அக்டோபர் 31
--தோழர் குருதாஸ் தாஸ் குப்தா நினைவுநாள்!
மீள்பதிவு
தோழர் குருதாஸ் குப்தாவுக்கு
முன்னாள் பிரதமர் புகழஞ்சலி
‘தேசம் தனது அர்ப்பணிப்புமிக்கத் தலைவர்களில் ஒருவரை இழந்து விட்டது’
டெல்லியில் 2019 நவம்பர் 18 அன்று இந்தியக் கம்யூனிஸ்ட்
கட்சி ஏற்பாடு செய்த அஞ்சலிக்
கூட்டத்தில்
முன்னாள் பிரதமர் டாக்டர் மன்மோகன் சிங் ஆற்றிய நினைவஞ்சலி உரையிலிருந்து:
“பாராளுமன்றத்தில் இடதுசாரிகளின் குரலை ஓங்கி
ஒலித்தத் திரு குருதாஸ் தாஸ்குப்தா அவர்களின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் பங்கேற்பதில்
மகிழ்ச்சி. நீண்ட காலம் அவரை நெருங்கி அறியும் வாய்ப்பைப் பெற்றவன். எங்களுக்குள் கொள்கை
முரண்பட்டாலும் தாஸ்குப்தா ஓர் அர்ப்பணிப்புள்ள தேசியவாதியாக, அரசியலமைப்புச் சட்டத்திற்கும்
குடியாட்சியின் மதிப்புகளை உயர்த்திப் பிடிக்கும் பற்றுறுதி மிக்கவராக அவர் எப்போதும்
என்னை வெகுவாகக் கவர்ந்துள்ளார்.
நமது ஜனநாயகத்தை மேலும் வளமுள்ளதாக்க அவர்
ஆற்றிய அளப்பரிய பணிகளை நினைவுபடுத்திக் கொள்ள வாய்ப்பு தந்துள்ளது இந்த அஞ்சலிக் கூட்டம்.
குருதாஸ்குப்தாவை ஒரு தலைச்சிறந்த பாராளுமன்றவாதியாக நாம் நினைவுகொள்வோம். ஏழைகள்,
தொழிலாளர் வர்க்கத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சனைகளைத் தனது தனித்துவமான ஆற்றல்மிகு
சொற்பொழிவுகளால், அரசியல் கட்சி சார்புகளைக் கடந்து, வெளிப்படுத்தியுள்ளார். அப்படி
அவர் நாடாளுமன்ற அவைகளில் உரையாற்றும்போது ஆளும் கட்சி, எதிர்கட்சி என அனைவருமே கவனமாக
உற்றுக் கேட்பது வழக்கம்.
தொழிற்சங்க
இயக்கத்தின் மூத்த தலைவர், பொது
எதிரிக்கு எதிராக வேறுபட்ட சங்கங்கள் அனைத்தையும் ஒன்றிணைத்து ஐக்கிய முன்னணி கட்டுவதில்
முன்னோடி. அவரது மறைவில் கம்யூனிஸ்ட் இயக்கம் மட்டுமல்ல, நமது நாடும் அர்ப்பணிப்பு மிக்கத் தலைவர்களில் ஒருவரை, மக்கள்
மிகவும் நேசித்த ஒருவரை இழந்து விட்டது. ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்டவர்களின் உரிமைக்காகத்
தனது வாழ்வையே அர்ப்பணித்தப் பெருமகன் அவர்.
குருதாஸ் குப்தாவின் போற்றத்தக்க குணம் அவர்
ஒருபோதும் அதிகாரம் விரித்த வலைகளில் சிக்கி தனது பணிகளை நிறுத்திக் கொண்டதில்லை. எதிர்கட்சியின்
முக்கியத்துவத்தை அறிந்து மதித்தவர் அவர்; எனினும் மோதலை மீறி ஒருமனதான தீர்வுகளை ஏற்பவர்.
நமது ஜனநாயகத்தின் பேரழகு, தத்துவார்த்த ரீதியில் எதிர் கொள்கையைச் சேர்ந்த திரு குருதாஸ்
குப்தா நாட்டிற்கு ஆற்றிய நல்ல பணிகளை நினைந்து போற்ற நாம் எல்லோரும் ஒன்று கூட முடிகிறது
என்பதுதான்.
மூன்றுமுறை மாநிலங்களவை உறுப்பினராகவும்,
தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களவை உறுப்பினராக இரண்டு முறையும் பணியாற்றிய தாஸ்குப்தா தலைச்
சிறந்த பாராளுமன்றவாதி. பாராளுமன்றத்திற்கு
உள்ளேயும் வெளியேயும் தீப்பொறி பறக்கும் ஆவேச உரைகளில் தொழிலாளர்கள், பொதுமக்களின்
பிரச்சனைகளை முன்னிறுத்தும் உண்மையான தலைவர். மத்திய தொழிற்சங்கத்தின் பொதுச் செயலாளராக
அவருடைய தலைமையில் ஏஐடியுசி மிக பிரம்மாண்டமான சங்கமாக வளர்ச்சி பெற்றது என்பதிலிருந்தே
அவரது தொழிற்சங்க உழைப்பின் மேன்மை விளங்கும். ஏஐடியுசி பொதுச்செயலாளராக
அவர் இருந்தபோது சக்திமிக்க பல போராட்டங்களைத் தலைமை தாங்கி நடத்தியுள்ளார். சங்கங்களை
ஒன்றிணைக்கப் பாடுபட்டு இணைந்த போராட்டங்கள் மூலம் தொழிற்சங்கங்களின் அவசரமான கோரிக்கைகளுக்கு
ஆதரவு திரட்டியுள்ளார். வங்கி,காப்பீடு மற்றும் எண்ணைத் தொழிற்துறை சார்ந்த சங்கங்களின்
வலிமைக்கு அவர் தூண் போன்ற உற்ற துணையாக விளங்கினார்.
எளிமையாக, பணிவும் தன்னடக்கத்துடன் வாழ்வதன்
பேராற்றலை நாம் பலபோழ்து உணராது இருக்கிறோம். கட்சிசார்பு கடந்து அவர் அனைவராலும் மதித்துப்
போற்றப்பட்டார். பாராளுமன்றத்தில் ஓங்கி ஒலிக்கும் குரல் அவருடையது. அவரது கட்சியின்
பல தோழர்கள் போலல்லாது எதிரிகளோடும் கூட வெளிப்படையாக பழகும் பண்புடையவர் குருதாஸ்
குப்தா. அதனால் பாராளுமன்ற செயல்பாடுகளில் எந்தப் பிரச்சனைகளில் எப்போது மற்றவர்களின்
அதரவைத் திரட்ட வேண்டுமோ அப்போது எதிர்கட்சித் தலைவர்கள் எவரையும் தயக்கமின்றி அவரால்
சந்திக்க முடிந்தது.
அவருடைய போல்ஷ்விக் தூய்மைக்கு உண்மை விஸ்வாசமாக,
அதற்கேற்றபடி தோழர் குருதாஸ் தாஸ்குப்தா சிக்கனமான எளிய வாழ்வை மேற்கொண்டாலும், உயர்ந்த கோட்பாடு கொள்கைகளைப் பற்றி
ஒழுகினார். தற்பெருமை விளம்பரம் மற்றும் தற்புகழ்ச்சிகளை அவர் வெறுத்தார். தற்காலத்தில்
அவர் போன்ற தலைவர்களைக் காண்பதரிது. அவரது மறைவால் தேசம்
பெரும் சொற்பொழிவாளரை, புகழ்பெற்ற தொழிற்சங்கவாதியை, திறன்மிக்க நிர்வாகியை, அனுபவமிக்க
பாராளுமன்றவாதியை இழந்து விட்டது.
சமூகத்தின் ஏழைகள் மற்றும் ஒடுக்கப்பட்ட
மக்களுக்கு ஆதரவாக வாதாடிப் போராடிய தலைவர்
அவர்
இந்தத் தேசத்திற்கு ஆற்றிய சேவை மற்றும் அரும் பங்களிப்புகளுக்காக அவர் என்றென்றும்
நினைவு கூரப்படுவார்.
வாழ்க திரு குருதாஸ் தாஸ்குப்தா அவர்களின்
புகழ்.”
--செய்தி : நியூஏஜ்
--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்
No comments:
Post a Comment