Wednesday, 21 August 2024

நாட்டின் சுதந்திரம் – இன்றைய சவால்கள் --தோழர் -டி ராஜா

 


     நாட்டின் சுதந்திரம் – இன்றைய சவால்கள்


--டி ராஜா

   சிபிஐ பொதுச் செயலாளர்

            இந்திய மக்கள் நீண்ட வரலாற்றுப் போராட்டங்களுக்குப் பிறகு 1947 ஆகஸ்ட் 15ல் காலனிய ஆட்சியிலிருந்து விடுதலை அடைந்தனர். இந்தப் போராட்ட இயக்கங்களில் கம்யூனிஸ்ட்கள் புகழார்ந்த பெரும் பங்கை ஆற்றினர்.

         20ம் நூற்றாண்டின் இரண்டாவது பத்தாண்டில் அர்ப்பணிப்பு- மிக்க, அறிவுக் கூர்மை உடைய தேச பக்த இளைஞர்கள் குழு ஒன்றிணைந்து, தேசம் தழுவிய ஓர் அமைப்பைத்

தொடங்கினர். 1920ல் அனைத்திந்திய தொழிற் சங்கக் காங்கிரஸ் (ஏஐடியுசி) பேரமைப்பை நிறுவியது அவர்களின் முதலாவது பெரும் வெற்றி; அது நாடெங்குமிருந்த தொழிலாளர் வர்க்கத்தின் முற்போக்கான தேசியத் தலைவர்களை ஒன்றாகக் கொண்டு வந்தது. ஏஐடியுசி பிரிட்டிஷ் அரசின் தொழிலாளர் விரோதக் கொள்கைகளை எதிர்த்துப் போராடியதுடன், தேச விடுதலை உட்பட நீண்ட கால அரசியல் கோரிக்கைகள் மீது தொழிலாளர்களுக்கு உணர்வூட்டி அரசியல்படுத்தியது.

அக்காலக்கட்டம், 2வது உலகப் போர் முடிவுக்கு வந்து, ரஷ்யாவில் லெனின் தலைமையில் போல்ஷ்விக் புரட்சி வெற்றி, இந்திய அரசியல் அரங்கில் மகாத்மா காந்தியின் வருகை என முக்கிய நிகழ்வுகள் நடந்தேறின. விடுதலை இயக்க நிகழ்ச்சி நிரலைத் தீவிரப்படுத்தும் பொறுப்பை முன்வந்து ஏற்ற கம்யூனிஸ்ட்கள், இந்திய தேசியக் காங்கிரஸ் அமைப்பின் உள்ளும் புறமும் இருந்து செயல்பட்டனர்;அதில் அடைந்த குறிப்பிடத்தக்க வெற்றிகள் நமது நாட்டிற்குக் கேந்திரமான முக்கியத்துவம் உடையதாக நிரூபித்தது.

       கான்பூரில் 1925 டிசம்பர் 26ம் நாள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்பட்டது. துணைக் கண்டத்தின் குறுக்கிலும் நெடுக்கிலும் இருந்து கம்யூனிஸ்ட்கள் ஒன்று திரண்டு சக்திமிக்க மேடையமைத்தது, முற்போக்கான கோரிக்கைகளை அழுத்தமாக முன்

வைக்க உதவி, விடுதலை இயக்கத்தில் கம்யூனிஸ்ட்களைத் தவிர்க்க முடியாத அங்கமாக்கியது. இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் கான்பூர் அமைப்பு மாநாட்டின் வரவேற்புக் குழு தலைவரான மௌலானா ஹஸ்ரத் மொஹானிபிரிட்டிஷ் ஆட்சியிடமிருந்து “பூரண சுதந்திரம்” கோரிக்கையை முதன்முதலாக எழுப்பியவர்! அந்தக் கோரிக்கை முழக்கம், (டொமினியன் அந்தஸ்து போன்ற) வரையறுக்கப்பட்ட தன்னாட்சி என்ற முந்தைய கோரிக்கை- களிலிருந்து குறிப்பிடத்தக்க வகையில் விலகியதை அடையாளப்படுத்தியது. மேலும், நமது தேசத்திற்கு அரசியல் அமைப்பு நிர்ணய சட்டமன்றம் வேண்டும் என்ற கோரிக்கையை முதன் முதலாக எழுப்பியதும் கம்யூனிஸ்ட்களே!

           ‘அனைத்திந்திய கிசான் சபா’ (1936) மூலம் விவசாயிகளையும், ‘அனைத்திந்திய மாணவர் பெருமன்றம்’ (1936) மூலம் மாணவர்- களையும், ‘முற்போக்கு எழுத்தாளர்கள் சங்கம்’ (1936) மூலம் நாட்டின் எழுத்தாளர்களையும் அறிஞர்களையும் மற்றும் ‘இந்திய மக்கள் நாடக மன்றம்’ (IPTA, 1943) மூலம் கலைஞர்களையும் அமைப்பு ரீதியில் ஒன்று திரட்ட இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி முன்முயற்சி எடுத்தது.

         இதன் மத்தியில், முகிழ்ந்து மலர்ந்துவரும் கம்யூனிஸ்ட் இயக்கத்தை நசுக்க பிரிட்டிஷ் அரசு தீவிரமாக முயன்றும், கம்யூனிஸ்ட்கள் மக்களிடமிருந்து பெற்ற ஆதரவு காரணமாகவும் விடுதலைப் போராட்டத்தில் அவர்கள் ஆற்றிய பங்காலும், அரசு அதில் தோல்வியே அடைந்தது. இவை அனைத்தும், ‘இந்திய விடுதலையின் இறுதிப் போர்’ என்று மிகச் சரியாக அழைக்கப்படும் 1946ன் ‘இராயல் இந்திய கப்பற்படை எழுச்சி’ என்ற உச்சநிலையை அடைந்தது.

      நேதாஜி சுபாஷ் சந்திர போசின் ‘இந்திய தேசிய இராணுவம்’ (ஆஸாத் ஹிந்த் ஃபவுஜ்) அமைப்பால் உற்சாகமும், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதரவையும் பெற்ற கப்பற்படை வீரர்கள், பிரிட்டிஷ் மேலதிகாரிகள் உத்தரவைப் புறக்கணித்து, வேலை நிறுத்தத்தில் இறங்கினர். அதற்கு ஆதரவாக சிபிஐ பம்பாயில் வேலைநிறுத்தம் செய்ததில் இலட்சக் கணக்கானோர் பங்கேற்றனர். பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து தொடங்கிய வன்முறை எதிர்மறை விளைவாய் முடிந்தது; வெளிநாட்டு ஆட்சியாளர்கள் இந்தியாவில் தஙகளின் நாட்கள் எண்ணப்பட்டு வருவதையும், இந்திய மக்கள் இதற்கு மேலும் அன்னிய அடிமை நுகத்தடியைச் சுமக்கத் தயாராக இல்லை என்பதையும்  உணரச் செய்தது.

    சமூகத்தை அறிவியல் ரீயில் புரிந்து கொண்டு, மிகவும் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சனைகளைக் கையில் எடுத்து நிகழ்ச்சி நிரலை வகுத்துக் கொண்டதால், மக்கள் திரள்

மத்தியில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அவர்களின் பேரன்பிற்கு உரித்தானது. சிபிஐ எப்போதும் மக்களுடன் நின்றது, ஆலைகளிலும் வயல்களிலும் அவர்கள் சுரண்டப்படும் தன்மையை அவர்களுக்கு விளக்கி மக்களைத் திரட்டியது. இந்தியக் கம்யூனிஸட் கட்சியின் கான்பூர் அமைப்பு மாநாட்டிலேயே மாநாட்டின் தலைவர் சிந்தனை சிற்பி ம சிங்காரவேலு செட்டியார் மனிதத்தன்மையற்ற தீண்டாமை வழக்கத்தை எதிர்த்தார். சாதி முறைக்கு எதிரான முன்னோடிகளில் ஒன்றாக சிபிஐ எழுந்தது. நவீன, விஞ்ஞான கருத்தியலான மார்க்ஸிய தத்துவம் என்ற ஆயுதம் தரித்து, சமூக சீர்திருத்தவாதிகளின் செழுமையான பங்களிப்புச் சிந்தனைகளுடன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி
பெண்களைத் திரட்டுவதில் முன்கை எடுத்து, ஆணாதிக்கத்திற்கு எதிரான போராட்டத்தில் முனையிலே முன் நிற்கிறது. வர்க்க, சாதியப் படிநிலைகள் மற்றும் ஆணாதிக்கம் இல்லாத சுதந்திரமான அறிவார்ந்த இந்தியா என்ற சிபிஐ-யின் கருத்து, இலட்சக் கணக்கான மக்களை ஈர்த்து அவர்களைச் சமூகத்தில் நீதி மற்றும் சமத்துவத்திற்கான போராட்டத்தில் இணையச் செய்துள்ளது.

நமக்கு முன் இருக்கும் சவால்கள் என்ன?

    சுதந்திரத்தின் எட்டாவது பத்தாண்டையும் நமது கட்சியின் நூற்றாண்டையும் நாம் நெருங்கும்போது, மக்களுடன் நம்மை நெருக்கமாகக் கொண்டு வந்தது எது? நாம் உயர்த்திப் பிடிக்கும் விழுமியங்களுக்காகத் தொடரும் நமது சமரசமற்ற போராட்டத்தில் நமக்கு முன் இருக்கும் சவால்கள் என்ன? மற்றும், நாம் கட்டி எழுப்ப கனவு காணும் சமூகத்தில் --நமது அனைத்துக் குடிமக்களுக்கும் சமூக, அரசியல், பொருளாதார நீதியை உறுதி செய்யும் சமூகத்தில்- வர்க்கமற்ற, சாதியற்ற தேசமாகக் கட்டியெழுப்ப உறுதி பூண்டவற்றைச் சுட்டிக்காட்டி குறிப்பிடுவது கட்டாயமாகும்.

       சிபிஐ போல, ஆர்எஸ்எஸ் அமைப்பும் அதே 1925ம் ஆண்டில் அமைக்கப்பட்டது. பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போரிடுவதற்குப் பதில், சிறுபான்மை இனத்தவர்களையும் கம்யூனிஸ்ட்களையும் நாட்டின் விரோதிகளாக ஆர்எஸ்எஸ் அடையாளப்படுத்தியது; அவர்களின் 100வது ஆண்டின் பிரச்சாரம் நேர்மறை விழுமியங்களை இழந்து பரிதாபமாக இருக்கிறது. கம்யூனிஸ்ட்கள் உச்சபட்சத் தியாகங்களை செய்தபோது, ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் தலைமை பிரிட்டிஷ் காலடியில் அடிமைச் சேவகம் செய்து கிடந்தது; அரசியல் சூழலை ஆர்எஸ்எஸ் விஷமாக்கியது, மகாத்மா காந்தி படுகொலையில் முடிந்தது; மேலும் அன்றைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் ஆர்எஸ்எஸ் அமைப்பைத் தடை செய்வதில்போய் அது முடிந்தது.

            விடுதலை அடைந்த நாளிலிருந்தும் ஆர்எஸ்எஸ் மீதான தடை ரத்து செய்யப்பட்ட பிறகும் அந்த அமைப்பு, மேல் கீழாக அடுக்கப்பட்ட படிநிலைச் சமூகம், மற்றும் மதச்சார்பு இந்து ராஷ்ட்ரா அமைக்கும் இலட்சியத்தை நோக்கி இரகசியமாக மறைந்தும் மறையாமலும் வேலை செய்தது; அதன் பல்வேறு இணைப்பு அமைப்புகள் வாழ்வின் எல்லா களங்களிலும் அதைச் சுற்றி காளானாக முளைத்தன –அவை அனைத்தும் கூட்டாக ‘சங்க் பரிவார்’ என்றழைக்கப்படுகிறது.

        ஒன்றியத்தில் ஆளும் கட்சியான பாரதிய ஜனதா கட்சி, ஆர்எஸ்எஸ் அமைப்பின் அரசியல் பிரிவேயன்றி வேறில்லை; மேலும் பாஜக அதே சாதிய, சுரண்டல், பெண் இன வெறுப்புக் கொள்கைகளையே இரகசியமாகத் தன்னுள் நீண்ட காலமாகப் பாதுகாத்துப் பின்பற்றி வருகிறது.

முக்கியமான கேள்வியும் புகழார்ந்த வரலாறும்

இச்சூழலில், இந்தத் தத்துவார்த்தச் சவாலைச் சிபிஐ எவ்வாறு எதிர்கொள்ளப் போவது என்பதும்; முற்போக்கான, சோஷலிச நிகழ்ச்சி நிரலை நாட்டின் முன் மீண்டும் எப்படி வலியுறுத்தப் போகிறோம் என்பதும், இன்று நாம் அக்கறை கொள்ளும் முக்கியமான கேள்வியாகும்.

           பிரிட்டிஷ் அரசை எதிர்த்துப் போராடிய புகழார்ந்த வரலாறும், விடுதலை அடைந்த பிறகு நமது தேசத்தை வடிவமைப்பதில் குறிப்பிடத்தக்க பங்களிப்புச் செய்த வரலாறும் நமக்கு உண்டு; அந்தப் புகழ்பெற்ற வரலாற்றைப் பழங்காலக் கலைப் பொருள் போலக் கருதிவிடாது, கூடுதல் உற்சாகத்துடன் போராட்டங்களில் முன்நோக்கிச் செல்ல அவை நமக்கு ஊக்கம் தருபவைகளாகக் கருதுவோம். நம்முடைய கடமையும் கவலையும் எப்போதும் ஒன்றேஅது, இந்திய மக்களின் நலவாழ்வு மட்டுமே! ஆர்எஸ்எஸ் –பாஜக கூட்டின் மோசமான ஆட்சியின் கீழ் மக்கள் அவதிப்பட்டு தவிக்கும்போதும், பிளவுபடுத்தும் வகுப்புவாதக் கருத்தியல் நமது சமூகத்தை உடைத்துச் சீரழிக்க அச்சுறுத்தும்போதும், நம்முடைய பணி, மக்களின் அன்றாட வாழ்வில் அவர்களை நோக்கி நெருக்கமாகச் செல்வதுதான்.

            இன்று இது சாதாரண எளிய பணி அன்று; அதுவும், ஆர்எஸ்எஸ் – பாஜகவின் அதிகாரச் செல்வாக்கு மற்றும் அவர்களின் வேவு பார்த்துக் கண்காணிக்கும் ஆயுதத் திரட்டு மற்றும்

பொய்யான தகவல்களைப் பரப்பும் திறன் இவற்றை வைத்துப் பார்க்கும்போது இப்பணிகள் எளிதானவை அல்ல. ஆர்எஸ்எஸ், அரசு நிர்வாக அதிகார அமைப்பிலும் அரசின் அத்தனைப் பிரிவுகளிலும் ஊடுருவி விட்டது. இது நமது மதசார்பற்ற ஜனநாயகக் குடியரசை மதிப்பிழக்கச் செய்யும் அச்சுறுத்தலையும், மதவாத இந்து ராஷ்ட்டிரத்தைத் திணிக்கும் ஆபத்தையும் முன் நிறுத்துகிறது. அண்ணல்  அண்ணல் டாக்டர் அம்பேத்கர் எச்சரித்ததைப் போல அத்தகைய அசம்பாவித பேரழிவு எதுவும் நிகழும் முன், சுதந்திரத்தையும் நமது மதசார்பற்ற ஜனநாயகக் குடியரசையும் நாம் பாதுகாக்க வேண்டும்!

நமது மாபெரும் விடுதலைப் போராட்ட இயக்கத்திலிருந்து நாம் மரபுரிமையாகப் பெற்ற விழுமியங்களைப் பாதுகாக்க       எப்போதும் நாம் விழிப்புடன் இருக்க வேண்டும்!

உடனடி கோரிக்கைகளுக்காக மட்டுமின்றி, நமது நாட்டில் சோஷலிசச் சமூகத்தை அமைக்கும் இறுதி இலட்சியத்திற்காகவும் கட்சி அதன் போராட்டங்களையும் பிரச்சார இயக்கங்களையும் தீவிரப்படுத்த வேண்டும்!

            அனைவருக்கும் சுதந்திர தின தோழமை நல்வாழ்த்துகள்!

--நன்றி : நியூஏஜ் (ஆக.18 –24)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

 

No comments:

Post a Comment