Thursday 30 June 2022

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலா;ற்று வரிசையில் 65 -- தாதி மகந்தா

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 65

தாதி மகந்தா --அஸாம், வடகிழக்கு மாநிலத்தில் கம்யூனிஸ்ட் மற்றும்  இலக்கியஇயக்கம் கட்டியவர்

                                         --அனில் ரஜீம்வாலே

தாதி மகந்தா 1914ல் அஸாம், ஜோர்ஹட் தென்பகுதியில் கரங்காவின் டெல்பானி என்ற இடத்தில் பிறந்தார். தந்தை ஜாதப் சந்திர மகந்தா. கோலஹாட்டில் பள்ளிக் கல்வியைப் பெற்றவர் கோலஹாட் பெஸ்போரோ ஆங்கில உயர்நிலை பள்ளியில் படித்தபோதே ‘புஷ்பாஞ்சலி’ என்ற கையெழுத்துப் பிரதி பத்திரிக்கையை வெளியிட்டார்.

மாணவர் இயக்கத்தில்

            குன்னிங்காம் அறிக்கையை எதிர்த்து அவர் இரண்டு ஆண்டுகள் பள்ளியைவிட்டு விலகினார். (பிரிட்டிஷ்க்கு எதிராக விடுதலை இயக்கங்களில் குறிப்பாக ஒத்துழையாமை இயக்கத்தில் மாணவர்கள் கலந்து கொள்வதை முற்றிலுமாகத் தடைசெய்த 1930ன் அன்றைய பொதுத் தகவல் இயக்குநர் ஜெஆர் குன்னிங்காம் வெளியிட்ட) கண்டனத்திற்குரிய அந்த அறிக்கை அஸாம் மற்றும் கோலஹாட்டை உலுக்கியது. பல மாணவர்கள் தங்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளிலிருந்து, சிலர் நல்லதாகப் போயிற்றென்றும், வெளியேறினர். தாதியும் கோலஹாட் அரசு உயர்நிலைப் பள்ளியைவிட்டு, பின்னர் ஜோர்ஹட் அரசு சாரா பெஸ்பாருஹ் உயர்நிலைப் பள்ளியிலிருந்து மெட்ரிக் தேர்வு பெற்றார். இத்தகைய பள்ளிகள் (அரசுக்கு) எதிர் இயக்கத்தின் ஒரு பகுதியாக இணையான கல்வி முறையை நடத்தின. 1929ல் கோலஹாட்டில் அஸாம் சாகித்திய பரிக்ஷத் ஒரு மாநாட்டை நடத்தியது. அம்மாநாட்டில் தாதி ஒரு மாணவத் தன்னார்வத் தொண்டராகப் பணியாற்றினார்.

            காலேஜ் படிக்கும்போது காலரா பாதிப்புக் காரணமாகக் கல்லூரியைவிட்டு நீங்கினார். இருப்பினும் பின்னர் அவர் ஜோர்ஹட் ஜகந்நாத் பரூவா கல்லூரியில் சேர்ந்து இந்தியப் பள்ளிச் சான்றிதழ் (ISc) தேர்வானார். அவருடைய முயற்சியால்தான் கல்லூரியில் பிஏ வகுப்புகள் தொடங்கப்பட்டன. அங்கே மாணவர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளராகத் தேர்வாகி பின்னர் அதன் தலைவரானார். 1941ல் பிஏ தேர்வு பெற்றபின் எம்ஏ பட்டப்படிப்பில் சேர கல்கத்தா சென்றார். ஆனால் படிப்பை முடிக்க முடியாமல் வீடு திரும்பினார்.

            தாதி மகந்தா எழுதுகிறார் : “1937 --38ல்  இதை எழுதுபவர் (தாதி) ஜோர்ஹட் சாத்ர சன்மிலான் (Chhatra Sanmilan, மாணவர் சங்கம்) மற்றும் ஜகந்நாத் பரூவா கல்லூரி மாணவர்கள் சங்கச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பேராசிரியர் துளசி நாராயன் சர்மா மற்றும் அன்றைய ஜோர்ஹட் அரசு உயர்நிலைப் பள்ளி உதவித் தலைமையாசியர் மரியாதைக்குரிய லகேஷ்வர் சர்மா பரூவா ஆகிய இருவரும் தேசிய இயக்கம் மற்றும் மாணவர்களின் முற்போக்கு இயக்கத்திலும் மிகவும் ஈடுபாடு கொண்டிருந்தார்கள். இவ்விருவரின் இல்லங்களையும் சன்மிலானின் தற்காலிக அலுவலமாக மாணவர்கள் பயன்படுத்திக் கொண்டனர். இந்த இரு பெருமக்கள் அளித்த உற்சாகத்தால் ஜோர்ஹட் சாத்ர சன்மிலான், 1936ல் நிறுவப்பட்ட அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் அமைப்பில் இணைப்புப் பெற செய்த மனு ஏற்கப்பட்டது.

            ஜோர்ஹட் சாத்ர சன்மிலான் சங்கம்தான், அஸாம் மாணவர் பெருமன்றத்தின் முதல் கிளை. பெங்கால் மாகாணப் பிரதேச மாணவர்கள் சம்மேளன (BPSF) வங்கத் தலைவர் பிஸ்வநாத் முகர்ஜியை வரவேற்க சாத்ர சன்மிலான் ஒரு கூட்டத்தை நடத்தியது. அவரது ஆலோசனையை ஏற்றே 1939 ஏப்ரல் மாதத்தில் அஸாம் சாத்ர சன்மிலானின் 24வது ஆண்டு மாநாட்டை ஜோர்ஹட்டில் நடத்த முடிவெடுக்கப்பட்டு ஏப்ரல் 21ல் நடத்தப்பட்டது.

அம்மாநாட்டின் வரவேற்புக்குழுச் செயலாளராகத் தாதி மகந்தா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிற்காலத்தில் இந்தியாவின் கல்வி அமைச்சரான ஹுமாயூன் கபீர் மாநாட்டுக்குத் தலைமை வகித்தார். இந்த மாநாட்டில்தான் சன்மிலான் ஏஐஎஸ்எஃப் உடன் இணைப்புச் சங்கமாக முடிவெடுத்தது. 1939வரை ‘சதவ் அஸாம் சாத்ர சன்மிலான்’ மட்டுமே அசாமின் மாணவர் அமைப்பாக இருந்தது. இந்த மாநாட்டில் தாதியின் பெரும் பங்களிப்பில் அந்த அமைப்பு அஸாம் மாணவர் சம்மேளனமாக மாற்றம் பெற்றது.

ஏஐஎஸ்எஃப் 7வது மாநாடு 1941ல் பாட்னாவில் நடைபெற்றது. ’மக்கள் போர்’ என்ற முழக்கம் இதன் மேடையிலிருந்துதான் முதன் முதலாக அறிவிக்கப்பட்டது. தாதி மகந்தா, கௌரி சங்கர் பட்டாச்சாரியா மற்றும் இரமேஷ் சர்மா அஸாமின் பிரதிநிதிகள் குழுவில் இடம் பெற்றனர். மக்கள் போர் (பியூபிள்ஸ் வார்) தீர்மானத்தை ஆதரித்துத் தாதி சக்திமிக்க வலிமையான சொற்பொழிவை ஆற்றினார்.

1942ல் போர்ச் சூழலில் நடந்த ஜோர்ஹட் மாநாட்டில் ஜோர்ஹட் தேயிலைத் தோட்ட டொக்லாய் ஆய்வு மேம்பாட்டு இயக்குநர் அழைக்கப்பட்டிருந்தார். (தி டோக்லாய் எக்ஸ்பரிமென்டல் ஸ்டேஷன், தேயிலை மேம்பாட்டிற்கான ஓர் ஆய்வு வசதியாகும்.) திடீரென அந்தப் பிரிட்டிஷ் அதிகாரி மகாத்மா காந்திஜி குறித்து, அவரை ஒரு ‘பனியா’ (வியாபாரி) என்று அழைத்தது உட்பட, கேலியாகச் சில ஆத்திரமூட்டும் விமர்சனங்களைச் செய்தார். தாதி உட்கார்ந்த இடத்திலிருந்து விருட்டென்று எழுந்து பிரிட்டிஷ் அதிகாரி தனது சொற்களைத் திரும்பப் பெறவில்லை என்றால் அவரை மேலே செல்ல அனுமதிக்க மாட்டோம் என்றார். அந்த அதிகாரியைக் கட்டாயமாக மன்னிப்புக் கேட்க வைத்தனர்.

ஜவகர்லால் நேரு ஜெபி கல்லூரிக்கு வந்திருந்தபோது தாதி அவரைச் சந்திக்க முடிந்தது. போலீஸ் எச்சரிக்கையையும் மீறி நேரு மாணவர்களிடையே உரையாற்றினார். 1937 பொதுத் தேர்தல்களின்போது தாதி, கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்தபோதே, காங்கிரஸ் கட்சிக்காகப் பணியாற்றினார்.

ஓப்பியம் நுகர்வுக்கு எதிராக இயக்கம்

           போதை வஸ்து ஓப்பியம் நுகர்வுக்கு எதிராகக் காங்கிரஸ் அரசு தொடங்கிய இயக்கங்கள் ஒரு பெரும் தலைவலியானது. வேறு வழியின்றி அமியா குமார் தாஸ் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த இயக்கத்தில் தாதி மகந்தா பல மாதங்கள் பணியாற்றினார். இந்தப் போராட்டம் முதலில் கிருஸ்துவ பேப்டிஸ்ட் மிஷனரிகளால் தொடங்கப்பட்டது. இப்போதை பழக்கத்திற்கு எதிராகத் துண்டறிக்கைகள், பிரச்சார ஏடுகள் வெளியிடப்பட்டதுடன், விழிப்புணர்வை ஏற்படுத்த நாடகங்களும் அரங்கேற்றப்பட்டன. பெரும் எண்ணிக்கையில் அறிஞர்கள் பங்கேற்றனர். சில காலத்தில் இந்த இயக்கம் தேசிய இயக்கத்துடன் இணைந்தது.

சிபிஐ கட்சியில் சேர்தல்

            அஸாமில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை நிறுவியவர்களில் தாதியும் ஒருவர்.

            காசி பல்கலைக்கழகத்தில் படிக்கும்போதே கம்யூனிஸ்ட்டான ஜோர்ஹட்டிலிருந்து வந்த ஜடுநாத் ஸைக்கியாதான் அஸாம் சிபிஐ கட்சியின் முதல் உறுப்பினர்.1938ல் ஏஐஎஸ்எஃப் அமைப்பின் இணைச் செயலாளர் பிஸ்வநாத் முகர்ஜி அஸாம் வந்தார். அவர் தாதி மற்றும் தோழர்களிடம் கோலகாட், ஜோர்ஹட், த்திப்ருஹார்க் முதலிய இடங்களில் சோஷலிஸ்ட் கட்சியை அமைக்கும்படி யோசனை கூறினார்.

    1939ல் இடதுசாரி மனோபாவம் உள்ளவர்கள் கௌஹாத்தி (குவஹாத்தி)யில் ஒரு கருத்தரங்கை நடத்தினர். அது ஜடுநாத் ஸைக்கியா மற்றும் பபித்ரா ராய் அவர்களால் கூட்டப்பட்டது. 1940ல் மிசமோராவில் காங்கிரஸ் மாநாட்டுடன் அதே வளாகத்தில் மற்றுமொரு கருத்தரங்கம் நடத்தப்பட்டது. தனது மாணவ நண்பர்களுடன் தாதி தீவிரமாகப் பங்கேற்றார்.

         அந்தக் கருத்தரங்கில் அஸாமில் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பது குறித்து விவாதம் நடந்தது. கடுமையான கருத்து வேறுபாடு இருந்தது. சிலர் அஸாம் சோஷலிஸ்ட் கட்சியை (அஸோம் சமாஜ்தந்த்ரிக் தள்) அமைக்க விரும்பினர், வேறு சிலரோ அஸோம் காங்கிரஸ் சமாஜ்தந்த்ரிக் தள் அமைக்க வேண்டும் என்றனர். இவ்வாறு சோஷலிசவாதிகள் மற்றும் காங்கிரஸ்காரர்களுக்கும் இடையே பிளவு ஏற்பட்டது.

            இறுதியில் அஸோம் காங்கிரஸ் சமாஜ்தந்த்ரிக் தள் அமைப்பது என முடிவானது, அதன் செயற்குழுவில் தாதியும் சேர்த்துக் கொள்ளப்பட்டார்.  தள் அமைப்பின் முதலாவது செயற்குழு லும்டிங்கைச் சேர்ந்த எஸ்என் பண்டிட் இல்லத்தில் நடைபெற்றது.

     கம்யூனிஸ்ட் கட்சி முறையாக அமைக்கப்படுவதற்கு முன்பு பாரக் பள்ளத்தாக்கில் கம்யூனிஸ்ட் குழு ஒன்று செயல்படத் தொடங்கியது. தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் மற்றும் தேசிய இயக்கத்தில் பங்கேற்ற படித்தவர்கள் கட்சியைப் பலப்படுத்த உதவிக்கரம் நீட்டினார்கள். முன்பு அஸாம் கம்யூனிஸ்ட் குழு வங்காளக் கட்சியின் கீழ் செயல்பட்டது. 1943ல் கோலஹாட்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அஸாம் கிளையின் அமர்வு நடைபெற்றது. அஸாம் பள்ளத்தாக்கு குழு என்ற பெயரில் ஒரு குழு அமைக்கப்பட்டது. 1948ல் குவஹாத்தியில் கட்சியின் முதலாவது மாகாண மாநாடு நடைபெற்றது. பிரிட்டிஷ் காலனிய ஆட்சியை எதிர்த்துக் கம்யூனிஸ்ட் கட்சி தேசியக் காங்கிரசுடன் இணைந்து போராடியது. அஸாமில் பிரேஷ் மிஸ்ராவைச் செயலாளராகக் கொண்டு 1943ல் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரதேசக் கிளை அமைக்கப்பட்டது.

            அது முற்போக்கு இலக்கிய இயக்கத்தில் காட்டிய ஈடுபாடு குறிப்பிடத்தக்க குணாம்சம். அவர்கள் மாணவர்கள், விவசாயிகள், தேயிலைத் தொழிலாளர்கள் எனப் பல்வேறு பிரிவினர்களின் சங்கங்களை அமைத்தனர். மாணவர்கள், ஆசிரியர்கள் மற்றும் கலைஞர்களை முற்போக்காகச் சிந்திப்பது குறித்து மறுமலர்ச்சி பெறச்செய்ய அவர்கள் முயன்றனர். செயற்கையான விலை உயர்வு, உணவு நெருக்கடி பிரச்சனை, கருப்புப் பணம் முதலியவற்றிற்கு எதிராக அவர்கள் போராடினர். கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பாக மாணவர்கள், கலைஞர்கள் மற்றும் இலக்கியவாதிகளுடன் கூட்டு சேர்ந்து ஹெமங்க பிஸ்வாஸ் பாரதிய காணத்ய சங்கா’ (பாரத மக்கள் நாடக மன்ற சங்கம்) அமைப்பின் பிரதேசக் கிளையைத் தொடங்கி பள்ளத்தாக்கின் மக்கள் செயல்பாட்டிற்கு ஒரு மேடையை வழங்கினார்.

      கம்யூனிஸ்ட் கட்சி டெர்கௌண் அருகே கோலஹாட்டில் மிசமோராவின் டெலியா சோனாரிகௌண் என்ற கிராமத்தில் முறையாக அமைக்கப்பட்டது. இங்கே 1940 ஜனவரி 27, 28ல் கம்யூனிஸ்ட் சிந்தனையுடைய காங்கிரஸ் உப்பினர்கள் கூடினர். வங்கத்திலிருந்தும் சில தோழர்கள் கலந்து கொண்டனர். பின்னர் 1942 ஜூலை 22ல் ஹார்கேஷ்வர் ஸைக்கியா இல்லத்தில் மற்றொரு கூட்டம் நடத்தப்பட்டது. ஜடுநாத் ஸைக்கியாவைச் செயலாளராகத் தேர்ந்தெடுத்துப் புதியதாகக் கட்சி அமைக்கப்பட்டது.

           உண்மையில், மேல் அஸாமில் கம்யூனிஸ்ட் கட்சியைத் தொடங்க பிரசாந்த சன்யால்தான் அனுப்பப்பட்டார்.

பிடிஆர் காலம் குறித்து

            தாதி மகந்தா பிடிஆர் பாதையைக் கடுமையாக எதிர்த்தார், பிடிஆர் பாதையை ஏற்பது கட்சியைப் பெரிதும் பாதிக்கும் என்று கருத்துத் தெரிவித்தார். நாடு தனது விடுதலையைக் கொண்டாடிக் கொண்டிருக்கும்போது ஆயுதப் புரட்சியை நாடுவது என்பது தவறானது, கேடு பயப்பது என்றார்.  தேர்தல்களில் பங்கேற்பதை வரவேற்றவர், காங்கிரசுடன் ஒத்துழைப்பதற்கு ஆதரவாக நின்றார். ‘எதனை நீ உண்மையென்று கருதுகிறாயோ, பிறகு அதற்காக நீ போராடத்தான் வேண்டும்’ என்ற காந்திஜியின் அறிவுரையை அவர் நம்பினார். அதுபோலவே தவறுகளும் உடனடியாகத் திருத்தப்பட வேண்டும் என்றார்.

       விரைவில் அஸாம் மற்றும் வடகிழக்கின் சிபிஐ உயர் தலைவராகத் தாதி மகந்தா உயர்ந்தார். பலதரப்பு வட்டங்களில் அவர் உயர்வாக மதிக்கப்பட்டார். மாநிலக் கட்சியின் செயலகத்தில் அவர் நீண்ட பல ஆண்டுகள் இருந்தார், கட்சியின் ‘ஜனமத்’ (மக்கள் எண்ணம்) மற்றும் பிற இதழ்களின் ஆசிரியராகப் பணியாற்றினார். குறிப்பாக, தாதி மகந்தா கற்றறிந்தோர் மற்றும் இலக்கியச் செயல்பாட்டாளர்கள் மத்தியில் தீவிரமாகச் செயல்பட்டார். அவர்கள் மத்தியில் அவர் (கட்சிப்) பணிகளைப் பிரபலப்படுத்தவும் ஒன்று திரட்டும் ஏராளமான அமைப்புநிலைப் பணிகளையும் ஆற்றினார்; மேலும் தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பிற பகுதி மக்கள் மத்தியில் பணியாற்றினார்.

ஆசிரியராக

            தனது மாணவப் பருவ நாட்களில் தாதி மகந்தா ஜெபி கல்லூரியின் ‘ஜெபி-யன்’ இதழின் ஆசிரியராக இருந்தார். கல்லூரி முதல்வர் கிருஷ்ண காந்த ஹண்டிக் வழிகாட்டலின் கீழ் இதழ் ஆசிரியராக இது அவரது முதல் அனுபவம். பின்னர் அஸோம் சாத்ர சன்மிலான் அமைப்பின் குரலான ‘மிலன்’ இதழில் ஆசிரியராக இருந்தார். அந்த இதழ்தான் அஸோம் சாகித்திய சபா அமைப்புக்கு அடித்தளமானது. அவர்தான் ‘நூதன் அஸோம்’ (புதிய அஸாம்) இதழின் நிறுவன ஆசிரியர், அந்த இதழே சிபிஐ கட்சியின் முதலாவது அஸாமிய மொழி பத்திரிக்கை. அவர் டாக்டர் தீனநாத் சர்மா ஆசிரியராக இருந்த ‘ஆவாகன்’ பத்திரிக்கையின் உதவி ஆசிரியர்.

சீனா மீதான கருத்துகள்

           சோஷலிசத்திலிருந்து விலகிச் சென்றதற்காகச் சீனாவை விமர்சனம் செய்த தாதி மகந்தா, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிளவுக்குச் சீனாவே பொறுப்பு என்றார். 1962ல் இந்தியா மீது சீனா நடத்திய தாக்குதலுக்குப் பின் கட்சி மோசமாகப் பிரிந்தது, இறுதியாக 1964ல் கட்சிப் பிளவில் போய் முடிந்தது.

        பொம்டிலா பகுதியில் சீனா ஆக்கிரமிப்பால் அஸாம் மோசமாக பாதிக்கப்பட்டது, சீனர்கள் பிடித்துவிடுவார்களோ என்ற பயத்தில் மக்கள் பலரும் டெஸ்பூரை விட்டு ஓடினர். வட கிழக்குப் பிராந்தியமே சீன ஆக்கிரமிப்பு அபாயத்தில் இருந்தது, ஆனால் சீனப் படையினர் பின்வாங்கித் திரும்பச் சென்றனர். இருப்பினும் அவர்கள் கம்யூனிஸ்ட் மற்றும் முற்போக்கு இயக்கங்களுக்குக் கடும் சேதாரத்தை ஏற்படுத்தினர். இவற்றைத் தாதி மகந்தா கடுமையாக விமர்சனம் செய்தார்.

கல்வி, இலக்கியம் மற்றும் கலாச்சாரம் குறித்து

      தாதி மகந்தா கருத்தின்படி விவசாயிகளுக்குப் பொதுக் கல்வியுடன் அறிவியல் கல்வியையும் வழங்க வேண்டும், விவசாயிகள் அனைவரும் எழுத்தறிவு மற்றும் கல்வி கற்றவர்களாக இருக்க வேண்டும். மாமேதை லெனின் மேற்கோளைச் சுட்டிக்காட்டி முந்தைய சமூகம் விட்டுச் சென்ற பொருண்மையிலிருந்து (மெட்டீரியல்) இளைஞர்களின் கல்வி தொடர வேண்டும் என்று தாதி கூறினார். கம்யூனிஸ்ட் கோட்பாடு கொள்கைகளைப் போதிக்கக் கம்யூனிஸ்ட் கட்சி கல்வி முகாம்களை நடத்த வேண்டும், சமூகத் தீமைகளை அவர்கள் எதிர்க்க வேண்டும் என்றார்.

           காந்திஜி காட்டிய பாதையிலிருந்து விலகிச் செல்வதற்காக அவர் காங்கிரஸை விமர்சனம் செய்தார். இது சம்பந்தமாக அஸாம் மறுமலர்ச்சித் தலைவர் ஆகப்பெரும் இலக்கிய ஆளுமை ஜோதி பிரஸாத் அக்ரவாலா உணர்வுகளுடன் அவர் உடன்பட்டார்.

       மொழி குறித்தப் பிரச்சனையில் தாதி மகந்தா மிகத் தெளிவாக இருந்தார். கல்வி, தாய் மொழியில்தான் புகட்டப்பட வேண்டும் என்றார். மொழி அடிப்படையில் அஸாம் மாநிலம் உருவாக்கப்பட வேண்டும் என்று 1971ல் சிபிஐ மாநிலக்குழு யோசனை கூறியது. தாதி அதனை ஆதரித்தார். மாநிலக்குழு மேலும் கச்சார் பகுதியைத் தனி நிர்வாக அலகாக ஆக்க வேண்டும் என்றும் யோசனை கூறியது. கட்சியின் ‘ஜனமத்’ இதழில் மகந்தா பல கட்டுரைகளை எழுதியதுடன் அதன் ஆசியராகவும் இருந்தார். சுர்மா பள்ளத்தாக்குப் பகுதிக்குத் தனி அஸ்தஸ்து அளிப்பது ஒரு பிரச்சனையாக இருந்தது. தாதி, சுர்மாவில் அஸாமிய மொழியைத் திணிப்பதற்கு எதிராக இருந்தார். விட்டுக் கொடுத்துச் சமரசமாகச் செல்வதை ஆதரித்த அவர், அதே நேரத்தில் அஸாமின் முக்கிய மொழியாக அஸாமிய மொழி இருக்க வேண்டும் என்றார்.

            சரியாகப் பேசுவதையும் திருத்தமாக எழுதுவதையும் தாதி மகந்தா வற்புறுத்தினார்.

தாதி மகந்தா நூல்கள்

            வீட்டிலேயே தாதி இலக்கியப் பாடங்களைக் கற்றார், அதற்குப் பொருத்தமாக அவரது வீட்டின் சூழல் இலக்கியம் சார்ந்து இருந்தது. அவர் கற்றறிந்த அறிவாளியாக, ஓயாது எழுதிக்

குவிப்பவராக இருந்தார்; மார்க்ஸிய நூல்களைஆழமாகவும் விரிவாகவும் படித்தார். முற்போக்கு இலக்கியம் குறித்து ஏராளமாக எழுதினார். கம்யூனிஸ்ட் இயக்க வரலாறு, குறிப்பாக அஸாமில் இயக்க வரலாறு குறித்து எழுதியுள்ளார். அவர் ஒரு வாழ்க்கை வரலாற்றாசிரியர் மற்றும் நாடக ஆசிரியர். கம்யூனிஸ்ட் அறிக்கையை அஸாமிய மொழியில் மொழிபெயர்த்துள்ளார்; மேலும் டாக்டர் ஜாகீர் ஹுஸைன் எழுதிய “அடிப்படை கல்வி” நூல் மற்றும் நேருவின் எழுத்துக்களையும் அஸாமில் மொழிபெயர்த்துள்ளார். தாதி மகந்தாவின் ‘ரச்சனாவளி’ (தேர்ந்தெடுக்கப்பட்ட எழுத்துகள்) 1989ல் அஸாம் கம்யூனிஸ்ட் கட்சியால் பிரசுரிக்கப்பட்டது.

            “யார் ஒருவர் அஸாமின் கலாச்சார வரலாறு குறித்து எழுதினாலும், அத்தகைய எந்த ஒரு ஆய்வாளராலும் தாதி மகந்தாவின் எழுத்துக்களை, இனி வரக்கூடிய நீண்ட காலத்திற்குப், புறக்கணித்துவிட முடியாது” என்று புகழ்பெற்ற அறிஞர் ரஞ்சித் குமார் தேவா கோஸ்வாமி எழுதியுள்ளார்.

மறைவு

            ஒரு கண நேர விபத்தில் தாதி மகந்தா மரணமடைந்தார். மருத்துவச் சிகிச்சை பெற அவர் மருத்துவமனைக்கு ஒரு ரிக்க்ஷாவில் சென்று கொண்டிருந்தார். குவஹாத்தி, சில்புகுரி அருகே தீடீர் விபத்தைச் சந்தித்தார். 1986 ஜனவரி 31ம் நாளில் அஸாமின் புகழ்பெற்ற மைந்தர் தாதி மகந்தா இயற்கை எய்தினார்.

            அரசு “தாதி மகந்தா சமூக விஞ்ஞான ஆராய்ச்சி விருது” என்று அவரது பெயரில் ஒரு விருதை நிறுவியுள்ளது. பல கல்வி நிறுவனங்கள் மற்றும் இடங்களுக்கு அவருடைய பெயர் சூட்டப்பட்டுள்ளது. உலகளாவிய அளவில் ஏராளமான ஆய்வுக்குரிய ஒருவராக அவர் விளங்குகிறார்.

            அஸாமிய மண் மணத்துடன் தாதி மகந்தாவின் புகழும் என்றும் மணம் வீசும்!  

--நன்றி : நியூஏஜ் (மே 22 –28)

                                                                                                    --தமிழில் : நீலகண்டன்,  என்எப்டிஇ, கடலூர்

 

 

 

    

 

  

                

 

Sunday 26 June 2022

இன்றைய சூழலில் ராஜா ராம்மோகன் ராய் --கார்க்கி சக்ரவர்த்தி

 


இன்றைய சூழலில் ராஜா ராம்மோகன் ராய்

                                          --கார்க்கி சக்ரவர்த்தி

            ராஜா ராம்மோகன் ராயின் 250 பிறந்தநாள் 2022 மே மாதம் 22ம் நாள் தலைநகரிலும் நாட்டின் பிற பகுதிகளிலும் கவனிப்பாரற்று கடந்து போனது. அவர் புகழ்பெற்ற புள்ளியாக இல்லாமல் இருந்திருக்கலாம், 19ம் நூற்றாண்டின் தொடக்கக் காலத்தில் மதம் மற்றும் சமூக சீர்திருத்தவாதியாக அவரது மாபெரும் பங்களிப்புகளைச் சாதாரண மக்கள் அறிந்திருக்க மாட்டார்கள். தனது சமூகச் சீர்திருத்த நிகழ்ச்சி நிரலில் தொடர்புடையவராகப் பெரும்பாலும் அவர் இருந்தார்; அதில் முக்கியமானது கணவர் இறந்த சிதையிலேயே மணப்பெண்ணையும் எரிக்கும் உடன்கட்டை  ஏ(ற்)றும் சதி என்னும் வழக்கத்தை ஒழித்தது. 1828ல், அவர் பிரம்ம சபா என்ற அமைப்பை நிறுவிய ஆண்டில், கல்கத்தாவில் மட்டும் 309 கைம்பெண்கள் சதி என்று சிதையில் எரிக்கப்பட்டனர். சதி வழக்கத்தை ஒழிக்க அவர் முன்னெடுத்த போராட்டம் அவருக்குத் தனியான போர்; அது சனாதனப் பழமையில் ஊறிய இந்து சமூகத்திற்கு எதிரானது மட்டுமல்ல, அவரது தாய் உள்ளிட்ட சொந்த குடும்பத்திற்கு எதிரானது. அவரது சமூகச் சீர்திருத்தங்களும் மத ரீதியான சீர்திருத்தங்களும் பின்னிப் பிணைந்தவை; காரணம், அவரது போராட்டம்  மூடத்தனத்திற்கு, பழமை இருண்மை வாதத்திற்கு, மதச் சடங்குகளுக்கு மற்றும் அவரது காலத்தின் சமூகக் காழ்ப்பு மற்றும் பாரபட்சத்திற்கு எதிரானது.

            அவரது மதம் பற்றிய கோட்பாடு அவரது காலத்திற்கு மிகமிக முந்தி இருந்தது. சடங்குகள் பெயரால் கோலோச்சிய மத குருமார்கள் மற்றும் பிராமணிய மேலாண்மையை ஒழிப்பதற்காக ராம்மோகன் ராய், ஜாதி இன வேறுபாடின்றி மக்கள் தங்கள் சொந்த மத வழக்கத்தை முடிவு செய்ய, எல்லா ஆண் பெண்களுக்குமான புதிய பாதையை விழைந்தார். பதினொரு மொழிகளைக் கற்றுத் துறைபோகிய அறிவாளரான அவர், பல மத நூல்களை அவற்றின் ஒரிஜினல் மூல மொழியில் கற்கக் கூடிய திறமையுடையவராக இருந்தார். அவர் திருக்குரானை அரேபிய மூலத்தில் படித்தார், வேதங்களையும் உபநிடதங்களையும் மூல சமஸ்கிருதத்திலும், பழைய வேதாகமத்தை ஹீப்ருவிலும், புதிய ஏற்பாட்டைக் கிரேக்கத்திலும் படித்தார். அந்த நூல்களின் போதனைகளின் உணர்வு ‘புதுமையான ஒரு பாதையைச் சமைக்க’ அவரைத் தூண்டியது; அதன் விளைவே, பிரபஞ்ச மதம் என்ற கருத்தின் அவரது சமய சமரச இணைப்பு யோசனை. இந்தியா குறித்த அவரது கண்ணோட்டம், பல்வேறு சமயங்கள் மற்றும் பல்வேறு கலாச்சாரங்கள் உடைய இந்தியா போன்ற நாட்டில் ஒத்திசைவு பிணைப்பை ஏற்படுத்தும் ஒருமை மத நம்பிக்கையை (monotheism) உண்டாக்குவது என்பதால் அது மதசார்பற்ற பெருங்குணப் பெருமிதத்தை (செக்குலர் கிரடென்ஷியல்) அவருக்குப் பெற்றுத் தந்தது.

            இன்று நாட்டில் செக்குலரிசம் என்பது, குறிப்பாக இந்து பெரும்பான்மையிச அரசியல் பின்னணியில், பெரிதும் விவாதிக்கப்பட்ட பொருளாக உள்ளது. மேற்குலக ஐரோப்பாபோல அன்றி பல்வேறு சமயங்கள் மற்றும் பல்வேறு கலாச்சாரச் சமூகங்கள் உடைய நாடான இந்தியாவில் செக்குலரிசம் என்பது வித்தியாசமான குறிப்புப் பொருள் உடையது. மதச் சார்பின்மை என்பது பல நேரம் மதம் அற்றது எனத் தவறாகக் கருதப்படுகிறது, ஆனால் இந்தியச் சூழலில் அது அப்படி அல்ல. உண்மையான ஆன்மிக மனிதரான ராம்மோகன் ராய் ஒருபோதும் நம்பிக்கையை அல்லது சமயத்தை மறுத்தவர் அல்லர்; ஆனால் மாறாகப் பொதுவான மத அடிப்படையை, இந்தியாவின் சாதாரண மக்களுக்குப் பொருத்தமான பாதையைத் தேடியவர் அவர்; அப்பொதுமக்கள், வேத சாஸ்திர நூல்களின் அறிவு ஏதுமின்றி, மத குருமார் வர்க்கத்தின் ஆதிக்கப் பற்சக்கரப் பிடியிலிருந்து விடுதலை பெற்றவர்களாகத் தங்களை நேரடியாக இறைவனுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொள்ளக் கூடியவர்கள்.

            இந்தியாவில் எப்போதுமே மதத்திற்கும் அரசியலுக்கும் இடையிலான செயல்பாட்டு உறவுகள் இருந்தே வருகிறது. எனவே அரசியல் கட்சிகள் மதத்தைப் பயன்படுத்தி “மற்றவர்களுக்கு” எதிராக மத அடையாளத்தைத் தூண்டி சீண்டுவதற்காக அல்லது தேர்தல் ஆதாயத்திற்காகப் பெரும்பான்மையின மக்களை எளிதாகத் தாஜா செய்வதற்காகப் பயன்படுத்துகின்றன. மனம் கல்லாய்ப்போன தீவிர இந்துத்துவவாதிகள் வெறிக்கூச்சல் கூட்டத்தைத் தூண்டிவிட்டு மசூதிகளில் இந்து கடவுள் சிலைகளைத் தேடுவதன் மூலம் மத மோதலுக்குப் பதுங்கு குழி தோண்டுகிறார்கள்; இவர்களின் இச்செயல் வழிபாட்டு இடங்களின் சமயத் தன்மையை 1947 ஆகஸ்ட் 15ல் இருந்தவாறே மாற்றமின்றிப் பராமரிக்க வேண்டும் என்றும், வழிபாட்டு இடங்களை ஒரு மதத்தினரிடமிருந்து மற்றொரு மதத்தினருக்கு அல்லது ஒரே மதத்தின் ஒரு சார்பினரிடமிருந்து மற்றொரு சார்பு குழுவிற்கு மாற்றுவதையும் தடை செய்யும் 1991 மத வழிபாட்டு இடங்கள் சட்டத்தை முற்றிலும் புறக்கணிப்பதாகும்.

            மதத் தீவிர அடிப்படைவாதிகளுக்கு ராம்மோகன் ராயின் பிரபஞ்ச மதக் கோட்பாடு முற்றிலுமாகத் தீண்டத்தகாதது; அக்கோட்பாட்டை அவர்கள் தங்கள் தேர்தல் ஆதாயத்திற்குக் கேடு செய்யும் என்று கருதினார்கள். ஒருமை நம்பிக்கை (Monotheism) இந்து மதத்தின் பன்மை நம்பிக்கைக்கு (Polytheism) எதிராக இருப்பது. தேர்தல் அரசியலுக்காக, பெரும்பான்மை சமூகத்தைத் தாஜா செய்ய மதச்சார்பற்ற தேசியக் கட்சிகள் என அழைக்கப்படுவனவும்கூட அல்லது பல்வேறு மாநிலக் கட்சிகளும் மென்மையான இந்துவவாதி பாதையைப் பின்பற்றுகின்றன.

            நமது மதசார்பற்ற கட்டமைப்பைப் பிரித்தெறியும் சக்திகள், அறிவிக்கப்படாத இந்து ராஷ்ட்டிராவை நோக்கி நகர்கின்றன; ஆலயங்கள் கட்டுவதற்காகக் கோடிக் கணக்கான ரூபாய்கள் செலவிடப்படுகிறது; மசூதிக்குள் இந்து தெய்வ உருவங்கள் காணப்படுவதாக சட்ட வழக்குகள் தொடுக்கப்பட்டு, பல நேரங்களில் அவர்கள் தங்களைத் தாங்களே ஒட்டு மொத்த இந்து சமுதாயத்திற்கும் பிரதிநிதிகள்போலக் காட்டிக் கொள்கின்றனர். ஒருவகையான சர்வ அதிகாரத்துவ உத்தரவுகள் சமூகத்தில் புரையோடிப் போனது போன்ற நிலை மிக ஆழமான அபாயகரமான போக்காகும்.   

            ஆனால் இந்துக்களாகப் பிறந்தவர்கள் பல்லாயிர லட்சக் கணக்கானோர், கடவுள் நம்பிக்கை அற்றவர்களாக அல்லது நம்பிக்கை உடையவராக இருந்தாலும், அவர்கள் தீவிர இந்துத்துவவாதிகளின் கருத்துகளுக்கு ஆதரவளிப்பதில்லை. இருந்தபோதிலும் மரபுவழி மற்றும் பழமைவாதப் போக்கு இன்றைய இந்தியாவில் தொடர்ந்து நிலவுகிறது. உபி மாநிலச் சாலை ஓரங்களில் பல சதி (மாதா) ஆலயங்கள் இருப்பதை ஒரு என்டிடிவி செய்திஅறிக்கை சுட்டிக்காட்டி ஒளிபரப்பியது. பசு வழிபாடு மற்றும் இந்தி பேசும் பகுதிகளின் பல பள்ளிகளில் சதி பிராத்தனைப் பாடல்கள் தொடர்ந்து முறையாக பாடப்படுகிறது.

            1985 செப்டம்பர் 4ம் நாள் ராஜஸ்தானில் ரூப் கன்வார் என்ற இளம் பெண் கட்டாயப்

படுத்தப்பட்டு உடன்கட்டை ஏற்றி சதி-சிதையில் எரிக்கப்பட்ட நிகழ்வை நாடு முழுவதும் கண்டித்தது. ஆனால் ரூப் கன்வரின் புகழுக்காக பல கோயில்கள் ராஞ்சி மற்றும் பிற இடங்களில் கட்டப்பட்டன. இது எதனைப் புலப்படுத்துகிறது? இந்த நடவடிக்கைகளின் பின்னால் ஒளிந்திருக்கும் மனிதர்கள் யார்? சமூகத்தில் இவற்றைச் சில பிறழ் நிகழ்வுகள் என்று புறக்கணித்துவிட முடியாது. வலிமையான பிற்போக்கு மனநிலை அடிநீரோட்டமாக  இருப்பதை நாம் கண்டும் காணாமல் சென்றுவிடக் கூடாது.

            ஒரு சமூகச் சீர்திருத்தவாதியாக ராம்மோகன் ராய் முதல் மனிதராகப் பெண்களுக்குச் சொத்துரிமை பிரச்சனையை எழுப்பினார். 1832ல், “இந்து பாரம்பரிய வாரிசுரிமைச் சட்டத்தின்படி (நடத்தப்படும்) பெண்களின் வழிவழி வந்த பழமை உரிமைகள் மீதான நவீன அத்துமீறல்கள்” என்ற தலைப்பிலான கட்டுரையை வெளியிட்டார். பரம்பரை பாரம்பரியச் சொத்துக்களிலிருந்து பெண்களுக்குரிய பங்கைத் தருவதற்கு இந்து வாரிசுரிமைச் சட்டத்தில் சீர்திருத்தம் வேண்டும் என அவர் விரும்பினார். அவரது அகால மறைவினால் இந்தக் கடமையை அவரால் நிறைவேற்ற முடியாது போனது.

            விடுதலைக்குப் பிறகு, இந்து குறுங்குறி (இந்து கோடு) மசோதாவை நிறைவேற்றுவது சுதந்திர அரசுக்கு மிகக் கடினமானதாக இருந்தது; காரணம், மரபுவழி சடங்குகளைப் பிடித்துத் தொங்கும் பிரிவான அகில இந்திய இந்து மகாசபா, மகள்களின் சொத்து வாரிசுரிமையைக் கடுமையாக எதிர்த்தது. அது ‘இந்து குடும்ப முறையை உருக்குலைத்துச் சிதைக்கும்’ என்று அவர்கள் எண்ணினர். அந்த மசோதாவை எதிர்த்த ஆர்எஸ்எஸ் தலைவர் எம் எஸ் கோல்வால்கர், ‘அது இந்தியக் கலாச்சாரத்திற்குக் கேடு பயக்கும்’ என்று கூறினார்.

            சொத்தைப் பிரிக்கக் கூடாது மற்றும் மகள்களின் திருமணத்தின் மூலமாக வரும் தொடர்புள்ளவர்கள் கைகளில் சொத்து சென்றுவிட அனுமதிக்கக் கூடாது என்பதே அவர்களின் முழுமையான நிலைபாடு. சமூக அழுத்தத்தின் காரணமாக இன்றும்கூட பல மகள்கள் தங்களின் மரபுவழி சொத்துரிமையைத் தங்கள் சகோதரர்களிடம் விட்டுக் கொடுத்துவிட நேர்கிறது.  

            இதன் தொடர் விளைவாய், இன்றைய பேராவல் மிக்க இளைஞர்களின் பெரும் பகுதி, வாழ்வில் செல்வம் மற்றும் லாபம்தரும் பதவிகளை அடைவதை இலட்சியமாகக் கொள்கிறது. அவர்களால் பிராண்டட் நுகர்வுப் பொருட்கள் நிரம்பி வழியும் சந்தைப் பொருளாதாரத்திற்கும் பழமைவாத மரபுவழி, அறிவுக்குப் பொருத்தமில்லாதவை, மதத்தின் பெயரால் மூட நம்பிக்கை சடங்குகள், பண்பாடு மற்றும்  பாரம்பரியம் இவற்றுக்கிடையில் எந்த முரண்பாட்டையும் இனம்பிரித்துக் காண முடியவில்லை.

            மேலும் அவர்கள் பிரம்ம சமாஜ் மற்றும் ராம்மோகன் ராயின் தத்துவம் போன்ற பல்வேறு சமூக-சமய சீர்திருத்த இயக்கங்களைப் பற்றி அதிகமாக எதுவும் அறியாதவர்களாக இருக்கிறார்கள். பல நேரங்களில் அவர் ‘இரகசிய கிருஸ்துவர்’ (கிரிப்டோ கிரிஸ்டியன்) அல்லது ஒரு ‘பிரிட்டிஷ் ஏஜென்ட்’ என்றெல்லாம் சமூக ஊடகங்களில் அவதூறாக இழிவு செய்யப்பட்டார். மாறாக யாருக்காவது அவர் ஒரு ஏஜென்ட்டாக இருந்திருப்பார் எனில் அது, டெல்லியின் முகலாயப் பேரரசர் இரண்டாவது அக்பருக்குத்தான்; அவர்தான் பிரிட்டிஷ் அரசிடமிருந்து உரிமைத் தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற தமது வழக்கில் வாதாடியதற்காக ராம்மோகன் ராய்க்கு 1928ல் ராஜா என்ற பட்டத்தை வழங்கினார். 1830ம் ஆண்டின்போது மொகலாயப் பேரரசரைக் கிழக்கிந்திய கம்பெனி அவமரியாதையாக நடத்தியதை எதிர்த்த மேல்முறையீட்டு மனுவில் கிங் வில்லியம் IV அவையில்  பேரரசரைப் பிரதிநிதித்துவப்படுத்த ராம்மோகன் ராயை இரண்டாம் அக்பர் லண்டனுக்கு அனுப்பினார்.

            இறுதியாக இந்தியாவில், பத்திரிக்கை சுதந்திரத்திற்குப் பரிவான ராம்மோகன் ராயின் ஆதரவு கருத்துகள் இன்றைக்கும் பொருத்தமானது. 1823 மார்ச் 14ல் கவர்னர் ஜெனரல் குழு ஒரு பிரஸ் அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது; அதன்படி செய்திப் பத்திரிக்கைகள் மற்றும் பிற இதழ்களின் அனைத்து உரிமையாளர்களும் கவர்னர் ஜெனரலிடமிருந்து லைசென்ஸ் பெறுவது கட்டாயமானது. இதனை ராம்மோகன் ராய் எதிர்த்தார், இரு வழக்கறிஞர்களை அமர்த்தி உச்நீதி மன்றத்தில் வழக்காடச் செய்தார். ஆனால் அவர் வெற்றி பெறவில்லை. நல்ல ஆட்சி நிர்வாகத்திற்குப் பத்திரிக்கை சுதந்திரம் மிக முக்கியமான முன் நிபந்தனையென எப்போதும் வலியுறுத்தினார். இருப்பினும், அவரது வெளிப்படையான நிலைபாடுகள் மற்றும் உரையாடல் விவாதங்கள் நம் நாட்டில் சர் சார்லஸ் மெட்கால்ஃப் (Sir Charles Metcalfe) தாராளச் சிந்தனை நடவடிக்கைகளுக்கு 1835ல் வழியமைத்தன.

      (பிரிட்டிஷ் சிவில் அதிகாரியான மெட்கால்ஃப் போன்ற வேறெந்த ஆங்கிலேயரும் இந்தியாவுக்குச் சேவை புரிந்ததில்லை. அவர் 38 ஆண்டுகள் இந்தியாவில் வாழ்ந்தார். சீர்திருத்தத்திற்கான அவரது வேட்கை, மிகத் தொடக்கத்தில் 1812ம் ஆண்டிலேயே டெல்லி பகுதியில் அடிமை முறை மற்றும் சதி, சிசுகொலை வழக்கங்களுக்குத் தடை விதிக்கத் தூண்டியது. அவர் முற்போக்கு கருத்தோட்டங்களுடன் கூடிய திறமையான சிவில் அதிகாரி. அவரது தாராள பத்திரிக்கை கொள்கை அவர் மீது இந்தியர்களை அன்பு கொள்ளச் செய்தது. அந்த அன்பினால் இந்தியர்கள் அவர்பெயரில் கல்கத்தாவில் மெட்கால்ஃப் ஹால் ஒன்றை ஏற்படுத்தி அங்கே அவரது மார்பளவு சிலையையும் அமைத்துள்ளனர். –இணையத்திலிருந்து)

            இன்றைய நாளின் இந்தியாவில் 154 பத்திரிக்கையாளர்கள் கடந்த பத்தாண்டுகளில்

மட்டும் கைது செய்யப்பட்டுள்ளனர், பலர் மீது பிணையில் வரமுடியாத குற்றச்சாட்டுகள் பதியப்பட்டுள்ளன. (அரசை விமர்சனம் செய்தார்கள் என்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள) பல பத்திரிக்கையாளர்களுக்குத் தங்கள் வழக்கை நீதிமன்றங்களில் நடத்திப் போராட போதுமான பணம் இல்லை. சமூக ஊடகத்தில் ஆளும் ஆட்சியாளர்கள் குறித்து எழுதினால் ஒருவர் சிறையில்தான் அடைபட வேண்டும் என்ற நிலை. காலனிய ஆட்சியாளர்களின் புத்தியில் பிறந்த தேசத் துரோகச் சட்டம் (ஸெடிஷன் லா) இன்னும் ஒழிக்கப்படாமல் இன்றைய ஆட்சியாளர்களின் மடியில் தவழ்கிறது.

            இன்று ராம்மோகன் ராய் உயிருடன் இருந்தால் நாட்டில் நிகழும் நிகழ்வுகள் குறித்து அவரது எதிர்வினை என்னவாக இருக்கும் என்று கற்பனை செய்தால் வியப்பாக இருக்கும். அவருடைய காலத்திற்கு முந்தியிருக்கும் சிந்தனையாற்றல் உள்ளவராக அவர் இருந்தார்; ஆனால் இன்றைய இந்தியாவோ அவர் கருத்தோட்டத்தின்படியான இந்தியாவிலிருந்து மிகவும் பின்னடைந்து நகர்ந்துள்ளது. இன்றைக்கு மிக முக்கியமான கேள்வி அப்படியே இருக்கிறது: ராஜா ராம்மோகன் ராயின் கருத்துக்களின் அடிப்படையில் பெருமளவிலான சமூக விழிப்புணர்வை அடையச் செய்வது இன்று சாத்தியமா? அல்லது இல்லையா?

            கேள்வி அப்படியே இருக்கிறது!

         --நன்றி : நியூஏஜ் (ஜூன் 26 – ஜூலை 2)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

Monday 20 June 2022

நீதிபரிபாலனம், அனைவருக்கும் ஓர்நிறை மற்றும் நீதியை உறுதிப்படுத்த வேண்டும்!

    நீதிபரிபாலனம், அனைவருக்கும் 

          ஓர்நிறை மற்றும் 

நீதியை உறுதிப்படுத்த வேண்டும்!

--நீதியரசர் மதன் பீமாராவ் லோகுர்
உச்சநீதிமன்ற நீதிபதி (பணி ஓய்வு)

நாட்டில் இரண்டு நீதிமுறைகள் நிலவுகிறதா? உண்மையில் உச்சநீதிமன்றம் சொல்லியது: ‘‘இந்தியாவில் – ‘ஒன்று, பணக்காரர்கள், வசதி படைத்தோர் மற்றும் அரசியல் அதிகாரத்தையும் செல்வாக்கையும் வளைக்கத் தெரிந்தோருக்கானது; மற்றது, வசதியற்றவர்கள், நீதியைப் பெறும் சக்தியற்றவர்கள் அல்லது அநீதியை எதிர்க்க முடியாதவர்களுக்கானது’ என இணையான இரண்டு நீதி முறைகள் இருக்க முடியாது.” நல்லது, எதார்த்தத்தில் உண்மை, இரண்டு இணையான நீதி முறைகள் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்பதை நமக்கு உணர்த்துகிறது. அதைத்தான் டெல்லி முந்த்கா மெட்ரோ ரயில் நிலையம் அருகில் உள்ள வணிக வளாகத்தில் நிகழ்ந்த துயர்மிகு தீ விபத்தும், புல்டோசர் உதவியுடன் நடத்தப்பட்ட ஜகான்கீர்புரி இடிப்பு நடவடிக்கைகளும் நமக்கு எடுத்துக் காட்டுகின்றன.

அகதிகளாக்கும் புல்டோசர்

டெல்லி மற்றும் அதைச் சுற்றிலும் எண்ணற்ற சட்டவிரோதக் கட்டுமானங்கள், அது போல நாட்டின் பலபகுதிகளிலும் இருப்பது ஊரறிந்த ரகசியம். டெல்லியைப் பொருத்தவரை 80 சதவீதத்திற்கும் மேற்பட்ட கட்டடங்கள் சட்டவிரோதமானவை மற்றும் பொது இடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டவை என அழைக்க முடியும் என முதல்வர் அரவிந்த் கேசரிவால் கூறியுள்ளதாகத் தகவல்; மேலும் சமீபத்திய புல்டோசர் இடிப்பு நடவடிக்கைகள் தொடருமெனில் 63 லட்சம் மக்கள் வீடு இழந்து அகதிகள் ஆவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

வீடு இழந்து நிர்கதியானவர்கள் மிகப் பெரும்பாலும் ஏழைகள், ஏதுமற்றவர்களாகவே இருப்பர் என நான் நம்புகிறேன்; ஏனெனில் பணம், ஆள் படை அம்பு அதிகாரம் அல்லது அரசியல் சக்திமிக்க செல்வாக்குடையவரைத் தொட்டுவிடும் துணிச்சல் மாநகராட்சி அதிகாரிகளுக்கு இல்லை. கடந்த காலச் சமீப உதாரணங்கள் சிலவற்றைப் பார்க்கலாம்: எங்கே கட்டுமானங்கள் கட்டப்படக் கூடாதோ, ஆனால் அங்கெல்லாம் கட்டடம் எழும்பி இருக்கும்; துயர நிகழ்வு நேரும் முன் (விதிகளுக்குப் புறம்பான) அவை இடிக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் துரதிருஷ்டவசமாக அங்கெல்லாம் நடவடிக்கை எடுக்கப்பட்டிராது; காரணம், அந்தக் கட்டடங்களோடு தொடர்புடையவர்கள் பணக்காரர்களாக, அல்லது ஆள் படை அம்பு அதிகாரம் மிக்கவர்களாக, அல்லது அரசியல் செல்வாக்குடையவர்களாக அல்லது இந்த மூன்றும் உடையவராய் இருக்கலாம்.

உப்ஹார் சினிமா தியேட்டர் துயர நிகழ்வு

டெல்லி கீரின் பார்க் பகுதியின் புகழ்பெற்ற உப்ஹார் தியேட்டரில் 1997ல் நடந்த துயர்மிகு தீ
விபத்து இன்றும் தொடர்ந்து நம்மைத் துன்பப்படுத்துகிறது. இந்த ஜூன் 13, மறக்க முடியா பேரழிவின் 25வது ஆண்டு. 59 உயிர்களை இழந்த, நூற்றுக்கும் மேற்பட்டோர் துன்புற்ற தீக்காயங்களின்  நெஞ்சைப் பிழியும் சோகம் நினைவில் ஆடுகிறது. தங்கள் அன்பிற்குரியோரை இழந்த குடும்பங்கள் தூக்கம் தொலைத்த கொடுங்கனவாய் அதிலிருந்து மீள முடியாத துயரம் புரிந்து கொள்ளக்கூடியது. அத்துயருக்குக் காரணமான தியேட்டர் உரிமையாளர்கள் மற்றும் விபத்தை அனுமதித்த அதிகாரிகள் தண்டிக்கப்பட்டார்கள் (7 ஆண்டுகள் சிறை தண்டனை) என்பது உண்மையாயினும், அது அவர்களுக்கு என்ன ஆறுதலை அளிக்க முடியும்?

என்னுடைய கேள்வி இதுதான்: முனிசிபல் அதிகாரிகளுக்குத் தெரிந்தே நடந்த இந்தத் துயரினைத் தடுக்க அந்த அதிகாரிகள் என்ன செய்தார்கள்? ஏன் (கட்டட விதிகள்) சட்டத்தை அமல்படுத்தவில்லை? அந்தக் குற்றச் செயல் அலட்சியத்திற்கு அவர்கள் தகுந்த முறையில் தண்டிக்கப்பட்டார்களா? யாருக்கும் இதற்கான விடை தெரியாது, ஒருக்கால் எல்லா வகையிலும் அவர்கள் எளிதாகத் தப்பி வெளியே வந்திருக்கலாம். நீதிபரிபாலன முறையில் பொறுப்பு (அக்கௌண்டபிலிட்டி) என்பது இல்லை என்பதற்கு உப்ஹார் துயரம்  சிறந்ததோர் உதாரணம்; வருத்தமாக இருப்பினும், இந்தியாவில் நீதிபரிபாலனம் (ஜூரிஸ்-ப்ருடன்ஸ்) நிலவவில்லை (என்பதே எதார்த்தம்)

நீதிபரிபாலனத்தில் பொறுப்பின்மை என்பது நீண்ட காலப் பின்விளைவுகளை உடையது. வருமுன் காக்கும் பாதுகாப்புப் பாடங்கள் கற்கப்படுவதே இல்லை. சில பாடங்கள் கற்றாலும் அதுவும் விரைவில் மறக்கப்பட்டு, தீர்வு நடவடிக்கைகள் எடுக்கப்படுவதில்லை. பிரச்சனை சிறிதாக இருக்கும்போது காலத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டால் பின்னர் வருந்தத் தேவையில்லை; முள்செடியை எளிதாகப் பிடுங்கி எறிவதுபோல மரமாக வளர்ந்த பிறகு முடியாது, அது நம் கையைப் பதம் பார்க்கும் என வள்ளுவரும் எச்சரிப்பதை நினைவில் கொள்க. பின்விளைவு பலவகைகளில் மீண்டும் மீண்டும் பெருந்துயராய் வட்டமிட்டுத் தொடர்ந்து நிகழும். நாம் மேலும் சில உதாரணங்களைப் பார்க்கலாம்:

பவானா தொழிலகப் பகுதி பெரும்தீ  

          2018 ஜனவரியில் டெல்லிப் புறநகரின் பவானா தொழிலகப் பகுதியில் நடந்த பெரும் தீவிபத்து 17 உயிர்களைப் பலி வாங்கியது, மிகப் பலருக்குக் கடுமையான தீக் காயம்.

தொழிற்சாலை அதிபர் கைது செய்யப்பட்டு பின்னர் பிணையில் விடுதலையானார். உப்ஹார் துயரச் சம்பவத்திலிருந்து பாடம் கற்றிருந்தால், தீர்வு நடவடிக்கைகள் ஏதும் எடுக்கப்பட்டிருந்தால், உப்ஹார் பெரும்தீ மீண்டும் நிகழாது தடுக்கப்பட்டிருக்கும் அல்லவா? மீண்டும் உயிர்ப் பலி வாங்கும் தீ விபத்துக்கள் நடக்குமென்றால், மாநகராட்சி மற்றும் சட்டரீதியான அதிகாரமுடைய அதிகாரிகள் தங்கள் பணிகளைச் செய்யவில்லை என்பதே சாதாரணமான பொருள். அவர்கள் கடமையைச் செய்திருந்தால் பவானா துயரம் நடந்திருக்காது. அதிகாரிகளின் மெத்தனம், நடவடிக்கையின்மையே   பவானா பெரும் துயருக்குப் பொறுப்பு என அவர்கள் ஏன் பொறுப்பாளி ஆக்கப்படவில்லை? யாருக்குத் தெரியும், நாமறியோம் பராபரமே!

ஆர்பிட் பேலஸ், சர்தார் பஜார் அனாஜ் மண்டி தீ விபத்துகள்

            ஓராண்டிற்குப் பிறகு மற்றொரு தீ விபத்து மக்கள் கூட்டம் நிரம்பிய கரோல் பாக் பகுதியின்  ஹோட்டல் ஆர்பிட் பேலஸ் இடத்தில் ஏற்பட்டது. 17பேர் பலி, 35 பேர் காயம். (ஹோட்டலுக்கு லைசென்ஸ் வழங்கிய) மாநகராட்சி அதிகாரிகள் கண்ணை மூடியிருந்து நடவடிக்கை எடுக்காது மெத்தனமாக இருந்ததற்காக அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

            அதே ஆண்டு 2019 டிசம்பரில் டெல்லி, சர்தார் பஜார் பகுதியின் அனாஜ் மண்டியில் பெரும் தீ விபத்து. அதில் 43 பேர் மடிந்து, 67 பேர் கடுமையாகக் காயமடைந்தனர். இறந்து போனவர்கள் பீகார் மற்றும் உபி யிலிருந்து வந்த புலம் பெயர்ந்த தொழிலாளர்கள், இப்போது அவர்கள் வெறும் புள்ளிவிபரமாகச் சுருங்கினர். அந்தக் கட்டடத்தில் சட்டவிரோதமான உற்பத்தி அலகுகள் செயல்பட்டு வந்தன. அதற்குத் தீ அணைப்புத் துறையிலிருந்து தடையில்லாச் சான்று இல்லை. அக்கட்டடத்தில் குவிக்கப்பட்டிருந்த எரியக்கூடிய பொருட்கள், ஒரு துயரம் நிகழக் காத்திருந்தது. பரவிய தீ நாக்குகளிலிருந்து அந்தத் தொழிலாளர்களுக்குத் தப்பியோட முடியாதபடி வெளியேறும் வாயில் பொருட்களால் திணிக்கப்பட்டிருந்தது. ஜன்னல்கள் சீல்வைக்கப்பட்டிருந்தால், அபாயகரமான புகை மற்றும் கார்பன் மோனாக்ஸைடு நச்சு வாயு சூழ இறுதியில் பரிதவித்து மூச்சுத் திணறி அவர்கள் மாண்டனர். கட்டட உரிமையாளர்கள் மற்றும் அவர்களது குழாம் கைது செய்யப்பட்டனர்; அதனால் என்ன, பின்னர் பிணையில் விடுதலையானார்கள். கடமை தவறிய மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் தீ விபத்துத் தடுப்புக்கான தடையில்லா சான்று வழங்கும் அதிகாரிகளுக்கு எதிராக என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? அவர்கள் அல்லவா இந்த அத்துமீறல்கள், விதி மீறல்கள் தொடர்வதற்கு அனுமதித்தார்கள். கட்டட உரிமையாளர்களைப் போலவே அவர்களும் அல்லவா அதற்கான பழியை ஏற்க வேண்டும்? அவர்கள் பொறுப்பு இல்லையா அல்லது அவர்கள் கண்களை மூடிக் கொள்ள – தீமைகளைப் பார்க்காதது போல பாவனை செய்ய – ஒருக்கால் கையூட்டு அளிக்கப்பட்டிருக்கலாம் என்பதால் அவர்கள் சுலபமாகத் தப்பிச் சென்றுவிட உரிமை படைத்தவர்களா, என்ன?

கட்டடங்களின் அடிப்படை குறைபாடுகள்

            இது போன்ற பல நிகழ்வுகள். கலெக்டிவ் டெல்லி என்ற மாணவர் இளைஞர் அமைப்பு இந்தத் துயர நிகழ்வுகளை எல்லாம் நன்கு பட்டியலிட்டு ஆவணமாக்கி அதன் ஒரே மாதிரியான புறக்கணிப்பு அலட்சிய குற்றத்தைக் கண்டறிந்து வெளிப்படுத்தியுள்ளனர். பிரதானமாக, வானுயர்ந்த பிரம்மாண்டமான கட்டடங்கள் எந்தவிதக் கட்டட வரைபடத் திட்ட அனுமதியும் பெறாமல் கட்டி எழுப்பப்பட்டுள்ளன. இவை யாருமறியாமல் இருளில் கட்டப்பட்டதல்ல, பட்ட பகலில் சில மாதங்களில் நடத்தி முடிக்கப்பட்டவை. அப்படிக் கட்டிக் கொண்டிருந்த காலத்தில் மாநகராட்சி அதிகாரிகள் என்ன செய்து கொண்டிருந்தனர்? இக்கட்டடங்களுக்குத் தீயணைப்புத் துறையிலிருந்து தடையில்லா சான்றிதழ் இல்லை; அதைவிட அதிர்ச்சி, சிலர் அச்சான்றிதழுக்கு மனுகூடச் செய்யவில்லை; விளைவு, இவை உயிருள்ளோருக்கான சுடுகாடானது. சாதாரணமாக இங்கு தீயை எதிர்த்துப் போரிடும் அடிப்படையான நடவடிக்கைகள் காண முடியாது; தேவையான தீ அணைப்புக் கருவிகளோ, தப்பி ஓடும் அவசரகாலப் படிக்கட்டுகள் போன்ற எவையும் இங்கே இராது; இந்தக் கட்டடங்க்ளில் ஒரே நுழைவாயில் அல்லது வெளியேறும் வழி மட்டுமே இருக்கும் என இவற்றின் போதாமைகளைச் சொல்லிக்கொண்டே போகலாம்.

முந்த்கா தீ விபத்து

           இத்துயரங்களின் தொடர் நிகழ்வில் சமீபத்திய துயரம் முந்த்கா. நான்கு மாடி கட்டடத்தில் இரண்டு தளங்களில் தொழிற்சாலை உற்பத்தி நடவடிக்கைகள் நடந்து வந்தன. இதற்குத் தீ

விபத்துத் தடையில்லாச் சான்றிதழ் இல்லை, தீயணைப்புக் கருவிகள் இல்லை. தொழிலாளர்களின் பெரும்பாலானவர்கள் பெண்கள். தீ சூழ்ந்து அதில் சிக்குண்டபோது குறைந்தபட்சம் 27பேர் மாண்டனர், சிலர் அடையாளம் தெரியாத அளவு கரிக்கட்டையாய் மோசமாக மடிய, அடையாளம் காண டிஎன்ஏ சோதனை மேற்கொள்ள வேண்டி வந்தது.

            இக்கட்டடத்தில் ஒரே வழி மட்டும் இருந்ததாகத் தகவல். எப்படி நான்கு மாடி கட்டடம் ஒரே உள்நுழைவு அல்லது வெளியேறும் வழியுடன் மட்டும் மேலெழ அனுமதிக்கப்பட்டது? அப்படிக் கட்டப்பட்டதற்குப் பிறகாவது கட்டட விதிகள் மற்றும் தீவிபத்துப் பாதுகாப்பு விதிகள் பின்பற்றப் பட்டதா என்பது உறுதிபடுத்தப்பட்டதா? இதற்கான பதில் தெரிந்ததுதான்; பணக்கார, சக்திமிக்க மற்றும் ஒருக்கால் அரசியல் செல்வாக்குடைய உரிமையாளர்கள் அல்லது கட்டட ஒப்பந்ததாரர்கள் மீது என்றாவது நடவடிக்கை பாய்ந்ததுண்டா?

            ‘தொழிற்சாலை’ உரிமையாளர் கைது செய்யப்பட்டார், ஆனால் மிக விரைவில் அவர்கள் பிணையில் வெளியேவந்து விடுவார்கள் என்பது தெரிந்ததுதானே. கட்டட உரிமையாளர் தப்பி ஓடிவிட்டார், அவர் பிடிபட்டு கைதான பிறகு அவருக்கும் பிணை கிடைக்கும். அதிகாரிகளுக்கு? அவர்களில் சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர் – அவ்வளவுதான். என்ன நடந்துவிட்டது, சமகாலத்து அடிமையாக ஊக்குவிக்கப்பட்டு குறைந்தபட்ச ஊதியத்தில் பாதிக்கும் குறைவாகக் கூலி பெற்றுவந்த 21 பெண்கள் உட்பட வெறும் 27பேர் இறந்தனர். இப்படிச் சர்வ சாதாரணமாகக் குற்றநடவடிக்கைக்கான பொறுப்பு மேம்போக்காக மென்மையாகக் கையாளப்படுவதே எப்படியும் தண்டனையிலிருந்து தப்பிவிடலாம் என்ற கலாச்சாரத்தை வளர்க்கிறது; நாம் இந்தக் கேலிக்குரிய நாடகத்தின் மௌனச் சாட்சிகளாக இருக்கிறோம். பொறுப்பு என்பது அந்த லட்சணத்தில் இருக்கிறது.

தீ விபத்துத் துன்பியலும், புல்டோசர் ‘நீதி’ துன்பியலும்

            ஒரு முரண்பாடான ஒப்பீடு. ‘பணக்கார, எதையும் சமாளிக்கும் ஆள் படை அதிகாரத் திறன்மிக்க’வர்களுக்குச் சொந்தமான சட்டவிரோத மற்றும் அனுமதி பெறாத கட்டுமானங்களுக்கு எதிராக நடவடிக்கை இன்மையால் விளைந்த இந்தத் தீ விபத்துத் துயரங்களை; டெல்லி ஜகான்கீர்புரியில் “எதையும் சமாளிக்கும் ஆள் படை அம்பு அதிகாரமற்ற சிறிய மனிதர்களுக்கு’ எதிராகப் புல்டோசர்களை ஏவி விரைந்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகள் இப்போது சட்ட அகராதியில் அறிமுகம் செய்துள்ள புல்டோசர் நீதியுடன் ஒப்பிடலாம்!

            முன்னறிவிப்பு நோட்டீஸ் மற்றும் எச்சரிக்கை ஏதும் அளிக்காமல் புல்டோசர்கள் வந்தன; மேலே குறிப்பிட்ட சிறிய மனிதர்களான ஆண்கள் பெண்களின் வீடுகளை, த்ஹிலா என்னும் தள்ளு வண்டி அல்லது கடை/ஸ்டால் இவற்றை இடித்து நொறுக்கி நசுக்கியது. உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள்: “அவர்கள் பணக்காரராக, அதிகாரம் மிக்கவராக அல்லது அரசியல் செல்வாக்குடையவராக இருந்திருந்தால் இத்தகைய செயலூக்கமுள்ள அநீதிக்கு அவர்கள் ஆட்படுத்தப்பட்டிருப்பார்களா?” (“சூத்திரனுக்கு ஒரு நீதி, தண்டச் சோறுண்ணும் பார்ப்புக்கு வேறொரு நீதி எனச் / சாத்திரம் சொல்லிடும் ஆயின், அது சாத்திரமன்று – சதி என்று கண்டோம்” என்று பாரதி சீறுவதுபோல) சட்டங்கள் இரண்டு வகையான இந்தியர்களுக்கு வேறு வேறாக இருக்கிறதா? ஏழையாக இருப்பதுவே ஒரு குற்றம்போலத் தோன்றுகிறது.

            உங்களை நீங்களே கேட்டுக் கொள்ளுங்கள், ஒரு கற்பனைதான்: ‘ஒரு நாள் திடீரென்று உங்கள் வீட்டிற்கு வெளியே புல்டோசர் ஒன்று வந்து நிற்பதைப் பார்க்கிறீர்கள். என்ன என்று தெரிந்து கொள்வதற்கு முன் --உங்கள் உடமைகளும், உங்கள் அன்றாட ஆடை அணிகலங்கள் போன்ற தனியுடமைகளும் அன்பிற்குரிய சொந்தங்களும் இன்னும் உள்ளே இருக்கும்போதே -- சில மணித் துளிகளில் அந்த ராட்ஷச இயந்திரத்தின் இரும்புக் கரம் உங்கள் சேமிப்பு மற்றும் வியர்வையால் கட்டப்பட்ட இல்லத்தை இடித்து நிர்மூலப்படுத்தத் தொடங்குகிறது. அப்போது உங்கள் மனநிலை எப்படி, என்னவாக இருக்கும்?’

ஜகான்கீர்புரி அட்டூழியமும் அதிகாரிகள் பொறுப்பின்மையும்

                          ஜகான்கீர்புரியில் அரச வன்முறையால் பாதிக்கப்பட்ட உதவ யாருமற்றவருக்கு

முன்னறிவிப்பு நோட்டீஸ் வழங்கப்படவில்லை. இடிப்பு நடவடிக்கைகள் தான்தோற்றித்தனமான தன்னிச்சையானவை என்பது தெளிவு. ஆனால் உச்ச நீதிமன்றம் தலையிட்டு, இடிப்பு நடவடிக்கைக்கு எதிராகத் தடையாணை வழங்கிய பிறகும், அதிகாரிகள் தங்கள் இதயமற்ற நடவடிக்கைகளைத் தொடர்வார்கள் எனில் அவர்களுக்கு அந்தத் துணிச்சல் எப்படி வந்தது? சரி, ஆக்கிரமிப்புக் கட்டட இடிப்பு ஒருபக்கம் இருக்கட்டும், சிறு வியாபாரத் தள்ளுவண்டி (த்ஹிலா) என்பது இடம் பெயரும் சொத்துதானே, அதை அடித்து நொறுக்கியதை மாநகராட்சி அதிகாரிகள் எப்படி நியாயப்படுத்த முடியும்? தள்ளு வண்டி உரிமையாளரை அதை எடுத்துச் செல்லும்படிச் சுலபமாகச் சொல்லியிருக்க முடியுமே? ஆனால் ‘பணக்கார, ஆள் படை அம்பு அதிகாரம், அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்த முடிந்த’ மனிதர்கள்போல அல்லாமல், ‘பிரச்சனைகளைச் சமாளிக்க முடியாத, அதற்கான திறன்கள் அற்ற எளிய சிறிய மனிதர்கள்’ எதிர்த்துப் போராட மாட்டார்கள் என்பது ‘ஆண்மையுடைய’ மாநகராட்சி அதிகாரிகளுக்குத் தெரியும்.

கவலையில்லா அதிகாரிகள்

            இடித்து நொறுக்கப்பட்ட வீட்டை மீண்டும் முதலிருந்து எடுத்துக் கட்டுவதற்கோ மீண்டும் வாழ்வில் அடியெடுத்து வைப்பதோ எளிய சிறிய மனிதருக்கு அத்தனை எளிதானதில்லை. இது பொருளாதாரம் சம்பந்தப்பட்டதெனில், அம்மனிதர்களின் மனநிலை ஆரோக்கிய அம்சத்தைப் பாருங்கள். அது எப்படி பாதிக்கப்பட்டிருக்கும்? ஆகப் பெரிய துயரும், இடியாய் வந்திறங்கிய திகலும் அத்தனை எளிதாக அகன்று சென்றுவிடாது. ஆனால் புல்டோசரை இயக்கி புளகாங்கித மகிழ்ச்சி அடையும் அதிகாரிகளுக்கு இவையெல்லாம் ஒரு பொருட்டா, என்ன? என்னதான் பெருமளவிலான தீ விபத்துக்கான கண்ணிவலை பொறிகளாக அனுமதி பெறப்படாத கட்டடங்கள் மீது அவர்கள் நடவடிக்கை எடுக்காமல் அப்படியே இருக்க விட்டுவிட்டாலும், அல்லது சிறிய, அனுமதி பெறாத கட்டடத்தைத் தன்னிச்சையாக இடித்தாலும் அவர்கள் இதற்குப் பொறுப்பாக மாட்டார்கள் என்பது அவர்களுக்குத் தெரியும். பிறகு ஏன் கவலைப்பட வேண்டும்?

சட்டத்தின் ஆட்சி 

            நீதி அனைவருக்கும் சரிசமமாக வழக்கப்படுவதாக இருக்க வேண்டும். ஆனால் நாம் சந்தித்து வரும் பெரு நிகழ்வுகளின் கடைதல்களைக் காணும்போது அது சட்டப்படியான ஆட்சிக்கு எந்த நன்மையும் செய்யாது என நான் அச்சப்படுகிறேன். உயிர் இழப்பு ஏற்பட்ட இடத்தும் நடவடிக்கை இன்மை என்பது மன்னிக்கப்படுகிறது, தான்தோற்றித்தனமான நடவடிக்கையால் வாழ்வாதாரம் மற்றும் வாழுமிடம் இழந்தாலும் அந்நடவடிக்கை ஏற்கப்படுகிறது. இது எந்த வகையான சட்டப்படியான ஆட்சி?

என்னதான் தீர்வு?

            இழப்பீடு மட்டுமே ஒரே பதில் இல்லை – அது மிகச் சுலபமான பதில். இதற்கான தீர்வு, அனுமதி பெறாத ஒரு கட்டுமானத்தின் ஒப்பந்தரார் மற்றும் கட்டட உரிமையாளர் போலவே நமது அதிகாரிகளையும் அரசியலமைப்புச் சட்டத்திற்கும் சட்ட விதிகளுக்கும் பொறுப்பாக்குவதேயாகும். அதிகாரிகளின் நடவடிக்கை இன்மை, அலட்சியம் அல்லது குற்ற நடவடிக்கைசார் அலட்சியம் இவற்றிற்காக அவர்களைத் தண்டிக்காத வரை, அகால மரணங்கள் தொடரவே செய்யும் – நாமும் ஒவ்வொரு முறையும் அவலங்களைக் காணும்போது திடுக்கிட்டு விழித்துக் கொள்வோம்.

           மறுபுறம் தான்தோற்றித்தனமான, மேலதிகத் தன்னிச்சை நடவடிக்கைக்காக அதிகாரிகள் தண்டிக்கப்படாவிட்டால், தண்டனையிலிருந்து விலக்குப் பெற்றுத் தப்பிவிடும் கலாச்சாரத்தை நாம் ஊக்கப்படுத்தி வளர்ப்பவர்கள் ஆவோம். நமது நீதி வழங்கும் முறையில் நீதிபரிபாலனப் பொறுப்பு என்பது வேர்பிடிக்க வேண்டும்; அப்போதுதான் தண்டனை விலக்குக் கலாச்சாரத்துடன் வளர்ந்த நம் அதிகாரிகள் அமைப்பு என்பது நமது அகராதியிலிருந்து மறையும். வளர்ந்தோங்கிக் கவ்விப் பிடிக்கும் தீ நாக்குகள் இவ்வளவு உயிர்களைச் சுட்டுப் பொசுக்கிய பிறகாவது, புல்டோசர் நீதியின் தோற்றத்தால் பெரும் எண்ணிக்கையிலான மக்கள் வீடிழந்த பிறகாவது – குறைந்த பட்சம் நாம் இதனைச் செய்ய வேண்டும்!

இப்படித் திருத்துவோம்

            நமது பெரும் சட்ட ஒளிவிளக்குகள் மும்முரமாக சட்டங்களை திரும்ப எழுதி வருவதில்


ஈடுபட்டிருப்பதால் இப்படித் திருத்தி எழுதுவது ஒரு நல்ல யோசனையாக இருக்கும். ஏழைகள் மற்றும் சமூகத்தின் விளம்புநிலை மக்கள் கைகளில் அதிகாரத்தை அளிப்பதாகச் சட்டங்களைத் திருத்தித் திரும்ப எழுதுங்கள்! வெட்கமற்று துணிந்துவிட்ட அதிகாரிகளை அரசியலமைப்புச் சட்டம் மற்றும் சட்ட விதிகளுக்குப் பொறுப்பாக்கிச் சட்டங்களைத் திருத்தித் திரும்ப எழுதுங்கள்! பணம், ஆள் படை அம்பு அதிகாரம்நிறைந்த, அரசியல் ரீதியில் செல்வாக்குடையவர்களையும் சட்டத்திற்கு உட்படுமாறு சட்டங்களைத் திருத்தித் திரும்ப எழுதுங்கள், அது நல்ல யோசனையாக இருக்கும்.

            அதன் பிறகுதான் அரசியலமைப்புச் சட்டம் உறுதியளித்த வாழ்க்கைக்கான உரிமை மற்றும் கௌரவத்துடன் உயிர் வாழ்வதற்கான உரிமை என்பது “நிலைமைகளைச் சமாளிக்க முடியாத, நீதியைப் பெறத் திறனற்ற அல்லது அநீதியை எதிர்த்துப் போராட முடியாத எளிய சிறிய மனிதர்களுக்கு (ஆண் பெண் இருபாலரும்)” ஏதாவது அர்த்தமுடையதாக இருக்கும்.

            “சமன்செய்து சீர்தூக்கும் கோல்போல் அமைந்தொருபால்

             கோடாமை சான்றோர்க்கு அணி”                     --குறள் 118

 “எல்லாரும் ஓர் நிறை எல்லாரும் ஓர் விலை

  எல்லாரும் இந்நாட்டு மன்னர் – ஆம்

  எல்லாரும் இந்திய மக்கள்”                        --மகாகவி பாரதி 

-- நியூஏஜ் (ஜூன் 19 –25) இதழில் வெளியான                              

              நன்றியுடன் The Leaflet கட்டுரை  

                                                                                                                  --தமிழில் நீலகண்டன்,

                                                                                                                      என்எப்டிஇ, கடலூர்