Friday 19 November 2021

கம்யூனிஸ்ட் வரலாற்றுத் தலைவர்கள் வரிசை 53 தோழர் பி கே கொடியன்

 

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 53       


தோழர் பி கே கொடியன் --

விவசாயத் தொழிலாளர்களின் 

தன்னேரில்லா தலைவர்

– அனில் ரஜீம்வாலே

நியூஏஜ் (அக்.31 –நவ.6)

            தோழர் P K கொடியன் 1922ம் ஆண்டு கேரளா, எர்ணாகுளத்தின் வைப்பின்கரா என்ற இடத்தில் பிறந்தார். இவ்வாண்டு அக்டோபர் 20ல் அவருடைய 20வது நினைவுநாள். தோழர் கொடியன் முதன்மையான சமூகச் சீர்திருத்தவாதி, விடுதலைப் போராட்ட வீரர், தொழிலாளர்கள் மற்றும் அடித்தட்டு ஏழை மக்களின் நலன்களுக்காகப் பாடுபட்டவர். தனது வாழ்க்கை முழுமையும் சமூகத்தின் எளிய, அடித்தட்டு மக்களின் முன்னேற்றத்திற்காகச் செலவிட்டார்.

தோழர் கொடியன் வாய்ப்பு வசதியற்றவர்களின் முன்னேற்திற்காக உழைத்த போராளி, கொள்கை உறுதிப்பாடுடைய புரட்சியாளர், கம்யூனிஸ்ட் கட்சியின் உற்சாகமான, முழுமையான விஸ்வாசம் மற்றும் அர்ப்பணிப்புடன் வாழ்நாள் இறுதிவரை வாழ்ந்தவர். குறிப்பாக விவசாயத் தொழிலாளர்களின் நன்மைக்காக அர்ப்பணித்தவர். சிறந்த சொற்பொழிவாளரும் இயக்கம் கட்டுவதில் திறமையானவருமாவார். இத்திறன்களின் வலிமையோடு இருந்தபோது அவர்  இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கமான ‘பாரதிய கெந்த் மஸ்தூர் யூனியன்’ (BKMU) அமைப்பின் பொதுச் செயலாளர் ஆனார். (இந்தியக் கம்யூனிட் கட்சியை ஆதரித்தாலும் BKMU சங்கம், கம்யூனிஸ்ட் கட்சி, அதன் ஏஐடியுசி மற்றும் அகில இந்திய கிசான் சபா அமைப்புகளிலிருந்து சுயேச்சையாகவே செயல்பட்டது --இணையத்திலிருந்து). விவசாயத் தொழிலாளர்களின் உரிமை நலன்களுக்காகப் பெரும் ஈடுபாட்டோடும் ஆர்வத்தோடும் போராடினார். விவசாயத் தொழிலாளர்களின் சர்வதேசத் தொழிற்சங்கம், வனம் மற்றும் தோட்டத் தொழிலாளர்களின் சங்கத்தின் துணைத் தலைவராகவும் இருந்தார்.

பள்ளிப் பருவத்திலிருந்தே சமூக ஊழியராக

            உயர்நிலைப் பள்ளி மாணவராக இருந்தபோதே சமூகக்களத்தில் தனது செயல்பாடுகளைத் தொடங்கினார். மாணவர்கள் குழுவுடன் சுற்றியிருந்த ஷெட்யூல்டு இன மக்களின் குடிசைகளுக்குச் சென்று பெற்றோர்களிடம் அவர்களது குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புமாறு பிரச்சாரம் செய்வார். 1940களின் அக்காலங்களில் பட்டியலினச் சாதியினரிடையே கல்வியறிவின் மட்டம் மிகவும் குறைவானதாக இருந்தது. பெரும்பான்மையான குழந்தைகள் வயல்களில் விவசாயப் பணிகளுக்கோ அல்லது வீட்டு வேலைகளிலும் கைக்குழந்தைகளைப் பார்த்துக் கொள்வதில் உதவியாகவும் வீட்டிலேயே நிறுத்திக் கொள்ளப்பட்டுவிடுவார்கள். இவர் வழிகாட்டலில் ஆண்டு கோடை விடுமுறை காலங்களில் இதுபோன்ற தன்னார்வத் தொண்டுகளை மேற்கொள்வது இளம் ஹரிஜன மாணவர்கள் குழுவின் வழக்கமான பணியாயிற்று. 

            இளம் பருவத்திலிருந்தே தோழர் கொடியன் படிப்பில் ஆர்வத்துடன் மிகவும் புத்திசாலியான மாணவராக விளங்கினார். கதைகள் கவிதைகள் புனைவதிலும் குழந்தைகளை ஒருங்கிணைத்து நாடகங்களை அரங்கேற்றுவதும் அவரது வழக்கம். கிராமத்தில் நடக்கும் நிகழ்ச்சிகள் குறித்து பல நேரங்களில் நாடகங்கள் எழுதுவார். ஒவ்வொரு நாளும் பள்ளி முடிந்த பிறகு அவரும் நண்பர்களும் வழக்கமாக நூலகத்தில் கூடுவார்கள். அவர்கள் அனைவருமே புத்தகப் புழுக்களாக நிறைய நூல்களைப் படிப்பவர்கள். அவர்களது செயல்பாட்டு மையங்களில் நூலகமும் ஒரு மையமாயிற்று. நிறைய புத்தகங்களைப் படித்ததால் தோழர் கொடியன் இந்து புராணங்களில் முழுமையான ஞானம் உடையவரானார். அவரும் அவரது நண்பர்களும் (கேரளாவின்) கதகளி நாட்டிய நாடகத்தை நடிப்பது வழக்கம். அவர்களுடைய நாடகங்களும் கலாச்சாரச் செயல்பாடுகளும் சுற்று வட்டாரக் கிராமங்களில் மிகவும் பிரபலம். அந்த நாடகங்களையும் கவிதைகள் வாசிப்பதையும் காண மக்கள் கூடுவது வழக்கம்.

            இரண்டாவது உலகப் போரின்போது உடல் கட்டுமஸ்தான ஹரிஜன இளைஞர்கள் பலர் வருமானம் மற்றும் குடும்பத்திற்கு பணம் அனுப்பி ஆதரிக்க வேண்டி  இராணுவத்தில் சேர்ந்தனர். அந்த இளைஞர்களின் படிப்பறிவில்லாத பெற்றோர்கள், போர் குறித்த தற்போதைய செய்திகளை அறிந்து கொள்ள, ஆங்கிலச் செய்தித் தாள்களை நூலகத்தில் ஆழ்ந்து படிப்பவரான கொடியனை அணுகுவார்கள். சந்தையில் கூடும் பெற்றோர்கள் பத்திரிக்கை செய்தி விஷயங்களைப் படிக்கச் சொல்லிக் கேட்பார்கள். கொடியனும் மணல்தரையில் (உலக நாடுகளின்) வரைபடங்களை வரைந்து வேறுபட்ட பல போர்முனைகளின் நிலைமைகளை அவர்களுக்கு விளக்கிக் கூறுவார். அந்த நாட்களிலிருந்தே அவர் ‘கொடியன் மாஸ்டர்’ என மரியாதைக்குரிய அடைமொழியோடு புகழ்பெற்றார். உண்மையான ஆசிரியராக ஒருபோதும் இல்லாத அவரோ எஞ்சிய வாழ்நாட்களில் எல்லாம் அந்தப் புகழ் அடைமொழியோடு இணைத்தே அழைக்கப்பட்டார்.

சமூக நீதி இயக்கத்தில் பங்கேற்றல்

            ஆரம்பத்திலிருந்தே தோழர் கொடியன் சமூக நீதி இயக்கத்தின்பால் ஈர்க்கப்பட்டார். காந்திஜி கைது செய்யப்பட்டபோது அவரும் நண்பர்களும் நிதி திரட்டி ‘காந்திஜியை நிபந்தனை இன்றி விடுதலை செய்க’ என அதிகாரிகளுக்குத் தந்தி அனுப்பினர். விடுதலை இயக்கத்தால்

ஊக்கம் பெற்றனர். சாதி முறைமை பாகுபாடு மற்றும் ஒடுக்குமுறைக்கு ஆளாக்கப்பட்டதால், சாதி முறைக்கு எதிராகப் பிரச்சாரம் செய்தவரும் அடித்தட்டு மக்கள் முன்னேற அவர்கள் கல்வி அறிவு பெற வேண்டும் என வற்புறுத்திய சமூகச் சீர்திருத்தவாதி ஸ்ரீநாராயண குரு அவர்களைப் பின்பற்றுபவரானார்கள். (நிலச்சுவாந்தார் பலியம் எஸ்டேட் வழியாகச் செல்லும்) பொது சாலையில் ஹரிஜன மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் நுழையும் உரிமை கோரி 1946ல் பலியம் சத்தியாகிரகம் நடைபெற்றது; அதில் போலீஸ்காரர்கள் சித்திரவதையில் ஏ வி வேலாயுதம் கொல்லப்பட்டார். அந்நிகழ்வு குறித்து தோழர் கொடியனும் நண்பர்களும் ஒரு நாடகம் நடத்தினர்.

            உயர்நிலைப் பள்ளி மாணவராக அவர் புலையர் மகா சபா போராட்ட இயக்கங்களில் ஒரு தன்னார்வத் தொண்டராகப் பங்கேற்றார். மகாசபாவின் நடவடிக்கைகளில் மேலும் மேலும் ஈர்க்கப்பட்டார். அதே நேரத்தில் அதற்குச் சற்றும் குறையாமல் உயர்கல்வி கற்பதிலும் கவனமாக இருந்தார்; ஏனெனில், அப்படிக் கல்வி கற்றவனாவதால், தனது குடும்பம் மற்றும் சமூகத்திற்குத் தான் கூடுதல் பயனுடையவனாக முடியும் என உணர்ந்தார். எனவே படிப்பதில் கூடுதல் நேரம் அர்ப்பணித்ததால் எப்போதாவது தன்னார்வத் தொண்டுகளில் ஈடுபட முடிந்தது. கூடுதலான மதிப்பெண்களோடு உயர்நிலைப் பள்ளித் தேர்வுகளில் தேறி, மகாராஜா கல்லூரியில் சேர்ந்தார்.

            கல்லூரி நாட்களில் மெல்ல சமூக இயக்கங்களில் மேலும் பங்கேற்றார். மற்ற சில மாணவர்களுடன் சேர்ந்து கொச்சி ஹரிஜன் மாணவர்கள் சம்மேளனம் அமைப்பை நிறுவி அதன் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தீண்டாமை காரணமாக பட்டியலின மாணவர்களை விடுதிகளில் தங்க அனுமதிக்காததால் அவர்களில் பலரும் பல மைல்கள் பயணம் செய்து கல்லூரி வர வேண்டியிருந்தது; சிலரால் அப்படிப் போக்குவரத்துக்குச் செலவு செய்ய இயலவில்லை. கொடியன் முன்முயற்சியில் கொச்சியில் கட்டப்பட்ட ஒரு ஹரிஜன விடுதி ஏழை மலைசாதி மற்றும் பழங்குடி இன மாணவர்களுக்குப் பெரும் உதவியாக இருந்தது.  கொச்சி புலையர் மகாசபையின் நிர்வாகப் பொறுப்பாளர்களில் ஒருவரானார். சமூக ஒடுக்குமுறை மற்றும் பட்டியலின மக்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராக மகாசபா தொடர்ச்சியாகப் பல போராட்ட இயங்கங்களை முந்தைய கொச்சி சமஸ்தானத்தின் பல பகுதிகளில் நடத்தியது.

            கல்லூரியின் ஒவ்வொரு ஆண்டு விடுமுறை நாட்களில் சமஸ்தானத்தின் தொலைதூர உட்பகுதி குக்கிராமங்களுக்குச் சென்ற மாணவர் குழுவில் இடம் பெற்ற தோழர் கொடியன் கல்வியின் (சமூக மாற்றச்) சக்தியைப் பிரச்சாரம் செய்து வருவது வழக்கம். கிராமத்தின் வீடு வீடாகச் சென்று குழந்தைகளைப் பள்ளிக்கு அனுப்புமாறு பெற்றோர்களிடம் எடுத்துக் கூறி வற்புறுத்துவார்கள். இந்தத் தருணத்தில் குடிசை வாழ் மக்களின் இன்னல் பாடுகளில் கொடியனின் ஆர்வம் வளர்ந்தது. சுற்றி நிலம் அமைந்த வீடுகள் குடியிருப்புகளிலிருந்து (homestead lands) வெளியேற்றப்படுவதை எதிர்த்தும் அந்த இடங்களுக்கு உரிமைகோரியும் போராடுவதற்காக ஓர் அமைப்பை நிறுவிப் போராடினார்.

கம்யூனிட்ஸ்ட் கட்சியில் இணைதல், 1948

            மகாராஜா கல்லூரியிலிருந்து மலையாளத்தில் தனிச்சிறப்பு மற்றும் முதல் வகுப்பில் 1948ல் இளங்கலைப் பட்டம் பெற்றார். அந்த ஆண்டில்தான் கொடியன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். அவரும் தோழர் நாராயணனும் விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தைக் கொச்சி சமஸ்தானத்தின் கணயன்னூர் தாலுக்காவில் அமைத்தனர். செயலாளர் கொடியனுடன் சங்கம், தனது உறுப்பினர்களுக்கு அவர்களது உரிமைகளை எடுத்துக் கூற முயன்று சாதி பாகுபாட்டை எதிர்த்துப் போராட ஊக்கப்படுத்தியது. சாதி போராட்டத்தை வர்க்கப் போராட்டமாக மாற்றுவதே அவர்களுடைய நோக்கம். 1949ல் திரு–கொச்சி மாநிலம் அமைக்கப்பட்டு தேர்தல்களும் நடத்தப்பட்டன. [திரு-கொச்சி என்பது, முன்னாள் திருவாங்கூர் மற்றும் கொச்சி சமஸ்தானங்கள் 1949 ஜூலை 1தேதியில் இணைந்த பிறகு ஏற்படுத்தப்பட்ட மாநிலங்களின் ஒன்றிய அரசாகும் (யுனைட்டெட் ஸ்டேட்). இந்தியாவில் அது 1950வரை சிறிது காலமே நீடித்தது. பின்னர் அதற்குத் திருவாங்கூர் – கொச்சி மாநிலம் என மறுபெயரிடப்பட்டது. –விக்கிப் பீடியாவிலிருந்து.]

            கணயன்னூர் தாலுக்காவில் போட்டியிட கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளரை நிறுத்தியது. உள்ளூர் பிரச்சாரக் குழவில் தோழர் கொடியனும் ஒருவராக இடம் பெற்றார். தேர்தலில் வெல்வது அவர்களுடைய நோக்கம் இல்லை. கம்யூனிஸ்ட் கட்சியின் செய்தியைப் பரப்புவதே அவர்களின் முக்கியமாக எண்ணம்.

            விரைவில் அடுத்து கம்யூனிஸ்ட் கட்சி இந்தியாவில் தடை செய்யப்பட்டது. கட்சி தடை செய்யப்பட்டதும் பல பிராந்தியங்களில் போலீஸ் அடக்குமுறை கட்டவிழ்த்துவிடப்பட்டது. கேரளாவிலும் அதிக எண்ணிக்கையில் கம்யூனிஸ்ட்கள் கைது செய்யப்பட்டனர். எடப்பள்ளி காவல் நிலையம் தாக்கப்பட்ட சம்பவம் கேரளா முழுமையும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது; இதைச் சாக்காகக் கொண்டு போலீஸ் அனைத்துக் கம்யூனிட்களையும் வேட்டையாடியது. எடப்பள்ளி வழக்கில் முதலில் கைது செய்யப்பட்ட கொடியன் சிறையில் மிகக் கொடூரமான சித்திரவதைக்கு ஆளாக்கப்பட்டார். தான் கைது செய்யப்பட்ட தகவலைத் தாயிடம் தெரிவிக்க வேண்டாம் என முதலாமாண்டு கல்லூரி மாணவரான இளைய சகோதரர் கிருஷ்ணனைக் கேட்டுக் கொண்டார். ஆறு மாதங்களுக்குப் பிறகு அவர் விடுதலை செய்யப்பட்டார்.

            விடுதலையானவுடன் நேரே இளைய சகோதரர் விடுதிக்குச் சென்றார். உடலில் இருந்த வீக்கங்கள் சித்திரவதையின் அடையாளத்தை வெளிப்படுத்த கொடியனின் உருக்குலைந்த தோற்றத்தைக் கண்ட கிருஷ்ணன் அதிர்ச்சி அடைந்தார். அவரால் நடக்கவோ பேசவோகூட முடியவில்லை. இதை எல்லாம்விட சிறையின் மோசமான நிலைமைகள் ஈசினோபிலியா என்ற கடுமையான உடல் உபாதையை அவரிடம் தூண்டியது. 

         இவை அனைத்தும் அவரை மிக மோசமான நிலைக்குத் தள்ளியது. ஓர் ஆங்கிலோ இந்தியப் பள்ளியில் ஓராண்டாக பணிசெய்து வந்த கொடியனின் மூத்த சகோதருக்கு, அப்பள்ளிக்கு அரசு மானியம் வராததால், சம்பளம் வழங்கப்படாது தாமதிக்கப்பட்டது. நிதி உதவி வந்து வழங்கப்பட்ட ஊதியம் அனைத்தையும் அவர் கொடியனின் சிகிச்சைக்காகச் செலவிட்டார். குடும்பத்தினரின் அன்பும் ஆதரவும் அவருக்கு மறுவாழ்வை வழங்கியது; இருப்பினும் மோசமான முதுகுவலி மற்றும் ஈசினோபிலியா பாதிப்பை எஞ்சிய வாழ்நாள் முழுவதும் அவர் சுமந்தார்.  

         உடல்நலம் தேறியதும் கொடியன் மீண்டும் தீவிரக் கட்சிப் பணிகளை மேற்கொண்டார். நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களை அமைப்பாகத் திரட்டுவதில் பணியாற்றத் தொடங்கிய கொடியனுக்கு அதன் பிறகு அதுவே வாழ்நாள் பணியும் பொறுப்புமாயிற்று. 1957 வாக்கில் அவர் கேரளா மாநிலம் அறிந்த புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் பிரபலமானார். அதே நேரத்தில் ஏற்கனவே விவசாயத் தொழிலாளர்கள் இயக்கத்தின் அனைத்திந்தியத் தலைவராக உருவாகி இருந்தார். 1957ல் (மலபார் கடற்கரையில் அமைந்த) கொல்லம் பாராளுமன்றத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தோழர் கொடியன்தான் அத்தேர்தலில் கேரளாவிலேயே அதிகபட்ச வாக்குகள் வாங்கிய வேட்பாளரும், அகில இந்திய அளவில் நாடுமுழுவதும் வெற்றிக்கான அதிகபட்சக் கூடுதல் வாக்குகள் (விக்ட்ரி மார்ஜின்) பெற்றவருமாவார்.

         மக்களவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு பெரும்பான்மையாக அவருடைய கவனம் தேசியக் கம்யூனிஸ்ட் கட்சி பணிகளில், முக்கியமாக பிகேஎம்யு விவசாயச் சங்கத்தைக் கட்டியமைப்பதில் சென்றது. சிபிஐ தேசியச் செயற்குழு உறுப்பினராக அவர் தேர்வானார். மக்களவையில் பிரச்சனைகளை எழுப்பும்போது அவர் பேசும் விஷயங்களில் அவருக்கிருந்த ஆழ்ந்த அறிவு, பிரச்சனைகளை எடுத்துக்கூறும் தெளிவான பான்மை மற்றும் திறனுக்காக அவர் நன்கு அறியப்பட்டார்.

1968ல் BKMU நிறுவுதல் 

   1968ல் அன்றைய சிபிஐ பொதுச் செயலாளர் தோழர் சி ராஜேஸ்வர ராவ் மற்றும் தோழர் கொடியன் முதன்முறையாக அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தை அமைத்தனர். அந்த ஆண்டே பஞ்சாப் மாநிலம் மோகாவில் அனைத்திந்திய மாநாடு நடத்தப்பட்டு முறையாக BKMU நிறுவப்பட்டது. நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கு அனைத்திந்திய அளவில் ஓர் அமைப்பை ஏற்படுத்தும் தோழர் கொடியனின் நீண்டகால விருப்பம் அதன் மூலம் நிறைவேறியது. அதுவரை பல ஆண்டுகள் மாநிலங்கள் தோறும் போராட்ட இயக்கங்களை நடத்திட களைப்பின்றி முயன்றார். போராட்டத்தின் லட்சிய நோக்கம் விவசாயத் தொழிலாளர்களின் கூலி, வேலைநேரம், வீட்டு வசதி மற்றும் நிலத்திற்கான உரிமை முதலியவைகளை ஒழுங்குபடுத்தி அவர்களுக்காக தேசிய அளவில் சட்டம் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே. அப்போராட்டங்களின் மூலம் குரலற்ற விளிம்புநிலை நிலமற்ற விவசாயத் தொழிலாளர்களுக்கான  சில ஒழுங்குமுறை சட்ட விதிகளை அரசுகள் அமல்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.  

         விவசாயத் தொழிலாளர்களின் உரிமைகள் அனைத்தும் பொறிக்கப்பட்ட ஒருங்கிணைந்த மசோதாவை ஏற்படுத்த வேண்டும் என்ற அவருடைய இறுதி விருப்பம் அமல்படுத்தப்பட்டு நிறைவேறவே இல்லை. தனது வாழ்நாளின் இறுதிவரை நாடாளுமன்றத்தில் அந்த மசோதாவை பலமுறை எழுப்ப அவர் உதவினார். அரசை நிர்பந்தித்து அந்த மசோதாவை நிறைவேற்ற பல மாநிலங்களுக்குப் பயணம் செய்து போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தினார். இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கம் BKMU அனைத்திந்திய அமைப்பாக வளர்ந்து, இந்தியாவின் பல மாநிலங்களில் நீண்டகாலப் போராட்டங்கள் பலவற்றை நடத்தியது. இந்த இயக்கங்களின் பலனாய் பல இடங்களில் சில நன்மைகளை விவசாயத் தொழிலாளர்கள் சாதித்து வென்றார்கள்.

         தோழர் கொடியனின் ஓய்வில்லாத சோர்வற்ற தொடர் பணியின் காரணமாகவே  விவசாயத் தொழிலாளர்களுக்கென்று சொந்தமாக ஓர் அமைப்பு கிடைத்தது. விவசாயத் தொழிலாளர்களின் நிலைமை மிகவும் பரிதாபகரமாக இருந்தபோது அவர்களுடைய பிரச்சனைகளைத் தீர்க்க சட்டம் கொண்டுவர வேண்டும் என்ற அவரது உண்மையான முயற்சி,


அவருடைய செயல்பாட்டுப் பணிகளில் புகழ்ந்து குறிப்பிடத்தக்கது. அவருடைய பங்களிப்புகளை அங்கீகரிக்கும் விதமாக சர்வதேச  விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் (Trade Union International of Agricultural, Forestry and Plantation Workers) துணைத் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். அவருடைய ஆழ்ந்தகன்ற அறிவு மற்றும் அனுபவத்தால், இந்திய விவசாயத் தொழிலாளர்களின் பிரச்சனைகளைத் தோழர் கொடியன் உலக அரங்கிற்குக் கொண்டு செல்ல முடிந்தது.

1957 மக்களவை உறுப்பினராகத் தேர்வு

       1957 மக்களவைத் தேர்தலில் கேரள மாநிலத்தின் கொல்லம் நாடாளுமன்றத் தனித் தொகுதியிலிருந்து தோழர் கொடியன் சிபிஐ கட்சியின் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவ்வாறுதான் கொடியன் மாஸ்டரின் நாடாளுமன்றச் சகாப்தம் தொடங்கியது. பல விஷயங்கள் குறித்து நாடாளுமன்ற அவையில் அவர் ஆற்றிய உரைகள் தலைசிறந்து விளங்கின. பட்டியலின மக்களின் பல பிரிவு அமைப்புகளை ஒருங்கிணைப்பதில் முக்கிய பங்காற்றினார். 1960 மற்றும் 1970களில் எண்ணற்ற பல கூட்டங்களில் கலந்து கொண்டு பிரிந்து கிடக்கும் பல்வேறு அமைப்புகள் என்பதைக் கைவிடுமாறு தோழர் கொடியன் அவர்களை அறைகூவி அழைத்தார். அந்த முயற்சிகள் ‘ஹரிஜன் சம்யுக்த சமிதி’ (ஹரிஜன் இணைப்புக் குழு) அமைப்பதை நோக்கிச் செலுத்தியது. 

           


(இன்றைய 2021 நவம்பர் 19ம் நாள் விவசாயப் போராட்ட வெற்றியின் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்ட நாள்போல) 1979 மார்ச் 20ம் நாள் இத்தேசத்தின் விவசாயத் தொழிலாளர் இயக்க வரலாற்றில் பொன்னெழுத்தில் பொறிக்கப்பட்ட நாளாகும். அன்றைய தினத்தில் முதன் முறையாக அனைத்திந்திய அளவில் விவசாயத் தொழிலாளர்களின் டெல்லி பேரணி நிகழ்ந்தது; அதிக அளவில் தோழர்கள் திரண்டு வந்து, 5 லட்சத்திற்கும் மேற்பட்ட விவசாயிகள் பாதாகைகள், கோரிக்கை அட்டைகள், கொடிகளை ஏந்தி முழக்கமிட்டுச் சென்ற பிரம்மாண்டமான பேரணி நடந்தது. அந்த மாபெரும் பேரணியின் வெற்றிக்காகத் தோழர் கொடியன் தனிப்பட்ட முறையிலும், பாரதிய கெந்த் மஸ்தூர் சங்கத்தின் பொதுச் செயலாளர் என்ற முறையிலும் தனது ஆகச் சிறந்த பங்களிப்பை வழங்கினார். இமயமலை பகுதிகளிலிருந்து பல்வேறு கிராமங்கள், கடலன்னை தாலாட்டும் கேரளாவிலிருந்தும், குஜராத் மற்றும் ராஜஸ்தான் பாலைவனங்கள் வரண்ட பிராந்தியங்கள் மற்றும் வடகிழக்கிலிருந்தும் பேரணியில் கலந்து கொள்ள மக்கள் திரண்டு வந்திருந்தனர்.

         ஏழை எளிய மக்கள் நெடுந்தொலைவுக்கு அப்பால் குக்கிராமங்களில் வசிக்கிறார்கள், அவர்களால் ஓர் அமைப்பாக ஒன்று திரள முடியாது மற்றும் அவர்களுக்கு என்ன கோரிக்கையை முன் வைக்க வேண்டும் என்பதும் தெரியாது என்று கருதிக் கொண்டு, இத்தேசத்தின் பரம ஏழைகளைப் புறக்கணிக்கும் அதிகார வர்க்கம் மற்றும் ‘அரசுக்கு உரத்து எடுத்துச் சொல்வதே’ இப்பேரணியின் பிரதானமான நோக்கம் என்ற பேரணியின் மிக முக்கியமான கருத்தைத் தோழர் கொடியன் அழுத்தமாகப் புரிய வைத்தார். அவர்கள் மீது நடத்தப்படும் கொடுமைகள் நிறுத்தப்படாவிட்டால், தங்களைப் பாதுகாக்கும் பிரச்சனையை விவசாயத் தொழிலாளர்களே தங்கள் கைகளில் எடுத்துக் கொள்வர் எனத் தோழர் கொடியன் பிரகடனப்படுத்தினார்.

         விவசாயத் தொழிலாளர்களுக்குப் பொருத்தமான சட்டங்களைச் சட்டமன்றத்திலும் குறிப்பாக நாடாளுமன்றத்திலும் ஏற்று சட்டமாக நிறைவேற்றுவதற்காகத் தோழர் கொடியன் சோர்வின்றி கடுமையாக உழைத்தார். அதை நனவாக்குவது மிகக் கடினமான பணி என்பதை உணர்ந்தே ஆக வேண்டும். அது வரை விவசாயத் தொழிலாளர்கள் மிகவும் புறக்கணிக்கப்பட்டப் பிரிவினராகவே இருந்தனர்; முறையான பணி நிலைமைகள், பணி நேரம் இவற்றைச் சட்டபூர்வமாகச் சட்ட வடிவிலே கொண்டுவந்து அவர்களை உண்மையாகப் பாதுகாக்கலாம் என ஒருவரும் கற்பனை செய்துகூட பார்க்கவில்லை.  அது தொடர்பாக முக்கியமான பெரும் முயற்சிகளில் விவசாயத் தொழிலாளர்களுக்கான மத்திய சட்டமியற்றும் தீர்மானத்தை நாடாளுமன்ற அவைகளில் விவாதத்திற்குக் கொண்டு வந்ததைக் குறிப்பிடலாம். இந்த முயற்சிகளுக்குப் பின்னால் ஆகக் கூடுதலான தயாரிப்புகள் நடைபெற்றன – அவற்றில் தோழர் கொடியனின் பங்களிப்பு இருந்தது என்பதைக் குறிப்பிடத் தேவையில்லை. அவருடைய வாழ்வும் ஜீவனும் அதுதானே, விவசாயத் தொழிலாளர்களின் மேம்பாடு!  

[ பிற்சேர்க்கை : 7வது லோக் சபா உறுப்பினர்கள் சுய விவரக் குறிப்புகளிலிருந்து

ஸ்ரீ கொடியன் (சிபிஐ, கேரளா அடூர்  (எஸ்சி தனித் தொகுதி)

தந்தை-- திரு பண்டாரத்தில் கொடியன்; பிறப்பு – எர்ணாகுளம் மாவட்டம் இளங்குன்னபுழா கிராமம், 1923 செப்டம்பர் 23; கல்வி -- நரக்கல் உயர்நிலைப் பள்ளி மற்றும் எர்ணாகுளம் மகாராஜா கல்லூரி; திருமணம் மற்றும் குடும்பம்திருமதி  சிசிலி,  1958 பிப்ரவரி 4;  இரண்டு மகன்கள் இரண்டு மகள்கள்

வகித்த பதவிகளும் பொறுப்புகளும் -- 1954 –57ல் சிபிஐ எர்ணாகுளம் மாவட்டக் குழு செயலாளர்; 1957 -- 62ல் சிபிஐ மாநில செயற்குழு உறுப்பினர்;  1961 –64ல் சிபிஐ தேசியக் குழு உறுப்பினர்; மீண்டும் தற்போது கட்சி தேசியக் குழு உறுப்பினர்;  அனைத்திந்திய விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர்; 1975லிருந்து விவசாயம், வனம் மற்றும் தோட்டப் பயிர்கள் தொழிலாளர்களுக்கான சர்வதேசத் தொழிற்சங்கத்தின் துணைத் தலைவர்; 1957 –62ம் ஆண்டின் 2வது லோக் சபா, 1977 –79ம் ஆண்டின் 6வது லோக்சபா உறுப்பினர் மற்றும் 1977 –78ல் பொது கணக்குக் குழு உறுப்பினர் மற்றும் 7வது லோக் சபா உறுப்பினர்.

பிடித்தமான பொழுது போக்கு – நூல்களைப் படிப்பது

வெளிநாட்டுப் பயணம்  -- 1964ல் பல்கேரியா, 1964, 70, 74 மற்றும் 75ல் சோவியத் யூனியன், 1964ல் கிரீஸ், 1976ல் செக்கோஸ்லேவாக்கியா மற்றும் அல்ஜீரியா, பிரான்ஸ் மற்றும் போலந்து

நிரந்தர முகவரி – இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, அடூர், கொல்லம் மாவட்டம், கேரளா]

மறைவு

கடுமையான ஆஸ்துமா நோய் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட விவசாயிகளின் தன்னேரில்லா தலைவரான கொடியன் மாஸ்டர் தனது 78வது வயதில் 2001 அக்டோபர் 28ல் மறைந்தார்.

"உழுவார் உலகத்தார்க்கு ஆணி” “உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்” என

உழுவார் உலகில் உள்ளவரை தோழர் கொடியன் மாஸ்டர் புகழ் நீடித்து நிலைக்கட்டும்! செவ்வணக்கம் மாஸ்டர்!


--தமிழில் : நீலகண்டன்,
              என்எப்டிஇ, கடலூர்


கருத்துப் படம் நன்றி : Rachana Dhaka 



‘உயர்த்திப் பிடித்தால் கொடியாகும்

 திருப்பிப் பிடித்தால் தடியாகும்’ 

 என முழக்கமிட்டவர்கள் நாம்!

                           “மண்ணில் புதையுண்டு கவிழ்ந்து கிடந்த கலப்பைகள்

                                      விண்ணில் நிமிர்ந்து உயர்த்தினர் உழுபடையினர்

                                      ‘வெண்கொற்றக் குடை தானே தாழ்ந்தது’ (குறள் 3034)

                                      என்றும் ‘உழந்தும் உழவே தலை’! ”

 




1 comment:

  1. மிக அருமையான பயனுள்ள பதிவு. தொடரட்டும் உங்கள் அரும் பணி.

    ReplyDelete