Friday, 27 December 2024

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு –120 சி் ராஜேஸ்வர ராவ் –கம்யூனிஸ்ட் இயக்கம் கட்டியவர், அமைப்பாளர்

 


கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு –120

                         சி் ராஜேஸ்வர ராவ்                             –கம்யூனிஸ்ட் இயக்கம் கட்டியவர், அமைப்பாளர்

--அனில் ரஜீம்வாலே

     ‘சிஆர்’ என்று பிரபலமாக அறியப்படும் சந்திர ராஜேஸ்வர ராவ் 1914 ஜூன் 6ல் ஆந்திரப் ஆந்திரப் பிரதேச கிருஷ்ணா மாவட்ட மங்களபுரம் கிராமத்தில் செழிப்பான விவசாயக் குடும்பத்தில் பிறந்தார். மச்சிலிப்பட்டின இந்து உயர்நிலைப் பள்ளியில் பள்ளிக் கல்வியை முடித்த பின், வாரணாசி பெனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் அறிவியல் பட்டப் படிப்பில் சேர்ந்தார். படிப்பை நிறைவு செய்யாமல் பல்கலைக் கழகத்தில் இருந்து வெளியேறி விசாகப்பட்டினம் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தார். மக்களுக்கு மருத்துவம் மூலம் சேவை செய்ய விரும்பிய அவர், ஆனால் அதைவிட பெருந்திரள் மக்கள் இயக்கம் மூலம் இன்னும் சிறப்பாகச் சேவை செய்ய முடியும் என உணர்ந்தார்.

படிப்பு வட்டங்கள்

     பெனாரஸ் பல்கலைக் கழகத்தில் அவருக்கு மலர்ந்து வந்த பல கம்யூனிஸ்ட்களுடன் அறிமுகம் கிடைத்தது; 1933ல் அவர் சந்தித்த (1967 வாரணாசி தொகுதி சிபிஐ எம்பி) ரஸ்டம் சாட்டின், வித்தல் சௌத்ரி உள்ளிட்ட பலர் அதில் அடங்குவர். பரோச்சா விடுதியில் வாழ்ந்த அவர்களில், விரைவில் சிஆரின் நெருங்கிய தோழரானார் ரஸ்டம். சிஆர் உள்ளிட்ட மாணவர்கள், தேசிய விடுதலைப் போராட்டத்தின் அடையாளமாகக் காந்திக் குல்லாய் அணிவது வழக்கம். ‘சோஷலிசப் படிப்பு வட்டம்’ என்றழைக்கப்பட்ட சிஆர் இருந்த குழு, மார்க்ஸின் ‘கம்யூனிஸ்ட் அறிக்கை’யுடன் தங்கள் பாடத் திட்டப் படிப்பைத் தொடங்கியது. அறிக்கையின் ஒவ்வொரு வரியும் படித்து விவாதிக்கப்பட்டது. விடுதியின் பொது அறையில் நூற்றுக்கும் அதிகமானோர் படிப்பு வட்டத்தில் கலந்து கொண்டனர். தினமும் 2மணி நேரம் என 20 நாட்களில் கம்யூனிஸ்ட் அறிக்கையை நிறைவு செய்தனர்.

    கம்யூனிஸ்ட் அறிக்கை மீது (ரஷ்யப் புரட்சியாளர்) டேவிட் ரியஸோனோவ் எழுதிய குறிப்புகள் மற்றும் லெனினின் ‘என்ன செய்ய வேண்டும்’ நூல்களையும் படித்தனர். 

மேலும் இங்கிலாந்து,ஜெர்மனியிலிருந்து புத்தகங்கங்கள் வரப் பெற்றனர். மார்க்ஸிய நூல்களைப் படிப்பதில் சிஆர் பெருவிருப்பம் உடையவராக இருந்தார். சோஷலிச இளைஞர் லீக் அமைப்பு ஜனவரி 26ஐ விடுதலை நாளாக அனுசரித்தது. அந்த நாளில் பல்கலைக் கழக வளாக நீண்ட பாதைகளில் பாடல்களைப் பாடியபடிச் சென்று மற்ற மாணவர்களையும் தங்களுடன் சேர அழைத்தனர். அவர்கள் நவம்பர் 7 புரட்சி தினம், லெனின் தினம் போன்ற நாட்களையும் அனுசரித்தனர்.

வாரணாசியிலேயே 1934ல் அவர் கட்சி உறுப்பினரானார்.

மீண்டும் ஆந்திரப் பிரதேசம் திரும்பல்

  ஆந்திரா பல்கலைக் கழகத்தில் இருந்தபோது, தொழிலாளர்களைத் திரட்டவும், தொழிற்சங்கங்களை அமைப்பதிலும் அவர் தீவிர ஆர்வம் கொண்டார். விவசாயத் தொழிலாளர்கள், இளைஞர்கள் மத்தியில் பணியாற்ற அவர், தனது சொந்த கிருஷ்ணா மாவட்டத்திற்குத் திரும்பச் சென்று குடியேறினார். விரைவில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கிருஷ்ணா மாவட்டக் குழுவின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கப்பல் கட்டும் தளத் தொழிலாளர்களைத் திரட்டுவதிலும் அவர் ஈடுபட்டார்.

வரலாற்றுப் புகழ்மிக்க விவசாயிகள் பேரணி, 1937

    மிகச் சிறந்த குறிப்பிடத்தக்கப் போராட்டங்களில், 1937–38ல் நடந்த மாபெரும் விவசாயிகள் பேரணிகளில் சிஆர் தீவிரப் பங்காற்றினார். 1937 ஜூலை 3ல் தொடங்கிய முக்கிய பேரணி ஒன்று, மாகாணத் தலைநகரான மெட்ராஸில் 1938 மார்ச் 27ல் முடிந்தது. அப்பேரணியில் அவர்கள் 9 மாவட்டங்களின் வழியாக 1500 மைல்கள் நடந்தும், 525 மைல் பேருந்துகளிலும் பயணித்தும், 500க்கு அதிகமான கிராமங்களுக்குச் சென்று, 60க்கும் மேற்பட்ட மாநாடுகளில் கலந்து கொண்டு மக்களிடமிருந்து 1100 மனுக்களைத் திரட்டினர்.

    பேரணியில் வந்தவர்கள் தங்களின் கோரிக்கைகளைப் பிரதமரிடமும் (ப்ரீமியர், அன்றைய மாகாண முதலமைச்சர்) வருவாய்த் துறை அமைச்சரிடமும் சமர்ப்பித்தனர்.

    1940களின் தொடக்கத்தில் செல்லப்பள்ளி ராஜாவை எதிர்த்த போராட்டத்தில் சிஆர் கைது செய்யப்பட்டார். அவரது தளர்வில்லாத முயற்சிகளின் காரணமாக, கிருஷ்ணா மாவட்டக் கட்சிக் கிளை ஆந்திராவில் சக்திவாய்ந்த கம்யூனிஸ்ட் தளங்களில் ஒன்றானது. பரம்பரைச் சொத்துக்- களின் தனது பங்கு முழுவையும் விற்று சிஆர் அதனைக் கட்சிக்கு நன்கொடையாக வழங்கினார்.

கட்சித் தலைவராக

    சிபிஐ ஆந்திர மாகாண 2வது மாநாடு 1938ல் விஜயவாடாவில் நடைபெற்றது. சிஆர் அதன் ஏழு உறுப்பினர் குழுவுக்குத் தேர்வானார். 1943ல் அவர் ஆந்திரா மாகாண சிபிஐ செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்; மேலும் 1948 புத்தவாரம் 4வது மாநாட்டிலும், 1956ல் ராவந்திரபாடு ஆறாவது மாநாட்டிலும் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி ஆந்திரப்பிரதேச மாநிலக் குழுவின் முதல் செயலாளராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

    பந்தர் கால்வாய் பகுதியில் இரண்டு மைல் தொலைவு படிந்த வண்டல் மண்ணை அகற்றக் கோரி நடந்த பெருந்திரள் இயக்கத்தில் சிஆர் பங்கேற்றார், 1943ல், அதற்கு முன் கண்டிராத மாபெரும்  பெருந்திரள் விவசாயிகள் பேரணியை விஜயவாடாவில் நடத்தினார்.

தெலுங்கானா பிராந்தியத்தில் கட்சி பரவல்

தெலுங்கானா, ஹைதராபாத்  சமஸ்தான அரசின் பகுதியாக, ஒடுக்குமுறை நிஜாம் ஆட்சியின் கீழ்  அப்போது இருந்தது.  கொடூரமான வகுப்புவாத நிலப்பிரபுத்துவ அடக்கு முறை ஆட்சி அது. மக்களைத் திரட்டுவது எளிய பணி அலல. காங்கிரஸ் சோஷலிசக் கட்சி (சிஎஸ்பி) மற்றும் காங்கிரஸ் கட்சி அமைத்த விசாரணைக் குழுவின் உறுப்பினராக அங்குச் சென்ற சிஆர், முனகாலா பகுதியில் விரிவாகப் பயணம் செய்தார்.1939ல் சிஆர் கிருஷ்ணா மாவட்ட துனிகிபாடு-வில் அரசியல் பள்ளியைத் திரட்டி அமைத்தார்; அதில் ரவி நாராயண ரெட்டி, பந்தம் யெல்லா ரெட்டி போன்ற பல தலைவர்கள் கலந்து கொண்டனர்.  போலீஸ் தாக்குதலைச் சந்தேகித்துப் பள்ளியை ரவி நாராயண ரெட்டியின் சொந்தக் கிராமமான பொல்லேபள்ளிக்கு மாற்றினர்.

    1939 முதல் 1942வரை தலைமறைவாக இருந்தபோது, சிஆர் மாநிலத்தின் பல பகுதிகளில் கட்சி அமைப்புகளை அமைத்தார். ஒரு சிறு காலத்திற்குச் சிஆர்கூட மெட்ராஸ் சட்டமன்றக் குழு உறுப்பினராக இருந்தார். ஜமீன்தார்களின் சட்டவிரோதச் செயல்களை எதிர்த்ததற்காக அவர் 1942ல் ஆறுமாத காலம் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். 1946ல் அவரது தலைமையின் கீழ் நிலமற்ற, மற்றும் விவசாயத் தொழிலாளர்கள் 17,000 ஏக்கர் பண்ணை வீடு நிலங்களைக் கைப்பற்றினர். அப்போராட்டத்தின் இறுதிக் கட்டத்தில் அவரே நேரடியாக அவர்களுக்குத் தலைமை ஏற்றுச்சென்று, பெரும் நிலப்பிரபுகளின் 3000 ஏக்கர் கரும்பு பயிரிடும் நிலங்களைக் கைப்பற்றினார்.

1946 –50 தெலுங்கானா ஆயுதப் போராட்டம்    

தெலுங்கானா ஆயுதப் போராட்டம் இரு கட்டங்களாக நடந்தது : 1946-48, 1948- 50

    சிஆர், ரவி நாராயண ரெட்டி மற்றம் பிற தலைவர்கள் முயற்சியால் கம்யூனிஸ்ட் கட்சியும், ஆந்திர மகாசபாவும்,  சிபிஐ, காங்கிரஸ் மற்றும் பிறரை உள்ளடக்கிய பரவலான பெருந்திரள் அமைப்பும் நிஜாமின் ஹைதராபாத் சமஸ்தானத் தெலுங்கானா பகுதியிலும் பிற இடங்களிலும்  ஆழமாக வேர்கொண்டன. பி சி ஜோஷி சிபிஐ பொதுச் செயலாளர். அவரது அனுமதியுடன் 1946ல் தெலுங்கானாவிலும் பிற சமஸ்தானங்களிலும் நிலப் பிரபுக்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தைத் தொடங்க சிபிஐ முடிவு செய்தது. நிலப் பிரபுக்களிடமிருந்து பெரும் பரப்பு நிலங்களைக் கைப்பற்றி அவற்றை நிலமற்ற விவசாயிகளுக்குப் பிரித்துக் கொடுப்பது போராட்டத்தின் முக்கிய நோக்கம்.

  சிபிஐயும் ஆந்திர மகாசபாவும் தெலுங்கானாவில் நூற்றுக் கணக்கில் கிராமங்களைக் கைப்பற்றி, விடுதலை செய்யப்பட்ட பகுதிகளின் நிலங்களைப் பிரித்துக் கொடுத்தன. ஆயுதம் தாங்கிய ‘தலாம்கள்’ (கொரில்லா படை) நிஜாமின் குண்டர்களான ரஜாக்கர்களை எதிர்த்துப் போரிட்டன. ஆயுதப் போராட்டத்தின் புகழ்பெற்ற தலைவர்கள் மத்தியில் சிஆர் இருந்தார்.

    இதனிடையே 1947 ஆகஸட் 15ல் இந்தியா சுதந்திரம் அடைந்தது; சிபிஐ பெருமகிழ்வுடன் வரவேற்று பிசி ஜோஷி தலைமையில் நாடு முழுதும் விழா எடுத்துக் கொண்டாடியது. ஹைதராபாத்திலும்கூட அரசு கட்டடங்கள் மீது கம்யூனிஸ்ட்கள், போலீஸ் கண்களில் மண்ணைத் தூவி, மூவர்ணக் கொடிகளை ஏற்றினர். சிஆர் கட்சியின் தலைவராக இருந்து இந்த இயக்கங்களைத் தீவிரமாக ஏற்பாடு செய்தார். 

    ஹைதராபாத் --இந்திய ஒன்றிய இணைப்பு முன்தயாரிப்பாக, இந்திய அரசு அப்போதைய நிலையை அப்படியே பாதுகாக்கும் ஓராண்டு கால ஒப்பந்தத்தை (ஸ்டாண்ட் ஸ்டில் அக்ரிமெண்ட்) நிஜாமுடன் செய்தது.   ஹைதராபாத்  மற்றும் பிற சமஸ்தானங்களை இந்தியாவுன் இணைப்பதைச் சிபிஐ வலியுறுத்தி வந்தது. பொதுவாக அந்த ஒப்பந்தம் நிஜாமால் மீறப்பட்டது. மேலும் இந்துகளுக்கும் கம்யூனிஸ்ட்களுக்கும் எதிராகப் பரவலான அளவில் வகுப்புவாத வன்முறையை நிஜாம் பயன்படுத்தினார்.

பிடிஆர் பாதையும் தெலுங்கானா போராட்டத்தின் இரண்டாவது கட்டமும்

    இதன் மத்தியில், பிப்ரவரி --மார்ச் 1948ல் நடைபெற்ற இரண்டாவது கட்சிக் காங்கிரஸில், சிபிஐ தலைமை மாறியது. பிசி ஜோஷிக்குப் பதில் பிடி ரணதிவே (பிடிஆர்) பொதுச் செயலாளரானார்; அவர், நேரு ஆட்சியை ஆயுதம் தாங்கிய கிளர்ச்சி மூலம் ‘தூக்கி எறியும்’ சோஷலிசப் புரட்சிக்கு அறைகூவல் விடுத்தார். அந்த ஆயுதக் கிளர்ச்சிப் பாதை முழுமையாகத் தோல்வி அடைந்தது; அது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சிக்கும் பெருந்திரள் அமைப்புகளுக்கும் கணக்கிட முடியாத சேதங்களை ஏற்படுத்தியது. இதன் மத்யில் செப்டம்பர் 1948ல் இதிய இராணுவமும் போலீசும், ‘போலீஸ் ஆக் ஷன்’ என்று அறியப்படும் நடவடிக்கையாக, ஹைதராபாத் திற்குள் நுழைந்தது. நிஜாமும் அவரது படைகளும் இந்திய இராணுவத்திடம் சரண் அடைந்தது, புதிய அரசு அங்கே வந்தது. இவ்வாறு ஆயுதப் போராட்டத்தின் ஒரு பகுதி கோரிக்கை நிறைவேறியதும், பெரிய பிரிவு விவசாயிகள் ஆயுதப் போராட்டத்திலிருந்து விலகியது. சரியாக இந்தக் கட்டத்தில் ஆயுதப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.

  ஆனால் பெருந்திரள் வேளாண் மக்களிடமிருந்து தனிமைப்பட்டபோதிலும், ஆயுதப் போராட்டம் தொடரும் என்பதே பிடிஆர் பாதையின் தர்க்க வாதம். பிடிஆர் தலைமை தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தைப் பரவலாக விரிந்த ‘இந்தியப் புரட்சி’யின் ஒரு பகுதியாகப் பார்த்தது; அப்போராட்டத்தை நிலப்பிரபுக்களுக்கு எதிராக நடத்தப்பட்ட ஒன்றாகப் பார்க்கத் தவறியது – இதன் விளைவு, முழுமையாகத் தனிமைப்படுத்தப்பட நேரிட்டது. இப்போதைய ஆயுதக் கிளர்ச்சி இந்திய இராணுவத்திற்கு எதிரான ஒன்றாக ஆனதால், தோல்வி நிச்சயமானது. கம்யூனிஸ்ட் அணிகள் கிராமங்களிலிருந்து காடுகளை நோக்கிப் பின்வாங்கின. அங்கே அவை வீரம் செறிந்த, ஆனால் தோல்வி அடையும் போராட்டங்களை நடத்தின. அந்த வீரம், பிடிஆர் தலைமையின் கீழ் நடத்தப்பட்ட வெறும் சாகசம் காரணமாக, தனிமைப்படுத்தப்- பட்டு தோற்கடிக்கப்பட்டது.

பிடிஆருக்குப் பதில் சிஆர் : ‘ஆந்திரா பாதை’

    இதைத் தொடர்ந்து பிடிஆர் விமர்சிக்கப்பட்டு மே 1950ல் மாற்றப்பட்டதுமின்றி கட்சியை அழிவில் தள்ளியதற்காக இடைநீக்கம் செய்யப்பட்டார்: கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை இரண்டே ஆண்டகளில் 90ஆயிரத்திலிருந்து வெறும் ஒன்பதாயிரமாக வீழ்ந்தது. கல்கத்தாவில் தலைமறைவாக நடந்த மத்தியக் குழு கூட்டத்தில் பிடிஆர் மாற்றப்பட்டு சிஆர் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சிஆரும் அவரது சகாக்ககளும், கட்சி அழிவுக்காகப் பிடிஆரைக் கூர்மையாக விமர்சித்துத் தாக்கினர். மிக துரதிருஷ்டவசமாக, பிடிஆரின் ‘ரஷ்யப் பாதை’ தற்போது சிஆரின் கீழ் ‘சீனப் பாதை’ என்றும், ஆந்திரா பாதை என்றும் அறியப்படும் திட்டமாக மாற்றப்பட்டது. ஆயுதக் கிளர்ச்சி, ஆயுதம் தாங்கிய கொரில்லா போராட்டத்தால் மாற்றப்பட்டது. புதிய தலைமை, புதிய மத்தியக் குழு (நியூ CC) ஆனது. இந்தப் பாதையை வகுத்தவர்களில் சிஆர் முக்கியமானவராக இருந்தார்; தனிமைப்படுத்தப்பட்ட நிலைகளில் ஆயுதப் போராட்டம் தொடர்ந்தது – அது ஒரு முட்டாள்தனமான தவறு.

    டாங்கே, காட்டே மற்றும் அஜாய் கோஷ் ஆந்திரா பாதையைக் கூர்மையாக விமர்சித்து, செப்டம்பர் 1950ல் புகழ்பெற்ற தங்கள் ‘3-Pகள் கடித’த்தை வெளியிட்டனர்.  (தலைமறைவு வாழ்க்கையின்போது அவர்கள், ஆங்கில P என்ற எழுத்தில் தொடங்கும் பெயர்களை தங்கள் புனைப் பெயர்களாக வைத்திருந்தனர்; எனவே அவர்களது அந்த அறிக்கை ‘3-Pகள் கடிதம்’ எனப்பட்டது.) தனியாக, பிசி ஜோஷி, ‘வெளிநாட்டுத் தோழர்களுக்குக் கடிதம்’ என்ற அவரது அறிக்கையில் ஆந்திரா பாதையையும் பிடிஆர் பாதையையும் கூர்மையாகத் தாக்கினார். உட்கட்சிப் போராட்டம் கூர்மையடைந்தது, கட்சி முட்டுக்கட்டை நிலையில் வந்து நின்றது. சிபிஐ, சகோதரக் கட்சிகளிடமிருந்து, குறிப்பாகச் சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி(CPSU)யிடமிருந்து, உதவி கோர முடிவு செய்தது.

ஸ்டாலினுடன் சந்திப்பு

    1950ன் இறுதியில், எஸ்ஏ டாங்கே, அஜாய்கோஷ் மற்றும் எம் பசவபுன்னையா அடங்கிய 4 உறுப்பினர் தூதுக் குழுவில் சிஆர் இரகசியமாக மாஸ்கோவுக்குப் பயணம் செய்தார். அதில் பங்கேற்றவர்களால் இப்பயணம் குறித்த விவரங்கள் இன்று வரை இரகசியமாக வைக்கப்- பட்டது, யாருக்கும் எந்த விபரமும் தெரியாது. சிஆரும் பசவபுன்னையாவும் ஆயுதப் போராட்டம் தொடர்வதை ஆதரித்தனர்; டாங்கேயும் அஜாய் கோஷும் அதை எதிர்த்தனர். தூதுக் குழு சுஸ்லோவ், மொலோடோவ், ககனோவிச் முதலான உயர் மட்டத் தலைவர்களையும் 

ஸ்டாலினையும் கூட சந்தித்தது. ஸ்டாலின்-- அவரே கணிசமான அளவு குழுவாதப் போக்கு (செக்டேரியன்) உடையவரே எனினும்-- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் ஆயுதப் போராட்டப் பாதையை மிகக் கடுமையான மொழியில் கண்டித்தார். எப்படி நீங்கள், மக்கள் ஆதரவை இழந்தபோதினும், வலிமைமிகக இந்திய இராணுவத்தை எதிர்க்க நினைத்தீர்கள்? என்று அவர்களிடம் கேட்டார். முதலில் மக்களிடம் திரும்பச் செல்லுங்கள் என்று அவர்களிடம் கூறியவர், நேருவின் அயல் உறவுக் கொள்ளையைப் புகழவும் செய்தார். சிபிஐ தனது பாதையை மாற்றிக் கொள்ள வேண்டியதாயிற்று. 

    பல நாட்கள் நீடித்த விவாதங்களில் சிஆர் தனது கருத்துகளை மிகத் திறமையுடன் எடுத்து வைத்தார்.

கட்சித் தலைமையில் மாற்றம்      

    ஸ்டாலினுடன் நடந்த விவாதங்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தை அதன் வேர் வரை பிடித்து ஆட்டியது. ஏற்கனவே (பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட்டான) ரஜனி பால்மே தத், சீனக் கட்சி மற்றும் பிறர் சிபிஐ-யுடன் தங்கள் அதிருப்தியைத் தெளிவாக்கினர். தோழர்கள் அதற்கு வெகு முன்னதாகவே ஆயுதப் போராட்டத்தின் பயனின்மையை உணர்ந்தனர். 1951 அக்டோபரில் நடந்த கட்சியின் தலைமறைவு மாநாட்டில் சிஆர் மாற்றப்பட்டு அஜாய் கோஷ் பொதுச்செயலாளராக ஆனார். அதே மாதத்தில் ஆயுதப் போராட்டம் விலக்கிக் கொள்ளப்- பட்டது, சிபிஐ பொதுத் தேர்தல்களில் பங்கேற்க முடிவு செய்தது. இதற்கான பெருமை சிஆரையே சாரும், மிக விரைவில் தனது ஆந்திரா பாதையின் தவறை அவர் உணர்ந்தார். விலக்கிக் கொள்வது அவ்வளவு சுலபமான பணியாக இல்லை, தோழர்கள் ஆயுதங்களைக் கைவிடத் தயங்கினர். சிஆர், ரவி நாராயணன் ரெட்டி மற்றும் பிறர் காடுகளில் முகாம் முகாமாக- வும், தலாம் (கொரில்லா படை) தலாமாகவும் சென்று ஆயுதங்களைக் கைவிட வேண்டிய தேவையை விளக்கினர்.

புதிய சூழ்நிலை

    பெருந்திரள் மக்கள் போராட்டங்கள் மற்றும் நாடாளுமன்ற வடிவப் போராட்டங்கள் என்ற புதிய சூழ்நிலைக்கு அனுசரித்துச் செல்வதில் சிஆர் விரைவில் பழக்கிக் கொண்டார். 1956ல் மாநிலச் செயலாளர் ஆகி 1961வரை அப்பொறுப்பில் நீடித்தார். அமிர்தசரஸ் காங்கிரசுக்கு முன்பு 1948 முதல் 1958 வரை, பொலிட் பீரோ உறுப்பினர். 1958 முதல் 1964 வரை மத்திய செயற்குழு உறுப்பினர்.1964 கட்சி பிளவுக்குப் பின் அவர் சிபிஐ பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கட்சி பிளவு, பொதுச் செயலாளராகச் சிஆர்

    கட்சி பிளவால் ஏற்பட்ட நெருக்கடியின்போது சிஆர் முக்கிய பங்காற்றினார். ஒரு காலத்தில் ஆந்திரா (சீனப்) பாதையின் மூலவராக அதை வகுத்தளித்த ஒருவர், மாவோயிசச் சாகசம் மற்றும் பிளவுவாத இசத்திற்கு எதிராகத் தீவிரக் கருத்தியல் தத்துவ, அரசியல் மற்றும அமைப்புநிலை பாதையை அவரே தலைமையேற்று வழிநடத்தினார் எனில், சிஆருக்கே அந்தப் பெருமையெலாம் சேரும்.

   1964ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 7வது கட்சிக் காங்கிரஸ் (பம்பாய்) மாநாட்டில் சி ராஜேஸ்வர ராவ் கட்சியின் பொதுச் செயலாளராகத தேர்ந்தெடுக்கப்பட்டார். அவர் மிகச் சிறப்பாகக் கடசியைத் தலமையேற்று நடத்திச் சென்று, ஒரு போராடும் கட்சியாகப் புகழ் வெளிச்சத்தில் வைத்திருந்தார். தனது உடல் நலமின்மை காரணமாகப் பதவியை ராஜினாமா செய்யும் வரை அவர் அப்பொறுப்பில் 1990வரை செயல்பட்டார். அவர் ஒரு திறமையான பொதுச் செயலாளர், அவரைச் சுற்றியே கட்சி நடவடிக்கைகள் சுழன்றன.

   அவர் பெருந்திரள் மக்கள் தலைவரும் பேராளுமை உடைய அமைப்பாளருமாவார். அவர்தான், ஏஐகேஎஸ் (அகில இந்தியக் கிசான் சபா)விலிருந்து தனியான ஓர் அமைப்பாக பாரதிய கெந்த் மஸ்தூர் யூனியன் (BKMU) கட்டியெழுப்ப உதவினார். 1960கள், 1970களில் நிலங்களைப் பகிர்ந்தளிக்க பெரும் நிலச் சீர்திருத்தப் போராட்டங்களைத் தலைமையேற்று நடத்தினார். தேவை ஏற்பட்டால் அவர் எங்கும் எந்த நேரத்திலும் செல்லக் கூடியவர், தரையிலும் பெஞ்ச்களிலும் படுத்துறங்குபவர், பயணங்களில் வசதிகளற்ற சாதாரணமாகப் பயணிப்பவர். இரயிலுக்கோ பேருந்து நிறுத்தங்களுக்கோ தனது வெறும் படுக்கை விரிப்புக்களைச் சுருட்டி எடுத்துக் கொண்டு நடப்பார். மக்கள் கூட்டத்துடன் எளிதில் ஒன்று கலந்துவிடுபவர். கட்சி அணிகளிடம் எளிமையாகப் பேசி அவர்களது பிரச்சனைகளை அக்கறையுடன் காது கொடுத்துக் கேட்பார். சர்வதேச மாநாடுகளில் இருந்தாலும் சரி, நிலமற்றவர்கள் மத்தியில் இருந்தாலும் சரி, சொந்த வீட்டில் இருப்பதுபோலச் சகஜமாக இருப்பார். கோட்பாட்டு அறிவை வெளிச்சமிட்டு அவர் ஒருபோதும் நடிக்க மாட்டார்; இருந்தாலும் மக்கள் பிரச்சனைகள் அல்லது தேசிய ஜனநாயகம் அல்லது உலகக் கம்யூனிஸ்ட் இயக்கப் பாதை குறித்த விவாதங்களில் அவர் முழுமையாக இயல்பாய்க் கலந்து கொள்வார்.

    அவர் மிகவும் எளிமையானர் மற்றும் தனது பழக்க வழக்கங்களில் சிக்கனமானவர், தன்னலமற்றவர். 

உதியான தேசியவாதி

    சி ராஜேஸ்வர ராவ் விடுதலைப் போராட்டத்தில் தீவிரமாகப் பங்கேற்றவர். 1964 சீன ஆக்கிரமிப்பை உறுதியாக எதிர்த்தவர். 1965 பாக்கிஸ்தானிய ஆக்கிரமிப்பின்போது அவர் எல்லைப் பகுதிகளுக்கு விஜயம் செய்தார், தேசிய ஒற்றுமை, ஒருமைப்பாட்டிற்காக உறுதியாக நின்று நமது ஜவான்கள் மற்றும் மக்களைப் போரிட ஊக்கப்படுத்தினார். பங்களாதேச விடுதலைப் போருடன் ஒருமைப்பாட்டு உணர்வை மக்களிடம் புகுத்தினார்.

எழுத்துப் பணிகள்

    சிஆர் ஆங்கிலத்திலும் தெலுங்கிலும் விரிவாகப் பல நூல்களை எழுதினார். அவரது படைப்புக்களில் சில வருமாறு: இந்திய வேளாண் பிரிவு பிரச்சனைகள்; ஆர்எஸ்எஸ் மற்றும் ஜனசங்(கம்)-- ஒரு தொல்லை; வரலாற்றுப் புகழ்பெற்ற தெலுங்கானா போராட்டம்; லெனின் போதனைகளும் நமது தந்திரோபாயங்களும்; சிபிஐ(எம்) உடன் உரையாடல்; கம்யூனிச ஒற்றுமைக்காகச் சிபிஐ-யின் போராட்டம்; எஸ்வி காட்டே மற்றும் பவானி சென் குறித்த நினைவலைகள்; திப்பு சூல்தான் –உண்மைகளும் கட்டுக்கதைகளும், முதலிய நூல்கள்.

விருதுகள்

    

சிஆருக்கு 1974ல் ஆர்டர் ஆப் லெனின் (USSR) விருது; ஜார்ஜ் டிமிட்ரோ ஆர்டர் (பல்கேரியா) விருது; மக்களுக்கு இடையே நட்புறவு ஆர்டர் (செக்கோலாஸ்வாக்கியா) விருது முதலான பிற விருதுகளும் வழங்கப்பட்டு கௌரவிக்கப்பட்டார்.

நீண்ட காலச் சுவாசப் பிரச்சனை, சிறுநீரக மற்றும் பிற பிரச்சனைகள் காரணமாகச் சி ராஜேஸ்வர ராவ் ஹைதராபாத்தில் 1994 ஏப்ரல் 9ம் நாள் காலமானார். அவருடைய மறைவுக்குக் கட்சி வித்தியாசங்கள் கடந்து பலரும் இரங்கல் தெரிவித்தனர். அரசு மரியாதையுடன் நடந்த அவரது இறுதிச் சடங்குகளின்போது துப்பாக்கி குண்டுகள் வான் நோக்கி ஒரே நேரத்தில் முழங்கப்பட்டன.

சிஆரின் உயிலும் மரண சாசனமும்

    தனது இறுதிநாட்கள் நெருங்குவதை உணர்ந்த சிஆர், 1993 நவம்பர் 6ல் ஐந்து அம்சங்கள் கொண்ட உயில் மற்றும் ஏற்பாடுகள் குறித்து எழுதினார்: தனக்கு வருத்தம் ஏதும் இல்லை, நிறைவான பயனுள்ள முழு வாழ்வை வாழ்ந்தேன்; தனக்கு உதவிய அனைத்துத் தோழர்களுக்கும் நன்றி; உடலைத் தூக்கித் திரிய வேண்டாம், ஹைதராபாத்திலேயே எரியூட்டுங்கள்; தனக்கு எந்தச் சொத்தும் இல்லை, எனவே எதையும் கொடுக்கவும், எடுத்துச் செல்லவும் வேண்டாம்; அனைவருக்கும் நன்றி.

    அந்த உயிலும் ஏற்பாடும் அவருடைய ஆளுமையின் சாரத்தை வெளிப்படுத்துகிறது. அவர் ஆளுமைமிக்க மாபெரும் மனிதர் என்று சொல்வது மிகையன்று-- அந்த வார்த்தைகளின்படியும், நீதி நெறிபடியும் அவர் மாபெரும் ஆளுமைமிக்கப் பேராளர்.

    அதன் இறுதியில் அவர் எழுதினார், “நூல்கள் கட்சிக்கு, உடைகள் தேவை உள்ளவர்களுக்கு”

     – தனக்கென வாழாப் பெருந்தகையாளர்! வாழ்க சிஆர் புகழ்! வாழ்க கம்யூனிஸ்ட் இயக்கம்!

 --நன்றி : நியூஏஜ் (2024, டிச.8 –14)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்

கூடுதல் இணைப்பு  

    அவரைப் பார்த்ததும் முதலில் ஒருவக்கு ஏற்படும் மனப்பதிவு சிஆரின் ‘பேருருவம்’. அவர் பருத்த, உயரமான, கட்டுறுதி உடற்கட்டும் விரிந்த தோள்களும் புடைத்த நெஞ்சுமாக வலுவான சதுர முகவாயுடன் விரிந்தகன்ற பெரியமுகம் உடையவர். நேருக்கு நேர் உங்கள் முகத்தைப் பார்த்து உரத்து மணியோசை குரலில் பேசுவார். அவரது பேருருவத்தைவிட அவரின் இதயம் மிகப் பெரியது.

   எப்போதும் எளிய வாழ்வை மேற்கோள்வார், மிகச் சாதாரண உடை, காலணியை அணிவார். பயன்படுத்தும் உடைகளும்கூட அவர் மனைவி சாவித்திரி அம்மாவிடமிருந்து வந்தவை.

    ஒருமுறை அவர் வரத் தாமதமாக, நான் அவரது அறைக்குள் சென்று பார்த்தேன், அப்போது சிறிது கிழிந்திருந்த தனது வேட்டியைத் தைத்துக் கொண்டிருந்தார். என்னை ஐந்து நிமிடம் காத்திருக்கச் சொன்னார். அவரிடம் சில ஆடைகளே இருந்தன….

  தேவையில்லாமல் ஒருபோதும் பணத்தைச் செலவு செய்ய மாட்டார்: தனது சொந்த செலவுகளுக்காகக் கட்சிப் பணத்தை ஒருபோதும் பயன்படுத்த மாட்டார். வழக்கமாகப் புகைவண்டிப் பயணங்களில் எப்போதும் சாதாரண வகுப்பிலேயே பயணம் செய்வார், சில சந்தர்ப்பங்களில் அரிதாக விமானத்தில் பயணித்துள்ளார்…”.

              (--சிஆர் நூற்றாண்டு விழாபோது தோழர் ஏ பி பரதன் எழுதிய கட்டுரையிலிருந்து) 

Friday, 20 December 2024

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு –119 ஹனுமன் சி்ங் – குஜராத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டியவர்


 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு –119

ஹனுமன் சி்ங் – குஜராத்தில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டியவர்

--அனில் ரஜீம்வாலே

மத்தியப் பிரதேசம், இந்தூரில் 1916 டிசம்பர் 12ல் ஹனுமன் சி்ங் பிறந்தார். அவரது முன்னோர்கள் உபி பிரதாப்கர்க் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். தந்தை பஜ்ரங் தள், இந்தூர் சிறையில் பாதுகாப்பு அதிகாரியாகப் பணியாற்றினார். அவரது தாயின் சகோதரியும் அதே சிறையில் பாதுகாப்பு அதிகாரி. பணியின் காரணமாக, குடும்பம் இந்தூருக்கு மாறியது. அவர் பிறந்த உடன் அவரது தாயார் இறந்து விட்டார். எனவே தாயாரின் சகோதரியின் கவனிப்பில் வளர்ந்தார். இன்டர்மீடியட் தேர்வில் ஆங்கிலம் மற்றும் கணிதத்தில் சிறந்து விளங்கி நல்ல மதிப்பெண்கள் பெற்றார். 

    பிரதாப்கர்கின் பத்டி கிராமத்தைச் சேர்ந்த பூல்மதி என்பரை மணந்தார். நிதி நிலை காரணமாகப் படிப்பை விட்டுவிட்டு வேலை தேட வேண்டியதாயிற்று. இந்தூர் சமாச்சார் இந்தி செய்தி பத்திரிக்கையில் பணியாற்றினார். பெயர் இல்லாமல் தலையங்கமும்கூட அவர் எழுத வேண்டியிருந்தது. அந்நாட்களில் இந்தூர் ஹோல்கர்களால் ஆளப்படும் சமஸ்தான அரசு. ஆள்வோருக்கு எதிராக எதுவும் பிரசுரிக்க முடியாத நிலை. சூழ்நிலை முழுவதும் ஹனுமன் சிங்குக்கு மூச்சுத் திணறுவதாக இருந்தது,  பத்திரிக்கை பணியிலிருந்து விலகினார்.  

தொழிற்சங்க இயக்கத்தில்

          டெக்ஸ்டைல் தொழிலின் முக்கிய மையமான இந்தூரில் இருந்த 4 ஆலைகளில் ஒவ்வொன்றிலும் 4ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றினர். ஒரு மஸ்தூர் மண்டல் (தொழிலாளர் அமைப்பு) ஜீஜீபாய் என்பவரால் நடத்தப்பட்டது. இந்தூரில் அந்த நாட்களில் சங்கங்கள் நடத்துவது அவ்வளவுச் சுலபமல்ல. இச்சங்கத் தலைவர்கள் கைது செய்யப்பட்டபோது ஒருமைப்பாட்டு ஆதரவு கண்டன ஆர்ப்பாட்டங்களும், தொழிலாளர்களின் வேலைநிறுத்தமும் நடத்தப்பட்டன. போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் ஒரு தொழிலாளி கொல்லப்பட்டார்.

1942 இயக்கம்

       ஆகஸ்ட் 1942ல் தொடங்கப்பட்ட வெள்ளையனே வெளியேறு இயக்கம் விரைவில் நாட்டில் கொழுந்துவிட்டு எரிந்தது. பெருந்திரள் ஆர்ப்பாட்டங்கள், வேலை நிறுத்தங்கள், பேரணிகள் தினசரி நிகழ்வானது. இது தவிர, ஒரு பிரிவு மக்கள் ரயில் தண்டவாளங்கள், தந்தி கம்பங்களைப் பெயர்த்துத் தொலைபேசி கம்பிகளைத் துண்டிக்கவும் தொடங்கினர். இந்தூரிலும் பிரிட்டிஷ் அரசுக்கு எதிராகப் போராட்டங்கள் தீவிரமானது. ஆட்சித் தலைவர் அலுவலகக் கட்டடத்தில் குண்டு வைக்க அவர்கள் முடிவு செய்தனர், ஆனால் குண்டு கலெக்டர் கார் அருகே அவரது காலருகே வெடித்தது. உடனடியாகப் போலீசார் உஷார் ஆனார்கள். விடுதலைப் போராட்ட வீரர்கள், புரட்சியாளர்கள் பலரைக் கைது செய்ய அரசு உத்தரவிட்டது. ஏற்கனவே தேடப்படுவோர் பட்டியலில் இருந்த. ஹனுமன் சிங், போலீஸ் வலையிலிருந்து தப்பி இந்தூரை விட்டு நாக்பூர் சென்றார்.

   நாக்பூரில் பகதூர் சிங் என்ற பெயரை வைத்துக் கொண்டார், ஓர் ஆலையின் நெசவு இலாக்காவில் சிறு பணியை அவர் மேற்கொண்டார். வேலையில் மனம் செல்லவில்லை. தொழிலாளர்களுடன் ஒன்று கலந்து பழகி, அவர்களை அமைப்பாக ஒன்று திரட்டி தலைமை ஏற்று, கோரிக்கை மனுவையும் தயாரித்து விட்டார். சமரசத் தீர்வு தோற்க, ஒரு வேலை நிறுத்தத்திற்குத் தலைமையேற்றார். இந்தூர் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்பு உடைய ஒருவர் நாக்பூர் வந்திருப்பதாகச் சந்தேகித்த போலீசார், தேடத் தொடங்கினர். நாக்பூரில் டெக்ஸ்டைல் தொழிலாளர் வேலைநிறுத்தம் நடக்கவே, ஹனுமன் சிங் மீதான சந்தேகம் வலுத்தது. ஆனால் போலீஸ் பிடிப்பதற்கு முன் அவர் தப்பிவிட்டார். பாம்பேயில் தென்பட்டவர் பிறகு குஜராத் கட்ச் பகுதிக்கு மாறினார்.

   எனினும் கட்ச், தொழிலாளர் இயக்கத்திற்குப் பொருத்தமான இடம் அல்ல. எனவே அவர் 1944 –45ல் அகமதாபாத் மாறிச் சென்றார். அங்கு அகமதாபாத் சமன்புரா பகுதியில் உபி, மபி மற்றும் இராஜஸ்தானிலிருந்து வந்த ஏராளமான தொழிலாளர்கள் இருந்தனர். இந்தூரைச் சேர்ந்த அத்தார் சிங் அவரை அடையாள கண்டு பிடித்தார். அவர்தான் நாக்பூரில் ஹனுமன் சிங்க்கு நெசவைக் கற்றுத் தந்தவர். ஹனுமனன் சிங்கைத் தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார், சாரங்பூர் ஆலையில் ஒரு வேலை கிடைத்தது. 8 மணிநேர வேலைக்குப் பிறகு தொழிலாளர் மத்தியில் பழகி, அவர்களை ஒன்று திரட்டி அவர்கள் மத்தியில் அரசியல் உணர்வூட்டினார். சமன்புராவில் வசித்து, பத்து கிமீ தள்ளி ஒரு மில்லில் பணியாற்றினார். தொழிற்சங்க இயக்கத்தில் கடுமையாக வேலைசெய்து புகழ்பெற்ற தலைவரானார். பின்னர் அவரது குடும்பமும் அகமதாபாத் வந்தது, மனைவி அவருடன் தங்கினார்.

பிடிஆர் காலத்தின்போது

    1948 –50 காலகட்டத்தின்போது, பிடி ரணதிவே தலைமையின் கீழ் கட்சி சுய தோல்வி தேடும் சாகசப் பாதையை மேற்கொண்டது; ‘பிடிஆர் லைன்’ என அறியப்படும் அப்பாதை கம்யூனிஸ்ட் இயக்கத்தை, இந்திய அரசியலின் முக்கிய நீரோட்டத்திலிருந்து முற்றாகத் தனிமைபடுத்தி, மிகக் கடுமையாகப் பாதித்தது. இப்பாதை 1948ல் நடந்த சிபிஐ இரண்டாவது கட்சிக் காங்கிரஸில் நிறைவேற்றப்பட்டது. இப்பாதையை அமல்படுத்தும் வகையில் பிடிஆர், –புரட்சி நிகழும் என எதிர்பார்த்து-- இரயில்வே மற்றும் பிற தொழிலாளர்களைக் காலவரையற்ற வேலை நிறுத்தம் செய்ய 1949 மார்ச்சில் அறைகூவல் விடுத்தார். குஜராத்தில் வேலைநிறுத்தத்திற்கு கட்சியும் தயாரானது; மாறாக, சாகசத் துணிச்சல் காரணமாக வேலைநிறுத்தம் மோசமான தோல்வியில் முடிந்தது. முன்னிலை வரிசை தலைவரான ஹனுமன் சிங் உட்பட பல தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

  ஏராளமான கம்யூனிஸ்ட்கள் அடைக்கப்பட்டிருந்த சபர்மதி மத்திய சிறைக்கு அவர்கள் அனுப்பப்பட்டார்கள். சிறையில் அவர்கள் வகுப்புகள், விவாதங்கள் நடத்துவது வழக்கம். பெரும் எண்ணிக்கையில் ஒன்றாக வைக்கப்பட்டு இருப்பதை அவர்கள் சாதகமாக எடுத்துக் கொள்கின்றனர் என்று எண்ணிய சிறை அதிகாரிகள் வெவ்வேறு சிறைகளில் அடைக்க முடிவு செய்தனர். அந்நேரத்தில், சிறையில் உள்ள தோழர்களுக்குப் பல்வேறு விஷயங்களில், உயிர்த் தியாகம் செய்ய நேரிட்டாலும், அதிகாரிகளுடன் மோதல் போக்கைக் கடைபிடிக்க கட்சி உத்தரவிட்டது. அது, சிறையில் கிடைக்கக் கூடிய எந்தப் பொருளானாலும், உணவுத் தட்டோ, தண்ணீர் ஜெக்கோ எது கையில் கிடைக்கிறதோ அதைக் கொண்டு போலீஸ் மற்றும் வார்டன்களுக்கு எதிரான ‘வர்க்கப் போராட்டத்தை’ நடத்தும் ஒரு வடிவம்!

  அந்த வகையில் சிறை மாற்றல் நடவடிக்கையை எதிர்க்க தோழர்கள் முடிவு செய்தனர். சிறையில் கட்சி கமிட்டி செயலாளர் ஜெயந்தி பரேக், கட்சியின் சாகசப் பாதையை எதிர்த்தார். எனினும் கட்சி செயலாளர் என்ற வகையில் அதை அமலாக்க முடிவு செய்தார். கட்சிக் கூட்டத்தில், கட்சி லைனை எதிர்க்கும் தோழர்கள் பிற முகாம்களுக்குச் செல்லும்படி அவர் கேட்டுக் கொண்டார். பலர் அப்படி விலகிச் சென்றனர்.

  1949 ஆகஸ்ட் 13 நள்ளிரவு முகாமிற்குள் நுழைந்த போலீசார் பிற சிறைகளுக்கு மாற்ற கட்டாயப்படுத்தினர். எதிர்ப்புக் கிளம்பியது அவர்கள் சிறைவாசிகளை அடிக்கத் தொடங்கினர். தோழர்கள் மிளகுப் பொடி மற்றும் எரியும் விறகுடன் தயாராக இருந்தனர். கையில் கிடைத்ததைக் கொண்டு அவர்கள் போலீசைத் தாக்கினர். ஜெயந்தி பரேக் மற்றும் ஜம்னா தாஸ் மோடி அதே இடத்தில் சுடப்பட்டு கொல்லப்பட்டனர். கடும் தாக்குதலுக்கு ஆளான ஹனுமன் சிங் இரு கைளும் முறிந்தன. ஒரு தோட்டா அவரது முதுகெலும்பை உராய்நது சென்றது. அவர்கள் மீது வழக்குகள் பதியப்பட்டன. வழக்கறிஞர் டிஎம் சந்த் மற்றும் வழக்கறிஞர் தாகோர் கொடிவாலா அவர்கள் வழக்கை எடுத்து நடத்தினர். மற்றவர்களுடன் ஹனுமன் சிங்கும் சிறை தண்டனை விதிக்கப்பட்டார். முதலில்  சபர்மதியிலும், பின்பு பரோடா சிறையிலும் அவர் அடைக்கப்பட்டார். சிறையில் அவரும் மேனாள் எம்பி ஏஷன் ஜாஃப்ரி (Ehsan Jaffri)யும் இருந்தார். ஜாஃப்ரி தனது நினைவு குறிப்பு நூலில் சிறையில் ஹனுமன் சிங் பிரசித்தியானவராக இருந்தார் எனக் குறிப்பிட்டுள்ளார். 

சிறையிலிருந்து விடுதலை 

  சிறை வாழ்வு ஹனுமன் சிங்கின் உடல்நிலையைக் கடுமையாகப் பாதித்தது. நோயால் பாதிக்கப்பட்டது மட்டுமின்றி அவரால் நேராக உட்காரக்கூட முடியவில்லை. சில காலத்திற்குப் பிறகு மில்களில் ஒரு வேலை தேடினார்; ஆனால் அவர் நன்கு அறியப்பட்ட கம்யூனிஸ்ட் மற்றும் தொழிற்சங்கத் தலைவராக இருந்ததால், யாரும் அவருக்கு வேலை தர தயாராக இல்லை. பின்பு மாதம் ரூ60 ஊதியத்தில் கட்சியின் முழுநேர ஊழியரானார்.

மாநிலக் கட்சி ப்ளீனம்

 1950ன் நடுப்பகுதியில் சிபிஐ தனது சாகசப் பாதையைக் கைவிட்டு, எதார்த்தமான நிலைபாடுகளை மேற்கொண்டது. இது தொடர்பாக நாடு முழுவதும் மாநில அல்லது மண்டல மட்டத்திலான கட்சிப் ப்ளீனம் கூட்டங்களைக் கூட்டியது. குஜராத் ப்ளீனம் 1951, ஜனவரி 13,14,15 தேதிகளில் கட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் ஐந்து உறுப்பினர்கள் கொண்ட மாகாண அமைப்புக் குழு (POC) தேர்ந்தெடுக்கப்பட்டது. அதில் ஹனுமன் சிங் இரண்டாவது இடம் பெற்றார். POCன் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சந்திரகாந்த் ஆஸாத் பரோடாவில் வசித்து வந்தார். எனவே, நடைமுறையில் ஹனுமன் சிங் மாகாணக் குழுவின் பணிகளைக் கவனித்து வந்தார்.

1952 தேர்தல்கள்

  குஜராத் கட்சி அன்றைய பம்பாய் சட்டமன்றத்திற்கு நடந்த 1952 தேர்தல்களில் 4  இடங்களுக்கு, ஹனுமன் சிங் சமன்புரா, திங்கர் மேத்தா ஷஹக்பூர் மற்றும் மகான் பட்டேல் மணிநகர் தொகுதியிலிருந்தும் போட்டியிட முடிவு செய்தது. ஓர் இடத்திலும் வெற்றி பெறாத போதும், பெருந்திரள் மக்கள் பிரச்சாரம் மூலம் தனக்கென ஒரு தவிர்க்க முடியாத தோற்றத்தை உருவாக்கியது. ஹனுமன் சிங்கின் முக்கிய பணி தொழிற்சங்க அரங்கம், பணி மையம் அகமதாபாத். கட்சி மற்றும் தொழிற்சங்கத்தின் நிலை அந்நேரத்தில் மோசமாக இருந்ததால் அவர் கடுமையாக உழைக்கவும் கட்சிப் பணிகளுக்குப் பொறுப்பேற்கவும் வேண்டியிருந்தது. அவர் உடல் நலன் மீண்டும் பாதிப்படைந்தது.

மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைப்பு

    சுதந்திரத்திற்கு முன்பேகூட காங்கிரஸ் மொழிவாரி மாநிலங்களாக நாட்டை மறுசீரமைக்கக் கொள்கைரீதியாக ஒப்புக் கொண்டது. சிபிஐ போன்ற கட்சிகளும்கூட இக்கொள்கையை ஆதரித்தன, அதைச் சாதிக்கப் போராட்டங்கள் நடத்தின. 1946 தேர்தல் பிரச்சாரத்திலும் இது ஒரு பிரச்சனையாக இருந்தது. சுதந்திரத்திற்குப் பிறகு அக்கோரிக்கை வேகமெடுத்தது. மொழிவாரி மாநிலங்கள் மறுசீரமைப்புக் கமிட்டி குஜராத் மாநிலம் அமைக்க சிபார்சு செய்தது; ஆனால் அரசு மக்களிடம் ஆலோசிக்காமல் குஜராத்தை இருமொழி பம்பாய் மாநிலத்தின் ஒரு பகுதியாக்கியது.

  மாணவர்கள் குழு  குஜராத் மையத்தில் அமைந்த காங்கிரஸ் இல்லத்தில் காங்கிரஸ் தலைவர்களை 1956 ஆகஸ்டில் சந்தித்தது. மாணவர்கள் இருமொழி மாநிலம் அமைப்பதை எதிர்த்தனர். காங்கிரஸ் தலைவர்கள் சந்திக்க மறுக்க, நிலைமை பதற்றமானது. இறுதியில் அது மாணவர்கள் மீது துப்பாக்கிச் சூட்டில் முடிந்து, பல மாணவர்கள் கொல்லப்பட்டனர். துப்பாக்கிச் சூட்டையும் மாணவர்கள் கொல்லப்பட்டதையும் கடுமையாகக் கண்டித்தது சிபிஐ. மாணவர்களின் உடல்கள் மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்பட்டபோது சிபிஐ உறுப்பினர்கள் போலீஸ் துப்பாக்கிச் சூட்டைக் கண்டித்து ஹனுமன் சிங் தலைமையில் பேரணி

மற்றும் கூட்டம் நடத்தியது. போலீஸ் ஹனுமன் சிங்கைக் கைது செய்தது. துப்பாக்கி மற்றும் தோட்டக்களைப் போலீஸ் ‘மிக முறையாகவும் சட்டப்படியும்’ பயன்படுத்தியதாகக் கூறிய முதலமைச்சர் மொரார்ஜி தேசாய் துப்பாக்கிச் சூட்டை நியாயப்படுத்தினார். போலீஸ் ‘தற்காத்துக் கொள்வதற்கே’ அப்படி நடந்து கொண்டதாக அவர் சட்டமன்றத்தில் கூறினார்! மகாகுஜராத் வித்யார்த்தி சமிதி என்ற முக்கியமான மாணவர் அமைப்பு இந்தப் போராட்டத்தால் பாதிக்கப்பட்டது. 
மகாகுஜராத் ஜனதா பரிஷத்

தனியான குஜராத் மாநிலம் அமைப்பதற்காகப் போராடிய மகாகுஜராத் ஜனதா பரிஷத் என்ற பெருந்திரள் மக்கள் அமைப்பு 1948ல் அமைக்கப்பட்டது. இந்துலால் யாக்னிக் என்ற சந்தேகத்திற்கு இடமில்லாத பெருந்தலைவர், அந்த அமைப்பின் தலைவர். அவர் கம்யூனிஸ்ட்களுக்கு நெருக்கமாக இருந்தார். இப்போராட்ட இயக்கத்தில் ஹனுமன் சிங் முக்கிய பங்காற்றினார். போராட்டம் வெற்றி அடைந்து குஜராத் மாநிலம் 1960 மே 1ம் நாள் உதயமானது. மாநிலம் அமைக்கப்பட்ட பிறகு பெரும்பாலான பிற தலைவர்கள் பரிஷத் அமைப்பைக் கலைக்க முடிவு செய்தனர். அது கலைக்கப்படுவதற்கு எதிராக இருந்தார் ஹனுமன் சிங்.

1962 சீன ஆக்கிரமிப்பு

  1962ல் இந்தியா மீது சீனா தாக்குதல் நடத்தியது. கட்சியின் கொள்கையை விளக்குவதில் ஹனுமன் சிங் தீவிரமாக ஈடுபட்டார். சீனாவின் ஆக்கிரமிப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி விமர்சித்தது. இருந்த போதிலும் ஹனுமன் சிங் கைது செய்யப்பட்டார். தொழிலாளர்கள் இயக்கச் செயல்பாடு உச்சத்தில் இருந்த நேரமது, ஹனுமன் சிங் அதன் தலைவராக இருந்தார்.

1964, கட்சி பிளவு

  இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி 1964ல் இரண்டாகப் பிளவுபட்டது. இது சிபிஐ அமைப்புக்குள் கடும் நெருக்கடியை ஏற்படுத்தி அதன் பணிகளைச் சீர்குலைத்தது. கட்சியை மீண்டும் புனரமைக்கவும், புதிய செயற்குழுவை அமைக்கவும் வேண்டியதாயிற்று. உயர் மட்ட தலைமை பொறுப்பில் இருக்க அவர் விரும்பாவிட்டாலும் ஹனுமன் சிங் கட்சியின் புதிய செயலகத்தில் இணைய வேண்டியதாயிற்று.

அகமதாபாத்தில் தொழிலாளர்கள் போராட்டம்

    கமதாபாத் சுதேசி மில் அருகே சௌமுண்டா சௌக் பகுதியில் 1964 ஆகஸ்ட் 4ல் அனைத்து மில்களைச் சேர்ந்த தொழிலாளர்களின் மாபெரும் கூட்டம் நடைபெற்றது. அவர் கூட்டத்தில் பேசிக் கொண்டிருந்தபோது செய்தி எடுத்து வந்தவர் அவரை அணுகி அவரது இளைய மகன் திடீரென்று இறந்துவிட்டதாக மெல்ல அவரிடம் கூறினார். ஹனுமன் சிங் அமைதியாக, ‘அவனது இறந்த உடலைச் சௌமுண்டா சுடுகாட்டிற்கு எடுத்துவரச்’ சொன்னார். பிறகு அவர் தொடர்ந்து உரையாற்றினார். உரையாற்றி முடித்த பிறகு அவர் அமைதியாக எரியூட்டும் இடத்திற்குச் சென்று இறுதிச் சடங்குகள் அனைத்தையும் முடித்துத் திரும்பினார்.

  மக்கள் அவர் எங்கே என்று காத்திருந்தனர். விவரங்களை அறிந்த இந்துலால் யாக்னிக் அதிர்ச்சி அடைந்தார். ஹனுமன் சிங்iகக் கண்டித்து, “நீங்கள் எங்களிடம் சொல்லி இருக்க வேண்டும், நாங்கள் அனைவரும் உங்களுடன் வந்திருப்போம்” என்றார். ஹனுமன் சிங். “என் மகன் திரும்பி வரப் போவதில்லை, அதற்காகப் பல மகன்கள் ஏன் துன்பப்பட வேண்டும்?” என்று பதில் கூறினார். அந்தப் பதிலைக் கேட்டு ஒவ்வொருவரும் அதிர்ச்சி அடைந்தனர்.

     ஆலைத் தொழிலாளர் வர்க்கத்தின் போராட்டங்கள் பல நடந்து கொண்டிருந்தன, ஹனுமன் சிங் அவர்கள் மத்தியில் முன்னணித் தலைவராக இருந்தார். சங்கத்தின் பொதுச் செயலாளர் அவர். பெரிதும் மதிக்கப்பட்ட அவரை ஒவ்வொருவரும் ‘சச்சா’ (மாமா ) என்று அழைத்தனர். அப்போது கிராக்கிப் படியை (டிஏ) உயர்த்தக் கோரி மாநிலம் முழுதும் நடந்த போராட்டம், நீண்ட காலம் நீடித்தது.

  1964 --65ல் அவரது கைது அவரின் உடல்நலம் மோசமாகக் காரணமானது. அவர் அடையாளம் காண முடியாதபடி உடல் உருக்குலைந்தார். ஆனால் ஓய்வெடுக்க மறுத்து விட்டார். 1964ல் அகமதாபாத் கார்ப்பரேஷனுக்குத் தேர்தல் நடந்தது. 1956 –57 மற்றும்1962 தேர்தல்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சிறப்பாகச் செயல்பட்டிருந்தது. இம்முறை ஹனுமன் சிங்கை வேட்பாளராக நிறுத்த கட்சி முடிவு செய்தது. அகமதாபாத் முனிசிபல் கார்ப்பரேஷனுக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். மகாகுஜராத் ஜனதா பரிஷத் பெரும்பான்மை பெற்றது. ஆனால் அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்தது.

      மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு வயிற்றுப் புண் (அல்சர்) அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது, ஆனால் பெரிய முன்னேற்றம் இல்லை. கார்ப்பரேஷன் கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. கூட்டத்தில் பங்கேற்காது போனால் உறுப்பினர் பதவியை இழக்க நேரிடும். எனவே, ஸ்டிரச்சர் மீது படுத்தபடி வந்து கூட்டங்களில் கலந்து கொள்வது வழக்கம்! சிகிச்சைக்காக அவரை மாஸ்கோ அனுப்பி வைக்க கட்சி முடிவு செய்தது. எழுச்சிமிக்க முழக்கங்களுக்கு மத்தியில் ஆயிரக்கணக்கான மக்கள் அகமதாபாத் இரயில் நிலையத்தில் அவரை வழிஅனுப்பி வைத்தனர். இது 1965ல் நடந்தது. 

மாஸ்கோ நகரில்

    ஹனுமன் சிங்குக்கு மாஸ்கோவில் தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டது. எனினும் அவர் நோயிலிருந்து மீண்டு வரவில்லை. 1966 செப்டம்பர் 24ம் நாள் அவர் காலமானார். அவர் இறந்த செய்தி அகமதாபாத்தை அடைந்ததும் தன்னெழுச்சியாகத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். மாஸ்கோவிலிருந்து அவரது அஸ்தி கொண்டுவரப்பட்டபோது மீண்டும் தொழிலாளர்கள் பேரணியாகத் திரண்டுவர, அவரது அஸ்தி சபர்மதி ஆற்றில் கரைக்கப்பட்டது. அகமதாபாத் கார்ப்பரேஷன், சமன்புரா முதல் ஓம் நகர் வரையுள்ள சாலைக்கு அனுமன் சிங் மார்க் எனப் பெயரிட்டது.

    குஜராத் கம்யூனிஸட் கட்சி இயக்க வரலாற்றில் ஹனுமன் சிங் தனித்துவமான இடத்தைப் பெற்று விளங்குகிறார்.

      (கட்டுரையில் இடம் பெற்ற தகவல்களைத் தந்து உதவியதற்காகக் குஜராத் சிபிஐ கட்சியின் ராம்சாகர் சிங் பரிக்கர் அவர்களுக்கு இக்கட்டுரை ஆசிரியர் பெரிதும் கடப்பாடுடையதாக நன்றி பாராட்டுகிறார்)

--நன்றி: நியூஏஜ் (2024, நவ.24 –30)

 --தமிழில் : நீலகண்டன், என்எப்டிஇ, கடலூர்


Wednesday, 11 December 2024

போபால் விஷவாயு துயரத்தின் 40வது ஆண்டு --டிசம்பர் 3

போபால் விஷவாயு துயரத்தின் 40வது ஆண்டு 

பாதிக்கப்பட்டவர்களுக்குச் சேர வேண்டிய
இழப்பீடு இன்னும் மறுக்கப்படுகிறது

--L S ஹெர்டினியா


    2024 டிசம்பர் 3 போபால் விஷவாயு பெருந்துயரின் 40வது ஆண்டு. அந்த நாளில் (1984, டிசம்பர் 3) போபால் நகரின் வெளியே அமைந்த பூச்சி மருந்து உற்பத்தி செய்த அமெரிக்கப் பன்னாட்டு நிறுவனம், யூனியன் கார்பைடு கார்ப்பரேஷன் ஆலை கக்கிய மெதில் ஐசோ சைனைடு இரசாயன வாயு ஆயிரக் கணக்கானவர்- களைக் கொன்று குவித்து, இலட்சக் கணக்கான மக்களை உடல் ஊனமுற்றவர்களாக்கியது.

        நகரின் நச்சு வாயு பாதித்தவர்களுக்குக் கடந்த நாற்பது ஆண்டுகளும் வாழ்க்கை ஏற்ற இறக்கம் நிறைந்ததாக, பல நேரங்களில் இறக்கமே கூடுதலாக அமைந்து கடந்தன. துயரம் முடிவுக்கு வருவது தள்ளிப்போய்க் கொண்டிருந்தது. 

அவர்களது ஏமாற்றங்களின் பட்டியல் முடிவற்று நீண்டது. செயல்படாத ஆலை வளாகத்தில் குவித்து வைக்கப்பட்ட ரசாயனக் கழிவுகள் அழிக்கப்படுமென அவர்கள் பெரிதும் எதிர்பார்த்தனர். நகரின் மீது மரணங்களை மழையாய்ப் பொழிந்த குற்றத்திற்குக் காரணமானவர்கள் கடுமையாகத் தண்டிக்கப்படுவர் என்ற நம்பிக்கை இருந்தது. விஷவாயு பாதிக்கப்பட்டவர்களுக்காக அர்ப்பணிக்கப்பட்ட,பின்னர் இந்திய அரசால் எடுத்துக்கொள்ளப்பட்ட, BMHRC (போபால் நினைவு மருத்துவமனை மற்றும் ஆராய்ச்சி மையம்) மருத்துவமனை செயல்பாடுகளில் பெரிய முன்னேற்றங்கள் ஏற்படும் என்ற நம்பிக்கையும் இருந்தது. விஷவாயுவால் பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூடுதல் உயர் நட்டஈடு கிடைக்கும் என்பது மேலும், ஒரு நம்பிக்கை.

ஆனால் அனைத்து நம்பிக்கைகளும் நிறைவேற்றப்படாத ஏமாற்றமே நீடிக்கிறது. இரசாயனக் கழிவு கொட்டப்பட்ட இடத்தில் அப்படியே கிடக்க, விஷவாயு பேரழிவின் குற்றவாளிகள் அற்ப தண்டனையுடன் தப்பியது மட்டுமல்ல, அத்தண்டனையும்கூட அமல்படுத்தப்படவில்லை; மற்றும் BMHRC மருத்துவமனை, அதிலிருந்து சிறந்த முன்னணி மருத்துவர்கள் தொடர்ந்து வெளியேறியதைப் பார்த்தது.

பாதிக்கப்பட்டவர்களுக்குக் கூடுதல் இழப்பீடு கோரிய மேல்முறையீட்டு மனுகள் தள்ளுபடியான நிலையில், ஒன்றிய அரசால் தாக்கல் செய்யபட்ட சீராய்வு மனுவையும் (க்யூரேடிவ் பெட்டிஷன், பாதிக்கப்பட்ட தரப்பிற்கு வழங்கப்பட்ட இறுதி வாய்ப்பு) 2023 மார்ச் 14ல் உச்சநீதி மன்றம் தள்ளுபடி செய்தது.

க்யூரேட்டிவ் மனு பெருந்துயரின் 26 ஆண்டுக்குப் பிறகு, அதாவது இழப்பீட்டுத் தீர்வுக்குப் பிறகு, 2010 டிசம்பரில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு, தற்போது டௌவ் கெமிகல்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான யூனியன் கார்பைடு கார்ப்ரேஷனிட- மிருந்து கூடுதல் நிதியாக 7,400 கோடிக்கு மேல் கோரியது.

(சர்வதேசச் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக சேவை தன்னார்வ அமைப்பான) கீரின்பீஸ் மற்றும் பல்வேறு இந்திய, வெளிநாட்டு முகமைகள் யூனியன் கார்பைடு ஆலையின் உள்ளும் புறமும் சுற்றியுள்ள பகுதிகளி- லிருந்து மண், நிலத்தடிநீர், கிணற்று நீர் மற்றும் காய்கறி முதலியவற்றின் மாதிரிகளைச் சேகரித்து நடத்திய ஆய்வில், (இரும்பு, தாமிரம், மெக்னீஷியம் போன்ற உடலுக்குத் தேவையான சத்துகள் எனினும் குறிப்பிட்ட அளவிற்கு மேல் அவையே உயிருக்கு விஷமாக மாறும் தன்மையுள்ள ஹெவி மெட்டல் என்றழைக்கப்படும்) கன உலோகங்கள் மற்றும் இரசாயனக் கூட்டுப்பொருள்கள் அதிக அளவில் கலந்து அபாயகரமான தீங்கிழைக்கும் வகையில் மாசுபடுத்தியதைக் காட்டுகிறது.
     மண் மாதிரிகளில் நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, மண்மாதிரியில் பாதுகாப்பு அளவைவிட 6ஆயிரம் மடங்கு கூடுதலாகப் பாதரசம் (மெர்க்குரி) இரசாயனத் தனிமம் செறிவாக உள்ளதைக் கண்டறிந்தது! அப்பகுதியில் 100கும் அதிகமான ஆழ்துளைக் கிணறுகளின் நீர் மனித நுகர்வுக்கு அருகதை அற்றது எனப் பிரகடனப்படுத்தியது. அப்பகுதியின் மண், நீர், தாவரங்களை மெல்ல விஷமாக்கியது யூனியன் கார்பைடு ஆலை வளாகத்தில் குவிக்கப்பட்ட 350 மெட்ரிக் டன் இரசாயன நச்சுக் கழிவுகள். அக்கழிவு மண்ணுக்குள் ஊடுருவி பிறகு கடந்த 40 ஆண்டுகளில் படுக்கை வாட்டத்தில் எங்கும் பரவியது. கழிவை அகற்ற எடுக்கப்பட்ட எல்லா முயற்சிகளும் தோல்வி அடைந்தன.
           விஷவாயு துயரை விளைவித்த குற்றவாளிகளுக்கு அளிக்கப்- பட்ட தண்டனையைப் பொருத்த வரை, 15 ஆண்டுக்கு மேல் நீடித்தச் சட்டப் போராட்டத்திற்கு பிறகு, யூனியன் கார்பைடு கார்ப்ரேஷன் இந்தியா நிறுவனத் தலைவர் கேஷப் மகேந்திரா மற்றும் 7 பேர் ‘அலட்சியத்தால் மரணத்தை ஏற்படுத்திய’தற்காகக் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர்; போபால் நீதிமன்றம் அவர்களுக்கு 2 ஆண்டுகள் சிறைதண்டனை விதித்தது! எனினும் சில மணி நேரத்தில் அவர்கள் பிணையில் வெளியே வந்தனர். அது நிகழ்ந்தது ஜூன் 2010.

      ஆகஸ்ட் 2010ல் இவ்வழக்கின் ப்ராசிக்யூடிவ் தரப்பு முகமை CBI தாக்கல் செய்த க்யூரேடிவ் மனுவை உச்சநீதிமன்றம் அனுமதித்த போது, நம்பிக்கைகள் மீண்டும் துளிர்விட்டன; ஏனெனில், க்யூரேடிவ் மனு என்பது, உச்சநீதிமன்றம் தான் வழங்கிய தனது தீர்ப்பை மீண்டும் பரிசீலனைக்கு உட்படுத்தச் சம்மதிப்பதாகும். 1996 தீர்ப்பு குற்றவாளிகள் மீதான ‘கொலையில் முடியாத கொலைக் குற்றம்’ (‘culpable homicide not amounting to murder’, அதற்கு 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கலாம்) என்பதிலிருந்து ‘அலட்சியம் காரணமாக மரணத்தை விளைவிப்பது’ என்பதாகக் குற்றச்சாட்டின் வீரியத்தை நீர்த்துப்போகச் செய்தது; அதன் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்ட குற்றவாளிக்கு அதிகபட்சம் 2 ஆண்டுகள் சிறை தண்டனை மட்டுமே விதிக்க முடியும்.

      எனினும் விஷ வாயு பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களின் அமைப்புகளுக்கு மிகப் பெரும் அதிர்ச்சியாக உச்சநீதி மன்றம் 2011 மே 11ல் அந்த மனுவைத் தூக்கி எறிந்தது.

    உலகின் தொழிற்சாலைகளில் நிகழ்ந்த பேரழிவுகளின் தலைமை வில்லனான, யூனியன் கார்பைடின் அன்றைய தலைவர், வாரன் ஆன்டர்சன் அந்நிறுவனத்திலிருந்து அமெரிக்காவில் மிக அமைதியான ஓய்வுகாலத்தை அனுபவித்த பிறகு, நியூயார்க் மருத்துவமனை ஒன்றில் 2013 செப்டம்பரில் தனது 92வது வயதில் இறந்தார். ஒருபோதும் விசாரணையை அவர் சந்திக்கவில்லை, அவரை நாட்டிலிருந்து வெளியேற்றி இங்கு கொண்டு வர வேண்டும் என்ற

முறையீடுகள் இந்திய அரசால் தீவிரமாக எடுத்துக் கொள்ளப்படவில்லை. 2002ம் ஆண்டில் அப்போதே, “வெளிநாட்டில் இந்தியா” (இந்தியா அப்ராடு) என்ற இதழின் பத்திரிக்கையாளர் சக்தி பட், அதிகச் சிரமமின்றி, நியூயார்க்கில் ஆன்டர்சன் இல்லத்தைக் கண்டறிந்தார். அதே நேரத்தில்தான், இந்திய, அமெரிக்க அரசுகளால் “ஆன்டர்சன் முகவரி தெரியாது” என்று பிரகடனப்படுத்தப்பட்டது.

     விஷவாயு பாதித்தோர்கள் கோபமும் ஏமாற்றமும் அடைந்த மூன்றாவது பிரச்சனை இழப்பீடு. பாதிப்புக்கு ஆளானோர்களுக்கு யூனியன் கார்பைடு நிறுவனம், 4700 இலட்சம் டாலர் வழங்கச் சம்மதித்து, 1989ல் நீதிமன்றத்திற்கு வெளியே தீர்வு எட்டப்பட்டது. அந்த இழப்பீட்டுத் தொகை மத்தியப் பிரதேச அரசு அளித்த இறந்தவர்கள் புள்ளிவிபர அடிப்படையில் கணக்கிடப்பட்டது. அப்பேரழிவில் 3000 பேர் இறந்ததாகவும், 1,02,000 மக்கள் காயங்களால் பாதிக்கப்பட்டதாகவும் ம பி அரசின் மதிப்பீடு. 

எனினும் விஷவாயுவில் தப்பியோர்களது அமைப்புகள் உண்மையான எண்ணிக்கை இன்னும் மிக அதிகமாக இருக்கும் என வாதிடுகின்றன. வழக்குகளின் அடிப்படையில் இறந்தவர்கள் 15,274 மற்றும் காயமடைந்தோர் 5.73 லட்சம் மக்கள். 2010ல் இழப்பீட்டுத் தொகையை உயர்த்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு சென்ற ஆண்டு நிராகரிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டோர் மற்றும் அவர்களின் அமைப்புகள் பலமுறை மீண்டும் மீண்டும் முறையிட்டும், மாநில அரசோ அன்றி ஒன்றிய அரசோ இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தோர் எண்ணிக்கையை அந்த மனுவில் திருத்தம் செய்ய அக்கறை காட்டவில்லை.

    அவர்களின் நீண்ட கால குறைபாடு, அமெரிக்க அரசோ அன்றி, இந்நாட்டின் மக்கள் பிரதிநிதிகள் மன்றங்களோ ஆயிரக் கணக்கானவர்களின் மரணத்திற்குத் துக்கப்படவும், அவர்களுக்கு உரிய நியாயத்தையும், நியாயமான போதுமான இழப்பீட்டுத் தொகையைப் பெற்றுத் தரவும் அக்கறைப்படவில்லை, எதுவும் செய்யவில்லை என்பதுதான்.

      அவர்களுடைய மற்றொரு வருத்தம், அரசு தன்னையே தங்களின் முழுமுதல் சட்டப் பிரதிநிதி என்று பிரகடனப்படுத்தியதன் மூலம், யூனியன் கார்பைடு நிறுவனத்திடமிருந்து இழப்பீடு பெறும் தங்களின் சட்டபூர்வ உரிமையை இந்திய அரசு பறித்துவிட்டது என்பதாகும்.

   இதன் மத்தியில், விஷவாயு பாதித்தோர்களின் அமைப்புகள் அத்துயர நிகழ்வின் 40வது ஆண்டின்போது, கேன்சர் மற்றும் உயிர்க்கொல்லி சிறுநீரக நோய்களால் துன்பப்படும் பாதிக்கப்பட்ட -வர்களுக்குக் கூடுதல் இழப்பீடு நிவாரணம் கோரி உச்ச நீதி மன்றத்தில் புதிய முறையீடுகளைத் தாக்கல் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளனர். 


--நன்றி : நியூஏஜ் (2024, டிச.8 –14)

--தமிழில் : நீலகண்டன்,

                                                                                                                    என்எப்டிஇ, கடலூர்