Monday 17 October 2022

சிபிஐ 24வது கட்சிக் காங்கிரஸ் சிறப்புக் கட்டுரை -- ஒரு வரலாற்றுப் பார்வை

                   
கம்யூனிஸ்ட் கட்சிக் காங்கிரஸ் மாநாடுகள் வழி,                              ஒரு வரலாற்றுப் பார்வை

                                                                  --அனில் ரஜீம்வாலே

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1925ல் கான்பூரில் நிறுவப்பட்டது. அதிலிருந்து கட்சி நடத்திய பல்வேறு மாநாடுகள் மற்றும் காங்கிரஸ்களில் (குறிப்பிட்ட கால இடைவெளியில் நடத்தப்படும் பேராயங்கள்) கட்சியின் அரசியல், தத்துவக் கோட்பாடு மற்றும் செயல்திட்ட நிலைபாடுகளைத் தீட்டி, முடிவுகள் மேற்கொள்ளப்பட்டன.

     முதலில் குறிப்பிடத்தக்க ஒன்று, தேசியக் காங்கிரஸ் கட்சியின் அகமதாபாத் அமர்வில் (1921) இந்தியாவுக்கு “அனைத்து அன்னியக் கட்டுப்பாட்டிலிருந்தும் விடுதலை என்னும் ‘பூரண சுயராஜ்யம்’’ என்ற தீர்மானத்தை முதன் முதலாக முன்மொழிந்தது கம்யூனிஸ்டான மௌலானா ஹஸ்ரத் மொகானி. ஆனால் அத்தீர்மானம் வாக்கெடுப்பில் தோற்றது.

சிபிஐ அமைப்பு மாநாடு, கான்பூர், 1925

       இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கான்பூர் அமைப்பு மாநாடு 1925 டிசம்பர் 25 முதல் 29 வரை நடைபெற்றது.

    மாநாட்டின் அமைப்பாளரான சத்தியபக்தா, 1925 ஜூன் 18ம் தேதியிட்ட அவரது சுற்றறிக்கை கடிதத்தில், “கம்யூனிஸ்ட் கட்சியின் இறுதி லட்சியம், ‘இந்தியாவில் முழுமையான சுதந்திர’த்தை ஏற்படுத்துவது, அதன் விளைவாய் நியாயமான ஒரு சமூகத்தை அமைப்பது” என்று தெளிவாகக் குறிப்பிட்டார்.

        கான்பூரில் கம்யூனிஸ்ட்களின் மாநாட்டின் தலைவரான ம சிங்காரவேலர்னது உரையில் பின்வருமாறு குறிப்பிட்டார்: “…கட்சியின் உடனடி லட்சியம், சுயராஜ்யத்தை அல்லது முழுமையான விடுதலையை அனைத்து நியாயமான வழிகளிலும் நிறுவுவதே.”

    மொஹானியும் சிங்காரவேலரும் தங்கள் உரைகளில் தொடர்ச்சியாக ‘சுயராஜ்’ என்பது முழுமையான விடுதலை என உறுதியாக விளக்கமளித்தனர்.

    கான்பூர் மாநாட்டில் ஏற்கப்பட்ட அமைப்பு விதி ஷரத்து 1, “பிரிட்டிஷ் ஏகாதிபத்திய மேலாதிக்கத்திலிருந்து இந்தியாவின் விடுதலை”யைக் கட்சியின் லட்சியங்களில் ஒன்றாகப் பிரகடனப்படுத்தியது. மேலும் கட்சி உறுப்பினர்கள் காங்கிரஸ் கட்சிக்குள்ளும் இருக்கலாம் என மாநாடு முடிவுசெய்தது.

 கான்பூர் அமைப்பு மாநாடு எஸ் வி காட்டே மற்றும் ஜெ பி பஹர்ஹட்டா இருவரையும் பொதுச் செயலாளர்களாகவும் சிங்காரவேலரைத் தலைவராகவும் தேர்ந்தெடுத்தது.

சிபிஐ-யின் விரிவடைந்த சிஇசி கூட்டம், பாம்பே, 1927

          பாம்பேயில் 1927 மே 29 முதல் 31வரை நடைபெற்ற கட்சியின் (பொதுக்குழு என்று அழைக்கப்படும்) விரிவடைந்த மத்திய செயற்குழு (சிஇசி) கூட்டம் கட்சியின் அமைப்புச் சட்டம்

மற்றும் செயல்திட்டத்தை மாற்றியமைத்தது. மற்றும் செயல்திட்டத்தை மாற்றியமைத்தது. சிபிஐ அமைப்பு விதி, ‘ப்ரோகிராம்’ பிரிவு பத்தி 6, கட்சியின் லட்சியத்தை, “முழுமையான தேசிய விடுதலை மற்றும் வயது வந்த அனைவருக்கும் வாக்குரிமை அடிப்படையில் ஜனநாயகக் குடியரசை நிர்மாணிப்பது” என்று மேம்படுத்தி மாற்றியமைத்தது. அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டியில் அதனது இடதுசாரி அணியின் ஒத்துழைப்புடன் குடியரசு அணியை அமைப்பதைக் கம்யூனிஸ்ட்கள் லட்சியமாகக் கொண்டனர்.

 சிஇசி கூட்டம் எஸ் வி காட்டேவைப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தது.       


  கல்கத்தா மாநாடு, 1933

      1933ல் மீரட் கைதிகள் விடுதலைக்குப் பிறகு, சிபிஐ-யின் சிறிய மாநாடு கல்கத்தாவில் 1933 டிசம்பரில் நடைபெற்றது; அதில் அரசியல் தீர்மானம், கட்சியின் புதிய அமைப்பு விதி ஏற்கப்பட்டு, டாக்டர் ஜி அதிகாரியைப் பொதுச் செயலாளராகக் கொண்ட புதிய மத்திய குழுவும் தேர்ந்தெடுக்கப்பட்டது. அவர் கைது செய்யப்பட்ட பிறகு, எஸ் எஸ் மிராஜ்கர் பொதுச் செயலாளராகச் செயல்பட்டார். சில காலத்திற்குப் பிறகு அவர் மாற்றப்பட்டு சோமநாத் லாகிரி பொதுச் செயலாளரானார்.

   அம்மாநாடு இந்தியாவின் விடுதலையை வென்றடைய வற்புறுத்தியது.

சிபிஐயும், முழு விடுதலை காங்கிரஸால் ஏற்கப்பட்டதும்

    முழு விடுதலையை லட்சியமாகத் தீர்மானிப்பதை நோக்கிய நடவடிக்கைகளில் இந்திய தேசியக் காங்கிரசின் மெட்ராஸ் (1927), கல்கத்தா (1928) மற்றும் லாகூர் (1929) அமர்வுகள் முக்கியமானவை: அதில் சிபிஐ மற்றும் WPP (தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சி)  கேந்திரமான முக்கிய பங்கு வகித்தன. 1927 மெட்ராஸ் அமர்வில் முழு விடுதலை குறித்த தீர்மானத்தைப் பொருளாய்வுக் குழுவில் கே என் ஜோக்லேக்கர் (சிபிஐ) முன்மொழிய, ஜவகர்லால் நேரு ஆதரித்தார், அத்தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது. பொது அரங்கில் முழு விடுதலைத் தீர்மானத்தை ஜவகர்லால் நேரு முன்மொழிய கேஎன் ஜோக்லேக்கர் வழிமொழிந்தார். ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

காங்கிரசின் 1928 கல்கத்தா அமர்வில் சிபிஐ மற்றும் தொழிலாளர் விவசாயக் கட்சி தலைமையில் 50ஆயிரம் மக்கள் பங்கேற்க மாபெரும் பேரணி காங்கிரஸ் அமர்வு நடைபெறும் பந்தலுக்குள், காங்கிரஸ் தலைவர் மோதிலால் நேரு அனுமதியுடன் நுழைந்தது. முழு விடுதலையை ஆதரித்து நடத்தப்பட்ட பேரணியில் ஜோக்லேக்கரும், ஜவகர்லால் நேருவும் உரையாற்றினர்.

     அதன் விளைவாய், ஓராண்டிற்குள் முழு விடுதலை லட்சியத் தீர்மானத்தை ஏற்க காங்கிரஸ் முடிவு செய்தது; மேலும் 1929 டிசம்பர் 31 லாகூர் அமர்வில் அவ்வாறே செய்தது: அமர்வின் தீர்மானம், “இந்தக் காங்கிரஸ், கடந்த ஆண்டின் அதன் கல்கத்தா அமர்வில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு ஒப்ப, பிரகடனம் செய்கிறது: காங்கிரஸ் அமைப்பு விதி ஷரத்து 1ல் உள்ள ‘சுயராஜ்’ என்ற வார்த்தைக்கு முழு விடுதலை என்றே பொருள்படும்…”

பிசி ஜோஷி பொதுச் செயலாளராக, 1935

    1935ல் பிசி ஜோஷி சிபிஐ பொதுச் செயலாளர் ஆக்கப்பட்டார். ‘தேசிய முன்னணி’ என்றழைக்கப்பட்ட பரந்த ஏகாதிபத்திய எதிர்ப்பு முன்னணியை அமைப்பதன் மூலம் முழு விடுதலை என்ற முழக்கங்களை அவர் மேலெடுத்துச் சென்றார்.

சிபிஐ முதலாவது கட்சிக் காங்கிரஸ், பாம்பே, 1943

     இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது கட்சிக் காங்கிரஸ் (பேராயம்) 1943 மே 23 லிருந்து ஜூன் 1 வரை பாம்பேயில், பிரிட்டிஷ் ஆட்சியாளர்களுக்கு எதிராகத் தீவிரமான அரசியல் போராட்டங்கள் நிகழ்ந்த சூழ்நிலையின் மத்தியில், தேசிய வாழ்வில் பெரும் நிகழ்வாக நடைபெற்றது. பேராயம், முக்கிய எதிரியாகிய உலகப் பாசிசத்தை எதிர்த்துப் போரிட முடிவு செய்தது.

     கட்சியின் மீதான தடை நீக்கப்பட்டது. நாடு முழுவதுமிருந்து 139 பிரதிநிதிகள் பங்கேற்றனர். தேசிய முன்னணி மற்றும் தேசியப் பாதுகாப்பிற்காகத் தேசிய அரசு குறித்துப் பேராயம் விவாதித்து ‘மக்களின் யுத்தம்’ (பியூபிள்ஸ் வார்) என்ற முழக்கத்தைத் தந்தது. அதன் முக்கிய அம்சம் பாசிச எதிர்ப்பு முன்னணியை அமைப்பது.

            அந்நேரத்தில் கட்சி உறுப்பினர் எண்ணிக்கை 5ஆயிரத்திலிருந்து 15,000மாக உயர்ந்தது. 1931ன் அமைப்பு விதியை 1943 அமைப்பு விதி மாற்றியமைத்தது. அதுபோழ்து கட்சி ஒரு தேசிய சக்தியாக மாறி, பெருந்திரள் மக்களின் கட்சியாக உருவாகும் பாதையில் இருந்தது. கட்சி அமைப்பு விதி, இந்தியாவின் சுதந்திரத்தை விரும்பும் அனைத்து மக்களின், தேசிய ஐக்கிய முன்னணி கட்டியமைக்கும் கடமை பொறுப்பை வலியுறுத்தியது.

              சிபிஐயின் இலச்சினை சின்னம், ஐந்து கூர் முனைகள் உள்ள சிகப்பு நட்சத்திரம், அதன்
மத்தியில், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி என்று வட்டமாகப் பொறிக்கப்பட்ட எழுத்துகளுடன் குறுக்காக அமைந்த சுத்தியல் அரிவாள் என்பதாகும்.

 இது பின்னர் (சிகப்பு நட்சத்திரம் இல்லாமல்) சிகப்புப் பின்னணியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி என்று வெள்ளை நிறத்தில் வட்ட வடிவிலான வார்த்தைகளுடன் வெள்ளை நிறத்தில் அரிவாள் சுத்தியல் குறுக்காக அமையுமாறு மாற்றப்பட்டது.

            பிசி ஜோஷி பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்திய விடுதலையும் சிபிஐ கட்சியும்

   கடுமையான போராட்டங்களால் 1947 ஆகஸ்ட் 15ல் வென்றடைந்த இந்தியாவின் சுதந்திரத்தைப் பிசி ஜோஷி தலைமையிலான சிபிஐ மனப்பூர்வமாக மகிழ்ந்து வரவேற்றது, அதனைக் கொண்டாடும் வகையில் தொடர்ச்சியான கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் மற்றும் ஊர்வலங்களை நடத்தியது. சிபிஐ-யின் அதிகாரபூர்வ ஏடு ‘மக்களின் சகாப்தம்’ (பியூபிள்ஸ் ஏஜ்) தனது 1947 ஆகஸ்ட் 3 இதழில், “நூற்றாண்டுகளாக யூனியன் ஜாக் கொடி பறந்த இடத்தில், இந்தியாவின் தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்க உள்ளது… இந்திய மக்களின் விடுதலைப் போராட்டத்தில் அது ஒரு முக்கிய வரலாற்று நிகழ்வாகப் பொன்னெழுத்துக்களில் பொறிக்கப்பட உள்ளது” என்று எழுதியது.   

 பியூபிள்ஸ் ஏஜ் விடுதலை நாள் சிறப்பிதழை வெளியிட்டு, அதில் நாடு முழுவதும் நடந்த விழா கொண்டாட்டங்களில் சிபிஐ-யின் பங்கேற்பு குறித்த செய்திகளை விரிவாகத் தந்தது.

சிபிஐ 2வது பேராயம், கல்கத்தா, 1948

  1947 டிசம்பரில் நடைபெற்ற மத்தியக் குழு கூட்டத்தில் பொதுச் செயலாளர் பிசி ஜோஷி, ‘சீர்திருத்தவாதம்’ என்ற பெயரில், நீக்கப்பட்டு, பிடி ரணதிவே நியமிக்கப்பட்டார்; அது ‘பிடிஆர்’ பாதை என்ற தற்கொலை சாகசத்திற்குக் கட்சியில் தொடக்கம் செய்தது. 1948 பிப்ரவரி-மார்ச்சில் கல்கத்தாவில் நடைபெற்ற 632 பிரதிநிதிகள் கலந்து கொண்ட சிபிஐ 2வது பேராயம் பிடி ரணதிவேவைப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தது. அப்பேராயம், இந்தியச் சுதந்திரத்தைப் ‘போலி’ என்றும் நேருவின் அரசை ஏகாதிபத்தியத்தின் ஏஜெண்ட் என்றும் குணாம்சப்படுத்தியது. அது நேரு அரசை உடனடியாக ஆயுதப் போராட்டம் மூலம் தூக்கி எறிந்து, ‘சோஷலிசம்’ நோக்கி நகர்த்த அறைகூவல் விடுத்தது. 1948 மார்ச் 9ல் தேசம் தழுவிய காலவரையறையற்ற ரயில்வே வேலை நிறுத்தத்திற்கான அழைப்பு, புரட்சி வெடிக்கும் என்ற நம்பிக்கையில் விடுக்கப்பட்டது, ஆனால் அது முழுமையாகத் தோல்வியில் முடிந்தது.

   ஹைதராபாத் நிஜாம் சமஸ்தானத்தின் தெலுங்கானா பகுதியில் நடைபெற்ற ஆயுதப் போராட்டம், அப்பகுதிக்குள் இந்திய இராணுவப்படைகள் 1948 செப்டம்பர் 13ல் நுழைந்த பிறகும், தவறாகத் தொடர்ந்தது. அதன் விளைவாய், சிபிஐ மற்றும் அதன் ஜனரஞ்சக அமைப்புகள் முற்றாகத் தனிமைப்படுத்தப்பட்டு, சிதறின. 1948ன் தொடக்கத்தில் கட்சி உறுப்பினர் எண்ணிக்கை 89ஆயிரத்திற்கும் மேல் இருந்தது, 1950ன் இறுதியில் வெறும் 9,000 ஆகக் குறைந்தது! சாகசப் பாதை கட்சியை அழித்தது.

       பிடிஆர் நீக்கப்பட்டு, முதலில் சி இராஜேஸ்வர ராவ் பொதுச் செயலாளராகவும், பின்னர் அஜாய் கோஷ் பொதுச் செயலாளராகவும் ஆக்கப்பட்டார்.

சிபிஐ சிறப்பு மாநாடு, கல்கத்தா, 1951

        அது, தலைமறைவாக 1951 அக்டோபர் 9முதல் 15வரை நடைபெற்றது. புதிய, முறையான, கட்சி செயல்திட்டம் நிறைவேற்றப்பட்டது. தலைமறைவு வாழ்வில் அஜாய் கோஷ், டாங்கே மற்றும் காட்டேவின் புனைப் பெயரின் தொடக்கமான ஆங்கில ‘P’ என்ற எழுத்தில் அமைந்த அவர்களிடமிருந்து வந்த ‘3 P’ கடிதத்தின் அடிப்படையில் அந்த மாற்றம் ஏற்கப்பட்டது; அவர்கள் சூழ்நிலைக்கு ஏற்ப புதிய புரிதலைப் பின்பற்றி, கட்சித் திட்டங்களை மேம்படுத்தினர். ஆயுதப் போராட்டத்தைத் திரும்பப் பெற்று 1952 பொதுத் தேர்தல்களில் பங்கெடுக்க கட்சி முடிவு செய்தது.

      கட்சித் திட்டம், “தொழிலாளர் வர்க்கம், வேளாண் குடிகள், உழைக்கும் கற்றறிவாளர்கள், நடுத்தர வர்க்கத்தினர் எனும் லட்சோப லட்சம் பாடுபடும் மக்கள் திரளையும், நாட்டின் விடுதலையில் ஆர்வம் உடைய தேசிய முதலாளிகளையும்” ஒன்றிணைத்து அதனை ஒரே ஜனநாயக முன்னணியாக மேம்படுத்த அழைப்பு விடுத்தது. திட்டம் மேலும் கூறும்போது புரட்சியின் இந்தக் கட்டம், சோஷலிசப் புரட்சி அன்று; மாறாக அது ஜனநாயகப் புரட்சிக்கானது  என்று வரையறுத்தது.

       மேலும் அது ‘கொள்கை அறிக்கை’ (பாலிசி ஸ்டேட்மெண்ட்) நிறைவேற்றியது. அஜாய் கோஷ் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

3வது கட்சிப் பேராயம், மதுரை, 1953 --54

     1953 டிசம்பர் 27 முதல் 1954 ஜனவரி வரை தமிழகத்தின் மதுரையில் நடைபெற்ற 3வதுகட்சிப் பேராயம், நேருவின் வெளிநாட்டுக் கொள்கையின் முற்போக்குத் தன்மையை அங்கீகரித்து அரசியல் தீர்மானம் நிறைவேற்றியது.

     நமது முக்கியமான கடமைப் பொறுப்பு, காங்கிரஸ் அரசை மாற்றுவது; அதனை முற்போக்குக் காங்கிரஸ்காரர்களை உள்ளடக்கிய ஜனநாயக ஒன்றாக மாற்றி அமைப்பதென அஜாய் கோஷ் விளக்கினார். பொதுச் செயலாளராக அஜாய் கோஷ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

ஜூன் 1955 தீர்மானம்

   இந்த முக்கியமான ஆவணம் உத்திகள் மற்றும் தந்திரோபாய நிலைபாடுகளையும், நாடாளுமன்ற அமைப்புகளின் நேர்மறை பங்கையும் வரையறுத்தது. ஜனநாயக முன்னணியின் முக்கியத்துவத்தையும், இந்தியாவின் வெளிநாட்டுக் கொள்கையையும், உள்நாட்டில் பொதுத்துறை சார்பான கொள்கைகளையும் நேர்மறையாக மதிப்பிட்டு வலியுறுத்தியது; மேலும், அரசின் மக்கள் விரோதக் கொள்கைகளை எதிர்த்துப் போரிடும்போது, வலதுசாரி பிற்போக்கு சக்திகள் அதிகாரத்திற்கு வந்துவிடாத வகையில் மிகக் கவனமாகக் கையாளவும் எச்சரித்தது. காங்கிரஸின் முற்போக்குப் பிரிவுகளையும் உள்ளடக்கியதாக ஜனநாயக முன்னணி இருக்கும் என்றது.

4வது கட்சிப் பேராயம், பாலக்காட், 1956

    கட்சியின் அரசியல் மற்றும் தத்துவக் கோட்பாடுகளின் வரலாற்றில் இப்பேராயம் ஒரு குணாம்சரீதியான திருப்பு முனை, பிடிஆர் காலத்தின் சரிவுக்குப் பிறகு கட்சியை அரசியல் மைய நீரோட்டத்தில் இணைய உதவியது. கேரள மாநில பாலக்காட்டில் 1956 ஏப்ரல் 19முதல் 29வரை நடைபெற்றது. ஒரு லட்சத்து ஐயாயிரம் உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 407பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

     அஜாய் கோஷ், தேசிய சர்வதேசிய நிலைகள் மற்றும் புதிய கடமை பொறுப்புகளையும் வரலாற்றுச் சிறப்புமிக்க சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPSU) 20வது காங்கிரஸ் குறித்தும் அறிக்கை தந்து, புதிய உலக எதார்த்தங்கள் மற்றும் உத்திகள், தந்திரோபாயங்களில் மாற்றத்தின் தேவையை வலியுறுத்தினார். நாடாளுமன்ற அமைப்புகள் மற்றும் அமைதியான மாற்றத்தின் பங்கினை அடிக்கோடிட்டு வலியுறுத்தினார்.

      கட்சிப் பேராயம் ஸ்டாலின் தலைமை வழிபாட்டை (பர்சனாலிட்டி கல்ட்) விமர்சனம் செய்தது; மேலும் அவரது பங்களிப்புக் குறித்துச் சமச்சீரான மதிப்பீடு தேவை என்றது.

     பாலக்காட் பேராயம் மொழிவாரி மாநிலங்கள் சீரமைப்பை ஆதரித்தது. ஜனநாயக முன்னணி, காங்கிரஸ் எதிர்ப்பு முன்னணியாக இருக்காது என அரசியல் தீர்மானம் தெளிவு படுத்தியது. “இந்தியச் சமூகத்தின் அடிப்படை முரண்பாடு, ஒரு பக்கம் ஏகாதிபத்தியம் மற்றும் நிலப்பிரபுத்துவமும் இருக்க, மறுபுறம் தேசிய நடுத்தர வர்க்க முதலாளிகள் (நேஷனல் பூர்ஷ்வாசி) உள்ளிட்ட ஒட்டு மொத்த இந்திய மக்களுக்கும் இடையிலான முரண்பாடாகும்” என்று விளக்கியது தீர்மானம். (ஏகாதிபத்தியம் மற்றும் நிதிமூலதனத்தை ஆதரிக்கும் பெரு முதலாளிகள் –கார்ப்பரேட் பூர்ஷ்வாஸி-- வேறு, நடுத்தர வர்க்க தேசிய பூர்ஷ்வா முதலாளிகள் வேறு. மாற்றத்திற்கான போராட்டத்தில் தேசிய பூர்ஷ்வாக்களின் ஒத்துழைப்பு தேவை)

            வலதுசாரி சக்திகளுக்கு எந்தவகையிலும் இடம் தரும் கேள்வியே எழவில்லை.

            ஜாய் கோஷ் மீண்டும் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

5வது (அசாதாரண) கட்சிப் பேராயம், அமிர்தசரஸ், 1958      

      கேரள மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களில் வெற்றி பெற்ற (1957) பின்னணியில், இந்தப் பேராயம் ஒரு மைல்கல் பேராயம். கட்சி அமைப்பு விதிகளில் முக்கிய மாற்றங்களை ஏற்படுத்தி கட்சிக்கான புதிய அமைப்பு விதி நிறைவேற்றப்பட்டது. அதன் முக்கிய அம்சங்கள்:

1.‘பாட்டாளிகளின் சர்வாதிகாரம்’ என்ற கோட்பாடு கைவிடப்பட்டது.

2.இந்தியாவில் எதிர்கால சோஷலிசத்தில் எதிர்க்கட்சிகளின் இருப்பை அங்கீகரிப்பது

3.அமைதியான வழிகளில் முழு ஜனநாயகத்தையும் சோஷலிசத்தையும் வென்றெடுக்கச் சிபிஐ பாடுபடும் என அறிவிக்கிறது.

4.அனைத்து தேசபக்த மற்றும் ஜனநாயக சக்திகளையும் ஒன்றிணைத்துத் தேசிய விடுதலையைப் பாதுகாக்க உறுதி ஏற்கிறது.

5. தேசியமயமாக்கல் மற்றும் பொதுத் துறைகள் போன்ற நல்ல அம்சங்களை வலதுசாரி பிற்போக்குச் சக்திகள் தாக்குகின்றன என்பதைக் கட்சிப் பேராயம் சுட்டிக் காட்டுகிறது.

6.அமிர்தசரஸ் பேராயம் குறித்து விமர்சித்த இஎம்எஸ், ‘நியூ ஏஜ்’ இதழில் பின்வருமாறு எழுதினார்: “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி உண்மையில் தேசியம், ஜனநாயகம் மற்றும் மக்களுக்குச் சேவை என்ற செயல்திட்டத்தைப் பின்பற்றுகிறது; மேலும் அகிம்சை, ஒத்துழையாமை மற்றும் சுயராஜ் என்ற காந்திஜியின் உணர்வைப் பின்பற்றுகிறது”

7.கட்சி அமைப்பு விதிகள் ஸ்தாபனக் கட்டமைப்பில் முந்தைய இரண்டடுக்கு என்பதற்குப் பதிலாக மூன்று அடுக்கு கட்டமைப்பை ஏற்படுத்தத் தீர்மானம் நிறைவேற்றியது.

6வது கட்சிப் பேராயம், விஜயவாடா, 1961

இப்பேராயம், சர்வதேசிய மற்றும் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்திலும் அழிவு தரும் மாவோயிசப் பிளவு நடவடிக்கைகளின் பின்னணியில் நடைபெற்றது, பல பிளவுகளுக்கு இட்டுச் சென்றது.

கட்சிப் பேராயம் 1961 ஏப்ரல் 7 முதல் 16வரை 1,77,501 உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்திய 439 பிரதிநிதிகள் பங்கேற்புடன் நடைபெற்றது. மாவோயிசத்தால் தூண்டிவிடப்பட்ட சீனப் பாதையைப் பின்பற்றியவர்கள் கட்சியைப் பிளவுபடுத்தும் தயாரிப்புகளில் ஈடுபட்டாலும், தக்க சமயத்தில் அஜாய் கோஷ் தலையீட்டால் காக்கப்பட்டது. கடுமையாக நோய்வாய்ப்பட்ட நிலையிலும் அவர் ஆற்றிய நீண்ட உரை ‘கட்சிப் பாதை’யாக (பார்ட்டி லைன்) நிறைவேற்றப்பட்டது. அந்த நேரத்திற்குப் பிளவு தவிர்க்கப்பட்டது.

சீனா ஆக்கிரமிப்பு, 1962      

       தங்கள் சொந்த வாக்குறுதிக்கு மாறாக அதை மீறி, 1962 அக்டோபரில் சீனப்படைகள் இந்தியப் பிராந்தியத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஆக்கிரமித்தது. சீன ஆக்கிரமிப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய செயற்குழு (CEC) ஐயத்திற்கு இடமின்றி வெளிப்படையாகக் கண்டித்தது; மேலும் தேசப் பாதுகாப்பிற்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகளை ஆதரித்தது.

7வது கட்சிப் பேராயம், பாம்பே, 1964

            கட்சிப் பிளவிற்குப் பிறகு நடந்த முதலாவது பேராயம், 1964 டிசம்பர் 13 முதல் 23 வரை நடைபெற்றது. பிளவு, கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு மாபெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனச் சுட்டிக் காட்டியது. பேராயம், தேசிய ஜனநாயகப் புரட்சிக்கான புதிய செயல்திட்டத்தை நிறைவேற்றியது. மாவோயிசம் மற்றும் சீன ஆக்கிரமிப்பைச் சிபிஐ பேராயம் கண்டித்தது.

            சி இராஜேஸ்வர ராவ் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

8வது கட்சிப் பேராயம், பாட்னா, 1968

    1968 பிப்ரவரி 7 முதல் 15வரை நடத்தப்பட்டது. சிபிஐ(எம்) கட்சியிலும் 1967ல் பிளவு ஏற்பட்டு ‘நக்சலைட்டுகள்’ வெளியே வந்தார்கள். அரசியல் தீர்மானம் பெருந்திரள் மக்கள்

எழுச்சியையும் பந்த் (கடையடைப்பு) இயக்கத்தையும் சுட்டிக் காட்டியது, சிபிஐ அந்தப் போராட்டங்களில் முன்னணியில் இருந்தது. வலதுசாரி பிற்போக்குச் சக்திகளிடமிருந்து அதிகரித்து வளரும் ஆபத்துக்களுக்கு எதிராக அது எச்சரித்தது; பெருந்திரள் ஜனநாயக முன்னணியை விரிவுபடுத்த அது அறைகூவல் விடுத்தது.

  சி இராஜேஸ்வர  ராவ் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

9வது கட்சிப் பேராயம், கொச்சி, 1971

   2,43,248 உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 995 சார்பாளர்கள் மற்றும் 182 பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். 

       பேராயம் அரசியல் அறிக்கை, அரசியல் தீர்மானம், அமைப்புநிலை அறிக்கை மற்றும் பிற ஆவணங்களை நிறைவேற்றியது. காங்கிரஸ் விரோத அல்லது காங்கிரஸ் அல்லாத முன்னணி

போன்ற எந்தக் கருத்தும் வலதுசாரி பிற்போக்கு சக்திகளுக்கே உதவிடும் என்பதை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தெளிவுபடுத்தியது. ஜனசங்கம் –ஆர்எஸ்எஸ் கூட்டு ஆகப் பெரிய ஆபத்து. 1969ல் 14 ஏகபோக வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டன. பிற்போக்கு மற்றும் முற்போக்கு சக்திகள்  இடையே மோதல், முரண்பாடு கூர்மை அடைந்தது; சிபிஐ ஆதரவுடன் வி வி கிரி குடியரசுத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

        எஸ் ஏ டாங்கே தலைவராகவும் (சேர்மன்) சி இராஜேஸ்வர ராவ் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

10வது கட்சிப் பேராயம், விஜயவாடா, 1975

  3,55,526 உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 1246 சார்பாளர்கள் கலந்து கொள்ள, இப்பேராயம் 1975 ஜனவரி 27 முதல் பிப்ரவரி 2 வரை நடைபெற்றது. சிபிஐ அமைக்கப்பட்ட 50ம் ஆண்டு பொன்விழா குறித்துத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. சிபிஐ சேர்மன் எஸ் ஏ டாங்கே, ‘வலதுசாரி பிற்போக்கை அதிகாரத்திற்கு வர சிபிஐ அனுமதிக்காது’ என்று கூறினார்.

      பேராயத்தின் இறுதி நாளில் 5 லட்சம் பேர் கலந்து கொண்ட பிரம்மாண்டமான பேரணி நடைபெற்றது.

        எஸ் ஏ டாங்கே தலைவராகவும், சி இராஜேஸ்வர ராவ் பொதுச் செயலாளராகவும் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

11வது கட்சிப் பேராயம், பட்டிண்டா, 1978

       பஞ்சாப் மாநில பட்டிண்டாவில் 1978 மார்ச் 31 முதல் ஏப்ரல் 7வரை நடைபெற்றது. 5,46,732 உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி 1183 முழு பிரதிநிதிகளும் மற்றும் 259 மாற்றுப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

    பேராயம், அவசரநிலையை (எமர்ஜென்சி) சிபிஐ ஆதரித்தது தவறு என்று முடிவு செய்தது. தொடக்கத்தில் இருந்தே எமெர்ஜென்சி மக்கள் விரோதமாகவே இருந்தது. அதே நேரத்தில் ‘முழுப் புரட்சி’ என்றழைக்கப்பட்ட ஆர்எஸ்எஸ் தலைமையிலான (ஜெயப்பிரகாஷ் நாராயணன் இயக்கம்) ஜெபி இயக்கத்திடமிருந்து உண்மையான அச்சுறுத்தல் இருந்தது என்பதைத் தெளிவுபடுத்திய பேராயம், எனவே நாம் பாசிச எதிர்ப்புப் பிரச்சாரத்தை மேற்கொண்டது சரியே என்றும் கூறியது.

இந்த இயக்கத்தின் முக்கிய மையமாக இருந்தது ஆர்எஸ்எஸ் மற்றும் ஜனசங்கம் என்று சுட்டிக் காட்டிய பட்டிண்டா பேராயம் இவ்வாறு அறிவித்தது: “அதிதீவிர வலதுசாரிகளால் கைப்பற்றுப்படும் ஆபத்து இவ்வாறு கடுமையானதாக இருந்தது.”

என்னதான் நோக்கமாக இருந்தாலும், அவசரநிலை திணிப்பு இந்திரா காந்தியின் தனிப்பட்ட ஆட்சியை மட்டுமே வலுப்படுத்தியது; மேலும் அது வலதுசாரி பிற்போக்கிற்கே உதவியது.

பேராயம் சேர்மன் மற்றும் பொதுச் செயலாளரை மீண்டும் தேர்ந்தெடுத்தது.

12வது கட்சிப் பேராயம், வாரணாசி, 1982

    உ.பி. மாநில (காசி மற்றும் பெனாரஸ் எனப்படும்) வாரணாசியில் 1982 மார்ச் 22 முதல் 28வரை நடைபெற்றது. 1223 முழு பிரதிநிதிகளும் மற்றும் 188 மாற்றுப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். சென்ற மாநாடு நடந்த காலத்திலிருந்து நாட்டில் அனைத்து வகையான வகுப்புவாத மற்றும் சீர்குலைவு சக்திகள் தலை தூக்கி ஒற்றுமைக்கு ஆபத்து ஏற்படுத்தின எனப் பேராயம் சுட்டிக் காட்டியது. (கொள்கையற்ற) “அனைத்தும் சேர்ந்த எதிர்த்தரப்பு ஒற்றுமை” (ஆல்-இன் அப்பொஸிஷன் யூனிட்டி) என்ற கோட்பாட்டைக் கட்சிப் பேராயம் கூர்மையாக விமர்சனம் செய்தது.

       சி இராஜேஸ்வர ராவ் மீண்டும் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

13வது கட்சிப் பேராயம், பாட்னா, 1986

   1986 மார்ச் 12 முதல் 17வரை நடைபெற்றது. 1027 பிரதிநிதிகளும் மற்றும் 71 மாற்றுப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். “கொள்கை அடிப்படையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தை மீண்டும் ஒன்றிணைப்பது” என்பதற்காக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிற்கிறது, ஆனால் அதற்கு மறுமொழி கிடைக்கவில்லை. தேசிய அளவில் சிபிஐ, இந்திய தேசியக் காங்கிரசுக்கு அடுத்து இரண்டாவதாக உள்ளது.

        சி இராஜேஸ்வர ராவ் மீண்டும் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

14வது கட்சிப் பேராயம், கல்கத்தா, 1989

    1989 மார்ச் 6 முதல் 12வரை நடைபெற்றது. 956 பிரதிநிதிகளும் மற்றும் 91 மாற்றுப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். சோவியத் யூனியனின் நிகழ்வுகள் பிரதிநிதிகளின் கவனத்தைக் கவர்ந்தது. பெரேஸ்ட்ரோய்கா மற்றும் க்ளாஸ்நாட் (சீர்திருத்தம் மற்றும் வெளிப்படைத் தன்மை), குறித்து அங்கே பிரதிநிதிகள் பலவாறு பேசினர். கட்சிப் பேராயம், “இத்தகைய சீர்திருத்தங்களின் முக்கியமான திசைவழி சரியானது என்று நமது கட்சி திருப்தி அடைகிறது மற்றும் நாம் அதனை ஆதரிக்கிறோம்” என்று கூறியது. அப்படிக் கூறியதால் அதற்கு எல்லாமும் சரி என்று பொருளாகாது.

   இந்திய அரசு அதனது வெளியுறவுக் கொள்கையில் ஏகாதிபத்திய எதிர்ப்புத் தன்மை கொண்டுள்ளது. நாட்டில் வகுப்புவாத நிலைமை மோசத்திலிருந்து படு மோசமாகப் போனது.

        சி.இராஜேஸ்வர ராவ் பொதுச் செயலாளராகத் திரும்ப மீண்டும் தேர்வானார்.

15வது கட்சிப் பேராயம், ஹைதராபாத், 1992

        1992 ஏப்ரல் 16 முதல் நடைபெற்றது.

     பேராயத்தின் விவாதங்களில் சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நாடுகளின் நிகழ்வுகளும் அது தொடர்ந்து சோவியத் யூனியன் சிதறியதற்கு இட்டுச் சென்றது குறித்தும் மேலோங்கி இருந்தது: அது ஜனநாயகம் மற்றும் சோஷலிசம் குறித்த கேள்விகளை எழுப்பியது.

       பேராயத்திற்கு முந்தைய நீண்ட விவாதங்களுக்குப் பிறகு, பேராயத்தில் “சோவியத் யூனியன் மற்றும் கிழக்கு ஐரோப்பிய நிகழ்ச்சிப் போக்குகள்” என்ற தலைப்பில் விரிவான ஆவணம் நிறைவேற்றப்பட்டது. நிறைவேற்றப்பட்ட மற்றொரு முக்கியமான ஆவணம், (பார்ட்டி ப்ரோகிராம்) செயல்திட்ட ஆவணமாகும். இந்திய மற்றும் உலக நிலைமைகளில் ஏற்பட்ட மாற்றங்கள் முழுமையான செயல்திட்ட ஆணவம் நிறைவேற்றுவதிலும் அதன் மீதான விவாதங்களையும் தாமதப்படுத்தி ஒத்தி வைக்க வேண்டிய தேவையை ஏற்படுத்தியது. கட்சியில் விரிவான விவாதங்களுக்குப் பிறகு இதுவும் ஏற்கப்பட்டது.

        ஹைதராபாத் பேராயம் நடைபெறுவதற்குச் சில மாதங்களுக்கு முன் சி இராஜேஸ்வர ராவ் உடல்நலம் குன்றிய காரணத்தால் இந்திரஜித் குப்தா பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருந்தார். பேராயம் இந்திரஜித் குப்தாவைப் பொதுச் செயலாளராக உறுதி செய்தது.

திரிச்சூர் அமைப்புநிலை மாநாடு, 1993

     கேரள மாநிலம், திருச்சூரில் 1993 மார்ச் 11 முதல் 14 வரை இரண்டு ஆவணங்களை விவாதிக்க நடத்தப்பட்டது: ஒன்று, “சில ஸ்தாபனக் கடமைகள்,” மற்றொன்று, “ஜனரஞ்சகப் பெருந்திரள் அமைப்புகளும் கட்சியும்.” இம்மாநாடு மூன்றடுக்கு கட்சிக் கட்டமைப்பை, இரண்டடுக்காக மாற்றியது. இவ்வாறு மாற்றியமைப்பதால் பணிகளை மறுமுறையும் திரும்ப (டூப்ளிகேட்டாக) செய்வதைக் குறைக்கும் எனக் கருதப்பட்டது. செயலகம் என்ற அமைப்பு எடுக்கப்பட்டது, மத்திய செயற்குழு (சிஇசி) ‘தேசியச் செயற்குழு’ என்றானது.

     மாநாடு, கட்சி அமைப்பில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி, சிறுபான்மையினர் பிரிவுகள் மற்றும் பெண்களுக்கு முறையான பிரதிநிதித்துவம் அளிக்க முடிவு செய்தது.

   இரண்டடுக்கு ஏற்பாடு எதிர்பார்க்கப்பட்டவாறு செயல்படவில்லை; எனவே, கட்சி மூன்றடுக்கு கட்டமைப்புக்கு மீண்டும் திரும்பியது.

16வது கட்சிப் பேராயம், புதுடெல்லி, 1995

        1995 அக்டோபர் 7முதல் 11வரை நடைபெற்றது. 720 பிரதிநிதிகளும் மற்றும் 44 மாற்றுப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். பாபர் மசூதி இடிப்பு (1992), இடதுசாரி மற்றும் கம்யூனிஸ்ட் ஒற்றுமை குறித்த கேள்விகள் மற்றும் முன்னாள் சோவியத் யூனியன், கிழக்கு ஐரோப்பா நிகழ்வுகள் பேராயத்தில் முக்கிய பொருளாக விவாதிக்கப்பட்டன.

   எதிர்வரும் தேர்தல்களில் மூன்று அணிகள் போட்டியிடக் கூடும் என்று சிபிஐ கட்சிப் பேராயம் கூறியது: தேசியக் காங்கிரஸ் மற்றும் கூட்டணி, பாஜக தலைமையிலான கூட்டணி மற்றும் தேசிய முன்னணி –இடதுசாரி முன்னணி கூட்டு. காங்கிரஸ் மற்றும் பாஜக –சிவசேனா கூட்டு இரண்டையும் எதிர்த்துத் தேசிய முன்னணி – இடது முன்னணி (NF-LF) போராடும்.

 இந்திரஜித் குப்தா பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

17வது கட்சிப் பேராயம், சென்னை, 1998

       சென்னையில் 1998 செப்டம்பர் 14முதல் 19வரை கூட்டப்பட்டது. 975 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி (என்டிஏ) அரசு 1998ல் சிறிது காலம் அதிகாரத்திற்கு வந்தது. பேராயம், ஒரு மதசார்பற்ற ஜனநாயக மாற்றை மேலெடுத்து, வலதுசாரி பக்கம் திரும்புவதைத் தடுத்து, இடதுசாரிப் பக்கம் கொண்டு வருவதே நோக்கம் என்று கூறியது. புதிய மாற்றில் காங்கிரஸ் கட்சி முக்கிய பங்காற்ற வேண்டும்.

    புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தேசியக் குழு ஏபி பரதனைப் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுத்தது. இந்திரஜித் குப்தா 1996ல் ஒன்றிய அமைச்சரவையில் சேர்ந்து உள்துறை அமைச்சரானதும், ஏபி பரதன் 1996லேயே பொதுச் செயலாளர் ஆனார்.

18வது கட்சிப் பேராயம், திருவனந்தபுரம், 2002

 2002 மார்ச் 26முதல் 31வரை திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. 604பிரதிநிதிகளும் மற்றும் 56 மாற்றுப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர். இப்பேராயம் நாடாளுமன்றத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சூழலிலும், குஜராத்தில் பரவலான வகுப்புவாதக் கலவரங்கள் நடந்த பின்னணியிலும் நடந்தது.

  சிபிஐ மற்றும் சிபிஐ (எம்) ஒருங்கிணைப்பு குழுவின் செயல்பாடு நின்று போனது. வலிமையான சிபிஐ கட்சியே தற்போதைய தேவை; மற்றும் எதிர்வரும் காலம் தவறுகளைச் சரிசெய்வதாகவும், கட்சியை மறுசீரமைப்பதாகவும் இருக்கும் என்று பேராயம் கூறியது.

   ஏபி பரதன் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

19வது கட்சிப் பேராயம், சண்டிகார், 2005

       2005 மார்ச் 29முதல் ஏப்ரல் 3வரை நடைபெற்றது. 549பிரதிநிதிகளும் மற்றும் 61 மாற்றுப் பிரதிநிதிகளும் கலந்து கொண்டனர்.

        இக்காலகட்டத்தில் சிபிஐ மற்றும் இடதுசாரிகள், (யூபிஏ-1) ஐக்கிய முற்போக்கு கூட்டணி -1 அரசை ஆதரித்தன. கட்சிப் பேராயம், கம்யூனிஸ்ட் ஒற்றுமைக்காகக் கையேந்தி இரந்து நிற்காது என்பதைத் தெளிவாக்கியதுடன், வலிமையான சுதந்திரமான கட்சியைக் கட்டும் என்று அறிவித்தது. 1964 பிளவு ஏற்பட்டதிலிருந்து சிபிஐ-யின் கருத்து பெருமளவு நிரூபிக்கப்பட்டது.

   ஏபி பரதன் பொதுச் செயலாளராகவும், எஸ் சுதாகர் ரெட்டி துணைப் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

20வது கட்சிப் பேராயம், ஹைதராபாத், 2008

      2008 மார்ச் 23முதல் 27வரை நடைபெற்றது. கட்சியின் அடித்தளத்தையும், கட்சியின் தனித்த சுதந்திரமான இமேஜையும் கட்டுவது என்பதன் மீது முக்கிய அழுத்தம் தரப்பட்டது. மேலும் ஜனரஞ்சக பெருந்திரள் அமைப்புக்களின் அடித்தளத்தை விரிவுபடுத்த முடிவு செய்யப்பட்டது.

மீண்டும் ஏபி பரதன் பொதுச் செயலாளராகவும், எஸ் சுதாகர் ரெட்டி துணைப் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

21து கட்சிப் பேராயம், பாட்னா, 2012

    2012 மார்ச் 27முதல் 31வரை நடைபெற்றது. அரசியல் தீர்மானம், அரசியல் மறுபரிசீலனை (ரெவியு) அறிக்கை மற்றும் ஸ்தாபன அறிக்கை விவாதிக்கப்பட்டன. கட்சி அமைப்பு விதிகளில் நுழைவுக் கட்டணம், செயலர்களின் பதவிக் காலம் முதலிய சில திருத்தங்கள் செய்யப்பட்டன. பேராயம், பரந்த இடதுசாரி மற்றும் ஜனநாயக ஒற்றுமையை வலியுறுத்தியதுடன், இடதுசாரி ஒற்றுமை மேலும் வெளிப்படையானதாக இருக்க வேண்டும் என்றது.

எஸ் சுதாகர் ரெட்டி பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

22வது கட்சிப் பேராயம், புதுச்சேரி, 2015

   2015 மார்ச் 25முதல் 29வரை புதுச்சேரியில் நடைபெற்றது. 819பிரதிநிதிகள், மாற்றுப் பிரதிநிதிகள், பார்வையாளர்கள் மற்றும் அழைப்பாளர்கள் கலந்து கொண்டனர். கட்சியின் புதிய செயல்திட்டம் நிறைவேற்றப்பட்டது. மேலும் நிரந்தரமான செயல்திட்ட ஆணையம் (ப்ரோகிராம் கமிஷன்) நியமிக்கப்பட்டது. பேராயத்தின் அரசியல் தீர்மானம், கார்ப்ரேட் வலதுசாரி வகுப்புவாதச் சக்திகளை அதிகாரத்திலிருந்து இறக்குவதும், மக்களின் மாற்றைக் கட்டி எழுப்புவதும் மிகவும் முக்கியமானது என வலியுறுத்தியது.

 “மக்களுடன் மீண்டும் ஒன்றிணயுங்கள்!” என்று பேராயம் கட்சி முழுமையையும் அறிவுறுத்தியது.

    எஸ் சுதாகர் ரெட்டி பொதுச் செயலாளராகவும், குருதாஸ் தாஸ்குப்தா துணைப் பொதுச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

23வது கட்சிப் பேராயம், கொல்லம், 2018

      2018 ஏப்ரல் 25முதல் 29வரை கேரளாவின் கொல்லத்தில் நடைபெற்ற பேராயத்தில் மற்றவர்கள் உள்ளிட்ட 810பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். வலிமையான சிபிஐ கட்சியைக் கட்டுவதை வலியுறுத்தும்போது, பரந்துபட்ட ஒற்றுமைக்கு எதிரானதாக இடதுசாரி ஒற்றுமை அமையக் கூடாது என்பதை அரசியல் தீர்மானம் தெளிவாக்கியது. 
          அனைத்து மதசார்பற்ற, ஜனநாயக மற்றும் இடதுசாரி சக்திகளின் பரந்த மேடை கட்டியமைக்க வேண்டும் என்றது.
 
    எஸ் சுதாகர் ரெட்டி பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2019 ஜூலை தேசியக் கவுன்சில் கூட்டத்தில் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து சுதாகர் ரெட்டி ஓய்வு பெற்றார்; அந்தப் பொறுப்பிற்கு டி ராஜா தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அடுத்த 24வது பேராயம், விஜயவாடா, 2022

கடந்த சில ஆண்டுகளில் கட்சி உறுப்பினர் எண்ணிக்கை சுமார் 6,50,000 ஆகும். அடுத்த 24வது கட்சிப் பேராயம் தற்போது விஜயவாடா நகரில் (2022 அக்டோபர் 14 முதல் 18வரை) சீரும் சிறப்புமாக நடந்து வருகிறது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நீடு வாழ்க!

--நன்றி : நியூஏஜ் (அக்.16 –22)
--தமிழில் : நீலகண்டன்,
தொலைத் தொடர்பு ஊழியர், கடலூர்

 

 

 

  

 

 

 

                         

 

1 comment:

  1. மிகவும் பயனுள்ள வரலாற்று தகவல்கள். நன்றி. வாழ்த்துகள். மாலி

    ReplyDelete