Tuesday, 28 October 2025

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு --அதன் கடந்த காலத்தை அம்பலப்படுத்தும் தருணம்

 

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு

–சந்தேகத்திற்குரிய அதன் கடந்த காலத்தை
அம்பலப்படுத்தும் தருணம்

P சுதீர்

–நன்றி : இந்திய பிரஸ் ஏஜென்சி சேவை (IPA Service)

ஆர்எஸ்எஸ் அமைக்கப்பட்ட நூற்றாண்டைப் பெருமையுடன் பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் பெரும் முயற்சிகளின் மத்தியில், திடுக்கிடச் செய்யும் ஒரு காட்சியால் தேசம் அதிர்ச்சி அடைந்தது. உச்சநீதிமன்ற பார் கவுன்சிலில் பதிவு செய்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர்இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி ஆர் கவாய் அவர்களை நோக்கி காலணியை வீசினார். ஒரு மனுவைத் தள்ளுபடி செய்யும்போது நீதிபதி கவாய் இந்து மதம் பற்றி இழிவாக விமர்சனம் செய்தார் என்பது வழக்கறிஞரின் புகார்.

எனினும், முக்கிய செய்தி ஊடகங்கள் இந்த அதிர்ச்சி தரும் நிகழ்வை முக்கியமற்ற அற்ப நிகழ்வாக்க எந்த எல்லைக்கும் சென்று நிறுவ முயன்றன. ‘காலணியை வீசவில்லை, அது வெறும் பேப்பர் கட்டுஎன கதைத்துக் குழப்ப முயன்றன – ஊடகங்களின் வழக்கம் அதுதானே. மற்றவர்கள், கிஷோர் நடவடிக்கையை நியாயப்படுத்த முயன்றனர்: ‘மத உணர்வுகள் காயப்படுத்தப் பட்ட‘தன் மீது எழுந்த மனவருத்தத்தின் வெளிப்பாடு என அதனை விவரித்தனர் –இப்போது அது ஒரு பிரபலமான சொல்லாடல், சட்டவிரோத மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்க ஒரு சாக்கு!

இந்த அப்பட்டமான கடும் நிகழ்வுப் போக்கை, ஆர்எஸ்எஸ் நூற்றாண்டை அடையாளப்படுத்த கொட்டி முழங்கி பெரிதுபடுத்தப் படும் சூழலுடன் துல்லியமாகக் குறிப்பிட்டுத் தொடர்புபடுத்துவது கடினம். எனினும் நமது கவனத்தில் இருந்து ஒன்று தப்ப முடியாது –அது, இந்த அருவருக்கத்தக்க நிகழ்வை அடையாளப்படுத்தும் வெறுப்பு மற்றும் பழிவாங்கல் உணர்வும் நிறைந்த சூழல் இதுபோன்ற இணையான நிகழ்வுகள் நமது தேச அரசியல் வாழ்வின் முக்கிய கட்டங்களில் பல உண்டு. அப்போதெல்லாம் அதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செல்வாக்கு கோலோச்சிய சூழலைக் காணலாம். அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது, தேசத் தந்தை மகாத்மா காந்திஜியின் படுகொலை.

அந்தக் கொடூரமான செயலை நோக்கி கட்டி எழுப்பப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஈடுபாட்டைக் குறித்த வலுவான சந்தர்ப்பச் சாட்சியங்கள் இருந்தன; என்றபோதும், கறாரான நேரடி சாட்சியம் இன்மை, எம்எஸ் கோல்வால்கர் போன்ற பல முக்கிய ஆர்எஸ்எஸ்

செயல்பாட்டாளர்கள் (படுகொலையில்) அவர்களின் தனிப்பட்ட பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட ஏதுவாயிற்று. கோல்வால்கருக்கு அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் எழுதிய கடிதம், “இந்து மகாசபாவுடன் சேர்ந்து ஆர்எஸ்எஸ் பிரச்சாரம், மகாத்மா கொல்லப்படுவதற்கான சூழலை ஏற்படுத்தியதுஎனத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டது.

ஆர்எஸ்எஸ் அமைப்பை அதன் ‘மேன்மை பெருமைக்காக வானளாவ மக்கள் புகழ அரசு எடுக்கும் முயற்சிகளே, உண்மையில், அதன் சந்தேகத்திற்குரிய கடந்த காலம் குறித்தக் கவனக் குவிப்புடன் பெருமளவில் விவாதங்கள்/ உரையாடல்கள் நடத்த அழைப்பு விடுப்பதாக உள்ளது.

பலருக்கும் இந்தக் கொண்டாட்டம் உண்மையில் அந்த அமைப்பின் அடிப்படை கோட்பாடுகளை ஆய்வு செய்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது; சவார்க்கர் இந்துத்துவா என்று வரையறுத்ததை, நடைமுறையில் கொண்டு வர ஆர்எஸ்எஸ் அமைப்பின் விஷக் கருத்தியல் வேர்களையும் மற்றும் அதன் அமைப்பியல் முறைகளையும் ஆய்வு செய்வதற்கான தருணம் இது. 

இந்துத்துவாவின் சாராம்சங்கள் என்ற தனது நூலின் மூலம் இந்தக் கருத்தியலுக்கான அடிப்படைகளைச் சவார்க்கர் ஏற்படுத்திய போதும், ஆர்எஸ்எஸ் அமைப்புதான், சவார்க்கரால் ஆதரிக்கப்பட்ட ஹிந்து ராஷ்ட்டிரா அமைப்பதை நோக்கிய நடவடிக்கைகளையும், அமைப்பு

ரீதியான வலிமையையும் வழங்கியது. சவார்க்கர் வேறுபட்டதான ஒரு கருத்தியலை, அதாவது அது இந்து சமய நெறிகளைக் குறித்ததன்று; மாறாக, , அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற பச்சையான அரசியல் செயல் திட்டம் என்ற கருத்தியல் அடிப்படையிலானது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சாவர்க்கர் தனது வார்த்தைகளில், ‘இந்து சமயநெறி கருத்தியல் மற்றும் இந்துத்துவா இடையே குழப்பிக் கொள்வது, இந்துக்களை ஒற்றுமைபடுத்துவதில் ஓர் இடையூறு ஆகிவிடும் –ஏனெனில் சாதிகளால் கட்டமைக்கப்பட்டு செலுத்தப்படும் இந்து சமூகத்தின் (கீழ், மேல் ஏற்றத்தாழ்வான) படிநிலை தன்மை அப்படிப்பட்டது என்று எழுதினார். (சுருக்கமாக, பொதுமக்களின் ‘இந்து சமயநெறி நம்பிக்கை வேறு, ‘இந்துத்துவா வேறு. அது இறை நம்பிக்கை சார்ந்தது – இது அரசியல் நோக்கமுடையது).

எனினும் கடந்த பல ஆண்டுகளில், ஆர்எஸ்எஸ் அமைப்பால் எழுப்பப்படும் கோரிக்கைகள் மற்றும் முழக்கங்களில் இருந்துகூட, இந்துத்துவா நடைமுறைக்குப் பிராமணியம் என்பதே உள்ளார்ந்த சமூகப் பார்வை என்பது தெளிவாகிறது. உதாரணத்திற்கு, ஆர்எஸ்எஸ் பத்திரிக்கை ஆர்கனைசர், தேச விடுதலைக்கு முந்தைய நாளில் வெளியான 1947 ஆகஸ்ட் 14 தேதியிட்ட இதழிலேயே, ‘பன்முகக் கூட்டு தேசம் (composite nation) என்ற கோட்பாட்டை முற்றாக நிராகரித்தது: (‘Whither–‘எந்த இடத்திற்கு, ஏன், எதற்காக, எந்த இலக்கை நோக்கி?’--  என்ற தலைப்பின் கீழ் அமைந்த அதன் தலையங்கத்தில்) “நாம் இனியும் தேசிய அடையாளம் என்ற தவறான கற்பிதங்களால் செல்வாக்கு செலுத்தப்பட அனுமதியோம். பெரும்பான்மையான மனரீதியான குழப்பங்களும், தற்போதைய மற்றும் எதிர்காலச் சங்கடங்களையும், சாதாரண உண்மையைத் தயாராக அங்கீகரிப்பதன் மூலம், நீக்க முடியும்; (அந்த உண்மை,) இந்துஸ்தானத்தில் இந்துக்கள் மட்டுமே தேசத்தை – இந்துக்களால், இந்து மரபுகள், கலாச்சாரம், கருத்துக்கள் மற்றும் விழைவுகள் மீது கட்டப்பட்ட அத்தகைய தேசத்தையும்தேசியக் கட்டமைப்பையும் பாதுகாப்பான மற்றும் உறுதியான அடிப்படையில் கட்ட முடியும்

அதே இதழில் ஆர்கனைசர், தேசியக் கொடியைத் தொடர்ந்து இழிவுபடுத்தி கடுமையாகச் சாடியது: “விதிவசத்தால் அதிகாரத்தில் வந்தமர்ந்தவர்கள், நம் கையில் மூவர்ணக் கொடியைக்

கொடுத்து இருக்கலாம்; ஆனால் ஒருபோதும் அதை மதிக்கவும் முடியாது இந்துக்களால் சொந்தமாக ஏற்கவும் முடியாது.” ஆர்எஸ்எஸ் அதே தொனியில் தேசிய கீதத்தையும் எதிர்த்து, பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் நாவலின் ஒரு பகுதியான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது –நிச்சயமாக அந்தப் பாடல், சந்தேகத்திற்கு இடமின்றி, வகுப்புவாதச் சாயலை உடையது மற்றும் இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் கேலி செய்து கண்டனம் தெரிவிக்கிறது.

இது ஒரு தற்செயல் உடன் நிகழ்வு அல்ல. காலனிய அடிமை தளையிலிருந்து தேசத்தை விடுவிக்கும் பொதுப் போராட்டத்தில் இருந்து அவர்கள் ஒதுங்கி நின்றது மட்டுமல்ல; மாறாக, “நமது முதன்மையான அர்ப்பணிப்பு இந்துக்கள் பாலானதுஎன்று கூறும் அளவு செல்வதை –சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களில் இருந்தேதனது மரபிலேயே சுமந்து வருகிறது. எனவே பிரிட்டிஷ்க்கு எதிராக ஒன்றுபடுவதை விடநாம் இந்துக்களை ஒன்றுபடுத்த வேண்டும்; அவர்களை இராணுவ மயமாக்க வேண்டும் என்றது.

    ஆர்எஸ்எஸின் இந்த அதே பல்லவி, ஜனநாயக, மதச்சார்பற்ற அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்ட சமயத்தில் தொடர்ந்தது: அவர்கள் அதை இந்தியத் தன்மையற்றது என வெளிப்படையாகக் கண்டித்தனர். 1949 நவம்பர் 30 தேதியிட்ட ஆர்கனைசர் இதழ் தனது தலையங்கத்தின் மூலம் பழங்கால மனுஸ்மிருதியைச் சட்டபூர்வமாக அரசியலமைப்பு ஆவணமாக ஏற்கக் கோரியது.  அந்தத் தலையங்கத்தில், “ஆனால் நமது அரசியலமைப்புச் சட்டத்தில், பண்டைய பாரதத்தின் தனித்துவமான அரசியலமைப்பு வளர்ச்சி உருவானது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஸ்பார்டாவிலும் ஏதென்ஸிலும் சட்டம் எழுதிய அறிஞர்களாக கருதப்படும் ஸ்பார்டாவின் லைகுர்கஸ் / பெர்சியாவின் சொலோன் காலத்திற்கு வெகுகாலம் முன்பே மனுவின் சட்டங்கள் எழுதப்- பட்டன. இந்த நாள் வரை, மனுஸ்மிருதியில் பொறிக்கப்பட்ட அவரது சட்டங்கள் உலகத்தால் உற்சாகமாகப் பாராட்டுப்பட்டுத் தன்னியல்பாக அதற்குப் பணியவும், உடன்படவும் தூண்டுகிறது. ஆனால் நமது அரசியலமைப்புச் சட்டப் பண்டிதர்களுக்கு அது ஒன்றும் இல்லாதது எனப்  பொருள்படுகிறது.” 

அரசியலமைப்புச் சட்டம் குறித்து கோல்வால்கர் 

கோல்வால்கரும் அரசியலமைப்பை முழுவதும் மறுத்து உறுதிபடக் கூறினார், “நமது அரசியலமைப்பும் கூட, மேற்கத்திய நாடுகளின் பல்வேறு அரசியலமைப்புச் சட்டங்களில்

இருந்து பல்வேறு ஷரத்துக்களை எடுத்து ஒன்றாக்கிய பல்வேறுபட்ட கூறுகளால் ஒட்டுப் போட்ட கலவையாக, சிக்கல் நிறைந்ததாக உள்ளது.  நமக்குச் சொந்தமானது என்று அழைக்கத்தக்க எதுவும் முற்றிலும் அதில் இல்லை. அதன் வழிகாட்டுநெறி கோட்பாடுகளில் நமது தேசிய லட்சிய நோக்கம் என்ன? மற்றும் நமது வாழ்வில் முக்கிய சாரம் என்ன என்பதன் மீது ஏதாவது ஒரு வார்த்தை குறிப்பு உள்ளதா?”.

ஒரு மக்கள், ஒரு தேசம் என்ற கோட்பாட்டைத் தன்னிச்சையாக மூச்சு முட்டும் சட்டையில் கட்டாயமாகத் திணிக்கப்பட்ட இதை, ‘இந்தி, இந்து, இந்துஸ்தான் என்று உடைத்த முழக்கங்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கருத்தியல் உரையாடல்களில் –முஸ்லிம்கள், கிறிஸ்த்துவர்கள், கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான அதன் தவிர்க்க முடியாத விருப்பத்துடன் கூடியதாகசெல்வாக்குச் செலுத்துகிறது.

எனவே, ஆர்எஸ்எஸ் அடித்தளக் கோட்பாட்டின் அடிப்படையில், எந்தவித நெருடலும் இன்றி இரட்டை விதமாகப் பேசுவத்தைப்  பழகிப் பயின்ற ஒரு ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர், நாட்டின் பிரதமர் பதவியைப் பிடித்தமரும் வரை இரட்டை விதமாகவே பேசுவார்.

அந்த அடையாளத்தை மறைக்கும் எந்த நிர்பந்தத்தையும் அவர் ஒருபோதும் உணர்வதில்லை; ஆனால் ஜனநாயக, மதச்சார்பற்ற அரசியல் அமைப்பின்பால் பிறப்பிலேயே இருக்கும் வெறுப்பு இருந்த போதும், அவரது அரசு அரசியலமைப்புச் சட்டத்தை ஒன்றுமில்லாத வெற்றுக் கூடாக்கவும்; மேலும் அதைக் குறுகிய, குழுவாத, பாசிச, இந்து ராஷ்ட்டிரா தத்துவத்தால் மாற்றி அமைக்க- வும் உள்ளுக்குள்ளே இருந்து முயற்சி செய்யும். இதற்கு மத்தியில் அவ்வப்போது அரசியலமைப்புச் சட்டத்தை வணங்குவது, அந்த நேரத்தால் ஏற்படும் வெறும் நிர்ப்பந்தம் மட்டுமே –அதிலிருந்தும் இறுதியில் தகுந்த வாய்ப்பான நேரத்தில் விடுபடும்.

எவ்வாறாயினும், இந்த இரண்டு ஷூக்களை இரண்டு கால்களில் அணிவது, சில நேரங்களில் சமாளித்துப் பேலன்ஸ் செய்வதில் கடுமையான செயலாகிவிடும். எனவே ஆர்எஸ்எஸ் அமைப்பைப் புகழ்வதில் காட்டப்படும் கூடுதலான உற்சாகம், அதன் சந்தேகத்திற்குரிய சுயம்சேவக் சங்கின் கோரமான கடந்த கால நூறாண்டின் குறிப்பிட்ட நிகழ்வுகளுடன் முரண்படுகின்றன.

நீதிபதி கவாய் மீதான வழக்கறிஞரின் தாக்குதல் மீது பிரதமரின் தாமதமான மென்மையான விமர்சனமும்; காலணி வீச்சு சம்பவத்தால் பதற்றம் அடையாது அதனைக் கண்ணியமாகக் கையாண்ட தலைமை நீதிபதியின் நிதான நிலைப்பாட்டிற்காக அவரைப் புகழ்வதும் ஒருபுறம் இருந்த போதும், வலதுசாரி சமூக ஊடகப் படைவீரர்கள் நீதிபதிக்கு எதிராகத் தனிப்பட்ட முறையில் அவர் மீது பழிவாங்கல்களைத் தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.

சங்கி படை வீரர்களுக்கு, குறிப்பாகப் புரிந்து கொள்ளக்கூடிய அவர்களின் மனுவாதி ஆதர்ச உற்சாகம் காரணமாக, தலைமை நீதிபதியின் தலித் அடையாளம் மற்றும் புத்தவியல் சார்ந்த நம்பிக்கை அவருக்கு எதிரான இந்த விஷத்தைக் கக்கும் வாய்ப்பை வழங்கி உள்ளது.

எனவே ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு, சந்தேகத்திற்குரிய அவர்களின் கடந்த காலத்தை அம்பலப்படுத்தும் வாய்ப்பை நமக்கு வழங்கி உள்ளது: மேலும் சுதந்திரம், ஜனநாயகம் மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் கூட்டாட்சி தத்துவத்திற்குத் தேசத்தின் பற்றுறுத்தியை உள்ளடக்கிய நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளின் புகழ் கெடுத்துக் களங்கப்படுத்த அரசின் இழிதகவான முயற்சிகளை அம்பலப்படுத்தும் வாய்ப்பை ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நமக்கு வழங்கியுள்ளது.

 

: நியூ ஏஜ் (அக். 26 –நவ.1)

தமிழில் : நீலகண்டன்,

என் எஃப் டி இ, கடலூர்

 


Sunday, 26 October 2025

நியூ ஏஜ் தலையங்கம் -- சுயமரியாதை இயக்கத்திற்கு இது நூற்றாண்டு


 
நியூ ஏஜ் தலையங்கம் (அக். 26 –நவ. 1)

சுயமரியாதை இயக்கத்திற்கு

இது நூற்றாண்டு

வர்க்கங்களால் ஆன சமூகத்தில் ஒரு வர்க்கம், அடியாழத்தில் வாழும் மற்றொன்றின் மீது எப்போதும் ஆதிக்கம் செலுத்தும். வழிகாட்டும் விளக்கைச் சுமப்பவர்கள் அவர்கள், ஆனால் சுமக்கும் அந்த ஜ்வாலை பல நேரம் அவர்களையே எரிக்கும். பாதிக்கப்- பட்டவர்கள் கிளர்ந்து எழுந்து எதிர்க்கத் துணியும்போது, தன்னலவாதிகள் வன்முறையைக் கையில் எடுப்பர். நிலப்பிரபுக்கள் அல்லது முதலாளிகள் யாருக்கு எதிரான போராட்டம் எனினும், அந்த வன்முறை சுரண்டப்பட்டவர்களைக் கட்டுப்படுத்தும் அச்சுறுத்தலாக மாறும். –‘இல்லாதஅவர்கள், உழன்று உழைத்து உருக்குலைந்து ‘இருப்பவர்க்கு வளங்களை வாரிக் குவித்தவர்கள். எனினும் எந்தக் குற்றமும் இழைக்காத போதும்கூட அவர்கள் தண்டிக்கப்படுவார்கள். அது நமது ஜனநாயகக் குணப் பண்பிற்கு ஓர் அச்சுறுத்தல்; சமூகம் முழுமையும் ஒருங்கிணைக்கப் போராட முயற்சிக்கும்போதே, மக்கள் மத்தியில் உள்ள ஒற்றுமையை அது பிளவுபடுத்தும்.

எனினும், சமூக பொருளாதார இல்லாமையின் கீழ் வாழும் மக்களுக்கு அது தொடர்ச்சியாகத் தீங்கிழைக்கும். இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண பல்வேறு பெரும் ஆளுமைகள் மற்றும் இயக்கங்கள், சமூகத்தில் சமத்துவம் மற்றும் சகோதரத்துவத்தை உறுதியளிக்கும் நியாயமான முறைமையைத் தேடி, ஈடுபட்டு வருகிறார்கள். அத்தகைய இயக்கங்களில் ஒன்றுதான் சுயமரியாதை இயக்கம். இந்த ஆண்டு அந்த இயக்கம் நூற்றாண்டை நிறைவு செய்கிறது. சுயமரியாதை இயக்கமும் அதன் இலட்சிய நோக்கங்களும் இளம் தொழிலாளர்கள் மற்றும் மாணவர் திறளை ஈர்த்து, செல்வாக்கு செலுத்தி, இறுதியில் சோசலிசம் நோக்கி நகர்த்தியது.

உண்மையில் காலனிய ஆட்சியின் இறுதி 25 ஆண்டுகள் தமிழ்நாட்டில், (பெரியார் தலைமையிலான திராவிட இயக்கத்திற்கு முன்னோடியான) சுயமரியாதை இயக்கம் மற்றும் கம்யூனிஸ இயக்கம் என இரு இயக்கங்கள் மலரக் கண்டது.

மெட்ராஸ் மாகாணத்தில் ஈ வே ராமசாமி பெரியார் தலைமையிலான சுயமரியாதை இயக்கத்திற்கு, முன்னோடி கம்யூனிஸ்டும், சமூக சீர்திருத்தவாதியுமான சிந்தனை சிற்பி எம் சிங்காரவேலர் முக்கியமான கூட்டாளி, 1920கள் மற்றும் 1930களில் அவர்களின் நெருங்கிய நட்பு, சுயமரியாதை இயக்கத்திற்குச் சோசலிச விஞ்ஞான பொருள் முதல்வாதக் கண்ணோட்டத்தை  உட்பகுத்தியது.

1920களில் காங்கிரஸ் கட்சிக்குள் சிங்காரவேலரும் பெரியாரும் நெருங்கிய கூட்டாளிகள். சோசலிசத் தத்துவக் கருத்துகளைப் பெரியார் ஏற்றுத் தழுவியதில் சிங்காரவேலர் முக்கிய செல்வாக்கைச் செலுத்தினார்; அவர் 1923 மே முதல் நாள் இந்துஸ்தான் லேபர் அண்ட் கிசான் பார்ட்டி (தொழிலாளர் விவசாயிகள் கட்சி)யை மெட்ராஸில் நிறுவியவர்.  சிங்காரவேலர், தந்தை பெரியாரின் குடியரசு தமிழ் வார இதழில் சமூகச் சீர்திருத்தம், விஞ்ஞானம், பகுத்தறிவு சிந்தனை மற்றும் சோசலிசம் குறித்த தலைப்புகளில் கட்டுரைகளை எழுதுவது வழக்கம்

1932ல் தந்தை பெரியாரின் சோவியத் யூனியன் விஜயத்திற்குப் பிறகு அவர், சிங்காரவேலர் மற்றும் பிற சுயமரியாதை செயல்பாட்டாளர்களுடன் ஈரோட்டில் ஒரு கூட்டத்தை

கூட்டினார். அவர்கள் அனைவரும் இணைந்து “ஈரோட்டுத் திட்டம் வகுத்து, இயக்கத்திற்குச் சோஷலிசக் கண்ணோட்டத்தை வழங்க ‘தென்னிந்திய சமதர்மக் (சோசலிஸ்ட்) கட்சி அமைத்தனர்  –அக்கட்சி சிறிது காலமே செயல்பட்டது. அதே ஆண்டு, சட்ட மறுப்பு இயக்கத்தில் இணைந்த சுயமரியாதை இயக்கச் செயல்பாட்டாளர்- கள் பகத்சிங்கின் நெருங்கிய தோழரான பட்டுக்கேஷ்வர் தத் செல்வாக்குக்கு ஆட்பட்டனர். உண்மையான விடுதலைக்கு இட்டுச் செல்ல சோஷலிசம் ஒன்றே வழி என்ற உணர்வை ஜீவானந்தம் மற்றும் பலரிடம் அவர் ஆழப் பதிய வைத்தார். 

அர்ப்பணிப்புள்ள அறிவியல் ஆதரவாளரான சிங்காரவேலர் இயக்கத்திற்கு விஞ்ஞானபூர்வ மார்க்சிய வரையறையை அறிமுகம் செய்தார். அவரது அணுகுமுறை, வெறுமே சடங்குகளைக் கேள்வி கேட்பதற்கு அப்பால் சென்று, சுரண்டல் மற்றும் அநீதியின் (அடிப்படைக் காரணமான) பொருளாதார வேர்களை நாடிச் சென்று தீர்ப்பதாக இருந்தது. இந்தக் காலத்தை ஒட்டிதான் சுயமரியாதை இயக்க செயல்பாட்டாளர்கள் மத்தியிலும் தந்தை பெரியார் ஈவேரா அவர்களிடத்தும் --குறிப்பாக அவரது சோவியத் யூனியன் பயணத்திற்குப் பிறகு அதுவரை-- சீர்திருத்த இயக்கமாக மட்டுமே இருந்த சுயமரியாதை இயக்கத்தின் தன்மையை மாற்ற வேண்டும் என்ற தெளிவான விழைவு இருந்தது. (பின்னரே அரசியல் லட்சிய நோக்கங்கள் அதில் சேர்க்கப்பட்டன) 

அப்பொழுது சிங்காரவேலர் மேற்பார்வையின் கீழ் புதிய செயல் திட்டம் வகுக்கப்பட்டது. பெரியாரின் இடமான ஈரோட்டில் கூட்டம் நடத்தப்பட்டு ‘தென்னிந்தியச் சமதர்மக் கட்சி’ என்ற புதிய கட்சி அமைக்கப்பட்டது. எனினும் அடிப்படையில் அது பழைய இயக்கமாகவே இருந்தது. ப. ஜீவானந்தம் கட்சியின் செயலாளராகத் தேர்ந்து எடுக்கப்பட்டார்.

காந்திய கருத்துக்களில் தன்னை நிலைநிறுத்தி தனது அரசியல் வாழ்வைத் தொடங்கியவர் ஜீவானந்தம். வைக்கம் மகாதேவர் ஆலயத்திற்குச் செல்லும் சாலையில் தலித்துகள் நடப்பதற்கு இருந்த தடையை எதிர்த்து, உயர்ஜாதி இந்துக்களுக்கு எதிராக 1924ல் நடைபெற்ற வைக்கம் சத்தியாகிரகத்தில் ஜீவா கலந்து கொண்டார். சுசீந்திரம் ஆலயத்திற்குள் தலித்கள் நுழைவைக் கோரி நடைபெற்ற அதுபோன்றதொரு கண்டனப் போராட்டத்தில், அவர் கலந்து கொண்டார். வவேசு அய்யர் நடத்திய சேரன்மாதேவி ஆசிரமத்தில் தலித்கள் மற்றும் உயர் ஜாதி ஹிந்து மாணவர்களுக்குத் தனித்தனி ஹால்களில் உணவு  பரிமாறப்பட்டதைக் கண்டார். இந்தச் சாதிப் பாகுபாட்டு நடைமுறையைப் பெரியார் எதிர்த்ததை ஆதரித்து அவர் ஆசிரமத்தைவிட்டு வெளியேறினார்.

பின்னர் காரைக்குடி அருகே சிறுவயலில் அருட்கொடையாளர் ஒருவர் நிதியளிக்க நடந்தப்பட்டு வந்த ஆசிரமத்தின் பொறுப்பை எடுத்துக் கொண்டார். ஆசிரம வாழ்க்கை ஏராளமான புத்தகங்களைப் படிக்க அவருக்கு வாய்ப்பை வழங்கியது. இந்த அவசரமத்தில் அவர் காந்தியைச் சந்திக்கும் பேறு பெற்றார். காந்திய முறைகளுடன் உடன்படாது ஜீவா அது குறித்துக் காந்திக்கு ஒரு கடிதம் எழுதி இருந்தார்.

காந்தி மெட்ராஸ் வந்தபோது அவர் வசம் இந்த கடிதம் இருந்தது, அவர் ஜீவாவைச் சந்திக்க விரும்பினார். (ராஜாஜி) ராஜகோபாலச்சாரியார் காந்தியிடம், ‘நீங்கள் பெயரைக் கூறுங்கள்; அந்தக் குறிப்பிட்ட நபரை இங்கே அழைக்க முடியும் என்றார். காந்தி கூறினார், ‘அவரை இங்கே அழைப்பதில் எனக்கு விருப்பமில்லை; எந்த ஆசிரமத்தில் ஜீவா வசிக்கிறாரோ, அந்த ஆசிரமத்திற்குச் சென்று அவரைச் சந்திக்கவே விரும்புகிறேன் என்று குறிப்பிட்டார். காந்தி சிறுவயல் ஆசிரமத்திற்குச் சென்றபோது, தன் முன் நின்ற 25வயது மதிக்கத்தக்க இளைஞர் ஜீவாவிடம் நீங்கள்தானே ‘அந்தக் கடிதம்எழுதியவர் என்று கேட்டார் –ஜீவா ஆம் என்று பதில் அளித்தார்.

(‘ஆசிரமம் நடத்துகிறீர்களே, உங்களுக்கு என்ன சொத்துஎன காந்தி வினவ, “இந்தத் தேசம்தான் எனது சொத்துஎன்றார் ஜீவா. அதை விரைவாக மறுத்த காந்தி, “இல்லை, இல்லை, நீங்கள்தான் இந்தத் தேசத்தின் சொத்துஎன்று கூறிச் சென்றது நம் நெஞ்சில் நிறைந்த வரலாறு அல்லவா! –மொழிபெயர்ப்பாளர் கூடுதல் தகவல் இணைப்பு)

பின்னர் மெட்ராஸ் மாகாணக் காங்கிரஸ் சோசலிசக் கட்சி 1937ல் அமைக்கப்பட்டபோது ஜீவானந்தம் அதன் முதல் செயலாளர் ஆனார். பிறகு இரண்டு ஆண்டுகளில் இயக்கத்தின் மற்றொரு மூத்த செயல் வீரரான  பி ராமமூர்த்தியுடன்,  ஜீவா  இந்தியக்  கம்யூனிஸ்ட்  கட்சியில்

இணைந்தார். சிபிஐ-யில் தன்னை முதல் உறுப்பினராகத் தமிழ்நாட்டில் இணைத்துக் கொள்வதற்கு முன், ஜீவானந்தம் இந்த முந்தைய இரு இயக்கங்களிலும் தீவிரமாகப் பங்கேற்றார். அவரது தேசப்பற்று அவரைத் தேசிய இயக்கத்தில் கொண்டு சேர்த்தது;
தீண்டாமை மற்றும் சாதி அடிப்படையிலான பாகுபாட்டின் பால் அவரது வெறுப்பு, அவரைச் சுயமரியாதை இயக்கத்தை ஆதரிப்பவர் ஆக்கியது.

சிபிஐயில் இணைந்த பிறகு ஜீவானந்தமும் ராமமூர்த்தியும் மார்க்சியப் பாதையில் ரிக்க்ஷா இழுப்பவர்களையும் ஆலைத் தொழிலாளர்களையும் அமைப்பாகத் திரட்டினார்கள். இதில், எம் ஆர் வெங்கட்ராமன் மற்றும் பி சீனிவாச ராவ் போன்ற தலைவர்கள் உதவினர். மார்க்சிய அடிப்படையில் வலிமையான தொழிலாளர் இயக்கத்தைக் கட்டும் முயற்சிகளில் ஜீவா முன்னணியில் நின்றார். இந்தப் பொறுப்பை முழுமையாக்குவதில் அவரது பேச்சாற்றல் மற்றும் எழுத்தாற்றல் அவருக்கு உதவின. ஆனால் இந்தத் தலைவர்கள் போலீஸ் அடக்கு முறையில் துன்பப்பட்டார்கள் மற்றும் பலமுறை சிறை சென்றார்கள். ஜீவா பதற்றமான இடங்களுக்கும் நேரில் சென்று தொழிலாளர்களின் போராட்ட உணர்வுகளைத் துடிப்புடன் வளர்த்தார். ஆலைத் தொழிலாளர்கள் மட்டுமின்றி, விவசாயத் தொழிலாளர்கள் மற்றும் சிறு விவசாயிகளையும் தஞ்சாவூர் மற்றும் பிற மாவட்டங்களில் அவர்கள் திரட்டினர். ஆற்றல் மிக்க தங்கள் உரைகளால் ஜீவானந்தமும் ராமமூர்த்தியும் ஆயிரக்கணக்கான மக்களை ஊக்குவித்தனர் .

(அத்தகைய தலைவர்கள் பாடுபட்டு வளர்த்த) நூற்றாண்டு காணும் சுயமரியாதை இயக்கத்தின் விழுமியங்களை உயர்த்தி பிடிப்போம்!

தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ கடலூர்

பின்குறிப்பு :

1925ஆம் ஆண்டு நவம்பர் 21, 22ஆம் தேதிகளில் காஞ்சிபுரத்தில் தமிழ்நாடு காங்கிரசின் 31வது மாநில மாநாடு. அந்த மாநாட்டில் பெரியார், ‘பிராமணர், பிராமணரல்லாதார், தீண்டாதார் மூன்று பிரிவினருக்கும் ராஜ்ஜிய சபை, பொது ஸ்தாபனங்களில் அவரவர் சமூக மக்கள் தொகை விழுக்காடு இடஒதுக்கீடு அடிப்படையில் தங்கள் பிரதிநிதிகளைத் தாங்களே தேர்ந்தெடுக்கும் உரிமை கோரி’ கொண்டுவந்த தீர்மானம் நிராகரிக்கப்பட்டது. பெரியார் மாநாட்டைவிட்டு வெளியேறினார். சிலர் இந்த நாளையே சுயமரியாதை இயக்கத்தின் துவக்க நாளாகக் கருதுவதும் உண்டு.

ஆனால், சுயமரியாதை இயக்கத்தின் துவக்க விழாவோ, பொதுக்கூட்டமோ நடக்கவில்லை. இந்த இயக்கம் தோன்றியது குறித்து, 1937ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் தேதி குடிஅரசு இதழில் ‘சுயமரியாதை இயக்கம்’ என்ற பெயரில் பெரியார் ஒரு கட்டுரையை வெளியிட்டார். அந்தக் கட்டுரையில் “சுயமரியாதை இயக்கம் என்பதாக ஓர் இயக்கம் 1925ல் என்னால் துவங்கப்பட்டது யாவரும் அறிந்ததேயாகும்” என்று குறிப்பிடுகிறார். ஆனால், அந்த இயக்கத்தின் வரலாற்றை அவர் அந்தக் கட்டுரையில் எழுதவில்லை. ஆகவே இந்த இயக்கத்தின் துவக்கப் புள்ளியாக ஒரு தினத்தைக் குறிப்பிட முடியாது.

பெரியாரின் குடிஅரசு இதழின் முதல் படியை 1925 மே 2-ஆம் நாள் சனிக்கிழமை அன்று திருப்பாதிரிப்புலியூர் சைவத் திருமடத்தின் தலைவர் தவத்திரு ஞானியார் அடிகள் வெளியிட்டார். தனக்கென ஓர் இதழாகப் ‘‘பெரியார் குடிஅரசு இதழைத் துவங்கிய காலகட்டத்தையே சுயமரியாதை இயக்கத்தின் துவக்கமாகக் கொள்ளலாம்" என்கிறார் வரலாற்றுத் துறை பேராசிரியர் ஆ. திருநீலகண்டன். 

எனவே இதையெல்லாம் மனதில் கொண்டு 2025ம் ஆண்டு சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவாகக் கொண்டாடப்படுகிறது.

                                                                                            (இணையத்தில் திரட்டியது)






Friday, 24 October 2025

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 112 -- ஷிவ் வர்மா –பகத்சிங்கின் சகா

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 112


ஷிவ் வர்மா –பகத்சிங்கின் சகா,
உ பி --யில் கட்சியைக் கட்டியவர்

அனில் ரஜீம்வாலே

ஷிவ் வர்மா, நாம் நன்கு அறிந்த சர்தார் பகத்சிங்கின் தோழர், ஹிந்துஸ்தான் சோஷலிஸ்ட் புரட்சிகர அமைப்பின் அமைப்பாளர், அந்தமான் செல்லுலார் சிறையில் நீண்ட காலம் கைதியாக இருந்தவர்,  உ.பி மற்றும் பிற இடங்களில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை வளர்த்தவர்களில் ஒருவராவார்.

ஷிவ் வர்மா உபி ஹர்தோய் மாவட்டம், கட்டேளி கிராமத்தில் 1904 பிப்ரவரி 9ம் நாள் பிறந்தார். தந்தை ஸ்ரீ கன்னையா லால் வர்மா, தாயார் திருமதி குந்தி தேவி. குழந்தைகள், ஷிவ் உள்ளிட்ட ஆறு பேர். அரசு ஊழியரான அவரது தந்தை பகுதிநேரம் விவசாயத்தில் ஈடுபட்டவர். அவர் அரசு வேலையை ராஜினாமா செய்துவிட்டு ஆயுர்வேத மருத்துவத் தொழிலை மேற்கொண்டார்.

ஷிவ் கான்பூர் டிஏவி கல்லூரி மாணவர். அவர் தனது தொடக்க அரசியல் உணர்வைப் பெற்றிட தந்தை வழி  சகோதரர் காரணமாக இருந்தார்.

சுதந்திரப் போராட்டத்தில் நுழைவு

15 வயது முதலே ஷிவ் அரசியல் இயக்கங்களின் பால் ஈர்க்கப்பட்டார். அப்போது அவர் எட்டாம் வகுப்பில் படித்துக் கொண்டிருந்தார். அவரது மூத்த சகோதரனும் மூன்று நண்பர்களும், ஹர்தோய் பகுதியில் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்த, முதலாவது சத்யாகிரகிகள். அவர்களது உதாரணத்தைப் பின்பற்றி ஷிவ் வர்மாவும் படிப்பை விட்டு விட்டு 1920 ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார்.

அந்த இளம் வயதிலேயே ஷிவ், ஹர்தோய் காங்கிரஸ் அலுவலகப் பொறுப்பாளர் ஆனார். இறுதியில் அவர் மாவட்டக் காங்கிரஸ் செயலாளராக அறிவிக்கப்பட்டார்.

பகிஷ்கரிப்பு இயக்கத்தில் அவர் தீவிரமாகப் பங்கேற்றார். ஒத்துழையாமை இயக்கம் திரும்பப் பெறப்பட்டதும் பெரும் ஏமாற்றமடைந்த ஷிவ், முற்றாகக் காங்கிரசை விட்டு வெளியேறினார். அவரது மூத்த சகோதரர் ஒரு சன்னியாசியாக மாறினார். கயா பிரசாத் பிரம்மச்சாரி என்பவருடன் ஷிவ்வுக்குத் தொடர்பு ஏற்பட்டது. அவர் புரட்சிகரப் புத்தகங்களைத் தந்தார்.

1922--23ல் உ.பி அவந்த் பகுதியில் நடைபெற்ற ‘விவசாயிகளின் ஒற்றுமை இயக்கத்தில் (ஏகா மூமெண்ட்)  ஷிவ் தீவிரமாகப் பங்கேற்றார். ஹரிஜனத் தலைவர் மாதரி பாசி தலைமையில் நடைபெற்ற அந்த இயக்கம் ஹர்தோய், உனாவ், ஃபரூகாபாத் முதலிய பகுதிகளுக்கும் பரவியது. இதன் மத்தியில் ஷிவ் ஒரு புரட்சிகர குழுவை அமைக்க   பாசியும் உறுப்பினரானார். அந்த இயக்கம் முடிந்த பிறகு அவர் தனது படிப்பைத் தொடர்ந்தார்; 1925ல் ஜெய்தேவ் கபூர் உடன் அவர் கான்பூர் வந்தார்.

கான்பூரில்தான் சச்சீந்திரநாத் சன்யால், சுரேஷ் சந்திர பட்டாச்சாரியா மற்றும் பிறரால் ‘ஹிந்துஸ்தான் குடியரசு அசோசியேஷன் அமைக்கப்பட்டது. பின்னர் ஷிவ் வர்மா, சுரேந்திரநாத் பாண்டே, பிஜாய் குமார் சின்ஹா, ஜெய்தேவ் கபூர் மற்றும் பிறரும் அதில் இணைந்தனர். தலைமறைவு வாழ்வில்  ஷிவ் வர்மாவின் பெயர் ‘பிரபாத்

பிஜாய் குமார் சின்ஹா, ஷிவ் வர்மாவை ராதா மோகன் கோகுல்ஜியிடம் அறிமுகம் செய்து வைத்தார்; அவர், தீவிரமான இதழியல் செயல்பாட்டாளர், எழுத்தாளர் மற்றும் 1925 கான்பூரில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தொடக்க மாநாட்டிற்காகத் தீவிரமாகப் பணியாற்றியவர்களில் ஒருவராவார். அந்த நேரத்தில் நடத்தப்பட்ட அகில இந்தியக் காங்கிரஸ் கட்சி அமர்வில் ஷிவ் ஒரு தன்னார்வத் தொண்டராக இணைந்தார்.

கோகுல்ஜி உடன் ஷிவ்வின் சந்திப்பு 1926 டிசம்பரில் நடந்தது. ஒரு புத்தகத்தைத் திரும்பித் தர பிஜாய் தன்னுடன் அவரை அழைத்துச் சென்றிருந்தார். கோகுல் ஜி ஏழை மக்களும் தொழிலாளர்களும் நிறைந்த இடத்தில் வாழ்வது வழக்கம். ஷிவ் அவரை 1925ல் நடைபெற்ற காங்கிரஸ் அமர்வில் போகிற போக்கில் நொடிப் பொழுது பார்த்ததுதான்.

ராதா மோகன் ஜி, ஷிவ் வர்மாவைக் கருத்தியலில் பயிற்றுவித்தார். ’கம்யூனிசம் என்றால் என்ன?’ என்ற அவர் எழுதிய புத்தகத்தைப் படிக்கக் கொடுத்தார். புத்தகத்தைத் தரும்போது அவர் ஷிவ்விடம், ‘அப்புத்தகத்தை ஒருமுறை அல்லது இரண்டு முறை அல்ல, பலமுறை படிக்குமாறு’ கூறினார்.  அப்படி அதை முழுமையாகப் படிக்காமல் தன்னிடம் மீண்டும் திரும்ப வேண்டாம் என ஷிவ்விடம் கேட்டுக் கொண்டார்! மேலும், தனது கேள்விகளுக்குப் பதில் அளிக்க முழுமையான தயாரிப்புடன் அவர் இருக்க வேண்டும் என்றும் கூறினார்.

அதைத்தான் ஷிவ் செய்தார். ஆழ்ந்து படித்த பிறகு அவர் புத்தகத்தைத் திரும்பக் கொடுத்தார்; கோகுல் ஜி கேட்ட அனைத்துக் கேள்விகளுக்கும் வெற்றிகரமாகப் பதில் அளித்தார்: கோகுல் ஜி, “சபாஷ், நீ தேர்வில் வென்று விட்டாய்!” என்றார். கோகுல் ஜி பெருமளவில் சேகரித்து வைத்திருந்த நூல்களைப் படிக்க ஷிவ் வர்மாவை ஊக்கப்படுத்தினார். அவரது நூலகத்திலிருந்து பல பல புத்தகங்களைப் படித்தார், அவர்கள் சோசலிசம் குறித்து விவாதித்தனர்.

மேலும் பல புரட்சிகர நடவடிக்கைகளிலும் ஷிவ் ஈடுபட்டார். விலை உயர்ந்த இரண்டு பிஸ்டல்களைப் பெற உதவியவர் கோகுல் ஜி. ஒரு பிஸ்டல் மணி பானர்ஜியாலும், மற்றொன்று அலகாபாத் சிஐடி-யான எஸ்.பி. பானர்ஜியாலும் பயன்படுத்தப்பட்டன. மற்றொன்று சாண்டர்சைச்  சுடுவதற்குப் பகத்சிங்  பயன்படுத்தியது.

    1925ல் புகழ்பெற்ற ககோரி (ரயில் கொள்ளை* ) நிகழ்வுக்குப் பிறகு சந்திரசேகர ஆசாத் ஜான்சியில் தங்கினார். அவர் கான்பூருக்கு வந்து ராதாமோகன் கோகுல் ஜியுடன் தங்கினார். இங்குதான் ஷிவ் வர்மா ஆஸாத்தை முதல் முறை சந்தித்தார். அவர்கள் அனைவரும் ராம் பிரசாத் பிஸ்மில் உடன் தீவிரத் தொடர்பு கொண்டிருந்தனர். 
 [*இது, 1925 ஆகஸ்ட் 9ல் இந்துஸ்தான் குடியரசு அமைப்பைச் சேர்ந்த ராம் பிரசாத் பிஸ்மில். சந்திரசேகர ஆசாத் முதலான இந்தியப் புரட்சியாளர்கள், ககோரி ரயில் நிலையத்தில் 8ம் எண் ரயிலை நிறுத்தி அதில் கொண்டு செல்லப்பட்ட பிரிட்டிஷ் அரசு நிதியை –தங்கள் புரட்சிகர நடவடிக்கைகளுக்காக – துணிச்சலாகக் கொள்ளையடித்த நிகழ்வு. பின்னர் முக்கிய புரட்சியாளர்கள் சிலருக்குத் தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது –மொழிபெயர்ப்பாளர் கூடுதல் இணைப்பு]  

1927 ஜனவரியில் டிஏவி கல்லூரியில் ஷிவ் வர்மா பகத்சிங்கைச் சந்தித்தார். அப்போது பகத்சிங் புரட்சியாளர்கள் அனைவரையும் சந்திக்க ஒரு வாரம் கான்பூர் வந்திருந்தார். பகத்சிங் கற்றலில் மிக ஆர்வம் உடையவராகவும் ஏராளமான நூல்களைப் படிப்பவராகவும் ஷிவ் அவரைக் கண்டறிந்தார் அவர் பெரும்பாலும் ஷிவ் அறையில் தங்கினார். விக்டர் க்யூகோ, டால்ஸ்டாய், தஸ்தயேவ்ஸ்கி, கார்க்கி, பெர்னாட்ஷா, சார்லஸ் டிக்கன்ஸ் மற்றும் பலர் எழுதிய நூல்களைப் பகத்சிங் படித்தார். 1925ல் கணேஷ் சங்கர் வித்யார்த்தி வெளியிட்டு வந்த ‘பிரதாப்’ (புகழ்/ வலிமை) பத்திரிக்கையில் அவர் முன்பு பணியாற்றியுள்ளார். மௌலானா ஹஸ்ரத் மொஹானி அவர்களையும் சந்தித்த ஷிவ் அவர் குறித்து எழுதினார்.

பிஸ்மில் உடன் சந்திப்பு

ராம் பிரசாத் பிஸ்மில் 1927 டிசம்பர் 19 தூக்கிலிடப்பட இருந்தார். அதற்கு ஒரு நாள் முன்பு கோரக்பூர் மாவட்டச் சிறைக்கு அவரது தாயார் மூல் ராணி தேவி மகனை இறுதி முறையாகப் பார்க்க வந்தார். ஏற்கனவே அங்கே இருந்த ஷிவ், மூல் ராணியை நெருங்கி பிஸ்மில்லைச் சந்திக்கத் தனக்கு உதவும்படி வேண்டினார். உடனே அதற்கு ஒப்புக் கொண்டவர் அவரை பிஸ்மில் ஒன்றுவிட்ட சகோதரன் ஷங்கர் பிரசாத் போல நடிக்கக் கூறி, தன்னை அவரது ‘மௌசி (தாயின் சகோதரி) எனக் குறிப்பிட்டார்! தாய்க்கும் மகனுக்குமான இறுதி சந்திப்பு அது என்பதால் சிறிது நேரம் அவர்கள் தனியே விடப்பட்டனர். அதன் பிறகு அந்தத் தாய் ஷிவ் வர்மாவை இந்துஸ்தான் குடியரசு அமைப்பின் (HRA) உறுப்பினர் என்று குறிப்பிட்டு அவருடன் பிஸ்மில்லைப் பேசக் கூறினார். பிஸ்மில்லும் ஷிவ் வர்மாவும் சிறிது நேரம் உரையாடினர்.

அந்தமான் சிறையில் கடுமையான சித்திரவதைகள் மற்றும் கட்டாய உணவு புகட்டல் உள்பட பல கொடூரங்களின் காரணமாக மரணமடைந்த மகாவீர் சிங் ஒரு பெரும் புரட்சிகர கைதி. 1928 ஜூனில் ஷிவ் வர்மாதான் அவரை ஹிந்துஸ்தான் குடியரசு அமைப்பில் (HRA) உறுப்பினராகச் சேர்ந்தார்.

1928 நவம்பரில் நூரிகேட்டுக்கு அருகில் ஆக்ராவில் அமீர் சந்த் என்ற புனைப் பெயரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி இருந்தபோது ஷிவ் வர்மா வெடிகுண்டுகள் தயாரிப்பதில் பயிற்சி பெற்றார்.

புகழ்பெற்ற ககோரி சதி வழக்கில் (ரயில் கொள்ளை) ஜோகேஷ் சந்திர சாட்டர்ஜி 1927-ல் ஃபதேக்ஹர்க் மாவட்டச் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சாட்டர்ஜியைச் சிறையிலிருந்து வெளியே கொண்டு வர அவரது ஒப்புதலைப் பெறுவதற்கான பொறுப்பு ஷிவ் வர்மா மற்றும் விஜய் குமார் சின்ஹாவிடம் அளிக்கப்பட்டிருந்தது. அவர்கள் ஃபதேக்ஹர்க் விட்டு புறப்பட்ட பிறகு 1928 மார்ச் 3ல் போலீஸ்காரர்கள் இந்த இருவரையும் தேடி வந்தனர். இதையறிந்த இருவரும் உடனடியாக அந்த இடத்தை விட்டு நீங்கி கான்பூர் செல்ல முடிவு செய்தனர். கான்பூருக்கு ரயில் புறப்பட்டதும் இரண்டு போலீஸ்காரர்கள், ஷிவ் மற்றும் பிஜாய் முன்பதிவு செய்த அதே பெட்டியில் வந்தமர்ந்தனர். இதை மோப்பம் பிடித்து ஜலாலாபாத் ஸ்டேஷனுக்கு அடுத்து அவர்கள் ரயிலில் இருந்து குதித்துத் தப்பி சென்றனர். அவர்களைப் பிடிக்கத் தொடர்ந்து ஓடிய  போலீஸ்காரர்கள் அந்த முயற்சியில் விழுந்து காயமடைந்ததுதான் மிச்சம்.

HSRA அமைப்பில்

ஷிவ் விரைவாக சோசலிசம் நோக்கி நகரத் தொடங்கினார். அவர் தனது படிப்பை விட்டு விட்டு புரட்சிகரப் பணியில் ஆழ்ந்தார். (பின்னர் ஹிந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு, HSRA, என்று மாற்றப்பட்ட) ஹிந்துஸ்தான் குடியரசு அமைப்பில் (HRA) இணைந்தார். விரைவில் ஷிவ் வர்மா, 1928 செப்டம்பர் 8 மற்றும் 9ல் டெல்லி பெரோஷா கோட்லா கோட்டை இடிபாடுகளில் புரட்சியாளர்களால் அமைக்கப்பட்ட HSRA மத்தியக் குழுவில் இணைத்துக் கொள்ளப்பட்டார். அவர் உ பி கிளையின் அமைப்பாளர். ‘சந்த்(‘Chand’) இதழுக்காக வர்மா பல்வேறு கட்டுரைகளை எழுதினார்.

பகத்சிங் மற்றும் பட்டுகேஷ்வர் மத்திய அசெம்பிளியில் குண்டுகளை வீசுவதற்கு முன்பு, சந்திரசேகர் ஆசாத் ஷிவ்விடம் அவர்களை நன்கு கவனித்துக் கொள்ளும்படி அறிவுறுத்தினார்.

ஜெய்தேவ் கபூர், கயா பிரசாத் மற்றும் ஷிவ் வர்மாவிடம் சஹாரன்பூரில் குண்டு தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கும் பொறுப்பு தரப்பட்டது. அவர்கள் டிஸ்பென்சரி நடத்தும் பெயரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்தனர். அவர்களிடம் பணம் இல்லாததால் பணத்தைத் திரட்ட காலம் எடுத்துக் கொண்டனர்; மேலும் பணத்துக்கு ஏற்பாடு செய்ய கயா பிரசாத் கான்பூர் சென்றார். அவர்களின் நடவடிக்கைகளைச் சந்தேகித்த போலீஸ் அந்த இடத்தைச் சோதனை நடத்தி வெடிகுண்டுகள் மற்றும் சில பொருட்களுடன் அவர்களைக் கைது செய்தனர். பின்னர் கயா பிரசாத்தும் கைது செய்யப்பட்டார், அது மே 1929. 

லாகூர் மத்தியச் சிறைக்கு அனுப்பப்பட்ட அவர்களுக்கு எதிராக விசாரனை நடத்தப்பட்டு 1930ல் லாகூர் சதி வழக்கின் கீழ் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அரசியல் செயல்பாட்டாளர்களுக்குச் சிறையின் நிலைமைகளை மேம்படுத்தக் கோரி சரித்திர புகழ் பெற்ற 63 நாட்கள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஷிவ் வர்மா பங்கேற்றார்; அதில் யதீந்திர நாத் தாஸ்  (‘ஜத்தின் தாஸ்’ என்ற ஜதீந்திர நாத் தாஸ்) மரணமடைந்தார்.

         உண்ணாவிரதம் காரணமாக விரைவில் தாஸின் உடல்நிலை பலவீனமடைந்தது. 15 நாட்களுக்குப் பிறகு உணர்விழந்த நிலையில் அதிகபட்ச காய்ச்சலுடன் சிறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். சிறையில் காய்ச்சல் நிமோனியா ஆனது. கூடுதல் ஜுரத்தில் பல நாட்கள் படுக்கையில் புரண்டு தவித்தார். மார்பில் தைக்கும் வலியால் துடித்தவர் ஒரு வினாடி கூட இமை மூடி தூங்க முடியவில்லை. சில மருந்துகளை உட்கொள்ள மருத்துவர்கள் கெஞ்சியபோது மறுத்தார். பலகீனமான குரலில் அவர், ‘எல்லா மருந்துகளையும் மறுக்க அவர்கள் முடிவெடுத்துள்ளதாகவும், அந்த முடிவிலேயே தானும் உறுதியாக நிற்கப் போவதாக பதில் அளித்தார்.

ஷிவ் வர்மா அதில் பிழைத்தது, ஓர் அதிசயம். அவர் எப்பொழுதும் அமைதியாகத் துணிச்சலை வெளிப்படுத்துவார். ஒருமுறை நீதிமன்றத்தில் போலீசால் மிகக் கடுமையாகத் தாக்கப்பட்ட அவர் அந்த இடத்திலேயே மயங்கி விழுந்தார்.

நீதிமன்ற விசாரணை நிகழ்வுகளைக் கூர்ந்து கவனமுடன் பார்ப்பது அவர் வழக்கம். பின்னர் குறுக்கு விசாரணையின்போது அவற்றைப் பயன்படுத்தி அரசு தரப்பு வழக்கறிஞர் வாதங்களையும் சாட்சிகளையும் நார்நாராகக் கிழித்தெறிவார். குறிப்பாக அவர் அப்ரூவர் ஆன பிறழ் சாட்சிகளிடம் கடுமையான கேலி கிண்டலுடன் வினாக்களைத் தொடுப்பார்; அப்போது அவர்கள் உடல் நடுங்கி கண்கள் பட படக்க தங்கள் முந்தையக் கூற்றுடன் முரண்பட பதிலளிக்க வைத்து விடுவார். நீதிமன்ற அறையில் குழுமிய பார்வையாளர்கள் மத்தியில் இது சிரிப்பலைகளை எழுப்பும்.

உண்ணாவிரதப் போராட்டம்போது அரசு அதிகாரிகள் அளித்த உறுதி மொழிகளில் இருந்து அரசு பின் வாங்கியது. லாகூர் வழக்கின் அனைத்துக் கைதிகளும் ‘சிவகுப்பு சிறையில் அடைக்கப்பட்டு கடும் மிருகத்தனத்துடன் நடத்தப்பட்டனர்.

ஷிவ் மெட்ராஸ் சிறைகளுக்கு மாற்றப்பட்டார். ராஜமுந்திரி சிறையில் இருந்தபோது அவரும் ஜெய்தேவ் கபூரும் ஐந்தரை மாதங்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினர். அது அல்லாமலும் எண்ணற்ற சண்டைகளும் நடப்பதுண்டு.

அந்தமானில்

இறுதியாக ஷிவ் வர்மாவும் பிற கைதிகளும் இழிவுப் பெயர் பெற்ற, மனிதத்தன்மை அற்ற அந்தமான் செல்லுலார் சிறைக்கு அனுப்பப்பட்டனர். அங்கே நிலைமைகள் படுமோசம். ஷிவ் அங்கே கம்யூனிஸ்ட் ஒருங்கிணைப்பு குழுவின் அங்கமானார், பிஜாய் குமார் சின்ஹா அதன் நிறுவனர்களில் ஒருவர். அந்தமானில் இருந்தபோது கம்யூனிசத்திற்கு மாறிய ஷிவ் உண்மையில் அதன் முன்னணி அமைப்பாளர்கள், தலைவர்களில் ஒருவர்.

1938 வரை ஜெய் தேவ் உடன் ஷிவ் வர்மா அந்தமானில் இருந்தார். பிற கைதிகளில் பெரும்பான்மையோர் விடுதலை செய்யப்பட்டனர்; ஆனால் அந்தமான் தீவில் இருந்து இந்திய நிலப் பகுதிக்குக் கொண்டுவரப்பட்ட பின்பும் ஷிவ் மற்றும் ஜெய்தேவ் விடுதலை செய்யப்படவில்லை. 1946-ல்தான் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். 1929 மற்றும் 1946 இடைப்பட்ட காலத்தில் ஷிவ் வர்மா பல்வேறு சிறைகளில் அடைக்கப்பட்டு, மொத்தம் 16 ஆண்டுகள் 9 மாதங்கள் மற்றும் ஒரு வாரம் சிறைவாசத்தில் கழித்தார். நாடு விடுதலையான பிறகும் பலமுறை அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

சிறையிலிருந்து விடுதலை குறித்து

சில நிபந்தனைகளை ஏற்றால், ஷிவ் வர்மா மற்றும் ஜெய் தேவ் கபூர் இருவரையும் விடுவிக்க பிரிட்டிஷ் அரசு முன் வந்தது. ஆனால் அந்நிபந்தனைகளை ஏற்க அவர்கள் மறுத்து விட்டனர். இது, அந்தமானிலிருந்து விடுவிக்க வேண்டுகோள் மனுக்களை எழுதி; அரசியலில் இருந்து விலகி இருக்க எல்லாவிதமான வாக்குறுதிகளையும் அளித்து; வெளியே வந்த, சவார்க்கர் போன்ற சில கைதிகளின் செயல்களில் இருந்து முற்றிலும் மாறான தன்மை உடையது!

ஹர்தோய் மத்திய சிறையில் இருந்து பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு,  1946 பிப்ரவரி 4ல் ஷிவ் மற்றும் ஜெய்தேவ், ‘நாங்கள் ஏன் இன்னும் பிடித்து வைக்கப் பட்டிருக்கிறோம் என்பதை எங்களால் புரிந்து கொள்ள முடியவில்லைஎன்று எழுதினர். 1920களின் தொடக்கத்திலிருந்து பஞ்சாப், இராணுவச் சட்ட கைதிகள் மற்றும் பிற ஆயுள் தண்டனை பெற்ற கைதிகள் விடுவிக்கப்பட்டு விட்டனர். மொத்தம் ஏறத்தாழ 20 ஆண்டுகளை அவர்கள் சிறையில் கழித்து விட்டனர். இருந்தும் அவர்கள் எந்த மன்னிப்பையும் கோரவில்லை. இந்திய விடுதலை நாள் நெருங்கி வர, தாங்கள் எந்தவித நிபந்தனையும் இன்றி விடுவிக்கப்படுவோம் என்று அவர்கள் உறுதியாக நம்பினர்.

இறுதியாக, பிரிட்டிஷ் அரசு அவர்களை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டி வந்தது. நாட்டின் பல மூலைகளில் இருந்த லாகூர், ராஜமுந்திரி, அந்தமான், ஹர்தோய், நைனி, (கல்கத்தா அருகே) டம் டம், லக்னோ முதலிய பல்வேறு சிறைகளில் அவர்கள் அடைக்கப்பட்டனர். சிறைவிட்டுச் சிறை என ஆர்வத்தை தூண்டும் பயணம் அல்லவா இது!

விடுதலைக்குப் பிந்தைய காலம்

(அந்தமான் தீவில் இருந்து) இந்திய மண்ணிற்கு வந்த பிறகு ஷிவ் வர்மா இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் செயல்பாட்டாளர் ஆனார். அந்தமானில் அவர், கம்யூனிஸ்ட் ஒருங்கிணைப்புக் குழுவில் வகுப்புகளை நடத்துவது மற்றும் கையெழுத்துப் பிரதி இதழ் நடத்துவதில் உதவுவது உள்ளிட்ட ஏராளமான பணிகளை ஆற்றினார். உத்திரப் பிரதேசத்தில் அவர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் பிரபல தலைவரானார்.

1948ல் சிபிஐ உ.பி. மாநிலக் குழுவின் செயலாளராக ஷிவ் வர்மா தேர்ந்து எடுக்கப் பட்டார். அது சிபிஐ-யில் பிடிஆர் பாதையின் காலம். மற்றவர்களைப் போலவே உ.பி. கட்சி குழுவும் தன்னைத் தானே அரித்து அழிக்கும் ஆழமான உட்கட்சி போராட்டத்தில் ஈடுபட்டது. கட்சியில் நிலவிய சூழ்நிலையை ஷிவ் விரும்பாவிட்டாலும் தொடர்ந்து பணி செய்தார்.

1951ல் உ.பி. கட்சிப் பொறுப்புகளில் இருந்து அவர் நீக்கப்பட்டார். அந்தத் தருணத்தில் கட்சியில் நிகழ்ந்துவந்த தேவையில்லாத மயிர் பிளக்கும் கூர்மையான விவாதங்களுடன் அல்லது அதன் பிறகும்கூட அத்தகைய விவாதங்களில் ஒருபோதும் அவர் மகிழ்ச்சியாக இல்லை.

சிபிஐ-யின்  நயா சவேரா (“புதிய விடியல்) என்ற கட்சி பத்திரிக்கையின் ஆசிரியராக ஷிவ் வர்மா இருந்தார்.

1948, 1962 மற்றும் 1965 ஆண்டுகளின்போது அவர் பலமுறை சிறை சென்றார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1964ல் பிளவுபட்டது. பிளவுக்குப் பிறகு ஷிவ் வர்மா சிபிஐ (எம்) கட்சியில் சேர்ந்தார். தேர்தல் டிக்கெட்டுக்காக நடந்த உட்கட்சி மோதல்களில் மெல்ல மெல்ல அவர் எதிர்ப்பையும் அவமானங்களையும் சந்தித்தார். 1971 தேர்தலில் எப்படியோ ஷிவ் வர்மாவுக்குக் கான்பூர் நாடாளுமன்றத் தொகுதியில் இருந்து போட்டியிட டிக்கெட் கிடைத்தது; ஆனால் அவரை எதிர்த்துச் சுயேச்சையாகப் போட்டியிட்ட அதிருப்தி கம்யூனிஸ்ட் வேட்பாளர் எஸ் எம் பானர்ஜி அவரைத் தோற்கடித்தார்.

அவர் லோக் லஹர் (மக்கள் அலை அல்லது மக்கள் இயக்கம்) என்ற சிபிஎம் கட்சி ஹிந்தி

நாளிதழின் ஆசிரியராக அவர் நியமிக்கப்பட்டார். மேலும் ‘நயா பாத் (புதிய பாதை)  என்ற ஹிந்தி இதழின்ஆசிரியரும் ஆவார். HSRA இயக்கத்தின் புகழ்பெற்ற பெண் புரட்சியாளர், ‘துர்கா பாபி (மதினி)’ என்று மரியாதையுடன் அழைக்கப்பட்ட துர்காவதி தேவியால் தொடங்கப்பட்ட லக்னோ மாண்டிசோரி சொசைட்டியின் வாழ்நாள் அறங்காவலர் அவர். மேலும் லக்னோவில் ‘தியாகிகள் நினைவு மற்றும் சுதந்திரப் போராட்ட ஆய்வு மையம்ஒன்றை அவர் நிறுவினார்.

புரட்சியாளர்கள் பற்றிய கட்டுரைகள், புகைப்படங்கள் போன்றவற்றைத் திரட்ட அவர் விரிவாகப் பயணம் செய்தார் –அதற்காக அவர் லண்டனில் உள்ள பிரிட்டிஷ் அருங்காட்சியகம் நூலகத்திற்கும் கூட சென்றார்.

முதுமை பிரச்சனைகள் காரணமாக ஷிவ் வர்மா 1997 ஜனவரி10ல் இயற்கை எய்தினார்.

ஹர்தோய் முனிசிபல் கவுன்சில், இந்தியப் புரட்சியாளர்களுக்கு அர்ப்பணித்து ‘ஷாஹீத் உத்தியான் (ஷாஹீத் பூங்கா)வில் ஷிவ் வர்மா, ஜெய்தேவ் கபூர் மற்றும் ஹரி பகதூர் ஸ்ரீவஸ்தவ் மூவருக்கும் சிலைகள் நிறுவ தீர்மானம் நிறைவேற்றியது.

தி லெஜெண்ட் ஆப் பகத்சிங் திரைப்படத்தில் ஷிவ் வர்மா பாத்திரத்தைக் கபில் சர்மா ஏற்று நடித்தார்.

எழுத்துப் படைப்புகள்

அவரது நூல்கள் சுதந்திரப் போராட்ட வரலாற்றின் முக்கியமான ஆதார ஊற்று. அவரது ‘நினைவலைகள் (‘ஸ்மிருத்தியான்’) நூலில் பகத்சிங், சந்திரசேகர ஆசாத், ராஜகுரு, சுக் தேவ், மகாவீர் சிங், யதீந்திரநாத் தாஸ் மற்றும் பகவதி சரண் வோரா குறித்த மதிப்புமிக்க, நேரடியாக

அறிந்து உணர்ந்த தகவல்களை ஷிவ் வர்மா அளித்துள்ளார். அந்த நூல் எல்லா வகையிலும் ஹிந்துஸ்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு மற்றும் அந்தமானில் கம்யூனிஸ்ட்கள் ஒருங்கிணைப்பு குறித்த வரலாற்று நூலாகத் திகழ்கிறது!

புரட்சியாளர் ஷிவ் வர்மா புகழ் வாழ்க!

--நன்றி : நியூ ஏஜ் (2024 ஜூலை 7 –13)

தமிழில் : நீலகண்டன்,

என் எஃப் டி இ, கடலூர்.