Thursday, 20 March 2025

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாற்று வரிசை 123 -- பிரசண்டா சன்யால் : AISF மாணவர் பெருமன்ற நிறுவனர்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு -- 123

பிரசண்டா சன்யால்

AISF மாணவர் பெருமன்ற நிறுவனர் 

மற்றும் கட்டி வளர்த்தவர்

                                               --அனில் ரஜீம்வாலே

பிரசண்டா சன்யால் 1919 ஜனவரி 3ல், துறை சார்ந்த ஆளுமைகள், பொறியாளர்கள், வழக்கறிஞர்கள், மருத்துவர்கள் மற்றும் பேராசிரியர்கள் அடங்கிய கூட்டுக் குடும்பத்தில் பிறந்தார். பிரசண்டா இரண்டு வயதாகும்போது அவரது தந்தை ஸ்ரீ ஹிராலால் சன்யால் இறந்தார். அவரது தாயார் ஸ்ரீமதி ஸ்வர்ணலதா (தற்போது பங்களாதேஷில் உள்ள) பாப்னா மாவட்டத்தின் பல நிலபுலங்கள் உடைய புகழ்வாய்ந்த குடும்பத்தைச் சேர்ந்தவர். பிரசண்டாவுக்கு இரண்டு சகோதரிகள். தந்தை இறந்த பிறகு (தந்தையின் சகோதரரான (சித்தப்பா எனப் பொருள்படும்) ‘சிஜோ காகாடாக்டர் சுனிலால் சன்யால் என்ற கல்கத்தாவின் புகழ் பெற்ற ஹோமியோபதி மருத்துவரால் அவர் வளர்க்கப்பட்டார்.

அவருடைய குடும்பம் அனைத்து முக்கிய மதங்களையும் பிரதிநிதித்துவப்- படுத்துவதாகவும், இந்தியாவின் பெரும்பான்மை மாநிலங்களிலும், ஏன் உலகின் முக்கிய நாடுகளிலும் கூட, விரிந்து பரந்து இருந்தது!

பிரசண்டா பவானிபூர் மித்ரா கல்வி நிறுவனத்தில் படித்தார். கல்லூரிக் கல்வியைப் புகழ்பெற்ற கல்கத்தா ஸ்காட்டீஷ் சர்ச் காலேஜ், மற்றும் பின்னர் கல்கத்தா பல்கலைக் கழகத்திலும் பெற்றார். அக்கல்லூரி, மாணவர்கள் சேர்க்கைக்கு அனுமதிப்பதில் போலீஸ் சரிபார்ப்பு என்ற பழக்கத்தைப் புறக்கணித்த கல்லூரிகளில் ஒன்றுபிரசிடென்சி கல்லூரி போன்ற கல்லூரிகளில் அந்த வழக்கம் அப்போது பரவலான நடைமுறையாக  இருந்தது.

கிரிக்கெட், பால்-பாட்மிட்டன் விளையாட்டை விரும்பிய அவர் பாடத்திட்டம் சாராத பிற (எக்ட்ரா க்கரிகுலர்) நடவடிக்கைகளில் மிக ஆர்வம் உடையவராக இருந்தார்.

அந்த நாட்களின்போது, சிறந்த மாணவர்கள் அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் (AISF) மற்றும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில் வழக்கமாக இணைந்தனர். 1930களின்போது பொதுவான ஒரு நகைச்சுவை சொல்வதுண்டு -- சிறந்த அறிவுடையவர்கள் கம்யூனிஸ்ட்  கட்சியைத் தேர்ந்தெடுக்கிறார்கள், நடுத்தரமானவர்கள் காங்கிரஸ் கட்சியையும் மற்றும் மூன்றாம் தரமானவர்கள் இந்து மகா சபாவையும் தேர்ந்தெடுக்கிறார்கள் என்று!

அரசியலிலும் தேசிய இயக்கத்திலும்

கல்லூரித் தெரு மற்றும் கல்கத்தாவில் நிலவிய அரசியல் சூழ்நிலை இயல்பாகப் பிரசண்டாவிடம் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தியது. மாணவர்கள் மத்தியில் மட்டுமல்ல விரைவில் தொழிலாளர்கள் மத்தியிலுமிருந்தும் அவர் குறைகளைக் கேட்டறிந்து அவர்களை ஒன்று திரட்டினார். உண்மையில் வெறும் 16 வயது இருக்கும்போதே, 1935ல் கல்கத்தா கித்னாப்பூர் பகுதியில் துறைமுகம் மற்றும் சரக்குகளைக் கையாளும் ஊழியர்கள்  (water-front workers) மத்தியில் தொழிற்சங்க நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காகக் கைது செய்யப்பட்டு அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.

மாணவர் இயக்கத்தில்

 30களின் மத்தியிலிருந்து பிரசண்டா வங்காளம் மற்றும் இந்தியா முழுவதும் அலை புரண்டோடிய பெரும் மாணவர் இயக்கங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். மிக விரைவில் பிரசண்டா தீவிரச் செயல்பாட்டாளராகவும் ‘வங்காள மாகாண மாணவர்கள் சம்மேளன’ (BPSF) தலைவராகவும் ஆனார். பின்னர் அவர் அதன் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இழிவான ஹோல்வெல் நினைவுச் சின்னத்தை அகற்ற சுபாஷ் சந்திர போஸ் விடுத்த அறைகூவலுக்கு ஆதரவாக BPSF பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்தது. (ஹோல்வெல் Holwell Monument என்று அழைக்கப்பட்ட அந்த நினைவுச் சின்னம் 14க்கு 18 அடி அளவுள்ள சிறிய அறையாகும். கிழக்கிந்திய கம்பெனி முழுமையாக இந்தியாவில் கால் ஊன்றுவதற்கு முன் வங்காள நவாப், சிராஜ் உத் தௌலத் 1756ல் அந்தச் சிறிய அறை சிறையில் அளவுக்கு அதிகமான ஆங்கிலேயர்களைச் சிறைபிடித்து அடைத்தபோது, அதில் பலர் இறந்தும் போயினர் என்பது அதன் வரலாறு. அதில் உயிர் பிழைத்தவர்களில் ஹோல்வெல் ஒருவர் – இணையத்திலிருந்து மொழிபெயர்ப்பாளர் திரட்டியது).

பெருந்திரளான மாணவர்கள் அதில் கலந்து கொள்ள பிரசண்டா முன்னணி தலைவர்களில் ஒருவராக விளங்கினார். இஸ்லாமியக் கல்லூரி (தற்போது மௌலானா ஆசாத் கல்லூரி) அருகே மாணவர்களின் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. அதில் முக்கிய பேச்சாளர்களில் ஒருவரான பிரசண்டா, தர்க்க அடிப்படையிலான நல்லதொரு வாதங்களை நிரல்பட அடுக்கி முன்வைத்து உரையாற்றினார்.

முஸ்லிம் மாணவர்கள் தனியாக ‘அனைத்து வங்காள முஸ்லிம் மாணவர்கள் லீக்’ (ABMSL) என்ற அமைப்பின் கீழ் திரட்டப்பட்டார்கள். தனியான முஸ்லிம் மாணவர் சம்மேளனம் MSF என்பதை மாணவர் பெருமன்றம் எதிர்த்தது. காலப்போக்கில் அவர்களின் சில பிரிவுகள் AISF உடன் ஒத்துழைத்தது. ஹோல்வெல் இயக்கத்தில் அவர்களுடன் ஐக்கிய முன்னணி கட்ட பிரசண்டா முன் முயற்சி எடுத்தார். அந்த இயக்கம் மிகப் பெரும் வெற்றியாகி நினைவுச் சின்னம் அகற்றப்பட வேண்டிதாயிற்று. வங்கப் பஞ்சத்தின் போதும் BPSF மற்றும் ABMSL இணைந்து பணியாற்றினர்.

முப்பதுகளின் இறுதியில் அந்தமான் சிறைக் கைதிகளை விடுவிக்கக் கோரி நாடு முழுவதும் இயக்கம் நடத்தப்பட்டது. மாணவர்கள் முன்னணியில் இருக்க வங்காளத்தில் அது பெரும் இயக்கமாக இருந்தது. இந்த இயக்கத்திலும்கூட பிரசண்டா சன்யால் முன்னணிப் பிரமுகராக இருந்தார்.

இரண்டாம் உலகப் போர் வெடித்த பிறகு போருக்கு எதிரான இயக்கங்கள் தொடங்கப்பட்டன. 1939ல் போர் எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்டதற்காகவும் போரை எதிர்த்ததற்காகவும் கல்கத்தாவிலிருந்து முதலில் வெளியேற்றப்பட்டவர்களில் ஒருவராகப் பிரசண்டா இருந்தார். அவரது ஸ்காட்டீஷ் சர்ச் கல்லூரியில் சுபாஷ் சந்திர போஸ் பிறந்தநாள் விழாக்களின் முன்னணியில் அவர் தீவிரமாகப் பங்கேற்றார்

1942ல் நாடியா மாவட்ட மாணவர்கள் சம்மேளனத்தின் மாநாடு நடைபெற்றது. புகழ் பெற்ற கம்யூனிஸ்ட் வரலாற்று ஆய்வாளர் கௌதம் சட்டடோபாத்யாயா அதன் செயலாளர். அப்போது அவர் சிபிஐயில் இருந்து பிரிந்து சென்ற குழுவான தொழிலாளர் கட்சியில் இருந்தார். (வைணவ ஆச்சாரியார் சைதன்ய மகாபிரபு பிறந்த இடமான Nabadwip) நவதீப் என்ற இடத்தில் மாநாடு நடத்தப்பட்டது. அதை வழிநடத்தும் சக்தியாக BPSFன் பெருந்தலைவர் நிகில் மொய்த்ரா இருந்தார். அவரது அழைப்பின் பெயரிலேயே பிரசண்டாவும் ஆமியா தாஸ்குப்தாவும் மாநாட்டில் மாகாணத் தலைவர்களாகக் கலந்து கொண்டனர். கௌதம் பின்னர் தொழிலாளர் கட்சியின் சிலருடன் சிபிஐயில் இணைந்தார்.

மற்றொரு முக்கிய இயக்கமான சுபாஷ் போஸுக்கு நடத்திய பாராட்டு விழா, அனைத்து கல்கத்தா இயக்கமாகப் பல்கி பெருகி விரிவடைந்தது. சுபாஷ் போஸ் சில ஆண்டுகள் ஸ்காட்டீஷ் சர்ச் கல்லூரியின் மாணவராக இருந்தவர். பின்னர் அவர் காங்கிரஸ் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். கல்லூரி வளாகத்தில் அவருக்கு விழா நடத்தி பாராட்ட மாணவர்கள் விரும்பினர். இது கல்லூரி முதல்வரை சீற்றமடையச் செய்தது – இந்தச் சாதாரண கோரிக்கையையும் நிராகரிக்கும் அளவு அவர் பெருந்தன்மையற்றவராக இருந்தார்! இது மட்டுமல்ல, பிரசண்டாவையும் வேறு சில மாணவர்களையும் கல்லூரியைவிட்டு வெளியேற்றுவதாகவும் மிரட்டினார்! பேராசிரியர் நிர்மல் பட்டாச்சாரியா முன் முயற்சியில் சமரசப் பேச்சுவார்த்தை தொடங்கியது. கல்லூரி முதல்வரிடம் பிரசண்டா தலைமையில் மாணவர்கள் குழு சென்றது. அவர்கள் எடுத்து வைத்த வாதங்களின் முன், கல்லூரி முதல்வர் ஸ்காட்லாந்து நாட்டைச் சேர்ந்த பேராசிரியர் கேமரூன் நிலைகுலைந்து நிராயுதபாணியானார்.

பிரசண்டாவின் தலைமைப் பண்பு

எடுத்த செயலை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதில் எப்போதும் கண்ணும் கருத்துமாய் இருந்த பிரசண்டா தலைமைப் பண்பை இயற்கையாக பெற்றிருந்தார். 1939இல் ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரி நிர்வாகம் அரசியல் நடவடிக்கைகள் எனக் குற்றம் சாட்டி இரண்டு மாணவர்களைக் கல்லூரியைவிட்டு வெளியேற்றியது. பிரசண்டா அப்போது BPSFன் பொதுச் செயலாளர். அவர் கல்கத்தாவின் அனைத்து மாணவர்களின் பொது வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து, ஆர்ப்பாட்டமும் கல்லூரி வாசலுக்கு முன் அமர்ந்து தர்ணா போராட்டமும் நடத்தப்பட்டன. விரைவில் ஆயிரக்கணக்கான மாணவர்கள் வடக்கிலிருந்து கல்லூரி வாசலை நோக்கி அணிவகுத்து வந்து அதில் இணைந்தனர். போலீஸ் அவர்களைத் தடுத்து நிறுத்தியது. சில மாணவர்கள் போலீஸ் தடுப்பை உடைத்து மேலும் முன்னேறிச் செல்ல விரும்பினர். அவ்வாறு செய்வதிலிருந்து அவர்களைப் பிரசண்டா உறுதியாகத் தடுத்து தனது உத்தரவுகளைப் பின்பற்றச் செய்தார். அவரும்கூட ஒரு திட்டம் வைத்திருந்தார். மற்றொரு ஆர்ப்பாட்டத்தை அவர்  திட்டமிட அது தெற்கிலிருந்து 15 நிமிடத்தில் தொடங்கியது. தற்போது போலீஸ் வடக்கிலும் தெற்கிலும் இருந்த மாணவர்கள் மத்தியில் அகப்பட்டு முழுமையாகச் சிக்கிக் கொள்ள, போலீஸ் தடுப்பு அகற்றப்பட வேண்டியதாயிற்று! இவ்வாறு பிரசண்டாவும் BPSF தலைமையும் போலீசை முறியடித்தனர்!

1940 நாக்பூர் AISF மாநாட்டில் பிரசண்டாவின் பங்கு

அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் AISF அமைப்பு நாக்பூர்1940 மாநாட்டில் இரண்டாகப் பிளவுபட்டது நாம் அறிந்த ஒன்று. பிளவிற்கான காரணம் அடிப்படையில் போரைக் குணாம்சப்படுத்தும் சர்ச்சை சம்பந்தமானது. முக்கியமாகக் கம்யூனிஸ்டுகளை உள்ளடக்கிய பெரும்பான்மையினர் போரை ஏகாதிபத்திய யுத்தம் என அழைக்க  விரும்பினர் மற்றும் அனைத்துப் போர் முயற்சி நடவடிக்கைகளையும் எதிர்க்க வேண்டும் என்றனர்; அதே நேரம் சிறுபான்மையினர் – முக்கியமாக காங்கிரஸ்காரர்களும் காங்கிரஸ் சோஷலிஸ்ட் CSP கட்சியினரும்-- அக்கருத்தை முழுமையாக ஒப்புக் கொள்ளவில்லை.

பிரசண்டாவும் வங்காளச் சார்பாளர் குழுவும் அமைப்பு பிளவுபடுவதை எதிர்த்தனர், சமரச பார்முலாவை எட்ட விரும்பினர். AISF பொதுச் செயலாளர் எம் எல் ஷா என்ற காங்கிரஸ்காரர், பேச்சுவார்த்தை நடத்த ஒப்புக்கொண்டு, ஆனால் அதற்கு நிபந்தனையாக எதிர்த்தரப்பில் பிரசண்டா சன்யால் பிரதிநிதித்துவப்படுத்த வேண்டும் என்றார் – இது எவ்வளவு உயர்வாக அவர் மதிக்கப்பட்டார் என்பதை எடுத்துக் காட்டுகிறது. ஆனால் இரு தரப்பும் தங்கள் நிலைப்பாட்டை விட்டுக்கொடுக்கவில்லை. பிரசண்டாவின் முயற்சிகள் தோல்வியடைந்தன. எனினும் மாணவர்கள் ஒற்றுமைக்காகத் தொடர்ந்து பணியாற்றினார்.

ஒற்றுமை குறித்து விவாதிக்க இரண்டு அணிகளின் இணைந்த கூட்டம் பேராசிரியர் சதீஷ் கலேல்கர் இல்லத்தில் கூடியது; சமரசம் செய்யும் பொறுப்பு பேராசிரியரிடம் வழங்கப் பட்டிருந்தது. ஷா மற்றும் ஃபரூக்கி குழுக்கள் காலை உணவு நேர கூட்டத்தில் கலந்து கொண்டன. கலந்து கொண்டவர்களில் AISF அமைப்பிலிருந்து பிரசண்டாவும் ஒருவர். 2-3 மணி நேரம் ‘கலேல்கர் பார்முலாவிவாதிக்கப்பட்டது.

வகுப்புவாதக் கலவரங்களுக்கு எதிரான போராட்டம்

பிரசண்டாவின் வாழ்க்கையில் பெருமிதம் மிகுந்த தருணங்களில், டாக்காவில் 1938 தொடக்கத்தில் வகுப்புவாத கலவரங்களுக்கு எதிரான போராட்டத்தில் கலந்து கொண்டது முக்கியமானது. அந்த ஆண்டில் தீவிரக் கலவரங்கள் காரணமாக டாக்கா பல்கலைக் கழகம் மூடப்பட்டது. வகுப்புக்களுக்கிடையே சமாதானம், நல்லிணக்கத்திற்குப் பணியாற்ற பிரசண்டா மற்றும் பிறர் தலைமையில் BPSF மாணவர்கள் சென்றனர். அந்தப் பல்கலைக் கழகத்தின் புகழ்பெற்ற பேராசிரியர் ஷாகித்துல்லா மற்றும் பேராசிரியர் சத்யன் போஸ் (போஸ் -ஐன்ஸ்டீன் புகழ், குவாண்டம் மெக்கானிக்ஸ் துறை பௌதீக ஆராய்ச்சிப் பேராசிரியர்) மாணவர்கள் குழுவினருக்குத் தீவிரமாக உதவி புரிந்தனர்.

வந்தே மாதரம் பாடலைப் பாடுவது குறித்த கேள்வி தொடர்பாக டாக்கா பல்கலைக்கழகத்தில் 1943 ஜனவரி பிப்ரவரியில் மீண்டும் கலவரங்கள் வெடித்தன. முஸ்லிம் தீவிரவாதச் சக்திகளும் இந்து வகுப்புவாதிகளும் தீவிரமாகக் கலவரங்களில் ஈடுபட்டனர்.  AISF எதிர்த்துப் போரிட்டு நிலைமையை இயல்பு நிலைக்குக் கொண்டு வர உதவினர். இந்த வகுப்புவாத சக்திகளை எதிர்த்துப் போரிடுவதில் AISF தலைவராகப் பிரசண்டா சன்யால் தீவிரப் பங்காற்றினார்.

சிறார்கள் AISFல் இணைதல்

 தி ஸ்டூடண்ட் என்ற AISF இதழின் ஆசிரியர் குழு உறுப்பினரான பிரசண்டா, அதன் 1943 இதழில் எழுதிய கட்டுரையில் கல்கத்தா இந்தியன் அசோசியேஷன் ஹாலில் 300

சிறுவர்கள் கலந்து கொண்ட கூட்டம், AISFல் எப்படிச் சேர்வது மற்றும் எதற்காக என்பதை விவாதிப்பதற்காக நடந்தது என்ற தகவலைத் தருகிறார். அதற்கான ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. உலகப் போர் மற்றும் பெரும் பஞ்சம் நிலவிய பின்னணியில் இது நடத்தப்பட்டது. 

இக்காலகட்டத்தின்போது வங்காளம் முழுவதும் AISFன் எண்ணிறந்த கிளைகள் அமைக்கப்பட்டன. வங்கத்தின் பஞ்சம் மற்றும் இரண்டாவது உலகப் போருக்காக மிகப் பெரும் அளவில் மாணவர் போராட்ட நிதி திரட்டப்பட்டது.

1943 ஆகஸ்டில் AISFன் பொதுச் செயலாளராகப் பிரசண்டா சன்யால் அப்போதைய பிரச்சனைகளை எதிர்கொண்டு சந்திக்க மாணவர்களின் ஒற்றுமைக்காக வேண்டுகோள் விடுத்து அறிக்கை வெளியிட்டார்.

மாணவர் உழைப்பாளர்கள் மாநாடு 1943 பம்பாய்

AISFன் செயலாளராகப் பிரசண்டா சன்யால் தி ஸ்டூடன்ட் 1943 அக்டோபர் இதழில் ஆல் இந்தியா ஸ்டுடென்ட் ஒர்க்கர்ஸ் மாநாடு நடக்க உள்ளதாக அறிக்கை வெளியிட்டார். AISFன் 80, 000 உறுப்பினர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி, 14 மாகாணங்களிலிருந்து 93 பிரதிநிதிகள் கலந்து கொண்ட மாநாடு, 1943 நவம்பர் 25 முதல் 30 வரை நடைபெற்றது. அது 1943 ஜூலை முதல் நவம்பர் வரை நடந்த நிகழ்வுகளைப் பரிசீலனை செய்தது. அக்காலகட்டத்தின்போது, வங்கத்தின் பஞ்ச நிவாரணப் பணிகளுக்காக ரூ65000 திரட்டப்பட்டது என்றும், 3000 AISF தன்னார்வலர்கள் ஒவ்வொரு நாளும் 26,000 மக்களுக்கு உணவளிப்பதற்காக 86 சமையல் கூடங்களை நிர்வகித்ததாகவும் தெரிவிக்கப்பட்டது.

அசாமில் கம்யூனிஸ்ட் கட்சியை அமைத்தல்

AISF பணி தொடர்பாகப் பிரசண்டா அசாம் செல்வது வழக்கம். அந்த மாகாணத்தில் AISFஐ அமைக்க நடத்தப்பட்ட மாணவக் குழுவினர்களின் அனைத்து அசாம் முகாமில் பிரசண்டா உரையாற்றினார். அவரது வழிகாட்டலில் 1942 செப்டம்பரில் ஒரு மாணவர் முகாம் கோலகாட் என்ற இடத்தில் நடத்தப்பட்டது.

அதற்கு முன் 1941ல் பிரசண்டா மேல் அசாம் (Upper Assam) பகுதியில் கம்யூனிஸ்ட் கட்சியை அமைக்க அனுப்பப்பட்டார். அதற்கான முயற்சியில் ஈடுபட்டிருந்தபோது, கம்யூனிஸ்ட் கட்சி அங்கே கால் ஊன்றி வளர்ந்து விடக்கூடாது என விரும்பிய சில நபர்கள் அவரைக் கடுமையாகத் தாக்கி காயப்படுத்தினர். 1942 மத்தியில் அவர் அசாமை விட்டு புறப்பட்டார்; இருப்பினும், கட்சியின் மையக் கரு அமைப்பு ஏற்கனவே அங்கு வடிவம் பெற்றிருந்தது.

பம்பாய் கட்சித் தலைமையகத்தில்

பம்பாயில் பிரசண்டா முதலில் AISF பொதுச் செயலாளராகப் பணியாற்றினார். அந்த அமைப்பின் தி ஸ்டுடென்ட் இதழின் எடிட்டோரியல் போர்டு உறுப்பினராகவும் இருந்தார். ஏஐஎஸ்எப் மற்றும் கட்சியை அமைப்பதற்காக நாடு முழுதும் சுற்றுப்பயணம் செய்தார். பின்னர் மத்தியக் கட்சியின் வார பத்திரிகையான பியூப்பிள் வார் (மக்கள் யுத்தம், பின்னர் அது பியூபிள்ஸ் ஏஜ் என்றான) வார இதழின் கட்டுரைகள் எழுதும் எழுத்தாளர் ஆனார்.

பிரசண்டாவின் மைத்துனர் சந்திரகுப்தா சௌத்ரி, மகாராஷ்டிரா சிபிஐ தலைவரும் மற்றும் ஹைதராபாத்தில் (பிரிட்டிஷ் ராஜாங்க) மாகாணங்களின் மக்கள் இயக்கத்தின் (States’ People’s movement) நிறுவனர்களில் ஒருவரும் ஆவார். அவர் பம்பாய் கட்சி தலைமையகத்தில் பிரசண்டாவின் கம்யூன் வாழ்க்கை குறித்து நினைவு கூர்ந்துள்ளார்:

 பிசி ஜோஷி தலைமையின் கீழ் சிபிஐ அலுவலகமான ராஜ்பவன், தேனீக்களின் இருப்பிடம்போலச் சுறுசுறுப்பான நடவடிக்கைகள் ததும்பி நிரம்பிய இடம். தூய்மையான தோழமை மற்றும் (சுய) கட்டுப்பாடுகள் தவழும் அதன் சூழல், எனினும் வெளிப்படைத் தன்மை மிளிர்ந்த இடம் அது. அங்கே பெரியவரோ சிறியவரோ ஒவ்வொருவரும் குறைந்த தேவைகளுடன் ஒன்றாக வாழ்ந்தார்கள், ஒன்றாக உண்டார்கள், ஒன்றாக இணைந்து பணியாற்றினார்கள். தோழர்கள் அங்கே வாழ்ந்த நாட்களைத் தங்கள் வாழ்வின் ஆகச் சிறந்த காலமாக நினைவு கூர்கிறார்கள். அத்தகைய ஒரு சூழலில் பிரசண்டா ஓர் உண்மையான கம்யூனிஸ்டாகப் பயிற்றுவிக்கப்பட்டார்’. 

இந்த அனைத்தையும் பிடிஆர் காலம் சிதறடித்தது, தோழமையை அழித்துப் பரஸ்பர சந்தேக விதைகளைத் தூவியது, அவ்வளவு ஏன், கட்சியையே சிதறடித்தது. ஆக கூடுதலான குழுவாதப் போக்கு (செக்டேரியன்), இதயமற்ற கொள்கை அரசின் அடக்குமுறைகளுக்கு  அழைப்பு விடுத்தது. பலர் தங்கள் அரசியல் வாழ்வை இழந்தனர். கொந்தளிப்பான இந்தக் காலத்தின் ஊடாகப் பெரும் நெருக்கடிகளைப் பொறுமையாகவும் ஒருமைப்பாட்டு உணர்வுடனும் பிரசண்டா வாழ்ந்தார்.

PPH பதிப்பகப் பொறுப்பாளராக

 1950 வாக்கில் பம்பாயில் PPH மக்கள் பதிப்பகப் பொறுப்பாளராகப் பிரசண்டா நியமிக்கப்பட்டு, பின்பு அதன் பொது மேலாளராக ஆக்கப்பட்டார். நலிவுற்றுத் தடுமாறிய

அப்பதிப்பகத்தைத் தன் சொந்தக் காலில் எழுந்து நிற்க வைத்தார். பதிப்புகளை அதிகரித்தது மற்றும் புத்தகங்களின் விற்பனையை உயர்த்தியது மட்டுமல்ல, புதிய எழுத்தாளர்களையும், பதிப்பகத்துடன் இணைந்து செயல்படும் கூட்டாளிகளையும் அவர் கண்டறிந்தார். பல்வேறு விஷயங்கள் குறித்த புத்தகங்களைப் பதிப்பித்து வெளியிடுவது தொடங்கியது. PPH பதிப்பகத்திற்காக அவர் வடிவமைத்த ஒருங்கிணைந்த எதிர்காலச் செயல் திட்டம் அதன் பின்னரும் பதிப்பகத்திற்குத் தொடர்ந்து பயனளித்தது.

திருமணம்

 1946 பம்பாயில் சந்திரகுப்தா சௌத்ரியின் சகோதரி கமல்சௌத்ரியைப் பிரசண்டா சன்யால் மணந்தார். அந்நேரத்தில் தொழிற்சங்க முன்னணி அரங்கில் பணியாற்றினார். ஆனால் குடும்பம் மற்றும் குழந்தைகள் கட்டாயத்தால் அவர் வேலை தேட நேரிட்டது.    புகழ்பெற்ற கம்யூனிஸ்ட் வரலாற்றாளர் சின்மோகன் ஷேகானவிஸ் (Chinmohan Sehanavis) இந்திய புள்ளியியல் நிறுவனத்தில் அவருக்கு ஒரு வேலை வழங்கும்படி அதன் பேராசிரியர் பிரசண்டா மகளநோபிஸ் (Prasanta Mahalanobis)அவர்களை வேண்டினார். 1955ல் PPH பதிப்பகம் டெல்லிக்கு மாற்றப்பட்ட பிறகு, அந்த வேலையை விட்டுவிட்டு கல்கத்தா திரும்பினார்.

பிந்தைய வாழ்க்கை

அதைத் தொடர்ந்து பிரசண்டா, ஜே வால்டர் தாம்சன் கம்பெனியில் காப்பி ரைட்டராகப் பணியாற்றினார். பின்னர் அவர் விளம்பரங்கள் உலகில் இணைந்து பணியாற்றியதில் கிளாரியான் மெக்கான் (Clarion McCann) அட்வர்டைசிங் ஏஜென்சி மற்றும் இந்தியன் ஆக்சிஜன் லிட்., நிறுவனங்களில் ஆற்றிய பணிகள் ஆகும். கடுமையாகப் பணியாற்றுவது, நேர்மை மற்றும் பணியில் அர்ப்பணிப்பு போன்ற அவரது குணங்கள் எல்லோரிடத்தும் எல்லா இடத்தும் ஏற்படுத்திய தாக்கம், பாராட்டு, மரியாதைகளை பெற்றுத் தந்தது. கிளாரியான் அட்வெர்டைஸ்ங்கில் அவர் மேனேஜிங் டைரக்டராக 10 ஆண்டுகள் பணியாற்றினார்.

1967ல் அவர் டைம்ஸ் ஆப் இந்தியா இதழின் லண்டன் பதிப்பின் ஆசிரியர் குழு தலைவராகப் பொறுப்பேற்றார். அங்கே கம்யூனிசத்தின் பல்வேறு வகையான போக்குகள் மற்றும் விளக்கங்களுடன் அவர் பரிச்சியமும் தொடர்பும் பெற்றார்.

இந்திரா காந்திக்கு உதவியாளராக

திருமதி இந்திரா காந்தி தகவல் ஒலிபரப்பு அமைச்சராக இருந்தபோது பிரசண்டா அவருக்கு ஆலோசகராக நியமிக்கப்பட்டார், அப்போது  இந்தியன் ஆக்சிஜன் நிறுவனத்தில்

(தற்போது அது லின்டே பிக் என்ற பொதுத்துறை நிறுவனம்) பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்த நாட்கள்பாகிஸ்தானுடன் போர் நடந்த கடுமையான நாட்கள். 
      அவர் DAVP என்ற விளம்பரம் மற்றும் காட்சி விளம்பர இயக்குநரகத்தை (Directorate of Advertising and Visual Publicity) அமைப்பதற்கான திட்ட வரைபடத்தைத் தயாரித்து அளித்தார். வெப்பல் (Webel) எலக்ட்ரானிக் மேம்பாட்டு கார்ப்பரேஷன் உடன் தொடர்பில் இணைந்திருந்தார். 

அவர் (ஊடக விளம்பரப் பதிப்பு, சர்குலேஷன்களின் வெளிப்படைத் தன்மையை உறுதிப்படுத்துவதற்கான) தணிக்கை பீரோ அமைப்பின் தேசியக் குழுவில், கல்கத்தா சினிமா சென்சார் போர்டு உறுப்பினராக இருந்து சேவையாற்றினார். மேலும் குறும்படங்களின் விருதுகளுக்கான ஜூரி தேர்வுக் குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்

அவர் பாரத் எர்த் மூவர்ஸ் லிமிடெட் என்ற பொதுத் துறை பிரிவு நிறுவனத்திலும் பணியாற்றினார். 1976ல் அவர், (விளம்பரம் மற்றும் சந்தைப்படுத்தலில் வழங்கப்படும் HK McCann Award) ஹெச் கே மெக் கேன் விருது வழங்கப்பட்ட முதல் இந்தியர் ஆனார்.

பத்திரிக்கை இதழ்களுடன்

ஆனந்த பஜார் குழு பத்திரிகைகளுடன் அவர் நெருக்கமாக இருந்து, டெய்லி டெலிகிராஃப் தொடங்கியதுடன் மற்றும் வீக்லி லிங்க், டெய்லி பேட்டரியாட் போன்ற செய்திப் பத்திரிகைகளுடன் பணியாற்றினார். 1978ல் வங்க மொழி மாத இதழான பரோமாஸ் (‘ஆண்டைச் சுற்றி அனைத்தும்) நிறுவுவதுடன் அவர் நெருக்கமாகச் சேர்ந்து இருந்தார், அந்த நெருக்கமும் தொடர்பும் அவர் இறக்கும் வரை நீடித்தது. இது தவிரவும், அவர் பல்வேறு பிற பத்திரிக்கை, இலக்கியம் மற்றும் கலாச்சார நடவடிக்கைகள் மற்றும் நிறுவனங்களுக்குப் பங்களிப்புச் செய்தார்.

சத்திய பால் டாங் கல்கத்தா வந்து கமால்டியைச் சந்தித்தபோது அவர் கௌதம் சட்டோபாத்யாயாவிடம், “எப்படி ஒருவர் பிரசண்டாவை மறக்க முடியும்?“ என்று கூறினார்.  

      மாணவர், கம்யூனிஸ்ட் மற்றும் பரவலான சமூக இயக்கங்களின் வரலாற்றின் மீது பிரசண்டா சன்யால், அழிக்க முடியாத தனது அடையாள முத்திரையைப் பதித்துவிட்டு 1990 டிசம்பர் 10ல் மாரடைப்பு காரணமாக மரணமடைந்தார்.

விளையும் பயிர் முளையிலே என்பது போல மாணவர் இயக்கம் தந்த கொடை பிரசண்டா சன்யால் புகழ் வாழ்க!

--நன்றி : நியூஏஜ் (2025, பிப்.23 –மார்ச் 1)

தமிழில் : நீலகண்டன்,

 என் எஃப் டி இ, கடலூர்

 

 

 

 

 

Saturday, 15 March 2025

கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாற்று வரிசை 122 -- சர்ஜூ பாண்டே. உ.பி. கம்யூனிஸ்ட் தலைவர்

 கம்யூனிஸ்ட் தலைவர்கள் வரலாறு 122


சர்ஜூ பாண்டே : பழம்பெரும் உ.பி. கம்யூனிஸ்ட் தலைவர்,
1942 இயக்கத்தின் கதாநாயகன்

                                               --அனில் ரஜீம்வாலே

சர்ஜூ பாண்டே, உ.பி. மற்றும் இந்தி பிராந்தியத்தின் இதிகாசமாகத் திகழ்ந்தவர், கம்யூனிஸ்ட் இயக்கத்தைக் கட்டி வளர்த்தவர், 1942ம் ஆண்டு இயக்கத்தின் கதாநாயகன் மற்றும் தலைச் சிறந்த மக்கட் தலைவர், அவரது புகழ் ஒவ்வொரு வீட்டையும் சென்றடைந்தது எனில் மிகையன்று.

இளமைப் பருவம்

    சர்ஜூ பாண்டே உபி மாநிலக் காசிமாபாத் தானா, ராஜ்பூர் கட்டியான் அஞ்சல் பகுதியின் உர்கான் என்ற கிராமத்தில் 1919 நவம்பர் 19-ல் பிறந்தார். தந்தை ஸ்ரீ மஹாவீர் பாண்டே மற்றும் தாயார் ஸ்ரீமதி சுர்ஜி தேவி. மூன்று குழந்தைகளில் இரண்டாவதாகப் பிறந்தவர் சர்ஜூ. அவரது தந்தை அவரைக் கீழ்படியாத முரட்டுக் கலகக்காரன் என்று வித்தியாசமாக, அசாதாரணமான முத்திரை குத்தி அடையாளப்படுத்தினார்.

    சர்ஜூ தொடக்கக் கல்வியைக் கிராமத்திலே கற்று, 1935இல் உருது வழியில் காசிமாபாத் ஜூனியர் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். 1936-ல் இந்தி வழியில் படித்து, 1937ல் உருது மொழி ’ஆலா’ தேர்வுகளை எழுதினார். 

    இராமாயணம், மகாபாரதம் மற்றும் கீதையில் மிகுந்த விருப்பம் கொண்டிருந்தார். அவரது தோளில் யக்யோபவிதம் எனும் பருமனான பூணூலை அணிந்திருந்தார். கீதை மற்றும் இராமாயணத்திலிருந்து சமஸ்கிருத ஸ்லோகங்களை மிக எளிதாகப் பாடுவதில் வல்லவர். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் பிரிட்டிஷ் போலீஸ்களை ஏமாற்றுவதற்கு அவருக்குப் பெரிதும் உதவியது: எந்தக் கோயிலுக்குள்ளும் நுழைந்து சமஸ்கிருதத்தில் ஸ்லோகங்களை இசைப்பார், மக்களும் ஏதோ ஒரு ‘ஞானி பாபா’ வந்துள்ளதாக நினைப்பர் -- அவரோ மறுநாள் அல்லது அதற்கு அடுத்து மறைந்து விடுவார்!

விடுதலை இயக்கத்தில்

    காங்கிரஸ் கட்சி 1936-37ல் காசிமாபாத்தில் கௌமி சேவா தள் (தேசியத் தன்னார்வத் தொண்டர் குழு) ஒன்றை அமைத்தது. சர்ஜூ அதில் சேர்ந்து பயிற்சி பெற்றார். பின்னர் அவர் 1940ல் கங்கௌலி சத்தியாகிரகத்தில் கலந்து கொண்டு ஆறுமாதச் சிறை தண்டனை காலத்தைக் காசிப்பூர் சிறையில் கழித்தார்.

1942 இயக்கத்தில்

1942 ஆகஸ்டில் நடைபெற்ற ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம், தேசம் முழுமையும் கவ்வி பிடித்த  மாபெரும் வரலாற்று நிகழ்வு. (முன்பு ஐக்கிய மாநிலங்கள் என்றழைக்கப்பட்ட) 

உபி அந்த இயக்கத்தின் மையமாக இருந்தது. தீவிரமாக அதில் பங்கேற்ற சர்ஜூ பாண்டே, அந்த இயக்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவராக இருந்தார். ராமா சிங் போன்ற பிற கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆகஸ்ட் 15ல் காசிமாபாத் போலீஸ் நிலையம் அடைந்தார். நிலையக் காவல் அதிகாரியிடம் யூனியன் ஜாக் கொடியை இறக்கிவிட்டு மூவர்ணக் கொடியை ஏற்றக் கூறினர். இதைக் கேட்ட நிலையத்தின் பொறுப்பதிகாரி ஏற்கனவே ‘சுயராஜ்யம்’ வந்துவிட்டதோ எனக் கிண்டலாக வினவினார்.

சர்ஜூ உடனடியாகத் திருப்பி அடித்தார், ‘உங்களுக்குத் தெரியாதா? சுயராஜ்யம் ஏற்கனவே உண்மையில் வந்துவிட்டதென்று?’ போலீஸ் அதிகாரி பயந்துபோய்ச் சரணடைந்து, ஆயுத அறை சாவிகளை ஒப்படைத்தார். அனைத்துப் போலீஸ்காரர்களின் டர்ப்பன் தலைப்பாகைகளைக் கழற்றச் செய்தார். பின்னர் மூவர்ணக் கொடி ஏற்றப்பட்டது. ஆயுதங்களை எல்லாம் கைப்பற்றி எடுத்துச் சென்று மறைந்து போயினர். காசிமாபாத் போலீஸ் நிலையத்தில் ஒரு வாரம் முழுவதும் மூவர்ணக் கொடி பறந்து கொண்டிருந்தது.

பாண்டேவைப் பார்த்ததும் சுடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்நிகழ்வு எல்லா இடங்களிலும் புகழ்பெற்று பரவியது. நீண்ட காலத்திற்குச் சர்ஜூ மற்றும் தோழர்கள் கிராமம் விட்டு கிராமம் சென்று தலைமறைவாக இருந்தனர். அவர்கள் மறைந்து இருக்கும் இரகசியத்தைக் கிராமத்தினர் ஒருபோதும் காட்டிக் கொடுக்கவில்லை. எனவே போலீஸ் அவர்களின் குடும்பத்தினருக்குத் தொல்லை கொடுக்கத் தொடங்கினர்.

போலீஸ், அவரது தாத்தா ஸ்ரீ மஹாவீர் பாண்டே இல்லத்திற்கு வந்து அவரையும் அடிப்போம் என மிரட்டியது. சர்ஜூ போலீசை எச்சரித்தார். ஆனால் தாத்தாவோ ‘போலீஸ் என்ன செய்தாலும் அவர் கைதாகக் கூடாது’ என அவருக்குத் தகவல் அனுப்பினார்.

சில மாதங்களுக்குப் பின்னர் அவரது சகா ஸ்ரீ ராமா சிங் உடன் கைது செய்யப்பட்ட சர்ஜூ காசிப்பூர், காசி மற்றும் பிற சிறைகளுக்கு அனுப்பப்பட்டார்.

சிறைகளில் அவர் மிக மோசமாகவும் மனிதத்ததன்மையற்றும் நடத்தப்பட்டார்; பல தருணங்களில் சித்திரவதைகளுக்கு ஆளானார். கை கால்களில் விலங்கிட்டு அவரைத் தனிமைச் சிறையில் அடைத்தனர் மாவு அரைவைக்கல் இயந்திரங்களில் பணியாற்ற கட்டாயப்படுத்தப்பட்டு மிருகத்தனமாகத் தாக்கப்பட்டார். தாக்கப்பட்ட போதெல்லாம், ‘பாரத் மாதா கி ஜெய்என்றும், ‘வந்தே மாதரம் என்றும் உரத்து முழக்கமிட்டார்; அவர் மயங்கி விழும் வரை காவலர்கள் பிரம்பால் அடித்தார்கள்.

அவருக்கு 42 ஆண்டுகள் கடுங்காவல் சிறை தண்டனை வழங்கப்பட்டது! 80 பிரம்படிகளும் பெரிய தொகை அபராதமாகமும் விதிக்கப்பட்டது. தனது வழக்கில் தானே வாதாடி, அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டார். வின்ஸ்டன் சர்ச்சில் உடனும் கூட தான் விவாதிக்கத் தயார் என்று அவர் கூறுவது வழக்கம்!  ஒருபோதும் அவர் பயந்தது இல்லை : ‘அதிகபட்சமாகத் தூக்கில் ஏற்றுவார்கள், அவ்வளவு தானே’ என்பார்.

திருமணமும் குடும்ப கஷ்டங்களும்

1940ல் சர்ஜூ பாண்டேவுக்குத் திருமணமானது. உண்மையில் அவர் திருமணம் செய்து கொள்ள விரும்பவில்லை தனது வாழ்வு முழுமையும் தேச சேவைக்கு அர்ப்பணிக்க விரும்பினார். ஆனால் அவரது தந்தை மிகப் பிடிவாதமாக இருக்கவே, சர்ஜூ அவரது விருப்பத்திற்குப் பணிய வேண்டியதாயிற்று. அவர் ராம்ராஜி தேவியை மணந்தார், அவர் சிக்கன்தர் சௌக் (பகுதியைச்) சேர்ந்த ஸ்ரீ பூஷண் உபாத்தியாயா மகள். திருமணத்திற்குப் பிறகு சர்ஜூவின் தாயார், அவர் கைதாவாரோ அல்லது பிற பிரச்சனைகளை எண்ணி தொடர்ந்து கவலைப்பட்டார்.

1941ல் காந்திஜி கங்கௌளி சத்தியாகிரகத்தைத் தொடங்கினார். சர்ஜூ அதில் கலந்து கொள்வதாக முடிவு செய்து மறுநாள் காலை புறப்படத் தயாரானார். பெரிதாக அழத் தொடங்கிய அவரது தாயார் செல்ல வேண்டாம் என்று கெஞ்சினார்.

சர்ஜூ அதற்கு மசியவில்லை, மறுத்துவிட்டார். எனவே தாயார் தன் உடல் முழுதும் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு தீ வைத்துத் தன்னை மாய்த்துக்கொள்ள முயன்றார். அவரது ஒன்றுவிட்ட சகோதரர் ஸ்ரீ ராம்லால்ஜி உடனே அவர் மீது தண்ணீர் ஊற்றி அவரைக் காப்பாற்றினார். இருப்பினும் மிக மோசமாக அவரது உடலில் தீக்காயம் ஏற்பட்டது. தனது தந்தை மற்றும் மாமாவிடம் பதில் அளிக்கும் வகையில், ‘ஒத்துழையாமை இயக்கத்துடன் தான் பிரிக்க முடியாதவன், எனவே நிச்சயம் செல்லப் போவதாக’வும் சர்ஜூ கூறினார். மேலும் தாய் குணமடைந்த பிறகு மீண்டும் அப்படி ஒரு பைத்தியக்காரத்தனத்தை திரும்பவும் செய்ய வேண்டாம் என்று அவரிடம் சொல்லுமாறு கூறினார்!

சர்ஜு பாண்டே கைது செய்யப்பட்டு ஆறு மாதம் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த மாதிரி வாழ்க்கைக்கு அவரது தாயார் பழக்கப்படுத்திக் கொண்டு, நீண்ட நேரம் மத வழிபாடுகளில் செலவிட்டார். மகனின் நலனுக்காகத் தொடர்ந்து கடவுளிடம் பிரார்த்தனை செய்தார்.

கம்யூனிசத்தை நோக்கி

சிறையிலேயே சர்ஜூ பாண்டே கம்யூனிஸ்டுகளுடன் தொடர்பு கொண்டார். புகழ்பெற்ற கம்யூனிஸ்டுகளான ரஸ்டம் சாட்டின் மற்றும் பிகே ஆசாத் கான்பூர் மத்திய சிறையில் இருந்தனர். அவர்களுடன் அவருக்குப் பழக்கமும் நெருக்கமும் ஏற்பட்டது. சிறையில் புகழ்பெற்ற காங்கிரஸ் தலைவர் ஜான்பூர் ஹர்கோவிந்த் சிங் மற்றும் ராஃப் ஜாப்ரி இருவரும் (டாஸ் கேப்பிட்டல்) மூலதனம் குறித்து வகுப்பெடுப்பது வழக்கம். இவை அனைத்தும் ஆழமான தாக்கத்தை அவரிடம் ஏற்படுத்தியது. அவரும் பகத்சிங் வாழ்க்கை வரலாறு மற்றும் பிற நூல்களைப் படித்தார். ஏழைகள் மற்றும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை மேம்பாட்டிற்காகத் தன்னை அர்ப்பணிக்க அவர் முடிவு செய்தார்.

1946ல் விடுதலைக்குப் பிறகு காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி (CSP)யில் தல்ஸ்ரீங்கர் துபே (Dalshringar Dube)யுடன் இணைந்தார்

கம்யூனிஸ்ட் கட்சியில்

இப்பொழுது சர்ஜூ பாண்டே கம்யூனிஸ்ட் தத்துவத்தால் பெரிதும் ஈர்க்கப்பட்டார். ஒரு நாள் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்குச் சென்ற அவர் தன்னைக் கட்சியில் இணைத்துக் கொள்ளும்படி வேண்டினார். அந்த நேரத்தில் சிபிஐ பொதுச் செயலாளர் பி சி ஜோஷி அங்கே இருந்தார். சர்ஜூ பற்றி அவர் ஏற்கனவே கேள்விப்பட்டிருந்தார். ஜோஷியிடம் சர்ஜூ தன்னை அறிமுகப்படுத்திக் கொண்டபோது அவர், 'இது போலீஸ் ஸ்டேஷன் அல்ல, நீங்கள் புகார்கள் தருவதற்கு' என்றார்! சர்ஜூவோ ‘என்னைக் கட்சியில் அனுமதிக்கவில்லை என்றால், நான் சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்' என்றார்! உடனே மனதார சிரித்து விட்ட   ஜோஷியும் மற்றவர்களும் அவரது முடிவை வரவேற்றனர்.

கட்சியில் இணைய அவர் அனுமதிக்கப்பட்டார். அவர் காசிப்பூர் சென்று ஹர் பிரசாத் ‘கேப்டன் என்பவரைச் சந்திக்க, சிபிஐ உறுப்பினர் அட்டை வழங்கப்பட்டது. அவர்கள் கட்சி அலுவலகத்தைக் காசிப்பூரில் தொடங்கினர். சர்ஜூ தனது தோழர்கள் ஹர் பிரசாத், சூரியநாத் மற்றும் ராம் நகீனா ராய் உடன் மாவட்டம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து கட்சி அமைப்பை ஏற்படுத்தினார். சூரியநாத் ராய் சிறந்த பாடகர்; அவரும் ராம் நகீனாவும் மக்கள் திரள் கூட்டங்களில் பாடுவது வழக்கம் அப்போது ஹர் பிரசாத்தும் சர்ஜூவும் சொற்பொழிவாற்றுவர். விரைவில் மாவட்டத்தில் சிபிஐ முக்கிய கட்சி ஆயிற்று. மேலும் அவர்கள் ஏழை விவசாய மக்களின் பல போராட்டங்களைத் தலைமை ஏற்று நடத்தினர்.

பி டி ஆர் காலம்

நன்கு அறிந்தது போல, கட்சி வரலாற்றில் பி டி ஆர் காலம் என்பது மிக மோசமான சுய அழிப்புக் காலம். அந்தச் சுய அழிப்புக் குழுவாதப் போக்கு காலத்தில், உ பி கட்சி மிகப் பெருமளவில் பாதிக்கப்பட்டது. உபி கம்யூனிஸ்ட் கட்சிக்கு மண்டல/ மாநிலம் முழுவதும் வலுவான தளங்கள் இருந்தன. அவை உருவாக்கிய ஆகப்பெரும் சிபிஐ தலைவர்களில் சர்ஜூ பாண்டேவும் ஒருவர்.

இக்காலகட்டத்தில் அவர் விவசாயிகள் மத்தியில் பணியாற்றிக் கொண்டிருந்தார். அவர் தலைமறைவாக வேண்டி வந்தது. காவலர்களால் அவரது இல்லம் பலமுறை தாக்குதலுக்கு உள்ளானது, சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நில பிரபுத்துவ மற்றும் நிர்வாக ரீதியான ஒடுக்கு முறைகள் மிகக் கூர்மையாக இருந்தன.

1949 சிச்சோரே நிகழ்வு

சிச்சோரே, ரத்தன்பூருக்கு வடக்கே உள்ள ஒரு சிறு கிராமம். அங்கே ஒரு காலத்தில் நிலப் பிரபு ஆவாத் சிங் என்ற ஒரு கொடூரமான ஒடுக்குமுறை ஜமீன்தார் கோலோச்சிக் கொண்டிருந்தார். அவருக்கு எதிராகக் கம்யூனிஸ்ட் கட்சி மிகப் பெரும் போராட்டத்தை நடத்தியது. ஒருமுறை ஒரு கம்யூனிஸ்ட் குடும்பத்தின் வீட்டுக்குள் புகுந்த போலீஸ்காரர்கள் பச்சிளம் குழந்தையோடு இருந்த கம்யூனிஸ்ட் பெண்ணிடம் தவறாக நடந்தனர். சர்ஜூ பாண்டே மற்றும் ஜெய் பகதூர் சிங் மறைவிடத்தை அவர்கள் தெரிந்து கொள்ள விரும்பினர். அப்பெண்ணுக்கு அது தெரியாது மற்றும் அவர்கள் கேட்பது என்ன என்றும் புரியவில்லை. அந்தப் பச்சிளம் குழந்தையை மிருகத்தனமாக நடத்திய அவர்கள், தங்கள் காலடியில் போட்டு மயக்கமாக்கும் வரை நசுக்கினர். அந்தப் பெண்ணையும் உதைத்துத் தள்ளினர். அப்பெண்ணின் தந்தை திரும்பும்போது அவரையும் மோசமாக அடித்து மரத்தில் கட்டி வைத்து, அவரது தங்கையைக் கூட்டுப் பாலியல் வல்லுறவுக்கு ஆட்படுத்தினர்

சர்ஜூ பாண்டே மற்றும் ஜெய்பகதூர் சிங் இருவரும் ஆவாஸ் சிங்குக்கு ஒரு பாடம் கற்பிக்க முடிவு செய்தனர். அவர்கள் ஒரு ரகசிய கூட்டம் நடத்தி தங்கள் செயல் திட்டத்தை வகுத்தனர். ராம் நாராயண் குப்தா தலைமையில் கம்யூனிஸ்ட் செயல்வீரர்கள், கிராம மக்கள் கூட்டத்தினருடன் ஆவாஸ் சிங் இல்லத்தைச் சூழ்ந்து கொண்டனர். அவனது குடும்ப உறுப்பினர்கள் சிலரைக் கொன்றனர், அந்த வீட்டையும் தீயிட்டுக் கொளுத்தினர்.

இது தவிர நிலப் பிரபுக்களுக்கு எதிரான பல்வேறு  பிற போராட்டங்களும் அங்கு நடத்தப்பட்டன. அவற்றில் பாலியைச் சேர்ந்த நிலப் பிரபுக்கள் சுரூஜ் சிங் மற்றும் ராஜா ராய் இருவர் மீது மக்கள் நடத்திய தாக்குதல்களும் குறிப்பிடத் தகுந்தன.

சுபாஷ் முகர்ஜியின் தியாகம்

1950 ஜனவரி 26ல் குத்துவா மாணிக்பூரில் மண்டல மட்டத்திலான கெந்த் மஸ்தூர் சபாவின் (விவசாயத் தொழிலாளர் சங்கம்) பேரணி நடத்தப்பட்டது. அதில் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் கலந்து கொண்டனர். அப்பகுதி கிசான் இயக்கத்தின் முன்னணி ஒளி விளக்குகளாகச் சர்ஜூ பாண்டே, ஜெய் பகதூர் சிங் மற்றும் பாய்ஜ்நாத் ஷர்மா இருந்தனர். கட்சி மையத்திலிருந்து எஸ் ஜி சர்தேசாய் அவர்களும்கூட வந்திருந்தார்.

முக்கியமாக பெண்கள் அடங்கிய பெரும்படையணி ஒரு புறத்திலிருந்து, மாணவர் தலைவர் சுபாஷ் முகர்ஜி தலைமையில் அணுகியது. போலீஸ்காரர்கள் சூழ்ந்து கொண்டு மக்களைத் தடுக்க நினைத்தனர், ஆனால் அவர்கள் கேட்கவில்லை. துப்பாக்கி சூடு நடத்துவதாக எச்சரித்தும், பலன் இல்லை. போலீசார் கண்டபடி கண் மூடித்தனமாகத் துப்பாக்கிச் சூடு நடத்த, பலர் காயம் அடைந்தனர். சுபாஷ் மார்பில் சுடப்பட்டு, துப்பாக்கி குண்டு அவர் உடலைக் கிழித்துக்கொண்டு மறுபுறமாக வெளியே வந்தது. அவர் அந்த இடத்திலேயே மரணம் அடைந்தார். சுவான்ஷாவும் துப்பாக்கிச் சூட்டில் அந்த இடத்திலேயே மடிந்தார். மராட்ச்சி மோசமாகப் படுகாயம் அடைந்தார்.

போலீஸ் அந்த இடத்தை விட்டு ஓடினர். ஜெய் பகதூர், சர்ஜூ பாண்டே மற்றும் ஜார்கண்டே ராய் மற்றும் பலர் சிறையில் அடைக்கப்பட்டு அவர்களுக்கு எதிராக விசாரணை நடத்தப்பட்டது.

விவசாயத் தலைவராக

சர்ஜூ பாண்டே, காசிப்பூர் மற்றும் உபி-யின், குறிப்பாகக் கிழக்கு உத்தரப் பிரதேசத்தின் மரியாதைக்குரிய மற்றும் திறன் மிகுந்த விவசாயிகள் (கிசான்) தலைவராக விளங்கினார் என டாக்டர் இஸட் ஏ அகமது தனது நினைவலைகளில் எழுதினார். இஸட் ஏ அகமது, ஜெய் பகதூர் சிங் மற்றும் சர்ஜூ பாண்டே கிசான் இயக்கத்தின் ‘மூவர் அணி (‘triad’)யாகத் திகழ்ந்தனர். இக்குழு உ பி விவசாய இயக்கத்தின் அடித்தளத்தை அமைத்தது. உபி மக்களுக்குச் சர்ஜூ பாண்டே கடவுள் போல இருந்ததாக டாக்டர் இஸட் ஏ அகமத் எழுதினார். கூட்டத்திற்கு மக்களை ஈர்க்க அவரது பெயர் பயன்படுத்தப்பட்டது. அவர் கூட்டத்திற்கு வரவில்லை எனில் அவர்கள் மிகவும் ஏமாற்றமடைவது வழக்கம்.  

ட்டமன்றக் களத்தில் நுழைவு

1956 இறுதியில் சர்ஜூ பாண்டே பரோலில் விடுதலையானார். தேர்தல்களில் போட்டியிட கட்சி அவரைத் தேர்ந்தெடுத்தது. அவர் மாநிலச் சட்டமன்றத்திற்கு மட்டும் போட்டியிட விரும்பினார். பப்பார் ராம் மற்றும் ராஜ்நாத் சிங் அவரை மக்களவை ரஸ்ரா தொகுதிக்கு வேட்பு மனு தாக்கல் செய்யக் கட்டாயப்படுத்தினர் – அந்தத் தொகுதி புரட்சிகர சோசலிசக் கட்சி (RSP) செல்வாக்கின் கீழ் இருந்தது. இறுதியில் அவர் இரண்டிற்கும் போட்டியிட வேண்டி வந்தது

ரூபாய் 800க்கு ஒரு செவர்லே கார் வாங்கப்பட்டது! யாசின் என்ற ஓர் அரசு ஊழியர் தனது வேலையை விட்டு விலகி, சர்ஜூ பாண்டேவின் கார் ஓட்டுனராக ஆனார். இதனால் அவர்களால் எல்லா இடத்திற்கும் செல்ல முடிந்தது.

காங்கிரஸின் சௌகத் அன்சாரி, சர்ஜூ பாண்டேவிடம் மோசமாகத் தோல்வி அடைந்தார், அவர் தனது டெபாசிட்டையும் இழந்தார். பாண்டே ஜிக்கு முஸ்லிம்கள் பெருமளவில் உற்சாகமாக வாக்களித்தனர்.பாண்டே ஜி விதான் சபா (சட்டமன்றம்) வுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஆனால் லோக் சபாவுக்குத் தேர்வானதும், சட்டமன்றத்திலிருந்து ராஜினாமா செய்தார்.  இந்த எதிர்பாராத தேர்தல் முடிவால் மிகவும் ஈர்க்கப்பட்ட பண்டித நேரு, பாண்டே ஜியை லோக்சபாவில் அன்பாக வரவேற்றார்

சர்ஜூ பாண்டேவைக் காங்கிரஸில் சேருமாறு பண்டித நேரு அழைத்தார், ஆனால் பாண்டே அதை மிக மென்மையாக மறுத்த பாண்டே அப்போது, ‘நிச்சயமாக நமது நாடு பிரிட்டிஷ்காரர்களிடமிருந்து விடுதலை பெற்று விட்டது, ஆனால் ஒவ்வொருவருக்கும் உண்மையான விடுதலை கிடைக்கவில்லை; எனவே நான், தொழிலாளர்கள், விவசாயிகள் மற்றும் பிற ஏழைகளுக்குப் பணியாற்றவும் கம்யூனிஸ்ட் கட்சிக்காகப் பணியாற்றவும் போகிறேன்’ என்று கூறினார். நேரு சிரித்தபடி அவரைத் தட்டிக் கொடுத்தார்!

லோக் சபாவுக்கு நடந்த 1957, 1962, 1967 மற்றும் 1971 தேர்தல்களில் சர்ஜூ பாண்டே வெற்றி பெற்றார். 1977ல் அவர் தோல்வி அடைந்தார். அவரது உரைகள் அனைத்து அமைச்சர்கள் உள்ளிட்ட எல்லோராலும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்டன.

 அவர் உபி சட்டமன்ற மேல் சபைக்கு 1982ல் எதிர்ப்பின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நாட்டின் புகழ் வாய்ந்த மனிதர்

 சர்ஜூ பாண்டேவின் பெயர் நாட்டில் புகழ்வாய்ந்த ஒன்றாக இருந்தது, ஒவ்வொரு தனி நபரும் அவரை அறிந்திருந்தனர், அவருக்குப் பெரும் மதிப்பளித்தனர். அவரால் எந்த நேரத்திலும் எந்த இடத்திற்கும் செல்லவும், எவரையும் சந்திக்கவும் முடிந்தது. மக்கள் அவரை மொய்த்துச் சூழ்ந்து கொண்டு தங்கள் பிரச்சனைகளைப் பகிர்ந்து கொண்டனர்.

அவர் மிக மிகப் புகழ்வாய்ந்தவராகவும் எல்லா அரசியல் கட்சிகள் மற்றும் அதன் தலைவர்களால் பெரிதும் மதிக்கப்படுபவராகவும் இருந்தார். திருமதி இந்திரா காந்தி, அடல் பிகாரி வாஜ்பாய்சந்திரசேகர் மற்றும்பலர்

மீது பெரும் மரியாதை வைத்திருந்தார், பண்டித நேரு மீது அவருக்கு இருந்த உயர் மரியாதையைச் சொல்லத் தேவையில்லை. இந்திரா காந்தி அவரது குடும்ப உறுப்பினர் களுடன் மிகப் பரிச்சயம் உடையவராக இருந்தார். மேலும் பாண்டே ஜி  புரட்சியாளராகவும், அவருக்குப் பின்னால் புரட்சிகர நடவடிக்கைகளின் பெரும் வரலாறு உடையவராகவும் இருந்ததன் காரணமாக இந்திரா காந்தி அவர் மீது பெரும் மதிப்புடையவராக இருந்தார்.

வாஜ்பாய் அவரைப் பெரிதும் மதித்தார். பாண்டே (காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கிய) அரசியலமைப்புச் சட்ட ஷரத்து 370 ரத்து செய்யப்பட்டதன் ஆதரவாளராக இருந்தார் –- பாண்டேஜி மட்டும்தான் அவ்வளவு துணிச்சலாகப் பேச முடியும் என்றார் வாஜ்பாய்!

ஆதா காவ் (அரை கிராமம்) என்ற தலைப்பில் ரஹீமாசோம் ரசா (Rahimassom Raza) எழுதிய நாவலில் சர்ஜூ பாண்டே ஒரு புரட்சிகரப் பாத்திரமாகப் படைக்கப்பட்டிருந்தார்.

கட்சி மாநிலச் செயலாளராக

சர்ஜூ பாண்டே உபி மாநிலக் கட்சியின் செயலாளராக 1978ல் தேர்ந்தெடுக்கப்- பட்டவர், 1985 வரை அப்பொறுப்பில் இருந்தார். அவரது மகன் பானு பிரகாஷ் (தற்போது மும்பையில் பணியாற்றிக் கொண்டிருக்கும் டாக்டர் பானு பிரகாஷ்) லக்னோவில் அவரைக் கவனித்துக் கொண்டார். பாண்டே ஜி ஒரு வெற்றிகரமான செயலாளராக இருந்தார்.

அவரது திறன்மிகு தலைமையின் கீழ் பல முக்கிய மாவட்டங்களில் கட்சி அலுவலகங்கள் கட்டப்பட்டன. காசிப்பூரில் கட்டப்பட்ட ‘பரத்வாஜ் பவன்’ ஓர் அற்புதமான கட்டடம். 1940களில் பொலிட் பீரோ உறுப்பினராக இருந்த ஆர் டி பரத்வாஜ் உடன் அவர் மிக நெருக்கமாக இருந்தவர். மார்த்தா மற்றும் காசிமாபாதிலும் கட்சி அலுவலகங்கள் கட்டப்பட்டன.

1978ல் சிபிஐ மத்தியச் செயற்குழு உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர் இறுதிவரை அதில் நீடித்தார்.

மாரடைப்பும் மரணமும்

1988ல் மாரடைப்பால் பாதிக்கப்பட்ட அவருக்கு உண்மையில் அது இரண்டாவது ஹார்ட் அட்டாக். அந்த நேரத்தில் லக்னோவில் இருந்த அவர் பின்னர் காசிப்பூருக்கு மாற்றப்பட்டார். வாஜ்பாய் அவரது உடல் நலன் குறித்து விசாரித்தார், இருவரும் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொண்டனர். சிகிச்சைக்காக ரஷ்யாவுக்கு அனுப்பப்பட்ட அவர் 1989 ஆகஸ்ட் 25ல் மரணமடைந்தார்.

புதுடெல்லி அஜாய் பவனுக்குக் கொண்டுவரப்பட்ட அவரது உடல் பின்னர் காசிப்பூருக்கு எடுத்துச் செல்லப்பட்டது. பரவலாகவும் எண்ணிறைந்த பொது மக்களாலும் அவரது

மறைவுக்குத் துக்கம் அனுசரிக்கப்பட்டது. அவருக்கு அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்குகள் நடத்தப்பட்டன. சர்ஜூ பாண்டே மீது பெரிதும் அன்புடைய அன்றைய உ பி முதல்வர் திரு முலாயம் சிங் யாதவ் 1991ல் காசிப்பூரில் அவரது சிலையை நிறுவினார். அன்றைய முதல்வர் என்டி திவாரி அஞ்சலி தெரிவித்தார். இறுதிச் சடங்குகளில் கலந்து கொண்டது மட்டுமின்றி, அவர் சவப்பெட்டியைத் தோளில் சுமந்து சென்றார்.

சர்ஜூ பாண்டேவின் இறுதி ஊர்வலமும் அஞ்சலி கூட்டங்களும் அதுவரை காணாத இணையற்ற பெரும் நிகழ்வாக, பல லட்சம் மக்களும் பரவலாக பல அமைப்புகளும் கலந்து கொண்டதாக அமைந்தது.

சர்ஜு பாண்டேவின் நினைவுகள் நீடு வாழ்க!

(இக்கட்டுரை ஆசிரியர் அனில் ரஜீம்வாலே, சர்ஜூ பாண்டே குறித்த வரலாற்றுத் தகவல்களை வழங்கியதற்காக பாண்டே ஜி மகன் டாக்டர் பானு பிரகாஷ் மற்றும் சிலருக்கு நன்றி தெரிவிக்கிறார். வேறு சில ஆவணங்களும்  சேகரிக்கப்பட்டன என்றார்.)

--நன்றி : நியூஏஜ் (பிப்.9 --15)

தமிழில் : நீலகண்டன்,

என்எப்டிஇ, கடலூர்