நியூஏஜ் மார்க்ஸ் பிறந்தநாள் சிறப்புக் கட்டுரை
----கல்யாண் பந்தோபாத்யாய்
(ஆசிரியர், *கலாந்தர் பத்திரிகா,
மேற்கு வங்க இந்தியக் கம்யூனிஸ்ட்
கட்சியின் நாளிதழ்)
ஓவியம்
நன்றி: தடம் விகடன்
காரல் மார்க்ஸ் பிறந்து இரண்டு நூற்றாண்டுகள்
கடந்த பிறகு இன்றைய கரோனா வைரஸ் தொற்று மற்றும் அதன் பாதிப்புக்குப் பின்னர் ‘கம்யூனிஸ்ட்
அறிக்கை’யின் போதனைகள் மேலும் கூர்மையாக அடிக்கோடிட்டு மேலெழுந்து முன்னிற்கின்றன.
நவீன காலத்தின் ஒப்புயர்வில்லாத தத்துவவாதிகளில் மிகச் சிறந்து விளங்கும் மார்க்ஸ்
அவருடைய ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’யில் கூறுகிறார்,
“…முதலாளித்துவம்
இதன் பிறகும் ஆளும் வர்க்கமாகச் சமூகத்தில் நீடிப்பதற்குத் தகுதி அற்றது என்பது தற்போது
மிகவும் தெளிவாகிவிட்டது; சமூகத்தில் தனது இருப்பிற்கான நிபந்தனையை
முன்னுரிமை வாய்ந்த சட்டமாக நிர்ப்பந்திக்கும் தகுதி அதற்கு இல்லை. தனது அடிமைத்தனத்தின் கீழ் ஓர் அடிமையான
இருப்பைக்கூட உத்தரவாதப்படுத்த முடியாதக் கையாலாகாத காரணத்தால் அது ஆள்வதற்குத் தகுதி
அற்றது; அடிமை உழைப்பால் உருவாகும் செல்வத்தால் இச்சமூகம் உணவளிக்கப்படுவதற்கு மாறாக,
அந்த உழைப்பாளி உயிர் தரித்து இருப்பதற்கே சமூகம்தான் உணவிட வேண்டும் என்ற (இரந்து
நிற்கும்) தாழ்ந்த நிலையில், அவன் மூழ்கிவிடாதிருக்க உதவ முடியாத அது, ஆள்வதற்குத்
தகுதி அற்றது. சமூகம் இந்த பூர்ஷ்வா அமைப்பின் கீழ் இதற்கு மேலும் வாழ முடியாது; வேறு
வார்த்தைகளில் கூறினால், முதலாளித்துவம் இதற்கு மேலும் சமூகத்தோடு இணைந்து இருப்பதென்பது
முடியாது…”
கரோனா
தொற்று காலத்தில் காண்பது என்ன? முரண்பாடுகளுடைய முதலாளித்துவம்
இறந்து கொண்டிருக்கிறது. குறைந்த பட்சம் சில அம்சங்கள் கம்யூனிசத்தோடு நெருங்கி வருவதாக மலர்ந்து
வருகிறது. அதைத்தான் உலகின் மிகப் பெரிய முதலாளித்துவக் கம்பெனிகளில் ஒன்றான ‘ஆஸ்திரேலிய
சர்வதேச முதலீட்டு வங்கி மற்றும் நிதிச் சேவை நிறுவன’மான மாக்குவரீ வெல்த் க்ரூப்
(Macquarie Wealth Group) தனது முதலீட்டாளர்களிடம் கூறியுள்ளது.
அமெரிக்க நிதிச் செயலாளர்
ஸ்டீவ் ம்யூசின் வார்த்தைகளில், “2008ம் ஆண்டின்
பொருளாதார வீழ்ச்சி அமெரிக்க வேலையில்லாதோர் விகிதத்தை 10 சதவீதமாக்கியது. அது தற்போது
30 சதத்தைத் தாண்டும். டிரம்ப் அறிவித்துள்ள இரண்டு டிரிலியன் டாலர் மதிப்பு மீட்புத்
திட்டத்தால் இந்த நெருக்கடியிலிருந்து மீள முடியாது.” 2007 -08ம் ஆண்டுகளின் போது
‘வால் ஸ்டிரீட்டைக் கைப்பற்றுவோம்’
இயக்கம் வெடித்து எழுந்தபோது பலர் நம்ப முடியாத சந்தேகத்தோடுப் புருவங்களை உயர்த்தினர்,
இது மிகைக் கூற்று என. கேலப் (Gallup, Inc. வாஷிங்டன் டிசி யிலிருந்து இயங்கும் கருத்துக் கணிப்பு மற்றும்
ஆலோசனை நிறுவனம்) நடத்திய 2011 கருத்துக் கணிப்பு தேர்தலில் 51
சதவீத அமெரிக்க இளைஞர்கள் சோஷலிசக் கருத்துகளை ஆதரித்தனர்
என்பது தெரிந்தது. 2018லும் அந்த விகிதம் அப்படியே நீடித்தது. எனவே இப்போது?
Guggenheim பார்ட்டனர்ஸ் நிறுவனத்தின் தலைமை முதலீட்டு அதிகாரியான ஸ்காட்
மேனார்டு கூறுகிறார்: “கரோனா தொற்றிலிருந்து பொருளாதாரம் மீள்வதற்கான எந்த நம்பிகையும்
எனக்கு இல்லை. மாறாக, செல்வக்குவிப்பு மற்றும் (வாழ்க்கை) வருமானத்திற்கு இடையேயான
பெரும் பள்ளத்தாக்கு போன்ற இடைவெளியின் விளைவாய், (பாரதிதாசன் குறிப்பிடும்
‘எங்கள் உடலில் இரத்தம் கொதிப்பேறும்’) குமுறல் அதிகரித்துள்ள (சமூகச்) சூழல், பெருந்திரள்
எழுச்சிக்கே இட்டுச் செல்லும். சமூகக் கடமை மற்றும் நிதிக் கொள்கைகளை வகுத்து நிர்வகிக்கும்
நிர்வாகத்தின் நீதிநெறி சார்ந்த பொறுப்பு என்ற அபாயம் --டிரம்பின் முன்– (கட்டுரையாளர்
சேர்த்தது) உள்ளது. (அரசியல் பிழைத்தோர்க்கு அறமே கூற்றாதல் போல)
கொள்கைகளில் செய்த பிழைக்கான விலையை நாம் தந்தே
ஆக வேண்டும். அமெரிக்கா ஒருபோதும் மீண்டும்
சுதந்திரச் சந்தை முதலாளித்துவத்திற்குத் திரும்ப இயலாது.”
இதனோடு மாற்றுத் தத்துவ முகாமைச் சேர்ந்தவர்கள்
கூறும் இரண்டு கருத்துகள் முக்கியத்துவம் பெறுகிறது. பத்திரிக்கையாளர், தொலைகாட்சி
விமர்சகர், டாக்குமெண்டரி சினிமா இயக்குநர், பொருளாதாரவியல் அறிஞர் என்ற பன்முகச் செயற்பாட்டாளரான
பிரிட்டன் நிபுணர் பால் மேசன் கரோனா தொற்றுக்குப் பின்
ஏப்ரல் 3ம் தேதி எழுதிய அறிக்கையில் பின்வருமாறு குறிப்பிடுகிறார்: “1340களில் பிளேக் நோய் மங்கோலியாவிலிருந்து ஐரோப்பா வரை பரவியது. இந்தப் பிளேக் நோயை நிலப்பிரபுத்துவச் சகாப்தம் இற்று
நொறுங்கி வீழ்ந்ததற்கான முக்கிய காரணமாக நிபுணர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர்; ஏனெனில், நிலப்பிரபுத்துவத்தின்
ஆட்சி அதிகார அமைப்பு முறையின் எல்லை, தொற்றின் பேரழிவுக்கு ஈடுகொடுத்துச் சமாளிக்க
முடியாததாக இருந்தது. இதன் விளைவு யாதெனின், ஒரு பக்கம் மனித குலத்தின் தேவைக்கும்
எதார்த்தத்திற்கும் இடையே இருந்த பிளவு; மறுபுறம் மனிதகுல விடுதலைக்கான தேவைக்கும்
மத்திய காலக் கருத்துகளும் இடையே நிலவிய பெரும் வித்தியாசம். இப்படி இதன் இரண்டுக்கும்
இடையேயான பாரதூரமான பெரும் இடைவெளி முதலாளித்துவம் முகிழ்ப்பதற்கான ஒரு வாய்ப்பைத்
தந்தது.”
கரோனாவிற்கு முன்பு, அமெரிக்க ஜனநாயகக் கட்சி
வேட்பாளர் பெர்னி சான்டர்ஸ் அல்லது பிரிட்டன்
தொழிலாளர் கட்சியின் ஜெரிமி கோர்பின் மக்களின்
ஆதரவு வாக்குகளைப் பெற முடியவில்லை. கரோனாவிற்கு முன்பு பொதுவாகச் சமூகப் பாதுகாப்பு அல்லது பொதுத்துறை நிறுவனங்களில் முதலீடு முதலிய
பிரச்சனைகளுக்கு எதிரான மனநிலையே இருந்தது, ஆனால்
கோவிட் 19க்குப் பிறகு நிலைமை அவ்வாறில்லை. இதில் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டியது, சோவியத் சோஷலிசத்தின்
வீழ்ச்சியைப் பார்த்த பிறகும், கரோனா அனுபவத்திற்குப் பிந்தைய மக்கள், ’முதலாளித்துவத்தை
ஒழித்துக் கட்டு’என்று தற்போது கூறத் தொடங்கி உள்ளார்கள்.
மற்றொரு மார்க்சிய
எழுத்தாளரான ராப் சீவெல்
(Rob Sewell மார்க்சியம் என்றால் என்ன போன்ற நூல்களை எழுதியவர்) மார்ச்
22 அறிக்கையில் மிகத் துணிச்சலாகக் கூறுகிறார், ‘2007—08 பெரும் பொருளாதார வீழ்ச்சியின்
பிரச்சனைகள் இன்னும் தீர்க்கப்படவில்லை.’ இந்த சிஸ்டத்தைப் பற்றிய பேச்சுகள்
அப்போதிலிருந்தே தொடர்கின்றன. 1930களின் பெரும் வீழ்ச்சியை விடவும்
கரோனா தொற்றின் பாதிப்பு மோசமானது. 1930களின் பெரும் வீழ்ச்சியின்
விளைவாய், பாசிசத்தின் பேரழிவு நிதி மூலதனத்திற்குச் சேவகம் செய்வதாய் துவங்கியது.
ஆனால் தற்போதைய சிஸ்டத்தின் கையாலாகாதத்தனம் பல மடங்கு பெரியதாக 2020ன் உலகளாவிய தொற்றில்
வெளிப்பட்டது மட்டுமல்ல, அது பற்றிய கூடுதல் விழிப்புணர்வும் ஏற்பட்டுள்ளதால், இந்தச்
சிஸ்டத்தை மாற்றுவதற்கான களம் பண்பட்ட பெருவாய்ப்பாக உள்ளது. இந்த நெருக்கடியிலிருந்து
முதலாளித்துவம் மீள்வதற்கான இரண்டு வழிகள் உள்ளதாக சீவெல் கூறுகின்றார்:
“ஒன்று, மேலும் கூடுதலாக வணிகப் போர்களில்
ஈடுபடுவது; இதை ஏற்கனவே அவர்கள் துவங்கி விட்டாலும் பயனேதும் விளையவில்லை. இரண்டாவது வழி, இன்னொரு உலகப் போரைத் துவக்குவது.
அணுகுண்டின் பேரளவிலான அணுக்கதிர் பேரழிவு அபாயம் நிலவும் தற்போதைய சூழலில், இன்று
அது நினைக்கப் பார்க்கவியலாத ஒன்று.”
இதைக் கருத்தில் கொண்டே சீவெல், மார்க்சின்
மறுக்கவியலாத போதனையின் தன்மையை எடுத்துக் காட்டுகிறார். அவர் எழுதுகிறார், “இது
2008 -09ன் காலம் போன்றதல்ல. இன்னும் யாரும் அதைவிட்டு வெளியே இல்லை, அது ஒரு துவக்கம்தான்.
ஆளும் வர்க்கம் முழுமையாகக் கையறுநிலையில் உள்ளது. பிரச்சனையின் மீது பண மழையைக் கொட்ட
அவர்கள் விரும்புகிறார்கள். ஆனால் அது வெறும் நிதி சார்ந்த பிரச்சனை மட்டுமில்லையே
(மேலும் அது மோசமாகக் கூடும்); முதலாளித்தவ அமைப்பு நிர்வாகத்தின் நெருக்கடி அது, அந்தச்
சிஸ்டம் முழுமையாகப் பயன்படுத்தப்பட்டு, இனி பயனில்லை, முடியாதென ஓய்ந்துபோய் விட்டது”.
உற்பத்தி செய்து குவித்த
பொருட்களைவிட அதற்கான சந்தை தற்போது சிறுத்துப் போயுள்ளது.
(சந்தையின் தேவையைவிட கூடுதலான உற்பத்தி என்பதால்) நுகர்வைப் பொருத்த அளவில் கீழ்நோக்கிய
வீழ்ச்சியான போக்கு என்பதே இதன் பொருளாகும். இந்தப் பிரச்சனையைத் தீர்க்கச் செயற்கையான
முறையில் அவர்கள் சந்தையை விரிவாக்க முயல்கிறார்கள். (சந்தையை விரிவாக்கும்போது அது
இன்னும் கூடுதல் உற்பத்திக்கு வழி வகுத்து) மார்க்ஸ் எவ்வளவோ ஆண்டுகளுக்கு முன்னால் விளக்கியதுபோல, மிகை உற்பத்தி
என நெருக்கடி மேலும் முற்றுகிறது. மார்க்சின் மெய்யறிவு
ஞான விளக்கத்திற்கு ஒரு நிரூபணமாக இன்றைய பிரச்சனை உள்ளது. (உதாரணத்திற்கு
அரசின் களஞ்சியத்தில் உணவு குவிந்து கிடக்க, பல இலட்சம் மக்கள் பட்டினியில் கிடக்கக்
காரணம், சிஸ்டத்தின் தோல்வி)
சீவெல்
இவ்வாறு நிறைவு செய்கிறார், “…சோஷலிசத் திட்டமிட்டப் பொருளாதாரமே ஒரே தீர்வு; அதன்படி இந்தப் புவிமண்டலத்தின்
செல்வவளம் ஒருசில ஒட்டுண்ணி கோடீஸ்வரர்களின் கைகளில் அகப்படாது, ஒவ்வொரு மனிதனின் நலவாழ்விற்காகச்
செலவிடப்படும், அந்த முறையே, ஒரே தீர்வு. முதலாளித்துவம் என்ற கொடுமையான அராஜகத்திலிருந்து
அது ஒன்றே நம்மைக் காப்பாற்றும்.”
உண்மையில் இதுபோன்ற செய்திகள் வெகுகாலத்திற்கு
முன்பே வந்து விட்டன. ‘தி
எக்கானமிஸ்ட்’ என்பது இடதுசாரி இதழ் அல்ல. 2017ல் அது கூறியது: “இந்தப் பொருள் குறித்து
மார்க்ஸ் என்ன எழுதி இருக்கிறார் என்பதிலிருந்து கற்றறிந்து கொள்வதற்கு எவ்வளவோ உள்ளன.
மார்க்ஸ் அன்று கூறியது இன்றைக்கும் மிகவும் பொருத்தம் உடையதாக உள்ளது.”
2015ல் வெளியான ஒரு புத்தகம், ‘முதலாளித்துவம் எப்படி முடிவுக்கு வரும்’.
அதில் ஜெர்மன் பொருளியல், சமூகவியல் அறிஞரான Wolfgang Streeck கூறுகிறார், ‘முதலாளித்துவம் சந்திக்கும் நெருக்கடி,
பன்முகத் தோல்விகளை உள்ளடக்கியது. இன்றைக்கு மிகப் பெரிய தோல்வியைச் சந்தித்து, பிரச்சனையைத்
தீர்ப்பதற்கான எந்த ஆயுதமும் இல்லாமல் நிர்கதியாக நிற்கிறது.’
(Cologne ல்
இருந்து செயல்படும், ‘சமூகங்களைப் பற்றி ஆய்வு நடத்தும் Max Planck ஆய்வுநிறுவன’த்தில்
அவர் பெருமைமிகு நிகர்நிலை இயக்குநராகவும் உள்ளார்)
சர்வ தேச நாணய நிதியமான ஐஎம்எப் அமைப்பின் Ken Rogoff என்ற முன்னாள் இயக்குநரின் கருத்தின்படி முதலாளித்துவத்திற்கும் சோஷலிசத்திற்கும்
இடையேயான அடுத்த போர், ‘மனிதகுலத்தின் உடல்நலம் மற்றும் சுகாதாரப் பராமரிப்பு மற்றும்
வாழ்வதற்கான வாழ்க்கைச் செலவு குறித்தான போராக’ இருக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
எனவே கரோனா தொற்றின் நெருக்கடி நம் போராட்டத்தை
முன்னெடுத்துச் செல்வதற்கான சூழலை உருவாக்கி இருக்கிறது என நம்புவதற்குக் காரணம் இருக்கிறது.
விரும்பினால் சோஷலிசம் வந்திடுமா?
முதலாளித்துவச் சிஸ்டத்தின்
திறமையின்மை ஊரறிந்ததாக நிரூபணமாகி உள்ளது. இந்நிலையில் சோஷலிசத்தை அடைவது என்று நாம்
விரும்புவதால் மட்டுமே சாதிக்கப்பட முடியாது. ‘அக்கா வந்து கொடுக்கச் சுக்கா மிளகா சுதந்திரம் கிளியே?' என்று பாவேந்தர்
பாரதிதாசன் பாடியது போல, சோஷலிசமும் விழைவதால் விளைந்து விடாது. சமூக எதார்த்தம்
என்ற புறச்சூழல் நிபந்தனைகள் உள்ளன. ஆனால் எந்தப் புரட்சிகரப் பாதையிலும் பயணிக்க அகவயச்
சூழல் நிபந்தனைகளையும் பூர்த்தி செய்தாக வேண்டும். இந்தப் பிரச்சனையில் மார்க்சியத்தை
மிக உயர்ந்த படைப்பூக்கத்துடன் (வெற்றிகரமாகப்) பயன்படுத்திய ஆசான் மாமேதை லெனின்
அவர்களின் கூற்று நினைவுகொள்ளத் தக்கது. புரட்சிக்கான சூழல் கனிந்து விட்டதா என்பதற்கான
புறச் சூழல் மற்றும் அகவசச் சூழல் நிபந்தைகள் குறித்து லெனின் பின்வருமாறு எழுதியுள்ளார்:
“ஆளும் வர்க்கம் அல்லது ஆட்சியின் மேற்கட்டுமான
அமைப்புகள், எழுந்துள்ள (புதிய) பிரச்சனையை எதிர்கொள்ள, ஏற்கனவே பின்பற்றிவந்த அதே
பழைய வழிமுறைகள் மற்றும் கொள்கைகளில் மாற்றம் இன்றி, அவற்றால் இனியும் சமாளிக்க முடியாது
என்ற நிலையில்; அதே நேரம் சமூகத்தின் மனிதத் துயர்கள் உச்சத்தை எட்டி, அந்தச் சமூக
மனிதர்கள் இனியும் அந்தப் பழைய முறையைப் பின்பற்ற விரும்பாதபோது – அந்நிலையில், மாற்றத்தை
ஏற்படுத்த மக்களிடையே ஆகக் கூடுதலான பெருந்திரள் செயல்பாட்டு எழுச்சி ஏற்பட்டு -- மாற்றத்தைக்
கொண்டு வர எது நேர்ந்தாலும் சந்திப்போம் என்ற உறுதிப்பாடு உண்டான நிலையில்தான் புரட்சிகர
மாற்றம் சாத்தியமாகும்.”
மேலே விவரிக்கப்பட்ட
சமூக எதார்த்தக் களநிலைமை நிபந்தனைகள் ஏற்படாமல்
புரட்சி சாத்தியமாகாது என்பது போல (மக்கள் உணர்வான) அகவயச்
சூழல் நிபந்தனைகள் பூர்த்தியாகாமலும் புரட்சி சாத்தியமில்லை என்பதையும்
அவர் மேலும் குறிப்பிட்டுச் சுட்டிக் காட்டியுள்ளார். 1905ம் ஆண்டிலும் ரஷ்யாவில் புரட்சிக்கான
புறச் சூழ்நிலைகள் நிலவிய போதும், அதுவே புரட்சியாக வெற்றிகரமாக மலர்ந்து விடவில்லை;
காரணம், பெருந்திரள் போராட்டங்கள் மூலம் வெளிப்படுத்தப்படும் உழைக்கும் வர்க்கத்தின்
சமூக உணர்வின் மட்டம் போதுமானதாகவும் இல்லை, அது விஞ்ஞான முறைப்படி மேலும் முறைபடுத்தப்பட்டு
அமைப்பு ரீதியாகப் போதுமான அளவில் அணிதிரட்டி அமைக்கப்படவும் இல்லை – எனவே புறச் சூழல்
இருந்தும் புரட்சி சாத்தியமாகவில்லை.
எனவே கரோனா சூழ்நிலை
பாதிப்பின் விளைவு எங்கே திரும்புகிறது; உலக மக்களிடையே போராட்டங்கள் எத்தகைய திருப்பங்களை
ஏற்படுத்தும்; பாதிப்பைச் சகஜமாக ஏற்றுக் கொண்டு கடந்து போவார்களா அல்லது (கரோனா பாதிப்பிலிருந்து
பாதுகாக்கவோ உதவவோ உபயோகமற்ற) சிஸ்டத்தை மாற்றுவதற்காக மக்கள் திரள் எதையும் எதிர்கொள்ளத்
தயாராக இருப்பார்களா என்பது போன்ற ஒவ்வொன்றையும் பொருத்தே அனைத்தும் அமையும். காரணம்,
உலகெங்கும் சூழல் ஒன்றுபோல் இல்லை, வெவ்வேறு இடங்களில் பெரிதும் நிச்சயமற்ற தன்மையே
நிலவுகிறது. எனவே என்ன நிகழுமென ஆருடம் முன்கணிக்க இயலாது. ஆனால் இதன் மத்தியில், கரோனா
உலகச் சமூகத்தினரிடையே ஓர் உந்துதலை, சிஸ்டத்தை மாற்றுவதற்கான தேவை மற்றும் விழைவை
அதிகரித்துள்ளது. இந்தச் சூழலைப் புரட்சிகர மாற்றத்திற்கான புறச்சூழல் எதார்தத்தின்
களநிலைமையோடு ஒப்பிடலாம். இரண்டாவது உலக யுத்தத்திற்குப் பின், சிஸ்டத்தை மாற்றுவதற்கு
ஆதரவான ஒரு பொதுவான சூழல் நிலவவில்லை. அதற்கு மாறாக, இது முற்றிலும் ஒரு புதிய
சூழல், ஒரு புதிய வாய்ப்பு. இது நம்பிக்கைக்கான புதிய
வெளிச்சம். இந்தப் புதிய வாய்ப்பான சூழ்நிலையை –மாற்றத்திற்கு ஆதரவாக -- மக்கள் திரளைத் திரட்டும் முயற்சியில் மார்க்சிய-லெனினியவாதிகள்
முற்போக்கான முதன்மைப் பங்கு வகிக்க முடியும். இந்த அற்புதமான
அரிய வாய்ப்பை நாம் புறக்கணித்து நழுவவிடலாகாது.
‘மாற்றம்
ஒன்றே மாறாதது’ என்ற தத்துவ போதம் ஊட்டிய மாமேதை காரல் மார்க்ஸ்
அவர்களின் 202வது பிறந்த நாளில் –
“மாற்றம் படைப்போம்” என்ற செய்தியை-- உலகின்
தொடு வானத்தின் எல்லைவரை கொண்டு சேர்க்கச் சபதம் ஏற்போம்!
குறிப்பு:
*’கலாந்தர் பத்திரிகா’
வங்க மொழியில் 1965ல் வார இதழாகத் துவங்கப்பட்டு, 1960பிற்பகுதியிலிருந்து சிபிஐ மாநிலக்
கட்சியின் நாளிதழாக வெளிவருகிறது. தற்போது நான்கு வண்ணப் பயன்பாட்டோடு வெளிவரும் நாளிதழின்
துவக்க கால ஆசிரியர்களாகச் சோமநாத் லஹரி
போன்ற புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் தலைவர்கள் பணியாற்றியிருக்கிறார்கள். தின நாளேட்டுடன்
வாரஇதழும் வெளிவருகிறது. பத்திரிக்கையின் பெயர் தாங்கிய முகப்பை உலகப் புகழ்பெற்ற சினிமா
இயக்குநர் சத்தியஜித் ரே அவர்களே உருவாக்கினார் என்பது சிறப்பு.
--தமிழில்
: நீலகண்டன்,
என்எப்டிஇ,
கடலூர்
No comments:
Post a Comment