Tuesday, 12 November 2024

மதராஸாகள் மீதான நடவடிக்கை, முஸ்லீம்களை அன்னியப்படுத்திவிடும் -- பினாய் விஸ்வம்

                       

மதராஸாகள் மீதான நடவடிக்கை      
முஸ்லீம்களை அன்னியப்படுத்திவிடும்
-- பினாய் விஸ்வம்

    குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (NCPCR) (2009 கல்வி உரிமைச் சட்டத்திற்கு இணங்கி செயல்படாத) மதராஸாகளுக்கு அரசு நிதி அளிப்பதை நிறுத்தவும், அனைத்து மதராஸாகளிலும் ஆய்வு நடத்தவும் சிபார்சுகளை அளித்தது; ஆணையத்தின்
அச்சிபார்சுகளை
யும், அதற்குப் பிறகு அதன்படி ஒன்றிய மற்றும் பல்வேறு மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகளையும் உச்சநீதி மன்றம் நிறுத்தி வைத்தது. இது, சிறுபான்மையினருக்கும், நாட்டின் மதச்சார்பற்ற எண்ணம் கொண்ட மக்களுக்கும் சற்று ஆறுதல் அளித்தது. ஆனால் ஆணையச் சிபார்சுகளின்படி அரசுகளால் தொடங்கப்பட்ட நடவடிக்கைகள் தூண்டிய அச்ச உணர்வு நீடிக்கிறது.

    குழந்தை உரிமைகள் பாதுகாப்பு தேசிய ஆணையத்தின் முன்னெடுப்புகள், எம் எஸ் கோல்வாக்கரின் ‘சிந்தனை கொத்து’ (பஞ்ச் ஆப் தாட்ஸ்) முன்மொழிந்த கருத்தியல் தத்துவத்தால்   வழிநடத்தப்பட்டுள்ளது என்பது தெளிவு. அந்த ‘விச்சார் தாரா’ (தத்துவம்) மதச் சிறுபான்மையினர்களைத் தேசத்தின் பகைவர்களாகப் பிரகடனப்படுத்தியது. லோக் ஜனசக்தி கட்சி (LJP) தலைவர் ஏ கே பாஜ்பாய் இந்த நடவடிக்கைக்கு எதிராக எடுத்த நிலைபாட்டிலிருந்து, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணியின்  கூட்டணி கட்சியினர்கூட இந்த முன்னெடுப்புக்குப் பின்னே மறைந்துள்ள ஆபத்தை உணர்ந்துள்ளனர் என்பது தெளிவாகிறது.

     சுதந்திர இந்தியாவின் பல முக்கியமான முற்போக்கு சட்டங்களில், 2005ம் ஆண்டின் குழந்தை உரிமைகளுக்கான ஆணையங்கள் (CPCR) சட்டம் குறிப்பிடத்தக்கது. இந்தச் சட்டத்தின் கீழ்தான் மாநில அரசுகளுக்குத் தேசிய ஆணையம் 2024 அக்டோபர் 11ல் மேற்கண்ட அறிவுறுத்தல்களைப் பிறப்பித்தது. பாலியல் பணி, பிச்சை எடுத்தல், உடல் உறுப்புகள் வணிகத்திற்காகவும்கூட இந்தியாவில், குழந்தைகள் கடத்தப்படுகின்றனர். அவர்களில் பலரும் அரிச்சுவடி முதல் எழுத்துகளின் கல்வியும் மறுக்கப்படுகின்றனர்.

நடைமுறையில் குழந்தை மற்றும் பதின்பருவத் தொழிலாளர் (தடை மற்றும் முறைப்படுத்தல்) சட்டம் கேலிக்கு உள்ளாகிறது. துரதிருஷ்டவசமாக, இவைகளில் எது பற்றியும் தேசிய ஆணையம் அக்கறைபடுவதாகத் தெரியவில்லை. பாசிஸ்ட்டுகள் தங்களின் இரகசிய நோக்கங்களைச் சட்டவிதிகள் மற்றும் முறைப்படுத்தல்களை ஏமாற்றி பயன்படுத்தியே சாதிக்கிறார்கள் என்பதை உலகமெங்கும் வரலாறு காட்டுகிறது.

கோட்பாடும் வரலாறும்

மேலும், பிற மதக் குழுக்களைச் சார்ந்த குழந்தைகள் மதராஸா பள்ளிகளிலிருந்து தூக்கி எறிய வேண்டும் எனத் தேசிய ஆணையம் கோருகிறது. இது எப்படி இருக்கிறது என்றால், ‘பக்கெட் குளியல் நீருடன் குழந்தையையும் வீசி எறிவதைப் போல” என்று கூறியது உச்சநீதிமன்றம். பிற மதக் குழுக்களைச் சார்ந்த பல குழந்தைகள் மதராஸா பள்ளிகளுக்குச் செல்கின்றனர் என ஆணையத்தின் கூற்றே நிரூபிக்கிறது. அவ்வாறு பிற குழந்தைகள் ஏன் மதராஸாகளுக்குச் செல்ல நேர்ந்தது?

பொதுக் கல்வியை அனைவருக்கும் அளித்ததில் வெற்றிபெற்ற மாநிலமான கேரளாவின் உண்மை அனுபவங்களை நன்கு அறிந்த ஒருவருக்கு இந்தக் காட்சியைப் புரிந்து கொள்வது கடினம். ஏனெனில், கல்வி உரிமைச் சட்டம் (ஆர்டிஇ) 2009 நிறைவேற்றப்பட்ட பிறகும்கூட இந்த நாட்டில் தொடக்கக் கல்வி வாய்ப்பு அனைவருக்கும் கிடைக்கவில்லை என்பதை (அனைவரும் கல்வியறிவு பெற்ற மாநிலத்தில் உள்ள ஒருவர்) அறிந்திருக்க மாட்டார். அதன் காரணமாகத்தான், மத போதனை கல்வியுடன் மதசார்பற்ற கல்வி அளித்திடும் முறைமை உருவானது; அதற்காக நிதி உதவி அளிக்க வேண்டிய கட்டாயம் பல மாநிலங்களில் அரசுக்கு ஏற்பட்டது. இந்த எதார்த்த உண்மையைத் தேசிய ஆணையம் புரிந்து கொள்ளத் தவறிவிட்டது.

1970களின் பிற்பகுதியில் அமெரிக்க ஆதரவுடன், பயிற்சி மையங்கள் அதி தீவிர பயங்கரவாத தலிபான்களால் தொடங்கப்பட்டன; ஆப்கானிஸ்தானின் இடதுசாரி அரசைத் தூக்கி எறிவதே நோக்கம். பின்பு அந்த மையங்கள் மதராஸாகள் எனப் பெயரிடப்பட்டன.  அதே அமெரிக்கா மற்றும் அதன் ஏகாதிபத்திய கூட்டாளிகளாலும் முன் வைக்கப்படும் தற்போதைய இஸ்லாமிய வெறுப்பு, பயமுறுத்தல் கதையாடலுடன், வேண்டுமென்றே செய்யப்பட்ட அந்தப் பிரச்சாரம் பொருந்துகிறது. எனினும் அந்தக் கோட்பாடு, இந்திய வரலாறு மற்றும் சமூகத்தின் எதார்த்தங்களுடன் பொருந்தாத முரண்பாடுகளுடன் உள்ளது.

‘மதராஸா’ என்ற அரபு வார்த்தையின் பொருள் பள்ளிக்கூடம் மற்றும் அது தவிர வேறு எதுவும் இல்லை. அந்தப் பெயர் நீண்ட காலமாக மத போதனை பள்ளி மற்றும் மதசார்ப்பற்ற பள்ளிகள் என இரண்டிற்கும் --பிரிட்டிஷ் ஆட்சி, தனித்த காலனிய கல்வி முறையை அறிமுகப்படுத்தும் வரை-- பொதுவில் வழங்கப்பட்டு வந்தது. கட்டணமில்லாத மற்றும்

அனைவருக்கும் கல்வி முறை இல்லாத நிலையில், முஸ்லீம் அல்லாத குழந்தைகள் பலர் மதராஸாகளைச் சார்ந்தே இருந்தனர். இந்திய மறுமலர்ச்சியின் தந்தையான ராஜா ராம் மோகன் ராய், முதல் குடியரசுத் தலைவர் இராஜேந்திரப் பிரசாத், எழுத்தாளர் முன்ஷி பிரேம்சந்த் மற்றும் பலர், மதராஸாகள் மற்றும் மௌல்விகளிடமிருந்து பெற்ற அறிவின் தொடக்கக் கதிர்களில் அமிழ்ந்து திளைத்தனர்.

இந்துத்துவா வகுப்புவாதிகளுக்கு இந்த வரலாற்று உண்மை சகிக்க முடியாதபடி கசக்கவே செய்யும். இந்திய வரலாறு போட்டியும் மோதலும் நிரம்பிய ஒன்றல்ல, மாறாக சகிப்பும் சகவாழ்வும் நிலவுகின்ற ஒன்று என நிறுவுவதை, நமது தற்போதைய காலத்தின் வெறுப்பு விற்பனையாளர்கள், வெறுப்புமிழ் பிரச்சாரகர்கள் விரும்ப மாட்டார்கள்.

இன்றைய நாள், வெறுப்பு நிறைந்த உரையாடல்களில் எழுந்து நின்று உண்மையை உரக்கக் கூறுவது கடினம், எனினும் உண்மையை அப்படியே கூறாது விட்டுவிட முடியாது.

டெல்லி சூல்தான் ஆட்சி நாட்களிலிருந்தே மதராஸா முறை இருந்து வருகிறது; அது அடிமை, கில்ஜி மற்றும் துக்ளக் வம்சங்களால் ஆதரிக்கப்பட்டது. (முதலாவது வம்சமான அடிமை வம்சம், பொதுவாக துருக்கிய அடிமைகள் அல்லது அவர்களின் வாரிசுகளால் ஆனதால் அப்பெயரைப் பெற்றது.) மொராக்கோ பயணியான இபின் பதூதா பயணக் குறிப்பு நூல்களிலிருந்து, முகமது பின் துக்ளக்கின் வாரிசான ஃபிரோஸ் ஷா துக்ளக் (1309 –1388) பெண்கள் மற்றும் அடிமைச் சேவகர்களுக்குக் கலை, அறிவியல், கைவினைப் பொருள் பயிற்சிகளில் கல்வி அளிப்பதற்காக இந்த வழக்கத்தை முறைப்படுத்தினார் என்பது தெளிவாகிறது.

பின்னர் இந்தியாவின் பல்வேறு பகுதிகளில், குறிப்பாகக் கேரளாவில், கிருஸ்துவக் குழுகள், தேவாலயங்களுக்கு அடுத்துப் பரவலாகப் பள்ளிகளை –தங்கள் குழுவின் சொந்தக் குழந்தைகளுக்கும், கற்க விரும்பிய மற்றவர்களுக்கும் கல்வி அளித்திட வேண்டி—நிறுவினர். யாரிடமிருந்தும், வேறு மத நம்பிக்கை உடையவர்கள் எனினும் கூட, அறிவைப் பெறுவது என்பது அவமானமாகக் கருதப்படவில்லை. (‘பிச்சை புகினும் கற்கை நன்றே’ என்பது ஔவை மூதாட்டி அறிவுரை)

அது சமூக நீதி, தாஜா செய்வதல்ல

      சமீப ஆண்டுகளில் பொய்யான, கதைகட்டிப் புனைந்துரைக்கப்படும் செய்திகள் மூலம் கொடூரத் தாக்குதலுக்குக் கேரளா இலக்காகி வருகிறது; பல மூலைகளிலிருந்து வெறுப்பையும் நம்பிக்கை இன்மையையும் ஆதரித்துப் பரப்ப எடுக்கப்படும் அத்தனை முயற்சிகளையும் மீறி, கேரள மாநிலம் சமூகத்தின் அனைத்துப் பிரிவினர்கள் மத்தியிலும் ஒருமைப்பாட்டையும் வகுப்பு நல்லிணக்கத்தையும்  உயர்த்திப் பிடிப்து மட்டுமே அத்தாக்குதல்களுக்குக் காரணம். மதராஸா செயல்படுவது தொடர்பான பிரச்சனையும் அதற்கு விதி விலக்கல்ல. ஆனால், உண்மைதான் என்ன?

         எடுத்துக்காட்டான தொடக்கக் கல்வி முறையுடன் விளங்கும் ஒரு மாநிலம் என்ற வகையில் கேரளாவுக்கு, அரசிடமிருந்து நிதி உதவி பெற்று மதராஸாகளை நடத்த வேண்டிய தேவை எதுவும் இல்லை. மதராஸாகளுக்குக் கேரளா ஏராளமாகச் செலவு செய்கிறது என்று கசியவிடப்படும் பொய் செய்தியில் உண்மை கிஞ்சிற்றும் இல்லை. எனினும், (ஆசிரியர்களின்) ஓய்வூதியம் மற்றும் பிற பலன்களுக்கான நிதி ஆதாரமான ‘மதராஸா ஆசிரியர்கள் நல நிதியம்’, மற்ற வகை ஊழியர்களுக்கான அமைப்புப் போலவே, சட்டரீதியாக நிறுவப்பட்ட அமைப்பாகும். அது சமூக நீதி கொள்கையின் அடிப்படையில் அமைக்கப்பட்ட ஒன்றே தவிர, அது எந்த வகையிலும் மத ரீதியாகத் தாஜா செய்வதல்ல (நாட் ரிலீஜியஸ் அப்பீஸ்மெண்ட்) 

       மதச் சுதந்திரம் அரசியல் அமைப்புச் சட்ட உரிமை. அதன் ஷரத்து 25, ஒவ்வொரு இந்தியக் குடிமகனுக்கும் தாங்கள் தேர்வு செய்த மதத்தின் நம்பிக்கையைக் கூறவும், பின்பற்றவும் மற்றும்

பரப்புவதற்கும் உரிமை வழங்குகிறது. ஏதேனும் சட்ட விரோதமாக இருந்தாலோ, தேசியப் பாதுகாப்புக்குக் கேடு விளைவிப்பதாக இருந்தாலோ அதனைத் தடுக்க அரசுக்கு அதிகாரம் உண்டு. மத ரீதியான அல்லது மதசார்பற்ற பள்ளிகளாக இருந்தாலும் அனைத்துப் பள்ளிகளும் சட்ட விதிகளின் கீழ் மட்டுமே செயல்படமுடியும்.

    ஆனால் குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையத்தின் (NCPCR) நடவடிக்கை, மதச் சிறுபான்மையினர்களை ஒதுக்கி வைத்து அன்னியப்படுத்துவதைத் தீவிரப்படுத்துகிறது; மேலும் குழந்தை உரிமைகள் சட்டத்திற்கும் நியாயம் செய்யவில்லை, தேசத்திற்கும் அது நியாயம் செய்யவில்லை.

மூர்க்கமான பெரும்பான்மைவாத மேட்டிமை

நம்மைப் போன்ற ஒரு தேசத்தில், வளரும் தலைமுறையினர்களுக்கு மதசார்பற்ற மதிப்புறு விழுமியங்களைப் புகட்டுவது மிக முக்கியமானது. இந்தியா நின்று நிலைப்பதும், வளர்வதும் அதன் வேற்றுமையில் ஒற்றுமையைச் சார்ந்துள்ளது. மாபெரும் தேசத்தின் பன்மைத்துவ உள்ளடக்கத்தை மதத் தலைவர்களும் பல்வேறு நம்பிக்கைகளை உடைய மக்களும் புரிந்து கொள்வார்கள். பல்வேறு கொள்கைகளைச் சேர்ந்த பெரும் தலைவர்கள் அனைவரின் போதனைகளை –அவர்கள் சார்ந்த மத வேறுபாடு கருதாமல்-- பின்பற்றுவதன் மூலமே அதனை வளரும் தலைமுறையினர் மனங்களில் விதைக்க முடியும்.

இச்சூழ்நிலையில்,ஸ்ரீநாராயணகுரு வார்த்தைகளை நினைவூட்டுவது  நினைவூட்டுவது பொருத்தமானது “சர்வமத சர்வம் ஏகம்” (அனைத்து மதங்களின்
சாராம்சமும் ஒன்றேதான்).

ஆனால், காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை மதச் சிறுபான்மையினர்கள் நாளும் பாதுகாப்பற்ற நாட்களைக் கடந்து வருகிறார்கள் என்ற உண்மையைத் துரதிருஷ்டவசமாக NCPCR காண மறுத்துக் கண்களை இறுக மூடியுள்ளது. தீவிர பெரும்பான்மையிசத்தின் கெட்ட நோக்கமுடைய தீய சக்திகள் வெறுப்பு உமிழும் வார்த்தைகள் மற்றும் செயல்கள் மூலம் அந்த மக்களை அச்சுறுத்துகிறார்கள். ஆணையத்தின் நடவடிக்கையை இந்தச் சமூக அரசியல் சூழலில் வைத்தே அணுக முடியும். அந்நடவடிக்கை அம்மக்களின் வெந்த புண்ணில் வேல் பாய்ச்சுவது. இந்தியா முழுவதும் அச்சிறுபான்மையின மக்களைப் பாரதிய ஜனதா கட்சி ‘பிறர்’ (அதர்ஸ்) என்றே நடத்துகிறது. சட்டபூர்வமான ஓர் ஆணையம், சமூகத்தில் பிரிவினை விதைகளை விதைப்பதையோ, மற்றும் சிறுபான்மை மக்கள் உணர்வு நிலையை அன்னியப்படுத்துவதையோ நாடு எதிர்பார்க்கவில்லை. 

அதனால்தான் இந்திய மக்கள் அரசியலமைப்பு விழுமியங்களை உயர்த்திப் பிடித்து, குழந்தை உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் (NCPCR) தனது தற்போதைய நடவடிக்கையைத் திரும்பப் பெற வலியுறுத்துகிறார்கள்.

-- நன்றி : நியூஏஜ் (நவ.10  16)

--தமிழில் : நீலகண்டன்,

          என்எப்டிஇ, கடலூர்

 

Monday, 4 November 2024

ஓங்குபுகழ் அக்டோபர் புரட்சி வாழ்க!

 நியூஏஜ் தலையங்கம் (நவ.3 --9)

ஓங்குபுகழ் அக்டோபர் புரட்சி வாழ்க!

   கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் ஏற்கனவே மாற்றத்தின் நிகழ்முறை தொடங்கி விட்டது. அத்தருணத்தின் ரஷ்யாவில் அக்டோபர் புரட்சிக்கான சூழல் கனிந்து வந்தது. அது மனித குல வரலாற்றில் உலகின் ஆகப் பெரிய நிகழ்வுகளில் ஒன்று, அப்போது விளாதிமிர் இலியீச் லெனின் தலைமையில் ரஷ்யாவின் தொழிலாளர்களும் ஒடுக்கப்பட்டவர்களும், நிலப்பிரபுத்துவ முதலாளிய ஆட்சியைத் தூக்கி எறிய கிளர்ந்தெழத் தொடங்கினார்கள்.  ‘ரஷ்யாவில் நடந்த புரட்சி, ஏகாதிபத்திய முதலாளித்துவ முறை சங்கிலியின் பலவீனமான கண்ணியில் நடந்தது’ என்பது லெனின் கூறிய புகழ்வாய்ந்த மொழி. ஐரோப்பாவின் மற்ற முதலாளித்துவ நாடுகளைப்போல ரஷ்யா அந்தளவு முன்னேறிய நாடு அல்ல. எனவேதான்  தாமதமாக 1870ல் ஜார்ஜ் பிளக்கனாவ், புரட்சிகரப் போராட்டத்தை நோக்கி தொழிலாளர் வர்க்கம் அணி திரள, ‘தொழிலாளர் விடுதலை (எமென்ஸிபேஷன் ஆப் தி லேபர் லீக்) அமைப்பை’ ஏற்படுத்தினார். (1870 என்பது இரண்டாவது தொழிற்புரட்சியைச் சுட்டிக் காட்டுவது.)

 ரஷ்ய தத்துவயியலாளர் பிளக்கனாவ் விஞ்ஞான கருத்தியல் ரீதியில் தொடங்கிய ஆய்வு, அடிப்படையில் மார்க்ஸியமாகும். தொழில்மயமாவது முதன்மை இடத்தை பெறத் தொடங்க, மின்ஸ்க் என்ற இடத்தில் 1898ல் ரஷ்ய

சமூக ஜனநாயக லேபர் பார்ட்டி (RSDLP) அமைக்கப்பட்டதைத் தொடர்ந்து தொழிலாளர் வர்க்கமும் அங்கு எழுச்சி பெற்றது. அந்தக் கட்சி அமைத்ததும் லெனினேதான். அப்போது அங்கே ஜனநாயக மத்தியத்துவம் மீது ஏராளமான விவாதம் நடந்தது. அவ்விவாதம் புரட்சியின் குணாம்சம் குறித்தும் விவாதத்தை ஏற்படுத்தியது. கட்சியின் உறுப்பினர்கள், அவர்கள் அங்கம் வகிக்கும் கிளைகளிலும்கூட தீவிரமாகச் செயல்பட எதிர்பார்க்கப்பட்டனர். இந்தக் கட்டத்தில்தான் லெனின், “என்ன செய்ய வேண்டும்” என்ற பிரசுரத்தை எழுதினார்.

அக்கட்டத்தில் தியரி குறித்த தீவிர சங்கடமும் குழப்பமும் நிலவியது. லெனின் அழைப்பில் விவாதத்திற்கு வந்தவர்களில் நரோத்னிக்ஸ் (விவசாயிகள் மத்தியில் பிரச்சாரம் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம் என நம்பிய ரஷ்ய சோஷலிசக் குழு), அராஜவாதிகள், அதிதீவிர இடதுசாரிகள் மற்றும் பலர் இருந்தனர். விவசாயிகள் மற்றும் வேளாண் முறை அடிப்படையிலான அவர்களது கற்பனாவாதச் சோஷலிசக் கோட்பாட்டை லெனின் எதிர்த்தார். விஞ்ஞான மற்றும் புரட்சிகர செயல்உத்தி திட்டங்களின் தேவையை லெனின் வற்புறுத்தினார். இதன் மீது தத்துவார்த்தக் கோட்பாட்டுத் தெளிவிற்காக அவர், “மக்களின் நண்பர்கள் எப்படி இருப்பார்கள்” (மற்றும் எவ்வாறு சமூக ஜனநாயகவாதிகளுடன் அவர்கள் போராடுவார்கள்) என்ற பிரசுரத்தை, விமர்சனங்களுக்குப் பதில் அளிக்கும் வகையில், எழுதினார். இந்தத் தருணத்தில் அவர், முதலாளித்துவத் தாக்குதலுக்கு எதிரான போராட்டத்திற்காகப் புரட்சியின் விஞ்ஞான அடிப்படை செயல்உத்தி திட்டத்தை வகுத்து விட்டார். 19ம் நூற்றாண்டின் இறுதி மற்றும் 20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் லெனின் சிறையில் அடைக்கப்பட்டு, நாடு கடத்தப்பட்டார்.

அத்தகைய நிலைமைகளில், அனுசரிக்க வேண்டிய உத்திகள் மீது ரஷ்ய சமூக ஜனநாயக லேபர் கட்சியினுள் கூர்மையான வேறுபாடுகளும் உருவாகின. கட்சியின் இரு பெரிய முக்கிய அணிகளான போல்ஷ்விக் (பெரும்பான்மையினர்) மற்றும் மென்ஷ்விக் (சிறுபான்மையினர்) தரப்பினர்களால் கூறப்பட்ட இரண்டு உத்திகள், புரட்சியின் தன்மை மீதான வேறுபாட்டை, முன்வைத்தன. இரண்டு குழுக்களாக இருந்தவை, பின்னர் இரண்டு கட்சிகளாக உடைந்தன.

ஜனநாயகப் புரட்சியின் இரண்டு தந்திரோபாய உத்திகளை விளக்கி லெனின், “சமூக ஜனநாயகத்தின் இரண்டு உத்திகள்” என்ற நூலை எழுதினார். அது, புரட்சி குறித்த மார்க்ஸியத் தத்துவக் கோட்பாட்டில் ஒரு புதிய பரிணாமத்தைச் சேர்ப்பதை நோக்கிய ஓரடி. இதுவரை இருந்த குழப்பம் (டைலமா), முதலாளித்துவத்தை முழுமையாக ஒழிப்பதை நோக்கி புரட்சி முன்னேற வேண்டுமா? அல்லது, நிலப்பிரபுத்துவத்தையும் ஜார் மன்னனின் எதேச்சிகார ஆட்சியையும் வெற்றி கொண்டு, பூர்ஷ்வா முதலாளித்துவ (நடுத்தர வர்க்க முதலாளிகளின்) ஜனநாயகக் கட்டத்தை நோக்கி புரட்சி முன்னேற வேண்டுமா? என்பதே.

சிறிய தொழில்முனைவோர்கள், விளிம்புநிலை விவசாயிகள் மற்றும் ஏகாதிபத்தியத்-திற்கு எதிரான சக்திகளுடன் கரம் கோர்த்துத் தொழிலாளர் வர்க்கம் போராட்டத்தைத் தலைமைதாங்கி நடத்துவதை லெனின் ஆதரித்தார். லெனினுடைய கூற்று யாதெனின், ஏகாதிபத்தியக் கட்டத்தில் புரட்சி ஒரு புதிய கட்டத்தின் வழியாக மேல் செல்ல முடியும்; மாறாக, நேரடியாகச் சோஷலிசக் கட்டத்திற்கு அல்ல. அந்த புதிய கட்டத்தை அவர், பூர்ஷ்வா ஜனநாயகம் என்றழைத்தார். இவ்வாறு, முதலாளித்துவக் கட்டத்தின் புரட்சியில் தந்திரோபமான உத்தி என்ற வகையில் அது, லெனின் அவர்களின் மாபெரும் பங்களிப்பாகும். தனித்த முறையில் பாட்டாளிகளின் தலைமையில் வழிநடத்தப்பட்டு சோஷலிசப் புரட்சியின் இறுதிக் கட்டத்திற்குச் செல்லாமல், ஒருவர் இரண்டு கட்டங்களாக நகர்வது என்று அவர் யோசனை கூறினார்.

மாபெரும் அக்டோபர் புரட்சிக்கான தயாரிப்புகளில் சமூக ஜனநாயகத்தின் இரண்டு தந்திரோபாய உத்திகளில் முன்னெடுக்கப்பட்ட ஐக்கிய முன்னணி என்பது லெனினின் புகழ்பெற்ற பங்களிப்புகளில் ஒன்று. ஆனால் அதுவும் மென்ஷ்விக்குகளுடன் கூர்மையான வேறுபாடுகளை ஏற்படுத்தியது. லெனின் முன் வைத்த தந்திர உத்திகள் உருவாக்கத்தைத் தொழிலாளர் வர்க்கத்தின் பெரும் பிரிவு சரியாகப் புரிந்துகொண்டு உள்வாங்கவில்லை. தீவிர இடதுசாரிகள் பிரதிநிதித்துவப்படுத்திய சோஷலிசப் புரட்சிகர கட்சியும் மென்ஷ்விக்குகளும் (நேரடியாகச் சோஷலிசக் கட்டத்திற்குச் செல்லாமல் பூர்ஷ்வா ஜனநாயகம் என்பதில் இடைநின்றது என்பதை) லெனின் சமரசம் செய்துவிட்டார் என்று பார்த்தனர். முதலாளித்துவத்தையும் ஏகாதிபத்தியத்தையும் லெனின் ஆதரிப்பதாக அவர்கள் கருதினர்.

ஆனால், தொழிலாளர் வர்க்கம் அதுதானும் எண்ணிக்கையில் வளர்ந்தது மட்டுமல்ல, விழிப்புணர்விலும் கூட வளர்ந்தது என்பது உணரப்படவில்லை. உற்பத்தி முறையிலும் முக்கிய மாற்றங்ஙகள் ஏற்பட்டுவந்த உண்மையும்கூட எதிர்த்தரப்பினர்களால் கருத்தில் கொள்ளப்படவில்லை. இரு தரப்பு நிலைபாடுகளையும் பிராவ்தா, இஸ்கரா, இஸ்வெஸ்தியா, ரபோசாயா மிசில் போன்ற பத்திரிக்கைகள் வெளிச்சத்திற்குக் கொண்டு வந்து புரட்சிகர நிகழ்முறையையே முழுமையாகச் செழுமைப்படுத்தின. 1917ன் அக்டோபர் புரட்சிக்கு ஓர் முன்னுரையாக, ஒரு முன்னோட்டமாகத் தயாரித்தது 1905ன் புரட்சி. எவ்வாறெனினும், 1905 புரட்சி வெற்றி பெறவில்லை, இருந்தால் என்ன, அதுதான் 1917 இறுதி நடவடிக்கைக்கு நடத்தப்பட்ட “ஒப்பனைகளுடன் கூடிய முழு ஒத்திகை” என்றழைக்கப்படுகிறது.

20ம் நூற்றாண்டின் தொடக்கத்தில், வளர்ந்துவந்த ஏகபோக முதலாளித்துவமும் ஏகாதிபத்தியமும், கண்ணுக்குத் தெரியத் தொடங்கின. முதல் உலகப் போருக்கான தயாரிப்புகளின் சூழல் நிலவியபோது, உலகம் முழுவதும் நிதிமூலதனத்தின் ஆட்சி மற்றும் பிளவுபடுதலையும் மீண்டும் திரும்ப பிரிக்கப்படுதலுக்கு உள்ளாவதையும் உலகம் சந்தித்தது. ரஷ்ய அரசர் ஜார் நிக்கோலஸ் தலைமையில் ரஷ்ய ராணுவம் போர்முனைகளில் போராடிவர, ரஷ்யாவில் முரண்பாடுகள் குவிந்தன. போரில், பெரும் இழப்புகள்.  1,300,000 பேர் கொல்லப்பட்டனர், எதிரிப் படைகளால் 4,200,000 பேர் சிறைபிடிக்கப்பட்டனர், பல லட்சம் பேர் வாழ்நாள் முழுவதும் உடல் ஊனமுற்றவர்களாக விடப்பட்டனர். 1917 மார்ச் 8ல் பல்லாயிரக்கணக்கில் மக்கள் தெருக்களில் திரண்டு “ரொட்டி” கோரிப் போராட, அதற்கு ஆதரவாக 90,000கும் அதிகமானோர் வேலைநிறுத்தத்தில் இறங்கினர். அது சர்வதேசப் பெண்கள் தினம் மற்றும் பெண்கள் தலைமையில் ரொட்டி விலைஉயர்வைக் கண்டித்து எழுச்சிப் போராட்டங்கள் தொடங்கின.

இங்கே கட்டாயம் சுட்டிக்காட்ட வேண்டிய செய்தி, ரஷ்யப் புரட்சியானது கட்சி நடத்திய புரட்சி அல்ல; அது, சோவியத்கள் (தேர்ந்தெடுக்கப்பட்ட உள்ளூர் சபைகள்) மூலம் தொழிலாளர் வர்க்கமும் மக்கள் திரளும் திரண்டு வந்தும், சோவியத்கள் கட்சிகளால் வழிநடத்தப்பட்டும் நடத்தியது. நாடு கடத்தப்பட்டிருந்த லெனின் ஏப்ரலில்தான் வர முடிந்தது. அக்காலகட்டம், இரட்டை அதிகாரம் பற்றி லெனின் ஏப்ரல் தீசிஸ் எழுதினார். அந்தக் கோட்பாடின் ஏற்பாட்டின்படி, அங்கே இடைக்காலப் புரொவிஷனல் அரசும், அதனுடன்கூட மற்றொரு அரசு தொழிலாளர்களாலும் சோவியத்துகளாலும் வழிநடத்தப்பட்டு அதிகாரம் கொண்டிருந்தன. அது ஒரு நாடு மற்றும் இரண்டு அரசுகள்.

அமைதியான வழியில் மாற்றம் சாத்தியமில்லாதபோக, போல்ஷ்விக் கட்சியின் மத்தியக் குழு அக்டோபரில் நடத்திய கூட்டத்தில், ஆயுதமேந்திய கிளர்ச்சியில் இறங்க ஆதரவாக முடிவு எடுக்கப்பட்டது; அதற்கான தந்திரோபமான திட்டங்களையும் உத்தி சார்ந்த நடவடிக்கைகளுக்கான துல்லியமான வரைபடம் லெனினால் தயாரிக்கப்பட்டது. எந்தத் தாமதமுமின்றி உடனடி நடவடிக்கையை மேற்கொள்ள அக்டோபரிலிருந்து லெனின் வலியுறுத்தி வந்தார். “நிகழ்வுகள் நமது பொறுப்பை நமக்காக மிகத் தெளிவாகப் பரிந்துரைக்கின்றன, இதில் எந்தத் தாமதமும், நேர்மறையான குற்றமாகிவிடும்” என்று அவர்
கூறினார். இவை அனைத்திற்கும் மத்தியில், தாக்குதல் நடத்த வேண்டிய நேரம் மற்றும் தன்மை குறித்த ஆக மிகத் தெளிவான பார்வையை லெனின் கொண்டிருந்தார். லெனின்
அக்டோபர் 25ஐ, நடவடிக்கை தொடங்கும் நாளாக வற்புறுத்தினார். (ரஷ்யாவின் முந்தைய ஜூலியன் நாட்காட்டியின்படி அக்டோபர் 25, பின்னாட்களில் பயன்பாட்டிற்கு வந்த கிரிகோரியன் பொது நாட்காட்டியின்படி 1917 நவம்பர் 7ம் நாளாகும். அதனால் அன்று ரஷ்யாவில் நிகழ்ந்த யுகப்புரட்சியை அக்டோபர் புரட்சி என்றும், நவம்பர் புரட்சி என்றும் கொண்டாடப்படுகிறது)

அந்தநேரத்தின்போது லெனின், கிளர்ச்சித் தாக்குதலின் கலை மற்றும் அறிவியலின் அற்புதமான கூறுகளுடன் வந்தார்.  தாக்குதலை எவ்வாறு நிகழ்த்துவது மற்றும் அதற்காக உத்தரவிடுவதென தெளிவான வரைபடத்

திட்டம் கொண்டிருந்தார். அவர் வாகனங்களைத் திரட்டவும், தொலைபேசி நிலையங்கள், தந்தி அலுவலகங்கள், இரயில்வே நிலையங்கள், பாலங்களைக் கைப்பற்றவும் மற்றும் தொழிலாளர்களையும் இராணுவ அணிகளைத் திரட்டி அமைக்கவும் கேட்டுக் கொண்டார். (போஸ்ஷ்விக் தலைமையகமான, செயின்ட் பீட்டர்ஸ் பர்க் என்ற) ஸ்மோல்னிக்கு அக்டோபர் 25ல், அதுதான் நவம்பர் 7ம்நாள், லெனின் வந்தார்; வந்து முழுமையான கட்டுப்பாட்டை மேற்கொண்டார்.

புரட்சியின் முழுமையான நிகழ்முறையிலும் மற்றும் அதற்குப் பிறகும் கூட, தலைமை, மாபெரும் தத்துவவாதியும், விஞ்ஞானரீதியில் சிந்தனையாளருமான மாமேதை லெனின் வசம் இருந்தது. 

வாழிய நவம்பர் புரட்சி!

--தமிழில் : நீலகண்டன், என்எப்டிஇ, கடலூர்