Thursday 12 January 2023

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 77 -- ஆர் கிஸான், சுயமரியாதை இயக்கத்திலிருந்து கம்யூனிசத்திற்கு

 

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 77


      ஆர் கிஸான் – சுய மரியாதை இயக்கத்திலிருந்து  கம்யூனிஸத்திற்கு

--நன்றி : நியூஏஜ் (டிசம்பர் 18 –24) 

--அனில் ரஜீம்வாலே

          தமிழ்நாட்டிலிருந்து ஓர் அசாதாரணமான தலைவரின் வரலாறு இது. ஆர் கிசானின் முன்னோர்கள் பல தலைமுறைகளுக்கு முன் அப்போதைய மெட்ராஸ் ராஜதானி பகுதிகளுக்கு இராசபுதானம் (இன்றைய ராஜஸ்தான்) பகுதியிலிருந்து வந்தவர்கள். தென்னகத்திற்குள் முகலாயர்கள் ஆக்கிரமிப்புத் தொடங்கிய காலத்தில் அவர்கள் இடம் பெயர்ந்து வந்திருக்கக் கூடும். கிசானின் தந்தை பெயர் எம் ரத்தன் சிங். கிசான் தமிழ்நாட்டின் வண்டிப் புதூர் அருகே 1910ல் பிறந்தவர். 1926ல் அவர்கள் குடும்பம் கோயம்புத்தூர் பீலமேடுக்கு மாறியது.

    கிசான் 1929ல் எஸ்எஸ்எல்சி பள்ளி இறுதித் தேர்வு பெற்றார். இதன் மத்தியில் அவரது தந்தை மறைந்தார். எனவே அதன் பிறகு மேலே எந்தத் தேர்வும் எழுதவில்லை. கூட்டுறவு வங்கிப் பணியில் சில பயிற்சிகள் பெற்றார். அதன் பிறகு எட்டு ஆண்டுகள் கூட்டுறவு வங்கிச் சேவையில் அவர் பணியாற்றினார்.

      1930ல் நாட்டில் வெடித்த ஒத்துழையாமை இயக்கத்தில் அவருக்கு ஈடுபாடு ஏற்பட்டது. ஒரு சத்தியாகிரகத்தின்போது மரியாதைக்குரிய ஒரு வழக்கறிஞர், பாலாஜி என்பவர் போலீஸ் அடித்ததில் படுகாயம் அடைந்ததாக அவர் கேள்விப்பட்டார். அந்தச் செய்தி அவர் மனதில் ஒரு ஆழமான பாதிப்பை ஏற்படுத்தியது.

சுயமரியாதை இயக்கத்தில்

     1931ல் பகத்சிங் தூக்கிலிடப்பட்டது எங்கும் கிளர்ச்சியை ஏற்படுத்தியது. அந்நிகழ்வு எந்த அளவு ஈவெ ராமசாமி நாயக்கரிடம் (ஈவெரா) பதிந்தது எனில், ‘பகத்சிங்போல தான் தூக்கிலிடப்பட்டால் மகிழ்ச்சி அடைவேன்’ என்று கூறியதுடன், ஒவ்வொரு மாகாணத்திலும் ஒன்று அல்லது இரண்டு ‘பகத்சிங்கள்’ உருவாக வேண்டும் என்றும் கூறினார்.

      அந்நேரத்தில் சுயமரியாதை இயக்கம், தென்னிந்தியாவில் சாதி மற்றும் கலாச்சாரப் பாகுபாடு இல்லாத சமுதாயத்தைச் சாதிக்கும் நோக்கத்துடன், பரவலாகத் தொடங்கப்பட்டது. அடிப்படையில் அது பிராமணிய எதிர்ப்பு சமூகச் சீர்திருத்த இயக்கம். பிராமணிய சாதிப் படிநிலைகளின் பாகுபாடுகளுடன் அமைந்த சமூகத்தில், பின்தங்கிய மற்றும் ஒடுக்குமுறைக்கு ஆளான சாதியினர் ‘சுய மரியாதை’யைச் சாதிப்பதை அது ஊக்கப்படுத்தியது. 1925ல் எஸ் இராமநாதன் நிறுவிய சுயமரியாதை இயக்கத்திற்குத் தலைமை ஏற்கும்படி அவர் ஈவெ ராமசாமி (பெரியார்) அவர்களை அழைத்தார். அவரது கூற்றின்படி, மேல் சாதிகள் மற்றும் கீழ் சாதிகள் இடையே பாகுபாட்டை ஒழித்தால்தான்  ‘சுய மரியாதை’ சாதிக்கப்பட முடியும். ‘சுயமரியாதை’ ஆங்கிலத்தில் ‘செல்ஃப் ரெஸ்பெக்ட்’.

      ‘சுய மரியாதை வாலிபர் சங்கம்’ என்ற இளைஞர் அமைப்பை 1932ல் கோயம்புத்தூரில்

கிசான் தொடங்கினார். அந்தச் சங்கம்தான் தமிழ்நாட்டில் முதன் முதலாக மே தினத்தைக் கொண்டாடியது. அப்பகுதியில் ப ஜீவானந்தம் (ஜீவா) கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டி எழுப்பி வந்தார். 1931ல் விருதுநகரில் நடைபெற்ற சுய மரியாதை இயக்கத்தின் மூன்றாவது மாநாட்டின்போது கிசான் ஜீவாவைச் சந்தித்தார். அதிலிருந்து அவர்கள் நெருங்கிய தோழர்கள் ஆனார்கள். ஒவ்வொரு ஆண்டும் ஜீவா ஈரோட்டில் இரண்டு அல்லது மூன்று மாதங்கள் கிசானுடன் தங்கி இருப்பது வழக்கம்.

     இந்த மனிதர்கள் ‘சுய மரியாதைக்காரர்கள்’ என அறியப்படலானார்கள். அவர்களுக்கு

தங்கள் சொந்த கருத்து வேறுபாடுகள் காந்திஜியுடன் இருந்தன. முதலில் சுயமரியாதை இயக்கம், சமூகப் பிரச்சனைகளின் மீது பிரச்சாரங்களை மட்டுமே நடத்தி வந்தது.1930க்குப் பின் பெரியாரின் ‘குடியரசு’ இதழில் சோஷலிசம் மற்றும் பொருளாதார விஷயங்கள் குறித்தும் (சிந்தனை சிற்பி) ம சிங்காரவேலர் கட்டுரைகள் பல எழுதினார். இக்கட்டுரைகளின் பெரும் செல்வாக்கிற்கு கிசான் உட்பட சுயமரியாதைக்காரர்கள் ஆட்பட்டார்கள். 

     சோவியத் சோஷலிச குடியரசு நாடுகளுக்கு (யூஎஸ்எஸ்ஆர்) பயணம் மேற்கொள்ள ஈவெரா, எஸ்.இராமநாதன் மற்றும் ராமுவுக்குச் சக்லத்வாலா உதவியுடன் சிங்காரவேலு கடவுச் சீட்டுகளை எப்படியோ பெற்றார். அங்குப் பயணமான அவர்கள் இங்கிலாந்து, ஃபிரான்சு மற்றும் பிற நாடுகளுக்கும் சென்றனர்.

     ஈவெராவுடன் இராமநாதனுக்கு கடுமையான கருத்து வேறுபாடுகள் வளர, பின்னர் அவர் தனியாக ‘தி ரேஷனலிஸ்ட்’ (பகுத்தறிவாளர்) என்ற இதழைத் தொடங்கினார். சோவியத்

யூனியனைப் பார்த்த பின் ஈவெரா அந்நாட்டால் மிகவும் கவர்ந்து ஈர்க்கப்பட்டார். தனது பயணத்திலிருந்து திரும்பிய பின் அவர் ஈரோட்டில் சுயமரியாதை மாநாட்டினைக் கூட்டினார். அம்மாநாட்டிற்கு ம சிங்காரவேலர் தலைமையேற்றார். ஒரு சோஷலிசத் திட்டம் நிறைவேற்றப்பட்டது. கிசானும் மற்றவர்களும் சோஷலிசக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டனர். ஆனால் ஈவெரா இந்தப் பாதையை ஏற்கத் தயாராக இல்லை. 1935ல் அவர் சோஷலிசப் போக்கிலிருந்து தன்னைத் தனித்து விலக்கிக் கொண்டார்.

சுயமரியாதை சோஷலிசக் கட்சி

      இக்கால கட்டத் தருணத்தில், கோயம்புத்தூர் மற்றும் பிற இடங்களிலிருந்து வேறு பலர்

கம்யூனிசத்தின்பால் ஆர்வம் கொண்டனர். அவர்கள் தனியாக ‘சோஷலிசச் சுயமரியாதை’ மாநாடு நடத்தி, ஜீவாவைச் செயலாளராகக் கொண்டு ‘சுயமரியாதை சோஷலிசக் கட்சி’யை நிறுவினர். ‘சமாதானம்’ என்ற இதழையும் வெளியிடத் தொடங்கினார்கள்.

    ‘சுயமரியாதை சோஷலிசக் கட்சி’யின் முதலாவது மாநாடு 1935 –36ல் திருச்சியில் நடத்தப்பட்டது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் தொழிலாளர் வர்க்கத்தின் புகழ்பெற்ற தலைவர் எஸ் ஏ டாங்கே அம்மாநாட்டைத் தொடங்கி வைத்தார். டாங்கே அவரது உரையில் கீழ்க்கண்ட அம்சங்களை வலியுறுத்தினார்:

1.    கட்சி தனது செயல்பாடுகளைத் தமிழ்நாட்டிற்குள் மட்டும் மட்டுப்படுத்தக் கூடாது.

2. அடிமைத்தனத்தின் கீழ்ச் சோஷலிசம் சாத்தியம் இல்லை; எனவே, முதலில் தேச விடுதலைக்கான போராட்டத்தை நடத்த வேண்டும்

3. உழைப்பாளர்கள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் முதலானவர்களைப் போன்ற ஒடுக்கப்பட்டவர்களை அமைப்பில் திரட்ட வேண்டும்.

4.  இந்திய தேசியக் காங்கிரஸில் சேருங்கள், ஏனெனில் அது விடுதலைக்காகப் போராடும் ஓர் அனைத்திந்திய அமைப்பு

5.    காங்கிரஸ் சோஷலிசக் கட்சியை (CSP) அமைத்து அதற்குள் பணியாற்றுங்கள்

காங்கிரஸ் சோஷலிசக் கட்சி (CSP)

    அதன்படியே, கிசானும் மற்ற அனைவரும் காங்கிரஸ் சோஷலிசக் கட்சி (CSP)யில் சேர்ந்தனர். CSP-ன் முதலாவது மாநாடு 1936ல் சேலத்தில் நடைபெற்றது. தின்கர் மேத்தா தலைமை வகித்த அம்மாநாட்டில் மற்றவர்களுடன் கிசானும் தீவிரமாகப் பணியாற்றினார். எதிர்வரும் தேர்தலில் காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரிப்பதென மாநாடு முடிவெடுத்தது. 1937 ஈரோட்டில் கிசானும் ஜீவாவும் காங்கிரசுக்காகப் பணியாற்றினர். தேர்தலுக்குப் பிறகு மதுரையில் ஒரு காங்கிரஸ் மாநாடு மற்றும், அதே நேரத்தில் CSP மாநாடும் நடைபெற்றது. ஆந்திராவிலிருந்து மாதுரி அன்னபூர்ணையா மற்றும் கேரளாவிலிருந்து கே தாமோதரன் கலந்து கொண்டனர். 1937 மாநாட்டிற்குப் பின் கிசான் வேலையை ராஜினாமா செய்துவிட்டு முழு நேர கட்சி ஊழியராகப் பணியாற்றத் தொடங்கினார்.

ஊட்டியில்

        இதன் மத்தியில் 1935ல் கிசான் வேலை ஊட்டிக்கு மாற்றப்பட்டது. அங்கு அவர் இளைஞர் அமைப்புகளை அமைத்துப் பிரச்சாரங்களை நடத்தினார். 1935 நவம்பர் 7ம் நாள் ஊட்டியில் ரஷ்ய புரட்சி தினம், முனிசுவாமி பிள்ளை தலைமையில், கொண்டாடப்பட்டது. இச்செயல்பாடுகள் காரணமாக அவரை மீண்டும் ஈரோட்டுக்கு மாற்றினர், 1937 வரை பணி செய்தார். பின்னர்தான் மேலே குறிப்பிட்ட மாநாட்டிற்குப் பிறகு வேலையை ராஜினாமா செய்த கிசான் கட்சி முழுநேர ஊழியர் ஆனார்.

திருமணம்

      1933ல் நடைபெற்ற கிசானின் திருமணம் ஒரு முன்மாதிரியான (ஐடியல், ‘ஆதர்ஷ விவாகம்’) எடுத்துக்காட்டான திருமணம். சுயமரியாதை இயக்கத் தலைவர்கள் தலைமையில் நடைபெற்ற அது ஒரு சாதிக் கலப்பு திருமணம். அந்தத் திருமணத்திற்காக ஈரோட்டில் மிகப் பெரிய ஊர்வலம் நடத்தப்பட்டது.

காங்கிரஸ் அமைச்சரவை மற்றும் தொழிலாளர்களின் இயக்கம்

    மெட்ராஸ் மாகாணத்தில் காங்கிரஸ் மந்திரி சபை அமைக்கப்பட்ட பிறகு, பஞ்சாலைத் தொழிலாளர்களின் முதலாவது வேலை நிறுத்தம் லெட்சுமி மில்ஸ் ஆலையில் நடைபெற்றது. அந்நாட்களில் சோஷலிசத் தொழிலாளர்கள் சங்கம் மிகவும் பலம் பொருந்தியது. 1920களில் இருந்து என் எஸ் இராமசுவாமி அய்யங்கார் என்ற காங்கிரஸ்காரர் முன்னணிப் புள்ளியாக இருந்தார். பின்னர் CSP உறுப்பினர்களும் கம்யூனிஸ்ட்களும் தொழிலாளர் இயக்கத்தில் வலிமை உடையவர் ஆனார்கள். ஆர் கிசானின் கூற்றுப்படி, கோயம்புத்தூர் தொழிலாளர்கள் ஸ்ரீனிவாச அய்யங்கார் மற்றும் சி பாசுதேவ் செல்வாக்கின் கீழ் இருந்தார்கள். 1937 தேர்தல்களில் காங்கிரஸ் வேட்பாளர் என்ஜி ராமசுவாமி நாயுடு, நீதிக் கட்சி வேட்பாளரான பாசுதேவை தோற்கடித்தார். இது, கோயம்புத்தூர் மற்றும் பிற இடங்களின் தொழிலாளர் இயக்கத்திற்கு ஊக்கமளித்தது. புதிய சூழ்நிலையின் பலன்களை ஒன்று திரட்ட கிசான் கடுமையாக உழைத்தார்.

     பின்னர் அது தொடங்கி பாசுதேவ் சிறுபான்மையாக வீழ்ந்தார், ஆனாலும் ராஜினாமா செய்ய மறுத்தார். தொழிற்சங்கத்தின் நடவடிக்கை குறிப்பேட்டை (மினிட்ஸ்) ஒப்படைக்கவும் அவர் மறுத்தார். தொழிலாளர்கள் இராமநாதனிடம் புகார் செய்தனர்; அவர்களிடம் அவர் புதிய சங்கத்தை அமைக்க யோசனை கூறினார். கோயம்புத்தூர் சோஷலிஸ்ட் டெக்ஸ்டைல் தொழிலாளர்கள் சங்கம் என்ற பெயரில் 1936ல் புதிய சங்கம் அமைக்கப்பட்டது. எஸ் இராமநாதன் அதன் தலைவராக்கப்பட்டார்.

    காங்கிரஸ் மந்திரிசபை அமைக்கப்பட்ட உடன் பாப்பநாயக்கன் பாளையம், லெட்சுமி மில்ஸில், புகுத்தப்பட்ட புதிய இயந்திரங்கள் மற்றும் தொழிலாளர்களின் இரட்டிக்கப்பட்ட வேலைச் சுமையின் விளைவாய் வேலைநிறுத்தம் வெடித்தது பற்றி மேலே குறிப்பிட்டோம். சங்கத்தின் தலைமையில் போராடிய தொழிலாளர்கள், தங்களை நூற்பு ஃப்ரேம்களின் ஒரு பக்கத்தில் மட்டும் பணியாற்ற அனுமதிக்க வேண்டும் எனக் கோரினார்கள்.

       1937 செப்டம்பர் 21ல் தொழிலாளர்கள் வெளிநடப்பு செய்து வெளியேற, போராட்டம் மற்ற ஆலைகளுக்கும் பரவியது. தொழிலாளர்களுக்கு உதவிட ஜீவா மற்றும் எஸ்வி காட்டே மெட்ராஸிலிருந்து வந்தனர். (அந்தப் போராட்டத்தில் ஜீவா இயற்றி கோவை ராம்தாஸ் பாடிய வரலாற்றுப் புகழ் மிக்கப் பாடல்தான் “காலுக்குச் செருப்புமில்லை /கால் வயிற்றுக் கூழுமில்லை / பாழுக் குழைத்தோமடா தோழனே”)

    வேலைநிறுத்தம் 18 நாட்கள் நீடித்தது. இரவு பகலாகச் சைக்கிள் மிதித்துச் சென்று கிசான் குழு கூட்டங்கள் அமைத்து நடத்திட உதவினார். மூன்று முறை அவர் 90 மைல்களுக்கு மேல் சைக்கிளில் பயணம் செய்தார். வேலைநிறுத்தம் தொழிலாளர்களுக்கு வெற்றியுடன் முடிந்தது. லெட்சுமி மில்ஸ் நிர்வாகம் சரணடைந்து சோஷலிசத் தொழிலாளர் சங்கத்துடன் ஒப்பந்தம் செய்தது.

    அடுத்து விரைவில் கோயம்புத்தூர் பஞ்சாலைகளில் முழுமையான ஒரு பொது வேலைநிறுத்தம் நடைபெற்றது. எஸ்வி காட்டே மற்றும் ஐயங்கார் கோயம்புத்தூர் வந்தனர், பொது வேலைநிறுத்தத்திற்காகத் தொழிலாளர்களைத் திரட்டினர்.

    தொழிலாளர்கள் ரஷ்ய புரட்சி தினம் அனுசரித்தனர், தங்கள் ஊர்வலங்களில் அரிவாள் சுத்தியலுடன் செங்கொடிகளை ஏந்திபடிச் சென்றனர்.

பஞ்சாலைத் தொழிலாளர்கள் மத்தியில் பிளவு

    துரதிருஷ்டவசமாக, வேலைநிறுத்தத்திற்குப் பிறகு தொழிலாளர்கள் மத்தியில் பிளவு ஏற்பட்டது. விரிவான வகையில் மற்றொரு இயக்கம் நடைப்பெற்றது. 1938ல் அது மேலும் பரவியது. 1937 மெட்ராஸ் சட்டமன்றக் குழு தேர்தல்களில் தொழிலாளர்களின் சங்கம் வெங்கடேச ராவ் என்ற ஒரு தொழிலாளியைக் காங்கிரஸ் வேட்பாளராகத் தொழிலாளர் இடத்திலிருந்து போட்டியிட விரும்பினார்கள். தேர்தல்களில் தீவிரமாகப் பணியாற்றினார், கிசான். ஆனால் காங்கிரஸ் தலைவர்களே இதை எதிர்த்தனர், அவர்கள் எம்ஜி ராமசுவாமியை நிறுத்த விரும்பினார்கள். தனது குழந்தைப் பருவ நண்பரான அவர் போட்டியிடுவதைக் கிசான் ஆதரித்தார். ராமசுவாமி ஜீவானந்தத்திற்கும் உதவி செய்திருக்கிறார்.

       தொழிற்சங்க அலுவலகர்கள் மட்டுமே தேர்தலில் போட்டியிடத் தகுதி பெற்றவர்கள். எனவே ராமசுவாமியைச் சங்கத்தின் துணைத் தலைவராக உடன் சேர்த்துக் கொண்டனர். தனது தொழிற்சங்கப் பணியில் விஸ்வாசமாக இருந்த அவரை வேலைநிறுத்தத்தின்போது அதிகாரிகள் அடித்துத் தாக்கியும் இருக்கிறார்கள்.  ஆனால் வேலைநிறுத்ததின்போதே ராமசுவாமி நகர காங்கிரஸ் கமிட்டி செல்வாக்கின்கீழ்த் தொழிலாளர்களை அவர்களின் வேலைநிறுத்தைக் கைவிட்டுப் பணியில் சேருமாறு வற்புறுத்தினார். தொழிலாளர்கள் அவரை எதிர்த்தனர், அந்த விஷயத்தைக் காங்கிரஸ் குழுவிடம் புகார் செய்தனர். கமிட்டியும் அவரைச் சங்கத்தின் பொறுப்பிலிருந்து ராஜினாமா செய்யும்படி கேட்டுக் கொண்டதுடன் தொழிலாளர்கள் மத்தியில் மற்றொரு சங்கத்தை அமைக்குமாறு கூறியது. அதைத் தொடர்ந்து கோயம்புத்தூர் மாவட்ட டெக்ஸ்டைல் தொழிலாளர்கள் சங்கம் செயல்பாட்டுக்கு வந்தது. ராமசுவாமி மற்றும் கிசான் மற்றும் ஜீவா தொழிற்சங்க செயல்பாடுகளைப் பொருத்தவரையில் பிரிந்து விலகிச் சென்றனர் என்றபோதிலும் தனிப்பட்ட முறையில் தங்கள் நட்புறவைத் தொடர்ந்தனர்.

    இரண்டு சங்கங்கள் அமைக்கப்பட்டதில், சிஎஸ்பி மற்றும் சிபிஐ கட்சிகளிடையேயான போட்டியும் ஒரு காரணம். என் சி ஷேகர், ஜீவா, இராமமூர்த்தி முதலானர்வர்கள் உதவியுட்ன் கிசான் இரண்டு சங்கங்களையும் ஒன்றிணைக்கத் தன்னால் இயன்ற ஆகச் சிறந்த முறையில் முயன்றார், ஆனால் அவரது முயற்சி வெற்றிபெறவில்லை.

இரண்டாம் உலகப் போரின்போது

     1939 செப்டம்பரில் வெடித்த இரண்டாம் உலகப்போர்  நாட்டில் ஒரு புதிய சூழ்லைக் கொண்டு வந்தது. போரின் தொடக்கக் கட்டங்களில் சிபிஐ போர் எதிர்ப்பு நடவடிக்கைகளை நடத்தியது. சிபிஐ அதனை ஏகாதிபத்திய எதிர்ப்புப் போர் எனக் குணாம்சப்படுத்தியது. 1940 டிசம்பர் 19ல் போர் எதிர்ப்புச் செயல்பாடுகளுக்காக சென்னையில் பத்து தோழர்கள் கைது செய்யப்பட்டனர். ஆர் கிசான் 1941 மார்ச்சில் கைதானார். போலீஸ் தடியடி நடத்தியதில் அவர் மண்டை உடைய, காயம் குணமாகும் வரை வேலூர் சிறையில், போகராஜூ பட்டாபி சீத்தாராமையா மற்றும் பிறருடன் வைத்திருக்கப்பட்டார்.

      பின்னர் கிசான் கோயம்புத்தூர் சதி வழக்கில் மாட்டிவிடப்பட்டு, இரண்டாண்டு கடுங் காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். சிறை வாசத்தின்போது உண்ணாவிரதப் போராட்டம் நடத்தியதற்காக தண்டனை காலம் மேலும் 6 மாதங்கள் நீட்டிக்கப்பட்டது. அவர் அலிபுரம் மற்றும் பெல்லாரி சிறைகளிலும் அடைக்கப்பட்டார்.

       போரைக் குறித்த கட்சியின் கொள்கை வழி (பார்ட்டி லைன்) ‘மக்கள் போர்’ என்று மாறியது. [முதலில் போரின் குணாம்சம் ஏகாதிபத்தியம் தொடுத்த போர் என்பதிலிருந்து ஜெர்மன் பாசிசத்தை முறியடிப்பதற்கான ‘மக்களின் போர்’ எனப் போரின் குணாம்சம் மாறியது. எனவே கட்சி, சர்வதேசிய நிலைக்கு ஏற்ப போரை ஆதரிக்கத் தொடங்கியது –கூடுதல் இணைப்பு] கிசான் மற்றும் சிலர் விடுதலையானார்கள். 1942ல் பங்கஜா மில்களில் சில சலசலப்பு தொந்தரவுகள். அது போலீஸ் துப்பாக்கிச் சூடு வரை சென்றுவிட அதில் மூன்று தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்தும், பலியானவர்களின் குடும்பத்தினர்களுக்கு நிவாரணம் கோரியும் கிசானும் மற்றவர்களும் துண்டறிக்கைகளை வெளியிட்டனர். சுற்றறிக்கை கிசானால் எழுதப்பட்டது. இந்தக் ‘குற்றத்திற்காக’ அவருடன் ரமணி மற்றும் அச்சக உரிமையாளர் லெட்சுமணனும் குற்றவிசாரணையை எதிர்கொண்டனர். பத்து மாதங்கள் சிறை தண்டனை. ஆனால் அந்தத் தண்டனை மேல்முறையீட்டில் ரத்து செய்யப்பட்டது.

1945 –49 காலகட்டத்தின்போது

    இக்காலத்தின்போது கிசான் மெட்ராஸில் இருந்தார், எண்ணற்ற செயல்பாடுகளில் பங்கேற்றார். இராயல் இந்தியக் கப்பற்படை (RIN) எழுச்சிக்கு ஆதரவான ஆர்பாட்டங்கள், பேரணிகளில் கலந்து கொண்டார். அவர்களின் பிற கோரிக்கைகளுடன் கப்பற்படை எழுச்சியில் கைதானவர்களை விடுதலை செய்யக் கோரும் கோரிக்கையும் ஒன்று.

    அனைவரும் நன்றாக அறிந்ததுபோல, 1948ல் ‘பிடிஆர் பாதை’ சிபிஐ கட்சியைப் பிடித்து ஆட்டியது. கிசான் பிடிஆர் பாதையை ஆதரிக்கவில்லை. இந்தக் காலகட்டத்தில் அவர் சிறையில் அடைபட்டிருந்தார். கைது செய்யப்பட்ட அவர் சேலம் சிறையில் அடைக்கப் பட்டார்.  பிடிஆர் பாதை சிறையில் பல்வேறு சாகச செயல்பாடுகளுக்கு அடியெடுத்து வைக்க சிறையில் துப்பாக்கிச் சூட்டிற்கு இட்டுச் சென்றது. இதனால் தோழர்கள் கொல்லப்பட்டனர். சேலம் சிறையில் மட்டும் 22 தோழர்களும் கடலூர் முகாமில் மூன்று தோழர்களும் சுட்டுக் கொல்லப்பட்டனர். கிசானும் கடுமையாகத் தாக்கப்பட்டார், மோசமான எலும்பு முறிவுகளில் எலும்புகள் உடைக்கப்பட்டன. சிறையிலும் அதற்கு வெளியிலும்கூட மருத்துவமனையில் சிகிச்சைக்காக அவர் தங்கி இருக்க வேண்டியதாயிற்று.

    அதன் பிறகும் தொடர்ந்து தொழிற்சங்க மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு ஏராளமான பங்களிப்புகளைக் கிசான் வழங்கினார்.

     1990ல் அவர் இயற்கையெய்தினார். இயக்கத்திற்கு உழைத்த பன்னூறு தோழர்களில் கிசான் மிக அசாதாரணமான தொண்டரும் தோழரும் ஆவார்.

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

 

 

 

 

             

 

No comments:

Post a Comment