Wednesday 19 October 2022

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 73 -- ரஜனி பால்மே தத்

 

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 73


ஆர்பிடி – இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின்                      நண்பன், மந்திரி, நல்லாசிரியன்

--அனில் ரஜீம்வாலே

            ஜனி பால்மே தத், வரலாற்றில் புகழ்பெற்ற ஆர்பிடி (RPD) என்ற மூன்றெழுத்துக்காரர், தலைசிறந்த தலைவர் மற்றும் கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி (CPGB) கோட்பாட்டாளர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினராக ஒருபோதும் இல்லாவிட்டாலும், அவருடைய பெயர் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்துடன் பிரிக்க முடியாதபடி இரண்டறக் கலந்தது. (கண்ணனைப் பாரதி வர்ணிப்பாரே ‘எங்கிருந்தோ வந்தான்…ஈங்கிவனை யாம் பெறவே என்ன தவம் செய்து விட்டோம்’ என அப்படி) இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு நண்பனாய், மந்திரியாய் வழிகாட்டி, தத்துவ நல்லாசிரியனாய் ஏராளமாக அவர் பங்களித்தார். தலைமுறை தலைமுறையாக இந்தியக் கம்யூனிஸ்ட்கள், புரட்சியாளர்கள் மற்றும் விடுதலைப் போராட்ட வீரர்களை அவரது புகழ்பெற்ற நூலான ‘இந்தியா டு-டே’ ஒழுங்கமைத்து உருவாக்கியது.

தொடக்க கால வாழ்க்கை

       இங்கிலாந்து கேம்பிரிட்ஜின் மில் ரோட்டில் அமைந்ததொரு வீட்டில் 1896, ஜூன் 19ல் ஆர் பால்மே தத் பிறந்தார். இந்திய சர்ஜனான அவரது தந்தை டாக்டர் உபேந்திர கிருஷ்ணா தத் பிரிட்டனில் மருத்துவப் பணி ஆற்றி வந்தார். பால்மே தத்தின் பெரிய மாமா ரொமேஷ் சந்திர தத் (அறிஞர், நாவலாசிரியர் மற்றும் 19ம் நூற்றாண்டின் வரலாற்றாளர்) ஆவார். தாயார், அன்னா பால்மே, ஸ்வீடிஷ் நாட்டவர்; அவர் ஸ்வீடன் பிரதமர் ஓலோஃப் பால்மே அவர்களின் பெரிய அத்தை. பால்மே தத்தின் சகோதரி எல்னா பால்மே தத், பின்னர் ஜெனிவா ஐஎல்ஓ அமைப்பின் அலுவலரானார். பால்மேயின் மூத்த சகோதரர் மற்றொரு புகழ்பெற்ற கம்யூனிஸ்ட்டான கிளமென்ஸ் பால்மே தத்.

   டாக்டர் உபேந்திர கிருஷ்ணா லண்டனில் இந்தியர்களுடன் நெருக்கமான தொடர்பு கொண்டிருந்தார். உண்மையில், இந்திய மாணவர்களின் மஜ்லீஸ்* அமைப்பின் கூட்டங்கள் வழக்கமாக அவரது இல்லத்தில்தான் நடக்கும். ரஜனி பால்மே தத் அந்தக் கூட்டங்களை நன்றாக ஞாபகத்தில் வைத்திருந்தார், அதில் ஜவகர்லால் நேருகூட பங்கேற்றிருக்கிறார். (*மஜ்லீஸ் என்ற அரபுச் சொல்லிற்கு ஒத்த கருத்துடையவர்கள் கூடும் இடம் என்பது பொருள்; ஈரான் நாடாளுமன்றத்திற்கும் மஜ்லீஸ் என்று பெயர்)

       பால்மே தத் பள்ளிக் கல்வியை கேம்ப்பிரிட்ஜ் தி பேர்ஸ் (பொது) பள்ளியிலும் கல்லூரிப் படிப்பை ஆக்ஸ்போர்டு பலியால் (Balliol) கல்லூரியிலும் பெற்றார். முதலாவது உலகப் போருக்குக் கட்டாய ஆளெடுப்பை எதிர்த்ததற்காக அவர் 1916ல் பிரிட்டிஷ் சிறையில் தள்ளப்பட்டார். படிப்பில் அவர் செவ்வியல், தத்துவம் மற்றும் வரலாறு இவற்றில் முதல் வகுப்பில் முதல் ஹானர்ஸ் தகுதி பெற்றார். கல்லூரியில் இருக்கும்போது ரஷ்யப் புரட்சிக்கு ஆதரவாகக் கூட்டம் நடத்த ஏற்பாடு செய்தார் என்பதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டார். கல்லூரியில் மீண்டும் எடுத்துக் கொள்ளப்பட்ட அவர் பாராட்டிற்குரிய சிறப்புகளுடன் தேர்வு பெற்றார். பால்மே தத் சமூக ஜனநாயக பெடரேஷன் கூட்டங்களில் வழக்கமாகக் கலந்து கொள்வார் என புகழ்பெற்ற அறிஞர் அன்ட்ரூ ரோத்ஸ்டின் (பிரிட்டிஷ் பத்திரிக்கையாளர் மற்றும் புகழ்பெற்ற பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்) எழுதியுள்ளார்.

       1919 மார்ச் 21ல் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத் துணைவேந்தர் கர்சன் பிரபுவுக்கு எழுதிய கடிதத்தில் கிளமென்ஸ் தத் மற்றும் ரஜனி பால்மே தத் போன்ற சில (சினிஸ்டர் கேரக்டர்ஸ்) ‘தொல்லைப் பேர்வழிகள்’ (!) இருப்பதாக எழுதினார்.

   சல்மே மூரிக் என்ற ஈஸ்டோனிய பெண்மணியை ரஜனி 1922ல் திருமணம் செய்து கொண்டார்; அவர், (1919 மார்ச் 2ல் லெனின் நிறுவிய சர்வதேசக் கம்யூனிஸ்ட் அமைப்பு, காமின்டர்ன், 3வது அகிலம் என்றும் அழைக்கப்படும்) கம்யூனிஸ்ட் இன்டர்நேஷனலின் பிரதிநிதியாகப் பிரிட்டன் வந்தவர்.

ஐஎல்பி அமைப்பில்

     பால்மே தத் கல்லூரியில் படித்த காலத்திலேயே சுதந்திரத் தொழிலாளர் கட்சி (ILP)யில் இணைந்தார். 1919ல் அக்கட்சியின் சர்வதேசப் பிரிவின் தொழிலாளர் ஆய்வுத் துறையில் செயலாளராகச் சேர்ந்தார். 1921ல் வெளியிடப்பட்ட தொழிலாளர் சர்வதேசிய கையேட்டின் ஆசிரியராக இருந்தார். ஷபூர்ஜி சக்லத்வாலாவுடன் இணைந்து ரஜனி பால்மே தத் கட்சியில் கம்யூனிசத்தைப் பரப்பினார்; வலதுசாரி ஸ்னோடென் மற்றும் மேக்டொனால்டை எதிர்த்தார்.

  மூன்றாவது அகிலத்தில் இணைய வேண்டும் என்பதைக் கட்சிக்குள் இருந்தே வற்புறுத்துவதற்காகப் பால்மே தத், சக்லத்வாலா, வால்டன் நியூபோல்டு மற்றும் எமிலி பர்ன்ஸ் ஒரு குழு அமைத்தனர். அவர்கள் ‘சர்வதேசியம்’ (தி இன்டர்நேஷனல்) என்ற தலைப்பில் செய்தி மடல் சுற்றறிக்கையும் வெளியிட்டனர்.

கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியில்

     கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி (CPGB) அமைக்கப்பட்ட உடன் 1921 ஜனவரியில் அந்தக் குழு முறையாகக் கட்சியில் இணைந்தது. 1921ல் புகழ்பெற்ற ‘தொழிலாளர் மாத சஞ்சிகை’ (‘லேபர் மந்த்லி’) இதழை நிறுவிய பால்மே தத், இறக்கும் வரை அதன் ஆசிரியர் பொறுப்பை வகித்தார். பின்னர் அவர் கட்சியின் ‘டெய்லி ஒர்க்கர்’ இதழின் ஆசிரியராகவும், 1922ல் கட்சிப் பத்திரிக்கை ‘ஒர்க்கர்ஸ் வீக்லி’ இதழின் ஆசிரியராகவும் நியமிக்கப்பட்டார். வெறும் 8ஆயிரத்தில் இருந்த வாராந்திர இதழின் சர்குலேஷன் எண்ணிக்கை 50,000மாக அதிகரித்தது.

       பால்மே தத் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி செயற்குழுவிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர், அதன் உறுப்பினராக 1965வரை இருந்தார். அது மட்டுமின்றி, கட்சி பொலிட் பீரோவிலும் இருந்தார். கம்யூனிஸ்ட் அகிலத்தின் செயற்குழுவில் (ECCI) 1923ல் கலந்து கொண்டவர், அதன் தலைமைக் குழு மாற்று உறுப்பினராகவும் இருந்தார்.

    பால்மே தத் பல ஆண்டுகள் காமின்டர்ன் (கம்யூனிஸ்ட் அகிலம்) பிரதிநிதியாகப் பெல்ஜியத்திலும் ஸ்வீடனிலும் தங்கியிருந்தார்.

       1937ல் பல்வேறு போக்குகளைச் சேர்ந்த ஐக்கிய முன்னணி கமிட்டி அமைக்கப்பட்டது. அதில் ஆர்பி தத், கிரிப்ஸ், பீவன், பொலிட், ப்ரோக்வே மற்றும் மாக்ஸ்டன் இருந்தனர்.

 பால்மே தத்தும் இந்தியாவும்

     1974ல் எஸ் ஏ டாங்கே எழுதினார்: கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலாளர் இயக்கத்தின் முழுமையானதொரு காலத்தின் களஞ்சியமாக எங்களிடம் ‘ஆர்பிடி’ என்ற மூன்றெழுத்து இருந்தது. முழுமையான 54 ஆண்டுகள், அந்த எழுத்துகளில்தான், கிரேட் பிரிட்டன், இந்தியா மற்றும் ஆங்கிலம் அறிந்த பகுதிகளின் கம்யூனிஸ்ட் மற்றும் தொழிலார் இயக்கம் தோழர் ரஜனி பால்மே தத்தின் அற்புதமான எழுத்துக்களை வாசித்துக் கொண்டிருந்தது.” லேபர் மந்த்லியில் அவரது ‘மாதாந்திரக் குறிப்புகள்,’ உலக நிகழ்வுகள், உலகப் பொருளாதாரம் மற்றும் அரசியல் குறித்த அற்புதமான ஆய்வுகளை வழங்கியது’ என்றார் டாங்கே.

     அவரது ‘மாடர்ன் இந்தியா’ மற்றும் ‘இந்தியா டுடே’ இந்திய வரலாற்றின் செவ்வியல் நூல்களாகத் திகழ்கின்றன. ரஜனி பால்மே தத் எழுதிய பிற நூல்களான ‘பாசிசமும் சமூகப் புரட்சியும்,’ ‘உலக அரசியல் 1918 –36,’ மற்றும் ’பிரிட்டனின் நெருக்கடியும் பிரித்தானிய பேரரசும்’ முதலியன உலக முதலாளித்துவ நெருக்கடியையும், பாசிசத்தையும் புரிந்து கொள்ள நமக்கு உதவுகின்றன.

       பெரும்பான்மை இந்தியக் கம்யூனிஸ்ட்களுக்கு, ஊடுபாவாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரலாற்றுடன் பிணைந்திருந்த ஆர்பி தத், ‘கிரேட் பிரிட்டனில் இருந்த ஓர் இந்தியக் கம்யூனிஸ்ட்’ ஆக நம் உணர்வோடு கலந்துள்ளார்.

        பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்லஸ் ஆஷ்லெய்க், கம்யூனிஸ்ட் மற்றும் தொழிற்சங்க இயக்கத்திற்கு உதவ 1921 செப்டம்பர் 19 இந்தியா வந்தார்; ஆனால் அவர் இந்தியாவில் கால்

வைத்ததுமே கைது செய்யப்பட்டார். நாட்டை விட்டு வெளியேறக் கூறியபோது தப்பிய அவர் ‘பாம்பே க்ரானிகல்’ பத்திரிக்கை அலுவலகத்தில் ரகசியமாக எஸ்ஏ டாங்கேவைச் சந்தித்துப் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் பால்மே தத் குறித்துத் தகவல் தெரிவித்தார். டாங்கேவின் ‘சோஷலிஸ்ட்’ இதழ், பால்மே தத்தின் லேபர் மந்த்லி மற்றும் பெண்கள் வாக்குரிமைக்காகப் போராடிய சில்வியா பங்க்ருஸ்ட் (படம்) வெளியிட்ட ‘ஒர்க்கர்ஸ் டிரெட்நாட்’ (அச்சமறியா தொழிலாளி) பத்திரிக்கையுடன் தொடர்பில் இருந்தது. (டிரெட்நாட் என்பது வலிமையான பெரிய பிரிட்டிஷ் போர்க் கப்பலின் பெயர்).

     டாங்கே மற்றும் பிற கம்யூனிஸ்ட்கள் என்சைக்ளோபீடியா பிரிட்டானிகாவில் பால்மே தத் எழுதிய ‘கம்யூனிசம்’ என்பதை ஒரு சிறு பிரசுரமாக அச்சடித்து 2 அணாக்களுக்கு விற்றனர். அது குறித்த விளம்பரமும் ‘தி சோஷலிஸ்ட்’ 1922 நவம்பர்18 இதழில் வெளியானது.

        அவர் எழுதிய ‘மார்டன் இந்தியா’ பாம்பேயில் 1926ல் பிரசுரமானது.

     மீரட் சதி வழக்குகள் (1929 –33) கைதிகளுக்கு ஆதரவாக ‘மீரட் பாதுகாப்புக் குழு’வைப் பால்மே தத்தும் கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியும் அமைத்தது.

இந்திய மாணவர்கள் மீது செல்வாக்கு

ரஜனி பால்மே தத் மற்றும் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி பல தலைமுறை மாணவர்கள் மீது செல்வாக்கு செலுத்தியது. பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் காலனியத் துறை (காலனிய விஷயங்களைக் கவனித்த கட்சியின் பிரிவு) இந்திய விடுதலை இயக்கத்திற்கு உதவியது. அத்தகைய செல்வாக்கு பெற்றவர்களில் குறிப்பிடத் தக்க சிலர் வருமாறு: ஜவகர்லால் நேரு, விகே கிருஷ்ண மேனன், இந்திரா காந்தி, டிஆர் காட்கில், ஸுஷோபன் சர்க்கார், கேவி கோபால்சாமி, பக்ர் அலி மிஸ்ரா, நிகரேந்து தத் மஜூம்தார், மொகித் சென், ஜோதி பாசு, இந்திர ஜித் குப்தா, பிஎன் ஹக்ஸர், என்கே கிருஷ்ணன், ரேணு சக்ரவர்த்தி, பேரா. தேவிப்பிரஸாத் சட்டோபாத்யாயா, திலீப் போஸ், பார்வதி கிருஷ்ணன், பூபேஷ் குப்தா, ஹஜ்ரா பேகம், சாஜ்ஜட் ஸாஹீர் மற்றும் எண்ணற்ற பலராவர். அவர்களில் பலர் கம்யூனிஸ்ட் ஆனார்கள். அவர்கள், பால்மே தத் உள்ளிட்ட பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்கள் மற்றும் அறிஞர்கள் எடுத்த அரசியல் தியரி வகுப்புகளில் படித்தவர்கள்.

தத் –பிராட்லே தீசிஸ் (1936)

       உலகில் பாசிசம் எழுச்சி பெற்றும் ஏகாதிபத்தியம் போருக்கான தயாரிப்புகளில் ஈடுபட்டும் வந்தபோது, பால்மே தத் மற்றும் பென் பிராட்லே இருவரால் எழுதப்பட்ட ஆய்வறிக்கைகள் (தீசிஸ்) இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்குத் தெரிவிக்கப்பட்டது. அந்தத் தீசிஸ் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஐக்கிய முன்னணி அமைக்குமாறு யோசனை கூறியது. மேலும் அதில் தேசிய பூர்ஷ்வாகள், தொழிலாளர்களின் கூட்டமைப்புகள் மற்றும் விவசாயிகளின் அமைப்புகள் உள்ளிட்டவர்களுடன் காங்கிரசும் இடம் பெற வேண்டும் என்று கூறியது.  அந்த ஆய்வறிக்கை ஐக்கிய முன்னணி உத்திகளைத் தீட்டுவதில் முக்கிய பங்காற்றியது.

    லெனின் மறைவுக்குப் பிறகு உடனே காமின்டர்ன், லெனினின் காலனிய கருதுகோள் மற்றும்

ஐக்கிய முன்னணி தந்திரம் இரண்டையும் கைவிட்டு விடுதலை இயக்கங்கள்பால் குறுங்குழுவாத (செக்டேரியன்) அணுகுமுறையைப் பின்பற்றியது. “இந்தியாவில் தேசிய பூர்ஷ்வாகள் ‘ஏகாதிபத்தியத்திற்குச் சென்று விட்டனர்’’ என்று 1925ல் அறிவித்த ஸ்டாலின், காந்தி ‘ஏகாதிபத்தியத்தின் எடுபிடி வேலையாள் (சர்விட்டர்)’ ஆகிவிட்டார்” என்றார் (1926). காமின்டர்னின் 6வது பேராயம் முழுமையான குறுங்குழு வாதம் மற்றும் இறுக்கமான கோட்பாட்டுப் பாதையை ஏற்றது.

    மீரட் சதி வழக்கில் தலைவர்கள் பலர் கைதான பிறகு (1929), வெளியே இருந்த கம்யூனிஸ்ட்கள் கேலிக்குரிய குறுங்குழுவாத நிலைபாடு எடுத்து, தாங்களே முழுமையாகத் தனிமைப்பட்டுப் போயினர். ஜவகர்லால் நேரு ‘ஏகாதிபத்தியத்திற்கு எதிரான லீக்’ அமைப்பிலிருந்து ‘வெளியேற்ற’ப்பட்டார்’; அது மட்டுமின்றி, அவரை ‘இந்திய மக்களை விடுவிக்கும் போராட்டத்தின் துரோகி!’ என்றும் அழைத்தனர்.

       பிசி ஜோஷி 1935ல் சிபிஐ பொதுச் செயலாளர் ஆனதும், சூழ்நிலை மெல்ல மேம்படத் தொடங்கியது. அவர் ‘தேசிய முன்னணி’ முழக்கத்தை முன் வைத்தார்.

ஆர்பி தத், நேரு மற்றும் போஸ்

       ஆர்பி தத் 1936 பிப்ரவரி ஸ்வீசர்லாந்தில் நேருவைச் சந்தித்தார். அவர்கள் ஏகாதிபத்திய எதிர்ப்பு ஐக்கிய முன்னணி உள்ளிட்ட பல விஷயங்களை விவாதித்தனர், அந்த விவாதம் 16 மணி நேரம் நீடித்தது! அவர்கள் வாழ்நாள் நண்பர்கள் ஆயினர். நேரு அடிக்கடி தனது பிரச்சனைகளைக் கம்யூனிஸ்ட்களுடன் விவாதிப்பார், அவர்களுக்கிடையே ரஜனி பால்மே தத் சமரசம் செய்பவராக இருந்தார்!

      1936ம் ஆண்டின் காங்கிரஸ் அமர்வில் நேரு ஆற்றிய தலைமை உரையைப் பெரிதும் செல்வாக்கு செலுத்தியவர் பால்மே தத். நேரு பல தருணங்களில் கம்யூனிஸ்ட்களுக்கு உதவினார். நேரு சோஷலிசத்தை ஏற்று நம்பிக்கை கொண்டார்; ‘‘சோஷலிசம் என்பதன் மேலெழுந்தவாரியான தெளிவற்ற மனிதாபிமான அடிப்படையில் அல்ல, மாறாக, அதன் விஞ்ஞானபூர்வ, பொருளாதார உணர்வு அடிப்படையிலானதாகும் அந்த நம்பிக்கை.”

       ஏற்கனவே மேலே குறிப்பிட்ட தத் – பிராட்லே அறிக்கைகளில் கூறப்பட்ட இரண்டு முக்கிய பெரிய யோசனை திட்டங்களை நேரு லக்னோவில் முன்மொழிந்தார். நேருவின் முழுமையான உரையைப் பால்மே தத் லேபர் மந்த்லி இதழில் வெளியிட்டார். பிசி ஜோஷி தலைமையிலான சிபிஐ மத்தியக் குழு 1936 ஜூலை 24ல் ‘நேருவின் உரை ஏகாதிபத்தியத்திற்கு எதிரான மிகத் தெளிவான உரை’ என்று பிரகடனம் செய்தது.

இணைப்புக் குறித்த நேருவின் யோசனைத் திட்டங்கள் காங்கிரஸ் காரியக் குழுவில் நிராகரிக்கப்பட்டது. சர்தார் பட்டேல் உட்பட மத்திய செயற்குழு (சிடபிள்யுசி) உறுப்பினர்கள் ஏழு பேர் ராஜினாமா செய்தார்கள்.

சுபாஷ் சந்திர போஸ் முன்பு, “நேருவின் கம்யூனிசப் பரிவு ஆதரவை” விமர்சித்தார்; ஆனால் அந்தக் கருத்தை, 1938 லண்டனில் பால்மே தத்துடன் நடத்திய விவாதங்களுக்குப் பிறகு, மாற்றிக் கொண்டார். அது குறித்த செய்தி டெய்லி ஒர்க்கர் பத்திரிக்கையின் 1938 ஜனவரி 24 இதழில் பிரசுரிக்கப்பட்டது. அதையே போசும் தனது ‘இந்தியப் போராட்டம் : 1920 –40’ புத்தகத்தில் மீண்டும் மறு பிரசுரம் செய்தார்.

போஸ் ஒரு நேர்முகப் பேட்டியில், ‘மார்க்ஸ், லெனின் மற்றும் கம்யூனிஸ்ட் இன்டர் நேஷனல் கூறிய கம்யூனிசத்தில், தான் திருப்தி அடைவதாகவும், அது தேசிய விடுதலைக்கு முழுமையான ஆதரவை அளிக்கிறது’ என்று கூறினார். காங்கிரஸ் கட்சியை ஒரு பரந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியாக உருமாற்றம் செய்வதும் முக்கிய தேவை என்றார்

1938 ஜனவரி 11ல் லண்டன், செயின்ட் பான்கிரஸ் ஹாலில் ரஜனி பால்மே தத் தலைமையில் போஸ் உரையாற்றினார். “நான், பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சியின் … அணுகுமுறைகளால் பெரிதும் உற்சாகம் அடைந்தேன்…” என்று தெளிவாகக் கூறினார்.

தேர்தல்களில் போட்டி

        பிரிட்டிஷ் நாடாளுமன்ற தேர்தல்களில் பால்மே தத் பர்மிங்ஹாம் தொகுதியில், --அப்போது இந்தியாவின் பிரிட்டிஷ் அரசு செகரெட்டரியாக இருந்து, இந்திய விடுதலைப் போராளிகளுக்கு எதிரான கொடுமையான அடக்குமுறைகளுக்குக் காரணமாகி இழிவுப் பெயரெடுத்த, -- டோரி கட்சி வேட்பாளர் அம்ரேவை எதிர்த்துப் போட்டியிட்டார். பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுமென்றே ரஜனி பால்மே தத்தை அங்கு வேட்பாளராக நிறுத்தி பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்திற்கு எதிராகவும் இந்திய விடுதலை இயக்கத்திற்கு ஆதரவாகவும் தனது நிலைபாட்டை வெளிப்படுத்தியது. பர்மிங்ஹாமில் பால்மே தத்திற்கு ஆதரவாக எஸ்ஏ டாங்கே பிரச்சாரம் செய்தார்.

இந்தியாவில் பால்மே தத்

     1946 மார்ச்சில் ‘டெய்லி ஒர்க்கரின்’ சிறப்புப் பத்திரிக்கையாளராகக் கேபினட் மிஷன் குறித்த செய்திகளைச் சேகரிக்க பால்மே தத் இந்தியா வந்தார். அவரது முன்னோர்களின் நகரமான கல்கத்தாவில் அவருக்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. மே தின ஊர்வலம் மற்றும் கேசோரம் காட்டன் மில் கூட்டம் உட்பட பல கூட்டங்களில் கலந்து கொண்டார்.

      பேராசிரியர் ஹிரேன் முகர்ஜி எழுதினார்: “இந்தத் தேசம் அவர் பிறந்த மண்ணாக இல்லா விட்டாலும், இத்தேசம் அவரது தந்தையர் நாடு. ராம்பஹனின் புகழார்ந்த தத்தா குடும்பத்தின் ரத்தினங்களில் ஒருவர் அவர்” அந்தப் பெருமகன் கம்யூனிசத்தை எந்தத் தயக்கமும் இன்றி ஏற்று வரித்துக் கொண்டார்.

       அவருடைய விஜயத்தின்போது பம்பாயில் அவரது 50வது பிறந்த நாள் வெகு விமர்சையாக மிகுந்த உற்சாகத்துடன் கொண்டாடப்பட, அவரும் பெரிதும் அகமகிழ்ந்தார்.

    சர்தார் பட்டேல், சரோஜினி நாயுடு, எஸ்கே பாட்டீல், சி இராஜகோபாலச்சாரி, நேரு, காந்திஜி, அபுல் கலாம் ஆஸாத் மற்றும் பிற புகழ்பெற்ற தலைவர்களை அவர் சந்தித்தார்; லேபர்

மந்த்லியில் அது குறித்த பயண நாட்குறிப்புகளையும் எழுதினார். அனைவருக்கும் வாக்குரிமை அடிப்படையில் அரசியல் நிர்ணய சபை அமைக்க ஆலோசனை கூறினார். பாக்கிஸ்தான் அமைக்கப்படுவதையும், இந்திய தேசப் பிரிவினையையும் அவர் மிக உறுதியாக எதிர்த்தார்.

      1947 நவம்பரில் லண்டன் நேர்முகம் ஒன்றில் சோஷலிசத் தலைவர் மது லிமாயி அவர்களிடம் ‘அவர் காங்கிரஸில் நீடித்து, கட்சியில் கம்யூனிஸ்ட்கள் அனுமதிக்கப்பட போராட வேண்டும்’ என்று கூறினார்.

பிடிஆர் காலமும் பால்மே தத்தும்

       பிடி ரணதிவே காலத்தின்போது பின்பற்றப்பட்ட குறுங்குழுவாதப் பாதை குறித்துப் பால்மே தத் மிகவும் சங்கடப்பட்டார். இந்தியக் கம்யூனிஸ்ட்களை அதனை மறுபரிசீலனை செய்யக் கோரினார். காமின்டர்ன் அமைப்பின் LPPD (‘For a Lasting Peace, For People’s Democracy’, நீடிக்கும் அமைதிக்காக, மக்கள் ஜனநாயகத்திற்காக) இதழில் மூன்றாவது உலக நாடுகளில் சுதந்திரத்தின் புதிய வாய்ப்புகள் குறித்து எழுதினார். இந்தியச் சுதந்திரத்தைப் பாதுகாக்க, பிற்போக்கு பெரு முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களை எதிர்த்துப் போராட, விரைவில் நிலச்சீர்திருத்தங்களை மேற்கொள்ளவும் நாட்டின் முற்போக்கு சத்திகளுடன் கூட்டிணைவது முக்கியம் என்று சுட்டிக் காட்டினார்.

      அந்தக் கட்டுரை சிபிஐ கட்சிக்குள் தீவிரமாக விவாதிக்கப்பட்டது, கட்சி அதிதீவிர இடதுசாரி கொள்கைகளைக் கைவிடவும் உதவியது. LPPD இதழின் தலையங்க விமர்சனக் குறிப்புக்குப் பிறகு, “ஆர்பி தத் எண்ணற்ற வழிகளில் நமது கட்சிக்கு, அது தொடங்கப்பட்ட நாளிலிருந்து, உதவி வருகிறார்; கட்சியை, அதனது பொலிட் பீரோவின் முதலாளித்துவ ஆதிக்க மனோபாவம் மற்றும் குறுங்குழு வாத முட்டாள்தனத்திலிருந்தும் பாதுகாத்தது” என்பதைச் சிபிஐ ஒப்புக் கொண்டது.

       கோரிய யுத்தத்தில் நேருவின் பங்களிப்பு குறித்தும் ஆர் பி தத் புகழ்ந்துரைத்தார். (லேபர் மந்த்லி, நவம்பர் 1950 )

      அதன் பிறகு, மூன்று கட்சிகள் கடிதம் (1933), தத்-பிராட்லே ஆய்வறிக்கைகள் (1936), கிரேட் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியின் கடிதம் (1933) போன்றவை மூலம் ”எண்ணற்ற பல நெருக்கடியான தருணங்களில் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சியும் ஆர்பி தத்தும் எங்களை சரி செய்தது” என்பதைச் சிபிஐ கட்சி ஒப்புக் கொண்டது.

ஆயுதப் போராட்டத்திற்கு எதிராக

    1948 –50களின் ஆயுதப் போராட்டம், தற்கொலை முயற்சி என்று கூறிய பால்மே தத் அதனைக் கைவிட வற்புறுத்தினார். இது தொடர்பாக நேருவை ஆதரிக்கவும் அமைதிக்கான போராட்டத்தையும் அவர் வலியுறுத்தினார். 1951ல் சிபிஐ அவரிடம் பல கேள்விகளைக் கேட்டது, அதற்கு அவர் நேர்மறையான முறையில் பதில் அளித்து, பெருந்திரள் போராட்டங்களை வலிறுத்தினார். பால்மே தத்தின் இந்தச் சிந்தனைப் போக்கின் தாக்கத்தை 1951ன் சிபிஐ செயல்திட்டப் புரோகிராம் தெளிவாகப் பிரதிபலித்தது. 1954 எல்பிபிடி இதழில் தேசிய விடுதலை இயக்கத்தின் புதிய அம்சங்கள் குறித்து எழுதினார். அதில் அமைதிக்கானப் போராட்டமும் சுதந்திரத்திற்கானதும் தனியானதல்ல என வற்புறுத்தியவர், தொழிலாளர்கள், விவசாயிகள், கற்றறிந்த சான்றோர்கள், நகர்ப்புறக் குட்டி முதலாளிகள், தேசிய நடுத்தரவர்க்க முதலாளிகள் ஆகியோரை உள்ளடக்கிய ஐக்கிய முன்னணியை, ஜனநாயக ஏகாதிபத்திய எதிர்ப்புப் புரட்சியில் ஒன்று திரட்டி அமைக்க வற்புறுத்தினார்.

ஈடு இணையற்ற கோட்பாட்டாளர்

       ரஜனி பால்மே தத் தனித்துச் சிறந்து விளங்கிய மார்க்ஸிய ஆய்வாளர் மற்றும் அவரே ஒரு கலைக்களஞ்சியம். அவரது தினசரி பணிகள் மிகுந்த கட்டுப்பாடானவை. தத்துவ ஆழத்துடன் நுணுக்கமாக ஆய்ந்தறியும் அறிஞர், விரல் நுனியில் பல்துறைப் பொருள்களின் விபரங்களைத் துல்லியமாக வைத்திருந்தவர்.

      உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்திய எண்ணிறைந்த கட்டுரைகள், விமர்சன மதிப்புரைகள், ஆய்வேடுகள், புத்தகங்கள் மற்றும் கையேடுகளை எழுதிக் குவித்தவர். சகோரதரக் கட்சிகளின், குறிப்பாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின், பிரச்சனைகளைத் தீர்க்க – அமைப்பில் குறுக்கிடாமல் –தலையிட்டு தீர்வு காண உதவியவர்.

    தீவிர அரசியலில் இருந்து 1960களின் மத்தியில் விலகினார், அனைத்துப் பதவிப் பொறுப்புகளையும் கைவிட்டார், ஆனால் தொடர்ந்து பணியாற்றினார். நீண்ட காலம் உடல் நலம் குன்றியிருந்த அவர் 1974 டிசம்பர் 20ல் மறைந்தார். (ஏங்கெல்சின் மொழியில் கூறினால், கம்யூனிச இயக்கத்திற்காகச் சிந்திப்பதை அவர் நிறுத்தினார். அந்தப் பணியை அவரது எழுத்துகள் தொடர்ந்து ஆற்றி வருகிறது. படித்துப் பயன்பெறுவோம்!)

            வாழ்க ஆர்பிடி எனும் மூன்றெழுத்து அறிஞர் பெருமகனார்!

--நன்றி : நியூஏஜ் (செப்.25 –அக்.1)
--தமிழில் : நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்

             

 

 

No comments:

Post a Comment