Wednesday, 29 January 2025

உலகச் சுகாதார அமைப்பிலிருந்து டிரம்ப் விலகல் --டாக்டர் அருண் மித்ரா கட்டுரை

 உலகச் சுகாதார அமைப்பிலிருந்து டிரம்ப் விலகல் --உலகச் சுகாதாரம் பின்னடைவைச் சந்திக்கிறது
--டாக்டர் அருண் மித்ரா

    அமெரிக்காவின் 47வது அதிபராக டொனால்டு டிரம்ப் முடிசூட்டு விழா அரங்கு, அமெரிக்க அரசை மட்டுமின்றி பிற நாடுகளின் அரசுகள் மீதும் செல்வாக்குச் செலுத்தும் அதிபணக்காரர்களால் நிறைந்திருந்தது. அவர்களில் பலரும் தொலைவிலிருந்து மக்களின் மனங்களைக் கட்டுப்படுத்தத் திட்டமிடும் தொழில்நுட்பப் பகாசுரர்கள். அவர்களில் சில பிரபலங்கள் கூகுள் நிறுவனத் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை, எக்ஸ் தளத்தின் எலான் மஸ்க் போல மேட்டா, அமேசான், ஆப்பிள் மற்றும் டிக்-டாக் நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரிகள் அடங்குவர். அதில் கலந்து கொண்ட அதிதீவிர வலதுசாரி அரசியல்வாதிகளில் அர்ஜன்டினா அதிபர் ஜேவியர் மிலய், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, ஈக்வெட்டார் அதிபர் டேனியல் நோபோவா மற்றும் போலந்து மேனாள் பிரதமர் மாத்யூஸ் மோராவிக் (Mateusz Morawieck) முதலானோர் அடங்குவர்.

  பதவியேற்பு உறுதிமொழி நிகழ்ச்சிக்குப் பின் உடனே, காலவிரயமின்றி டிரம்ப் பல உத்தரவுகளில் கையெழுத்திட்டார். நீண்ட காலத் தாக்கத்தை ஏற்படுத்தும் மிக ஆழமான கவலைக்குரிய உத்தரவு பாரீஸ் பருவகால மாற்ற உடன்பாட்டிலிருந்து அமெரிக்க நாட்டை முறைப்படி திரும்பப் பெற்றதாகும். இதுவரை, மனிதர்களால் உருவாக்கப்பட்ட பருவகால நெருக்கடிகளைக் கணக்கில் எடுத்துக் கொண்ட மிக முக்கியமான உடன்படிக்கயான அது, பருவநிலை மாற்றத்தைக் குறைப்பதற்கான உலக ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தை முன்னிறுத்திக் காட்டியது. பருவகால மாற்றத்தின் விளைவுகளை நாம் ஏற்கனவே, உயரும் வெப்பநிலை, அடிக்கடி வெள்ளப் பெருக்கு, விவசாயப் பயிர் முறைகளில் மாற்றங்கள், உணவுப் பாதுகாப்பில் நெருக்கடிகள் மற்றும் மூன்றாம் உலக நாடுகளில் ஏழைகள் மற்றும் எளிதில் பாதிப்புக்கு ஆளாகும் எளிய பிரிவு மக்கள் உடல் ஆரோக்கியத்தின் மீதான தாக்கங்கள் முதலான வடிவங்களில் பார்த்து வருகிறோம்.

    டிரம்ப் பதவி உறுதியேற்பு விழாவில் கலந்துகொண்ட மேற்கண்டவர்கள், டிரம்பின் இந்த உத்தரவை எந்தப் பொது அமைப்புகளிலாவது எதிர்ப்பார்கள் என எதிர்பார்ப்பது என்றும் நடக்கப் போவதில்லை. அவர்களுக்கு வளர்ச்சி என்பதன் பொருள், பொது மக்களின் உணவு, இருப்பிடம், உடல்நலப் பராமரிப்பு, கல்வி மற்றும் வெறும் குறைந்தபட்ச தேவைகள் பற்றிய கவலைகளிலிருந்து வேறுபட்டது. புதைபடிவ எரிபொருள்களைப் பயன்படுத்தி அல்லது தேவைப்படும் எனில், அதை அணு சக்தி ஆற்றலைக் கொண்டு மாற்றி –அதில் உட்பொதிந்த ஆபத்துக்களை உணராமல் அதைத் தூய்மையான ஆற்றலின் ஆதார உற்று என்ற தவறான கருத்தில் அணுசக்தி ஆற்றலைப் பயன்படுத்தி – அதீத தொழில்மயமாக்குவதை நம்புபவர்கள் அவர்கள்.

   டிரம்ப் பிறப்பித்த அடுத்த உத்தரவு உலகச் சுகாதார நிறுவனத்திலிருந்து (WHO) அமெரிக்காவை விலக்கிக் கொள்வது. மக்களின் உடல்நலச் சுகாதாரத்தை மேம்படுத்தும் உலகளாவிய முயற்சிகளில் பங்கேற்கும் பொறுப்பிலிருந்து இது விட்டு விலகுவதே ஆகும். டிரம்ப்பின் முடிவு காரணமற்றதும், நிலைக்க முடியாததும் ஆகும்; ஏனெனில், பல்வேறு விஷயங்களில் உலகச் சுகாதார அமைப்பு பன்னாட்டு கார்ப்பரேஷன் நிறுவனங்களின் கருத்தையே பின்பற்றி வருகிறது. இந்தக் கார்ப்பரேட் நிறுவனங்களில் பெரும்பாலானவை அமெரிக்க நாட்டைச் சேர்ந்தவை. மாறாக மறுபுறத்தில் உலகச் சுகாதார நிறுவனம் கொரோனா பெருந்தொற்றைக் கையாண்டதில் குறைபாடுகள் இருந்தால், இதில் கவனத்தில் குறித்துக் கொள்ள வேண்டியது, அமெரிக்காவின் தடுப்பூசி தயாரிக்கும் கார்ப்பரேஷன்களே பெரும் லாபங்களைக் குவித்தது என்பது மட்டுமின்றி, குறிப்பாக ஆப்பிரிக்கா போன்ற சில வளரும் நாடுகளை மிரட்டவும் செய்தன என்பதைத்தான். அமெரிக்க அரசுகள் உலகச் சுகாதார அமைப்புக்கு நன்கொடை நிதி அளிப்பது என்ற பெயரில் சுகாதாரம் தொடர்பான அமெரிக்கப் பன்னாட்டுக் கார்ப்பரேஷன்கள் மேலும் பெரும் லாபங்களைக் குவித்தன எனச் சொல்லத் தேவையில்லை, ஊரறிந்த விஷயமது.

   பாலினத்தைப் பொருத்தவரை டிரம்பின் உத்தரவு (ஆண் பெண் என) இரு பாலினம் மட்டுமே என்பது மிகவும் பிற்போக்கானது. பாலினங்களை வரையறுப்பதில் மனிதர்களின் (மரபணு) குரோமசோம்கள் அடிப்படையிலன்றி, மாறாக மனிதர்கள் கருமுட்டைகளுடன் அல்லது விந்துவுடன் பிறக்கிறார்களா என்ற அடிப்படையில், எதிர்வரும் உத்தரவின் விவரங்களின்படி, வரையறுக்கப்படுவதாகிறது. இது, (திருநங்கை, திருநம்பி போன்ற) மாற்றுப் பாலின மக்களின் உரிமைகளைப் பாதிக்கும்.

  புலம்பெயர்ந்த மக்கள் குறித்த எந்தக் கொள்கையும் மனிதாபிமான மதிப்புக்களின் அடிப்படையில் வகுக்கப்பட வேண்டும். புலம்பெயர்ந்தோர் உரிமைகள் மீதான டிரம்பின் நிலைபாடு, அவநம்பிக்கையும் சந்தேக புத்தியும் கொண்டதாகவே பார்க்கப்படும். லத்தீன் அமெரிக்கா, குறிப்பாக கியூபா குறித்த டிரம்ப் அணுகுமுறையின் தீவிர மோதல் போக்கு நிலைபாடுகள், தொடரும் ஏகாதிபத்திய தலையீடுகளையே சுட்டிக் காட்டி, தேசங்களின் சுய நிர்ணய உரிமையை அச்சுறுத்துவதாய் உள்ளது.

   கடற்படை முற்றுகை மூலம் பனாமா கால்வாய் மீண்டும் கைப்பற்றப் போவதாக அவர் வலியுறுத்தினார். ஏற்கனவே (வட அமெரிக்காவின் தென்பகுதியில் அட்லான்டிக் பெருங்கடலுக்கும் கரிபியக் கடலுக்கும் நீட்சியாக உள்ள) மெக்ஸிகோ வளைகுடாவின் பெயரை அவர் அமெரிக்க வளைகுடா என்று மாற்றியுள்ளார். (டென்மார்க் இராஜியத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படும், வட அட்லான்டிக் பெருங்கடலில் அமைந்துள்ள, உலகின் மிகப் பெரிய தீவான) கீரின்லாந்து தீவை வாங்குவதற்கான வெளிப்படையான முயற்சி நடக்கிறது.

   அமெரிக்காவை மீண்டும் மாபெரும் தேசமாக்குவது என்ற பெயரில், உலக விவகாரங்களில் மூர்க்கமான அமெரிக்கக் கொள்கைகளை டிரம்ப் ஒழிக்க வாய்ப்பில்லை. இஸ்ரேலுக்குத் தொடர்ந்து ஆயுதங்கள் வழங்குவதை அவர் வற்புறுத்தியுள்ளார். காசாவில் எவ்வளவு காலம் சண்டை நிறுத்தம் நீடிக்கும் எனப் பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். தற்போது ஏற்பட்டுள்ளது அமைதி உடன்பாடு அல்ல, மாறாக தற்சாலிகப் போர் நிறுத்தம் மட்டுமே; ஆனால் அது அமைதிக்கான நீடித்து நிலைக்கும் தீர்வுகள் குறித்து விவாதிப்பதில் ஓரடி முன்னேற்றம்தான். அமெரிக்காவுக்குப் பெறுவதற்கும் அல்லது இழப்பதற்கும் மத்திய கிழக்கில் ஏராளம் உள்ளது என்பதையும் மற்றும் அப்பகுதியில் அவர்களின் உறுதியான பொம்மலாட்ட ஆட்சியாக இஸ்ரேல் இருப்பதையும் உலகம் நன்றாகவே அறியும்.

    அவர் புடினைத் திருப்திப்படுத்த அனைத்தையும் செய்யப் போவதோ, போரை நிறுத்த ஜெலன்ஸ்கிக்கு அழுத்தம் தரவோ போவதில்லை. அப்படிப் போரை நிறுத்துமாறு டிரம்ப் கூறினானாலும்கூட, புடினும் அல்லது ஐரோப்பிய நாடுகளும் உக்ரேனிய அதிபர் தொடர்ந்து போரிடுவதில் உகக்கும்போது, யாரும் அவர் பேச்சைக் கேட்கப் போவதுமில்லை.

   அமெரிக்கப் பொருளாதாரம் இராணுவ ஆயுத உற்பத்தித் தொழில் அடிப்படையில் இயங்குவது மற்றும் அவர்கள் ஆயுதங்களை விற்பதன் மூலம் தொடர்ந்து லாபம் ஈட்ட, மக்கள்

உயிரை விலையாகக் கொடுத்துப் போர்களை ஊக்குவிப்பார்கள். டொனால்டு டிரம்ப் பதவியேற்பு விழாவில் ஆற்றிய தொடக்க உரை, உலக அரசியலில் அதிர்ச்சிகர மாற்றங்களைக் குறிக்கிறது. அவரது கொள்கைகள் 18 மற்றும் 19ம் நூற்றாண்டுகளின் காலனிய மனநிலையைப் பிரதிபலிக்கிறது. உலகு தழுவிய ஒத்துழைப்பு மற்றும் கூட்டுறவையும், ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகள் கூட்டாகச் செயல்படும் பன்மைத்துவ அணுகுமுறையையும் அவர் மறுக்கிறார்.

(புதிதாக இணைந்த இந்தோனேஷியா உள்ளிட்ட பத்து நாடுகள் சேர்ந்த) ‘பிரிக்ஸ்’ அமைப்புக்கு டிரம்ப் விடுத்துள்ள மிரட்டல், நாடுகளின் இறையாண்மை மீது முழுண்டனத்தைக்

காட்டுகிறது. இது உலக நிலைத்தன்மையை அச்சுறுத்துவதாகும். அவருடைய உத்தரவுகள், நாடுகள் இடையே பரஸ்பர மரியாதை மற்றும் கலந்துரையாடல், கூட்டுறவு முறைக்கு எதிரான (தான் மட்டுமே என்ற) ஒருதலைபட்சமான அவரது தன்னிச்சையான மனநிலையைக் காட்டுகின்றன. சுங்கவரி கட்டணங்கள் போன்ற மூடி பாதுகாக்கப்படும் பொருளாதாரக் கொள்கைகள்  (Protectionist economic policies) வளரும் நாடுகளுக்கு எதிரான வர்த்தகத்தைக் கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது; உலக சமத்துவமற்ற நிலையையும் திட்டமிட்ட சுரண்டலையும் அதிகரிப்பது.

   அணுஆயுதப் போட்டி உள்ளிட்ட ஆயுதப் போட்டியில் செலவிடப்படும் உலகச் செலவீனம் தொடர்ந்து அதிகரித்தபடி உள்ளது, அந்தச் செலவீனத்தில் அதிகபட்ச பங்கு அமெரிக்கா உடையது. உலகளாவிய அணுஆயுதக் குறைப்புக் குறித்து டோனால்டு டிரம்ப் ஒரு வார்த்தைகூட உதிர்க்கவில்லை.

   அவரைச் சுற்றி அதிபணக்காரர்கள் சூழந்து நிற்க, அவருடைய நிலைபாடுகளால் உலகின் வருங்காலம் எதிர்வரும் காலத்தில் என்னவாகும் என்பதை ஒருவர் யூகிக்க முடியும். தங்கள் நலன்களைப் பாதுகாக்க, வளரும் நாடுகள் தங்கள் செயல்திட்டங்களை வகுத்துக் கொள்ள வேண்டும்.  

--நன்றி : நியூஏஜ் (ஜன. 26 –பிப்.1)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

Monday, 20 January 2025

முன்னோக்கி நாம் அணிவகுப்போம் தோழர்களே! (பகுதி 2) --பினாய் விஸ்வம்

 

 முன்னே முன்னே முன்னோக்கி          
நாம் அணிவகுப்போம் தோழர்களே!
 

                             (பகுதி 2)

                             --பினாய் விஸ்வம்

உலகக் கம்யூனிஸ்ட் இயக்கம்

   சர்வதேசக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனித்த அங்கீகாரத்துடன் விளங்குகிறது. 1960களின் தொடக்கத்தில் காட்சியில் வந்த சீனக் கம்யூனிஸ்ட் கட்சி, உலகக் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் துரதிருஷ்டவசமான பிளவைத் தொடங்கி வைத்தது. அது முன்வைத்த கருத்தியல மற்றும் அரசியல் நிலைபாடுகள் பின்னர் மாவோயிசம் என்றழைக்கப்படலாயிற்று. அதன் மையமான முக்கிய சாராம்சம் குறுகிய தேசியவாதமும் கண்மூடித்தமான சோவியத்யிச எதிர்ப்புமே. மாவோயிசம், இந்தியா உள்பட உலகம் முழுதும் உள்ள பல கம்யூனிஸ்ட் கட்சிகளில் பிளவின் அழிவு விதைகளை விதைத்தது. மாவோயிசம் என்பது மார்க்சியத்தின் சிதைக்கப்பட்ட தவறான விளக்கம் என்று முதலில் அறிவித்தது சிபிஐ கட்சியே. தீவிர வலதுசாரி சக்திகளால் கட்டவிழ்த்து விடப்பட்ட பாசிசத் தாக்குதலைத் தொடர்ந்து சிபிஐ, ‘‘கொள்கைசார்ந்த அடிப்படையில் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் ஒற்றுமை” என்ற முழக்கத்தை உயர்த்திப் பிடித்தது.

கட்சியின் அமைப்புநிலை மாநாடுகள்

    புத்தாண்டு நமது கட்சியின் அமைப்புநிலை மாநாடுகளைச் சந்திக்க உள்ளது. சிபிஐ 25வது கட்சிக் காங்கிரஸின் ஒரு பகுதியாகக் கிளை மாநாடுகள் ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடத்தி முடிக்கப்பட வேண்டும். அதன்பிறகு, உள்ளூர் தாலுக்கா, மண்டல, மாவட்ட மற்றும் மாநில மாநாடுகள் நடத்தப்படும். இதே ஆண்டில் சண்டிகார் நகரில் செப்டம்பர் 21 முதல் 25வரை நடைபெற உள்ள கட்சிப் பேராய (கட்சி காங்கிரஸ்) மாநாட்டிற்கான தயாரிப்புகள் தொடங்கிவிட்டன. 2025ம் ஆண்டு என்பது மாநாடுகள் மற்றும் கட்சிக் காங்கிரஸின் ஆண்டு என்பதன் பொருள், மக்களுக்கான போராட்டத்தில் கட்சியை அசைக்க முடியாத சக்தியாக கட்சியை மேலும் வலிமையாக்குவதற்கான நேரம் என்பதே. “வலிமை பெறச் செய்வது” என்பது தத்துவக் கருத்தியல், அரசியல் மற்றும் அமைப்புரீதியான தாக்கங்களை உள்ளடக்கியது. மாநாடுகளை நோக்கி செல்லும்போது அதனை நாம் மனதில் கொள்ள வேண்டும்.

மாநாட்டில் கருத்தில் கொள்க

    மாநாடுகளில் நமது நாட்டு மக்களின் பிரச்சனைகள் தீவிரமாக விவாதிக்கப்படும், மேலும் இந்த வரலாற்றுச் சூழலில் கம்யூனிஸ்ட்கள் ஆற்ற வேண்டிய கடமை பொறுப்புகள் திட்டமிடப்படும். மாநாட்டின் முன்பு பிரதிநிதிகள் விவாதிக்க வேண்டிய ஆவணங்கள் முன் வைக்கப்படும். தோழர்கள் அனைவருக்கும், அமைப்புரீதியாகவும், அரசியல் ரீதியாகவும் இருக்க வேண்டிய உயரிய கம்யூனிஸ்ட் உணர்வுடன், தங்கள் கருத்துகளை வெளிப்படுத்த உரிமை உண்டு. போதுமான விவாதங்களுக்குப் பிறகு கட்சியின் முடிவு எடுக்கப்படும்; கட்சி முடிவு எடுத்த பிறகு அதற்குப் பற்றுறுதியாக அனைவரும் நிற்க வேண்டும்.

    கட்சி வலிமையின் அடிப்படை, அதன் ஜனநாயக மத்தியத்துவக் கோட்பாடு. கட்சியின் அரசியல் முதிர்ச்சியின் மைல்கல், (இந்நிகழ்முறையில், வள்ளுவர் எச்சரிக்கும் ‘நுனிக்கொம்பு ஏறினார்’ என்ற) அராஜகவாத இறுதி முனை அல்லது உச்சபட்ச அதிகாரத்துவப் போக்கு இறுதிமுனை ஆகிய பாதை விலகல்களுக்கு நகர்ந்துவிடாமல் தடுக்கும் கண்காணிப்பு விழிப்புணர்வு காட்டப்படுவதில் உள்ளது. (அதாவது, கட்சியில் விவாதங்களை அனுமதிக்காது தலைமை அதிகாரத்துவத்துடன் நடந்து கொள்வது; மற்றும் விவாதங்களைத் தொடர்ந்து முடிவு எடுத்த பிறகு, தோழர்கள் முடிவுக்கு மாறுபட்ட தங்கள் நிலைபாட்டில் பிடிவாதம் காட்டுவது என்ற இருவேறுபட்ட இறுதிமுனைகள், extremities தவிக்கப்பட வேண்டும் என்பது கருத்து)

வலதுசாரி அரசியல் ஊடகங்கள்

  கம்யூனிஸ்ட் மாநாடு நடக்கும் காலத்தைத் தங்கள் தகிடுதத்தத் தந்திரங்களை அரங்கேற்றுவதற்கான நல்ல நேரம் என்று எண்ணும் கேரள ஊடகம்போல நாட்டில் எண்ணற்ற பல ஊடகங்கள் உள்ளன. அவை வலதுசாரி அரசியல் மற்றும் அதன் வர்க்க அடிப்படையைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. கம்யூனிஸ்ட் இயக்கம் மக்களிடம் அங்கீகாரம் பெறுவதையும், சக்திவாய்ந்த இயக்கமாக ஆவதையும் அவர்கள் ஒருபோதும் விரும்புவதில்லை. ஆனால் கருத்தியல் மற்றும் அரசியல் ரீதியில் பலவீனமான சில தோழர்கள், அறிந்தோ அறியாமலோ,

பல நேரங்களில் வலதுசாரி ஊடகங்கள் விரிக்கும் வலையில் வீழ்கிறார்கள். தாங்கள் செய்து வருவது இயக்கத்தைப் பலவீனப்படுத்தும் கட்சி விரோத நடவடிக்கை என்பதை அந்தத் தோழர்கள் உணர வேண்டும். சமூக ஊடகம் இரு முனைகளிலும் கூர்மையான கத்தி என்ற விழிப்புணர்வு நம் அனைவருக்கும் வேண்டும். தத்துவக் கருத்தியல் போராட்டத்தில் அதனைத் திறமையாகப் பயன்படுத்த முடியும். அதே நேரத்தில் அதுவே கட்சி அமைப்பைச் சீர்குலைக்கும் வல்லமை உடையதும் கூட என்பதை நாம் மறக்கக் கூடாது.

நமது பொறுப்பு 

 கட்சி அமைப்புகளில் விவாதிக்க வேண்டிய விஷயங்களைப் பொதுவெளியில் வெளிப்படையாக விவாதிக்கும் போக்கு என்பது, அரசியல் முதிர்ச்சி மற்றும் அமைப்புக் கட்டுப்பாடு பற்றாக்குறையின் வெளிப்பாடு. அந்தப் போக்கு களைந்து நீக்கப்பட வேண்டும். நமது மத்தியில் அரிதாக இருப்பினும், அத்தகைய கட்சி விரோதப் போக்கு உடையவர்களைக் கட்சியிலிருந்து வெளியேற்றவும் கூட 24வது கட்சி காங்கிரஸில் திருத்தப்பட்ட கட்சி அமைப்பு விதிகள் அனுமதிக்கிறது. மாநாடுகளில் அச்சமற்ற விவாதங்கள் கட்சிக்குள் நிச்சயமாக நடக்கின்றன. அத்தகைய விவாதங்கள் இயக்க வளர்ச்சி மற்றும் விரிவாக்கத்திற்காக இருக்க வேண்டும். அதற்கான இடம் கட்சியின் அந்தந்த அமைப்புகளே (தவிர பொது வெளிகளோ, ஊடகங்களோ அல்ல). நம்முடைய கட்சி போன்ற ஒரு புரட்சிகரமான கட்சி, பிரச்சனைகளைக் கட்சி அமைப்புகளில் விவாதிப்பதற்கு மாறாக, பொது(வெளியில்) அறிக்கைகள் விடுபவர்களுக்கு எந்த இடமும் அளித்திடக் கூடாது. 

ஒரு கேரள உதாரணம்

    கேரளாவில் ஒரு முன்னணி செய்திப் பத்திரிக்கை கட்சி மாநாடுகள் தொடங்குவதை ஒட்டி ஒரு தவறான கட்டுக்கதையுடன் வெளி வந்தது என்றால், அது காரணமில்லாமல் சாதாரணமாக நடந்திருக்க முடியாது. அத்தகைய கட்டுக் கதைகளைப் படித்து அதை உண்மை என்று நம்பி ஏமாறுபவர்கள் இருப்பார்கள் எனின், அந்தப் பத்திரிக்கைகளுக்கு அவர்கள் தான் இலக்குகள்.

கேரள மாநிலக் கட்சி அலுவலகம் (கேரள சிபிஐ முதல் மாநிலச் செயலாளர் எம் என் கோவிந்தன் நாயர் பெயரில் அமைந்த) ‘எம் என் ஸ்மாரகம்’ (நினைவக) கட்டடத்தில் செயல்படுகிறது; அக்கட்டடம் புதுப்பிக்கப்பட்டு அதன் திறப்பு விழா செய்தியை வெளியிட்ட அந்தப் பத்திரிக்கை, ‘திறப்பு விழாவின்போது கட்சியின் பொதுச் செயலாளர் டி ராஜா காணப்படவில்லை என அவர்கள் வருந்துவதாக’ இரண்டகம் செய்யும் நோக்கத்தில் செய்தி வெளியிட்டது. அதே கட்டுரையில், ‘தோழர் ராஜா தமிழகத்திலிருந்து மக்களவை வேட்பாளராக மோசமான வழியை நாடிய’தாக மற்றொரு பொய்க் கட்டுக்கதையையும் அவிழ்த்து விட்டது. 

உண்மை என்ன?

    புதுப்பிக்கப்பட்ட எம்என் நினைவகத்தின் திறப்பு விழா, கட்சியின் பிறந்த நாளான 2024 டிசம்பர் 26ல் நடத்துவதாகத் திட்டமிடப்பட்டது. அதே நாளில் கட்சி பிறந்த இடமான கான்பூரில் மாபெரும் பேரணி மற்றும் மாநாடு நடத்துவது எனத் தேசியக் குழு முடிவெடுத்து இருந்தது. சாதாரண பகுத்தறிவுள்ள எவரும், ஒரே நேரத்தில் ஒரே நாளில் கான்பூரில் ஒரு விழாவிலும், திருவனந்தபுரத்தில் மற்றொரு விழாவிலும் ஒரு மனிதர் கலந்து கொள்வது என்பது முடியாத ஒரு செயல் என்பதைப் புரிந்து கொள்ள முடியும். தங்கள் தலையில் கம்யூனிஸ்ட் விரோத நஞ்சுடன் பொய்க் கட்டுக்கதை புனைய முடிவு செய்தவர்களிடம் இந்தப் பொதுவான பகுத்தறிவை எதிர்பார்க்க முடியாது. அவர்களுடைய ஒரே எண்ணம், கட்சி மாநாடுகளில் கலந்து கொள்ளும் பலகீன மனதுடைய எவராவது தாங்கள் எதிர்பார்த்தபடி அதை நம்பி மாநாட்டில் நடந்து கொண்டால் அதுவரை நல்லது என்பதே. இந்த மனிதர்களின் கேடுகெட்ட புத்தியில் இதுபோன்ற கதைகளை உற்பத்தி செய்து உலவ விடக்கூடும். இத்தகைய வலதுசாரி ஊடகங்களால் விரிக்கப்படும் வலைகளில் கம்யூனிஸ்ட் கட்சியின் அணிகள் இரையாக மாட்டார்கள் என்பதை அவர்கள் புரிந்து கொள்ளட்டும். 

முன்னோக்கி அணிவகுப்போம்!

  கம்யூனிஸ்ட் மதிப்புறு விழுமியங்களுக்காகப் பற்றுறுதியுடன் நாம் முன்னோக்கி அணிவகுப்போம். அனைத்து வகையான அத்தகைய அவதூறுகள் நிச்சயம் பின்வாங்கி ஓட்டம் பிடிக்கும். கட்சிதான் நமது பெருமிதம், கட்சிதான் நமது உணர்வு மற்றும் வழிகாட்டி என்ற அசைக்க முடியாத பற்றுறுதியை நெஞ்சில் நிறுத்தி கம்யூனிஸ்ட்கள்  தீர்மானகரமாக முன்னோக்கி நடப்போம்! கட்சியின் நூற்றாண்டு விழாகள், 25வது கட்சிக் காங்கிரஸ் காண உள்ள சூழலில் புலரும் புத்தாண்டில் இதுவே நமது சபதமும் பிரகடனமுமாக இருக்கட்டும்!

வாழ்க இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி!

வாழ்க செங்கொடி!

இன்குலாப் ஜிந்தாபாத்!   

--நன்றி : நியூஏஜ் (2025, ஜன.12 –18)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர் 


Saturday, 18 January 2025

முன்னே முன்னே முன்னோக்கி நாம் அணிவகுப்போம் தோழர்களே! -- --பினாய் விஸ்வம்

 

                                                                                                                     --பினாய் விஸ்வம்

    உலக மக்கள் அனைவரும் ஏராளமான நம்பிக்கை மற்றும் எதிர்பார்ப்புகளுடன் புத்தாண்டை வரவேற்றார்கள். போர், இனவாத ஆதிக்கம் மற்றும் சுரண்டல் சக்திகளுக்கு எதிராக ஒற்றுமையை விரிவாக்கி நமது போராட்டங்களை வலிமையாக்குவது நமது புத்தாண்டு சபதமாகட்டும்!

 கிருஸ்துமஸ் விழாவை ஒட்டி போப் ஃபிரான்ஸிஸ் வெளியிட்ட செய்தி, அமைதி மற்றும் சமூக முன்னேற்றத்திற்காகப் போரிடும் அனைவரிடமும் எதிரொலிப்பது மிகவும் தேவை. “உலகின் ஒவ்வொரு இடத்திலும் உள்ள ஏழைகளின் வாழ்க்கை நிலை மீது அக்கறை கொள்ளும் அரசியல்வாதிகளே மேலும் நமக்குத் தேவை” என்றார் போப். அவரது வார்த்தைகள் கம்யூனிஸ்ட்கள், இறை நம்பிக்கையாளர்கள் இடையே --பிரபஞ்சத்தின் தோற்றம் முதலான இன்ன பிறவற்றில் கருத்து வேறுபாடு, உடன்பாடின்மை இருப்பினும்– உழைக்கும் மக்கள் கூட்டத்தின் பாடுகள் குறித்த அக்கறைகளைப் பகிர்வதில் ஒரு பொதுவான களத்தை வழங்குகிறது. இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்ட்கள் அந்த நம்பிக்கை உணர்வு, அழகை உயர்த்திப் பிடித்து எவ்விதத் தயக்கமுமின்றி புத்தாண்டில் நுழைகிறார்கள்.

            இந்த ஆண்டில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நூற்றாண்டை நாம் அனுசரிக்கிறோம். இந்த நூறாண்டுகள், தேச விடுதலைப் போராட்டத்தில் இரத்தமும் வியர்வையும் கண்ணீருடனும் கூடிய மாபெரும் காவியங்களில் எழுதப்பட்டுள்ளது. முழுமையான சுதந்திரம் என்ற ‘பூரண சுயராஜ்’ முழக்கம், முதன் முதலாகக் கம்யூனிஸ்ட்களால் தேசிய இயக்கத்தின் நிகழ்ச்சி நிரலில்

எழுப்பப்பட்டது. அந்த வரலாற்றுத் தீர்மானம், உறுதியான ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராளியான மௌலானா ஹஸ்ரத் மொஹானியால் 1921ல் காங்கிரசின் அலகாபாத் அமர்வில் முன் வைக்கப்பட்டது. அந்த நேரத்தில் டோமினியன் அந்தஸ்தை மட்டுமே கோரிவந்த மகாத்மா காந்தியடிகளுக்குக்கூட மொஹானியின் முழக்கத்தை ஏற்பதற்குக் கடினமாக இருந்தது. இந்திய தேசியக் காங்கிரஸ் பூரண ஸ்வயராஜியம் என்ற லட்சியத்தைப் பிரகடனப்படுத்த அதனுடைய லாகூர் அமர்வு வரை (1929) காத்திருக்க வேண்டியிருந்தது.

   இதற்கிடையில் நாடு முழுதும் நடந்து வந்த மக்கள் போராட்டங்களின் கொதி கலன்களிலிருந்து 1925 டிசம்பர் 26ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி பிறந்தது. மாநாட்டின் வரவேற்புக் குழுத் தலைவராக மௌலானா ஹஸ்ரத் மொஹானியே இருந்தார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அந்த அமைப்பு மாநாட்டுக் கூட்ட நிகழ்வின் மையமான முக்கியக் கொள்கைகளில் ஒன்றாக பூரண சுயராஜியம் இருந்தது தற்செயலான உடன் நிகழ்வு அல்ல.

    கான்பூரில் கம்யூனிஸ்ட்கள், தங்கள் சொந்த அரசியல் அடித்தளத்தில் உறுதியாக நின்று, பூரண சுயராஜியத்திற்காகப் போராடும் தங்கள் உறுதிப்பாடு, தயார்நிலையைத் தேசத்திற்கு அனைத்து வலிமையுடன் பிரகடனம் செய்தார்கள். சுதந்திரம் என்பது முக்கியமாகத் தொழிலாளர்கள், விவசாயிகள் உள்ளிட்ட சமூகத்தின் ஒடுக்கப்பட்ட எல்லா பிரிவினரின்

விடுதலையுடன் இணைந்து வருவது கட்டாயம் என அவர்கள் மக்களுக்குக் கற்பித்தார்கள். அமைப்பு மாநாட்டிற்குக் கான்பூரில் எம் சிங்காரவேலு வரவேற்புக்குழு தலைவராக இருந்தார். அவர் மெட்ராஸ் கம்யூனிஸ்ட் குழுவின் தலைவரும், ஏஐடியுசி தொழிற்சங்க நிறுவனர்களில் ஒருவருமாவார். ‘தேச விடுதலை தாகத்துடனும், சுரண்டலற்ற ஓர் உலகுக்காகக் கனவு காண்பவர்கள் அனைவருக்குமான கட்சியே, கம்யூனிஸ்ட் கட்சி’ என்றார் மாநாட்டுத் தலைவர் சிங்காரவேலர். (1923ல் இந்தியாவில் முதன் முறையாக மேதினத்தை மெட்ராஸில் செங்கொடி ஏற்றிக் கொண்டாடிய) தொழிலாளர்களின் அப்பெரும் தலைவர் மாநாட்டின் தொடக்க அமர்வில் தனது தலைமை உரையை நிறைவு செய்யும்போது (அமெரிக்கக் கவிஞர்) வால்ட் விட்மனின் புரட்சிகர கவிதையை மேற்கோள் காட்டினார்.

    கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு மாநாடு ஏதோ வானத்திலிருந்து திடீரென்று தோன்றி நடந்துவிடவில்லை. அந்த டிசம்பரில் எப்போதும்போல கான்பூர் தாங்கமுடியாத கடுங்குளிர் நிலவியது. இருந்தும், சிலரின் அயராத உழைப்பின் விளைவு, இந்தியச் சமூகத்தின் முழுமையான எண்ண நிகழ்முறையை விடுதலைக்கான பெரும் தாகத்துடன் கூடியதாக அதிரச் செய்தது. இந்தியாவுக்குள் பல நகரங்களிலும் மற்றும் தாஷ்கண்ட் போன்று வெளிநாட்டில்கூட செயல்பட்டு வந்த சிறிய கம்யூனிஸ்ட் குழுக்களின் உழைப்பின் விளைவு கான்பூர் மாநாடு. மாபெரும் அக்டோபர் புரட்சி வெற்றியும், அதன் புயல்போன்ற மாற்றங்களின் செல்வாக்கும் இந்தியாவில் அந்த அரசியல் நிகழ்முறைக்கான வேகத்தை அளித்தது. நாட்டிற்குள் வீரம் செறிந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்கள் மேலும் நமது மண்ணை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைப்பதற்குத் தயார்ப்படுத்தின.

   இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் ஒன்றுபட்ட முதலாவது தேசிய அமைப்பான, அனைத்திந்தியத் தொழிற்சங்கக் காங்கிரஸ் (ஏஐடியுசி) ஏற்கனவே 1920ல் அமைக்கப்பட்டு விட்டது. நாட்டின் பல பகுதிகளிலும் தொழிலாளர்கள், விவசாயிகளின் போராட்டங்கள் வலிமைபெறத் தொடங்கின. இவை சந்தேகமின்றி காலனிய ஆட்சியை அச்சுறுத்தின. 1908ல் லோகமான்ய பால கங்காதர திலகரைப் பிரிட்டிஷ் அரசு கைது செய்தபோது, பம்பாய் தொழிலாளர்களின் வேலைநிறுத்த அறைகூவல் ஒவ்வொருவரையும் வியப்பில் ஆழ்த்தியது. அவர்களின் அந்தப் போராட்டக் கிளர்ச்சி தங்களுக்கான எந்தச் சொந்த பணப் பலன்களுக்காகவும் அல்ல. அவர்கள் உரத்து முழங்கியது ஒரே அரசியல் கோரிக்கை –‘திலகரை விடுதலை செய்! தொடுவானத்திற்கு அப்பாலிருந்து தோழர் லெனின் எழுதினார், “இந்தியத் தொழிலாளர் வர்க்கம் வளர்ந்து முதிர்ச்சி பெற்று விட்டது.” அந்த அரசியல் முதிர்ச்சி, இந்தியத் தொழிலாளர் வர்க்கத்தின் கட்டமைப்பையும் போராட்ட உற்சாகக் குணத்தையும் வடிவமைத்தது.

    இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத் தோற்றத்தின் நீண்டகால அர்த்தத்தை முதலில் சரியாக உணர்ந்தது வேறு யாரும் அல்ல, காலனிய எஜமானர்கள்தாம். கட்சியை முளையிலேயே கிள்ளி எறிய அவர்கள் ஒன்றன் பின் ஒன்றாகப் பல பொய் வழக்குகளைப் புனைந்து கம்யூனிஸ்ட்களை நசுக்கத் தொடங்கினார்கள். ஆளும் வர்க்கம் பெஷாவர் (1922-27), கான்பூர் (1924), லாகூர் (1929-30) மற்றும் மீரட் (1929-33) போன்ற சதி வழக்குகளைத் தொடர்ச்சியாகக் கட்டவிழ்த்தும், அவதூறு பிரச்சாரங்கள் மற்றும் ஒடுக்குமுறை மூலமும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை ஒழித்துக் கட்ட நினைத்த அவர்களின் எல்லா முயற்சிகளும் தோல்வியிலேயே முடிந்தன. தனது தத்துவக் கருத்தியலுடன் உயிர்ப்புடன் கட்சி அனைத்துச் சவால்களையும் தாக்குப் பிடித்து நீடிக்கும் போதிய வலிமையுடன் இயங்கியது. ஒடுக்கப்பட்ட மக்கள்திரளிடமிருந்து பெற்ற ஊசலாட்டமில்லாத ஆதரவு, அனைத்துத் தடைகளையும் மீறி, இந்தப் புரட்சிகரக் கட்சிக்கு வலிமையை அளித்தது. கருத்தியலில் தெளிவு மற்றும் தியாகம் செய்யத் தயக்கமில்லாது முன்வரும் விருப்பம் நமது கட்சியின் பெருநிதியச் சொத்து.

    ஒரு கருத்தை மக்கள் ஏற்கும்போது அது காரியசாத்தியமான சக்தியாக மாறுகிறது என்பதைக் கம்யூனிஸ்ட்கள் அறிவார்கள். மக்கட் சமூக எல்லாப் பிரிவு அமைப்புகளையும் ஒன்று திரட்டுவதன் மூலம் ஏகாதிபத்திய எதிர்ப்பு இயக்கத்தை வேகம் கொள்ளச் செய்ய முடியும் எனவும்; மேலும் அவ்வாறே விடுதலை மற்றும் சமூக முன்னேற்றத்திற்கான தங்கள் போராட்டங்களைத் தீவிரப்படுத்தவும் முடியும் எனக் கம்யூனிஸ்ட்கள் நம்பினார்கள். கம்யூனிஸ்ட்கள் முன்முயற்சியில்தான் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF), அனைத்திந்தியக் கிசான் சபா (AIKS), இந்திய மக்கள் நாடக மன்றம் (IPTA) மற்றும் முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம் (PWA) போன்ற அமைப்புகள் 1936லிலும், அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) 1959லும் அமைக்கப்பட்டன.

    தேச விடுதலையை நனவாக்கவும், ஒடுக்கப்பட்ட பிரிவினர் விடுதலைக்காகவும் நடத்தப்பட்ட போராட்டங்களில் கம்யூனிஸ்ட்கள் சிந்திய குருதியையும், செய்த உயிர்த் தியாகங்களையும் யார்தான் அளவிடமுடியும்! கையூர், கரிவேலூர், வயலார், புன்னபுரா, தெலுங்கானா மற்றும் தேபங்கா –இவையெல்லாம் வெறும் இடங்களின் பெயர்கள் அல்ல. தொழிலாளர்களும் விவசாயிகளும் நடத்திய எண்ணற்றப் போராட்டங்களிலும், இராயல் இந்தியக் கப்பற்படை வீரர்கள் (RIN) நடத்திய கிளர்ச்சி உள்ளிட்ட போர்க்களங்களிலும் கம்யூனிஸ்ட் தியாகிகளின் இரத்தத்தால் தேசத்தின் விடுதலை வரலாறு எழுதப்பட்டது.

    விடுதலைப் போராட்ட இயக்கத்தில் காந்தி, நேரு மற்றும் காங்கிரஸ் இயக்கம் வகித்த பங்கினைக் கம்யூனிஸ்ட்கள் ஒருபோதும் மறுக்கவில்லை. ஆனால், அகிம்சைப் போராட்டத்தின் முலம் விடுதலையைச் சாதித்தது காங்கிரஸ் மட்டுமே என்ற வாதத்தை நாங்கள் கறாராக நிராகரிக்கிறோம்.

   இந்தியா அடிமைச் சங்கலியை, அகிம்சை சத்தியாகிரகம் முதல் ஆயுதப் போராட்டம் வரையான பல்வேறு போராட்டங்கள் மூலம் அறுத்தெறிந்தது. அவர்கள் மத்தியிலிருந்து அச்சமற்று தங்கள் தனிப்பாதையைப் பின்பற்றிய பகத்சிங், நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் மற்றும் தீவிரவாதிகள் வகித்த பங்கு குறித்துக் கம்யூனிஸ்ட்கள் எப்போதும் பெருமிதம் கொள்கிறோம். ஆனால் தாய்நாட்டு விடுதலைக்கான இந்தத் தீவிரப் போராட்டங்களில் வெறும் பார்வையாளர்களாக இருந்து காணும் பங்கை ஆற்றவும் தவறியவர்கள், தங்களைத் தாங்களே “கலாச்சார அமைப்பு” என்று அழைத்துக் கொண்ட அரசியல் போக்குடன் இந்தியாவில் இருந்தனர். அவர்களே, ஆர்எஸ்எஸ் தலைமையிலான “விச்சாரதாரா” (தத்துவக் கருத்தியலைப்) பின்பற்றியவர்கள். 

    அவர்கள் கலாச்சாரத் தேசியம் என்ற போர்வையில் கோழைத்தனமாகப் பதுங்கிக்  கொண்டு, ஏகாதிபத்தியத்தைத் தூக்கி எறிவதற்கான எல்லாப் போராட்டங்களையும் ‘அரசியல் சார்ந்தது’ என முத்திரை குத்தினர். காலனிய எஜமானர்கள் கேட்டுக் கொண்ட போதெல்லாம் அவர்கள் தங்கள் எஜமானர்களுக்கு அவ்வாறு சேவை செய்யவும் தயங்கவில்லை. அவர்களின் கதாநாயகன் சவார்க்கர், ஒரு முறை அல்ல ஏழு முறை, வெட்கமற்ற மொழியில் ஏகாதிபத்திய ஏஜமானர்களுக்கு மன்னிப்புக் கோரி மனு செய்தார். இப்போது அவனது வழிவந்தவர்கள் தேசபக்திக்கு ஏகபோக உரிமை கோருவது மட்டுமல்ல, தேசத்தை அன்பு செய்வது எப்படி என நாட்டு மக்களுக்குப் பாடம் எடுக்கவும் துணிந்து விட்டார்கள். வரலாறு அவர்கள் செயலைக் கண்டித்து ஏளனமாக எள்ளி நகையாடும் என்பது மட்டும் நிச்சயம்.

    கடந்த நூறாண்டுகளில் கம்யூனிஸ்ட்கள் எப்போதும் மக்களுடன் நின்றார்கள். சுதந்திரத்திற்கு முன்பும் சரி, பின்பும் சரி கம்யூனிஸ்ட்களின் அடையாளம் ஒன்றேதான்; தேசத்திற்காகவும் மக்களுக்காகவும் போராடி தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தவர்கள் எவரோ அவர்கள்தான் கம்யூனிஸ்ட்கள் என அறியப்படுகிறார்கள். தொழிற்சாலைகளில், வயல்வெளிகளில், கல்வி வளாகங்களில், வீதிகளில் கம்யூனிஸ்ட்கள் மக்கள் நலன் பாதுகாவலர்களானார்கள். நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியிலும் மக்கள் குரலை அவர்கள் எழுப்பினார்கள். எப்போதாவது எங்காவது தலை கவிழ்ந்து வணங்கினார்கள் எனின், அது மக்களின் முன்பு மட்டுமே இருக்க முடியும் என்பதை அவர்களின் எதிரிகள்கூட புரிந்து கொண்டனர்.

   கம்யூனிஸ்ட் கட்சியின் நூறாண்டு வரலாறு ஏற்ற இறக்கங்கள் நிரம்பியது, அதில் வெற்றிகளும் உண்டு தோல்விகளும் உண்டு. வெற்றிகளில் தலைகனமோ, தோல்விகளில் ஏமாற்றமோ  கொண்டதில்லை கம்யூனிஸ்ட் கட்சி. அதன் நூற்றாண்டு நீண்ட பயணத்தில் பெரும் வெற்றிகளின் சாதனைகளுடன் பின்னடைவுகளையும் அடையாளப்படுத்தியது. வெள்ளையனே வெளியேறு (குவிட் இந்தியா) இயக்கத்தில் கட்சியின் நிலைபாடு, இந்திய விடுதலை இயக்கப் பொது நீரோட்டத்திலிருந்து கம்யூனிஸ்ட்களைத் தனிமைப்படுத்தியது. 1948ல் கட்சி தழுவிய கல்கத்தா தீசிஸ் பாதை மற்றும் 1975ல் தேசிய அவசரநிலை குறித்த அணுகுமுறை ஜனநாயகச் சக்திகள் மத்தியில் மனக்கசப்புக் கோபத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை வரலாறு, தவறுகளைத் திருத்திக் கொள்ள அதன் உட்பொதிந்த ஆர்வத்தின் மூலம், தீர்மானிக்கும். பிற எல்லா கட்சிகளும் தங்கள் தவறுகளை மூடி மறைக்க சால்ஜாப்புக் காரணங்களைத் தேடியலையும்போது, சிபிஐ மட்டும் செய்த தவறுகளையும் அதைத் திருத்திக் கொள்வதைப் பற்றியும் மக்களிடம் வெளிப்படையாகச் கூறுகின்ற ஈடு இணையற்ற துணிச்சலைக் காட்டியது.

  கம்யூனிஸ்ட் கட்சி ஜமீன்தார்களிடமிருந்து உபரி நிலங்களைக் கைப்பற்றி நிலமற்றவர்களுக்குப் பிரித்துக் கொடுக்க பல்வேறு நிலமீட்புப் போராட்டங்களை ஏற்பாடு செய்து நடத்தியது.   1970களின் தொடக்கத்தில்

 கட்சி பொதுச் செயலாளர் சி ராஜேஸ்வர ராவ் தானேமுன்னின்று அப்போராட்டங்களை நடத்தினார். காங்கிரஸ் ஆட்சி காலத்தில் மக்கள் வாழ்க்கை கஷ்டங்களைச் சந்தித்தபோது சிபிஐ டெல்லியை நோக்கிப் பேரணிகள் நடத்தியது. பஞ்சாபில் காலிஸ்தான் பிரிவினைவாதிகளுக்கு எதிராகக் கட்சி நடத்திய போராட்டங்களில் 400கும் மேற்பட்ட கட்சித் தோழர்கள் தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தனர். 1990களின் தொடக்கத்தில் பாபர் மசூதியை இடித்து அழிக்க சங்பரிவார் அச்சுறுத்தியபோது அயோத்தியில் சிபிஐ, “அன்பின் சுவர்” என்ற பெருந்திரள் மக்கள் இயக்கத்தை அமைத்து நடத்தியது. தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள், இளைஞர்கள், பழங்குடியின மக்கள் மற்றும் பெண்கள் நடத்திய
போராட்டங்களுக்குக் கட்சி வழங்கிய ஊசலாட்டமில்லாத உறுதியான ஆதரவு என அனைத்தும் வரலாற்றில் பதிவாகி உள்ளன. சிபிஐ தலைவர் சி அச்சுத மேனன் தலைமையின் கீழ் கேரளா, இந்தியாவில் நிலப்பிரபுத்துவத்தைச் சட்டபூர்வமாக ஒழித்த முதல் மாநிலமானது, அது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் வரலாற்றில் பெருமிதம் மிக்க தருணமாகும்.  

            (கட்டுரை இரண்டாவது பகுதியில் நிறைவடையும்)

--நன்றி : நியூஏஜ் (2025, ஜன.12 –18)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர் 


         



          



Saturday, 11 January 2025

சிபிஐ தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் குறித்த சுருக்கமான பதிவு

 

சிபிஐ வரலாற்றில் அதன் தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் குறித்த சுருக்கமான பதிவு

--அனில் ரஜீம்வாலே

    இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அதன் வரலாற்றுப் பயணத்தில், கட்சியின் தலைவர்கள் (சேர்மன்), பொதுச் செயலாளர்கள் உள்ளிட்ட சில தலைசிறந்த ஆளுமையாளர்களைப் பெற்றுள்ளது. அவர்கள் வாழ்க்கை வரலாற்றின் குறைந்தபட்ச அடிப்படை விபரங்களை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். இக்கட்டுரையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூற்றாண்டைக் கொண்டாடும் தருணத்தில் சிபிஐ சேர்மன்கள் மற்றும் பொதுச் செயலாளர்களின் வாழ்க்கை மற்றும் அவர்களது படைப்புக்களின் முக்கியமான சில உண்மைகளை வழங்குகிறோம்.

எம் சிங்காரவேலு : சிபிஐயின் முதல் சேர்மன்

   ஒரு வகையில், எம் சிங்காரவேலர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதல் தலைவர். கான்பூரில் 1925 டிசம்பர் 25 முதல் 29 வரை நடந்த சிபிஐ அமைப்பு மாநாட்டிற்கு அவர் தலைமை தாங்கினார். அப்போதைய கட்சி அமைப்பு விதிகள்படி மாநாட்டின் தலைவராகச் செயல்பட்டவரே ‘மத்திய செயற்குழு’ (CEC) மற்றும் கட்சியின் சேர்மன் ஆவார். சிந்தனைச் சிற்பி சிங்காரவேலர், ‘தென்னிந்தியாவின் முதல் கம்யூனிஸ்ட்’ என்று புகழப்படுகிறார்.

  தலைமையுரையில் சிங்காரவேலர், சோஷலிசம் மற்றும் கம்யூனிசத்தின் அடிப்படை கோட்பாடுகளைப் பட்டியலிட்டு, சிபிஐ இலட்சியங்கள், நோக்கங்களை எடுத்துரைத்தார்.

      மெட்ராஸில் 1860 பிப்ரவரி 18ல் பிறந்த சிங்காரவேலர், FA முதல் தேர்வு மற்றும் மெட்ராஸ் பல்கலைக்கழக இளங்கலை பட்டத் தேர்விலும் தேறினார். மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞரானார். 1902ல் வணிகத்திற்காக லண்டன் சென்றவர், அங்கே உலக புத்தமதவாதிகள் மாநாட்டில் கலந்து கொண்டார். சுய மரியாதை இயக்கம் மற்றும் சோஷலிச சுயமரியாதை இயக்கத்துடன் தொடர்புடைய சிங்காரவேலர் நாடறிந்த சமூக சீர்திருத்தவாதி. காங்கிரஸ் தீவிரவாதத் தலைவர்களான புகழ்பெற்ற மகாகவி சுப்பிரமணிய பாரதியார், தொழிலாளர் தலைவர் வி சர்க்கரை செட்டியார், வஉ சிதம்பரம் பிள்ளை (வஉசி) மற்றும் பிறருடன் தொடர்பு ஏற்பட்டது.

   டெக்ஸ்டைல் மில் தொழிலாளர்கள் மற்றும் ரயில்வே தொழிலாளர்கள் இயக்கத்தில் பங்கேற்று, மெட்ராஸ் லேபர் யூனியன் மற்றும் பிற சங்கங்களை அமைக்க உதவினார்: அதில் (மெட்ராஸ் மற்றும் சதர்ன் மராட்டா இரயில்வே எனப்படும்) MSM தொழிலாளர்கள், மின்சாரம், டிராம்வே, பெட்ரோலியம், பெயிண்ட், அலுமினியம் சார்ந்த தொழிற்சங்கங்கள் மற்றும் கோயம்புத்தூர், மதுரை தொழிலாளர்கள் என இன்ன பிற சங்கங்கள் அமைப்பதிலும் உதவினார்.

      காங்கிரஸ் கட்சியின் கயா மாநாட்டில் 1922ல் கலந்து கொண்டு, எஸ் ஏ டாங்கேவை அங்கே சந்தித்தார். அவரது முன்முயற்சியில் இந்தியாவில் முதன்முறையாக 1923ல் மே தினம் கொண்டாடப்பட்டது, மெட்ராஸ் கடற்கரையில் இரண்டு கூட்டங்களில் செங்கொடி ஏற்றப்பட்டது. இந்தக் கூட்டங்களில் லேபர் கிசான் பார்ட்டி (தொழிலாளர் விவசாயிகள் கட்சி) அறிவிக்கப்பட்டது.

     1924 –28 கான்பூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

    1932ல் கம்யூனிஸ்ட் குழு அமைக்கப்பட்டு, அமீர் ஹைதர் கானுடன் தொழிலாளர் பாதுகாப்பு லீக் அமைப்பு அமைக்கப்பட்டது. அது கம்யூனிஸ்ட் கட்சி மையம் என்றும் அழைக்கப்பட்டது.

 1936 நவம்பரில் ‘சுயமரியாதை சோஷலிச மாநாட்டில்’ முன்னணி தலைவராகச் சிங்காரவேலருடன் எஸ் ஏ டாங்கே வந்தார். காங்கிரஸ் சோஷலிசக் கட்சி (CSP)ல் எஸ் வி காட்டேவுடன் சிங்காரவேலரும் ஒத்துழைத்தார். 1936ல் மெட்ராஸ் வந்த எம் என் ராய், சிங்காரவேலர் இல்லத்தில் தங்கினார். ஜனசக்தி இதழில் பணியாற்றி சிங்காரவேலர் சோஷலிசத்தைப் பரப்பினார். மீரட் சதி வழக்கில் அவரும்கூட குறறம் சாட்டப்பட்டார், அவரது உடல்நலமின்மை காரணமாக அவர் கைது செய்யப்படவில்லை.

            சிந்தனை சிற்பி ம சிங்காரவேலர் 1946 பிப்ரவரி 11ல் காலமானார்.

எஸ்வி காட்டே: சிபிஐ முதல் பொதுச் செயலாளர்

    1894 டிசம்பர் 14ல் பிறந்த காட்டே பம்பாயில் பிகாம் இளங்கலை படித்தார். எஸ்ஏ டாங்கேவின் தி சோஷலிஸ்ட் வார இதழுடன் தொடர்பு ஏற்பட கம்யூனிஸ்டானார். இருவரும் பம்பாயில் காங்கிரஸில் பணியாற்றி, காங்கிரஸ் இயக்கத்திற்குள் ஜோக்லேக்கர், மிராஜ்கர், நிம்கார் உள்ளிட்ட தீவிரவாதக் குழுவை அமைத்தனர்; இருவரும் பம்பாயிலும் பிற இடங்களிலும் தொழிலாளர் இயக்கத்தில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தினர்.

    1925ல் சிபிஐ பழைய அமைப்பு விதிகளின்படி கட்சியில் 3 பொதுச் செயலாளர்கள் பொறுப்பேற்க முடியும்; அதன்படி, சிபிஐயின் முதல் இரண்டு பொதுச் செயலாளர்களில் ஒருவராக காட்டே, ஜெபி பகர்கட்டாவுடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1927 பம்பாயில் நடந்த விரிவடைந்த மத்திய செயற்குழுவில் (சிஇசி) ஒரே பொதுச் செயலாளராகத் தேர்வு செய்யப்பட்டார். கிர்ணி காம்கர் யூனியன் மற்றும் தொழிலாளர்கள் விவசாயிகள் கட்சியின் (WPP) முன்னணித் தலைவராக விளங்கினார். 1929 மீரட் சதி வழக்கில் கைதானார். மெட்ராஸ் மாகாணத்தில் சிபிஐயை நிறுவிய நிறுவனர்களில் அவரும் இருந்தார். 1943 சிபிஐ முதலாவது கட்சி காங்கிரஸில் மத்திய குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தியோலி முகாமிலும் வேலூர் சிறையிலும் அடைக்கப்பட்டார். சிபிஐ வரலாற்றின் புகழ்பெற்ற முக்கிய ஆவணமான ‘3-Pகளின் கடித’த்தை, டாங்கே மற்றும் அஜாய் கோஷ் உடன், வரைந்த சிற்பிகளில் ஒருவர். 

  கட்சி கட்டுப்பாட்டுக் குழுவிலும், சிபிஐ பொருளாளராகவும் மத்திய செயற்குழு உறுப்பினராகவும் இருந்துள்ள காட்டே புது டெல்லியில் 1970 நவம்பர் 28ல் காலமானார்.

அஜாய் கோஷ் : பகத் சிங்கின் நெருங்கிய சகா

        வங்காளத்தின் மிகிஜாமில் 1909 பிப்ரவரி 20ல் பிறந்தார். கான்பூரில் படித்தார். பகத் சிங், பட்டுகேஷ்வர் தத், சந்திரசேகர ஆஸாத், பிஜாய் குமார் சின்ஹா முதலான புரட்சியாளர்களுடன் பணியாற்றினார்.

      பம்பாய்   1934 அக்டோபரில் சிபிஐ மத்திய குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு பிசி ஜோஷி, ஆர்டி பரத்வாஜ் முதலானவர்களுக்குக் கம்யூனிஸ்ட் இயக்கத்தை மீண்டும் ஒன்று சேர்க்க உதவினார். 1936ல் கட்சி பொலிட் பீரோவுக்குத் தேர்வானார்.

  1938 முதல் சிபிஐ பத்திரிக்கை நேஷனல் ஃபிரண்ட் (தேசிய முன்னணி) இதழை நடைமுறையில் அனைத்து வகைகளிலும் நடத்தினார். பிடிஆர் பாதையையும் 1948 –50களின் ஆந்திரா பாதையையும் எதிர்த்தார்.

     டாங்கே, காட்டே உடன் இணைந்து 3-Pகள் கடிதத்தை எழுதிய ஆசிரியர்களில் ஒருவர். 1951ல் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டின் முக்கிய நீரோட்டத்தில் இணைந்து செயல்படும் வகையில் கட்சி அணுகுமுறையில் தேவையான திருத்தங்களைச் செய்து, முக்கிய எதிர்க்கட்சியாகக் கட்சியை வழி நடத்தினார். உட்கட்சி சூழலில் மிகக் கடுமையான காலத்தில் கட்சியை நடத்திய அஜாய் கோஷ், 1962 ஜனவரி 13ல் மறைந்தார்.

சோமநாத் லாஹிரி : அரசியலமைப்பு நிர்ணய சபையில் ஒரே சிபிஐ உறுப்பினர்

       மீரட் சதி வழக்கில் மிராஜ்கர் கைது செய்யப்பட்ட பிறகு 1934ல் சிறிது காலம் சிபிஐ பொதுச் செயலாளராகப் பொறுப்பு வகித்தார். வங்கத்தில் 1909 செப்டம்பர் 1ல் பிறந்தார். 1946ல் அரசியலமைப்பு நிர்ணய சபைக்குத் தொழிலாளர்கள் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட  கம்யூனிஸ்ட் உறுப்பினராகப் புகழ் பெற்றார். 19ம் நூற்றாண்டின் ‘இளம் வங்க இயக்க’த் தலைவரான ராம்தனு லாஹிரி குடும்பத்தைச் சேர்ந்தவர் சோமநாத். கல்கத்தா பிரிஸிடென்சி கல்லூரியிலிருந்து பிஎஸ்சி (ஹானர்ஸ்) பட்டம் பெற்றார். பூபேந்திர நாத் தத்தா போன்ற புரட்சிளாளர்களுடன் தொடர்பு ஏற்பட்டு மார்க்ஸியவாதி ஆனார்.

    1931 கராச்சி காங்கிரஸ் மாநாட்டில் பங்கேற்றார். அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF) மற்றும் தொழிற்சங்கங்களில் உழைத்தார். 1930கள் காலகட்டத்தின் கம்யூனிஸ்ட்களின் ‘கல்கத்தா கமிட்டி’யின் அங்கமாவார். அனைத்திந்திய காங்கிரஸ் குழு (AICC) உறுப்பினராக 1936ல் இடம் பெற்றார். ‘ஸ்வதந்திரா’ (வங்கமொழி) இதழ் ஆசிரியராக இருந்தார். பிடிஆர் காலத்தில் பொலிட் பீரோ உறுப்பினர். 1957ல் மேற்கு வங்கச் சட்டப் பேரவைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டு 1977வரை அதில் தொடர்ந்தார். மாநில அமைச்சரவையில் 1967 மற்றும்  1969ல் அமைச்சராக இருந்தார்.

      சோமநாத் லாஹிரி 1984 அக்டோபர் 19ல் இயற்கை எய்தினார்.

எஸ்எஸ் மிராஜ்கர் : பம்பாய் கம்யூனிஸ்ட் மேயர்

    1899 பிப்ரவரி 8ல் மகாராஷ்டிராவில் பிறந்தார்.  மெட்ரிக் படிப்பை முடித்து ஆலைத் தொழிலாளியாகப் பம்பாயில் பணியாற்றினார். AITUC மற்றும் தொழிலாளர் விவசாயிகள் கட்சியில் (WPP) பணியாற்றினார். கிராந்தி (புரட்சி) மராத்தி இதழ் ஆசிரியர். சைமன் குழு புறக்கணிப்புப் போராட்டத்திற்குத் தலைமையேற்றார். 1929 –33 மீரட் சதி வழக்கில் கைதாகி சிறை தண்டனை பெற்றார்.1934ல் யங் ஒர்க்கர்ஸ் லீக் (இளைய தொழிலாளர்கள்) அமைப்பைத் திரட்டினார். 7வது உலக காமின்டர்ன் காங்கிரஸ் (மாநாட்டில்) பங்கேற்க மாஸ்கோ செல்லும் வழியில் சிங்கப்பூரில் கைது செய்யப்பட்டார். 1940 தியோலி முகாமில் அடைக்கப்பட்டார். தனி மராத்தி மாநிலம் அமைக்கக் கோரிய சம்யுக்த மகாராஷ்டிரா இயக்கத்தின் (ஐக்கிய மகாராஷ்டிரா சமிதி) முன்னணித் தலைவராகச் செயல்பட்டார். கோவா விடுதலை இயக்கத்தில் பங்கேற்றார். 1958ல் பம்பாய் மேயராகத் தேர்ந்தெடுக்கப்-பட்டார். 

       1980 பிப்ரவரி 15ல் காலமானார்.

இஎம்எஸ் நம்பூதிரிபாத் : முதலாவது கம்யூனிஸ்ட் முதலமைச்சர்

    (கேரளாவின்) மலப்புறம் மாவட்ட எர்ணாகுளத்தில் 1909 ஜூன்13ல் பிறந்தார். 1925ல் பள்ளியில் சேர்ந்து 1929ல் எஸ்எஸ்சி பள்ளி இறுதித் தேர்வில் தேறினார். சமஸ்கிருதம் மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்றார். 1927ல் மெட்ராஸ் அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் கலந்து கொண்டார். ஒத்துழையாமை இயக்கத்தில் கலந்து கொள்வதற்காகக் கல்லூரி படிப்பைத் துறந்தார். காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி (CSP) மற்றும் காங்கிரஸ் AICCல் தீவிரமாக ஈடுபட்டு கோவில் நுழைவு சத்தியாகிரகத்தில் பங்கேற்றார்.

     திருவிதாங்கூர் –கொச்சி விவசாயிகள் இயக்கத்தில் புகழ்பெற்ற முன்னணித் தலைவராக விளங்கினார். 1936ல் சிபிஐயில் சேர்ந்து அதன் முதலாவது கட்சி காங்கிரஸ்  மாநாட்டில் (1943) சிபிஐ மத்தியக் குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1951ல் முதல் பொலிட் பீரோ உறுப்பினர். 1957 பொதுத் தேர்தலில் கேரளாவின் முதல் கம்யூனிஸ்ட் முதலமைச்சரானார். 1962 –64ல் சிபிஐ பொதுச் செயலாளர். (கட்சி பிளவுக்குப் பின்) 1977ல் சிபிஐ (எம்) பொதுச் செயலாளர்.

            1998 மார்ச் 19ல் காலமானார்

பிசி ஜோஷி : கம்யூனிஸ்ட் இயக்கம் கட்டியவர்

     (உத்தர்காண்ட் மாநில) அல்மோராவில் 1907பிப்ரவரி 14ல் பிறந்தார். அலகாபாத் பல்கலைக் கழகத்தில் எம்ஏ முதுகலைப் பட்டம் பெற்றார். ஜவகர்லால் நேரு மற்றும் யூசுப் மெஹ்ராலியுடன் இளைஞர் லீக் இயக்கத்திலும் WPP கட்சியிலும் இருந்தார். மீரட் சதி வழக்கில் கைதானவர்களில் வயதில் மிக இளைய சிறைவாசி. 1933ல் புரொவிஷனல் மத்திய குழுவில் இருந்தவர்,1935ல் சிபிஐ பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

   தேசிய முன்னணி, AISF, AIKS, PWA, IPTA முதலான அமைப்புகளுக்கு ஆதர்சமாக ஊக்குவிப்பவராக விளங்கினார். தேசிய முன்னணி, பியூபிள்ஸ் வார், பியூபிள்ஸ் ஏஜ் முதலான கம்யூனிஸ்ட் கட்சி இதழ்களை நிறுவினார். 1943ல் நடந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முதலாவது பேராயத்தில் (கட்சி காங்கிரஸ் மாநாட்டில்) பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1943 –44ல் காந்திக்கும் ஜோஷிக்கும் இடையில் நடந்த கடிதப் போக்குவரத்து முக்கியமானது. இந்தியாவில் கலாச்சார மறுமலர்ச்சியை ஏற்படுத்தியவர். 1947 டிசம்பரில் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டார் (பிடிஆர் பொதுச் செயலாளராகி, பிடிஆர் பாதை அமலானது. சறுக்கல்களிலிருந்து மீண்டபோது)1958க்குப் பிறகு கட்சி மத்திய செயலகத்திற்கு ஜோஷி தேர்வானார். நியூஏஜ் இதழின் ஆசிரியராக இருந்தார். ஜவகர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் கம்யூனிஸ்ட் இயக்க ஆவணக் காப்பகத்தை நிறுவினார்.

       பிசி ஜோஷி 1980 நவம்பர் 9ல் இயற்கை எய்தினார்.

எஸ் ஏ டாங்கே : தலைச்சிறந்த தொழிலாளர் வர்க்க, கம்யூனிஸ்ட் தலைவர்

     குறிப்பாக 1962ல் ஏற்படுத்திய ஏற்பாட்டின் கீழ் ஒருவகையில் அவர் சிபிஐ சேர்மன். பம்பாய் நாசிக்கில் 1899 அக்டோபர் 10ல் பிறந்தார். 1917ல் பம்பாய் வில்சன் கல்லூரியில் சேர்ந்தார். கல்லூரியில் ‘யங் காலேஜியன்’ இதழ் ஆசிரியராக இருந்து, இலக்கிய மன்றம் நடத்தினார். முதலில் திலகர் மற்றும் மகாத்மா காந்தியால் செல்வாக்கு செலுத்தப்பட்டார்; இறுதியில் மார்க்சியக் கருத்துகளை முழுமையாக ஏற்று ஒரு மார்க்சியர் ஆனார். ‘காந்தி எதிர் லெனின்’ (1921) என்ற இந்தியாவின் முதல் மார்க்சிய நூலை எழுதினார், ‘தி சோஷலிஸ்ட்’ என்ற முதல் மார்க்சிய இதழ் (1922) ஆசிரியர்.

     1925லிருந்து சிபிஐ மத்திய செயற்குழுவில் (சிஇசி) இடம் பெற்றார். 1940 –42ல் தியோலி தடுப்புக் காவல் முகாமில் அடைக்கப்பட்டார். 1943ல் மத்தியக் குழுவிலும் 1953ல் பொலிட் பீரோவிலும் இருந்தார். 1958 முதல் மத்தியச் செயலகத்தில் இடம் பெற்றார். கான்பூர் சதி வழக்கில் (1924 –28) கைது செய்யப்பட்டார்.  1928ல் பம்பாயில் டெக்ஸ்டைல் தொழிலாளர்களின் (கிர்ணி காம்கர் யூனியன், GKU) மிகநீண்ட கால வேலைநிறுத்தத்தைத் தலைமையேற்று நடத்தினார். (1929 –33) மீரட் சதி வழக்கில் கைது செய்யப்பட்டார்.

  (சிபிஐ பாதை மாற்றத்திற்குக் காரணமான புகழ்பெற்ற) 3-Pகள் கடிதத்தை 1950ல் அஜாய்கோஷ் மற்றும் எஸ்வி காட்டேவுடன் எழுதினார். 1950ல் நால்வர் தூதுகுழுவில் இடம் பெற்று ஸ்டாலினைச் சந்தித்தார். ஏஐடியுசி பேரியக்கத்தின் பொதுச் செயலாளர். 1963 செப்டம்பர் 13ல் பல லட்சம் மக்களின் கையொப்பங்களுடன் நாடாளுமன்றத்திற்கு முதலாவது மாபெரும் அணிவகுப்பைத் தொடங்கியவர், ‘பந்த்’, ‘கேரோ’ மறியல் போன்ற புதிய வடிவங்களில் போராட்ட இயக்கங்களை மேற்கொண்டவர். 1962 முதல் 1982வரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் சேர்மனாகச் செயல்பட்டார்.  

  1946ல் பம்பாய் மாகாண சட்டமன்ற  உறுப்பினராகவும்,  1957 மற்றும் 1967ல் மக்களவைக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். கோவா விடுதலை மற்றும் ஒன்றுபட்ட சம்யுக்த மகாராஷ்டிரா இயக்கங்களின் முன்னணித் தலைவர். [1981ல் சிபிஐயிலிருந்து வெளியேற்றப்பட்டவர், 1983ல் அனைத்திந்திய கம்யூனிஸ்ட் கட்சி, AICPல் சேர்ந்தார்; பின்னர் AICP, மொகித்சென்னின் ICPயுடன் இணைந்து இந்திய ஐக்கிய கம்யூனிஸ்ட் கட்சியாக, யுசிபிஐ ஆனது --மொழிபெயர்ப்பாளர் இணைப்பு]

    ‘இந்தியா – ஆதிகாலக் கம்யூனிசத்திலிருந்து அடிமைச் சமூகம் வரை’ என்ற நூலுக்காக டாங்கே அறியப்படுகிறார்.

        1991 மே 22ல் தோழர் டாங்கே இயற்கை எய்தினார்.

டாக்டர் ஜி அதிகாரி – அறிவியலாளர் மற்றும் கம்யூனிஸ்ட்

    கங்காதர் மொரேஷ்வர் அதிகாரி (முனைவர்) மும்பைக்கு அருகே பன்வேலில் 1898 டிசம்பர் 8ல் பிறந்தார். பம்பாய் வில்சன் கல்லூரியில் சேர்ந்தார். பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனத்தில் (IISc) ஆய்வறிஞராகச் சேர்ந்து, உடன் ஜெர்மன் மொழியையும் கற்றார். ஜெர்மனி ஹம்போல்டுட் பல்கலைக் கழகத்தில் இயற்பிய வேதியல் (பிஸிகல் கெமிஸ்ட்ரி) துறையில் தனது முனைவர் பட்ட ஆய்வை (டாக்டரேட்) மேற்கொண்டு பட்டம் பெற்றார். விஞ்ஞானி ஐன்ஸ்டீனைச் சந்தித்தார், அவரது விரிவுரை சொற்பொழிவுகளில் கலந்து கொண்டார், அவருடைய நிறுவனத்தில் பணியாற்றினார்.

  ஜெர்மனியில் வீரேந்திரநாத் சடடோபாத்யாயா மற்றும் பிற புரட்சியாளர்களையும் இங்கிலாந்து மற்றும் ஜெர்மனி கம்யூனிஸ்ட்களையும் சந்தித்தார்.1928ல் ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். ஜெர்மன் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச் செயலாளர் (CPG GS) எர்ன்ஸ்ட் தால்மென் கூட்டங்களில் கலந்து கொண்டார்.

  1928ல் இந்தியா திரும்பி, பம்பாயில் கிர்ணி காம்கர் யூனியன் மற்றும் தொழிலாளர் விவசாயிகள் கட்சியிலும் (WPP) டாங்கே மற்றும் பிறருடன் செயல்பட்டார். மீரட் சதி வழக்கில் கைது செய்யப்பட்டார். அவரை விடுதலை செய்ய அவரை அறிந்த ஐன்ஸ்டீன் வேண்டுகோள் விடுத்தார். சிபிஐ-யில் அனுமதிக்கப்பட்டார்.

     தலைமறைவு சிபிஐ மத்திய குழு உறுப்பினராகவும் 1933ல் சிபிஐ பொதுச் செயலாளராகவும், பொலிட் பீரோ உறுப்பினராகவும் இருந்தார். சிறையிலிருந்து தப்பினார். சுபாஷ் சந்திர போஸ் தப்பிச் செல்வதற்கான திட்டத்தில் உதவினார். பிடிஆர் பாதைக்குப் பொறுப்பாளராக அவர் நிறுத்தப்பட்டார்.

     1958 அமிதசரஸ் கட்சி காங்கிரஸில் கட்சி அமைப்பு விதிகள் மீது அறிக்கை தந்தார். தேசியக் கவுன்சில் மற்றும் மத்திய செயற்குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1964 பிளவுக்குப் பிறகு கட்சி செயலகத்தில் இடம் பெற்றார். சிபிஐ வரலாற்று ஆவணங்களைத் தொகுக்கும் பொறுப்பினை ஏற்றார்; அதன் ஐந்து தொகுதிகளின் ஆசிரியராக இருந்தார். ஆய்வு மற்றும் கட்சிக் கல்வி பணிகளில் ஈடுபட்டார்.

     1981 நவம்பர் 21ம் நாள் மாரடைப்பால் மரணமடைந்தார்.

சி ராஜேஸ்வர ராவ் : அமைப்பாளர் மற்றும் கட்சியைக் கட்டியெழுப்பியவர்

   ‘சிஆர்’ என்று புகழோடு அறியப்பட்ட சந்திரா ராஜேஸ்வர் ராவ், ஆந்திரப் பிரதேசம், கிருஷ்ணா மாவட்டம், மங்களபுரம் கிராமத்தில் 1914 ஜூன் 6ல் பிறந்தார். பெனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் படித்தார், பின்பு விசாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். சோஷலிஸ்ட் படிப்பு வட்டத்தில் இணைந்தார், மார்க்சிய நூல்களை விரிவாகப் படித்தார். பல்கலைக் கழகத்திலேயே 1934ல் சிபிஐ உறுப்பினரானார். சிபிஐ கிருஷ்ணா மாவட்டக் குழு செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

   மாணவர்கள், விவசாயிகள், ஆலைத் தொழிலாளர்களை அமைப்பாகத் திரட்டினார். செல்லப்பள்ளி ராஜாவை எதிர்த்துப் போராடினார். விவசாயிகளின் நீண்ட பேரணியை 1937ல் மெட்ராஸ் நோக்கி நடத்தினார். 1938ல் ஏழு உறுப்பினர் ஆந்திரா குழுவுக்கும்  1943ல் ஆந்திரா மாகாண சிபிஐ செயலாளராகவும், 1956 ஆந்திரப் பிரதேச மாநிலக் குழுவின் முதலாவது சிபிஐ மாநிலச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

   1946 –50 தெலுங்கானா ஆயுதம் தாங்கிய போராட்டத்தின் தலைவர்களில் ஒருவர். ஆந்திர மகாசபாவில் இருந்தார். 1950 –51 (கொரில்லா போராட்ட) ‘ஆந்திரப் பாதை’யின் கதாநாயகர். 1950 –51ல் சிபிஐ பொதுச் செயலாளர். ரஷ்யாவில் ஸ்டாலினையும் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி (CPSU) தலைவர்களையும் சந்திக்கச் சென்ற 4 உறுப்பினர்கள் தூதுக் குழுவில் ஒருவராகச் சென்றார். 1958 –64ல் மத்திய செயற்குழு உறுப்பினர். 1964 முதல் 1990வரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர். சீன ஆக்கிரமிப்பு, பாக்கிஸ்தான் படையெடுப்பை எதிர்த்தார். எண்ணிறந்த விருதுகளைப் பெற்றவர். “யாருக்கும் கடன்படவில்லை, தரவேண்டியது எதுவுமில்லை; புத்தகங்கள் கட்சிக்கு, எனது ஆடைகள் தேவையுள்ளோருக்கு” என்ற புகழ்பெற்ற உயில் மற்றும் ஏற்பாட்டை (Will and Testament) எழுதி வைத்த பேராளுமையாளர்!

            1994 ஏப்ரல் 9ல் மறைந்தார்.  

இந்திரஜித் குப்தா : தலைச் சிறந்த பாராளுமன்றவாதி

      கல்கத்தாவில் 1919 மார்ச் 18ல் பிறந்தார். இந்திய அரசியலில், குறிப்பாக நாடாளுமன்ற அரசியலில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியவர். 1937ல் டெல்லி, ஸ்டீபன்ஸ் கல்லூரில் பட்டம் பெற்றார். கேம்ப்பிரிட்ஜ், கிங்க்ஸ் கல்லூரியில் உயர் கல்வியைப் பயின்றார். அங்கு இந்திய மற்றும் பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்களுடன் தொடர்பு கொண்டு கம்யூனிஸ்டானார். மார்க்சியத்தை விரிவாகப் படித்தார். 1940 அக்டோபரில் தாயகம் திரும்பினார்.

     கட்சியின் பம்பாய் தலைமையகத்தில், பொதுச் செயலாளர் பிசி ஜோஷியின் கீழ் நேரடியாகப் பணியாற்றினார். வங்கத்தில் சணல் ஆலை தொழிற்சங்கங்களிலும், கப்பல் கட்டும் தளம், துறைமுகம் மற்றும் இரயில்வே தொழிலாளர்களுடன் பணியாற்றினார். அனைத்திந்திய போர்ட் அண்ட் டாக் ஒர்க்கர்ஸ் பெடரேஷன் அமைப்பின் தலைவர் மற்றும் பொதுச் செயலாளர். 1948 –49ல் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

   1880ல் ஏஐடியுசி பொதுச் செயலாளர், 1998ல் உலகத் தொழிற்சங்கச் சம்மேளன (WFTU) தலைவர்.

   எழுதிய புகழ்பெற்ற ஆய்வு நூல் – “சணல் ஆலைத் தொழிலில் மூலதனமும் தொழிலாளர்களும்” (“Capital and Labour in Jute Industry”)

   மக்களவைக்கு 11 முறை தேர்ந்தெடுக்கப்பட்டு, 1977 –80 காலகட்டத்தின் குறுகிய இடைவெளி தவிர மிக நீண்ட காலம், 37 ஆண்டுகள் சேவையாற்றியுள்ளார். 10 முதல் 13வது லோக் சபாக்கள் வரை (மூத்த உறுப்பினர் என்ற வகையில்) அதன் இடைக்கால, ப்ரோ டேர்ம் சபாநாயகர். 1992ல் சிறந்த நாடாளுமன்றவாதி என்ற விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். ‘மன்றத்தின் தந்தை’ (ஃபாதர் ஆப் தி ஹவுஸ்). முன் மாதிரி கம்யூனிஸ்ட் நாடாளுமன்றவாதி என்று பெருமை பெற்றவர்.

     சிபிஐயைச் சேர்ந்த, அவ்வளவு ஏன் உண்மையில் இடதுசாரிகளில் ஒன்றிய காபினட்டில் இணைந்த ஒரே அமைச்சர் என்ற வகையில் சிறப்பைப் பெற்றவர் 1996 –98 அமைச்சரவையில் இவர் ஒன்றிய உள்துறை அமைச்சர், மற்றவர் சதுரானன் மிஸ்ரா.

    1964 டிசம்பரில் பம்பாயில் சிபிஐ மத்திய செயற்குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1971 முதல் சிபிஐ மத்திய செயலகத்தில் இடம் பெற்று, 1988முதல் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆனார். 1990 ஏப்ரல் முதல் சிபிஐ பொதுச் செயலாளர்.

            2001 பிப்ரவரி 20ல் டெல்லியில் காலமானார்.

BT ரணதிவே

          1904 டிசம்பர் 19ல் மும்பை, தாதரில் பிறந்தார். புத்திசாலியான மாணவர். 1928ல் சிறப்புத் தகுதியில் முதுகலை எம்ஏ பட்டம் பெற்றார். ஏஐடியுசி மற்றும் கிர்ணி காம்கர் யூனியனில் சேர்ந்தார். 1939ல் (பல சங்கங்கள் இணைந்து உருவான ‘மாபெரும் இந்தியத் தீபகற்ப’ எனும் GIP) கிரேட் இந்தியன் பெனிசுலார் இரயில்வே மென் யூனியன் செயலாளர். 1940 –42ல் தியோலி தடுப்புக் காவல் முகாமில் இருந்தார். 1943ல் சிபிஐ மத்தியக் குழுவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். 1946ல் ராயல் இந்தியன் நேவி, RIN, கிளர்ச்சியில் உதவினார். 1948 சிபிஐ 2வது கட்சி காங்கிரஸில், பிசி ஜோஷியை மாற்றி பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இடதுசாரி சாகச ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடக் காரணமான அதனை வகுத்தவர். அதன் காரணமாகவே 1950ல் நீக்கப்பட்டார். 1956ல் மத்திய குழுவில் இடம் பெற்றார். கட்சி பிளவுக்குப் பிறகு 1964ல் சிபிஐ(எம்) கட்சியில் இணைந்தார். 1970 மே மாதம் CITU தொழிற்சங்கத்தின் நிறுவனத் தலைவர்.

      1990 ஏப்ரல் 6ல் மரணமடைந்தார்.

ஏபி பரதன்

    தற்போது பங்களாதேசத்தில் உள்ள சில்கெட் என்ற ஊரில் 1925 செப்டம்பர் 25ல் பிறந்தார். பின்பு நாக்பூருக்கு மாறினார். 1940ல் அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தில் (ஏஐஎஸ்எப்) இணைந்து அதன் பெருந்தலைவர்களில் ஒருவரானார். சிபிஐ-ல் அதே ஆண்டு சேர்ந்தார். மாணவர் முன்னணியில் முழுநேரப் பணியில் ஈடுபட்டார். நாக்பூர் பல்கலைக் கழக மாணவர்கள் சங்கத்தின் தலைவர். பொருளாதாரப் பாடத்தில் முதுகலைப் பட்டமும் சட்டத்தில் பட்டமும் பெற்றார்.

    சிபிஐ, மத்திய பாரத் மாகாணக் குழுவுக்கும், பின்னர் சிபிஐ மகாராஷ்டிரா மாநிலக் குழுவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1968ல் சிபிஐ தேசியக் குழு மற்றும் 1978ல் சிபிஐ மத்திய செயற்குழுவிலும் இடம் பெற்றார்.

    பல்வேறு தொழில்களின் தொழிற்சங்க இயக்கங்களில் பணியாற்றினார். 1957ல் மகாராஷ்டிரா மாநிலச் சட்டமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1994ல் ஏஐடியுசி பொதுச் செயலாளர். 1995 அக்டோபரில் சிபிஐ துணைப் பொதுச் செயலாளர் ஆகி, 1996 ஆகஸ்டில் சிபிஐ பொதுச் செயலாளர் ஆனார். கட்சி திட்டத்தின் வரைவறிக்கைக்கு முன்முயற்சி எடுத்து, 2015 புதுச்சேரி கட்சி காங்கிரசில் கட்சி செயல் திட்டம் ஏற்கப்பட்டது.

       நீண்ட கால உடல்நலமின்மைக்குப் பிறகு 2016 ஜனவரி 2ல் இயற்கை எய்தினார்.

ஸ் சுதாகர் ரெட்டி : இளைஞர் மற்றும் சிபிஐ அமைப்பாளர்

      சுரவரம் சுதாகர் ரெட்டி ஹைத்தராபாத், மெகபூஃப்நகர் கொண்டிரவாபள்ளியில் 1942 மார்ச் 25ல் பிறந்தார். கர்னூலில் உயர்நிலைப் பள்ளி கல்வியை முடித்து, கர்னூல் உஸ்மானியா கல்லூரியில் பிஏ இளங்கலைப் பட்டமும் ஹைத்தராபாத்தில் எல்எல்பி சட்டப் படிப்பையும் நிறைவு செய்தார். ஆந்திரப் பிரதேச கர்னூலில் மாணவர் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். 1966ல் ஏஐஎஸ்எஃப் பொதுச் செயலாளராகி, புது டெல்லிக்கு மாறிச் சென்றார். 1970ல் ஏஐஎஸ்எஃப் தலைவரானார். 1971ல் சிபிஐ தேசியக் குழுவில் இடம் பெற்றார். ஆந்திராவில் மின்சாரக் கட்டண உயர்வுக்கு எதிரான போராட்டத்தை நடத்தினார். 1998 மற்றும் 2004ல் நால்கொண்டா நாடாளுமன்றத் தொகுதியிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டார். தொழிலாளர் குறித்த நாடாளுமன்றக் குழுத் தலைவர்.

     2007ல் சிபிஐ துணைப் பொதுச் செயலாளர் ஆகி, மார்ச் 2012ல் சிபிஐ பொதுச் செயலாளர் ஆனார். உடல்நலப் பிரச்சனை காரணமாக 2019ல் பொதுச் செயலாளர் பொறுப்பிலிருந்து விலகினார்.

டி ராஜா : இயக்க அடிமட்டத்திலிருந்து பொதுச் செயலாராக

     துரைசாமி ராஜா 1949 ஜூன் 3ல் தமிழ்நாடு, வேலூர் மாவட்ட சித்தாத்தூரில் பிறந்தார். பெற்றோர் நிலமற்ற விவசாயத் தொழிலாளர்கள். குடியாத்தத்தில் பிஎஸ்சி பட்டமும் வேலூரில் பிஎட் பட்டமும் பெற்றார். பிள்ளைப் பருவம் கடுமையான ஏழ்மையில் கழிந்தது. மாணவர் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபட்டார். கல்லூரி நாட்களில் ஏஐஎஸ்எஃப் அமைப்பில் சேர்ந்தார். 1975 –80ல் அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் (AIYF) மாநிலச் செயலாளர் ஆனார். அதே காலகட்டத்தில் AIYF பொதுச் செயலாளராகி டெல்லிக்கு மாறினார். 1994ல் சிபிஐ தேசியச் செயலாளராக (தேசிய செயலக உறுப்பினர்) ஆனார். 2019 ஜூலை 21ல் நடைபெற்ற தேசியக் குழுவால் சிபிஐ பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

     2007 ஜூலையில் முதலில் மாநிலங்களவை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு  2013ல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். (2022 அக்டோபர் விஜயவாடாவில் நடைபெற்ற சிபிஐ 24வது கட்சிக் காங்கிரஸ் மாநாட்டில் மீண்டும் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.)

 (இத்தகைய ஆளுமையாளர்கள் தலைவர்களாகவும், பொதுச் செயலாளர்களாகவும் பொறுப்பு வகித்துச் செம்மாந்து இயங்கும் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது நூற்றாண்டு விழாவைத் தனது வரலாற்றுப் பெருமிதத்துடன் கொண்டாடி வருகிறது. 

          வாழ்க சிபிஐ! வாழ்க செங்கொடி!)

--நன்றி : நியூஏஜ் (2024 டிச.29 –2025, ஜன.4)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்