூர்த்தி செய்யப் போதுமானவை உள்ளன, ஆனால் ஒரு மனிதனின் பேராசையைக்கூட பூர்த்தி செய்யப் போதுமானது இல்லை.”

            ஒரு துண்டு நிலம் அல்லது செல்வத்திற்காவது சதா சர்வ காலமும் போரிடும் குழுக்கள் இடையே நடந்த ஓயாத போர்களின் நாள் முதலாய் நீண்ட தூரம் மனித நாகரீகம் கடந்து வந்துள்ளது. வேறுபட்ட மனிதக் குழுக்கள் ஒவ்வொன்றும் தாங்கள்தான் மேன்மையான உயர்ந்த இனமென்றும்; எனவே மற்றவர்களை அடக்கி ஆள உரிமை பெற்றதாகவும் நினைக்கின்றன. நல்ல வேளை, நம் அறிவியல் தெளிவின் காரணமாக இப்பூமியின் அனைத்து மனிதர்களும் பொதுவான மனிதகுலக் குடும்பத்திலிருந்து வந்தவர்கள் என்ற புரிதல் இன்று ஏற்பட்டுள்ளது. நம் அனைவருக்கும் பொதுவான முதாதையரையே நாம் பகிர்கிறோம்.

            காலம் தோறும் கவிஞர்கள், எழுத்தாளர்கள், தத்துவியலாளர்கள், முனிவர்கள் மற்றும் பெரும் தலைவர்கள் எல்லாம் தங்களோடு வாழ்ந்த சக மனிதர்களுக்கு எடுத்துச் சொல்லியபடியே இருந்தார்கள் – வாழ்வதற்கு மிகச் சிறந்த நல்ல வழி அமைதியே! ‘பூமியிலே கண்டம் ஐந்து, மதங்கள் கோடி…யாவினுக்கும் உட்புதைந்த கருத்து இங்கொன்றே’ என்று பாரதி சொன்னபடி அனைத்துச் சமயங்களும் சமாதான சகவாழ்வு பாதையில் நம்மை அழைத்துச் செல்ல வழிகாட்டின.

            மனிதகுலம் இரண்டு கோரமான யுத்தங்களைப் பார்த்தன. இரண்டாவது உலகப்போரில் பூமித்தாயின் புதல்வர்களும் புதல்விகளுமாக 5கோடி பேர் கொல்லப்பட்டனர். ஒரு சர்வாதிகாரி தான் மேன்மையான உயர்ந்த இனத்தைச் சேர்ந்தவன் என நினைத்ததே காரணம்! அந்தப் போரில் அழிக்கப்பட்ட பணத்தைக் கொண்டு இப்பூவுலகில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வீடுகட்டித் தருவதற்கு அது போதுமான தொகையாகும். அப்பணத்தைச் சரியாகப் பயன்படுத்தியிருந்தால், நீலவானும் கடலும் சூழ்ந்த இந்த நிலவுலகின் ஒவ்வொரு தாயின் வீட்டு வாசலுக்கே சுத்தமான குடிநீர் வசதியைக் கொண்டு சென்று தந்திருக்க முடியும்.

            இன்று உலகின் எல்லா நாடுகளும் பாதுகாப்புக்காகச் செலவிடும் மொத்த தொகை (1981 பில்லியன் டாலர்) ரூபாய் 91,12,600 கோடி. நகரத்தில் சராசரியாக ரூ10லட்சத்தில் நடுத்தர வசதிகளுடைய வீடு கட்ட முடியும். பாதுகாப்புக்காகச் செலவிடுவதை ஒரு குவியலாக்கி அந்தத் தொகையில் 91 கோடி வீடுகள் கட்டி எழுப்ப முடியும். (‘காணி நிலத்தினிலே ஓர் மாளிகை’ என்ற மகாகவியின் மக்கள் கோரிக்கையை நிறைவேற்ற முடியும்). இந்தியாவில் இருக்கும் மொத்த குடும்பங்கள் எண்ணிக்கை சுமார் 40 கோடி. உலகம் முழுவதிலுமே வீடில்லாத குடும்பங்கள் 50 கோடிக்கு மேல் இல்லை.

            உலகம் கெட்ட போரிடுவதை விட்டொழித்தால் சொர்க்கம் மண்ணில் வந்திறங்கும். நான்கு நாடுகள் –இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா – புதிய பீரங்கி கவச வாகனங்கள் (டாங்குகள்) வாங்குவதைக் குறைந்தது ஓராண்டிற்கு தள்ளி வைத்தால், இந்நாடுகளின் மக்கள் அனைவருக்கும் பாதுகாப்பான நல்ல குடிநீர் வசதி செய்து  தர அத்தொகை போதுமானதாகும்.  

            ஆப்கானிஸ்தானை ஆக்கிரமித்த வகையில் 20 ஆண்டுகளில் அமெரிக்கா செலவிட்டது 2 ஆயிரம் பில்லியன் டாலர் (அதாவது, ரூ1,56,65,800  கோடி). ஆப்கானிஸ்தான் மக்கள் தொகையே நான்கு கோடிதான். எனவே ஒவ்வொரு ஆப்கானிஸ்தான் குடிமகனுக்கும் அமெரிக்கா 40 லட்சம் செலவிட்டுள்ளது என்பது கொடுமை. இதையே அந்த மக்களின் நலவாழ்விற்காகச் செலவிட்டு இருந்தால், அந்நாடு ஏனைய ஐரோப்பிய நாடுகள்போல வளர்ச்சி பெற்றிருக்கும். அர்த்தமற்ற போரில் அத்தொகை வீணடிக்கப்பட்டிருக்கிறது. ஆப்கான் குடிமக்கள் மட்டுமில்லாமல் அமெரிக்க வீரர்களும் பலியாகி இருக்கிறார்கள்; அழகிய ஆப்கான் தேசம் பாலைவனமாகி இருக்கிறது.

            நாம் கற்பனை செய்து பார்க்கலாம், மனித நாகரீகம் தனது ஞானத்தைக் கொண்டு போர் என்ற முட்டாள்தனத்தை ஒழித்தால் பிறகு எவ்வளவு செல்வங்களைச் சேமிக்கலாம்? இந்தியாவின் ஆண்டு பட்ஜெட் ரூ.5 லட்சம் கோடி. இதன் பொருள் ஒவ்வொரு குடிமகனுக்கும் ஓராண்டிற்கு ரூ நான்காயிரம் பாதுகாப்புக்காகச் செலவிடுகிறோம் என்பதே. ஒரு கிராமத்தின் மக்கள் தொகை சராசரியாக ஆயிரம் எனக் கொண்டால் அந்த 1000 x 4000 என ரூ 40 லட்சம்  அந்தக் கிராமத்தின் வளர்ச்சிப் பணிக்காகச் செலவிடக் கிடைத்திருக்கும். இதுபோல ஒவ்வொரு கிராமம் நகரம் என வளர்ச்சி பெற்று, சில வருட காலத்திலேயே ஏழ்மையும் பசியும் இப்புவியின் முகத்திலிருந்து துடைத்து அகற்றப்பட இயலும்!

            சிலர் கேட்கிறார்கள், உலகத்திலிருந்து போரை ஒழிப்பது சாத்தியமா? இதற்குப் பதில் மிகச் சாதாரணமான ’ஆம்’ முடியும் என்பதே. உலகத்தின் மக்களாகிய நாம்தான் நல்லதொரு வாழ்வை அமைத்துத்தர வேண்டி நமது அரசுகளைத் தேர்ந்தெடுக்கிறோம்; போர்களைத் தொடுப்பதற்காகத் தேர்ந்தெடுக்கவில்லை. குடிமக்கள் அனைவரும் முறையே தங்கள் தேசம் மற்றும் அதைச் சுற்றியும் அமைதியைக் கோரத் தொடங்கினால், உலகத் தலைவர்கள் அத்திசைவழியில் நடவடிக்கை எடுக்க நிர்பந்திக்கப்படுவார்கள். அமைதியை ஒரு மூலையில் மட்டும் கொண்டுவந்துவிட முடியாது. அது ஓர் உலகளாவிய தேவை. உலக மாந்தர் அனைவர்க்கும் தேவை, அமைதியே!

            இரு நாடுகள் போரிடும்போது அவை இரண்டுமே ஓரிரண்டு நாள் போரில் ஆண்டுக் கணக்கிலான வளர்ச்சியை இழந்து, இரு தரப்பிலேயும் கடும் நட்டங்கள் விளைகின்றன. இந்தப் போரில் ஆதாயம் அடையும் ஒரே தரப்பு, உலகின் மற்றொரு மூலையில் உட்கார்ந்திருக்கும் ‘ஆயுத உற்பத்தியாளர்களே’. (உற்பத்தியாளர்கள் இல்லை, அவர்கள் ‘சாவு வியாபாரிகள்’). அவர்களைத் தவிர போரிடும் நாடுகளில் உள்ள ஆயுத பேரத் தரகர்களும் கமிஷன் ஆதாயம் அடைகின்றனர். இதில் வேடிக்கை அந்த நாடுகளில் ஆயுத பேரங்களில் ஈடுபடுபவர்கள்தாம் தேசபக்தி என்றும் தேசியவாதம் என்றும் உச்சபட்ச கூச்சலை எழுப்புகின்றனர்! இதில் ஆகக்கூடுதலான அதிகபட்சம் முழுமையாக அவதிப்படுபவர்கள் அத்தேசங்களின் பொதுமக்களே!

            காலங்காலமாகப் போர் விரும்பிகள் பேரழிவு ஆயுத விற்பனையை உலகின் சர்வதேச எல்லைகளில் தங்குதடையின்றி நடத்துவதற்காகப் புதிய சொல்லாடல்களை உருவாக்குகிறார்கள். டாங்கிகளையும் வெடிகுண்டுகளையும் தேசபக்தி என்றழைக்கின்றனர், ஆனால் உண்மை அதற்கு மாறானதல்லவா! வெடிகுண்டு எதையும் உண்டாக்காது, அது அழிவை மட்டுமே ஏற்படுத்தும்! உருண்டோடும் கவச வாகனம் கட்டட வாழ்விடங்களையும், மனித ஆற்றலின் அடையாளமான அணைக்கட்டுகளையும் அழிக்க மட்டுமே செய்யும்! அது எதையும் உண்டாக்காது. கட்டடங்கள் மற்றும் மற்ற கட்டுமானங்கள் தலையில் போர் விமானங்கள் குண்டு மழை மட்டுமே பொழியும். அந்த இடங்களைப் போர்வெறியர்கள் தங்கள் மொழியில் எதிரியின் நாடு என்று பெயரிட்டு வெறியூட்டும். அழிக்கும் போர் விமானங்கள் மக்களை ஏற்றிச் செல்லாது!

            உண்மை யாதெனில், எந்தப் பிரச்சனைக்கும் போர் தீர்வாகாது. மனித நாகரீகத்தின் மிகப் பெரிய பிரச்சனையே போர்தான்! பிறகு அது எப்படி எந்தப் பிரச்சனையையும் தீர்க்கும்?

            பிரச்சனைகள் பரஸ்பர பேச்சுவார்த்தைகள், உரையாடல்கள் மூலமே தீர்க்கப்படுகின்றன. நவீன அறிவியல், அற்புதமான தகவல் தொழில்நுட்ப வசதியை வழங்கியிருக்கிறது. இரண்டு அதிபர்கள் அல்லது பிரதமர்கள் தொலைபேசியை எடுத்துச் சர்வ சாதாரணமாகப் பேச முடியும். தேவை, உரையாடலைத் துவக்குவது என்பதே! பரஸ்பரப் புரிதல் மூலம் இந்த உலகில் தீர்க்கப்பட முடியாத பிரச்சனைகளே இல்லை! அருகமை தேசத் தலைவர்கள் இடையேயான சில நிமிட உரையாடல் பல நூறு உயிர்களை, பலகோடி ரூபாய் மதிப்புடைய வாழ்வாதாரப் பொருட்களை (போர்) அழிவிலிருந்து காப்பாற்றும். இதில் விளையும் மிகப் பெரிய லாபம் அமைதியும் அனைவருக்குமான வளர்ச்சியுமே!

            இரண்டாவது உலக யுத்தம் வரை, ஐரோப்பாவின் நாடுகள் தொடர்ச்சியாகப் பதற்றத்திலும் சிலநேரம் போர்களிலும் கூட இருந்தன. பரஸ்பர பேச்சுவார்த்தை, உரையாடல் மற்றும் கவனமான திட்டமிடல் என்ற நீண்டகால கடுமையான நிகழ்முறைக்குப் பின்னர் ஐரோப்பிய யூனியன் பிறந்தது. (புதிய குழந்தை குடும்பத்தில் பிறந்ததும்) அப்பகுதியின் பல எல்லைகளில் போர்கள் முடிவுக்கு வந்தன. பரந்ததொரு நிலப்பரப்பில் அமைதி நிலைநாட்டப்பட்டது. இதனையே பிரதி எடுத்து உலகின் மற்ற பகுதிகளுக்கும் ஏன் விரிவுபடுத்த முடியாது? “தெற்காசிய இறையாண்மை குடியரசுகளின் கூட்டமைப்பு” (Union of South Asian Sovereign Republics) என்ற ஓர் அமைப்பை ஏன் நம்மால் ஏற்படுத்த முடியாது? இந்தியா, பாக்கிஸ்தான், பங்களாதேஷ், ஸ்ரீலங்கா, பூட்டான் நாடுகளின் கூட்டமைப்பு, மக்கள் சுதந்திரமாக நடமாடக் கூடிய ஒரு பிராந்தியமாகக் கட்டமைப்பது சாத்தியமே. இது பலநூறு கோடி ரூபாயை மிச்சப்படுத்தும், அப்பகுதியே அமைதி மற்றும் வளர்ச்சியின் வளாகமாக மாறும்; அல்லாது போனால் அர்த்தமற்ற எல்லை அத்துமீறல்கள், சீண்டல்கள், மோதல்கள் என சர்வதேச எல்லைகளில் அந்தச் செல்வாதாரம் வீணடிக்கப்படும்.

            நம் முன்னோர்கள் உருவாக்கித்தந்த வளர்ச்சிக் கொள்கையை வெளிப்படுத்தும் வேத வாக்கியம், “வசுதைவ குடும்பகம்” (உலகமே ஒரு குடும்பம்), மகா உபநிஷத் நூலில் இடம்பெற்றது. (அந்தச் சுலோகத்தின் முழுமையான பொருள்: 




“இவர் எனக்கு வேண்டியவர்; அவர் எனக்கு வேண்டாதவர்’ என்று வேறுபாடுகள் காண்பவர் சிறுமதியுடையவர். இவை மிகவும் கீழ்த்தரமான புத்தியின் வெளிபாடாகும். குறுகிய எண்ணங்களையும் உணர்ச்சிகளையும் கடந்த சான்றோர், “இவ்வுலகமே ஒரு குடும்பம்” என்ற உண்மையை உணர்வர்.) இதனை நம் வாழ்வில் உண்மையாக ஆக்க வேண்டிய தருணம் இது. தத்துவம் வாழ்வியல் எதார்த்தமாக வேண்டும், நம் வாழ்வில் அதனைக் கடைபிடிக்க வேண்டும்.  

            உலகக் குடிமக்கள் அனைவரின் தேவை சாந்தியும், சமாதானமும், அமைதியுமே. உணவை உற்பத்தி செய்துதரும் அன்னதாதாக்களாகிய விவசாயிகளுக்கும் அமைதி தேவை. இந்த அழகிய பூமிப் பந்தின் தாய்மார்கள் ஒவ்வொருவருக்கும் மட்டுமல்ல, பூமித் தாய்க்கே அமைதி தேவை. எதிர்காலச் சந்ததியினரின் நன்மைக்காக இப்பூமிக் கோளின் அமைதியை நாம் பாதுகாப்போம்! நாம் முன்னெடுத்துச் செல்ல வேண்டியது அமைதியையும் வளர்ச்சியையும்; போரையும் அழிவையும் அல்ல. உலகில் அமைதியும் சமாதானமும் நிலவட்டும்!

            வேண்டாம், வேண்டாம் அணுகுண்டுகள் வேண்டவே வேண்டாம்!

            வேண்டும் நமக்கு உண்ண உணவும், உலகில் அமைதியும்!

                        “புதியதோர் உலகம் செய்வோம் – கெட்ட 

                          போரிடும் உலகத்தை வேரோடு சாய்ப்போம்!

    இதயமெலாம் அன்பு நதியினில் நனைப்போம்
    இது எனது என்னுமோர் கொடுமையைத் தவிர்ப்போம்!”

--நன்றி : நியூஏஜ் (செப்.26 – அக்.2)

--தமிழில் : நீலகண்டன், கடலூர்

 

 

Monday 27 September 2021

விவசாய உற்பத்தி பொருள்களுக்குக் குறைந்தபட்ச ஆதரவு விலை பிரச்சனை

 




குறைந்தபட்ச ஆதரவு விலை பிரச்சனை

--ஆர் எஸ் யாதவ்

            பல மாதங்களாகப் போராடிவரும் விவசாயிகளின் கோரிக்கைகளில் விவசாய உற்பத்திப் பொருள்களுக்குக் ‘குறைந்தபட்ச ஆதரவு விலை’ (MSP, எம்எஸ்பி) நடைமுறைக்குச் சட்டபூர்வ பாதுகாப்பு வழங்க வேண்டும் என்பதும் ஒன்று. அபரிமித விளைச்சல் அல்லது சந்தை சக்திகளின் கூட்டு மோசடியால் விலை குறைவாக நிர்ணயிக்கப்படுவது போன்ற காரணங்களால் விவசாய உற்பத்திப் பொருள்களின் விலை வீழ்ச்சி அடைவதிலிருந்து விவசாயிகளைப் பாதுகாக்க ஒன்றிய அரசு ஏற்படுத்திய நடைமுறையே எம்எஸ்பி. அரசு முகமைகள் குறிப்பிட்ட தானியத்தை விவசாயிகளிடமிருந்து கொள்முதல் செய்து வாங்கும் விலைதான் அது. உற்பத்தியை அதிகரிக்க ஏற்றதொரு சூழ்நிலையை உருவாக்கவும், விவசாயிகளுக்கு ஊக்கம் அளிக்கவும் இத்திட்டம் 1960களின் மத்தியில் கொண்டுவரப்பட்டது. நாட்டில் உணவு பற்றாகுறை ஏற்பட்ட 1966 –67ல் முதன் முதலாகக் கோதுமைக்கு இம்முறை அறிமுகப்படுத்தப்பட்டது. 

            23 பயிர்களுக்கு எம்எஸ்பி அறிவிக்கப்படுகிறது: 7வகை தானியங்கள் (நெல், கோதுமை, மக்காச்சோளம், கம்பு, சோளம், பார்லி மற்றும் கேழ்வரகு); 5 பருப்புகள் (கடலை, துவரை (ஆர்க்கார்), உளுந்து, பயறு, மசூர் (மைசூர்) பருப்பு; 7 எண்ணை வித்துகள் (கடுகு, மணிலா, சோயாபீன், எள் , சாபிளவர், சூரியகாந்தி மற்றும் நைஜர் (காட்டு எள்) வித்து); 4 வணிகப் பயிர்கள் (பருத்தி, கரும்பு, தேங்காய் கொப்பரை மற்றும் சணல்). இருப்பினும் குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது சட்டபூர்வமாக உறுதி செய்யப்பட்ட விலை அல்ல என்பதே நடைமுறை உண்மை.

            விளைச்சலில் அரசு முகமைகளால் வாங்கப்படும் ஒரு பகுதிக்குத்தான் எம்எஸ்பி விலை கிடைக்கிறது. ஆனால் அதுபோக ஏனைய உற்பத்தி தானியங்களை எம்எஸ்பியைவிடக் குறைந்த விலைக்கு, சிலநேரம் அதனில் பாதிவிலைக்கே, தனியார் வியாபாரிகள் வாங்குகின்றனர். அப்படிக் குறைந்தவிலைக்கு வாங்கியதை அவர்கள் அரசு முகமைகளிடம், மாநிலத்திற்குள் அல்லது வெளி மாநிலத்திலே எம்எஸ்பி விலைக்கு விற்கின்றனர் என்பது இதில் கொடுமை.

            கரும்புக்கு நிர்ணயிக்கும் விலையை ‘நியாயமான மற்றும் லாபகரமான விலை’ (FRP, அது எம்எஸ்பி அல்ல) என்றழைக்கிறார்கள். பஞ்சாப், உபி, ஹரியானா, தெலுங்கானா மற்றும் கர்னாடகா போன்ற சில மாநிலங்கள் மற்ற மாநிலங்களிலிருந்து வேறுபட்டு கரும்புக்குத் தாங்கள் அளிக்கும் சொந்த விலையை ‘மாநில சிபாரிசு விலை’ (SAP, state advisory price) என்கிறார்கள்; அது ஃஎப்ஆர்பி லாபவிலையைவிடவும் வழக்கமாக அதிகமாக இருக்கும். சில மாநிலங்கள் அதனை ‘மாநில உடன்பாட்டு விலை’ (SAP, Agreed Price’) என்கின்றன. அம்மாநில மில் ஆலைகள் மாநிலம் நிர்ணயித்த லாபகர விலை அல்லது உடன்பாட்டு விலையைத்தான் பின்பற்ற வேண்டும்.

            ஒவ்வொரு ஆண்டும், ‘விவசாய உற்பத்திச்செலவு மற்றும் விலைக்கான கமிஷன்’ (CACP) அமைப்பு பல்வேறு வகை பயிர்களுக்கு ஆகும் உற்பத்திச் செலவை மூன்று வரையறை விளக்கங்களைப் பயன்படுத்தி நிர்ணயிக்கிறது. அந்த மூன்று வரையறைகளும் முறையே A2, A2+FL மற்றும் C2 எனப்படுகிறது.  

            முதலாவது ஏ-2 : இது, ஒவ்வொரு பருவத்திற்கும் பயிரை வளர்ப்பதற்கு விவசாயிகள் நேரடியாக உண்மையில் செலவிடும் தொகையைப் பிரதிபலிக்கிறது. அதில் விதைகள், உரங்கள், பூச்சிமருந்து, நிலக் குத்தகை வாடகை மற்றும் தொழிலாளிகளுக்கு வழங்கும் கூலி முதலிய உள்ளீட்டுச் செலவுகள் சேரும்.

            இரண்டாவது ஏ2 + ஃஎப்எல் : முதல் முறையில் விவசாயி நேரடியாகச் செலவிடும் தொகையைத் தவிர, மேலதிகமாக விவசாயியின் குடும்ப உறுப்பினர்களின் ஊதியமில்லாத உழைப்பின் மதிப்பும் சேர்க்கப்படும். அதாவது அவர்கள் உழைக்காவிட்டால் அதற்கு பதில் மற்ற கூலித் தொழிலாளர்களைப் பயன்படுத்தி அவர்களுக்கு வழங்கியிருக்க வேண்டிய கூலியையும் சேர்க்க வேண்டும். இங்கே ஃஎப்எல் என்பது ஃபேமிலி லேபர், குடூம்ப உழைப்பு.

            மூன்றாவது முறை சி-2 : இரண்டாவது முறையின் மதிப்போடு பயிரிடப் பயன்படுத்தும் முதலீட்டுச் சொத்தான நிலத்திற்கான வாடகை மற்றும் நிலத்தின் மீதான வட்டியும் சேர்க்கப்படும்.

            சுவாமிநாதன் கமிஷன் சிபாரிசு செய்த குறைந்தபட்ச ஆதரவு விலை என்பது மூன்றாவது வரையறையான சி2 என்பதை அடிப்படையாகக் கொண்டது. சுவாமிநாதன் குழு சி 2 வை போல ஒன்னரை மடங்கு என எம்எஸ்பியை நிர்ணயித்து பரிந்துரைத்தது (அதாவது சி2 + 50%).  ஆனால் அரசு நிர்ணயித்த எம்எஸ்பி, சுவாமிநாதன் குழு பரிந்துரைத்தல்ல; மாறாக, இரண்டாவது A2+FL வரையறையின் வழிமுறையின்படிதான் நிர்ணயித்துள்ளது.

            எனவே அரசு அறிவிக்கும் குறைத்நபட்ச ஆதரவு விலைகள் குழுவின் சிபாரிசு விலையோடு ஒப்பிட மிகவும் குறைவானது. எனவே விவசாயிகள் இரண்டு கோரிக்கைகளை MSPல் வலியுறுத்துகிறார்கள். ஒன்று, சுவாமிநாதன் குழு பரிந்துரைத்த எம்எஸ்பி C2 + 50% என்று இருக்க வேண்டும். இரண்டாவது, எம்எஸ்பிக்குச் சட்டபூர்வமான உறுதி அளிக்க வேண்டும். விவசாய உற்பத்திப் பொருட்களை யார் வாங்கினாலும் வாங்கும் விலை என்பது எம்எஸ்பி-ஐவிட குறைவாக இருக்கக் கூடாது; அப்படி யாரேனும் குறைவான விலைக்கு வாங்க முயன்றால் அவர்களைச் சட்டப்படி தண்டிக்க வேண்டும். இவற்றை அமல்படுத்தினால், விவசாயிகளின் பொருட்களைத் தனியார் வியாபாரிகள் எவர் வாங்கினாலும் அவர்களுக்கு எந்த ஆட்சேபணையும் இல்லை. அவர்கள் கோருவதெல்லாம் உழைப்பில் விளைந்த பொருளை எம்எஸ்பி-ஐ விட குறைவான விலைக்கு வாங்கக் கூடாது என்பதுதான். சட்டபூர்வ அங்கீகாரம் வழங்கினால்தான் இது சாத்தியம். அதற்காகவே விவசாயிகள் தொடர்ந்து போராடுகிறார்கள்.

            23 பயிர்களுக்கு எம்எஸ்பி அறிவிக்கப்படுகிறது. ஆனால் அந்த விலைவிகிதத்தில் கொள்முதல் நடத்த எந்த முறையான ஏற்பாடும் இல்லை. எல்லா பயிர்களுக்கும் மற்றும் மொத்த உற்பத்திப் பொருட்களையும் எம்எஸ்பி விலையில் கொள்முதல் செய்ய ஏற்பாடு செய்யாதவரை, அறிவிப்புகளால் பயனில்லை. எம்எஸ்பி விலையில் கொள்முதலின் அவல நிலை இப்படி இருக்கையில் நாடாளுமன்றத்தில் பிரதமர் கூச்சமின்றி தைரியமாகக் கூறுகிறார், “குறைந்தபட்ச ஆதரவு விலை நேற்றும் இருந்தது, இன்றும் இருக்கிறது, நாளையும் இருக்கும்’. இது என்ன கேலிக்கூத்து நாடகம்?

தற்போது அறிவிக்கப்பட்ட எம்எஸ்பி

            2021 – 22ம் ஆண்டின் ஆறு ரபி பருவ (குளிர்காலப்) பயிர்களுக்கு (சந்தைப் பருவம் 2022 –23 ஆண்டிற்கான) எம்எஸ்பி விலைகளை அரசு 2021 செப்டம்பர் 8ல் அறிவித்துள்ளது. ஒப்பீட்டிற்காக முந்தைய ஆண்டின் எம்எஸ்பி விலையோடு கீழே தரப்படுகிறது:

 

பயிர்கள்

குறைந்தபட்ச ஆதரவு விலை

    (குவிண்டாலுக்கு ரூபாய்)

           மார்க்கெட் பருவம்

    2021 -- 22

  2022 -- 23

கோதுமை

1975

2015

பார்லி

1600

1635

கடலைப் பருப்பு

5100

5230

மசூர் (/மைசூர்) பருப்பு (சிகப்பு)

5100

5500

கடுகு விதை

4650

5050

சாபிளவர் (குசம்பா) [செந்தூரப் பூ]

5327

5441


            







           எம்எஸ்பி விலையை அறிவித்தபோது அரசு ‘அனைத்தையும் உள்ளடக்கிய முழுமையான’ (‘comprehensive’) என்ற வார்த்தையைத் தவறாகப் பயன்படுத்தியது. (அந்த வார்த்தை மேலே குறிப்பிட்ட மூன்றாவது வகையான C2உற்பத்திச் செலவைக் குறிப்பிடப் பயன்படுத்தப்படுவது). ஆனால் அரசு அறிவித்த எம்எஸ்பி, அதைவிடக் குறைவானதான இரண்டாவது வகையான A2+FL என்பதை அடிப்படையாகக் கொண்டு நிர்ணயிக்கப்பட்டதாகும். இது மக்களை ஏமாற்றுவதைத் தவிர வேறில்லை.

            கோதுமைக்கு உயர்த்திய எம்எஸ்பி வெறும் 2 சதவீதம் மட்டுமே, இது பத்தாண்டுகளில் அறிவிக்கப்பட்ட மிகக் குறைவானதாகும். கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது கோதுமைக்கு 2%, சாப்ளவர் 2.1%, பார்லி 2.2% மற்றும் கடலைப் பருப்புக்கு 2.5% மட்டுமே எம்எஸ்பி அதிகரிக்கப் பட்டுள்ளது. இதே காலகட்டத்தில் பணவீக்கம் 6 சதவீதம், அதாவது பணத்தின் உண்மை மதிப்பு அதற்கு முந்தைய காலத்தைவிட 6சதவீதம் குறைந்துள்ளது எனப் பொருளாகும். எனவே எம்எஸ்பி உயர்த்தப்பட்டாலும் எதார்த்த உண்மை, எம்எஸ்பி விலை மதிப்பு குறைந்து போனது என்பதே நிகர விளைவு. அதாவது ஜான் ஏறி, முழம் சறுக்கிய கதைதான். எனவே மேற்கண்ட உற்பத்திப் பொருள்களின் உண்மை விலை (பணவீக்கத்தையும் கணக்கில் கொள்ள) முறையே 4%, 3.9%, 3.8% மற்றும் 3.5% குறைந்துள்ளது. அதாவது உண்மையில் எம்எஸ்பி உயர்த்தப்படவே இல்லை. உயர்த்தப்பட்டதாகச் சொல்வது விவசாயிகளைக் கேலி செய்வதல்லவா?

மேலும் ஐக்கிய முற்போக்கு ஆட்சி காலத்தைவிட மோடி ஆட்சி காலத்தில் விவசாயிகளுக்கான எம்எஸ்பி வீழ்ச்சி அடைந்தே வருகிறது. யுபிஏவின் 2009 –13 ஆட்சி காலத்தில் எம்எஸ்பி ஆண்டுதோறும் 19.3 சதவீதம் வளர்ச்சி அடைந்தது; மோடியின் ஆட்சியில் 2014 –17ல் 3.6 சதவீதமாக வீழ்ச்சி அடைந்த எம்எஸ்பி 2020 –21ல் மேற்பத்தியில் குறிப்பிட்டபடி சில பயிர்களுக்கு 3 சதவீதத்திற்கும் குறைவாக வீழ்ந்தது.

            சந்தைப் பருவம் 2021–22க்கான பல்வேறு காரீப் (இலையுதிர்கால) சம்பா பயிர்களுக்கு அரசு 2021 ஜுன் 9ம் தேதி அறிவித்த குறைந்தபட்ச ஆதாரவிலை வருமாறு:

 

 

பயிர்கள்

குறைந்தபட்ச ஆதரவு விலை

    (குவிண்டாலுக்கு ரூபாய்)

           மார்க்கெட் பருவம்

    2020 -- 21

  2021 -- 22

நெல் (சாதா ரகம்)

1868

1940

நெல் ( ஏ – ரகம்) 

1888

1960

சோளம் (கலப்பினம்)

2620

2738

வெள்ளை சோளம்(மால்தண்டி)

2640

2758

கம்பு 

2150

2250

கேழ்வரகு    

3295

3327

மக்காச்சோளம்       

1850

1870

துவரம் பருப்பு (ஆர்கார்) 

6000

6300

பச்சைப்பயிர்           

7196

7275

உளுந்து

6000

6300

மணிலா       

5275

5550

சூரியகாந்தி விதை

5885

6015

சோயாபீன்ஸ் (மஞ்சள்)

3880

3950

எள்   

6855

7307

நைஜர் விதை

6695

6930

பருத்தி நடுத்தர இழை

5515

5726

பருத்தி (நீண்ட இழை)       

5825

6025

  

கரும்பு : 2021 ஆகஸ்ட் 25ல் உணவு மற்றும் நுகர்வோர் அமைச்சர் பியூஷ் கோயல் கரும்புக்கான நியாய லாப விலையில் (FRP) குவிண்டாலுக்கு ரூ5/- அதிகரித்து அறிவித்தார். 10% அடிப்படை மீட்பு விகிதமுள்ள கருப்புக்கு (அதாவது 100 டன் கரும்பைப் பிழிந்தால் 10 டன் சக்கரை கிடைக்கும் பிழிதிறன் உள்ளது) நியாயமான லாப விலையை ரூ290 அதிகரித்தும், 9.5% குறைவான மீட்பு விகிதமுள்ள கரும்புக்கு ரூ275 எனவும் நிர்ணயிக்கப்பட்டது. மீட்பு விகிதம் 0.1% அதிகரித்தால் 290 விலையில் குவிண்டாலுக்கு ரூ2.90 அதிகரித்தும்; 0.1% குறைந்தால் ரூ2.90 குறைத்தும் லாபவிலை வழங்கப்படும். (9.5% க்கு குறைவான மீட்பு விகிதமுள்ள கரும்பு வகைகளுக்கு மாற்றமின்றி குவிண்டாலுக்கு ரூ275/- வழங்கப்படும்). ஒன்றிய அமைச்சர் அறிவித்த குவிண்டாலுக்கு ரூ5 அதிகரிப்பு என்பது 1.7% உயர்வாகும். பணவீக்க விகிதத்தையும் கணக்கில் கொண்டால் உண்மையில் (மாநில அரசுகள் நிர்ணயித்த FRP) நியாய, லாப விலையில் அதிகரிப்பு எதுவுமில்லை; மாறாக, விலையில் வீழ்ச்சியே ஏற்பட்டுள்ளது.

            பல மாநிலங்கள் கரும்புக்கு பலவகையில் மாநிலச் சிபாரிசு விலையை வழங்குகின்றன. இரயில் பாதைகள், நெடுஞ்சாலைகளில் தடைகளை ஏற்படுத்தி விவசாயிகள் போராடிய பிறகு சம்யுக்த கிசான் மோர்ச்சா மற்றும் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் இடையே 2021 ஆகஸ்ட் 24ல் பேச்சுவார்த்தை நடந்தது; அதன் விளைவாய் பஞ்சாப் அரசு சென்ற ஆண்டின் மாநில விலையை விட குவிண்டாலுக்கு ரூ 50 அதிகரித்து ரூ360 என நிர்ணயித்து அறிவித்தது.

            பஞ்சாப் மாநிலத்தைத் தொடர்ந்து, ஹரியானா அரசும் ரூ12 அதிகரித்து முன்னதாக அறுவடைக்கு வரும் கரும்பு ரகங்களுக்கு குவிண்டாலுக்கு ரூ362 என அறிவிக்க வேண்டி வந்தது; தாமதமாக அறுவடைக்கு வரும் ரகங்களுக்கு முன்பிருந்த ரூ 340 என்பதை 355 என அறிவித்தது.

            2017லிருந்தே உத்திரபிரதேசத்தில்  மாநில ஏற்பு விலை மாற்றி அமைக்கப்படவில்லை. இது அம்மாநில விவசாயிகள் மீது மாநில பாஜக அரசு எந்தஅளவு அக்கறையாக இருக்கிறது என்பதைக் காட்டுகிறது. நான்கு ஆண்டுகளாக அதிக மகசூல் காணும் சாதாரண கரும்பின் விலை குவிண்டாலுக்கு ரூ315எனவும் முன்பருவ அறுவடை மற்றும் நிராகரிக்கப்பட்ட வகைகளுக்கு  ரூ325 எனவும் கரும்பின்விலை மாற்றமின்றி நீடிக்கிறது. ஆனால் சட்டமன்றத் தேர்தல் வருவதை முன்னிட்டு உபி அரசு கரும்பு விலையை அதிகரித்து விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கலாம்.

“உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம்!”



                  --நன்றி: நியூஏஜ் (செப்.26 – அக்.2)

--தமிழில்: நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்