Wednesday, 3 September 2025

மார்க்சியம் இந்த நாட்டிற்கு வழங்கியது என்ன?

 

மார்க்சியம் இந்த நாட்டிற்கு வழங்கியது என்ன?  

         --டாக்டர் சி என் ஷேத்ரபால் ரெட்டி

சமூக வலைத்தள விவாதம் ஒன்றில் முற்போக்கு இலக்கியம், மார்க்சியம் மற்றும் எழுத்தாளர்கள் மீது அவற்றின் செல்வாக்குக் குறித்து ஓர் ஆசிரிய நண்பர் எழுப்பிய கேள்விக்குப் பதிலாக இக்கட்டுரை எழுதப்படுகிறது.      

        கேள்வி இதுதான், “மார்க்சியம் இந்த நாட்டிற்கு வழங்கியது என்ன?” புறக்கணிக்கக் கூடாத கேள்வி இது. இந்தக் கேள்வியைக் கேட்டவர்க்கு மார்க்சியம் அளித்தது என்ன என்பதை மட்டும் விளக்குவது அல்ல, மாறாக நமது தேசம் முழுமைக்கும் மார்க்சியம் வழங்கியதையும்கூட விளக்குவது மிக முக்கியம் என நான் நினைத்தேன். 

     தொழிலாளர் வர்க்கத்துடன் அரசு ஊழியர்களுக்கும்கூட எட்டு மணி நேர வேலை நாள் உரிமைக்குப் பின்னே இருந்த பெரும் சக்தி மார்க்சியம். மார்க்சியம்தான் நியாய ஊதியம் பெறுவது ஓர் உரிமை என்ற கருத்தியலை ஏற்படுத்தியது. ஒவ்வொரு 5 ஆண்டுகளுக்கும் ஊதியங்களை உயர்த்த, அல்லது அது சாத்தியமில்லாதபோது இடைக் கால நிவாரணங்களை அளிக்க ஊதிய மாற்றக் குழுக்களை நாம் கோர முடியும் என்ற யோசனை மார்க்சியத்திலிருந்து தொடங்கியது. பல்வேறு அலவன்ஸ்கள், கிராக்கிப்படி (டிஏ) போன்ற பலன்களை உரிமையுடன் கோரவும், அவற்றிற்காகவும் மற்றும் பல்வேறு நிலுவைத் தொகைகளுக்காகவும் ஊழியர்கள் போராட முடியும் என்றும் ஊழியர்களை உணர வைத்தது மார்க்சியம்தான். ஓய்வு பெற்ற அரசு ஊழியரின் மனைவி உரிமையாக குடும்ப ஓய்வூதியம் பெறுவதும் மாக்சியம் அளித்த சிந்தனை முறையின் விளைவே. 

        அரசின் சூழ்ச்சிக் கொள்கைகளால் தற்போதைய அரசு ஊழியர்கள், இழந்து விட்ட பழைய பென்ஷன் முறையை (ஓபிஎஸ்) மீட்டு மீண்டும் கொண்டுவர இயக்கங்களைத் தலைமையேற்று நடத்தும் ஆசிரியர் சங்கத் தலைவர்கள் மார்க்சியக் கருத்தாளர்களே. வாய்ப்பு ஏற்படும் எனில், சட்ட மன்ற அமைப்புகளில் உங்களுக்காக அவர்கள் குரல் எழுப்புகின்றனர் அல்லது வீதிகளில் உங்கள் பிரச்சனைகளைப் பேசிப் போராடுகிறார்கள். இவை எல்லாம் மார்க்சியம் வழங்கிய ஒளி விளக்குகள். வேலை வழங்குவது அரசின் பொறுப்பு, மற்றும் வேலைவாய்ப்புகளைப்

பொதுத்துறை பிரிவில் ஏற்படுத்த வேண்டும் என்ற முழக்கத்தைத் தந்தவர்கள் மார்க்சியவாதிகள். அரசு இதைப் புறக்கணிக்கும் எனில், வேலை- யில்லாதவர்கள் சார்பாக அவர்கள் போராடவும் செய்கிறார்கள். “அனைவருக்கும் கல்வி, அனைவருக்கும் வேலை மற்றும் அனைவருக்கும் ஆரோக்கியம்/ சுகாதாரம்” என்ற             முழக்கங்களும்கூட மார்க்சியர்கள் வழங்கியதே.

  தேசத்திற்கு மார்க்சியம் வழங்கியதைச் சுருக்கமாக விளக்குவதும் தேவை. மார்க்சியச் சிந்தனா முறை பெருவெள்ளம் இந்தியாவுக்குள் நுழைந்து நூறாண்டுகளுக்கும் மேலாகிறது. இந்தத் தேசத்தை முன்னேற்ற கடுமையாகப் பாடுபட்டதில் மார்க்சியர்கள் போல வேறு எந்தக் குழுவும் உழைத்ததில்லை. அந்நியக் காலனி ஆட்சி நுகத்தடியிலிருந்து இந்தியாவை விடுதலை செய்வது மற்றும் அறிவார்ந்த சிறந்த சமூகத்தைக் கட்டி எழுப்புவது என்ற இலட்சியமுடன் இந்தியக் கம்யூனிஸ்ட்

கட்சி அமைக்கப்படுவதற்குக் காரணம் மார்க்சியம். (டோமினியன் அந்தஸ்துடன் கூடிய) “வெறும் சுதந்திரம் அல்ல, மாறாகப் பூரணச் சுதந்திரம்” என்ற முழக்கத்தை மைய அரசியல் நீரோட்டத்தில் முதலில் கொண்டு வந்ததும், அதனை அனைத்துக் கட்சிகளின் முக்கிய அரசியல் நிகழ்ச்சி நிரல் திட்டமாக மாற்றியதும் மார்க்சியம். இந்தியாவுக்கும் அதன் மக்களுக்கும் மார்க்சியம் வழங்கிய மாபெரும் வெற்றி, இது.

        பிரிட்டிஷ் ஆட்சியாளர் இரவுகளை உறக்கமில்லாது செய்த இந்திய மார்க்சியர்கள், மீரட், கான்பூர், பெஷாவர் போன்ற பல சதி வழக்குகளைச் சந்தித்தனர். இந்தியாவில் மார்க்சியம் வலிமை பெறுவதைக் கண்டு நடுங்கிய பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியையும் அதன் இணைப்பு அமைப்புகளையும் தடை செய்தனர். எனினும் மார்க்சியர்கள் பின்வாங்கவில்லை, விடுதலைப் போராட்டம் மற்றும் தொழிலாளர் இயக்கங்களைத் தொடர்ந்து தலைமையேற்று நடத்தி, தொழிலாளர்களை அதிகாரம் உடையவர்களாகச் செய்தனர். 1946ல் தபால் தந்தி மற்றும் இரயில்வே தொழிலாளர்கள் நடத்திய வேலைநிறுத்தங்கள் வரலாற்றுப் புகழ் பெற்றவை. தேசிய இயக்கத் தலைவர்களுடன் இணைந்து மார்க்சியர்கள் தலையேற்ற இந்திய ராயல் கடற்படை (ரின்) வீரர்களின் போராட்டம் தனித்துவமானது.

    1943 வங்கப் பஞ்சத்தில் 35லட்சம் மக்கள் மடிந்தபோது உணவு நெருக்கடியைத் தடுக்க தீவிரமாகப் பணியாற்றிய மார்க்சியர்கள், “வங்கம் இறந்தால், இந்தியா வாழ முடியாது” என்ற முழக்கத்தை எழுப்பினார்கள். இந்த அனுபவங்களின் அடிப்படையில், தேசத்தின் அனைத்துக் குடிமக்களுக்கும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்து ஐக்கிய முற்போக்கு ஆட்சி -1 காலத்தில் உணவுப் பாதுகாப்புச் சட்டத்தை ஏற்படுத்தக் காரணமாக இருந்தவர்கள் மார்க்சியர்கள். அந்தச் சட்டத்தின் காரணமாகவே நாட்டின் 85கோடி மக்கள் இன்றும், தற்போதைய மோடி அரசின் கீழும்கூட, இலவச ரேஷன் பொருட்களைப் பெற்று வருகிறார்கள்.      

  “உழுபவருக்கே நிலம் சொந்தம்” என்ற முழக்கம் இந்திய மார்க்சியர்கள் வழங்கியது. அம்முழக்கத்தின் அடிப்படையில் 10 லட்சம் ஏக்கர் நிலம், விவசாயிகளின் தெலுங்கானா ஆயுதப் போராட்டத்தின் போது, ஏழைகளுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டது. இதற்காக 4,000 மார்க்சியக்

கருத்தியலாளர்கள் தங்கள் இன்னுயிரைத் தியாகம் செய்தனர். கேரளாவில் புன்னப்புரா வயலார் போராட்டம் (ம்) மற்றும் வங்கத்தின் தேபகா போராட்டம் அத்தகையதே. (நில உடைமையாளர்கள், குத்தகைய விவசாயிகளுக்கு உற்பத்தியில் பாதி பங்கே அளித்து வந்தனர்; அதனை ‘மூன்றில் இரண்டு பங்காக’ உயர்த்தக் கோரி குத்தகை விவசாயிகள் நடத்தியதே தேபகா போராட்டம். தேபகா எனில் ‘மூன்றில் இரண்டு பங்கு’ எனப் பொருள்).

       தேசிய இயக்கத்துடன் ஒன்றுபட்டு பணியாற்றியபோது இந்திய மார்க்சியர்கள் தொழிலாளர் வர்க்க நலவாழ்வுக்காவும் பாடுபட்டனர். தங்களின் பணிநேரம் எவ்வளவாக இருந்தாலும் அதைப் பொருட்படுத்தாது சுரண்டப்பட்ட எல்லா தொழிலாளர்களுக்கும் மார்க்சியம் வழிகாட்டும் ஒளிவிளக்கு ஆனது. தொழிற்சங்கங்கள் அமைக்கப்படுவதற்குக் காரணம் மார்க்சியம். இதன் ஓர் அங்கமாக இருந்து இந்தியாவில் பல லட்சக் கணக்கான உழைப்பாளர்களுடன் நின்று மார்க்சியம் அவர்களுக்காகப் போராடியது. 64 வகையான தொழிலாளர் நலச் சட்டங்களை ஏற்படுத்த அது வழி வகுத்தது. அதன் அடிப்படையில் பல உரிமைகளை வென்றெடுப்பதற்குப் பாதை அமைத்துச் சாதித்தது.

     பிஎப், இஎஸ்ஐ, டிஏ, மிகுதி நேரப்படி, (ஊதியத்துடன் கூடிய) விடுமுறைகள், ஈட்டிய விடுப்பு, பேறுக்கால விடுப்பு மற்றும் தந்தைமை விடுப்பு போன்ற வசதிகளுக்கான போராட்டங்கள் மார்க்சியத்திலும், மார்க்சியர்களிடத்தும் வேர் கொண்டுள்ளது. கூடுதல் பலன்களுக்காகப் பணியாற்ற ஊக்குவிப்பது மார்க்சியமே. இந்திய மார்க்சியர்கள், அரசுகளைக் கட்டாயப்டுத்தி நவரத்னா நிறுவனங்களையும் பிற பொதுத்துறை ஆலைகளையும் நிறுவிடப் போராடினார்கள்.

     விடுதலைக்குப் பிறகு மார்க்சியம், வங்கிகள் தேசியமயமாக்க, மன்னர் மானியம் ஒழிக்க, நிலச் சீர்திருத்தங்களை அமலாக்க இந்திய அரசுக்கு அழுத்தம் தந்தது. அது நில உச்சவரம்பு யோசனையை முன் வைத்தது, அரசு உபரி நிலங்களை தலித் மற்றும் ஏழை வகுப்பினர்- களுக்குப் பகிர்ந்தளிக்க வேண்டியிருந்தது. பல சீர்திருத்தச் சட்டங்களை ஏற்படுத்துவதற்கு பாடுபட்ட மார்க்சியம் அதிலும் வெற்றியும் பெற்றது; நாடு முழுவதும் இன்றும் –கிராமப்புற வேலைவாய்ப்பு உறுதிச் சட்டம், தகவல் பெறும் உரிமை சட்டம், உணவுப் பாதுகாப்புச் சட்டம் மற்றும் வன உரிமைகள் சட்டம் போன்ற-- அத்தகையச் சட்டங்கள் அமல்படுத்தப்படுவது மட்டுமின்றி, அவை மக்களுக்குக் கிடைக்கக் கூடியதாகவும் ஆக்கப்பட்டுள்ளன.

    சமுதாயத்தின் செம்பாதியாக அமைந்துள்ள பெண்களின் உரிமைகளுக்கான போராட்டம் தேவை என மார்க்சியம் வலியுறுத்துகிறது. எல்லா அதிகார மட்டங்களிலும் பெண்களுக்கு 

அரசியல் ரீதியான இடஒதுக்கீடு என்று எண்ணியது மார்க்சியர்களே. அதன் பொருட்டு நமது நாட்டில், மார்க்சியரான ஒரு பெண்மணி ஒரு மசோதா வரைவை முன் மொழிந்து தனது மக்கள் நலனுக்காகவும் கம்யூனிஸ்ட் கட்சிக்காகவும் தனது வாழ்வை அர்ப்பணித்தார். அவர்தான், தோழியர் கீதா முகர்ஜிஏழு முறை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர். அவர் கொண்டு வந்த முன்னுதார அடையாளமான முக்கிய மசோதா நாடாளுமன்ற அவைகளால் ஏற்றுக் கொள்ளப்பட்டு, மாநிலச் சட்டமன்றங்களில் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கி 2023 செப்டம்பர் 21ல் சட்டமானது.

    மார்க்சியத்தை நம்பும் சக்திகள் அதிகாரத்தில் இல்லை என்றாலும், அவர்கள் சாதித்த வெற்றிகள் கொஞ்சம் அல்ல. விடுதலை போராட்டம் தொடங்கி நமது தேசத்தைக் கட்டி எழுப்புவதிலும்கூட மார்க்சியம் முக்கிய பங்களிப்புகளை அளித்தது, இன்னும் மேலும் சாதிக்க வேண்டியவை பல உள்ளன என்பது உண்மையே. தேர்தல் வாக்குறுதிகளாக அரசுகள் இப்போது வழங்கிவரும் பல்வேறு நலவாழ்வுத் திட்டங்கள் அனைத்தும், மார்க்சியர்கள் முன்பே கோரிக்கை வைத்து மக்கள் பக்கம் நின்று அவர்களைத் திரட்டி அவற்றிற்காகப் போராடியதே காரணம் எனச் சொல்வது மிகையான ஒன்று அல்ல.

  ஒடுக்கப்பட்டோர், சுரண்டப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர், ஏழை, உழைப்போர், பலவீனமானவர்கள் மற்றும் விவசாய வகுப்புக்களைச் சார்ந்த ஒவ்வொரு குடும்பமும் இந்தியாவில் மார்க்சியத்தின் பலன்களை இன்னும் அனுபவித்துக் கொண்டு இருக்கிறார்கள். அந்தப் பலன்களை யார் பெறவில்லையோ, அவர்களுக்காகவும் மார்க்சியத் தத்துவத்தில் நம்பிக்கை கொண்ட சக்திகள் இன்னும் போராடி வருகிறார்கள்.

                              

                                             --நன்றி : நியூஏஜ் (ஆக.31 --செப்.6)

--தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்.


Saturday, 30 August 2025

சி அச்சுத மேனன் –நம்மை எப்போதும் வழி நடத்தும் விழுமியங்களின் மரபு


 சி அச்சுத மேனன்

 –நம்மை எப்போதும் வழி நடத்தும் விழுமியங்களின் மரபு

கவிதா ராஜன்

கேரள அரசியல் வரலாற்றுப் பக்கங்களில் சி அச்சுத மேனன், அவரது தொலைநோக்குப் பார்வையடன் கூடிய தலைமை மற்றும் சமூகச் சீர்திருத்தத்திற்கான உறுதிப்பாட்டிற்காகப் பெரும் ஆளுமையாளராகப் புகழார்ந்த இடத்தை வகிக்கிறார். அவர் 1913 நவம்பர் 23 கோட்டயத்தில் பிறந்தார். மேனன் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியில் முன்னணி உறுப்பினராக உயர்ந்தார். 1960 முதல் 1962 வரை கேரள முதலமைச்சராகப் பணியாற்றினார். சமூகத்தில் திட்டமிட்டு ஏற்படுத்தப்பட்ட சமத்துவமின்மைகளை ஒழிப்பதையும், விளிம்பு நிலை மக்கள் நலவாழ்வை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட பெரும் மாற்றங்களை ஏற்படுத்திய கொள்கைகளை, ஒரு முதலமைச்சராக வகுத்த சிற்பி அவர்.

குறிப்பாக அவரது பதவிக்காலம், நிலச் சீர்திருத்தச் சட்டம் என்ற முன்னுதாரண மைல்கல் நாட்டியதைக் குறிக்கிறது. இந்தச் சட்டம் நிலம் இல்லாதவர்களுக்கு நிலத்தைப் பகிர்ந்து அளித்தது. மேலும், மக்களுக்குக் கல்வி மற்றும் (சுகாதாரக் கட்டமைப்புகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட) சுகாதாரப் பாதுகாப்புக் கிடைப்பதை விரிவாக்குவதற்காகவும் பாடுபட்டார். சமூகச் சமத்துவத்திற்கு இந்தச் சீர்திருத்தங்கள் ஆட்சி நிர்வாகத்தில் தர அளவு கோல்களை ஏற்படுத்தியது. சல்லி வேர் ஜனநாயகம் மற்றும் கூட்டு அதிகாரமளித்தலுக்கு ஆழமான உறுதிப்பாட்டின் மூலம் மேனனின் பாரம்பரியம் பண்பினைப் பெறுகிறது. மக்கள் குரலுக்கு முன்னுரிமை தந்த தலைவர் அவர்.

சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் மற்றும் புரையோடிய சாதியத் தடை கற்கள் கேரளாவில் பரவலாகத் தலை விரித்தாடியபோது, அச்சுத மேனனின் தொலைநோக்குப் பார்வை அணுகுமுறை வந்தது. அவரது முன்னோடி சீர்திருத்தங்களில், உள்ளாட்சி நிர்வாகத்தின் மூலம் அதிகாரப் பரவலை ஏற்படுத்தியது  மிக முக்கியமானது.  இந்தச் செயல் திட்ட உத்தி, விளிம்பு நிலை சமூகங்களின் குரலை மேம்படுத்தி, பங்கேற்பு ஜனநாயகத்தை ஊக்கப்படுத்தியது. இந்த மாற்றம், உள்ளாட்சி அமைப்புகளை உள்ளூர் பிரச்சனைகளைத் தீர்க்கவும் பல்வேறு சமூக வகுப்புகளின் தேவைகளைப் பூர்த்தி செய்யவும் வைத்தது.  மேலும் இது, மக்கள்திரள் மத்தியில் தாங்கள் ஓர் அமைப்பின் பிரதிநிதி என்ற பொறுப்புணர்வு பண்பை வளர்த்தது.

மேனன் சீர்திருத்தங்களில் கல்வி அடுத்த திருப்புமுனை. அறிவுதான் சமத்துவத்தை ஏற்படுத்தவல்ல ஆற்றல் மிக்கது என்பதை அங்கீகரித்த அவர், சமூகத்தின் அனைத்து மட்ட பிரிவினர்களுக்கும் கல்வி கிடைக்கச் செய்யவும், கல்வி/ எழுத்தறிவு விகிதத்தை உயர்த்துவதற்குமான முன்னெடுப்புகளைத் தலைமை ஏற்று நடத்தினார். மாநிலம் முழுவதும் கல்வி நிறுவனங்களை மேம்படுத்தியதன் மூலம், கல்வியறிவில் கேரளாவின் ஈடு இணையற்ற சாதனைகளுக்கான அடித்தளத்தை மேனன் அமைத்தார்.

இதன் விளைவாய் மக்கட் சமூகம் மேல்நிலைப்படுத்தப்பட்டதை இத்தகைய முதலீடுகளின் நேரடிப் பலனளிப்பு என்பதைக் காணலாம்; இது, முற்போக்குச் சமூகத்தின் அடித்தளமாகவும், சமூகம் அடுத்தடுத்த படிநிலைக்கு நகர்வதன் முக்கிய காரணியாகவும் கல்வி உள்ளது என்ற அவரது நம்பிக்கையை வலியுறுத்துகிறது. மேலும் இதன் மூலம் (அறிவு, ஆற்றல், ஆரோக்கியம் முதலானவை உள்ளிட்ட) மனிதவள மூலதனத்தை மேம்படுத்தப்படுத்தி திறன்மிக்க முறையில் பொருளாதாரத்தில் பங்கேற்கச் செய்ய முடிகிறது.

மேலும் சமூக நீதிக்கு அவரது தளர்வில்லாத ஆதரவின் விளைவாய் இறுதியில், சமூகத்தைப் பீடித்த சாதியப் படிநிலைகளை ஒழிப்பதை நோக்கமாகக் கொண்ட கொள்கைகள் வகுப்பதில் முடிந்தது. நிலச்சீர்திருத்தங்களில் அவரது நிர்வாகத்தின் பற்றுறுதி, வேளாண் செல்வாதாரங்கள் மீது பிரபுத்துவக் கொடும்பிடிப்பை விடுவித்தது; குத்தகை விவசாயிகள் மற்றும் நிலமற்றவர்களுக்கு நிலங்களைப் பகிர்ந்து அளித்ததன் மூலம், சமூகப் படிநிலையில் அடிமட்ட மக்கள் மத்தியில் பொருளாதார அதிகாரம் அளிக்கப்பட்ட ஒரு புதிய சகாப்தம் ஊக்கம் பெற்றது. இந்த அசாதாரணமான சாதனை முயற்சி, ஏழ்மையை மட்டும் குறைக்கவில்லை; மாறாக, வரலாற்று ரீதியாக விளிம்பு நிலை வகுப்பினர்களின் மத்தியில் சுயமதிப்பு மற்றும் ஒரு கௌரவ உணர்வையும் ஏற்படுத்தியது. கொள்கையைத் தாண்டி நீண்ட மேனனின் பாரம்பரியம், சமூகச் சமத்துவம் மற்றும் திறன்மிகு ஆட்சி நிர்வாகத்தில் கேரளாவின் உறுதிப்பாட்டை வடிவமைத்தது.

மக்கள் தொகையில் செம்பாதியாக அமைந்த பெண்களின் தேவைகளை உணர்ந்து அங்கீகரித்த அவரது தொலைநோக்குப் பார்வையில் உருவானவைதான், உழைக்கும் பெண்களுக்கும் மாணவிகளுக்கும் தங்கும் விடுதிகள் –அவை அவர்களுக்கு மேம்பட்ட கல்வி மற்றும் வேலை வாய்ப்புக்களை அடைவதைச் சாத்தியமாக்கின. கூட்டுறவுச் சங்க அமைப்புகளை வலிமை பெறச் செய்தும்; பொருளாதார நடவடிக்கைகளில்  பெண்களின் பங்கேற்பை ஊக்குவித்ததன் மூலமும், தான் ஆர்வமாகத் தழுவிய முற்போக்குத் தத்துவங்களை அவர் தீவிரமாக ஆதரித்துச் செயல்படுத்தினார். இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய கொள்கைகளான சல்லி வேர் ஜனநாயகம், ஆட்சியில் பங்கு பெற குடிமக்களை அதிகாரமுடையவர்கள் ஆக்குவது மற்றும் விளிம்பு நிலை மக்களின் குரல்களைச் செவி மடுப்பது மட்டுமின்றி, அவர்கள் குரலை மேலும் ஓங்கி ஒலிக்கச் செய்வதாகிய கட்சிக் கொள்கைகளுடன் அவரது தலைமை நெருக்கமாக ஒன்றிணைந்து இருந்தது. இந்தப் பற்றுறுதி இன்றும் பொருத்தம் உடையதாக விளங்கி, பங்கேற்பு ஜனநாயகத்திற்கு வலுவான சட்டக்கத்தை வழங்குகிறது. கல்வி நிறுவன அமைப்புகளைச் சமூகச் சமத்துவத்தை ஏற்படுத்தும் கருவிகளாக அவர் பார்த்தார்; அனைவருக்கும் கல்விக்காகவும், கல்வியறிவின் மூலம் தனிநபர்களுக்கு அதிகாரமும் அளிக்கவும் அந்நிறுவனங்களுக்கு அவர் ஊசலாட்டம் இல்லாத ஆதரவு அளித்தார்;  அதன்வழி அவர், பங்கேற்பு ஜனநாயகத்தில் அர்த்தமுள்ள வகையில் கலந்து கொள்ளவல்ல குடிமக்களை ஆதரிக்கும் சிபிஐ-யின் நீடித்து நிலைத்த லட்சிய செயல்திட்டத்தை அமலாக்க முயன்றதை அது பிரதிபலிக்கிறது.

சி அச்சுத மேனனைக் கேரளச் சமூக மேம்பாட்டின் முக்கிய சிற்பியாக அங்கீகரிப்பது முக்கியம். ஒரு நூற்றாண்டு காலமாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்திய நீதி, சமத்துவம் மற்றும் அனைவரையும் உள்ளிணைக்க பாடுபடுவது உள்ளிட்ட விழுமியங்களை மேனனின் மரபு பிரதிபலிக்கிறது.

சிபிஐ நூற்றாண்டை நாம் கொண்டாடும்போது, மேனன் வரலாற்று நாயகராக உயர்ந்து நிற்பது மட்டுமின்றி சமூக நீதிக்காகக் கட்சியின் தொடரும் பற்றுறுதிப்பாட்டின்   அடையாளமாகவும் திகழ்கிறார். அதிகாரப் பரவலாக்கல், கல்வி மற்றும் நிலக் கொள்கைகளில் அவரது சீர்திருத்தம், விளிம்பு நிலை மக்களை மேம்படுத்துவது மற்றும் உள்ளூர் சமூகங்களை அதிகாரப்படுத்துவதற்கான சி பி ஐ -யின் முக்கிய லட்சிய நோக்கத் திட்டத்துடன் ஒன்றிணைந்து இருந்தது. மேனனின் எதிர்காலக் கண்ணோட்டம் மற்றும் அனைவரையும் உள்ளிணைத்த வளர்ச்சிக்கான ஆதரவு, கேரளாவை முற்போக்கு ஆட்சி நிர்வாக முன்மாதிரியாக நிறுவுவதற்கு உதவியது. அவரது மரபு சோஷலிசம், ஜனநாயகம் மற்றும் சமூகச் சமத்துவத்தை உயர்த்திப் பிடிக்கும் மாற்றத்தின் தாக்கத்தை நமக்கு நினைவுறுத்தி தொடர்ந்து நம்மை உற்சாகப்படுத்துகிறது

  சி அச்சுத மேனனின் நலவாழ்வு நடவடிக்கைகள் –வரையறுக்கப்பட்ட, நகரத்தை மையமாகக் கொண்டகுடிமை பொருள் பொது விநியோக முறையை, கிராமப்புற வகுப்புகளையும் சென்றடையும் வகையில் மாற்றி அமைத்தது.   உணவுப் பாதுகாப்பை அடிப்படை உரிமையாக வலியுறுத்தியதன் மூலம் அவர், அத்தியாவசியப் பொருட்களைச்  சலுகை விலையில் சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும் வழங்குகின்ற பரவலான பொது விநியோக முறையை ஏற்படுத்தினார். இந்த அணுகுமுறை சந்தை விலைகளை நிலைப்படுத்தி பொருட்கள் சமமாகக் கிடைப்பதை உறுதிப்படுத்தியது; மற்றும் அரசின் தலைமையிலான நலவாழ்வு நடவடிக்கைகள் எவ்வாறு கண்ணியத்தையும் சமூக நீதியையும் உயர்த்திப் பிடிக்க முடியும் என்பதை எடுத்துக் காட்டியது. அவரது சீர்திருத்தங்கள், கேரளாவின் உயர்வான மனித மேம்பாட்டு குறியீடுகளிலும், முன்மாதிரியான நலவாழ்வு அரசு என்ற அதன் நற்பெயரிலும் பிரதிபலிக்கின்றன. மேனன் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பரவலாக்கப்பட்ட ஜனநாயகம், கல்வியறிவு மற்றும் பெண்களின் பிரச்சனைகளுக்கு முன்னுரிமை அளித்து, கேரளாவின் தொடரும் சமூக முன்னேற்றத்திற்கு நெடுநோக்குப் பார்வை கொண்ட தலைமையின் முக்கியத்துவம் மீது சிறப்பான கவனத்தை ஈர்க்கிறார்.

இந்தச் சாதனை மைக்கல்களைக் கொண்டாடும்போது நாம் எதிர்காலத்திற்கான மேனனின் பார்வையைத் தழுவி கொள்ள வேண்டும். இன்றைய சவால்களுக்குப் பங்கேற்பு ஜனநாயகம் மற்றும் சமூக சமத்துவத்திற்கான அவரது உறுதிப்பாடு பொருத்தமான சட்டகத்தை வழங்குகிறது. பொருள் பொதிந்த மாற்றத்தை சாதிப்பதில் கொள்கை வழிப்பட்ட தலைமையின் தாக்கத்தை மேனன் முன்னுதாரணமாக திகழ்ந்து எடுத்துக் காட்டுகிறார். இந்நூற்றாண்டு விழா கொண்டாட்டங்களின்போது, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் அடிப்படை விழுமியங்களுக்கும், நியாயமான, சமத்துவச் சமுதாயம் நோக்கி வழிநடத்தவும் நமது பற்றுதியை நாம் மீண்டும் உறுதி செய்வோம். அச்சுத மேனனின் பங்களிப்புகள் கேரள வரலாற்றின் பகுதி மட்டுமல்ல, மாறாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் லட்சியங்களை எதிர்வரும் ஆண்டுகளில் நனவாக்க நம்மை ஊக்குவிக்கும் உற்சாகத்தின் ஊற்றும் ஆகும்!

வாழ்க சி அச்சுத மேனன் புகழ்!

நன்றி: நியூ ஏஜ் (ஆகஸ்ட் 24 –30)

தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்.

Thursday, 21 August 2025

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 135-- மோகன் குமாரமங்கலம், தலைசிறந்த கோட்பாட்டாளர் மற்றும் தலைவர்


 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 135

மோகன் குமாரமங்கலம்

--தலைசிறந்த கோட்பாட்டாளர் மற்றும் தலைவர்

அனில் ரஜீம்வாலே

சுரேந்திர மோகன் குமாரமங்கலம் தலைசிறந்த கம்யூனிஸ்ட் தலைவரும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கோட்பாட்டாளரும் (தியரிடிஷியன்) ஆவார். தென்னிந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டியவர்களில் அவரும் ஒருவர். 1940களின் தொடக்கத்தில் புனையப்பட்ட புகழ்பெற்ற மெட்ராஸ் சதி வழக்கில் ஈடுபட்டவர். பின்னர் அவர் இந்திய தேசியக் காங்கிரஸில் இணைந்தார், 1966 முதல் 1967 வரை மெட்ராஸ் மாநிலத்திற்கு அட்வகேட் ஜெனரலாகப் பணியாற்றினார். அவர் ஒன்றிய அமைச்சராகவும் இருந்தவர். விமான விபத்தில் பிரபலமான பல ஆளுமைகளுடன் அவர் மரணமடைந்தார்.

லண்டனில் பிறப்பும் வளர்ப்பும்

மோகன் குமாரமங்கலம் திரு பி சுப்பராயன் மற்றும் திருமதி ராதாபாய் சுப்பராயன் இருவருக்கும் மகனாக லண்டனில் 1916 நவம்பர் 1-இல் பிறந்தார். அவரது தந்தை அப்போது

கல்விக்காக லண்டன் வந்திருந்தார். அவர்களின் குடும்பம் வாழ்வின் பல்வேறுபட்ட துறைகளில் தலைசிறந்து விளங்கிய பிரபலமானவர்களைச் சமூகத்துக்கு வழங்கிய ஆளுமை பொருந்திய குடும்பம். மூத்த மகன் ஜெனரல் பரமசிவ பிரபாகரன் குமாரமங்கலம் இந்திய இராணுவத்தில் ஏழாவது (சீஃப் ஆஃப் ஸ்டாப்) தலைமை படை அதிகாரியானார். உண்மையில், மோகனின் தாயார் ராதாபாய் 1938ல் மத்திய அசெம்பிளியின் முதல் பெண் உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்; மற்றும் மோகனின் சகோதரி பார்வதியை அரசியலுக்குள்  கொண்டு வந்ததில் அவரே முக்கிய பொறுப்பு. ராதாபாய் ஓர் அரசியல்வாதி, சமூக சீர்திருத்தக்காரர் மற்றும் பெண் உரிமைகளின் தலைவர். அவர் லண்டனில் நடைபெற்ற வட்டமேசை மாநாடுகளில் கூட கலந்து கொண்டவர்.

புகழ் பெற்ற பிரிட்டிஷ் கம்யூனிஸ்ட் வரலாற்று ஆசிரியர் எரிக் ஹாப்ஸ்பாவ் (Eric Hobsbawm) பெரு விருப்பத்துடன் பெருமைமிகு இந்தக் குடும்பத்தைப் பற்றி ‘இன்ட்ரஸ்டிங் டைம்ஸ்’ என்ற தனது சுயசரிதையில் விவரித்துள்ளார். பார்வதி கிருஷ்ணன் தனது சகோதரர் மோகன் குமாரமங்கலத்தைச் சந்திக்க ஹார்வேர்ட்டுக்கு விஜயம் செய்ததை அவர் குறிப்பிட்டுள்ளார்.

பி சுப்பராயன் அப்போது நாமக்கல் (சேலம்) மாவட்ட திருச்செங்கோடு தாலுகா ‘குமாரமங்கலம்ஜமீன்தார். 5000 ஏக்கர்களுக்கு மேலாக நிலங்கள் வைத்திருந்தார். ஆனால் அந்தக் குடும்பம் அந்த நிலங்களை நிலம் அற்றவர்களுக்குப் பிரித்துக் கொடுத்தது –குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவரும் வாழ்வில் அவரவர் சொந்தப் பாதையை வகுத்துக் கொண்டனர்.

சுப்பராயன் மெட்ராஸ் மாகாணத்தின் புகழ்பெற்ற அரசியல்வாதியாகி, எண்ணற்ற பேர்களுடன் பெரும் மரியாதையுடன் கூடிய  தொடர்பும், கம்யூனிஸ்டுகளிடம் நெருக்கமும் கொண்டு 1926– 30ல் மெட்ராஸ் ராஜதானியின் முதன்மை அமைச்சராக (முதலமைச்சர் ஆக) ஆனார்; இந்தோனேசியாவுக்குத் தூதராகவும் நேரு அமைச்சரவையில் ஒன்றிய அமைச்சராகவும் இருந்தார். அவர் அரசியலமைப்பு நிர்ணய சபை உறுப்பினரும்கூட.

பாஜகவில் இணைந்த ரங்கராஜன் குமாரமங்கலம் அவரது பெயரன்.

கல்வி

மோகன் குமாரமங்கலம் ஈடன் மற்றும் கிங்ஸ் கல்லூரியில் கல்வி கற்றார். கேம்பிரிட்ஜில் படித்த காலத்தில் அவர் ஆழமான கம்யூனிசச் செல்வாக்குக்கு ஆட்பட்டார். FEDIND அமைப்பில் அல்லது ‘வெளிநாட்டில் இந்திய மாணவர்களின் ஃபெடரேஷன்அமைப்பில் அவர் தீவிரமாகப் பங்கு பெற்றார். 1937ல் ‘கேம்பிரிட்ஜ் மஜ்லிஸ் அமைப்பின் தலைவராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். (மஜ்லிஸ் என்ற பெர்சியன் வார்த்தைக்கு அசெம்பிளி அல்லது குழு என்று பொருள். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக வளாகத்தின் மஜ்லிஸ், இந்திய மாணவர்களின் சமூக அறிமுகம், விவாத அரங்கு மற்றும் நடவடிக்கை செயல்பாட்டிற்கான மையம்). 1938ல் அவர் கேம்பிரிட்ஜ் யூனியன் தலைவரானார்.

மேல் படிப்புக்காகக் கிங்ஸ் கல்லூரியில் சேர்ந்தபோது இளைஞர்கள் மத்தியில் வளர்ந்து வந்த கம்யூனிசக் கருத்துக்களால் மோகன் ஆழமாக ஈர்க்கப்பட்டார். பாசிச ஆக்கிரமிப்பு மற்றும் ஜெனரல் பிரான்சிஸ்கோ பிளாங்கோவின் எதிர்ப் புரட்சிக்கும் எதிராக இளைஞர்கள் ஸ்பானிஷ் குடியரசை ஆதரித்தனர். அவர் பிரிட்டன் மாணவர் இயக்கத்தின் முன்னணிப் படையில் ஒருவராக உருவானார்.

ஜவஹர்லால் நேரு ஐரோப்பாவிற்கு விஜயம் செய்த போது மோகன் அவருடன் நெருங்கிய தொடர்பு கொண்டார். ஸ்பெயினுக்குச் சென்ற நேரு, அதன் போர்முனைகளுக்குச் சென்று (ஸ்பானியக்) குடியரசைப் பாதுகாப்பவர்களை நேரடியாக வாழ்த்தினார்.  நேரு பயணம் செய்த காரை ஓட்டுவதற்கு அவர் தேர்ந்தெடுத்தது மோகன் குமாரமங்கலத்தைதான். அது ‘பாதுகாப்புவழங்குவதற்காக மட்டுமல்ல, அறிவார்ந்த பயணத் துணையை வழங்குவதற்காக -வும்கூட. சுப்பராயனின் பெரும் நண்பரான நேரு, மோகனை வெகுவாக விரும்பினார்.

இந்தியாவுக்குத் திரும்பும் வழியில் மோகனின் பெற்றோர்களைச் சந்தித்த பூபேஷ் குப்தா, அந்தப் பெற்றோர் சிறையில் அடைக்கப்பட்ட தங்கள் கம்யூனிஸ்ட் மகன் மோகன் மற்றும் மகள் பார்வதி குறித்து மிகவும் பெருமிதம் அடைந்ததைக் கண்டார். ஒரு வகையில் சுப்பராயன்கள் தங்கள் இரு குழந்தைகளையும் கம்யூனிசத்தைத் தழுவச் செய்ததில் பெரும் பங்கு வகித்தனர்!

1951 வரை மோகன், கட்சி ஊதியத்தில் முழு நேர உறுப்பினராக இருந்தார். சுதந்திர இந்தியாவில் தடுப்பு காவலில் முதலில் பாதிக்கப்பட்டவர்களில் அவரும் ஒருவர். அவரே பின்னர் எஃகு மற்றும் சுரங்கத்துறை ஒன்றிய அமைச்சராகவும் ஆனார்.

நாடாளுமன்ற உறுப்பினரகச் செல்லும் வரை குமாரமங்கலம் நீதிமன்றங்களில் அற்புதமாகச் சட்டப் போராட்டம் நடத்திய வழக்கறிஞராக இருந்தார். பொதுவாகச் சட்ட உலகிலும், குறிப்பாக உச்ச நீதிமன்றத்தில் சிறந்த வழக்கறிஞராகவும் அவர் இருந்தார்.

சேவையில் மூத்த மூன்று நீதிபதிகளைத் தாண்டி இளையவரைத் தலைமை நீதிபதியாக நியமிப்பதற்கு ஆதரவாக மோகன் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை ஆற்றல் மிக்கச் செயல்பாடு.

பிரிட்டனில் பாரிஸ்டர்களுக்கான பெருமைமிக்க ‘இன்னர் டெம்பிள் அமைப்பு குமாரமங்கலத்தை வழக்கறிஞர்கள் பார் அமைப்பிற்கு அழைத்தது. [ஆங்கில வழக்கறிஞர்கள் அமைப்பான பாருக்குத் தனி நபர்களை வழக்கறிஞராக அனுமதிப்பதற்கு உரிமை பெற்ற நான்கு அமைப்புகளில் ஒன்றுதான் இன்னர் டெம்பிள். அவை, கிரேஸ் இன், லிங்கன் இன், இன்னர் டெம்பிள் மற்றும் மிடில் டெம்பிள் என்ற பிரிட்டன் பாரிஸ்டர்களுக்கான அமைப்புகள்இணையத் தகவல்]. 1939ல் இந்தியா திரும்பிய மோகன் குமாரமங்கலம் இந்திய விடுதலை இயக்கத்தில் பங்கு பெற்றார்.

லண்டனில் இருந்தபோது தான் மோகனுக்குப் பிரிட்டன் கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் கம்யூனிஸ்ட் தத்துவத்துடன் தொடர்பு ஏற்பட்டது. பார்வதி எக்ஸ்போர்ட் மஜ்லிஸ் என்ற மாணவர் அமைப்பின் தலைவர் ஆனார். 

மேலும் அவர்   FEDIND (இங்கிலாந்து மற்றும் அயர்லாந்தில் இருந்த இந்திய மாணவர் சமூகங்களின் சம்மேளனம், Federation of Indian Students Societies in England and Ireland) என்ற பத்திரிக்கையின் ஆசிரியராகவும் செயல்பட்டார். இங்கிலாந்து மற்றும் ஆக்ஸ்போர்ட் –கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்களில் பயின்ற ஏராளமான இந்திய மாணவர்களில் என்கே கிருஷ்ணன், பூபேஷ் குப்தா, ஜோதிபாசு, மோகன் குமாரமங்கலம், இந்திரஜித் குப்தா, மோஹித் சென் முதலான வாழ்வில் பின்னர் கம்யூனிஸ்டுகளான மாணவர்களும் அடங்குவர். ஆக்ஸ்போர்ட் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் மோகன் குமாரமங்கலம், பார்வதி குமாரமங்கலம், அருண் போஸ், இந்திரஜித் குப்தா, ரொமேஷ் சந்திரா, ரேணு சக்கரவர்த்தி, என்கே கிருஷ்ணன், ஜோதிபாசு, பூபேஷ் குப்தா, மோகித் சென் மற்றும் சிலர் போன்ற எதிர்காலத்தில் கம்யூனிஸ்டுகளாக மலர்ந்தவர்கள் படித்தார்கள். இது தவிரவும் அங்கு இந்திரா காந்தி, PN ஹஸ்கர் மற்றும் பிறர் அன்ன ஒளி வீசிய ஆளுமையாளர்கள் இருந்தனர். எரிக் ஹாப்ஸ்பாம் மோகனை நன்றாக அறிவார்.

இந்தியா திரும்புதல்

1939இல் இந்தியா திரும்பிய மோகன் தொழிலாளர்கள் மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்களில் குறிப்பாகத் தென்னிந்தியாவில் தீவிரமாக ஈடுபட்டார். 1940களின் தொடக்கத்தில் மெட்ராஸ் ராயப்பேட்டையில் சுப்பராயன்கள் குடும்பத்தினரைச் சந்தித்த புகழ்பெற்ற கம்யூனிசக் கோட்பாட்டாளர் மோகித் சென் பெரிதும் ஈர்க்கப்பட்டார். மோகனின் பெற்றோர்கள் மட்டுமல்லாது லிபியாவில் இத்தாலியப் போர் கைதிகள் முகாமில் இருந்து அப்போதுதான் விடுதலை செய்யப்பட்ட, பிற்காலத்தில் இந்திய இராணுவக் கமாண்டர் இன் சீப் ஆக பணியாற்றிய (P) பரமசிவ பிரபாகர் குமாரமங்கலமும்கூட அங்கே இருந்தார். 

அப்போதுதான் கம்யூனிஸ்ட் கட்சியில் முழு நேர உறுப்பினர்களாக இணைந்திருந்த மோகன் மற்றும் பார்வதி ஆகிய தங்கள் குழந்தைகள் குறித்து பெற்றோர்கள் மிகுந்த பெருமிதம் கொண்டனர். மோகித் சென் மற்றும் பிறரிடம் மார்க்ஸ் மற்றும் லெனினைப் படிக்குமாறு மோகன் கூறுவது வழக்கம். பம்பாய் கட்சித் தலைமையகத்தில் இருந்த பிசி ஜோஷி, கம்யூனிஸ்ட் அறிக்கை மற்றும் பிற கம்யூனிச நூல்களைப் படிக்குமாறு தோழர்களைத் தூண்டி உற்சாகப்படுத்திக் கொண்டிருப்பார். பிசி ஜோஷி, மோகன் மற்றும் பிறர், கட்சித் தலைமையகமான ராஜ் பவனில் அற்புதச் சூழலை ஏற்படுத்தினர். மோகன் மீது காந்திஜி தனது கடவுளின் (ஆசீர்வதிக்கப்பட்ட) குழந்தையாக (like his godson) கருதி அன்பு கொண்டிருந்தார்.

முதலாவது கட்சி காங்கிரஸ், 1943 

மோகன் 1940 ஏப்ரலில் ஆலடி கிருஷ்ணசாமி ஐயரால் ஒரு வழக்கறிஞராகப் பதிவு செய்யப்பட்டார்.

1939இல் இரண்டாவது உலக யுத்தம் வெடிக்க பிரிட்டிஷ் அரசு பெரும் எண்ணிக்கையிலான கம்யூனிஸ்டுகள் மற்றும் ஆதரவாளர்களைக் கைது செய்து அவர்களுக்கு எதிராகப் பல்வேறு ‘சதி வழக்குகள்தொடுத்தனர். அவ்வழக்குகளில் புகழ்பெற்ற ஒன்று 1941ன் ‘மெட்ராஸ் சதி வழக்கு; அதில் குமாரமங்கலம், சிஎஸ் சுப்பிரமணியம், பி ராமமூர்த்தி, கேரளீயன், எஸ் சுப்பிரமணியம் சர்மா, ஆர் உமாநாத், ஹனுமந்த ராவ் மற்றும் சிலர் சிறை தண்டனை விதிக்கப்பட்டனர்.

மாதக் கணக்கில் நீண்ட அந்த வழக்குகள் குமாரமங்கலம், ராமமூர்த்தி மற்றும் பிற தோழர்களுக்குத் தங்களது லட்சியங்களையும் நோக்கங்களையும் விரிவான மக்கள் திரளுக்கு அறிவிப்பதற்கான ஒரு வாய்ப்பை வழங்கியது. அவர் ‘தேசத் துரோகப் பிரசுரங்கள்என்று அழைக்கப்பட்ட சுற்றறிக்கை கையேடுகளை மக்களிடம் விநியோகித்து பிரிட்டிஷ் அரசுக்கு எதிராக மக்களை ஆயுதம் ஏந்தத் தூண்டியதாகக் கூறி அவருக்கு மூன்றாண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் 1942லேயே அவர் விடுதலை செய்யப்பட்டார்.

பின்னர் அவர் மதுரை மாவட்டத்தில் பயணம் செய்து மாணவர்கள், புகையிலை மற்றும் பஞ்சு நூற்பாலைத் தொழிலாளர்களைத் திரட்டினார்.

மோகன், பார்வதி மற்றும் என் கே கிருஷ்ணனுடன் கட்சி மற்றும் தொழிற்சங்க இயக்கங்களைத் தென்னகத்தில் கட்டியமைப்பதில் முன்னணி அமைப்பாளராகச் செயல்பட்டார்.

1943, மே ஜூன் மாதங்களில் பம்பாயில் நடைபெற்ற முதலாவது கட்சி காங்கிரசில் மோகன், சிபிஐ-யின் மத்திய குழுவுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கட்சிப் பொதுச் செயலாளர் பிசி ஜோஷியின் நெருங்கிய கூட்டாளியாக இருந்த போதும், 1948 கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது கட்சி காங்கிரசில் பிசி ஜோஷியைக் கடுமையாக விமர்சித்தத் தோழர்களுடன் மோகனும் சேர்ந்து கொண்டார்.

திருமணம்

காங்கிரஸ் தலைவர் அஜாய் முகர்ஜி மற்றும் சிபிஐ தலைவர் பிஸ்வநாத் முகர்ஜியின் மருமகளான கல்யாணி முகர்ஜியை 1943ல் திருமணம் செய்து கொண்டார். (ஓவியம் நன்றி தோழர் அன்பு, காலந்தோறும் கம்யூனிஸ்ட்கள்)

கட்சித் தலைமையகத்தில்

1940களில் குமாரமங்கலம் பம்பாய் சந்தூர்ஸ்ட் சாலையில் உள்ள மத்திய கட்சி தலைமையகமான ராஜ் பவனத்திற்கு (Raj Bhuvan) மாற்றப்பட்டார். எல்லோரிடத்தும் நட்புறவு ஏற்படுத்திக் கொள்ளவும் மக்களுடன் ஒன்று கலக்க வல்லவருமான பிசி ஜோஷியுடன் அவர் நெருங்கிய நட்பு கொண்டார்! நீங்காது நினைவில் நிற்கும் அந்தக் கம்யூன் வாழ்க்கையின் பிரிக்க முடியாத அங்கமானார் மோகன். அங்கே அவர் பல்வேறு பொறுப்புகளில் பணியாற்றினார். மத்தியக் கட்சியின் ‘பீப்பிள்ஸ் வார் அதன் பிறகு ‘பீப்பிள்ஸ் ஏஜ் ஆகிய இதழ்களில் பணியாற்றியவர், அவற்றின் ஆசிரியர் குழுவிலும் இடம்பெற்றார்.

மோகன், தேசிய மற்றும் சர்வதேச நிகழ்வுகளில் அவரது விரிவான, ஆழமான அறிவை வெளிப்படுத்தி அந்த இதழ்களில் உயர் கருத்தியல் மிக்க (தியரிட்டிகல்) மற்றும் கல்விப் புலனத் தரத்திலான கட்டுரைகளை வழக்கமாக எழுதினார். அங்கிருந்தபோது அவர் எழுதிய பல்வேறு சிற்றேடுகள்/கையேடுகள் (புக்-லெட்ஸ்) அவரது ஆழமான அறிவைக் காட்டின. சீனாவின் ஒற்றுமையை யார் அச்சுறுத்துவது? (1944), ஈரான் மற்றும் ஜெர்மனி குறித்து மற்றும் பிற விடயங்கள் குறித்து அவர் எழுதியவை அத்தகைய சிற்றேடுகளில் அடங்கும்.

சீனா பற்றிய கையேட்டில் அவர், தேசிய முன்னணி அமைப்பதன் முக்கியத்துவம் குறித்த பிரச்சனையை எழுப்பினார். சீனா குறித்த சிற்றேட்டிற்கான தேவை என்ன என்ற கேள்விக்கு அதில் அவர் பதிலளித்தார்; மேலும் காலனியம் மற்றும் பாசிசத்தை எதிர்த்துப் போராடிய நேரத்தில், இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே நெருங்கிய உறவு இருந்ததை அவர் சுட்டிக் காட்டினார். சீனாவில் ஏகாதிபத்திய எதிர்ப்பு, பாசிச எதிர்ப்புப் போராட்டம் வெறும் அந்த நாட்டின் உள்நாட்டு பிரச்சனை மட்டும் அல்ல, மாறாக இந்தியாவிற்கும் கூட அதன் பரவலான பின்விளைவுகள் உள்ளன. சீனாவில் தேசிய முன்னணியின் பலவீனம் நமது சொந்த எல்லைகளுக்கு ஜப்பானின் ஆபத்தை அதிகரித்தது, மேலும் “நமது மக்களைத் தாக்குவதற்கான அவர்களின் செயல்திறனை அதிகரித்தது.சீனாவில் ஜப்பானுக்கு எதிரான சக்திகளுக்கு உதவுவது நமது கடமை, என குமாரமங்கலம் விளக்கினார். சீனாவில் தேசிய முன்னணி, தீவிர வலதுசாரி மற்றும் பாசிசச் சக்திகளால் சீர்குலைக்கப்படுவது பெரும் கவலைக்குரிய விஷயம்.

தெளிவாகவும் அரசியல் மற்றும் கருத்தியல் ரீதியில் திறன் மிக்கதாகவும் தேசிய முன்னணியின் கேள்வியைச் சுற்றி எழுதப்பட்ட அற்புதமான கையேடு அது

இரண்டாவது கட்சி காங்கிரஸ், 1948

பிப்ரவரி-- மார்ச் 1948ல் கல்கத்தாவில் நடைபெற்ற சிபிஐ இரண்டாவது கட்சி காங்கிரஸ் மாநாட்டில் மோகன் குமாரமங்கலம் கலந்து கொண்டார். முன்பு அவர் பிசி ஜோஷியுடன் மிக நெருக்கமாக இருந்த போதிலும், மாநாட்டின் தருணத்தில் பிசி ஜோஷியைக் கூர்மையாகக் கண்டித்து மேற்கொள்ளப்பட்டட பிடிஆர் தலைமையிலான  தாக்குதலில் அவரும் இணைந்தார். பிசி ஜோஷியே கூறினார்: ‘அதிகாரி, குமாரமங்கலம், என்கே கிருஷ்ணன் மற்றும் பிறர் தனக்கு எதிராகத் தொடுத்த தாக்குதலின் மூர்க்கத்தைப் பார்க்கும்போது, பிடிஆர் கண்டனத் தாக்குதலின் மூர்க்கத்தால் தான் அவ்வளவாகக் காயப்படுத்தப்படவில்லை’ என்றார்.

மோகன் பின்னர் தனது பாதையை மாற்றிக் கொள்ள வேண்டி வந்தது; மற்றும் சிபிஐ வரலாற்றை மீண்டும் புதிதாகப் பரிசீலிப்பதற்கான தேவை எழ, அது காங்கிரஸ் மற்றும் சிபிஐ இடையே பல அம்சங்களில் கருத்திணக்கம் குவிவதைக்  காட்டியது. ஜோஷியைவிட அவர் இன்னும் சற்று மேலே சென்று, ‘ஒன்றுபட்ட தேசிய முன்னணி என்ற கருதுகோளைத் ‘தேசிய முன்னணியாக மேலும் வளர்த்து, முன்மொழியப்பட்ட முன்னணி (திட்டத்தில்) யில் காங்கிரசுக்கு மைய முன்னணி இடத்தை அளித்தது. இவ்வாறு இந்தக் கருதுகோள் (கான்செப்ட்) ‘தேசிய ஜனநாயக முன்னணிஎன்பதிலிருந்து வேறுபட்டு இருந்தது.

இக்காலகட்டத்தின்போது, தமிழ்நாட்டில் விவசாயிகள் போராட்டங்களில் அவர் கைது செய்யப்பட்டார்.

அதன் பிறகு கட்சியின் தேசியக் குழு உறுப்பினராகவும் மற்றும் ஏஐடியுசி பேரியக்கத்தில் பல்வேறு பொறுப்புகளிலும் செயல்பட்டார்.

அட்வகேட் ஜெனரலாக

1960களில் மெட்ராஸ் மாநிலத்தின் அட்வகேட் ஜெனரலாகப் பணியாற்றினார். இந்தப் பொறுப்பை அவர் மிகத் திறமையுடன் மேற்கொண்டார்.

காங்கிரஸ் கட்சியில் இணைத்தல்

1967 சட்டமன்றத் தேர்தல்களில் திமுக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து குமாரமங்கலம் அந்த ஆண்டு சிபிஐயில் இருந்து விலகி காங்கிரஸில் இணைந்தார். 1971ல் பாண்டிச்சேரியில் இருந்து (இந்திரா) காங்கிரஸ் சார்பில் மக்களவைக்கு அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார். 1973ல் பணியில் மூத்த மூன்று நீதிபதிகளை விடுத்து, இந்தியத் தலைமை நீதிபதியாக ஏஎன் ரே-வை நியமிக்க இந்திரா காந்தி எடுத்த முடிவிற்குப்  பின்புலச் சக்தியாக அவர் இருந்தார். இது குறித்துத் தனது கருத்தை நியாயப்படுத்தி அற்புதமான உரையை அவர் நாடாளுமன்றத்தில் ஆற்றினார்.

1971ல் இருந்து 1973ல் அவர் மரணமடையும் வரை குமாரமங்கலம், எஃகு மற்றும் சுரங்கத்துறை ஒன்றிய அமைச்சராகச் சேவை புரிந்தார். மக்களின் கட்டளையை அவர் மிகத் தீவிரமாகக் கருதினார். (இதன் காரணத்தால்) 700கும் மேற்பட்ட நிலக்கரிச் சுரங்கங்கள் உட்பட தொடர்ச்சியான சுரங்கக்  கையகப்படுத்தல் மற்றும் தேசியமயமாக்கல் நடவடிக்கைகள் அவரது வழிகாட்டலில் மேற்கொள்ளப்பட்டன. தனது ஒப்பற்ற பணித் திறனுடன் அமைச்சராகப் பொறுப்பு வகித்த இரு ஆண்டுகளில் அவர் அசாதாரணமான சாதனைகளை நிகழ்த்தினார்.

குமாரமங்கலம் ஆய்வு அறிக்கை, 1964

1964ல் குமாரமங்கலம் சிபிஐ தலைமையிடம் “குமாரமங்கலம் தீசிஸ் என்று பிரபலமாக அறியப்படும் விரிவான ‘ஆய்வறிக்கை’யை வழங்கினார். கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குள் தீவிரமான விவாதங்கள் நடந்த நேரம் அது. அந்த விவாதத்திற்கு இந்த ஆவணம் முக்கியமான பங்களிப்பு வழங்கியது. ஐயம் திரிபற கூர்மையான அந்த ஆய்வில் அவர், 1947ல் இருந்து 1964 வரை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தத்துவ மற்றும் கோட்பாட்டு நிலைப்பாடுகள் பரிணாமம் அடைந்து உருவாகி வந்ததைப் பரிசீலித்திருந்தார். அது படிக்கப்பட வேண்டிய மதிப்புமிக்க தீசிஸ் (ஆய்வறிக்கை).

அதன் அறிமுக உரையில் குமாரமங்கலம் கூறினார்: ”இந்தப் பங்களிப்பு, இந்தியா விடுதலை அடைந்த 1947ல் இருந்து இன்றைய தினம் வரை, நமது கட்சியின் கொள்கை உருவாகி வளர்ந்து வந்ததைப் பரிசீலிக்கும் ஒரு முயற்சி.அது முழுமையாகக் கட்சி ஆவணங்கள் அடிப்படையில் அமைந்தது. அந்த ஆய்வு அறிக்கை புத்தக வடிவில் 1973ல், ‘காங்கிரஸில் கம்யூனிஸ்டுகள்குமாரமங்கலத்தின் ஆய்வறிக்கை என்ற தலைப்பில் பிரசுரமானது.

எழுதிய புத்தகங்கள், கட்டுரைகள்

இக்கட்டுரையில் ஏற்கனவே சீனா மீது, மற்றும் குமாரமங்கலம் தீசிஸ் ஆகிய சிற்றேடுகளைக் குறிப்பிட்டோம். இதனுடன் ஏராளமான கட்டுரைகள், புத்தகங்கள் மற்றும் கையேடுகளை அவர் எழுதினார். பீப்பிள்ஸ் வார், பீப்பிள்ஸ் ஏஜ் மற்றும் அதன் பின்னர் கட்சியின் பிற இதழ்களில் அவர் விரிவாக எழுதினார். அவரது பிற நூல்கள் வருமாறு:

ஒரு புதிய ஜெர்மனி பிறக்கிறது (1944); தி ஐக்கிய நாடுகள்;  முக்கிய முடிவு எடுக்க வேண்டிய கட்டத்தில் ஈரான் (1946); தென்னாப்பிரிக்காவில் சமத்துவத்திற்காக இந்தியாவின் போராட்டம் (1946); இந்தியாவின் மொழி நெருக்கடி (1965); இந்தியாவும் ஐக்கிய நாடுகள் அமைப்பும் (1947); ஜனநாயகம் மற்றும் தனிநபர் நம்பிக்கைமுறை போக்கும் (Democracy and Cult of Individual) 1966; அரசியலமைப்புச் சட்டத் திருத்தங்கள் –ஏன் என்ற காரணங்கள் (1971); இந்தியாவில் நிலக்கரித் தொழில்தேசியமயமாக்கல் மற்றும் எதிர்காலக் கடமைகள் (1973); நீதித்துறை நியமனம்சமீபத்திய சர்ச்சைகள் (1973) முதலியன. அவை அவரது பிரதானமான ஆய்வு நோக்கிலான அறிவார்ந்த பங்கைப் பிரதிபலிக்கின்றன.

குமாரமங்கலத்தின் மறைவு

1973 மே 31ல், இந்திய ஏர்லைன்ஸ் போயிங் 737 பிளைட் 440 நொறுங்கி விழுந்த விபத்தில் மோகன் குமாரமங்கலம் கொல்லப்பட்டார். மரணமடைந்தபோது அவருக்கு 56 வயதுதான். அதே விமானத்தில் பயணம் செய்த கே பாலதண்டாயுதம் மற்றும் சதீஷ் லூம்பா போன்ற வேறு சில பிரபல ஆளுமைகளும் இறந்தனர். அது கம்யூனிஸ்ட் மற்றும் முற்போக்கு ஜனநாயக இயக்கத்தின் மீது விழுந்த பேரிடி. அதில் இறந்த பலரது உடல்கள் அடையாளம் காணப்பட முடியவில்லை; ஆனால் குமாரமங்கலத்தின் உடல் அவர் பயன்படுத்தும் பார்க்கர் பேனா, காது கேட்கும் கருவி மூலம் அடையாளம் காணப்பட்டது.

குமாரமங்கலம் இடதுசாரி, ஜனநாயக, முற்போக்கு, ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாதையில் இருந்து ஒருபோதும் தடுமாறியது இல்லை. பிற்போக்கு மற்றும் ஏகாதிபத்தியக் கருத்தியலுக்கு எதிராக வெளிப்படையாகப் பேசுவதில் அவர் அச்சமற்றவராக இருந்தார். கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கு இறுதிவரை அவர் நெருங்கிய நண்பராகவும் கூட்டாளியாகவும் இருந்து, சாத்தியமான எல்லா வகையிலும் அதற்குத் தொடர்ந்து உதவி வந்தார். தொழிலாளி வர்க்க விழைவுகளிலிருந்து அவர் ஒருபோதும் பிரிந்து விலகியதில்லை. அதே நேரத்தில் அவர் தீவிரமான சுதந்திர மனப்போக்கு உடையவராக இருந்தார். ஆழமான கோட்பாட்டு அறிவும், நுட்பமான நடைமுறை கண்ணோட்டமும் கொண்டிருந்தார்.

கம்யூனிஸ்ட் இயக்கத்திற்கும், விரிந்த தேசிய ஜனநாயகத்திற்கும் மறக்க முடியாத பங்களிப்புகளைச் செய்துள்ள மோகன் குமாரமங்கலத்தின் புகழ் வாழ்க!

--நன்றி : நியூ ஏஜ் (ஆகஸ்ட் 10 –16)

தமிழில் : நீலகண்டன்,

என் எஃப் டி இ, கடலூர்

Monday, 18 August 2025

புத்தக மதிப்புரை -- இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் நூறு ஆண்டுகள்

 புத்தக மதிப்புரை


இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின்
நூறு ஆண்டுகள்

திக்காராம் சர்மா

        இந்த ஆண்டு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது அமைப்பு தின நூற்றாண்டு விழாவைக் கொண்டாடி வருகிறது. அனைத்தையும் ஒழுங்கமைத்துத் தொகுக்கப்பட்ட புத்தகம் என்பதற்கு

ஏற்ப, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு குறித்த இந்நூலை கட்சியில் தத்துவக் கல்வி இலாகாவைக் கவனித்து வருபவரானமார்க்சிய அறிஞர் அனில் ரஜீம்வாலே எழுதியுள்ளார். இது விஷயத்தில் வேறு எந்த நூல்களும் இல்லாத நிலையில் இந்த நூல் மிகத் தேவையான ஒன்று.

1925ல் கட்சி நிறுவப்பட்டதில் இருந்து 2022 விஜயவாடாவில் நடந்த கடைசி கட்சிப் பேராய மாநாடு வரை உள்ளடக்கிய முழுமையான காலத்தை இந்நூல் பேசுகிறது. அனைத்துக் கட்சி காங்கிரஸ்கள் மற்றும் முக்கிய மாநாடுகள் குறித்த விவரங்களை வழங்குவதால் இது கட்சி வரலாறு குறித்துப் படிக்கவும் ஆய்வு செய்வதற்கும் மிக உதவியான நூலாக விளங்குகிறது.

எளிமை, தெளிவு இதனுடன் ஆழமான அறிவாற்றலுடன் இந்நூலை நமக்கு வழங்கிய  நூலின் ஆசிரியர் முதலில் சுதந்திர மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்கான  கள யதார்த்தங்களை விளக்குகிறார்; அதில் 1853ல் இந்தியாவில் அமைக்கப்பட்ட முதலாவது
இரயில் பாதையைச் சுட்டிக்காட்டி
, அது
பிரிட்டிஷ் காலனியத்தின் கல்லறையைத் தோண்டும் உழைக்கும் வர்க்கம் இந்தியாவில் உருவான நிகழ்முறை தொடங்குவதை விவரித்துள்ளார். இரயில்வே பாதையை அமைப்பதன் மூலம் பிரிட்டிஷ் ஆட்சியாளர்கள் இந்தியாவில் சமூகப் புரட்சிக்கான விதைகளை விதைத்துள்ளனர் என்பது எதிர்காலத்தை முன் கணித்த மாமேதை காரல் மார்க்ஸின் தீர்க்கதரிசனம். அந்தக் கணிப்பு 95 ஆண்டுகளுக்குப் பிறகு 1947 ஆகஸ்ட் இந்தியா விடுதலை பெற்றபோது உண்மையானது.

புதிய எந்திரத் தொழிற்சாலைகள், மில்கள் மற்றும் சுரங்கங்கள் முளைத்து எழுவதற்கு இரயில்வே காரணமாயிற்று; இது தொழிலாளர் எண்ணிக்கையை உயர்த்தி உழைக்கும் வர்க்க மற்றும் புரட்சிகர, சோஷலிச, கம்யூனிஸ இயக்கத்தை வலிமை பெறச் செய்ததுடன், நவீன சுதந்திர இயக்கம் உருவாவதற்கும் உதவியது. பொருட்களையும் பயணிகளையும் மட்டும் இரயில்வே சுமந்து செல்லவில்லை; தேசியம், விடுதலை மற்றும் சோசலிசம் குறித்த கருத்துக்களையும்கூட அவை சுமந்து சென்றன. இது தவிரவும், இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் பெரிய அளவில் பரவுவதற்கு நவீனக் கல்வியும் பங்களிப்பு நல்கியது. எனினும் தொழில்மயமும் கல்வியும் பிரிட்டிஷ் காலனியத் தேவைகளை நிறைவேற்றும் அளவிற்கு மட்டும் அப்போது இருந்தன என்பது தெளிவு.

     1917ல் ரஷ்யப் புரட்சி இந்திய மக்கள் திரளையும் வர்க்கங்களையும் மறு அர்ப்பணிப்பு உணர்வைப் பெறச் செய்து, தேசிய இயக்கம் மற்றும் அதன் தலைவர்களிடம் ஆழமான தாக்கத்தைச் செலுத்தியது.

     வலதுசாரி பிரச்சாரத்திற்குப் பதிலளிக்கும் வகையில் ‘சோசலிசம் என்ற சொல், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி அமைக்கப்படுவதற்கு முன்பே பயன்படுத்தப்பட்டது என்பது தொடர்பாக நூலாசிரியர் சுவாரஸ்யமான தகவல்களைத் தருகிறார்! அந்தச் சொல் முதன் முதலில் சுவாமி விவேகானந்தரால் 1899–1902-ல் பயன்படுத்தப்பட்டது. தொடர்ந்து திலகர், லாலா ஹர்தயாள், பண்டிட் நேரு, லாலா லஜபதி ராய் மற்றும் பிற தேசியத் தலைவர்களாலும் கூட அந்தப் பதம் பயன்படுத்தப்பட்டது. எனவே, அயல்நாட்டுக் கருதுகோளைக் (கான்செப்ட்) கம்யூனிஸ்டுகள் மட்டுமே பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்ட முடியாது!

            கம்யூனிஸ்ட் குழுக்கள் ஒரே அமைப்பாய்த் திரண்டு வடிவம் பெற்ற நிகழ்முறை, 1925 டிசம்பர் 25 முதல் 29 வரை கான்பூரில் நடைபெற்ற கம்யூனிஸ்ட் அமைப்பு மாநாட்டில் உச்சம் தொட்டது. தோழர் சத்யபக்தா முயற்சியில் மாநாடு, இந்தியாவில் இயங்கிய கை நிறைந்த எண்ணிக்கையிலான கம்யூனிஸ்டுகளை ஒன்றாய்க் கொண்டு வந்தது. அவர்களில் ராதா மோகன் கோகுல்ஜி, மௌலானா ஹஸ்ரத் மொஹானி; பம்பாய், லாகூர், கராச்சி மற்றும் கல்கத்தாவின் கம்யூனிஸ்ட் குழுக்கள்; டாங்கே, காட்டே, மிராஜ்கர், சிங்காரவேலர், ஹாசன், முசாஃபர் அஹமத் உள்ளிட்ட மற்றும் சிலரும் அடங்குவர். அதற்கு முன்னதாக, 1920 தாஷ்கண்டில் புரட்சியாளர்களின் ஒரு சிறு குழு, “இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி  ஒன்றை அமைக்க எடுத்த முயற்சிகள் அதன் குறிக்கோளை எட்டத்  தவறிவிட்டன. அது இந்தியாவுடன் தீவிரத் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டதும் இல்லை அல்லது இந்தியாவில் உள்ள கம்யூனிஸ்டுகள் அதனை அங்கீகரிக்கவும் இல்லை.

எம்என் ராய் சிபிஐ-யின் ‘நிறுவனர்என்று சிலரால் தவறாகக் குறிப்பிடப்பட்டது. அது அவ்வாறு இல்லை என்பதை நூலாசிரியர் விரிவாக விளக்கி உள்ளார்.

1920ல் காமின்டர்ன் (சர்வதேசக் கம்யூனிஸ்ட் அகிலம்) இரண்டாவது மாநாட்டில் லெனின்ராய் கருத்து முரண்பாட்டை     இந்த இடத்தில் குறிப்பிடுவது தவறாகாது. அம்மாநாட்டில் எம்என்

ராய் அவரது அப்பட்டமான குழுவாத மற்றும் தீங்கு தரக்கூடிய போக்கிலான பாதையைத் (தேவையில்லாது) திணிக்க முயற்சி செய்தார்: ‘தலைமைப் பொறுப்பில் இருந்து முதலில் காந்திஜியின் தலைமையிலான தேசியப் பூர்ஷ்வா தலைமையை அகற்றுவதுஎன்பது அவர் முன்வைத்த கருத்து. ராய் கூறினார்:  “காலனிய நாடுகளில் புரட்சி/ சுதந்திர இயக்கம் தொழிலாளர் வர்க்கத் தலைமையின் கீழ்தான் சாத்தியம்.” லெனின், இந்தக் கருத்தமைவு மற்றும் அதனைத் தொடர்ந்த தந்திரோபாயச் செயல் திட்டப் பாதையை முற்றாக நிராகரித்தார். துரதிஷ்டவசமாக, ராய் தொடங்கி வைத்த குழுவாதப் (செக்டேரியன்) போக்கின் மிச்சசொச்ச ஒட்டுதல் தொடர்கிறது.

இந்தியாவில் வளர்ந்து வந்த கம்யூனிஸ்ட் இயக்கத்தை நசுக்க பிரிட்டிஷ் அரசு, முன்னணி கம்யூனிஸ்ட், தொழிலாளர் வர்க்க, தொழிற்சங்கத் தலைவர்கள் 32 பேர் மீது பொய்யான குற்ற விசாரணைகளை புனைந்து, மீரட் சதி வழக்குகளின் கீழ் கைது செய்தது. ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களின் நோக்கத்திற்கு எதிரான விளைவையே அது ஏற்படுத்தியது. இவ்வழக்கின் விசாரணைகளின் வழியாக, கம்யூனிஸ்ட் தத்துவம் குறித்துச் சாதாரண பொதுமக்கள் அறிந்து கொண்டு அறிவு வெளிச்சம் பெற்றனர்.

1933 வாக்கில் கைதிகள் விடுதலைக்குப் பிறகு, அவர்களில் மிக இளையவரான பிசி ஜோஷி 1935ல் கட்சியின் பொதுச் செயலாளர் ஆனார். அவரது தலைமை வழிகாட்டுதலின் கீழ் சிபிஐ வரலாற்றில் ஒரு புதிய காலம் தொடங்கியது. 1936-ல், அனைத்திந்திய மாணவர்

பெருமன்றம் (AISF), அனைத்திந்திய கிசான் சபா (AIKS) மற்றும் முற்போக்கு எழுத்தாளர்கள் அமைப்பு (PWA) என இணைந்த மூன்று பெருந்திரள் மக்கள் அமைப்புகள் நிறுவப்பட்டன. சிபிஐ அதனது ‘தேசிய முன்னணி (நேஷனல் ஃபிரண்ட்) என்ற முழக்கத்தின் கீழ் தேசிய இயக்கத்தின் மீது ஓர் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. எதிர்கால நிகழ்வுகளின் மீது செல்வாக்கு செலுத்திய முக்கியத்துவமுடைய முதலாவது கட்சி காங்கிரஸ் மாநாட்டைக் கட்சி  1943ல் நடத்தியது.

இந்தியா, பாகிஸ்தான் என்ற  தேசப்   பிரிவினை மற்றும் அதனைத் தொடர்ந்த மோசமான வகுப்புவாதக் கலவரங்களுடன் 1947 ஆகஸ்ட் 15-ல் இந்திய நாடு விடுதலை பெற்றது. பிசி ஜோஷி தலைமையின் கீழ் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி சுதந்திரத்தை மனதார வரவேற்று, நாடு முழுதும் கொண்டாடியது. நம் தேசத்திற்கு முழு சுதந்திரம் என்ற கோரிக்கையை 1921லேயே முதன் முதலில் எழுப்பியது கம்யூனிஸ்டுகளே ஆவர்.

1947 டிசம்பரில் பிசி ஜோஷியை மாற்றிவிட்டு பொதுச் செயலாளரானவரும் 1948 பிப்ரவரி மார்ச் மாதம் கல்கத்தாவில் நடைபெற்ற இரண்டாவது மாநாட்டில் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டவருமான பிடி ரணதிவே (பிடிஆர்)-ன் குழுவாதப் போக்கு காலத்தை

இந்நூல் ஆசிரியர் கூர்மையாக விமர்சிக்கிறார். பிடிஆர் பாதை ஆயுதப் புரட்சிக்கு அறைகூவல் விடுத்தன் மூலம் இயக்கத்திற்குப் பேரளவிலான சேதாரத்தை ஏற்படுத்தியது. சில அதிதீவிர இடதுசாரி சக்திகள் (வரலாற்று அனுபவத்திலிருந்து) இன்னும் பாடம் கற்க மறுக்கின்றன.

கட்சியைத் தேசிய அரசியல் மைய நீரோட்டத்திற்குக் கொண்டுவர உதவியடாங்கே, காட்டே மற்றும் அஜாய் கோஷ் ஆகியோரதுவரலாற்றுப் புகழ் பெற்ற 3 Pகள் கடிதம் குறித்து இந்நூலில் ஆசிரியர் விரிவாக விளக்குகிறார். இது இந்தியாவில் ஆயுதப் புரட்சி பாதை எந்த அளவு தவறானது என்பதைக் காட்டுகிறது.

1956-ல் புதிய உலகம் மற்றும் தேசிய நிலைமையைப் பிரதிபலித்து, குணாம்ச ரீதியில் புதிய பாதை உருவானதை ஆசிரியர் தெளிவாக விளக்கிறார். அது 1955 மற்றும் 1956ம் ஆண்டில் விவாதிக்கப்பட்டது (நான்காவது கட்சிப் பேராயம், பாலக்காடு)

1958ல் நடைபெற்ற அமிர்தசரஸ் ஐந்தாவது காங்கிரஸ் சிறப்பு மாநாடு பல வகையில் கட்சி வரலாற்றில் திருப்பத்தை ஏற்படுத்திய முக்கிய மைல்கல். கட்சி அமைப்புச் சட்டம் மாற்றப்பட்டது; அது ஜனநாயக அம்சத்தை அதற்கு அளித்தது. பாட்டாளிகளின் சர்வாதிகாரம் என்ற கோட்பாடு கைவிடப்பட்டது மற்றும் அமைதியான மாற்றம் வலியுறுத்தப்பட்டது.

1962 சீன ஆக்கிரமிப்பைச் சிபிஐ விமர்சித்தது   

1962ன் சீன ஆக்கிரமிப்பை இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி  விமர்சிக்கவில்லை என்ற தவறான பிரச்சாரத்தை இந்நூல் ஆசிரியர் உடைத்தெறிகிறார். உண்மையில், 1962 அக்டோபர் நவம்பரில் நடைபெற்ற தனது மத்திய செயற்குழு மற்றும் தேசியக் குழு கூட்டங்களில் சிபிஐ, சீன ஆக்கிரமிப்பை எந்தவித சந்தேகத்திற்கும் இடமின்றி விமர்சித்தது என்பதை இந்தப் புத்தகம் நிரூபிக்கிறது; மாவோயிஸ்டுகள் மற்றும் (கம்யூனிஸ்டுகளை விமர்சிப்பதற்கான தங்கள் வாய்ப்பை இழந்ததாக அதனைப் பார்த்த) தீவிர வலதுசாரிகளாலும் அந்த விமர்சனம் விரும்பப்படவில்லை. எதார்த்தச் செயல் திட்ட  உத்தி மற்றும் தந்திரோபாயப் பாதையை வகுப்பதற்கு வாய்ப்பான தருணம் ஒன்று இருந்தது; 1964ல் கட்சிப் பிளவிற்கு இட்டுச் சென்ற பிளவு நடவடிக்கைகள் காரணமாக அவ்வாய்ப்பு இழக்கப்பட்டது. இந்நூல் ஆசிரியர், பின்னணி நிகழ்வுகளைச் சுவைபட தந்து, கட்சிப் பிளவு துரதிஷ்டமானது மற்றும் தீங்கு நிறைந்தது எனக் குணாம்சப்படுத்துகிறார்.

வலதுசாரி பிற்போக்கு, ஏகபோக மூலதனம் மற்றும் ஏகாதிபக்தியத்திற்குப் பிளவு உதவுவதாகச் சிபிஐ கருதுகிறது.

இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்திற்குப் பிளவு நடவடிக்கைகள் மூலம் மாவோயிசம் பெரும் தீங்கிழைத்ததாக இந்தப் புத்தகம் கருதுகிறது.

இந்நூலை எழுதுவதற்கு இதன் ஆசிரியர் ஏராளமான வரலாற்றுத் தரவுகளைத் திரட்டியுள்ளார். இந்தியக் கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முக்கிய பிரச்சினைகளைப் பேசும் இந்தப் புத்தகம், விவாதங்கள் மற்றும் முரண்பாடுகளையும் அறியத் தருகிறது. இந்நூல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வரலாறு குறித்த அடிப்படை தகவல்களை வழங்குகிறது.

இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் இந்த நூற்றாண்டில் இது போன்ற புத்தகங்கள் மேலும் கூடுதலாக வெளிவரட்டும் என நாம் நம்புவோம்!

வாசகர்களுக்கு இப்புத்தகம் மிக உயர்ந்த பயனுள்ள கருவியாக இருக்கும் என நம்பலாம். இந்தி மற்றும் பிற மாநில மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட்ட இதன் பதிப்புக்கள் வெளியிடப்பட வேண்டும்; அப்போதுதான் கட்சியின் வரலாறு ஆகக் கூடுதலான பார்வையாளர்களைச் சென்றடையக் கூடியதாக இருக்கும்! இவ்வாண்டில் மொழியாக்கப் பதிப்புகள் மேலும் மேலும் வெளிவரட்டும்!                        


நன்றி: நியூ ஏஜ் (ஆகஸ்ட் 17– 23)

                        தமிழில்: நீலகண்டன்,

என் எஃப் டி இ, கடலூர்.