Monday 23 November 2020

வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 20 டாக்டர் கே எம் அஷ்ரஃப்

 

நமது பெரும் தலைவர்கள் வாழ்விலிருந்து :

சில சித்திரத் சிதறல்கள் -20


கே எம் அஷ்ரஃப் : மார்க்ஸிய வரலாற்றாளர்,

விடுதலைப் போராட்ட வீரர் மற்றும் சிபிஐ அமைப்பாளர்

--அனில் ரஜீம்வாலே

(நியூ ஏஜ்–நவ.08 --14, 2020)

            குன்வர் முகமது அஷ்ரஃப் ஒரு தனித்துவமான மார்க்ஸிய வரலாற்றாளர், கம்யூனிச இயக்கத்தின் தலைவரும் கட்சிக்காகப் பாடுபட்ட அமைப்பாளரும் ஆவார்; வரலாற்றுத் துறை, மாணவர் இயக்கம் உட்பட அவரது பங்களிப்பு அழிக்க முடியாத மதிப்புடையது. அவருக்கே உரிய அமைதியான வழியில் தலை சிறந்த விடுதலைப் போராட்ட வீரராகக் காங்கிரஸ் இயக்கத்தில் முற்போக்கு குணம் வளர முக்கியப் பங்காற்றினார்.

          அவர் முஸ்லீம் ராஜபுத்ர குடும்பத்தில், உபி, அலிகார் மாவட்ட ஹத்ராஸ் தாலுக்கா தாரியாபூர் கிராமத்தில் 1903 ஆண்டு நவம்பர் 24ம் நாள் பிறந்தார்.  அவர்கள் இந்து ராஜபுத்ரர்கள் போல பல வகைகளிலும் நெருங்கிய ஒத்த தன்மை உடையவர்கள்; பல பழக்க வழக்கங்களும் நடைமுறையில் ஒன்றே தான்; மதங்களும் கூட, நுட்பமான விபரங்கள் தவிர, மிகவும் ஒன்றுபோலவே இருக்கும். இவை எல்லாமுமாகச் சேர்ந்து பன்முகக் கலாச்சாரத்தையும் மதச்சார்பற்ற அரசியல் வாழ்வை மேற்கொள்ளவும் மிக நல்ல வாய்ப்பான சூழலை வழங்கியது.

          அவர்களின் முன்னோர்கள் 19ம் நூற்றாண்டில் ராஜஸ்தான் மன்னராட்சின் கீழ் அமைந்த அல்வார் அல்லது ஆழ்வார் சமஸ்தானத்திலிருந்து புலம் பெயர்ந்து வந்தவர்கள். அவருடைய தந்தை தாக்கூர் முராத் அலி முதலில் இரயில்வேயிலும் அதன் பின்னர் பிரிட்டிஷ் இராணுவத்திலும் சேர்ந்து முதலாவது உலக யுத்தத்தில் இராக், ஆப்ரிக்கா முதலான நாடுகளில் போர்களில் பணியாற்றி உள்ளார். அவரது இளம் வயதிலேயே தனது தாய், அன்ச்சீ (Anchhi)யை இழந்தார்.

புத்திசாலியான சிறந்த மாணவர்

          தாரியாபூர் கிராமத்தில்  மேல்நிலை தொடக்கக் கல்வி கற்கும்போது ஆசிரியர் பண்டிட் ராம்லால் அஷ்ஃரப்பிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினார். தந்தை அவரை அலிகார் ஆர்ய சமாஜ் உயர்நிலைப் பள்ளிக்கு மாற்றினார். அந்தப் பள்ளியின் மதப் பிரசங்கங்கள் அவரை ஈர்க்காவிட்டாலும், நிச்சயமாக அவர்களது தேசிய அரசியல் சார்புகள் தாக்கத்தைச் செலுத்தின. தந்தை முராத் அலி மொராதாபாத் மாறிய போது அஷ்ரஃப் அங்கே இருந்த முஸ்லீம் உயர்நிலைப் பள்ளியில் சேர்க்கப்பட்டார். அங்கே சமஸ்கிருதம் இந்திக்குப் பதில் பெர்சிய (பாரசீகம்) மொழியும் உருதுவும் படித்தார். 1918ல் மெட்ரிக் தேர்வில் தேர்வு பெற்றார். அரசியல் ரீதியாகப் பண்டிட் சங்கர் லால் கைது செய்யப்பட்டதும், அன்னிபெசன்ட் மற்றும் முகமது மௌலானா அப்துல்லா சித்திக் கைதும் அவரை ஆழமாகப் பாதித்தது.

          அஷ்ரஃப் அலிகார் முகமதிய ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரியில் அரபி தர்க்கவியல் மற்றும் வரலாறு பிஏ இளங்கலையில் சேர்ந்து படித்தார். (முகமதிய ஆங்கிலோ ஓரியண்டல் கல்லூரி MAO என்பது அலிகாரில், முஸ்லீம் விழிப்புணர்ச்சிக்காக முன்னெடுக்கப்பட்ட அலிகார் இயக்கத்தின் ஒருபகுதியாக,  சர் சையத் அகமத் கான் அவர்களால் 1875ல் துவங்கப்பட்ட கல்லூரி; அதுவே பின்னர் 1920ல் புகழ்பெற்ற அலிகார் முஸ்லீம் பல்கலைக் கழகமாக மாற்றப்பட்டது.)

ஒத்துழையாமை இயக்கத்தில்

          1920 –21களில் ஒத்துழையாமை இயக்கம் தீவிரமடைந்தது. சுதந்திரப் போராட்ட இயக்கத்தின் தலைவராக மகாத்மா காந்தி பரிணாமம் பெற்றார். அந்த இயக்கத்தினுள் இணையாகத் தேசிய கல்வி நிறுவனங்களை அமைக்கும் பிரச்சாரம் வேகம் பெற்றது. தேசியக் கல்வியின் ஓர் அடையாளமாக அலிகார் ஜாமியா மிலியா மலர்வதற்கு அடித்தளமிட்டவர்களில் கே எம் அஷ்ரஃப் பங்காற்றினார். ஒவ்வொரு செங்கல்லாக உயர்த்துவது என்பார்களே அப்படி, அந்தத் தேசியக் கல்வி நிறுவனத்தின் வகுப்புகள் ஓராண்டுக்கு மேல் (டெண்ட்) கூடாரங்களில் நடந்தது. இந்தக் கல்லூரியிலிருந்துதான் இஸ்லாமியத் தத்துவம் மற்றும் வரலாற்று பாடத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். அவர் திலகரின் சுயராஜ்ய நிதி, கதர் பிரச்சாரம் மற்றும் இந்து – முஸ்லீம் ஒற்றுமை பிரச்சார இயக்கங்கள் போன்றவற்றில் பங்கேற்றார்.

          1926ல் கேஎம் அஷ்ரஃப், ‘சட்டங்களில் இளங்கலை’ எனும் LL.B சட்டவியல் பட்டப் படிப்பில், முதல் வகுப்பில் தேர்வு பெற்றதன் மூலம் ஒரு சாதனையையே நிகழ்த்தினார். (அது ஒரு கடினமான தேர்வு; LL.B என்பது Legum Baccalaureus என்ற லத்தீன் மொழியின் சுருக்கம். லத்தீன் மொழியில் ஒரு வார்த்தையின் பன்மை வடிவம் அந்த வார்த்தையின் முதல் எழுத்தை இரட்டிப்பதன் மூலம் எழுதுவார்கள். இதனால் சட்டம் (Legum) என்பது சட்டங்கள் எனப் பொருள் தரும் LL என்று எழுதப்படுகிறது)

தீவிர அரசியலில்

          ஒத்துழையாமை இயக்கத்தில் பணியாற்றியது மட்டுமின்றி, 1922ல் அவர் சௌகத் உஸ்மானியைச்  சந்திக்க, சோஷலிசம் குறித்து அறிய ஆரம்பித்தார். 1923ல் முஸாஃபர் அகமது, குத்புதீன் இருவரையும் கல்கத்தாவில் சந்தித்தார். ஆழ்வார் சமஸ்தானத்தில் இருந்தபோது நிலப்பிரபுத்துவ முறையை நெருக்கமாக இருந்து தெரிந்து கொள்ள வாய்ப்பு கிட்டியது. 1926ல் எம்ஏ முதுகலைப் பட்டப் படிப்பில் தேர்வு பெற்றதற்காக ஆழ்வார் சமஸ்தான மகாராஜா அரசு விருந்தினராக அவரை வரவழைத்து பாராட்டி கௌரவித்தார். தொடர்ந்து வெளிநாடுகளில் படிக்க ரியாசத்தின் (சமஸ்தான அரசின்) கல்வி உதவித் தொகை கிடைக்கப் பெற்றார்.

லண்டனில்

          1927ல் லண்டன் சென்ற அஷ்ரஃப் சட்டம் படித்ததுடன், பாரிஸ்டராகவும் அனுபவம் பெறத் தொடங்கினார். “1200 –1550 காலகட்டத்தில் இந்தியாவில் சமூக வாழ்க்கை” என்ற தலைப்பில் PhD முனைவர் பட்ட ஆய்வை மேற்கொண்டார். அங்கே ஷக்லத்வாலா, சாஜ்ஜட் ஸாகீர் முதலானவர்களின் தொடர்பு ஏற்பட இறுதியில் கம்யூனிசக் கோட்பாட்டைத் தழுவினார்.

          1929ல் ஆழ்வார் மகாராஜாவின் ஆண்டுவிழா கொண்டாட்டங்கள் நடைபெறுவதை ஒட்டி, (கல்வி உதவித் தொகை வழங்கிய) மகாராஜா அவரைத் திரும்ப வருமாறு கடிதமெழுதினார். திரும்பி வந்த அஷ்ரஃப் மகாராஜாவின் தனிச் செயலாளர் ஆனார். மன்னர் விழா கொண்டாட்டங்களில் ரூ 15 லட்சம்  விரயச் செலவாகி இருப்பதை ஒரு வாரத்திலேயே கண்டுபிடித்தார். இது அவரை சொல்லமுடியாத அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. இர்வின் பிரபுவும்கூட வந்திருந்தார். தனிச் செயலாளராக மூன்று மாதம் பணியாற்றியபோது சமஸ்தான ஆட்சியின் நிலப்பிரபுத்துவ (டாம்பீகச்) செயல்முறைகளை மிக நெருக்கமாக இருந்து நேரடியாக அறிந்து கொண்ட அவரால் சீற்றம் கொள்ளாமல் இருக்க முடியவில்லை. எல்லாவற்றையும் அப்படியே விட்டு விட்டு மீண்டும் லண்டன் திரும்பினார்.  

          முனைவர் பட்ட ஆய்வை நிறைவு செய்து டாக்டர் அஷ்ரஃப் ஆனார். இதற்கு மத்தியில் சீனுவாச ஐயங்கார், முகமது அலி, சக்லத்வாலா மற்றும் பிறரோடு சேர்ந்து இந்திய தேசியக் காங்கிரஸின் லண்டன் குழுவை அமைத்தார். மார்க்ஸியச்  செயல்பாடுகளிலும் தீவிரமாகத் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார்.

காங்கிரஸ் இடதுசாரி குழுவில்

          1932ல் இந்தியா திரும்பியதும் முஸ்லீம் பல்கலைக் கழகப் பேராசிரியராகப் பணியில் சேர்ந்தார். இதன் மத்தியில் காங்கிரஸ் இயக்கத்தில் சேர்ந்தவர், அதன் இடதுசாரி அணியின் முன்னணித் தலைவரானார். காங்கிரஸ் சோஷலிசக் கட்சி (CSP)யில் ஜெயப்பிரகாஷ் நாராயணன், இஎம்எஸ், ஆச்சார்ய நரேந்திர தேவ்,

இசட் ஏ அகமது, ஷாஜ்ஜட் ஸாகீர், ராம் மனோகர் லோகியா, அசோக் மேத்தா முதலானவர்களோடு அஷ்ரஃப் அவர்களும் மத்திய குழு உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளப்பட்டார். 1936ல் அகில இந்தியக் காங்கிரஸ் கமிட்டிச் செயலாளர்களில் ஒருவரானார். காங்கிரஸ் தலைவர், இஸ்லாமிய விவகாரங்களைக் கவனிக்கும் பணிக்கு இவரைப் பொறுப்பாளாராக நியமித்தார். 

          பெர்சிய, உருது மற்றும் மத்திய காலச் சமூக, தத்துவ வாழ்வியலில் முழுமையான பாண்டியத்யமும் முஸ்லீம் தலைவர்களுடன் மிக நெருங்கிய அணுக்கமும் உடையவர் அஷ்ரஃப். எனவே அந்தப் பணிக்கு அவரே மிகவும் பொருத்தமானவராக இருந்தார். டாக்டர் கே எம் அஷ்ரஃப் அலகாபாத் அகில இந்தியக் காங்கிரஸ்  கமிட்டி அலுவலகத்தில் பணியாற்றினார்.

ஏஐஎஸ்எஃப் மாணவர் அமைப்புடன் கூட்டாக

          இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி டாக்டர் அஷ்ரஃப் அவர்களை மாணவர் அரங்கில் பணியாற்றுமாறு பணிக்க, மாணவர் இயக்கத்தின் கட்சி குழுவுக்கு (ப்ராக்க்ஷனில்) வழிகாட்டுவதை வழக்கமாகக் கொண்டார். 1939 ஜனவரியில் ஏஐஎஸ்எஃப் கல்கத்தா அமர்வுக்குத் தலைமை தாங்கினார்; 1940 டிசம்பர் நாக்பூரில் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஏஐஎஸ்எஃப் அமர்வைத் துவக்கி வைத்து உரையாற்றினார். நாக்பூர் மாநாட்டில், எம் எல் ஷா அணியுடனும் மற்றும் பேராசிரியர் சதீஷ் காலேல்கர் அவார்டு உட்பட, எழுந்த முரண்பாடுகளில் தன்னை ஆழமாக ஈடுபடுத்திக் கொண்டு, மாணவர்களின் இரண்டு பிரிவினரிடையே ஒற்றுமையை ஏற்படுத்தக் கடுமையாக முயன்றார்; ஆனால் அவரது முயற்சி பலனளிக்கவில்லை. நாடு முழுவதும் நடைபெற்ற மாணவர்களுக்கிடையேயான கூட்டங்களில் அவர் கவர்ந்து ஈர்க்கும் மையப் புள்ளியானார். ஏஐஎஸ்எஃப் பணிகளில் ஆலோசனைகள் வழங்கி, வழிநடத்தி பெரும் பங்காற்றினார்.

          மௌலானா அபுல் கலாம் ஆஸாத் அவர்களின் செயலாளராகவும் டாக்டர் அஷ்ரஃப் பணியாற்றினார்.

தியோலி தடுப்புக் காவல் முகாமில்

          1940 முதல் வேறுசில கம்யூனிஸ்ட் தலைவர்களோடும் டாக்டர் அஷ்ரஃப் தியோலி தடுப்புக் காவல் முகாமில் அடைக்கப்பட்டார். அங்கே நடந்த 30 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்திலும் பங்கேற்றார். பட்டினிப் போர் பங்கேற்பும், சிறை முகாமின் மோசமான நிலைமைகளுமாகச் சேர்ந்து அவரது உடல்நிலை கடுமையாகப் பாதிக்க, நைந்த உடல்நிலையோடு 1943ல் விடுதலையானார்.

சிபிஐ தலைமையகத்தில்

          விடுதலைக்குப் பிறகு பம்பாய் கட்சி மையத்தில் பணியாற்றியவர் ஏராளமாக எழுதிக் குவித்தார். அங்கே அப்போது ஆர் டி பரத்வாஜ் (இந்தத் தொடரின் 5வது கட்டுரையில் இடம் பெற்ற தலைவர்) உடல்நிலை பாதிக்கப்பட்டு மிக மோசமான நிலையில் இருந்தார். எனவே டாக்டர் அஷ்ரஃப் அவரது சில பணிகளையும் மேற்கொண்டதுடன் காங்கிரஸ் இயக்கத்திற்குள் கம்யூனிஸ்ட்களின் சார்பாகப் பேசும் செய்தித் தொடர்பாளராகவும் பணியாற்றினார்.

          1946ல் டெல்லிக்கு இடம் மாறியவர், தர்யாகஞ்ச் பகுதியில் இருந்த கட்சி கம்யூன் கூட்டு வாழ்வில் கட்சி வழங்கிய சொற்ப ஊதியமான 8 ரூபாயிலேயே வாழ்வதை வழக்கமாகக் கொண்டார். அங்கே இருந்தவர்கள் பெரும்பாலும் இளைஞர்கள், அஷ்ரஃப் மட்டுமே வயதில் மூத்தவர். மற்றவர்களோடு அனுசரித்து இணைந்து வாழ்வது, மென்மையான மேன்மையான குணங்களோடு மிக உயரிய கட்டுப்பாடு முறைமைகளைப் பின்பற்றியவர் அவர். அவர் இருக்கும் இடத்தின் சூழலை மகிழ்ச்சிகரமானதாகவும் நம்பிக்கை உடையதாகவும் மாற்றி விடுவார்.

தேசப் பிரிவினைக்குப் பிறகு, பாக்கிஸ்தான் செல்லல்

          இதுதான் அவருடைய வாழ்வில் மிகவும் மோசமான துரதிருஷ்டமான காலம். அங்கங்கு எல்லா இடங்களிலும் மதக் கலவரங்கள். தேசம் இரண்டாகப் பிளவு பட்டது. அவரது சொந்தப் பாதுகாப்புக் காரணமாக அவரைத் தர்யாகஞ்சிலிருந்து ஜாமா மஸ்ஜித் (டெல்லி மசூதி) பகுதி மாகாண கட்சி அலுவலகப் பகுதிக்குச் சென்றுவிடுமாறு கட்சி உத்தரவிட்டது. இந்த இடமாற்றம் காரணமாக அவர் நொறுங்கி அழுதுவிடுவார் போலச் சோகத்தில் மிகவும் உடைந்து சோர்ந்து போய் விட்டார்: அவர் போய்த்தான் தீர வேண்டும், மிகவும் அற்பமான காரணம், ஏனெனில், அவர் ஒரு முஸ்லீம்! (எனில், அந்தக் கற்றறிந்த சான்றோன் மனதில் கம்யூன் வாழ்க்கை எவ்வளவு நேயத்திற்குரியதாக இருந்திருக்கும்!)

       

‘அவாமி தௌர்’ என்ற பெயரில் உருது ’மக்கள்  தினசரி’ ஒன்றை டெல்லியிலிருந்து வெளியிட கட்சி முடிவு செய்தது. டாக்டர் கே எம் அஷ்ரஃப் அதன் ஆசிரியர், டீகாராம் சகுன் (படம்) அதன் துணை ஆசிரியர். கனோட் ப்ளேஸ் பகுதியில் ஓர் அலுவலகமும் திறக்கப்பட்டது.

          மக்கள் தினசரி இதழ் மூடப்பட்டதும் 1948ல் டாக்டர் அஷ்ரஃப் பாக்கிஸ்தான் சென்றுவிடுமாறு கட்சி கேட்டுக் கொண்டது. அங்கே நிலைமை மிகக் கடினமான ஒன்றாகவும் கம்யூனிஸ்ட்கள் கடுமையான அடக்குமுறைகளையும் சந்திக்க வேண்டி வந்தது. பாக்கிஸ்தானில் கட்சி தடை செய்யப்பட்ட உடன் அவர் தலைமறைவாகும்படி ஆயிற்று. சட்ட விரோதமாகப் பாக்கிஸ்தானில் வசிக்கும் இந்தியக் குடிமகன் என்ற குற்றச்சாட்டின் பேரில் அவர் கைது செய்யப்பட்டார். அவரது உடல்நிலை மேலும் மோசமாகப் பாதிப்படையத் தொடங்கியது. மீண்டும் பாக்கிஸ்தான் திரும்பக் கூடாது என்ற நிபந்தனை விதித்து அவரை விடுவித்தனர். இந்தியாவும் கூட அவரை ஏற்றுக் கொள்ளத் தயாராக இல்லை, காரணம் அவர் இந்தியக் குடிமகன் இல்லை. (புகழ்பெற்ற கல்வியாளரின் கதி, பிரிவினை சோகத்தின் உச்சம்! அப்போதே இவ்வாறெனின், இன்று குடியுரிமைச் சட்டம் மக்களை எப்படியெல்லாம் வாட்டக் கூடும்?)

          இங்கிலாந்து திரும்பியவர், இந்தியச் சமூகம் மற்றும் வரலாறு குறித்தத் தனது ஆய்வை மீண்டும் மேற்கொண்டார். மருத்துவச் சிகிச்சையும் எடுத்துக் கொண்டு, பிரிட்டிஷ் அருங்காட்சியகத்தில் தளர்வில்லாது பணிகளை மேற்கொண்டார்.

இந்தியா திரும்புதல்

          இங்கிலாந்தில் இருப்பது அவருக்கு மகிழ்ச்சி தருவதாய் இல்லை, தனது நெஞ்சம் நிறைந்த தாய் மண் இந்தியாவுக்குத் திரும்ப வேண்டும் என்ற தணியாத தாகம். இத்தனைக்கும் நேரு மற்றும் மௌலானா ஆஸாத்துடன் மிக நெருக்கமானவராக அவர் இருந்தும், அவரது விருப்பம் ஈடேற நீண்ட காலம் பிடித்ததது. அதற்காக நேரு பிரத்தேகமான சிறப்பு நடவடிக்கை மேற்கொண்டார். இரண்டு ஆண்டுகள் கடும் முயற்சிக்குப் பிறகே அவருக்கு இந்தியக் குடியுரிமை கிடைத்தது. நேருவின் வேண்டுகோளை ஏற்று காஷ்மீர் மக்கள் வரலாறு குறித்து

ஆராய ஸ்ரீநகரில் தங்கிப் பணியாற்றினார். இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, டெல்லி கே எம் கல்லூரியில் பேராசிரியராகப் பணியில் சேர்ந்து வரலாறுத் துறை தலைவரானார். (கே எம் கல்லூரி (படம்) டெல்லி பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற இணைப்புக் கல்லூரி. முந்தைய நிர்மலா கல்லூரி தேசப் பிரிவினைக்குப் பிறகு சேத் கிரோரி மால் என்பவர் தலைமையிலான அறக்கட்டளை நிர்வாகத்தின் கீழ் கிரோரி மால் கல்லூரி ஆனது)

          பாக்கிஸ்தானிலிருந்து திரும்பியதும் நேரு மற்றும் அபுல் கலாம் ஆஸாத்தைச் சந்தித்தார் அஷ்ரஃப்;  அப்போது, ‘நீங்கள் இனியும் இந்தியக் குடிமகன் இல்லையே…’ என்று நேரு விளையாட்டாகக் கூறி சீண்டினார்: வந்ததே கோபம் அஷ்ரஃப்பிற்கு –சீற்றத்தோடு நேருவுக்குப் பதிலளித்தார், “உங்களைவிட நான் அதிகம் இந்தியன், தெரியுமா? நான் ஒரு ராஜபுத்ர வம்சத்தவன்!”

          இந்திய வரலாற்று காங்கிரஸ் பேரவை அமர்வுகளில் (Indian History Congresses) பல்வேறு ஆராய்ச்சிக் கட்டுரைகளைச் சமர்ப்பித்தார்.

          1969ல் ஜெர்மனி ஹம்போல்ட் பல்கலைக்கழகத்திற்குச் சென்று ‘மத்திய கால இந்தியாவில் மக்களின் வாழ்க்கை நிலை’ என்பது குறித்த ஆய்வினை மேற்கொண்டு, ஆய்வு நூலை பெர்லினில் வெளியிட்டார். அது உலகம் முழுவதும் புகழ்பெற்று கொண்டாடப்படுவதாயிற்று. மாஸ்கோ மற்றும் தாஷ்கண்ட்டிற்கும் அவர் விஜயம் செய்துள்ளார்.

          தனது 58வது வயதில்  மாரடைப்பு காரணமாக டாக்டர் கே எம் அஷ்ரஃப் 1962 ஜூன் 7ம் நாள் மறைந்தார். அரசியல் உலகிலும் கல்விப் புலனங்கள் வட்டாரத்திலும் அவரது மறைவுக்குப் பரவலாக அஞ்சலி செலுத்தப்பட்டது. வேற்றுமையில் ஒற்றுமை  மற்றும் நமது பன்மைத்துவக் கூட்டுப் பண்பாடு கலாச்சாரத்திற்கு அவர் ஒரு வாழும் உதாரண புருஷராக விளங்கினார். மிகக் கூர்மையான ஆழமாகக் கற்றல் மற்றும் ஆய்வுத் துறை பணிகளை மேற்கொள்ளும்போதே அரசியல் மற்றும் கட்சி அமைப்பு தீவிரச் செயல்பாடுகளையும் இணைத்தே மேற்கொண்டார். அவர் ஒரு மக்கள் தலைவர் மட்டுமல்ல, மார்க்சிய முறையில் வரலாற்றை ஆய்வு செய்த மக்கள் வரலாற்றாளரும் கூட!

          அவரது பங்களிப்பை ஊன்றிப் படிப்போம், பயன் பெறுவோம்! டாக்டர் கே எம் அஷ்ரஃப் ஜிந்தாபாத்!

--தமிழில்: நீலகண்டன்,

 என்எப்டிஇ, கடலூர்  

Thursday 19 November 2020

பெண்களும் தொழிலாளர் வர்க்க இயக்கமும்

 

பெண்களும்

இந்தியத் தொழிலாளி வர்க்க இயக்கமும்

--டாக்டர் B V விஜயலெட்சுமி

நன்றி : நியூஏஜ் (நவ.15 –21 இதழ்)

லாலா லஜபதி ராய் தலைமையில் பம்பாய் எம்ப்பயர் தியேட்டரில் நடைபெற்ற முதலாவது மாநாட்டில் 1920 அக்டோபர் 31ம் நாள் AITUC பேரியக்கம் பிறந்தது. மாநாடு நிறைவேற்றியப் பல தீர்மானங்களில் உணவு தானியங்கள் ஏற்றுமதிக்குத் தடை விதிப்பது, வேலை இல்லாதோர் விபரங்களை முறையாகப் பதிவு செய்வது, விபத்துக் காப்பீடு, உடல் நலமின்மை மற்றும் தனித்த சலுகை விடுப்புகள் வழங்குவது, தொழிலாளர்கள், ஊழியர்கள் மீது போலீசார் நடத்தும் காட்டுமிராண்டித் தாக்குதல்களுக்கு முடிவு கட்டுவது போன்றனவும் அடங்கும். இவை தவிரவும் மற்றொரு முக்கியத் தீர்மானம் உழைக்கும் பெண்களின் கைக் குழந்தைகள் பராமரிப்பு நலத்திற்கு உரிய வசதிகளை ஏற்படுத்த வேண்டும் என்பது. இன்றைக்கு, தாய் தொழிற்சங்கம் பிறந்து 100 ஆண்டுகள் கொண்டாடும் நிலையிலும், பணி செய்யும் இடங்களில், அது அரசு அலுவலகமாயினும் சரி, எங்கேயும் குழந்தைகள் காப்பக மையம் (crèche) என்ற வசதி ஏற்படுத்தப்படவில்லை என்பது உறுத்தலான உண்மை. ஆளும் வர்க்கங்களுக்குப் பெண்கள் மற்றும் குழந்தைகளின் குறைகளைக் களைய நடவடிக்கை எடுக்க நேர்மையான அக்கறை இல்லை என்பதே அதன் பொருள்.

ஏஐடியுசி பிறப்பதற்கு முன்பே பல்வேறு பாட்டாளி வர்க்கப் போராட்ட இயக்கங்கள் நம் தோழர்கள் பலரால் நடத்தப்பட்டுள்ளன. தொழிற்புரட்சி, உலகில் வெகுகாலம் முன்பே தொடங்கி விட்டாலும் இந்தியாவில் தாமதமாகவே ஏற்பட்டது. ஒரு காரணம், நமது நாடு விவசாய நாடு; மற்றொன்று, நம் நாட்டிலிருந்து மூலக் கச்சாப் பொருள்கள் ஏற்றுமதி கட்டாயப்படுத்தப்பட்டு அதிலிருந்து உற்பத்திச் செய்யப்பட்ட பயன்படு பொருள்களுக்கு நம்மை வெளிநாடுகளைச் சார்ந்திருக்கச் செய்த அடிமைநிலை. நமது நாட்டில் 1850ல் பம்பாயில் நிறுவப்பட்ட டெக்ஸ்டைல் ஆலையே முதலாவது தொழிற்சாலை; பின் அதே போன்ற பல ஆலைகள் பம்பாயிலேயே துவக்கப்பட்டன. வங்காளத்தில் சணல் ஆலைகளும், கேரளாவில் தென்னை நாரினால் செய்யப்படும் கயிறு ஆலைகள் பலவும் தொழில் வளர்ச்சியின் அடையாளமாயின. மெல்ல மெல்ல வேறுபல ஆலைகளும் முளைக்கத் தொடங்கின.

தொழிலாளர் வர்க்க இயக்கம் -- மூன்று கட்டம்

வரலாற்றாளர்கள் தொழிலாளர் வர்க்க இயக்கத்தை மூன்று கட்டங்களாகப் பகுக்கின்றனர். முதல் கட்டம், 19ம் நூற்றாண்டின் பாதியிலிருந்து முதல் உலகப்போர் வரை; இரண்டாவது அதிலிருந்து நமது தேசம் விடுதலை அடைந்தது வரை; மூன்றாவது கட்டம், சுதந்திர இந்தியாவில் தற்போதைய வளர்ச்சி கட்டம். முதல் கட்டத்தில் அமைப்பு ரீதியான தொழிற் சங்கம் இல்லை எனினும், பிரச்சனைகள் தீர்வுக்காக வர்க்க அணுகுமுறையில் போராட்டங்கள் நிகழவே செய்தன. பம்பாய் டெக்ஸ்டைல் ஆலையில் முதலாவதும் மூத்ததுமான தொழிற்சங்கம் 1851ல் தொடங்கப்பட்டது. பின்னர் 1854ல் கல்கத்தா சணல் ஆலையில் இரண்டாவது தொழிற்சங்கம் வந்தது மட்டுமல்ல, 1879லேயே இந்திய தொழிலாளர் வர்க்கத்தின் பணிநிலைகள் மற்றும் வாழ்க்கை நிலையை ஆராயக் குழு ஒன்றும் நியமிக்கப்பட்டது.

தொடக்கத்திலிருந்து பெண்களின் பங்கேற்பு

1891ல் முதலாவது தொழிற்சாலை சட்டம் சாதிக்கப்பட்டது. அதனால் எந்தப் பயனும் விளையவில்லை. 10ஆயிரம் தொழிலாளர்கள் பங்கேற்க 1890ல் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்ட இயக்கம் நடைபெற்றது. மற்ற கோரிக்கைகளோடு உழைக்கும் பெண்கள் முன் வைத்த வாராந்திர விடுமுறை கோரிக்கை இடம் பெற்றது. இதன் பிறகு ஒவ்வொரு தொழில் பிரிவிலும், ஒவ்வொரு ஆலையிலும் தொழிற் சங்கங்கள் அமைக்கப்பட்டன. அந்தச் சங்கங்களின் பிரிக்க முடியாத பகுதியாகப் பெரும் எண்ணிக்கையில் உழைக்கும் பெண்கள் சேர்ந்தனர். தொழில்மயம் வந்த இடமெல்லாம் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கு பெற்றனர். 1913ல் பம்பாயின் 1,10,033 தொழிலாளர்களில் 22,402  பேர் பெண்கள் என்பது மொத்த எண்ணிக்கையில் 20 சதமாகும்.

அந்த ஆலைகளின் பணிச் சூழல் நிலைமைகள் மிக மோசம். தொழிலாளர் சட்டங்கள் எதுவும் இல்லாத நிலையில் அங்கே மனித உழைப்புச் சுரண்டல் தலைவிரித்தாட, வரைமுறை அற்ற நீண்ட வேலை நேரம், வாராந்திர ஓய்வு குறைவு, அற்பக் கூலி கோலோச்சியது. இதனால் தவிர்க்க இயலாத தன்னெழுச்சிப் போராட்டங்கள், வேலைநிறுத்தங்கள் வெடித்தன. அனைத்து ஆலைகளிலும் ஆண்களோடு பெண்களும் தங்கள் குழந்தைகளோடு வேலை செய்வது வழக்கம். இந்த அனைத்துப் போராட்டங்களிலும் பெண்கள் பெரும் உற்சாகத்தோடு பங்கேற்றனர். போராடிய அந்தப் பெண்கள் மீது நடத்தப்பட்ட அட்டூழியங்கள் அச்சுறுத்தல்களுக்கும் அளவே இல்லை. பணிப் பாதுகாப்பும் இல்லை. இவை அனைத்தையும் மீறி ஒவ்வொரு போராட்டத்திலும் பெண்கள் அச்சமின்றித் துணிவோடு வீராங்கனைகளாகக் களத்தில் முன் நின்றனர்.

கேரளாவில் காயர் இன்டஸ்டரி

19ம் நூற்றாண்டிலேயே கேரளாவில் தென்னை நார் கொண்டு தயாரிக்கப்பட்ட காயர் இன்டஸ்டரி பொருள்களில் பெரும்பகுதி வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. மலையாள மொழியில் ‘கயர்’ என்றால் கயிறு, முறுக்கப்பட்ட சங்கிலி என்பது பொருள். அந்த வார்த்தை இத்தொழில் மூலமே ஆங்கிலத்திற்கும் காயர்(coir) என்று சென்றது. மணிக் கயிறு மூலம் பின்னப்படும் தரைவிரிப்புகள் இங்கிலாந்து போன்ற பிற பகுதிகளிலும் 1840களிலேயே மிகவும் பிரசித்தி பெற்றது. அந்த விரிப்புகள் ஐரோப்பாவிலும் பரவலாகப் பயன்படுத்தப்பட்டது.  1860ல் ரூபாய் 6 லட்சமாக இருந்த இதன் ஏற்றுமதி மதிப்பு 1864 –65ல் ரூபாய் 43.6 லட்சமாக உயர்ந்தது. அலப்பி எனப்படும் ஆலப்புழாவில் 1901ல் தொடங்கப்பட்ட தரைவிரிப்பு (கார்ப்பெட்) பின்னல் ஆலையில் ஆயிரத்து நூறு பேர் பணியாற்றினர். முதல் உலகப் போரின்போது உச்சத்தை அடைந்த ஏற்றுமதி, போரின் பின்விளைவாய் பெரும் மாற்றத்தைச் சந்தித்தது. ஆலைகளில் தொழிலாளர்களுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டது. எனவே கிராமப் பகுதிகளின் விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களை ஆலைகளில் வந்து ஆலைத் தொழிலாளர்களாக வேலை செய்யக் கெஞ்சினர். 1930 வாக்கில் ஆலப்புழாவில் மட்டும் 1லட்சத்து 33 ஆயிரம் ஆலைத் தொழிலாளர்களும், 32,000 பேர் ஆலைகளுக்கான கச்சாப் பொருள்களைத் தயாரிக்கும் குடிசைத் தொழில்களிலும் இருந்தனர்.

1922ல் தொடங்கப்பட்ட திருவாங்கூர் தொழிலாளர் அசோசியேஷன் (AITUC) குறைந்த காலத்திலேயே பலம் பொருந்திய சங்கமாயிற்று. அத்தொழிற்சங்கத் தலைவர்கள் பொருளாதாரக் கோரிக்கைகளுக்காக மட்டும் போராடுபவர்களாக இல்லாமல் நன்கு முதிர்ச்சி அடைந்த அரசியல் ஆளுமைகளாகவும் பரிணமித்தார்கள் என்று வரலாற்றாளர்கள் கூறுகின்றனர். இயக்கங்களை அவர்கள் தொழிலாளர் வர்க்கமாக ஒழுங்குபடுத்தி உயர்த்தினார்கள். 1931 முதலே முதலாளிகள், தொழிலாளர்களின் உரிமைப்படியான உரிய ஊதியத்தை வெட்டத் துவங்கினர். பணிப் பாதுகாப்பும் குறையத் தொடங்கியது. அப்போது தென்னை நார் காயர் இன்டஸ்டரியில் இரண்டு விதமான வகை இருந்தன. ஒன்று, கயிறு பொருள் பின்னல் ஆலைகளுக்குத் தேவையான மூலப் பொருள் தென்னை நார் எடுத்து சுத்தப்படுத்தித் தருவதற்கான திரட்டப்படாத உதிரித் தொழிலாளர்கள் பிரிவு; இரண்டாவது, அப்படித் தயாரித்தளித்த மூலப் பொருளைக் கொண்டு தரைவிரிப்பு முதலான (மதிப்புக் கூட்டல்) பொருள்களைத் தயாரிக்கும் பின்னல் ஆலைகள் அமைப்பு ரீதியான தொழிலாளர்களைக் கொண்டது. திரட்டப்படாத பிரிவில் 90 சதவீதம் பெண் தொழிலாளர்கள் பணியாற்ற, திரட்டப்பட்ட பிரிவில் பெண்கள் 25 சதவீதம் மட்டுமே. நாளுக்கு நாள் கூலி குறைக்கப்பட்டு, வேலை நேரம் மட்டும் அதிகரிக்கப்பட்டது. அமைப்புரீதியான பலம் பொருந்திய சங்கங்களின் தலைவர்கள் தொழிலாளர்களுக்கான சட்டங்களை இயற்ற கோரிக்கை வைத்தனர். இறுதியில் பொது வேலைநிறுத்தத்திற்கு அறைகூவல் விடப்பட்டது. 1938 அக்டோபர் 21ம் நாள் தொடங்கிய வேலை நிறுத்தத்தில் ஒவ்வொரு நாளும் மோதலும் போராட்டமும்தான். அதில் பெருமளவு பெண்கள் பங்கேற்றனர்.

வேலைநிறுத்தத்தில் முதல் கள பலி

வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்கள் மீது இராணுவம் 1938 அக்டோபர் 24ல் நடத்திய கொடுமையானத் துப்பாக்கிச் சூட்டில் அம்மு மற்றும் சுபோதா, இரண்டு பெண் தொழிலாளர்கள், முதல் களபலி ஆயினர். அதன் பிறகும் பெண்கள் வீறுகொண்டு உறுதியோடு போராடினர். அவர்களின் தியாகம் மற்றும் உறுதிப்பாடு காரணமாக பல கோரிக்கைகளை வெல்ல முடிந்தது. 1938 நவம்பர் 15ம் நாள் வேலை நிறுத்தம் விலக்கிக் கொள்ளப்பட்டது. வேலைநிறுத்தத்தின் தொடர்ச்சியாக ஒவ்வொரு ஆலைகளிலும் பெண்களின் குழுக்கள் ஆரம்பிக்கப்பட்டன. அந்தப் பெண்கள் குழுவின் வழிகாட்டலில் பெண் தொழிலாளர்களுக்குத் தங்களைத் தாங்களே அமைப்பு ரீதியாகப் பெருமளவில் திரட்ட முறையான பயிற்சி அளிக்கப்பட்டது.

வீராங்கனை கே தேவயானி

அதே துறையில் வீராங்கனையாக உருவாகி வரலாற்றுப் பங்களிப்பு செய்த மற்றொரு பெண்மணி கே தேவயானி – அவர் இறுதி மூச்சுவரை பல பிரச்சனைகளோடு போராடியவர். 1936 தனது 15வது வயதில் ஆலப்புழா தாலுக்காவில் பெண்களுக்கான சங்கம் அமைத்தார். விரைவிலே பெருமளவிலான அமைப்புகளின் பலன்களை உணர்ந்து கொண்டவர், தொழிற்சங்க இயக்கத்தின் மைய நீரோட்டத்தில் இணைந்து பெருமளவில் பெண்களைத் திரட்டிச் சாதித்தார். தன்னுடைய சக நண்பர்கள் மீனாட்சி, தாட்சாயணி மற்றும் பவானியோடு கூட்டுக் கம்யூன் வாழ்க்கை நடத்தி பெண் செயல்வீரர்களுக்கான பயிற்சி முகாம்களை நடத்தினார். தங்கள் பணி முடித்ததும், கயிறு ஆலை பெண் ஊழியர்கள் முகாம்களில் கலந்து கொண்டனர்.

ஆலை பெண் தொழிலாளர்கள் தவிர அவர் விவசாயத் தொழிலாளர்களையும் திரட்டினார். ஆலப்புழா தாலுக்காவிலிருந்து 4 கிமீ தொலைவில் உள்ள கொல்லர்கோடு விவசாய நிலங்களில் பணியாற்றிய விவசாயப் பெண் தொழிலாளர்களை விழிப்புணர்வு பெறச் செய்தார். அங்கே அவர் முன்னின்று நடத்திய வேலைநிறுத்தம் வெற்றிகரமாக அமைந்தது. அந்த வேலைநிறுத்தத்தின் காரணமாக 6 அணா கூலி உயர்வும் பிற்பகலில் அரை மணிநேர ஓய்வும் சாதிக்கப்பட்டது. மெல்ல அவர் மீதான போலீஸ் தாக்குதல்கள் அதிகரித்தன. போலீஸ் துரத்தியதிலிருந்து தப்பிக்க ஒரு நாள் இரவு முழுவதும் சுடுகாட்டில் தங்க நேரிட்டது. வறுமையின் காரணமாக அவரது மகள் ராதாம்மாள் இறந்தே போனார். இத்துயரச் சம்பவம், நிலப்பிரபுத்துவத்துக்கு எதிரான முதலாவது எழுச்சியாகப் போற்றப்படும் வரலாற்றுப் புகழ்மிக்க, காரிவேலூர் போராட்ட காலத்தில் நிகழ்ந்தது. இதன் பிறகு தேவயானி புன்னப்புரா வயலூர் போராட்டத்திற்குப் பெண்களைத் திரட்டினார். வறுமையோடும் வேறு பல பிரச்சனைகளோடும் அவர் போராடினார். பெரும்பாலும் அனைத்துப் பெண்களும் கல்வியறிவு இல்லாதவர்களாக இருந்தாலும், புரட்சிகரமான (திருவாதிரை) பாடல்களைப் பாட அவர்கள் மிகுந்த ஊக்கம் பெற்றனர். சங்கங்களில் பெண்களைச் சேர்ப்பதற்காகப் பெண் தலைவர்கள் மிகக் கடுமையாகப் பாடுபட்டனர்.

வங்கத்தின் சணல் ஆலைகளும் ‘துக்மத் தீதி’யும்

கேந்திரமான தொழில் பிரிவில் அடுத்து முக்கியமானது வங்காளத்தின் சணல் ஆலைகள். அன்றைய கல்கத்தா நகரின் (வடக்கு 24 பர்க்கானா மாவட்ட) பாராநகர் பகுதியில் அநேக சணல் ஆலைகள் இயங்கின. வாழ்வாதாரம் தேடி நாட்டின் பலபகுதிகளிலிருந்து பல குடும்பங்கள் கல்கத்தாவுக்குப் புலம்பெயர்ந்தன; அதுபோல போலவே 1930ல் மத்திய பிரதேசத்திலிருந்து துக்மத் தீதி (துக்மத் அக்கா) தனது கணவரோடு கல்கத்தா வந்தார். கணவன் மனைவி இருவருமே சணல் ஆலை எந்திர அறையில் ஆறு அணா ஊதியத்தில் பணியாற்றினர். அங்கே 600 முதல் 700 பெண் தொழிலாளர்களும் இருந்தனர். அனைவருமே குறைந்த ஊதியம், கூடுதல் வேலை நேரம் எனக் கடும் சுரண்டலுக்கு உள்ளாகி வேலை பாதுகாப்பு எதுவுமின்றி உழன்றனர். கொதித்தெழுந்த துக்மத் தீதி தொழிலாளர்களை அணிதிரட்டத் தொடங்கினார். ஒடுக்குதலுக்கு எதிராக இணைந்து போராடுவதை அவர்களுக்குக் கற்பித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார். 1946ல் பாராநகர் சணல் ஆலை 14ஆயிரம் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். ஆலையின் நுழைவாயிலில் மேலாளர் வாகனத்தை முற்றுகை இட்டனர். 700 பெண் தொழிலாளர்களோடு துக்மத் வீரம் செறிந்த பங்கு வகித்த அந்தப் போராட்டத்தால் குறிப்பிடத்தக்க அளவு வெற்றி கிட்டியது.

1947 தேச விடுதலைக்குப் பிறகு ஆலை சம்பந்தமான விவாதங்களில் பங்கேற்க வசதியாக தொழிற்சங்கப் பிரதிநிதிகள் அடங்கிய குழுவைத் தேர்தல் மூலம் மறுசீரமைக்க அழுத்தம் தரப்பட, இறுதியில் ஆலை நிர்வாகமும் அதற்கு 1950ல் ஒப்புக் கொண்டனர். முதன் முறையாக அந்தக் குழுவின் உறுப்பினராகத் துக்மத் ஏஐடியுசி பிரதிநிதியாகத் தேர்வு பெற்றார்.

கல்கத்தா டல்ஹவ்சி பகுதியில், இந்தியச் சணல் ஆலை அதிபர்களின் அசோசியேஷனை 1953ல் 20ஆயிரம் தொழிலாளர்கள் சூழ்ந்து கொண்டனர். அதன் தலைமை துக்மத் தீதி. அவர் சணல் பிரிவு தொழிலாளர்களுக்கு மட்டுமின்றி பிற சமூகப் பிரச்சனைகளுக்காகவும் தீவிரமாகப் பணியாற்றினார். நாட்டில் பஞ்சம் தலைவிரித்தாடியபோது மக்களின் உணவுப் பிரச்சனை போன்ற அடிப்படைத் தேவைகளுக்கான சமூகப் பிரச்சனைகளில் சேவை செய்ய ஏராளமான பெண்களை அணிதிரட்டி அவர்களின் சமூக உணர்வை எழுப்பினார். அவரைக் கைதுசெய்து சிறையில் தள்ள போலீஸ் பெரும் படையோடு அவரது அலுவலகத்தைச் சூழ்ந்து கொண்டனர். வீரப்பெண்மணி அவர், மிக எளிதாகப் போலீசார் கண் முன்பே ஆண் உடையில் பிடிபடாது தப்பி விட்டார்.

“ஒன்றுபட்டு முன்னேறுவோம்! இணைந்து நாமே வென்றிடுவோம்!” என்பதவர் முழக்கம். உழைக்கும் வர்க்கக் குடும்பத்தில் பிறந்து தொழிலாளர்களுக்காகப் பாடுபட்டு ஆயிரக் கணக்கான சணல் ஆலைத் தொழிலாளர்களின் வர்க்கப் போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தியவர். அதனால்தான் மக்கள் அவரை மிகுந்த அன்போடு ‘அக்கா’ (வங்கமொழியில் தீதி எனில் சகோதரி) துக்மத் தீதி என்றழைத்தனர். நேயத்திற்குரிய அந்தப் பெண் போராளி 1994ல் தனது 84 வயதில் மறைந்தார். அவரைப் போலவே பெண்களிடையே விழிப்புணர்வு உண்டாக்கி, அணிதிரட்டிய இயக்க அமைப்பாளர்கள், வீரம் செறிந்த வர்க்கப் போராளிகளாக இன்னும் பல பெண் தலைவர்கள் உண்டு. அவர்களின் கடும் உழைப்பின் காரணமாகவே பலமான தொழிற்சங்க அமைப்புகள் மலர்ந்து மணம் வீசி, வெற்றியும் பெற்று பீடு நடை போட்டு வருகின்றன.

ஆந்திரா தொழிற்சங்க இயக்கத்தில் பெண்கள்

ஆந்திரப் பிரதேசம் அமைக்கப்படுவதற்கு முன்பு, 1956ல் ஆந்திரா, ஹைத்ராபாத் நிஜாம் மாநிலங்களில் பல்வேறு ஆலைகள், சணல், டெக்ஸ்டைல், புகையிலை மற்றும் பீடித் தொழில் பெரிய ஆலைகளாக இருந்தன. அவற்றில் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் பணியாற்றினர். கடுமையான வேலைக்குக் குறைவான கூலி, சுகாதாரமற்ற மற்றும் உடல்நலத்திற்குக் கேடான மிக மோசமான பணிச்சூழல். இத்தனையும் மீறி வருந்தத்தக்க ஏழ்மையின் காரணமாக அவர்கள் அங்கே வேலை செய்யக் கட்டாயப்படுத்தப்பட்டார்கள்.

பணியாற்றும் இடத்திற்குக் குழந்தைகளையும் அழைத்துச் சென்று விடுவதால் அடிக்கடி தாய்மார்களும் குழந்தைகளும் நெஞ்சக நோய்களால் பாதிக்கப்பட்டனர். ஹைத்ராபாத்தில் டெக்ஸ்டைல் ஆலைகள் தவிர குடிசைத் தொழில்களாக இருந்த தீப்பெட்டி செய்தல், பீடி, வளையல்கள், மருந்து தயாரிப்பு நிறுவனங்கள், சிகரெட் தயாரிப்பு முதலிய ஆலைகளிலும் பெண்கள் பெருமளவில் இடம் பெற்றனர். ஹைத்ராபாத்தில் உருவான பல்வேறு தொழிற்சாலை எஸ்டேட்டுகள் தவிர மற்ற பிரிவுகளிலும் அதிகமான திரட்டப்படாத தொழிலாளர்கள் இருந்தனர்.

ஆந்திரா பிராந்தியத்தின் புகையிலை தொழிற்சாலைகளில் பெண்கள் பலர் பணியாற்றினர். விஜயவாடா வெளிப்பகுதியில் கிருஷ்ணா மாவட்டம் கொல்லப்புடி பகுதியில் இருந்த ITDC புகையிலை குடோன்களில் ஜோஷ்யபாட்லா சுப்பம்மா என்பவர் பெண்களை அணிதிரட்டுவதில் சோர்வின்றிக் கடுமையாகப் பாடுபட்டார். அவர்களை AITUC பேரியக்கக் குடையின் கீழ் கொண்டு வந்து அவர்களின் குறை களையப் போராடவும் செய்தார். விவசாயப் பெண் தொழிலாளர்களுக்குச் சமவேலைக்குச் சம ஊதியம் பெறவும் பல போராட்டங்கள் நடத்தப்பட்டன.

குண்டூரில் இருந்த பல புகையிலை குடோன்களில் ஆயிரமாகப் பெண்கள் பணியாற்றினர். அவர்களை அணி திரட்ட உழைத்த பல பெண் தலைவர்களில் பாக்கியம்மா ஒருவர். அவரது தீவிரமான செயல்பாடு பெண்களை வீரத்தோடு போராட்டங்களில் கலந்து கொள்வது மட்டுமின்றி வீட்டிலும் வெளியிலும் தைரியம் மிக்கவர்களாக செயல்படுவும் ஊக்கப்படுத்தியது.

தெலுங்கானா ஆயுதப் போராட்டக் காலங்களின்போது பிரமிளா தாய் மகேந்திரா சிறந்த திறன் மிக்க தொழிலாளியாக இருந்தார். ஆயுதப் போராளிகளுக்குச் செய்திகளைக் கொண்டு சேர்ப்பவராக மட்டுமல்ல ஆயுதங்களையும்கூட பலமுறை எடுத்துச் சென்று வழங்கிய தைரிய லெட்சுமியாகவும் அறிவுக் கூர்மை உள்ளவராகவும் செயல்பட்டார். அதன் பிறகு தொழிற்சாலைப் பிரிவுகளில் தொழிற்சங்கங்களைக் கட்டுவதிலும் அதே திறமையோடு பாடுபட்டார். பிஸ்கெட் தயாரிப்பு ஆலைகளில் பணியாற்றிய இளம் பெண்களின் உரிமைகளுக்காகச் சோர்வின்றி உழைத்து AITUC சங்கங்களை அமைத்தார். தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தின் மற்றொரு வீராங்கனை பிரிஜ்ராணி கவுர். அவர் மகிளா சம்ஐக்யா பெண்கள் அமைப்பில் பணியாற்றினாலும் திரட்டப்படாத தொழிலாளர்கள் பிரிவில் பல பெண்களை அணிதிரட்டினார். தனது கணவர் டாக்டர் ராஜ் பகதூர் கவுர் அவர்களுடன் மிக எளிமையான வாழ்க்கையை –கழிவுநீர் கால்வாய் தூய்மைப் பணியாளர்கள் வசிக்கும் காலனியில்—வாழ்ந்தார்.

அரசு சாலைப் போக்குவரத்து கார்பரேஷனில் பணியாற்றியவர் (நாயுடம்மா எனப் புகழோடு அறியப்படும்) பத்மா நாயுடு. சமூகப் பணிகளோடு, பெண் செயல் வீராங்கனைகள் பலரைத் தொழிற்சங்கத்தில் அணி திரட்டினார். அவரோடு ருக்மணி மற்றும் சாந்தா தீவிரப் பங்கு வகித்தனர். போக்குவரத்து கழகத்தில் 1960களில் நீண்ட கால வேலை நிறுத்தம் நடைபெற்றது. வேலைநிறுத்தத்தில் பங்கேற்று மற்ற பெண்களை அணி திரட்டியது மட்டுமல்ல, தொழிலாளர் காலனி குடும்ப உறுப்பினர்களையும் குழந்தைகளையும் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுத்தினார். கொடுமையான லத்தி தாக்குதலுக்கு ஆளாகி பத்து நாட்கள் சிறையிலும் இருந்தார். அதன் வலியும் வேதனையும் ஒரு மாதத்திற்கு மேல் நீடித்தது.

தொழிற்சங்க இயக்கத்தில் பெண்களின் இடர்பாடு

சுதந்திரப் போராட்ட இயக்கத்தில் பல சாதாரண பெண்கள் களத்தில் முன் நின்றது போலவே வர்க்க உணர்வுடைய பல பெண் செயல்வீரர்கள் தொழிற்சங்க இயக்கத்தில் பல தியாகங்களைச் செய்துள்ளனர். இரண்டு தெலுங்கு மாநிலங்களின் மருத்துவத் தொழிலாளர்கள் சங்கம், 70 சதவீதத்திற்கும் அதிகமான பெண் ஊழியர்களைக் கொண்டது, கடந்த 70 ஆண்டுகளில் தங்களின் பல கோரிக்கைகளை வென்றுள்ளனர். பீடித் தொழிலில் இரவும் பகலும் கடும் பணியாற்றும் திரட்டப்படாத பிரிவு பெண்களை அணி திரட்டி அந்தச் சங்கங்கள் பாடுபட்டாலும் குறிப்பிடத்தக்க அளவு அந்தப் பெண் தலைவர்கள் மேல்நிலை அடைய இயலவில்லை. ஏன் என ஆராயந்தால் அவர்களின் குடும்பப் பொறுப்பு மட்டுமின்றி, நீக்கமறப் பரவியுள்ள ஆணாதிக்க மனப்பான்மை பெருமளவுக்கு அதன் அடிவேர் காரணமாக உள்ளது; வர்க்க உணர்வை வளர்த்துத் தொழிலாளர் வர்க்கத்தினரிடையே அந்த மனத் தடையை உடைக்க வேண்டும்.

நமது இந்தியச் சமூகத்தில் பெண்கள் வீட்டை விட்டு வெளியே செல்லக் கூடாது என்றிருந்த காலத்திலேயே, “விலகி வீட்டிலோர் பொந்தில் வளர்வதை/ வீரப் பெண்கள் விரைவில் ஒழிப்பராம்” என்று பாரதி முழங்கியபடி அந்தக் கண்ணாடிச் சிறை விதானத்தை உடைத்துப் பல துறைகளிலும் பெண்கள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தியுள்ளனர். இன்றும் நடுத்தர வர்க்கப் பெண்களும் பெண் ஊழியர்களும் போராட்டத்தில் பங்கேற்பதைக் கவுரவக் குறைச்சலாகக் கருதுகின்றனர்; ஆனால் வர்க்க உணர்வுள்ள பெண் தொழிலாளர்கள் இயக்கங்களின் முன்னணிப் படையாக முந்தி நிற்பதில் பின்வாங்குவதில்லை. ஒரு சம்பவத்தை நினைவுவூட்டத்தான் வேண்டும். கேரளா மூணாறு மலைப் பகுதியில் மிகப் பெரிய தோட்டப் பயிர் எஸ்டேட்டாக இருப்பது கண்ணன் தேவன் டீ எஸ்டேட். அங்கே 2015 செப்டம்பரில் ஊதிய உயர்வு கோரி 5ஆயிரம் பெண் தொழிலாளர்கள் மின்னல் வேக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். அமைதியாக அந்தப் போராட்டம் பல நாள்கள் நீடித்தது. அவர்களிடையே தொழிற்சங்க அமைப்பு ஏதுமில்லை எனினும் அவர்களின் ஒற்றுமையான சக்தியின் மூலம் கோரிக்கைகளில் வெற்றி அடைந்தனர்; இறுதியில் பேச்சுவார்த்தைகள் பலனளித்தன.

2016 செப்டம்பரில் மத்திய அரசு பிராவிடெண்ட் பண்டு கணக்கிலிருந்து தொழிலாளர்கள் தங்கள் சொந்த பணத்தை எடுப்பதற்குச் சில தடைகளை விதித்தது. இதைக் கேள்விப்பட்டதும் ஆயத்த ஆடை தயாரிப்பு ஆலைகளில் பணியாற்றிய 1,20,000 பெண் தொழிலாளர்கள் பெங்களூரு வீதிகளில் திரண்டனர். சில மணி நேரத்தில் பிற ஆலைத் தொழிலாளர்களும் அவர்களோடு சேர்ந்தனர். பெங்களூரின் உழைக்கும் பெண்கள் நகரை முடக்கினர். இறுதியில் மத்திய அரசு தனது முடிவைத் திரும்பப் பெற வேண்டி வந்தது. இந்த அனுபவங்களிலிருந்து, பெண்கள் தங்கள் பிரச்சனைகளை உணர்ந்து விட்டால், இயற்கையாகவே ஒன்றிணைந்து எதிர்க்கத் துணிந்து விடுவார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். எனவே பெண்களை மேலும் மேலும் ஊக்குவித்து அமைப்புகளில் போராட்ட இயக்கங்களில் பங்குபெற உற்சாகப்படுத்துக!

திரட்டப்படாத தொழிலாளர்களின் அவலம்

 குறிப்பாகத் திரட்டப்படாதப் பகுதியினரின் பிரச்சனைகள் ஏராளம். அங்கே அவர்களுக்குத் தொழிலாளர் நலச் சட்டங்களோ, உரிய ஊதியம், சமூக மற்றும் பணி பாதுகாப்போ எதுவுமில்லை. லட்சக் கணக்கான விவசாயத் துறை உழைப்பாளிகள், சில்லறை விற்பனையாளர்கள், வீட்டுப் பணி செய்வோர், அங்கன்வாடி, ஆஷா, மதிய உணவு மற்றும் பிற திட்டப் பணியாளர்கள் இவர்களுக்கெல்லாம் ’தொழிலாளி’ என்ற அந்தஸ்துகூட

 வழங்கப்படுவதில்லை. அவர்களெல்லாம் அற்பக் கூலி அளிக்கப்பட்டு சுரண்டப்படுகிறார்கள். இயக்கப் போராட்டங்கள் அனைத்திலும் அவர்கள் முன்னே நிற்கிறார்கள்; கடும் போராட்டங்களுக்குப் பிறகும் கோரிக்கைகளில் சிறிதளவே முன்னேற்றம் காண்கிறார்கள். அங்கேயும் வீரம் செறிந்த போராட்டங்கள் நடைபெறுகின்றன, இன்னும் எதிர்காலத்திலும் நிகழும். இன்றைய மக்கள் விரோத அரசின் கீழ் ஆகப் பெரிய போராட்டங்களுக்கு அவர்கள் தயாராக வேண்டும். அத்தகயை போராட்டங்களை மேலெடுத்துச் செல்லவதற்காக அவர்களை உற்சாகப்படுத்தி ,ஊக்கப்படுத்துவது நம் அனைவரது கடமையாகும்.

புகழ் வானில் பெண் நட்சத்திரத் தலைவர்கள்

சர்வதேச அளவில் புகழ்பெற்ற முக்கிய AITUC தலைவர்கள், க்ளாரா ஜெட்கின்சன், ரோசா லுக்சம்பர்க், மேரி ஜோன்ஸ் போன்றோர் உள்ளனர். இயக்கத்தின் சல்லி வேர் தொடங்கி தொழிலாளர் வர்க்கத்திற்காகப் பாடுபட்டு தேசிய அளவில் உயர்ந்த பார்வதி கிருஷ்ணன், ரோசா தேஷ்பாண்டே போன்றவர்கள் இருந்தனர். சுதந்திரப் போராட்ட வீராங்கனையான பார்வதி கிருஷ்ணன் கோயம்புத்தூர் டெக்ஸ்டைல் ஆலைத் தொழிலாளர்களிடையே பணியாற்றினார்.

அவர் மூன்று முறை பாராளுமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பெரும் செல்வச் சீமாட்டி குடும்பத்தில் 5ஆயிரம் ஏக்கர் நிலங்களுக்குச் சொந்தக்காரராகப் பிறந்தவர், அத்தனை சொத்து சுகங்களையும் விட்டு விட்டுத் தொழிலாளர்களுக்காகப் பாடுபடத் தம் வாழ்வையே அர்ப்பணித்தவர். தேசிய அளவில் AITUC பேரியக்கத்தின் துணைத் தலைவராகப் பொறுப்பு வகித்துத் தமது 94வது வயதில் 2014 பிப்ரவரி 20ம் நாள் மறைந்தார். மற்றொரு வீராங்கனை தோழர் எஸ் ஏ டாங்கேவின் வாழ்க்கை துணையான   பம்பாயின் உஷாதாய் டாங்கே, பல வீரம் செறிந்த போராட்டங்களை நடத்தியவர், அவரது தலைமையில் ஆலை மேலாளர் ஒருவரைப் பெண் தொழிலாளர்கள் ஒரு முழு இரவும் மறியல் செய்தார்கள்.

மற்றொரு மெய் சிலிர்க்கும் சம்பவம் 1929ல் துணி ஆலைகளில் நடந்த மிகப் பெரிய வேலைநிறுத்தத்தின்போது நடந்தது. ஆலை முதலாளிகளைத் ஆலைக்குள் நுழைய விடாமல் கேட்டின் முன்பு தன் பெண் குழந்தையைக் கிடத்தினார் – உஷாதாய் டாங்கே! அந்தப் பெண் வேறு யாருமல்ல, பெற்றோரின் பெயர் சொல்லப் பிறந்த புலிக் குட்டி ரோசா தேஷ்பாண்டே, புலிக்குப் பிறந்தது பூனையாவதில்லை. பிறகு அவரும் பின்னாட்களில் மும்பையின் புகழ்வாய்ந்த தொழிற்சங்கவாதியாகப் பரிணமித்தார். மும்பை மக்கள் அவரை அன்போடு ‘சிகப்பு ரோஜா’ என்றழைப்பார்கள். அவரும் பல டெக்ஸ்டைல் மில்கள் மற்றும் மருந்து தயாரிக்கும் ஆலைகளில் பல தொழிற்சங்களில் தலைமை வகித்தார். அவரால்தான் தங்களது பணி நிலைமைகள் உயர்ந்தன என மருந்து கம்பெனிகளின் ஊழியர்கள் நன்றியோடு நினைவு கூர்கிறார்கள்.

இதற்கு முன்பு மருந்து தயாரிப்பு நிறுவனங்களில் திருமணமாகாத பெண்களை மட்டுமே வேலையில் சேர்த்துக் கொள்வார்கள்; அவர்கள் திருமணம் செய்து கொள்வார்கள் எனில் உடனே வேலையை விட்டு நீக்கி வீட்டுக்கு அனுப்பப்பட்டுவிடுவார்கள். அவர்களுக்குப் பேறு கால விடுமுறை மற்றும் சலுகைகள் அளிப்பதைத் தவிர்த்துவிடலாம் எனக் கம்பெனிகளின் நிர்வாகம் கருதியதே காரணம். இதே நிலைமை ஏர் இந்தியா நிறுவனத்திலும் நிலவியது. (பேர் அண்ட் லவ்லி போல விமானப் பணிப்பெண்கள் அழகாக இருக்க வேண்டும் என விரும்பும் ஆணாதிக்க மனோபாவ எதிர்பார்ப்பு.) மனிதத் தன்மையற்ற இந்நிலைமைகளை எதிர்த்துத் தளர்வின்றிப் போராடினார். இறுதியில் நிர்வாகங்கள் பணிந்தன என்பதே அவரது போராடும் குணத்தின் வெளிப்பாடு. பெரும் வாக்கு வித்தியாசத்தோடு பாராளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார் 1994ல். அவரது இயல்பும் குணமுமான அநீதிகளை எதிர்த்து உரத்துக் குரல் எழுப்பும் சக்திமிக்க கர்ஜனை பாராளுமன்றத்திலும் எதிரொலித்து, பலரும் அதனால் ஈர்க்கப்பட்டனர். அவர் சமீபத்தில் தமது 91வது வயதில் 2020 கடந்த செப்டம்பர் 19ம் நாள் மறைந்தார். (அந்த நாள் மத்திய அரசு ஊழியர்களின் போராட்ட வரலாற்றில் தியாகிகள் தினம் –1968—என அனுசரிக்கப்படுகிறது). இறுதி மூச்சுவரை படிப்பில் திளைத்து இலக்கியப் பணிகளில் ஈடுபட்ட அவர் தீவிரச் செயல்பாட்டாளராகவும் திகழ்ந்தார்.

விண்ணில் பெயரிடப்படாத விண்மீன்கள்

புகழோடு விளங்கிய இந்த வீரப் பெண்மணி தலைவர்களைத் தவிர, களச் செயல்பாடுகளில், பெயர் வெளிப்படாத எத்தனையோ தலைவர்கள் அல்லும் பகலும் இயக்கங்களில் வான வீதியின் கோள்கள் போல இயங்கி வருகிறார்கள்; தொழிலாளர் வர்க்கச் சரித்திர ஏடுகளில் தங்கள் அறிவார்ந்த திறமைகள் மற்றும் போர்க் குணங்களாலும் செம்மை சேர்க்கின்றனர்.(அமைப்பு ரீதியான சங்கங்களில், அரசு, வங்கி, தொலைபேசி எனப் பல பிரிவு தொழிற்சங்கங்களிலும் எத்தனையோ பெண்கள் ஆற்றல் மிக்கவர்களாகப் பணியாற்றி வருகின்றனர்)
       
நூற்றாண்டு காலத் தொழிற்சங்க இயக்க வரலாறு தியாகங்களால் நிரம்பித் தளும்புகின்றது. பாடுபடும் பாட்டாளிகளுக்காக உழைக்கவும், தியாகங்களை ஏற்கவும் முன் வருவோம்! வர்க்கப் போராட்டத்தின் வார்ப்படங்களாய், போர் வாளாய், நன்கு பயிற்றுவித்தக் கட்டுப்பாடு மிக்கப் படைவீரர்களாய் தொழிலாளர்களை – ஆண் பெண் என்ற பேதம் இன்றி – உருவாக்குவோம்!

“எல்லார்க்கும் தேசம்; எல்லார்க்கும் உடைமை எலாம்
 எல்லார்க்கும் எல்லா உரிமைகளும் ஆகுகவே!
 எல்லார்க்கும் கல்வி சுகாதாரம் வாய்த்திடுக
 எல்லார்க்கும் நல்ல இதயம் பொருந்திடுக!”
      

                                                              –-பாவேந்தர் பாரதி தாசன்

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

Sunday 15 November 2020

இந்தியத் தொழிலாளர் வர்க்க வரலாற்றுச் சுவடுகள் ஒரு மீள் பார்வை -2


இந்தியத் தொழிலாளர் வர்க்க வரலாற்றுச் சுவடுகள்

ஒரு மீள் பார்வை -2

(சென்ற கட்டுரை தொடர்ச்சி --நிறைவுப் பகுதி-- சமகால நடப்புகள்)

--அமர்ஜித் கவுர்

ஏஐடியுசி பொதுச் செயலாளர்

சென்ற பகுதியில் விவரிக்கப்பட்ட நெடிய வரலாற்றுப் பின்னணியில் சாதிக்கப்பட்ட உரிமைகள்தான் இன்றைய காலகட்டத்தில் தாக்குதலுக்கு உள்ளாகி உள்ளன. சர்வதேச நிதி மூலதனம் வரலாற்று சக்கரத்தைத் திசை திருப்ப விரும்புகிறது. ஆட்சியாளர்கள் இச்சூழ்நிலைக்கு எப்படி எதிர்வினை ஆற்றுகிறார்கள் என்பதும்; 150 ஆண்டுகளுக்கு மேல் நீண்ட கடும் போராட்டங்களால் கைவரப்பெற்ற உரிமைகளைப் பாதுகாக்கத் தொழிலாளி வர்க்கமாகிய நாம் எப்படி நம்மைத் தயார்படுத்திப் போராட்டக் களம் காண்கிறோம் என்பதும் மிக முக்கியமானது.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் பாசிசப் போக்குகள், ஆளும் வர்க்கத்தினரின் அறிவிக்கப் படாத ஆதரவுடன், வளர்ந்து வருவதைப் பார்க்கிறோம். சகல மட்டங்களிலும் மோதல்–நாட்டிற்குள், நாடுகள் மற்றும் பிராந்தியங்களுக்கிடையே – மோதல்கள் அதிகரிக்கப்படுகின்றன. ஏகாதிபத்திய சக்திகளின் கொள்கைகளுக்கு, அவர்களின் சதிச் செயல் திட்டங்களுக்கு, மத்திய கிழக்கு மற்றும் தெற்காசியப் பகுதிகள் இலக்காகின்றன.

சர்வதேச நிதிமூலதன உத்தரவுகளுக்கு இந்திய அரசாங்கம் சரணடைகிறது. ஒரு புறம் நாட்டின் பொருளாதாரம் கார்ப்பரேட்டுகள் மற்றும் முதலாளித்துவ வர்க்கத்தினரிடம் கையளிக்கப்பட்டு வருகிறது; மறுபுறமோ சமூகத்தில் வெறுப்பை, மதரீதியான விஷத்தைப் பரப்புபவர்களைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை. சமூகத்தைப் பிளவு படுத்தும் இத்தகைய செயல்களால், பொது சுகாதாரம், தூய்மை, மருத்துவம், வாழ்விடம், நல்ல குடிநீர் மற்றும் சமூகப் பாதுகாப்பு போன்ற மக்களின் அன்றாட வாழ்வியல் வாழ்வாதாரப் பிரச்சனைகளிலிருந்து கவனம் சிதறடிக்கப்படுகிறது.

இதன் விளைவாக ஏற்கனவே வேலைவாய்ப்பு மற்றும் பணிப் பாதுகாப்பு கடுமையான தாக்குதலுக்கு உள்ளாகி எதிர்காலம் மிகவும் இருளடைந்துள்ளது. ஒப்பந்தப் பணி முறை மற்றும் தற்காலிக வேலை என்பதே இன்றைய நடப்பாகி உள்ளது. பணி நியமனம் செய்வோர் எந்தவிதமான பயமோ தண்டனையோ இன்றி, மனம் போன போக்கில் ஆட்குறைப்பு, லே-ஆஃப்  பணி இடைநிறுத்தம் மற்றும் தொழிலாளர்களைச் சஸ்பெண்ட் செய்வது போன்றவற்றில் ஈடுபடுவது சாதாரண நடைமுறையாகி உள்ளது.

நாட்டின் செல்வத்தை நாளும் கொள்ளை கொண்டு போக சர்வதேச கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு மோடி அரசு விரித்த சிகப்புக் கம்பள வரவேற்பே ‘மேக்-இன் இந்தியா.’  கார்ப்பரேட் முதலாளிகளின் லாபத்தை அதிகரிக்க வசதியாக, ஒருபுறம் ஊக்கமும் சலுகைகளும் அளிக்கப்படுகின்றன; மறுபுறம் அதற்கு மாறாக, ‘சுலபமாகத் தொழில் நடத்துவது’ என்ற பெயரில், நடப்பு தொழிலாளர் நலச் சட்டங்கள், பாதகமாகத் திருத்தப்படுகின்றன. அதிரடியான பணமதிப்பிழப்பு நடவடிக்கை, குழப்பமான ஜிஎஸ்டி அமலாக்கம், நாளும் அதிகரிக்கும் வங்கிகளின் வாரக் கடன் சுமை, உச்சத்தைத் தொடும் ஊழல் மற்றும் கருப்புப் பணத்தை மீட்க வக்கற்ற அரசின் கையாலாகாத்தனம் நாட்டின் பொருளாதாரத்தை மேலும் மோசமாக்கி உள்ளன.

பள்ளி மற்றும் கல்லூரி கல்வியின் மீதான தாக்குதல்கள் --வணிகமயமாக்குதல், தனியார் மயமாக்குதல் மூலமாக-- மேலும் மூர்க்கமாக அதிகரிக்கப்பட்டுள்ளன; இந்தக் கொள்கைகளுக்கு எதிரான கல்வியாளர்கள் மற்றும் மாணவர்களின் விமர்சனபூர்வமான மாற்று கருத்துகள் மற்றும் எதிர்ப்புகள் நசுக்கப்படுகின்றன. எழுத்தாளர்கள், கலைஞர்கள், திரை உலகப் பிரபலங்கள், பத்திரிக்கையாளர்கள், அமைப்பு சாரா சுதந்திரச் சிந்தனையாளர்கள் மற்றும் தத்துவக் கோட்பாட்டாளர்கள் அனைவருமே தாக்குதலுக்கு உள்ளாகின்றனர். (சமீபத்திய உதாரணம், தமிழ் நாட்டின் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக் கழகத் துணைவேந்தர், அந்தப் பல்கலைக் கழக மாணவர்களுக்குப் பாடநூலாக வைக்கப்பட்டிருந்த எழுத்தாளர் அருந்ததி ராய் எழுதிய வாக்கிங் வித் காம்ரேடுஸ்’ என்ற மனித உரிமை சார்ந்த நூலைத் தன்னிச்சையாக நீக்கியது). எதிர்ப்பு, மாற்றுக் கருத்தை வன்முறையாக மௌனமாக்குவது என்ற (பாசிச) அரசியலைப் பின்பற்றி இந்திய அரசியலமைப்பில் பொறிக்கப்பட்ட அடிப்படைக் கொள்கைகளுக்குக் குழிபறிக்கிறார்கள்.

தொழிற்சங்கங்கள் என்பன கூட்டுச் செயல்பாடு, ஜனநாயகம் மற்றும் ஒன்றுகூடி இருத்தலுக்கான ஒற்றுமையின் அடையாளம்; அனைத்து சாதி, சமூக, மத நம்பிக்கை உள்ளவர்களும் தொழிற்சங்கத்தில் ஒன்றாய் இணைந்து --வேலை வாய்ப்பு, பணிபாதுகாப்பு, பணியிடம் சார்ந்த உரிமைகள் மற்றும் சமூகப் பாதுகாப்பிற்காக– சாதாரண மனிதனின் சமூக, பொருளாதார வளர்ச்சிக்கான தங்கள் செயல் திட்டங்களை முன்னோக்கி எடுத்துச் செல்லக் கூட்டாகப் போராடும் அமைப்பே தொழிற்சங்கம்! ஆனால் மத்திய அரசோ, முத்தரப்பு மற்றும் இருதரப்பு அமர்வுகளில் அவர்களோடு விவாதிக்க மறுத்து, கடந்த ஐந்து வருடங்களுக்கு மேலாக இந்தியத் தொழிலாளர் மாநாட்டையும் நடத்த மறுத்து வருகிறது. ஆனால் அதற்கு மாறாக, தீவிரமான மூர்க்கத்தோடு உழைப்பாளி மக்களின் வாழ்க்கை, வாழ்வாதாரங்களின் மீது கொடுமையான தாக்குதல்களைக் கட்டவிழ்த்துள்ளது.  

கோவிட் 19 பெருந்தொற்று உலகச் சமுதாயத்தைப் பேரதிர்ச்சியில் ஆழ்த்தி சகல பகுதி மக்களையும், அனைத்து மனிதச் செயல்பாடுகளையும் பாதித்துள்ளது; அதிலும் உலகம் முழுவதும் பெரும் பாதிப்புக்கு ஆளோனார், தொழிலாளர் பிரிவினரே. மனித குலத்தின் பெரும் சவாலாக முன்நிற்கும் இப்பாதிப்பிலிருந்து உதவ முன்வருவதற்கு மாறாக, உலக முதலாளிகள் தங்கள் பங்கிற்கு மேலும் சுரண்ட, இந்த நெருக்கடியான சூழலையும் தங்களுக்கான வாய்ப்பாகப் பயன்படுத்துவதில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்தியாவிலோ வெறும் நான்கு மணிநேர முன்னறிவிப்பு மட்டுமே தந்து, முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது; தங்கள் சொந்த இடங்களில் இருந்து பணி நிமித்தம், மருத்துவச் சிகிச்சை பெற, குடும்ப வேலையாகச் சென்றவர்கள் மற்றும் மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள், தொழிலாளர்கள், புலம்பெயர்ந்தோர் என எண்ணிறைந்த குடிமக்களைப் பத்திரமாக ஊர் திரும்ப இயலாதபடி, சொல்ல முடியாத இன்னல்களுக்கு ஆட்படுத்தி ஊரடங்கு அமலாக்கப்பட்டது. அவர்களில்


திடீரென வேலை இழந்த தொழிலாளர்கள், வாழ்விழந்த பலதரப்பட்டப் பணியாளர்கள் தங்க இடமும் இன்றி தவிக்க விடப்பட்டார்கள். பயணிக்க எந்த வசதியும் இல்லாத நிலையில் பல நூறு மைல் தூரம், குடும்பத்தினரோடு உயிரைப் பணயம் வைத்து நடந்து சென்றனர். அந்த அப்பாவிப் புலம் பெயர் தொழிலாளிகளின் குழந்தைகள், பெண்கள், வயதானோர் வழியில் அடைந்த இன்னல்கள் கல்நெஞ்சமுடையோரையும் கலங்கச் செய்வதாய் இருந்தது.

2019 டிசம்பர் தொடங்கிய முதல் நான்கு மாதகாலம் மார்ச் 2020வரை பெருந்தொற்றின் தீவீரம் பற்றி வாளாவிருந்து, எந்த முன்னேற்பாடுகளையும் செய்யாமல் தூங்கிவிட்டு, ஒரு சுகாதார அவசரநிலையை மருத்துவப் பிரச்சனையாக எதிர்கொள்ளாமல், பேரிடர் மேலாண்மை (DMA) சட்டத்தைத் திணிக்கும் பாதையையே அரசு தேர்ந்தெடுத்தது. அச்சட்டத்தின் கீழ் ஊரடங்கைப் பிரகடனப்படுத்திய அரசின் செயல் நன்கு தெரிந்து திட்டமிட்டுச் செய்ததே!  அப்போதுதான், இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி மக்களைச் சட்டம் ஒழுங்கின் கீழ் கட்டுப்படுத்தவும்; மேலும் தனியார் மயப்படுத்தல், பொதுத்துறை நிறுவனங்களை விற்றல், தொழிலாளர் நலச் சட்டங்களைக் கொடுமையாகத் தொழிலாளர்களுக்கு எதிராகத் திருத்துவது, மேலும் அதிக அளவில் ஜனநாயக அமைப்புகளைப் பலமிழக்கச் செய்வது, நாட்டின் சுதந்திரமான வெளிநாட்டுக் கொள்கையை அமெரிக்க – இஸ்ரேல் கூட்டணிக்குள் தள்ளுவது போன்ற தங்களது நிகழ்ச்சி நிரல் திட்டங்களை எதிர்ப்பின்றிச் சுலபமாக அமலாக்கவும் முடியும் என்பது அவர்கள் கையாண்ட திறமையான உத்தி.

எல்லாம் தற்போது அனைவர் கண்முன்பும் வெட்டவெளிச்சமாகி உள்ளன. இந்தியாவின் உள்நாட்டு உற்பத்திக் குறியீடு ஜிடிபி, எதிர்மறையாகக் கீழ்நோக்கி 23.8 சதவீதம் சரிவடைந்துள்ள அதிர்ச்சியான செய்தி ஏற்கனவே சமூகத்தின் பல தரப்பு மக்களையும் பீதியில் ஆழ்த்தியுள்ளது. 45 ஆண்டுகளில் இல்லாத அளவாக 2019ல் மிக மோசமாக உயர்ந்த வேலையில்லாத் திண்டாட்டம் தற்போது இன்னும் விரைவாக அதிகரிக்கிறது. எது குறித்தும் கவலையின்றி, அனைத்து யோசனைகளையும் புறக்கணித்து, எதிர்க்கட்சிகள் மற்றும் தொழிற்சங்க இயக்கத்தின் கருத்துகளையும் மீறி, மோடி அரசு தனது திட்டத்தின்படி நடைமுறையில் இருந்த 44 மத்திய தொழிலாளர் சட்டங்களை நான்கு குறுங்குறிகளாக (code) மாற்ற முனைந்துள்ளது.  

மாநில ஆளுநர்களின் அவசரச் சட்டங்கள் மூலமாகவும் மாநில அமைச்சரவைகளின் அத்தகைய முடிவுகளுக்கு அவசரமாக ஒப்புதல் வழங்குவதன் மூலமாகவும் பல தொழிலாளர் சட்டங்களின் பயன்களை முடக்குவதில் காட்டப்படும் வேகம் அரசினுடைய அந்த நிகழ்ச்சிநிரல் திட்டங்கள்தான். தொழிலாளர் சட்டங்களில் கொண்டுவரப்படும் இந்த மாற்றங்கள் எல்லாம் மத்திய அரசின் தொழிலாளர் அமைச்சகம் அனுப்பும் சுற்றறிக்கைகள் வாயிலாக அவர்கள் வற்புறுத்தல் பேரிலேயே நடத்தப்படுகின்றன. குறிப்பாகத் தொழில் தகராறு சட்டம், ஒப்பந்தப் பணியாளர், தொழிற்சாலைகள், சமவேலைக்கு சம ஊதியம், பணி பழகுநர் முதலான சட்டங்களில் மாறுதல்களை ஏற்படுத்தவும், கால வரையறைப் பணிநியமன (ஃபிக்ஸட் டெர்ம்) முறைகளைத் திணிக்கவும், வேலை நேரத்தை எட்டு மணி நேரத்திலிருந்து 12 மணி நேரமாக அதிகரிக்கவும் மாநில அரசுகள் வற்புறுத்தப்படுகின்றன. 

ஆனால் கள எதார்த்தம் கொடுமையானது; முறைசாரா பொருளாதாரச் செயல்பாடுகளில் ஈடுபடும் 90 சதவீதத் தொழிலாளர்களுக்குத் தொழிலாளர் நலச் சட்டங்களின் கீழ் எந்தப் பாதுகாப்பும் இல்லை; பாதுகாப்புப் பெற்ற தொழிலாளர்களும்கூட அரசின் இத்தகைய நடவடிக்கைகளால் உரிமைகளை இழக்கின்றனர். உலகத் தொழிலாளர் (ஐஎல்ஓ)  அமைப்பிற்கு அளித்த அனைத்து உறுதிமொழிகளையும் சீர்குலைக்கும் மத்திய அரசு, மனித உரிமைகள் தொடர்பான சர்வதேச உடன்படிக்கைகளையும் மீறுகிறது – அது சர்வதேச தொழிலாளர் தர நிர்ணயங்களைப் பின்பற்றுவதாக இருந்தாலும், சமூகத்தில் பன்முகக் கலாச்சாரப் பண்பாடு, நம்பிக்கைகள் மற்றும் பழக்கங்களை அனுசரிக்கும் உரிமைகளைப் பாதுகாப்பது என அனைத்தையும் காற்றில் பறக்கவிட்டு விட்டது.

பாராளுமன்ற ஜனநாயகத்தின் மாண்புகளை ஒரு சிறிதும் மதிக்காமல் வேளாண் மசோதா மற்றும் அத்தியாவசிய (உணவுப்) பொருள்கள் சட்டத்தில் திருத்தம், போதுமான விவாதம் இன்றி, அவசரகதியில் நிறைவேற்றுப்பட்டு விட்டன. அதற்கு மறுநாள் அனைத்து எதிர்கட்சிகளும் பாராளுமன்ற நடவடிக்கைளில் கலந்து கொள்ளாது புறக்கணித்த நிலையில் வெட்கமின்றி தொழிலாளர் சட்டங்களுக்கு மாற்றான மூன்று தொழிலாளர் குறுங்குறிகளை நிறைவேற்றினர்.

நாட்டின் வணிகம், தொழில் மற்றும் வர்த்தக நிலைமை மிகவும் பரிதாபகரமானது. ஊரடங்கால் நிலைகுலைந்த சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் (MSME) ஏறத்தாழ 35 சதவீதம் மீண்டும் தொழிலைத் தொடங்க முடியாத நிலையிலும்; 35 சதவீதம் மட்டும் 6 மாதங்களுக்குப் பின் செயல்படவும், தொழில் தொடங்கிய ஏனை 30 சதவீதம் தங்கள் தொழிலில் இன்னும் இரண்டு மூன்று மாதங்களுக்குப் பிறகே பலன் காணக்கூடிய நிலையிலும் உள்ளன. முதலாளிகளின் அமைப்புகள் நடத்திய சர்வேபடி இந்தத் தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன. தொழில்களின் மறு புனரமைப்பு நடவடிக்கைகளில் 30முதல் 50 சதவீத ஊழியர்களே எடுத்துக் கொள்ளப்படுவதால், தொழில் இயல்புநிலைக்கு வரும் வரை 40 வயதிற்கு மேற்பட்ட அனுபவம் உள்ள தொழிலாளர்களையே முதலாளிகள் முதலில் பணிக்கு வரவழைத்துள்ளனர். இதனால் இளம் வயது தொழிலாளர்களில் பலரும் வேலை இழந்து அந்தத் தலைமுறை தொழிலாளர்கள் பெரும் மன அழுத்தத்திற்கும் பதற்றத்திற்கும் ஆளாகி உள்ளனர் என ஒரு ஆய்வு அறிக்கை தெரிவிக்கிறது. மிகக் கூடுதலான திறமையுள்ள இளம் வயது தொழிலாளர்கள், வாழ்க்கையில் தப்பிப் பிழைக்கும் உபாயமாக, பகுதித் திறமை அல்லது திறமை தேவைப்படாத பணிகளை நாட வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளதாக கள எதார்த்தத்தை மேலும் ஆய்வு விவரிக்கிறது. இதனால் பகுதித் திறமை மற்றும் திறமையற்ற உடலுழைப்புத் தொழிலாளர்களின் வாய்ப்பு சுருங்கிப் போய் அந்தப் பிரிவு ஊழியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த உண்மைகளை எல்லாம் ஒரேயடியாக மறுக்கும் போக்கிலும், சரியாகச் சொல்வதென்றால், உண்மைகளைத் திரித்து நாட்டின் பொருளாதாரம் முழு வேகத்தில் ஏதோ மீண்டும் நடைபோடுவதான சித்திரத்தைத் தீட்டவும் மத்திய அரசு முயல்கிறது. ஆண்டுக்கு இரண்டு கோடி புதிய வேலைவாய்ப்புகளை, தகுதிக்கும் திறமைக்கும் ஏற்ப, உருவாக்குவது என்று தான் முன்பு அளித்த உறுதிமொழியிலிருந்து மோடி ஏற்கனவே தலைகீழாகத் திரும்பி பின்வாங்கி விட்டார். (கூரை ஏறி கோழி பிடிக்க முடியாதவன் வானத்தைக் கீறி வைகுண்டம் காட்டுவதாக) தற்போது அரசு மார் தட்டுகிறது, அவர்கள் (வேலை கொடுக்க முடியாத) இளைஞர்களை வேலை தேடுபவர்களாக அல்ல, வேலைகளை உருவாக்குபவர்களாக (சுய தொழில்முனைவர்களாக) மாற்றுவார்களாம் – சொல்கிறார்கள், கேப்பையில் நெய்வடிகிறதென்று.

சர்வதேச நிதிமூலதனம், பன்னாட்டு கார்ப்பரேட்டுகள் மற்றும் இந்தியப் பெரும் கார்ப்பரேட்டுகளிடம் முழுமையாகச் சரண் அடைந்த அரசு கொள்கைகளின் விளைவு, இந்தியப் பொருளாதாரத்தை முதலாளித்துவ உலகிற்கு அடிமைப்படுத்தி, அவர்களைக் கூடுதலாகச் சார்ந்திருக்கச் செய்துவிடும். இன்றைய ஆளும் தரப்பினர் இந்திய விடுதலைப் போராட்டத்தில் பங்கு பெற்றவர்கள் இல்லை என்பது மட்டுமல்ல; இந்திய விடுதலைக்காக இன்னுயிர் ஈந்து, செக்கிழுத்து, சிறைக் கொடுமைகளையும், வெள்ளைக் காவலர்களின் சித்தரவதைகளையும், குண்டாந்தடி அடிகளையும் எதிர்கொண்ட தியாகிகள் –இந்திய மக்கள், தொழிலாளர்கள், விவசாயிகள், படித்த வர்க்கத்தினர், மாணவர்கள், எழுத்தாளர்கள் மற்றும் கலைஞர்கள் என எண்ணிறைந்தோர் செங்குருதித் தியாக வேள்விக்கு – எதிராக, விஷமாகச் செயல்பட்டவர்களும் கூட. அவர்களுக்கு --பாரதியின் வார்த்தைகளில்  ‘இந்த நிலைகெட்ட மனிதர்களுக்கு’-- இந்தியத் தாய் மடியின் இயற்கைச் செல்வங்கள், மனித ஆற்றல் உள்பட நாட்டின் ஆஸ்தி கொள்ளையடிக்கப்படுவதும், நாடு இறையாண்மை உரிமைகளை இழப்பதும் ஒரு பொருட்டே அல்ல. எல்லாவற்றையும் தனியார்மயப்படுத்தவும், விற்பதற்கும் துணிந்து விட்டார்கள்

பெருந் தொற்று உழைக்கும் பாட்டாளி வர்க்கத்தின் போராட்ட குணத்தை மழுங்கடித்து விட முடியாது. மருத்துவர்களின் அனைத்து வழிகாட்டுதல்களைப் பின்பற்றி கிளர்ச்சி, போராட்டங்கள் நடைபெற்றன; இணைந்து மேதினம் அனுசரிக்கப்பட்டது; மே 22, ஜூலை 3, தேசத்தைப் பாதுகாப்போம் தினம் ஆகஸ்ட் 9 மற்றும் செப்டம்பர் 23 தேதிகளில் நாடு தழுவிய போராட்ட இயக்கங்கள் வெற்றிகரமாக நடைபெற்றன. மத்திய தொழிற்சங்கங்களின் ஒவ்வொரு கிளர்ச்சிப் பிரச்சாரத்திலும் தொழிலாளர்களின் பங்கேற்பு அதிகரித்தது. அரசின் நாசகாரக் கொள்கைகளுக்கு எதிர்ப்பு வளர்ந்தது; பாரத் பெட்ரோலியம் கார்ப்பரேஷன் லிட் (BPCL) மற்றும் நிலக்கரி சுரங்கத் தொழிலாளர்கள் மற்றும் ஸ்கீம் ஒர்க்கர்ஸ் எனப்படும் திட்டம் சார்ந்த பணியாளர்களின் வேலைநிறுத்தங்கள் இந்தக் காலகட்டத்தில் நிகழ்ந்தன. பாதுகாப்புத் தளவாட ஆலைகளின் ஊழியர்கள் விடுத்த கால வரையறையற்ற வேலை நிறுத்த அறிவிப்பு, சமரப் பேச்சு வார்த்தைகள் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இது போன்று பல்வேறு போராட்டங்கள் பல துறைப் பிரிவுகளிலும் எழுந்த வண்ணம் உள்ளன. அந்த வரிசையில் மத்தியத் தொழிற்சங்கங்கள் விடுத்துள்ள மற்றொரு மாபெரும் பொது வேலைநிறுத்தம் எதிர்வரும் நவம்பர் 26ம் நாள் நடைபெற உள்ளது. சங்கங்கள் அதற்கான தயாரிப்புப் பணிகளில் உற்சாகமாக ஈடுபட்டு வருகின்றன. தொழிற்சங்கங்களின் இந்தச் செயல்பாட்டு ஒற்றுமை நடவடிக்கைகளும், போராட்டக் களம் காண விவசாய அமைப்புகளும் தயாராவதும் அதிகரித்துள்ளது வரவேற்க வேண்டிய நல்லதொரு இயக்கப் போக்கு.

எதிரே களம் விரிந்துள்ளது; சமத்துவம், சமநீதி அடிப்படையில் அமைந்த சுரண்டலற்ற சமுதாயத்தை அமைப்பதற்கான நமது போர்கள் தொடரும்! சமரசமற்ற அந்தச் சமரில் நாம் வெல்வது உறுதி!

“நாளை உலகை ஆள வேண்டும் உழைக்கும் கரங்களே!

 வாருங்கள் தோழர்களே! ஒன்றாய்ச் சேருங்கள்!”

--தமிழில் : நீலகண்டன், கடலூர்