Sunday, 15 March 2026

நியூ ஏஜ் தலையங்கம் -- மகளிர் தினம், சுதந்திரத்திற்கான ஒரு விழா

 


1910ல் கோபன்ஹேகனில் உழைக்கும் பெண்களின் 2வது சர்வதேச மாநாடு நடைபெற்றபோது, ஜெர்மன் சோஷலிஸ்ட் ஜனநாயகக் கட்சியின் பெண்கள் இலாகா தலைவர் கிளாரா ஜெட்கின் –சம உரிமைக்கான 

பெண்களின் கோரிக்கைகளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட உலகளாவிய ஒரு விழாவாக-- “சர்வதேசப் பெண்கள் தினம்” கொண்டாடப்பட வேண்டும் என்ற யோசனையை முன் வைத்தார். அவரது புரட்சிகரத் தீவிரத் தன்மைக்காக நன்கு அறியப்பட்ட ஜெட்கின், பெண்கள் உரிமைகளைப் பெற தொழிலாளர்கள் இயக்கங்கள் முக்கியமானது என நம்பினார். மான்செஸ்டர் கார்டியன் பத்திரிக்கை பின்னர், “கம்யூனிசத்தின் பாட்டி” என அவரை வர்ணித்தது.

17 நாடுகளிலிருந்து மாநாட்டில் கலந்து கொண்ட 100கும் மேற்பட்ட பெண் பிரதிநிதி- களால் அந்த யோசனை ஏற்கப்பட்டது. 1911ம் ஆண்டு ஐரோப்பா முழுவதிலும் நடத்தப்பட்ட சர்வதேசப் பெண்கள் தினப் பேரணிகளில் கலந்துகொண்ட 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள், பணியாற்ற, வாக்களிக்க, பயிற்சி அளிக்கப்பட, புது பதவிப் பொறுப்புகளை ஏற்பதற்கான உரிமைகளையும், பாரபட்சத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான கோரிக்கை முழக்கங்களையும் எழுப்பினர்.

பெண்கள் ஜன்னல்களை அகலத் திறக்கத் தொடங்கி, தங்கள் வியாபகத்துக்குள் உலகைத்தையே கொண்டு வந்து இணைத்தனர். பெண்களின் கோரிக்கைகள் இன்னும் நிறைவேறப்படாத நிலையில், போராட்டங்கள் தளர்வின்றித் தொடர்கின்றன. உலகம் முழுவதும் பாலினச் சமத்துவம், பெண்களுக்கு அதிகாரமளித்தல், சமூகநீதி கோரிக்கைகளுக்கான இயக்கங்களில் அனைத்துப் பகுதிகளில் இருந்தும் பெண்கள் இணைந்தனர். இக்கோரிக்கைகள் இன்றும்கூட 2026ம் ஆண்டு சர்வதேசப் பெண்கள் தினத்திற்கான கருத்துருவாக உள்ளது.

ஐநா அமைப்பும், ‘சர்வதேசப் பெண்கள் தின’ (IWD) அமைப்புசாரா பிரிவும் ”அனைத்து மகளிர் மற்றும் பெண்களைத் தங்கள் உரிமைகளுக்காகவும் நீதிக்காகவும் போராடுவீர்” என அறைகூவல் விடுத்துள்ளன. இந்த முழக்கம், போராடும் மக்கள் திரளின் உறுதியான கூட்டு முடிவெடுக்கும் தருணத்தின் அடையாளம். ஆண்களையும் பெண்களையும் ஒருவருக்கொருவர் சமமற்றவர்களாக வைக்கும் மனப்பிறழ்வு எவ்ளவு ஆழமாக வேரோடி இருந்தாலும், எவ்வளவு தூரம் அரசியலும் கூட  மேலும் மேலும் நம்பிககை இழக்கச் செய்தாலும் –அவற்றை யெல்லாம் மீறி– அந்த உறுதிப்பாட்டில் இருந்து பெண்கள் பின்வாங்குவதில்லை. உலகம் முழுவதும் வலிமையான உரத்த குரலில் அவற்றையெல்லாம் மறுத்து அந்த உறுதிப்பாட்டை மேலும் வலிமை பெறச் செய்து, அனைத்துப் பெண்கள் மற்றும் மகளிர்களுக்குச் சம உரிமைகள் மற்றும் அதிகாரமளித்தல் கோரிக்கைகளுக்குப் பின் அணிதிரள்கிறது

சூழ்நிலை கவலை அளிப்பதாக மோசமாகி வருகிறது. பின்நவீனத்துவச் சகாப்தத்தில் நாம் வாழ்வது உண்மை என்ற போதிலும், மற்றும் நாம் 21ம் நூற்றாண்டின் 2வது காலாண்டில் நுழைந்த போதும், ஆண்கள் மற்றும் பெண்களுக்கு இடையேயான சட்ட இடைவெளிகள் மாற்றமின்றி தொடர்கின்றன. ஒரு நூற்றாண்டிற்கு அதிகமான பிறகும், எந்த நாடும் சுட்டெரித்து வாட்டும் இந்தக் காயத்தை ஆற்ற எந்த முன்னெடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை, அதிலிருந்து தப்பி பெண்கள் இளைப்பாறும் வாய்ப்பையும் நல்கவில்லை. ஆண்களுக்கு உரியதாக்கப்பட்ட சட்ட உரிமைகளில் 64சதவீதம் மட்டுமே பெண்களுக்கு உரிதாக்கப்- பட்டுள்ளன. முக்கியமாக பணி, பணம், பாதுகாப்பு, குடும்பம், சொத்து, எங்கும் செல்லும் சுதந்திரம், வணிகம் மற்றும் ஓய்வு  பெறுதல் போன்ற முக்கியமான வாழ்க்கை பகுதிகளின் அடிப்படைகள் தொடர்பான விஷயங்களில் அடிப்படையில் பாரபட்சம் உள்ளது. பெண்களுக்குத் திட்டமிட்ட முறையில் சாதகமற்றவைகள்  ஏற்படுத்தப்- படுகின்றன தீங்கு தரும் சமூக வழக்கங்களில் இருந்து பாரபட்சமான சட்டங்கள் வரை பெண்களும் மகளிர்களும் தொடர்ந்து ஆழமாகப் புரையோடிப் போன தடைகளைச் சந்திக்கின்றனர். தற்போதைய வேகத்தில் வளர்ச்சி முன்னேற்றம் தொடருமானால், சட்டப் பாதுகாப்பு இடைவெளிகளை அடைக்க இன்னும் 286 ஆண்டுகள் ஆகும் –அது, சரணடையச் செய்வது என்பதைத் தவிர வேறில்லை. பெண்களுக்கு நீதி மறுக்கப்படும்  எனில், உரிமைகள் என்பதற்கு எந்த  அர்த்தமும் இல்லை; அது, பொய்யான அதன் கொடூர உண்மையை அம்பலப் படுத்தி உள்ளீடற்ற வெற்று உறுதிமொழியாகிறது.

இந்த ஆண்டு சர்வதேச பெண்கள் தினம், கட்டமைப்பு ரீதியில் ஏற்படுத்தப்பட்ட தடைகளை நீக்கி நீதியில் சமத்துவத்தைக் கொண்டு வர தேவையான நடவடிக்கைகளை எடுக்க அறைகூவல் விடுத்துள்ளது. அத்தகைய நடவடிக்கைகள் பாரபட்சமான சட்டங்கள், பலவீனமான சட்டப் பாதுகாப்புகள் மற்றும் தீங்கு நிறைந்த நடைமுறை வழக்கங்களை அகற்றுவதற்குப் பேருதவியாகும். பெண்கள் மற்றும் மகளிர்களின் உரிமைகளைப் பறித்து இல்லை என்றாக்குவதில் சமூகநெறி முறைகளும் கூட முக்கிய பங்கு வகிக்கின்றன.

பாதுகாப்பும் உரிமைகளுக்கு ஆதரவும் இருந்த போதும்கூட, சட்டங்கள் புத்தகங்களில் இருந்தால் மட்டும் போதாது உரிமைகளின் உண்மையான சமத்துவ முகத்தை மக்கள் உணரும் வகையில் அவை அமல்படுத்த வேண்டும்.

சமமான உரிமைகள் மற்றும்  நீதியின் அனுபவத்தை அவர்கள் பெற வேண்டும். மேலும் அது, பெண் குழந்தைகள் கல்வி பெறும் சட்டபூர்வ பாதுகாக்கப்பட்ட வாய்ப்பு என்பதாகவும் பொருள்பட வேண்டும்; அதன் மூலம் குழந்தைத் திருமணங்களுக்கு முடிவு கட்டுவதாகவும் இருக்க வேண்டும்.

மனிதஜீவன் என்ற முறையில் பெண்கள் அனைவரும், சுதந்திரமாகப் பணியைத் தேர்ந்தெடுக்க, என்ன வழியிலும் முடிவெடுக்கும் தேர்வு மற்றும் பங்கு பெறுவதற்கும்; அரசியல் மற்றும் நீதித்துறை உள்ளிட்டவைகளிலும் தலைமை பாத்திரம் வகிப்பதற்கும் கூட தகுதி உடையவர்கள். எல்லா வடிவங்களிலும் பாலியல் அடிப்படையிலான வன்முறைக்கு முடிவு கட்டி தடுக்கவும் பாதுகாக்கவும் வேண்டும். குறிப்பாக குடும்பம், தொழில் மற்றும் சுகாதார ஆரோக்கியப் பராமரிப்பு சம்பந்தமாகப் பெண்களுக்கு எதிரான பாரபட்சம் காட்டப்படாமல் இருக்க  சட்டங்கள் வேண்டும்.

நீதி வழங்கும் முறைமைகள் ஒருதலைச் சார்பு இல்லாமலும், பாதிப்பிலிருந்து தப்பிப் பிழைத்தவர்கள் சார்பாக அவர்களை மையமாகக் கொண்டும் –பதவி, அதிகாரம், அந்தஸ்து காரணமாக தண்டனைகளில் இருந்து தப்பலாம் என்ற அகந்தையில்– கட்டுப்பாடின்றி பெண்களுக்கு எதிராகக் குற்றம் இழைப்பவர்களை எள்ளளவும் சகிக்காமல் தண்டனைக்கு உட்படுத்தும் ஆதரவான சட்டங்களும் வேண்டும். கட்டுப்படியாகும் கட்டணத்திலும் அணுகக்கூடிய வகையிலும் சட்ட உதவி கிடைத்தாலும் அவை போதுமானதாக இல்லை.

பெண்களின் நிலை குறித்த கமிஷன்’ என்பது உலகின்  அரசுகளுக்கு இடையே ஆன அமைப்பு; இதில்  உறுப்பு நாடுகளின் பிரதிநிதிகள், ஐநா அமைப்பு மற்றும் குடிமைச் சமூகப் பிரதிநிதிகள் இடம் பெறுகின்றனர். இந்த 

அமைப்பின் 70வது அமர்வு [70th session of the Commission on the Status of Women (CSW70)], சம நீதி பிரச்சனையை மையக் கருத்தாக எடுத்துக்கொண்ட இந்த ஆண்டின் சர்வதேச மகளிர் தினத்தை ஐநா அனுசரிப்பதுடன் இணைந்ததாக மார்ச் மாதம் 9 முதல் 19 வரை நடத்தப்படுகிறது. இந்த 70வது அமர்வு, “அனைத்துப் பெண்கள் மற்றும் மகளிர்களுக்கு நீதி முறைமைகள் கிடைப்பதை உறுதிப்படுத்தல் மற்றும் வலிமைப்படுத்தல்” கருத்துருவின் மீது விவாதித்து முடிவுகளை மேற்கொள்ள உள்ளது. இந்த மையக் கருத்தில் அனைவரையும் உள்ளிணைத்த மற்றும் சமத்துவச் சட்ட முறைமைகளை மேம்படுத்துவது, பாரபட்சமான சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நடைமுறைகளை நீக்குவது மற்றும் கட்டமைப்பு ரீதியிலான தடைகள் பிரச்சனைகளைத் தீர்ப்பது ஆகியவையும் விவாதத்தில் அடங்கும்”

தேதியைப் பொருத்தவரை இதுவரை ஐநா அதிகாரப்பூர்வமாக மார்ச் 8ஐ சர்வதேசப் பெண்கள் நாளாக 1977-ல் பிரகடனப்படுத்தியது; முதன் முதலில் ஐநா 1975ல் உலகப் பெண்கள் தினத்தை அனுசரித்ததைத் தொடர்ந்து இந்தப் பிரகடனம் செய்யப்பட்டது. எனினும் பெண்கள் தினத்தின் தொடக்க காலம் அந்தப் பிரகடனத்திற்கு முற்பட்டது.

மார்ச் 8 தேதியின் வேர்கள் ரஷ்ய வரலாற்றில் உள்ளது. ஜூலியன் நாட்காட்டியின் கீழ் 1913 பிப்ரவரி 23ல் ரஷ்யப் பெண்கள் முதல் உலகப் போருக்கு எதிராகக் கண்டனப் போராட்டங்களை நடத்தினர். (அந்த பிப்ரவரி 23 –பிற இடங்களில் பயன்படுத்தப்பட்ட– கிரிகோரியன் நாட்காட்டிபடி மார்ச் 8ஆம் தேதியாகும்). இது பிறகு பெண்கள் தினப் பேரணிகளுக்கு உலகளாவிய அளவுகோலானது.

மற்றொரு போராட்டம் இதே பிப்ரவரி 23 தேதியில் 1917ல் நிகழ்ந்தபோது ரஷ்யப் பெண்கள் போரை நிறுத்தக் கோரியதுடன், உணவுப் பற்றாக்குறை

மற்றும் ஜார் நிக்கோலஸ்-2 ஆட்சிக்கு எதிராகவும் போராடினர். வரலாற்றாளர் ரோசெல் ரோத்ஸ்சைல்ட் (Rochelle Ruthchild) அந்த நிகழ்வை விளக்கும்போது லியான் டிராட்ஸ்கி போன்ற ஆண் புரட்சியாளர்கள், திட்டமிட்ட மே தின (தொழிலாளர் தின) ஆர்பாட்டங்களுக்கு முன்னதாகவே இந்தக் “கீழ்ப்படிதல் இல்லாத பெண்கள்” போராட்டம் நடத்துவது குறித்து விரக்தி அடைந்ததாகக் குறிப்பிடுகிறார்.

எவ்வாறாயினும் இந்தப் போராட்டங்கள் ரஷ்யப் புரட்சியின் பொறியைப் பற்ற வைக்க உதவின. சில நாட்களிலேயே ”ஆகாவென்று எழுந்தது பார் யுகப் புரட்சி…ஜார் எனும் பேரிசைந்த பாவி… கொடுங்கோலன் அலறி வீழ்ந்தான்” என ஜார் ஆட்சி தூக்கி எறியப்பட்டது. கம்யூனிஸ்ட் அரசு அமைக்கப்பட்டது, ரஷ்யாவில் பெண்கள் வாக்களிக்கும் உரிமையை வென்றனர். ஆனால் அமெரிக்காவில் வெள்ளை நிறப் பெண்கள் மட்டும் 1920ல் வாக்குரிமையைப் பெற்றபோது பிற கருப்பினப் பெண்கள் வாக்களிக்கும் உரிமைகள் சட்டத்தின் படி 1965 க்கு பிறகே வாக்களிக்கும் உரிமைகளை அடைந்தனர்.

பெண்களின் சாதனைகளை உலகளாவிய கொண்டாட்டமாக ஆவதில் தொழிலாளர் போராட்டங்களில் தனது வேர்களைக் கொண்டிருக்கும் “சர்வதேசப் பெண்கள் தினம்”, உலகம் முழுவதும் பாலினச் சமத்துவம், பெண்களுக்கு அதிகாரம் அளிக்கப்படுத்தல் மற்றும் சமூக நீதிக்காகத்  தொடர்ந்து தற்போது நடந்து வரும் போராட்டங்களை உயர்த்திப் பிடித்துச் செம்மாந்து  அணிவகுத்து நடக்கிறது!

                        “ஆணும் பெண்ணும் நிகரனக் கொள்வதால் 

                         அறிவில் ஓங்கி இவ்வையம் தழைக்குமாம்…

                        ‘போற்றி தாய்” என்று தோள் தட்டி ஆடுவீர்…

                        ‘போற்றி தாய்” என்று தாளங்கள் கொட்டடா 

                        ‘போற்றி தாய்” என்று பொற்குழல் ஊதடா…

                        பெண்மை வாழ்கவென்று கூத்திடுவோமடா!

                        பெண்மை வெல்க வென்று கூத்திடுவோமடா!”

–தமிழில் : நீலகண்டன், 

என்எப்டிஇ, கடலூர்





No comments:

Post a Comment