இந்தியாவும் அதன் பல முரண்பாடுகளும்
--கே ஜெயகுமார்
கேரள
மேனாள் முதன்மைச் செயலாளர் மற்றும்
மேனாள்
துணைவேந்தர், துஞ்சத்து எழுத்தச்சன் மலையாளப் பல்கலைக் கழகம்
--நன்றி : தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்
(18 -- 02 –22)
‘அதிசயம், அது இந்தியா’
என்பது அடிக்கடி கேட்ட அடைமொழி, இருப்பினும் இந்தியா பலவகை புதிர்களில் நம்மைத் தொடர்ந்து
அதிசயக்கச் செய்கிறது. பாரதம் என்கிற இந்தியா ஒருபோதும் முரண்பாடுகளிலிருந்து விடுதலை
பெறாவிடினும் நமது அரசியல் சமூக அமைப்பு (பாலிட்டி) எப்போதும் போதுமான நெகிழ்வுத்தன்மையோடு
மீண்டு வந்து அவற்றோடே வாழ்கிறது. அந்த முரண்பாடுகளை நிர்பந்தமாகச் சமாதானப்படுத்த
முயலாமல் நாமும் அவற்றுடன் சகவாழ்வு நடத்த அனுமதிக்கிறோம். எவ்வாறாயினும், கடந்த சில ஆண்டுகளாக முரண்பாடுகளின் சுமை மெல்ல
அதிகரித்து தேசிய வாழ்வில் விரிசல்கள் தொடங்கியுள்ளன. ஓர் எல்லைக்கு மேல் முரண்பாடுகள்
இயல்புக்கு மீண்டுவர முடியாத நிலைக்குச் செல்வது சுய தோல்வியாக முடிந்துவிடுகிறது.
இத்தகைய பழைய மற்றும் புதிய முரண்பாடுகளைத் தொடர்ச்சியாக ஒரு தேசத்திடம் நினைவூட்டிக்கொண்டே
இருந்தால், அதன் உள்ளார்ந்த பதற்றம் எந்தச் சமூகத்தையும் தாறுமாறாக இழுத்துச் செல்லவே
செய்யும்; அப்போது நிலைத்த முன்னேற்றம், வளர்ச்சி மற்றும் சமப்பகிர்வுக்காக
நியாயமாகச் செலவிட வேண்டிய ஒரு தேசத்தின் ஆக்கபூர்வமான நேரமும் சக்தியும் வீணடிக்கப்படும்.
நம்மை ஆசிய சக்தி, எழுச்சிபெற்று
வரும் உலகச் செயற்பாட்டாளர்களில் ஒருவர் என்றெல்லாம் கற்பனை செய்து
உலகளாவிய பல முன்முயற்சிகளின் அரசியல் தலைமைப் பொறுப்பையும் நாமாக வரித்துக்கொள்கிறோம்.
சில ஆண்டுகளில் 5லட்சம் கோடி அமெரிக்க டாலர் பொருளாதார
நாடாக நாம் விரும்புகிறோம். வளர்ந்து வரும் பொருளாதாரம் என்ற வகையில் இந்தியா வெளிநாட்டு
மற்றும் உள்நாட்டு முதலீடுகளை ஈர்க்க விரும்புகிறது. சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில்
பாராளுமன்ற வளாகத்தைப் புதியதாக மீண்டும் கட்டவும், 75வது
விடுதலைநாளைக் கொண்டாடும் மாபெரும் தேசத்தின் பெருமிதத்தின் அடையாளமாகப்
பிற நினைவுச் சின்னங்களையும் தேசியத் தலைநகரிலும் பிற இடங்களிலும் கட்டியெழுப்ப முயற்சிகள்
மேற்கொள்ளப்படுகின்றன. சுருக்கமாக நாம் சரியாகவே நமக்கான மாபெரும் பெருமிதத் தோற்றப்
பொலிவு வடிவத்தை உண்டாக்கிக் கொள்கிறோம்.
சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஒன்றிய
நிதிநிலை அறிக்கை இக்கண்ணோட்டத்தை நனவாக்க நெகிழ்வுத்தன்மையுள்ள புதிய
இந்தியாவை உருவாக்க முயல்கிறது. நியாயமாக கூடுதல் மூலதனச் செலவு
அதிகரிப்பது, உயர்தரத்தில் சாலைகள், அதிவேக ரயில்கள், மின்னணு நிர்வாகக் கட்டமைப்பு
மற்றும் மரபணுயியல் (genomics)
ஆய்வுக்கூடங்கள், செயற்கை அறிவு, 5ஜி அலைக்கற்றை முதலிய வானளாவியப் பிரிவுகளில் அழுத்தம்
தரப்பட்டுள்ளது. மின்னணு கடவுச் சிட்டுகள் வழங்கவும், தகவல் தொழில்நுட்ப அடிப்படையிலான
நில ஆவணங்கள், தேசிய டிஜிடல் சுற்றுச்சூழல் முறைமை, விவசாயிகளுக்கு உயர்தொழில்நுட்பச்
சேவைகள் முதலியவற்றிற்கு உறுதியளிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்தியாவை நவீன இந்தியாவாக
மாற்றுவதற்கும், இந்திய தேசம் தனது நூற்றாண்டு விடுதலைநாளைக் கொண்டாடும் 2047ல் சூப்பர்
பவர் வல்லரசு நாடாக மாற்றவும் அறிவுத்துறை சார்ந்து டிஜிடல் பல்கலைக் கழகம் மற்றும்
கொத்தான புதிய யோசனைகள் மற்றும் கண்டுபிடிப்புகளுக்கும் பட்ஜெட்டில் உறுதியளிக்கப்பட்டுள்ளது.
அத்தகைய கண்ணோட்டம், சில
மதிப்புறு கொள்கைகளை அவசியத் தேவையென வரித்துக் கொள்கிறது;
அவை, தாராளப் பொருளாதாரம், சமத்தன்மை, அனைவரையும்
உள்ளடக்கி அணைத்துச் செல்லல், தனிநபர் முன்னெடுப்புச் செயல்களில் நம்பிக்கை, தொழில்நுட்பத்தில்
நம்பிக்கை மற்றும் மனித வளச் செல்வாதாரத்தை மேம்படுத்துவதில் பற்றுறுதி போன்றன.
இக்கண்ணோட்டம் அதன் ஆதார அடித்தளமாக அமைதியான அரசியல் சமூக அமைப்பை நம்புகிறது; அத்தகைய
குடிமைச் சமூக அமைப்பில் ஒவ்வொருவரும் அவரவர் சக்தி மற்றும் செயலாற்றலுக்கு ஏற்ப வளர்ச்சியடைய
இயலும். தனது ஆற்றலை நனவாக மாற்றக்கூடிய சமுதாயத்தில் ஒரு தேசியக் கண்ணோட்டத்தைப் பிடிப்பாக வேர் கொண்டிருக்க
வேண்டும். சம கால இந்தியா அக்கண்ணோட்டத்தைப்
பகிர்கிறதா? இந்தியக் சமூகம் இந்த மதிப்பீடுகளைப் பகிர்கிறதா? குரோதம்,
வெறுப்பு மற்றும் பிறரை மற்றவர் என ஒதுக்குதல் என்பதன் அடிப்படையில் ஆளும் அரசியல்
கட்சி முற்றாக வேறொரு மதிப்புகளின் தொகுப்பால் வழிநடத்தப்படும் சமூக அரசியல் கண்ணோட்டத்தைப்
பின்பற்றும்போது – அரசின் உயர்ந்த லட்சியத் திட்டங்கள் மற்றும் மாபெரும் நோக்கங்கங்கள்
தங்களுக்கான உண்மையான வெளியைத் தேடி இருப்புக்காகப் போராடுகிறது.
இந்தியாவை எப்போதும் முரண்பாடுகள் பீடித்திருக்கின்றன.
1947ல் தேசப் பிரிவினையின் பைத்தியக்கார கலவரங்கள் இந்தியச் சமூக உணர்வில் ஆழமான காயங்களை
ஏற்படுத்தின. ஆயினும், புதியதாய்ப் பிறந்த விடுதலைபெற்ற இந்தியாவின் மனதில் உற்சாக
விழைவு கொப்பளித்ததால் இளம் இந்தியா தனது பெருமிதத்தை மீண்டும் திரும்ப அடைந்தது. நேருவின்
இந்தியாவில் முரண்பாடுகளுக்குப் பஞ்சமில்லை; ஆனாலும் தேசத்தைக் கட்டியெழுப்புதல், அறிவியல்
மனோபாவம், மதசார்பற்ற மதிப்பீடுகள் மட்டுமே அந்த முரண்பாடுகளைக் கடந்து செல்வதற்குப்
போதுமானவையாக இருந்தன: அதுவே தேசத்தை முன்னோக்கி இழுத்துச் சென்றது. ஒப்புக்கொள்ளப்பட்ட
தேசிய இலக்குகளைச் சாதிக்க அரசியல் செயல்பாடு,
அரசு திட்டங்கள் மற்றும் சட்டமியற்றுதல் ஒருமித்துச்
சென்றன. நமது அரசியலமைப்புச் சட்டத்தின் பெருந்தன்மையான பெருமனது மற்றும் ஒருமைப்பாட்டுக்
கண்ணோட்டம் நெருக்கடியான காலங்களில் உறுதியான ஆதார அடித்தளத்தை வழங்கியது.
எனினும், கடந்த சில காலமாக, முரண்பாடுகளில்
செயற்கையான முக்கியத்துவம் மற்றும் அழுத்தம் தந்ததால், இந்த நுட்பமான சமன் செய்யும்
நெகிழ்வுப் போக்கு சீர் குலைந்தது. இன்றைய
இந்தியா ஒன்றையொன்று மறுக்கும் கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகளின் துயரகரமான புதிராகக்
காட்சியளிக்கிறது. பசி பட்டினி, ஊட்டச்சத்துக் குறைபாடு, வேலையின்மை, மிக மோசமான கிராமப்புறச்
சுகாதார முறைமை மற்றும் நகர்ப்புற அவலங்கள் நிலவுவதை ஒப்புக்கொள்ளும்
‘நன்றாம்
பணிதலில்’ தயக்கம் தெரிகிறது. வேளாண் பிரிவினரின் இன்னல்கள்
கவனிக்கப்படாமல், தவறான ஆலோசனைகளின் பேரில், பிரச்சனையை இரக்கமற்று நன்கு ஆராயாமல்
மேலும் நலிவடையச் செய்யும் தீர்வுகள் தரப்படுகின்றன. விவசாயிகள் ஓரம் கட்டப்படுகின்றனர்.
பொதுக் கல்வி தொடர்ந்து வீழ்ச்சி அடைந்து
கல்வித் துறையில் தனியார் முதலாளிகள் கோலோச்சுவதால் ஏற்கனவே நிலவும் சமூக ஏற்றத் தாழ்வுகள்
மேலும் அதிகரிக்கிறது. சமூகத்தின் முக்கியமான
பகுதிகளிலிருந்து அரசு பின்வாங்குவதாகத் தோன்றுவது மட்டுமல்ல ஆதரவற்ற மக்கள் கூட்டம்
லாப வேட்டையாடும் சந்தை சக்திகளிடம் அகப்பட்டுள்ளனர். நாகரீக
நவீன வார்த்தையாடல்கள் மற்றும் வெற்றுக் கூச்சல், ஆக்கபூர்வமான கருணைமிக்க நடவடிக்கைக்கு
மாற்றாக மாட்டா.
இன்றைய இந்தியா ஒரு படப்பிடிப்பு
தற்போது அரசியல் மட்டத்தில், வழக்கொழிந்த
வெறுக்கத்தக்க கருத்துகள், சொற்கள் மற்றும் செயல்கள், ஏறத்தாழ கட்டுப்படுத்தப்படாமல்,
நமது சமூக வாழ்வைத் தொடர்ந்து மதிப்பிழக்கச் செய்து பாழ்படுத்துகின்றன. வெறியூட்டும்
கசப்பான பேச்சுகள் மற்றும் வகுப்புவாத வெறுப்பைத் தூண்டிவிடுவதைச் சமூக ஊடகங்கள் மீது
கூட்டாகத் தாக்குதல் நடத்துவதன் மூலம் வலுவூட்டப்படுகிறது; மேலும் பல நூற்றாண்டாக இருக்கும்
அனைத்து வித்தியாசங்களோடும் அனுசரித்து ‘சமாதான சக வாழ்வு’ என்ற மரபை ஏற்படுத்தி
வாழும் சமூகத்தில் பிளவுகள் ஏற்படுத்தப்படுகின்றன.
பெரும்பான்மையானவர்கள் சகிப்புத்தன்மையற்ற,
ஒதுக்கி வைக்கும் மொழியைப் பேசி சிறுபான்மையினர் மத்தியில் பாதுகாப்பற்ற ஒதுக்கப்பட்ட
உணர்வை ஏற்படுத்துகின்றனர். மென்மையான விமர்சனங்களுக்கும் கொடுமையான சட்டங்கள் பயன்படுத்தப்படுகின்றன.
மாற்றுக் கருத்து கூறுவதைக் கலகம், தேசத்துரோகம் என அர்த்தப்படுத்தப்படுகிறது. விமர்சனம்
செய்பவர்களின் குரல்வளைகள் அதிர்ச்சி அளிக்கும் கொடூரமான பலவழிகளில் நெறிக்கப்பட்டு
மௌனமாக்கப்படுகின்றனர். தாராள சிந்தனை மற்றும் மதசார்பின்மை சந்தேகிக்கப்படுகிறது.
தன்னாட்சி பெற்ற புகழ்மிக்க தேசிய அமைப்புகளின் முக்கிய பொறுப்புக்களில் தங்களின் தீவிர
கருத்தாளர்களை நுழைப்பதன் மூலம் அவ்வமைப்புகளைப் பின்பாட்டு பாடுபவர்களாகத் தரமிறக்கப்படுகின்றன.
வரலாறும் அறிவியலும் புராதன மொழியில் மாற்றி எழுதப்படுகின்றன. ஐஐடி உட்பட தேசிய நிறுவனங்களின்
அறிவியல் ஆய்வு, அவ்வமைப்புக்களில் நடுவுநிலை பிழன்ற மனச்சாய்வு கோட்பாடுகள் மூலம்
கடத்தி, அவர்களுக்கு இட்ட அறிவார்ந்த கூலிப் பணிகளை மேற்கொள்ள கட்டாயப்படுத்தப்படுகிறது.
டிஜிடல் சூப்பர் பவராக மலர விரும்பும் ஒரு தேசத்தின் இணைய சேவைகளை, அரசியல் காரணங்களுக்காக,
மனம்போன போக்கில் துண்டிக்கப்படுகிறது.
இதுவா ஆசிய சூப்பர் பவராக,
டிஜிடல் உலகின் தலைவராக நம்பிக்கையுடன் காட்டிக் கொள்ளும் சமூகம்?
எதிர்காலக் கண்ணோட்டமும் பிரகடனங்களும் பிரம்மாண்டமாக இருக்கும்போது, அரசியல் சட்டம்
ஏற்காத புராதனச் சட்டங்கள், புறக்கணிப்பு நடவடிக்கை மற்றும் தோரணையால் பிரகடனங்களுக்குப்
பொருந்தும் பயனுறு திறமை மற்றும் தொழில் நுட்பங்களைத் தொடர்ந்து ஒன்றுமில்லாது நீர்க்கச்
செய்வதா? நாட்டை முன்னோக்கிச் செல்லவிடாது தடுப்பதா? அது
கரையில் கட்டப்பட்ட படகில் அமர்ந்து துடுப்பு வலிப்பதைப் போல
உள்ளது.
ஒரு தேசம் முன்னேற -- விரைவாக
முன்னேற – அரசியல் அமைப்பு, சமூகம் மற்றும் பொருளாதாரம் மூன்றும் சில பொதுவான கண்ணோட்டம்,
மதிப்புறு விழுமியங்கள் மற்றும் தோழமை உணர்வைக் கொண்டிருக்க வேண்டும்.
‘ஒரு அமைப்பின் உறுப்பினர்கள் பகிர்ந்து கொள்ளும் உற்சாக உந்து உணர்ச்சி, பெருமிதம்,
பரஸ்பர விஸ்வாசம்’ என்ற அந்த (எஸ்பிரிட் டி கார்ப்ஸ்,
esprit de corps, பிரெஞ்ச் சொல்) ஒத்திசைவு உணர்வு இல்லாது இருப்பின், அதனை ஆட்சி அதிகாரம் செலுத்துவோர்
மட்டுமே அளித்திட முடியும். (அரசு) அப்படி நடக்காவிடில், நாம் கோட்டை கட்டும் வானளாவிய
பிரம்மாண்டங்கள், குறுகியகால அரசியல் பலனுக்காக மேடையில் பெரிதாய் காட்டிக்கொள்ளும்
தற்புகழ்ச்சி, ஆடம்பர வீண்ஜம்பங்களாகவே முடியும்.
--தமிழில் நீலகண்டன்,
என்எப்டிஇ, கடலூர்
No comments:
Post a Comment