Wednesday 23 March 2022

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரிசை 60 -- பிரகாஷ் ராய், தேபகா இயக்கத் தலைவர்

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 60


பிரகாஷ் ராய்– தேபகா இயக்கத் தலைவர்,

மத்திய இந்தியாவில் 
கட்சியைக் கட்டியவர்

--அனில் ரஜீம்வாலே

நன்றி : நியூஏஜ் (பிப்.20 --26)

            பிரகாஷ் ராயின் உண்மையான பெயர் அசோக் போஸ். 1946ல் வரலாற்றுப் புகழ்பெற்ற தேபகா (விவசாயிகள்) இயக்கத்தைத் தலைமையேற்று நடத்திய தலைவர்களில் ஒருவர்; வங்காள மாநிலத்திலும் மத்திய இந்தியாவிலும் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டி வளர்த்தவர். இந்தியா உருவாக்கிய அற்புதமான கம்யூனிஸ்ட்களில் ஒருவர்.

            அசோக் (பிரகாஷ் ராய்) மேற்கு வங்க மாநிலம், நாடியா மாவட்டம் பாரா ஜுகாலியா கிராமத்தில் 1922 செப்டம்பர் 23ல் பிறந்தார். தந்தை பிஸாத் குமார் போஸ், தாய் பீனாபானி தேவி. தந்தை, நெல் பயிரிடும் நிலங்களைக் குத்தகை பயிரிட குத்தகைக்கு விடும் ஜோடேதார் (ஜமீன்தார்). இரண்டு வயதில் தாயை இழந்த அசோக் பாட்டியார் மிராணாளி தேவி கவனிப்பில் வளர்ந்தார்.

            மிருணாளினி, புகழ்பெற்ற புரட்சியாளர் டாக்டர் பூபேந்திரநாத் தத்தா அவர்களின் (உடன்பிறந்தார் மகள் என்ற) மருமகள் உறவானவர். பூபேந்திரநாத், சுவாமி விவேகாந்தரின் இளைய சகோதரர். அவர், 1921 மாஸ்கோவில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் அகிலம் (மாநாடு) காங்கிரஸில் கலந்து கொண்டு லெனின் மற்றும் பிற பிரபலமான தலைவர்களைச் சந்தித்தார்.

            பூபேந்திரநாத் போன்று அசோக்கை வளர்க்க எண்ணிய மிருணாளினி தேவி, புத்திசாலியான அசோக் மீது சிறப்பு அக்கறை செலுத்தினார். கிராமத்தில் குத்தகை விவசாய ஏழைப் பிள்ளைகளோடு கலந்துறவாடி அவர்களுடன் விளையாட அசோக்கைப் பாட்டியார் ஊக்குவித்தார்.

            மிருணாளினி தேவியின் இந்த அணுகுமுறை அசோக்கின் தந்தைக்குப் பிடிக்கவில்லை. கிராமத்திலிருந்து அழைத்துக் கொண்டு அசோக்கைக் கல்கத்தா நியூ இந்தியா இங்கிலீஷ் உயர்நிலைப் பள்ளியில் சேர்த்தார். உண்மையில், எதிர்காலத்தில் அசோக் தன்னைப் போல ஜமீந்தார் ஆக வேண்டும் என அவர் விரும்பினார்.

 மாணவர் தலைவராக வளருதல்

            கல்கத்தா மாணவர் விடுதியில் தங்கிய அசோக், கலாச்சார, சமூகச் செயற்பாடுகளில் பங்கேற்றார். 1937ல் அந்தமான் சிறை அரசியல் கைதிகள் அனைவரையும் விடுவிக்கக் கோரி ‘கோரிக்கை நாள்’ அனுசரிக்கும்படித் தேசியத் தலைவர்கள் அறைகூவல் விடுத்தனர். அப்போது 9ம் வகுப்பில் படித்து வந்த அசோக், மாணவர்கள் வேலைநிறுத்தத்தை வெற்றிகரமாக நடத்தி, மறியல் போராட்டத்திற்கும் ஏற்பாடு செய்தார். பள்ளியின் துணை தலைமை ஆசிரியர் மறியல் செய்த மாணவர்களைத் தனது அறைக்கு வரவழைத்து அவர்களைச் சக்கையாகப் பிரம்பால் அடித்தார்; பிறகு, பிரிட்டீஷ் போலீசார் கையில் இந்த மாணவர்கள் எதிர்காலத்தில் தண்டனை துன்பத்தை அனுபவிப்பதற்கு அவர்களைத் ‘தயாரித்ததாக’ கூறினார்!

            இந்த இயக்கத்தின்போது அவர் உள்ளூர் கம்யூனிஸ்ட் செயற்பாட்டாளர்கள் சிலரைச் சந்தித்தார். அசோக்கின் அமைப்பு திரட்டும் பணியின் திறனைக் கண்டு, அவர்கள் அசோக்கிடம் மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின் நூல்கள் மற்றும் புரட்சிகளின் வரலாறுகளைப் படிக்குமாறு அறிவுரை கூறினர். மேலும், கிராமப்புற மக்களுடன் தொடர்புகளை வளர்த்துக் கொள்ளுமாறும் ஆலோசனை கூறினர். அசோக் அடிக்கடி கிராமத்திற்குச் செல்லத் தொடங்கினார்; அதற்கு அசோக்கின் பாட்டி மிருணாளினி தேவி பெரிதும் உதவி செய்தார்.

            சிறப்புத் தகுதியுடன் மெட்ரிகுலேசன் தேர்வுகளில் தேறி மேற்படிப்புக்காக கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் அசோக் ‘ஆபத்தான’ பாதையை நோக்கிப் பயணிப்பதைக் கண்ட அவரது தந்தை படிப்பைப் பாதியிலேயே இடை நிறுத்தினார்; அசோக்கைக் கல்கத்தா தபால் மற்றும் தந்தித் துறையில் எழுத்தராகப் பணியில் அமரச் செய்தார்.

தொழிற்சங்க இயக்கத்துடன் தொடர்பு

            1939ல் இரண்டாம் உலகப் போர் வெடித்தது. அசோக் வேறு பலருடன் பாட்னா தபால்

தந்தித் துறைக்கு இடமாற்றம் செய்யப்பட்டார். பாட்னாவில் பூபென் கோஷ் மற்றும் கே ஜி போஸ் (படம்) போன்ற பிரபலமான நன்கறிந்த தபால் தந்தி ஊழியர்களின் தலைவர்களுடன் அவருக்குத் தொடர்பு ஏற்பட்டது. அசோக்கைப் பற்றி ஏற்கனவே அறிந்திருந்த அவர்கள், அவரிடம் தபால் ஊழியர் தொழிற்சங்க வேலைகளின் பொறுப்பை அளித்தனர்.

            1943ல் பெரும் வங்கப் பஞ்சம் வெடித்தது. அசோக் தபால் துறை பணியை விட்டு விட்டு பஞ்சம் பீடித்த தனது சொந்த மாவட்ட மக்களுக்கு நிவாரணச் சேவைகளை ஆற்றச் சென்றார். தந்தையுடன் முரண்பாடு முற்றியது. அசோக் மிருணாளினி தேவியின் கால்களைத் தொட்டு வணங்கி  அவருடைய ஆசிகளைப் பெற்று இயக்கத்தில் முழு நேரச் செயற்பாட்டாளராகப் பணியாற்ற வீட்டைவிட்டுப் புறப்பட்டார். தேவையான வழிகாட்டலைப் பெறுவதற்காக மாகாணக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் பவானி சென் மற்றும் நித்யானந்த சௌத்திரியைச் சந்தித்தார்; கிசான் சபாவில் பணியாற்ற அவர்கள் ஆலோசனை வழங்கினர்.  

கிஸான் மற்றும் தேபகா இயக்கத்தில்

            மைமென்சிங் மாவட்டத்தின் மோனி சிங் மற்றும் மணிப்பூரின் இராபோட் சிங் போன்ற புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் கட்சித் தலைவர்கள் அப்போது கிசான் போராட்டங்களை வழிநடத்தி வந்தனர். ஒன்பதாயிரம் ஏக்கர் நிலங்களின் உரிமைகளை ரத்து செய்து விவசாயிகளைக் கட்டாயமாக வெளியேற்றிய பிரிட்டிஷ் அதிகாரிகள் நடவடிக்கையை எதிர்த்து ஹரிங்கட்டா பகுதி விவசாயிகளை அசோக் ஒன்று திரட்டினார். ஆயிரக் கணக்கான விவசாயிகளுக்குத் தலைமையேற்று வழிநடத்தி செங்கொடியை ஏற்றி நிலங்களைக் கைப்பற்றினார். அதில் அவர்கள் விவசாயம் செய்து தானியங்களை அறுவடை செய்து பகிர்ந்தளித்தனர். வெளியேற்றப்பட்ட விவசாயிகள் இழந்த தங்கள் நிலங்களை மீண்டும் பெற்றனர். அருகிலிருந்த 24 பர்கானா மாவட்டத்திலும் அசோக் இருந்தார். சில காலத்திற்குப் பிறகு 24 பர்கானா மாவட்டச் சிபிஐ மாவட்டச் செயலாளராக அசோக் தேர்வு செய்யப்பட்டார்.

           

1940களில் வங்காளத்தில் குத்தகை விவசாயிகள் மத்தியில் நிலவுடமையாளர்களுக்கு எதிராகப் பெரும் எழுச்சி ஏற்பட்டு, நெல் தானிய உற்பத்தியில் நியாயமான பங்கைக் கோரினர். 1946ல் வங்காளத்தின் 20க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பல்லாயிரம் குத்தகை விவசாயிகள் உற்பத்தியில் கூடுதல் பங்கு வழங்கக் கோரினர். தாங்கள் உற்பத்தி செய்த அறுவடையில் மூன்றில் இரண்டு பங்கு (எனவே ‘தேபகா’ அல்லது மூன்று பங்கு என்று பெயர்) வழங்க வேண்டும் என்பது கோரிக்கை. அப்போது அவர்கள் உற்பத்தியில் பாதி அளவு மட்டுமே பெற்று வந்தனர். கோரிக்கை மீது போராட்டங்கள் வலுவடைந்தபோது அசோக் போஸ் அவர்களது திறன் மிக்கத் தலைவராக விளங்கினார். 

            1946ல் தேபகா போராட்டம் கிஸான் சபா மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடைபெற்றது; அப்போராட்டம் 24 பர்கானாஸ், நாடியா, மித்னாபூர், மால்டா, பங்கூரா, ஜல்பைகுரி, மைமென்சிங், ஜெஸ்ஸோர் போன்ற பல மாவட்டங்களில் பரவி ஆயிரமாய் பெண்கள் உட்பட 60லட்சம் குத்தகை விவசாயிகள் பங்கேற்றனர். உலகத்தில் விவசாயிகளின் முக்கியமான பெரும் போராட்டம் அது என சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்டது. அதனை வழிநடத்தியதில் சிபிஐ பொதுச் செயலாளர் பி சி ஜோஷி மிக முக்கியமான பங்காற்றினார்.

            1940ல் (தற்போது பங்களா தேசத்தில் உள்ள) ஜெஸ்ஸோர் மாவட்டத்தில் நடைபெற்ற மாகாண கிசான் சபா மாநாட்டில் இந்த ‘தேபகா’ (முன்றில் இரண்டு பங்கு) கோரிக்கை முதன் முதலாக எழுப்பபப்பட்டது. வருமானத்தை உயர்த்த வழிமுறைகளைச் சிபார்சு செய்ய பிரிட்டிஷ் அரசு ஒரு குழுவை அமைத்தது. அவர்கள், குத்தகை விவசாயிகள் உற்பத்தி செய்த நெல்லில் பாதிக்கும் மேல் வசூலிக்க முடிவு செய்தனர். அதனைக் கிஸான் சபா எதிர்த்தது, ‘தேபகா’ கோரிக்கையை எழுப்பியது.

            1946 – 47 காலகட்டம் கல்கத்தா, 24 பர்க்கானா மற்றும் பிற பகுதிகள் வகுப்புவாதக் கலவரங்களில்  மூழ்கிய கடினமான ஆண்டுகள். அசோக் போஸ் மற்றும் அவரது குழுவினர் தன்னார்வத் தொண்டர்களைத் திரட்டி வகுப்புவாதக் கலவரங்களைத் தடுக்கவும், நிவாரணப் பணிகளிலும் ஈடுபட்டது.

            வகுப்புவாதச் சூழ்நிலைகளை மீறி, தேபகா போராட்டம் பல மாதங்கள் நடைபெற்று, அன்றைய மேற்கு வங்க முஸ்லீம் லீக் அமைச்சரவை கோரிக்கையை ஏற்க நிர்பந்தித்தது; முஸ்லீம் அமைச்சரவையும் 1947ல் ‘ஜமீந்தாரி ஒழிப்பு மற்றும் குத்தகை விவசாயிகள் உரிமை மசோதா’வை முன் மொழிந்தது.

            தேபகா போராட்ட இயக்கத்திற்குத் தொழிலாளர்கள் மற்றும் படைப்பூக்கம் மிக்க இடதுசாரி அறிஞர்களிடையே பரவலான ஆதரவு இருந்தது. பிரபலமான பாடகர்கள் சலீல் சௌத்திரி மற்றும் ஹேமந்த முகோபாத்யாயா போன்றோர் இயக்கத்திற்கு ஆதரவாக எண்ணிறைந்த புகழ்பெற்ற பாடல்களைப் புனைந்து பாடினர். 

இயக்கம் பரவியது

            கன்சாரி ஹால்டர், அசோக் போஸ் மற்றும் பிறர் இந்த வரலாற்றுப் போராட்டதின் முன்னணியில் இருந்தனர்.  அவர்கள் சுமார் 2000 தொண்டர்களைத் திரட்ட, ஜோட்டேதார்கள், நில உரிமையாளர்கள் அரசின் உதவியை நாட, பிரிட்டிஷ் அதிகாரிகள் பல்வேறு இடங்களில் பலத்த போலீஸ் படைகளை நிறுத்தினர். அசோக் போஸ், கன்சாரி ஹால்டர் மற்றும் பலரின் பெயர்களில் கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட அவர்கள் தலைமறைவில் செல்ல நேர்ந்தது. என்றாலும் அசோக் போஸ் தேபகா இயக்கத்தின் ஆதாரமான முக்கிய பகுதிகளில், ஓரிடத்திலிருந்து வேறு இடத்துக்கு (மின்னல், அறிவானவர் எனப் பொருள்படும்) ‘பித்யூத்’ மற்றும் (பகவான் கிருஷ்ணரின் பெயரான) ‘நிகுன்ஜ்’ என்ற பெயரில் மாறு வேடங்களில் இயங்கியபடி இருந்தார். சந்தன்பிரி மற்றும் அதன் அருகில் அமைந்த பகுதிகளில் குறிப்பாக பெண்கள் மீது கடுமையான அடக்குமுறை ஏவிவிடப்பட்டது.

            காக்த்வீப் சதி வழக்கில் அசோக் போஸ் முதல் குற்றவாளி, இரண்டாவது புகழ்பெற்ற கன்சாரி ஹால்டர் மீது குற்றம் சாட்டப்பட்டது. ‘பிரகாஷ் ராய்’ என்ற பெயரில் அசோக் தலைமறைவில் இருந்தார். கஜன் மாலி, மானிக் ஹஜ்ரா மற்றும் பலர் என மொத்தம் 26பேர் மீது நடவடிக்கைகள் தொடங்கப்பட்டன; அவர்களும் தலைமறைவுக்கு அனுப்பப்பட்டனர்.

            ஒருமுறை காக்த்வீப் பகுதியின் புடகாலி கிராமத்தில் அசோக் போஸ் பிடிபட்டு, அவரைச் சங்கிலியால் பிணைத்து, உடல் முழுதும் கயிறால் சுற்றி சுட்டுக் கொல்லப்படுவதற்காகத் தயார் படுத்தப்பட்டார். பெண்கள் உட்பட மக்கள் கூட்டம் சூழ்ந்து கொண்டு போலீஸ் பிடியிலிருந்து அவரை விடுவித்துச் சென்றனர்.

            1949 –50களில் சுந்தர்பன் பகுதியில் லால்கஞ்ச் இடத்தை மையமாகக் கொண்டு ஒரு ‘குட்டி தெலுங்கானா’ (‘சிசு தெலுங்கானா’) நிறுவப்பபட்டது.

‘பிடிஆர் பாதை’யும் தேபகா மீது அதன் எதிர்மறை தாக்கமும்

            1948ன் பிடிஆர் பாதை தேபகா போராட்டத்தை ஆயுதத்தை நாடக் கட்டாயப்படுத்தியது. தொண்டர்களிடம் நவீன ஆயுதங்கள் இல்லாத நிலையில் பாரம்பரியமான ஆயுதங்களைக் கொண்டு போலீசை எதிர்க்க நேர்ந்தது. வங்காள விரிகுடாவின் டெல்டா பகுதிகளான காக்த்வீப், மதுராபூர், ஜெய்நகர், சந்தேஷ் காலி, ஹஸ்னாபாத் மற்றும் பிற இடங்களில் ஆயுதப் போராட்டம் நடைபெற்றாலும் தோல்வியே அடைந்தது – ஆயுதப் போராட்டம் வெற்றி பெறும் என்ற கட்சியின் பாதைக்கு (பார்ட்டி லைன்) மாறாக அங்கு நிலவிய எதார்த்த உண்மை முரண்பட்டிருந்தது. ஆயுதப் போராட்டப் பாதை, இயக்கத்தில் பெரும் குழப்பத்தையும் அழிவையும் ஏற்படுத்தியது. (முன்பு) பி சி ஜோஷியின் தலைமையின் கீழ் தேபகா போராட்ட இயக்கம் வெற்றிகரமான பெருந்திரள் மக்கள் பாதையைப் பின்பற்றியது.  

            அசோக் போஸ் மற்றும் கன்சாரி ஹால்டர் இவர்களுடன் ஹேமந்த கோஸால், ராஷ்பிகாரி கோஷ், மானிக் ஹஸ்ரா, அப்துல் ரஸாக் கான் மற்றும் பலர் முன்னணித் தலைவர்களாக இருந்தனர். போலீஸ் தொண்டர்கள் மீது அடுத்தடுத்து தாக்குதல்களைத் தொடுத்து, நவீன ஆயுதங்களுடன் தேபகா போராட்டத்தை வீழ்த்தியது. டோங்கா ஜோரா மற்றும் பிற இடங்களில் துப்பாக்கிச் சூடும் நடத்தப்பட்டது. அசோக் போஸ் மீது 13 கிரிமினல் குற்ற வழக்குகள் பதியப்பட, மேற்கு வங்க அரசு அவரை உயிருடனோ அன்றிப் பிணமாகவோ பிடித்துத் தருபவர்களுக்கு ரூ50,000 பரிசுத் தொகையை அறிவித்தது. காச நோயால் பாதிக்கப்பட்ட அசோக்கைக் கட்சி மத்தியப் பிரதேசத்தின் ராஜ்நந்த்கௌண் (தற்போது சத்தீஸ்கரில் உள்ளது) என்ற இடத்திற்கு மாற்றியது.

            1948ல் கைதாகி 6மாதங்கள் அலிபூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலையான பிறகு சுந்தர்பன் பகுதியில் தலைமறைவானார்.

அசோக் போஸ் மத்திய பிரதேசத்தில் ‘பிரகாஷ் ராய்’ எனத் தோன்றுதல்

            அசோக் போஸ், மனைவி மாதவி தேவி மற்றும் இரண்டு வயது மகன் அமித் உடன் ராஜ்நந்த்கௌண் பகுதிக்கு 1952 ஜூனில் வந்தார். அப்போது அவர் ‘பிரகாஷ் ராய்’ என்று வந்தவர் இன்றும் கூட பெருமளவு அப்படியே அறியப்படுகிறார், வெகுசிலரே அவரது உண்மையான பெயரை அறிவார்கள்! அவர்கள் ஒரு தொழிலாளர் காலனியில் சுமார் 40 பீடி தொழிலாளர்களுக்குப் படிப்பு மையத்தை நடத்திக் கொண்டு வசித்தனர். மாதவி தேவி பயிற்சி பெற்ற ஒரு செவிலியர். அவர்கள் இருவருமாக பீடித் தொழிலாளர்களின் குடும்பங்களோடு சேர்ந்து பணியாற்றி அவர்களைச் செங்கொடியின் கீழ் ஒன்று திரட்டினர். தொழிலாளர்களின் குடும்பங்கள் பிரகாஷ் குடும்பத்திற்கு ஆதரவாக இருந்தனர். தொழிலாளர்கள் கூட்டம் ஒன்றில் பேசும்போது தனது மோசமான நிதிநிலையைப் பிரகாஷ் விளக்கினார். அவர்கள், குறிப்பாக பெண்கள், உணவு தானியங்கள், பருப்புகள், காய்கறி, சமையல் எண்ணெய் முதலியவற்றை ஒவ்வொரு வாரமும் அளிக்க வேண்டும் என முடிவு செய்தனர். இந்த நடைமுறை முழுமையாக நான்கு ஆண்டுகள் நடைபெற்றது. சில தருணம் அவர்கள் பட்டினியாகக்கூட இருக்க நேர்ந்தது.

            ராஜ்நந்த்கௌண் பகுதி பீடி தயாரிப்பில் பெரும் மையமாக இருந்ததால், ஆயிரக் கணக்கான தொழிலாளர்கள் ‘கர் –கட்டா’ முறையில் வணிகர்களின் கீழ் வேலை செய்தனர்.

(குடிசைப் பணியாக எவ்வளவு பீடி சுற்றப்பட்டதோ அதற்குக் கூலி என்ற முறை). தொழிலாளர்களில் பெரும்பான்மையினர் பெண்கள். பிரகாஷ் மற்றும் மாதவியும் நினைவில் நிற்கும் பல போராட்டங்களை நடத்தினர். பிரகாஷ் ராய் மோட்டார் வண்டி டிரைவர்களைத் திரட்டியும், பிஎன்சி மில் தொழிலாளர்களையும் செங்கொடியின் கீழ் திரட்டி சங்கம் அமைத்தார். ஒரு சம்பவத்தின்போது ஒரு டிரக்கின் முன் படுத்து மறியல் செய்ய, அவர் மீது வண்டியை ஏற்றும் நோக்கத்தில் வண்டி ஓட்டுநர் என்ஜினை இயக்கி ஓடவிட்டுக் கொண்டிருந்ததற்காக அவரிடம் மன்னிப்புக் கோரினார்.

            பேராசிரியர் கஜானந்த் மாதவ் முக்திபோத் போன்ற அறிவுஜீவிகள், சுதந்திரப் போராட்ட வீரர் கன்னையா லால் அகர்வால், டாக்டர் நந்துலால் சோட்டியா, ரமேஷ் யாக்னிக், வழக்கறிஞர் அடல் பிகாரி துபே, பத்திரிக்கையாளர் ஷரத் கோதாரி மற்றும் பலர் பிரகாஷ் ராயைச் சூழ்ந்து கொண்டனர். கம்யூனிஸ்ட் கட்சியும் ராஜ்நந்த்கௌண் பகுதியில் பலம் பொருந்திய அரசியல் சக்தியானது.

தல்லி – ராஜ்கராவில் (In Dalli-Rajhara)

                அப்போது பிலாய் ஸ்டீல் பிளாண்ட் மற்றும் அதன் இரும்புத் தாது வெட்டும் சுரங்கங்கள், ராஜ்நந்த்கௌண் அருகே அமைந்துள்ள தல்லி-ராஜ்கரா அருகே வந்தது. சுரங்கத்

தொழிலாளர்களை ஏஐடியுசி தொழிற்சங்க அமைப்பின் கீழ் திரட்ட பிரகாஷ் ராயை ஏஐடியுசியின் பொதுச் செயலாளர் எஸ் ஏ டாங்கே (படம்) அனுப்பி வைத்தார். இந்தப் பணியில் பிராகாஷின் தோழர்களாக பாஜிராவ் ஷிண்டே, அர்ஜுன் ஷயாம்கர், கணேஷ் ராம் யாதவ், மகாதேவ் பொம்ப்ளே, நஸீம் ஆலம் நக்வி மற்றும் சிலர் இருந்தனர். பிரகாஷ் ராய் 15000 உடல் உழைப்பு ஒப்பந்தத் தொழிலாளர்களைத் திரட்டினார். 1960ல் ‘சம்யுக்த கதன் மஸ்தூர் சங்’ (SKMS, ‘ஐக்கிய குவாரித் தொழிலாளர்கள் சங்கம்) என்ற பெயரில் பதிவு செய்யப்பட்ட புதிய சங்கத்தில் 3000 நிரந்தர ஊழியர்களும் சேர்ந்தனர்.

            நிலக்கரி, சுண்ணாம்புக் கல், டோலோமைட் தாது (மெக்னீசியத்தின் ஆதாரமான, கால்சியம் மெக்னீசியம் கார்பனேட்டைக் கொண்ட ஒரு ஒளி வண்ணத் தாது; பீங்கான் மற்றும் உரம் தயாரிப்பில் பயன்படுவது) வெட்டும் சுரங்கங்களில் தொழிற்சங்கக் கிளைகள் தொடங்கப்பட்டன. மேலும் NMDC என்ற ‘தேசிய தாது மேம்பாட்டுக் கழக’த்தின் கீழ் பாஸ்டர் பகுதியில் பைலாடிலா மற்றும் பாசேலி இரும்புத் தாது சுரங்கங்களிலும் சங்கக் கிளைகள் தொடங்கப்பட்டன. எஸ் கே சன்யால் (நாக்பூர்), எஸ் டி முகர்ஜி மற்றும் பி கே தாக்கூர் (ஜபல்பூர்), கிருஷ்ணா மோடி (பாலாகாட்) மற்றும் சுதீர் முகர்ஜி (ராய்ப்பூர்) போன்ற மூத்த தொழிற்சங்கத் தலைவர்கள் தல்லி-ராஜ்கரா மற்றும் பிற இடங்களில் உதவி செய்தனர்.  

            தேபகா போராட்டத்தின்போது கைது செய்யப்பட்டு ஒன்றரை ஆண்டுகள் சிறை தண்டனை பெற்ற அப்போதைய மாணவர் சிஆர் பக்க்ஷி-யையும் பிரகாஷ் சந்தித்தார்.  

            தல்லி-ராஜ்கரா, நந்தினி லைம் ஸ்டோன் சுரங்கம் மற்றும் ஹிர்ரி டோலோமைட் சுரங்கங்களிலும் பிரகாஷ் ராய் தொழிலாளர் கூட்டு பண்டகச் சாலைகள் அமைப்பதை முன்னெடுத்தார். கான்டிராக்டர்களிடம் வேலை செய்த 10,000 உள்ளூர் தொழிலாளர்களைப் பிலாய் ஸ்டீல் பிளாண்ட்டின் ஊழியர்களாக முறைப்படுத்தப்பட்டனர்.

            இவை அனைத்தையும் சாதிக்கும் போதும் பிரகாஷ் ராய் தனது கடந்த காலப் பின்னணியை வெளிப்படுத்தவில்லை.

                      1961 டிசம்பர் 7ம் நாள், எஸ்ஏ டாங்கே, பூபேஷ் குப்தா, இஎம்எஸ், அஜாய் கோஷ்

மற்றும் சோகன் சிங் பாக்னா அடங்கிய இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தூதுக் குழு பிரதமர் நேருவை ஒரு கோரிக்கை மனுவுடன் சந்தித்தனர். அதில், பிரகாஷ் ராய் மற்றும் பிறர் மீது அவர்களுக்கு எதிரான வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் எனக் கோரினர். 1962 ஆகஸ்ட் 15ம் நாள் பல்வேறு மாநிலங்களில் எண்ணற்ற கைதிகள் விடுவிக்கப்பட்டனர். பிரகாஷ் ராய் என்கிற அசோக் போசுக்கு எதிரான பிடி வாரண்ட் மேற்கு வங்க அரசால் ரத்து செய்யப்பட்டது .

            நாடாளுமன்றத் தேர்தலில் ராஜ்நந்த்கௌண் தொகுதியிலிருந்து பிரகாஷ் ராயைச் சிபிஐ கட்சி வேட்பாளராக நிறுத்தியது. அவர் 40ஆயிரம் வாக்குகளுக்கு மேல் பெற்றார்.

சிபிஐ தலைவராக

          சிபிஐயின் தேசியக் குழு உறுப்பினராக பிரகாஷ் ராய்  9வது கட்சிக் காங்கிரஸ் (1971) மற்றும் 10வது விஜயவாடா கட்சிக் காங்கிரசிலும் (1975) தேர்ந்தெடுக்கப்பட்டார். அவசரநிலையின்போது இந்திரா காந்தி அரசு தொழிலாளர்களின் உரிமைகள் மீது தாக்குதல் நடத்தியபோது பிலாய் ஸ்டீல் பிளாண்ட் மற்றும் BSP சுரங்கங்களில் வேலைநிறுத்தம் நடத்த பிரகாஷ் ராய் அறைகூவல் விடுத்தார்.

            மத்திய பிரதேசத்தின் மாநிலச் செயலாளர் ஐ.எஸ் காந்த்கர் மற்றும் ஹோமி தாஜி, ஷாகிர் அலி கான், பால்கிருஷ்ண குப்தா மற்றும் பி.கே தாக்கூருடன் இணைந்து பிரகாஷ் ராய் மத்தியப் பிரதேச மாநிலத்தில் கட்சியை வலிமையாக கட்டக் கடுமையாகப் பாடுபட்டார்.

            ராஜ்நந்த்கௌண் –ல் பிரதேசக் கிஸான் சபா மாநாடு நடத்த ஏற்பாடு செய்த பிரகாஷ், பிரதேசத் தொழிற்சங்கப் பள்ளியையும் நடத்தினார்.

            உடல் நலமின்மை மற்றும் மூளை இரத்தக் கசிவு பிரச்சனைகள் பிரகாஷ் ராயைத் தீவிரச் செயல்பாடுகளில் ஈடுபட இயலாது தடுத்தாலும், பெருந்திரள் நடவடிக்கைகளில் தொடர்ந்து அவர் பங்கேற்றார்.

தேபகா போராட்டப் பகுதிகளுக்கு மறுவிஜயம்

            1973ல் பிரகாஷ், மனைவி மாதவி மற்றும் மகன் அமித் உடன் காக்த்விப், சந்தன்பிரி மற்றும் பிற இடங்களுக்கு விஜயம் செய்தார். பெரும் எண்ணிக்கையில் கிராம மக்கள் ஒன்றுகூடி அவர்களை வரவேற்றனர்.

            1975 டிசம்பர் 3ம் நாள் மாதவி ராய் மறைந்தார். பிரகாஷ் ராயின் உடல்நிலையும் மேலும் பாதிப்படைந்தது. அந்த உடல்நிலையிலும் அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் படிண்டா 1978 கட்சிக் காங்கிரஸில் கலந்து கொண்டு விவாதங்களிலும் தீவிரமாகப் பங்கேற்றார். 1978ல் வாரணாசியில் நடைபெற்ற 12வது கட்சிக் காங்கிரசிலும் கலந்து கொண்டார்.

            மனைவின் மறைவுக்குப் பிறகு சுருக்கமான தன்வரலாற்று நூல் எழுதினார்.

            வனக் கோட்டத்தைப் பிரிக்கும் மாநில அரசின் முடிவுக்கு எதிராக 1983 செப்டம்பரில் நடைபெற்ற கண்டனக் கூட்டம் ஒன்றில் அவர் கலந்து கொண்டார். அரசியல் கட்சிகள் ஏற்பாடு செய்த பொதுக் கூட்டத்தில் உரையாற்ற உடல் நலம் இல்லாவிட்டாலும் அவர் சென்றார். மேடையில் பேசிக் கொண்டிருக்கும்போதே கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. விரைவாக அவர் மருத்துவ மனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்; ஆனால் மறு நாள் 1983 செப்டம்பர் 3ம் நாள் தமது 61வது வயதில் மறைந்தார்.

(கட்டுரை தரவுகள் சி.ஆர் பக்க்ஷி மற்றும் பிற ஆதாரங்களிலிருந்து எடுத்தாளப்பட்டது)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர் 

No comments:

Post a Comment