Tuesday, 12 May 2026

மார்க்சியமும் 21ம் நூற்றாண்டின் எதார்த்தங்களும் -- --அனில் ரஜீம்வாலே

 

மார்க்சியமும் 21ம் நூற்றாண்டின் எதார்த்தங்களும்

இரண்டு நூற்றாண்டுகளுக்குப் பிறகும் கூட காரல் மார்க்சின் பெயரும் போதனைகளும் உலகெங்கும் மக்களையும், இந்தியாவில் அரசியல் மற்றும் கட்சி கருத்தியல் எல்லைகளைத் தாண்டியும் தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருகிறது. உலகம் தலைசிறந்த பல சிந்தனையாளர்களைத் தந்துள்ளது அவர்களிடமிருந்து நாம் கற்க வேண்டும். ஆனால் யாரும் மார்க்ஸைப் போல சமூகப் பொருளாதார, அரசியல் மற்றும் கருத்தியல்-தத்துவார்த்தப் பிரச்சனைகளில் ஆழமாகச் செல்லவில்லை. ஆனால் அவர் பிரச்சனைகளின் மூலங்களுக்கும் மனித சமூக வளர்ச்சிக்கும் ஆழமாகச் சென்று அதன் இயக்கத்தையும் மற்றும் அதன் பிரச்சனைகளின் வளர்ச்சி மற்றும் நெருக்கடிகள் இரண்டையும் விளக்கினார்.

மார்க்சின் பங்களிப்பு 

பிற சிந்தனையாளர்களும் தலைவர்களும் உழைக்கும் மக்களுடன் அனுதாபப்பட்டு அவர்கள் வாழ்க்கையை மேம்படுத்த தலைமை ஏற்றும்; வாழ்க்கை மற்றும் சமூக நீதி மேம்பாட்டுக்கான அவர்களின் போராட்டத்தை ஆதரிக்கவும் செய்தனர். ஆனால் மார்க்ஸ், சமத்துவமின்மை, சமூக மற்றும் பொருளாதார, ஏன் கலாச்சாரத்திலும் சுரண்டல், ஏழ்மை  முதலான பிரச்சனைகள் ஏன் எழுந்தன என்ற சரியான கேள்வியை எழுப்பினார்; மற்றும் அப்பிரச்சனைகள் என்றென்றைக்குமாகத் தீர்க்கப்பட முடியாததா என்ற கேள்வியையும் எழுப்பினார்.

காரல் மார்க்ஸ் அவரது கண்டுபிடிப்புகள் மூலம் சமூக இருப்பு மற்றும் அதன் இயக்கத்தை ஒரே நிகழ்முறையாக ஒன்றுபடுத்தினார். அவரும் ஃபெடரிக் ஏங்கல்சும் அவர்களின் கோட்பாட்டு ஆய்வுகள் மூலம் இயற்கை, சமூகம் மற்றும் உணர்வுநிலையைக் குறுக்கீடு இடையறுதல் இல்லாத ஒரே நிகழ்முறையாக ஒன்றுபடுத்தினர்: புரட்சியாளர்- களும் ஜனநாயகவாதிகளும் சமூகத்தை மாற்றி புதிய ஒன்றை ஏற்படுத்துவதற்காக அதனைப் புரிந்து கொள்ள வேண்டும்

மற்றவர்கள் மனிதகுல பிரச்சனையின் இந்த அம்சம் அல்லது அந்த அம்சத்தின் மீது பாராட்டுக்குரிய வகையில் ஆய்வை மேற்கொண்டு, மக்களுக்கும் நாட்டிற்கும் ஏதோ சில நன்மையைச் செய்ய மனிதாபிமான அணுகுமுறையைக் கடைப்பிடித்தனர். அவர்களில் பெரும்பாலும் பொதுவாக அவரவர் நாடுகளின் பிரச்சனைகளில் ஆழ்ந்து பரிசீலித்தனர். மார்க்ஸ் இந்த அணுகுமுறையுடன் திருப்தி அடையவில்லை. அவர் உலகச் சமூகத்தின் பிரச்சனையை முழுமையான ஒன்றாகவும் மற்றும் இந்தியா உட்பட தனித்தனி நாடுகளின் பிரச்சனைகளிலும் ஆழமாகச் சென்றார். அவர் ‘ஐரோப்பா மைய’ சிந்தனை கொண்டவர், ஐரோப்பிய சமூகத்தின் பிரச்சனைகளில் மட்டுமே ஆழ்ந்தவர் எனக் கருதுகின்றனர். இது தவறானது. இந்தியா உட்பட ஆசிய சமூகத்தை அவர் நன்றாக அறிவார். இந்தியக் கிராமச் சமூக வகுப்பை அவர் ஆழமாக ஆய்வு செய்தார்; அவர் அதை உற்பத்திமுறை என்றழைத்தார். அவர் சாதி பிரச்சனை மற்றும் அதன் தன்மையையும், வர்க்கங்களுடன் அதன் சிக்கலான பரஸ்பர உள் உறவுகளையும் ஆராய்ந்தார்.

மார்க்சும் இந்தியாவும்

இந்தியா மற்றும் பிற ஆசிய நாடுகளின் தனித்துவமான அம்சங்களை விளக்க காரல் மார்க்ஸ்தான் ”ஆசிய உற்பத்தி முறை” (‘Asiatic Mode of Production’ –the AMP) என்ற கோட்பாட்டை உருவாக்கினார். காரல் மார்க்சின் கூற்றுப்படி இந்தச் சில அம்சங்கள் –உதாரணத்திற்கு நிலத்தில் பொது உரிமை மற்றும் அரசுடன் நேரடி உறவு போன்ற அம்சங்கள் –ஜெர்மன் மற்றும் பிரெஞ்ச் மண்ணில் வசிக்கும் சமூகங்களுக்கும் பொருந்துவதாகும்.

கிராமச் சமூகம், வருண முறை, சாதியின் குணாம்சங்களையும்; உற்பத்திக் கருவியில், பிரதானமாக நிலத்தில், பொது உரிமை மற்றும் தனி உரிமையை மாற்றும் சிக்கலையும் விளக்க ஆசிய உற்பத்தி முறை பெரிதும் உதவும். இயற்கை உற்பத்தி முறை கோட்பாட்டை மேம்படுத்துவது ஆசிய சமூகங்களுக்குப் பெரிதும் பொருந்தும். (வட இந்தியா, பாகிஸ்தான் மற்றும் வங்காளதேசத்தின் பகுதிகளை உள்ளடக்கிய, சிந்து மற்றும் கங்கை நதிகளால் உருவாக்கப்பட்ட மிகப் பரந்த, வளமான வண்டல் சமவெளிப் பகுதியான) இந்தோ-கங்கைச் சமவெளி பகுதியில் உற்பத்திச் சக்திகளின் வளர்ச்சி ஒப்பிட்ட அளவில் மெதுவாக இருப்பதை அவர் விளக்குகிறார் –இங்குப் பெரும் முயற்சியின்றி கிராமச் சமூகங்களை  மீண்டும் உருவாக்குவது  எளிதானது. மற்றவற்றுடன் மத நம்பிக்கை மற்றும் கருத்தியல் உள்ளிட்ட இந்த அம்சங்கள் படிநிலையில் சாதியைப் பொருத்த உதவின மற்றும் பரம்பரை உற்பத்தி முறையில் தொடரவும் செய்தது. இந்தியாவைப் போல் வேறு எந்தச் சமூகத்திலும் கருவிகளும் உற்பத்திச் சாதனங்களும் வழி வழி சந்ததி பாரம்பரியமாக இருந்து சாதி முறைமையை  வலிமை பெறச் செய்தது இல்லை.

ஏழ்மையும் சுரண்டலும் ஒழிக்கப்பட முடியாதன, அவை பொறுத்துக் கொள்ளப்படத்தான் வேண்டும் மற்றும் அவற்றைச் சீர்திருத்தலாம் மற்றும் மேம்படுத்த மட்டும் செய்யலாம் என ஒப்புக் கொள்ள மார்க்ஸ் தயாராக இல்லை. அவர் கற்பனாவாதச் சோசலிசத்தை (உட்டோபியன் சோசலிசத்தை) எதிர்த்தார்; முதலாளித்துவமே இந்த இதே மண்ணில் –வானகத்தில் அல்ல– சொர்க்கத்தை ஏற்படுத்த தேவையான பௌதீகச் சூழலை ஏற்படுத்துகிறது என்பதை எடுத்துக்காட்ட அவர் விஞ்ஞான சோசலிசக் கோட்பாட்டை நிறுவினார்.

காரல் மார்க்ஸ் இரண்டு பெரும் கண்டுபிடிப்புகளைச் செய்தார்: வரலாற்றின் பொருள்

முதல்வாதக் கோட்பாடு மற்றும் உபரி மதிப்பு (சர்ப்ளஸ் வேல்யூ). அவர் வேறு
பலவும் கண்டறிந்தார் –ஒவ்வொன்றும் ஒரு நோபல் பரிசு பெறத் தகுதியானது!– என்பது உண்மையே. உபரி மதிப்பை உறிஞ்சுவதன் மூலம் ஒரு தொழிலாளி எவ்வாறு சுரண்டப்படுகிறார் என அவர் தெளிவாக எடுத்துக் காட்டினார். இந்தக் கண்டுபிடிப்பின் மீதும் வேறு சிலவற்றின் மீதும் அமைந்தது அவரது பெரும் படைப்பான “மூலதனம்” (கேப்பிட்டல்).

உலக ஏகாதிபத்தியம் ஆழமான நிதி நெருக்கடியில் சிக்கி உள்ளபோது இந்த நூற்றாண்டின் 20 ஆண்டுகளில் அவர் கற்பித்தவை எவ்வளவு பொருத்தமானவை எனக் காட்டியுள்ளது. பூர்ஷ்வா மற்றும் மார்க்சியர் அல்லாத பொருளியலாளர்கள் மற்றும் சிந்தனையாளர்கள் முதலாளித்துவம் கால இடைவெளியில் பொருளாதார நெருக்கடி (பாதிப்பு) என்ற மார்க்ஸின் கோட்பாட்டை ஆராயத் தலைப்பட்டுள்ளனர். அமெரிக்காவின் ஐந்து பகாசுர நிதி நிறுவனங்கள் ஓர் இரவில் சரிந்து விழுந்தது உலகெங்கிலும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியது மற்றும்  பொருளியலாளர்கள் மற்றும் தலைவர்களை மார்க்ஸ் எவ்வாறு இவ்வளவு சரியாகச் சொன்னார் என வியக்க வைத்துள்ளது!

மார்க்ஸும் ஏகாதிபத்திய நெருக்கடி  சுழற்சி வட்டங்களும்

மார்க்ஸ் முன்கணித்துக் கூறியது போலவே உலக ஏகாதிபத்தியம் கால இடைவெளியில் அவ்வப்போது நெருக்கடி சுழற்சிகளைக் கடந்து செல்கிறது. அவர் துல்லியமான ஆண்டுகளைக் கூட கணக்கிட்டுள்ளார். இன்று இருபத்தோராம் நூற்றாண்டில் இந்தக் கால இடைவெளி நெருக்கடிகளின் சுழற்சிகள் ஒன்றன் மீது ஒன்றாக ஏற்பட ‘நெருக்கடிக்குள் நெருக்கடி’ என, ஒரு நெருக்கடி முடிவதற்குள் மற்றொன்று தொடங்கும் விளைவை ஏற்படுத்தியுள்ளது.

மார்க்ஸ் எழுதிய, மிகக் கடினமான படைப்பான டாஸ் கேப்பிட்டல் உட்பட, அவரது நூல்களின் விற்பனை உச்சம் தொட்டுள்ளது. டாஸ் கேப்பிட்டலின் மூன்றாவது தொகுதியில் அவரது கோட்பாடான ‘கற்பனையான மூலதனம்’ (‘fictitious capital’ பங்குச் சந்தை பத்திரங்கள், கடன்பத்திரங்கள், போலிச் சொத்துக்கள் போன்ற வெறும் காகித வடிவில் அல்லது உரிமையின் அடிப்படையில் லாபம் ஈட்டும் மூலதனம்) தற்போதைய சமகாலத்தின் நிதி மூலதனத்துடன் (பைனான்ஸ் கேப்பிட்டல்) பணத்தையும் மூலதனத்தை-யம் இணைக்கிறது. நாம் மித மிஞ்சிய பண மூலதனத்தை (அதாவது கூடுதலாகவே பணம் இருக்கிறது, முதலீடு செய்ய வாய்ப்பு இல்லாத நிலையை) அத்தகைய ஏராளமான பணத்துடன் ஏகாதிபத்திய முறைமை மிதப்பதைப் பார்க்கிறோம். திறன் சார்ந்த பலனுள்ள உற்பத்தியில் முதலீடு செய்ய இயலாமல் ஏகாதிபத்திய நிதியம் மிகவும் பயன் இல்லாத இரண்டு பகுதிகளில் முதலீடு செய்கிறது: பங்குச் சந்தை மற்றும் கோத்தாக மனிதர்களைப் பேரளவில் அழிக்கும் நவீன ஆயுதங்கள் உற்பத்தி.

மிக வலிமையானது என கருதப்படும் உலகின் ஆகப் பெரும் பணக்கார நாடான அமெரிக்கா மிகப் பெரிய செல்வத்தை வைத்துள்ளது, இருப்பினும் அதனால் பலன் அளிக்கும் முதலீட்டிற்கு  மூலதனத்தைக் கண்டுபிடிக்க இயலாமல் உள்ளது. எனவே அது கொடிய பிரச்சாரங்களில் ஒன்றான நாடுகளை ஆக்கிரமித்து அந்நாடுகளின் அரசுகளைத் தூக்கி எறியத் தொடங்கியுள்ளது, இதற்கு முன் சந்தித்திராத போர்களில் அந்நாடுகளை ஈடுபடுத்துகிறது. அமெரிக்கா உலக நாடுகளை எல்லாம், கனடா உள்பட, அதன்  மாகாணப் பகுதிகளாக்க (பிராவின்ஸ்கள்) விரும்புகிறது! அது லாப விகிதங்களளை அதிகமாகவே நீடிப்பதற்கு உலகைப் பதற்றத்தில் காத்திருக்க வைத்துள்ளது. ஆனால் ஈரான் போன்ற நாடுகள் மிகவும் எதிர்பாராத முறையில் எதிர்த்துத்  திரும்பத் தாக்கி அமெரிக்காவின் அனைத்துக்  கணக்குகளையும் குலைத்துப் போடுகின்றன

தகவல் புரட்சி, சைபர் பிரிவு  தொழிலாளர்கள் மற்றும் மார்க்சியம் 

21 ஆம் நூற்றாண்டில் முதலாளித்துவம் மற்றும் ஏகாதிபத்தியத்தின் தற்போதைய வளர்ச்சி மட்டங்கள், மார்க்சிய கோட்பாடு மற்றும் நடைமுறை செயல்பாட்டில் –குறிப்பாக தகவல் மற்றும் தொழில்நுட்ப புரட்சி சூழலில்– புதிய அம்சங்களைச் சேர்த்துள்ளது. அதன் ஆழமான தாக்கத்தில் தற்போதுள்ள எதார்த்தங்கள் வேகமாக மாறி வருகின்றன மற்றும் புதிய பிரிவுகளும் கட்டமைப்புகளும் உள்ளே வருகின்றன. தொழிலாளர் வர்க்கமும் கூட கடுமையான மாறுதல்களைக் கடந்து வருகிறது. கைப்பேசி போன்ற புதிய மின்னணு கருவிகள் ஒவ்வொரு தனிநபர்களையும் அடைந்துள்ளன.  உற்பத்தியில் தகவல், வெறும் ஆதரவு செல்வாதாரம் என்ற அதன் மரபார்ந்த பங்கைத் தாண்டி முதன்மை புதிய அம்சமாகி உற்பத்தி நிகழ்முறையில் அவுட்சோர்சிங், சேவை மற்றும் தகவல் தொடர்பாகி உள்ளன.

இந்த வளர்ச்சிப் போக்குகள் உற்பத்தி பண்டம், மதிப்பு மற்றும் சந்தையின் புதிய பிரச்சனைகளை எழுப்பியுள்ளன. புதிய கருவிகள் சிறிய உற்பத்தியாளர்களுக்குச் சாதகமாக உள்ளன; இருந்த போதிலும், நிதி கார்ப்பரேஷன்கள் –லாப விகிதங்கள் வீழ்ச்சி அடைந்து, ஏகாதிபத்திய சந்தையில் மேலும் நெருக்கடியை ஏற்படுத்திய  நிலையில் –இந்த மற்றும் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோக்கள் உள்ளிட்ட பிற கருவிகளை லாப மட்டங்களை அதிகரிக்கப் பயன்படுத்த முயற்சிக்கின்றன.

சேவை பிரிவில் சைபர் ப்ராலிடேரியட் (டிஜிட்டல் தொழில்நுட்பங்கள் தயாரிப்பு, பராமரிப்பு மற்றும் இயக்குதலில் பணியாற்றும் தொழிலாளர்கள்), மனதால் புதிய நடுத்தர மற்றும் தொழிலாளர் வர்க்கங்கள், இளைஞர்கள், பெண்கள், நகரமயமான வலைப்பின்னலில் பணியாற்றுவோர் முதலான புதிய பிரிவு தொழிலாளர்கள் வரத் தொடங்கியுள்ளனர்: அவையெல்லாம் புதிய கேள்விகளையும் மற்றும் கோட்பாட்டு மற்றும் செயல்முறை சவால்களையும் கொண்டு வந்துள்ளன. மார்க்சியம் தேங்கிய கோட்பாடு அல்ல மாறாக அது செயல்படுவதற்கான வழிகாட்டி. எனவே நாம் இருபத்தோராம் நூற்றாண்டின் எதார்த்தங்களுடன் அவற்றைக் கையாள புதிய அறிவு கருவிகளை உருவாக்க வேண்டிய தேவை உள்ளது.

--நன்றி : நியூ ஏஜ் (மே 10 –16)

 –தமிழில் : நீலகண்டன், 

 என்எப்டிஇ, கடலூர்

 

   

 

No comments:

Post a Comment