Monday, 12 January 2026

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு -- 95 ராதா மோகன் கோகுல்ஜி : 1925ல் சிபிஐ அமைப்பு மாநாடு ஏற்பாட்டாளர்களில் ஒருவர்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு -- 95


ராதா மோகன் கோகுல்ஜி :
1925ல் சிபிஐ அமைப்பு மாநாடு ஏற்பாட்டாளர்களில் ஒருவர்

–அனில் ரஜீம்வாலே

1925ல் கான்பூரில் நடந்த இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அமைப்பு மாநாட்டின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவராக ராதா மோகன் கோகுல்ஜி பெயரை ஒரு சிலரே அறிந்திருப்பர். தற்போது அவரது பெயர் மறக்கப்பட்ட ஒன்று. இந்த மாநாட்டின் ஏற்பாட்டாளர்கள் சத்திய பக்தா, மௌலானா ஹஜ்ரத் மொஹானி, அர்ஜுன் லால் சேத்தி மற்றும் பல முன்னணி செயல்பாட்டாளர்களுடன் அவர், எல்லா வகையிலும் மாநாட்டின் அமைப்பு மற்றும் வரவேற்புக் குழுவாகச் செயல்பட்டார்.

தொடக்க வாழ்க்கை 

ராதா மோகன் கோகுல்ஜி 1865 டிசம்பர் 15ல், பிரிட்டிஷ் இந்தியாவின் அவுத் அல்லது அயோத்தி (தற்போது உபியில் உள்ளது) அரசின் கீழ் அலகாபாத், கோபால் கஞ்ச் என்ற இடத்தில் பிறந்தார். அவரது மூதாதையர்கள் ராஜஸ்தான் ஜெய்ப்பூர் எஸ்டேட்டின் கேத்திரியிலிருந்து வந்தவர்கள். அவர்கள் ஒருக்கால் 250 ஆண்டுகளுக்கும் முன்னால் சொத்துக்களை இழந்த அல்லது வறுமை காரணத்தால் இடம்பெயர்ந்த அகர்வால் சிங்கானியாஸ் ஆவர். அவர்களில் ஒருவர் பத்ரி மகாராஜாவுக்கு பொடார் (Poddar, அதாவது ட்ரஷரர், பொக்கிஷதாரர்) ஆக இருந்தார். (பொடார் என்பது இந்தியாவில் இருந்து வந்த மார்வாரி அகர்வால் மத்தியில் காணப்படும் குடும்பப் பெயரும் மற்றும் சில வட இந்திய மாநிலங்களில் பனியா வணிகச் சமூகத்தினரின் இனச் சிறப்புப் பெயரும் ஆகும்.) அந்த இடம் பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராக 1857ல் கிளர்ந்து எழுந்து, அந்த இடத்தைப் பல நாட்கள் பிடித்து வைத்திருந்த ராஜா ராணா பேணி மாதவ் சிங் உடன் தொடர்புடையது. அவருடைய தந்தை லாலா கோகுல் சந்த். 

ராதா மோகன் ஆறு வயதில் அருகில் இருந்த புத்த விகாரில் தொடக்கக் கல்வி பெற்று அங்கு இந்தி மொழி கற்றார். இதைத் தொடர்ந்து மௌல்வி ஃபிதா ஹுசைன் அவருக்குக் கல்வி கற்பித்தார். பின்னர் அவரது தந்தை அலகாபாத் மாவட்ட  ஷஹ்ஜாத்பூருக்கு வந்தார்.  பிறகு படிப்புக்காகக் கான்பூருக்கு மாறி அவரது மாமாவுடன் தங்கினார். 13 வயதில் ராதா மோகனுக்குத் திருமணம் நடந்தது. 1878ல் ஆக்ராவில் உள்ள செயின்ட் ஜான்ஸ் கல்லூரியில் உயர்கல்வி கற்றார். அங்கு அவர் ஆங்கிலம் படித்தார். 

ஒருக்கால் ராதா மோகன் அவரது தந்தையின் பெயரை இணைத்து ராதா மோகன் கோகுல்ஜி ஆகியிருக்கக்கூடும். 1984ல் அவரது தந்தையின் சொந்த வணிகம் நொடித்துப் போனதால் அவர் அகராவைவிட்டு நீங்க வேண்டியதாயிற்று. ஏதாவது வேலையைத் தேடி அலகாபாத் திரும்பினார். மாதம் இருபது ரூபாய் சம்பளத்தில் கணக்குத் துறையில் பழகுநர் பணி கிடைத்தது. ஆனால் ஒரு பிரிட்டிஷ் ஊழியருடன் மோதல் ஏற்பட்டு அவரை அடித்தார், பணிக்குச் சேர்ந்த 9 மாதத்திலேயே வேலையை விட்டு விலகினார். இனி பிரிட்டீஸ்க்குக் கீழ் வேலை செய்யக்கூடாது என்று சபதம் செய்து வீட்டுக்குச் சென்றார். தனது எல்லாச் சான்றிதழ்கள்ளையும் தீயில்  எரித்தார். இது நடந்தது 1886 ஜூலை மாதம். ஆக்ராவில் சமூக சீர்திருத்தப் பணியை மேற்கொண்டார். ஆக்ராவில் ஆரிய சமாஜ் அமைப்பில் நடந்த ஒரு முஸ்லீம் ‘சுத்திகரிப்புச்: சடங்’கில் (மீண்டும் தாய் மதத்திற்கு மாறி திரும்ப வருபவர்களுக்கு நடத்தப்படும் சடங்கு, ஆரிய சமாஜ் தொடங்கிய இயக்கம்) - அந்தச் சடங்கில் இனிப்புகள் வழங்கப்படுவது வழக்கம். இதனால் பழமைவாத மக்கள் வெறுப்புற்றனர். ஆனால் ராதா மோகன் அந்த இனிப்புச் சாப்பிடுவதை வற்புறுத்தினார்.

ஆரிய சமாஜ் சார்பாக விதவை மறுமணத்திற்கு ஆதரவாகவும் அவர் பிரச்சாரம் செய்தார். 

1885ல் அலகாபாத்தில் உள்ள ‘சுதேசி வியாபாரக் கம்பெனி:யின் ரூ 25 மதிப்புள்ள பங்கினை அவர் பெற்றார். அது முதலாக அவர் எப்போதும் சுதேசி ஆடைகளையே அணிந்தார். 

காங்கிரஸ் செல்வாக்கின் கீழ்

பம்பாயில் இந்தியத் தேசியக் காங்கிரஸ் நிறுவப்பட்டது, 1885ல். அது குறித்த விளக்கக் கூட்டம் அலகாபாத் ஜான்சன்கஞ்ச் ஷிவ்ராகான் பாடசாலையில் பண்டிட் சுந்தர்லால் தலைமையில் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் பண்டிட் மதன் மோகன் மாளவியா உரையாற்றினார். அதில் ராதா மோகன் உட்பட சுமார் 15 பேர் கலந்து கொண்டனர். அவர் மனதில் அந்தக் கூட்டம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. பின்னர் வேலை தேடி ரிவா என்ற இடத்திற்கு அவர் மாற வேண்டியதாயிற்று. ஆனால் மலேரியா பாதிப்புக்கு ஆளாகி கான்பூர் திரும்பினார். அங்குப் பண்டிட் பிரதாப் நரைன் அவர்களை ஆசிரியராகக் கொண்டு நடத்தப்பட்ட ‘பிராமின்’ என்ற இதழில் பணியாற்றத் தொடங்கினார். 

கல்கத்தாவில் 

பணி நிமித்தமாகக் கல்கத்தா சென்ற அவர் சில மார்வாரி பையன்களுக்கு டியூஷன் எடுத்தார். மேலும் அவர் வணிகச் சமூகத்தில் இணைந்தார்; ஜுகல் கிஷோர் பிர்லா உடன் அறிமுகம் ஏற்பட்டது --அவர் ஆரிய சமாஜத்தின் கீழ் ஏராளமான சமூகச் சீர்திருத்தப் பணிகளைச் செய்து கொண்டிருந்தார். ராதா மோகன் 1908ல் ‘சத்திய சனாதன் தர்மம்’ என்ற பெயரிலான ஒரு இதழை வெளியிடத் தொடங்கினார். அதன் மூலம் ஏராளமான சீர்திருத்தப் பணிகளைச் செய்தார். அது ‘ஸ்ரீ சனாதன தர்மம்’ என்ற பழமைவாதத்திற்கு எதிரான ஒரு சீர்திருத்தவாதியின் பதிலாக அமைந்தது. 

 லஜபதி ராயைப் பின்பற்றுபவர்

அவர் ஏராளமான தேசியவாத நூல்களைப் படித்தார், லஜபதி ராய் கருத்துக்களின் செல்வாக்கின் கீழ் வந்தார். பின்னர் அவர் லாலா லஜபதி ராய் வாழ்க்கை வரலாற்றை எழுதினார். 

இதன் மத்தியில் முதலில் அவர் தனது மனைவியை இழந்தார், பின்பு அவரது மகளையும் பிறகு 1901ல் 16வயதேயான அவரது ஒரே மகனையும் இழந்தார். மனரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் அவர் வாழ்க்கை  மோசமாக இருந்தது. மறுமணம் செய்து கொள்ள வற்புறுத்தப்பட்டார்; ஆனால் அவரோ ஒரு கைம்பெண்ணை மட்டும்தான் மணப்பேன் என்றார். யாரும் அதற்குச் சம்மதிக்கவில்லை. பின்பு அவர் ஒருபோதும் மீண்டும் மணம் செய்து கொள்ளவில்லை. இந்தக் காலகட்டத்தின்போது முதலில் அவர் குர்கானுக்கும் பின்னர் மதுராவுக்கும் சென்றார். 

ஏராளமாக எழுதினார்

ராதா மோகன் 1908ல் தேஷ் கா தன்’ (தேசத்தின் செல்வம்) என்ற நூலை எழுதினார். அந்நூல் காலனியச் சுரண்டலைக் கூர்மையாக விமர்சனம் செய்து எழுதப்பட்ட  காலனியப் பொருளாதாரத்தின் மீதான ஆழமான விமர்சன நூல். அவர் தொழிலாளர்களின் பங்கை வலியுறுத்தினர். சமூகத்தை மேம்படுத்த சமூக நல நடவடிக்கைகளை விவரித்து ‘நீதி தர்ஷன்’என்ற நூலை 1912ல் எழுதினார். பின்னர் அவர் ‘கம்யூனிசம் க்யா ஹை’ (கம்யூனிசம் என்றால் என்ன?) என்ற புகழ்பெற்ற நூலை எழுதினார். ககோரி (ரயில் கொள்ளை) நிகழ்வை அடுத்து அது தொடர்பாக ராம் பிரசாத் பிஸ்மில், அஸ்வகுல்லாகான் மற்றும் பிறர் கைது செய்யப்பட்டனர் (ரயிலில் கொண்டு செல்லப்பட்ட பிரிட்டிஷ் அரசின் கஜானா பணத்தை இந்தியப் புரட்சியாளர்கள் உபி அருகில் உள்ள ககோரி ரயில்வே நிலையத்தில், தங்கள் புரட்சிகர நடவடிக்கைகளுக்காக 1925 ஆகஸ்ட் 9ல், துணிச்சலாகக்  கொள்ளை அடித்தனர். இந்நிகழ்வே ககோரி சதி வழக்கு.) நடைமுறை தகவல்கள் மற்றும் ஞானத்தின் அடிப்படையில் அந்த ஹிந்துஸ்தான் குடியரசு அசோசியேசன் (HRA) அமைப்பை முழுமையாக அங்கீகரித்தது ராதா மோகன்தான். அவர் ஜான்சியில் இருந்த சந்திரசேகர் ஆசாத்திடம் விஜய்குமார் சின்ஹாவை அனுப்பி அவரைத் தன் வீட்டுக்கு அழைத்தார். அவர் சசீந்திரநாத் சன்யால் மற்றும் பிற அத்தகைய புரட்சியாளர்களுடன் தீவிரத் தொடர்பில் இருந்தார். 

ராதா மோகன் பெண்கள் இயக்கத்திலும் கூட ஆழமான தடம் பதித்தார். பெண்கள் உரிமைக்கான பெரும் ஆதரவாளரான அவர், கைம்பெண்கள் மறுமணத்திற்காகவும் குழப்பத்தை ஏற்படுத்தும் பழமைவாதத்திற்கு எதிராகவும் ஓய்வின்றி உழைத்தார். அவருடைய கருத்துக்களும் மற்றும் பிறரது கருத்துக்களும் இணைந்து 1917ல் ‘பாரதிய மகிளா சமிதி’ அமைப்பை ஏற்படுத்துவதில் பங்களிப்புச் செய்தன. 

பகத்சிங்கும் கூட அவரைச் சந்தித்து, பின்னர் கம்யூனிசம் குறித்துக் கருத்துப் பரிமாற்றம் செய்து வந்தார். 1924ல் ராதா மோகன் இந்தியில் எழுதிய ‘கம்யூனிசம் என்றால் என்ன?’ என்ற நூல் மிகப் பிரபலம் அடைந்தது. கான்பூரில் உள்ள பிரம்மன் அச்சகத்தில் சத்திய பக்தா அந்நூலைப் பதிப்பித்து வெளியிட்டார். அந்நூல் கம்யூனிசக் கோட்பாடுகள், ரஷ்யப் புரட்சி, அதன் தியரி மற்றும் செயலாக்கத்தின் தகவல்களை மிக விரிவாகப் பேசியது. அக்காலத்தில் இந்தப் புத்தகம் புரட்சியாளர்களுக்குப் பயிற்சி அளிப்பதில் பெரும் பங்காற்றியது. பின்பு இந்நூலின் சில 150 பிரதிகளை ஆக்ராவில் போலீஸ் கண்டறிந்து அவற்றைக் கைப்பற்றியது. அவற்றைப் பல ஆண்டுகளுக்குப் பிறகே  மீட்டெடுக்க முடிந்தது.

புரட்சியாளர்களுக்கு ஆயுதங்கள், வெடி மருந்துகள் மற்றும் பணத்தையும்யும்கூட அவர் ஏற்பாடு செய்து தந்தார்.

காந்திய இயக்கத்தில் 

ராதா மோகன் 1921 ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார். அவர் பண்டிட் சுந்தர்லால் செல்வாக்கின் கீழ் நாக்பூர் சத்தியாகிரகம் அல்லது அ-சகயோக் (Asahayog சமஸ்கிருதம், ஒத்துழைக்காமை) ஆசிரமத்தில் வாழத் தொடங்கினார்.

இதன் மத்தியில் அவர் (இத்தாலியின் ஐக்கியம் மற்றும் சுதந்திரத்திற்குப் பாடுபட ‘இளம் இத்தாலி’ என்ற புரட்சிகர அமைப்பை உருவாக்கிய) மாஜினி, கரிபால்ட்டி, நெப்போலியன் போனபார்ட் மற்றும் பிறர் குறித்த ஏராளமான வாழ்க்கை வரலாற்று நூல்களை எழுதினார். நெப்போலியன் வாழ்க்கை குறித்த நூல் நகரி பிரச்சாரனி சபாவுக்காக எழுதப்பட்டது. அவர் சிறிது காலம் இந்து மகாசபா உடன் இணைந்திருந்தார். 

1925 கான்பூரில் சிபிஐ கட்சி அமைக்கப்பட்டதும் கோகுல்ஜியும்

1923ல் நாக்பூரில் இருந்து ‘பிராண்வீர்’ (துணிச்சலான போர்வீரன்) இதழைக் கொண்டு வருவதில் ராதா மோகன் கோகுல்ஜியுடன் சத்திய பக்தா இணைந்தார். பிராண்வீர் இதழ், கான்பூரில் சத்திய பக்தாவால் அமைக்கப்பட்ட ‘இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி’யின் முதலாவது காலாண்டு அறிக்கையை வெளியிட்டது. அந்த அறிக்கையில் சத்திய பக்தா செயலாளர் என்று கையெழுத்திட்டிருந்தார். கட்சியில், பெரும்பாலும் கான்பூர் மற்றும் உபியில் இருந்து, 78 உறுப்பினர்கள் இருந்ததாக அந்த அறிக்கை கூறியது.  அதன் புகழ்பெற்ற உறுப்பினர்களில் மௌலானா ஹஸ்ரத் மொகானி, ராதா மோகன் கோகுல்ஜி, ராமசங்கர் அவஸ்தி (வர்த்தமான் இதழ ஆசிரியர்), ராம் கோபால் வித்யாலங்கர் (பிரான்வீர் இதழ் ஆசிரியர்) மற்றும் பலர் அடங்குவர்.

ராதா மோகன், கம்யூனிஸ்ட் முதல் மாநாட்டின் முன்னணி அமைப்பாளர்களில் ஒருவராகசத்திய பக்தா, மௌலானா ஹஸ்ரத் மொகானி [இந்த வரலாற்றுக் கட்டுரைத் தொடரில் சத்யாபக்தா வரலாறு வரிசை எண் 57லிலும் மற்றும் மௌலானா ஹஸ்ரத் மொஹானி வரலாறு வரிசை எண் 47லிலும் இடம் பெற்றுள்ளது –மொழிபெயர்ப்பாளர் இணைப்புமற்றும் பிறருடன் –விளங்கினார் என்பது பரவலாகப் பெரிதும் அறியப்படவில்லை. 1924ல் அவர் ‘இந்தியன் கம்யூனிஸ்ட் கட்சி’யில் பணியாற்ற சத்திய பக்தாவால் கான்பூருக்கு அழைக்கப்பட்டார். கான்பூரில் அவர் தங்கியிருந்தபோது மார்க்ஸ், ஏங்கெல்ஸ், லெனின், (‘சொத்துரிமை என்பது திருட்டு’ என்ற பிரெஞ்ச் சோசலிசவாதியும் தத்துவவாதியும் அராஜகத் தத்துவத்தின் முன்னோடிகளில் ஒருவருமான) புரூதோன், (ரஷ்யப் புரட்சியாளர், அராஜகத் தத்துவ ஆதரவாளரான) பக்குனின் முதலானவர்களை ராதா மோகன் படித்தார். அவர் உறுதியான பகுத்தறிவாளரானார். இக்காலகட்டத்தில், ராதா மோகன் கம்யூனிசத்தின் பல அடிப்படை கோட்பாடுகளை ஒருங்கிணைத்து உட்கிரகித்தார். அவர் ஏற்கனவே ‘கம்யூனிசம் என்றால் என்ன?’ என்ற நூலை, மார்க்சியக் கோட்பாடுகளுக்கான விளக்கங்களுடன், எழுதியவர்.

ராதாமோகன் குறித்துப் பல அறிஞர்கள்

ராதா மோகன் குறிப்பாக இலக்கியம் மற்றும் மார்க்சியத்தின் மீதும் ஏராளமான நூல்களை எழுதினார். புத்தகங்கள் மட்டுமல்லாது பல இதழ்களுக்கும் ஆசிரியராக இருந்தார்.

முன்னணி இலக்கியப் பிரமுகராக அவர் பரவலாக அறியப்பட்டார். கவிஞர் நிராலா அவரைத் தனது முதல் அரசியல் குருவாகக் கருதினார். [இந்தி இலக்கியத்தின் 1910களின் நடுப்பகுதியிலிருந்து 1940களின் முற்பகுதி வரை பரவியிருந்த மாய-காதல் வாதத்தின் சகாப்தமே சாயவத் இயக்கம் எனப்படுகிறது. இது அதற்கு முந்தைய போதனை வாதம் மற்றும் அரசவை மரபுகளுக்கு எதிர்வினையாகத் தோன்றியது. அந்த இயக்கத்தின் முக்கிய நான்கு தூண்களாக ஜெய்சங்கர் பிரசாத், ‘நிராலா’ என்ற புனைப்பெயர் கொண்ட சூரியகாந்த் திரிபாதி, சுமித்ரானந்தன் மற்றும் மகாதேவி வர்மா குறிப்பிடப்படுகிறார்கள். இவர்களின் கவிதைகளில் காதலும் மனிதநேயமும் சிறப்பிடம் பெறுகின்றன. --கூடுதல் இணைப்பு]

அவரைப் பற்றி எழுதும்போது பிரேம்சந்த், அவரை ‘நவீன சார்வாகத் தத்துவ இயலாளர்’ (நவீன லோகாயுத/ பொருள் முதல் வாத, பகுத்தறிவாளர்) என்று கூறுகிறார். பிரேம்சந்த்

கருத்தின்படி மதம், சமூகம், ஒழுக்க நெறி மற்றும் அரசியல் பிரச்சனைகள் மீது அச்சமற்று எழுதிய சிலரில் அவரும் ஒருவர். அவர் அனைத்து வகையான சமூக மற்றும் மத பழமைவாதத்திற்கு/ இருண்மைவாதக் கருத்துக்கு எதிரானவர். அவர் ‘மாதுரி’ என்ற இந்தி இதழில் தொடர்ச்சியாக 8 ஆண்டுகள் “கடவுளை வெளியே துரத்துதல்” (‘Expulsion of God’) என்று தொடங்கிய தொடரை எழுதினார். 

டாக்டர் ராம் விலாஸ் சர்மா கூற்றுப்படி, ராதா மோகன் விவசாயத் தொழிலாளர்களுக்காக, அவர்கள் உழுது பயிரிடும் நிலம் அவரவர்க்கே சொந்தமாக வேண்டும் என்ற கோரிக்கையை எழுப்பினார். மேலும் அவர் ஏகாதிபத்தியம் மற்றும் வகுப்புவாதத்திற்கு எதிராகத் தீவிரமாக இருந்தார். ராதா மோகனின் வாழ்க்கை கம்யூனிச இயக்கத்தின் இந்தக் கட்டத்துடன் மிக நெருக்கமாக பிணைந்து இருந்தது என்று விஜயகுமார் சின்ஹா எழுதினார். கம்யூனிஸ்ட் இயக்கத்தின் அந்தக் கட்டம் குறித்துத் தனியாக, குறிப்பாக ஆங்கிலத்தில், வெளியிட வேண்டும் என்ற யோசனையை அவர் தெரிவித்தார்.

ஆக்ரா பல்கலைக்கழகத்தின் தேவி தத் ஜோஷி கூற்றுப்படி இந்தியாவில் கம்யூனிசக் கருத்துக்களை இந்தி மொழியில் பெருந்திரள் மக்கள் மத்தியில் பரப்பியவர்களில் ராதா மோகன் முதலாமவர். புகழ்பெற்ற புரட்சியாளர் பகத்சிங்கின் தோழரும் நன்கறியப்பட்ட

கம்யூனிஸ்ட்டுமான ஷிவ் வர்மா, சத்திய பக்தா கூறியதை மேற்கோள்காட்டி கூறினார்: ராதா மோகனும், மௌலானா  ஹஸ்ரத் மொகானியும் நடைமுறையில் எல்லா வகையிலும் கான்பூர் கம்யூனிஸ்ட் அமைப்பு மாநாடு வெற்றி பெறுவதற்கு ஆக கூடுதலாகப் பங்களிப்புச் செய்தனர். ராதா மோகன் நூலகத்திலிருந்துதான் ஷிவ் வர்மா, காரல் மார்க்சின் கம்யூனிஸ்ட் அறிக்கையை எடுத்துச் சென்றார்; சந்திரசேகர் ஆசாத்துக்குப் படித்துக் காட்டினார்.

சிபிஐ-ன் கான்பூர் அமைப்பு மாநாடு தேர்ந்தெடுத்த மத்திய செயற்குழுவில் ராதா மோகன் கோகுல்ஜி ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர். புதிய மத்தியச் செயற்குழுவின் முதல் கூட்டம் டிசம்பர் 28ல் நடைபெற்றது. அது பல்வேறு மாகாணங்களுக்குப் பொறுப்பாளர்களை முடிவு செய்தது. ராதா மோகன் கோகுல்ஜி மற்றும் முசாபர் அஹமத் வங்கத்தின் பொறுப்பாளர் ஆக்கப்பட்டார்கள். அவரவர் மாகாணங்களுக்கான  மாகாணக் குழுக்களை அமைத்திட, அவர்கள் முறையே அம்மாகாணச் செயலாளர்கள் ஆக்கப்பட்டார்கள். 

அமைப்பு ரீதியான கம்யூனிஸ்ட் இயக்கம் மற்றும் சிபிஐ உடன் அவரது தொடர்பு சிறிது காலமே நீடித்தது. அவருக்குக் கலவையான கருத்துக்கள் இருந்தன. 1926க்கு பின் அவர், சத்திய பக்தாவின் கான்பூர் குழுவின் சில உறுப்பினர்களுடன் சேர்ந்து ‘இந்தி சாம்யவாதி கட்சி’யை (இந்தி கம்யூனிஸ்ட் கட்சி) அமைக்க முயன்றார். எதார்த்தத்தில் இயல்பாகவே இது நீடிக்கவில்லை. பின்னர் அவர் சமூகப் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். 

ஷிவ் வர்மாவுடன் தொடர்பு 

1926 டிசம்பரில் கோகுல்ஜி முதன் முறையாகப் புகழ்பெற்ற பகத்சிங் புரட்சியாளர்கள் குழுவைச்  சேர்ந்த ஷிவ் வர்மாவை விஜயகுமார் சின்ஹா மூலமாகச் சந்தித்தார். கோகுல்ஜி அந்நாட்களில் இரு சிறிய அறைகள் மட்டுமே கொண்ட தொழிலாளர்களின் அடுக்கக் குடியிருப்புப் (chawl type) பகுதியில் தங்கி வந்தார். தொழிலாளர்கள் வழக்கமாகக் கீழ்த்தளத்தின் அறைகளில் தங்குவர், கோகுல்ஜி மட்டும் மேல் தளத்தில் தங்கினார். காலையில் ஷிவ் வர்மாவும் விஜய்யும் வந்தபோது அவர் காய்கறிகளை வெட்டிக் கொண்டிருந்தார். ஷிவ் ஏற்கனவே அவரை 1925ல் கான்பூர் காங்கிரஸ் அமர்வில் சந்தித்துள்ளார். காலை இந்த முதல் சந்திப்பு ஷிவ் வர்மாவுக்கு ஏமாற்றம் தருவதாக இருந்தது. அடுத்த நாள் காலை சந்திப்பு மிக உற்சாகமளிப்பதாக அமைந்தது; கோகுல்ஜி ஏராளமான கேள்விகளை, தனிப்பட்ட வாழ்வு குறித்தும் அரசியல் ரீதியான கேள்விகளையும், எழுப்பினார். ‘கம்யூனிசம் கியா ஹை?’ புத்தகத்தை அவரிடம் தந்தார்.

ஷிவ் வர்மா முன்பு, ராம் சந்திர வர்மா 1918ல் எழுதிய ‘சாம்வாத்’ (கம்யூனிசம்) உள்ளிட்ட, மார்க்ஸியம் குறித்த ஒன்று அல்லது இரண்டு புத்தகங்களைப் படித்துள்ளார்.கோகுல்ஜியின் புத்தகம் மிக எளிமையாகவும் கற்றுத் தருவதாகவும் இருந்தது.  அவரது புத்தகங்களை ஷிவ் வர்மா திருப்பித் தரும்போது, கோகுல்ஜி அவரிடம் ‘கம்யூனிசம் என்றால் என்ன’ என்பது உள்ளிட்ட ஏராளமான கேள்விகளைக் கேட்டார்.

அவர்களின் பரஸ்பர உறவும் தொடர்பும் அதிகரித்தது, ஷிவ் வர்மா உறுதியான மார்க்சியவாதியாகவும் கம்யூனிஸ்ட் ஆகவும் ஆனார். கோகுல்ஜி மார்க்சியத்தின் மீது அவரது ஆசிரியரானார். கோகுல்ஜி  வீட்டில்தான் சந்திரசேகர ஆசாத்தை ஷிவ் முதன் முறை சந்தித்தார். மேலும் ஷிவ் வர்மா மற்றும் சிலருக்கு வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு கை துப்பாக்கிகளை ராஜஸ்தானில் இருந்து வாங்குவதற்குக் கோகுல்ஜி உதவினார். அவரது நண்பர் ஃபதேக் பகதூர் தலையணையில் மறைத்து வைத்துக் கைத்துப்பாக்கிகளைக் கொண்டு வந்தார். ஒரு துப்பாக்கி மணி பானர்ஜியால் அகமதாபாத் சிஐடி காவல் கண்காணிப்பாளர் பானர்ஜியைச் சுடுவதற்குப் பயன்படுத்தப்பட்டது; மற்றொன்று (லாகூரில் ‌1928 டிசம்பர் 17ல் பிரிட்டிஷ் காலனிய காவல் அதிகாரி) சாண்டர்ஸ்-ஐ  கொல்வதற்குப்  பகத்சிங்கால் பயன்படுத்தப்பட்டது. அதே கைத்துப்பாக்கி மத்திய சட்டமன்றத்தில் வெடிகுண்டு வீசிய வழக்கில் பகத்சிங்கிடமிருந்து கைப்பற்றப்பட்டது.

மேலும் கோகுல்ஜி ராஜா மகேந்திர பிரதாப்பைச் சந்திக்க நேபாள் பகுதிக்கு விஜயம் செய்தார், ஆனால் அவரைச் சந்திக்க முடியாமல் போனது.

 மீரட் சதி வழக்கின் போது போலீஸ் ஆக்ராவில் கோகுல்ஜி யின் இளைய சகோதரர் வீட்டைச் சோதனையிட்டது. அவர்களுக்குக் கம்யூனிசம் க்யா ஹை? என்பதன் பிரதிகளைத் தவிர்த்து வேறு எதுவும் கிடைக்கவில்லை. ராதா மோகன் நகருக்கு வெளியே இருந்தார். 1930ல் கைது செய்யப்பட்டு கான்பூர் சிறைக்கு அனுப்பப்பட்ட அவர், ஹமிர்ப்பூரில் அவரது செயல்பாடுகளை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற வரையறை கட்டுப்பாடுடன் 1932ல் விடுதலை செய்யப்பட்டார். வயிற்றுப் போக்கு முதலான வயிறு உபாதைகள் காரணமாகச் சிறையில் அவர் கடுமையாக உடல்நலம் பாதிக்கப்பட்டார். இந்தப் பாதிப்புகள் 1935ல் அவர் இறக்கும் வரை நீடித்தது. அவர் பிராண்வீர், மத்வாலா, மனோரமா, மகா ரதி, நவ யுகம் முதலான இதழ்களில் தீவிரமாக எழுதிக் குவித்தார். 

இறுதி நாட்கள் 

ராதா மோகன் கான்பூருக்கு அருகில் உள்ள ஹமீர்பூர் மாவட்டத்தின் போகி என்ற கிராமத்தில் தனது இறுதி நாள்களைக் கழித்தார். 1933ல் சுவாமி பிரம்மானந்த் மற்றும் பிருந்தாவன் சிங் இருவரும் பசுமை சூழ்ந்த சிறு குன்றுகளுக்கு மத்தியில் சிறு பள்ளியைத் தொடங்கினர். உண்மையில் அந்தப் பள்ளி பல்வேறு சமூக மற்றும் புரட்சிகர நடவடிக்கைகளை மறைப்பதற்கான திரை. இளைஞர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தலை மறைவு புரட்சிகரப் பிரச்சாரம் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வந்தது. ஆயுதங்கள் திரட்டப்பட்டு வெடிகுண்டுகள் தயாரிக்கப்பட்டன. பின்னரே போலீஸ் அந்த இடத்தைக் கண்டுபிடித்தது.

அவரது 70வது வயதுகளில் ராதா மோகன் அவரைச் சுற்றி ஓர் இளைஞர் படையை அமைத்தார். அருகிலுள்ள கிராமங்களுக்கு விஜயம் செய்து கல்வி கற்பிக்க மாணவர்களை ஒன்று திரட்டினார். இலக்கியங்களுக்கு மத்தியில் அவர்களுக்குப் பண்டித நேரு எழுதிய “ஒரு தந்தையிடமிருந்து  மகளுக்குக் கடிதங்கள்” நூலையும் கற்பித்தார். பண விடை அஞ்சல் மூலம் மக்கள் அவருக்குப் பணம் அனுப்பி உதவினர். பல மாணவர்களும் ஆசிரியர்களும் பள்ளியிலேயே தங்கினார், உணவு சமைத்துக் கூட்டாக உண்டனர்.

ராதா மோகன் நடவடிக்கைகளில் காவல்துறை சந்தேகம் அடைந்தது. ஒரு பாபா சாமியார் வேடத்தில் இளைஞர்களைத் திரட்டி குண்டு தயாரிப்பில் பயிற்சி அளிப்பதாக அறிக்கை அனுப்பப்பட்டது. மாவட்ட ஆட்சித் தலைவர் அவரை அழைத்தார். உடல்நலம் இல்லாதபோதும் மோசமான சாலை வழியே ஒரு சிறு குதிரை அல்லது மட்டக்குதிரையில் (pony) சென்றார். திரும்பி வரும்போது வயிற்றுப்போக்கு மற்றும் சீதபேதியால் கடுமையாக உடல் நலம் பாதிக்கப்பட்டார்.

பத்து நாட்களுக்குப் பிறகு 1935 செப்டம்பர் 3ம் தேதி அவர் மரணமடைந்தார். அவர் உறுதியான கடவுள் மறுப்பாளர், ஆனால் மரணமடையும் நேரத்தில் ‘ஹே ராம்’ என்று அவர் உதடுகள் உச்சரித்தன. அவர் கோகி (Khohi) அருகில் உள்ள வயல் வெளியில் அடக்கம் செய்யப்பட்டார். தற்போது இந்த இடம் இடிந்து சிதைந்த நிலையில் உள்ளது. அவருடைய பெரிய புகைப்படத்துடன் அவரது மறைவு செய்தி ‘தைனிக் விஸ்வமித்ரா, (தினசரி உலக நண்பன்) என்ற ஹிந்தி நாளிதழ் வெளியிட்டது.

அத்தகைய ஆளுமை மிக்க மனிதர் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி நிறுவப்பட்டதுடன் இணைந்திருந்தார் என்ற பெருமிதத்துடன். கட்சி நூற்றாண்டின் இத்தருணத்தின்போது ராதா மோகன் கோகுல்ஜி-யின் நினைவைப் போற்றுவோம்! 


–நன்றி : நியூ ஏஜ் (2023 அக். 1 –7)

–தமிழில் : நீலகண்டன்,

என்எஃப்டிஇ, கடலூர்

 

Monday, 8 December 2025

இந்திய அரசியலமைப்புச் சட்டமும் சாதியும்

 


19ம் நூற்றாண்டு வருகையிலிருந்தும், கல்வியும் விழிப்புணர்வும் பரவியதிலிருந்தும்

சாதியின் பெயரால் இழைக்கப்பட்ட அநீதி கவனக் குவிப்புப் பெற்றது. பெரியார், மகாத்மா
பூலே மற்றும் டாக்டர் அம்பேத்கர் போன்ற மற்றும் பிற சீர்திருத்தவாதிகள் இந்தச் சாதி அநீதி பிரச்சனை மீது கவனக் குவிப்பை ஏற்படுத்தி, சாதியற்ற சமூகத்தைக் கோரி அதற்காகப் பாடுபட்டனர்.

இந்திய மார்க்சியவாதிகளும் கம்யூனிஸ்டுகளும்கூட சமத்துவ அடிப்படையிலான சமூகக் காட்சிப் படிவத்தைச் சித்தரித்து அதில் சாதிக்கு இடமில்லை என்று முன்வைத்தனர். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது 2015 புதுச்சேரி கட்சி காங்கிரஸ் மாநாட்டில் ஒரு தீர்மானத்தை வடிவமைத்து நிறைவேற்றியது: அந்தத் தீர்மானம், சமத்துவம் மற்றும் சம வாய்ப்பு அடிப்படையிலான சமூகத்தை நிறுவ, சாதிப் போராட்டம் மற்றும் வர்க்கப் போராட்டம் இரண்டும் ஒன்றாக இணைந்து செல்ல வேண்டியது குறித்துப் பேசியதுடன், அத்தகைய சமுதாயம் ஒரு சோசலிச அமைப்பில் மட்டுமே சாத்தியம் எனப் பிரகடனம் செய்தது. இந்திய அரசியலமைப்புச் சட்டமும் கூட அத்தகைய சமூகத்தை எண்ணத்தில் கொண்டிருந்தது. 

எனினும் 1949ல் அமைக்கப்பட்ட நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் அதனைச் சந்தித்தது. எதார்த்தத்தில் அத்தகைய சமூகம் ஒன்று இல்லை. அத்தகைய சமூகத்தை அமைப்பதற்குச் சமூக நீதிக் கருதுகோள் கட்டாயம் என்பதை உணர்ந்தது. இந்திய அரசியலமைப்பை வரைவதும் முக்கியமான நடவடிக்கை என்பதால், எஸ்சி/ எஸ்டி சமூகத்தினருக்கு அதில் இட ஒதுக்கீடு அளிப்பது போன்ற உறுதியான நேர்மறை நடவடிக்கைகளை முன்மொழிந்தது. அதன் பின்னர் இது பிற பிற்படுத்தப்பட்ட (ஓபிசி) சமூகத்தினருக்கும் நீட்டிக்கப்பட்டது.

சாதி என்பது ஆயிரம் வருடங்களுக்கு மேலாக நிலவி வருவது மட்டுமின்றி, மதத்தாலும் நியாயப்படுத்தப்பட்டதால் சாதி, கருத்தியல் மட்டம் என்பதைத் தாண்டி (ஆதிக்கம் முதலிய) கள எதார்த்த சக்தி ஆனதுடன், மனித மனத்தையும் கெட்டியாகப் பற்றிப் பிடித்துள்ளது. இன்று, மேல் சாதியினர் மட்டுமின்றி எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி போன்ற பிற சாதிகளைச் சார்ந்தவர்களும்கூட இந்தச் சாதி ரீதியான சிந்தனைக்குப் பலியாகி வருவதை நாம் காண்கிறோம். எனவே இந்திய அரசியலமைப்புச் சட்டம் இந்தப் பிரச்சனையைச் சமாளித்துக் கையாள வேண்டி வந்தது.

சாதாரணமாக சாதி வாதத்தால் நியாயப்படுத்தப்பட்டது. பிற்படுத்தப்பட்ட சாதி என்றழைக்கப்பட்டவர்களுக்கு இட ஒதுக்கீடு அளித்ததன் மூலம் இந்த மெரிட் தகுதி மாயை நொறுக்கப்பட்டது; மற்றும் அரசியலமைப்புச் சட்டத்தின் கடந்த 75 ஆண்டுகள் அனுபவம் இந்த அம்சத்தை நிரூபிக்கிறது. ஆனால் அது சமூகம் முழுமையாலும்  ஏற்றுக் கொள்ளப்பட வேண்டும். ஒரு கருத்து மக்கள் கூட்டத்தைக் கவ்வி பிடிக்கும்போது அது எதார்த்தச் சக்தியாகிறது என்றார்

காரல் மார்க்ஸ்; மக்கள் மனதைப் பிடித்துள்ள இந்தச் சாதிப் பிடிப்பிலிருந்து விடுவிக்கப்பட்டால்தான், அது ஆதிக்க எதார்த்த சக்தி என்ற நிலையிலிருந்து அகற்றப்படும்; அதன் மூலமே சாதியக் கருத்தியலை எதிர்க்கும் யதார்த்தக் களநிலைகளை ஏற்படுத்த முடியும்.

இட ஒதுக்கீட்டின் மூலம் அதற்குத் தீர்வு காண  முயற்சிக்கப்பட்டது. ஒரு சமூகத்தில் ஒரு தனிநபருக்குக் கண்ணியம் மற்றும் சம வாய்ப்பு இருந்தால் மட்டுமே, மற்றும் அவன் அல்லது அவள் சாதி, மதம், பாலினம், மொழி முதலான அடிப்படைகளில் பாரபட்சம் இல்லாமல் பணியாற்றுவதற்கும் வாழ்வதற்கும் முடிந்தால் மட்டுமே சாதி இல்லாத சமூகம் அமைக்கப்பட முடியும் என்ற உண்மையை இந்திய அரசியலமைப்புச் சட்டம் உணர்ந்திருந்தது. 

சாதிக் சமூகத்தின் தற்போதைய சவாலும், சாதியற்ற சமூகத்தை எதிர்காலத்தில் நிர்மாணிப்பதும் இந்திய அரசியலமைப்பால் முன்மொழிக்கப்பட்டது. இது நமது அரசியலமைப்பின் சிறப்பு; இதனை நாம், நவம்பர் 26ல் வர இருக்கின்ற அரசியலமைப்புச் சட்ட தினத்தில் வலியுறுத்த வேண்டும்.

இந்த லட்சியத்தை நோக்கி முன்னோக்கிச் செல்ல அறிவியல் பார்வை மிக முக்கியமானது; எனவே இந்திய அரசியலமைப்புச் சட்டம், (காரண காரிய தர்க்க ரீதியாகச் சிந்திக்கும் அறிவான) அறிவியல் பார்வையைப் பரப்பும் பொறுப்பை இந்திய அரசிடம் அளித்தது. ஆனால் துரதிஷ்டவசமாக இன்று, கலாச்சாரத் தேசியம் என்ற பெயரில் இந்தப் பொறுப்பு அரசால் புறக்கணிக்கப்பட்டுள்ளது. உண்மையில் இந்த உலகில், தேச மக்கள் மத்தியில் அறிவியல் கண்ணோட்டப் பார்வையைப் பரப்பும் பொறுப்பை அரசிடம் வழங்கிய ஒரே அரசியலமைப்புச் சட்டம் நமது இந்திய அரசியலமைப்புச் சட்டம் மட்டுமே.

அதுபோலவே இந்திய அரசியலமைப்புச் சட்டம் நிறுவிய அரசு, மதசார்பற்றத் தன்மையுடையதாகவும், எந்தவொரு மதம், பிரிவு அல்லது சாதிக்குச் சொந்தம் உடையது இல்லை என்றவாறும் அமைத்தது. நவம்பர் 26ல் அரசியலமைப்பு தினத்தை நாம் கொண்டாடும்போது இவை நினைவுறுத்தப்பட்டு, பலப்படுத்தப்பட வேண்டும்.

இந்தியா 140 கோடி மக்கள் தொகையுடன் கூடிய ஒரு தனித்துவமான தேசம். இங்கே சாதி ஒரு வித்தியாசமான வினோதப் பிரச்சனை மற்றும் உலகம் முழுதும் பணியாற்றுவதற்காகச் செல்லும் இந்தியர்களுடன் சாதியும் கூட உலகெங்கும் பரவுகிறது. சமீபத்தில் அமெரிக்காவில் உள்ள சில மாநிலங்கள் –சாதி அநீதி குறித்தப் புகார்கள் வந்த காரணத்தால்– சாதி பாரபட்சத்திற்கு எதிரான சட்டங்களை இயற்றி உள்ளதாகச் செய்திகள் வருகின்றன. இதன் விளைவாய் இந்தியச் சமூகம் சாதி முறையை ஒழிக்க தீவிரமாக முயற்சிக்க வேண்டும் என்ற புரிதல் விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் விரும்பியது இதைத்தான் மற்றும் இந்தியர்கள் நாம் அனைவரும் அந்தத் திசை வழியில் பணியாற்ற வேண்டும்.

துரதிஷ்டவசமாக, பெரும்பான்மையான சாதிகள், வேலையில்லாத் திண்டாட்டம் குறித்த கேள்விக்கான பதில் இட ஒதுக்கீடு என்று நினைப்பதால், விரிவாகப் பரவியுள்ள வேலையில்லாத் திண்டாட்டம் இதற்கு எதிராகத் தடையாக உள்ளது. ஆனால் அது அவ்வாறு அல்ல.  இந்த யதார்த்த உண்மையை அம்பலப்படுத்த இட ஒதுக்கீடுகள் மட்டுமல்ல, வாய்ப்புகளும் கிடைக்கச் செய்ய வேண்டும்: அதுவும், பொதுத்துறை நிறுவனங்கள் தனியார்மயப்படுத்தப்பட்டு வரும்போது மற்றும் தனியார் துறை பிரிவில் இட ஒதுக்கீடுகள் இல்லை என்பதையும் மனதில் கொள்ள வேண்டும். தனியார் மயமாக்கப்படுவதால் பணி நியமனங்களில் இட ஒதுக்கீட்டு இடங்கள் இழக்கப்பட்டது எவ்வளவு என்பது குறித்தப் புள்ளி விபர தரவுகளை ஒருவர் தேடினால், அத்தகைய புள்ளி விபரங்களே இல்லை என்பது மட்டுமல்ல; மாறாக அத்தகைய பிரச்சனைகள் மீது எந்தப் போராட்டங்களும்  நடத்தப்படுவதும் இல்லை –சமூக நீதியைப் பேணுவதில் நாம் உண்மையிலேயே இட ஒதுக்கீட்டைப் பாதுகாக்க நினைத்தால் அத்தகைய போராட்டங்கள் இத்தருணத்தின் தேவையாகும். ‘தனியார்மயத்தைப் பயன்படுத்தி வேலைவாய்ப்பில் இட ஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்காதே’ என்பது நமது முழக்கமாக வேண்டும்!

தற்போது செயற்கை நுண்ணறிவு மற்றும் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்துவதன் காரணமாகப் பணியிடங்கள் குறைக்கப்படுகின்றனவா என்பதன் மீது விவாதங்கள் நடைபெறுகின்றன. புதிய தொழில்நுட்பம் காரணமாக ஏற்படுத்தப்படும் புதிய பணிகள், சிறப்புத் திறன்கள் மற்றும் கல்வித் தகுதியைக் கோருகின்றன. புதிய பணிகளுக்குத் தகுதி உடையவராக்க அனைத்து இந்தியர்களுக்கும் பொருத்தமான அத்தகையத் திறன்கள் மற்றும் கல்வியை அளிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும். கல்வி தனியார்மயமாக்கல், பணம் உடையவர்களுக்கு மட்டுமே தேவைகளைப் பூர்த்தி செய்வதால் இதில் உதவிடாது –சமீபத்தில் வருமானம் மற்றும் சொத்தில் சமத்துவமற்ற தன்மை மீது நடத்தப்பட்ட ஓர் ஆய்வு, அந்த ஏற்றத்தாழ்வு அபாயகரமான அளவை எட்டி உள்ளதாகச் சுட்டிக் காட்டுகிறது.

மேற்கண்ட பின்னணியில், இந்தியாவில் சாதிகள் குறித்தப் பிரச்சனையை இந்திய அரசியலமைப்புச் சட்டம், நடைமுறை சாத்தியமான வகையில் கையாண்டுள்ளது குறித்து நாம் பெருமைப்பட வேண்டும். 

அத்தகைய பெருமிதம் மிக்க நமது அரசியலமைப்புச் சட்டத்தைப் பாதுகாக்க நாம் உறுதி ஏற்போம்! மற்றும் சாதியற்றச் சமூகத்தை அமைக்கும் அதன்  விழைவை நனவாக்க நாம் பாடுபடுவோம்!

--நன்றி : நியூ ஏஜ் (நவ.30 –டிச.6)

–தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்.

 

 

 

Friday, 28 November 2025

ஏங்கெல்ஸ் – மார்க்சியத் தத்துவத்தை இணைந்து உருவாக்கியவர்

ங்கெல்ஸ் –

மார்க்சியத் தத்துவத்தை

இணைந்து உருவாக்கியவர்

–கிருஷ்ண ஜா

ஃபிரெட்ரிக் ஏங்கெல்ஸ் இல்லாமல் மார்க்சியம் முழுமை அடைந்திருக்க முடியாது. புருஷிய அரசாட்சி ரைன் மாகாணத்தின் பர்மன் என்ற ஊரில் 1820 நவம்பர் 28ல் பிறந்த ஏங்கெல்ஸ், மார்க்சிடமிருந்து பிரிக்க முடியாதவர். அவரது தந்தை ஜவுளி நூற்பாலை உரிமையாளர். தந்தையின் விருப்பப்படி அவர் தனது கல்வியை விட்டுவிட்டு பர்மனில் வணிகத்தில் ஈடுபடும் கட்டாயத்திற்கு ஆளானபோதும், அவர் நவீன பாட்டாளிகளின் மிகச் சிறந்த ஆசிரியர்கள் மற்றும் அறிவாளிகளில் ஒருவரானார். ஏங்கெல்ஸ் குறித்த சிறிய வரலாற்றுக் குறிப்பில் லெனின், “இந்த இரண்டு நண்பர்கள் ஒன்றான காலத்தில் இருந்து, அவர்கள் பொதுவான சமூக நல நோக்கத்திற்கு உழைக்க தங்கள் வாழ்வின் பணியை அர்ப்பணித்தார்கள். பாட்டாளிகளுக்கு ஏங்கெல்ஸ் என்ன செய்தார் என்பதைப் புரிந்து கொள்ள ஒருவர், தங்கள் சமகால தொழிலாளர் வர்க்க இயக்க மேம்பாட்டிற்கு மார்க்சின் போதனைகள் மற்றும் ஆக்கங்கள் குறித்த தெளிவான கருத்தைப் பெற்றிருக்க வேண்டும்” என்று எழுதினார்.

உண்மையில் மார்க்ஸும்  ஏங்கெல்ஸும் தொழிலாளர் வர்க்க இயக்கத்தின் முன்னோடிகள் –அவர்கள்தான் அந்த வர்க்க இயக்கத்தை, நவீனச் சமூகத்தில் சுரண்டலை உயிர்ப்புடன் வைத்திருக்கும் தீமைகளிலிருந்து பாட்டாளிகளை விடுவிக்கும் வர்க்கப் போராட்டம் என விளக்கினர். வர்க்கப் போராட்டம், சமூகத்தை மேலும் முன்னெடுத்து நடத்திச் செல்லும் வாழ்வின் ஜீவிதம். ‘ஒவ்வொரு வர்க்கப் போராட்டமும் அரசியல் ரீதியிலானது’ என்று கூறிய ஏங்கெல்ஸ், எனவே அது நன்கு உணர்வுடையதும் ஒருங்கமைத்துத் திரட்டப்பட்ட ஒன்றுமாகும்; ஏனெனில் அது சுரண்டல் முறைமையையே எதிர்த்து நடத்தப்படுவதாகும். ஒரு வர்க்கம் மற்றதன் மீது ஆதிக்கம் செலுத்தும் நிலையை முடிவு கட்டுவதுடன் ஒரு மாற்றத்தை இது கொண்டு வருகிறது. மேலும் அது தனி சொத்துரிமைக்கும் அராஜகமான (சட்ட ஒழுங்கற்ற) சமூக உற்பத்திக்கும் முடிவு கட்டுகிறது.

மார்க்ஸ் மற்றும் ஏங்கெல்சின் இந்தக் கருத்துக்கள் மக்கள் தொகையில் பெரும் பகுதியினரால் ஏற்றுக் கொள்ளப்பட்டன. அவர்கள் சோசலிச நூல்களைப் படைப்பதிலும் ஈடுபட்டனர். சமூக இயக்கங்கள் பரவலாகப் பெருக்கினாலும், அவை அனைத்துமே அறிவியல் ரீதியில் அமைக்கப்பட்டன அல்ல. அவற்றில் பல இயக்கங்களும் சமூகத்தை மாற்றுவதில் முனைந்தன; ஆனால் பாட்டாளி வர்க்கம் மற்றும் பூர்ஷ்வா (நடுத்தர வர்க்க முதலாளியியம்) இடையில் நோக்க நலன்களில் முரண்பாடு நிலவும் கள யதார்த்தத்தை ஏற்பதில் அவை தோல்வியடைந்தன.

மேலும், தொழிலாளி வர்க்கம் எதிர்கொள்ளும் நெருக்கடியை ஆளும் வர்க்கங்கள் அறியாது உள்ளனர் என்பது அவர்களின் புரிதலாக இருந்ததால், அவர்கள் வன்முறையில் ஈடுபட விரும்பவில்லை. முதலாளிகளின் வளர்ச்சியுடன் தொழிலாளர் வர்க்க வளர்ச்சியைக் கண்டு அவர்கள் திகிலடைந்தனர். இது, தொழில்துறை மேலும் வளர்வதை நிறுத்த வேண்டும் மற்றும் அதன் மூலம் வரலாற்றின் சக்கரங்களும் சுழல்வதில் இருந்து நிறுத்தப்படும் என அவர்களை நம்ப தூண்டியது. இவற்றை விளக்கும்போது லெனின், ஏங்கெல்ஸ் குறித்து எழுதுகையில், ‘மார்க்ஸுடன் சேர்ந்து ஏங்கெல்ஸ், தொழிலாளி வர்க்கம் தன்னைத் தானே உணர்ந்து கொள்ளவும், அதன் வலிமை குறித்த விழிப்புணர்வு பெறச் செய்யவும் பாடுபட்டார்’ என்று எழுதினார். ஏங்கல்ஸும் மார்க்ஸும் பாட்டாளிகளின் கனவுகளை அறிவியலுடன் நிரூபித்தனர்.

தத்துவ இயலாளர் ஹெகல், தத்துவ உலகில் செல்வாக்குச் செலுத்திக் கொண்டிருந்த காலமது. நீண்ட காலம் இல்லை என்றாலும், ஏங்கல்சும் கூட அவரைப் பின்பற்றுபவரானார். ஹெகல் அப்போது நிலவிய ஏதேச்சிகார ஆட்சியைப் (autocracy) போற்றுபவராக இருந்தாலும் அவரது போதனைகள் புரட்சிகரமானவை. இந்தப் பிரபஞ்சம் முழுவதும் தொடர்ந்து மாறிக்கொண்டே இருக்கிறது என்பது அவரது கருத்துக்களின் அடிப்படைகளாக இருந்தன. அப்போது சிலர், தொடர்ச்சியாக மாறிக்கொண்டே இருப்பது என்ற இந்தக் கருத்துக்களை, ஒன்று முடிவுக்கு வந்து மற்றொன்று வருவது என்றும் கூட விளக்கலாம் –அதாவது முடிவில்லாத மாற்றத்தின் முறைமை இது– என்பதாக மறைமுகமாக விளக்கினர். ஹெகல் ஒரு கருத்து முதல்வாதி மற்றும் கருத்தே –மனித மற்றும் சமூக உறவுகள் உட்பட– முழுமையான எதார்த்தத்தின் ஆதார ஊற்று என்று கருதியவர். இந்தக் கருத்து அமைவுகளுக்கும் (ஃபார்முலேஷன்) மற்றும் தனித்த, நிபந்தனையற்ற அறுதி முழு முதல் (அப்சல்யூட்) கருத்தியல் என்பதற்கும் எதிராக மார்க்சுடன் ஏங்கெல்ஸ் எழுந்து நின்றார். அவர்கள் இருவரும் இவ்வுலகின் பௌதீக சக்திகளே இயற்கை உருவாவதற்கு உதவுவதாக நம்பினர்.

இந்த நேரத்தில்தான் ஏங்கெல்ஸ், 1845ல் “இங்கிலாந்தில் தொழிலாளர் வர்க்கத்தின் நிலை” என்ற நூலை எழுதினார். பாட்டாளிகள் தீவிரமான பற்றாக்குறை மற்றும் ஏழ்மையில்

மட்டும் துன்பப்படவில்லை, மாறாக அதற்கும் மேலும் இருக்கிறது என்று முதன் முதலில் அறிவித்தவர் ஏங்கெல்ஸ்தான். ‘அவர்களின் துன்ப துயரங்கள் இந்தப் பாதகமான நிலைமைகளுக்கு எதிராக எழ நிர்பந்திப்பதுடன், முழுமையான விடுதலைக்குப் போராட வருமாறும் அவர்களைக் கட்டாயப்படுத்துகிறது. முழுமையான விடுதலைக்காக ஆள்வோர்களுக்கு எதிரான கிளர்ச்சி, தொழிலாளர் வர்க்க அரசியல் இயக்கத்தைக் கிளர்ந்தெழச் செய்து, இறுதியாகச் சோஷலிசம் மட்டுமே தீர்வாக முடியும் என அவர்களை உணர்ந்திடச் செய்கிறது’. ஏங்கெல்ஸ் எழுதிய இந்த நூல் குறித்து லெனின், அது, “முதலாளித்துவம் மற்றும் பூர்ஷ்வாக்கள் மீதான கடுமையான கண்டனமும் விமர்சனமும் ஆகும்; மற்றும் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்திய நூல்” என்று கூறினார். “1845க்கு முன்பும் சரி அதற்குப் பிறகும் சரி, இதுபோல் ஈர்க்கக்கூடிய மற்றும் மிகவும் குறிப்பிடத்தக்கதாக உண்மையான படப்பிடிப்பு –தொழிலாளி வர்க்கத் துன்ப துயரங்களின் சித்திரம்– தோன்றியதில்லை” என்றும்கூட லெனின் எழுதினார். 

இங்கிலாந்து வந்து சேர்ந்த பிறகு ஏங்கெல்ஸ் சோஷலிசவாதி ஆனார், மான்செஸ்டரில் தொழிலாளர் இயக்கத் தலைவர்களுடன் தொடர்பு கொண்டார். இந்நேரத்தில் மார்க்ஸும்கூட சோஷலிஸ்ட் ஆகி இருந்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து “புனிதக் குடும்பம் அல்லது விமர்சனபூர்வ விமர்சனத்தின் மீதான விமர்சனம்” (அதாவது இளம் ஹெகலியர்களை  விமர்சித்து “The Holy Family, or Critique of Critical Criticism”) என்ற நூலை எழுதினர். அப்புத்தகம் புரட்சிகர பொருள் முதல்வாத சோஷலிசத்தின் அடிப்படைகளைக் கொண்டது.

1845லிருந்து 1847 வரை ஏங்கெல்ஸ், புரூசெல்ஸ் மற்றும் பாரிஸில் இருந்தார். இங்கே அவர்கள் இரகசிய ஜெர்மன் கம்யூனிஸ்ட் லீக் அமைப்புடன் தொடர்பில் இருந்தபோது, சோஷலிசத்தின் முக்கிய கோட்பாடுகள் குறித்து எழுதுமாறு வேண்டிக் கொள்ளப்பட்டனர் –அப்போது அவர்கள் அந்த விஷயம் குறித்துதான் தங்கள் ஆய்வை நடத்திக் கொண்டிருந்தனர். இவ்வாறுதான், கம்யூனிசத்தின் கோட்பாடுகளுடன், ‘கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை’ (தி மேனிஃபெஸ்டோ ஆப் கம்யூனிஸ்ட் பார்ட்டி) வந்தது.

மார்க்ஸ் லண்டனில் குடியேறினார்; ஏங்கெல்ஸ் ஓர் எழுத்தர் பணியை மேற்கொண்டு பின்னர் மான்செஸ்டர் வணிக நிறுவனத்தில் பங்குதாரர் ஆனார். இருவருமாக இணைந்து விஞ்ஞான சோசலிசம் மீது தங்கள் ஆய்வு பணியை நடத்தினர். 1870ல் ஏங்கெல்ஸ் லண்டனுக்கு மாறி வரவும், விரைவில் இருவருமாகச் சேர்ந்து இணைந்த அறிவார்ந்த பணிகளில் ஈடுபட்டனர். ஏங்கெல்ஸ் படைப்புக்கள், பெரும்பாலும் சர்ச்சைக்குரிய தர்க்கரீதியான விமர்சனப்பூர்வமானவை: அறிவியல் பிரச்சனைகள் குறித்த அவை, வரலாற்றுப் பொருள் முதல்வாதக் கருத்துருவாக்கத்துடன் (conception) எழுதப்பட்டன. 1883 வரை அவர்கள் கடுமையாகப் பணியாற்றியபோது மார்க்ஸ் மரணமடைந்தார்.

அவரது மாபெரும் படைப்பு மூன்று தொகுதிகளைக் கொண்ட ‘மூலதனம்’ (கேப்பிட்டல்) –அவை, பதிப்பாசிரியராக மட்டுமில்லாமல் அதே நேரம் மீண்டும் ஏங்கல்ஸால் திரும்ப எழுதப்பட்டு வெளியிடப்பட்டன. அந்த மாபெரும் படைப்பாக்கத்தில் தனது இறுதி செம்மையாக்கல் சிறு திருத்தப் பணிகளைச் செய்து முழுமையாக்கும் முன் மார்க்ஸ் (மனித குலத்திற்கான தனது சிந்தனைகளை நிறுத்தி) இவ்வுலகை விட்டு மறைந்தார்.

ஏங்கல்ஸால் எழுதப்பட்ட பிறநூல்கள்: 

‘லுத்விக் ஃபாயர்பாக்கும் மூலச்சிறப்புள்ள ஜெர்மன் தத்துவஞானத்தின் முடிவும்” (Ludwig Feuerbach and the End of Classical German Philosophy என்ற நூலின் தமிழாக்கம் பதிப்பு) ஃபாயர்பாக் பொருள்முதல் வாதம் குறித்து வலியுறுத்திய போதும், இயக்கவியல் (டயலெக்டிக்ஸ்) குறித்து வலியுறுத்தவில்லை. (எனவே அது குறித்த  ஏங்கெல்ஸ் விமர்சன நூல் இது).

மேலும் ‘தொடக்க கால கிறிஸ்டியானிட்டி மீது’ என்பது அவர் எழுதிய இன்னொரு நூல். மற்றொரு நூல் ‘டூரிங்குக்கு மறுப்பு’ மார்க்சியத்தின் மூன்று கூறுகளுடன்; வீட்டு வசதி பிரச்சனை மீது இரண்டு பெரும் கட்டுரைகள்; இயற்கையின் இயக்கவியல் முதலான நூல்கள்.  ஏங்கெல்ஸ் இயற்கை விஞ்ஞானம் மற்றும் இராணுவ விவகாரங்கள் மீது சிறப்பு நிபுணத்துவம் கொண்டிருந்தார். ஏங்கெல்ஸ் இரண்டாவது (கம்யூனிச) சர்வதேச அகிலம் அமைப்பை நிறுவியவரும் ஆவார்.

மார்க்சியத்தின் இணை நிறுவனரான பிரெட்ரிக் எங்கெல்ஸ் 1895 ஆகஸ்ட் மாதம் 5ஆம் நாள் இயற்கை எய்தினார். 

காரல் மார்க்சின் பெருங்கொடையை நமக்கு முழுமையாக்கித் தந்த மார்க்ஸின் இணைபிரியா நண்பர் பிரெட்ரிக் எங்கெல்ஸ் பிறந்தநாளில் அவர் புகழ் பாடுவோம்! 

–நன்றி : நியூ ஏஜ் (நவ. 23 –29)

–தமிழில் : நீலகண்டன்,

 என்எப்டிஇ, கடலூர்

 

    

.     

 

Tuesday, 28 October 2025

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு --அதன் கடந்த காலத்தை அம்பலப்படுத்தும் தருணம்

 

ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு

–சந்தேகத்திற்குரிய அதன் கடந்த காலத்தை
அம்பலப்படுத்தும் தருணம்

P சுதீர்

–நன்றி : இந்திய பிரஸ் ஏஜென்சி சேவை (IPA Service)

ஆர்எஸ்எஸ் அமைக்கப்பட்ட நூற்றாண்டைப் பெருமையுடன் பொதுமக்களிடம் எடுத்துச் செல்லும் பெரும் முயற்சிகளின் மத்தியில், திடுக்கிடச் செய்யும் ஒரு காட்சியால் தேசம் அதிர்ச்சி அடைந்தது. உச்சநீதிமன்ற பார் கவுன்சிலில் பதிவு செய்த வழக்கறிஞர் ராகேஷ் கிஷோர்இந்திய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி பி ஆர் கவாய் அவர்களை நோக்கி காலணியை வீசினார். ஒரு மனுவைத் தள்ளுபடி செய்யும்போது நீதிபதி கவாய் இந்து மதம் பற்றி இழிவாக விமர்சனம் செய்தார் என்பது வழக்கறிஞரின் புகார்.

எனினும், முக்கிய செய்தி ஊடகங்கள் இந்த அதிர்ச்சி தரும் நிகழ்வை முக்கியமற்ற அற்ப நிகழ்வாக்க எந்த எல்லைக்கும் சென்று நிறுவ முயன்றன. ‘காலணியை வீசவில்லை, அது வெறும் பேப்பர் கட்டுஎன கதைத்துக் குழப்ப முயன்றன – ஊடகங்களின் வழக்கம் அதுதானே. மற்றவர்கள், கிஷோர் நடவடிக்கையை நியாயப்படுத்த முயன்றனர்: ‘மத உணர்வுகள் காயப்படுத்தப் பட்ட‘தன் மீது எழுந்த மனவருத்தத்தின் வெளிப்பாடு என அதனை விவரித்தனர் –இப்போது அது ஒரு பிரபலமான சொல்லாடல், சட்டவிரோத மற்றும் அரசியலமைப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் இறங்க ஒரு சாக்கு!

இந்த அப்பட்டமான கடும் நிகழ்வுப் போக்கை, ஆர்எஸ்எஸ் நூற்றாண்டை அடையாளப்படுத்த கொட்டி முழங்கி பெரிதுபடுத்தப் படும் சூழலுடன் துல்லியமாகக் குறிப்பிட்டுத் தொடர்புபடுத்துவது கடினம். எனினும் நமது கவனத்தில் இருந்து ஒன்று தப்ப முடியாது –அது, இந்த அருவருக்கத்தக்க நிகழ்வை அடையாளப்படுத்தும் வெறுப்பு மற்றும் பழிவாங்கல் உணர்வும் நிறைந்த சூழல் இதுபோன்ற இணையான நிகழ்வுகள் நமது தேச அரசியல் வாழ்வின் முக்கிய கட்டங்களில் பல உண்டு. அப்போதெல்லாம் அதில் ஆர்எஸ்எஸ் அமைப்பின் செல்வாக்கு கோலோச்சிய சூழலைக் காணலாம். அவற்றில் மிகவும் குறிப்பிடத்தக்கது, தேசத் தந்தை மகாத்மா காந்திஜியின் படுகொலை.

அந்தக் கொடூரமான செயலை நோக்கி கட்டி எழுப்பப்பட்ட ஆர்எஸ்எஸ் அமைப்பின் ஈடுபாட்டைக் குறித்த வலுவான சந்தர்ப்பச் சாட்சியங்கள் இருந்தன; என்றபோதும், கறாரான நேரடி சாட்சியம் இன்மை, எம்எஸ் கோல்வால்கர் போன்ற பல முக்கிய ஆர்எஸ்எஸ்

செயல்பாட்டாளர்கள் (படுகொலையில்) அவர்களின் தனிப்பட்ட பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட ஏதுவாயிற்று. கோல்வால்கருக்கு அப்போதைய உள்துறை அமைச்சர் சர்தார் வல்லபாய் பட்டேல் எழுதிய கடிதம், “இந்து மகாசபாவுடன் சேர்ந்து ஆர்எஸ்எஸ் பிரச்சாரம், மகாத்மா கொல்லப்படுவதற்கான சூழலை ஏற்படுத்தியதுஎனத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டது.

ஆர்எஸ்எஸ் அமைப்பை அதன் ‘மேன்மை பெருமைக்காக வானளாவ மக்கள் புகழ அரசு எடுக்கும் முயற்சிகளே, உண்மையில், அதன் சந்தேகத்திற்குரிய கடந்த காலம் குறித்தக் கவனக் குவிப்புடன் பெருமளவில் விவாதங்கள்/ உரையாடல்கள் நடத்த அழைப்பு விடுப்பதாக உள்ளது.

பலருக்கும் இந்தக் கொண்டாட்டம் உண்மையில் அந்த அமைப்பின் அடிப்படை கோட்பாடுகளை ஆய்வு செய்வதற்கான வாய்ப்பை வழங்கியுள்ளது; சவார்க்கர் இந்துத்துவா என்று வரையறுத்ததை, நடைமுறையில் கொண்டு வர ஆர்எஸ்எஸ் அமைப்பின் விஷக் கருத்தியல் வேர்களையும் மற்றும் அதன் அமைப்பியல் முறைகளையும் ஆய்வு செய்வதற்கான தருணம் இது. 

இந்துத்துவாவின் சாராம்சங்கள் என்ற தனது நூலின் மூலம் இந்தக் கருத்தியலுக்கான அடிப்படைகளைச் சவார்க்கர் ஏற்படுத்திய போதும், ஆர்எஸ்எஸ் அமைப்புதான், சவார்க்கரால் ஆதரிக்கப்பட்ட ஹிந்து ராஷ்ட்டிரா அமைப்பதை நோக்கிய நடவடிக்கைகளையும், அமைப்பு

ரீதியான வலிமையையும் வழங்கியது. சவார்க்கர் வேறுபட்டதான ஒரு கருத்தியலை, அதாவது அது இந்து சமய நெறிகளைக் குறித்ததன்று; மாறாக, , அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்ற பச்சையான அரசியல் செயல் திட்டம் என்ற கருத்தியல் அடிப்படையிலானது என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். சாவர்க்கர் தனது வார்த்தைகளில், ‘இந்து சமயநெறி கருத்தியல் மற்றும் இந்துத்துவா இடையே குழப்பிக் கொள்வது, இந்துக்களை ஒற்றுமைபடுத்துவதில் ஓர் இடையூறு ஆகிவிடும் –ஏனெனில் சாதிகளால் கட்டமைக்கப்பட்டு செலுத்தப்படும் இந்து சமூகத்தின் (கீழ், மேல் ஏற்றத்தாழ்வான) படிநிலை தன்மை அப்படிப்பட்டது என்று எழுதினார். (சுருக்கமாக, பொதுமக்களின் ‘இந்து சமயநெறி நம்பிக்கை வேறு, ‘இந்துத்துவா வேறு. அது இறை நம்பிக்கை சார்ந்தது – இது அரசியல் நோக்கமுடையது).

எனினும் கடந்த பல ஆண்டுகளில், ஆர்எஸ்எஸ் அமைப்பால் எழுப்பப்படும் கோரிக்கைகள் மற்றும் முழக்கங்களில் இருந்துகூட, இந்துத்துவா நடைமுறைக்குப் பிராமணியம் என்பதே உள்ளார்ந்த சமூகப் பார்வை என்பது தெளிவாகிறது. உதாரணத்திற்கு, ஆர்எஸ்எஸ் பத்திரிக்கை ஆர்கனைசர், தேச விடுதலைக்கு முந்தைய நாளில் வெளியான 1947 ஆகஸ்ட் 14 தேதியிட்ட இதழிலேயே, ‘பன்முகக் கூட்டு தேசம் (composite nation) என்ற கோட்பாட்டை முற்றாக நிராகரித்தது: (‘Whither–‘எந்த இடத்திற்கு, ஏன், எதற்காக, எந்த இலக்கை நோக்கி?’--  என்ற தலைப்பின் கீழ் அமைந்த அதன் தலையங்கத்தில்) “நாம் இனியும் தேசிய அடையாளம் என்ற தவறான கற்பிதங்களால் செல்வாக்கு செலுத்தப்பட அனுமதியோம். பெரும்பான்மையான மனரீதியான குழப்பங்களும், தற்போதைய மற்றும் எதிர்காலச் சங்கடங்களையும், சாதாரண உண்மையைத் தயாராக அங்கீகரிப்பதன் மூலம், நீக்க முடியும்; (அந்த உண்மை,) இந்துஸ்தானத்தில் இந்துக்கள் மட்டுமே தேசத்தை – இந்துக்களால், இந்து மரபுகள், கலாச்சாரம், கருத்துக்கள் மற்றும் விழைவுகள் மீது கட்டப்பட்ட அத்தகைய தேசத்தையும்தேசியக் கட்டமைப்பையும் பாதுகாப்பான மற்றும் உறுதியான அடிப்படையில் கட்ட முடியும்

அதே இதழில் ஆர்கனைசர், தேசியக் கொடியைத் தொடர்ந்து இழிவுபடுத்தி கடுமையாகச் சாடியது: “விதிவசத்தால் அதிகாரத்தில் வந்தமர்ந்தவர்கள், நம் கையில் மூவர்ணக் கொடியைக்

கொடுத்து இருக்கலாம்; ஆனால் ஒருபோதும் அதை மதிக்கவும் முடியாது இந்துக்களால் சொந்தமாக ஏற்கவும் முடியாது.” ஆர்எஸ்எஸ் அதே தொனியில் தேசிய கீதத்தையும் எதிர்த்து, பக்கிம் சந்திர சாட்டர்ஜி எழுதிய ஆனந்த மடம் நாவலின் ஒரு பகுதியான ‘வந்தே மாதரம்’ பாடலுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தது –நிச்சயமாக அந்தப் பாடல், சந்தேகத்திற்கு இடமின்றி, வகுப்புவாதச் சாயலை உடையது மற்றும் இஸ்லாத்தையும் முஸ்லீம்களையும் கேலி செய்து கண்டனம் தெரிவிக்கிறது.

இது ஒரு தற்செயல் உடன் நிகழ்வு அல்ல. காலனிய அடிமை தளையிலிருந்து தேசத்தை விடுவிக்கும் பொதுப் போராட்டத்தில் இருந்து அவர்கள் ஒதுங்கி நின்றது மட்டுமல்ல; மாறாக, “நமது முதன்மையான அர்ப்பணிப்பு இந்துக்கள் பாலானதுஎன்று கூறும் அளவு செல்வதை –சுதந்திரத்திற்கு முந்தைய நாட்களில் இருந்தேதனது மரபிலேயே சுமந்து வருகிறது. எனவே பிரிட்டிஷ்க்கு எதிராக ஒன்றுபடுவதை விடநாம் இந்துக்களை ஒன்றுபடுத்த வேண்டும்; அவர்களை இராணுவ மயமாக்க வேண்டும் என்றது.

    ஆர்எஸ்எஸின் இந்த அதே பல்லவி, ஜனநாயக, மதச்சார்பற்ற அரசியலமைப்பு நிறைவேற்றப்பட்ட சமயத்தில் தொடர்ந்தது: அவர்கள் அதை இந்தியத் தன்மையற்றது என வெளிப்படையாகக் கண்டித்தனர். 1949 நவம்பர் 30 தேதியிட்ட ஆர்கனைசர் இதழ் தனது தலையங்கத்தின் மூலம் பழங்கால மனுஸ்மிருதியைச் சட்டபூர்வமாக அரசியலமைப்பு ஆவணமாக ஏற்கக் கோரியது.  அந்தத் தலையங்கத்தில், “ஆனால் நமது அரசியலமைப்புச் சட்டத்தில், பண்டைய பாரதத்தின் தனித்துவமான அரசியலமைப்பு வளர்ச்சி உருவானது குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. ஸ்பார்டாவிலும் ஏதென்ஸிலும் சட்டம் எழுதிய அறிஞர்களாக கருதப்படும் ஸ்பார்டாவின் லைகுர்கஸ் / பெர்சியாவின் சொலோன் காலத்திற்கு வெகுகாலம் முன்பே மனுவின் சட்டங்கள் எழுதப்- பட்டன. இந்த நாள் வரை, மனுஸ்மிருதியில் பொறிக்கப்பட்ட அவரது சட்டங்கள் உலகத்தால் உற்சாகமாகப் பாராட்டுப்பட்டுத் தன்னியல்பாக அதற்குப் பணியவும், உடன்படவும் தூண்டுகிறது. ஆனால் நமது அரசியலமைப்புச் சட்டப் பண்டிதர்களுக்கு அது ஒன்றும் இல்லாதது எனப்  பொருள்படுகிறது.” 

அரசியலமைப்புச் சட்டம் குறித்து கோல்வால்கர் 

கோல்வால்கரும் அரசியலமைப்பை முழுவதும் மறுத்து உறுதிபடக் கூறினார், “நமது அரசியலமைப்பும் கூட, மேற்கத்திய நாடுகளின் பல்வேறு அரசியலமைப்புச் சட்டங்களில்

இருந்து பல்வேறு ஷரத்துக்களை எடுத்து ஒன்றாக்கிய பல்வேறுபட்ட கூறுகளால் ஒட்டுப் போட்ட கலவையாக, சிக்கல் நிறைந்ததாக உள்ளது.  நமக்குச் சொந்தமானது என்று அழைக்கத்தக்க எதுவும் முற்றிலும் அதில் இல்லை. அதன் வழிகாட்டுநெறி கோட்பாடுகளில் நமது தேசிய லட்சிய நோக்கம் என்ன? மற்றும் நமது வாழ்வில் முக்கிய சாரம் என்ன என்பதன் மீது ஏதாவது ஒரு வார்த்தை குறிப்பு உள்ளதா?”.

ஒரு மக்கள், ஒரு தேசம் என்ற கோட்பாட்டைத் தன்னிச்சையாக மூச்சு முட்டும் சட்டையில் கட்டாயமாகத் திணிக்கப்பட்ட இதை, ‘இந்தி, இந்து, இந்துஸ்தான் என்று உடைத்த முழக்கங்கள் ஆர்எஸ்எஸ் அமைப்பின் கருத்தியல் உரையாடல்களில் –முஸ்லிம்கள், கிறிஸ்த்துவர்கள், கம்யூனிஸ்டுகளுக்கு எதிரான அதன் தவிர்க்க முடியாத விருப்பத்துடன் கூடியதாகசெல்வாக்குச் செலுத்துகிறது.

எனவே, ஆர்எஸ்எஸ் அடித்தளக் கோட்பாட்டின் அடிப்படையில், எந்தவித நெருடலும் இன்றி இரட்டை விதமாகப் பேசுவத்தைப்  பழகிப் பயின்ற ஒரு ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர், நாட்டின் பிரதமர் பதவியைப் பிடித்தமரும் வரை இரட்டை விதமாகவே பேசுவார்.

அந்த அடையாளத்தை மறைக்கும் எந்த நிர்பந்தத்தையும் அவர் ஒருபோதும் உணர்வதில்லை; ஆனால் ஜனநாயக, மதச்சார்பற்ற அரசியல் அமைப்பின்பால் பிறப்பிலேயே இருக்கும் வெறுப்பு இருந்த போதும், அவரது அரசு அரசியலமைப்புச் சட்டத்தை ஒன்றுமில்லாத வெற்றுக் கூடாக்கவும்; மேலும் அதைக் குறுகிய, குழுவாத, பாசிச, இந்து ராஷ்ட்டிரா தத்துவத்தால் மாற்றி அமைக்க- வும் உள்ளுக்குள்ளே இருந்து முயற்சி செய்யும். இதற்கு மத்தியில் அவ்வப்போது அரசியலமைப்புச் சட்டத்தை வணங்குவது, அந்த நேரத்தால் ஏற்படும் வெறும் நிர்ப்பந்தம் மட்டுமே –அதிலிருந்தும் இறுதியில் தகுந்த வாய்ப்பான நேரத்தில் விடுபடும்.

எவ்வாறாயினும், இந்த இரண்டு ஷூக்களை இரண்டு கால்களில் அணிவது, சில நேரங்களில் சமாளித்துப் பேலன்ஸ் செய்வதில் கடுமையான செயலாகிவிடும். எனவே ஆர்எஸ்எஸ் அமைப்பைப் புகழ்வதில் காட்டப்படும் கூடுதலான உற்சாகம், அதன் சந்தேகத்திற்குரிய சுயம்சேவக் சங்கின் கோரமான கடந்த கால நூறாண்டின் குறிப்பிட்ட நிகழ்வுகளுடன் முரண்படுகின்றன.

நீதிபதி கவாய் மீதான வழக்கறிஞரின் தாக்குதல் மீது பிரதமரின் தாமதமான மென்மையான விமர்சனமும்; காலணி வீச்சு சம்பவத்தால் பதற்றம் அடையாது அதனைக் கண்ணியமாகக் கையாண்ட தலைமை நீதிபதியின் நிதான நிலைப்பாட்டிற்காக அவரைப் புகழ்வதும் ஒருபுறம் இருந்த போதும், வலதுசாரி சமூக ஊடகப் படைவீரர்கள் நீதிபதிக்கு எதிராகத் தனிப்பட்ட முறையில் அவர் மீது பழிவாங்கல்களைத் தொடர்ந்த வண்ணம் உள்ளனர்.

சங்கி படை வீரர்களுக்கு, குறிப்பாகப் புரிந்து கொள்ளக்கூடிய அவர்களின் மனுவாதி ஆதர்ச உற்சாகம் காரணமாக, தலைமை நீதிபதியின் தலித் அடையாளம் மற்றும் புத்தவியல் சார்ந்த நம்பிக்கை அவருக்கு எதிரான இந்த விஷத்தைக் கக்கும் வாய்ப்பை வழங்கி உள்ளது.

எனவே ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு, சந்தேகத்திற்குரிய அவர்களின் கடந்த காலத்தை அம்பலப்படுத்தும் வாய்ப்பை நமக்கு வழங்கி உள்ளது: மேலும் சுதந்திரம், ஜனநாயகம் மதச்சார்பின்மை, சமூக நீதி மற்றும் கூட்டாட்சி தத்துவத்திற்குத் தேசத்தின் பற்றுறுத்தியை உள்ளடக்கிய நமது அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படை கோட்பாடுகளின் புகழ் கெடுத்துக் களங்கப்படுத்த அரசின் இழிதகவான முயற்சிகளை அம்பலப்படுத்தும் வாய்ப்பை ஆர்எஸ்எஸ் நூற்றாண்டு நமக்கு வழங்கியுள்ளது.

 

: நியூ ஏஜ் (அக். 26 –நவ.1)

தமிழில் : நீலகண்டன்,

என் எஃப் டி இ, கடலூர்