Saturday 29 October 2022

நியூஏஜ் தலையங்கம் -- 24வது கட்சிப் பேராயத்தின் பேரிகை முழக்கம்

 நியூஏஜ் தலையங்கம் (அக்.23 --நவ.5)

24வது கட்சிப் பேராயத்தின் பேரிகை முழக்கம்

          இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அகில இந்திய மாநாடுகள் குறிப்பிட்ட இடைவெளியில், சுமார் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, நடை பெறுவது வழக்கம். அம்மாநாட்டைக் கட்சிக் காங்கிரஸ் (பேராயம்) என அழைப்பர். அவ்வாறு கட்சியின் 24வது பேராயம் வரலாற்றுப் புகழ் மிக்க விஜயவாடா நகரில் நடைபெற்றது. அப்பேராயம் நம்பிக்கை மற்றும் புது உற்சாக உணர்வு கரைபுரண்டு ஓடிய காங்கிரஸ் என வரலாற்றில் இடம்பெறும். கட்சி முன்னோக்கி செம்மாந்து நடக்க புது ஊக்கத்தை அளித்து அக்டோபர் 14 முதல் 18வரை நடைபெற்ற பேராயத்தின் ஒவ்வொரு தருணமும் பொருள் நிறைந்ததாய் விளங்கியது. மாற்றுப் பிரதிநிதிகளுடன் 872 பிரதிநிதிகள், பார்வையாளர்கள் மற்றும் அழைப்பாளர்கள் தங்கள் அனுபவம், சக்தி அனைத்தையும் கட்சியை வலிமைப்படுத்த செலவிட்டு எதிர்காலப் புதிய பாதையை வகுத்தனர். ஆக முக்கியமான போர்களில் வெல்ல தாங்கள் போரிட வேண்டிய களதின் அகச் சூழல்கள் மற்றும் புறச் சூழல் எதார்த்தங்களைப் புரிந்து கொள்வதில் கம்யூனிஸ்ட்கள் எப்போதும் கடமை உணர்வு மிக்கவர்கள்.

          கடந்த கால நடவடிக்கைகளைச் சீர்தூக்கிப் பார்த்துத் தேவையான முடிவுகளை எடுப்பதில், உண்மையில், கட்சிப் பேராயமே இரண்டாம் நிலை உயர் அமைப்பாகும். சிபிஐ 24வது கட்சிப் பேராய விவாதங்களும் அமர்வுகளும் நாட்டின் கம்யூனிஸ்ட்களுக்கு மட்டும் முக்கியமானவை அல்ல. ஒற்றுமை மற்றும் போராட்டத்திற்கான அதனது அழைப்பு மதசார்பற்ற, ஜனநாயக மற்றும் பிற இடதுசாரி சக்திகளுக்கும் கூடுதல் பொருத்தப்பாடு உடையது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை மக்கள், புதிய இந்தியாவைப் படைப்பதற்கான அர்ப்பணிப்பு மிக்க போராளிகளின் கட்சியாகக் காண்கிறார்கள். அக்டோபர் 14ல் கட்சிப் பேராயத் தொடக்கத்தின் அடையாளமாக

நடத்தப்பட்ட பிரம்மாண்ட பேரணியில் உற்சாகம் பொங்கியது, விஜயவாடா வீதிகளில் ஆயிரம் பல்லாயிரமாய் ஆண்களும் பெண்களும் செங்கொடிகள் உயர்த்தி நடந்த அணிவகுப்பு, செங்கடல் பேரொலியாய் முழங்கியது. அந்தப் பேரணி, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மேலும் வலிமை பெற்று நாட்டின் எதிர்காலத்தைச் செதுக்க ஏற்கத்தக்க தனது பங்கை ஆற்றும் என்பதற்கான பிரகடனம்!

மார்க்சிய விஞ்ஞானத் தத்துவத்தின் அடிப்படையில் செயல்படும் கம்யூனிஸ்ட்கள், தங்கள் முன் நிலவும் எதார்த்தங்களைத் தெளிவாகப் பகுப்பாய்வு செய்து தங்கள் பொறுப்பை மேற்கொள்ளும் கடமை வீரர்கள். இந்தப் பொறுப்பை வெற்றிகரமாக நிறைவேற்றிய 24வது கட்சிப் பேராயம், குழப்பமில்லாத தெளிவான வகையில் அதனது எதிர்காலச் செயல் திட்டப் பாதையைத் தயாரித்தது. உண்மையில், அவ்வகையில் ‘வரலாற்றுச் சிறப்புடையது’ என நாம் நியாயமாகவே அதனை அழைக்கலாம். அனுபவமும் முதிர்ச்சியும் பெற்ற மூத்த தோழர்கள் மற்றும் இளையோரின் ஆற்றல்மிக்க சுறுசுறுப்பும் பின்னிப் பிணைந்து பேராயத்தின் மகத்தான வெற்றிக்குப் பங்களித்தன.

பிரதிநிதிகளின் தகுதி குறித்த அறிக்கை பேராயத்தில் கலந்து கொண்ட பிரதிநிதிகளில் 51.2 சதவீதத்தினர் 60 வயதிற்குக் குறைவானவர்கள் என்ற உண்மையின் மீது வெளிச்சம் பாச்சுகிறது. அவர்களில் சிலர் தங்கள் இருபதுகளில் இருப்பவர்கள். பிரதிநிதிகளில் பலர் பெருந்திரள் போராட்டம் மற்றும் இயக்கங்களில் தொழிலாளர்கள், விவசாயிகள், தலித்கள், ஆதிவாசிகள், சிறுபான்மையினர்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் மாணவர்களின் உரிமைக்காகப் போராடிய தலைவர்கள். லட்சத்தீவு கட்சி மாநிலச் செயலாளர் உட்பட மாநிலத்தின் மூன்று பிரதிநிதிகள் பேராயத்தில் கலந்து கொள்ள இயலவில்லை; ஏனெனில், மக்கள் உரிமைகளுக்காகக் குரல் எழுப்பினர் என்று லட்சத் தீவு நிர்வாகத்தால் அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டனர். அவ்வகையில் விஜயவாடா கட்சிக் காங்கிரஸைத் தலைமுறை தலைமுறையான கம்யூனிஸ்ட்கள் உயர்த்திப் பிடித்த ஒன்றுபட்ட விழைவு மற்றும் ஊசலாட்டமில்லாத நம்பிக்கையின் பேராயம் என அழைக்கலாம்.

வலதுசாரி ஊடக அணியினரின் ‘கம்யூனிஸ்ட் நிபுணர்கள்(?)’ சிபிஐ கட்சிக்குள் அமைப்பு மற்றும் அரசியல் வேறுபாடுகள் மூண்டுவிட்டதாகக் கண்டுபிடிக்க இம்முறையும் இரவு பகலாக மோப்பம் பிடித்துப் பணியாற்றினர். வயது வரம்பு சம்பந்தமான வழிகாட்டல் முடிவுகள் பேராயத்தில் ஒன்றுமில்லாது ஆக்கப்படும் என்று பிரச்சாரம் செய்தனர். அரசியல் பாதை குறித்தும் கடுமையான வேறுபாடுகள் கட்சிக்குள் நிலவுவதாகவும் அவர்கள் மேலும் பிரச்சாரம் செய்தனர். அவர்கள் எதிர்ப்பார்த்ததுபோல அதுபோன்ற எதுவும் 24வது கட்சிப் பேராயத்தில் நிகழவில்லை என்பதில் அவர்கள் அவமானகரமாக ஏமாந்தார்கள். ஆனால் அரசியல் மற்றும் ஸ்தாபன அமைப்பு குறித்து --கம்யூனிஸ்ட் கட்சிக்கே உரிய முறையில்-- தீவிரமான மற்றும் ஆழமான விவாதங்கள் பேராயத்தில் நடைபெற்றன. உண்மையில், விமர்சனம் மற்றும் சுயவிமர்சனத்துடன் கூடிய அத்தகைய விவாதங்கள் கம்யூனிஸ்ட் கட்சிப் பேராயத்தின் ஜீவன் அல்லவா! முன்னோக்கிய தனது பயணத்திற்கான வழியை இந்த ஜனநாயக நிகழ்முறையின் மூலமாக மட்டுமே கட்சி கண்டறிகிறது. இந்தக் கலாச்சாரம் மற்றும் கட்டுப்பாடு எந்த வலதுசாரி கட்சியிலும் நினைத்துப் பார்க்க முடியாதது. பெரும்பான்மை தருணங்களில் அக்கட்சிகளின் தலைவர்கள் நியமிக்கப்படுகிறார்கள் (தேர்ந்தெடுக்கப்படுவதில்லை). அரிதான சில சூழ்நிலைகளில், அங்கே தேர்தல் நடக்கும்போது, போட்டியாளர்களும் அவர்களின் கட்சித் தலைவர்களும் கொள்கைகள் குறித்துத் தப்பித் தவறி ஒரு வார்த்தையும் உதிர்த்துவிடக் கூடாது என்பதில் கூடுதல் எச்சரிக்கை கொள்கின்றனர்! அது கம்யூனிஸ்ட்களின் வழியாக முடியாது!

கம்யூனிஸ்ட்களின் தேசபக்த உணர்வின் கனல், அதிதீவிர வலதுசாரிகளின் போலி தேசியவாதத்திலிருந்து, தனித்து வேறுபட்டு ஒளி வீசுவது. கம்யூனிஸ்ட்கள் தங்கள் தாய் மண்ணிற்கும் தங்கள் மக்களுக்கும் ஊசலாட்டமற்ற வகையில் தங்களை அர்ப்பணித்தவர்கள். அதே நேரத்தில் சர்வதேசியப் பதாகையை உயர்த்திப் பிடிப்பதன் மூலம் உலகெங்கும் உள்ள பாடுபடும் மக்களுடன் தங்கள் தோழமையை வெளிப்படுத்துபவர்கள். இந்தத் தோழமையின் அடையாளமாக 24வது கட்சிப் பேராயம், 16 நாடுகளிலிருந்து 17 சகோதரத்துவப் பிரதிநிதிக் குழுக்களை வரவேற்கும் பெருமை பெற்றது. ‘எல்லா இடங்களிலும் கம்யூனிசம் இறந்து விட்டது’ என்று ஏகாதிபத்தியம் கட்டவிழ்த்துவிட்ட பழிவாங்கும் இழிவுப் பிரச்சாரத்திற்குச் சிபிஐ கட்சிக் காங்கிரசில் அவர்கள் வருகையும் பங்கேற்பும் மென்மையான தக்க பதிலாகும்!

கட்சிப் பேராயம் தொடர்பான எல்லா ஆவணங்களும் முழுமையான விவாதங்களுக்குப் பிறகு ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன. மாநிலக் குழுக்கள் தவிர, ஆவணங்கள் தனியான கமிஷன்களிலும்கூட விவாதிக்கப்பட்டன. அதற்கென அமைக்கப்பட்ட கமிஷன்கள் 1) அரசியல் தீர்மானங்கள் 2) அரசியல் பரிசீலனை ஆய்வறிக்கை 3) அமைப்புநிலை அறிக்கை மற்றும் 4) கட்சி செயல்திட்டங்கள் மற்றும் அமைப்பு விதிகள் என்று வகைப்படுத்தப்பட்டன. ஒவ்வொரு ஆவணத்திற்கும் கீழ்மட்ட அமைப்புகள் மற்றும் பிரதிநிதிகள் முன் வைத்த திருத்தங்கள் அனைத்தும் ஒவ்வொரு கமிஷனிலும் விவாதிக்கப்பட்டன.

அரசியல் பொருளாதார வளர்ச்சிப் போக்குகள் பரிசீலனைக்குப் பின் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட அரசியல் தீர்மானம், நாட்டின் மதசார்பற்ற, ஜனநாயக மற்றும் இடதுசாரி சக்திகளின் பரந்த விரிவான கூட்டணிக்கு அழைப்பு விடுத்தது. தேசத்திற்கு ஒரு மாற்றம் தேவை. நமது மாபெரும் தேசத்தின் அடித்தளங்களை ஆர்எஸ்எஸ் – பாஜக பாழ்படுத்துகிறது. மக்கள் விரோத நிலைபாட்டுடன் பாசிச ஆர்எஸ்எஸ் அமைப்பின் கட்டுப்பாடு வழிகாட்டலில் செயல்படும் அரசு தூக்கி எறியப்பட வேண்டும். மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும்  சோஷலிச இலட்சியம் உருவாக்கிய அரசியல் அமைப்புச் சட்டத்தையும் பாதுகாக்க தற்போது நடைபெற்று வரும் போராட்டத்தில் முக்கிய எதிரி யார் என்பதில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மிகத்  தெளிவாக உள்ளது.

மதசார்பற்ற, ஜனநாயக சக்திகள் ஒன்றுபடுவதன் மூலமாக மட்டுமே ஆர்எஸ்எஸ் – பாஜக தலைமையிலான வலதுசாரி பிற்போக்குச் சக்திகளைத் தோற்கடிக்க முடியும். நாடு முழுவதும் அத்தகைய கூட்டமைப்பு ஒருபடித்தான தன்மையில் இருக்க வேண்டும் என்ற தேவை இல்லை. மாநிலத்திற்கு மாநிலம் அது வேறுபடலாம். அத்தகைய கூட்டமைப்புச் சக்திகளோடு இணைந்து நடக்க சித்தமாகவே இருக்கும் மனநிலையை மக்கள் வெளிப்படுத்தி விட்டார்கள்; ஆனால் ஆர்எஸ்எஸ் – பாஜகவுக்கு மாற்றாக அந்தக் கூட்டு நடவடிக்கை நம்பிக்கைக்குரிய மாற்றாக இருக்க வேண்டும் என்பது மக்களின் எதிர்பார்ப்பு. இன்றைய இந்தச் சிக்கலான நிலையில் இடதுசாரிகள் முக்கிய அரசியல் பங்கை ஆற்ற வேண்டும். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எப்போதும் இந்தக் கடமை பொறுப்புக் குறித்து விழிப்பாகவே இருக்கிறது, இடதுசாரி சக்திகளின் பயன்தரும் ஒற்றுமைக்காக உறுதியாக நிற்கிறது!

24வது கட்சிப் பேராயத்தின் தொடக்க அமர்வில் சிபிஐ (எம்), சிபிஐ (எம்எல்), பார்வர்டு பிளாக் கட்சித் தலைவர்கள் ஆற்றிய உரைகளில் இடதுசாரி ஒற்றுமை குறித்த தங்கள் நிலைபாட்டை வலியுறுத்தினர். ஆர்எஸ்பி (புரட்சிகர சோஷலிசக் கட்சி) தங்கள்

அமைப்புப் பணிகளின் காரணமாகப் பேராயத்தில் கலந்து கொள்ள இயலாத போதும் அவர்களும் இணைந்து போராடுவதில் அதே புரிதலைப் பகிர்ந்து கொண்டார்கள். சிபிஐ கட்சியை மேலும் வலிமையானதாகக் கட்டி எழுப்ப வேண்டிய தேவையைக் கட்சிப் பேராயம் அடிக்கோடிட்டு வலியுறுத்தியது. விவாதங்களில் பங்கேற்ற தோழர்கள் இது சம்பந்தமாகத் தொடர்ச்சியான செயல் திட்டத்தைக் கோரினர். இப்போதிலிருந்து மூன்றாண்டுகளில் சிபிஐ, கட்சியின் நூற்றாண்டைக் கொண்டாட உள்ளது. போராட்டம் மற்றும் தியாகத்தின் பெருமைமிகு வரலாறே இந்த நூறாண்டுகள்; அது, சுதந்திரம் மற்றும் சமூக முன்னேற்றத்தைச் சாதிக்கவும் பாதுகாக்கவும் கம்யூனிஸ்ட்கள் ஆற்றிய அரும்பெரும் பங்கைப் பக்கம் பக்கமாகப் பேசும்.

அந்த மாபெரும் பாரம்பரியத்தில் நிலைகொண்டு, இன்றைய சவாலான கடமைகளைக் கட்சி மேற்கொள்ள வேண்டும். கட்சி நூற்றாண்டு விழா வருடத்தின்போது உறுப்பினர் எண்ணிக்கையை 10 லட்சமாக உயர்த்துவது என்றும், அனைத்து மாநிலங்கள் மற்றும் மாவட்டங்களின் வரலாற்றை ஆவணப்படுத்தவும் எடுக்கப்பட்ட முடிவு, முக்கியமானதொரு தீர்மானம். கம்யூனிஸ்ட் கட்சியைத் தத்துவார்த்த, அரசியல் கொள்கை அறிவாயுதத்துடன் ஆயத்தப்படுத்தும் வகையில்
அமைப்பு ரீதியான தயார்நிலையை எட்ட கட்சி இன்னும் பயணிக்க வேண்டிய பாதையின் தொலைவு மிக நீண்டது. கட்டாயமான அந்தக் கடமைகளை நிறைவேற்றும் வரையில் அது உறங்கவோ ஓய்வெடுக்கவோ முடியாது.

24வது கட்சிப் பேராயம், அதன் விவாதங்கள் மற்றும் கலந்துரையாடல்கள், உற்சாக ஊக்க விழுமியங்களைச் சுமந்து உயர்ந்து பறக்கும் செங்கொடியின் கீழ் இந்தத் திசைவழியில் முன்னோக்கிச் செல்ல ஜெய பேரிகை கொட்டி முழங்குகிறது!


செங்கொடி வாழ்க! இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்க!

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 


No comments:

Post a Comment