கம்யூனிஸ்ட் அறிக்கை
175 ஆண்டுகள்
கம்யூனிஸ்ட் அறிக்கை,
ஜனநாயகம் மற்றும் சோஷலிசம்
--அனில் ரஜிம்வாலே
இன்றைக்கு
175 ஆண்டுகளுக்கு முன்பு கம்யூனிஸ்ட் கட்சியின் மெனிஃபெஸ்டோ அல்லது ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’
1848 பிப்ரவரியில் பதிப்பிக்கப்பட்டது. அது உலகின் முதலாவது கம்யூனிஸ்ட் கட்சியான கம்யூனிஸ்ட்
லீக் அமைப்பிற்காக 1847 நவம்பரில் காரல் மார்க்ஸ் மற்றும் ஃபெடரிக் ஏங்கல்ஸ் இருவராலும்
எழுதப்பட்டது.
இப்படைப்பின்
மூலம் மார்க்சும் ஏங்கெல்சும் இறுதியாகப் புரட்சி குறித்த யூகங்களுக்கு முடிவு கட்டி,
சோஷலிசம் மற்றும் கம்யூனிசத்தின் கருத்தியலை விஞ்ஞான அடிப்படையில் முன் வைத்தனர். முதன்
முறையாகத் தொழிலாளர் வர்க்கம், புரட்சியின் --அதாவது ஜனநாயகப் புரட்சி மற்றும் சோஷலிசம்/கம்யூனிசம்
இவற்றின்-- செயல்திட்டத் தந்திரோபாயம் மற்றும் உத்திகளை வகுத்து உருவாக்கியது.
வரலாற்றில்
1789ன் ஃபிரெஞ்ச் புரட்சி, 1776ன் அமெரிக்கப் புரட்சி, 1640 மற்றும் 1688ன் பிரிட்டன்
புரட்சிகள், 1848 –50களின் ஐரோப்பியப் புரட்சிகள் போன்ற பெரும் புரட்சிகள் இடம் பெற்றுள்ளன.
ஆனால் அவை எதனிலும் ‘செயல்திட்டத் தந்திரோபாயம்’ (ஸ்டடர்ஜி) வகுக்கப்படவில்லை.
மார்க்சும்
ஏங்கல்சும் கம்யூனிசத்தின் விஞ்ஞான கோட்பாடுகளை வகுத்து, விஞ்ஞானபூர்வமல்லாத உட்டோபிய
(கற்பனைவாத) சோஷலிசத்திற்கு எதிராக விஞ்ஞான சோஷலிசத்தை மேம்படுத்தி வளர்த்தனர்; ஜனநாயகக்
கோரிக்கைகளுக்கான அன்றாடப் போராட்டங்களின் திட்டங்களை வகுத்தளித்தும், பிற ஜனநாயகக்
கட்சிகளுடன் ஒத்துழைப்புக்கான உத்திகளையும் வளர்த்தனர். உடனடி கோரிக்கைகளுக்கான போராட்டம்,
எதிர்கால சோஷலிசப் போராட்டத்துடன் இயக்கவியல் ரீதியாக இணைக்கப்படுகின்றது.
கம்யூனிஸ்ட் அறிக்கையின் பொருத்தப்பாடு
ஃபெடரிக் ஏங்கல்ஸ்
கூற்றின்படி, “புரட்சிகர பாட்டாளி வர்க்கக் கடமைகளில் முதலாவதும்
முக்கியமானதுமான, ‘ஜனநாயகத்தில் பொது வாக்குரிமையை வென்றடைவது’
எனக் கம்யூனிஸ்ட் அறிக்கை ஏற்கனவே பிரகடனப்படுத்தி உள்ளது” என மார்க்ஸ் எழுதிய ‘பிரான்ஸில்
வர்க்கப் போராட்டங்கள்’ என்ற நூலுக்கு 1895ல் எழுதிய
முகவுரையில் ஃபெடரிக் ஏங்கல்ஸ் குறிப்பிட்டுள்ளார் (SW1, Moscow, 1973, p195). இதிலிருந்து
தெளிவாவது, தொழிலாளி வர்க்கம் மற்றும் அதன் அரசியல் கட்சிகளுக்குப் பொது வாக்குரிமை
என்பதன் முக்கியத்தும் குறித்து ஏங்கல்ஸ் மற்றும் மார்க்ஸ் வலியுறுத்தியுள்ளனர் என்பதே.
இந்தக் கோரிக்கை 1830கள் மற்றும் 1840களில் இங்கிலாந்து தொழிலாளர்கள் நடத்திய வரலாற்றுப்
புகழ்மிக்கச் ‘சாசன இயக்கம்’ (Chartist movement) எழுப்பிய கோரிக்கையாகும்.
மார்க்சும் ஏங்கல்சும்
ஜனநாயக உரிமைகளுக்கான போராட்டங்கள் மற்றும் ஜனநாயக முறைகளிலான போராட்ட வடிவங்களுக்குப்
பெரும் முக்கியத்தும் அளித்தனர். ஆனால் பெரும்பாலான மக்களிடம், ‘அவர்கள் ஆயுதம் தாங்கிய போராட்டங்களின் பெரும் ஆதரவாளர்கள்’ என்று பதிந்துள்ள கருத்து, முற்றிலும் தவறானது. இக்கருத்து
உண்மைக்கு முற்றிலும் மாறானது, உண்மைக்கு வெகு தொலைவில் இருப்பது. ஆயுதப் போராட்டத்தைப்
பரிந்துரைத்த ஒரு தருணம், ஒற்றை மேற்கோள் அவர்களுடைய நூல்களில் ஒரு இடத்தில்கூட காணப்படவில்லை.
பிரெஷ்யாவில்
வாக்குரிமையை அறிமுகப்படுத்த கட்டாயப்படுத்தப்பட்ட பிஸ்மார்க், அதனைத் தனது சொந்த நலனுக்குப்
பயன்படுத்த முயன்றார். ஆனால் அவ்வாய்ப்பை உடனடியாக இறுகப் பிடித்துக்கொண்ட தொழிலாளர்கள்
(ஜெர்மன் சோஷலிசவாதியான) “ஆகஸ்ட் பேபெல் என்பரை முதலாவதாக அரசமைப்பு ரீச்ஸ்டாக் (ஜெர்மன்
நாடாளுமன்றத்திற்கு) அனுப்பினர். அந்த நாள் முதலாக வாக்குரிமையை அவர்கள் ஆயிரம் மடங்கு
தங்களுக்குப் பயன்அளிக்கும் வகையில் பயன்படுத்தினர்; அது அனைத்து நாடுகளின் தொழிலாளர்களுக்கும்
ஒரு முன்னுதாரணமாகியது” (அதே நூலில் ஏங்கெல்ஸ்). இவ்வாறு அது விடுதலைக்கான ஒரு கருவியாக
மாற்றப்பட்டது.
இந்த வார்த்தைகள்
ஏறத்தாழ 130 ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்டது! அது முதலாக, அவை இன்னும் கூடுதலாக 21ம்
நூற்றாண்டில் பொருத்தப்பாடு உடையதாகத் திகழ்கின்றன. இன்று, ஜனநாயகம், ஜனநாயக அரசியலமைப்புச்
சட்டங்கள் மற்றும் பாராளுமன்ற முறைமைகள் என்பன நன்கு நிலைநிறுத்தப்பட்ட உண்மைகள் ஆயின,
அவை மேலும் பரவலாக்கப்படவும் வலிமைபடுத்தப்படவும் வேண்டும். இது, கம்யூனிஸ்ட் அறிக்கையின்
பொருத்தப்பாடு உடைய போதனைகளில் ஒன்று.
(உடோபிய) கற்பனாவாதமும் விஞ்ஞான
சோஷலிசமும்
மெனிஃபெஸ்டோவில்
வரலாற்றின் பொருள்முதல்வாதக் கருத்துருவாக்கம் பொதுவாக முன்வைக்கப்பட்டது. அனைவருக்கும்
வாக்குரிமை மற்றும் நாடாளுமன்ற ஜனநாயகம் உள்ளிட்ட அரசியல் நிகழ்வுகளில் அவை தங்கள்
சமூக பொருளாதார வேர்களையும் வரலாற்றையும் கொண்டிருந்தது.
வரலாறு
மற்றும் சமூகத்தின் இயக்க சக்திகளையும் எதார்த்தமாகக் காணக்கூடிய விதிகளையும் குறித்த
விஞ்ஞான ரீதியான புரிதலில் பற்றாக்குறை கொண்டிருந்த உடோபிய சோஷலிசம்/கம்யூனிசத்தை, அதன் காரணமாகவே,
மார்க்சும் ஏங்கெல்சும் விமர்சித்தனர். அறிக்கையில் அவர்கள் அடையாளப்படுத்திய பலவித
‘சோஷலிச மாதிரி’களில் ‘விமர்சன கற்பனாவாத சோஷலிசம் மற்றும் கம்யூனிசம்’ என்பதும் ஒன்று.
“விமர்சன கற்பனாவாத சோஷலிசம் மற்றும் கம்யூனிசத்தின் முக்கியத்துவம், வரலாற்று வளர்ச்சிப்
போக்கினுடன் தலைகீழ் உறவைக் கொண்டிருப்பதைத் தாங்கியுள்ளதைக் காட்டுகிறது“ (பார்வை:
கம்யூனிஸ்ட் மெனிஃபெஸ்டோவில் மார்க்ஸ் மற்றும் எங்கெல்ஸ், ‘சோஷலிச மற்றும் கம்யூனிச
இலக்கியம் பகுதி III).
அதன்
பின் தொடர்ந்து, மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்சின் பணியை மேலெடுத்துச் சென்ற லெனின், அராஜகவாதம் (அல்லது அரசின்மைவாதம்),
ஜனரஞ்சகவாதம் (Anarchism,
Narodnism) மற்றும் ‘இடதுசாரி’ சாகசக் கம்யூனிசம் இவற்றை அவர்களின் (சமூக எதார்த்தத்தைப் புறக்கணித்து)
சுயவிருப்ப விழைவு மற்றும் அகவயப்பட்ட சமூகச் செயல்பாட்டிற்காக விமர்சித்தார். நவீனகால
மாவோயிசவாதிகள், உலகச் சமுதாயத்தில் ஏற்பட்டுவரும் பெரும் மாறுதல்களைக் கணக்கில் கொள்ளாமல்,
இந்த விஞ்ஞானபூர்வமற்ற, வரலாற்று பூர்வமற்ற அணுகுமுறையை வலியுறுத்துகின்றனர்.
இத்தகைய
குறுகிய கருத்தியல் அணுகுமுறைகள், உற்பத்தி சக்திகள், பொருளாதாரம், சந்தை, அறிவியல்,
தொழில்நுட்பம் முதலிய மற்றும் புதிய தொழில்நுட்பப் புரட்சி உள்ளிட்டவற்றின் புதிய வளர்ச்சிப்
போக்குகளைப் புறக்கணிக்கின்றன.
கற்பனாவாதச்
சோஷலிசத்தின் மீது இரக்கமற்ற விமர்சனம் மூலமாகவே மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்சின் விஞ்ஞான
சோஷலிசம் உருவானது
பொருளாதார மற்றும்
தொழில்நுட்ப அடிப்படைகள் மீதான ஆய்வு
அரசியல் நிகழ்வுகளின் பொருளாதார வேர்களைக்
குறித்த ஆய்வைக் கம்யூனிஸ்ட் அறிக்கை தொடங்கி வைத்தது. அது இல்லாமல் இருந்தால், மிக
மோசமான மாதிரியான உட்டோபிய கற்பனாவாதத்தில் விழும் ஆபத்து விளைந்து இருக்கும்.
1848 –50ன் ஐரோப்பிய புரட்சி சம்பந்தமான
தெளிவில்லாத பல அம்சங்கள் குறித்து மார்க்சும் ஏங்கெல்சும் ஆழமான பொருளாதார ஆய்வுப்
பணியை மேற்கொண்டனர். கம்யூனிஸ்ட் அறிக்கை எழுதப்பட்ட ஆண்டான 1847ல்தான் அவர்கள்
1847 உலக வர்த்தக நெருக்கடியின் மீது கவனம் செலுத்தினர். அவர்கள் தங்களின் முந்தைய
சில மதிப்பீடுகளை திருத்தியமைத்து, “ஒரு புதிய நெருக்கடியின் பின்விளைவாகவே ஒரு புதிய
புரட்சி சாத்தியம்” (பிரான்சில் வர்க்கப் போராட்டங்கள்) என்று கூறினர்.
உண்மையில் இந்த ஆய்வுகள்தான் மார்க்ஸ்
மற்றும் ஏங்கெல்ஸ் இருவரின் பிரம்மாண்ட ‘டாஸ் கேபிடல்’ (மூலதனம்) என்ற படைப்பிற்கான
களத் தயாரிப்புகளுக்குக் காரணமாயிற்று. அந்த மாபெரும் நூல் அரசியல்
பொருளாதாரம் மற்றும்
இயக்கவியல் ஆய்வுமுறை என்ற இரண்டின் மீதான படைப்பு. அது, முதலாளித்துவ உற்பத்தி முறையின்
உள்ளார்ந்த எதார்த்த செயல்முறையை விளக்கியது. அந்த இரு மேதைகளின் இந்த படைப்பு இல்லாமல்
ஒருவரால் எவ்வாறு சமுதாயத்தை மாற்றுவது என்பதைப் புரிந்து கொள்ளவே முடியாது.
சோஷலிசத்திற்கான
மாற்றத்தில்
நாடாளுமன்ற ஜனநாயக வடிவங்கள்
வயது வந்தோர்
அனைவருக்கும் வாக்கு உரிமையை ஜெர்மன் தொழிலாளி வர்க்கத்தின் அரசியல் கட்சியான ‘ஜெர்மன் சமூக ஜனநாயகக் கட்சி’ (SDP) சிறப்பாகப் பயன்படுத்தியது குறித்து
ஏங்கல்ஸ் மிக விரிவாக ஆராய்ந்துள்ளார். அக்குறிப்பு ‘பிரான்ஸில் வர்க்கப் போராட்டங்கள்’ என்ற மார்க்சின் நூலுக்கு அவர் எழுதிய முகவுரையில்
(1895) இடம் பெற்றுள்ளது. பாட்டாளிகளின் போராட்டத்தில் அனைவருக்கும் வாக்குரிமை என்பது
முற்றிலும் புதிய முறை என்று கருதும் ஏங்கல்ஸ், அது மிகவும் ஆற்றல் மிக்கது, அதன் மூலம்
தொழிலாளர் வர்க்கம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து அரசமைப்பது மட்டுமல்ல, அதன் உதவியோடு
சோஷலிசத்திற்கான தொடர்சியான மாறுதல்களைச் சமூகத்தில் ஏற்படுத்தவும் முடியும் என்று
கூறுகிறார். மேலும் ஏங்கல்ஸ், ஜெர்மன் தொழிலாளர்கள், “பிற
நாடுகளில் இருக்கும் தங்கள் தோழர்களுக்கு ஒரு புதிய ஆயுதத்தை, மிகக் கூர்மையான ஆயுதத்தை,
அனைவருக்கும் வாக்குரிமையை எப்படிப் பயன்படுத்துவது என்பதை எடுத்துக்காட்டி” மிகப் பெரிய சேவையை ஆற்றியிருக்கிறார்கள் என்று புகழ்ந்து
எழுதியுள்ளார். (அதே நூலில்)
தேர்தல் நிகழ்முறை, நாடாளுமன்ற அமைப்பு
குறித்த மார்க்ஸிய அணுகுமுறையின் அடிப்படை கோட்பாடுகளை ஃபெடரிக் ஏங்கெல்சின் ஆய்வுகள் நிறுவுகின்றன.
அனைவருக்கும்
வாக்குரிமையை அறிவார்ந்த முறையில் ஜெர்மன் தொழிலாளர்கள் பயன்படுத்தியதால், அவர்களுடைய
கட்சியிலும் (SDP) பிரமிப்பூட்டும்
வளர்ச்சி ஏற்பட்டது என ஏங்கல்ஸ் விமர்சனக் குறிப்பில் குறிப்பிடுகிறார். SDP-ன் மறுக்க முடியாத ஓட்டு எண்ணிக்கை
உயர்விலிருந்து இது தெளிவாகிறது: 1871: 1,02,000; 1874: 3,52,000; 1877:
4,93,000.
சோஷலிச எதிர்ப்புச் சட்டம் ஜெர்மனியில் 1878ல் கொண்டு வரப்பட்டது. SDPகட்சி அமைப்புகள், வெகுஜன தொழிலாளர் அமைப்புகள், தொழிலாளர்களின்
அச்சகம் தடை செய்யப்பட்டு, சோஷலிசப் பிரசுரங்கள் பறிமுதலுக்கு உள்ளாயின. 1890ல் கடுமையான
பெருந்திரள் தொழிலாளர் போராட்ட இயக்கங்கள் தந்த நெருக்கடியால் அந்தத் தடை நீக்கப்பட்டது.
1881ல் தற்காலிக பின்னடைவுக்குப் பிறகு SDP கட்சி, அந்தச் சட்டம் இருந்தபோதும்,
தொடர்ச்சியாக வளர்ச்சி அடைந்தது. 1884ல் 5,50,000 வாக்குகளும் 1887ல் 7,63,000;
1890ல் 14,27,000 வாக்குகளும் பெற்றது. இப்படி அதிகரித்த வாக்குகள் ஏங்கல்ஸ் உயிரோடு
இருந்த காலத்தில் (அவர் 1895 ஆக.5ல் மறைந்தார்) 17 லட்சத்து 87ஆயிரம் வரை அல்லது பதிவான
மொத்த வாக்குகளில் கால் பங்கு என அதிகரித்தது.
SDP ஜெர்மனியில் பலம் பொருந்திய கட்சிகளில்
ஒன்றானது. அது பெற்ற வாக்குகள் சதவீதம் 1898ல் 27.2% (30லட்சம் வாக்குகளுக்கு மேல்)
1912ல் 34.8% (40 லட்சம் வாக்குகளுக்கு மேல்). ஜெர்மன் SDP கட்சி பெருந்திரள் அமைப்பாகவும்
நாட்டின் மிகப் பெரிய கட்சியாகவும் ஆனது. 1907ல் அந்தக் கட்சி நூற்றுக்கும் மேற்பட்ட
தினசரி நாளிதழ்களை நடத்தியது!
மேற்கண்ட
முன்னுரையில், வெற்றிகரமாக வாக்குரிமையைப் பயன்படுத்தியதன் மூலம், “முற்றிலும் புதியதான பாட்டாளிகளின் போராட்ட முறை பயன்பாட்டிற்கு
வந்து விட்டது” என்று கூறினார். இந்த முறை விரைவாக மேலும்
வளர்ச்சி அடைந்தது. அரசு அமைப்புகளை எதிர்த்துப் போராடுவதற்குத் தொழிலாளி வர்க்கத்திற்குப்
புதிய வாய்ப்புகளும் புதிய ஆயுதங்களும் கிடைத்துள்ளன. முதலாளிகள் மற்றும் அரசுகள் தொழிலாளர்
கட்சியின் சட்டவிரோத செயல்பாடுகளுக்குப் பதில், தற்போது அதன் சட்டப்படியான போராட்டங்களுக்கு
– “தொழிலாளர் கட்சியின் கலகத்தைவிட, தேர்தல் முடிவுகளில் அதுபெறும்
வெற்றி”களைக் குறித்து-- அதிகமாக அச்சப்படுகின்றன.
தெருச் சண்டைகள்
மற்றும் தடைகளை ஏற்படுத்திப் போராடுவது மற்றும் பொதுவாக ஆயுதம் தாங்கிய போராட்டங்கள்
மீதான மாயையை விட்டொழிக்க ஏங்கல்ஸ் அறைகூவல் விடுகிறார்.
மிகுந்த பொருள்
பொதிந்த முறையில், ஒரு வகையில் எச்சரிப்பதாகவும் ஏங்கல்ஸ் கூறுவார், “நாம் அவ்வளவு முட்டாள்கள் இல்லை” எவ்வாறு, “எங்கே துப்பாக்கிகள் சுடும், பட்டாக்கத்திகள் வெட்டும்” அந்த இடத்திற்கு, எதிரிகள் விரும்புகிற மாதிரி, நாம் சென்று அகப்பட்டுக்
கொள்வதற்கு. (ஆளும் வர்க்க எதிரிகள் தொழிலாளி வர்க்கத்தை ஆத்திரமூட்டி, ஆயுதப்
புரட்சிக்கு உந்தித் தள்ளும் பிரச்சனையில் தொழிலாளி வர்க்கம் எச்சரிக்கையாக இருக்க
வேண்டும் என ஏங்கல்ஸ் எச்சரிக்கிறார்.)
ஜெர்மன் SDP கட்சிக்கு வாக்களித்த வாக்காளர்கள்
உலகத் தொழிலாளர் இயக்கத்தின் “அதிர்வு உந்து சக்தி” என ஏங்கல்ஸ் அதன் குணாம்சத்தை விரித்துரைப்பார்: “வாக்குப் பெட்டியில் விழுந்த 20 லட்சம் வாக்குகளும், அந்த வாக்காளர்களோடு
உடன் நின்ற வாக்குரிமை இல்லாத இளைஞர்கள் மற்றும் பெண்களுமாகச் சேர்ந்து மிகப் பிரம்மாண்டமான
திரளாக, ‘சர்வதேசப் பாட்டாளி வர்க்கப் படை’யினுடைய தீர்மானகரமான நிச்சயிக்கும் ஆற்றல்மிக்க “அதிர்வு உந்து சக்தி” ஆவர்.
(தேர்தல்களில்
தொழிலாளர் இயக்கம் தொடர்ந்து வளர்ச்சியை அடைந்து வந்தது. இந்த வளர்ச்சியை ஏங்கல்ஸ்
பின்வருமாறு, “இந்த வளர்ச்சி தன்னியல்பாக, நிதானமாக,
எதிர்க்க முடியாதபடி மற்றும் அதே நேரத்தில் அமைதியான இயல்பான நிகழ்வாய் முன்னேறி வருகிறது” எனக் குறிப்பிட்டுள்ளார்.)
மேலும் ஏங்கல்ஸ்
மிகவும் பொருள் பொதிந்து கூறுவார்: “தடைப்படுத்த முடியாத இந்த (வளர்ச்சி) நிகழ்முறையில்
இடையூறு செய்து தடைப்படுத்தக் கூடிய ஒரே வழி என்பது, இராணுவத்தோடு மிகப்பெரிய
அளவில், 1871 பாரீசில் இரத்த ஆறு ஓடியதைப் போன்று, மோதலில் ஈடுபடுவது” (அதாவது அத்தகைய மோதல் ஒன்றே சமூக ஜனநாயகக் கட்சியின் வளர்ச்சியைத்
தடுப்பதில் முடியும். எனவே) சாகசமாக இராணுவத்துடன் மோதிடச் செய்யும் ஆத்திரமூட்டல்களுக்கு
இரையாவதற்கு எதிராக எச்சரிக்கையாக இருக்குமாறு பாட்டாளி வர்க்கத்தை ஏங்கெல்ஸ் எச்சரிக்கிறார்.
வாக்குப் பெட்டியின்
மூலம் ஜனநாயக உரிமைகளைச் சாதித்த பிறகு, சோஷலிசப் புரட்சியை அடைவதற்கான சாதனமாக மார்க்சும்
ஏங்கல்சும் வாக்குப் பெட்டியைப் பார்த்தனர்.
21ம் நூற்றாண்டில் கம்யூனிஸ்ட் அறிக்கை,
ஜனநாயகம் மற்றும் சோஷலிசம்
உலகச் சமுதாயத்தைக்
கவ்விப் பிடித்திருக்கும் புதிய மாற்றங்களை ஒன்றிணைத்து 21ம் நூற்றாண்டின் நோக்கு நிலையிலிருந்து
நாம் கம்யூனிஸ்ட் அறிக்கையைப் படிக்க வேண்டும். நமக்கு நாமே மீண்டும் நினைவூட்டிக்
கொள்வோம், ஜனநாயக உரிமைகளும் வாய்ப்புகளும் நமக்குச் சும்மா வரவில்லை: நம்முடைய கருத்தியல்
மற்றும் கோட்பாட்டின்படி அதற்காக நாம் போராடினோம். எனவே அரசியலமைப்புச் சட்டம் மற்றும்
ஜனநாயக அமைப்புகளின் பங்கை நாம் குறைத்து மதிப்பிடலாகாது.
லத்தீன்
அமெரிக்கா நிகழ்வுகளிலிருந்து நீண்ட காலத்திற்கான பாடங்களை நாம் பெற வேண்டிய தேவை உள்ளது.
அங்கே பெரும்பான்மையான நாடுகளில் இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள் திரும்பத் திரும்ப
ஆட்சி அதிகாரத்திற்கு வருகின்றன. நாம் ஒன்றைப் பார்க்க வேண்டும், லத்தீன் அமெரிக்கச்
சமூகத்தின் ஒருங்கமைவு நகரமயமாதல் நோக்கி தீவிர மாறுதல்களைக் கடந்து வந்துள்ளது: அந்தச்
சமூகம் இன்று நகரமயமான ஒரு கண்டம். (நகரமயமாதல் ஆங்கிலத்தில் அர்பனைசேஷன், கிராமப்பகுதிகளிலிருந்து
மக்கள் கூட்டம் நகரங்களை நோக்கிச் செல்லும் சமூக நிகழ்வு)
இதனோடு
முன்பு, லத்தீன் அமெரிக்காவில் ஆயுதப்படைகள் ஜனநாயகத் தீர்ப்புகளை ஆதரித்தது இல்லை
அல்லது எதிர்த்ததும் இல்லை. இன்று இராணுவப்படைகள் பொதுவாக ஜனநாயக நிகழ்முறையை ஆதரிக்கின்றன,
இதனால் சமூக மாற்றத்திற்கான புதிய களங்கள் பரந்து விரிந்துள்ளன.
(இதனால்
இதனைப் புரட்சி என்றிடலாமா எனில்,) புரட்சி குறித்த நம்முடைய தெளிவில்லாத கருத்துகளை
லத்தீன் அமெரிக்க நாடுகளின் நிகழ்வுகளில் சுமத்தி, அதற்கான முடிவுகளை எதிர்பார்ப்பதுபோல,
மனம்போன போக்கில் ‘புரட்சி’ என்ற பதத்தை லத்தீன் அமெரிக்கச் சூழலில் பயன்படுத்த முடியாது.
இந்நாடுகளில்
தனித்தனி அம்சங்கள் உள்ளன, உதாரணத்திற்கு ‘ஹவுஸ் ஒய்ஃப்’ புரட்சி (சிலி), தொழிலாளர்
பிரதிநிதிகளின் கூடுலான பெரும் பங்கேற்பு (பிரேசில்), இளைஞர்கள் மற்றும் பெண்களின்
பெரும்பான்மை (சிலி), பல்வேறு லத்தீன் அமெரிக்க நாடுகளில் நகர்ப்புற நடுத்தர வர்க்கங்களின்
கூடுதல் பெரும் பங்கு, முதலியனவற்றைக் கூறலாம்.
செய்து
நடத்திக் காட்டுவதே (பர்ஃபார்மன்ஸ்) இன்று வெற்றிக்கான திறவுகோல்.
ஜனநாயக
மாற்றத்தின் நிகழ்முறை மிக நீண்டதொரு மாற்றமடைகின்ற ஒன்றாக இருக்கும் என்பதை லத்தீன்
அமெரிக்கா காட்டுகிறது. தற்போதைய நிகழ்வுகள் சமூகத்தை மேலும் ஜனநாயகப்படுத்துவதில்
சாதகமான சமநிலை சக்திகளை ஏற்படுத்துகின்றன.
இதே
போன்று முக்கியமான புதிய வளர்ச்சிப் போக்குகள் உலகின் வேறெங்கும்கூட நடந்து கொண்டிருக்கின்றன.
அவைகளை நாம் ஆராய வேண்டிய தேவை உள்ளது.
அரசியலமைப்புச்
சட்டம் மற்றும் நாடாளுமன்ற ஜனநாயக அமைப்புகளைப் பாதுகாப்பது இந்தியாவில் ஜனநாயகவாதிகளின்
முக்கிய கடமையாகி உள்ளது. வகுப்புவாத பாசிச வடிவிலான வலதுசாரி பிற்போக்குச் சக்திகள்
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தை எப்படியும் அழிப்பது என்று அலைகிறார்கள். உண்மையில்
இந்திய அரசியலமைப்பு மக்கள் கையில் உள்ள திறன்வாய்ந்த கருவி என்பதால் அது ‘மக்களின்
அரசியலமைப்பு.’
21ம்
நூற்றாண்டில் நிகழும் மின்னணு மற்றும் தகவல் புரட்சி முன்னேறிச் செல்ல நாம் புவி அடுக்கு
மாறிச் செல்வது போன்ற ஆகப்பெரும் மாற்றங்களைக் காண்கின்றோம். தகவல் தொழில்நுட்பம்,
பொதுவாகத் தகவல் என்பது முக்கியமான அம்சம், அதனைக் கையாள்வதில் இடதுசாரிகளும் ஜனநாயகவாதிகளும்
திறமை பெற வேண்டும். இம்மாற்றங்களுடன், நகரமயமாதலும் வேகம் எடுத்துள்ளது.
மின்னணு
மற்றும் தகவல் தொழில்நுட்பப் புரட்சி சகாப்தத்தில், சோஷலிசம் என்பதற்கான புதிய வரையறைகளை
வகுக்கவும், ‘21ம் நூற்றாண்டு சோஷலிச’த்தை வளர்தெடுக்கவும் வேண்டிய தேவை உள்ளது. இந்தியாவுக்கு
‘சமூக நீதி’ உள்ளிட்ட அதற்கே உரிய சொந்த தெளிவான அம்சங்கள் உண்டு.
இப்பணிகளை
முன்னெடுத்துச் செல்லவும் புதிய வளர்ச்சிப் போக்குகளையும் 21ம் நூற்றாண்டின் இந்திய
குணாம்சத்தையும் ஆய்வுசெய்யவும், கம்யூனிஸ்ட் அறிக்கையில் பயன்படுத்தப்பட்ட ஆய்வு மாதிரிமுறைகள்
நமது வழிகாட்டி ஆகட்டும்!
நம்
பயணத்தின் வழிகாட்டி மற்றும் வழித் துணையாக மாமேதைகள் உலகிற்கு அளித்த கம்யூனிஸ்ட்
அறிக்கையை மீண்டும் பயில்வோம்!
--நன்றி : நியூஏஜ்
(ஏப்ரல் 16 –22)
--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்.