Tuesday 1 February 2022

பாஜக -விடமிருந்து நேதாஜியை மீட்டு எடுங்கள்

 

         நேதாஜி சிலை அமைப்பதை எதிர்க்காதீர்கள்

பாஜக அபகரித்த நேதாஜியை 

அவர்களிடமிருந்து மீட்டு எடுங்கள்

--சுவாமிநாதன் எஸ் அங்கிலேசாரியா அய்யர்

டெல்லி ராஜ்பாத்தில் நிற்கும்  ஜார்ஜ் மன்னர் சிலைக்குப் பதிலாகத் தேசத் தந்தை மகாத்மா காந்தி சிலையை நிறுவ வேண்டும் என எப்போதும் நான் நினைப்பேன். தற்போது பாஜக அரசு சுபாஷ் சந்திரபோஸ் சிலையை அமைக்க முடிவு செய்துள்ளது. விடுதலை இயக்கத்தில் புகழ்பெற்ற தனது தலைவர்களாக ஒருவரும் இடம் பெறாத பாஜகவின் அம்முடிவு, விடுதலை இயக்கத்தில் காந்திஜியின் பங்களிப்பைக் குறைக்கவும் தேசியக் கதாநாயகராக நேதாஜியைக் கட்டமைத்து அவரைக் களவாடி அபகரிக்கவும் மேற்கொள்ளப்படும் அப்பட்டமான முயற்சி தவிர வேறில்லை.

நான் ஒருநாளும் போஸின் விசிறி அல்ல. சரித்திரத்தில் இரண்டு மோசமான ஆட்சிகளோடு அவர் கூட்டமைத்தார் –ஹிட்டலரின் நாஜிகள் மற்றும் ஜப்பானிய கொள்ளையர்கள். அவர்கள்தாம் இரண்டாம் உலகப் போரில் சொல்ல முடியாத கொடுமைகளை இழைத்தவர்கள். சீனா மற்றும் பர்மாவில் அவர்கள் அரங்கேற்றிய பலாத்காரங்களும் கொலைகளும் ஏராளம். ஒரு வாய்ப்புக் கிடைத்திருந்தால் இந்தியாவிலும் அதைவிட மோசமாக நடந்திருப்பார்கள். எவ்வளவு கதாநாயக வழிபாடு செய்து புகழ்ந்தாலும் போஸின் ஐஎன்ஏ படை அதனது ஜப்பானிய அதிபதிகளால் இராணுவரீதியாகத் தாக்கப்பட்ட உண்மையைத் திரையிட்டு மூடி மறைத்துவிட முடியாது. அவரது ஜப்பான் கூட்டாளிகள் நூற்றுக் கணக்கான இந்திய வீரர்களைக் கொன்றனர்.

அந்தமான் தீவுகளை ஜப்பான் கைப்பற்றி ஆக்கிரமித்ததும் தீவுகளில் போஸ் இந்தியக் கொடியை ஏற்றினார். அபர்ணா வைதிக் போன்ற வரலாற்றாசிரியர்கள், ’அதன் விளைவு கருணைமிக்க இந்திய ஆட்சியாக இல்லை; மாறாக காட்டுமிராண்டி ஜப்பானிய ஆட்சியே ஏற்பட்டது என்றும் உள்ளுர் மக்கள் இன்றும் அதை நினைத்து நடுங்குகிறார்கள்’ எனச் சுட்டிக்காட்டுகின்றனர். பிரிட்டிஷ் ஆட்சியைவிட ஜப்பானிய காட்டுமிராண்டித்தனம் மேலானது என நம்புவது –போஸ் அப்படித்தான் நம்பினார் – பைத்தியக்கார முட்டாள்தனம். இருப்பினும் கிளர்ச்சியை நடத்த இந்திய வீரர்களை இராணுவத்தில் சேர்த்ததன் மூலம் இந்திய விடுதலைக்கு நேதாஜி பெரும் பங்களிப்புச் செய்தார்.

இந்தியாவை அதனுடைய விருப்பத்திற்கு மாறாக ஆட்சி செய்ய முடியாதென வெகுகாலம் முன்பே பிரிட்டிஷ்காரர்கள் கூறினார்கள் – அதன் பொருள், தங்கள் படையில் மிகப்பெரும் எண்ணிக்கையில் அமைந்த இந்தியப் படைவீரர்களின் விஸ்வாசத்தைப் பெறாமல் இந்தியாவை ஆட்சி செய்வது சாத்தியமல்ல என்பதே. 1857 சிப்பாய்கள் கிளர்ச்சிக்குப் பிறகு இன்னொரு கிளர்ச்சி ஏற்பட்டால் தாங்கள் முழுமையாகத் துடைத்தெறியப்படுவோம் எனற கலக்கத்தில் பிரிட்டிஷ்காரர்கள் இருந்தார்கள்.

எனவே இந்திய இராணுவப் படைப்பிரிவுகளில் வெள்ளைக்காரர்களின் எண்ணிக்கை விகிதத்தை இரட்டிப்பாக்கினர். ஆனால் முதல் உலகப் போருக்கு வீரர்கள் தேவை அதிகரித்ததால் பத்து லட்சம் இந்தியர்களை இராணுத்தில் சேர்த்தனர். அடுத்து இரண்டாவது உலகப் போரில் 20 இலட்சம் இந்தியர்களுக்கு மேல் படைகளில் சேர்த்ததுடன் இந்திய இராணுவ அதிகாரிகளுக்கும் சந்தூர்ஸ்டில் பயிற்சி அளித்தனர். இதன் மூலம் –1857ல் தலைவர்கள் வழிகாட்டல்இன்றி நடத்தப்பட்ட இராணுவக் கிளர்ச்சிபோல அன்றி-- வருங்கால கிளர்ச்சியைத் திறமைவாய்ந்த (பயிற்சி அளிக்கப்பட்ட) இராணுவ அதிகாரிகள் தலைமையேற்று வழிநடத்துவது சாத்தியமானது.

சுதந்திரத்தின் 20வது ஆண்டு தினத்தைக் கொண்டாடும் வகையில் நடத்தப்பட்ட ஒரு கருத்தரங்கில் நான் கலந்து கொண்டேன். அதில் உரையாற்றிய பிரிட்டிஷ் ஹைகமிஷனர் ஜான் ஃப்ரீமென்,1946 இந்தியக் கப்பல் படை கிளர்ச்சிக்குப் பிறகு இந்தியா விடுதலை அடைவதை நிறுத்தி மாற்றப்பட இயலாதாயிற்று’ எனக் கருத்துத் தெரிவித்தார். இந்நிகழ்வு நான் கேள்விப்பட்ட ஒன்றல்ல. இந்திய கப்பல் மாலுமிகள் மும்பையில் சிறு கிளர்ச்சியை அரங்கேற்றினர்; ஆனால் கிளர்ச்சியாளர்களைச் சமாதானப்படுத்திய சர்தார் வல்லபாய் பட்டேல் ஏற்கனவே சுதந்திரம் குறித்து விவாதிக்கப்பட்டு வருவதாகத் தெரிவித்தார். அந்தக் கிளர்ச்சியும் சரித்திரத்தில் சிறிய அடிக்குறிப்பு என்ற அளவில் சுருங்கியது. இருந்தபோதிலும் இந்தியப் படையினரின் விஸ்வாசத்தைப் பிரிட்டன் இழந்து விட்டதை அக்கிளர்ச்சி நிரூபித்ததாக ஃப்ரீமென் குறிப்பிட்டார், மீண்டும் அவ்விஸ்வசத்தைப் பெறுவது இயலாதது. அப்போது போஸ் இறந்து போயிருந்தார், ஆனால் கிளர்ச்சி உயிர்ப்புடன் வாழ்ந்து வந்ததால், சுமுகமாக இந்தியாவைவிட்டு வெளியேறுவதை பிரிட்டிஷ் தேர்வு செய்தது.

சர்தார் சரோவர் அணையைத் தாண்டிய உயரத்தில் பட்டேலின் பிரம்மாண்ட சிலையை எழுப்பியதன் மூலம், சர்தார் பட்டேலைக் களவாடி அபகரித்த பாஜக, அவர்கள் புகழும் தலைவர்கள் வரிசையில் அவரைக் கொண்டுபோய் நிறுத்துவதில், ஏற்கனவே நரேந்திரமோடி ஓரளவு வெற்றி பெற்றுள்ளார். அது தண்டச் செலவு எனக் கண்டித்தன் வாயிலாக காங்கிரஸ், மோடியின் கடுமையான  தந்திர உத்தியில் வீழ்ந்து விட்டது. (காங்கிரஸ் கண்டிக்கும், அதனால் காங்கிரஸ் பட்டேலை மதிக்கவில்லை எனச் சித்தரிக்கும் உத்தி ஓரளவு வெற்றி பெற்றது எனலாம்.) மாறாக, அந்த இடத்தில் பிரம்மாண்டமான பட்டேல் மியூசியம் நிறுவ காங்கிரஸ் வாக்குறுதி தந்திருக்க வேண்டும். அதில்  பட்டேலின் மதசார்பற்ற பற்றுறுதி மற்றும் மத இணக்கம் வலியுறுத்திய நிகழ்வுகளைக் காட்சிப்படுத்தி இருக்கலாம்.

நேதாஜி சிலை விஷயத்தில் காங்கிரஸ் மீண்டும் அந்தத் தவறைச் செய்துவிடக் கூடாது. நேதாஜி சிலை எதிர்ப்பு அரசியல் ரீதியில் முட்டாள்தனமானது; நேதாஜியின் ஆண்மைமிக்க வலிமையான தலைவர் பாரம்பரியத்தில் சிறிதளவு அபகரிக்க மோடிக்கு அது உதவுவதாகும். அதற்கு மாறாக, காங்கிரஸ் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின்  மதசார்பற்ற கருத்து உணர்வுகளை மக்களிடையே பிரச்சாரம் செய்து எவ்வாறு அவை பாஜகவின் கருத்து மதிப்புகளுக்கு அப்படியே நேர் எதிரிடையாக உள்ளன என்பதை எடுத்துக் கூறி வலியுறுத்த வேண்டும். அப்படிச் செய்வது, முன்பு முட்டாள்தனமாகத் தேர்வு செய்த மென்மையான இந்து லைன் அணுகுமுறையைக் கைவிட்டு போஸின் உறுதியான மதச்சார்பின்மை அணுகுமுறை பாதைக்கு மீண்டும் காங்கிரஸ் திரும்புவதையும் குறிப்பால் உள்ளடக்கியது.

வரலாற்றாசிரியர் ராமச்சந்திர குகா சொல்கிறார்: இந்து மகா சபாவின்  மதவாதக் கொள்கைகளை மிகக் கடுமையாக முற்றாகக் கண்டிப்பராக போஸ் விளங்கினார்; அதனால் தனது இந்திய தேசிய இராணுவத்தின் மைய கலாச்சாரப் பண்பாடாகச் சமூக நல்லிணக்கத்தை ஏற்படுத்தினார். அவருடைய நான்கு படைப்பிரிவுகளுக்கு (பிரிகேடு) காந்தி, நேரு, மௌலானா ஆஸாத் மற்றும் தனது பெயரான போஸ் எனவும் பெயர் சூட்டினார். அவரது ‘இந்திய தேசிய இராணுவத்திற்கு’ அவர் மக்கள் பேசும் மொழியில் “ஆஸாத் ஹிந்த்  ஃபௌஜ்” (Azad Hind Fauj) என மொழிபெயர்த்து அழைத்தார். இதில் அவர் மூன்று உருது வார்த்தைகளைப் பயன்படுத்தினார். இந்தி மொழிபெயர்ப்பை அவர் ஏற்க மறுத்து விட்டார்; அப்படி இந்தியில் அழைப்பதாய் இருந்தால் சமஸ்கிருத  மயமாக்கப்பட்ட (செம்மைப்படுத்திய) இந்தியில் அது “ஸ்வதந்தர பாரத் சேனா” என அழைக்கப்பட்டிருக்கும். போஸின் சமகாலத்தவர்கள், ஆங்கில மொழியைவிட போஸ் மேம்பட்ட வகையில் உருதுவில் பேசக் கூடியவர் எனக் கூறுகின்றனர்.

அவரது இராணுவத்தில் படைப் பிரிவின் உயர்ந்த தலைவர்களாக அவர் சேகல் (ஓர் இந்து),தில்லான் (ஒரு சீக்கியர்) மற்றும் ஷாநவாஸ் கான் (ஒரு முஸ்லீம்) என சமூக வகுப்புகளிடையே ஒற்றுமையை எடுத்துக் காட்டும் வகையில் தேர்வு செய்தார். இந்தக் கோட்பாடுகள் முற்றாக அப்படியே சவார்க்கரின் இந்துத்துவா கொள்கைக்கு நேர் எதிரானது.

            நாளை மத்திய ஆட்சியில் மற்றொரு கட்சி அல்லது கூட்டணி வரக்கூடும். நாளை அவ்வாறு நிகழுமானால், அந்த அரசு இன்று பாஜக கட்டும் புதிய நினைவுக் கட்டடத்தில் நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் மதசார்பற்ற விழுமிய உணர்வுகள் அனைத்தையும் கட்டாயம் செதுக்கிப் பொறித்திட வேண்டும். போஸின் அப்பொன்மொழிகளில்  (காந்தி, நேரு இருவரோடும் அவரது கருத்து வேறுபாடுகளைக் கடந்து) காந்தி மீதும், நேரு மீதும் வியந்து போற்றிப் புகழ்ந்த வாசகங்கள் இடம்பெற வேண்டும். இந்த உத்தி மூலம் பாஜகவின் தந்திர விளையாட்டைப் புரட்டிப் போடுவது மட்டுமின்றி, ஒருகால் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் பொறிக்கப்பட்ட அவ்வார்த்தைகளை அழிக்க அஞ்சுவார்கள். இத்தகைய வழியில்தான் மதசார்பற்ற கட்சிகள் சுபாஷ் சந்திர போஸை மீட்டெடுக்க முடியும்.

                                             --நன்றி : டைம்ஸ் ஆப் இந்தியா

--தமிழில் : நீலகண்டன்,

                                                                                                                          என்எப்டிஇ, கடலூர்

   

                                                                         

                     

 

 

No comments:

Post a Comment