Tuesday 26 May 2020

ஊரடங்கும் அதன் பின்விளைவுகளும் : தி எக்கானமிஸ்ட் கட்டுரை


ஊரடங்கும் அதன் பின்விளைவுகளும்
இந்தியப் பொருளாதாரம் இன்னும் கூடுதலாகப் பாதிப்பதுடன்
கோவிட் 19ம் இன்னும் பரவியபடிதான் உள்ளது
--நன்றி: தி எக்கானமிஸ்ட்
 (ஆசியப்பிரிவு அச்சு ஊடகத்தில் மே23ல் வெளியானது)
        உலகின் மிகக் கடுமையான ஊரடங்குகளில் ஒன்று மார்ச் 25 முதல் மே 31வரை இந்தியாவில் அமல்படுத்தப்படுவது; இதனால் இரண்டுவித தர்மசங்கடமான இரண்டாங்கெட்ட குழப்பமான நிலைகள். வீட்டிலேயே இருத்தல் விதி அமலாக்கத்தால் தொற்று வளர்ச்சிப் பரவல் அதிகரித்து உயரும் வளைவைக் கட்டுப்படுத்தி தட்டையானது உண்மைதான். இதன் பொருள் ஸ்வீடிஷ்காரர்களைவிட, 134 மடங்கு அதிக மக்கள் தொகை என்றபோதும், இந்தியாவில் கரோனாவால் இறந்தவர்கள் எண்ணிக்கை குறைவு. ஆனாலும் இந்தியாவில் தொற்று போதுமான அளவு கட்டுப்படுத்தப்படவில்லை. இதனைப் பற்றிக் குறிப்பிடும்போது ஒரு தொற்றுநோயியல் நிபுணர் கூறினார், “நாம் மக்களை வீட்டிலேயே கட்டுப்படுத்துவதற்கு அதிக முயற்சி எடுத்தோமே தவிர கிருமியைக் கட்டுப்படுத்த அல்ல.” இதன் விளைவாக நாள்தோறும் பலியாவோர் எண்ணிக்கை 150 என்ற அளவில் உயர்ந்து கொண்டேதான் வருகிறது. (மே 25 முடிவில் இந்தியாவில் மொத்தம் பலியானோர் 4,021; தமிழகத்தில் 118 ) ஊரடங்கு முடிவுக்கு வந்து 130கோடி இந்தியர்கள் வீதிகளுக்கு வரும்போது, வீதிகள் ஊரடங்கின் துவக்கத்தில் இருந்ததைவிட அதிகஅளவு நோய் ஏற்படுத்தும் வைரஸ் நிறைந்து இருக்கப் போகிறது.
        துவக்கத்தில் பலநாடுகளும் கோவிட்19 காரணமாகப் பொருளாதார ரீதியாகப் பாதிக்கப்பட்டதைவிட ஏற்கனவே இந்தியா ஊரடங்கிற்காக மிகக் கடுமையான விலையைத் தந்துவிட்டது. மார்ச் மாதத்தில் மட்டுமே 14 கோடி தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை இழந்துள்ளனர்; இதனால் வேலையின்மை விகிதம் 8 சதவீதத்திலிருந்து தேசிய அளவில் 26% ஆனது. புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் எண்ணிக்கை ஒரு கோடியிலிருந்து 8கோடி வரையானது என்கிறார்கள் – எண்ணிக்கையில் தெளிவில்லாத இந்த மதிப்பீடே சமூகத்தில் கீழ்மட்டத்தில் பணிபுரியும் அவர்களின் அவலநிலையையும் -- (சமூகத்தாலும், அரசாலும்) பார்வையில் படாத அவர்களின் அரூபநிலை அந்தஸ்து குறித்து ஆயிரம் கதைகள் கூறும்; அவர்களில் தெருக்களில் வியாபாரம் செய்பவர்கள், கூலித் தொழிலாளர்கள், ஆலைத் தொழிலாளர்கள் முதலானோர் மனம் ஒடிந்து விரக்தியில் அதிக வசதிகள் இல்லாத தங்கள் கிராமங்களை நோக்கிச் செல்ல முயல்கின்றனர். வெளிநாடுகளில் வேலைசெய்யும் பல இலட்சம் இந்தியர்கள் தங்கள் வீடுகளுக்கு அனுப்பும் தொகை மிகவும் குறைந்து விட்டது அல்லது அவர்களில் பலரும் இந்தியத் தாயகம் திரும்ப திட்டமிட்டுள்ளனர். அமைப்பு சார்ந்த பணிகளில் இருக்கும் 10 சதமானவர்கள் நிலைமை சற்று பரவாயில்லை – அதற்குக் காரணம், கூடுமானகாலம்வரை அவர்களை வேலையிலிருந்து நீக்க இயலாதபடி முதலாளிகள் தடுக்கப்பட்டிருப்பதே. இப்போதுதான் அவர்கள் வேலைநீக்கப்படுவதும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.
        (Goldman Sachs) கோல்டுமேன் சச்ஸ் என்ற வங்கி இந்தக் காலாண்டில் ஆண்டு விகித அடிப்படையில், பொருளாதாரம் 45% சுருங்கும் எனவும்; இரண்டாவது பாதியில் வளர்ச்சி கூடுதலாகும் என்ற நம்பிக்கையில் முழுவருடத்திற்கும் 5% பொருளாதாரம் சுருங்கும் எனக் கணித்துள்ளது. ‘பயன்பாட்டுப் பொருளாதார ஆய்வுக்கான தேசிய கவுன்சில்’ என்ற டெல்லியில் செயல்படும் சிந்தனைத் தேக்க (think-tank) அமைப்பு –பேரளவிலான ஊக்க உதவித் திட்டம் இல்லையானால் – பொருளாதாரம் 12.5 சதவீதம் இந்த நிதியாண்டில் சுருங்கும் எனக் கணித்துள்ளது.
        பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள இந்த வலியை அங்கீகரித்துப் பிரதமர் நரேந்திர மோடி மே 13 அன்று சாகசக் கதைகளில் வருவது போன்ற பிரம்மாண்டமான 20 லட்சம் கோடி – அமெரிக்க டாலரில் 265 பில்லியன் அல்லது ஜிடிபியில் 10%க்கு இணையான—அரசின் புதிய செலவுத் திட்டங்களை, பொருளாதார வளர்ச்சியை மீண்டும் தூண்டுவதற்கு அறிவித்துள்ளார். அடுத்த ஐந்து நாட்கள் நிதியமைச்சகத்தின் அதிகாரிகள் படை மின்னும் காமிராக்களைச் சந்தித்து, தொகுப்புத் திட்டத்தைப் பகுதி பகுதியாக அதன் மேலுறைகளைக் கழற்றி, மிக கவனமாக திரு மோடி அறிவித்த மேஜிக் எண் கூடுதல் கிடைக்கும்படி விளக்கினர்.
        இதனை ஆய்வு செய்த சில பொருளாதார ஆய்வாளர்கள் கூடுதலாகச் செலவழிக்க எண்ணியுள்ள தொகையால் மத்திய மாநில அரசுகளின் நிதிப் பற்றாக்குறை அளவு அதிகரித்து அது ஜிடிபியில் 12 சதமாக உயரக்கூடும் எனவும்; இதனால் தேசத்தின் ஒட்டுமொத்த அரசுக் கடனுக்கும் (ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தி) ஜிடிபிக்கும் இடையேயான விகிதம் நிலையற்றுத் தடுமாறி 80% சதமாகும் என்று கூறிப்பிட்டுள்ளனர் (இந்த விகிதம் அதிகரிப்பதானது, நாடு கடனுக்காகத் திருப்பிச் செலுத்த வேண்டிய வட்டியைக் கட்டுவதற்கே மேலும் கடன் வாங்கி, பொருளாதார பாதிப்பைச் சந்திக்கும் என்று பொருள்) – பலரும் இந்தத் திட்டம் பலனளிக்குமா என்பது குறித்து சந்தேகம் தெரிவித்தள்ளனர்.
        “இப்போது நமக்குத் தேவை பெரும் பகுதிகளான பணம், சந்தடியோ காரண காரிய ஆரவாரமோ இல்லாமல், (மக்கள் கையில்) புழக்கத்துக்கு, சுற்றுக்குச் சென்று சேர வேண்டும் என்பதுதான்” – இது நிதிசார்ந்த தினசரிப் பத்திரிக்கையான ‘மிண்ட்’--இன் தலையங்கம் கூறுவது. (இதன் அர்த்தம், நுகர்வோர் கையில், பொருட்கள் தேவைப்படுவோர்/ எதிர்பார்ப்போர் கையில், பொருட்களை வாங்குவதற்கான சக்தியை அதிகரிக்க வேண்டும் என்பது). ஆனால் இப்படி டிமாண்ட் பக்கத்தை ஊக்குவிப்பதற்கு –குறிப்பாக, ஏழைகளுக்கு அவசரமாக ரொக்க ஆதரவைப் பணமாக வழங்குவதற்கு – பதிலாக, திரு மோடி (பொருட்களை வழங்குநர்களான)  சப்ளை பக்கத்தே, சப்ளை சைடு ஊக்குவிப்புகள் மற்றும் கடன் உத்தரவாதம் முதலிய சீரமைப்புத் திட்ட உதவிகளைத் தாறுமாறான குவியலாக வழங்கி ‘பொருளாதாரமே எழுந்து நட, ஓடு’ என வலியுறுத்துகிறார் – இத்தகைய சீரமைப்புத் திட்டங்களின் பலன் தெரியவர குறைந்தபட்சம் சில காலம் பிடிக்கும். ஊக்குவிப்புத் தொகுப்புத் திட்டத்தின் பலவும், i) ஒன்று முன்பே அறிவிக்கப்பட்ட நடவடிக்கைகள் அல்லது ii) மத்திய வங்கியைக் கடன் வழங்க வற்புறுத்துவதான திட்டங்களால் உருவாக்கப்பட்டது. பட்ஜெட் ஒதுக்கீடான புதிய நிதிச்சுமை செலவு என்று மோடி அரசு அறிவித்துள்ள திட்டங்களின் திட்டமதிப்பீடு மிகமிக அற்பமான ஜிடிபி-யில் 0.7% யிலிருந்து 1.3% ஜிடிபி அளவிலானதே என்ற உண்மை அறிவிக்கப்பட்ட 10 சதத்திலிருந்து எவ்வளவு தூரம் குறைவான சிறுத்துப்போன ஒன்று.
        எதிர்பார்க்கப்பட்டது போலவே திரு மோடியின் ஆதரவாளர்கள் இதற்கொரு விளக்கம் தருகிறார்கள் – இந்த நெருக்கடி எப்போது முடியும் என்று தெரியாத நிலையில் இப்போதே அனைத்தையும் செலவிடுவது ஜாக்கிரதையான அணுகுமுறை ஆகாது; அதனால்தான் அரசு எதிர்காலத்தில் எதற்கும் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காகப் பட்ஜெட்டில் இந்தத் தொகை ஜிடிபியில் ஆறில் ஒரு பங்காக –பணக்கார நாடுகளை ஒப்பிட மிகக் குறைவாக இருப்பினும் – வரையறுத்துள்ளது. எனவே ஏழைகள் கைகளில் பணமாகத் தருவதைவிட, அந்தப் பெரும்பான்மை மக்களைப் பணியில் அமர்த்தக்கூடிய –இந்தியப் பொருளாதாரத்தின் முதுகெலும்பாகிய --சிறு வணிக நிறுவனங்களுக்குச் சுலபக் கடனாக, முதலீடு செய்ய வசதியாக அரசு ஏற்பாடு செய்துள்ளது என்கிறார்கள்.
        அரசும் அதன் பங்கிற்கு மிகப் பெரிய அளவில் கிராமப்புற வேலைவாய்ப்புத் திட்டங்களில் செலவு செய்கிறது என்கிறார்கள். (மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைக் குறிப்பிடுகிறார் எனக் கருதலாம் –மொழிபெயர்ப்பாளர்): திரு மோடி அவர்கள் எதிர்கட்சியில் இருக்கும்போது இந்த ஊரகப்பகுதி திட்டங்களைத்தான் தேவையற்றது, வீணானது அல்லது ஊழல் நிறைந்தது என்றெல்லாம் நிராகரித்தார்.
        வேளாண் உற்பத்திப் பொருட்களின் உள்நாட்டு வர்த்தகத்தின் கட்டுப்பாடுகளை நீக்கும் அத்தகைய சீர்திருத்தங்கள், மாநில மட்டத்தில் அல்லாது தேசிய அளவில் கொண்டு சென்று மானிய விலையில் உணவுதானியப் பொருட்களை வினியோகிக்கும் சிஸ்டத்தைக் கொண்டு வருவது எழைகளுக்கு உதவிகரமாக இருப்பது மட்டுமல்ல, அரசு பணத்தையும் சேமிக்க உதவும்.
        இருப்பினும், மென்மையான இடதுசாரிகள் மட்டுமே திரு மோடியின் கஞ்சத்தனம் குறித்து குற்றம் சாட்டவில்லை; நோபல் பரிசுபெற்ற இரண்டு இந்தியப் பொருளியல் அறிஞர்கள் அமர்தியா சென்னும் அபிஜித் பானர்ஜியும்கூட மாதத்திற்கு 100 டாலர் (ஒரு டாலர் = ரூ75.69என இந்திய மதிப்பில் சுமார் ரூ7500/=) அவசரகாலப் பணஉதவி வழங்குவது அந்த ஏழைக் குடும்பங்கள் நெருக்கடியிலிருந்து மீள உதவும் என யோசனை தெரிவித்துள்ளனர். ஆனால் அதற்குப் பதிலாகத் தற்போது அரசு வழங்க முன்வந்துள்ளது 20 கோடி ஏழைப் பெண்களுக்கு மாதத்திற்கு சுமார் 6.60 டாலர் (இந்திய மதிப்பில் ரூ500/=) மற்றும் ஏழு கோடி விவசாயிகளுக்கு ஒருமுறை பட்டுவாடாவாக 26 டாலர் (இந்திய மதிப்பில் ரூ2000/=) தருவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. 60 சதமான இந்தியர்கள் ஒருநாளைக்கு 3.20 டாலருக்கும் (இந்திய மதிப்பில் ரூ250/=) குறைவான தொகையில் (எப்படியோ) வாழ்வை ஓட்டுகிறார்கள் --அந்தத் தொகை நடுத்தர வர்க்கத்திற்கும் கீழே வருமானம் பெறுகின்ற நாடுகளுக்கான உலகவங்கியின் ஏழ்மைக் கோடு வரையறையாகும் --  அந்த அற்பமான சிறுதொகை சிலகாலம்கூட நீடிக்காது என்றபோது, அது எப்படி வேலைவாய்ப்பை உருவாக்கும் அளவு நுகர்ச்சியின் தேவையை எழுச்சிபெறச் செய்து, அதன் விளைவாய் பொருளாதார வளர்ச்சியை உண்டாக்கிவிடும்?
        கரோனா வைரஸ் பாதிப்பிற்கு முன்பு ஏற்கனவே மலையளவு வாராக் கடன் சுமையாக அழுத்திச் செலவையும் முதலீட்டையும் தடுத்துள்ளது. அப்படி இருக்கும்போது மத்திய அரசும் மத்திய ரிசர்வ் வங்கியும் கடன்களை அதிகம் அளிப்பதை ஊக்குவிப்பதன் மூலம் பொருளாதாரத்தைப் புத்தாக்கம் செய்துவிடலாம் என நம்புகிறது. இதுகுறித்து கருத்து தெரிவிக்கும் விமர்சகர்கள், பழைய கடனால் ஏற்பட்ட பிரச்சனைகளைத் தீர்ப்பதற்கு முன், மேலும் மேலும் அவர்களையே கடன் வாங்கத் தூண்டுவது தவறான நம்பிக்கை மட்டுமல்ல, முட்டாள்தனமானதும் கூட என்கிறார்கள்.   “தற்போது வங்கிக் கடன்கள் கிடுகிடுவென வளர்ந்து உயர்ந்தோங்கிவிடும் என நம்புவது சாத்தியமாகாத கனவாக மட்டுமே இருக்க முடியும்” என்று கூறுகிறார் ஒரு பத்திரிக்கை கட்டுரையாளர், திரு விவேக் கௌல்.  

--தமிழில் நீலகண்டன்,
  என்எப்டிஇ, கடலூர்


No comments:

Post a Comment