Friday 28 January 2022

அதிபணக்காரர்கள் மீது சமத்துவமின்மை வரி விதித்திடுக!

                                                                     

                   


 பட்ஜெட்டில் ஏழைகளுக்குக்

        குறைந்தபட்ச வருமானம் கிடைக்கச் செய் 

           

             அதிபணக்காரர்கள் மீது  சமத்துவமின்மை வரி விதித்திடுக!

                                                                               --நித்தியா சக்ரவர்த்தி

          தேவோஸில் உலகப் பொருளாதார ஃபோரத்தின் மெய்நிகர் கூட்டம் நடைபெறும் அதே நேரம் ஆக்ஸ்பாம் சர்வதேச ஆய்வு அமைப்பின் சமத்துவமின்மை குறித்த அறிக்கை வெளியாகி ஓர் உண்மையை அம்பலப்படுத்திவிட்டது. அது, இந்தியா உட்பட உலகத்தில் கரோனா பெருந்தொற்றின் இரண்டாண்டு காலம் எவ்வாறெல்லாம் சமத்துவமின்மை என்னும் ஏழை –பணக்காரர்கள் இடையே உள்ள இடைவெளியை மேலும் அகலப்படுத்தியதை மிகத் தெளிவாக வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்தியாவில், தற்போதைய அரசிடம் ஏழைகளைப் பாதுகாக்கும் சமூகப் பாதுகாப்பு வழங்கு முறைக்குப் பற்றாக்குறை இருப்பதால், நிலைமை இருள் சூழ்ந்து ஏழைகளின் வாழ்வாதாரத்தை மேலும் மோசமாக்கி உள்ளது.

             தற்போது நிதியமைச்சகம் மற்றும் பிரதமர் அலுவலக விவாதங்களில் 2022—23ம் ஆண்டிற்கான மத்திய பட்ஜெட் வடிவமைப்பது எப்படியெனத் தொழிலதிபர்கள், பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட சமூகத்தின் பல்வேறு பிரிவுகளின் யோசனைகள் பரிசீலிக்கப்படுகின்றன. பிப்ரவரி 1ல் பட்ஜெட் தாக்கலான பிறகு வழக்கம்போல பிரதமரும் நிதியமைச்சரும் புதிய பட்ஜெட்டில் முன்மொழியப்பட்ட திட்டங்கள் இந்தியாவைப் புதிய உச்சத்திற்கு, கவண்கல் எறிவதுபோல  நாட்டை வளர்ச்சி பெற்ற நாடுகளின் பெரும் அணிவகுப்பில் கொண்டுபோய்விடும் என மார்தட்டுவார்கள் என்பதையும் எதிர்பார்க்கலாம்.

ஏழாண்டுகள் ஆட்சியில் ஏழைகளின் நிலை

            கடந்த ஏழாண்டு கால நரேந்திர மோடி தலைமையிலான என்டிஏ அரசு பின்பற்றிய வளர்ச்சிப் பாதை (?) சமத்துவமின்மை இடைவெளியை மட்டுமே அகலப்படுத்தியது; ஒவ்வொரு பொருளாதார நெருக்கடியும் பணக்காரர்களுக்கு அனுகூலமானது; ஏழைகள் மற்றும் இந்தியச் சமூகத்தின் குறைந்த வருமானப் பிரிவினரின் வாழ்வை விலைபேசி பணக்காரர்கள் லாபத்தைக் குவிக்கின்றனர். கடந்த இரண்டாண்டு பெருந்தொற்று காலத்தில் இந்நிகழ்முறைப் போக்கு மேலும் தீவிரமடைந்தபோதெல்லாம் அல்லற்படுபவர்களுக்கு அரசு நிவாரண உதவி சலுகைகளைத் தொடர்ந்து வழங்குவதாக அறிவிப்புகளை மட்டும் வெளியிடத் தவறவில்லை.

            தொற்றின் முதல் அலையின்போது 2020 மார்ச் 24ல் திடீரென்று நாடு முழுவதும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டது. அன்றிலிருந்து தினக் கூலிகள், சிறு குறு நடுத்தர நிறுவனங்களின் ஊழியர்கள், புலம்பெயர் தொழிலாளர்கள் மற்றும் தனியார் சிறுநிறுவனங்களில் பணியாற்றும் லட்சக் கணக்கான ஊழியர்கள் வேலை இழந்து, கதவடைப்புகளைச் சந்தித்து, குறைக்கப்பட்ட வருமானத்தில் மிகக் கடுமையான வறுமையில் உழன்றனர். இதே உழைக்கும் மக்கள்தான் இந்தியா மந்தநிலைப் பொருளாதாரத் பிடியில் பாதிக்கப்பட்டிருந்த 2017முதல் துன்ப துயரத்தில் வாழ்ந்து வந்தவர்கள். அதே காலகட்டத்தில் இந்தியப் பணக்காரர்களின் நிலை என்ன? நாட்டின் பொருளாதாரம் முழுமையாகப் பாதிக்கப்பட்டிருந்தபோது அப்பணக்காரர்கள் சாதனை அளவாகத் தங்கள் செல்வத்தை அதிகரித்து வந்தார்கள்.

            இந்தியச் சமத்துவமின்மை மீதான ஆக்ஸ்பாம் ஆண்டறிக்கை, மோடி அரசின் ஆட்சி முறை ஒரு சிலர் செல்வம் குவிக்கப் பெரும் ஆதரவு தந்ததையும், பிற மக்கட் பகுதியினருக்குப் பாதுகாப்பு வழங்குவதில் தோல்வியடைந்ததையும் மையப்படுத்தி சுட்டிக்காட்டியுள்ளது. அவ்வறிக்கையில் “சமத்துவமின்மை கொல்கிறது” என்ற தலைப்பில் கோவிட்19 பெருந்தொற்று ஏழைகள் மீதும் பணக்காரர்கள் மீதும் எத்தகையப் பொருளாதாரத் தாக்கத்தை ஏற்படுத்தியது என்பதை வலியுறுத்தி எடுத்துக் காட்டியுள்ளது.

அதிபணக்காரர்கள் மீது ஒரு சத வீத வரி விதித்திடுக

            அந்த அதிபணக்காரக் குடும்பங்களின் செல்வத்தின் மீது வெறும் ஒரு சதவீதம் வரி விதிப்பதன் மூலம் 130 கோடி மக்கள் தொகை உடைய இந்திய மக்கள் அனைவருக்கும் ரூ50கோடி மதிப்பிலான (6.8 பில்லியன் டாலர்) தடுப்பூசி திட்டத்தை நிறைவேற்றிவிடலாம் என அந்த அறிக்கை கூறுகிறது. “அதற்கு மாறாக இந்தியாவில் வரிவிதிப்பின் சுமை, இந்திய நடுத்தர வர்க்கத்தினர் மற்றும் ஏழைகளின் தோள்களின் மீது தற்போது சுமத்தப்பட்டுள்ளது. ‘கோவிட் 19 தொற்றிலிருந்து மீண்டு வருவதற்காக அதிபணக்காரர்கள் மீது ஒரே ஒரு முறை வெறும் ஒரு சதவீதம் வரி விதியுங்கள்’ என்ற யோசனையை இந்திய அரசு பரிசீலிக்கவே இல்லை. அதனால், மீதமுள்ள ஒரே வாய்ப்பு மறைமுக வரிவருமானம் மூலம் நிதிதிரட்டுவதை அரசு பயன்படுத்துகிறது –அது மீண்டும் ஏழைகளையே தண்டிக்கிறது” என ஆக்ஸ்பாம் அறிக்கை கூறுகிறது.

            கோவிட்19க்கு முன் 2019 செப்டம்பரில் மோடி அரசு உள்நாட்டு உற்பத்தியாளர்களுக்குக் 30 சதவீதத்திலிருந்து 22 சதவீதமாகக் கார்ப்பரேட் வரி விகிதத்தைக் குறைத்தது; புதிய உற்பத்தி நிறுவனங்கள், வேறு எந்த விலக்குச் சலுகைகள் கோராத பட்சத்தில், அவைகளுக்கு 25லிருந்து 15 சதவீதமாகவும் வரியைக் குறைத்தது. இம்முடிவை அமல்படுத்த அரசுக்கு வெறும் 36மணி நேரம் போதுமானதாக இருந்தது; முடிவெடுத்த பிறகு அமைச்சரவையின் ஒப்புதலைப் பெறலாம் என்று பிரதமருக்குச் சிறப்பு அதிகாரம் வழங்கும் விதி 12 அதற்காகப் பயன்படுத்தப்பட்டது. நாடுகளின் கடன்பெறும் அந்தஸ்து தரத்தைப் பட்டியலிடும் எஸ் அண்ட் பி வோர்ல்டு என்னும் அமெரிக்காவிலிருந்து செயல்படும் முகமை, அந்த வரிக் குறைப்பு நடவடிக்கை “கடன்பெறும் தரத்தில் எதிர்மறை அந்தஸ்து” (கிரிடிட் நெகடிவ்) என்று வர்ணித்தது. இந்தக் கார்ப்பரேட் வரி குறைப்பு மொத்தமாக 1.5 லட்சம் கோடி நட்டத்தை ஏற்படுத்தி இந்திய நிதிப் பற்றாக்குறையையும் அதிகரித்துவிட்டது.

ஏழைகளுக்கு மாத வருமானம் வழங்கும் திட்டம் (யுபிஐ)

            அவ்வறிக்கையில் திகைக்க வைக்கும் செய்தி, 142 இந்திய பில்லியனர்கள் (100 கோடிக்கும் மேல் சொத்துடைய அதிகோடீஸ்வரர்கள்) ஒட்டு மொத்தமாக 719 பில்லியன் (53லட்சம் கோடிக்கும் மேல்) சொத்துகளை வைத்துள்ளனர். அதில் முதலில் உள்ள 98பேர் சொத்து மட்டும் இந்தியாவின் அடித்தட்டில் மிக ஏழ்மையில் உள்ள 55.5 கோடி ஏழைகளின் மொத்த செல்வத்தில் 40 சதவீதம் (657பில்லியன் டாலர் அல்லது சுமார் 49 லட்சம் கோடி ரூபாய்.) இவர்கள் மீது 4 லிருந்து 5 சதவீத வரி விதித்தாலே போதும் அனைவருக்குமான அடிப்படை வருமானம் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்திவிட முடியும். அந்த (யுனிவர்சல் பேசிக் இன்கம் ஸ்கீம்) திட்டத்தின்படி நகர்ப்புற மற்றும் கிராமப்புற ஏழைகளுக்கு மாதத்திற்கு  நாலாயிரம் முதல் ஐந்தாயிரம் வரை, குறிப்பாக வறுமைக் கோட்டிற்கு கீழே உள்ளவர்களுக்கு அளிக்க முடியும்.

            நாடு சந்திக்கும் அசாதாரண சூழ்நிலை, நமது சமூகத்தின் எளிதில் பாதிப்படையக் கூடிய நலிந்த பிரிவு மக்களைப் பாதுகாக்க உடனடி நடவடிக்கைகளைக் கோருகிறது. ஏற்கனவே ஏழைகளும் திரட்டப்படாத தொழிலாளர்களும் 2020ன் முதல் அலையில் மிக மோசமாகத் துன்பப்பட்டார்கள். அதே நிலை தொடர 2021ன் இரண்டாம் அலையிலும் இப்போது தொற்றின் மூன்றாம் அலையின் பிடியிலும் அவர்கள் சிக்கியுள்ளனர். இதனால் நான்கு கோடி மக்களுக்கும் மேல் ஏழைகள் எண்ணிக்கையில் மீண்டும் சேர்ந்து விட்டார்கள் என்று இந்தியப் பொருளாதார கண்காணிப்பு மையம் (CMIE) ஏற்கனவே  தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது.

பொருளாதார நிபுணர்களின் அறிவுரை

            எனவே இந்த அசாதாரண சூழ்நிலையில் மேற்கொள்ள வேண்டிய சிறந்த தேர்வு யாது? புகழ்பெற்ற வளர்ச்சிக்கான பொருளாதார நிபுணர்கள் குறைந்தபட்ட அடிப்படை வருமானம் வழங்கும் திட்டமே இந்தியச் சமூகத்தின் எளிய பிரிவினருக்குப் பொருத்தமாதெனத் தற்போது கூறி வருகிறார்கள். பெரும்பான்மை சமூகத்தின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த இதுவே ஒரே வழி. அப்படி அவர்கள் கையில் குறைந்தபட்ட வருமானத்தை வழங்கினால் அடிப்படைத் தேவைகளை வாங்க அவ்வருமானத்தைப் பயன்படுத்துவார்கள் என்பதால் சந்தையில் பொருட்களுக்கான தேவை அதிகரிக்கும்; அந்தத் தேவையை நிறைவேற்ற உற்பத்தி கூடும், இது நாட்டின் பொருளாதாரத்தின் மீது நேர்மறை தாக்கத்தை ஏற்படுத்தும்.

யுபிஐ – அமெரிக்க அனுபவம்

            அமெரிக்கா பொருளாதாரத்தில் உச்சத்தில் இருக்கும் முதலாளித்துவ நாடு. அந்நாட்டில்கூட அதிபர் ஜோபிடன் அமெரிக்கச் சமூகத்தின் அடித்தட்டு பிரிவினர்களுக்குக் கூடுதல் வருவானத்தை உறுதிசெய்து வழங்கும் வகையில் மீட்புத் தொகுப்புத் திட்டங்களை வடிவமைத்தார். மேலும் தொழிலாளர் வர்க்கத்திற்கு ஆதரவான பிற நடவடிக்கைகளையும் முன் வைத்துள்ளார்.

சாரமற்ற ஜிகினா உரைகள்

            சமீபத்தில் ஜனவரி 17ல் உலகப் பொருளாதார ஃபோரம் உட்பட கூட்டங்களில் பிரதமர் ஆற்றும் உரைகள் எப்போதும்போல சாரத்திற்குப் பதில் பார்வைக்குப் பகட்டாகக் காட்சி தருகின்றன. அவருடைய புதிய காட்சி படப்பிடிப்பு மலர்ந்து வரும் துடிப்பான டிஜிடல் புதிய இந்தியா – அந்தப் புதிய இந்தியாவில் எளியவர்களுக்கு எந்த இடமுமில்லை. பொருளாதார டிஜிடல்மயமாக்கலும் பிற நடவடிக்கைகளும் வரவேற்கத் தக்கன, சந்தேகமில்லை; ஆனால் அந்தத் திட்டங்களில் எளிய பிரிவு மக்களும் பங்குபெறும் வகையில் உறுதியான நடவடிக்கைகள் வேண்டும்; மாறாக அவை சமூகத்திற்குள் டிஜிடல் பிளவை –டிஜிடல் வசதி வாய்ப்புகளைப் பெற்றவர்கள் மற்றும் பெறாதவர்கள் என்ற பிளவை – ஊக்கப்படுத்தி உண்டாக்கிவிடக் கூடாது.

            புகழ் வாய்ந்த பெரும் பொருளாதார நிபுணர்கள் அமர்தியா சென், அபிஜித் பானர்ஜி மற்றும் ரகுராம் ராஜன் போன்றவர்கள் கூறிய புதுமையான யோசனைகளை ஒன்றிய அரசு ஏற்க மறுத்தது; மாறாக, உறுதியற்று நிலைதடுமாறும் பெரும் வங்கிக் கடன்கள் அடிப்படையிலான மீட்புத் திட்டங்களைத் தேர்ந்தெடுத்தது: ஆனால் எதார்த்த உண்மை நிலைமையோ மங்கலாக இருள் சூழ, அந்நிலையில் எந்த ஒருவரும் --கையில் மூலதன நிதி வைத்திருப்பவரும்கூட-- (தொழிலில்) செலவு செய்யும் மனநிலையில் இல்லை. திகைக்க வைக்கும் பெரும் எண்ணிக்கையில் உள்ள ஏழைகளையும் வேலையற்றவர்களையும் செலவு செய்யத் தூண்ட முடியும், அப்படித்தான் நுகர்ச்சிக்கு ஊக்கம் அளிக்க முடியும். அது எப்படிச் சாத்தியம்? அதற்குத்தான் நேரடியாக நிதியளிப்பதன் வாயிலாக அனைவருக்கும் குறைந்தபட்ச அடிப்படை வருவாய் திட்டத்தைச் (UBI)செயல்படுத்துவதன் மூலம் சாத்தியம்.

அமெரிக்கத் தலைவர்கள் கூறியது

            அனைவருக்கும் வருவாய் கிடைக்கச் செய்யும் யுபிஐ பிரச்சனை மேற்கத்திய உலகில் பெரும் விவாதங்களை உண்டாக்கியது. குறிப்பாக அமெரிக்காவில் சமத்துவமின்மை பிரச்சனை பெருமளவில் கடந்த அதிபர் தேர்தலின்போது அங்கே விவாதத்தில் முன் வந்தது. அமெரிக்க ஜனநாயகக் கட்சியின் முன்னணித் தலைவர் பெர்னி சான்டர்ஸ் ஒரு சதவீதத்தினர் நலனுக்காக நடைபெறும் பொருளாதாரம்’ பற்றி விமர்சிக்கும்போது, ‘பொருளாதார முறைமையை 99 சதவீதத்தினர் சார்புடையதாக மாற்ற’ வாக்குறுதி அளித்தார். முகநூலின் இணை நிறுவனர்கள் மார்க் ஜுக்கர் பெர்க் மற்றும் கிரிஸ் ஹியூக்ஸ் போன்ற இளம்தலைமுறை (கேப்பிடலிஸ்ட்) முதலாளிகள்கூட யுபிஐ திட்டத்திற்கு ஆதரவாக வாதாடினர். ‘அத்திட்டம் ஒருங்கிணைந்த முழுமையான தீர்வு வழங்கும் திட்டமாக இல்லாமல் இருக்கலாம்; ஆனால் வருமானத்தில் கடுமையான சமத்துவமின்மையும் ஏழ்மையும் உள்ள நாடுகளில், ஏன் உலக அதிகாரச் சக்தியாகத் திகழும் அமெரிக்கா உட்பட அனைத்து நாடுகளிலும், நிச்சயம் குறைந்தபட்சம் ஒரு சராசரி வலிநிவாரணியாக அத்திட்டம் இருக்கும்’ என வாதிட்டனர்.

            2019 மக்களவை தேர்தலின்போது காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, வறுமைநிலைக்குக் கீழுள்ள குடும்பங்களுக்கு மாதம் குறைந்தபட்சம் அடிப்படை வருமானம் ரூ6000/- அளிப்பதையும் காங்கிரஸ் தேர்தல் அறிக்கையில் சேர்த்திருந்தார். இப்போது அவர் கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகள் அனைவருக்கும் மாதம் ரூ7000/- வழங்கக் கோருகிறார். பொருளாதாரம் சீர்கெட்ட நிலையில் மக்கள் துன்பப்படும்போது, அவரது கோரிக்கையின் மாற்றம் நியாயமே. ஒருக்கால் அத்தொகையை மாதத்திற்கு ரூ5000 அல்லது ரூ4000 என்றுகூட குறைத்துக் கொள்ளலாம், ஏனெனில் இப்போதைய பிரதான தேவை மக்களின் உயிர்களைக் காப்பாற்றுவது மற்றும் நுகர்ச்சிக்கு வழிசெய்வதன் மூலம் இந்தியப் பொருளாதாரத்திற்கும் ஊக்கமளிப்பது.

பட்ஜெட் நிவாரணம் அளிக்குமா?

          

  இப்போதுகூட பிரதமர் நரேந்திர மோடி குறைந்தபட்ச அடிப்படை வருமானம் வழங்கும் திட்ட யோசனையைத் தீவிரமாக எடுத்துக் கொண்டு ஏழைகளுக்கு உதவி இந்தியப் பொருளாதாரத்தையும் அழிவிலிருந்து மீட்டுப் பாதுகாக்க முடியும். அதற்குத் தேவைப்படும் நிதியாதாரத்தைத் திரட்ட அதிபணக்காரர்கள் மீது வரி விதித்துச் சுலபமாகத் திட்டத்தைச் செயல்படுத்த முடியும். அதிபணக்காரர்கள் மீது கூடுதல் வரி விதிக்கும் கோரிக்கையை எதிர்த்தரப்பு அரசியல் கட்சிகள் வற்புறுத்தி தங்கள் குரலை ஒலிக்க வேண்டும். கரோனா பெருந்தொற்றால் பெரும் பாதிப்புக்கு உள்ளான கிராமப்புற மற்றும் நகர்ப்புற ஏழைகளின் துன்ப துயரங்களைக் குறைப்பதற்கான ஒரே வழி இதுதான். அதே நேரம் நுகர்வால் சந்தையில் பொருட்களின் தேவை அதிகரித்து உற்பத்தியும் நம் பொருளாதாரமும் ஊக்கம் பெறும்.

            எதிர்வரும் மத்திய பட்ஜெட் நிபுணர்களின் அறிவுரையைப் பிரதிபலிக்குமா? மில்லியன்

டாலர் கேள்வி.

--நன்றி : நியூஏஜ் (ஜன.23 –29)

--தமிழில் : நீலகண்டன்,

                                                                                                                     என்எப்டிஇ, கடலூர்  



            

Sunday 23 January 2022

உலகில் ஆண்டு தோறும் 20 லட்சம் தொழிலாளர்கள் மரணமடைகின்றனர்…

 

உலகத்தில் ஆண்டு தோறும்

20 லட்சம் தொழிலாளர்கள் மரணமடைகின்றனர்…

                                                                             --ஞான் பதக்

                                                               -- நன்றி : நியூஏஜ் (ஜன.16—22)

            பணி செய்வதால் எவரும் மரணமடையக் கூடாது; எனினும் உலகில் ஆண்டு தோறும் 20லட்சம் தொழிலாளர்கள் பணியால் மரணமடைகின்றனர். அவர்களது பணியிடங்களின் ஆபத்தான சூழல் காரணமாக –ஆபத்தான அப்பணிச்சூழல் அம்சங்களைக் கட்டுப்படுத்தி தடுக்கக் கூடியவை என்ற போதிலும்-- நோய்களுக்கும் கடுமையான காயங்களுக்கும் ஆட்படுகின்றனர். அது தொழிலாளர்களின் ஆரோக்கியத்திற்குக் கேடு பயப்பது மட்டுமல்ல உற்பத்தித் திறனைக் குறைத்துக் குடும்ப வருமானத்தின் மீது பேரழிவுத் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

   பணி தொடர்பான மரணங்களில் பெரும்பான்மை சுவாச மற்றும் இதயப் பிரச்சனைகள் காரணமாக ஏற்படுவதாக உலக சுகாதார அமைப்பு (WHO) மற்றும் சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு (ILO) இரண்டும் கூட்டாக நடத்திய ஆய்வின் முதலாவது உலகளாவிய மதிப்பீடுகளில் காணப்படுகிறது. 2021 செப்டம்பர் 20 –23ல் ‘பாதுகாப்பு மற்றும் உலன்நலன் மீதான உலக காங்கிரஸி’ன் 22வது கூட்டம் நடைபெற இருந்தது; அதற்கு முன் “2000 –2016 ஆண்டு காலத்தில் நோய்கள் மற்றும் காயங்களின் மீதான பணி தொடர்பான சுமைகள் பற்றிய WHO மற்றும் ILO அமைப்புகளின் கூட்டு மதிப்பீடு : உலகளாவிய கண்காணிப்பு அறிக்கை” வெளியிடப்பட்டது. அதில், பணிசார்ந்த நோய்கள் மற்றும் காயங்களின் காரணமாக 2016ம் ஆண்டில் 19 லட்சம் தொழிலாளர்கள் மரணம் அடைந்தனர், 9கோடி பேர் காயத்தால் உடல் ஊனமுற்றனர் எனக் கூறுகிறது. அந்த ஆய்வறிக்கையில் ஆபத்து அம்சம் மற்றும் உடல்நலன் மீதான அதன் விளைவு என 41 இணைகள் (pairs) பட்டியலிடப்பட்டுள்ளன (உதாரணமாக, பருத்தி ஆலை அல்லது சிமெண்ட் உற்பத்தி ஆலைகளில்  தூசினால் ஏற்படும் நுரையீரல் சுவாசப் பிரச்சனை என்று இரண்டையும் இணைத்துப் பட்டியலிடுதல்)

தென்கிழக்கு ஆசியா மற்றும் மேற்கு பசிபிக் பகுதி

            இந்தியா உட்பட தென்கிழக்கு ஆசியாவில் (மொத்த தொழிலாளர்கள்) விகிதத்திற்குப் பொருத்தமில்லாத வகையில் ஏராளமான எண்ணிக்கையில் பணி சார்ந்த இறப்பு விகிதம் –ஒரு லட்சம் பேருக்கு 45 என -- மரணங்கள் நிகழ்கின்றன. அந்த விகிதம் மேற்கு பசிபிக் பிராந்தியத்தில் 37 என உள்ளது. அதுபோல காயங்களால் உடல் ஊனமடைதல்  தென்கிழக்கு ஆசியப் பகுதியில் மட்டும் மற்ற பகுதிகளைவிட மிக உச்சபட்சமாக லட்சம் பேருக்கு 2100 என்றுள்ளது. பணிசார்ந்த நோய் சுமை இன்னும் அதிகமாகக் கூடும் என அறிக்கை சுட்டிக் காட்டுகிறது; காரணம் உடல்நலத்தைப் பாதிக்கக் கூடிய பணிசார்ந்த பல்வேறு பிற ஆபத்து அம்சங்கள் குறித்து இனிதான் வருங்காலத்தில் அளவிட வேண்டியுள்ளது. மேலும், கோவிட்19 பெருந்தொற்று பாதிப்பு விளைவித்த ஆகக் கூடுதலான பாதிப்புக்களின் சுமையை அவற்றோடு எதிர்கால மதிப்பீட்டு அறிக்கையில் சேர்க்க வேண்டியுள்ளது.

            WHO அமைப்பின் இயக்குநர் ஜெனரல் டாக்டர் டெட்ராஸ் அதநோம் கேப்ரியிசஸ் கூறினார்: “இத்தனை மனிதர்கள் பணிச் சுமையால் பச்சையாகக் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்ற உண்மையைப் பார்க்க அதிர்ச்சியாக உள்ளது. எங்களுடைய அறிக்கை அனைத்து நாடுகள் மற்றும் தொழிலதிபர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கை அழைப்பாகும்; இப்போதாவது அவர்கள் பணிசார் அபாயங்களிலிருந்து எல்லா தொழிலாளர்களுக்கும் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை வழங்க வேண்டிய தங்கள் கடப்பாட்டை நிறைவேற்றும் நடவடிக்கைகளை மேம்படுத்த வேண்டும் என்பதற்கான நினைவூட்டல் எச்சரிக்கை.”

           உலகச் சுகாதார அமைப்பின் சுற்றுச் சூழல், பருவ மாற்றம் மற்றும் ஆரோக்கியத்திற்கான துறையின் இயக்குநர் டாக்டர் மரியா நெய்ரா கூறுகிறார் : “ஏறத்தாழ இந்த 20 லட்சம் பேர்களின் அகால மரணங்கள் தடுக்கப்பட்டிருக்கக் கூடியவை. பணி தன்மையால் விளையும் உடல்நல ஆபத்துகள் குறித்த ஆய்வுகள் அடிப்படையில், தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டிய தேவை எழுந்துள்ளது. எந்தத் தொழிலாளரையும் விட்டு விடாமல் அனைத்துத் தொழிலாளர்களின் உடல்நலன் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வது, சுகாதாரம் மற்றும் தொழிலாளர் துறைகள் பகிர்ந்திட வேண்டிய கூட்டுப் பொறுப்பாகும். ஐநா மன்றம்  நிறைவேற்றிய ‘நிலைத்த வளர்ச்சி இலக்குகள்’ தீர்மானத்தின் மேலான உணர்வுடன் சுகாதாரம் மற்றும் தொழிலாளர் துறைகள், மிகப்பெரும் நோய்களின் சுமையை நீக்க ஒன்றாகப் பணியாற்ற வேண்டும்”

நீண்ட பணி நேரமும் சாகடிக்கும்

    இவ்விடத்தில் குறிப்பிடுவது மிகப் பொருத்தமானது யாதெனில், WHO மற்றும் ILO முதன் முதலாக வெளியிட்ட ஆய்வு அறிக்கையில் தொழிலாளர்களை மிக நீண்ட வேலை நேர பணிகளில் ஈடுபடுத்துவது இதய நோய்களும் பக்கவாதமும் ஏற்படுத்தும் காரணியாகிறது என அளவிட்டு சுட்டிக் காட்டியுள்ளது; அதன்படி நீண்ட வேலைநேரம் 7 லட்சத்து 50 ஆயிரம் தொழிலாளர்களைக் கொன்றிருக்கிறது. பெரும்பான்மை பணிசார் நோய்களின் சுமைக்கு நீண்ட பணிநேரம் மிகப் பெரிய ஆபத்து அம்சம் என்பதைத் தற்போதைய அறிக்கை உறுதியாக நிரூபித்திருக்கிறது.

தொற்றா நோய்கள், நீண்ட பணிநேரம் மற்றும் பணியிடச் சுகாதாரமின்மை

            மரணங்களில் 81 சதவீதம் பரவாத தொற்றாநோய்கள் காரணமாக ஏற்படுவதாக சமீபத்திய அறிக்கை கூறுகிறது. அதில் மிகப் பெரிய காரணியாக, 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் மரணத்திற்குக் காரணமானது நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய் என்னும் சுவாசப் பிரச்சனையும், 4 லட்சம் தொழிலாளர்களைக் கொன்ற பக்கவாதம் மற்றும் 3 லட்சத்து 50 ஆயிரம் பேர்களைக் கொன்ற இஸ்கீமியா (இரத்த ஓட்டக் குறைபாடு) தொடர்பான இதய நோய் காரணமாகின்றன. மேலும் பணிசார்ந்த (விபத்தால் ஏற்படும்) காயங்கள் காரணமாக 19 சதவீதம் அதாவது 3 லட்சத்து 60 ஆயிரம் பேர் கொல்லப்பட்டிருக்கிறார்கள்.

            19 வகையான பணிசார் ஆபத்து அம்சங்களையும், நீண்ட வேலை நேரம் மற்றும் பணிஇடங்களில் நிலவும் காற்று மாசு, ஆஸ்துமாவை ஏற்படுத்தும் (ஆஸ்துமாஜென் என்னும்) துகள்கள், புற்றுநோயை ஏற்படுத்தும் (ஆஸ்பெடாஸ், நிக்கல் போன்ற) தூசிகள், கடுமையான சப்தம் போன்ற பணிச்சூழலியல் மிகப்பெரிய ஆபத்து அம்சங்களாக உள்ளதாக இந்த ஆய்வில் பரிசீலித்துக் கூறியுள்ளது.  மிகப் பெரிய ஆபத்தான நீண்ட பணிநேரம், சுமார் 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் மரணத்தோடு தொடர்புடையது. காற்று மாசு (துகள்கள், வாயுக்கள் மற்றும் புகை) 4 லட்சத்து 50 ஆயிரம் பேர் சாவுக்குக் காரணமாகியுள்ளது. (சமீபத்தில் டெல்லியில் கடுமையான காற்று மாசுபாடு காரணமாகப் பள்ளி, கல்லூரி, தொழிற்சாலைகள் மூடப்பட்டதைக் காண்க)

பணிசார் மரண விகிதம்

            உலக அளவில் பணி சார்ந்த மரணங்கள் 2000 – 2016 ஆண்டு காலகட்டத்தில் ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 14 சதவீதம் குறைந்துள்ளது. இது பணியிட சுகாதாரம் மற்றும் பாதுகாப்பில் ஏற்பட்ட மேம்பாடுகளைப் பிரதிபலிக்கிறது என அறிக்கை கூறுகிறது. இருந்த போதிலும் பணியிடச் சூழலால் இதயநோய் மற்றும் பக்கவாதம் காரணமான மரணங்கள் 41 சதவீதமும் நீண்ட பணி நேரம் காரணமான மரணங்கள் 19 சதவீதமும் அதிகரித்துள்ளதைச் சுட்டிக் காட்டுகிறது. பணி தொடர்பாகப் புதியதாக எழுந்துள்ள சமூக உளவியல் போக்கின் பணிசார் ஆபத்து அம்சம் அதிகரித்துள்ளதை இது பிரதிபலிக்கிறது.

தீர்வு உண்டு

            (எந்தவொரு பிரச்சனைக்கும் தீர்வு இருப்பதைப் போல) ஒவ்வொரு ஆபத்து அம்சமும் தனித்துவமான முன்தடுப்பு நடவடிக்கை தொகுப்பைக் கொண்டிருக்கிறது; அவற்றைப் பணிஅமர்த்துநர்கள் மற்றும் பணியாளர்களுடன் கலந்து பேச அரசுகளுக்கு இந்தக் கண்காணிப்பு அறிக்கை வழிகாட்டுகிறது. உதாரணமாக, நீண்ட பணி நேரத்திற்கு ஆட்படும் பிரச்சனைக்குத் தீர்வு, ஆரோக்கியமான அதிகபட்ச பணி நேரத்தை நிர்ணயிப்பது குறித்த உடன்பாட்டைக் கோருகிறது. அதேபோல, பணியிட காற்று மாசு பிரச்சனைக்கு, தூசுகளைக் கட்டுப்படுத்துவது, காற்றோட்ட வசதியை ஏற்படுத்துவது மற்றும் தனிநபர் பாதுகாப்பு கருவிகளை வழங்கவும் சிபார்சு செய்கிறது.

ஐ நா SDG ஆய்வறிக்கைகள்

            ஐநா மன்றம் 2015ல் நிர்ணயித்த (உலகளாவிய இலக்குகள் என்று அறியப்படும்) ‘நிலைத்த வளர்ச்சிக்கான இலக்குகள்’ (SDGs) 2030க்குள் சாதிக்க உலகத்தினருக்கு அழைப்பு விடுத்தது: இப்பூமிப் பந்தில் வாழும் மக்கள் அனைவரும் சமாதானத்தையும் வளர்ச்சியையும் அனுபவிப்பதை உறுதிப்படுத்த உலக நாடுகளே நடவடிக்கை எடுக்க முன்வாருங்கள் என்று அழைத்தது; குறிப்பாக SDG3 அறிக்கை மற்றும் SDG8 அறிக்கையும் பணிசார் ஆபத்து அம்சங்கள், உடல்நலக் கேடு விளைவிக்கும் காரணிகளைக் குறைக்கவும் ஏன், முற்றிலும் அகற்றவும், நாடுகள், பிராந்தியங்கள் மற்றும் உலக மட்டத்தில் அவற்றைக் கண்காணிக்க வேண்டிய தேவையை வற்புறுத்தியது. அந்த அறிக்கைகளின் நோக்கம், நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள் தேவையானவற்றைச் செய்ய உதவுவதே. இதனால் பிரச்சனைகள்பால் மேலும் கவனத்தைக் குவிக்கவும், திட்டமிடவும், நிதி ஒதுக்கீடு செய்யவும், அவற்றை அமல்படுத்தவும், மறுமதிப்பீடு செய்யவும் முடியும்; அனைத்துத் தொழிலாளர் பெருங்கூட்டத்தின் உடல்நலம் மற்றும் தேசத்தின் சுகாதாரப் பங்கிட்டின் பலனை அவர்களும் சமமாகப் பெறுவதை மேம்படுத்தத் தேவையான கொள்கைசார் தலையீடுகளைச் செய்ய முடியும். மேலும் ஆரோக்கியம், பாதுகாப்பு, நெகிழ்வுப் போக்கு மற்றும் சமூகரீதியில் இன்னும் நியாயமான பணியிடங்களை உறுதிசெய்ய தீவிரமான நடவடிக்கைகள் தேவை என அறிக்கை சுட்டிக் காட்டுகிறது. அத்தகைய கொள்கை செயல்திட்டத்தின் நடுநாயகமாகப் பணியிட சுற்றுச்சூழல், சுகாதார மேம்பாடு மற்றும் பணிசார் உடல்நலச் சேவை வசதிகள் திகழ வேண்டும்.

ILO இயக்குநர் ஜெனரல் கய் ரீடர்

            “இந்த மதிப்பீடுகள் பணிசார் நோய்களின் சுமையைக் குறித்த முக்கியமான தகவல்களை வழங்குகிறது; இத்தகவல்கள் ஆரோக்கியமான, பாதுகாப்பான பணியிடங்களை ஏற்படுத்தத் தேவையான கொள்கைகள் மற்றும் வழக்கங்களை வடிவமைக்கப் பெரிதும் உதவும்” என்று கூறுகிறார் சர்வதேசத் தொழிலாளர்கள் அமைப்பின் (ILO) இயக்குநர் ஜெனரல், கய் ரீடர். மேலும் அவர், “அரசுகள், பணி அமர்த்துநர்கள் மற்றும் தொழிலாளர்கள் அனைவரும் பணியிடங்களின் ஆபத்து அம்சங்களைக் குறைக்க நடவடிக்கைகள் எடுக்க முடியும். பணித்தன்மையின் போக்கு (ஒர்க் பேட்டர்ன்) மற்றும் முறைமைகளை மாற்றுவதன் மூலம் அந்த ஆபத்து அம்சங்களைக் குறைக்கவும், முற்றிலும் நீக்கவும் முடியும். அத்தகைய ஆபத்தான சூழல்களில் கட்டாயம் பணியாற்ற வேண்டிய, அவற்றைத் தவிர்க்கவே முடியாத தொழிலாளர்களின் பாதுகாப்புக்குத் தேவையான தனிநபர் பாதுகாப்பு கவசங்கள் மற்றும் கருவிகள், கடைசி வாய்ப்பாக உதவ முடியும்” என்று விரிவாக விளக்கியுள்ளார்.

இன்றைய நிலையும் நமது கடமையும்

            [இந்தச் சர்வதேச வழிகாட்டல்களை நமது அரசுகள் பொருட்படுத்தவில்லை என்பதையே தொழிலாளர் நலச் சட்டங்களின் மீது அவசரமாக நிறைவேற்றப்பட்ட திருத்தங்கள் அம்பலப்படுத்துகின்றன; போராடிப் பெற்ற பல்வேறு தொழிலாளர் நலச் சட்டங்களின் பலன்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பை –ஒன்றிய அரசின் புதிய நான்கு தொழிலாளர் குறுங்குறிகள் (லேபர் கோடு) – குறிப்பாக, சமூகப் பாதுகாப்புக் கோடு மற்றும் பணிசார்ந்த பாதுகாப்பு, உடல் நலம் மற்றும் பணியிட நிலைமை குறித்தான கோடு கேள்விக்கு உள்ளாக்கியுள்ளன.

            இந்த அராஜகத்தைக் கண்டித்து இந்தியத் திருநாட்டின் தொழிலாளர் வர்க்கம் போர் முழக்கம் செய்கிறது :


“எதிர்வரும் பிப்ரவரி 23, 24ல் 

நாடு தழுவிய பொது வேலைநிறுத்தம்!”

                  வெற்றிபெறச் செய்வோம், 

       ஒன்றிணைந்து வாருங்கள் தோழர்களே! ]

-- நன்றி : நியூஏஜ் (ஜன.16—22)

--தமிழில் : நீலகண்டன்,

தொலைத்தொடர்புத் துறை, கடலூர்  

 

Sunday 16 January 2022

திருவள்ளுவர் பற்றி திரு கோபால கிருஷ்ண காந்தி கட்டுரை -- தமிழாக்கம்


ஆடை வடிவம், வண்ணம், காலத்திற்கும் 
கட்டுப்படாதவர் திருவள்ளுவர்

--கோபால கிருஷ்ண காந்தி

(மேனாள் அரசு நிர்வாகி, தூதுவர் மற்றும் மாநில ஆளுநர்)

          திருவள்ளுவர் யாருக்கும் சொந்தமில்லை.

            அவரது பாரம்பரியத்தினர் என்று எவரும், “வள்ளுவர் எங்களுக்குச் சொந்தம்” என்று சொல்வதற்கு அவர் வாழ்ந்த பாதையில் சுவடு எதையும் விட்டுச் செல்லவில்லை; அல்லது எந்த எதிர்அணி சொந்தங்களும், “நாங்கள், நாங்கள்தான் அவரது இரத்த உறவு” என்று கூச்சலிடவும் முடியாது. எந்தக் குடியும், சாதியினரும் அவரை உரிமை கோரிவிட முடியாது. அது எப்படி முடியும்? யாரறிவார் எந்தக் குடிமரபில் அவர் பிறந்தார், வாழ்ந்தார், நீங்கினார் என்று சொல்ல? பட்டு நெசவு போன்ற நெருக்கமான பாரம்பரியத்தின் ஊடாக அவர் நழுவிச் செல்கிறார்; அதே போன்று பொய்யான பந்தப்படுத்தலையும் கடந்து செல்கிறார். புனிதமானதென்று வைதீக ஆடைகளை அவருக்கு அணிவிப்பதோ, புரட்சியாளரின் சீருடையை மாட்டி விடுவதோ பொருந்தாது. உறுதியாக அவர்தான் வல்லபாச்சாரியார் என்று சொல்பவர்களை, அவரது ஆக்கத்தில் அதற்கான பிராமணியக் கூறுகளின் ஆதாரத்தை ஒருவர் கேட்கலாம். அவர் ஒரு தலித் என்று கூறுபவர்களை, அவரது எழுத்துக்களில் தாழ்த்தப்பட்டவர்களின் நிலைகுறித்து அதனை ஏற்கவேண்டி நேர்ந்ததே என்ற ஏக்கப்பெருமூச்சோ அல்லது அதை எதிர்த்துக் குரல் எழுப்பும் எதிர்ப்பாளரின் வெளிப்பாடுகள் எதுவும் காணப்படுகிறதா என்றும் ஒருவர் ஆதாரம் கேட்கலாம்.

வள்ளுவர் மீது லேபிள் ஒட்டமுடியாது

            திருவள்ளுவர் எந்தவித அடையாள அட்டை குத்தப்படுவதிலிருந்தும் தப்பிவிடுகிறார் என்பதே உண்மை. எவ்வளவு புரிந்துகொள்ள முடியாதவராக இருக்கிறாரோ, அதற்கு மேலும் அவர் விரும்பப்படுபவராகி விடுகிறார். காலம் கடந்தும் நிற்கின்ற கருத்துக்களை எழுதியுள்ளார் என்பதை நாம் அனைவரும் அறிவோம்; ஆனால் அவற்றைச் சாதியால் ஆடை அணிவிக்கவோ, வர்க்கத்தால் வண்ணம் பூசவோ அல்லது அவற்றின் மீது சமயச் சடங்கு வாசத்தைலம் பூசிவிடவோ முடியாது. அவை பொதுவாகக் கருத்துகள், திகைக்க வைக்கும் மிகநெருக்கமான வடிவத்திலும், கட்டுடைக்க முடியாத வடிவத்திலும், எல்லையற்ற பொருள் தருவதாகவும் உள்ள அவருடை கருத்துகள்.

            தூய்மையான கருத்தியல் வெளியில் அவர் ஒரு கருத்தியல்வாதி. கருத்துகளைப் பண்டமாக்கி விற்பனை செய்பவர்களிடம் பிடிபடவோ, பேழைக்குள் அகப்படவோ மாட்டார். பதிப்பாளர்கள், மறுபதிப்பாளர்கள், மொழிபெயர்ப்பாளர், மீண்டும் மொழிபெயர்ப்பவர்களுக்கு அறிவைக் கிளர்ந்தெழச் செய்யும் 1330குறட்பாக்களும் மறுஅச்சிட வசதியாக நேர்த்தியான எளிய வடிவத்தில் இருக்கும். மாறுதல் இல்லாது முதல்வரியில் நான்கு சீர்கள், அடுத்த வரியில் மூன்று என்று உயர்தரத்து  ஓசை நயத்திலும் இசை ஒழுங்கு வடிவத்திலும் அனைத்துக் குறட்பாக்களும் உள்ளன. சரியான, சுருக்கமான, கட்டுக்கோப்பான இந்த வடிவம் பதிப்பாளர்களின் கனவு. ஆனால் அவருடைய கருத்துகளை வகைத்தொகைப்படுத்தி வெளியிடுவதென்பது அவர்களைப் பயமுறுத்தக்கூடியது. அவர் கருத்துகளில் பொதிந்திருக்கும் உள்ளக்கிடக்கை பொருண்மையைக் கையாள்வது என்பது சிரமமான பணி. “எப்போதும் மதிப்புடையதாகக் கோரப்படும்” பொருளை அவர்களால் வகைத்தொகைப்படுத்த இயலாது.

அது அரசியல் செய்யுளா அல்லது தத்துவமா? மக்கள் தலைவனாகும் ஆர்வமுடையவர்க்கு வழிகாட்டும் ஆவணமா? காதல் தவிர வேறு சுவாசமற்ற காதலர்களுக்கு முதன்மைக் கைஏடோ? ஏற்றத்தாழ்வான வாழ்வின் முடிவுப் பொருளைத் தேடும் யூகங்களோ, அன்றி அதன் மிகத் தெளிவான ஒத்ததன்மை குறித்தத் தத்துவ விச்சாரமோ? 


வள்ளுவரின் படப்பிடிப்பு இயற்கை ஆர்வலர்கள் தங்கள் மனதைத் தொலைக்கும் காட்டு விலங்குகளின் வாழ்க்கை வர்ணிப்போ? ஒரு குறட்பாவில் முதலை சோம்பி உறங்கிக் கிடக்கும், மற்றொன்றில் யானைகள் வெற்றிக் கும்மாளமிட்டு பெரும் சப்தத்தோடு நடக்கும், இன்காத்திருக்கும்னொன்றிலோ மூச்சை அடக்கி, எதிர்பாராத இரை மீது தீடீர் தாக்குதல் நடத்தக்  சதுப்புநிலக் கொக்கு. சில நேரங்களில் வள்ளுவர் அறிவியலுக்குப் புறம்பாகப் பேசுவார், அவரும் சறுக்கி விழக்கூடிய மனிதர்தானே? பொதுவாக மனிதர்கள் நம்புவதுபோல அவரும் பகலில் ஆந்தைக்குக் கண்தெரியாது என மறுகேள்வியின்றி நம்பி விடுகிறார். ஒரே மேசையில் உண்ணும் மனிதர்களின் குணத்தை அவர் வீட்டுக் காகங்களிடம் கண்டு சொல்லும்போது புகழ்பெற்ற பறவையியல் ஆய்வாளர் சலீம் அலி அவரைத் தலையில் தூக்கி வைத்துக் கொண்டாடியிருப்பார். இதை எல்லாம் வைத்துப் பார்க்க திருக்குறள் “இயற்கை விஞ்ஞானம்’‘ என்பதன் கீழ் கொண்டுவந்து விடலாம்.

            திருவள்ளுவர் சித்தரிக்கும் சமூகப் பழக்க வழக்கங்கள், மக்களின் மூடநம்பிக்கைகளின் சொல்லோவியங்களில் சமூக விஞ்ஞானிகள் மூழ்கிவிடுவர். இவற்றில் சிலவற்றை அதிர்ச்சியளிக்கும் வகையில் அவரே ஏற்று வழிமொழிவதுபோல இருக்கும். முரண்பாடாக, குடிமைச் சமூகத்தில் பெரும் மாற்றத்தை, அந்தச் சமூக மாற்றத்திற்கான வருவதுரைப்பது போன்ற கருத்துகளின் பக்கம் அவர் நிற்கவும் செய்வார். மனிதகுலத்தின் இத்தனைச் சிக்கலான ஒழுங்கமைத் திட்டமிடுதலில் அவர் தனது பெயரிடப்படாத சுதந்திரத்தோடு ஊடாடிச் செல்வார்.

         

  திறமைமிக்க நிர்வாகியான இராசகோபாலச்சாரி திருவள்ளுவரின் ஆட்சிக்கலை மேன்மையில் ஈர்க்கப்பட்டு, குறட்பாக்களைத் தனது மிகச்சிறப்பான ஆங்கிலத்தில் அழகானச் செய்யுளாக்கி உள்ளார். ஆனால் அவருள் இருந்த ஒழுக்கவாதி வள்ளுவரின் மூன்றாவது காதல் கவிதைகளோடு (காமத்துப்பால்) சமசரம் செய்துகொள்ளவிடவில்லை. அவ்வாறு அப்படி ஒன்று இருப்பதையே தெரியாமல் அதன் மீது திரைபோட்டு மூடிவிட்டார். அதுதான் இராஜாஜி. ஆனால் அதற்காக வள்ளுவரை ஒருவர், தமிழ் வாத்சாயனர் என நினைக்காதிருக்க முடியுமா? இன்பத்துப் பாலின் உடல் கவர்ச்சி எழுப்பும் உள்ளக் கிளர்ச்சி ஒன்றும், மகப்பேறுஇயல் மற்றும் பெண் நோயியல் மருத்துவத்திற்கான பாடமாகாது. அது, தலைமகனான காதலன் தலைமகளானத் தன் காதலியின் அழகில் ஈடுபடுவது தொடர்பானது மட்டுமே (தகை அணங்கு உறுத்தல், அதி.109; நலம் புனைந்துரைத்தல் அதி.112 போன்றவைதான்.) அது காதலின் உடலழகு மட்டுமே, அறிவியல் உடல் இயக்கவியல் அல்ல.

            (பௌதீக) உடலை ஆராதிப்பதில் திருவள்ளுவர் எடுத்துக் கொள்ளும் சுதந்திரத்தை மகிழ்வுடன் அங்கீகரித்தது வேறுயாரும் இல்லை, தந்தை பெரியார்தான். திருக்குறளைப் புகழ்வதில் யாருக்கும் சளைத்தவரில்லாத அவர்தான், அடக்க ஒடுக்கமாகப் பெண் இல்லத்தில் உறைய வேண்டும் என்ற அதன் கருத்தோவியத்தை நேருக்கு நேர் தலையால் மோதுகிறார். அதுதான் பெரியார்.


திருக்குறள் புத்தகத்தின் விற்பனை உலகளாவிய நிரந்தரமானது, ஆச்சரியமான அதன் கருத்துகளை ஏற்கவோ, மறுக்கவோ விற்பனையாளர்கள் ஆளில்லை, அவர்களுடைய கவலை அவர்களது விற்பனைப் பொருள் மற்றும் லாபம் மட்டுமே. திருவள்ளுவர் காப்புரிமை பெறவும் இல்லை, அன்றி அவரை யாரும் காப்புரிமைக்குள் அடைத்துவிடவும் முடியாது. திருக்குறள் நூலின் மறுஅச்சுப் பதிப்புகளையும் தாண்டி, சுலபமாக அதிகரிகரிக்கும் இத்தனையாவது பதிப்பையும் தாண்டி திருக்குறள் வாழும், காற்றில் மிதந்து தங்கும். எல்லா இடத்தும், தருணங்களிலும் குறளை மேற்கோள் காட்டுதல், திரும்பத் திரும்பப் பாடுதலுக்கும் அப்பால் வெள்ளமெனப் பாயும்.

சமயங்களுக்கு மேலே

            எந்தச் சமயமும் தனது புனித இடத்தில் அல்லது நூல்களுக்குள் வள்ளுவரைப் பிடித்து அடைத்துவிட முடியாது. ஏதோ ஒரு குறட்பாவில் இங்கே அங்கே என்று மகாவிஷ்ணு இடம் பெற்றார் என்று ஒரு இந்து நினைப்பாரேயானால் அவர் மீண்டும் சிந்திக்க வேண்டும். பூடகமாகக்கூட எந்தக் கடவுள் உருவத்தையும், ஆணாக, பெண்ணாக அல்லது கொண்டாடப்படும் ஏராளமான இடம் மாறியத் தோற்றத்தோடு பாதி மனிதன் – பாதி மிருக உருவத்தோடானச் சித்தரிப்புகளைத் திருவள்ளுவர் பெயரிடவில்லை.

            ஜெயின் சமய அறிஞர்கள் ஏற்கத்தக்க உயரிய காரணகாரியங்களோடு உண்மையில் திருவள்ளுவர்தான் தங்கள் ஜெயின் சமய குருவான குந்தகுந்தாச்சாரியா எனும் பெயரில் இருந்தவர் என்று நினைக்கிறார்கள். பிரிட்டிஷ் அரசு நிர்வாகியான F.W. எல்லீஸ் பிரபு அறத்துப்பாலை மொழிபெயர்த்தபோது, அவர் திருக்குறளை ஒரு ஜெயின் அறிஞரின் படைப்பு என்றே கருதினார் என்பதைக் கொண்டும் ஜெயினர்கள் மேற்கண்ட தங்கள் கருத்தை வலியுறுத்துகிறார்கள். புலால் உண்ணல் மற்றும் கள் குடித்தலைத் திருவள்ளுவர் பேரார்வத்தோடு மறுக்கிறாரே (புலால் மறுத்தல் அதி.26; கள்ளுண்ணாமை அதி 93) அவர் எப்படி உடலை மறுத்தொதுக்கி வீடுபேறு பெறும் கொள்கை உடைய ஜெயின் சமயத்தைச் சேர்ந்தவராவார்?

            அவர்களது கூற்றை உடனடியாக ஏற்று ஒப்புக்கொள்ள நினைப்பவர்கள், அதற்கு முன் திருவள்ளுவர் தமது திருக்குறள் நூலை எப்படித் தொடங்கி எப்படி முடிக்கிறார் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். ’அகரமுதல எழுத்தெல்லாம் ஆதிபகவன்’ என்று உலகைப் படைத்தவனை வணங்கி, இறுதியில், ‘இன்பம் கூடி முயக்கப்பெறின்’ என உலகவாழ்வின் உந்து சக்தியாகிய காதல் உயிர் சக்தி, வாழும் பெருவிருப்பதைக் கூறி நிறைவு செய்கிறாரே, அது மாபெரும் தீர்த்தங்கரர்களின் போதனைகளோடு நன்கு பொருந்தவில்லையே!

          

  திருவள்ளுவர் சென்னை மயிலாப்பூர் கடற்கரையில் வாழ்ந்தவராக இருக்கக்கூடும் என்பது திருக்குறளின் புகழ்பெற்ற ஆங்கில மொழிபெயர்பாளராகிய ஜி யு போப் அவர்களின் புனிதமான நம்பிக்கை; அது, மலைப்பிரசங்கங்களால் ஆழமாக செல்வாக்கு பெற்று கடற்பயணமாக வரும் சமயப் பிரச்சாரகர்களின் கருத்து என ஒருவர் மெல்ல நகைத்து நகர்ந்துவிட வேண்டியதுதான். கடுமையான உழைப்பால் மொழிபெயர்த்த அவர், தமது தேவாலயம் மற்றும் அதன் மேல்நிலையில் உள்ளவர்களின் பெரும் ஆதரவாளர்.

            இதனால் வள்ளுவர் கடவுளைப் பற்றிக் கவலைப்படாதவர் அல்லது கடவுள் மறுப்பாளர் என்று அவரை அனைத்துச் சமயங்களையும் மறுத்துரைப்போர் முகாமைச் சேர்ந்தவர் என்று அர்த்தப்படுத்திவிட முடியுமா? திருக்குறளின் தொடக்கத்தில்‘ஆதி--பகவன்’ எனக் குறிப்பிட்டதை மதச்சார்பற்றதாகவோ, அன்றி ‘ஆதாம் – ஏவாள்’ என்று பொருள் கொள்வதும் கருத்தியல் ரீதியில் துணிவான முயற்சியாகவும் திருக்குறள் சொற்கள்படி நம்பக்கூடியதென ஒருவர் விரும்பலாம்.

            நமது உள்ளுணர்வு திருவள்ளுவர் முகபாவத்தைத் தாடியுடன் கூடிய ஒரு முனிவராக, தமிழ் வியாசராக, விஸ்வாமித்ரர், வால்மீகியாகக் கற்பனை செய்கிறது. புகழ்பெற்ற ஓவியச் சித்தரிப்புகள் அதனை அனுமதிக்கிறது. ஆனால் அவர் அப்படித்தான் இருந்தாரென எந்த அனுபவ, சோதனைச் சாட்சியத்தின்படி சொல்ல முடியும்? அப்படித் தோற்றமளித்திருக்கலாம், ஆனால் எவரும் அதிகாரத்துடன் நிரூபிக்க முடியாது. அன்றி ஒருக்கால், எல்லீஸ் பிரபு வள்ளுவரின் முகத்தை ஒரு ஜெயின் முனிவரின் தோற்றத்தில் தங்க நாணயமாக வார்க்க எண்ணி, காலகாலத்திற்கும் நிரந்தரப்படுத்த விரும்பினாரே அப்படியும் இருந்திருக்கலாம். அமைதியாக அமர்ந்த நிலையில் தாடி, மணி மாலை இன்றி தலைக்கவசம் அல்லது ஒளிவட்டத்தோடு திட்டமிடப்பட்ட அந்த உருவத்திற்கு எல்லீஸ் எந்தப் பெயரையும் சூட்டவில்லை என்பது மிகவும் முக்கியமான மதிப்புடையது. யார் அடைவதற்கு அப்பால் இருக்கிறாரோ, அவரை எட்டிப்பிடிக்க விரும்பிய மனிதர்களின் உச்சபட்ச  முயற்சிகளே வள்ளுவரின் உருவமாக, ஓவியமாக அல்லது சிலையாக வடித்த அனைத்து வெளிப்பாடுகளும்.

            முழுமையாக எந்தச் சார்பும் இல்லாதவரை அபகரித்து எடுத்துக் கொள்ளுதல் சாத்தியமாகக் காரணம், அவை அங்கே அப்படியே உள்ளன என்பதுதான்; கலாச்சாரச் சொந்தம் கொண்டாடுபவர்கள் இரைமீது பாய்ந்து கொத்தத் தயாராக இருக்கும் வல்லூறாகக் கவர்ந்திடக் காத்திருக்கிறார்கள். சார்புடையவர்களையும் நம்பமுடியாதபடி அபகரித்துக் கொள்வதும் போதுமான அளவு நடக்கின்றன; காரணம், அப்படி அபகரிக்கப்படுபவர்கள் இறந்தவர்களாக இருப்பதால், அவர்களால் நம்பமுடியாத ஆச்சரித்துடன் கத்த முடியாதல்லவா! 

எல்லைகள் அற்றவர்

            ஆனால் வள்ளுவர் முற்றிலும் வேறுவகையினர். ஒன்றை அபகரிக்க வேண்டுமானால், அது பௌதீகப் பொருளாக இருக்க வேண்டும். வள்ளுவரோ தொட்டுணர முடியாதபடிச் செறிவு உள்ளவர்; உள்வாங்க முடியாத கற்பனையான உயர் மின்அழுத்தம் உடையவர்; அவரோ வரையறுத்துச் சொல்ல முடியாத கருத்துகள், சித்தரிப்புகள், ஆலோசனை, இடித்துரைத்தல் என்ற மெய்ம்மைகளின் என்றுமுள உண்மைகள்; அவற்றை எவரும் ஒரு பையில் அடைத்து வீட்டிற்குத் தூக்கிச் சென்றுவிட முடியாது. மனிதர்களைத்தான் அபகரிக்கலாமே தவிர, கருத்துகளை அல்ல. கருத்துகளை எதிர்த்து ஒருவர் எதிர்வாதம் புரியலாம். அவற்றிற்குக் கூட்டு படைப்பாளியாகிவிட முடியாது.

            நான் உறுதியாகக் கூறுகிறேன், வள்ளுவரை எவரும் உரிமையாக்கிக் கொள்ள முடியாது. அதனை நான் மேலும் வரையறுக்க வேண்டும். சந்தேகத்திற்கு இடமின்றி தனித்துவமாகத் தமிழ் நிச்சயமாக உரிமை கோரும். ஆனால் வேறுயாரும், எதுவும் முடியாது. அவர் எதனையாவது சொந்தம் கொண்டாடினாரா? ஆமாம், உதாரணத்திற்கு இல்வாழ்வு குறித்த கருத்து. இல்லத்தின் மழலைகளைப் பற்றிய சித்தரிப்பு, அவருக்கே உரித்த தனித்துவமானது. அடுத்து தேசம் பற்றிய கருத்து, நாடு, அரண், அரசன், அமைச்சர்கள், அரசியல்கலை இப்படி. ஒரு நல்ல தேசம் பற்றிய அவரது படப்பிடிப்பு, நமது அரசியல் அமைப்புச் சட்ட முகப்புரையின் தெறிப்புகளால் ஆனது, அதற்குச் சற்றும் குறைவில்லாதது. நமது சொந்த குடியரசின் 70வது ஆண்டு கொண்டாட்டத்தில் அந்த அத்தியாயத்தை / அதிகாரத்தை நாம் வணங்குவோம்!

         

   (காவி ஆடை பூண்ட) உருவத்தோடு காவிகள் ஊதிவிட்டு மெல்ல ஆழம் பார்க்கும் வடிவத்தால் அவரைத் தொட்டுவிட முடியாது. அசைவற்ற காற்றுவெளியில் விருப்பத்திற்கு உயர்த்திய பட்டம் போல அவரது பெயரின் மீது அது (வாசம்போல) மிதக்குமே தவிர அவருக்கு வெளியே சென்றுவிட முடியாது. இந்தச் சம்பவம் குறித்து வீணே நினைத்துத் திருவள்ளுவரின் வாசகர்கள் நேரத்தை விரயமாக்க வேண்டாம். ஓவியச் சீலைகளில் வண்ணம் படியலாம், ஆனால் கருத்துகளின் மீது அல்ல. பலரும் ஞாபகப்படுத்தி விட்டார்கள் –அப்படிப்பட்ட நினைவூட்டல்கள் தேவையே இல்லை – திருக்குறளுக்குப் பின்னால் உள்ள அறிஞர் யாரென்ற முடிவை. (அது திருவள்ளுவரைத் தவிர வல்லபாச்சாரியாரோ, குந்தகுந்தாச்சாரியாரோ வேறு எவருமோ அல்ல).

            வண்ணம் பூசப்படுவதை எந்தக் காலத்திலும் திருவள்ளுவர் பொருட்படுத்தத் தேவை இல்லை. திருக்குறளின் மெய்ம்மையில் வண்ணப் பூச்சுகள் கரைந்து காணாது போகும்!         

--தமிழில் : வெ. நீலகண்டன், கடலூர்

ஓய்வுபெற்ற தொலைத்தொடர்பு ஊழியர்

நன்றி : தி இந்து 2019 நவம்பர் 25 இதழ் 

Saturday 15 January 2022

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாற்று வரிசை 56 -- பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி

 

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 56 


பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி
--

ஈடு இணையில்லா ஒப்பற்ற நாடாளுமன்ற ஆளுமை

– அனில் ரஜீம்வாலே

நியூஏஜ் (டிச.19 – 25)

             ஹிரேன் முகர்ஜி புரட்சிகர அறிவாற்றலின் ஒட்டுமொத்த உருவகம். அவர் மிகப் பெரும் சொற்பொழிவாளர், நாடாளுமன்றத்தில் அவருடைய பங்களிப்புகள் நினைவில் நீங்காதவை.

           ஹிரேந்திர நாத் முகர்ஜி 1907 நவம்பர் 23ல் கல்கத்தாவின் தால்தளா என்னுமிடத்தில் சச்சீந்திரநாத் முகர்ஜிக்குப் பத்து குழந்தைகளில் நான்காவதாகப் பிறந்தார். மிகப் பெரும் சொற்பொழிவாளராகவும் தேசியவாதிவாதியாகவும் விளங்கிய சசீந்திரநாத் பல வகைகளிலும் ஹிரேனின் ஆளுமை உருவாக்கத்தில் செல்வாக்கு செலுத்தினார்.

பள்ளி, கல்லூரி படிப்பு
            ஹிரேனுக்குக் குடும்ப வழக்கப்படி 13 வயதில் பூணூல் அணிவிக்கும் ‘உபநயனம்’ நடந்தது; அந்நிகழ்வு குறித்துப் பின்னாட்களில் பல முறை அவர் கேலி செய்திருக்கிறார். இராமாயணம் மற்றும் மகாபாரதக் காவியங்களிலிருந்து நீண்ட பத்திகளை அவர் பாடுவது வழக்கம்; அப்படி அதன் மூலம் தனது பாட்டியின் பிரியத்திற்கு உரியவரானார்! கீதை சுலோகங்கள் பல மனனம் செய்தார். புத்திசாலியான மாணவராகத் தொடர்ந்து விளங்கினார். தால்தளா உயர்நிலைப் பள்ளியிலிருந்து 1922ல் 80% (நட்சத்திர) மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் மெட்ரிகுலேஷன் தேர்வாகி, மேல் படிப்புக்குக் கல்வி உதவித் தொகையும் பெற்றார்.

            1924ல் இன்டர்மீடியட் ஆர்ட்ஸ் (IA) தேர்வில் முதல் வகுப்பில் சிறப்பாக வந்ததுபோல் பிஏ தேர்வுகளிலும் அச்சாதனையை 1926ல் மீண்டும் நிகழ்த்தினார். சரித்திரம் (ஹானர்ஸ்) தேர்வில் சாதனை மதிப்பெண்கள் பெற்று இஷான் கல்வி உதவித் தொகை வென்றார். 1928ல் முதுகலை எம்ஏ சரித்திரத்தில் தேர்வுக்கான எட்டு தாள்களிலும் அவரே முதலாவதாக வந்தார். காசி இந்து பல்கலைக் கழகம் (BHU) நடத்திய அனைத்திந்திய விவாதப் போட்டியில் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் வென்றார்.

உயர் படிப்புக்காக இங்கிலாந்தில்

            அரசு கல்வி உதவித் தொகை பெற்று ஹிரேன் 1929ல் இங்கிலாந்து சென்று செயின்ட் கேத்தரின் கல்லூரி, ஆக்ஸ்போர்டில் அனுமதிக்கப்பட்டார். 1932ல் பி.லிட் பட்டத்தையும் 1934ல் லிங்கன் இன் கல்வி நிறுவனத்திலிருந்து பார் அட் லா பட்டத்தையும் பெற்றார். அங்கே சையத் சாஜட் ஜாகீர் போன்ற கம்யூனிஸ்ட்களைச் சந்திக்க, அவர்களுடனும் கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி (CPGB) உடனும் தொடர்பு ஏற்பட்டது. ஆக்ஸ்போர்டு மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களில் மாணவர்களை அமைப்புரீதியாகத் திரட்ட அவர் உதவினார்.

            1920ல் ஒத்துழையாமை இயக்கம் நடந்தபோதே தேசிய அரசியலுடன் ஹிரேன் தொடர்பு கொண்டிருந்தார். 1921 டிசம்பர் 24ல் வேல்ஸ் இளவரசரை வரவேற்க கல்கத்தா நகர் ஒளி அலங்காரம் செய்யப்பட்டிருந்தைப் பார்க்கப் பதின் பருவத்திலேயே மறுத்தார். கல்லூரி விழாவில் காஸி நஸ்ரூல் இஸ்லாம்இ ஷிகல் பரா சல்” பாடலைப் பாடும்போதெல்லாம் மிகவும் அவர் உணர்ச்சிவசப்படுவார். பிரிசிடன்சி கல்லூரி மாணவர்கள் சங்கத்திற்கு ஹிரேன் செயலாளரானார்.

            1934ல் அவர் இந்தியா திரும்பினார். புகழ்பெற்ற தத்துவவாதியும் அறிஞருமான டாக்டர் சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் அவரிடம் ஆழமாக ஈர்க்கப்பட்டு வரலாற்றுப் பாடம் கற்பிக்க ஆந்திரா பல்கலைக் கழகத்திற்கு அழைத்தார். ஹிரேனும் அப்பல்கலைக்கழகப் பேராசியராகச் சேர்ந்தார். பின்னர் கல்கத்தா, ரிப்பன் கல்லூரியில் சேர்ந்து 1936ல் வரலாற்றுத் துறை தலைவராகி 1962வரை அப்பதவியில் நீடித்தார். கல்லூரியில் வரலாறு மற்றும் அரசியல் தத்துவம் பாடம் இரண்டையும் கற்பித்தார்.

சிபிஐ கட்சியில் இணைதல்     

            1936ல் சிபிஐ தடை செய்யப்பட்டிருந்தபோது ஹிரேன் கட்சியில் சேர்ந்தார். 1938 -39ல் அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராகி, வங்கப் பிரிவு செயற்குழு உறுப்பினராகவும் செயல்பட்டார். முற்போக்கு எழுத்தாளர் சங்க நிறுவனத் தலைவர்களில் ஒருவர். அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்துடன் (AISF) நெருங்கி இருந்து அதன் வங்க மாநாடுபோல 1940ல் நாக்பூரில் நடைபெற்ற புகழ்பெற்ற நாக்பூர் அமர்வு உட்பட அனைத்திந்திய மாநாடுகளில் தலைமை வகித்துள்ளார். AISF அமைப்புக்குப்  பல தருணங்களில் ஆலோசனைகள் கூறி வழிநடத்தினார்.

            1941ல் நிறுவப்பட்ட சோவியத் நண்பர்கள் சங்கம் (FSU) அமைப்போடு முகர்ஜி தீவிரச் செயல்பாட்டுத் தொடர்பில் இருந்தார். கம்யூனிஸ்ட் இயக்க மாபெரும் ஆளுமை தலைவர்களான எஸ்ஏ டாங்கே, பிசி ஜோஷி, டாக்டர் ரனீன் சென், பவானிசென், சோமநாத் லாகிரி, ஜோதிபாசு, பூபேஷ் குப்தா போன்ற பலருடன் ஹிரேன் முகர்ஜி நெருக்கமாக இருந்தார்.

தலைச்சிறந்த கற்றறிவாளர் மற்றும் எழுத்தாளர்

            பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி ஏராளமான நூல்களை மலைபோல எழுதிக் குவித்த படைப்பாளி, கடல்போல கலைக் களஞ்சியமாய் ஞானம் ததும்பும் துறைசார்ந்த பேரறிஞர். அறிவார்ந்த அவருடைய சொற்பொழிவுகளைக் கேட்பது பேரானந்த அனுபவம் –பொருள் ஆழத்துடன் அறிவுச் சுடர் வீசும் உரைகள் நகைச்சுவை உணர்வு நிரம்பியதாயும் இருக்கும். அத்தகைய ஆழமான அறிவின் தாக்கத்தை, விரல் விட்டு எண்ணக்கூடிய அரசியல் தலைவர்கள் வேறு சிலர் மட்டுமே, கேட்போர் மனதில் பதிய வைக்க முடியும்.

அவருடைய புத்தகங்கள் மற்றும் உரைகளின் விரிந்த பன்முகத் தன்மையும் உண்மைத்தன்மையும் ஆச்சரியத்தில் ஒருவரை வாய் அடைக்கச் செய்யும், மகுடி இசை கேட்கும் பாம்புபோல கேட்போரை மயங்கச் செய்யும். தம் அறிவாற்றலைப் பயன்படுத்துவதில் சமூகத்திற்கு உண்மையாக இருந்தார். கல்லூரிகளில் அவர் ஆற்றும் உரைகள் மாணவர்களுக்குப் பெருவிருந்து, பெருந்திரள் கூட்டத்தில் பேசும் பேச்சுக்கள் கூட்டத்தினரை மயக்கிக் கட்டிப்போடும். அவர் உரையைக் கேட்க பண்டித நேரு நாடாளுமன்ற அவைக்கு விரைந்தோடி வருவார். அவர் எழுதிய சில புத்தகங்கள் உலகச் செவ்வியல் நூல்களாகப் போற்றப்படுகின்றன. நவீன வங்கக் கவிதைகளின் நீண்ட தொகுப்பொன்றை அவர் ஆசிரியராக இருந்து பதிப்பித்தார். சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாறு (போல்ஷ்விக்) என்ற நூலின் ஆசிரியர் அவர்.

            ஆங்கிலத்தில் அவரது பிற நூல்கள் சில :  சுதந்திரத்திற்கான இந்தியப் போராட்டங்கள்; சோஷலிசத்திற்கு ஓர் அறிமுகம்; காந்திஜி – ஓர் ஆய்வு; நேரு குறித்த ஓர் ஆய்வு; இந்தியாவும் நாடாளுமன்றமும்; நாடாளுமன்றம் பற்றிய ஒரு சித்தரிப்பு; தங்கமாய் ஜொலிக்கும் வில் (Bow of Burning Gold -சுபாஷ் சந்திரபோஸ் பற்றி ஓர் ஆய்வு) ; வகுப்புவாதப் பிரச்சனைகளும் சுதந்திரப் போராட்டமும் 1919 முதல் 1947வரை; காந்தி, அம்பேத்கர் மற்றும் தீண்டாமையை அடியோடு அகற்றலும் (Extirpation); இன்றைய தினத்திற்கான உங்கள் தாகூர்; மார்க்ஸை நினைவோம்; மார்க்சியப் பதாகையின் கீழ்;  கம்யூனிசத்தின் அடர் சிகப்பு வண்ணங்களின் கீழ் (Under Communism’s Crimson Colours;) முதலியன

            வங்க மொழியில் அவர் எழுதிய நூல்கள் : இந்தியாவில் தேசிய இயக்கம்;  இந்திய வரலாறு ( 2தொகுதிகள்); தேசியப் பாடல்கள்; நவீன வங்காளக் கவிதைகள்; முதலியன. அவர் ‘கல்கத்தா வீக்லி நோட்ஸ்’ மற்றும் ‘இந்திய – சோவியத் ஜஞ்சிகை’ முதலிய இதழ்களின் ஆசிரியராக இருந்தார். மேலும் அவர், ‘டோரி ஹோடே டீர்’ (படகிலிருந்து கரைக்கு) என்ற சுயசரிதை நாவலும் எழுதியுள்ளார்.

            அவர் ஆங்கிலம், வங்காளம் மற்றும் சமஸ்கிருதம் என மூன்று மொழிகளில் ஏராளமாக எழுதிக் குவித்தவர்.

            மேலும் ஜார்ஜ் டிமிட்ரோவ் மற்றும் (கீழ்த் திசை ஆய்வாளரும் ஹங்கேரிய தத்துவவியலாளருமான) இந்தியவியலாளர் அலெக்ஸாண்டர் க்சோமா டி கோரொஸ் (Alexander Csoma De Koros.) ஆகியோரின் வரலாற்று நூல்களையும் எழுதியுள்ளார்.

பத்ம பூஷண் மற்றும் பிற விருதுகள்

        பொதுவாழ்வில் தலைச்சிறந்த பங்களிப்புக்காக 1990ல் பத்ம பூஷண், 1991ல் இந்தியாவின் இரண்டாவது குடிமை விருதான பத்ம விபூஷண் அளித்துப் பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி கௌரவிக்கப்பட்டார். 2001ல் முஸாஃபர் அகமத் ஸ்மிரிதி புரஸ்கார் விருது பெற்றார். கௌரவ டாக்டர் பட்டங்களை ஆந்திரா, கல்கத்தா, வடக்கு வங்கம், கல்யாணி மற்றும் வித்யாசாகர் பல்கலைக்கழகங்கள் வழங்கின. 1992ல் (ஈஸ்வர் சந்திர) வித்யாசாகர் விருது, 1994ல் மௌலானா ஆஸாத் விருது மற்றும் 2000ல் நஸ்ரூல் விருது என பல விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டன. மேலும் அவருக்குச் சோவியத் லாண்டு நேரு விருது 1977லும், இரண்டாம் உலகப் போர் பற்றிய அவருடைய புத்தகத்திற்காகச் சோவியத் விருது மற்றும் 1980ல் பல்கேரியா அரசு டிமிட்ரோ நினைவு விருதினையும் வழங்கிச் சிறப்பித்தது.

ஈடு இணையில்லா அசாதரண நாடாளுமன்றவாதி

        1952ல் நடந்த முதல் பொதுத் தேர்தலில் மேற்கு வங்கத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து கம்யூனிஸ்ட் நாடாளுமன்ற உறுப்பினர்களில் பேராசிரியர் ஹிரேன் முகர்ஜியும் ஒருவர்.  கல்கத்தா வடகிழக்குத் தொகுதியிலிருந்து முதலாவது, நான்காவது மற்றும் ஐந்தாவது மக்களவை தேர்தலில் நாடாளுமன்ற உறுப்பினராகவும், மீண்டும் 1967 மற்றும் 1971லும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்கத்தா மத்திய தொகுதிலிருந்து மக்களவைக்கு 1957 மற்றும் 1967ல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.  

        1952 முதல் 1964வரையிலும் பின்னர் 1967லிருந்து 1971வரையிலும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மக்களவை உறுப்பினர்கள் குழுவின் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்தார். 1964 முதல் 1967வரை மக்களவை சிபிஐ கட்சிக் குழுவின் தலைவராக இருந்தார். இவ்வாறாக 1952 முதல் தொடர்ந்து 25 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராகப் பணியாற்றியுள்ளார்.

        இந்திய தேசத்தில் பாராளுமன்ற ஜனநாயகம் மலர்ந்து வரும் நிகழ்முறையிலும் அதற்கான நடைமுறைகள் வகுக்கப்பட்டுவரும் தொடக்கநிலையில் இருந்தபோது பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார். நாடாளுமன்றத்தில் மக்களின் பிரதிநிதியாக, அந்தப் பதத்திற்கு மிக உண்மையாக, அவர் எல்லா வகையிலும் விளங்கினார். நாடாளுமன்றத்தில் அவரது செயல்பாடு ஜனநாயக அமைப்புக்களை ஒரு கம்யூனிஸ்ட் எவ்வாறு பயன்படுத்த முடியும் என்றும் ஒரு கம்யூனிஸ்ட் எப்படி இருக்க வேண்டும் என்பதையும் எடுத்துக்காட்டியது.

        பாராளுமன்ற நடைமுறைகள் மற்றும் விதிகளை வகுப்பதில் பெரும் விற்பன்னராகத் திகழ்ந்து, நாடாளுமன்ற ஜனநாயக அமைப்பை உறுதியாகப் பாதுகாத்த, பன்முக ஆற்றல் பெற்ற மேதை ஹிரேன் பாபு நாடாளுமன்ற வட்டத்தில் அனைவராலும் மிகப் பெரிதும் மதிக்கப்பட்டார்.

வெள்ளி நாக்கு படைத்தவர், சொல்லின் செல்வர்

        நாடாளுமன்றத்தில் அவரது உரைகள் உயரிய தேசியக் கண்ணோட்டத்தையும் நாட்டின் மீது அவருக்கிருந்த பேரன்பையும் பிரதிபலித்தன. அவரது மிகச் சிறந்த மொழி ஆளுமையும் அவர் தேர்ந்தெடுக்கும் வார்த்தைகளும் மிக உயரிய தரத்தில் அமைந்திருந்தன. அவருடைய உரைகளை ஆளும் தரப்பு மற்றும் எதிர் தரப்பு இரண்டும் மிகுந்த அமைதியோடு இருந்து அக்கறையாகக் கேட்பார்கள். அவருடைய குரல் ‘தங்கக் குரல்’ அல்லது வெள்ளி நாக்கு படைத்தவர்’ என்று கூறுவர். (அவர் நாக்கில் கலை மகள் சரஸ்வதி நர்த்தனம் ஆடினாள் எனலாம்)

        ஒரு நாட்டியப் பெண்மணி மேடையின் ஒரு புறத்திலிருந்து எல்லா இடத்திற்கும் எப்படிச் சென்றார் என வியக்கும் வகையில் அவருடைய உரைகளில் ஹோமரின் இலியட் மற்றும் ஒடிசி கிரேக்கப் பேரிலக்கியங்களிலிருந்து நமது இராமாயணம் மற்றும் மகாபாரதத்திற்கும்; கிருஸ்வது புதிய ஏற்பாட்டிலிருந்து பகவத் கீதைக்கும், குரானுக்கும்; மார்க்சுக்கும் லெனினுக்கும் வெகு சுலபமாக நீந்திச் சென்று நம்மையும் உடன் அழைத்துச் செல்வார். சொற்பொழிவுகளில் விவேகானந்தர், காந்திஜி, நேரு, புத்தர் எனப் பல பேராளுமைகள் தென்றலின் சுகமாய் மிதந்து வருவார்கள். மிகச் செவ்விய முறையிலான சமஸ்கிருதத்தில் அவரால் பேசவும் எழுதவும் முடியும்.  மக்களவையில் தொல்லியல் குறித்த அவரது உரைகள் ஒப்புயர்வற்றன – ஏனெனில், அவற்றில் இந்திய வரலாறு குறித்த பெரும் ஆய்வாளர்கள் சர் லியோனார்டு உல்லே மற்றும் சர் மார்ட்டிமர் வீலர் அகியோரின் அரிய ஆராய்ச்சித் தகவல்கள் நிரம்பி இருக்கும்.

        நாடாளுமன்றத்தில் அரசுக்கு எதிராகக் கொண்டு வந்த வெட்டுத் தீர்மானத்திற்கு ஆதரவாக நூறு ஓட்டுகளுக்கு மேல் பெறுவது என்பது மிகவும் அரிதான சாதனை. எந்த விஷயம் குறித்துப் பேசுவதற்கு முன்பு பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி அவ்விஷயங்களில் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சனைகள்/ சிக்கல்கள் பற்றி ஆழமாக ஆய்வுகளை மேற்கொள்வார். நாடாளுமன்றத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவதற்காகப் பல முக்கிய ஆலோசனைகளைத் தந்த அவர் கேள்வி நேரத்தின் முக்கித்துவத்துவத்தை வலியுறுத்துவார். தனது “பாராளுமன்றச் சித்தரிப்பு” (‘Portrait of Parliament’) என்ற புத்தகத்தில் புறநிலை எதார்த்த நோக்கில் நாடாளுமன்றச் செயல்பாடுகளின் அணுகுமுறையை விவரித்திருப்பார்.  

        நாடாளுமன்றப் பொதுக் கணக்குக் குழு (PAC) தலைவராக இரண்டு முறை அவர் இருந்தார். (1976ல் தொடங்கப்பட்ட BPST எனும்) மக்களவைச் செயலகத்தின் ‘பாராளுமன்ற ஆய்வு மற்றும் பயிற்சி அமைப்பின் முதலாவது கவுரவ ஆலோசகராகவும் இருந்து, பல கருத்தரங்குகள், பயிற்சி செயல்திட்டங்கள் மற்றும் பிற செயல்பாடுகளுக்கும்  ஏற்பாடு செய்தார்.  நாடாளுமன்றக் குழுக்கள் பலவற்றில் உறுப்பினராக இருந்து ஆக்கபூர்வமான மாபெரும் பங்களிப்புகளைச் செய்தார்.

        பார்வையாளர்களுக்காக நடித்து நடப்பது, தொலைக்காட்சி போன்றவற்றின் கண்காட்சி  வெளிப்பகட்டு போன்ற காட்சி அரசியல் நடத்துவதை அவர் விமர்சித்தார். (அரசியல் என்பது தேர்ந்தெடுத்த மக்களுக்கு விஸ்வாசமாக, உண்மையாக இருப்பது). வேறுபட்ட பல தரப்பு அரசியல் கருத்தோட்டம் உள்ளவர்களோடு அவருக்கு மிக நல்ல நெருக்கமான உறவு இருந்தது.

பல்வேறு அமைப்புகளில் பங்களிப்பு

        விரிவான பல தளங்களின் அமைப்புகளில் அவர் உறுப்பினராக இருந்தார்; தொல்லியல் துறையின் மத்திய ஆலோசனை போர்டு (1952), கல்விக் குழு, திட்டக்குழு, பண்டித ஜவகர்லால் நேரு நினைவு அறக்கட்டளை, லால்பகதூர் சாஸ்திரி நினைவு அறக்கட்டளை, அனைத்திந்திய விளையாட்டுகள் கவுன்சில் போன்றவை அவற்றில் சில. 

தஞ்சாவூர் பெருவுடையார் எனும் பிரகதீஸ்வரர் கோவிலின் பழங்காலச் சுவரோவியங்கள் (மூலிகை வண்ணங்களைக் கொண்டு வரையப்பட்ட frescosecco panels) பாதுகாப்புக்கு அவரையே வழிகாட்டியாகக் கொண்டிருந்தனர். 

                             

கம்யூனிஸ்ட்களும் காங்கிரஸ்காரர்களும் அக்குழுக்களில் சுலபமாக இணைந்து பணியாற்றினர். “ஹிரேன் பாபு அவர்களுக்கு வாழ்க்கை மற்றும் மனித நாகரீகத்தின் நீடித்த மதிப்பீடுகள் அனைத்து வகையான குறுகிய மனப்பாங்கு வித்தியாசங்களைத் தாண்டி பாரம்பரியமாகக் கடந்து வருவது” என கோபால் (கிருஷ்ண) காந்தி எழுதுகிறார். 

        பாராளுமன்றத்தில் அசாதாரணமான எல்லா வசதிகளும் நிரம்பிய அரிய பெரிய நூலகத்தை ஏற்படுத்த முன்முயற்சி எடுத்த ஒருசிலருள் பேராசிரியர் ஹிரேனும் ஒருவர். அவர் விரிவான பல்துறைகளைச் சார்ந்த நூல்களைப் பெரும் ஆர்வத்தோடு படிப்பவர். நாடாளுமன்றத்தின் தற்போதைய நூலகம் அவருக்குப் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறது.

ஹிரேன் பாபுவின் இதயம்

        சாதாரண மனிதனின் நலமே ஹிரேன் முகர்ஜியின் நெஞ்சிற்கு மிகவும் நெருக்கமானது என்பதை விவரிக்கும் சோமநாத் சாட்டர்ஜி,ஒரு நோக்கத்திற்கான செயல்பாடுகளில் மகாத்மா காந்திஜியுடன் ஒருசிறிதும் குறைவுபடாத வகையில் அவர் பகிர்ந்து கொள்ளும் கருத்து அது” எனக் கூறுகிறார். 

             (அது, மகாத்மா காந்தி தந்த மந்திரத் தாயத்து : “நான் உங்களுக்கெல்லாம் ஓர் மந்திரத் தாயத்து அளிக்கிறேன். முடிவெடுக்கையில் அது சரியா, தவறா என்கிற ஐயப்பாடு எழும்போதோ, அல்லது அகந்தையோ சுயநலமோ தலைதூக்கும்போதோ, இச்சோதனையைப் பயன்படுத்துங்கள். நீங்கள் பார்த்துள்ள, மிக மிக நலிவுற்ற ஏழையின் முகத்தை ஞாபகப்படுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் செய்யவிருக்கும் காரியம், அந்தப் பரம ஏழைக்கு எவ்விதத்திலாவது பயன்படுமா? அவன்  அன்றாட வாழ்க்கையையும், வருங்கால வாழ்வையும் வளமாக்க வகைசெய்யுமா? என்று உங்களையே கேட்டுக்கொள்ளுங்கள். அதன்பின் உங்களது ஐயங்களும் சுயநலமும் கரைந்து மறைந்து போவதைக் காண்பீர்கள்.'' – மகாத்மா காந்திஜி)


       
டாக்டர் கே ஆர் நாராயணன் இந்தியக் குடியரசுத் தலைவரானவுடன் ஹிரேன் பாபுவை அவரது இல்லத்தில் சந்திக்க கல்கத்தா சென்றார்: அதுதான் அந்த நகருக்கு அவரது முதல் விஜயம்.

        ‘பொருத்தமற்ற பல்துறைகளில் ஈடுபட்டவன்’ (a jack of several incompatible trades’) என (நகைச்சுவையாக) ஹிரேன் முகர்ஜி தன்னைப் பற்றி குறிப்பிடுவார். 1948லும் 1949லும் இரண்டு முறை அவர் கைது செய்யப்பட்டிருக்கிறார்.

சீனா ஆக்கிரமிப்பு குறித்து:

        சீனா குறித்து அவர், “இந்தியாவைச் சீனா நடத்திய விதத்தில் அது மிகக் கொடுமையான தாக்குதல் என்றும்; மேலும் அதன் மூலம் (சீனா) சோஷலிசத்தின் நிகழ்முறையை மதிப்பிழக்கச் செய்து அதன் புகழைக் குலைக்கிறது’ என்றும் ஐயத்திற்கு இடமின்றி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கடுமையாகக் கண்டிக்கிறது” என மிகத் தெளிவாகக் கூறினார்.

கட்சி மற்றும் வெகுஜன அமைப்புக்களில்

        ஹிரேன் முகர்ஜி இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தேசியக் குழுவின் உறுப்பினராக இருந்தார். 1964 கட்சி பிளவிற்குப் பிறகு நீடித்தாலும், பிளவால் ஆழமாகப் பாதிக்கப்பட்டு பிளவை எதிர்ப்பவராக இருந்தார். (‘ஹிரேன் பாபு சிபிஐ – சிபிஐ(எம்) உறவிற்குப் பாலமாக இருந்தார்’ என மேற்கு வங்க மேனாள் நிதியமைச்சர் அசோக் மித்ரா கூறுகிறார்.) அஞ்சல், காப்பீடு மற்றும் வங்கி ஊழியர்கள் போராட்டத் தொழிற்சங்க இயக்கங்களில் நெருக்கமாக இருந்தார். வங்கத்தின் தொழிற்சங்கக் கவுன்சிலின் துணைத் தலைவராகவும், 1946ல் வங்காளத்தில் ‘மோஷன் பிக்சர்ஸ் (சினிமா) தொழிலாளர்கள் சங்கம்’ அமைக்கப்பட்டதிலிருந்து அதன் தலைவராகவும் இருந்தார். சோவியத் யூனியன் நண்பர்கள் (FSU) அமைப்பு தவிர ‘இந்தியா – சீனா நட்புறவு அஸோசியேஷன்’ நிறுவுவதில் உதவியதுடன் அதில் தீவிரமாக ஈடுபட்டார்.

பேராசிரியர் மறைவு

        (அஞ்சலி என்பவருடன் திருமணம் நடந்து அவர்களுக்குச் சந்தீப் என்றொரு மகன் இருந்தான்; திருமண வாழ்வைவிட தனியே இருப்பது அவருக்குச் சிரமமானதாக இல்லை என ஓர் இணையப் பதிவில் காண முடிந்தது – மொழிபெயர்ப்பாளர் இணைப்பு).  கல்கத்தா பாலிகவுன்ஜ் அவருடைய குடியிருப்பில் கீழே விழுந்து 2004ல் அவர் இடுப்பில் பாதிப்பு ஏற்பட்டது. கல்கத்தா SSKM மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். (பிரிஜிடென்சி பொது மருத்துவமனை பெரும் நன்கொடையாளர் சேத் சுக்லால் கர்னானி நினைவு மருத்துவமனை என 1954ல் பெயரிடப்பட்டது.) ஆனால் மாரடைப்பு காரணமாகப் பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி 2004 ஜூலை 30ல் மரணமடைந்தார். 

        இந்திய அரசு மிகப் பொருத்தமாக அவரது பிறந்த நூற்றாண்டான 2008லிருந்து “பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி நினைவு நாடாளுமன்ற சொற்பொழிவு”களை அமைத்தது. அந்நினைவுச் சொற்பொழிவுளைப் பேராசிரியர் அமர்தியா சென் மற்றும் ஜெகதீஷ் பகவதி போன்ற ஆளுமைகள் நிகழ்த்தியுள்ளனர்.

      கோபால கிருஷ்ண காந்தி அவரைக் “கம்யூனிச ரிஷி” எனப் புகழ்ந்தார்.

காந்திஜி குறித்து ஹிரேன் பாபு கூறியது மிகவும் அற்புதமானது. “ஒரு கம்யூனிஸ்ட்டாக இப்படி இருப்பதற்காக வருத்தப்படாத நான், என் வழியில் காந்தியின் பக்தனாக இருந்தேன். ( I have been in my own way a Gandhi devotee, inspite of my unrepentant communism) ‘தி நியூ ஸ்டேட்ஸ்மன் மற்றும் நேஷன்’ (சுமார் 1935ல்) வெளியான, சாகிட்டரியஸ் எழுதிய கவிதையின் சிறிய பகுதியை என் நினைவிலிருந்து உங்களுக்கு நான் வழங்குகிறேன்:

‘டி வலீரா மற்றும் அவனது பச்சை சட்டை (அணி)கள் சுவரில் முட்டி நின்றன             

 ஹிட்லர் பிரவுன் சட்டை படையினரோடு வீழ்ச்சியை நோக்கிப் பயணம்

முஸோலினி  கருஞ்சட்டைப் படையினரோடு அனைத்தையும் தாண்டி மோதிச் சென்றான்        

 மகாத்மா காந்திக்கு, சட்டை இல்லா வெற்று உடம்பு அரையாடை பக்கிரிக்கு,

(உலகம்) வாழ்த்திசைத்துச் செல்கிறது”

(De Valera and his Green Shirts with their back to the wall/ Hitler with his Brown Shirts riding for a fall/ Mussolini with his Black Shirts lording over it all/ Three cheers for Mahatma Gandhi with no shirt at all”’!!)

            உண்மைதான், மாற்ற முடியாத கம்யூனிஸ்ட்டாக இருந்த பேராசிரியர் ஹிரேன் பாபு முகர்ஜி காந்திஜியை ஆராதிப்பவராகவும் திகழ்ந்தார். 

         வாழ்க ஹிரேன் பாபு புகழ்! அவர் படைத்தளித்த எண்ணற்ற நூல்களில் அவரைத் தரிசிப்போம் வாருங்கள்!  ஹிரேன் பாபு ஜிந்தாபாத்!

--தமிழில் : நீலகண்டன்,

  என்எப்டிஇ, கடலூர்